Namakkal kavinjar V. Ramalingam Pillai (1888-1972) Songs- part I
in Tamil Script, Unicode/utf-8 format
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (1888-1972) பாடல்கள் - முதல் பாகம்
Etext Preparation : Ms. Vijayalakshmi Alagarsamy, California, USA
Proof-reading: Prof. Swaminathan Sankaran, Regina, Canada
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape >4.6, Internet Explorer 5) with the Unicode Tamil font
chosen as the default font for the UTF-8 char-set/encoding view. .
In case of difficulties send an email request to kalyan@geocities.com
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
Namakkal kavinjar V. Ramalingam Pillai (1888-1972) Songs- part I
(in Tamil Script, TSCII format)
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள் - முதல் பாகம்
1. பரமன்
உலகெலாம் படைத்துக் காத்தே
உருவிலா தழித்து நாளும்
உண்மையாய் எண்ண மாளா
ஒருவனாய் அருவ னாகிச்
சலமிலா தெண்ணு வோர்க்குச்
சத்திய மயமே யாகித்
தனித்தனி பிரிந்த போதும்
தானதிற் பிரியா னாகி
மலரின்மேல் தேவ னாகி
மாதொரு பாக னாகி
மாலொடு புத்த னாகி
மகம்மதாய் ஏசு வாகிப்
பலபல தெய்வ மாகிப்
பற்பல மதங்க ளாகிப்
பக்குவப் படியே தோன்றும்
பரமனார் பெருமை போற்றி.
2. கடவுள்
இல்லாத கால மில்லை
இருக்கின்ற பொருள்ஒன் றில்லை
எண்ணாத எண்ண மெல்லாம்
எண்ணியும் எட்ட வில்லை
சொல்லாத வேத மெல்லாம்
சொல்லியும் சொன்ன தில்லை
சூட்டாத நாமம் இல்லை
தோன்றாத உருவ மில்லை
அல்லா வாய்ப் புத்த னாகி
அரனரி பிரம்ம னாகி
அருளுடைச் சமணர் தேவும்
அன்புள்ள கிறிஸ்து வாகிப்
கல்லாத மனத்திற் கூடக்
காணாமல் இருப்பா ரந்தக்
கடவுளென் றுலகம் போற்றும்
கருணையைக் கருத்தில் வைப்பாம்.
3. இறைவன்
அன்பினுக் கன்பாய் வந்தும்
அறிவினுக் கறிவாய் நின்றும்
அறிந்தவர்க் கெளிய னாகி
அல்லவர்க் கரிய னாகி
முன்பினும் நடுவொன் றின்றி
முதுமறை தனக்கு மெட்டான்
மூடர்கள் மனத்திற் கூட
மூலையில் ஒதுங்கி நின்று
செம்பினும் கல்லி னாலும்
செய்தவை எல்லா மாகிச்
சிலந்திபோற் கூடு கட்டிச்
சிலுவையில் மறைந்தான் போல
என்பினுக் கென்பா யென்றும்
எம்முளே விளங்கு கின்ற
எழுசுடர் சோதி யான
இறைவனை இறைஞ்சி நிற்பாம்.
4. சொல்வதற்கு முடியாத சக்தி
இல்லையென்று சொல்வதற்கும்
இருக்கின்ற ஒருபொருளாய்
இருப்பதென்பார் ருசுப்படுத்த
'இசை'எனல் கருத்துடன் ஓசையும் இசைவதாம்.
'கற்றலில் கேட்டலே நன்றெ'னும் கட்டுரை
படிப்பிற்கு மட்டுமா? பாட்டிற்கும் உண்டு.
படித்துக் கற்றிடும் அறிவைப் பார்க்கினும்
கேட்டுக் கற்றிடும் அறிவே கெட்டியாம்.
என்னும் தத்துவம் இசையினால் பலம்பெறும்
செவிவழி நுழைந்தே உணர்ச்சியைத் திரட்டி
அறிவைத் தேடும் ஆவலுண் டாக்கி
எண்ணச் செய்கிற ஓசையே இசையாம்.
ஓசைகள் மட்டுமே உணர்ச்சிஉண் டாக்கலாம்.
அழுவதற் கென்றோர் ஓசையை அறிவோம் ;
சிரிப்பதைக் காட்டும் சத்தமும் தெரிவோம் ;
அச்சம் குறிக்கிற ஒலியையும் அறிவோம் ;
அதிசயப் பட்டால் அதற்கொரு தனிஒலி ;
ஐயம் வினாக்களும் ஓசையால் அறியலாம் ;
அபயக் குரலையும் ஓசையால் அளக்கலாம் ;
எல்லா உணர்ச்சியும் ஓசையால் எழலாம் ;
எனினும் ஓசையே இசை ஆகாது.
