pm logo

apirAmi paTTar's tirukaTavUr pirapantangkaL 4
(in tamil script, unicode/utf-8 format)

அபிராமிபட்டர் அருளிய
திருக்கடவூர் பிரபந்தங்கள்



Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext Preparation (input, proof-reading, webpage) : Dr. Kumar Mallikarjunan, Blacksburg, Virginia, U.S.A.
This webpage presents the Etext in Tamil script in Unicode encoding (utf-8 format)

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

அபிராமிபட்டர் அருளிய
திருக்கடவூர் பிரபந்தங்கள்

1. திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம்
2. திருக்கடவூர் அமுதகடேசுவரர் பதிகம்
3. திருக்கடவூர்க் காலசம்மாரமூர்த்தி சபதம்
4. திருக்கடவூர்க் காலசங்கார மூர்த்தி பின்முடுகு
----------
1. திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம்

கட்டளைக் கலித்துறை

பங்கயத் தாளும் ஒருநான்கு தோளும் படாமுகமும்
திங்களின் கோடும் வளர்மோ தகத்துடன் செங்கையிலே
அங்குச பாசமு மாகிவந்(து) என்றனை ஆண்டருள்வாய்;
வெங்கய மே!கட வூர்வாழுங் கள்ள விநாயகனே!         1.

உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒருதொழிலைப்
பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும்நின் பாதத்திலே
நண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ?
விண்ணும் புகழ்கட வூர்வாழும் கள்ள விநாயகனே!         2.

யாதொன்றை யாகிலும் எண்ணிய போ(து) உன் இணைக்கமல்
பாதம் பரவிய பேர்கட் கலாது பலித்திடுமோ?
பேதம் தெரிந்த மறையோர் தமது பெருச்தெருவில்
வேதம் பயில்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே!         3.

அரனென் பவனையும் அம்புயத் தோனையும் ஆழிசங்கு
கரனென் பவனையுங் கைதொழ வேண்டி உன் கால்தொழுவார்
இரவும் பகலும் இயலிசை நாடக மென்னும் நன்னூல்
விரவுந் தமிழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே!         4.

துதியேன் எனினும் தொழுகேன் எனினும் தொழுபவர்தமை
மதியேன் எனினும் வணங்கேன் எனினும் வலியவந்து
கதியே தரும்வழி காட்டிடுவாய்; நின் கருணையினால்
விதியே புகழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே!        5.

நாக ந்துரகம் பலபணி அடை நவநிதிகள்
பாகஞ்சு மென்மொழியாள் போகமும் உன்றன் பாதமதில்
மோகந் திகழப் பணிந்தோர்க்(கு) அலாமல் முயன்றிடுமோ?
மேகம் பயில்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே!         6.

இளங்குஞ் சரச்செழுங் கன்றே! எனச்சொலி ஏத்திநின்றாய்
உளங்கசிந் தங்கையால் குட்டிக்கொண் டோர்க்கோர் குறையுமுண்டோ?
வளங்கொண்ட மூவர் தமைமறித் தேதமிழ் மாலைகொண்டு
விளங்கும் புகழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே!         7.

தண்டாயுதத்தையும் சூலாயுதத்தையும் தாங்கியென்னைக்
கண்டாவிகொள்ள நான் வரும் வேளையில் காத்திடுவாய்
வண்டாரவாரஞ்செய் மாமலர்ச்சோலை வளப்பமுடன்
விண்தாவிய கடவூர் வாழும் கள்ள விநாயகனே.         8

மூவரும் தங்கள் தொழிலே புரிந்திட முந்திமுந்தித்
தாவரும் நெற்றியில் தாக்கியுன் நாமத்தைச் சாற்றிடுவார்;
தேவரும் போற்றிய தேவே! உனையன்றித் தெய்வமுண்டோ?
மேவருஞ் சீர்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே!         9.

