pm logo

அரிபத்த நாவலர் எழுதிய
திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம்


tirumAlinjcOlai azakar kalampakam of
aripatta nAvalar
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing us with scanned images version of the work online.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
V. Devarajan, Sakthikumaran, S. Karthikeyan, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan,
Mithra and Thamizhagazhvan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was first put online on 20 Sept. 2010.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

அரிபத்த நாவலர் எழுதிய
திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம்


Source:
ஸ்ரீராமஜயம்.
"திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம்"
மூலபாடம் - முதற்பதிப்பு
இஃது புஷ்பரதசெட்டியாரால் கலாரத்நாகரம்
என்னுந் தமது அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கபட்டது
சென்னை:
1891.
இந்நூல் அரிபத்தநாவலர் என்பவரால்
செய்யப்பட்டதென்று சொல்லுகின்றனர்.
-----

ஸ்ரீராமஜயம்.

திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம்.

பாயிரம்.
காப்பு.

கட்டளைக்கலித்துறை.

ஆனைக்கு முன்செல் லிடபா சலத்தி லழகனையெம்
மானைக் கருதிக் கலம்பகங் கூற வரற்கரற்குத்
தானைச் சுரர்க்குச் சடகோபங் சித்திக்கத் தாங்குசெங்கோல்
சேனைத் தலைவர் திருத்தாள் கருத்தொடுஞ் சேவிப்பனே.

அத்தியின் மத்தியி லேவிளங் காலிலம் மாமகிழ
நித்திரை கொள்ளுந்த மாலத் துருவ னிவனென்பதே
சத்திய மென்னப் புளிக்கீழ் மகிழந் தமிழ்க்கரசே
நித்திய மாலழ கன்றமிழ் கூறமுன் னின்றருளே.

நேரிசை வெண்பா.

முதலாழ்வார் மூவர்தொண்டர் பாதப் பொடியார்
மதுரகவி மாறன்மழி சைக்கோ - இதவார்
குலசே கரன்கோதை பட்டர்பிரான் பாணன்
கலியன் றிருவடிகள் காப்பு.

அவையடக்கம்

அழகர் பதின்ம ரருந்தமிழ்கொண் டார்யான்
குழறியபுன் சொற்றமிழுங் கொண்டார் - முழுதும்
கருத்திருத்தி வைத்த வெண்மர் காந்தருமாய்க் கூனி
உருத்திருத்திக் கொண்டதுபோ லும்.

நூல்.

மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா

எட்டடித்தரவுகள்       (2)

நீர்பூத்த பொற்றகட்டு நெட்டிதழ்ச்செந் தாமரைமான்
கார்பூத்த முழுநீலக் கண்ணுமன முங்குளிரச்
சுரும்புதுவைத் தோகைமிகச் சூடியதா மமுங்கவியும்
தரும்புதுவைத் தோகைகன தனதடங்கள் புளகரும்பப்
பழமுதிர்நான் மறைகுமுறப் பதின்மர்கண்முத் தமிழ்முழங்கப்
பழமுதிர்பூஞ் சோலைமலை பச்சைமர கதத்திலங்க
வந்தவிமா னத்தமரர் மலர்தூவிப் பணிசோமச்
சந்தவிமா னத்தமருஞ் சௌந்தரிய பரஞ்சோதீ.

குறித்தமுகில் பந்தரிட்டுக் குறுந்துளிதூற் றிடவாயர்
தறித்தமர மத்தனையுந் தழைத்தலர்ந்து பழுத்துதவக்
கடும்புலிக ளயர்ந்துசித்திர காயமெனும் பேர்விளக்கக்
கொடும்பணிகண் மாலையதாய்க் குலரத்தின விளக்கேற்றக்
கருங்கற்றான் வெண்ணெயெனக் கரைந்தோட விரைந்தோடி
வருங்கற்றா னிமைப்பொழிய மழவிடையங் கயர்ந்துநிற்ப
மிகவிளங்கோ வியரெழுத வெள்கியதிரி பங்கியுடன்
சுகவிளங்கோ வியர்மழலை தொனித்தக்குழ லிசைத்தோய்கேள்.

ஈரடித்தாழிசைகள்.       (6)

பலகடலுஞ் செதிலடங்கப் பசுந்துழாய் பரிமளிக்கப்
பலகடமீன் வடிவெடுத்தாய் பார்த்தெம்மைக் காக்கவென்றோ.             (1)

போகமடங் குலகமுற்றும் பூவெனவன் புறங்கிடக்க
நீகமட வுருக்கொண்டாய் நினைத்தெம்மைப் புரக்கவென்றோ.       (2)

நிலக்கினிய தேவகிபா னீபிறந்த சுபயோக
விலக்கினமேற் கடைப்பிடியோ விடபமலை யுவந்தனையே.       (3)

உதித்ததுநம் மிந்துகுல முயர்த்ததுநந் தமையென்றோ
பதித்தமலை யத்துவச பாண்டியனை யாண்டனையே.       (4)

தருமகதி யாய்ப்பாடி தனினவநீ தங்கவர்ந்தா
யொருமகதி முனிமுதலோ ருள்ளமெனக் குறித்தேயோ.       (5)

ஆரமுத வுததிபொங்க வமரர்குழாம் வாயூற
வாரமுத மதித்தெடுத்தா யடியவர்கட் கென்றேயோ.       (6)

ஈரடி அராகங்கள்       (4)

நிலமுத லியவெயி னிலவுமிழ் கதிர்மதி
குலதெய்வம் வழிபடு குருவென வருளினை.       (1)

அரியய னரனென வவனவ ளதுவென
விரியிக பரமிரு வினையென மருவினை.       (2)

அருள்சில வறிபவ னறிவறி தருமொரு
பொருள்பல வெனமறை புகல்சுக வடிவினை.       (3)

ஒளியினு ளொளியுல குயிரினு ளுயிர்மிகு
களியினுள் களியென மிகமகிழ் கருணையை.       (4)

பெயர்த்தும் ஈரடித்தாழிசைகள்       (4)

அடலவுணன் பாற்குறுகி யற்பநிலங் கையேற்றாய்
கடலகிலம் யாவுமுந்தி காட்டுவது கண்டிலையோ.       (1)

இலகங்கை யெனத்திரைக ளெறியமுனை துளைந்தாய்வான்
குலகங்கை கால்பிடித்துக் கூப்பிடுதல் கேட்டிலையோ.       (2)

கருதுகளி றோலமிடக் கலுழனொடும் விண்பறந்தாய்
மருதினுர லொடுதவழ்ந்தாய் மால்விளையாட் டென்றேயோ.       (3)

சிறந்தபெரும் பகொரண்டத் திரளெல்லாந் திருவுருவிற்
பிறந்தகுறும் புளகெனினின் பெருமையையா ருரைக்கவல்லார்.       (4)

நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்.

சகலநற் பொருளிநீ தத்து வங்கணீ
புகறரு கரணநீ புவன போகநீ.       (1)

மொழியுநீ பொருளுநீ முக்கு ணங்கணீ
விழியுநீ மணியுநீ விந்து நாதநீ.       (2)

முச்சீர் ஓரடி அம்போதரங்கம்.

தயரதர் தவசிலு தித்தனை.
தசமுக னுருளவ தித்தனை.
உயர்சது முகனைவி தித்தனை.
உரனுள சரபமி தித்தனை.

இருசீர் ஓரடி அம்போதரங்கம்.       (16)

செகமி சைந்தனை. கரும மண்டினை.
ககமி சைந்தனை. தரும மண்டினை.
செயல்க டந்தனை. கதம டக்கினை.
மயல்க டந்தனை. மதம டக்கினை.
சுகமு கந்தனை. அருவி ழைந்தனை.
மகமு கந்தனை. உருவி ழைந்தனை.
துன்பொ ழிந்தனை. அமிழ்த ழைத்தனை.
பொன்பொ ழிந்தனை. தமிழ்த ழைத்தனை.

தனிச்சொல்.
எனவாங்கு.

இருபத்துமூன்றடியால்வந்த ஆசிரியச்சுரிதகம்.

தேறிய வடகலை தென்கலை யெனவிரண்
டாறொழு கரங்க வரவிந்த லோசன
குளிர்பத மிடுசட கோபமீ தெனவான்
வெளிமுக டணிவட வேங்கட வாண

அதிர்குரல் வளைசுட ராழியா மெனமதி
கதிர்புடை வரநிமிர் கரிகிரி வரத
வலம்புரி போலயன் வாகன மீண்டிச்
சிலம்புறு தரளச் சிலம்பாற் றிறைவ
எழுமணி யால்கட லீந்தபொன் னுடனொரு
செழுமணி யுரமணி தெய்வ சிகாமணீ
உரனுடை மதலையு மிரணிய னுரமொடு
சரபமும் வகிர்தரு நரகரி ரூபா
பூமியி லசுரப் புன்பனிக் கினனெனும்
நேமியம் பரம சாமி வாழி
இரவினி லாடு மிறையணி யொளிக்க
அரவினி லாடுநின் னடிமலர்க் கியம்புவென்
அண்டகோ டியையு மயனையு முந்திப்
புண்டரீ கத்துப் பொதிந்தரு ணின்னை
நெஞ்செனு மலரு ணிறுத்துமெய் யடியர்க்
கஞ்சுற் றஞ்சுற் றாங்கவர் தம்மை
கண்ட விடத்துநுங் காற்றுக ளென்று
தொண்டுபட் டொழுகத் துணைசெய்
தண்டமிழ்ச் சங்கத் தனியிறை யவனே.       (1)

நேரிசைவெண்பா.

