pm logo

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 31 (3221-3321)
ஸ்ரீ சச்சிதானந்ததேசிகர் மாலை


Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - part 31 (3221 - 3321)
sri caccitAnanta tEcikar mAlai
In tamil script, unicode/utf-8 format



Acknowledgements:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for providing us with a photocopy of the work.
This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
V. Devarajan, Senthan Swaminathan, Lakshminarayan Haridas,
R. Navaneethakrishnan, Venkatesh Jambulingam, Govindarajan,
S. Karthikeyan, Nalini Karthikeyan and Subbu
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was first put online on 12 Jan 2010.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 31 (3221-3321)
தருமபுர ஆதீனத்து "ஸ்ரீ சச்சிதானந்ததேசிகர் மாலை"

உ - சிவமயம்
காப்பு.
சிவஞான விநாயகர்.
கட்டளைக்கலித்துறை.
3221
மன்னும் புகழ்ச்சிவ ஞான வரோதய மால்களிற்றின்
பன்னும் புகழ்த்துணைப் பாதாம் புயங்கண்மெய்ப் பத்தியுற்ற
மின்னும் புகழ்த்தவ ரன்றிநன் னூல்விருப் பாளர்விழை
முன்னும் புகழ்ச்சச்சி தானந்த மாலைக்கு முன்னிற்குமே.       0

நூல்.

3222
பூமேவு நின்கழல் சார்ந்தாரை யன்பிற் பொருந்தியவர்
தாமேவு மின்பமுற் றாரன்று மின்றுமத் தன்மையரே
மாமேவு மிவ்விரண் டுள்ளேக மேனுமன் னேன்கதியென்
றேமேவு காத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       1

3223
ஒன்று முளேமற் றிரண்டு முளேமொரு மூன்றுமுளே
மென்று முளேமொன்றை யென்றடை வேமென றிரப்பவருக்
கன்று முளேமென் றருள்வாயிப் பேருண்மை யாட்டைபல
சென்று முளேந்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       2

3224
மதிக்கும் பெருங்கள்வ னீயேயென் பார்மழு மான்முதலாப்
பதிக்கும் பலவுங் கரந்தாயிங் குற்றுமொர் பாற்பசுக்கட்
குதிக்கு முணர்வுங் கவர்வா யுணரினுள் ளேயொளிப்பாய்
திதிக்குந் தருமைப் பதிச்சச்சி தானந்த தேசிகனே.       3

3225
ஒன்றா வெனினன்றென் பாயிரண் டாவெனி னோமுரையா
யென்றா வருநிலை யென்றிரப் பார்க்கிரு காலுடனே
நன்றா வயங்கொரு கையையுங் காட்டுவை நன்றுனியல்
சென்றாய் புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       4

3226
மருந்து பிடகர் சுமப்பதெல் லாம்பிறர் மாட்டடைந்த
வருந்து பிணிமுற் றொழிப்பதற் கேபிற வாருயிர்கள்
பொருந்து வினையொழிப் பான்றனுத் தாங்குபு போந்தனைமெய்
திருந்து புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       5

3227
நின்னைப் பணிபவர் நல்லாக் கறப்பவர் நீர்மையிலான்
றன்னைப் பணிபவர் கல்லாக் கறப்பவர் தற்றெரிப்பான்
பொன்னைப் பணிகொள் சடாமுடி யோடிங்குப் போந்தமர்வாய்
தென்னைப் பொழிற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       6

3228
யானுள போதுளை நீயுமென் றாய்சித்து நீயுமென்றாய்
வானுள விச்சை முதன்முச் சொருபன்மன் னீயுமென்றாய்
மீனுள வார்கட னானீ புனலென்று விண்டதெவன்
றேனுள காத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       7

3229
தத்துவ முற்று மசத்தென்பை யென்னைச் சதசத்தென்பை
யொத்துநிற் சத்தென்பை யிவ்வா றுரைக்கு முனைப்பெரியர்
மெத்து மொருமொழி யாளனென் றோதலென் விள்ளுகண்டாய்
சித்துரு வத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       8

3230
காண்பானுங் காட்சியுங் காணப் படுபொரு ளுங்கழித்தல்
வீண்பான் மதிகழி யாமையும் வீணென்று விண்டதெவன்
மாண்பா னிறைந்த சிவஞானச் செல்வ மலிதலினாற்
சேண்பான் மிளிர்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       9

