அகநானுறு

akanAnURu
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:

Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany
for providing us with the transliterated/romanized version of the etext and giving us permission
to release the TSCII version as part of Project Madurai etext collections.
TSCII proof reading by Mr. Sivakumar of Chennai and Mr. Raju Rajendran, USA
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2006 .
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


அகநானுறு

1. களிற்றியாணை நிரை

0 கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்;
மார்பி னஃதே மை இல் நுண்ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டுக்,
கையது கணிச்சியொடு மழுவே ; மூவாய்
5
வேலும் உண்டு அத் தோலா தோற்கே;
ஊர்ந்தது ஏறே ; சேர்ந்தோள் உமையே-
செவ்வான் அன்ன மேனி, அவ்வான்
இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிற்று,
எரியகைந் தன்ன அவிர்ந்து விளங்கு புரிசடை,
10
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொன்முறை மரபின்,
வரிகிளர் வயமான் உரிவை தைஇய,
யாழ்கெழு மணிமிடற்று, அந்தணன்
தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே.
15
1 வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல்,
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி,
அறுகோட்டு யானைப் பொதினி யாங்கண்,
சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய
5
கல்போற் பிரியலம் என்ற சொல்தாம்
மறந்தனர் கொல்லோ - தோழி!-சிறந்த
வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய் நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார்-நிலம்பக
அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின்,
10
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு,
அறுநீர்ப் பைஞ்சுனை ஆமறப் புலர்தலின்
உகுநெல் பொரியும் வெம்மைய; யாவரும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய
சுரம்புல் லென்ற ஆற்ற; அலங்கு சினை
15
நாரில் முருங்கை நவிரல் வான்பூச்
சூரலம் கடுவளி எடுப்ப, ஆருற்று,
உடைதிரைப் பிதிர்வின் பொங்கி, முன்
கடல்போல் தோன்றல - காடு இறந்தோரோ?
19
2 கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை
ஊழுறு தீங்கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
5
கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது,
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல்வேறு விலங்கும், எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கெவன் அரிய?
10
வெறுத்த ஏஎர், வேய்புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு
இவளும், இனையள் ஆயின், தந்தை
அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக்
கங்குல் வருதலும் உரியை; பைம்புதல்
15
வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன;
நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே!
17
3 இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினை
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
கொடுவாய்ப் பேடைக்கு அல்கிரை தரீஇய
மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-
5
வான்தோய் சிமைய விறல்வரைக் கவா அன்,
துளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி,
ஒண்செங் குருதி உவற்றியுண்டு அருந்துபு;
புலவுப்புலி துறந்த கலவுக்கழிக் கடுமுடை
கொள்ளை மாந்தரின்- ஆனாது கவரும்
10
புல்லிலை மராஅத்த அகல்சேண் அத்தம்,
கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டிப்
பின்நின்று துரக்கும் நெஞ்சம் நின்வாய்
வாய்போற் பொய்ம்மொழி எவ்வமென் களைமா-
கவிரிதழ் அன்ன காண்பின் செவ்வாய்,
15
அந்தீங் கிளவி, ஆயிழை மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ்சேண் ஆரிடை விலங்கும் ஞா஡ன்றே?
18
4 முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்காற் கொன்றை மெல்பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மாஇரு மருப்பின்,
பரலவல் அடைய, இரலை தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்ப,
5
கருவி வானம் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே, கவின் பெறு கானம்;
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன, வாங்குவள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
10
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி,
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்,
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்,
கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது,
நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தட்
15
போதவிழ் அலரின் நாறும்-
ஆய்தொடி அரிவை! - நின் மாணலம் படர்ந்தே.
17
5 அளிநிலை பொறா அது அமரிய முகத்தள்,
விளிநிலை கொள்ளாள், தமியள், மென்மெல,
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளா அக்
குறுக வந்துதன் கூர்எயிறு தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
5
கண்ணிய துணரா அளவை, ஒண்ணுதல்,
வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையலம் காட்டுப்,
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி,
மோட்டிரும் பாறை ஈட்டுவட்டு ஏய்ப்ப,
10
உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன்,
மாய்த்த போல மழுகுநுனை தோற்றி,
பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்.
விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை அதர,
பரல்முரம்பு ஆகிய பயம்இல் கானம்
15
இறப்ப எண்ணுதிர் ஆயின் - 'அறத்தாறு
அன்று' என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன ஆக என்னுநள் போல,
முன்னம் காட்டி, முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி
20
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு,
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை, மாமலர்
மணிஉரு இழந்த அணியழி தோற்றம்
25
கண்டு கடிந்தனம், செலவே - ஒண்டொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ, பிரிதும் நாம் எனினே
28
6 அரிபெய் சிலம்பின் ஆம்பலந் தொடலை,
அரம்போழ் அவ்வளைப் பொலிந்த முன்கை,
இழையணி பணைத்தோள், ஐயை தந்தை,
மழைவளம் தரூஉம் மாவண் தித்தன்
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்-
5
கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
குழைமாண் ஒள்ளிழை நீ வெய் யோளொடு,
வேழ வெண்புணை தழீஇப், பூழியர்
கயம்நாடு யானையின் முகனமர்ந் தாங்கு,
ஏந்தெழில் ஆகத்து பூந்தார் குழைய,
10
நெருநல் ஆடினை புனலே ; இன்று வந்து
'ஆக வனமுலை அரும்பிய சுணங்கின்,
மாசில் கற்பின், புதல்வன் தாய்' என,
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல!
15
சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத்து
அம்தூம்பு வள்ளை ஆய்கொடி மயக்கி,
வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய்,
முள்ளரைப் பிரம்பின் மூதரில் செறியும்,
பல்வேல் மத்தி, கழாஅர் அன்ன எம்
20
இளமை சென்று தவத்தொல் லஃதே;
இனிமைஎவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே? .
22
7 முலைமுகம் செய்தன; முள்ளெயிறு இலங்கின;
தலைமுடி சான்று; தண்தழை உடையை;
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;
மூப்புடை முதுபதி தாக்கு அணங்கு உடைய;
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை;
5
பேதை அல்லை - மேதையம் குறுமகள்!
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து என,
ஒண்சுடர் நல்லில் அருங்கடி நீவி,
தன்சிதைவு அறிதல் அஞ்சி-இன்சிலை
ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி!-
10
வலைகாண் பிணையின் போகி, ஈங்கு ஓர்
தொலைவில் வெள்வேல் விடலையொடு, என் மகள்
இச் சுரம் படர்தந் தோளே; ஆயிடை,
அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தென,
பிற்படு பூசலின் வழிவழி ஓடி
15
மெய்த்தலைப் படுதல் செல்லேன், இத்தலை,
நின்னொடு வினவல் கேளாய்;- பொன்னொடு
புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி,
ஒலிக்குழைச் செயலை உடைமாண் அல்குல்,
ஆய்சுளைப் பலவின் மேய்கலை உதிர்த்த
20
துய்த்தலை வெண்காழ் பெறூஉம்
கல்கெழு சிறுகுடிக் கானவன் மகளே.
22
8 ஈயற் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த
குரும்பி வல்சிப் பெருங்கை ஏற்றைக்
தூங்குதோல் துதிய வள்உகிர் கதுவலின்,
பாம்பு மதன்அழியும் பானாட் கங்குலும்,
அரிய அல்ல-மன் இகுளை! 'பெரிய
5
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றைப்
பலாவமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
கழை நரல் சிலம்பின் ஆங்கண், வழையொடு
வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பில்,
படுகடுங் களிற்றின் வருத்தம் சொலியப்
10
பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல்
விண்தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு,
எண்ணரும் பிறங்கல் மானதர் மயங்காது,
மின்னுவிடச் சிறிய ஒதுங்கி, மென்மெலத்
துளிதலைத் தலைஇய மணியேர் ஐம்பால்
15
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ
நெறிகெட விலக்கிய, நீயிர், இச் சுரம்
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே.
18
9 கொல்வினைப் பொலிந்த, கூர்ங்குறு புழுகின்,
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
அம்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை
செய்படர் அன்ன செங்குழை அகந்தோறு,
இழுதின் அன்ன தீம்புழல் துய்வாய்
5
உழுதுகாண் துளைய வாகி, ஆர்கழல்பு
ஆலி வானிற் காலொடு பாறித்,
துப்பின் அன்ன செங்கோட்டு இயவின்,
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்-
10
கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடிமாண் உலக்கைத் தூண்டுரல் பாணி
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்றுபின் ஒழியப் போகி, உரந்துரந்து,
ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது,
15
துனைபரி துரக்கும் துஞ்சா செலவின்
எம்மினும், விரைந்து வல்எய்திப் பல்மாண்
ஓங்கிய நல்லில் ஒரு சிறை நிலைஇ,
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்
கன்றுபுகு மாலை நின்றோள் எய்தி,
20
கைகவியாச் சென்று, கண் புதையாக் குறுகி,
பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டி,
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ-
நாணொடு மிடைந்த கற்பின், வாணுதல்,
அம் தீம் கிளவிக் குறுமகள்
மென்தோள் பெறநசைஇச் சென்றவென் நெஞ்சே?
26
10 வான்கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
மீன்கண் டன்ன மெல்லரும்பு ஊழ்த்த,
முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினை,
புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப!
நெய்தல் உண்கண் பைதல கலுழப்
5
பிரிதல் எண்ணினை ஆயின், நன்றும்,
அரிது துற்றனையால். பெரும!- உரிதினின்
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும்- கொண்டலொடு
குரூஉத்திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர்
10
மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி,
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி அன்ன இவள் நலனே
13
11 வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு,
இலையில மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த
அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி,
5
கயந்துகள் ஆகிய பயம்தபு கானம்
எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென,
வம்புவிரித் தன்ன பொங்குமணற் கானயாற்றுப்,
படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர்,
மெய்புகுவு அன்ன கைகவர் முயக்கம்
10
அவரும் பெறுகுவர் மன்னே! நயவர,
நீர்வார் நிகர்மலர் கடுப்ப, ஓ மறந்து
அறுகுளம் நிறைக்குந போல, அல்கலும்
அழுதல் மேவல வாகிப்
பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே!
15
12 யாயே, கண்ணினும் கடுங் காதலளே
எந்தையும், நிலன்உரப் பொறாஅன்; 'சீறுடி சிவப்ப,
எவன், இல! குறுமகள்! இயங்குதி! என்னும்;'
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே;
5
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
கிளிவிளி பயிற்றும் வெளில்ஆடு பெருஞ்சினை
விழுக்கோட் பலவின் பழுப்பயம் கொண்மார்,
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம்
10
புலிசெத்து, வெரீஇய புகர்முக வேழம்,
மழைபடு சிலம்பில் கழைபடப் பெயரும்
நல்வரை நாட! நீ வரின்,
மெல்லியல் ஓரும் தான் வாழலளே
14
13 தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
முனைதிரை கொடுக்கும் துப்பின், தன்மலைத்
தெறல் அருமரபின் கடவுட் பேணிக்
குறவர் தந்த சந்தின் ஆரமும்,
இருபேர் ஆரமும் எழில்பெற அணியும்
5
திருவீழ் மார்பின் தென்னவன் மறவன் -
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறுவரை அல்லது,
வரைநிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
வள்வாய் அம்பின் கோடைப் பொருநன்-
10
பண்ணி தைஇய பயம்கெழு வேள்வியின்,
விழுமிது நிகழ்விது ஆயினும்- தெற்குஏர்பு,
கழிமழை பொழிந்த பொழுதுகொள் அமையத்துச்,
சாயல் இன்துணை இவட்பிரிந்து உறையின்,
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட
15
மாசுஇல் தூமடி விரிந்த சேக்கை,
கவவுஇன் புறாமைக் கழிக- வள வயல்,
அழல்நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல்லின் கவைமுதல் அலங்கல்
நிரம்புஅகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வரப்,
20
புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை,
இலங்குபூங் கரும்பின் ஏர்கழை இருந்த
வெண்குருகு நரல, வீசும்
நுண்பல் துவலைய தண்பனி நாளே!
24
14 'அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி,
காயாஞ் செம்மல் தாஅய், பலஉடன்
ஈயல் மூதாய் வரிப்பப், பவளமொடு
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய
அம்காட்டு ஆர்இடை, மடப்பிணை தழீஇத்,
5
திரி மருப்பு இரலை புல்அருந்து உகள,
முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்
குறும்பொறை மருங்கின் நறும்பூ அயரப்
பதவு மேயல் அருந்து மதவுநடை நல்ஆன்
வீங்குமாண் செருத்தல், தீம்பால் பிலிற்ற
10
கன்றுபயிர் குரல, மன்றுநிறை புகுதரும்
மாலையும் உள்ளார் ஆயின், காலை
யாங்கு ஆகுவம் கொல்? பாண!" என்ற
மனையோள் சொல்எதிர் சொல்லல் செல்லேன்,
செவ்வழி நல்யாழ் இசையினென், பையெனக்
15
கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந் நிறுத்து,
அவர்திறம் செல்வேன் கண்டனென், யானே-
விடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக்
கல்பொருது இரங்கும் பல்ஆர் நேமிக்
கார்மழை முழக்குஇசை கடுக்கும்,
முனைநல் ஊரன், புனைநெடுந் தேரே!
21
15 எம்வெங் காமம் இயைவது ஆயின்,
மெய்ம்மலி பெரும்பூண், செம்மற் கோசர்
கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக்கட் பீலித்
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன,
5
வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல-
தோழி மாரும் யானும் புலம்பச்,
சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன்
10
பாழி அன்ன கடியுடை வியன்நகர்ச்
செறிந்த காப்புஇகந்து, அவனொடு போகி,
அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்
துய்த்த வாய, துகள்நிலம் பரக்க,
கொன்றை யம்சினைக் குழற்பழம் கொழுதி,
15
வன்கை எண்கின் வயநிரை பரக்கும்-
இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்குக்,
குன்ற வேயின் திரண்ட என்
மென்தோள் அஞ்ஞை சென்ற- ஆறே!
19
16 நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய்
நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்,
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்
5
தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே,
கூர்எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
காணுநர் இன்மையின், செத்தனள் பேணிப்
பொலங்கலம் சுமந்த பூண்தாங்கு இளமுலை,
'வருக மாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து
10
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன்,
'மாசுஇல் குறுமகள்!' எவன் பேதுற்றனை?
நீயும் தாயை இவற்கு?' என யான்தற்
கரைய, வந்து விரைவனென் கவைஇ,
களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம்கிளையா,
15
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
பேணினென் அல்லெனோ- மகிழ்ந!- வானத்து
அணங்குஅருங் கடவுள் அன்னோள், நின்
மகன்தாய் ஆதல் புரைவது - ஆங்கு எனவே!
19
17 வளம்கெழு திருநகர்ப் பந்து சிறிது எறியினும்,
இளந்துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்,
'உயங்கின்று, அன்னை! என்மெய்' என்று அசைஇ,
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென,
முயங்கினள் வதியும் மன்னே! இனியே,
5
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்,
நெடுமொழித் தந்தை அருங்கடி நீவி,
நொதும லாளன் நெஞ்சுஅறப் பெற்றஎன்
சிறுமுதுக் குறைவி சிலம்புஆர் சீறுடி
வல்லகொல், செல்லத் தாமே- கல்லென-
10
ஊர்எழுந் தன்ன உருகெழு செலவின்,
நீர்இல் அத்தத்து ஆர்இடை, மடுத்த,
கொடுங்கோல் உமணர், பகடுதெழி தெள்விளி
நெடும்பெருங் குன்றத்து இமிழ்கொள இயம்பும்,
கடுங்கதிர் திருகிய வேய்பயில் பிறங்கல்,
15
பெருங்களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து
அருஞ்சுரக் கவலைய அதர்படு மருங்கின்,
நீள்அரை இலவத்து ஊழ்கழி பல்மலர்,
விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்
நெய்உமிழ் சுடரின் கால்பொரச் சில்கி,
20
வைகுறு மீனின் தோன்றும்
மைபடு மாமலை விலங்கிய சுரனே!
22
18 நீர்நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,
பூமலர் கஞலிய கடுவரற் கான்யாற்று,
கராஅம் துஞ்சும் கல்உயர் மறிசுழி,
மராஅ யானை மதம்தப ஒற்றி,
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்-
5
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து,
நாம அருந்துறைப் பேர்தந்து, யாமத்து
ஈங்கும் வருபவோ?- ஓங்கல் வெற்ப!-
ஒருநாள் விழுமம் உறினும், வழிநாள்,
வாழ்குவள் அல்லள், என் தோழி; யாவதும்
10
ஊறுஇல் வழிகளும் பயில வழங்குநர்
நீடுஇன்று ஆக இழுக்குவர், அதனால்,
உலமரல் வருத்தம் உறுதும், எம் படப்பைக்
கொடுந்தேன் இழைத்த கோடுஉயர் நெடுவரை,
பழம்தூங்கு நளிப்பிற் காந்தள்அம் பொதும்பில்,
15
பகல்நீ வரினும் புணர்குவை - அகல்மலை
வாங்குஅமைக் கண்இடை கடுப்ப, யாய்
ஓம்பினள் எடுத்த, தடமென் தோளே.
18
19 அன்றுஅவண் ஒழிந்தன்றும் இலையே; வந்துநனி
வருந்தினை- வாழி, என் நெஞ்சே!- பருந்து இருந்து
உயாவிளி பயிற்றும், யாஉயர் நனந்தலை,
உருள்துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம்,
5
எம்மொடு இறத்தலும் செல்லாய்; பின்நின்று,
ஒழியச் சூழ்ந்தனை ஆயின், தவிராது,
செல்இனி; சிறக்க நின் உள்ளம்! வல்லே
மறவல் ஓம்புமதி; எம்மே - நறவின்
சேயிதழ் அனைய ஆகிக், குவளை
10
மாஇதழ் புரையும் மலிர்கொள் ஈர்இமை,
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,
பழங்கண் கொண்ட, கதழ்ந்துவீழ், அவிர்அறல்
வெய்ய உகுதர, வெரீஇப், பையென,
சில்வளை சொரிந்த மெல்இறை முன்கை
15
பூவீழ் கொடியின் புல்லெனப் போகி;
அடர்செய் ஆய்அகல் சுடர் துணை ஆக,
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்குசாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!
19
20 பெருநீர் அழுவத்து எந்தை தந்த
கொழுமீன் உணங்கற் படுபுள் ஓப்பி,
எக்கர்ப் புன்னை இன்நிழல் அசைஇ
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,
ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித்
5
தாழை வீழ்கயிற்று ஊசல் தூங்கிக்,
கொண்டல் இடுமணல் குரவை முனையின்
வெண்தலைப் புணரி ஆயமொடு ஆடி,
மணிப்பூம் பைந்தழை தைஇ, அணித்தகப்
பல்பூங் கானல் அல்கினம் வருதல்
10
கவ்வை நல்அணங்கு உற்ற, இவ்வூர்,
கொடிதுஅறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை
கடிகொண் டனளே- தோழி:- பெருந்துறை,
எல்லையும் இரவும் என்னாது கல்லென
வலவன் ஆய்ந்த வண்பரி,
நிலவு மணல் கொட்கும்ஓர் தேர் உண்டு எனவே!
16
21 'மனைஇள நொச்சி மௌவல் வால்முகைத்
துணை நிரைத்தன்ன; மாவீழ் வெண்பல்,
அவ்வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ்மென் கூந்தல், தடமென் பணைத்தோள்
மடந்தை மாண்நலம் புலம்பச், சேய்நாட்டுச்
5
செல்லல் என்று யான் சொல்லவும், ஒல்லாய்
வினைநயந்து அமைந்தனை ஆயினை ; மனைநகப்
பல்வேறு வெறுக்கை தருகம்- வல்லே,
எழுஇனி, வாழி என் நெஞ்சே!- புரி இணர்
மெல்அவிழ் அம்சினை புலம்ப; வல்லோன்
10
கோடுஅறை கொம்பின் வீஉகத் தீண்டி
மராஅம் அலைத்த மணவாய்த் தென்றல்,
சுரம்செல் மள்ளர் சுரியல் தூற்றும்,
என்றூழ் நின்ற புன்தலை வைப்பில்
பருந்து இளைப்படூஉம் பாறுதலை ஓமை
15
இருங்கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட
மென்புனிற்று அம்பிணவு பசித்தெனப், பைங்கட்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க,
இரியற் பிணவல் தீண்டலில், பரீஇச்
செங்காய் உதிர்த்த பைங்குலை ஈந்தின்
20
பரல்மண் சுவல முரண்நிலம் உடைத்த
வல்வாய்க் கணிச்சி, கூழார், கோவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்,
வெண்கோடு நயந்த அன்பில் கானவர்
இகழ்ந்தியங்கு இயவின் அகழ்ந்தகுழி செத்து,
25
இருங்களிற்று இனநிரை தூர்க்கும்
பெருங்கல் அத்தம் விலங்கிய காடே .
27
22 அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்
கணம்கொள் அருவிக் கான்கெழு நாடன்
மணம்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல்
இதுஎன அறியா மறுவரற் பொழுதில்
'படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
5
நெடுவேட் பேண தணிகுவள் இவள்' என,
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற,
களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி,
வளநகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,
10
முருகுஆற்றுப் படுத்த உருகெழு நடுநாள்,
ஆரம் நாற, அருவிடர்த் ததைந்த
சாரல் பல்பூ வண்டுபடச் சூடி,
களிற்று - இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப்புலி போல,
15
நல்மனை, நெடுநகர்க் காவலர் அறியாமை
தன்நசை உள்ளத்து நம்நசை வாய்ப்ப,
இன்உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து,
நக்கனென் அல்லெனோ யானே - எய்த்த
நோய்தணி காதலர் வர, ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?
21
23 மண்கண் குளிர்ப்ப வீசி தண்பெயல்,
பாடு உலந்தன்றே, பறைக்குரல் எழிலி;
புதல்மிசைத் தளவின் இதல்முட் செந்நனை
நெருங்குகுலைப் பிடவமொடு ஒருங்குபிணி அவிழக்
காடே கம்மென் றன்றே; அவல,
5
கோடு உடைந்தன்ன கோடற் பைம்பயிர்,
பதவின் பாவை, முனைஇ, மதவுநடை
அண்ணல்இரலை அமர்பிணை தழீஇத்,
தண்அறல் பருகித் தாழ்ந்துபட் டனவே;
அனையகொல் - வாழி, தோழி!- மனைய
10
தாழ்வின் நொச்சி. சூழ்வன மலரும்
மௌவல். மாச்சினை காட்டி,
அவ்அளவு என்றார், ஆண்டுச்செய் பொருளே! .
13
24 வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளைகளைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
தலைபிணி அவிழா, சுரிமுகப் பகன்றை
சிதரல்அம் துவலை தூவலின், மலரும்
தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்,
5
வயங்குகதிர் கரந்த வாடை வைகறை,
விசும்பு உரிவதுபோல், வியல்இடத்து ஒழுகி,
மங்குல் மாமழை, தென்புலம் படரும்
பனிஇருங் கங்குலும் தமியள் நீந்தி,
தம்ஊ ரோளே, நன்னுதல்; யாமே
10
கடிமதில் கதவம் பாய்தலின், தொடிபிளந்து
நுதிமுகம் மழுகிய மண்ணை வெண்கோட்டுச்,
சிறுகண் யானை நெடுநா ஒண் மணி,
கழிப்பிணிக் கறைத்தோல் பொழிகணை உதைப்பு,
தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து, .
15
கழித்துஉறை செறியா வாளுடை எறுழ்த்தோள்,
இரவு துயில் மடிந்த தானை,
உரவுச்சின வேந்தன் பாசறை யேமே!
18
25 "நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும்புனல் சாஅய,
அவிர்அறல் கொண்ட விரவுமணல் அகன்துறைத்
தண்கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப்
பைந்தாது அணிந்த போதுமலி எக்கர்,
வதுவை நாற்றம் புதுவது கஞல,
5
மாநனை கொழுதிய மணிநிற இருங்குயில்
படுநா விளியா னடுநின்று, அல்கலும்,
உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ,
இனச்சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்
சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர்
10
பவளச் செப்பில் பொன்சொரிந் தன்ன,
இகழுநர் இகழா இளநாள் அமையம்
செய்தோர் மன்ற குறி" என, நீநின்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப
வாரா மையின் புலர்ந்த நெஞ்சமொடு,
15
நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!" என,
மெல்லிய இனிய கூறி, வல்லே
வருவர் வாழி - தோழி - பொருநர்
செல்சமம் கடந்த வில்கெழு தடக்கைப்
பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன்
20
இன்இசை இயத்தின் கறங்கும்
கல்மிசை அருவிய காடு இறந்தோரோ!
22
26 கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற,
மீன்முள் அன்ன, வெண்கால் மாமலர்
பொய்தல் மகளிர் விழவுஅணி கூட்டும்
அவ்வயல் தண்ணிய வளம்கேழ் ஊரனைப்
புலத்தல் கூடுமோ - தோழி! - அல்கல்
5
பெருங் கதவு பொருத யானை மருப்பின்
இரும்புசெய் தொடியின் ஏர ஆகி,
'மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி,
'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம்மற்று
10
இவை பாராட்டிய பருவமும் உளவே ; இனியே
புதல்வற் றடுத்த பாலொடு தடஇத்
திதலை அணிந்த தேம்கொள் மென்முலை
நறுஞ் சாந்து அணிந்த கேழ்கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம்வேண் டினமே
15
தீம்பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக்
கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி, மதவுநடைச்
செவிலி கைஎன் புதல்வனை நோக்கி,
'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் ; இஃதோ
செல்வற்கு ஒத்தனம் யாம்' என, மெல்லஎன்
20
மகன் வயின் பெயர்தந் தேனே; அதுகண்டு
'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய்
சிறுபுறம் கவையின னாக, உறுபெயல்
தண்துளிக்கு ஏற்ற பலஉழு செஞ்செய்
மண்போல் நெகிழ்ந்து, அவன் கலுழ்ந்தே .
நெஞ்சுஅறை போகிய அறிவி னேற்கே?
26
27 "கொடுவரி இரும்புலி தயங்க, நெடுவரை
ஆடுகழை இருவெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார், நாம்அழ,
நின்றதுஇல் பொருட்பிணிச் சென்றுஇவண் தருமார்,
செல்ப" என்ப, என்போய்! நல்ல
5
மடவை மன்ற நீயே; வடவயின்
வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை,
மறப்போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கைஅம் பெருந்துறை முத்தின் அன்ன
நகைப்பொலிந்து இலங்கும் எயிறுகெழு துவர்வாய்
10
தகைப்பத் தங்கலர் ஆயினும், இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே - தேம்படத்
தெள்நீர்க்கு ஏற்ற திரள்காற் குவளைப்
பெருந்தகை சிதைத்தும், அமையா பருந்துபட
வேந்துஅமர்க் கடந்த வென்றி நல்வேல்
15
குருதியொடு துயல்வந் தன்னநின்
அரிவேய் உண்கண் அமர்த்த நோக்கே?
17
28 மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும், உரைப்பல் - தோழி!
கொய்யா முன்னும், குரல்வார்பு, தினையே
அருவி ஆன்ற பைங்கால் தோறும்
இருவி தோன்றின பலவே; நீயே,
5
முருகு முரண்கொள்ளும் தேம்பாய் கண்ணி,
பரியல் நாயொடு பன்மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழநின்
பூக்கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து
கிள்ளைத் தெள்விளி இடைஇடை பயிற்றி
10
ஆங்காங்கு ஒழுகாய்ஆயின், அன்னை,
'சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள்' எனப்,
பிறர்த் தந்து நிறுக்குவள் ஆயின்,
உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே!
14
29 "தொடங்கு வினை தவிர, அசைவில் நோன்தாள்,
கிடந்துஉயிர் மறுகுவது ஆயினும், இடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலியினும் சிறந்த
தாழ்வுஇல் உள்ளம் தலைத்தலைச் சிறப்பப்
செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று
5
இருவேறு ஆகிய தெரிதகு வனப்பின்
மாவின் நறுவடி போலக், காண்தொறும்
மேவல் தண்டா மகிழ்நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்
வாழலென் யான்" எனத் தேற்றிப், "பல்மாண்
10
தாழக் கூறிய தகைசால் நன்மொழி
மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்தநின்
எயிறுகெழு துவர்வாய் இன்நகை அழுங்க
வினவல் ஆனாப் புனையிழை!- கேள்இனி-
வெம்மை தண்டா எரிஉகு பறந்தலை,
15
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர்மருங்கு அறியாது, தேர்மருங்கு ஓடி,
அறுநீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை,
எள்ளல் நோனாப் பொருள்தரல் விருப்பொடு
20
நாணுத் தளைஆக வைகி, மாண்வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
மடம்கெழு நெஞ்சம் நின் உழை யதுவே!
23
30 நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை,
கடல்பாடு அழிய, இனமீன் முகந்து,
துணைபுணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி
உப்புஒய் உமணர் அருந்துறை போக்கும்
5
ஒழுகை நோன்பகடு ஒப்பக் குழீஇ
அயிர்திணி அடைகரை ஒலிப்ப வாங்கிப்,
பெருங்களம் தொகுத்த உழவர் போல,
இரந்தோர் வறுங்கலம் மல்க வீசி,
பாடுபல அமைத்துக் கொள்ளை சாற்றிக்
10
கோடுஉயர் திணிமணல் துஞ்சும் துறைவ!
பெருமை என்பது கெடுமோ - ஒருநாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண்நறுங் கானல் வந்து "நும்
வண்ணம் எவனோ?" என்றனிர் செலினே?
15
31 நெருப்புஎனச் சிவந்த உருப்புஅவிர் மண்டிலம்
புலங்கடை மடங்க தெறுதலின், ஞொள்கி,
"நிலம்புடை பெயர்வது அன்றுகொல், இன்று?" என
மன்உயிர் மடிந்த மழைமாறு அமையத்து,
இலைஇல ஓங்கிய நிலைஉயர் யாஅத்து
5
மேற்கவட்டு இருந்த பார்ப்பினங் கட்குக்
கல்லுடைக் குறும்பின் வயவர் வில்இட,
நிணவரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,
கணவிர மாலை அடூஉக் கழிந்தன்ன
புண்உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்
10
கண்உமிழ் கழுகின் கானம் நீந்திச்,
'சென்றார்' என்பு இலர் -தோழி!- வென்றியொடு
வில்இலைத்து உண்ணும் வல்ஆண் வாழ்க்கைத்
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே.
15
32 நெருநல் எல்லை ஏனல் தோன்றிச்
திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து,
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றிச்,
சிறுதினைப் படுகிளி கடீஇயர், பன்மாண்
5
குளிர்கொள் தட்டை மதன்இல புடையாச்
'சூரர மகளிரின் நின்ற நீமற்று
யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச்
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
இகுபெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர்உற்ற என்
10
உள்அவன் அறிதல் அஞ்சி, உள்இல்
கடிய கூடு, கைபிணி விடாஅ
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற
என்உரத் தகைமையின் பெயர்த்து, பிறிதுஎன்வயின்
சொல்ல வல்லிற்றும் இலனே; அல்லாந்து,
51
இனம்தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை- தோழி! நாம் சென்மோ,
சாய்இறைப் பணைத்தோட் கிழமை தனக்கே
மாசு இன் றாதலும் அறியான், ஏசற்று,
என்குறைப் புறனிலை முயலும்
அங்க ணாளனை நகுகம், யாமே!
21
33 வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி,
மனைமாண் கற்பின் வாணுதல் ஒழியக்,
கவைமுறி இழந்த செந்நிலை யாஅத்து
ஒன்றுஓங்கு உயர்சினை இருந்த வன்பறை,
வீளைப் பருந்தின் கோள்வல் சேவல்
5
வளைவாய்ப் பேடை வருதிறம் பயிரும்
இளிதேர் தீங்குரல் இசைக்கும் அத்தம்
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவண்
மலர்பாடு ஆன்ற, மைஎழில், மழைக்கண்
தெளியா நோக்கம் உள்ளினை, உளிவாய்
10
வெம்பரல் அதர குன்றுபல நீந்தி,
யாமே எமியம்ஆக, நீயே
ஒழியச் சூழ்ந்தனை ஆயின் - முனாஅது
வெல்போர் வானவன் கொல்லி மீமிசை,
நுணங்குஅமை புரையும் வணங்குஇறைப் பணைத் தோள்,
15
வரிஅணி அல்குல், வால்எயிற் றோள்வயிற்
பிரியாய் ஆயின் நன்றுமற் றில்ல.
அன்றுநம் அறியாய் ஆயினும், இன்றுநம்
செய்வினை ஆற்றுற விலங்கின்
எய்துவை அல்லையோ, பிறர்நகு பொருளோ?
20
34 சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல்
கண்ணியின் மலரும் தண்நறும் புறவில்,
தொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன
இருதிரி மருப்பின் அண்ணல் இரலை
செறிஇலைப் பதவின் செங்கோல் மென்குரல்
5
மறிஆடு மருங்கின் மடப்பிணை அருத்தித்,
தெள்அறல் தழீஇய வார்மணல் அடைகரை,
மெல்கிடு கவுள துஞ்சுபுறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுறச்;
செல்க, தேரே - நல்வலம் பெறுந!-
10
பசைகொல் மெல்விரல், பெருந்தோள், புலைத்தி
துறைவிட் டன்ன தூமயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பிற்,
செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி,
'இன்றுவரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து' என,
15
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென
மழலை இன்சொல் பயிற்றும்
நாணுடை அரிவை மாண்நலம் பெறவே!
18
35 ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,
வான்தோய் இஞ்சி நன்னகர் புலம்பத்-
தனிமணி இரட்டும் தாளுடைக் கடிகை
நுழைநுதி நெடுவேல், குறும்படை மழவர்
முனைஆத் தந்து முரம்பின் வீழ்த்த
5
வில்ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்;
நடுகல் பீலி சூட்டித்; துடிப்படுத்துத்,
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்குஅருங் கவலைய புலவுநாறு அருஞ்சுரம்
10
துணிந்து பிறள் ஆயினள் ஆயினும், அணிந்து அணிந்து,
ஆர்வ நெஞ்சமொடு ஆய்நலன் அளைஇத், தன்
மார்பு துணையாகத் துயிற்றுக தில்ல-
துஞ்சா முழவிற் கோவற் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்துறை,
15
பெண்ணையம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
நெறிஇருங் கதுப்பின்என் பேதைக்கு,
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே!
18
36 பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக்
கொடுவாய் இரும்பின் கோள்இரை துற்றி,
ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து,
அரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித்
5
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
கயிறுஇடு கதச்சேப் போல மதம்மிக்கு,
நாள், கயம் உழக்கும் பூக்கேழ் ஊர
வருபுனல் வையை வார்மணல் அகன்துறைத்
திருமருது ஓங்கிய விரிமலர்க் காவில்,
10
நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப அலரே,
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத்து அகன்தலை சிவப்பச்,
சேரல், செம்பியன், சினம்கெழு திதியன்,
15
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி,
நார்அரி நறவின் எருமை யூரன்,
தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநன், என்று
எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல்
20
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரைசெலக்,
கொன்று களம்வேட்ட ஞான்றை,
வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!
23
37 மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்
கங்குல் ஓதைக் கலிமகிழ் உழவர்
பொங்கழி முகந்த தாஇல் நுண்துகள்,
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப,
வைகுபுலர் விடியல் வைபெயர்த்து ஆட்டித்
5
தொழிற் செருக்கு அனந்தர்வீட, எழில்தகை
வளியொடு சினைஇய வண்தளிர் மாஅத்துக்
கிளிபோல் காய கிளைத்துணர் வடித்துப்
புளிப்பதன் அமைந்த புதுக்குட மலிர்நிறை
வெயில்வெரிந் நிறுத்த பயில்இதழ்ப் பசுங்குடைக்,
10
கயமண்டு பகட்டின் பருகிக், காண்வரக்
கொள்ளொடு பயறுபால் விரைஇ, வெள்ளிக்
கோல் வரைந்தன்ன வால்அவிழ் மிதவை
வாங்குகை தடுத்த பின்றை ஓங்கிய,
பருதிஅம் குப்பை சுற்றிப், பகல்செல,
15
மருத மரநிழல், எருதொடு வதியும்
காமர் வேனில்மன் இது,
மாண்நலம் நுகரும் துணைஉடை யோர்க்கே!
18
38 விரிஇணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்,
தெரிஇதழ்க் குவளைத் தேம்பாய் தாரன்,
அம்சிலை இடவதுஆக, வெஞ் செலற்
கணைவலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி;
வருதல் வாய்வது வான்தோய் வெற்பன்,
5
வந்தனன் ஆயின், அம்தளிர்ச் செயலைத்
தாழ்வுஇல் ஓங்குசினைத் தொடுத்த வீழ்கயிற்று
ஊசல் மாறிய மருங்கும், பாய்புஉடன்
ஆடா மையின் கலுழ்புஇல தேறி,
நீடுஇதழ் தலயிய கவின்பெறு நீலம்
10
கண்என மலர்ந்த சுனையும், வண்பறை
மடக்கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல்
குலவுப்பொறை யிறுத்த கோல்தலை மருவி
கொய்துஒழி புனமும், நோக்கி; நெடிதுநினைந்து,
பைதலன் பெயரலன் கொல்லோ? ஐ.தேங்கு -
15
'அவ்வெள் அருவிசூடிய உயர்வரைக்
கூஉம் கணஃது எம்ஊர், என
ஆங்குஅதை அறிவுறல் மறந்திசின், யானே,
18
39 'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்து,
உள்ளியும் அறிதிரோ, எம்?" என, யாழநின்
முள்எயிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க
நோய்முந் துறுத்து நொதுமல் மொழியல ; நின்
ஆய்நலம் மறப்பெனோ மற்றே? சேண்இகந்து
5
ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி ஒண்பொறி
படுஞெமல் புதையப் பொத்தி, நெடுநிலை
முளிபுன் மீமிசை வளிசுழற் றுறாஅக்
காடுகவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின்,
அதர்கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு
10
மதர்புலி வெரீஇய மையல் வேழத்து
இனம்தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு,
ஞான்று தோன்று அவிர்சுடர் மான்றால் பட்டெனக்,
கள்படர்ஓதி! நிற்படர்ந்து உள்ளி,
அருஞ்செலவு ஆற்றா ஆர்இடை, ஞெரேரெனப்
15
பரந்துபடு பாயல் நவ்வி பட்டென,
இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு,
நிலம்கிளை நினைவினை நின்ற நிற்கண்டு,
'இன்னகை! இனையம் ஆகவும், எம்வயின்
ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழநின்
20
கோடுஏந்து புருவமொடு குவவுநுதல் நீவி,
நறுங்கதுப்பு உளரிய நன்னர் அமையத்து,
வறுங்கை காட்டிய வாய்அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
போற்றாய் ஆகலின், புலத்தியால் எம்மே!
25
40 கானல், மாலைக் கழிப்பூக் கூம்ப,
நீல்நிறப் பெருங்கடல் பாடுஎழுந்து ஒலிப்ப
மீன்ஆர் குருகின் மென்பறைத் தொழுதி
குவைஇரும் புன்னைக் குடம்பை சேர,
அசைவண்டு ஆர்க்கும் அல்குறு காலைத்,
5
தாழை தளரத் தூக்கி, மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க்
காமர் நெஞ்சம் கையறுபு இனையத்
துயரம் செய்துநம் அருளார் ஆயினும்-
அறா அ லியரோ அவருடைக் கேண்மை!
10
அளிஇன் மையின் அவண்உறை முனைஇ,
வாரற்க தில்ல - தோழி! - கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை
செறிமடை வயிரின் பிளிற்றிப் பெண்ணை
15
அகமடல் சேக்கும் துறைவன்
இன்துயில் மார்பில் சென்றஎன் நெஞ்சே!
17
41 வைகுபுலர், விடியல், மைபுலம் பரப்பக்,
கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரிமருள் பூஞ்சினை இனச்சிதர் ஆர்ப்ப,
நெடுநெல் அடைச்சிய கழனிஏர் புகுத்து,
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, .
5
அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர்
ஓதைத் தெள்விளி புலந்தொறும் பரப்பக்
கோழிணர் எதிரிய மரத்த கவினிக்,
காடுஅணி கொண்ட காண்தகு பொழுதில்,
நாம்பிரி புலம்பின் நலம் செலச் சாஅய்
10
நம்பிரிபு அறியா நலமொடு சிறந்த
நல்தோள் நெகிழ, வருந்தினள் கொல்லோ-
மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர்
தாதுஇன் துவலை தளிர்வார்த் தன்ன
அம்கலுழ் மாமை கிளஇய,
நுண்பல் தித்தி, மாஅ யோளோ?
16
42 மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல்அரு நிலைஇய பெயல்ஏர் மணமுகைச்
செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்
தளிர்ஏர் மேனி, மாஅ யோயே!
நாடுவறம் கூர, நாஞ்சில துஞ்சக்
5
கோடை நீடிய பைதுஅறு காலைக்
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள்இல்
என்றூழ் வியன்குளம் நிறைய வீசிப்,
பெரும்பெயல் பொழிந்த ஏம வைகறை,
10
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந் தற்று - சேண்இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான்தோய் வெற்பன் வந்த மாறே!
14
43 கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை
சுடர்நிமிர் மின்னொடு வலன்ஏர்பு இரங்கி
என்றூழ் உழந்த புன்தலை மடப்பிடி
கைமாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
நிலனும் விசும்பும் நீர்இயைந்து ஒன்றி,
5
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது,
கதிர்மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
தளிமயங் கின்றே தண்குரல் எழிலி, யாமே
கொய்அகை முல்லை காலொடு மயங்கி,
மைஇருங் கானம் நாறும் நறுநுதல்,
10
பல்இருங் கூந்தல், மெல்இயல் மடந்தை
நல்எழில் ஆகம் சேர்ந்தனம், என்றும்
அளியரோ அளியர்தாமே - அளிஇன்று
ஏதில் பொருட்பிணிப் போகித், தம்
இன்துணைப் பிரியும் மடமை யோரே!
15
44 வந்துவினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
தம்திறை கொடுத்துத் தமர்ஆ யினரே;
முரண்செறிந் திருந்த தானை இரண்டும்
ஒன்றுஎன அறைந்தன பணையே; நின்தேர்
முன்இயங்கு ஊர்திப் பின்னிலை ஈயாது
5
ஊர்க, பாக! ஒருவினை, கழிய-
நன்னன், ஏற்றை, நறும்பூண் அத்தி,
துன்அருங் கடுந்திறல் கங்கன், கட்டி,
பொன்அணி வல்வில் புன்றுறை என்றுஆங்கு
அன்றுஅவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்,
10
பருந்துபடப் பண்ணிப், பழையன் பட்டெனக்,
கண்டது நோனானாகித் திண்தேர்க்
கணையன் அகப்படக் கழுமலம் தந்த
பிணையல்அம் கண்ணிப் பெரும்பூட் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர்,
15
பழம்பல் நெல்லின் பல்குடிப் பரவை,
பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளை,
தண்குட வாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன்துயில் பெறவே!
19
45 வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர்
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்பக்
கோடை நீடிய அகன்பெருங் குன்றத்து,
நீர்இல் ஆர்ஆற்று நிவப்பன களிறுஅட்டு
ஆள்இல் அத்தத்து உழுவை உகளும்
5
காடு இறந்தனரே, காதலர்; மாமை,
அரிநுண் பசலை பாஅய, பீரத்து
எழில்மலர் புரைதல் வேண்டும்,அலரே
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணி,
10
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன்இசை ஆர்ப்பினும் பெரிதே; யானே,
காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து
ஆதிமந்தி போலப் பேதுற்று
அலந்தனென் உழல்வென் கொல்வோ - பொலந்தார்,
15
கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல்,
வான வரம்பன் அடல்முனைக் கலங்கிய
உடைமதில் ஓர் அரண்போல
அஞ்சுவரு நோயொடு துஞ்சா தேனே!
19
46 சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
ஊர்மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
நீர்முதிர் பழனத்து மீன்உடன் இரிய,
அம்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை
5
வண்டூது பனிமலர் ஆரும் ஊர!
யாரை யோ? நிற் புலக்கேம், வாருற்று,
உறை இறந்து, ஒளிரும் தாழ்இருங் கூந்தல்,
பிறரும், ஒருத்தியை நம்மனைத் தந்து,
வதுவை அயர்ந்தனை என்ப; அஃது யாம்
10
கூறேம்; வாழியர், எந்தை! செறுநர்
களிறுடை அருஞ்சமம் ததைய நூறும்
ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னஎன்
ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க;
சென்றீ, பெரும! நிற் றகைக்குநர் யாரோ?
16
47 அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினைஇவண் முடித்தனம் ஆயின், வல்விரைந்து
எழுஇனி - வாழிய நெஞ்சே! - ஒலிதலை
அலங்குகழை நரலத் தாக்கி, விலங்குஎழுந்து,
கடுவளி உருத்திய கொடிவிடு கூர்எரி
5
விடர்முகை அடுக்கம் பாய்தலின், உடனியைந்து,
அமைக்கண் விடுநொடி கணக்கலை அகற்றும்
வெம்முனை அருஞ்சுரம் நீந்திக் கைம்மிக்கு
அகன்சுடர் கல்சேர்பு மறைய, மனைவயின்
ஒண்தொடி மகளிர் வெண்திரிக் கொளாஅலின்
10
குறுநடைப் புறவின் செங்காற் சேவல்
நெடுநிலை வியன்நகர் வீழ்துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை
"யாண்டு உளர்கொல்?" எனக், கலிழ்வோள் எய்தி,
இழைஅணி நெடுந்தேர்க் கைவண் செழியன்
15
மழைவிளை யாடும் வளம்கெழு சிறுமலைச்
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்
வேய்புரை பணைத்தோள், பாயும்
நோய்அசா வீட, முயங்குகம் பலவே!
15
48 "அன்னாய்! வாழி! வேண்டு அன்னை! நின்மகள்
பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
நனிபசந் தனள்" என வினவுதி; அதன்திறம்
யானும் தெற்றென உணரேன்; மேல்நாள்,
மலிபூஞ் சாரல், என்தோழி மாரோடு
5
ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி
"புலிபுலி!" என்னும் பூசல் தோன்ற-
ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆய்இதழ்
ஊசி போகிய சூழ்செய் மாலையன்,
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,
10
குயம்மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு
"யாதோ, மற்று அம் மாதிறம் படர்?" என
வினவிநிற் றந்தோனே. அவற் கண்டு,
எம்முள் எம்முள் மெய்மறைபு ஒடுங்கி
15
நாணி நின்றனெ மாகப், பேணி,
"ஐவகை வகுத்த கூந்தல் ஆய்நுதல்
மைஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
பொய்யும் உளவோ?" என்றனன் பையெனப்
பரிமுடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து,
20
நின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச்
சென்றோன் மன்ற அக் குன்றுகிழ வோனே!
பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்து,
அவன்மறை தேஎம்நோக்கி, "மற்றுஇவன்
மகனே, தோழி!" என்றனள்
அதன்அளவு உண்டுகோள், மதிவல் லோர்க்கே.
26
49 'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
முன்நாள் போலாள்; இறீஇயர், என்உயிர்' என,
கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த
கடுங்கட் கறவையின் சிறுபுறம் நோக்கி,
5
குறுக வந்து, குவவுநுதல் நீவி,
மெல்லெனத் தழீஇயினே னாக, என் மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
பல்கால் முயங்கினள் மன்னே! அன்னோ!
விறல்மிகு நெடுந்தகை பலபா ராட்டி,
10
வறன்நிழல் அசைஇ, வான்புலந்து வருந்திய
மடமான் அசாஇனம் திரங்குமரல் சுவைக்கும்
காடுஉடன் கழிதல் அறியின் - தந்தை
அல்குபதம் மிகுந்த கடியுடை வியன்நகர்,
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல,
15
கோதை ஆயமொடு ஓரை தழீஇத்
தோடுஅமை அரிச்சிலம்பு ஒலிப்ப, அவள்
ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே!
18
50 கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
நெடுநீர் இருங்கழிக் கடுமீன் கலிப்பினும்;
செவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்,
மாண்இழை நெடுந்தேர் பாணி நிற்பப்,
பகலும் நம்வயின் அகலா னாகிப்
5
பயின்றுவரும் மன்னே, பனிநீர்ச் சேர்ப்பன்,
இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி,
"வாராதோர் நமக்கு யாஅர்?" என்னாது,
மல்லன் மூதூர் மறையினை சென்று,
சொல்லின் எவனோ - பாண! 'எல்லி
10
மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில்
துணைஒன்று பிரியினும் துஞ்சா காண்' எனக்
கண்நிறை நீர்கொடு கரக்கும்
ஒண்நுதல் அரிவை "யான் என் செய்கோ?" எனவே!
14
51 ஆள்வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர்தெற,
நீள்எரி பரந்த நெடுந்தாள் யாத்து,
போழ்வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
முடைநசை இருக்கைப் பெடைமுகம் நோக்கி,
ஊன்பதித் தன்ன வெருவரு செஞ்செவி
5
எருவைச் சேவல் கரிபுசிறை தீய,
வேனில் நீடிய வேய்உயர் நனந்தலை,
நீஉழந்து எய்தும் செய்வினைப் பொருட்பிணி
பல்இதழ் மழைக்கண் மாஅ யோள்வயிற்
பிரியின் புணர்வது ஆயிற், பிரியாது.
10
ஏந்துமுலை முற்றம் வீங்கப், பல்வீழ்
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப,
நினை - மாண் நெஞ்சம்!- நீங்குதன் மறந்தே.
14
52 'வலந்த வள்ளி மரன்ஓங்கு சாரல்,
கிளர்ந்த வேங்கைச் சேண்நெடும் பொங்கர்ப்
பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின்
5
ஆகொள் வயப்புலி ஆகும் அஃது" எனத்தம்
மலைகெழு சீறூர் புலம்பக், கல்லெனச்
சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சுஅமர் வியன்மார்பு உடைத்துஎன அன்னைக்கு
அறிவிப் பேம்கொல்? அறியலெம் கொல்?' என
10
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபாற்
சேர்ந்தன்று - வாழி, தோழி!- 'யாக்கை
இன்உயிர் கழிவது ஆயினும், நின்மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காம நோய்' எனச் செய்யா தீமே!
15
53 அறியாய், வாழி, தோழி! இருள்அற
விசும்புடன் விளங்கும் விரைசெலல் திகிரிக்
கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய,
நெடுங்கான் முருங்கை வெண்பூத் தாஅய்,
நீர்அற வறந்த நிரம்பா நீள்இடை,
5
வள்எயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள்ஊன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரிஅரை புதைத்த புலம்புகொள் இயவின்,
விழுத்தொடை மறவர் வில்இட வீழ்ந்தோர்
10
எழுத்துடை நடுகல் இன்நிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை நீந்தி, என்றும்,
'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
பொருளே காதலர் காதல்;
'அருளே காதலர்' என்றி, நீயே.
16
54 விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம்பகை தணிந்தனன்; தீம்பெயற்
காரும் ஆர்கலி தலையின்று: தேரும்
ஓவத் தன்ன கோபச் செந்நிலம்,
வள்வாய் ஆழி உள்உறுபு உருளக்,
5
கடவுக காண்குவம் - பாக! மதவு நடைத்
தாம்புஅசை குழவி வீங்குசுரை மடியக்,
கனையலம் குரல் காற்பரி பயிற்றிப்,
படுமணி மிடற்ற பயநிரை ஆயம்
கொடுமடி உடையர் கோற்கைக் கோவலர்
10
கொன்றையம் குழலர் பின்றைத் தூங்க,
மனைமனைப் படரும் நனைநகு மாலைத்,
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்இலைப்
புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்
15
நீர்குடி சுவையின் தீவிய மிழற்றி,
'முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி,
வருகுவை ஆயின், தருகுவென் பால்' என,
விலங்கு அமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித்
20
திதலை அல்குல்எம் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே!
