Namakkal kavinjar V. Ramalingam Pillai (1888-1972)
pATalkaL- part I I (98 -180)
in Tamil Script, unicode/utf-8 format
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள் - இரண்டாம் பாகம்
Etext Preparation : Ms. Vijayalakshmi Alagarsamy, California, USA
Proof-reading: Prof. Swaminathan Sankaran, Regina, Canada
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape >4.6, Internet Explorer 5) with the Unicode Tamil font
chosen as the default font for the UTF-8 char-set/encoding view. .
In case of difficulties send an email request to kalyan@geocities.com
சுகத்தினைப் பழித்து வாழ்ந்து
குணத்தையே விலைக்கு விற்றுக்
குரங்கினைக் கொண்டார் போல
இனத்தையே பிணிகள் வாட்ட
இருந்தனம் அறிவி ருந்தும்.
உண்டியில் ஆசை வைத்தோம்
ஒழுக்கமே மறந்து போனோம்
பெண்டுகள் மக்கள் தம்மை
வளர்த்திடும் முறைமை பேணார்
மண்டையி லெழுத்தி தென்று
மயங்கினோம் கர்மந் தன்னை
மண்டின நோய்கள் ‡¡மம்
மலிந்திட நலிந்தோ மையோ!
பிணியிலே பிறந்து நித்தம்
பிணியையே அருந்திப் பொல்லாப்
பிணியிலே வளர்ந்தும் அந்தப்
பிணியினாற் சாகக் கண்டும்
அணியிலே ஆடை யாலே
அலங்கரித் தோமே யன்றி
அறிவிலே ஆசா ரத்தால்
அழகெதும் செய்தோ மில்லை.
பணியிலும் பணத்தி லேயும்
சுகமெலாம் இருந்தாற் போலப்
பழகினோம் நாமே யன்றிப்
பழக்கினோம் மக்கள் தம்மை.
துணிவிலோம் தூய்மை யில்லோம்
சுசிகர நடத்தை யில்லோம்
துவக்குவோம் இனிமே லேனும்
நோய்களைத் துடைக்கும் வாழ்க்கை.
123. தமிழ்க் கலை
வியப்புற இன்பம் விருப்புற விளைக்கும்
காரியத் திறமையே 'கலை'எனப் படுவது ;
இன்பம் தருகிற எல்லாச் செய்கையும்
கலையின் இனமாய்க் கருதத் தக்கதே ;
இன்பம் என்பதில் இரண்டு விதங்கள் ;
இயற்கை இன்பமும் செயற்கை இன்பமும்.
இயற்கை இன்பம் ஈடற்ற தெனினும்
செயற்கை இன்பமே சிறப்பென எண்ணி
மகிழ்வது மாநில மக்களின் இயல்பு.
கண்ணிற் காணும் இயற்கைக் காட்சியைச்
சித்திரம் வரைந்து சிறப்பென எண்ணுவர்.
உயிருடன் பார்க்கும் ஒருவரின் உருவைச்
சிற்பச் சிலையில் சீராட்டு வார்கள்.
ஊக்கமும் உணர்ச்சியும் ஊட்டும் சொற்களைப்
பாட்டாய்க் கேட்கவே பலரும் விரும்புவர்.
மணமிக்க மலர்கள் மடியில் இருப்பினும்
அவற்றின் அத்தரின் ஆசையே அதிகம் ;
எலுமிச் சம்பழம், இளநீர், கரும்பைத்
தனித்தனி அவற்றின் தன்மை கெடினும்
மூன்றும் கலந்தால் முதிர்சுவை என்பர்.
இன்பம் தருகிற இயற்கை நிகழ்ச்சிகள்
அநேகம் உள்ளன. ஆயினும், அவைதாம்
வேண்டிய போதுநாம் விரும்பும் விதத்தில்
அகப்பட மாட்டா, அதற்கோர் உதாரணம் ;
காதில் விழுந்ததும் களிக்கச் செய்கிற
ஓசைகள் அநேகம் இயற்கையில் உண்டு ;
ஆனால் அவைகள் நேர்வது அருமை.
அதனால் அல்லவா அப்படி ஓசையை
வாய்பாட் டென்றும் வாத்திய மாகவும்,
சமைத்துக் கொடுக்கும் சங்கீ தத்தைஓர்
உயர்ந்த கலையென உலகம் கொள்வது?
இப்படி யேபிற எல்லா இன்பமும்
செய்யத் தெரிந்த திறமையே 'கலை'யாம்.
கலைகளின் இன்பம் புலன்களைக் கவரும் ;
ஒழுக்கக் கேட்டையும் உண்டாக்கும். அதனால்
தமிழன் கலையெனத் தந்தன யாவும்
அறங்களைப் போற்றும் அறிவையே நாடும்.
வேடிக்கை என்றும், விநோதம் என்றும்
அநேகக் கலைகளைத் தமிழன் அறிவான் ;
ஆயினும், அவைகளும் அறத்தையே அடுக்கும் ;
நூல்களை எழுதும் கலையின் நோக்கமும்,
கற்பனைக் கதையின் கலையும் அறமே,
தருமம் பேசாத் தமிழ்நூல் கலையை
இலக்கிய மாகவே எண்ணான் தமிழன்.
கலைகளின் வழியே கருணையைப் புகட்டல்
எளிதாம் எனநம் முன்னோர் எண்ணிய
கண்ணுங் கருத்துமாய்க் கலைகளைக் காத்தனர்.
இயலென எழுதியும், இசையெனப் பாடியும்,
கற்பனை நிறைந்த கவிதைகள் செய்தும்,
நாட்டியம் பயின்றும், நாடகம் நடித்தும்,
குளங்களை வெட்டியும், கோபுரம் கட்டியும்,
சிலைகளைச் செதுக்கிச் சித்திரம் வரைந்தும்,
மலைகளைக் குடைந்து மண்டபம் ஆக்கியும்,
கலைகளை வளர்த்த காரணம் எல்லாம்,
செயற்கை இன்பமும் இயற்கையில் சேர்ந்துடன்
அறிவைத் துலக்கி, அன்பைப் பெருக்கிச்
சச்சர வில்லாச் சமுதாய வாழ்வை
உண்டாக்கி வைத்தல் ஒன்றே நோக்கம்.
புலன்களுக் கெட்டாப் பொருளாம் இறைவனைப்
புலன்களுக் கின்பம் புகட்டவே புரியும்
கலைகளின் மூலமாய்க் கருதலாம் என்றே
கடவுளின் நினைப்பே கலைகளில் கலந்திடப்
பழகிய பெருமையே தமிழ்க்கலைப் பண்பு.
சித்தர்களும் முத்தர்களும் செறிந்து வாழ்ந்து
சேர்த்துவைத்த தவப்பயனின் சிறப்பே யாகும்.
எத்திசையும் இவ்வுலகில் எங்கும் காணா
எழில்மிகுந்த தமிழ்நாட்டின் அமைதி என்றும்
அத்தகைய மரபினுக்கிங் காக்கம் தந்தே
அருணகிரி நாதனுடை அருளைத் தேக்கி
முத்திநெறி காட்டுகின்ற மோன ஞான
முழுமதியாம் ரமணமகா முனிவன் ஜோதி.