'சங்கீதம்' என்பது ஓசையின் சங்கதி.
சப்த சுரங்களைச் சமர்த்தாய்க் கலந்து
நீட்டலும் குறுக்கலும் தெளித்தலும் செய்து
நிரவல் செய்து பரவல் நிரப்பிக்
கற்பனை மிகுந்த ஓசைகள் காட்டலே
சாமான்ய மாகச் 'சங்கீதம்' என்பது.
அதிலே மட்டுமோர் ஆனந்த மிருக்கலாம்.
நாதப் பிரம்மமும் அதிலே நாடலாம் ;
அதைப்பற்றி இங்கே ஆராய்ச்சி இல்லை ;
ஓசையை மட்டும் ரசிப்பவர் உண்டு.
ஆனால் அவர்கள் அதற்கெனப் பழகினோர்.
அப்படிப் பழகினோர் மிகச்சிலர் ஆவர் ;
அவர்களைப் பற்றியும் அக்கறை இல்லை.
பொதுஜன மனத்தில் அறிவைப் புகட்ட
இனிய ஓசையால் உணர்ச்சியை எழுப்பப்
'பாடுவோன்' கருத்தைக் 'கேட்போன்' பருக
எண்ணமும் ஓசையும் இசைவதே 'இசை'யாம்.
இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.
அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம் ;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.
புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.
தத்துவம் இதனை மனத்தில் தாங்கி,
புதுப்புது 'மெட்டை'யும் இசையிற் புகுத்திப்
பழைய 'சிந்துகள்' 'பதங்கள்' 'வண்ணமும்',
தமிழின் சொந்தச் சந்தம் பலவும்
அழிந்துபோ காமல் அவற்றையும் போற்றித்
'தமிழிசை' வளர்ப்பது தமிழன் கடமையாம்.
சங்கீ தத்தையும் தமிழன் கைவிடான்.
சரித்திரம் அறிந்த சத்தியப் படிக்கு
யாழின் விதங்களும், குழலினம் அனைத்தும்,
வாத்தியக் கருவிகள் வகைகள் பலவும்,
ஏழு சுரங்களை இயக்கும் விதமும்,
'கர்நா டகத்துச் சங்கீதம்' என்றே
அழைக்கப் படுகிற அந்தக் கலையும்
தமிழன் ஆதியில் வளர்த்துத் தந்ததே.
இன்றைய தினத்திலும் இந்தக் கலைகளில்
தலைசிறந் துள்ளவன் தமிழனே யல்லவா?
29. சேர்த்து வைத்த செல்வம்
"தன்குஞ்சு ஒன்றே பொன்குஞ்சு என்று
கன்னங் கறுத்த காக்கையும் கருதும்"
என்னும் பழமொழி இயல்புக் கிணங்க
அவரவர் மொழியே அவரவர்க் குயர்ந்ததாம்.
ஆயினும் தமிழை அதற்காய்ப் புகழ்ந்திடோம்.
பழமை மிக்கது தமிழெனும் மொழியாம்.
ரசங்கள் நிறைந்த ராமா யணத்தை
வான்மீகி முனிவன் வரைந்த போதே
தமிழர் நாட்டைத் தனியே புகழ்ந்தான் ;
ஆட்சியின் சிறப்பையும் அதிலே சொன்னான்.
வான்மீகி காலம் வரையறை அற்றது ;
அதற்கும் முன்னால் ஆண்டனர் தமிழர் ;
இலக்கண அமைப்பிலும் இலக்கியச் சிறப்பிலும்
தனிப்பட் டுயர்ந்தது தமிழ்மொழி என்றே
ஆராய்ந்தறிந்த அனைவரும் சொல்லுவர்.
எந்த மொழியையும் இகழ்ந்திடாத் தமிழன்
பற்பல பாஷைகள் நன்றாய்ப் படித்தும்
அறிவையே நாடி அலசிப் பார்த்தும்
உலகத்தி லுள்ள உயர்ந்த கருத்துகள்
எல்லாம் நிறைந்த இலக்கியம் உள்ளதாய்ச்
சேர்த்து வைத்த செல்வம் தமிழ்மொழி
இன்று நேற்று ஏற்பட்ட தன்று ;
மூவேந்தர் ஆட்சிக்கு முன்னா லிருந்தே
இந்திய நாட்டிலும் அந்நிய இடத்திலும்,
திரவியம் தேடித் திரைகட லோடியும்,
கப்பல் ஓட்டிக் கடலைக் கடந்தும்,
அந்நிய மன்னர் அழைப்புக் கிணங்கியும்,
எவரும் மதித்தே எதிர்கொள்ளும் இனமாய்,
எங்கும் சென்றே எவரோடும் பழகி
ஆண்டுகள் பற்பல ஆயிர மாக
வாழ்ந்த தமிழர் வருந்திச் சேர்த்தது.
