pm logo

nAlAyira tivya pirapantam -part V (3343-4000)
nammAlvAr tiruvAimozi
rAmAnuja nURRantAti of tiruvarankattamutanAr
(in Tamil Script, unicode/utf-8 format)

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பாடல்கள் 3343-4000)
நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி &
திருவரங்கத்தமுதனார் அருளிய ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி



Acknowledgements:
Our sincere thanks go to Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland for the preparation of this work for publication.
This etext was first put up in Inaimathi, Mylai versions on 1998 and then on TSCII in 1999.
The work is now presented in Unicode encoding (utf-8 format).

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பாடல்கள் 3343-4000)
நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி


திருவாய் மொழி ஆறாம் பத்து (3343-3452)


3343
வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்,
செய்கொள் செந்நெ லுயர்திருவண்வண் டூருறையும்,
கைகொள் சக்கரத் தென்கனி வாய்பெரு மானைக்கண்டு,
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே. 6.1.1

3344
காதல் மென்பெடை யோடுடன் மேயும் கருநாராய்,
வேத வேள்வி யொலிமுழங்கும் தண் டிருவண்வண்டூர்,
நாதன் ஞாலமெல் லாமுண்ட நம்பெரு மானைக்கண்டு,
பாதம் கைதொழுது பணியீ ரடியேன் திறமே. 6.1.2

3345
திறங்க ளாகியெங் கும்செய்களூடுழல் புள்ளினங்காள்,
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண் டூருறையும்,
கறங்கு சக்கரக் கைக்கனி வாய்ப்பெரு மானைக்கண்டு,
இறங்கி நீர்தொழுது பணியீரடியே னிடரே. 6.1.3

3346
இடரில் போகம் மூழ்கி யிணைந்தாடும் மடவன்னங்காள்,
விடலில் வேத வொலிமுழங்கும்தண் திருவண்வண்டூர்,
கடலில் மேனிப் பிரான்கண் ணணைநெடு மாலைக்கண்டு,
உடலம் நைந்தொருத் தியுரு கும் என் றுணர்த்துமினே. 6.1.4

3347
உணர்த்த லூட லுணர்ந்துடன் மேயும் மடவன்னங்காள்,
திணர்த்த வண்டல்கள் மேல்சங்கு சேரும் திருவண்வண்டூர்,
புணர்த்த பூந்தண் டுழாய்முடி நம்பெரு மானைக்கண்டு,
புணர்த்த கையினரா யடியேனுக்கும் போற்றுமினே. 6.1.5

3348
போற்றியான் இரந் தேன்புன்னை மேலுறை பூங்குயில்காள்,
சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண் டூருறையும்,
ஆற்ற லாழியங் கையம ரர்பெரு மானைக்கண்டு,
மாற்றங் கொண்டரு ளீர்மையல் தீர்வ தொருவண்ணமே. 6.1.6

3349
ஒருவண் ணம்சென்று புக்கெனக்கு
      ஒன்றுரை யொண்கிளியே,
செருவொண் பூம்பொழில் சூழ்செக்கர்
      வேலை திருவண்வண்டூர்,
கருவண்ணம் செய்யவாய் செய்யகண்
      செய்யகை செய்யகால்,
செருவொண் சக்கரம் சங்கடை
      யாளம் திருந்தக் கண்டே. 6.1.7

3350
திருந்தக் கண்டெனக் கொன்றுரை
      யாயொண் சிறுபூவாய்.
செருந்தி ஞாழல் மகிழ்புன்னை
      சூழ்தண் டிருவண்வண்டூர்,
பெருந்தண் தாமரைக் கண்பெரு
      நீண்முடி நாள்தடந்தோள்,
கருந்திண் மாமுகில் போல்திரு
      மேனி யடிகளையே. 6.1.8

3351
அடிகள் கைதொழு தலர்மேல்
      அசையும் அன்னங்காள்,
விடிவை சங்கொலிக் கும்திரு
      வண்வண் டூருறையும்,
கடிய மாயன்தன் னைக்கண்ணனை
      நெடு மாலைக்கண்டு,
கொடிய வல்வினை யேன்திறம்
      கூறுமின் வேறுகொண்டே. 6.1.9

3352
வேறு கொண்டும்மை யானிரந்
      தேன்வெறி வண்டினங்காள்,
தேறு நீர்ப்பம் பைவட
      பாலைத் திருவண்வண்டூர்,
மாறில் போரரக் கன்மதிள்
      நீறெழச் செற்றுகந்த,
ஏறுசேவக னார்க்கென்னை
      யுமுளள் என்மின்களே. 6.1.10

3353
மின்கொள் சேர்புரி நூல்குற
      ளாயகல் ஞாலம்கொண்ட,
வன்கள் வனடி மேல்குரு
      கூர்ச்சட கோபன்சொன்ன,
பண்கொள் ஆயிரத் துள்ளிவை
      பத்தும் திருவண்வண்டூர்க்கு,
இன்கொள் பாடல் வல்லார்
      மதனர்மின் னிடையவர்க்கே. 6.1.11

3354
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார முன்புநா னதஞ்சுவன்,
மன்னுடை இலங்கை யரண்காய்ந்த மாயவனே,
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் னினியது கொண்டு செய்வதென்,
என்னுடைய பந்தும் சுழலும் தந்து போகு நம்பீ. 6.2.1

3355
போகுநம் பீ.உன்தாமரை புரைகண் ணிணையும் செவ்வாய் முறுவலும்,
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோ மேயாம்?,
தோகைமா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவியோசை வைத்தெழ,
ஆகள் போகவிட்டுப் குழலூது போயிருந்தே. 6.2.2

3356
போயி ருந்தும்நின் புள்ளுவம் அறியாத வர்க்குரை நம்பி, நின்செய்ய
வாயிருங் கனியுங் கண்களும் விபரீத மிந்நாள்,
வேயி ருந்தடந் தோளினா ரித்திரு வருள்பெறு வார்யவர் கொல்
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே? 6.2.3

3357
ஆலி னீளிலை யேழுலக முண்டன்று நீகிடந் தாய்,உன் மாயங்கள்
மேலை வானவரு மறியா ரினியெம் பரமே?
வேலி னேர்த்தடங் கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்கவல் லாய்.எம்மைநீ கழறேலே. 6.2.4

3358
கழறேல் நம்பீ.உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கறியும், திண்சக்கர
நீழறு தொல்படை யாய்.உனக் கொன்றுணர்த் துவன் நான்,
மழறு தேன்மொழி யார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க,எம்
குழறு பூவையோடும் கிளியோடும் குழகேலே. 6.2.5

3359
குழகி யெங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மமொன் றில்லை,
பழகி யாமிருப் போம்பர மேயித் திருவருள்கள்?,
அழகி யாரிவ் வுலகுமூன் றுக்கும் தேவிதமை தகுவார் பலருளர்,
கழக மேறேல் நம்பீ.உனக்கும் இளைதே கன்மமே. 6.2.6

3360
கன்மமன் றெங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞா முண்டிட்ட,
நின்மலா. நெடியாய். உனக்கேலும் பிழைபிழையே,
வன்மமே சொல்லி யெம்மைநீ விளையாடுதி அதுகேட்கில் என்னைமார்,
தன்ம பாவமென் னாரொரு நான்று தடிபிணக்கே. 6.2.7

3361
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதி யாதது,ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தியினாய்,
இணக்கி யெம்மையெந் தோழிமார் விளையாடப் போதுமின் என போந்தோமை,
உணக்கி நீவளைத் தாலென்சொல் லாருக வாதவரே? 6.2.8

3362
உகவையால் நெஞ்சம் உள்ளுருகி
      உன்தாமரைத் தடங்கண் விழிகளின்,
அகவலைப் படுப்பான் அழித்தாயுன் திருவடியால்,
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாமடு
      சிறுசோறுங் கண்டு,நின்
முகவொளி திகழ முறுவல் செய்து நின்றிலையே. 6.2.9

3363
நின்றிலங்கு முடியினாய். இருபத் தோர் கால்
      அரசு களை கட்ட,
வென்றி நீண்மழுவா. வியன்ஞாலம் முன்படைத்தாய்,
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத்
      தோன்றிய கருமா ணிக்கச்சுடர்,
நின்றன்னால் நலிவே படுவோ மென்றும் ஆய்ச்சி யோமே. 6.2.10

3364
ஆய்ச்சி யாகிய அன்னையால் அன்று வெண்ணெய்
      வார்த்தையுள், சீற்ற முண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்,
ஏத்திய தமிழ்மாலை யாயிரத்துள் இவையு
      மோர்பத் திசையோடும்,
நாத்தன்னால் நவில வுரைப்பார்க் கில்லை நல்குரவே. 6.2.11

3365
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்,
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்,
பல்வகையும் பரந்தபெரு மானென்னை யாள்வானை,
செல்வம்மல்கு குடித்திரு விண்ணகர்க் கண்டேனே. 6.3.1

3366
கண்டவின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்ற முமாய்,
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்,
கண்டுகோ டற்கரிய பெருமானென்னை யாள்வானூர்,
தெண்டிரைப் புனல்சூழ் திருவிண்ணகர் நன்னகரே. 6.3.2

3367
நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்,
நிகரில்சூழ் சுடராயிரு ளாய்நில னாய்விசும்பாய்,
சிகரமா டங்கள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
புகர்கொள் கீர்த்தியல்லாலில்லை யாவர்க்கும் புண்ணியமே. 6.3.3

3368
புண்ணியம் பாவம்
      புணர்ச்சிபிரி வென்றிவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய்
      இன்மயாயல்லனாய்,
திண்ணமா டங்கள்சூழ்
      திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
கண்ணனின் னருளேகண்டு
      கொண்மின்கள் கைதவமே. 6.3.4

3369
கைதவம் செம்மை
      கருமை வெளுமையுமாய்,
மெய்பொய் யிளமை
      முதுமைபுதுமை பழமையுமாய்,
செய்யதிண் மதிள்சூழ்
      திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
பெய்தகாவு கண்டீர்
      பெருந்தேவுடை மூவுலகே. 6.3.5

3370
மூவுலகங் களுமாய்
      அல்லனாயுகப் பாய்முனிவாய்,
பூவில்வாழ் மகளாய்த்
      தவ்வையாய்ப்பு ழாய்பழியாய்,
தேவர்மே வித்தெழும்
      திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
பாவியேன் மனத்தே
      யுறைகின்ற பரஞ்சுடரே. 6.3.6

3371
பரஞ்சுடர் உடம்பாய்
      அழுக்குபதித்த வுடம்பாய்,
கரந்தும்தோன் றியும்நின்றும்
      கைதவங்கள் செய்யும்,விண்ணோர்
சிரங்களால் வணங்கும்
      திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
வரங்கொள்பாத மல்லாலில்லை
      யாவர்க்கும் வன்சரணே. 6.3.7

3372
வன்சரண் சுரர்க்காய்
      அசுரர்க்குவெங் கூற்றமுமாய்,
தன்சரண் நிழற்கீ
      ழுலகம்வைத்தும் வையாதும்,
தென்சரண் திசைக்குத்
      திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
என்சரணென் கண்ணன்
      என்னையாளுடை என்னப்பனே. 6.3.8

3373
என்னப்பன் எனக்காயிகுளாய்
      என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன் மணியப்பன்
      முத்தப்பனென் அப்பனுமாய்,
மின்னப்பொன் மதிள்சூழ்திரு
      விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,
தன்னொப்பா ரில்லப்பன்
      தந்தனன்தன தாள்நிழலே. 6.3.9

3374
நிழல்வெயில் சிறுமைபெருமை
      குறுமை நெடுமையுமாய்,
சுழல்வனநிற் பனமற்று
      மாயவை அல்லனுமாய்,
மழலைவாழ் வண்டுவாழ்
      திருவிண்ணகர் மன்னுபிரான்,
கழல்களன்றி மற்றோர்
      களைகணிலம் காண்மின்களே. 6.3.10

3375
காண்மின்க ளுலகீர். என்று
      கண்முகப் பேநிமிர்ந்த,
தாளிணையன் தன்னைக் குருகூர்ச்
      சடகோபன் சொன்ன,
ஆணையா யிரத்துத்திரு
      விண்ணகர்ப்பத் தும்வல்லார்,
கோணையின்றி விண்ணோர்க்
      கொன்றுமாவர் குரவர்களே. 6.3.11


3376
குரவை யாய்ச்சிய ரோடு கோத்ததும்
      குன்றமொன் றேந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்
      உட்பட மற்றும்பல,
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய
      வினைகளை யேயலற்றி,
இரவும் நன்பக லும்த விர்கிலம்
      என்ன குறைவெனக்கே? 6.4.1

3377
கேயத் தீங்குழ லூதிற்றும் நிரைமேய்த்த
      தும்,கெண்டை யொண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள்
      மணந்ததும் மற்றும்பல,
மாயக் கோலப் பிரான்தன் செய்கை
      நினைந்து மனம்குழைந்து,
நேயத் தோடு கழிந்த போதெனக்
      கெவ்வுல கம்நிகரே? 6.4.2

3378
நிகரில் மல்லரைச் செற்ற தும்நிரை
      மேய்த்ததும் நீணெடுங்கைச்,
சிகர மாகளி றட்டதும் இவை
      போல்வனவும் பிறவும்,
புகர் கொள் சோதிப் பிரான்தன் செய்கை
      நினைந்து புலம்பி,என்றும்
நுகர் வைகல் வைகப்பெற் றேன் எனக்கு
      என்இ னி நோவதுவே? 6.4.3

3379
நோவ ஆய்ச்சி யுரலோ டார்க்க
      இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்,
சாவப் பாலுண் டதும்ஊ ர் சகடம்
      இறச்சா டியதும்,
தேவக் கோல பிரான்தன் செய்கை
      நினைந்து மனம்குழைந்து,
மேவக் காலங்கள் கூடி னேன்எ னக்கு
      என்இ னி வேண்டுவதே? 6.4.4

3380
வேண்டி தேவ ரிரக்க வந்து
      பிறந்ததும் வீங்கிருள்வாய்,
பூண்டன் றன்னை புலம்பப் போயங்கோர்
      ஆய்க்குலம் புக்கதும்,
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத்
      துஞ்சவஞ் சம்செய்ததும்,
ஈண்டு நான்அ லற் றப்பெற் றென்எ னக்கு
      என்ன இகலுளதே? 6.4.5

3381
இகல்கொள் புள்ளை பிளந்த தும்இ மில்
      ஏறுகள் செற்றதுவும்,
உயர்கொள் சோலைக் குருந்தொ சித்ததும்
      உட்பட மற்றும்பல,
அகல்கொள் வையம் அளந்த மாயனென்
      அப்பன்றன் மாயங்களே,
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன
      மனப்ப ரிப்பே? 6.4.6

3382
மனப்பரி போட ழுக்கு மானிட
      சாதியில் தான்பிறந்து,
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்றன
      சீற்றத்தினை முடிக்கும்,
புனத்து ழாய்முடி மாலை மார்பனென்
      அப்பன்தன் மாயங்களே,
நினைக்கும் நெஞ்சுடை யேனெ னக்கினி
      யார்நிகர் நீணிலத்தே? 6.4.7

3383
நீணிலத் தொடுவான் வியப்ப நிறைபெரும்
      போர்கள் செய்து,
வாண னாயிரம் தோள்து ணித்ததும்
      உட்பட மற்றும்பல,
மாணி யாய்நிலம் கொண்ட மாயனென்
      அப்பன்றன் மாயங்களே,
காணும் நெஞ்சுடை யேனெனக் கினியென
      கலக்க முண்டே? 6.4.8

3384
கலக்க வேழ்கட லேழ்மலை யுலகே
      ழும்கழி யக்கடாய்,
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும்
      உட்பட மற்றும்பல,
வலக்கை யாழி யிடக்கை சங்கம்
      இவையுடை மால்வண்ணனை,
மலக்குநா வுடையேற்கு மாறுள தோவிம்
      மண்ணின் மிசையே? 6.4.9

3385
மண்மிசைப் பெரும்பாரம் நீங்கவோர்பாரத
      மாபெ ரும்போர்,
பண்ணி, மாயங்கள் செய்து, சேனையைப்
      பாழ்பட நூற்றிட்டுப்போய்,
விண்மி சைத்தன தாம மேபுக
      மேவிய சோதிதன்தாள்,
நண்ணி நான்வணங் கப்பெற் றென்எனக்
      கார்பிறர் நாயகரே? 6.4.10

3386
நாய கன்முழு வேழுல குக்குமாய்
      முழுவே ழுலகும்,தன்
வாய கம்புக வைத்துமிழ்ந் தவையாய்
      அவையல் லனுமாம்,
கேசவன் அடியிணை மிசைக்குரு கூர்ச்சட
      கோபன் சொன்ன
தூய வாயிரத் திப்பத்தால்
      பத்தராவர் துவளின்றியே. 6.4.11

3387
துவளில் மாமணி மாட மோங்கு
      தொலைவில் லிமங்க லம்தொழும்
இவளை, நீரினி யன்னை மீர்.உமக்
      காசை யில்லை விடுமினோ,
தவள வொண்சங்கு சக்க ரமென்றும்
      தாம ரைத்தடங் கணென்றும்,
குவளை யொண்மலர்க் கண்கள் நீர்மல்க
      நின்று நின்று குமுறுமே. 6.5.1

3388
குமுறு மோசை விழவொ லித்தொலை
      வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
அமுத மென்மொழி யாளை நீருமக்
      காசை யின்றி அகற்றினீர்,
திமிர்க்கொண் டாலொத்து நிற்கும் மற்றிவள்
      தேவ தேவபி ரானென்றே,
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க
      நெக்கொ சிந்து கரையுமே. 6.5.2

3389
கரைகொள் பைம்பொழில் தண்ப ணைத்தொலை
      வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
உரைகொ ளின்மொழி யாளை நீருமக்
      காசை யின்றி அகற்றினீர்,
திரைகொள் பௌவத்து சேர்ந்த தும்திசை
      ஞாலம் தாவி யளந்ததும்,
நிரைகள் மேய்த்தது மேபி தற்றி
      நெடுங்கண் ணீர்மல்க நிற்குமே. 6.5.3

3390
நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை
      வில்லி மங்கலங் கண்டபின்,
அற்க மொன்றும் அறிவு றாள்மலிந்
      தாள்கண் டீரிவள் அன்னைமீர்,
கற்கும் கல்வியெல் லாம்க ருங்கடல்
      வண்ணன் கண்ணபி ரானென்றே,
ஒற்க மொன்றுமி லள்உகந்துகந்து
      உள்மகிழ்ந்து குழையுமே. 6.5.4

3391
குழையும் வாள்முகத் தேழை யைத்தொலை
      வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
இழைகொள் சோதிச்செந் தாம ரைக்கட்f
      பிரானி ருந்தமை காட்டினீர்,
மழைபெய் தாலொக்கும் கண்ண நீரினொடு
      அன்று தொட்டும்மை யாந்து,இவள்
நுழையும் சிந்தையள் அன்னை மீர்.தொழும்
      அத்தி சையுற்று நோக்கியே. 6.5.5

3392
நோக்கும் பக்கமெல் லாம்க ரும்பொடு
      செந்நெ லோங்குசெந் தாமரை,
வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை
      வந்தொ லைவில்லி மங்கலம்,
நோக்கு மேல்அ த் திசையல் லால்மறு
      நோக்கி லள்வைகல் நாள்டொறும்,
வாய்க்கொள் வாசக மும்ம ணிவண்ணன்
      நாம மேயிவள் அன்னைமீர். 6.5.6

3393
அன்னை மீர்.அணி மாம யில்சிறு
      மானி வள்நம்மைக் கைவலிந்து,
என்ன வார்த்தையும் கேட்கு றாள்தொலை
      வில்லி மங்கலம் என்றல்லால்,
முன்னம் நோற்ற விதிகொ லோமுகில்
      வண்ணன் மாயங்கொ லோ,அவன்
சின்ன மும்திரு நாம முமிவள்
      வாய னகள்தி ருந்தவே. 6.5.7

3394
திருந்து வேதமும் வேள்வி யும்திரு
      மாம களிரும் தாம்,மலிந்,
திருந்து வாழ்பொரு நல்வ டகரை
      வண்தொ லைவில்லி மங்கலம்,
கருந்த டங்கண்ணி கைதொ ழுதஅ ந்
      நாள்தொ டங்கியிந் நாள்தொறும்,
இருந்தி ருந்து தர விந்த லோசன.
      என்றேன் றேநைந்தி ரங்குமே. 6.5.8

3395
இரங்கி நாள்தொறும் வாய்வெ ரீஇ யிவள்
      கண்ண நீர்கள் அலமர,
மரங்க ளுமிரங் குவ கை மணி
      வண்ண வோ. என்று கூவுமால்,
துரங்கம் வாய்பிளந் தானு றைதொலை
      வில்லி மங்கல மென்று,தன்
கரங்கள் கூப்பித் தொழுமவ் வூர்த்திரு
      நாமங் கற்றதற் பின்னையே. 6.5.9

3396
பின்னை கொல்நில மாம கள்கொல்?
      திரும கள்கொல்? பிறந்திட்டாள்,
என்ன மாயங்கொ லோ?இ வள்நெடு
      மாலென் றேநின்று கூவுமால்,
முன்னி வந்தவன் நின்றி ருந்துறை
      யும்தொ லைவில்லி மங்கலம்
சென்னி யால்வணங் கும்அ வ் வூர்த்திரு
      நாமம் கேட்பது சிந்தையே. 6.5.10

3397
சிந்தை யாலும்சொல் லாலும் செய்கையினாலும்
      தேவ பிரானையே,
தந்தை தாயென் றடைந்த வண்குரு
      கூர வர்சட கோபன்சொல்,
முந்தை யாயிரத் துள்ளி வைதொலை
      வில்லி மங்கலத் தைச்சொன்ன,
செந்தமிழ்பத்தும் வல்லாரடிமை
      செய் வார்திரு மாலுக்கே. 6.5.11

3398
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு,
நீலக் கருநிற மேக நியாயற்கு,
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு,என் கொங்கலர்
ஏலக் குழலி யிழந்தது சங்கே. 6.6.1

3399
சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு,
செங்கனி வாய்ச்செய்ய தாமரை கண்ணற்கு,
கொங்கலர் தண்ணந் துழாய்முடி யானுக்கு,என்
மங்கை யிழந்தது மாமை நிறமே. 6.6.2

3400
நிறங்கரி யானுக்கு நீடுல குண்ட,
திறம்கிளர் வாய்ச்சிறு கள்ள னவற்கு,
கறங்கிய சக்கரக் கையவ னுக்கு,என்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே. 6.6.3

3401
பீடுடை நான்முக னைப்படைத் தானுக்கு,
மாடுடை வையம் அளந்த மணாளற்கு,
நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு,என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே. 6.6.4

3402
பண்புடை வேதம் பயந்த பரனுக்கு,
மண்புரை வையம் இடந்த வராகற்கு,
தெண்புனல் பள்ளியெந் தேவப் பிரானுக்கு,என்
கண்புனை கோதை இழந்தது கற்பே. 6.6.5

3403
கற்பகக் காவன நற்பல தோளற்கு,
பொற்சுடர்க் குன்றன்ன பூந்தண் முடியற்கு,
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்கு,என்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே. 6.6.6

3404
மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு,
பையர வினணைப் பள்ளியி னானுக்கு,
கையொடு கால்செய்ய கண்ண பிரானுக்கு,என்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே. 6.6.7

3405
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு,
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு,
பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்கு,என்
வாசக் குழலி இழந்தது மாண்பே. 6.6.8

3406
மாண்பமை கோலத்தெம் மாயக் குறளற்கு,
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு,
காண்பெருந் தோற்றத்தெங் காகுத்த நம்பிக்கு,என்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே. 6.6.9

3407
பொற்பமை நீண்முடிப் பூந்தண் டுழாயற்கு,
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு,
நிற்பன பல்லுரு வாய்நிற்கு மாயற்கு,என்
கற்புடை யாட்டி யிழந்தது கட்டே. 6.6.10

3408
கட்டெழில் சோலைநல் வேங்கட வாணனை,
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்,
கட்டெழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,
கட்டெழில் வானவர் போகமுண் பாரே. 6.6.11

3409
உண்ணுஞ் சோறு பருகுநீர்
      தின்னும்வெற் றிலையுமெல்லாம்
கண்ணன், எம்பெருமான் னென்றென்
      றேகண்கள் நீர்மல்கி,
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக்
      கவனூர் வினவி,
திண்ண மென்னிள மான்புகு
      மூர்திருக் கோளூரே. 6.7.1

3410
ஊரும் நாடும் உலகும்
      தன்னைப்போல், அவனுடைய
பேரும் தார்களு மேபிதற்றக்
      கற்பு வானிடறி,
சேருநல் வளஞ்சேர் பழனத்
      திருகோ ளூர்க்கே,
போருங் கொலுரை யீர்க்கொடி
      யேன்கொடி பூவைகளே. 6.7.2

3411
பூவை பைங்கிளிகள் பந்து
      தூதைபூம் புட்டில்கள்,
யாவையும் திருமால் திருநாமங்
      களேகூவி யெழும்,என்
பாவை போயினித் தண்பழனத்
      திருக்கோ ளூர்க்கே,
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணோ
      டென்செய் யுங்கொலோ? 6.7.3

3412
கொல்லை யென்பர்கொ லோகுணம்
      மிக்கனள் என்பர்கொலோ,
சிலலை வாய்ப்பெண் டுகளயற்
      சேரியுள் ளாருமெல்லே,
செல்வம் மல்கி யவன்கிடந்த
      திருக்கோ ளூர்க்கே,
மெல்லிடை நுடங்க இளமான்
      செல்ல மேவினளே. 6.7.4

3413
மேவி நைந்து நைந்துவிளை
      யாடலுறா ளென்சிறுத்
தேவிபோய், இனித்தன்
      திருமால் திருக்கோ ளூரில்,
பூவியல் பொழிலும் தடமும்
      அவன்கோ யிலுங்கண்டு,
ஆவியுள் குளிர எங்ஙனே
      யுகக்குங்கொல் இன்றே? 6.7.5

3414
இன்றெனக் குதவா தகன்ற
      இளமான் இனிப்போய்,
தென்திசைத் திலத மனைய
      திருக்கோ ளூர்க்கே
சென்று,தன் திருமால் திருக்கண்ணும்
      செவ்வாயும் கண்டு,
நின்று நின்று நையும்
      நெடுங்கண்கள் பனிமல்கவே. 6.7.6

3415
மல்குநீர் கண்ணோடு மையலுற்ற மனத்தனளாய்,
அல்லுநன் பகலும் நெடுமாலென்றழைத் தினிப்போய்,
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோ ளூர்க்கே,
ஒல்கி யொல்கி நடந்தெங்ஙனே புகுங்கொ லோசிந்தே? 6.7.7

3416
ஒசிந்த நுண்ணிடை மேல்கையை
      வைத்து நொந்துநொந்து,
கசிந்த நெஞ்சின ளாய்க்கண்ண
      நீர்த்துளும்பச் செல்லுங்கொல்,
ஒசிந்த வொண்மல ராள்கொழுநன்
      திருக்கோ ளூர்க்கே,
கசிந்த நெஞ்சின ளாயெம்மை
      நீத்தஎ ம் காரிகையே? 6.7.8

3417
காரியம் நல்லன களவை காணிலென்
      கண்ணனுக்கென்று,
ஈரியா யிருப்பாளி தெல்லாம்
      கிடக்க இனிப்போய்,
சேரி பல்பழி தூயிரைப்பத்
      திருக்கோ ளூர்க்கே,
நேரிழை நடந்தா ளெம்மை
      யொன்றும் நினைத்திலளே. 6.7.9

3418
நினைக்கிலேன் தெய்வங்காள் நெடுங்கண்
      இளமான் இனிப்போய்,
அனைத்து லகுமு டைய
      அரவிந்த லோசனனை,
தினைத்தனை யும்விடா ளவன்சேர்
      திருக்கோ ளூர்க்கே,
மனைக்கு வான்பழியும் நினையாள்
      செல்ல வைத்தனளே. 6.7.10