அவனிவனென் றெண்ணி யலையா திருத்தி
அவனிவனி தைக்கா மழகன் - கவடார்
மருதிடந்தா னேகட வுண் மற்றில்லை நெஞ்சே
ஒருதிடந்தான் சொன்னே னுனக்கு.       (2)

கட்டளைக் கலித்துறை.

உனைக்கண் டகங்குளிர்ந் துன்னாமங் கூற வுனைவணங்க
வினைக்கண் டகரிடஞ் செல்லா திருக்கநல் வீடுபெற
முனைக்கண் டகங்கையை நேராக்குங் காந்தி முகுந்தநந்தன்
மனைக்கண் டகணித லீலாதென் சோலை மலைக்கொண்டலே.       (3)

அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

கொண்டல்வண் ணாவன் றேயுன் குரைகழற் கமலம் பெற்றேன்
மண்டல மளந்த காலை மற்றுநான் புறம்போ சொல்லாய்
அண்டர்தெள் ளமுத முண்ண வாலமுண் டவர்க்கே சோமன்
துண்டமுன் றந்தாய் தந்தாய் சுந்தர ராச மாலே.       (4)

சந்தவிருத்தம்.

மாலைக் கரும்புபிறை புரைவா ளெயிற்றுநமன்
      வனபாசம் வீசவுடலம்,
ஆலைக் கரும்புபடு முன்னேகண் முன்னேபுள் ளர
      சோடும் வந்துதவுவாய்,
வேலைக் கரும்புனித விந்திராதி யர்க்கு நல்
      விருந்திட்டு வந்துவிதுரன்,
சாலைக் கரும்புதுவி ருந்தா மருந்தே
      தடஞ்சோலை மலையழகனே.       (5)

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

மலைக்குமேன் மலைவிளக்கா மழகா வேத
      வான்குதலை நான்குதலை மகனார் வாளா
தலைக்குமே லெழுதுகின்றா ரரியென் றெங்கள்
      தாலத்தின் மேலெழுதச் சமர்த்தி லாரோ
அலைக்குமே லுடுமலரா மிதக்குங் கால
      மாலமொன்று காயாம்பூ வலர்ந்தாற் போற்பச்
சிலைக்குமேற் செங்கண்வள ரனந்தா னந்தா
      விருக்கி லிருக்கும் பொருளே யெம்பிரானே.       (6)

கட்டளைக் கலிப்பா.

பிரானெனச் சொன்முராரி புராரிநீ பிரமனீ குணப்பேதநீ பூதநீ,
தராதலத் திற்சராசரம் யாவுநீ சச்சிதாநந்த விம்பமுநீ யன்றோ,
மராமரங் கொலி ராமவிராகவ வாசுதேவ வனகிரி வாசமுன்,
கராசலஞ்சொற் பராபர நாதசெங் கஞ்சலோசன வஞ்சன மேருவே.       (7)

நேரிசைவெண்பா.

அஞ்சார லும்மணிநீ ராறுங் கிடைக்கரிய
மஞ்சீர மாறா வனகிரியே - பஞ்சவர்தம்
பங்கங் களைந்தான் பனிரண்டு கண்ணொருவர்
பங்கங் களைந்தான் பதி.       (8)

கட்டளைக்கலித்துறை.

பதிக்கின்ற கற்பகப் பூஞ்சோலையை யெட்டிப் பார்த்து மந்தி
குதிக்கின்ற மாலிருஞ் சோலைவெற் பாநின் குளிர்வதனம்
உதிக்கின்ற திங்கண்மெய் யுற்பலக் காடங் கொழுகு பைந்தேன்
மதிக்கின்ற கட்டழ கெங்கள்கண் மூழ்கு மதுகரமே.       (9)

புயவகுப்பு.

ஆசிரியவண்ணவிருத்தம்.

தனதனன தந்ததன தனதனன தந்ததன.
தனதனன தந்ததன -தனத்ததனதனந்தன.

மதுகயிட வன்சடல மெழுகுபட வெங்குருதி
மதுவினில்வ ழிந்தொழுக இறுக்கிநனிபிழிந்தன
வடிதயிர்மு கந்துரலில் வரியவுமி சைந்துபய
மருதையுமி டந்துபினும் அடுக்குறிநெய்கவர்ந்தன
மகளிர்நக சந்த்ரகலை பதிபிடர்த ழும்புபட
மணிகணிரெ னுஞ்சுரபி திருப்புகுணில்சுமந்தன
வயிறுகுழை யும்பொழுது சிறுகுமுத மொன்றநிரை
மடிமுலைவி ரைந்துருவி நுரைத்தசுரைகறந்தன

புதுவையின்ம டந்தைகவி பதின்மர்தமிழ் கொண்டினிது
புளகிதமெ றிந்துமர கதக்கிரியினிமிர்ந்தன
பொதுவர்தரு பெண்கள்முலை திமிர்மிர்கம தங்களொடு
புதியபசு மஞ்சள்குமு குமுக்கவிமிவளர்ந்தன
புவிகிடுகி டென்றதிர வெதிர்தொடைய றைந்துசமர்
பொருமலர்க லங்கமுகம் இடித்துமிகநுழைந்தன

புகையுமொரு கஞ்சன்விழ முரனடுந டுங்கயம
புரநெளிய வும்பர்மலர் இறைக்கவமர்புரிந்தன
மிதிலைமயி லின்புருவ நிகரலதி தென்றரனும்
வெருவிடவ வன்சிலையை முறித்தவையிலெறிந்தன
விசையினொடு கொம்பினிணை திருகிமணி சிந்தரண
வெறிகொள்கெச கும்பமது தகர்த்துவிருதணிந்தன
விசையன்ரத வெண்புரவி கருவிகொடு ரிஞ்சிமிக
மெழுகுசெய்து தண்புனலின் மினுக்கியுளைவகிர்ந்தன
விரனுனிசி வந்தபடி யுலவைகள்கொ ழுந்துவிட
வெணெயின்மலை யுங்கரைய இசைத்தகுழல்பயின்றன

அதிர்கனக னெஞ்சமிரு பிளவுசெய்து றுஞ்சமுக
அருகுதிர மொண்டுதவி நிணத்தகுடர்பிடுங்கின
அவைதொடைபு னைந்துரகம் வளைமலையை வென்றுதொழு
வரசிளம கன்குடுமி திருத்தியலர்புனைந்தன
அணிமகர குண்டலநல் விசயமக ளுஞ்சலென
வசையவவள் செம்பொனெயி லெனத்தொடிகள்செறிந்தன
அமுதமதி வந்துதவ ழிடபகிரி நின்றவடி
வழகர்துள வுந்தளவு மணத்ததிரள்புயங்களே.

நேரிசைவெண்பா.

புயங்க சயனா புயல்வண்ணா பூமின்
முயங்கு மணிமார்பா முகுந்தா - மயங்கும்
கருப்பழகா தன்பரையாள் கண்ணாதென் சோலைப்
பொருப்பழகா நீயே புகல்.       (11)

வண்டுவிடுதூது.

எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

நீயாகி லுஞ்சொல் லொணாதோ பிரிந்தேகும்
      நிட்டூர ருக்கந்த நெட்டாலி னிலையோர்
பாயாக விழிதுஞ்சு முகில்சோலை வெற்பிற்
      பசுந்தேன் விருந்துண் கருந்தேனி னரசே
மீயாகும் வெளிநாகம் வெண்பா லெனுந்தண்
      மேகங்க ளுரிபுள்ளி மீனஞ்செவ் வானம்
வாயாகும் ரவிகான்ற மாணிக்க மெயிறோ
      மதியால மறுமூச்சு வாடைக்கொ ழுந்தே.       (12)

இரங்கல்.

அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

கொழுநனைவிட் டாய்பூவை நிரைக்கின்றாய்
      வண்டிசையைக் குறித்தாய் கண்ணீர்,
விழுவதறா யொன்றுமருந் தாதுகைப்பா யிதழ்புலர்ந்தாய்
      வினையேன் போன்றாய்,
எழுவிடையுந் தழுவியொரு விடைமலையில்
      வாழழக ரிந்திர நீலச்,
செழுமலையொப் பார்நாட்டில் வெண்டளவே
      கண்டளவே தேறி னேனே.       (13)

தவம்.

