pm logo

caNmuka kavacam of
pAmpan kumarakurutAca cuvAmikaL &
tirucentUr kantar kaliveNpA of kumarakuruparar
(in Tamil script, Unicode/utf-8 format)

சண்முக கவசம் &
திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா




Acknowledgement :
Our Sincere thanks go to Dr. K. Kalyanasundaram for his assistance in the preparation of this work.
This webpage presents the Etxt in Tamil script in Unicode encoding (utf-8 format).

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
Feel free to send the corrections by email to the webmaster "pmadurai@gmail.com".

1. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் (1853-1929 ) அருளிய
சண்முக கவசம்


அறுசீர் அடி ஆசிரிய விருத்தம்

அண்டமாய் அவனி யாகி
        அறியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித்
        துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற
        என்னருள் ஈச னான
திண்டிறல் சரவ ணத்தான்
        தினமும்என் சிரசைக் காக்க.         1

ஆதியாம் கயிலைச் செல்வன்
        அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான்
        தான்இரு நுதலைக் காக்க !
சோதியாம் தணிகை யீசன்
        துரிசிலா விழியைக் காக்க !
நாதனாம் கார்த்தி கேயன்
        நாசியை நயந்து காக்க !         2

இருசெவி களையும் செவ்வேள்
        இயல்புடன் காக்க ! வாயை
முருகவேல் காக்க! நாப்பல்
        முழுதுநல் குமரன் காக்க !
துரிசறு கதுப்பை யானைத்
        துண்டனார் துணைவன் காக்க !
திருவுடன் பிடரி தன்னைச்
        சிவசுப்ர மணியன் காக்க !         3

ஈசனாம் வாகு லேயன்
        எனதுகந் தரத்தைக் காக்க !
தேசுறு தோள்வி லாவும்
        திருமகள் மருகன் காக்க !
ஆசிலா மார்பை ஈராறு
        ஆயுதன் காக்க; என்றன்
ஏசிலா முழங்கை தன்னை
        எழில்குறிஞ் சிக்கோன் காக்க !         4

உறுதியாய் முன்கை தன்னை
        உமையிள மதலை காக்க;
தறுகண் ஏறிடவே என்கைத்
        தலத்தைமா முருகன் காக்க;
புறங்கையை அயிலோன்காக்க;
        பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்குமால் மருகன் காக்க;
        பின்முது கைச்சேய் காக்க.         5

ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை
        ஊர்தியோன் காக்க; வம்புத்
தோள்நிமிர் கரேசன் உந்திச்
        சுழியினைக் காக்க; குய்ய
நாணினை அங்கி கெளரி
        நந்தனன் காக்க; பீஜ
ஆணியைக் கந்தன் காக்க;
        அறுமுகன் குதத்தைக் காக்க.         6

எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு
        இறைவனார் காக்க காக்க;
அஞ்சகனம் ஓரி ரண்டும்
        அரன்மகன் காக்க காக்க;
விஞ்சிடு பொருட்காங் கேயன்
        விளரடித் தொடையைக் காக்க;
செஞ்சரண் நேச ஆசான்
        திமிருமுன் தொடையைக் காக்க.         7

ஏரகத் தேவன் என்தாள்
        இருமுழங் காலும் காக்க;
சீருடைக் கணைக்கால் தன்னைச்
        சீரலை வாய்த்தே காக்க;
நேருடைப் பரடுஇ ரண்டும்
        நிகழ்பரங் கிரியன் காக்க;
சீரிய குதிக்கால் தன்னைத்
        திருச்சோலை மலையன் காக்க.         8

ஐயுறு மலையன் பாதத்
        தமர்பத்து விரலும் காக்க;
பையுறு பழநி நாத
        பரன்அகம் காலைக் காக்க;
மெய்யுடல் முழுதும் ஆதி
        விமலசண் முகவன் காக்க;
தெய்வ நாயக விசாகன்
        தினமும்என் நெஞ்சைக் காக்க.         9

ஒலியெழ உரத்த சத்தத்
        தொடுவரு பூத ப்ரேதம்
பலிகொள் இராக்க தப்பேய்
        பலகணத்து எவையா னாலும்
கிளிகொள எனைவேல் காக்க;
        கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம்
        வருந்திடாது அயில்வேல் காக்க !         10

ஓங்கிய சீற்ற மேகொண்டு
        உவணிவில் வேல்சூ லங்கள்
தாங்கிய தண்டம் எஃகம்
        தடிபரசு ஈட்டி ஆதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர்
        என் மேலே ஒச்சின்
தீங்குசெய் யாமல் என்னைத்
        திருக்கைவேல் காக்க காக்க !         11

