pm logo

எட்டிகுடி முருகன் பிள்ளைத் தமிழ்
ஆசிரியர்: கோவை.கு. நடேச கவுண்டர்


eTTikuTi murukan piLLaittamiz
of kOvai naTEca kavuNTar
In tamil script, unicode/utf-8 format



Acknowledgements:
Our Sincere thanks go to Mr. Muthukumaraswamy of Coimbatore, Tamilnadu, India
for the preparation and proof-reading of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was first put online on 8 October 2010.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

எட்டிகுடி முருகன் பிள்ளைத் தமிழ்
ஆசிரியர்: கோவை.கு. நடேச கவுண்டர்


Source:
"எட்டுகுடி முருகன் பிள்ளைத்தமிழ்"
சிஷ்யர கவியரசு வித்துவான்
கவியரசு கோவை கு. நடேச கவுண்டர்
எட்டுகுடி முருகன் தேவஸ்தானம், எட்டுகுடி, 1947.
--------------------------

சிவமயம் : திருச்சிற்றம்பலம்

"நறவமார் பொழிற் பிரமனற்பதி
இறைவன் நாமமே மறவல் நெஞ்சமே" (சம்பந்தர்)

தரவு கொச்சகம்

தன்பாட்டுக் கிணையில்லாச் சம்பந்தன் தாள்போற்றி
இன்பாட்டுத் திருப்பொதுவி லியற்றுமடி யிணைபோற்றி
என்பாட்டுக் கிருந்தாலும் இன்பாட்டுக் கொண்டருளி
அன்பாட்டும் எட்டுக்குடி அமர்வேலன் அருள்போற்றி

நூல்

விநாயக வணக்கம்

பொன்பூத்த கொன்றையந் தொங்கலும் திங்களும்
        பொங்கரவுடன் கங்கையும்
பொதிகின்ற பு¡¢சடை யினான்முப் புரஞ்செற்ற
        புண்ணியனுருக் காட்டியும்
கொன்பூத்த வங்குசம் பாசம் பிடித்தகை குலவிமய
        மகள்தன் உருவம்
குலவிடக் காட்டியும் தந்தைதா யுருவான குஞ்சரனை
        நெஞ்சில் நினைவாம்
தென்பூத்த பழமறை சதாசிவோம் ஓஞ்சுப்ர
        மணியவோம் என்றுசெப்பும்
செம்பொருளதா யைந்துமுகமோ டதோமுகந் திகழும்
        அறுமுக அழகனாய்
மின்பூத்த ஞானவடிவேல் ஏந்தியன்பருள் விளங்கும்
        னந்த வாழ்வை
மிக்கவள முறுமெட்டி குடிவளரு முருகனை விளம்பு
        பைந்தமிழ் தழையவே.

1. காப்பு

திருமால்
பெருந்தேன் இறைக்கும் நறைக்கமலம்
        பிரியா மாதர் இருவிழியாப்
பிறங்கும் உமையாள் உருவாகிப்
        பெருமான் பாகம் பிரியாமல்
இருந்தே உலகம் புரந்தருளும்
        இலங்கும் ஆழிப் படையானை
இம்மைச் சீவன் முத்திதரும்
        எங்கள் சைவ முதற்குருவை
மருந்தேர் அமரர் தமக்குதவும்
        வண்மை மாறாக் கருமுகிலை
வணங்கிப் புகழ்வாம் தனக்கினிய
        மருகனான முருகோனை
அருந்தே னார்க்கும் பொழில்புடைசூழ்
        அழகாரெட்டிக் குடியமர்ந்த
அமரர் சேனா பதியான
        அண்ணல் வேளைப் புரக்கெனவே.       (1)

சிவபெருமான்
சீதநிலா மதமத்தம் எருக்கறு காறிள வரவமொடே
        தேசமர் வேணி முடித்தவன் முக்கதிர் சேர்விழி யுடையவனீள்
சீகர வாரிதி கக்கு விடத்தைவி டாதுமி டறிலுறவே
        சேர்சுவை நாவல்ப ழுத்தக னிக்கிணை யாநுகர் கிருபையினால்
வேதன்மு ராரிமு னிற்றவர் எற்பொடு தாதகி விரவியதோள்
        மீதொரு நீள்கன கச்சிலை வைத்திடு வீரனை யுறுசினமால்
வேதியர் ஏவுத ரக்கொடு கைக்கிரி கீறத ளுடைய வன்பொன்
        வீசிய தேசமர் சிற்சபை யிற்பர மேசனை யடிபணிவாம்
வாதனை யேதுமி னற்றவர் துய்த்தப ராவமு தினையளவா
        வாழ்வுறு மாருயி ருட்டக ரக்குகை வாழ்வள மிகுமொளியாய்
மாதவ மீறுமகத்தி யனுக்கொரு வாசகம் உரைகுருவாய்
        மாகடன் மேலுறுகொக்கைவ தைத்தொளிர் வேலனை யடிபணிவாம்
ஏதமி லாதுய வைத்தருள் நற்றொழி லாளனை இமையவர்கோன்
        ஈனும காநுப வக்கொடி சுற்றிய தோளனை இறவுளர்மான்
ஏர்மிகு பாதமு டிக்கணி யக்களி மேவிடு விரகனைநீள்
        ஏடவிழ் காமலி எட்டிகு டிக்கும ரேசனை யருள்கெனவே.       (2)

சிவசத்தி
எண்ணரிய பல்லுயிர்கள் தனுகரண புவனமிவை
        எய்தியிரு வினையொழிந்திட்
டிறுதியறு பரமசுக வீடெய்த வென்றுவெளி
        யேயெம்பி ரான்செய் நடனம்
தண்ணளியின் மகவுநுக ரருமருந் தினையருட்
        டாய்நுகர்ந் தூட்டுமமுதத்
தானீவல் போற்கண் டுயிர்க்கின்பு தருபரா
        சத்திபத பத்மமம் நினைவாம்
தண்ணுமை முழக்கமத குறுபுனல்காட்டச்
        சகோடயாழ் வண்டுகாட்டத்
தத்தைதமிழ் பாடமட வன்னமுத லாம்பறவை
        தாமிருந் தினிது கேட்ப
நித்திலம் புன்னைசெம் பொன்கொன்றை சொரியவளம்
        நிலவுபொழில் எட்டிகுடிவாழ்
நிமலவறு முகசிவனை நினையுமடி யவர்துணையை
        நிதமும் புரக்க வெனவே.       (3)

விநாயகர்

முனைமுகம் எதிர்ந்தகய முகனுடல் பிளந்தசுரர்
        முடியவொரு கோடுறுத்தி
மூதண்ட கூடமு மறைத்திடு பிணக்குவியல்
        முளியவிழி யழலையுய்த்துப்
பனையனைய கரமுமிரு கவுளும்விடு நீராற்
        பறந்தலையை யளறுசெய்து
பற்றலர் குலக்கறு வறுத்துக் கொடுஞ்செயல்
        பழுத்தச்ச மூட்டுமியல்பும்
தினையளவு பத்தியுடை யவர்களுக்குஞ் செய்த
        தீவினையை வேர்பறித்துத்
திருவருள் மதம்பொழிந் தருளியல்பு முடையநற்
        சித்தியைங் கரவேழமே
நனைமலர்கொ டுனதுபரி புரசரண நளினமெந்
        நாளும்புகழ்ந்து தொழுவேம்
நட்புமிகு நும்பியை எட்டிகுடி நம்பியை
        நயந்துகாத் தருள்புரிகவே.       (4)

திருநீறு

ஞானவன லாற்பசுவின் மலநீறி னமலமாம்
        ஞாயத்தை யறிவுறுத்தி
ஞானியர்கள் திருமேனி மேன்மிளிர்ந் தறிவிலார்
        நாட்டந் திகைக்கலாற்றி
கானமறை யுண்மாசு கழுவுவ தெனப்பகர்செய்
        கட்டுரைப் பொருளுமாகிக்
கடவுள்கண் மணியினுறு துணையான நீறெனும்
        காப்புமுறு காப்பாகவே
மீனவ னழற்பிணி தவிர்த்துடற் கூனீவி
        வெஞ்சமண விருளகற்றி
வேதநெறி சைவநெறி தழையவரு வேணுபுர
        வேதியர்சி காமணிக்குத்
தானதரு மங்கள்சலி யாதுபுரி வார்குடி
        தழைத்துசை வம்பொலிந்து
சட்டகலை எட்டெட்டு முற்றுவளர் எட்டிகுடி
        சார்குமர வேளினுக்கே.       (5)

திருவைந்தெழுத்து

வேத நான்கின் மெய்ப்பொருளாய்
        வீட்டின் நெறியை விளக்குவதாய்
விளம்பு மறைகட் கரசாகி
        விண்ணு மண்ணும் எண்ணுவதாய்க்
காத லாகி யோதுபவர்
        கடல்நேர் பிறவி கடத்துவதாய்க்
கடையே னுளத்தும் பயில்கின்ற
        கடவுளெ ழுத்தைந் தும்புரக்க
சீத வேரி மலர்க்கணைகொள்
        சித்தசன் மைத்துன வேளைத்
திருமா லருமை மருமகனைத்
        தேவர் மணவா ளனைமந்தர்
மாதர் காதன் மக்களொடு
        மறவா தேத்த எட்டிகுடி
வாழுந் தோகை மயின்மீது
        வருமெய்ஞ் ஞானக் குருந்தினையே.       (6)

உருத்திராக்கம்
விண்மணியை ஓருருவாக் கொண்ட முக்கண் மணிமுன்
        விண்ணவர்கள் முப்புரத்தார் செய்கொடுமை விளம்பக்
கண்மணிநீ ருகுப்பவரு கண்மணியைப் பிறவிக்
        கடியவினை நோய்கடியும் மணியையெணி மகிழ்வாம்
தெண்மணியை விப்பிரர்கள் தேடுசுப்ர மணியைத்
        தேவசிகா மணியையடி யார்கள்சிந் தாமணியை
எண்மணிக ளொன்பதிழை மாடமலி கின்ற
        எட்டிகுடி வேலவனைக் காவல்செய் கவெனவே.       (7)

திருநந்திதேவர்

பாசத் தாம்பிற் பிணிப்புண்டு பயிலும் புலப்புல் லுணவார்ந்து
        பராதீ னப்பட் டுளபசுக்கள் பதியாய் மேலாங் கதியுறவே
நேசத் தாலா கமவேத நிகழ்த்துஞ் சுத்தாத் துவிதநெறி
        நிகழக் கல்லா னிழலிருந்து நிகழ்த்துஞ் சம்புக் கடுத்தவனாய்
பேசப் படுசீ ருடையானே பிரமன் முதலோர் முடிப்பூவின்
        பிரச நாறும் பிரம்பானே பெருமா னந்திப் பெயரானே
வாசக் கமல மலர்மேவு மடவா ரிருநால் வரும்வாழும்
        வளமா ரெட்டிக் குடிமருவும் வடிவே லவனைக் காத்தருளே.       (8)

வீரபத்திரர்

ஐந்தொழி லியற்றும் பரம்பரற் கன்பிலா
        ராற்றுநல் வினைக டாமும்
அவமாவ தன்றியுறு பவமாய்ப் பெரும்பழி
        யளிக்குமென் றுலக மறிய
மைந்துடைய மாமடிக ளின்மக மழித்தங்கு
        வந்தமா லிந்தி ரன்முதல்
வானவரி யாவர்க்கு மங்கபங் கஞ்செய்த
        வாள்வீர னினிது காக்க
வெந்தொழிற் சூரனுட லந்தடிந் தோங்குபெரு
        வெற்பைப் பிளந்த லைமிகு
வேலையை யுரிஞ்சவடி வேலையெறி வேலையொரு
        விளையாட் டெனக்கொள் வேளை
சந்தமுந் துங்கருணை யருணகிரி நாதன்
        தமிழ்க்கவிகள் கிள்ளை யோதத்
தண்கரும் பொண்கண்முத் தந்தளிக் கும்பொழிற்
        சாரெட்டி குடிமுருகையே.       (9)

