pm logo

இறையனார் அருளிய "களவியல்"
என்னும் "இறையனார் அகப்பொருள்"

kaLaviyal or akapporul of iRaiyanAr
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements :
Our sincere thanks to the following persons for their assistance in the preparation of this work.
Etext - Input-Keying, Proof reading, preparation of Web versions in TSCII, Unicode, PDF versions.
N D LogaSundaram & his daughter Ms. Selvanayagi - Chennai
Web Master Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script in unicode/utf-8 encoding

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

இறையனார் அருளிய "களவியல்"
என்னும் "அகப்பொருள்", நூல் - மூலம்

1. களவு (33), 2. கற்பு (27) ஆக 60 சூத்திரங்கள்
மற்றும் உரைகாரரின் புகழ் பெற்ற இறையனார் அகப்பொருளுரை உரைநடை - ஓர் பகுதி

---------

நூல்
1. களவு


1.1
அன்பின் ஐந்திணைக் களவெனப் படுவ(து)
அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள்
கந்தருவ வழக்கம் என்மனார் புலவர்       1

1.2
அதுவே
தானே அவளே தமியர் காணக்
காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்       2

1.3
ஆங்ஙணம் புணர்ந்த கிழவோன் தன்வயின்
பாங்க னோரின் குறிதலைப்(பு) எய்தலும்
பாங்கிலன் தமியோள் இடம்தலைப் படலும்என்(று)
ஆங்(கு)அவ் இரண்டே தலைப்பெயல் மரபே       3

1.4
அவ்இயல்(பு) அல்லது கூட்டக் கூடல்
எவ்விடத்(து) ஆயினும் களவிற்(கு) இல்லை       4

1.5
புணர்ந்த பின்றை ஆங்ஙணம் ஒழுகாது
பணிந்த மொழியால் தோழி தேஎத்(து)
இரந்துகுறை உறுதலும் கிழவோன் மேற்றே       5

1.6
இரந்துகுறை உறாது கிழவியும் தோழியும்
ஒருங்கு தலைப்(பு)எய்த செவ்வி நோக்கிப்
பதியும் பெயரும் பிறவும் வினாஅய்ப்
புதுவோன் போலப் பொருந்துபு கிளந்து
மதிஉடம் படுத்தற்கும் உரியன் என்ப       6

1.7
முன்உற உணர்தல் குறைஉற உணர்தல்
இருவரும் உள்வழி அவன்வர(வு) உணர்த்தலென்(று)
அம்மூன்(று) என்ப தோழிக்(கு) உணர்ச்சி       7

1.8
ஆங்குணர்ந்(து) அல்லது கிழவோள் தேஎத்துத்
தான்குறை உறுதல் தோழிக்(கு) இல்லை       8

1.9
முன்உற உணரினும் அவன்குறை உற்ற
பின்னர் அல்லது கிளவி தோன்றாது       9

1.10
உள்ளத்(து) உணர்ச்சி தெள்ளிதின் கரந்து
கிழவோள் தேஎத்துக் குறைஉறூஉம் உளவே
குறிப்பறி உறூவும் காலை ஆன       10

1.11
தன்னுள் குறிப்பினை அருகும் தோழிக்கு
முன்னுறு புணர்ச்சியின் அருகலும் உண்டே       11

1.12
குறைஉறும் கிழவனை உணர்ந்த தோழி
சிறைஉறக் கிளந்து சேண்பட நிறுத்தலும்
என்னை மறைத்தல் எவனா கியர்என
முன்உறு புணர்ச்சி மு¨றுமுறை செப்பலும்
மாயப் புணர்ச்சி அவனொடு நகாஅ
நீயே சென்று கூ(று)என விடுத்தலும்
அறியாள் போறலும் குறியாள் கூறலும்
படைத்துமொழி கிளவியும் குறிப்புவேறு கொளலும்
அன்ன பிறவும் தலைப்பெயல் வேட்கை
முன்உறு புணர்ச்சிக்(கு) உரிய என்ப       12

