pm logo

Literary Works of Bharathidaasan
part VI : icai amutu
(in Tamil Script, unicode/utf-8 format)

கவிஞர் பாரதிதாசன் படைப்புகள்
பாகம் 6: இசை அமுது
(கவிதைத்தொகுப்பு)



Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext Preparation and Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
Preparation of HTML and PDF versions: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents Etext in Tamil script in Unicode encoding (utf-8 format).
This page was first put up on Jan 10, 2001

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

"icai amutu" by Bharathidaasan
புரட்சி கவிஞர் பாரதிதாசனின் படைப்புகள் - VI
(கனகசுப்பரத்னம், 1891 - 1964)
"இசை அமுது" (கவிதைத்தொகுப்பு)

Source Acknowledgement:
Icai amuthu by Bharathidasan,
Published by Pari Nilayam, 184 Broadway, Chennai 600100.
--------------
உள்ளடக்கம்
1. காதல் பகுதி (1-31)

1.01 வண்டிக்காரன்
1.02 மாடு மேய்ப்பவன்
1.03 பாவோடும் பெண்கள்
1.04 தறித்தொழிலாளி நினைவு
1.05 உழவன் பாட்டு
1.06 உழத்தி
1.07 ஆலைத் தொழிலாளி
1.08 இரும்பாலைத் தொழிலாளி
1.09 கோடாலிக்காரன்
1.10 கூடைமுறம் கட்டுவோர்
1.11 பூக்காரி
1.12 குறவர்
1.13 தபாற்காரன்
1.14 சுண்ணாம்பிடிக்கும் பெண்கள்
1.15 ஓவியக்காரன்
1.16 இன்பம்
1.17 சிறார் பொறுப்பு
1.18 தூய்மை
1.19 அன்பு
1.20 மெய்
1.21 பொறுமை
1.22 சினம்
1.23 மழை
1.24 நிலா
1.25 கறவை
1.26 சிட்டு
1.27 காக்கை
1.28 நாய்
1.29 பூனை
1.30 காப்பி
1.31 புகைச் சுருட்டு

2 . தமிழ்ப் பகுதி (32-44)
1.32 தமிழ்
1.33 தமிழ்ப் பள்ளு
1.34 நெஞ்சுக்கு நீதி
1.35 தமிழர் முரசு
1.36 எழுச்சி
1.37 எந்நாள்?
1.38 பாண்டியன்மேற் காதல்
1.39 தமிழன்
1.40 இன்பத் தமிழ்
1.41 உலகின் நோக்கம்
1.42 தமிழ் நாடு
1.43 தமிழ்
1.44 அன்றும் இன்றும்

3. பெண்கள் பகுதி (45-52)
1.45 பெற்றோர் ஆவல்
1.46 பெண் கல்வி
1.47 தந்தை பெண்ணுக்கு
1.48 தாய் : வெற்றிலை வேண்டுமா?
1.49 ஆண் பெண் நிகர்
1.50 பெண்கள் கடன்
1.51 அச்சந்தவிர், மடமை நீக்கு!
1.52 தாலாட்டு -----------
3. பெண்கள் பகுதி (45- 52)
------------

1. காதல் பகுதி

1.1 வண்டிக்காரன்

அதோ பாரடி அவரே என் கணவர்--
      அதோ பாரடி!

புதுமாட்டு வண்டி ஓட்டிப்
போகின்றார் என்னை வாட்டி!
      அதோ பாரடி!

இருப்பவர் உள்ளே முதலாளி செட்டி
ஏறுகால் மேல்தானென் சர்க்கரைக் கட்டி
தெரிய வில்லையோடி தலையில் துப்பட்டி?
சேரனே அவர்என்றால் அதில்என்ன அட்டி?
      அதோ பாரடி!

ஐந்து பணத்தினை என்னிடம் தந்தார்
அடிசாயும் முன்னே வரவு மிசைந்தார்
அந்தி வராவிட்டால் பெண்ணே இந்தா
"ஆசைமுத்தம்" என்று தந்து நடந்தார்!
      அதோ பாரடி!
-------------

1.2 மாடு மேய்ப்பவன்

மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?
வஞ்சிஎன் றழைத்தான் ஏனென்றேன் மாலை!--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

பாடொரு பாட்டென்றேன் பாடி இருந்தான்
பைந்தமிழ் கேட்டுநான் ஆடி யிருந்தேன்--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

"ஓடையில் தாமரை வாடிடும்" என்றான்
உள்ளங்கை விரித்தும் கூப்பியும் நின்றேன்
"வாடாத தாமரை உன்முகம்" என்றான்
மலர்காட்டி முகங்காட்டி வாய்பார்த்து நின்றேன்
"கூடியிருக்க" என்றான் கைகோத்து நின்றேன்
காடும் கமழ்ந்தது நான்விட் டகன்றேன்--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

காளைசொற் படிமறு நாளைக்குச் சென்றேன்
"கனிபோன்ற தென்பாங்கு பாடாயோ?" என்றான்
வேளை யாகிவிடும் என்று நவின்றேன்
விரும்பிப் பசுக்கறந்து "குடி" என்று நின்றான்
ஆளன் கொடுத்தபா லாழாக்குப் பால் என்றேன்
"அல்லடி காதற் கலப்பால் தான்" என்றான்--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?
--------------

1.3 பாவோடும் பெண்கள்

நடை ஓவியங்கள்! அடடா!
நடுவீதியிற் பாவோடும் மடவார்--
      நடை ஓவியங்கள்!

இடதுகைத் திரிவட்டம் எழிலொடு சுழலும்
ஏந்தும் வலதுகை வீசுமுள் அசையும்--
      நடை ஓவியங்கள்!

தண்டை யாடிடும் காலில்!
கெண்டை விழிபோகும் நூலில்!
கொண்டை மேலெலாம் நறுமலர்க் காடு
கொடியிடை அசையும் மிகஅழ கோடு--
      நடை ஓவியங்கள்!

உலகினுக் குடை தேவை
உடைக்கு வேண்டும் நூற்பாவே
உலவும் மங்கைமார் இதனை எண்ணுவார்
உயிரும் உணர்வுமாய்த் தொண்டு நண்ணுவார்--
      நடை ஓவியங்கள்!
-------------

1.4 தறித்தொழிலாளி நினைவு

இழை யெலாம் அவள் பூங்
குழலோ! கைத்தறியின்--       இழை

பிழைசெய்தாள் என்றுதாய் துரத்தினாள்--என்
விழியெலாம் அவளையே பொருத்தினாள்

தொழில் முடிந்ததும் உணவுண்டு--நான்
தூங்கு முன்னே எனைக் கண்டு--மங்கை,
"எழுதினீர்களா மேற்கொண்டு-- பதில்
என்தாய்க்" கென்று கேட்டதுண்டு--தேன்
பிழியும் அவளிதழ் தின்றதா பிழை?--அவள்
பின்னும் என்னிடம் நின்றதா பிழை?--       இழை

தார்கொண்ட நாடாவைக் கையினால்--நான்
தறியில் கோப்பதும் தேவை--அன்றோ?
பார்கொண்ட மானத்தை--நான்
பாதுகாப்பதும் தேவை--மிகச்
சீர்கொண்ட என்குளிர்ப் பூங்காவை--நான்
சேரவும் கேட்க வேண்டும் அம்மாவை!--       இழை
--------------

1.5 உழவன் பாட்டு

சென்று பொழுதுசாய--வரு
கின்றேனடி விரைவாக!
இன்று தவறினால் ஈரம் போகுமடி
இருட்டிப் போகுமுன் விதைக்கலாகுமடி--       சென்று

வேலி முள்சுமந்த கூலிகொடடி
ஆள் வந்தால்--நீ
வேளை ஆகுமுன் கொண்டுவா
கூழிருந்தால்!

வேலைக்காகப் பகல் போதில்
உன்னைப் பிரிந்தால்
விடியுமட்டும் யார் கேட்பர்
காதல் புரிந்தால்--       சென்று

சேவல் குரல்கிழியக் கூவல்
கேளடி கரும்பு!--நின்
ஆவல் தெரியுமடி போக
விடைகொடு! திரும்பு!