தமிழ்த்தெய்வம்

திரிபுரமெ ரித்தவிரி சடையிறைவர் சங்கத்
        திறற்புலவ ரோடிருந்து
செவ்வனே யாராய்ந்த வியலுடைய தாயவர்
        செய்தகள வியலுடைத்தாய்
அரியபொரு ளெல்லாம் அடங்குகுறள் வேதமுட
        னன்பர்மொழி திருவாசகம்
அருமறைக ளாகம முடிப்பெளி துணர்த்துசித்
        தாந்தநூ லாதியுளதாய்ப்
பெரிய தேவாதிய ருவப்பவின் கவிபாடு
        பேரறிஞர் பேணுமமுதாய்ப்
பேருலகி லென்றைக்கு மழியாத தமிழெனும்
        பெண்ணணங் கினிதுகாக்க
சீரிய தமிழ்த்தெய்வ மாகிமுத் தமிழினாற்
        றிட்டுகினும் வாழவைக்கும்
சேந்தனைக் கந்தனை யெட்டிகுடி வேலனைத்
        தேவர்கள் சிகாமணியையே.       (10)
---------

2. செங்கீரைப்பருவம்

மண்ணுலகி லூழின்வழி வருகின்ற சிறுமகார்
        வாய்குழறி யோது குதலை
மங்கல வழக்கினாற் செங்கீரை யென்றுதமிழ்
        வாணர்கள் வழங்கு வாரால்
பண்ணுலவு பழமறைக ளின்னனென்
        பரிசுணர லாகாதவெம்
பரமனிரு செவிகுளிர வுபதேசம் வைத்தநின்
        பவழவாய் மழலை மொழிதான்
உண்மையினி வியல்பாம் வழக்கென் றுணர்ந்தியாம்
        உய்யவுன் பாலி ரந்தேம்
உள்ளமல் மூன்றும்விட் டோடவனு பூதியா
        முற்றிட விரங்கி வாய்மைத்
திண்ணமுடை யார்பரவு மெட்டிக்குடி வேலனே
        செங்கீரை யாடி யருளே
திமிரமல மகலவரு மெய்ஞ்ஞான பானுவே
        செங்கீரை யாடி யருளே       (1)

உளதெனவு மிலதெனவு முருவெனவு மருவெனவு
        மொன்றன்றி ரண்டென்னவும்
உடலெனவு முயிரெனவு மைம்பொறிக ளென்னவும்
        உணராத பாழென்னவும்
அளவில்வித மாவுலகி லுளறுவன பலசமய
        ஆரவா ரத்திலுண்மை
அறியாது பேதுற்ற சிறியோ முளத்துயர்
        அகற்றலுன் கடனையனே
களகள வெனக்கடை மழைபொழி பகட்டுருவு
        கண்டவந் தகர்சொனம்புங்
கயவர்போ லாகாது மெய்யுணரு மாசையாற்
        கந்தநினை வந்தனைசெய்தோம்
திளையவநு பூதியரு ளெட்டிக்குடி வேலனே
        செங்கீரை யாடியருளே
திமிரமல மகலவரு மெய்ஞ்ஞான பானுவே
        செங்கீரை யாடியருளே.       (2)

ஓராலி னீழலிரு மூன்றுபகை யகற்றிமுனி
        வோர்நால்வ ரஞ்சடங்கி
உய்யமா சறுமின்ப மெழுமாறு மோனத்
        துணர்த்தும் பெருங்கடவுளும்
சீராமனும் பொதிய முனியும் பராசரன்
        சேய்களிரு மூன்றுபேரும்
சீகாழி வரைநகர்க் கண்ணுடைய வள்ளலுஞ்
        சிற்றம் பலநாடியும்
ஆராதரத் துன்னையே புகழு மருணகிரி
        யையனுமு தற்பலருமே
அரியபே ரின்பவநு பூதியுற வொருமொழி
        முனருளியத றிந்தடைந்தேம்
சேராத நிருதர்குல கலகயா முய்யவொரு
        செங்கீரை யாடியருளே
செட்டியென எட்டிகுடி யுற்றவடி வேலனே
        செங்கீரை யாடியருளே.       (3)

உகந்தொறு முயர்ந்தகயி லாயமலை மீதிலுயர்
        ஒளிறுமணி மண்டபத்தே
ஓங்குமரி யணைமீது புவனமுழு துடையாளு
        முடையானு நடுவிருத்தி
முகந்திருத் திக்குழைந் துச்சியை முகந்துவாய்
        முத்தாடி மாறிமாறி
முருகாவா வென்றெடுத் துத்தோ ளணைத்தோறு
முறுவல்செய் தொழுகுமழலை
        அகந்தளிர்ப் பப்பேசு மஞ்சுகப் பிள்ளையே
        அடியேங் களுஞ்சுகமுற
அருமதலை குதலைமொழி குழறியொன் றோதினா
        லந்நன்றி யென்றுமறவேம்
திகந்தமண நாறுபொழி லெட்டிகுடி வேலனே
        செங்கீரை யாடியருளே
திமிரமல மகலவரு மெய்ஞ்ஞான பானுவே
        செங்கீரை யாடியருளே.       (4)

பூமேவு சரவணப் பொய்கைதனில் வளர்ஞான்று
        போற்றுமுடு மகளிர்மகிழப்
புன்முறுவ னாறவோ ரின்மழலை யாயினும்
        புகலாதிருந் தனைகொலோ
பாமேவு புகழுந்தை யோமொழிப் பொருளைய
        பகரென்ற போதிலுன்றன்
பவழவாய் திறவாது கைகாட்டி னாய்கொலோ
        பண்ணவர்க ளுண்மகிழவே
நாமேவுசூரனிடு சிறைதவிர்ப் போமென்று
        நண்ணியவர் கனவில்மொழியும்
நாதனே பழமறைக ளோலிடும் பாதனே
        நாதாந்த மானபரனே
தேமேவு பொழில்சூழு மெட்டிகுடி வேலனே
        செங்கீரை யாடி யருளே
திமிரமல மகல்வரு மெய்ஞ்ஞான பானுவே
        செங்கீரை யாடி யருளே.       (5)

மலரிதழி னளிமொய்த்த தெனவொளிரு மணியாழி
        மாட்டிய மலர்க்கை யூன்றி
மண்மீதி லொருகால் மடக்கிக் கிடத்தியொரு
        மலரடி நிறுத்திவைத்துப்
பலமணிக ளிழைசுட்டி நெற்றியாடக் கருணை
        பாலிக்கும் விழிக ளாடப்
பவளவித ழிடைமுறுவன் முத்தமா டச்செவிப்
        படரொளிக் குழைக ளாட
நிலவுவிரி முழுமதிய முகமாட நீபமணி
        நீள்வரைத் தோள்க ளாட
நிசிசரர்கள் திண்டாட வமரர்கள் மகிழ்ந்தாட
        நிலமகளி னுதலினாறுந்
திலகமென வளரெட்டி குடிமுருக குகபகவ
        செங்கீரை யாடி யருளே
திமிரமல மகலவரு மெய்ஞ்ஞான பானுவே
        செங்கீரை யாடி யருளே.       (6)

(வேறு)

பாதல மேவுல காதிப னாடப்
        பாரும சைந்தாடப்
பார வரைக்குல மாடத் திரையெறி
        பரவையுரந் தாடப்
போதனு நாமிசை யாளுட னாடப்
        புயல்வண னாராடப்
பொன்னா டச்சுரர் மன்னாடப்
        பலபொற்கொடி யாராட
ஆதவ னாடநி லாமதி யாட
        வுடுக்க ளசைந் தாட
அழகிய கலபநன் மயிலாடத்திரு
        வருணையி லரசவையில்
சேதொளி யாடமு னாடிவ ருங்குக
        செங்கோ செங்கீரை
சித்தியளித் தருளெட்டி குடிக்குக
        செங்கோ செங்கீரை.       (7)

நெக்குரு கித்தொழு பத்தரு ளத்தில்
        நிமிர்ந்தூ றுந்தேனே
நிச்சய மற்றுழ லற்பருளத்து
        மறைந்தே நின்றோனே
பக்குவ ருக்கு நினைப்பு மறப்பும
        றுந்தா டந்தாள்வோய்
பச்சையி லைக்கல ருக்கு
        நினைப்புறு மின்பீ யுந்தேவே
கொக்கு வருக்கை பழக்கத
        லிக்குலை கொண்டாலுங் காநீள்
கொச்சையி லுற்று மறைத்தமி
        ழைப்பொழி கொண்டாள் செந்தூரா
செக்கர் மணிப்பிரபைப் பொலிகற்பக
        செங்கோசெங்கீரை
சித்தியளித் தருளெட்டி குடிக்குக
        செங்கோ செங்கீரை.       (8)

(பச்சை இலைக்கு, அலருக்கு எனப் பிரிக்க)

எச்சம யத்தவ ருக்குமி
        லக்கென நின்றா ளுந்தேவே
எத்துகு ணக்கல ருக்குணர்
        வுட்க மறைந்தே நின்றோனே
பச்சை மறக்கொடி சுற்றுபுனத்
        தெளி வந்தே சென்றோனே
பட்ச மிகுத்தவ ளிட்டபு
        துத்தினை மென்றே தின்றோனே
கச்சை யறுத்த தனத்து
        மயக்க மிகுந்தா ளென்றேகால்
கட்டி முடிக்கவள் பொற்பாதம்
        வைக்க வுளம்பூ ணுஞ்சேயே
செச்சை மணத்த கடப்பணி
        பொற்புய செங்கோசெங்கீரை
சித்தி யளித்தரு ளெட்டி
        குடிக்குக செங்கோசெங்கீரை.       (9)

செப்பமு றப்பல லக்கண
        லக்கிய மோதி லரும்பாவே
செப்பி வழுத்த மனத்துறு
        பத்திய ராகின றும்பாகே
ஒப்ப நலத்த தமிழ்க்கவி
        யெப்புல வோரும் விரும்பாவீ
தொப்ப விசைக்க வெவர்க்குறு
        மப்பவெ னாவர நன்கீவாய்
மைப்புய லொத்த உடற்கரு
        ணைப்புய லார்மரு கெங்கோவே
வச்சிரநற்படை யத்தன்
        மகட்குள மாலருள் சிங்காரா
அப்ப வெனச்சிவ னைச்சொலு
        நற்கும ராகுண கெம்பீரா
அற்புத மிக்குள வெட்டிகுடிக்
        குக னாடுக செங்கீரை.       (10)
------------

3. தாலப்பருவம்

கதிரோன் குடபால் மலைமறைந்தான்
        ககனத் தடத்திலுடு வரும்பின
கதிர்மா மதிய மலர்பூத்துக்
        கமழ்பூந் தென்றலுலவிடுமால்
முதிரா விளம்பார் பினந்தாயர்
        முடங்குஞ் சிறையி லொடுங்கின
முளரிக் கதவ மடைத்து
        வரிமுழங்கும் வண்டுந் துயின்றனவால்
எதிரா சர்களந்தியின் மறைக
        ளியம்பிக் கடன்க ளியற்றியபின்
இதயக் கமலத் துனையிருத்தி
        யிமைகள்பொருந்தி யொடுங்கினர்காண்
சதுரா னனைச் சிறையிலிட்ட
        சதுரா தாலோ தாலேலோ
தமிழா கரவெட் டிக்குடிவாழ்
        தலைவா தாலோ தாலேலோ.       (1)