22
55 காய்ந்துசெலற் கனலி கல்பகத் தெறுதலின்,
ஈந்துகுருகு உருகும் என்றூழ் நீள்இடை,
உளிமுக வெம்பரல் அடிவருத் துறாலின்,
விளிமுறை அறியா வேய்கரி கானம்,
வயக்களிற்று அன்ன காளையொடு என்மகள்
5
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலனே! ஒழிந்துயாம்
ஊதுஉலைக் குருகின் உள்உயிர்த்து, அசைஇ,
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன், கனவ - ஒண்படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
10
பொருதுபுண் நாணிய சேர லாதன்
அழிகள மருங்கின் வான்வடக் கிருந்தென,
இன்னா இன்உரை கேட்ட சான்றோர்
அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
பெரும்பிறிது ஆகி யாங்குப், பிரிந்து இவண்
15
காதல் வேண்டி, எற் றுறந்து
போதல் செல்லாஎன் உயிரொடு புலந்தே!
17
56 நகை ஆகின்றே - தோழி! - நெருநல்-
மணிகண் டன்ன துணிகயம் துளங்க,
இரும்புஇயன் றன்ன கருங்கோட்டு எருமை,
ஆம்பல் மெல்லடை கிழியக், குவளைக்
கூம்புவிடு பன்மலர் மாந்திக், கரைய
5
காஞ்சி நுண்தாது ஈர்ம்புறத்து உறைப்ப,
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
தண்துறை ஊரன் திண்தார் அகலம்
வதுவை நாள்அணிப் புதுவோர்ப் புணரிய,
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
10
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ்இட்டு,
எம்மனைப் புகுதந் தோனே; அதுகண்டு
மெய்ம்மலி உவகை மறையினென், எதிர்சென்று,
'இம்மனை அன்று; அஃது உம்மனை' என்ற
என்னும் தன்னும் நோக்கி,
மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே.
16
57 சிறுபைந் தூவிச் செங்காற் பேடை
நெடுநீர் வானத்து, வாவுப்பறை நீந்தி
வெயில்அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது,
பெறுநாள் யாணர் உள்ளிப், பையாந்து,
புகல்ஏக் கற்ற புல்லென் உலவைக்
5
குறுங்கால் இற்றிப் புன்தலை நெடுவீழ்
இரும்பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொரப்,
பெருங்கை யானை நிவப்பின் தூங்கும்
குன்ற வைப்பின் என்றூழ் நீள்இடை
யாமே எமியம் ஆகத், தாமே
10
பசுநிலா விரிந்த பல்கதிர் மதியிற்
பெருநல் ஆய்கவின் ஒரீஇச், சிறுபீர்
வீஏர் வண்ணம் கொண்டன்று கொல்லோ-
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
முதுநீர் முன்றுறை முசிறி முற்றிக்
15
களிறுபட எருக்கிய கல்லென் ஞாட்பின்
அரும்புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து,
பானாட் கங்குலும் பகலும்
ஆனாது அழுவோள் - ஆய்சிறு நுதலே!
19
58 இன்இசை உருமொடு கனைதுளி தலைஇ,
மன்னுயிர் மடிந்த பானாட் கங்குல்
காடுதேர் வேட்டத்து விளிவுஇடம் பெறாஅது,
வரிஅதள் படுத்த சேக்கை, தெரிஇழைத்
தேன்நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை,
5
கூதிர் இல் செறியும் குன்ற நாட!
வனைந்து வரல் இளமுலை ஞெமுங்கப், பல்ஊழ்
விளங்குதொடி முன்கை வளைந்துபுறம் சுற்ற,
நின்மார்பு அடைதலின் இனிது ஆகின்றே-
நும்இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும்
10
தண்வரல் அசைஇய பண்புஇல் வாடை
பதம்பெறு கல்லாது இடம்பார்த்து நீடி-
மனைமரம் ஒசிய ஒற்றிப்
பலர்மடி கங்குல், நெடும்புற நிலையே!
14
59 தண்கயத்து அமன்ற வண்டுபடு துணைமலர்ப்
பெருந்தகை இழந்த கண்ணினை, பெரிதும்
வருந்தினை, வாழியர், நீயே!- வடாஅது
வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை,
அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
5
மரம்செல மிதித்த மாஅல் போலப்
புன்தலை மடப்பிடி உணீஇயர், அம்குழை,
நெடுநிலை யாஅம் ஒற்றி, நனைகவுள்
படிஞிமிறு கடியும் களிறே- தோழி!
சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்,
10
சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து,
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை,
இன்தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த
தண்நறுங் கழுநீர்ச் செண்இயற் சிறுபுறம்
தாம்பா ராட்டிய காலையும் உள்ளார்,
15
வீங்குஇறைப் பணைத்தோள் நெகிழச், சேய்ந்நாட்டு
அருஞ்செயற் பொருட்பிணி முன்னி, நப்
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே!
18
60 பெருங்கடற் பரப்பில் சேயிறா நடுங்கக்
கொடுந்தொழின் முகந்த செங்கோல் அவ்வலை
நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு
அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து,
5
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
திண்தேர்ப் பொறையன் தொண்டி அன்னஎம்
ஒண்தொடி ஞெமுக்கா தீமோ தெய்ய;
'ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை,
கோதை ஆயமொடு வண்டல் தைஇ,
10
ஓரை ஆடினும் உயங்கும்நின் ஒளி' எனக்
கொன்னும் சிவப்போள் காணின், வென்வேற்
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடுதரு நிதியினுஞ் செறிய
அருங்கடிப் படுக்குவள், அறன்இல் யாயே
15
61 'நோற்றோர் மன்ற தாமே கூற்றங்
கோளுற விளியார், பிறர்கொள விளிந்தோர்' எனத்
தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்
நாள்இழை நெடுஞ்சுவர் நோக்கி, நோய்உழந்து
ஆழல் வாழி, தோழி!- தாழாது,
5
உரும்எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்
வரிமாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ,
அருநிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு,
நறவுநொடை நெல்லின் நாள்மகிழ் அயரும்
10
கழல்புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்,
பழகுவர் ஆதலோ அரிதே - முனாஅது
முழவுஉறழ் திணிதோள் நெடுவேள் ஆவி
15
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்னநின்
ஒண்கேழ் வனமுலைப் பொலிந்த
நுண்பூண் ஆகம் பொருந்துதன் மறந்தே.
18
62 அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப்பொலிந்து இலங்கும் எயிறுகெழு துவர்வாய்,
ஆகத்து அரும்பிய முலையள், பணைத்தோள்,
மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன
மாஇதழ் மழைக்கண், மாஅ யோளொடு
5
பேயும் அறியா மறைஅமை புணர்ச்சி
பூசற் றுடியிற் புணர்வு பிரிந்து இசைப்பக்,
கரந்த கரப்பொடு நாஞ்செலற்கு, அருமையின்,
கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல,
10
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
ஆகம் அடைதந் தோளே - வென்வேற்
களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறுநீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
கடவுள் எழுதிய பாவையின்,
மடவது மாண்ட மாஅ யோளே!
16
63 கேளாய் வாழியோ மகளை! நின் தோழி,
திருநகர் வரைப்பகம் புலம்ப அவனொடு-
பெருமலை இறந்தது நோவேன்; நோவல்-
கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி,
முடங்குதாள் உதைத்த பொலங்கெழு பூழி
5
பெரும்புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்பக்
கருந்தாள் மிடற்ற செம்பூழ்ச் சேவல்
சிறுபுன் பெடையொடு குடையும் ஆங்கண்,
அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக்.
கன்று காணாது, புன்கண்ண, செவிசாய்த்து
10
மன்றுநிறை பைதல் கூறப், பல உடன்
கறவை தந்த கடுங்கான் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ,
முதுவாய்ப் பெண்டின் செதுகாற் குரம்பை,
மடமயில் அன்னஎன் நடைமெலி பேதை
15
தோள்துணை யாகத் துயிற்றத் துஞ்சாள்,
'வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண்
சேக்கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள் கொல்?, எனக் கலுழும்என் நெஞ்சே!
19
64 களையும் இடனாற் - பாக! உளை அணி
உலகுகடப் பன்ன புள்இயற் கலிமா
வகைஅமை வனப்பின் வள்புநீ தெரியத்
தளவுப்பிணி அவிழ்ந்த தண்பதப் பெருவழி,
ஐதுஇலங்கு அகல்இலை நெய்கனி நோன்காழ்
5
வென்வேல் இளையர் வீங்குபரி முடுகச்,
செலவுநாம் அயர்ந்தனம் ஆயிற், பெயல
கடுநீர் வரித்த செந்நில மருங்கின்,
விடுநெறி ஈர்மணல், வாரணம் சிதரப்,
பாம்புஉறை புற்றத்து ஈர்ம்புறங் குத்தி,
10
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
உடன்நிலை வேட்கையின் மடநாகு தழீஇ,
ஊர்வயிற் பெயரும் பொழுதிற், சேர்புஉடன்,
கன்றுபயிர் குரல, மன்றுநிறை புகுதரும்
ஆபூண் தெண்மணி ஐதுஇயம்பு இன்இசை
15
புலம்புகொள் மாலை கேட்டொறும்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே.
17
65 உன்னங் கொள்கையொடு உளம்கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்
ஈரம்சேரா இயல்பிற் பொய்ம் மொழிச்
சேரிஅம் பெண்டிர் சௌவையும் ஒழிகம்;
நாடுகண் அகற்றிய உதியஞ் சேரற்
5
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவஇனி - வாழி, தோழி! அவரே,
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்
செலவு அயர்ந்தனரால் இன்றே - மலைதொறும்
மால்கழை பிசைந்த கால்வாய் கூர்எரி,
10
மீன்கொள் பரதவர் கொடுந்திமில் நளிசுடர்,
வான்தோய் புணரி மிசைக்கண் டாங்கு,
மேவரத் தோன்றும் யாஅஉயர் நனந்தலை
உயவல் யானை வெரிநுச்சென் றன்ன
கல்ஊர்பு இழிதரும் புல்சாய் சிறுநெறிக்,
15
காடுமீக் கூறும் கோடுஏந்து ஒருத்தல்
ஆறுகடி கொள்ளும் அருஞ்சுரம், 'பணைத்தோள்,
நாறுஐங் கூந்தல், கொம்மை வரிமுலை,
நிரைஇதழ் உண்கண், மகளிர்க்கு
அரியவால்' என அழுங்கிய செலவே!
20
66 'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,
மறுமை உலகமும் மறுஇன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்' எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
5
வாயே ஆகுதல் வாய்த்தனம் - தோழி!
நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப், புதுவதின்
இயன்ற அணியன், இத்தெரு இறப்போன்
மாண்தொழில் மாமணி கறங்கக், கடை கழிந்து
10
காண்டல் விருப்பொடு தளர்புதளர்பு ஓடும்
பூங்கட் புதல்வனை நோக்கி, 'நெடுந்தேர்
தாங்குமதி, வலவ!' என்று இழிந்தனன், தாங்காது,
மணிபுரை செவ்வாய் மார்பகம் சிவணப்
புல்லிப் பெரும! செல்இனி, அகத்து' எனக்
15
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், 'தடுத்த
மாநிதிக் கிழவனும் போன்ம்' என, மகனொடு
தானே புகுதந் தோனே; யான் அது
படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, 'இவற்
கலக்கினன் போலும், இக்கொடியோன்' எனச்சென்று
20

அலைக்கும் கோலொடு குறுகத், தலைக்கொண்டு
இமிழ்கண் முழவின் இன்சீர் அவர்மனைப்
பயிர்வன போலவந்து இசைப்பவும், தவிரான்
கழங்குஆடு ஆயத்து அன்றுநம் அருளிய
பழங்கண் ணோட்டமும் நலிய,
அழுங்கினன் அல்லனோ, அயர்ந்த தன் மணனே!
26
67 யான்எவன் செய்கோ? தோழி! பொறிவரி
வானம் வாழ்த்தி பாடவும், அருளாது
உறைதுறந்து எழிலி நீங்கலிற், பறைபு உடன்,
மரம்புல் லென்ற முரம்புஉயர் நனந்தலை;
அரம்போழ் நுதிய வாளி அம்பின்
5
நிரம்பா நோக்கின்; நிரயம் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி,
நல்அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி யதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
10
வேல்ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
மொழிபெயர் தேஎம் தருமார், மன்னர்
கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன
உவல்இடி பதுக்கை ஆள்உகு பறந்தலை,
'உருஇல் பேஎய் ஊராத் தேரோடு
15
நிலம்படு மின்மினி போலப் பலஉடன்
இலங்கு பரல் இமைக்கும்' என்ப - நம்
நலம்துறந்து உறைநர் சென்ற ஆறே!
18
68 'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத்
தணஅயத்து அமன்ற கூதளம் குழைய,
இன்இசை அருவிப் பாடும் என்னதூஉம்
கேட்டியோ? வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை
ஊட்டி யன்ன ஒண்தளிர்ச் செயலை
5
ஓங்குசினைத் தொடுத்த ஊசல், பாம்புஎன,
முழுமுதல் துமிய உரும்எறிந் தன்றே;
பின்னும் கேட்டியோ?' எனவும், அஃது அறியாள்,
அன்னையும் கனைதுயில் மடிந்தனள்; அதன்தலை
மன்உயிர் மடிந்தன்றால் பொழுதே ; காதலர் .
10
வருவர் ஆயின், பருவம்இது' எனச்
சுடர்ந்து இலங்கு எல்வளை நெகிழ்ந்த நம்வயின்
படர்ந்த உள்ளம் பழுதுஅன் றாக,
வந்தனர் - வாழி, தோழி!- அந்தரத்து
இமிழ்பெயல் தலைஇய இனப்பல் கொண்மூத்
15
தவிர்வுஇல் வெள்ளம் தலைத்தலை சிறப்பக்
கன்றுகால் ஒய்யும் கடுஞ்சுழி நீத்தம்
புன்தலை மடப்பிடிப் பூசல் பலஉடன்
வெண்கோட்டு யானை விளிபடத் துழவும்
அகல்வாய்ப் பாந்தட் படாஅர்ப்
பகலும் அஞ்சும் பனிக்கடு சுரனே.
21
69 ஆய்நலம் தொலைந்த மேனியும், மாமலர்த்
தகை வனப்புஇழந்த கண்ணும், வகைஇல
வண்ணம் வாடிய வரியும் நோக்கி,
ஆழல் ஆன்றிசின் நீயே; உரிதினின்
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச்
5
செய்பொருள் திறவர் ஆகிப், புல்இலைப்
பராரை நெல்லி அம்புளித் திரள்காய்
கான மடமரைக் கணநிரை கவரும்
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர்
10
பொன்புனை திகிரி திரிதர குறைத்த
அறைஇறந்து அகன்றனர் ஆயினும், எனையதூஉம்
நீடலர் - வாழி, தோழி! - ஆடுஇயல்
மடமயில் ஒழித்த பீலிவார்ந்து, தம்
சிலைமாண் வல்வில் சுற்றிப், பலமாண்
15
அம்புடைக் கையர் அரண்பல நூறி,
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர்மணிப் பெரும்பூண் ஆஅய் கானத்துத்
தலைநாள் அலரின் நாறும்நின்
அலர்முலை ஆகத்து இன்துயில் மறந்தே.
20
70 கொடுந்திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென
இருபுலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப் பயம்பா ராட்டி,
கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
5
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்,
பலரும் ஆங்கு அறிந்தனர் மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றைப், புதுவது
பொன்வீ ஞ்஡ழலொடு புன்னை வரிக்கும்
கானல்அம் பெருந்துறைக் கவினி மாநீர்ப்
10
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவுஅணி மகளிர் தழைஅணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
15
பல்வீழ் ஆலம் போல,
ஒலிஅவிந் தன்றுஇவ், அழுங்கல் ஊரே.
17
71 நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்
பயன்இன் மையின் பற்றுவிட்டு, ஒரூஉம்
நயன்இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப்பூ நீத்துச், சினைப்பூப் படர,
மைஇல் மான்இனம் மருளப், பையென
5
வெந்துஆறு பொன்னின் அந்தி பூப்ப,
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
அகல்இரு வானம் அம்மஞ்சு ஈனப்,
பகல்ஆற்றுப் படுத்த பழங்கண் மாலை,
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக,
10
ஆர்அஞர் உறுநர் அருநிறம் சுட்டிச்
கூர்எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது,
எள்அற இயற்றிய அழல்காண் மண்டிலத்து
உள்ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
மதுகை மாய்தல் வேண்டும் - பெரிது அழிந்து,
15
இதுகொல் - வாழி, தோழி! என் உயிர்
விலங்குவெங் கடுவளி எடுப்பத்
துளங்குமரப் புள்ளின் துறக்கும் பொழுதே?
18
72 இருள்கிழிப் பதுபோல் மின்னி, வானம்
துளிதலைக் கொண்ட நளிபெயல் நடுநாள்,
மின்னி மொய்த்த முரவுவாய்ப் புற்றம்
பொன்எறி பிதிரிற் சுடர வாங்கிக்,
குரும்பி, கெண்டும் பெருங்கை ஏற்றை
5
இரும்புசெய் கொல்எனத் தோன்றும் ஆங்கண்,
ஆறே அருமர பினவே; யாறே
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய;
கழைமாய் நீத்தம் கல்பொருது இரங்க,
'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து,
10
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்,
ஈர்உயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய,
இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும்
15
வாள்நடந் தன்ன வழக்கு அருங் கவலை,
உள்ளுநர் உட்கும் கல்அடர்ச் சிறுநெறி,
அருள்புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின்
20
ஆனா அரும்படர் செய்த
யானே, தோழி, தவறுஉடை யேனே!
22
73 பின்னொடு முடித்த மண்ணா முச்சி
நெய்கனி வீழ்குழல் அகப்படத் தைஇ;
வெருகுஇருள் நோக்கி யன்ன கதிர் விடுபு
ஒருகாழ் முத்தம் இடைமுலை விளங்க,
அணங்குறு கற்பொடு மடம்கொளச் சாஅய்,
5
நின்நோய்த் தலையையும் அல்லை; தெறுவர
'என்ஆகுவள்கொல், அளியள் தான்?' என,
என்அழிபு இரங்கும் நின்னொடு யானும்
ஆறுஅன்று என்னா வேறுஅல் காட்சி
இருவேம் நம்படர் தீர வருவது
10
காணிய வம்மோ - காதல்அம் தோழி!
கொடிபிணங்கு அரில இருள்கொள் நாகம்
மடிபதம் பார்க்கும், வயமான் துப்பின்,
ஏனல்அம் சிறுதினைச் சேணோன் கையதைப்
பிடிக்கை அமைந்த கனல்வாய்க் கொள்ளி
15
விடுபொறிச் சுடரின் மின்னி அவர்
சென்ற தேஎத்து நின்றதால் மழையே.
17
74 வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து,
போர்வல் இளையர் தாள்வலம் வாழ்த்தத்,
தண்பெயல் பொழிந்த பைதுறு காலை,
குருதி உருவின் ஒண்செம் மூதாய்
பெருவழி மருங்கில் சிறுபல வரிப்பப்,
5
பைங்கொடி முல்லை மென்பதப் புதுவீ
வெண்களர் அரிமணல் நன்பல் தாஅய்,
வண்டுபோது அவிழ்க்கும் தண்கமழ் புறவில்,
கருங்கோட்டு இரலைக் காமர் மடப்பிணை
மருண்டமான் நோக்கம் காண்தொறும், 'நின் நினைந்து
10
"திண்தேர் வலவ! கடவு' எனக் கடைஇ,
இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என,
வன்புறை இன்சொல் நன்பல பயிற்றும்
நின்வலித்து அமைகுவென் மன்னோ - அல்கல்
புன்கண் மாலையொடு பொருந்திக், கொடுங்கோற்
15
கல்லாக் கோவலர் ஊதும்
வல்வாய் சிறுகுழல் வருத்தாக் காலே!
17
75 "அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர்
பொருள்" என வலித்த பொருள்அல் காட்சியின்
மைந்துமலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
எரிசினம் தவழ்ந்த இருங்கடற்று அடைமுதல்
கரிகுதிர் மரத்த கான வாழ்க்கை,
5
அடுபுலி முன்பின், தொடுகழல் மறவர்
தொன்றுஇயல் சிறுகுடி மன்றுநிழற் படுக்கும்
அண்ணல் நெடுவரை, ஆம்அறப் புலர்ந்த
கல்நெறிப் படர்குவர் ஆயின் - நல்நுதல்,
செயிர்தீர் கொள்கை, சில்மொழி துவர்வாய்,
10
அவிர்தொடிய முன்கை, ஆய்இழை, மகளிர்
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து,
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
சென்றுபடு விறற்கவின் உள்ளி, என்றும்
இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும்,
15
தருநரும் உளரோ, இவ் உலகத் தான்?, என-
மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன
அம்மா மேனி, ஐது அமை நுசுப்பின்;
பல்காசு நிரைத்த, கோடுஏந்து, அல்குல்;
மெல்இயல் குறுமகள்!- புலந்துபல கூறி
20
ஆனா நோலை ஆக, யானே
பிரியச் சூழ்தலும் உண்டோ ,
அரிதுபெறு சிறப்பின் நின்வயி னானே?"
23
76 மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத்,
தண்துறை ஊரன் எம்சேரி வந்தென
இன்கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு
நல்கலம் ஈயும் நாள்மகிழ் இருக்கை
அவைபுகு பொருநர் பறையின், ஆனாது,
5
கழறுப என்ப, அவன் பெண்டிர்; அந்தில்
கச்சினன், கழலினன், தேம்தார் மார்பினன்
வகைஅமைப் பொலிந்த, வனப்பு அமை தெரியல்,
சுரியல்அம் பொருநனைக் காண்டிரோ?' என,
ஆதி மந்தி பேதுற்று இனைய,
10
சிறைபறைந்து உறைஇச் செங்குணக்கு ஒழுகும்
அம்தண் காவிரி போல,
கொண்டுகை வலித்தல் சூழ்ந்திசின், யானே!
13
77 'நல்நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
துன்அருங் கானம் துன்னுதல் நன்று' எனப்
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
சூழ்ந்திசின் - வாழிய நெஞ்சு!- வெய்துற
இடிஉமிழ் வானம் நீங்கி, யாங்கணும்
5
குடிபதிப் பெயர்ந்த சுட்டுடை முதுபாழ்,
கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்,
பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்,
உயிர்திறம் பெயர, நல்அமர்க் கடந்த
தறுக ணாளர் குடர் தரீஇத் தெறுவச்,
10
செஞ்செவி எருவை, அஞ்சுவர இருக்கும்
கல்அதர்க் கவலை போகின், சீறூர்ப்
புல்அரை இத்திப் புகர்படு நீழல்
எல்வளி அலைக்கும், இருள்கூர் மாலை,
வானவன் மறவன், வணங்குவில் தடக்கை,
15
ஆனா நறவின் வண்மகிழ் பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்த்த
திருந்துஇலை எஃகம் போல,
அருந்துயர் தரும், இவள் பனிவார் கண்ணே!
19
78 'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி,
இனம்தலைத் தரூஉம் எறுழ்கிளர் முன்பின்,
வரிஞிமிறு ஆர்க்கும், வாய்புகு கடாஅத்துப்
பொறிநுதற் பொலிந்த வயக்களிற்று ஒருத்தல்
இரும்பிணர்த் தடக்கையில், ஏமுறத் தழுவ,
5
கடுஞ்சூல் மடப்பிடி நடுங்கும் சாரல்,
தேம்பிழி நறவின் குறவர் முன்றில்
முந்தூழ் ஆய்மலர் உதிரக், காந்தள்
நீடுஇதழ் நெடுந்துடுப்பு ஒசியத், தண்ணென
வாடை தூக்கும் வருபனி அற்சிரம்,
10
நம்இல் புலம்பின், நம் ஊர்த் தமியர்
என்ஆ குவர்கொல் அளியர் தாம்?' என
எம்விட்டு அகன்ற சின்னாள், சிறிதும்,
உள்ளியும் அறிதிரோ - ஓங்குமலை நாட!
உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்இசை
15
வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று
செழுஞ்செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு,
தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி,
யாண்டுபல கழிய, வேண்டுவயிற் பிழையாது,
ஆள்இடூஉக் கடந்து, வாள்அமர் உழக்கி,
20
ஏந்துகோட்டு யானை வேந்தர்ஓட்டிய
நெடும்பரிப் புரவிக் கைவண் பாரி
தீம்பெரும் பைஞ்சுனைப் பூத்த
தேம்கமழ் புதுமலர் நாறும் - இவள் நுதலோ?
24
79 தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர்
கனைபொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து
கல்லுறுத்து இயற்றிய வல்உயர்ப் படுவில்,
பார்உடை மருங்கின் ஊறல் மண்டிய
வன்புலம் துமியப் போகிக், கொங்கர்
5
படுமணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந்நிலக் குரூஉத் துகள்
அகல்இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப,
'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர
10
வருந்தினை - வாழி என் நெஞ்சே!- இருஞ்சிறை
வளைவாய்ப் பருந்தின் வான்கட் பேடை,
ஆடுதொறு கனையும் அவ்வாய்க் கடுந்துடிக்
கொடுவில் எயினர் கோட்சுரம் படர
நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீள்இடை,
15
கல்பிறங்கு அத்தம் போகி
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீயே!
17
80 கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
இருங்கழி இட்டுச்சுரம் நீந்தி, இரவின்
வந்தோய் மன்ற - தண்கடற் சேர்ப்ப !-
நினக்குஎவன் அரியமோ, யாமே? எந்தை
புணர்திரைப் பரப்பகம் துழைஇத் தந்த
5
பல்மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும்
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண்பன் மலரக் கவட்டுஇலை அடும்பின்
செங்கேழ் மென்கொடி ஆழி அறுப்ப
இனமணிப் புரவி நெடுந்தேர் கடைஇ,
10
மின்இலைப் பொலிந்த விளங்கிணர் அவிழ்பொன்
தண்நறும் பைந்தாது உறைக்கும்
புன்னைஅம் கானல், பகல்வந் தீமே!
13
81 நாள்உலா எழுந்த கோள்வல் உளியம்
ஓங்குசினை இருப்பைத் தீம்பழம் முனையின்,
புல்அளைப் புற்றின் பல்கிளைச் சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனைவாய் நெடுங்கோடு
அரும்புஊது குருகின், இடந்து, இரை தேரும்
5
மண்பக வறந்த ஆங்கண் கண்பொரக்
கதிர்தெறக் கவிழ்ந்த உலறுதலை நோன்சினை
நெறிஅயல் மராஅம் ஏறிப், புலம்புகொள
எறிபருந்து உயவும் என்றூழ் நீள்இடை
வெம்முனை அருஞ்சுரம் நீந்திச் - சிறந்த
10
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர்
ஒளிறுவேல் அழுவம் களிறுபடக் கடக்கும்
மாவண் கடலன் விளங்கில் அன்ன, எம்
மைஎழில் உண்கண் கலுழ-
ஐய! சேறிரோ, அகன்றுசெய் பொருட்கே?
13
82 ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை ஆக,
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்இசைத்
தோடுஅமை முழவின் துதைகுரல் ஆகக்
கணக்கலை இகுக்கும் கடுங்குரற் றூம்பொடு
5
மலைப்பூஞ் சாரல் வண்டுயாழ் ஆக
இன்பல் இமிழ்இசை கேட்டுக், கலிசிறந்து,
மந்தி நல்அவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத்து, இயலி ஆடுமயில்
நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன்!
10
உருவவல் விற்பற்றி, அம்புதெரிந்து,
செருச்செய் யானை செல்நெறி வினாஅய்ப்,
புலர்குரல் ஏனற் புழையுடை ஒருசிறை,
மலர்தார் மார்பன், நின்றோற் கண்டோ ர்
பலர்தில், வாழி - தோழி - அவருள்,
15
ஆர்இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர்யான் ஆகுவது எவன்கொல்,
நீர்வார் கண்ணொடு, நெகிழ்தோ ளேனே?
18
83 வலம்சுரி மராஅத்துச் சுரம்கமழ் புதுவீச்
சுரிஆர் உளைத்தலை பொலியச் சூடி,
கறைஅடி மடப்பிடி கானத்து அலறக்,
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலிசிறந்து,
கருங்கால் மராஅத்து கொழுங்கொம்பு பிளந்து,
5
பெரும்பொழி வெண்நார் அழுந்துபடப் பூட்டி,
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்,
நறவுநொடை நல்இல் பதவுமுதற் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன்தலை நல்நாட்டு வேங்கடம் கழியினும்
10
சேயர் என்னாது, அன்புமிகக் கடைஇ,
எய்தவந் தனவால் தாமே - நெய்தல்
கூம்புவிடு நிகர்மலர் அன்ன
ஏந்துஎழில் மழைக்கண்எம் காதலி குணனே!
14
84 மலைமிசைக் குலஇய உருகெழு திருவில்
பணைமுழங்கு எழிலி பௌவம் வாங்கித்
தாழ்பெயற் பெருநீர், வலன்ஏர்பு வளைஇ,
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
இருநிலம் கவினிய ஏமுறு காலை-
5
நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி,
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய,
நறுவீ முல்லை நாண்மலர் உதிரும்
புறவு அடைந் திருந்த அருமுனை இயவிற்
சீறூ ரோளே, ஒண்ணுதல்! - யாமே,
10
எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி,
அரிஞ்ர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு
கள்ஆர் வினைஞர் களந்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடிநுடங்கு ஆர்எயில்
அருந்திறை கொடுப்பவும் கொள்ளான், சினம்சிறந்து,
15
வினைவயின் பெயர்க்குந் தானைப்,
புனைதார், வேந்தன் பாசறை யேமே!
17
85 நன்னுதல் பசப்பவும், பெருந்தோள் நெகிழவும்
உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சாஅய்
இன்னம் ஆகவும், இங்குநத் துறந்தோர்
அறவர் அல்லர் அவர்' எனப் பலபுலந்து
ஆழல் - வாழி, தோழி!- 'சாரல்,
5
ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி,
கன்றுபசி களைஇய, பைங்கண் யானை
முற்றா மூங்கில் முளைதருபு, ஊட்டும்
வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை;
நல்நாள் பூத்த நாகுஇள வேங்கை
10
நறுவீ ஆடிய பொறிவரி மஞ்ஞை
நனைப்பசுங் குருந்தின் நாறுசினை இருந்து,
துணைப்பயிர்ந்து அகவும் துணைதரு தண்கார்,
வருதும், யாம்' எனத் தேற்றிய
பருவம் காண் அது; பாயின்றால் மழையே.
15
86 உழுந்துதலைப் பெய்த கொழுங்கனி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி,
மனைவிளக் குறுத்து, மாலை தொடரிக்,
கனைஇருள் அகன்ற கவின்பெறு காலைக்,
5
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென,
உச்சிக் குடத்தர், புத்துகன் மண்டையர்,
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்,
10
புதல்வற் பயந்த திதலை! அவ் வயிற்று
வால்இழை மகளிர் நால்வர் கூடிக்,
'கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக'- என
நீரொடு சொரிந்த ஈர்இதழ் அலரி
15
பல்இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்,
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து,
'பேர்இற் கிழத்தி ஆக' எனத் தமர்தர;
ஓர்இற் கூடிய உடன்புணர் கங்குல்,
20
கொடும்புறம் வளஇக், கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்த காலை, யாழநின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என.
25
இன்நகை இருக்கை, பின்யான் வினவலின்-
செஞ்சூட்டு ஒண்குழை வண்காது துயல்வர
அகமலி உவகையள் ஆகி, முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சி யோளே - மாவின்
மடம்கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்குஈர் ஓதி, மா அ யோளே.
31
87 தீந்தயிர் கடைந்த திரள்கால் மத்தம்
கன்றுவாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்
படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை,
நல்கூர் சீறூர் எல்லித் தங்கிக்,
குடுமி நெற்றி நெடுமரச் சேவல்
5
தலைக்குரல் விடியற் போகி, முனாஅது,
கடுங்கண் மறவர் கல்லெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடங்கட்பாணி,
அருஞ்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணெனக்,
குன்றுசேர் கவலை, இசைக்கும் அத்தம்,
10
நனிநீடு உழந்தனை மன்னே! அதனால்
உவஇனி - வாழிய, நெஞ்சே - மைஅற
வைகுசுடர் விளங்கும் வான்தோய் வியனகர்ச்
சுணங்குஅணி வனமுலை நலம்பா ராட்டித்,
தாழ்இருங் கூந்தல்நம் காதலி
நீள்அமை வனப்பின் தோளுமார் அணைந்தே!
16
88 முதைச்சுவற் கலித்த மூரிச் செந்தினை
ஓங்குவணர்ப் பெருங்குரல் உணீஇய, பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லி பாடுஓர்த்துக் குறுகும்
புருவைப் பன்றி வருதிறம் நோக்கி,
கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய
5
நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்து, நம்
நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன்
சென்றனன் கொல்லோ தானே - குன்றத்து
இரும்புலி தொலைத்த பெருங்கை யானைக்
கவுள்மலிபு இழிதரும் காமர் கடாஅம்
10
இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ்செத்து,
இருங்கல் விடர்அளை அசுணம் ஓர்க்கும்
காம்புஅமல் இறும்பில் பாம்புபடத் துவன்றிக்,
கொடுவிரல் உளியம் கெண்டும்
வடுஆழ் புற்றின வழக்குஅரு நெறியே?
15
89 தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின்,
உறுபெயல் வறந்த ஓடுதேர் நனந்தலை,
உருத்துஎழு குரல குடிஞைச் சேவல்,
புல்சாய் விடரகம் புலம்ப, வரைய
கல்லெறி இசையின் இரட்டும் ஆங்கண்,
5
சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து
ஊழுறு விளைநெற்று உதிரக், காழியர்
கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப்பு ஒழியக்,
களரி பரந்த கல்நெடு மருங்கின்,
விளர்ஊன் தின்ற வீங்குசிலை மறவர்
10
மைபடு திண்தோள் மலிர வாட்டிப்,
பொறைமலி கழுதை நெடுநிரை தழீஇய
திருந்துவாள் வயவர் அருந்தலை துமித்த
படுபுலாக் கமழும் ஞாட்பில், துடிஇகுத்து
அருங்கலம் தெறுத்த பெரும்புகல் வலத்தர்,
15
விலங்கெழு குறும்பில் கோள்முறை பகுக்கும்
கொல்லை இரும்புனம் நெடிய என்னாது,
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள் கொல்லோ தானே - தேம்பெய்து
அளவுறு தீம்பால் அலைப்பவும் உண்ணாள்,
20
இடுமணற் பந்தருள் இயலும்,
நெடுமென் பணைத்தோள், மாஅ யோளே?
22
90 மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
தளைஅவிழ் தாழைக் கானல்அம் பெருந்துறை
சில்செவித்து ஆகிய புணர்ச்சி அலர்எழ,
இல்வயிற் செறித்தமை அறியாய்; பன்னாள்
5
வருமுலை வருத்தா, அம்பகட்டு மார்பின்
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்வயின்,
'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?
அருந்திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது
பெருங்கடல் முழக்கிற்று ஆகி, யாணர்,
10
இரும்புஇடம் படுத்த வடுவுடை முகத்தர்,
கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
'உறும்' எனக் கொள்குநர் அல்லர்-
நறுநுதல் அரிவை பாசிலை விலையே!
14
91 விளங்குபகல் உதவிய பல்கதிர் ஞாயிறு
வளம்கெழு மாமலை பயம்கெடத் தெறுதலின்,
அருவி ஆன்ற பெருவரை மருங்கில்
சூர்ச்சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது,
பாசி தின்ற பைங்கண் யானை
5
ஓய்பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க,
வேய்கண் உடைந்த வெயில்அவிர் நனந்தலை
அரும்பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்,
பெரும்பேர் அன்பினர் - தோழி!- இருங்கேழ்
இரலை சேக்கும், பரல்உயர் பதுக்கைக்
10
கடுங்கண் மழவர் களவுஉழவு எழுந்த
நெடுங்கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
விசிபிணி முழவின் குட்டுவன் காப்பப்,
பசிஎன அறியாப் பணைபயில் இருக்கைத்,
தடமருப்பு எருமை தாமரை முனையின்,
15
முடமுதிர் பலவின் கொழுநிழல் வதியும்,
குடநாடு பெறினும், தவிரலர்-
மடமாண் நோக்கி! நின் மாண்நலம் மறந்தே!
18
92 நெடுமலை அடுக்கம் கண்கெட மின்னிப்,
படுமழை பொழிந்த பானாட் கங்குல்,
குஞ்சரம் நடுங்கத் தாக்கிக், கொடுவரிச்
செங்கண் இரும்புலி குழுமும் சாரல்
வாரல் - வாழியர், ஐய! நேர்இறை
5
நெடுமென் பணைத்தோள் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே; நாளை
மந்தியும் அறியா மரம்பயில் இறும்பின்
ஒண்செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்
தண்பல் அருவித் தாழ்நீர் ஒருசிறை,
10
உருமுச் சிவந்து எறிந்த உரன்அழி பாம்பின்
திருமணி விளக்கிற் பெறுகுவை-
இருள்மென் கூந்தல் ஏமுறு துயிலே!
13
93 கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்,
கேள்அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல்சிறந்து,
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
அறம்கெழு நல்அவை உறந்தை அன்ன
5
பெறல்அரு நல்கலம் எய்தி நாடும்
செயல்அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்
அரண்பல கடந்த, முரண்கொள் தானை,
வாடா வேம்பின், வழுதி கூடல்
நாள்அங் காடி நாறும் நறுநுதல்
10
நீள்இருங் கூந்தன் மாஅ யோளொடு
வரைகுயின் றன்ன வான்தோய் நெடுநகர்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
நிவந்த பள்ளி, நெடுஞ்சுடர் விளக்கத்து,
நலம்கேழ் ஆகம் பூண்வடுப் பொறிப்ப,
15
முயங்குகம் சென்மோ - நெஞ்சே! வரிநுதல்
வயம்திகழ்பு இழிதரும் வாய்புகு கடாஅத்து ,
மீளி மொய்ம்பொடு நிலன்எறியாக் குறுகி,
ஆள்கோள் பிழையா, அஞ்சுவரு தடக்கைக்,
கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை
20
திருமா வியனகர்க் கருவூர் முன்துறைத்
தெண்நீர் உயர்கரைக் குவைஇய
தன்ஆன் பொருநை மணலினும் பலவே!
23
94 தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவைஇலை முசுண்டை வெண்பூக் குழைய,
வான்எனப் பூத்த பானாட் கங்குல்,
மறித்துரூஉத் தொகுத்த பறிப்புற இடையன்
தண்கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ,
5
வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன்,
ஐதுபடு கொள்ளி அங்கை காயக்,
குறுநரி உளம்பும் கூர்இருள் நெடுவிளி
சிறுகட் பன்றிப் பெருநிரை கடிய,
முதைப்புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்
10
கருங்கோட்டு ஓசை யொடு ஒருங்குவந்து இசைக்கும்
வன்புலக் காட்டுநாட் டதுவே - அன்புகலந்து
ஆர்வம் சிறந்த சாயல்,
இரும்பல் கூந்தல், திருந்திழை ஊரே!
14
95 பைப்பயப் பசந்தன்று நுதலும்; சாஅய்,
ஐதுஆ கின்று, என் தளிர்புரை மேனியும்,
பலரும் அறியத் திகழ்தரும் அவலமும்;
உயிர்கொடு கழியின் அல்லதை; நினையின்
எவனோ?- வாழி, தோழி!- பொரிகாற்
5
பொகுட்டுஅரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற
ஆலிஒப்பின் தூம்புடைத் திரள்வீ,
ஆறுசெல் வம்பலர் நீள்இடை அழுங்க,
ஈனல் எண்கின் இருங்கிளை கவரும்
சுரம்பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்,
10
கௌவை மேவலர் ஆகி, 'இவ் ஊர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரைய அல்ல, என் மகட்கு' எனப் பரைஇ,
நம்உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர், யாம்என், இதற்படலே?
15
96 நறவுண் மண்டை நுடக்கலின் இறவுக்கலித்துப்,
பூட்டுஅறு வில்லிற் கூட்டுமுதல் தெறிக்கும்
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அரவாய் அன்ன அம்முள் நெடுங்கொடி
அருவி ஆம்பல் அகல்அடை துடக்கி,
5
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
விசைவாங்கு தோலின், வீஞ்குபு ஞெகிழும்
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!
'ஒண்தொடி ஆயத் துள்ளும்நீ நயந்து
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்'; அதுவே-
10
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்
அம்கலுழ் மாமை, அஃதை தந்தை,
அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்,
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
இருபெரு வேந்தரும் பொருதுகளத்து ஒழிய,
15
ஒளிறுவாள் நல்அமர்க் கடந்த ஞான்றை,
களிறுகவர் கம்பலை போல,
அலர்ஆ கின்றது, பலர்வாய்ப் பட்டே!
18
97 'கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை
வறன்உறல் அம்கோடு உதிர, வலம்கடந்து,
புலவுப்புலி துறந்த கலவுக்கழிக் கடுமுடை
இரவுக்குறும்பு அலற நூறி, நிரைபகுத்து,
இருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
5
கொலைவில் ஆடவர் போலப், பலவுடன்
பெருந்தலை எருவையொடு பருந்துவந்து இறுக்கும்
அருஞ்சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்,
இருங்கழை இறும்பின் ஆய்ந்துகொண்டு அறுத்த
நுணங்குகட் சிறுகோல் வணங்குஇறை மகளிரொடு
10
அகவுநர்ப் புரந்த அன்பின் கழல்தொடி,
நறவுமகிழ் இருக்கை, நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்னநின்
அலர்முலை ஆகம் புலம்பப் பல நினைந்து,
ஆழேல், என்றி - தோழி! யாழ என்
15
கண்பனி நிறுத்தல் எளிதோ - குரவுமலர்ந்து,
அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில்
அறல்அவிர் வார்மணல் அகல்யாற்று அடைகரைத்
துறைஅணி மருத தொகல்கொள ஓங்கிக்,
கலிழ்தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்து
20
இணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப்
புகைபுரை அம்மஞ்சு ஊர,
நுகர்குயில் அகவும் குரல்கேட் போர்க்கே?
23
98 பனிவரை நிவந்த பயம்கெழு கவாஅன்
துனிஇல் கொள்கையொடு அவர்நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னா ஆக,
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
சூர்உறை வெற்பன் மார்புஉறத் தணிதல்
5
அறிந்தனள் அல்லள், அன்னை; வார்கோல்
செறிந்துஇலங்கு எல்வளை நெகிழ்ந்தமை நோக்கிக்,
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப்
பொய்வல் பெண்டிர் பிரப்புஉளர்பு இரீஇ,
'முருகன் ஆர் அணங்கு' என்றலின், அது செத்து
10
ஓவத் தன்ன வினைபுனை நல்இல்
'பாவை அன்ன பலர்ஆய் மாண்கவின்
பண்டையின் சிறக்க, என் மகட்கு' எனப் பரைஇ,
கூடுகொள் இன்இயம் கறங்கக், களன் இழைத்து,
ஆடுஅணி அயர்ந்த அகன்பெரும் பந்தர்,
15
வெண்போழ் கடம்பொடு சூடி, இன்சீர்
ஐதுஅமை பாணி இரீஇக், கைபெயராச்,
செல்வன் பெரும்பெயர் ஏத்தி, வேலன்
வெறிஅயர் வியன்களம் பொற்ப வல்லோன்
பொறிஅமை பாவையிற் றூங்கல் வேண்டின்,
20
எ ன்ஆம் கொல்லோ?- தோழி!- மயங்கிய
மையற் பெண்டிற்க்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும், வாடிய மேனி
பண்டையிற் சிறவாது ஆயின், இம்மறை
அலர்ஆ காமையோ அரிதே, அஃதான்று,
25
அறிவர் உறுவிய அல்லல்கண் டருளி,
வெறிகமழ் நெடுவேள் நல்குவ னேயெனின்,
'செறிதொடி உற்ற செல்லலும் பிறிது' எனக்
கான்கெழு நாடன் கேட்பின்,
யான்உயிர் வாழ்தல் அதனினும் அரிதே!
30
99 வாள்வரி வயமான் கோள்உகிர் அன்ன
செம்முகை அவிழ்ந்த முள்முதிர் முருக்கின்
சிதரார் செம்மல் தா அய், மதர்எழில்
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
முகைபிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை
5
அதிரல் பரந்த அம்தண் பாதிரி
உதிர்வீ அம்சினை தாஅய், எதிர்வீ
மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
நன்றே, கானம்; நயவரும் அம்ம,
10
கண்டிசின வாழியோ - குறுமகள்! நுந்தை
அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பின்,
பிடிமிடை களிற்றின் தோன்றும்
குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தோ!
14
100 அரையுற்று அமைந்த ஆரம் நீவிப்,
புரையப் பூண்ட கோதை மார்பினை,
நல்லகம் வடுக்கொள முயங்கி, நீ வந்து,
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே!
பெருந்திரை முழக்கமொடு இயக்குஅவிந் திருந்த
5
கொண்டல் இரவின் இருங்கடன் மடுத்த
கொழுமீன் கொள்பவர் இருள்நீங்கு ஒண்சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை
ஆடுஇயல் யானை அணிமுகத்து அசைத்த
ஓடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும்
10
பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான்,
பரியுடை நற்றோர்ப் பெரியன், விரிஇணர்ப்
புன்னைஅம் கானற் புறந்தை முன்துறை
வம்ப நாரை இனன்ஒலித் தன்ன
அம்பல் வாய்த்த தெய்ய - தண்புலர்
15
வைகுறு விடியற் போகிய எருமை
நெய்தல்அம் புதுமலர் மாந்தும்
கைதைஅம் படப்பைஎம் அழுங்கல் ஊரே!
18
101 அம்ம வாழி, தோழி! 'இம்மை
நன்றுசெய் மருங்கில் தீதுஇல்' என்னும்
தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்?-
தகர்மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த
சுவல்மாய் பித்தைச் செங்கண் மழவர்
5
வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்
தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி,
நுரைதெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து,
அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்,
கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,
10
இனம்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு,
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போலப்,
பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு ஊரிய சுழன்றுவரு கோடைப்
புன்கான் முருங்கை ஊழ்கழி பன்மலர்,
15
தண்கார் ஆலியின், தாவன உதிரும்,
பனிபடு பன்மலை இறந்தோர்க்கு,
முனிதகு பண்புயாம் செய்தன்றோ இலமே!
18
102 உளைமான் துப்பின், ஓங்குதினைப் பெரும்புனத்துக்
கழுதில் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென,
உரைத்த சந்தின் ஊரல் இருங்கதுப்பு
ஐதுவரல் அசைவளி ஆற்றக், கைபெயரா
ஒலியல் வார்மயிர் உளரினள், கொடிச்சி
5
பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற்று, ஒய்யென
மறம்புகல் மழ களிறு உறங்கும் நாடன்;
ஆர மார்பின் வரிஞிமிறு ஆர்ப்பத்,
10
தாரன் கண்ணியன், எஃகுடை வலத்தன்,
காவலர் அறிதல் ஓம்பிப், பையென
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,
உயங்குபடர் அகலம் முயங்கித், தோள்மணந்து
இன்சொல் அளைஇப், பெயர்ந்தனன் - தோழி!-
15
இன்றுஎவன் கொல்லோ கண்டிகும் - மற்றுஅவன்
நல்கா மையின் அம்பல் ஆகி,
ஒருங்குவந்து உவக்கும் பண்பின்
இருஞ்சூழ் ஓதி ஒண்நுதற் பசப்பே!
19
103 நிழல்அறு நனந்தலை, எழில்ஏறு குறித்த
கதிர்த்த சென்னி நுணங்கு செந்நாவின்,
விதிர்த்த போலும் அம்நுண் பல்பொறிக்,
காமர் சேவல் ஏமம் சேப்ப;
முளிஅரில் புலம்பப் போகி, முனாஅது
5
முரம்பு அடைந் திருந்த மூரி மன்றத்து,
அதர்பார்த்து அல்கும் ஆகெழு சிறுகுடி
உறையுநர் போகிய ஓங்குநிலை வியன்மலை ;
இறைநிழல் ஒருசிறைப் புலம்புஅயா உயிர்க்கும்
வெம்முனை அருஞ்சுரம் நீந்தித், தம்வயின்
10
ஈண்டுவினை மருங்கின் மீண்டோ ர் மன்என,
நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக
நம்மொடு பசலை நோன்று, தம்மொடு
தானே சென்ற நலனும்
நல்கார் கொல்லோ, நாம் நயந்திசி னோரோ?
1 5
104 வேந்துவினை முடித்த காலைத், தேம்பாய்ந்து
இனவண்டு ஆர்க்கும் தண்நறும் புறவின்
வென்வேல் இளையர் இன்புற, வலவன்
வள்புவலித்து ஊரின் அல்லது, முள்உறின்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா
5
நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்
வாங்குசினை பொலிய ஏறிப்; புதல
பூங்கொடி அவரைப் பொய்அதள் அன்ன
உள்இல் வயிற்ற, வெள்ளை வெண்மறி,
மாழ்கி யன்ன தாழ்பெருஞ் செவிய,
10
புன்றலை சிறாரோடு உகளி, மன்றுழைக்
கவைஇலை ஆரின் அங்குழை கறிக்கும்
சீறூர் பலபிறக்கு ஒழிய, மாலை
இனிதுசெய் தனையால் - எந்தை! வாழிய!-
பனிவார் கண்ணள் பலபுலந்து உறையும்
15
ஆய்தொடி அரிவை கூந்தற்
போதுகுரல் அணிய வேய்தந் தோயே!
17
105 அகல்அறை மலர்ந்த அரும்புமுதிர் வேங்கை
ஒள்இலைத் தொடலை தைஇ, மெல்லென
நல்வரை நாடன் தற்பா ராட்ட
யாங்குவல் லுநள்கொல் தானே - தேம்பெய்து,
மணிசெய் மண்டைத் தீம்பால் ஏந்தி,
5
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்,
நிழற்கயத் தன்ன நீணகர் வரைப்பின்
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம்மருண்டு
பந்துபுடைப் பன்ன பாணிப் பல்லடிச்
சில்பரிக் குதிரை, பல்வேல் எழினி
10
கெடல்அருந் துப்பின் விடுதொழில் முடிமார்,
கனைஎரி நடந்த கல்காய் கானத்து
வினைவல் அம்பின் விழுத்தொடை மறவர்
தேம்பிழி நறுங்கள் மகிழின், முனைகடந்து
வீங்குமென் சுரைய ஏற்றினம் தரூஉம்
15
முகைதலை திறந்த வேனிற்
பகைதலை மணந்த பல்அதர்ச் செலவே?
17
106 எரிஅகைந் தன்ன தாமரைப் பழனத்துப்,
பொரிஅகைந் தன்ன பொங்குபல் சிறுமீன்,
வெறிகொள் பாசடை, உணீஇயர், பைப்பயப்
பறைதபு முதுசிரல் அசைபுவந்து இருக்கும்
துறைகேழ் ஊரன் பெண்டுதன், கொழுநனை
5
நம்மொடு புலக்கும் என்ப - நாம்அது
செய்யாம் ஆயினும் உய்யா மையின்,
செறிதொடி தெளிர்ப்ப வீசிச், சிறிதுஅவண்
உலமந்து வருகம் சென்மோ - தோழி!-
ஒளிறுவாட் டானைக் கொற்றச் செழியன்
10
வெளிறுஇல் கற்பின் மண்டுஅமர் அடுதொறும்
களிறுபெறு வல்சிப் பாணன் எறியும்
தண்ணுமை கண்ணின் அலைஇயர், தன் வயிறே!