மைப்பொரு வாரண மாமுக மீதினில் வாய்ந்ததுதிக்
கைப்பொரு ளே! என்று கைதொழு வோர்குன் கருணைவைப்பாய்;
பொய்ப்பணி யோஅறி யாதமு தீசன் புகழுமெங்கள்
மெய்ப்பொருளே!கட வூர்வாழுங் கள்ள விநாயகனே!         10.
----------
2. திருக்கடவூர் அமுதகடேசுவரர் பதிகம்

ஆசிரிய விருத்தம்

சுடர்மணிக் குழையும் மலர்க்கரத் துழையும் தும்பிகள் இடையிடை நுழையும்
        தும்பமா லிகைபும் வம்புவார் சடையும் துண்டவெண் பிறையுமுந் நூலும்
நடனபங் கயமும் கிரணகங் கணமும் நங்கைபங் கமர்ந்தசுந் தரமும்
        நயனமூன் றுடைய கோலமுங் கண்டோர் நமனையுங் காணவல் லவரோ?
கொடிபல தொடுத்த நெடியமா மணிபொற் கோபுரம் பாரிடந் தொடுத்துக்
        கொழுந்துவிட் டெழுந்து வாணில வெறிப்பக் கொண்டல் வந் துலவியே நிலவும்
கடிமலர்த் தடமுஞ் சுருதியோ திடமும் கன்னிமா மாடமுஞ் சூழ்ந்து
        கனவளஞ் செறிந்த கடவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே!         1.

தண்டமுங் கயிறுஞ் சூலமும் புகைந்த தழலுமிழ் கண்களும் வளைந்த
        தந்தமுஞ் சிவந்த குஞ்சியுங் கரிய சைலமே அனையமே னியுமாய்
அண்டிய சமனைக் கண்டுள மயங்கி அறிவழிந் திருவிழி களும்பஞ்(சு)
        அடைந்துவாய் புலர்ந்து மெய்மறந் திடும்போ(து) அம்பிகை தன்னுடன் வருவாய்!
வண்டுகள் முரன்று முகைமுறுக் குடைந்து மதுமழை பொழிந்துதா தளைந்து
        மடல்விரிந் தலர்ந்து பொன்னிறம் பொதிந்த மண்டலங் கொன்றைவார் சடையாய்!
கண்டவர் உளமுங் கண்ணுமே கவருங் கனதன வனிதையர் நெருங்கும்
        கனவளஞ் செறிந்த கடமைவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே!        2.

தனபதி யனைய செல்வமே பெறினும் சதமகன் போகமே பெறினும்
        தாரணி சுமக்குஞ் சேடனே நிகராய்த் தக்கதோ ரறிவெலாம் பெறினும்
அனகனையத்த அழகுதான் பெறினும் அருமறைக் கிழவனே எனினும்
        ஐய! நின் கடைக்கண் அருள்தவ றியபேர் அங்கையோ டேந்திநின் றுழல்வார்;
பனககங் கணத்தாய்! அளப்பெருங் குணத்தாய்! பார்வதி வாமபா கத்தாய்!
        பவளநன் நிறத்தாய்! தவளதூ ளிதத்தாய்! பரிபுரம் அலம்புபொற் பதத்தாய்!
கனகமுந் துகிலுந் தரளமும் வயிரக் கலன்களும் நிலந்தொறு மிடைந்த
        கனவளஞ் செறிந்த கடவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே!        3.

தந்தையை மனையை ஒக்கலைத் துணையைத் தாயைமென் குதலைவாய்ச் சேயைத்
        தனத்தையெள வனத்தை இன்பபோ கத்தைத் தையல்நல் லாள்பெறுந் திறத்தை
அந்தியும் பகலும் விரும்பிமெய் சோம்பி ஆழ்கடற் படுதுரும் பாகி
        அலக்கழிந் தேனைப் புலப்படத் திருத்தி ஆட்கொள நினைத்திலாய் அன்றோ!
சிந்தைநந் துருக இன்னிசை படித்துச் சிலம்பொலி யாரவே நடித்துச்
        செழும்புனற் சடைமேற் கரந்தையை முடித்துத் திருவெணீ(று) உடலெலாந் தரித்துக்
கந்தைகோ வணம்தோல் பொக்கணந் தாங்கிக் கபாலமொன் றேந்திநின் றவனே!
        கனவளஞ் செறிந்த கடவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே!         4.