1.13
குறைஉறு புணர்ச்சி தோழி தேஎத்துக்
கிழவிக்(கு) இல்லை தலைப் பெயல் ஆன       13

1.14
தோழிக்(கு) உரியவை கோள்தாய் தேஎத்து
மாறுகோள் இல்லா மொழியுமார் உளவே       14

1.15
முன்படப் புணராத சொல்இன் மையின்
கற்பெனப் படுவது களவின் வழித்தே       15

1.16
களவினுள் தவிர்ச்சி காப்புமிகின் உரித்தே
வரைவிடை வைத்த காலை ஆன       16

1.17
அல்லகுறிப் படுதலும் அவ்வயின் உரித்தே
அவன்வர(வு) அறியும் குறிப்பினன் ஆனா       17

1.18
குறிஎனப் படுவ(து) இரவினும் பகலினும்
அறியக் கிளந்த இடம் என மொழிப       18

1.19
இரவுக் குறியே இவ்வரை இகவாது       19

1.20
பகற்குறி தானே இகப்பினும் வரையார்       20

1.21
இரவுமனை இகந்த குறிஇடத்(து) அல்லது
கிழவோன் சேர்தல் கிழத்திக்(கு) இல்லை       21

1.22
அம்பலும் அலரும் களவு       22

1.23
வெளிப்பட்ட பின்றையும் உரிய கிளவி       23

1.24
களவு வெளிப்படா முன்உறு வரைதல்
களவு வெளிப்பட்ட பின்றை வரைதல் என்(று)
ஆய்இரண்(டு) என்ப வரைதல் ஆறே       24

1.25
பட்ட பின்றை வரையாக் கிழவன்
நெட்டிடைக் கழிந்து பொருள்வயின் பிரிதலும்
பொருள்வயின் பிரியா(து) ஒருவழி தணத்தலும்
புரைவ(து) என்ப கற்பால் ஆன       25

1.26
வெளிப்படை தானே விரிக்கும் காலைத்
தந்தை தாயே தன்னையர் என்(று) ஆங்(கு)
அன்னவர் அறியப் பண்(பு)ஆ கும்மே       26

1.27
அவருள்
தாய்அறி உறுதலின் ஏனோரும் அறிப       27

1.28
தந்தை தன்னயர் ஆய்இரு வீற்றும்
முன்னம் அல்லது கூற்(று) அவண் இல்லை       28

1.29
காப்புக் கைமிக்குக் காமம் பெருகினும்
நொதுமலர் வரையும் பருவம் ஆயினும்
வரைஎதிர் கொள்ளாது தமர்அவண் மறுப்பினும்
அவன்ஊறு அஞ்சும் காலம் ஆயினும்
அந்நால் இடத்தும் மெய்ந்நாண் ஒரீஇ
அறத்தொடு நிற்றல் தோழிக்கும் உரித்தே       29

1.30
காமம் மிக்க கழிபடர் கிளவியும்
காப்புச் சிறைமிக்க கையறு கிளவியும்
ஆறுபார்த்(து) உற்ற அச்சக் கிளவியும்
இரவினும் பகலினும் நீவரு(க) என்றலும்
கிழவோன் தன்னை வாரல் என்றலும்
தன்னுள் கையாறு எய்திடு கிளவியும்
அன்ன மரபின் பிறவும் தொகைஇத்
தன்னை அழிந்த கிளவி எல்லாம்
வரைதல் வேட்கைப் பொருள என்ப       30

1.31
ஆ(று)இன் னாமையும் ஊறும் அச்சமும்
தன்னை அழிதலும் கிழவோர்க்(கு) இல்லை       31

1.32
களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்
திங்கள் இரண்டின் அகம்என மொழிப       32