அங்கத் தொருகூ றமர்ந்தா
        ளுமரனும் பாகம் வேறாகி
அருமா தவங்கள் செய்தபய
        னாகமு ளைத்த பசுங்குருத்தே
சிங்க முரித்து மேல்போர்த்த
        திறலார் சரபத் திளம்பார்ப்பே
செங்கட் கயவாய் மகிடனுயிர்
        செற்ற பிணவினிளங் குருளாய்
கங்கைப் புனலி னிடையெழுந்த
        கதிரார் துகிரி னிளங்கொழுந்தே
கமழ்பூம் பொய்கைச் சரவணத்தின்
        கண்ணே பிறந்த கதிர்முத்தே
தங்கக் கட்டியே மணியின்
        திரளே தாலோ தாலேலோ
தமிழா கரவெட் டிக்குடிவாழ்
        தலைவா தாலோ தாலேலோ.       (2)

அலையிற் பொலியும் பொய்கையிலே
        யசையுங் கமலத் தொட்டிலிலே
அறுமீன் மாத ரொக்கலைமே
        லசலாம் பிகையின் மடிமீதே
மலையைச் சிலையாக் குழைத்தபிரான்
        மார்பின் மேலே தோள்மேலே
மகிழ்ந்து பொலிந்து வீற்றிருந்து
        வளர்ந்து தவழ்ந்து விளையாடித்
துலையிற் பொலியு நாவென்னத்
        துளங்கா ருளத்தே களிதுலங்கும்
துய்ய ஞான மழகளிறே
        துரியங் கடந்த பரம்பொருளே
தலையைக் குனிவார் துயரனைத்துந்
        தவிர்ப்பாய் தாலோ தாலேலோ
தமிழா கரவெட் டிக்குடிவாழ்
        தலைவா தாலோ தாலேலோ.       (3)

திருந்தப் புவனங்க ளீன்றவடன்
        திருமா முலையுண் டகங்குளிர்ந்து
திரைவா ரிதிசேர் சரவணத்திற்
        செவ்விப் பூந்தொட் டிலிலமர்ந்து
மருந்தி லினிய வறுவர்முலை
        மாந்த விரும்பி வாரியழ
வானோர் பகையாஞ் சூரரழ
        மாயம் பெருத்த குன்றமழ
விரும்பிப் படைத்த மாயையழ
        விம்மி விம்மியழுங் குழந்தாய்
வேத னழவன்றளை பூட்டி
        மிகுங்கா வலிடை விட்டவனே
தருந்தந் தைக்குக் குருமொழிசொல்
        சாமி தாலோ தாலேலோ
தமிழா கரவெட் டிக்குடிவாழ்
        தலைவா தாலோ தாலேலோ.       (4)

அல்லி லிருண்ட வாணவத்தா
        லறிவு குருடா மாருயிர்கள்
அனைத்தும் விடய வாரகமும்
        அரிய சொரூப வாரகமும்
புல்ல லொழியத் தனுகரண
        புவனம் படைத்துக் கொடுத்தளவில்
போக மூட்டி யுலகாசை
        போன பின்பு பெருவீட்டில்
தொல்லை யொழிய வைத்தின்பத்
        துயிலில் வளர்க்குந் திருவருளாம்
தூயாள் வயிற்றிற் சேயான
        சுப்ர மண்யப் பரம்பொருளே
சல்லென் றொலிக்கும் பழையமறைத்
        தண்டைத் தாளா தாலேலோ
தமிழா கரவெட் டிக்குடிவாழ்
        தலைவா தாலோ தாலேலோ.       (5)

குஞ்சி திருத்தி நீராட்டிக்
        குவளைக் கண்கள் மையெழுதி
கொள்ளுங் கலன்கள் பலபூட்டிக்
        கொங்கை யருத்தி முத்தாடி
மஞ்சர் நவவீரர் களுடனே
        மறுகி லாட விடுத்துப்பின்
மாலை யயினி நீர்சுழற்றி
        மணிப்பூந் தொட்டி லினில்வளர்த்தே
அஞ்சொற் கிளிமா தர்கள்பாடல்
        அன்பாய்ப் பாடித் துயில்வித்தால்
அரசே மழலை பலபேசி
        யங்கண் விழித்துக் கிடந்தனையால்
தஞ்ச மடைந்தார் தமக்கெளிய
        சாமீ தாலோ தாலேலோ
தமிழா கரவெட் டிக்குடிவாழ்
        தலைவா தாலோ தாலேலோ.       (6)

வேறு
தெண்கிணை கொட்டுந் தண்வயல் முற்றுஞ் செஞ்சா லிப்பயிர்கள்
        செழுமத வாரண மறைய வளர்ந்து திரைப்புனல் போலலையப்
பண்கள் மிழற்றும் வெண்ப லுழத்திப் பாவையர் வாழ்சேரிப்
        பரவை யிடைச்செறி குறுநில மெனவுழு பகடிரு முகிலென்னத்
திண்கைக் கோலிற் போர்கள் சரிப்போர் திமில்விடு வோரென்னச்
        செந்துகிரின்கொடி சங்கொளிர் வெண்டர ளஞ்சொரி யுங்கழனி
தண்கடல் வைப்பொக் குங்குளி ரெட்டிக் குடியாய் தாலேலோ
        தமிழ்முனி பரவிய சிவசர வணபவ சண்முக தாலேலோ.       (7)

அமலை மிகுங்கிணை முழவ மதிர்ந்திட வரியன் மகிழ்ந்துழவோர்
        அரிகள் சரிந்துறு தலைகளு திர்ந்திட வானைப் பகடுய்த்தே
நமர்க ளடுந்தொழில் புரிய விரைந்திடு நாவல் நாவலெனும்
        நரலை யெழுந்துயர் ககன மளந்திட நாந்தக நேர்வாளை
குமர ரரிந்திட வுந்தி உறும்பல குருகுக ளிரையாரக்
        கொடிக ணிரைந்திட வினைக ணடந்திடு குளிர்பூம் பழனநிலம்
தமிழ்முனி பரவிய சிவசர வணபவ சண்முக தாலேலோ
        சமர நெடுங்கள நிகரெட் டிக்குடி சார்வேள் தாலேலோ.       (8)

துன்று முகிற்கண மின்னுட னாடுந் தூயபொன் மாளிகைகள்
        துங்கக் கொடியமை துன்றப் பனிமதி தோயுமிறால் நிகர
வென்றி மிகுங்கொடு வரியரி யடுசின வேழநிகர்த் தவர்கண்
        மேவிப் பிணைவிழி யார்பச் சிளமயில் மேனிக்கொடி யிடையாள்
என்று மிருப்பத னாலிமை யோர்கண மின்பந் துய்ப்பதனால்
        ஏமத் துணையென நீயு மிருப்பத னாலிது புளினர்கள்வாழ்
குன்ற மிகுந்திணை யென்றவி ரெட்டிக் குடியாய் தாலேலோ
        குறமகள் கனதன முருவிய திரள்புய குமரா தாலேலோ.       (9)

வேறு
இமய மடப்பிடி பெற்றிடு களிறே தாலோ தாலேலோ
        இபமுக வற்புத னற்புறு துணைவா தாலோ தாலேலோ
அமரர் தமக்கிறை பெற்றவள் கொழுநா தாலோ தாலேலோ
        அமுத கடற்றுயி லுற்றவர் மருகா தாலோ தாலேலோ
குமர குருப்பெயர் தக்கவெ மிறையே தாலோ தாலேலோ
        குகவுயி ருக்கு ளிருக்குமி னுயிரே தாலே தாலேலோ
சமரச நிச்சய முற்றவர் தலைவா தாலோ தாலேலோ
        தமிழ்வள ரெட்டிக் குடிப்பதி முருகா தாலோ தாலேலோ       (10)
------------

4. சப்பாணிப் பருவம்

பிண்டத்தி லோருயி ரிருந்ததை யசைக்கின்ற
        பெற்றி போலொரு பேருயிர்
பேருலக மேதனது பேருட லெனக்கொண்டு
        பிறழா மலசை விக்குமிவ்
வண்டத்தி லவனன்றி யணுவுமசை யாதென்னு
        மறிவு சிறிதேனு மின்றி
ஆத்தர்மொழி நம்பாது நாத்திகம் புகல்கின்ற
        வசடர்க ளகன்று போமின்
வண்டக் குணத்தரவர் கூட்டத்தை யணுகாது
        மனதுமெய் மொழிக ளாலே
வழிபாடு புரிகின்ற வடியார்க ணலமேவ
        வம்மின்க ளென்றல் போலத்
தண்டத்த னித்தொங்கல் லணிதோள செங்கைகொடு
        சப்பாணி கொட்டி யருளே
தருமமிகு மெட்டிகுடி முருகதிரு மருகனே
        சப்பாணி கொட்டி யருளே.       (1)

தருநிழலில்மருவமரர் நெஞ்சுபறை கொட்டிட
        தளவநிகர் பற்கள் கொட்டத்
தரியாத வுறுகணா லுறுகணீர் கொட்டிடச்
        சலதியிடை மீன்கள் வாரி
அருகாது கொட்டுகென வாணை யிட்டிந்த் ரனரியயன்
        முதலி னோரை யெல்லாம்
ஆலைக் கரும்பென்ன வின்னாவிழத்
        தடாவாட்சி புரியவுணர் மடியக்
குருருடைய அவர்மாதர் மார்கொட்ட வங்கையாற்
        கோலமு தமீது கொட்டக்
குவளைநிகர் கண்கணீர் கொண்டல்போற் கொட்டிடக்
        குணங்குவாய்த் தசைகள் கொட்டிடச்
சருகிலழ லிட்டதென வேல்தொட்ட வீரனே
        சப்பாணி கொட்டி யருளே
சகலவள நிறையெட்டி குடிமுருக குகசெட்டி
        சப்பாணி கொட்டி யருளே.       (2)

திடநிலவு மசுரர்கள் நடுநடுங்கத்
        தோள்கள் சினவிழியி டந்துடிக்கத்
தீராத அவர்காதன் மாதர்மங் கலநாண்
        சிதைந்துமுலை மீது வீழக்
கடனடுவு ளவர்கள்நக ரினில்வானவில்
        லிரவு காணமலர் புலவுநாறக்
கனவுதனி லிரதமொடு குதிரைவர
        வேறுதீங் கானவுற் பாதநிகழ
வடகிரியு மிருநாலு குலவரையு
        மசையநெடு வஞ்சக்ர வஞ்சமுலைய
வாரிதி வெதும்பிய லைமோதவிண்
        ணோர்க்கெலாம் வலதுதோள் விழிதுடிக்கத்
தடவிமய மகள்விழி களிக்கநின்
        செங்கைகொடு சப்பாணி கொட்டியருளே
தருமமிகு மெட்டிகுடி முருகதிரு
        மருகனே சப்பாணி கொட்டியருளே.       (3)

செங்கட் கருங்களத் துத்திப் படத்தரவு
        துளையெயிற் றமிழ்துகொட்டத்
தேனொழுக் கென்னவிசை மகதியாழ் கொட்டிடத்
        திமிந்திமிதி யென்றுவாணன்
அங்கைத் தலங்க ளோராயிரங் கொண்டுமுழ
        வண்டமதிரக் கொட்டிட
அண்டரொடு தொண்டர்விழி கண்டுவகை கொண்டுபே
        ரானந்த மாரி கொட்டத்
திங்க ளமுதங்கொட்ட மதலைபொன் கொட்டவலை
        சுரநதித் திவலைகொட்டத்
சிவகாமி யம்மைமகிழ் புன்முறுவல் கொட்டிடத்
        திருமன்றி லாடுமிறைவர்
தங்கைத் தலங்கொட்ட நடமாடு பாதனே
        சப்பாணிகொட்டியருளே
தருமமிகு மெட்டிகுடி முருகதிரு மருகனே
        சப்பாணிகொட்டியருளே.       (4)

