pm logo

கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்
அருளிச்செய்த "திருத்தொண்டர் புராண வரலாறு"
என்னும் "சேக்கிழார் சுவாமிகள் புராணம்"

koRRavankuTi umApati civAcAriyAr's
cEkkizAr cuvAmikaL purANam



Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext preparation, proof reading & web version : N D Loga Sundaram & his daughter L Selvanayagi, Chennai, India
PDF and HTML versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This webpage presents the Etext in Tamil scrip in Unicode encoding.
This webpage was last updated on 19th October 2004

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்
அருளிச்செய்த "திருத்தொண்டர் புராண வரலாறு" என்னும்
"சேக்கிழார் சுவாமிகள் புராணம் "


சிவசிவ
திருச்செந்திலாண்டவன் துணை

பாயிரம்

விநாயகர்

வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்       1

சபாநாதர்

சீராருஞ் சதுர்மறையும் தில்லைவா ழந்தணரும்
பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த
வாராருங் கடல்புடைசூழ் வையமெலாற் ஈடேற
ஏராரு மணிமன்றுள் எடுத்ததிரு வடிபோற்றி       2

சிவகாமசுந்தரி

பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச்
சிரந்தழுவு சமயநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க
அரந்தைகெட புகலியர்கோன் அமுதுசெயத் திருமுலைப்பால்
சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி       3

கற்பக விநாயகர்

மலரயனுந் திருமாலுங் காணாமை மதிமயங்கப்
புலிமுனியும் பதஞ்சலியுங் கண்டுதொழப் புரிசடையார்
குலவுநடந் தருந்தில்லைக் குடதிசைக் கோபுரவாயில்
நிலவியகற் பகக்கன்றின் நிரைமலர்த்தா ளிணைபோற்றி       4

சுப்ரமணியர்

பாறுமுக மும்பொருந்தப் பருந்துவிருந் துணக்கழுகு
நூறுமுக மாயணைந்து நூழில்படு களம்புகுத
மாறுமுகந் தருநிருதர் மடியவடி வேலெடுத்த
ஆறுமுகன் திருவடித்தா மறையிணைக ளவைபோற்றி       5

சைவ சமயாசாரியார்

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலுர் வன்றொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி       6

திருத்தொண்டர் - சேக்கிழார்

தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாந் திருத்தொண்டத் தெகையடியார் பதம்போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழார ரடிபோற்றி       7


நூற்பெயர்


தாய்மலர்ந்த முகத்தினளாய்த் தழுவிமுலை தரவந்த
நோய்மலர்ந்த பிறவிதொறு நுழையாமல் உலகுய்யத்
தீமலர்ந்த சடைக்கூத்தர் திருவருளாற் சேக்கிழார்
வாய்மலர்ந்த புராணத்தின் வரலாறு விரித்துரைப்பாம்       8

அவையடக்கம்

ஊர்கடலை இவனெனவந் துதித்தநான் ஓங்குதமிழ்
நூற்கடலைக் கரைகண்டு நுவலநினைக் குமதுதிருப்
பாற்கடலை சிற்றெரும்பு பருகநினைப் பதுபோலும்
நீர்கடல்சூழ் மண்ணுலகை நிறுக்கநினைக் குமதொக்கும்       9


தேவுடனே கூடியசொல் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த
பாவுடனே கூடியஎப் பருப்பொருளும் விழுப்பொருளாம்
கோவுடனே கூடிவருங் குருட்டாவும் ஊர்புகுதும்
பூவுடனே கூடியநார் புனிதர்முடிக் கணியாமால்       10


(*) இஃது உமாபதிசிவம் என்னும் புலவர் இயற்றியது என்பர்
-------------------

நூல்


பாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும்
      பாளைவிரி மணங்கமழ் பூஞ்சேநலை தோறும்
காலாறு கோலிஇசை பாடநீடும் களிமயில்நின்
      றாடும்இயல் தொண்டை நாட்டுள்
நாலாறுக் கோட்டத்துப் புலியூர்க் கோட்டம்
      நன்றிபுனை குன்றைவள நாட்டு மிக்க
சேலாறு கின்றவயற் குன்றத் துரில்
      சேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே       11


நாடெங்கும் சோழன்முனந் தெரிந்தே
      ஏற்றும் நற்குடி நாற்பத் தெண்ணாயிரத்து வந்த
கூடல்கிழான் புரிசைகிழான் குழவு சீர்வெண்
      குளப்பாக் கிழான் வரிசைக்குளத் துழான்முன்
தேடுபுக ழாரிவருஞ் சிறந்து வாழச்
      சேக்கிழார் குடியிலிந்த தேசம் உய்யப்
பாடல்புரி அருள்மொழித்தே வரும்பினந்தம்
      பாலறா வாயரும்வந் துதித்து வாழ்ந்தார்       12


இமயமகள் யரையன்மகள் தழுவக் கச்சி
      ஏகம்பர் திருமேனி குழைந்த ஞான்று
சமயமவை ஆறினுக்குத் தலைவிக்கீசர்
      தந்தபடி எட்டுழக்கீராழி நெல்லும்
உமைதிருச் சூடகக்கையால் கொடுக்கவாங்கி
      உழவுதொழி லாற்பெருக்கி உலகமெல்லாம்
தமதுகொழு மிகுதிகொடு வளர்க்கும் வேளான்
      தலைவர் பெரும் புகழ்உலகில் தழைத்தன்றே       13


விளைகழனி பூலோகம் முழுதும் ஏரி விரிதிரை
      நீர்க்கடல் வருணன் கம்பு கட்டி
கிளர்கலப்பை தருசுமையாள் சுவேதராமன்
      கிடாமறலி வசத்தீசன் வசத்தான் என்றிங்
களவறிந்தாண் டாண்டுதொறும் விதைதப்
      பாமல் அளக்குமவள் கச்சியறம் வளர்த்த மாதா
ஒளிபொருகு கொழுமிகுதி எறும்பீ றானஉயி
      ரனைத்தும் தேவரும்உண் டுவப்பதன்றே       14


மாறுகொடு பழையனூர் நீலி செய்த வ
      ஞ்சனையால் வணிகன் உயிர் இழப்பத் தாங்கள்
கூறஉயசொல் பிழையாது துணிந்து
      செந்திக் குழியிலெழு பதுபேரும் முழ்கிக் கங்கை
ஆறணிசெஞ் சடைதிருவா லாங்காட் டப்பர்
      அண்டமுற நிமிந்தாடுமட அடியின்மின்கீழ்மெய்ப்
பேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால்
      பிரிந்தளவிட் டிவளவெனப் பேசலாமோ       15


காராளர் அணிவயலில் உழுதுதங்கள்
      கையார நட்டமுடி திருந்தில்இந்தப்
பாராளுந் திறல்அரசர் கவித்தவெற்றிப்
      பசும்பொன்மணி முடிதிருத்துங் கலப்பைபூண்ட
ஏரால்எண் டிசைவளர்க்கும் புகழ்வேளாளர்
      ஏறடிக்கஞ் சிறுகோலால் தரணியாளச்
சீராருமுடியரசர் இருந்துசெங்கோல்
      செலுத்துவர்வே ளாளர்புகழ் செப்பலாமோ       16