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

தேறாது வனம்போயெள வனமும் போனீர்
      சிறுகிழங்கைக்கொண்டுபெருங் கிழங்கைக் கொண்டீர்
ஏறாத பலஞ்சுவைத்தோர் பலமுங் காணீ
      ரிலைமேய்ந்தும் பேறிலையே யிதுவோ யோகம்
மாறாது சருகுதின்று சருகு பட்டீர்
      வாயுநுகர்ந் தீர்வாயு மௌன மானீர்
ஆறாத தீயினிற்பீர் தீய ரேநும்
      மருந்தவமே தவமழகர்க் காட்ப டீரே.       (14)

கட்டளைக்கலித்துறை.

படவர வப்பள்ளி மாலலங் காரர் பழமறையும்
தடவர வச்சிரத் தண்டையு மார்ப்பச் சகடுதைத்த
திடவர வச்சுத ரெல்லா விடுக்கணுந் தீர்த்தருளக்
கடவர வற்றைக் கருது மவரைக் கருதுமினே.       (15)

மேகவிடுதூது.
நேரிசைவெண்பா.

மின்னுமுகி லேசோலை வெற்பழகர் வந்திலார்
உன்னையெதிர் கண்டே னுயிர்தரித்தேன் - ஒன்னார்
வெருவவிரு தூதுமவர் மேனிநிற முற்றும்
மருவவிரு தூதுபோய் வா.       (16)

இரங்கல்.
எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

வாளுந் திகிரிப் படையுங் கதையுங்
      வளையும் வளையுஞ் சிலையும் புனைவார்
ஆளுங் குலபூ தரனார் மலர்மா
      னன்னாள் பிரியா ரெந்நாள் வருவார்
நீளுங் குழலீர் காமம் படுதீ
      நெய்விட் டதுகா ணீர்பெய் பனிநீர்
வேளைங் கணையும் விறகா மவர்தாம்
      வேயூ துவதுந் தீயூ துவதே.       (17)

வேறு.

வேயினா னிரையழைத்துக் களிறழைக்க வோடி
      மென்பிடிக்காய் மான்பின்போய் விடைமலைமே லிருப்பீர்
போயின்மா முலைபருகு மச்சுதரே கேளீர்
      பின்னைக்கு முன்னாளை பின்னைக்கென் னாமல்
போய்வாச வன்றருவை வேரினொடுங் கொணர்ந்தீர்
      புதல்வனார் தமக்குமுந்திப் பூவிருப்பென் றளித்தீர்
தூயகோ வியர்க்குமெல்ல விதழ்கொடுத்தீர் நம்புந்
      தொண்டன்முடி மேற்றாளைச் சூட்டுவதுன் கடனே.       (18)

சந்தவிருத்தம்.

கடதாரை குன்றாத விபராசன் முன்றாவு
      ககராச னுந்தாமு நொடியூடே
வடமேரு வுஞ்சோனை மழைமேக மும்போல
      வருமா லலங்காரர் பதிகேளீர்
சடகோபர் தம்பாட லெனவே பசுந்தேறல்
      தவழ்சாரல் சங்கீனு மணியாலே
திடராக மஞ்சீர நதியோ லிடுந்தூய
      திருமாலிருஞ்சோலை மலைதானே.       (19)

வண்டுவிடுதூது.
நேரிசைவெண்பா.

மலையழகர் வண்டினமே வண்டுவரை யார்காண்
நிலைகொள் பொறியளியை நீங்கார் - தலைவரவர்
ஆழியுடை யாருமக்குண் டாறுகால் பேர்சுமந்தீர்
வாழிசெல லாஞ்சொலலா மால்.       (20)

கட்டளைக் கலித்துறை.

மாலாகும் வேளையி னீலா சலமொத்து மாப்பறவை
மேலாக வந்தருள் வாயெங்கள் கோசலை மெய்வயிறென்
ஆலா னதிலிளஞ் சேயாயுறங்கி யசோதை கண்போல்
சேலா யெழுமழ காகுல பூதரச் சீதரனே       (21)

அம்மானை.

மடக்குக் கலித்தாழிசை.

சீதரராஞ் சோலைமலைச் செல்வரைமுன் சந்ததியா
மாதர சோதை வளர்த்தனள்கா ணம்மானை
மாதர சோதை வளர்த்தனளே யாமாகில்
ஆதரவில் லார்போ லடித்ததே னம்மானை
அடித்ததொரு வன்மத்தா லல்லவோ வம்மானை.       (22)

மடக்கு.

பதினான்குசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

மானமா லழகர் பதிகணூற் றெட்டே
      மற்றவை யாவுநூற் றெட்டே
    வளரக நந்த னந்தமா மனையே
      வதைத்தது மந்தமா மனையே
ஏனமா யெடுத்த தெட்டுமா தாரையே
      யிணங்கிய தெட்டுமா தரையே
    யேற்றது கயவர்க் குடையுமை வரையே
      யேந்திய குடையுமை வரையே
ஆனைகூப் பிடுமுன் புகுமிடங் கரையே
      யன்றுயுங் கனகன் கைப்பொருந் தூணே
    யண்டகோ டிகள்பொருந் தூணே
பானமுங் கரும்பேய் வனமுலைப் பாலே
      பயிற்சியும் வனமுலைப் பாலே
    பாயலு மரவுக் கரசனா லிலையே
      பரஞ்சுட ரவனலா லிலையே.       (23)

கட்டளைக்கலித்துறை.

இலையும் பசும்புல்லுஞ் செஞ்சூட்டரவு மிடைச்சி மடித்
தலையுஞ் சயனங்கொண் டீரடி யேன் மனத் தாமரையின்
றலையுஞ் செயலொழித் திங்கிருந் தாலென்ன வஞ்சனமா
மலையுங் கடலும் பொருந்தமிழ்ச் சோலை மலையரசே.       (24)

மறம்.

பதினான்குசீர்கழிநெடி லாசிரியவிருத்தம்.

அரசர் தூத கவிஞர் தூத ரயனொடுந் துதிக்கவே
      யைவர்தூத ராயளித்த வழகர்நாட்டின் மறவர்யாம்
பரசிகால தூதரும் பறப்பரெங்கள் பேர்சொலிற்
      பயமிலாது செல்லுமென்று பயமிலோலை வைத்தனை
சரசம்வாசி யென்றுசொல்வை சரணிதேடு காவலர்
      தளமிணக்க மென்கிறாய் சரந்தொடுக்க வெண்டுமோ
சிரமிருக்க வேண்டிலுங்க டிருமுகங் கிழித்தெறி
      சேரர்பெண்ணை யீவர்போ சிறாரினிப் பொறார்களே.       (25)

வேறு.

பொறுபொறு தூத பசிபொறாய் முந்திப்
      புனைசுருட் டோலையைத் தின்னு
புரவலர் காதிற் சொருகுசந் திரிகை
      புயனிறத் தழகர்சீர் பதியின்
மறவரென் றறிந்துங் காரிகை கேட்டாய்
      மதமலோ வதுபுல வரைக்கேள்
வயலிலே யரிவை சிலையிலே நாரி
      மரத்தினு மண்ணினும் பாவை
குறிதிகழ் தையல் பாணர்பால் வஞ்சி
      குடக்கினிற் கோதையு மாங்கே
குன்றின்மேற் குன்றா விளம்பிடி நல்ல
      குமரியுண் டடவியி லுடனே
நறுமணங் கூடுஞ் சோறுமுண் டோடு
      நங்கையைப் பார்வினை முகத்தில்
ஞாலமே னீங்கள் வாலையே படைத்தா
      னரியொடுந் திரிவது திரமே.       (26)

மடக்கு.
கட்டளைக்கலிப்பா.

திரவி ருப்பணி தாமத் திகிரியே
      செங்கை மேலணி தாமத் திகிரியே
வரதர் மொய்ம்பு குலவர விந்தமே
      வாய்கண் கால்கை குலவர விந்தமே
உரமி சைக்கரும் பன்ன கமலையே
      யுறையு ளுங்கரும் பன்ன கமலையே
அரச ருக்கிட முத்தமர் சங்கமே
      யழகர் சேரிட முத்தமர் சங்கமே.       (27)

கட்டளைக்கலித்துறை

மேகங் கடல்மணி காளிந்தி பூவைமென் காவிகண்மை
மாகந் தொடுபச்சை நின்னுருக்காட்ட மனங்குளிர்ந்தேன்
சோகந் தவிர்ந்தனென் மாலிருஞ் சோலைச் சுரும்புசெய்த
யோகந் திகழழ காவவைவாழி யொளிசிறந்தே.       (28)

நேரிசை வெண்பா.

சிறந்துன் பதந்தொழுவார் சேவடிதொ ழாமல்
இறந்தும் பிறந்து மிரைக்கே - பறந்தும்
மிகவேசற் றேனிடப வெற்பாவ சோதை
மகவேசற் றேகடைக்கண் வை.       (29)

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்

வைக்குமிடத் தன்புவையா மாந்தர் காளம்
      மறலிகதை யறியீரோ வருமே நாளை
தக்ககதை புகுமேநுங் குணமும் போமே
      சரமும்போ மேயெடுத்த தநுவும் போமே
திக்கிலைவே றிக்கணமே சோலை வெற்பிற்
      சீதரசஞ் சீவிதனைத் தேடிக் கொள்ளும்
துக்கமறு நமனோடத் துரப்பீர் யார்க்குந்
      தோற்றிடீ ரொருகாலுந் தோற்றி டீரே.       (30)

கட்டளைக்கலிப்பா

தோற்றும் பொய்கை விடாதா ரருவியுந்
      துலங்க விட்டவர் சோலைவெற் பார்சந்தச்
சேற்று மொய்ம்ப ரிவரிக்கரி தோநம
      திருக்குளக் குறை தீர்ப்பது மாவலி
ஊற்று நீரினி தென்றே குடங்கைகொண்
      டுற்ற நாளங் கொருகால்விண் ணுச்சிகண்
டாற்று நீர்தந்த திங்கொரு காலுல
      களந்து போக ம்னைத்த்துங் கொடுத்ததே.       (31)

கட்டளைக்கலித்துறை.