தேவையிருக்கையில் உன்றன்
நெஞ்சோ இரும்பு!
சிவலைப் பசுவுக்கோ தீனி
வைக்க விரும்பு--       சென்று.
-----------------

1.6 உழத்தி

களை யெடுக்கின்றாள் -- அதோ
கட்டழகுடையாள் சிற்றிடையாள் அதோ
      களை யெடுக்கின்றாள்!

வளவயல்தனில் மங்கைமாருடன்
இளங் கரும்பிடைச் செங்கரும்பு போல்
      களை யெடுக்கின்றாள்!

கவிழ்ந்த தாமரை
முகம் திரும்புமா?--அந்தக்
கவிதை ஓவியம்
எனை விரும்புமா?
அவிழ்ந்து வீழ்ந்த கருங்கூந்தலாம்
அருவிநீரில் எப்போது முழுகலாம்?--       களை

"செந்நெல் காப்பது
பொதுப்பணி செய்யல்!--ஆம்"
என்ற நினைவினால்
என்னருந் தையல்,
மின்னுடல் வளைய வளையல்கள் பாட
விரைவில் செங்காந்தள் விரல்வாட--       களை
--------------

1.7 ஆலைத் தொழிலாளி

ஆலையின் சங்கேநீ ஊதாயோ? மணி
ஐந்தான பின்னும் பஞ்சாலையின்...

காலைமுதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே,
வேலை செய்தாரேஎன் வீட்டை மிதிக்கவே
      ஆலையின் சங்கே...

மேலைத் திசைதனில் வெய்யிலும் சாய்ந்ததே
வீதி பார்த்திருந்தஎன் கண்ணும் ஓய்ந்ததே
மேலும் அவர்சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே
விண்ணைப் பிளக்கும்உன் தொண்டையேன் காய்ந்ததே
      ஆலையின் சங்கே...

குளிக்க ஒருநாழிகை யாகிலும் கழியும்
குந்திப்பேச இரு நாழிகை ஒழியும்
விளைத்த உணவிற்கொஞ்ச நேரமும் அழியும்
வெள்ளி முளைக்குமட்டும் காதல் தேன் பொழியும்
      ஆலையின் சங்கே...
--------------

1.8. இரும்பாலைத் தொழிலாளி

அழுக்குத் துணிக்குள்ளே அறத்தோடு பிணைந்துள்ள
அவ்வுயிரே என்றன் ஆருயிராம்!

பழுப்பேறக் காய்ச்சிய இருப்பினைத் தூக்கி
உழைப்பாலும் உணர்வாலும் உலகை உண்டாக்கி -- இவ்
      அழுக்குத் துணிக்குள்ளே...

பழக்காடும் கிளியும்போல் நானும் அத்தானும்
பகற்போதைக் கழித்தபின் அவன் கொஞ்சமேனும்
பிழைஇன்றி ஆலைக்குச் சென்றுதன் மானம்
பேண இராவேலையைக் காணாவிடிலோ ஊனம்
தழற் காட்டிலே இரும்புச் சரக்கும் உருகக்கண்டு
விழிப்போடிருந்து வேண்டும் உருப்படி செய்வதுண்டு
      அழுக்குத் துணிக்குள்ளே...

அறம்புரிவார் எய்தும் இன்பமே இன்பம்
அயலார்க்கு நலம்செய்யார் எய்துவார் துன்பம்
இறந்து படும்உடலோ ஏகிடும் முன்பும்
எழில் உள்ளம் நன்மைதீமை இனம்கண்ட பின்பும்
"அறஞ்செய் அறஞ்செய் என்றே அறிவேஎனை அழைத்தால்
இறந்தார்போல் இருப்பேனோ" என்பான்என் அத்தான்
      அழுக்குத் துணிக்குள்ளே...
---------------

1.9. கோடாலிக்காரன்

வெய்யில் தாழ வரச் சொல்லடி -- இந்தத்
தையல் சொன்ன தாகச் சொல்லடி
      வெய்யில் தாழ வரச் சொல்லடி

கையில் கோடாலி கொண்டு
கட்டை பிளப் பாரைக் கண்டு
கொய்யாக் கனியை இன்று
கொய்து போக லாகும்என்று
      வெய்யில் தாழ வரச் சொல்லடி

கூரைக்குப்பின் னால் இருக்கும் தென்னை -- அதன்
கூட இருக்கும் வளர்ந்த புன்னை
நேரினிலே காத்திருப்பேன்! என்னை
நிந்திப்பதில் என்னபயன் பின்னை?
      வெய்யில் தாழ வரச் சொல்லடி

தாய் அயலூர் சென்றுவிட்டாள்; நாளை -- சென்று
தான் வருவாள் இன்றுநல்ல வேளை
வாய் மணக்கக் கள்ளழுகும் பாளை -- நாள்
மாறிவிட்டால் ஆசை எல்லாம் தூளே
      வெய்யில் தாழ வரச் சொல்லடி.
--------------

1.10 கூடைமுறம் கட்டுவோர்

கசங்கு சீவடி பிரம்பு செற்றடி
கைவேலை முடித் திடலாம் -- நம்
பசங்கள் பசிக்கு விரைவில் சென்றால்
பழயதைக் கொடுத் திடலாம்

பிசைந்து வைத்துள மாவும் தேனும்
பீர்க்கங் கொடியின் ஓரம் -- அந்த
உசந்த பானை திறந்து கரடி
உருட்டிடும் இந்த நேரம்

கூடைமுறங்கள் முடித்து விட்டேன்
காடை இறக்கை போலே -- இனி
மூடுதட்டும் குழந்தை மூச்சிலும்
முடிப் பதுதான் வேலை

காடு வெட்டவும் உதவி யில்லாக்
கழிப்புக் கத்தியைத் தீட்டி -- நீ
ஏடுபத்தாய் மூங்கில் பிளக்க
எழுந்திரு கண் ணாட்டி

சோடியாக நா மிருவர்
கூடி உழைக்கும்போது -- நம்
ஓடும்நரம்பில் உயிர் நடப்பதை
உரைத்திட முடி யாது

பாடி நிறுத்தி நீகொடுத்திடும்
பாக்கு வெற்றிலைச் சருகும் -- அத
னோடு பார்க்கும் பார்வையும் என்
உயிரினை வந்து திருகும்.
-----------------

1.11 பூக்காரி

சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டு மென்றேன் -- நல்ல
சேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்!

பார்த்துப் பறித்த தாமரைப்பூத்
தீர்த்து விலைக்குக் கொடடி என்றேன்
பூத்த முகத் தாமரையாள்
புதுமை காட்டி மயங்கி நின்றாள்       சேர்த்து...

தேவையடி தாமரை இதழ் என்றேன்
தேனொழுகும் வாயிதழ்மலர் கின்றாள் -- ஒரு
பூவைக் காட்டிப் பேர்சொல் என்றேன்
பூவை "என்பேர் பூவை" என்றாள்
ஆவல் அற்றவன் போல் நடந்தேன்
அவள் விழிதனில் அலரி கண்டேன்       சேர்த்து...

காவல் மீறிக் கடைக்கு வந்து விழுந்து -- பலர்
கண்பட வாடிய மருக்கொழுந்து நீ!
மேவா தடி என்று சொன்னேன்
வேங்கையில் ஈ மொய்க்கா தென்றாள்
தேவைக்கு மணம் வேண்டும் என்றேன்
திருமணம் என்று தழுவி நின்றாள்.       சேர்த்து...
----------------

1.12 குறவர்

காடைக் காரக் குறவன் வந்து
பாடப் பாடக் குறத்தி தான்
கூடக் கூடப் பாடி ஆடிக்
குலுங்கக் குலுங்கச் சிரித்தனள்

சாடச் சாட ஒருபுறப் பறை
தக தக வென் றாடினாள்
போடப் போடப் புதுப் புதுக்கை
புதுப் புதுக்கண் காட்டினாள்

ஓடிச் சென்று மயிலைப் போல
ஒதுங்கி நிலையில் நிமிர்ந்துமே
மூடி மலர்க்கை திறந்து வாங்கி
முறிப்பும் முத்தமும் குறித்தனள்

தேடத் தேடக் கிடைப்ப துண்டோ
சிறுத்த இடுப்பில் நொடிப்பு கள்
ஈடு பட்டது நேரில் முத்தமிழ்
ஏழை மக்களின் வாழ்விலே!
---------

1.13 தபாற்காரன்

வருகின்றார் தபால்காரர் -- கடிதம்
தருகின்றாரோ இல்லையோ?
      வருகின்றார் தபால்காரர்!