வாயிலார் சத்தியார் விறல்சேர் மிண்டர்
      வாக்கரையர் சாக்கியர்கோட் புலிகஞ் சாறர்
ஏயர்கோன் கலிக்காமர் முளைவித்தாக்கும்
      இளையான்தன் குடிமாறர் முர்க்கர் செங்கைத்
தாயனார் செருத்துணையார் செருவில்
      வெம்போர் சாதித்த முனையடுவார் ஆகநம்பி
பாயிரஞ்சேர் அறுபதுபேர் தனிப்பேர்
      தம்மில் பதின்மூவர் வேளாளர் பகருங்காலெ       17


அத்தகைய புகழ்வேளாண் மரபில்சேக்
      கிழார்குடியில் வந்தஅருண் மொழித்தேவர்க்குத்
தத்துபரி வலவனுந்தன் செங்கோலோச்சுங்
      தலைமையளித் தவர்தமக்கு தனதுபேரும்
ஊத்தமசோ ழப்பல்ல வன்தான்என்றும்
      உயர்பட்டங் கொடுத்திடஆங் கவர்நீர்நாட்டு
நித்தனுறை திருநாகேச் சுரத்தில்அன்பு
      நிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார்       18


தம்பதிகுன் றத்தூரில் மடவளாகந்
      தானாக்கி திருக்கோயில் தாபித்தங்கண்
செம்பியர்கோன் திருநாகேச் சுரம்போலீதுங்
      திருநாகேச் சுரமெனவே திருப்பேர் சாற்றி
அம்புவியில் அங்காங்க வைபவங்கட்
      கானபரி கலந்திருநாள் பூசைகற்பித்(து)
இம்பர்புகழ் வளவன்அர சுரிமைச்
      செங்கோல் இமசேது பரியந்தம் இயற்று நாளில்       19


கலகமிடும் அமண்முருட்டுக் கையர் பொய்யே
      கட்டிநடத் தியசிந்தா மணியை மெய்யென்(று)
உலகிலுள்ளொர் சிலகற்று நெற்குத்துண்ணா
      துமிக்குத்திக் கைவருந்திக் கறவைநிற்க
மலடுகறந் துளந்தளர்ந்து குளிர்பூஞ்சேலை
      வழியிருக்க குழிவீழ்ந் தளறுபாய்ந்து
விலைதருமென் கரும்பிருக்க இரும்மைமென்று
      விளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்து நொந்தார்       20


வளவனுங்குண் டமண்புரட்டுத் திருட்டுச்சிந்
      தாமணிக் கதையை மெய்யென்று வரிசைகூர
உளமகிகழ்ந்து பலபடப்பா ராட்டிக்கேட்க
      உபயகுல மணிவிளக்காஞ்சேக் கிழான்கண்(டு)
இளஅரசன் தனைநோக்கிச் சமணர்பொய்ந்நூல்
      இதுமறுநக்காகா(து) இம்மைக்கு மற்றே
வளமருவு கின்றசிவ கதை இம்மைக்கும்
      மறுமைக்கும் உறுதிஎன வளவன்கேட்டு       21


"அவகதையாய்ப் பயனற்ற கதையீதாகில்
      அம்மையும் இம்மையும் உறுதி பயத்தக்க
சிவகதைஏ ததுகற்ற திறமைப்பேரார்
      சீவகசிந்தா மணிபோல் இடையில்வந்த
நவகதையோ? புராதனமோ? முன்னிலுண்டோ ?
      நானிலத்து சொன்னவரார்? கேட்பாரார்?
தவகதையொ? தவம்பண்ணிப் பேறுபெற்ற
      தனிக்கதையோ? அடைவுபடச் சாற்று"மென்றான்       22


செம்பியர்பூ பதிமகிழ்ந்து வினவிக்கேட்கச்
      சேக்கிழார் குரிசில்உரைசெய்வார் ஞாலத்(து)
அம்பலவர் திருத்தொண்டர் பெருமை
      ஆரூர் அடிகள்முதல் அடிஎடுத்துக் கொடுக்க நாவல்
நம்பிபதி னொருதிருப்பாட் டாகச்செய்த
      நலமலிதொண் டத்தொகைக்கு நாரையூரில்
தும்பிமுகன் பொருளுரைக்க நம்பியாண்டார்
      சுருதிமொழிக் கலித்துறைஅந் தாதிசெய்தார்       23


"ஆயுமறை மொழிநம்பி யாண்டார் நம்பி
      அருள்செய்த கலித்துறைஅந் தாதிதன்னைச்
சேயதிரு முறைகண்ட ராசராச
      தேவர்சிவா லயதேவர் முதலாயுள்ள
ஏயகருங் கடல்புடைசூழ் உலகமெலாம்
      எடுத்தினிது பாராட்டிற்(று)" என்ன
தூயகதை அடைவுபடச் சொல்வீர்
      என்றுசோழன் உரைசெயக் கேட்டு       24


தில்லைவாழ் அந்தணரே முதற்பண்
      பாடுதிருநீலகண்டத்துப் பாணார் ஈறாச்
சொல்லிய தொண்டத் தொகை நூல்வகை
      அந்தாதித் தொடர்ச்சியினை விரித்துரைக்க வளவன்கேட்டு
மெல்லியலாள் பங்கர் திருவருளை நோக்கி
      வியந்தடியார்(1) தொண்டுசெய்து பேறுபெற்ற
செல்கதியை நினைந்துருகி வளவர் கோமான்
      சேவையர்கா வலரைமுக நோக்கிச் சொல்வான்
/ (1)பா.பே. 'வியந்தடிமைத்'      25


"அவரவர்கள் நாடவர்கள் இருந்தஊர்
      வந்(து) அவதரித்த திருமரபு திருப்பேர் செய்த
சிவசமயத் திருத்தொண்டு முற்பிற்பாடு
      சிவனடிக்கிழ் உயர்பரம முத்தி பெற்றோர்
எவரும்அறியச் சீவன் முத்தராய் இங்கிருப்பவர்கள்
      இனிமேலும் பிறப்போர் மண்மேல்
அவர்களைச்சேர்ந் தருள்பெற்றொர் பகைத்துப்பெற்றோர்
      அவர்கள்பகையால் நரகில் அடைந்த பேர்கள்       26


இல்லறத்தில் இருந்துநனி முத்திபெற்றோர்
      சிற்றின்ப இயல்பைநீக்கி
நல்லறமாந் துறவறத்தில் நின்று பெற்றோர்
      நற்பிரமசாரிகளாய் அருள்பெற்றுயந்தோர்
செல்கதிசற் குருவருளால் சென்று சேர்ந்தோர்
      சிவபூசைசெய்துபர முத்தி பெற்றோர்
புல்லறிவு தவிர்ந்துதிரு வேடமேமெய்ப்
      பொருளெனக்கொண் டரனடிக்கீழ்ப் பொருந்த புக்கோர்       27