வெற்றியென்றும் வீரமென்றும் வெறிகள் மூட்டி
வேற்றுமையே மக்களிடை விரியச் செய்து
கற்றுணர்ந்த பெரியவரைக் கசக்கப் பேசும்
கசட்டறிவின் தலையெடுப்பைக் காணும் இந்நாள்
பற்றொழித்த மெய்ஞ்ஞானி இவரே யென்று
பலகோடி பக்தர்மனம் பரவச் செய்த
நற்றவசி ரமணரிஷி வாழ்ந்த வாழ்வே
நம்நாட்டின் பெரும்புகழின் ஜீவ நாடி.
அணுவினுடன் அணுமோதி அழியச் செய்தே
ஆருயிர்கள் பதைபதைக்க அவதி மூட்டப்
பணவெறியும் பார்வெறியும் பற்றித் தூண்டும்
பாதகமே சாதனையாய்ப் படிக்கும் இந்நாள்
அணுவினுடன் அணுசேர அணைத்து நிற்கும்
ஆண்டவனின் திருவருளை அறியச் செய்த
குணமலையாம் ரமணரிஷி மோன வாழ்வே
கொடுமைகளை நம்மிடையே குறைக்கும் போதம்.
இன்றிருந்து நாளைக்குள் மறைந்து போகும்
இச்சிறிய உடலினுக்குள் புகுந்து கொண்டு
நன்றிருந்து பேசுகின்ற 'நான்யார்?' என்று
நாளில்ஒரு தரமேனும் நாடிப் பார்த்தால்
'என்றிருந்தோம்? எங்குவந்தோம்? எதுநாம்?' எல்லாம்
எளிதாகக் கண்டுகொள்வாய் என்றே சொல்லிக்
குன்றிருந்த விளக்கேபோல் திசையைக் காட்டும்
குறிக்கோளாம் ரமணமகா குருவின் வாழ்க்கை.
இந்திரியச் சுகங்களுக்கே ஓடி யாடி
இழிவடைந்து துறவடைந்தோர் பலபே ருண்டு
வந்தகடன் தீர்ப்பதற்கு வழியில் லாமல்
வைராக்யம் பூண்டவர்கள் வகையும் உண்டு
கந்தையற்றுத் தரித்திரத்தின் கவலை மாற்றக்
காவியுடை அணிந்தவரைக் காண்ப துண்டு
வந்துதித்த நாள்முதலாய்ப் பரத்தை நாடும்
வைராக்யம் ரமணரிஷி வாழ்வாய் நிற்கும்.
சக்திகளில் மிகச்சிறந்த சக்தி யாகும்
துன்பங்கள் சகிப்பதையே சாதித் திட்டான்.
வித்தைகளில் மிகப்பெரிய வித்தை யாகும்
விருப்புவெறுப் பில்லாத வேள்வி செய்தான்.
உத்திகளில் உச்சநிலை உள்ள தாகும்
உள்ளத்தில் பொய்யாமை உடைய னானான்
சித்திகண்ட ரமணரைநாம் சிந்தித் திட்டால்
சித்தசுத்தி பெற்றுமிகச் சிறந்து வாழ்வோம்.
திருவுள்ளத் தீர்ப்போ? என்று
செப்பினசொல் அழியாமல் எம்மனத்தில்
பச்செனவே திகழு மென்றும்.
அஞ்சாத நெஞ்சம் வேண்டின்
அசையாத ஞானம் வேண்டின்
ஆடாத கொள்கை வேண்டின்
ஓடாத உறுதி வேண்டின்
கெஞ்சாத வாழ்க்கை வேண்டின்
கேடிலா எண்ணம் வேண்டின்
கேளாத கலைகள் வேண்டின்
மாளாத உழைப்பு வேண்டின்
நஞ்சான பேர்கள் யாரும்
நடுங்குமோர் நடத்தை வேண்டின்
நாணாத செயல்கள் வேண்டின்
கோணாத குணங்கள் வேண்டின்
செஞ்சாறு வார்த்தை வேண்டின்
திலகனார் சரிதை தன்னில்
தெரியாத நீதி யெல்லாம்
தெரியலாம் தெளிவா யங்கே.
கருத்ததெல்லாம் நீராமோ? வெளுத்ததெல்லாம்
பாலாமோ? கண்ணிற் கண்ட
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லே யாமோ?
கருமமது செய்தல் வேண்டும்
கலங்காமல் உழைத்தல் வேண்டும்
கண்ணபிரான் கீதையிலே
சொன்னமொழி கடைப்பி டித்த
பெருமையுள்ள திலக ரைநீ
பிரித்தாயே யெம்மை விட்டு!
பெம்மானே! ஒருவ ரம்நீ
பிழையாது தருதல் வேண்டும் ;
தருமமது குறையும் போதும்
தப்பிதங்கள் நிறையும் போதும்
தப்பாம லவத ரிப்பேன்
தரணி யில்நா னென்றபடி
அருமறைகள் அறிய மாட்டா
அரும்பொருளே வருதல் வேண்டும்,
அன்பு டன்நீ அப்போதும்
திலககுரு அடைதல் வேண்டும்.
133. தாதாபாய் நவரோஜி
நேற்றுதித்த தேசமெல்லாம் நினைத்தபடி
பலபேசி நிந்தை கூறி
நின்றிடவே குன்றிடநாம் நெஞ்சுருகிப்
தருமமும் கரும மெல்லாம்
தனித்தனி மறந்து மிக்க
தரித்திரம் பிணிக ளெல்லாம்
தங்கியே இங்கு நிற்கப்
பெருநிலக் கிழவி யிந்தப்
பேதையாம் இந்து தேசம்
பலபல துன்ப முற்றுப்
பஞ்சையாய் வாடி நிற்க
வெறுமனே யிருந்து நாங்கள்
வீணரா யலைந்து கெட்டோம்
வேண்டினோம் தேச பக்தி
விமலனார் எமக்குத் தந்த
பெருமனே! கோக லேநீ
பின்னையும் பிறந்து வந்து
பெற்றதாய் இந்துமாதின்
பிணியெலாம் அறுத்து வைப்பாய்.
பொய்வெறுத்த மேன்மை யாலோ
'ஐயர்' என்று தனியுரைத்தால் உனையன்றித்
தமிழுலகம் அறியா தையா!
முழுமதி மயிர்த்தா லன்ன
முகந்திகழ் கருணை நோக்கும்
மூர்க்கரும் நேரிற் கண்டால்
முகந்திடும் சாந்த வீச்சும்
குழலினும் இனிய தான
குழந்தையின் மழலைப் பேச்சும்
குவிந்திடும் உதட்டிற் கூடக்
கூத்திடும் சிரிப்பின் கூட்டும்
தழலினும் தூய வாழவும்
தாயினும் பெரிய அன்பும்
சத்திய நிலையும் முன்னாள்
தவமுனி இவனே என்னப்
பழகிய பேயும் போற்றும்
படித்தொரு வடிவம் தன்னைப்
பாரிடை இனிமேல் வேறு
யாரிடைப் பார்ப்போம் ஐயா!
136. கவி தாகூர்
கலைமகள் கண்ணீர் சோரக்
கவிமகள் கலங்கி வீழத்
தலைமகன் இறந்தா னென்றே
இந்தியத் தாய்த விக்க
அலைகடற் கப்பா லுள்ள
அறிஞர்கள் யாரும் ஏங்க
மலைவிளக் கவிந்த தென்ன
மறைந்தனன் கவிதா கூரே.
