Holy Bible - New Testament - part II
Gospel according to Luke 
(in tamil script, unicode format)
திருவிவிலியம் - புதிய ஏற்பாடு - IIb
லூக்கா நற்செய்திகள்
 
 
Etext input: Rev.Fr. Adaikalarasa,sdb, St. Xavier's Church, Dindigul, Tamilnadu
Proof-reading :  Mr. Mukundaraj Munisamy, Chennai, Tamilnadu
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
 
To view the Tamil text correctly you need to set up the following: 
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer 
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP). 
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font
chosen as the default font for the UTF-8 char-set/encoding view. 
.
In case of difficulties send an email request to kalyan@geocities.com
C: Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.
Click here to access Part I of Holy 
Bible- New Testament covering the Books of Mathew and Mark
 
Holy Bible - New Testament -  Book of Luke
திருவிவிலியம் - புதிய ஏற்பாடு - லூக்கா நற்செய்தி
1 அதிகாரம்
    1.1 மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்
 
    1.2 தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.
 
    1.3 அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,
 
    1.4 அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.
 
    1.5 யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர். அவர் பெயர் எலிசபெத்து.
 
    1.6 அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள்.
 
   1.7 அவர்களுக்குப் பிள்ளை இல்லை. ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.
 
   1.8 தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார்.
 
   1.9 குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, ஆண்டவின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்ட போது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது.
 
   1.10 அவர் தூபம் காட்டுகிற வேளையில் மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர்.
 
   1.11 அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார்.
 
   1.12 அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார்.
 
   1.13 வானதூதர் அவரை நோக்கி ,  "செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார் அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர்.
 
   1.14 நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர்.
 
   1.15 அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார். திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார். தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார்.
 
   1.16 அவர், இஸரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார்.
 
   1.17 எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார். தந்தையாரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார். நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார். இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்" என்றார்.
 
   1.18 செக்கரியா வானதூதரிடம், "இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அது போல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே" என்றார். 
 
   1.19 அதற்கு வானதூதர் அவரிடம் ,  "நான் கபியேல். கடவுளின் திருமுன் நிற்பவன் உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன்.
 
   1.20 இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர். உம்மால் பேசவே இயலாது" என்றார்.
 
   1.21 மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள்.
 
   1.22 அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேச முடியாமல் இருந்தார். ஆதலால் அவர் திருக்கோவிலில் ஏதொ காட்சி கண்டிருக்க வேண்டும் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார் பேச்சற்றே இருந்தார். 
 
   1.23 அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார்.
 
   1.24 அதற்குப்பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார்.
 
   1.25 "மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்" என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.
 
   1.26 ஆறாம் மாதத்தில் கபியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.
 
   1.27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.
 
   1.28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி ,  "அருள்மிகப் பெற்றவரே வாழ்க. ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் என்றார்.
 
   1.29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
 
   1.30 வானதூதர் அவரைப் பார்த்து,  "மரியா, அஞ்சவேண்டாம் கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.
 
   1.31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர் அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.
  
   1.32 அவர் பெரியவராயிருப்பார். உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
 
   1.33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.
 
   1.34 அதற்கு மரியா வானதூதரிடம்,  "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே." என்றார்.
 
   1.35 வானதூதர் அவரிடம்,  "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.
 
   1.36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். 
 
   1.37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.
 
   1.38 பின்னர் மரியா,  "நான் ஆண்டவரின் அடிமை. உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
 
   1.39 அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.
 
   1.40 அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.
 
   1.41 மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். 
 
   1.42 அப்போது அவர் உரத்த குரலில்,  "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே.
 
   1.43 ஆண்டவின் தாய் என்னிடம் வர நான் யார்?
 
   1.44 உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.
 
   1.45 ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார்.
 
   1.46 அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்
 
   1.47  "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
 
   1.48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
 
   1.49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.
 
   1.50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
 
   1.51 அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார் உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.
 
   1.52 வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
 
   1.53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார். செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுவார்.
 
   1.54 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்.
 
   1.55 தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்".
 
   1.56 மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.
 
   1.57 எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
 
   1.58 ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.
 
   1.59 எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள். செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள்.
 
   1.60 ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து,  "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார்.
 
   1.61 அவர்கள் அவரிடம்,  "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே" என்று சொல்லி,
 
   1.62  "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?" என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள்.
 
   1.63 அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி,  "இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர்.
 
   1.64 அப்பொழுதே அவரது வாய் திறந்தது. நா கட்டவிழ்ந்தது. அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
 
   1.65 சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது.
 
   1.66 கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி,  "இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?" என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.
 
   1.67 பிள்ளையின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு
 
   1.68  "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
 
   1.69 தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே, 
 
   1.70 அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்
 
   1.71 நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.
 
   1.72 அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், 
 
   1.73 நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
 
   1.74 இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும்,
 
   1.75  வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார். 
 
   1.76 குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்
 
    1.77 ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்.
 
   1.78 இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
 
   1.79 நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது."
 
   1.80 குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.
 
 2 அதிகாரம்
 
   2.1 அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.
 
   2.2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.
 
   2.3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். 
 
   2.4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,
 
   2.5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.
 
   2.6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.
 
   2.7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
 
   2.8 அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.
 
   2.9  திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது. மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
 
   2.10 வானதூதர் அவர்களிடம்,  "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
 
   2.11 இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.
 
   2.12 குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள் இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றார்.
 
   2.13 உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து,  " உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக.
 
   2.14 உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக." என்று கடவுளைப் புகழ்ந்தது. 
 
   2.15 வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர்நோக்கி,  "வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்" என்று சொல்லிக்கொண்டு,
 
   2.16 விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.
 
   2.17 பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.
 
   2.18 அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தஹர்.
 
   2.19 ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
 
   2.20 இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.
 
   2.21 குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
 
   2.22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.
 
   2.23 ஏனெனில்,  "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.
 
   2.24 அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒருசோடி மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
 
   2.25 அப்போது எருசலேமில் சிமியோன் என்பவர் இருந்தார். அவர் நேர்மையானவர் இறைப்பற்றுக் கொண்டவர். இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர். தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.
 
   2.26 ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.
 
   2.27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.
 
   2.28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,
 
   2.29   "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.
 
   2.30 ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,
 
   2.31 நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.
 
   2.32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி. இதுவெ உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" என்றார்.
 
   2.33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். 
 
   2.34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி,  "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.
 
   2.35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார்.
 
   2.36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர் மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்
 
   2.37 அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.
 
   2.38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார். 
 
   2.39 ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.
 
   2.40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
 
   2.41 ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்
 
   2.42 இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.
 
   2.43 விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.
 
   2.44    பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்
 
   2.45 அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
 
   2.46 முன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார்.
 
   2.47 அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்.
. 
   2.48 அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி,  "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார்.
 
   2.49 அவர் அவர்களிடம்"நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தியாதா?" என்றார்.
 
   2.50 அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
 
   2.51 பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
 
   2.52 இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.
 
 
 3 அதிகாரம்
 
   3.1 திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொத்தியு பிலாத்து யூதேயாவின் ஆளநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும், லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர்.
 
   3.2 அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார்.
 
   3.3   "பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்" என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார்.
 
   3.4 இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது"பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது"ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள் அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்
 
   3.5 பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும். மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும். கோணலானவை நேராக்கப்படும். கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.
 
   3.6 மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்."
 
   3.7 தம்மிடம் திருமுழுக்குப் பெறப் புறப்பட்டு வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு யோவான்,  "விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?
 
   3.8 மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உள்ளத்தில் சொல்லத் தொடங்காதீர்கள். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன்.
 
   3.9 ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தார மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்" என்றார்.
 
   3.10 அப்போது,  "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர்.
 
   3.11 அதற்கு அவர் மறுமொழியாக,  "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும். உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்" என்றார்.
 
   3.12 வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து,  "போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று அவரிடம் கேட்டனர்.
 
   3.13 அவர்"உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்" என்றார்.
 
   3.14 படைவீரரும் அவரை நோக்கி,  "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டனர். அவர்,  "நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள். யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள். உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்" என்றார். 
 
   3.15 அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.
  
   3.16 யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து,  "நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன். ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
 
   3.17 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார். பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்" என்றார்.
 
   3.18 மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
 
   3.19 குறுநில மன்னன் ஏரோது தன் சகோதரன் மனைவியாகிய ஏரோதியாவை வைத்திருந்ததன் பொருட்டும் அவன் இழைத்த மற்ற எல்லாத் தீச்செயல்கள் பொருட்டும் யோவான் அவனைக் கண்டித்தார்.
 
   3.20 எனவே அவன் தான் செய்த தீச்செயல்கள் எல்லாம் போதாதென்று அவரைச் சிறையிலும் அடைத்தான்.
 
   3.21 மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது.
 
   3.22 தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது,  "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
 
   3.23 இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது. அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்.
 
   3.24 ஏலி மாத்தாத்தின் மகன். மாத்தாத்து லேவியின் மகன். லேவி மெல்கியின் மகன். மெல்கி யன்னாயின் மகன். யன்னாய் யோசேப்பின் மகன்.
 
   3.25 யோசேப்பு மத்தத்தியாவின் மகன். மத்தத்தியா ஆமோசின் மகன். ஆமோசு நாகூமின் மகன். நாகூம் எஸலியின் மகன். எஸலி நாகாயின் மகன்.
 
   3.26 நாகாய் மாத்தின் மகன். மாத்து மத்தத்தியாவின் மகன். மத்தத்தியா செமேயின் மகன். செமேய் யோசேக்கின் மகன். யோசேக்கு யோதாவின் மகன். 
 
   3.27 யோதா யோவனானின் மகன். யோவனான் இரேசாவின் மகன். இரேசா செருபாபேலின். மகன் செருபாபேல் செயல்தியேலின் மகன்.
 
   3.28 செயல்தியேல் நேரியின் மகன். நேரி மெல்கியின் மகன். மெல்கி அத்தியின் மகன். அத்தி கோசாமின் மகன். கோசாம் எல்மதாமின் மகன். எல்மதாம் ஏரின் மகன். ஏர் ஏசவின் மகன்.
 
   3.29 ஏசு எலியேசரின் மகன். எலியேசர் யோரிமின் மகன். யோரிம் மாத்தாத்தின் மகன். மாத்தாத்து லேவியின் மகன்.
 
   3.30 லேவி சிமியோனின் மகன். சிமியோன் யூதாவின் மகன். யூதா யோசேப்பின் மகன். யோசேப்பு யோனாமின் மகன். யோனாம் எலியாக்கிமின் மகன். எலியாக்கிம் மெலேயாவின் மகன்.
 
   3.31 மெலேயா மென்னாவின் மகன். மென்னா மத்தத்தாவின் மகன். மத்தத்தா நாத்தானின் மகன். நாத்தான் தாவீதின் மகன்.
 
   3.32 தாவீது ஈசாயின் மகன். ஈசாய் ஓபேதின் மகன். ஓபேது போவாசின் மகன். போவாசு சாலாவின் மகன். சாலா நகசோனின் மகன். நகசோன் அம்மினதாபின் மகன். 
 
   3.33 அம்மினதாபு அத்மினின் மகன். அத்மின் ஆர்னியின் மகன். ஆர்னி எட்சரோனின் மகன். எட்சரோன் பெரேட்சின் மகன். பெரேட்சு யூதாவின் மகன். யூதா யாக்கோபின் மகன்.
 
   3.34 யாக்கோபு ஈசாக்கின் மகன். ஈசாக்கு ஆபிரகாமின் மகன். ஆபிரகாம் தெராகின் மகன். தெராகு நாகோரின் மகன்.
 
   3.35 நாகோர் செரூகின் மகன். செரூகு இரகுவின் மகன். இரகு பெலேகின் மகன். பெலேகு ஏபேரின் மகன். ஏபேர் சேலாவின் மகன்.
 
   3.36 சேலா காயனாமின் மகன். காயனாம் அர்பகசாதின் மகன். அர்பகசாது சேமின் மகன். சேம் நோவாவின் மகன். நோவா இலாமேக்கின் மகன்.
 
   3.37 இலாமேக்கு மெத்துசேலாவின் மகன். மெத்துசேலா ஏனொக்கின் மகன். ஏனோக்கு ஏரேதின் மகன். ஏரேது மகலலேலின் மகன். மகலலேல் கேனானின் மகன். கேனான் ஏனோசின் மகன்.
 
   3.38 ஏனோசு சேத்தின் மகன். சேத்து ஆதாமின் மகன். ஆதாம் கடவுளால் உண்டானவர்.
 4 அதிகாரம்
 
   4.1 அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.
 
   4.2 அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார். 
 
   4.3 சோதிக்கிறவன் அவரை அணுகி,  " நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும் என்றான்.
 
   4.4   அவர் மறுமொழியாக,  " மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்" என மறைநூலில் எழுதியுள்ளதே" என்றார்.
 
   4.5 பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,
 
   4.6 "நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்" கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்" என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்று அலகை அவரிடம் சொன்னது.
 
   4.7 இயேசு அதனிடம்,  " உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்" எனவும் எழுதியுள்ளதே" என்று சொன்னார்.
 
   4.8 மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,
 
   4.9 அவரிடம்,  " நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்" என்றது.
 
   4.10 அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து,  "அகன்று போ. சாத்தானே,  " உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்" என்றும் மறைநூலில் எழுதியுள்ளது" என்றார். 
 
   4.11 பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.
 
   4.12  யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
 
   4.13 அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.
 
   4.14 இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது
 
   4.15 " செபுலோன் நாடே. நப்தலி நாடே. டிபருங்கடல் வழிப் பகுதியே. யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே. பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே.
 
   4.16 காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது."
 
   4.17 அதுமுதல் இயேசு,  " மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றத் தொடங்கினார்.
 
   4.18 இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர்.
 
   4.19 இயேசு அவர்களைப் பார்த்து,  " என் பின்னே வாருங்கள் நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார்.
 
   4.20  உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
 
   4.21 அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். 
 
   4.22 உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
 
   4.23 அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார். அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார். விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார். மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
 
   4.24 அவரைப் பற்றிய பேச்சு சிரியா நாடு முழுவதும் பரவியது. பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய நோயாளர், பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர் ஆகிய அனைவரும் அவரிடம் அழைத்து வரப்பட்டனர். அவர் அவர்களைக் குணமாக்கினார். 
 
   4.25 ஆகவே கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா. யோர்தானுக்கு அக்கரைப் பகுதி ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். 
 
 5 அதிகாரம்
 
   5.1 ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.
 
   5.2 அப்போது இக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.
 
   5.3 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.
 
   5.4 அவர் பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி,  "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார்.
 
   5.5 சீமோன் மறுமொழியாக,  "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார். 
 
   5.6 அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே,
 
   5.7 மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகைகாட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.
 
   5.8 இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து,  "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்றார்.
 
   5.9 அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.
 
   5.10 சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி,  "அஞ்சாதே. இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்" என்று சொன்னார்.
 
   5.11 அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
 
   5.12 இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து,  "ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என மன்றாடினார்.
 
   5.13 இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு,  "நான் விரும்புகிறேன்" உமது நோய் நீங்குக." என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று.
 
   5.14 இயேசு அவரிடம்,  "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்று கட்டளையிட்டார்.
 
   5.15 ஆயினும் இயேசுவைப் பற்றிய செய்தி இன்னும் மிகுதியாகப் பரவிற்று. அவரது சொல்லைக் கேட்கவும், தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறவும், பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்து கொண்டிருந்தார்கள்.
 
   5.16 அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார்.
 
