kalingkattup paraNi of CeyangkoNTAr
(in Tamil Script, unicode format)

சயங்கொண்டார் இயற்றிய
கலிங்கத்துப் பரணி




Etext preparation : Mr. P.R.Sivakumar, Toronto, ON, Canada
Proof-reading: Mr. P.K.Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
Source acknowledgement: Suvadugal Pathippagam, Herslebs GT-43, 0578 Oslo 5, Norway)

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணி
kalingkattup paraNi of CeyangkoNTAr

உள்ளுறை

1. கடவுள் வாழ்த்து 20 ( 1 - 20)
2. கடை திறப்பு 54 ( 21 - 74)
3. காடு பாடியது 22 ( 75 - 96)
4. கோயில் பாடியது 24 ( 97 - 120)
5. தேவியைப் பாடியது 13 (121 - 133)
6. பேய்களைப் பாடியது 19 (134 - 152)
7 இந்திர சாலம் 25 (153 - 177)
8. இராச பாரம்பரியம் 34 (178 - 211)
9. பேய் முறைப்பாடு 20 (212 - 231)
10. அவதாரம் 80 (232 - 311)
11. காளிக்குக் கூளி கூறியது 92 (312 - 403)
12. போர் பாடியது 68 (404 - 471)
13. களம் பாடியது 125 (472 - 596)

சயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணி

1. கடவுள் வாழ்த்து
உமாபதி துதி

1.
புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன்
தொழில்காட்டப் புவன வாழ்க்கைச்
செயல்வண்ண நிலைநிறுத்த மலைமகளைப்
புணர்ந்தவனைச் சிந்தை செய்வாம். 1

2.
அருமறையி னெறிகாட்ட வயன்பயந்த
நிலமகளை யண்டங் காக்கும்
உரிமையினிற் கைப்பிடித்த வுபயகுலோத்
தமனபயன் வாழ்க வென்றே. 2

திருமால் துதி

3.
ஒருவயிற்றிற் பிறவாது பிறந்தருளி யுலகொடுக்குந்
திருவயிற்றிற் றொருகுழவி திருநாமம் பரவுதுமே. 3

4.
அந்நெடுமா லுதரம்போ லருளபயன் றனிக்கவிகை
இந்நெடுமா நிலமனைத்தும் பொதிந்தினிது வாழ்கவென்றே. 4

நான்முகன் துதி

5.
உகநான்கும் பொருணான்கு முபநிடத மொருநான்கு
முகநான்கும் படைத்துடைய முதல்வனையாம் பரவுதுமே. 5

6.
நிலநான்குந் திசைநான்கு நெடுங்கடல்க ளொருநான்குங்
குலநான்குங் காத்தளிக்குங் குலதீபன் வாழ்கவென்றே. 6


சூரியன் துதி

7.
பேராழி யுலகனைத்தும் பிறங்கவள ரிருணீங்க
ஓராழி தனைநடத்து மொண்சுடரைப் பரவுதுமே. 7

8.
பனியாழி யுலகனைத்தும் பரந்தகலி யிருணீங்கத்
தனியாழி தனைநடத்துஞ் சயதுங்கன் வாழ்கவென்றே. 8

கணபதி துதி

9.
காரணகா ரியங்களின்கட் டறுப்போர் யோகக்
கருத்தென்னுந் தனித்தறியிற் கட்டக் கட்டுண்
டாரணமா நாற்கூடத் தணைந்து நிற்கும்
ஐங்கரத்த தொருகளிற்றுக் கன்பு செய்வாம். 9

10.
தனித்தனியே திசையானைத் தறிக ளாகச்
சயத்தம்பம் பலநாட்டி யொருகூ டத்தே
அனைத்துலகுங் கவித்ததெனக் கவித்து நிற்கும்
அருட்கவிகைக் கலிப்பகைஞன் வாழ்க வென்றே. 10

முருகவேள் துதி

11.
பொன்னிரண்டு வரைதோற்கும் பொருவரிய நிறம்படைத்த புயமுங் கண்ணும்
பன்னிரண்டு மாறிரண்டும் படைத்துடையான் அடித்தலங்கள் பணிதல் செய்வாம். 11

12.
ஓரிரண்டு திருக்குலமும் நிலைபெறவந் தொருகுடைக்கீழ்க் கடலுந் திக்கும்
ஈரிரண்டு படைத்துடைய விரவிகுலோத் தமனபயன் வாழ்க வென்றே. 12

நாமகள் துதி

13.
பூமாதுஞ் சயமாதும் பொலிந்து வாழும் புயத்திருப்ப மிகவுயரத் திருப்ப ளென்று
நாமாதுங் கலைமாது மென்னச் சென்னி நாவகத்து ளிருப்பாளை நவிலு வாமே. 13

14.
எண்மடங்கு புகழ்மடந்தை நல்ல னெங்கோன் யானவன்பா லிருப்பதுநன் றென்பாள் போல
மண்மடந்தை தன்சீர்த்தி வெள்ளை சாத்தி மகிழ்ந்தபிரான் வளவர்பிரான் வாழ்க வென்றே. 14

உமையவள் துதி

15.
செய்யதிரு மேனியொரு பாதிகரி தாகத்
தெய்வமுத னாயகனை யெய்தசிலை மாரன்
கையின்மலர் பாதமலர் மீதுமணு காநங்
கன்னிதன் மலர்க்கழல்கள் சென்னிமிசை வைப்பாம். 15

16.
கறுத்தசெழி யன்கழல்சி வப்பவரை யேறக்
கார்முகம்வ ளைத்துதியர் கோமகன்மு டிக்கட்
பொறுத்தமலர் பாதமலர் மீதணிய நல்கும்
பூழியர்பி ரானபயன் வாழ்கவினி தென்றே. 16

சத்த மாதர்கள் துதி

17.
மேதி புள்ளலகை தோகை யேறுவணம் வேழ மென்றகொடி யேழுடைச்
சோதி மென்கொடிக ளேழி னேழிருது ணைப்ப தந்தொழநி னைத்துமே. 17

18.
கேழன் மேழிகலை யாளி வீணைசிலை கெண்டை யென்றினைய பல்கொடி
தாழ மேருவிலு யர்த்த செம்பியர்த னிப்பு லிக்கொடித ழைக்கவே. 18

வாழி

19.
விதிமறை யவர்தொழில் விளைகவே விளைதலின் முகில்மழை பொழிகவே
நிதிதரு பயிர்வளம் நிறைகவே நிறைதலி னுயிர்நிலை பெறுகவே. 19

20.
தலமுத லுளமனு வளர்கவே சயதர னுயர்புலி வளர்கவே
நிலவுமிழ் கவிகையும் வளர்கவே நிதிபொழி கவிகையும் வளர்கவே. 20


2. கடை திறப்பு

உடல் அழகு

21.
சூதள வளவெனு மிளமுலைத் துடியள வளவெனு நுண்ணிடைக்
காதள வளவெனு மதர்விழிக் கடலமு தனையவர் திறமினோ. 1

மார்பழகு

22.
புடைபட விளமுலை வளர்தொறும் பொறையறி வுடையரு நிலைதளர்ந்
திடைபடு வதுபட வருளுவீர் இடுகத வுயர்கடை திறமினோ. 2

நடை அழகு

23.
சுரிகுழ லசைவுற வசைவுறத் துயிலெழு மயிலென மயிலெனப்
பரிபுர வொலியெழ வொலியெழப் பனிமொழி யவர்கடை திறமினோ. 3

ஊடிய மகளிர்

24.
கூடிய வின்கன வதனிலே கொடைநர துங்கனொ டணைவுறா
தூடிய நெஞ்சினொ டூடுவீர் உமது நெடுங்கடை திறமினோ. 4

விடுமின் பிடிமின்

25.
விடுமி னெங்கள்துகில் விடுமி னென்றுமுனி வெகுளி மென்குதலை துகிலினைப்
பிடிமி னென்றபொருள் விளைய நின்றருள்செய் பெடைந லீர்கடைகள் திறமினோ. 5

கனவா நனவா

26.
எனத டங்கவினி வளவர் துங்கனருள் எனம கிழ்ந்திரவு கனவிடைத்
தனத டங்கண்மிசை நகந டந்தகுறி தடவு வீர்கடைகள் திறமினோ. 6

ஊடலும் கூடலும்

27.
முனிபவ ரொத்திலராய் முறுவல்கி ளைத்தலுமே
முகிழ்நகை பெற்றமெனா மகிழ்நர் மணித்துவர்வாய்
கனிபவ ளத்தருகே வருதலு முத்துதிருங்
கயல்க ளிரண்டுடையீர் கடைதிற மின்றிறமின். 7

பொய்த் துயில்

28.
இத்துயின் மெய்த்துயிலே என்றுகு றித்திளைஞோர்
இதுபுல விக்குமருந் தெனமனம் வைத்தடியிற்
கைத்தலம் வைத்தலுமே பொய்த்துயில் கூர்நயனக்
கடைதிற வாமடவீர் கடைதிற மின்றிறமின். 8

கனவில் பெற முயல்தல்

29.
இகலி ழந்தரசர் தொழவ ரும்பவனி இரவுகந் தருளு கனவினிற்
பகலி ழந்தநிறை பெறமு யன்றுமொழி பதறு வீர்கடைகள் திறமினோ. 9

முத்துமாலையும் பவளமாலையும்

30.
முத்து வடஞ்சேர் முகிழ்முலைமேன் முயங்குங் கொழுநர் மணிச்செவ்வாய்
வைத்த பவள வடம்புனைவீர் மணிப்பொற் கபாடந் திறமினோ. 10

ஆத்திமாலையின் மேல் ஆசை

31.
தண்கொடை மானதன் மார்புதோய் தாதகி மாலையின் மேல்விழுங்
கண்கொடு போம்வழி தேடுவீர் கனகநெ டுங்கடை திறமினோ. 11

படைக்கும் கண்களுக்கும் ஒப்புமை

32.
அஞ்சியே கழல்கெடக் கூடலிற் பொருதுசென்
றணிகடைக் குழையிலே விழவடர்த் தெறிதலால்
வஞ்சிமா னதன்விடும் படையினிற் கொடியகண்
மடநலீ ரிடுமணிக் கடைதிறந் திடுமினோ. 12

கூடலில் தோன்றும் நிகழ்ச்சிகள்

33.
அவசமுற் றுளநெகத் துயினெகப் பவளவாய்
அணிசிவப் பறவிழிக் கடைசிவப் புறநிறைக்
கவசமற் றிளநகை களிவரக் களிவருங்
கணவரைப் புணருவீர் கடைதிறந் திடுமினோ. 13

கலவி மயக்கம்

34.
கலவிக் களியின் மயக்கத்தாற் கலைபோ யகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர் நீள்பொற் கபாடந் திறமினோ. 14

நனவும் கனவும்

35.
நனவினிற் சயதரன் புணரவே பெறினுநீர்
நனவெனத் தௌிவுறா ததனையும் பழையவக்
கனவெனக் கூறுவீர் தோழிமார் நகைமுகங்
கண்டபின் தேறுவீர் கடைதிறந் திடுமினோ. 15

மகளிர் உறங்காமை

36.
மெய்யே கொழுநர் பிழைநலிய வேட்கை நலிய விடியளவும்
பொய்யே யுறங்கு மடநல்லீர் புனைபொற் கபாடந் திறமினோ. 16

கொழுநர் மார்பில் துயில்
37.
போக வமளிக் களிமயக்கிற் புலர்ந்த தறியா தேகொழுநர்
ஆக வமளி மிசைத்துயில்வீர் அம்பொற் கபாடந் திறமினோ. 17

பிரிவாற்றாமை

38
ஆளுங் கொழுநர் வரவுபார்த் தவர்தம் வரவு காணாமல்
தாளு மனமும் புறம்பாகச் சாத்துங் கபாடந் திறமினோ. 18

ஒன்றில் இரண்டு

39.
உந்திச் சுழியின் முளைத்தெழுந்த உரோமப் பசுந்தா ளொன்றிலிரண்
டந்திக் கமலங் கொடுவருவீர் அம்பொற் கபாடந் திறமினோ. 19

சிறைப்பட்ட மகளிர் நிலை

40.
மீனம்புகு கொடிமீனவர் விழியம்புக வோடிக்
கானம்புக வேளம்புகு மடவீர்கடை திறமின். 20

மகளிரை கப்பப்பொருளாக அளித்தல்

41.
அலைநாடிய புனனாடுடை யபயர்க்கிடு திறையா
மலைநாடியர் துளுநாடியர் மனையிற் கடைதிறமின். 21

தோளைத் தழுவி விளையாடல்

42.
விலையி லாதவடம் முலையி லாடவிழி குழையி லாடவிழை கணவர்தோள்
மலையி லாடிவரு மயில்கள் போலவரு மடந லீர்கடைகள் திறமினோ. 22

கன்னடப் பெண்டிரின் பேச்சு

43.
மழலைத்திரு மொழியிற்சில வடுகுஞ் சிலதமிழுங்
குழறித்தரு கருநாடியர் குறுகிக்கடை திறமின். 23

தழுவிய கை நழுவல்
44.
தழுவுங் கொழுநர் பிழைநலியத் தழுவே லென்னத் தழுவியகை
வழுவ வுடனே மயங்கிடுவீர் மணிப்பொற் கபாடந் திறமினோ. 24

மகளிர் புன்னகை
45.
வேகம் விளைய வருங்கொழுநர் மேனி சிவந்த படிநோக்கிப்
போகம் விளைய நகைசெய்வீர் புனைபொற் கபாடந் திறமினோ. 25

உறக்கத்திலும் முகமலர்ச்சி

46
சொருகு கொந்தளக மொருகை மேலலைய ஒருகை கீழலைசெய் துகிலொடே
திருவ னந்தலினு முகம லர்ந்துவரு தெரிவை மீர்கடைகள் திறமினோ. 26

நெஞ்சம் களிப்பீர்

47
முலைமீது கொழுநர்கைந் நகமேவு குறியை
முன்செல்வ மில்லாத வவர்பெற்ற பொருள்போல்
கலைநீவி யாரேனு மில்லாவி டத்தே
கண்ணுற்று நெஞ்சங்க ளிப்பீர்கள் திறமின். 27

மதர்விழி மாதர்

48
கடலில் விடமென வமுதென மதனவேள் கருதி வழிபடு படையொடு கருதுவார்
உடலி னுயிரையு முணர்வையும் நடுவுபோய் உருவு மதர்விழி யுடையவர் திறமினோ. 28

பிறைநிலவும் முழுநிலவும்

49
முறுவன் மாலையொடு தரள மாலைமுக மலரின் மீதுமுலை முகிழினுஞ்
சிறுநி லாவுமதின் மிகுநி லாவுமென வருந லீர்கடைகள் திறமினோ. 29

திருகிச் செருகும் குழல் மாதர்

50
முருகிற் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிருந்
திருகிச் செருகுங் குழன்மடவீர் செம்பொற் கபாடந் திறமினோ. 30

கொழுநரை நினைந்தழும் பெண்கள்

51
மெய்யில ணைத்துருகிப் பையவ கன்றவர்தா
மீள்வரெ னக்கருதிக் கூடல்வி ளைத்தறவே
கையில ணைத்தமணற் கண்பனி சோர்புனலிற்
கரையவி ழுந்தழுவீர் கடைதிற மின்றிறமின். 31

ஊடன் மகளிர்

52
செருவிள நீர்பட வெம்முலைச் செவ்விள நீர்படு சேயரிக்
கருவிள நீர்பட வூடுவீர் கனகநெ டுங்கடை திறமினோ. 32

நடந்துவரும் அழகு

53
அளக பாரமிசை யசைய மேகலைகள் அவிழ வாபரண மிவையெலாம்
இளக மாமுலைக ளிணைய றாமல்வரும் இயன லீர்கடைகள் திறமினோ. 33

இதழ் சுவைத்தல்

54
மதுர மானமொழி பதற வாள்விழிசி வப்ப வாயிதழ்வெ ளுப்பவே
அதர பானமது பான மாகவறி வழியு மாதர்கடை திறமினோ. 34

வேதும் மருந்தும்

55
தங்குகண் வேல்செய்த புண்களைத் தடமுலை வேதுகொண் டொற்றியுஞ்
செங்கனி வாய்மருந் தூட்டுவீர் செம்பொ னெடுங்கடை திறமினோ. 35

வேதும் கட்டும்

56
பொருங்கண் வேலிளைஞர் மார்பி னூடுருவு புண்கள் தீரவிரு கொங்கையின்
கருங்கண் வேதுபட வொற்றி மென்கைகொடு கட்டு மாதர்கடை திறமினோ. 36

விழுதலும் எழுதலும்

57
இடையி னிலையரி திறுமிறு மெனவெழா எமது புகலிட மினியிலை யெனவிழா
அடைய மதுகர மெழுவது விழுவதாம் அளக வனிதைய ரணிகடை திறமினோ. 37

சிலம்புகள் முறையிடல்

58
உபய தனமசையி லொடியு மிடைநடையை ஒழியு மொழியுமென வொண்சிலம்
பபய மபயமென வலற நடைபயிலும் அரிவை மீர்கடைகள் திறமினோ. 38

பெண்ணுக்கும் பொன்னிக்கும் ஒப்புமை
59
பூவிரி மதுகரம் நுகரவும் பொருகய லிருகரை புரளவுங்
காவிரி யெனவரு மடநலீர் கனகநெ டுங்கடை திறமினோ. 39

வண்டுகள் கூந்தலிற் பந்தலிடல்
60
களப வண்டலிடு கலச கொங்கைகளின் மதியெ ழுந்துகனல் சொரியுமென்
றளக பந்திமிசை யளிகள் பந்தரிடும் அரிவை மீர்கடைகள் திறமினோ. 40

விழி சிவக்கும் உதடு வெளுக்கும்

61
வாயிற் சிவப்பை விழிவாங்க மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி யமுதளிப்பீர் துங்கக் கபாடந் திறமினோ. 41

கலவியில் நிகழ்வன

62
கூடு மிளம்பிறையிற் குறுவெயர் முத்துருளக்
கொங்கை வடம்புரளச் செங்கழு நீரளகக்
காடு குலைந்தலையக் கைவளை பூசலிடக்
கலவி விடாமடவீர் கடைதிற மின்றிறமின். 42

காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்தது

63
காஞ்சி யிருக்கக் கலிங்கங் குலைந்த கலவி மடவீர் கழற்சென்னி
காஞ்சி யிருக்கக் கலிங்கங் குலைந்த களப்போர் பாடத் திறமினோ. 43

கருணாகரனின் போர்ச்சிறப்பு

64
இலங்கை யெறிந்த கருணா கரன்றன் இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர்
கலிங்க மெறிந்த கருணா கரன்றன் களப்போர் பாடத் திறமினோ. 44

