tiruvarutpA of rAmalinga aTikaL
tirumuRai -VI part I (verses 3267 -3871)
(in tamil script, unicode format)

திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
ஆறாம் திருமுறை - முதற் பகுதி பாடல்கள் (3267 -3871)




Etext preparation (inaimathi format) Mr. Sivakumar of Singapore (www.vallalar.org)
Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஆறாம் திருமுறை - முதற் பகுதி பாடல்கள் (3267 -3871)

அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு
திருச்சிற்றம்பலம்

ஆறாம் திருமுறை - முதற் பகுதி

1. பரசிவ வணக்கம்

குறள்வெண்பா
3267 எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து.197
1
197. எல்லாம்வல் லான்தாளை ஏத்து - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3268 திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.198
2
198. 2500 ஆம் பாடலின் உத்தரவடிவம்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3269 அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே.
3

திருச்சிற்றம்பலம்

2. திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3270 அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்
அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்
பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்
பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்
இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்
எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்
சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.
1
3271 வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா
வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி
எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்
இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்
அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்
அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்
திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.
2
3272 சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்
தத்துவங்கள் விளக்கமெலாந் தருவிளக்க மாகி
நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி
நிலைத்தபரா பரைவிளக்க மாகிஅகம் புறமும்
பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்
பெருவிளக்க மாகிஎலாம் பெற்றவிளக் கமதாய்ச்
சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.
3
3273 இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக
இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்
தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்
சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்
நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்
ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்
திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.
4
3274 எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்
எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்
சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும்
துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த
வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்
மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்
செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.
5
3275 அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்
அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்
மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை
மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்
துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்
துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்
உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
6
3276 அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்
ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே
கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்
கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்
கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்
கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்
ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
7
3277 பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்
பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான
ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்
இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்
நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்
நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய்
ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
8
3278 இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர்
இலேசமதாய் எண்கடந்தே இலங்கியபிண் டாண்டம்
பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம்
பகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும்
விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி
விளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பே ரொளியாய்
உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
9
3279 ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம்
அணியோகா னந்தம்மதிப் பருஞானா னந்தம்
பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர்
பிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ
டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம்
இயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த
ஊற்றமதாம் சமரசஆ னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
10
3280 வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்
வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல்
புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே
புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி
மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம்
விதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி
உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
11
3281 இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்
வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்
உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
12
3282 ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
13

திருச்சிற்றம்பலம்

3. ஆற்றாமை

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3283 எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார்
ஈயினும் நாயினும் இழிந்தேன்
புழுவினும் சிறியேன்பொய்விழைந் துழல்வேன்
புன்மையேன் புலைத்தொழிற்கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன்
மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
1
3284 கற்றமே லவர்தம் உறவினைக் கருதேன்
கலகர்தம் உறவினிற் களித்தேன்
உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன்
உலகியற் போகமே உவந்தேன்
செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன்
தெய்வம்ஒன் றெனும்அறி வறியேன்
குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
2
3285 கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக்
கண்மனக் குரங்கனேன் கடையேன்
நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன்
நீசனேன் பாசமே உடையேன்
நடுமைஒன் றறியேன் கெடுமையிற் கிளைத்த
நச்சுமா மரம்எனக்கிளைத்தேன்
கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
3
3286 நிலத்திலும்பணத்தும் நீள்விழிமடவார்
நெருக்கிலும்பெருக்கிய நினைப்பேன்
புலத்திலும் புரைசேர் பொறியிலும் மனத்தைப்
போக்கிவீண் போதுபோக் குறுவேன்
நலத்தில்ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய
நாயினுங் கடையனேன் நவையேன்
குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
4
3287 செடிமுடிந் தலையும்மனத்தினேன் துன்பச்
செல்லினால்அரிப்புண்டசிறியேன்
அடிமுடி அறியும் ஆசைசற் றறியேன்
அறிந்தவர் தங்களை அடையேன்
படிமுடி வழித்துக் கடிகொளும் கடையர்
பணத்திலும் கொடியனேன் வஞ்சக்
கொடிமுடிந் திடுவேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
5
3288 அரங்கினிற் படைகொண் டுயிர்க்கொலை புரியும்
அறக்கடை யவரினுங் கடையேன்
இரங்கில்ஓர் சிறிதும் இரக்கம்உற் றறியேன்
இயலுறு நாசியுட் கிளைத்த
சிரங்கினிற் கொடியேன் சிவநெறி பிடியேன்
சிறுநெறிச் சழக்கையே சிலுகுக்
குரங்கெனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
6
3289 வாட்டமே உடையார் தங்களைக் காணின்
மனஞ்சிறிதிரக்கமுற் றறியேன்
கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன்
கூற்றினும் கொடியனேன் மாயை
ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன்
அச்சமும் அவலமும் இயற்றும்
கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
7
3290 கலைத்தொழில் அறியேன் கள்உணுங் கொடியேன்
கறிக்குழல் நாயினும் கடையேன்
விலைத்தொழில் உடையேன் மெய்எலாம் வாயாய்
விளம்புறும் வீணனேன் அசுத்தப்
புலைத்தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம்
பொங்கிய மனத்தினேன் பொல்லாக்
கொலைத்தொழில் புரிவேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
8
3291 பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப்
பணம்பறித் துழல்கின்ற படிறேன்
எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை
இயற்றுவேன் எட்டியே அனையேன்
மணமிலா மலரிற் பூத்தனன் இருகால்
மாடெனத் திரிந்துழல் கின்றேன்
குணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
9
3292 கடியரில் கடியேன் கடையரில் கடையேன்
கள்வரில் கள்வனேன் காமப்
பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன்
பொய்யரில் பொய்யனேன் பொல்லாச்
செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன்
தீயரில் தீயனேன் பாபக்
கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
10

திருச்சிற்றம்பலம்

4. பிறப்பவம் பொறாது பேதுறல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3293 குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன்
குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன்
மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்
வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்
நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா
நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்கும்மிக இழிந்தேன்
நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே.
1
3294 விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது
விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்
அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்
கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்
கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ
கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே.
2
3295 அறியாத பொறியவர்க்கும் இழிந்ததொழி லவர்க்கும்
அதிகரித்துத் துன்மார்க்கத் தரசுசெயுங் கொடியேன்
குறியாத கொடும்பாவச் சுமைசுமக்கும் திறத்தேன்
கொல்லாமை என்பதைஓர் குறிப்பாலும் குறியேன்
செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன்
சினத்தாலும் மதத்தாலும் செறிந்தபுதல் அனையேன்
எறியாத புவியிடைநான் ஏன்பிறந்தேன் உன்றன்
இதயமறி யேன்மன்றில் இனித்தநடத் திறையே.
3
3296 இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர்
இழிவிலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம்ஒன்றும் இல்லேன்
அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த
அறக்கடையர் தமக்கெல்லாம் அறக்கடையன் ஆனேன்
பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன்
பாதகமும் சூதகமும் பயின்றபெறும் படிறேன்
தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது
தனிக்கருத்தை அறிந்திலேன் சபைக்கேற்றும் ஒளியே.
4
3297 ஏறுகின்றேம் எனமதித்தே இறங்குகின்ற கடையேன்
ஏதமெலாம் நிறைமனத்தேன் இரக்கமிலாப் புலையேன்
சீறுகின்ற புலியனையேன் சிறுதொழிலே புரிவேன்
செய்வகைஒன் றறியாத சிறியரினும் சிறியேன்
மாறுகின்ற குணப்பேதை மதியதனால் இழிந்தேன்
வஞ்சம்எலாம் குடிகொண்ட வாழ்க்கைமிக உடையேன்
வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
மெய்க்கருத்தை அறிந்திலேன் விளங்குநடத் தரசே.
5
3298 அரசர்எலாம் மதித்திடப்பே ராசையிலே அரசோ
டால்எனவே மிகக்கிளைத்தேன் அருளறியாக் கடையேன்
புரசமரம் போற்பருத்தேன் எட்டிஎனத் தழைத்தேன்
புங்கெனவும் புளிஎனவும் மங்கிஉதிர் கின்றேன்
பரசும்வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன்
பசைஅறியாக் கருங்கல்மனப் பாவிகளிற் சிறந்தேன்
விரசுநிலத் தேன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
வியக்குமணி மன்றோங்கி விளங்குபரம் பொருளே.
6
3299 பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே
பொங்கிவழிந் துடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்
வையுண்டும் உழவுதவா மாடெனவே தடித்தேன்
வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன்
வீணர்களில் தலைநின்றேன் விலக்கனைத்தும் புரிவேன்
தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
திருவுளத்தை அறிந்திலேன் தெய்வநடந் தவனே.
7
3300 தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத்
தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்
பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன்
பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன்
அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால்
ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன்
நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
நல்லதிரு வுளம்அறியேன் ஞானநடத் திறையே.
8
3301 இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில்
இருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்
பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை
புரிகின்றேன் எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன்
நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த
நெடுஞ்சால நெஞ்சகத்தேன் நீலவிடம் போல்வேன்
கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
கருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே.
9
3302 காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்
களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்
நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்
ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்
அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்
கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே.
10

திருச்சிற்றம்பலம்

5. மாயைவலிக் கழுங்கல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3303 தாவு மான்எனக் குதித்துக்கொண் டோ டித்
தைய லார்முலைத் தடம்படுங் கடையேன்
கூவு காக்கைக்குச் சோற்றில்ஓர் பொருக்கும்
கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன்
ஓவு றாதுழல் ஈஎனப் பலகால்
ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன்
சாவு றாவகைக் கென்செயக் கடவேன்
தந்தை யேஎனைத் தாங்கிக்கொண் டருளே.
1
3304 போக மாதியை விழைந்தனன் வீணில்
பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
தேக மாதியைப் பெறமுயன் றறியேன்
சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும்
காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
ஆக மாதிசொல் அறிவறி வேனோ
அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
2
3305 விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன்
விருந்தி லேஉண வருந்திஓர் வயிற்றுக்
குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன்
கோப வெய்யனேன் பாபமே பயின்றேன்
வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன்
மாய மேபுரி பேயரில் பெரியேன்
பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன்
பரம னேஎனைப் பரிந்துகொண் டருளே.
3
3306 மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன்
வாட்ட மேசெயும் கூட்டத்தில் பயில்வேன்
இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன்
ஈயும் மொய்த்திடற் கிசைவுறா துண்பேன்
குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன்
கோடை வெய்யலின் கொடுமையிற் கொடியேன்
சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன்
தெய்வ மேஎனைச் சேர்த்துக்கொண் டருளே.
4
3307 கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக்
கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த
கழுதை யேன்அவப் பொழுதையே கழிப்பேன்
விடியு முன்னரே எழுந்திடா துறங்கும்
வேட னேன்முழு மூடரில் பெரியேன்
அடிய னாவதற் கென்செயக் கடவேன்
அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
5
3308 தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன்
சோற தேபெறும் பேறதென் றுணர்ந்தேன்
ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன்
இரக்கின் றோர்களே என்னினும் அவர்பால்
வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன்
வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன்
ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன்
உடைய வாஎனை உவந்துகொண்ட ருளே.
6
3309 வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து
வாடும் ஓர்பொதி மாடென உழன்றேன்
பருத்த ஊனொடு மலம்உணத் திரியும்
பன்றி போன்றுளேன் நன்றியொன் றறியேன்
கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த
கடைய நாயினிற் கடையனேன் அருட்குப்
பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன்
புண்ணி யாஎனைப் புரிந்துகொண் டருளே.
7
3310 துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச்
சூழ்க லோஎனக் காழ்கொளும் மனத்தேன்
தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன்
சந்தை நாயெனப் பந்தமுற் றலைவேன்
திருக்கெ லாம்பெறு வெருக்கெனப்199 புகுவேன்
தீய னேன்பெரும் பேயனேன் உளந்தான்
உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன்
உடைய வாஎனை உவந்துகொண் டருளே.
8
199. வெருக்கு - பூனை. ககரமெய் விரிக்கும் வழி விரித்தல். முதற்பதிப்பு
3311 கான மேஉழல் விலங்கினிற் கடையேன்
காம மாதிகள் களைகணிற் பிடித்தேன்
மான மேலிடச் சாதியே மதமே
வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன்
ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன்
இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன்
ஞான மேவுதற் கென்செயக் கடவேன்
நாய காஎனை நயந்துகொண் டருளே.
9
3312 இருளை யேஒளி எனமதித் திருந்தேன்
இச்சை யேபெரு விச்சைஎன் றலந்தேன்
மருளை யேதரு மனக்குரங் கோடும்
வனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன்
பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன்
பொதுவி லேநடம் புரிகின்றோய் உன்றன்
அருளை மேவுதற் கென்செயக் கடவேன்
அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
10

திருச்சிற்றம்பலம்

6. முறையீடு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3313 மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
1
3314 அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
அறிவறிந்த அந்தணர்பால் செறியும்நெறி அறியேன்
நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன்
நச்சுமரக் கனிபோல இச்சைகனிந் துழல்வேன்
மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
2
3315 கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த
கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன்
நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன்
நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்
சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும்
திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனோ
இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
3
3316 தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன்
சித்தாந்த நிலைஅறியேன் சித்தநிலைஅறியேன்
யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்
உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரில் கடையேன்
ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே
அம்பலத்தில் ஆடுகின்ற அடியைஅறி வேனோ
ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
4
3317 வேதாந்த நிலைநாடி விரைந்துமுயன் றறியேன்
மெய்வகையும் கைவகையும் செய்வகையும் அறியேன்
நாதாந்தத் திருவீதி நடந்திடுதற் கறியேன்
நான்ஆர்என் றறியேன்எங் கோன்ஆர்என் றறியேன்
போதாந்தத் திருநாடு புகஅறியேன் ஞான
பூரணா காயம்எனும் பொதுவைஅறி வேனோ
ஏதாந்தீ யேன்சரிதம் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
5
3318 கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும்
கதிஅறியேன் கதிஅறிந்த கருத்தர்களை அறியேன்
கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன்
கொடுங்காமக் கடல்கடக்கும் குறிப்பறியேன் குணமாம்
மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
6
3319 சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்
சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்
ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்
நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
7
3320 சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
தரம்அறியேன் போகாத தண்ணீரை அறியேன்
ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
8
200. ஏகம் - முத்தி, ஈறுதொக்கு நின்றது, முதற்பதிப்பு.
3321 தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்
சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன்
அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை
அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன்
சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே
தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ
எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
9
3322 வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்
திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே
தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன்
உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
10

திருச்சிற்றம்பலம்

7. அடியார் பேறு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3323 அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார்
வடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற பெரியர் வார்த்தைஎலாம்
நெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன் தனையும் நீக்கியதோ
கடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட பரிசுங் கண்டிலனே.
1
3324 பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள்
ஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே
மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன்
நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே.
2
3325 பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிதளிப்பான்
ஊழை அகற்றும் பெருங்கருணை உடையான் என்பார் உனைஐயோ
மோழை மனத்தால் குரங்கெறிந்த விளங்கா யாகி மொத்துண்ணும்
ஏழை அடியேன் வருத்தங்கண் டிருத்தல் அழகோ எங்கோவே.
3
3326 மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று
பொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில்
கருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே
இருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே.
4
3327 முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய
உன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே
மன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக்
கின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ.
5
3328 அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ
இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல்
செங்கேழ் இதழிச் சடைக்கனியே201 சிவமே அடிமைச் சிறுநாயேன்
எங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே.
6
201. செங்கேழ் வண்ணத் தனிக்கனியே - முதற்பதிப்பு, பொ. சு; பி. இரா. பாடம்.
3329 அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான
வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும்
தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான்
எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே.
7
3320 தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து
வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்
சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்
ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே.
8
3331 பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக்
கதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப
திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ
எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே.
9
3332 வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள்
பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான்
நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே
துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ.
10
3333 கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலேநான்
அல்லும் பகலுந் திருக்குறிப்பை எதிர்பார்த் திங்கே அயர்கின்றேன்
கொல்லுங் கொடியார்க் குதவுகின்ற குறும்புத் தேவர் மனம்போலச்
சொல்லும் இரங்கா வன்மைகற்க எங்கே ஐயோ துணிந்தாயோ.
11
3334 படிமேல் ஆசை பலவைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்துசுகக்
கொடிமேல் உறச்செய் தருள்கின்றாய் என்பால் இரக்கங் கொண்டிலையே
பொடிமேல் அணிநின் அருட்கிதுதான் அழகோ பொதுவில் நடிக்கும்உன்றன்
அடிமேல் ஆசை அல்லால்வே றாசை ஐயோ அறியேனே.
12
3335 நாயேன் உலகில் அறிவுவந்த நாள்தொட் டிந்த நாள்வரையும்
ஏயேன் பிறிதி லுன்குறிப்பே எதிர்பார்த் திருந்தேன் என்னுடைய
தாயே பொதுவில் நடம்புரிஎந் தாயே தயவு தாராயேல்
மாயேன் ஐயோ எதுகொண்டு வாழ்ந்திங் கிருக்கத் துணிவேனே.
13
3336 நயத்தால் உனது திருவருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை
உயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தாற் பின்னர் உலகத்தே
வயத்தால் எந்த உடம்புறுமோ என்ன வருமோ என்கின்ற
பயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின் றேன்எம் பரஞ்சுடரே.
14
3337 இன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா தேறி யிருக்கின்றார்
வன்ப ரிடத்தே பலகாற்சென் றவரோ டுறவு வழங்கிஉன்றன்
அன்பர் உறவை விடுத்துலகில் ஆடிப் பாடி அடுத்தவினைத்
துன்ப முடுகிச் சுடச்சுடவுஞ் சோறுண் டிருக்கத் துணிந்தேனே.
15
3338 எந்நாள் கருணைத் தனிமுதல்நீ என்பால் இரங்கி அருளுதலோ
அந்நாள் இந்நாள் இந்நாள்என் றெண்ணி எண்ணி அலமந்தேன்
சென்னாள் களில்ஓர் நன்னாளுந் திருநா ளான திலைஐயோ
முன்னாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே.
16
3339 எந்த வகைசெய் திடிற்கருணை எந்தாய் நீதான் இரங்குவையோ
அந்த வகையை நான்அறியேன் அறிவிப் பாரும் எனக்கில்லை
இந்த வகைஇங் கையோநான் இருந்தால் பின்னர் என்செய்வேன்202
பந்த வகைஅற் றவர்உளத்தே நடிக்கும் உண்மைப் பரம்பொருளே203.
17
202. என்செய்கேன் - ச மு க. பதிப்பு.
203. பரஞ்சுடரே - படிவேறுபாடு. ஆ பா.
3340 அடுக்குந் தொண்டர் தமக்கெல்லாம் அருளீந் திங்கே என்னளவில்
கொடுக்குந் தன்மை தனைஒளித்தால் ஒளிக்கப் படுமோ குணக்குன்றே
தடுக்குந் தடையும் வேறில்லை தமியேன் தனைஇத் தாழ்வகற்றி
எடுக்குந் துணையும் பிறிதில்லை ஐயோ இன்னும் இரங்கிலையே.
18
3341 எல்லாம் உடையாய் நின்செயலே எல்லாம் என்றால் என்செயல்கள்
எல்லாம் நினது செயல்அன்றோ என்னே என்னைப் புறந்தள்ளல்
வல்லாய் என்னைப் புறம்விடுத்தால் புறத்தும் உன்றன் மயம்அன்றே
நல்லார் எங்கும் சிவமயம்என் றுரைப்பார் எங்கள் நாயகனே.
19
3342 கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து
வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும்
பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில்
ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே.
20

திருச்சிற்றம்பலம்

8. ஆன்ம விசாரத் தழுங்கல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3343 போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன்
பூப்பினும் புணர்ந்தவெம் பொறியேன்
ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின்
இச்சையால் எருதுநோ வறியாக்
காகமே எனப்போய்ப் பிறர்தமை வருத்திக்
களித்த பாதகத்தொழிற் கடையேன்
மோகமே உடையேன் என்னினும் எந்தாய்
முனிந்திடேல் காத்தருள் எனையே.
1
3344 பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப்
புணர்ந்தவெம் புலையனேன் விடஞ்சார்
பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த
பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும்
ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன்
அன்பினால் அடுத்தவர் கரங்கள்
கூப்பினுங் கூப்பாக் கொடுங்கையேன் எனினும்
கோபியேல் காத்தருள் எனையே.
2
3345 விழுத்தலை நெறியை விரும்பிலேன் கரும்பின்
மிகஇனிக் கின்றநின் புகழ்கள்
வழுத்தலை அறியேன் மக்களே மனையே
வாழ்க்கையே துணைஎன மதித்துக்
கொழுத்தலை மனத்துப் புழுத்தலைப் புலையேன்
கொக்கனேன் செக்கினைப் பலகால்
இழுத்தலை எருதேன் உழத்தலே உடையேன்
என்னினும் காத்தருள் எனையே.
3
3346 புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து
பொறுக்கிய சுணங்கனேன் புரத்தில்
தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த
தயவிலாச் சழக்கனேன் சழக்கர்
உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில்
உழன்றுழன் றழன்றதோர் உளத்தேன்
இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன்
என்னினும் காத்தருள் எனையே.
4
3347 கொட்டிலை அடையாப் பட்டிமா டனையேன்
கொட்டைகள் பரப்பிமேல் வனைந்த
கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த
கடையனேன் கங்குலும் பகலும்
அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை
அறவுண்டு குப்பைமேற் போட்ட
நெட்டிலை அனையேன் என்னினும் வேறு
நினைத்திடேல் காத்தருள் எனையே.
5
3348 நேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில்
நெருக்கிய மனத்தினேன் வீணில்
போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன்
புனைகலை இலர்க்கொரு கலையில்
ஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள
உடுத்துடுத் தூர்தொறுந் திரிந்தேன்
ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன்
என்னினும் காத்தருள்எனையே.
6
3349 அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன்
அசடனேன் அறிவிலேன்உலகில்
குளத்திலே குளிப்பார் குளிக்கவெஞ் சிறுநீர்க்
குழியிலே குளித்தவெங் கொடியேன்
வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க
மனங்கொணட சிறியேனன் மாயைக்
களத்திலே பயின்ற உளத்திலே பெரியன்
என்னினும் காத்தருள் எனையே.
7
3350 தொழுதெலாம் வல்ல கடவுளே நின்னைத்
துதித்திலேன் தூய்மைஒன் றறியேன்
கழுதெலாம் அனையேன் இழுதெலாம் உணவில்
கலந்துணக் கருதிய கருத்தேன்
பழுதெலாம் புரிந்து பொழுதெலாம் கழித்த
பாவியேன் தீமைகள் சிறிதும்
எழுதலாம் படித்தன் றெனமிக உடையேன்
என்னினும் காத்தருள் எனையே.
8
3351 வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை
மனைகவர் கருத்தினேன் ஓட்டைச்
சட்டியே எனினும் பிறர்கொளத் தரியேன்
தயவிலேன் சூதெலாம் அடைத்த
பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில்
பெரியவர் மனம்வெறுக் கச்செய்
எட்டியே மண்ணாங் கட்டியே அனையேன்
என்னினும் காத்தருள் எனையே.
9
3352 உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந்
தோதிய வறிஞருக் கேதும்
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன் உலகில்
குணம்பெரி துடையநல் லோரை
அடுத்திலேன் அடுத்தற் காசையும் இல்லேன்
அவனிமேல் நல்லவன் எனப்பேர்
எடுத்திலேன் எனினும் தெய்வமே துணைஎன்
றிருக்கின்றேன் காத்தருள் எனையே.
10

திருச்சிற்றம்பலம்

9. அவா அறுத்தல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3353 தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம்
தக்கமுப் போதினும் தனித்தே
சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார்
சிறியனேன் தவஞ்செய்வான் போலே
ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே
நவிலும்இந் நாய்வயிற் றினுக்கே
காலையா தியமுப் போதினும் சோற்றுக்
கடன்முடித் திருந்தனன் எந்தாய்.
1
3354 சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன்
துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி
ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என்
றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில்
பொருந்திய காரசா ரஞ்சேர்
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை
தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
2
3355 விருப்பிலேன் போலக் காட்டினேன் அன்றி
விளைவிலா தூண்எலாம் மறுத்த
கருப்பிலே எனினும் கஞ்சியா திகளைக்
கருத்துவந் துண்ணுதற் கமையேன்
நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும்
நீரிடாத் தயிரிலே நெகிழ்ந்த
பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை
பற்றினேன் என்செய்வேன் எந்தாய்.
3
3356 உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என்
றொருவனை உரைப்பதோர் வியப்போ
குறியிலே அமைத்த உணவெலாம் திருடிக்
கொண்டுபோய் உண்டனன் பருப்புக்
கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக்
கறியிலே கலந்தபே ராசை
வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு
வீங்கிட உண்டனன் எந்தாய்.
4
3357 கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த
கீரையே விரும்பினேன் வெறுந்தண்
நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின்
நீரையே விரும்பினேன் உணவில்
ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன்
அய்யகோ அடிச்சிறு நாயேன்
பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம்
பிடிக்குமே என்செய்வேன் எந்தாய்.
5
3358 பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே
பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை
தகுபலா மாமுதற் பழத்தின்
தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும்
சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க
வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.
6
3359 உடம்பொரு வயிறாய்ச் சருக்கரை கலந்த
உண்டியே உண்டனன் பலகால்
கடம்பெறு புளிச்சோ றுண்டுளே களித்தேன்
கட்டிநல் தயிரிலே கலந்த
தடம்பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச்
சம்பழச் சோற்றிலே தடித்தேன்
திடம்பெறும் மற்றைச் சித்திரச் சோற்றில்
செருக்கினேன் என்செய்வேன் எந்தாய்.
7
3360 மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில்
விருப்பெலாம் வைத்தனன்உதவாச்
சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த
துவையலே சுவர்க்கம்என் றுண்டேன்
இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில்
எவற்றிலும் இச்சைவைத் திசைத்தேன்
குளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை
கொண்டனன் என்செய்வேன்எந்தாய்.
8
3361 தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும்
தவறவிட் டிடுவதற் கமையேன்
கொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக்
கொட்டினேன் குணமிலாக் கொடியேன்
வண்டுபோல் விரைந்து வயல்எலாம் நிரம்ப
மலங்கொட்ட ஓடிய புலையேன்
பண்டுபோல் பசித்தூண் வருவழி பார்த்த
பாவியேன் என்செய்வேன் எந்தாய்.
9
3362 வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டி
வைத்தலே துவட்டலில் சுவைகள்
உறுத்தலே முதலா உற்றபல் உணவை
ஒருமல வயிற்றுப்பை உள்ளே
துறுத்தலே எனக்குத் தொழில்எனத் துணிந்தேன்
துணிந்தரைக் கணத்தும்வன் பசியைப்
பொறுத்தலே அறியேன் மலப்புலைக் கூட்டைப்
பொறுத்தனன் என்செய்வேன் எந்தாய்.
10
3363 பருப்பிடி யரிவா லிடிகளா திகளால்
பண்ணிய பண்ணிகா ரங்கள்
உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம்
ஒருபெரு வயிற்றிலே அடைத்தேன்
கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய
கடையரில் கடையனேன் உதவாத்
துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து
தூங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
11
3364 அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள்
அடுக்கிய இடந்தொறும் அலைந்தே
தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத்
தவம்புரிந் தான்என நடித்தேன்
பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப்
பொங்கினேன் அய்யகோ எனது
முடிக்கடி புனைய முயன்றிலேன் அறிவில்
மூடனேன் என்செய்வேன் எந்தாய்.
12
3365 உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை
உடையவா அடியனேன் உனையே
அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன்
அப்பநின் ஆணைநின் தனக்கே
தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன்
தூயனே துணைநினை அல்லால்
கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண்
கைவிடேல் கைவிடேல் எந்தாய்.
13