தருகின்றார் கடிதம் எனினும் அதுஎனக்
குரியதோ என் தந்தைக் குரியதோ?
      வருகின்றார் தபால்காரர்!

வரும் அக்கடிதம் அவர் வரைந்ததோ
மாமியார் வரைந்ததோ?
திருமணாளர் வரைந்த தாயினும்
வருவதாய் இருக் குமோ இராதோ?
      வருகின்றார் தபால்காரர்!

அன்பர் அவர் வருவதாயினும்
ஆடி போக்கியோ விரைவிலோ?
இன்று போதல் நூறாண்டு போதலே
அன்றி நாளைஎன் பதுவென் சாதலே!
      வருகின்றார் தபால்காரர்!
----------------

1.14 சுண்ணாம்பிடிக்கும் பெண்கள்

மந்தையின் மாடு திரும்பையிலே -- அவள்
மாமன் வரும் அந்தி நேரத்திலே
குந்தி இருந்தவள் வீடு சென்றாள் -- அவள்
கூட இருந்தாரையும் மறந்தாள்!
தொந்தி மறைத்திட வேட்டிகட்டி -- அவன்
தூக்கி வந்தானொரு வெல்லக்கட்டி
இந்தா எனக் கொடுத் திட்டாண்டி -- அவன்
எட்டி ஒரே முத்தம் இட்டாண்டி!

கட்டி வெல்லத்தைக் கசக்கு தென்றாள் -- அவன்
கட்டாணி முத்தம் இனிக்கு தென்றாள்
தொட்டியின் நீரில் குளிக்கச் சொன்னாள் -- அவன்
தோளை அவள் ஓடித் தேய்த்து நின்றாள்
"கொட்டிய நீரில் குளிர்ச்சி உண்டோ -- இந்தக்
கோடை படுத்திடும் நாளில்?" என்றாள்
"தொட்டியின் தண்ணீர் கொதிக்கு" தென்றான் -- "நீ
தொட்ட இடத்தில் சிலிர்க்கு" தென்றான்.
-----------

1.15 ஓவியக்காரன்

ஓவியம் வரைந்தான் -- அவன் தன்
உளத்தினை வரைந்தான்!
ஒல்லிஇடை எழில் முல்லை நகை இரு
வில்லைநிகர் நுதல் செல்வியை வைத்தே
      ஓவியம் வரைந்தான்!

கூவும் குயில்தனைக் கூவா திருத்திக்
கூந்தல் சரிந்ததென் றேந்தித் திருத்தி
மாவின் வடுப்போன்ற கண்ணை வருத்தி
வஞ்சியின் நெஞ்சத்தைத் தன்பாற் பொருத்தித்
தேவை எழுதுகோல் வண்ணம் நனைத்தே
தீர்ந்தது தீர்ந்தது சாய்ந்திடேல் என்றே
      ஓவியம் வரைந்தான்!

காதலைக் கண்ணிலே வை! என்று சொல்வான்
கணவ னாகஎன்னை எண்ணென்று சொல்வான்
ஈதல்ல இவ்வாறு நில்லென்று சொல்வான்
இதழினில் மின்னலை ஏற்றென்று சொல்வான்
கோதை அடியில்தன்கை கூப்புதல் போலவும்
கொள்கை மகிழ்ந்தவள் காப்பது போலவும்
      ஓவியம் வரைந்தான்!
-----------

1.16 இன்பம்

பசி என்று வந்தால் ஒருபிடி சோறு
புசி என்று தந்துபார் அப்பா
      பசி என்று வந்தால்...

பசையற்ற உன் நெஞ்சில் இன்பம் உண்டாகும்
பாருக் குழைப்பதே மேலான போகம்
      பசி என்று வந்தால்...

அறத்தால் வருவதே இன்பம் -- அப்பா
அதுவலால் பிறவெலாம் துன்பம்!
திறத்தால் அறிந்திடுக அறம்இன்ன தென்று
செப்புநூல் அந்தந்த நாளுக்கு நன்று!
      பசி என்று வந்தால்...

மனுவின்மொழி அறமான தொருநாள் -- அதை
மாற்று நாளே தமிழர் திருநாள்!
சினம்அவா சாதிமதம் புலைநாறும் யாகம்
தீர்ப்பதே இந்நாளில் நல்லறம் ஆகும்!
      பசி என்று வந்தால்...
---------------

1.17 சிறார் பொறுப்பு

இன்று குழந்தைகள் நீங்கள் -- எனினும்
இனிஇந்த நாட்டினை ஆளப் பிறந்தீர்!
      இன்று குழந்தைகள் நீங்கள்!

நன்றாய்ப் படியுங்கள்! நாட்டின் குழந்தைகாள்!
ஒன்றாய் இருங்கள் உயர்வினை எண்ணுங்கள்!
      இன்று குழந்தைகள் நீங்கள்!

குன்றினைப்போல் உடல்வன்மை வேண்டும்!
கொடுமை தீர்க்கப்போ ராடுதல் வேண்டும்!
தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்
அன்றன்று வாழ்விற் புதுமை காணவேண்டும்
      இன்று குழந்தைகள் நீங்கள்!

பல்கலை ஆய்ந்து தொழில் பலகற்றும்,
பாட்டிற் சுவைகாணும் திறமையும் உற்றும்,
அல்லும் பகலும் இந்நாட்டுக் குழைப்பீர்கள்!
அறிவுடன் ஆண்மையைக் கூவி அழைப்பீர்கள்!
      இன்று குழந்தைகள் நீங்கள்!
-----------

1.18 தூய்மை

தூய்மை சேரடா தம்பி -- என்
சொல்லை நீபெரிதும் நம்பித்
      தூய்மை சேரடா தம்பி!

வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத்
தூய்மை உண்டாகும் மேலும்மேலும்
      தூய்மை சேரடா தம்பி!

உடையினில் தூய்மை -- உண்ணும்
உணவினில் தூய்மை -- வாழ்வின்
நடையினில் தூய்மை -- உன்றன்
நல்லுடற் றூய்மை -- சேர்ப்பின்
தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம்
தரும்நாள் ஆகும் நீஎன்றும்
      தூய்மை சேரடா தம்பி!

துகளிலா நெஞ்சில் -- சாதி
துளிப்பதும் இல்லை -- சமயப்
புகைச்சலும் இல்லை -- மற்றும்
புன்செயல் இல்லை -- தம்பி
அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய
அச்சம் போகும்! நீ எந்நாளும்
      தூய்மை சேரடா தம்பி!
--------------

1.19 அன்பு

அன்பை வளர்த்திடுவாய் -- மெய்
யன்பை வளர்த்திடுவாய்

கூடப் பிறந்த குழந்தை யிடத்தினில்
கொஞ்சுதல் அன்பாலே! உற
வாடி அம்மாவை மகிழ்ந்த மகிழ்ச்சியும்
அன்பின் திறத்தாலே!
தேடிய அப்பத்தில் கொஞ்சத்தை இன்னொரு
சின்னவனுக்குத் தர --நீ
ஓடுவ துண்டெனில் கண்டிருப்பாய் உன்
உள்ளத்திருந்த அன்பை!

கன்றையும் ஆவையும் ஒன்றாய் இணைத்தது
கருதில் அன்பன்றோ?
உன்னையும் உன்னரும் தோழர்கள் தம்மையும்
ஒட்டிய தன்பன்றோ?
சென்னையி னின்றொரு பேர்வழி வந்ததும்
சிட்டுப் பறந்ததுபோல் -- நீ
முன்னுற ஓடஉன் உள்ளம் பறந்ததும்
முற்றிலும் அன்பன்றோ?
----------------

1.20 மெய்

மெய் சொல்லல் நல்லதப்பா! தம்பி
மெய் சொல்லல் நல்லதப்பா!

கண்டதைச் சொல்லென்று சொன்னாலும் -- நீ
உண்டதைச் சொல்லென்று சொன்னாலும்,
மண்டை யுடைத்திட வந்தாலும் -- பொருள்
கொண்டுவந் துன்னிடம் தந்தாலும்
      மெய் சொல்லல் நல்லதப்பா!