கொடுக்கின்ற செங்கை யழகனென் றோதுங் குழகன் வெய்யோன்,
எடுக்கின்ற சக்கரத் தேரோ டிலங்கு மிடபவெற்பில்,
அடுக்கின்ற வாயிரம் பேரோ கிரணமஞ் ஞானவிருள்,
தடுக்கின் றவருமுண் டோபனி காண்புன் சமயங்களே.       (32)

அறுசீர்க்கழிநெடில் வண்ணவிருத்தம்.

சமயமென முதுகடவு கடவியுயிர் கறுவிவரு
      சமனுமொரு திரண மிவனே,
ஆமையுமென வுழலும்யம படருமொரு மசகமெழு
      தயனுமவ னளவு நமர்காள்,
கமையுரக கிரியிறைவர் கரிகிரியில் வரதர்வளர்
      கமலைதன கிரியை யகலார்,
இமையகிரி ரசதகிரிகனககிரி பரவுநம
      திடபகிரி யழகர் துணையே.       (33)

அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

துணையென்று வந்தே மெம்மைத் தொடர்ந்துமா லாக்கிக் கொண்டாய்,
அணையென்று நாக மீந்தா யாங்கரு டனைவி டேமால்,
இணையொன்று மில்லாய் நல்லா யீசசர் வேச புல்லும்,
சுணையென்ற வழகா வெண்ணெய்க் கள்வனே துளவி னானே.       (34)

மடக்கு.

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

துளவழகர் கலக்கவர வஞ்சலிக்குங் காலந்
      தொனித்திடிகள் கலக்கவர வஞ்சலிக்குங் காலம்
வளமலிவெற் பருகுகரு மஞ்சாருங் காலம்
      வாடையுயிர் பருகுகரு மஞ்சாருங் காலம்
களிறுருளச் சிலையருவி யம்புதைக்குங் காலங்
      காயமுறுஞ் சிலையருவி யம்புதைக்குங் காலம்
தளவமளி பாடீரப் பூச்செறியுங் காலந்
      தளவமளிப் பாடீரப் பூச்செறியுங் காலம்.       (35)

வேறு.

காலமுகந் தானு மோலமுகந் தானுங்
      காமனைவாய்த் தானு மாமனைமாய்த் தானும்
ஞால மடுத்தானுஞ் சூல மெடுத்தானு
      நளின விருப்பானும் புளின விருப்பானும்
நீல மதித்தானுஞ் சீலம் விதித்தானு
      நீதி பொழிந்தானுஞ் சோதி வழிந்தானும்
சால நிறைந்தானு மால முறைந்தானுஞ்
      சலமலை வென்றானுங் குலமலை நின்றானே.       (36)

கட்டளைக்கலித்துறை.

மலைதாங்கு மாயர் வனகிரிக் கேமழை தாங்கிச்சந்திர
கலைதாங்கி யிந்திர சிலைதாங்கிக் கஞ்சமுந் தாங்கியங்கே
கொலைதாங்கு நீலங் குமிழாம்ப றாங்கிக் கொடியொன்றின்மேல்
நிலைதாங்கு கோங்கமுந் தாங்கியொர் பூங்கொம்பு நிற்கின்றதே.       (37)

அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

தேனைப் பழித்த விசைக்குயில்காள் செம்மாந் தழைக்கப் புறப்பட்டீர்,
சோனைப் புயல்போ லனங்கனம்பு தொடுத்தா னினிமேற் றொடப்போமோ,
ஆனைக் கரச னிடுக்கணிருட் கருணோதயம்போ லிமைத்த செம்பொற்,
றானைத் திருமா லலங்கார தந்தா ரிந்தா தந்தாரே.       (38)

மடக்கு.
தாழிசை.

தாரமருங்கா மனப்புள்ளே தைக்கு மருங்கா மனப்புள்ளே
      சரக்கோ டங்கங் குலைபடவே தகுமோ வங்கங் குலைபடவே
வேரோ டின்ப வளவனமே விடமோ வின்ப வளவனமே
      மேகம் பாவி வருந்திடரே விதிகாண்பாவி வருந்திடரே
மாரனுடைவாட் கேதகையே மயல்கொண் டுடைவாட் கேதகையே
      மணந்த விராவம் போருகமே வந்த விராவம் போருகமே.
ஆரங் கடுக்கு மென்னுரையே யாருக் கடுக்கு மென்னுரையே
      யலைக வராவெண் ணந்தினமே யழகர் வராவெண்ணந்தினமே       (39)

நேரிசைவெண்பா.

தினகரனு மப்பால்வெண் டிங்களுங்கா ரென்ன
வனகிரிவாழ் காயாம்பூ வண்ணா - அனகா
அறவேத வித்தேநின் னம்புயத்தாள் காணா
தறவேத வித்தே னருள்.       (40)

களி.

பன்னிருசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

அருணன் பரிபோற் பரியிலக
வமரில் விசயன் றேர்கடவு
மழக ரிணையில் குழகரெமை
யாளும் பெருமாள் வாளரக்கர்

செருவென் றிறுத்தார் மதுவார்க்குஞ்
செயலை முடித்தார் பின்னுமன்பர்
தேனுக் கலையா மற்கருணை
செய்தா ரவர்தந் திருவடிகள்

கருதுங் களியெங் கனமடத்தைக்
கழுவு மினிய வினையடையுங்
கஞ்சாக் கருக்கு வகைநிறையுங்
கற்பத் தயன்வீழ்ந் தனனன்று

குருவி சார மச்சமறுங்
குலவா ரணங்கள் முன்படியுங்
குறும்பாட் டையுமோ திடும்வாருங்
குடியும் படையும் வேண்டியவே.       (41)

பறவைவிடுதூது.
எழுசீர்க்கழிநெடில் சந்தவிருத்தம்.

வேண்டலர் நகைக்கவொரு பாங்கியும் வெறுக்கவனை
      வேங்கையி னதட்டமதன் வில்லாலே
தூண்டில்படு மச்சமென நான்பதை பதைக்கும்விதி
      தூங்கியிரை கொத்திநிமிர் புள்ளீரே
பாண்டவர் துதிக்குமயில் கூந்தல்சொரு கத்தவள
      பாஞ்சசனி யத்தொனிசெய் செவ்வாயர்
ஆண்டுதுரு வற்குநிழ லீந்தவன வெற்பிலெனை
      யாண்டவழ கர்க்கினிது சொல்லீரே.       (42)

கட்டளைக்கலித்துறை.

சொல்லிட பாசல மாயர்நன் னாட்டிற் சுடர்க் கொதுங்கும்
அல்லிடர் தீர்குழ லாய்நின் படாமுலை யானை கண்டால்
மல்லிட றுந்திண் புயத்தார் கனக வளைநிரைப்பார்
புல்லிட வுஞ்செய்வ ரீந்தார் பிடியென்றிப் பூந்தழையே.       (43)

பாண்.

தாழிசை.

தழைவிருந்த வனத்தர்பூமிசை குழைவிருந்தவ னத்தனை
      தந்தசுந்தர ராசகேசவர் தம்பதங்களி னினைவினார்
இழைமருங்குடை வாணியுந்தொழ வியங்கொர்பாணரு ளாரவ
      ரிசைபுகுந்திடு காதின்மற்றவ ரிசைபுகாதுத காதுநீ'
மழைதொடுங்கொடி மாடவீதியில் வந்ததேபிழை யிறையிவண்
      வரத்தைவிட்டனர் ஞானம்வந்து பரத்தைநச்சினர் வீணையும்
பழையபேச்சுரை யுந்தொடுத்தனை புதியபேச்சுரை காணது
      பாடினிக்கு மவட்கெழுந்தருள் பாடினிக்கு மணாளனே.       (44)

ஊசல்.
எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

மணங்கமிழ்பு வையுமயிலுந் தமாலக் காடும்
      வண்கிளியு நீலவெற்பு மடமான் கன்றும்
இணங்குகட லுந்துகிருங் காரு மின்னும்
      யமுனையெனுந் திருநதியு மெகினப் பேடும்
கணங்குழைய கோசலைதே வகிய சோதை
      கண்மணியும் பாவையும்போற் கமல வீட்டில்
அணங்கரசி னுடன்குலவி யாடி ரூச
      லலங்கார மாயவரே யாடி ரூசல்.       (45)

தவம்.
எழுசீர்க்கழிநெடில் சந்தவிருத்தம்.