   5.17 ஒரு நாள் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது. கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும், எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.
 
   5.18 அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலோடு சுமந்துகொண்டு வந்து, அவரை உள்ளே கொண்டுபோய் இயேசுமுன் வைக்க வழி தேடினர்.
 
   5.19 மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை உள்ளே கொண்டுபோக அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவ்வழியாய் மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள்.
 
   5.20 அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து,  "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
 
   5.21 இதனைக் கேட்ட மறைநூல் அறிஞரும், பிசேயரும்,  "கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" என்று எண்ணிக்கொண்டனர்.
 
   5.22 அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து,  "உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன?
 
   5.23   "உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன" என்பதா, அல்லது"எழுந்து நடக்கவும்" என்பதா, எது எளிது?
 
   5.24 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,  "நான் உமக்குச் சொல்கிறேன் நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்." என்றார்.
 
   5.25 உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார்.
 
   5.26 இதைக் கண்ட யாவரும் மெய்ம் மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய்,  "இன்று புதுமையானவற்றைக் கண்டோ ம்." என்று பேசிக் கொண்டார்கள்.
 
   5.27 அதன்பின் இயேசு வெளியே சென்று சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரி தண்டுபவர் ஒருவரைக் கண்டார் அவரிடம்,  "என்னைப் பின்பற்றி வா." என்றார்.
 
   5.28 அவர் அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
 
   5.29 இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரியவிருந்து அளித்தார். வரி தண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள்.
 
   5.30  பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம்,  "வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்று கேட்டனர்.
 
   5.31 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக,  "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை.
 
   5.32  நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்றார்.
 
   5.33  பின்பு அவர்கள் இயேசுவை நோக்கி,  "யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகிறார்கள் பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே." என்றார்கள்.
 
   5.34 இயேசு அவர்களை நோக்கி,  "மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா?
 
   5.35 ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும் அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்" என்றார்.
 
   5.36 அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்"எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும் புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.
 
   5.37 "அதுபோலபப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும் தோற்பைகளும் பாழாகும்.
 
   5.38 புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும்.
 
   5.39 பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார் ஏனெனில்"பழையதே நல்லது" என்பது அவர் கருத்து.
 
 6 அதிகாரம்
 
   6.1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு வயல்வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர்  கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர்
 
   6.2   பரிசேயருள் சிலர்,  "ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?"
 என்று கேட்டனர்.
 
   6.3 அதற்கு இயேசு மறுமொழியாக,  "தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்த  போது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா?
 
   6.4 அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும்  உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடும்  இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?" என்று கூறினார்.
 
   6.5 மேலும் அவர்களிடம்,  "ஓய்வுநாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்.
 
   6.6 மற்றோர் ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார்.
 அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்.
 
   6.7 மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன்,  ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர்.
 
   6.8 இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, கை சூம்பியவரை நோக்கி,  "எழுந்து நடுவே நில்லும்." என்றார். அவர் எழுந்து நின்றார்.
 
   6.9 இயேசு அவர்களை நோக்கி,  "உங்களிடம் ஒன்று கேட்கிறேன் ஓய்வுநாளில் நன்மை  செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?" என்று கேட்டார்.
 
   6.10 பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு,  "உமது கையை  நீட்டும்." என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது.
 
   6.11 அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.
 
   6.12 அந்நாள்களில் அவர் வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம்  வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்.
 
   6.13 விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத்  தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.
 
   6.14 அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர்  அந்திரேயா, யாக்கோபு, யோவான் பிலிப்பு, பர்த்தலமேயு,
 
   6.15 மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட  சீமோன்,
 
   6.16 யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து  என்பவர்களே.
 
   6.17 இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான இடத்தில் நின்றார்.  பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர்,  சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள்.
 
   6.18 அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள்  வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள்.
 
   6.19 அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால்,  அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.
 
   6.20 இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை"ஏழைகளே, நீங்கள்  பேறுபெற்றோர். ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே.
 
   6.21 இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர் ஏனெனில்  நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்  ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.  
   6.22 மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள்  பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்.
 
   6.23 அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள் ஏனெனில் விண்ணுலகில்  உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.
 
   6.24 ஆனால் செல்வர்களே ஐயோ. உங்களுக்குக் கேடு. ஏனெனில் நீங்கள் எல்லாம்  அனுபவித்துவிட்டீர்கள்.
 
   6.25 இப்போது உண்டு கொழுந்திருப்போரே, ஐயோ. உங்களுக்குக் கேடு. ஏனெனில்  பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ. உங்களுக்குக் கேடு.  ஏனெனில் துயருற்று அழுவீர்கள்.
 
   6.26 மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ. உங்களுக்குக் கேடு.  ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.  
   6.27 "நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன் உங்கள்  பகைவரிடம் அன்பு கூருங்கள். உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்.
 
   6.28 உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள். உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக  இறைவனிடம் வேண்டுங்கள்.
 
   6.29 உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்  காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்.
 
   6.30 உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக்  கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.
 
   6.31 "பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே  நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
 
   6.32  உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு  வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே.
 
   6.33  உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும்  நன்மை  என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே.
 
   6.34 திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால்  உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்  என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
 
   6.35  நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள். அவர்களுக்கு நன்மை  செய்யுங்கள் திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது  உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள்.  ஏனெனில் அவர் நன்றி கெட்டோ ருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.
 
   6.36  உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம்  உள்ளவர்களாய் இருங்கள்.
 
   6.37  " பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள் அப்போதுதான் நீங்களும்  தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள் அப்போதுதான்  நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள் மன்னிப்புப் பெறுவீர்கள்.
 
   6.38  கொடுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும். அமுக்கிக் குலுக்கிச் சரிந்து  விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால்  அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்."
 
   6.39  மேலும் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது"பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற  வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?
 
   6.40 சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப்  போலிருப்பர்.
 
   6.41  "நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள்  சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?  
   6.42 உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து  கொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம்,  "உம் கண்ணில் இருக்கும் துரும்பை  எடுக்கட்டுமா?" என்று எப்படிக் கேட்க முடியும்? வெளி வேடக்காரரே, முதலில் உங்கள்  கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள்.
 
   6.43   "கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை.
 
   6.44 ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில்  அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை. முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச்  சேர்ப்பாருமில்லை.
 
   6.45 நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக்  கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே  வாய் பேசும்.
 
   6.46  "நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை,  "ஆண்டவரே, ஆண்டவரே" என ஏன்  கூப்பிடுகிறீர்கள்?
 
   6.47 என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும்  யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்.
 
   6.48 அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய  ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.
 
   6.49 நான் சொல்வதைக் கேட்கும் அதன்படி செயல்படாதவரோ, அடித்தளம் இல்லாமல்  மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். ஆறு பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது  விழுந்தது அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது."
  
 7 அதிகாரம்
 
   7.1 இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு, கப்பர்நாகுமுக்குச்  சென்றார்..
 
   7.2 அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும்  தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார்.
 
   7.3 அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம்  அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார்.
 
   7.4   அவர்கள் இயேசுவிடம் வந்து,  "நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர்  நம் மக்கள் மீது அன்புள்ளவர் எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்"  என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள்.
 
   7.5 இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில்  வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச்  சொன்னார்"ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம் நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்.
 
   7.6  உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு  வார்த்தை சொல்லும் என் ஊழியர் நலமடைவார்.
 
   7.7 நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும்  உள்ளனர். நான் ஒருவரிடம்"செல்க" என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம்"வருக"  என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து"இதைச் செய்க" என்றால் அவர்  செய்கிறார்."
 
   7.8 இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார். தம்மைப் பின்தொடரும்  மக்கள்
 
   7.9 கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து,  " இஸ்ரயேலிடத்திலும் இத்தகைய  நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.  
   7.10  அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர்  நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.
 
   7.11 அதன்பின் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும்  பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர்.
 
   7.12  அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி  வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன். அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த  பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர்.
 
   7.13  அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு,  "அழாதீர்" என்றார்.
 
   7.14    அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள்  நின்றார்கள். அப்பொழுது அவர்,  "இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு"  என்றார்.
 
   7.15  இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம்  ஒப்படைத்தார்.
 
   7.16 அனைவரும் அச்சமுற்று,  "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர்  தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று சொல்லிக்  கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
 
   7.17 அவரைப்பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள  பகுதிகளிலும் பரவியது.
 
   7.18 யோவானுடைய சீடர் இவற்றையெல்லாம் அவருக்கு அறிவித்தனர். யோவான் தம்  சீடருள் இருவரை வரவழைத்து,
 
   7.19  " வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர் பார்க்க வேண்டுமா?" எனக்  கேட்க ஆண்டவரிடம் அனுப்பினார்.
     7.20  அவர்கள் அவரிடம் வந்து,  "வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை  எதிர்பார்க்க வேண்டுமா?" எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம்  அனுப்பினார்" என்று சொன்னார்கள்.
 
   7.21  அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த  பலரை இயேசு குணமாக்கினார் பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார்.
 
   7.22  அதற்கு அவர் மறுமொழியாக, நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும்  யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர். கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர். தொழுநோயாளர் நலமடைகின்றனர். காது கேளாதோர் கேட்கின்றனர். இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது.
 
   7.23 என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்" என்றார்.
 
   7.24 யோவானிடமிருந்து வந்த தூதர்கள் திரும்பிச் சென்ற பிறகு இயேசு மக்கள்  கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்"நீங்கள் எதைப் பார்க்கப்  பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா?
 
   7.25 இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடை அணிந்த ஒரு  மனிதரையா? பளிச்சிடும் ஆடை அணிந்து செல்வச் செழிப்பில் வாழ்வோர் அரச மாளிகையில்  அல்லவா இருக்கின்றனர்.
 
   7.26 பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம்,  இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
 
   7.27 இதோ. என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை  ஆயத்தம் செய்வார்" என் இவரைப் பற்றித்தான் மறை நூலில் எழுதப்பட்டுள்ளது.
 
   7.28 மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை. ஆயினும்  இறையாட்சிக்கு உட்பட்டோ ருள் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான்  உங்களுக்குச் சொல்கிறேன்."
 
   7.29 திரண்டிருந்த மக்கள் அனைவரும் வரிதண்டுவோரும் இதைக் கேட்டு, கடவுளுடைய  நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றனர்.
 
   7.30 ஆனால் பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது,  தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள்.
 
   7.31 பின்னர் இயேசு,  "இத் தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள்  யாருக்கு ஒப்பானவர்கள்?
 
   7.32 இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு"நாங்கள் குழல்  ஊதினோம் நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம் நீங்கள் அழவில்லை" என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.
 
   7.33  "எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார் அவர் உணவு அருந்தவுமில்லை  திராட்சை மது குடிக்கவுமில்லை அவரை,  "பேய் பிடித்தவன்" என்றீர்கள்.
 
   7.34 மானிட மகன் வந்துள்ளார் அவர் உண்கிறார், குடிக்கிறார் நீங்களோ,  "இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களும், பாவிகளுக்கும் நண்பன்"  என்கிறீர்கள்.
 
   7.35 எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோ ரின் செயல்களே  சான்று" என்றார்.
 
   7.36 பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும்  அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.
 
   7.37 அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு  அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார்.
 
   7.38 இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்  அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து  முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.
 
   7.39 அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு,  "இவர் ஓர் இறைவாக்கினர் என்றால்,  தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார் இவள் பாவியாயிற்றே"  என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
 
   7.40   இயேசு அவரைப் பார்த்து,  "சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்"  என்றார். அதற்கு அவர்,  "போதகரே, சொல்லும்" என்றார்.
 
   7.41   அப்பொழுது அவர்,  "கடன் கொடுப்பவர் ஒருவிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும்  மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர்.
 
   7.42  கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி  செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?" என்று கேட்டார்.  
   7.43  சீமோன் மறுமொழியாக,  "அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே  என் நினைக்கிறேன்" என்றார். இயேசு அவரிடம்,  "நீர் சொன்னது சரியே" என்றார்.
 
   7.44  பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம்,  "இவரைப்  பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர்  தரவில்லை இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால்  துடைத்தார்.
 
   7.45 நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை. இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என்  காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார்.
 
   7.46 நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை. இவரோ என் காலடிகளில் நறுமணத்  தைலம் பூசினார்.
 
   7.47 ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன் இவர் செய்த பல பாவங்கள்  மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப்  பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார்.
 
   7.48  பின்பு அப்பெண்ணைப் பார்த்து,  "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
 
   7.49  "பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?" என்று அவரோடு பந்தியில்  அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
 
   7.50 இயேசு அப்பெண்ணை நோக்கி,  "உமது நம்பிக்கை உம்மை மீட்டது அமைதியுடன்  செல்க" என்றார்.
  
 8 அதிகாரம்
 
   8.1 அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய  நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர்.
 
   8.2. பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு  பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்
 
   8.3 ஏரோதுவின் மாளிகை மேற் பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும்  சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.  
   8.4 பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் அவரிடம் கூடி வந்தபோது அவர்  உவமை வாயிலாகக் கூறியது
 
   8.5 " விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள்  வழியோரம் விழுந்து மிதிபட்டன வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.  
   8.6 வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன அவை முளைத்தபின் ஈரமில்லாததால்  கருகிப் போயின.
 
   8.7 மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன கூடவே வளர்ந்த முட்செடிகள்  அவற்றை நெருக்கிவிட்டன.
 
   8.8 இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு  விளைச்சலைக் கொடுத்தன." இவ்வாறு சொன்னபின்,  "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்"  என்று உரக்கக் கூறினார்.
 
   8.9  இந்த  உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர்.
 
   8.10 அதற்கு இயேசு கூறியது"இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக்  கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே"அவர்கள் கண்டும் காண்பதில்லை கேட்டும் புரிந்துகொள்வதில்லை."
 
   8.11  "இந்த உவமையின் பொருள் இதுவே விதை, இறைவார்த்தை.
 
   8.12 வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக்  குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள்  உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது.
 
   8.13   பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை  மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள் சிறிது  காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள் சோதனைக் காலத்தில் நம்பிக்கையை
 விட்டுவிடுவார்கள்.
     8.14  முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம்,  வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி  அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.
 
   8.15   நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக்  கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.  
   8.16  "எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை, கட்டிலின்  கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர்.
 
   8.17 வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. அறியப்படாமலும் வெளியாகாமலும்  ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.
 
   8.18 ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக்  கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும் இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று  அவர் நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்."
 
   8.19 இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக  இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை.
 
   8.20  "உம்தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று  கொண்டிருக்கிறார்கள்" என்று அவருக்கு அறிவித்தார்கள்.
 
   8.21 அவர் அவர்களைப் பார்த்து,  "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே  என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார்.
 
   8.22   ஒரு நாள் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் ஏறியதும்,  "ஏரியின்  அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்" என்று அவர் அவர்களுக்குச் சொன்னார். அவர்களும்  படகைச் செலுத்தினார்கள்.
 
   8.23   படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது  ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள்.  
   8.24 அவர்கள் அவரிடம் வந்து,  "ஆண்டவரே, ஆண்டவரே, சாகப் போகிறோம்" என்று  சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றையும் நீரின் கொந்தளிப்பையும்  கடிந்துகொண்டார். உடனே அவை ஓய்ந்தன அமைதி உண்டாயிற்று.
 