திருச்சிற்றம்பலம்

10. தற் சுதந்தரம் இன்மை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3366 இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற்
கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே
எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை
அருட்சோதி இயற்கை என்னும்
துப்பாய உடலாதி தருவாயோ
இன்னும்எனைச் சோதிப் பாயோ
அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ்
வடியேனால் ஆவ தென்னே.
1
3367 என்னேஎம் பெருமான்இங் கின்னும்அணைந்
திலன்என்றே ஏங்கி ஏங்கி
மன்னேஎன் மணியேகண் மணியேஎன்
வாழ்வேநல் வரத்தாற் பெற்ற
பொன்னேஅற் புதமேசெம் பொருளேஎன்
புகலேமெய்ப் போத மேஎன்
அன்னேஎன் அப்பாஎன் றழைத்தலன்றி
அடியேனால் ஆவ தென்னே.
2
3368 பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி
எடுத்தரையில் புனைவேன் சில்லோர்
தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி
ஓடுவனித் தரத்தேன் இங்கே
முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின்
அருள்இலதேல் முன்னே வைத்த
அடிஎடுக்க முடியாதே அந்தோஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
3
3369 பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால்
பணிகின்றேன் பதியே நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால்
குழைகின்றேன் குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால்
உறங்குகின்றேன் உறங்கா தென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
4
3370 உடுப்பவனும் உண்பவனும் நானேஎன்
னவும்நாணம் உறுவ தெந்தாய்
தடுப்பவனும் தடைதீர்த்துக் கொடுப்பவனும்
பிறப்பிறப்புத் தன்னை நீக்கி
எடுப்பவனும் காப்பவனும் இன்பஅனு
பவஉருவாய் என்னுள் ஓங்கி
அடுப்பவனும் நீஎன்றால் அந்தோஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
5
3371 சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற
பெரும்பாவம் தன்னை எண்ணி
நோவதின்று புதிதன்றே என்றும்உள
தால்இந்த நோவை நீக்கி
ஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே
ஆகும்மற்றை இறைவ ராலே
ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
6
3372 இசைத்திடவும் நினைத்திடவும் பெரிதரிதாம்
தனித்தலைமை இறைவா உன்றன்
நசைத்திடுபே ரருட்செயலால் அசைவதன்றி
ஐந்தொழில்செய் நாத ராலும்
தசைத்திடுபுன் துரும்பினையும் அகங்கரித்துத்
தங்கள்சுதந் தரத்தால் இங்கே
அசைத்திடற்கு முடியாதேல் அந்தோஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
7
3373 கல்லாய மனத்தையும்ஓர் கணத்தினிலே
கனிவித்துக் கருணை யாலே
பல்லாரும் அதிசயிக்கப் பக்குவந்தந்
தருட்பதமும் பாலிக் கின்றோய்
எல்லாஞ்செய் வல்லோய்சிற் றம்பலத்தே
ஆடல்இடு கின்றோய் நின்னால்
அல்லால்ஒன் றாகாதேல் அந்தோஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
8
3374 கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய்
குற்றமெலாம் கருதி மாயைத்
திரைசேரப் புரிந்தாலும் திருவுளமே
துணைஎனநான் சிந்தித் திங்கே
உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என்
உறவேஎன் உயிரே என்றன்
அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
9
3375 இன்பேநன் றருளிஅருள் இயற்கையிலே
வைத்தாலும் இங்கே என்னைத்
துன்பேசெய் வித்தாலும் என்செய்வேன்
நின்னருளே துணைஎன் றந்தோ
என்பேதை மனமடங்கி இருப்பதன்றி
எல்லாங்கண் டிருக்கும் என்றன்
அன்பேஎன் அம்மேஎன் அப்பாஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
10

திருச்சிற்றம்பலம்

11. அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3376 திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான
உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்
பொங்கிஅகம் புறங்காணா தெங்கு நிறைந்திடுமோ
அருத்தகும்அவ் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்
அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.
1
3377 கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ
அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்
வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
தனதுதிரு உளம்எதுவோ சற்றுமறிந் திலனே.
2
3378 நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ
ஞானவெளி நடுஇன்ப நடந்தரிசிப் பேனோ
போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ
புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ
வெறுவெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ
பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும்
பரமர்திரு உளம்எதுவோ பரமம்அறிந் திலனே.
3
3379 சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்
சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ
பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும்
பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ
நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத
நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ
மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான்
வள்ளல்குரு நாதர்திரு உள்ளம்அறி யேனே.
4
3380 களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ
வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
ஜோதிதிரு உளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.
5
3381 திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம்
சித்திஎனும் பெண்ணரசி எத்திஎன்கை பிடித்தாள்
கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர்
காரிகைதான் கண்டளவில் கனிந்துமகிழ்ந் திடுமோ
விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம்
விளைந்திடுமோ இவர்க்குநிதம் சண்டைவிளைந் திடுமோ
தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ
தடைபடுமோ திருஉளந்தான் சற்றும்அறிந் திலனே.
6
3382 ஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே
அருமருந்தொன் றென்கருத்தில் அடைந்தமர்ந்த ததுதான்
கானந்த மதத்தாலே காரமறை படுமோ
கடுங்கார மாகிஎன்றன் கருத்தில்உறைந் திடுமோ
ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ
உணக்கசந்து குமட்டிஎதிர் எடுத்திடநேர்ந் திடுமோ
நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ
நல்லதிரு உளம்எதுவோ வல்லதறிந் திலனே.
7
3383 தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன்
சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை
காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ
கனிந்தபழங் கொண்டுவருங் காலதனை மதமாம்
பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ
பின்படுமோ முன்படுமோ பிணங்கிஒளித் திடுமோ
வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை
மறந்திடுமோ திருஉளத்தின் வண்ணம்அறிந் திலனே.
8
3384 தீட்டுமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டேத்தச்
செல்கின்றேன் சிறியேன்முன் சென்றவழி அறியேன்
காட்டுவழி கிடைத்திடுமோ நாட்டுவழி தருமோ
கால்இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம்
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ
விவேகம்எனும் துணையுறுமோ வேடர்பயம் உறுமோ
ஈட்டுதிரு வடிச்சமுகம் காணவும்நேர்ந் திடுமோ
எப்படியோ திருஉளந்தான் ஏதும்அறிந் திலனே.
9
3385 ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே
நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன்
ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ
உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ
ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ
இச்சைஎனும் இராக்கதப்பேய் எனைப்பிடித்துக் கொளுமோ
ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ
ஐயர்திரு உளம்எதுவோ யாதுமறிந் திலனே.
10

திருச்சிற்றம்பலம்

12. பிள்ளைச் சிறு விண்ணப்பம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3386 தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்
தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப்
பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
அம்மைஅப் பாஇனி ஆற்றேன்.
1
3387 பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம்
பெற்றவர் அறிவரே அல்லால்
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற
வள்ளலே மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர்எண் குணத்தவ நீதான்
குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என் றனைநீ
முனிவதென் முனிவுதீர்ந் தருளே.
2
3388 வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை
விரும்பினும் அங்ஙனம் புரியச்
சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற
தந்தைதாய் மகன்விருப் பாலே
இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ
என்றனை விழைவிக்க விழைந்தேன்
செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின்
திருவுளம் அறியுமே எந்தாய்.
3
3389 பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர்
புல்முனை ஆயினும் பிறர்க்கு
நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால்
நண்ணிய கருணையால் பலவே
கைபிழை யாமை கருதுகின் றேன்நின்
கழற்பதம் விழைகின்றேன் அல்லால்
செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ
திருவுளம் அறியுமே எந்தாய்.
4
3390 அப்பணி முடி204என் அப்பனே மன்றில்
ஆனந்த நடம்புரி அரசே
இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட்
டிந்தநாள் வரையும்என் தனக்கே
எப்பணி இட்டாய் அப்பணி அலதென்
இச்சையால் புரிந்ததொன் றிலையே
செப்புவ தென்நான் செய்தவை எல்லாம்
திருவுளம் அறியுமே எந்தாய்.
5
204. அப்பணிசடை - ச. மு. க. பதிப்பு.
3391 முன்னொடு பின்னும் நீதரு மடவார்
முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
பொன்னொடு விளங்கும் சபைநடத் தரசுன்
புணர்ப்பலால் என்புணர்ப் பலவே
என்னொடும் இருந்திங் கறிகின்ற நினக்கே
எந்தைவே றியம்புவ தென்னோ
சொன்னெடு வானத் தரம்பையர் எனினும்
துரும்பெனக் காண்கின்றேன் தனித்தே.
6
3392 இன்னுமிங் கெனைநீ மடந்தையர் முயக்கில்
எய்துவித் திடுதியேல் அதுவுன்
தன்னுளப் புணர்ப்பிங் கெனக்கொரு சிறிதும்
சம்மதம் அன்றுநான் இதனைப்
பன்னுவ தென்னே இதில்அரு வருப்புப்
பால்உணும் காலையே உளதால்
மன்னும்அம் பலத்தே நடம்புரி வோய்என்
மதிப்பெலாம் திருவடி மலர்க்கே.
7
3393 அறிவிலாச் சிறிய பருவத்திற் றானே
அருந்தலில் எனக்குள வெறுப்பைப்
பிறிவிலா தென்னுட் கலந்ததீ அறிதி
இன்றுநான் பேசுவ தென்னே
செறிவிலாக் கடையேன் என்னினும் அடியேன்
திருவருள் அமுதமே விழைந்தேன்
எறிவிலாச் சுவைவே றெவற்றினும் விழைவோர்
எட்டுணை யேனும்இன் றெந்தாய்.
8
3394 இன்சுவை உணவு பலபல எனக்கிங்
கெந்தைநீ கொடுப்பிக்கச் சிறியேன்
நின்சுவை உணவென் றுண்கின்றேன் இன்னும்
நீதரு வித்திடில் அதுநின்
தன்சுதந் தரம்இங் கெனக்கதில் இறையும்
சம்மதம் இல்லைநான் தானே
என்சுதந் தரத்தில் தேடுவேன் அல்லேன்
தேடிய தும்இலை ஈண்டே.
9
3395 செறிவதில் மனத்தேன் காசிலே ஆசை
செய்திலேன் இந்தநாள் அன்றி
அறிவதில் லாத சிறுபரு வத்தும்
அடுத்தவர் கொடுத்தகா சவர்மேல்
எறிவதும் மேட்டில் எறிந்ததும் எனக்குள்
இருக்கின்ற நீ அறிந் ததுவே
பிறிவதில் லாநின் அருட்பெரும் பொருளைப்
பெற்றனன் பேசுவ தென்னே.
10
3396 பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான்
படைத்தஅப் பணங்களைப் பலகால்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன்
கேணியில் எறிந்தனன் எந்தாய்
குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை
எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக்
கண்டனன் இனிச்சொல்வ தென்னே.
11
3397 கிளைத்தஇவ் வுடம்பில் ஆசைஎள் ளளவும்
கிளைத்திலேன் பசிஅற உணவு
திளைத்திடுந் தோறும் வெறுப்பொடும் உண்டேன்
இன்றுமே வெறுப்பில்உண் கின்றேன்
தளைத்திடு முடைஊன் உடம்பொரு சிறிதும்
தடித்திட நினைத்திலேன் இன்றும்
இளைத்திட விழைகின் றேன்இது நான்தான்
இயம்பல்என் நீஅறிந் ததுவே.
12
3398 இவ்வுல கதிலே இறைஅர சாட்சி
இன்பத்தும் மற்றைஇன் பத்தும்
எவ்வள வெனினும் இச்சைஒன் றறியேன்
எண்ணுதோ றருவருக் கின்றேன்
அவ்வுலக கதிலே இந்திரர் பிரமர்
அரிமுத லோர்அடை கின்ற
கவ்வைஇன் பத்தும் ஆசைசற் றறியேன்
எந்தைஎன் கருத்தறிந் ததுவே.
13
3399 சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும்
சாற்றிடும் யோகமோர் நான்கும்
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது
புந்தியில் ஆசைசற் றறியேன்
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை
பெற்றிலேன் முத்திபெற் றிடவும்
உறியதோர் இச்சை எனக்கிலை என்றன்
உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்.
14
3400 இறக்கவும் ஆசை இல்லைஇப் படிநான்
இருக்கவும் ஆசைஇன் றினிநான்
பிறக்கவும் ஆசை இலைஉல கெல்லாம்
பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள்
செய்யவும் ஆசைஒன் றில்லை
துறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து
தூங்கவும் ஆசைஒன் றிலையே.
15
3401 சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித்
தனித்தபே ரன்புமெய் அறிவும்
நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா
நல்லமெய் வாழ்க்கையும் பெற்றே
சிற்சபை நடமும் பொற்சபை நடமும்
தினந்தொறும் பாடிநின் றாடித்
தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம்
செய்வதென் இச்சையாம் எந்தாய்.
16
3402 உருமலி உலகில் உன்னைநான் கலந்தே
ஊழிதோ றூழியும் பிரியா
தொருமையுற் றழியாப் பெருமைபெற் றடியேன்
உன்னையே பாடி நின்றாடி
இருநிலத் தோங்கிக் களிக்கவும் பிறருக்
கிடுக்கணுற் றால்அவை தவிர்த்தே
திருமணிப் பொதுவில் அன்புடை யவராச்
செய்யவும் இச்சைகாண் எந்தாய்.
17
3403 எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே
எண்ணிநல் இன்புறச் செயவும்
அவ்வுயிர் களுக்கு வரும்இடை யூற்றை
அகற்றியே அச்சநீக் கிடவும்
செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச்
சிவசிவ என்றுகூத் தாடி
ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே
ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்.
18
3404 உலகறி வெனக்கிங் குற்றநாள் தொடங்கி
உன்அறி வடையும்நாள் வரையில்
இலகிஎன் னோடு பழகியும் எனைத்தான்
எண்ணியும் நண்ணியும் பின்னர்
விலகிய மாந்தர் அனைவரும் இங்கே
மெய்யுறக் கூடிநின் றுனையே
அலகில்பே ரன்பில் போற்றிவாழ்ந் திடவும்
அடியனேற் கிச்சைகாண் எந்தாய்.
19
3405 திருவளர் திருச்சிற் றம்பலம் ஓங்கும்
சிதம்பரம் எனும்பெருங் கோயில்
உருவளர் மறையும் ஆகமக் கலையும்
உரைத்தவா றியல்பெறப் புதுக்கி
மருவளர் மலரின் விளக்கிநின் மேனி
வண்ணங்கண் டுளங்களித் திடவும்
கருவளர் உலகில் திருவிழாக் காட்சி
காணவும் இச்சைகாண் எந்தாய்.
20
3406 தங்கமே அனையார் கூடிய ஞான
சமரச சுத்தசன் மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம்
சார்திருக் கோயில்கண் டிடவும்205
துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி
துலங்கவும் சங்கத்தில் அடியேன்
அங்கமே குளிர நின்றனைப் பாடி
ஆடவும் இச்சைகாண் எந்தாய்.
21
205. சங்கம் சார்திருக்கோயில் - வடலூர் ஞானசபை. ச . மு. க.
3407 கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த
கடுந்துயர் அச்சமா திகளைத்
தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம்
தரவும்வன் புலைகொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க
உஞற்றவும் அம்பலந் தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை
வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய்.
22
3408 மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும்
வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
கணமும்நான் சகித்திடமாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால்
இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான்
நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.
23
3409 இவையலால் பிறிதோர் விடயத்தில் இச்சை
எனக்கிலை இவைஎலாம் என்னுள்
சிவையொடும் அமர்ந்த பெருந்தயா நிதிநின்
திருவுளத் தறிந்தது தானே
தவம்இலேன் எனினும் இச்சையின் படிநீ
தருதலே வேண்டும்இவ் விச்சை
நவைஇலா இச்சை எனஅறி விக்க
அறிந்தனன் நவின்றனன் எந்தாய்.
24