வேறு
அட்ட திசைக்களி றுட்கவெதி
        ரறைவார் குலவரை பந்தெறிவார்
அகில மெடுத்த பஃறலையரவ
        மாழியெனக் கைவிரற் புனைவார்
குட்டை யெனக்கட லளறுசெய்
        வார்குதி ரைக்கனலி னையுஞ்சுடுவார்
கொண்டற் கனமொருகைப் பிழிவார்
        கொடிமின் மாலைபு யத்தணிவார்
எட்டுத் திசைகள் புரப்பவரை
        யேவற் கொளுவார் சூரியனை
இதுவோர் தீப்பொறி யென்றிகழ்வா
        ரிகலான் மிக்கநிசாசரர்கள்
கொட்ட மடக்கிய கதிர்வேலா
        கொட்டி யருளுக சப்பாணி
கொழிதமி ழெட்டி குடிக்குமரா
        கொட்டி யருளுக சப்பாணி.       (5)

மன்ற நடித்திடு மெம்பெருமான்
        மலைமா னைப்புணர் திருநாளில்
வருவா யற்புத முனியேநீ
        மலயப் பெருமலை யுறுகவெனத்
தென்றிசை சென்றிடு பொழுதிமையஞ்
        சிறிதென ஓங்கிய விந்தவரைச்
சென்னி மிசைக்கை கவித்தலஞ்
        சேர வடக்கிய திறலாளன்
கன்று சினத்தச முகியருமைக்
        காதல ராகிய வாதாவி
கபடத் தவமுறு வில்வலனைக்
        காசினி மாசறவே யெளிதிற்
கொன்ற தவக்குறு மாமுனிவன்
        குருவேகொட்டுக சப்பாணி
கொழிதமிழ் எட்டி குடிக்குமரா
        கொட்டி யருளுக சப்பாணி.       (6)

வேறு

சஞ்சித மென்றக ளஞ்சிய
        மொண்டே தானுகர் தனுவயலில்
தண்டா தேவிளை யாகா
        மியவினை தானுஞ் சஞ்சிதமாய்
எஞ்சுத லின்றி மிகுந்து
        வருஞ்செய லென்றுகு றைந்திடுமோ
என்றுள மஞ்சியு னஞ்சரணஞ்
        சரணென் றடையுஞ் சரணர்
வெஞ்சம னஞ்ச விடும்படர்
        தங்கையில் வீழாமே ஞானம்
விஞ்ச மிகுந்தரு ளென்றுரு
        வங்கொடு விழியெதிர் வந்தவர்தம்
குஞ்சி புனைந்தருள் செஞ்சிறு
        கையா கொட்டுக சப்பாணி
கொற்றவை பெற்றருள் எட்டிகுடிக்
        குக கொட்டுக சப்பாணி.       (7)

வேறு

பிறவிக் கடலி லலைவாரைப்
        பேணி யெடுக்குங் கமலக்கை
பெரிய பொருளைத் தெரிவிக்கும்
        பெருமைச் சின்முத்திரைச் செங்கை
உறவும் பொருளும் துறந்தாரை
        யுவந்தே யஞ்ச லளிக்குங்கை
உம்ப ரிம்ப ரின்பமெல்லாம்
        உதவும் விரத வரதக்கை
மறவி நினைவு மில்லாத
        வாழ்வார் தலைமேன் மன்னுங்கை
வடிவேல் விளங்குந் தொடிசேர்கை
        மாதே கடைக்கண் வழங்குகெனக்
குறவி திருமுன் கூப்புங்கை
        கொண்டே கொட்டுக சப்பாணி
குறையா நிறைவே எட்டிகுடிக்
        குமரா கொட்டுக சப்பாணி.       (8)

வேறு

மச்சத் தினைச்சுடுச ரத்திக்க டற்கடுவை
        மைப்பான லைப்புரையுநீள்
மைக்கட்க ளிப்பினிலொண் முத்தத்தி னைப்பழிசி
        ரிப்பான திற்றுவரினால்
அச்சத்த மிக்கடலுக் குட்கி ளைத்ததுகி
        ரைக்கோவை யொத்தவிதழால்
அட்டுத்து ளைப்படன் முதற்குற்ற மற்றொளிர
        மைத்தோளி னிற்குவடெனாக்
கச்சைக்கி ழித்துநிமிர் செப்புத்த னத்தினின்ம
        னத்தாசை மிக்கிதணில்வாழ்
கற்புக்கு றத்தியரு குற்றுத்து தித்துருகு
        கைக்கேவ லுக்குவிழைவாய்
சச்சப்பு டத்துருவ மொற்றிப் பழக்கனிகர்
        சப்பாணி கொட்டி யருளே
சற்பத்தி யர்க்குதவு மெட்டிக்கு டிக்குமர
        சப்பாணி கொட்டி யருளே.       (91)

வேறு
மஞ்சிவ ருங்கன குன்றுத டிந்தவ லிக்குலி சப்பாணி
        வஞ்சனை மிஞ்சுமி லங்கைஎ றிந்தவளைத்த சிலைப்பாணி
கஞ்ச மிருந்துல கங்கட ருங்கன கக்கர கப்பாணி
        கம்பலை யுந்தி வளைந்துல கம்பொதி கைச்சக டற்பாணி
எஞ்ச லருந்திய புங்கவன் முந்திய நற்றவர் மற்றோரும்
        எங்க ளருந்தவ மென்றுப ணிந்திடு மெட்டி குடித்தேவ
குஞ்சரி கொங்கை மணந்தரு ளுங்குக கொட்டுக சப்பாணி
        குன்ற மெறிந்தவ கந்த சிவந்தகை கொட்டுக சப்பாணி.       (10)

(குலிசப் பாணி - குலிசப்படையுடைய இந்திரன். சிலை -வில் கஞ்சம் )
இருந்து உலகங்கள் தரும் பொற்கரகப் பாணி- பிரமன். )
கைச்ச கடற்பாணி - கசக்கும் கடல் நீரை ஏந்திய கரத்தன் - அகத்தியமுனிவர்)
----------

5. முத்தப் பருவம்
உருகு முளத்தோ டணைத்துமையா ளுச்சி மோந்து முத்தாடி
        ஊட்ட உண்ட வபரபர வோதி மயமாந் தீம்பாலும்
குருகு பரவு சரவணத்திற் குலவி யறுவர் தாய்மார்கள்
        கொடுத்த கொங்கைத் தீம்பாலும் குடைவார் பிறவி வினைதீர்த்துப்
பெருகுங் கங்கை யாயிரமாம் பிரசக் குமுத மலர்வாயிற்
        பிறங்கு மமுதுஞ் சிவபெருமான் பிறழா மறைசொல் வாய்மலரின்
முருகு நாறுஞ் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே
        முத்தர் பரவு மெட்டிகுடி முருகா தருக முத்தமே.       (1)

முத்தி நெறிதேர் முனிவர்க்கு முனியாங் கல்லா னிழலரசும்
        முதிரா வன்பா லவன்றிண்டோள் முயங்குங் கொடியு மைங்கரனும்
பத்திமிகு வெங்குரு கூடற்பதி வாழிரு தம்பதி மாரும்
        பரிந்து முலையூட்டிய அறுமீன் பாவை மாருங் குஞ்சரியும்
தத்தி யருவி யிழிபுனவர் தருமான் அருணைப் பெருமானும்
        தரங்கக் கங்கை மானும்வாய்த் தமைகேட் டியாமும் பெறவிழைந்தோம்
முத்தி தருஞ்சீ ரெட்டிகுடி முருகா தருக முத்தமே
        மும்மைத் தமிழின் பயனான முதல்வா தருக முத்தமே.       (2)

பித்தைத் தருகட் சரமெய்து பேணா விளைஞர் தமைப்பிடித்துப்
        பெருகுங் காம நஞ்சருத்திப் பிணிக ளுடலிற் புகுத்தியவர்
சொத்தைக் கணத்திற் பறித்தெளிதிற் றுறவராக்கும் திறம்படைத்த
        துட்டக் கணிகை மகளிர்மனை சுழன்று திரிந்த அருணகிரி
அத்தைத் தவிர்த்துக் கையறவோ டாவிவி டுக்கத் துணிவுறுகால்
        அச்சந் தவிர்த்துத் தொண்டுகொண் டுனருமைப் புகழைப் பாடுகென
முத்தைத் தருசொற் றருகனிவாய் முத்தந் தருக முத்தமே
        முத்தர் பரவு மெட்டிகுடி முருகா தருக முத்தமே.       (3)

துட்ட மதனைப் பொடிசெய்த சோதி நயனச் சிவபெருமான்
        துலங்கு முகங்க ளைந்தினொடுந் தோன்றா திருக்கு மதோமுகமும்
திட்ட முறக்கொண் டுள்ளவிவன் தேரி னமக்கு வேறலன்காண்
        சிவையே யென்றன் றுமையவட்குத் தெரித்த சரதந் தேறாமல்
இட்ட முடன்கோ ழியைப்பாடி யிளங்குஞ் சினையும் பாடேனென்
        றிசைத்த பொய்யா மொழிப்புலவன் திகைக்கச் சுரத்தி னிடைமறித்து
முட்டைப் பெயரிற் கவிகவர்வாய் முத்தந் தருக முத்தமே
        முத்தர் பரவு மெட்டிகுடி முருகா தருக முத்தமே.       (4)

சத்தஞ் சுவையே முதலாகச் சாரும் புலன்க ளெனும்வேடர்
        தங்கள் சீறூ ரிடைவளர்ந்து தன்னை யறியா மன்னுயிரை
நித்தஞ் சுகத்தில் வைத்திடுவா னேசித் தடுத்துத் தடுத்தாளும்
        நேர்மை யுலக மறிந்துய்ய நித்தப் பிரம சாரிநீ
கத்துங் கிளிகள் கடிந்தகுறக் கன்னியிருந்த தினைப்புனத்தே
        காளை வேட னெனச்சென்று காதன் மொழிந்தங் கவள்செவ்வாய்
முத்தம் பெறவே துடித்தவிதழ் முத்தந் தருக முத்தமே
        முத்தர் பரவு மெட்டிகுடி முருகா தருக முத்தமே.       (5)

சந்தம் பதினா றாயிரஞ்சொல் சதுரனல்லேன் கீரனலேன்
        சங்கத் தவரு ளொருவனலேன் தண்டபாணிச் சாமியலேன்
கந்தர் கலிவெண் பாவருளுங் கனிவாய் மகவல் லேன்போரூர்க்
        கவிஞ ரேறோ மார்க்கச்ச காயன் பகழிக் கூத்தனோ
சந்த மறையும் தமிழுந்தேர் தன்னே ரில்லாக் குமரகுரு
        தாசனோ வல்லே னிவர்தாள் தாங்குஞ் சென்னி யடியேற்கு
முந்தை மறைகள் மொழிகனிவாய் முத்தந் தருக முத்தமே
        முத்தர் பரவு மெட்டிகுடி முருகா தருக முத்தமே.       (6)

வேண்டு மடியார் வேண்டுபவை வெறாமலுதவும் பெருமானென
        விளம்பு மருண கிரிநாதன் மெய்மை நம்பி வேண்டினன்யான்
ஈண்டு நிதியக் குவைவேண்டே னெழிலார் மாதர் நலம்வேண்டேன்
        இமையோ ரரசா குதல்வேண்டே னெதுவும் வேண்டா நலம்விழைந்தேன்
ஆண்டா யுன்றன் றிருநாமம் ஆனா அன்பாற் சொலவிழைந்தேன்
        அடியா ரேவல் செயவிழைந்தே னவையீந் தருளத் தாமதித்தால்
மூண்ட விழைவுக் கிரங்கியொரு முத்தந் தருக முத்தமே
        முத்தர் பரவு மெட்டிகுடி முருகா தருக முத்தமே,      (7)