வஞ்சகக் கிணறாய்த் துன்பவா ரிதியாய் வறுமையென் பதற்கிருப் பிடமாய்
        மறம்பொதி குடிலாய் அசத்திய வினதயாய் மயல்விளை கழனியாய்ப் பாவ
சஞ்சிதவடிவாய்ச் சருச்சரைப் புரமாய்ச் சங்கட நோய்க்களஞ் சியமாய்த்
        தலைதடு மாறித் திரியுமென் றனக்குன் தண்ணருள் கிடைக்குமோ? அறியேன்;
நஞ்சமும் பகுவாய்ச் சுடிகைமுள் ளெயிற்று நகைமணிப் பாந்தளஞ் சூழ்ந்த
        நளிரிளம் பிறையோ டொளிர்செழுஞ் சடையாய்! நங்கையர் முழுமதி முகத்தைக்
கஞ்சமென் மலர்கள் கண்டுவா யடுங்கும் கந்தமுந் தியதடஞ் சூழும்
        கனவளஞ் செறிந்த கடவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே!         5.

பிரமனுஞ் சலிக்கத் தாயர்சஞ் சலிக்கப் பேதையர் கண்(டு) அசங் கதிக்கப்
        பிணிகளூம் பகைக்க மூப்புவந் தலைக்கப் பின்றொடர்ந்(து) ஆசைசென் றிழுக்கத்
தருமனும் வெறுக்க நரகமும் ஒறுக்கத் தாரணி சுமந்துநொந் திளைக்கச்
        சகடெனச் சுழலும் கறங்கெனக் கொடிய சடலம தெடுக்கநான் இலக்கோ?
குடுமணி இமைக்கும் புதுமலர்த் தடத்தில் கோட்டிள மோட்டுமா மேதிக்
        குலங்கள்போய் படிந்து நலங்கிளர் செழுந்தேன் குவளைமென்(று) ஒழுக்கிய தோற்றம்
கரியமா கடலிற்புகுந்துநீர் அருந்துங் காளமே கங்களோ வெனவாய்க்
        கனவளஞ் செறிந்த கடவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே!        6.

மறுகுவெஞ் சினத்தர் தெருமவ குணத்தர் வஞ்சகம் பொதிந்தநெஞ் சகத்தர்
        வழக்கமொன் றில்லாப் பிணக்குறு மூடர் மதியிலாப் பதிதர்பால் அணுகிப்
பொறுமையில் தருமன் நெறியினில் சேடன் புலமையில் குறியமா முனிவன்
        புரந்தரன் எனவும் நிரந்தரம் புகழ்ந்து பொழுதவம் போக்கினன் அந்தோ
வெறிமலர்ப் பிரசஞ் சொரிந்துவண் டினங்கள் மிடைந்துமா முகிலினைக் கிழித்து
        மேலிடத்(து) இரவிப் பசும்புர விகளாய் விளங்கியே விண்டல முகட்டைக்
கருவினின் றோங்கிச் செறியும்ஐந் தருக்குள் கற்பகத் தருவினை யப்பாய்!
        கனவளஞ் செறிந்த கடவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே!         7.