   8.25 அவர் அவர்களிடம்,  "உங்கள் நம்பிக்கை எங்கே?" என்றார். அவர்கள் அச்சமும்  வியப்பும் நிறைந்தவர்களாய்,  "இவர் காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகிறார். அவை  இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே. இவர் யாரோ?" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.
 
   8.26 அவர்கள் கலிலேயாவுக்கு எதிரே இருக்கும் கெரசேனர் பகுதியை நோக்கிப் படகைச்  செலுத்தினார்கள்.
 
   8.27 கரையில் இறங்கியதும் அந்நகரைச் சேர்ந்த ஒருவர் அவருக்கு எதிரே வந்தார்.  பேய் பிடித்த அவர் நெடுநாளாய் ஆடை அணிவதில்லை வீட்டில் தங்காமல் கல்லறைகளில்  தங்கிவந்தார்.
 
   8.28 இயேசுவைக் கண்டதும் கத்திக்கொண்டு அவர்முன் விழுந்து,  "இயேசுவே, உன்னத  கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? என்னை வதைக்க வேண்டாம் என உம்மிடம்  மன்றாடுகிறேன்" என்று அவர் உரத்த குரலில் கூறினார்.
 
   8.29 ஏனென்றால், அவரைவிட்டு வெளியேறுமாறு அத்தீய ஆவிக்கு இயேசு  கட்டளையிட்டிருந்தார். அது எத்தனையோ முறை அவரைப் பிடித்திருந்தது. அவ்வேளைகளில் அவர் சங்கிலிகளாலும் விலங்குகளாலும் கட்டப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தும் அவற்றை  உடைத்து எறிந்துவிடுவார். அது மட்டுமல்ல, தீய ஆவி அவரைப்
 
   8.30   இயேசு அவரிடம்,  "உம் பெயர் என்ன?" என்று கேட்க, அவர்,  "இலேகியோன்"  என்றார். ஏனெனில் பல பேய்கள் அவருக்குள் புகுந்திருந்தன.
 
   8.31   அவை தங்களைப் பாதாளத்துக்குள் போகப் பணிக்கவேண்டாமென அவரை வேண்டின.
 
   8.32 அங்கு ஒரு மலையில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்துகொண்டிருந்தன.  அவற்றுக்குள் புகும்படி தங்களை அனுமதிக்குமாறு பேய்கள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார்.
 
   8.33 பேய்கள் அவரைவிட்டு வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. பன்றிக்கூட்டம்  செங்குத்துப் பாறையிலிருந்து ஏரியில் பாய்ந்து வீழ்ந்து முழ்கியது.
 
   8.34  பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் நடந்ததைக் கண்டு ஓடிப்போய்,  நகரிலும் நாட்டுப் புறத்திலும் அறிவித்தார்கள்.
 
   8.35  நடந்தது என்ன என்று பார்க்க மக்கள் இயேசுவிடம் வந்தனர். பேய்கள்  நீங்கப்பெற்றவர் ஆடை அணிந்து அறிவுத் தெளிவுடன் இயேசுவின் காலடியில் அமர்ந்திருப்பதைக்  கண்டு அஞ்சினர்.
 
   8.36 நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவர் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பதை  அவர்களுக்கு அறிவித்தார்கள்.
 
   8.37 அப்பொழுது கெரசேனரைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரண்டு வந்திருந்த  மக்கள் அனைவரும் அச்சம் மேலிட்டவர்களாய்த் தங்களை விட்டுப் போகுமாறு இயேசுவை  வேண்டிக்கொண்டார்கள். அவர் படகேறித் திரும்பிச் சென்றார்.
 
   8.38 அப்போது பேய்கள் நீங்கப்பெற்றவர் தம்மைக் கூட்டிச் செல்லும்படி இயேசுவிடம்  மன்றாடினார்.
 
   8.39 அவரோ,  "உம்முடைய வீட்டிற்குத் திரும்பிப்போம். கடவுள் உமக்குச்  செய்ததையெல்லாம் எடுத்துக்கூறும்" என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார். அவரும்  நகரெங்கும் போய், இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் அறிவித்தார்.
 
   8.40   இயேசு திரும்பி வந்தபோது அங்கே திரண்டு அவருக்காகக் காத்திருந்த மக்கள்  அவரை வரவேற்றனர். அப்போது தொழுகைக்கூடத் தலைவர் ஒருவர் இயேசுவிடம் வந்தார். அவர் பெயர் யாயிர். அவர் இயேசுவின் காலில் விழுந்து தம்முடைய வீட்டிற்கு வருமாறு வேண்டினார்.
 
   8.41   ஏனெனில் பன்னிரண்டு வயதுடைய அவருடைய ஒரே மகள் சாகும் தறுவாயிலிருந்தாள்.
 
   8.42  இயேசு அங்குச் செல்லும் வழியில் மக்கள் கூட்டம் அவரை நெருக்கிக்  கொண்டிருந்தது.
 
   8.43   பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு  இருந்தார். அவர் தம் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் எவராலும் அவரைக்  குணமாக்க இயலவில்லை.
 
   8.44   அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத்  தொட்டார். உடனே அவரது இரத்தப்போக்கு நின்று போயிற்று.
 
   8.45  "என்னைத் தொட்டவர் யார்?" என்று இயேசு கேட்டார். அனைவரும் மறுத்தனர்.  பேதுரு,  "ஆண்டவரே, மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறதே என்றார்.  
   8.46 அதற்கு இயேசு,  "யாரோ ஒருவர் என்னைத் தொட்டார் என்னிடமிருந்து வல்லமை  வெளியேறியதை உணர்ந்தேன்" என்றார்.
 
   8.47  அப்பெண்தாம் இனியும் மறைந்திருக்க முடியாதென்று கண்டு நடுங்கிக்கொண்டே  வந்து அவர்முன் விழுந்து, தாம் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தமது பிணி  நீங்கியதையும் பற்றி மக்கள் அனைவர் முன்னிலையிலும் அறிவித்தார்.
 
   8.48 இயேசு அவரிடம்,  "மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ" என்றார்.
 
   8.49 அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது தொழுகைக் கூடத் தலைவருடைய  வீட்டிலிருந்து ஒருவர் வந்து,  "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். இனி போதகரைத் தொந்தரவு  செய்ய வேண்டாம்" என்றார்.
 
   8.50  இதைக் கேட்ட இயேசு சிறுமியின் தந்தையைப் பார்த்து,  "அஞ்சாதீர்,  நம்பிக்கையோடு மட்டும் இரும் அவள் பிழைப்பாள்" என்றாள்.
 
   8.51 வீட்டுக்குள் வந்ததும் பேதுரு, யோவான், யாக்கோபு, சிறுமியின் தாய், தந்தை  ஆகியோரைத் தவிர எவரையும் அவர் தம்மோடு உள்ளே வர அனுமதிக்கவில்லை.
 
   8.52 அவளுக்காக அனைவரும் மாரடித்துப் புலம்பி அழுதுகொண்டிருந்தார்கள். இயேசுவோ,  "அழாதீர்கள் இவள் இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்றாள்.  
   8.53 அவள் இறந்துவிட்டாள் என்று அறிந்திருந்ததால் அவரைப் பார்த்து அவர்கள்  நகைத்தார்கள்.
 
   8.54   அவர் அவளது கையைப் பிடித்து,  "சிறுமியே, எழுந்திடு." என்று கூப்பிட்டார்.
 
   8.55  உயிர் முச்சுத் திரும்பி வரவே, உடனே அவள் எழுந்தாள் இயேசு அவளுக்கு உணவு  கொடுக்கப் பணித்தார்.
 
   8.56  அவளுடைய பெற்றோர் மலைத்துப் போயினர். நடந்ததை எவருக்கும் சொல்லவேண்டாம்  என்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார்.
  
 9 அதிகாரம்
 
   9.1 இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும்  பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார்.
 
   9.2  இறையாட்சிபற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும்  அவர்களை நோக்கி,  "பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும்  எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஓர் அங்கி போதும்.
 
   9.3 நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்.  அங்கிருந்தே புறப்படுங்கள்.
 
   9.4 உங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களுடைய நகரைவிட்டுப் புறப்படும்போது உங்கள்  கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்"  என்றார்.
 
   9.5 அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக்  குணமாக்கினார்கள்.
 
   9.6 நிகழ்ந்தவற்றையெல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம்  குழம்பினான். ஏனெனில் சிலர்,  "இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்" என்றனர்.
 
   9.7 வேறு சிலர்,  "எலியா தோன்றியிருக்கிறார்" என்றனர். மற்றும் சிலர்,  "முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்" என்றனர்.
 
   9.8 ஏரோது,  "யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே. இவர் யாரோ? இவரைப்  பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே." என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத்  தேடிக் கொண்டிருந்தான்.
 
   9.9 திருத்தூதர்கள் திரும்பி வந்து. தாங்கள் செய்த யாவற்றையும் இயேசுவிடம்  எடுத்துக் கூறினார்கள். அவர்களை மட்டும் கூட்டிக்கொண்டு அவர் தனித்திருப்பதற்காகப்  பெத்சாய்தா என்னும் நகருக்குச் சென்றார்.
 
   9.10 அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர்  வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக்  குணப்படுத்தினார்.
 
   9.11  பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து,  "இவ்விடம்  பாலைநிலம் ஆயிற்றே சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு  வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்" என்றனர்.
 
   9.12 இயேசு அவர்களிடம்,  "நீங்களே அவர்களுக்க உணவு கொடுங்கள்" என்றார். அவர்கள்,  "எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்" என்றார்கள்.
 
   9.13  ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய  சீடர்களை நோக்கி,  "இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்"  என்றார்.
 
   9.14  அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.
 
   9.15 அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை  அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச்  சீடரிடம் கொடுத்தார்.
 
   9.16  அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய  எடுத்தனர்.
 
   9.17  இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு  இருந்தனர். அப்போது அவர்களிடம்,  "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று அவர்  கேட்டார்.
 
   9.18 அவர்கள் மறுமொழியாக,  "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா  எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும்  சொல்கின்றனர்" என்றார்கள்.
 
   9.19  "ஆனால் நீங்கள் நான் யார் என் சொல்கிறீர்கள்?" என்று அவர்களிடம் அவர்  கேட்டார். பேதுரு மறுமொழியாக,  "நீர் கடவுளின் மெசியா" என்று உரைத்தார்.  
   9.20 இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க்  கூறினார்.
 
   9.21   மேலும் இயேசு,  "மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக்  குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும்  மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்" என்று சொன்னார்.
 
   9.22 பின்பு அவர் அனைவரையும் நோக்கி,  "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும்  தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.  
   9.23 ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை  இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.
 
   9.24 ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில்  அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?
 
   9.25 என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும்  ஒவ்வொருவரைப் பற்றியும் மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் தூய வானதூதருக்கும் உரிய  மாட்சியோடு வரும் போது வெட்கப்படுவார்.
 
   9.26 இங்கு நிற்பவர்களுள் சிலர் இறையாட்சி வருவதைக் காண்பதற்குமுன்  சாகமாட்டார்கள் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
 
   9.27 இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும்  யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது  ஏறினார்.
 
   9.28 அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது அவருடைய ஆடையும்  வெண்மையாய் மின்னியது.
 
   9.29 மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.
 
   9.30 மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய  இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
 
   9.31 பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள்  விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.
 
   9.32 அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்ற போது, பேதுரு இயேசுவை நோக்கி,  "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.
 
   9.33 இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல்  நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.
 
   9.34 அந்த மேகத்தினின்று,  "இவரே என் மைந்தர் நான் தேர்ந்து கொண்டவர் இவரே.  இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது.
 
   9.35 அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில்  எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.
 
   9.36 மறுநாள் அவர்கள் மலையிலிருந்து இறங்கியபொழுது, பெருந்திரளான மக்கள் அவரை  எதிர்கொண்டு வந்தார்கள்.
 
   9.37 கூட்டத்திலிருந்து ஒருவர்,  "போதகரே, என் மகன்மீது அருள்கூர வேண்டும் என  உம்மிடம் மன்றாடுகிறேன். அவன் எனக்கு ஒரே மகன்.
 
   9.38 ஓர் ஆவி அவனைப் பிடித்துக் கொள்கிறது. உடனே அவன் அலறுகிறான். வலிப்பு  உண்டாகி நுரை தள்ளுகிறான். அது அவனை நொறுக்கிவிடுகிறது அவனைவிட்டு எளிதாகப்  போவதில்லை.
 
   9.39 அதை ஓட்டிவிடும்படி உம் சீடரிடம் மன்றாடினேன். ஆனால் அவர்களால் முடியவில்லை" என்று உரக்கக் கூறினார்.
 
   9.40 அதற்கு இயேசு,  "நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம்  நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்?" என்றார்."உம் மகனை இங்கே கொண்டுவாரும்" என்று அம்மனிதரிடம் கூறினார்.
 
   9.41 அவன் அவரிடம் வந்தபோது பேய் அவனைக் கீழே தள்ளி வலிப்புண்டாக்கியது.  இயேசு அத்தீய ஆவியை அதட்டி, சிறுவனின் பிணி தீர்த்து, அவனுடைய தந்தையிடம் அவனை  ஒப்படைத்தார்.
 
   9.42 அப்பொழுது எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்து நின்றார்கள்.
 
   9.43 இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம்  சீடர்களிடம்,
 
   9.44   "நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிடமகன்  மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்" என்றார்.
 
   9.45 அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை  உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.
 
   9.46 தங்களுக்குள் பெரியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.
 
   9.47 இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து ஒரு சிறு பிள்ளையை எடுத்து, தம் அருகே  நிறுத்தி,
 
   9.48 அவர்களிடம்,  "இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும்  என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்  கொள்கிறார். உங்கள் எல்லிலும் சிறியவரே பெரியவர் ஆவார்" என்றார்.
 
   9.49 யோவான் இயேசுவைப் பார்த்து,  "ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய்  ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம் ஏனெனில் அவர் நம்மைச்  சாராதவர்" என்றார்.
 
   9.50 இயேசு அவரை நோக்கி,  "தடுக்க வேண்டாம் ஏனெனில் நமக்கு எதிராக இராதவர்  நம் சார்பாக இருக்கிறார்" என்றார்.
 
   9.51 இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச்  செல்லத் தீர்மானித்து,
 
   9.52 தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக  அவர்கள் சமியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தவர்கள்.
 
   9.53 அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக்  கொள்ளவில்லை.
 
   9.54 அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு,  "ஆண்டவரே,  வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?" என்று  கேட்டார்கள்.
 
   9.55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.
 
   9.56 பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.
 
   9.57 அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி,  "நீர் எங்கே சென்றாலும் நானும்  உம்மைப் பின்பற்றுவேன்" என்றார்.
 
   9.58 இயேசு அவரிடம்,  "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக்  கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்.
 
   9.59 இயேசு மற்றொருவரை நோக்கி,  "என்னைப் பின்பற்றிவாரும்" என்றார். அவர்,  "முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்" என்றார்.
 
   9.60 இயேசு அவரைப் பார்த்து,  "இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள்  அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்" என்றார்.
 
   9.61 வேறொருவரும்,  "ஐயா, உம்மைப் பின்பற்றுவேன் ஆயினும் முதலில் நான் போய்  என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்" என்றார்.  
   9.62 இயேசு அவரை நோக்கி,  "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர்  எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" என்றார்.
  
 10 அதிகாரம்
 
   10.1 இதற்குப்பின் ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம்  போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.
 
   10.2 அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது"அறுவடை மிகுதி வேலையாள்களோ  குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.
 
   10.3. புறப்பட்டுப் போங்கள் ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல்  உங்களை நான் அனுப்புகிறேன்.
 
   10.4   பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல  வேண்டாம் வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.
 
   10.5 நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும்,  "இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக." என முதலில் கூறுங்கள்.
 