வேறு

குத்திப் பொருப்பையெறி சத்திச் சமர்த்தகமழ்
        குமுதவாய் முத்த மருளே
கொத்துப் படப்பணியெ டுத்தப் பரிக்கண்வரு
        குமரவாய் முத்த மருளே
நத்துக் கரத்தர்மரு கக்கற்பகக் கனிநின்
        நளினவாய் முத்த மருளே
நக்கர்க்கு மெய்ப்பொருள் விரித்துச் சொலற்குவிரி
        நலமுள்வாய் முத்தமருளே
பத்தர்க்குள் நித்தமு மினிப்புற்ற புத்தமுத
        பவளவாய் முத்த மருளே
பச்சைக் குறத்தியித ழிச்சித் தெழிச்சியுறு
        பழுதில்வாய் முத்த மருளே
வித்தைக்கடற்குள் முழுகிக் கைக்கொள் முத்தனைய
        விமலவாய் முத்த மருளே
மெய்ப்பத்த ரெப்பொழுது மெச்சுற்ற வெட்டிக்குடி
        விரகவாய் முத்த மருளே.       (8)

வேறு
மந்திர தந்திர முங்கலை யும்பகர் வுற்றவிழுப்பொருளே
        வஞ்சனை யுங்கொலை யுங்கள வுந்தவி ருற்றவர் நற்றுணையே
மைந்தெழில் விஞ்சிய அண்டர்கு லங்கள்செ ழிப்ப வளிப்பவனே
        வண்டுள வந்துள வங்கம லங்கமழ் பத்மப தத்தரசே
சந்தன முங்கணி யுங்குர வும்பொலிவெற்பி லிருப்பவனே
        சங்கரர் சங்கரி மைந்த வளஞ்செறி எட்டிகுடிக் குமரா
முந்தவ டைந்து வணங்கின மிங்கொரு முத்த மளித்தருளே
        முண்டக மென்குமு தம்பவ ளம்பொலி முத்த மளித்தருளே.       (9)

வெட்டிக் கொடியவர் குலகாலா
        விம்பவொண் முத்தந் தருவாயே
வெற்றிச் செயலின் மிகுவேலா
        விஞ்சொளி முத்தந் தருவாயே
கட்டிக் கனியினு மினியோனே
        கஞ்சவொண் முத்தந் தருவாயே
கர்த்தற் கொருமொழி பகர்வோனே
        கண்டெனு முத்தந் தருவாயே
செட்டிக் குடியினில் வருவோனே
        செந்துகிர் முத்தந் தருவாயே
தித்திக் குமொழிசொ லுமைசேயே
        செங்கனி முத்தந் தருவாயே
எட்டிக் குடியமர் முருகோனே
        இங்கொரு முத்தந் தருவாயே
இச்சைப் படியருள் தருசேயே
        இன்புள முத்தந் தருவாயே.       (10)
-----------

6. வருகைப் பருவம்

வெம்பிறவி வேனிலொழி முகில்போ லிருண்டகுழல்
        முன்னெற்றி மீதி லசைய
வெண்ணீறு திலகமுடன் இலகுபிறை நெற்றிமேல்
        மிளிர்மணிச் சுட்டி யிலகச்
செம்பதுமை கேள்வன் மலரோன்முதற் றேவர்செயல்
        செவ்வியழி யாம லருளுந்
திருவிழி மணிக்கடையி லருளலைக ளோங்கிடத்
        திண்டோளி லார மாட
மொய்ம்புவரை வரைநீண்ட வரைமார்பி லருணகிரி
        முத்தமிழ்த் தொடைய லாட
மொகுமொகென வரைமணிகள் ஒலியிட வருட்சத்தி
        முழுஞான வேல்கை மிளிர
வம்புலவு செம்பதும மலரடியின் மணம்வீச
        வந்தருள்க வந்தருள்கவே
வளரெட்டி குடிவேல சிவைபெற்ற சிறுபால
        வந்தருள்க வந்தருள்கவே.       (1)

இன்னம் புலன்க ளடங்காமல் இச்சை
        நெறியே யுழல்கின்ற
ஈனரிவர்கண் ணெதிர்வந்தால்
        எதுகேட் பாரோவென நினையேல்
பொன்னம் புயமா ளிகைவேண்டேம்
        பொங்கு மரவின்னணை வேண்டேம்
பொருநாற் கோட்டுக் கரிவேண்டேம்
        பொருவி லிருநன் னிதிவேண்டேம்
பின்னும் பிறவி வரினுமிளம்
        பெருமா னுனது சரணமலர்
பிரியா தெளியே முள்ளத்துப்
        பிறங்கும் வரமே வேண்டினம்யாம்
முன்னம் புளினர் மடமானை
        முயங்குங் களிறே வருகவே
முனிவோர் பரவு மெட்டிகுடி
        முருகா வருக வருகவே.       (2)

நெஞ்சா லுனது செஞ்சரண நிமல மலரே நினைந்துருகி
        நிகரில் ஞானத் தமிழ்ச்சந்தம் நின்றா ளிணைக்கே வனைதொழிலன்
மஞ்சா ரருண கிரிநாதன் வழுத்து மதல சேடனெனும்
        வழுவாப்பாவை நவின்றுன்னை வரச்செய் திடுவேமப்பாவைத்
தஞ்சா மதிக்க கிற்பாயே தமிழுக் கிரங்கும் பெருமானே
        தானே வாரா யெனின்மயிலின் சந்த விருத்த மோதிடுவோம்
அஞ்சா தெடுத்து வருங்கண்டா யயில்வே லரசே வருகவே
        அடியார் குடியா மெட்டிக்குடி யானாய் வருக வருகவே.       (3)

உருகி யுருகி யுடல்புளகித் துரைகள் குழறி விழியருவி
        ஓட வன்பாய் உன்னுமவ ருள்ளத் தூறும் தெள்ளமுதே
பருக வினிய பரங்கருணைப் பரமா னந்தப் பெருங்கடலே
        படிற்றுப் புலவே டர்க்கிடைந்தார் பதுங்குஞ் சேமப் பருப்பதமே
கருவி கரணம் கழன்றறிஞர் காணும் சுகசிற் ககனமே
        கடிய மலமாங் காரிருளைக் கடியு ஞான தினகரனே
முருக நாமந் தனக்குரிய முதல்வா வருக வருகவே
        முனிவோர் பரவு மெட்டிகுடி முருகாவருக வருகவே.       (4)

மண்மேல் மனித உடம்பெடுத்து மயங்கு வேனைப் பேரருளால்
        மானைக் காட்டி மான்பிடித்தல் மானவந்தாட் கொளுங்குருவே
பண்மேம் படுசெந் தமிழ்ப்பயனே பழைய மறையின் விழுப்பொருளே
        பரவுமடியார் விழைபவெலாம் பரிந்தீந் தருள்கற் பகதருவே
கண்மேற் கண்கொள் செங்கரும்பின் கண்ணில் முளைத்த கதிர்மணியே
        கனக மலையில்வளர் பச்சைக் கவினார் கொடியி னறும்பூவே
விண்மே லமரர் சூழமயின் மீதே விழிமுன் வருகவே
        விளங்கும் வளஞ்சா ரெட்டிகுடி வேளே வருக வருகவே.       (5)

மலையின் முழையிற் கற்கிமுகி வைத்த சிறையி லுறுகீரன்
        வழுத்து முருகாற்றுப் படைக்கு மகிழ்ந்து கருணை வழங்கியதும்
உலையின் மெழுகொத் துளமுருகி உருகி முருகா என்றோதும்
        ஓருத் தமியாள் வெட்டியகை உதவ முன்வந் தருளியதும்
நிலையு மன்பா லுன்னாமம் நினைவார் பெறுஞ்சீர் பற்பலவும்
        நெஞ்சந் தேறி நின்சரண நிமலக கமல நினைவானேன்
அலையுமடியேன் விழிகாண அயில்வே லரசே வருகவே
        அடியார் குடியா மெட்டிகுடி அறுமா முகவ வருகவே.       (6)

கமழும் பனிநீர் முழுக்காட்டிக் கவினீற் றுப்புண் டரந்தீட்டிக்
        கத்தூ ரியினிற் பொட்டிட்டுக் கருங்குஞ் சியின்மா மலர்சூட்டி
முமலங் கெடுத்தின் னருள்கொடுக்கும் முளரி விழிக்கஞ் சனமெழுதி
        மொய்ம்பு மலையி னறுங்கலவை முழுகப் பூசிமுலை யூட்டிச்
சமயங் கடந்த திருவடிக்குத் தண்டை சிலம்பு முதலாய
        சவியா பரணந் திருமேனி தன்னில் விளங்கும் படிபூட்டி
அமையத் திருவீ தியிலுன்னை அழைத்துப் போவேன் வருகவே
        அடியார் குடியாமெட்டிகுடி யறுமாகுகவா வருகவே.       (7)

விண்ணோ ரமுதுஞ் சுவைகுறைய விளம்பும் புலவர் கவிகேட்பேம்
        வீணை முதலாங் கருவியொடு மிழற்று மினிய இசைகேட்பேம்
பண்ணார் பழைய மறைநால்வர் பாடுந்தமிழ் மாமறை கேட்பேம்
        பழுதில் சைவ சித்தாந்தப் பனுவலறிஞர் மொழிகேட்பேம்
எண்ணான் குடனா லையுங் கடந்த இடத்தே இருந்த பெரும்பொருளோ
        டிரண்டற் றொன்று மோனியர்க ளிசைக்கு மனுபூ தியுங்கேட்பேம்
அண்ணால் அழைத்துச் செல்வேனான் அருளா ரமுதே வருகவே
        அடியார் குடியா மெட்டிகுடி யறுமா முகவா வருகவே.       (8)

வேறு

பரிந்த செஞ்சுடரின் பிழம்பென வருக
        பசுங்கடற் பருதிபோல் வருக
பைம்புயல் மின்னின் குழுவென வருக
        பவழத்தின் குழவிபோல் வருக
விரித்த பேரொளிப்பொன் கலந்த சிந்துரத்தின்
மிகுகுவை போலிவண் வருக
        விலையிலா மணியின் திரளென வருக
விளங்கெழி லரசென வருக
தெரிந்தநான் மறையின் முடிபுணர் அறிஞர்
        செய்தவப் பேறென வருக
திகழ்சிவ ஞானபோத நன்னெறியோர்
        சேரநு பூதிபோல் வருக
அரிந்தமன் அயனிந்திரன் முதலமரர்
        அதிபதி வந்தருள் செயவே
அணிபொழி லெட்டி குடியமர் முருகா
        அறுமுக வந்தருள் செயவே.       (9)

வேறு
முத்தமிழ் வித்வ விநோதா வருக வருகவே
        முட்டை யெனற்குள நாணாய் வருக வருகவே
முத்தி கொடுத்தருள் தாளா வருக வருகவே
        முக்கணர் மெச்சிய பாலா வருக வருகவே
தத்துவ முற்று முளானே வருக வருகவே
        சத்தி கையிற்கொள் குமாரா வருகவே
எத்த வருக்குமு னாவாய் வருக வருகவே
        இச்சைமுடித் தருள்வோனே வருக வருகவே
எத்தர்தமக் கரியோனே வருக வருகவே
        எட்டிகுடிப் பதிவேளே வருக வருகவே.       (10)
-----------

7. அம்புலிப்பருவம்

விண்ணவர் மதிக்க வமுதுருவமாய் வருதலான்
        வியோமத்தி னிலவிடுதலான்
மெய்யமர் வியன்கலை விளங்கலாற் கங்கைதலை
        மேவுமருண் மலைமேவலான்
கண்ணமரு மொருமானை மேவியுல குக்கெலாம்
        கலவிநல மீந்திடுதலாற்
கனகிநறு மாலையணி யனகனழ கேசுரன்
        கட்பொறியெனப் பொலிதலான்
எண்ணரு முயிர்ப்பயிர் தழைப்பவமு தீதலான்
        ஏறிமேடத்தின் வரலான்
இரவலர் களைப்புரந் திடுதலான் நீயிவற்
        கிணையிவனு னக்கிணையுளான்
அண்ண லெட்டிக்குடியி லமருமுரு கையனுட
        னம்புலி ஆடவாவே
ஆரணம் பரவுதிரு நாரணன் மருகனுட
        னம்புலி ஆடவாவே.       (1)