நினைவும் மறதியும்

65
பேணுங் கொழுநர் பிழைகளெலாம் பிரிந்த பொழுது நினைந்தவரைக்
காணும் பொழுது மறந்திருப்பீர் கனப்பொற் கபாடந் திறமினோ. 45

உறவாடும் மாதர்

66
வாச மார்முலைகண் மார்பி லாடமது மாலை தாழ்குழலின் வண்டெழுந்
தூச லாடவிழி பூச லாடவுற வாடு வீர்கடைகள் திறமினோ. 46

வாய் புதைக்கும் மடநல்லீர்

67
நேயக் கலவி மயக்கத்தே நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப
வாயைப் புதைக்கு மடநல்லீர் மணிப்பொற் கபாடந் திறமினோ. 47


மதியொளிக்கு நடுங்குவீர்

68
பொங்கு மதிக்கே தினநடுங்கிப் புகுந்த வறையை நிலவறையென்
றங்கு மிருக்கப் பயப்படுவீர் அம்பொற் கபாடந் திறமினோ. 48

தேயும் குடுமி

69
வருவார் கொழுந ரெனத்திறந்தும் வாரார் கொழுந ரெனவடைத்துந்
திருகுங் குடுமி விடியளவுந் தேயுங் கபாடந் திறமினோ. 49

புலவியும் கலவியும்

70
ஊடு வீர்கொழுநர் தங்கள் பான்முனிவொ ழிந்து கூடுதலி னுங்களைத்
தேடு வீர்கடைகள் திறமி னோவினிய தெரிவை மீர்கடைகள் திறமினோ. 50

கண்ணின் இயல்பு

71
பண்படு கிளவியை யமுதெனப் பரவிய கொழுநனை நெறிசெயக்
கண்கொடு கொலைசெய வருளுவீர் கனக நெடுங்கடை திறமினோ. 51

தரையில் விரல் எழுதுவீர்

72
பிழைநி னைந்துருகி யணைவு றாமகிழ்நர் பிரித லஞ்சிவிடு கண்கணீர்
மழை ததும்பவிரல் தரையி லேயெழுதும் மடந லீர்கடைகள் திறமினோ. 52

குலோத்துங்கன் போன்றீர்

73
நக்காஞ் சிக்கும் வடமலைக்கும் நடுவில் வௌிக்கே வேடனைவிட்
டக்கா னகத்தே யுயிர்பறிப்பீர் அம்பொற் கபாடந் திறமினோ. 53

பூவும் உயிரும் செருகுவீர்

74
செக்கச் சிவந்த கழுநீருஞ் செகத்தி லிளைஞ ராருயிரும்
ஒக்கச் செருகுங் குழன்மடவீர் உம்பொற் கபாடந் திறமினோ. 54


காடு பாடுவோம்

75
களப்போர் விளைந்த கலிங்கத்துக் கலிங்கர் நிணக்கூழ் களப்பேயின்
உளப்போ ரிரண்டு நிறைவித்தாள் உறையுங் காடு பாடுவாம். 1

மரம் செடி கொடிகள்

76
பொரிந்த காரைக ரிந்த சூரைபு கைந்த வீரையெ ரிந்தவேய்
உரிந்த பாரையெ றிந்த பாலையு லர்ந்த வோமைக லந்தவே. 2

77
உதிர்ந்த வெள்ளிலு ணங்கு நெல்லியொ டுங்கு துள்ளியு லர்ந்தவேல்
பிதிர்ந்த முள்ளிசி தைந்த வள்ளிபி ளந்த கள்ளிப பரந்தவே. 3

78
வற்றல் வாகைவ றந்த கூகைம டிந்த தேறுபொ டிந்தவேல்
முற்ற லீகைமு ளிந்த விண்டுமு ரிந்த புன்குநி ரைந்தவே. 4

பரிதியின் செயல்

79
தீய வக்கொடிய கான கத்தரைதி றந்த வாய்தொறுநு ழைந்துதன்
சாயை புக்கவழி யாதெ னப்பரிதி தன்க ரங்கொடுதி ளைக்குமே. 5

நிழல் இல்லாமை

80
ஆடு கின்றசிறை வெம்ப ருந்தினிழல் அஞ்சி யக்கடுவ னத்தைவிட்
டோடு கின்றநிழ லொக்கும் நிற்கும்நிழல் ஓரி டத்துமுள வல்லவே. 6

நிழலின் செயல்

81
ஆத வம்பருகு மென்று நின்றநிழல் அங்கு நின்றுகுடி போனதப்
பாத வம்புனல்பெ றாது ணங்குவன பருகும் நம்மையென வெருவியே. 7

நெருப்பும் புகையும்

82
செந்நெ ருப்பினைத் தகடு செய்துபார் செய்த தொக்குமச் செந்த ரைப்பரப்
பந்நெ ருப்பினிற் புகைதி ரண்டதொப் பல்ல தொப்புறா வதனி டைப்புறா. 8

நிலத்தில் நீரின்மை

83
தீயின் வாயினீர் பெறினு முண்பதோர் சிந்தை கூரவாய் வெந்து வந்துசெந்
நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே. 9

நிலத்தின் வெம்மை

84
இந்நி லத்துளோ ரேக லாவதற் கௌிய தானமோ வரிய வானுளோர்
அந்நி லத்தின்மேல் வெம்மை யைக்குறித் தல்ல வோநிலத் தடியி டாததே. 10

இரவியும் இருபொழுதும்

85
இருபொழுது மிரவிபசும் புரவிவிசும் பியங்காத தியம்பக் கேண்மின்
ஒருபொழுதுந் தரித்தன்றி யூடுபோ கரிதணங்கின் காடென் றன்றோ. 11

பனிநீரும் மழைநீரும் வியர்வை நீரே

86
காடிதனைக் கடத்துமெனக் கருமுகிலும் வெண்மதியுங் கடக்க வப்பால்
ஓடியிளைத் துடல்வியர்த்த வியர்வன்றோ உகுபுனலும் பனியு மையோ. 12

தேவர் வாழ்க்கை

87
விம்முகடு விசைவனத்தின் வெம்மையினைக் குறித்தன்றோ விண்ணோர் விண்ணின்
மைம்முகடு முகிற்றிரையிட் டமுதவட்ட வாலவட்ட மெடுப்ப தையோ. 13

பேயின் மூச்சும் மரத்தின் புகையும்

88
நிலம்புடைபேர்ந் தோடாமே நெடுமோடி நிறுத்தியபேய்
புலம்பொடுநின் றுயிர்ப்பனபோல் புகைந்துமரங் கரிந்துளவால். 14

வறண்ட நாக்கும் முதிய பேயும்

89
வற்றியபேய் வாயுலர்ந்து வறள்நாக்கை நீட்டுவபோல்
முற்றியநீண் மரப்பொதும்பின் முதுப்பாம்பு புறப்படுமே. 15

சூறாவளியின் இயல்பு
90
விழிசுழல வருபேய்த்தேர் மிதந்துவரு நீரந்நீர்ச்
சுழிசுழல வருவதெனச் சூறைவளி சுழன்றிடுமால். 16

நீறு பூத்த நெருப்பு

91
சிதைந்தவுடற் சுடுசுடலைப் பொடியைச் சூறை சீத்தடிப்பச் சிதறியவப் பொடியாற் செம்மை
புதைந்தமணி புகைபோர்த்த தழலே போலும் போலாவேற் பொடிமூடு தணலே போலும். 17

முத்து சொரிதல் கண்ணீர் பொழிதல்

92
மண்ணோடி யறவறந்து துறந்தங் காந்த
வாய்வழியே வேய்பொழியு முத்த மவ்வேய்
கண்ணோடிச் சொரிகின்ற கண்ணீ ரன்றேற்
கண்டிரங்கிச் சொரிகின்ற கண்ணீர் போலும். 18

முத்துக்கள் கொப்புளங்கள்

93
வெடித்தகழை விசைதெறிப்பத் தரைமேன் முத்தம்
வீழ்ந்தனவத் தரைபுழுங்கி யழன்று மேன்மேற்
பொடித்தவியர்ப் புள்ளிகளே போலும் போலும்
போலாவேற் கொப்புளங்கள் போலும் போலும். 19

காற்றின் தன்மை

94
பல்கால்திண் திரைக்கரங்கள் கரையின் மேன்மேற்
பாய்கடல்கள் நூக்குமதப் படர்வெங் கானில்
செல்காற்று வாராமல் காக்க வன்றோ
திசைக்கரியின் செவிக்காற்று மதற்கே யன்றோ. 20

வெந்தவனமே இந்தவனம்

95
முள்ளாறுங் கல்லாறுந் தென்ன ரோட முன்னொருநாள் வாளபயன் முனிந்த போரின்
வெள்ளாறுங் கோட்டாறும் புகையான் மூட வெந்தவன மிந்தவன மொக்கி லொக்கும். 21

மணலின் தன்மை

96
அணிகொண்ட குரங்கினங்கள் அலைகடலுக் கப்பாலை
மணலொன்று காணாமல் வரையெடுத்து மயங்கினவே. 22


4. கோயில் பாடியது

பழையகோயிலும் புதியகோயிலும்

97
ஓதி வந்தவக் கொடிய கானகத் துறைய ணங்கினுக் கயன்வ குத்தவிப்
பூத லம்பழங் கோயி லென்னினும் புதிய கோயிலுண் டதுவி ளம்புவாம். 1

புதிய கோயிலுக்குக் கடைக்கால்

98
வட்ட வெண்குடைச் சென்னி மானதன் வாளின் வாயினான் மறலி வாயிடைப்
பட்ட மன்னர்தம் பட்ட மங்கையர் பரும ணிக்கருத் திருவி ருத்தியே. 2

கோயில் இயல்பு

99
துவர்நி றக்களிற் றுதிய ரேவலிற் சுரிகை போர்முகத் துருவி நேரெதிர்த்
தவர்நி ணத்தொடக் குருதி நீர்குழைத் தவர்க ருந்தலைச் சுவர டுக்கியே. 3

தூணும் உத்தரமும்

100
அறிஞர் தம்பிரா னபயன் வாரணம் அரசர் மண்டலத் தரண றப்பறித்
தெறித ரும்பெருங் கணைம ரங்கள்கொண் டெழுது தூணொடு த் திரமி யற்றியே. 4

கை மரமும் பரப்பு மரமும்

101
கடித ழிந்துபோர் மிதிலை யிற்படுங் கரிம ருப்பினைத் திரள் துலாமெனும்
படிப ரப்பியப் பரும யானையின் பழுவெ லும்பினிற் பாவ டுக்கியே. 5

மேல் முகடு
102
மீளி மாவுகைத் தபயன் முன்னொர்நாள் விருத ராசரைப் பொருது கொண்டபோர்
ஆளி வாரணங் கேழல் சீயமென் றவை நிரைத்துநா சிகையி ருத்தியே. 6

வெற்றிடத்தை மூடுதல்
103
துங்க பத்திரைச் செங்க ளத்திடைச் சோள சேகரன் வாளெ றிந்தபோர்
வெங்க தக்களிற் றின்ப டத்தினால் வௌிய டங்கவே மிசைக விக்கவே. 7

கோபுரமும் நெடுமதிலும்
104
கொள்ளிவாய்ப் பேய்காக்குங் கோபுரமு நெடுமதிலும்
வெள்ளியாற் சமைத்ததென வெள்ளெலும்பி னாற்சமைத்தே. 8

கோயில் வாயிலில் மகரதோரணம்

105
காரிரும்பின் மகரதோ ரணமாகக் கரும்பேய்கள்
ஓரிரண்டு கால்நாட்டி யோரிரும்பே மிசைவளைத்தே. 9

மதில்களின் காட்சி

106
மயிற்கழுத்துங் கழுத்தரிய மலர்ந்தமுகத் தாமரையு மருங்கு சூழ்ந்த
எயிற்கழுத்து நிணக்கொடியு மிளங்குழவிப் பசுந்தலையு மெங்குந் தூக்கி. 10

மதுரையின் மகரதோரணம்

107
பணியாத வழுதியர்தம் பாய்களிற்றின் செவிச்சுளகு பலவுந் தூக்கி
மணியூச லெனமதுரை மகரதோ ரணம்பறித்து மறித்து நாட்டி. 11

ஈம விளக்கு

108
பரிவிருத்தி யலகிட்டுப் பசுங்குருதி நீர்தௌித்து நிணப்பூச் சிந்தி
எரிவிரித்த ஈமவிளக் கெம்மருங்கும் ஏற்றியதோ ரியல்பிற் றாலோ. 12

வீரர்களின் பேரொலி

109
சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர் தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப்
பலியாக வுறுப்பரிந்து தருது மென்று பரவுமொலி கடலொலிபோற் பரக்குமாலோ. 13

வீர வழிபாடு

110
சொல்லரிய ஓமத்தீ வளர்ப்ப ராலோ தொழுதிருந்து பழுவெலும்பு தொடர வாங்கி
வல்லெரியின் மிசையெரிய விடுவ ராலோ வழிகுருதி நெய்யாக வார்ப்ப ராலோ. 14

தலை துதிக்கும் முண்டம் வழிபடும்

111
அடிக்கழுத்தி னெடுஞ்சிரத்தை யரிவ ராலோ
அரிந்தசிர மணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரங் கொற்றவையைப் பரவு மாலோ
குறையுடலங் கும்பிட்டு நிற்கு மாலோ. 15


அச்சுறுத்தும் தலைகள்

112
நீண்டபலி பீடத்தி லரிந்து வைத்த
நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் னினமென் றெண்ணி
ஆண்டலைப்புள் ளருகணைந்து பார்க்கு மாலோ
அணைதலுமச் சிரமச்ச முறுத்து மாலோ. 16

அஞ்சி அலைந்தன

113
கடன மைந்ததுக ருந்தலைய ரிந்த பொழுதே கடவ
தொன்றுமிலை யென்றுவிளை யாடு முடலே
உடல்வி ழுந்திடினு கர்ந்திடவு வந்த சிலபேய்
உறுபெ ரும்பசியு டன்றிடவு டன்றி ரியுமே. 17

குரல் ஒலியும் வாத்திய ஒலியும்

114
பகடி டந்துகொள்ப சுங்குருதி யின்று தலைவீ
பலிகொ ளென்றகுர லெண்டிசைபி ளந்து மிசைவான்
முகடி டந்துருமெ றிந்தெனமு ழங்க வுடனே
மொகுமொ கென்றொலிமி குந்தமரு கங்கள் பலவே. 18

மெய்க் காப்பாளர்கள்

115
தமரு கங்கள்தரு கின்றசதி யின்கண் வருவார்
அமரி யின்புறும நாதிவரு சாத கர்களே. 19

யோகினிப் பெண்கள்

116
படைவ லங்கொடுப சுந்தலையி டங்கொ டணைவார்
இடைமொ ழிந்திடைநு டங்கவரு யோகி னிகளே. 20

பெருந்தலை கண்டு பேய் உறங்காமை

117
வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறுந் திசைதோறும் விழித்து நின்று
தூங்குதலை சிரிப்பனகண் டுறங்குதலை மறந்திருக்குஞ் சுழல்கட் சூர்ப்பேய். 21

காலன் இடும் தூண்டில்

118
அரிந்ததலை யுடனமர்ந்தே ஆடுகழை அலைகுருதிப் புனலின் மூழ்கி
இருந்தவுடல் கொளக்கால னிடுகின்ற நெடுந்தூண்டி லென்னத் தோன்றும். 22

கொள்ளிவாய்ப் பேயின் தன்மை

119
கொல்வா யோரி முழவாகக் கொள்ளி வாய்ப்பேய் குழவிக்கு
நல்வாய்ச் செய்ய தசைதேடி நரிவாய்த் தசையைப் பறிக்குமால். 23

கோயிலைச் சுற்றியுள்ள சுடலை

120
நிணமுந் தசையும் பருந்திசிப்ப நெருப்பும் பருத்தி யும்பொன்று
பிணமும் பேயுஞ் சுடுகாடும் பிணங்கு நரியு முடைத்தரோ. 24


5. தேவியைப் பாடியது

காளியின் வடிவழகு

121
உவையுவை யுளவென் றெண்ணி உரைப்ப தெனுரைக்க வந்த
அவையவை மகிழ்ந்த மோடி அவயவம் விளம்பல் செய்வாம். 1

பரிபுரம் விளங்கும் பாதம்

122
ஒருமலை மத்துவலத் துலவுக யிற்றினுமற்
றுலகுப ரித்தபணத் துரகவ டத்தினுமப்
பருமணி முத்துநிரைத் துடுமணி தைத்தவிணைப்
பரிபுரம் வைத்ததளிர்ப் பதயுக ளத்தினளே. 2

காளி தேவியின் குங்குமப்பொட்டு

123
அருமறை யொத்தகுலத் தருணெறி யொத்தகுணத்
தபயனு தித்தகுலத் துபயகு லத்துமுதல்
திருமதி யொக்குமெனத் தினகர னொக்குமெனத்
திகழ்வத னத்தினிடைத் திலகவ னப்பினளே. 3

சதிகொள் நடனம்

124
அரவொடு திக்கயமப் பொழுதுப ரித்தவிடத்
தடியிட வுட்குழிவுற் றசைவுறு மப்பொழுதில்
தரணித ரித்ததெனப் பரணிப ரித்தபுகழ்ச்
சயதர னைப்பரவிச் சதிகொள் நடத்தினளே. 4

பால் நிரம்பிய கிண்ணம்

125
தணிதவ ளப்பிறையைச் சடைமிசை வைத்தவிடைத்
தலைவர்வ னத்தினிடைத் தனிநுகர் தற்குநினைத்
தணிதவ ளப்பொடியிட் டடையவி லச்சினையிட்
டமுதமி ருத்தியசெப் பனையத னத்தினளே. 5

ஆடையும் இடைக்கச்சும்

126
பரிவக லத்தழுவிப் புணர்கல விக்குருகிப்
படர்சடை முக்கணுடைப் பரமர்கொ டுத்தகளிற்
றுரிமிசை அக்கரியிற் குடரொடு கட்செவியிட்
டொருபுரி யிட்டிறுகப் புனையுமு டுக்கையளே. 6

தேவியின் பிள்ளைகள்

127
கலைவள ருத்தமனைக் கருமுகி லொப்பவனைக்
கரடத டக்கடவுட் கனகநி றத்தவனைச்
சிலைவளை வுற்றவுணத் தொகைசெக விட்டபரித்
திறலவ னைத்தருமத் திருவுத ரத்தினளே. 7

தேவியின் அணிகள்

128
கவளம தக்கரடக் கரியுரி வைக்கயிலைக்
களிறுவி ருப்புறுமக் கனகமு லைத்தரளத்
தவளவ டத்திடையிற் பவளமொ டொத்தெரியத்
தழலுமி ழுத்தரியத் தனியுர கத்தினளே. 8