நெஞ்சகக் குழைந்து பணிவிடைக் கிசைந்து நீறொடு கண்டிகை புனைந்து
        நிலவுபொற் கோயி லதைவலம் புரிந்து நெகிழுமுன் நாண்மலர் எடுத்து
வஞ்சமா மயக்கில் மயங்கும்ஐம் புலனாம் மாற்றலர் வலிமையைக் களைந்துன்
        மலர்ப்பதத்(து) இருத்தி அலக்கணைத் துரத்தி மதிமிகு வாழ்வளித் திடும்ஒம்
சுஞ்சகர் எனுநற் றூயமூன் றெழுத்தைச் சுகிர்தமாய் கொண்டருச் சனைசெய்
        தொண்டர்கள் உறவைக் கொண்டுனைப் பணியச் சுணங்கனாம் எனக்கருள் புரிவாய்;
கஞ்சமென் மலர்மீ(து) அஞ்சமே படரக் கார்மயில் ஓரமாய் நடிக்கும்
        கனவளஞ் செறிந்த கடவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே!         8.

மைக்கயல் விழியால் மயக்கியுள் ளுருக்கி மஞ்சளால் முகத்தினை மினுக்கி
        மணிநகை பெருக்கி ஆசையுண் டாக்கி வளரிள முலைத்துகில் இறுக்கிப்
பக்கல்வந் தமர்ந்து மென்மொழி பகர்ந்து பரவசம் அடைந்துமேல் விழுந்து
        படிற்றுளம் உணர்த்தாச் சத்திய முரைத்துப் பறித்திடப் பயிலுபா வையர்க்காய்த்
துக்கசா கரத்தில் அழுந்திநா டோறும் தோதகப் பட்டபா தகனைத்
        துய்யசெங் கமலச் செய்யதா ளிணைக்கே தொண்டுகொண் டால்குறை யுமோ?
கைக்கழங் காடுந் திறத்தினை நிகராய்க் கமலமென் மலர்மிழை அறுகால்
        களியடு சுழலுங் கடவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே!         9.

செயல்பணி விடையாய்ச் செப்பல்ஐந் தெழுத்தாய்த் திரிதலே வலம்புரி தலுமாய்ச்
        சிந்தையின் நினைவே தியானமாய் உண்டு தெவிட்டல்நை வேதனம் சிறப்பாய்த்
துயிறல்வந் தனையாய்த் திருவுளத் துவந்து துள்ளுவெள் விடையினில் ஏறித்
        தொண்டரும் விசும்பில் அண்டருங் காணத் தோகையோ(டு) எனக்குவந் தருள்வாய்;
வயல்கரம் புறைந்த கடைசியர் முகத்தை மதியம்என்(று) அதிசய மிகுந்து
        வரும்பக லிடத்தும் இரவினும் குவளை வாயடுங் காமலே விளங்கும்
கயனெடுந் தடமுங் கமுகமுங் கமுகைக் காட்டிய கன்னலும் பொதிந்த
        கனவளஞ் செறிந்த கடவையம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே!         10.
---------

3. திருக்கடவூர்க் காலசம்மாரமூர்த்தி சபதம்

சந்த விருத்தம்)

அந்தரத் தமரர் மந்தரத் தையலி அலைக டற்றலை நிறுத்திநின்(று)
        அழலுறாக் கடைய அதனிடைத் துடைய அமுத முற்றடையும் அண்ணலார்
கந்த ரத்திடை கறுப்பி னார்கவுரி கண்க ளித்திடு முறுப்பினார்
        கால காலகட வூரர் கோலமது கண்டு தண்டனிட வல்லபேர்
பந்தம் ஆசைய வமான நிந்தையடு பழிப்ப சத்திய மனப்பயம்
        படிறு வஞ்சனை அனர்த்தமா கொடுமை பாப மீறுகொலை சஞ்சலம்
தொந்த மோகமவி வேக மாசுசதி துயர மூடமுழு வைரநீள்
        தோதகங் குடிலம் அவகுணந் தவறு சோகமுந் தவிரு வார்களே.        1.