இப்படியே அடைவுபெற பிரித்துக்கேட்டால்
      யாவருக்கு மேதரிக்கச் செவிநா நீட்டா
ஓப்பரிய பொருள் தெரிந்து விளங்கித்தோன்ற
      உவமையடைத்தாய கதை கற்கநிற்கத்
தப்பில்பொருங் காவியமாய் விரித்துச்
      செய்து தருவீர்"என் றவர்குவிடைகொடுத்து வேண்டும்
செப்பரிய திரவியமும் கொடுக்க வாங்கிச்
      சேக்கிழார் குரிசில் திருத்தில்லை சேர்ந்தார்       28


தில்லை எல்லையில் வந்து வந்தெதிர் தெண்டனாக விழுந்தெழுந்(து)
அல்லிசேர் கமலத்தடத்தினில் மூழ்கி அம்பலவாணர்முன்
ஓல்லைசென்று பணிந்து கைத்தலம் உச்சிவைத்துளம் உருகி நைந்(து)
எல்லைகா ணரிதாய பெரொளி இன்பவாரியில் மூழ்கியே       29


அடையலார் புரம் நீறெழ திருநகை செய்தன்றொரு மூவரைப்
படியின் மேல் அடிமைக் கொளும் பதபங்கயங்கள் பணிந்து நின்(று)
அடிகளே உனதடியார் சீரடியேன் உரைத்திட அடிஎடுத்(து)
இடர்கெட தருவாய் எனத்திருவருளை எண்ணி இறைஞ்சினார்       30


அலைபுனற் பகிரதி நதிச்சடை யாட வாடர வாட நின்(று)
இலகு மன்றினில் ஆடுவார் திருவருளினால் அசரீரி வாக்கு
உலகெலாம் என அடிஎடுத்துரைசெய்த பேரொலி யோசைமிக்
கிலகு சீரடியார் செவிப்புலந்தெங்குமாகி நிறைந்தலால்       31


தில்லை மாநகர்வாழ வாழ்தவசிந்தை அந்தணர் ஆறைஞ்ஞூ(று)
அல்லதும் பலமடபதித்தவராச ரிக்கையிலுள்ள பேர்
எல்லை யில்லவர் யாவருங் களிகொளவிளங்(கு) அசரீரி வாக்கு
ஒல்லை வந்தெழ அனவருங் கரம் உச்சிவைத்து உளம் உருகினார்       32


உள்ளலார் புரம் நீரெழக் கணை ஒன்று தொட்டு உயர் மன்றில்வாழ்
வள்ளலார் திருமாலையுந் திருநீறு மெய்ப் பரிவட்டமும்
எள்ளலா ரலரென்று சேவையர் காவலர்க்கிவை இனிதளித்(து)
அள்ளலார்வயல் நீடுதில்லையில் அனைவருங் களிகொண்டபின்       33


சேவை காவலர் தொண்டர் சீர்உரை செய்தவற்குயர் செய்யுள்முன்
மூவரோதிய திருநெறித்தமிழ் ஆதலால் வரன்முறையால்
யாவரும் புகழ் திருநெறித் தலைவரை வணங்கி இணங்கி மெய்த்
தாவருஞ் சிவசாதனங்கள் தரித்து நீறுபரித்தரோ       34


வந்துசூழ நிரைத்த ஐயிருநூறுகால் மணிமண்டபத்(து)
எந்தையார் திருவருளை உன்னிஇருந்து சேவையர் காவலர்
செந்தமிழ் தொடையால் விளங்கிய திருவிருத்த நிருத்தனார்
தந்த சொன்முதலா எடுத்தனர் தாணுவான புராணநூல்       35


திருமறையோர் புராணமவை பதின்மூன்று
      சிவவேதியர் அரனை வழிபட்ட புராணமோ ரிரண்டு
குரைகழல் மாத்திரரொன்(று) அறுவர்
      முடிமன்னர் முறுநிலமன்னர் ஐவர் வணிகர்குலத்தைவர்
இருமை நெறி வேளாளர் பதின்மூவர்
      இடையர் இருவர் சாலியர் குயவர் தயிலவினையாளர்
பரதவர்கள் சான்றார் வண்ணார் சிலைமறவர்
      நீசர் பாணர் இவர் ஓர்ஒருவராம் பகருங்காலே       36


அறுதிபெறத் திருமரபு குறித்துரையாப்
      புராணம் அவைகள் ஒரு பதின்மூன்று திருக்கூட்டந்தன்னில்
மறுவிலவர் பதியறிந்த கதையிரண்டு வந்த
      மரபறிந்த கதையிரண்டு பேரறிந்த கதைஒன்(று)
உறுமரபு தெரியாப் புராணமவை யோரேழ்
      ஊர்அறியாக் கதை ஏழு பேரறியாக் கதைஎட்(டு)
இறுதி யிலக்கங்கண்ட திருக்கூட்ட
      மொன்றெண்ணித்தனை என்றறியாக் திருக்கூட்டம் எட்டே       37


தில்லை மறையோர் கலயர் முருகர் பசுபதியார்
      சிறப்புலியார் கணநாதர் பூசலை சண்டேசர்
கல்விநிறை சோமாசிமாறர் நமிநந்தி
      கவுணியனார் அப்பூதி நீலநக்கராகச்
செல்வமறையோர் காதை பதின்முன்று
      சிவவேதியர் காதை இரண்டு புகழ்த்துணையார் முப்போதும்
வல்லபடி சிவனை அருச்சிப்பார்கள்
      மாமாத்திரர் மரபில் சிறுத்தொண்டர் ஒருவர் முடிமன்னர்       38


அறுவரெவரவர் கோச்செங்கோட்சோழர்
      புகழ்ச்சோழர் அருள்மானி இடங்கழியார் நெடுமாறர் சேரர்
குறுநில மன்னவர் ஐவர் நரசிங்கமுனையர்
      குற்றுவனார் கழற்சிங்கர் மெய்பொருள் ஐயடிகள்
முறைமையில் வணிகரில் ஐவர் காரைக்காலம்மை
      மூர்த்தி கலிக்கம்பர் அமர்நீதி இயற்பகையார்
திறமைவிரி(2) வேளாளர் பதின் முவர்
      மூர்க்கர் செருத்துணையார் வாயிலார் கோடபூலியார் சத்தி
/ பா.பே.'திறமைபுரி'(2)       39


தாயனார் இளையான்தன் குடிமாறர் அரசு
      சாக்கியர் கஞ்சாறர் விறல்மிண்டர் முனையடுவார்
ஏயர்கோன் கலிக்காமர் கோபாலர்
      மரபிலிருவர் திருமுலர் ஆனாயர் குயவர்
சேயபுகழ்த் திருநீலகண்டனார் பாணர்
      திருமரபில் திருநீலகண்டத்துப்பாணர்
மேயதிறல் அதிபத்தர் பரதவர் கண்ணப்பர்
      வேடர் மரபினில் சான்றார்(3) ஏனாதிநாதர்
/ பா.பே.'சான்றோர்'(3) /       40