13
107 நீசெலவு அயரக் கேட்டொறும், பலநினைந்து,
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த
என்அகத்து இடும்பை களைமார், நின்னொடு
கருங்கல் வியல்அறை கிடப்பி, வயிறுதின்று
இரும்புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்
5
நெறிசெல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
ஆன்நிலைப் பள்ளி அளைசெய்து அட்ட
வால்நிணம் உருக்கிய வாஅல் வெண்சோறு
புகர்அரைத் தேக்கின் அகல்இலை மாந்தும்
10
கல்லா நீள்மொழிக் கதநாய் வடுகர்
வல்லாண் அருமுனை நீந்தி, அல்லாந்து,
உகுமண்ஊறு அஞ்சும் ஒருகாற் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து,
ஒருதனித்து ஒழிந்த உரனுடை நோன்பகடு
15
அம்குழை இருப்பை அறைவாய் வான்புழல்
புல்உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
மரைகடிந்து ஊட்டும் வரையகச் சீறூர்
மாலை இன்துணை ஆகிக், காலைப்
பசுநனை நறுவீப் பரூஉப்பரல் உறைப்ப,
20
மணமனை கமழும் கானம்
துணைஈர் ஓதிஎன் தோழியும் வருமே!
22
108 புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு
ஒத்தன்று மன்னால்! எவன்கொல்? முத்தம்
வரைமுதற் சிதறிய வைபோல், யானைப்
புகர்முகம் பொருத புதுநீர் ஆலி
பளிங்குசொரி வதுபோற் பாறை வரிப்பக்,
5
கார்கதம் பட்ட கண்அகன் விசும்பின்
விடுபொறி ஞெகிழியிற் கொடிபட மின்னி,
படுமழை பொழிந்த பானாட் கங்குல்,
ஆர்உயிர்த் துப்பின் கோள்மா வழங்கும்
இருளிடைத் தமியன் வருதல் யாவதும்
10
அருளான் - வாழி தோழி!- அல்கல்
விரவுப்பொறி மஞ்ஞை வெரீஇ அரவின்
அணங்குடை அருந்தலை பைவிரிப் பவைபோற்,
காயா மென்சினை தோய நீடிப்
பல்துடுப்பு எடுத்த அலங்குகுலைக் காந்தள்
15
அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி
கைஆடு வட்டின் தோன்றும்
மைஆடு சென்னிய மலைகிழ வோனே!
18
109 பல்இதழ் மென்மலர் உண்கண், நல்யாழ்
நரம்புஇசைத் தன்ன இன்தீம் கிளவி,
நலம்நல்கு ஒருத்தி இருந்த ஊரே-
கோடுழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
காடுகால் யாத்த நீடுமரச் சோலை
5
விழைவெளில் ஆடும் கழைவளர் நனந்தலை;
வெண்நுனை அம்பின் விசைஇட வீழ்ந்தோர்
எண்ணுவரம்பு அறியா உவல்இடு பதுக்கைச்
சுரம்கெழு கவலை கோட்பாற் பட்டென
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்,
10
கைப்பொருள் இல்லை ஆயினும், மெய்க்கொண்டு
இன்உயிர் செகாஅர் விட்டுஅகல் தப்பற்குப்
பெருங்களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன்இல் வேந்தன் ஆளும்
வறன்உறு குன்றம் பலவிலங் கினவே.
15
110 அன்னை அறியினும் அறிக; அலர்வாய்
அம்மென் சேரி கேட்பினும் கேட்க;
பிறிதுஒன்று இன்மை அறியக் கூறிக்,
கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்,
கடுஞ்சூள் தருகுவன், நினக்கே; கானல்
5
தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும், சிறுசோறு குவைஇயும்
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது
இருந்தன மாக எய்த வந்து
'தடமென் பணைத்தோள் மடநல் லீரோ!
10
எல்லும் எல்லின்று; அசைவுமிக உடையேன்;
மெல்இலைப் பரப்பின் விருந்துஉண்டு, யானும்இக்
கல்லென் சிறுகுடித் தங்கின்மற்று எவனோ?'
எனமொழிந் தனனே ஒருவன்; அவற்கண்டு,
இறைஞ்சிய முகத்தேம் புறம்சேர்பு பொருந்தி,
15
'இவைநுமக்கு உரிய அல்ல; இழிந்த
கொழுமீன் வல்சி' என்றனம்; இழுமென
'நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ?' எனக் காலின் சிதையா,
நில்லாது பெயர்ந்த பல்லோர் ருள்ளும்
20
என்னே குறித்த நோக்கமொடு 'நன்னுதால்!
ஒழிகோ யான்?' என அழிதகக் கூறி,
யான் 'பெயர்க' என்ன நோக்கித் தான்தன்
நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி,
நின்றோன் போலும் இன்றும்என் கட்கே!
25
111 உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎச்சொல் நாணி
வருவர் - வாழி, தோழி!- அரச
யானை கொண்ட துகிற்கொடி போல,
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி
5
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர
மழைஎன மருண்ட மம்மர் பலஉடன்
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங்கை
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
அத்தக் கேழல் அட்ட நற்கோள்
10
செந்நாய் ஏற்றைக் கம்மென ஈர்ப்பக்,
குருதி ஆரும் எருவைச் செஞ்செவி,
மண்டுஅமர் அழுவத்து எல்லிக் கொண்ட
புண்தேர் விளக்கின், தோன்றும்
விண்தோய் பிறங்கல் மலைஇறந் தோரோ!
15
112 கூனல் எண்கின் குறுநடைத் தொழுதி
சிதலை செய்த செந்நிலைப் புற்றின்
மண்புனை நெடுங்கோடு உடைய வாங்கி,
இரைநசைப் பரிக்கும் அரைநாட் கங்குல்
ஈன்றுஅணி வயவுப்பிணப் பசித்தென மறப்புலி
5
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஅட்டுக் குழுமும்
பனிஇருஞ் சோலை எமியம் என்னாய்
தீங்குசெய் தனையே, ஈங்குவந் தோயே;
நாள்இடைப் படின், என் தோழி வாழாள்;
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை;
10
கழியக் காதலர் ஆயினும், சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
வரையின் எவனோ?- வான்தோய் வெற்ப!-
கணக்கலை இகுக்கும் கறிஇவர் சிலம்பின்
மணப்புஅருங் காமம் புணர்ந்தமை அறியார்,
15
தொன்றுஇயல் மரபின் மன்றல் அயரப்
பெண்கோள் ஒழுக்கம் கண்கொள் நோக்கி,
நொதுமல் விருந்தினம் போல, இவள்
புதுநாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே!
19
113 நன்றுஅல் காலையும் நட்பின் கோடார்,
சென்று வழிப்படூஉம் திரிபுஇல் சூழ்ச்சியிற்,
புன்தலை மடப்பிடி அகவுநர் பெருமகன்
அமர்வீசு வண்மகிழ் அஃதைப் போற்றிக்,
காப்புக் கைந்நிறுத்த பல்வேற் கோசர்
5
இளங்கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
வளம்கெழு நன்னாடு அன்னஎன் தோள்மணந்து,
அழுங்கன் மூதூர் அலர்எடுத்து அரற்ற,
நல்காது துறந்த காதலர், 'என்றும்
கல்பொரூஉ மெலியாப் பாடின் நோன்அடியன்
10
அல்கு வன்சுரைப் பெய்த வல்சியர்
இகந்தன ஆயினும், இடம்பார்த்துப் பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பிற்
குவைஇமில் விடைய வேற்றுஆ ஒய்யும்
கனைஇருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல்
15
விழவுஅயர்ந் தன்ன கொழும்பல் திற்றி
எழாஅப் பாணன் நன்னாட்டு உம்பர்,
நெறிசெல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
எறிபடை கழீஇய சேயரிச் சின்னீர்
அறுதுறை அயிர்மணற் படுகரைப் போகிச்,
20
சேயர்' என்றலின், சிறுமை உற்றஎன்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
அழாஅம் உறைதலும் உரியம் - பராரை
அலங்கல் அம்சினைக் குடம்பை புல்லெனப்
புலம்பெயர் மருங்கிற் புள்எழுந் தாங்கு,
25
மெய்இவண் ஒழியப் போகி, அவர்
செய்வினை மருங்கிற் செலீஇயர், என் உயிரே!
27
114 கேளாய், எல்ல! தோழி! வேலன்
வெறிஅயர் களத்துச் சிறுபல தாஅய
விரவுவீ உறைத்த ஈர்நறும் புறவின்,
உரவுக்கதிர் மழுங்கிய கல்சேர் ஞாயிறு,
அரவுநுங்கு மதியின், ஐயென மறையும்
5
சிறுபுன் மாலையும் உள்ளார், அவர்என
நம்புலந்து உறையும் எவ்வம், நீங்க
நூல்அறி வலவ! கடவுமதி, உவக்காண்
நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை,
யாமம் கொள்பவர் நாட்டிய நளிசுடர்
10
வானக மீனின் விளங்கித் தோன்றும்,
அருங்கடிக் காப்பின், அஞ்சுவரு மூதூர்த்
திருநகர் அடங்கிய மாசுஇல் கற்பின்,
அரிமதர் மழைக்கண், அமைபுரை பணைத்தோள்,
அணங்குசால், அரிவையைக் காண்குவம்-
பொலம்படைக் கலிமாப் பூண்ட தேரே!
16
115 அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
பழிஇலர் ஆயினும், பலர்புறங் கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர், வெஞ்சொல்
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
நுண்பூண் எருமை குடநாட் டன்னஎன்
5
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
நோய்இல ராக, நம் காதலர் - வாய்வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின்முன் பரித்துஇடூஉப் பழிச்சிய
வள்உயிர் வணர்மருப்பு அன்ன, ஒள்இணர்ச்
10
சுடர்ப்பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடைப்,
பிறைமருள் வான்கோட்டு அண்ணல் யானை,
சினம்மிகு முன்பின், வாமான், அஞ்சி
இனம்கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை
15
நன்னர் ஆய்கவின் தொலையச் சேய்நாட்டு
நம்நீத்து உறையும் பொருட்பிணிக்
கூடா மையின், நீடி யோரே!
18
116 எரியகைந் தன்ன தாமரை இடைஇடை
அரிந்துகால் குவித்த செந்நெல் வினைஞர்
கட்கொண்டு மறுகும் சாகாடு அளற்றுஉறின்,
ஆய்கடும்பு அடுக்கும் பாய்புனல் ஊர!
பெரிய நாண்இலை மன்ற; பொரிஎனப்
5
புன்குஅவிழ் அகன்துறைப் பொலிய, ஒள்நுதல்,
நறுமலர்க் காண்வரும் குறும்பல் கூந்தல்
மாழை நோக்கின், காழ்இயன் வனமுலை,
எஃகுடை எழில்நலத்து ஒருத்தியொடு நெருநை
வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே,
10
பொய்புறம் பொதிந்துயாம் கரப்பவும் கையிகந்து
அலர்ஆ கின்றால் தானே; மலர் தார்,
மையணி யானை, மறப்போர்ச் செழியன்
பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
உடன்இயைந்து எழுந்த இருபெரு வேந்தர்
15
கடன்மருள் பெரும்படை கலங்கத் தாக்கி,
இரங்குஇசை முரசம் ஒழியப், பரந்துஅவர்
ஓடுபுறம் கண்ட ஞான்றை,
ஆடுகொள் வியன்களத்து ஆர்ப்பினும் பெரிதே!
19
117 மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும்,
அவ்வரி அல்குல் ஆயமும் உள்ளாள்,
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர்வினை
வளம்கெழு திருநகர் புலம்பப் போகி,
வெருவரு கவலை ஆங்கண், அருள்வரக்,
5
கருங்கால் ஓமை ஏறி, வெண்தலைப்
பருந்து பெடைபயிரும் பாழ்நாட்டு ஆங்கண்,
பொலந்தொடி தெளிர்ப்ப வீசிச், சேவடிச்
சிலம்புநக இயலிச் சென்றஎன் மகட்கே-
சாந்துஉளர் வணர்குரல் வாரி, வகைவகுத்து
10
யான்போது துணைப்பத், தகரம் மண்ணாள்,
தன்ஓ ரன்ன தகைவெங் காதலன்
வெறிகமழ் பன்மலர் புனையப் பின்னுவிடச்
சிறுபுறம் புதைய நெறிபுதாழ்ந் தனகொல்-
நெடுங்கால் மாஅத்து ஊழுறு வெண்பழம்
15
கொடுந்தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
வாணன் சிறுகுடி வடாஅது
தீம்நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே? .
19
118 கறங்குவெள் அருவி பிறங்குமலைக் கவாஅன்,
தேங்கமழ் இணர வேங்கை சூடித்,
தொண்டகப் பறைச்சீர்ப் பெண்டிரொடு விரைஇ,
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து,
இயல்முருகு ஒப்பினை, வயநாய் பிற்பட
5
பகல்வரின் கவ்வை அஞ்சுதும்; இகல்கொள,
இரும்பிடி கன்றொடு விரைஇய கயவாய்ப்,
பெருங்கை யானைக் கோள்பிழைத்து, இரீஇய
அடுபுலி வழங்கும் ஆர்இருள் நடுநாள்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்;
10
என்ஆ குவள்கொல் தானே? பல்நாள்
புணர்குறி செய்த புலர்குரல் ஏனல்
கிளிகடி பாடலும் ஒழிந்தனள்;
அளியள் தான்,நின் அளி அலது இலளே!
14
119 'நுதலும், தோளும், திதலை அல்குலும்,
வண்ணமும், வனப்பும், வரியும் வாட
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி,
'வரைவுநன்று' என்னாது அகலினும், அவர் - வறிது,
ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை,
5
ஏறுபெறு பாம்பின் பைந்துணி கடுப்ப,
நெறியயல் திரங்கும் அத்தம்; வெறிகொள,
உமண்சாத்து இறந்த ஒழிகல் அடுப்பில்,
நோன்சிலை மழவர் ஊன்புழுக்கு அயரும்
சுரன்வழக்கு அற்றது என்னாது, உரஞ்சிறந்து,
10
நெய்தல் உருவின் ஐதுஇலங்கு அகல்இலைத்,
தொடைஅமை பீலிப் பொலிந்த கடிகை,
மடைஅமை திண்சுரை, மரக்காழ் வேலொடு
தணிஅமர் அழுவம் தம்மொடு துணைப்பத்,
துணிகுவர் கொல்லோ தாமே - துணிகொள
15
மறப்புலி உழந்த வசிபடு சென்னி
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டிப்
படிமுழம் ஊன்றிய நெடுநல் யானை
கைதோய்த்து உயிர்க்கும் வறுஞ்சுனை,
மைதோய் சிமைய, மலைமுதல் ஆறே!
20
120 நெடுவேள் மார்பின் ஆரம் போலச்,
செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைங்காற் கொக்கினம் நிரைபறை உகப்ப,
எல்லை பைப்பய கழிப்பிக், குடவயின்
கல்சேர்ந் தன்றே, பல்கதிர் ஞாயிறு -
5
மதர்எழில் மழைக்கண் கலுழ, இவளே
பெருநாண் அணிந்த நறுமென் சாயல்
மாண்நலம் சிதைய ஏங்கி, ஆனாது
அழல்தொடங் கினளே - பெரும;- அதனால்
கழிச்சுறா எறிந்த புண்தாள் அத்திரி
10
நெடுநீர் இருங்கழி பரிமெலிந்து அசைஇ,
வல்வில் இளையரொடு எல்லிச் செல்லாது
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ -
பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண்
சிறுகுரல் நெய்தல்எம் பெருங்கழி நாட்டே!
16


2. மணிமிடை பவளம்


121 நாம்நகை யுடையம் நெஞ்சே!- கடுந்தெறல்
வேனில் நீடிய வானுயர் வழிநாள்,
வறுமை கூரிய மண்நீர்ச் சிறுகுளத்
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணிச்
5
சேறுகொண் டாடிய வேறுபடு வயக்களிறு
செங்கோல் வாலிணர் தயங்கத் தீண்டிச்
சொறிபுறம் உரிஞிய நெறியியல் மராஅத்து
அல்குறு வரிநிழல் அசைஇ, நம்மொடு
தான்வரும் என்ப, தடமென் தோளி-
10
உறுகண மழவர் உருள்கீண் டிட்ட
ஆறுசெல் மாக்கள் சோறுபொதி வெண்குடைக்
கணைவிசைக் கடுவளி எடுத்தலின், துணைசெத்து
வெருளேறு பயிரும் ஆங்கண்,
கருமுக முசுவின் கானத் தானே.
15
122 நாம்நகை யுடையம் நெஞ்சே!- கடுந்தெறல்
இரும்பிழி மகாஅரிவ் அழுங்கல் மூதூர்
விழவின் றாயினும் துஞ்சா தாகும்:
மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின்,
வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள்;
பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்.
5
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
இலங்குவேல் இளையர் துஞ்சின், வைஎயிற்று
வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்;
அரவவாய் ஞமலி மகிழாது மடியின்,
பகலுரு உறழ நிலவுக்கான்று விசும்பின்
10
அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே;
திங்கள் கல்சேர்வு கனைஇருள் மடியின்,
இல்எலி வல்சி வல்வாய்க் கூகை
கழுதுவழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
வளைக்கண் சேவல் வாளாது மடியின்,
15
மனைச்செறி கோழி மாண்குரல் இயம்பும்;
எல்லாம் மடிந்த காலை, ஒருநாள்
நில்லா நெஞ்சத்து அவர்வா ரலரே; அதனால்
அரிபெய் புட்டில் ஆர்ப்பப் பரிசிறந்து,
ஆதி போகிய பாய்பரி நன்மா
20
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல்முதிர் புறங்காட் டன்ன
பல்முட் டின்றால் - தோழி!- நம் களவே.
23
123 உண்ணா மையின் உயங்கிய மருங்கின்
ஆடாப் படிவத் தான்றோர் போல,
வரைசெறி சிறுநெறி நிரைபுடன் செல்லும்
கான யானை கவினழி குன்றம்
இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்: சிறந்த
5
சில்லைங் கூந்தல் நல்லகம் பொருந்தி
ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு
உடைமதி-வாழிய, நெஞ்சே!-நிலவு என
நெய்கனி நெடுவேல் எஃகிலை இமைக்கும்
மழைமருள் பல்தோல் மாவண் சோழர்
10
கழைமாய் காவிரிக் கடல்மண்டு பெருந்துறை,
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங்கடல் ஓதம் போல,
ஒன்றிற் கொள்ளாய், சென்றுதரு பொருட்கே.
12
124 'நன்கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி,
வந்துதிறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து
'சென்றீக' என்ப ஆயின், வேந்தனும்
நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு
இன்றே புகுதல் வாய்வது; நன்றே,
5
மாட மாண்நகர்ப் பாடமை சேக்கைத்
துனிதீர் கொள்கைநம் காதலி இனிதுறப்,
பாசறை வருத்தம் வீட, நீயும்-
மின்னுநிமிர்ந் தன்ன பொன்னியற் புனைபடைக்,
கொய்சுவல் புரவிக், கைகவர் வயங்குபரி
10
வண்பெயற்கு அவிழ்ந்த பைங்கொடி முல்லை
வீகமழ் நெடுவழி ஊதுவண் டிரிய,
காலை எய்தக், கடவு மதி - மாலை
அந்திக் காவலர் அம்பணை இமிழ்இசை
அரமிய வியலகத்து இயம்பும்
நிரைநிலை ஞாயில் நெடுமதில் ஊரே.
16
125 அரம்போழ் அவ்வளை தோள்நிலை நெகிழ,
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி-
ஈர்ங்காழ் அன்ன அரும்புமுதிர் ஈங்கை
ஆலி யன்ன வால்வீ தாஅய்
வைவால் ஓதி மையணல் ஏய்ப்பத்
5
தாதுஉறு குவளைப் போதுபணி அவிழப்,
படாஅப் பைங்கண் பாவடிக் கயவாய்க்
கடாஅம் மாறிய யானை போலப்,
பெய்துவறிது ஆகிய பொங்குசெலற் கொண்மூ
மைதோய் விசும்பின் மாதிரத்து உழிதரப்,
.10
பனிஅடூஉ நின்ற பானாட் கங்குல்
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென,
முனிய அலைத்தி, முரண்இல் காலை;
கைதொழு மரபின் கடவுள் சான்ற
செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின்
15
விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலத்து இறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடுபெற
ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த
பீடில் மன்னர் போல,
ஓடுவை மன்னால் - வாடை!- நீ எமக்கே.
22
126 நினவாய் செத்து நீபல உள்ளிப்,
பெரும்புன் பைதலை வருந்தல் அன்றியும்,
மலைமிசைத் தொடுத்த மலிந்துசெலல் நீத்தம்
தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக்
கடற்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாற்று
5
அறல்வார் நெடுங்கயத்து அருநிலை கலங்க,
மாலிருள் நடுநாட் போகித் தன்னையர்
காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்கு,
அவ்வாங்கு உந்தி, அஞ்சொல் பாண்மகள்,
நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில்
10
பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயங்கெழு வைப்பிற் பல்வேல் எவ்வி
நயம்புரி நன்மொழி அடக்கவும் அடங்கான்,
பொன்னிணர் நறுமலர்ப் புன்னை வெஃகித்,
15
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை கொல்லோ, நீயே - கிளியெனச்
சிறிய மிழற்றுஞ் செவ்வாய்ப், பெரிய
கயலென அமர்த்த உண்கண், புயலெனப்
புறந்தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால்:
மின்னோர் மருங்குல், குறுமகள்
பின்னிலை விடாஅ மடங்கெழு நெஞ்சே!
22
127 இலங்குவளை நெகிழச் சாஅய், அல்கலும்,
கலங்கஞர் உழந்து, நாம்இவண் ஒழிய
வலம்படு முரசின் சேர லாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்புஅறுத்து, இமயத்து
முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து,
5
நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்றுவாய் நிறையக் குவைஇ, அன்றவண்
நிலம்தினத் துறந்த நிதியத்து அன்ன,
10
ஒருநாள் ஒருபகற் பெறினும், வழிநாள்
தங்கலர் - வாழி, தோழி!- செங்கோற்
கருங்கால் மராஅத்து வாஅல் மெல்இணர்ச்
சுரிந்துவணர் பித்தை பொலியச் சூடிக்,
கல்லா மழவர் வில்லிடம் தழீஇ,
15
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,
பழிதீர் காதலர் சென்ற நாட்டே.
18
128 மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே;
கொன்றோ ரன்ன கொடுமையோ டின்றே
யாமம் கொளவரின் கனைஇக், காமங்
கடலிலும் உரைஇக், கரைபொழி யும்மே
எவன்கொல்- வாழி, தோழி!- மயங்கி
5
இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு,
இறும்புபட்டு இருளிய இட்டருஞ் சிலம்பிற்
குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்,
கான நாடன் வரூஉம், யானைக்
10
கயிற்றுப்புறத் தன்ன, கன்மிசைச் சிறுநெறி,
மாரி வானந் தலைஇ நீர்வார்பு,
இட்டருங் கண்ண படுகுழி இயவின்,
இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர்
தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே?
15
129 'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என
நள்ளென் கங்குல் நடுங்குதுணை யாயவர்
நின்மறந்து உறைதல் யாவது? 'புல் மறைந்து
அலங்கல் வான்கழை உதிர்நெல் நோக்கிக்'
கலைபிணை விளிக்கும் கானத்து ஆங்கண்,
5
கல்சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப்
பொதிவயிற்று இளங்காய் பேடை ஊட்டிப்,
போகில்பிளந் திட்ட பொங்கல் வெண்காழ்
நல்கூர் பெண்டிர் அல்குற் கூட்டும்
10
கலங்குமுனைச் சீறூர் கைதலை வைப்பக்,
கொழுப்புஆ தின்ற கூர்ம்படை மழவர்,
செருப்புடை அடியர், தெண்சுனை மண்டும்
அருஞ்சுரம் அரிய வல்ல; வார்கோல்
திருந்திழைப் பணைத்தோள் தேன்நாறு கதுப்பின்
15
குவளை உண்கண், இவளொடு செலற்கு 'என
நெஞ்சுவாய் அவிழ்ந்தனர் காதலர்-
அஞ்சில் ஓதி ஆயிழை!- நமக்கே. .129-18
130 அம்ம வாழி, கேளிர்! முன்நின்று
கண்டனிர் ஆயின், கழறலிர் மன்னோ-
நுண்தாது பொதிந்த செங்காற் கொழுமுகை
முண்டகம் கெழீஇய மோட்டுமணல் அடைகரைப்,
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை
5
எயிறுடை நெடுந்தோடு காப்பப், பலவுடன்
வயிறுடைப் போது வாலிதின் விரீஇப்,
புலவுப்பொருது அழித்த பூநாறு பரப்பின்
இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும்
10
நற்றேர் வழுதி கொற்கை முன்துறை
வண்டுவாய் திறந்த வாங்குகழி நெய்தற்
போதுபுறங் கொடுத்த உண்கண்
மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே.
14
130 'விசும்புற நிவந்த மாத்தாள் இதணைப்
பசுங்கேழ் மெல்லிலை அருகுநெறித் தன்ன,
வண்டுபடுபு இருளிய, தாழ்இருங் கூந்தல்
சுரும்புஉண விரிந்த பெருந்தண் கோதை
இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு என
5
வீளை அம்பின் விழுத்தொடை மழவர்
நாள்ஆ உய்த்த நாமவெஞ் சுரத்து
நடைமெலிந்து ஒழிந்த சேட்படர் கன்றின்
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்,
10
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேல்ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
வெருவரு தகுந கானம் 'நம்மொடு
வருக' என்னுதி ஆயின்,
வாரேன்; நெஞ்சம்! வாய்க்கநின் வினையே.
15
132 ஏனலும் இறங்குகுரல் இறுத்தன; நோய்மலிந்து,
ஆய்கவின் தொலைந்த இவள் நுதலும்; நோக்கி
ஏதில மொழியும் இவ்வூரும்; ஆகலின்,
களிற்றுமுகந் திறந்த கவுளுடைப் பகழி,
வால்நிணப் புகவின், கானவர் தங்கை
5
அம்பணை மென்தோள் ஆயஇதழ் மழைக்கண்
ஒல்கியற் கொடிச்சியை நல்கினை ஆயின்,
கொண்டனை சென்மோ நுண்பூண் மார்ப!
துளிதலைத் தலைஇய சாரல் நளிசுனைக்
கூம்புமுகை அவிழ்த்த குறுஞ்சிறைப் பறவை
5
வேங்கை விரியிணர் ஊதிக், காந்தள்
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை
இருங்கவுட் கடாஅம் கனவும்,
பெருங்கல் வேலி, நும் உறைவின் ஊர்க்கே.
14
133 'குன்றி அன்ன கண்ண, குருஉமயிர்ப்,
புன்தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம்பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
நல்நாள் வேங்கைவீ நன்களம் வரிப்பக்,
கார்தலை மணந்த பைம்புதற் புறவின்,
5
வில்எறி பஞ்சியின் வெண்மழை தவழும்
கொல்லை இதைய குறும்பொறை மருங்கில்,
கரிபரந் தன்ன காயாஞ் செம்மலொடு
எரிபரந் தன்ன இலமலர் விரைஇப்,
பூங்கலுழ் சுமந்த தீம்புனற் கான்யாற்று
10
வான்கொள் தூவல் வளிதர உண்கும்;
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக்
கொன்ஒன்று வினவினர் மன்னே- தோழி!-
இதல்முள் ஒப்பின் முகைமுதிர் வெட்சி
கொல்புனக் குருந்தொடு கல்அறை தாஅம்
15
மிளைநாட்டு அத்தத்து ஈர்ஞ்சுவற் கலித்த
வரிமரல் கறிக்கும் மடப்பிணைத்
திரிமருப்பு இரலைய காடிறந் தோரே.
18
134 வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென;
மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச்,
செம்புற மூதாய் பரத்தலின், நன்பல
முல்லை வீகழல் தாஅய், வல்லோன்
5
செய்கை அன்ன செந்நிலப் புறவின்;
வாஅப் பாணி வயங்குதொழிற் கலிமாத்
தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க,
இடிமறந்து, ஏமதி- வலவ! குவிமுகை
வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த
10
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக்கால் அம்பிணைக் காமர் புணர்நிலை
கடுமான் தேர்ஒலி கேட்பின்,
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே.
14
135 திதலை மாமை தளிர்வனப்பு அழுங்கப்,
புதலிவர் பீரின் எதிர்மலர் கடுப்பப்,
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி,
எழுதெழில் மழைக்கண் கலுழ, நோய் கூர்ந்து,
ஆதி மந்தியின் அறிவுபிறி தாகிப்
5
பேதுற் றிசினே - காதல்அம் தோழி!
காய்கதிர் திருகலின் கனைந்துகால் கடுகி,
ஆடுதளிர் இருப்பைக் கூடுகுவி வான்பூக்
கோடுகடை கழங்கின், அறைமிசைத் தாஅம்
காடிறந் தனரே, காதலர்; அடுபோர்,
10
வீயா விழுப்புகழ், விண்தோய் வியன்குடை,
ஈர்-எழு வேளிர் இயந்துஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போலக்
கலங்கின்று மாது, அவர்த் தெளிந்தஎன் நெஞ்சே.
14
136 மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்,
புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள்ஒளி
அம்கண் இருவிசும்பு விளங்கத், திங்கட்
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்,
5
கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப்,
படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை,
10
பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணுமணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண்நறு முகையொடு வெந்நூல் சூட்டித்,
தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி,
15
மழைபட் டன்ன மணன்மலி பந்தர்,
இழைஅணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றித்
தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
'உவர்நீங்கு கற்பின்எம் உயிர்உடம் படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்,
20
பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர்
உறுவளி ஆற்றச் சிறுவரை திற' என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறைகழி வாளின் உருவுபெயர்ந்து இமைப்ப,
மறைதிறன் அறியாள் ஆகி, ஒய்யென
25
நாணினள் இறைஞ்சி யோளே- பேணிப்
பரூஉப்பகை ஆம்பற் குரூஉத்தொடை நீவிச்
சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே.
29
137 ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத்து உண்ட
சிறும்பல் கேணிப் பிடியடி நசைஇச்,
களிறுதொடூஉக் கடக்குங் கான்யாற்று அத்தம்
சென்றுசேர்பு ஒல்லார் ஆயினும், நினக்கே-
வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர்
5
இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில்
10
தீஇல் அடுப்பின் அரங்கம் போலப்,
பெரும்பாழ் கொண்டன்று, நுதலே, தோளும்,
தோளா முத்தின் தெண்கடற் பொருநன்
திண்தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
நல்லெழில் நெடுவேய் புரையும்
தொல்கவின் தொலைந்தன: நோகோ யானே.
16
138 இகுளை! கேட்டிசின் காதலம் தோழி !
குவளை உண்கண் தெண்பனி மல்க,
வறிதியான் வருந்திய செல்லற்கு அன்னை
பிறிதொன்று கடுத்தனள் ஆகி - வேம்பின்
வெறிகொள் பாசிலை நீலமொடு சூடி,
5
உடலுநர்க் கடந்த கடல்அம் தானைத்,
திருந்துஇலை நெடுவேல் தென்னவன் - பொதியில்
அருஞ்சிமை இழிதரும் ஆர்த்துவரல் அருவியின்
ததும்புசீர் இன்னியங் கறங்கக், கைதொழுது,
உருகெழு சிறப்பின் முருகுமனைத் தரீஇக்,
10
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு
தோடுந் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்
தேடினர் ஆதல் நன்றோ?- நீடு
நின்னொடு தெளித்த நன்மலை நாடன்
குறிவரல் அரைநாட் குன்றத்து உச்சி,
15
நெறிகெட வீழ்ந்த துன்னருங் கூர்இருள்,
திருமணி உமிழ்ந்த நாகம் காந்தட்
கொழுமடற் புதுப்பூ ஊதுந் தும்பி
நன்னிறம் மருளும் அருவிடர்
இன்னா நீள்இடை நினையும்என் நெஞ்சே.
20
139 துஞ்சுவது போலஇருளி, விண்பக
இமைப்பது போலமின்னி, உறைக்கொண்டு
ஏறுவதுப் போலப் பாடுசிறந்து உரைஇ
நிலம்நெஞ்சு உட்க ஓவாது சிலைத்தாங்கு,
ஆர்தளி பொழிந்த வார்பெயற் கடைநாள்;
5
ஈன்றுநாள் உலந்த வாலா வெண்மழை
வான்தோய் உயர்வரை ஆடும் வைகறைப்
புதல்ஒளி சிறந்த காண்பின் காலைத்,
தண்நறும் படுநீர் மாந்திப், பதவு அருந்து
வெண்புறக்கு உடைய திரிமருப்பு இரலை;
10
வார்மணல் ஒருசிறைப் பிடவுஅவிழ் கொழுநிழல்,
காமர் துணையொடு ஏமுற வதிய;
அரக்குநிற உருவின் ஈயல் மூதாய்
பரப்பி யவைபோற் பாஅய்ப், பலவுடன்
நீர்வார் மருங்கின் ஈர்அணி திகழ;
15
இன்னும் வாரார் ஆயின்- நன்னுதல்!
யாதுகொல் மற்றுவர் நிலையே? காதலர்
கருவிக் கார்இடி இரீஇய
பருவம் அன்று, அவர்: 'வருதும்' என்றதுவே.
19
140 பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங்கழி செறுவின் உழாஅது செய்த
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி,
என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
5
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
'நெல்லின் நேரே வெண்கல் உப்பு' எனச்
சேரி விலைமாறு கூறலின், மனைய
விளியறி ஞமலி குரைப்ப, வெரீஇய
மதர்கயல் மலைப்பின் அன்னகண் எனக்கு,
10
இதைமுயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
மாமூ தள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வந் தீர வாங்குந் தந்தை
கைபூண் பகட்டின் வருந்தி
வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே.
15
141 அம்ம வாழி, தோழி ! கைம்மிகக்
கனவுங் கங்குல்தோ றினிய: நனவும்
புனைவினை நல்இல் புள்ளும் பாங்கின!
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
உலகுதொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி
5
மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேறும் அகல்இருள் நடுநாள்:
மறுகுவிளக் குறுத்து, மாலை தூக்கிப்,
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
10
விழவுஉடன் அயர, வருகதில் அம்ம!
துவரப் புலர்ந்து தூமலர் கஞலித்,
தகரம் நாறுந் தண்நறுங் கதுப்பின்
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇ
15
கூழைக் கூந்தற் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
கடிதுஇடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு
தீங்குலை வாழை ஓங்குமடல் இராது:
20
நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றுஞ்
செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன் இடையாற்று அன்ன
நல்லிசை வெறுக்கை தருமார், பல்பொறிப்
புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை
25
நரந்த நறும்பூ நாள்மலர் உதிரக்,
கலைபாய்ந்து உகளும், கல்சேர் வேங்கைத்,
தேம்கமழ் நெடுவரைப் பிறங்கிய
வேங்கட வைப்பிற் சுரன்இறந் தோரே.
29
142 இலமலர் அன்ன அம்செந் நாவிற்
புலம்மீக் கூறும் புரையோர் ஏத்தப்,
பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல்
நிறையருந் தானை வெல்போர் மாந்தரம்-
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற
5
குறையோர் கொள்கலம் போல, நன்றும்
உவஇனி - வாழிய, நெஞ்சே!- காதலி
முறையின் வழா அது ஆற்றிப் பெற்ற
கறையடி யானை நன்னன் பாழி,
ஊட்டரு மரபின் அஞ்சு வரு பேய்எக்
10
கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும்பெயர்
வெள்ளத் தானை அதிகற் கொன்றுஉவந்து
ஒள்வாள் அமலை ஞாட்பிற்,
பலர் அறி வுறுதல் அஞ்சிப், பைப்பய,
15
நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச்
சூர்ப்புறு கோல்வளை செறித்த முன்கைக்
குறை அறல் அன்ன இரும்பல் கூந்தல்,
இடனில் சிறுபுறத்து இழையொடு துயல்வரக்,
கடல்மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து.
20
உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை
இயல்கற் றன்ன ஒதுக்கினள் வந்து,
பெயல் அலைக் கலங்கிய மலைப்பூங் கோதை
இயல்எறி பொன்னின் கொங்குசோர்பு உறைப்பத்
தொடிக்கண் வடுக்கொள - முயங்கினள்:
வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே.
26
143 செய்வினைப் பிரிதல் எண்ணிக், கைம்மிகக்
காடுகவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்,
நீடுசினை வறிய வாக, ஒல்லென
வாடுபல் அகலிலை கோடைக்கு ஒய்யும்
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கெழுபு
5
முளிஅரிற் பிறந்த வளிவளர் கூர்எரிச்
சுடர்நிமிர் நெடுங்கொடி விடர்முகை முழங்கும்
'வெம்மலை அருஞ்சுரம் நீந்தி - ஐய!
சேறும்' என்ற சிறுசொற்கு... இவட்கே,
வசைஇல் வெம்போர் வானவன் மறவன்
10
நசையின் வாழ்நர்க்கு நன்கலஞ் சுரக்கும்,
பொய்யா வாய்வாள், புனைகழல் பிட்டன்
மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன்
அகல்அறை நெடுஞ்சுனை, துவலையின் மலர்ந்த
தண்கமழ் நீலம் போலக்,
கண்பனி கலுழ்ந்தன; நோகோ யானே.
16
144 "வருதும்" என்ற நாளும் பொய்த்தன;
அரியேர் உண்கண் நீரும் நில்லா;
தண்கார்க்கு ஈன்ற பைங்கொடி முல்லை
வைவாய் வான்முகை அவிழ்ந்த கோதை
பெய்வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார்,
5
அருள்கண் மாறலோ மாறுக- அந்தில்
அறன்அஞ் சலரே!- ஆயிழை! நமர்' எனச்
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும்,
பனிபடு நறுந்தார் குழைய, நம்மொடு,
துனிதீர் முயக்கம் பெற்றோள் போல
10
உவக்குநள்- வாழிய, நெஞ்சே!- விசும்பின்
ஏறெழுந்து முழங்கினும் மாறெழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறைப்,
பார்வேட்டு எழுந்த மள்ளர் கையதை
கூர்வாட் குவிமுகஞ் சிதைய நூறி
15
மானடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின்வயின் இமைப்ப,
அமரோர்த்து, அட்ட செல்வம்
தமர்விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே.
19
145 வேர்முழுது உலறி நின்ற புழற்கால்,
தேர்மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
வற்றல் மரத்த பொன்தலை ஓதி
வெயிற்கவின் இழந்த வைப்பின் பையுள் கொள,
நுண்ணிதின் நிவக்கும் வெண்ஞெமை வியன்காட்டு
5
ஆளில் அத்தத்து, அளியள் அவனொடு-
வாள்வரி பொருத புண்கூர் யானை
புகர்சிதை முகத்த குருதி வார,
உயர்சிமை நெடுங்கோட்டு உருமென முழங்கும்
'அருஞ்சுரம் இறந்தனள்' என்ப- பெருஞ்சீர்
10
அன்னி குறுக்கைப் பறந்தலைத், திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல்லிணர்ப் புன்னை போலக்,
கடுநவைப் படீஇயர் மாதோ - களி மயில்
குஞ்சரக் குரல குருகோடு ஆலும்,
15
துஞ்சா முழவின் துய்த்தியல் வாழ்க்கைக்,
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஊழடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பாற்
சிறுபல் கூந்தற் போதுபிடித்து அருளாது,
எறிகோல் சிதைய நூறவும், சிறுபுறம்,
20
'எனக்குஉரித்து' என்னாள், நின்ற என்
அமர்க்கண் அஞ்ஞையை அலைத்த கையே!
22
146 வலிமிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனிமலர்ப் பொய்கைப் பகல்செல மறுகி
மடக்கண் எருமை மாண்நாகு தழீஇ,
படப்பை நண்ணிப், பழனத்து அல்கும்
கலிமகிழ் ஊரன் ஒலிமணி நெடுந்தேர்
5
ஒள்ளிமழை மகளிர் சேரிப், பல்நாள்
இயங்கல் ஆனாது ஆயின்; வயங்கிழை
யார்கொல் அனியள் தானே- எம்போல்
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி
வளிபொரத் துயல்வரும் தளிபொழி மலரின்
10
கண்பனி ஆகத்து உறைப்பக், கண் பசந்து
ஆயமும் அயலும் மருளத்,
தாயோம்பு ஆய்நலம் வேண்டா தோளோ?
13
147 ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்னை
ஊன்பொதி அவிழாக் கோட்டுகிர்க் குருளை
மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்த,
துறுகல் விடரளைப் பிணவுபசி கூர்ந்தெனப்,
5
பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை
அறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஓர்க்கும்
நெறிபடு கவலை நிரம்பா நீளிடை,
வெள்ளி வீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந் திசினால் யானே; பல புலந்து,
10
உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சா அய்,
தோளும் தொல்கவின் தொலைய, நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
மருந்துபிறிது இன்மையின், இருந்துவினை இலனே!
14
148 பனைத்திரள் அன்ன பருஏர் எறுழ்த் தடக்கைச்
கொலைச்சினந் தவிரா மதனுடை முன்பின்,
வண்டுபடு கடாஅத்து, உயர்மருப்பு யானை
தண்கமழ் சிலம்பின் மரம்படத் தொலைச்சி:
உறுபுலி உரறக் குத்தி; விறல்கடிந்து,
5
சிறுதினைப் பெரும்புனம் வவ்வும் நாட!
கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலியொடு பொருது, களம் பட்டெனக்
காணிய செல்லாக் கூகை நாணிக்
கடும்பகல் வழங்கா தாஅங்கு, இடும்பை
10
பெரிதால் அம்ம இவட்கே: அதனால்
மாலை வருதல் வேண்டும் - சோலை
முளைமேய் பெருங்களிறு வழங்கும்
மலைமுதல் அடுக்கத்த சிறுகல் ஆறே.
14
149 சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின்,
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்,
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள்இடைப் போகி, நன்றும்
5
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன்- வாழி, என் நெஞ்சே!- சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
10
வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய,
15
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே.
19
150 பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்புவிடக்
கண்ணுருத்து எழுதரு முலையும் நோக்கி,
'எல்லினை பெரிது' எனப் பன்மாண் கூறிப்
பெருந்தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து,
5
அருங்கடிப் படுத்தனள் யாயே; கடுஞ்செலல்
வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறைக்,
கனைத்த நெய்தற் கண்போன் மாமலர்
நனைத்த செருந்திப் போதுவாய் அவிழ,
மாலை மணியிதழ் கூம்பக் காலைக்
10
கள்நாறு காவியொடு தண்ணென் மலருங்
கழியுங், கானலுங் காண்தொறும் பலபுலந்து;
வாரார் கொல்? எனப் பருவரும்-
தார் ஆர் மார்ப! நீ தணந்த ஞான்றே!
14
151 'தம்நயந்து உறைவோர்த் தாங்கித் தாம்நயந்து
இன்னமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ,
நகுதல் ஆற்றார் நல்கூர்ந் தோர்!' என,
மிகுபொருள் நினையும் நெஞ்சமொடு அருள்பிறிது
ஆபமன் - வாழி, தோழி ! கால் விரிபு
5
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறிவரிக்
கலைமான் தலையின் முதன்முதற் கவர்த்த
கோடலம் கவட்ட குறுங்கால் உழுஞ்சில்
தாறுசினை விளைந்த நெற்றம், ஆடுமகள்
அரிக்கோற் பறையின், ஐயென ஒலிக்கும்
10
பதுக்கை ஆய செதுக்கை நீழற்,
கள்ளி முள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க்கு
உறுவது கூறுஞ், சிறுசெந் நாவின்
மணிஓர்த் தன்ன தெண்குரல்
கணிவாய்ப் பல்லிய காடிறந் தோரே!
15
152 நெஞ்சுநடுங்கு அரும்படர் தீர வந்து,
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண்
செலீஇய பெயர்வோள் வணர்சுரி ஐம்பால்-
நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச்
சினங்கெழு தானைத் தித்தன் வெளியன்
5
இரங்குநீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறைத்,
தனம்தரு நன்கலம் சிதையத் தாக்கும்
சிறுவெள் இறவின் குப்பை அன்ன
உறுபகை தரூஉம் மொய்ம்மூசு பிண்டன்
முனைமுரண் உடையக் கடந்த வென்வேல்,
10
இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்ப்
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்;
ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற்
களிமயிற் கலாவத் தன்ன தோளே-
வல்வில் இளையர் பெருமகன்; நள்ளி
15
சோலை அடுக்கத்துச் சுரும்புஉண விரிந்த
கடவுட் காந்தள் உள்ளும் பலவுடன்
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி-
வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்குச்
சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும்,
20
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்
வேயமைக் கண்ணிடை புரைஇச்
சேய ஆயினும், நடுங்குதுயர் தருமே.
24
153 நோகோ யானே; நோதகும் உள்ளம்;
அம்தீங் கிளவி ஆயமொடு கெழீஇப்,
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்துநனி
வெம்புமன், அளியள் தானே - இனியே,
வன்க ணாளன் மார்புஉற வளஇ,
5
இன்சொற் பிணிப்ப நம்பி, நம்கண்
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத்
தெறுகதிர் உலைஇய வேனில் வெங்காட்டு,
உறுவளி ஒலிகழைக் கண்ணுறுபு தீண்டலின்
பொறிபிதிர்பு எடுத்த பொங்கெழு கூர் எரிப்
10
பைதறு சிமையப் பயம்நீங்கு ஆர்இடை
நல் அடிக்கு அமைந்த அல்ல; மெல்லியல்
வல்லுநள் கொல்லோ தானே- எல்லி
ஓங்குவரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
மீனொடு பொலிந்த வானின் தோன்றித்
15
தேம்பாய்ந்து ஆர்க்குந் தெரியிணர்க் கோங்கின்
காலுறக் கழன்ற கள்கமழ் புதுமலர்
கைவிடு சுடரின் தோன்றும்
மைபடு மாமலை விலங்கிய சுரனே?
19
154 படுமழை பொழிந்த பயமிகு புறவின்
நெடுநீர் அவல பகுவாய்த் தேரை
சிறுபல் இயத்தின் நெடுநெறிக் கறங்கக்
குறும்புதற் பிடவின் நெடுங்கால் அலரி
செந்நில மருங்கின் நுண்அயிர் வரிப்ப,
5
வெஞ்சின அரவின் பைஅணந் தன்ன
தண்கமழ் கோடல் தாதுபிணி அவிழத்,
திரிமருப்பு இரலை தெள்அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதியக்,
காடுகவின் பெற்ற தண்பதப் பெருவழி
10
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள்தாழ் தார்மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி - வலவ! தேரே- சீர்மிகுபு
நம்வயிற் புரிந்த கொள்கை
அம்மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே.
15
155 'அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
பொருளின் ஆகும், புனையிழை!' என்றுநம்
இருளேர் ஐம்பால் நீவி யோரே-
நோய்நாம் உழக்குவம் ஆயினும், தாந்தம்
5
செய்வினை முடிக்க தோழி ! பல்வயின்
பயநிரை சேர்ந்த பாண்நாட்டு ஆங்கண்
நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய
கொடுவாய்ப் பத்தல் வார்ந்துகு சிறுகுழி,
நீர்காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது
10
பெருங்களிறு மிதித்த அடியகத்து, இரும்புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர்வழி,
செயிர்தீர் நாவின் வயிரியர் பின்றை
மண்ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
விரலூன்று வடுவில் தோன்றும்
மரல்வாடு மருங்கின் மலைஇறந் தோரே.
16
156 முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்
மூட்டுறு கவரி தூக்கி யன்ன
செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்
மூதா தின்றல் அஞ்சிக், காவலர்
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇக்
5
காஞ்சியின் அகத்துக், கரும்பருத்தி, யாக்கும்
தீம்புனல் ஊர! திறவதாகக்
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந்தழை
காயா ஞாயிற் றாகத், தலைப்பெய,
10
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து,
நின்நகாப் பிழைத்த தவறே - பெரும!
கள்ளுங் கண்ணியும் கையுறை யாக
நிலைக்கோட்டு வெள்ளை நாள்செவிக் கிடாஅய்
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சித்,
15
தணிமருங்கு அறியாள், யாய்அழ,
மணிமருள் மேனி பொன்னிறம் கொளலே?
17
157 அரியற் பெண்டிர் அலகுற் கொண்ட
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த
வரிநிறக் கலுழி ஆர மாந்திச்
செருவேட்டுச், சிலைக்கும் செங்கண் ஆடவர்,
வில்லிட வீழ்ந்தோர் பதுக்கைக் கோங்கின்
5
எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல்
பெரும்புலர் வைகறை அரும்பொடு வாங்கிக்
கான யானை கவளங் கொள்ளும்
அஞ்சுவரு நெறியிடைத் தமியர் சென்மார்
நெஞ்சுண மொழிப மன்னே - தோழி
10
முனைபுலம் பெயர்த்த புல்லென் மன்றத்துப்
பெயலுற நெகிழ்ந்து, வெயிலுறச் சாஅய்
வினையழி பாவையின் உலறி,
மனைஒழிந் திருத்தல் வல்லு வோர்க்கே!
15
158 'உருமுரறு கருவிய பெருமழை தலைஇப்
பெயல்ஆன்று அவிந்த தூங்கிருள் நடுநாள்,
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்பப்,
பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள்,
வரைஇழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி,
5
மிடைஊர்பு இழியக்கண்டனென், இவள் என
அலையல் - வாழிவேண்டு அன்னை!- நம் படப்பைச்
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து
தாம்வேண்டு உருவின் அணங்குமார் வருமே;
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்
10
கனவாண்டு மருட்டலும் உண்டே: இவள்தான்
சுடரின்று தமியளும் பனிக்கும்: வெருவர
மன்ற மராஅத்த கூகை குழறினும்
நெஞ்சழிந்து அரணஞ் சேரும்: அதன்தலைப்
புலிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு,
15
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல்
எந்தையும் இல்லன் ஆக,
அஞ்சுவள் அல்லளோ, இவளிது செயலே!
18
159 தெண்கழி விளைந்த வெண்கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடுநுக ஒழுகை
உரறுடைச் சுவல பகடுபல பரப்பி
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்
வடியுறு பகழிக் கொடுவில் ஆடவர்
5
அணங்குடை நோன்சிலை வணங்க வாங்கிப்
பல்ஆன் நெடுநிரை தழீஇக் கல்லென
அருமுனை அலைத்த பெரும்புகல் வலத்தர்,
கனைகுரற் கடுந்துடிப் பாணி தூங்கி,
உவலைக் கண்ணியர் ஊன்புழுக்கு அயரும்
10
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி
அவலம் கொள்ளன்மா காதல் அம் தோழி!
விசும்பின் நல்லேறு சிலைக்குஞ் சேட்சிமை
நறும்பூஞ் சாரற் குறும்பொறைக் குணாஅது
வில்கெழு தடக்கை வெல்போர் வானவன்
15
மிஞிறுமூசு கவுள சிறுகண் யானைத்
தொடியுடைத் தடமறுப்பு ஒடிய நூறிக்
கொடுமுடி காக்குங் குரூஉக்கண் நெடுமதில்
சேண்விளங்கு சிறப்பின் - ஆமூர் எய்தினும்,
ஆண்டமைந்து உறையுநர் அல்லர், நின்
பூண்தாங்கு ஆகம் பொருந்துதன் மறந்தே.
21
160 ஒடுங்கீர் ஓதி நினக்கும் அற்றே?