3419
வைத்த மாநிதி யாம்மது
      சூதனை யேயலற்றி,
கொத்த லர்பொழில் சூழ்குரு
      கூர்ச்சட கோபன்சொன்ன,
பத்து நூறு ளிப்பத்
      தவன்சேர் திருக்கோளூர்க்கே,
சித்தம் வைத்து ரைப்பார்
      திகழ்பொன் னுலகாள்வாரே. 6.7.11

3420
பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?,
நன்னலப் புள்ளினங்காள். வினையாட்டியேன்நானிரந்தேன்,
முன்னுல கங்களெல்லாம் படைத்தமுகில்வண்ணன்கண்ணன்,
என்னலங் கொண்டபிரான் தனக்கென் நிலைமையுரைத்தே? 6.8.1

3421
மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார்முன்பென் கையிருந்து,
நெய்யம ரின்னடிசில் நிச்சல்பாலோடு மேவீரோ,
கையமர் சக்கரத்தென் கனிவாய்ப்பெரு மானைக்கண்டு
மெய்யமர் காதல்சொல்லிக் கிளிகாள்.விரைந் தோடிவந்தே? 6.8.2

3422
ஓடிவந் தென்குழல்மேல் ஒளிமாமல ரூதீரோ,
கூடிய வண்டினங்காள். குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறெழ செற்றபிரான்,
சூடிய தண்டுளவ முண்டதூமது வாய்கள்கொண்டே? 6.8.3

3423
தூமது வாய்கள்கொண்டு
      வந்தென்முல்லைகள் மேல்தும்பிகாள்,
பூமது வுண்ணச்செல்லில்
      வினையேனைப் பொய்செய்தகன்ற,
மாமது வார்தண்டுழாய்
      முடிவானவர் கோனைக்கண்டு,
யாமிது வோதக்கவா
      றென்னவேண்டும்கண் டீர்நுங்கட்கே. 6.8.4

3424
நுங்கட்கி யானுரைக்கேன்
      வம்மின்யான்வளர்த் தகிளிகாள்,
வெங்கட்புள் ளூர்ந்துவந்து
      வினையேனைநெஞ் சம்கவர்ந்த,
செங்கட் கருமுகிலைச்
      செய்யவாய்ச்செழுங் கற்பகத்தை,
எங்குச்சென் றாகிலும்கண்
      டிதுவோதக்க வாறென்மினே. 6.8.5

3425
என்மின்னு நூல்மார்வ
      னென்கரும்பெரு மானென்கண்ணன்,
தன்மன்னு நீள்கழல்மேல்
      தண்டுழாய்நமக் கன்றிநல்கான்,
கன்மின்க ளென்றும்மையான்
      கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,
சென்மின்கள் தீவினையேன்
      வளர்த்தசிறு பூவைகளே. 6.8.6

3426
பூவைகள் போல்நிறத்தன்
      புண்டரீகங்கள் போலும்கண்ணன்,
யாவையும் யாவருமாய்
      நின்றமாயனென் ஆழிபிரான்,
மாவைவல் வாய்பிளந்த
      மதுசூதற்கென் மாற்றம்சொல்லி,
பாவைகள். தீர்க்கிற்றிரே
      வினையாட்டியேன் பாசறவே. 6.8.7

3427
பாசற வெய்தியின்னே
      வினையேனெனை யூழிநைவேன்?,
ஆசறு தூவிவெள்ளைக்
      குருகே.அருள் செய்யொருநாள்,
மாசறு நீலச்சுடர்
      முடிவானவர் கோனைக்கண்டு,
ஏசறும் நும்மையல்லால்
      மறுநோக்கிலள் பேர்த்துமற்றே. 6.8.8

3428
பேர்த்துமற் றோர்களைகண்
      வினையாட்டியேன் நானொன்றிலேன்,
நீர்த்திரை மேலுலவி
      யிரைதேரும்பு தாவினங்காள்,
கார்த்திரள் மாமுகில்போல்
      கண்ணன்விண்ணவர் கோனைக்கண்டு,
வார்த்தைகள் கொண்டருளி
      யுரையீர்வைகல் வந்திருந்தே. 6.8.9

3429
வந்திருந் தும்முடைய
      மணிச்சேவலும் நீருமெல்லாம்,
அந்தர மொன்றுமின்றி
      யலர்மேலசை யுமன்னங்காள்,
என்திரு மார்வற்கென்னை
      யின்னாவாறிவள் காண்மினென்று,
மந்திரத் தொன்றுணர்த்தி
      யுரையீர்வைகல் மறுமாற்றங்களே. 6.8.10

3430
மாற்றங்க ளாய்ந்துகொண்டு
      மதுசூதபி ரானடிமேல்,
நாற்றங்கொள் பூம்பொழில்சூழ்
      குருகூர்ச்சட கோபன்சொன்ன,
தோற்றங்க ளாயிரத்துள்
      இவையுமொரு பத்தும்வல்லார்,
ஊற்றின்கண் நுண்மணல்போல்
      உருகாநிற்பர் நீராயே. 6.8.11

3431
நீராய் நிலனாய் தீயாய்க் காலாய் நெடுவானாய்,
சீரார் சுடர்க்க ளிரண்டாய்ச் சிவனாய் அயனாய்,
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய், ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே. 6.9.1

3432
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி,
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே,
நண்ணி யுனைநான் கண்டு கந்து கூத்தாட,
நண்ணி யொருநாள் ஞாலத் தூடே நடவாயே. 6.9.2

3433
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்,
சாலப் பலநாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே,
கோலத் திருமா மகளோ டுன்னைக் கூடாதே,
சாலப் பலநாள் அடியேன் இன்னம் தளர்வேனோ? 6.9.3

3434
தளர்ந்தும் முறிந்தும் சகட வசுரர் உடல்வேறா,
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே,
கிளர்ந்து பிரமன் சிவனிந் திரன்விண் ணவர்சூழ,
விளங்க வொருநாள் காண வாராய் விண்மீதே. 6.9.4

3435
விண்மீதிருப்பாய். மலைமேல் நிற்பாய். கடல்சேர்ப்பாய்,
மண்மீதுழல்வாய். இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்,
எண்மீதியன்ற புறவண்டத்தாய். எனதாவி,
உண்மீதாடி உருக்காட்டாதே யொளிப்பாயோ? 6.9.5

3436
பாயோர் அடிவைத் ததன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாய்,ஓர் அடியாய் எல்லா வுலகும் தடவந்த
மாயோன், உன்னைக் காண்பான் வருந்தி யெனைநாளும்,
தீயோடுடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ? 6.9.6

3437
உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்,
உலகுக் கேயோ ருயிரு மானாய் புறவண்டத்து,
அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ,
அலகில் பொலிந்த அறிவி லேனுக் கருளாயே. 6.9.7

3438
அறிவி லேனுக் கருளாய் அறிவா ருயிரானாய்,
வெறிகொள் சோதி மூர்த்தி. அடியேன் நெடுமாலே,
கிறிசெய் தென்னைப் புறதிட் டின்னம் கெடுப்பாயோ,
பிறிதொன் றறியா அடியே னாவி திகைக்கவே? 6.9.8

3439
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,
பாவி யேனைப் பலநீ காட்டிப் படுப்பாயோ,
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே,
கூவிக் கொள்ளும் கால மின்னம் குறுகாதோ? 6.9.9

3440
குறுகா நீளா இறுதி கூடா எனையூழி,
சிறுகா பெருகா அளவி லின்பம் சேர்ந்தாலும்,
மறுகா லின்றி மாயோ னுனக்கே யாளாகும்,
சிறுகா லத்தை யுறுமோ அந்தோ தெரியிலே? 6.9.10

3441
தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,
தெரியச் சொன்ன ஓரா யிரத்து ளிப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே. 6.9.11

3442
உலகம் உண்ட பெருவாயா.
      உலப்பில் கீர்த்தி யம்மானே,
நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி.
      நெடியாய். அடியே னாருயிரே,
திலதம் உலகுக் காய்நின்ற
      திருவேங் கடத்தெம் பெருமானே,
குலதொல் லடியேன் உன்பாதம்
      கூடு மாறு கூறாயே. 6.10.1

3443
கூறாய் நீறாய் நிலனாகிக்
      கொடுவல் லசுரர் குலமெல்லாம்
சீறா எறியும் திருநேமி
      வலவா. தெய்வக் கோமானே,
சேறார் சுனைத்தா மரைசெந்தீ
      மலரும் திருவேங் கடத்தானே,
ஆறா அன்பில் அடியேனுன்
      அடிசேர் வண்ணம் அருளாயே. 6.10.2

3444
வண்ண மருள்கொள் அணிமேக
      வண்ணா. மாய அம்மானே,
எண்ணம் புகுந்து தித்திக்கும்
      அமுதே. இமையோர் அதிபதியே,
தெண்ணல் அருவி மணிபொன்முத்
      தலைக்கும் திருவேங் கடத்தானே,
அண்ண லே.உன் அடிசேர
      அடியேற் காவா வென்னாயே. 6.10.3

3445
ஆவா வென்னா துலகத்தை
      அலைக்கும் அசுரர் வாணாள்மேல்,
தீவாய் வாளி மழைபொழிந்த
      சிலையா. திருமா மகள்கேள்வா,
தேவா சுரர்கள் முனிக்கணங்கள்
      விரும்பும் திருவேங் கடத்தானே,
பூவார் கழல்கள் அருவினையேன்
      பொருந்து மாறு புணராயே. 6.10.4

3446
புணரா நின்ற மரமேழன்
      றெய்த வொருவில் வலவாவோ,
புணரேய் நின்ற மரமிரண்டின்
      நடுவே போன முதல்வாவோ,
திணரார் மேகம் எனக்களிறு
      சேரும் திருவேங் கடத்தானே,
திணரார் சார்ங்கத் துன்பாதம்
      சேர்வ தடியே னெந்நாளே? 6.10.5

3447
எந்நா ளேநாம் மண்ணளந்த
      இணைத்தா மரைகள் காண்பதற்கெ ன்று,
எந்நா ளும்நின் றிமையோர்கள்
      ஏத்தி யிறைஞ்சி யினமினமாய்,
மெய்ந்நா மனத்தால் வழிபாடு
      செய்யும் திருவேங் கடத்தானே,
மெய்ந்நா னெய்தி யெந்நாளுன்
      அடிக்கண் அடியேன் மேவுவதே? 6.10.6

3448
அடியேன் மேவி யமர்கின்ற
      அமுதே. இமையோர் அதிபதியே,
கொடியா அடுபுள் ளுடையானே.
      கோலக் கனிவாய்ப் பெருமானே,
செடியார் வினைகள் தீர்மருந்தே.
      திருவேங் கடத்தெம் பெருமானே,
நொடியார் பொழுதும் உன்பாதம்
      காண நோலா தாற்றேனே. 6.10.7

3449
நோலா தாற்றேன் நுன்பாதம்
      காண வென்று நுண்ணுணர்வில்,
நீலார் கண்டத் தம்மானும்
      நிறைநான் முகனு மிந்திரனும்,
சேலேய் கண்ணார் பலர்சூழ
      விரும்பும் திருவேங் கடத்தானே,
மாலாய் மயக்கி யடியேன்பால்
      வந்தாய் போல வாராயே. 6.10.8

3450
வந்தாய் போலே வாராதாய்.
      வாரா தாய்போல் வருவானே,
செந்தா மரைக்கண் செங்கனிவாய்
      நால்தோ ளமுதே. எனதுயிரே,
சிந்தா மணிகள் பகரல்லைப்
      பகல்செய் திருவேங் கடத்தானே,
அந்தோ. அடியேன் உன்பாதம்
      அகல கில்லேன் இறையுமே. 6.10.9

3451
அகல கில்லேன் இறையும் என்
      றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய். உலகமூன்
      றுடையாய். என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள்
      விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன்
      அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே. 6.10.10

3452
அடிக்கீ ழமர்ந்து புகுந்தடியீர்.
      வாழ்மின் என்றென் றருள்கொடுக்கும்
படிக்கே ழில்லாப் பெருமானைப்
      பழனக் குருகூர்ச் சடகோபன்,
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்
      திருவேங் கடத்துக் கிவைபத்தும்,
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து
      பெரிய வானுள் நிலாவுவரே. 6.10.11
--------------

திருவாய் மொழி ஏழாம் பத்து (3453-3562 )


3453
உண்ணி லாவிய ஐவ ரால்குமை
      தீற்றி யென்னையுன் பாத பங்கயம்,
நண்ணிலா வகையே நலிவா னின்ன மெண்ணு கின்றாய்,
எண்ணி லாப்பெரு மாயனே. இமையோர்கள்
      ஏத்து முலக மூன்றுடை,
அண்ண லே.அமு தே.அப்ப னே.என்னை யாள்வானே. (2) 7.1.1

3454
என்னை யாளும் வங்கோ வோரைந் திவைபெய்
      திராப்பகல் மோது வித்திட்டு,
உன்னை நானணு காவகை செய்து போதி கண்டாய்,
கன்ன லே.அமு தே.கார் முகில்வண்ண
      னே.கடல் ஞாலம் காக்கின்ற,
மின்னு நேமியி னாய்.வினை யேனுடை வேதியனே. 7.1.2

3455
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை
      மோது வித்து,உன் திருவடிச்
சாதி யாவகை நீதடுத் தென்பெறு தியந்தோ,
ஆதி யாகி யகலி டம்படைத் துண்டு மிழந்து
      கடந்திடந் திட்ட,
சோதி நீண்முடி யாய்.தொண்ட னேன்மது சூதனனே. 7.1.3

3456
சூது நானறி யாவகை சுழற்றியோர்
      ஐவரைக் காட்டி,உன் அடிப்
போது நானணு காவகை செய்து போதி கண்டாய்,
யாதும் யாவரு மின்றிநின் னகம்பால்
      ஒடுக்கியோ ராலி னீளிலை,
மீது சேர்குழவி. வினையேன் வினைதீர் மருந்தே. 7.1.4

3457
தீர்மருந் தின்றி யைந்து நோயடும்
      செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை,
நேர்ம ருங்குடைத் தாவடைத்து நெகிழிப்பான்
      ஒக்கின்றாய்,
ஆர்ம ருந்தினி யாகுவர்? அடலாழி
      யேந்தி யசுரர் வன்குலம்,
வேர்ம ருங்கறுத் தாய்.விண்ணு ளார்பெரு மானேயோ. 7.1.5

3458
விண்ணு ளார்பெரு மாற்க டிமைசெய்
      வாரை யும்செறும் ஐம்பு லனிவை,
மண்ணு ளென்னைப் பெற்றா லெஞ்செய்
      யாமற்று நீயும்விட்டால்?
பண்ணு ளாய்.கவி தன்னு ளாய்.
      பத்தியினுள் ளாய்.பர மீசனே, வந்தென்
கண்ணுளாய். நெஞ்சுளாய். சொல்லுளாய்.
      ஒன்று சொல்லாயே. 7.1.6

3459
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத
      ஒரைவர் வன்கயவரை,
என்று யான்வெல் கிற்பனுன் திருவரு ளில்லையேல்?,
அன்று தேவர் அசுரர் வாங்க
      அலைகட லரவம் அளாவி,ஓர்
குன்றம் வைத்த எந்தாய்.கொடியேன் பருகின் னமுதே. 7.1.7

3460
இன்ன முதெனத் தோன்றி யோரைவர்
      யாவரையும் மயக்க, நீவைத்த
முன்ன மாயமெல் லால்முழு வேரரிந்து, என்னையுன்
சின்ன மும்திரு மூர்த்தியும் சிந்தித் தேத்திக்
      கைதொழ வேயரு ளெனக்கு,
என்னம் மா.என் கண்ணா. இமையோர்தம் குலமுதலே. 7.1.8

3461
குலமுத லிடும்தீ வினைக்கொடு வன்குழியினில்
      வீழ்க்கும் ஐவரை
வலமுதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்,
நிலமுத லினீவ் வுலகுக்கும் நிற்பன
      செல்வன என,பொருள்
பலமுதல் படைத்தாய்.என் கண்ணா.என் பரஞ்சுடரே. 7.1.9

3462
என்பரஞ் சுடரே. என்றுன்னை அலற்றியுன்
      இணைத்தா மரைகட்கு,
அன்புருகி நிற்கும் அதுநிற்கச் சுமடு தந்தாய்,
வன்பரங்க ளெடுத்துஐவர் திசைதிசை
      வலித்தெற்று கின்றனர்
முன்பரவை கடைந்தமுதங் கொண்ட மூர்த்தியோ. 7.1.10

3463
கொண்ட மூர்த்தியோர் மூவராய்க் குணங்கள்
      படைத்தளித் துக்கெடுக் கும்,அப்
புண்ட ரீகப்கொப் பூழ்ப்புனற் பள்ளி யப்பனுக்கே,
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
      சொல்லா யிரத்து ளிப்பத்தும்,
கண்டு பாடவல் லார்வினை போம்கங்கு லும்பகலே. (2) 7.1.11

3464
கங்குலும் பகலும் கண் துயி லறியாள்
      கண்ணநீர் கைகளால் இறைக்கும்,
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும்
      தாமரைக் கண் என்று தளரும்,
எங்ஙனே தரிக்கே னுன்னைவிட்டு என்னும்
      இருநிலம் கைதுழா விருக்கும்,
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய்.
      இவள்திறத் தெஞ்செய்கின் றாயே? (2) 7.2.1

3465
எஞ்செய்கின் றாயென் தாமரைக் கண்ணா.
      என்னும்கண் ணீர்மல்க இருக்கும்,
எஞ்செய்கே னெறிநீர்த் திருவரங் கத்தாய்?
      என்னும்வெவ் வுயிர்த்துயிர்த் துருகும்
முன்செய்த வினையே. முகப்படாய் என்னும்
      முகில்வண்ணா. தகுவதோ? என்னும்,
முஞ்செய்திவ் வுலகம் உண்டுமிழந் தளந்தாய்.
      எங்கொலோ முடிகின்ற திவட்கே? 7.2.2

3466
வட்கிலள் இறையும் மணிவண்ணா. என்னும்
      வானமே நோக்கும்மை யாக்கும்,
உட்குடை யசுரர் உயிரெல்லா முண்ட
      ஒருவனே. என்னுமுள் ளுருகும்,
கட்கிலீ. உன்னைக் காணுமா றருளாய்
      காகுத்தா. கண்ணனே. என்னும்,
திட்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்.
      இவள்திறத் தென்செய்திட் டாயே? 7.2.3

3467
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்
      எழுந்துலாய் மயங்கும்கை கூப்பும்,
கட்டமே காதல். என்றுமூர்ச் சிக்கும்
      கடல்வண்ணா. கடியைகாண் என்னும்,
வட்டவாய் நேமி வலங்கையா. என்னும்
      வந்திடாய் என்றென்றே மயங்கும்,
சிட்டனே. செழுநீர்த் திருவரங் கத்தாய்.
      இவள்திறத் தெஞ்சிந்தித் தாயே? 7.2.4

3468
சிந்திக்கும் திசைக்கும் தேறும்கை கூப்பும்
      திருவரங் கத்துள்ளாய். என்னும்
வந்திக்கும், ஆங்கே மழைக்கண்ணீர் மல்க
      வந்திடாய் என்றென்றே மயங்கும்,
அந்திப்போ தவுணன் உடலிடந் தானே.
      அலைகடல் கடைந்தவா ரமுதே,
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
      தையலை மையல்செய் தானே. 7.2.5

3469
மையல்செய் தென்னை மனம்கவர்ந் தானே.
      என்னும் மா மாயனே. என்னும்,
செய்யவாய் மணியே. என்னும் தண் புனல்சூழ்
      திருவரங் கத்துள்ளாய். என்னும்,
வெய்யவாள் தண்டு சங்குசக் கரம்வில்
      ஏந்தும்விண் ணோர்முதல். என்னும்,
பைகொள்பாம் பணையாய். இவள்திறத் தருளாய்
      பாவியேன் செய்யற்பா லதுவே. 7.2.6

3470
பாலதுன் பங்கள் இன்பங்கள் படைத்தாய்.
      பற்றிலார் பற்றநின் றானே,
காலசக் கரத்தாய். கடலிடங் கொண்ட
      கடல்வண்ணா. கண்ணணே. என்னும்,
சேல்கொள்தண் புனல்சூழ் திருவரங் கத்தாய்.
      என்னும் என் தீர்த்தனே. என்னும்,
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்
      என்னுடைக் கோமளக் கொழுந்தே. 7.2.7

3471
கொழுந்துவா னவர்கட்கு என்னும் குன்றேந்திக்
      கோநிரை காத்தவன். என்னும்,
அழுந்தொழும் ஆவி அனலவெவ் வுயிர்க்கும்
      அஞ்சன வண்ணனே. என்னும்,
எழுந்துமேல் நோக்கி யிமைப்பிலள் இருக்கும்
      எங்ஙனே நோக்குகேன்? என்னும்,
செழுந்தடம் புனல்சூழ் திருவரங் கத்தாய்.
      என்செய்கேன் என்திரு மகட்கே? 7.2.8

3472
என்திரு மகள்சேர் மார்வனே. என்னும்
      என்னுடை யாவியே. என்னும்,
நின்திரு எயிற்றால் இடந்துநீ கொண்ட
      நிலமகள் கேள்வனே. என்னும்,
அன்றுரு வேழும் தழுவிநீ கொண்ட
      ஆய்மகள் அன்பனே. என்னும்,
தென்திரு வரங்கம் கோயில்கொண் டானே.
      தெளிகிலேன் முடிவிவள் தனக்கே. (2) 7.2.9

3473
முடிவிவள் தனக்கொன் றறிகிலேன் என்னும்
      மூவுல காளியே. என்னும்,
கடிகமழ் கொன்றைச் சடையனே. என்னும்
      நான்முகக் கடவுளே. என்னும்,
வடிவுடை வானோர் தலைவனே. என்னும்
      வண்திரு வரங்கனே. என்னும்,
அடியடை யாதாள் போலிவள் அணுகி
      அடைந்தனள் முகில்வண்ணன் அடியே. 7.2.10

3474
முகில்வண்ணன் அடியை அடைந்தருள் சூடி
      உய்ந்தவன் மொய்புனல் பொருநல்,
துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்வண்பொழில்சூழ்
      வண்குரு கூர்ச்சட கோபன்,
முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொன்மாலை
      ஆயிரத் திப்பத்தும் வல்லார்,
முகில்வண்ண வானத் திமையவர் சூழ
      இருப்பர்பே ரின்பவெள் ளத்தே. (2) 7.2.11

3475
வெள்ளைச் சுரிசங்கொ டாழி யேந்தித்
      தாமரைக் கண்ணனென் னெஞ்சி னூடே,
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர்
      எஞ்சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள்,
வெள்ளச் சுகமவன் வீற்றி ருந்த
      வேத வொலியும் விழா வொலியும்,
பிள்ளைக் குழாவிளை யாட்டொலி யும் அறாத்
      திருப்பே ரையில் சேர்வன் நானே. (2) 7.3.1

3476
நானக் கருங்குழல் தோழி மீர்காள்.
      அன்னை யர்காள்.அயல் சேரியீர்காள்,
நானித் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்
      என்வசம் அன்றிதி ராப்ப கல்போய்,
தேன்மொய்த்த பூம்பொழில் தண்ப ணைசூழ்
      தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,
வானப்பி ரான்மணி வண்ணன் கண்ணன்
      செங்கனி வாயின் திறத்த துவே. 7.3.2

3477
செங்கனி வாயின் திறத்த தாயும்
      செஞ்சுடர் நீண்முடித் தாழ்ந்த தாயும்,
சங்கொடு சக்கரம் கண்டு கந்தும்
      தாமரைக் கண்களுக் கற்றுத் தீர்ந்தும்,
திங்களும் நாளும் விழாவ றாத
      தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,
நங்கள் பிரானுக்கென் னெஞ்சம் தோழீ.
      நாணும் நிரையு மிழந்த துவே. 7.3.3

3478
இழந்தவெம் மாமை திறத்துப் போன
      என்னெஞ்சி னாருமங் கே ஒழிந்தார்,
உழந்தினி யாரைக்கொண் டெனு சாகோ?
      ஓதக் கடலொலி போல எங்கும்,
எழுந்தநல் வேதத் தொலிநின் றோங்கு
      தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,
முழங்குசங் கக்கையன் மாயத் தாழ்ந்தேன்
      அன்னையர் காள்.என்னை யென்மு னிந்தே? 7.3.4

3479
முனிந்து சகடம் உதைத்து மாயப்
      பேய்முலை யுண்டு மருதி டைப்போய்,
கனிந்த விளவுக்குக் கன்றெ றிந்த
      கண்ண பிரானுக்கென் பெண்மை தோற்றேன்,
முனிந்தினி யென்செய்தீர் அன்னை மீர்காள்.
      முன்னி யவன்வந்து வீற்றி ருந்த,
கனிந்த பொழில்திருப் பேரை யிற்கே
      காலம் பெறவென்னைக் காட்டு மினே. 7.3.5

3480
காலம் பெறவென்னைக் காட்டு மின்கள்
      காதல் கடலின் மிகப் பெரிதால்,
நீல முகில்வண் ணத்தெம் பெருமான்
      நிற்குமுன் னேவந்தென் கைக்கும் எய்தான்,
ஞாலத் தவன்வந்து வீற்றி ருந்த
      நான்மறை யாளரும் வேள்வி யோவா,
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
      கூடு புனல்திருப் பேரை யிற்கே. 7.3.6

3481
பேரெயில் சூழ்கடல் தென்னி லங்கை
      செற்ற பிரான்வந்து வீற்றி ருந்த,
பேரையிற் கேபுக்கென் னெஞ்சம் நாடிப்
      பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்,
ஆரை யினிங் குடையம் தோழி.
      என்னெஞ்சம் கூவ வல்லாரு மில்லை,
ஆரை யினிக்கொண்டென் சாதிக் கின்றது?
      என்னெஞ்சம் கண்டது வேகண் டேனே. 7.3.7

3482
கண்டது வேகொண்டெல் லாருங் கூடிக்
      கார்க்கடல் வண்ணனோ டெந்தி றத்துக்
கொண்டு,அலர் தூற்றிற் றதுமுத லாக்
      கொண்டவென் காத லுரைக்கில் தோழீ,
மண்டிணி ஞால முமேழ் கடலும்
      நீள்வி சும்பும் கழியப் பெரிதால்,
தெண்திரை சூழ்ந்தவன் வீற்றி ருந்த
      தெந்திருப் பேரையில் சேர்வன் சென்றே. 7.3.8

3483
சேர்வஞ்சென் றென்னுடைத் தோழி மீர்காள்.
      அன்னையர் காள்.என்னைத் தேற்ற வேண்டா,
நீர்கள் உரைக்கின்ற தென்னி தற்கு?
      நெஞ்சும் நிறைவும் எனக்கிங் கில்லை,
கார்வண்ணன் கார்க்கடல் ஞால முண்ட
      கண்ண பிரான்வந்து வீற்றி ருந்த,
ஏர்வள வொண்கழ னிப்பழ னத்துத்
      தென்திருப் பேரை யின்மா நகரே. 7.3.9

3484
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
      நாணெனக் கில்லையென் தோழி மீர்காள்,
சிகரம் அணிநெடு மாடம் நீடு
      தென்திருப் பேரையில் வீற்றி ருந்த,
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
      நூற்றுவ ரையன்று மங்க நூற்ற,
நிகரில் முகில்வண்ணன் நேமி யானென்
      னெஞ்சம் கவர்ந்தெனை யூழி யானே? 7.3.10

3485
ஊழிதோ றூழி யுருவம் பேரும்
      செய்கையும் வேறவன் வையங் காக்கும்,
ஆழிநீர் வண்ணனை யச்சு தன்னை
      அணிகுரு கூர்ச்சட கோபன் சொன்ன,
கேழிலந் தாதியோ ராயி ரத்துள்
      இவைதிருப் பேரையில் மேய பத்தும்,
ஆழியங் கையனை யேத்த வல்லார்
      அவரடி மைத்திறத் தாழி யாரே. (2) 7.3.11