உலக வழக்குடன் ஒட்டியே நின்று
'கன்னித் தமி'ழென இன்னும் களிக்கப்
புதுப்புது அறிவுகள் புகுதற் கிடந்தர
எண்ணிச் செய்த இலக்கணம் உள்ளதாய்,
உண்மை அறிவில் ஊன்றிய வேருடன்
பருத்துப் படர்ந்த பற்பல கிளையுடன்
விழுதுகள் எண்ணில வெவ்வெறு தாங்க
ஊழிக் காற்றே உரத்தடித் தாலும்
அசைக்க முடியா ஆல மரம்போல்
நேர்ந்தவர்க் கெல்லாம் நிழலே கொடுத்தும்
அலுப்பைத் தீர்த்தும் அமைதியைத் தந்தும்
கவிதையும் காட்டி, களிக்கச் செய்திடச்
செழித்து நிற்பது செந்தமிழ்ச் சிறப்பு ;
தமிழைப் போற்றுதல் தமிழரின் கடமை.
தமிழின் வளர்ச்சியை மனத்தில் தரித்தும்
அந்நியர் அறிவையும் தமிழில் பிணைத்தும்
தொழில்முறை அறிவுகள் தமிழில் தொகுத்தும்
ஏனைய நாட்டின் எல்லா அறிவும்
தமிழில் உண்டெனத் தருக்கும் படியாய்ச்
செய்து வைப்பதே தமிழ்மொழிச் சேவை.
30. கவிதை என்றால் என்ன?
அசதியைக் கிள்ளி, அறிவைக் கிளப்பி,
அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி,
இன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி,
நன்மை தீமையை நன்றாய் விளக்க
இல்லாத ஒன்றையும் இருப்பதைப் போலவே
மனக்கண் முன்னால் மலரச் செய்தே
இருக்கிற ஒன்றையும் இல்லாத தேபோல்
மனத்தை விட்டு மறையச் செய்து,
வாழ்க்கைக் குதவும் நல்ல வழிகளில்
ஊக்கம் கொள்ளும் உறுதியை ஊட்டப்
பாடு படாமல் பாடம் பண்ணவும்,
நினைவில் எளிதாய் நிற்கவும் தக்கதாய்
இணைத்த சொற்களே 'கவிதை' எனப்படும்.
'கவிதை' என்பது கற்பனை உள்ளது ;
கூட்டியும் பேசும் ; குறைத்தும் கூறும் ;
பொய்ம்மையும் வாய்மையே போலப் பொலிவுற
அறங்களைப் புகட்டலே அதனுடை நோக்கம்.
எதுகை மோனை இலக்கணம் பார்த்தும்
பதங்களை அடுக்கிப் பாட்டெனச் செய்தும்
உள்ளதை உள்ளதே போல உரைக்கும்
கதையோ பாட்டோ கற்பனை யில்லையேல்
ஐந்தும் மூன்றும் ஆறு என்கிற
கணக்கே யாகும் ; கவிதையா காது.
கற்பனை மிகுந்த கவிதைகள் மிகுந்தது
தமிழ்மொழிக் குள்ள தனிப்பெரும் சிறப்பு!