நடுங்கின்று, அளித்தென் நிறையில் நெஞ்சம்
அடும்புகொடி சிதைய வாங்கிக் கொடுங்கழிக்
குப்பை வெண்மணற் பக்கம் சேர்த்தி,
நிறைச்சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த
5
கோட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டைப்
பார்புஇடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானலஞ் சேர்ப்பன்
முள்ளுறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல
வாவுஉடை மையின் வள்பிற் காட்டி,
10
ஏத்தொழில் நவின்ற எழில்நடைப் புரவி
செழுநீர்த் தண்கழி நீந்தலின், ஆழி
நுதிமுகங் குறைந்த பொதிமுகிழ் நெய்தல்,
பாம்புஉயர் தலையின் சாம்புவன நிவப்ப,
இரவந் தன்றால் திண்தேர்; கரவாது
15
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல்வாய்
அரவச் சீறூர் காணப்
பகல்வந் தன்றல், பாய்பரி சிறந்தே.
18
161 வினைவயிற் பிரிதல் யாவது?- 'வணர்சுரி
வடியாப் பித்தை வன்கண், ஆடவர்
அடியமை பகழி ஆர வாங்கி; வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலைப்
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ்செவி
5
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்
வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து
இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக்
கேட்டனள் கொல்லோ தானே? தோழ் தாழ்பு
சுரும்பு உண ஒலிவரும் இரும்பல் கூந்தல்,
10
அம்மா மேனி, ஆயிழைக் குறுமகள்
சுணங்கு சூழ் ஆகத்து அணங்குஎன உருத்த
நல்வரல் இளமுலை நனைய;
பல்லிதழ் உண்கண் பரந்தன பனியே.
14
162 கொளக்குறை படாஅக் கோடுவளர் குட்டத்து
அளப்பு அரிது ஆகிய குவைஇருந் தோன்றல,
கடல்கண் டன்ன மாக விசும்பின்
அழற்கொடி அன்ன மின்னுவசிபு நுடங்கக்
கடிதுஇடி உருமொடு கதழுறை சிதறி
5
விளிவுஇடன் அறியா வான்உமிழ் நடுநாள்
அருங்கடிக் காவலர் இகழ்பதம் நோக்கிப்,
பனிமயங்கு அசைவளி அலைப்பத், தந்தை
நெடுநகர் ஒருசிறை நின்றனென் ஆக;
அறல்என அவிரும் கூந்தல் மலர்என
10
வாண்முகத்து அலமரும் மாஇதழ் மழைக்கண்,
முகைநிரைத் தன்ன மாவீழ் வெண்பல்;
நகைமாண்டு இலங்கும் நலம்கெழு துவர்வாய்க்,
கோல்அமை விழுத்தொடி விளங்க வீசிக்,
கால்உறு தளிரின் நடுங்கி ஆனாது, .
15
நோய்அசா வீட முயங்கினன் - வாய்மொழி
நல்லிசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
நசைபிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன்
கோள்அறவு அறியாப் பயம்கெழு பலவின்
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய,
20
வில்கெழு தானைப் பசும்பூண் பாண்டியன்
களிறணி வெல்கொடி கடுப்பக் காண்வர
ஒளிறுவன இழிதரும் உயர்ந்துதோன்று அருவி
நேர்கொள் நெடுவரை கவா அன்
சூரா மகளிரிற் பெறற்குஅரி யோளே.
25
163 விண்அதிர்பு தலைஇய விரவுமலர் குழையத்
தண்மழை பொழிந்த தாழ்பெயற் கடைநாள்,
எமியம் ஆகத் துனிஉளம் கூரச்
சென்றோர் உள்ளிச் சில்வளை நெகிழப்
பெருநகை உள்ளமொடு வருநசை நோக்கி
5
விளியும் எவ்வமொடு 'அளியள்' என்னாது
களிறுஉயிர்த் தன்ன கண்அழி துவலை
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
குன்றுநெகிழ்பு அன்ன குளிர்கொள் வாடை!
எனக்கே வந்தனை போறி ! புனற்கால்
10
அயிர்இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழக்,
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது
இனையை ஆகிச் செல்மதி;
வினைவிதுப் புறுநர் உள்ளலும் உண்டே!
14
164 கதிர்கை யாக வாங்கி ஞாயிறு
பைதறத் தெறுதலின் பயங்கரந்து மாறி,
விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம்
காடுகவின் எதிரக் கனைபெயல் பொழிதலின்
பொறிவரி இனவண்டு ஆர்ப்பப் பலவுடன்
5
நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற'
வெறியேன் றன்றே வீகமழ் கானம்-
'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி,
இகுபனி உறைக்குங் கண்ணொடு இனைபு ஆங்கு
இன்னாது உறைவி தொன்னலம் பெறூஉம்
5
இதுநற் காலம்; கண்டிசின் - பகைவர்
மதின்முகம் முருக்கிய தொடிசிதை மருப்பின்;
கந்துகால் ஒசிக்கும் யானை;
வெஞ்சின வேந்தன் வினைவிடப் பெறினே!
14
165 கயந்தலை மடப்பிடி பயம்பில் பட்டெனக்
களிறுவிளிப் படுத்த கம்பலை வெரீஇ,
ஒய்யென எந்த செவ்வாய்க் குழவி
தாதுஎரு மறுகின் மூதூர் ஆங்கண்
எருமை நல் ஆன் பெறுமுலை மாந்தும்
5
நாடுபல இறந்த நன்ன ராட்டிக்கு
ஆயமும் அணிஇழந்து அழுங்கின்று! தாயும்
'இன்தோள் தாராய், இறீஇயர்என் உயிர்! என,
கண்ணும் நுதலும் நீவித், தண்ணெனத்,
தடவுநிலை நொச்சி வரிநிழல் அசைஇத்,
10
தாழிக் குவளை வாடுமலர் சூட்டித்,
'தருமணற் கிடந்த பாவைஎன்
அருமக ளே' என முயங்கினள் அழுமே!
13
166 'நல்மரங் குழீஇய நனைமுதிர் சாடி
பல்நாள் அரித்த கோஒய் உடைப்பின்,
மயங்குமழைத் துவலையின் மறுகுடன் பனிக்கும்
பழம்பல் நெல்லின் வேளூர் வாயில்,
நறுவிரை தெளித்த நாறிணர் மாலைப்,
5
பொறிவரி இனவண்டு ஊதல கழியும்
உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம்,
புனைஇருங் கதுப்பின் நீகடுத் தோள்வயின்
அனையேன் ஆயின், அணங்குக, என்!' என
மனையோட் தேற்றும் மகிழ்நன் ஆயின்,
10
யார்கொல்- வாழி, தோழி !- நெருநல்
தார்பூண் களிற்றின் தலைப்புணை தழீஇ,
வதுவை ஈர்அணிப் பொலிந்து, நம்மொடு,
புதுவது வந்த காவிரிக்
கோடுதோய் மலிர்நிறை, ஆடி யோரே?
15
167 வயங்குமணி பொருத வகையமை வனப்பின்
பசுங்காழ் அல்குல் மாஅயோ ளொடு
வினைவனப்பு எய்திய புனைபூஞ் சேக்கை,
விண்பொரு நெடுநகர்த் தங்கி, இன்றே
இனிதுடன் கழிந்தன்று மன்னே; நாளைப்
5
பொருந்தாக் கண்ணேம் புலம்வந்து உறுதரச்
சேக்குவம் கொல்லோ, நெஞ்சே! சாத்துஎறிந்து
அதர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடுவில் ஆடவர் படுபகை வெரீஇ
ஊர்எழுந்து உலறிய பீர்எழு முதுபாழ்
10
முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந்ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென,
மணிப்புறாத் துறந்த மரம்சோர் மாடத்து
எழுதுஅணி கடவுள் போகலின், புல்லென்று
15
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பால்நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில்,
குயில்காழ் சிதைய மண்டி, அயில்வாய்க்
கூர்முகச் சிதலை வேய்ந்த
போர்மடி நல்இறைப் பொதியி லானே!
20
168 யாமம் நும்மொடு கழிப்பி, நோய்மிக,
பனிவார் கண்ணேம் வைகுதும், இனியே:
ஆன்றல் வேண்டும் வான்தோய் வெற்ப!
பல்ஆன் குன்றில் படுநிழல் சேர்ந்த
நல்ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்-
5
கொடைக்கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலிஎழுந்து,
அருவி ஆர்க்கும் பெருவரைச் சிலம்பின்
ஈன்றணி இரும்பிடி தழீஇக் களிறு தன்
தூங்குநடைக் குழவி துயில்புறங் காப்ப,
10
ஒடுங்குஅளை புலம்பப் போகிக், கடுங்கண்
வாள்வரி வயப்புலி நன்முழை உரற,
கானவர் மடிந்த கங்குல்,
மான்அதர்ச் சிறுநெறி வருதல், நீயே?
14
169 மரம்தலை கரிந்து நிலம்பயம் வாட,
அலங்குகதிர் வேய்ந்த அழல்திகழ் புனந்தலைப்,
புலிதொலைத்து உண்ட பெருங்களிற்று ஒழிஊன்
கலிகெழு மறவர் காழ்க்கோத்து ஒழிந்ததை
ஞெலிகோற் சிறுதீ மாட்டி, ஒலிதிரைக்
5
கடல்விளை அமிழ்தின் கணஞ்சால் உமணர்
சுனைகொள் தீநீர்ச் சோற்றுஉலைக் கூட்டும்
சுரம்பல கடந்த நம்வயின் படர்ந்து: நனி
பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து
செல்கதிர் மழுகிய புலம்புகொள் மாலை
10
மெல்விரல் சேர்த்திய நுதலள், மல்கிக்
கயலுமிழ் நீரின் கண்பனி வாரப்,
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லலொடு
வருந்துமால், அளியள் திருந்திழை தானே!
14
170 கானலும் கழறாது: கழியும் கூறாது:
தேன்இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது:
ஒருநின் அல்லது பிறிதுயாதும் இலனே:
இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல்
கமழ்இதழ் நாற்றம் அமிழ்துஎன நசைஇத்:
5
தண்தாது ஊதிய வண்டினம் களிசிறந்து,
பறைஇய தளரும் துறைவனை, நீயே,
சொல்லல் வேண்டுமால் - அலவ! பல்கால்
கைதையம் படுசினை எவ்வமொடு அசாஅம்
கடற்சிறு காக்கை காமர் பெடையொடு
10
கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
வெள்இறாக் கனவும் நள்ளென் யாமத்து,
'நின்னுறு விழுமம் களைந்தோள்
தன்னுறு விழுமம் நீந்துமோ!' எனவோ!
14
171 'நுதலும் நுண்பசப்பு இவரும், தோளும்
அகன்மலை இறும்பின் ஆய்ந்துகொண்டு அறுத்த
பணைஎழில் அழிய வாடும்; நாளும்
நினைவல் மாதுஅவர் பண்பு' என்று ஓவாது
இனையல் - வாழி, தோழி ! புணர்வர் -
5
இலங்குகோல் ஆய்தொடி நெகிழப், பொருள்புரிந்து
அலந்தலை ஞெமையத்து அதர்அடைந் திருந்த
மால்வரைச் சீறூர் மருள்பன் மாக்கள்
கோள்வல் ஏற்றை ஓசை ஓர்மார்,
திருத்திக் கொண்ட அம்பினர், நோன்சிலை
10
எருத்தத்து இரீஇ, இடந்தொறும் படர்தலின்
கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற்சினைப்
பழம்போற் சேற்ற தீம்புழல் உணீஇய,
கருங்கோட்டு இருப்பை ஊரும்
பெருங்கை எண்கின் சுரன்இறந் தோரே!
15
172 வாரணம் உரறும் நீர்திகழ் சிலம்பில்
பிரசமொடு விரைஇய வயங்குவெள் அருவி
இன்இசை இமிழ்இயம் கடுப்ப, இம்மெனக்
கல்முகை விடர்அகம் சிலம்ப, வீழும்
காம்புதலை மணந்த ஓங்குமலைச் சாரல்,
5
இரும்புவடித் தன்ன கருங்கைக் கானவன்
விரிமலர் மராஅம் பொருந்திக், கோல்தெரிந்து,
வரிநுதல் யானை அருநிறத்து அழுத்தி,
இகல்இடு முன்பின் வெண்கோடு கொண்டுதன்
புல்வேய் குரம்பை புலர ஊன்றி,
10
முன்றில் நீடிய முழவுஉறழ் பலவின்
பிழிமகிழ் உவகையன், கிளையொடு கலிசிறந்து,
சாந்த ஞெகிழியின் ஊன்புழுக்கு அயரும்
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல்
அறியேன் யான்; அஃது அறிந்தனென் ஆயின்-
15
அணி இழை, உண்கண், ஆய்இதழ்க் குறுமகள்
மணிஏர் மாண்நலம் சிதையப்,
பொன்னேர் பசலை பாவின்று மன்னே!
18
173 'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த
கேளிர் கேடுபல ஊன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறுநுதல்
மைஈர் ஓதி ! அரும்படர் உழத்தல்
5
சிலநாள் தாங்கல் வேண்டும்' என்று, நின்
நல்மாண் எல்வளை திருத்தினர் ஆயின்,
வருவர் - வாழி, தோழி !- பலபுரி
வார்கயிற்று ஒழுகை நோன்சுவற் கொளீஇ,
பகடுதுறை ஏற்றத்து உமண்விளி வெரீஇ,
10
உழைமான் அம்பிணை இனன்இரிந்து ஓடக்,
காடுகவின் அழிய உறைஇக், கோடை
நின்றுதின விளிந்த அம்புணை, நெடுவேய்க்
கண்விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
கழங்குஉறழ் தோன்றல, பழங்குழித் தாஅம்
15
இன்களி நறவின் இயல்தேர் நன்னன்
விண்பொரு நெடுவரைக் கவாஅன்
பொன்படு மருங்கின் மலைஇறந் தோரே.
18
174 'இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத்து,
ஒருபடை கொண்டு, வருபடை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்' எனப்,
பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
செல்வேம் ஆதல் அறியாள், முல்லை
5
நேர்கால் முதுகொடி குழைப்ப, நீர் சொரிந்து,
காலை வானத்துக் கடுங்குரற் கொண்மூ
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து,
பழங்கண் கொண்ட பசலை மேனியள்
யாங்குஆ குவள் கொல் தானே - வேங்கை
10
ஊழுறு நறுவீ கடுப்பக் கேழ்கொள,
ஆகத்து அரும்பிய மாசுஅறு சுணங்கினள்,
நன்மணல் வியலிடை நடந்த
சின்மெல் ஒதுக்கின், மாஅ யோளே?
14
175 வீங்கு விளிம்பு உரீஇய விசைஅமை நோன்சிலை
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
விடுதொறும் விளிக்கும் செவ்வாய் வாளி
ஆறுசெல் வம்பலர் உயிர்செலப் பெயர்ப்பின்,
பாறுகிளை பயிர்ந்து படுமுடை கவரும்
5
வெஞ்சுரம் இறந்த காதலர் நெஞ்சுஉணர
அரிய வஞ்சினம் சொல்லியும் பல்மாண்
தெரிவளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து
வருதும்' என்றனர் அன்றே - தோழி !-
கால்இயல் நெடுந்தேர்க் கைவண் செழியன்
10
ஆலங் கானத்து அமர்கடந்து உயர்த்த
வேலினும் பல்ஊழ் மின்னி, முரசு என
மாஇரு விசும்பிற் கடிஇடி பயிற்றி,
நேர்கதிர் நிறைத்த நேமியம் செல்வன்
போர்அடங்கு அகலம் பொருந்திய தார்போல்
15
திருவில் தேஎத்துக் குலைஇ, உருகெழு
மண்பயம் பூப்பப் பாஅய்த்,
தண்பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே!
18
176 கடல்கண் டன்ன கண்அகன் பரப்பின்
நிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கின்
கழைகண் டன்ன தூம்புடைத் திரள்கால்,
களிற்றுச்செவி அன்ன பாசடை மருங்கில்,
கழுநிவந் தன்ன கொழுமுகை இடைஇடை
5
முறுவல் முகத்தின் பன்மலர் தயங்கப்,
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து,
வேப்புநனை அன்ன நெடுங்கண் நீர்ஞெண்டு
இரைதேர் வெண்குருகு அஞ்சி, அயலது
ஒலித்த பகன்றை இருஞ்சேற்று அள்ளல்
10
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன்
நீர்மலி மண்அளைச் செறியும் ஊர!
மனைநகு வயலை மரன்இவர் கொழுங்கொடி
அரிமலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ,
விழவுஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து,
15
மலர்ஏர் உண்கண் மாண்இழை முன்கைக்
குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தது
உடன்றனள் போலும், நின் காதலி?' எம்போல்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து,
நெல்லுடை நெடுநகர் நின்னின்று உறைய,
20
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து
எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி,
அடித்தென உருத்த தித்திப் பல்ஊழ்
நொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு,
கூர்நுனை மழுகிய எயிற்றள்
ஊர்முழுது நுவலும்நிற் காணிய சென்மே.
26
177 'தொன்னலம் சிதையச் சாஅய், அல்கலும்
இன்னும் வாரார்: இனி எவன் செய்கு? எனப்,
பெரும்புலம் புறுதல் ஓம்புமதி - சிறுகண்
இரும்பிடித் தடக்கை மான, நெய்அருந்து
ஒருங்குபிணித்து இயன்ற நெறிகொள் ஐம்பால்
5
தேம்கமழ் வெறிமலர் பெய்ம்மார், காண்பின்
கழைஅமல் சிலம்பின் வழைதலை வாடக்
கதிர்கதம் கற்ற ஏகல் நெறியிடைப்,
பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக்,
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை
10
அயிரியாற்று அடைகரை வயிரின் நரலும்
காடுஇறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்
வல்லே வருவர் போலும் - வென்வேல்
இலைநிறம் பெயர ஓச்சி, மாற்றோர்
மலைமருள் யானை மண்டுஅமர் ஒழித்த
15
கழற்கால் பண்ணன் காவிரி வடவயின்
நிழற்கயம் தழீஇய நெடுங்கால் மாவின்
தளிர்ஏர் ஆகம் தகைபெற முகைந்த
அணங்குடை வனமுலைத் தாஅய நின்
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே.
20
178 வயிரத் தன்ன வைஏந்து மருப்பின்,
வெதிர்வேர் அன்ன பரூஉமயிர்ப் பன்றி
பறைக்கண் அன்ன நிறைச்சுனை பருகி,
நீலத் தன்ன அகல்இலைச் சேம்பின்
பிண்டம் அன்ன கொழுங்கிழங்கு மாந்தி,
5
பிடிமடிந் தன்ன கல்மிசை ஊழ் இழிபு,
யாறுசேர்ந் தன்ன ஊறுநீர்ப் படாஅர்ப்
பைம்புதல் நளிசினைக் குருகுஇருந் தன்ன,
வண்பிணி அவிழ்ந்த வெண்கூ தாளத்து
அலங்குகுலை அலரி தீண்டித், தாது உக,
10
பொன்உரை கட்டளை கடுப்பக் காண்வரக்,
கிளைஅமல் சிறுதினை விளைகுரல் மேய்ந்து
கண்இனிது படுக்கும் நன்மலை நாடனொடு
உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின்தோட்
பணைக்கவின் அழியாது துணைப்புணர்ந்து, என்றும்,
15
தவல்இல் உலகத்து உறைஇயரோ - தோழி -
எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக்
கொண்டல் வான்மழை பொழிந்த வைகறைத்
தண்பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது' எனக்,
கனவிலும் பிரிவு அறியலனே: அதன்தலை
20
முன்தான் கண்ட ஞான்றினும்
பின்பெரிது அளிக்கும், தன் பண்பினானே.
22
179 விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்,
வெண்தேர் ஓடும் கடம்கால் மருங்கில்,
துனைஎரி பரந்த துன்அரும் வியன்காட்டுச்,
சிறுகண் யானை நெடுங்கை நீட்டி
வான்வாய் திறந்தும் வண்புனல் பெறாஅது,
5
கான்புலந்து கழியும் கண் அகன் பரப்பின்
விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர்
நல்நிலை பொறித்த கல்நிலை அதர,
அரம்புகொள் பூசல் களையுநர்க் காணாச்
சுரம்செல விரும்பினிர் ஆயின் - இன் நகை,
10
முருந்துஎனத் திரண்ட முள்எயிற்றுத் துவர்வாய்,
குவளை நாண்மலர் புரையும் உண்கண், இம்
மதிஏர் வாள்நுதல் புலம்ப,
பதிபெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே?
14
180 நகைநனி உடைத்தால் - தோழி ! தகைமிக,
கோதை ஆயமொடு குவவுமணல் ஏறி,
வீததை கானல் வண்டல் அயர,
கதழ்பரித் திண்தேர் கடைஇ வந்து,
தண்கயத்து அமன்ற ஒண்பூங் குவளை
5
அரும்புஅலைத்து இயற்றிய சுரும்புஆர் கண்ணி
பின்னுப்புறம் தாழக் கொன்னே சூட்டி,
நல்வரல் இளமுலை நோக்கி, நெடிது நினைந்து,
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே
புலவுநாறு இருங்கழி துழைஇப் பலஉடன்
10
புள்இறை கொண்ட முள்ளுடை நெடுந்தோட்டுத்
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇப்
படப்பை நின்ற முடத்தாட் புன்னைப்
பொன்நேர் நுண்தாது நோக்கி,
என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே.
15
181 துன்அருங் கானமும் துணிதல் ஆற்றாய்,
பின்நின்று பெயரச் சூழ்ந்தனை ஆயின்,
என்நிலை உரைமோ - நெஞ்சே!- ஒன்னார்
ஓம்பரண் கடந்த வீங்குபெருந் தானை
அடுபோர் மிஞிலி செருவேல் கடைஇ,
5
முருகுறழ் முன்பொடு பொருதுகளம் சிவப்ப,
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
ஒண்கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு
விசும்பிடை தூரஆடி, மொசிந்து உடன்,
10
பூவிரி அகன்துறைக் கணைவிசைக் கடுநீர்க்
காவிரிப் பேர்யாற்று அயிர்கொண்டு ஈண்டி,
எக்கர் இட்ட குப்பை வெண்மணல்
வைப்பின் யாணர் வளம்கெழு வேந்தர்
ஞாலம் நாறும் நலம்கெழு நல்இசை,
15
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்,
ஆல முற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில்மனை மகளிர்
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
மகர நெற்றி வான்தோய் புரிசைச்
20
சிகரம் தோன்றாச் சேண்உயர் நல்இல்
புகாஅர் நல்நாட் டதுவே - பகாஅர்
பண்டம் நாறும் வண்டுஅடர் ஐம்பால்,
பணைத்தகைத் தடைஇய காண்புஇன் மென்தோள்,
அணங்குசால், அரிவை இருந்த
மணம்கமழ் மறுகின் மணற்பெருங் குன்றே. .
26
182 பூங்கண் வேங்கைப் பொன்னிணர் மிலைந்து,
வாங்கமை நோன்சிலை எருத்தத்து இரீஇ,
தீம்பழப் பலவின் சுளைவிளை தேறல்
வீளைஅம்பின் இளையரொடு மாந்தி,
ஓட்டியல் பிழையா வயநாய் பிற்பட,
5
வேட்டம் போகிய குறவன் காட்ட
குளவித் தண்புதல் குருதியொடு துயல்வர,
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாடே!
அரவுஎறி உருமோடு ஒன்றிக் கால்வீழ்த்து
உரவுமழை பொழிந்த பானாட் கங்குல்,
10
தனியை வந்த ஆறுநினைந்து அல்கலும்,
பனியொடுகலுழும் இவள் கண்ணே: அதனால்,
கடும்பகல் வருதல் வேண்டும் - தெய்ய
அதிர்குரல் முதுகலை கறிமுறி முனைஇ,
உயர்சிமை நெடுங்கோட்டு உகள, உக்க
15
கமழ்இதழ் அலரி தாஅய் வேலன்
வெறிஅயர் வியன்களம் கடுக்கும்
பெருவரை நண்ணிய சார லானே.
18
183 'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்
திதலை அல்குல் அவ்வரி வாடவும்,
அத்தம்ஆர் அழுவம் நத்துறந்து அருளார்
சென்றுசேண் இடையர் ஆயினும், நன்றும்
நீடலர், என்றி - தோழி !- பாடுஆன்று
5
பனித்துறைப் பெருங்கடல் இறந்து, நீர் பருகி,
குவவுத்திரை அருந்து கொள்ளைய குடக்குஏர்பு,
வயவுப்பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி
இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி
காலை வந்தன்றால் காரே - மாலைக்
10
குளிர்கொள் பிடவின் கூர்முகை அலரி
வண்டுவாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர்அற் சிரத்து ஊதை தூற்ற,
பனிஅலைக் கலங்கிய நெஞ்சமொடு
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே?
15
184 கடவுட் கற்பொடு குடிக்குவிளக்கு ஆகிய
புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்
நன்ன ராட்டிக்கு அன்றியும், எனக்கும்
இனிதுஆ கின்றால், சிறக்க, நின் ஆயுள்!
அருந்தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு
5
சுரும்புஇமிர் மலர கானம் பிற்பட
வெண்பிடவு அவிழ்ந்த வீகமழ் புறவில்
குண்டைக் கோட்ட குறுமுள் கள்ளிப்
புன்தலை புதைத்த கொழுங்கொடி முல்லை
ஆர்கழல் புதுப்பூ உயிர்ப்பின் நீக்கித்,
10
தெள்அறல் பருகிய திரிமருப்பு எழிற்கலை
புள்ளிஅம் பிணையொடு வதியும் ஆங்கண்,
கோடுடைக் கையர், துளர்எறி வினைஞர்,
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்கச்,
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச்
15
செக்கர் வானம் சென்ற பொழுதில்,
கற்பால் அருவியின் ஒலிக்கும் நற்றேர்த்
தார்மணி பலஉடன் இயம்ப-
சீர்மிகு குருசில்!- நீ வந்துநின் றதுவே.
19
185 எல்வளை ஞெகிழச் சாஅய், ஆய்இழை
நல்எழிற் பணைத்தோள் இருங்கவின் அழிய,
பெருங்கை யற்ற நெஞ்சமொடு நத்துறந்து,
இரும்பின் இன்உயிர் உடையோர் போல,
வலித்து வல்லினர், காதலர்: வாடல்
5
ஒலிகழை நிவந்த நெல்லுடை நெடுவெதிர்
கலிகொள் மள்ளர் வில்விசையின் உடைய,
பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண், வான்உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்
10
பெருவிழா விளக்கம் போலப், பலவுடன்
இலைஇல மலர்ந்த இலவமொடு
நிலையுயர் பிறங்கல் மலைஇறந் தோரே.
13
186 வானம் வேண்டா வறனில் வாழ்க்கை
நோன்ஞாண் வினைஞர் கோளறிந்து ஈர்க்கும்
மீன்முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
நீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகலிலை
இருங்கயம் துளங்கக், கால்உறு தொறும்
5
பெருங்களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு
எழுந்த கௌவையோ பெரிதே: நட்பே,
கொழுங்கோல் வேழத்துப் புணைதுணை யாகப்
புனல்ஆடு கேண்மை அனைத்தே; அவனே,
ஒண்தொடி மகளிர் பண்டையாழ் பாட,
10
ஈர்ந்தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
தண்நறுஞ் சாந்தம் கமழும் தோள்மணந்து,
இன்னும் பிறள்வயி னானே: மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப, வென்வேல்
மாரி அம்பின், மழைத்தோற் பழையன்
15
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
செறிவளை உடைத்தலோ இலனே: உரிதினின்
யாம்தன் பகையேம் அல்லேம்; சேர்ந்தோர்
திருநுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும், தன் உடன்உறை பகையே.
20
187 தோள்புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு
நாள்பல நீடிய கரந்துஉறை புணர்ச்சி
நாண் உடைமையின் நீங்கிச், சேய்நாட்டு
அரும்பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி,
நம் உயர்வு உள்ளினர் காதலர் - கறுத்தோர் .
5
தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி,
வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன,
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்
புலம்புறும் கொல்லோ - தோழி !- சேண்ஓங்கு
10
அலந்தலை ஞெமையத்து ஆள்இல் ஆங்கண்,
கல்சேர்பு இருந்த சில்குடிப் பாக்கத்து,
எல்விருந்து அயர, ஏமத்து அல்கி,
மனைஉறை கோழி அணல்தாழ்பு அன்ன
கவைஒண் தளிர கருங்கால் யாஅத்து
15
வேனில் வெற்பின் கானம் காய,
முனைஎழுந்து ஓடிய கெடுநாட்டு ஆர்இடை,
பனைவெளிறு அருந்து பைங்கண் யானை
ஒண்சுடர் முதிரா இளங்கதிர் அமையத்து,
கண்படு பாயல் கைஒடுங்கு அசைநிலை
20
வாள்வாய்ச் சுறவின் பனித்துறை நீந்தி,
நாள்வேட்டு எழுந்த நயன்இல் பரதவர்
வைகுகடல் அம்பியின் தோன்றும்
மைபடு மாமலை விலங்கிய சுரனே?
24
188 பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ!
இருண்டுஉயர் விசும்பின் வலன்ஏர்பு வளைஇப்,
போர்ப்புஉறு முரசின் இரங்கி, முறைபுரிந்து
அறன்நெறி பிழையாத் திறன்அறி மன்னர்
அருஞ்சமத்து எதிர்ந்த பெருஞ்செய் ஆடவர்
5
கழித்துஎறி வாளின், நளிப்பன விளங்கும்
மின்னுடைக் கருவியை ஆகி, நாளும்
கொன்னே செய்தியோ, அரவம்? பொன்னென
மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சிப்,
பொலிந்த ஆயமொடு காண்தக இயலித்,
10
தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும்,
அழலேர் செயலை அம்தழை அசைஇயும்,
குறமகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ? வாழிய, மழையே!
14
189 பசும்பழப் பலவின் கானம் வெம்பி,
விசும்புகண் அழிய, வேனில் நீடிக்,
கயம்கண் அற்ற கல்லோங்கு வைப்பின்
நாறுஉயிர் மடப்பிடி தழீஇ, வேறுநாட்டு
விழவுப்படர் மள்ளரின் முழவெடுத்து உயரிக்,
5
களிறுஅதர்ப் படுத்த கல்லுயர் 'கவாஅன்
வெவ்வரை அத்தம் சுட்டிப்' பையென,
வயல்அம் பிணையல் வார்ந்த கவாஅன்
திதலை அல்குல் குறுமகள் அவனொடு
சென்று பிறள் ஆகிய அளவை, என்றும்
10
படர்மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ,
மனைமருண்டு இருந்த என்னினும், நனைமகிழ்
நன்ன ராளர் கூடுகொள் இன்னியம்
தேர்ஊர் தெருவில் ததும்பும்
ஊர்இழந் தன்று, தன் வீழ்வுஉறு பொருளே.
15
190 திரைஉழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு
உப்பின் குப்பை ஏறி எற்பட,
வருதிமில் எண்ணும் துறைவனொடு, ஊரே
ஒருதன் கொடுமையின் அலர்பா டும்மே;
அலமரல் மழைக்கண் அமர்ந்து நோக்காள்;
5
அலையல் - வாழி ! வேண்டு, அன்னை!- உயர்சிமைப்
பொதும்பில், புன்னைச் சினைசேர்பு இருந்த
வம்ப நாரை இரிய, ஒருநாள்,
பொங்குவரல் ஊதையொடு புணரி அலைப்பவும்,
உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை
10
இருங்கழி புகாஅர் பொருந்தத் தாக்கி
வயச்சுறா எறிந்தென: வலவன் அழிப்ப,
எழிற்பயம் குன்றிய சிறைஅழி தொழில
நிரைமணிப் புரவி விரைநடை தவிர,
இழுமென் கானல் விழுமணல் அசைஇ,
15
ஆய்ந்த பரியன் வந்து, இவண்
மான்ற மாலைச் சேர்ந்தன்றே இலனே!
17
191 அத்தப் பாதிரித் துய்த்தலைப் புதுவீ
எரிஇதழ் அலரியொடு இடைப்பட விரைஇ,
வண்தோட்டுத் தொடுத்த வண்டுபடு கண்ணி,
தோல்புதை சிரற்றுஅடிக், கோலுடை உமணர்
ஊர்கண் டன்ன ஆரம் வாங்கி,
5
அருஞ்சுரம் இவர்ந்த அசைவுஇல் நோன்தாள்
திருந்துபகட்டு இயம்பும் கொடுமணி, புரிந்துஅவர்
மடிவிடு வீளையொடு, கடிதுஎதிர் ஓடி,
ஓமைஅம் பெருங்காட்டு வரூஉம் வம்பலர்க்கு
ஏமம் செப்பும் என்றூழ் நீள்இடை,
10
அரும்பொருள் நசைஇப், பிரிந்துஉறை வல்லி
சென்று: வினை எண்ணுதி ஆயின், நன்று,
உரைத்திசின் வாழி - என் நெஞ்சே!- நிரைமுகை
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி,
அறல்என விரிந்த உறல்இன் சாயல்
15
ஒலிஇருங் கூந்தல் தேறும்' என,
வலிய கூறவும் வல்லையோ, மற்றே?
17
192 மதிஇருப் பன்ன மாசுஅறு சுடர்நுதல்
பொன்நேர் வண்ணம் கொண்டன்று: அன்னோ?
யாங்குஆ குவள்கொல் தானே? விசும்பின்
எய்யா வரிவில் அன்ன பைந்தார்ச்,
செவ்வாய்ச், சிறுகிளி சிதைய வாங்கி,
5
பொறைமெலிந் திட்ட புன்புறப் பெருங்குரல்
வளைசிறை வாரணம் கிளையொடு கவர,
ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள்
வந்து அளிக்குவை எனினே மால்வரை
மைபடு விடரகம் துழைஇ, ஒய்யென
10
அருவிதந்த, அரவுஉமிழ், திருமணி
பெருவரைச் சிறுகுடி மறுகுவிளக் குறுத்தலின்
இரவும் இழந்தனள்: அளியள்- உரவுப்பெயல்
உருமிறை கொண்ட உயர்சிமைப்
பெருமலை நாட - நின் மலர்ந்த மார்பே.
15
193 கானுயர் மருங்கில் கவலை அல்லது,
வானம் வேண்டா வில்லேர் உழவர்
பெருநாள் வேட்டம், கிளைஎழ வாய்த்த
பொருகளத்து ஒழிந்த குருதிச் செவ்வாய்ப்,
பொறித்த போலும் வால்நிற எருத்தின்:
5
அணிந்த போலும் செஞ்செவி, எருவை:
குறும்பொறை எழுந்த நெடுந்தாள் யாஅத்து
அருங்கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட,
விரைந்துவாய் வழுக்கிய கொழுங்கண் ஊன்தடி
கொல்பசி முதுநரி வல்சி ஆகும்
10
சுரன்நமக்கு எளிய மன்னே; நல்மனைப்
பன்மாண் தங்கிய சாயல், இன்மொழி,
முருந்தேர் முறுவல், இளையோள்
பெருந்தோள் இன்துயில் கைவிடு கலனே.
14
194 பேர்உறை தலைஇய பெரும்புலர் வகைறை,
ஏர்இடம் படுத்த இருமறுப் பூழிப்
புறமாறு பெற்ற பூவல் ஈரத்து,
ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்,
வித்திய மருங்கின் விதைபல நாறி,
5
இரலைநல் மானினம் பரந்தவை போலக்,
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்,
கறங்குபறை சீரின் இரங்க வாங்கி,
களைகால் கழீஇய பெரும்புன வரகின்
கவைக்கதிர் இரும்புறம் கதூஉ உண்ட,
10
குடுமி நெற்றி நெடுமாத் தோகை
காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
கொல்லை உழவர் கூழ்நிழல் ஒழித்த
வல்லிலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,
கிளிகடி மகளிரின் விளிபடப் பயிரும்
15
கார்மன் இதுவால் - தோழி !- 'போர்மிகக்
கொடுஞ்சி நெடுந்தேர் பூண்ட, கடும்பரி,
விரிஉளை, நல்மான் கடைஇ
வருதும்' என்று, அவர் தெளித்த போழ்தே.
19
195 'அருஞ்சுரம் இறந்தஎன் பெருத்தோட் குறுமகள்
திருந்துவேல் விடலையொடு வரும்' எனத் தாயே
புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி,
மனைமணல் அடுத்து, மாலை நாற்றி,
உவந்து, இனிது அயரும் என்ப: யானும்,
5
மான்பிணை நோக்கின் மடநல் லாளை
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்
இன்னகை முறுவல் ஏழையைப் பல்நாள்,
கூந்தல் வாரி: நுசுப்புஇவர்ந்து, ஓம்பிய
நலம்புனை உதவியோ உடையன் மன்னே:
10
அஃது அறி கிற்பினோ நன்றுமன் தில்ல,
அறுவை தோயும் ஒருபெருங் குடுமி,
சிறுபை நாற்றிய பல்தலைக் கொடுங்கோல்,
ஆகுவது அறியும் முதுவாய், வேல!
கூறுக மாதோ, நின் கழங்கின் திட்பம்;
15
மாறா வருபனி கலுழும் கங்குலில்,
ஆனாது துயருமெம் கண்இனிது படீஇயர்
எம்மனை முந்துறத் தருமோ?
தன்மனை உய்க்குமோ? யாதவன் குறிப்பே?
19
196 நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி பாக்கத்து,
நாள்துறைப் பட்ட மோட்டிரு வராஅல்
துடிக்கண் கொழுங்குறை நொடுத்து, உண்டுஆடி
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி
ஆம்பல் அகலிலை, அமலைவெஞ் சோறு
5
தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து,
விடியல் வைகறை இடூஉம் ஊர!
தொடுகலம்: குறுக வாரல் - தந்தை
கண்கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண்போகிய,
10
கடுந்தேர்த் திதியன் அழுந்தை, கொடுங்குழை
அன்னி மிஞிலியின் இயலும்
நின்நலத் தகுவியை முயங்கிய மார்பே!
13
197 மாமலர் வண்ணம் இழந்த கண்ணும்,
பூநெகிழ் அணையின் சாஅய தோளும்
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த
தொன்னலம் இழந்த துயரமொடு, என்னதூஉம்
இனையல் - வாழி; தோழி !- முனை எழ
5
முன்னுவர் ஓட்டிய முரண்மிகு திருவின்,
மறமிகு தானைக், கண்ணன் எழினி
தேமுது குன்றம் இறந்தனர் ஆயினும்,
நீடலர் யாழநின் நிரைவளை நெகிழத்-
தோள்தாழ்வு இருளிய குவைஇருங் கூந்தல்
10
மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
புன்தலைப் புதல்வன் ஊர்புஇழிந் தாங்கு,
கடுஞ்சூல் மடப்பிடி தழீஇய வெண்கோட்டு
இனம்சால் வேழம், கன்றுஊர்பு இழிதரப்,
பள்ளி கொள்ளும் பனிச்சுரம் நீந்தி,
15
ஒள்ளிணர்க் கொன்றை ஓங்குமலை அத்தம்
வினைவலி யுறூஉம் நெஞ்சமொடு
இனையர்ஆகி, நம் பிரிந்திசி னோரே.
18
198 'கூறுவம் கொல்லோ? கூறலம் கொல்?' எனக்
கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது,
நயந்துநாம் விட்ட நல்மொழி நம்பி,
அரைநாள் யாமத்து விழுமழை கரந்து,
கார்விரை கமழும் கூந்தல், தூவினை
5
நுண்நூல் ஆகம் பொருந்தினன், வெற்பின்
இளமழை சூழ்ந்த மடமயில் போல,
வண்டுவழிப் படரத், தண்மலர் மேய்ந்து,
வில்வகுப் புற்ற நல்வாங்கு குடைச்சூல்
அஞ்சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து,
10
துஞ்சுஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள்,
ஆன்ற கற்பின் சான்ற பெரியள்,
அம்மா அரிவையோ அல்லள்: தெனாஅது
ஆஅய் நல்நாட்டு அணங்குடைச் சிலம்பிற்,
கவிரம் பெயரிய உருகெழு கவாஅன்,
15
ஏர்மலர் நிறைசுனை உறையும்
சூர்மகள் மாதோ என்னும்- என் நெஞ்சே!
17
199 கரைபாய் வெண்திரை கடுப்பப், பலஉடன்,
நிரைகால் ஒற்றலின், கல்சேர்பு உதிரும்
வரைசேர் மராஅத்து ஊர்மலர் பெயல் செத்து,
உயங்கல் யானை நீர்நசைக்கு அலமரச்,
சிலம்பி வலந்த வறுஞ்சினை வற்றல்
5
அலங்கல் உலவை அரிநிழல் அசைஇத்,
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை,
அரம்தின் ஊசித் திரள்நுதி அன்ன,
திண்ணிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்:
வளிமுனைப் பூளையன் ஒய்யென்று அலறிய
10
கெடுமான் இனநிரை தரீஇய கலையே
கதிர்மாய் மாலை ஆண்குரல் விளிக்கும்
கடல்போற் கானம் பிற்படப், 'பிறர்போல்
செல்வேம்ஆயின், எம் செலவுநன்று' என்னும்
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப,
15
நீ செலற்கு உரியை - நெஞ்சே!- வேய்போல்
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட,
பெருந்தோள் அரிவை ஒழியக், குடாஅது,
இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்,
பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய,
20
வலம்படு கொற்றம் தந்த வாய்வாள்,
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
இழந்த நாடு தந்தன்ன
வளம்பெரிது பெறினும், வாரலென் யானே.
24
200 நிலாவின் இலங்கு மணல்மலி மறுகில்,
புலால்அம் சேரிப், புல்வேய் குரம்பை,
ஊர்என உணராச் சிறுமையொடு, நீர்உடுத்து,
இன்னா உறையுட்டு ஆயினும், இன்பம்
ஒருநாள் உறைந்திசி னோர்க்கும், வழிநாள்,
5
தம்பதி மறக்கும் பண்பின் எம்பதி
வந்தனை சென்மோ - வளைமேய் பரப்ப!-
பொம்மற் படுதிரை கம்மென உடைதரும்
மரன்ஓங்கு ஒருசிறை பல பாராட்டி,
எல்லை எம்மொடு கழிப்பி, எல்உற,
10
நல்தேர் பூட்டலும் உரியீர்: அற்றன்று,
சேந்தனிர் செல்குவிர் ஆயின், யாமும்
எம்வரை அளவையின் பெட்குவம்
நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே.-
14
201 அம்ம, வாழி - தோழி - பொன்னின்
அவிர்எழில் நுடங்கும் அணிகிளர் ஓடை
வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன்
புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை,
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து,
5
தழைஅணிப் பொலிந்த கோடுஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனித்துறைப் பரவ,
பகலோன் மறைந்த அந்தி ஆர்இடை,
உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு,
அலரும் மன்று பட்டன்றே: அன்னையும்
10
பொருந்தா கண்ணள். வெய்ய உயிர்க்கும்' என்று
எவன் கையற்றனை, இகுளை? சோழர்
வெண்ணெல் வைப்பின் நல்நாடு பெறினும்,
ஆண்டு அமைந்து உறைகுநர் அல்லர்- முனா அது
வான்புகு தலைய குன்றத்து கவாஅன்,
15
பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை
இருள்துணிந் தன்ன குவவுமயிர்க் குருளைத்
தோல்முலைப் பிணவொடு திளைக்கும்
வேனில் நீடிய சுரன் இறந்தோரே.
19
202 வயங்குவெள் அருவிய குன்றத்துக் கவாஅன்,
கயந்தலை மடப்பிடி இனன் ஏமார்ப்பப்,
புலிப்பகை வென்ற புண்கூர் யானை
கல்லகச் சிலம்பில் கைஎடுத்து உயிர்ப்பின்,
நல்இணர் வேங்கை நறுவீ கொல்லன்
5
குருகுஊது மிதிஉலைப் பிதிர்வின் பொங்கி,
சிறுபல் மின்மினி போலப், பலஉடன்
மணிநிற இரும்புதல் தாவும் நாட!
யாமே அன்றியும் உளர்கொல் - பானாள்,
உத்தி அரவின் பைத்தலை துமிய
10
உரஉரும் உட்குவரு நனந்தலைத்,
தவிர்வுஇல் உள்ளமொடு எஃகு துணையாகக்,
கனைஇருள் பரந்த கல்லதர்ச் சிறுநெறி
தேராது வரூஉம் நின்வயின்
ஆர்அஞர் அரும்படர் நீந்து வோரே?
15
203 'உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்,
யாய் அறிந்து உணர்க' என்னார், தீ வாய்
அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர்,
'இன்னள் இனையள், நின்மகள்' எனப் பல்நாள்
எனக்கு வந்து உரைப்பவும், தனக்குஉரைப்பு அறியேன்,
5
'நாணுவள் இவள்' என, நனிகரந்து உறையும்
யான்இவ் வறுமனை ஒழிய, தானே,
'அன்னை அறியின், இவணுறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல்' எனக், கழற்கால்
மின்னொளிர் நெடுவேல் இளையோன் முன்னுறப்,
10
பன்மலை அருஞ்சுரம் போகிய தனக்கு, யான்
அன்னேன் அன்மை நன்வாய் யாக,
மான்அதர் மயங்கிய மலைமுதல் சிறுநெறி
வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப்
புல்லென் மாமலைப் புலம்புகொள் சீறூர்
15
செல்விருந்து ஆற்றித், துச்சில் இருத்த,
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனைகெழு பெண்டுயான் ஆகுக மன்னே!
18
204 உலகுடன் நிழற்றிய தொலையா வெண்குடைக்,
கடல்போல் தானைக், கலிமா வழுதி
வென்றுஅமர் உழந்த வியன்பெரும் பாசறைச்
சென்றுவினை முடித்தனம் ஆயின், இன்றே
கார்ப்பெயற்கு எதிரிய காண்தகு புறவில்,
5
கணங்கொள் வண்டின் அம்சிறைத் தொழுதி
மணங்கமழ் முல்லை மாலை ஆர்ப்ப,
உதுக்காண் வந்தன்று பொழுதே: வல்விரைந்து,
செல்க, பாக! நின் நல்வினை நெடுந்தேர்-
வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை
10
பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும்
காய்நெல் படப்பை வாணன் சிறுகுடித்
தண்டலை கமழும் கூந்தல,
ஒண்தொடி மடந்தை தோள்இணை பெறவே.
14
205 'உயிர்கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின்
செயிர்தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போலத்,
தையல்! நின்வயின் பிரியலம் யாம்' எனப்
பொய்வல் உள்ளமொடு புரிவுஉணக் கூறி,
துணிவில் கொள்கையர் ஆகி, இனியே
5
நோய்மலி வருத்தமொடு நுதல்பசப் பூர
நாம்அழத் துறந்தனர் ஆயினும், தாமே
வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை
வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி,
நிலங்கொள வெஃகிய பொலம்பூண் கிள்ளி,
10
பூவிரி நெடுங்கழி நாப்பண், பெரும்பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன
செழுநகர் நல்விருந்து அயர்மார், ஏமுற
விழுநிதி எளிதினின் எய்துக தில்ல-
மழைகால் அற்சிரத்து மாலிருள் நீக்கி,
15
நீடுஅமை நிவந்த நிழல்படு சிலம்பில்;
கடாஅ யானைக் கவுள்மருங்கு உதிர
ஆம்ஊர்பு இழிதரு காமர் சென்னி,
புலிஉரி வரியதள் கடுப்பக், கலிசிறந்து,
நாட்பூ வேங்கை நறுமலர் உதிர,
20
மேக்குஎழு பெருஞ்சினை ஏறிக் கணக்கலை
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறுநெறிக்
கல்பிறங்கு ஆரிடை விலங்கிய
சொல்பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே.
24
206 என்னெனப் படுங்கொல்- தோழி !- நல்மகிழ்ப்
பேடிப் பெண்கொண்டு! ஆடுகை கடுப்ப
நகுவரப் பணைத்த திரிமருப்பு எருமை
மயிர்க்கவின் கொண்ட மாத்தோல் இரும்புறம்,
சிறுதொழில் மகாஅர் ஏறிச், சேணோர்க்குத்
5
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்,
மாரி ஈங்கை மாந்தளிர் அன்ன
அம்மா மேனி, ஆயிழை, மகளிர்
ஆரந் தாங்கிய அலர்முலை ஆகத்து
ஆராக் காதலொடு தாரிடை குழைய,
10
முழவுமுகம் புலரா விழவுடை வியனகர்
வதுவை மேவலன் ஆகலின், அதுபுலந்து
அடுபோர் வேளிர் வீரை முன்றுறை,
நெடுவெள் உப்பின் நிரம்பாக் குப்பை,
பெரும் பெயற்கு உருகி யா அங்குத்
திருந்திழை நெகிழ்ந்தன, தடமென் தோளே!
16
207 அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்குதிறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம்
குடபுல மருங்கின் உய்ம்மார், புள்ளோர்த்துப்
படைஅமைத்து எழுந்த பெருஞ்செய் ஆடவர்
நிரைப்பரம் பொறைய நரைப்புற கழுதைக்
5
குறைக்குளம்பு உதைத்த கற்பிறழ் இயவின்,
வெஞ்சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை,
மிஞிறுஆர் கடாஅம் கரந்துவிடு கவுள,
வெயில்தின வருந்திய, நீடுமருப்பு ஒருத்தல்
பிணரழி பெருங்கை புரண்ட கூவல்
10
தெண்கண் உவரிக் குறைக்குட முகவை,
அறனிலாளன் தோண்ட, வெய் துயிர்த்துப்,
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள் கொல்லோ-
தேம்கலந்து அளைஇய தீம்பால் ஏந்திக்
கூழை உளர்ந்து மொழிமை கூறவும்,
15
மறுத்த சொல்லள் ஆகி,
வெறுத்த உள்ளமொடு உண்ணா தோளே!
17
208 யாம இரவின் நெடுங்கடை நின்று,
தேமுதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண்கோல் அகவுநர் வேண்டின், வெண்கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண்மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,
5
அளிஇயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து,
ஒள்வாள் மயங்குஅமர் வீழ்ந்தெனப், 'புள்ஒருங்கு
அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
10
ஒண்கதிர் தெறாமை சிறகரிற் கோலி,
நிழல்செய்து உழறல் காணேன், யான் எனப்
படுகளம் காண்டல் செல்லான், சினஞ் சிறந்து,
உருவினை நன்னன், அருளான் கரப்பப்,
பெருவிதுப் புற்ற பல்வேள் மகளிர்
15
குரூஉப்பூம் பைந்தார் அருக்கிய பூசல்,
வசைவிடக் கடக்கும் வயங்குபெருந் தானை
அகுதை கிளைதந் தாங்கு, மிகுபெயல்
உப்புச்சிறை நில்லா வெள்ளம் போல,
நாணுவரை நில்லாக் காமம் நண்ணி
20
நல்கினள், வாழியர், வந்தே- ஓரி
பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லிக்
கார்மலர் கடுப்ப நாறும்,
ஓர்நுண் ஓதி மாஅ யோளே!
24
209 'தோளும் தொல்கவின் தொலைந்தன; நாளும்
அன்னையும் அருந்துயர் உற்றனள், அலரே,
பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் கோமான்,
எழுஉறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன்,
நேரா எழுவர் அடிப்படக் கடந்த
5
ஆலங் கானத்து ஆர்ப்பினும் பெரிது என,
ஆழல் வாழி, தோழி !- அவரரே,
மாஅல் யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்
அறைஇறந்து அகன்றனர் ஆயினும், நிறைஇறந்து
10
உள்ளார் ஆதலோ அரிதே - செவ்வேல்
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி,
15
நிலைபெறு கடவுள் ஆக்கிய,
பலர்புகழ் பாவை அன்னநின் நலனே.