காளியின் கைகள்

129
அரியுமி டற்றலையிட் டலைகுரு திக்கெதிர்வைத்
தறவும டுத்தசிவப் பதனைமு ழுத்திசையிற்
கரிகர டத்தொளையிற் கலுழியி டைக்கழுவிக்
கருமைப டைத்தசுடர்க் கரகம லத் தினளே. 9

தேவியின் உதடுகள்
130
சிமையவ ரைக்கனகத் திரளுரு கப்பரவைத்
திரைசுவ றிப்புகையத் திசைசுடு மப்பொழுதத்
திமையவ ரைத்தகைதற் கிருளுமி டற்றிறைவற்
கினியத ரத்தமுதக் கனியத ரத்தினளே. 10

சிவனின் பகை தீர்த்தவள்

131
உருகுத லுற்றுலகத் துவமைய றச்சுழல்வுற்
றுலவுவி ழிக்கடைபட் டுடல்பகை யற்றொழியத்
திருகுதலைக் கிளவிச் சிறுகுத லைப்பவளச்
சிறுமுறு வற்றரளத் திருவத னத்தினளே. 11

காதணிகளும் மாலைகளும்

132
அண்டமுறு குலகிரிகள் அவளொருகா லிருகாதிற்
கொண்டணியிற் குதம்பையுமாம் கோத்தணியின் மணிவடமாம். 12

தேவியின் ஆற்றல்

133
கைம்மலர்மே லம்மனையாம் கந்துகமாங் கழங்குமாம்
அம்மலைக ளவள்வேண்டின் ஆகாத தொன்றுண்டோ. 13


6. பேய்களைப் பாடியது

காளியின் பெருமை

134
எவ்வணங்கு மடிவணங்க இப்பெருமை படைத்துடைய
அவ்வணங்கை யகலாத அலகைகளை யினிப்பகர்வாம். 1

பேய்களின் காலும் கையும்

135
பெருநெ டும்பசி பெய்கல மாவன பிற்றை நாளின்முன் னாளின்மெ லிவன
கருநெ டும்பனங் காடுமு ழுமையுங் காலுங் கையுமு டையன போல்வன. 2

வாய் வயிறு முழங்கால்கள்

136
வன்பி லத்தொடு வாதுசெய் வாயின வாயி னானிறை யாதவ யிற்றின
முன்பி ருக்கின்மு கத்தினு மேற்செல மும்மு ழம்படு மம்முழந் தாளின. 3

பேய்களின் உடம்பு

137
வெற்றெ லும்பைந ரம்பின்வ லித்துமேல் வெந்தி லாவிற கேய்ந்தவு டம்பின
கொற்ற லம்பெறு கூழில மெங்களைக் கொள்வ தேபணி யென்றுகு ரைப்பன. 4

கன்னங்களும் விழிகளும்

138
உள்ளொ டுங்கியி ரண்டுமொன் றாகவே ஒட்டி யொட்டுவி டாதகொ டிற்றின
கொள்ளி கொண்டிரண் டேமுழை யுட்புகிற் குன்று தோன்றுவ போலவி ழிப்பன. 5

முதுகும் கொப்பூழும்

139
வற்ற லாகவு லர்ந்தமு துகுகள் மரக்க லத்தின்ம றிபுற மொப்பன
ஒற்றை வான்றொளைப் புற்றெனப் பாம்புடன் உடும்பு முட்புக்கு றங்கிடு முந்திய. 6

உடல் மயிர் மூக்கு காது

140
பாந்தள் நால்வன போலுமு டல்மயிர் பாசி பட்டப ழந்தொளை மூக்கின
ஆந்தை பாந்தி யிருப்பத் துரிஞ்சில்புக் கங்கு மிங்குமு லாவு செவியின. 7

பல் தாலி தலை உதடு

141
கொட்டும் மேழியுங் கோத்தன பல்லின கோம்பி பாம்பிடைக் கோத்தணி தாலிய
தட்டி வானைத் தகர்க்குந் தலையின தாழ்ந்து மார்பிடைத் தட்டு முதட்டின. 8

தாய்ப்பேயும் பிள்ளைப்பேயும்

142
அட்ட மிட்ட நெடுங்கழை காணிலென் அன்னை யன்னையென் றாலுங் குழவிய
ஒட்ட ஒட்டகங் காணிலென் பிள்ளையை ஒக்கு மொக்குமென் றொக்கலை கொள்வன. 9

ஆற்றாத பசி

143
புயல ளிப்பன மேலும ளித்திடும் பொற்க ரத் தப யன்புலி பின்செலக்
கயலொ ளித்தக டுஞ்சுரம் போலகங் காந்து வெம்பசி யிற்புறந் தீந்தவும். 10

காளியைப் பிரியாத பேய்கள்

144
துஞ்ச லுக்கணித் தாமென முன்னமே சொன்ன சொன்னது றைதொறும் பேயெலாம்
அஞ்ச லித்தொரு காலக லாமலவ் வணங்கி னுக்கரு காகவி ருக்கவே. 11


நொண்டிப் பேய்

145
ஆளைச் சீறுக ளிற்றப யன்பொரூஉம் அக்க ளத்தில ரசர்சி ரஞ்சொரி
மூளைச் சேற்றில் வழுக்கி விழுந்திட மொழிபெ யர்ந்தொரு கால்முட மானவும். 12

கை ஒடிந்த பேய்

146
அந்த நாளக்க ளத்தடு கூழினுக் காய்ந்த வெண்பல் லரிசி யுரற்புக
உந்து போதினிற் போதகக் கொம்பெனும் உலக்கை பட்டுவ லக்கைசொற் றானவும். 13

குருட்டுப் பேய்

147
விருத ராசப யங்கரன் முன்னொர்நாள் வென்ற சக்கரக் கோட்டத்தி டைக்கொழுங்
குருதி யுங்குட ருங்கலந் தட்டவெங் கூழ்தெ றித்தொரு கண்குரு டானவும். 14

ஊமைப் பேய்

148
வண்டல் பாய்பொன்னி நாடனை வாழ்த்திமா மதுரை வெங்களத் தேமது ரிக்கவட்
டுண்ட கூழொடு நாவுஞ்சு ருண்டுபுக் குள்வி ழுந்தற ஊமைகள் ஆனவும். 15

செவிட்டுப் பேய்

149
ஆனை சாயவ டுபரி யொன்றுகைத் தைம்ப டைப்பரு வத்தப யன்பொருஞ்
சேனை வீரர்நின் றார்த்திடு மார்ப்பினில் திமிரி வெங்களத் திற்செவி டானவும். 16

குட்டைப் பேய்

150
பண்டு தென்னவர் சாயவ தற்குமுன் பணிசெய் பூதக ணங்கள னைத்தையுங்
கொண்டு வந்தபேய் கூடிய போதிலக் குமரி மாதர்பெ றக்குற ளானவும். 17

கூன் பேய்

151
பரக்கு மோதக்க டாரம ழித்தநாள் பாய்ந்த செம்புன லாடியும் நீந்தியுங்
குரக்கு வாதம்பி டித்தவி தத்தினிற் குடிய டங்கலுங் கூன்முது கானவும். 18

கடல் விளையாட்டு

152
சிங்க ளத்தொடு தென்மது ராபுரி செற்ற கொற்றவன் வெற்றிகொள் காலையே
வெங்க ளத்தில டுமடைப் பேய்க்குலம் வேலை புக்குவி ரல்கள் திறந்தவும். 19


7. இந்திர சாலம்

தீபக்கால் கட்டில்

153
இவ்வண்ணத் திருதிறமுந் தொழுதிருப்ப எலும்பின்மிசைக் குடர்மென் கச்சிற்
செவ்வண்ணக் குருதிதோய் சிறுபூதத் தீபக்கால் கட்டி லிட்டே. 1

பிண மெத்தை

154
பிணமெத்தை யஞ்சடுக்கிப் பேயணையை முறித்திட்டுத் தூய வெள்ளை
நிணமெத்தை விரித்துயர்ந்த நிலாத்திகழும் பஞ்சசய னத்தின் மேலே. 2

கொலு வீற்றிருத்தல்

155
கெடாதபடி கெடுஞ்செழியர் கெடும்பொழுதின் இடும்பிண்டி பால மேந்தி
இடாகினிக ளிருமருங்கு மீச்சோப்பிப் பணிமாற விருந்த போழ்தின். 3

கோயில் நாயகியை கும்பிடுதல்

156
அடல்நாக எலும்பெடுத்து நரம்பிற் கட்டி அடிக்கடியும் பிடித்தமரின் மடிந்த வீரர்
குடர்சூடி நிணச்சட்டை யிட்டு நின்ற கோயில்நா யகிநெடும்பேய் கும்பிட் டாங்கே. 4

காளியிடம் நெடும்பேய் கூறல்

157
சுரகுருவின் தூதாகி யமன்பாற் செல்வோன் துணித்துவைத்த சிரமன்று தின்ற பேயைச்
சிரமரிய வதற்குறவா யொளித்துப் போந்த சிலபேயைத் திருவுள்ளத் தறிதி யன்றே. 5

முதுபேயின் வருகை கூறல்

158
அப்பேயி னொருமுதுபேய் வந்து நின்றிங் கடியேனை விண்ணப்பஞ் செய்க வென்ற
திப்பேயிங் கொருதீங்குஞ் செய்த தில்லை என்கொலோ திருவுள்ள மென்னக் கேட்டே. 6

முதுபேய் மன்னிப்பு கேட்டல்

159
அழைக்க வென்றலும ழைக்க வந்தணுகி அஞ்சி யஞ்சியுன தாணையிற்
பிழைக்க வந்தனம்பொ றுத்தெ மக்கருள்செய் பெண்ண ணங்கெனவ ணங்கவே. 7


காளியின் அருள்மொழி

160
அருத்தி யிற்பிழைநி னைத்த கூளியை யறுத்த வன்தலைய வன்பெறப்
பொருத்தி யப்பிழைபொ றுத்த னம்பிழை பொறாத தில்லையினி யென்னவே. 8

முதுபேய் வேண்டல்

161
உய்ந்து போயினமு வந்தெ மக்கருள ஒன்றொ டொப்பனவொ ராயிரம்
இந்த்ர சாலமுள கற்று வந்தனெ னிருந்து காணென விறைஞ்சியே. 9

கண் கட்டு வித்தைகள்

162
ஏற நின்னிருதி ருக்கண் வைத்தருள்செய் இக்கை யிற்சிலது திக்கைபார்
மாறி இக்கையில ழைக்க மற்றவை மதக்க ரித்தலைக ளானபார். 10

163
இக்க ரித்தலையின் வாயி னின்றுதிர நீர்கு டித்துரு மிடித்தெனக்
கொக்க ரித்தலகை சுற்ற மற்றிவை குறைத்த லைப்பிணம் மிதப்பபார். 11

164
அடக்க மன்றிது கிடக்க வெம்முடைய அம்மை வாழ்கவென வெம்மைபார்
கடக்க மென்றபயன் வென்றி வென்றிகொள் களப் பெரும்பரணி யின்றுபார். 12

165
துஞ்சி வீழ்துரக ராசி பாருடல் துணிந்து வீழ்குறை துடிப்பபார்
அஞ்சி யோடும்மத யானை பாருதிர ஆறு மோடுவன நூறுபார். 13

166
அற்ற தோளிவை யலைப்ப பாருவை யறாத நீள்குடர் மிதப்பபார்
இற்ற தாள்நரி யிழுப்ப பாரடி யிழுக்கும் மூளையில் வழுக்கல்பார். 14

167
நிணங்கள் பார்நிண மணங் கனிந்தன நிலங்கள் பார்நில மடங்கலும்
பிணங்கள் பாரிவை கிடக்க நம்முடைய பேய லாதசில பேய்கள் பார். 15

வித்தை கண்ட பேய்களின் மயக்கம்
168
என்ற போதிலிவை மெய்யெ னாவுட னிருந்த பேய்பதறி யொன்றன்மேல்
ஒன்று கால்முறிய மேல்வி ழுந்தடிசில் உண்ண வெண்ணிவெறும் மண்ணின்மேல். 16

169
விழுந்துகொ ழுங்குரு திப்புன லென்றுவெ றுங்கைமு கந்துமுகந்
தெழுந்து விழுந்தசை யென்று நிலத்தை யிருந்து துழாவிடுமே. 17

170
சுற்ற நிணத்துகில் பெற்றன மென்றுசு லாவுவெ றுங்கையவே
அற்ற குறைத்தலை யென்று விசும்பை யதுக்கு மெயிற்றினவே. 18

171
கயிற்றுறி யொப்பதொர் பேய்வறி தேயுடல் கௌவின தொக்கவிரைந்
தெயிற்றை யதுக்கி நிலத்திடைப் பேய்கள் நிறைத்தன மேல்விழவே. 19

172
முறம்பல போல நகங்கள் முறிந்து முகஞ்சித றாமுதுகுந்
திறம்பலி லாவிறல் யோகினி மாதர் சிரித்துவி லாவிறவே. 20

பேய்கள் வேண்டுதல்

173
அக்கண மாளு மணங்கினை வந்தனை செய்துக ணங்களெலாம்
இக்கண மாளுமி னித்தவிர் விச்சையெ னக்கைவி திர்த்தலுமே. 21

முதுபேயின் வேண்டுகோள்

174
கொற்றவர்கோன் வாளபய னறிய வாழுங்
குவலயத்தோர் கலையனைத்துங் கூற வாங்கே
கற்றுவந்தார் கற்றவவன் காணு மாபோல்
கடைபோகக் கண்டருளென் கல்வி யென்றே. 22

தாயின்மேல் ஆணை
175
வணங்குதலுங் கணங்களெலா மாயப் பாவி
மறித்தெம்மை மறுசூடு சுடுவை யாகில்
அணங்கரசி னாணையென அணங்கு மிப்போ
தவைதவிரெங் கிவைகற்றா யென்ன வாங்கே. 23

முதுபேய் வரலாறு
176
நின்முனிவுஞ் சுரகுருவின் முனிவு மஞ்சி
நிலையரிதென் றிமகிரிபுக் கிருந்தேற் கௌவை
தன்முனிவு மவன்முனிவுந் தவிர்க வென்று
சாதனமந் திரவிச்சை பலவுந் தந்தே. 24

177
உன்னுடைய பழவடியா ரடியாள் தெய்வ
உருத்திரயோ கினியென்பா ளுனக்கு நன்மை
இன்னுமுள கிடைப்பனவிங் கிருக்க வென்ன
யானிருந்தேன் சிலகால மிருந்த நாளில். 25


8. இராச பாரம்பரியம்

இமயத்தில் புலிக்கொடி

178
செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமயச்
சிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப்
பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்
பாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த பொழுதே. 1

நாரதர் கூறல்

179
கால மும்மையுமு ணர்ந்தருளு நார தனெனுங்
கடவுள் வேதமுனி வந்துகடல் சூழ்பு வியில்நின்
போலு மன்னருள ரல்லரென ஆசி புகலாப்
புகல்வ தொன்றுளது கேளரச வென்று புகல்வான். 2

விநாயகர் பாரதம் எழுதினார்

180
பண்டு பாரதமெ னுங்கதை பராச ரன்மகன்
பகர வெங்கரிமு கன்பரு மருப்பை யொருகைக்
கொண்டு மேருசிக ரத்தொரு புறத்தி லெழுதிக்
குவல யம்பெறு தவப்பய னுரைப்ப வரிதால். 3

181
பார தத்தினுள வாகிய பவித்ர கதையெம்
பரம னற்சரிதை மெய்ப்பழைய நான்ம றைகளே
நேர தற்கிதனை நான்மொழிய நீயு மெழுதி
நெடிய குன்றின்மிசை யேயிசைவ தான கதையே. 4

இதுவும் வேதம் ஆகும்

182
அதன் முதற்கண்வரு மாதிமுதன் மாய னிவனே
அப்ர மேயமெனு மெய்ப்ரியம தாக வுடனே
பதமு மிப்பதம் வகுக்கவரு பாத மதுவும்
பாத மானசில பார்புகழ வந்த அவையும். 5

183
அந்த முட்பட விருக்குமவ் விருக்கின் வழியே
ஆகி வந்தவவ் வருக்கமும் வருக்க முழுதும்
வந்த அட்டகமு மொட்டரிய சங்கி தைகளும்
வாய்மை வேதியர்கள் தாம்விதி யெனும் வகையுமே. 6

184
கமல யோனிமுத லாகவரு முங்கள் மரபிற்
காவன் மன்னவர்க ளாகிவரு கின்ற முறையால்
அமல வேதமிது காணுமிதி லார ணநிலத்
தமல னேயபய னாகிவரு கென்ற ருளியே. 7

நாரதர் இருப்பிடம் செல்லல்

185
அரணி வேள்வியி லகப்படு மகண்ட வுருவாய்
அரவ ணைத்துயிலு மாதிமுத லாக வபயன்
தரணி காவலள வுஞ்செல மொழிந்து முனிவன்
தானெ ழுந்தருள மாமுனி மொழிந்த படியே. 8

நாரதர் கூறிய வரலாறு

186
ஆதி மாலமல நாபிகம லத்த யனுதித்
தயன் மரீசியெனும் அண்ணலை யளித்த பரிசுங்
காதல் கூர்தரு மரீசிமக னாகி வளருங்
காசி பன்கதி ரருக்கனை யளித்த பரிசும். 9

187
அவ்வ ருக்கன்மக னாகிமனு மேதினி புரந்
தரிய காதலனை யாவினது கன்று நிகரென்
றெவ்வ ருக்கமும் வியப்பமுறை செய்த கதையும்
இக்கு வாகுவிவன் மைந்தனென வந்த பரிசும். 10

188
இக்கு வாகுவின் மகன்புதல்வ னான வுரவோன்
இகலு வோனிகலு ரஞ்செய்து புரந்த ரனெனுஞ்
சக்கு வாயிர முடைக்களிறு வாகன மெனத்
தானி ருந்துபொரு தானவரை வென்ற சயமும். 11

189
ஒருது றைப்புனல்சி னப்புலியு மானு முடனே
உண்ண வைத்தவுர வோனுலகில் வைத்த அருளும்
பொருது றைத்தலைபு குந்துமுசு குந்த னிமையோர்
புரம டங்கலும ரண்செய்து புரந்த புகழும். 12

190
கடல் கலக்கவெழு மின்னமுது தன்னை யொருவன்
கடவுள் வானவர்க ளுண்ணவருள் செய்த கதையும்
உடல்க லக்கற அரிந்துதசை யிட்டு மொருவன்
ஒருது லைப்புறவொ டொக்கநிறை புக்க புகழும். 13

191
சுராதி ராசன்முத லாகவரு சோழன் முனநாள்
சோழ மண்டலம மைத்தபிற கேழு லகையும்
இராச கேசரிபு ரந்துபர கேச ரிகளாம்
இருவ ராணைபுலி ஆணையென நின்ற இதுவும். 14