வெங்கயத் துரியர் பங்கையர்க் கரியர் வேத வாம்பரியர் தீதிலர்
        வீரர் விஞ்சுகர் வினோதர் கஞ்சுகர் வெற்றிமால் மகிழும் அத்தனார்
கங்க ணத்தர்மிகு வெங்க ணத்தலைவர் நளத்தி சைந்தபொரு நிர்த்தனர்
        கால காலகடவூரர் கோலமது கண்டு தணடனிட வல்லபேர்
திங்கள் வெண்குடை கவிப்ப மும்முரசு சென்று சென்றெதிர் ஒலிப்பஎண்
        திசைபுரக்கு மனர்கை முகிழ்ப்பஇகல் எவ்வருந் திறைய ளப்பமேல்
மங்கை மார்கவரி காலசைப் பநெடு மகர தோரண வளப்பமாய்
        மத்த யானைமிசை வெற்றி யாளரென வைய கந்தனில் இருப்பரே.         2.

திருகு வெள்ளெயிறு வரிநெடுங் கயிறு செய்ய குஞ்சியடு நஞ்செனச்
        சீறு கோபமுடன் ஏறுதீபவிழி தெறுமிடிக் குரல்மு ழக்கியே
கரும லைக்குநிகர் எருமையிற் பெரிய கால்மலைக் குவடு போல்வருங்
        கால காலகட வூரர் கோலமது கண்டு தண்டனிட வல்லபேர்
பொரும ழுப்படை இலங்கு செஞ்சடை பொருந்து வெள்ளிடை திருந்துவெண்
        பூதி யாகமொடு தோகை பாகமழல் பொங்கு நாகமணி கங்கணம்
பெருகு கங்கைநதி முடிவிளங் கிவதி பிஞ்சு மாமதி கொழுந்தழல்
        பெய்த பெற்றிபெறும் ஒற்றை நெற்றிவிழி பெற்றிருப் பர்அடை யாளமே.         3.

பெண்ணி டும்பரி புரத்தி னாரொலி பிறந்தி டும்பரி புரத்தினார்
        பிறைமு டிக்குளணி கங்கை யார்மறைப் பொருளை வைத்துளணி கங்கையார்
கண்ணி சைந்ததொரு மூன்றினா ருரிய கயிலை தாழநக மூன்றினார்
        கால காலகட வூரர் கோலமது கண்டுதண்டனிட வல்லபேர்
மண்ண ளந்தச ரணர்க்கு மென்முளரி மாலை யாபர ணர்க்கு மோர்
        வச்சி ரத்திறை வருக்கு எண்டிகிரி மாத்தி ரத்திறை வருக்குமே
விண்ண வர்க்குமிகு பண்ண வர்க்குமுயர் வித்த கர்க்குமதி யத்துவாழ்
        மெய்த்த வத்துநிலை பெற்ற வர்க்குமவர் மேலிருப் பர்அடயாளமே.         4.

உரக குண்டலர் நெருங்கி விண்டலர் உறைத்த வண்டுமுரல் கொன்றையார்
        உத்த ரீகமல ரொப்பி லாதசிலை ஒத்த நெற்றிமுலை மங்கையார்
கரக பாலர்திரி சூலர் நீலமணி கண்டர் புண்டரிக ஆடையார்
        கால காலகட வூரர் கோலமது கண்டு தண்டனிட வல்லபேர்
விரக மானதில் உணங்கி டார்; உடல் வேத னைப்பட அறிந்திலார்;
        வெகுளி யானது செறிந்திடார்; உலகை வேண்டி ஈனரை வணங்கிடார்;
நரக மென்பதினி எய்திடார்; கருமம் நல்ல(து) அல்லதவர் செய்திடா ர்;
        நமனிருந் ததிசை கண்டிடார்; இறுதி நாளுமே பகுதி யாவரே.         5.

துலைநி றுக்குமொரு வணிக னுக்குமது சூதனுக்குமநு நீதிசேர்
        தொல்புவிக் கரச னுக்குமிக் கதமிழ் சொல்லுமோர் புலவ னுக்குமெய்க்
கலைய னுக்குமதி நடுவ னுக்குமுனி காத லர்க்குமினி தருள்செயுங்
        கால காலகட வூரர் மேவிவளர் கயிலை போலவரு மயிலானார்
முலைய ரும்பிவரு பனசமே இனிய மொழியும் இன்பமுறு வனசமே
        முத்தை யத்தமணி மூரலே அளிகள் மொய்த்த தோள்களிள வேரலே
சிலையி ரண்டனைய புருவமே இரதி தேவி யத்தவள் உருவமே
        திருமிடற் றழகு சங்கமே அமுது சிந்து மாணடிபு சங்கமே.         6.