17
210 குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்
எறியுளி பொருத ஏமுறு பெருமீன்
புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட
விசும்பணி வில்லின் போகி, பசும்பிசிர்த்
திரைபயில் அழுவம் உழக்கி, உரனழிந்து,
5
நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன்,
பானாள் இரவில்நம், பணைத்தோள் உள்ளி,
தானிவண் வந்த காலை, நம்ஊர்க்
கானலம் பெருந்துறைக் கவின்பா ராட்டி,
ஆனாது புகழ்ந்திசி னோனே; இனித்தன்,
10
சாயல் மார்பின் பாயல் மாற்றிக்,
'கைதைஅம் படுசினைக் கடுந்தேர் விலங்கச்
செலவுஅரிது என்னும்' என்பது
பலகேட் டனமால் - தோழி !- நாமே
14
211 கேளாய், எல்ல! தோழி - வாலிய
சுதைவிரிந் தன்ன பல்பூ மராஅம்
பறைகண் டன்ன பாவடி நோன்தாள்
திண்நிலை மருப்பின் வயக்களிறு உரிஞுதொறும்,
தண்மழை ஆலியின் தாஅய், உழவர்
5
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்,
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்-
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெருநிரை
பிடிபடு பூசலின் எய்தாது ஒழியக்,
10
கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி,
நெடுஞ்சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல்லெறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
மத்தி நாட்டிய கல்கெழுப் பனித்துறை,
15
நீர்ஒலித் தன்ன பேஎர்
அலர்நமக்கு ஒழிய, அழப்பிரிந் தோரே.
17
212 தாஇல் நன்பொன் தைஇய பாவை
விண்தவழ் இளவெயிற் கொண்டுநின் றன்ன,
மிகுகவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால்,
கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற
முளைஓ ரன்ன மின்எயிற்றுத் துவர் வாய்,
5
நயவன் தைவரும் செவ்வழி நல்யாழ்
இசைஓர்த் தன்ன இன்தீங் கிளவி,
அணங்குசால் அரிவையை நசைஇப், பெருங்களிற்று
இனம்படி நீரின் கலங்கிய பொழுதில்,
பெறலருங் குரையள் என்னாய், வைகலும்,
10
இன்னா அருஞ்சுரம் நீந்தி, நீயே
என்னை இன்னற் படுத்தனை; மின்னுவசிபு
உரவுக்கார் கடுப்ப மறலி மைந்துற்று,
விரவுமொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ,
படைநிலா இலங்கும் கடல்மருள் தானை
15
மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன்
பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்து,
செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி,
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய
நீர்மாண் எஃகம் நிறத்துச்சென்று அழுந்தக்
20
கூர்மதன் அழியரோ- நெஞ்சே!- ஆனாது
எளியள் அல்லோட் கருதி,
விளியா எவ்வம் தலைத் தந்தோயே.
23
213 வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு
ஓங்குவெள் அருவி வேங்கடத்து உம்பர்க்,
கொய்குழை அதிரல் வைகுபுலர் அலரி
சுரிஇரும் பித்தை சுரும்புபடச் சூடி,
5
இகல்முனைத் தரீஇய ஏருடைப் பெருநிரை
நனைமுதிர் நறவின் நாட்பலி கொடுக்கும்
வால்நிணப் புகவின் வடுகர் தேஎத்து,
நிழற்கவின் இழந்த நீர்இல் நீள்இடை
அழலவிர் அருஞ்சுரம் நெடிய என்னாது
10
அகறல் ஆய்ந்தனர் ஆயினும், பகல்செலப்
பல்கதிர் வாங்கிய படுசுடர் அமையத்துப்
பெருமரம் கொன்ற கால்புகு வியன்புனத்து,
எரிமருள் கதிர திருமணி இமைக்கும்
வெல்போர் வானவன் கொல்லிக் குடவரை
15
வேய்ஒழுக்கு அன்ன, சாய்இறைப் பணைத்தோள்
பெருங்கவின் சிதைய நீங்கி, ஆன்றோர்
அரும்பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்
சென்று, தாம் நீடலோ இலரே: என்றும்
கலம்பெயக் கவிழ்ந்த கழல்தொடித் தடக்கை,
20
வலம்படு வென்றி வாய்வாள், சோழர்
இலங்குநீர்க் காவிரி இழிபுனல் வரித்த
அறலென நெறிந்த கூந்தல்,
உறலின் சாயலொடு ஒன்றுதல் மறந்தே.
24
214 அகலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப்,
பகலுடன் கரந்த, பல்கதிர் வானம்
இருங்களிற்று இனநிரை குளிர்ப்ப வீசிப்,
பெரும்பெயல் அழிதுளி பொழிதல் ஆனாது,
வேந்தனும் வெம்பகை முரணி, ஏந்திலை,
5
விடுகதிர் நெடுவேல் இமைக்கும் பாசறை,
அடுபுகழ் மேவலொடு கண்படை இலனே;
அமரும் நம்வயி னதுவே; நமர்என
நம்மறிவு தெளிந்த பொம்மல் ஓதி
யாங்குஆ குவள்கொள் தானே -- ஓங்குவிடைப்
10
படுசுவற் கொண்ட பகுவாய்த் தெள்மணி
ஆபெயர் கோவலர் ஆம்பலொடு அளஇப்,
பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப,
ஆருயிர் அணங்கும் தெள்இசை
மாரி மாலையும் தமியள் கேட்டே?
15
215 'விலங்குருஞ் சிமையக் குன்றத்து உம்பர்,
வேறுபன் மொழிய தேஎம் முன்னி,
வினைநசைஇப் பரிக்கும் உரன்மிகு நெஞ்சமொடு
புனைமாண் எஃகம் வலவயின் ஏந்தி,
செலல்மாண்பு உற்ற நும்வயின், வல்லே,
5
வலன்ஆகு! என்றலும் நன்றுமன் தில்ல
கடுத்தது பிழைக்குவது ஆயின், தொடுத்த
கைவிரல் கவ்வும் கல்லாக் காட்சிக்,
கொடுமரம் பிடித்த கோடா வன்கண்,
வடிநவில் அம்பின் ஏவல் ஆடவர்,
10
ஆளழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கைக்,
கூர்நுதிச் செவ்வாய் எருவைச் சேவல்
படுபிணப் பைந்தலை தொடுவன குழீஇ,
மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணிகொண்டு,
வல்வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண்,
15
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு
ஒழிந்திவண் உறைதல் ஆற்று வோர்க்கே.
17
216 நாண்கொள் நுண்கோலின் மீன்கொள் பாண்மகள்-
தாளபுனல் அடைகரைப் படுத்த வராஅல்,
நாரரி நறவுண்டு இருந்த தந்தைக்கு,
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும்
தண்துறை ஊரன் பெண்டிர் எம்மைப்
5
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ்வலர்
பட்டனம் ஆயின், இனியெவன் ஆகியர்;
கடலாடு மகளிர் கொய்த ஞாழலும்,
கழனி உழவர் குற்ற குவளையும்,
கடிமிளைப் புறவின் பூத்த முல்லையொடு,
10
பல்லிளங் கோசர் கண்ணி அயரும்
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
எறிவிடத்து உலையாச் செறிசுரை வெள்வேல்
ஆதன் எழினி அருநிறத்து அழுத்திய
பெருங்களிற்று எவ்வம் போல
வருந்துப மாதுஅவர் சேரியாம் செலினே! .
16
217 பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை,
எஃகுஉறு பஞ்சித் துய்ப்பட் டன்ன,
துவலை தூவல் கழிய, அகல்வயல்
நீடுகழைக் கரும்பின் கணைக்கால் வான்பூக்
கோடைப் பூளையின் வரடையொடு துயல்வர,
5
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை
நீல்உண் பச்சை நிறமறைத்து அடைச்சிய
'தோலெறி பாண்டிலின் வாலிய மலரக்
கோழிலை அவரைக் கொழுமுகை அவிழ,
ஊழுறு தோன்றி ஒண்பூத் தளைவிட,
10
புலம்தொறும் குருகினம் நரலக் கல்லென
அகன்றுறை மகளிர் அணிதுறந்து நடுங்க,
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இதுவென,
எப்பொருள் பெறினும், பிரியன்மினோ, எனச்
செப்புவல் வாழியோ, துணையடை யீர்க்கே;
15
நல்காக் காதலர் நலன்உண்டு துறந்த
பாழ்படு மேனி நோக்கி நோய்பொர,
இணர்இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு,
எயிறுதீப் பிறப்பத் திருகி
நடுங்குதும் - பிரியின்யாம் கடும்பனி உழந்தே.
20
218 'கிளைபா ராட்டும் கடுநடை வயக்களிறு
முளைதருபு ஊட்டி, வேண்டுகுளகு அருத்த,
வாள்நிற உருவின் ஒளிறுபு மின்னி,
பரூஉஉறைப் பல்துளி சிதறி, வான் நாவின்று,
பெருவரை நளிர்சிமை அதிர வட்டித்துப்
5
புயலேறு உறைஇய வியலிருள் நடுநாள்,
விறலிழைப் பொலிந்த காண்பின் சாயல்,
தடைஇத் திரண்டநின் தோள்சேர்பு அல்லதை
படாஅ வாகும், எம் கண் என, நீயும்
இருள்மயங்கு யாமத்து இயவுக்கெட விலங்கி,
10
வரிவயங்கு இரும்புலி வழங்குநர்ப் பார்க்கும்
பெருமலை விடரகம் வர அரிது; என்னாய்,
வரவெளி தாக எண்ணுதி, அதனால்,
நுண்ணிதின் கூட்டிய படுமாண் ஆரம்
தண்ணிது கமழும்நின் மார்பு, ஒருநாள்
15
அடைய முயங்கேம் ஆயின், யாமும்
விறலிழை நெகிழச் சாஅய்தும்; அதுவே
அன்னை அறியினும் அறிக! அலர்வாய்
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க!
வண்டிறை கொண்ட எரிமருள் தோன்றியொடு.
20
ஒண்பூ வேங்கை கமழும்
தண்பெருஞ் சாரல் பகல்வந் தீமே!
22
219 சீர்கெழு வியனகர்ச் சிலம்புநக இயலி.
ஓரை ஆயமொடு பந்துசிறிது எறியினும்,
'வாராயோ!' என்று ஏத்திப் பேர்இலைப்
பகன்றை வான்மலர் பனிநிறைந் ததுபோல்
பால்பெய் வள்ளம் சால்கை பற்றி,
5
'என்பாடு உண்டனை ஆயின் ஒருகால்
நுந்தை பாடும் உண்' என்று ஊட்டிப்,
'பிறந்ததற் கொண்டும் சிறந்தவை செய்துயான்,
நலம்புனைந்து எடுத்தஎன் பொலந்தொடிக் குறுமகள்
அறனி லாளனொடு இறந்தனள் இனி' என,
10
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்-
பொன்வார்ந் தன்ன வைவால் எயிற்றுச்
செந்நாய் வெரீஇய புகர்உழை ஒருத்தல்;
பொரிஅரை விளவின் புன்புற விளைபுழல்,
அழல்எறி கோடை தூக்கலின், கோவலர்,
15
குழல்என நினையும் நீர்இல் நீள்இடை,
மடத்தகை மெலியச் சாஅய்,
நடக்கும் கொல்?" என, நோவல் யானே.
18
220 ஊருஞ் சேரியும் உடன்இயைந்து அலர்எழத்,
தேரொடு மறுகியும், பணிமொழி பயிற்றியும்,
கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்க்,
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய
மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
5
முன்முயன்று அரிதினின் முடித்த வேள்வி,
கயிறுஅரை யாத்த காண்தகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல, யாவரும்
காண லாகா மாண் எழில் ஆகம்
உள்ளுதொறும் பனிக்கும் நெடுஞ்சினை, நீயே
10
நெடும்புற நிலையினை, வருந்தினை ஆயின்,
முழங்குகடல் ஓதம் காலைக் கொட்கும்,
பழம்பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்
நோலா இரும்புள் போல, நெஞ்சு அமர்ந்து,
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின்,
15
இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை
முடங்குபுற இறவொடு இனமீன் செறிக்கும்
நெடுங்கதிர்க் கழனித் தண்சாய்க் கானத்து
யாணர்த் தண்பணை உறும் எனக் கானல்
ஆயம் ஆய்ந்த சாய்இறைப் பணைத்தோள்
20
நல்எழில் சிதையா ஏமம்
சொல்லினித் தெய்ய, யாம் தெளியு மாறே.
22
221 நனைவிளை நறவின் தேறல் மாந்திப்,
புனைவினை நல்லில் தருமணல் குவைஇப்,
'பொம்மல் ஓதி எம்மகள் மணன்' என,
வதுவை அயர்ந்தனர் நமரே அதனால்
புதுவது புனைந்த சேயிலை வெள்வேல்-
5
மதிஉடம் பட்ட மைஅணற் காளை
வாங்குசினை மலிந்த திரளரை மராஅத்துத்
தேம்பாய் மெல்லிணர் தளிரொடு கொண்டு, நின்
தண்நறு முச்சி புனைய, அவனொடு
கழைகவின் போகிய மழைஉயர் நனந்தலை,
10
களிற்றிரை பிழைத்தலின் கயவாய் வேங்கை
காய்சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ,
இரும்பிடி இரியும் சோலை
அருஞ்சுரம் சேறல் அயர்ந்தனென், யானே.
14
222 வானுற நிவந்த நீல்நிறப் பெருமலைக்
கான நாடன் இறீஇய நோய்க்கு, என்
மேனி ஆய்நலம் தொலைதலின், மொழிவென்;
முழவுமுகம் புலராக் கலிகொள் ஆங்கண்,
கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்.
5
ஈட்டெழில் பொலிந்த ஏந்துகுவவு மொய்ம்பின்
ஆட்டன் அத்தி நலன்நயந்து உரைஇத்,
தாழிருங் கதுப்பின் காவிரி வவ்வலின்
மரதிரம் துழைஇ, மதிமருண்டு அலந்த
ஆதி மந்தி காதலற் காட்டிப்
10
படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்
மருதி அன்ன மாண்புகழ் பெறீஇயர்
சென்மோ - வாழி, தோழி - பல்நாள்
உரவுரும் ஏறொடு மயங்கி,
இரவுப்பெயல் பொழிந்த ஈர்ந்தண் ஆறே.
15
223 'பிரிதல் வல்லியர்; இது, நத் துறந்தோர்
மறந்தும் அமைகுவர் கொல்?' என்று எண்ணி,
ஆழல் - வாழி, தோழி!- கேழல்
வளைமருப்பு உறழும் உளைநெடும் பெருங்காய்
நனைமுதிர் முருக்கின் சினைசேர் பொங்கல்,
5
காய்சினக் கடுவளி எடுத்தலின் வெங்காட்டு
அழல்பொழி யானையின் ஐயெனத் தோன்றும்
நிழலில் ஓமை நீரில் நீளிடை,
இறந்தனர் ஆயினும், காதலர் நம்வயின்
மறந்து கண்படுதல் யாவது - புறம் தாழ்
10
அம்பணை நெடுந்தோள் தங்கித், தும்பி
அரியினம் கடுக்கும் சுரிவணர் ஐம்பால்
நுண்கேழ் அடங்க வாரிப் பையுள் கெட,
நன்முகை அதிரல் போதொடு குவளைத்
தண்நறுங் கமழ்தொடை வேய்ந்த, நின்
மண்ஆர் கூந்தல் மரீஇய துயிலே?
16
224 செல்க, பாக! எல்லின்று பொழுதே- வல்லோன் அடங்குகயிறு அமைப்பக், கொல்லன்
விசைத்துவாங்கு துருத்தியின் வெய்ய உயிராக்,
கொடுநுகத்து யாத்த தலைய, கடுநடைக்,
கால்கடுப்பு அன்ன கடுஞ்செலல் இவுளி,
5
பால்கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன,
வால்வெண் தெவிட்டல் வழிவார் நுணக்கம்
சிலம்பி நூலின் நுணங்குவன பாறிச்,
சாந்துபுலர் அகலம் மறுப்பக் காண்தகப்
புதுநலம் பெற்ற வெய்துநீங்கு புறவில்,
10
தெறிநடை மரைக்கணம் இரிய மனையோள்,
ஐதுணங்கு வல்சி பெய்துமுறுக்கு உறுத்த
திரிமரக் குரலிசைப் கடுப்ப, வரிமணல்
அலங்குகதிர் திகிரி ஆழி போழ,
வரும்கொல்- தோழி!- நம் இன்உயிர்த் துணைஎனச்,
15
சில்கோல் எல்வளை ஒடுக்கிப் பல்கால்
அருங்கடி வியனகர் நோக்கி,
வருந்துமால் அளியள் திருந்திழை தானே.
18
225 அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,
என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்,
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,
இன்றே இவணம் ஆகி, நாளைப்,
புதலிவர் ஆடுஅமைத் தும்பி குயின்ற
5
அகலா அந்துளை கோடை முகத்தலின்
நீர்க்கியங்கு இனநிரைப் பின்றை, வார்கோல்
ஆய்க்குழல் பாணியின் ஐதுவந்து இசைக்கும்,
தேக்கமல் சோலைக் கடறேங்கு அருஞ்சுரத்து,
யாத்த தூணித் தலைதிறந் தவைபோல்,
10
பூத்த இருப்பைக் குழைபொதி குவிஇணர்
கழல்துளை முத்தின் செந்நிலத்து உதிர,
மழைதுளி மறந்த அங்குடிச் சீறூர்ச்
சேக்குவம் கொல்லோ- நெஞ்சே!- பூப்புனை
புயலென ஒலிவரும் தாழிருங் கூந்தல்,
15
செறிதொடி முன்கை நம் காதலி
அறிவஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?
17
226 உணர்குவென் அல்லென்; உரையல்நின் மாயம்;
நாணிலை மன்ற- யாணர் ஊர!-
அகலுள் ஆங்கண் அம்பகை மடிவைக்,
குறுந்தொடி, மகளிர் குரூஉப்புனல் முனையின்,
பழனப் பைஞ்சாய் கொழுதிக் கழனிக்
5
கரந்தைஅம் செறுவின் வெண்குருகு ஓப்பும்,
வல்வில் எறுழ்த்தோள் பரதவர் கோமான்,
பல்வேல் மத்தி கழாஅர் முன்துறை,
நெடுவெண் மருதொடு வஞ்சி சாஅய்,
விடியல் வந்த பெருநீர்க் காவிரி,
10
தொடிஅணி முன்கை நீ வெய் யோளொடு
முன்நாள் ஆடிய கவ்வை இந்நாள்,
வலிமிகும் முன்பின் பாணனொடு மலிதார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாளவைப்
பாடுஇன் தெண்கிணைப் பாடுகேட்டு அஞ்சி,
15
போரடு தானைக் கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.
17
227 'நுதல்பசந் தன்றே; தோள்சா யினவே;
திதலை அல்குல் வரியும் வாடின;
என்ஆ குவள்கொல் இவள்?' எனப் பல்மாண்
நீர்மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி,
இனையல்- வாழி, தோழி!- நனை கவுள்
5
காய்சினம் சிறந்த வாய்புகு கடாத் தொடு
முன்னிலை பொறாஅது முரணிப், பொன்னிணர்ப்
புலிக்கேழ் வேங்கைப் பூஞ்சினை புலம்ப,
முதல்பாய்ந் திட்ட முழுவலி ஒருத்தல்
செந்நிலப் படுநீறு ஆடிச், செருமலைந்து,
10
களம்கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
பலஇறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ,
நோய்இல ராக, நம் காதலர்!- வாய்வாள்,
தமிழ் அகப் படுத்த இமிழிசை முரசின்
வருநர் வரையாப் பெருநாள் இருக்கை,
15
தூங்கல் பாடிய ஓங்குபெரு நல்லிசைப்
பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன்
கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர்,
விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்.
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து,
20
எல்லுமிழ் ஆவணத்து அன்ன,
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே!
22
228 பிரசப் பல்கிளை ஆர்ப்பக், கல்லென
வரைஇழி அருவிஆரம் தீண்டித்
தண்என நனைக்கும் நளிர்மலைச் சிலம்பில்,
கண்என மலர்ந்த மாஇதழ்க் குவளைக்
கல்முகை நெடுஞ்சுனை நம்மொடு ஆடிப்,
5
பகலே இனிதுடன் கழிப்பி, இரவே
செல்வர் ஆயினும், நன்றுமன் தில்ல-
வான்கண் விரிந்த பகல்மருள் நிலவின்
சூரல் மிளைஇய சாரல் ஆர்ஆற்று,
ஓங்கல் மிசைய வேங்கை ஒள்வீப்
10
புலிப்பொறி கடுப்பத் தோன்றலின், கயவாய்
இரும்பிடி இரியும் சோலைப்
பெருங்கல் யாணர்த்தம் சிறுகுடி யானே.
13
229 பகல்செய் பல்கதிர்ப் பருதியம் செல்வன்
அகல்வாய் வானத்து ஆழ் போழ்ந்தென,
நீர்அற வறந்த நிரம்பா நீளிடைக்
கயந்தலைக் குழவிக் கவிஉகிர் மடப்பிடி
குளகுமறுத்து உயங்கிய மருங்குல் பலவுடன்
5
பாழூர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண்,
நெடுஞ்சேண் இடைய குன்றம் போகி,
பொய்வ லாளர் முயன்றுசெய் பெரும்பொருள்
நம்இன்று ஆயினும் முடிக, வல்லெனப்,
பெருந்துனி மேவல்!- நல்கூர் குறுமகள்!-
10
நோய்மலிந்து உகுத்த நொசிவரல் சில்நீர்
பல்லிதழ் மழைக்கண் பாவை மாய்ப்பப்,
பொன்னேர் பசலை ஊர்தரப், பொறிவரி
நல்மா மேனி தொலைதல் நோக்கி,
இனையல் என்றி; தோழி! சினைய
15
பாசரும்பு ஈன்ற செம்முகை முருக்கின
போதவிழ் அலரி கொழுதித், தாது அருந்து
அம்தளிர் மா அத்து அலங்கல் மீமிசைச்,
செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம்
இன்இள வேனிலும் வாரார்.
'இன்னே வருதும்' எனத்தெளித் தோரே.
21
230 'உறுகழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
சிறுகரு நெய்தற் கண்போல் மாமலர்ப்
பெருந்தண் மாத்தழை இருந்த அல்குல்,
ஐய அரும்பிய சுணங்கின் வைஎயிற்று,
மைஈர்ஓதி, வாள் நுதல் குறுமகள்!
5
விளையாட்டு ஆயமொடு வெண்மணல் உதிர்த்த
புன்னை நுண்தாது பொன்னின் நொண்டு,
மனைபுறந் தருதி ஆயின், எனையதூஉம்,
இம்மனைக் கிழமை எம்மொடு புணரின்
தீதும் உண்டோ , மாத ராய்?' எனக்
5
கடும்பரி நல்மான், கொடிஞ்சி நெடுந்தேர்
கைவல் பாகன் பையென இயக்க,
யாம்தற் குறுகினமாக ஏந்தெழில்
அரிவேய் உண்கண் பனிவரல் ஒடுக்கிச்
சிறிய இறைஞ்சினள், தலையே-
பெரிய எவ்வம் யாமிவண் உறவே!
16
231 'செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு
உறுமிடத்து உவக்கும் உதவி ஆண்மையும்,
இல்லிருந்து அமைவோர்க்கு இல்' என்று எண்ணி,
நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்
கொடுவிற் கானவர் கணைஇடத் தொலைந்தோர்,
5
படுகளத்து உயர்த்த மயிர்த்தலைப் பதுக்கைக்,
கள்ளியம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ,
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கருங் கடத்திடை
வெஞ்சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சுருக
வருவர் - வாழி; தோழி!- பொருவர்
10
செல்சமம் கடந்த செல்லா நல்லிசை,
விசும்பிவர் வெண்குடைப், பசும்பூட் பாண்டியன்
பாடுபெறு சிறப்பின் கூடல் அன்னநின்
ஆடுவண்டு அரற்றும் முச்சித்
தோடுஆர் கூந்தல் மரீஇ யோரே.
15
232 காண்இனி- வாழி, தோழி!- பானாள்,
மழைமுழங்கு அரவம் கேட்ட, கழைதின்,
மாஅல் யானை புலிசெத்து வெரீஇ,
இருங்கல் விடரகம் சிலம்பப் பெயரும்
பெருங்கல் நாடன் கேண்மை, இனியே,
5
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்,
மன்ற வேங்கை மணநாட் பூத்த
மணிஏர் அரும்பின் பொன்வீ தாஅய்
வியலறை வரிக்கும் முன்றில், குறவர்
மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்
10
ஆர்கலி விழவுக் களம்கடுப்ப, நாளும்,
விரவுப்பூம் பலியொடு விரைஇ! அன்னை
கடியுடை வியல்நகர்க் காவல் கண்ணி
'முருகு' என வேலன் தரூஉம்
பருவ மாகப் பயந்தன்றால், நமக்கே!
15
233 அலமரல் மழைக்கண் மல்குபனி வார, நின்
அலர்முலை நனைய, அழாஅல்- தோழி!-
எரிகவர்பு உண்ட கரிபுறப் பெருநிலப்
பீடுகெழு மருங்கின் ஓடுமழை துறந்தென,
ஊனில் யானை உயங்கும் வேனில்,
5
மறப்படைக் குதிரை, மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை
முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை, இரும்பல்
கூளிச் சுற்றம் குழீஇயிருந் தாங்கு,
10
குறியவும் நெடியவும் குன்றுதலை மணந்த
சுரன்இறந்து அகன்றனர் ஆயினும், மிகநனி
மடங்கா உள்ளமொடு மதிமயக் குறாஅ,
பொருள்வயின் நீடலோ இலர் - நின்
இருள்ஐங் கூந்தல் இன்துயில் மறந்தே!
15
234 கார்பயம் பொழிந்த நீர்திகழ் காலை,
நுண்ணயிர் பரந்த தண்ணய மருங்கின்,
நிரைபறை அன்னத்து அன்ன, விரைபரிப்
புல்உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய,
வள்புஒருங்கு அமையப் பற்றி, முள்கிய
5
பல்கதிர் ஆழி மெல்வழி அறுப்பக்,
கால்என மருள, ஏறி, நூல்இயல்
கண்நோக்கு ஒழிக்கும் பண்ணமை நெடுந்தேர்
வல்விரைந்து ஊர்மதி!- நல்வலம் பெறுந!
ததர்தழை முனைஇய தெறிநடை மடப்பிணை
10
ஏறுபுணர் உவகைய ஊறுஇல உகள,
அம்சிறை வண்டின் மென்பறைத் தொழுதி
முல்லை நறுமலர்த் தாதுநயந்து ஊத,
எல்லை போகிய புல்லென் மாலைப்
புறவுஅடைந் திருந்த உறைவுஇன் நல்ஊர்,
15
கழிபடர் உழந்த பனிவார் உண்கண்
நல்நிறம் பரந்த பசலையள்
மின்நேர் ஓதிப் பின்னுப்பிணி விடவே.
18
235 அம்ம- வாழி, தோழி!- பொருள் புரிந்து
உள்ளார் கொல்லோ, காதலர்? உள்ளியும்,
சிறந்த செய்தியின் மறந்தனர் கொல்லோ?-
பயன்நிலம் குழைய வீசிப், பெயல் முனிந்து,
விண்டு முன்னிய கொண்டல் மாமழை
5
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப,
வாடையொடு நிவந்த ஆய்இதழ்த் தோன்றி
சுடர்கொள் அகலின் சுருங்குபிணி அவிழச்
சுரிமுகிழ் முசுண்டைப் பொதிஅவிழ் வான்பூ
விசும்புஅணி மீனின் பசும்புல் அணியக்,
10
களவன் மண்அளைச் செறிய, அகல்வயல்
கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான்பூ
மாரிஅம் குருகின் ஈரிய குரங்க,
நனிகடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றிப்,
பனிகடி கொண்ட பண்பில் வாடை
15
மருளின் மாலையொடு அருள்இன்றி நலிய,
'நுதல்இறை கொண்ட அயல்அறி பசலையொடு
தொன்னலம் சிதையச் சாஅய்'
என்னள்கொல் அளியள்?' என்னா தோரே.
19
236 மணிமருள் மலர முள்ளி அமன்ற,
துணிநீர், இலஞ்சிக் கொண்ட பெருமீன்
அரிநிறக் கொழுங்குறை வௌவினர் மாந்தி,
வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை,
இடைனில நெரிதரு நெடுங்கதிர்ப் பல்சூட்டுப்
5
பனிபடு சாய்ப்புறம் பரிப்பக், கழனிக்
கருங்கோட்டு மாஅத்து அலங்குசினைப் புதுப்பூ
மயங்குமழைத் துவலையின் தாஅம் ஊரன்
காமம் பெருமை அறியேன், நன்றும்
உய்ர்த்தனென்- வாழி, தோழி!- அல்கல்
10
அணிகிளர் சாந்தின் அம்பட்டு இமைப்பக்,
கொடுங்குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
அறியா மையின் அழிந்த நெஞ்சின்,
'ஏற்றுஇயல் எழில்நடைப் பொழிந்த மொய்ம்பின்,
தோட்டுஇருஞ் சுரியன் மணந்த பித்தை,
15
ஆட்டன் அத்தியை காணீரோ?' என
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
'கடல்கொண் டன்று' எனப், 'புனல் ஒளித் தன்று' எனக்
கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த
ஆதி மந்தி போல, ஏதம் சொல்லிப், பேதுபெரிது உறலே!
21
237 'புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வீ
நுண்கொடி அதிரலொடு நுணங்கறல் வரிப்ப,
அரவுஎயிற்று அன்ன அரும்புமுதிர் குரவின்
தேன்இமிர் நறுஞ்சினைத் தென்றல் போழக்,
குயில்குரல் கற்ற வேனிலும் துயில்துறந்து
5
இன்னா கழியும் கங்குல்' என்றுநின்
நல்மா மேனி அணிநலம் புலம்ப,
இனைதல் ஆன்றிசின்- ஆயிழை! கனைதிறல்
செந்தீ அணங்கிய செழுநிணக் கொழுங்குறை
மென்தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு,
10
இருங்கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளைகழை பிழிந்த அம்தீஞ் சேற்றொடு,
பால்பெய் செந்நெற் பாசவல் பகுக்கும்
புனல்பொரு புதவின்; உறந்தை எய்தினும்,
வினைபொரு ளாகத் தவிரலர்- கடைசிவந்து
15
ஐய அமர்த்த உண்கண்நின்
வைஏர் வால்எயிறு ஊறிய நீரே!
17
238 மான்றமை அறியா மரம்பயில் இடும்பின்,
ஈன்றுஇளைப் பட்ட வயவுப்பிணப் பசித்தென,
மடமான் வல்சி தரீஇய, நடுநாள்,
இருள்முகைச் சிலம்பின், இரைவேட்டு எழுந்த
பணைமருள் எருத்தின் பல்வரி இரும்போத்து,
5
மடக்கண் ஆமான் மாதிரத்து அலறத்,
தடக்கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு
நனந்தலைக் கானத்து வலம்படத் தொலைச்சி
இருங்கல் வியல்அறை சிவப்ப ஈர்க்கும்
பெருகல் நாட; பிரிதி ஆயின்,
10
மருந்தும் உடையையோ மற்றே- இரப்போர்க்கு
இழை அணி நெடுந்தேர் களிறொடு என்றும்
மழைசுரந் தன்ன ஈகை, வண்மகிழ்க்,
கழல்தொடித் தடக்கைக், கலிமான், நள்ளி
நளிமுகை உடைந்த நறுங்கார் அடுக்கத்து,
15
போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்
மென்பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
தண்கமழ் புதுமலர் நாறும்நறு நுதற்கே?
18
239 அளிதோ தானே; எவன்ஆ வதுகொல்!
மன்றும் தோன்றாது, மரனும் மாயும்-
'புலிஎன உலம்பும் செங்கண் ஆடவர்,
ஞெலியொடு பிடித்த வார்கோல் அம்பினர்
எல்ஊர் எறிந்து, பல்ஆத் தழீஇய
5
விளிபடு பூசல் வெஞ்சுரத்து இரட்டும்
வேறுபல் தேஅத்து ஆறுபல நீந்திப்
புள்ளித் தொய்யில், பொறிபடு சுணங்கின்,
ஒள்இழை மகளிர் உயர்பிறை தொழூஉம்
புல்லென் மாலை, யாம்இவண் ஒழிய,
10
ஈட்டுஅருங் குரைய பொருள்வயிற் செலினே,
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்? எனக்,
குறுநெடு புலவி கூறி, நம்மொடு
நெருநலும் தீம்பல மொழிந்த
சிறுநல் ஒருத்தி பெருநல் ஊரே!
15
240 செவ்வீ ஞாழற் கருங்கோட்டு இருஞ்சினைத்
தனிப்பார்ப்பு உள்ளிய தண்பறை நாரை
மணிப்பூ நெய்தல் மாக்கழி நிவப்ப,
இனிப்புலம் பின்றே கானலும், நளிகடல்
திரைச்சுரம் உழந்த திண்திமில் விளக்கில்
5
பன்மீன் கூட்டம் என்னையர் காட்டிய
எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில்
அணங்குடைப் பனித்துறை கைதொழுது ஏத்தி,
யாயும் ஆயமோடு அயரும்; நீயும்,
தேம்பாய் ஓதி திருநுதல் நீவிக்,
10
கோங்குமுகைத் தன்ன குவிமுலை ஆகத்து,
இன்துயில் அமர்ந்தனை ஆயின், வண்டுபட
விரிந்த செருந்தி வெண்மணல் முடுக்கர்ப்,
பூவேய் புன்னை அம் தண்பொழில்,
வாவே தெய்ய, மணந்தனை செலற்கே.
15
241 'துனிஇன்று இயைந்த துவரா நட்பின்
இனியர் அம்ம, அவர்' என முனியாது
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும்,
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய
நமர்மன்- வாழி, தோழி!- உயர்மிசை
5
மூங்கில் இளமுளை திரங்கக், காம்பின்
கழைநரல் வியலகம் வெம்ப, மழைமறந்து
அருவி ஆன்ற வெருவரு நனந்தலைப்
பேஎய் வெண்தேர்ப் பெயல்செத்து ஓடி,
தாஅம் பட்ட தனிமுதிர் பெருங்கலை
10
புலம்பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்குதலை
விருந்தின் வெங்காட்டு வருந்தி வைகும்
அத்த நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய்
வட்டக் கழங்கின் தாஅய்த், துய்த்தலைச்
செம்முக மந்தி ஆடும்
நல்மர மருங்கின் மலைஇறந் தோரே!
16
242 அரும்புமுதிர் வேங்கை அலங்கல் மென்சினைச்
சுரும்புவாய் திறந்த பொன்புரை நுண்தாது
மணிமருள் கலவத்து உறைப்ப, அணிமிக்கு
அவிர்பொறி மஞ்ஜை ஆடும் சோலைப்,
பைந்தாட் செந்தினைக் கொடுங்குரல் வியன்புனம்,
5
செந்தார்க் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
பண்புதர வந்தமை அறியாள், 'நுண்கேழ்
முறிபுரை எழில்நலத்து என்மகள் துயர்மருங்கு
அறிதல் வேண்டும்' எனப், பல்பிரப்பு இரீஇ
அறியா வேலற் றரீஇ, அன்னை
10
வெறிஅயர் வியன்களம் பொலிய ஏத்தி
மறிஉயிர் வழங்கா அளவை, சென்றுயாம்
செலவரத் துணிந்த, சேண்விளங்கு, எல்வளை
நெகிழ்ந்த முன்கை, நேர்இறைப் பணைத்தோள்,
நல்எழில் அழிவின் தொல்கவின் பெறீஇய,
15
முகிழ்த்து வரல் இளமுலை மூழ்கப், பல்ஊழ்
முயங்கல் இயைவன் மன்னோ-தோழி!-
நறைகால் யாத்த நளிர்முகைச் சிலம்பில்
பெருமலை விடரகம் நீடிய சிறுயிலைச்
சாந்த மென்சினை தீண்டி, மேலது
20
பிரசம் தூங்கும் சேண்சிமை,
வரையக வெற்பன் மணந்த மார்பே!
22
243 அவரை ஆய்மலர் உதிரத், துவரின்
வாங்குதுளைத் துகிரின் ஈங்கை பூப்ப
இறங்குபோது அவிழ்ந்த ஈர்ம்புதல் பகன்றைக்
கறங்குநுண் துவலையின் ஊருழை அணியப்,
பெயல்நீர் புதுவரல் தவிரச், சினைநேர்பு
5
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்குகதிர்க் கழனி
நெல்ஒலி பாசவல் துழைஇக், கல்லெனக்
கடிதுவந்து இறுத்த கண்இல், வாடை!
'நெடிதுவந் தனை' என நில்லாது ஏங்கிப்
பலபுலந்து உறையும் துணைஇல் வாழ்க்கை
10
நம்வலத்து அன்மை கூறி, அவர்நிலை
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல;
பனிவார் கண்ணேம் ஆகி, இனிஅது
நமக்கே எவ்வம் ஆகின்று;
அனைத்தால் தோழி! நம் தொல்வினைப் பயனே!
15
244 "பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன
சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை
பகலுறை முதுமரம் புலம்பப் போகி,
முகைவாய் திறந்த நகைவாய் முல்லை
கடிமகள் கதுப்பின் நாறிக் கொடிமிசை
5
வண்டினம் தவிர்க்கும் தண்பதக் காலை
வரினும், வாரார் ஆயினும், ஆண்டு அவர்க்கு
இனிதுகொல், வாழி தோழி?" எனத்தன்
பல்லிதழ் மழைக்கண் நல்லகஞ் சிவப்ப,
'அருந்துயர் உடையள் அவள்' என விரும்பிப்
10
பாணன் வந்தனன், தூதே; நீயும்
புல்லார் புரவி, வல்விரைந்து, பூட்டி,
நெடுந்தேர் ஊர்மதி, வலவ!-
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே!
14
245 'உயிரினும் சிறந்த ஒண்பொருள் தருமார்
நன்றுபுரி காட்சியர் சென்றனர், அவர்' என
மனைவலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
நீ நற்கு அறிந்தனை ஆயின், நீங்கி
மழைபெயன் மறந்த கழைதிரங்கு இயவில்
5
செல்சாத்து எறியும் பண்பில் வாழ்க்கை
வல்வில் இளையர் தலைவர், எல்லுற,
வரிகிளர் பணைத்தோள், வயிறணி திதலை,
அரிய லாட்டியர் அல்குமனை வரைப்பில்,
மகிழ்நொடை பெறாஅ ராகி, நனைகவுள்
10
கான யானை வெண்கோடு சுட்டி,
மன்றுஓடு புதல்வன் புன்தலை நீவும்
அருமுனைப் பாக்கத்து அல்கி, வைகுற,
நிழல்படக் கவின்ற நீள்அரை இலவத்து
அழல் அகைந் தன்ன அலங்குசினை ஒண்பூக்
1 5
குழல்இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண்,
குறும்பொறை உணங்கும் ததர்வெள் என்பு
கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்
கல்நெடுங் கவலைய கானம் நீந்தி,
அம்மா அரிவை ஒழிய,
சென்மோ- நெஞ்சம்!- வாரலென் யானே.
21
246 பிணர்மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை
கதிர்மூக்கு ஆரல் களவன் ஆக,
நெடுநீர்ப் பொய்கைத் துணையொடு புணரும்
மலிநீர் அகல்வாய் யாணர் ஊர!
போதுஆர் கூந்தல் நீவெய் யோளொடு
5
தாதுஆர் காஞ்சித் தண்பொழில் அகல்யாறு
ஆடினை என்ப நெருநை; அலரே
காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்,
சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின் .246-10

இமிழிசை முரசம் பொருகளத்து ஒழியப்,
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய,
மொய்வலி அறுத்த ஞான்றை,
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே.
14
247 மண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலை
நன்மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்
அருளிலர்- வாழி, தோழி!- பொருள்புரிந்து,
இருங்கிளை எண்கின் அழல்வாய் ஏற்றை
கருங்கோட்டு இருப்பை வெண்பூ முனையின்
5
பெருஞ்செம் புற்றின் இருந்தலை இடக்கும்
அரிய கானம் என்னார், பகைபட
முனைபாழ் பட்ட ஆங்கண், ஆள்பார்த்துக்
கொலைவல் யானை சுரம்கடி கொள்ளும்
ஊறுபடு கவலைய ஆறுபல நீந்திப்
10
படுமுடை நசைஇய பறைநெடுங் கழுத்தின்,
பாறுகிளை சேக்கும் சேண்சிமைக்
கோடுயர் பிறங்கல் மலைஇறந் தோரே.
13
248 நகைநீ கோளாய்- தோழி!- அல்கல்
வயநாய் எறிந்து, வன்பறழ் தழீஇ,
இளையர் எய்துதல் மடக்கிக், கிளையொடு
நான்முலைப் பிணவல் சொலியக், கான் ஒழிந்து,
அரும்புழை முடுக்கர் ஆள்குறித்து நின்ற
5
தறுகட் பன்றி நோக்கிக், கானவன்
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி
மடைசெலல் முன்பின்தன் படைசெலச் செல்லாது,
அருவழி விலக்கும்எம் பெருவிறல் போலும்' என,
எய்யாது பெயரும் குன்ற நாடன்
10
செறிஅரில் துடக்கலின், பரீஇப் புரிஅவிழ்ந்து,
ஏந்துகுவவு மொய்ம்பிற் பூச்சோர் மாலை,
ஏற்றுஇமில் கயிற்றின், எழில்வந்து துயல்வர
இல்வந்து நின்றோற் கண்டனள் அன்னை;
வல்லே என்முகம் நோக்கி.
'நல்லை மன்!' என நகூஉப் பெயர்ந் தோளே!
16
249 அம்ம- வாழி, தோழி!- பல்நாள்
இவ்ஊர் அம்பல் எவனோ? வள்வார்
விசிபிணித்து யாத்த அரிகோல் தெண்கிணை
இன்குரல் அகவுநர் இரப்பின் நாடொறும்
பொன்கோட்டுச் செறித்துப், பொலந்தார் பூட்டிச்,
5
சாந்தம் புதைத்த ஏந்துதுவங்கு எழிலிமில்
ஏறுமுந் துறுத்துச், சால்பதம் குவைஇ,
நெடுந்தேர் களிற்றொடு சுரக்கும் கொடும்பூண்
பல்வேல் முசுண்டை வேம்பி அன்னஎன்
நல்லெழில் இளநலம் தொலையினம், நல்கார்-
10
பல்பூங் கானத்து அல்குநிழல் அசைஇத்,
தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
நாகுஆ வீழ்த்துத், திற்றி தின்ற
புலவுக்களம் துழைஇய துகள்வாய்க் கோடை
நீள்வரைச் சிலம்பின் இரைவேட்டு எழுந்த
15
வாள்வரி வயப்புலி தீண்டிய விளிசெத்து,
வேறுவேறு கவலைய ஆறுபரிந்து, அலறி,
உழைமான் இனநிரை ஓடும்
கழைமாய் பிறங்கல் மலைஇறந் தோரே.
19
250 எவன்கொல்?- வாழி, தோழி!- மயங்குபிசிர்
மல்குதிரை உழந்த ஒல்குநிலைப் புன்னை
வண்டிமிர் இணர நுண்தாது வரிப்ப
மணம்கமழ் இளமணல் எக்கர்க் காண்வரக்,
கணம்கொள் ஆயமொடு புணர்ந்து விளையாடக்,
5
கொடுஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீக்கித்,
தாரன், கண்ணியன், சேரவந்து, ஒருவன்,
வரிமனை புகழ்ந்த கிளவியன் யாவதும்
மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு
அரும்படர் எவ்வமொடு பெருந்தோள் சாஅய்
10
அவ்வலைப் பரதவர் கானல்ஞ் சிறுகுடி
செவ்வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி,
இறைவளை நெகிழ்ந்த நம்மொடு
துறையும் துஞ்சாது, கங்கு லானே!
14
251 தூதும் சென்றன; தோளும் செற்றும்;
ஓதி ஒண்நுதல் பசலையும் மாயும்;
வீங்கிழை நெகிழச் சாஅய்ச்; செல்லலொடு
நாம்படர் கூரும் அருந்துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண்
5
தங்கலர்- வாழி, தோழி!- வெல்கொடித்
துனைகால் அன்ன புனைதேர்க் கோசர்
தொல்மூ தாலத்து அரும்பணைப் பொதியில்,
இன்இசை முரசம் கடிப்பிகுத்து இரங்கத்,
தெம்முனை சிதைத்த ஞான்றை; மோகூர்
10
பணியா மையின், பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த
இலங்குவெள் அருவிய அறைவாய் உம்பர்,
மாசில் வெண்கோட்டு அண்ணல் யானை
15
வாயுள் தப்பிய அருங்கேழ், வயப்புலி
மாநிலம் நெளியக் குத்திப், புகலொடு
காப்புஇல வைகும் தேக்கமல் சோலை
நிரம்பா நீளிடைப் போகி-
அரம்போழ் அவ்வளை நிலைநெகிழ்த் தோரே.
20
252 இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி
உயர்நுதல் யானைப் புகர்முகத்து ஒற்றி,
வெண்கோடு புய்க்கும் தண்கமழ் சோலைப்
பெருவரை அடுக்கத்து ஒருவேல் ஏந்தித்
5
தனியன் வருதல் அவனும் அஞ்சான்;
பனிவார் கண்ணேன் ஆகி, நோய்அட,
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்;
பாங்குச் செய்வாம்கொல்- தோழி! ஈங்கைத்
துய்அவிழ் பனிமலர் உதிர வீசித்
10
தொழில்மழை பொழிந்த பானாட் கங்குல்
எறிதிரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்
பெருங்குளம் காவலன் போல,
அருங்கடி அன்னையம் துயில்மறந் தனளே!
14
253 'வைகல் தோறும் பசலை பாய, என்
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று; ஒய்யென,
அன்னையும் அமரா முகத்தினள்; அலரே,
வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி,
நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன்
5
பொன்மலி நெடுநகர்க் கூடல் ஆடிய
இன்இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்குயான்
சிலநாள் உய்யலென் போன்ம்' எனப் பலநினைந்து
ஆழல்- வாழி, தோழி!- வடாஅது,
ஆர்இருள் நடுநாள் ஏர்ஆ ஒய்யப்
10
பகைமுனை அறுத்துப் பல்இனம் சாஅய்
கணம்சால் கோவலர் நெடுவிளிப் பயிர்அறிந்து,
இனம்தலைத் தரூஉம் துளங்குஇமில் நல்ஏற்றுத்
தழூஉப்பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
அம்தூம்பு அகல்அமைக் கமஞ்செலப் பெய்த
15
துறுகாழ் வல்சியர் தொழுஅறை வௌவி,
கன்றுடைப் பெருநிரை மன்றுநிறை தரூஉம்
நேரா வன்தோள் வடுகர் பெருமகன்,
பேர்இசை எருமை நல்நாட்டு உள்ளதை
அயிரியாறு இறந்தனர் ஆயினும், மயர்இறந்து
5
உள்ளுப தில்ல தாமே- பணைத்தோள்,
குரும்பை மென்முலை, அரும்பிய சுணங்கின்,
நுசுப்புஅழித்து ஒலிவரும் தாழ்இருங் கூந்தல்,
மாக விசும்பின் திலகமொடு பதித்த
திங்கள் அன்னநின் திருமுகத்து,
ஒண்சூட்டு அவிர்குழை மலைந்த நோக்கே.
26
254 'நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற்
செம்முது செவிலியர் பலபா ராட்டப்
பொலன்செய் கிண்கிணி நலம்பெறு சேவடி
மணன்மலி முற்றத்து, நிலம்வடுக் கொளாஅ,
மனைஉறை புறவின் செங்காற் சேவல்
5
துணையொடு குறும்பறை பயிற்றி மேல்செல,
விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும்
நம்வயின் நினையும் நல்நுதல் அரிவை
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல,
வேந்துஉறு தொழிலொடு வேறுபுலத்து அல்கி,
5
வந்துவினை முடித்தனம் ஆயின், நீயும்,
பணைநிலை முனஇய, வினைநவில் புரவி
இழைஅணி நெடுந்தேர் ஆழி உறுப்ப,
நுண்கொடி மின்னின்; பைம்பயிர் துமியத்,
தளவ முல்லையொடு தலைஇத், தண்ணென
5
வெறிகமழ் கொண்ட வீததை புறவின்
நெடிஇடை பின்படக் 'கடவுமதி' என்று யான்
சொல்லிய அளவை, நீடாது, வல்லெனத்,
தார்மணி மாஅறி வுறாஅ,
ஊர்நணித் தந்தனை, உவகையாம் பெறவே!
20
255 உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ,
இரவும் எல்லையும் அசைவின்று ஆகி,
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்டக்,
கோடுஉயர் திணிமணல் அகன்துறை, நீகான்
5
மாட ஒள்எரி மருங்கு அறிந்து ஒய்ய,
ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல
கழியா மையே, அழிபடர் அகல,
வருவர் மன்னால்- தோழி!- தண்பணைப்
பொருபுனல் வைப்பின் நம்ஊர் ஆங்கண்
10
கருவிளை முரணிய தண்புதல் பகன்றைப்
பெருவளம் மலர அல்லி தீண்டிப்,
பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல்
கூதள மூதிலைக் கொடிநிரைத் தூங்க,
அறன்இன்று அலைக்கும் ஆனா வாடை
15
கடிமனை மாடத்துக் கங்குல் வீசத்,
'திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய,
நிரைவளை ஊருந் தோள்' என,
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே.
19
256 பிணங்குஅரில் வள்ளை நீடுஇலைப் பொதும்பின்
மடிதுயில் முனைஇய வள்உகிர் யாமை
கொடிவிடு கல்லிற் போகி, அகன்துறைப்
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின்
நுகர்வார் அருந்து மகிழ்புஇயங்கு நடையொடு
5
தீம்பெரும் பழனம் உழக்கி, அயலது
ஆம்பல் மெல்அடை ஒடுங்கும் ஊர!
பொய்யால்; அறிவென்; நின் மாயம் அதுவே
கையகப் பட்டவும் அறியாய்; நெருநை
மைஎழில் உண்கண் மடந்தையொடு வையை
10
ஏர்தரு புதுப்புனல் உரிதினின் நுகர்ந்து,
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத்
தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்,
கரும்பமல் படப்பைப், பெரும்பெயர்க் கள்ளூர்த்
15
திருநுதற் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனி லாளன், 'அறியேன்' என்ற
திறன்இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை;
வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே.
21
257 வேனிற் பாதிரிக் கூனி மாமலர்
நறைவாய் வாடல் நாறும் நாள், சுரம்,
அரிஆர் சிலம்பின் சீறடி சிவப்ப,
எம்மொடு ஓர்ஆறு படீஇயர், யாழநின்
பொம்மல் ஓதி பொதுள வாரி
5
அரும்புஅற மலர்ந்த ஆய்பூ மராஅத்துச்
சுரும்புசூழ் அலரி தைஇ, வேய்ந்த நின்
தேம்பாய் கூந்தல் குறும்பல மொசிக்கும்
வண்டுகடிந்து ஓம்பல் தேற்றாய்; அணிகொள
நுண்கோல் எல்வளை தெளிர்க்கும் முன்கை
10
மெல்இறைப் பணைத்தோள் விளங்க வீசி,
வல்லுவை மன்னால் நடையே- கள்வர்
பகைமிகு கவலைச் செல்நெறி காண்மார்,
மிசைமரம் சேர்த்திய கவைமுறி யாஅத்து.
நார்அரை மருங்கின் நீர்வரப் பொளித்துக்,
15
களிறுசுவைத் திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீமூட்டு ஆகும்,
துன்புறு தகுவன ஆங்கண், புன்கோட்டு
அரிலிவர் புற்றத்து அல்குஇரை நசைஇ,
வெள்அரா மிளிர வாங்கும்
பிள்ளை எண்கின் மலைவயி னானே.
21
258 நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்,
தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமைநற்கு அறிந்தும், அன்னோள்
துன்னலம் மாதோ எனினும், அஃது ஒல்லாய்-
தண்மழை தவழும் தாழ்நீர் நனந்தலைக்
5
கடுங்காற்று எடுக்கும் நெடும்பெருங் குன்றத்து
மாய இருள்அளை மாய்கல் போல,
மாய்கதில்- வாழிய, நெஞ்சே!- நாளும்,
மெல்இயர் குறுமகள் நல்அகம் நசைஇ,
அரவுஇயல் தேரும் அஞ்சுவரு சிறுநெறி,
10
இரவின் எய்தியும் பெறாஅய், அருள்வரப்
புல்லென் கண்ணை புலம்புகொண்டு, உலகத்து
உள்ளோர்க்கு எல்லாம் பெருநகை யாக;
காமம் கைம்மிக உறுதர,
ஆனா அரும்படர் தலைத்தந் தோயே!