192
கால னுக்கிது வழக்கென வுரைத்த அவனும்
காவி ரிப்புனல்கொ ணர்ந்தவவ னும்பு வனியின்
மேல னைத்துயிரும் வீவதிலை யாக நமன்மேல்
வென்றி கொண்டவனு மென்றிவர்கள் கொண்ட விறலும். 15

193
புலியெ னக்கொடியி லிந்திரனை வைத்த அவனும்
புணரி யொன்றினிடை யொன்றுபுக விட்ட அவனும்
வலியி னிற்குருதி யுண்கென வளித்த அவனும்
வாத ராசனைவ லிந்துபணி கொண்ட அவனும். 16

194
தேங்கு தூங்கெயிலெ றிந்தவவ னுந்தி ரள்மணிச்
சுடர்வி மானமது வான்மிசையு யர்த்த அவனும்
தாங்கள் பாரதமு டிப்பளவும் நின்று தருமன்
தன்க டற்படைத னக்குதவி செய்த அவனும். 17

195
தளவ ழிக்குநகை வேல்விழி பிலத்தின் வழியே
தனிந டந்துரகர் தங்கண்மணி கொண்ட அவனும்
களவ ழிக்கவிதை பொய்கையுரை செய்ய உதியன்
கால்வ ழித் தளையை வெட்டியர சிட்ட அவனும். 18

கரிகால் வளவன்

196
என்று மற்றவர்கள் தங்கள்சரி தங்கள் பலவும்
எழுதி மீளவிதன் மேல்வழுதி சேரன் மடியத்
தன்ற னிக்களி றணைந்தருளி வீர மகள்தன்
தனத டங்களொடு தன்புய மணைந்த பரிசும். 19

197
தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
தொடர வந்திலா முகரி யைப்படத்
தெழுது கென்றுகண் டிதுமி கைக்கணென்
றிங்க ழிக்கவே அங்க ழிந்ததும். 20


198
தத்து நீர்வரால் குருமி வென்றதுந்
தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்
பத்தொ டாறுநூ றாயி ரம்பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும். 21

199
ஒருவர் முன்னொர்நாள் தந்து பின்செலா
உதியர் மன்னரே மதுரை மன்னரென்
றிருவர் தம்மையுங் கிழிகள் சுற்றுவித்
தெரிவி ளக்குவைத் திகல்வி ளைத்ததும். 22

முதலாம் பராந்தகன்

200
வேழ மொன்றுகைத் தாலி விண்ணின்வாய் விசைய டங்கவு மசைய வென்றதும்
ஈழ முந்தமிழ்க் கூடலுஞ் சிதைத் திகல்க டந்ததோ ரிசைப ரந்ததும். 23

முதலாம் இராசராச சோழன்

201
சதய நாள்விழா உதியர் மண்டலந் தன்னில் வைத்தவன் றனியொர் மாவின்மேல்
உதய பானுவொத் துதகை வென்றகோன் ஒருகை வாரணம் பலக வர்ந்ததும். 24

முதலாம் இராசேந்திர சோழன்

202
களிறு கங்கைநீ ருண்ண மண்ணையிற் காய்சி னத்தொடே கலவு செம்பியன்
குளிறு தெண்டிரைக் குரைக டாரமுங் கொண்டு மண்டலங் குடையுள் வைத்ததும். 25

முதலாம் இராசாதிராசன்
203
கம்பி லிச்சயத் தம்பம் நட்டதுங் கடிய ரண்கொள்கல் யாணர் கட்டறக்
கிம்பு ரிப்பணைக் கிரியு கைத்தவன் கிரிக ளெட்டினும் புலிபொ றித்ததும். 26

இராசேந்திர சோழன்
204
ஒருக ளிற்றின்மேல் வருக ளிற்றையொத் துலகு யக்கொளப் பொருது கொப்பையிற்
பொருக ளத்திலே முடிக வித்தவன் புவிக விப்பதோர் குடைக வித்ததும். 27

இராச மகேந்திரன்
205
பனுவலுக்கு முதலாய வேத நான்கிற்
பண்டுரைத்த நெறிபுதுக்கிப் பழையர் தங்கள்
மனுவினுக்கு மும்மடிநான் மடியாஞ் சோழன்
மதிக்குடைக்கீ ழறந்தளிர்ப்ப வளர்ந்த வாறும். 28

முதற் குலோத்துங்கன் தோற்றம்

206
குந்தளரைக் கூடற்சங் கமத்து வென்ற கோனபயன் குவலயங்காத் தளித்த பின்னை
இந்தநிலக் குலப்பாவை யிவன்பாற் சேர என்ன தவஞ் செய்திருந்தா ளென்னத் தோன்றி. 29

வெற்றிச் சிறப்பு

207
எவ்வளவு திரிபுவன முளவாய்த் தோன்றும் எவ்வளவு குலமறைக ளுளவாய் நிற்கும்
அவ்வளவு திகிரிவரை யளவுஞ் செங்கோல் ஆணைசெல்ல வபயன்காத் தளிக்கு மாறும். 30

கரிகாலன் எழுதி முடித்தான்

208
இப்பு றத்திமய மால்வரையின் மார்பி னகலத்
தெழுதி னானெழுது தற்கரிய வேத மெழுதி
ஒப்பு றத்தனது தொன்மரபு மம்ம ரபின்மேல்
உரைசெய் பல்புகழு மொன்றுமொழி யாத பரிசே. 31

காளி வியத்தல்

209
எழுதி மற்றுரைசெய் தவரவர்கள் செய்பி ழையெலாம்
எமர்பொ றுக்கவென விப்படிமு டித்த விதனைத்
தொழுது கற்றனமெ னத்தொழுது சொல்லு மளவிற்
சோழ வம்சமிது சொன்னவறி வென்னவழகோ. 32

காளி மகிழ்தல்
210
வையகமாங் குலமடந்தை மன்னபயன் தன்னுடைய மரபு கேட்டே
ஐயனையான் பெற்றெடுத்த வப்பொழுதும் இப்பொழுதொத் திருந்த தில்லை. 33

காளி புகழ்தல்
211
உலகையெலாங் கவிக்கின்ற ஒருகவிகைச் சயதுங்கன் மரபு கீர்த்தி
அலகையெலாங் காக்கின்ற அம்மைபூ தலங்காப்பா னவனே யென்ன. 34


9. பேய் முறைப்பாடு

பேய்களாகப் பிறந்து கெட்டோம்

212
ஆறுடைய திருமுடியா னருளுடைய பெருந்தேவி யபயன் காக்கும்
பேறுடைய பூதமாப் பிறவாமற் பேய்களாப் பிறந்து கெட்டேம். 1

எங்களை யார் காப்பார்

213
ஆர்காப்பா ரெங்களைநீ யறிந்தருளிக் காப்பதல்லா லடையப் பாழாம்
ஊர்காக்க மதில்வேண்டா வுயிர்காத்த உடம்பினைவிட் டோடிப் போதும். 2

பிழைக்க மாட்டோம்

214
ஓய்கின்றே மோய்வுக்கு மினியாற்றேம் ஒருநாளைக் கொருநாள் நாங்கள்
தேய்கின்ற படிதேய்ந்து மிடுக்கற்றேஞ் செற்றாலு முய்ய மாட்டேம். 3

ஆசை போதும்

215
வேகைக்கு விறகானே மெலியா நின்றே மெலிந்தவுடல் தடிப்பதற்கு விரகுங் காணேஞ்
சாகைக்கித் தனையாசை போதும் பாழிற் சாக்காடு மரிதாகத் தந்து வைத்தாய். 4

பசிக்கு ஒன்றும் இல்லேம்

216
சாவத்தாற் பெறுதுமோ சதுமுகன்றான் கீழ்நாங்கண் மேனாட் செய்த
பாவத்தா லெம்வயிற்றிற் பசியைவைத்தான் பாவியேம் பசிக்கொன் றில்லேம். 5

மூளி வாய் ஆனோம்

217
பதடிகளாய்க் காற்றடிப்ப நிலைநி லாமற் பறக்கின்றேம் பசிக்கலைந்து பாதி நாக்கும்
உதடுகளிற் பாதியுந்தின் றொறுவா யானேம் உனக்கடிமை யடியேமை யோடப் பாராய். 6

நெற்றாகி யுள்ளோம்
218
அகளங்க னமக்கிரங்கா னரசரிடுந் திறைக்கருள்வா னவன்றன் யானை
நிகளம்பூண் டனவடியேம் நெடும்பசியான் அறவுலர்ந்து நெற்றா யற்றேம். 7

நற்குறியால் பொறுத்துள்ளோம்
219
மூக்கருகே வழுநாறி முடைநாறி உதடுகளுந் துடிப்ப வாயை
ஈக்கதுவுங் குறியாலுய்ந் திருக்கின்றேம் அன்றாகி லின்றே சாதும். 8

முதுபேய் வருகை

220
என்றுபல கூளிகளி ரைத்துரைசெய் போதத்
தன்றிமய வெற்பினிடை நின்றுவரு மப்பேய். 9

முதுபேய் வணங்கிக் கூறல்

221
கைதொழுதி றைஞ்சியடி யேன்வடக லிங்கத்
தெய்தியவி டத்துளநி மித்தமிவை கேண்மோ. 10

தீய சகுனங்கள்

222
மதக்கரி மருப்பிற மதம்புலரு மாலோ
மடப்பிடி மருப்பெழ மதம்பொழியு மாலோ
கதிர்ச்சுடர் விளக்கொளி கறுத்தெரியு மாலோ
காலமுகில் செங்குருதி காலவரு மாலோ. 11

223
வார்முரசி ருந்துவறி தேயதிரு மாலோ
வந்திரவி லிந்திரவில் வானிலிடு மாலோ
ஊர்மனையி லூமனெழ ஓரியழு மாலோ
ஓமஎரி ஈமஎரி போல்கமழு மாலோ. 12

224
பூவிரியு மாலைகள் புலால்கமழு மாலோ
பொன்செய்மணி மாலையொளி போயொழியு மாலோ
ஓவிய மெலாமுடல் வியர்ப்பவரு மாலோ
ஊறுபுனல் செங்குருதி நாறவரு மாலோ. 13

விளைவு என்ன ஆகும்

225
எனாவுரைமு டித்ததனை யென்கொல்விளை வென்றே
வினாவுரை தனக்கெதிர் விளம்பின ளணங்கே. 14

இரு குறிகள் நல்லன

226
உங்கள் குறியும் வடகலிங்கத் துள்ள குறியு முமக்கழகே
நங்கள் கணிதப் பேய்கூறு நனவுங் கனவுஞ் சொல்லுவாம். 15

பரணிப் போர் உண்டு

227
நிருபரணி வென்றவக ளங்கன்மத யானைநிக ளங்களொடு நிற்பன வதற்
கொருபரணி உண்டென வுரைத்தன வுரைப்படி யுமக்கிது கிடைக்கு மெனவே. 16


களிப்பால் நடித்தன

228
தடித்தன மெனத்தலை தடித்தன மெனப்பல தனிப்பனை குனிப்ப வெனவே
நடித்தன நடிப்பவலி யற்றன கொடிற்றையு நனைத்தன உதட்டி னுடனே. 17

பசியை மறந்தன

229
விலக்குக விலக்குக விளைத்தன வெனக்களி விளைத்தன விளைத்தன விலா
அலக்குக வலக்குக வடிக்கடி சிரித்தன வயர்த்தன பசித்த பசியே. 18

வயிறு நிரம்பப் போதுமா

230
ஆடியிரைத் தெழுகணங்க ளணங்கேயிக் கலிங்கக்கூழ்
கூடியிரைத் துண்டொழியெங் கூடாரப் போதுமோ. 19

ஒட்டிக்கு இரட்டி

231
போதும்போ தாதெனவே புடைப்படல மிடவேண்டா
ஓதஞ்சூ ழிலங்கைப்போர்க் கொட்டிரட்டி கலிங்கப் போர். 20


10. அவதாரம்

திருமாலே தோன்றினான்

232
அன்றிலங்கை பொருதழித்த வவனேயப் பாரதப்போர் முடித்துப் பின்னை
வென்றிலங்கு கதிராழி விசயதரன் எனவுதித்தான் விளம்பக் கேண்மின். 1

233
தேவரெலாங் குறையிரப்பத் தேவகிதன் திருவயிற்றில் வசுதே வற்கு
மூவுலகுந் தொழநெடுமால் முன்னொருநாள் அவதாரஞ் செய்த பின்னை. 2

கண்ணனே குலோத்துங்கனானான்
234
இருள்முழுது மகற்றும்விது குலத்தோன் தேவி இகல்விளங்கு தபனகுலத் திராச ராசன்
அருள்திருவின் திருவயிற்றில் வந்து தோன்றி ஆலிலையில் அவதரித்தா னவனே மீள. 3

துந்துமி முழங்கிற்று

235
வந்தருளி யவதாரஞ் செய்தலுமே மண்ணுலகும் மறைகள் நான்கும்
அந்தரநீங் கினவென்ன வந்தரதுந் துமிமுழங்கி யெழுந்த தாங்கே. 4

மலர்க்கையால் எடுத்தாள்

236
அலர்மழைபோல் மழைபொழிய வதுகண்டு கங்கைகொண்ட சோழன் தேவி
குலமகள்தன் குலமகனைக் கோகனத மலர்க்கையா னெடுத்துக் கொண்டே. 5

பாட்டியார் கருத்து

237
அவனிபர்க்குப் புரந்தரனா மடையாளம் அவயவத்தி னடைவே நோக்கி
இவனெமக்கு மகனாகி யிரவிகுலம் பாரிக்கத் தகுவ னென்றே. 6

இருகுலத்து அரசரும் மகிழ்ந்தனர்

238
திங்களினி ளங்குழவி செம்மலிவ னென்றுஞ்
செய்யபரி திக்குழவி யையனிவ னென்றுந்
தங்களின் மகிழ்ந்திரு குலத்தரசர் தாமுந்
தனித்தனி யுவப்பதொர் தவப்பயனு மொத்தே. 7

நடை கற்றான்

239
சினப்புலி வளர்ப்பதொர் சிறுப்புலியு மொத்தே
திசைக்களி றணைப்பதொர் தனிக்களிறு மொத்தே
அனைத்தறமு மொக்கவடி வைக்கவடி வைத்தே
அறத்தொடு மறத்துறை நடக்கநடை கற்றே. 8

ஐம்படைத் தாலி அணிந்தனன்

240
பண்டுவசு தேவன்மக னாகிநில மாதின்
படர்களையு மாயனிவ னென்றுதௌி வெய்தத்
தண்டுதனு வாள்பணில நேமியெனு நாமத்
தன்படைக ளானதிரு வைம்படை தரித்தே. 9

மழலை மொழிந்தான்

241
தாயர்தரு பால்முலை சுரக்கவரு நாளே
தானுமுல கத்தவர்த மக்கருள்சு ரந்தே
தூயமனு வுஞ்சுருதி யும்பொருள்வி ளங்கிச்
சொற்கள்தெரி யத்தனது சொற்கள்தெரி வித்தே. 10


பூணூல் அணிந்தான்

242
திருமார்பின் மலர்மடந்தை திருக்கழுத்தின் மங்கலநா ணென்ன முந்நூற்
பெருமார்பின் வந்தொளிரப் பிறப்பிரண்டா வதுபிறந்து சிறந்த பின்னர். 11

மறை கற்றான்

243
போதங்கொள் மாணுருவாய்ப் புவியிரந்த அஞ்ஞான்று புகன்று சென்ற
வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளி மீண்டு கற்றே. 12

வீர வாள் ஏந்தினான்

244
நிறைவாழ்வைப் பெறல்நமக்கும் அணித்தென்று நிலப்பாவை களிப்ப விந்தத்
துறைவாளைப் புயத்திருத்தி யுடைவாளைத் திருவரையி னொளிர வைத்தே. 13

யானையேற்றம் கற்றான்

245
ஈரிரும ருப்புடைய வாரணமு கைத்தே இந்திரனெ திர்ந்தவரை வென்றுவரு மேயான்
ஓரிரும ருப்புடைய வாரணமு கைத்தே ஒன்னலரை வெல்வனென வன்னதுப யின்றே. 14

குதிரையேற்றம் பயின்றான்

246
இற்றைவரை யுஞ்செலவ ருக்கனொரு நாள்போல் ஏழ்பரியு கைத்திருள கற்றிவரு மேயான்
ஒற்றைவய மானடவி யித்தரைவ ளாகத் துற்றவிருள் தீர்ப்பனென மற்றதுப யின்றே. 15

படைக்கலம் பயின்றான்

247
சக்கரமு தற்படையொ ரைந்துமுதல் நாளே தன்னுடைய வானவத னாலவைந மக்குத்
திக்குவிச யத்தின்வரு மென்றவைப யிற்றிச் செங்கைமலர் நொந்திலசு மந்திலத னக்கே. 16

பல்கலை தேர்ந்தான்

248
உரைசெய்பல கல்விகளி னுரிமைபல சொல்லுவதெ னுவமையுரை செய்யி னுலகத்
தரசருள ரல்லரென அவைபுகழ மல்குகலை யவையவைகள் வல்ல பிறகே. 17

இளவரசன் ஆனான்
249
இசையுடனெ டுத்தகொடி யபயனவ னிக்கிவனை யிளவரசில் வைத்த பிறகே
திசையரச ருக்குரிய திருவினைமு கப்பதொரு திருவுளம டுத்த ருளியே. 18

போர்மேல் சென்றான்

250
வளர்வதொர்ப தத்தினிடை மதகரிமு கத்தினிடை
வளையுகிர்ம டுத்து விளையா
டிளவரியெ னப்பகைஞ ரெதிர்முனைக
ளைக்கிழிய எறிபடைபி டித்த ருளியே. 19

வடவரசரை வென்றான்

251
குடதிசை புகக்கடவு குரகதர
தத்திரவி குறுகலு மெறிக்கு மிருள்போல்
வடதிசை முகத்தரசர் வருகத
முகத்தனது குரகத முகைத் தருளியே. 20

வயிராகரத்தை எறித்தான்

252
புரமெரி மடுத்தபொழு ததுவிது வெனத்திகிரி புகையெரி குவிப்ப வயிரா
கரமெரி மடுத்தரசர் கரமெதிர் குவிப்பதொரு கடவரை தனைக் கடவியே. 21

களம் கொண்டான்

253
குளமுதிர மெத்தியதொர் குரைகடல்
கடுப்பவெதிர் குறுகலர்கள் விட்ட குதிரைத்
தளமுதிர வெட்டியொரு செருமுதிர
ஒட்டினர்கள் தலைமலை குவித் தருளியே. 22

சக்கரக்கோட்டம் அழித்தான்

254
மனுக்கோட்ட மழித்தபிரான் வளவர்பிரான் திருப்புருவத்
தனுக்கோட்ட நமன்கோட்டம் பட்டதுசக் கரக்கோட்டம். 23