31. தமிழைப் பேணுவோம்
பாஷைக ளெல்லாம் பசையற நாணிக்
கூசிக் கூசிக் குறைபடச் செய்யும்
வாசத் தமிழை வரையிலாத் தொன்மையை
வீசும் தமிழை விரிந்த கடலினைத்
தேனினும் பாகினும் தெள்ளிய அமுதினும்
ஏனினும் எதனினும் இனித்திடும் தமிழைத்
தின்னத் தின்னத் தெவிட்டாத் தமிழைப்
பன்னப் பன்னப் பலக்கும் தமிழைக்
கொள்ளக் கொள்ளக் குறாயாத் தமிழைக்
கள்ளக் கபடுகள் இல்லாத் தமிழைப்
படிக்கப் படிக்கப் பயனே தந்து
குடிக்கக் குடிக்கக் குறையா அமுதை
என்தாய் மொழியினை என்னுடைத் தமிழை
உன்தாய் மொழியினை உம்முடைத் தமிழை
எம்மையும் உம்மையும் மற்றுமிங் கெவரையும்
செம்மையாம் நம்முடைச் சிறுபிரா யத்தினில்
தொட்டிலில் விட்டுக் கட்டிலில் வைத்துத்
தோளிலும் மார்பிலும் தூக்கித் திரிந்து
பாலூட்டி வளர்த்த பாவையாம் தமிழைத்
தாலாட்டி வளர்த்த தாயாம் தமிழைச்
சீராட்டி வளர்த்த சீர்பெறும் தமிழைப்
பாராட்டி வளர்த்த பழையதோர் தமிழைக்
கோவண முடுத்துப் பாவாடை தந்த
தேவியாம் தமிழைத் தெய்வநற் றமிழை
ஆசையாம் மனைவியை அகத்தினில் விட்டு
சேவையை விரும்பும் வெறியரைப் போன்ற
பாஷையை மறந்த பாதகர் பிறந்து
தேசமிந் நாட்டின் தீவினை யாலே
சீச்சீத் தமிழெனச் சீறிப் பழித்து
நாசியை நீட்டி நாய்போல் விழுந்து
ஏசித் திரியும் இழிவுடை மாக்கள்
பேசவும் கூசிடும் பேயர்கள் பிறந்து
தன்னை வளர்த்த தமிழைப் பேசுதல்
குன்றுந் தொழிலெனக் கூசியே நின்று
பன்னப் பன்னப் பல்லைக் காட்டிடும்
சின்னஞ் சிறியவர் பிறந்தத னாலே
தாயை மறந்த தடியர்கள் போல
வாயைத் திறந்தொரு வார்த்தை சொல்லவும்
உரிமையாம் பாஷையைத் தெரியா திருப்பது
பெருமையென் றெண்ணும் பேயெனு மாக்கள்
குங்குமம் சுமந்த கழுதையே போலத்
தம்முடைப் பாஷையைத் தாமுண ராமல்
அத்துடன் அதனை அவமதித் தேசும்
பித்தரும் பதரெனும் சுத்தநிர் மூடர்கள்
பிறந்தத னாலே பெருமை மறந்து
சிறந்த நாளும் சீரும் குறைந்து
மண்ணிற் கிடக்கும் மணியே போலும்
அற்பரை அண்டிய விற்பனர் போலும்
ஆதர வில்லா வித்தையே போலும்
அணைப்பவ ரில்லாக் குழந்தையே போலும்
அநுபவ மில்லா அறிவே போலும்
மங்கிக் கிடக்கும் மருவிலாத் தமிழை
இங்கிதத் தமிழிழை இனிமையாம் தமிழை
அந்த நாளினற் சந்திர முடியோன்
சுந்தரப் படுத்த வந்துநின் றருளி
விருத்தியே செய்யக் கருத்தினி லெண்ணிப்
பெருத்த கேள்வியர் பெரியவர் சபையெனச்
சங்கரன் தானே அந்தத் தலைவனாய்த்
தங்கியே நடத்திய தனிப்பெரும் சபையெனச்
சுத்தரும் சித்தரும் பக்தரும் துதிக்க
இத்தரை யெல்லாம் இசைகொண்டு நின்றே
உலகெலாம் அழியினும் விலகிடாப் புகழொடும்
அலகிலாக் கல்விக் களஞ்சிய மாகித்
தெய்வப் பலகையைத் தன்னிட மடக்கி
ஐயமில் லாத அருந்தமி ழளித்த
சித்திரச் சபையாம் மெய்த்திருச் சபையாம்
முத்தமிழ்ச் சங்கம் விளங்கிய தமிழைத்
தாயெனப் பேணித் தமிழ்ர்கள் யாவரும்
ஓயா துழைத்தே ஒப்பிலா மொழியெனப்
புதுப்புதுக் கவியும் புகழ்பெரு நூல்களும்
விதவிதம் படைத்து வேறுள நாட்டவர்
யாவரும் வியக்க அரியா சனத்தில்
மேவிடச் செய்ய விரைகுவம் இன்றே.
32. தமிழ் இசை
தன்நாட்டுத் தாய்மொழியில் எவரும் கேட்கத்
தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டு வேண்டு மென்ற
நன்னாட்டத் துடன்ராஜா நம்சர் அண்ணா
மலையவர்கள் அதற்காகப் பரிசு நாட்டத்
தென்னாட்டுத் சிதம்பரத்தில் அறிஞர் கூடித்
தமிழ்மொழிக்குத் தேவையென்று தீர்மா னித்தால்
எந்நாட்டு யாராரோ எங்கோ கூடி
ஏசுவதும் பேசுவதும் என்ன விந்தை!
வந்தஎந்தப் பிறமொழிக்கும் வரவு கூறி
வகைசெய்து வாழ்வளித்து வரிசை யெல்லாம்
தந்தவர்கள் தமிழரைப்போல வேறு யாரும்