ஓங்கலை யிடங்கொண் டெழுந்தோகை மேலாகி
        யுலகைவல மாகவருவாய்
உற்றிடு கணங்கள்புடை சுற்றமிளிர்வாய் கலைகள்
        ஒண்புல வருக்குதவுவாய்
தாங்குமெழில் வள்ளிக்கு மாரன் சினந்தெயும்
        சமயத்தி லுதவிசெய்வாய்
சலசத்தி யொடுமதிக் கின்றவிண் ணோர்கள்பரி
        தாபமற வந்தளிப்பாய்
வாங்குமுட லோடுவா னத்துநரை யாய்க்குறை
        மதியனென மாதரேச
மாசஞ் சலஞ்செய்து குறையுறுவை யிவனிந்த
        வாறுனக் கொப்புடையவன்
ஆங்குறைக ணீங்கவரு ளெட்டிகுடி வேலனுட
        னம்புலி யாடவாவே
ஆரணம் பரவுதிரு நாரணன் மருகனுட
        னம்புலி யாடவாவே.       (2)

சோமனென் கின்றபேர் கொண்டுமா னாகஞ்
        சுமந்துசிவ னென்னநின்றாய்
தூயவட திசையிறைவ னாகிக்கு பேரனாந்
        தொடர்பினாற் றோழனானாய்
மாமனுத வியமாதர் பலரையு மணந்தென்று
        மாறாத வுறவுமானாய்
மன்னிராமன் கலைய னென்னு நாமங்களால்
        மலரடித் தொண்டனானாய்
பூமனா ரணனறிய வரியமுடி யடிகண்ட
        பூதியான் ஞானியானாய்
பூழியர்கள் குலமுதல்வ னாதலான் மரபிற்
        பொருந்துமுன் னோனுமானாய்
ஆமிதா லறுமுகச் சிவனழைத் தான்விரைந்
        தம்புலீ யாடவாவே
ஆரணம் பரவுதிரு நாரணன் மருகனுட
        னம்புலீ யாடவாவே.       (3)

நஞ்சினொடு வருமமுத முண்டமர ரென்றுபேர்
        நண்ணுகினும் விண்ணுளோர்கள்
நாசமுறுவாரெனற் கீசன்முடிமீதுள்ள
        நகுதலை சிறந்த சான்றாம்
துஞ்சிடல் பிறந்திடல் வளர்ந்து தேய்ந்திடலென்ற
        துன்பமொடு கொடிய கயநோய்
தோய்ந்துளை பணிப்பகை யடிக்கடி விழுங்கவரு
        தொல்லையும் படுகின்றனை
கஞ்சனை முனிந்தந் தகனை யுதைத்துக் கலக
        காமனையெ ரித்துநஞ்சங்
கண்டந் தரித்தபெரு மானரு ளுருக்கொண்டு
        கந்தனென வந்து நின்றான்
அஞ்சுமுக நீங்கவெழி லாறுமுக சிவனிவனொ
        டம்புலீ யாடவாவே
ஆரணம் பரவுதிரு நாரணன் மருகனுட
        னம்புலி யாடவாவே.      (4)

கலகவிழி கலவிநசை யாலணுகு
        கடியகொடு நோய்கழன்றுட்
களங்கம தொழிந்துகுறை யாதகலை நிதியெனக்
        கவிராசர் புவிராசர்கள்
தலைவணங் கச்சித்தி பெற்றுய்ய லாமெங்கள்
        தலைவனரு ளருணகிரியே
தக்கசான் றாமுனை விழுங்குபாம் புன்னருகு
        சாராது தரணி தாங்கும்
பலதலைய பாந்தளை யெடுத்துதறி யார்க்கும்
        பசுங்கலப மயிலி வணதாம்
பகலிரா வென்னும் பகுப்பற்ற நிலையிற்
        பரானந்த வமுதாரலாம்
அலகில்புக ழெட்டிகுடி மருவு முருகையனுட
        னம்புலீ யாடவாவே
ஆரணம் பரவுதிரு நாரணன் மருகனுட
        னம்புலீ யாடவாவே.       (5)

பூதகா யத்துப் பொருந்தியுளை நீயிவன்
        புனிததக ராலயத்தான்
பொன்றுறுஞ் சிலகலையை நீயிவன் கலையெலாம்
        போற்றிடுங் குரிசிலாகும்
மாதமொரு நாணிறைவு மேவுவாய் குறைவிலா
        மாநிறைவு ளானிவன்காண்
மாசுணங் கண்டஞ்சு வாயிவன் பரிகண்டு
        வாசுகியு முள்ளமஞ்சும்
ஆதவற்கொளிமங்கு வாயிவன் அவன்பகை
        அழித்தவன் வணங்குமுன்னோன்
ஆனைமுக னார்சாப மேவினை யவன்றுணையி
        னான்மாதை யிவன்மணந்தான்
ஆதலி னிவற்குநீ யிணையாவை யோகடுகி
        யம்புலீ யாடவாவே
அட்டதிசை யும்பரவு மெட்டிகுடி வேலனுட
        னம்புலீ யாடவாவே.       (6)

வேறு
அஞ்சு பிறப்புளை நீயிவ னஞ்சு பிறப்பை யறுத்தெழுவான்
        ஆசை வழித்திரி வாயிவ னாசை யறுத்துயர் வாழ்வருள்வான்
மஞ்சு மறைந்து வெளிப்படு வாயிவன் மஞ்சுள மிஞ்சியுளான்
        மாசு பொதிந்தனை நீயிவ னாருயிர் மாசுதனைத் தெறுவான்
கஞ்சன் மகற்கு வருந்தினை நீயிவன் கஞ்சன் வணங்கடியான்
        காமற் கோர்குடை நீயழகாலக் காமனிவற் குடைவான்
வஞ்சனை யன்றிது முருகனொ டாடிட வாவா வம்புலியே
        வளரெட் டிக்குடி யிறைவனொ டாடிட வாவா வம்புலியே.       (7)

மதியே மென்று நினைத்தனை யேலுன் மதியினை யென்சொல்கேம்
        மன்னும் பெரியரை மதியா தவனை மதிப்பவ ராருலகில்
மதியா தவர்மதி யாதவன் வேள்வி மதித்துறு தீமதியால்
        மதிமாழ் குறவுடல் தேய்வுற் றலர்விழி வாணகை போயினரால்
மதிதீ விடநுகர் மதிசேர் சடையிறை வன்மதி மதியனிவன்
        மதியிற் சினமுறின் மதியே யுன்பெரு வாழ்வு குலைந்திடுமே
மதியா யெனின்முரு கையனோ டாடிட வாவா வம்புலியே
        வளரெட் டிக்குடி முருக னொடாடிட வாவா வம்புலியே.       (8)

பாணித் தனையே லிவனொண் புருவங் கோணித் திடுமாயின்
        பணியன கைப்பிணி முகமொரு கவளமெ னப்பசி யாறிடுமால்
வேணித் தலையொடு கலையையு மருகுவி யாளங் கொளவருள்வான்
        விமலன் கண்கள் புதைக்கி னினக்குறு வினையார் புகலவலார்
பாணிக் கரகமு டைப்பிர மன்படு பரிபவ முணராயோ
        பரிவா லிவையுரை செய்தோம் கருணைப் பரவை யிடைத்தோன்றும்
வாணித் திலமுரு கையனொ டாடிட வாவா வம்புலியே
        வளரெட்டிக்குடி யிறைவனொ டாடிட வாவா வம்புலியே.       (9)

நிசிசர னென்றொரு பெயருடை மையினவ னெஞ்சஞ் சினனென்றோம்
        நேரரு வேந்தென் பெயருட னிரவுறு நிலைநா ணினனென்றோம்
சசியென் பெண்பெயர் சரியாய் நெஞ்சு சமழ்த்தா னிவனென்றோம்
        தானவ னருகுற நாணுத லியல்பே சருவேனீ யென்றோம்
உசிதம தோவுன் னருகல் லோனுற லென்றுன் னினனென்றோம்
        ஒருகண மினிநீ பாணித்தனையே லுறுதுயர் அளவிலைகாண்
வசிகர னாகிய முருகனொ டாடிட வாவா வம்புலியே
        வளரெட் டிக்குடி யிறைவனொ டாடிட வாவா வம்புலியே.       (10)
---------------

8. சிறுபறைப் பருவம்

தழங்கும் புனலை வயற்பாய்ச்சுஞ் சத்த முழங்கக் கருவியினாற்
        றடியை யுழுவார் பகடுகளைத் தட்டித் துரப்பு மொலிமுழங்கச்
செழுங்கட் கரும்பு பிழிகின்ற திரிகை யானை போன்முழங்கத்
        தீஞ்சா றோடிப் பாசனத்திற் றிரண்டு வீழு மொலிமுழங்கக்
கொழுங்கட் கயற்பண் மொழிமடவார் குரவைப் பாட்டாட் டிசைமுழங்கக்
        கொண்டல் முழங்கத் தண்டலையிற் குலவுமளிகள் குழல்போல்
முழங்கு மெட்டிக் குடிமுருகா முழக்கி யருள்க சிறுபறையே
        முழுமா ணிக்கத் திரளொளியே முழக்கி யருள்க சிறுபறையே.       (1)


தூவார் மறையின் பொருள் முழங்கத் துய்ய சிவநூற் றுறைமுழங்கத்
        துகளில் பிறபல் கலைமுழங்கத் தொண்டர் மலர்வாய்ச் சொல்முழங்கத்
தேவா ரங்கள் முதலாய தெய்வத் தமிழ்மா லைகள் முழங்கத்
        தெவிட்டா வமுதா யருணகிரி செப்பு முனது புகழ்முழங்க
ஓவா துனது கோயில்தொறு முஞற்றும் பூசைமணி முழங்க
        உனையே நினைந்துன் னடியவர்கட் கூட்டுவாரின் சொன்முழங்க
மூவா வெட்டிக் குடிமுருகா முழக்கி யருள்க சிறுபறையே
        முழுமா ணிக்கத் திரளொளியே முழக்கி யருள்க சிறுபறையே.       (2)


அலையும் புலனை யகத்தடக்கி யாசை யடக்கி யாதர
        மாறுங் கண்டு மேனிலைமை யணுகி லெழும்பல் லிசைபோலத்
தொலைவில் பிறவிப் பெரும்பகையும் துணையாங் காம முதலாய
        துணைவர் குழுவு மிரியவெழுந் தொண்டர் படைப்பல் லியம்போல
மலையும் நினைப்பு மறப்பும்செய் மாயை யிருளும் போயதினி
        வைகுந் துயினீங் குகவென்னு மாறு போல உமைஞான
முலையுண் ணெட்டிக் குடிமுருகா முழக்கி யருள்க சிறுபறையே
        முழுமா ணிக்கத் திரளொளியே முழக்கி யருள்க சிறுபறையே.       (3)

வருந்தும் பிறவிக் கடனின்று
        வாங்கி யெம்மைத் தாங்குங்கை
மண்மேல் வினையி லுழலுங்கால்
        மயங்கா தஞ்ச லருளுங்கை
திருந்து மருண கிரிக்கருளாற்
        செபமா லையளித் திடுஞ்செங்கை
செருக்கு முட்டாட் டாமரையோன்
        சென்னி குலுங்கக் குட்டுங்கை
மருந்துண் ணமரர் கோன்றலையில்
        மகுடஞ் சூட்டும் வரதக்கை
வள்ளி யெனுந்தெள் ளமுதினுக்கு
        மணமா லிகைசூட் டுங்கையால்
முருந்து நகையெட் டிக்குடியாய்
        முழக்கி யருள்க சிறுபறையே
முழுமா ணிக்கத் திரளொளியே
        முழக்கி யருள்க சிறுபறையே.       (4)