சந்திரன் கிரணத் தோடு
சூரியன் ஒளிசேர்ந் தென்ன
செந்தணல் நெருப்பில் நல்ல
சிலுசிலுப் பிணைந்த தென்ன
அந்தணர் அமைதி யோடே
அரசரின் ஆண்மை கூட்டும்
சுந்தரக் கவிகள் பாடும்
சொல்வள முடையோன் தாகூர்.
கருணையின் உருவு காட்டும்
கவிரவீந் திரநாத் தாகூர்
அருணனாய் உலகுக் கெல்லாம்
அறிவொளி பரப்பி வாழ்ந்தான்
மருணெறி மாற்ற இந்த
மாநில மக்கட் கெல்லாம்
பொருணெறி சாந்தி சொல்லும்
புத்தக மாக நிற்பான்.
அரசியல் போராட் டத்தில்
ஆழ்ந்திலன் என்றிட் டாலும்
புரைசெயும் அடிமை வாழ்வின்
புண்ணையே எண்ணி எண்ணிக்
கரைசெய முடிந்தி டாத
கவலையால் கண்ணீர் பொங்க
உரைசொலி அடிமைக் கட்டை
உடைத்திடத் துடித்தோன் தாகூர்.
'ஒத்துழை யாமை' என்று
காந்தியார் உரைக்கும் முன்னால்
இத்துரைத் தனத்தார் தம்மோ
டிணங்கிடப் பிணக்கி விட்டோன்
பற்றுகள் அவர்முன் தந்த
தெய்வத்தைச் சிந்தை செய்து
வல்லாண்மை குறையாமல் நூறாண்டும் அவன்வாழ
மனமார வாழ்த்து கின்றோம்!
147. உள்ளங் கவர்ந்த பண்டிதர்
'பண்டிதர்' என்றால் பள்ளிக் கூடப்
பையன் களுக்குப் பரிகா சச்சொல்.
ஆங்கிலப் பாடத்(து) ஆசான் மாரும்
கணக்குப் போடக் கற்பிப் பவரும்
பூகோள சாத்திரம் புகட்டு வோரும்
விஞ்ஞான அறிவை விளக்கு பவரும்
சரித்திரம் சொல்லித் தருகிற பேரும்
சித்திரம் வரையச் செய்கிற வாத்தியும்
தேகப் பயிற்சி 'ட்ரில்மாஸ்டர்' கூட
ஓட்டமும் நடையும் உருட்டும் மிரட்டுமாய்க்
கண்டிப்பு தண்டிப்புக் கடுபிடி காட்டி
வருவார் போவார் வார்த்தைகள் பேசுவார்
பார்த்த உடனே பயபக்தியோடு
மாணாக்கர் அவர்களை மதித்து வணங்குவார்.
ஆனால்,
பண்டித ரிடத்தில் மாத்திரம் பயப்படார்.
வடமொழிப் பண்டிதர் வைதீக மானவர் ;
அநித்திய உலகில் அசட்டை போலத்
தம்முடைக் கடமையைத் தாம்முடித் திட்டே
எவரென்ன செய்யினும் ஏனென்றும் கேளார் ;
அவரைப் பற்றிநான் அதற்குமேல் அறியேன்.
தமிழ்மொழிப் பண்டிதர் தண்மையே உருவாய்
'அடக்கம்' என்பதன் அறிகுறி யாமென
'அமைதி' என்னும் சொல்லின் அர்த்தமாய்ச்
சாந்த மயமாய்ச் சந்தடி யின்றி
இருக்கிற இடமே தெரியா திருப்பார்.
சிறியோர் பெரும்பிழை செய்திட் டாலும்
அடிக்கவோ பிடிக்கவோ அவர்கை கூசும்.
வழுக்கியும் அவருடை வாயி லிருந்தோர்
இழுக்குடை வார்த்தை எதுவும் வராது.
சொற்பொழி வென்று சொல்லவந் தாலும்
'பண்டிதர்' பேச்சுப் பழங்கதை யாகவே
பக்தியைக் குறித்தும் முக்தியைப் பற்றியும்
ஞானம் என்றும் மோனம் என்றும்
அன்பைப் பற்றியும் அருளைப் பற்றியும்
சத்தியம் என்றும் சாந்தம் என்றும்
இளைஞர் காதுக் கின்பம் தராது.
அதனால் தானோ, என்னவோ அறியேன்.
பண்டிதர் என்றால் பயமற்றுப் போனது!
நான் படித்திட்ட நாளில்நான் அறிந்த
பண்டிதர் அனைவர்க்கும் பான்மை இன்னதே.
இப்போது பண்டிதர் எப்படி என்றிட
அவர்களைப் பற்றிநான் சிறிதும் அறியேன்.
மற்ற மாணவர் மரியாதை குறையினும்
பண்டித ருக்குநான் பணிந்தே பயின்றேன்.
எனினும்; பண்டித ரென்றால் இளக்கமாய்
ஏளனம் செய்பவர் இடையே வளர்ந்தவன்.
ஆகையி னாலே, தீயஅப் பழக்கம்
எனக்கும் தெரியாமல் இருந்தது போலும்!
அப்படி யிருக்க,
உலகுக் கெல்லாம் உணவு கொடுத்து
வந்தவர்க் கெல்லாம் வடித்துக் கொட்டி
ஞானமும் ஊட்டி நல்வழி காட்டிக்
கல்வியும் கலைகளும் கற்கச் செய்து
வீரமும் தீரமும் வெற்றியும் கண்டே
அன்பின் முறைகளில் அரசு புரிந்து
சாந்தி மிகுந்த தனிச்சிறப் புள்ளதாய்,
வந்து பார்த்தவர் வாழ்த்தி வணங்கும்
நாடா வளந்திகழ் நாடா யிருந்தும்
பேரும் புகழும் பெருமையும் கெட்டுத்
தன்னர சிழந்து தரித்திரம் மிஞ்ச
அன்னிய நாட்டுக் கடிமைப் பட்டும்,
அறிவும் ஆற்றலும் ஆண்மையும் மறைந்து
நொந்து கிடக்கும் இந்தியத் தாயின்
சுதந்தரப் போரைத் தொடங்கிய தூயோன்.
தெய்வத் திருக்குறள் திருவாய் மலர்ந்த
வள்ளுவ முனிவனே வந்துவிட் டதுபோல்
உழவும் உழைப்புமே உயர்ந்த தொழிலாய்
வாழ்ந்து காட்டும் நவீன வள்ளுவன்.
'ஏழையின் துயரம் என்துயர்' என்போன்
நல்லற மாகிய இல்லறத் தவசி
பக்தருக் கெல்லாம் பக்த சிகாமணி
ஐம்புலன் வென்ற அருந்தவ சித்தன்.
ஞாலத் துக்கொரு ஞான ஜோதியாய்
அறந்தரு வாழ்க்கை அந்த ணாளனாம்
காந்தி அடிகள்எம் கருணா மூர்த்தி--
சத்தியமே சாந்தமே கத்திகே டயமாய்க்
கொல்லா விரதமே வில்லாய் வளைத்திட்(டு)
அன்பே அதற்கோர் அம்பாய்ப் பூட்டி
அறப்போர் தொடுத்தஅவ் வாரம்ப நாளில்,
அன்னவன்,
சேனையில் ஒருவனாய் யானும் சேர்ந்தேன்.