   10.6  அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி  அவரிடம் தங்கும் இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.
 
   10.7 அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள்.  ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே. வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம்.
 
   10.8 நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை  உண்ணுங்கள்.
 
   10.9 அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி  வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.
 
   10.10 நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதன்  வீதிகளில் சென்று,
 
   10.11  "எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக  உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து  கொள்ளுங்கள்" எனச் சொல்லுங்கள்.
 
   10.12  அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகினர் பெறும் தண்டனையை  விட கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.
 
   10.13  "கொராசின் நகரே, ஐயோ. உனக்குக் கேடு. பெத்சாய்தா நகரே, ஐயோ.  உனக்குக் கேடு. ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன்  நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச்  சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர்.
 
   10.14 எனினும் தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட  உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்.
 
   10.15 கப்பர்நாகுமே, நீ நானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம்வரை  தாழ்த்தப்படுவாய்.
 
   10.16  "உங்களுக்குச் செவி சாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார் உங்களைப்  புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்."
 
   10.17 பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து,  "ஆண்டவரே, உமது  பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன" என்றனர்.
 
   10.18  அதற்கு அவர்,  "வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன்.  
   10.19 பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும்  வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு  விளைவிக்காது.
 
   10.20 ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம்.  மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே  மகிழுங்கள்" என்றார்.
 
   10.21 அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து,  "தந்தையே, விண்ணுக்கும்  மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்" என்றார்.
 
   10.22 என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்.  தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும் மகன்  யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார்.
 
   10.23 பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக,  "நீங்கள்  காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர்.
 
   10.24 ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண  விரும்பினார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க  விரும்பினார்கள் ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்"
 என்று கூறினார்.
 
   10.25 திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன்,  "போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று  கேட்டார்.
 
   10.26 அதற்கு இயேசு,  "திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன  வாசிக்கிறீர்?" என்று அவரிடம் கேட்டார்.
 
   10.27 அவர் மறுமொழியாக,  "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு  ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்று எழுதியுள்ளது"  என்றார்.
 
   10.28 இயேசு,  "சரியாகச் சொன்னீர் அப்படியே செய்யும் அப்பொழுது வாழ்வீர்"  என்றார்.
 
   10.29 அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி,  "எனக்கு அடுத்திருப்பவர்  யார்?" என்று இயேசுவிடம் கேட்டார்.
 
   10.30 அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை"ஒருவர் எருசலேமிலிருந்து  எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
 
   10.31 குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு  பக்கமாக விலகிச் சென்றார்.
 
   10.32 அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும்  மறுபக்கமாய் விலகிச் சென்றார்.
 
   10.33 ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து  அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார்.
 
   10.34 அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து,  அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக்  கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்.
 
   10.35 மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து,  "இவரைக் கவனித்துக் கொள்ளும் இதற்கு மேல் செவானால் நான் திரும்பி வரும்போது  உமக்குத் தருவேன்" என்றார்.
 
   10.36  "கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத்  தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார்.
 
   10.37 அதற்கு திருச்சட்ட அறிஞர்,  "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு,  "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்.
 
   10.38 அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை  அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா.
 
   10.39  அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி  அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
 
   10.40 ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து,  "ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே,  உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி  புரிய அவளிடம் சொல்லும்" என்றார்.
 
   10.41 ஆண்டவர் அவரைப் பார்த்து,  "மார்த்தா, மார்த்தா. நீ பலவற்றைப் பற்றிக்  கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
 
   10.42 ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத்  தேர்ந்தெடுத்துக்கொண்டாள் அது அவளிடமிருந்து எடுக்கப்படாது" என்றார்.
  
 11 அதிகாரம்
 
   11.1 இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய  சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி,  "ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக்கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்" என்றார்.
 
   11.2 அவர் அவர்களிடம்,  "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு  சொல்லுங்கள். தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக.
 
   11.3 எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.
 
   11.4 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால்  எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.  (தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்") என்று கற்பித்தார்.
 
   11.5 மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்"உங்களுள் ஒருவர் தம்  நண்பரிடம் நள்ளிரவில் சென்று,  "நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு.
 
   11.6 என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார்.  அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை" என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.
 
   11.7 உள்ளே இருப்பவர்,  "எனக்குத் தொல்லை கொடுக்காதே ஏற்கெனவே கதவு  பூட்டியாயிற்று என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து  உனக்குத் தர முடியாது" என்பார்.
 
   11.8 எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம்  நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
 
   11.9  "மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கேளுங்கள், உங்களுக்குக்  கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள். உங்களுக்குத்  திறக்கப்படும்.
 
   11.10 ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர். தேடுவோர்  கண்டடைகின்றனர். தட்டுவோருக்குத் திறக்கப்படும்.
 
   11.11 பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப்  பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா?
 
   11.12 முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?
 
   11.13 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க  அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய  ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி."
 
   11.14 ஒரு நாள் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டினார். பேய்  வெளியேறவே, பேச்சற்ற அவர் பேசினார். கூட்டத்தினர் வியந்து நின்றனர்.
 
   11.15 அவர்களுள் சிலர்,  "பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன்  பேய்களை ஓட்டுகிறான்" என்றனர்.
 
   11.16 வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர்  அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.
 
   11.17 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது"தனக்கு  எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும்  விழுந்துவிடும்.
 
   11.18 சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி  நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே.
 
   11.19 நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச்  சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு  என்பதற்குச் சாட்சிகள்.
 
   11.20  நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி  உங்களிடம் வந்துள்ளது அல்லவா.
 
   1121 வலியவர் ஆயதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய  உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும்.
 
   11.22 அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர்  நம்பியிருந்த எல்லாப் படைக் கலங்களையும் பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும்  பங்கிடுவார்.
 
   11.23  "என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக்  கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்.
 
   11.24   "ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து  இளைப்பாற இடம்தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல்,  "நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத்  திரும்பிப் போவேன்" எனச் சொல்லும்.
 
   11.25 திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகு படுத்தப்பட்டிருப்பதைக் காணும்.
 
   11.26 மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து  அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்."
 
   11.27 அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர்,   "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்" என்று குரலெழுப்பிக் கூறினார்.
 
   11.28 அவரோ,  "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம்  பேறுபெற்றோர்" என்றார்.
 
   11.29 மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது"இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம்  கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் எதுவும்  கொடுக்கப்பட மாட்டாது.
 
   11.30 யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும்  இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்.
 
   11.31 தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக்  கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின்  கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா.
 
   11.32 தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக்  கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம்  மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா.
 
   11.33  "எவரும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ மரக்காலுக்குள்ளோ வைப்பதில்லை  மாறாக அறையின் உள்ளே வருவோர்க்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர்.
 
   11.34 உங்கள் கண்தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் நலமாயிருந்தால் உங்கள்  உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும் அது கெட்டுப்போனால் உங்கள் உடல் இருளாய் இருக்கும்.
 
   11.35 ஆகையால் உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாயிராதவாறு பார்த்துக்  கொள்ளுங்கள்.
 
   11.36 உடலின் எப்பகுதியிலும் இளுளின்றி உங்கள் உடல் முழுவதும் ஒளியாய்  இருந்தால், விளக்குச் சுடர் முன் நீங்கள் ஒளிமயமாய் இருப்பதுபோல் அனைத்தும் ஒளிமயமாய்  இருக்கும்.
 
   11.37 இயேசு பேசிக்கொண்டிருந்த போது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி  அவரைக் கேட்டுக் கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.
 
   11.38 உணவு அருந்து முன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார்.
 
   11.39 ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது"பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும்  தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன.
 
   11.40 அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார்  அல்லவா.
 
   11.41 உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு  அனைத்தும் தூய்மையாயிருக்கும்.
 
   11.42   "ஐயோ. பரிசேயரே உங்களுக்குக் கேடு. நீங்கள் புதினா,கறியிலை, மற்றும்  கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப்  படைக்கிறீர்கள். ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை.  இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும் ஆனால் அவற்றையும்
 
   11.43  "ஐயோ. பரிசேயரே, உங்களுக்குக் கேடு. தொழுகைக் கூடங்களில் முதன்மையான  இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே.
 
   11.44 ஐயோ. உங்களுக்குக் கேடு. ஏனெனில் நீங்கள் அடையாளம் தெரியாத  கல்லறைகள்போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது  நடந்து போகிறார்கள்."
 
   11.45 திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து,  "போதகரே, இவற்றைச் சொல்லி  எங்களை இழிவுபடுத்துகிறீர்" என்றார்.
 
   11.46  அதற்கு அவர்,  "ஐயோ. திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு. ஏனென்றால்  நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள் நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்.
 
   11.47  "ஐயோ. உங்களுக்குக் கேடு. ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச்  சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால் அவர்களைக் கொலை செய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே.
 
   11.48 உங்கள் மூதாதையின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்  அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலை செய்தார்கள் நீங்கள் நினைவுச்
 சின்னம் எழுப்புகிறீர்கள்.
      11.49 இதை முன்னிட்டே கடவுளின் ஞானம் இவ்வாறு கூறுகிறது நான் அவர்களிடம்  இறைவாக்கினரையும் திருத்தூதரையும் அனுப்புவேன். அவர்களுள் சிலரைத் துன்புறுத்துவார்கள்.
 
   11.50 ஆபெலின் இரத்தம்முதல் பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே கொலை  செய்யப்பட்ட இறைவாக்கினர் அனைவின் இரத்தத்திற்காகவும் இந்தத் தலைமுறையினரிடம்  கணக்குக் கேட்கப்படும்.
 
   11.51 ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த தலைமுறையினிடம் கணக்குக்  கேட்கப்படும்.
 
   11.52  "ஐயோ. திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு. ஏனெனில் அறிவுக்  களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை  நுழைவோரையும் தடுக்கிறீர்கள்" என்றார்.
 
   11.53 இயேசு அங்கிருந்து புறப்பட்டபோது மறைஞூல் அறிஞரும் பரிசேயரும் பகைமையுணர்வு  மிகுந்தவராய்
 
   11.54 அவரது பேச்சில் அவரைச் சிக்கவைக்குமாறு பல கேள்விகளைக் கேட்டனர்.
 
 12 அதிகாரம்
 
   12.1 ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு  வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார். அவர் அவர்களிடம்  கூறியது"பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய்  இருங்கள்.
 
   12.2 வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை. அறியப்படாதவாறு  மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.
 
   12.3 ஆகவே நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில்  காதோடு காதாய்ப் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும்.
 
   12.4 நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன் உடலைக் கொல்வதையன்றி வேறு  எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.
 
   12.5 நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.  கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரமுள்ளவருக்கே அஞ்சுங்கள் ஆம், அவருக்கே அஞ்சுங்கள்  என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
 
   12.6 இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில்  ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே.
 
   12.7. உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்  சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.
 
   12.8  "நான் உங்களுக்குச் சொல்கிறேன் மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்  கொள்பவரை மானிடமகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக் கொள்வார்.
 
   12.9 மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும்  மறுதலிக்கப்படுவார்.
 
   12.10 மானிடமகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும்  மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்.
 
   12.11 தொழுகைக் கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக்  கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதிலளிப்பது. என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது  என நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
 
   12.12 ஏனெனில் நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில்  உங்களுக்குக் கற்றுத் தருவார்.
 
   12.13 கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம்,  "போதகரே, சொத்தை என்னோடு  பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்" என்றார்.
 
   12.14 அவர் அந்த ஆளை நோக்கி,  "என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம்  பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?" என்று கேட்டார்.
 
   12.15 பின்பு அவர் அவர்களை நோக்கி,  "எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு  எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு  வந்துவிடாது" என்றார்.
 
   12.16 அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்"செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம்  நன்றாய் விளைந்தது.
 
   12.17 அவன், "நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க  இடமில்லையே." என்று எண்ணினான்.
 
   12.18  "ஒன்று செய்வேன் என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக்  கட்டுவேன் அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்".
 
   12.19 பின்பு,  "என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப்  பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன நீ ஓய்வெடு உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு"  எனச் சொல்வேன்" என்று தனக்குள் கூறிக்கொண்டான்.
 
   12.20 ஆனால் கடவுள் அவனிடம்,  "அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப்  பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?" என்று கேட்டார்.
 
   12.21 கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே."
 
   12.22 இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது"ஆகவே நான் உங்களுக்குச்  சொல்கிறேன், உயிர்வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை  கொள்ளாதீர்.
 
   12.23 உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?
 
   12.24 காகங்களைக் கவனியுங்கள் அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை  அவற்றுக்குச் சேமிப்பறையுமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றுக்கும் உணவு  அளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா?
 
   12.25 கவலைப்படுவதால் உங்களுள் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?
 
   12.26 ஆதலால் மிகச் சிறிய ஒரு செயலைக் கூடச் செய்யமுடியாத நீங்கள் மற்றவை  பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்?
 
   12.27 காட்டுச் செடிகள் எப்படி வளர்கின்றன எனக் கூர்ந்து கவனியுங்கள் அவை  உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. ஆனால் சாலமோன்கூடத் தம் மேன்மையிலெல்லாம்  அவற்றில் ஒன்றைப்போல் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
 
   12.28   "நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில்  எறிப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு  இன்னும் மிகுதியாகச் செய்வார் அல்லவா.
 
   12.29 ஆதலால் எதை உண்பது, எதைக் குடிப்பது என நீங்கள் தேடிக்கொண்டிருக்க  வேண்டாம். கவலை கொண்டிருக்கவும் வேண்டாம்.
 
   12.30 ஏனெனில் உலகு சார்ந்த பிற இனத்தவரே இவற்றையெல்லாம் தேடுவர். உங்களுக்கு  இவை தேவையென உங்கள் தந்தைக்குத் தெரியும்.
 
   12.31 நீங்கள் அவருடைய ஆட்சியை நாடுங்கள் அப்பொழுது இவை உங்களுக்குச்  சேர்த்துக் கொடுக்கப்படும்.
 
   12.32  "சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம் உங்கள் தந்தை உங்களைத் தம்  ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.
 
   12.33 உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள் இற்றுப்போகாத  பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள் அங்கே திருடன் நெருங்குவதில்லை. பூச்சியும் இருப்பது இல்லை.
 
   12.34   உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
 
   12.35  "உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து  கொண்டிருக்கட்டும்.
 
   12.36  திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது  உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.
 
   12.37 தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு  பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச்  செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
 
   12.38 தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல்  வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள்  பேறுபெற்றவர்கள்.
 
   12.39 எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத்  தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.
 
   12.40 நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில்  மானிடமகன் வருவார்."
 
   12.41 அப்பொழுது பேதுரு,  "ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது  எல்லாருக்குமா?" என்று கேட்டார்.
 
   12.42 அதற்கு ஆண்டவர் கூறியது"தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர்  அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?
 
   12.43 தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே  அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர்,
 
   12.44 அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக  உங்களுக்குச் சொல்கிறேன்.
 
   12.45  ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத் தன்  உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில்
 
   12.46 அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து  அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.
 
   12.47 தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர்  விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான்.
 
   12.48 ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன்  அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக்  கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக  ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.
 
   12.49   "மண்ணுலகில் தீமுட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க  வேண்டும் என்பதே என் விருப்பம்.
 
   12.50 ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான்  மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.
 
   12.51 மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை,  பிளவு உண்டாக்கவே வந்தேன் என் உங்களுக்குச் சொல்கிறேன்.
 
   12.52 இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக  இருவரும் பிரிந்திருப்பர்.
 
   12.53 தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும்,  மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்."
 
