pm logo

நன்மதி வெண்பா.
(சுமதி சதகம் / தமிழில் மொழி பெயர்ப்பு)
எம்.ஆர். ஸ்ரீநிவாசய்யங்கார்.


nanmati veNpA (tamil translation of cumati catakam)
by M.R. Sreenivasa Aiyangar
In tamil script, unicode/utf-8 format



Acknowledgements:
Our sincere thanks go to the Digital Library of India for providing us with scanned images version of the work online.
Etext preparation and proof-reading:
This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
R. Aravind, S. Govindarajan, Senthan Swaminathan, S. Karthikeyan,
R. Navaneethakrishnan, V. Ramasami, K. Ravindran, Santhosh Kumar Chandrasekaran,
S.A. Ramachandar, Thamizhagazhvan and V. Devarajan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was first posted online on 28 November 2011.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

நன்மதி வெண்பா.
(சுமதி சதகம் / தமிழில் மொழி பெயர்ப்பு)
எம்.ஆர். ஸ்ரீநிவாசய்யங்காராலியற்றப்பட்டது.

source:
Nanmathi Venba: A Translation
Telugu Sumati Satakam
by M.R. Sreenivasa Aiyangar
(Late Teacher, Hindu High School,Silethputhur *)
Madras: The Vaijayanthi Press,
32, Mount Road
1910
Copy Right Registered - Price As 4.
------------------

நன்மதி வெண்பா.

இஃது மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் அக்கிராசனாதிபதியாகிய
ம-௱-௱-ஸ்ரீ பொ.பாண்டித்துரைத்தேவர் அவர்கள் அனுமதியின்படி
தெலுங்குபாஷையிலுள்ள சுமதி சதகத்தைத் தமிழில் மொழி பெயர்த்து
௸ சங்கத்தின் ஆங்கிலத் தமிழ் வித்வான் எம்.ஆர். ஸ்ரீநிவாசய்யங்காராலியற்றப்பட்டு
௸ சங்த்தின் 1905-ம்௵ வருஷோற்சவத்தில் அரங்கேற்றப்பட்டது.

சென்னை வைஜயந்தி அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது.
1910
Copyright Registered] [ இதன்விலை 4 அணா.
-------------------------

Dedicated to Dewan Bahadur Sir S.Subramania Iyer K.C.I.E., L.L.D.,
Retired Judge, and sometime Chief Justice, of the High Court of Judicature Madras.
With Kind Permission By the Author.
----------------

முகவுரை.

'சுமதிசதகம்' என்பது தெலுங்கு பாஷையிலுள்ள வோர் சிறந்த நீதி நூல். இந்நூல் யாவரும் எளிதில் ஞாபகத்தில் தாரணம் செய்யுமாறு தெலுங்கு பாஷையிலுள்ள விருத்தங்களிலெல்லாம் மிகச்சிறிய "கந்தமு" என்னும் விருத்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தநூல் தெலுங்கு ஜில்லாக்களிலன்றித் தமிழ் ஜில்லாக்களிலும் தெலுங்கு கற்பிக்கும் பாடசாலைகளில் பெரும்பாலும் கற்பிக்கப்பட்டு வருவதாலும், பெரியோர்கள் இந்த நூலின்பாடல்களைச் சமயோசிதமாக வெடுத்தாண்டு வருவதாலும் மிகப் பிரசித்தி பெற்றதென்பதற்கையமில்லை. முதனூற் கருத்தைச் சிறிதும் விடாது மொழிபெயர்த்திருப்பதில் கீழ்க்குறித்த சங்கியையுள்ள முதனூற் பாட்டுகளிற் கூறியிருக்கும் சிற்சில விஷயங்கள் தற்காலத்தில் பரீக்ஷகட்குக் கற்கும் மாணாக்கர்க்கு ஏலாதனவாயிருப்பதால் அவ்விஷயங்களை முதனூற் கருத்தினின்று மிக
முரணாது மாற்றி மொழிபெயர்த்திருக்கிறது.

முதனூற்பாட்டுகளின் சங்கியை.
10,32,33,35,40,70,76,78,97,99,100
36-ம் செய்யுளில், பூரணம் என்பது- தேங்காய் பருப்பு சர்க்கரை முதலிய கலந்துள் வைப்பது.
பூரி என்பது- ஓர்வகைச் சிற்றுண்டி. 82-ம் செய்யுளில், களமம் என்பது-நெற்பயிர்.

1910 )
பிப்ரவரி 26௳ ) M.R.S.
-----------------------------------------------------------

நன்மதிவெண்பா.