ஊசிமுனை நின்றுமென தாழ்குகைநு ழைந்துமென
      வூமரிலி ருந்துமென வளைபோலே
காசினிசு ழன்றுமென வானிடைப றந்துமென
      காயமிதெ ழுந்துவிழும் வினைபோமோ
நீசரையு மண்டர்செய சோலைமலை யின்கன்முழு
      நீலமலை யுண்டுதொழு மியலாதேல்
கேசவமு குந்தமது சூதனவ னந்தகக
      கேதனவெ னுந்தளரி னினைவீரே.       (46)

கட்டளைக்கலித்துறை

நினையா தவர்தமை யாளலங் காரனை நேர்ந்து நந்தன்
தனையா தவர்நண்ப வென்றிட பாசலச் சாரலிற் போய்
முனையா தவர்தகை தீர்சிலம் பாற்றின் முடை யுடலை
நனையா தவர்சன்ம முஞ்சன்ம மோவிந்த நானிலத்தே.       (47)

சந்தவிருத்தம்

நிலங்குலவு நாபர்பணி லங்குலவு முத்த
      நிரைக்குமரு விக்குலவ ரைக்குமரு வியகார்
இலங்கையில்வெவ் வாளிகொடி லங்கையிலி ருக்கு
      மிராவணவி ராவணனி ராவணம றுத்தோர்
அலங்கலைய ளித்தனர லங்கலைக டற்கு
      மந்தமத னுக்குமனை சந்தமத னுக்கும்
கலங்கலெ னெனக்கணிக லங்கலவை தம்மின்
      கையிலமனை தாருமுலை சயிலமனை யாரே.       (48)

கொச்சகக் கலிப்பா

ஆராம வெற்பி லழகர்சுரு திக்குமெட்டா
ஏரார் பதந்தீண்ட வெத்தவங்கள் செய்தனவோ
சூரான வன்சிலையுந் துந்துமியென் புஞ்சகடும்
காராய கட்டையும்வெங் காளியப்பேர் நாகமுமே.       (49)

மதங்கி

தாழிசை

காளமேகமும் வெளிறிமின்னிய கண்னனார்வன கிரியினில்
      காமதங்கம தங்கமாமெழின் மாமதங்கம டந்தைகேள்
தாளநின்முலை யிடைகுறுந்துடி தவளசங்கதிர் களமுகம்
      தகசந்திர வலையநூபுர சரணமென்பது மத்தளம்
நீளூம்யாழின முன்கைகார்குழ னெற்றிவேடன தம்புரு
      நிறுத்தினன்றொறு சற்றுடுக்கைநெ கிழ்க்கவேண்டுநின் சிந்தையே
நாளுநச்சின னாடகத்தினி நட்டுவாவெனு மதிசயம்
      நாட்டவாளினை சுழலுமுன்பல கூட்டவாள்சுழல் கின்றவே.

நேரிசைவெண்பா

சுழல்காற்றை மாய்த்துஞ் சுடர்நெருப்பை யுண்டும்
நிழல்பார்த் திடபகிரி நின்றோன் - குழலூதிக்
கற்றாக் குவித்த கடவுளவ னேயனைத்தும்
பெற்றாக்கு வித்த பிரான்.

33- அடி நேரிசை ஆசிரியம்.

வித்தகர் கருத்துட் பத்தி பாய
நீலம் பழுத்த கோல மேனி
காற்கடன் முகந்த சூற்புய லென்று
கதிரிளங் கொங்கைச் சதிரிள மங்கையர்
இயலுறு கலாப மயினட மாடக்
காயா மலர்விரி காயா வனமென
அரையர வல்லி வரையர மகளிர்
குழலிசை வண்டு குழலிசை பாட
அங்கையிற் றாங்குஞ் சங்கமுந் திகிரியும்
புதையிருள் சீக்கு மதிகதிரென்ன
கவண்கலா லிசைசெய் சிவந்தவாய் மழலைக்
கொடிச்சியர் கண்போ லடிக்கடி சுனைதொறும்
பதுமச் செங்கா டிதழ்குவிந் தலர
இருவகைக் காந்தமும் பெருமுனி வர்க்குப்
புனலும் புகையாக் கனலுங் கொடுப்ப
வனந்திரி மேதி யினஞ்சொரி தீம்பால்
கங்கையிற் பரக்கப் பொங்குதேன் வெள்ளம்
சாம்புன தம்போன் மேம்படு சாரல்
சோலை மாமலை மேலினி தமர்ந்தோய்
அதிர்ந்துவெண் பரிக ளெதிர்ந்தவென் றஞ்சி
பசும்பரி யேழும் விசும்பிடை மறுக
விரிதிரை கொழிக்கும் பரிபுர நதியோய்
மழுப்படைக் கடவுள் விழிக்குடை யாத
சித்தசர் கோடி யொத்தகட் டழக
சடைகொடு வேட்ட விடையுடை யவற்காப்
புரஞ்சொற் றருளிய பரஞ்சுடர் மூர்த்தி
குருகூர் விளங்க வருசட கோபர்
வழுத்தவிர் நான்மறை விழுப்பொருள் பழுத்த

வாக்கெனு மமுதந் தேக்கிய வொருநீ
புவிமேற் சிற்சிலர் கவியுங் கொண்டனை
ஆங்கவை தமக்குப் பாங்கெனும் வளைகாய்ப்
புளியென மகிழ்ந்தனை போலும்
எளியேன் புன்கவி யேற்பதெத் திறமே.       (52)

குறம்.
எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

ஏற்றபூங் கோதைகே ளிடபமால் வரையில்வா
      ழிளங்குறப் பாவையான் விளங்குறப் பாவையும்
சாற்றுவேன் கண்ணர்முன் வெண்ணெயாக் குவியவே
      தானடுக் குறிசொனேன் சயிலமா தினைமுதற்
போற்றினே னாழியின் னெல்லையுஞ் சங்கையும்
      பூரியெட் டக்கரஞ் சீரினிட் டெம்பிரான்
தோற்றுவார் வாக்குநன் கூழ்பெலங் கஞ்சியச்
      சுதர்விடா ரம்பரத் துணிவையா யினியமே.       (53)

கைக்கிளை.
மருட்பா.

இனியஞ்ச னெஞ்சே யினியவிசை யேழும்
கனியாறு காலுமிரு காலும் - முனிவர்
தொழுதா ளழகர் சுரும்பில்
எழுபூ வாய்ந்த திவளணங் கவளே.       (54)

சித்து.
தாழிசை.

அலகைமாமுலை யுண்டகொண்டல்புள்
ளலகையன்றுப குந்தமா
லழகர்தாள்தெரி சித்தசித்தா
னுக்கிரகம்பெறு சித்தர்யாம்

சலனமேனொரு கடகநற்கரி
தனையழைப்பிமுன் னாகமா
தங்கமாக்குவெ மெய்தராவிடு
சந்தமிக்குயர் பணம்வரும்

இலகிரும்புத னைப்பொன்வெள்ளியொ
டேற்றுவோமுரை குறைபடா
தெடுத்ததாம்பிர மாழை மச்சநம்
மிரதவாதம தன்கையிற்

பலமருந்தறி வொஞ்சொல்வோமதி
பசியவர்க்குப சரியையா
படியளப்பந மக்குமாவடை
பழவனம்பிரிய மப்பனே       (55)

கட்டளைக்கலித்துறை
அப்போத கத்துறை செந்திரு மார்பத் தழகர்பனைக்
கைப்போத கஞ்சொன்ன மாயரெக்காலங் கருணை செய்வார்
மெய்ப்போ தகநமக் கெந்நாள்வரும் வினையென் றொழியும்
எப்போ தகமு மமதையும் போம்புக லேழைநெஞ்சே       (56)

சம்பிரதம்

14-சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்

ஏழுலோ கமுமிக்க மண்டலத் தூடடைத்
திடுவோங் குணக்கு வெய்யோ
ரெமதிசை புகச்செய்வோ முத்தரத் தூடுபன்
னிருதிங்க ளெண்ணி விடுவோம்

வாழ்குகையு ளண்டரை யரம்பையரை நாரதனை
வரவழைப் போம் படர்கொடி
மருப்பங் கயங்கள்பல் குதிரைகுடை சுனையிலெழ
மாதேரை யடைய நினைவோம்

தாழ்வறும் புல்லையடு புலிசெய்வோந் திரணத்தை
யுந்திருத் தூணாக்கு வோம்
தருமெறும் பிதனைமத கரிசெய்வோந் துவரையைச்
சண்பகா டவியாக்கு வோம்

ஆழிநீர் முன்பொருப் பாக்குவோ மெய்யகலு
மாவிகள் வரப்பண்ணு வோ
மதிரகசி யங்கேளு மழகர்தாட் காளலா
வதிதெய்வ முன்விடுவ மே.       (57)

கலிவிருத்தம்.