   12.54 இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து,  "மேற்கிலிருந்து மேகம் எழும்பும்வரை  நீங்கள் பார்த்ததும் மழைவரும் என்கிறீர்கள். அது அப்படியே நடக்கிறது.
 
   12.55 தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும்  என்கிறீர்கள். அதுவும் நடக்கிறது.
 
   12.56 வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும்  ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது  எப்படி?
 
   12.57   "நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?
 
   12.58 நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே  உங்கள் வழக்கைத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை  நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்  நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார்.
 
   12.59 கடைசிக் காசுவரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து  வெளியேறமாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்."
 ***
 
 13 அதிகாரம்
 
   13.1 அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த  கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.
 
   13.2 அவர் அவர்களிடம் மறுமொழியாக,  "இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால்  இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?
 
   13.3 அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள்  அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.
 
   13.4 சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள்  எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?  
   13.5 அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள்  அனைவரும் அப்படியே அழிவீர்கள்" என்றார்.
 
   13.6 மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்"ஒருவர் தம் திராட்சைத்  தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத்  தேடியபோது எதையும் காணவில்லை.
 
   13.7 எனவே அவர் தோட்டத் தொழிலாளிடம்,  "பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி  மரத்தில் கனியைத் தேடி வருகிறேன் எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?" என்றார்.
 
   13.8 தொழிலாளர் மறுமொழியாக,  "ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும் நான்  இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.
 
   13.9 அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி, இல்லையானால் இதை வெட்டிவிடலாம்"  என்று அவரிடம் கூறினார்."
 
   13.10 ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார்.  
   13.11 பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர்  அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார்.
 
   13.12 இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு,  "அம்மா, உமது நோயிலிருந்து நீர்  விடுவிக்கப்பட்டுள்ளீர்" என்று கூறி,
 
   13.13 தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப்  புகழ்ந்தார்.
 
   13.14 இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர்  கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து,  "வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே  அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக்கொள்ளுங்கள் ஓய்வுநாளில் வேண்டாம்" என்றார்.
 
   13.15 ஆண்டவரோ அவரைப் பார்த்து,  "வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும்  ஓய்வுநாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவதில்லையோ?
 
   13.16 பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான்  கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வுநாளில் விடுவிப்பது முறையில்லையா?" என்று கேட்டார்.
 
   13.17 அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர்.  திரண்டிருந்த மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து  மகிழ்ச்சி அடைந்தனர்.
 
   13.18 பின்பு இயேசு,  "இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு  ஒப்பிடுவேன்?
 
   13.19 அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில்  இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின" என்று  கூறினார்.
 
   13.20 மீண்டும் அவர்,  "இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்?
 
   13.21 அது புளிப்புமாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால்  மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது" என்றார்.
 
   13.22 இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப்  பயணம் செய்தார்.
 
   13.23 அப்பொழுது ஒருவர் அவரிடம்,  "ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர்  மட்டும்தானா?" என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது
 
   13.24  "இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே  செல்ல முயன்றும் இயலாமற்போகும்.
 
   13.25  "வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்" என்று கேட்பீர்கள்.  அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது" எனப் பதில் கூறுவார்.
 
   13.26 அப்பொழுது நீங்கள்,  "நாங்கள் உம்மோடு உணவு உண்டோ ம், குடித்தோம். நீர்  எங்கள் வீதிகளில் கற்பித்தீரே" என்று சொல்வீர்கள்.  
   13.27 ஆனாலும் அவர்,  "நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு  செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள்" என உங்களிடம் சொல்வார்.
 
   13.28 ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு  உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது  அங்கலாய்ப்பீர்கள்.
 
   13.29 இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து  மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.
 
   13.30 ஆம், கடைசியானோர் முதன்மையாவர் முதன்மையானோர் கடைசியாவர்."
 
   13.31 அந்நேரத்தில் பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து,  "இங்கிருந்து போய்விடும்  ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்லவேண்டும் என்றிருக்கிறான்" என்று கூறினார்.
 
   13.32 அதற்கு அவர் கூறியது"இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன், பிணிகளைப்  போக்குவேன், மூன்றாம் நாளில் என்பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம்  கூறுங்கள்.
 
   13.33 இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாக வேண்டும்.  ஏனெனில், இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே.
 
   13.34  "எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே. உன்னிடம்  அனுப்பப்பட்டோ ரைக் கல்லால் எறிகிறாயே. கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள்  கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை  விரும்பினேன் உனக்கு விருப்பமில்லையே.
 
   13.35 இதோ, உங்கள் இறை இல்லம் கைவிடப்படும்."ஆண்டவரின் பெயரால் வருபவர்  ஆசி பெற்றவர்" என் நீங்கள் கூறும் நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என நான்  உங்களுக்குச் சொல்கிறேன்.
 
 14 அதிகாரம்
 
   14.1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச்  சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.
 
   14.2 அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார்.  
   14.3 இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து,  "ஓய்வுநாளில்  குணப்படுத்துவது முறையா, இல்லையா?" என்று கேட்டார்.
 
   14.4 அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி  அனுப்பிவிட்டார்.
 
   14.5 பிறகு அவர்களை நோக்கி,  "உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ  கிணற்றில்  விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?" என்று கேட்டார்.
 
   14.6 அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.
 
   14.7 விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை  நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை      
  14.8  "ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில்  முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம்.
 
   14.9 உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில்,  "இவருக்கு இடத்தை  விட்டுக்கொடுங்கள்" என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப்  போக வேண்டியிருக்கும்.
 
   14.10 நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள்.  அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம்,  "நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்"  எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக  நீங்கள் பெருமை அடைவீர்கள்.
 
   14.11 தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர். தம்மைத்தாமே  தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்."
 
   14.12 பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவிடம் இயேசு,  "நீர் பகல் உணவோ இரவு  உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்கு கைம்மாறு ஆகிவிடும்.
 
   14.13 மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால்  ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழையும்.
 
   14.14 அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய  அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்" என்று கூறினார்.
 
   14.15 இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இவற்றைக் கேட்டு அவரிடம்,  "இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்" என்றார்.
 
   14.16 இயேசு அவரிடம் கூறியது"ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை  அழைத்தார்.
 
   14.17 விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை  அனுப்பி,  "வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது" என்று சொன்னார்.
 
   14.18 அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத்  தொடங்கினர். முதலில் ஒருவர்,  "வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன் அதை நான் கட்டாயம்  போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்" என்றார்.
 
   14.19   "நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன் அவற்றை ஓட்டிப்பார்க்கப்  போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்" என்றார் வேறொருவர்.
 
   14.20"எனக்கு இப்போது தான் திருமணம் ஆயிற்று ஆகையால் என்னால் வர முடியாது"  என்றார் மற்றொருவர்.
 
   14.21 பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார். வீட்டு  உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளிடம்,  "நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும்  விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும்", என்றார்.
 
   14.22 பின்பு பணியாளர்,  "தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று இன்னும்  இடமிருக்கிறது" என்றார்.
 
   14.23 தலைவர் தம் பணியாளரை நோக்கி,  "நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும்  போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டிவாரும்.
 
   14.24 அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை  என உமக்குச் சொல்கிறேன்" என்றார்.
 
   14.25 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப்  பார்த்து அவர்களிடம் கூறியது
 
   14.26   "என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர்  சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என்  சீடராயிருக்க முடியாது.
 
   14.27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய்  இருக்கமுடியாது.
 
   14.28   "உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து,  அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா  எனப் பார்க்கமாட்டாரா?
 
   14.29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல்  இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக,
 
   14.30  "இம்மனிதன் கட்டத் தொடங்கினான் ஆனால் முடிக்க இயலவில்லை" என்பார்களே.
 
   14.31   "வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம்  பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று  முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?
 
   14.32 எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி,  அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?
 
   14.33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என்  சீடராய் இருக்க முடியாது.
 
   14.34   "உப்பு நல்லது ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை  உவர்ப்புள்ளதாக்க முடியும்?
 
   14.35 அது நிலத்துக்கோ எருக்குழிக்கோ பயனற்றது. அது வெளியே கொட்டப்படும்.  கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்".
 
 15 அதிகாரம்
 
   15.1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம்  நெருங்கிவந்தனர்.
 
   15.2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும்,  "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு  உணவருந்துகிறாரே" என்று முணுமுணுத்தனர்.     
 15.3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்
 
   15.4   "உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர்  தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக்  கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?
 
   15.5 கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக்  கொள்வார்
 
   15.6 வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து,  "என்னோடு  மகிழுங்கள். ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்" என்பார்.
 
   15.7 அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக்  குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில்  மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
 
   15.8   "பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற்  போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக்  கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?
 
   15.9 கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து,  "என்னோடு  மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்பார்.  
   15.10 அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே  மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்."
 
   15.11 மேலும் இயேசு கூறியது"ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.
 
   15.12 அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி,  "அப்பா, சொத்தில் எனக்கு உரிய  பங்கைத் தாரும்" என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.
 
   15.13 சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை  நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார் அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும்  பாழாக்கினார்.
 
   15.14 அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம்  ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்
 
   15.15 எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர்  அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.
 
   15.16 அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்.  ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.
 
   15.17 அவர் அறிவு தெளிந்தவராய்,  "என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு  மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே.
 
   15.18  நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய்,  "அப்பா, கடவுளுக்கும் உமக்கும்  எதிராக நான் பாவம் செய்தேன்
 
   15.19 இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் உம்முடைய  கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்" என்று சொல்லிக்கொண்டார்.
 
   15.20   "உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில்  வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக்  கட்டித் தழுவி முத்தமிட்டார்.
 
   15.21 மகனோ அவரிடம்,  "அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம்  செய்தேன் இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்" என்றார்.
 
   15.22 தந்தை தம் பணியாளரை நோக்கி,  "முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு  உடுத்துங்கள் இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்
 
   15.23 கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள். நாம் மகிழ்ந்து விருந்து  கொண்டாடுவோம்.
 
   15.24 ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான், மீண்டும் உயிர் பெற்று  வந்துள்ளான். காணாமற்போயிருந்தான் மீண்டும் கிடைத்துள்ளான்" என்றார். அவர்கள்  மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.
 
   15.25   "அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி  வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு,
 
   15.26 ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து,  "இதெல்லாம் என்ன?" என்று வினவினார்.  
   15.27 அதற்கு ஊழியர் அவரிடம்,  "உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம்  நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்" என்றார்.
 
   15.28 அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை  வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.
 
   15.29 அதற்கு அவர் தந்தையிடம்,  "பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று  உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என்  நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.
     15.30 ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த  உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே."  என்றார்.
 
   15.31 அதற்குத் தந்தை,  "மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்  என்னுடையதெல்லாம் உன்னுடையதே.
 
   15.32 இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி  இவன் இறந்து போயிருந்தான் மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்  மீண்டும் கிடைத்துள்ளான்" என்றார்."
 
 16 அதிகாரம்
 
 
   16.1 இயேசு தம் சீடருக்குக் கூறியது"செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர்  இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது.
 
   16.2 தலைவர் அவரைக் கூப்பிட்டு,  "உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம்  பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது"  என்று அவிடம் கூறினார்.
 
   16.3 அந்த வீட்டுப் பொறுப்பாளர்,  "நான் என்ன செய்வேன்? வீட்டுப்  பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே. மண்வெட்டவோ என்னால்  உரியலாது, இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.
 
   16.4 வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள்  வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்" என்று  அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
 
   16.5 பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார்.  முதலாவது வந்தவரிடம்,  "நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?" என்று  கேட்டார்.
 
   16.6 அதற்கு அவர்,  "நூறு குடம் எண்ணெய்" என்றார். வீட்டுப் பொறுப்பாளர்  அவரிடம்,  "இதோ உம் கடன் சீட்டு உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்" என்றார்.
 
   16.7 பின்பு அடுத்தவரிடம்,  "நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?" என்று கேட்டார்.  அதற்கு அவர்,  "நூறு மூடை கோதுமை" என்றார். அவர்,  "இதோ, உம் கடன் சீட்டு எண்பது என்று  எழுதும்" என்றார்.
 
   16.8 நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர்  அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள்  தலைமுறையினிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.
 
   16.9   "ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன் நேர்மையற்ற  செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.
 
   16.10 மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத்  தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும்  நேர்மையற்றவராய் இருப்பார்.
 
   16.11 நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய்  இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?
 
   16.12 பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப்  போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?
 
   16.13  "எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது  ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார் அல்லது ஒருவரைச் சார்ந்து  கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை  செய்யமுடியாது."
 
   16.14 பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர்.
 
   16.15 அவர் அவர்களிடம் கூறியது"நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக்  காட்டிக் கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை  மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும்.
 
   16.16 திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும் தான். அதுமுதல்  இறையாட்சி பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. யாவரும் இறையாட்சிக்குட்பட  நெருக்கியடித்துக்கொண்டு வருகிறார்கள்.
 
   16.17 திருச்சட்டத்திலுள்ள ஓர் எழுத்தின் கொம்பு அழிவதைவிட விண்ணும்  மண்ணும் ஒழிவது எளிதாகும்.
 
   16.18   " தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம்  செய்கிறான். கணவனால் தள்ளப்பட்ட பெண்ணை மணப்பவனும் விபசாரம் செய்கிறான்.
 
   16.19   "செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து  நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
 
   16.20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும்  புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.
 
   16.21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற  விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.
 
   16.22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு  போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
 
   16.23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலைவில்  ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.
 
   16.24 அவர்,  "தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும். இலாசர் தமது விரல் நுனியைத்  நீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத்  தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்" என்று உரக்கக் கூறினார்.
 
   16.25 அதற்கு ஆபிரகாம்,  "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய் அதே  வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார், நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.
 
   16.26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது.  ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து  நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது" என்றார்.
 
   16.27  "அவர்,  "அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு  உம்மிடம் வேண்டுகிறேன்.
 
   16.28 எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு  வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே" என்றார்.
 
   16.29 அதற்கு ஆபிரகாம்,  "மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு.  அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்" என்றார்.
 
   16.30 அவர்,  "அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால்  அவர்கள் மனம் மாறுவார்கள்" என்றார்.
 
   16.31 ஆபிரகாம்,  "அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும்  செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும்  நம்பமாட்டார்கள்" என்றார்."
 
 17 அதிகாரம்
 
   17.1 இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது"பாவத்தில் விழுவதைத் தவிர்க்க  முடியாது. ஆனால் ஐயோ. அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு.
 
   17.2 அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வதைவிட அவ்வாறு  செய்பவரது கழுத்தில் ஒரு எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு  நல்லது.
 
   17.3 எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதரர்  சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துகொள்ளுங்கள். அவர் மனம் மாறினால்  அவரை மன்னியுங்கள்.
 
   17.4 ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும்  உங்களிடம் திரும்பி வந்து,  "நான் மனம் மாறிவிட்டேன்" என்று சொல்வாரானால் அவரை  மன்னித்து விடுங்கள்."
 
   17.5 திருத்தூதர்கள் ஆண்டவரிடம்,  "எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்" என்று  கேட்டார்கள்.
 
   17.6 அதற்கு ஆண்டவர் கூறியது"கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள்  இந்த முசக்கட்டை மரத்தை நோக்கி,  "நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேருன்றி  நில்" எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
 
   17.7  "உங்கள் பணியாளர் உழுது விட்டோ , மந்தையை மேய்த்துவிட்டோ   வயல்வெளியிலிரந்து வரும்போது அவரிடம்,  "நீர் உடனே வந்து உணவருந்த அமரும்" என்று  உங்களில் எவராவது சொல்வாரா?
 