காப்பு.
நீர்கொண்ட கொண்டல் நிகர்மாறன் றண்ணளியால்
சீர்கொண்ட வெண்பாவிற் செப்புவாம்-பேர்கொ
சொன்மதுரம் வாய்ந்த சுமதி சதகத்தை
நன்மதியே நாடி நயந்து.       1

நூல்.
தருணமுத வாக்கேளிர் தாள்வணங்கு வோர்க்கு
வரமருளாத் தெய்வமன வாஞ்சை--பெரிதுறமேல்
ஊர்ந்தவுட னோடா வுழைப்புரவி நன்மதியே
ஓர்ந்தவ ரகற்றுவரென் றோது.       2

நாடுங்கால் வேதனத்தை நல்காப் புரவலன்றன்
மாடிருந்து தொண்டியற்றி வாழ்வதினும்--ஈடுபெறு
சீரணியா னேறுகொண்டு செய்ந்நிலத்தை நன்மதியே
ஏரினுழல் மேலாமென் றெண்       3

மிக்கவாக் கொண்டுபணி மேவேற்கோ யின்மணியம்
தக்கதெனக் கொள்ளேல் தகவில்லார்--பக்கல்
வருநட்பாற் றேனன் மதியேநீ செல்லேல்
அரிய வனத்தொன்றி யாய்.       4

வாய்திறந்தோ ரின்சொல் வழங்காது மௌனியாய்
வாய்மகிபன் றன்மை வழுத்துங்கால்--நோய்கொள்
செவிகேளான் கண்விழியான் தேர்நன் மதியே
சவமவனென் றேதுணிந்து சாற்று.       5

கடன்கொண்டி டம்பமிகக் காட்டலுறு மூப்பின்
இடைநற் பருவமனை யெய்தல்--மடமைமிகும்
தீயர்தவம் குற்றமதைத் தேரா னரசாட்சி
தீயவென நனமதியே செப்பு.       6

கடனளிப்பா னாயுணூல் கற்றவனெஞ் ஞான்றும்
இடைவறத்த லில்லாத யாறு--கடவுண்மறை
தேர்ந்துணர்ந்த வநதணர்கள் சேர்நகரி னன்மதியே
சார்ந்திருக்கும் வாழ்வே தகும்.       7

மருகன்ற னல்லியல்பு மங்கையரின் வாய்மை
மருண்மதியா யன்கவிசொல் மாட்சி--வரிகொளுமி
தன்னைக்குத் திக்கொள்ளுந் தண்டுலம்வெண் காகவினம்
இன்னவில நன்மதியே யெண்.       8

அரியபசிக் காஞ்சோ றமுதுவருத் தாமற்
றருபவனே வள்ளறனைச் சாரும்--ஒருதுயரம்
தாங்கவல்லா னாண்டகையாந் தைரியவா னன்மதியே
ஓங்கு குலமணியென் றோது.       9

வருத்துபசி நீக்காவூண் மக்கட்பே றில்லா
ஒருத்தி யுடன்வாழ்ந் துழலும்--திருத்தமிலா
வாழ்வசத் தின்கறவை மாசுறுகி ணற்றுநீர்
தாழ்வென்று நன்மதியே சாற்று.       10

வழங்க வியன்றதே வான்கல்வி தெவ்வர்
முழங்கமர்க்கஞ் சாமையே மொய்ம்பு - செழுங்கவிசொல்
பாவலரை மெச்சுதலே பாண்டித்தி யம்குதர்க்கம்
மேவலிடர் நன்மதியே விள்.       11

நன்னசையாய் விச்சை நவிலாவா யன்னையைக்கூஉய்
அன்னமெனக் கேளாத வன்னவாய் - பின்னோர்த்
தயவுடன்கூ வாதவாய் தாநன் மதியே
குயவன்மண் டொட்ட குழி.       12

தொத்துவார் வல்லுடும்பு சொல்வருட நூறிருக்கும்
பத்துநூ றாண்டுபெரும் பாம்பிருக்கும் - தத்தும்
திரைமடுவிற் பல்காலம் சேர்ந்திருக்கும் கொக்கு
புருடார்த்த நன்மதியே போற்று.       13

பித்தளைகாந தங்கியுலைப் பெய்துருக்கி வாத்திடினும்
நத்துபசும் பொன்னியல்பை நண்ணுமோ - சித்தம்
மயர்வுறுகீ ழோர்நன் மதியேமே தக்க
வியல்புளா ராத விலர்.       14

புனலருந்து வாம்பரியைப் பொங்கு மதத்தால்
அனலுகுக்குங் கட்களிற்றை யாவின் - நினைவொடுசெல்
புங்கவத்தைக் கல்லாத புன்மதியை நன்மதியே
சங்கையின்றி நண்ண றவிர்.       15

நன்றியற்றி னார்மகிழ நன்றாற்றல் விந்தையின்றால்
கொன்றன்ன வின்னா குறித்தியற்றும் - வன்றொழிலோர்
துன்புறுத்துங் காலத்தும் தூயவர்க ணன்மதியே
இன்புறுத்து வாரென் றிசை.       16