காந்தி மகானின் கருத்தைச் சொல்லிப்
பாமர மக்களின் படைப்பலம் திரட்ட
ஒவ்வோர் ஊராய் ஓடித் திரிந்து
வீடு வாசல் வேலைகள் விட்டு
அதுவே பணியாய் அலைந்த நாட்களில்--
"அயலூர் ஒன்றில் அரசியற் கூட்டம்,
பெருத்த கூட்டம் பெரியகொண் டாட்டம் ;
பட்டண மிருந்தொரு பண்டிதர் வருகிறார் ;
செந்தமிழ் நடையில் தித்திக்கப் பேசுவார் ;
போவோம் அதற்குப் புறப்படுங் கள்" என
என்னையும் சிலரையும் எனக்கொரு நண்பர்
கந்த சாமியார் கனிவுடன் அழைத்தார்.
இதனைக் கேட்டார் இன்னொரு நண்பர் ;
"பண்டிதர் பேச்சா? பழைய சோறுதான்.
சளசள சளவென்று சப்பிட் டிருக்கும்.
வெண்டைக் காயும் விளக்கெண் ணெயுமாய்
வழவழ வென்றுதான் பேச்சு வளரும்.
நேற்றொரு பண்டிதர் நீளமாய்ப் பேசினார்
போதும் போதும் போதுமென் றாச்சு"
என்று சொல்லி ஏளனம் செய்தார்.
என்னுடன் இருந்த ஏழெட்டுப் பேரும்
ஆங்கிலப் பள்ளியின் அனுபவ முள்ளோர்
பண்டிதர் பேச்சைப் பரிகாசம் பண்ணிய
அந்தக் கேலியை ஆமோ தித்தனர்.
கூடச் சேர்ந்து குறைசொலா விடினும்
பண்டிதர் என்பதைப் பரிகாசம் செய்ததைக்
கண்டிக் காமல்நான் கம்மென் றிருந்தேன்.
சேர்ந்து கொஞ்சம் சிரித்தும் விட்டேன்.
அதனால், என்னிடம் அதிக மதிப்புடன்
கூவி யழைத்தவர் கோபங் கொண்டார்.
அதன்மேல் எனக்கும் அறிவு பிறந்தது.
பண்டிதர் என்றால் பரிகாசம் செய்வதைக்
கண்டனம் செய்து கனிந்து பேசிக்
கந்த சாமியின் கருத்தின் படிக்கே
எல்லோரும் சேர்ந்து போய்வர இசைந்தோம்.
போனோம்,
பண்டிதர் அவர்களைப் பார்த்தேன் ; பார்த்தால்
தாட்டிகம் இல்லை; தடபுடல் காணோம்!
உயரமும் இல்லை; உருவமும் ஒல்லி ;
மாநிற மென்ன மதிக்கத் தகுந்தவர்
கல்வித் தெய்வம் கலைமகள் வண்ணமாய்
வெள்ளை வெளேரென வெளுத்த வேட்டியும்
அதனிலும் வெளுத்த அங்கச் சட்டையும்
அங்கியின் மேலோரு அங்கவஸ் திரமும்,
தலையில் துல்லிய வெள்ளைத் தலைப்பா
கண்ணாடி மூடிய கனற்பொறி போன்று
குளிர்ச்சியும் கூடிய கூர்ந்த கண்கள்.
மகிழ்ச்சி ஊட்டும் மலர்ந்த முகத்துடன்
'பண்டித' ராகவே பண்டிதர் இருந்தார்.
இடக்கை விரல்கள் இரண்டை நீட்டி
கருத்துக் கேற்பக் கையை ஆட்டி
வலக்கைத் தலத்தில் அடித்து வைத்துச்
சங்கீத மத்தியில் சாப்புப் போல
அடித்துப் பேசி அழுத்தம் திருத்தமாய்ச்
சுளைகளை யாகச் சொற்களைச் சொல்லிப்
பதம்பத மாகப் பதியும் படிக்கே
அணிஅணி யாக அடுக்கிய கருத்தொடும்
இயக்கி விட்டதோர் எந்திரம் போலத்
தங்கு தடையெனல் எங்குமில் லாமல்
எத்தனை தூரம் எட்டநின் றாலும்
கணீர்க ணீரெனக் காதிலே விழும்படி
செவிவழி இனிக்கும் செந்தேன் போலக்
கற்பனை மிகுந்த கவினுடைக் கவிதையாய்க்
காதாற் காணும் கனவே போலத்
தொல்காப் பியத்தின் சூத்திரம் தொடரச்
சங்க நூல்களின் சாறு வடித்துச்
சிலப்பதி கார ஒலிப்பும் சேர்த்துத்
திருக்குறள் ஞானப் பெருக்கம் திகழத்
திருமந் திரத்தின் பெருமை திரட்டிக்
கம்பன் பாட்டின் செம்பொருள் பெய்து
தேவா ரத்தின் திருவருள் கூட்டித்
திருவா சகத்தின் தேன்சுவை நிறைத்துத்
திருவாய் மொழியின் தெளிவையும் ஊட்டி
எம்மத மாயினும் சம்மதம் என்னும்
சமரச சுத்தசன் மார்க்கம் தழுவிப்
பண்டைய அறிவைப் புதுமையிற் பதித்துப்
பண்டிதர் பிறரிடம் பார்த்தறி யாத
அரசியல் சரித்திர அறிவுகள் பொருத்திக்
கள்ளமில் லாத உள்ளத் தெளிவுடன்
அன்பு ததும்பிட ஆர்வம் பொங்கக்
கற்றவர் மனத்தை முற்றிலும் கவர்ந்து
பாமர மக்களைப் பரவசப் படுத்தி,
'காந்தீ யத்தின் கருத்துகள் எல்லாம்
தமிழன் இதயம் தழுவிய வாழ்வே'
என்பதைத் தெளிவாய் எடுத்துக் காட்டிய
அற்புதம் மிகுந்த சொற்பொழி வதனைக்
கேட்டேன் ; இன்பக் கிறுகிறுப் புற்றேன்.
இரண்டரை மணியும் இப்படிப் பேசிக்
கடைசியில் பேச்சின் கருத்துரை யாக,
முறைபிற ழாமல் உரைதள ராமல்
சொன்னதை யெல்லாம் சுருக்கிச் சொல்லி
இறைத்த முத்தை எடுத்துச் சேர்த்துத்
தொடுத்த மாலைபோல் தொகுத்துக் கூறிக்
கேட்டவர் நெஞ்சில் கிடந்து புரளக்
கூப்பிய கையுடன் குனிந்து கொடுத்து
உரையை முடித்து உட்கார்ந்து விட்டார்.
சொப்பன இன்பத் தொடர்ச்சி நிற்கவே,
திடுக்குற விழித்துத் திகைப்பவன் போலும்,
சங்கீதம் மத்தியில் தடைப்பட் டதுபோல்,
ஓடின சினிமா ஒளிப்படம் கேடுற்(று)
இடையில் அறுந்தே இருட்டடித் ததுபோல்
என்னுடை உணர்ச்சிகள் இடைமுறிந் தேங்கினேன்.