திருச்சிற்றம்பலம்

13. பிள்ளைப் பெரு விண்ணப்பம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3410 தனிப்பெருஞ் சோதித் தலைவனே எனது
தந்தையே திருச்சிற்றம் பலத்தே
கனிப்பெருங் கருணைக் கடவுளே அடியேன்
கருதிநின் றுரைக்கும்விண் ணப்பம்
இனிப்புறும் நினது திருவுளத் தடைத்தே
எனக்கருள் புரிகநீ விரைந்தே
இனிச்சிறு பொழுதும் தரித்திடேன் உன்றன்
இணைமலர்ப் பொன்னடி ஆணை.
1
3411 திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே
திகழ்கின்ற தெய்வமே அன்பர்
பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும்
பண்பனே பரையிடப் பாகா
பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற
பேரருட் சோதியே எனக்கே
உரியநல் தந்தை வள்ளலே அடியேன்
உரைக்கின்றேன் கேட்டருள் இதுவே.
2
3412 தானலா திறையும் உயிர்க்கசை வில்லாத்
தலைவனே திருச்சிற்றம் பலத்தே
வானலால் வேறொன் றிலைஎன உரைப்ப
வயங்கிய மெய்யின்ப வாழ்வே
ஊனலால் உயிரும் உளமும்உள் உணர்வும்
உவப்புற இனிக்குந்தெள் ளமுதே
ஞானநா டகஞ்செய் தந்தையே அடியேன்
நவில்கின்றேன் கேட்டருள் இதுவே.
3
3413 என்னுயிர்க் குயிராம் தெய்வமே என்னை
எழுமையும் காத்தருள் இறைவா
என்னுளத் தினிக்கும் தீஞ்சுவைக் கனியே
எனக்கறி வுணர்த்திய குருவே
என்னுடை அன்பே திருச்சிற்றம் பலத்தே
எனக்கருள் புரிந்தமெய் இன்பே
என்னைஈன் றெடுத்த தந்தையே அடியேன்
இசைக்கின்றேன் கேட்கஇம் மொழியே.
4
3414 கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே
கனிந்தசிற் றம்பலக் கனியே
வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி
வயங்கிய வள்ளலே அன்பர்
தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத்
தெய்வமே திருவருட் சிவமே
தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே
தரித்தருள் திருச்செவிக் கிதுவே.
5
3415 என்னைஆண் டருளி என்பிழை பொறுத்த
இறைவனே திருச்சிற்றம் பலத்தே
என்னைஆண் டஞ்சேல் உனக்குநல் அருளிங்
கீகுதும் என்றஎன் குருவே
என்னைவே றெண்ணா துள்ளதே உணர்த்தி
எனக்குளே விளங்குபே ரொளியே
என்னைஈன் றளித்த தந்தையே விரைந்திங்
கேற்றருள் திருச்செவிக் கிதுவே.
6
3416 இரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென்
இதயத்தில் எழுந்திருந் தருளி
விரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு
விளங்கிட விளக்கியுட் கலந்தே
கரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன்
கலந்தென இனிக்கின்றோய் பொதுவில்
அரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே
அடைத்தருள் என்மொழி இதுவே.
7
3417 மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி
மன்னிய வடிவளித் தறிஞர்
குலத்திலே பயிலுந் தரமுமிங் கெனக்குக்
கொடுத்துளே விளங்குசற் குருவே
பலத்திலே சிற்றம் பலத்திலே பொன்னம்
பலத்திலே அன்பர்தம் அறிவாம்
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது
தந்தையே கேட்கஎன் மொழியே.
8
3418 விண்டபோ தகரும் அறிவரும் பொருளே
மெய்யனே ஐயனே உலகில்
தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர்
சூழ்ந்தவர் உறவினர் தாயர்
கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனும்இக்
குறிப்பினர் முகங்களில் இளைப்பைக்
கண்டபோ தெல்லாம் மயங்கிஎன் னுள்ளம்
கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
9
3419 சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது
தெய்வமே என்பெருஞ் சிறப்பே
ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர்
அடுத்தவர் உறவினர் நேயர்
வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால்
மெய்யுளம் வெதும்பிய வெதுப்பைப்
பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம்
பதைத்ததுன் உளம்அறி யாதோ.
10
3420 பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும்
பரமனே அரும்பெரும் பொருளே
தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச்
சங்கடப் பாவியால் வருந்தி
நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர்
நண்பன்என் றவரவர் குறைகள்
உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம்
உடைந்ததுன் உளம்அறி யாதோ.
11
3421 அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென்
ஐயனே இவ்வுல கதிலே
பொன்னையே உடையார் வறியவர் மடவார்
புகலும்ஆ டவர்இவர் களுக்குள்
தன்னையே அறியாப் பிணியினால் ஆவி
தளர்கின்றார் தருணம்ஈ தெனவே
சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த
சோபத்தை நீஅறி யாயோ.
12
3422 உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும்
ஒருவனே சிற்சபை உடையாய்
விண்டபே ருலகில் அம்மஇவ் வீதி
மேவும்ஓர் அகத்திலே ஒருவர்
ஒண்டுயிர் மடிந்தார் அலறுகின் றார்என்
றொருவரோ டொருவர்தாம் பேசிக்
கொண்டபோ தெல்லாம் கேட்டென துள்ளம்
குலைநடுங் கியதறிந் திலையோ.
13
3423 காவிநேர் கண்ணாள் பங்கனே206 தலைமைக்
கடவுளே சிற்சபை தனிலே
மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர்
வீதிஆ திகளிலே மனிதர்
ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத
அழுகுரல் கேட்டபோ தெல்லாம்
பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப்
பதைத்ததுன் உளம்அறி யாதோ.
14
206. காவியல் கருணை வடிவனே - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
3424 நாதனே என்னை நம்பிய மாந்தர்
ஞாலத்தில் பிணிபல அடைந்தே
ஏதநேர்ந் திடக்கண் டையகோ அடியேன்
எய்திய சோபமும் இளைப்பும்
ஓதநேர் உள்ள நடுக்கமும் திகைப்பும்
உற்றபேர் ஏக்கமா திகளும்
தீதனேன் இன்று நினைத்திட உள்ளம்
திடுக்கிடல் நீஅறிந் திலையோ.
15
3425 கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும்
கண்ணுதற் கடவுளே என்னைப்
பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர்
பெருகிய பழக்கமிக் குடையோர்
மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து
மறைந்திட்ட தோறும்அப் பிரிவை
உற்றுநான் நினைக்குந் தோறும்உள் நடுங்கி
உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்.
16
3426 என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும்
எந்தையே என்றனைச் சூழ்ந்தே
நன்றுநா டியநல் லோர்உயிர்ப் பிரிவை
நாயினேன் கண்டுகேட் டுற்ற
அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும்
அளவிலை அளவிலை அறிவாய்
இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும்
எய்திடும் துயரும்நீ அறிவாய்.
17
3427 நிலைபுரிந் தருளும் நித்தனே உலகில்
நெறியலா நெறிகளில் சென்றே
கொலைபுரிந் திட்ட கொடியவர் இவர்என்
றயலவர் குறித்தபோ தெல்லாம்
உலைபுரிந் திடுவெந் தீவயிற் றுள்ளே
உற்றென நடுநடுக் குற்றே
துலைபுரிந்207 தோடிக் கண்களை மூடித்
துயர்ந்ததும் நீஅறிந் ததுவே.
18
207. தொலைபுரிந்து ஖ முதற்பதிப்பு, பொ.சு, ச.மு.க.
3428 ஓர்ந்தஉள் ளகத்தே நிறைந்தொளிர் கின்ற
ஒருவனே உலகியல் அதிலே
மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின்
வல்லொலி கேட்டபோ தெல்லாம்
காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம்
கடவுள்நீ யேஅறிந் திடுவாய்
ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய்
என்னுளம் நடுங்குவ தியல்பே.
19
3429 மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை
வள்ளலே உலகர சாள்வோர்
உறைமுடி208 வாள்கொண் டொருவரை ஒருவர்
உயிரறச் செய்தனர் எனவே
தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம்
தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன்
இறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய்
என்னுளம் நடுங்குவ தியல்பே.
20
208. உறைஉறு - முதற்பதிப்பு, பொ.சு., ச. மு. க.
3430 தாய்மொழி குறித்தே கணக்கிலே மற்றோர்
தாய்க்குநால் என்பதை இரண்டாய்
வாய்மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன்
நடுங்கினேன் நினைத்ததை மனத்தே
தூய்மொழி நேயர் நம்பினோர் இல்லில்
சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன்
காய்மொழி புகன்றேன் பொய்மொழி புகன்றேன்
கலங்கினேன் அதுநினைத் தெந்தாய்.
21
3431 எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே
இலகிய இறைவனே உலகில்
பட்டினி உற்றோர் பசித்தனர் களையால்
பரதவிக் கின்றனர் என்றே
ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம்
உளம்பகீர் எனநடுக் குற்றேன்
இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய்
என்னுளம் நடுங்குவ தியல்பே.
22
3432 பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும்
பகரும்நேர் முதற்பல வயினும்
சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச்
சொல்கின் றவோஎனச் சூழ்ந்தே
மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை
வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்209
வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல
வருந்தினேன் எந்தைநீ அறிவாய்.
23
209. எந்தாய் கூகை வெங்குரல் செயுந்தோறும் - முதற்பதிப்பு, பொ.சு.,பி. இரா.
3433 காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின்
கடுங்குரல் கேட்டுளங் குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன்
சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய்
வீக்களால் மயங்கினேன் விடத்தில்210
ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம்
ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.
24
210. விடத்தின் - ச. மு. க.
3434 வேறுபல் விடஞ்செய் உயிர்களைக் கண்டு
வெருவினேன் வெய்யநாய்க் குழுவின்
சீறிய குரலோ டழுகுரல் கேட்டுத்
தியங்கினேன் மற்றைவெஞ் சகுனக்
கூறதாம் விலங்கு பறவைஊர் வனவெங்
கோள்செயும்211 ஆடவர் மடவார்
ஊறுசெய் கொடுஞ்சொல் இவைக்கெலாம் உள்ளம்
உயங்கினேன் மயங்கினேன் எந்தாய்.
25
211. செறும் - பி. இரா. பதிப்பு.
3435 நிறமுறு விழிக்கீழ்ப் புறத்தொடு தோளும்
நிறைஉடம் பிற்சில உறுப்பும்
உறவுதோல் தடித்துத் துடித்திடுந் தோறும்
உன்னிமற் றவைகளை அந்தோ
பிறர்துயர் காட்டத் துடித்தவோ என்று
பேதுற்று மயங்கிநெஞ் சுடைந்தேன்
நறுவிய துகிலில் கறைஉறக் கண்டே
நடுங்கினேன் எந்தைநீ அறிவாய்.
26
3436 மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும்
மயங்கிநாம் இவரொடு முயங்கி
இங்குளங் களித்தால் களித்தவர்க் குடனே
இன்னல்உற் றிடும்நமக் கின்னல்
தங்கிய பிறர்தம் துயர்தனைக்212 காண்டல்
ஆகும்அத் துயருறத் தரியேம்
பங்கமீ தெனவே எண்ணிநான் உள்ளம்
பயந்ததும் எந்தைநீ அறிவாய்.
27
212. துயர்களை - ச. மு. க.
3437 வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில்
மறைந்துவந் தடுத்தபின் நினைந்தே
மலிந்திவர் காணில் விடுவர்அன் றிவரால்
மயங்கிஉள் மகிழ்ந்தனம் எனிலோ
நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே
நடுங்குற வரும்எனப் பயந்தே
மெலிந்துடன் ஒளித்து வீதிவே றொன்றின்
மேவினேன் எந்தைநீ அறிவாய்.
28
3438 களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட
காலத்தும் உண்டகா லத்தும்
நெளிப்புறு மனத்தோ டஞ்சினேன் எனைத்தான்
நேர்ந்தபல் சுபங்களில் நேயர்
அளிப்புறு விருந்துண் டமர்கஎன் றழைக்க
அவர்களுக் கன்பினோ டாங்கே
ஒளிப்புறு வார்த்தை உரைத்தயல் ஒளித்தே
பயத்தொடும் உற்றனன் எந்தாய்.
29
3439 இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம்
இச்சுகத் தால்இனி யாது
துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச்
சூழ்வெறு வயிற்றொடும் இருந்தேன்
அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம்
ஐயகோ213 தெய்வமே இவற்றால்
வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து
வாங்கியுண் டிருந்தனன் எந்தாய்.
30
213. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா.
3440 உற்றதா ரணியில் எனக்குல குணர்ச்சி
உற்றநாள் முதல்ஒரு சிலநாள்
பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப்
பேருண வுண்டனன் சிலநாள்
உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம்
உறுவதற் கஞ்சினேன் உண்டேன்
மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள
மனநடுங் கியதுநீ அறிவாய்.
31
3441 தொழுந்தகை உடைய சோதியே அடியேன்
சோம்பலால் வருந்திய தோறும்
அழுந்தஎன் உள்ளம் பயந்ததை என்னால்
அளவிடற் கெய்துமோ பகலில்
விழுந்துறு தூக்கம் வரவது தடுத்தும்
விட்டிடா வன்மையால் தூங்கி
எழுந்தபோ தெல்லாம் பயத்தொடும் எழுந்தேன்
என்செய்வேன் என்செய்வேன் என்றே.
32
3442 அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில்
அரும்பெருஞ் சோதியே அடியேன்
சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம்
தூக்கமே கண்டனன் தூக்கம்
வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன்
மற்றுநான் எழுந்தபோதெல்லாம்
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம்
தொலைவதெக் காலம்என் றெழுந்தேன்.
33
3443 உடையஅம் பலத்தில் ஒருவனே என்றன்
உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
கடையன்நான் நனவில் நடுங்கிய நடுக்கம்
கணக்கிலே சிறிதுறும் கனவில்
இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும்
எண்ணவும் எழுதவும் படுமோ
நடையுறு சிறியேன் கனவுகண் டுள்ளம்
நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
34
3444 பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம்
தூக்கமாம் பாவிவந் திடுமே
இகலுறு கனவாம் கொடியவெம் பாவி
எய்துமே என்செய்வோம் என்றே
உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம்
உன்னுளம் அறியுமே எந்தாய்
நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம்
நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
35
3445 தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும்
தொழிலிலே வந்தகோ பத்தில்
சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த
தருணம்நான் கலங்கிய கலக்கம்
வகுப்புற நினது திருவுளம் அறியும்
மற்றுஞ்சில் உயிர்களில் கோபம்
மிகப்புகுந் தடித்துப் பட்டபா டெல்லாம்
மெய்யநீ அறிந்ததே அன்றோ.
36
3446 ஒடித்தஇவ் வுலகில் சிறுவர்பால் சிறிய
உயிர்கள்பால் தீமைகண் டாங்கே
அடித்திடற் கஞ்சி உளைந்தனன் என்னால்
ஆற்றிடாக் காலத்தில் சிறிதே
பொடித்துநான் பயந்த பயமெலாம் உனது
புந்தியில் அறிந்ததே எந்தாய்
வெடித்தவெஞ் சினம்என் உளமுறக் கண்டே
வெதும்பிய நடுக்கம்நீ214 அறிவாய்.
37
214. நடுக்கமும் - படிவேறுபாடு. ஆ. பா.
3447 கோபமே வருமோ காமமே வருமோ
கொடியமோ கங்களே வருமோ
சாபமே அனைய தடைமதம் வருமோ
தாமதப் பாவிவந் திடுமோ
பாபமே புரியும் லோபமே வருமோ
பயனில்மாற் சரியம்வந் திடுமோ
தாபஆங் கார மேஉறு மோஎன்
றையநான் தளர்ந்ததும் அறிவாய்.
38
3448 காமமா மதமாங் காரமா திகள்என்
கருத்தினில் உற்றபோ தெல்லாம்
நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான்
நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய்
சேமமார் உலகில் காமமா திகளைச்
செறிந்தவர் தங்களைக் கண்டே
ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும்
ஐயநின் திருவுளம் அறியும்.
39
3449 கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன்
காட்சியைக் கண்டபோ தெல்லாம்
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி
வந்துநொந் திளைத்தனன் எந்தாய்
நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம்
நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்
பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப்
படுத்ததும் ஐயநீ அறிவாய்.
40
3450 புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில்
புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி
ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு
மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
என்பெலாம் கருக இளைத்தனன் அந்த
இளைப்பையும் ஐயநீ அறிவாய்.
41
3451 இந்தவிர் சடைஎம் இறைவனே என்னோ
டியல்கலைத் தருக்கஞ்செய் திடவே
வந்தவர் தம்மைக் கண்டபோ தெல்லாம்
மனம்மிக நடுங்கினேன் அறிவாய்
சந்தியுற் றொருகால் படித்தசாத் திரத்தைத்
தமியனேன் மீளவுங் கண்டே
நொந்ததும் உலகப் படிப்பில்என் உள்ளம்
நொந்ததும் ஐயநீ அறிவாய்.
42
3452 முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ
தெரிந்திலேன் மோகமே லின்றித்
தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்
ஒருத்தியைக் கைதொடச் சார்ந்தேன்
குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக்
கலப்பிலேன் மற்றிது குறித்தே
பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன்
பகர்வதென் எந்தைநீ அறிவாய்.
43
3453 பதியனே பொதுவில் பரமநா டகஞ்செய்
பண்பனே நண்பனே உலகில்
ஒதியனேன் பிறர்பால் உரத்தவார்த் தைகளால்
ஒருசில வாதங்கள் புரிந்தே
மதியிலா மையினால் அகங்கரித் ததன்பின்
வள்ளல்உன் அருளினால் அறிந்தே
விதியைநான் நொந்து நடுங்கிய தெல்லாம்
மெய்யனே நீஅறிந் ததுவே.
44
3454 அருளினை அளிக்கும் அப்பனே உலகில்
அன்புளார் வலிந்தெனக் கீந்த
பொருளினை வாங்கிப் போனபோ தெல்லாம்
புழுங்கிய புழுக்கம்நீ அறிவாய்
மருளும்அப் பொருளைச் சாலகத் தெறிந்து
மனமிக இளைத்ததும் பொருளால்
இருளுரும் எனநான் உளம்நடுங் கியதும்
எந்தைநின் திருவுளம் அறியும்.
45
3455 பொருளிலே உலகம் இருப்பதா தலினால்
புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்
மருவினால் பொருளின் இச்சையால் பலகால்
மருவுகின் றான்எனக் கருதி
வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும்
மேவிலேன் எந்தைநீ அறிவாய்
ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம்
உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்.
46
3456 தகைத்தபே ருலகில் ஐயனே அடியேன்
தடித்தஉள் ளத்தொடு களித்தே
நகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் இங்கே
நல்லவா கனங்களில் ஏறி
உகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் விரைந்தே
ஓட்டிய போதெலாம் பயந்தேன்
பகைத்தபோ தயலார் பகைகளுக் கஞ்சிப்
பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்.
47
3457 சகப்புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில்
சஞ்சலம் உறும்எனப் பயந்தே
நகர்புறத் திருக்குந் தோட்டங்கள் தோறும்
நண்ணியும் பிறவிடத் தலைந்தும்
பகற்பொழு தெல்லாம் நாடொறுங் கழித்தேன்
பகலன்றி இரவும்அப் படியே
மிகப்பல விடத்தும் திரிந்தனன் அடியேன்
விளம்பலென் நீஅறிந் ததுவே.
48
3458 உருவுள மடவார் தங்களை நான்கண்
ணுற்றபோ துளநடுக் குற்றேன்
ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர்
உவளகத் தொளித்தயல் இருந்தேன்
கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட
காலத்தில் நான்உற்ற கலக்கம்
திருவுளம் அறியும் உரத்தசொல் எனது
செவிபுகில் கனல்புகு வதுவே.
49
3459 பண்ணிகா ரங்கள் பொசித்தஅப் போதும்
பராக்கிலே செலுத்திய போதும்
எண்ணிய மடவார் தங்களை விழைந்தே
இசைந்தனு பவித்தஅப் போதும்
நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும்
நவின்றசங் கீதமும் நடமும்
கண்ணுறக் கண்டு கேட்டஅப் போதும்
கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
50
3460 நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது
நண்பினர் உடுத்திய போது
பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம்
பயந்தனர் வெய்யிலிற் கவிகை
வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம்
வெருவினேன் கைத்துகில் வீசி
அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி
அரைக்குமேல் வீக்கினன் எந்தாய்.
51
3461 கையுற வீசி நடப்பதை நாணிக்
கைகளைக் கட்டியே நடந்தேன்
மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால்
மெய்எலாம் ஐயகோ215 மறைத்தேன்
வையமேல் பிறர்தங் கோலமும் நடையும்
வண்ணமும் அண்ணலே சிறிதும்
பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப்
பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்.
52
215. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா
3462 வைகிய நகரில் எழிலுடை மடவார்
வலிந்தெனைக் கைபிடித் திழுத்தும்
சைகைவே றுரைத்தும் சரசவார்த் தைகளால்
தனித்தெனைப் பலவிசை அறிந்தும்
பொய்கரைந் தாணை புகன்றுமேல் விழுந்தும்
பொருள்முத லியகொடுத் திசைத்தும்
கைகலப் பறியேன் நடுங்கினேன் அவரைக்
கடிந்ததும் இல்லைநீ அறிவாய்.
53
3463 எளியரை வலியார் அடித்தபோ தையோ
என்மனம் கலங்கிய கலக்கம்
தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன்
திருவுளம் அறியுமே எந்தாய்216
களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான்
கடலினும் பெரியது கண்டாய்
அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை
அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார்.
54
216. அறியும் எந்தாயே - பி. இரா. பதிப்பு.
3464 இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த
இருப்பெலாம் கள்ளர்கள் கூடிக்
கரவிலே கவர்ந்தார் கொள்ளைஎன் றெனது
காதிலே விழுந்தபோ தெல்லாம்
விரவிலே217 நெருப்பை மெய்யிலே மூட்டி
வெதுப்பல்போல் வெதும்பினேன் எந்தாய்
உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண்
டுளம்நடுக் குற்றனன் பலகால்.
55
217. விரைவிலே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா. பதிப்பு.
3465 உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ
துள்ளகம் நடுங்கினேன் பலகால்
கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ
தையவோ கலங்கினேன் கருத்தில்
புரத்திலே அம்மா அப்பனே ஐயோ
எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே
தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம்
தந்தைநீ அறிந்தது தானே.
56
3466 மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை
மதித்துளம் வருந்திய பிறர்தம்
கண்ணினீர் விடக்கண் டையவோ நானும்
கண்ணினீர் விட்டுளங் கவன்றேன்
நண்ணிநின் றொருவர் அசப்பிலே218 என்னை
அழைத்தபோ தடியனேன் எண்ணா
தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி
ஏன்எனல் மறந்தனன் எந்தாய்.
57
218. அசைப்பிலே - படிவேறுபாடு. ஆ. பா.
3467 தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால்
சிலுகுறும்219 என்றுளம் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே
நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க்
களத்திலே திரிந்துற்ற இளைப்பை
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள்
எந்தைநீ அறிந்தது தானே.
58
219. சிறுகுறும் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு. க. பதிப்பு.
3468 என்புடை வந்தார் தம்முகம் நோக்கி
என்கொலோ என்கொலோ இவர்தாம்
துன்புடை யவரோ இன்புடை யவரோ
சொல்லுவ தென்னையோ என்றே
வன்புடை மனது கலங்கிஅங் கவரை
வாஎனல் மறந்தனன் எந்தாய்
அன்புடை220 யவரைக் கண்டபோ தெல்லாம்
என்கொலோ என்றயர்ந் தேனே.
59
220. இன்புடை - ச.மு க. பதிப்பு.
3469 காணுறு பசுக்கள் கன்றுக ளாதி
கதறிய போதெலாம் பயந்தேன்
ஏணுறு மாடு முதல்பல விருகம்221
இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்
கோணுறு கோழி முதல்பல பறவை
கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்
வீணுறு கொடியர் கையிலே வாளை
திர்த்தல்கண் டென்என வெருண்டேன்.
60
221. மிருகம் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க., பி. இரா. பதிப்பு.
3470 பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார்
பின்முன்நோக் காதுமேல் நோக்கி
அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன்
அவர்புகன் றிட்டதீ மொழிகள்
பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன்
புண்ணியா நின்துதி எனும்ஓர்
முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து
முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன்.
61
3471 வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா222 னிகளாய் ஏழைக ளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
62
222. ஈடு - ஒப்பு, முதற் பதிப்பு.
3472 நலிதரு சிறிய தெய்வமென் றையோ
நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புந்திநொந் துளநடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வவெங் கோயில்
கண்டகா லத்திலும் பயந்தேன்.
63
3473 துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்
தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக்
கண்டகா லத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்டபோ தெல்லாம்
எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
எந்தைநின் திருவுளம்223 அறியும்.
64
223. திருவருள் - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
3474 நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை
நண்ணிடா அரையரை நாளும்
கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக்
கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம்
பயந்தனன் சுத்தசன் மார்க்கம்
விடுநிலை உலக நடைஎலாங் கண்டே
வெருவினேன் வெருவினேன் எந்தாய்.
65
3475 ஓங்கிய திருச்சிற் றம்பல முடைய
ஒருதனித் தலைவனே என்னைத்
தாங்கிய தாயே தந்தையே குருவே
தயாநிதிக் கடவுளே நின்பால்
நீங்கிய மனத்தார் யாவரே எனினும்
அவர்தமை நினைத்தபோ தெல்லாம்
தேங்கிய உள்ளம் பயந்தனன் அதுநின்
திருவுளம் அறியுமே எந்தாய்.
66
3476 காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன்
காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன்
பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன்
பஞ்சணை படுக்கவும் பயந்தேன்
நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து
நன்குறக் களித்துக் கால்கீழே
நீட்டவும் பயந்தேன் நீட்டிப்பே சுதலை
நினைக்கவும் பயந்தனன் எந்தாய்.
67
3477 தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம்
சார்ந்திட முயலுறா தந்தோ
கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக்
கனிவுற வைத்தனர் ஆகிப்
புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள்
பொதுஎனக் கண்டிரங் காது
கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன்
எந்தைநான் கூறுவ தென்னே.
68
3478 இவ்வணஞ் சிறியேற் குலகியல் அறிவிங்
கெய்திய நாளது தொடங்கி
நைவணம் இற்றைப் பகல்வரை அடைந்த
நடுக்கமும் துன்பமும் உரைக்க
எவ்வணத் தவர்க்கும் அலகுறா224 தெனில்யான்
இசைப்பதென் இசைத்ததே அமையும்
செவ்வணத் தருணம் இதுதலை வாநின்
திருவுளம் அறிந்ததே எல்லாம்.
69
224. அலகுறாது - குறைவுபடாது. முதற் பதிப்பு.
3479 தரைத்தலத் தெனைநீ எழுமையும் பிரியாத்
தம்பிரான் அல்லையோ மனத்தைக்
கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த
கடவுள்நீ அல்லையோ எனைத்தான்
இரைத்திவ ணளித்தோர் சிற்சபை விளங்கும்
எந்தைநீ அல்லையோ நின்பால்
உரைத்தல்என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன்
நீஅறி யாததொன் றுண்டோ .
70
3480 கைதலத் தோங்கும் கனியின்225 என் னுள்ளே
கனிந்தஎன் களைகண்நீ அலையோ
மெய்தலத் தகத்தும் புறத்தும்விட் டகலா
மெய்யன்நீ அல்லையோ எனது
பைதல்தீர்த் தருளுந் தந்தைநீ அலையோ
பரிந்துநின் திருமுன்விண் ணப்பம்
செய்தல்என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன்
திருவுளம் தெரிந்ததே226 எல்லாம்.
71
225. கனியில் - பி. இரா. பதிப்பு.
226. அறிந்ததே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க. பதிப்பு.
3481 இன்னவா றடியேன் அச்சமுந் துயரும்
எய்திநின் றிளைத்தனன் அந்தோ
துன்னஆ ணவமும் மாயையும் வினையும்
சூழ்ந்திடும் மறைப்பும்இங் குனைத்தான்
உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம்
என்பவால் என்செய்வேன் எனது
மன்னவா ஞான மன்றவா எல்லாம்
வல்லவா இதுதகு மேயோ.
72
3482 எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த
இளைப்பெலாம் இங்குநான் ஆற்றிக்
கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என்
கூடவே அடுத்ததென் அந்தோ
வள்ளலே எனது வாழ்முதற் பொருளே
மன்னவா நின்னலால் அறியேன்
உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள்ஆவி
உன்னதே என்னதன் றெந்தாய்.
73
3483 என்சுதந் தரம்ஓர் எட்டுணை யேனும்
இல்லையே எந்தைஎல் லாம்உன்
தன்சுதந் தரமே அடுத்தஇத் தருணம்
தமியனேன் தனைப்பல துயரும்
வன்சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும்
மாயையும் வினையும்ஆ ணவமும்
இன்சுவைக் கனிபோல் உண்கின்ற தழகோ
இவைக்கெலாம் நான்இலக் கலவே.
74
3484 அறிவொரு சிறிதிங் கறிந்தநாள் முதல்என்
அப்பனே நினைமறந் தறியேன்
செறிவிலாச் சிறிய பருவத்தும் வேறு
சிந்தைசெய் தறிந்திலேன் உலகில்
பிறிதொரு பிழையுஞ் செய்திலேன் அந்தோ
பிழைத்தனன் ஆயினும்என்னைக்
குறியுறக் கொண்டே குலங்குறிப் பதுநின்
குணப்பெருங் குன்றினுக் கழகோ.
75
3485 ஐயநான் ஆடும் பருவத்திற் றானே
அடுத்தநன் னேயனோ டப்பா
பொய்யுல காசை எனக்கிலை உனக்கென்
புகல்என அவனும்அங் கிசைந்தே
மெய்யுறத் துறப்போம் என்றுபோய் நினது
மெய்யருள் மீட்டிட மீண்டேம்
துய்யநின் உள்ளம் அறிந்ததே எந்தாய்
இன்றுநான் சொல்லுவ தென்னே.
76
3486 தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே
தெய்வமே தெய்வமே எனநின்
சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன்
தந்தையும் குருவும்நீ என்றேன்
பேர்விலா துளத்தே வந்தவா பாடிப்
பிதற்றினேன் பிறர்மதிப் பறியேன்
ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன்
இன்றுநான் உரைப்பதிங் கென்னே.
77
3487 பொறித்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை
புரிந்தது போலவே இன்றும்
செறித்துநிற் கின்றேன் அன்றிஎன் உரிமைத்
தெய்வமும் குருவும்மெய்ப் பொருளும்
நெறித்தநற் றாயுந் தந்தையும் இன்பும்
நேயமும் நீஎனப் பெற்றே
குறித்தறிந் ததன்பின் எந்தைநான் ஏறிக்
குதித்ததென் கூறுக நீயே.
78
3488 பரிந்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை
பணிபுரிந் தாங்கிது வரையில்
புரிந்துறு கின்றேன் அன்றிஎன் உயிரும்
பொருளும்என் புணர்ப்பும்என் அறிவும்
விரிந்தஎன் சுகமும் தந்தையுங் குருவும்
மெய்ம்மையும் யாவும்நீ என்றே
தெரிந்தபின் அந்தோ வேறுநான் செய்த
செய்கைஎன் செப்புக நீயே.
79
3489 மைதவழ் விழிஎன் அம்மைஓர் புடைகொள்227
வள்ளலே நின்னைஅன் பாலும்
வைதவர் தமைநான் மதித்திலேன் அன்பால்
வாழ்த்துகின் றோர்தமை வாழ்த்தி
உய்தவர் இவர்என் றுறுகின்றேன் அல்லால்
உன்அருள் அறியநான் வேறு
செய்ததொன் றிலையே செய்தனன் எனினும்
திருவுளத் தடைத்திடல் அழகோ.
80
227. மைதவழ் முகில்போன் றருள்பொழி கருணை - முதற் பதிப்பு,
பொ. சு., ச. மு. க. 'மைதவழ் விழியென் னம்மையோர் புடைகொள் வள்ளலே' என்றும் பாடம்
எனச் ச.மு.க. அடிக்குறிப்பிடுகிறார்.
3490 ஆரணம் உரைத்த வரைப்பெலாம் பலவாம்
ஆகமம் உரைவரைப் பெல்லாம்
காரண நினது திருவருட் செங்கோல்
கணிப்பருங் களிப்பிலே ஓங்கி
நாரணர் முதலோர் போற்றிட விளங்கி
நடக்கின்ற பெருமைநான் அறிந்தும்
தாரணி யிடைஇத் துன்பமா திகளால்
தனையனேன் தளருதல் அழகோ.
81
3491 பார்முதல் நாதப் பதிஎலாங் கடந்தப்
பாலும்அப் பாலும்அப் பாலும்
ஓர்முதல் ஆகித் திருவருட் செங்கோல்
உரைப்பரும் பெருமையின் ஓங்கிச்
சீர்பெற விளங்க நடத்திமெய்ப் பொதுவில்
சிறந்தமெய்த் தந்தைநீ இருக்க
வார்கடல் உலகில் அச்சமா திகளால்
மகன்மனம் வருந்துதல் அழகோ.
82
3492 ஆர்ந்தவே தாந்தப் பதிமுதல் யோகாந்
தப்பதி வரையும்அப் பாலும்
தேர்ந்தருள் ஆணைத் திருநெறிச் செங்கோல்
செல்லஓர் சிற்சபை இடத்தே
சார்ந்தபே ரின்பத் தனியர சியற்றும்
தந்தையே தனிப்பெருந் தலைவா
பேர்ந்திடேன் எந்த விதத்திலும் நினக்கே
பிள்ளைநான் வருந்துதல் அழகோ.
83
3493 சித்திகள் எல்லாம் வல்லதோர் ஞானத்
திருச்சபை தன்னிலே திகழும்
சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம்
தழைத்திடத் தனிஅருட் செங்கோல்
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும்
தனிமுதல் தந்தையே தலைவா
பித்தியல் உடையேன் எனினும்நின் தனக்கே
பிள்ளைநான் வாடுதல் அழகோ.
84
3494 சாற்றுபே ரண்டப் பகுதிகள் அனைத்தும்
தனித்தனி அவற்றுளே நிரம்பித்
தோற்றுமா பிண்டப் பகுதிகள் அனைத்தும்
சோதியால் விளக்கிஆ னந்த
ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில்
அரும்பெருந் தந்தையே இன்பப்
பேற்றிலே விழைந்தேன் தலைவநின் தனக்கே
பிள்ளைநான் பேதுறல் அழகோ.
85
3495 சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த்
திகழ்ஒளி யாய்ஒளி எல்லாம்
பிறங்கிய வெளியாய் வெளிஎலாம் விளங்கும்
பெருவெளி யாய்அதற் கப்பால்
நிறைந்தசிற் சபையில் அருளர சியற்றும்
நீதிநல் தந்தையே இனிமேல்
பிறந்திடேன் இறவேன் நின்னைவிட் டகலேன்
பிள்ளைநான் வாடுதல் அழகோ.
86
3496 எண்ணிய எல்லாம் வல்லபே ரருளாம்
இணையிலாத் தனிநெடுஞ் செங்கோல்
நண்ணிய திருச்சிற் றம்பலத் தமர்ந்தே
நடத்தும்ஓர் ஞானநா யகனே
தண்ணருள் அளிக்கும் தந்தையே உலகில்
தனையன்நான் பயத்தினால் துயரால்
அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும்
ஐயகோ வாடுதல் அழகோ.
87
3497 கலைஎலாம் புகலும் கதிஎலாம் கதியில்
காண்கின்ற காட்சிகள் எல்லாம்
நிலையெலாம் நிலையில் நேர்ந்தனு பவஞ்செய்
நிறைவெலாம் விளங்கிடப் பொதுவில்
மலைவிலாச் சோதி அருட்பெருஞ் செங்கோல்
வாய்மையான் நடத்தும்ஓர் தனிமைத்
தலைவனே எனது தந்தையே நினது
தனையன்நான் தளருதல் அழகோ.
88
3498 ஆதியே நடுவே அந்தமே எனும்இவ்
வடைவெலாம் இன்றிஒன் றான
சோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே
தூயபே ரருள்தனிச் செங்கோல்
நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை
நிருத்தனே ஒருத்தனே நின்னை
ஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே
உறுகணால் தளருதல் அழகோ.
89
3499 அத்தனே திருச்சிற் றம்பலத் தரசே
அரும்பெருஞ் சோதியே அடியார்
பித்தனே எனினும் பேயனே எனினும்
பெரிதருள் புரிதனித் தலைமைச்
சித்தனே எல்லாம் செய்திட வல்ல
செல்வனே சிறப்பனே சிவனே
சுத்தனே நினது தனையன்நான் மயங்கித்
துயர்ந்துளம் வாடுதல் அழகோ.
90
3500 உற்றதோர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
ஒருதனித் தந்தையே நின்பால்
குற்றம்நான் புரிந்திங் கறிந்திலேன் குற்றம்
குயிற்றினேன் என்னில்அக் குற்றம்
இற்றென அறிவித் தறிவுதந் தென்னை
இன்புறப் பயிற்றுதல் வேண்டும்
மற்றய லார்போன் றிருத்தலோ தந்தை
வழக்கிது நீஅறி யாயோ.
91
3501 குற்றமோ குணமோ நான்அறி யேன்என்
குறிப்பெலாம் திருச்சிற்றம் பலத்தே
உற்றதா தலினால் உலகியல் வழக்கில்
உற்றன228 மற்றென தலவே
தெற்றென229 அருட்கே குற்றம்என் பதுநான்
செய்திடில் திருத்தலே அன்றி
மற்றய லார்போன் றிருப்பதோ தந்தை
மரபிது நீஅறி யாயோ.
92
228. உற்றிடின் - முதற்பதிப்பு; பொ. சு., ச. மு. க. பதிப்பு.
229. தெற்றென - விரைந்து. முதற்பதிப்பு.
3502 மாயையால் வினையால் அரிபிர மாதி
வானவர் மனமதி மயங்கித்
தீயகா ரியங்கள் செய்திடில் அந்தோ
சிறியனேன் செய்வது புதிதோ
ஆயினும் தீய இவைஎன அறியேன்
அறிவித்துத் திருத்துதல் அன்றி
நீயிவண் பிறர்போன் றிருப்பது தந்தை
நெறிக்கழ கல்லவே எந்தாய்.
93
3503 கருணையும் சிவமே பொருள்எனக் காணும்
காட்சியும் பெறுகமற் றெல்லாம்
மருள்நெறி எனநீ எனக்கறி வித்த
வண்ணமே பெற்றிருக் கின்றேன்
இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்
எய்திய தென்செய்வேன் எந்தாய்
தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்
சிறுநெறி பிடித்ததொன் றிலையே.
94
3504 கலங்கிய போதும் திருச்சிற்றம் பலத்தில்
கருணையங் கடவுளே நின்பால்
இலங்கிய நேயம் விலங்கிய திலையே
எந்தைநின் உளம்அறி யாதோ
மலங்கிய மனத்தேன் புகல்வதென் வினையால்
மாயையால் வரும்பிழை எல்லாம்
அலங்கும்என் பிழைகள் அல்லஎன் றுன்னோ
டடிக்கடி அறைந்தனன் ஆண்டே.
95
3505 இரும்பினும் கொடிய மனஞ்செயும் பிழையும்
என்பிழை அன்றெனப் பலகால்
விரும்பிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன்
வேறுநான் செய்ததிங் கென்னே
அரும்பொனே திருச்சிற் றம்பலத் தமுதே
அப்பனே என்றிருக் கின்றேன்
துரும்பினுஞ் சிறியேன் புகல்வதென் நினது
தூயதாம் திருவுளம் அறியும்.
96
3506 வருமுயிர் இரக்கம் பற்றியே உலக
வழக்கில்என் மனஞ்சென்ற தோறும்
வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன்
விண்ணப்பஞ் செய்கின்றேன் இன்றும்
உருவஎன் உயிர்தான் உயிர்இரக் கந்தான்
ஒன்றதே இரண்டிலை இரக்கம்
ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத்
தொருவனே நின்பதத் தாணை.
97
3507 தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும்
தலைவனே இன்றும்என் உளமும்
மலைவில்என் அறிவும் நானும்இவ் வுலக
வழக்கிலே உயிர்இரக் கத்தால்
இலகுகின் றனம்நான் என்செய்வேன் இரக்கம்
என்னுயிர் என்னவே றிலையே
நிலைபெறும் இரக்கம் நீங்கில்என் உயிரும்
நீங்கும்நின் திருவுளம் அறியும்.
98
3508 ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில்
ஆடலே அன்றிஓர் விடயக்
காதலால் ஆடல் கருதிலேன் விடயக்
கருத்தெனக் கில்லைஎன் றிடல்இப்
போதலால் சிறிய போதும்உண் டதுநின்
புந்தியில் அறிந்தது தானே
ஈதலால் வேறோர் தீதென திடத்தே
இல்லைநான் இசைப்பதென் எந்தாய்.
99
3509 என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய்
இருக்கவே இசைவித் திவ்வுலகில்
மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை
வள்ளல்நீ நினக்கிது விடயம்
பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப்
பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய்
இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா
திருந்ததோர் இறையும்இங் கிலையே.
100
3510 உறுவினை தவிர்க்கும் ஒருவனே உலகில்
ஓடியும் ஆடியும் உழன்றும்
சிறுவர்தாம் தந்தை வெறுப்பஆர்க் கின்றார்
சிறியனேன் ஒருதின மேனும்
மறுகிநின் றாடி ஆர்த்ததிங் குண்டோ
நின்பணி மதிப்பலால் எனக்குச்
சிறுவிளை யாட்டில் சிந்தையே இலைநின்
திருவுளம் அறியுமே எந்தாய்.
101
3511 தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் பயனில்
சழக்குரை யாடிவெங் காமச்
சிந்தைய ராகித் திரிகின்றார் அந்தோ
சிறியனேன் ஒருதின மேனும்
எந்தைநின் உள்ளம் வெறுப்பநின் பணிவிட்
டிவ்வுல கியலில்அவ் வாறு
தெந்தன என்றே திரிந்ததுண் டேயோ
திருவுளம் அறியநான் அறியேன்.
102
3512 அம்புவி தனிலே தந்தையர் வெறுப்ப
அடிக்கடி அயலவர் உடனே
வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர்
வள்ளலே நின்பணி விடுத்தே
இம்பர்இவ் வுலகில் ஒருதின மேனும்
ஏழையேன் பிறரொடு வெகுண்டே
வெம்புறு சண்டை விளைத்ததுண் டேயோ
மெய்யநின் ஆணைநான் அறியேன்.
103
3513 வள்ளல்இவ் வுலகில் தந்தையர் வெறுப்ப
மக்கள்தாம் ஒழுக்கத்தை மறந்தே
கள்ளருந் துதல்சூ தாடுதல் காமக்
கடைதொறும் மயங்குதல் பொய்யே
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன்
மெய்யநின் திருப்பணி விடுத்தே
எள்ளிஅவ் வாறுபுரிந்ததொன் றுண்டோ
எந்தைநின் ஆணைநான் அறியேன்.
104
3514 மலைவிலாத் திருச்சிற் றம்பலத் தமர்ந்த
வள்ளலே உலகினில் பெற்றோர்
குலைநடுக் குறவே கடுகடுத் தோடிக்
கொடியதீ நெறியிலே மக்கள்
புலைகொலை களவே புரிகின்றார் அடியேன்
புண்ணிய நின்பணி விடுத்தே
உலையஅவ் வாறு புரிந்ததொன் றுண்டோ
உண்பதத் தாணைநான் அறியேன்.
105
3515 தனிப்பெருஞ் சோதித் தந்தையே உலகில்
தந்தையர் பற்பல காலும்
இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட்
கேற்கவே பயிற்றிடுந் தோறும்
பனிப்புற ஓடிப் பதுங்கிடு கின்றார்
பண்பனே என்னைநீ பயிற்றத்
தினைத்தனை யேனும் பதுங்கிய துண்டோ
திருவுளம் அறியநான் அறியேன்.
106
3516 தன்னைநே ரில்லாத் தந்தையே உலகில்
தந்தையர் தங்களை அழைத்தே
சொன்னசொல் மறுத்தே மக்கள்தம் மனம்போம்
சூழலே போகின்றார் அடியேன்
என்னைநீ உணர்த்தல் யாதது மலையின்
இலக்கெனக் கொள்கின்றேன் அல்லால்
பின்னைஓர் இறையும் மறுத்ததொன் றுண்டோ
பெரியநின் ஆணைநான் அறியேன்.
107
3517 போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள்
பொருந்துதம் தந்தையர் தமையே
வேற்றுவாழ் வடைய வீடுதா பணந்தா
மெல்லிய சரிகைவத் திரந்தா
ஏற்றஆ பரணந் தாஎனக் கேட்டே
இரங்குவார் இவைகுறித் தடியேன்
தேற்றுவாய் நின்னைக் கேட்டதொன் றுண்டோ
திருவுளம் அறியநான் அறியேன்.
108
3518 குணம்புரி எனது தந்தையே உலகில்
கூடிய மக்கள்தந் தையரைப்
பணம்புரி காணி பூமிகள் புரிநற்
பதிபுரி ஏற்றபெண் பார்த்தே
மணம்புரி எனவே வருத்துகின் றார்என்
மனத்திலே ஒருசிறி தேனும்
எணம்புரிந் துனைநான் வருத்திய துண்டோ
எந்தைநின் ஆணைநான் அறியேன்.
109
3519 இகத்திலே எனைவந் தாண்டமெய்ப் பொருளே
என்னுயிர்த் தந்தையே இந்தச்
சகத்திலே மக்கள் தந்தையர் இடத்தே
தாழ்ந்தவ ராய்ப்புறங் காட்டி
அகத்திலே வஞ்சம் வைத்திருக் கின்றார்
ஐயவோ வஞ்சம்நின் அளவில்
முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ
முதல்வநின் ஆணைநான் அறியேன்.
110
3520 தன்மைகாண் பரிய தலைவனே எனது
தந்தையே சகத்திலே மக்கள்
வன்மைவார்த் தைகளால் தந்தையர் தம்மை
வைகின்றார் வள்ளலே மருந்தே
என்மனக் கனிவே என்னிரு கண்ணே
என்னுயிர்க் கிசைந்தமெய்த் துணையே
நின்மனம் வெறுப்பப் பேசிய துண்டோ
நின்பதத் தாணைநான் அறியேன்.
111
3521 ஒப்பிலா மணிஎன் அப்பனே உலகில்
உற்றிடு மக்கள்தந் தையரை
வைப்பில்வே றொருவர் வைதிடக் கேட்டு
மனம்பொறுத் திருக்கின்றார் அடியேன்
தப்பிலாய்230 நினைவே றுரைத்திடக் கேட்டால்
தரிப்பனோ தரித்திடேன் அன்றி
வெப்பில்என் உயிர்தான் தரிக்குமோ யாதாய்
விளையுமோ அறிந்திலேன் எந்தாய்.
112
230. தப்பிலா - முதற்பதிப்பு., பொ.சு., ச. மு. க. பதிப்பு.
3522 இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன்
எந்தைநின் திருப்பணி விடுத்தே
சித்தம்வே றாகித் திரிந்ததே இலைநான்
தெரிந்தநாள் முதல்இது வரையும்
அத்தனே அரசே ஐயனே அமுதே
அப்பனே அம்பலத் தாடும்
சித்தனே சிவனே என்றென துளத்தே
சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும்.
113
3523 பொய்வகை மனத்தேன் என்னினும் எந்தாய்
பொய்யுல காசைசற் றறியேன்
நைவகை தவிரத் திருச்சிற்றம் பலத்தே
நண்ணிய மெய்ப்பொருள் நமது
கைவகைப் படல்எக் கணத்திலோ எனநான்
கருதினேன் கருத்தினை முடிக்கச்
செய்வகை அறியேன் என்செய்வேன் ஐயோ
தெய்வமே என்றிருக் கின்றேன்.
114
3524 அன்னையே என்றன் அப்பனே திருச்சிற்
றம்பலத் தமுதனே எனநான்
உன்னையே கருதி உன்பணி புரிந்திங்
குலகிலே கருணைஎன் பதுதான்
என்னையே நிலையாய் இருத்தஉள் வருந்தி
இருக்கின்றேன் என்உள மெலிவும்
மன்னும்என் உடம்பின் மெலிவும்நான் இருக்கும்
வண்ணமும் திருவுளம் அறியும்.
115
3525 பொய்படாப் பயனே பொற்சபை நடஞ்செய்
புண்ணியா கண்ணினுள் மணியே
கைபடாக் கனலே கறைபடா மதியே
கணிப்பருங் கருணையங் கடலே
தெய்வமே எனநான் நின்னையே கருதித்
திருப்பணி புரிந்திருக் கின்றேன்
மைபடா உள்ள மெலிவும்நான் இருக்கும்
வண்ணமும் திருவுளம் அறியும்.
116
3526 தன்னிகர் அறியாத் தலைவனே தாயே
தந்தையே தாங்குநற் றுணையே
என்னிறு கண்ணே என்னுயிர்க் குயிரே
என்னுடை எய்ப்பினில் வைப்பே
உன்னுதற் கினிய வொருவனே எனநான்
உன்னையே நினைத்திருக் கின்றேன்
மன்னும்என் உள்ள மெலிவும்நான் இருக்கும்
வண்ணமும் திருவுளம் அறியும்.
117
3527 திருவளர் திருஅம் பலத்திலே அந்நாள்
செப்பிய மெய்ம்மொழிப் பொருளும்
உருவளர் திருமந் திரத்திரு முறையால்
உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும்
கருவளர் அடியேன் உளத்திலே நின்று
காட்டிய மெய்ம்மொழிப் பொருளும்
மருவிஎன் உளத்தே நம்பிநான் இருக்கும்
வண்ணமும் திருவுளம் அறியும்.
118
3528 உவந்தென துளத்தே உணர்த்திய எல்லாம்
உறுமலை இலக்கென நம்பி
நிவந்ததோள் பணைப்ப மிகஉளங் களிப்ப
நின்றதும் நிலைத்தமெய்ப் பொருள்இப்
பவந்தனில் பெறுதல் சத்தியம் எனவே
பற்பல குறிகளால் அறிந்தே
சிவந்தபொன் மலைபோல் இருந்ததும் இந்நாள்
திகைப்பதும் திருவுளம் அறியும்.
119
3529 ஏய்ந்தபொன் மலைமேல் தம்பத்தில் ஏறி
ஏகவும் ஏகவும் நுணுகித்
தேய்ந்தபோ தடியேன் பயந்தவெம் பயத்தைத்
தீர்த்துமேல் ஏற்றிய திறத்தை
வாய்ந்துளே கருதி மலைஎனப் பணைத்தே
மனங்களிப் புற்றுமெய் இன்பம்
தோய்ந்துநின் றாடிச்சுழன்றதும் இந்நாள்
சுழல்வதும் திருவுளம் அறியும்.
120
3530 வாட்டமோ டிருந்த சிறியனேன் தனது
வாட்டமும் மாயையா திகளின்
ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத் திரங்கி
என்னைஓர் பொருள்என மதித்தே
தீட்டரும் புகழ்சேர் திருவடித் துணைகள்
செலுத்திய திருச்சிலம் பொலிநான்
கேட்டபோ திருந்த கிளர்ச்சியும் இந்நாள்
கிலேசமுந் திருவுளம் அறியும்.
121
3531 கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல்என்
காதிலே கிடைத்தபோ தெல்லாம்
மற்றவர் தமக்கென் உற்றதோ அவர்தம்
மரபினர் உறவினர் தமக்குள்
உற்றதிங் கெதுவோ என்றுளம் நடுங்கி
ஓடிப்பார்த் தோடிப்பார்த் திரவும்
எற்றரு பகலும் ஏங்கிநான் அடைந்த
ஏக்கமுந் திருவுளம் அறியும்.
122
3532 கருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம்
கருத்திலே கலந்ததெள் ளமுதம்
மருள்நெறி தவிர்க்கும் மருந்தெலாம் வல்ல
வள்ளல்சிற் றம்பலம் மன்னும்
பொருள்நிறை இன்பம் நம்மைஆண் டளித்த
புண்ணியம் வருகின்ற தருணம்
தருணம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும்
தன்மையும் திருவுளம் அறியும்.
123
3533 இமையவர் பிரமர் நாரணர் முதலோர்
எய்துதற் கரியபே ரின்பம்
தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம்
தயாநிதி தனிப்பெருந் தந்தை
அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப் பொதுவில்
ஐயர் தாம் வருகின்ற சமயம்
சமயம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும்
தன்மையும் திருவுளம் அறியும்.
124
3534 அடியனேன் உள்ளம் திருச்சிற்றம் பலத்தென்
அமுதநின் மேல்வைத்த காதல்
நெடியஏழ் கடலில் பெரிதெனக் கிந்நாள்
நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
படியஎன் தன்னால் சொலமுடி யாது
பார்ப்பறப் பார்த்திருக் கின்றேன்
செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம்
திருவுளங் கண்டதே எந்தாய்.
125
3535 பன்னிரண் டாண்டு தொடங்கிநான் இற்றைப்
பகல்வரை அடைந்தவை எல்லாம்
உன்னிநின் றுரைத்தால் உலப்புறா ததனால்
ஒருசில உரைத்தனன் எனினும்
என்னுளத் தகத்தும் புறத்தும்உட் புறத்தும்
இயல்புறப் புறத்தினும் விளங்கி
மன்னிய சோதி யாவும்நீ அறிந்த
வண்ணமே வகுப்பதென் நினக்கே.
126
3536 இதுவரை அடியேன் அடைந்தவெம் பயமும்
இடர்களும் துன்பமும் எல்லாம்
பொதுவளர் பொருளே பிறர்பொருட் டல்லால்
புலையனேன் பொருட்டல இதுநின்
மதுவளர் மலர்ப்பொற் பதத்துணை அறிய
வகுத்தனன் அடியனேன் தனக்கே
எதிலும்ஓர் ஆசை இலைஇலை பயமும்
இடரும்மற் றிலைஇலை எந்தாய்.
127
3537 என்னள விலையே என்னினும் பிறர்பால்
எய்திய கருணையால் எந்தாய்
உன்னுறு பயமும் இடருமென் தன்னை
உயிரொடும் தின்கின்ற தந்தோ
இன்னும்என் றனக்கிவ் விடரொடு பயமும்
இருந்திடில்231 என்உயிர் தரியா
தன்னையும் குருவும் அப்பனும் ஆன
அமுதனே அளித்தருள் எனையே.
128
231. இருக்கில் - பி. இரா. பதிப்பு,
3538 பயத்தொடு துயரும் மறைப்புமா மாயைப்
பற்றொடு வினையும்ஆ ணவமும்
கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது
கருத்திலே இனிஒரு கணமும்
வியத்திடத் தரியேன் இவையெலாந் தவிர்த்துன்
மெய்யருள் அளித்திடல் வேண்டும்
உயத்தரு வாயேல் இருக்கின்றேன் இலையேல்
உயிர்விடு கின்றனன் இன்றே.
129
3539 ஐயநான் பயத்தால் துயரினால் அடைந்த
அடைவைஉள் நினைத்திடுந் தோறும்
வெய்யதீ மூட்டி விடுதல்232 ஒப் பதுநான்
மிகஇவற் றால்இளைத் திட்டேன்
வையமேல் இனிநான் இவைகளால் இளைக்க
வசமிலேன் இவைஎலாம் தவிர்த்தே
உய்யவைப் பாயேல் இருக்கின்றேன் இலையேல்
உயிர்விடு கின்றனன் இன்றே.
130
232. விடுத்தல் - முதற்பதிப்பு, பொ. சு.,ச. மு. க., பி. இரா. பதிப்பு.
3540 பயந்துயர் இடர்உள் மருட்சியா தியஇப்
பகைஎலாம் பற்றறத் தவிர்த்தே
நயந்தநின் அருளார்233 அமுதளித் தடியேன்
நாடிஈண் டெண்ணிய எல்லாம்
வியந்திடத் தருதல் வேண்டும்ஈ தெனது
விண்ணப்பம் நின்திரு உளத்தே
வயந்தரக் கருதித் தயவுசெய் தருள்க
வள்ளலே சிற்சபை வாழ்வே.
131
233. அருளாம் - ச. மு. க. பதிப்பு.
3541 என்னுயிர் காத்தல் கடன்உனக் கடியேன்
இசைத்தவிண் ணப்பம்ஏற் றருளி
உன்னுமென் உள்ளத் துறும்பயம் இடர்கள்
உறுகண்மற் றிவைஎலாம் ஒழித்தே
நின்னருள் அமுதம் அளித்தென தெண்ணம்
நிரப்பியாட் கொள்ளுதல் வேண்டும்
மன்னுபொற் சபையில் வயங்கிய மணியே
வள்ளலே சிற்சபை வாழ்வே.
132
3542 பரிக்கிலேன் பயமும் இடரும்வெந் துயரும்
பற்றறத் தவிர்த்தருள் இனிநான்
தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம்
தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ
புரிக்கிலே சத்தை அகற்றிஆட் கொள்ளும்
பொற்சபை அண்ணலே கருணை
வரிக்கணேர் மடந்தை பாகனே சிவனே234
வள்ளலே சிற்சபை வாழ்வே.
133
234. வரிக்கணேர் இன்ப வல்லியை மணந்த - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க. பதிப்பு.