தூரிற் கரும்பினிதாய்த் தோன்றிமேல் வன்மைமிக்க
சீரிலாக் கண்கடொறுந் தீயதாய்ப் - பாரில்
முடிவி லுவர்ப்புறல்போல் முற்றுங் கயவர்
தொடர்பென்று நன்மதியே சொல்.       17

எத்தருணத் தெம்மொழிக ளேற்குமோ வம்மொழிகள்
அத்தருணத் திற்புகன்று மந்நியர்தம் - சித்தமது
நோதலின்றித் தாநோவா நோன்மையன்றோ நன்மதியே
ஏதமிலாச் சான்றோ ரியல்.       18

குற்றமே நாடுங் குணமிலிபாற் றொண்டுசெய
உற்றுழல லால முகுபகுவாய்ப் - புற்றரவப்
பையடியிற் றேரை படுத்தலென நன்மதியே
ஐயமின்றித் தெள்ள வறை.       19

ஏரிநிறை நீரா லெழிலுறுங்கா லத்தடத்தில்
ஆருந் தவளை யயுதமாம் - தாரணியில்
பொற்றிரளான் மேன்மை பொருந்துங்கா னன்மதியே
பற்றுடையே மென்பார் பலர்.       20

பக்குவமில் காய்பறியேல் பந்துக்க ளைப்பழியேல்
தக்கபடை மண்டும் சமரின்மனம் - நெக்குவெரின்
இட்டகலே னன்மதியே யிங்கிதங்கூ றுங்குரவர்
கட்டளைமீ றேனீ கடந்து.       21

ஒருநகரிற் கோர்கணக்கன் ஓர்வழக்குத் தீர்ப்போன்
ஒருவனே யாகாம லூரின் - வருவழக்கம்
பன்முறையு மாறிற் பருவரலுற் றந்நகரம்
நன்மதியே வீயுமென நாட்டு.       22

உடன்பாடி லாமனையாள் ஒப்புரவில் மன்னன்
தொடர்புறுதி கொள்ளாத தோழன் - விடவுரியார்
என்றறியா தானே யிடைய னிடையனிடை
யன்றென்று நன்மதியே யாய்.       23

பாவுகல மேற்சகடம் பண்டியின்மே லந்நாவாய்
மேவுதலு முண்டிதனை விள்ளுங்கால் - வீவில்
கலையார்ந்த நன்மதியே கைத்துடைமை யின்மை
நிலையாவென் றின்றே நினை.       24

வெந்திறன்மிக் கோனேனும் மென்மனையை யன்னவடன்
தந்தைமனை யிற்பலநா டங்கவிடல் - சந்தைக்
கடையில்விலை கூறியந்தக் காரிகையை விற்று
விடலென்று நன்மதியே விள்.       25

தேசவிருஞ் செம்பொன்மணிச் சிங்கா தனத்துமிசை
ஏசவரு நாயதனை யேற்றியே - நேசமுடி
சூட்டுகினு மந்தச் சுணங்கன் குணங்கெடுமோ
தேட்டமுறு நன்மதியே செப்பு.       26

தவளைக்கு காலிறுதல் சர்ப்ப மதற்கு
நவையார் மிகுபிதா னண்ணல் - இவரும்
மனைதீயா ளாதல் வறுமையுறன் மூப்பில்
இனவினலே யாநன்மதி யே.       27

முளரிபுன னீங்கின் முளரிமலர்க் கேள்வன்
ஒளிர்கரத்தாற் றீய்ந்திறுத லொப்பத் - தளர்வணுகித்
தந்தநிலை மாறிற் றமராலுந் துன்புறலில்
விந்தையென்னோ நன்மதியே விள்.       28

நாட்டுகணக் கன்கணக்க னம்பி னிறப்பனைய
கேட்டையுறு வானதனாற் கேண்மையுடன் - தேட்டமுறுந்
தன்மரும மோர்கணக்கற் சாராவண் ணங்கணக்கன்
நன்மதியே வாழ்ந்திடுத னன்று.       29

மாகணக்கன் றன்னை மகிழ்விக்கா துண்டவூண்
தேகஞ்சே ராதிருசிற் றேய்க்குமெண்ணெய்ப் - பாகமின்றேல்
ஈசன் சகடு மிறையுநக ராதெனவீண்
பாசமிலா நன்மதியே பன்.       30

சாந்த குணங்கணக்கற் சார்ந்தாலும் வன்றந்தப்
பாந்தள்தீண் டாதேனும் பல்புகர்மா - வாய்நதகடாம்
விட்டாலும் தேள்கொட்டா விட்டாலு நன்மதியே
கிட்டார்கள் மேதினியோர் கேள்.       31

மேலியல்தே ரும்பருவ மேவுமுன மக்கட்குப்
பாலியவி வாகமதைப் பாலிப்பர் - காலமுற்று
முற்றாத காய்துவர்ப்பு மொய்க்குமன்றித் தீஞ்சுவையைப்
பற்றாது நன்மதியே பார்.       32