3231
மெய்யோ துவையென்பர் மேதக்க யாருமம் மேதகுசொற்
பொய்யோ புகலடைந் தாரிடந் தத்துவப் பொய்யுஞ்சொல்வா
யையோ வெமர்சொற் றிடினொறுப் பாயழ கேநினக்குச்
செய்யோ வருந்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       10

3232
பாடிவந் தார்க்கென் பரிசளிப் பாயுட் படுமறையிற்
கூடிவந் தாவ முறப்பேசி மூன்றையுங் கொள்ளைகொள்வாய்
நாடிவந் தாருண் மகிழ்வள்ள லேபன் னகரினருந்
தேடிவந் தார்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       11

3233
நிறைமதி யாயென்று நிற்பேசி யின்ப நினைந்தடைந்தேன்
மிறைமதி யாயிங்கு வம்மோவென் னாவிடின மேல்வெகுண்டு
குறைமதி யாயென்று கூறிலென் னாவை குணத்தர்நல்கு
திறைமதி யாய்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       12

3234
மாலார் தமக்கரி யாயென்ப ரன்றின்றும் வாய்மைமணக்
கோலார் பகையுளை யன்றென்ப ரின்றுங் குலாயதது
மேலா ருணைக்கண்டுங் காணரி யாயென்று விள்ளுவன்யான்
சேலார் வயற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       13

3235
மூவா மதிமறைத் தாய்ஞான சம்பந்த மூர்த்தியெனத்
தாவா நலப்பெயர் பூண்டா யஃது தகாதென்பன்யா
னாவா விராகுத் தலையென்ப தெண்ணி யடங்கினன்மெய்த்
தேவா புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       14

3236
ஒன்றனை யாற்ற லொழிதன்மற் றொன்றனை யாற்றலுளாய்
முன்றனை நேரி லுனக்கின் றிலைகொன் மொழிவறிய
வென்றனைப் பாக மிலாயென்ப தென்னை யெழிலிவந்து
தென்றனை யார்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       15

3237
அந்நாள் வினையைந் தெனக்கூ றுதலு மமைந்தநினக்
கிந்நாள் வினையொன் றெனக்கூ றுதலு மெதிர்மறையை
மின்னா ளறிஞர் வினையெனல் போலுமெய் யார்ந்துகற்பஞ்
சின்னா ளெனுந்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       16

3238
அத்து விதம்விசிட் டங்கே வலந்து விதஞ்சிவமிவ்
வொத்து நிகழ்தலி றீர்சுத்த மேகொள்ளென் றோதினையாற்
சத்து மிளிரவ் வவத்தையு மாக்கிற் றவாதடைவேன்
சித்து மலிதரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       17

3239
நின்பார்வை யாலிரு ணீங்கிடு மாலிந் நெடுநிலத்திற்
கென்பார் கதிர்மதி யாலிரு ணீங்குத லென்வியப்பு
வன்பா ரகவிரு ளென்றே யுளத்து மதித்தனன்காண்
டென்பா ரணித்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.      18

3240
இயலார் பெயருஞ் சிறப்பார் பெயரு மியல்வழுவா
வியலார் வழக்கிடை மாறுங்கொ லோதிரு மேனியைப்போ
லுயலார்நின் னாமமு மாறிய தாலென் றுளத்துணர்ந்தேன்
செயலார் மதிற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       19

3241
வேலையி லாயத னாலல வோநம்பு மெய்யடியார்
மாலை யுறாம லவாவேலை யாவையும் வாங்கிக்கொள்வாய்
சோலை விராமது மாந்தி மயங்கித் துனைந்துவரால்
சேலை விராந்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       20

3242
நீயுநின் பேருமொன் றேயென்று தேர்ந்தன நிற்பழிச்சி
லாயு நினைக்கொனின் பேரைக்கொல யாமடை வோமறைதி
யேயு நினக்குந்நின் பேருக்கும் வேற்றுமை யில்லையறஞ்
சேயும் புரிதரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       21