சீதனம் பெற்றான்
255
சரிக ளந்தொறுந் தங்கள் சயமகள் தன்னை மன்னப யன்கைப் பிடித்தலும்
பரிக ளுங்களி றுந்தன ராசியும் பாரி போகங் கொடுத்தனர் பார்த்திபர். 24

கைவேல் சிவந்தது
256
பொருத ராதிபர் கண்கள் சிவந்தில போரி லோடிய கால்கள் சிவந்தன
விருத ராசப யங்கரன் செங்கையில் வேல்சி வந்தது கீர்த்தி வெளுத்ததே. 25

வீரராசேந்திரன் இறந்தான்

257
மாவுகைத் தொருதனி யபய னிப்படி வடதிசை மேற்செல மன்னர் மன்னவன்
தேவருக் கரசனாய் விசும்பின் மேற்செலத் தென்றிசைக் குப்புகுந் தன்மை செப்புவாம். 26

சோழ நாட்டில் நிகழ்ந்தவை

258
மறையவர் வேள்வி குன்றி மனுநெறி யனைத்து மாறித்
துறைகளோ ராறு மாறிச் சுருதியு முழக்கம் ஓய்ந்தே. 27

259
சாதிக ளொன்றொ டொன்று தலைதடு மாறி யாரும்
ஓதிய நெறியின் நில்லா தொழுக்கமும் மறந்த போயே. 28

260
ஒருவரை யொருவர் கைம்மிக் கும்பர்தங் கோயில் சோம்பி
அரிவையர் கற்பின் மாறி யரண்களு மழிய வாங்கே. 29

சோழநாடு அடைந்தான்

261
கலியிருள் பரந்த காலைக் கலியிருள் கரக்கத் தோன்றும்
ஒலிகட லருக்க னென்ன உலகுய்ய வந்து தோன்றி. 30

நீதியை நிலைநிறுத்தினான்

262
காப்பெலா முடைய தானே படைப்பதுங் கடனாக் கொண்டு
கோப்பெலாங் குலைந்தோர் தம்மைக் குறியிலே நிறுத்தி வைத்தே. 31

திரு முழுக்கு

263
விரிபுனல் வேலை நான்கும் வேதங்க ணான்கு மார்ப்பத்
திரிபுவ னங்கள் வாழ்த்தத் திருவபி டேகஞ் செய்தே. 32

முடி புனைதல்

264
அறைகழ லரச ரப்பொழு தடிமிசை யறுகெ டுத்திட
மறையவர் முடியெ டுத்தனர் மனுநெறி தலையெ டுக்கவே. 33


அறம் முளைத்தன

265
நிரைமணி பலகு யிற்றிய நெடுமுடி மிசைவி திப்படி
சொரிபுன லிடைமு ளைத்தன துறைகளி னறம னைத்துமே. 34

புலிக்கொடி எடுத்தான்

266
பொதுவற வுலகு கைக்கொடு புலிவளர் கொடியெ டுத்தலும்
அதுமுதற் கொடியெ டுத்தன அமரர்கள் முழவெ டுக்கவே. 35

நிலவு எறித்தது இருள் ஒளித்தது

267
குவிகைகொ டரசர் சுற்றிய குரைகழ லபயன் முத்தணி
கவிகையி னிலவெ றித்தது கலியெனு மிருளொ ளித்ததே. 36

குடை நிழலின் செயல்

268
அரனுறை யும்படி மலைகள் அடைய விளங்கின வனையோன்
ஒருதனி வெண்குடை யுலகில் ஒளிகொள் நலந்தரு நிழலில். 37

புகழ் மேம்பாடு

269
அரிதுயி லும்படி கடல்கள் அடைய விளங்கின கவினின்
ஒருகரு வெங்கலி கழுவி உலவு பெரும்புகழ் நிழலில். 38

270
நிழலில டைந்தன திசைகள் நெறியில டைந்தன மறைகள்
கழலில டைந்தனர் உதியர் கடலில டைந்தனர் செழியர். 39

271
கருணையொ டுந்தன துபய கரமுத வும்பொருள் மழையின்
அரணிய மந்திர அனல்கள் அவையுத வும்பெரு மழையே. 40

272
பரிசில் சுமந்தன கவிகள் பகடு சுமந்தன திறைகள்
அரசு சுமந்தன இறைகள் அவனி சுமந்தன புயமும். 41

273
விரித்த வாளுகிர் விழித் தழற்புலியை மீது வைக்கவிம யத்தினைத்
திரித்த கோலில்வளை வுண்டு நீதிபுரி செய்ய கோலில்வளை வில்லையே. 42

274
கதங்க ளிற்பொரு திறைஞ்சிடா வரசர் கால்க ளிற்றளையும் நூல்களின்
பதங்க ளிற்றளையு மன்றி வேறொரு பதங்க ளிற்றளைக ளில்லையே. 43

275
மென்க லாபமட வார்கள் சீறடி மிசைச்சி லம்பொலிவி ளைப்பதோர்
இன்க லாம்விளைவ தன்றி யெங்குமொர் இகல்க லாம்விளைவ தில்லையே. 44

பொழுது போக்கு

276
வருசெருவொன் றின்மையினால் மற்போருஞ் சொற்புலவோர் வாதப் போரும்
இருசிறைவா ரணப்போரு மிகன்மதவா ரணப்போரு மினைய கண்டே. 45

277
கலையினொடுங் கலைவாணர் கவியினொடும் இசையினொடுங் காதன் மாதர்
முலையினொடு மனுநீதி முறையினொடு மறையினொடும் பொழுது போக்கி. 46

பரிவேட்டையாட நினைத்தான்

278
காலாற்றண் டலையுழக்குங் காவிரியின் கரைமருங்கு வேட்டை யாடிப்
பாலாற்றங் கரைமருங்கு பரிவேட்டை ஆடுதற்குப் பயண மென்றே. 47

படை திரண்டது

279
முரசறைகென் றருளுதலு முழுதுலகும் ஒருநகருட் புகுந்த தொப்பத்
திரைசெய்கட லொலியடங்கத் திசைநான்கிற் படைநான்குந் திரண்ட வாங்கே. 48

வேட்டைக்குப் புறப்பட்டான்

280
அழகின்மே லழகுபெற வணியனைத்தும் அணிந்தருளிக் கணித நூலிற்
பழகினார் தெரிந்துரைத்த பழுதறுநாட் பழுதற்ற பொழுதத் தாங்கே. 49

தானம் அளித்தான்

281
அனக தானதரு மங்கண்மறை மன்னர் பெறவே
அபய தானமப யம்புகுது மன்னர் பெறவே
கனக தானமுறை நின்றுகவி வாணர் பெறவே
கரட தானமத வாரணமு மன்று பெறவே. 50

யானைமேல் ஏறினான்

282
மற்ற வெங்கட களிற்றினுத யக்கி ரியின்மேல்
மதிக வித்திட வுதித்திடு மருக்க னெனவே
கொற்ற வெண்குடை கவிப்பமிசை கொண்டு கவரிக்
குலம திப்புடை கவித்தநில வொத்து வரவே. 51

பல்லியம் முழங்கின

283
ஒருவ லம்புரி தழங்கொலி முழங்கி யெழவே
உடன் முழங்குபணி லம்பல முழங்கி யெழவே
பருவம் வந்துபல கொண்டல்கண் முழங்கி யெழவே
பலவி தங்களொடு பல்லிய முழங்கி எழவே. 52

வேறு பல ஒலிகள் எழுந்தன

284
மன்னர் சீர்சய மிகுத்திடை விடாத வொலியும்
மறைவ லாளர்மறை நாள்வயின் வழாத வொலியும்
இன்ன மாகடல் முழங்கியெழு கின்ற வொலியென்
றிம்ப ரும்பரறி யாதபரி செங்கு மிகவே. 53

ஏழிசைவல்லபியும் உடனிருந்தாள்

285
வாழி சோழகுல சேகரன் வகுத்த இசையின்
மதுர வாரியென லாகுமிசை மாத ரிதெனா
ஏழு பாருலகொ டேழிசை வளர்க்க உரியாள்
யானை மீதுபிரி யாதுட னிருந்து வரவே. 54

தியாகவல்லியும் சென்றாள்

286
பொன்னின் மாலைமலர் மாலைபணி மாறி யுடனே
புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ்பிடி வரச்
சென்னி யாணையுடன் ஆணையை நடத்து முரிமைத்
தியாக வல்லிநிறை செல்வியுடன் மல்கி வரவே. 55

மகளிரும் மன்னரும் சூழ வருதல்

287
பிடியின் மேல்வரு பிடிக்குல மநேக மெனவே
பெய்வ ளைக்கைமட மாதர்பிடிமீதின் வரவே
முடியின் மேன்முடி நிரைத்துவரு கின்ற தெனவே
முறைசெய் மன்னவர்கள் பொற்குடை கவித்து வரவே. 56

அரசரோடு வீரர் சூழ்ந்து வரல்

288
யானை மீதுவரும் யானையு மநேக மெனவே
அடுக ளிற்றின்மிசை கொண்டர சநேகம் வரவே
சேனை மீதுமொரு சேனைவரு கின்ற தெனவே
தௌிப டைக்கலன் நிலாவொளி படைத்து வரவே. 57

முரசொலியும் கொடிநிரலும்

289
முகிலின் மேன்முகின் முழங்கிவரு கின்ற தெனவே
மூரி யானைகளின் மேன்முரச திர்ந்து வரவே
துகிலின் மேல்வரு துகிற்குலமு மொக்கு மெனவே
தோகை நீள்கொடிகள் மேன்முகில் தொடங்கி வரவே. 58

புழுதி எழுந்தது

290
தேரின் மீதுவரு தேர்களு மநேக மெனவே
செம்பொன் மேகலை நிதம்பநிரை தேரின் வரவே
பாரின் மீதுமொரு பாருளது போலு மெனவே
படல தூளியு மெழுந்திடையின் மூடி வரவே. 59

படை செல்லும் காட்சி

291
யானை மேலிளம் பிடியின் மேனிரைத்
திடைய றாதுபோ மெறிக டற்கிணை
சேனை மாகடற் கபய னிம்முறைச்
சேது பந்தனஞ் செய்த தொக்கவே. 60

பல்லக்கும் முத்துக் குடையும்

292
நீல மாமணிச் சிவிகை வெள்ளமும் நித்தி லக்குலக் கவிகை வெள்ளமுங்
காலி னான்வரும் யமுனை வெள்ளமுங் கங்கை வெள்ளமுங் காண்மி னென்னவே. 61

புலிக்கொடிச் சிறப்பு

293
கெண்டை மாசுண முவணம் வாரணங் கேழ லாளிமா மேழி கோழிவிற்
கொண்ட வாயிரங் கொடிநு டங்கவே குமுறு வெம்புலிக் கொடிகு லாவவே. 62

மகளிர் கூட்டம்

294
தொடைகள் கந்தரம் புடைகொள் கொங்கைகண்
சோதி வாண்முகங் கோதை யோதிமென்
நடைகண் மென்சொலென் றடைய வொப்பிலா
நகை மணிக்கொடித் தொகைப ரக்கவே. 63

மகளிர் தோற்றம்

295
எங்குமுள மென்கதலி யெங்குமுள
தண்கமுக மெங்குமுள பொங்கு மிளநீர்
எங்குமுள பைங்குமிழ்க ளெங்குமுள
செங்குமுத மெங்குமுள செங்க யல்களே. 64

296
ஆறலைத ரங்கமுள வன்னநடை தாமுமுள
வாலைகமழ் பாகு முளவாய்
வேறுமொரு பொன்னிவள நாடுசய
துங்கன்முன்வி தித்ததுவு மொக்கு மெனவே. 65

மலைக் காட்சி

297
வேழம்நிரை வென்றுமலை யெங்குமிடை
கின்றவயில் வென்றியப யன்ற னருளால்
வாழவப யம்புகுது சேரனொடு
கூடமலை நாடடைய வந்த தெனவே. 66

298
அக்கிரிகு லங்கள்விடு மங்குலியின்
நுண்திவலை யச்செழிய ரஞ்சி விடுமத்
திக்கிலுள நித்திலமு கந்துகொடு
வீசியொரு தென்றல்வரு கின்ற தெனவே. 67

தில்லைக் கூத்தனை வணங்கினான்

299
தென்றிசையி னின்றுவட திக்கின்முகம்
வைத்தருளி முக்கணுடை வெள்ளி மலையோன்
மன்றினட மாடியருள் கொண்டுவிடை
கொண்டதிகை மாநகருள் விட்ட ருளியே. 68

காஞ்சியை அடைந்தான்
300
விட்டவதி கைப்பதியி னின்றுபய
ணம்பயணம் விட்டுவிளை யாடி யபயன்
வட்டமதி யொத்தகுடை மன்னர்தொழ
நண்ணினன்வ ளங்கெழுவு கச்சி நகரே. 69

கலிங்கப்பேய் ஓடிவந்தது

301
என்னுமித னன்மொழியெ டுத்திறைவி சொல்லுவதன் முன்னமிகல் கண்ட தொருபேய்
தன்னுடைய கால்தனது பிற்பட மனத்துவகை தள்ளிவர வோடி வரவே. 70

கலிங்கப் பேயின் மொழிகள்

302
கலிங்கர் குருதி குருதி கலிங்க மடைய வடைய
மெலிந்த வுடல்கள் தடிமின் மெலிந்த வுடல்கள் தடிமின். 71

303
உணங்கள் வயிறு குளிர உவந்து பருக பருக
கணங்க ளெழுக வெழுக கணங்க ளெழுக வெழுக. 72

304
என்செயப் பாவி காளிங் கிருப்பதங் கிருப்ப முன்னே
வன்சிறைக் கழுகும் பாறும் வயிறுகள் பீறிப் போன. 73

305
வயிறுக ளென்னிற் போதா வாய்களோ போதா பண்டை
எயிறுக ளென்னிற் போதா என்னினு மீண்டப் போதும். 74

306
சிரமலை விழுங்கச் செந்நீர்த் திரைகடல் பருக லாகப்
பிரமனை வேண்டிப் பின்னும் பெரும்பசி பெறவும் வேண்டும். 75


பேய்களின் பேரின்பம்

307
என்ற வோசை தஞ்செ விக் கிசைத்த லுந்த சைப்பிணந்
தின்ற போற்ப ருத்து மெய் சிரித்து மேல்வி ழுந்துமே. 76

308
ஓகை சொன்ன பேயின் வாயை ஓடி முத்த முண்ணுமே
சாகை சொன்ன பேய் களைத் தகர்க்க பற்க ளென்னுமே. 77

309
பிள்ளை வீழ வீழ வும்பெ ருந் துணங்கை கொட்டுமே
வள்ளை பாடி யாடி யோடி வாவெனாவ ழைக்குமே. 78

310
எனாவு ரைத்த தேவி வாழி வாழி யென்று வாழ்த்தியே
கனாவு ரைத்த பேயி னைக்க ழுத்தி னிற்கொ டாடுமே. 79

காளி போர்நிலை கேட்டல்

311
ஆடிவரு பேய்களின லந்தலைத விர்த்தடுப றந்தலைய றிந்த தனினின்
றோடிவரு பேயையிக லுள்ளபடி சொல்கெனவு ரைத்தனளு ரைத்த ருளவே. 80


11.காளிக்குக் கூளி கூறியது

நாவாயிரம் நாளாயிரம்

312
மாவா யிரமும் படக்கலிங்கர் மடிந்த களப்போ ருரைப்போர்க்கு
நாவா யிரமுங் கேட்போர்க்கு நாளா யிரமும் வேண்டுமால். 1

சிறியேன் விண்ணப்பம்

313
ஒருவர்க் கொருவாய் கொண்டு ரைக்க ஒண்ணா தேனு முண்டாகுஞ்
செருவைச் சிறியேன் விண்ணப்பஞ் செய்யச் சிறிது கேட்டருளே. 2

காஞ்சனம் பொழிகாஞ்சி

314
பாரெ லாமுடை யானப யன்கொடைப் பங்க யக்கர மொப்பெனப் பண்டொர்நாள்
காரெ லாமெழுந் தேழரை நாழிகைக் காஞ்ச னம்பொழி காஞ்சிய தன்கணே. 3

சித்திர மண்டபத்தில்

315
அம்பொன் மேருவ துகொலி துகொலென் றாயி ரங்கதிர் வெய்யவ னையுறுஞ்
செம்பொன் மாளிகைத் தென்குட திக்கினிற் செய்த சித்திர மண்டபந் தன்னிலே. 4

நித்திலப் பந்தரின்கீழ்

316
மொய்த்தி லங்கிய தாரகை வானின்நீள் முகட் டெழுந்த முழுமதிக் கொப்பென
நெய்த்தி லங்கிய நித்திலப் பந்தரின் நின்று வெண்குடை யொன்று நிழற்றவே. 5

குடையும் சாமரையும்
317
மேற்க வித்த மதிக்குடை யின்புடை வீசு கின்றவெண் சாமரை தன்றிருப்
பாற்க டற்றிரை யோரிரண் டாங்கிரு பாலும் வந்து பணிசெய்வ போலுமே. 6

சிங்க ஏறு

318
அங்கண் ஞால மனைத்தும் புயத்தில்வைத் தாட கக்கிரி யிற்புலி வைத்தவன்
சிங்க ஆசனத் தேறி யிருப்பதோர் சிங்க வேறெனச் செவ்வி சிறக்கவே. 7

இருந்த மாட்சி

319
பணிப் பணத்துறை பார்க்கொரு நாயகன் பல்க லைத்துறை நாவிலி ருந்தவன்
மணிப்ப ணிப்புயத் தேசிங்க வாகனி வந்து செந்திரு மாதொடி ருக்கவே. 8

தேவியர் சேவித்திருந்தனர்

320
தரும டங்கமு கந்துத னம்பொழி தன்பு யம்பிரி யாச்சயப் பாவையுந்
திரும டந்தையும் போற்பெரும் புண்ணியஞ் செய்த தேவியர் சேவித் திருக்கவே. 9

ஏவற் பெண்டிர்

321
நாட காதிநி ருத்தம னைத்தினு நால்வ கைப்பெரும் பண்ணினு மெண்ணிய
ஆடல் பாடல ரம்பைய ரொக்குமவ் வணுக்கி மாரும நேகரி ருக்கவே. 10

புகழ் பாடுவோம்

322
சூதர் மாகத ராதிய மாந்தருந் துய்ய மங்கலப் பாடகர் தாமுநின்
பாத மாதர ராயவர் கட்கெலாம் பைம்பொன் மௌலியெ னப்புகழ் பாடவே. 11

இசை வல்லார் போற்றினர்

323
வீணை யாழ்குழல் தண்ணுமை வல்லவர் வேறு வேறிவை நூறுவி தம்படக்
காண லாம்வகை கண்டனம் நீயினிக் காண்டல் வேண்டுமெ னக்கழல் போற்றவே. 12