திருச்சிற்றம்பலம்

14. மாயையின் விளக்கம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3543 திடுக்கற எனைத்தான் வளர்த்திடப் பரையாம்
செவிலிபாற் சேர்த்தனை அவளோ
எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள்
என்செய்வேன் இன்னும்என் னிடைப்பால்
மடுக்கநற் றாயும் வந்திலள் நீயும்
வந்தெனைப் பார்த்திலை அந்தோ
தடுக்கருங் கருணைத் தந்தையே தளர்ந்தேன்
தனையனேன் தளர்ந்திடல் அழகோ.
1
3544 தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர்
தாய்கையில் கொடுத்தனை அவளோ
வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று
மாயமே புரிந்திருக் கின்றாள்
கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும்
கேட்பதற் கடைந்திலன் அந்தோ
உளந்தரு கருணைத் தந்தையே நீயும்
உற்றிலை பெற்றவர்க் கழகோ.
3545 தாங்கஎன் தனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
தாயவள் நான்தனித் துணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள்
சூதையே நினைத்திருக் கின்றாள்
ஓங்குநற் றாயும் வந்திலாள் அந்தோ
உளந்தளர் வுற்றனன் நீயும்
ஈங்குவந் திலையேல் என்செய்கேன் இதுதான்
எந்தைநின் திருவருட் கழகோ.
3
3546 அத்தநீ எனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
ஆங்கவள் மகள்கையில் கொடுத்தாள்
நித்திய மகள்ஓர் நீலிபாற் கொடுத்தாள்
நீலியோ தன்புடை ஆடும்
தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள்
தனித்தனி அவர்அவர் எடுத்தே
கத்தவெம் பயமே காட்டினர் நானும்
கலங்கினேன் கலங்கிடல் அழகோ.
4
3547 வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற
மகள்கையில் கொடுத்தனள் எனைத்தான்
ஈங்கிவள் கருத்தில் எதுநினைத் தனளோ
என்செய்வேன் என்னையே உணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித்
தொட்டிலும் ஆட்டிடு கின்றாள்
ஏங்குறு கின்றேன் பிள்ளைதன் அருமை
ஈன்றவர் அறிவரே எந்தாய்.
5
3548 வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி
மக்கள்பால் காட்டிவிட் டிருந்தாள்
மலத்திலே உழைத்துக் கிடந்தழல் கேட்டும்
வந்தெனை எடுத்திலார் அவரும்
இலத்திலே கூடி ஆடுகின் றனர்நான்
என்செய்வேன் என்னுடை அருமை
நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய்
நீயும்இங் கறிந்திலை யேயோ.
6
3549 தும்மினேன் வெதும்பித் தொட்டிலிற் கிடந்தே
சோர்ந்தழு திளைத்துமென் குரலும்
கம்மினேன் செவிலி அம்மிபோல் அசையாள்
காதுறக் கேட்டிருக் கின்றாள்
செம்மியே மடவார் கொம்மியே பாடிச்
சிரித்திருக் கின்றனர் அந்தோ
இம்மியே எனினும் ஈந்திடார் போல
இருப்பதோ நீயும்எந் தாயே.
7
3550 துருவிலா வயிரத் தொட்டிலே தங்கத்
தொட்டிலே பலஇருந் திடவும்
திருவிலாப் பொத்தைத் தொட்டிலிற் செவிலி
சிறியனைக் கிடத்தினள் எந்தாய்
பிரிவிலாத் தனிமைத் தலைவநீ பெற்ற
பிள்ளைநான் எனக்கிது பெறுமோ
கருவிலாய் நீஇத் தருணம்வந் திதனைக்
கண்டிடில் சகிக்குமோ நினக்கே.
8
3551 காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும்
னிவிலாள் காமமா திகளாம்
பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப்
பயம்புரி வித்தனள் பலகால்
தேய்ந்திடு மதிஎன் றெண்ணினாள் குறையாத்
திருமதி எனநினைந் தறியாள்
சாய்ந்தஇச் செவிலி கையிலே என்னைத்
தந்தது சாலும்எந் தாயே.
9
3552 ஞானஆ னந்த வல்லியாம் பிரியா
நாயகி யுடன்எழுந் தருளி
ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே
இன்னமு தனைத்தையும் அருத்தி
ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில்
உறப்புரிந் தெனைப்பிரி யாமல்
வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க
மாமணி மன்றில்எந் தாயே.
10

திருச்சிற்றம்பலம்

15. அபயத் திறன்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3553 ஆடக மணிப்பொற் குன்றமே என்னை
ஆண்டுகொண் டருளிய பொருளே
வீடகத் தேற்றும் விளக்கமே விளக்கின்
மெய்யொளிக் குள்ளொளி வியப்பே
வாடகச் சிறியேன் வாட்டங்கள் எல்லாம்
தவிர்த்தருள் வழங்கிய மன்றில்
நாடகக் கருணை நாதனே உன்னை
நம்பினேன் கைவிடேல் எனையே.
1
3554 வட்டவான் சுடரே வளரொளி விளக்கே
வயங்குசிற் சோதியே அடியேன்
இட்டமே இட்டத் தியைந்துளே கலந்த
இன்பமே என்பெரும் பொருளே
கட்டமே தவிர்த்திங் கென்னைவாழ் வித்த
கடவுளே கனகமன் றகத்தே
நட்டமே புரியும் பேரரு ளரசே
நம்பினேன் கைவிடேல் எனையே.
2
3555 புல்லவா மனத்தேன் என்னினும் சமயம்
புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம்
சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர்
சொப்பனத் தாயினும் நினையேன்
கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன்
கனகமா மன்றிலே நடிக்கும்
நல்லவா எல்லாம் வல்லவா உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
3
3556 புண்படா உடம்பும் புரைபடா மனமும்
பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
கண்படா திரவும் பகலும்நின் தனையே
கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்
உண்பனே எனினும் உடுப்பனே எனினும்
உலகரை நம்பிலேன் எனது
நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
4
3557 புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம்
புகுந்தெனைக் கலக்கிய போதும்
கண்ணிலே எனது கருத்திலே கலந்த
கருத்தனே நின்றனை அல்லால்
மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை
மதித்திலேன் மதிக்கின்றார் தமையும்
நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
5
3558 ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும்
ஊக்கமும் உண்மையும் என்னைத்
தான்பெறு தாயும் தந்தையும் குருவும்
தனிப்பெருந் தெய்வமுந் தவமும்
வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும்
மக்களும் மனைவியும் உறவும்
நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே
நம்பினேன் கைவிடேல் எனையே.
6
3559 வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்தென்
வடிவமும் வண்ணமும் உயிரும்
தேட்டமும் நீயே கொண்டுநின் கருணைத்
தேகமும் உருவும்மெய்ச் சிவமும்
ஈட்டமும் எல்லாம் வல்லநின் னருட்பே
ரின்பமும் அன்பும்மெய்ஞ் ஞான
நாட்டமும் கொடுத்துக் காப்பதுன் கடன்நான்
நம்பினேன் கைவிடேல் எனையே.
7
3560 வம்பனேன் பிறர்போல் வையமும் வானும்
மற்றவும் மதித்திலேன் மதஞ்சார்
உம்பனேர் அகங்கா ரந்தவிர்ந் தெல்லா
உலகமும் வாழ்கவென் றிருந்தேன்
செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம்
செயவல்ல சித்தனே சிவனே
நம்பனே ஞான நாதனே உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
8
3561 ஆயகால் இருந்தும் நடந்திட வலியில்
லாமையால் அழுங்குவார் எனஉண்
மேயகால் இருந்தும் திருவருள் உறஓர்
விருப்பிலா மையின்மிக மெலிந்தேன்
தீயகான் விலங்கைத் தூயமா னிடஞ்செய்
சித்தனே சத்திய சபைக்கு
நாயகா உயிர்க்கு நயகா உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
9
3562 அற்றமும் மறைக்கும் அறிவிலா தோடி
ஆடிய சிறுபரு வத்தே
குற்றமும் குணங்கொண் டென்னைஆட் கொண்ட
குணப்பெருங் குன்றமே குருவே
செற்றமும் விருப்பும் தீர்த்தமெய்த் தவர்தம்
சிந்தையில் இனிக்கின்ற தேனே
நற்றக வுடைய நாதனே உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
10
3563 படம்புரி பாம்பிற் கொடியனேன் கொடிய
பாவியிற் பாவியேன் தீமைக்
கிடம்புரி மனத்தேன் இரக்கம்ஒன் றில்லேன்
என்னினும் துணைஎந்த விதத்தும்
திடம்புரி நின்பொன் அடித்துணை எனவே
சிந்தனை செய்திருக் கின்றேன்
நடம்புரி கருணை நாயகா உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
11
3564 படித்தனன் உலகப் படிப்பெலாம் மெய்ந்நூல்
படித்தவர் தங்களைப் பார்த்து
நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம
நோக்கினேன் பொய்யர்தம் உறவு
பிடித்தனன் உலகில் பேதையர் மயங்கப்
பெரியரில் பெரியர்போல் பேசி
நடித்தனன் எனினும் நின்னடித் துணையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
12
3565 பஞ்சுநேர் உலகப் பாட்டிலே மெலிந்த
பாவியேன் சாவியே போன
புஞ்செயே அனையேன் புழுத்தலைப் புலையேன்
பொய்யெலாம் பூரித்த வஞ்ச
நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில்
நெடியனேன் கொடியனேன் காம
நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
13
3566 கயந்துளே உவட்டும் காஞ்சிரங் காயில்
கடியனேன் காமமே கலந்து
வியந்துளே மகிழும் வீணனேன் கொடிய
வெகுளியேன் வெய்யனேன் வெறியேன்
மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை
மக்களை ஒக்கலை மதித்தே
நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
14
3567 ஓடினேன் பெரும்பே ராசையால் உலகில்
ஊர்தொறும் உண்டியே உடையே
தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து
தியங்கினேன் மயங்கினேன் திகைத்து
வாடினேன் சிறிய வாரியான் மகிழ்ந்தேன்
வஞ்சமே பொருளென மதித்து
நாடினேன் எனினும் பாடினேன் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
15
3568 காட்டிலே திரியும் விலங்கினிற் கடையேன்
கைவழக் கத்தினால் ஒடிந்த
ஓட்டிலே எனினும் ஆசைவிட் டறியேன்
உலுத்தனேன் ஒருசிறு துரும்பும்
ஏட்டிலே எழுதிக் கணக்கிட்ட கொடியேன்
எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக
நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
16
3569 துனித்தவெம் மடவார் பகல்வந்த போது
துறவியின் கடுகடுத் திருந்தேன்
தனித்திர வதிலே வந்தபோ தோடித்
தழுவினேன் தடமுலை விழைந்தேன்
இனித்தசொல் புகன்றேன் என்பினைக் கறித்தே
இடர்ப்பட்ட நாயென இளைத்தேன்
நனித்தவ றுடையேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
17
3570 தார்த்தட முலையார் நான்பல ரொடுஞ்சார்
தலத்திலே வந்தபோ தவரைப்
பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப்
பாதகப் பூனைபோல் இருந்தேன்
பேர்த்துநான் தனித்த போதுபோய் வலிந்து
பேசினேன் வஞ்சரிற் பெரியேன்
நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
18
3571 பெண்மையே விழைந்தேன் அவர்மனம் அறியேன்
பேய்எனப் பிடித்தனன் மடவார்க்
குண்மையே புகல்வான் போன்றவர் தமைத்தொட்
டுவந்தகங் களித்தபொய் யுளத்தேன்
தண்மையே அறியேன் வெம்மையே உடையேன்
சாத்திரம் புகன்றுவாய் தடித்தேன்
நண்மையே அடையேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
19
3572 வன்மையில் பொருள்மேல் இச்சைஇல் லவன்போல்
வாதிபோல் வார்த்தைகள் வழங்கி
அன்மையில் பிறர்பால் உளவினால் பொருளை
அடிக்கடி வாங்கிய கொடியேன்
இன்மையுற் றவருக் குதவிலேன் பொருளை
எனைவிடக் கொடியருக் கீந்தேன்
நன்மையுற் றறியேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
20
3573 கட்டமே அறியேன் அடுத்தவர் இடத்தே
காசிலே ஆசையில் லவன்போல்
பட்டமே காட்டிப் பணம்பறித் துழன்றேன்
பகல்எலாம் தவசிபோல் இருந்தேன்
இட்டமே இரவில் உண்டயல் புணர்ந்தே
இழுதையிற் றூங்கினேன் களித்து
நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
21
3574 காணியே கருதும் கருத்தினைப் பிறர்க்குக்
காட்டிடா தம்பெலாம் அடங்கும்
தூணியே எனச்சார்ந் திருந்தனன் சோற்றுச்
சுகத்தினால் சோம்பினேன் உதவா
ஏணியே அனையேன் இரப்பவர்க் குமியும்
ஈந்திலேன் ஈந்தவன் எனவே
நாணிலேன் உரைத்தேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
22
3575 அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன்
அடிக்கடி பொய்களே புனைந்தே
எடுத்தெடுத் துரைத்தேன் எனக்கெதிர் இலைஎன்
றிகழ்ந்தனன் அகங்கரித் திருந்தேன்
கொடுத்தவர் தமையே மிகவுப சரித்தேன்
கொடாதவர் தமைஇகழ்ந் துரைத்தேன்
நடுத்தய வறியேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
23
3576 எளியவர் விளைத்த நிலமெலாங் கவரும்
எண்ணமே பெரிதுளேன் புன்செய்க்
களியுணும் மனையில் சர்க்கரை கலந்து
காய்ச்சுபால் கேட்டுண்ட கடையேன்
துளியவர்க் குதவேன் விருப்பிலான் போலச்
சுவைபெறச் சுவைத்தநாக் குடையேன்
நளிர்எனச் சுழன்றேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
24
3577 கொலைபல புரிந்தே புலைநுகர்ந் திருந்தேன்
கோடுறு குரங்கினிற் குதித்தே
அலைதரு மனத்தேன் அறிவிலேன் எல்லாம்
அறிந்தவன் போல்பிறர்க் குரைத்தேன்
மலைவுறு சமய வலைஅகப் பட்டே
மயங்கிய மதியினேன் நல்லோர்
நலையல எனவே திரிந்தனன் எனினும்
நம்பினேன் கைவிடேல் எனையே.
25
3578 ஈயெனப் பறந்தேன் எறும்பென உழன்றேன்
எட்டியே எனமிகத் தழைத்தேன்
பேயெனச் சுழன்றேன் பித்தனே எனவாய்ப்
பிதற்றொடும் ஊர்தொறும் பெயர்ந்தேன்
காயெனக் காய்த்தேன் கடையென நடந்தேன்
கல்லெனக் கிடந்தனன் குரைக்கும்
நாயெனத் திரிந்தேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
26
3579 ஒன்றியே உணவை உண்டுடல் பருத்த
ஊத்தையேன் நாத்தழும் புறவே
வென்றியே உரைத்து வினைகளே விளைத்த
வீணனேன் ஊர்தொறுஞ் சுழன்ற
பன்றியே அனையேன் கட்டுவார் அற்ற
பகடெனத் திரிகின்ற படிறேன்
நன்றியே அறியேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
27
3580 கவையெலாந் தவிர்ந்த வெறுமரம் அனையேன்
கள்ளனேன் கள்ளுண்ட கடியேன்
சுவையெலாம் விரும்பிச் சுழன்றதோர் கடையேன்
துட்டனேன் தீதெலாந் துணிந்தேன்
இவையெலாம் அந்நாள் உடையனோ அலனோ
இந்தநாள் இறைவநின் அருளால்
நவையெலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
28