பின்னவன் கெஞ்சியும் நின்றாலும் --அன்றி
முன்னவன் அஞ்சிட நின்றாலும்
மன்னவரே எதிர் நின்றாலும் -- புலி
தின்னவரே னென்று சொன்னாலும் -- நீ
      மெய் சொல்லல் நல்லதப்பா!
-------------

1.21 பொறுமை

பொறுமைதான் உன்றன் உடைமை! அதைப்
போற்றலே கடமை

பொறுமையாற் கழியும் நாளிலே
புதுவன்மை சேருமுன் தோளிலே!
      பொறுமைதான் உன்றன் உடைமை!

பொறுமையுடைய ஏழையே கொடையன்!
பொறுமையிலாதவன் கடையன்!
இறைவனே எனினும் பிழை செய்தோன்
ஏதுமற்றவனாகி நைவான்!
      பொறுமைதான் உன்றன் உடைமை!

பலமுறை பொறுப்பாய் வேறு
பழுதும் நேருமெனில் சீறு!
நிலைமை மிஞ்சுகையில் பகைவனை
நீறாக்கலே பொறுமையின் பயன்
      பொறுமைதான் உன்றன் உடைமை!
-----------

1.22 சினம்

சினத்தை யடக்குதல் வேண்டும் -- சினம்
உனக்கே கெடுதியைத் தூண்டும்!

சினத்தினை யடக்கிட முடியுமா என்று
செப்புகின்றாய் எனில்கேள் இதை நன்று

வலிவுள்ளவன் என்று கண்டு -- சினம்
வாராமலே யடக்கல் உண்டு;
வலிவிலான்மேல் அன்பு கொண்டு -- அதை
மாற்றாதான் பெரிய மண்டு!
நலியும் மொழிகளைப் பேசவும் சொல்லும்
நாக்கையும் பல்லால் நறுக்கவும் சொல்லும்
      சினத்தை யடக்குதல் வேண்டும்!

அடங்கா வெகுளிமண் மேலே -- காட்
டாறுபோய்ச் சீறுதல் போலே,
தொடர்ந்தின்னல் செய்யுமதனாலே -- அதைத்
தோன்றாமலே செய்உன் பாலே!
கடிதில் சுடுமிரும்பைத் தூக்கவும் வைக்கும்
கண்ணாடி மேசையைத் தூளாய் உடைக்கும்
      சினத்தை யடக்குதல் வேண்டும்!
---------------

1.23 மழை

மழையே மழையே வா வா -- நல்ல
வானப்புனலே வா வா! --இவ்
வையத்தமுதே வாவா!

தழையா வாழ்வும் தழைக்கவும் -- மெய்
தாங்கா வெப்பம் நீங்கவும்
உழுவாரெல்லாம் மலைபோல் எருதை
ஓட்டிப் பொன்னேர் பூட்டவும்       மழையே...

தகரப்பந்தல் தணதண வென்னத்
தாழும் குடிசை சளசள என்ன
நகரப்பெண்கள் செப்புக் குடங்கள்
நன்றெங் குங்கண கணகண வென்ன       மழையே...

ஏரி குளங்கள் வழியும்படி, நா
டெங்கும் இன்பம் பொழியும்படி, பொடி
வாரித்தூவும் பூவும் காயும்
மரமும் தழையும் நனைந்திடும்படி       மழையே...

இல்லாருக்கும், செல்வர்கள் தாமே
என்பாருக்கும், தீயவர் மற்றும்
நல்லாருக்கும் முகிலே சமமாய்
நல்கும் செல்வம் நீயேயன்றோ?       மழையே...
-------------

1.24 நிலா

முழுமை நிலா! அழகு நிலா!
முளைத்ததுவிண் மேலே --அது
பழைமையிலே புதுநினைவு
பாய்ந்தெழுந்தாற் போலே!
அழுதமுகம் சிரித்ததுபோல்
அல்லி விரித்தாற் போல் -- மேல்
சுழற்றி எறிந்த வெள்ளித்தட்டுத்
தொத்திக்கிடந் தாற்போல்
      முழுமை நிலா! அழகு நிலா!

குருட்டு விழியும் திறந்ததுபோல்
இருட்டில் வான விளக்கு! -- நம்
பொருட்டு வந்ததுபாடி ஆடிப்
பொழுது போக்கத் துவக்கு!
மரத்தின் அடியில் நிலவு வெளிச்சம்
மயிலின் தோகை விழிகள்! -- பிற
தெருக்கள் எல்லாம் குளிரும் ஒளியும்
சேர்த்து மெழுகும் வழிகள்!
      முழுமை நிலா! அழகு நிலா!
-----------

1.25 கறவை

நிறையப் பால் தரும் கறவை -- நீ
மறவேல் அதன் உறவை!
குறைவிலாது வைத் திடுக தீனியைக்
குளிப் பாட்டிவா நாளும் மேனியை!
      நிறையப் பால்தரும் கறவை!

நோய் மிகுத்து மாளும்! -- கொட்டில்
தூய்மை செய்எந் நாளும்!
தோய்வு குப்பை கூளம் -- இன்றித்
துடைக்க என் ஓக்காளம்?
வாய் மணக்கவே, உடல் மணக்கவே
வட்டில் நெய்யோடு கட்டித்தயிர் ஏடு
      நிறையப் பால்தரும் கறவை!

ஈக்கள் மொய்த்தல் தீது! -- கூடவே
எருமை கட்டொ ணாது!
மேய்க்கப் போகும் போது -- மேய்ப்போன்
விடுக பசும்புல் மீது!
நோக்கும் கன்றினும், நமது நன்மையைக்
காக்கும் தாயடா! காக்கும் தாயடா!
      நிறையப் பால்தரும் கறவை!
-------------

1.26 சிட்டு

இத்தனைச் சிறிய சிட்டு! -- நீபார்!
எத்தனை சுறுசுறுப்பு! -- தம்பி
      இத்தனைச் சிறிய சிட்டு!

குத்தின நெல்லைத் தின்றுநம் வீட்டுக்
கூரையில் குந்தி நடத்திடும் பாட்டு
      இத்தனைச் சிறிய சிட்டு!

கொத்தும் அதன்மூக்கு முல்லை அரும்பு
கொட்டை பிளந்திடத் தக்க இரும்பு!
தொத்தி இறைப்பினில் கூடொன்று கட்டும்
கூட்டை நீ கலைத் தாலது திட்டும்!
      இத்தனைச் சிறிய சிட்டு!

மல்லி பிளந்தது போன்றதன் கண்ணை
வளைத்துப் பார்த்த ளாவிடும் விண்ணை!
கொல்லையில் தன் பெட்டை அண்டையில் செல்லும்
குதித்துக் கொண்டது நன்மொழி சொல்லும்
      இத்தனைச் சிறிய சிட்டு!
-----------

1.27 காக்கை

காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை கண்டு -- நீ
வாழ்க்கை நடத்தினால் நன்மை உண்டு
      காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

ஆக்கிய சோறு கொஞ்சம் சிந்திக் கிடக்கும்! -- காக்கை
அழைத்துத்தன் இனத்தொடு குந்திப் பொறுக்கும்
      காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

காக்கையை ஒருபையன் கொன்று விட்டதால் --அதைக்
காக்கைகள் அத்தனையும் கண்டு விட்டதால்
கூக்குரல் இட்டபடி குந்தி வருந்தும்! -- அதைக்
கொன்றபையன் கண்டுதன் நெஞ்சு வருந்தும்
      காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

வரிசையில் குந்தியந்தக் காக்கைகள் எலாம் -- நல்ல
வரிசை கெட்டமக்களின் வாழ்க்கை நிலையைப்
பெருங்கேலி யாய்மிகவும் பேசியிருக்கும் -- அதன்
பின்பவைகள் தத்தமிடம் நோக்கிப் பறக்கும்
      காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...
-------------

1.28 நாய்

என்றன் நாயின் பேர் அப்பாய்! அது
முன்றில் காக்கும் சிப்பாய்!

ஒன்றும் செய்யாது விளையாடும்; பெருச்சாளியைக்
கொன்று போடும்; குலைக்கும் எதிராளியை;
      என்றன் நாயின் பேர் அப்பாய்...