1.33
களவினுள் தவிர்தல் கிழவோர்(கு) இல்லை       33
-----------

2.1
கற்பினுள் துறவே கடிவரை இன்றே       34

2.2
ஓதல் காவல் பகைதணி வினையே
வேந்தர்க்(கு) உற்றுழி பொருள்பிணி பரத்தைஎன்(று)
ஆங்க ஆறே அவ்வயின் பிரிவே       35

2.3
அவற்றுள்
ஓதலும் காவலும் உயர்ந்தோர்க்(கு) உரிய       36

2.4
வேந்துவினை இயற்கை பார்ப்பார்க்கும் உரித்தே       37

2.5
அரசர் அல்லா ஏனை யோர்க்கும்
புரைவது என்ப ஓரிடத்(து) ஆன       38

2.6
வேந்தர்க்(கு) உற்றுழிப் பொருள்பிணிப் பிரிவென்(று)
ஆங்(கு) அவ்இரண்டும் இழிந்தோர்க்(கு) உரிய       39

2.7
காதல் பரத்தை எல்லார்க்கும் உரித்தே       40

2.8
பிரிவின் நீட்டம் நிலம்பெயர்ந்(து) உறைவோர்க்(கு)
உரிய(து) அன்றே யாண்டுவரை யறுத்தல்       41

2.9
பரத்தையின் பிரிவே நிலத்திரி(பு) இன்றே       42

2.10
பரத்தையின் பிரிந்த கிழவோன் மனைவி
பூப்பின் புறப்பா(டு) ஈர்அறு நாளும்
நீத்(து) அகன்(று) உறைதல் அறத்தா(று) அன்றே       43

2.11
கற்பினுள் பிரிந்தோன் பரத்தையின் மறுத்தந்(து)
அறப்பொருள் படுப்பினும் வரைநிலை இன்றே       44

2.12
புகழும் கொடுமையும் கிழவோன் மேன       45

2.13
கொடுமை இல்லை கிழவி மேற்றே       46

2.14
கிழவோன் முன்னர்க் கிழத்திதன் புகழ்தல்
புலவிக் காலத்துப் புரைவ(து) அன்றே       47

2.15
நாடும் ஊரும் இல்லும் சுட்டித்
தன்வயின் கிளப்பின் புலவிப் பொருட்டே       48

2.16
அவன்வயின் கிளப்பின் வரைவின் பொருட்டே       49

2.17
உணர்ப்புவயின் வாரா ஊடல் தோன்றின்
புலத்தல் தானே கிழவர்க்கும் வரையார்       50

2.18
நிலம்பெயர்ந்(து) உறையும் நிலைஇயல் மருங்கின்
களவுறை கிளவி தோன்றுவ(து) ஆயின்
திணைநிலைப் பெயர்க்கோள் கிழவர்க்கும் வரையார்       51

2.19
நிலம்பொயர்ந்(து) உறையும் எல்லாப் பிரிவும்
ஒழிந்தார் அறியவும் அறியா மையும்
கழிந்துசேண் படூஉம் இயற்கைய என்ப       52

2.20
எல்லா வாயிலும் கிழவோன் பிரிவயின்
பல்ஆற் றானும் வன்புறை குறித்தன்று       53

2.21
வன்புறை குறித்த வாயில் எல்லாம்
அன்புதலைப் பிரிந்த கிளவித் தோன்றின்
சிறைப்புறம் குறித்தன்(று) என்மனார் புலவர்       54

2.22
சிறைப்புறம் குறியா தோன்றலும் உளவே
அவன்புணர்(வு) அறியும் குறிப்பின் ஆன       55

2.23
திணையே வைகோள் கூற்றே கேட்போர்
இடனே காலம் எச்சம் மெய்ப்பாடு
பயனே கோளென்(று) ஆங்(கு)அப் பத்தே
அகன்ஐந் திணையும் உரைத்தல் ஆறே       56