3486
ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ,திசை
வாழி யெழத்தண்டும் வாளு மெழ,அண்டம்
மோழை யெழமுடி பாத மெழ,அப்பன்
ஊழி யெழவுல கங்கொண்ட வாறே. (2) 7.4.1

3487
ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர
வூறு சுலாய்மலை தேய்க்கு மொலி,கடல்
மாறு சுழன்றழைக் கின்ற வொலி, அப்பன்
சாறு படவமு தங்கொண்ட நான்றே. 7.4.2

3488
நான்றில வேழ்மண்ணும் தானத்த, வே,பின்னும்
நான்றில வேழ்மலை தானத்த வே,பின்னும்
நான்றில வேழ்கடல் தானத்த வே,அப்பன்
ஊன்றி யிடந்தெயிற் றில்கொண்ட நாளே. 7.4.3

3489
நாளு மெழநில நீரு மெழவிண்ணும்
கோளு மெழேரி காலு மெழ,மலை
தாளு மெழச்சுடர் தானு மெழ,அப்பன்
ஊளி யெழவுல கமுண்ட வூணே. 7.4.4

3490
ஊணுடை மல்லர் ததர்ந்த வொலி,மன்னர்
ஆணுடை சேனை நடுங்கு மொலி,விண்ணுள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட வொலி,அப்பன்
காணுடைப் பாரதம் கையரைப் போழ்தே. 7.4.5

3491
போழ்து மெலிந்தபுன் செக்கரில்,வான்திசை
சூழு மெழுந்துதி ரப்புன லா,மலை
கீழ்து பிளந்தசிங் கமொத்த தால்,அப்பன்
ஆழ்துயர் செய்தசு ரரைக்கொல்லு மாறே. 7.4.6

3492
மாறு நிரைத்திரைக் கும்சரங் கள்,இன
நூறு பிணம்மலை போல்புர ள,கடல்
ஆறு மடுத்துதி ரப்புன லா,அப்பன்
நீறு படவிலங் கைசெற்ற நேரே. 7.4.7

3493
நேர்சரிந் தாங்கொடிக் கோழிகொண் டான்,பின்னும்
நேர்சரிந் தானெரி யுமன லோன்,பின்னும்
நேர்சரிந் தான்முக்கண் மூர்த்திகண் டீர்,அப்பன்
நேர்சரி வாணந்திண் டோ ள்கொண்ட அன்றே. 7.4.8

3494
அன்றுமண் நீரெரி கால்விண் மலைமுதல்,
அன்று சுடரிரண் டும்பிற வும்,பின்னும்
அன்று மழையுயிர் தேவும்மற் றும்,அப்பன்
அன்று முதலுல கம்செய் ததுமே. 7.4.9

3495
மேய்நிரை கீழ்புக மாபுர ள,சுனை
வாய்நிறை நீர்பிளி றிச்சொரி ய,இன
ஆநிரை பாடியங் கேயொடுங் க,அப்பன்
தீமழை காத்துக் குன்ற மெடுத்தானே. 7.4.10

3496
குன்ற மெடுத்த பிரானடி யாரொடும்,
ஒன்றிநின் றசட கோப னுரைசெயல்,
நன்றி புனைந்த ஓராயிரத் துள்ளிவை
வென்றி தரும்பத்தும் மேவிக்கற் பார்க்கே. (2) 7.4.11

3497
கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே. (2) 7.5.1

3498
நாட்டில் பிறந்தவர் நாரணற் காளன்றி யாவரோ,
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா,
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு,
நாட்டை யளித்துய்யச் செய்து நடந்தமை கேட்டுமே? 7.5.2

3499
கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல் லால்மற்றூம் கேட்பரோ,
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுக ளேவையும்,
சேட்பால் பழம்பகைவன் சிசு பாலன், திருவடி
தாட்பால் அடைந்த தன்மை யறிவாரை யறிந்துமே? 7.5.3

3500
தன்மை யறிபவர் தாமவற் காளன்றி யாவரோ,
பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ்நெடுங் காலத்து,
நன்மைப் புனல்பண்ணி நான்முகனைப்பண்ணி, தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே? 7.5.4

3501
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழலன்றிச் சூழ்வரோ,
ஆழப் பெரும்புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை,
தாழப் படாமல்தன் பாலொரு கோட்டிடைத் தான்கொண்ட,
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே? 7.5.5

3502
கேட்டும் உணர்ந்தவர் கேசவற் காளன்றி யாவரோ,
வாட்டமி லாவண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு,
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க்கிடர் நீக்கிய,
கோட்டங்கை வாமன னாயச்செய்த கூத்துகள் கண்டுமே? 7.5.6

3503
கண்டும் தெளிந்தும்கற் றார்க்கண்ணற் காளன்றி யாவரோ,
வண்டுன் மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி யீசனுடன்கொண்டு சாச்சொல்ல,
கொண்டங்குத் தன்னொடும் கொண்டுடன்சென்றதுணர்ந்துமே? 7.5.7

3504
செல்ல வுணர்ந்தவர் செல்வன்றன் சீரன்றிக் கற்பரோ,
எல்லை யிலாத பெருந்தவத் தால்பல செய்மிறை,
அல்லல் அமரரைச் செய்யும் இரணிய னாகத்தை,
மல்லல் அரியுரு வாய்ச்செய்த மாயம் அறிந்துமே? 7.5.8

3505
மாயம் அறிபவர் மாயவற் காளன்றி யாவரோ,
தாயம் செறுமொரு நூற்றுவர் மங்கவோ ரைவர்க்காய்,
தேச மறியவோர் சாரதி யாய்ச்சென்று சேனையை
நாசம்செய் திட்டு, நடந்தநல் வார்த்தை யறிந்துமே? 7.5.9

3506
வார்த்தை யறிபவர் மாயவற் காளன்றி யாவரோ,
போர்த்த பிறப்பொடு நோயோடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்து, பெருந்துன்பம் வேரற நீக்கித்தன் தாளிங்கீழ்ச்
சேர்த்து,அவன் செய்யும் சேமத்தையெண்ணித் தெளிவுற்றே? (2) 7.5.10

3507
தெளிவுற்று வீவன்றி நின்றவர்க் கின்பக் கதிசெய்யும்,
தெளிவுற்ற கண்ணனை தென்குரு கூர்ச்சட கோபன்fசொல்,
தெளிவுற்ற ஆயிரத் துள்ளிவை பத்தும்வல் லாரவர்,
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே. (2) 7.5.11

3508
பாமரு மூவுலகும் படைத்த
      பற்ப நாபாவோ,
பாமரு மூவுலகும் அளந்த
      பற்ப பாதாவோ,
தாமரைக் கண்ணாவோ. தனியேன்
      தனியா ளாவோ,
தாமரைக் கையாவோ. உன்னை
      யென்றுகொல் சார்வதுவே? (2) 7.6.1

3509
என்றுகொல் சேர்வதந் தோஅரன்
      நான்முக னேத்தும்,செய்ய
நின்திருப் பாதத்தை யான்நிலம்
      நீரெரி கால்,விண்ணுயிர்
என்றிவை தாம்முத லாமுற்று
      மாய்நின்ற எந்தாயோ,
குன்றெடுத் தாநிரை மேய்த்தவை
      காத்தவெங் கூத்தாவோ. 7.6.2

3510
காத்தவெங் கூத்தாவோ. மலையேந்திக்
      கன்மாரி தன்னை,
பூத்தண் டுழாய்முடி யாய்.புனை
      கொன்றையஞ் செஞ்சடையாய்,
வாய்த்தவென் நான்முக னே.வந்தென்
      னாருயிர் நீயானால்,
ஏத்தருங் கீர்த்தியி னாய்.உன்னை
      யெங்குத் தலைப்பெய்வனே? 7.6.3

3511
எங்குத் தலைப்பெய்வன் நான்?எழில்
      மூவுல கும்நீயே,
அங்குயர் முக்கட்fபிரான்
      பிரமன்பெரு மானவன்நீ,
வெங்கதிர் வச்சிரக் கையிந்
      திரன்முத லாத்தெய்வம்நீ,
கொங்கலர் தண்ணந் துழாய்முடி
      யென்னுடைக் கோவலனே. 7.6.4

3512
என்னுடைக் கோவல னே.என்
      பொல்லாக்கரு மாணிக்கமே,
உன்னுடை யுந்தி மலருலகம்
      அவைமூன் றும்பரந்து,
உன்னுடைச் சோதிவெள் ளத்தகம்
      பாலுன்னைக் கண்டுகொண்டிட்டு,
என்னுடை யாருயிரார் எங்ஙனே
      கொல்வந் தெய்துவரே? 7.6.5

3513
வந்தெய்து மாறறி யேன்மல்கு
      நீலச் சுடர்தழைப்ப,
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்தொரு
      மாணிக்கம் சேர்வதுபோல்,
அந்தர மேல்செம்பட் டோ டடி
      உந்திகை மார்வுகண்வாய்,
செஞ்சுடர்ச் சோதி விடவுறை
      என்திரு மார்பனையே. 7.6.6

3514
என்திரு மார்பன் தன்னையென்
      மலைமகள் கூறன்தன்னை,
என்றுமென் நாமக ளையகம்
      பால்கொண்ட நான்முகனை,
நின்ற சசிபதி யைநிலங்
      கீண்டெயில் மூன்றெரித்த,
வென்று புலம்துரந் தவிசும்
      பாளியைக் காணேனோ. 7.6.7

3515
ஆளியைக் காண்பரி யாயரி
      காண்நரி யாய்,அரக்கர்
ஊளையிட் டன்றிலங்கைகடந்
      துபிலம் புக்கொளிப்ப,
மீளியம் புள்ளைக் கடாய்விறல்
      மாலியைக் கொன்று,பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்தடர்த்
      தானையும் காண்டுங்கொலோ? 7.6.8

3516
காண்டுங்கொ லோநெஞ்ச மே.கடி
      யவினை யேமுயலும்,
ஆண்டிறல் மீளிமொய்ம் பிலரக்f
      கன்fகுலத் தைத்தடிந்து,
மீண்டுமவன் தம்பிக்கே விரி
      நீரிலங்கையருளி,
ஆண்டுதன் சோதிபுக் கவம
      ரர்அரி யேற்றினையே? 7.6.9

3517
ஏற்றரும் வைகுந்தத் தையருளும்
      நமக்கு, ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளையொன் றாய்ப்புக்கு
      மாயங்க ளேயியற்றி,
கூற்றியல் கஞ்சனைக் கொன்றுஐவர்க்
      காயக்கொடுஞ் சேனைதடிந்து,
ஆற்றல்மிக் கான்பெரி யபரஞ்
      சோதிபுக் கஅரியே. 7.6.10

3518
புக்க அரியுரு வாயவுணனுடல் கீண்டுகந்த,
சக்கரச் செல்வன்தன்னைக் குருகூர்ச்சட கோபஞ்சொன்ன,
மிக்கவோ ராயிரத் துளிவைபத்தும்வல் லாரவரை,
தொக்குப்பல் லாண்டிசைத் துக்கவரி செய்வ ரேழையரே. (2) 7.6.11

3519
ஏழையர் ஆவியுண் ணுமிணைக்
      கூற்றங்கொ லோவறியேன்,
ஆழியுங் கண்ண பிராந்திருக்
      கண்கள்கொ லோவறியேன்,
சூழவும் தாமரை நாண்மலர்
      போல்வந்து தோன்றும்கண்டீர்,
தோழியர் காள்.அன்னை மீர்.என்fசெய்
      கேந்துய ராட்டியேனே? (2) 7.7.1

3520
ஆட்டியும் தூற்றியும் நின்றன்னை
      மீரென்னை நீர்நலிந்தென்?
மாட்டுயர் கற்பகத் தின்வல்லி
      யோகொழுந் தோ?அறியேன்,
ஈட்டிய வெண்ணெயுண் டாந்திரு
      மூக்கென தாவியுள்ளே,
மாட்டிய வல்விளக் கின்
      சுடரய்நிற்கும் வாலியதே. 7.7.2

3521
வாலிய தோர்கனி கொல்வினை
      யாட்டியேன் வல்வினைகொல்,
கோலம் திரள்பவ ளக்கொழுந்
      துண்டங்கொ லோவறியேன்,
நீல நெடுமுகில் போல்திரு
      மேனியம் மான்தொண்டைவாய்,
ஏலும் திசையுளெல் லாம்வந்து
      தோன்றுமென் னின்னுயிர்க்கே. 7.7.3

3522
இன்னுயிர்க் கேழையர் மேல்வளையும்
      இணை நீலவிற்கொல்,
மன்னிய சீர்மத னங்கருப்புச்
      சிலை கொல்,மதனன்
தன்னுயிர்த் தாதைகண் ணபெருமான்
      புரு வமவையே,
என்னுயிர் மேலன வாய்
      அடுகின்றன என்று நின்றே. 7.7.4

3523
என்று நின்றேதிக ழும்செய்ய
      வீன்சுடர் வெண்மின்னுக்கொல்,
அன்றியென் னாவி யடுமணி
      முத்தங்கொ லோவறியேன்,
குன்றம் எடுத்தபி ரான்
      முறுவலெனதாவியடும்,
ஒன்றும் அறிகின்றி லேனன்னை
      மீர்.எனக் குய்விடமே. 7.7.5

3524
உய்விடம் ஏழையர்க் கும்
      அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங் கிமகரம்
      தழைக் கும்தளிர்கொல்,
பைவிடப் பாம்பணை யான்
      திருக்குண்டலக் காதுகளே?
கைவிட லொன்றுமின் றிய்
      அடுகின்றன காண்மின்களே. 7.7.6

3525
காண்மின்கள் அன்னையர் காள்.என்று
      காட்டும் வகையறியேன்,
நாண்மன்னு வெண்திங்கள் கொல்.
      நயந்தார்கட்கு நச்சிலைகொல்,
சேண்மன்னு நால்தடந் தோள்
      பெருமான்தன் திருநுதலே?,
கோள்மன்னி யாவி யடும்கொடியேன்
      உயிர் கோளிழைத்தே. 7.7.7

3526
கோளிழைத் தாமரையும்
      கொடியும் பவளமும் வில்லும்,
கோளிழைத்தண் முத்தமும்
      தளிரும் குளிர்வான் பிறையும்,
கோளிழையாவுடைய கொழுஞ்
      சோதி வட்டங்கொல், கண்ணன்,
கோளிழைவாள் முகமாய்க் கொடியேன்
      உயிர் கொள்கின்றதே? 7.7.8

3527
கொள்கின்ற கோளிரு ளைச்சுகிர்ந்
      திட்ட கொழுஞ்சுருளின்,
உள்கொண்ட நீலநன் னூல்தழை
      கொல்?அன்று மாயங்குழல்,
விள்கின்ற பூந்தண் டுழாய்விரை
      நாறவந் தென்னுயிரை,
கள்கின்ற வாறறி யீரன்னை
      மீர்.கழ றாநிற்றிரே. 7.7.9

3528
நிற்றிமுற் றத்துள் என் றுநெரித்
      தகைய ராயென்னைநீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர்சுடர்ச்
      சோதி மணிநிறமாய்,
முற்றவிம் மூவுல கும்விரி
      கின்ற சுடர்முடிக்கே,
ஒற்றுமைக் கொண்டதுள் ளமன்னை
      மீர்.நசை யென்நுங்கட்கே? 7.7.10

3529
கட்கரி யபிர மஞ்சிவன் இந்திரன் என்றிவர்க்கும்,
கட்கரி யகண்ண னைக்குரு கூர்ச்சடகோபன்fசொன்ன,
உட்குடை யாயிரத் தூளிவை யுமொரு பத்தும்வல்லார்,
உட்குடை வானவ ரோடுட னாயென்றும் மாயாரே. (2) 7.7.11

3530
மாயா. வாமன னே.மது சூதா. நீயருளாய்,
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்,
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்,
நீயாய் நீநின்ற வாறிவை யென்ன நியாயங்களே. (2) 7.8.1

3531
அங்கண் மலர்த்தண் டுழாய்முடி அச்சுத னே.அருளாய்,
திங்களும் ஞாயிறு மாய்ச்செழும் பல்சுட ராயிருளாய்,
பொங்கு பொழிமழை யாய்ப்புக ழாய்பழி யாய்ப்பின்னும்நீ,
வெங்கண்வெங் கூற்றமு மாவிவை யென்ன விசித்திரமே. 7.8.2

3532
சித்திரத் தேர்வல வா.திருச் சக்கரத் தாய்.அருளாய்,
எத்தனை யோருக முமவை யாயவற் றுள்ளியுலும்,
ஒத்தவொண் பல்பொருள் களுலப் பில்லன வாய்வியவாய்,
வித்தகத் தாய்நிற்றி நீயவை யென்ன விடமங்களே. 7.8.3

3533
கள்ளவிழ் தாமரைக்கண்கண்ண னே.எனக் கொன்றருளாய்,
உள்ளது மில்லது மாயுலப் பில்லன வாய்வியவாய்,
வெள்ளத் தடங்கட லுள்விட நாகணை மேல்மருவி,
உள்ளப்பல் யோகுசெய் தியிவை யென்ன உபாயங்களே. 7.8.4

3534
பாசங்கள் நீக்கியென் னையுனக் கேயுறக் கொண்டிட்டு,நீ
வாச மலர்த்தண் டுழாய்முடி மாயவ னே.அருளாய்,
காயமும் சீவனு மாய்க்கழி வாய்ப்பிறப் பாய்ப்பின்னும்நீ,
மாயங்கள்செய்துவைத் தியிவை யென்ன மயக்குகளே. 7.8.5

3535
மயக்கா. வாமன னே.மதி யாம்வண்ணம் ஒன்றருளாய்,
அயர்ப்பாய்த் தேற்றமு மாயழ லாய்க்குளி ராய்வியவாய்,
வியப்பாய் வென்றிகளாய்வினை யாய்ப்பய னாய்ப்பின்னும்நீ,
துயக்காய் நீநின்ற வாறிவை யென்ன துயரங்களே. 7.8.6

3536
துயரங்கள் செய்யுங்கண்ணா.சுடர் நீண்முடி யாயருளாய்,
துயரம்செய் மானங்க ளாய்மத னாகி உகவைகளாய்,
துயரம்செய் காமங்க ளாய்த்துலையாய்நிலை யாய்நடையாய்,
துயரங்கள் செய்துவைத் தியிவை யென்னசுண் டாயங்களே. 7.8.7

3537
என்னச்சுண்டாயங்களால் நின்றிட்டாயென்னையாளும்கண்ணா,
இன்னதோர் தன்மையை என்றுன்னையாவர்க்கும் தேற்றரியை,
முன்னிய மூவுல குமவை யாயவற் றைப்படைத்து,
பின்னுமுள் ளாய்.புறத் தாய்.இவை யென்ன இயற்கைகளே. 7.8.8

3538
என்ன இயற்கைகளால் எங்ஙனேநின்றிட் டாயென்கண்ணா,
துன்னு கரசர ணம்முத லாகவெல் லாவுறுப்பும்
உன்னு சுவையொளி யூறொலி நாற்றம் முற்றும்நீயே,
உன்னை யுணர வுறிலுலப் பில்லை நுணுக்கங்களே. 7.8.9

3539
இல்லை நுணுக்கங்க ளேயித னில்பிறி தென்னும்வண்ணம்
தொல்லைநன் னூலில் சொன்ன வுருவும் அருவும்நியே
அல்லித் துழாயலங் கலணி மார்ப.என் அச்சுதனே,
வல்லதோர் வண்ணம்சொன்னாலதுவேயுனக் காம்வண்ணமே. 7.8.10

3540
ஆம்வண்ண மின்னதொன் றென்றறி வதரி யஅரியை,
ஆம்வண்ணத் தால்குரு கூர்ச்சட கோபன் அறிந்துரைத்த
ஆம்வண்ண வொண்டமிழ்களிவை யாயிரத் துளிப்பத்தும்,
ஆம்வண்ணத் தாலுரைப்பாரமைந் தார்தமக்கென்றைக்குமே. (2) 7.8.11

3541
என்றைக்கும் என்னையுய் யக்கொண்டு போகிய,
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய்
நின்றவென் சோதியை, எஞ்சொல்லி நிற்பனோ? (2) 7.9.1

3542
என்சொல்லி நிற்பனென் இன்னுயி ரின்றொன்றாய்,
என்சொல்லால் யான்சொன்ன இன்கவி யென்பித்து,
தன்சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்,என்
முன்சொல்லும் மூவுரு வாம் முதல்வனே. 7.9.2

3543
ஆம்முதல் வனிவ னென்றுதற் றேற்றி,என்
நாமுதல் வந்து புகுந்துநல் லின்கவி,
தூமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்ன,என்
வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ? 7.9.3

3544
அப்பனை யென்று மறப்பனென் னாகியே,
தப்புத லின்றித் தனைக் கவி தான்சொல்லி,
ஒப்பிலாத் தீவினை யேனையுய் யக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே? 7.9.4

3545
சீர்கண்டு கொண்டு திருந்துநல் லின்கவி,
நேற்பட யான்சொல்லும் நீர்மை யிலாமையில்,
ஏர்விலா என்னைத்தன் னாக்கி என் னால்தன்னை,
பார்பரவு இன்கவி பாடும் பரமரே. 7.9.5

3546
இன்கவி பாடும் பரம கவிகளால்,
தன்கவி தான்தன்னைப் பாடுவி யாது,இன்று
நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை,
வன்கவி பாடுமென் வைகுந்த நாதனே. 7.9.6

3547
வைகுந்த நாதனென் வல்வினை மாய்ந்தறச்,
செய்குந்தன் றன்னையென் னாக்கியென் னால்தன்னை,
வைகுந்த னாகப் புகழ்வண் தீங்கவி,
செய்குந்தன் தன்னையெந் நாள்சிந்தித் தார்வனோ. 7.9.7

3548
ஆர்வனோ ஆழியங் கையெம்பி ரான்புகழ்,
பார்விண்நீர் முற்றும் கலந்து பருகிலும்,
ஏர்விலா என்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
சீர்பெற இன்கவி சொன்ன திறத்துக்கே? 7.9.8

3549
திறத்துக்கே துப்புர வாம்திரு மாலின்சீர்,
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ,
மறப்பிலா வென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
உறப்பல இன்கவி சொன்ன வுதவிக்கே? 7.9.9

3560
உதவிக்கைம் மாறென் னுயிரென்ன வுற்றெண்ணில்,
அதுவும்மற் றாங்கவன் றன்னதென் னால்தன்னை,
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு,
எதுவுமொன் றுமில்லை செய்வதிங் குமங்கே. 7.9.10

3551
இங்குமங் கும்திரு மாலன்றி இன்மைகண்டு,
அங்ஙனே வண்குரு கூர்ச்சட கோபன் சொல்,
இங்ஙனே சொன்னவோ ராயிரத் திப்பத்தும்,
எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே. (2) 7.9.11

3552
இன்பம் பயக்க எழில்மலர்
      மாதரும் தானுமிவ் வேழுலகை,
இன்பம் பயக்க இனிதுடன்
      வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான்,
அன்புற் றமர்ந்துறை கின்றா
      ணிபொழில் சூழ்திரு வாறன்விளை,
அன்புற் றமர்ந்து வலம்செய்து
      கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ. (2) 7.10.1

3553
ஆகுங்கொல் ஐயமொன் றின்றி
      அகலிடம் முற்றவும், ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த
      திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும்,
மாகம் திகழ்கொடி மாடங்கள்
      நீடும் மதிள்திரு வாறன்விளை,
மாகந்த நீர்கொண்டு தூவி
      வலஞ்செய்து கைதொழுங் கூடுங்கொலோ. 7.10.2

3554
கூடுங்கொல் வைகலும் கோவிந்த
      னைமது சூதனைக் கோளரியை,
ஆடும் பறவை மிசைக்கண்டு
      கைதொழு தன்றி யவனுறையும்,
பாடும் பெரும்புகழ் நான்மறை
      வேள்வியைந் தாறங்கம் பன்னினர்வாழ்,
நீடு பொழில்திரு வாறன்
      விளைதொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே. 7.10.3

3555
வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழு
      தும்மனத்து ஈங்கு நினைக்கப்பெற
வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந்
      நெலும்வயல் சூழ்திரு வாறன்விளை,
வாய்க்கும் பெரும்புகழ் மூவுல
      கீசன் வடமது ரைப்பிறந்த,
வாய்க்கும் மணிநிறக் கண்ணபி
      ரான்றன் மலரடிப் போதுகளே. 7.10.4

3556
மலரடிப் போதுகள் என்னெஞ்சத்
      தெப்பொழு துமிருத் திவணங்க,
பலரடி யார்முன் பருளிய
      பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்,
மலரில் மணிநெடு மாடங்கள்
      நீடு மதில்திரு வாறன்விளை,
உலகம் மலிபுகழ் பாடநம்
      மேல்வினை ஒன்றும்நில் லாகெடுமே. 7.10.5

3557
ஒன்றும்நில் லாகெடும் முற்றவும்
      தீவினை யுள்ளித் தொழுமிந்தொண்டீர்,
அன்றங் கமர்வென் றுருப்பிணி
      நங்கை யணிநெடுந் தோள்புணர்ந்தான்,
என்றுமெப் போதுமென் னெஞ்சம்
      துதிப்பவுள் ளேயிருக் கின்றபிரான்,
நின்ற அணிதிரு வாறன்
      விளையென்னும் நீணக ரமதுவே. 7.10.6

3558
நீணக ரமது வேமலர்ச்
      சோலைகள் சூழ்திரு வாறன்விளை,
நீணக ரத்துறை கின்றபி
      ரான்நெடு மால்கண்ணன் விண்ணவர்கோன்
வாண புரம்புக்கு முக்கட்பி
      ரானைத் தொலையவெம் போர்கள்செய்து,
வாணனை யாயிரந் தோள்துணித்
      தாஞ்சரண் அன்றிமற் றொன்றிலமே. 7.10.7

3559
அன்றிமற் றொன்றிலம் நின்சர
      ணே. என் றகலிரும் பொய்கையின்வாய்,
நின்றுதன் நீள்கழ லேத்திய
      ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தபிரான்,
சென்றங் கினிதுறை கின்ற
      செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை,
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?
      தீவினை யுள்ளத்தின் சார்வல்லவே. 7.10.8

3560
தீவினை யுள்ளத்தின் சார்வல்ல
      வாகித் தெளிவிசும் பேறலுற்றால்,
நாவினுள் ளுமுள்ளத் துள்ளும்
      அமைந்த தொழிலினுள் ளும்நவின்று,
யாவரும் வந்து வணங்கும்
      பொழில்திரு வாறன் விளையதனை,
மேவி வலஞ்செய்து கைதொழக்
      கூடுங்கொல் என்னுமென் சிந்தனையே. 7.10.9

3561
சிந்தைமற் றொன்றின் திறத்ததல்
      லாத்தன்மை தேவபி ரானறியும்,
சிந்தையி னால்செய்வ தானறி
      யாதன மாயங்கள் ஒன்றுமில்லை,
சிந்தையி னால்சொல்லி னால்செய்கை
      யால்நிலத் தேவர் குழுவணங்கும்,
சிந்தை மகிழ்திரு வாறன்
      விளையுறை தீர்த்தனுக் கற்றபின்னே. 7.10.10

3562
தீர்த்தனுக் கற்றபின் மற்றோர்
      சரணில்லை யென்றெண்ணி, தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தன னாகிச்
      செழுங்குரு கூர்ச்சட கோபன்fசொன்ன,
தீர்த்தங்க ளாயிரத் துள்ளிவை
      பத்தும்வல் லார்களை, தேவர்வைகல்
தீர்த்தங்க ளேயென்று பூசித்து
      நல்கி யுரைப்பார்தம் தேவியர்க்கே. (2) 7.10.11
--------------

திருவாய் மொழி எட்டாம் பத்து (3563-3672)


3563
தேவிமா ராவார் திருமகள் பூமி
      யேவமற் றமரராட் செய்வார்,
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி
      வேண்டுவேண் டுருவம்நின் னுருவம்,
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக்
      கண்ணதோர் பவளவாய் மணியே,
ஆவியே. அமுதே. அலைகடல் கடைந்த
      அப்பனே. காணுமா றருளாய். 8.1.1