ஒளவியம் உளர், ஊன் உண்போர்
        அசடர், பேய், அரக்கர், புல்லர்,
தெவ்வர்கள் எவரா னாலும்
        திடமுடன் எனைமல் கட்டத்
தவ்வியே வருவார் ஆயின்
        சராசரம் எலாம்பு ரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன்
        கைஅயில் காக்க காக்க !         12

கடுவிடப் பாந்தள் சிங்கம்
        கரடிநாய் புலிமா யானை
கொடிய கோள்நாய் குரங்கு
        கோலமார்ச் சாலம் சம்பு
நடையுடை எதனா லேனும்
        நான்இடர்ப் பட்டி டாமல்
சடுதியில் வடிவேல் காக்க;
        சானவி முளைவேல் காக்க !         13

ஙகர மேபோல் தமீஇ
        ஞானவேல் காக்க ! வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி
        செய்யன்ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஒந்தி பூரான்
        நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவற்றால் எற்குஓர்
        ஊறிலாது ஐவேல் காக்க.         14

சலத்தில்உய் வன்மீன் ஏறு
        தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலும் சலத்தி லும்தான்
        நெடுந்துயர் தரற்கே யுள்ள
குலத்தினால் நான்வ ருத்தம்
        கொண்டிடாது அவ்வவ் வேளை
பலத்துடன் இருந்து காக்க;
        பாவகி கூர்வேல் காக்க.         15

ஞமலியம் பரியன் கைவேல்
        நவக்கிர கக்கோள் காக்க;
சுமவிழி நோய்கள் தந்த
        சூலை ஆக்கிராண ரோகம்
திமிர்கழல் வாதம் சோகை
        சிரம்அடி கர்ண ரோகம்
எமையணு காம லேபன்
        னிருபுயன் சயவேல் காக்க.         16

டமருகத்து அடிபோல் நைக்கும்
        தலையிடி கண்ட மாலை
குமுறுவிப் புருதி குன்மம்
        குடல்வலி ஈழை காசம்
நிமிரொணாது இருத்தும் வெட்டை
        நீர்ப்பிர மேகம் எல்லாம்
எமையடை யாம லேகுன்
        நெறிந்தவன் கைவேல் காக்க.         17

இணக்கம் இல்லாத பித்த
        எரிவுமா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்கும் குட்டம்
        மூலவெண் முளைதீ மந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி
        சாமென் றறையும் இந்தப்
பிணிக்குலம் எனைஆ ளாமல்
        பெருஞ்சத்தி வடிவேல் காக்க.         18

தவனமா ரோகம் வாதம்
        சயித்தியம் அரோச கம்மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு
        இளைப்பு உடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய்
        அண்டவா தங்கள் சூலை
எனையும்என் இடத்தெய் தாமல்
        எம்பிரான் திணிவேல் காக்க.         19

நமைப்புறு கிரிந்தி வீக்கம்
        நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை
        ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறுவ லிப்போடு
        எழுபுடைப் பகந்த ராதி
இமைப்பொழு தேனும் என்னை
        எய்தாமல் அருள்வேல் காக்க.         20

பல்லது கடித்து மீசை
        படப டென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம்
        காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி
        எமபடர் வரினும் என்னை
ஒல்லையில் தார காரி
        ஓம்ஐம் ரீம்வேல் காக்க !         21

மண்ணிலும் மரத்தின் மீதும்
        மலையிலும் நெருப்பின் மீதும்
தண்நிறை சலத்தின் மீதும்
        சாரிசெய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும்
        வேறெந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருளார் சஷ்டி
        நாதன்வேல் காக்க காக்க.         22

யகரமே போல்சூ லேந்தும்
        நறும்புயன் வேல்முன் காக்க,
அகரமே முதலாம் ஈராறு
        அம்பகன் வேல்பின் காக்க,
சகரமோடு ஆறும் ஆனோன்
        தன்கைவேல் நடுவில் காக்க,
சிகரமின் தேவ மோலி
        திகழ்ஐவேல் கீழ்மேல் காக்க.         23

ரஞ்சித மொழிதே வானை
        நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல்கி ழக்கில்
        திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையின் ஞான
        வீரன்வேல் காக்க; தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்தோன்
        இகலுடைக் கரவேல் காக்க.         24

லகரமே போல்கா ளிங்கன்
        நல்லுடல் நெளிய நின்று
தகரமர்த் தனமே செய்த
        சங்கரி மருகன் கைவேல்
நிகழெனை நிருதி திக்கல்
        நிலைபெறக் காக்க; மேற்கில்
இகல்அயில் காக்க, வாயு
        வினில்குகன் கதிர்வேல் காக்க.         25