இன்னான் எனவெனை ஏதும் அறியாப்
பண்டிதர் அவரையே பார்த்துப் பார்த்துப்
புருடனைக் கண்ட புதுப்பெண் போல--
அன்போ ஆசையோ அடக்கமோ ஒடுக்கமோ
அச்சமோ நாணமோ மடமையோ அறியேன்--
என்னையும் மறந்து என்னுடை மனது
பண்டிதர் இடத்தில் படிந்து விட்டது.
இன்பத் தமிழ்மொழி இலக்கியம் சொல்வதே
காந்தீ யத்தின் கருத்துகள் என்பதை
என்னைப் போலவே எண்ணிய பண்டிதர்
என்னிலும் அழகாய் இணைத்துச் சொன்னதை
எண்ணிக் கொண்டே தலைகுனிந் திருந்தேன்.
சிறிது நேரம் சிந்தனை செய்தபின்,
பண்டிதர் அவர்களைப் பார்க்கும் ஆசையால்
மீண்டும் நிமிர்ந்து மேடையைப் பார்த்தேன்.
அந்தப் பண்டிதர் அங்கே இல்லை.
எவரோ பேசுதற்(கு) எழுந்து நின்றார்.
"எங்கே? பண்டிதர் எங்கே?" என்றுநான்
பக்கத்தி லிருந்த பலரையும் கேட்டேன்.
"பிரிதோர் ஊரிற் பேசுதற் கருதி
அவசர மாக அவர்போய் விட்டார்"
என்றொரு நண்பர் என்னிடம் சொன்னார்.
கூட்டம் முடிந்தபின் கொஞ்சிக் குலவிக்
கலந்து பேசிக் களிப்பெலாம் சொல்லிப்
பண்டித ரோடு பழக நினைத்தஎன்
ஆசை கெட்டதால், அவதி மிகுந்தது.
மற்றவர் பேச்சில் மனங்கொள் ளாமல்
உடனே புறப்பட்(டு) ஊருக்கு வந்தேன்.
கண்ட பண்டிதர் கண்ணி லிருந்தார்.
கேட்ட பேச்சும் நெஞ்சில் கிளர்ந்தது.
அந்தப் பண்டிதர் அவரே அவர்தாம்
கலியாண சுந்தர முதலியார் காண்க.
அவரை முதல்முதல் பார்த்த(து) அப்படி.
அந்நாள் தொடங்கி இந்நாள் அளவும்
என்னுடை நினைவில் என்றும் நின்றுளார்.
எண்ணும் போதெலாம் இன்பம் ஊறும்.
நினைக்கும் பொழுதெலாம் நெஞ்சம் குளிரும்.
..................................................................
பத்தாண் டுகள் தாம் பறந்தபிற் பாடு
பட்டணம் சென்றுநான் நேரிற் பழகினேன்,
அதன்மத் தியிலே அவரும் நானும்
கடிதத் திலேதான் கலந்து மகிழ்ந்தோம்.
என்னுடைப் பாட்டென எதுபோ னாலும்
'தேச பக்தன்' தினசரி அதனிலும்
'நவசக்தி' தன்னிலும் நன்றாய் அமைத்துச்
சிறப்புடன் வெளிவரச் செய்வரச் செம்மல்.
பக்கத்தில் அவருடன் பழகிய போதுதான்
சீலம் நிறைந்த செம்மனக் குன்றாம்
ஒழுக்கம் உயர்ந்த உத்தம சீலர்
முதலியார் பெருமையை முற்றிலும் அறிந்தேன்.
தமிழ்நாடு தந்த தலைவர்கள் தம்முள்
காந்தீ யத்தின் உட்பொருள் கண்ட
சிலருள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்
முதலியார் என்பது முற்றிலும் உண்மை.
'தேசபக் த'னில் அவர் செய்த சேவையும்
'நவசக்தி' மூலமாய் நாட்டிற் குழைத்ததும்
புகழ்ந்தால் அதுபெரும் புத்தக மாகும்.
தமிழிலே எண்ணித் தமிழிலே பேசித்
தமிழருக் காகவும் தனித்தொண் டாற்றுவார்.
சந்தி விகாரச் சந்திடைச் சிக்கிய
வழக்கற்றுப் போன வார்த்தைகள் மலியப்
'பழந்தமிழ்' என்று பலபேர் பேசின
அந்தத் தமிழையும் அழகுறச் செய்து
புத்தம் புதுப்பல சொற்றொடர் புகுத்திக்
கேட்கக் கேட்கக் கிளர்ச்சி யுண்டாகும்
தனியரு தமிழ்நடை தந்தவர் சுந்தரர்.
இந்தியத் தாயின் விடுதலை எண்ணமே
நிறைந்த அவருடை நெஞ்சம் குமுற,
காந்தீ யத்தையே கடைப்பிடித் தவராய்ச்
சாது வாகவே தம்கடன் தாங்கி
அச்சுத் தொழிலும் அச்சாணி போலவே
கண்ணிற் படாமல் கடமையைச் செய்து
பழமையும் புதுமையும் படியும் சந்தியாய்ப்
பாட்டாளி மக்களின் பக்கத் துணையாய்ப்
பெண்குலப் பெருமைக்குப் பெருத்த காவலாய்ச்
சைவ நெறிக்கொரு சமரசத் தூதனாய்ப்
பட்டணத் திருந்தும் பகட்டில் லாமல்
ஓசையில் லாமல் ஓய்வற உழைக்கிறார்.
முத்தமிழ்க் கலியாண சுந்தர முதலியார்
அவருடை அறுபதாம் ஆண்டு நிறைவைப்
பரவிப் புகழ்ந்து பல்லாண்டு பாடி
நலம்குறை யாமல் இன்னமும் நாற்ப(து)
ஆண்டுக ளேனும் அவர்வாழந் திருக்கச்
சிவத்தைக் கோரித் தவத்தைச் செய்வோம்.
நந்தமிழ் மக்கள் நல்வாழ்வு பெற்வே.
வாழி கல்யாண சுந்தரன் வாழி!
வாழிபல் லூழி வாழிவா ழியவே!
148. சத்தியமூர்த்திக்கு வரவேற்பு
நித்திய அறங்கள் நாட்டில் நிலைத்திட உலகம் வாழ
உத்தமன் காந்தி காட்டும் ஒருவழி ஒன்றே உண்டு ;
சத்திய சாந்த நோன்பின் தவச்சிறை யிருந்து வந்தாய்
சத்திய மூர்த்தி எங்கள் தலைவனே! வருக! ஐயா!
உடல்நலம் குறைந்தி ருந்தும் ஒருசிறு தயக்க மின்றிக்
கடன்என ஓடி அண்ணல் காந்தியின் ஆணை தாங்கித்
திடமுடன் தேச சேவை தீரர்கள் இனத்தைச் சேர்ந்தே
இடரிடைக் காத்தாய் பெற்ற இந்தியத் தாயின் மானம்.
ஏழைகள் துயரம் போக எளியவர் களைப்பு நீங்கப்
பாழ்பட உலகை வாட்டும் பகைமைகள் குறைய வென்றே
வாழிய காந்தி சாந்த வாய்மையின் வழியில் நின்று
ஊழியம் செய்யு முங்கள் உதவியை உலகம் போற்றும்.
