pm logo

naTarAjapattu
ciRumaNavUr municAmi mutaliyAr

சிறுமணவூர் முனுசாமி முதலியார்
எழுதிய நடராசபத்து
(in tamil script, Unicode/UTF-8 format)




Our Sincere thanks go to Mr. S. Anbumani for his assistance in the preparation of this work.
Proof-reading : Mr. Sivakumar Sundararajan
This webpage presents Etext in Tamil script in Unicode encoding (utf-8 format).

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
Feel free to send the corrections by email to the webmaster "pmadurai@gmail.com".

Source
natarajapathu
Author: Municami Mutaliyar, Cirumanavur. (?)
Early reference: Natarajappattu / Ikatu Mayilam Cuppiramaniyacuvamikalal parvaiyitappattu ...
Cennai: Patmanapavilaca accukkutam, 1905.


ஓம்

சிவமயம்

நடராசபத்து

மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீ
        மறைநான்கின் அடிமுடியும்நீ
    மதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீ
        மண்டலமிரண்டேழும்நீ,
பெண்ணும்நீ ஆணும்நீ, பல்லுயிர்க்குயிரும்நீ,
        பிறவும்நீ ஒருவநீயே,
    பேதாதிபேதம்நீ பாதாதிகேசம்நீ
        பெற்றதாய் தந்தைநீயே,
    பொன்னும் பொருளும்நீ யிருளும்நீ
        ஒளியும்நீ போதிக்கவந்தகுருநீ,
புகழொணாக் கிரகங்க ளொன்பதும்நீயிந்த
            புவனங்கள் பெற்றவனும்நீ
எண்ணரிய சீவகோடிகளீன்ற வப்பனே என்
        குரைகளார்க் குரைப்பேன்,
    ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
        தில்லைவாழ் நடராசனே. 1

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை
        சிவகாமியாட,
    மாலாட நூலாட மறையாட திறையாட
        மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
            குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட
        குழந்தை முருகேசனாட,
    ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு
        முனியட்ட பாலகருமாட,
நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட
            நாட்டியப் பெண்களாட,
வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளை
        விருதோடு ஆடிவருவாய்
    ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
        தில்லைவாழ் நடராசனே. 2

கடலென்ற புவிமீதில் அலையென்றவுரு
        கொண்டு கனவென்ற வாழ்வைநம்பிக்,
    காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
        கட்டுண்டு நித்த நித்தம்,
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி
        ஓயாமலிரவு பகலும்,
    உண்டுண் டுறங்குவதைக் கண்டதேயல்லாது
        ஒருபயனடைந்திலேனைத்,
தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்
        தாபரம் பின்னலிட்டுத்,
    தாயென்று சேயென்று நீயென்று நானென்று
        தமியேனை யிவ்வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளா
        திருப்பதுன் னழகாகுமோ,
    ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
        தில்லைவாழ் நடராசனே. 3

பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணந்
        தம்பனம் வசியமல்ல,
    பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச
        மதுவல்ல சாலமல்ல,
அம்பு குண்டுகள் விலக மொழியுமந்திரமல்ல
        ஆகாய குளிகையல்ல,
    அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல,
        அரியமோ கனமுமல்ல,
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிசி,
        கொங்கணர் புலிப்பாணியும்,
    கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாங்
        கூறிடும் வைத்தியமுமல்ல,
என்மனதுன் னடிவிட்டு நீங்காது நிலைநிற்க
        ஏதுளது புகலவருவாய்
    ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
        தில்லைவாழ் நடராசனே. 4

நொந்துவந்தேனென்று ஆயிரஞ் சொல்லியும்
        செவியென்ன மந்தமுண்டோ ,
    நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்ற
        பின் நோக்காத தந்தையுண்டோ ,
சந்தமுந் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
        தளராத நெஞ்சமுண்டோ ,
    தந்திமுகனறு முகன் இருபிள்ளை யில்லையோ
        தந்தைநீ மலடுதானோ,
    விந்தையும் சாலமும் உன்னிடமிருக்குதே
        வினையொன்று மறிகிலேனே,
    வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே
        வேடிக்கையிது வல்லவோ,
இந்தவுல கீரேழு மேனளித்தாய் சொல்லும்
        இனியுன்னை விடுவதில்லை,
    ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
        தில்லைவாழ் நடராசனே. 5

வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
        வாஞ்சை யில்லாத போதிலும்,
    வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
        வஞ்சமே செய்த போதிலும்,
மொழியெகனை மொகனையில் லாமலே
        பாடினும் மூர்க்கனே முகடாகினும்,
    மோசமே செய்யினும் தேசமேகவரினும்
        முழுகாமியே யாகினும்,
பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ
        பார்த்தவர்கள் சொல்லார்களோ,
    பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ
        பாலனைக் காக்கொணாதோ,
எழில்பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்தநீ
        யென்குறைகள் தீர்த்தல் பெரிதோ,
    ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
        தில்லைவாழ் நடராசனே. 6

அன்னை தந்தைக ளென்னை யீன்றதற்
        கழுவனோ அறிவிலாத தற்கழுவனோ,
    அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ
        ஆசை மூன்றுக் கழுவனோ,
    முன்பிறப் பென்னவினை செய்த னென்றழுவனோ
        என்மூட வறிவுக் கழுவனோ,
முன்னிலென் வினைவந்து மூளுமென்றழுவனோ
        முத்திவரு மென்றுணர்வனோ,
    தன்னைநொந் தழுவனோ உன்னை நொந்தழு
        வனோ தவமென்ன வென்றழுவனோ,
    தையலர்க் கழுவனோ மெய்வளர்க் கழுவனோ
        தரித்திர திசைக்கழுவனோ,
இன்னமென்னப் பிறவி வருமோ வென்றழு
        வனோ யெல்லாமுரைக்க வருவாய்,
    ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
        தில்லைவாழ் நடராசனே. 7

காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ
        கன்னியர்கள் பழிகொண்டனோ,
    கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்
        தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ,
தாயாருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ,
        தந்தபொரு ளிலையென்றனோ,
    தானென்று கெர்வித்துக் கொலைகளவு
        செய்தனோ தவசிகளை யேசினனோ,
வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ,
        வானவரைப் பழித்திட்டனோ,
    வடவுபோலப் பிறரைச் சேர்க்கா தடித்தனோ
        வந்தபின் என் செய்தனோ,
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ
        எல்லாம் பொறுத்தருளுவாய்,
    ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
        தில்லைவாழ் நடராசனே. 8

தாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன
        தன்பிறவியுறவு கோடி,
    தனமலை குவித்தென்ன, கனபெய, ரெடுத்
        தென்ன, தாரணியையாண்டு மென்ன,
சேயர்களிருந் தென்ன குருவா யிருந்தென்ன
        சீடர்களிருந்து மென்ன,
    சித்துபல கற்றென்ன, நித்தமும் விரதங்கள்
        செய்தென்ன நதிகளெல்லாம்,
ஓயாது மூழ்கினும் என்னபலன் எமனோலை
        ஒன்றைக் கண்டு தடுக்க,
    உதவுமோ இதுவெலாம் சந்தையுற வென்று
        தான் உன்னிருபாதம் பிடித்தேன்,
யார்மீது வுன்மன மிருந்தாலு முன்கடைக்,கண்
        பார்வை யதுபோதுமே,
    ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
        தில்லைவாழ் நடராசனே. 9

இன்னமுஞ் சொல்லவோ உன்மனங்கல்லோ
        இரும்போ பெரும்பாறையோ,
    இருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ
        இதுவுனக் கழகுதானோ,
என்னை மோகமோ இதுவென்ன சோபமோ
        இதுவேவுன் செய்கைதானோ,
    இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ
        ஆனாலும் நான் விடுவனோ,
உன்னைவிட் டெங்கு சென்றாலும் விழலாவனோ
        நான் உனையடுத்துங் கெடுவனோ,
    ஓகோவிதுன் குற்றமென் குற்ற மொன்றுமிலை
        யுற்றுப்பார் பெற்றவையோ,
என்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும்
        இனியருளளிக்க வருவாய்,
    ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
        தில்லைவாழ் நடராசனே. 10

சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குரு
        சந்திரன் சூரியனிவரை,
    சற்றெனக் குள்ளாக்கி ராசிபனி ரெண்டையும்
        சமமாய் நிறுத்தியுடனே,
பனியொத்த நட்சத்திரங்க ளிருபத்தேழும் பக்குவப்
        படுத்திப் பின்னால்,
    பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும்
        வெட்டிப்பலரையும் அதட்டியென்முன்,
கனிபோலவே பேசிக் கெடுநினைவு நினைக்கின்ற
        கசடர்களையுங் கசக்கி
    கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்குத்
        தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி
இனியவள மருவுசிறு மணவை முனுசாமி யெனை
        யாள்வதினி யுன்கடன்காண்
    ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
        தில்லைவாழ் நடராசனே. 11
-------------


This webpage was last revised on 31 July 2021.
Please send your comments and corrections to the webmaster (pmadurai AT gmail.com).