3243
மருவுநின் னாமங்க ளுக்கள வேயிலை மற்றவற்றுட்
பொருவி லிரண்டவற றொன்றைந் தெழுத்தின் பொருளுணர்த்தி
யிருவிமற் றொன்றைந் தெழுத்தின் பொருளு மியையவைத்தாய்
திருவ மலிதரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       22

32443
பூதத்தை வாயுவைப் புந்தியை யைந்து பொறியைமற்றைப்
பேதத்தை யாவியென் றேயுழ லாது பிறங்குவிந்து
நாதத்தை யோவுநின் னுண்மை தெரித்தது நன்றுமலர்ச்
சீதத்தை யார்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       23

3245
தந்தை யிலார்பெறுந் தாயு மிலார்தமர் யாருமிலார்
நந்தை யிலார்மனை யாதி யிலார்வெளி நண்ணினரே
எந்தை யிலாநின் னடியடைந் தாரழ கேயமரர்
சிந்தை யிலார்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       24

3246
நிலையா வுடம்பு விளக்கங்கொண் டன்றி நிருவிகற்ப
மலையாச் சவிகற்ப மிக்காட்சி யெய்துத லாகுங்கொலோ
மலையா வதுதந்த நின்னருள் வாழ்கவம் மாதடம
திலையார் முகற்றிரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       25

3247
அகர வுயிருந் தனிநிலை யாவது மக்கரமே
நிகர வரிய வினையு மசைநிலை யம்பதமே
மகர மரியா வொருநீயும் யானும் வயங்குசித்தே
சிகர மதிற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       26

3248
வளிதாழ் விசும்பைப் பைந்தோலிற் சுருட்டிட வல்லவனு
மளிதாழ்நின் பேரரு டீர்ந்தின்ப மார்தற் கமைபவனு
மொளிதாழ் புவனத்தி லொப்பரன் றோவுண ராதவர்க்குந்
தெளிதாழ் புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       27

3249
எல்லா மறைத்துஞ் சடையொன்று மேபுனைந் திங்கமர்ந்தாய்
வல்லா வெமரு முணர்வர்கொ லோவல் லவருணர்வார்
வில்லார்நற் றாலிபு லாகத்தின் மற்றும் விளங்குமென்று
செல்லார் மதிற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       28

3250
உற்ற வியாபகம் வெம்பாச மென்னி னொழிதலிலை
மற்ற வியாப்பிய மென்னினெஞ் ஞான்று மயங்குகிலாய்
சொற்ற வியாத்தியென் றாய்நீக்கு றாமையென் சொற்றிபொறி
செற்றவர் சூழ்திரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       29

3251
நன்றாய்வெம் பாச மியற்கையென் றாலது நாசமுறா
தொன்றா யிருக்குஞ் செயறகை யனாதி யதுவுமுண
ரென்றா யழியுங்கொ லோவெனக் காரண மெஞ்சவென்றாய்
தென்றாய் வளர்திரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       30

3252
கல்லான் மருவி யமர்ந்திங்கு மேவிக் கஞன்றமரு
மெல்லா னறிஞர் சிகாமணி யாயினை யென்பனிந்தச்
சொல்லான் முனிவு கொளேலுன்மை கூறினன் சூழ்ந்துகருஞ்
செல்லான் மதிற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       31

3253
புறத்து முதன்மை நமக்காக மேவிப் பொலிவகத்து
நிறத்து முதன்மை நமக்காக வேயிது நீநினையென்
றறத்து முதல்வசொற் றாய்சொற்ற வாபின்ன தாகிலையென்
றிறத்து மலிதரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       32

3254
பின்னை யுருவி னிறைமதி யோனெனப் பெற்றபெயர்
முன்னை யுருவிற் குறைமதி யோனென மூண்டபெயர்
தன்னை மறைத்திடுங் கொல்லோ மறைக்கினுஞ் சாற்றுவல்யான்
றென்னை வளத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       33

3255
சத்தாதி யைந்து வசனாதி யைந்து சதாகதிபத்
தொத்தார் தருமிந் திரியம்பத் தந்தக் கரணமொர்நான்
கத்தா புருட னொடுசாக் கிர நுத லார்வையென்றாய்
சித்தா தருமைப் பதிச்சச்சி தானந்த தேசிகனே.       34