திருச்சிற்றம்பலம்

16. ஆற்ற மாட்டாமை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3581 இப்பார் முதல்எண் மூர்த்தமதாய்
இலங்கும் கருணை எங்கோவே
தப்பா யினதீர்த் தென்னையும்முன்
தடுத்தாட் கொண்ட தயாநிதியே
எப்பா லவரும் புகழ்ந்தேத்தும்
இறைவா எல்லாம் வல்லோனே
அப்பா அரசே இனிச்சிறிதும்
ஆற்ற மாட்டேன் கண்டாயே.
1
3582 புரைசேர் துயரப் புணரிமுற்றும்
கடத்தி ஞான பூரணமாம்
கரைசேர்த் தருளி இன்னமுதக்
கடலைக் குடிப்பித் திடல்வேண்டும்
உரைசேர் மறையின் முடிவிளங்கும்
ஒளிமா மணியே உடையானே
அரைசே அப்பா இனிச்சிறிதும்
ஆற்ற மாட்டேன் கண்டாயே.
2

3583
கண்ணார் அமுதக் கடலேஎன்
கண்ணே கண்ணுட் கருமணியே
தண்ணார் மதியே கதிர்பரப்பித்
தழைத்த சுடரே தனிக்கனலே
எண்ணா டரிய பெரியஅண்டம்
எல்லாம் நிறைந்த அருட்சோதி
அண்ணா அரசே இனிச்சிறிதும்
ஆற்ற மாட்டேன் கண்டாயே.
3
3584 பொய்யா தென்றும் எனதுளத்தே
பொருந்தும் மருந்தே புண்ணியனே
கையார்ந் திலங்கு மணியேசெங்
கரும்பே கனியே கடையேற்குச்
செய்யா உதவி செய்தபெருந்
தேவே மூவாத் தெள்ளமுதே
ஐயா அரசே இனிச்சிறிதும்
ஆற்ற மாட்டேன் கண்டாயே.
4
3585 இத்தா ரணியில் என்பிழைகள்
எல்லாம் பொறுத்த என்குருவே
நித்தா சிற்றம் பலத்தாடும்
நிருத்தா எல்லாஞ் செயவல்ல
சித்தா சித்தி புரத்தமர்ந்த
தேவே சித்த சிகாமணியே
அத்தா அரசே இனிச்சிறிதும்
ஆற்ற மாட்டேன் கண்டாயே.
5
3586 எம்மே தகவும் உடையவர்தம்
இதயத் தமர்ந்த இறையவனே
இம்மே தினியில் எனைவருவித்
திட்ட கருணை எம்மானே
நம்மே லவர்க்கும் அறிவரிய
நாதா என்னை நயந்தீன்ற
அம்மே அப்பா இனிச்சிறிதும்
ஆற்ற மாட்டேன்கண்டாயே.
6
3587 செப்பார் கலைகள் மொழிந்தபொருள்
திறங்கள் அனைத்துந் தெரிந்துதெளிந்
திப்பா ரிடைநின் புகழ்பாடு
கின்ற பெரிய ரின்மொழிப்பாட்
டொப்பாச் சிறியேன் புன்மொழிப்பாட்
டெல்லாம் உவந்த உடையானே
அப்பா அரசே இனிச்சிறிதும்
ஆற்ற மாட்டேன் கண்டாயே.
7
3588 துப்பார் கனகப் பொதுவில்நடத்
தொழிலால் உலகத் துயர்ஒழிக்கும்
வைப்பாம் இறைவா சிவகாம
வல்லிக் கிசைந்த மணவாளா
ஒப்பார் உயர்ந்தார் இல்லாத
ஒருவா எல்லாம் உடையானே
அப்பா அரசே இனிச்சிறிதும்
ஆற்ற மாட்டேன் கண்டாயே.
8
3589 ஒப்பா ருரைப்பார் நின்பெருமைக்
கெனமா மறைகள் ஓலமிடும்
துப்பார் வண்ணச் சுடரேமெய்ச்
சோதிப் படிக வண்ணத்தாய்
வெப்பா னவைதீர்த் தெனக்கமுத
விருந்து புரிதல் வேண்டும்என்றன்
அப்பா அரசே இனிச்சிறிதும்
ஆற்ற மாட்டேன் கண்டாயே.
9
3590 வெப்பார் உள்ளக் கலக்கமெலாம்
இற்றைப் பொழுதே விலக்கிஒழித்
திப்பா ரிடைஎன் கருத்தின்வண்ணம்
எல்லாம் விரைவின் ஈந்தருள்க
ஒப்பால் உரைத்த தன்றுண்மை
உரைத்தேன் கருணை உடையானே
அப்பா அரசே இனிச்சிறிதும்
ஆற்ற மாட்டேன் கண்டாயே.
10

திருச்சிற்றம்பலம்

17. வாதனைக் கழிவு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3591 பாழுது விடிந்த தினிச்சிறிதும்
பொறுத்து முடியேன் எனநின்றே
அழுது விழிகள் நீர்துளும்பக்
கூவிக் கூவி அயர்கின்றேன்
பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள்
பட்ட திலையோ பலகாலும்235
உழுது களைத்த மாடனையேன்
துணைவே றறியேன் உடையானே.
1
235. பலநாளும் - ச. மு. க. பதிப்பு.
3592 உடையாய் திருஅம் பலத்தாடல்
ஒருவா ஒருவா உலவாத
கொடையாய் எனநான் நின்றனையே
கூவிக் கூவி அயர்கின்றேன்
தடையா யினதீர்த் தருளாதே
தாழ்க்கில் அழகோ புலைநாயிற்
கடையாய்த் திரிந்தேன் கலங்குதல்சம்
மதமோ கருணைக் கருத்தினுக்கே.
2
3593 கருணைக் கருத்து மலர்ந்தெனது
கலக்க மனைத்துந் தவிர்த்தேஇத்
தருணத் தருளா விடில்அடியேன்
தரியேன் தளர்வேன் தளர்வதுதான்
அருணச் சுடரே நின்னருளுக்
கழகோ அழகென் றிருப்பாயேல்
தெருணற் பதஞ்சார் அன்பரெலாம்236
சிரிப்பார் நானும் திகைப்பேனே.
3
236. அடியரெலாம் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
3594 திகைப்பார் திகைக்க நான்சிறிதும்
திகையேன் எனநின் திருவடிக்கே
வகைப்பா மாலை சூட்டுகின்றேன்
மற்றொன் றறியேன் சிறியேற்குத்
தகைப்பா ரிடைஇத் தருணத்தே
தாராய் எனிலோ பிறரெல்லாம்
நகைப்பார் நகைக்க உடம்பினைவைத்
திருத்தல் அழகோ நாயகனே.
4
3595 நாயிற் கடையேன் கலக்கமெலாம்
தவிர்த்து நினது நல்லருளை
ஈயிற் கருணைப் பெருங்கடலே
என்னே கெடுவ தியற்கையிலே
தாயிற் பெரிதும்237 தயவுடையான்
குற்றம் புரிந்தோன் தன்னையும்ஓர்
சேயிற் கருதி அணைத்தான்என்
றுரைப்பா ருனைத்தான் தெரிந்தோரே.
5
237. தாயிற் பெரிய - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா.
3596 தெரிந்த பெரியர்க் கருள்புரிதல்
சிறப்பென் றுரைத்த தெய்வமறை
திரிந்த சிறியர்க் கருள்புரிதல்
சிறப்பிற் சிறப்பென் றுரைத்தனவே
புரிந்தம் மறையைப் புகன்றவனும்
நீயே என்றால் புண்ணியனே
விரிந்த மனத்துச் சிறியேனுக்
கிரங்கி அருளல் வேண்டாவோ.
6
3597 வேண்டார் உளரோ நின்னருளை
மேலோ ரன்றிக் கீழோரும்
ஈண்டார் வதற்கு வேண்டினரால்
இன்று புதிதோ யான்வேண்டல்
தூண்டா விளக்கே திருப்பொதுவிற்
சோதி மணியே ஆறொடுமூன்
றாண்டா வதிலே முன்னென்னை
ஆண்டாய் கருணை அளித்தருளே.
7
3598 அருளே வடிவாம் அரசேநீ
அருளா விடில்இவ் வடியேனுக்
கிருளே தொலைய அருளளிப்பார்
எவரே எல்லாம் வல்லோய்நின்
பொருளேய் வடிவிற் கலைஒன்றே
புறத்தும் அகத்தும் புணர்ந்தெங்குந்
தெருளே யுறஎத் தலைவருக்குஞ்
சிறந்த அருளாய்த் திகழ்வதுவே.
8
3599 திகழ்ந்தார் கின்ற திருப்பொதுவில்
சிவமே நின்னைத் தெரிந்துகொண்டு
புகழ்ந்தார் தம்மைப் பொறுத்திடவும்
புன்மை அறிவால் பொய்உரைத்தே
இகழ்ந்தேன் தனைக்கீழ் வீழ்த்திடவும்
என்னே புவிக்கிங் கிசைத்திலைநீ
அகழ்ந்தார் தமையும் பொறுக்கஎன
அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே.
9
3600 எல்லாம் வகுத்தாய் எனக்கருளில்
஡ரே தடுப்பார் எல்லாஞ்செய்
வல்லான் வகுத்த வண்ணம்என
மகிழ்வார் என்கண் மணியேஎன்
சொல்லா னவையும் அணிந்துகொண்ட
துரையே சோதித் திருப்பொதுவில்
நல்லாய் கருணை நடத்தரசே
தருணம் இதுநீ நயந்தருளே.
10
3601 நயந்த கருணை நடத்தரசே
ஞான அமுதே நல்லோர்கள்
வியந்த மணியே மெய்யறிவாம்
விளக்கே என்னை விதித்தோனே
கயந்த மனத்தேன் எனினும்மிகக்
கலங்கி நரகக் கடுங்கடையில்
பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல்
அழகோ கடைக்கண் பார்த்தருளே.
11
3602 பார்த்தார் இரங்கச் சிறியேன்நான்
பாவி மனத்தால் பட்டதுயர்
தீர்த்தாய் அந்நாள் அதுதொடங்கித்
தெய்வந் துணைஎன் றிருக்கின்றேன்
சேர்த்தார்238 உலகில் இந்நாளில்
சிறியேன் தனைவெந் துயர்ப்பாவி
ஈர்த்தால் அதுகண் டிருப்பதுவோ
கருணைக் கழகிங் கெந்தாயே.
12
238. சேர்த்தாய் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
3603 தாயே எனைத்தான் தந்தவனே
தலைவா ஞான சபாபதியே
பேயேன் செய்த பெருங்குற்றம்
பொறுத்தாட் கொண்ட பெரியோனே
நீயே இந்நாள் முகமறியார்
நிலையில் இருந்தால் நீடுலகில்
நாயே அனையேன் எவர்துணைஎன்
றெங்கே புகுவேன் நவிலாயே.
13
3604 ஆயேன் வேதா கமங்களைநன்
கறியேன் சிறியேன் அவலமிகும்
பேயேன் எனினும் வலிந்தென்னைப்
பெற்ற கருணைப் பெருமானே
நீயே அருள நினைத்தாயேல்
எல்லா நலமும் நிரம்புவன்நான்
காயே எனினும் கனிஆகும்
அன்றே நினது கருணைக்கே.
14
3605 கருணா நிதியே என்இரண்டு
கண்ணே கண்ணிற் கலந்தொளிரும்
தெருணா டொளியே வெளியேமெய்ச்
சிவமே சித்த சிகாமணியே
இருணா டுலகில் அறிவின்றி
இருக்கத் தரியேன் இதுதருணம்
தருணா அடியேற் கருட்சோதி
தருவாய் என்முன் வருவாயே.
15
3606 வருவாய் என்கண் மணிநீஎன்
மனத்திற் குறித்த வண்ணமெலாம்
தருவாய் தருணம் இதுவேமெய்த்
தலைவா ஞான சபாபதியே
உருவாய்239 சிறிது தாழ்க்கில்உயிர்
ஒருவும் உரைத்தேன் என்னுடைவாய்
இருவாய் அலநின் திருவடிப்பாட்
டிசைக்கும் ஒருவாய் இசைத்தேனே.
16
239. ஒருவா - ச. மு. க.
3607 தேனே திருச்சிற் றம்பலத்தில்
தெள்ளா ரமுதே சிவஞான
வானே ஞான சித்தசிகா
மணியே என்கண் மணியேஎன்
ஊனே புகுந்தென் உளங்கலந்த
உடையாய் அடியேன் உவந்திடநீ
தானே மகிழ்ந்து தந்தாய்இத்
தருணம் கைம்மா றறியேனே.
17
3608 அறியேன் சிறியேன் செய்தபிழை
அனைத்தும் பொறுத்தாய் அருட்சோதிக்
குறியே குணமே பெறஎன்னைக்
குறிக்கொண் டளித்தாய் சன்மார்க்க
நெறியே விளங்க எனைக்கலந்து
நிறைந்தாய் நின்னை ஒருகணமும்
பிறியேன் பிறியேன் இறவாமை
பெற்றேன் உற்றேன் பெருஞ்சுகமே.
18
3609 சுகமே நிரம்பப் பெருங்கருணைத்
தொட்டில் இடத்தே எனைஅமர்த்தி
அகமே விளங்கத் திருஅருளார்
அமுதம் அளித்தே அணைத்தருளி
முகமே மலர்த்திச் சித்திநிலை
முழுதும் கொடுத்து மூவாமல்
சகமேல்240 இருக்கப் புரிந்தாயே
தாயே என்னைத் தந்தாயே.
19
240. சகமே - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க.
3610 தந்தாய் இன்றும் தருகின்றாய்
தருவாய் மேலுந் தனித்தலைமை
எந்தாய் நினது பெருங்கருணை
என்என் றுரைப்பேன் இவ்வுலகில்
சிந்தா குலந்தீர்த் தருள்எனநான்
சிறிதே கூவு முன்என்பால்
வந்தாய் கலந்து மகிழ்கின்றாய்
எனது பொழுது வான்பொழுதே.
20

திருச்சிற்றம்பலம்

18. அபயம் இடுதல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3611 உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்
உலவா ஒருபேர் அருளார் அமுதம்
தருவாய் இதுவே தருணம் தருணம்
தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ
வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான்
மதிசேர் முடிஎம் பதியே அடியேன்
குருவாய் முனமே மனமே இடமாக்
குடிகொண் டவனே அபயம் அபயம்.
1
3612 என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங்
கிதுஎன் றருள்வாய் இதுவே தருணம்
மன்னே அயனும் திருமா லவனும்
மதித்தற் கரிய பெரிய பொருளே
அன்னே அப்பா ஐயா அரசே
அன்பே அறிவே அமுதே அழியாப்
பொன்னே மணியே பொருளே அருளே
பொதுவாழ் புனிதா அபயம் அபயம்.
2
3613 கருணா நிதியே அபயம் அபயம்
கனகா கரனே அபயம் அபயம்
அருணா டகனே அபயம் அபயம்
அழகா அமலா அபயம் அபயம்
தருணா தவனே அபயம் அபயம்
தனிநா யகனே அபயம் அபயம்
தெருணா டுறுவாய் அபயம் அபயம்
திருவம் பலவா அபயம் அபயம்.
3
3614 மருளும் துயரும் தவிரும் படிஎன்
மனமன் றிடைநீ வருவாய் அபயம்
இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ்
சினன்என் றிகழேல் அபயம் அபயம்
வெருளும் கொடுவெம் புலையும் கொலையும்
விடுமா றருள்வாய் அபயம் அபயம்
அருளும் பொருளும் தெருளும் தருவாய்
அபயம் அபயம் அபயம் அபயம்.
4
3615 இனிஓர் இறையும் தரியேன் அபயம்
இதுநின் அருளே அறியும் அபயம்
கனியேன் எனநீ நினையேல் அபயம்
கனியே241 கருணைக் கடலே அபயம்
தனியேன் துணைவே றறியேன் அபயம்
தகுமோ தகுமோ தலைவா அபயம்
துனியே அறவந் தருள்வாய் அபயம்
சுகநா டகனே அபயம் அபயம்.
5
241. களியே - படிவேறுபாடு. ஆ. பா.
3616 அடியார் இதயாம் புயனே அபயம்
அரசே அமுதே அபயம் அபயம்
முடியா தினிநான் தரியேன் அபயம்
முறையோ முறையோ முதல்வா அபயம்
கடியேன் அலன்நான் அபயம் அபயம்
கருணா கரனே அபயம் அபயம்
தடியேல் அருள்வாய் அபயம் அபயம்
தருணா தவனே அபயம் அபயம்.
6
3617 மலவா தனைதீர் கலவா அபயம்
வலவா திருஅம் பலவா அபயம்
உலவா நெறிநீ சொலவா அபயம்
உறைவாய் உயிர்வாய் இறைவா அபயம்
பலஆ குலம்நான் தரியேன் அபயம்
பலவா பகவா பனவா அபயம்
நலவா அடியேன் அலவா அபயம்
நடநா யகனே அபயம் அபயம்.
7
3618 கொடியேன் பிழைநீ குறியேல் அபயம்
கொலைதீர் நெறிஎன் குருவே அபயம்
முடியேன் பிறவேன் எனநின் அடியே
முயல்வேன் செயல்வே றறியேன் அபயம்
படியே அறியும் படியே வருவாய்
பதியே கதியே பரமே அபயம்
அடியேன் இனிஓர் இறையும் தரியேன்
அரசே அருள்வாய் அபயம் அபயம்.
8
3619 இடர்தீர் நெறியே அருள்வாய் அபயம்
இனிநான் தரியேன் தரியேன் அபயம்
விடர்போல் எனைநீ நினையேல் அபயம்
விடுவேன் அலன்நான் அபயம் அபயம்
உடலோ டுறுமா பொருள்ஆ வியும்இங்
குனவே எனவே அலவே அபயம்
சுடர்மா மணியே அபயம் அபயம்
சுகநா டகனே அபயம் அபயம்.
9
3620 குற்றம் பலஆ யினும்நீ குறியேல்
குணமே கொளும்என் குருவே அபயம்
பற்றம் பலமே அலதோர் நெறியும்
பதியே அறியேன் அடியேன் அபயம்
சுற்றம் பலவும் உனவே எனவோ
துணைவே றிலைநின் துணையே அபயம்
சிற்றம் பலவா அருள்வாய் இனிநான்
சிறிதுந் தரியேன் தரியேன் அபயம்.
10

திருச்சிற்றம்பலம்

19. பிரிவாற்றாமை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3621 போக மாட்டேன் பிறரிடத்தே பொய்யிற் கிடந்து புலர்ந்துமனம்
வேக மாட்டேன் பிறிதொன்றும் விரும்ப மாட்டேன் பொய்யுலகன்
ஆக மாட்டேன் அரசேஎன் அப்பா என்றன் ஐயாநான்
சாக மாட்டேன் உனைப்பிரிந்தால் தரிக்க மாட்டேன் கண்டாயே.
1
3622 செல்ல மாட்டேன் பிறரிடத்தே சிறிதுந் தரியேன் தீமொழிகள்
சொல்ல மாட்டேன் இனிக்கணமுந் துயர மாட்டேன் சோம்பன்மிடி
புல்ல மாட்டேன் பொய்யொழுக்கம் பொருந்த மாட்டேன் பிறஉயிரைக்
கொல்ல மாட்டேன் உனைஅல்லால் குறிக்க மாட்டேன் கனவிலுமே242
2
242. கண்டாயே - முதற்பதிப்பு, பொ. க., ச.மு.க.
3623 வெறுக்க மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர்சிறிதும்
பொறுக்க மாட்டேன் உலகவர்போல் பொய்யிற் கிடந்து புரண்டினிநான்
சிறுக்க மாட்டேன் அரசேநின் திருத்தாள் ஆணை நின்ஆணை
மறுக்க மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே.
3
3624 கருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுட் கலந்தொளிரும்
தருணச் சுடரே எனைஈன்ற தாயே என்னைத் தந்தோனே
வருணப் படிக மணிமலையே மன்றில் நடஞ்செய் வாழ்வேநற்
பொருண்மெய்ப் பதியே இனித்துயரம் பொறுக்க மாட்டேன் கண்டாயே.
4
3625 திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித் துலவாச் சுயஞ்சோதி
வண்ணம் பழுத்த தனிப்பழமே மன்றில் விளங்கு மணிச்சுடரே
தண்ணம் பழுத்த மதிஅமுதே தருவாய் இதுவே தருணம்என்றன்
எண்ணம் பழுத்த தினிச்சிறியேன் இறையுந் தரியேன் தரியேனே.
5
3626 நாட்டுக் கிசைந்த மணிமன்றில் ஞான வடிவாய் நடஞ்செயருள்
ஆட்டுக் கிசைந்த பெருங்கருணை அப்பா என்றன் அரசேஎன்
பாட்டுக் கிசைந்த பதியேஓர் பரமா னந்தப் பழமேமேல்
வீட்டுக் கிசைந்த விளக்கேஎன் விவேகம் விளங்க விளக்குகவே.
6
3627 வேதந் தலைமேற் கொளவிரும்பி வேண்டிப் பரவு நினதுமலர்ப்
பாதந் தலைமேற் சூட்டிஎனைப் பணிசெய் திடவும் பணித்தனைநான்
சாதந் தலைமேல் எடுத்தொருவர் தம்பின் செலவும் தரமில்லேன்
ஏதந் தலைமேற் சுமந்தேனுக் கிச்சீர் கிடைத்த243 தெவ்வாறே.
7
243. கொடுத்த - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா. ச.மு.க.
3628 பொய்விட் டகலாப் புலைக்கொடியேன் பொருட்டா இரவில் போந்தொருநின்
கைவிட் டகலாப் பெரும்பொருள்என் கையிற் கொடுத்தே களிப்பித்தாய்
மைவிட் டகலா விழிஇன்ப வல்லி மகிழும் மணவாளா
மெய்விட் டகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய்யருளே.
8
3629 சாமத் திரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கந் தடுத்துமயல்
காமக் கடலைக் கடத்திஅருட் கருணை அமுதங் களித்தளித்தாய்
நாமத் தடிகொண் டடிபெயர்க்கும் நடையார் தமக்கும் கடையானேன்
ஏமத் தருட்பே றடைந்தேன்நான் என்ன தவஞ்செய் திருந்தேனே.
9
3630 பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்
சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.
10

திருச்சிற்றம்பலம்

20. இறை பொறுப் பியம்பல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3631 தேடிய துண்டு நினதுரு வுண்மை
தெளிந்திடச் சிறிதுநின் னுடனே
ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே
உரைத்ததும் உவந்ததும் உண்டோ
ஆடிய பாதம் அறியநான் அறியேன்
அம்பலத் தரும்பெருஞ் சோதி
கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்
கூறவுங் கூசும்என் நாவே.
1
3632 மடம்புரி மனத்தாற் கலங்கிய துண்டு
வள்ளலே நின்திரு வரவுக்
கிடம்புரி சிறியேன் கலங்கினேன் எனினும்
இறையும்வே றெண்ணிய துண்டோ
நடம்புரி பாதம் அறியநான் அறியேன்
நான்செயும் வகையினி நன்றே
திடம்புரிந் தருளிக் காத்திடல் வேண்டும்
சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே.
2
3633 நீக்கிய மனம்பின் அடுத்தெனைக் கலக்கி
நின்றதே அன்றிநின் அளவில்
நோக்கிய நோக்கம் பிறவிட யத்தே
நோக்கிய திறையும் இங்குண்டோ
தூக்கிய பாதம் அறியநான் அறியேன்
துயரினிப் பொறுக்கலேன் சிறிதும்
தேக்கிய களிப்பில் சிறப்பவந் தென்னைத்
தெளிவித்தல் நின்கடன் சிவனே.
3
3634 ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும்
என்னுயிர்க் கின்பமும் பொதுவில்
ஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன்
அன்றிவே றெண்ணிய துண்டோ
ஊன்றிய பாதம் அறியநான் அறியேன்
உறுகணிங் காற்றலேன் சிறிதும்
தோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத்
துலக்குதல் நின்கடன் துணையே.
4
3635 மாயையாற் கலங்கி வருந்திய போதும்
வள்ளல்உன் தன்னையே மதித்துன்
சாயையாப்244 பிறரைப் பார்த்ததே அல்லால்
தலைவவே245 றெண்ணிய துண்டோ
தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
நன்றருள் புரிவதுன் கடனே.
5
244. சாயையாற்
245. தலைவரென் - படிவேறுபாடுகள். ஆ. பா.
3636 வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்
மன்னிய உண்மை ஒன்றென்றே
எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்
திறையும்வே றெண்ணிய துண்டோ
அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன்
அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்
தெளிவித்துக் காப்பதுன் கடனே.
6
3637 ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்
வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்
மன்றினை மறந்ததிங் குண்டோ
ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்
ஐயவோ சிறிதும்இங் காற்றேன்
பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்
பரிந்தருள் புரிவதுன் கடனே.
7
3638 உள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம்
ஒருசிவ மயமென உணர்ந்தேன்
கள்ளநேர் மனத்தால் கலங்கினேன் எனினும்
கருத்தயல் கருதிய துண்டோ
வள்ளலுன் பாதம் அறியநான் அறியேன்
மயக்கினிச் சிறிதும்இங் காற்றேன்
தெள்ளமு தருளி மயக்கெலாம் தவிர்த்தே
தெளிவித்தல் நின்கடன் சிவனே.
8
3639 எம்மத நிலையும் நின்னருள் நிலையில்
இலங்குதல் அறிந்தனன் எல்லாம்
சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால்
தனித்துவே றெண்ணிய துண்டோ
செம்மலுன் பாதம் அறியநான் அறியேன்
சிறிதும்இங் கினித்துயர் ஆற்றேன்
இம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள
தியற்றுவ துன்கடன் எந்தாய்.
9
3640 அகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தே
அடுத்திடும் புறப்புறம் நான்கில்
இகந்ததும் இலைஓர் ஏகதே சத்தால்
இறையும்இங் கெண்ணிய துண்டோ
உகந்தநின் பாதம் அறியநான் அறியேன்
உறுகணிங் கினிச்சிறி துந்தான்
இகம்பெறல் ஆற்றேன் மயக்கெலாம் தவிர்த்திங்
கென்னைஆண் டருள்வ துன்கடனே.
10