செய்யதமிழ்த் தேர்ச்சிமிகச் சேராதான் சொல்செய்யுள்
செய்மிங்கி தந்தன்னைத் தேரான்பால் - செய்யுநட்பு
மேவியக லேன்மெய்யான் வில்லாண்மை நன்மதியே
பாவிக்கி லின்னனவீண் பார்.       33

கொள்ளேல் கொடியோர்தங் கூட்டுறவு கொண்டபுகழ்
தள்ளேல் கடனளித்துச் சஞ்சலத்துக் - குள்ளாகேல்
என்புருக்கு மென்குதலை யேந்திழையார் நன்மதியே
அன்புளரென் றுன்னே லகத்து.       34

காதலொடில் வாழக் கருதா மதியிலியாம்
மாதுடனில் வாழ்க்கையுற வாஞ்சித்தல் - மாதுரியச்
சார மொழிகருப்பஞ் சக்கையினை நன்மதியே
ஊரெறும்பு மொய்த்திடலொக் கும்.       35

காரணமில் லாநகையுங் காதலன்பா லன்பில்லா
நேரிழையும் பூரணமில் நெய்படுநற் - பூரிகளும்
பல்லியமில் லாமணமும் பாரினில்வீ ணாமெனவே
தொல்லியல்பார் நன்மதியே சொல்.       36

நல்குமின்ப வில்லா ணவியப் புரைநாடிப்
பல்கலாஞ் செய்யேலப் பண்மொழியாள் - மல்குகண்ணீர்
வாரும்போ தம்போச மாதுன் மனையைவிட்டுப்
பேருமென்று நன்மதியே பேசு.       37

அன்புகுன்றா நாளி லருங்குறைசற் றேனுமெண்ணா
தன்புகுன் றத்தொடங்கு மற்றைமுதல் - இன்புடன்செய்
நற்றொழிலி லுந்தீய நாடுதல்கா ணன் மதியே
குற்றமுறுங் கீழோர் குணம்.       38

சீர்த்தவியன் மேலோர் சிறியோரைத் தம்மொடுறச்
சேர்த்தலா னீக்கரிய தீங்குறுவர் - போர்த்துடலூன்
மேயலுறு வன்முகடு மேவுதலா னன்மதியே
பாயன்மிக மொத்துப் படும்.       39

மெய்யழகி லைங்கணைகொள் வேளெனினு மான்றோர்சொல்
செய்யமுது நூலனைத்துந் தேர்ந்தாலும் - மையணிகண்
வேசையணு காமற்கை விட்டகல்வா ணன்மதியே
காசையளி யானைக் கடிந்து.       40

தகைசால்பண் பில்லாத் தனயனைப்பெற் றோன்றன்
அகிலகுண முங்கெட் டழியும் - நகுதரளம்
கக்குமிக்கு முற்றிக் கதிரீனி னன்மதியே
அக்கரும்பி னின்சா றறும்.       41

கன்னியருள் ளன்புங் கடுக்கட் செவிநட்பும்
அந்நியவில் லக்கிழத்தி யாசையும் - துன்னரையன்
நம்ப மனங்கொளலு நன்மதியே யின்னிரத
நிம்பமும்பொய் யென்றே நினை.       42

மகிபுகழு மாண்டகையை வாழ்மனையாள் கண்டால்
அகனமர்ந்தின் சொல்லா னழைக்கும் - புகழ்வாய்
நடைப்பெருமை யில்லானை நன்மதியே நோக்கின்
நடைப்பிணமென் றெள்ளி நகும்.       43

கடந்த நினைந்துருகேற் காரிகையா ரன்பு
மிடைந்தவரென் றெண்ணேன் மிலைந்த - வடந்திகழ்தோள்
பூவலரந் தப்புரத்துப் பூவையரை நன்மதியே
மேவமனங் கொள்ளேல் விழைந்து.       44

எறும்பார்ந் தியற்று மிரும்புற்றுப் பிண்;ணா
வுறும்பாந்த ளார்வாத லொப்ப - வறும்பாழ்
மதிகேடன் பொன்னன் மதியேபா ராள்பூ
பதிசெயிர்த்து வவ்வப் படும்.       45

உறவனரல் லாரு முறவுடையே மென்று
செறிவொடுறச் சூழ்வாங்ஙன் சேரின் - பெறவரிதாய்த்
தேடுமருஞ் செல்வஞ் சிதறுண்டு நன்மதியே
ஒடுமென்று நெஞ்சி லுணர்.       46

செங்கைக் கணியீகை தேர்வேந்தர்க் கம்பணியாம்
பங்கமறப் பொய்யாமை பத்தினியாம் - மங்கைக்கு
மான முயரிழையாம் மன்னீதி நன்மதியே
மானவர்க்குப் பூணா மதி.       47