3256
சொல்லும் புருவ நடுச்சாக் கிரத்துறச் சொற்றவற்று
ளொல்லுந் தசவிந் திரியங் கழியமற் றுள்ளனவே
புல்லுங் கனவிற் களத்திலென் றாயது போற்றிக்கொண்டேன்
செல்லும் புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       35

3257
பேரார் சுழுத்தி யிதயத் தமர்ந்து பிராணசித்த
நாரார் புருட னொடுநிற்பை நீயென்று நாட்டினையீ
தோரா ரொழிக வுணர்ந்தேன்மற் றோதுவ வோதுபெருஞ்
சீரார் புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       36

3258
பொற்ற துரியம் புகுவாய் பிராணன் புருடனொடு
சொற்றநன் னாபி யதீதத்தின் மூலத்திற் றொக்கமர்வை
யுற்ற புருடனொ டென்றாய் தெளிதர வுள்ளங்கொண்டேன்
செற்ற வளத்தறு மைச்சச்சி தானந்த தேசிகனே.       37

3259
நாலாறு தத்துவ மாயையென் றாய்நவி லேழனையுங்
கோலாறு சாலும் புருடனென் றாய்குறி யைந்தனையு
மேலாறு சூடிய வீசனென் றாயுள் விரித்துணர்ந்தேன்
சேலாறு பாய்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       38

3260
கேவல மாணவ நீக்குமென் றாய்கிள ருஞ்சகல
மாவல மாயையை நீக்குமென் றாய்நல மன்னுசுத்த
நாவல வாவினை நீக்குமென் றாயுண்மை நானுணர்ந்தேன்
சேவல வாதரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       39

3261
ஒன்று சிதசித் தசித்துப் பலவொளிர் சித்துச்சில
வென்று புகன்றனை யோர்முப்பத் தாறையு மெண்ணினன்யான்
கன்று பிறரெங் ஙனமுணர் வார்தென்னை கற்பகத்தைச்
சென்று பொருந்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       40

3262
நீயே யருட்குறி யாய்க்குரு வாய்மெய் நிகழ்ச்சியரா
யாயேக மாமல மாயை கரும மறப்புரிவாய்
தாயே யனையநின் றண்ணளி யென்சொல்வ றண்கடப்பஞ்
சேயே புகழ்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       41

3263
கரத்துச் சுடர்கொண் டிருடனை நேடல் கடுக்குநினை
யுரத்துப் பதித்தறி யாமையை நேடுத லுத்தமனே
வரத்துப் பொலிமெய்க் குரவர் சிகாமணி யேவளங்கூர்
திரத்துப் பொலிதரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       42

3264
மலையா நகரொரு மூன்றழித் தாயன்று வாழ்தரவின்
றுலையா நகரொரு மூன்றையுங் காப்பைநின் னுண்மையெவர்
நிலையாம் வகையுணர் வார்புணர் வார்கையி னீத்தசெம்பொற்
சிலையாய் தமிழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       43

3265
ஒரூ ரிலானென் றுரைப்பார் நினையவ் வுரைமறையா
வாரூர் முகலொரு மூன்றூ ரகத்தர சாட்சிகொண்டாய்
நீரூர் நின்செய்கை நிரம்பநன் றாயிற்று நீடுபெருஞ்
சீரூர் தமிழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       44

3266
நின்னூ ரகர நிகருமை நீரென நேருரைக்கு
முன்னூ ரகரமை யீருற்று நின்றொரு மூன்றுமந்த
மன்னூர் நடுவ கரவு கரத்தை மதிப்பவர்யார்
தென்னூர் தமிழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       45

3267
ஒளிவார் விழியும் படையின் றலையு முதவுகின்ற
களிவார் பதமுத்தி யுஞ்சத்தி யுங்கமம் புண்டரமு
மளிவார் நின்சொல்லு ளமைந்தவும் போல வணிநகரோ
தெளிவார் மகிழ்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       46

3268
அருளா ருலக மொருமூன்று மாடற் கறிகுறியாப்
பொருளார் நகரொரு மூன்றாளு வாய்பெரும் புண்ணியனே
வெருளார் பிறவிப் பிணிமருந் தேமத வேள்பகையே
தெருளா ருறாத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       47