அதன் இனத்தை அதுவே பகைக்கும்! -- எனில்
அதுதான் மிகவும் கெட்ட வழக்கம்! -- அது
முதல் வளர்த்தவன் போஎன்றாலும் போகாது;
மூன்றாண்டாயினும் செய்தநன்றி மறவாது!
      என்றன் நாயின் பேர் அப்பாய்...

நாய் எனக்கு நல்லதோர் நண்பன் -- அது
நான் அளித்ததை அன்புடன் உண்ணும் -- என்
வாய் அசைந்திடில் முன்னின்றே தன் வாலாட்டும்
வருத்தினாலும் முன்செய்த நன்றி பாராட்டும்
      என்றன் நாயின் பேர் அப்பாய்...
--------------

1.29 பூனை

பூனை வந்தது பூனை! -- இனிப்
போனது தயிர்ப் பானை!

தேனின் கிண்ணத்தைத் துடைக்கும் -- நெய்யைத்
திருடி உண்டபின் நக்குந்தன் கையைப்
      பூனை வந்தது பூனை!

பட்டப் பகல்தான் இருட்டும் -- அது
பானை சட்டியை உருட்டும்!
சிட்டுக் குருவியும் கோழியும் இன்னும்
சின்ன உயிரையும் வஞ்சித்துத் தின்னும்
      பூனை வந்தது பூனை!

எலிகொல்லப் பூனை தோது -- மெய்தான்
எங்கள் வீட்டில் எலி ஏது?
தலை தெரியாத குப்பை இருட்டறை
தன்னிலன்றோ எலிக்குண்டு திருட்டறை!
      பூனை வந்தது பூனை!
-----------

1.30 காப்பி

காப்பி எதற்காக நெஞ்சே?
காப்பி எதற்காக?

கையினில் சுக்குடன் மல்லி இருக்கையில்
      காப்பி எதற்காக?

தீப்பட்ட மெய்யும் சிலிர்க்க இளிப்புக்கு
வாய்ப்புற்ற தெங்கு வளர்ந்த தென்னாட்டினில்
      காப்பி எதற்காக?

ஆட்பட்டாய் சாதி சமயங்களுக்கே
அடிமை வியந்தாய் ஆள்வோர் களிக்கப்
பூப்போட்ட மேல்நாட்டுச் சிப்பம் வியந்தாய்
போதாக் குறைக்கிங்குத் தீதாய் விளைந்திட்ட
      காப்பி எதற்காக?

திரும்பிய பக்கமெல் லாம்மேல் வளர்ந்தும்
சிவந்து தித்திப்பைச் சுமந்து வளைந்தும்
கரும்பு விளைந்திடும் இந்நாட்டு மண்ணும்
கசப்பேறச் செய்திடும் சுவையே இலாத
      காப்பி எதற்காக?
-----------

1.31 புகைச் சுருட்டு
புகைச் சுருட்டால் இளமை பறிபோகும்
பொல்லாங் குண்டாகும்
      புகைச் சுருட்டால்!

முகமும் உதடும் கரிந்துபோகும்
முறுக்கு மீசையும் எரிந்து போகும்
      புகைச் சுருட்டால்!

மூச்சுக் கருவிகள் முற்றும் நோய்ஏறும் -- பிள்ளை
முத்தம் தருநே ரத்தில் வாய் நாறும்
ஓய்ச்சல் ஒழிவில் லாதிருமல் சீறும் -- நல்
ஊரோ உன்னைச் சீ என்றே கூறும்
பேச்சுக் கிடையில் பிடிக்கச் சொல்லும்
பெரியார் நெஞ்சம் துடிக்கச் சொல்லும்
      புகைச் சுருட்டால்!

காசுபணத்தால் தீச்செயலை வாங்கிப் -- பின்
கைவிட எண்ணினும் முடியாமல் ஏங்கி
ஏசிக்கொண்டே விரலிடையில் தாங்கி -- நீ
எரிமலை ஆகா திருதுன்பம் நீங்கி
மாசில்லாத செந்தமிழ் நாடு
வறுமை நோய்பெற ஏன் இக்கேடு?
      புகைச் சுருட்டால்!
----------

2. தமிழ்ப் பகுதி

1.32 தமிழ்

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!
-------------

1.33 தமிழ்ப் பள்ளு

ஆடுவமே பள்ளுப் பாடுவமே! -- தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே -- ஆடுவமே!

கோடுயர் வேங்கடக் குன்றமுதல் -- நல்ல
குமரிமட்டும் தமிழர் கோலங் கண்டே
      நாம் -- ஆடுவமே...

மானிடம் என்னுமோர் ஆதிப்பயிர் -- தமிழ்
மக்களென் றேகுதித் தாடுவமே!
கானிடை வாழ்ந்திட்ட மனிதர்க்கெலாம் -- நல்ல
கதியினைக் காட்டினர் தமிழ ரென்றே
      நாம் -- ஆடுவமே...

மூலமென்றே சொல்லல் முத் தமிழாம் -- புவி
மூர்க்கம் தவிர்த்ததும் அப் புத்தமுதாம்!
ஞாலமெலாம் தமிழ், தமிழர்களே -- புவி
நாம் எனவே குதித் தாடுவமே!
      நாம் -- ஆடுவமே...

வானிடை மிதந்திடும் தென்றலிலே -- மணி
மாடங்கள் கூடங்கள் மீதினிலே,
தேனிடை ஊறிய செம்பவழ -- இதழ்ச்
சேயிழை யாரொடும் ஆடுவமே!
      நாம் -- ஆடுவமே...

கவிதைகள், காவியம், உயர்கலைகள் -- உளம்
கவர்ந்திடும் சிற்பமும் சிறந்தனவாம்
குவிகின்ற பொன்பொருள் செந்நெலெலாம் -- இங்குக்
குறையில வாம் என் றாடுவமே!
      நாம் -- ஆடுவமே...
----------

1.34 நெஞ்சுக்கு நீதி

சூதும் வாதும் நிறைந்த பூதலமீது நல்லார்
ஓதும்வழி நடந்தால் யாதும் துயரமில்லை
ஏதும் சந்தேகம் உளதோ -- நெஞ்சே இதில்
தீது சிறிதும் உளதோ?

சாதி சமயக்கடை வீதியின் அப்பால்ஒரு
சோதி அறிவிற் சரி நீதி விளங்கும் அதைக்
காதினில் தினம் கேட்பாய் -- நெஞ்சே இந்த
மேதினி தனை மீட்பாய்!

கூழுமில்லாது நாட்கள் ஏழும்பசித் துன்பமே
சூழும்படியே பிறர் தாழும்நிலை தவிர்க்க
வாழும் முறைமை சொல்வார் -- நெஞ்சே நல்லார்
பாழும் இருளைக் கொல்வார்!

மேழி உழவன் பாட்டும், கோழியின் ஆர்ப்பும் கேட்டாய்
ஆழியிற் கதிர்ஏறும் நாழிகை யாயிற்றே
வாழிய மனப்பாவாய் -- அறிஞர் காட்டும்
ஊழியம் செயப் போவாய்!
------------

1.35 தமிழர் முரசு

உயர்வென்று கொட்டுக முரசே -- நல்ல
உண்மைத் தமிழர்கள் வாழ்வு!
அயர்வில்லை அச்சமிங் கில்லை -- புவி
ஆளப் பிறந்தவன் தமிழன்.
      உயர்வென்று கொட்டுக முரசே!

அயல் என்று கொட்டுக முரசே!-- உற
வான திராவிடர் அல்லார்!
துயர் செய்ய எண்ணிடும் பகைவர் -- திறம்
தூள் என்று கொட்டுக முரசே!
      உயர்வென்று கொட்டுக முரசே!

அறிவுள்ள திராவிடர் நாட்டில் -- சற்றும்
ஆண்மை யில்லாதவர் வந்து
நமர்பசி கொள்ள நம்சோற்றை -- உண்ண
நாக்கைக் குழைப்ப துணர்ந்தோம்.
      உயர்வென்று கொட்டுக முரசே!