ஆய்ந்தோய்நது செய்யா தவசாத்தி னாற்றுதலால்
வாய்ந்தகரு மஞ்சிதைந்து மாயுமே - ஆய்ந்தோய்ந்து
செய்யிற் சிதைந்ததுநற் சீர்த்தியுற்று நன்மதியே
கையிலுறு மென்றே கருது.       48

தன்னுளடங் காச்சினமே சத்துருவாந் தன்பொறையே
தன்னரணாந் தன்றயையே சார்கிளையாந் - தன்னுடைமை
நன்றென்று வந்திடலே நன்மதியே வான்றுறக்கம்
கன்றுமன மேவனர கம்.       49

தன்னகரார் வான்றவனைத் தன்புதல்வன் வாலறிவைத்
தன்னரிவைப் பேரழகைத் தன்முன்றில் - துன்னரிய
வோடதியை யுள்ளத் துவகையொடு நன்மதியே
நாடமனங் கொள்ளார் நரர்.       50

தானருஞ்செல் வந்துய்த்த றக்கமக வான்பதவி
தானிழிமி டிக்ககடலிற் றாழ்தல்புவி - யீனமுறல்
தன்மரண மூழி தனக்கினியாள் விண்ணரம்பை
நன்மதியே யீ துண்மை நம்பு.       51

தமரில்லாத் தானத்துந் தம்மன்ப ரில்லா
வமையத்து மேதிலர்சே ராங்கும் - சுமையின்றிச்
சங்கைகொளு மவ்விடத்துந் தாஞ்சேற னன்மதியே
இங்கிதந்தேர்ந் தோர்க்கமைதி யின்று.       52

வெள்ளிலையுண் ணாவாயும் மென்மணஞ்செய் நாதனுடன்
உள்ளமிணங் காதா ளுடன் வாழ்வும் - கள்ளொழுகும்
அங்கமலம் விணடலரா வாவியுட னன்மதியே
திங்களில காவிரவுந் தீது.       53

வாளுரகத் திற்கு வலியதலை யிற்கடுவாம்
தேளிற்கு வாலில்விடஞ் சேருமே -கோளர்களாம்
தீயுருவார் கீழ்கட்குத் தேகமெலாம் வெங்காளம்
ஏயுமென நன்மதியே யெண்.       54

தலைமறையப் பொற்குவையைத் தந்தாலு மன்பு
நிலைபெறா தாங்கணிகை நெஞ்சில் - விலைமாது
மத்தகத்த டித்தானை வைத்தாலு நன்மதியே
சித்தமக ளங்கமிலை தேர்.       55

சிரமார்ந்த குஞ்சிமிகச் சிக்குற்று நாறி
யுரவாகம் போர்க்கு முடுக்கை - பெருமாசு
கொண்டுசீர் குன்றிற் குலமாது நன்மதியே
கொண்டவற்ப ழிக்குமெனக் கூறு.       56

கானீண்ட சோலையிற்பல் கந்தமலர்ச் சாறெடுத்துத்
தேனீச்செய் தேன்பிறரைச் சேரலைப்போற் - றானீதல்
உண்ணலின்றிக் கூட்டும்பொன் னோடுங்கா ணன்மதியே
மண்ணின்மன் கையில் வறிது.       57

வன்புறங்கூற் றாலுய்யும் வஞ்சகர்சொற் கேட்டரசன்
மன்பதைக்கின் னாவியற்றல் வண்மையொடு - பொன்பொழிந்து
மட்டலருங் கற்பகத்தை வன்னியிற்றீய்க் குங்கரிக்கா
வெட்டலென நன்மதியே விள்.       58

பாழிநிதி கட்குப் பதியாங் குபோன்றன்
றோழ னெனவிருந்துஞ் சோமேசன் - ஏழமையாய்
அம்பலியி ரந்துண்டா னாதலா னன்மதியே
தம்பொருட மக்குதவி சாற்று.       59

தீரர்க்கி யற்றுதவி தெங்கிளநீ ருண்ணிறையும்
சார மதற்குச் சமமாகும் - பாரில்
பெருமை மிகப்பிறங்கப் பேசரிய வின்பம்
தருமென்று நன்மதியே சாற்று.       60

அரியவழிச் செல்லே லாய்ந்ததுணை யின்றி
யரகத்தி லன்ன மருந்தேல் - உரிமைபிறர்க்
குள்ளபொருள் கொள்ளே லொன்னாரு நன்மதியே
துள்ளவன்சொற் கூறே றுணிந்து.       61

ஆயங்கொள் வானை யருங்கவறா டாகுலனை
மாயஞ்செய் தட்டானை வாணிபனைத் - தீய
நடக்கை விலைமாதை நன்மதியே நம்பேல்
இடக்கரனை நீயென்று மே.       62

இன்மொழியாற் றீம்பா லெவருமருந் தார்சினத்து
வன்மொழியால் வெவ்விடமும் வாய்க்கொள்வார் - இன்மொழிதான்
ஐயோ பயனிலதா மாதலா னன்மதியே
வெய்யோர்க்கு வன்சொல் விளம்பு.       63