நேசனார் சாலியரில் திருநாளைப்போவார்
      நீசர் மரபினில் எங்கள் திருக்குறிப்புத்தொண்டர்
துசொலிக்கும் ஏகாலிமரபு திலதைலத்தொழில்
      மரபில் கலியனார் மரபு குறித்துரையாக்(4)
காசில்கதை பதின்மூன்று குலச்சிறையார்
      தண்டி கணம்புல்லர் எறிபத்தர் காரியார் குறும்பர்
தேசுடைய பத்தர் பரமனையே பாடுவார்கள்
      சித்தத்தைச் சிவன்பால் வைத்தார் ஆரூர் பிறந்தார்
/ பா.பே.'குறித்தறி'(4) /       41


செப்பரிய பொய்யடிமை இல்லாதார்
      மெய்யில் திருநீறு பூசுமுனிவர்கள் யுலகுதன்னில்
அப்பாலும் அடிசார்ந்தார் இவரில் தமிற்
      சிலபேர் ஆய்ந்த தமிழ் பேர் சிலபேர் மலையாளர் சிலபேர்
தப்பாத தெலுங்கர் சிலர் மற்றுள தேசத்தோர்
      தவஞ்செய்து பரகதியை அடைந்தவர்கள் சிலபேர்
இப்போதும் இருந்தரனை வழிபடுவோர்
      சிலபேர் இனிமேலுந் திருமேனி கொடுவருவோர் சிலரே       42


திருஞானசம்பந்தர் திருநாவுக்கரையர்
      திருமூலர் நெடுமாறர் மங்கையர்க்கரசி
கரைசேருங் குலச்சிறையார் யாழ்ப்பாணர்
      குறும்பர் கணநாதர் அப்பூதி சோமாசிமாறர்
உரைசேரும் இவர்கள் பதினெருவர்
      குருவருளால் உயர்முத்தி யடைந்தவர்கள் எறிபபத்தர் கலயர்
முருகனார் கண்ணப்பர் ஆனாயர் தாயர்
      முர்த்தியார் சண்டேசர் திருநாளைப்போவார்       43


சேரனார் சாக்கியர் கூற்றுவனார் தண்டி
      சிறப்புலியார் பசுபதியார் கலிக்காமர் கலியர்
காரியார் அதிபத்தர் நீலநக்கர் பூசல்
      கணம்புல்லர் கோட்புலியர் நமிந்தியடிகள்
சீருடைய கழற்சிங்கர் வாயிலார் தூய
      செருத்துணையார் புகழ்துணையார் காடவர் ஐயடிகள்
மூரிநெடு வேற் செங்கோட்சோழனாராக
      முப்பதுபேர் சிவலிங்கத்தால் முத்தியடைந்தார்       44


திருநீலகண்டனார் இயற்பகையார் மூர்க்கர்
      சிறுத்தொண்டர் திருக்குறிப்புத்தோண்டர் விறல்மிண்டர்
அருள்சேரும் இடங்கழியார் முனையடுவார்
      சத்தி அமர்நீதி மெய்ப்பொருளார் ஏனாதி நாதர்
கரைசேரும் புகழ்ச்சோழர் கஞ்சாறர் மாறர்
      காரைக்காலம்மை நரசிங்கர் கலிக்கம்பர்
வருநேசராக ஒருபத்தொன்பதடியார்
      மணிவேடத்தாரை வழிபட்டரனை யடைந்தார்       45


கவுணியர் நாவுக்கரசர் பேயார் இம்மூவர்
      கற்கும் இயல் இசைவல்லோர் இசைத்தமிழ் நூல்வல்லோர்
பவமணுகாத் திருநாளைப்போவார் ஆனாயர்
      பாணர் பரமனையே பாடுவராக நால்வர்
புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி
      பொய்யடிமை இல்லாத தமிழ்ப்புலவர் சேரர்
நவமுடைய இவர்ஐவர் இயல் வல்லோர் நின்ற
      நாயன்மார் தவம் புரிந்து நற்கதியை யடைந்தோர்       46


இல்லறத்தில் நின்றவர்கள் திருநீலகண்டர்
      இயற்பகை உள்ளிட்டார் முர்த்தியார் அப்பர்
நல்ல துறவறம் பிரமசாரிகள் சண்டேசர்
      நானிலத்தில் அரனடியார் தங்களுடன்சேர்ந்
செல்கதி பெற்றவர் ஞான சம்பந்தருடனே
      திருமணத்தில் ஒருமணமாய்ச் சேர்ந்தவர்கள் அனேகம்
பல்வளஞ்சேர் ஆரூரருடன் சேரர் கையில்
      பரிஉகைக்க உடன்சென்ற பரிசனமெண்ணிறந்தோர்       47


சிவனடியாருடன் பகையாய் முத்தியடைந்தவர்கள்
      சேய்ஞலூர் சண்டேசர் பிதா எச்சதத்தன்
கவர்புகழ்சேர் கோட்புலியார் உரைத்த திருவிரையாக்
      கலிபிழைத்த கிளைபகைத்து(5) நரகினைசென்றடைந்தோர்
தவரான(6) முர்த்தியார் இறைவனுக்குச்சாத்துஞ்
      சந்தணக்காப்பினை விலக்கி அமண்சமயச் சார்வாய்ப்
புவிபரந்த கருநடமன்னவன் முதலனேகர்
      புராணகதை யினைப் பிரித்துப் புகல எளிதலவே
/பா.பே. 'பிழைத்து'(5) . 'தவராசர்'(6)/       48


ஆருரர் திருத்தொண்டத் தொகையு஡ரத்த நாளில்
      அடுத்தொண்டுசெய்தொண்டர் சிலர் அவர்க்கு முன்னே
பேருர் மெய்த் தொண்டுசெய்த பேர்
      சிலபேர் அவர்க்குப்பிறக திரத்தொண்டுசெய்யும்பேர் சிலபேராகச்
சீருருந் திருத்தொண்டர் புராணத்திற் சேர்த்து
      சேவையர் கோன் சேர்வைசெயுந் தொண்டர் அளவிரந்தோர்
காரூரும் மணிகண்டர்க் கவரவர்கள் செய்த
      கைத்தொண்டில்ன் நிலைகரைகண்டுரைக்க எளிதலவே       49


ஓருலகோ ஒருதிசையோ ஒருபதியோ
      தம்மிலோரு மரபோ ஒருபெயரோ ஒரகாலந்தானோ
பேருலகில் ஒருமைநெறி தருங்கதையோ
      பன்மைப் பெருங்கதையோ பேர் ஒன்றோ அல்லவே இதனை
ஏர் உலகெலாம் உணர்ந் தோதர்றகரியவன்
      என்றிறைவன்முன் அடியெடுத்துக் கொடுத்தருளக் கொண்டு
பாருலகில் நாமகள் நின்றெடுத்துக்
      கைநீட்டப் பாடி முடித்தனர் தொண்டர்சீர் பரவவல்லார்       50