தமிழ்நாடு தமிழருக் கென்றே -- இந்தச்
சகத்தில் முழக்கிடு முரசே!
நமைவென்ற நாட்டினர் இல்லை -- இதை
நாற்றிசை முற்றும் முழக்கு!
      உயர்வென்று கொட்டுக முரசே!
-----------

1.36 எழுச்சி

தமிழனே இது கேளாய் -- உன்பால்
சாற்ற நினைத்தேன் பல நாளாய்!

கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு
காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு!
நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு
நம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு!
      தமிழனே இது கேளாய்

தனித்தியங் கும்தன்மை தமிழினுக் குண்டு;
தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு!
கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு
காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு.
      தமிழனே இது கேளாய்

வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்
நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
நாமுணர்ந்தோம்; இந்நாள் அவரஞ்சி விழித்தார்.
      தமிழனே இது கேளாய்
---------

1.37 எந்நாள்?

அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?
அந்த வாழ்வுதான்

இந்த மாநிலம் முழுதாண் டிருந்தார்
இணையின்றி வாழ்ந்தார் தமிழ்நாட்டு வேந்தர்
      அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?

ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்;
ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்!
புலி, வில், கயல் கொடி மூன்றினால்
புது வானமெங்கும் எழில் மேவிடும்
      அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?

குறைவற்ற செல்வம், வாழ்வில் இன்பவாழ்வு
கொண்ட தமிழனுள்ளம் கண்ட தமிழிசை.
பிற மாந்தர்க்கும் உயி ரானதே
பெறலான பேறு சிறி தல்லவே!
      அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?
-------------

1.38 பாண்டியன்மேற் காதல்

பாண்டியன் என் சொல்லைத் தாண்டிப் போனாண்டி,
பாண்டியன் என் சொல்லை...

ஈண்டு மயலில்நான் தூண்டிலில் மீனாய்
மாண்டிட விடுத்தே வேண்டிட வேண்டிட,
      பாண்டியன் என் சொல்லை...

தமிழிசைப் பேச்சும், செங்கோலோச்சும்;
தடக்கை வீச்சும், காதலைப் பாய்ச்சும்,
இமைப்பினில் ஓடி அவனைத் தேடி
என்னகம் நாடி வாடிபோடி
      பாண்டியன் என் சொல்லை...

பிரிந்திடும் போது நெஞ்சு பொறாது;
வரும்போது பேசா திருக்க ஒண்ணாது
எரிந்திடும் சினத்தில் எதிர்வரு வானேல்
என்னுயிர் தாவிடும் அன்னவன் மேல்
      பாண்டியன் என் சொல்லை...
----------

1.39 தமிழன்

தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை!
தமிழகமேல் ஆணை!
தூயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான்
தோழரே உரைக்கின்றேன்:

நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்,
ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்.

தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன்
தாய்தடுத் தாலும் விடேன்!
எமைநத்து வாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்!

"தமக்கொரு தீமை" என்று நற்றமிழர்
எனைஅழைத்திடில் தாவி
இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான்
இனிதாம் என் ஆவி!

மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்தஎன் மற வேந்தர்
பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர்
புலிநிகர் தமிழ் மாந்தர்!

ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்
குவப்புடன் நான் சேர்ப்பேன்!
-----------

1.40 இன்பத் தமிழ்

இன்பந் தருந்தமிழில் அன்பு பிறந்ததுண்டு;
துன்பம் இனியு முண்டோ
சொல் சொல் சொல் பகையே!
முன்பு துருப்பிடித்தி ருந்த படைக்கலமாம்
முத்தமிழ் ஒளி அறிந்து
செல் செல் செல் பகையே!
      இன்பந் தருந்தமிழில்...

தெள்ளு தமிழில்இசைத் தேனைப் பிழிந்தெடுத்துத்
தின்னும் தமிழ் மறவர்
யாம் யாம் யாம் பகையே!
துள்ளும் பகைமுடித்துக் கூத்திடுவோம் தமிழர்
கொள்கை நிறைவ டைந்து
போம் போம் போம் பகையே!
      இன்பந் தருந்தமிழில்...
-----------

1.41 உலகின் நோக்கம்

உவகை உவகை உலகத்தாயின் கூத்து! -- வந்து
குவியுதடா நெஞ்சில்
      உவகை உவகை!

எவையும் தன்னுள் ஆக்கிய பெருவெளி
எங்கும் அடடே தாயின் பேரொளி!
      உவகை உவகை!

அவிழும் கூந்தல் வானக் கருமுகிலாய் -- இடையினின்
றலையும் பூந்துகில் பெருவெளி எங்கும் போம்
தவழப் புதுநகை மின்னித் துலங்கும்
தாய்நின் றாடிய அடிஇடி முழங்கும்
      உவகை உவகை!

தொடுநீள் வானப் பெருவில் ஒருகையில் -- பெரும்புறம்
தூளா கிடவரு கதிர்வேல் ஒருகையில்
அடுநீள் விழியிற் கனலைப் பெருக்கி
ஆடும் திறல்கண் டோடும் பகைதான்
      உவகை உவகை!

அகலொளி விளக்கு நிலவினில் அவள்ஆடும் -- ஆடிநின்
றந்தமி ழின்பத் தென்பாங்கிற் பாடும்
துகளறு விண்மீன் துளிகள் பறக்கத்
துடிஇடை நெளியும் துணைவிழி உலவும்
      உவகை உவகை!

அறிவே உயிராய் அதுவே அவளாகி -- மற்றுள
அறமென்ப வெலாம் அழியும் எனவோதிக்
குறியும் செயலும் ஒன்றாய் இயலக்
கூத்தாடுந் தாய் பார்த்திடு தோறும்
      உவகை உவகை!

மடமைப் பகைமையும் சாகப் பின்வருமோர் --கொடிதாம்
வறுமைத் தீயும் அலறிப் புறமேக
அடிமைத் தனமே துகள் துகளாக
ஆடுந் தாயவள் நாளும் வாழிய!
      உவகை உவகை!
----------

1.42 தமிழ் நாடு

சேரன் செங்குட்டு வன்பிறந்த
வீரம் செறிந்த நாடிதன்றோ?
      சேரன் செங்குட்டுவன்...

பாரோர் புகழ் தமிழ்ச் சேயே
பகை யஞ்சிடும் தீயே
நேரில் உன்றன் நிலையை நீயே
நினைந்து பார்ப் பாயே.
      சேரன் செங்குட்டுவன்...

பண்டி ருந்த தமிழர் மேன்மை
பழுதாக முழு துமே
கண்டி ருந்தும் குகையிற் புலிபோல்
கண்ணு றக்கம் ஏனோ?
      சேரன் செங்குட்டுவன்...
-------------

1.43 தமிழ்

வெண்ணி லாவும் வானும் போலே
வீரனும்கூர் வாளும் போலே
      வெண்ணிலாவும் வானும் போலே!

வண்ணப் பூவும் மணமும் போலே
மகர யாழும் இசையும் போலே
கண்ணும் ஒளியும் போலே எனது
கன்னல் தமிழும் நானும் அல்லவோ?
      வெண்ணிலாவும் வானும் போலே!

வையகமே உய்யு மாறு
வாய்த்த தமிழ் என்அரும் பேறு!
துய்யதான சங்க மென்னும்
தொட்டிலில் வளர்ந்த பிள்ளை
(தம்) கையிலே வேலேந்தி இந்தக்
கடல் உலகாள் மூவேந்தர்
கருத் தேந்திக் காத்தார்; அந்தக்
கன்னல் தமிழும் நானும் நல்ல
      வெண்ணிலாவும் வானும் போலே!
--------

1.44 அன்றும் இன்றும்

பண்டு தமிழ்ச் சங்கத்தை
உண்டு பண்ணிய மன்னன் சீரெல்லாம்,
விண்டு புகழ்ந்து பாடி
இன்னும் வியக்கின்றார் இப் பாரெல்லாம்.

அண்டும் புலவர்க் கெல்லாம்
அந்நாள் மன்னர் கொடுத்த கொடைதானே,
தண்டமிழ் இந்நாள் மட்டும்
சாகாமைக்கே அடிப்படை மானே!

புலவர் நினைப்பை யெல்லாம்
பொன் னெழுத்தால் பதித்து நூலாக்கி,
நலம் செய்தா ரடிமானே
நம் தமிழ்வேந்தர் நம்மை மேலாக்கி!