   17.8 மாறாக,  "எனக்கு உணவு ஏற்பாடு செய்யும், உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு,  நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும் அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்"  என்று சொல்வாரல்லவா?
 
   17.9 தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?
 
   17.10 அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும்  செய்தபின்,  "நாங்கள் பயனற்ற பணியாளர்கள் எங்கள் கடமையைத்தான் செய்தோம்" எனச்  சொல்லுங்கள்."
 
   17.11 இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமியப் பகுதிகள்  வழியாகச் சென்றார்.
 
   17.12 ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு  வந்து, தூரத்தில் நின்று கொண்டு,
 
   17.13  "ஐயா. இயேசுவே, எங்களுக்கு இரங்கும்" என்று உரக்கக் குரலெழுப்பி  வேண்டினார்கள்.
 
   17.14 அவர் அவர்களைப் பார்த்து,  "நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம்  காண்பியுங்கள்" என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய்  நீங்கிற்று.
 
   17.15 அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப்  போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்
 
   17.16 அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு  சமியர்.
 
   17.17 இயேசு, அவரைப் பார்த்து,  "பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற  ஒன்பது பேர் எங்கே?
 
   17.18 கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும்  திரும்பிவரக் காணோமே." என்றார்.    
  17.19 பின்பு அவரிடம்,  "எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது"  என்றார்.
 
   17.20 இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர். அவர்  மறுமொழியாக,  "இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது.
 
   17.21 இதோ, இங்கே. அல்லது அதோ, அங்கே. எனச் சொல்லமுடியாது. ஏனெனில்,  இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது" என்றார்.
 
   17.22 பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது"ஒரு காலம் வரும் அப்போது மானிட  மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் காணமாட்டீர்கள்.
 
   17.23 அவர்கள் உங்களிடம்,  "இதோ, இங்கே. அல்லது அதோ, அங்கே." என்பார்கள்.  ஆனால் நீங்கள் போக வேண்டாம் அவர்களைப் பின் தொடரவும் வேண்டாம்.
 
   17.24 வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரைக்கும் பளீரென  மின்னி ஒளிர்வது போல மானிடமகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.
 
   17.25 ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித்  தள்ளப்பட வேண்டும்.
 
   17.26 நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே மானிட மகனுடைய காலத்திலும்  நடக்கும்.
 
   17.27 நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும்  உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது.
 
   17.28 அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள்,  குடித்தார்கள் வாங்கினார்கள், விற்றார்கள் நட்டார்கள், கட்டினார்கள்.
 
   17.29 லோத்து சோதோமை விட்டுப்போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும்  கந்தகமும் எல்லாரையும் அழித்தன.
 
   17.30 மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
 
   17.31  "அந்நாளில் வீட்டின் மேல் தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை  எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம்.
 
   17.32 லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.
 
   17.33 தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர் தம் உயிரை இழப்பவரோ  அதைக் காத்துக் கொள்வர்.
 
   17.34 நான் உங்களுக்குச் சொல்கிறேன் அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர்  படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார் மற்றவர் விட்டு விடப்படுவார்.
 
   17.35 இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்  மற்றவர் விட்டுவிடப்படுவார்.
 
   17.36 இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார் மற்றவர் விட்டு  விடப்படுவார்,  " 
 
   17.37 அவர்கள் இயேசுவைப் பார்த்து,  "ஆண்டவரே, இது எங்கே நிகழும்?" என்று  கேட்டார்கள். அவர் அவர்களிடம்,  "பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்" என்றார்.
 
 18 அதிகாரம்
 
 
   18.1 அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு  இயேசு ஓர் உவமை சொன்னார்.
 
   18.2  "ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை  மக்களையும் மதிப்பதில்லை.
 
   18.3 அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய்,  "என்  எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்" என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.
 
   18.4 நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர்,  "நான்  கடவுளுக்கு அஞ்சுவதில்லை மக்களையும் மதிப்பதில்லை.
 
   18.5 என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான்  இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்"  என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்."
 
   18.6 பின் ஆண்டவர் அவர்களிடம்,  "நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால்,
 
   18.7 தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக்  கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?
 
   18.8 விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.  ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?" என்றார்.
 
   18.9 தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்கள் இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப்  பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்
 
   18.10  "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர்,  மற்றவர் வரிதண்டுபவர்.
 
   18.11 பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்"கடவுளே, நான்  கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரம் போன்ற மற்ற மக்களைப் போலவோ இல்லாதது பற்றி  உமக்கு நன்றி செலுத்துகிறேன்
 
   18.12 வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன். என்வருவாயில் எல்லாம் பத்திலொரு  பங்கைக் கொடுக்கிறேன்."
 
   18.13 ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து  பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு,  "கடவுளே, பாவியாகிய என்மீது  இரங்கியருளும்" என்றார்."
 
   18.14 இயேசு,  "பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு  திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர் தம்மைத்தாமே  தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
 
   18.15 குழந்தைகளை இயேசு தொடவேண்டும் என்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு  வந்தனர். இதைக் கண்ட சீடர் அவர்களை அதட்டினர்.
 
   18.16 ஆனால் இயேசு அவர்களைத் தம்மிடம் வரழைத்து,  "சிறுபிள்ளைகளை என்னிடம்  வரவிடுங்கள் அவர்களைத் தடுக்காதீர்கள், ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.
 
   18.17 இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட  மாட்டார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று சீடர்களிடம் கூறினார்.
 
   18.18 அப்பொழுது தலைவர் ஒருவர் அவரிடம்,  "நல்ல போதகரே, நிலை வாழ்வை  உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.
. 
   18.19 அதற்கு இயேசு அவரிடம்,  "நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள்  ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.
 
   18.20 உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா விபசாரம் செய்யாதே. கொலை  செய்யாதே. களவு செய்யாதே. பொய்ச் சான்று சொல்லாதே. உன் தாய் தந்தையை மதித்து நட" என்றார்.
 
 18.21 அவர்,   "இவை அனைத்தையும் நான் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன்"  என்றார்.
 
 18.22 இதைக் கேட்ட இயேசு அவரிடம்,  "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. உமக்குள்ள  யாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய்  இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றார்.
 
 18.23 இவற்றைக் கேட்டு அவர் மிகவும் வருத்தமுற்றார். ஏனெனில் அவர் மிகுந்த  செல்வம் உடையராய் இருந்தார்.
   18.24 அவர் மிகவும் வருத்தமுற்றதைப் பார்த்த இயேசு,  "செல்வர் இறையாட்சிக்கு  உட்படுவது எவ்வளவு கடினம்.
 
 18.25 செல்வர் ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம்  நுழைவது எளிது" என்றார்.
 
 18.26 இதைக் கேட்டவர்கள்,  "பின் யார்தான் மீட்புப் பெற முடியும்?" என்று  கேட்டார்கள்.
 
 18.27 இயேசு,  "மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்" என்றார்.  
 18.28 பேதுரு அவரிடம்,  "பாரும், எங்கள் உடைமைகளை விட்டுவிட்டு நாங்கள் உம்மைப்  பின்பற்றினோமே" என்றார்.
 
 18.29 அதற்கு அவர் அவர்களிடம்,  "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்  இறையாட்சியின் பொருட்டு வீட்டையோ மனைவியையோ சகோதரர் சகோதரிகளையோ  பெற்றோரையோ பிள்ளைகளையோ விட்டுவிட்டவர் எவரும்
 
 18.30 இம்மையில் பன்மடங்கும் மறுமையில் நிலைவாழ்வும் பெறாமல் போகார்"  என்றார்.
 
 18.31 இயேசு பன்னிருவரையும் தம் அருகில் அழைத்து, அவர்களிடம்,  "இப்பொழுது நாம்  எருசலேமுக்குச் செல்கிறோம் மானிடமகனைப் பற்றி இறைவாக்கினர் வாயிலாக எழுதப்பட்டவை  யாவும் நிறைவேறும்.
 
 18.32 அவர் பிற இனத்தவரிடம் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவரை ஏளனம் செய்து  அவமானப்படுத்தி அவர்மீது துப்புவார்கள்.
 
 18.33 அவர்கள் அவரைச் சாட்டையால் அடித்துக்கொலை செய்வார்கள். ஆனால் மூன்றாம்  நாளில் அவர் உயிர்த்தெழுவார்" என்றார்.
 
 18.34 இவற்றில் எதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர் கூறியது அவர்களுக்கு  மறைபொருளாக இருந்தது. ஏனெனில், அவர் சொன்னது என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை.
 
 18.35 இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய்  உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்.
 
   18.36 மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர்,  "இது என்ன?" என்று வினவினார்.
 
 18.37 நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.
 
 18.38 உடனே அவர்,  "இயேசுவே. தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கூக்குரலிட்டார்.
 
 18.39 முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள்.  ஆனால் அவர்,  "தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
 
 18.40 இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர்  நெருங்கி வந்ததும்,
 
 18.41   "நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்" என்று இயேசு  கேட்டார். அதற்கு அவர்,  "ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்" என்றார்.
 
 18.42 இயேசு அவரிடம்,  "பார்வை பெறும், உமது நம்பிக்கை உம்மை நலமாக்கியது"  என்றார்.
 
 18.43 அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப்  பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.
 
 19 அதிகாரம்
 
 
 19.1 இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்.
 
 19.2 அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர்  வரிதண்டுவோருக்குத் தலைவர்.
 
 19.3 இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார் மக்கள் திரளாய்க் கூடியிருந்தால்  அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.
 
 19.4 அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு முசக்கட்டை மரத்தில்  ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.
 
 19.5 இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம்,  "சக்கேயு,  விரைவாய் இறங்கிவாரும் இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" என்றார்.
 
 19.6 அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.
 
 19.7 இதைக் கண்ட யாவரும்,  "பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்" என்று  முணுமுணுத்தனர்.
 
 19.8 சக்கேயு எழுந்து நின்று,  "ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக்  கொடுத்துவிடுகிறேன் எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால்  நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்று அவரிடம் கூறினார்.
 
 19.9 இயேசு அவரை நோக்கி,  "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று, ஏனெனில்  இவரும் ஆபிரகாமின் மகனே.
 
 19.10 இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்" என்று  சொன்னார்.
 
 19.11 இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக்  கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று  நினைத்தார்கள். அப்போது இயேசு மேலும் ஓர் உவமையைச் சொன்னார்
 
 19.12  "உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப்  புறப்பட்டார்.
 
 19.13 அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை  அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி,  "நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம்  செய்யுங்கள்" என்று சொன்னார்.
 
 19.14 அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே,  "இவர் அரசராக இருப்பது  எங்களுக்கு விருப்பமில்லை" என்று சொல்லித் தூது அனுப்பினர்.
 
 19.15 இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார். பின்னர் தம்மிடம்  பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.
 
 19.16 முதலாம் பணியாளர் வந்து,  "ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச்  சேர்த்துள்ளேன்" என்றார்.
 
 19.17 அதற்கு அவர் அவரிடம்,  "நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய  பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய்  இரும்" என்றார்.
 
 19.18 இரண்டாம் பணியாளர் வந்து,  "ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை  ஈட்டியுள்ளேன்" என்றார்.
 
 19.19 அவர்,  "எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்" என்று அவிடமும்  சொன்னார்.
 
 19.20 வேறொருவர் வந்து,  "ஐயா, இதோ உமது மினா, ஒரு கைக்குட்டையில் முடிந்து  வைத்திருக்கிறேன்.
 
 19.21 ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன், நீர்  வைக்காததை எடுக்கிறவர் நீர் விதைக்காததை அறுக்கிறவர்" என்றார்.
 
 19.22 அதற்கு அவர் அவரிடம்,  "பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக்  கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன் வைக்காததை எடுக்கிறவன்  விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா?
 
 19.23 அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை?  நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே" என்றார்.
 
 19.24 பின்பு அருகில் நின்றவர்களிடம்,  "அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து  மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்" என்றார்.
 
 19.25 அதற்கு அவர்கள்,  "ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவே" என்றார்கள்.
 
 19.26 அவரோ,  "உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதாரிடமிருந்து உள்ளதும்  எடுக்கப்படும்" என உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
 
 19.27 மேலும் அவர்,  "நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை  இங்குக்கொண்டு வந்து என்முன் படுகொலை செய்யுங்கள்" என்று சொன்னார்."
 
 19.28 இவற்றைச் சொன்னபின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுச்  சென்றார்.
 
 19.29 ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை  அவர் நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பினார்.
 
 19.30 அப்போது அவர் அவர்களிடம்,  "எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள் அதில்  நுழைந்ததும் இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக் குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக்  காண்பீர்கள் அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.
 
 19.31 யாராவது உங்களிடம்,  "ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று கேட்டால்,  "இது  ஆண்டவருக்குத் தேவை" எனச் சொல்லுங்கள்" என்றார்.
 
 19.32 அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச் சொன்னவாறே இருக்கக்  கண்டார்கள்.
 
 19.33 அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின் உரிமையாளர்கள்,  "கழுதையை  ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார்கள்.
 
 19.34 அதற்கு அவர்கள்,  "இது ஆண்டவருக்குத் தேவை" என்றார்கள்
 
 19.35 பின்பு அதை இயேசுவிடம் ஓட்டி வந்தார்கள் அக்கழுதையின்மேல் தங்கள்  மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏற்றி வைத்தார்கள்.
 
 19.36 அவர் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில்  விரித்துக் கொண்டே சென்றார்கள்.
 
 19.37 இயேசு ஒலிவ மலைச்சரிவை நெருங்கினார். அப்போது திரண்டிருந்த சீடர் அனைவரும்  தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும் உரத்தக் குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப்  புகழத் தொடங்கினர்
 
 19.38  "ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக. விண்ணகத்தில்  அமைதியும் மாட்சியும் உண்டாகுக." என்றனர்.
 
   19.39 அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி,  "போதகரே, உம் சீடர்களைக் கடிந்து கொள்ளும்" என்றனர்.
 
 19.40 அதற்கு அவர் மறுமொழியாக,  "இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என  நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
 
 19.41 இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்.
 
 19.42  "இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா? ஆனால்  இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.
 
 19.43 ஒரு காலம் வரும். அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி,  உன்னை முற்றுகையிடுவார்கள்
 
 19.44 உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி  அழித்து உன்னைத் தரை மட்டமாக்குவார்கள் மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று  இராதபடி செய்வார்கள் ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து  கொள்ளவில்லை" என்றார்.
 
 19.45 இயேசு கோவிலுள்ள சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே  துரத்தத் தொடங்கினார்.
 
 19.46 அவர்களிடம்,  "என் இல்லம் இறைவேண்டலின் வீடு" என்று மறைநூலில்  எழுதியுள்ளதே ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்" என்று கூறினார்.
 
 19.47 இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும்  மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள்.
 
 19.48 ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள்  அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.
 
 20 அதிகாரம்
 
 20.1 ஒருநாள் இயேசு கோவிலில் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தார். அவர்  நற்செய்தியை அறிவித்துக்கொண்டு இருந்தபோது தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மூப்பர்களும் அங்கு வந்தார்கள்.
 
 20.2 அவர்கள் அவரை நோக்கி,  "எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?  இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? எங்களுக்குச் சொல்லும்" என்றார்கள்.
 
 20.3 அவர் அவர்களுக்கு மறுமொழியாக,  "நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்  நீங்கள் மறுமொழி கூறுங்கள்.
 
 20.4 திருமுழுக்குக் கொடுக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா  அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?"என்று கேட்டார்.
 