தீனரை வதைத்து வாட்டித் தின்றுடல் சுகித்து வாழும்
மானமில் லாத வாழ்க்கை மலிந்த(து) உலகில்; மற்ற
ஞானநல் வழியில்செல்ல நடத்திடும் காந்தி சாந்தச்
சேனையில் சேர்ந்த பேரைச் செகமெலாம் சிறப்புச் செய்யும்.
தஞ்சம்வந் தவரை நம்பித் தன்னர சிழந்து நொந்துப்
பஞ்சமும் பிணியும் வாட்டப் பலதுயர் பட்டா ளேனும்
எஞ்சிய 'சாந்தி' ஞானம் இன்னமும் குறைவி லாத
வஞ்சியாம் பார தத்தாய் வாழ்த்துவள் வாரித் தூக்கி.
வள்ளுவன் குறளும் வேத வடமொழி வகுத்த யாவும்
தள்ளரும் 'சாந்தி' என்ற தனிப்பதக் கருத்தே யாகும்
கள்ளமில் லாமலெண்ணின் காந்திசொல் அதுவே; காண்போம்
எள்ளரும் அதுவே யாகும் இந்திய நாக ரீகம்.
வருகவே சத்யமூர்த்தி! வாழ்கஉன் இனத்தோ ரெல்லாம்
பெருகிநம் சாந்தி சேனை பெற்றதாய் நாட்டை மீட்கும்
அருகிலே அடையும் சொந்த அரசினை அழைத்துக் கொள்ளத்
தருகஉன் திறமை முற்றும் தமிழகம் பெருமை கொள்ளும்.
149. யோக சமாஜ குரு
பள்ளியில் மாணவனாய்ப் படிக்கும் போதே
பரமார்த்த சிந்தனைகள் பற்றிக் கொள்ளத்
துள்ளிவரும் வாலிபத்தின் துடிப்ப டக்கித்
ஏழைகள் படுந்துயர் எங்கணும் குறைந்து
போர்வெறிக் கொடுமைகள் புரிவதை மறந்து
பொய்ந்நெறி விடுத்தறம் மெய்ந்நெறி சிறந்து
சீர்தரும் கல்வியும் கலைகளும் செழிக்கச்
செம்மையும் இன்பமும் நாட்டினிற் கொழிக்கப்
பார்புகழ் உழவினைப் பணிந்திட என்றே
பண்டைய தமிழர்கள் கண்டதிப் பொங்கல்.
(வேறு)
பொங்குக பொங்கல் பொங்கிட இன்பம்
ஏரைத் தொழுதால் சீரைப் பெறலாம்
என்பதைப் புகட்டும் இங்கிதப் பொங்கல்
நன்னாள் ஆகிய இந்நாள் தொடங்கிக்
கோழை படாத மேழிச் செல்வம்
வேண்டிய மட்டிலும் வீட்டில் நிறைந்தே
இன்பம் குறையா இல்லறம் நடத்தி
மனைவியும் மக்களும் மற்றுள சுற்றமும்
குலவிட உங்கள் குடித்தனம் சிறந்து
காந்தியை எண்ணிக் கடவுளை நம்பிச்
சத்திய சாந்த சன்மார்க்க நெறியில்
பல்லாண்டு வாழ்வீர் பரமன் அருளும்.
(வேறு)
பொங்கி வழிந்திடும் அன்போடு
பொங்கல் திருநாள் கொண்டாடி
திங்கள் மும்மாரி பொழிந்திடவும்
தீமைகள் யாவும் ஒழிந்திடவும்
எங்கும் மாந்தவர்கள் எல்லாரும்
ஏதொரு குறையும் இல்லாமல்
இங்கித முற்றிட வேண்டுமென
ஈசன் மலரடி பூண்டிடுவோம்.
ஏரைத் தொழுதால் சீராகும்
என்கிற அறிவே நேராகும்
பாரில் இதனை மறந்ததனால்
பஞ்சம் என்பது நிறைந்ததுவே.
ஊரும் நாடும் உயிர்வாழ்தல்
நசைதரும் மகிழ்ச்சி கொள்ளான் ;
அல்லது கெடுதி வந்தால்
அருவருப் படைய மாட்டான் ;
தொல்லைய விருப்பி னோடு
வெறுப்பையும் துறந்தோன் என்னும்
வல்லவன் அவனே யாகும்
வலிவுள்ள அறிவு வந்தோன்.
தலைஒன்று, கால்கள் நான்கு,
ஐந்தையும் தனக்குள் ளேயே
நிலைபெற இழுத்துக் கொள்ளும்
ஆமைபோல் நினைத்த வாறே
அலைதரும் புலன்கள் ஐந்தும்
தன்னுளே அடக்கி ஆளும்
கலைதெரிந் தவனே யாகும்
கலங்கிடா அறிவு கண்டோன்.
தம்மிடம் மோகம் கொள்ளா
ஜீவரை விட்டுத் தாமே
வெம்மைய விஷய மெல்லாம்
விலகிடும் எனினும் முன்னே
அம்மனம் சுவைத்த இன்ப
ஆசையின் சபலம் தங்கும் ;
மெய்ம்மையன் பரமாத் மாவை
மேவினால் அதுவும் நீங்கும்.
குந்தியின் மகனே! கேளாய் ;
குறைவற முயலும் யோக
சிந்தனை யுடைய நல்ல
தவசியின் திடத்தைக் கூட
இந்திரி யங்கள் வேகம்
தம்முடன் இழுத்துச் செல்லும் ;
நிந்தனை சேரப் புத்தி
நிலைதடு மாற நேரும்.
அப்படிப் பட்ட அந்தப்
பொறிகளை அடக்கி வைத்துத்
தப்பற யோகம் தன்னில்
தன்மனம் ஊன்றி நிற்பாய் ;
எப்பொருள் எதையும் விட்டிங்
கென்னையே பரனாய்க் கொண்டு
வெப்புறும் புலனை வேன்றோன்
மேவுவன் நிலைத்த ஞானம்.
மனிதர்கள் விஷயம் தம்மை
மனத்தினில் மருவும் போது
பனிதரும் ஆசை தோன்றிப்
பற்றுகள் பற்றிக் கொள்ளும்.
வினைதரும் பற்றுண் டாகி
விளைந்திடும் மோகத் தாலே
சினமெனும் தீமை தோன்றிச்
சிந்தனை கெட்டுப் போகும்.
சினமது வந்த பின்னர்ச்
சிந்தனை மயக்கம் கொள்ளும்
மனமது மயங்கும் போதில்
எண்ணத்தில் மாசுண் டாகும் ;
நினைவது மாசு பட்டால்
நிச்சயம் புத்தி நாசம் ;
அனையதாய் அறிவு கெட்டால்
அதன்பின்பு அழிவே திண்ணம்.
அருப்புடைப் புலன்கள் தம்மை
அடக்கிய அறிஞன் என்போன்
இருப்புள உலகத் தோடே
இணங்கிஊ டாடி னாலும்
விருப்பொடு வெறுப்பு மின்றி
விஷயங்கள் நுகர்வோ னாகத்
திரிப்பிலன் ஆகி உள்ளத்
தெளிவுடன் அமைதி சேர்வான்.