3564
காணுமா றருளாய் என்றென்றே கலங்கிக்
      கண்ணநீர் அலமர வினையேன்
பேணுமா றெல்லாம் பேணிநின் பெயரே
      பிதற்றுமா றருளெனக் கந்தோ,
காணுமா றருளாய் காகுத்தா. கண்ணா.
      தொண்டனேன் கற்பகக் கனியே,
பேணுவார் அமுதே. பெரியதண் புனல்சூழ்
      பெருநிலம் எடுத்தபே ராளா. 8.1.2

3565
எடுத்தபே ராளன் நந்தகோ பன்றன்
      இன்னுயிர்ச் சிறுவனே, அசோதைக்
கடுத்தபே ரின்பக் குலவிளங் களிறே.
      அடியனேன் பெரியவம் மானே,
கடுத்தபோர் அவுணன் உடலிரு பிளவாக்
      கையுகி ராண்டவெங் கடலே,
அடுத்ததோர் உருவாய் இன்றுநீ வாராய்
      எங்ஙனம் தேறுவர் உமரே? 8.1.3

3566
உமருகந் துகந்த வுருவம்நின் னுருவம்
      ஆகியுன் தனக்கன்ப ரானார்
அவர்,உகந் தமர்ந்த செய்கையுன் மாயை
      அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்,
அமரது பண்ணி அகலிடம் புடைசூழ்
      அடுபடை அவித்தாம் மானே,
அமரர்தம் அமுதே. அசுரர்கள் நஞ்சே.
      என்னுடை ஆருயி ரேயோ. 8.1.4

3567
ஆருயி ரேயோ. அகலிடம் முழுதும்
      படைத்திடந் துண்டுமிழ்ந் தளந்த,
பேருயி ரேயோ. பெரியநீர் படைத்தங்
      குறைந்தது கடைந்தடைத் துடைத்த,
சீரிய ரேயோ.மனிசர்க்குத் தேவர்
      போலத்தே வர்க்கும்தே வாவோ,
ஒருயி ரேயோ. உலகங்கட் கெல்லாம்
      உன்னைநான் எங்குவந் துறுகோ? 8.1.5

3568
எங்குவந் துறுகோ என்னையாள் வானே.
      ஏழுல கங்களும் நீயே,
அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே
      அவற்றவை கருமமும் நீயே,
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும்
      அவையுமோ நீயின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே
      வான்புலம் இறந்ததும் நீயே. 8.1.6

3569
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே
      நிகழ்வதோ நீயின்னே யானால்,
சிறந்தநின் தன்மை யதுவிது வுதுவென்
      றறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்,
கறந்தபால் நெய்யே. நெய்யின் சுவையே.
      கடலினுள் அமுதமே, அமுதில்
பிறந்தவின் சுவையே. சுவையது பயனே.
      பின்னைதோள் மணந்தபே ராயா. 8.1.7

3570
மணந்தபே ராயா. மாயத்தால் முழுதும்
      வல்வினை யேனையீர் கின்ற,
குணங்களை யுடையாய். அசுரர்வன் கையர்
      கூற்றமே. கொடியபுள் ளுயர்த்தாய்,
பணங்களா யிரமும் உடையபைந் நாகப்
      பள்ளியாய். பாற்கடல் சேர்ப்பா,
வணங்குமா றாறியேன். மனமும்வா சகமும்
      செய்கையும் யானும்நீ தானே. 8.1.8

3571
யானும்நீ தானே யாவதோ மெய்யே
      அருநர கவையும் நீயானால்,
வானுய ரின்பம் எய்திலென் மற்றை
      நரகமே யெய்திலென்? எனிலும்,
யானும்நீ தானாய்த் தெளிதொறும் நன்றும்
      அஞ்சுவன் நரகம்நா னடைதல்,
வானுய ரின்பம் மன்னிவீற் றிருந்தாய்.
      அருளுநின் தாள்களை யெனக்கே. 8.1.9

3572
தாள்களை யெனக்கே தலைத்தலை சிறப்பத்
      தந்தபே ருதவிக்கைம் மாறா,
தோள்களை யாரத் தழுவிதென் னுயிரை
      அறவிலை செய்தனன் சோதீ,
தோள்களா யிரத்தாய். முடிகளா யிரத்தாய்.
      துணைமலர்க் கண்களா யிரத்தாய்,
தாள்களா யிரத்தாய். பேர்களா யிரத்தாய்.
      தமியனேன் பெரிய அப்பனே. 8.1.10

3573
பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை
      உருத்திரன் அப்பனை, முனிவர்க்
குரிய அப்பனை அமரர் அப்பனை
      உலகுக்கோர் தனியப்பன் தன்னை,
பெரியவண் குருகூர் வண்சட கோபன்
      பேணின ஆயிரத் துள்ளும்,
உரியசொல் மாலை இவையும்பத் திவற்றால்
      உய்யலாம் தொண்டீர்.நங் கட்கே. (2) 8.1.11

3574
நங்கள் வரிவளை யாயங் காளோ.
      நம்முடை ஏதலர் முன்பு நாணி,
நுங்கட் கியானொன்று ரைக்கும் மாற்றம்
      நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன்,
சங்கம் சரிந்தன சாயி ழந்தேன்
      தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன்,
வெங்கண் பறவையின் பாக னெங்கோன்
      வேங்கட வாணணை வேண்டிச் சென்றே. (2) 8.2.1

3575
வேண்டிச்சென் றொன்று பெறுகிற் பாரில்
      என்னுடைத் தோழியர் நுங்கட் கேலும்,
ஈண்டிது ரைக்கும் படியை யந்தோ.
      காண்கின்றி லேனிட ராட்டி யேன்நான்,
காண்தகு தாமரைக் கண்ணன் கள்வன்
      விண்ணவர் கோன்நங்கள் கோனைக் கண்டால்,
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
      எத்தனை காலம் இளைக்கின் றேனே. 8.2.2

3576
காலம் இளைக்கிலல் லால்வி னையேன்
      நானிளைக் கின்றிலன் கண்டு கொண்மின்,
ஞாலம் அறியப் பழிசு மந்தேன்
      நன்னுத லீர்.இனி நாணித் தானென்,
நீல மலர்நெடுஞ் சோதி சூழ்ந்த
      நீண்ட முகில்வண்ணன் கண்ணன் கொண்ட,
கோல வளையொடு மாமை கொள்வான்
      எத்தனை காலம்கூ டச்சென்றே? 8.2.3

3577
கூடச்சென் றேனினி என்கொ டுக்கேன்?
      கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்,
பாடற் றொழிய இழந்து வைகல்
      பல்வளை யார்முன் பரிச ழிந்தேன்,
மாடக் கொடிமதிள் தென்கு ளந்தை
      வண்குட பால்நின்ற மாயக் கூத்தன்,
ஆடல் பறவை உயர்த்த வெல்போர்
      ஆழி வலவினை யாதரித்தே. 8.2.4

3578
ஆழி வலவினை ஆதரிப்பும் ஆங்கவன்
      நம்மில் வரவும் எல்லாம்,
தோழியர் காள்.நம் முடைய மேதான்?
      சொல்லுவ தோவிங் கரியதுதான்,
ஊழிதோ றூழி ஒருவ னாக
      நன்குணர் வார்க்கும் உணர லாகா,
சூழ லுடைய சுடர்கொ ளாதித்
      தொல்லையஞ் சோதி நினைக்குங் காலே. 8.2.5

3579
தொல்லையஞ் சோதி நினைக்குங் காலென்
      சொல்லள வன்றிமை யோர்த மக்கும்,
எல்லையி லாதன கூழ்ப்புச் செய்யும்
      அத்திறம் நிற்கவெம் மாமை கொண்டான்,
அல்லி மலர்த்தண் டுழாயும் தாரான்
      ஆர்க்கிடு கோவினிப் பூசல் சொல்லீர்,
வல்லி வளவயல் சூழ்கு டந்தை
      மாமலர்க் கண்வளர் கின்ற மாலே. 8.2.6

3580
மாலரி கேசவன் நார ணஞ்சீ
      மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றென்று,
ஒல மிடவென்னைப் பண்ணி விட்டிட்
      டொன்று முருவும் சுவடும் காட்டான்,
ஏல மலர்குழல் அன்னை மீர்காள்.
      என்னுடைத் தோழியர் காள்.என் செய்கேன்?
காலம் பலசென்றும் காண்ப தாணை
      உங்களோ டெங்க ளிடையில் லையே. 8.2.7

3581
இடையில் லையான் வளர்த்த கிளிகாள்.
      பூவைகள் காள்.குயில் காள்.ம யில்காள்,
உடையநம் மாமையும் சங்கும் நெஞ்சும்
      ஒன்றும் ஒழியவொட் டாது கொண்டான்,
அடையும் வைகுந்த மும்பாற் கடலும்
      அஞ்சன வெற்பும் அவைந ணிய,
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை
      அன்றி யவனவை காண்கொ டானே. 8.2.8

3582
காண்கொடுப் பானல்ல னார்க்கும் தன்னைக்
      கைசெயப் பாலதோர் மாயந் தன்னால்,
மாண்குறல் கோல வடிவு காட்டி
      மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த,
சேண்சுடர்த் தோள்கள் பலத ழைத்த
      தேவ பிராற்கென் நிரைவினோடு,
நாண்கொடுத் தேனினி யென்கொடுக்கேன்
      என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள். 8.2.9

3583
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்.
      யானினச் செய்வதென்? என்நெஞ் சென்னை,
நின்னிடை யேனல்லேன் என்று நீங்கி
      நேமியும் சங்கும் இருகைக் கொண்டு,
பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற் றோடு
      பான்மதி ஏந்தியொர் கோல நீல,
நன்னெடுங் குன்றம் வருவ தொப்பான்
      நாண்fம லர்ப்பா தமடைந் ததுவே. 8.2.10

3584
பாதம் அடைவதன் பாசத் தாலே
      மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு,
கோதில் புகழ்க்கண் ணன்தன் னடிமேல்
      வண்குரு கூர்ச்சட கோபன் சொன்ன,
தீதிலந்தாதியோ ராயி ரத்துள்
      இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்,
ஆதுமோர் தீதில ராகி யிங்கும்
      அங்குமெல் லாமமை வார்கள் தாமே. (2) 8.2.11

3585
அங்கு மிங்கும் வானவர் தானவர் யாவரும்,
எங்கும் இனையையென் றுன்னை அறியகிலா தலற்றி,
அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்,
சங்கு சக்கரக் கையவ னென்பர் சரணமே. (2) 8.3.1

3586
சரண மாகிய நான்மறை நூல்களும் சாராதே,
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பென் றிவைமாய்த்தோம்,
கரணப் பல்படை பற்றற வோடும் கனலாழி,
அரணத் திண்படை யேந்திய ஈசற் காளாயே. 8.3.2

3587
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார்தாம்,
வாளும் வில்லுங் கொண்டுபின் செல்வார் மாற்றில்லை,
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக்காணேன்,
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே. 8.3.3

3588
ஞாலம் போனகம் பற்றியோர் முற்றா வுருவாகி,
ஆலம் பேரிலை யன்னவ சஞ்செய்யும் அம்மானே,
காலம் பேர்வதோர் காரிரு ளுழியொத் துளதால்,உன்
கோலங் காரேழில் காணலுற் றாழும் கொடியேற்கே. 8.3.4

3589
கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும்,
மடியா தின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான்,
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல்,இப்
படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே. 8.3.5

3590
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமேயாம்,
அணியார் ஆழியும் சங்கமு மேந்தும் அவர்காண்மின்,
தணியா வெந்நோ யுலகில் தவிர்ப்பான், திருநீல
மணியார் மேனியோ டென்மனம் சூழ வருவாரே. 8.3.6

3591
வருவார் செல்வார் வண்பரி சாரத் திருந்த,என்
திருவாழ் மார்வற் கென்திறம் சொல்லார் செய்வதென்,
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங் கும்மோடு,
ஒருபா டுழல்வா னோரடி யானு முளனென்றே. 8.3.7

3592
என்றே யென்னையுன் ஏரார் கோலத் திருந்தடிக்கீழ்,
நின்றே யாட்செய்ய நீகொண் டருள நினைப்பதுதான்,
குன்றெழ் பாரேழ் சூழ்கடல் ஞாலம் முழுவேழும்,
நின்றே தாவிய நீள்கழல் ஆழித் திருமாலே. 8.3.8

3593
திருமால் நான்முகன் செஞ்சடை யானென் றிவர்கள்,எம்
பெருமான் தன்மையை யாரறி கிற்பார் பேசியென்,
ஒருமா முதல்வா. ஊழிப் பிரானென் னையாளுடை,
கருமா மேனியன் என்பனென் காதல் கலக்கவே. 8.3.9

3594
கலக்க மில்லா நல்தவ முனிவர் கரைகண்டோ ர்,
துளக்க மில்லா வானவ ரெல்லாம் தொழுவார்கள்,
மலக்க மெய்த மாகடல் தன்னைக் கடைந்தானை,
உலக்க நாம்புகழ் கிற்பதென் செய்வ துரையீரே. 8.3.10

3595
உரையா வெந்நோய் தவிர அருள்நீண் முடியானை,
வரையார் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன்,
உரையேய் சொல்தொடை ஓரா யிரத்து ளிப்பத்தும்,
நிரையே வல்லார் நீடுல கத்துப் பிறவாரே. (2) 8.3.11

3596
வார்கடா அருவி யானைமா மலையின்
      மருப்பிணைக் குவடிறுத் துருட்டி,
ஊர்கொள்திண் பாகன் உயிர்செகுத் தரங்கின்
      மல்லரைக் கொன்றுசூழ் பரண்மேல்,
போர்கடா வரசர் புறக்கிட மாட
      மீமசைக் கஞ்சனைத் தகர்த்த,
சீர்கொள்சிற் றாயன் திருச்செங்குன் றூரில்
      திருச்சிற்றா றெங்கள்செல் சார்வே. (2) 8.4.1

3597
எங்கள்செல் சார்வு யாமுடை அமுதம்
      இமையவர் அப்பனென் அப்பன்,
பொங்குமூ வுலகும் படைத்தளித் தழிக்கும்
      பொருந்துமூ வுருவனெம் அருவன்,
செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ்
      திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு
அங்கமர் கின்ற, ஆதியான் அல்லால்
      யாவர்மற் றெனமர் துணையே? 8.4.2

3598
என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
      இருநிலம் இடந்தவெம் பெருமான்,
முன்னைவல் வினைகள் முழுதுடன் மாள
      என்னையாள் கின்றேம் பெருமான்,
தென்திசைக் கணிகொள் திருச்செங்குன் றூரில்
      திருச்சிற்றா றங்கரை மீபால்
நின்றவெம் பெருமான், அடியல்லால் சரணம்
      நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே. 8.4.3

3599
பிறிதில்லை யெனக்குப் பெரியமூ வுலகும்
      நிறையப்பே ருருவமாய் நிமிர்ந்த,
குறியமாண் எம்மான் குரைகடல் கடைந்த
      கோலமா ணிக்கமென் எம்மான்,
செறிகுலை வாழை கமுகுதெங் கணிசூழ்
      திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு
அறிய,மெய்ம் மையே நின்றவெம் பெருமான்
      அடியிணை யல்லதோர் அரணே. 8.4.4

3600
அல்லதோர் அரணும் அவனில்வே றில்லை
      அதுபொரு ளாகிலும், அவனை
அல்லதென் ஆவி அமர்ந்தணை கில்லா
      தாதலால் அவனுறை கின்ற,
நல்லநான் மறையோர் வேள்வியுள் மடுத்த
      நறும்புகை விசும்பொளி மறைக்கும்,
நல்லநீள் மாடத் திருச்செங்குன் றூரில்
      திருச்சிற்றா றெனக்குநல் லரணே. 8.4.5

3601
எனக்குநல் லரணை எனதா ருயிரை
      இமையவர் தந்தைதாய் தன்னை,
தனக்குன்தன் தன்மை அறிவரி யானைத்
      தடங்கடல் பள்ளியம் மானை,
மனக்கொள்சீர் மூவா யிரவர்வண் சிவனும்
      அயனும் தானுமொப் பார்வாழ்,
கனக்கொள்திண் மாடத் திருச்செங்குன் றூரில்
      திருச்சிற்றா றதனுள்கண் டேனே. 8.4.6

3602
திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்
      கண்டவத் திருவடி யென்றும்,
திருச்செய்ய கமலக் கண்ணூம்செவ் வாயும்
      செவ்வடி யும்செய்ய கையும்,
திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய
      கமலமார் பும்செய்ய வுடையும்,
திருச்செய்ய முடியும் ஆரமும் படையும்
      திகழவென் சிந்தையு ளானே. 8.4.7

3603
திகழவென் சிந்தை யுள்ளிருந் தானைச்
      செழுநிலத் தேவர்நான் மறையோர்,
திசைகைகூப்பி யேத்தும் திருச்செங்குன் றூரில்
      திருச்சிற்றா றங்கரை யானை,
புகர்கொள்வா னவர்கள் புகலிடந் தன்னை
      அசுரர்வன் கையர்வெங் கூற்றை,
புகழுமா றறியேன் பொருந்துமூ வுலகும்
      படைப்பொடு கெடுப்புக்காப் பவனே. 8.4.8

3604
படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம
      பரம்பரன் சிவபெருமான் அவனே,
இடைப்புக்கோ ருருவும் ஒழிவில்லை யவனே
      புகழ்வில்லை யாவையும் தானே,
கொடைப்பெரும் புகழார் இனையர்தன் னானார்
      கூறிய விச்சையோ டொழுக்கம்,
நடைப்பலி யியற்கைத் திருச்செங்குன் றூரில்
      திருச்சிற்றா றமர்ந்த நாதனே. 8.4.9

3605
அமர்ந்த நாதனை யவரவ ராகி
      அவர்க்கருள் அருளுமம் மானை
அமர்ந்ததண் பழனத் திருச்செங்குன் றூரில்
      திருச்சிற்றாற் றங்கரை யானை,
அமர்ந்தசீர் மூவா யிரவர்வே தியர்கள்
      தம்பதி யவனிதே வர்வாழ்வு,
அமர்ந்தமா யோனை முக்கணம் மானை
      நான்முக னையமர்ந் தேனே. 8.4.10

3606
தேனைநன் பாலைக் கன்னலை யமுதைத்
      திருந்துல குண்டவம் மானை,
வானநான் முகனை மலர்ந்தண் கொப்பூழ்
      மலர்மிசைப் படைத்தமா யோனை,
கோனைவண் குருகூர்ச் வண்சட கோபன்
      சொன்னவா யிரத்துளிப் பத்தும்,
வானின்மீ தேற்றி யருள்செய்து முடிக்கும்
      பிறவிமா மாயக்கூத் தினையே. (2) 8.4.11

3607
மாயக் கூத்தா. வாமனா.
      வினையேன் கண்ணா. கண்கைகால்
தூய செய்ய மலர்களாச்
      சோதிச் செவ்வாய் முகிழதா,
சாயல் சாமத் திருமேனி
      தண்பா சடையா, தாமரைநீள்
வாசத் தடம்போல் வருவானே.
      ஒருநாள் காண வாராயே. (2) 8.5.1

3608
காண வாராய் என்றென்று
      கண்ணும் வாயும் துவர்ந்து,அடியேன்
நாணி நன்னாட் டலமந்தால்
      இரங்கி யொருநாள் நீயந்தோ,
காண வாராய் கருநாயி
      றுதிக்கும் கருமா மாணிக்க,
நாணல் மலைபோல் சுடர்ச்சோதி
      முடிசேர் சென்னி யம்மானே. 8.5.2

3609
முடிசேர் சென்னி யம்மா.நின்
      மொய்பூந் தாமத் தண்டுழாய்,
கடிசேர் கண்ணிப் பெருமானே.
      என்றென் றேங்கி யழுதக்கால்,
படிசேர் மகரக் குழைகளும்
      பவள வாயும் நால்தோளும்,
துடிசே ரிடையும் அமைந்ததோர்
      தூநீர் முகில்போல் தோன்றாயே. 8.5.3

3610
தூநீர் முகில்போல் தோன்றும்நின்
      சுடர்க்கொள் வடிவும் கனிவாயும்,
தேநீர்க் கமலக் கண்களும்
      வந்தென் சிந்தை நிறைந்தவா,
மாநீர் வெள்ளீ மலைதன்மேல்
      வண்கார் நீல முகில்போல,
தூநீர்க் கடலுள் துயில்வானே.
      எந்தாய். சொல்ல மாட்டேனே. 8.5.4

3611
சொல்ல மாட்டேன் அடியேனுன்
      துளங்கு சோதித் திருப்பாதம்,
எல்லை யில்சீ ரிளஞாயி
      றிரண்டு போலென் னுள்ளவா.,
அல்லல் என்னும் இருள்சேர்தற்
      குபாயம் என்னே?, ஆழிசூழ்
மல்லல் ஞால முழுதுண்ட
      மாநீர்க் கொண்டல் வண்ணனே. 8.5.5

3612
கொண்டல் வண்ணா. குடக்கூத்தா.
      வினையேன் கண்ணா. கண்ணா,என்
அண்ட வாணா. என்றென்னை
      ஆளக் கூப்பிட் டழைத்தக்கால்,
விண்டன் மேல்தான் மண்மேல்தான்
      விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்,
தொண்ட னேனுள் கழல்லாண
      ஒருநாள் வந்து தோன்றாயே. 8.5.6

3613
வந்து தோன்றா யன்றேலுன்
      வையம் தாய மலரடிக்கீழ்,
முந்தி வந்து யான்நிற்ப
      முகப்பே கூவிப் பணிகொள்ளாய்,
செந்தண் கமலக் கண்கைகால்
      சிவந்த வாயோர் கருநாயிறு,
அந்த மில்லாக் கதிர்பரப்பி
      அலர்ந்த தொக்கும் அம்மானே. 8.5.7

3614
ஒக்கும் அம்மா னுருவமென்
      றுள்ளம் குழைந்து நாணாளும்,
தொக்க மேகப் பல்குழாங்கள்
      காணுந் தோறும் தொலைவன்நான்,
தக்க ஐவர் தமக்காயன்று
      றீரைம் பதின்மர் தாள்சாய,
புக்க நல்தேர்த் தனிப்பாகா.
      வாராய் இதுவோ பொருத்தமே? 8.5.8

3615
இதுவோ பொருத்தம் மின்னாழிப்
      படையாய். ஏறும் இருஞ்சிசிறைப்புள்,
அதுவே கொடியா வுயர்த்தானே.
      என்றென் றேங்கி யழுதக்கால்,
எதுவே யாகக் கருதுங்கொல்
      இம்மா ஞாலம் பொறைதீர்ப்பான்,
மதுவார் சோலை யுத்தர
      மதுரைப் பிறந்த மாயனே? 8.5.9

3616
பிறந்த மாயா. பாரதம்
      பொருத மாயா. நீயின்னே,
சிறந்த கால்தீ நீர்வான்மண்
      பிறவு மாய பெருமானே,
கறந்த பாலுள் நெய்யேபோல்
      இவற்று ளெங்கும் கண்டுகொள்,
இறந்து நின்ற பெருமாயா.
      உன்னை எங்கே காண்கேனே? 8.5.10

3617
எங்கே காண்கேன் ஈன்துழாய்
      அம்மான் றன்னை யான்? என்றென்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
      அந்தண் குருகூர்ச் சடகோபன்,
செங்கேழ் சொன்ன வாயிரத்துள்
      இவையும் பத்தும் வல்லார்கள்,
இங்கே காண இப்பிறப்பே
      மகிழ்வர் எல்லியும் காலையே. (2) 8.5.11

3618
எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ,
நல்ல அருள்கள் நமக்கேதந் தருள்செய்வான்,
அல்லியந் தண்ணந் துழாய்முடி யப்பனூர்,
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே. (2) 8.6.1

3619
திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும்,
ஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான்கண்டீர்,
செருக்கடுத் தன்று திகைத்த அரக்கரை,
உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே. 8.6.2

3620
ஒருவ ரிருவரோர் மூவ ரெனநின்று,
உருவு கரந்துள் ளுந்தோறும் தித்திப்பான்,
திருவமர் மார்வன் திருக்கடித் தானத்தை,
மருவி யுரைகின்ற மாயப் பிரானே. 8.6.3

3621
மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற,
நேயத்தி னால்நெஞ்சம் நாடு குடிகொண்டான்,
தேசத் தமரர் திருக்கடித் தானத்தை,
வாசப் பொழில்மன்னு கோயில்கொண் டானே. 8.6.4

3622
கோயில்கொண் டான்தன் திருக்கடித் தானத்தை,
கோயில்கொண் டானத னேடுமென் னெஞ்சகம்,
கோயில்கொள் தெய்வமெல் லாம்தொழ, வைகுந்தம்
கோயில்கொண் டகுடக் கூத்தவம் மானே. 8.6.5

3623
கூத்தவம் மான்கொடி யேனிடர் முற்றவும்,
மாய்த்தவம் மான்மது சூதவம் மானுறை,
பூத்த பொழில்தண் திருக்கடித் தானத்தை,
ஏத்தநில் லாகுறிக் கொண்டமின் இடரே. 8.6.6

3624
கொண்டமின் இடர்கெட வுள்ளத்துக் கோவிந்தன்,
மண்விண் முழுதும் அளந்தவொண் டாமரை,
மண்ணவர் தாம்தொழ வானவர் தாம்வந்து,
நண்ணு திருக்கடித் தான நகரே. 8.6.7

3625
தான நகர்கள் தலைசிறந் தெங்கெங்கும்,
வானிந் நிலம்கடல் முற்றுமெம் மாயற்கே,
ஆன விடத்துமென் நெஞ்சும் திருக்கடித்
தான நகரும், தனதாயப் பதியே. 8.6.8

3626
தாயப் பதிகள்தலைசிறந் தெங்கெங்கும்,
மாயத்தி னால்மன்னி வீற்றிருந் தானுறை,
தேயத் தமரர் திருக்கடித் தானத்துள்,
ஆயர்க் கதிபதி அற்புதன் தானே. 8.6.9

3627
அற்புதன் நாரா யணனரி வாமனன்,
நிற்பது மேவி யிருப்பதென் னெஞ்சகம்,
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்,
கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே. 8.6.10

3628
சோலை திருக்கடித் தானத் துறைதிரு
மாலை, மதிள்குரு கூர்ச்சடகோபன்fசொல்,
பாலோ டமுதன்ன ஆயிரத் திப்பத்தும்,
மேலைவை குந்தத் திருத்தும் வியந்தே. (2) 8.6.11

3629
இருத்தும் வியந்தென்னைத் தன்பொன் னடிக்கீழென்று,
அருத்தித் தெனைத்தோர் பலநாள் அழைத்தேற்கு,
பொருத்த முடைவா மனன்தான் புகுந்து,என்தன்
கருத்தை யுறவீற் றிருந்தான் கண்டுகொண்டே. (2) 8.7.1

3630
இருந்தான் கண்டுகொண் டெனதேழை நெஞ்சாளும்,
திருந்தாத வோரைவ ரைத்தேய்ந் தறமன்னி,
பெருந்தாள் களிற்றுக் கருள்செய்த பெருமான்,
தருந்தான் அருள்தான் இனியான் அறியேனே. 8.7.2

3631
அருள்தா னினியான் அறியேன் அவனென்னுள்,
இருள்தான் அறவீற் றிருந்தான் இதுவல்லால்,
பொருள்தா னெனில்மூ வுலகும் பொருளல்ல,
மருள்தானீ தோ?மாய மயக்கு மயக்கே. 8.7.3

3632
மாய மயக்குமயக் கானென்னை வஞ்சித்து,
ஆயன் அமரர்க் கரியே றெனதம்மான்,
தூய சுடர்ச்சோதி தனதென்னுள் வைத்தான்,
தேயம் திகழும்தன் திருவருள் செய்தே. 8.7.4

3633
திகழுந்தன் திருவருள் செய்துல கத்தார்,
புகழும் புகழ்தா னதுகாட்டித் தந்து,என்னுள்
திகழும் மணிக்குன்ற மொன்றே யொத்துநின்றான்,
புகழும் புகழ்மற் றெனக்குமோர் பொருளே? 8.7.5