வடதிசை தன்னில் ஈசன்
        மகன்அருள் திருவேல் காக்க;
விடையுடை யீசன் திக்கில்
        வேதபோதகன்வேல் காக்க;
நடக்கையில் இருக்கும் ஞான்றும்
        நவில்கையில் நிமிர்கையில் கீழ்க்
கிடக்கையில் தூங்கும் ஞான்றும்
        கிரிதுளைத் துளவேல் காக்க.         26

இழந்து போகாத வாழ்வை
        ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கும் நல்லூண் உண்போதும்
        மால்விளை யாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம்
        பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
செழுங்குணத் தோடே காக்க;
        திடமுடன் மயிலும் காக்க.         27

இளமையில் வாலிபத்தில்
        ஏறிடு வயோதி கத்தில்
வளர்அறு முகச்சி வன்தான்
        வந்தெனைக் காக்க காக்க.
ஒளியெழு காலை முன்எல்
        ஓம்சிவ சாமி காக்க.
தெளிநடு பிற்ப கல்கால்
        சிவகுரு நாதன் காக்க.         28

இறகுடைக் கோழித் தோகைக்கு
        இறைமுன் இராவில் காக்க;
திறலுடைச் சூர்ப்ப கைத்தே
        திகழ்பின் இராவில் காக்க;
நறவுசேர் தாள்சி லம்பன்
        நடுநிசி தன்னில் காக்க;
மறைதொழு குழகன் எம்கோன்
        மாறாது காக்க காக்க.         29

இனமெனத் தொண்ட ரோடும்
        இணக்கிடும் செட்டி காக்க;
தனிமையில் கூட்டந் தன்னில்
        சரவண பவனார் காக்க;
நனியனு பூதி சொன்ன
        நாதர்கோன் காக்க; இத்தைக்
கனிவொடு சொன்ன தாசன்
        கடவுள்தான் காக்க வந்தே.         30

திருச்சிற்றம்பலம்
சண்முக கவசம் முற்றிற்று
---------------

குமரகுருபரர் அருளிய "திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா"


பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு       1

நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத போதமாய் - ஆதிநடு       2

அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த       3

குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு       4

அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மானதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின்       5

பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத       6

பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
காரணமும் இல்லாக் கதியாதித் - தாரணியில்       7

இந்திரசாலம் புரிவோன் யாரையும் தான்மயக்கும்
தந்திரத்தில் சாராது சார்வதுபோல் - முந்தும்       8

கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம்       9

ஆகவரும் இச்சை அறிவு இயற்ற லால்இயல
போகஅதி காரப் பொருளாகி - ஏகத்து       10

உருவம் அருவும் உருஅருவும் ஆகிப்
பருவ வடிவம் பலவாய் - இருள்மலத்துள்       11

மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத்       12

தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பத்து - மந்த்ரமுதல்       13

ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்
கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும்      14

ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனி என்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய       15

கண்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்
சென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய       16

சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும்       17

தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவே
நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னூல்       18

விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச்
சரியைகிரி யாயோகம் சார்வித்து - அருள்பெருகு      19

சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து
ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம்       20

சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்
ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த       21

மலபரி பாகம் வருமளவில் பன்னாள்
அலமருதல் கண்ணுற்று அருளி - உலவாது       22

அறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்தநிலை நீங்கிப் - பிறியாக்       23

கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால்      24

ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்
ஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் - பாழாக       25

ஆணவமான படலம் கிழித்து அறிவில்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும்       26

அடிஞானத் தற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது       27

தேக்குபர மானந்தத் தெள்ளமுதம் ஆகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும்       28

வரவும் நினைப்பும் மறப்பும் பகலும்
இரவும் கடந்துஉலவா இன்பம் - மருவுவித்துக்       29

கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்
வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் -மின்னிடந்துப்       30

பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த      31

கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று
ஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு       32

மூன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேஇருத்தி
ஈன்றபர முத்தி அடைவித்துத் - தோன்றவரும்       33

யானெனதென்று அற்ற இடமே திருவடியா
மோனபரா னந்தம் முடியாக - ஞானம்       34

திருஉருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை அலரா - இருநிலமே       35

சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே; எவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம்       36

தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத்       37

துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் - விண்ட       38

பருவமலரப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
அருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி       39

பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் - நிலவுமிழும்       40

புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள்       41

வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடித்து
தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும்       42

ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர்       43

வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் - விடுத்தலாகப்       44

பால இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடம்
வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன்       45

போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன்       46

வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த       47

வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம்       48

தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்
வேமக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது       49

மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையால்
சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில்      50

வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த       51

சிறுதொடிசேர் கையும்மணி சேர்ந்ததடங் கையும்
கறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர்       52

அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத       53

கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன்       54

புரிநூலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்
அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும்       55

நாதக் கழலும் நகுமணிப் பொற் கிண்கிணியும்
பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி      56

இளம்பருதி நூறா யிரங்கொடி போல
வளந்தரு தெய்வீக வடிவம் - உளந்தனில்கண்டு       57

ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியஐந்து       58

ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய       59

மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால்       60

ஒத்த புவனத் துருவே உரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவா - வைத்த       61

கலையே அவயவாக் காட்டும்அத்து வாவின்
நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி       62

அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
கண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும்       63

ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ       64

வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
தரும்அட்ட யோகத் தவமே - பருவத்து       65

அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்
புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப்       66

பேரின்ப வெள்ளப் பெருக்காறும் மீதானம்
தேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம்       67

எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு
அல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில்       68

ஈறும் முதலுமகன்று எங்குநிறைந்த ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம்       69

தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ       70

பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள்       71

ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்த்த வான்கொடியும்
வந்தநவ நாத மணிமுரகம் - சந்ததமும்      72

நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்
ஆக்கி அசைத்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து       73

வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
பேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ்       74

பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்
பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள்       75

வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து       76

திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம்       77

எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்
பொங்கும் தழல்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண்       78

எடுத்தமைத்து வாயுலைக் கொண்டு ஏகுதினெய்று எம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு      79

பூதத் தலைவகொடு போதி எனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று       80

அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் - முன்னர்       81

அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல்       82

கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்
அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறிணையும் - தன்னிரண்டு       83

கையால் எடுத்தணைத்துக் கத்தனெனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய       84

முகத்தில் அணைத்துஉச்சி மோந்து முலைப்பால்
அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் - சகத்தளந்த       85

வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி       86

மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள்      87

விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார்வீர வாகு - நெருப்பிலிதித்து       88

அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்
செங்கண் கிடாஅதனைச் சென்றுகொணர்ந்து - எங்கோன்       89

விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதுவர்ந்து எண்திக்கும்
நடத்தி விளையாடும் நாதா - படைப்போன்       90

அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று
உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால்      91

சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும்       92

பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே -கொன்னெடுவேல்       93

தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக
வீரவடி வேல் விடுத்தோனே - சீரலைவாய்த்       94

தெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை
வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக்       95

கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் - சயேந்திரனால்       96

சூரனைச் சோதித்தவரு கென்றுதடம் தோள்விசய
வீரனைத் தூதாக விடுத்தோனே - காரவுணன்       97

வானவரை விட்டு வணங்காமை யால்கொடிய
தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு       98

பகைவன் முதலாய பாலருடன் சிங்க
முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த       99

வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்
சூருடலம் கீண்ட சுடர் வேலோய் - போரவுணன்       100

அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள்       101

சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு       102

சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன
மேவத் தனித்துயர்ந்த மேலோனே - மூவர்       103

குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்
சிறைவிடுத்து ஆட்கொண்ட தேவே - மறைமுடிவாம்       104

சைவக் கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே - பொய்விரவு       105

காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
வாமமட மானின் வயிற்றுதித்துப் - பூமருவு       106

கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத்       107

தெள்ளித் தினைமாவும் தேனும் பரித்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம் உவந்து       108

ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோ னே - நாறுமலர்க்       109

கந்திப் பொதும்பர்எழு காரலைக்கும் சீரலைவாய்ச்
செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும்       110

பல்கோடி சன்பப் பகையும் அவமி|ருத்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி       111

பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாகம்அடல்
பூதமுதீ நீரும் பொருபடையும் - தீது அகலா       112

வெவ்விடமும் துட்ட மிருகமுதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் - அவ்விடத்தில்      113

பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் - கச்சைத்       114

திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரிகிரணம்       115

சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண்       116

எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம்       117

ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் - ஓசை       118

எழுத்துமுத லாம்ஐந்து இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன்       119

இம்மைப் பிறப்பில் இருவா தனைஅகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து       120

ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய       121

கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள்.      122

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று
---------

This webpage was last revised on 16 August 2021.
Please send your comments and corrections to the webmaster (pmadurai AT gmail.com).