மெய்ம்மை நெறிநிருபன் மீறி யொழுகுதல்வெங்
கைம்மைப்பெண் வீட்டிலதி காரமுறல் - பொய்ம்மையொன்றே
மேயகணக் கன்சுகுண மேவலிவை நன்மதியே
தீய பயக்குமெனச் செப்பு.       64

செறிபொருள்சே ரம்பனுவ றீஞ்சுவையார் கீதம்
அறிவிலிக்கி சைக்க வணுகல் - உறுமொலிகொள்
காதில் செவி டன்பாற்போய்க் கம்பெடுத்துப் பம்பம்மென்
றூதலென நன்மதியே யோது.       65

நகையேற்றாய் தந்தை நரபதிபால் வீணே
நகையேற் பிறன்மனையை நண்ணி - நகையேல்
அவையினவை யேன்மறைதேர் அந்தணரை யின்ன
நவையிலா நன்மதியே நன்று.       66

புனலுயிர்க்கா தாரமாம் பொற்பாரா தாரம்
வனமதுர மென்மொழிக்கு வாயாம் - மனிதர்க்கு
மானைவிழி யார்மணியாம் மாந்தர்க்கு நன்மதியே
தானை யணியெனவே சாற்று.       67

இகலாகா தியாவரொடு மின்னலுற்ற பின்னர்
அகமலைத லாகா தவையில் - பகச்சொல்லல்
தக்கதன்று தன்னெஞ்சைத் தையலர்பா னன்மதியே
சிக்கவிட லாகாது தேர்.       68

கொண்டமனை யாளிடத்தும் கொற்றவன் றன்பாலும்
அண்டர்தொழுந் தேவிடத்து மான்மாவைக் - கண்ட
குருவிடத்து நன்மதியே கொஞ்சுமகார் பாலும்
தருகையுறை யோடணுகல் சால்பு.       69

தொண்டியற்ற லிற்பணிப்பெண் தூயவுரு வத்தரம்பை
பண்டைமந்தி ரத்தமைச்சு பற்றுடனே - உண்டி
உதவலிற்றா யானவளே யொண்மனையா ளென்றே
இதமாக நன்மதியே யெண்.       70

பிறன்மனைக்குக் கூடப் பிறந்தாரை யொப்பப்
பிறர்பொருள்வவ் வாதவரைப் பேணிப் - பிறர்தம்மைப்
போற்றநடந் தொன்னார் புழுங்கினா னன்மதியே
சீற்றமுறு வாரான்றோர் தேர்ந்து.       71

பிறர்க்குரியா ணாடேல் பிறர்பொருளை வவ்வேல்
பிறருதவி நோக்கிப் பிழையேல் - செறிசெல்வம்
போயபின்சுற் றத்தகத்திற் புக்குழலே னன்மதியே
தீயகுழுச் சேரே றெளிந்து.       72

வீட்டுமனு நற்பருவ மெல்லியலார் பாலிருப்பின்
நாட்டுபுகழ் குன்றி நவையுறுவன் - கோட்டமிலா
நங்கை யருந்ததியு நன்மதியே யாடவர்கள்
அங்குழுப்புக் காற்சீ ரறும்.       73

பிறனையுன்னும் பேதையோரீஇப் பீதியலாக் கையாள்
அறநீக்கி மாற்றமெதி ராடும் - அறிவில்லாக்
கான்முளைக டிந்துபல கான்மனையைச் சாராத
நோன்மைநன்று நன்மதியே நோக்கு.       74

பிறர்க்குன் னசைவிள்ளேற் பிறரில்லத் தென்றும்
வறிதுறே லந்நியன்மேல் வாஞ்சை - யுறுமனையைச்
சேரவுன்னே னன்மதியே தீயவிடக் காம்புரவி
யூரமனங் கொள்ளே லுணர்ந்து.       75

பருவவே ளாண்மைவிடேற் பார்த்திபர்க ணேசம்
திரமெனவுட் பூரியேற் சேர்ந்த - வரவைமிகத்
தர்ப்பமுறு மாறுவிடேல் தங்கரிய தானத்தே
நிற்பவுன்னே னன்மதியே நீ.       76

பற்றுலக்கிப் பின்னருந்தும் பாகிலைநல் லெண்ணெய்மூழ்
கற்றைநாட் கண்டுயில லையமறக் - கற்ற
புலமைமிகு நன்மதியே போதமிகு வாரோ
டிலகல் விலையரிதென் றெண்.       77

பாடறியா தான்பாற் பணிசெய்த லும்விரும்பி
நாடலிலா நட்பதனை நாடலும் - நீடு
நிதிக்காகச் செய்நட்பு நீணன் மதியே
நதிக்கெதிர்த்து நீநதலென நாட்டு.       78