இத்தா ரணியார் வானோர்வேண் டியவெல்லாமு மீயுங்கை
        எம்மானருண கிரிசிகரி யிருந்து விழுங்கா லேந்துங்கை
சித்தர் தமக்கு ஞானநெறி தெரிக்குஞ் சின்முத் திரைச்செங்கை
        சீகா ழியிலந் தணர்காணச் சிவனார் தம்மைச் சுட்டுங்கை
கொத்தார் வேம்பன் சுரநீங்கிக் குளிர நீறு பூசுங்கை
        கோலக்காவிற் பொற்றாளங் கொண்ட கையா லுமையளித்த
முத்தா வெட்டிக் குடிமுருகா முழக்கி யருள்க சிறுபறையே
        முழுமா ணிக்கத் திரளொளியே முழக்கி யருள்க சிறுபறையே.       (5)

வேறு
எண்ணறு மறையறி வருபிர மப்பொரு ளிருமூ வுருவாகி
        எறிதிரை யுறுசர வணமீ தேமல ரெழிலா சனமேவிக்
கண்ணுறு முடுமக ளிரறுவ ருளமிகு களிகூ ரத்தளருங்
        கானடை கொண்டு நடந்தோ டிக்கரி யரியொடு விளையாடிப்
பண்மிகு குழல்கோ டூதித் தண்ணுமை பம்பையொ டொண்பதலை
        பயிலுஞ் சிறுதுடி முதல முழக்கிய பாலக வுமைமுத்தம்
கொண்ணறு மலர்வா யெட்டிக் குடியாய் கொட்டுக சிறுபறையே
        குஞ்சரி கொங்கை மணந்திடு தோளா கொட்டுக சிறுபறையே.       (6)

பூதலமேவு பொறிப்பண மாசுண மாதிய பொள்ளெனவே
        பொன்வரை யாதிய பூதர மாடி யசைந்து பொருக்கெழவே
மோதலை வாரிதி பொங்கியெழப் பெருமுகில் மழையைப் பெயவே
        முகிலுறு மிடியு நமைத்தெறு மிடியின் முழக்கி தெனக்கொளவே
வாதமு முகமுடி விதென வெருக்கொள வலிமிகு மசுரர்குழாம்
        மாய ஒலித்திடு நெய்தலெனக் குளிர்வா னளவும் பொழில்வாய்க்
கோதறு தேன்சொரி யெட்டி குடிக்குக கொட்டுக சிறுபறையே
        குஞ்சரி கொங்கை மணந்திடு தோளா கொட்டுக சிறுபறையே.       (7)

ஐந்தொழி லுஞ்செயு மெந்தை நடஞ்செய வாயிர மங்கைகளால்
        அணிமந் தணமறை யுந்தொழில் வாணனு மகமிக வெள்குறவே
நந்தியு மிந்த விதஞ்சதி கொட்ட நமக்குவ ராதெனவே
        நாதனு மாதர வாகித் தலையை யசைத்து நடஞ்செயவே
தந்தன தந்தன திந்திமி யென்று சதிக்கண முந்துறவே
        தாயுமை யானந் தக்கொடியுங் கைத்தாளங் கொட்டிடவே
கொந்தண வும்பொழி லெட்டி குடிக்குக கொட்டுக சிறுபறையே
        கோவா மணியே வாடா மலரே கொட்டுக சிறுபறையே.       (8)

நம்மின மிதுவென முகில்கண் முழங்க நயந்து முகிற்கணமார்
        நாத மெனக்களி மயில்க ணடஞ்செய நடனங் கண்டு விணோர்
கொம்மை முலைச்சிய ராடல் கொளக்காண் கொழுநர் மகிழ்ச்சிகொளக்
        கொண்டல் முழக்குக் கெதிரா கப்பல குஞ்சர மும்பிளிற
விம்மு முழக்க மெழுந்து திசைக்களி வேழச் செவிநுழைய
        விரல்சிர லிறகென வசைய விரற்பணி மின்னிட விண்ணளவும்
கொம்மைப் பொறி மதிலெட்டி குடிக்குக கொட்டுக சிறுபறையே
        குஞ்சரி கொங்கை மணந்திடு தோளா கொட்டுக சிறுபறையே.       (9)

கொக்குச் சுவைக்கனி வெடித்துச் சொரிந்தகடி
        கொண்டசாற் றோடுயர்ந்த
கோழரைய வாழையி னறுங்கனி யெழுஞ்சாறு
        கூடியய லாகவளரும்
இக்குக் குழுக்கிடை நிறைத்துத் தொடுத்துள
        விறாலினஞ் சிதையவீழ
எழுகின்ற தேன்வெள்ள மொடுபலா வின்சா
        றியைந்துகால் வழியினோடிப்
புக்குத் திளைத்தினிது துய்த்துச் செருக்கியொளிர்
        பொன்னாடு தாவியங்குப்
பொற்றருவி னரைமுட்டி மீண்டுவரு வாளையூர்
        புனல்சூடு மெட்டுகுடிவாழ்
செக்கச் சிவந்தவொளி திக்கெட்டும் வீசுசேய்
        சிறுபறை முழக்கி யருளே
தினகரர்க ளொருகோடி யெனவொளிரும் வடிவேல
        சிறுபறை முழக்கி யருளே.       (10)
---------

9. சிற்றிற் பருவம்

பிள்ளை யிவனென் றுனைநினைந்த பிரமன்வாழும் பதமன்று
       பிறழா வன்பர் தலையிலவன் பிசகித்தீட்டு மெழுத்தன்று
வெள்ளக் கடலி னடுவசுரர் வீர மகேந்ர புரமன்று
       வீர நினது திருவடியின் வீச்சா லழிவுற் றிடவிதுதான்
தெள்ளிக் கொழித்த மண்ணொடுகல் சேர்த்துக் கட்டுஞ் சிறுவீடு
       சேர்ந்தாய் விருந்தாய் நாமட்ட சிறுசோ றிடுவோ மாதலினால்
அள்ளிக் கொள்ளும் பேரழகா அடியேஞ் சிற்றி லழியேலே
       அழகாரெட்டிக் குடிமுருகா அடியேஞ் சிற்றி லழியேலே.       (1)

செஞ்சொ லொன்று மில்லாமற் சீருங் கட்டுஞ் சேராமல்
       சிறந்த பொருளும் பயவாமல் செவ்வே சந்தி பொருந்தாமல்
நெஞ்சங் கவரு மணியின்றி நிறைந்த புலமை யில்லோர்கள்
       நேர்ந்த வாறு கீறும்பா நிகர யாஞ்செய் சிற்றில்லம்
விஞ்ச யெம்போற் சிறியர்சிலர் வியந்து சிறிதே விளையாடி
       வீசுங் காலிற் பறந்துபோ மென்காற் போதின் மண்படிய
அஞ்சன் றனைமோ தியபெருமா னடிகேள் சிற்றில் சிதையேலே
       அழகா வெட்டிக் குடிமுருகா அடியேஞ் சிற்றில் சிதையேலே.       (2)

புவன மிருநூற் றீரேழும் பொற்பப் படைத்துச் சிற்றுயிர்கள்
       பொருந்தக் குடிவைத் தளிக்கின்ற பொன்னம் பொருப்பன் றன்னன்னத்
துவமை யறுசிற்றின் முழுதும் ஊழிநாளி லழிக்கின்றான்
       உந்தை யென்றாற் றந்தைகுண முனக்கும் பொருந்த லியல்பெனினும்
கவன மாக யாமியற்றுங் கவினார் மனைகள் கடிதழித்தல்
       கடனன் றுனக்கு விளையாட்டின் கடைசி வரையும் பொறுப்பாயே
அவனு மவளு மோருருவா மரசே சிற்றி லழியேலே
       அழகா ரெட்டிக் குடிமுருகா வடியேஞ் சிற்றி லழியேலே.       (3)

ஒன்றும் போதா நாயனையே முழைநீ வந்தெஞ் சிற்றில்லை
       உதைத்தே மகிழ்ந்தா லதற்கடியே முவப்ப தன்றி வெறுப்பேமோ
நன்றெம் மில்லந் தொறும்வந்து நயந்துன் பாத மலர்காட்டும்
       நயமே நினைவே மொறுத்தாலும் நம்பாலரு ளென்றுளம் நெகிழ்வேம்
மன்றம் பொலிய நடம்புரிவார் மைந்தா செந்தா மரையனைய
       மஞ்சா ரடியின் மண்படுங்கால் மற்றெங் கண்ணிற் பட்டதுவாம்
அன்று மின்று மென்றுமுன தடியேஞ் சிற்றி லழியேலே
       அழகாரெட்டிக் குடிமுருகா அடியேஞ் சிற்றி லழியேலே.       (4)

மண்ணும் பொன்னும் பெண்ணுமெனும் மாவேடணை மூன்றனையு மொழித்து
       மாளா வின்ப வீடளித்தல் வழக்கா மெனினு மறவாமல்
எண்ணு மடியா ரிதயத்து மிருக்கின் முதலு நடுமுடியும்
       இருக்கும் பதத்தி லுறுத்துமென வெண்ணி யெண்ணி மறுகுறுவேம்
பண்ணும் தமிழும் பயில்புலவர் பாடு மணிநா விலுமிமயப்
       பாவை குவளை விழியினிடைப் பாவை தனிலும் துகள்படுமே
அண்ணுஞ் சிவபோ கத்தமுதே யடியேஞ் சிற்றி லழியேலே
       அழகா ரெட்டிக் குடிமுருகா வடியேஞ் சிற்றி லழியேலே.       (5)


உள்ளக் கமலத் துனையிருத்தி யொருமைப் புலனாம் விளக்கேற்றி
        ஒழியா வன்பா நீராட்டி யுண்மை முதலெண் பூச்சாத்தித்
தள்ளற் கரிய தற்போதந் தனையே வமுதா வுனையூட்டித்
        தளரா வழிபா டுடையார்கள் தம்பூ சனைகொண் டுகப்பதுபோல்
வெள்ளத் தனைய பேராசை மேவு நெஞ்சம் புறத்தலைய
       மென்பூக் கொண்டு புறப்பூசை விளைக்கு மவர்க்கும் விருப்பளிப்போய்
தெள்ளுந் தரளச் சோறடுமிச் சிறியேஞ் சிற்றில் சிதையேலே
       சிட்டர் பரவு மெட்டிகுடிச் செல்வா சிற்றில் சிதையேலே.       (6)

line missing in the following verse ?? to be checked
வெங்கட் புலியி னுடலுருவே வெகுண்டு குத்திப் பொருகரியின்
        வெண்கோ டதனில் விளைமுத்தும் விலகி யெறிக்கும் பலமணியும்
பொங்கி வழியுந் தேன்கூடும் பூவும் பொன்னும் மலைகொழிக்கும்
        பொன்னிப் புவன முழுதுடையா ரளித்த செல்வத் திருக்குமரா
அமரர் கற்ப நாடுகுடி யமரக் காத்த வமர்வேலோய்
செங்கட் கமலத் திருத்தாளாற் சிறியேஞ் சிற்றில் சிதையேலே
        சிட்டர் பரவு மெட்டிக்குடிச் செவ்வேள் சிற்றில் சிதையேலே.       (7)