கரங்கடலைக் கைநீத்துக் கொள எளிது
      முந்நீர்க் கடற்கரையின்(7) நொய்மணலை எண்ணி அளவிடலாம்
பெருங்கடல்மேல் வருந்திரையை ஒன்றிரண்டென்
      றெண்ணிப் பிரித்தெழுதி கடையிலக்கம் பிரித்துவிடலாகும்
தருங்கலின் மீனை அளவிடலாகும்
      வானத்தாரகையைஅளவிடலாம் சங்கரன்தாள் தமது
சிரங்கொள் திருத்தொண்டர் புராணத்தை
      அளவிட நஞ்சேக்கிழார்க் கெளிதலதுதேவர்க்கும் அரிதே
/பா.பே. 'கடற்கரைநுண்'(7)/       51


அறுவதுபேர் தனித்திருப்பேர் கூட்டம்
      ஒன்பதாக அரனடியார் கதையை
மறுவில் திருநாவலூர்ச் சிவமறையோர் குலத்து
      வருசடையனார் மனைவி இசைஞானி வயிற்றில்
உறுதிபெற அவதரித்த ஆரூரர் முன்னாள்
      உரைசெய்த திருத்தொண்டத்தொகைப் பதிகத்தடைவே
நறைமலிபூம் பொழில்புடைசூழ் திருநாரையூரில்
      நம்பியாண்டார் திருவந்தாதியைக் கடைபிடித்து       52


காண்டம் இரண்டா வகுத்துத் கதைபரப்பைத்
      தொகுத்து கருதரிய சருக்கங்கள் பதின்மூன்றா நிலையிட்(டு)
ஈண்டுரைத்த புராணத்தில் திருவிருத்தம்
      நாலாயிரத் திருநூற்ஐம்பத்து மூன்றாக
அமைத்துச்
சேண்டகையை திருத்தொண்டர் புராணமெனப்
      புராணத் திருமுறைக்குத் திருநாமஞ் சீர்மைபெற அமைத்திட்
டாண்டகைமை பெறயெழுதி மைக்காப்புச்சாத்தி
      அழகுபெறக் கவளிகையும் அமைத்ததில் வைத்ததனபின்       53


"சேவைகாவலர் புராணகதைதொகை
      செயநினைந்தெமை அகன்றபின்
யாவர் தாம் அருகிருந்த பேர்கள்கதைசென்ற
      தெவ்வளவிருந்தாங்(கு)
ஆவதென்னி வைகள் அறியவேண்டுமதறிந்து
      வாரும்" எனவளவர்கோன்
ஏவினார் உரிய தூதர் தூதறியாமல்
      ஒற்றரையு மேவினான்       54


வென்றி வேல்வளவன் அளவறிந்துவர
      விட்ட காளையர் "புராணநூல்
ஒன்று பாதிகதை சென்ற(து)" என்று
      சிலர் ஓடினார் சிலர் உவந்து சென்(று)
"இன்று நாளைமுடியும் புராணம் இனி"
      என்றுரைத்திட்டு இறைஞ்சினான்
சென்று "நற்கதைமுடிந்தது" என்று
      சிலர் செம்பியற்குறுதி செப்பினார்       55


வந்து சொன்னவர்கள் அனைவருக்கும் நவமணிகளுந்துகிலும் பொனும்
சிந்தி அள்ளியும் உவந்து விசி உயர் செம்பொன் அம்பல மருங்கில்வாழ்
அந்தி வண்ணர் நடமும் பணிந்து முதலடி எடுத்தவர் கொடுத்திடப்
புந்தி செய்து மகிழ்சேவை காவலர் "புராணமுந் தொழுவன்நான்" எனா       56


வீதிவீதிகள்தொறுந் தொறும் பயணம் என்று வென்றி மணிமுரசறைந்
தோதி வேதியர்கள் எண்ணி இட்ட உயர்நாளும் ஓரையும் முகூர்த்தமும்
போத நாடிவரை புரைகடக்களிறு பரவி தேர் கருவியாள்தரச்
சாதுரங்கமுடனே செலப் பிளிறுநந்தி மேல்கொடு நடந்தனன்       57


தேர்முழக்கொலி மழைக் கடக்கரட சிந்துரக் களிறு பிளிறுசீர்
ஆர்முழக்கொலி பரிசெருக்கொலி பதாதி வந்தெதிர் அடர்ந்தெழும்
போர் முழக்கொலி சழக்கிலாதுயர் படைக்கலன் புணரும் ஓசைஏழ்
கார்முழக்கொலியின் எட்டிரட்டிநிரை கடல்முழக்கென முழக்கெழ       58


வளவர்கோன் வரவறிந்த தில்லைமறையோரும் வண்஡ம மடபதிகளும்
பிளவுகொண்டமதி நுதல்மடந்தையாரும் மற்றுமுள பெரியோர்களும்
களவிலாத மொழிகொடு புராணகதை செய்த கங்கைகுல திலகரும்
தளவமாலை அபயனை எதிர்ந் தினியசாரஆசிபலசாற்றினார்       59


முண்டமான திருமுடியும் இட்ட திருமுண்டமங்கவசமுந்துணைக்
குண்டலங்களும் இரண்டுகாதினுங் வடிந்தலைந்த குழையுந்திருக்
கண்டமாலை கரமாலையுஞ் சிரசுகவின் விளங்வே
தோண்டர்சீர் பரவுவான் அணைந்த சுபசரிதை சோழனெதிர் கண்டனன்       60


கண்டபோதுள மகிழ்ந்து தன்னையறியாது கைகள் தலைமீதுறக்
'கொண்டவேடம் அரனடியார் வேடம் இது குறைவிலாத தவவேடம்' என்
றண்டவாணர் திருவருளை யுன்னி அவர்அடிமை கொண்ட பெருமை நினைந்(து)
எணடயங்கரசர் ஏறு சேவையர் குலாதி பாதுகை இறைஞ்சினான்       61


இறைஞ்சி அம்பலவர் பாத தாமரை இறைஞ்ச எண்ணி வரன்முறையால்
அறஞ்சிறந்த முனிசேவை காவலரும் ஆறைஞ்ஞூறு மறையோர்களும்
துறஞ்சிறந்த மடபதிகளுந்தொடர வந்து மன்னன் அரிபிரமர்பால்
மறைஞ்சு நின்ற பொருள் வெளிப்பட கனகமன்றில் நின்றபடி கண்டனன்       62


கண்டகண்அருவி தாரை கொள்ள இருகைகள் அள்சலிகொள கசிந்து
எண்டரும் புளகரோமகூபம் எழ இன்பம் வாரி கரைபுரளவாய்
விண்ட தூமொழிகள் குழற அன்பினொடு விம்மிவிம்மி அருள்மேலிடத்
தெண்டனாகமுன் விழுந்தெழுந்து நனி செம்பியன் பரவ எம்பிரான்       63