பாலார்ந்த நன்னீரப் பால்போ லிருப்பினும்பால்
மேலாங் குணம்போம் விதம்போல - மாலார்ந்த
துன்மதியின் கூட்டுறவு துன்புறுத்தும் வாய்மையினை
நன்மதியே யோர்ந்து நவில்.       79

கயவர்க்கு நேர்துன்பங் காதலித்துத் தீர்ப்போர்
துயருறுவ ரென்ற றுணிபாம் - உணரனலிற்
பட்டுவருந் துந்தேளைப் பாலிப்போர் தம்மையது
கொட்டுமென்று நன்மதியே கூறு.       80

செய்யவே வாக்கருமஞ் செய்யலுள்ள மொவ்வாத
தையன் மணமரசன் றானறியாச் - செய்யபணி
வேண்டியழை யாவதுவை வீடுறலொவ் வாக்கேண்மை
ஈண்டிவையா கா நன்மதி யே.       81

அளவிறிரு விற்குயிரோ ராயிழைபே ரூர்க்கு
வளவணிக னின்னுயிராம் வாய்த்த - களமத்தின்
ஆருயிர்நீ ரும்பற் கருந்துதிக்கை சீவனா
வாருமென நன்மதியே யாய்.       82

வலியபுலிப் பால்கொணர்ந்து வைத்தாலு மீரல்
உலையவரிந் தங்கை யுதவித் -தலையுயரம்
நற்பொற் றிரள்குவித்து நல்கிடினும் நன்மதியே
அற்பொன்றாள் வேசை யவள்.       83

விதிப்பயனன் றாங்காலம் வெங்கா னடைந்தும்
மதிப்புடைய பல்பொருளும் வாய்க்கும் - விதிப்பயன்றான்
தீதுறுங்காற் செம்பொற் றிடருறினு நன்மதியே
ஏது முறலரிதென் றெண்.       84

பாங்கர்ப் பகைஞனுறின் பண்டிராய சம்பார்த்தோன்
ஓங்கதிகா ரத்துவரி னூர்க்குடிகள் - தீங்கியற்றும்
வெங்குறளை கூறுவரேல் மிக்கதுயர் நன்மதியே
அங்கணக்கற் சாருமென லாம்.       85

பொன்கொதுவை வைத்திடுதல் போர்முகத்து நில்லாது
பின்கொடுத்த லாவணத்திற் பேதமையாய் - மின்கனகம்
வீண்செலவு செய்தல் வெறுக்கையில் லாவறியன்
கேண்மைகொள னன்மதியே கேடு.       86

மாவெந் திறலுள்ளேம் மண்டலத்தி யாமென்றே
யேவ ருடனு மிகல்கொள்ளேல் - தீவிடங்கால்
புற்றரவு நன்மதியே பூவுலகிற் பொன்றும்பல்
சிற்றெறும்பு மொய்க்கச் சிதைந்து.       87

விரிதிசைசூழ் பாராளும் வேந்த னருகிற்
பிரதானி யின்மை பெரியோர் - கருதித்
துதிக்கைபெறு நன்மதியே துன்னுமத வேழம்
துதிக்கையின்றி நிற்றலெனச் சொல்.       88

நல்லவமைச் சாரரசு நானிலத்தின் மேன்மையுறும்
நல்லமைச்சில் லாநாடு நன்மதியே - வல்ல
வியந்திரங் கீல்கழல விற்றுகுதல் போல
பயனற் றழியுமெனப் பன்.       89

சொல்லியமாற் றத்துயிராந் தூய்மைபெறு வாய்மை
மெல்லியற்குச் சீவன் மிகுமானம் - அல்லலிலாக்
கூட்டுநவார் நன்மதியே கோட்டைக் குயிர்வீரர்
சீட்டிற் கெழுத்தெனவே செப்பு.       90

பெருமானி யூக்கமற்றுப் பேதைமையார் கீழின்
அருகிருந் துய்ய வணுகிச் - சிரமமுறல்
நாழி புனலுக்கு ணன்மதியே கைம்மாவின்
பாழிமெய்ம்ம றைத்தடிலனப் பன்னு.       91

அம்முகமன் கூறா வரசனிடந் தொண்டுசெயின்
இம்மையம்மை யில்லையெங்ங னென்னிலோ - கம்மும்
இருணிறையு மில்லி லிருகைத் தடவித்
திரியலென நன்மதியே தேர்.       92

மெய்யுறுதி காட்டியதன் மேற்பொய்த் திடமுயலேல்
செய்யவா தாரமாய்ச் சேர்கிளைஞர் - நையவசை
சொல்லேற் சினவாசற் றொண்டியற்றேல் பாதகரூர்
செல்லேனீ நன்மதியே தேர்ந்து.       93

உருவிற் பெரியனினு மொண்ணயங்கை சோரா
நானே பெரியனென்பர் நல்லோர் - பெருமைமிகு
மாகன் மலைநிகரு மத்தகய நன்மதியே
பாகற் கடங்குமிது பார்.       94