தழைத்த சாலிப் பயிரருகே சாறு நிறைந்த கரும்பருகே
        தரக்கின் பாதச் சீப்பரம்பை தரள மரும்பித் துகிர்போலப்
பழுத்த கமுக மதனருகே பலவும் மாவும் பயில்சோலை
        பசியாம் பகைவ னெஞ்சஞ்சப் படைபோ னிற்குஞ் சோணாடா
பிழைத்த மறையோன் போலுன்னைப் பிள்ளை யெனவெள் ளியதுண்டோ
        பிச்ச னீலி பெறுஞ் சிறுவன் பெருங்காட் டெருமை மேய்ப்பனெனத்
தெழித்த துண்டோ மலரடியாற் சிறியேஞ் சிற்றில் சிதையேலே
        சிட்டர் பரவு மெட்டிக்குடிச் செவ்வேள் சிற்றில் சிதையேலே.       (8)

பவளக் கொழுந்து விளக்கேற்றிப் பைம்பொற் கலத்தின் முத்திட்டுப்
        பனிநீர் வாக்கிச் செம்மணித்தீப் பசுங்கல் லடுப்பின் வைத்தூதி
எவள வடியார் வந்தாலு மெதிர்கொண் டமுதட் டூட்டுதுமென்
        றெண்ணி யதனின் முனைந்திருந்தோ மெங்கள் பெருமா னருளாலெம்
உவள கத்தின் வரக்கண்டு முரையா டாம லிருப்பேமோ
        உண்ணச் சிறுசோ றளியேமோ வுள்ளஞ் சினவா தருள்கண்டாய்
திவளுந் திருநீ றணியழகா சிறியேஞ் சிற்றில் சிதையேலே
        சிட்டர் பரவு மெட்டிகுடிச் செவ்வேள் சிற்றில் சிதையேலே.      (9)

உந்தை யிரந்துண் டமைமொழியோ மும்மோய் புலவர்க் கறுதிங்க
        ளுணவட் டிட்ட செயலுரையோ முன்மா மன்வெண் ணெய்க்களவும்
நிந்தைக் குரிய பலசெயலு நிகழ்த்தோந் தமைய னுருப்பழியோம்
        நீயோர் குறத்தி யெச்சினுகர் நிலைமை சொல்லோம் நினதடியார்
இந்தக் குலத்தா ரெனவிகழோ மிதுநால் வரையாஞ் செய்பிழைகள்
        எல்லாம் பொறுத்தி பழனிதிரு வேரகஞ்சோ லைமலையாய்
செந்திற் குமரா பரங்குன்றாய் சிறியேஞ் சிற்றில் சிதையேலே
        சிட்டர் பரவு மெட்டிகுடிச் செல்வா சிற்றில் சிதையேலே.       (10)
----------

10. சிறுதேர்ப் பருவம்

பாயிரு ளகற்றுகதிர் ஞாயிறொளி மட்கும்
        பரூஉமணிச் சூட்டிராசிப்
பாந்தளின் றலைவீதி மீதோடு வையமாம்
        பாரித்த தேரிலேறி
மாயிரும் பொற்சிலையில் வாசுகி தனைப்பூட்டி
        வாங்கியரி வாளியாக
வானவர்க டுயர்தீர முப்புரந் தீவாய்
        மடுத்தபெரு வீரன் மதலாய்
காயிருங் கனல்வேள்வி வருதகரை யூர்ந்துவரு
        களிறே கலாப மயின்மேல்
ககனவெளி வழியுலகை யொருநொடியில் வலம்வந்த
        காளையே யுமைநங் கையின்
சேயென அரன்கண்வரு சோதியே யாதியே
        சிறுதே ருருட்டி யருளே
சிட்டர்புக ழெட்டிகுடி யுற்றவடிவேலனே
        சிறுதே ருருட்டி யருளே.       (1)

கடலுலகி லறநெறி புரந்தமுசு குந்தனொடு
        காவலரு மேவ வரிய
கற்பக தலத்தமரர் காவலனு மோவாது
       காவலா ழியையுருட்ட
முடவரவ படவணையி லறிதுயிற் கொண்டமரு
       முண்டகக் கட்கொண்டலு
முதுமறைக் கிழவனுஞ் சமனுமுத லமரர்தொழின்
       முட்டாது தாஞ்செலுத்தத்
தடவரை யுதித்துவரு சூரியன் தேருருளை
       தடையின்றி வழிநடப்பச்
சமரிலெதிர் நிசிசரர்கள் விரிதலைக ளுருளத்
       தடந்தேரில் வந்தசதுரா
திடமதிலின் முகில்படியு மெட்டிகுடி வேலனே
       சிறுதே ருருட்டி யருளே
சிவசமய வறுமுகவ குகபகவ வுமைபுதல்வ
       சிறுதே ருருட்டி யருளே.       (2)

அறுமுகத் தொருகுழவி யாகிவட மேருவி
        லமர்ந்தெட்டு வரைபிடுங்கி
அட்ட நாகங்களைச் சுற்றிவிசை யோடுபம்
       பரமென்னு மாசுழற்றித்
தெறுசுறவு செறிகடல்க ளொன்றாக்கி யெட்டுத்
       திசைக்களிறு முட்டவிட்டுச்
செய்ததிரு விளையாட லறியா தெதிர்ந்தவத்
       தேவேந்தி ரற்படுத்துக்
குறுகியரி யயனமரர் பரவ விந்திரனுயிர்
       கொடுத்துக் குமாரவுருவிற்
குலவுசர வசரங்க ளெல்லா மடங்கியுள
       கோலமுங் காட்டுபரமன்
சிறுவ சருவேச வெட்டிக் குடியில் வேலனே
       சிறுதே ருருட்டி யருளே
சிவசமய வறுமுகவ குகபகவ வுமைபுதல்வ
       சிறுதே ருருட்டி யருளே.       (3)

பண்ணவர் களுக்குநல மெண்ணிநா ரதமுனி
       பயின்றவேள் வியிலெழுந்து
பாரித்த பேரண்ட நிலைகுலைய வேமருப்
       பான்முட்டி வந்ததகரை
விண்ணவர்க ளுக்கஞ்ச லென்றருளி யன்புடைய
       வீரவா குவினையேவி
விரைவினி லவன்கொணர வூர்தியா கக்கொண்ட
       வித்தகா நத்துமிழ்ந்த
கண்கவரு முத்தின முமிழ்ந்தநில வான்மடுக்
       கைவரவங் கண்விழிப்பக்
கமலங்கண் மூடுபுனல் வளமிஞ்சு பழனங்
       கவின்றுசூ ழெட்டிகுடிவாழ்
திண்ணிய தவத்தவர்க ளெண்ணமமர் வேலனே
       சிறுதே ருருட்டி யருளே
சிவசமய வறுமுகவ குகபகவ வுமைபுதல்வ
       சிறுதே ருருட்டி யருளே.       (4)

வேறு
கோரச்சூர னுளத்திலுறுங் கொள்கை யறிந்து தொழில்புரியும்
        கோதறு மிந்திர ஞாலத்தேர் கூடிய பூத கணத்தையெலாம்
சேரக் கொண்டு புறக்கடலிற் சேர்ப்பச் செங்கதிர் வேலேவித்
        தீதற மீட்டுத் திறலவுணன் சிந்தை திகைப்ப வழைத்தந்த
ஏர்பெறு மிந்திர ஞாலத்தை யிங்குற வென்று வசஞ்செய்தஃ
        தீந்தவ னென்னினும் வேறலனென் றியாவரு மறியச் செய்தபெருஞ்
சீர்பெறு மெட்டிக்குடி முருகா சிறுதே ருருட்டி யருளுகவே
        சிவசுப் பிரமணி யப்பெருமான் சிறுதே ருருட்டி யருளுகவே.       (5)

தந்தி முகத்தவன் முந்துமகன் சாலச் சீறி விடுத்தகொடுஞ்
        சலதி யனற்பவ னப்படைகள் சதுர்முக னாரண னாதிபடை
வந்திட வந்திட வுந்தியுற வாய்க்கொள் ளுக்கிர னாதியராம்
        வலிமிகு சாரதமாப் படைகள் வாழ்த்துஞ் சேனைத் தலைவனுமாய்
முந்திர விப்பகை வன்றனுயிர் முடித்த திறற்புயன் முன்னவனே
        மூரித் தாரக னுயிருண்ட மூவாத் தேவர்கள் கோளரியே
செந்தில வெட்டிக் குடிமுருகா சிறுதே ருருட்டி யருளுகவே
        சிவசுப் பிரமணி யப்பெருமான் சிறுதே ருருட்டி யருளுகவே.       (6)

வேறு
வெங்கட் சிங்க முகத்தசுரன் வீரவாகு முதலொன்பான்
        விரும்பு மிளைஞ ரிலக்கரொடு விரவும் பூத கணமெல்லாம்
அங்கைப் பாசத் தார்த்துதைய வசலத் துய்த்து மறைந்திடவே
        அம்பொன் றேவிப் பாசமறுத் தவரைப் புரந்த திறல்வீரா
பங்கப் படினும் பின்கிளைக்கும் பாவிச் சிங்கன் தலைதோள்கள்
        பட்டே ஒழிய உங்காரம் பண்ணி யடக்கிப் பின்னவனைச்
செங்கை வயிரத் தான்முடித்தோய் சிறுதே ருருட்டி யருளுகவே
        திருவா ரெட்டிக் குடிமுருகா சிறுதே ருருட்டி யருளுகவே.       (7)

உருட்டும் புரட்டு மிகுமுலகி லுடம்பை யோம்புங் குறிக்கோளே
        உடையா ரிடையே யுழன்றாலு முலோகா யதநஞ் சேறாமே
மருட்டுங் கடுவிற் கொடியவிழி மானார் மயக்கந் தாக்குகினும்
        மனையாண் மக்கள் சுற்றமெனும் வலையிற் காலை வைத்திடுனும்
பொருட்டுன் பஞ்சிற் சிலவேலை பொருந்து மெனினும் நின்பாதப்
        போதெப் போதும் மறவாத போத மளித்துச் சிறியேனைத்
தெருட்டுங் கருணை யாறுமுகச் சிவனே சிறுதே ருருட்டுகவே
        செல்வஞ் சிறந்த எட்டிகுடிச் செல்வா சிறுதே ருருட்டுகவே.       (8)

கேழி லரனார் திருவருளாற் கிட்டற் கரிய பெருஞ்செல்வங்
        கேச வாதி யமரர்களாற் கேடுறாத வலியுடைமை
ஊழி காலம் வரைவாழ்நா ளுற்ற சூரன் வயிரவுடல்
        ஊழித் தீமுன் பூளைப்பூ வொக்கத் தடிந்த கதிர்வேலா
கோழி யாகி மயிலாகிக் கொத்த வந்த விருகூறும்
        கொடியு மேறும் பரியுமெனக் கொண்ட கருணைப் பெருங்கடலே
வாழி யெட்டிக் குடி முருகா வள்ளால் சிறுதே ருருட்டுகவே
        மாளா வாழ்வைத் தருமெங்கள் வாழ்வே சிறுதே ருருட்டுகவே.       (9)

வேறு
காலிரு காலா வரையச் சாக்கட் டாணி நரம்பாகக்
        கட்டு மெலும்புப் பலகை யுரந்தட் டுப்பொறி கண்ணாடி
மேலிருள் குஞ்சிக் கொடிபல வாக்கு மிழற்றுங் கணமணியா
       வேதத் தச்சன் செய்மெய்த் தேரில் விசைமனமாப் பூட்டி
ஏலுஞ் சிற்றுயி ரென்னுங் குழவியை ஏற்றித் திருவருளா
        கியவல வற்கொடு பலபுவனத்து மியக்கிடு மெந்தாயே
ஓலிடு மறைதே ரெட்டிகுடிய னுருட்டுகவே சிறுதேரே
        உமையவள் மொஞ்சி யருந்திய மஞ்ச னுருட்டுக சிறுதேரே.       (10)

எட்டுகுடி முருகன் பிள்ளைத்தமிழ் முற்றும்.

This file was last revised on 15 Nov. 2021
Fee free to send corrections to the webmaster (pmadurai AT gmail.com)