தெளிவுடன் அமைதி சேர்ந்த
சித்தத்தில் ஒளிஉண் டாகும் ;
ஒளிபெறும் போது புத்தி
விரைவினில் உறுதி கொள்ளும் ;
அளிதரும் சாந்தி பெற்ற
அறிவுதான் நிலைப்ப தாகும் ;
இளிதரும் துன்பம் என்ப
திவனுக்கிங் கில்லை யாகும்.
யோகமில் லாத பேர்க்கே
உறுதியாம் புத்தி யில்லை ;
ஆகவே அவர்கள் ஆத்ம
சிந்தனை அடைய மாட்டார்.
சேகெனும் அந்த ஆத்ம
சிந்தனை இல்லை யானால்
பாகெனும் சாந்தம் இல்லை;
பகர்ந்திட இன்பம் ஏது?
இந்திரி யத்தின் வேக
இழுப்பினில் சிக்கிக் கொண்டு
சிந்தனை விஷயத் தோடு
பின்பற்றிச் செல்லு மாயின்
அந்தரக் கடலில், காற்றில்
அலைபடும் படகே போல
மைந்தரின் அறிவு மங்கி
மலைத்திடும் ஆசை மோத.
ஆதலால் வலிய தோளாய்!
அத்தகை விஷயம் தம்மைக்
காதலால் தொடரா வண்ணம்
பொறிகளைக் கட்டிக் காத்து
வாதனைக் கிடமில் லாமல்
வசமாக்கி வைக்கத் தக்க
சாதனை உடையோன் புத்தி
சலனமில் லாத தாகும்.
மற்றுள உயிர்கள் தூங்கும்
மடமையின் இரவே யாகும்
கற்றுள யோகி ஞானக்
கண்ணுறங் காத நேரம் ;
உற்றுள உலகத் தோர்கள்
உழல்கின்ற பகற்கா லத்தை
நற்றவ யோகி சாந்த
நள்ளிர வாகக் கொள்வான்.
ஆறுகள் பாய்ந்து தண்ணீர்
அடிக்கடிப் புகுந்திட் டாலும்
மாறுகொள் ளாது நிற்கும்
மாபெரும் கடலே போல
வீறுகொள் காமம் பாய்ந்தும்
விருப்புறா நிலையே சாந்தி ;
சாறுற விருப்ப முற்றோன்
சாந்தியை அடைய மாட்டான்.
இச்சையை ஒழித்தே எல்லா
இன்பமும் துறந்தோ னாகி
எச்சரிப் போடு காத்திங்
கிடைதடு மாறி டாமல்
நச்சிடும் மமதை கூட்டும்
'நான்என' தென்ப தற்றோன்
நிச்சயம் பரம் சாந்த
நிலையினை அடைந்தோ னாவான்.
அந்நிலை அதுவே ப்ரம்ம
ஆனந்த நிலைமை யாகும் ;
இந்நிலை பெற்றோன் பின்னர்
எதிலுமே மயங்க மாட்டான் ;
பொய்நிலை யான தேகம்
போய்விடும் போது கூடச்
செந்நிலை மாறி டாமல்
முத்தியைச் சேர்வான் திண்ணம்.
177. வாக்குமூலம்
[மகாத்மா காந்தி, விசாரணையின்போது
நீதி மன்றத்தில் கூறியதின் சாரம்]
'ஆங்கில அரசியல் அதுமிக நல்லது
ஈங்கதற் கொன்றும் இணையிலை' யென்றே
எண்ணியே இருந்த என்மன முடைந்து
மண்ணிலே அதுமிக மயக்குடைத் தென்று
கண்ணிய முடையோர் கலந்திடார் அதிலெனத்
திண்ணமாய் நம்பித் திரும்பிய காரணம்
ஈங்குள யாவரும் இந்திய ரனைவரும்
ஆங்கில மக்களும் அரசியல் அதிபதி
தாங்களும் அறியச் சத்தியம் தெரிய
ஓங்கிய கடமையில் உரைத்திட நின்றேன்.
ஆதிநாள் தென்னாப் பிரிக்கா தன்னிவில்
நீதியும் எங்கள் நிலைமையும் கண்டேன்
இந்திய னாகவே இருந்தத னாலே
சொந்தமென் றுரிமை சொல்லுதற் கொன்றும்
இந்தமா உலகில் எமக்கிலை யென்பதை
அங்கே முதலில் அறிந்திட லானேன்
என்கிற போதும் ஏகாதி பத்யம்
போய்விடும் போலப் போரில் எதிர்த்த
போயர் சமரிலும் ஜூலுவர் போரிலும்
அந்தநா டாளும் ஆங்கிலே யருக்கே
என்னா லான உதவிகள் புரிந்தேன்
சொற்பொரு ளுடலும் சோர்விலா துதவி
பற்பல விதமாய்ப் பட்டமும் பரிசும்
ஏட்டினிற் கூட என்னைப் புகழ்ந்து
காட்டியே எழுதும் கனதையும் பெற்றேன்.
ஜெர்மனி சண்டை செய்திடும் போதும்
தர்மம் இதுவெனத் தளரா துழைத்தேன்.
ஆனஎன் தேகம் அசதியுற் றிருந்தும்
சேனையும் பணமும் சேர்த்துக் கொடுத்தேன்.
சண்டையின் பின்பு தருமம் தழைக்கும்
அண்டிய எங்கள் ஆரிய நாடும்
மாநிலத் துள்ள மற்றநா டுகளெனத்
தானிமிர்ந் துயரத் தயவுசெய் வாரென
நம்பியே நானும் நாளும் உழைத்து
வெம்பினேன் எண்ணமும் வீணாய்ப் போனதே!
அதைத்தடுப் பதற்கே அலைந்திடும் நாளில்
தயங்கிய என்மனம் தைரிய மடையுமுன்
பயங்கர மாகிய பஞ்சாப் படுகொலை!
கூர்மையாம் இடியது மானமுங் குறைய
மார்பினில் விழவே மயங்கினன் ஐயோ!
இந்திய முசல்மான் மக்களுக் கென்று
மந்திரி யுரைத்த உறுதியை மறந்தும்
அன்னவர் குருவின் ஆதி பீடமாம்
மன்னிய கிலாபத் மதவிஷயத்திலும்
சொன்னதம் வாக்கினைச் சோரவிட் டார்கள் ;
எண்ணமும் இல்லை யென்பதை யுணர்ந்தேன்.
இத்தனைக் கொடுமைகள் இழைத்தனர் தெரிந்தும.
சித்தமும் அவர்க்குச் சீக்கிரம் திரும்புமென்
றாசையே கொண்டு அடக்கினேன் துக்கமே.
ஏசிய என்னை எதிர்த்தவ ராகி
எச்சரித் திட்ட என்னுடைய நண்பர்கள்
உச்சரித் திட்ட உரைகளை விடுத்தே
இந்தியர் குறைகளை எடுத்துரைத் திடவென
வந்திடும் பெரிய வாக்குடை காங்கிஸில்
அத்தினம் நானும் அமிர்த சரசினில்
ஒத்துழைப் பதையே உறுதியாய்க் கொண்டு
தாங்கியே நின்றேன் தருமந் தானென
ஏங்கினேன் ஐயோ ஏமாந் தவனாய்!