15
259 வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்;
தாரும் தையின; தழையும் தொடுத்தன;
நிலம்நீர் அற்ற வெம்மை நீங்கப்
பெயல்நீர் தலைஇ, உலவைஇலை நீத்துக்
குறுமுறி ஈன்றன, மரனே; நறுமலர்
5
வேய்ந்தன போலத் தோன்றிப், பலஉடன்
தேம்படப் பொதுளின பொழிலே; கானமும்,
நனிநன்று ஆகிய பனிநீங்கு வழிநாள்,
பால்எனப் பரத்தரும் நிலவின் மாலைப்
போதுவந் தன்று, தூதே; நீயும்
10
கலங்கா மனத்தை ஆகி, என்சொல்
நயந்தனை கொண்மோ- நெஞ்சுஅமர் தகுவி!
தெற்றி உலறினும், வயலை வாடினும்,
நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும்,
நின்னினும் மடவள் நனிநின் நயந்த
15
அன்னை அல்லல் தாங்கி,நின் ஐயர்
புலிமருள் செம்மல் நோக்கி,
வலியாய் இன்னும் தோய்க, நின் முலையே!
18
260 மண்டிலம் மழுக, மலைநிறம் கிளர,
வண்டினம் மலர்பாய்ந்து ஊத, மீமிசைக்
கண்டற் கானல் குருகினம் ஒலிப்பக்,
கரைஆடு அலவன் அளைவயின் செறியத்,
திரைபாடு அவியத், திமில் தொழில் மறப்பச்,
5
செக்கர் தோன்றத், துணைபுணர் அன்றில்
எக்கர்ப் பெண்ணை அகமடல் சேரக்,
கழிமலர் கமழ்முகம் கரப்பப், பொழில்மனைப்
புன்னை நறுவீ பொன்நிறம் கொளாஅ,
எல்லை பைப்பய கழிப்பி எல்உற,
10
யாங்குஆ குவள்கொல்? யானே நீங்காது,
முதுமரத்து உறையும், முரவுவாய் முதுபுள்
கதுமெனக் குழறும், கழுதுவழங்கு, அரைநாள்,
நெஞ்சுநெகிழ் பருவரல் செய்த
அன்பி லாளன் அறிவுநயந் தேனே.
15
261 கானப் பாதிரிக் கருந்தகட்டு ஒள்வீ
வேனில் அதிரலொடு விரைஇக், காண்வர,
சில்ஐங் கூந்தல் அழுத்தி, மெல்லிணர்த்
தேம்பாய் மராஅம் அடைச்சி, வான்கோல்
இலங்குவளை தெளிர்ப்ப வீசிச், சிலம்புநகச்
5
சிலமெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின்
அணிமாண் சிறுபுறம் காண்கம்; சிறுநனி
ஏகு' என, ஏகல் நாணி, ஒய்யென
மாகொல் நோக்கமொடு மடம்கொளச் சாஅய்,
நின்றுதலை இறைஞ்சி யோளே; அதுகண்டு,
10
யாமுந் துறுதல் செல்லேம், ஆயிடை
அருஞ்சுரத்து அல்கி யேமே- இரும்புலி
களிறுஅட்டுக் குழுமும் ஓசையும், களிபட்டு
வில்லோர் குறும்பில் ததும்பும்,
வல்வாய்க் கடுந்துடிப் பாணியும் கேட்டே.
15
262 முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப்,
பகடுபல பூண்ட உழவுறு செஞ்செய்,
இடுமுறை நிரம்பி, ஆகுவினைக் கலித்துப்,
பாசிலை அமன்ற பயறுஆ புக்கென,
வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து, அருளாது,
5
ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
மறம்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
செருஇயல் நல்மான் திதியற்கு உரைத்து, அவர்
10
இன்உயிர் செகுப்பக் கண்டு, சினம் மாறிய
அன்னி மிஞிலி போல, மெய்ம்மலிந்து,
ஆனா உவகையேம் ஆயினெம் - பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம்திகழ் சிலம்பின்
நுண்பல துவலை புதல்மிசை நனைக்கும்
15
வண்டுபடு நறவின் வண்மகிழ்ப் பேகன்
கொண்டல் மாமலை நாறி,
அம்தீம் கிளவி வந்த மாறே.
18
263 தயங்குதிரைப் பெருங்கடல், உலகுதொழத் தோன்றி,
வயங்குகதிர் விரிந்த, உருகெழு மண்டிலம்
கயம்கண் வறப்பப் பாஅய், நல்நிலம்
பயம்கெடத் திருகிய பைதுஅறு காலை,
வேறுபல் கவலைய வெருவரு வியன்காட்டு,
5
ஆறுசெல் வம்பலர் வருதிறம் காண்மார்
வில்வல் ஆடவர் மேலான் ஒற்றி,
நீடுநிலை யாஅத்துக் கோடுகொள் அருஞ்சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு,
அவள் துணிவு அறிந்தனென் ஆயின், அன்னோ!
10
ஒளிறுவேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்னஎன் வளநகர் விளங்க,
இனிதினிற் புணர்க்குவென் மன்னே - துனிஇன்று
திருநுதல் பொலிந்தவென் பேதை
வருமுலை முற்றத்து ஏமுறு துயிலே!
15
264 மழையில் வானம் மீன்அணிந் தன்ன,
குழையமல் முசுண்டை வாலிய மலர,
வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப்
பெரிய துடிய கவர்கோற் கோவலர்,
எல்லுப்பெயல் உழந்த பல்லான் நிரையொடு,
5
நீர்திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர;
நனிசேண் பட்ட மாரி தளிசிறந்து,
ஏர்தரு கடுநீர் தெருவுதொறு ஒழுகப்,
பேரிசை முழக்கமொடு சிறந்துநனி மயங்கிக்,
கூதிர்நின் றன்றால்; பொழுதே! காதலா
10
நம்நிலை அறியார் ஆயினும், தம்நிலை
அறிந்தனர் கொல்லோ தாமே- ஓங்குநடைக்
காய்சின யானை கங்குல் சூழ,
அஞ்சுவர இறுத்த தானை
வெஞ்சின வேந்தன் பாசறை யோரே?
15
265 புகையின் பொங்கி, வியல்விசும்பு உகந்து,
பனிஊர் அழற்கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ்வரை மானும் கொல்லோ?
பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக், கங்கை
5
நீர்முதற் கரந்த நிதியம் கொல்லோ?
எவன்கொல்? வாழி, தோழி! வயங்கொளி
நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல்,
குழற்குரல், பாவை இரங்க, நத்துறந்து,
ஒண்தொடி நெகிழச் சாஅய்ச், செல்லலொடு
10
கண்பனி கலுழ்ந்துயாம் ஒழியப், பொறை அடைந்து,
இன்சிலை எழிலேறு கெண்டிப், புரைய
நிணம்பொதி விழுத்தடி நெருப்பின் வைத்துஎடுத்து,
அணங்கரு மரபின் பேஎய் போல
விளரூன் தின்ற வேட்கை நீங்கத்,
15
துகளற விளைந்த தோப்பி பருகித்,
குலாஅ வல்வில் கொடுநோக்கு ஆடவர்
புலாஅல் கையர், பூசா வாயர்,
ஒராஅ உருட்டுங் குடுமிக் குராலொடு
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும்
20
செந்நுதல் யானை வேங்கடம் தழீஇ,
வெம்முனை அருஞ்சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே!
23
266 கோடுற நிவந்த நீடுஇரும் பரப்பின்
அந்திப் பராஅய புதுப்புனல், நெருநை,
மைந்துமலி களிற்றின் தலைப்புணை தழீஇ,
நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல்
இளந்துணை மகளிரொடு ஈர்அணிக் கலைஇ,
5
நீர்பெயர்ந்து ஆடிய ஏந்துஎழில் மழைக்கண்
நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலை யாகிக்,
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண்இழந்து,
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே
யாழ்இசை மறுகின் நீடூர் கிழவோன்
10
வாய்வாள் எவ்வி ஏவன் மேவார்
நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர்
அரிமண வாயில் உறத்தூர் ஆங்கண்,
கள்ளுடைப் பெருஞ்சோற்று எல்இமிழ் அன்ன,
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனிஅஃது
15
அவலம் அன்றுமன், எமக்கே; அயல
கழனி உழவர் கலிசிறந்து எடுத்த
கறங்குஇசை வெரீஇப் பறந்த தோகை
அணங்குடை வரைப்பகம் பொலியவந்து இறுக்கும்
திருமணி விளக்கின் அலைவாய்ச்
செருமிகு சேஎயொடு உற்ற சூளே!
21
267 'நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்புகலந்து,
அறாஅ வஞ்சினம் செய்தோர், வினைபுரிந்து
திறம்வேறு ஆகல் எற்று?' என்று ஒற்றி,
இனைதல் ஆன்றிசின், நீயே; சினைபாய்ந்து.
உதிர்த்த கோடை, உட்குவரு கடத்திடை,
5
வெருக்குஅடி அன்ன குவிமுகிழ் இருப்பை,
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான்பூ
மயிர்க்கால் எண்கின் ஈர்இனம் கவர,
மைபட் டன்ன மாமுக முசுவினம்
பைதுஅறு நெடுங்கழை பாய்தலின் ஒய்யென
10
வெதிர்படு வெண்ணெல் வெவ்அறைத் தாஅய்,
உகிர்நெறி ஓசையிற் பொங்குவன பொரியும்
ஓங்கல் வெற்பின் சுரம்பல இறந்தோர்
தாம்பழி உடையர் அல்லர்; நாளும்
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்குவினை
15
வால்ஏர் எல்வளை நெகிழ்த்த,
தோளே!- தோழி - தவறுஉடை யவ்வே!
17
268 அறியாய்- வாழி, தோழி!- பொறியரிப்
பூநுதல் யானையொடு புலிபொரக் குழைந்த
குருதிச் செங்களம் புலவுஅற, வேங்கை
உருகெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
மாமலை நாடனொடு மறுஇன்று ஆகிய
5
காமம் கலந்த காதல் உண்டெனின்,
நன்றுமன்; அதுநீ நாடாய், கூறுதி;
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்,
யான் அலது இல்லை, இவ் உலகத் தானே-
இன்னுயிர் அன்ன நின்னொடுஞ் சூழாது,
10
முளைஅணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த
பெரும்பெயர் எந்தை அருங்கடி நீவிச்,
செய்துபின் இரங்கா வினையொடு
மெய்அல் பெரும்பழி எய்தினென் யானே!
14
269 தொடிதோள் இவர்க! எவ்வமுந் தீர்க!
நெறிஇருங் கதுப்பின் கோதையும் புனைக!
ஏறுடை இனநிரை பெயரப்; பெயராது
செறிசுரை வெள்வேல் மழவர்த் தாங்கிய
தறுக ணாளர் நல்லிசை நிறுமார்,
5
பிடிமடிந் தன்ன குறும்பொறை மருங்கின்,
நட்ட போலும் நடாஅ நெடுங்கல்
அகலிடம் குயின்ற பல்பெயர் மண்ணி,
நறுவிரை மஞ்சள் ஈர்ம்புறம் பொலிய
அம்புகொண்டு அறுத்த ஆர்நார் உரிவையின்
10
செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி
வரிவண்டு ஆர்ப்பச் சூட்டிக் கழற்கால்
இளையர்பதிப் பெயரும் அருஞ்சுரம் இறந்தோர்,
தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்,
பொலங்காசு நிரைத்த கோடுஏந்து அல்குல்
15
நலம்கேழ் மாக்குரல் குழையொடு துயல்வரப்,
பாடுஊர்பு எழுதரும் பகுவாய் மண்டிலத்து
வயிர்இடைப் பட்ட தெள்விளி இயம்ப
வண்டற் பாவை உண்துறை தரீஇத்,
திருநுதல் மகளிர் குரவை அயரும்
20
பெருநீர்க் கானல் தழீஇய இருக்கை,
வாணன் சிறுகுடி, வணங்குகதிர் நெல்லின்
யாணர்த் தண்பணைப் போதுவாய் அவிழ்ந்த
ஒண்செங் கழுநீர் அன்ன நின்
கண்பனி துடைமார் வந்தனர் விரைந்தே.
25
270 இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம்,
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து
இனமீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும்
மெல்லம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே;
சேயிறாத் துழந்த நுரைபிதிர்ப் படுதிரை
5
பராஅரைப் புன்னை வாங்குசினைத் தோயும்
கானல் பெருந்துறை நோக்கி, இவளே,
கொய்சுவற் புரவிக் கைவண் கோமான்
நல்தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன,
அம்மா மேனி தொல்நலம் தொலைய,
10
துஞ்சாக் கண்ணள் அலமரும், நீயே,
கடவுள் மரத்த முள்மிடை குடம்பைச்
சேவலொடு புணராச் சிறுகரும் பேடை
இன்னாது உயங்கும் கங்குலும்,
நும்ஊர் உள்ளுவை; நோகோ, யானே.
15
271 பொறிவரிப் புறவின் செங்காற் சேவல்
சிறுபுன் பெடையொடு சேண்புலம் போகி,
அரிமணல் இயவில் பரல்தேர்ந்து உண்டு,
வரிமரல் வாடிய வறன்நீங்கு நனந்தலைக்
குறும்பொறை மருங்கின் கோட்சுரம் நீந்தி,
5
நெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்
செல்லுயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லிப்
பல்காய் அஞ்சினை அகவும் அத்தம்
சென்று, நீர் அவணிர் ஆகி, நின்றுதரும்
நிலைஅரும் பொருட்பிணி நினைந்தனிர் எனினே,
10
வல்வதாக, நும் செய்வினை! இவட்கே,
களிமலி கள்ளின் நல்தேர் அவியன்
ஆடியல் இளமழை சூடித் தோன்றும்
பழம்தூங்கு விடரகத்து எழுந்த காம்பின்
கண்ணிடை புரையும் நெடுமென் பணைத்தோள்,
15
திருந்துகோல் ஆய்தொடி ஞெகிழின்,
மருந்தும் உண்டோ , பிரிந்துறை நாட்டே?
17
272 இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப்
புலவுநாறு புகர்நுதல் கழுவக், கங்குல்
அருவி தந்த அணங்குடை நெடுங்கோட்டு
அஞ்சுவரு விடர்முகை ஆர்இருள் அகற்றிய,
மின்ஒளிர் எஃகம் செல்நெறி விளக்கத்,
5
தனியன் வந்து, பனிஅலை முனியான்
நீர்இழி மருங்கின் ஆர்இடத்து அமன்ற
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி
அசையா நாற்றம் அசைவளி பகரத்
துறுகல் நண்ணிய கறிஇவர் படப்பைக்
10
குறிஇறைக் குரம்பைநம் மனைவயின் புகுதரும்,
மெய்ம்மலி உவகையன்; அந்நிலை கண்டு,
'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி,
உருவச் செந்தினை நீரொடு தூஉய்,
நெடுவேள் பரவும், அன்னை, அன்னோ!
15
என்ஆ வதுகொல் தானே - பொன்னென
மலர்ந்த வேங்கை அலங்குசினை பொலிய
மணிநிற மஞ்ஜை அகவும்
அணிமலை நாடனொடு அமைந்தநம் தொடர்பே?
19
273 விசும்பு விசைத்துஎறிந்த கூதளங் கோதையிற்,
பசுங்கால் வெண்குருகு வாப்பறை வளைஇ,
ஆர்கலி வளவயின் போதொடு பரப்பப்,
புலம்புனிறு தீர்ந்த புதுவரல் அற்சிரம்,
நலம்கவர் பசலை நலியவும், நந்துயர்
5
அறியார் கொல்லோ தாமே? அறியினும்,
நம்மனத்து அன்ன மென்மை இன்மையின்,
நம்முடை உலகம் உள்ளார் கொல்லோ?
யாங்கென உணர்கோ, யானே?- வீங்குபு
தலைவரம்பு அறியாத் தகைவரல் வாடையொடு
10
முலையிடைத் தோன்றிய நோய்வளர் இளமுளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத்திரள் நீடி,
ஊரோர் எடுத்த அம்பல் அம்சினை,
ஆராக் காதல் அவிர்தளிர் பரப்பிப்
புலவர் புகழ்ந்த நாணில் பெருமரம்
15
நிலவரை எல்லாம் நிழற்றி,
அலர்அரும்பு ஊழ்ப்பவும், வாரா தோரே.
17
274 இருவிசும்பு அதிர முழங்கி, அரநலிந்து,
இகுபெயல் அழிதுளி தலைஇ, வானம்
பருவஞ் செய்த பானாட் கங்குல்,
ஆடுதலைத் துருவின் தோடு ஏமார்ப்ப,
கடைகோல் சிறுதீ அடைய மாட்டித்,
5
திண்கால் உறியன், பானையன், அதளன்,
நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத்,
தண்டுகால் ஊன்றிய தனிநிலை இடையன்,
மடிவிடு வீளை, கடிதுசென்று இசைப்பத்,
தெறிமறி பார்க்கும் குறுநரி வெரீஇ
10
முள்ளுடைக் குறுந்தூறு இரியப் போகும்
தண்ணறும் புறவி னதுவே - நறுமலர்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியற் குறுமகள் உறைவின் ஊரே.
14
275 ஓங்குநிலைத் தாழி மல்கச் சார்த்திக்,
குடைஅடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலைப், பந்து எறிந்து ஆடி,
இளமைத் தகைமையை வளமனைக் கிழத்தி!
'பிதிர்வை நீரை வெண்நீறு ஆக;' என,
5
யாம்தற் கழறுங் காலைத், தான்தன்
மழலை இன்சொல், கழறல் இன்றி,
இன்உயிர் கலப்பக் கூறி, நன்னுதல்
பெருஞ்சோற்று இல்லத்து ஒருங்குஇவண் இராஅள்,
ஏதி லாளன் காதல் நம்பித்,
10
திரளரை இருப்பைத் தொள்ளை வான்பூக்
குருளை எண்கின் இருங்கிளை கவரும்
வெம்மலை அருஞ்சுரம், நம்இவண் ஒழிய,
இருநிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்,
நெருநைப் போகிய பெருமடத் தகுவி
15
ஐதுஅகல் அல்குல் தழையணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது, என்மகள்
செம்புடைச் சிறுவிரல் வரித்த
வண்டலும் காண்டீரோ, கண்உடை யீரே?
19
276 நீளிரும் பொய்கை இரைவேட்டு எழுந்த
வாளை வெண்போத்து உணீஇய, நாரைதன்
அடிஅறி வுறுதல் அஞ்சிப், பைப்பயக்
கடிஇலம் புகூஉம் கள்வன் போலச்,
சாஅய் ஒதுங்குந் துறைகேழ் ஊரனொடு
5
ஆவதுஆக! இனிநாண் உண்டோ ?
வருகதில் அம்ம, எம் சேரி சேர!
அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத்,
தாரும் தானையும் பற்றி, ஆரியர்
பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத்
10
தோள்கந் தாகக் கூந்தலின் பிணித்து, அவன்
மார்புகடி கொள்ளேன் ஆயின், ஆர்வுற்று
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல்,
பரந்து வெளிப்படாது ஆகி,
வருந்துக தில்ல, யாய் ஓம்பிய நலனே!
15
277 தண்கதிர் மண்டிலம் அவிர்அறச் சாஅய்ப்
பகலழி தோற்றம் போலப், பையென
நுதல்ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார்,
தவலில் உள்ளமொடு எஃகுதுணை ஆகக்,
கடையல குரலம் வாள்வரி உழுவை
5
பேழ்வாய்ப் பிணவின் விழுப்பசி நோனாது
இரும்பனஞ் செறும்பின் அன்ன பரூஉமயிர்ச்,
சிறுகண், பன்றி வருதிறம் பார்க்கும்
அத்தம்ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை,
பொத்துடை மரத்த புகர்படு நீழல்,
10
ஆறுசெல் வம்பலர் அசையுநர் இருக்கும்,
ஈரம்இல், வெஞ்சுரம் இறந்தோர் நம்வயின்
வாராஅளவை- ஆயிழை!- கூர்வாய்
அழல்அகைந் தன்ன காமர் துதைமயிர்
மனைஉறை கோழி மறனுடைச் சேவல்
15
போர்எரி எருத்தம் போலக் கஞலிய
பொங்கழல் முருக்கின் எண்குரல் மாந்தி,
சிதர்சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம, தானே;
வாரார் தோழி! நம் காத லோரே.
20
278 குணகடல் முகந்த கொள்ளை வானம்
பணைகெழு வேந்தர் பல்படைத் தானைத்
தோல்நிரைத் தனைய ஆகி, வலன்ஏர்பு
கோல்நிமிர் கொடியின் வசிபட மின்னி,
உரும்உரறு அதிர்குரல் தலைஇப், பானாள்,
5
பெருமலை மீமிசை முற்றின ஆயின்,
வாள்இலங்கு அருவி தாஅய், நாளை
இருவெதிர் அம்கழை ஒசியத் தீண்டி
வருவது மாதோ, வண்பரி உந்தி,
நனிபெரும் பரப்பின் நம்ஊர் முன்துறைப்,
10
பனிபொரு மழைக்கண் சிவந்த, பானாள்
முனிபடர் அகல மூழ்குவம் கொல்லோ!
மணிமருள் மேனி ஆய்நலம் தொலைய,
தணிவுஅருந் துயரம் செய்தோன்
அணிகிளர் நெடுவரை ஆடிய நீரே?
15
279 'நட்டோ ர் இன்மையும், கேளிர் துன்பமும்,
ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ
ஒருபதி வாழ்தல் ஆற்றுப தில்ல
பொன்னவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென்முலை முற்றம் கடவா தோர்' என,
5
நள்ளென் கங்குலும் பகலும் இயைந்து இயைந்து
உள்ளம் பொத்திய உரம்சுடு கூர்எரி
ஆள்வினை மாரியின் அவியா, நாளும்
கடறுஉழந்து இவணம் ஆகப், படர்உழந்து
யாங்குஆ குவள்கொல் தானே - தீம்தொடை
10
விளரி நரம்பின் நயவரு சீறுயாழ்
மலிபூம் பொங்கர் மகிழ்குரற் குயிலொடு
புணர்துயில் எடுப்பும் புனல்தெளி காலையும்,
நம்முடை மதுகையள் ஆகி, அணிநடை
அன்னமாண் பெடையின் மென்மெல இயலிக்,
15
கையறு நெஞ்சினள், அடைதரும்
மைஈர் ஓதி மாஅ யோளே?
17
280 பொன் அடர்ந் தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப்
பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையள்,
திணிமணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய்தொடிக் குறுமகள்,
நலம்சால் விழுப்பொருள் கலம்நிறை கொடுப்பினும்,
5
பெறல்அருங் குரையள் ஆயின், அறம்தெரிந்து,
நாம்உறை தேஎம் மரூஉப்பெயர்ந்து, அவனொடு
இருநீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
படுத்தனம் பணிந்தனம், அடுத்தனம், இருப்பின்,
10
தருகுவன் கொல்லோ தானே - விரிதிரைக்
கண்திரள் முத்தம் கொண்டு ஞாங்கர்த்
தேனிமிர் அகன்கரைப் பகுக்கும்
கானலம் பெருந்துறைப் பரதவன் எமக்கே? .
14
281 செய்வது தெரிந்திசின்- தோழி! அல்கலும்,
அகலுள் ஆண்மை அச்சறக் கூறிய
சொல்பழுது ஆகும் என்றும் அஞ்சாது,
ஒல்குஇயல் மடமயில் ஒழித்த பீலி
வான்போழ் வல்வில் சுற்றி, நோன்சிலை
5
அவ்வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வியல்
கனைகுரல் இசைக்கும் விரைசெல் கடுங்கணை
முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனிஇருங் குன்றத்து,
10
எண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறைஇறந்து, அவரோ சென்றனர்
பறையறைந் தன்ன அலர்நமக்கு ஒழித்தே.
13
282 பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய,
செறிமடை அம்பின், வல்வில், கானவன்
பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு,
நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்,
கண்பொருது இமைக்கும் திண்மணி கிளர்ப்ப,
5
வைந்நுதி வால்மருப்பு ஒடிய உக்க
தெண்நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு
சாந்தம் பொறைமரம் ஆக, நறைநார்
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு
10
இன்தீம் பலவின் ஏர்கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர்வாய்
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்;
சாயிறைத் திரண்ட தோள்பா ராட்டி,
யாயும், 'அவனே என்னும்; யாமும்,
15
'வல்லே வருக, வரைந்த நாள்; 'என,
நல்இறை மெல்விரல் கூப்பி,
இல்லுறை கடவுட்கு ஓக்குதும், பலியே!
18
283 நன்னெடுங் கதுப்பொடு பெருந்தோள் நீவிய!
நின்னிவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்,
செலவுதலைக் கொண்ட பெருவிதுப்பு உறுவி
பல்கவர் மருப்பின் முதுமான் போக்கிச்,
சில்உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர்
5
திரிவயின், தெவுட்டும் சேண்புலக் குடிஞைப்
பைதன் மென்குரல் ஐதுவந்து இசைத்தொறும்,
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு
அரிய ஆகும்என் னாமைக், கரிமரம்
கண்அகை இளங்குழை கால்முதற் கவினி,
10
விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்கப்,
பசுங்கண் வானம் பாய்தளி பொழிந்தெனப்,
புல்நுகும்பு எடுத்த நல்நெடுங் கானத்து,
ஊட்டுறு பஞ்சிப் பிசிர்பரந் தன்ன,
வண்ண மூதாய் தண்நிலம் வரிப்ப,
15
இனிய ஆகுக தணிந்தே
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே.
17
284 சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன
குறுவிழிக் கண்ண கூரல்அம் குறுமுயல்
முடந்தை வரகின் வீங்குபீள் அருந்துபு,
குடந்தைஅம் செவிய கோட்பவர் ஒடுங்கி,
இன்துயில் எழுந்து, துணையொடு போகி,
5
முன்றில் சிறுநிறை நீர்கண்டு உண்ணும்
புன்புலம் தழீஇய பொறைமுதற் சிறுகுடித்,
தினைகள் உண்ட தெறிகோல் மறவர்,
விதைத்த வில்லர், வேட்டம் போகி,
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும்
10
காமர் புறவி னதுவே- காமம்
நம்மினும் தான்தலை மயங்கிய
அம்மா அரிவை உறைவின் ஊரே.
13
285 'ஒழியச் சென்மார், செல்ப' என்று, நாம்
அழிபடர் உழக்கும் அவல நெஞ்சத்து
எவ்வம் இகந்துசேண் அகல, வைஎயிற்று
ஊன்நகைப் பிணவின் உறுபசி களைஇயர்,
காடுதேர் மடப்பிணை அலறக் கலையின்
5
ஓடுகுறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
வெயில்புலந்து இளைக்கும் வெம்மைய, பயில்வரி
இரும்புலி வேங்கைக் கருந்தோல் அன்ன
கல்எடுத்து எறிந்த பல்கிழி உடுக்கை
உலறுகுடை வம்பலர் உயர்மரம் ஏறி,
10
ஏறுவேட்டு எழுந்த இனம்தீர் எருவை
ஆடுசெவி நோக்கும் அத்தம், பணைத்தோள்
குவளை உண்கண் இவளும் நம்மொடு
வரூஉம் என்றனரே, காதலர்
வாராய், தோழி! முயங்குகம் பலவே.
15
286 வெள்ளி விழுந்தொடி மென்கருப்பு உலக்கை,
வள்ளி நுண்இடை வயின்வயின் நுடங்க,
மீன்சினை அன்ன வெண்மணல் குவைஇக்,
காஞ்சி நீழல், தமர்வளம் பாடி,
ஊர்க்குறு மகளிர் குறுவழி, விறந்த
5
வராஅல் அருந்திய சிறுசிரல் மருதின்
தாழ்சினை உறங்கும் தண்துறை ஊர!
விழையா உள்ளம் விழையும் ஆயினும்,
என்றும், கேட்டவை தோட்டி ஆகமீட்டு ஆங்கு,
அறனும் பொருளும் வழாமை நாடி,
10
தற்றகவு உடைமை நோக்கி, மற்றதன்
பின்ஆ கும்மே, முன்னியது முடித்தல்;
அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால்,
அரிய பெரியோர்த் தெரியுங் காலை
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன
15
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்,
மெய்யாண்டு உளதோ, இவ்வுலகத் தானே?
17
287 தொடிஅணி முன்கைத் தொகுவிரல் குவைஇப்,
படிவ நெஞ்சமொடு பகல்துணை ஆக,
நோம்கொல்? அளியள் தானே!- தூங்குநிலை,
மரைஏறு சொறிந்த மாத்தட் கந்தின்
சுரைஇவர் பொதியில் அம்குடிச் சீறூர்
5
நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகை,
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
ஒருதனி நெடுவீழ் உதைத்த கோடை
துணைப் புறா இரிக்கும் தூய்மழை நனந்தலைக்,
கணைக்கால் அம்பிணை ஏறுபுறம் நக்க,
10
ஒல்குநிலை யாஅத்து ஓங்குசினை பயந்த
அல்குறு வரிநிழல் அசையினம் நோக்க,
அரம்புவந்து அலைக்கும் மாலை,
நிரம்பா நீள்இடை வருந்துதும் யாமே.
14
288 சென்மதி; சிறக்க; நின் உள்ளம்! நின்மலை
ஆரம் நீவிய அம்பகட்டு மார்பினை,
சாரல் வேங்கைப் படுசினைப் புதுப்பூ
முருகுமுரண் கொள்ளும் உருவக் கண்ணியை,
எரிதின் கொல்லை இறைஞ்சிய ஏனல்,
5
எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்!
கனிமுதிர் அடுக்கத்துஎம் தனிமை காண்டலின்
எண்மை செய்தனை ஆகுவை; நண்ணிக்
கொடியோர் குறுகும் நெடிஇருங் குன்றத்து,
இட்டுஆறு இரங்கும் விட்டுஒளிர் அருவி
20
அருவரை இழிதரும் வெருவரு படாஅர்க்
கயந்தலை மந்தி உயங்குபசி களைஇயர்,
பார்ப்பின் தந்தை பழச்சுளை தொடினும்,
நனிநோய் ஏய்க்கும் பனிகூர் அடுக்கத்து,
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக்
25
கொங்தொடு உதிர்த்த கதுப்பின்,
அம்தீம் கிளவித் தந்தை காப்பே!
27
289 சிலைஏ றட்ட கணைவீழ் வம்பலர்
உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி அதிரல்
நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும்
சுரனிடை விலங்கிய மரன்ஓங்கு இயவின்,
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும்
5
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது,
நெகிழா மென்பிணி வீங்கிய கைசிறிது
அவிழினும், உயவும் ஆய்மடத் தகுவி;
சேண்உறை புலம்பின் நாள்முறை இழைத்த
திண்சுவர் நோக்கி, நினைந்து கண்பனி,
10
நெகிழ்நூல் முத்தின், முகிழ்முலைத் தெறிப்ப,
மைஅற விரிந்த படைஅமை சேக்கை
ஐமென் தூவி அணைசேர்பு அசைஇ
மையல் கொண்ட மதன்அழி இருக்கையள்
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி;
15
'நல்ல கூறு' என நடுங்கிப்
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே?
17
290 குடுமிக் கொக்கின் பைங்காற் பேடை
இருஞ்சேற்று அள்ளல் நாட்புலம் போகிய
கொழுமீன் வல்சிப் புன்தலைச் சிறாஅர்,
நுண்ஞாண் அவ்வலைச் சேவல் பட்டென,
அல்குறு பொழுதின் மெல்குஇரை மிசையாது,
5
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென,
அம்கண் பெண்ணை அன்புற நரலும்
சிறுபல் தொல்குடிப் பெருநீர்ச் சேர்ப்பன்
கழிசேர் புன்னை அழிபூங் கானல்,
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம்
10
மணவா முன்னும் எவனோ, தோழி?
வெண்கோட்டு யானை விறற்போர்க் குட்டுவன்
தென்திரைப் பரப்பின் தொண்டி முன்துறைச்,
கரும்புஉண மலர்ந்த பெருந்தண் நெய்தல்
மணிஏர் மாண்நலம் ஒரீஇப்,
பொன்நேர் வண்ணம் கொண்டஎன் கண்ணே?
16
291 வானம் யெல்வளம் கரப்பக், கானம்
உலறி இலைஇல வாகப், பல உடன்
ஏறுடை ஆயத்து இனம்பசி தெறுப்பக்
கயன்அற வறந்த கோடையொடு நயன் அறப்
பெருவரை நிவந்த மருங்கில், கொடுவரிப்
5
புலியொடு பொருது சினஞ்சிவந்து, வலியோடு
உரவுக்களிறு ஒதுங்கிய மருங்கில் பரூஉப்பரல்
சிறுபல் மின்மினி கடுப்ப எவ்வாயும்
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள்இடை,
எருவை இருஞ்சிறை இரீஇய, விரிஇணர்த்
10
தாதுஉண் தும்பி முரல்இசை கடுப்பப்,
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர
உவலை சூடிய தலையர், கவலை
ஆர்த்து, உடன் அரும்பொருள் வவ்வலின், யாவதும்
சாத்துஇடை வழங்காச் சேண்சிமை அதரச்
15
சிறியிலை நெல்லித் தீம்சுவைத் திரள்காய்
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வுஇன்று,
புள்ளிஅம் பிணை உணீஇய உள்ளி,
அறுமருப்பு ஒழித்த தலைய, தோல்பொதி
மறுமருப்பு இளங்கோடு அதிரக் கூஉம்
20
சுடர்தெற வருந்திய அருஞ்சுரம் இறந்து, ஆங்கு
உள்ளினை வாழிய, நெஞ்சே! போதுஎனப்
புலம்கமழ் நாற்றத்து இரும்பல் கூந்தல்,
நல்லெழில், மழைக்கண், நம் காதலி
மெல்லிறைப் பணைத்தோள் விளங்கும்மாண் கவினே.
25
292 கூறாய், செய்வது தோழி! வேறுஉணர்ந்து,
அன்னையும் பொருள்உகுத்து அலமரும்; மென்முறிச்
சிறுகுளகு அருந்து, தாய்முலை பெறாஅ,
மறிகொலைப் படுத்தல் வேண்டி, வெறிபுரி
ஏதில் வேலன் கோதை துயல்வரத்
5
தூங்கும் ஆயின், அதூஉம் நாணுவல்,
இலங்குவளை நெகிழ்ந்த செல்லல்; புலம்படர்ந்து
இரவின் மேயல் மரூஉம் யானைக்
கால்வல் இயக்கம் ஒற்றி, நடுநாள்,
வரையிடைக் கழுதின் வன்கைக் கானவன்
10
கடுவிசைக் கவணின் எறிந்த சிறுகல்
உடுஉறு கணையின் போகிச் சாரல்
வேங்கை விரிஇணர் சிதறித் தேன் சிதையூஉ,
பலவின் பழத்துள் தங்கும்
மலைகெழு நாடன் மணவாக் காலே!
15
293 இலைஒழித்து உலறிய புன்தலை உலவை
வலைவலந் தனைய ஆகப், பலஉடன்
சிலம்பி சூழ்ந்த புலம்கெடு வைப்பின்,
துகில்ஆய் செய்கைப் பாவிரிந் தன்ன
வெயில்அவிர்பு நுடங்கும் வெவ்வெங் களரி,
5
குயிற்கண் அன்ன குரூஉக்காய் முற்றி
மணிக்காசு அன்ன மால்நிற இருங்கனி
உகாஅ மென்சினை உதிர்வன கழியும்
வேனில் வெஞ்சுரம் தமியர் தாமே
செல்ப என்ப தோழி! யாமே,
10
பண்பில் கோவலர் தாய்பிரித்து யாத்த
நெஞ்சமர் குழவிபோல, நொந்து நொந்து,
இன்னா மொழிதும் என்ப;
என்மயங் கினர்கொல், நம் காத லோரே?
14
294 மங்குல் மாமழை விண்அதிர்பு முழங்கித்,
துள்ளுப்பெயல் கழிந்த பின்றை, புகையுறப்
புள்ளிநுண் துவலைப் பூவகம் நிறையக்,
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
நீர்வார் கண்ணின் கருவிளை மலரத்,
5
துய்த்தலைப் பூவின் புதலிவர் ஈங்கை
நெய்தோய்ந் தன்ன நீர்நனை அம்தளிர்
இருவகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
அவரைப் பைம்பூப் பயில, அகல்வயல்
கதிர்வார் காய்நெல் கட்குஇனிது இறைஞ்சக்
10
சிதர்சினை தூங்கும் அற்சிர அரைநாள்,
'காய்சின வேந்தன் பாசறை நீடி,
நம்நோய் அறியா அறனி லாளர்
இந்நிலை களைய வருகுவர், கொல்?' என
ஆனாது எறிதரும் வாடையொடு
நோனேன், தோழி! என் தனிமை யானே!
16
295 நிலம்நீர் அற்று நீள்சுனை வறப்பக்
குன்றுகோடு அகையக், கடுங்கதிர் தெறுதலின்,
என்றூழ் நீடிய வேய்படு நனந்தலை,
நிலவுநிற மருப்பின் பெருங்கை சேர்த்தி,
வேங்கை வென்ற வெருவரு பணைத்தோள்
5
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பிப்
பல்மர ஒருசிறைப் பிடியொடு வதியும்
கல்லுடை அதர கானம் நீந்திக்
கடல்நீர் உப்பின் கணஞ்சால் உமணர்
உயங்குபகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து
10
அகல்இடம் குழித்த அகல்வாய்க் கூவல்
ஆறுசெல் வம்பலர் அசைவிட ஊறும்,
புடையலம் கழற்கால் புல்லி குன்றத்து,
நடைஅருங் கானம் விலங்கி, நோன்சிலைத்
தொடைஅமை பகழித் துவன்றுநிலை வடுகர்,
15
பிழிஆர் மகிழ்நர், கலிசிறந்து ஆர்க்கும்
மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்,
பழிதீர் மாண்நலம் தருகுவர் மாதோ;
மாரிப் பித்திகத்து ஈர்இதழ் புரையும்
அங்கலுழ் கொண்ட செங்கடை மழைக்கண்,
20
மணங்கமழ் ஐம்பால், மடந்தை! நின்
அணங்குநிலை பெற்ற தடமென் தோளே!
22
296 கோதை இணர, குறுங்கால், காஞ்சிப்
போதுஅவிழ் நறுந்தாது அணிந்த கூந்தல்,
அரிமதர் மழைக்கண், மாஅ யோளொடு
நெருநையும் கமழ்பொழில் துஞ்சி, இன்றும்,
பெருநீர் வையை அவளொடு ஆடிப்,
5
புலரா மார்பினை வந்துநின்று, எம்வயின்
கரத்தல் கூடுமோ மற்றே பரப்பில்
பன்மீன் கொள்பவர் முகந்த இப்பி
நார்அரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும்
பேர்இசை கொற்கைப் பொருநன், வென்வேல்
10
கடும்பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்,
மலைபுரை நெடுநகர்க் கூடல் நீடிய
மலிதரு கம்பலை போல,
அலர்ஆ கின்று, அது பலர்வாய்ப் பட்டே.
14
297 பானாட் கங்குலும், பெரும்புன் மாலையும்,
ஆனா நோயொடு, அழிபடர்க் கலங்கி,
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக,
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின்;
இருங்கவின் இல்லாப் பெரும்புன் தாடிக்,
5
கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென,
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்
பெயர்பயம் படரத் தோன்றுகுயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது, அசைவுடன்
ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும்
10
சூர்முதல் இருந்த ஓமையம் புறவின்,
நீர்முள் வேலிப் புலவுநாறு முன்றில்,
எழுதி யன்ன கொடிபடு வெருகின்
பூளை அன்ன பொங்குமயிர்ப் பிள்ளை,
மதிசூழ் மீனின், தாய்வழிப் படூஉம்
15
சிறுகுடி மறவர் சேக்கோள் தண்ணுமைக்கு
எருவைச் சேவல் இருஞ்சிறை பெயர்க்கும்
வெருவரு கானம், நம்மொடு,
'வருவல்' என்றோள் மகிழ்மட நோக்கே?
19
298 பயங்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு
வயங்குதொழில் தரீஇயர், வலன்ஏர்பு விளங்கி,
மல்குகடல் தோன்றி யாங்கு, மல்குடை,
மணிமருள் மாலை, மலர்ந்த வேங்கை
ஒண்தளிர் அவிர்வரும் ஒலிகெழு பெருஞ்சினைத்
5
தண்துளி அசைவளி தைவரும் நாட!
கொன்றுசினம் தணியாது வென்றுமுரண் சாம்பாது,
இரும்பிடித் தொழுதியின் இனந்தலை மயங்காது,
பெரும்பெயற் கடாஅம் செருக்கி, வளமலை
இருங்களிறு இயல்வரும் பெருங்காட்டு இயவின்,
10
ஆர்இருள் துமிய வெள்வேல் ஏந்தி,
தாம்பூங் கோதை ஊதுவண்டு இரீஇ,
மென்பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு, இவண்
நீவந் ததனினும், இனிதுஆ கின்றே;
தூவல் கள்ளின் துணைதேர், எந்தை
15
கடியுடை வியல்நகர் ஓம்பினள் உறையும்
யாய்அறி வுறுதல் அஞ்சிப் பானாள்,
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்,
யான்நின் கொடுமை கூற, நினைபுஆங்கு,
இனையல்; வாழி, தோழி! நம் துறந்தவர்
20
நீடலர் ஆகி வருவர், வல்லென;
கங்குல் உயவுத்துணை ஆகிய
துஞ்சாது உறைவி இவளுவந் ததுவே!
23
299 எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த
முன்னம், முன்உறுபு அடைய உள்ளிய
பதிமறந்து உறைதல் வல்லுநம் ஆயினும்
அதுமறந்து உறைதல் அரிது ஆகின்றே
கடுவளி எடுத்த கால்வழி தேக்கிலை
5
நெடுவிளிப் பருந்தின் வெறிஎழுந் தாங்கு,
விசும்புகண் புதையப் பாஅய்ப், பலஉடன்
அகல்இடம் செல்லுநர் அறிவுகெடத் தாஅய்க்,
கவலை சுரக்கும் காடுஅகல் அத்தம்,
செய்பொருள் மருங்கின் செலவுதனக்கு உரைத்தென
10
வைகுநிலை மதியம் போலப், பையெனப்,
புலம்புகொள் அவலமொடு, புதுக்கவின் இழந்த
நலம்கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா,
நீரொடு பொருத ஈர்இதழ் மழைக்கண்
இகுதரு தெண்பனி ஆகத்து உறைப்பக்,
15
கால்நிலை செல்லாது, கழிபடர்க் கலங்கி,
நாநடுக் குற்ற நவிலாக் கிளவியொடு,
அறல்மருள் கூந்தலின் மறையினள், 'திறல் மாண்டு
திருந்துக மாதோ, நும்செலவு' என வெய்து உயிராப்,
பருவரல் எவ்வமொடு அழிந்த
பெருவிதுப் புறுவி பேதுறு நிலையே.
21
300 நாள்வலை முகந்த கோள்வல் பரதவர்
நுணங்குமணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்,
பறிகொள் கொள்ளையர், மறுக உக்க
மீன்ஆர் குருகின் கானலம் பெருந்துறை,
எல்லை தண்பொழில் சென்றெனச் செலீஇயர்,
5
தேர்பூட்டு அயர ஏஎய், வார்கோல்
செறிதொடி திருத்திப் பாறுமயிர் நீவிச்,
'செல்இனி, மடந்தை! நின் தோழியொடு, மனை' எனச்
சொல்லிய அளவை, தான்பெரிது கலுழ்ந்து
தீங்குஆ யினள்இவள் ஆயின் தாங்காது,
10
நொதுமலர் போலப் பிரியின் கதுமெனப்
பிறிதுஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால்,
சேணின் வருநர் போலப் பேணா,
இருங்கலி யாணர்எம் சிறுகுடித் தோன்றின்,
வல்லெதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇத்,
15
துறையும் மான்றன்று பொழுதே; சுறவும்
ஓதம் மல்கலின், மறு ஆயினவே;
எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்' என,
எமர்குறை கூறத் தங்கி, ஏமுற,
இளையரும் புரவியும் இன்புற, நீயும்
20
இல்லுறை நல்விருந்து அயர்தல்
ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே.
22

3. நித்திலக்கோவை


301 'வறன் உறு செய்யின் வாடுபு வருந்திப்
படர்மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறுநனி ஆன்றிகம் என்றி- தோழி-
நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு
5
நீர்வாழ் முதலை ஆவித் தன்ன
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து
ஊர்இஃது என்னாஅர் ஊறில் வாழ்க்கை
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டிப்
பாடுஇன் தெண்கிணை கறங்கங் காண்வரக்
10
குவிஇணர் எருக்கின் ததர்பூங் கண்ணி
ஆடூஉச் சென்னித் தகைப்ப மகடூஉ
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக்
களரி யாவிரைக் கிளர்பூங் கோதை
வண்ண மார்பின் வனமுலைத் துயல்வரச்
15
செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக்
குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந் திசைப்பக்
கார்வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மாணச் சீர் அமைத்து
சில்லரி கறங்கும் சிறுபல் லியத்தொடு
20
பல்லூர் பெயர்வனர் ஆடி ஒல்லெனத்
தலைப்புணர்த்து அசைத்த பல்தொகைக் கலப்பையர்
இரும்பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன்றலை மன்றங் காணின் வழிநாள்
அழுங்கன் மூதூர்க்கு இன்னா தாகும்;
25
அதுவே மறுவினம் மாலை யதனால்
காதலர் செய்த காதல்
நீடின்று மறத்தல் கூடுமோ, மற்றே?
28
302 சிலம்பிற் போகிய செம்முக வாழை
அலங்கல் அம்தோடு அசைவளி யுறுதொறும்
பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும்
நல்வரை நாடனொடு அருவி ஆடியும்
பல்லிதழ் நீலம் படுசுனைக் குற்றும்
5
நறுவீ வேங்கை இனவண் டார்க்கும்
வெறிகமழ் சோலை நயந்துவிளை யாடலும்
அரிய போலும்- காதல்அம் தோழி!-
இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத
கரும்பென கவினிய பெருங்குரல் ஏனல்
10
கிளிபட விளைந்தமை யறிந்தும் 'செல்க' என
நம்மவண் விடுநள் போலாள் கைம்மிகச்
சில்சுணங் கணிந்த செறிந்துவீங் கிளமுலை
மெல்லியல் ஒலிவரும் கதுப்பொடு
பல்கால் நோக்கும்- அறனில் யாயே.
15
303 இடைபிறர் அறிதல் அஞ்சி மறைகரந்து
பேஎய் கண்ட கனவிற பன்மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென்வேல்
மறமிகு தானைப் பசும்பூண் பொறையன்
கார்புகன் றெடுத்த சூர்புகல் நனந்தலை
5
மாஇருங் கொல்லி யுச்சித் தாஅய்த்
ததைந்துசெல் அருவியின் அலர்எழப் பிரிந்தோர்
புலம்கந் தாக இரவலர் செலினே
வரைபுரை களிற்றொடு நன்கலன் ஈயும்
உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின்
10
நிரைபறைக் குரீஇயினம் காலைப் போகி
முடங்குபுறச் செந்நெல் தரீஇயர் ஓராங்கு
இரைதேர் கொட்பின் வாகிப் பொழுதுபடப்
படர்கொள் மாலைப் படர்தந் தாங்கு
வருவாஎன்று உணர்ந்த மடங்கெழு நெஞ்சம்!
15
ஐயந் தெளியரோ நீயே பலவுடன்
வறன்மரம் பொருந்திய சிள்வீ டுமணர்
கணநிரை மணியின் ஆர்க்கும் சுரனிறந்து
அழிநீர் மீன்பெயர்ந் தாங்கவர்
வழிநடைச் சேறல் வலித்திசின் யானே.
20
304 இருவிசும்பு இவர்ந்த கருவி மாமழை
நீர்செறி நுங்கின் கண்சிதர்ந் தவைபோல்
சூர்ப்பனி பன்ன தண்வரல் ஆலியொடு
பரூஉப்பெயல் அழிதுளி தலைஇ வான்நவின்று
குரூஉத்துளி பொழிந்த பெரும்புலா வைகறை
5
செய்துவிட் டன்ன செந்நில மருங்கிற்
செறித்துநிறுத் தன்ன தெள்ளறல் பருகிச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
அலங்குசினைக் குருந்தின் அல்குநிழல் வதியச்
10
சுரும்புமிர்பு ஊதப் பிடவுத்தளை அவிழ
அரும்பொறி மஞ்ஜை ஆல வரிமணல்
மணிமிடை பவளம் போல அணிமிகக்
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவும்
ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்பப்
15
புலனணி கொண்ட காரெதிர் காலை
'ஏந்துகோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறுபுலத்து அல்கி நன்றும்
அறவர் அல்லர்நம் அருளா தோரன
நந்நோய் தன்வயின் அறியாள்
எந்நொந்து புலக்குங்கொல் மாஅ யோளே?
21
305 பகலினும் அகலா தாகி யாமம்
தவலில் நீத்தமொடு ஐயெனக் கழியத்
தளிமழை பொழிந்த தண்வரல் வாடையொடு
பனிமீக் கூரும் பைதற் பானாள்
பருகு வன்ன காதலொடு திருகி
5
மெய்புகு வன்ன கைகவர் முயக்கத்து
ஓருயிர் மாக்களும் புலம்புவர் மாதோ
அருளி லாளர் பொருள்வயின் அகல
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து
யானெவன் உளனே- தோழி!- தானே
10
பராரைப் பெண்ணைச் சேக்குங் கூர்வாய்
ஒரு தனி அன்றில் உயவுக்குரல் கடைஇய
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
கனைஎரி பிறப்ப ஊதும்
நினையா மாக்கள் தீங்குழல் கேட்டே?
16
306 பெரும்பெயர் மகிழ்ந! பேணா தகன்மோ!
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முட்கொம் பீங்கைத் துய்த்தலைப் புதுவீ
ஈன்ற மாத்தின் இளந்தளிர் வருட
ஆர்குருகு உறங்கும் நீர்சூழ் வளவயற்
5
கழனிக் கரும்பின் சாய்ப்புறம் ஊர்ந்து
பழன யாமை பசுவெயிற் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர!
இதுவோ மற்றுநின் செம்மல்? மாண்ட
மதியேர் ஒள்நுதல் வயங்கிழை ஒருத்தி-
10
இகழ்ந்த சொல்லுஞ் சொல்லிச் சிவந்த
ஆயிதழ் மழைக்கண் நோயுற நோக்கித்
தண்ணறுங் கமழ்தார் பரீஇயினள் நும்மொடு
ஊடினள்- சிறுதுனி செய்தெம்
மணன்மலி மறுகின் இறந்திசி னோளே.
15
307 'சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய்
அகலெழில் அல்குல் அவ்வரி வாடப்
பகலுங் கங்குலும் மயங்கிப் பையெனப்
பெயல்உறு மலரின் கண்பனி வார
ஈங்கிவள் உழக்கும்' என்னாது வினைநயந்து
5
நீங்கல் ஒல்லுமோ- ஐய!- வேங்கை
அடுமுரண் தொலைத்த நெடுநல் யானை
மையலம் கடாஅஞ் செருக்கி மதஞ்சிறந்து
இயங்குநர்ச் செருக்கும் எய்படு நனந்தலைப்
பெருங்கை எண்கினம் குரும்பி தேரும்
10
புற்றுடைச் சுவர புதலிவர் பொதியிற்
கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து
உடனுறை பழமையின் துறத்தல் செல்லாது
இரும்புறாப் பெடையொடு பயிரும்
பெருங்கல் வைப்பின் மலைமுதல் ஆறே?