விடலறு மறையினும் விடவ ராவினும்
நடமிடு மழகரெந் நாளி ரங்குவார்
தடமுலை மயிலொரு சரம் விடாமுனம்
அடன்மதன் விடுசர மனந்த கோடியே.       (58)

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

கோடிதவ முயன்முனிவோர்க் கருள்பதத்தா மரையார்
      குறியவரா கம்பெரிய நெடியவரா கமுமாய்
ஆடிரண சிங்கமுமா மெம்மான்பல் கலையோ
      டம்புலிதாழ் கோட்டிடபத் தணிவரையைக் கண்டால்
மூடி ருளைப் பொருதறுகண் மறலிகடா விடிலே
      முடுகொருக டாமடங்கு மூன்றுகடா மடங்கா
தோடிவரக் குளிறிவெளி றியகளிறு வந்தே
      யுறப்பிடரி னிணைத்துலவும் பிறப்பிடர்மற் றி**ய.       (59)

தாழிசை.

இடர்களென்ற திரைகளாலி டிந்துதீரம் வீழவே
      யெழுந்தபாவ சாகரத்தி னிடைமிதந்த திரணநான்
மடமைநெஞ்ச நாளிலே மகிழ்ச்சிகூர்ந்த தெம்பிரான்
      மந்த்ரமூல சொருபகாந்தி யிந்த்ரநீல மல்லவோ
உடன்மறந்த மறவிராத னுறவிராத தறுகணா
      னொடுங்கவந்த னாவிபோயொ டுங்கவந்த நிருதரும்
திடமலைந்து விடமலைந்து தென்னிலங்கை வென்றவன்
      திங்கள்குன்ற முத்திலங்கு நங்கள்குன்ற மாயனே.       (60)

கட்டளைக்கலித்துறை.

மாய்கின்ற தேவர்க்கெ லாமண வாளர் வடிவழகர்
வேய்கின்ற குல்லையென் றோதரு வாரெங்கள் மின்கரும்பு
சாய்கின்ற பூவணை யாலைபொன் னோலையிற் றாவுங்கண்ணீர்
பாய்கின்ற சாறு குறுவேர் பிதுங்கிய பான்முத்தமே.       (61)

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

பாலிருந்த நீர்பிரிப்பீ ரொருநீ ருங்கள்
      பங்கயத்தோன் றன்னாவைப் பாரா னென்கண்
போலிருந்தா ரையமெனை யும்பிரித்தா னிந்தப்
      புண்ணியமுங் களையடையும் போமோ சொல்லீர்
சேலிருந்த கொடியோனைப் பெறுமால் சோலைச்
      சிலம்பாற்றி னிரைதெவுட்டித் திரைமுத் தூஞ்சல்
மேலிருந்து விளையாடிக் கமல வீட்டின்
      மென்பேட்டி னுடன்செல்செங்கால் வெண்புள் ளீரே.       (62)

பதினான்குசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

புள்ளின்வாய்க் கிழித்தார் மருதிடந் தழித்தார்
பூதனை யாருயிர் கழித்தார்
புறகுசுழல் காற்றுண் டுதிரமொண் டிரைத்தார்
புரவியோ டிரவியை மறைத்தார்

துள்ளிய குயிலைப் பூத்ததே மாவைத்
தூற்றுமன் னையைச்சிறு காற்றைச்
சுடுமதி கோர மதியினை விடுத்தார்
தோன்றிய மதியையென் சொல்வேன்
விள்ளரும் பிலத்துட் பணிகளோ வென்று
விகங்க பூபதியெழக் கனகன்
வெங்குடர் பிடுங்கி யெறிந்துறங் கிழித்து
விடாய்க்குவெங் குருதிநீ ருறுஞ்சி

பிள்ளையைப் புரந்த வெள்ளெயிற் றகல்வாய்ப்
பெருங்குரற் சிங்கமெங் கணுந்தேன்
பெருக்கெறி சோலைப் பொருப்பலங் காரர்
பிறர்க்குப் காரமொன் றிலரே.       (63)

கட்டளைக்கலித்துறை.

ஒன்றாகி மூன்று வடிவா யடியவ ருள்ளத்துள்ளே
நின்றாய் புறத்தும்புள் ளேறிவந் தாயெங்கு நீநிறைந்தாய்
நன்றாமுன் னாடல்பொன் னாடர்கை கூப்பிய நங்கள்குன்றிற்
குன்றா மரகதக் குன்றே குன்றேந்து குணக்குன்றமே.       (64)

கலிவிருத்தம்.

குணசலதி யாமழகர் குலவரையின் முகில்காள்
மணமலரின் வண்டுநிகர் வன்கணர்பி ரிந்தார்
கணவரவர் நெஞ்சது கருங்கல்ல வோவென்
புணர்முலையில் வந்துவிளை பொன்னையுரை யீரே       (65)

மடக்கு.
கொச்சகக்கலிப்பா.

ஈரமதிச் சோலைவரை யிறைவர்மதிச் சோலைவரை
சாரகவி மானமறார் தாரகவி மானமறார்
ஆரணந்தா மோதரனா ரயனாந்தா மோதரனார்
சீரரங்க மொழியாரே தீயரங்க மொழியாரே.       (66)

அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

மொழியு மினியீர் குழைவார்ந்தீர் முத்த
      மிழச்செய்யுட்பயின்றீர்,
வழியு மாசா ரமுஞ்சிறந்தீர் மதுரக்
      கழைகா ளினிக்கேளீர்,
பொழியுங் கொடையா ரழகர்வெற்பிற் புராரிக்
      கெதிர்போய்த் தழல்விழியால்,
அழியுங் காமன் பழிகாரனங்கே
      யிணக்க மாகாதே.       (67)

நேரிசைவெண்பா
அங்காப் பொழிய வருணனுக்குத் தேனருவி
அங்காப் பொழியேற் றசலமே - பங்கயமேல்
துங்கத் திருப்பிரியான் சுத்தத் தமிழ்ப்புலவர்
சங்கத் திருப்பிரியான் சார்பு.       (68)

வஞ்சித்துறை
சாரலங் காராமால்
சாரலங் காராமால்
நீரலங் காராமால்
நீரலங் காராமால்.       (69)

சந்தவிருத்தம்
அலங்கார யமனும் புறஞ்சாய விதழ்மென்
      றறுங்காது பொருகும்ப கனன்வீழா
இலங்கேசன் மகுடந் தகர்ந்தோட முனையம்
      பெயுங்கார்மு கமன்முன்பென் மயல்கூறீர்
கலங்காம லரசன்முன் செலுங்காம துவசங்
      களைந்தேவின் முதல்தின்று மகிழ்வாயே
சிலம்பாறு தனில்வந் திளம்பேடை குமுறும்
      சிலம்போசை நறவுண்ட குருகாரே       (70)

நேரிசைவெண்பா
காமனார் வெள்ளைக் கருப்புவில்லே கீற்றுமதி
தாமடுவுச் சிந்து சரங்களே - ஆமாம்
வளைத்தெய் வசிகா மணிநிகரில் லாவெள்
வளைத்தெய் வசிகா மணி.       (71)

கட்டளைக்கலித்துறை.

மணியுந்தி யான நதிபாய் வனவெற்பன் மண்ணும்விண்ணும்
தணியுந்தி யானலங் காரனெங் கோவெனுந் தாமமென்னும்
பணியுந்தி யானந்த வேளென்னு நீலம் பசுங்குரும்பைக்
கணியுந்தி யான மிடுந்திசை பார்க்குமென் னாரணங்கே.       (72)

நாரைவிடுதூது.
அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

ஆரமா மலையிற் றொன்றி யங்கங்கோ டிச்செய் தீங்கால்
ஈரமே வியதென் காற்று மிந்துவுஞ் சமனே கண்டீர்
வீரமா லலங்காரர்க்கு விடவரா விடவ ராதோ
தீரமே நாரை காணீர் செல்லுவீர் சொல்லு வீரே.       (73)

கட்டளைக்கலித்துறை.

சொல்லா ரணப்பொருண் மாலலங் காரர்தண் சோலைவெற்பில்,
வல்லா ரிளங்கொங்கை மங்கையெங் கேமனு நூல்வழியிற்,
செல்லாச் செலுத்தொரு கோல்போன் முடங்கிய தீங்கரும்பு,
வில்லானைங் கோல்வென்று முக்கோல் விழைந்திட்ட வேதியரே.       (74)

சந்தவிருத்தம்.

வேதாவே னச்சொல்சுதர் பூமேல்வ ரத்தளரின்
      மீதாம்வி சித்ரர்மறை வேரானார்
வாதாச னச்சயன ராராம வெற்பிறைவர்
      வாராம லெய்த்ததுயர் சீராமா
சாதார ணத்ததல வேள்பூச லிப்பொழுது
      தாரா மடைக்குருகு தூதாமோ
போதா வவைக்கறிவு போதாவெ னிற்பரிவர்
      போதாம லர்த்துளவு போதாவே.       (75)

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

தாவுமன் புள்ளவர் மேவுமன் புள்ளவர்
      தக்கதா மலையினார் மிக்கசே மலையின்மேல்
ஆவியுங் கூடுமா வோவியந் தேடுமே
      வலகிலா வஞ்சன்முன் னுலகெலாங் கஞ்சமும்
காவியும் மகரமு நாவியுஞ் சிகரமுங்
      காந்தளுஞ் சங்கமும் பாந்தருளுஞ் சிங்கமும்
கோவையு மாரமும் பூவையுங் கீரமுங்
      கொஞ்சுமின் சொல்லுநீண் மஞ்சும்விண் வில்லுமே.       (76)

நேரிசைவெண்பா

மஞ்சுகா ளுங்களைப்போல் மாரன்பூ மாரிபெய்ய
விஞ்சியது பேராசை வெள்ளங்காண் - தஞ்சம்
வழுத்தீர் மதிச்செங்கண் மாலலங் காரர்க்கு
வழுத்தீர் மதிச்செங்கண் மால்.       (77)

வஞ்சிவிருத்தம்.