 20.5 அவர்கள்"விண்ணகத்திலிருந்து வந்தது" என்போமானால்,  "ஏன் நீங்கள் அவரை  நம்பவில்லை?" எனக் கேட்பார்
 
 20.6  "மனிதரிடமிருந்து வந்தது" என்போமானால் மக்கள் அனைவரும் நம்மீது கல்  எறிவர்" என்று தங்களிடையே சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் மக்கள் யோவானை  இறைவாக்கினர் என்று உறுதியாய் நம்பியிருந்தனர்.
 
 20.7 எனவே அவர்கள்,  "எங்கிருந்து வந்தது எனத் தெரியாது" என்று பதிலுரைத்தார்கள்.  
 20.8 இயேசுவும் அவர்களிடம்,  "எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று  நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்" என்றார்.
 
   20.9 பின்பு இயேசு மக்களை நோக்கி இந்த உவமையைச் சொல்லத் தொடங்கினார்"ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு  விட்டு விட்டு நீண்ட காலம் நெடும் பயணம் மேற்கொண்டார்.
 
 20.10 பருவகாலம் வந்ததும் ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் தோட்டத்  தொழிலாளர்கள் அவரை நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.
 
 20.11 மீண்டும் அவர் வேறு ஒரு பணியாளரை அனுப்பி வைத்தார். அவர்கள் அவரையும்  நையப்புடைத்து அவமதித்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.
 
 20.12 மூன்றாம் முறையாக அவர் ஒருவரை அனுப்பினார். அவரையும் அவர்கள் காயப்படுத்தி  வெளியே தள்ளினர்.
 
 20.13 பின்பு திராட்சைத் தோட்ட உரிமையாளர்,  "நான் என்ன செய்வேன்? என் அன்பு  மகனை அனுப்புவேன். ஒருவேளை அவனை அவர்கள் மதிப்பார்கள்" என்று சொல்லிக்கொண்டார்.
 
 20.14 தோட்டத் தொழிலாளர்கள் அவருடைய மகனைக் கண்டதும்,  "இவன்தான் சொத்துக்கு  உரியவன் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நம்முடையதாகும்" என்று  ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
 
 20.15 எனவே அவர்கள் அவரைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக்  கொன்று போட்டார்கள். அப்படியானால் திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவர்களை என்ன  செய்வார்?
 
 20.16 அவர் வந்து அந்தத் தொழிலாளர்களை ஒழித்து விட்டு, திராட்சைத் தோட்டத்தை  வேறு ஆள்களிடம் குத்தகைக்கு விடுவார்." அப்போது அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள்,  "ஐயோ. அப்படி நடக்கக் கூடாது" என்றார்கள்.
 
 20.17 ஆனால், இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, கட்டுவோர் புறக்கணித்த கல்லே  கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று" என்று மறைநூலில் எழுதியிருப்பதன் பொருள் என்ன?  
 20.18 அந்தக் கல்லின் மேல் விழுகிற எவரும் நொறுங்கிப் போவார் அது யார்மேல்  விழுமோ அவரும் நசுங்கிப்போவார்" என்றார்.
 
 20.19 மறைநூல் அறிஞர்களும் தலைமைக் குருக்களும் தங்களைக் குறித்தே அவர் இந்த  உவமையைச் சொன்னார் என்பதை உணர்ந்து கொண்டு, அந்நேரமே இயேசுவைப் பிடிக்க  வழிதேடினார்கள். ஆனால் மக்களுக்கு அஞ்சினார்கள்.
 
 20.20 ஆகவே அவர்கள் இயேசுவைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார்கள்.  நேர்மையாளர் போன்று நடித்து, அவரது பேச்சில் குற்றம் காண ஒற்றர்களை அனுப்பி வைத்தார்கள்  அவரை ஆளுநரின் ஆட்சி அதிகாரத்திற்கு ஒப்புவிப்பதே அவர்கள் நோக்கமாய் இருந்தது.
 
 20.21 ஒற்றர்கள் அவரிடம்,  "போதகரே, நீர் சொல்வதும் கற்பிப்பதும் சரியே. நீர்  ஆள் பார்த்துச் செயல்படாதவர். கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது  எங்களுக்குத் தெரியும்.
 
 20.22 சீசருக்கு நாம் கப்பம் கட்டுவது முறையா இல்லையா?" என்று கேட்டார்கள்
 
 20.23 அவர்களுடைய சூழ்ச்சியை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டு அவர்களிடம்,
 
 20.24   "ஒரு தெனியத்தை எனக்குக் காட்டுங்கள் இதில் பொறிக்கப்பட்டுள்ள  உருவமும் எழுத்தும் யாருடையவை?"என்று கேட்டார். அவர்கள்,  "சீசருடையவை" என்றார்கள்.
 
 20.25 அவர் அவர்களை நோக்கி,  "அப்படியானால், சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும்,  கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்"என்று சொன்னார்.
 
 20.26 மக்கள் முன்னிலையில் இயேசுவின் பேச்சில் அவர்களால் குற்றம் காண  இயலவில்லை. அவருடைய மறுமொழியைக் கண்டு அவர்கள் வியப்புற்றுப் பேசாதிருந்தார்கள்.
 
 20.27 உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி,
 
 20.28   "போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக்  கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார்.
 
 20.29 இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி  இறந்தார்.
 
 20.30 இரண்டாம்,
 
 20.31 முன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி  இறந்தனர்
 
 20.32 கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.
 
 20.33 அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்?  ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?" என்று கேட்டனர்.
 
 20.34 அதற்கு இயேசு அவர்களிடம்,  "இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.
   20.35 ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து  உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை.
 
 20.36 இனி அவர்கள் சாகமுடியாது அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள்.  உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.
 
 20.37 இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய  பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை,  "ஆபிரகாமின் கடவுள்,  ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்" என்று கூறியிருக்கிறார்.
 
 20.38 அவர் இறந்தோரின் கடவுள் அல்ல மாறாக, வாழ்வின் கடவுள். ஏனெனில்  அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே" என்றார்.
 
 20.39 மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து,  "போதகரே, நன்றாகச் சொன்னீர்" என்றனர்.
 
 20.40 அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
 
 20.41 அப்போது இயேசு அவர்களை நோக்கி,  "மெசியா தாவீதின் மகன் என்று கூறுவது  எப்படி?
 
 20.42 ஏனென்றால் திருப்பாடல்கள் நூலில்,  "ஆண்டவர், என் தலைவரிடம்,
 
 20.43   "நான் உம் பகைவரை உமக்குக் கால் மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம்  வீற்றிரும்" என்றுரைத்தார்" எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா?
 
 20.44 எனவே தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால் அவர் அவருக்கே மகனாய் இருப்பது  எப்படி?" என்று கேட்டார்.
 
 20.45 மக்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தபோது இயேசு தம் சீடர்களிடம்,
 
 20.46   "மறைநூல் அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஏனென்றால்  அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதை விரும்புகிறார்கள் சந்தைவெளிகளில் மக்கள்  தங்களுக்கு வணக்கம் செலுத்துவதை விரும்புகிறார்கள் தொழுகைக்கூடங்களில் முதன்மையான  இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் விரும்புகிறார்கள்
 
 20.47 கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள் நீண்டநேரம்  இறைவனிடம் வேண்டுவதுபோல நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள்  அவர்களே" என்றார்.
 
 21 அதிகாரம்
 21.1 இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக்  காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார்.
 
 21.2 வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.
 
 21.3 அவர்"இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும்விட மிகுதியான காணிக்கை  போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
 
 21.4 ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து  காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக  வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்" என்றார்.
 
 21.5 கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின் மிகு கற்களாலும்,  நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக்  கொண்டிருந்தனர்.
 
 21.6 இயேசு,  "இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்  அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்" என்றார்.
 
 21.7 அவர்கள் இயேசுவிடம், போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை  நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?" என்று கேட்டார்கள்.
 
 21.8 அதற்கு அவர்,  "நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் ஏனெனில் பலர் என்  பெயரை வைத்துக்கொண்டு வந்து,  "நானே அவர், என்றும்,  "காலம் நெருங்கி வந்துவிட்டது"  என்றும் கூறுவார்கள் அவர்கள் பின்னே போகாதீர்கள்.
 
 21.9 ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது  திகிலுறாதீர்கள் ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது"  என்றார்.
 
 21.10 மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது"நாட்டை எதிர்த்து நாடும், அரசை  எதிர்த்து அரசும் எழும்.
 
 21.11 பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும், கொள்ளை நோயும்  ஏற்படும் அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.
 
 21.12 இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்.  தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள். சிறையில் அடைப்பார்கள். என்  பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்.
 
 21.13 எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.
 
 21.14 அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட  வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
 
 21.15 ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும், ஞானத்தையும் கொடுப்பேன். உங்கள்  எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.
 
 21.16 ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும்  உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள். உங்களுள் சிலரைக் கொல்வார்கள்.
 
 21.17 என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.
 
 21.18 இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.
 
 21.19 நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.
 
 21.20  "எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு  நெருங்கி வந்துவிட்டது என அறிந்துகொள்ளுங்கள்.
 
 21.21 அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். நகரத்தின்  நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும். நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே  வரவேண்டாம்.
 
 21.22 ஏனெனில் அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும்  நிறைவேறும்.
 
 21.23 அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை  அந்தோ பரிதாபம். ஏனெனில் மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள் மீது கடவுளின் சினமும்  வரும்.
 
 21.24 அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள். எல்லா நாடுகளுக்கும்  சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள். பிற இனத்தார் காலம் நிறைவு பெறும் வரை எருசலேம்  அவர்களால் மிதிக்கப்படும்.
 
 21.25  "மேலும் கதிரவனிலும், நிலாவிலும், விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும்.  மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன  செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள்.
 
 21.26 உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர்.  ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும்.
 
 21.27 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது  வருவதை அவர்கள் காண்பார்கள்.
 
 21.28 இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்  ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது."
 
 21.29 இயேசு அவர்களுக்கு மேலும் ஓர் உவமை சொன்னார்"அத்தி மரத்தையும் வேறு எந்த  மரத்தையும் பாருங்கள்.
 
 21.30 அவை தளிர்விடும் போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக்காலம்  நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள்.
 
 21.31 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது  என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
 
 21.32 அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக  உங்களுக்குச் சொல்கிறேன்.
 
 21.33 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா."
 
 21.34 மேலும் இயேசு,  "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக  வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு  கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்.
 
 21.35 மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும்.
 
 21.36 ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன்  முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்"  என்றார்.
 
 21.37 இயேசு பகல் நேரங்களில் கோவிலில் கற்பித்துவந்தார். இரவு நேரங்களிலோ  ஒலிவம் என்று வழங்கப்பட்ட மலைக்குச் சென்று தங்கி வந்தார்.
 
 21.38 எல்லா மக்களும் கோவிலில் அவர் சொல்வதைக் கேட்கக் காலையிலேயே  அவரிடம் வருவார்கள்.
 
 22 அதிகாரம்
 
 22.1 அப்போது பாஸகா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நெருங்கி வந்தது.
 
 22.2 தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு கொலை செய்யலாமென்று  வழி தேடிக்கொண்டிருந்தனர். ஏனெனில் மக்களுக்கு அஞ்சினர்.
 
 22.3 அந்நேரத்தில் பன்னிருவருள் ஒருவனான யூதாசு எனப்படும் இஸகாரியோத்துக்குள்  சாத்தான் புகுந்தான்.
 
 22.4 யூதாசு தலைமைக் குருக்களிடமும் காவல் தலைவர்களிடமும் சென்று அவர்களுக்கு  இயேசுவைக் காட்டிக்கொடுப்பதுபற்றிக் கலந்து பேசினான்.
 
 22.5 அவர்கள் மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுக்க உடன்பட்டார்கள்.
 
 22.6 அவனும் அதற்கு ஒத்துக்கொண்டு மக்கள் கூட்டம் இல்லாதபோது, அவர்களிடம்  அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான்.
 
 22.7 புளிப்பற்ற அப்ப விழாக்கொண்டாடும் நாளும் வந்தது. அன்றுதான் பாஸகா ஆடு  பலியிடப்பட வேண்டும்.
 
 22.8 இயேசு பேதுருவிடம் யோவானிடமும்,  "நாம் பாஸகா விருந்துண்ண நீங்கள் போய்  ஏற்பாடு செய்யுங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.
 
 22.9 அதற்கு அவர்கள்,  "நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டுமென நீர்  விரும்புகிறீர்? என்று கேட்டார்கள்.
 
 22.10 இயேசு அவர்களிடம்,  "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள்.  மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே  செல்லுங்கள். அவர் செல்லும் வீட்டிற்குள் நீங்களும் சென்று,
 
 22.11 அந்த வீட்டின் உரிமையாளிடம்,  "நான் என் சீடர்களோடு பாஸகாவிருந்து  உண்பதற்கான அறை எங்கே? என்று போதகர் உம்மிடம் கேட்கச் சொன்னார்" எனக் கூறுங்கள்.
 
 22.12 அவர் மேல்மாடியில் தேவையான வசதிகள் அமைந்த ஒரு பிய அறையைக்  காட்டுவார். அங்கே ஏற்பாடு செய்யுங்கள்" என்றார்.
 
 22.13 அவர்கள் சென்று தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு, பாஸகா  விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
 
 22.14 நேரம் ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார்.  
 22.15 அப்போது அவர் அவர்களை நோக்கி,  "நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு  இந்தப் பாஸகா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலமாய் இருந்தேன்.
 
 22.16 ஏனெனில் இறையாட்சியில் இது நிறைவேறும்வரை இதை நான் உண்ணமாட்டேன் என்று  உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
 
 22.17 பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களிடம்,  "இதைப் பெற்று ங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள்.
 
 22.18 ஏனெனில், இது முதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக்  குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
 
 22.19 பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு,  அவர்களுக்குக் கொடுத்து,  "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். எனது நினைவாக  இவ்வாறு செய்யுங்கள்" என்றார்.
 
 22.20 அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து,  "இந்தக் கிண்ணம்  உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை.
    22.21 என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ, என்னோடு பந்தியில்  அமர்ந்திருக்கிறான்.
 
 22.22 மானிடமகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே போகிறார், ஆனால் ஐயோ.  அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு" என்றார்.
 
 22.23 அப்பொழுது அவர்கள்,  "நம்மில் இச்செயலைச் செய்யப் போகிறவர் யார்" என்று  தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள்.
 
 22.24 மேலும் தங்களுக்குள்ளே பியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம்  அவர்களிடையே எழுந்தது.
 
 22.25 இயேசு அவர்களிடம்,  "பிற இனத்தவின் அரசர்கள் மக்களை அடக்கி  ஆளுகின்றார்கள் அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என  அழைக்கப்படுகின்றார்கள்.
 
 22.26 ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பியவர் சிறியவராகவும்  ஆட்சிபிபவர் தொண்டு பிபவராகவும் மாற வேண்டும்.
 
 22.27 யார் பியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை பிபவரா?  பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை பிபவனாக  இருக்கிறேன்.
 
 22.28 நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே,
 
 22.29 என் தந்தை எனக்கு ஆட்சியிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக்  கொடுக்கிறேன்.
 
 22.30 ஆகவே என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு  குடிப்பீர்கள் இஸரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க இயணையில்  அமர்வீர்கள்.
 
 22.31   "சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச்  சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான்.
 
 22.32 ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ  மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து" என்றார்.
 
 22.33 அதற்கு பேதுரு,  "ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும்  நான் ஆயத்தமாய் உள்ளேன்" என்றார்.
 
 22.34 இயேசு அவரிடம்,  "பேதுருவே, இன்றிரவு, என்னைத் தியாது" என மும்முறை நீ  மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன்" என்றார்.
 