சேதகமார் மண்ணுழவு செய்யேற்றீ வற்கடத்தில்
ஒத முறவினரில் லுற்றழுங்கேல் - ஏதிலர்க்குன்
உண்மருமம் விள்ளே லுயர்படையை நன்மதியே
திண்மையிலார்க் கீயே றெளிந்து.       95

சாலிவிளை யாவூருந் தார்வேந்தில் லாவூருங்
கோலரசன் வாழாத கோவிலும் - மேலாந்
துணையின்றிச் சென்னெறியுந் தூநன் மதியே
பிணமெரியு மீமமெனப் பேசு.       96

ஒகையொடு நாதன்பா லுள்ளன்பில் லாளோடு
தாக முடன்கணவன் றான்வாழ்தல் - மோகமுடன்
வாய்த்தகற் சாணையினில் வாரியின்றிச் சந்தின்முறி
தேய்த்தலென நன்மதியே செப்பு.       97

ஆருரையுங் கேட்டலா மவ்வாறு கேட்டவற்றைத்
தீரவா ராய்ந்து தெளிந்திடலாம் - நேருற்றுக்
கண்டுமறி யாநிருபன் காசினியி னன்மதியே
துண்டரிக்க வாயனெனச் சொல்.       98

பாகிலையுண் ணாவாயும் பண்பார்முன் னூலனைத்தும்
மாகுரவர் பாலோதா வாயுமிசை - மோகமுறத்
தேம்பலின்றிப் பாடாவாய் சீர்மைபெறு நன்மதியே
சாம்ப லிடுமுழையாய்ச் சாற்று.       99

பல்லார்செல் பாதையிற்புற் பற்றாது பற்றிடினும்
புல்லார்ந்தி டாதிறுதல் போலவே - வில்லார்
நுதல்விலைமா தன்புகொள்ளாள் கொண்டாலு நொய்தாய்ச்
சிதையுமென நன்மதியே செப்பு.       100

விலைமா திடுமாணை வேளாள னட்பு
பலபணிசெய் தட்டான் பழக்கம் - மலைவாய்க்
கனவினிற்காண் செல்வம்பல் காலமுறு மென்று
மனநம்ப னன்மதியே வம்பு.       101

நன்மையுறாக் கல்வி நவையி லபிநயத்தின்
தன்மை யிசையிரதந் தான்செறியாப் - புன்மைமிகு
பாடன் மனக்கிளர்ச்சி பற்றாப் பழக்கமவை
தேடலில்சொன் னன்மதியே தீது.       102

அதிக சரச மருவருப்புக் கேது
அதிகவின்பந் துன்பமே யாக்கும் - மிதமின்றி
யோங்கி வளர லொடிதற்காந் தாழ்மையுறல்
ஒங்கலென நன்மதியே யோது.       103

மேலணுகாப் புன்னெஞ்சார் வீணனைப் பஞ்சமனை
ஞாலமதிற் றட்டானை நாவிதனைச் - சீல
முறுமிதராக் கொண்மகிப னோங்குதலில் செங்கோல்
இறுமென்று நன்மதியே யெண்.       104

மங்கையர்பால் வாதாடேல் மாண்ட வியன்குணங்கள்
பங்கமுறக் கைவிடேற் பாலருடன் - சங்கையின்றித்
தொந்தமுற நட்டவர்பாற் சொற்பழகே லாளிறையை
நிந்தைசெய்யே னன்மதியே நீ.       105

திருவுறுநற் காலமுறிற் றெங்கினிள நீருண்
மருவுபுனற் போன்று வருமால் - திருவறுங்கால்
வீயுங்கா ணன்மதியே வெங்கண் மதமாவின்
வாயுறுவி ளங்கனியின் மாய்ந்து.       106

மதியொருவன் மேல்வைத்த மங்கையின்மே லன்பாய்
மதியிலியோர் தூர்த்தன் வறிதே - நிதமணுகும்
பூசைப் பகுவாய்ப் புகுங்கிள்ளை பஞ்சரத்திற்
பேசலுண்டோ நன்மதியே பேசு.       107

மைந்தன் றனக்குதித்த வாய்மைசெவி யுற்றவந்நாள்
தந்தை யுறுமகிழ்ச்சி தான் சிறிதாம் - மைந்தனுல
கெங்கும் புகழ்படைத்தா னென்னுமொழி கேட்டுவகை
பொங்குமென நன்மதியே போற்று.       108

ஈனமுறு சாதி யெனினுங்காற் காசுக்கும்
தானுதவா னாம்வீணன் றானெனினும் - மானமிலா
வேசை மகனெனினு மேதினியி னன்மதியே
காசுடையா னே பெரியன் காண்.       109


This file was last revised on 13 Nov. 2021
Feel free to send corrections to the webmaster (pmadurai AT gmail.com)