செங்கண் மாயவர் சீபதி
மங்கை யாரிடம் வண்புனம்
கொங்கை யுங்கணுங் குதலையும்
அங் கரும்பிணை யாகுமால்.       (78)

தாழிசை.

மாலுநான்முகனு மரனுமாமழகர்
      மால் விடைச் சயில மயிலனீர்
நீலராமிறைவ ரின்னம்வந்திலர்கன்
      னெஞ்சர்போலு மினியென்செய்வேன்
ஆலகாலம்வட காலதாகவெதி
      ரம்புகாலவில் வளைத்ததால்
காலகாலர்கள மெனவிருண்டுபல
      காறிறந்தமழை காலமே.       (79)

கட்டளைக்கலிப்பா.

மழையுறங்குத டஞ்சோலைமாமலை
      வாணன்வாணன்க ரங்களைப்பூதங்கள்
விழையும்பாரவெ ழுக்களென்றேபற்றி
      வீசுமாலும்பர் வேதாமவருக்கே
பழயநான்மறை சிங்காசனமலர்ப்
      படுக்கைவீடுந டுக்கடல்வெண்ணெய்போல்
குழையுமன்பர்க ருத்தேயுபரிகை
      குளிர்நிலாமுற்றங் கோகுலங்காணுமே.       (80)

மடக்கு.

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

குலமலைமா யாவாழி கொடியவென்றன் சிந்தா
குலமலைமா யாவாழி கொடியமதி ளிலங்கை
நிலமலைய மாதவரி னானெறிந்தாய் மந்தா
நிலமலைய மாதவர்கை நின்னாமங் கண்டாய்
பலவருண வாரீச நயனமுழு நீலோற்
பலவருண வாரீசன் பயப்படவெற் பெடுத்து
நலவரிசைக் கவிகைபுனை காரேதென் குருகூர்
நலவரிசைக் கவிகைவிடா நளினமின்னா யகனே.       (81)

கலிநிலைத்துறை.

நளினவி லோசன ரழகர்பு லோமிசை நாதன்றன்
இளவலு மாயவர் மாயவர் வெற்பினி விலையோகாண்
தளையவிழ் மல்லிகை புல்லிய வண்டீர் தமியேன்போல்
வளைகலை நாண்மதி தோற்றிட நின்றே மருண்மாலை.       (82)

அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

மருதொடித்து விளவெறிந்து குருந்திலேறி
      வடத்துறங்கிச் சோலைமலை வருமால்வெற்பில்
இருதலைப்புள் ளென்னவிருந் திமைப்புநீங்கா
      வெனைப்பிரிந்த பாதகர்நாட் டில்லைபோலும்
அருவிமத மிக்களைமா தளைகடள்ளி
      யடையலர்மாக் கோட்டையிடந் தாவிதேக்கித்
தெருவுதொறு மால்யானைக் கன்றுபோலத்
      தென்றலிளங் கன்றோடித் திரியும்வேனில்.       (83)

கட்டளைக்கலித்துறை.

திரியுங் கிரிக்கெதிர் சென்றோ ரழகர் திருமலைமேல்
பரியுங் கொடித்தடந் தேர்வல வாபரி போற்றிரைகள்
விரியும் புனற்கட லுண்டமை யாதுநம் மின்கொடிகண்
சொரியும் புனற்கடற் கோடுதல் பார்நுண் டுளிப்புயலே.       (84)

நேரிசைவெண்பா.

புயல்பார்க்குஞ் சாதகமே போன்றேன்பொன் னாட்டின்
இயல்பார்க்குஞ் சேமலைமே லெந்தாய் - தயையின்
நிலையா திருக்கவரு ணேயா மிடிதீர்த்
தலையா திருக்க வருள்.       (85)

வலைச்சியார்.
அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

அலைகடலி னடுத்துயிலு மழகர்நாட்டி
      லஞ்சொலெலாங் குளமாக வஞ்சனக்கண்
வலையெறிவீர் பொய்கைவிட்டென் னாவிதாங்கும்
      வரலாறு கேளுமச்ச மருங்குநில்லும்
கலைமதியோ டாரலலர் வெளிச்சைமீறுங்
      கவலைமுன்னீ ரிரையேர்க்குங் கனகருப்பம்
சிலையருவ ரால்மலங்கு படுதல்பாருந்
      திருக்கைவையு மழைச்சுறவைத் தேடுவீரே.       (86)

கொற்றியார்.

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

தேடுதமிழ் வடிவழகர் நெடியவிடை மலைமேற்
      சிறியவிடைப் பெரியவிடைத் திருக்குலத்தி னமுதே
கூடுகின்ற வெண்ணெடொடும் வேனிலா னெய்யுங்
      குறைவிலைவிற் போரதிகங் கொண்டதெழு படிகாண்
நாடறிந்த ததிமோக முறையிணக்கம் வையு
      நவமணிசேர் பொன்னாழி நல்குவேன் மெல்ல
ஆடைதனை யொதுக்கிடுமென் பால்வாரு மிச்ச
      மாமுழக்கு மோர்போது மகலேனந் தமையே.       (87)

தாழிசை.

நந்தனந்தன வென்றுகார்தனை நங்கைசெங்கைமு கிழ்க்குமின்
      நளினமாதென விகலுமாரனை நமதுசாபம்வி டாதெனும்
சந்த்ரசூரியர் தங்களைச்செய சங்குசக்ர மெனத்தொழும்
      சலதியாடுதல் யமுனைமூழ்குத றவமெனுந்தலை நாளிலே
ஐந்தலைப்பணி யுந்தருப்பையு மாகிலேனெனும் வேணுவா
      யமுதமுண்டுயர் வம்சமானத திட்டமேயெனு மாசைநோய்
மந்திரத்தில றாதுதீர்க்குநின் வாசம்வீசிய துளவுகாண்
      வாசவன்பதி பரவுசீபதி வாசசுந்தர ராசனே.       (88)

சுரம்போக்கு.

கட்டளைக்கலித்துறை.

சுந்தரத் தோள ரழகர்நன் னாட்டன்னத் தூவியந்தாள்
மந்தரத் தீஞ்சொற் கிளிசெல்லு மோசக்ர வாளஞ்சுற்றி
அந்தரப் பானுவு மோடச்செந் தீயுநெட் டாழிவிழக்
கந்தரத் தன்குளக் கண்போற் கொதிக்குங் கடுஞ்சுரமே.       (89)

பிச்சியார்.

மடக்கு - எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

மேதினிபோற் றழகர்மலைத் திருப்பிச்சி யாரே
      வெளிப்பட்டீர் முனிவர்மலைத் திருப்பிச்சி யாரே
கோதுபடு குழல்போக விளங்குதலைச் சுகமே
      கொள்ளைகொண்டீ ரிங்குவர விளங்குதலைச் சுகமே
காதிலிட்ட செம்பணியு நடுக்காவி யுடையுங்
      கபாலமுஞ்சூ லமுங்கண்டே நடுக்காவி யுடையும்
ஆதரியு முங்கள்சிவ மதவேடந் திரமே
      யறிவீரே யன்றெதிர்த்த மதவேடந் திரமே.       (90)

நேரிசைவெண்பா.

மதுசூத னாமுகுந்தா வாமனா மாயா
அதிரூபா ராமா வழகா - எதுவீரா
வெண்ணந் துளவா விமலா மகலாட்சா
தண்ணந் துளவா சரண்.       (91)

பதினான்குசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

சரணகோ கனகங் கற்பக நாறத்
தண்டுழாய் முடிபரி மளிக்க
சங்குநே மியும்வெண் ணிலாவெயி லெறிக்கத்
தமனியத் துகில்பள பளக்க

மரகத மேனி யெழில்பழுத் தொழுக
மகரகுண் டலம்புயத் தலம்ப
வனசலோ சனங்க ளருண்மழை பொழிய
வந்தநின் கோலநான் மறவேன்

திரன்முலைக் கிராத நுணுகிடைக் கிராத
சிறுமிகள் முகமதி யெனவாய்
திறந்தவாம் பலையும் பறந்தவண் டையுஞ்செந்
தீயெழு புகையெனப் பதறி

விரனெரித் தடங்கா விழிபுதைத் தோடி
வெண்பளிக் கறைகுடி புகுங்கா
வெற்பலங் காரா வுற்பலங் காரா
மெய்யனே தெய்வநா யகனே.       (92)

அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

தெய்வசிகா மணியையெங்கள் சாரசோர
சிகாமணியைக் கண்மணியிற் சிறந்தோன்றன்னை
ஐவர்சகா யனைமுதலுந் தும்பியன்றோ
வழைத்ததின்னந் தும்பிகளே யழைத்துவாரும்
கைவருபந் தாடுமணி முற்றமெல்லாங்
கமழ்பனிநீ ரிறைத்திறைத்துக் கழுநீர்போலும்
மைவிழியார் குளமாக்கி விட்டாரென்ன
வன்பகையோ பொருமுதலை வளர்கின்றாரே.       (93)

எழுசீர்க்கழிநெடில் சந்தவிருத்தம்.