திருச்சிற்றம்பலம்

21. கைம்மாறின்மை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3641 இழைஎலாம் விளங்கும் அம்மை இடங்கொள்நின் கருணை என்னும்
மழைஎலாம் பொழிந்தென் உள்ள மயக்கெலாம் தவிர்த்து நான்செய்
பிழைஎலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கென் புரிவேன் அந்தோ
உழைஎலாம் இலங்குஞ் சோதி உயர்மணி மன்று ளானே.
1
3642 போதுதான் வீணே போக்கிப் புலையனேன் புரிந்த பொல்லாத்
தீதுதான் பொறுத்த உன்றன் திருவருட் பெருமைக் கந்தோ
ஏதுதான் புரிவேன் ஓகோ என்என்று புகழ்வேன் ஞான
மாதுதான் இடங்கொண் டோ ங்க வயங்குமா மன்று ளானே.
2
3643 சிற்றறி வுடையன் ஆகித் தினந்தொறும் திரிந்து நான்செய்
குற்றமும் குணமாக் கொண்ட குணப்பெருங் குன்றே என்னைப்
பெற்றதா யுடனுற் றோங்கும் பெருமநின் பெருமை தன்னைக்
கற்றறி வில்லேன் எந்தக் கணக்கறிந் துரைப்பேன் அந்தோ.
3
3644 மையரி நெடுங்க ணார்தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே
பொய்யறி வுடையேன் செய்த புன்மைகள் பொறுத்தாட் கொண்டாய்
ஐயறி வுடையார் போற்றும் அம்பலத் தரசே நின்சீர்
மெய்யறி வறியேன் எந்த விளைவறிந் துரைப்பேன் அந்தோ.
4
3645 பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக் கெல்லை இல்லை
ஆயினும் பொறுத்தாட் கொண்டாய் அம்பலத் தரசே என்றன்
தாயினும் இனிய உன்றன் தண்அருட் பெருமை தன்னை
நாயினுங் கடையேன் எந்த நலமறிந் துரைப்பேன் அந்தோ.
5
3646 துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த
பெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய்
அரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற
கரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் என்பேன் அந்தோ.
6
3647 வரைகடந் தடியேன் செய்த வன்பிழை பொறுத்தாட் கொண்டாய்
திரைகடந் தண்ட பிண்டத் திசைஎலாம் கடந்தே அப்பால்
கரைகடந் தோங்கும் உன்றன் கருணையங் கடற்சீர் உள்ளம்
உரைகடந் ததுஎன் றால்யான் உணர்வதென் உரைப்ப தென்னே.
7
3648 நனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ
கனவினும் பிழையே செய்தேன் கருணைமா நிதியே நீதான்
நினைவினும் குறியா தாண்டாய் நின்னருட் பெருமை தன்னை
வினவினும் சொல்வார் காணேன் என்செய்வேன் வினைய னேனே.
8
3649 வன்செயல் பொறுத்தாட் கொண்ட வள்ளலே அடிய னேன்றன்
முன்செயல் அவைக ளோடு முடுகுபின் செயல்கள் எல்லாம்
என்செயல் ஆகக் காணேன் எனைக்கலந் தொன்றாய் நின்றோய்
நின்செயல் ஆகக் கண்டேன் கண்டபின் நிகழ்த்தல் என்னே.
9
3650 இருமையும் ஒருமை தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன்
பெருமைஎன் என்று நான்தான் பேசுவேன் பேதம் இன்றி
உரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட
ஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே.
10

திருச்சிற்றம்பலம்

22. நடராசபதி மாலை

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3651 அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ சுகாதீத வெளிநடுவிலே
அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம் அனைத்தும்அவை ஆக்கல்முதலாம்
பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடுவி ளங்கிஓங்கப்
புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல் பூரணா காரமாகித்
தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள் சிறப்பமுதல் அந்தம்இன்றித்
திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை தெளிந்திட வயங்குசுடரே
சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ சுந்தரிக் கினியதுணையே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.
1
3652 என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்தி லேதயவிலே
என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே என்இயற் குணம்அதனிலே
இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என்செவிப் புலன்இசையிலே
என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே என்அனு பவந்தன்னிலே
தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே தானே கலந்துமுழுதும்
தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பிநிறை கின்றஅமுதே
துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.
2
3653 உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம் உள்ளனஎ லாங்கலந்தே
ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும் உதயாத்த மானம்இன்றி
இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய் ஏகமாய் ஏகபோக
இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே இலங்கிநிறை கின்றசுடரே
கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம் ககன்எலாம் கண்டபரமே
காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன் கண்காண வந்தபொருளே
தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த் துணையாய் விளங்கும்அறிவே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.
3
3654 மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது மேன்மேற் கலந்துபொங்க
விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம் விளங்கஅறி வறிவதாகி
உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந் துவட்டாதுள் ஊறிஊறி
ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே உள்ளபடி உள்ளஅமுதே
கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட கண்ணே கலாந்தநடுவே
கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே கணிப்பருங் கருணைநிறைவே
துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட் சுகபோக யோகஉருவே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.
4
3655 எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலேமேல்
ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிர டெய்துவடி வந்தன்னிலே
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மைதனிலே
கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக் கலந்தோங்கு கின்றபொருளே
தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச் சேர்ந்தனு பவித்தசுகமே
சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத் திருமாளி கைத்தீபமே
துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித் தொளிசெய்ஒளியே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.
5
3656 அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே அம்மண்ட லந்தன்னிலே
அகலத்தி லேபுவியின் அகிலத்தி லேஅவைக் கானவடி வாதிதனிலே
விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட விளக்கும்அவை அவையாகியே
மேலும்அவை அவையாகி அவைஅவைஅ லாததொரு மெய்ந்நிலையும் ஆனபொருளே
தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத் தலத்திலுற வைத்தஅரசே
சாகாத வித்தைக் கிலக்கண இலக்கியம் தானாய்இ ருந்தபரமே
தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச் சுகமும்ஒன் றானசிவமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.
6
3657 நீரிலே நீர்உற்ற நிறையிலே நிறைஉற்ற நிலையிலே நுண்மைதனிலே
நிகழ்விலே நிகழ்வுற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மைதனிலே
ஊரிலே அந்நீரின் உப்பிலே உப்பிலுறும் ஒண்சுவையி லேதிரையிலே
உற்றநீர்க் கீழிலே மேலிலே நடுவிலே உற்றியல் உறுத்தும்ஒளியே
காரிலே ஒருகோடி பொழியினும் துணைபெறாக் கருணைமழை பொழிமேகமே
கனகசபை நடுநின்ற கடவுளே சிற்சபைக் கண்ணோங்கும் ஒருதெய்வமே
தூரிலே பலமளித் தூரிலே வளர்கின்ற சுகசொருப மானதருவே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.
7
3658 ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா ஒளியிலே சுடரிலேமேல்
ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே உறும்ஆதி அந்தத்திலே
தெள்ளிய நிறத்திலே அருவத்தி லேஎலாம் செயவல்ல செய்கைதனிலே
சித்தாய் விளங்கிஉப சித்தாய சத்திகள் சிறக்கவளர் கின்றஒளியே
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞானமயமே
மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன் வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே
துள்ளிய மனப்பேயை உள்ளுற அடக்கிமெய்ச் சுகம்எனக் கீந்ததுணையே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.
8
3659 அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின் ஆதிநடு அந்தத்திலே
ஆனபல பலகோடி சத்திகளின் உருவாகி ஆடும்அதன் ஆட்டத்திலே
உறைகின்ற நிறைவிலே ஊக்கத்தி லேகாற்றின் உற்றபல பெற்றிதனிலே
ஓங்கிஅவை தாங்கிமிகு பாங்கினுறு சத்தர்கட் குபகரித் தருளும்ஒளியே
குறைகின்ற மதிநின்று கூசஓர் ஆயிரம் கோடிகிர ணங்கள்வீசிக்
குலஅமுத மயமாகி எவ்வுயி ரிடத்தும் குலாவும்ஒரு தண்மதியமே
துறைநின்று பொறைஒன்று தூயர்அறி வாற்கண்ட சொருபமே துரியபதமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.
9
3660 வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு வத்திலே வான்இயலிலே
வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே வண்ணத்தி லேகலையிலே
மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே
வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை வைத்தஅருள் உற்றஒளியே
தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித் திரளிலே தித்திக்கும்ஓர்
தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச் செப்பிடாத் தெள்ளமுதமே
தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த சொருபமே சொருபசுகமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.
10
3661 என்றிரவி தன்னிலே இரவிசொரு பத்திலே இயல்உருவி லேஅருவிலே
ஏறிட்ட சுடரிலே சுடரின்உட் சுடரிலே எறிஆத பத்திரளிலே
ஒன்றிரவி ஒளியிலே ஓங்கொளியின் ஒளியிலே ஒளிஒளியின் ஒளிநடுவிலே
ஒன்றாகி நன்றாகி நின்றாடு கின்றஅருள் ஒளியேஎன் உற்றதுணையே
அன்றிரவில் வந்தெனக் கருள்ஒளி அளித்தஎன் அய்யனே அரசனேஎன்
அறிவனே அமுதனே அன்பனே இன்பனே அப்பனே அருளாளனே
துன்றியஎன் உயிரினுக் கினியனே தனியனே தூயனே என்நேயனே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.
11
3662 அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே அவ்வுருவின் உருவத்திலே
அமுதகிர ணத்திலே அக்கிரண ஒளியி஧ அவ்வொளியின் ஒளிதன்னிலே
பணிமதியின் அமுதிலே அவ்வமு தினிப்பிலே பக்கநடு அடிமுடியிலே
பாங்குபெற ஓங்கும்ஒரு சித்தேஎன் உள்ளே பலித்தபர மானந்தமே
மணிஒளியில் ஆடும்அருள் ஒளியே நிலைத்தபெரு வாழ்வே நிறைந்தமகிழ்வே
மன்னேஎன் அன்பான பொன்னேஎன் அன்னேஎன் வரமே வயங்குபரமே
துணிமதியில் இன்பஅனு பவமாய் இருந்தகுரு துரியமே பெரியபொருளே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.
12
3663 அண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல் ஆங்காரி யப்பகுதியே
ஆதிபல பகுதிகள் அனந்தகோ டிகளின்ந அடியினொடு முடியும்அவையில்
கண்டபல வண்ணமுத லானஅக நிலையும் கணித்தபுற நிலையும்மேன்மேல்
கண்டதிக ரிக்கின்ற கூட்டமும் விளங்கக் கலந்துநிறை கின்றஒளியே
கொண்டபல கோலமே குணமே குணங்கொண்ட குறியே குறிக்கஒண்ணாக்
குருதுரிய மேசுத்த சிவதுரிய மேஎலாம் கொண்டதனி ஞானவெளியே
தொண்டர்இத யத்திலே கண்டென இனிக்கின்ற சுகயோக அனுபோகமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.
13
3664 கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற் கடையிலே கடல்இடையிலே
கடல்முதலி லேகடல் திரையிலே நுரையி கடல்ஓசை அதன்நடுவிலே
வரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட வடிவிலே வண்ணம்அதிலே
மற்றதன் வளத்திலே உற்றபல சத்தியுள் வயங்கிஅவை காக்கும் ஒளியே
புரையிலா ஒருதெய்வ மணியேஎன் உள்ளே புகுந்தறி வளித்தபொருளே
பொய்யாத செல்வமே நையாத கல்வியே புடம்வைத் திடாதபொன்னே
மரையிலா வாழ்வே மறைப்பிலா வைப்பே மறுப்பிலா தருள்வள்ளலே
மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே.
14
3665 உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல் உற்றகரு வாகிமுதலாய்
உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி உணர்வுள்உணர் வாகிஉணர்வுள்
பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம் பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்
பண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன் பாங்கோங்கு சிற்சபையுமாய்த்
தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற சிவமாய் விளங்குபொருளே
சித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத் தேற்றிஅருள் செய்தகுருவே
மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வேஎன் வாழ்வின்வரமே
மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே.
15
3666 எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய் எல்லாஞ்செய் வல்லதாகி
இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பமாகி
அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த அருளாகி அருள்வெளியிலே
அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள் அருட்பெருஞ் சோதியாகிக்
கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க் காட்சியே கருணைநிறைவே
கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற கதியே கனிந்தகனியே
வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னு வீற்றிருந் தருளும்அரசே
மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே மேவுநட ராசபதியே.
16
3667 நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம்உடனே
நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின் ஞானமெய்க் கொடிநாட்டியே
மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம் முன்னிப் படைத்தல்முதலாம்
முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம் மூர்த்திகளும் ஏவல்கேட்ப
வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர் வாய்ந்துபணி செய்யஇன்ப
மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல் வளத்தொடு செலுத்துமரசே
சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரியநடு நின்றசிவமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.
17
3668 ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே உன்னமுடி யாஅவற்றின்
ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம் உற்றகோ டாகோடியே
திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா சிவஅண்டம் எண்ணிறந்த
திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம் சீரண்டம் என்புகலுவேன்
உறுவுறும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில் உறுசிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும் ஒருபெருங் கருணைஅரசே
மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா வரந்தந்த மெய்த்தந்தையே
மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே.
18
3669 வரவுசெல வற்றபரி பூரணா காரசுக வாழ்க்கைமுத லாஎனக்கு
வாய்த்தபொரு ளேஎன்கண் மணியேஎன் உள்ளே வயங்கிஒளிர் கின்றஒளியே
இரவுபகல் அற்றஒரு தருணத்தில் உற்றபேர் இன்பமே அன்பின்விளைவே
என்தந்தை யேஎனது குருவேஎன் நேயமே என்னாசை யேஎன் அறிவே
கரவுநெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற கருணைஅமு தேகரும்பே
கனியே அருட்பெருங் கடலேஎ லாம்வல்ல கடவுளே கலைகள்எல்லாம்
விரவிஉணர் வரியசிவ துரியஅனு பவமான மெய்ம்மையே சன்மார்க்கமா
மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே மேவுநட ராசபதியே.
19
3670 பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும் பகுதியும் காலம்முதலாப்
பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த பரமாதி நாதம்வரையும்
சீராய பரவிந்து பரநாத முந்தனது திகழங்கம் என்றுரைப்பத்
திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடு தெய்வமே என்றும்அழியா
ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே உயர்தந்தை யேஎன்உள்ளே
உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே உவப்பேஎன் னுடையஉயிரே
ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த அரசே அருட்சோதியே
அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிநிறை அமுதநட ராசபதியே.
20
3671 உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை உறுமவுன வெளிவெளியின்மேல்
ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம் ஒருங்கநிறை உண்மைவெளியே
திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய் சித்தே எனக்குவாய்த்த
செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை தெரித்தெனை வளர்த்தசிவமே
பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்றெனக்கே
பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப் பரமமே பரமஞான
வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த வண்ணநடம் இடுவள்ளலே
மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம் வல்லநட ராசபதியே.
21
3672 ஊழிதோ றூழிபல அண்டபகிர் அண்டத் துயிர்க்கெலாம் தரினும்அந்தோ
ஒருசிறிதும் உலவாத நிறைவாகி அடியேற் குவப்பொடு கிடைத்தநிதியே
வாழிநீ டூழியென வாய்மலர்ந் தழியா வரந்தந்த வள்ளலேஎன்
மதியினிறை மதியே வயங்குமதி அமுதமே மதிஅமுதின் உற்றசுகமே
ஏழினோ டேழுலகில் உள்ளவர்கள் எல்லாம்இ தென்னைஎன் றதிசயிப்ப
இரவுபகல் இல்லாத பெருநிலையில் ஏற்றிஎனை இன்புறச் செய்தகுருவே
ஆழியோ டணிஅளித் துயிரெலாம் காத்துவிளை யாடென் றுரைத்தஅரசே
அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிஒளிர் அபயநட ராசபதியே.
22
3673 பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என் புகல்வழிப் பணிகள்கேட்பப்
பொய்படாச் சத்திகள் அனந்தகோ டிகளும்மெய்ப் பொருள்கண்ட சத்தர்பலரும்
ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங் கிசைந்தெடுத் துதவஎன்றும்
இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற் றிருக்கஎனை வைத்தகுருவே
நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும் நலம்பெறச் சன்மார்க்கமாம்
ஞானநெறி ஓங்கஓர் திருவருட் செங்கோல் நடத்திவரு நல்லஅரசே
வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய மாமதியின் அமுதநிறைவே
மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே.
23
3674 வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது மனமிக மயங்கிஒருநாள்
மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை மறந்துதுயில் கின்றபோது
நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை நன்றுற எழுப்பிமகனே
நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ நலிதல்அழ கோஎழுந்தே
ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண் டின்புறுக என்றகுருவே
என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபே ரின்பமே என்செல்வமே
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்தசுகமே
மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே மேவுநட ராசபதியே.
24
3675 என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம் ஏதாக முடியுமோஎன்
றெண்ணிஇரு கண்ணினீர் காட்டிக் கலங்கிநின் றேங்கிய இராவில்ஒருநாள்
மின்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே வெளிநின் றணைத்தென்உள்ளே
மேவிஎன் துன்பந் தவிர்த்தருளி அங்ஙனே வீற்றிருக் கின்றகுருவே
நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட நல்குரவி னோன்அடைந்த
நன்மகிழ்வின் ஒருகோடி பங்கதிகம் ஆகவே நான்கண்டு கொண்டமகிழ்வே
வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை வலியவந் தாண்டபரமே
மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே. 25
3676 துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச் சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே
சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே சுதந்தரம தானதுலகில்
வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய் வாழ்வெலாம் பெற்றுமிகவும்
மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன் மனநினைப் பின்படிக்கே
அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை யாடுக அருட்சோதியாம்
ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோ ம் கைவிடோ ம் ஆணைநம் ஆணைஎன்றே
இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந் திசைவுடன் இருந்தகுருவே
எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில் இலங்குநட ராசபதியே. 26
3677 பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம் பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல பேதமுற் றங்கும்இங்கும்
போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண் போகாத படிவிரைந்தே
புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப் பொருளினை உணர்த்திஎல்லாம்
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ என்பிள்ளை ஆதலாலே
இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே றெண்ணற்க என்றகுருவே
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்திருள் அகற்றும்ஒளியே
நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு நீதிநட ராசபதியே. 27
3678 சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம் தான்என அறிந்தஅறிவே
தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே தனித்தபூ ரணவல்லபம்
வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும் விளையவிளை வித்ததொழிலே
மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே வியந்தடைந் துலகம்எல்லாம்
மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை வானவர மேஇன்பமாம்
மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின் மரபென் றுரைத்தகுருவே
தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத் தேற்றிஅருள் செய்தசிவமே
சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே தெய்வநட ராசபதியே. 28
3679 நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின்வார்த்தை யாவும்நமது
நீள்வார்த்தை யாகும்இது உண்மைமக னேசற்றும் நெஞ்சம்அஞ் சேல் உனக்கே
ஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும் அழியாத நிலையின்நின்றே
அன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீ ஆடிவாழ் கென்றகுருவே
நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம் நான்இளங் காலைஅடைய
நல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையே நண்பனே துணைவனேஎன்
ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனேஉள்
ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலே ஓங்குநட ராசபதியே.
29
3680 அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக் கன்புடன் உரைத்தபடியே
அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே
இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே இயற்றிவிளை யாடிமகிழ்க
என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி இயல்சுத்தம் ஆதிமூன்றும்
எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம் எய்திநின் னுட்கலந்தேம்
இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ தெம்மாணை என்றகுருவே
மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத வரமாகி நின்றசிவமே
மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே.
30
3681 காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங் கருணைஅமு தேஎனக்குக்
கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக் காட்சியே கனகமலையே
தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித் தலைவனே நின்பெருமையைச்
சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச் சார்கின்ற தோறும்அந்தோ
வாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும் மதிஎலாந் தித்திக்கும்என்
மன்னியமெய் அறிவெலாந் தித்திக்கும் என்னில்அதில் வரும்இன்பம் என்புகலுவேன்
தூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம் தோன்றிட விளங்குசுடரே
துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே.
31
3682 எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே எல்லாஞ்செய் வல்லசித்தாய்
என்கையில் அகப்பட்ட ஞானமணி யேஎன்னை எழுமையும் விடாதநட்பே
கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக் கட்டியே கருணைஅமுதே
கற்பக வனத்தே கனிந்தகனி யேஎனது கண்காண வந்தகதியே
மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன் வினைஎலாந் தீர்த்தபதியே
மெய்யான தெய்வமே மெய்யான சிவபோக விளைவேஎன் மெய்ம்மைஉறவே
துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே சுத்தசன் மார்க்கநிலையே
துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே.
32
3683 துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான் சோர்ந்தொரு புறம்படுத்துத்
தூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால் தூயதிரு வாய்மலர்ந்தே
இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இருகைமலர் கொண்டுதூக்கி
என்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத் தியலுற இருத்திமகிழ்வாய்
வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி வைத்தநின் தயவைஅந்தோ
வள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப வாரிஅமு தூறிஊறித்
துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச் சுகவண்ணம் என்புகலுவேன்
துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே.
33
3684 ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே ஒருமைநிலை உறுஞானமே
உபயபத சததளமும் எனதிதய சததளத் தோங்கநடு வோங்குசிவமே
பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய பருவத்தில் ஆண்டபதியே
பாசநெறி செல்லாத நேசர்தமை ஈசராம் படிவைக்க வல்லபரமே
ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வாய் ஆடுவோர்க் கரியசுகமே
ஆனந்த மயமாகி அதுவுங் கடந்தவெளி ஆகிநிறை கின்றநிறைவே
தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது தூக்கந் தொலைத்ததுணையே
துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே.
34

திருச்சிற்றம்பலம்

23. சற்குருமணி மாலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3685 மாற்றறி யாதசெ ழும்பசும் பொன்னே
மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே
கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக்
கோயில் இருந்த குணப்பெருங் குன்றே
வேற்றறி யாதசிற் றம்பலக் கனியே
விச்சையில் வல்லவர் மெச்சுவி ருந்தே
சாற்றறி யாதஎன் சாற்றுங் களித்தாய்
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
1
3686 கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே
கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே
சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே
துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே
சிற்கரை திரையறு திருவருட் கடலே
தெள்ளமு தேகனி யேசெழும் பாகே
சர்க்கரை யேஅது சார்ந்தசெந் தேனே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
2
3687 என்னுயி ரேஎன தின்னுயிர்க் குயிரே
என்அறி வேஎன தறிவினுக் கறிவே
அன்னையில் இனியஎன் அம்பலத் தமுதே
அற்புத மேபத மேஎன தன்பே
பொன்னிணை அடிமலர் முடிமிசை பொருந்தப்
பொருத்திய தயவுடைப் புண்ணியப் பொருளே
தன்னியல் அறிவருஞ் சத்திய நிலையே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
3
3688 காய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே
கலைகளுங் கருதரும் ஒருபெரும் பதியே
தேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே
சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே
ஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே
அம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே
தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
4
3689 உருவமும் அருவமும் உபயமும் உளதாய்
உளதில தாய்ஒளிர் ஒருதனி முதலே
கருவினில் எனக்கருள் கனிந்தளித் தவனே
கண்ணுடை யாய்பெருங் கடவுளர் பதியே
திருநிலை பெறஎனை வளர்க்கின்ற பரமே
சிவகுரு துரியத்தில் தெளிஅனு பவமே
தருவளர் பொழிவடல் சபைநிறை ஒளியே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
5
3690 ஆறந்த நிலைகளின் அனுபவ நிறைவே
அதுஅது வாய்ஒளிர் பொதுவுறு நிதியே
கூறெந்த நிலைகளும் ஒருநிலை எனவே
கூறிஎன் உள்ளத்தில் குலவிய களிப்பே
பேறிந்த நெறிஎனக் காட்டிஎன் தனையே
பெருநெறிக் கேற்றிய ஒருபெரும் பொருளே
சாறெந்த நாள்களும் விளங்கும்ஓர் வடல்வாய்த்
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
6
3691 சாகாத தலைஇது வேகாத காலாம்
தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே
போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே
பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே
ஆகாத பேர்களுக் காகாத நினைவே
ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே
தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
7
3692 தத்துவ மசிநிலை இதுஇது தானே
சத்தியம் காண்எனத் தனித்துரைத் தெனக்கே
எத்துவந் தனைகளும் நீக்கிமெய்ந் நிலைக்கே
ஏற்றிநான் இறவாத இயல்அளித் தருளால்
சித்துவந் துலகங்கள் எவற்றினும் ஆடச்
செய்வித்த பேரருட் சிவபரஞ் சுடரே
சத்துவ நெறிதரு வடல்அருட் கடலே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
8
3693 இதுபதி இதுபொருள் இதுசுகம் அடைவாய்
இதுவழி எனஎனக் கியல்புற உரைத்தே
விதுஅமு தொடுசிவ அமுதமும் அளித்தே
மேனிலைக் கேற்றிய மெய்நிலைச் சுடரே
பொதுநடம் இடுகின்ற புண்ணியப் பொருளே
புரையறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே
சதுமறை முடிகளின் முடியுறு சிவமே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
9
3694 என்னிலை இதுவுறு நின்னிலை இதுவாம்
இருநிலை களும்ஒரு நிலைஎன அறிவாய்
முன்னிலை சிறிதுறல்246 இதுமயல் உறலாம்
முன்னிலை பின்னிலை முழுநிலை உளவாம்
இந்நிலை அறிந்தவண் எழுநிலை கடந்தே
இயனிலை அடைகஎன் றியம்பிய பரமே
தன்னிலை ஆகிய நன்னிலை அரசே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
10
சிறிதுற - பி. இரா.பதிப்பு. சிறிதுறில் - படிவேறுபாடு. ஆ. பா.
3695 காரணம் இதுபுரி காரியம் இதுமேல்
காரண காரியக் கருவிது பலவாய்
ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே
அளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே
பூரண நிலைஅனு பவமுறில் கணமாம்
பொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே
தாரணி தனில்என்ற தயவுடை அரசே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
11
3696 பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
பவநெறி இதுவரை பரவிய திதனால்
செந்நெறி247 அறிந்திலர் இறந்திறந் துலகோர்
செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
12
247. சென்னெறி - முதற்பதிப்பு, பொ.,சு., பி. இரா., ச. மு. க.
3697 அடிஇது முடிஇது நடுநிலை இதுமேல்
அடிநடு முடியிலா ததுஇது மகனே
படிமிசை அடிநடு முடிஅறிந் தனையே
பதிஅடி முடியிலாப் பரிசையும் அறிவாய்
செடியற உலகினில் அருள்நெறி இதுவே
செயலுற முயலுக என்றசிற் பரமே
தடிமுகில் எனஅருள் பொழிவடல் அரசே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
13
3698 நண்ணிய மதநெறி பலபல அவையே
நன்றற நின்றன சென்றன சிலவே
அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள்
அலைதரு கின்றனர் அலைவற மகனே
புண்ணியம் உறுதிரு அருள்நெறி இதுவே
பொதுநெறி எனஅறி வுறமுய லுதிநீ
தண்ணிய அமுதுணத் தந்தனம் என்றாய்
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
14
3699 அஞ்சலை நீஒரு சிறிதும்என் மகனே
அருட்பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே
துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே
சூழ்ந்தசன் மார்க்கத்தில் செலுத்துக சுகமே
விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே
விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய்
தஞ்சம்என் றவர்க்கருள் சத்திய முதலே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
15
3700 வேதத்தின் முடிமிசை விளங்கும்ஓர் விளக்கே
மெய்ப்பொருள் ஆகம வியன்முடிச் சுடரே
நாதத்தின் முடிநடு நடமிடும் ஒளியே
நவைஅறும் உளத்திடை நண்ணிய நலமே
ஏதத்தின் நின்றெனை எடுத்தருள் நிலைக்கே
ஏற்றிய கருணைஎன் இன்உயிர்த் துணையே
தாதுற்ற உடம்பழி யாவகை புரிந்தாய்
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
16
3701 சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்
தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே
வந்திர விடைஎனக் கருளமு தளித்தே
வாழ்கஎன் றருளிய வாழ்முதற் பொருளே
மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே
மாநிலத் திடைஎனை வருவித்த பதியே
தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
17
3702 அமரரும் முனிவரும் அதிசயித் திடவே
அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே
கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே
காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே
எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே
எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
18
3703 நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே
நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே
துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே
சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே
என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி
இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே
சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
19
3704 ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
20
3705 கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே
கலந்துகொண் டினிக்கின்ற கற்பகக் கனியே
அற்பனை யாண்டுகொண் டறிவளித் தழியா
அருள்நிலை தனில்உற அருளிய அமுதே
பற்பல உலகமும் வியப்பஎன் தனக்கே
பதமலர் முடிமிசைப் பதித்தமெய்ப் பதியே
தற்பர பரம்பர சிதம்பர நிதியே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
21
3706 பவநெறி செலுமவர் கனவினும் அறியாப்
பரம்பொரு ளாகிஎன் உளம்பெறும் ஒளியே
நவநெறி கடந்ததோர் ஞானமெய்ச் சுகமே
நான்அருள் நிலைபெற நல்கிய நலமே
சிவநெறி யேசிவ நெறிதரு நிலையே
சிவநிலை தனில்உறும் அனுபவ நிறைவே
தவநெறி செலும்அவர்க் கினியநல் துணையே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
22
3707 அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே
அடையாமல் அடைகின்ற அடைவினுள் அடைவே
செறியாமல் செறிகின்ற செறிவினுட் செறிவே
திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே
பிரியாமல் என்னுளம் கலந்தமெய்க் கலப்பே
பிறவாமல் இறவாமல் எனைவைத்த பெருக்கே
தறியாகி உணர்வாரும் உணர்வரும் பொருளே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
23
3708 கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே
காணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே
எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே
இறவாத வரமுந்தந் தருளிய ஒளியே
வருதாகந் தவிர்த்திட வந்ததெள் அமுதே
மாணிக்க மலைநடு மருவிய பரமே
தருதான முணவெனச் சாற்றிய பதியே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
24
3709 ஏகாஅ னேகாஎன் றேத்திடு மறைக்கே
எட்டாத நிலையேநான் எட்டிய மலையே
ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி
ஒருநிலை ஆக்கஎன் றுரைத்தமெய்ப் பரமே
ஈகாதல் உடையவர்க் கிருநிதி அளித்தே
இன்புறப் புரிகின்ற இயல்புடை இறையே
சாகாத வரந்தந்திங் கெனைக்காத்த அரசே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
25