3269
மருவு நகர மொருமூன்று சேர்ந்து வயங்குதல்போற்
பொருவில் பெயரு மொருமூன்று சேர்ந்து பொலிவையகத்
திருவு மவர்க்கினி யாய்தனி யாய்தழைந் தெவ்வகைய
திருவு மலிதரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       48

3270
கூடு நகர மொருமூன்று ளாய்க்குக் கொடுத்திடுவன்
மூடு நகரமொன் றென்னது காணது முற்றுங்கொண்மோ
சூடு நகரஞ் சிறப்புப் பொருளென்று சொல்லிவிடே
றேடு நகர்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       49

3271
மோதும் வலைகொடு முன்படுத் தாயொர் முழுமகர
மோது மருள்வலை கொண்டுகொ ளின்றெ னொருமகரம்
போது மலியும்பொற் றாதுகுத் தேவெளி போநதியைச்
சேதுசெய் காத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       50

3272
கரையு மவத்தை யொருமூன்று காரணங் காரியமோ
விரையும் பதினைந் துடையானு நீயென்று விண்டனையால்
வரையுந் தியபுனற் காவிரிப் பாலெழு வாளைமுகிற்
றிரையும் வளத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       51

3273
அரிக்கு மயற்கு மடைவரிய தாகிய வானந்தந்தோம்
பரிக்கு மெனெக்குங் கிடைக்குங்கொ லோவெனப் பையவுனை
யிரிக்குந் திறமுளை யேற்பெறு வாயென் றியம்பினையென்
றெரிக்குந் தமிழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       52

3274
அகார முலகம் பலவற் றையுமினி தாக்குமென்றா
யுகாரமுண் டாய வுலக மனைத்து மொடுக்குமென்றாய்
மகார மவைக்குள் ளொளியாய்ப் பிரேரித்து மன்னுமென்றாய்
சிகார வுருத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       53

3275
பேசு மகார முகார மகாரம் பிரணவமீ
தேசுத றீர்மறை வித்தா மசபை யிதனிடத்தே
கூசுத லோவி யியங்குமென் றாயுளங் கொண்டனன்யான்
றேசு மலிதரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       54

3276
நாட வரிய விகாரமுன் மூன்று நவிலிலிங்க
பீட முயிரைந் தருந்து மதனிடம் பேசினின்னுங்
கூட வருமண்ட பிண்டமு மாமென்று கூறினையே
தேட மிளிர்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       55

3277
பொறியொன்று பூதமொன் றந்தக் கரணம் புகலொருநான்
கறியுங் கலாதியொ ரேழ்சுத்த மைந்து மறைந்தவிவை
நெறியொன்றி னோர்புல னீநுகர் வாயென்று நீயுரைத்தாய்
செறியும் புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       56

3278
மூலமுன் மூவிரண் டற்குமொர் நான்கொரு மூவிரண்டு
நாலமை யாறுமற் றாறிரண் டோர்பதி னாறிரண்டு
சால விதழு மெழுத்துமென் றாயெவர் தள்ளுவர்செஞ்
சேலமை நீர்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       57

3279
ஆறு முணர்குள மேலால் விகசித்த வாயிரந்தோ
டேறு மமல கமலத்தி லென்னைக்கண் டின்புறுதி
வேறு முணர்த்தவும் வேண்டுங்கொ லோவென்று விண்டனையான்
றேறும் வகைதரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       58

3280
பரையே நயனந் திரோதை கருமணி பற்றுமிச்சை
யுரையேயு ஞானங் கிரியை யதற்குள் ளொளிதெளியப்
புரையே யிலாதெவை யுங்காண்பை நீதெளி புந்தியர்யார்
திரையேய் தடத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       59

3281
நாதத்தில் விந்துவின் மவ்வி லுகரத்தி னாடுமவ்வி
லோதச் சிறந்த சிகாரமுற் றோன்றுமென் றோதினையிப்
போதத்தை யுற்றவ ரேதத்தை நீங்கிப் பொலிவரென்றாய்
சீதப் புனற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       60

3282
கிரியை நிவிர்த்தி யிருமனு நூற்றெட்டுக் கேடில்புர
மரிய வெழுத்தொன்று நாலேழ் பதமய னாற்புவியி
னுரியநன் னாசி யுபத்த மதாற்பய னூட்டிடுவாய்
தெரிய வருந்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       61