3634
பொருள்மற் றெனக்குமோர் பொருள்தன்னில் சீர்க்கத்
தருமேல்,பின் யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்?,
கருமா ணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்,
திருமார்பு கால்கண்கை செவ்வாய் உந்தியானே. 8.7.6

3635
செவ்வாயுந்தி வெண்பல் சுடர்க்குழை, தன்னோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில்முன் வளாய்க்கொள்ள,
செவ்வாய் முறுவலோ டெனதுள்ளத் திருந்த,
அவ்வா யன்றியான் அறியேன்மற் றருளே. 8.7.7

3636
அறியேன்மற் றருளென்னை யாளும் பிரானார்,
வெறிதே யருள்செய்வர் செய்வார்கட் குகந்து,
சிறியே னுடைச்சிந்தை யுள்மூ வுலகும்,தம்
நெறியா வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரே. 8.7.8

3637
வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரும் யவரும்,
வயிற்றிற்கொண்டு நின்றொரு மூவுல கும்,தம்
வயிற்றிற்கொண்டு நின்றவண் ணம்நின்ற மாலை,
வயிற்றிற்கொண்டு மன்னவைத் தேன்மதி யாலே. 8.7.9

3638
வைத்தேன் மதியா லெனதுள்ளத் தகத்தே,
எய்த்தே யொழிவேனல் லேனென்றும் எப்பொதும்,
மொய்த்தேய் திரைமோது தண்பாற் கடலுளால்,
பைத்தேய் சுடர்ப்பாம் பணைநம் பரனையே. 8.7.10

3639
சுடர்ப்பாம் பணைநம் பரனைத் திருமாலை,
அடிச்சேர் வகைவண் குருகூர்ச் சடகோபன்,
முடிப்பான் சொன்னவா யிரத்திப்பத் தும்சன்மம்
விட,தேய்ந் தறநோக்கும் தன்கண்கள் சிவந்தே. (2) 8.7.11

3640
கண்கள் சிவந்து பெரியவாய்
      வாயும் சிவந்து கனிந்து,உள்ளே
வெண்பல் இலகு சுடரிலகு
      விலகு மகர குண்டலத்தன்,
கொண்டல் வண்ணன் சுடர்முடியன்
      நான்கு தோளன் குனிசார்ங்கன்,
ஒண்சங் கதைவா ளாழியான்
      ஒருவன் அடியே னுள்ளானே. (2) 8.8.1

3641
அடியே னுள்ளான் உடலுள்ளான்
      அண்டத் தகத்தான் புறத்துள்ளான்,
படியே யிதுவென் றுரைக்கலாம்,
      படியன் அல்லன் பரம்பரன்,
கடிசேர் நாற்றத் துள்ளாலை
      இன்பத் துன்பக் கழிநேர்மை,
ஒடியா இன்பப் பெருமையோன்
      உணர்வி லும்ப ரொருவனே. 8.8.2

3652
உணர்வி லும்ப ரொருவனை
      அவன தருளா லுறல்பொருட்டு,என்
உணர்வி னுள்ளே யிருத்தினேன்
      அதுவும் அவன தின்னருளே,
உணர்வும் உயிரும் உடம்பும்மற்
      றுலப்பி லனவும் பழுதேயாம்,
உணர்வைப் பெறவூர்ந் திறவேறி
      யானும் தானா யொழிந்தானே. 8.8.3

3643
யானும் தானா யொழிந்தானை
      யாதும் யவர்க்கும் முன்னோனை,
தானும் சிவனும் பிரமனும்
      ஆகிப் பணைத்த தனிமுதலை,
தேனும் பாலும் கன்னலும்
      அமுதும் ஆகித் தித்தித்து,என்
ஊனி லுயிரி லுணர்வினில்
      நின்ற வொன்றை யுணர்ந்தேனே. 8.8.4

3644
நின்ற ஒன்றை யுணர்ந்தேனுக்
      கதனுள் நேர்மை அதுவிதுவென்று,
ஒன்றும் ஒருவர்க் குணரலாகா
      துணர்ந்தும் மேலும் காண்பரிது
சென்று சென்று பரம்பரமாய்
      யாது மின்றித் தேய்ந்தற்று,
நன்று தீதென் றறிவரிதாய்
      நன்றாய் ஞானம் கடந்ததே. 8.8.5

3645
நன்றாய் ஞானம் கடந்துபோய்
      நல்லிந் திரிய மெல்லாமீர்த்து,
ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்
      உலப்பி லதனை யுணர்ந்துணர்ந்து,
சென்றாங் கின்ப துன்பங்கள்
      செற்றுக் களைந்து பசையற்றால்,
அன்றே யப்போ தேவீடு
      அதுவே வீடு வீடாமே. 8.8.6

3646
அதுவே வீடு வீடு
      பேற்றின்பந் தானும் அதுதேறி,
எதுவே தானும் பற்றின்றி
      யாது மிலிக ளாகிற்கில்,
அதுவே வீடு வீடு
      பேற்றின்பந் தானும் அதுதேறாது,
எதுவே வீடே தின்பம்? என்
      றெய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரே. 8.8.7

3647
எய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரென்
      றில்லாத் தாரும் புறத்தாரும்
மொய்த்து,ஆங் கலறி முயங்கத்தாம்
      போகும் போது,உன் மத்தர்போல்
பித்தே யேறி யனுராகம்
      பொழியும் போதெம் பெம்மானோடு
ஒத்தே சென்று,அங் குளம்கூடக்
      கூடிற் றாகில் நல்லுறைப்பே. 8.8.8

3648
கூடிற் றாகில் நல்லுறைப்புக்
      கூடா மையைக் கூடினால்,
ஆடல் பறவை யுயர்கொடியெம்
      ஆய னாவ ததுவதுவே,
வீடைப் பண்ணி யொருபரிசே
      எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்,
ஓடித் திரியும் யோகிகளும்
      உளரு மில்லை யல்லரே. 8.8.9

3649
உளரு மில்லை யல்லராய்
      உளரா யில்லை யாகியே,
உளரெம் மொருவர் அவர்வந்தென்
      உள்ளத் துள்ளே யுறைகின்றார்
வளரும் பிறையும் தேய்பிறையும்
      போல் அசைவும் ஆக்கமும்,
வளரும் சுடரும் இருளும்போல்
      தெருளும் மருளும் மாய்த்தோமே. 8.8.10

3650
தெருளும் மருளும் மாய்த்துத்தன்
      திருந்து செம்பொற் கழலடிக்கீழ்
அருளி யிருத்தும் அம்மானாம்
      அயனாம் சிவனாம்,திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
      ஓரா யிரத்து ளிப்பத்தால்,
அருளி யடிக்கீ ழிருத்தும்நம்
      அண்ணல் கருமா ணிக்கமே. (2) 8.8.11

3651
கருமா ணிக்க மலைமேல்மணித்
      தடந்தாமரைக் காடுகள்போல்,
திருமார்வு வாய்கண்கை யுந்திகாலுடை
      யாடைகள் செய்யபிரான்
திருமா லெம்மான் செழுநீர்வயல்
      குட்டநாட்டுத் திருப்புலியூர்,
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்
      அன்னைமீரிதற் கென்செய்கேனா. (2)8.9.1

3652
அன்னைமீ ரிதற்கென் செய்கேன்?
      அணிமேருவின் மீதுலவும்,
துன்னு சூழ்சுடர் ஞாயிறும்
      அன்றியும்பல் சுடர்களும்போல்,
மின்னு நீண்முடி யாரம்பல்கலன்
      றானுடை யெம்பெருமான்,
புன்னை யம்பொழில் சூழ்திருப்
      புலியூர் புகழுமிவளே. 8.9.2

3653
புகழு மிவள்நின் றிராப்பகல்
      பொருநீர்க்கடல் தீப்பட்டு,எங்கும்
திகழு மெரியோடு செல்வதொப்பச்
      செழுங்கதி ராழிமுதல்
புகழும் பொருபடை யேந்திப்போர்
      புக்கசுரரைப் பொன்றுவித்தான்
திகழு மணிநெடு மாடம்நீடு
      திருப்பூலி யுர்வளமே. 8.9.3

3654
ஊர்வ ளம்கிளர் சோலையும்
      கரும்பும்பெருஞ் செந்நெலும்சூழ்ந்து
ஏர்வ ளம்கிளர் தண்பணைக்
      குட்டநாட்டுத் திருப்பூலியுர்,
சீர்வ ளம்கிளர் மூவுல
      குண்டுமிழ் தேவபிரான்,
பேர்வ ளம்கிளர்ந் தன்றிப்
      பேச்சிலளின்றிப் புனையிழையே. 8.9.4

3655
புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புதுக்க ணிப்பும்,
நினையும் நீர்மைய தன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால்,
சுனுயி னுள்தடந் தாமரை மலரும்தண் திருப்புலியுர்,
முனைவன் மூவுல காளியப்பன் திருவருள் மூழ்கினளே.8.9.5

3656
திருவருள் மூழ்கி வைகளும் செழுநீர்நிறக் கண்ணபிரான்,
திருவருள் களும்சேர்ந் தமைக்கடை யாளம் திருந்தவுள,
திருவருள் அருளால் அவன்fசென்று சேர்தண் திருப்பூலியுர்,
திருவருள் கமுகொண் பழத்தது மெல்லியல் செவ்விதழே.8.9.6

3657
மெல்லிலைச் செல்வண் கொடிபுல்க வீங்கிளந் தாள்கமுகின்,
மல்லிலை மடல்வாழை யீங்கனி சூழ்ந்து மணம்கமழ்ந்து,
புல்லிலைத் தெங்கி னூடுகால் உலவும்தண் திருப்பூலியுர்,
மல்லலம் செல்வக் கண்ணந்தாள் அடைந்தாள் இம் மடவரலே. 8.9.7

3658
மடவரல் அன்னைமீர்கட் கெஞ்சொல்லிச்
      சொல்லுகேன்? மல்லைச்செல்வ
வடமொழி மறைவாணர் வேள்வியுள்
      நெய்யழல் வான்புகைபோய்
திடவிசும் பிலமரர் நாட்டை
      மறைக்கும்தண் திருப்பூலியுர்,
படவர வணையான் றன்நாமம்
      அல்லால் பரவா ளிவளே. 8.9.8

3659
பரவா ளிவள்நின் றிராப்பகல்
      பனிநீர்நிறக் கண்ணபிரான்,
விரவா ரிசைமறை வேதியரொலி
      வேலையின் நின்றொலிப்ப,
கரவார் தடந்தொறும் தாமரைக்
      கயந்தீவிகை நின்றலரும்,
புரவார் கழனிகள் சூழ்திருப்
      புலியூர்ப்புக ழன்றிமற்றே. 8.9.9

3660
அன்றிமற் றோருபாய மென்னிவ
      ளந்தண்டு ழாய்கமழ்தல்,
குன்ற மாமணி மாடமாளிகைக்
      கோலக்கு ழாங்கள்மல்கி,
தென்தி சைத்தில தம்புரைக்
      குட்டநாட்டுத் திருப்பூலியுர்,
நின்ற மாயப்பி ராந்திரு
      வருளாமிவள் நேர்ப்பட்டதே. 8.9.10

3661
நேர்ப்பட்ட நிறைமூ வுலகுக்கும்
      நாயகன் றன்னடிமை,
நேர்ப்பட்ட தொண்டர்தொண்டர்
      தொண்டர்தொண்டன் சடகோ பன்,சொல்
நேர்ப்பட்ட தமிழ்மாலை யாயிரத்துள்
      இவையு மோர்பத்தும்
நேர்ப்பட் டாரவர், நேர்ப்பட்டார்
      நெடுமாற்கடி மைசெய்யவே. (2) 8.9.11

அறுசீர் ஆசிரிய விருத்தம்

3662
நெடுமாற் கடிமை செய்வேன்போல்
      அவனை கருத வஞ்சித்து,
தடுமாற் றற்ற தீக்கதிகள்
      முற்றும் தவிர்ந்த சதிர்நினைந்தால்,
கொடுமா வினையேன் அவனடியார்
      அடியே கூடும் இதுவல்லால்,
விடுமா றென்ப தென்னந்தோ.
      வியன்மூ வுலகு பெறினுமே? (2)9.9.1

3663
வியன்மூ வுலகு பெறினும்போய்த்
தானே தானே யானாலும்,
புயல்மே கம்போல் திருமேனி
அம்மான் புனைபூங் கழலடிக்கீழ்,
சயமே யடிமை தலைநின்றார்
திருத்தாள் வணங்கி, இம்மையே
பயனே யின்பம் யான்பெற்ற
துறுமோ பாவி யேனுக்கே? 9.9.2

3664
உறுமோ பாவி யேனுக்கிவ்
      வுலகம் மூன்றும் உடன்நிறைய,
சிறுமா மேனி நிமிர்த்தவென்
      செந்தா மரைக்கண் திருக்குறளன்
நறுமா விரைநாண் மலரடிக்கீழ்ப்
      புகுதல் அன்றி அவனடியார்,
சிறுமா மனிச ராயென்னை
      ஆண்டா ரிங்கே திரியவே. 9.9.3

3665
இங்கே திரிந்தேற் கிழக்குற்றென்.
      இருமா நிலமுன் னுண்டுமிழ்ந்த,
செங்கோ லத்த பவளவாய்ச்
      செந்தா மரைக்க ணென்னம்மான்
பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப்
      புலன்கொள் வடிவென் மனத்தாய்
அங்கேய் மலர்கள் கையவாய்
      வழிபட் டோ ட அருளிலே? 9.9.4

3666
வழிபட் டோ ட அருள்பெற்று
      மாயன் கோல மலரடிக்கீழ்,
சுழிபட் டோ டும் சுடர்ச்சோதி
      வெள்ளத் தின்புற் றிருந்தாலும்,
இழிபட் டோ டும் உடலினிற்
      பிறந்து தன்fசீர் யான்கற்று,
மொழிபட் டோ டும் கவியமுத
      நுகர்ச்சி யுறுமோ முழுதுமே? 9.9.5

3667
நுகர்ச்சி யுறுமோ மூவுலகின்
      வீடு பேறு தன்கேழில்,
புகர்ச்செம் முகத்த களிறட்ட
      பொன்னா ழிக்கை யென்னம்மான்,
நிகர்ச்செம் பங்கி யெரிவிழிகள்
      நீண்ட அசுர ருயிரெல்லாம்,
தகர்த்துண் டுழலும் புட்பாகன்
      பெரிய தனிமாப் புகழே? 9.9.6

3668
தனிமாப் புகழே யெஞ்ஞான்றும்
      நிற்கும் படியாத் தான்தோன்றி,
முனிமாப் பிரம முதல்வித்தாய்
      உலகம் மூன்றும் முளைப்பித்த,
தனிமாத் தெய்வத் தளிரடிக்கீழ்ப்
      புகுதல் அன்றி அவனடியார்,
நனிமாக் கலவி யின்பமே
      நாளும் வாய்க்க நங்கட்கே. 9.9.7

3669
நாளும் வாய்க்க நங்கட்கு
      நளிர்நீர்க் கடலைப் படைத்து,தன்
தாளும் தோளும் முடிகளும்
      சமனி லாத பலபரப்பி,
நீளும் படர்பூங் கற்பகக்
      காவும் நிறைபன் னாயிற்றின்,
கோளு முடைய மணிமலைபோல்
      கிடந்தான் தமர்கள் கூட்டமே. 9.9.8

3670
தமர்கள் கூட்ட வல்வினையை
      நாசஞ் செய்யும் சதிர்மூர்த்தி,
அமர்கொள் ஆழி சங்குவாள்
      வில்தண் டாதி பல்படையன்,
குமரன் கோல ஐங்கணைவேள்
      தாதை கோதில் அடியார்தம்.
தமர்கள் தமர்கள் தமர்களாம்
      சதிரே வாய்க்க தமியேற்கே. 9.9.9

3671
வாய்க்க தமியேற் கூழிதோ
      றூழி யூழி மாகாயாம்
பூக்கொள் மேனி நான்குதோள்
      பொன்னா ழிக்கை யென்னம்மான்,
நீக்க மில்லா அடியார்தம்
      அடியார் அடியார் அடியாரெங்
கோக்கள், அவர்க்கே குடிகளாய்ச்
      செல்லும் நல்ல கோட்பாடே. 9.9.10

3672
நல்ல கோட்பாட் டுலகங்கள்
      மூன்றி னுள்ளும் தான்நிறைந்த,
அல்லிக் கமலக் கண்ணனை
      அந்தண் குருகூர்ச் சடகோபன்,
சொல்லப் பட்ட ஆயிரத்துள்
      இவையும் பத்தும் வல்லார்கள்,
நல்ல பதத்தால் மனைவாழ்வர்
      கொண்ட பெண்டிர் மக்களே. (2) 9.9.11
------------

திருவாய் மொழி ஒன்பதாம் பத்து (3673-3782 )


3673
கொண்ட பெண்டிர் மக்களுற்றார் சுற்றத் தவர்பிறரும்,
கண்ட தோடு பட்டதல்லால் காதல்மற்று யாதுமில்லை,
எண்டி சையும் கீழும்மேலும் முற்றவு முண்டபிரான்,
தொண்ட ரோமா யுய்யலல்லா லில்லைகண் டீர்துணையே. (2) 9.1.1

3674
துணையும் சார்வு மாகுவார்போல் சுற்றத் தவர்பிறரும்,
அணையவந்த ஆக்கமுண்டேல் அட்டைகள்போல்சுவைப்பர்,
கணையொன் ராலே யேழ்மாமரமு மெய்தேங் கார்முகிலை,
புணையென் றுய்யப் போகிலல்லா லில்லைகண் டீர்பொருளே. 9.1.2

3675
பொருள்கை யுண்டாய்ச் செல்லக்
      காணில் போற்றியென் றேற்றெழுவர்,
இருள்கொள் துன்பத் தின்மை
      காணில் என்னேஎன் பாருமில்லை,
மருள்கொள் செய்கை யசுரர்
      மங்க வடமது ரைப்பிறந்தாற்கு
அருள்கொள் ஆளாய் உய்யல்
      அல்லால் இல்லைகண் டீரரணே. 9.1.3

3676
அரணம் ஆவர் அற்ற
      காலைக் கென்றென் றமைக்கப்பட்டார்,
இரணம் கொண்ட தெப்பர்
      ஆவர் இன்றியிட் டாலுமஃஅதே,
வருணித் தென்னே வடமது
      ரைப்பி றந்தவன் வண்புகழே,
சரணென் றுய்யப் போகல்
      அல்லால் இல்லைகண் டீர்சதிரே. 9.1.4

3677
சதுரம் என்று தம்மைத்
      தாமே சம்மதித் தின்மொழியார்,
மதுர போக மதுவுற்
      றவரே வைகிமற் றொன்றுறுவர்,
அதிர்கொள் செய்கை யசுரர்
      மங்க வடமது ரைப்பிறந்தாற்கு ,
எதிர்கொள் ஆளாய் உய்யல்
      அல்லால் இல்லைகண் டீரின்பமே. 9.1.5

3678
இல்லை கண்டீர் இன்பம்
      அந்தோ. உள்ளது நினையாதே,
தொல்லை யார்க ளெத்த னைவர்
      தோன்றிக் கழிந்தொழிந்தார்?
மல்லை மூதூர் வடம
      துரைப்பி றந்தவன் வண்புகழே,
சொல்லி யுய்யப் போகல்
      அல்லால் மற்றொன்றில் லைசுருக்கே. 9.1.6

3679
மற்றொன் றில்லை சுருங்கச்
      சொன்னோம் மாநிலத் தெவ்வுயிர்க்கும்,
சிற்ற வேண்டா சிந்திப்
      பேயமை யும்கண் டீர்களந்தோ.
குற்றமன் றெங்கள் பெற்றத்
      தாயன் வடமது ரைப்பிறந்தான்,
குற்ற மில்சீர் கற்று
      வைகல் வாழ்தல்கண் டீர்குணமே. 9.1.7

3680
வாழ்தல் கண்டீர் குணமி
      தந்தோ. மாயவன் அடிபரவி,
போழ்து போக வுள்ள
      கிற்கும் புன்மையி லாதவர்க்கு,
வாழ்து ணையா வடம
      துரைப்பி றந்தவன் வண்புகழே,
வீழ்து ணையாய்ப் போமி
      தனில்யா துமில்லை மிக்கதே. 9.1.8

3681
யாது மில்லை மிக்க
      தனிலென் றன்ற துகருதி,
காது செய்வான் கூதை
      செய்து கடைமுறை வாழ்கையும்போம்,
மாது கிலிங்கொ டிக்கொள்
      மாட வடமது ரைப்பிறந்த,
தாது சேர்தாள் கண்ணன்
      அல்லால் இல்லைகண் டீரிசரணே. 9.1.9

3682
கண்ணன் அல்லால் இல்லை
      கண்டீர் சரணது நிற்கவந்து,
மண்ணின் பாரம் நீக்கு
      தற்கே வடமது ரைப்பிறந்தான்,
திண்ண மாநும் முடைமை
      யுண்டேல் அவனடி சேர்ந்துய்ம்மினோ,
எண்ண வேண்டா நும்ம
      தாதும் அவனன்றி மற்றில்லையே. 9.1.10

3683
ஆதும் இல்லை மற்ற
      வனிலென் றதுவே துணிந்து,
தாது சேர்தோள் கண்ண
      னைக்குரு கூர்ச்சடகோபன்fசொன்ன,
தீதி லாத வொண்தமிழ்
      கள் இவை ஆயிரத்து ளிப்பத்தும்,
ஓத வல்ல பிராக்கள்
      நம்மை யாளுடை யார்கள்பண்டே. (2) 9.1.11

3684
பண்டைநா ளாலே நிந்திரு வருளும்
      பங்கயத் தாள்திரு வருளும்
கொண்டு,நின் கோயில் சீய்த்துப்பல் படிகால்
      குடிகுடி வழிவந்தாட் செய்யும்,
தொண்டரோர்க் கருளிச் சோதிவாய் திறந்துன்
      தாமரைக் கண்களால் நோக்காய்,
தெண்டிரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த
      திருபுளிங் குடிக்கிடந் தானே. (2) 9.2.1

3685
குடிகிடந் தாக்கஞ் செய்துநின் தீர்த்த
      அடிமைக்குற் றேவல்செய்து, உன்பொன்
அடிக்கட வாதே வழிவரு கின்ற
      அடியரோர்க் கருளி,நீ யொருநாள்
படிக்கள வாக நிமிர்த்தநின் பாத
      பங்கய மேதலைக் கணியாய்,
கொடிக்கொள்பொன் மதிள்சூழ் குளிர்வயல் சோலைத்
      திருபுளிங் குடிக்கிடந் தானே. 9.2.2

3686
கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்
      கிடத்தியுன் திருவுடம் பசைய,
தொடர்ந்துகுற் றவேல் செய்துதொல் லடிமை
      வழிவரும் தொண்டரோர்க் கருளி,
தடந்தோள்தா மரைக்கண் விழித்துநீ யெழுந்துன்
      தாமரை மங்கையும் நீயும்,
இடங்கொள்மூ வுலகும் தொழவிருந் தருளாய்
      திருபுளிங் குடிக்கிடந் தானே. 9.2.3

3687
புளிகுடிக் கிடந்து வரகுண மங்கை
      இருந்துவை குந்தத்துள் நின்று,
தெளிந்தவென் சிந்தை அகங்கழி யாதே
      என்னையாள் வாயெனக் கருளி,
நளிந்தசீ ருலகம் மூன்றுடன் வியப்ப
      நாங்கள்கூத் தாடிநின் றார்ப்ப,
பளிங்குநீர் முகிலின் பவளம் போல் கனிவாய்
      சிவப்பநீ காணவா ராயே. 9.2.4

3688
பவளம் போல் கனிவாய் சிவப்பநீ காண
      வந்துநின் பன்னிலா முத்தம்,
தவழ்கதிர் முறுவல் செய்துநின் திருக்கண்
      டாமரை தயங்குநின் றருளாய்,
பவளநன் படர்க்கீழ்ச் சங்குறை பொருநல்
      தண்திருப் புளிங்குடிக் கிடந்தாய்,
கவளமா களிற்றி னிடர்கெடத் தடத்துக்
      காய்சினப் பறவையூர்ந் தானே. 9.2.5

3689
காய்சினப் பறவை யூர்ந்துபொன் மலையின்
      மீமிசைக் கார்முகில் போல,
மாசின மாலி மாலிமான் என்றங்
      கவர்படக் கனன்றுமுன் னின்ற,
காய்சின வேந்தே. கதிர்முடி யானே.
      கலிவயல் திருபுளிங் குடியாய்,
காய்சின ஆழி சங்குவாள் வில்தண்
      டேந்தியெம் இடர்கடி வானே. 9.2.6

3690
எம்மிடர் கடிந்திங் கென்னையாள் வானே.
      இமையவர் தமக்குமாங் கனையாய்,
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்
      தண்திருப் புளிங்குடிக் கிடந்தாய்,
நம்முடை யடியர் கவ்வைகண் டுகந்து
      நாம்களித் துளநலம் கூர,
இம்மட வுலகர் காணநீ யொருநாள்
      இருந்திடாய் எங்கள்கண் முகப்பே. 9.2.7

3691
எங்கள்கண் முகப்பே உலகர்கள் எல்லாம்
      இணையடி தொழுதெழுந் திறைஞ்சி
தங்களன் பாரத் தமதுசொல் வலத்தால்
      தலைதலைச் சிறந்தபூ சிப்ப,
திங்கள்சேர் மாடத் திருப்புளிங் குடியாய்.
      திருவைகுந் தத்துள்ளாய். தேவா,
இங்கண்மா ஞாலத் திதனுளு மொருநாள்
      இருந்திடாய் வீற்றிடங் கொண்டே. 9.2.8

3692
வீற்றிடங் கொண்டு வியங்கொள்மா ஞாலத்
      திதனுளு மிருந்திடாய், அடியோம்
போற்றியோ வாதே கண்ணினை குளிரப்
      புதுமலர் ஆகத்தைப் பருக,
சேற்றிள வாளை செந்நெலூ டுகளும்
      செழும்பணைத் திருப்புளிங் குடியாய்,
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த
      கொடுவினைப் படைகள்வல் லானே. 9.2.9

3693
கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க்
      கிடர்கெட, அசுரர்கட் கிடர்செய்,
கடுவினை நஞ்சே. என்னுடை அமுதே.
      கலிவயல் திருப்புளிங் குடியாய்,
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை
      நிலமகள் பிடிக்கும்மெல் லடியை,
கொடுவினை யேனும் பிடிக்கநீ ஒருநாள்
      கூவுதல் வருதல்செய் யாயே. 9.2.10

3694
கூவுதல் வருதல் செய்திடாய் என்று
      குரைகடல் கடைந்தவன் தன்னை,
மேவிநன் கமர்ந்த வியன்புனல் பொருநல்
      வழுதிநா டஞ்சட கோபன்,
நாவியல் பாடல் ஆயிரத் துள்ளும்
      இவையுமோர் பத்தும்வல் லார்கள்,
ஓவுத லின்றி யுலகம்மூன் றளந்தான்
      அடியிணை யுள்ளத்தோர் வாரே. (2) 9.2.11

3695
ஓரா யிரமாய் உலகேழ் அளிக்கும்
பேரா யிரம்கொண் டதோர்பீ டுடையன்
காரா யினகா ளநன்மே னியினன்,
நாரா யணன்நங் கள்பிரான் அவனே. (2) 9.3.1

3696
அவனே அகல்ஞா லம்படைத் திடந்தான்,
அவனே யஃதுண் டுமிழ்ந்தான் அளந்தான்,
அவனே யவனும் அவனும் அவனும்,
அவனே மற்றெல்லா மும் அறிந் தனமே. 9.3.2

3697
அறிந்தன வேத அரும்பொருள் நூல்கள்,
அறிந்தன கொள்க அரும்பொருள் ஆதல்,
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி,
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே. 9.3.3