வளங்குலவு தண்டலைநெ டுங்கிரிமு குந்தர்நல்வ
      ரந்தினம்வ ழங்கழ கர்தாம்
இளங்குதலை கொஞ்சியப சுங்கிளிகள் கெஞ்சியுமி
      ரங்கியினம் வந்தில ரையோ
உளங்கரையு மென்சொலமு னஞ்சமன டுங்கிடவு
      தைந்தவர்வெ குண்டு சுடவே
களங்கமற வெந்ததும தன்சடல மென்றனர்க
      ரும்புகையொ ழிந்த தலவே.       (94)

மடக்கு.

பன்னிருசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

அலமேந் தழகர் பதிச்சுனையே
யாடு மேமெய்ப் பதிச்சுனையே
யணில்வாற் கதிர்போ மருந்தினையே
யகன்றே மேய மருந்தினையே

குலவஞ் சுகமே கோகிலமே
கொம்பிற் புனத்திக் கோகிலமே
கூட வளர்மா தவிப்போதே
கொடியார்க் கென்மா தவிப்போதே

கலைமுன் பிரியக் கணக்கன்றே
கரும்பைப் பிரியக் கணக்கன்றே
கணியார் காட்டு மருவலரே
கணியார் காட்டு மருவலரே       (94)

சலதி முகக்கு முகமஞ்சே
தனித்தே நிமிட முகமஞ்சே
தைய லொதுங்கும் வரவழையே
தயையுண் டானால் வரவழையே       (95)

அகவல்.

வரம்பெற் றிடுதலி னருந்தவக் கிழவரும்
கண்டகரை யடர்த்தலின் மண்டலத் தரசரும்
கற்பக மண்டலிற் கனக நாடரும்
கானமு ழக்கலி னானகந் திருவரும்
எழுதரு மறைகள்கூ றிடலால் வியாதனும்
போதக மோதலிற் புராணவே தியரும்
சாந்தமுற் றிடுதலிற் றனிஞா னிகளும்
மான்மத மடுத்தலின் வைணவக் குரவரும்
நவமணி விரித்தலி னன்னா வலரும்
அன்னம் வழங்கலி னகவாழ்க் கையரும்
செம்பொன் னீட்டலிற் றிருப்பாற் கடலும்
அச்சங் களைதலி னமுதசஞ் சீவியும்
பூமிதந் திடுதலிற் புண்ட ரீகனும்
பொங்க ருரைதலிற் பூவை வண்ணனும்
அம்பிகை கலத்தலி னந்தி வண்ணனும்
பொருமலை யெறிதலிற் புலோமிசை கொழுநனும்
அகிலங் காட்டலி னலர்கதிர் ஞாயிறும்
முத்தமிழ் துதித்தலின் முழுமதிக் கடவுளும்
சிவணுங் கடவுட் சிலம்பாற் றிறைவ
இருபது சிகரத் தெண்ணிலாச் சிகரப்
பொன்மலை வளைத்த செம்மலை யேந்தும்
வெண்குன் றெடுத்த கருங்குன் றொருநாள்
முழைவாய் திறந்து மழைபோ லிடித்து
முடுகுசெங் களத்துக் கொடுமரம் வாங்கி
அடுசம ராட நடுநடு நடுங்கி
கொடிமுடி கவிழ்தலிற் குறுநகை பூத்து
நாளைவா வின்றுன நீள்பதிக் கேகென
விடைகொடுத் தருள்மால் விடைமலை வாண
உந்திக் கமலத் துச்சிவிட் டிறங்கி
கருத்திற் றெளிந்த கரகநீ ராட்டிக்
கண்டகண் போற்குளிர் தண்டுழாய் சாத்தி
இசைமக ளுடன்றுதித் தெண்ணில் கோடி
பிரமர்போற்      (*)றிய பரம சாமீ
அளவறு பிறைகளும் களனுறு கறைகளும்
கணக்கிலா மழுக்களும் குணக்கிலாக் கழுக்களும்
உடையார் புலித்தோ லுடையா ரிடையார்
அலகிலா வுமைகளு மிலகுபன் னதிகளும்
பதிகொ ளத்தனார் குதிகொள் மத்தனார்
வீரபத் திரமுதற் கோரபுத் திரரொடும்
அனந்த முருத்திரர் தினந்தினந் தொழுதிடும்
திருவடி யுடைய பிரம மூர்த்தி
ஒருவிண் ணப்பமுன் பெருமுனி பின்னர்
நம்பிநன் னிழலிற் றம்பின் தொடரச்
செஞ்சிலை யொடும்போய்க் கருஞ்சிலை மிதித்து
மின்னிள மேகமும் வில்லும் பிறையும்
அரவிந் தமுமாங் கதிற்சில பூவும்
சங்கமுந் திகிரியும் பங்கய முகுளமும்
காந்தளுங் கொடியும் பாந்தளுங் கதலியும்
மாவிளந் தளிரும் வகுத்தனை மீண்டும்
புன்மதி யுடைய வென்மனப் பாறையை
நற்பதப் படுத்தி யற்புதம் விளைக்கும்
கண்ணநீ யுண்ணக் கவர்ந்த
வெண்ணெய் செய்து விடுவதுன் கடனே.       (96)

தாழிசை

வெண்ணெய்சூறை கொண்டகொண்டல் மேனிமாயர் வனகிரி
      விறலியென்ற கோகிலத்து மென்பெடைக்கோர் சேவல்கேள்
பண்ணுமிங்கு தங்குடைந்து பாணர்தம்மை வென்றபின்
      பாதகற்கு மருமையோவோர் பாணநின்னை வெல்வது
வண்ணமார் பெழுந்தகொங்கை கிண்ணமென்ப ரதுமெய்யா
      வந்துபா னிறைந்ததுண்மை மதலைபால னென்பதும்
எண்ணெயீது பசுநரம்பெ னுங்கொடிக்கு விட்டநீ
      ரேற்குமோ வவர்க்கும்யாழின் வீக்குகாய நின்பமே.       (97)

எழுசீர்க்கழிநெடிலடி வாசிரிய விருத்தம்

காயரன் பிரமர்முத லோர்தொழுஞ் சனகர்நிமிர்
      காளமஞ் சனவழகர் மா
மாயரம் புவியுநவ நீதமுங் கமிழ்பவள
      வாயர்கண் டிலர்கொ லளிகாள்
பாயும்வெம் புலிபொருத மாமனென் பவன்விடுமோர்
      பாறைநெஞ் சினள் சிகரநேர்
ஆயகொங் கையிலொழுகு பால்பரந் தெனவிரிய
      கோர சந்திர கிரணமே.       (98)

சந்தவிருத்தம்

சந்தன நிழற்குளிரு வந்ததகை தீரச்
      சந்திரமுகி யேகவியு மிந்த்ரதரு மானும்
ஐந்தலை யராவில்வரு மழகர்பழ மறைதே
      டரியமுனை யார்முளரி தெரியமுனை போல்
வந்தருணம் வைகையிது பொய்கையிது முத்தின்
      வண்டலிது கொண்டறவழ் மண்டபமி தல்லால்
செந்திருநன் னகரமிது சிகரமிது சோலைச்
      சிலம்பிடைசி லம்பியசி லம்புநதி யிதுவே.       (99)

கட்டளைக்கலித்துறை.

நதிபெற்ற பாதர் மலையலங் காரர்நன் னாட்டணங்கே
கதிபெற்ற னன்னந்த மீகாமன் காமன் கழைகழையே
பதிபெற்ற வவ்வங்க மிவ்வங்கஞ் சங்கம் பலித்ததங்கே
துதிபெற்ற முத்தங் கிடைத்ததொப் பேதுன் சுகக்கடற்கே.       (100)

அறுசீர்கழிநெடி லாசிரியவிருத்தம்.

சகமும் பிகமும் மறையோதும் சோலை மலையி லலங்காரர்
இகமும் பரமும் வகுத்தபிரா னெல்லாப் பதமும் தரவாழ்
மகமுந் தவமுஞ் செய்ததொக்கும் மானந் தனைக்கும் பிடுவ
செகமும் பரவுஞ் சிலம்பாற்றுத் திருநீர் படியு மொருநீரே.       (101)

அழகர்கலம்பகம் முற்றுப்பெற்றது.

This file was last revised on 15 Nov. 2021
Feel free to send corrections to the webmaster (pmadurai AT gmail.com).