3283
ஞானம் பிதிட்டை யிருமனுத் தத்துவ நாலைந்துமூன்
றானவெண் மூவெழுத் துப்பத மேழ்மூன் றமைந்தபுர
மானவெண் ணேழரி நீர்தாலம் பாயு வருத்திடுவாய்
தீனரு றாத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       62

3284
இச்சைநல் வித்தை யுருத்திரன் மாமனு வென்பதிணை
வைச்ச பதமிரு பஃதேழு தத்துவம் வன்னமுமேழ்
மெச்சு புவனமூ வொன்ப தழல்கண்கை மிக்கருள்வாய்
செச்சை மலர்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       63

3285
ஆதியஞ் சாந்தி மனுவிரண் டீச னறைபதினொன்
றோதி யபதம்வன் னந்தத் துவமும்மூன் றொன்பதினை
யேதில் புரந்துவக் குப்பதங் காலினி தூட்டிடுவாய்
தீதிய லாத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       64

3286
பரையே யதீதமு மந்திர மொன்று பதந்தத்துவ
முரையே யிரண்டெழுத் தீரெட்டு மூவைந் தொளிர்புவனம்
வரையே சதாசிவன் முன்னிலை வான்செவி வாக்கினுய்ப்பாய்
திரையேய் புனற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       65

3287
அருள்சிவ னாத முளமறைப் பச்சிந்தை யீசன்விந்து
பொருளரன் மவ்வின் மனமழிப் புவ்விலொண் புத்திநின்று
கருணிறன் காப்ப கரத்தகங் காரத்துக் கம்படைப்புத்
தெருடியென் றாய்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       66

3288
அருளார் தருமப் பொழுதேமெய்ஞ் ஞானத்தொ டைந்தொழிலாம்
பொருளார் தருமென்பர் நம்பற்க வைந்தெனப் போற்றுதொழி
லிருளார் தருசிற் றறிவிற் கடாதென் றியம்பினையே
தெருளார் தருதரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       67

3289
குளிகை யடுத்தலுஞ் செம்புறு கோதழிந் தாங்கருளால்
விளிகை மலத்திற் குறன்முத்தி யென்பதும் வீண்களிம்பி
னொளிகை யுறாது மலநித்த மாதலி னோர்தியென்றாய்
தெளிகை யுளார்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       68

3290
இந்தனத் தங்கியின் மும்மல மேக விருஞ்சிவமு
நந்தலி னீயுமொன் றாவையென் பாரது நாமுரையோ
மந்த முதலொடு நீயேக மாத லடாதென்றியே
செந்தமி ழார்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       69

3291
நீரோடு நீர்புணர்ந் தாற்போற் சிவத்தொடு நீபுணர்வாய்
பேரோடு மென்பர் மலனீ யமலன் பெருமுதல்வ
னாரோடு கூறினும் பேசார் சமமென் றகற்றினையே
சீரோடு வாழ்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       70

3292
இருக்குரை யேக மெனலா லிரண்டிலை யென்றுரைக்கிற்
றருக்குரை யோயம் மொழிபதி மேற்றது சத்தியமே
பெருக்குரை வேத மெவர்க்கோ தியதென்று பேசினையே
திருக்குரை யாத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       71

3293
வேத முரைப்பது மேகமன் றோவதை விட்டுரைத்தல்
போத மெனத்தரு மோவெனின் மீட்டுமப் பொய்யின்மறை
யோத வுணர்ந்தனை யேநீ திரிபுடி யோதென்றியே
சீத வயற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       72

3294
வேனி லடைபவர்க் கெல்லா நிழறரு மென்றருப்போ
னானில மெங்கு மடைந்தார்க் கடிநிழ னல்குமெனிற்
கானின் மரத்தி னசேதன னல்லன் கடவுளென்றாய்
தேனில வுத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       73

3295
மறையத் துவித மெனவு மிரண்டெங்கு வந்ததெனிற்
கறையற் றொளிரது வேறன்மை யேகட் டுரைத்ததுகா
ணிறையத் தெரியென் றருளினை காவிரி நித்திலங்க
டிறையிற் றருதரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       74