2.24
அவற்றுள்
எச்சமும் கோளும் இன்மையும் உரிய       57

2.25
சொல்லே குறிப்பே ஆய்இரண்(டு) எச்சம்       58

2.26
முன்படக் கிளந்த பொருள்படைக்(கு) எல்லாம்
எச்சம் ஆகி வரும்வழி அறிந்து
கிளந்த அல்ல வேறுபல தோன்றினும்
கிளந்(து)அவற்(று) இயலான் உணர்ந்தனர் கொளலே       59

2.27
களவு கற்(பு)எனக் கண்ணிய ஈண்டையோர்
உளம்நிகழ் அன்பின் உயர்ச்சி மேன       60

இறையனார் களவியல் மூலம் முற்றிற்று

இந்நூலுக்கு நீண்டு அகன்றதோர் உரை உள்ளது
நக்கீரர் அருளியது (என்பர்)

இ·து மிக்க தொன்மை வாய்ந்த தமிழ் உரைநடைக்கு சான்றாக தலையாயாதாய் திகழும் இறையனார் அகப்பொருள் உரை எனும் பெயர்தன்னால் பலர் அறிந்த ஓர் வரலாற்றுச் பெட்டகம் ஆகும். இதனின்று இந்த நூல் பிறந்த காரணம் வரும் 'கேட்டோர்' விளக்கப் பகுதி மட்டும் நற்றமிழ் உலகம் நன்கறிந்த ஓன்று.
இனி நுதலிய பொருள் என்பது நூற்பொருளைச் சொல்லுதல் என்பது.
இந்நூல் என் நுதிலிற்றோ எனின்
தமிழ் நுதலியதென்பது கேட்டோர் யாரோ
எனின் மதுரை உப்பூரிகிழார் மகனாவான் உருத்திர சன்மன்
என்பது.

அவன் கேட்டதற்குக் காரணம் சொல்லுதும்
தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என
மூவகைப்பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள்
அவருள் தலைச்சங்கம் இருந்தார். அகத்தியனாரும்
திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும் குன்றெறிந்த முருகவேளும்
முரிஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும்
என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மர் என்ப.

அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று
நாற்பதின்மர் பாடினர் என்ப.
அவர்களால் பாடப்பட்ட எத்தனையோ.
பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும்
களரியாவிரையும் என இத்தொடக்கத்தன.
அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி
யாண்டு சங்கம் இருந்தார் என்ப.
அவர்களைச் சங்கம் இரீஇனார் காய்சினவழுதி முதலாக
கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்ப.

அவருள் கவி அரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப.

அவர் சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்தது
கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப.

அவருக்கு நூல் அகத்தியம் என்ப.

இனி இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், தொல்காப்பியனாரும்
இருந்தையூர் கருங்கோழியும், மோசியும், வெள்ளூர்காப்பியனும்
சிறுபாண்டரங்கனும், திரையன்மாறனும், துவரைக்கோமானும்
கீரந்தையும் என இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் என்ப.

அவர் உள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றவர் பாடினர் என்ப.

அவர்களால் பாடப்பட்டன
கலியும் குருகும் வெண்டாளியும்
வியாழமாலை அகவலும் என இத்தொடக்கத்தன என்ப.

அவருக்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும்
மாபுராணமும் இசைநுணுக்கமும் பூதபுராணமும் எனஇவை என்ப.

அவர் மூவாயிரத்து எழுநூற்றியாண்டு சங்கமிருந்தார் என்ப.

அவரைச் சங்கம் இரீஇனார் வெண்டேர்ச்செழியன் முதலாக
முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் என்ப.

அவருள் கவி அரங்கேறினார் ஐவர் பாண்டியர் என்ப.

அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது கபாடபுரத்து என்ப.

அக்காலத்தைப் போலும் பாண்டிய நாட்டை கடல் கொண்டது.