15
308 உழுவையொ டுழந்த உயங்குநடை ஒருத்தல்
நெடுவகிர் விழுப்புண் கழாஅக் கங்குல்
ஆலி அழிதுளி பொழிந்த வைகறை
வால்வெள் அருவிப் புனல்மலிந் தொழுகலின்
இலங்குமலை புதைய வெண்மழை கவைஇக்
5
கலஞ்சுடு புகையிற் றோன்றும் நாட!
இரவின் வருதல் எவனோ? பகல்வரின்
தொலையா வேலின் வண்மகிழ் எந்தை
களிறணந் தெய்தாக் கன்முகை இதணத்துச்
சிறுதினைப் படுகிளி எம்மொடு ஓப்பி
10
மல்ல லறைய மலிர்சுனைக் குவளை
தேம்பாய் ஒண்பூ நறும்பல அடைச்சிய
கூந்தல் மெல்லணைத் துஞ்சிப் பொழுதுபடக்
காவலர்க் கரந்து கடிபுனம் துழைஇய
பெருங்களிற்று ஒருத்தலின் பெயர்குவை
கருங்கோற் குறிஞ்சிநும் உறைவி னூர்க்கே.
16
309 வயவாள் எறிந்து வில்லின் நீக்கி
பயநிரை தழீஇய கடுங்கண் மழவர்
அம்புசேண் படுத்து வன்புலத்து உய்த்தெனத்
தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்
கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப்
5
புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக்
களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து
அரலை வெண்காழ் ஆலியின் தாஅம்
காடுமிக நெடிய என்னார் கோடியர்
பெரும்படைக் குதிரை நற்போர் வானவன்
10
திருந்துகழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு
நாஞ்செலின் எவனோ- தோழி!- காம்பின்
விளைகழை உடைந்த கவண்விசைக் கடிஇடிக்
கனைசுடர் அமையத்து வழங்கல் செல்லாது
இரவுப்புனம் மேய்ந்த உரவுச்சின வேழம்
15
தண்பெரும் படாஅர் வெரூஉம்
குன்றுவிலங் கியவினவர் சென்ற நாட்டே?
17
310 கடுந்தேர் இளையரொடு நீக்கி நின்ற
நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும்
தொழுதகு மெய்யை அழிவுமுந் துறுத்துப்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றலின்
குவளை யுண்கண் கலுழ நின்மாட்டு
5
இவளும் பெரும்பே துற்றனள் ஓரும்
தாயுடை நெடுநகர்த் தமர்பா ராட்டக்
காதலின் வளர்ந்த மாதர் ஆகலின்
பெருமடம் உடையரோ சிறிதே; அதனால்
குன்றின் தோன்றும் குவவுமணற் சேர்ப்ப!
10
இன்றிவண் விரும்பா தீமோ! சென்றப்
பூவிரி புன்னை மீதுதோன்று பெண்ணைக்
கூஉம்கண் ணஃதே தெய்ய- ஆங்கண்
உப்பொய் உமணர் ஒழுகையொடு வந்த
இளைப்படு பேடை இரியக் குரைத்தெழுந்து
15
உருமிசைப் புணரி யுடைதரும்
பெருநீர் வேலிஎம் சிறுநல் ஊரே.
17
311 இரும்பிடிப் பரிசிலர் போலக் கடைநின்று
அருங்கடிக் காப்பின் அகனகர் ஒருசிறை
எழுதி யன்ன திண்ணிலைக் கதவம்
கழுதுவழங்கு அரைநாள் காவலர் மடிந்தெனத்
திறந்துநப் புணர்ந்து 'நும்மிற் சிறந்தோர்
5
இம்மை உலகத்து இல்'லெனப் பன்னாள்
பொம்மல் ஓதி நீவிய காதலொடு
பயந்தலை பெயர்ந்து மாதிரம் வெம்ப
வருவழி வம்பலர்ப் பேணிக் கோவலர்
மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி
10
செவியடை தீரத தேக்கிலைப் பகுக்கும்
புல்லி நன்னாட்டு உம்பர் செல்லருஞ்
சுரமிறந்து ஏகினும் நீடலர்
அருண்மொழி தேற்றிநம் அகன்றிசி னோரே!
14
312 நெஞ்சுடன் படுதலின் ஒன்றுபுரிந் தடங்கி
இரவின் வரூஉம் இடும்பை நீங்க
வரையக் கருதும் ஆயின் பெரிதுவந்து
ஓங்குவரை இழிதரும் வீங்குபெயல் நீத்தம்
காந்தளஞ் சிறுகுடிக் கௌவை பேணாது
5
அரிமதர் மழைக்கண் சிவப்ப நாளைப்
பெருமலை நாடன் மார்புபுணை யாக
ஆடுகம் வம்மோ- காதலம் தோழி!
வேய்பயில் அடுக்கம் புதையக் கால்வீழ்த்து
இன்னிசை முரசின் இரங்கி ஒன்னார்
10
ஓடுபுறம் கண்ட தாள்தோய் தடக்கை
வெல்போர் வழுதி செல்சமத் துயர்த்த
அடுபுகழ் எஃகம் போலக்
கொடிபட மின்னிப் பாயின்றால் மழையே!
14
313 'இனிப்பிறி துண்டோ ? அஞ்சல் ஓம்பென!'
அணிக்கவின் வளர முயங்கி நெஞ்சம்
பிணித்தோர் சென்ற ஆறுநினைந்து அல்கலும்
குளித்துப்பொரு கயலிற் கண்பனி மல்க
ஐய வாக வெய்ய உயிரா
5
இரவும் எல்லையும் படரட வருந்தி
அரவுநுங்கு மதியின் நுதலொளி கரப்பத்
தம்மல தில்லா நம்மிவண் ஒழியப்
பொருள்புரிந்து அகன்றன ராயினும் அருள்புரிந்து
வருவர்- வாழி, தோழி!- பெரிய
10
நிதியஞ் சொரிந்த நீவி போலப்
பாம்பூன் தேம்பும் வறங்கூர் கடத்திடை
நீங்கா வம்பலர் கணையிடத் தொலைந்தோர்
வசிபடு புண்ணின் குருதி மாந்தி
ஒற்றுச்செல் மாக்களின் ஒடுங்கிய குரல
15
இல்வழிப் படூஉங் காக்கைக்
கல்லுயர் பிறங்கல் மலைஇறந் தோரே.
17
314 நீலத் தன்ன நீர்பொதி கருவின்
மாவிசும் பதிர முழங்கி ஆலியின்
நிலம்தண் ணென்று கானங் குழைப்ப
இனந்தேர் உழவர் இன்குரல் இயம்ப
மறியுடை மடப்பிணை தழீஇப் புறவின்
5
திரிமருப் பிரலை பைம்பயிர் உகள
ஆர்பெயல் உதவிய கார்செய் காலை
நூனெறி நுணங்கிய கானவில் புரவிக்
கல்லெனக் கறங்குமணி இயம்ப வல்லோன்
வாய்ச்செல வணக்கிய தாப்பரி நெடுந்தேர்
10
ஈர்ம்புறவு இயங்குவழி அறுப்பத் தீந்தொடைப்
பையுள் நல்யாழ் செவ்வழி பிறப்ப
இந்நிலை வாரார் ஆயின் தந்நிலை
எவன்கொல்? பாண! உரைத்திசிற் சிறிதெனக்
கடவுட் கற்பின் மடவோள் கூறச்
15
செய்வினை அழிந்த மையல் நெஞ்சில்
துனிகொள் பருவரல் தீர வந்தோய்!
இனிதுசெய் தனையால் வாழ்கநின் கண்ணி!
வேலி சுற்றிய வால்வீ முல்லைப்
பெருந்தார் கமழும் விருந்தொலி கதுப்பின்
20
இன்னகை இளையோள் கவவ
மன்னுக பெரும! நின் மலர்ந்த மார்பே!
22
315 'கூழையுங் குறுநெறிக் கொண்டன முலையும்
சூழி மென்முகஞ் செப்புடன் எதிரின
பெண்துணை சான்றனள் இவளெனப் பன்மாண்
கண்துணை ஆக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று மன்னே நெஞ்சம்! பெயர்த்தும்
5
அறியா மையிற் செறியேன் யானே
பெரும்பெயர் வழுதி கூடல் அன்னதன்
அருங்கடி வியனகர்ச் சிலம்புங் கழியாள்
சேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி
புறவுக்குயின்று உண்ட புன்காய் நெல்லிக்
10
கோடை யுதிர்த்த குவிகண் பசுங்காய்
அறுநூற் பளிங்கின் துளைக்காசு கடுப்ப
வறுநிலத் துதிரும் அத்தம் கதுமெனக்
கூர்வேல் விடலை பொய்ப்பப் போகிச்
சேக்குவள் கொல்லோ தானே- தேக்கின்
15
அகலிலை குவித்த புதல்போல் குரம்பை
ஊன்புழுக்கு அயரும் முன்றில்
கான்கெழு வாழ்நர் சிறுகுடி யானே.
18
316 துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு
ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்துத்
தூங்குசேற்று அள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்
பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து
5
குரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்
போர்ச்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன்
தேர்தர வந்த தெரிஇழை நெகிழ்தோள்
ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தரப்
பரத்தைமை தாங்கலோ இலனென வறிதுநீ
10
புலத்தல் ஒல்லுமோ?- மனைகெழு மடந்தை
அதுபுலந்து உறைதல் வல்லி யோரே
செய்யோள் நீங்கச் சில்பதங் கொழித்துத்
தாமட்டு உண்டு தமியர் ஆகித்
தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப
15
வைகுநர் ஆகுதல் அறிந்தும்
அறியார் அம்மவஃது உடலு மோரே!
17
317 "மாக விசும்பின் மழைதொழில் உலந்தெனப்
பாஅய் அன்ன பகலிருள் பரப்பிப்
புகைநிற உருவின் அற்சிரம் நீங்கக்
குவிமுகை முருக்கின் கூர்நுனை வைஎயிற்று
நகைமுக மகளிர் ஊட்டுகிர் கடுக்கும்
5
முதிராப் பல்லிதழ் உதிரப் பாய்ந்துடன்
மலருண் வேட்கையின் சிதர்சிதர்ந் துகுப்பப்
பொன்செய் கன்னம் பொலிய வெள்ளி
நுண்கோல் அறைகுறைந்து உதிர்வன போல
அரவ வண்டினம் ஊதுதொறுங் குரவத்து
10
ஓங்குசினை நறுவீ கோங்கலர் உறைப்பத்
துவைத்துஎழு தும்பி தவிர்இசை விளரி
உதைத்துவிடு நரம்பின் இம்மென இமிரும்
மரனே முற்ற காமர் வேனில்
வெயிலவிர் புரையும் வீததை மாஅத்துக்
15
குயிலிடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம்" என்ற பருவம் ஆண்டை
இல்லை கொல்லென மெல்ல நோக்கி
நினைந்தனம் இருந்தன மாகநயந் தாங்கு
உள்ளிய மருங்கின் உள்ளம் போல
20
வந்துநின் றனரே காதலர் நத்துறந்து
என்னுழி யதுகொல் தானே பன்னாள்
அன்னையும் அறிவுற அணங்கி
நன்னுதற் பாஅய பசலை நோயே?
24
318 கான மானதர் யானையும் வழங்கும்
வான மீமிசை உருமுநனி உரறும்
அரவும் புலியும் அஞ்சுதக வுடைய
இரவழங்கு சிறுநெறி தமியை வருதி-
வரையிழி யருவிப் பாட்டொடு பிரசம
5
முழவுச்சேர் நரம்பின் இம்மென இமிரும்
பழவிறல் நனந்தலைப் பயமலை நாட!-
மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ
இன்றுதலை யாக வாரல் வரினே
ஏமுறு துயரமொடு யாமிவண் ஒழிய
10
எற்கண்டு பெயருங் காலை யாழநின்
கற்கெழு சிறுகுடி எய்திய பின்றை
ஊதல் வேண்டுமாற் சிறிதே- வேட்டொடு
வேய்பயில் அழுவத்துப் பிரிந்தநின்
நாய்பயிர் குறிநிலை கொண்ட கோடே!
15
318 மணிவாய்க் காக்கை மாநிறப் பெருங்கிளை
பிணிவீழ் ஆலத் தலங்குசினை ஏறிக்
கொடுவில் எயினர் குறும்பிற் கூக்கும்
கடுவினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
படுபிணங் கவரும் பாழ்படு நனந்தலை
5
அணங்கென உருத்த நோக்கின் ஐயென
நுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமைப்
பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய
நன்னிறத் தெழுந்த சுணங்கணி வனமுலைச்
சுரும்பார் கூந்தற் பெருந்தோள் இவள்வயிற்
10
பிரிந்தனிர் அகறல் சூழின் அரும்பொருள்
எய்துக மாதோ நுமக்கே கொய்குழைத்
தளிரேர் அன்ன தாங்கரு மதுகையள்
மெல்லியள் இளையள் நனிபேர் அன்பினள்
'செல்வேம்' என்னும் நும்மெதிர்
'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே!
16
320 ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇத்
திமிலோன் தந்த கடுங்கண் வயமீன்
தழைஅணி அல்குல் செல்வத் தங்கையர்
விழவுஅயர் மறுகின் விலைஎனப் பகரும்
கானல்அம் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப!
5
மலர்ஏர் உண்கண்எம் தோழி எவ்வம்
அலர்வாய் நீங்கநீ அருளாய் பொய்ப்பினும்
நெடுங்கழி துழைஇய குறுங்கால் அன்னம்
அடும்புஅமர் எக்கர் அம்சிறை உளரும்
தடவுநிலைப் புன்னைத் தாதுஅணி பெருந்துறை
10
நடுங்குஅயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
வண்டற் பாவை சிதைய வந்துநீ
தோள்புதிது உண்ட ஞான்றைச்
சூளும் பொய்யோ கடல்அறி கரியே?
14
321 பசித்த யானைப் பழங்கண் அன்ன
வறுஞ்சுனை முகந்த கோடைத் தெள்விளி
விசித்துவாங்கு பறையின் விடரகத்து இயம்பக்
கதிர்க்கால் அம்பிணை உணீஇய புகல்ஏறு
குதிர்க்கால் இருப்பை வெண்பூ உண்ணாது
5
ஆண்குரல் விளிக்கும் சேண்பால் வியன்சுரைப்
படுமணி இனநிரை உணீஇய கோவலர்
விடுநிலம் உடைத்த கலுழ்கண் கூவல்
கன்றுடை மடப்பிடி களிறொடு தடவரும்
புன்றலை மன்றத்து அம்குடிச் சீறூர்
10
துணையொடு துச்சில் இருக்கும் கொல்லோ?
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு
எல்லி முன்னுறச் செல்லும் கொல்லோ?
எவ்வினை செயுங்கொல்? நோகோ யானே!-
அரிபெய்து பொதிந்த தெரிசிலம்பு கழீஇ
15
யாயறி வுறுதல் அஞ்சி
வேய்உயர் பிறங்கல் மலையிறந் தோளே!
17
322 வயங்குவெயில் ஞெமியப் பாஅய் மின்னுவசிபு
மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்
ஆராக் காமம் அடூஉநின்று அலைப்ப
இறுவரை வீழ்நரின் நடுங்கித் தெறுவரப்
பாம்புஎறி கோலிற் றமியை வைகி
5
தேம்புதி கொல்லோ?- நெஞ்சே! உருமிசைக்
களிறுகண் கூடிய வாள்மயங்கு ஞாட்பின்
ஒளிறுவேல் தானைக் கடுந்தேர்த் திதியன்
வருபுனல் இழிதரு மரம்பயில் இறும்பிற்
பிறையுறழ் மருப்பின் கடுங்கண் பன்றிக்
10
குறைஆர் கொடுவரி குழுமுஞ் சாரல்
அறையுறு தீந்தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்றுஅரு நெடுஞ்சிமைப்
புகலரும் பொதியில் போலப்
பெறலருங் குரையள்எம் அணங்கி யோளே!
15
323 இம்மென் பேர் அலர் இவ்வூர் நம்வயின்
செய்வோர் ஏச்சொல் வாடக் காதலர்
வருவர் என்பது வாய்வ தாக
ஐய செய்ய மதனில சிறியநின்
அடிநிலன் உறுதல் அஞ்சிப் பையத்
5
தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலிக்
காணிய வம்மோ?- கற்புமேம் படுவி!-
பலவுப்பல தடைஇய வேய்பயில் அடுக்கத்து
யானைச் செல்லினம் கடுப்ப வானத்து
வயங்குகதிர் மழுங்கப் பாஅய்ப் பாம்பின்
10
பைபட இடிக்கும் கடுங்குரல் ஏற்றொடு
ஆலி அழிதுளி தலைஇக்
கால்வீழ்த் தன்றுநின் கதுப்புறழ் புயலே!
13
324 விருந்தும் பெறுகுநள் போலும் திருந்திழைத்
தடமென் பணைத்தோள் மடமொழி அரிவை-
தளிரியல் கிள்ளை இனிதின் எடுத்த
வளராப் பிள்ளைத் தூவி அன்ன
வார்பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவில்
5
பறைக்கண் அன்ன நிறைச்சுனை தோறும்
துளிபடு மொக்குள் துள்ளுவன சாலத்
தொளிபொரு பொகுட்டுத் தோன்றுவன மாய
வளிசினை உதிர்த்தலின் வெறிகொள்பு தாஅய்ச்
சிரல்சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த
10
வண்டுண் நறுவீ துமித்த நேமி
தண்ணில மருங்கிற் போழ்ந்த வழியுள்
நிறைசெல் பாம்பின் விரைபுநீர் முடுகச்
செல்லும் நெடுந்தகை தேரே-
முல்லை மாலை நகர்புகல் ஆய்ந்தே!
15
325 அம்ம! வாழி தோழி! காதலர்
'வெண்மணல் நிவந்த பொலங்கடை நெடுநகர்,
நளிஇருங் கங்குல் புணர்குறி வாய்த்த
களவும் கைம்மிக அலர்ந்தன்று அன்னையும்
உட்கொண் டோ வாள் காக்கும் பிற்பெரிது
5
இவண்உறைபு எவனோ? அளியள்!' என்று அருவி
'ஆடுநடைப் பொலிந்த புகற்சியின், நாடுகோள்
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை
வள்ளுயிர் மாக்கிணை கண்ணவிந் தாங்கு
மலைகவின் அழிந்த கனைகடற்று அருஞ்சுரம்
10
வெய்ய மன்றநின் வைஎயிறு உணீஇய
தண்மழை ஒருநாள் தலைஇய ஒண்ணுதல்
ஒல்கியல் அரிவை நின்னொடு செல்கம்!
சில்நாள் ஆன்றனை யாகஎனப் பன்னாள்
உலைவில் உள்ளமொடு வினைவலி உறீஇ
15
எல்லாம் பெரும்பிறி தாக வடாஅது
நல்வேற் பாணன் நல்நாட்டு உள்ளதை
வாட்கண் வானத்து என்றூழ் நீள்இடை
ஆட்கொல் யானை அதர்பார்த்து அல்கும்
சோலை அத்தம் மாலைப் போகி
20
ஒழியச் சென்றோர் மன்ற
பழியெவன் ஆங்கொல் நோய்தரு பாலே?
22
326 ஊரல் அவ்வாய் உருத்த தித்திப்
பேரமர் மழைக்கண் பெருந்தோட் சிறுநுதல்
நல்லள் அம்ம குறுமகள்- செல்வர்
கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
நெடுங்கொடி நுடங்கும் அட்ட வாயில்
5
இருங்கதிர்க் கழனிப் பெருங்கவின் அன்ன
நலம்பா ராட்டி நடையெழில் பொலிந்து
விழவிற் செலீஇயர் வேண்டும் வென்வேல்
இழையணி யானைச் சோழர் மறவன்
கழை யளந்து அறியாக் காவிரிப் படப்பைப்
10
புனன்மலி புதவிற் போஒர் கிழவோன்
பழையன் ஓக்கிய வேல்போற்
பிழையல கண்ணவள் நோக்கியோர் திறத்தே!
13
327 'இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
நன்பகல் அமையமும் இரவும் போல
வேறுவேறு இயல ஆகி மாறெதிர்ந்து
உளவென உணர்ந்தனை ஆயின் ஒரூஉம்
இன்னா வெஞ்சுரம் நன்னசை துரப்பத்
5
துன்னலும் தகுமோ?- துணிவில் நெஞ்சே!-
நீசெல வலித்தனை ஆயின், யாவதும்
நினைதலும் செய்தியோ எம்மோ- கனைகதிர்
ஆவி அவ்வரி நீரென நசைஇ
மாதவப் பரிக்கும் மரல்திரங்கு நனந்தலைக்
10
களர்கால் யாத்த கண்ணகன் பரப்பிற்
செவ்வரை கொழிநீர் கடுப்ப அரவின்
அவ்வரி உரிவை அணவரும் மருங்கிற்
புற்றரை யாத்த புலர்சினை மரத்த
மைந்நிற உருவின் மணிக்கட் காக்கை
15
பைந்நிணங் கவரும் படுபிணக் கவலைச்
சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர்
கோல்கழிபு இரங்கும் அதர
பேய்பயில் அழுவம் இறந்த பின்னே.
19
328 வழையமல் அடுக்கத்து வலனேர்பு வயிரியர்
முழவதிர்ந் தன்ன முழக்கத்து ஏறோடு
உரவுப்பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து
அரவின் பைந்தலை இடறிப் பானாள்
இரவின் வந்தெம் இடைமுலை முயங்கித்
5
துனிகண் அகல வளைஇக் கங்குலின்
இனிதின் இயைந்த நண்பவர் முனிதல்
தெற்றுஆ குதல்நற்கு அறிந்தனம் ஆயின்
இலங்குவளை நெகிழப் பரந்துபடர் அலைப்பயாம்
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்துகொண்டு
10
அடக்குவம் மன்னோ- தோழி!- மடப்பிடி
மழைதவழ் சிலம்பிற் கடுஞ்சூல் ஈன்று
கழைதின் யாக்கை விழைகளிறு தைவர
வாழையஞ் சிலம்பிற் றுஞ்சும்
சாரல் நாடன் சாயல் மார்பே!
15
329 பூங்கணும் நுதலும் பசப்ப நோய்கூர்ந்து
ஈங்கியான் வருந்தவும் நீங்குதல் துணிந்து
வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர்
குவிந்த குரம்பை அங்குடிச் சீறூர்ப்
படுமணி இயம்பப் பகலியைந்து உமணர்
5
கொடுநுகம் பிணித்த செங்கயிற்று ஒழுகைப்
பகடுஅயாக் கொள்ளும் வெம்முனைத் துகள்தொகுத்து
எறிவளி சுழற்றும் அத்தம் சிறிதசைந்து
ஏகுவர் கொல்லோ தாமே.. பாய்கொள்பு
உறுவெரிந் ஒடிக்கும் சிறுவரிக் குருளை
10
நெடுநல் யானை நீர்நசைக் கிட்ட
கைகறித்து உரறும் மைதூங்கு இறும்பில்
புலிபுக்கு ஈனும் வறுஞ்சுனைப்
பனிபடு சிமையப் பன்மலை இறந்தே.
14
330 கழிப்பூக் குற்றுங் கானல் அல்கியும்
வண்டல் பாவை வரிமணல் அயர்ந்தும்
இன்புறப் புணர்ந்தும் இளிவரப் பணிந்தும்
தன்றுயர் வெளிப்பட தவறில் நம்துயர்
அறியா மையின் அயர்ந்த நெஞ்சமொடு
5
செல்லும் அன்னோ மெல்லம் புலம்பன்!
செல்வோன் பெயர்புறத்து இரங்கி முன்னின்று
தகைஇய சென்றவென் நிறையில் நெஞ்சம்
எய்தின்று கொல்லோ தானே? எய்தியும்
காமஞ் செப்ப நாணின்று கொல்லோ
10
உதுவ காணவர் ஊர்ந்த தேரே
குப்பை வெண்மணற் குவவுமிசை யானும்
எக்கர்த் தாழை மடல்வயி னானும்
ஆய்தொடிப் பாசடும்பு அரிய ஊர்பிழிபு
சிறுகுடிப் பரதவர் பெருங்கடன் மடுத்த
15
கடுஞ்செலற் கொடுந்திமில் போல
நிவந்துபடு தோற்றமொடு இகந்துமா யும்மே!
17
331 நீடுநிலை அரைய செங்குழை இருப்பைக்
கோடுகடைந் தன்ன கொள்ளை வான்பூ
ஆடுபரந் தன்ன ஈனல் எண்கின்
சேடுசினை உரீஇ உண்ட மிச்சில்
பைங்குழை தழையர் பழையர் மகளிர்
5
கண்திரள் நீள்அமைக் கடிப்பிற் றொகுத்து
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும்
சீறூர் நாடு பலபிறக் கெரழியச்
சென்றோர் அன்பிலர்- தோழி!- என்றும்
அருந்துறை முற்றிய கருங்கோட்டுச் சீறியாழ்ப்
10
பாணர் ஆர்ப்பப் பல்கலம் உதவி
நாளவை இருந்த நனைமகிழ் திதியன்
வேளிரொடு பொரீஇய கழித்த
வாள்வாய் அன்ன வறுஞ்சுரம் இறந்தே!
14
332 முளைவளர் முதல மூங்கில் முருக்கிக்
கிளையொடு மேய்ந்த கேழ்கிளர் யானை
நீர்நசை மருங்கின் நிறம்பார்த்து ஒடுங்கிய
பொருமுரண் உழுவை தொலைச்சிக் கூர்நுனைக்
குருதிச் செங்கோட்டு அழிதுளி கழாஅக்
5
கன்முகை அடுக்கத்து மென்மெல இயலிச்
செறுபகை வாட்டிய செம்மலொடு அறுகால்
யாழிசைப் பறவை இமிரப் பிடிபுணர்ந்து
வாழையம் சிலம்பில் துஞ்சும் நாடன்
நின்புரைத் தக்க சாயலன் எனநீ
10
அன்புரைத் தடங்கக் கூறிய இன்சொல்
வாய்த்தன- வாழி, தோழி!- வேட்டோ ர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ்தார் மார்பின்
வண்டிடைப் படாஅ முயக்கமும்
தண்டாக் காதலும் தலைநாள் போன்மே!
15
333 'யாஅ ஒண்தளிர் அரக்குவிதிர்த் தன்னநின்
ஆக மேனி அம்பசப்பு ஊர
அழிவுபெரிது உடையை யாகி அவர்வயின்
பழிதலைத் தருதல் வேண்டுதி மொழிகொண்டு
தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்குநின்
5
எவ்வம் பெருமை உரைப்பின் செய்பொருள்
வயங்காது ஆயினும் பயம்கெடத் தூக்கி
நீடலர்- வாழி, தோழி!- கோடையிற்
குருத்திறுபு உக்க வருத்தம் சொலாது
தூம்புடைத் துய்த்தலைக் கூம்புபு திரங்கிய
10
வேனில் வெளிற்றுப்பனை போலக் கையெடுத்து
யானைப் பெருநிரை வானம் பயிரும்
மலைச்சேண் இகந்தனர் ஆயினும் நிலைபெயர்ந்து
நாள்இடைப் படாமை வருவர் நமர்எனப்
பயம்தரு கொள்கையின் நயம்தலை திரியாது
15
நின்வாய் இன்மொழி நன்வா யாக
வருவர் ஆயினோ நன்றே வாராது
அவணர் காதலர் ஆயினும் இவண்நம்
பசலை மாய்தல் எளிதுமன் தில்ல
சென்ற தேஎத்துச் செய்வினை முற்றி
20
மறுதரல் உள்ளத்தர் எனினும்
குறுகுபெரு நசையொடு தூதுவரப் பெறினே.
22
334 ஓடா நல்லேற்று உரிவை தைஇய
ஆடுகொள் முரசம் இழுமென முழங்க
நாடுதிறை கொண்டனம் ஆயின் பாக!
பாடுஇமிழ் கடலின் எழுந்த சும்மையொடு
பெருங்களிற்றுத் தடக்கை புரையக் கால்வீழ்த்து
5
இரும்பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ
வணங்கிறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
கழங்குறழ் ஆலியொடு கதழுறை சிதறிப்
பெயல்தொடங் கின்றால் வானம் வானின்
வயங்குசிறை அன்னத்து நிரைபறை கடுப்ப
10
நால்குடன் பூண்ட கால்நவில் புரவிக்
கொடிஞ்சி நெடுந்தேர் கடும்பரி தவிராது
இனமயில் அகவும் கார்கொள் வியன்புனத்து
நோன்சூட்டு ஆழி ஈர்நிலம் துமிப்ப
ஈண்டே காணக் கடவுமதி பூங்கேழ்ப்
15
பொலிவன அமர்த்த உண்கண்
ஒலிபல் கூந்தல் ஆய்சிறு நுதலே!
17
335 இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள்நன்கு உடையர் ஆயினும், ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்
யானும் அறிவென் மன்னே யானைதன்
கொன்மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து
5
இன்னா வேனில் இன்றுணை ஆர
முளிசினை மராஅத்துக் பொளிபிளந்து ஊட்ட
புலம்புவீற் றிருந்த நிலம்பகு- வெஞ்சுரம்
அரிய அல்லமன் நமக்கே- விரிதார்
ஆடுகொள் முரசின் அடுபோர்ச் செழியன்
10
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ
நீடுவெயில் உழந்த குறியிறைக் கணைக்கால்
தொடைஅமை பன்மலர்த் தோடு பொதிந்து யாத்த
குடைஓ ரன்ன கோள்அமை எருத்திற்
பாளை பற்றிழிந்து ஒழியப் புறம் சேர்பு
15
வாள்வடித் தன்ன வயிறுடைப் பொதிய
நாளுறத் தோன்றிய நயவரு வனப்பின்
ஆரத்து அன்ன அணிகிளர் புதுப்பூ
வாருறு கவரியின் வண்டுண விரிய
முத்தின் அன்ன வெள்வீ தாஅய்
20
அலகின் அன்ன அரிநிறத்து ஆலி
நகைநனி வளர்க்குஞ் சிறப்பின் தகைமிகப்
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய்
நீரினும் இனிய ஆகிக் கூர்எயிற்று
அமிழ்தம் ஊறும் செவ்வாய்
ஒண்தொடிக் குறுமகட் கொண்டனம் செலினே!
26
336 குழற்காற் சேம்பின் கொழுமடல் அகலிலைப்
பாசிப் பரப்பிற் பறழொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கஞ் சொலிய
நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய்
வாளையொடு உழப்பத் துறைகலுழ்ந் தமையின்
5
தெண்கட் டேறல் மாந்தி மகளிர்
நுண்செயல் அம்குடம் இரீஇப் பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழிணர்க்
காஞ்சி நீழற் குரவை அயரும்
தீம்பெரு பொய்கைத் துறைகேழ் ஊரன்
10
தேர்தர வந்த நேரிழை மகளிர்
ஏசுப என்பவென் நலனே அதுவே
பாகன் நெடிதுயிர் வாழ்தல் காய்சினக்
கொல்களிற்று யானை நல்கல் மாறே
தாமும் பிறரும் உளர்போல் சேறல்
15
முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின்
யானவண் வாராமாறே வரினே வானிடைச்
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல
என்னொடு திரியான் ஆயின், வென்வேல்
மாரி யம்பின் மழைத்தோற் சோழர்
20
வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை
ஆரியர் படையின் உடைகவென்
நேரிறை முன்கை வீங்கிய வளையே!
23
337 'சாரல் யாஅத்து உயர்சினை குழைத்த
மாரி ஈர்ந்தளிர் அன்ன மேனிப்
பேர்அமர் மழைக்கண் புலம்புகொண்டு ஒழிய
ஈங்குப்பிரிந்து உறைதல் இனிதன்று ஆகலின்
அவணதாகப் பொருள் என்று உமணர்
5
கணநிரை அன்ன பல்காற் குறும்பொறைத்
தூதொய் பார்ப்பான் மடிவெள் ளோலைப்
படையுடைக் கையர் வருதிறம் நோக்கி
'உண்ணா மருங்குல் இன்னோன் கையது
பொன்னா குதலும் உண்டு' எனக் கொன்னே
10
தடிந்துஉடன் வீழ்த்த கடுங்கண் மழவர்
திறன்இல் சிதாஅர் வறுமை நோக்கிச்
செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்
கொடிவிடு குருதித் தூங்குகுடர் கறீஇ
வரிமரல் இயவின் ஒருநரி ஏற்றை
15
வெண்பரல் இமைக்கும் கண்பறி கவலைக்
கள்ளி நீழற் கதறுபு வதிய
மழைகண் மாறிய வெங்காட்டு ஆர்இடை
எமியம் கழிதந் தோயே- பனிஇருள்
பெருங்கலி வானம் தலைஇய
இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே.
21
338 குன்றேங்கு வைப்பின் நாடுமீக் கூறும்
மறம்கெழு தானை அரச ருள்ளும்
அறம்கடைப் பிடித்த செங்கோ லுடன்அமர்
மறம்சாய்த்து எழுந்த வலன்உயர் திணிதோள்
பலர்புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன்
5
அணங்குடை உயர்நிலைப் பொறுப்பின் கவாஅன்
'சினையொண் காந்தள் நாறும் நறுநுதல்
துணைஈர் ஓதி மாஅ யோள்வயின்
நுண்கோல் அவிர்தொடி வண்புறஞ் சுற்ற
முயங்கல் இயையாது ஆயினும் என்றும்
10
வயவுஉறு நெஞ்சத்து உயவுத்துணை யாக
ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும்
துன்னருந் துப்பின் வென்வேற் பொறையன்
அகலிருங் கானத்துக் கொல்லி போலத்
தவாஅ லியரே நட்பே அவள்வயின்
15
அறாஅ லியரே தூதே- பொறாஅர்
விண்பொரக் கழித்த திண்பிடி ஒள்வாள்
புனிற்றான் தரவின் இளையர் பெருமகன்
தொகுபோர்ச் சோழன் பொருள்மலி பாக்கத்து
வழங்கல் ஆனாப் பெருந்துறை
முழங்குஇரு முந்நீர்த் திரையினும் பலவே!
21
339 வீங்குவிசைப் பிணித்த விரைபரி நெடுந்தேர்
நோன்கதிர் சுமந்த ஆழிஆழ் மருங்கிற்
பாம்புஎன முடுகுநீர் ஓடக் கூம்பிப்
பற்றுவிடு விரலின் பயறுகாய் ஊழ்ப்ப
அற்சிரம் நின்றன்றாற் பொழுதே முற்பட
5
ஆள்வினைக்கு எழுந்த அசைவில் உள்ளத்து
ஆண்மை வாங்கக் காமம் தட்பக்
கவைபடு நெஞ்சம் கட்கண் அகைய
இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி
ஒருதலைப் படாஅ உறவி போன்றனம்
10
நோம்கொல்? அளியள் தானே- யாக்கைக்கு
உயிர்இயைந் தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவுஅரி யோளே.
14
340 பன்னாள் எவ்வம் தீரப் பகல்வந்து
புன்னைஅம் பொதும்பின் இன்னிழற் கழிப்பி
மாலை மால்கொள நோக்கிப் பண்ஆய்ந்து
வலவன் வண்தேர் இயக்க நீயும்
செலவுவிருப் புறுதல் ஒழிகதில் அம்ம-
5
'செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன்
பல்பூங் கானற் பவத்திரி அனவிவள்
நல்லெழில் இளநலம் தொலைய ஒல்லெனக்
கழியே ஓதம் மல்கின்று வழியே
வள்ளெயிற்று அரவொடு வயமீன் கொட்கும்
10
சென்றோர் மன்ற மான்றன்று பொழுது' என
நின்திறத்து அவலம் வீட இன்றிவண்
சேப்பின் எவனோ- பூக்கேழ் புலம்ப-
பசுமீன் நொடுத்த வெந்நெல் மாஅத்
தயிர்மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே
15
வடவர் தந்த வான்கேழ் வட்டம்
குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டிமிர் நறுஞ்சாந்து அணிகுவம்- திண்திமில்
எல்லுத்தொழின் மடுத்த வல்வினைப் பரதவர்
கூர்உளிக் கடுவிசை மாட்டலின் பாய்புடன்
20
கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை
தண்கடல் அசைவளி எறிதொறும் வினைவிட்டு
முன்றில் தாழைத் தூங்கும்
தெண்கடற் பரப்பினெம் உறைவின் ஊர்க்கே.
24
341 உய்தகை இன்றால்- தோழி- பைபயக்
கோங்கும் கொய்குழை உற்றன குயிலும்
தேம்பாய் மாஅத்து ஓங்குசினை விளிக்கும்
நாடுஆர் காவிரிக் கோடுதோய் மலிர்நிறைக்
கழைஅழி நீத்தம் சாஅய வழிநாள்
5
மழைகழிந் தன்ன மாக்கால் மயங்குஅறல்
பதவுமேயல் அருந்து துளங்குஇமில் நல்லேறு
மதவுடை நாகொடு அசைவீடப் பருகி
குறுங்காற் காஞ்சிக் கோதை மெல்லிணர்ப்
பொன்தகை நுண்தாது உறைப்பத் தொக்குஉடன்
10
குப்பை வார்மணல் எக்கர்த் துஞ்சும்
யாணர் வேனில்மன் இது-
மாண்நலம் நுகரும் துணையுடை யோர்க்கே.
13
342 ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை
புணர்ந்தோர் போலப் போற்றுமதி நினக்குயான்
கிளைஞன் அல்லனோ- நெஞ்சே- தெனாஅது
வெல்போர்க் கவுரியர் நல்நாட்டு உள்ளதை
மண்கொள் புற்றத்து அருப்புஉழை திறப்பின்
5
ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார்
அருங்குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்துபடப்
பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கை
கெடாஅ நல்இசைத் தென்னன் தொடாஅ
10
நீர்இழி மருங்கில் கல்லளைக் கரந்தஅவ்
வரையர மகளிரின் அரியள்
அவ்வரி அல்குல் அணையாக் காலே!
13
343 வாங்குஅமை புரையும் வீங்குஇறைப் பணைத்தோள்
சில்சுணங்கு அணிந்த பல்பூண் மென்முலை
நல்லெழில் ஆகம் புல்லுதல் நயந்து
மரம்கோள் உமண்மகன் பெயரும் பருதிப்
புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்
5
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூர்உளி குயின்ற கோடுமாய் எழுத்துஅவ்
ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும்
கண்பொரி கவலைய கானத்து ஆங்கண்
நனந்தலை யாஅத்து அம்தளிர்ப் பெருஞ்சினை
10
இல்போல் நீழல் செல்வெயில் ஒழிமார்
நெடுஞ்செவிக் கழுதைக் குறுங்கால் ஏற்றைப்
புறம்நிறை பண்டத்துப் பொறைஅசாஅக் களைந்த
பெயர்படை கொள்ளார்க்கு உயவுத்துணை ஆகி
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்துநின்று
15
உள்ளினை- வாழிஎன் நெஞ்சே- கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரிமதர் மழைக்கண்
சின்மொழிப் பொலிந்த துவர்வாய்ப்
பன்மாண் பேதையின் பிரிந்தநீயே.
19
344 வளமழை பொழிந்த வால்நிறக் களரி
உளர்தரு தண்வளி உறுதொறும் நிலவெனத்
தொகுமுகை விரிந்த முடககாற் பிடவின்
வைஏர் வால்எயிற்று ஒள்நுதல் மகளிர்
கைமாண் தோணி கடுப்பப் பையென
5
மயிலினம் பயிலும் மரம்பயில் கானம்
எல்லிடை உறாஅ அளவை வல்லே
கழல்ஒளி நாவின் தெண்மணி கறங்க
நிழல்ஒலிப் பன்ன நிமிர்பரிப் புரவி
வயக்குஉறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து
10
இயக்குமதி- வாழியோ கையுடை வலவ!
பயப்புறு படர்அட வருந்திய
நயப்புஇன் காதலி நகைமுகம் பெறவே.
13
345 'விசும்புதளி பொழிந்து வெம்மை நீங்கித்
தண்பதம் படுதல் செல்கெனப் பன்மாண்
நாம்செல விழைந்தன மாக' ஓங்குபுகழ்க்
கான்அமர் செல்வி அருளலின் வெண்கால்
பல்படைப் புரவி எய்திய தொல்லிசை
5
நுணங்குநுண் பனுவற் புலவன் பாடிய
இனமழை தவழும் ஏழில் குன்றத்துக்
கருங்கால் வேங்கைச் செம்பூம் பிணையல்
ஐதுஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
சின்னாள் கழிக! என்று முன்னாள்
10
நம்மொடு பொய்த்தனர் ஆயினும் தம்மொடு
திருந்துவேல் இளையர் சுரும்புண மலைமார்
மாமுறி ஈன்று மரக்கொம்பு அகைப்ப
உறைகழிந்து உலந்த பின்றைப் பொறைய
சிறுவெள் அருவித் துவலையின் மலர்ந்த
15
கருங்கால் நுணவின் பெருஞ்சினை வான்பூச்
செம்மணற் சிறுநெறி கம்மென வரிப்பக்
காடுகவின் பெறுக- தோழி- ஆடுவளிக்கு
ஒல்குநிலை இற்றி ஒருதனி நெடுவீழ்
கல்கண் சீக்கும் அத்தம்
அல்குவெயில் நீழல் அசைந்தனர் செலவே.
21
346 நகைநன்று அம்ம தானே- இறைமிசை
மாரிச் சுதையின் ஈர்ம்புறத்து அன்ன
கூரல் கொக்கின் குறும்பறைச் சேவல்
வெள்ளி வெண்தோடு அன்ன கயல்குறித்துக்
கள்ளார் உவகைக் கலிமகிழ் உழவர்
5
காஞ்சிஅம் குறுந்தறி குத்தித் தீஞ்சுவை
மென்கழைக் கரும்பின் நன்பல மிடைந்து
பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி
வருத்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை
மீதுஅழி கடுநீர் நோக்கிப் பைப்பயப்
10
பார்வல் இருக்கும் பயம்கேழ் ஊர-
யாம்அது பேணின்றோ இலமே- நீ நின்
பண்ணமை நல்யாழ்ப் பாணனொடு விசிபிணி
மண்ணார் முழவின் கண்ணதிர்ந்து இயம்ப
மகிழ்துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி
15
எம்மனை வாரா யாகி முன்னாள்
நும்மனைச் சேர்ந்த ஞான்றை அம்மனைக்
குறுந்தொடி மடந்தை உவந்தனள்- நெடுந்தேர்
இழையணி யானைப் பழையன் மாறன்
மாடமலி மறுகின் கூடல் ஆங்கண்
20
வெள்ளத் தானையொடு வேறுபுலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல்அமர் சாஅய்க்
கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி
ஏதின் மன்னர் ஊர்கொளக்
கோதை மார்பன் உவகையிற் பெரிதே.
25
347 தோளும் தொல்கவின் தொலைய நாளும்
நலங்கவர் பசலை நல்கின்று நலியச்
சால்பெருந் தானைச் சேர லாதன்
மால்கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய
பண்ணமை முரசின் கண் அதிர்ந்தன்ன
5
கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர்நமக்கு ஒழியச்
சென்றனர் ஆயினும் செய்வினை அவர்க்கே
வாய்க்கதில்- வாழி தோழி- வாயாது
மழைகரந்து ஒளித்த கழைதிரங்கு அடுக்கத்து
10
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென குவவுஅடி
வெண்கோட்டு யானை முழக்கிசை வெரீஇக்
கன்றொழித்து ஒடிய புன்தலை மடப்பிடி
கைதலை வைத்த மையல் விதுப்பொடு
கெடுமகப் பெண்டிரின் தேரும்
நெடுமர மருங்கின் மலைஇறந் தோரே!
16
348 என்ஆ வதுகொல் தானே- முன்றில்
தேன்தேர் சுவைய திரள்அரை மாஅத்துக்
கோடைக்கு ஊழ்த்த கமழ்நறுந் தீங்கனிப்
பயிர்ப்புறுப் பலவின் எதிர்ச்சுளை அளைஇ
இறாலொடு கலந்த வண்டுமூசு அரியல்
5
நெடுங்கண் ஆடுஅமைப் பழுநிக் கடுந்திறல்
பாப்புக்கடுப்பு அன்ன தோப்பி வான்கோட்டுக்
கடவுள்ஓங்கு வரைக்கு ஓக்கிக் குறவர்
முறித்தழை மகளிர் மடுப்ப மாந்தி
அடுக்கல் ஏனல் இரும்புனம் மறந்துழி
10
யானை வவ்வின தினைஎன நோனாது
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇச்
சிலைஆய்ந்து திரிதரும் நாடன்
நிலையா நல்மொழி தேறிய நெஞ்சே?
14
349 அரம்போழ் அவ்வளை செறிந்த முன்கை
வரைந்துதாம் பிணித்த தொல்கவின் தொலைய
எவன்ஆய்ந் தனர்கொல்- தோழி! ஞெமன்
தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே
5
உரன்மலி உள்ளமொடு முனைபா ழாக
அருங்குறும்பு எறிந்த பெருங்கல வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நல்நாட்டு
எழிற் குன்றத்துக் கவாஅன் கேழ்கொளத்
திருந்துஅரை நிவந்த கருங்கால் வேங்கை
10
எரிமருள் கவளம் மாந்திக் களிறுதன்
வரிநுதல் வைத்த வலிதேம்பு தடக்கை
கல்லூர் பாம்பின் தோன்றும்
சொல்பெயர் தேஎத்த சுரன்இறந் தோரே.
14
350 கழியே, சிறுகுரல் நெய்தலொடு காவிகூம்ப
எறிதிரை ஓதம் தரல்ஆ னாதே
துறையே, மருங்கின் போகிய மாக்கவை மருப்பின்
இருஞ்சேற்று ஈர்அளை அலவன் நீப்ப
வழங்குநர் இன்மையின் பாடுஆன் றன்றே;
5
கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
வடிமணி நெடுந்தேர் பூண ஏவாது
ஏந்துஎழில் மழைக்கண் இவள்குறை யாகச்
சேந்தனை சென்மோ- பெருநீர்ச் சேர்ப்ப!-
இலங்குஇரும் பரப்பின் எறிசுறா நீக்கி
10
வலம்புரி மூழ்கிய வான்திமிற் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்
கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும்
குவவுமணல் நெடுங்கோட்டு ஆங்கண்
உவக்காண் தோன்றும்எம் சிறுநல் ஊரே!
15
351 வேற்றுநாட்டு உறையுள் விருப்புறப் பேணி
பெறல்அருங் கேளிர் பின்வந்து விடுப்ப
பொருள்அகப் படுத்த புகல்மலி நெஞ்சமொடு
குறைவினை முடித்த நிறைவின் இயக்கம்
அறிவுறூஉம் கொல்லோ தானே- கதிர்தெற
5
கழலிலை உகுத்த கால்பொரு தாழ்சினை
அழல் அகைந் தன்ன அம்குழைப் பொதும்பில்
புழல்வீ இருப்பைப் புன்காட்டு அத்தம்
மறுதரல் உள்ளமொடு குறுகத் தோற்றிய
செய்குறி ஆழி வைகல்தோறு எண்ணி
10
எழுதுசுவர் நினைந்த அழுதுவார் மழைக்கண்
விலங்குவீழ் அரிப்பனி பொலங்குழைத் தெறிப்ப
திருந்திழை முன்கை அணல் அசைத்து ஊன்றி
இருந்துஅணை மீது பொருந்துவீக் கிடக்கை
வருந்துதோள் பூசல் களையும் மருந்தென
15
உள்ளுதொறு படூஉம் பல்லி
புள்ளுத்தொழுது உறைவி செவிமுத லானே?
17
352 'முடவுமுதிர் பலவின் குடம்மருள் பெரும்பழம்
பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்
பாடிமிழ் அருவிப் பாறை மருங்கின்
ஆடுமயில் முன்னது ஆகக் கோடியர்
விழவுகொள் மூதூர் விறலி பின்றை
5
முழவன் போல அகப்படத் தழீஇ
இன்துணைப் பயிரும் குன்ற நாடன்
குடிநன்கு உடையன் கூடுநர்ப் பிரியலன்
கெடுநா மொழியலன் அன்பினன்' என நீ
வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய்
10
நல்லை காண் இனிக்- காதல் அம்தோழீஇ!-
கடும்பரி புரவி நெடுந்தேர் அஞ்சி
நல்லிசை நிறுத்த நயம்வரு பனுவல்
தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன்
எண்ணுமுறை நிறுத்த பண்ணின் னுள்ளும்
15
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே.
17
353 ஆள்வினைப் பிரிதலும் உண்டோ ? பிரியினும்
கேளினி- வாழிய நெஞ்சே!- நாளும்
கனவுக்கழிந் தனைய வாகி நனவின்
நாளது செலவும் மூப்பினது வரவும்
அரிதுபெறு சிறப்பின் காமத்து இயற்கையும்
5
இந்நிலை அறியாய் ஆயினும் செந்நிலை
அமைஆடு அங்கழை தீண்டிக் கல்லென
ஞெமைஇலை உதிர்த்த எரிவாய்க் கோடை
நெடுவெண் களரி நீறுமுகந்து சுழலக்
கடுவெயில் திருகிய வேனில்வெங் காட்டு
10
உயங்குநடை மடப்பிணை தழீஇய வயங்குபொறி
அறுகோட்டு எழிற்கலை அறுகயம் நோக்கித்
தெண்நீர் வேட்ட சிறுமையின் தழைமறந்து
உண்நீர் இன்மையின் ஒல்குவன தளர
மரம்நிழல் அற்ற இயவின் சுரனிறந்து
15
உள்ளுவை அல்லையோ மற்றே- உள்ளிய
விருந்து ஒழிவு அறியாப் பெருந்தண் பந்தர்
வருந்தி வருநர் ஓம்பித் தண்ணெனத்
தாதுதுகள் உதிர்த்த தாழைஅம் கூந்தல்
வீழ்இதழ் அலரி மெல்லகம் சேர்த்தி
20
மகிழ்அணி முறுவல் மாண்ட சேக்கை
நம்மொடு நன்மொழி நவிலும்
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே?
23
354 மதவலி யானை மறலிய பாசறை
இடிஉமிழ் முரசம் பொருகளத்து இயம்ப
வென்றுகொடி எடுத்தனன் வேந்தனும் கன்றொடு
கறவைப் பல்லினம் புறவுதொறு உகளக்
குழல்வாய் வைத்தனர் கோவலர் வல்விரைந்து
5
இளையர் ஏகுவனர் பரிய விரியுளைக்
கடுநடைப் புரவி வழிவாய் ஓட
வலவன் வள்புவலி உறுப்பப் புலவர்
புகழ்குறி கொண்ட பொலந்தார் அகலத்துத்
தண்கமழ் சாந்தம் நுண்துகள் அணிய
10
வென்றிகொள் உவகையொடு புகுதல் வேண்டின்
யாண்டுஉறை வதுகொல் தானே...மாண்ட
போதுஉறழ் கொண்ட உண்கண்
தீதிலாட்டி திருநுதற் பசப்பே?
14
355 மாவும் வண்தளிர் ஈன்றன குயிலும்
இன்தீம் பல்குரல் கொம்பர் நுவலும்
மூதிலை ஒழித்த போதுஅவிழ் பெருஞ்சினை
வல்லோன் தைவரும் வள்ளுயிர்ப் பாலை
நரம்புஆர்த் தன்ன வண்டினம் முரலும்
5
துணிகயம் துன்னிய தூமணல் எக்கர்த்
தாதுஉகு தண்பொழில் அல்கிக் காதலர்
செழுமனை மறக்கும் செவ்விவேனில்
தானே வந்தன்று ஆயின் ஆனாது
இலங்குவளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப்
10
புலந்தனம் வருகம் சென்மோ- தோழி!
'யாமே எமியம் ஆக நீயே
பொன்நயந்து அருள்இலை யாகி
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே.