"சேக்கிழான் நமது தொண்டர்சீர்பரவ நாம் மகிழ்ந்(து) 'உலகம்' என்று நாம்
வாக்கினால் அடியெடுத் துரைத்திட வரைந்து நூல்செய்து முடித்தனன்
காக்கும் வேல்வளவ! நீஇதைகடிதுகேள்" எனக் கனக வெளியிலே(8)
ஊக்கமான திருவாக்கெழுந்து திருச்சிலம்பொலியும் உடன்எழ
/பா.பே. 'சபையிலே' (8) '       64


மன்றுளாடி திருவாய் மலர்ந்த மொழியுஞ் சிலம்பொலியும் மன்றிலே
நின்ற மானிடர் செவிப்புலன்புக நிறைந்த தன்றியும் நிலத்தின்மேல்
ஒன்றிநின்றுயர் சராசரங்கள் அடையக் கசிந்துருகி ஓலிடக்
குன்றிலங்கு திரள்தோள் நரேந்திரபதி குதுகுலித்(9)துளம் மகிழ்ற்தனன்
/பா.பே. 'குதுகுதுத்'(9)/       65


"தொண்டர் தொண்டுசெய் புராணகாதை மதிசூடுநாதர் திருவளினால்
விண்ட நீதிபுனை சேக்கிழார்முனி வரித்துரைத்த காதை கேட்பதற்(கு)
அண்டவாணர் அடியாரெலாங் கடுகவருக" என்று திசைதிசை தொறும்
எண்டயங்கரசன் ஏடெடுத் தெழுதியாளும் ஓலைகளும் ஏவினான்       66


கவசமணிந்த சனங்களு மிங்கிதமுகம்பித்
தவசமுறு சிவசிந்தையும் அன்பகலா மேன்மைத்
தவசரிதத் தொழிலுஞ் சிவசாதனமுஞ் சாரச்
சிவசமயத்தவர் யாவரும் வந்து திறண்டார்கள்       67


வேதியர் வேதமுழக்கொலி வேதத்தைத் தமிழால்
ஓதியமூவர் திருப்பதி கத்தொலி ஓவாமல்
பூதியணிந்து அரகரஎன அன்பர் புகழ்ந்தோதும்
காதியல் பேரொலி காரொலி போலொலி கைத்தேற       68


பூசிப்பவர் சிலர் பூசித்தன்பொடு புனிதன்தாள்
நேசிப்பவர் சிலர் பிறவாவரமருள் நிமலா என்
றியாசிப்பவர் சிலர் திருமறை எழுதி களிகூர
வாசிப்பவர் சிலராக இருந்து மகிழ்ந்தார்கள்       69


தெள்ளு திரைகடல்மீது மிதந்த திருத்தோணி
வள்ளலை அன்புசெய் அன்பர் மடங்கள் தொறும் பாலர்
மெள்ள இருந்து மிழற்று புராண விருத்தத்தைக்
கிள்ளைகள் பாடி உரைப்பன கேட்பன மெய்ப்பூவை       70


மற்றது கண்டு களித்த நலத்த மனதோடு
சுற்றிய மந்திரமாரொடு தந்திரிமார்சூழத்
தெற்றென வந்து திரண்டு முரண்தரு சீர்நாடு
பெற்றது செல்வ மெனத்தனி யேகை பொருத்தார்கள்       71


பாடினர் தும்புரு நாரதர் நீடிசை பாடாநின்(று)
ஆடினர் வானில் அரம்பையர் அஞ்சலி எஞ்சாமல்
சூடினர் மண்ணின் மடந்தையர் எந்தை துணைப்பாதம்
தேடினர் காலயன் அன்பர் நடந் தரிசித்தார்கள்       72


சங்கொடு பேரி கறங்கிசை வீணை தனித்தாளம்
வங்கிய காளம் இடக்கை கடக்கை மணிக்காளம்
பொங்கிய பம்பை வலம்புரி கண்டை முதற் பொற்பார்
மங்கல துரியம் எங்கும் முழுங்கி வனப்பெய்த       73


வேதியர் வேள்வி நெடும்புகை ஆலயம் எங்கெங்கும்
காதிய குங்கலியப்புகை நீடு கருப்பாலைச்
சோதி நெடும்புகை தோரணவீதி தொறுந் தோறும்
மாதர் புகைக்கும் அகிற்புகை எங்கும் வனப்பெய்த       74


ஆடகநாடக சாலைகள் முத்தணி அத்தாணி
மேடை அரங்கு களங்கமிலாத வெளிக்கூடம்
மாடமதிட்கன மாளிகை சூளிகை எங்கெங்கும்
தோடவிழ் மாலைகள் பொன்னரி மாலைகள் சூழ்வித்தார்       75


பழுதகலத் திருவலகு விருப்பொடு பணிமாறிக்
குழைவுபெறத் திகழ் கோமயநீர் குளிரச்செய்து
தழைபொதி தோரணமுங் கொடியுந் துகிலுஞ் சார்வித்(து)
அழகுபெற திருவீதி புதுக்கியதன் பின்பு       76


திருநெறித் தமிழ்வல்ல பேர்கள் சிவாகமங்கள் படித்தபேர்
கருநெறிப்பகை ஞானநூல் கற்றபேர் மறைகற்றபேர்
குருநெறிக்குரியோ ரிலக்கண இலக்கியங்கள் குறித்போர்
பெருநெறி பலகாவியக்கதை பேசவல்லவர் அனைவரும்       77


வள்ளலார் திருநடஞ்செய் மன்றின் முன்றில்
      மறைவவர் கோமய சலத்தால் மெழுகித்தாபித்
தெள்ளரும் வெண்சுதை யொழுக்கி
      அறுகால் பீடமிட் டதன்மேல் பசும்பட்டு விரித்து மீதே
வெள்ளை மடித்திட்டு மதுமலருந்தூவி
      விரைநறும் தூபங் கொடுத் தாதனங் கற்பித்துத்
தெள்ளுதமிழ் சேக்கிழார் புராணஞ்செய்த
      திருமுறையை அதன்மேல் வைத்திறைஞ்சிப் போற்றி       78


"வாழிதிருத்தொண்டர் புராணத்தை நீரே
      வாசித்துப் பொருள் அருளிச்செய்வீர்" என்று
சோழர் பெருமான் முதலாம் அடியரெல்லாஞ்
      சொல்லக்கேட்டுக் குன்றைமுனி மன்றுளாடும்
தாழ்சடையான் அடிஎடுத்துத்தரத் தாஞ்செய்த
      சைவக்கதையினை விளங்க விரித்துச்சொல்ல
சூழஇருந் தம்பலவ ரடியா ரெல்லாம்
      "சுருதிமொழி இது" எனக்கைதொழுது கேட்டார்       79


"தாளுடைய திருச்சிலம்பு புலம்ப நடம்புரியுந்
      தன்மை அரனுக்கிசைந்த பேர் வழியினாளும்
ஆளுடைய பிள்ளையார் அவதரித்த நாளும்
      அவரழுது திருஞானம் அமுது செய்த நாளும்
சூளுடை ஆதிரைநாளாம் சித்திரை ஆதிரைநாள்
      தொடங்கி எதிராம் ஆண்டு சித்திரை ஆதிரையின்
நாளுடைய கதை முடிப்பம்" எனக் குன்றைவேந்தர்
      நடத்த அனைவருமிருந்து கேட்டனர் நாள்தோறும்       80