இனிக் கடைச்சங்கம் இருந்து தமிழாராய்ந்தார் சிறுமேதாவியாரும்
சேந்தம்பூதனாரும் அறிவுடையனாரும் பெருங்குன்றூர் கிழாரும்
இளந்திருமாறனும் மதுரையாசிரியர் நல்லந்துவனாரும்
மருதனிள நாகனாரும் கணக்காயனார் மகனார் நக்கீரனாரும்
என இத்தொடக்கத்தார் நாற்பதொன்பதின்மர் பாடினார் என்ப.

அவர்களால் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும்
குறந்தொகை நானூறும் நற்றிணை நானூறும்
புறநானூறும் ஐங்குறுநூறும் பதிற்றுப்பத்தும்
நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும்
கூத்தும் வரியும் சிற்றிசையும் பேரிசையும்
என்று இத்தொடக்கத்தன

அவருக்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் என்ப.
அவர் சங்கம் இருந்து தமிழ் ஆராய்தது
ஆயிரத்தொண்ணூற்றைம்பதிற்றி யாண்டு என்ப.

அவருள் கவியரங்கேறினார் முவர் பாண்டியர் என்ப.

அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரை என்ப.

அக்காலத்துப் பாண்டியநாடு பன்னீரியாண்டு வற்கடம் சென்றது
செல்லப் பசி கடுகுதலும் அரசன் சிட்டரை எல்லாம் கூவி

    வம்மின் யாம் உங்களைப் புரந்தரகில்லேன். என் தேயம்     பெரிதும் வருந்துகின்றது நீயிர் போய் உமக்கு அறிந்தவாறு     புக்கு நாடு நாடாயின ஞான்று என்னை உள்ளி வம்மின்

என்றான். என அரசனைவிடுத்து எல்லோரும்
போயின பின்றை கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது
கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது
பெய்த பின்றை அரசன்

    இனி நாடு நாடாயிற்று ஆகலின் நூல் வல்லாரைக் கொணர்க

என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க
எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும்
வல்லாரத் தலைப்பட்டுக் கொணர்ந்து

    பொருளதிகாரம் வல்லாரை     எங்கும் தலைப்பட்டிலேம்

என வந்தார் வர அரசனும் புடைபடக் கவன்று

    என்னை     எழுத்தும் சொல்லும் ஆராய்வது     பொருளதிகாரத்தின் பொருட்டன்றே     பொருளதிகாரம் பெறேம் எனின்     இவை பெற்றும் பெற்றிலேம்

எனச்சொல்லா நிற்ப மதுரை ஆலவாயில்
அழல்நிறக் கடவுள் சிந்திப்பான்

    என்னை பாவம் அரசற்கு கவர்ச்சி பெரிதாயிற்று     அதுதானும் ஞானத்திடை ஆகலான்     யான் அதனைத் தீர்கற்பாலம்

என்று இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து இவை மூன்று
செப்பிதழகத்தெழுதி பீடத்தின் கீழிட்டான்
இட்ட பின்றை ஞான்று
தேவர்குலம் வழிபடுவோன்
தேவர் கோட்டத்தை எங்கும் துடைத்து
நீர் தெளித்துப் பூவிட்டு பீடத்தின் கீழ் பண்டென்றும்
அலகிடாதான் அன்று தெய்வத் தவக்குறிப்பினான்

    அலகிடுவன்

என உள்ளங் குளிர அலகிட்டான் இட்டதற்கு
அவ்வலகினோடும் இதழ் போந்தன
போதரக் கண்டு போந்து நோக்கினார்க்கு
வாய்ப்படைத்தாயிற்றோர்
பொருளதிகாரமாய்க் காட்டிற்று
காட்ட பார்ப்பான் சிந்திப்பான்

    அரசன் பொருளதிகாரம் இன்மையின் கவல்கின்றான்     உலகிற் பொருந்தி வழங்குகின்றமை     அறிந்து பட்டுச் செல்லாநின்றது     உணர்ந்து நம்பெருமான் அருளிச்செய்தானாகும்