கல்வியில் பிழை
324
தாள முஞ்செல வும்பிழை யாவகை தான் வகுத்தன தன்னெதிர் பாடியே
காள முங்களி றும்பெறும் பாணர்தங் கல்வி யிற்பிழை கண்டனன் கேட்கவே. 13

மன்னவர் பணிமாறினர்
325
வெங்க ளிற்றிலி ழிந்தபின் வந்தடி வீழ்ந்த மன்னவர் வெந்நிடு முன்னிடு
தங்கள் பொற்குடை சாமர மென்றிவை தாங்கள் தங்கரத் தாற்பணி மாறவே. 14

மன்னர் மனைவியர் சேடியர்

326
தென்ன ராதிந ராதிப ரானவர் தேவி மார்கள்தன் சேடிய ராகவே
மன்ன ராதிபன் வானவ ராதிபன் வந்தி ருந்தன னென்னவி ருக்கவே. 15

அமைச்சர் முதலியோர்

327
மண்ட லீகரு மாநில வேந்தரும் வந்து ணங்குக டைத்தலை வண்டைமன்
தொண்டை மான்முதல் மந்திரப் பாரகர் சூழ்ந்து தன்கழல் சூடியி ருக்கவே. 16

கப்பம் செலுத்தச் சென்றனர்

328
முறையி டத்திரு மந்திர ஓலையாண் முன்வ ணங்கிமு ழுவதும் வேந்தர்தந்
திறையி டப்புற நின்றன ரென்றலுஞ் செய்கை நோக்கிவந் தெய்தியி ருக்கவே. 17

கூடியிருந்த அரசர்கள்

329
தென்னவர் வில்லவர் கூபகர் சாவகர் சேதிபர் யாதவரே
கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே. 18

330
கங்கர் கராளர் கவிந்தர் துமிந்தர் கடம்பர் துளும்பர்களே
வங்க ரிலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே. 19

331
சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவ ரையணரே
கொங்கணர் கொங்கர் குலிங்கர் சவுந்தியர் குச்சரர் கச்சியரே. 20

332
வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர்மி லேச்சர்களே
குத்தர் குணத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே. 21

333
எந்நக ரங்களு நாடு மெமக்கருள் செய்தனை யெம்மையிடச்
சொன்னத னங்கள்கொ ணர்ந்தன மென்றடி சூடுக ரங்களொடே. 22

திறைப் பொருள்கள்

334
ஆர மிவையிவை பொற்கலம் ஆனை யிவையிவை ஒட்டகம்
ஆட லயமிவை மற்றிவை ஆதி முடியொடு பெட்டகம்
ஈர முடையன நித்திலம் ஏறு நவமணி கட்டிய
ஏக வடமிவை மற்றிவை யாதும் விலையில் பதக்கமே. 23

335
இவையு மிவையு மணித்திரள் இனைய விவைகன கக்குவை
இருளும் வெயிலு மெறித்திட இலகு மணிமக ரக்குழை
உவையு முவையுமி லக்கணம் உடைய பிடியிவை யுள்பக
டுயர்செய் கொடியிவை மற்றிவை உரிமை யரிவையர் பட்டமே. 24

336
ஏறி யருளவ டுக்குமிந் நூறு களிறுமி வற்றெதிர்
ஏனை யரசரொ ருத்தரோர் ஆனை யிடுவரெ னிற்புவி
மாறி யருளவ வர்க்கிடை யாமு மிசைவமெ னப்பல
மான வரசர்த னித்தனி வாழ்வு கருதியு ரைப்பரே. 25

உளர் கொல்

337
அரச ரஞ்சலென வடியி ரண்டுமவர் முடியின் வைத்தருளி யரசர்மற்
றுரைசெ யுந்திறைக ளொழிய நின்றவரும் உளர்கொ லென்றருளு பொழுதிலே. 26

திருமந்திர ஓலையின் மறுமொழி

338
கடகர் தந்திறைகொ டடைய வந்தரசர் கழல்வ ணங்கினர்க ளிவருடன்
வடக லிங்கர்பதி யவனி ரண்டுவிசை வருகி லன்றிறைகொ டெனலுமே. 27

முறுவல் கொண்டான்

339
உறுவ தென்கொலென நிலைகு லைந்தரசர் உயிர் நடுங்கவொளிர் பவளவாய்
முறுவல் கொண்டபொரு ளறிகி லஞ்சிறிது முனிவு கொண்டதிலை வதனமே. 28

குலோத்துங்கனின் கட்டளை

340
எளிய னென்றிடினும் வலிய குன்றரணம் இடிய நம்படைஞர் கடிதுசென்
றளிய லம்புமத மலைகள் கொண்டணைமின் அவனை யுங்கொணர்மி னெனலுமே. 29

தொண்டைமான் எழுந்தான்

341
இறைமொ ழிந்தளவி லெழுக லிங்கமவை எறிவ னென்றுகழல் தொழுதனன்
மறைமொ ழிந்தபடி மரபின் வந்தகுல திலகன் வண்டைநக ரரசனே. 30

விடை அளித்தான்

342
அடைய வத்திசைப் பகைது கைப்பனென் றாசை கொண்டடற் தொண்டைமான்
விடையெ னக்கெனப் புலியு யர்த்தவன் விடைகொ டுக்கவப் பொழுதிலே. 31

படைகள் திரண்டன

343
கடல்க லக்கல்கொன் மலையி டித்தல்கொல் கடுவி டப்பொறிப் பணபணிப்
பிடரொ டித்தல்கொல் படைநி னைப்பெனப் பிரள யத்தினிற் றிரளவே. 32

திசை யானைகள் செவிடுபட்டன

344
வளைக லிப்பவு முரசொ லிப்பவு மரமி ரட்டவும் வயிரமாத்
தொளையி சைப்பவுந் திசையி பச்செவித் தொளைய டைத்தலைத் தொடரவே. 33

இருள் பரந்தது

345
குடைநி ரைத்தலிற் றழைநெ ருக்கலிற் கொடிவி ரித்தலிற் குளிர்ச துக்கமொத்
திடைநி ரைத்தலிற் பகல்க ரப்பவுய்த் திருநி லப்பரப் பிருள்ப ரக்கவே. 34

ஒளி பிறந்தது

346
அலகில் கட்டழற் கனல்வி ரித்தலால் அரிய பொற்பணிக் கலனெ றித்தலால்
இலகு கைப்படை கனல்வி ரித்தலால் இருள்க ரக்கவே யொளிப ரக்கவே. 35

கண்டவர் வியப்பு

347
அகில வெற்புமின் றானை யானவோ அடைய மாருதம் புரவி யானவோ
முகில னைத்துமத் தேர்க ளானவோ மூரி வேலைபோர் வீர ரானவோ. 36

படையின் பரப்பு

348
பார்சி றுத்தலிற் படைபெ ருத்ததோ படைபெ ருத்தலிற் பார்சி றுத்ததோ
நேர்செ றுத்தவர்க் கரிது நிற்பிடம் நெடுவி சும்பலா லிடமு மில்லையே. 37

படை பொறுமை இழந்தது

349
எனவெ டுத்துரைத் ததிச யித்துநின் றினைய மண்ணுளோ ரனைய விண்ணுளோர்
மனந டுக்குறப் பொறைம றத்தலான் மாதி ரங்களிற் சாது ரங்கமே. 38

யானைகள் சென்றன

350
கடல்க ளைச்சொரி மலையுள வெனவிரு கடத டத்திடை பொழிமத முடையன
கனல்வி ளைப்பன முகிலுள வெனவிழி கனல்சி னத்தன கரியொடு பரிகளின்
உடல்பி ளப்பன பிறைசில வுளவென உயர்ம ருப்பின வுலகுகள் குலைதர
உருமி டிப்பன வடவன லுளவென ஒலிமு கிற்கட கரிகளு மிடையவே. 39

குதிரைகள் சென்றன

351
முனைக ளொட்டினர் முடியினை யிடறுவ முடியின் முத்தினை விளைபுக ழெனநில
முதுகில் வித்துவ நிலமுறு துகளற முகின்மி திப்பன முகில்விடு துளியொடு
கனை கடற்றிரை நிரையென விரைவொடு கடலி டத்தினை வலமிடம் வருவன
கடலி டத்திறு மிடியென வடியிடு கவன மிக்கன கதழ்பரி கடுகவே. 40

தேர்கள் சென்றன

352
இருநி லத்திட ருடைபடு முருளன இருபு டைச்சிற குடையன முனைபெறின்
எதிர்ப றப்பன விடுநுக மொடுகடி திவுளி முற்படி னிதுபரி பவமெனும்
ஒருநி னைப்பினை யுடையன வினையன உயர்செய் மொட்டொடு மலரென நிறுவிய
ஒழித ரச்செரு வுறுபுன லுமிழ்வன உலக ளப்பன விரதமு மருவியே. 41

வீரர்கள் சென்றனர்

353
அலகில் வெற்றியு முரிமையு மிவையென
அவய வத்தினி லெழுதிய வறிகுறி
அவையெ னப்பல வடு நிரை யுடையவர்
அடிபு றக்கிடி லமரர்த முலகொடிவ்
வுலகு கைப்படு மெனினும தொழிபவர்
உடல் நமக்கொரு சுமையென முனிபவர்
உயிரை விற்றுறு புகழ்கொள வுழல்பவர்
ஒருவ ரொப்பவர் படைஞர்கண் மிடையவே. 42

வீரர் சிரிப்பொலி
354
விழித்த விழிதனி விழித்த விருதர்கள் விடைத்து வெடுவெடு சிரித்தவாய்
தெழித்த பொழுதுடல் திமிர்க்க விமையவர் திகைக்கண் மதகரி திகைக்கவே. 43

குதிரைகளின் வாய்நுரை
355
உகத்தின் முடிவினி லுகைத்த கனைகடல் உவட்டி யெனமுகில் முகட்டின்மேல்
நகைத்த விடுபரி முகக்கண் நுரைசுர நதிக்கண் நுரையென மிதக்கவே. 44

யானைகளின் பிளிறல் ஒலி

356
கழப்பில் வௌில்சுளி கதத்தி லிருகவுள் கலித்த கடமிடி பொறுத்த போர்க்
குழப்பி வருமுகின் முழக்கி லலைகடல் குளிக்கு முகில்களு மிடக்கவே. 45

தேர்ப்படைகளின் ஒலி

357
கடுத்த விசையிருள் கொடுத்த வுலகொரு கணத்தில் வலம்வரு கணிப்பில் தேர்
எடுத்த கொடிதிசை யிபத்தின் மதமிசை இருக்கு மளிகளை யெழுப்பவே. 46

எழுந்தது சேனை

358
எழுந்தது சேனை யெழலு மிரிந்தது பாரின் முதுகு
விழுந்தன கானு மலையும் வெறுந்தரை யான திசைகள். 47

அதிர்ந்தன திசைகள்

359
அதிர்ந்தன நாலு திசைகள் அடங்கின ஏழு கடல்கள்
பிதிர்ந்தன மூரி மலைகள் பிறந்தது தூளி படலம். 48

புழுதியால் வறண்டன

360
நிலந்தரு தூளி பருகி நிறைந்தது வானின் வயிறு
வலந்தரு மேக நிரைகள் வறந்தன நீர்கள் சுவறி. 49

புழுதி தணிந்தது

361
தயங்கொளி ஓடை வரைகள் தருங்கடம் தாரை மழையின்
அயங்களின் வாயின் நுரையின் அடங்கின தூளி அடைய. 50

இரவு தங்கிப் பகலில் சென்றன
362
எழுதூ ளியடங் கநடந் துதயத் தேகுந் திசைகண் டதுமீ ளவிழும்
பொழுதே கலொழிந் துகடற் படையெப் பொழுதுந் தவிரா துவழிக் கொளவே. 51

கருணாகரன் சென்றான்
363
தண்ணா ரின்மலர்த் திரள்தோ ளபயன் தானே வியசே னைதனக் கடையக்
கண்ணா கியசோ ழன்சக் கரமாம் கருணா கரன்வா ரணமேற் கொளவே. 52

பல்லவ அரசன் சென்றான்

364
தொண்டை யர்க்கரசு முன்வ ருஞ்சுரவி துங்க வெள்விடையு யர்த்தகோன்
வண்டை யர்க்கரசு பல்ல வர்க்கரசு மால்க ளிற்றின்மிசை கொள்ளவே. 53

அரையனும் சோழனும் சென்றனர்

365
வாசி கொண்டரசர் வார ணங்கவர வாண கோவரையன் வாண்முகத்
தூசி கொண்டுமுடி கொண்ட சோழனொரு சூழி வேழமிசை கொள்ளவே. 54

போர்மேற் செல்லல்

366
மறித்தோடி யெவ்வரசுஞ் சரிய வென்று
வருமனுக்கைப் பல்லவர்கோன் வண்டை வேந்தன்
எறித்தோடை யிலங்குநடைக் களிற்றின் மேற்கொண்
டிரைவேட்ட பெரும்புலிபோ லிகன்மேற் செல்ல. 55

ஆறு பல கடந்தனர்

367
பாலா றுகுசைத் தலைபொன் முகரிப் பழவா றுபடர்ந் தெழுகொல் லியெனும்
நாலா றுமகன் றொருபெண் ணையெனும் நதியா றுகடந் துநடந் துடனே. 56

368
வயலா றுபுகுந் துமணிப் புனல்வாய் மண்ணா றுவளங் கெழுகுன் றியெனும்
பெயலா றுபரந் துநிறைந் துவரும் பேரா றுமிழிந் ததுபிற் படவே. 57

369
கோதா வரிநதி மேலா றொடுகுளிர் பம்பா நதியொடு சந்தப்பேர்
ஓதா வருநதி யொருகோ தமையுடன் ஒலிநீர் மலிதுறை பிறகாக. 58

சூறையிடல்

370
கடையிற் புடைபெயர் கடலொத் தமரர் கலங்கும் பரிசு கலிங்கம்புக்
கடையப் படரெரி கொளுவிப் பதிகளை அழியச் சூறைகொள் பொழுதத்தே. 59

கலிங்கர் நடுக்கம்

371
கங்கா நதியொரு புறமா கப்படை கடல்போல் வந்தது கடல்வந்தால்
எங்கே புகலிட மெங்கே யினியரண் யாரே அதிபதி யிங்கென்றே. 60

372
இடிகின் றனமதி லெரிகின் றனபதி எழுகின் றனபுகை பொழிலெல்லாம்
மடிகின் றனகுடி கெடுகின் றனமினி வளைகின் றனபடை பகையென்றே. 61

முறையீடு

373
உலகுக் கொருமுத லபயற் கிடுதிறை உரைதப் பியதெம தரசேயெம்
பலகற் பனைகளை நினைவுற் றிலைவரு படைமற் றவன்விடு படையென்றே. 62

கலிங்கர் நிலை

374
உரையிற் குழறியு முடலிற் பதறியும் ஒருவர்க் கொருவர்முன் முறையிட்டே
அரையிற் றுகில்விழ வடையச் சனபதி அடியிற் புகவிழு பொழுதத்தே. 63

அனந்தவன்மனின் செயல்

375
அந்தரமொன் றறியாத வடகலிங்கர் குலவேந்த னனந்த பன்மன்
வெந்தறுகண் வெகுளியினால் வெய்துயிர்த்துக் கைபுடைத்து வியர்த்து நோக்கி. 64

அனந்தவன்மன் கூற்று

376
வண்டினுக்குந் திசையானை மதங்கொடுக்கு மலர்க்கவிகை யபயற் கன்றித்
தண்டினுக்கு மௌியனோ வெனவெகுண்டு தடம்புயங்கள் குலுங்க நக்கே. 65

இகழ்ந்து பேசினான்

377
கானரணு மலையரணுங் கடலரணுஞ் சூழ்கிடந்த கலிங்கர் பூமி
தானரண முடைத்தென்று கருதாது வருவதுமத் தண்டு போலும். 66


எங்கராயன் அறிவுரை

378
என்று கூறலு மெங்க ராயனான்
ஒன்று கூறுவன் கேளென் றுணர்த்துவான். 67

379
அரசர் சீறுவ ரேனு மடியவர்
உரைசெ யாதொழி யார்களு றுதியே. 68

380
ஏனை வேந்தை யெறியச் சயதரன்
தானை யல்லது தான்வர வேண்டுமோ. 69

381
விட்ட தண்டினின் மீனவ ரைவருங்
கெட்ட கேட்டினைக் கேட்டிலை போலுநீ. 70

382
போரின் மேற்றண் டெடுக்கப் புறக்கிடுஞ்
சேரர் வார்த்தை செவிப்பட்ட தில்லையோ. 71

383
வேலை கொண்டு விழிஞ மழித்ததுஞ்
சாலை கொண்டதுந் தண்டுகொண் டேயன்றோ. 72

384
மாறு பட்டெழு தண்டெழ வத்தவர்
ஏறு பட்டது மிம்முறை யேயன்றோ. 73

385
தளத்தொ டும்பொரு தண்டெழப் பண்டொர்நாள்
அளத்தி பட்டத றிந்திலை யையநீ. 74

386
கண்ட நாயகர் காக்குந விலையிற்
கொண்ட தாயிரங் குஞ்சர மல்லவோ. 75

387
உழந்து தாமுடை மண்டலந் தண்டினால்
இழந்த வேந்த ரெனையரென் றெண்ணுகேன். 76

388
கண்டு காணுன் புயவலி நீயுமத்
தண்டு கொண்டவன் சக்கரம் வந்ததே. 77

389
இன்று சீறினும் நாளையச் சேனைமுன்
நின்ற போழ்தினி லென்னை நினைத்தியால். 78

அனந்தவன்மனின் ஆத்திரப் பேச்சு
390
என்றிவையு ரைத்தலுமெ னக்கெதிரு
ரைக்கவிமை யோர்களுந டுங்கு வர்புயக்
குன்றிவைசெ ருத்தொழில்பெ றாதுநெடு
நாண்மெலிவு கொண்டபடி கண்டு மிலையோ. 79

391
பிழைக்கவுரை செய்தனை பிழைத்தனை
எனக்குறுதி பேசுவது வாசி கெடவோ
முழைக்கணிள வாளரி முகத்தௌி
தெனக்களிறு முட்டியெதிர் கிட்டி வருமோ. 80

392
என்னுடைய தோள்வலியு மென்னுடைய
வாள்வலியும் யாதுமறி யாது பிறர்போல்
நின்னுடைய பேதைமையி னாலுரைசெய்
தாயிதுநி னைப்பளவில் வெல்ல வரிதோ. 81

கலிங்கர்கோன் கட்டளை

393
வேழமிர தம்புரவி வெம்படைஞர்
என்றினைய நம்படை விரைந்து கடுகச்
சோழகுல துங்கன்விட வந்துவிடு
தண்டினெதிர் சென்றமர் தொடங்கு கெனவே. 82

394
பண்ணுக வயக்களிறு பண்ணுக
வயப்புரவி பண்ணுக கணிப்பில் பலதேர்
நண்ணுக படைச்செருநர் நண்ணுக
செருக்களம் நமக்கிகல் கிடைத்த தெனவே. 83