3296
மொழியா தெனக்கு மொழிந்தது காணின்சின் முத்திரைக்கை
கழியாது பாசங் கழிந்தது நின்னையுங் *காணவொல்லே
னழியாத வானந்த வாரிதி யேயென் னரும்பொருளே
செழியா வளர்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.
* 'காணவல்லேன்' என்றும் பாடம்.       75

3297
மாணா வுணர்தத் துவமசி யென்னு மறைப்பொருளைக்
கோணா முதற்கும் பசுவிற்கும் வேறன்மை கூறியதே
வீணா வுரைப்பர் தனிமையென் றேயதை விண்டிடென்றாய்
சேணார் புகழ்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       76

3298
உயிர்கட் கிருளற மெய்யாதி சத்தியி னுய்த்தசைத்த
லயிரற் றுணர்த லிலார்பதி மாயை யகப்பட்டெண்ணில்
பெயருற்று முத்தி யுறுமெனல் பொய்யெனப் பேசினையே
செயிரற் றவர்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       77

3299
அந்தக் கரணங் கெடத்துன்பங் காணுத லற்றிருத்தல்
சந்தப் பெருமுத்தி யென்னின் மரணந் தவாவுறக்க
நந்தத் தருவுயிர் முத்திய வென்று நவின்றனைதோஞ்
சிந்தப் புடைதரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       78

3300
உலகாய்ப் பரிணமித் துச்சிவ மாருயி ராய்வினையுண்
டிலகா வதீதத்திற் பேரொளி யாமென்ப ரீதும்பொய்யென்
றலகா வுவப்பி னுணர்பாக் கியம்பினை யாரியர்தந்
திலகா புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       79

3301
இருவினை யொப்பின் மலத்தைக் கருவியை யீடழித்தே
யொருவி லறிவு மதன்முத லுந்தனை யும்மொருவிப்
பொருவிலொன் றாயுவப் புந்தபல் வீணென்று போக்கத்தந்தாய்
திருவினர் சேர்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       80

3302
எழுவாய் புவிசிவ மீறா விருபதி னெட்டனையும்
வழுவா வணமம் முறைமையிற் காண்டல் வருகருவி
குழுவா கியதத் துவரூப மென்றனை கொண்டனன்யான்
செழுவார் புனற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       81

3303
கூறிய தத்துவ மோர்முப்பத் தாறுங் குறிசடமென்
றேறிய போதது தத்துவக் காட்சி யெனப்புகன்றாய்
நாறிய நீற்றி னிருளற லானகு தானமென்றே
தேறிய சீர்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       82

3304
பூதமல் லேன்பொறி யல்லேன் புகலுங் கரணமல்லே
னோதுங் கலாதிசுத் தங்களல் லேனென் றொருவுவதே
போதங்கொ டத்துவ சுத்தியென் றாயது போற்றிக்கொண்டேன்
சீதங்கொ ணீர்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       83

3305
உறந்த விருளை யொரீஇயவ் விடத்திலுண் டாகுகின்ற
வறந்தவ றாதமெய்ஞ் ஞானத்தைத் தானென் றிறிவதுவே
மறந்தவிர் ஞான வுருவமென் றாய்மறப் பேன்கொலிது
சிறந்த புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       84

3306
நீகண்ட ஞானந் தனக்கே செயலன்றி நிற்கிலையன்
றேகண்ட ஞானமு மோர்நீயு மாய்நிற்ற லேயருணூற்
பாகண்ட வான்ம தரிசன மென்று பகர்ந்தனையே
சீகண்ட னேதரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       85

3307
பரையிற் பொருந்திநின் றன்மையென் போதப்பதைப் புங்கெட்டு
விரையப் பொருளிற் பொருந்தித் தரிசித்து மெய்த்தவக்க
ணுரையுற்ற தோற்ற மறநிற்றல் சுத்தியென் றோதினையே
திரைநற் புனற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       86

3308
தாவாப் பரசிவ ரூபந் தரிசனம் யோகமற்று
மேவாமெய்ப் போக மிவைமுறை யேவிரித் துத்தெரித்தா
யாவா நினக்கென்ன கைம்மாறு செய்வ லருட்பெருமைத்
தேவா திகழ்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       87