என்று தன் அகம் புகாதே கோயில் தலைக்கடைச் சென்று
நின்று கடைக் காப்பார்க்குணர்த்த கடைகாப்பார் அரசற்குணர்த்த
அரசன்

    புகுதருக

என்று பார்பானைக் கூவ சென்று புக்க காட்டக்
கண்டு நோக்கி

    இது பொருளதிகாரம் பெருமான் நம் இடுக்கண் கண்டு     அருளிச் செய்தானாகற்பாலது

என்று அத்திசை நோக்கி தொழுது கொண்டு நின்று
சங்கத்தாரைக் கூவித்து

    இதனைக் கொண்டுபோய்     பொருள் காண்மின்
என
அவர்கள் அதனைக் கொண்டு போந்து கன்மாப் பலகை ஏறியிருந்து
ஆராய்வுழி எல்லோரும் தாம் தம் உரைத்த உரையே
நன்றென்று சிலநாள் சென்றன செல்ல

    நாம் இங்ஙணம் எத்துணை     உரைப்பினும்ஒருதலைப்படாது     நாம் அரசனுழைச் சென்று நமக்கோர் காரணிகனைக் தரல்     வேண்டும் என்று கொண்டு போந்து அவனால்     பொருளெனப் பட்டது பொருளாய்     அன்றெனப்பட்டது     அன்றொழியக் காண்டும்
என
எல்லோரும் ஒருப்பட்டு அரசனுழைச்சென்றார் செல்ல
அரசனும் எதிர் எழுந்து சென்று
    என்னை நூற்குப் பொருள் கண்டீரோ என     அது காரணமாக ஓர் காரணிகனைத் தரல் வேண்டும்
என     போமின் நுமக்கோர் ஓர் காரணிகனை     எங்ஙணம் நாடுவேன் நீவிர்     நாற்பத்தொன்பதின்மர் ஆயிற்று     நுமக்கு நிகராவார் இம்மையினின்றே
என்று அரசன் சொல்லப் போந்து
பின்னையும் கன்மாப் பலகை ஏறியிருந்து அரசனும்

    இது சொல்லினான் யாம்     காரணிகனை பெறுமாறு என்னைகொல்

என்று சிந்தித்திருப்புழி

    சூத்திரம் செய்தான் ஆலவாயில்     அவிர்சடைக் கடவுள் அன்றே     அவனையே காரணிகனைத் தரல்     வேண்டும் என்று சென்று வரங்கிடத்தும்
என்று வரங்கிடப்ப இடையாமத்து

    இவ்வூர் உப்பூரிகிழான் மகனாவான் உருத்திரச் சன்மன் என்பான்     பைங்கண்ணன் புன்மயிரன் ஐயாட்டைப் பிராயத்தான்     ஒருமுங்கைப் பிள்ளை உளன் அவனை அன்னனென்றிகழாது     கொண்டு போந்து ஆசனமேலிரீஇக் கீழிருந்து     சூத்திரப் பொருளுரைத்தால் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்க்கும்     மெய்யாயின உரை கேட்டவிடத்து மெய்யில்லா உரை கேட்டவிடத்து     வாளா இருக்கும் அவன் குமார தெய்வம் அங்கோர் சாபத்தினால் தோன்றினான்

என முக்காலிசைத்த குரல் எல்லோருக்கும் உடன்பாடாயிற்றாக
எழுந்திருந்துதேவர் குலத்தை வலங்கெண்டு போந்து
உப்பூரிகிழாருழைச் சங்கமெல்லாம் சென்று
இவ்வார்த்தை எல்லாம் சொல்லி
    ஐயனாவான் உருத்திரச் சன்மனைத் தரல் வேண்டும்
என வேண்டிக் கொடுபோந்து வெளியது உடீஇ
வெண்பூச்சூட்டி வெண்சாந்தணிந்து கன்மாப்பலகை ஏற்றி இரீஇக்
கீழிருந்து சூத்திரப் பொருளுரைப்ப எல்லோரும் முறையே உரைப்பக் கேட்டு
வாளா இருந்து மதுரை இளநாகனார் உரைத்த இடத்து
ஒரோவழி கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் நிறுத்தி பின்னர்
கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்த இடத்து
பதந்தொறும் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான்
இருப்பஆர்ப்பெடுத்து
    மெய்யுறை பெற்றாம் இந்நூற்கு என்றார்.
அதனால் உப்பூரிகிழார் மகனாவார் உருத்திர சன்மனாவான் செய்தது இந்நூற்குரை
என்பாருமுளர்
அவன் செய்திலன்
மெய்யுரை கேட்டானென்க