இலை என்று புலவர்க்கோ
எடை யின்றிப் பொன்தந்தார் மூவேந்தர்,
கலை தந்தார் நமக் கெல்லாம்
அதனால் இன்றைக்கு நாம்தமிழ் மாந்தர்!
-----------

3. பெண்கள் பகுதி

1.45 பெற்றோர் ஆவல்

துன்பம் நேர்கையில் யாழ்எ டுத்துநீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
லன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா?
      துன்பம்...


வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? -- கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா?
      துன்பம்...

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது -- யாம்
அறிகி லாத போது -- தமிழ்
இறைவ னாரின்திருக் குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா?
      துன்பம்...

புறம்இ தென்றும்நல் லகம்இ தென்றுமே
புலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் -- நல்
திறமை காட்டிஉனை ஈன்ற எம்உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? -- தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா?
      துன்பம்...
----------

1.46 பெண் கல்வி பெண்களால் முன்னேறக் கூடும் -- நம்
வண் தமிழ் நாடும்எந் நாடும்!
கண்களால் வழிகான முடிவதைப் போலே
கால்களால் முன்னேற முடிவதைப் போலே
      பெண்களால் முன்னேறக் கூடும்!

படியாத பெண்ணினால் தீமை! -- என்ன
பயன்விளைப் பாளந்த ஊமை?
நெடுந்தமிழ் நாடெனும் செல்வி -- நல்ல
நிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி!
      பெண்களால் முன்னேறக் கூடும்!

பெற்றநல் தந்தைதாய் மாரே -- நும்
பெண்களைக் கற்கவைப் பீரே!
இற்றைநாள் பெண்கல்வி யாலே -- முன்
னேறவேண் டும்வைய மேலே!
      பெண்களால் முன்னேறக் கூடும்!
--------------

1.47 தந்தை பெண்ணுக்கு

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் -- பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை!
சிலைபோல ஏனங்கு நின்றாய்? -- நீ
சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?
விலைபோட்டு வாங்கவா முடியும்? -- கல்வி
வேளைதோ றும்கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? -- நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!

படியாத பெண்ணா யிருந்தால் -- கேலி
பண்ணுவார் என்னைஇவ் வூரார் தெரிந்தால்!
கடிகாரம் ஓடுமுன் ஓடு! -- என்
கண்ணல்ல? அண்டைவீட் டுப்பெண்க ளோடு!
கடிதாய் இருக்குமிப் போது -- கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது!
கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு -- பெண்
கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு!
-------------

1.48 தாய் : வெற்றிலை வேண்டுமா?

ஒருவேளை அல்ல திருவேளை
வெற்றிலை போடு! --போடா
தொதுக்கலும் நல்லஏற் பாடு!
சுரந்திட்ட எச்சிலை
வாயினில் தேக்குதல் போலே -- வேறு
தூய்மையில் லாச்செயல்
கண்டதில் லைவைய மேலே
      ஒருவேளை...

கரியாகுமே உதடு! கோவைக்
கனியைநீ காப்பதும் தேவை!
தெரியாத ஆடவர்
வாய்நிறைய எச்சிலின் சேறு
தேக்கியே திரிவார்கள்
அவருக்கும் நீஇதைக் கூறு!
      ஒருவேளை...

பூவைமார் 'நல்லிதழை' நல்ல
புன்னகை சிந்திடும் 'பல்லை'
நாவினால் யாம்சொல்வ தில்லை -- அவை
நன்மணத் தாமரை! முல்லை!
பாவைமார் வாயினில்
இயல்பான மணமுண்டு பெண்ணே!
பாக்குவெற் றிலைதனை
நீக்கலே மிகநன்று கண்ணே!
      ஒருவேளை...
------

1.49 ஆண் பெண் நிகர்

ஆண்உயர் வென்பதும் பெண்உயர் வென்பதும்
நீணிலத் தெங்கணும் இல்லை
வாணிகம் செய்யலாம் பெண்கள்! -- நல்
வானூர்தி ஓட்டலாம் பெண்கள்!
      ஆணுயர் வென்பதும்...

ஏணை அசைத்தலும் கூடும் -- அதை
யார் அசைத் தாலுமே ஆடும்!
வீணை மிழற்றலும் கூடும் -- அது
மெல்லியின் விரலுக்கா வாடும்?
நாணமும் அச்சமும் வேண்டும் -- எனில்
ஆணுக்கும் பெண்ணுக்கும் வேண்டும்.
      ஆணுயர் வென்பதும்...

சேயிழை மார்நெஞ்ச மீது -- நாம்
சீறுபுலி யைக்காணும் போது
தீயதோர் நிலைமைஇங் கேது? -- நம்
தென்னாட்டின் அடிமைநில் லாது.
தூயராய்த் தொண்டாற்ற வேண்டும் -- பல
தொழிற்கல்வி யுங்கற்க வேண்டும்.
      ஆணுயர் வென்பதும்...
---------

1.50 பெண்கள் கடன்

மேகலையும் நற்சிலம்பும் பூண்டு -- பெண்ணே
வீழ்ச்சியும் சூழ்ச்சியும் தாண்டு!
போகவில்லை அகம்புறமும், நாலிரண்டும் நெஞ்சம்
புகுந்தோறும் புகுந்தோறும் அறம் எதிரிற் கொஞ்சும்
      மேகலையும் நற்சிலம்பும்...

தமிழ்காத்து நாட்டினைக் காப்பாய் -- பெண்ணே
தமிழரின் மேன்மையைக் காப்பாய்
தமிழகம் நம்மதென் றார்ப்பாய்
தடையினைக் காலினால் தேய்ப்பாய்!
கமழும் சோலையும், ஆறும் நற்குன்றமும் கொண்டாய்
தமிழர் மரபினை உன்னுயிர் என்பதைக் கண்டாய்.
      மேகலையும் நற்சிலம்பும்...

மூவேந்தர் கொடி கண்ட வானம் -- இன்று
முற்றிலும் கான்கிலாய் ஏனும்
ஓஓஎ னப் பகை தானும்
ஓடவே காத் திடுக மானம்
காவெலாம் தென்றலும் பூக்களும் விளையாடும் நாட்டில்
கதலியும் செந்நெலும் பயனைப் புரிந்தமணி வீட்டில்.
      மேகலையும் நற்சிலம்பும்...
----------

1.51 அச்சந்தவிர், மடமை நீக்கு!

அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்
அழகிய தமிழ் நாட்டின் கண்கள்
உச்சி இருட்டினில் பேய்வந்த தாக
உளறினால் அச்சமா? பேய் என்ப துண்டா?
      அச்சமும் மடமையும்...

முச்சந்திக் காத்தானும் உண்டா? -- இதை
முணுமுணுப்பது நேரில் கண்டா?
பச்சைப் புளுகெலாம் மெய்யாக நம்பிப்
பல்பொருள் இழப்பார்கள் மடமை விரும்பி!
      அச்சமும் மடமையும்...

கள்ளுண்ணும் ஆத்தாளும் ஏது? -- மிகு
கடியசா ராயமுனி ஏது?
விள்ளும்வை சூரிதான் மாரியாத் தாளாம்;
வேளைதோறும் படையல் வேண்டும்என் பாளாம்.
      அச்சமும் மடமையும்...

மடமைதான் அச்சத்தின் வேராம் -- அந்த
மடமையால் விளைவதே போராம்!
மடமையும் அறமுநல் லொழுக்கமும் வேண்டும்
கல்விவேண் டும்அறிவு கேள்வியும் வேண்டும்.
      அச்சமும் மடமையும்...
----------

1.52 தாலாட்டு

ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ!

சீரோடு பூத்திருந்த செந்தாமரை மீது
நேரோடி மொய்த்துலவு நீலமணி வண்டுதனைச்
செவ்விதழால் தான்மூடும் சேதிபோல் உன்விழியை
அவ்விமையால் மூடியே அன்புடையாய் நீயுறங்கு!

கன்னங் கறேலென்று காடுபட்ட மேகத்தில்
மின்னி வெளிப்பட்ட விண்மீன்போல் உன்றன்விழி
சின்ன இமையைத் திறந்ததேன்? நீயுறங்கு!
கன்னலின் சாறே கனிச்சாறே நீயுறங்கு!