விதிசி ரத்தையரி பழியர் அஞ்சுகணை வேளுரத் தையெரி விழியர்மா
        மேருவிற் கையினர் நேர்கடுக் கையினர் வேள்வியிற் பணியும் வள்ளலார்
கதிர வன்றனது தந்தம் அம்புவியில் உதிர வன்பொடு புடைத்திடும்
        கால காலகட வூரர் மேவிவளர் கயிலை போலவரு மயிலனார்
மதியில் நஞ்சமு மிருக்குமோ கரிய மஞ்சு மாலிகை கரிக்குமோ?
        வாளரா அமுதம் ஊறுமோ? கனக வரையிலே புளக மீறுமோ?
எதிர்க லன்பல திருத்துமோ? இடையில் இலகுமே கலைபொ ருந்துமோ?
        விளங்கு தோட்கழை வியக்குமோ? இனிமை விண்ட சொற்கழை விளங்குமே.         7.

இகல றிந்துதரு பகையி னார்புரம் எரித்திடுங் கொடிய நகையினார்
        எரிம ழுப்படை வலத்தினார் முடியில் ஏறு மீறிய சலத்தினார்
ககன மண்டலமும் உருவி நின்றுவிதி காணொ ணாதொரு தாணுவார்
        கால காலகட வூரர் மேவிவளர் கயிலை போலவரு மயிலனார்
முகம திக்குவமை புகலுவார் அளிகள் மொய்குழற் குவமை நுவலுவார்
        முலையி னுக்குவமை பகருவார் இனிய மொழியி னுக்குவமை மொழிகுவார்
நகையி னுக்குவமை கூறுவார் சரண நடையி னுக்குவமை பேசுவார்
        நயமறிந் திளமை சொல்லுவார் எவரும் நடுவறிந் தவர்கள் இல்லையே.         8.

சிறைய னத்தநறை யெழுவளத் தறிவர் தினமனத் திடைதி யானமே
        செய்து தங்கள்வரம் எய்துதற் கரிய தேவ தேவர்பரி பூரணர்
கறைமிடற் றலைவர் அலைகடற் பரியர் கதிதரும் குரவை வெருவிலார்
        கால காலகட வூரர் கோலமது கண்டு கைதொழுது கொண்டுகாண்;
எறிதி ரைப்பறை முழக்கி அங்கைதனில் இக்குவார் சிலைவ ணக்கிநீள்
        இருதலைக் குமளி நாணி றுக்கிமுன் எழுந்து மீசையை முறுக்கிவேள்
வெறிம லர்க்கணை யெடுத்துங் கொடிய வேகமாயது தொடுத்தும்
        மெய்யி னிற்பட விடுத்துஞ் செவியில் விண்டு விண்டுசொல வேணுமே?        9.

குயில்மொ ழிப்புணர் முலைக்கருங் கணொடு கோதை பாதியுறை சோதியார்
        கொக்க ரித்துவரு தக்க னாருயிர் குறைத்தெ ழுந்திடு மறத்தினார்
கயிலை நாதர்கண நாதர் பூதியணி காய தாயசுமு மாயினார்
        கால காலகட வூரர் கோலமது கண்டு கைதொழுது வண்டுகாள்!
அயிலி னுங்கொடிய அம்பினால் மதுர ஆர வாரமிசை வேயினால்
        அந்த ரந்தனில் அசைந்துநின்(று) அடரும் அம்புலிக் கொடிய தீயினால்
துயில்து றந்துமெய் மறந்து வாடிமிக சோக மோகம் பிறந்துளத்
        தோதகப் படவும் நானகப் படுதல் சொல்லுவீர் மதனை வெல்லவே.         10.
--------------

4. திருக்கடவூர்க் காலசங்கார மூர்த்தி பின்முடுகு

வெண்பா

என்று தொழுவேன் எளியேன்; அளிமுரலும்
கொன்றைஅணி தென்கடவூர்க் கோமானே! - துன்றும்
கனற்பொறிகட் பகட்டிலுற்றுக் கறுத்ததெற்குத் திசைக்குளுரத்
தனைச்சினத்திட் டுதைத்தபத்மத் தாள்.         1.