3698
மருந்தே நங்கள் போகம கிழ்ச்சிக்கென்று,
பெருந்தே வர்குழாங் கள்பிதற் றும்பிரான்
கருந்தேவ னெம்மான் கண்ணன் விண்ணுலகம்
தரும்தே வலைசோ ரேல்கண்டாய் மனமே. 9.3.4

3699
மனமே. உன்னைவல் வினையேன் இரந்து,
கனமே சொல்லினேன் இதுசோ ரேல்கண்டாய்,
புனமே வியபூந் தண்டுழாய் அலங்கல்,
இனமே துமிலா னையடை வதுமே. 9.3.5

3700
அடைவ துமணி யார்மலர் மங்கைதோள்,
மிடைவ துமசு ரர்க்குவெம் போர்களே,
கடைவ தும்கட லுள் அமுது, என்மனம்
உடைவ தும் அவற் கேயொருங் காகவே. 9.3.6

3701
ஆகம் சேர்நர சிங்கம தாகி,ஓர்
ஆகங் வள்ளுகி ரால்பிளந் தானுறை,
மாக வைகுந்தம் காண்பதற்கு, என்மனம்
ஏக மெண்ணும் இராப்பக லின்றியே. 9.3.7

3702
இன்றிப் போக இருவினை யும்கெடுத்து,
ஒன்றி யாக்கை புகாமையுய் யக்கொள்வான்,
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளது,
சென்று தேவர்கள் கைதொழு வார்களே. 9.3.8

3703
தொழுது மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு,
எழுது மென்னும் இதுமிகை யாதலில்,
பழுதில் தொல்புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்,
தழுவு மாறறி யேனுன தாள்களே. 9.3.9

3704
தாள தாமரை யானுன துந்தியான்,
வாள்கொள் நீள்மழு வாளியுன் ஆகத்தான்,
ஆள ராய்த்தொழு வாரும் அமரர்கள்,
நாளும் என்புகழ் கோவுன சீலமே? 9.3.10

3705
சீல மெல்லையி லானடி மேல்,அணி
கோல நீள்குரு கூர்ச்சட கோபன்fசொல்,
மாலை யாயிரத் துள்ளிவை பத்தினின்
பாலர், வைகுந்த மேறுதல் பான்மையே. (2) 9.3.11

3706
மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள், திருமார் வினில்சேர் திருமாலே,
வெய்யார் சுடராழி சுரிசங்க மேந்தும்
கையா, உனைக்காணக் கருதுமென் கண்ணே. 9.4.1

3707
கண்ணே யுனைக்காணக் கருதி,என் னெஞ்சம்
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்றியம்பும்,
விண்ணோர் முனிவர்க் கென்றும்காண் பரியாயை,
நண்ணா தொழியே னென்றுநான் அழைப்பனே. 9.4.2

3708
அழைக்கின்ற வடிநாயேன் நாய்கூழை வாலால்,
குழைக்கின் றதுபோல் என்னுள்ளம் குழையும்,
மழைக்கன்று குன்றமெடுத்த தாநிரை காத்தாய்,
பிழைக்கின்ற தருளென்று பேதுறு வேனே. 9.4.3

3709
உறுவதிது வென்றுனக் காட்பட்டு, நின்கண்
பெறுவ தெதுகொலென்று பேதையேன் நெஞ்சம்,
மறுகல்செய்யும் வானவர் தானவர்க் கென்றும்,
அறிவ தரிய அரியாய அம்மானே. 9.4.4

3710
அரியாய அம்மானை அமரர் பிரானை,
பெரியானைப் பிரமனை முன்படைத் தானை,
வரிவாள் அரவின் அணைப்பள்ளி கொள்கின்ற,
கரியான் கழல்காணக் கருதும் கருத்தே. 9.4.5

3711
கருத்தே யுனைக்காணக் கருதி,என் னெஞ்சத்
திருத்தாக இருத்தினேன் தேவர்கட் கெல்லாம்
விருத்தா, விளங்கும் சுடர்ச்சோதி யுயரத்
தொருத்தா, உனையுள்ளும் என்னுள்ளம் உகந்தே. 9.4.6

3712
உகந்தே யுனையுள்ளு மென்னுள்ளத்து, அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட அமலா,
மிகுந்தான வன்மார் வகலம் இருகூறா
நகந்தாய், நரசிங் கமதாய வுருவே. 9.4.7

3713
உருவா கியாஅறு சமயங்கட் கெல்லாம்,
பொருவாகி நின்றான் அவனெல்லாப் பொருட்கும்,
அருவாகிய ஆதியைத் தேவர்கட் கெல்லாம்,
கருவாகிய கண்ணனைக் கண்டுகொண் டேனே. 9.4.8

3714
கண்டுகொண் டேனேகண் ணிணையாரக் களித்து,
பண்டை வினையாயின பற்றோ டறுத்து,
தொண்டர்க் கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,
அண்டத் தமரர் பெருமான். அடியேனே. 9.4.9

3715
அடியா னிவனென் றெனக்கா ரருள்செய்யும்
நெடியானை, நிறைபுகழ் அஞ்சிறைப் புள்ளின்
கொடியானை, குன்றாமல் உலகம் அளந்த
அடியானை, அடைந்தடி யேனுய்ந்த வாறே. 9.4.10

3716
ஆற மதயானை அடர்த்தவன் றன்னை,
சேறார் வயல்தென் குருகூர்ச் சடகோபன்,
நூறே சொன்னவோ ராயிரத்து ளிப்பத்தும்,
ஏறே தரும்வா னவர்தமின் னுயிர்க்கே. (2) 9.4.11

3717
இன்னுயிர்ச் சேவலும் நீரும்
      கூவிக்கொண்டுயிங் கெத்தனை,
என்னுயிர் நோவ மழிற்றேன்
      மின்குயில் பேடைகாள்,
என்னுயிர்க் கண்ண பிரானை
      நீர்வரக் கூவுகிலீர்,
என்னுயிர்க் கூவிக் கொடுப்பார்க்கும்
      இத்தனை வேண்டுமோ? (2) 9.5.1

3718
இத்தனை வேண்டுவ தன்றந்தோ.
      அன்றில் பேடைகாள்,
எத்தனை நீரும் நுஞ்சே
      வலும்கரைந் தேங்குதிர்,
வித்தகன் கோவிந்தன் மெய்ய
      னல்ல னொருவர்க்கும்,
அத்தனை யாமினி யென்னு
      யிரவன் கையதே. 9.5.2

3719
அவன்கைய தேயென தாருயிர்
      அன்றில் பேடைகாள்,
எவன்சொல்லி நீர்குடைந் தாடு
      திர்புடை சூழவே,
தவம்செய் தில்லா வினையாட்டி
      யெனுயி ரிங்குண்டோ ,
எவன்சொல்லி நிற்றும்நும் ஏங்கு
      கூக்குரல் கேட்டுமே. 9.5.3

3720
கூக்குரல் கேட்டும் நங்f கண்ணன்
      மாயன் வெளிப்படான்,
மேற்கிளை கொள்ளேன்மின் நீரும்
      சேவலும் கோழிகாள்,
வாக்கும் மனமும் கரும
      மும்நமக் காங்கதே,
ஆக்கையு மாவியும் அந்தரம்
      நின்று ழலுமே. 9.5.4

3721
அந்தரம் நின்றுழல் கின்ற
      யானுடைப் பூவைகாள்,
நுந்திரத் தேது மிடையில்
      லைகுழ றேன்மினோ,
இந்திர ஞாலங்கள் காட்டியிவ்
      வேழுல கும்கொண்ட,
நந்திரு மார்பன் நம்மாவி
      யுண்ணநன் கெண்ணினான். 9.5.5

3722
நன்கெண்ணி நான்வ ளர்த்த
      சிறுகிளிப் பைதலே,
இன்குரல் நீமிழிற் றேலென்
      னாருயிர்க் காகுத்தன்,
நின்செய்ய வாயொக்கும் வாயங்கண்
      ணங்கை காலினன்,
நின்பசுஞ் சாம நிறத்தன்
      கூட்டுண்டு நீங்கினான். 9.5.6

3723
கூட்டுண்டு நீங்கி கோலத்
      தாமரைக் கட்செவ்வாய்,
வாட்டமி லெங்கரு மாணிக்கம்
      கண்ணன் மாயன்போல்,
கோட்டிய வில்லொடு மின்னும்
      மேகக் குழாங்கள்காள்,
காட்டேன் மின்நும் முருவென்
      னுயிர்க்கது காலனே. 9.5.7

3724
உயிர்க்கது காலனென் றும்மை
      யானிரந் தேற்கு,நீர்
குயிற்பைதல் காள்.கண்ணன் நாம
      மேகுழ றிக்கொன்றீர்,
தயிர்ப்ப ழஞ்சோற் றொடுபா
      லடிசிலும் தந்து,சொல்
பயிற்றிய நல்வள மூட்டினீர்
      பண்புடை யீரே. 9.5.8

3725
பண்புடை வண்டொடு தும்பிகாள்.
      பண்மிழற் றேன்மின்,
புண்புரை வெல்கொடு குத்தாலொக்
      கும்நும் இன்குரல்,
தண்பெரு நீர்த்தடந் தாமரை
      மலர்ந்தா லொக்கும்
கண்பெருங் கண்ணன், நம்மாவி
      யுண்டெழ நண்ணினான். 9.5.9

3726
எழநண்ணி நாமும் நம்வான
      நாடனோ டொன்றினோம்,
பழனநன் னாரைக் குழாங்கள்
      காள்.பயின் றென்னினி,
இழைநல்ல வாக்கை யும்பைய
      வேபுயக் கற்றது,
தழைநல்ல இன்பம் தலைப்பெய்
      தெங்கும் தழைக்கவே. 9.5.10

3727
இன்பம் தலைப்பெய் தெங்கும்
      தழைத்தபல் லூழிக்கு,
தண்புக ழேத்தத் தனக்கருள்
      செய்த மாயனை,
தெங்குரு கூர்ச்சட கோபன்fசொல்
      லாயிரத் துள்ளிவை,
ஒன்பதோ டொன்றுக் கும்மூ
      வுலகு முருகுமே. (2) 9.5.11

3728
உருகுமால் செஞ்சம் உயிரின் பரமன்றி,
பெருகுமால் வேட்கையும் எஞ்செய்கேன் தொண்டனேன்,
தெருவெல்லாம் காவி கமழ்திருக் காட்கரை,
மருவிய மாயன்தன் மாயம் நினைதொறே. (2) 9.6.1

3729
நினைதொறும் சொல்லுந் தொறும்நெஞ் சிடிந்துகும்
வினைகொள்சீர் பாடிலும் வேமென தாருயிர்,
சுனைகொள்பூஞ் சோலைத்தென் காட்கரை யென்னப்பா,
நினைகிலேன் நானுனக் காட்செய்யும் நீர்மையே. 9.6.2

3730
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து,என்னை
ஈர்மைசெய் தென்னுயி ராயென் னுயிருண்டான்,
சீர்மல்கு சோலைத்தென் காட்கரை யென்னப்பன்,
கார்முகில் வண்ணன்தன் கள்வம் அறிகிலேன். 9.6.3

3731
அறிகிலேன் தன்னுள் அனைத்துலகம் நிற்க,
நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்,
வெறிகமழ் சோலைத்தென் காட்கரை என்னப்பன்,
சிறியவென் னாருயி ருண்ட திருவருளே. 9.6.4

3732
திருவருள் செய்பவன் போலவென் னுள்புகுந்து,
உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான்,
திருவளர் சோலைத்தென் காட்கரை யென்னப்பன்,
கருவளர் மேனிஎன் கண்ணங்கள் வங்களே. 9.6.5

3733
எங்கண்ணன் கள்வம் எனக்குச்செம் மாய்நிற்கும்,
அங்கண்ண னுண்டவென் னாருயிர்க் கோதிது,
புங்கண்மை யெய்திப் புலம்பி யிராப்பகல்,
எங்கண்ண னென்றவன் காட்கரை யேத்துமே. 9.6.6

3734
காட்கரை யேத்தும் அதனுள்கண் ணாவென்னும்,
வேட்கைநோய் கூர நினைந்து கரைந்துகும்,
ஆட்கொள் வானொத்தென் னுயிருண்ட மாயனால்,
கோட்குறை பட்டதென் னாருயிர் கோளுண்டே. 9.6.7

3735
கோளுண்டான் அன்றிவந் தென்னுயிர் தானுண்டான்,
நாளுநாள் வந்தென்னை முற்றவும் தானுண்டான்,
காளநீர் மேகத்தென் காட்கரை யென்னப்பற்கு,
ஆளன்றே பட்டதென் ஆருயிர் பட்டதே. 9.6.8

3736
ஆருயிர் பட்ட தெனதுயிர் பட்டது,
பேரிதழ் தாமரைக் கண்கனி வாயதோர்,
காரெழில் மேகத்தென் காட்கரை கோயில்கொள்,
சீரெழில் நால்தடந் தோள்தெய்வ வாரிக்கே. 9.6.9

3737
வாரிக்கொண் டுன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை யொழியவென் னில்முன்னம்
பாரித்து, தானென்னை முற்றப் பருகினான்,
காரொக்கும் காட்கரை யப்பன் கடியனே. 9.6.10

3738
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்றன்னை,
கொடிமதிள் தெங்குரு கூர்ச்சட கோபஞ்சொல்,
வடிவமை யாயிரத் திப்பத்தி னால்,சன்மம்
முடிவெய்தி நாசங்கண் டீர்களெங் கானலே. (2) 9.6.11

3739
எங்கானல் அகங்கழிவாய்
      இரைத்தேர்ந்திங் கினிதமரும்,
செங்கால மடநாராய்.
      திருமூழிக் களத்துறையும்,
கொங்கார்பூந் துழாய்முடியெங்
      குடக்கூத்தர்க் கென்fதூதாய்,
நுங்கால்க ளென் தலைமேல்
      கெழுமீரோ நுமரோடே. (2) 9.7.1

3740
நுமரோடும் பிரியாதே
      நீரும்நும் சேவலுமாய்,
அமர்காதல் குருகினங்காள்.
      அணிமூழிக் களத்துறையும்,
எமராலும் பழிப்புண்டிங்
      கென்?தம்மால் இழிப்புண்டு,
தமரோடங் குறைவார்க்குத்
      தக்கிலமே. கேளீரே. 9.7.2

3741
தக்கிலமே கேளீர்கள்
      தடம்புனல்வாய் இரைதேரும்,
கொக்கினங்காள். குருகினங்காள்.
      குளிர்மூழிக் களத்துறையும்,
செக்கமலத் தலர்போலும்
      கண்கைகால் செங்கனிவாய்,
அக்கமலத் திலைபோலும்
      திருமேனி யடிகளுக்கே. 9.7.3

3742
திருமேனி யடிகளுக்கு
      தீவினையேன் விடுதூதாய்
திருமூழிக் களமென்னும்
      செழுநகர்வாய் அணிமுகில்காள்,
திருமேனி யவட்கருளீர்
      என்றக்கால், உம்மைத்தன்
திருமேனி யொளியகற்றித்
      தெளிவிசும்பு கடியுமே? 9.7.4

3743
தெளிவிசும்பு கடிதோடித்
      தீவளைத்து மின்னிலகும்,
ஒளிமுகில்காள். திருமூழிக்
      களத்துறையும் ஒண்சுடர்க்கு,
தெளிவிசும்பு திருநாடாத்
      தீவினையேன் மனத்துறையும்,
துளிவார்கட் குழலார்க்கென்
      தூதுரைத்தல் செப்பமினே. 9.7.5

3744
தூதுரைத்தல் செப்புமின்கள்
      தூமொழியாய் வண்டினங்காள்,
போதிரைத்து மதுநுகரும்
      பொழில்மூழிக் களத்துறையும்,
மாதரைத்தம் மார்வகத்தே
      வைத்தார்க்கென் வாய்மாற்றம்,
தூதுரைத்தல் செப்புதிரேல்
      சுடர்வளையும் கலையுமே. 9.7.6

3745
சுடர்வளுயும் கலையுங்கொண்டு
      அருவினையேன் தோள்துறந்த,
படர்புகழான் திருமூழிக்
      களத்துறையும் பங்கயக்கட்,
சுடர்பவள வாயனைக்கடு
      ஒருநாளோர் தூய்மாற்றம்,
படர்பொழில்வாய்க் குருகினங்காள்.
      எனக்கொன்று பணியீரே. 9.7.7

3746
எனக்கொன்று பணியீர்கள்
      இரும்பொழில்வாய் இரைதேர்ந்து,
மனக்கின்பம் படமேவும்
      வண்டினங்காள். தும்பிகாள்,
கனக்கொள்திண் மதிள்புடைசூழ்
      திருமூழிக் களத்துறையும்,
புனல்கொள்கா யாமேனிப்
      பூந்துழாய் முடியார்க்கே. 9.7.8

3747
பூந்துழாய் முடியார்க்குப்
      பொன்னாழி கையார்க்கு,
ஏந்துநீ ரிளங்குருகே.
      திருமூழிக் களத்தார்க்கு,
ஏந்துபூண் முலைப்பயந்தென்
      இணைமலர்க்கண் ணீர்ததும்ப,
தாம்தம்மைக் கொண்டகல்தல்
      தகவன்றென் றுரையீரே. 9.7.9

3748
தகவன்றென் றுரையீர்கள்
      தடம்புனல்வாய் இரைதேர்ந்து,
மிகவின்பம் படமேவும்
      மென்னடைய அன்னங்காள்,
மிகமேனி மெலிவெய்தி
      மேகலையும் ஈடழிந்து,என்
அகமேனி யொழியாமே
      திருமூழிக் களத்தார்க்கே. 9.7.10

3749
ஒழிவின்றித் திருமூழிக்
      களத்துறையும் ஒண்சுடரை,
ஒழிவில்லா அணிமழலைக்
      கிளிமொழியாள் அலற்றியசொல்,
வழுவில்லா வண்குருகூர்ச்
      சடகோபன் வாய்ந்துரைத்த,
அழிவில்லா ஆயிரத்திப்
      பத்தும்நோய் அறுக்குமே. (2) 9.7.11

3750
அறுக்கும் வினையா யின ஆகத்தவனை,
நிறுத்தம் மனத்தொன் றியசிந் தையினார்க்கு,
வெறித்தண் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,
குறுக்கும் வகையுண்டு கொலொகொடி யேற்கே? (2) 9.8.1

3751
கொடியே ரிடைக்கோ கனகத் தவள்கேள்வன்,
வடிவேல் தடங்கண் மடப்பின்னை மணாளன்,
நெடியா னுறைசோ லைகள்சூழ் திருநாவாய்,
அடியேன் அணுகப் பெறு நாள் எவைகொலொ. 9.8.2

3752
எவைகொல் அணுகப் பெறுநாள்? என் றெப்போதும்,
கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்,
நவையில் திருநாரணன்fசேர் திருநாவாய்,,
அவையுள் புகலாவ தோர்நாள் அறியேனே. 9.8.3

3753
நாளெல் அறியேன் எனக்குள் ளன,நானும்
மீளா அடிமைப் பணிசெய்யப் புகுந்தேன்,
நீளார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,
வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா. 9.8.4

3754
மணாளன் மலர்மங் கைக்கும்மண் மடந்தைக்கும்,
கண்ணாளன் உலகத் துயிர்தேவர் கட்கெல்லாம்,
விண்ணாளன் விரும்பி யுறையும் திருநாவாய்,
கண்ணாரக் களிக்கின்ற திங்கென்று கொல்கண்டே? 9.8.5

3755
கண்டே களிக்கின்ற திங்கென்று கொல்கண்கள்,
தொண்டே யுனக்கா யொழிந்தான் துரிசின்றி,
வண்டார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,
கொண்டே யுறைகின்ற எங்கோ வலர்கோவே. 9.8.6

3756
கோவா கியமா வலியை நிலங்கொண்டாய்,
தேவா சுரம்செற் றவனே. திருமாலே,
நாவா யுறைகின்ற என்நா ரணநம்பீ,
ஆவா அடியா னிவன் என் றருளாயே. 9.8.7

3757
அருளா தொழிவாய் அருள்செய்து, அடியேனைப்
பொருளாக்கி யுன்பொன் னடிக்கீழ்ப் புகவைப்பாய்,
மருளே யின்றியுன்னை என்னெஞ்சத் திருத்தும்,
தெருளே தருதென் திருநாவாய் என்தேவே. 9.8.8

3758
தேவர் முனிவர்க் கென்றும்காண் டற்கரியன்,
மூவர் முதல்வன் ஒருமூ வுலகாளி,
தேவன் விரும்பி யுறையும் திருநாவாய்,
யாவர் அணுகப் பெறுவார் இனியந்தோ. 9.8.9

3759
அந்தோ. அணுகப் பெறுநாளென் றெப்போதும்,
சிந்தை கலங்கித் திருமாலென் றழைப்பன்,
கொந்தார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,
வந்தே யுறைகின்ற எம்மா மணிவண்ணா. 9.8.10

3760
வண்ணம் மணிமாட நன்னாவாய் உள்ளனை,
திண்ணம் மதிள்தென் குருகூர்ச் சடகோபன்,
பண்ணர் தமிழா யிரத்திப்பத் தும்வல்லார்,
மண்ணாண்டு மணம்கமழ் வர்மல்லிகையே. (2) 9.8.11

3761
மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ.
      வண்குறிஞ் சியிசை தவழு மாலோ,
செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ.
      செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ,
அல்லியந் தாமரைக் கண்ணன் எம்மான்
      ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன்,
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
      புகலிடம் அறிகிலம் தமிய மாலோ. (2) 9.9.1

3762
புகலிடம் அறிகிலம் தமிய மாலோ.
      புலம்புறும் அணிதென்றல் ஆம்ப லாலோ,
பகலடு மாலைவண் சாந்த மாலோ.
      பஞ்சமம் முல்லைதண் வாடை யாலோ,
அகலிடம் படைத்திடந் துண்டு மிழ்ந்து
      அளந்தெங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன்,
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
      இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்? 9.9.2

3763
இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்
      இணைமுலை நமுகநுண் ணிடைநு டங்க,
துனியிருங் கலவிசெய் தாகம் தோய்ந்து
      துறந்தெம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்,
தனியிளஞ் சிங்கமெம் மாயன் வாரான்
      தாமரைக் கண்ணும்செவ் வாயும்,நீலப்
பனியிருங் குழல்களும் நான்கு தோளும்
      பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ. 9.9.3

3764
பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ.
      வாடைதண் வாடைவெவ் வாடை யாலோ,
மேவுதண் மதியம்வெம் மதிய மாலோ.
      மென்மலர்ப் பள்ளிவெம் பள்ளி யாலோ,
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு
      துதைந்த எம் பெண்மையம் பூவி தாலோ,
ஆவியிம் பரமல்ல வகைக ளாலோ.
      யாமுடை நெஞ்சமும் துணையன் றாலோ. 9.9.4

3765
யாமுடை நெஞ்சமும் துணையன் றாலோ.
      ஆபுகும் மாலையும் ஆகின் றாலோ,
யாமுடை ஆயன்தன் மனம்கல் லாலோ.
      அவனுடைத் தீங்குழ லீரு மாலோ,
யாமுடை துணையென்னும் தோழி மாரும்
      எம்மின்முன் னவனுக்கு மாய்வ ராலோ,
யாமுடை ஆருயிர் காக்கு மாறென்?
      அவனுடை யருள்பெ றும்போது அரிதே. 9.9.5

3766
அவனுடை யருள்பெ றும்போ தரிதால்
      அவ்வருள் அல்லன அருளும் அல்ல,
அவனருள் பெறுமள வாவி நில்லாது
      அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனொடு பிரமன்வண் திரும டந்தை
      சேர்திரு வாகமெம் மாவி யீரும்,
எவனினிப் புகுமிடம்? எவஞ்செய் கேனோ?
      ஆருக்கென் சொல்லுகேன் அன்னை மீர்காள். 9.9.6

3767
ஆருக்கென் சொல்லுகேன் அன்னை மீர்காள்.
ஆருயிர் அளவு அன்று இக்கூர்தண் வாடை,
காரொக்கும் மேனிநங் கண்ணன் கள்வம்
கவர்ந்தவத் தனிநெஞ்சம் அவன்fக ணஃதே,
சீருற்ற அகிற்புகை யாழ்ந ரம்பு
பஞ்சமம் தண்பசுஞ் சாந்த ணைந்து,
போருற்ற வாடைதண் மல்லி கைப்பூப்
புதுமணம் முகந்துகொண் டெறியு மாலோ. 9.9.7

3768
புதுமணம் முகந்துகொண் டெறியு மாலோ.
      பொங்கிள வாடைபுன் செக்க ராலோ,
அதுமணந் தகன்றநங் கண்ணன் கள்வம்
      கண்ணினிற் கொடிதினி அதனி லும்பர்,
மதுமன மல்லிகை மந்தக் கோவை
      வண்பசுஞ் சாந்தினில் பஞ்ச மம்வைத்து,
அதுமணந் தின்னருள் ஆய்ச்சி யர்க்கே
      ஊதுமத் தீங்குழற் கேயுய் யேன்நான். 9.9.8

3769
ஊதுமத் தீங்குழற் கேயுய் யேன்நான்.
      அதுமொழிந் திடையிடைத் தஞ்செய் கோலத்,
தூதுசெய் கண்கள்கொண் டொன்று பேசித்
      தூமொழி யிசைகள்கொண் டொன்று நோக்கி,
பேதுறும் முகம்செய்து நொந்து நொந்து
      பேதைநெஞ் சறவறப் பாடும் பாட்டை,
யாதுமொன் றறிகிலம் அம்ம அம்ம.
      மாலையும் வந்தது மாயன் வாரான். 9.9.9

3770
மாலையும் வந்தது மாயன் வாரான்
      மாமணி புலம்பல் லேற ணைந்த,
கோலநன் னாகுகள் உகளு மாலோ.
      கொடியென குழல்களும் குழறுமாலோ,
வாலொளி வளர்முல்லை கருமு கைகள்
      மல்லிகை யலம்பிவண் டாலு மாலோ,
வேலையும் விசம்பில்விண் டலறு மாலோ.
      என்சொல்லி யுய்வனிங் கவனை விட்டே? 9.9.10

3771
அவனைவிட் டகன்றுயிர் ஆற்ற கில்லா
      அணியிழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்,
அவனைவிட் டகல்வதற் கேயி ரங்கி
      அணிகுரு கூர்ச்சட கோபன் மாறன்,
அவனியுண் டுமிழ்ந்தவன் மேலு ரைத்த
      ஆயிரத் துள்ளிவை பத்தும் கொண்டு,
அவனியுள் அலற்றிநின் றுய்ம்மின் தொண்டீர்.
      அச்சொன்ன மாலை நண்ணித் தொழுதே. (2) 9.9.11

3772
மாலைநண் ணித்தொழு தெழுமினோ வினைகெட,
காலைமா லைகம லமலர் இட்டுநீர்,
வேலைமோ தும்மதிள் சூழ்திருக் கண்ணபுரத்து,
ஆலின்மே லாலமர்ந் தானடி யிணைகளே. (2) 9.10.1

3773
கள்ளவி ழும்மலர் இட்டுநீ ரிறைஞ்சுமின்,
நள்ளிசே ரும்வயல் சூழ்கிடங் கின்புடை,
வெள்ளீயேய்ந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரம்
உள்ளி,நா ளும்தொழு தெழுமினோ தொண்டரே. 9.10.2

3774
தொண்டர்.நுந் தந்துயர் போகநீர் ஏகமாய்,
விண்டுவா டாமலர் இட்டுநீ ரிறைஞ்சுமின்,
வண்டுபா டும்பொழில் சூழ்திருக் கண்புரத்
தண்டவா ணன்,அம ரர்பெரு மானையே. 9.10.3

3775
மானைநோக் கிமடப் பின்னைதன் கேள்வனை,
தேனைவா டாமலர் இட்டுநீ ரிறைஞ்சுமின்,
வானையுந் தும்மதிள் சூழ்திருக் கண்ணபுரம்,
தான் நயந் தபெரு மான் சர ணாகுமே. 9.10.4

3776
சரணமா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,
மரணமா னால்வைகுந் தம்கொடுக் கும்பிரான்,
அரணமைந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரம்,
தரணியா ளன்,தன தன்பர்க்கன் பாகுமே. 9.10.5