14
356 மேல்துறைக் கொளீஇய கழாலின் கீழ்த்துறை
உகுவார் அருந்தப் பகுவாய் யாமை
கம்புள் இயவன் ஆக விசிபிணித்
தெண்கண் கிணையின் பிறழும் ஊரன்
இடைநெடுந் தெருவிற் கதுமெனக் கண்டென்
5
பொற்றெடி முன்கை பற்றின னாக
'அன்னாய்!' என்றனென் அவன்கைவிட் டனனே
தொன்னசை சாலாமை நன்னன் பறம்பில்
சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய
கற்போல் நாவினே னாகி மற்றுது
10
செப்பலென் மன்னால் யாய்க்கே நல்தேர்க்
கடும்பகட்டு யானைச் சோழர் மருகன்
நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
நல்லடி உள்ளா னாகவும் ஒல்லார்
கதவ முயறலும் முயல்ப அதாஅன்று
15
ஒலிபல் கூந்தல் நம்வயின் அருளாது
கொன்றனன் ஆயினும் கொலைபழுது அன்றே
அருவி ஆம்பல் கலித்த முன்துறை
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
மின்னீர் ஓதி!- என்னைநின் குறிப்பே?
20
357 கொடுமுள் ஈங்கைச் சூரலொடு மிடைந்த
வான்முகை இறும்பின் வயவொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய
தடமருப்பு யானை வலம்படத் தொலைச்சி
வியலறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து
5
புலவுப்புலி புரண்ட புல்சாய் சிறுநெறி
பயில்இருங் கானத்து வழங்கல் செல்லாது
பெருங்களிற்று இனநிரை கைதொடூஉப் பெயரும்
தீஞ்சுளைப் பலவின் தொழுதி உம்பற்
பெருங்காடு இறந்தனர் ஆயினும் யாழநின்
10
திருந்திழைப் பணைத்தோள் வருந்த நீடி
உள்ளாது அமைதலோ இலரே நல்குவர்
மிகுபெயல் நிலைஇய தீநீர்ப் பொய்கை
அடைஇறந்து அவிழ்ந்த தண்கமழ் நீலம்
காலொடு துயல்வந் தன்னநின்
ஆய்இதழ் மழைக்கண் அமர்த்த நோக்கே.
16
358 நீலத்து அன்ன நிறம்கிளர் எருத்தின்
காமர் பீலி ஆய்மயில் தோகை
இன்தீம் குரல துவன்றி மென்சீர்
ஆடுதகை எழில்நலம் கடுப்பக் கூடி
கண்ணேர் இதழ தண்நறுங் குவளை .
5
குறுந்தொடர் அடைச்சிய நறும்பல் கூழை
நீடுநீர் நெடுஞ்சுனை ஆயமொடு ஆடாய்
உயங்கிய மனத்தை யாகிப் புலம்புகொண்டு
இன்னை ஆகிய நின்நிறம் நோக்கி
அன்னை வினவினள் ஆயின், அன்னோ!
10
என்னென உரைக்கோ யானே- துன்னிய
பெருவரை இழிதரும் நெடுவெள் அருவி
ஓடை யானை உயர்மிசை எடுத்த
ஆடுகொடி கடுப்பத் தோன்றும்
கோடுயர் வெற்பன் உறீஇய நோயே?
15
359 'பனிவார் உண்கணும் பசந்த தோளும்
நனிபிறர் அறியச் சாஅய நாளும்
கரந்தனம் உறையும் நம்பண்பு அறியார்
நீடினர் மன்னோ காதலர்' எனநீ
எவன்கை யற்றனை?- இகுளை!- அவரே
5
வான வரம்பன் வெளியத்து அன்னநம்
மாணலம் தம்மொடு கொண்டனர்- முனாஅது
அருஞ்சுரக் கவலை அசைஇய கோடியர்
பெருங்கல் மீமிசை இயம்எழுந் தாங்கு
வீழ்பிடி கெடுத்த நெடுந்தாள் யானை
5
சூர்புகல் அடுக்கத்து மழைமாறு முழங்கும்
பொய்யா நல்லிசை மாவண் புல்லி
கவைக்கதிர் வரகின் யாணர்ப் பைந்தாள்
முதைச்சுவல் மூழ்கிய கான்சுடு குரூஉப்புகை
அருவித் துவலையொடு மயங்கும்
பெருவரை அத்தம் இயங்கி யோரே!
16
360 பல்பூந் தண்பொழில் பகல்உடன் கழிப்பி
ஒருகால் ஊர்திப் பருதிஅம் செல்வன்
குடவயின் மாமலை மறையக் கொடுங்கழித்
தண்சேற்று அடைஇய கணைக்கால் நெய்தல்
நுண்தாது உண்டு வண்டினம் துறப்ப
5
வெருவரு கடுந்திறல் இருபெரும் தெய்வத்து
உருவுடன் இயைந்த தோற்றம் போல
அந்தி வானமொடு கடலணி கொளாஅ
வந்த மாலை பெயரின் மற்றிவள்
பெரும்புலம் பினளே தெய்ய அதனால்
10
பாணி பிழையா மாண்வினைக் கலிமா
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி
நெடுந்தேர் அகல நீக்கிப் பையெனக்
குன்றுஇழி களிற்றின் குவவுமணல் நந்தி
இரவின் வம்மோ- உரவுநீர்ச் சேர்ப்ப!-
15
இனமீன் அருந்து நாரையொடு பனைமிசை
அன்றில் சேக்கும் முன்றில் பொன்னென
நன்மலர் நறுவீ தாஅம்
புன்னை நறும்பொழில் செய்தநம் குறியே
19
361 'தூமலர்த் தாமரைப் பூவின் அங்கண்
மாஇதழ்க் குவளை மலர்பிணைத் தன்ன
திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண்
அணிவளை முன்கை ஆயிதழ் மடந்தை
வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும்
5
கவவுப்புலந்து உறையும் கழிபெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியிற் சிறந்ததொன்று இல்லென
அன்பால் மொழிந்த என்மொழி கொள்ளாய்
பொருள்புரி வுண்ட மருளி நெஞ்சே!-
கரியாப் பூவின் பெரியோர் ஆர
10
அழலெழு தித்தியம் மடுத்த யாமை
நிழலுடை நெடுங்கயம் புகல்வேட் டாஅங்கு
உள்ளுதல் ஓம்புமதி இனிநீ முள்ளெயிற்றுச்
சின்மொழி அரிவை தோளே- பன்மலை
வெவ்வறை மருங்கின் வியன்சுரம்
எவ்வம் கூர இறந்தனம் யாமே!
16
362 பாம்புடை விடர பனிநீர் இட்டுத்துறை
தேம்கலந்து ஒழுக யாறுநிறைந் தனவே
வெண்கோட்டு யானை பொருத புண்கூர்ந்து
பைங்கண் வல்லியம் கல்லளைச் செறிய
முருக்கரும்பு அன்ன வள்ளுகிர் வயப்பிணவு
5
கடிகொள வழங்கார் ஆறே ஆயிடை
எல்லிற்று என்னான் வென்வேல் ஏந்தி
நசைதர வந்த நன்ன ராளன்
நெஞ்சுபழு தாக வறுவியன் பெயரின்
இன்றிப் பொழுதும் யான்வா ழலனே
10
எவன்கொல்?- வாழி தோழி!- நம் இடைமுலைச்
சுணங்கணி முற்றத்து ஆரம் போலவும்
சிலம்புநீடு சோலைச் சிதர்தூங்கு நளிர்ப்பின்
இலங்குவெள் அருவி போலவும்
நிழல்கொண் டனவால், திங்கள்அம் கதிரே!
15
363 நிறைசெலல் இவுளி விரைவுடன் கடைஇ
அகலிரு விசும்பிற் பகல்செலச் சென்று
மழுகுசுடர் மண்டிலம் மாமலை மறைய
பொழுதுகழி மலரிற் புனையிழை! சாஅய்!
அணை அணைந்து இனையை ஆகல்- கணையரைப்
5
புல்லிலை நெல்லிப் புகரில் பசுங்காய்
கல்லதர் மருங்கில் கடுவளி உதிர்ப்ப
பொலஞ்செய் காசிற் பொற்பத் தாஅம்
அத்தம் நண்ணி அதர்பார்த் திருந்த
கொலைவெங் கொள்கைக் கொடுந்தொழின் மறவர்
10
ஆறுசெல் மாக்கள் அருநிறத்து எறிந்த
எஃகுஉறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய
வளைவாய்ப் பருந்தின் வள்ளுகிர்ச் சேவல்
கிளைதரு தெள்விளி கெழுமுடைப் பயிரும்
இன்னா வெஞ்சுரம் இறந்தோர் முன்னிய
15
செய்வினை வலத்தர் ஆகி இவணயந்து
எய்தவந் தனரே!- தோழி!- மையெழில்
துணையேர் எதிர்மலர் உண்கண்
பிணையேர் நோக்கம் பெருங்கவின் கொளவே.
19
364 மாதிரம் புதையப் பாஅய்க் கால்வீழ்த்து
ஏறுடைப் பெருமழை பொழிந்தென அவல்தோறு
ஆடுகளப் பறையின் வரிநுணல் கறங்க
ஆய்பொன் அவிர்இழை தூக்கி யன்ன
நீடிணர்க் கொன்றை- கவின்பெறக் காடுடன்
5
சுடர்புரை தோன்றிப் புதல்தலைக் கொளாஅ
முல்லை இல்லமொடு மலரக் கல்ல
பகுவாய்ப் பைஞ்சுனை மாவுண மலிரக்
கார்தொடங் கின்றே காலை காதலர்
வெஞ்சின வேந்தன் வியன்பெரும் பாசறை
10
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்
யாதுசெய் வாங் கொல்?- தோழி!- நோதகக்
கொலைகுறித் தன்ன மாலை
துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே!
14
365 அகல்வாய் வானம் ஆலிருள் பரப்ப
பகல்ஆற்றுப் படுத்த பையென் தோற்றமொடு
சினவல் போகிய புன்கண் மாலை
அத்தம் நடுகல் ஆள்என உதைத்த
கான யானைக் கதுவாய் வள்ளுகிர்
5
இரும்பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண்
கடுங்கண் ஆடவர் ஏமுயல் கிடக்கை
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
என்றூழ் வெஞ்சுரம் தந்த நீயே!
துயர்செய்து ஆற்றா யாகிப் பெயர்பாங்கு
10
உள்ளினை- வாழிய- நெஞ்சே!- வென்வேல்
மாவண் கழுவுள் காமூர் ஆங்கண்
பூதம் தந்த பொரியரை வேங்கைத்
தண்கமழ் புதுமலர் நாறும்
அஞ்சில் ஓதி ஆய்மடத் தகையே.
15
366 தாழ்சினை மருதம் தகைபெறக் கவினிய
நீர்சூழ் வியன்களம் பொலியப் போர்ப்பஅழித்து
கள்ளார் களமர் பகடுதலை மாற்றி
கடுங்காற்று எறியப் போகிய துரும்புடன்
காயல் சிறுதடிக் கண்கெடப் பாய்தலின்
5
இருநீர்ப் பரப்பின் பனித்துறைப் பரதவர்
தீம்பொழி வெள்ளுப்புச் சிதைதலின் சினைஇக்
கழனி உழவரொடு மாறுஎதிர்ந்து மயங்கி
இருஞ்சேற்று அள்ளல் எறிசெருக் கண்டு
நரைமூ தாளர் கைபிணி விடுத்து
10
நனைமுதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம்பூண் எவ்வி நீழல் அன்ன
நலம்பெறு பணைத்தோள் நன்னுதல் அரிவையொடு
மணங்கமழ் தண்பொழில் அல்கி நெருநை
நீதற் பிழைத்தமை அறிந்து
கலுழ்ந்த கண்ணளெம் அணங்கன் னானே.
16
367 இலங்குசுடர் மண்டிலம் புலந்தலைப் பெயர்ந்து
பல்கதிர் மழுகிய கல்சேர் அமையத்து
அலந்தலை மூதேறு ஆண்குரல் விளிப்ப
மனைவளர் நொச்சி மாசேர்பு வதிய
முனையுழை இருந்த அம்குடிச் சீறூர்க்
5
கருங்கால் வேங்கைச் செஞ்சுவல் வரகின்
மிகுபதம் நிறைந்த தொகுகூட்டு ஒருசிறைக்
குவியடி வெருகின் பைங்கண் ஏற்றை
ஊன்நசைப் பிணவின் உயங்குபசி களைஇயர்
தளிர்புரை கொடிற்றின் செறிமயிர் எருத்திற்
10
கதிர்த்த சென்னிக் கவிர்ப்பூ அன்ன
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும் இனிது மன்றம்ம-
நல்லக வனமுலை அடையப் புல்லுதொறும்
உயிர்குழைப் பன்ன சாயற்
செயிர்தீர் இன்துணைப் புணர்ந்திசி னோர்க்கே.
16
368 தொடுதோற் கானவன் சூடுறு வியன்புனம்
கரிபுறம் கழீஇய பெரும்பாட்டு ஈரத்துக்
தொடுவளர் பைந்தினை நீடுகுரல் காக்கும்
ஒண்தொடி மகளிர்க்கு ஊசல் ஆக
ஆடுசினை ஒழித்த கோடுஇணர் கஞலிய
5
குறும்பொறை அயலது நெடுந்தாள் வேங்கை
மடமயிற் குடுமியின் தோன்றும் நாடன்
உயர்வரை மருங்கின் காந்தளம் சோலைக்
குரங்குஅறி வாரா மரம்பயில் இறும்பிற்
கடிசுனைத் தெளிந்த மணிமருள் தீநீர்
10
பிடிபுணர் களிற்றின் எம்மொடு ஆடிப்
பல்நாள் உம்பர்ப் பெயர்ந்து சில்நாள்
கழியா மையே வழிவழிப் பெருகி
அம்பணை விளைந்த தேக்கட் டேறல்
வண்டுபடு கண்ணியர் மகிழும் சீறூர்
15
எவன்கொல்- வாழி, தோழி!- கொங்கர்
மணியரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன
அலர்ஆ கின்றது பலர்வாய்ப் பட்டே?
19
369 கண்டிசின்- மகளே!- கெழீஇ இயைவெனை
ஒண்தொடி செறித்த முன்கை ஊழ்கொள்பு
மங்கையர் பலபா ராட்டச் செந்தார்க்
கிள்ளையும் தீம்பால் உண்ணா மயிலியற்
சேயிழை மகளிர் ஆயமும் அயரா
5
தாழியும் மலர்பல அணியா கேழ்கொளக்
காழ்புனைந்து இயற்றிய வனப்பமை நோன்சுவர்
பாவையும் பலிஎனப் பெறாஅ நோய்பொர
இவை கண்டு இனைவதன் தலையும் நினைவிலேன்
கொடியோள் முன்னியது உணரேன் 'தொடியோய்!
10
இன்றுநின் ஒலிகுரல் மண்ணல்' என்றதற்கு,
எற்புலந்து அழிந்தன ளாகித் தற்றகக்
கடல்அம் தானைக் கைவண் சோழர்
கெடல்அரு நல்லிசை உறந்தை அன்ன
நிதியுடை நல்கர்ப் புதுவது புனைந்து
15
தமர்மணன் அயரவும் ஒல்லாள் கவர்முதல்
ஓமை நீடிய உலவை நீளிடை
மணியணி பலகை மாக்காழ் நெடுவேல்
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
அறியாத் தேஎத்து அருஞ்சுரம் மடுத்த
20
சிறியோற்கு ஒத்தஎன் பெருமடத் தகுவி
'சிறப்பும் சீரும் இன்றிச் சீறூர்
நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை
ஓர்ஆ யாத்த ஒருதூண் முன்றில்
ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ
மேயினள் கொல்?' என நோவல் யானே.
26
370 'வளைவாய்க் கோதையர் வண்டல் தைஇ
இளையோர் செல்ப எல்லும் எல்லின்று
அகலிலைப் புன்னைப் புகர்இல் நீழல்
பகலே எம்மொடு ஆடிஇரவே
காயல் வேய்ந்த தேயா நல்லில்
5
நோயொடு வைகுதி ஆயின் நுந்தை
அருங்கடிப் படுவலும்' என்றி; மற்று 'நீ
செல்லல்' என்றலும் ஆற்றாய் 'செலினே
வாழலென்' என்றி ஆயின் ஞாழல்
வண்டுபடத் ததைந்த கண்ணி நெய்தல்
10
தண்ணரும் பைந்தார் துயல்வர அந்திக்
கடல்கெழு செல்வி கரைநின் றாங்கு
நீயே கானல் ஒழிய யானே
வெறிகொள் பாவையிற் பொலிந்தஎன் அணிதுறந்து
ஆடுமகள் போலப் பெயர்தல்
ஆற்றேன் தெய்ய அலர்கவிவ் வூரே!
16
371 அவ்விளிம்பு உரீஇய விசையமை நோன்சிலை
செவ்வாய்ப் பகழிச் செயிர்நோக்கு ஆடவர்
கணையிடக் கழிந்ததன் வீழ்துணை உள்ளிக்
குறுநெடுந் துணைய மறிபுடை ஆடப்
புன்கண் கொண்ட திரிமருப்பு இரலை
5
மேய்பதம் மறுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து
நெய்தலம் படுவில் சில்நீர் உண்ணாது
எஃகுஉறு மாந்தரின் இனைந்துகண் படுக்கும்
பைதற வெம்பிய பாழ்சேர் அத்தம்
எமியம் நீந்தும் எம்மினும் பனிவார்ந்து
10
என்ன ஆம்கொல் தாமே 'தெண்நீர்
ஆய்சுனை நிகர்மலர் போன்ம்' என நசைஇ
வீதேர் பறவை விழையும்
போதார் கூந்தல்நம் காதலி கண்ணே?
14
372 அருந்தெறன் மரபின் கடவுள் காப்பப்
பெருந்தேன் தூங்கும் நாடுகாண் நனந்தலை
அணங்குடை வரைப்பிற் பாழி ஆங்கண்
வேண்முது மாக்கள் வியனகர்க் கரந்த
அருங்கல வெறுக்கையின் அரியோள் பண்புநினைந்து
5
வருந்தினம் மாதோ எனினும் அஃது ஒல்லாய்
இரும்பணை தொடுத்த பலராடு ஊசல்
ஊர்ந்திழி கயிற்றின் செலவர வருந்தி
நெடுநெறிக் குதிரைக் கூர்வேல் அஞ்சி
கடுமுனை அலைத்த கொடுவில் ஆடவர்
10
ஆடுகொள் பூசலின் பாடுசிறந்து எறியும்
பெருந்துடி வள்பின் வீங்குபு நெகிழா
மேய்மணி இழந்த பாம்பின் நீநனி
தேம்பினை- வாழிஎன் நெஞ்சே!- வேந்தர்
கோண்தணி எயிலிற் காப்புச் சிறந்து
ஈண்டுஅருங் குரையள்நம் அணங்கி யோளே.
16
373 முனைகவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீர்எழுந்து
மனைபாழ் பட்ட மரைசேர் மன்றத்துப்
பணைத்தாள் யானை பரூஉப்புறம் உரிஞ்சக்
செதுகாழ் சாய்ந்த முதுகாற் பொதியில்
அருஞ்சுரம் நீந்திய வருத்தமொடு கையற்றுப்
5
பெரும்புன் மாலை புலம்புவந்து உறுதர
மீளிஉள்ளம் செலவுவலி யுறுப்பத்
தாள்கை பூட்டிய தனிநிலை இருக்கையொடு
தன்னிலை உள்ளும் நந்நிலை உணராள்
இரும்பல் கூந்தல் சேயிழை மடந்தை
10
கனையிருள் நடுநாள் அணையொடு பொருந்தி
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு ஐதுஉயிரா
ஆயிதழ் மழைக்கண் மல்கநோய் கூர்ந்து
பெருந்தோள் நனைக்கும் கலுழ்ந்துவார் அரிப்பனி
மெல்விரல் உகிரின் தெறியினள் வென்வேல்
15
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
ஒருங்குஅகப் படுத்த முரவுவாய் ஞாயில்
ஓர்எயில் மன்னன் போலத்
துயில்துறந் தனள்கொல்? அளியள் தானே!
19
374 மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி
மலர்தலை உலகம் புதைய வலன்ஏர்பு
பழங்கண் கொண்ட கொழும்பல் கொண்மூ
போழ்ந்த போலப் பலவுடன் மின்னி
தாழ்ந்த போல நனியணி வந்து
5
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி
இடியும் முழக்கும் இன்றிப் பாணர்
வடியுறு நல்யாழ் நரம்புஇசைத் தன்ன
இன்குரல் அழிதுளி தலைஇ நன்பல
பெயல்பெய்து கழிந்த பூநாறு வைகறைச்
10
செறிமணல் நிவந்த களர்தோன்று இயவில்
குறுமோட்டு மூதாய் குறுகுறு ஓடி
மணிமண்டு பவளம் போலக் காயா
அணிமிகு செம்மல் ஒளிப்பன மறையக்
கார்கவின் கொண்ட காமர் காலைச்
15
செல்க தேரே- நல்வலம் பெறுந!
பெருந்தோள் நுணுகிய நுசுப்பின்
திருந்திழை அரிவை விருந்தெதிர் கொளவே!
18
375 'சென்று நீடுநர் அல்லர்; அவர்வயின்
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை!
அம்புதொடை அமைதி காண்மார் வம்பலர்
கலனிலர் ஆயினும் கொன்றுபுள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலைக்
5
கணநரி இனனொடு குழீஇ நிணனருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசிவிரல்
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
அரைசேர் யாத்த வெண்திரள் வினைவிறல்
எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன்
10
விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி
குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார்
செம்புஉறழ் புரிசைப் பாழி நூறி
வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்
15
அஞ்சுவரு மரபின் வெஞ்சுரம் இறந்தோர்
நோயிலர் பெயர்தல் அறியின்
ஆழல மன்னோ தோழி! என் கண்ணே.
18
376 செல்லல் மகிழ்ந! நிற் செய்கடன் உடையென்மன்-
கல்லா யானை கடிபுனல் கற்றென
மலிபுனல் பொருத மருதொங்கு படப்பை
ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்துறை
கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத்
5
தண்பதம் கொண்டு தவிர்த்த இன்னிசை
ஒண்பொறிப் புனைகழல் சேவடி புரளக்
கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று
இரும்பொலப் பாண்டில் மணியொடு தெளிர்ப்பப்
புனல்நயந்து ஆடும் அத்தி அணிநயந்து
10
காவிரி கொண்டுஒளித் தாங்கு மன்னோ!
நும்வயிற் புலத்தல் செல்லேம்; எம்வயின்
பசந்தன்று காண்டிசின் நுதலே; அசும்பின்
அம்தூம்பு வள்ளை அழற்கொடி மயக்கி
வண்தோட்டு நெல்லின் வாங்குபீள் விரியத்
15
துய்த்தலை முடங்குஇறாத் தெறிக்கும் பொற்புடைக்
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன்
மரந்தை அன்னஎன் நலம்தந்து சென்மே!
18
377 கோடை நீடலின் வாடுபுலத்து உக்க
சிறுபுல் உணவு நெறிபட மறுகி
நுண்பல் எறும்பி கொண்டளைச் செறித்த
வித்தா வல்சி வீங்குசிலை மறவர்
பல்லூழ் புக்குப் பயன்நிரை கவரக்
5
கொழுங்குடி போகிய பெரும்பாழ் மன்றத்து
நரைமூ தாளர் அதிர்தலை இறக்கிக்
கவைமனத்து இருத்தும் வல்லுவனப்பு அழிய
வரிநிறச் சிதலை அரித்தலின் புல்லென்று
பெருநலம் சிதைந்த பேஎம்முதிர் பொதியில்
10
இன்னா ஒருசிறைத் தங்கி இன்னகைச்
சிறுமென் சாயல் பெருநலம் உள்ளி
வம்பலர் ஆகியும் கழிப மன்ற-
நசைதர வந்தோர் இரந்தவை
இசைபடப் பெய்தல் ஆற்று வோரே!
15
378 'நிதியம் துஞ்சும் நிவந்தோங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள
வங்கூழ் ஆட்டிய அம்குழை வேங்கை
நன்பொன் அன்ன நறுந்தாது உதிரக்
காமர் பீலி ஆய்மயில் தோகை
5
வேறுவேறு இனத்த வரைவாழ் வருடைக்
கோடுமுற்று இளந்தகர் பாடுவிறந்து இயல
ஆடுகள வயிரின் இனிய ஆலிப்
பசும்புற மென்சீர் ஒசிய விசும்புஉகந்து
இருங்கண் ஆடுஅமைத் தயங்க இருக்கும்
10
பெருங்கல் நாடன் பிரிந்த புலம்பும்
உடன்ற அன்னை அமரா நோக்கமும்
வடந்தை தூக்கும் வருபனி அற்சிரச்
சுடர்கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு
குடகடல் சேரும் படர்கூர் மாலையும்
15
அனைத்தும் அடூஉநன்று நலிய உஞற்றி
யாங்ஙனம் வாழ்தி?' என்றி- தோழி!-
நீங்கா வஞ்சினம் செய்துநத் துறந்தோர்
உள்ளார் ஆயினும் உளெனே- அவர் நாட்டு
அள்ளிலைப் பலவின் கனிகவர் கைய
20
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
கடுந்திறல் அணங்கின் நெடும்பெருங் குன்றத்துப்
பாடின் அருவி சூடி
வான்தோய் சிமையம் தோன்ற லானே.
24
379 நந்நயந்து உறைவி தொன்னலம் அழியத்
தெருளா மையின் தீதொடு கெழீஇ
அருளற நிமிர்ந்த முன்பொடு பொருள்புரிந்து
ஆள்வினைக்கு எதிரிய மீளிநெஞ்சே!
நினையினை ஆயின் எனவ கேண்மதி!-
5
விரிதிரை முந்நீர் மண்திணி கிடக்கைப்
பரிதிஅம் செல்வம் பொதுமை இன்றி
நனவின் இயன்றது ஆயினும் கங்குற்
கனவின் அற்று அதன் கழிவே அதனால்
விரவுறு பன்மலர் வண்டுசூழ்பு அடைச்சிச்
10
சுவல்மிசை அரைஇய நிலைதயங்கு உறுமுடி
ஈண்டுபல் நாற்றம் வேண்டுவயின் உவப்பச்
செய்வுறு விளங்கிழைப் பொலிந்த தோள்சேர்பு
எய்திய கனைதுயில் ஏற்றொறும் திருகி
மெய்புகு வன்ன கைகவர் முயக்கின்
15
மிகுதிகண் டன்றோ இலெனே நீ நின்
பல்பொருள் வேட்கையின் சொல்வரை நீவிச்
செலவுவலி யுறுத்தனை ஆயிற் காலொடு
கனைஎரி நிகழ்ந்த இலையில் அம் காட்டு
உழைப்புறத்து அன்ன புள்ளி நீழல்
20
அசைஇய பொழுதில் பசைஇய வந்துஇவள்
மறப்புஅரும் பல்குணம் நிறத்துவந்து உறுதர
ஒருதிறம் நினைத்தல் செல்லாய் திரிபுநின்று
உறுபுலி உழந்த வடுமருப்பு ஒருத்தற்குப்
பிடியிடு பூசலின் அடிபடக் குழிந்த
25
நிரம்பா நீளிடைத் தூங்கி
இரங்குவை அல்லையோ உரங்கெட மெலிந்தே?
27
380 தேர்சேண் நீக்கித் தமியன் வந்து, நும்
ஊர்யாது? என்ன நணிநணி ஒதுங்கி
முன்னாள் போகிய துறைவன் நெருநை
அகலிலை நாவல் உண்துறை உதிர்த்த
கனிகவின் சிதைய வாங்கிக் கொண்டுதன்
5
தாழை வேர்அளை வீழ்துணைக்கு இடூஉம்
அலவற் காட்டி, 'நற்பாற்று இது' என
நினைந்த நெஞ்சமொடு நெடிதுபெயர்ந் தோனே
உதுக்காண் தோன்றும் தேரே இன்றும்
நாம்எதிர் கொள்ளா மாயின் தான்அது
10
துணிகுவன் போலாம் நாணுமிக உடையன்
வெண்மணல் நெடுங்கோட்டு மறைகோ?-
அம்ம, தோழி!- கூறுமதி நீயே!
13
381 ஆளி நன்மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண்கோடு வாங்கிக் குருகருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண் மஞ்சுதப
அழல்கான்று திரிதரும் அலங்குகதிர் மண்டிலம்
5
நிழல்சூன்று உண்ட நிரம்பா நீளிடை
கற்றுரிக் குடம்பைக் கதநாய் வடுகர்
விற்சினம் தணிந்த வெருவரு கவலை
குருதி ஆடிய புலவுநாறு இருஞ்சிறை
எருவைச் சேவல் ஈண்டுகிளைத் தொழுதி
10
பச்சூன் கொள்ளை சாற்றிப் பறைநிவந்து
செக்கர் வானின் விசும்பணி கொள்ளும்
அருஞ்சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார்
முனைஅரண் கடந்த வினைவல் தானைத்
தேனிமிர் நறுந்தார் வானவன் உடற்றிய
15
ஒன்னாத் தெவ்வர் மன்னெயில் போலப்
பெரும்பாழ் கொண்ட மேனியள் நெடிதுயிர்த்து
வருந்தும்கொல்? அளியள் தானே!- சுரும்புண
நெடுநீர் பயந்த நிரைஇதழ்க் குவளை
எதிர்மலர் இணைப்போது அன்னதன்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே!
21
382 பிறருறு விழுமம் பிறரும் நோப
தம்முறு விழுமம் தமக்கோ தஞ்சம்
கடம்புகொடி யாத்துக் கண்ணி சூட்டி
வேறுபல் குரல ஒருதூக்கு இன்னியம்
காடுகெழு நெடுவேட் பாடுகொளைக்கு ஏற்ப
5
அணங்கயர் வியன் களம் பொலியப் பையத்
தூங்குதல் புரிந்தனர் நமரென ஆங்கவற்கு
அறியக் கூறல் வேண்டும்- தோழி!-
அருவி பாய்ந்த கருவிரல் மந்தி
செழுங்கோட் பலவின் பழம்புணை யாகச்
10
சாரல் பேரூர் முன்துறை இழிதரும்
வறனுறல் அறியாச் சோலை
விறன்மலை நாடன் சொல்நயந் தோயே!
13
383 தற்புரந்து எடுத்த எற்றுந்து உள்ளாள்
ஊருஞ் சேரியும் ஓராங்கு அலர்எழக்
காடுங் கானமும் அவனொடு துணிந்து
நாடுந் தேயமும் நனிபல இறந்த
சிறுவன் கண்ணிக்கு ஏர்தே றுவரென
5
வாடினை- வாழியோ, வயலை!- நாள்தொறும்
பல்கிளைக் கொடிகொம்பு அலமர மலர்ந்த
அல்குல் தலைக்கூட்டு அம்குழை உதவிய
வினையமை வரனீர் விழுத்தொடி தத்தக்
கமஞ்சூற் பெருநிறை தயங்க முகந்துகொண்டு
10
ஆய்மடக் கண்ணள் தாய்முகம் நோக்கிப்
பெய்சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள் வைகலும்
ஆரநீர் ஊட்டிப் புரப்போர்
யார்மற்றுப் பெறுகுவை அளியை நீயே!
14
384 இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்
புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது வந்த
ஆறுநனி அறிந்தன்றொ இலெனே! "தா அய்
முயற்பறழ் உகளும் முல்லையம் புறவிற்
5
கவைக்கதிர் வரகின் சீறூர் ஆங்கண்
மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ
இழிமின்" என்றநின் மொழிமருண் டிசினே!
வான்வழங்கு இயற்கை வளி பூட் டினையோ?
மானுரு ஆகநின் மனம்பூட் டினையோ
10
உரைமதி- வாழியோ வலவ! - எனத்தன்
வரைமருள் மார்பின் அளிப்பனன் முயங்கி
மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை
விருந்தேர் பெற்றனள் திருந்திழை யோளே!
14
385 தன்னோ ரன்ன ஆயமும் மயிலியல்
என்னோ ரன்ன தாயரும் காணக்
கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
பொன்னுடை நெடுநகர் புரையோர் அயர
5
நன்மாண் விழவில் தகரம் மண்ணி
யாம்பல புணர்ப்பச் சொல்லாள் காம்பொடு
நெல்லி நீடிய கல்லறைக் கவாஅன்
அத்த ஆலத்து அலந்தலை நெடுவீழ்
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ
10
வளையுடை முன்கை அளைஇக் கிளைய
பயிலிரும் பிணையல் பசுங்காழ்க் கோவை
அகலமை அல்குல் பற்றிக் கூந்தல்
ஆடுமயிற் பீலியின் பொங்க நன்றும்
தானமர் துணைவன் ஊக்க ஊங்கி
15
உள்ளாது கழிந்த முள்ளெயிற்றுத் துவர்வாய்ச்
சிறுவன் கண்ணி சிலம்பு கழீஇ
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே!
18
386 பொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்து
வாளை நாளிரை தேரும் ஊர!
நாணினென் பெரும! யானே- பாணன்
மல்லடு மார்பின் வலியுற வருந்தி
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்
5
நிறைத்திரண் முழவுத்தோள் கையகத்து ஒழிந்த
திறன்வேறு கிடக்கை நோக்கி நற்போர்க்
கணையன் நாணி யாங்கு- மறையினள்
மெல்ல வந்து நல்ல கூறி
மைஈர் ஓதி மடவோய்! யானும்நின்
10
சேரி யேனே அயலி லாட்டியேன்
நுங்கை ஆகுவென் நினக்கெனத் தன்கைத்
தொடுமணி மெல்விரல் தண்ணெனத் தைவர
நுதலும் கூந்தலும் நீவி
பகல்வந்து பெயர்ந்த வாணநுதற் கண்டே!
15
387 திருந்திழை நெகிழ்ந்து பெருந்தோள் சாஅய்
அரிமதர் மழைக்கண் கலுழச் செல்வீர்!
வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ
உவருணப் பறைந்த ஊன்தலைச் சிறாஅரொடு
அவ்வரி கொன்ற கறைசேர் வள்ளுகிர்ப்
5
பசைவிரற் புலைத்தி நெடிதுபிசைந்து ஊட்டிய
பூந்துகில் இமைக்கும் பொலன்காழ் அல்குல்
அவ்வரி சிதைய நோக்கி வெவ்வினைப்
பயிலரிற் கிடந்த வேட்டுவிளி வெரீஇ
வரிப்புற இதலின் மணிக்கட் பேடை
10
நுண்பொறி அணிந்த எருத்தின் கூர்முட்
செங்காற் சேவற் பயிரும் ஆங்கண்
வில்லீண்டு அருஞ்சமம் ததைய நூறி
நல்லிசை நிறுத்த நாணுடை மறவர்
நிரைநிலை நடுகற் பொருந்தி இமையாது
15
இரைநசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி
சிறிய தெற்றுவ தாயிற் பெரிய
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்
நின்றாங்குப் பெயரும் கானம்
சென்றோர் மன்னென இருக்கிற் போர்க்கே.
20
388 அம்ம!- வாழி தோழி!- நம்மலை
அமையறுத்து இயற்றிய வெவ்வாய்த் தட்டையின்
நறுவிரை ஆரம் அறவெறிந்து உழுத
உளைக்குரல் சிறுதினை கவர்தலின் கிளையமல்
பெருவரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி
5
ஓங்கிருஞ் சிலம்பின் ஒள்ளிணர் நறுவீ
வேங்கையம் கவட்டிடை நிவந்த இதணத்துப்
பொன்மருள் நறுந்தாது ஊதும் தும்பி
இன்னிசை ஓரா இருந்தன மாக
'மையீர் ஓதி மடநல் லீரே!
10
நொவ்வியற் பகழி பாய்ந்தெனப் புண்கூர்ந்து
எவ்வமொடு வந்த உயர்மருப்பு ஒருத்தல்நும்
புனத்துழிப் போகல் உறுமோ மற்று' என
சினவுக்கொள் ஞமலி செயிர்த்துப்புடை ஆடச்
சொல்லிக் கழிந்த வல்விற் காளை
15
சாந்தார் அகலமும் தகையும் மிகநயந்து
ஈங்குநாம் உழக்கும் எவ்வம் உணராள்
நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறியென
அன்னை தந்த முதுவாய் வேலன்
'எம்மிறை அணங்கலின் வந்தன்று இந்நோய்
20
தணிமருந்து அறிவல்' என்னும் ஆயின்
வினவின் எவனோ மற்றே- கனல்சின
மையல் வேழம் மெய்யுளம் போக
ஊட்டி யன்ன ஊன்புரள் அம்பொடு
காட்டுமான் அடிவழி ஒற்றி
வேட்டம் செல்லுமோ நும்மிறை? எனவே.
26
389 அறியாய்- வாழி தோழி!- நெறிகுரல்
சாந்தார் கூந்தல் உளரிப் போதணிந்து
தேங்கமழ் திருநுதல் திலகம் தைஇயும்
பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி வேறுபட
நல்லிள வனமுலை அல்லியொடு அப்பியும்
5
பெருந்தோள் தொய்யில் வரித்தும் சிறுபரட்டு
அஞ்செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்
எற்புறந் தந்து நிற்பா ராட்டிப்
பல்பூஞ் சேக்கையிற் பகலும் நீங்கார்
மனைவயின் இருப்பவர் மன்னே- துனைதந்து
10
இரப்போர் ஏந்துகை நிறையப் புரப்போர்
புலம்பில் உள்ளமொடு புதுவதந்து உவக்கும்
அரும்பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர்
சிறுபுன் கிளவிச் செல்லல் பாழ்பட
நல்லிசை தம்வயின் நிறுமார் வல்வேல்
15
வான வரம்பன் நல்நாட்டு உம்பர்
வேனில் நீடிய வெங்கடற்று அடைமுதல்
ஆறுசெல் வம்பலர் வேறுபிரிந்து அலறக்
கொலைவெம் மையின் நிலைபெயர்ந்து உறையும்
பெருங்களிறு தொலைச்சிய இருங்கேழ் ஏற்றை
20
செம்புல மருங்கிற் றன்கால் வாங்கி
வலம்படு வென்றியொடு சிலம்பகம் சிலம்பப்
படுமழை உருமின் முழங்கும்
நெடுமர மருங்கின் மலைஇறந் தோரே!
24
390 உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றி
அதர்படு பூழிய சேட்புலம் படரும்
ததர்கோல் உமணர் பதிபோகு நெடுநெறிக்
கணநிரை வாழ்க்கைதான் நன்று கொல்லோ
வணர்சுரி முச்சி முழுதுமற் புரள
5
ஐதகல் அல்குல் கவின்பெறப் புனைந்த
பல்குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி
நெல்லும் உப்பும் நேரே ஊரீர்!
கொள்ளீரோ எனச் சேரிதொறும் நுவலும்
அவ்வாங்கு உந்தி அமைத்தோ ளாய்! நின்
10
மெய்வாழ் உப்பின் விலைஎய் யாம்எனச்
சிறிய விலங்கின மாகப் பெரியதன்
அரிவேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி
யாரீ ரோஎம் விலங்கி யீஇரென
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற
15
சில்நிரை வால்வளைப் பொலிந்த
பல்மாண் பேதைக்கு ஒழிந்ததென் நெஞ்சே!
17
391 பார்வல் வெருகின் கூர்எயிற்று அன்ன
வரிமென் முகைய நுண்கொடி அதிரல்
மல்ககல் வட்டியர் கொள்விடம் பெறாஅர்
விலைஞர் ஒழித்த தலைவேய் கான்மலர்
தேம்பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி
5
தண்ணறுங் கதுப்பிற் புணர்ந்தோர்- புனைந்தவென்
பொதிமாண் முச்சி காண்தொறும் பண்டைப்
பழவணி உள்ளப் படுமால்- தோழி!
இன்றொடு சில்நாள் வரினுஞ் சென்றுநனி
படாஅ வாகுமெம் கண்ணே கடாஅ
10
வான்மருப்பு அசைத்தல் செல்லாது யானைதன்
வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை
குன்றுபுகு பாம்பின் தோன்றும்
என்றூழ் வைப்பின் சுரனிறந் தோரே!
14
392 தாழ்பெருந் தடக்கை தலைஇய கானத்து
வீழ்பிடி கெடுத்த வெண்கோட்டு யானை
உண்குளகு மறுத்த உயக்கத் தன்ன
பண்புடை யாக்கைச் சிதைவுநன்கு அறீஇப்
பின்னிலை முனியா னாகி நன்றும்
5
தாதுசெல் பாவை அன்ன தையல்
மாதர் மெல்லியல் மடநல் லோள்வயின்
தீதின் றாக நீபுணை புகுகென
என்னும் தண்டும் ஆயின் மற்றவன்
அழிதகப் பெயர்தல் நனிஇன் னாதே
10
ஒல்லினி வாழி தோழி!- கல்லெனக்
கணமழை பொழிந்த கான்படி இரவில்
தினைமேய் யானை இனனிரிந்து ஓடக்
கல்லுயர் கழுதில் சேணோன் எறிந்த
வல்வாய்க் கவணின் கடுவெடி ஒல்லென
15
மறப்புலி உரற வாரணம் கதற
நனவுறு கட்சியின் நன்மயில் ஆல
மலையுடன் வெரூஉம் மாக்கல் வெற்பன்
பிரியுநள் ஆகலே அரிதே அதாஅன்று
உரிதல் பண்பிற் பிரியுநன் ஆயின்
20
வினைதவப் பெயர்ந்த வென்வேல் வேந்தன்
முனைகொல் தானையொடு முன்வந்து இறுப்பத்
தன்வரம்பு ஆகிய மன்னெயில் இருக்கை
ஆற்றா மையின் பிடித்த வேல்வலித்
தோற்றம் பிழையாத் தொல்புகழ் பெற்ற
25
விழைதக ஓங்கிய கழைதுஞ்சு மருங்கிற்
கானமர் நன்னன் போல
யான்ஆ குவல்நின் நலம்தரு வேனே.
28
393 கோடுயர் பிறங்கற் குன்றுபல நீந்தி
வேறுபுலம் படர்ந்த வினைதரல் உள்ளத்து
ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரிய
முதைச்சுவற் கலித்த ஈர்இலை நெடுந்தோட்டுக்
கவைக்கதிர் வரகின் கால்தொகு பொங்கழி
5
கவட்டடிப் பொருத பல்சினை உதிர்வை
அகன்கண் பாறைச் செவ்வயின் தெறீஇ
வரியணி பணைத்தோள் வார்செவித் தன்னையர்
பண்ணை வெண்பழத்து அரிசி ஏய்ப்பச்
சுழல்மரம் சொலித்த சுளகுஅலை வெண்காழ்
10
தொடிமாண் உலக்கை ஊழின் போக்கி
உரல்முகம் காட்டிய சுரைநிறை கொள்ளை
ஆங்கண் இருஞ்சுனை நீரொடு முகவாக்
களிபடு குழிசிக் கல்லடுப்பு ஏற்றி
இணர்ததை கடுக்கை ஈண்டிய தாதிற்
15
குடவர் புழுக்கிய பொங்கவிழ்ப் புன்கம்
மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும்
நிரைபல குழீஇய நெடுமொழிப் புல்லி
தேன்தூங்கு உயர்வரை நல்நாட்டு உம்பர்
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டவர்
20
நீடலர்- வாழி தோழி!- தோடுகொள்
உருகெழு மஞ்ஞை ஒலிசீர் ஏய்ப்பத்
தகரம் மண்ணிய தண்ணறு முச்சிப்
புகரில் குவளைப் போதொடு தெரிஇதழ்
வேனில் அதிரல் வேய்ந்தநின் ஏமுறு புணர்ச்சி இன்துயில் மறந்தே.
26
394 களவும் புளித்தன; விளவும் பழுநின;
சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர்
இதைப்புன வரகின் அவைப்புமாண் அரிசியொடு
கார்வாய்த்து ஒழிந்த ஈர்வாய்ப் புற்றத்து
ஈயல்பெய்து அட்ட இன்புளி வெஞ்சோறு
5
சேதான் வெண்ணெய் வெம்புறத்து உருக
இளையர் அருந்தப் பின்றை, நீயும்
இடுமுள் வேலி முடக்காற் பந்தர்ப்
புதுக்கலத்து அன்ன செவ்வாய்ச் சிற்றிற்
புனையிருங் கதுப்பின்நின் மனையோள் அயரப்
10
பாலுடை அடிசில் தொடீஇய ஒருநாள்
மாவண் தோன்றல்! வந்தனை சென்மோ-
காடுறை இடையன் யாடுதலைப் பெயர்க்கும்
மடிவிடு வீளை வெரீஇக் குறுமுயல்
மன்ற இரும்புதல் ஒளிக்கும் புன்புல வைப்பின்எம் சிறுநல் ஊரே.
16
395 தண்கயம் பயந்த வண்காற் குவளை
மாரி மாமலர் பெயற்குஏற் றன்ன
நீரொடு நிறைந்த பேரமர் மழைக்கண்
பனிவார் எவ்வம் தீர இனிவரின்
நன்றுமன்- வாழி தோழி!- தெறுகதிர்
5
ஈரம் நைத்த நீர்அறு நனந்தலை
அழல்மேய்ந்து உண்ட நிழன்மாய் இயவின்
வறன்மரத்து அன்ன கவைமருப்பு எழிற்கலை
இறல்அவிர்ந் தன்ன தேர்நசைஇ ஓடிப்
புறம்புவழிப் பட்ட உலமரல் உள்ளமொடு
10
மேய்பிணைப் பயிரும் மெலிந்தழி படர்குரல்
அருஞ்சுரம் செல்லுநர் ஆள்செத்து ஓர்க்கும்
திருந்தரை ஞெமைய பெரும்புனக் குன்றத்து
ஆடுகழை இருவெதிர் நரலும்
கோடுகாய் கடற்ற காடிறந் தோரே!
1 5
396 தொடுத்தேன் மகிழ்ந! செல்லல்- கொடித்தேர்ப்
பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென
யாழிசை மறுகின் பாழி ஆங்கண்
'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன்
இகலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித்
5
தன்னுயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது
தெறலருங் கடவுள் முன்னர்த் தேற்றி
மெல்லிறை முன்கை பற்றிய சொல்லிறந்து
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்பநின்
மார்புதரு கல்லாய் பிறன் ஆயினையே
10
இனியான் விடுக்குவென் அல்லென் மந்தி
பனிவார் கண்ணள் பலபுலந்து உறையக்
கருந்திறல் அத்தி ஆடுஅணி நசைஇ
நெடுநீர்க் காவிரி கொண்டொளித் தாங்குநின்
மனையோள் வவ்வலும் அஞ்சுவல் சினைஇ
15
ஆரியர் அலறத் தாக்கிப் பேர்இசைத்
தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சி யன்னவென் னலம்தந்து சென்மே!
19
397 என்மகள் பெருமடம் யான்பா ராட்டத்
தாய்தன் செம்மல் கண்டுகடன் இறுப்ப
முழவுமுகம் புலரா விழவுடை வியனகர்
மணனிடை யாகக் கொள்ளான் 'கல்பகக்
கணமழை துறந்த கான்மயங்கு அழுவம்
5
எளிய வாக ஏந்துகொடி பரந்த
பொறிவரி அல்குல் மாஅயோட்கு' எனத்
தணிந்த பருவம் செல்லான் படர்தரத்
துணிந்தோன் மன்ற துனைவெங் காளை
கடும்பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்திப்
10
போழ்புண் படுத்த பொரியரை ஓமைப்
பெரும்பொளிச் சேயரை நோக்கி ஊன்செத்துச்
கருங்கால் யாத்துப் பருந்துவந்து இறுக்கும்
சேண்உயர்ந்து ஓங்கிய வானுயர் நெடுங்கோட்டுக்
கோடை வெவ்வளிக்கு உலமரும் புல்லிலை வெதிர நெல்விளை காடே.
16
398 'இழைநிலை நெகிழ்ந்த எவ்வம் கூரப்
படர்மலி வருத்தமொடு பலபுலந்து அசைஇ
மென்தோள் நெகிழச் சாஅய்க் கொன்றை
ஊழுறு மலரின் பாழ்பட முற்றிய
பசலை மேனி நோக்கி நுதல்பசந்து
5
இன்னேம் ஆகிய எம்மிவண் அருளான்
நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று
அலமரல் மழைக்கண் தெண்பனி மல்க
நன்று புறமாறி அகறல் யாழநின்
குன்றுகெழு நாடற்கு என்னெனப் படுமோ?
10
கரைபொரு நீத்தம்! உரைஎனக் கழறி
நின்னொடு புலத்தல் அஞ்சி அவர்மலைப்
பன்மலர் போர்த்து நாணுமிக ஒடுங்கி
மறைந்தனை கழியும் நிற்றந்து செலுத்தி
நயன்அறத் துறத்தல் வல்லி யோரோ!
15
நொதும லாளர் அதுகண் ணோடாது
அழற்சினை வேங்கை நிழல்தவிர்ந்து அசைஇ
மாரி புரந்தர நந்தி ஆரியர்
பொன்படு நெடுவரை புரையும் எந்தை
பல்பூங் கானத்து அல்கி இன்றிவண்
20
சேந்தனை செலினே சிதைகுவது உண்டோ ?
குயவரி இரும்போத்துப் பொருதபுண் கூர்ந்து
உயங்குபிடி தழீஇய மதனழி யானை
வாங்கமைக் கழையின் நரலும் அவர்
ஓங்குமலை நாட்டின் வருஉ வோயே!
25
399 சிமைய குரல சாந்துஅருந்தி இருளி
இமையக் கானம் நாறும் கூந்தல்
நந்நுதல் அரிவை! இன்னுறல் ஆகம்
பருகு வன்ன காதல் உள்ளமொடு
திருகுபு முயங்கல் இன்றியவண் நீடார்-
5
கடற்றடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடைக்கண் நீடமை ஊறல் உண்ட
பாடின் தெண்மணி பயங்கெழு பெருநிரை
வாடுபுலம் புக்கெனக் கோடுதுவைத்து அகற்றி
ஒல்குநிலைக் கடுக்கை அல்குநிழல் அசைஇப்
10
பல்லான் கோவலர் கல்லாது ஊதும்
சிறுவெதிர்ந் தீங்குழற் புலம்புகொள் தெள்விளி
மையில் பளிங்கின் அன்ன தோற்றப்
பல்கோள் நெல்லிப் பைங்கால் அருந்தி
மெல்கிடு மடமரை ஓர்க்கும் அத்தம்
15
காய்கதிர் கடுகிய கவினழி பிறங்கல்
வேய்கண் உடைந்த சிமைய
வாய்படு மருங்கின் மலைஇறந் தோரே. .399-18
400 நகைநன்று அம்ம தானே 'அவனொடு
மனைஇறந்து அல்கினும் அல'ரென நயந்து
கானல் அல்கிய நம்களவு அகல
பல்புரிந்து இயறல் உற்ற நல்வினை
நூல்அமை பிறப்பின் நீல உத்திக்
5
கொய்ம்மயிர் எருத்தம் பிணர்படப் பெருகி
நெய்ம்மிதி முனைஇய கொழுஞ்சோற்று ஆர்கை
நிரலியைந்து ஒன்றிய செலவின் செந்தினைக்
குரல்வார்ந் தன்ன குவவுத்தலை நந்நான்கு
வீங்குசுவல் மொசியத் தாங்குநுகம் தழீஇப் .
10
பூம்பொறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி
மதியுடைய வலவன் ஏவலின் இகுதுறைப்
புனல்பாய்ந் தன்ன வாமான் திண்தேர்க்
கணைகழிந் தன்ன நோன்கால் வண்பரிப்
பால்கண்ட டன்ன ஊதை வெண்மணற்
15
கால்கண்ட டன்ன வழிபடப் போகி
அயிர்ச்சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்
இருள்நீர் இட்டுச்சுரம் நீந்தித் துறைகெழு
மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை
பூமலி இருங்கழித் துயல்வரும் அடையொடு
20
நேமி தந்த நெடுநீர் நெய்தல்
விளையா இளங்கள் நாறப் பலவுடன்
பொதிஅவிழ் தண்மலர் கண்டும் நன்றும்
புதுவது ஆகின்று அம்ம- பழவிறல்
பாடுஎழுந்து இரங்கு முந்நீர் .
நீடிரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே!
26

அகநானுறு முற்றிற்று


This page was last updated on 3 September 2005.