 22.35 இயேசு சீடர்களிடம்,  "நான் உங்களைப் பணப்பையோ வேறுபையோ மிதியடியோ  எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?" என்று கேட்டார்.  அவர்கள்,  "ஒரு குறையும் இருந்ததில்லை" என்றார்கள்.
 
 22.36 அவர் அவர்களிடம்,  "ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக்  கொள்ளட்டும் வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை  விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்.
 
 22.37 ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன்"கொடியவருள் ஒருவராகக்  கருதப்பட்டார்"என்று மறைநூலில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம்  நிறைவேறி வருகின்றன" என்றார்.
 
 22.38 அவர்கள்  "ஆண்டவரே, இதோ. இங்கே இரு வாள்கள் உள்ளன" என்றார்கள். இயேசு  அவர்களிடம்,  "போதும்" என்றார்.
 
 22.39 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார்.  சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.
 
 22.40 அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம்,  "சோதனைக்கு உட்படாதிருக்க  இறைவனிடம் வேண்டுங்கள்", என்றார்.
 
 22.41 பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று,  முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார்
 
 22.42  "தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து  அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று  கூறினார்.
 
 22.43 ( அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை  வலுப்படுத்தினார்.
 
 22.44 அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக்  கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது. )
 
 22.45 அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள்  துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
 
 22.46 அவர்களிடம்,  "என்ன, உறங்கிக் கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு  உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்" என்றார்.
 
 22.47 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ. மக்கள் கூட்டமாய்  வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட  நெருங்கினான்.
 
 22.48 இயேசு அவனிடம்,  "யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிகக்  கொடுக்கப் போகிறாய்?" என்றார்.
 
 22.49 அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து,  "ஆண்டவரே, வாளால்  வெட்டலாமா?" என்று கேட்டார்கள்.
 
 22.50 அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய  வலக் காதைத் துண்டித்தார்.
 
 22.51 இயேசு அவர்களைப் பார்த்து,  "விடுங்கள், போதும்" என்று கூறி அவருடைய காதைத்  தொட்டு நலமாக்கினார்.
 
 22.52 அவர் தம்மிடம் வந்த தலைமைக் குருக்களையும் கோவில் காவல் தலைவர்களையும்  முப்பர்களையும் பார்த்து,  "ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாள்களோடும்,  தடிகளோடும் வந்தது ஏன்?
 
 22.53 நான் நாள்தோறும் கோவிலில் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னைப்  பிடிக்கவில்லையே. ஆனால் இது உங்களுடைய நேரம் இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது"  என்றார்.
 
 22.54 பின்னர் அவர்கள் இயேசுவைக் கைதுசெய்து இழுத்துச் சென்று தலைமைக் குருவின்  வீட்டுக்குக் கொண்டு போனார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார்.
 
 22.55 வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு முட்டி, அதைச் சுற்றி அவர்கள்  உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார்.
 
 22.56 அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக்  கண்டு, அவரை உற்றுப்பார்த்து,  "இவனும் அவனோடு இருந்தவன்" என்றார்.
 
 22.57 அவரோ,  "அம்மா, அவரை எனக்குத் தியாது" என்று மறுதலித்தார்.
 
 22.58 சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், நீயும் அவர்களைச்  சேர்ந்தவன்தான்" என்றார். பேதுரு,  "இல்லையப்பா" என்றார்.
 
 22.59 ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப்பின்பு மற்றொருவர்,  "உண்மையாகவே இவனும்  அவனோடு இருந்தான்  இவனும் கலிலேயன்தான்" என்று வலியுறுத்திக் கூறினார்.
 
 22.60 பேதுருவோ,  "நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தியாது" என்றார். உடனேயே, அவர்  தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று.
 
 22.61 ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்"இன்று சேவல் கூவு முன் நீ  என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து,
 
 22.62 வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.
 
 22.63 இயேசுவைப் பிடித்துவைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து  நையப்புடைத்தார்கள்.
 
 22.64 அவரது முகத்தை முடி,  "உன்னை அடித்தவர் யார்? இறைவாக்கினனே, சொல்" என்று  கேட்டார்கள்.
 
 22.65 இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள்.
 
 22.66 பொழுது விடிந்ததும் மக்களின் முப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல்  அறிஞர்களும் கூடிவந்தார்கள் இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் முப்பர் சங்கத்தின்முன்  நிறுத்தினார்கள்.
 
 22.67 அவர்கள்,  "நீ மெசியாதானா? எங்களிடம் சொல்" என்று கேட்டார்கள். அவர்  அவர்களிடம்,  "நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்
 
 22.68 நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள்.
 
 22.69 இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்"  என்றார்.
 
 22.70 அதற்கு அவர்கள் அனைவரும்,  "அப்படியானால் நீ இறைமகனா?" என்று கேட்டனர்.  அவரோ,  "நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள்" என்று அவர்களுக்குச் சொன்னார்.
 
 22.71 அதற்கு அவர்கள்,  "இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து  நாமே கேட்டோ மே" என்றார்கள்.
 
 
 23 அதிகாரம்
 
 23.1 திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு  சென்றனர்.
 
 23.2  "இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான். சீசருக்குக் கப்பம்  கட்டக்கூடாது என்கிறான். தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான்.  இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோ ம்" என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத்  தொடங்கினார்கள்.
 
 23.3 பிலாத்து அவரை நோக்கி,  "நீ யூதரின் அரசனா?" என்று கேட்க, அவர்,  "அவ்வாறு நீர் சொல்கிறீர்" என்று பதில் கூறினார்.  
 23.4 பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து,  "இவனிடம்  நான் குற்றம் ஒன்றும் காணவில்லை" என்று கூறினான்.
 
 23.5 ஆனால் அவர்கள்,  "இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும்  மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான்" என்று வலியுறுத்திக் கூறினார்கள்.  
 23.6 இதைக் கேட்ட பிலாத்து,  "இவன் கலிலேயனா?" என்று கேட்டான்
 
 23.7 அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது  எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான்.
 
 23.8 இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான் ஏனெனில், அவரைக்  குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான் அவர் அரும்  அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான்.
 
 23.9. அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில்  எதுவும் கூறவில்லை.
 
 23.10 அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான  குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள்.
 
 23.11 ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை  அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான்.
 
 23.12 அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று  நண்பர்களாயினர்.
 
 23.13 பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக  வரவழைத்தான்.
 
 23.14 அவர்களை நோக்கி,  "மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை  என்னிடம் கொண்டு வந்தீர்களே இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள்  சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை.
 
 23.15 ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி  அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு.
 
 23.16 எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்" என்றான்.
 
 23.17 (விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம்  அவனுக்கு இருந்தது.)
 
 23.18 திரண்டிருந்த மக்கள் அனைவரும்,  "இவன் ஒழிக. பரபாவை எங்களுக்கென விடுதலை  செய்யும்" என்று கத்தினர்.
 
 23.19 பரபா நகில் நடந்த ஒரு காகத்தில் ஈடுபட்டுக் கொலை செய்ததற்காகச்  சிறையிலிடப்பட்டவன்.
 
 23.20 பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப்  பேசினான்.
 
 23.21 ஆனால் அவர்கள்,  "அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" என்று  கத்தினார்கள்.
 
 23.22 மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி,  "இவன் செய்த குற்றம் என்ன? மரண  தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து  விடுதலை செய்வேன்" என்றான்.
 
 23.23 அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக்  கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது.
 
 23.24 அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான்.
 
 23.25 கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை  அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அவன் விடுதலை செய்தான். இயேசுவை அவர்கள் விருப்பப்படி  செய்ய விட்டுவிட்டான்.
 
 23.26 அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த  சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து  அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச்  செய்தார்கள்.
 
 23.27 பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த  பெண்களும் அவர் பின்னே சென்றார்கள்.
 
 23.28 இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி,  "எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக  அழவேண்டாம் மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்.
 
 23.29 ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது"மலடிகள் பேறுபெற்றோர்"  என்றும்" பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர்" என்றும்  சொல்வார்கள்.
 
 23.30 அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து,  "எங்கள் மேல் விழுங்கள்" எனவும்  குன்றுகளைப் பார்த்து,  "எங்களை மூடிக்கொள்ளுங்கள்" எனவும் சொல்வார்கள்.
 
 23.31 பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு  என்னதான் செய்யமாட்டார்கள்." என்றார்.
 
 23.32 வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு  கொண்டுசென்றார்கள்.
 
 23.33 மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும், வலப்புறம்  ஒருவனும், இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.
 
 23.34 அப்போது (இயேசு,  "தந்தையே, இவர்களை மன்னியும், ஏனெனில் தாங்கள் செய்வது  என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார்.) அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள்.  
  23.35 மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள்,  "பிறரை  விடுவித்தான் இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே  விடுவித்துக் கொள்ளட்டும்" என்று கேலிசெய்தார்கள்.
 
 23.36 படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து,
 
 23.37  "நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்" என்று எள்ளி  நகையாடினர்.
 
 23.38   "இவன் யூதரின் அரசன்" என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.  
 23.39 சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன்,  "நீ  மெசியாதானே. உன்னையும் எங்களையும் காப்பாற்று"என்று அவரைப் பழித்துரைத்தான்.
 
 23.40 ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு,  "கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா?  நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய்.
 
 23.41 நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம்  பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே." என்று பதிலுரைத்தான்.
 
 23.42 பின்பு அவன்,  "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை  நினைவிற்கொள்ளும்" என்றான்.
 
 23.43 அதற்கு இயேசு அவனிடம்,  "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என  உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார்.
 
 23.44 ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை  நாடெங்கும் இருள் உண்டாயிற்று.
 
 23.45 கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.
 
 23.46   "தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்"என்று இயேசு உரத்த  குரலில் கூறி உயிர் துறந்தார்.
 
 23.47 இதைக் கண்ட நூற்றுவர் தலைவர்,  "இவர் உண்மையாகவே நேர்மையாளர்" என்று கூறிக்  கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
 
 23.48 இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக்  கண்டு, மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர்.
 
 23.49 அவருக்கு அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி  வந்திருந்த பெண்களும் தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
 23.50 யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர்,  நல்லவர், நேர்மையாளர்.
 
   23.51 தலைமைச் சங்கத்தின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத அவர்  யூதேயாவிலுள்ள இமத்தியா ஊரைச் சேர்ந்தவர் இறையாட்சியின் வருகைக்காகக்  காத்திருந்தவர்.
 
 23.52 அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார்.
 
 23.53 அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில்  குடைந்திருந்த கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம்  செய்ததில்லை.
 
 23.54 அன்று ஆயத்த நாள். ஓய்வுநாளின் தொடக்கம்.
 
 23.55 கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின் தொடர்ந்து சென்று  கல்லறையைக் கண்டார்கள். அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு,
 
 23.56 திரும்பிப் போய் நறுமணப் பொருள்களையும், நறுமணத் தைலத்தையும் ஆயத்தம்  செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
 
 24 அதிகாரம்
 
 24.1 வாரத்தின் முதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த  நறுமணப் பொருள்கள் எடுத்துக் கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்
 
 24.2 கல்லறை வாயிலிருந்து கல்புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
 
 24.3 அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.
   24.4 அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப்  போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர்.
 
 24.5 இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர். அவர்கள்  அப்பெண்களை நோக்கி,  "உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?
 
 24.6 அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில்  இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.
 
 24.7 மானிடமகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில்  அறையப்படவேண்டும். மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரே"  என்றார்கள்.
 
 24.8 அப்போது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவிற்கொண்டு
 
 24.9 கல்லறையைவிட்டுத் திரும்பிப் போய் இவை அனைத்தையும் பதினொருவருக்கும்  மற்ற அனைவருக்கும் அறிவித்தார்கள்.
 
 24.10 அவர்கள் மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும்  அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும் ஆவர்.
 
 24.11 அவர்கள் நிகழ்ந்தவற்றைத் திருத்தூதர்களுக்குக் கூறினார்கள்.
 
 24.12 அவர்கள் கூற்று வெறும் பிதற்றலாகத் தோன்றியதால் திருத்தூதர்கள் அவர்களை  நம்பவில்லை.
 
 24.13 ஆனால் பேதுரு எழுந்து கல்லறைக்கு ஓடினார். அங்கு அவர் குனிந்து பார்த்தபோது  உடலைச் சுற்றியிருந்த துணிகளை மட்டுமே கண்டார் நிகழ்ந்ததைக் குறித்துத் தமக்குள்  வியப்புற்றவராய்த் திரும்பிச் சென்றார்.
 
 24.14 அதே நாளில் சீடர்களும் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ  மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு.  
 24.15 அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக்  கொண்டே சென்றார்கள்.
 
 24.16 இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு  நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார்.
 
 24.17 ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள்  மறைக்கப்பட்டிருந்தன.
 
 24.18 அவர் அவர்களை நோக்கி,  "வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர்  பேசிக்கொண்டிருப்பது என்ன?" என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள்.
 
   24.19 அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக,  "எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ." என்றார்.
 
 24.20 அதற்கு அவர் அவர்களிடம்,  "என்ன நிகழ்ந்தது?" என்று கேட்டார். அவர்கள்  அவரிடம்,  "நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள்  எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்.
 
 24.21 அவர் இஸரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து  இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன.
 
 24.22 ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை  மலைப்புக்குள்ளாக்கினர் அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்
 
 24.23 அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு  உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள்.
 
 24.24 எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள்  சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை" என்றார்கள்.
 
 24.25 இயேசு அவர்களை நோக்கி ,  "அறிவிலிகளே. இறைவாக்கினர்கள் உரைத்த  எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே.
 
 24.26 மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா."  என்றார்.
 
 24.27 மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக்  குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.
 
 24.28 அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு  அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார்.
 
 24.29 அவர்கள் அவரிடம் ,  "எங்களோடு தங்கும் ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று  பொழுதும் போயிற்று" என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர்  அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.
 
 24.30 அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப்  போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.
 
 24.31 அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம்  கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.
 
 24.32 அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி ,  "வழியிலே அவர் நம்மோடு பேசி,  மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?" என்று பேசிக்  கொண்டார்கள்.
 
 24.33 அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே  பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.
 
 24.34 அங்கிருந்தவர்கள்,  "ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர்  சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்" என்று சொன்னார்கள்.
 
 24.35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்  கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
 
   24.36 சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று,  "உங்களுக்கு அமைதி உரித்தாகுக." என்று அவர்களை வாழ்த்தினார்.  
 24.37 அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய்  நினைத்தார்கள்.
 
 24.38 அதற்கு அவர்,  "நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள்  உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்?
 
 24.39 கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப்  பாருங்கள். எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே இவை ஆவிக்குக் கிடையாதே" என்று அவர்களிடம் கூறினார்
 
 24.40 இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக்  காண்பித்தார்.
 
 24.41 அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி  இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம்,  "உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?  என்று கேட்டார்.
 
 24.42 அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள்.
 
 24.43 அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.
 
 24.44 பின்பு அவர் அவர்களைப் பார்த்து ,  "மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர்  நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற  வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே" என்றார் 
 
 24.45 அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத்  திறந்தார்.
 
 24.46 அவர் அவர்களிடம்,  " மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ  வேண்டும் என்றும்,
 
 24.47   "பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்" என எருசலேம் தொடங்கி அனைத்து  நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது.
 
 24.48 இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.
 
 24.49 இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன்.  நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே  இருங்கள்" என்றார்.
 
 24.50 பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை  உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.
 
 24.51 அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து  விண்ணேற்றம் அடைந்தார்.
 
 24.52 அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச்  சென்றார்கள்.
 
   24.53 அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.  
 *********************************