சிறப்புடைய மூவர்முதலிகள் திருவாய் மலர்ந்த
      திருநெறிய தமிழ்மூலர் திருமந்திரமாலை
அறப்பயனாம் காரைக்கால் பேயிரட்டைமாலை
      அந்தாதி மூத்தபதிகங் கழறிற்றறிவார்
மறப்பரிய பொன்வண்ணத் தந்தாதி
      திருமும்மணிக்கோவை தெய்வஉலா ஐயடிகள் வெண்பா
உறுப்பாகத் திருவிருத்தம் உடலாகப்
      பொருள்஧஡கள் உயிராக நடந்த துலகெலாம்       81


அன்று முதல் நாடோ றும் நாடோ றும் அண்ணல்
      அடியார் அளவிறந்த பெயர் வந்தவர்க்ளெல்லாம்
சென்றுறையத் திருமடங்கள் திருமடங்கள்
      தோறும் திருவிளக்கங் கவர் சாத்த உள்ளுடைமேற்போர்வை
துன்றிய செந்நெல்லின் அடிசில் கன்னல் நறுங் கனிகள்
      தூய அருசுவை கறிநெய் தயிர்திரண்ட பால்தேன்
நன்று திருப்பண்ணியந்தண்ணீர் அமுதம்
      அடைக்காய் நரபதி ஏவலின் அமைச்சர் நாடோ ரும் நடத்த       82


நலமலியுந் திருத்தில்லை மன்றினில்
      நின்றாடும் நடராசர்க் கன்று முதல் மகபூசை நடத்தி
அலகில்புகழ் தில்லைவாழ் அந்தணர்க்கும்
      வெவ்வேறமுதுபடி கறியமுது முதலானதெல்லாம்
நலமலி செங்கோல் வளவன் தப்பாமே நாளும்
      நடத்திவர அரனடியார் நிரைந்து பதஞ்சலியும்
புலிமுனியும் தவம்செய்த பெரும்பற்றப் புலியூர்
      பூலோக சிவலோகமென பொலிந்து தோன்ற       83


மருவு திருமுறை சேர்ப்பார் எழுதுவார் இருந்து
      வாசிப்பார் பொருளுரைப்பார் கேடடிருப்பார் மகிழ்ந்து
சிரமசைத்துக் கொண்டாடிக் குதுகுலிப்பார்
      சிரிப்பார் தேனிப்பார் குன்றைமுனி சேக்கிழார் செய்த
அரிய தவத்தினை நினைப்பார் அம்பலவர்
      முன்னாள் அடியெடுத்துக் கொடுக்க இவர் பாடினர் என்பார்
பெரிய பராணங்கேட்ட வளவர்பிரான் செவிக்கும்
      பிடிக்குமோ இனிச் சிந்தாமணிப் புரட்டு என்பார்       84


இத்தகைய சிறப்புடனே திருத்தொண்டர் புராணம்
      இருந்தன்பர் பாராட்ட நடந்தெதிரா மாண்டு
சித்திரை ஆதிரைநாளில் முடிய அதுகண்டு
      திருத்தொண்டர் அர என்னும் பேரொலியின் எழுந்துபொங்கக்
கத்துதிரைக் கடலொலியை விழுங்கி முழங்கோ
      ரேழ்கடல லொலியைக் கீழ்படுத்தி பிரமாண்டவெளியைப்
பொத்தி இமையவர் செவியை நிறைத்துயரப்
      பொங்கிப் பொன்னுலகுக் கப்பாலும் புகழ் பொலிந்ததன்றே       85


திருத்தொண்டர் புராணம் எழுதிய முறையை
      மறையோர் சிவமூல மந்திரத்தால் அருச்சனை செய்திறைஞ்சி
இருக்கு முதல் மறைநான்கில் இன்று முதலாக
      இதுவும் ஒரு தமிழ்வேதம் ஐந்தாவதென்று
கருத்திருத்தி அமுதடைக்காய் நறுந்தூபதீபம்
      கவரி குடை கண்ணாடி ஆலத்திநீறு
பரித்தளவு செய்யக்கண்டு வளவர்பிரான்
      முறையைப் பசும்பட்டினாற் சூழ்ந்து பொற்கலத்தினில் இருத்தி       86


செறிய மதயானை சிரத்தில் பொற்கலத் தோடெடுத்துத்
      திருமுறையை இருத்தியபின் சேவையர் காவலரை
முறைமை பெற ஏற்றி அரசனுங்கூட ஏறி
      முறைமையினால் இனைக்கவரி துணைக்கரத்தால் வீச
மறைமுழங்க விண்ணவர்கள் கற்பகப்புமாரி
      பொழியத் திருவீதி வலமாக வரும்போது
இறைவர் திருவருளை நினைந்தட லரசர் கோமான்
      இதுவன்றோ நான்செய்த தவப்பயன் என்றிசைந்தான்       87


வாரணத்தில் இவரவரைக் கண்ட திருவீதி
      மறுகுதொறுந் துய்மைசெய்து வாழைகளும் நாட்டிப்
பூரண கும்பமும் அமைத்துப் பொரியும் மிகத்தூவி
      பொன்னரிமாலையும் நறும்பூமாலைகளுந் தூக்கி
தோரணங்கள் நிரைத்து விரைநறுந் தூபம்ஏந்திச்
      சுடர்விளக்கும்ஏற்றி அணிமணிவிளக்கும் ஏந்தி
ஆரணங்கள் விரித்தோதி மாமறையொ ரெதிர்கொண்
      டறுகொடுப்ப வாழ்தெடுத்தார் அரம்பையர் களெல்லாம்       88


"காவலனாரிவர் தவரிவர் காவலர்
      கவரி இடத்தகுமோ" என்பார்
"சேவையர் காவலனார் சிவமான
      சிறப்பிது நல்ல சிறப்"பென்பார்
"தேவரு வெழுதவொணா மறையைத்
      தமிழ்செய்து திருப்பதிகம் பாடும்
மூவரும் ஒருமுதலா யுலகத்து
      முளைத்த முதற்பொருள் தான்" எனபார்       89


மின்மழை பெய்தது மேக ஒழுங்குகள்
      விண்ணவர் கற்பக விரைசேர்பூ
நன்மழை பெய்தனர் சேவையர்
      காவலர் நாவலரின்புற நாவாரச்
சொன்மழை பெய்தனர் இரவலர்
      மிடிகெட அள்ளி முகந்தெதிர் சோழேசன்
பொன்மழை பெய்தனன் உருகிய
      நெஞ்சொடு கண்மழை அன்பர் பொழிந்தார்கள்       90


"மதுர இராமாயண கதை உரைசெய்த
      வானமீகி பகவனும் ஒப்பல்ல
விதிவழி பாரதம் உரைசெய்து
      கரைசெய்த வேத வியாதனும் ஒப்பல்ல
சிதைவற ஆயிரம் நாவுடன்
      அறிவுள சேட விசேடனும் ஒப்பல்ல
பொதியமலைக் குறுமுனிவனும்
      ஒப்பல புகழ்புனை குன்றை முனிக்கு" என்பார்       91