மகம்மதி யர்க்குரை வார்த்தையும் பொய்த்தது.
தகுமெனப் பஞ்சாப் தருக ணாளரை
அடிப்பது போலும் அழுவது போலும்
நடிப்பினைச் செய்து ஞாயமும் மழுப்பித்
தீங்கிழைத் தவர்க்கே உதவிசம் பளமும்
பாங்குடன் கொடுத்துப் பரிசுகள் அளித்தார்.
இதையெலாங் கண்டபின் இந்தியர்க் களித்த
உதவாக் கரையாம் சீர்திருத் தங்களும்
என்னுடை நாடு இன்னமுங் குறைந்து
குன்றிட வென்றே கொடுத்தனர் என்று
கண்டனன் நானும் கருத்திழந் தவனாய்ப்
பண்டைய இந்தப் பாரத நாட்டிடம்
அரசியல் செய்பவர்க் கன்பிலை யென்றும்
உரிமையெம் பணத்தை உறிஞ்சிட வென்றே
அறிந்திட நின்றேன் ஆங்கில ஆட்சியில்
சிறந்தஎன் தேசம் சீர்குலைந் ததுவே!
அன்றியும் இந்த ஆட்சியின் முன்னால்
மாசிலா அவனுடைச் சன்னதி மன்றினில்
ஆங்கில தேசமும் அதனுடன் எண்ணிய
பாங்கின ராகிய இந்தியர் பலரும்
உத்தரம் சொல்ல ஒதுங்கிடும் காலம்
சத்தியம் ஒருநாள் வந்திடும் சத்தியம்.
பற்பல விதமாய்ப் பார்த்துப் பார்த்தே
அற்புத உண்மையை அறிந்தனன் நானும்
அறிந்தோ அன்றோ அன்னியர் தமக்கே
பரிந்தே நிற்கும் பகருமிவ் வாட்சியை
நல்லதே யென்று நம்பினராகி
நல்லதோர் துரைகளும் நாட்டினர் பலரும்
மயங்கியே நிற்கும் மகிமையே மகிமை!
முயங்கியே அவர்கள் செய்திடும் முறையில்
ஆண்மையை யிழந்திங் கழுந்திடும் தேசம்
பான்மையை உணரார் பாவமும் அறியார்.
ஆதலா லிந்த அரசியல் மாறத்
தீதிலா வழியில் திரும்பினேன் உழைக்க.
அரசியல் செலுத்தும் அதிகா ரிகளாம்
ஒருவ ரிடத்தும்நான் உள்ளம் கசந்திலன்
மன்னவ னிடத்துள் மதிப்பிலும் குறையேன்.
என்னினும் இந்த இயல்பிலா முறைமை
இதுவரை கண்ட எல்லா முறையிலும்
இதுமிகக் கெடுதிகள் இழைத்துள தென்று
நம்பியே அதனுடன் நான்பிணக் குற்றேன்
அன்புகாட் டுவதே அக்ரம மென்றேன்.
இந்தியா விற்கும் இங்கிலாந் திற்கும்
சந்ததம் நன்மையை நாடியே நானும்
ஒத்துழை யாமையே உயர்ந்த வழியென
ஒன்றிய சுகங்கள் உயர்ந்தஇந் நாட்டில்
மனைதொறும் இருந்து மானங் காத்ததாம்
நினைவரி தாகிய ராட்டினத் தொழிலை
அழித்தனர் முற்றும் அறிந்தே யென்றிங்
கெழுதினர் தெரிந்த இங்லீஷ் காரரே.
காரண மிதனால் கணக்கிலா ஜனங்கள்
சோறுண வழியும் துணியுமில் லாமல்
நடைப்பிணம் போல நாள்கழிப் பதனைத்
தடைசொல யார்க்கும் தைரியம் வருமோ?
பட்டணக் கரையில் பகட்டியே யலைந்து
சட்டவட் டம்பல ஜம்பமாய்ப் பேசி
வீடுகள் கட்டியே விளக்குகள் ஏற்றிப்
பாடுப டாமலே பசப்பியே வாழ்ந்து
நாட்டுப் புறங்களில் நலித்திடும் ஏழைகள்
பாட்டைப் பிடுங்கியோ பிறருடன் கூடிப்
பங்குகொண் டுண்ணும் பாவமாம் வாழ்க்கையைத்
தகர்த்திட் எண்ணார் தரகராய் வாழ்வார்.
ஏழையின் பணத்தை எளிதினிற் பறிக்கவே
ஆளுமிந் நாட்டின் ஆட்சியின் முறைமை
உதவியாய் நிற்பதென் றுணரார் அவரும்
உதவியாய் நிற்பதால் உண்மையை அறியார்.
வித்தைகள் ஜாலமும் வேணது செய்தே
எத்தனைக் கணக்குகள் எடுத்துரைத் தாலும்
உண்மையாம் இதனை ஒளித்திட முடியுமோ?
திண்மையாய் நானும் செப்புவ துண்டாம்.
உலகக் கதைகளில் உவமையன் றில்லாப்
பலமிகு மிகப்பெரும் பாவத் திற்கே
ஈசனென் றொருவன் இருப்பதும் உண்மையேல்
இத்தரை யெல்லாம் இயம்பினேன் அறிய,
கடமையை யுணரும் ஒவ்வொரு குடியும்
திடமுடன் கொண்டு செய்திட வென்றும்
சட்டப் படிக்குத் தவறெனத் தெரிந்தும்
திட்டமாய் நானும் தெரிந்தே செய்தேன்.
ஆகையால் துரையே! அறைகுவன் முடிவாய்
ஆகிய இந்த அரசியல் முறைமை
சரியல வென்றும் சத்தியத் தில்நான்
நிரப ராதியே என்பதும் நினைத்தால்
ஒருவழி ஒன்றே உங்களுக் குண்டு.
மருமிகும் இந்த மார்க்கத் திருப்பது
சாலவும் தவறெனத் தகுதியி லுணர்ந்தால்
வேலையை விட்டு விலகிடல் வேண்டும்.
அன்றேல் இந்த அரசியல் முறைமை
நன்றே நானும் நாட்டிற் கிடைஞ்சல்
செய்தவ னென்றே தெளிந்திடு வீரேல்
நொய்தில் விடாமல் நூலில் இதற்குள
தண்டனை முழுவதும் தந்திடல் வேணும்
கொண்டஇந் நாட்டின் குறைதவிர்ந் திடவே.
178. நாட்டுக் கும்மி
கும்மியடி பெண்கள் கும்மியடி யுங்கள்
கொத்துச் சரப்பளி சத்தமிட
நம்மையெ லாம்பெற்ற இந்திய நாட்டின்
நன்மையைக் கோரி யடியுங்கடி!
கடவுள் வணக்கம்
புத்தனென் றும்மஹ மத்தனென் றும்ஏசு
நாதனென் றும்மது சூதனென்றும்
நித்த முதித்தருள் நீதி யளித்திடும்
நிர்மல ஜோதியைப் போற்றுங்கடி!
பிரமன் துதி
நீதி நிலைக்க நினைந்தவ னாம்அருள்
ஜோதி யுருக்கொண்ட மேனியனாம்
ஆதி யறத்தை அளித்திடு வான்எங்கள்