குத்துண்ட கண்ணாடி கொண்டபல வீரர்கள்போல்
துத்திக்காய் போலச் சுடர்முகத்தை நீசுருக்கி
ஏனழுதாய் என்றன் இசைப்பாட்டே கண்ணுறங்கு!
வான்நழுவி வந்த வளர்பிறையே கண்ணுறங்கு!

கன்னம்பூ ரித்துக் கனியுதடு மின்உதிர்த்துச்
சின்னவிழி பூத்துச் சிரித்ததென்ன செல்வமே?
அன்னைமுகம் வெண்ணிலவே ஆனாலும் உன்விழியைச்
சின்னதொரு செவ்வல்லி ஆக்காமல் நீயுறங்கு!

நெற்றிக்கு மேலேயுன் நீலவிழியைச் செலுத்திக்
கற்றார்போல் என்ன கருதுகின்றாய்? நீகேட்டால்
ஆனை அடிபோல் அதிரசத்தைச் சுட்டடுக்கித்
தேனில் துவைத்தெடுத்துத் தின்னென்று தாரேனோ?

கொட்டித் தும்பைப்பூக் குவித்ததுபோல் உன்னெதிரில்
பிட்டுநறு நெய்யில் பிசைந்துவைக்க மாட்டேனா?
குப்பைமணக்கக் குடித்தெருவெல் லாம் மணக்க
அப்பம் நிலாப்போல் அடுக்கிவைக்க மாட்டேனா?

மீன்வலைசேந் தும்கயிற்றை வேய்ந்த வளையம்போல்
தேன்குழல்தான் நான்பிழிந்து தின்னத் தாரேனா?
விழுந்துபடும் செங்கதிரை வேல் துளைத்ததைப்போல்
உழுந்துவடை நெய்யழுக உண்ணென்று தாரேனா?

தாழையின் முள்போன்ற தகுசீ ரகச்சம்பா
ஆழ உரலில் இடித்த அவலைக்
கொதிக்குநெய் தன்னில்தான் கொட்டிப் பொறித்துப்
பதக்குக் கொருபதக்காய்ப் பாகும் பருப்புமிட்டே

ஏலத்தைத் தூவி எதிர் வைக்கமாட்டேனா?
ஞாலத்தொளியே நவிலுவதை இன்னும் கேள்:
செம்பொன்னை மேற்பூசித் தேனைச் சுளையாக்கிக்
கொம்பில் பழுத்தநறுங் கொய்யாப் பழமும்

செதில்அறுத்தால் கொப்பரையில் தேன்நிறைந்த தைப்போல்
எதிர்த்தோன்றும் மாம்பழமும் இன்பப் பலாப்பழமும்
வேண்டுமென்றால் உன்னெதிரில் மேன்மேற் குவிந்துவிடும்.
பாண்டியனார் நன்மரபின் பச்சைத் தமிழே!

நெருங்க உறவுனக்கு நீட்டாண்மைக் காரர்
அறஞ்சிறந்த பல்கோடி ஆன தமிழருண்டே!
எட்டும் உறவோர்கள் எண்ணறு திராவிடர்கள்
"வெட்டிவா"வென் றுரைத்தால் கட்டிவரும் வீரர்அவர்

என்ன குறைச்சல் எதனால் மனத்தாங்கல்?
முன்னைத் தமிழர் முடிபுனைந்து ஞாலத்தை
ஓர்குடைக்கீழ் ஆண்ட உவகை உனக்குண்டு!
சேரனார் சோழனார் சேர்ந்தபுகழ் உன்புகழே!

ஓவியக் கரைகண்டார் உண்மைநெறி தாம்வகுத்தார்
காவிய சிற்பத்தில் கவிதையினில் கைகாரர்
உன்னினத்தார் என்றால் உனக்கின்னும் வேண்டுவதென்?
பொன்னில் துலங்குகின்ற புத்தொளியே கண்ணுறங்கு!

கற்சுவரை மோதுகின்ற கட்டித்தயிரா, நற்
பொற்குடத்தில் வெண்ணெய்தரும் புத்துருக்கு நெய்யா,நல்
ஆனைப் பசுக்கள் அழகான வெண்ணிலவைப்
போல்நிறைந்த பாலைப் புளியக்கொட்டை தான்மிதக்கும்

இன்பநறும் பாலா, என்னஇல்லை? கண்ணுறங்காய்!
அன்பில் விளைந்தஎன் ஆறுயிரே கண்ணுறங்கு!
காவிரியின் பாதாளக் காலின் சிலம்பொலியும்
பூவிரியப் பாடும் புதிய திருப்பாட்டும்

கேட்ட உழவர் கிடுகிடென நல்லவிழாக்
கூட்டி மகிழ்ச்சி குதிகொள்ளத் தோளில்
அலுப்பை அகற்றி அழகுவான் வில்போல்
கலப்பை எடுத்துக் கனஎருதை முன்னடத்திப்

பஞ்சம் தலைகாட்டப் பாராப் படைமன்னர்,
நெஞ்சம் அயராமல் நிலத்தை உழுதிடுவார்.
வித்துநெல் வித்தி விரியும் களையெடுத்துக்
கொத்துநெல் முற்றித் தலைசாய்ந்த கோலத்தை

மாற்றி யடித்து மறுகோலம் செய்தநெல்லைத்
தூற்றிக் குவித்துத் துறைதோறும் பொன்மலைகள்
கோலம் புரியும் குளிர்நாடும் உன்னதுவே!
ஞாலம் புகழும் நகைமுத்தோய் கண்ணுறங்கு!

செம்புழுக்கல் பாலோடு பொங்கச் செழுந்தமிழர்
கொம்புத்தேன் பெய்து குளிர்முக் கனிச்சுளையோ
டள்ளூற அள்ளி முழங்கையால் நெய்யழுக
உள்ளநாள் உண்ணும் உயர்நாடும் உன்னதுவே!

கோட்டுப்பூ நல்ல கொடிப்பூ நிலநீர்ப்பூ
நாட்டத்து வண்டெல்லாம் நல்லஇசை பாய்ச்சக்
கொத்தும் மரங்கொத்தி, தாளங் குறித்துவரத்
தத்துபுனல் தாவிக் கரையில் முழாமுழக்க

மின்னும்பசுமை விரிதழைப்பூம் பந்தலிலே
பன்னும் படம்விரித்துப் பச்சை மயிலாடுவதும்,
பிள்ளைக் கருங்குயிலோ பின்பாட்டுப் பாடுவதும்
கொள்ளை மகிழ்ச்சித் தமிழ்நாடு கொண்டாய்நீ

குப்பையெலாம் மாணிக்கக் கோவை, கொடுந்தூம்பிற்
கப்பும் கழுவுடையில் கண்மணியும் பொன்மணியும்!
ஆடும் குளிர்புனலோ அத்தனையும் பன்னீராம்!
சூடாமணி வரிசை தூண்டாச் சரவிளக்காம்!

எப்போதும் தட்டார் இழைக்கும் மணியிழையில்
கொப்பொன்றே கோடிபெறும் கொண்டைப்பூ என்பெறுமோ?
ஐந்தாறு வெண்ணிலவும் ஆறேழு செங்கதிரும்
வந்தாலும் நாணும் வயிரத் திருகாணி

ஒன்றுக்கே வையத்தை ஒப்படைக்க வேண்டுமெனில்
உன்மார்பின் தொங்கலுக்கு மூன்றுலகு போதுமா?
மின்காய்த்த வண்ணம் மிகுமணிக ளோடுபசும்
பொன்காய்த்த பூங்கொடியா ரோடுதம் காதலர்கள்

எண்ண மொன்றாகியே இல்லறத் தேர்தன்னைக்
கண்ணும் கருத்தும் கவருமோர் அன்புநகர்,
ஆரும்நிகர் யார்க்கும் அனைத்தும் சரிபங்கென்
றோரும்நகர், நோக்கி ஓடுந்தமிழ் நாடு

நின்நாடு! செல்வம் நிறைநாடு கண்ணுறங்கு
பொன்னான தொட்டிலில் இப்போது!
--------
"இசை அமுது" முற்றும்.

This webpage was last revised on 24 August 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).