3309
இரும்பு மழலுமென் கோவுப்பு நீருமென் கோவிருடீர்த்
தரும்பு கதிரும் விழியுமென் கோமுன்னை யாணவமும்
விரும்பு முயிருமென் கோநீயு நானும் விரைசெலற்கோ
டிரும்பு மதிற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       88

3310
நீரு நிழலுமென் கோசுவைப் பாலுநன் னீருமென்கோ
வேரும் பழமுஞ் சுவையுமென் கோபண் ணிசையுமென்கோ
வாருங் கருதரு மோர்நீயு நானு மருளொளியே
சேரும் புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       89

3311
வானும் வளியுங்கொ லோசெங் கதிரு மதியுங்கொலோ
வூனு முயிருங்கொ லோதில மும்முறு நெய்யுங்கொலோ
யானுமொர் நீயு மருளிருள் காவல ரோடுசுவைத்
தேனும் பொழிதரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       90

3312
ஒருவாநின் பேரருள் பெற்றேனெஞ் ஞான்று முரைக்கரிய
பொருவாத வானந்த முற்றேன் கருணை பொழிமுகிலே
மருவாவென் னாற்பெறு மாறெவ னீயருள் வாரிதியே
திருவா புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       91

3313
உன்னை நினைக்க வுனையே வழுத்த வுனதுபணி
தன்னை யியற்றப் பெறுவா னினிப்பெறத் தக்கதுவே
றென்னை யருட்கட லேகரு ணாநிதி யேமுகிலார்
தென்னை வளத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       92

3314
இம்மா நிலத்தி லடியார் செயலொன்று மில்லவராய்ச்
சும்மா விருந்து சுகமார் தரவைத்த சோதியனே
யெம்மா தவர்க்கு மரசே கருணை யிரும்பொருப்பே
செம்மா மதிற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       93

3315
போக்கு வரவில் வெளிபோ னிறைந்தமெய்ப் போதநிலை
நீக்க மறப்பொருந் தித்திருந் தித்தன் னினைப்புமறு
பாக்கு மருளி லருளே செயும்பெரும் பண்ணவனே
தேக்கும் புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       94

3316
வருந்தி யிறந்து பிறந்துழ லாதுசன் மார்க்கநிலை
பொருந்தி யகண்ட பரிபூ ரணநிலை புக்குமிக்கின்
பருந்தி யடிய ரிறுமாக்க வைக்கு மருட்கடலே
செருந்தி மலர்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       95

3317
பந்த மகல வருண்ஞான சம்பந்தர் பார்பரவா
நந்த பரவசர் நற்சச்சி தாநந்தர் நாடினருக்
கந்த மருளு மொருமா சிலாமணி யாரெனத்தோஞ்
சிந்த வருடரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       96

3318
பயவிரு ஞானசம் பந்தர் திருவம் பலவரழ
கியதிருச் சிற்றம் பலவர் கிளர்திரு நாவுக்கர
சுயர்சிவ ஞான ரொளிர்சச்சி தாநந்த ராயுவந்த
செயலுடை மெய்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       97

3319
பார்புகழ் முத்துக் குமாரர்நன் ஞானசம் பந்தரரு
ளார்தரு கந்தப்ப ரம்மா சிலாமணி யாரிவராய்க்
கூர்தரு மெய்யடி யாரைப் புரந்தருள் கூர்ந்துநின்றாய்
சீர்தரு மெய்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       98

3320
ஒத்தே நிகழடி யாருளத் தேயொளி யாய்நிறைந்த
முத்தே முழுமணி யேகரு காது முளைக்குமருள்
வித்தேமெய்ஞ் ஞானத் திரளே மறைமுடி மேல்விளங்குஞ்
சித்தே செழுந்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       99

3321
பூவேயப் பூவின் மணமேமெய்ப் போதப் பொலிவருளுங்
காவேமெய்ஞ் ஞானக் கரும்பே யருள்கனி யுங்குரவர்
கோவே யிருங்குணக் குன்றே பொதுவிற் குனித்தருளுந்
தேவே திகழ்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.       100

சச்சிதானந்ததேசிகர்மாலை முற்றிற்று.
--------------------

This file was last revised on 12 Nov. 2021
Feel free to send corrections to the Webmaster (pmadurai AT gmail.com).