கலிங்கர் படையொலி

395
கலிங்கமவை யேழினு மெழுந்ததொரு
பேரொலி கறங்குகட லேழு முடனே
மலங்கியெழு பேரொலி யெனத்திசை
திகைப்புற வருந்தொனி யெழுந்த பொழுதே. 84

கரி பரிப் படைகள்
396
தொளைமுக மதமலை யதிர்வன தொடுகடல் பருகிய முகிலெனவே
வளைமுக நுரையுக வருபரி கடலிடை மறிதிரை யெனவெழவே. 85

குடை சாமரை கொடி
397
இடையிடை யரசர்க ளிடுகுடை
கவரிக ளிவைகடல் நுரையெனவே
மிடைகொடி பிறழ்வன மறிகடல்
அடையவு மிளிர்வன கயலெனவே. 86

படையின் புறப்பாடு

398
அலகினொ டலகுகள் கலகல
வெனுமொலி யலைதிரை யொலியெனவே
உலகுகள் பருகுவ தொருகடல்
இதுவென வுடலிய படையெழவே. 87

தேர்களும் வீரர்களும்

399
விசைபெற விடுபரி யிரதமு
மறிகடல் மிசைவிடு கலமெனவே
இசைபெற வுயிரையு மிகழ்தரும்
இளையவ ரெறிசுற வினமெனவே. 88

படை சென்றதன் விளைவு

400
விடவிகண் மொடுமொடு விசைபட
முறிபட வெறிபட நெறிபடவே
அடவிகள் பொடிபட அருவிகள்
அனல்பட அருவரை துகள்படவே. 89

சினத்தீயும் முரசொலியும்

401
அறைகழ லிளையவர் முறுகிய
சினவழ லதுவட வனலெனவே
முறைமுறை முரசுகள் மொகுமொகு
வதிர்வன முதிர்கட லதிர்வெனவே. 90

படைகளின் நெருக்கம்

402
ஒருவர்த முடலினி லொருவர்தம்
உடல்புக வுறுவதொர் படியுகவே
வெருவர மிடைபடை நடுவொரு
வௌியற விழியிட வரிதெனவே. 91

வீரர்கள் போருக்கெழுந்தனர்

403
வௌியரி தெனவெதிர் மிடைபடை மனுபரன் விடுபடை யதனெதிரே
எளிதென விரைபெறு புலியென வலியினொ டெடுமெடு மெடுமெனவே. 92


12 . போர் பாடியது

போரின் பேரொலி

404
எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே. 1

405
வெருவர வரிசிலை தெறித்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே
செருவிடை யவரவர் தெழித்ததோர் தெழியுல குகள்செவி டெடுக்கவே. 2

இருபடைகளும் குதிரைகளும்

406
எறிகட லொடுகடல் கிடைத்தபோல் இருபடை களுமெதிர் கிடைக்கவே
மறிதிரை யொடுதிரை மலைத்தபோல் வருபரி யொடுபரி மலைக்கவே. 3

யானைப் படையும் குதிரைப் படையும்

407
கனவரை யொடுவரை முனைத்தபோற் கடகரி யொடுகரி முனைக்கவே
இனமுகின் முகிலொடு மெதிர்த்தபோல் இரதமொ டிரதமு மெதிர்க்கவே. 4

வீரர்களும் அரசர்களும்

408
பொருபுலி புலியொடு சிலைத்தபோற் பொருபட ரொடுபடர் சிலைக்கவே
அரியினொ டரியின மடர்ப்பபோல் அரசரு மரசரு மடர்க்கவே. 5

விற்போர்
409
விளைகனல் விழிகளின் முளைக்கவே மினலொளி கனலிடை யெறிக்கவே
வளைசிலை யுருமென விடிக்கவே வடிகணை நெடுமழை படைக்கவே. 6

குருதி ஆறு
410
குருதியின் நதிவௌி பரக்கவே குடையின நுரையென மிதக்கவே
கரிதுணி படுமுட லடுக்கியே கரையென விருபுடை கிடக்கவே. 7

யானைப் போர்
411
மருப்பொடு மருப்பெதிர் பொருப்பிவை எனப்பொரு மதக்கரி மருப்பி னிடையே
நெருப்பொடு நெருப்பெதிர் சுடர்ப்பொறி தெறித்தெழ நிழற்கொடி தழற்க துவவே. 8

412
நிழற்கொடி தழற்கது வலிற்கடி தொளித்தவை நினைப்பவர் நினைப்ப தன்முனே
அழற்படு புகைக்கொடி யெடுத்தன புதுக்கொடி யனைத்தினு நிரைத்த தெனவே. 9

413
இடத்திடை வலத்திடை யிருத்திய துணைக்கரம் நிகர்த்தன வடுத்த கரியின்
கடத்தெழு மதத்திடை மடுத்தன சிறப்பொடு கறுத்தன வவற்றி னெயிறே. 10

414
எயிறுக ளுடையபொ ருப்பை வலத்திடை எதிரெதி ரிருபணை யிட்டுமு றுக்கிய
கயிறுக ளிவையென அக்கர டக்கரி கரமொடு கரமெதிர் தெற்றிவ லிக்கவே. 11

குதிரைகளின் தோற்றம்

415
முடுகிய பவனப தத்திலு கக்கடை முடிவினி லுலகமு ணச்சுடர் விட்டெழு
கடுகிய வடவன லத்தினை வைத்தது களமுறு துரகக ணத்தின்மு கத்திலே. 12

வீரர்களின் பெருமிதம்

416
களமுறு துரகக ணத்தின்மு கத்தெதிர் கறுவிலர் சிலர்கல வித்தலை நித்தில
இளமுலை யெதிர்பொரு மப்பொழு திப்பொழு தெனவெதிர் கரியின்ம ருப்பின்மு னிற்பரே. 13

வாள் வீரர்களின் சிறப்பு

417
எதிர்பொரு கரியின்ம ருப்பையு ரத்தினில் இறவெறி படையினி றுத்துமி றைத்தெழு
சதுரர்கண் மணியக லத்தும ருப்பவை சயமகள் களபமு லைக்குறி யொத்ததே. 14

குதிரை வீரர்களின் சிறப்பு

418
சயமகள் களபமு லைக்கணி யத்தகு தனிவட மிவையென மத்தக முத்தினை
அயமெதிர் கடவிம தக்கரி வெட்டினர் அலைபடை நிரைகள்க ளத்துநி ரைக்கவே. 15

வில் வீரரின் சிறப்பு

419
அலைபடை நிரைகள்நி றைத்தசெ ருக்களம் அமர்புரி களமென வொப்பில விற்படை
தலைபொர வெரியநெ ருப்பினின் மற்றது தழல்படு கழைவன மொக்கினு மொக்குமே. 16

420
தழல்படு கழைவன மெப்படி யப்படி சடசட தமரமெ ழப்பக ழிப்படை
அழல்படு புகையொடி ழிச்சிய கைச்சிலை அடுசிலை பகழிதொ டுத்துவ லிப்பரே. 17

421
அடுசிலை பகழிதொ டுத்துவி டப்புகும் அளவினி லயமெதிர் விட்டவர் வெட்டின
உடல்சில இருதுணி பட்டன பட்டபின் ஒருதுணி கருதுமி லக்கைய ழிக்குமே. 18

422
ஒருதுணி கருதுமி லக்கைய ழித்தன உருவிய பிறைமுக வப்பக ழித்தலை
அரிதரி திதுவுமெ னப்பரி யுய்ப்பவர் அடியொடு முடிகள்து ணித்துவி ழுத்துமே. 19

குதிரை வீரரின் சிறப்பு

423
அடியொடு முடிகள்து ணித்துவி ழப்புகும் அளவரி தொடைசம ரத்தொட ணைத்தனர்
நெடியன சிலசர மப்படிப் பெற்றவர் நிறைசர நிமிரவி டத்துணி யுற்றவே. 20

424
நிறைசர நிமிரவி டத்துணி யுற்றவர் நெறியினை யொடியெறி கிற்பவ ரொத்தெதிர்
அறைகழல் விருதர்செ ருக்கற வெட்டலின் அவருட லிருவகிர் பட்டன முட்டவே. 21

கலிங்க வீரர் தடுத்தனர்

425
விடுத்த வீர ராயு தங்கள் மேல்வி ழாம லேநிரைத்
தெடுத்த வேலி போற்க லிங்கர் வட்ட ணங்க ளிட்டவே. 22

கேடகங்கள் துளைக்கப்பட்டன

426
இட்ட வட்ட ணங்கண் மேலெ றிந்த வேல்தி றந்தவாய்
வட்ட மிட்ட நீண்ம திற்கு வைத்த பூழை யொக்குமே. 23

வாளும் உலக்கையும்

427
கலக்க மற்ற வீரர் வாள்க லந்த சூரர் கைத்தலத்
துலக்கை யுச்சி தைத்தபோ துழுங்க லப்பை யொக்குமே. 24

துதிக்கையும் சக்கரமும்
428
மத்த யானை யின்க ரஞ்சு ருண்டு வீழ வன்சரந்
தைத்த போழ்தி னக்க ரங்கள் சக்க ரங்க ளொக்குமே. 25

வீழ்ந்த முத்துக்கள்
429
வெங்க ளிற்றின் மத்த கத்தின் வீழு முத்து வீரமா
மங்கை யர்க்கு மங்க லப்பொ ரிசொ ரிந்த தொக்குமே. 26

கேடகங்களுடன் வீரர்கள்

430
மறிந்த கேட கங்கி டப்ப மைந்தர் துஞ்சி வைகுவோர்
பறிந்த தேரின் நேமி யோடு பார்கி டப்ப தொக்குமே. 27

தண்டும் மழுவும்

431
களித்த வீரர் விட்ட நேமி கண்டு வீசு தண்டிடைக்
குளித்த போழ்து கைப்பி டித்த கூர்ம ழுக்க ளொக்குமே. 28

குறையுடல்களும் பேய்களும்

432
கவந்த மாட முன்பு தங்க ளிப்பொ டாடு பேயினம்
நிவந்த வாட லாட்டு விக்கும் நித்த கார ரொக்குமே. 29

ஒட்டகம் யானை குதிரை

433
ஒட்டகங்கள் யானை வாலு யர்த்தமா வழிந்த போர்
விட்ட கன்று போகி லாது மீள்வ போலு மீளுமே. 30

யானைகள் மேகங்களை ஒத்தன

434
பிறங்கு சோரி வாரி யிற்பி ளிற்றி வீழ்க ளிற்றினங்
கறங்கு வேலை நீரு ணக் கவிழ்ந்த மேக மொக்குமே. 31

வீரர் துருத்தியாளரை ஒத்தனர்

435
வாளில் வெட்டி வாரணக்கை தோளி லிட்ட மைந்தர் தாம்
தோளி லிட்டு நீர்வி டுந் துருத்தி யாள ரொப்பரே. 32

வில் வீரர் செயல்
436
நேர்முனையிற் றொடுத்த பகழிகள் நேர்வளைவிற் சுழற்று மளவினின்
மார்பிடையிற் குளித்த பகழியை வார்சிலையிற் றொடுத்து விடுவரே. 33

குதிரை வீரர் செயல்
437
அசையவுரத் தழுத்தி யிவுளியை அடுசவளத் தெடுத்த பொழுதவை
விசையமகட் கெடுத்த கொடியென விருதர்களத் தெடுத்து வருவரே. 34

தொடை அறுந்த வீரர் செயல்

438
இருதொடையற் றிருக்கு மறவர்கள் எதிர்பொருகைக் களிற்றின் வலிகெட
ஒருதொடையைச் சுழற்றி யெறிவர்கள் ஒருதொடையிட் டுவைப்ப ரெறியவே. 35

வாள் வீரர் மடிந்தனர்

439
இருவருரத் தினுற்ற சுரிகையின் எதிரெதிர்புக் கிழைக்கு மளவினில்
ஒருவரெனக் கிடைத்த பொழுதினில் உபயபலத் தெடுத்த தரவமே. 36

யானை வீரரோடு பொருநர்

440
பொருநர்கள் சிலர்தமு ரத்தி னிற்கவிழ் புகர்முக மிசையடி யிட்ட திற்பகை
விருதரை யரிவர்சி ரத்தை யச்சிரம் விழுபொழு தறையெனு மக்க ளிற்றையே. 37

படைக்கருவி இல்லாதவர் செயல்

441
விடுபடை பெறுகிலர் மற்றி னிச்சிலர் விரைபரி விழவெறி தற்கு முற்பட
அடுகரி நுதற்பட விட்ட கைப்படை அதனையொர் நொடிவரை யிற்ப றிப்பரே. 38

வீரர்கள் நாணினர்

442
அமர்புரி தமதக லத்தி டைக்கவிழ் அடுகரி நுதலில டிப்ப ரிக்களி
றெமதென விருகண்வி ழிக்க வுட்கினர் எனவிடு கிலர்படை ஞர்க்கு வெட்கியே. 39

கருணாகரன் போரில் ஈடுபட்டான்

443
அலகில் செருமுதிர் பொழுது வண்டையர் அரச னரசர்கள் நாதன் மந்திரி
உலகு புகழ்கரு ணாக ரன்றன தொருகை யிருபணை வேழ முந்தவே. 40

இருபடைகளும் வெற்றிகாண முற்படல்
444
உபய பலமும்வி டாது வெஞ்சமம் உடலு பொழுதினில் வாகை முன்கொள
அபயன் விடுபடை யேழ்க லிங்கமும் அடைய வொருமுக மாகி முந்தவே. 41

இருபுறப் படைகளும் அழிந்தன
445
அணிக ளொருமுக மாக வுந்தின அமர ரமரது காண முந்தினர்
துணிகள் படமத மாமு றிந்தன துரக நிரையொடு தேர்மு றிந்தவே. 42

காலாட் படையின் அழிவு

446
விருத ரிருதுணி பார்நி றைந்தன விடர்கள் தலைமலை யாய்நெ ளிந்தன
குருதி குரைகடல் போற்ப ரந்தன குடர்கள் குருதியின் மேன்மி தந்தவே. 43

களத்தில் பேரொலி

447
கரிகள் கருவிக ளோடு சிந்தின கழுகு நரியொடு காக முண்டன
திரைகள் திசைமலை யோட டர்ந்தன திமில குமிலமெ லாம்வி ளைந்தவே. 44

அனந்தவன்மன் தோற்று ஓடினான்

448
புரசை மதமலை யாயி ரங்கொடு பொருவ மெனவரு மேழ்க லிங்கர்தம்
அரச னுரைசெய்த வாண்மை யுங்கெட அமரி லெதிர்விழி யாதொ துங்கியே. 45

449
அறியு முழைகளி லோப துங்கிய தரிய பிலனிடை யோம றைந்தது
செறியு மடவியி லோக ரந்தது தெரிய வரியதெ னாவ டங்கவே. 46

கலிங்கர் நடுங்கினர்

450
எதுகொ லிதுவிது மாயை யொன்றுகொல் எரிகொன் மறலிகொ லூழி யின்கடை
அதுகொ லெனவல றாவி ழுந்தனர் அலதி குலதியொ டேழ்க லிங்கரே. 47

கலிங்கர் சிதைந்தோடினர்

451
வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்
இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர் இருவ ரொருவழி போக லின்றியே. 48

452
ஒருவ ரொருவரி னோட முந்தினர் உடலி னிழலினை யோட வஞ்சினர்
அருவர் வருவரெ னாவி றைஞ்சினர் அபய மபயமெ னாந டுங்கியே. 49

குகைகளில் நுழைந்தனர்

453
மழைக ளதிர்வன போலு டன்றன வளவன் விடுபடை வேழ மென்றிருள்
முழைகள் நுழைவர்கள் போரி லின்றுநம் முதுகு செயுமுப கார மென்பரே. 50

கலிங்கம் இழந்த கலிங்கர்

454
ஒருக லிங்கமொ ருவன ழித்தநாள்
ஒருக லிங்கமொ ருவரு டுத்ததே. 51

சோழர் யானை குதிரைகளைக் கைப்பற்றினர்

455
அப்படிக் கலிங்க ரோட அடர்த்தெறி சேனை வீரர்
கைப்படு களிறும் மாவுங் கணித்துரைப் பவர்கள் யாரே. 52

களிறுகளின் தன்மை

456
புண்டரு குருதி பாயப் பொழிதரு கடமும் பாய
வண்டொடும் பருந்தி னோடும் வளைப்புண்ட களிற நேகம். 53

457
ஒட்டறப் பட்ட போரி லூர்பவர் தம்மை வீசிக்
கட்டறுத் தவர்போல் நின்று கட்டுண்ட களிற நேகம். 54

458
வரைசில புலிக ளோடு வந்துகட் டுண்ட வேபோல்
அரைசருந் தாமுங் கட்டுண் டகப்பட்ட களிற நேகம். 55

சோழ வீரர்கள் கைப்பற்றியவை

459
நடைவ யப்பரி யிரத மொட்டகம் நவநி திக்குல மகளிரென்
றடைவ வப்பொழு தவர்கள் கைக்கொளும் அவைக ணிப்பது மருமையே. 56

கருணாகரன் கட்டளை இட்டான்

460
இவைக வர்ந்தபி னெழுக லிங்கர்தம் இறையை யுங்கொடு பெயர்துமென்
றவனி ருந்துழி யறிக வென்றனன் அபயன் மந்திரி முதல்வனே. 57

ஒற்றர்கள் தேடினர்
461
உரைகள் பிற்படு மளவி லொற்றர்கள் ஒலிக டற்படை கடிதுபோய்
வரைக ளிற்புடை தடவி யப்படி வனமி லைப்புரை தடவியே. 58

ஒற்றர்களின் பேச்சு
462
சுவடு பெற்றில மவனை மற்றொரு சுவடு பெற்றன மொருமலைக்
குவடு பற்றிய தவன டற்படை அதுகு ணிப்பரி தெனலுமே. 59

மலையை அடைந்தனர்

463
எக்குவடு மெக்கடலு மெந்தக் காடும் இனிக்கலிங்கர்க் கரணாவ தின்றே நாளும்
அக்குவடு மக்கடலும் வளைந்து வெய்யோன் அத்தமனக் குவடணையு மளவிற் சென்றே. 60

விடியளவும் வெற்பைக் காத்தனர்

464
தோலாத களிற்றபயன் வேட்டைப் பன்றி தொழுவடைத்துத் தொழுவதனைக் காப்பார்போல
வேலாலும் வில்லாலும் வேலி கோலி வெற்பதனை விடியளவுங் காத்து நின்றே. 61

மலை சிவந்தது

465
செம்மலையா யொளிபடைத்த தியாதோ வென்றுஞ்
செங்கதிரோ னுதயஞ்செய் துதய மென்னும்
அம்மலையோ விம்மலையு மென்னத் தெவ்வர்
அழிகுருதி நதிபரக்க வறுக்கும் போழ்தில். 62