தொண்டருடன் கூடித் துதித்திரண்டு கண்ணாரக்
கண்டு தொழுவேனோ? கடவூரா! - பண்டோர்
அமுதிருக்குஞ் சிறுகடத்(து) அன்றெழும் உனக்(கு)அன் பரைமருட்டும்
எமனையெற்றும் பரிபுரச்செந் தாள்.         2.

பற்றிப் பணிந்து பரவ வரந்தருவாய்
கற்றைச் சடையா! கடவூரா! - வெற்றிநெடுங்
கொண்டலொக்குங் கண்டசத்தங் கொண்டெதிர்த்(து)அங்ககங்கருக்கும்
சண்டனைக்கண் டன்றுதைக்கும் தாள்.         3.

மேகங் கவிந்ததுபோல் மேலெழுந்த காலனைக் கண்(டு)
ஆகந் தளர்ந்துநெஞ்சம் அஞ்சாமுன் - மாகடவூர்ப்
பூதநாதா! வேதகீதா! பூவிதாதா! தேடுபாதா!
மாதுபாகா! காலகாலா! வா.         4.

அன்றயன்மால் காணா அடிமுடியைக் காண்பதற்குத்
தென்றிசைக்கோன் என்னதவஞ் செய்தானோ? - வென்றிதிகழ்
ஆடரவாளா? நீறணிதோளா! ஆதிரைநாளா! மாதுமணாளா!
தோடவிர்காதா! மாகடவூரா! சொல். 5.

ஆற்றுமோ நெஞ்சத் தடங்குமோ கொண்டமையல்
கூற்றுதைத்த தென்கடவூர்க் கோமானே! - மாற்றுயர்பொற்
கும்பமுலைத் திங்கள்நுதற் கொந்தளகக் கொம்பைவெறுத்(து)
அம்புதொடுத்(து) அங்கசன்விட் டால்.         6.

தென்றல் உலவுந் திருக்கடவூர் எம்பெருமான்
மன்றல் செறிந்தே மதுவூறும் கொன்றைக்காப்
பொன்பரவுந்திண் கொங்கையிரண்டும் புண்பட நொந்தும் துன்பமிகுந்தும்
அன்புதிரண்டும்பெண் கொடிநெஞ் சும்.         7.

சுடுமோ இளந்தென்றல் தோகையின்மேல் அம்பு
படுமோமெய் வாதை படுமோ? - கடவூரா!
நீரணங்கார் வேணிநம்பா! நீலகண்டா! மேனியின்பால்
ஆரணங்கார் காலசங்கா ரா.         8.

பாலனுக் காவன்று பகடேறி வந்தெதிர்த்த
காலனுக்குக் காலா! கடவூரா! - மேலோர்
கரும்புகொண்டங்(கு) எதிர்ந்துவந்(து)அங் கசன்பொருஞ் செஞ்சரங்கள்கண்டு
மருண்டுநெஞ்சங் கலங்குமென் றன்மான்.         9.

நீதிநெறி வேதியர்கள் நீங்கா மறைபயிலும்
ஆதிகட வூரிலுறை அம்மானை - பாதம்
பரவியங்கம் புளகி வணங்கும் பொழுதுநெஞ்சங்
கரவுதுஞ்சுஞ் சமனஞ்சுங் காண்.         10.

திருக்கடவூர்ப் பிரபந்தங்கள் முற்றிற்று.


This webpage was last revised on 7 August 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).