3777
அன்பனா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,
செம்பொனா கத்தவு ணனுடல் கீண்டவன்,
நன்பொனேய்ந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரத்
தன்பன்,நா ளும்தன் மெய்யர்க்கு மெய்யனே. 9.10.6

3778
மெய்யனா கும்விரும் பித்தொழு வார்க்கெலாம்,
பொய்யனா கும்புற மேதொழு வார்க்கெலாம்,
செய்யில்வா ளையுக ளும்திருக் கண்ணபுரத்து
ஐயன்,ஆ கத்தணைப் பார்கட் கணியனே. 9.10.7

3779
அணியனா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,
பிணியும் சாரா பிறவி கெடுத்தாளும்,
மணிபொனேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரம்
பணிமின்,நா ளும்பர மேட்டிதன் பாதமே. 9.10.8

3780
பாதநா ளும்பணி யத்தணி யும்பிணி,
ஏதம்சா ராஎனக் கேலினி யென்குறை?,
வேதநா வர்விரும் பும்திருக் கணபுரத்து
ஆதியா னை,அடைந் தார்க்கல்லல் இல்லையே. 9.10.9

3781
இல்லையல் லலெனக் கேலினி யென்குறை?,
அல்லிமா தரம ரும்திரு மார்பினன்,
கல்லிலேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரம்
சொல்ல,நா ளும்துயர் பாடுசா ராவே. 9.10.10

3782
பாடுசா ராவினை பற்றற வேண்டுவீர்,
மாடநீ டுகுரு கூர்ச்சட கோபஞ்சொல்,
பாடலா னதமிழ் ஆயிரத்து ளிப்பத்தும்
பாடியா டிப்,பணி மினவன் தாள்களே. (2) 9.10.11
---------------

திருவாய் மொழி பத்தாம் பத்து (3783-3892)


3783
தாள தாமரைத் தடமணி வயல் திரு மோகூர்
நாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்
காள மேகத்தை யன் றிமற் றொன் றிலம் கதியே. (2) 10.1.1

3784
இலங்கதி மற்றொன் றெம்மைக்கும் ஈன்தண் துழாயின்
அலங்கலங் கண்ணி ஆயிரம் பேருடை அம்மான்
நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்திரு மோகூர்
நலங்க ழலவன் அடிநிழல் தடமன்றி யாமே. 10.1.2

3785
அன்றி யாமொரு புகலிடம் இலம் என்றென் றலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றிம் மூவுல களித்துழல் வான்திரு மோகூர்
நன்று நாமினி நணுகுதும் நமதிடர் கெடவே. 10.1.3

3786
இடர்கெட எம்மைப் போந்தளி யாய் என்றென் றேத்தி
சுடர்கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர்கொள் பாம்பணைப் பள்ளிகொள் வான்திரு மோகூர்
இடர்கெ டவடி பரவுதும் தொண்டீர். வம்மினே. 10.1.4

3787
தொண்டீர். வம்மின்நம் சுடரொளி யொருதனி முதல்வன்
அண்ட மூவுல களந்தவன் அணிதிரு மோகூர்
எண்டி சையுமீன் கரும்பொடு பொருஞ்செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலஞ்செய்திங் காடுதும் கூத்தே. 10.1.5

3888
கூத்தன் கோவலன் குதற்றுவல் லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நங்கடகும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண்பணை வளவயல் சூழ்திரு மோகூர்
ஆத்தன் தாமரை யடியன்றி மற்றிலம் அரணே. 10.1.6

3789
மற்றி லமரண் வான்பெரும் பாழ்தனி முதலா
சுற்று நீர்படைத் ததன்வழித் தொன்முனி முதலா
முற்றும் தேவரோ டுலகுசெய் வான்திரு மோகூர்
சுற்றி நாம்வலஞ் செய்யநம் துயர்கெடும் கடிதெ. 10.1.7

3790
துயர்கெ டும்கடி தடைந்துவன் தடியவர் தொழுமின்
உயர்கொள் சோலையொண் தடமணி யொளிதிரு மோகூர்
பெயர்கள் ஆயிர முடையவல் லரக்கர்புக் கழுந்த
தயரதன் பெற்ற மரதக மணித்தடத் தினையே. 10.1.8

3791
மணித்த டத்தடி மலர்க்கண்கள் பவளச் செவ்வாய்
அணிககொள் நால்தடந் தோள்தெய்வம் அசுரரை யென்றும்
துணிக்கும் வல்லரட் டனுறை பொழில்திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாமடைந் தனமே. 10.1.9

3792
நாம டைந்தநல் லரண்தமக் கென்றுநல் லமரர்
தீமை செய்யும்வல் லசுரரை யஞ்சிச்சென் றடைந்தால்
காம ரூபம்கொண் டெழுந்தளிப் பான்திரு மோகூர்
நாம மேநவின் றெண்ணுமின் ஏத்துமின் நமர்காள். 10.1.10.

3793
ஏத்து மின்நமர் காள் என்று தான்குட மாடு
கூத்தனை குரு கூர்ச்சட கோபன்குற் றேவல்
வாய்த்த ஆயிரத் துள்ளிவை வண்திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை யேத்தவல் லார்க்கிடர் கெடுமே. (2) 10.1.11

3794
கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்தபுரநகர்ப் புகுதுமின்றே. (2) 10.2.1

3795
இன்றுபோய்ப் புகுதிராகி லெழுமையும் ஏதம்சார
குன்றுனேர் மாடமாடே குருந்துசேர் செருந்திபுன்னை
மன்றலர் போழில் அனந்தபுரநகர் மாயன்நாமம்
ஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே. 10.2.2

3796
ஊரும்புட் கொடியுமஃதே யுலகொல்லாமுண்டுமிழ்ந்தான்
சேரும்தண் ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச்சொன்னோம்
பேரும் ஓராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே. 10.2.3

3797
பேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து
வாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம்
நேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே. 10.2.4

3798
புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி
எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால்
திண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார். 10.2.5

3799
அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர அனந்தபுரத்து
அமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர்
நமர்களோ. சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும்
குமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே. 10.2.6

3800
துடைத்தகோ விந்தனாரே யுலகுயிர் தேவும்மற்றும்
படைத்தவெம் பரமமூர்த்தி பாம்பணைப் பள்ளிகொண்டான்
மடைத்தலை வாளைபாயும் வயலணியனந்தபுரம்
கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே. 10.2.7

3801
கடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை
இடவகை கொண்டதென்பர் எழிலணியனந்தபுரம்
படமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண
நடமினோ நமர்களுள்ளீர். நாமுமக் கறியச்சொன்னோம். 10.2.8

3802
நாமுமக் கறியச்சொன்ன நாள்களும் நணியவான
சேமம் நங்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம்
தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்துகொண்டு
வாமனன் அடிக்கென்றெத்த மாய்ந்தறும் வினைகள்தாமே. 10.2.9

3803
மாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன நாளும்
ஏய்ந்தபொன் மதிளனந்தபுர நகரெந்தைக்கென்று
சாந்தொடு விளக்கம்தூபம் தாமரை மலர்கள்நல்ல
ஆய்ந்துகொண் டேத்தவல்லார் அந்தமில் புகழினாரே. 10.2.10.

3804
அந்தமில் புகழனந்தபுர நகர் ஆதிதன்னை
கொந்தலர் பொழில்குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோ டைந்தும்வல்லார் அணைவர்போய் அமருலகில்
பைந்தொடி மடந்தையர்தம் வேய்மரு தோளிணையே. (2) 10.2.11

3805
வேய்மரு தோளிணை மெலியு மாலோ.
      மெலிவுமென் தனிமையும் யாதும் நோக்கா
காமரு குயில்களும் கூவு மாலோ.
      கணமயில் அவைகலந்தாலு மாலோ
ஆமரு வினநிரை மேய்க்க நீபோக்கு
      ஒருபக லாயிர மூழி யாலோ
தாமரைக் கண்கள்கொண் டீர்தி யாலோ.
      தகவிலை தகவிலையே நீ கண்ணா. (2) 10.3.1

3806
தகவிலை தகவிலை யேநீ கண்ணா.
      தடமுலை புணர் தொறும் புணற்ச்சிக் காரா
சுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை மூழ்க்கச்
      சூழ்ந்தது கனவென நீங்கி யாங்கே
அகவுயிர் அகமதந்தோறும் உள்புக்
      காவியின் பரமல்ல வேட்கை யந்தோ
மிகமிக இனியுன்னைப் பிரிவை யாமால்
      வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே. 10.3.2

3807
வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு
      வெவ்வுயிர் கொண்டென தாவி வேமால்
யாவரும் துணையில்லை யானி ருந்துன்
      அஞ்சன மேனியை யாட்டம் காணேன்
போவதன் றொருபகல் நீய கன்றால்
      பொருகயற் கண்ணிணை நீரும் நில்லா
சாவதிவ் வாய்க்குலத் காய்ச்சி யோமாய்ப்
      பிறந்தவித் தொழுத்தையோம் தனிமை தானே. 10.3.3

3808
தொழுத்தையோம் தனிமையும் துணைபி ரிந்தார்
      துயரமும் நினைகிலை கோவிந் தா நின்
தொழுத்தனில் பசுக்களை யேவி ரும்பித்
      துறந்தெம்மையிட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்தநல் லமுதினின் சாற்று வெள்ளம்
      பாவியேன் மனமகந் தோறு முள்புக்
கழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
      பணிமொழி நினை தொறும் ஆவி வேமால். 10.3.4

3809
பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்
      பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப்
      பெருமத மாலையும் வந்தின் றாலோ
மணிமிகு மார்வினில் முல்லைப் போதென்
      வனமுலை கமழ்வித்துன் வாயமு தம்தந்து
அணிமிகு தாமரைக் கையை யந்தோ.
      அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய். 10.3.5

3810
அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய்
      ஆழியங் கண்ணா. உன் கோலப் பாதம்
பிடித்தது நடுவுனக் கரிவை மாரும்
      பலரது நிற்கவெம் பெண்மை யாற்றோம்
வடித்தடங் கண்ணிணை நீரும் நில்லா
      மனமும்நில் லாவெமக் கதுதன் னாலே
வெடிப்புநின் பசு நிரை மேய்க்கப் போக்கு
      வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே. 10.3.6

3811
வேமெம துயிரழல் மெழுகில் உக்கு
      வெள்வளை மேகலை கழன்று வீழ
தூமலர்க் கண்ணிணை முத்தம் சோரத்
      தூணைமுலை பயந்து என தோள்கள் வாட
மாமணி வண்ணா உன்செங்கமல
      வண்ணமென் மலரடி நோவ நீபோய்
ஆமகிழ்ந் துகந்தவை மேய்க்கின் றுன்னோடு
      அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? 10.3.7

3812
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொ லாங்கென்று
      ஆழுமென் னாருயிர் ஆன்பின் போகேல்
கசிகையும் வேட்கையும் உள்க லந்து
      கலவியும் நலியுமென் கைகழி யேல்
வசிசெயுன் தாமரைக் கண்ணும் வாயும்
      கைகளும் பீதக வுடையும் காட்டி
ஒசிசெய்நுண் ணிடையிள ஆய்ச்சி யர்நீ
      உகக்குநல் லவரொடும் உழித ராயே. 10.3.8

3813
உகக்குநல் லவரொடும் உழிதந் துன்றன்
      திருவுள்ளம் இடர்கெடுந் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம்பெண்மை யாற்றோம்
      எம்பெரு மான். பசு மேய்க்கப் போகேல்
மிதப்பல அசுரர்கள் வேண்டும் உருவங்
      கொண்டுநின் றுழிதருவர் கஞ்ச னேவ
அகப்படில் அவரொடும் நின்னொ டாங்கே
      அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ. 10.3.9

3814
அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ.
      அசுரர்கள் வங்கையர் கஞ்ச னேவத்
தவத்தவர் மறுக நின்றுழி தருவர்
      தனிமையும் பெரிதுனக்கு இராமனையும்
உவர்த்தலை உடந்திரி கிலையு மென்றென்று
      ஊடுற வென்னுடை யாவிவேமால்
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு வத்தி
      செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே. 10.3.10.

3815
செங்கனி வாயெங்கள் ஆயர் தேவு
      அத்திருவடி திருவடி மேல் பொ ருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
      வண்சட கோபன்சொல் லாயி ரத்துள்
மங்கைய ராய்ச்சிய ராய்ந்த மாலை
      அவனொடும் பிரிவதற் கிரங்கி தையல்
அங்கவன் பசுநிரை மேய்ப்பொ ழிப்பான்
      உரைத்தன இவையும்பத் தவற்றின் சார்வே. (2) 10.3.11

3816
சார்வேதவ நெறிக்குத் தாமோதரன் தாள்தள்,
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்,
நீர்வானம் மண்ணெரிகா லாய்நின்ற நேமியான்,
பேர்வா னவர்கள் பிதற்றும் பெருமையனே. (2) 10.4.1

3817
பெருமையனே வானத் திமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணையாதார்க்கு என்றும்
திருமெய் யுறைகின்ற செங்கண்மால் நாளும்
இருமை வினைகடிந்திங்கு என்னையாள் கின்றானே. 10.4.2

3818
ஆள்கின்றா னாழியான் ஆரால் குறைவுடையம்?
மீள்கின்ற தில்லைப் பிறவித் துயர்கடிந்தோம்,
வாள்கெண்டையொண்கண் மடப்பின்னை தன் கேள்வன்,
தாள்கண்டு கொண்டு என் தலைமேல் புனைந்தேனே. 10.4.3

3819
தலைமேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல்தான் நின்றென் மனத்து ளிருந்தானை
நிலைபேர்க்க லாகாமை நிச்சித் திருந்தேனே. 10.4.4

3820
நிச்சித் திருந்தேனென் நெஞ்சம் கழியாமை
கைச்சக் கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன்
மெச்சப் படான்பிறர்க்கு மெய்போலும் பொய்வல்லன்
நச்சப் படும்நமக்கு நாகத் தணையானே. 10.4.5

3821
நாகத் தணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத் தணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை
மாகத் திள மதியம் சேரும் சடையானை
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே. 10.4.6

3822
பணிநெஞ்சே. நாளும் பரம பரம்பரனை
பிணியொன்றும் சாரா பிறவி கெடுத்தாளும்
மணிநின்ற சோதி மதுசூதன் என்னம்மான்
அணிநின்ற செம்பொன் அடலாழி யானே. 10.4.7

3823
ஆழியா னாழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியா னூழி படைத்தான் நிரைமேய்த்தான்
பாழியந் தோளால் வரையெடுத்தான் பாதங்கள்
வாழியென் நெஞ்சே. மறவாது வாழ்கண்டாய். 10.4.8

3824
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே யொழிந்த வினையா யினவெல்லாம்
தொண்டேசெய் தென்றும் தொழுது வழியொழுக
பண்டே பரமன் பணித்த பணிவகையே. 10.4.9

3825
வகையால் மனமொன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புதுமலரால் நீரால்
திகைதோ றமரர்கள் சென்றிறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கடகோர் பற்றே. 10.4.10.

3826
பற்றென்று பற்றிப் பரம பரமபரனை
மற்றிண்டோ ள் மாலை வழுதி வளநாடன்
சொற்றொடையந் தாதியோ ராயிரத்து ளிப்பத்தும்
கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே. (2) 10.4.11

பத்து வகை பத்தியும் பிரபத்தியும்

3827
கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே. (2) 10.5.1

3828
நாரணன் எம்மான்
பாரணங்காளன்
வாரணம் தொலைத்த
காரணன் தானே. 10.5.2

3829
தானே உலகெலாம்
தானே படைத்திடந்து
தானே உண்டுமிழ்ந்து
தானே யாள்வானே. 10.5.3

3830
ஆள்வான் ஆழிநீர்
கோள்வாய அரவணையான்
தாள்வாய் மலரிட்டு
நாள்வாய் நாடீரே. 10.5.4

3831
நாடீர் நாள்தோறும்
வாடா மலர்கொண்டு
பாடீர் அவன்நாமம்
வீடே பெறலாமே. 10.5.5

3832
மேயான் வேங்கடம்
காயா மலர்வண்ணன்
பேயார் முலையுண்ட
வாயான் மாதவனே. (2) 10.5.6

3833
மாதவன் என்றென்று
ஓத வல்லீரேல்
தீதொன்று மடையா
ஏதம் சாராவே. 10.5.7

3834
சாரா ஏதங்கள்
நீரார் முகில்வண்ணன்
பேர் ஆர் ஓதுவார்
ஆரார் அமரரே. 10.5.8

3835
அமரர்க்கு அரியானை
தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு
அமரா வினைகளே. 10.5.9

3836
வினைவல் இருளென்னும்
முனைகள் வெருவிப்போம்
சுனை நன் மலரிட்டு
நினைமின் நெடியானே. 10.5.10.

3837
நெடியான் அருள் சூடும்
படியான் சடகோபன்
நொடி ஆயிரத்திப்பத்து
அடியார்க்கு அருள் பேறே. (2) 10.5.11

3838
அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அதுநமது விதிவகையே
இருள்தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான்வேண்டேன்
மருளொழிநீ மடநெஞ்சே. வாட்டாற்றான் அடிவணங்கே. (2) 10.6.1

3839
வாட்டாற்றா னடிவணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான்
கேட்டாயே மடநெஞ்சே. கேசவனெம் பெருமானை
பாட்டாய பலபாடிப் பழவினைகள் பற்றறுத்து
நாட்டாரோ டியல்வொழிந்து நாரணனை நண்ணினமே. 10.6.2

3840
நண்ணினம் நாரணனை நாமங்கள் பலசொல்லி
மண்ணுலகில் வளம்மிக்க வாட்டாற்றான் வந்தின்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவா றாகாவிக் கருமங்க ளென்னெஞ்சே. 10.6.3

3841
என்னெஞ்சத் துள்ளிருந்திங் கிருந்தமிழ்நூலிவைமொழிந்து
வன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான்
மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்
நன்னெஞ்சே. நம்பெருமான் நமக்கருள்தான் செய்வானே. 10.6.4

3842
வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே
நானேறப் பெறுகின்றென் நரகத்தை நகுநெஞ்சே
தேனேறு மலர்த்துளவம் திகழ்பாதன் செழும்பறவை
தானேறித் திரிவான தாளிணையென் தலைமேலே. 10.6.5

3843
தலைமேல தாளிணைகள் தாமரைக்கண் என்னம்மான்
நிலைபேரான் என்நெஞ்சத் தெப்பொழுதும் எம்பெருமான்
மலைமாடத் தரவணைமேல் வாட்டாற்றான் மதமிக்க
கொலையானை மருப்பொசித்தான் குரைகழல்தள் குறுகினமே. 10.6.6

3844
குரைகழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான்
திரைகுழுவு கடல்புடைசூழ் தென்னாட்டுத் திலதமன்ன
வரைகுழுவும் மணிமாட வாட்டாற்றான் மலரடிமேல்
விரைகுழுவும் நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே. 10.6.7

3845
மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறு திருமுடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருதுபுனல்
மைந்நின்ற வரைபோலும் திருவுருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழவதுவே? 10.6.8

3846
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம்கெடுத்தான்
இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே. 10.6.9

3847
பிரியாதாட் செய்யென்று பிறப்பறுத்தாள் அறக்கொண்டான்
அரியாகி இரணியனை ஆகங்கீண் டானன்று
பெரியார்க்காட் பட்டக்கால் பெறாதபயன் பெறுமாறு
வரிவாள்வாய் அரவணைமேல் வாட்டாற்றான் காட்டினனே. 10.6.10.

3848
காட்டித்தன் கனைகழல்கள் கடுநரகம் புகலொழித்த
வாட்டாற்றெம் பெருமானை வளங்குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ்மாலை யாயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே. (2) 10.6.11

3849
செங்சொற் கவிகாள். உயிர்காத்தாட்
      செய்மின் திருமா லிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன்
      மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சு முயிரு முள்கலந்து
      நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சு முயிரும் அவைடுண்டு
      தானே யாகி நிறைந்தானே. (2) 10.7.1

3850
தானே யாகி நிறைந்தெல்லா
      உலகும் உயிரும் தானேயாய்
தானே யானென் பானாகித்
      தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே
      அமுதே திருமாலிருஞ்சோலை
கோனே யாகி நின்றொழிந்தான்
      என்னை முற்றும் உயிருண்டே. 10.7.2

3851
என்னை முற்றும் உயிருண்டென்
      மாய ஆக்கை யிதனுள்புக்கு
என்னை முற்றும் தானேயாய்
      நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமா லிருஞ்சோலைத்
      திசைகை கூப்பிச் தேர்ந்தயான்
இன்னம் போவே னேகொலோ.
      எங்கொல் அம்மான் திருவருளே? 10.7.3

3852
என்கொல் அம்மான் திருவருள்கள்?
      உலகும் உயிரும் தானேயாய்
நன்கென் னுடலம் கைவிடான்
      ஞாலத் தூடே நடந்துழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய்
      நின்ற திருமாலிருஞ்சோலை
நங்கள் குன்றம் கைவிடான்
      நண்ணா அசுரர் நலியவே. 10.7.4

3853
நண்ணா அசுரர் நலிவெய்த
      நல்ல அமரர் பொலிவெய்த
எண்ணா தனகள் எண்ணும்நன்
      முனிவ ரின்பம் தலைசிறப்ப
பண்ணார் பாடல் இன்கவிகள்
      யானாய்த் தன்னைத் தான்பாடி
தென்னா வென்னும் என்னம்மான்
      திருமாலிருஞ்சோலையானே. 10.7.5

3854
திருமாலிருஞ்சோலையானே
      ஆகிச் செழுமூ வுலகும் தன்
ஒருமா வயிற்றி னுள்ளேவைத்து
      ஊழி யூழி தலையளிக்கும்
திருமாலென்னை யாளுமால்
      சிவனும் பிரமனும்காணாது
அருமா லெய்தி யடிபரவ
      அருளை யீந்த அம்மானே. 10.7.6

3855
அருளை ஈயென் அம்மானே.
      என்னும் முக்கண் அம்மானும்
தெருள்கொள் பிரமன் அம்மானும்
      தேவர் கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும்
      ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணிமலை
      திருமாலிருஞ்சோலைமலையே. 10.7.7

3856
திருமாலிருஞ்சோலைமலையே
      திருப்பாற் கடலே என்தலையே
திருமால்வைகுந்தமே தண்
      திருவேங்கடமே எனதுடலே
அருமா மாயத் தெனதுயிரே
      மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என்
      ஊழி முதல்வன் ஒருவனே. (2) 10.7.8

3857
ஊழி முதல்வன் ஒருவனே
      என்னும் ஒருவன் உலகெல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே
      படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என்னம்மான்
      அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே கைவிடேல்
      உடலும் உயிரும் மங்கவொட்டே. 10.7.9

3858
மங்க வொட்டுன் மாமாயை
      திருமாலிருஞ்சோலைமேய
நங்கள் கோனே. யானேநீ
      யாகி யென்னை யளித்தானே
பொங்கைம் புலனும் பொறியைந்தும்
      கருமேந்திரியும் ஐம்பூதம்
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி
      மானாங்கார மனங்களே. 10.7.10.

3859
மானாங்கார மனம்கெட
      ஐவர் வன்கை யர்மங்க
தானாங்கார மாய்ப்புக்குத்
      தானே தானே யானானை
தேனாங் காரப் பொழில்குருகூர்ச்
      சடகோபன்சொல்லாயிரத்துள்
மானாங்காரத்திவைபத்தும்
      திருமாலிருங்சோலைமலைக்கே. (2) 10.7.11

3860
திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன
திருமால்வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குருமா மணியுந்து புனல்பொன்னித் தென்பால்
திருமால்சென்று சேர்விடம் தென் திருப்பேரே. (2) 10.8.1

3861
பேரே யுறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேனென் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையே ழுலகுண்டும்
ஆராவ யிற்றானை யடங்கப் பிடித்தேனே. 10.8.2

3862
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணிசாரேன்
மடித்தேன் மனைவாழ்க்கை யுள்நிற்பதோர் மாயையை
கொடிக்கோ புரமாடங்கள் சூழ்திருப் பேரான்
அடிச்சேர்வதெனெனக்கெளி தாயின வாறே. 10.8.3

3863
எளிதா யினவாறென் றெங்கண்கள் களிப்ப
களிதா கியசிந் தையனாய்க் களிக்கின்றேன்
கிளிதா வியசோழைகள் சூழ்திருப் பேரான்
தெளிதா கியசேண் விசும்புதரு வானே. 10.8.4

3864
வானே தருவா னெனக்காயென் னோடொட்டி
ஊனேய் குரம்பை யிதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே பொழில்தென் திருப்பேர் நகரானே. 10.8.5

3865
திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப்
பொருப்பே யுறைகின் றபிரானின்றுவந்து
இருப்பேன் என் றென்னேஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்றமுத முண்டு களித்தேனே. 10.8.6

3866
உண்டு களித்தேற் கும்பரென் குறை மேலைத்
தொண்டு களித்தந்தி தொழும்சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில்சூழ் திருப்பேரான்
கண்டு களிப்பக் கண்ணுள்நின் றகலானே. 10.8.7

3867
கண்ணுள்நின் றகலான் கருத்தின்கண் பெரியன்
எண்ணில்நுண் பொருளே ழிசையின் சுவைதானே
வண்ணநன் மணிமாடங்கள் சூழ்திருப் பேரான்
திண்ணமென் மனத்துப் புகுந்தான் செறிந்தின்றெ. 10.8.8

3868
இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென் னுள்வைத் தான்
அன்றென்னைப் புறம்பொகப் புணர்த்ததென் செய்வான்?
குன்றென்னத் திகழ்மாடங்கள் சூழ்திருப் பேரான்
ஒன்றெனக் கருள்செய்ய வுணர்த்தலுற் றேனே. 10.8.9

3869
உற்றே னுகந்து பணிசெய் துனபாதம்
பெற்றேன் ஈதேயின் னம்வேண் டுவதெந்தாய்
கற்றார் மறைவாணர் கள்வாழ் திருப்பேராற்கு
அற்றார் அடியார் தமக்கல்லல் நில்லாவே. (2) 10.8.10.

3870
நில்லா அல்லல் நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்
நல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழா யிரத்துள் இவைபத்தும்
வல்லார் தொண்டராள் வதுசூழ்பொன் விசும்பே. (2) 10.8.11

3871
சூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரை கையெடுத் தாடின
ஏழ்பொழி லும்வளம் ஏந்திய என்னப்பன்
வாழ்புகழ் னாரணன் தமரைக்ககண் டுகந்தே. (2) 10.9.1

3872
நாரணன் தமரைக்கண் டுகந்துநன் னீர்முகில்
பூரண பொற்குடம் பூரித்த துயர்விண்ணில்
நீரணி கடல்கள்நின் றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்தெங்கும் தொழுதனர் உலகரே. 10.9.2

3873
தொழுதனர் உலகர்கள் தூபநல் மலர்மழை
பொழிவனர் பூழியன் றளந்தவன் தமர்முன்னே
எழுமின் என் றிமருங்கிசைத்தனர் முனிவர்கள்
வழியிது வைகுந்தற் கென்றுவந் தெதிரே. 10.9.3

3874
எதிரெதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவரவர் கைந்நிரை காட்டினர்
அதிர்குரல் முரசங்கள் அலைகடல் முழக்கொத்த
மதுவிரி துழாய்முடி மாதவன் தமர்க்கே. 10.9.4

3875
மாதவன் தமரென்று வாசலில் வானவர்
போதுமின் எமதிடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேதநல் வாயவர் வேள்வியுள் மடுத்தே. 10.9.5

3876
வேள்வியுள் மடுத்தலும் விரைகமழ் நறும்புகை
காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் இசைத்தனர்
ஆளுமிங்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாளொண்கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே. 10.9.6

3877
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல்
கிடந்தவென் கேசவன் கிளரொளி மணிமுடி
குடந்தையென் கோவலன் குடியடி யார்க்கே. 10.9.7

3878
குடியடி யாரிவர் கோவிந்தன் தனக்கென்று
முடியுடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள
கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே. 10.9.8

3879
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுகென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்
வகுந்தம் புகுவது மண்ணவர் விதியே. 10.9.9

3880
விதிவகை புகுந்தனர் என்றுநல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியுநற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும்
மதிமுக மடந்தயர் ஏந்தினர் வந்தே. 10.9.10.