மெய்யுள சிவசாதனமும் வெளிப்பட
      வெண்ணீறெழுதிய கண்ணேறும்
கையுந் திகழ்மணிகண்டமும்
      ஒளிதரு கவளிகையும் புத்தகஏடும்
நையுந் திருவுளமழியுந்தொறும்
      அரகர வெனு நாமமும் நாமெல்லாம்
உய்யும்படியருள் கருணையும்
      அழகிதெனத் தொழு தனருலகவரெல்லாம்       92


பூவை மற்ந்தனள் வெண்டாமரை
      மயில் புகல்தரு சங்கப்புலவோர் சொல்
பாவை மறந்தனள் தேச சுபாடித
      பயனை மறந்தனள் பதுமத்தோன்
நாவை மறந்தனள் பொதியமலைத்தலை
      நண்ணிய புண்ணிய முனிவனெனும்
கோவை மறந்தனள் சேவையர்
      காவலனார் திருநாவிற் குடிகொண்டாள்       93


இப்படி இப்படி தன்னில் விதிப்படி
      இம்பரும் உம்பரும் ஏனோரும்
அப்படி சூழ அரத்திரு
      வீதிவலஞ்செய் தணைந் தம்பலமுன்றில்
தப்பற யானையினின்றும்
      இழிந்தரசனும் உரைசெறி சேவையர் கோவும்
முப்புரிநூல் மறையோ டணைந்
      தெழுதிய முறையைத் திருமுன் வைத்தார்       94


அண்டவாணர் எதிர் தெண்டனாக
      அனைவரும் விழுந்து பின்எழுந்துசீர்
கொண்ட சேவைகுல திலகருக்
      கனைவருங் குறித்தெதிர் கொடுத்த பேர்
தொண்டர்சீர் பரவுவார் எனப்பெயர்
      சுமத்தி ஞானமுடி சூட்டிமுன்
மண்டபத்தினி லிருத்தி மற்றவரை
      வளவர் பூபதி வணங்கினான்       95


மூவரோது திருமறைகளேழு
      திருவாதவூரர் முறைஒன்றிசைப்
பாவரைந்த முறைஒன்று மூலர்
      மறைஒன்று பாசுரமாதியாய்ச்
கோவைசெய்த முறைஒன்று
      சேவையர் குலாதி நீதிமறை ஒன்றுடன்
பாவைபாகர் திருவருள் சிறந்தமுறை
      பன்னிரண்டென வகுத்தபின்       96


"தோடுசெய்த திருநெறிய செந்தமிழோ
      டொக்கும்" என்றுரை தொடர்ந்து செப்
பேடுசெய்து நடராசர் சன்னிதியில்
      ஏற்றினார்க ளிதுபாலிசூழ்
நாடுசெய்த தவநீடு குன்றைவள
      நகரிசெய்தவ நிகரிலாப்
பீடுசெய்த பகிரதி குலத்திலகர்
      சேக்கிழார் செய்த பெருந்தவம்       97


ஆயவேலை அனபாயன் இந்நிலைமை
      யாதலால் "அனுசர் பாலறா
வாயர் எங்குளர்" எனப்பணிந்
      திருமருங்கு நின்றவர் விளம்புவார்
தூய குன்றைநகர்மீது தம்பெயர்
      துலங்க ஓர்குளம் அமைத்தபின் ஏ
யநாகை யரனார் திருப்பணி
      இயற்றி அவ்விடை இருந்தனர்       98


என்று சொல்ல அவர்தமை
      யழைத்தரசன் இவரமைச்சரிவர் பட்டமும்
மன்றல் மாலைபுனை தொண்டைமான்
      என வகுத்த பின் தமது மண்டலம்
அன்று வற்பம்வர வந்தடைந்தவரை
      ஆற்றல்செய்து தொண்டைமண்டல
நின்றுகாத்த பெருமான்
எனத்
      தமது பெயரை எங்கும் நிறுத்தினார்       99


தொண்டர்சீர்பரவு சேக்கிழார்
      குரிசில் தூய தில்லைநகர் தன்னிலே
பண்டு மூவர் பதிகத்துவந்த
      அறுபத்து மூவர்கதை தனையுணர்ந்(து)
அண்டவாணர் அடியார்கள் தம்முடன்
      அருந்தவந்தனில் இருந்துபின்
இண்டை வைத்தசடை
      அம்பலத்தவர் எடுத்தபாதநிழல் எய்தினார்       100


வாழி தில்லை மணிமன்று
      ளென்றும் நடமாடும் அங்கணர் மலர்ப்பதம்
வாழி காழிநகர் வாழவந்த
      திருநெறிய ராதிபதி வளாளல்தாள்
வாழி அன்பர் திரு நீறுமிட்ட
      திருமுண்ட முந்துவய கவசமும்
வாழி குன்றைமுனிசேவையாதிபதி
      வாய்மலர்ந்தருள் புரானமே       101


தேசிலங்கு முகில் குன்றையாதிபதி
      தொண்டர்சீர்பரவு சேக்கிழார்
வாசல் அன்றுமுதல் இன்று காறும்
      இனிமேலும் வாழையடி வாழையாய்
வீசுதென்றல் மணிமண்டபத்தரசு
      வீற்றிருக்(கு) முடிமன்னருக்கு
ஈசனன்பர்கள் புராணமுஞ்சொலி
      அமைச்சுமாகி நலமெய்துமால்       102


அண்டவாணர் தொழு தில்லை
      அம்பலவர் அடியெடுத்(து) உலகெலாம் எனத்
தொண்டர்சீர்பரவு சேக்கிழான்
      வரிசைதுன்று குன்றைநகராதிபன்
தண்டகாதிபதி திருநெறித்
      தலைமைத் தங்கு செங்கைமுகில் பைங்கழல்
புண்டரீகமலர் தெண்டனிட்டு
      வினைபோக்குவார் பிறவி நீக்குவார்
(பா.பே.=பாடபேதம்)       103

ஆக திருவிருத்தம் 103
---------

சிறப்புப் பாயிரம் (*)
திருக்கிளருங் கயிலைமலைக் காவல்
      பூண்ட செல்வமலி திருநந்தி மரபில்வந்து
கருக்குழியில் எமைவீழா தெடத்தாட்
      கொளுங் கருணைமிகு மெய்கண்டதேவர் தூய
மருக்கிளர்தாள் பரவும் அருள்நந்திதேவர்
      மகிழும் மறைஞான தேவருக்கன்பாகி
இருக்கும் உமாபதிதேவர் சேக்கிழார்தம்
      இசைபுராணம் உரைத்தார் என்ப மாதோ

(*) இச்சிறப்புப் பாயிரம் சிலப்பிரதிகளிலில்லை
--------------

This webpage was last updated on 19th October 2004
Please send your comments to the webmasters of this website