மதுரை ஆலவாயில் பெருமானடிகளால் செய்யப்பட்ட நூற்கு
நக்கீரனாரால் உரைகண்டு குமாரசாமியால் கேட்கப்பட்டது என்க.
--------

    இனி     உரை நடந்து வந்தவாறு சொல்லுதும்     மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்     தம்மகனார் கீரங்கொற்றனாற்கு உரைத்தார்
அவர் தேனூர்க் கிழார்க்கு உரைத்தார்
அவர் படிமங் கொற்றானார்க்கு உரைத்தார்
அவர் செல்வத்தாசிரியர் பெருஞ்சுவனார்க்கு உரைத்தார்
அவர் மணலுராசியர் புளியங்காய் பெருஞ்சேந்தனார்க்கு உரைத்தார்
அவர் செல்லுர் ஆசிரியர் ஆண்டைப் பெருங்குமரனார்க்கு உரைத்தார்
அவர் திருக்குன்றத் தாசிரியர்க்கு உரைத்தார்
அவர் மாதவளனார் இளநாகனார்க்கு உரைத்தார்
அவர் முசிறியாசிரியர் நீலகண்டனார்க்கு உரைத்தார்
    இங்ஙணம் வருகின்றது உரை     . . . . . . . .     . . . . . . . .
    களவியல் அகப்பொருள் உரையின்று எடுத்த உரைநடைப் பகுதி முற்றிற்று
இவ் உரையின்படி மூலநூல் ஆசிரியர் மதுரை ஆலவாய் கடவுள் இறைவன்
எனவே இறையனார் அகப்பொருள் எனும் பெயர் அமையப் பெற்றது போலும்
உரையின் ஆசிரியர் நக்கீரர் (அறிஞர் பலருக்கு ஐயம் உள்ளது)



சிறு அடிக்குறிப்பு

    இந்நூல் உரைகாரர், நாமறிந்த சங்கநூல்கள், அவர் காலத்து பழகும் ஏனைய சீர்மிகு நுல்களினின்றும் - பாடல்கள், சூத்திரங்கள் பற்பலவற்றை எடுத்துக்காட்டாக வைக்கின்றார். அவர்தம் உரை விளக்கங்களினின்று இளம்திரையம், சாதவாகனம், கலைக்கோட்டுத் தண்டு, 'நூல்', ' நிகண்டு', செம்பூழ்சேயார்கூற்றியல், கூத்தநூல், சிற்றெட்டகம் எனும் நமக்கு கிடைக்காத தொன்னூற்களின் பெயர்கள், வேறு பல நூல் பாடல்கள் மற்றும் ஓர் அகப்பொருள் கோவை நூலின் பெரும்பகுதி (325+பாடல்கள்) என காணக்கிடைக்கின்றன. 'பாண்டிக்கோவை' எனும் பெயரில் அவ்வகப்பொருள் நூல் வெளிவந்துள்ளது. ஈங்கும் வெளிவரும்.

    இக்'களவியல்' நூலை முறையுடன் உள்ளிட நூல்கள் உதவிய சென்னை பல்கலைகழக தமிழ்த்துறை பேராசிரியர் ஜெயதேவன் அவர்களுக்கு நன்றி உரித்தாகுக.

    நூ.த.லோகசுந்தரமுதலி


This file was last revised on 9 Nov 2021.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com).