திருச்சிற்றம்பலம்

24. தற்போத இழப்பு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3710 அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்
அறிந்தனம்ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச்
செவ்வண்ணம் பழுத்ததனித் திருவுருக்கண் டெவர்க்கும்
தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன்
இவ்வண்ணம் இருந்தஎனைப் பிறர்அறியத் தெருவில்
இழுத்துவிடுத் ததுகடவுள் இயற்கைஅருட் செயலோ
மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன்
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
1
3711 கள்ளிருந்த மலர்இதழிச் சடைக்கனிநின் வடிவம்
கண்டுகொண்டேன் சிறிதடியேன் கண்டுகொண்ட படியே
நள்ளிருந்த வண்ணம்இன்னும் கண்டுகண்டு களித்தே
நாடறியா திருப்பம்என்றே நன்றுநினைந் தொருசார்
உள்ளிருந்த எனைத்தெருவில் இழுத்துவிடுத் ததுதான்
உன்செயலோ பெருமாயை தன்செயெலோ அறியேன்
வள்ளிருந்த குணக்கடையேன் இதைநினைக் குந்தோறும்
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
2
3712 இகத்திருந்த வண்ணம்எலாம் மிகத்திருந்த அருட்பேர்
இன்பவடி வம்சிறியேன் முன்புரிந்த தவத்தால்
சகத்திருந்தார் காணாதே சிறிதுகண்டு கொண்ட
தரம்நினைந்து பெரிதின்னும் தான்காண்பேம் என்றே
அகத்திருந்த எனைப்புறத்தே இழுத்துவிடுத் ததுதான்
ஆண்டவநின் அருட்செயலோ மருட்செயலோ அறியேன்
மகத்திருந்தார் என்அளவில் என்நினைப்பார் அந்தோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
3
3713 கருங்களிறு போல்மதத்தால் கண்செருக்கி வீணே
காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்
ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்
உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்
பிறர்அறியா வகைபெரிதும் பெறுதும்என உள்ளே
மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
4
3714 நாடுகின்ற மறைகள்எலாம் நாம்அறியோம் என்று
நாணிஉரைத் தலமரவே நல்லமணி மன்றில்
ஆடுகின்ற சேவடிகண் டானந்தக் கடலில்
ஆடும்அன்பர் போல்நமக்கும் அருள்கிடைத்த தெனினும்
வீடுகின்ற பிறர்சிறிதும் அறியாமல் இருக்க
வேண்டும்என இருந்தஎன்னை வெளியில்இழுத் திட்டு
வாடுகின்ற வகைபுரிந்த விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
5
3715 நதிகலந்த சடைஅசையத் திருமேனி விளங்க
நல்லதிருக் கூத்தாட வல்லதிரு அடிகள்
கதிகலந்து கொளச்சிறியேன் கருத்திடையே கலந்து
கள்ளம்அற உள்ளபடி காட்டிடக்கண் டின்னும்
பதிகலந்து கொளும்மட்டும் பிறர்அறியா திருக்கப்
பரிந்துள்ளே இருந்தஎன்னை வெளியில் இழுத் திட்டு
மதிகலந்து கலங்கவைத்த விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
6
3716 மஞ்சனைய குழலம்மை எங்கள்சிவ காம
வல்லிமகிழ் திருமேனி வண்ணமது சிறிதே
நஞ்சனைய கொடியேன்கண் டிடப்புரிந்த அருளை
நாடறியா வகைஇன்னும் நீடநினைத் திருந்தேன்
அஞ்சனைய பிறர்எல்லாம் அறிந்துபல பேசி
அலர்தூற்ற அளியஎனை வெளியில்இழுத் திட்டு
வஞ்சனைசெய் திடவந்த விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
7
3717 அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா
தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில்
புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம்
பொருள்அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா
துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை
உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால்
வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.
8
3718 விழற்கிறைத்துக் களிக்கின்ற வீணர்களிற் சிறந்த
வினைக்கொடியேம் பொருட்டாக விரும்பிஎழுந் தருளிக்
கழற்கிசைந்த பொன்அடிநம் தலைமேலே அமைத்துக்
கருணைசெயப் பெற்றனம்இக் கருணைநம்மை இன்னும்
நிழற்கிசைத்த மேல்நிலையில் ஏற்றும்என மகிழ்ந்து
நின்றஎன்னை வெளியில்இழுத் துலகவியா பார
வழக்கில்வளைத் தலைக்கவந்த விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
9
3719 அடிபிடித்துத் திரிகின்ற மறைகள்எலாம் காணா
அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக்
கொடிபிடித்த குருமணியைக் கூடுமட்டும் வேறோர்
குறிப்பின்றி இருப்பம்எனக் கொண்டகத்தே இருந்தேன்
படிபிடித்த பலர்பலவும் பகர்ந்திடஇங் கெனைத்தான்
படுவழக்கிட் டுலகியலாம் வெளியில்இழுத் தலைத்தே
மடிபிடித்துப் பறிக்கவந்த விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.
10

திருச்சிற்றம்பலம்

25. திருமுன் விண்ணப்பம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3720 மாழை மாமணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற
வாழை வான்பழச் சுவைஎனப் பத்தர்தம் மனத்துளே தித்திப்போய்
ஏழை நாயினேன் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் செயல்வேண்டும்
கோழை மானிடப் பிறப்பிதில் உன்னருட் குருஉருக் கொளும்ஆறே.
1
3721 பொன்னின் மாமணிப் பொதுநடம் புரிகின்ற புண்ணியா கனிந்தோங்கி
மன்னு வாழையின் பழச்சுவை எனப்பத்தர் மனத்துளே தித்திப்போய்
சின்ன நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
இன்ன என்னுடைத் தேகம்நல் ஒளிபெறும் இயல்உருக் கொளும்ஆறே.
2
3722 விஞ்சு பொன்னணி அம்பலத் தருள்நடம் விளைத்துயிர்க் குயிராகி
எஞ்சு றாதபேர் இன்பருள் கின்றஎன் இறைவநின் அருள்இன்றி
அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி அமைத்தருள் செயல்வேண்டும்
துஞ்சும் இவ்வுடல் இம்மையே துஞ்சிடாச் சுகஉடல் கொளும்ஆறே.
3
3723 ஓங்கு பொன்அணி அம்பலத் தருள்நடம் உயிர்க்கெலாம் ஒளிவண்ணப்
பாங்கு மேவநின் றாடல்செய் இறைவநின் பதமலர் பணிந்தேத்தாத்
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
ஈங்கு வீழுடல் இம்மையே வீழ்ந்திடா இயலுடல் உறும்ஆறே.
4
3724 இலங்கு பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற இறைவஇவ் வுலகெல்லாம்
துலங்கும் வண்ணநின் றருளுநின் திருவடித் துணைதுணை என்னாமல்
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும்
அலங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறா அருள்உடல் உறும்ஆறே.
5
3725 சிறந்த பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே திருநடம் புரிகின்ற
அறந்த வாதசே வடிமலர் முடிமிசை அணிந்தக மகிழ்ந்தேத்த
மறந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் செயல்வேண்டும்
பிறந்த இவ்வுடல் இம்மையே அழிவுறாப் பெருநலம் பெறும்ஆறே.
6
3726 விளங்கு பொன்அணிப் பொதுநடம் புரிகின்ற விரைமலர்த் திருத்தாளை248
உளங்கொள் அன்பர்தம் உளங்கொளும் இறைவநின் ஒப்பிலாப் பெருந்தன்மை
களங்கொள் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும்
துளங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறாத் தொல்லுடல் உறும்ஆறே.
7
விளங்கு பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே விரைமலர்த் திருத்தாளை - முதற் பதிப்பு.
3727 வாய்ந்த பொன்அணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே மறைஎல்லாம்
ஆய்ந்தும் இன்னஎன் றறிந்திலா நின்திரு அடிமலர் பணியாமல்
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
ஏய்ந்த இவ்வுடல் இம்மையே திருவருள் இயல்உடல் உறும்ஆறே.
8
3728 மாற்றி லாதபொன் அம்பலத் தருள்நடம் வயங்கநின் றொளிர்கின்ற
பேற்றில் ஆருயிர்க் கின்பருள் இறைவநின் பெயற்கழல் கணிமாலை
சாற்றி டாதஎன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
காற்றில் ஆகிய இவ்வுடல் இம்மையே கதியுடல் உறும்ஆறே..
9
3729 தீட்டு பொன்அணி அம்பலத் தருள்நடம் செய்துயிர்த் திரட்கின்பம்
காட்டு கின்றதோர் கருணையங் கடவுள்நின் கழலிணை கருதாதே
நீட்டு கின்றஎன் விண்ணப்பம் திருச்செவி நேர்ந்தருள் செயல்வேண்டும்
வாட்டும்249இவ்வுடல் இம்மையே அழிவுறா வளமடைந் திடும்ஆறே.
10
249. ஆட்டும் - படிவேறுபாடு. ஆ. பா.

திருச்சிற்றம்பலம்

26. இனித்த வாழ்வருள் எனல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3730 உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி
புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம் பொறுத்தடி யேன்தனக் களித்த
வரத்தவா உண்மை வரத்தவா ஆக மங்களும் மறைகளும் காணாத்
தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில் தனித்தவா இனித்தவாழ் வருளே.
1
3731 முன்னவா திபர்க்கு முன்னவா வேத முடிமுடி மொழிகின்ற முதல்வா
பின்னவா திபர்க்குப் பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும்
சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும்
மன்னவா அமுதம் அன்னவா எல்லாம் வல்லவா நல்லவாழ் வருளே.
2
3732 விடையவா தனைதீர் விடையவா சுத்த வித்தைமுன் சிவவரை கடந்த
நடையவா ஞான நடையவா இன்ப நடம்புரிந் துயிர்க்கெலாம் உதவும்
கொடையவா ஓவாக் கொடையவா எனையாட் கொண்டெனுள் அமர்ந்தரு ளியஎன்
உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க் குரியவா பெரியவாழ் வருளே.
3
3733 வலத்தவா நாத வலத்தவா சோதி மலையவா மனமுதல் கடந்த
புலத்தவா எனது புலத்தவா தவிர்த்துப் பூரண ஞானநோக் களித்த
நலத்தவா வரையா நலத்தவா மறைகள் நாடியும் காண்பதற் கரிதாம்
பலத்தவா திருஅம் பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்தவாழ் வருளே.
4
3734 உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உருவதாய் இன்பம்
புணர்ந்திட எனைத்தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொதுநடம் புரிந்தெண்
குணந்திகழ்ந் தோங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும்
தணந்தசன் மார்க்கத் தனிநிலை நிறுத்தும் தக்கவா மிக்கவாழ் வருளே.
5
3735 தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா
சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே
ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ் வருளே.
6
3736 மதம்புகல் முடிபு கடந்தமெய்ஞ் ஞான மன்றிலே வயங்கொள்நா டகஞ்செய்
பதம்புகல் அடியேற் கருட்பெருஞ் சோதிப் பரிசுதந் திடுதும்என் றுளத்தே
நிதம்புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்தநிற் குணமாம்
சிதம்புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞானவாழ் வருளே.
7
3737 மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்தென துடம்பும்
ஆவியும் தனது மயம்பெறக் கிடைத்த அருட்பெருஞ் சோதிஅம் பலவா
ஓவுரு முதலா உரைக்கும்மெய் உருவும் உணர்ச்சியும் ஒளிபெறு செயலும்
மேவிநின் றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூயவாழ் வருளே.
8
3738 பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே
தங்கும்ஓர் சோதித் தனிப்பெருங் கருணைத் தரந்திகழ் சத்தியத் தலைவா
துங்கம்உற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே.
9
3739 இனித்தசெங் கரும்பில் எடுத்ததீஞ் சாற்றின் இளம்பதப் பாகொடு தேனும்
கனித்ததீங் கனியின் இரதமும் கலந்து கருத்தெலாம் களித்திட உண்ட
மனித்தரும் அமுத உணவுகொண் டருந்தும் வானநாட் டவர்களும் வியக்கத்
தனித்தமெய்ஞ் ஞானஅமுதெனக் களித்த தனியவா இனியவாழ் வருளே.
10

திருச்சிற்றம்பலம்

27. திருவருள் விழைதல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3740 செய்வகை அறியேன் மன்றுள்மா மணிநின்
திருவுளக் குறிப்பையும் தெரியேன்
உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
வினையனேன் என்செய விரைகேன்
பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுவேன்
புலையனேன் புகல்அறி யேனே.
1
3741 அறிவிலேன் அறிந்தார்க் கடிப்பணி புரியேன்
அச்சமும் அவலமும் உடையேன்
செறிவிலேன் பொதுவாம் தெய்வம்நீ நினது
திருவுளத் தெனைநினை யாயேல்
எறிவிலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன்
என்செய்வேன் யார்துணை என்பேன்
பிறிவிலேன் பிரிந்தால் உயிர்தரிக் கலன்என்
பிழைபொறுத் தருள்வதுன் கடனே.
2
3742 உன்கடன் அடியேற் கருளல்என் றுணர்ந்தேன்
உடல்பொருள் ஆவியும் உனக்கே
பின்கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த
பின்னும்நான் தளருதல் அழகோ
என்கடன் புரிவேன் யார்க்கெடுத் துரைப்பேன்
என்செய்வேன் யார்துணை என்பேன்
முன்கடன் பட்டார் போல்மனம் கலங்கி
முறிதல்ஓர் கணம்தரி யேனே.
3
3743 தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது
தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே
தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும்
தெரித்திடாய் எனில்இடர் எனைத்தான்
எரித்திடும் அந்தோ என்செய்வேன் எங்கே
எய்துகேன் யார்துணை என்பேன்
திரித்தநெஞ் சகத்தேன் சரித்திரம் அனைத்தும்
திருவுளம் தெரிந்தது தானே.
4
3744 தான்எனைப் புணரும் தருணம்ஈ தெனவே
சத்தியம் உணர்ந்தனன் தனித்தே
தேன்உறக் கருதி இருக்கின்றேன் இதுநின்
திருவுளம் தெரிந்ததெந் தாயே
ஆன்எனக் கூவி அணைந்திடல் வேண்டும்
அரைக்கணம் ஆயினும் தாழ்க்கில்
நான்இருப் பறியேன் திருச்சிற்றம் பலத்தே
நடம்புரி ஞானநா டகனே.
5
3745 ஞானமும் அதனால் அடைஅனு பவமும்
நாயினேன் உணர்ந்திட உணர்த்தி
ஈனமும் இடரும் தவிர்த்தனை அந்நாள்
இந்தநாள் அடியனேன் இங்கே
ஊனம்ஒன் றில்லோய் நின்றனைக் கூவி
உழைக்கின்றேன் ஒருசிறி தெனினும்
ஏனென வினவா திருத்தலும் அழகோ
இறையும்நான் தரிக்கலன் இனியே.
6
3746 இனியநற் றாயின் இனியஎன் அரசே
என்னிரு கண்ணினுண் மணியே
கனிஎன இனிக்கும் கருணைஆர் அமுதே
கனகஅம் பலத்துறும் களிப்பே
துனிஉறு மனமும் சோம்புறும் உணர்வும்
சோர்வுறு முகமும்கொண் டடியேன்
தனிஉளங் கலங்கல் அழகதோ எனைத்தான்
தந்தநற் றந்தைநீ அலையோ.
7
3747 தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும்
சாமியும் பூமியும் பொருளும்
சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும்
சுற்றமும் முற்றும்நீ என்றே
சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின்
திருவுளம் தெரிந்ததே எந்தாய்
நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல்
நீதியோ நின்அருட் கழகோ.
8
3748 அழகனே ஞான அமுதனே என்றன்
அப்பனே அம்பலத் தரசே
குழகனே இன்பக் கொடிஉளம் களிக்கும்
கொழுநனே சுத்தசன் மார்க்கக்
கழகநேர் நின்ற கருணைமா நிதியே
கடவுளே கடவுளே எனநான்
பழகநேர்ந் திட்டேன் இன்னும்இவ் வுலகில்
பழங்கணால் அழுங்குதல் அழகோ.
9
3749 பழம்பிழி மதுரப் பாட்டல எனினும்
பத்தரும் பித்தரும் பிதற்றும்
கிழம்பெரும் பாட்டும் கேட்பதுன் உள்ளக்
கிளர்ச்சிஎன் றறிந்தநாள் முதலாய்
வழங்குநின் புகழே பாடுறு கின்றேன்
மற்றொரு பற்றும்இங் கறியேன்
சழங்குடை உலகில் தளருதல் அழகோ
தந்தையுந் தாயும்நீ அலையோ.
10
3750 தாயும்என் ஒருமைத் தந்தையும் ஞான
சபையிலே தனிநடம் புரியும்
தூயநின் பாதத் துணைஎனப் பிடித்தேன்
தூக்கமும் சோம்பலும் துயரும்
மாயையும் வினையும் மறைப்பும்ஆ ணவமும்
வளைத்தெனைப் பிடித்திடல் வழக்கோ
நாயினேன் இனிஓர் கணந்தரிப் பறியேன்
நல்அருட் சோதிதந் தருளே.
11
3751 சோதியேல் எனைநீ சோதனை தொடங்கில்
சூழ்உயிர் விடத்தொடங் குவன்நான்
நீதியே நிறைநின் திருவருள் அறிய
நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே
ஓதியே உணர்தற் கரும்பெரும் பொருளே
உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
ஆதியே நடுவே அந்தமே ஆதி
நடுஅந்தம் இல்லதோர் அறிவே.
12
3752 இல்லைஉண் டெணும்இவ் விருமையும் கடந்தோர்
இயற்கையின் நிறைந்தபே ரின்பே
அல்லைஉண் டெழுந்த தனிப்பெருஞ் சுடரே
அம்பலத் தாடல்செய் அமுதே
வல்லைஇன் றடியேன் துயர்எலாம் தவிர்த்து
வழங்குக நின்அருள் வழங்கல்
நல்லைஇன் றலது நாளைஎன் றிடிலோ
நான்உயிர் தரிக்கலன் அரசே.
13
3753 அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின்
அருளர செனஅறிந் தனன்பின்
உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை
உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய்
வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி
வழிகின்ற தென்வசங் கடந்தே
இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை
ஈந்தருள் இற்றைஇப் போதே.
14
3754 போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த
புழுத்தலைப் புலையர்கள் புணர்க்கும்
சூதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும்
தூயர்கள் மனம்அது துளங்கித்
தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ
தனிஅருட் சோதியால் அந்த
வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம்
வழங்குவித் தருளுக விரைந்தே.
15
3755 விரைந்துநின் அருளை ஈந்திடல் வேண்டும்
விளம்பும்இத் தருணம்என் உளந்தான்
கரைந்தது காதல் பெருகிமேல் பொங்கிக்
கரைஎலாம் கடந்தது கண்டாய்
வரைந்தெனை மணந்த வள்ளலே எல்லாம்
வல்லவா அம்பல வாணா
திரைந்தஎன் உடம்பைத் திருஉடம் பாக்கித்
திகழ்வித்த சித்தனே சிவனே.
16
3756 சிவந்திகழ் கருணைத் திருநெறிச் சார்பும்
தெய்வம்ஒன் றேஎனும் திறமும்
நவந்தரு நிலைகள் சுதந்தரத் தியலும்
நன்மையும் நரைதிரை முதலாம்
துவந்துவம் தவிர்த்துச் சுத்தமா தியமுச்
சுகவடி வம்பெறும் பேறும்
தவந்திகழ் எல்லாம் வல்லசித் தியும்நீ
தந்தருள் தருணம்ஈ தெனக்கே.
17
3757 தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
தனிநெறி உலகெலாம் தழைப்பக்
கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்
புண்ணியம் பொற்புற வயங்க
அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
18
3758 என்உள வரைமேல் அருள்ஒளி ஓங்கிற்
றிருள்இர வொழிந்தது முழுதும்
மன்உறும் இதய மலர்மலர்ந் ததுநன்
மங்கல முழங்குகின் றனசீர்ப்
பொன்இயல் விளக்கம் பொலிந்தது சித்திப்
பூவையர் புணர்ந்திடப் போந்தார்
சொன்னநல் தருணம் அருட்பெருஞ் சோதி
துலங்கவந் தருளுக விரைந்தே.
19
3759 வந்தருள் புரிக விரைந்திது தருணம்
மாமணி மன்றிலே ஞான
சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும்
சுத்தசன் மார்க்கசற் குருவே
தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல
தனிஅருட் சோதியை எனது
சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே
செய்வித் தருள்கசெய் வகையே.
20

திருச்சிற்றம்பலம்

28. திருக்கதவந் திறத்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3760 திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
1
3761 மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே
மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ
கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே
கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ
தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே
தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே
திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
2
3762 உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது
கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
3
3 763 உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ
உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ
அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன்
அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே
என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர்
என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன்
தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
4
3764 இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
5
3765 பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ
பூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ
மெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன்
விளையாட்டென் பதுஞானம் விளையும்விளை யாட்டே
பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது
பண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே
செய்யுடைஎன் னொடுகூடி ஆடஎழுந் தருள்வாய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
6
3766 கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
7
3767 வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்
எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே
தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
8
3768 கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே
உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
9
3769 திருத்தகும்ஓர் தருணம்இதில் திருக்கதவம் திறந்தே
திருவருட்பே ரொளிகாட்டித் திருஅமுதம் ஊட்டிக்
கருத்துமகிழ்ந் தென்உடம்பில் கலந்துளத்தில் கலந்து
கனிந்துயிரில் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும்
உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா
தொன்றாகிக் காலவரை உரைப்பஎலாம் கடந்தே
திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
10

திருச்சிற்றம்பலம்

29. சிற்சபை விளக்கம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3770 சோறு வேண்டினும் துகில்அணி முதலாம்
சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம்
வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கே
மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
சாறு வேண்டிய பொழில்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.250
1
250. இஃது 1492 ஆம் பாடலின் உத்தர வடிவம்.
3771 எஞ்சல் இன்றிய துயரினால் இடரால்
இடுக்குண் டையநின் இன்னருள் விரும்பி
வஞ்ச நெஞ்சினேன் வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
அஞ்சல் என்றெனை ஆட்கொளல் வேண்டும்
அப்ப நின்னலால் அறிகிலேன் ஒன்றும்
தஞ்சம் என்றவர்க் கருள்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
2
3772 சூழ்வி லாதுழல் மனத்தினால் சுழலும்
துட்ட னேன்அருட் சுகப்பெரும் பதிநின்
வாழ்வு வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
ஊழ்வி டாமையில் அரைக்கணம் எனினும்
உன்னை விட்டயல் ஒன்றும்உற் றறியேன்
தாழ்வி லாதசீர் தருவடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
3
3773 ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால்
அலைதந் தையவோ அயர்ந்துளம் மயர்ந்து
வாட்ட மோடிவண் வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
நாட்டம் நின்புடை அன்றிமற் றறியேன்
நாயி னேன்பிழை பொறுத்திது251 தருணம்
தாட்ட லந்தரு வாய்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
4
251. நயந்திது - படிவேறுபாடு. ஆ. பா.
3774 கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்
காடு மேடுழன் றுளம்மெலிந் தந்தோ
வருண நின்புடை வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
அருணன் என்றெனை அகற்றிடு வாயேல்
ஐய வோதுணை அறிந்திலன் இதுவே
தருணம் எற்கருள் வாய்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிபெரும் பதியே.
5
3775 கரண வாதனை யால்மிக மயங்கிக்
கலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன்
மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர்
இச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய
சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
6
3776 தூய நெஞ்சினேன் அன்றுநின் கருணைச்
சுகம்வி ழைந்திலேன் எனினும்பொய் உலக
மாயம் வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
ஈய வாய்த்தநல் தருணம்ஈ தருள்க
எந்தை நின்மலர் இணைஅடி அல்லால்
தாயம் ஒன்றிலேன் தனிவடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
7
3777 சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும்
சேர்ந்தி லேன்அருட் செயலிலேன் சாகா
வரத்தை வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
கரத்தை நேர்உளக் கடையன்என் றெனைநீ
கைவி டேல்ஒரு கணம்இனி ஆற்றேன்
தரத்தை ஈந்தருள் வாய்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
8
3778 பத்தி யஞ்சிறி துற்றிலேன் உன்பால்
பத்தி ஒன்றிலேன் பரமநின் கருணை
மத்தி யம்பெற வந்துநிற் கின்றேன்
வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்
எத்தி அஞ்சலை எனஅரு ளாயேல்
ஏழை யேன்உயிர் இழப்பன்உன் ஆணை
சத்தி யம்புகன் றேன்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
9
3779 கயவு செய்மத கரிஎனச் செருக்கும்
கருத்தி னேன்மனக் கரிசினால் அடைந்த
மயர்வு நீக்கிட வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
உயவு வந்தருள் புரிந்திடாய் எனில்என்
உயிர் தரித்திடா துன்அடி ஆணை
தயவு செய்தருள் வாய்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
10

திருச்சிற்றம்பலம்

30. திருவருட் பேறு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3780 படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும்
பதியைஅடை வித்தீர்அப் பதிநடுவே விளங்கும்
கொடிகள்நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக்
கொடுத்தீர்அக் கோயிலிலே கோபுரவா யிலிலே
செடிகள்இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டித்
திரும்பவும்நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
அடிகள்இது தருணம்இனி அரைக்கணமும் தரியேன்
அம்பலத்தே நடம்புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே.
1
3781 பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ
பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்
எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்
அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்
அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக
வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை
மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.
2
3782 கைக்கிசைந்த பொருள்எனக்கு வாய்க்கிசைந்துண் பதற்கே
காலம்என்ன கணக்கென்ன கருதும்இடம் என்ன
மெய்க்கிசைந்தன் றுரைத்ததுநீர் சத்தியம் சத்தியமே
விடுவேனோ இன்றடியேன் விழற்கிறைத்தேன் அலவே
செய்க்கிசைந்த சிவபோகம் விளைத்துணவே இறைத்தேன்
தினந்தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும்
மைக்கிசைந்த விழிஅம்மை சிவகாம வல்லி
மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
3
3783 பரிகலத்தே திருஅமுதம் படைத்துணவே பணித்தீர்
பணித்தபின்னோ என்னுடைய பக்குவம்பார்க் கின்றீர்
இருநிலத்தே பசித்தவர்க்குப் பசிநீக்க வல்லார்
இவர்பெரியர் இவர்சிறியர் என்னல்வழக் கலவே
உரிமையுற்றேன் உமக்கேஎன் உள்ளம்அன்றே அறிந்தீர்
உடல்பொருள்ஆ விகளைஎலாம் உம்மதெனக் கொண்டீர்
திரிவகத்தே நான்வருந்தப் பார்த்திருத்தல் அழகோ
சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகரே.
4
3784 பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே
பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக்
கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத
கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத
மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர்
மேல்ஏறி னேன்இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும்
மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி
மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
5
3785 மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்
விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன்
முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே
என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.
6
3786 எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே
எல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே
இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ்
வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும்
மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம்
வாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில்
விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும்
வேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ.
7
3787 கோள்அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும்
கொடையாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
ஆள்அறிந்திங் கெனைஆண்ட அரசேஎன் அமுதே
அம்பலத்தே நடம்புரியும் அரும்பெருஞ்சோ தியனே
தாள்அறிந்தேன் நின்வரவு சத்தியம்சத் தியமே
சந்தேகம் இல்லைஅந்தத் தனித்ததிரு வரவின்
நாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுகநீ எனது
நனவிடையா யினும்அன்றிக் கனவிடையா யினுமே.
8
3788 அன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே
அறிந்திருக்கின் றேன்அடியேன் ஆயினும்என் மனந்தான்
கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற252 தரசே
கண்ணுடைய கரும்பேஎன் கவலைமனக் கலக்கம்
பொன்றிடப்பே ரின்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில்
புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்திவிளங் கிடநீ
இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின்253
றெழுந்தருளி அருள்வதெலாம் இனிதருள்க விரைந்தே.
9
252. கலக்குகின்ற - ச. மு. க. பதிப்பு.
253. மிசையின் - ச. மு. க. பதிப்பு.
3789 இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம்
இனித்தடைஒன் றிலைகண்டாய் என்மனனே நீதான்
மதுவிழுமோர் ஈப்போலே மயங்காதே கயங்கி
வாடாதே மலங்காதே மலர்ந்துமகிழ்ந் திருப்பாய்
குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது
குருவாணை நமதுபெருங் குலதெய்வத் தாணை
பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள்
புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே.
10