3881
வந்தவர் எதிர்கொள்ள மாமணி மண்டபத்து
அந்தமில் பேரின்பத் தடியரோ டிருந்தமை
கொந்தலர் பொழில்குரு கூர்ச்சட கோபஞ்சொல்
சந்தங்கள் ஆயிரத் திவைவல்லார் முனிவரே. 10.9.11

3882
முனியே. நான்முக னே.முக்கண்
      ணப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு
      மாணிக்கமே. என்கள்வா
தனியேன் ஆருயிரே. என் தலை
      மிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட் டேன் ஒன்றும்
      மாயம் செய்யேல் என்னையே. (2) 10.10.1

3883
மாயம்செய் யேலென்னை உன்திரு
      மார்வத்து மாலைநங்கை
வாசம்செய் பூங்குழலாள் திருவாணை
      நின்னாணை கண்டாய்
நேசம்செய்து உன்னோடு என்னை
      உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம்செய் யாதுகொண் டாயென்னைக்
      கூவிச்கொள் ளாய்வந்தந்தோ. 10.10.2

3884
கூவிக்கொள் ளாய்வந்தந் தோ.என்
      பொல்லாக்கரு மாணிக்கமே
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால்
      அறிகின்றி லேன்யான்
மேவித் தொழும்பிரமன் சிவன்
      இந்திர னாதிக்கெல்லாம்
நாவிக் கமல முதற்கிழங்கே.
      உம்பர் அந்ததுவே. 10.10.3

3885
உம்ப ரந்தண் பாழேயோ.
      அதனுள்மிசை நீயேயோ
அம்பர நற்சோதி. அதனுள்
      பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த
      முனிவன் அவன்நீ
எம்பரம் சாதிக்க லுற்றென்னைப்
      போரவிட் டிட்டாயே. 10.10.4

3886
போரவிட் டிட்டென்னை நீபுறம்
      போக்கலுற்றால் பின்னையான்
ஆரைக்கொண் டெத்தையந்தோ.
      எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரது
      போலவென் ஆருயிரை
ஆரப் பருக,எனக்கு
      ஆராவமுதானாயே. 10.10.5

3887
எனக்கா ராவமு தாயென
      தாவியை இன்னுயிரை
மனக்கா ராமைமன்னி யுண்டிட்டா
      யினியுண் டொழியாய்
புனக்கா யாநிறத்த புண்டரீ
      கக்கட்f செங்கனிவாய்
உனக்கேற்கும் கோல மலர்ப்பாவைக்
      கன்பா..என் அன்பேயோ. 10.10.6

3888
கோல மலர்ப்பாவைக் கன்பா
      கியவென் அன்பேயோ
நீல வரையிரண்டு பிறைகவ்வி
      நிமிர்ந்த தொப்ப
கோல வராகமொன் றாய்நிலங்
      கோட்டிடைக் கொண்டேந்தாய்
நீலக் கடல்கடைந் தாயுன்னைப்
      பெற்றினிப் போக்குவனோ? (2) 10.10.7

3889
பெற்றினிப் போக்குவனோ உன்னை
      என் தனிப் பேருயிரை
உற்ற இருவினையாய் உயிராய்ப்
      பயனாய் அவையாய்
முற்றவிம் மூவுலகும் பெருந்
      தூறாய்த் தூற்றில்புக்கு
முற்றக் கரந்தொளித் தாய்.என்
      முதல்தனி னித்தேயோ. 10.10.8

3890
முதல்தனி வித்தேயோ. முழுமூ
      வுலகாதிக் கெல்லாம்
முதல்தனி யுன்னையுன்னை எனைநாள்
      வந்து கூடுவன்நான்
முதல்தனி அங்குமிங்கும் முழுமுற்
      றுறுவாழ் பாழாய்
முதல்தனி சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த
      முடிவி லீயோ. 10.10.9

3891
சூழ்ந்தகன் றழ்ந்துயர்ந்த முடிவில்
      பெரும்பா ழேயோ
சூழ்ந்தத னில்பெரிய பரநன்
      மலர்ச்சோ தீயோ
சூழ்ந்தத னில்பெரிய சுடர்ஞான
      வின்ப மேயோ
சூழ்ந்தத னில்பெரிய என்னவா
      அறச்சூழ்ந் தாயே. (2) 10.10.10.

3892
அவாவறச் சூழரியை அயனை
      அரனை அலற்றி
அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச்
      சடகோபன் சொன்ன
அவாவிலந் தாதிகளால் இவையா
      யிரமும் முடிந்த
அவாவிலந் தாதியிப் பத்தறிந்
      தார்பிறந் தாருயர்ந்தே. (2) 10.10.11

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
திருவாய்மொழி நிறைவுற்றது.
ஆக பாசுரம் 1102.
-------------------
திருவரங்கத்தமுதனார் அருளிய ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி


3913
நிதியைப் பொழியும் முகில்என்று நீசர்தம் வாசல்பற்றித்
துதிகற் றுலகில் துவள்கின்றி லேன், இனித் தூய்நெறிசேர்
எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதிபெற் றுடைய இராமா னுசனென்னைக் காத்தனனே. 21

3914
கார்த்திகை யானும் கரிமுகத் தானும் கனலும்முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும்
பூத்தவ னே.என்று போற்றிட வாணன் பிழைபொறுத்த
தீர்த்தனை யேத்தும் இராமா னுசனென்றன் சேமவைப்பே. 22

3915
வைப்பாய வான்பொருள் என்று,நல் லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமா னுசனை இருநிலத்தில்
ஒப்பார் இலாத உறுவினை யேன்வஞ்ச நெஞ்சில்வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இதுஅவன் மொய்புகழ்க்கே. 23

3916
மொய்த்தவெந் தீவினை யால்பல் லுடல்தொறும் மூத்து,அதனால்
எய்த்தொழிந் தேன்முன நாள்களெல் லாம்,இன்று கண்டுயர்ந்தேன்
பொய்த்தவம் போற்றும் புலைச்சம யங்கள்நிலத்தவியக்
கைத்தமெய்ஞ் ஞானத்து இராமா னுசனென்னும் கார்தன்னையே. 24

3917
காரேய் கருணை இராமா னுச,இக் கடலிடத்தில்
ஆரே யறிபவர் நின்னரு ளின்தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான்வந்து நீயென்னை உய்த்தபினுன்
சீரே யுயிர்க்குயி ராய், அடி யேற்கின்று தித்திக்குமே. 25

3918
திக்குற்ற கீர்த்தி இராமா னுசனை, என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும்நல்லோர்
எக்குற்ற வாளர் எதுபிறப் பேதியல் வாகநின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல் வேநம்மை யாட்கொள்ளுமே. 26

3919
கொள்ளக் குறைவற் றிலங்கிக் கொழுந்துவிட் டோ ங்கியவுன்
வள்ளல் தனத்தினால் வல்வினை யேன்மனம் நீபுகுந்தாய்
வெள்ளைச் சுடர்விடும் உன்பெரு மேன்மைக் கிழுக்கிதென்று
தள்ளுற் றிரங்கும் இராமா னுச என் தனிநெஞ்சமே. 27

3920
நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன் பாதம்நண்ணா
வஞ்சர்க் கரிய இராமா னுசன்புகழ் அன்றியென்வாய்
கொஞ்சிப் பரவகில் லாது என்ன வாழ்வின்று கூடியதே. 28

3921
கூட்டும் விதியென்று கூடுங்கொ லோ,தென் குருகைப்பிரான்
பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத்,தன் பத்தியென்னும்
வீட்டின்கண் வைத்த இராமா னுசன்புகழ் மெய்யுணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டினப மெய்திடவே? 29

3922
இன்பந் தருபெரு வீடுவந் தெய்திலென்? எண்ணிறந்த
துன்பந் தருநிர யம்பல சூழிலென்? தொல்லுலகில்
மன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன் எனமொழிந்த
அன்பன் அனகன் இராமா னுசனென்னை ஆண்டனனே. 30

3923
ஆண்டிகள் நாள்திங்க ளாய்நிகழ் காலமெல் லாம்மனமே.
ஈண்டுபல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே
காண்டகு தோளண்ணல் தென்னத்தி யூரர் கழலிணைக்கீழ்ப்
பூண்டவன் பாளன் இராமா னுசனைப் பொருந்தினமே. (2) 31

3924
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையி னால்வந் தெடுத்தளித்த
அருந்தவன் எங்கள் இராமா னுசனை அடைபவர்க்கே. 32

3925
அடையார் கமலத் தலர்மகள் கேள்வன் கை யாழியென்னும்
படையொடு நாந்தக மும்படர் தண்டும்,ஒண் சார்ங்கவில்லும்
புடையார் புரிசங் கமுமிந்தப் பூதலம் காப்பதற்கென்று
இடையே இராமா னுசமுனி யாயின இந்நிலத்தே. 33

3926
நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என் பெய்வினைதென்
புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கியபின்
நலத்தைப் பொறுத்தது இராமா னுசன்றன் நயப்புகழே. 34

3927
நயவேன் ஒருதெய்வம் நானிலத் தேசில மானிடத்தைப்
புயலே எனக்கவி போற்றிசெய் யேன், பொன் னரங்கமென்னில்
மயலே பெருகும் இராம னுசன்மன்னு மாமலர்த்தாள்
அயரேன் அருவினை என்னையெவ் வாறின் றடர்ப்பதுவே? 35

3928
அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச்சொல்
கடல்கொண்ட ஒண்பொருள் கண்டளிப் பப்,பின்னும் காசினியோர்
இடரின்கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண்பொருள் கொண்டவர்பின்
படரும் குணன், எம் இராமா னுசன்றன் படியிதுவே. 36

3929
படிகொண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்திவெள்ளம்
குடிகொண்ட கோயில் இராமா னுசன்குணங் கூறும்,அன்பர்
கடிகொண்ட மாமாலர்த் தாள்கலந் துள்ளங் கனியும்நல்லோர்
அடிகண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே. 37

3930
ஆக்கி யடிமை நிலைப்பித் தனையென்னை இன்று,அவமே
போக்கிப் புறத்திட்ட தென்பொரு ளா?முன்பு புண்ணியர்தம்
வாக்கிற் பிரியா இராமா னுச நின் அருளின்வண்ணம்
நோக்கில் தெரிவிரி தால், உரை யாயிந்த நுண்பொருளே. 38

3931
பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே
மருள்கொண் டிளைக்கும் நமக்கு நெஞ் சே.மற்று ளார்த்தரமோ?
இருள்கோண்ட வெந்துயர் மாற்றித்தன் ஈறில் பெரும்புகழே
தெருளும் தெருள்தந்து இராமா னுசன்fசெய்யும் சேமங்களே. 39

3932
சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம்பொருள் வீடுதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன், இராமா னுசனிந்த மண்மிசையே. 40

3933
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில் லா, உல கோர்களெல்லாம்
அண்ணல் இராமா னுசன்வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு, நாரணற் காயினரே. 41

3934
ஆயிழை யார்கொங்கை தங்கும்அக் காதல் அளற்றழுந்தி
மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மாமலராள்
நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
தூயவன் தீதில் இராமா னுசன்தொல் லருள்சுரந்தே. 42

3935
சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றற வோடும் படியிலுள்ளீர்
உரைக்கின் றனனுமக் கியானறஞ் சீறும் உறுகலியைத்
துரக்கும் பெருமை இராமா னுசனென்று சொல்லுமினே. 43

3936
சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர்
நல்லார் பரவும் இராமா னுசன்திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத் தோர், எது பேறென்று காமிப்பரே. 44

3937
பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி,அப் பேறளித்தற்
காறொன்று மில்லைமற் றச்சரண் அன்றி,என் றிப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால்
கூறும் பரமன்று இராமா னுசமெய்ம்மை கூறிடிலே. 45

3938
கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மரையுணர்ந் தோனை மதியிலியேன்
தேறும் படியென் மனம்புதுந் தானைத் திசையனைத்தும்
ஏறும் குணனை இராமா னுசனை இறைஞ்சினமே. 46

3939
இறைஞ்சப் படும்பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்
தறம்செப்பும் அண்ணல் இராமா னுசன்,என் அருவினையின்
திறம்செற் றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தையுள்ளே
நிறைந்தொப் பறவிருந் தான், எனக் காரும் நிகரில்லையே. 47

3940
நிகரின்றி நின்றவென் நீசதைக்கு நின்னரு ளின்கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்குமஃ தேபுகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமா னுச இனி நாம்பழுதே
அகலும் பொருளென், பயனிரு வோமுக்கு மானபின்னே? 48

3941
ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறுசமயம்
போனது பொன்றி யிறந்தது வெங்கலி பூங்கமலத்
தேனதி பாய்வயல் தென்னரங் கன்கழல் சென்னிவைத்துத்
தானதில் மன்னும் இராமா னுசனித் தலத்துதித்தே. 49

3942
உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளைவன் குற்றமெல்லாம்
பதித்தவென் புன்கவிப் பாவினம் பூண்டன பாவுதொல்சீர்
எதித்தலை நாதன் இராமா னுசன்றன் இணையடியே. 50

3943
அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட் காய்அன்று பாரதப்போர்
முடியப் பரிநெடுந் தேர்விடுங் கோனை முழுதுணர்ந்த
அடியர்க் கமுதம் இராமா னுசனென்னை ஆளவந்திப்
படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே. 51

3944
பார்த்தான் அறுசம யங்கள் பதைப்ப,இப் பார்முழுதும்
போர்த்தான் புகழ்கொண்டு புன்மையி னேனிடைத் தான்புகுந்து
தீர்த்தான் இருவினை தீர்த்தரங் கன்செய்ய தாளிணையோ
டார்த்தான் இவையெம் இராமா னுசன்செய்யும் அற்புதமே. 52

3945
அற்புதன் செம்மை இராமா னுசன், என்னை ஆளவந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற்பல் லுயிர்களும் பல்லுல கியாவும் பரனதென்னும்
நற்பொருள் தன்னை, இந் நானிலத் தேவந்து நாட்டினனே. 53

3946
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற் றது,தென் குருகைவள்ளல்
வாட்டமி லாவண் டமிழ்மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வுகண்டே. 54

3947
கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமா னுசனைத், தொகையிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும், குடி யாமெங்கள் கோக்குடியே. 55

3948
கோக்குல மன்னரை மூவெழு கால், ஒரு கூர்மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்தபின்என்
வாக்குரை யாது, என் மனம்நினை யாதினி மற்றொன்றையே. 56

3949
மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக்காள்
உற்றவ ரேதனக் குற்றவ ராய்க்கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமா னுசனையிந் நானிலத்தே
பெற்றனன் பெற்றபின் மற்றறி யேனொரு பேதைமையே. 57

3950
பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம்நன்றென்
றோதிமற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள்மெய்விட்
டாதிப் பரனொடொன் றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம்
வாதில்வென் றான், எம் இராமா னுசன்மெய்ம் மதிக்கடலே. 58

3951
கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே
மிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்தில னேல்உயிரை
உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே. 59

3952
உணர்ந்தமெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்
மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும் மாமலராள்
புணர்ந்தபொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும்
குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே. 60

3953
கொழுந்துவிட் டோ டிப் படரும்வெங் கோள்வினை யால்,நிரயத்
தழுந்தியிட் டேனைவந் தாட்கொண்ட பின்னும், அருமுனிவர்
தொழுந்தவத் தோனெம் இராமா னுசன்தொல் புகழ்சுடர்மிக்
கெழுந்தது,அத் தால்நல் லதிசயங் கண்ட திருநிலமே. 61

3954
இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றிஇன் றியான்இறையும்
வருந்தேன் இனியெம் இராமா னுசன்,மன்னு மாமலர்த்தாள்
பொருந்தா நிலையுடைப் புன்மையி னோர்க்கொன்றும் நன்மைசெய்யாப்
பொருந்தே வரைப்பர வும், பெரி யோர்தம் கழல்பிடித்தே. 62

3955
பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கியசீர்
அடியைத் தொடரும் படிநல்க வேண்டும் அறுசமயச்
செடியைத் தொடரும் மருள்செறிந் தோர்சிதைந் தோடவந்திப்
படியைத் தொடரும் இராமா னுச மிக்க பண்டிதனே. 63

3956
பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய்
விண்டிட எங்கள் இராமா னுசமுனி வேழம் மெய்ம்மை
கொண்டநல் வேதக் கொழுந்தண்ட மேந்திக் குவலயத்தே
மண்டிவந் தேன்றது வாதியர் காள். உங்கள் வாழ்வற்றதே. 64

3957
வாழ்வற் றதுதொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்தம்
தாழ்வற் றதுதவம் தாரணி பெற்றது, தத்துவநூல்
கூழற் றதுகுற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந்
நாழற் றது,நம் இராமா னுசந்தந்த ஞானத்திலே. 65

3958
ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினை யேன்மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன்தக வென்னும் சரண்கொடுத்தே. 66

3959
சரணம் அடைந்த தருமனுக் காப்,பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த
கரணம் இவையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்
கரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே? 67

3960
ஆரெனக் கின்று நிகர்ச்சொல்லின் மாயனன் றைவர்த்தெய்வத்
தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள்தெரியப்
பாரினிற் சொன்ன இராமா னுசனைப் பணியும்நல்லோர்
சீரினிற் சென்று பணிந்தது, என் னாவியும் சிந்தையுமே. 68

3961
சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள்
அந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால்
தந்த அரங்கனும் தன்சரண் தந்திலன் தானதுதந்து
எந்தை இராமா னுசன்வந் தெடுத்தனன் இன்றென்னையே. 69

3962
என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல்குணத்த
உன்னையும் பார்க்கில் அருள்செய்வ தேநலம் அன்றியென்பால்
பின்னையும் பார்க்கில் நலமுள தே?உன் பெருங்கருணை
தன்னையென் பார்ப்பர் இராமா னுச உன்னைச் சார்ந்தவரே? 70

3963
சார்ந்ததென் சிந்தையுன் தாளிணைக் கீழ்,அன்பு தான்மிகவும்
கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு உன்றன் குணங்களுக்கே
தீர்ந்ததென் செய்கைமுன் செய்வினை நீசெய் வினையதனால்
பேர்ந்தது வண்மை இராமா னுச எம் பெருந்தகையே. 71

3964
கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறைநெறி தன்னை,என் றுன்னியுள்ளம்
நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறைபுக ழோருடனே
வைத்தனன் என்னை இராமா னுசன்மிக்க வண்மைசெய்தே. 72

3965
வண்மையி னாலுந்தன் மாதக வாலும் மதிபுரையும்
தண்மையி னாலுமித் தாரணி யோர்கட்குத் தான்சரணாய்
உண்மைநன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும்
திண்மையல் லாலெனக் கில்லை, மற் றோர்நிலை தேர்ந்திடிலே. 73

3966
தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனையவண்மை
ஏரார் குணத்தெம் இராமா னுசனவ் வெழில்மறையில்
சேரா தவரைச் சிதைப்பது அப் போதொரு சிந்தைசெய்தே. 74

3967
செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண்முகப்பே
மெய்த்தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின்புகழே
மொய்த்தலைக் கும்வந்து இராமா னுச.என்னை முற்றுநின்றே. 75

3968
நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்
என்றனக் கும்அது,இராமா னுச இவை யீந்தருளே. (2) 76

3969
ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக்குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல்பொரு ளால்,இப் படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர்பறியக்
காய்ந்தனன் வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே? 77

3970
கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தி னால்மிக வஞ்சித்து நீயிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில்
பொருத்தப் படாது, எம் இராமா னுச மற்றோர் பொய்ப் பொருளே. 78

3971
பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,இந்தப் பூதலத்தே
மெய்மைப் புரக்கும் இராமா னுசன்நிற்க, வேறுநம்மை
உய்யக் கொளவல்ல தெய்வமிங் கியாதென் றுலர்ந்தவமே
ஐயப் படாநிற்பர் வையத்துள் ளோர்நல் லறிவிழந்தே. 79

3972
நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம்நம்ப
வல்லார் திறத்தை மறவா தவர்கள் எவர்,,அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றுமெப் போதிலும் எத்தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தி னால்செய்வன் சோர்வின்றியே. 80

3973
சோர்வின்றி உன்றன் துணையடிக் கீழ்த்,தொண்டு பட்டவர்பால்
சார்வின்றி நின்ற எனக்கு,அரங் கன்செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமா னுச.இனியுன்
சீரொன் றியகரு ணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே. 81

3974
தெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது,வெந் தீவினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒருபொழுதில்
பொருவற்ற கேள்விய னாக்கிநின் றானென்ன புண்ணீயனோ.
தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர்முகிலே. 82

3975
சீர்கொண்டு பேரறம் செய்து,நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன்,உன் பதயுகமாம்
எர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார்கொண்ட வண்மை இராமா னுச.இது கண்டுகொள்ளே. 83

3976
கண்டுகொண் டேனெம் இராமா னுசன்றன்னை காண்டலுமே
தொண்டுகொண் டேன்அவன் தொண்டர்பொற் றாளில்என் தொல்லை வெந்நோய்
விண்டுகொண் டேன்அவன் சீர்வெள்ள வாரியை வாய்மடுத்தின்
றுண்டுகொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே. 84

3977
ஓதிய வேதத்தின் உட்பொரு ளய், அதன் உச்சிமிக்க
சோதியை நாதன் எனவெறி யாதுழல் கின்றதொண்டர்
பேதைமை தீர்த்த இராமா னுசனைத் தொழும்பெரியோர்
பாதமல் லாலென்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையை. 85

3978
பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே
உற்றா ரெனவுழன் றோடிநை யேனினி, ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமா னுசனைக் கருதுமுள்ளம்
பெற்றார் எவர், அவ ரெம்மைநின் றாளும் பெரியவரே. 86

3979
பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன்குணங்கட்
குரியசொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில்மிக்கோர்
தெரியும்வண் கீர்த்தி இராமா னுசன்மறை தேர்ந்துலகில்
புரியுநன் ஞானம் பொருந்தா தவரைப் பொரும்கலியே. 87

3980
கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப்பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டுதன் னுள்ளம் தடித்து,அதனால்
வலிமிக்க சீயம் இராமா னுசன்மறை வாதியராம்
புலிமிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே. (2) 88

3981
போற்றருஞ் சீலத் திராமா னுச,நின் புகழ்தெரிந்து
சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர்தனக்கோர்
ஏற்றமென் றேகொண் டிருக்கிலு மென்மனம் ஏத்தியன்றி
ஆற்றகில் லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே. 89

3982
நினையார் பிறவியை நீக்கும் பிரானை,இந் நீணிலத்தே
எனையாள வந்த இராமா னுசனை இருங்கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள்சுரந்தே. 90

3983
மருள்சுரந் தாகம வாதியர் கூறும்,அவப்பொருளாம்
இருள்சுரந் தெய்த்த உலகிருள் நீங்கத்,தன் ஈண்டியசீர்
அருள்சுரந் தெல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
பொருள்சுரந் தான், எம் இராமா னுசன்மிக்க புண்ணியனே. 91

3984
புண்ணிய நோன்பு புரிந்துமி லேன்,அடி போற்றிசெய்யும்
நுண்ணருங் கேள்வி நுவன்றுமி லேன்,செம்மை நூற்புலவர்க்
கெண்ணருங் கீர்த்தி இராமா னுச.இன்று நீபுகுந்தென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்றவிக் காரணம் கட்டுரையே. 92

3985
கட்டப் பொருளை மறைப்பொரு ளென்று கயவர்சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரனல்ல னே,என் பெருவினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னுமொள் வாளுருவி
வெட்டிக் கிளைந்த இராமா னுசனென்னும் மெய்த்தவனே. 93

3986
தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சலி யாப்பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந் தாமமென்னும்
திவந்தரும் தீதில் இராமா னுசன்தன்னைச் சார்ந்தவர்கட்
குவந்தருந் தேன், அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே. 94

3987
உண்ணின் றுயிர்களுக் குற்றன வேசெய்து அவர்க்குயவே
பண்ணும் பரனும் பரிவில னாம்படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலைநின்று விடளிப் பானெம் இராமானுசன்
மண்ணின் தலத்துதித்து உய்மறை நாலும் வளர்த்தனனே. 95

3988
வளரும் பிணிகொண்ட வல்வினை யால்,மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறி யாது முடைத்தலையூன்
தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்
குளரெம் இறைவர் இராமா னுசன்றன்னை உற்றவரே. 96

3989
தன்னையுற் றாட்செய்யும் தன்மையி னோர்,மன்னு தாமரைத்தாள்
தன்னையுற் றாட்செய்ய என்னையுற் றானின்று தன்தகவால்
தன்னையுற் றாரன்றித் தன்மையுற் றாரில்லை என்றறிந்து
தன்னையுற் றாரை இராமா னுசன்குணம் சாற்றிடுமே. 97

3990
இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல்பிறப்பில்
நடுமே யினிநம் இராமா னுசன்நம்மை நம்வசத்தே
விடுமே சரணமென் றால், மன மே நையல் மேவுதற்கே? (2) 98

3991
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன்
சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும்
நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற்கற் பகம், எம் இராமா னுசமுனி போந்தபின்னே. 99

3992
போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர்
ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமா னுச.இது அன்றியொன்றும்
மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே. 100

3993
மயக்கும் இருவினை வல்லியிற் பூண்டு மதிமயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயரகற்றி
உயக்கொண்டு நல்கும் இராமா னுச.என்ற துன்னையுன்னி
நயக்கும் அவர்க்கி திழுக்கென்பர், நல்லவர் என்றும்நைந்தே. 101

3994
நையும் மனமும் குணங்களை உன்னி,என் நாவிருந்தெம்
ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அருவினையேன்
கையும் தொழும்கண் கருதிடுங் காணக் கடல்புடைசூழ்
வையம் இதனில், உன் வண்மையென் பாலென் வளர்ந்ததுவே? 102

3995
வளர்ந்தவெங் கோட மடங்கலொன் றாய்,அன்று வாளவுணன்
கிளர்ந்தபொன் னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிரெழுந்து
விளைந்திடும் சிந்தை இராமா னுசனென்றன் மெய்வினைநோய்
களைந்துநன் ஞானம் அளித்தனன் கையிற் கனியென்னவே. 103

3996
கையிற் கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்,உன்றன்
மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள்நீ
செய்யில் தரிப்பன் இராமா னுச என் செழுங்கொண்டலே. 104

3997
செழுந்திரைப் பாற்கடல் கண்டுயில் மாயன் திருவடிக்கீழ்
விழுந்திருப் பார்நெஞ்சில் மேவுநன் ஞானி,நல் வேதியர்கள்
தொழுந்திருப் பாதன் இராமா னுசனைத் தொழும்பெரியோர்
எழுந்திரைத் தாடும் இடமடி யேனுக் கிருப்பிடமே. (2) 105

3998
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலையென்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர்நல் லோர்,அவை தன்னொடுவந்
திருப்பிடம் மாயன் இராமா னுசன்மனத் தின்றவன்வந்
திருப்பிடம் என்றன் இதயத்துள் ளேதனக் கின்புறவே. (2) 106

3999
இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டுன் தொண்டர்கட்கே
அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே. (2) 107

4000
அங்கயல் பாய்வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்
பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தியெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்துநெஞ் சே நந் தலைமிசையே
பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூமன்னவே. (2) 108

திருவரங்கத்தமுதனார் திருவடிகளே சரணம்
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
-------------


This webpage was last revised on 15 September 2021.
Please send your comments and corrections to the webmaster (pmadurai AT gmail.com).