திருச்சிற்றம்பலம்

31. உண்மை கூறல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3790 தனிப்பெருந் தலைவரே தாயவ ரேஎன்
தந்தைய ரேபெருந் தயவுடை யவரே
பனிப்பறுத் தெனையாண்ட பரம்பர ரேஎம்
பார்வதி புரஞானப் பதிசிதம் பரரே
இனிச்சிறு பொழுதேனுந் தாழ்த்திடல் வேண்டா
இறையவ ரேஉமை இங்குகண் டல்லால்
அனிச்சய உலகினைப் பார்க்கவும் மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
1
3791 பெறுவது நுமைஅன்றிப் பிறிதொன்றும் விரும்பேன்
பேசல்நும் பேச்சன்றிப் பிறிதொன்றும் பேசேன்
உறுவதுநும் அருள்அன்றிப் பிரிதொன்றும் உவவேன்
உன்னல்உம் திறன்அன்றிப் பிரிதொன்றும் உன்னேன்
மறுநெறி தீர்த்தெனை வாழ்வித்துக் கொண்டீர்
வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
அறுசுவை உண்டிகொண் டருந்தவும் மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
2
3792 கரும்பிடை இரதமும் கனியில்இன் சுவையும்
காட்டிஎன் உள்ளம் கலந்தினிக் கின்றீர்
விரும்பிநும் பொன்னடிக் காட்பட்டு நின்றேன்
மேல்விளை வறிகிலன் விச்சைஒன் றில்லேன்
துரும்பினும் சிறியனை அன்றுவந் தாண்டீர்
தூயநும் பேரருட் சோதிகண் டல்லால்
அரும்பெறல் உண்டியை விரும்பவும் மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
3
3793 தடுத்தெனை ஆட்கொண்ட தந்தைய ரேஎன்
தனிப்பெருந் தலைவரே சபைநடத் தவரே
தொடுத்தொன்று சொல்கிலேன் சொப்பனத் தேனும்
தூயநும் திருவருள் நேயம்விட் டறியேன்
விடுத்திடில் என்னைநீர் விடுப்பன்என் உயிரை
வெருவுளக் கருத்தெல்லாம் திருவுளத் தறிவீர்
அடுத்தினிப் பாயலில் படுக்கவும் மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
4
3794 காசையும் பணத்தையும் கன்னியர் தமையும்
காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர்
நேசநும் திருவருள் நேசம்ஒன் றல்லால்
நேசம்மற் றிலைஇது நீர்அறி யீரோ
ஏசறல் அகற்றிவந் தென்னைமுன் ஆண்டீர்
இறையவ ரேஉமை இன்றுகண் டல்லால்
ஆசையிற் பிறரொடு பேசவும் மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
5
3795 என்பொருள் என்உடல் என்உயிர் எல்லாம்
ஈந்தனன் உம்மிடத் தெம்பெரு மானீர்
இன்பொடு வாங்கிக்கொண் டென்னையாட் கொண்டீர்
என்செயல் ஒன்றிலை யாவும்நும் செயலே
வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர்
வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
6
3796 திருந்தும்என் உள்ளத் திருக்கோயில் ஞான
சித்தி புரம்எனச் சத்தியம் கண்டேன்
இருந்தருள் கின்றநீர் என்னிரு கண்கள்
இன்புற அன்றுவந் தெழில்உருக் காட்டி
வருந்தலை என்றெனைத் தேற்றிய வாறே
வள்ளலே இன்றுநும் வரவுகண் டல்லால்
அருந்தவர் நேரினும் பொருந்தவும் மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
7
3797 கரைக்கணம் இன்றியே கடல்நிலை செய்தீர்
கருணைக் கடற்குக் கரைக்கணஞ் செய்யீர்
உரைக்கண வாத உயர்வுடை யீர்என்
உரைக்கண விப்பல உதவிசெய் கின்றீர்
வரைக்கண எண்குண மாநிதி ஆனீர்
வாய்மையில் குறித்தநும் வரவுகண் டல்லால்
அரைக்கணம் ஆயினும் தரித்திட மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
8
3798 மடுக்கநும் பேரருள் தண்அமு தெனக்கே
மாலையும் காலையும் மத்தியா னத்தும்
கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்
காலையி னுந்தந்தென் கடும்பசி தீர்த்து
எடுக்குநற் றாயொடும் இணைந்துநிற் கின்றீர்
இறையவ ரேஉம்மை இங்குகண் டல்லால்
அடுக்கவீழ் கலைஎடுத் துடுக்கவும் மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
9
3799 கறுத்துரைக் கின்றவர் களித்துரைக் கின்ற
காலைஈ தென்றே கருத்துள் அறிந்தேன்
நிறுத்துரைக் கின்றபல் நேர்மைகள் இன்றி
நீடொளிப் பொற்பொது நாடகம் புரிவீர்
செறுத்துரைக் கின்றவர் தேர்வதற் கரியீர்
சிற்சபை யீர்எனைச் சேர்ந்திடல் வேண்டும்
அறுத்துரைக் கின்றேன்நான் பொறுத்திட மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
10

திருச்சிற்றம்பலம்

32. பிரியேன் என்றல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3800 அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன்
அச்சம்எலாம் துன்பம்எலாம் அறுத்துவிரைந் துவந்தே
இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி
எண்ணம்எலாம் முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின்
தாளிணைகள் அறிகஇது தயவுடையோய் எவர்க்கும்
துப்பாகித் துணையாகித் துலங்கியமெய்த் துணையே
சுத்தசிவா னந்தஅருட் சோதிநடத் தரசே.
1
3801 ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.
2
3802 படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்
உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.
3
3803 வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே.
4
3804 செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்
திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே
பொய்வகைஅன் றிதுநினது புந்திஅறிந் ததுவே
பொன்னடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்
எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே
எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்
ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே.
5
3805 முன்ஒருநாள் மயங்கினன்நீ மயங்கேல்என் றெனக்கு
முன்னின்உருக் காட்டினைநான் முகமலர்ந்திங் கிருந்தேன்
இன்னும்வரக் காணேன்நின் வரவைஎதிர் பார்த்தே
எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்னசெய்வேன் அந்தோ
அன்னையினும் தயவுடையாய் நின்தயவை நினைத்தே
ஆருயிர்வைத் திருக்கின்றேன் ஆணைஇது கண்டாய்
என்இருகண் மணியேஎன் அறிவேஎன் அன்பே
என்னுயிர்க்குப் பெருந்துணையே என்னுயிர்நா யகனே.
6
3806 உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ
என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான்
என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும்
அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே
இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்
இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே.
7
3807 நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது
நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும்
வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை
மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய
ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன்
உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன்
பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே
பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே.
8
3808 தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே
சிவமாலை அணிந்தனைஅச் சிறுவயதில் இந்த
உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள்
ஓடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ
கருவிடத்தே எனைக்காத்த காவலனே உனது
கால்பிடித்தேன் விடுவேனோ கைப்பிடிஅன் றதுதான்
வெருவிடத்தென் உயிர்ப்பிடிகாண் உயிர்அகன்றால் அன்றி
விடமாட்டேன் விடமாட்டேன் விடமாட்டேன் நானே.
9
3809 பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான்
பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே
துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை
துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த
அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன்
அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே
உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய்
உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே.
10
3810 கவலைஎலாம் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே
கைகுவித்துக் கண்களில்நீர் கனிந்துசுரந் திடவே
சவலைமனச் சலனம்எலாம் தீர்ந்துசுக மயமாய்த்
தானேதான் ஆகிஇன்பத் தனிநடஞ்செய் இணைத்தாள்
தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து
தானாகி நானாடத் தருணம்இது தானே
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய்
குருவேஎன் குற்றமெலாம் குணமாக்கொண் டவனே.
11

திருச்சிற்றம்பலம்

33. சிவ தரிசனம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3811 திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே
உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே
உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே
அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய்
அப்பாலும் ஆய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே
மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா
வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே.
1
3812 சொல்லவனே பொருளவனே துரியபதத் தவனே
தூயவனே நேயவனே சோதிஉரு வவனே
நல்லவனே நன்னிதியே ஞானசபா பதியே
நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும்
அல்லவனே ஆனவனே அம்மைஅப்பா என்னை
ஆண்டவனே தாண்டவனே அருட்குருவே எல்லாம்
வல்லவனே சிவகாம வல்லிமண வாளா
மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே.
2
3813 துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே
சுத்தசிவா னந்தசபைச் சித்தசிகா மணியே
பெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே
பேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்
கரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன்
கண்மணியே நின்திறத்தைக் காணுதல்வல் லேனோ
அரியபெரும் பொருளாம்உன் அருட்சோதி எனக்கே
அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே.
3
3814 மறப்பறியாப் பேரறிவில் வாய்த்தபெருஞ் சுகமே
மலைவறியா நிலைநிரம்ப வயங்கியசெம் பொருளே
இறப்பறியாத் திருநெறியில்254 என்னைவளர்த் தருளும்
என்னுடைய நற்றாயே எந்தாயே நினது
சிறப்பறியா உலகமெலாம் சிறப்பறிந்து கொளவே
சித்தசிகா மணியேநீ சித்திஎலாம் விளங்கப்
பிறப்பறியாப் பெருந்தவரும் வியப்பவந்து தருவாய்
பெருங்கருணை அரசேநீ தருந்தருணம் இதுவே.
4
254. திருநிலையில் - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா.

3815
முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின்
முடிவறியேன் எல்லாம்செய் முன்னவனே நீஎன்
தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின்
தனதுசுதந் தரமேஇங் கெனதுசுதந் தரமோ
என்னுழைப்பால் என்பயனோ இரங்கிஅரு ளாயேல்
யானார்என் அறிவெதுமேல் என்னைமதிப் பவரார்
பொன்னுழைப்பால் பெறலும்அரி தருள்இலையேல் எல்லாம்
பொதுநடஞ்செய் புண்ணியநீ எண்ணியவா றாமே.
5
3816 விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல்
விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே
மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும்
முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ
செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில்
சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே
பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே
பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே.
6
3817 மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே
மண்ணாள வானாள மனத்தில்நினைத் தேனோ
தேன்ஒருவா மொழிச்சியரைத் திளைக்கவிழைந் தேனோ
தீஞ்சுவைகள் விரும்பினனோ தீமைகள்செய் தேனோ
நானொருபா வமும்அறியேன் நன்னிதியே எனது
நாயகனே பொதுவிளங்கும் நடராஜ பதியே
ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.
7
3818 பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே
பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன்
ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பேர்
ஆசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன்
கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது
குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன்
தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா
தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணம்இது தானே.
8
3819 கட்டவிழ்ந்த கமலம்எனக் கருத்தவிழ்ந்து நினையே
கருதுகின்றேன் வேறொன்றும் கருதுகிலேன் இதுதான்
சிட்டருளம் திகழ்கின்ற சிவபதியே நினது
திருவுளமே அறிந்ததுநான் செப்புதல்என் புவிமேல்
விட்டகுறை தொட்டகுறை இரண்டும்நிறைந் தனன்நீ
விரைந்துவந்தே அருட்சோதி புரிந்தருளும் தருணம்
தொட்டதுநான் துணிந்துரைத்தேன் நீஉணர்த்த உணர்ந்தே
சொல்வதலால் என்அறிவால் சொல்லவல்லேன் அன்றே.
9
3820 காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது
கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்
கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்
கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன்
சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே
சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்
பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே
பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே.
10
3821 சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான்
செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த
இத்தினமே தொடங்கிஅழி யாதநிலை அடைதற்
கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம்
சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல்
சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை
நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ்ந் தமைவாய்
நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.
11

திருச்சிற்றம்பலம்

34. அனுபோக நிலயம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3822 இனிப்பிரிந் திறையும் இருக்கலேன் பிரிவை
எண்ணினும் ஐயவோ மயங்கிப்
பனிப்பில்என் உடம்பும் உயிரும்உள் உணர்வும்
பரதவிப் பதைஅறிந் திலையோ
தனிப்படு ஞான வெளியிலே இன்பத்
தனிநடம் புரிதனித் தலைவா
கனிப்பயன் தருதற் கிதுதகு தருணம்
கலந்தருள் கலந்தருள் எனையே.
1
3823 பிரிந்தினிச் சிறிதும் தரிக்கலேன் பிரிவைப்
பேசினும் நெய்விடுந் தீப்போல்
எரிந்துளங் கலங்கி255 மயங்கல்கண் டிலையோ
எங்கணும் கண்ணுடை எந்தாய்
புரிந்தசிற் பொதுவில் திருநடம் புரியும்
புண்ணியா என்னுயிர்த் துணைவா
கரந்திடா256 துறுதற் கிதுதகு தருணம்
கலந்தருள் கலந்தருள் எனையே.
2
255. கருகி - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.
256. கரைந்திடாது - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க.
3824 மேலைஏ காந்த வெளியிலே நடஞ்செய்
மெய்யனே ஐயனே எனக்கு
மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்
வல்லனே நல்லனே அருட்செங்
கோலையே நடத்தும் இறைவனே ஓர்எண்
குணத்தனே இனிச்சகிப் பறியேன்
காலையே தருதற் கிதுதகு தருணம்
கலந்தருள் கலந்தருள் எனையே.
3
3825 பண்டுகொண் டெனைத்தான் பிழைகுறி யாத
பண்பனே திருச்சிற்றம் பலத்தே
தொண்டுகொண் டடியர் களிக்கநின் றாடும்
தூயனே நேயனே பிரமன்
விண்டுகண் டறியா முடிஅடி எனக்கே
விளங்குறக் காட்டிய விமலா
கண்டுகொண் டுறுதற் கிதுதகு தருணம்
கலந்தருள் கலந்தருள் எனையே.
4
3826 தனித்துணை எனும்என் தந்தையே தாயே
தலைவனே சிற்சபை தனிலே
இனித்ததெள் ளமுதே என்னுயிர்க் குயிரே
என்னிரு கண்ணுள்மா மணியே
அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே
அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
கனித்துணை தருதற் கிதுதகு தருணம்
கலந்தருள் கலந்தருள் எனையே.
5
3827 துன்பெலாம் தவிர்க்கும் திருச்சிற்றம் பலத்தே
சோதியுட் சோதியே அழியா
இன்பெலாம் அளிக்கும் இறைவனே என்னை
ஈன்றநல் தந்தையே தாயே
அன்பெலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே
அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
பொன்பதந் தருதற் கிதுதகு தருணம்
புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
6
3828 ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத்
தென்னைஆட் கொண்டெனை உவந்தே
ஓதும்இன் மொழியால் பாடவே பணித்த
ஒருவனே என்னுயிர்த் துணைவா
வேதமும் பயனும் ஆகிய பொதுவில்
விளங்கிய விமலனே ஞான
போதகம் தருதற் கிதுதகு தருணம்
புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
7
3829 எண்ணிய எனதுள் எண்ணமே எண்ணத்
திசைந்தபேர் இன்பமே யான்தான்
பண்ணிய தவமே தவத்துறும் பலனே
பலத்தினால் கிடைத்தஎன் பதியே
தண்ணிய மதியே மதிமுடி அரசே
தனித்தசிற் சபைநடத் தமுதே
புண்ணியம் அளித்தற் கிதுதகு தருணம்
புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
8
3830 மலப்பகை தவிர்க்கும் தனிப்பொது மருந்தே
மந்திர மேஒளிர் மணியே
நிலைப்பட எனைஅன் றாண்டருள் அளித்த
நேயனே தாயனை யவனே
பலப்படு பொன்னம் பலத்திலே நடஞ்செய்
பரமனே பரமசிற் சுகந்தான்
புலப்படத் தருதற் கிதுதகு தருணம்
புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
9
3831 களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த
கற்பகத் தீஞ்சுவைக் கனியே
வெளிப்புறத் தோங்கும் விளக்கமே அகத்தே
விளங்கும்ஓர் விளக்கமே எனக்கே
ஒளிப்பிலா தன்றே அளித்தசிற் பொதுவில்
ஒருவனே இனிப்பிரி வாற்றேன்
புளிப்பற இனித்தற் கிதுதகு தருணம்
புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
10

திருச்சிற்றம்பலம்

35. சிவயோக நிலை

நேரிசை வெண்பா
3832 மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே
பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய
நவநேய மாக்கும் நடராச னேயெஞ்
சிவனே கதவைத் திற.
1
3833 இந்தார் அருளமுதம் யானருந்தல் வேண்டுமிங்கே
நந்தா மணிவிளக்கே ஞானசபை - எந்தாயே
கோவே எனது குருவே எனையாண்ட
தேவே கதவைத் திற.
2
3834 சாகா அருளமுதம் தானருந்தி நான்களிக்க
நாகா திபர்சூழ் நடராசா - ஏகா
பவனே பரனே பராபரனே எங்கள்
சிவனே கதவைத் திற.
3
3835 அருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி
மருள்நீங்கி நான்களித்து வாழப் - பொருளாந்
தவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள்
சிவனே கதவைத் திற.
4
3836 வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற
ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத்
திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா
சிறப்பா கதவைத் திற.
5

3837
எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல்
நல்லார் அமுதமது நானருந்த - நல்லார்க்கு
நல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு
செல்வா கதவைத் திற.
6
3838 ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்
வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க
ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா
தேவா கதவைத் திற.
7
3839 ஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே
ஞான அமுதமது நானருந்த - ஞான
உருவே உணர்வே ஒளியே வெளியே
திருவே கதவைத் திற.
8
3840 திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே
வரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது
வானேஎம் மானேபெம் மானே மணிமன்றில்
தேனே கதவைத் திற.
9
3841 சோதிமலை மேல்வீட்டில் தூய திருஅமுதம்
மேதினிமேல் நான்உண்ண வேண்டினேன் - ஓதரிய
ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான
தேகா கதவைத் திற.
10

திருச்சிற்றம்பலம்

36. பெற்ற பேற்றினை வியத்தல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3842 சீரிடம் பெறும்ஓர் திருச்சிற்றம் பலத்தே
திகழ்தனித் தந்தையே நின்பால்
சேரிடம் அறிந்தே சேர்ந்தனன்257 கருணை
செய்தருள் செய்திடத் தாழ்க்கில்
யாரிடம் புகுவேன் யார்துணை என்பேன்
யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
போரிட முடியா தினித்துய ரொடுநான்
பொறுக்கலேன் அருள்கஇப் போதே.
1
257. சேரிடம் அறிந்து சேர் - ஆத்திசூடி.
3843 போதுதான் விரைந்து போகின்ற தருள்நீ
புரிந்திடத் தாழ்த்தியேல் ஐயோ
யாதுதான் புரிவேன் யாரிடம் புகுவேன்
யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
தீதுதான் புரிந்தேன் எனினும்நீ அதனைத்
திருவுளத் தடைத்திடு வாயேல்
ஈதுதான் தந்தை மரபினுக் கழகோ
என்னுயிர்த் தந்தைநீ அலையோ.
2
3844 தந்தைநீ அலையோ தனயன்நான் அலனோ
தமியனேன் தளர்ந்துளங் கலங்கி
எந்தையே குருவே இறைவனே முறையோ
என்றுநின் றோலிடு கின்றேன்
சிந்தையே அறியார் போன்றிருந் தனையேல்
சிறியனேன் என்செய்கேன் ஐயோ
சந்தையே புகுந்த நாயினில் கடையேன்
தளர்ச்சியைத் தவிர்ப்பவர் யாரே.
3
3845 யாரினும் கடையேன் யாரினும் சிறியேன்
என்பிழை பொறுப்பவர் யாரே
பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே
பாவியேன் பிழைபொறுத் திலையேல்
ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி
உடம்பைவைத் துலாவவும் படுமோ
சேரினும் எனைத்தான் சேர்த்திடார் பொதுவாம்
தெய்வத்துக் கடாதவன் என்றே.
4
3846 அடாதகா ரியங்கள் செய்தனன் எனினும்
அப்பநீ அடியனேன் தன்னை
விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன்
விடுதியோ விட்டிடு வாயேல்
உடாதவெற் றரைநேர்ந் துயங்குவேன் ஐயோ
உன்னருள் அடையநான் இங்கே
படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப்
பாடெலாம் நீஅறி யாயோ.
5
3847 அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே
அழைத்தனன் அப்பனே என்னை
எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய்
எடுத்தணைத் தஞ்சிடேல் மகனே
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்
பெருந்திறல் சித்திகள் எல்லாம்
சிறந்திட உனக்கே தந்தனம் எனஎன்
சென்னிதொட் டுரைத்தனை களித்தே.
6
3848 களித்தென துடம்பில் புகுந்தனை எனது
கருத்திலே அமர்ந்தனை கனிந்தே
தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில்
சிறப்பினால் கலந்தனை உள்ளம்
தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும்
தடைபடாச் சித்திகள் எல்லாம்
அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை
அடியன்மேல் வைத்தவா றென்னே.
7
3849 என்நிகர் இல்லா இழிவினேன் தனைமேல்
ஏற்றினை யாவரும் வியப்பப்
பொன்இயல் வடிவும் புரைபடா உளமும்
பூரண ஞானமும் பொருளும்
உன்னிய எல்லாம் வல்லசித் தியும்பேர்
உவகையும் உதவினை எனக்கே
தன்னிகர் இல்லாத் தலைவனே நினது
தயவைஎன் என்றுசாற் றுவனே.
8
3850 சாற்றுவேன் எனது தந்தையே தாயே
சற்குரு நாதனே என்றே
போற்றுவேன் திருச்சிற் றம்பலத் தாடும்
பூரணா எனஉல கெல்லாம்
தூற்றுவேன் அன்றி எனக்குநீ செய்த
தூயபேர் உதவிக்கு நான்என்
ஆற்றுவேன் ஆவி உடல்பொருள் எல்லாம்
அப்பநின் சுதந்தரம் அன்றோ.
9
3851 சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது
தூயநல் உடம்பினில் புகுந்தேம்
இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே
இன்புறக் கலந்தனம் அழியாப்
பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்
பரிசுபெற் றிடுகபொற் சபையும்
சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்
தெய்வமே வாழ்கநின் சீரே.
10

திருச்சிற்றம்பலம்

37. அழிவுறா அருள்வடிவப் பேறு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3852 சிவங்க னிந்தசிற் றம்பலத் தருள்நடம் செய்கின்ற பெருவாழ்வே
நவங்க னிந்தமேல் நிலைநடு விளங்கிய நண்பனே அடியேன்றன்
தவங்க னிந்ததோர் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் புரிந்தாயே
பவங்க னிந்தஇவ் வடிவமே அழிவுறாப் பதிவடி வாமாறே.
1
3853 விளங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
களங்க மில்லதோர் உளநடு விளங்கிய கருத்தனே அடியேன்நான்
விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி வியந்தருள் புரிந்தாயே
உளங்கொள் இவ்வடி விம்மையே மந்திர ஒளிவடி வாமாறே.
2
3854 விஞ்சு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
எஞ்சல் அற்றமா மறைமுடி விளங்கிய என்னுயிர்த் துணையேநான்
அஞ்சல் இன்றியே செய்தவிண் ணப்பம்ஏற் றகங்களித் தளித்தாயே
துஞ்சும் இவ்வுடல் அழிவுறா தோங்குமெய்ச் சுகவடி வாமாறே.
3
3855 ஓங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே
தேங்கு லாவிய தெள்ளமு தேபெருஞ் செல்வமே சிவமேநின்
பாங்க னேன்மொழி விண்ணப்பம் திருச்செவி பதித்தருள் புரிந்தாயே
ஈங்கு வீழுடல் என்றும்வீ ழாதொளிர் இயல்வடி வாமாறே.
4
3856 இலங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் இடுகின்ற பெருவாழ்வே
துலங்கு பேரருட் சோதியே சோதியுள் துலங்கிய பொருளேஎன்
புலங்கொள் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தனைஇஞ்ஞான்றே
அலங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறா அருள்வடி வாமாறே.
5
3857 சிறந்த பேரொளித் திருச்சிற்றம் பலத்திலே திகழ்கின்ற பெருவாழ்வே
துறந்த பேருளத் தருட்பெருஞ் சோதியே சுகப்பெரு நிலையேநான்
மறந்தி டாதுசெய் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் புரிந்தாயே
பிறந்த இவ்வுடல் என்றும்இங் கழிவுறாப் பெருமைபெற் றிடுமாறே.
6
3858 வயங்கு கின்றசிற் றம்பலந் தன்னிலே வளர்கின்ற பெருவாழ்வே
மயங்கு றாதமெய் அறிவிலே விளங்கிய மாமணி விளக்கேஇங்
கியங்கு சிற்றடி யேன்மொழி விண்ணப்பம் ஏற்றருள் புரிந்தாயே
தயங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாத் தனிவடி வாமாறே.
7
3859 தீட்டு கின்றசிற் றம்பலந் தன்னிலே திகழ்கின்ற பெருவாழ்வே
காட்டு கின்றதோர் கதிர்நடு விளங்கிய கடவுளே அடியேன்நான்
நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி நிறைத்தருள் புரிந்தாயே
பூட்டும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே.
8
3860 தடையி லாதசிற் றம்பலந் தன்னிலே தழைக்கின்ற பெருவாழ்வே
கடையி லாப்பெருங் கதிர்நடு விளங்கும்ஓர் கடவுளே அடியேன்நான்
இடைவு றாதுசெய் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தாயே
புடையின் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே.
9
3861 கையின் நெல்லிபோல் விளங்குசிற் றம்பலங் கலந்தருள் பெருவாழ்வே
மெய்யி லேவிளைந் தோங்கிய போகமே மெய்ப்பெரும் பொருளேநான்
ஐய மற்றுரைத் திட்டவிண் ணப்பம்ஏற் றளித்தனை இஞ்ஞான்றே
செய்யும் இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடி வாமாறே.
10

திருச்சிற்றம்பலம்

38. பேரருள் வாய்மையை வியத்தல்

கட்டளைக் கலித்துறை
3862 நன்றே தருந்திரு நாடகம் நாடொறும் ஞானமணி
மன்றே விளங்கப் புரிகின்ற ஆனந்த வார்கழலோய்
இன்றே அருட்பெருஞ் சோதிதந் தாண்டருள் எய்துகணம்
ஒன்றே எனினும் பொறேன்அருள் ஆணை உரைத்தனனே.
1
3863 தற்சோதி என்னுயிர்ச் சத்திய சோதி தனித்தலைமைச்
சிற்சோதி மன்றொளிர் தீபக சோதிஎன் சித்தத்துள்ளே
நற்சோதி ஞானநல் நாடக சோதி நலம்புரிந்த
பொற்சோதி ஆனந்த பூரண சோதிஎம் புண்ணியனே.
2
3864 திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும்
கரைகண் டடைந்தனன் அக்கரை மேல்சர்க் கரைகலந்த
உரைகண்ட தெள்ளமு துண்டேன் அருளொளி ஓங்குகின்ற
வரைகண்ட தன்மிசை உற்றேன் உலகம் மதித்திடவே.
3
3865 மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினை
தனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம்
எனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியா
இனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே.
4
3866 வாதித்த மாயை வினையா ணவம்எனும் வன்மலத்தைச்
சேதித்தென் உள்ளம் திருக்கோயி லாக்கொண்டு சித்திஎலாம்
போதித் துடம்பையும் பொன்னுடம் பாக்கிநற் புத்தமுதும்
சாதித் தருளிய நின்னருட் கியான்செயத் தக்கதென்னே.
5
3867 செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னஞ் சிரித்தெழவே
இத்தா ரணியில் அருட்பெருஞ் சோதி எனக்களித்தாய்
எத்தாலும் என்றும் அழியா வடிவுதந் தென்னுள்நின்னை
வைத்தாய் மணிமன்ற வாணநின் பேரருள் வாய்மையென்னே.
6
3868 ஆக்கல்ஒன் றோதொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட
வீக்கம்எல் லாம்சென்றுன் இச்சையின் வண்ணம் விளங்குகநீ
ஏக்கமு றேல்என் றுரைத்தருட் சோதியும் ஈந்தெனக்கே
ஊக்கமெ லாம்உற உட்கலந் தான்என் உடையவனே.
7
3869 என்னேஎன் மீதெம் பெருமான் கருணை இருந்தவண்ணம்
தன்னேர் இலாத அருட்பெருஞ் சோதியைத் தந்துலகுக்
கன்னே எனவிளை யாடுக என்றழி யாதசெழும்
பொன்னேர் வடிவும் அளித்தென் உயிரில் புணர்ந்தனனே.
8
3870 அச்சோ என்என்று புகல்வேன்என் ஆண்டவன் அம்பலத்தான்
எச்சோ தனையும் இயற்றாதென் னுட்கலந் தின்னருளாம்
மெய்ச்சோதி ஈந்தெனை மேனிலைக் கேற்றி விரைந்துடம்பை
இச்சோதி ஆக்கிஅழியா நலந்தந்த விச்சையையே.
9
3871 வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும்
வாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள்
வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு
வாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே.
10

திருச்சிற்றம்பலம்



This page was first put up on Jan 9, 2002
Please send your comments and corrections to the Webmaster(s) of this site