சிலர் திகம்பரரானார்

466
வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை யேற்றி
வன்றூறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி
அரைக்கலிங்க முரிப்புண்ட கலிங்க ரெல்லாம்
அமணரெனப் பிழைத்தாரு மநேக ராங்கே. 63

சிலர் வேதியரானார்

467
வேடத்தாற் குறையாது முந்நூ லாக
வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியாற் கங்கை
ஆடப்போந் தகப்பட்டேங் கரந்தோ மென்றே
அரிதனைவிட் டுயிர்பிழைத்தா ரநேக ராங்கே. 64

சிலர் புத்தத் துறவியரானார்

468
குறியாகக் குருதிகொடி யாடை யாகக்
கொண்டுடுத்துப் போர்த்துத்தங் குஞ்சி முண்டித்
தறியீரோ சாக்கியரை யுடைகண் டாலென்
அப்புறமென் றியம்பிடுவ ரநேக ராங்கே. 65

சிலர் பாணர் ஆனார்

469
சேனைமடி களங்கண்டேந் திகைத்து நின்றேம்
தெலுங்கரே மென்றுசில கலிங்கர் தங்கள்
ஆனைமணி யினைத்தாளம் பிடித்துக் கும்பிட்
டடிப்பாண ரெனப்பிழைத்தா ரநேக ராங்கே. 66

கலிங்க வீரர் முற்றும் அழிந்தனர்

470
இவர்கண்மே லினியொருவர் பிழைத்தா ரில்லை
எழுகலிங்கத் தோவியர்க ளெழுதி வைத்த
சுவர்கண்மே லுடலன்றி யுடல்க ளெங்குந்
தொடர்ந்துபிடித் தறுத்தார்முன் னடைய வாங்கே. 67

அடி சூடினான் தொண்டைமான்

471
கடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்
கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்
சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்
சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே. 68


13. களம் பாடியது

களச் சிறப்பு

472
தேவாசுர ராமாயண மாபாரத முளவென்
றோவாவுரை ஓயும்படி உளதப் பொருகளமே. 1

பேய் வேண்டக் காளி அணுகல்

473
காலக்கள மதுகண்டரு ளிறைவீகடி தெனவே
ஆலக்கள முடையான்மகி ழமுதக்கள மணுகி. 2

காளி களங்கண்டு வியத்தல்
474
என்னேயொரு செருவெங்கள மெனவேயதி சயமுற்
றந்நேரிழை யலகைக்கண மவைகண்டிட மொழியும். 3

யானையும் கப்பலும்
475
உடலின்மேற் பலகாயஞ் சொரிந்து பின்கால்
உடன்பதைப்ப வுதிரத்தே யொழுகும் யானை
கடலின்மேற் கலந்தொடரப் பின்னே செல்லுங்
கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின். 4

குதிரையும் குதிரைத் தறியும்

476
நெடுங்குதிரை மிசைக்கலணை சரியப் பாய்ந்து
நிணச்சேற்றிற் கால்குளிப்ப நிரையே நின்று
படுங்குருதிக் கடும்புனலை யடைக்கப் பாய்ந்த
பலகுதிரைத் தறிபோன்ற பரிசு காண்மின். 5

வீரர் முகமலர்ந்து கிடந்தமை

477
விருந்தினரும் வறியவரு நெருங்கி யுண்ண
மேன்மேலு முகம்மலரு மேலோர் போலப்
பருந்தினமுங் கழுகினமுந் தாமே யுண்ணப்
பதுமமுக மலர்ந்தாரைப் பார்மின் பார்மின். 6

வீரர்களும் கருமிகளும்

478
சாமளவும் பிறர்க்குதவா தவரை நச்சிச்
சாருநர்போல் வீரருடல் தரிக்கு மாவி
போமளவு மவரருகே யிருந்து விட்டுப்
போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின். 7

வண்டும் விலைமாதரும்
479
மாமழைபோற் பொழிகின்ற தான வாரி
மறித்துவிழுங் கடகளிற்றை வெறுத்து வானோர்
பூமழைமேற் பாய்ந்தெழுந்து நிரந்த வண்டு
பொருட்பெண்டிர் போன்றமையுங் காண்மின்காண்மின். 8

கொடியொடு கிடக்கும் யானைகள்

480
சாய்ந்துவிழுங் கடகளிற்றி னுடனே சாய்ந்து
தடங்குருதி மிசைப்படியுங் கொடிகள் தங்கள்
காந்தருடன் கனலமளி யதன்மேல் வைகுங்
கற்புடைமா தரையொத்தல் காண்மின் காண்மின். 9

கணவரைத் தேடும் மகளிர்
481
தங்கணவ ருடன்றாமும் போக வென்றே
சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார்
எங்கணவர் கிடந்தவிட மெங்கே யென்றென்
றிடாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின். 10

ஆவி சோரும் மனைவி

482
வாய்மடித்துக் கிடந்ததலை மகனை நோக்கி
மணியதரத் தேதேனும் வடுவுண் டாயோ
நீமடித்துக் கிடந்ததெனப் புலவி கூர்ந்து
நின்றாவி சோர்வாளைக் காண்மின் காண்மின். 11

கணவனைத் தழுவி உயிர்விடும் பெண்

483
தரைமகள்தன் கொழுநன்ற னுடலந் தன்னைத்
தாங்காமற் றன்னுடலாற் றாங்கி விண்ணாட்
டரமகளி ரவ்வுயிரைப் புணரா முன்னம்
ஆவியொக்க விடுவாளைக் காண்மின் காண்மின். 12

தலை பெற்ற மனைவி செயல்

484
பொருதடக்கை வாளெங்கே மணிமார் பெங்கே
போர்முகத்தி லெவர்வரினும் புறங்கொ டாத
பருவயிரத் தோளெங்கே யெங்கே யென்று
பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின். 13

கருமேகம் செம்மேகத்தை ஒத்திருத்தல்

485
ஆடற்று ரங்கம்பி டித் தாளை யாளோட
டித்துப்பு டைத்தவ்வி ரும்புண்ணினீர்
ஓடித்தெ றிக்கக் கருங்கொண்டல் செங்கொண்டல்
ஒக்கின்ற விவ்வாறு காண்மின்களோ. 14

கருங்காகம் வெண்காகத்தை ஒத்திருத்தல்
486
நெருங்காக வச்செங் களத்தே
தயங்கும் நிணப்போர்வை மூடிக்கொளக்
கருங்காகம் வெண்காக மாய்நின்ற
வாமுன்பு காணாத காண்மின்களோ. 15

போர்க்களம் தாமரைக் குளத்தை ஒத்திருத்தல்
487
மிடையுற்ற தேர்மொட்டு மொட்டொக்க வெஞ்சோரி நீரொக்க வீழ்தொங்கல்பா
சடையொக்க வடுசெங்க ளம்பங்க யப்பொய்கை யாமாறு காண்மின்களோ. 16

வீரர் மூங்கிலை ஒத்திருத்தல்

488
வெயிற்றாரை வேல்சூழ வுந்தைக்க மண்மேல்வி ழாவீரர் வேழம்பர்தங்
கயிற்றாலி ழுப்புண்டு சாயாது நிற்குங்க ழாயொத்தல் காண்மின்களோ. 17

பருந்தும் கழுகும் துன்புறல்

489
இருப்புக்க வந்தத்தின் மீதேற லுஞ்சூர ரெஃகம்பு தைக்கஇறகைப்
பரப்பிச்சு ழன்றிங்கொர் பாறாட ஈதோர்ப ருந்தாடல் காண்மின்களோ. 18

படைத்தலைவர் கடனாற்றல்

490
வருஞ்சேனை தஞ்சேனை மேல்வந்து றாமேவில் வாள்வீரர் வாணாளுகக்
கருஞ்சேவ கஞ்செய்து செஞ்சோற றச்செய்த கைம்மாறு காண்மின்களோ. 19

எழுந்தாடும் வீரர் தலை

491
யானைப்ப டைச்சூரர் நேரான போழ்தற்றெ ழுந்தாடு கின்றார்தலை
மானச்ச யப்பாவை விட்டாடும் அம்மானை வட்டொத்தல் காண்மின்களோ. 20

வானில் கண்ட காட்சி

492
எதிர்கொளுஞ் சுரர்விமா னங்களிற் சுரர்களாய்
ஏறுமா னவர்கள்தா மெண்ணுதற் கருமையிற்
கதிர்விசும் பதனிலே யிதனிலும் பெரியதோர்
காளையம் விளையுமா காண்மினோ காண்மினோ. 21

குருதிக் கடல்

493
அவரிபஞ் சொரிமதங் கழியெனப் புகமடுத்
தவர்பரித் திரையலைத் தமர்செய்கா லிங்கர்தங்
கவரிவெண் ணுரைநிரைத் தவருடற் குருதியிற்
கடல்பரந் தோடுமா காண்மினோ காண்மினோ. 22

யானைகள் மலைகளை ஒத்தல்

494
புவிபுரந் தருள்செயுஞ் சயதர னொருமுறைப்
புணரிமே லணைபடப் பொருவில்விற் குனிதலிற்
கவிகுலங் கடலிடைச் சொரிபெருங் கிரியெனக்
கரிகளின் பிணமிதிற் காண்மினோ காண்மினோ. 23

வீரர் வியத்தல்

495
உற்றவா யம்புதம் பரிசையுங் கருவியும்
உருவிமார் பகலமு முருவிவீழ் செருநர்விற்
கற்றவா வொருவன்விற் கற்றவா வென்றுதங்
கைம்மறித் தவரையுங் காண்மினோ காண்மினோ. 24

வீரர்தம் உடலங்கள் தேவர்களை ஒத்தல்

496
விண்ணின்மொய்த் தெழுவிமா னங்களிற் சுரர்களாய்
மீதுபோ முயிர்களே யன்றியே யின்றுதங்
கண்ணிமைப் பொழியவே முகமலர்ந் துடல்களுங்
கடவுளோர் போலுமா காண்மினோ காண்மினோ. 25

வெட்டுண்ட யானைத்தலைகள் சம்மட்டியை ஒத்தல்

497
பிறைப்பெ ரும்பணை வேழ முன்னொடு பின்று ணிந்துத ரைப்படுங்
குறைத்த லைத்துணி கொல்ல னெஃகெறி கூட மொத்தமை காண்மினோ. 26

வேல் பறித்து சாயும் வீரர்

498
வாயி னிற்புகு வேல்கள் பற்றுவ லக்கை யோடுநி லத்திடைச்
சாயு மற்றவர் காள மூதிகள் தம்மை யொத்தமை காண்மினோ. 27

வீரர் படகோட்டிகளை ஒத்தல்

499
படவூன்று நெடுங்குந்த மார்பி னின்று
பறித்ததனை நிலத்தூன்றித் தேர்மே னிற்பார்
படவூன்றி விடுந்தொழிலோ ரென்ன முன்னம்
பசுங்குருதி தோன்றுமால் காண்மின் காண்மின். 28

நிணமென அம்பு பற்றிய பருந்தின் நிலை

500
வாயகலம் பரத்தமொடு நிணங்கொண் டோட
மற்றதனை வள்ளுகிரின் பருந்து கோணல்
வாயகலம் பரத்தினிடைக் கௌவி வல்வாய்
வகிர்ப்பட்டு நிலம்பட்ட வண்ணங் காண்மின். 29

பிணந்தின்ற பூதம் வரும் தோற்றம்

501
சாதுரங்கத் தலைவனைப்போர்க் களத்தில் வந்த
தழைவயிற்றுப் பூதந்தா னருந்தி மிக்க
சாதுரங்கந் தலைசுமந்து கமஞ்சூற் கொண்டு
தனிப்படுங்கா ரெனவருமத் தன்மை காண்மின். 30

விழுப்புண்பட்ட யானை வீரர்

502
முதுகுவடிப் படியிருக்கு மென்ன நிற்கு
முனைக்களிற்றோர் செருக்களத்து முந்து தங்கண்
முதுகுவடுப் படுமென்ற வடுவை யஞ்சி
முன்னம்வடுப் பட்டாரை யின்னங் காண்மின். 31

கூழ் அடுமாறு கூறல்

503
களமடையக் காட்டுதற்கு முடிவ தன்று கவிழுமதக் கரிசொரியக் குமிழி விட்டுக்
குளமடைபட் டதுபோலுங் குருதி யாடிக் கூழடுமி னென்றருளக் கும்பிட் டாங்கே. 32

பேய்கள் அழைத்தல்

504
குறுமோ டீநெடு நிணமா லாய்குடை கலதீ கூரெயி றீநீலி
மறிமா டீகுதிர் வயிறீ கூழட வாரீர் கூழட வாரீரே. 33

பல் விளக்கல்

505
பறிந்த மருப்பின் வெண்கோலாற் பல்லை விளக்கிக் கொள்ளீரே
மறிந்த களிற்றின் பழுவெலும்பை வாங்கி நாக்கை வழியீரே. 34

நகம் நீக்கலும் எண்ணெய் தேய்த்தலும்

506
வாயம் புகளா முகிர்கொள்ளி வாங்கி யுகிரை வாங்கீரே
பாயுங் களிற்றின் மதத்தயிலம் பாயப் பாய வாரீரே. 35

இரத்தத்தில் குளித்தல்

507
எண்ணெய் போக வெண்மூளை யென்னுங் களியான் மயிர் குழப்பிப்
பண்ணை யாகக் குருதிமடுப் பாய்ந்து நீந்தி யாடிரே. 36

கரையிலிருந்தே குளிப்பீர்

508
குருதிக் குட்ட மித்தனையுங் கோலும் வேலுங் குந்தமுமே
கருவிக் கட்டு மாட்டாதீர் கரைக்கே யிருந்து குளியீரே. 37

ஆடை உடுத்தல்

509
ஆழ்ந்த குருதி மடுநீந்தி யங்கே யினையா திங்கேறி
வீழ்ந்த கலிங்கர் நிணக்கலிங்கம் விரித்து விரித்துப் புனையீரே. 38

கைவளையும் காலணியும்

510
மதங்கொள் கரியின் கோளகையை மணிச்சூ டகமாச் செறியீரே
பதங்கொள் புரவிப் படிதரளப் பொற்பா டகமாப் புனையீரே. 39

காதணி

511
ஈண்டுஞ் செருவிற் படுவீர ரெறியும் பாரா வளையடுக்கி
வேண்டு மளவும் வாய்நெகிழ்த்து விடுகம் பிகளாப் புனையீரே. 40

காப்பணியும் காதணியும்

512
பணைத்த பனைவெங் கரிக்கரத்தாற் பரிய பருநாண் கட்டீரே
இணைத்த முரசம் வாள்கம்பிட் டிரட்டை வாளி யேற்றீரே. 41

தோளணியும் முத்து மாலையும்

513
பட்ட புரவிக் கவிகுரத்தாற் பாகு வலயஞ் சாத்தீரே
இட்ட சுரிசங் கெடுத்துக்கோத் தேகா வலியுஞ் சாத்தீரே. 42

வன்னசரம் அணிதல்
514
பொருசின வீரர்தங் கண்மணியும் போதக மத்தக முத்தும்வாங்கி
வரிசை யறிந்து நரம்பிற்கோத்து வன்ன சரங்க ளணியீரே. 43

உணவின் பொருட்டு எழுக
515
கொள்ளு மெனைப்பல கோலமென்மேற் கொண்டிட வேளையு மீதூர
உள்ளும் புறம்பும் வெதும்புங்காண் உண்பத னுக்கொருப் படுவீரே. 44

சமையலறை அமைத்தல்

516
மாகாய மதமலையின் பிணமலைமேல் வன்கழுகின் சிறகாற் செய்த
ஆகாய மேற்கட்டி யதன்கீழே அடுக்களைகொண் டடுமி னம்மா. 45

மெழுகல் கோலமிடல் அடுப்பமைத்தல்

517
பொழிமதத்தா னிலமெழுகிப் பொடிந்துதிர்ந்த பொடித்தரளப் பிண்டி தீட்டி
அழிமதத்த மத்தகத்தை யடுப்பாகக் கடுப்பாக்கொண் டடுமி னம்மா. 46

பானையை அடுப்பில் ஏற்றல்

518
கொற்றவாண் மறவ ரோச்சக் குடரொடு தலையுங் காலும்
அற்றுவீ ழானைப் பானை அடுப்பினி லேற்று மம்மா. 47

உண்பொருள் கொணர்தல்

519
வெண்டயிருஞ் செந்தயிரும் விராய்க்கிடந்த கிழான்போல வீரர் மூளைத்
தண்டயிரு மிடைவித்த புளிதமுமாத் தாழிதொறுந் தம்மி னம்மா. 48

உலைநீர் ஊற்றல்

520
கொலையினுட் படுகரிக் குழிசியுட் கூழினுக்
குலையெனக் குதிரையின் உதிரமே சொரிமினோ. 49

உப்பும் காயமும் இடல்

521
துள்ளிவெங் களனில்வீழ் துரகவெண் பல்லெனும்
உள்ளியுங் கிள்ளியிட் டுகிரினுப் பிடுமினோ. 50

தீ மூட்டல்
522
தனிவிசும் படையினும் படைஞர்கண் டவிர்கிலா
முனிவெனுங் கனலைநீர் மூளவைத் திடுமினோ. 51

விறகு கொண்டு எரித்தல்
523
குந்தமும் பகழியுங் கோல்களும் வேலுமாம்
இந்தனம் பலவெடுத் திடைமடுத் தெரிமினோ. 52

பல்லும் பழவரிசியும்

524
கல்லைக் கறித்துப் பல்முறிந்து கவிழ்ந்து வீழ்ந்த கலிங்கர்தம்
பல்லைத் தகர்த்துப் பழவரிசி ஆகப் பண்ணிக் கொள்ளீரே. 53

அரிசியும் குற்றும் உரலும்

525
சுவைக்கு முடிவிற் கூழினுக்குச் சொரியு மரிசி வரியெயிறா
அவைக்கு முரல்க ளெனக்குரல்கள் அவிந்த முரசங் கொள்ளீரே. 54

அரிசி குற்றல்

526
இந்த வுரற்க ணிவ்வரிசி எல்லாம் பெய்து கொல்யானைத்
தந்த வுலக்கை தனையோச்சிச் சலுக்கு முலுக்கெனக் குற்றீரே. 55

காளியைப் பாடி அரிசி குற்றல்

527
தணந்த மெலிவு தான்றீரத் தடித்த வுடல்வெம் பசிதீரப்
பிணந்தரு நாச்சியைப் பாடீரே பெருந்திரு வாட்டியைப் பாடீரே. 56

குலோத்துங்கனைப் பாடிக் குற்றல்

528
கவன நெடும்பரி வீரதரன் காவிரி நாடுடை யானிருதோள்
அவனி சுமந்தமை பாடீரே அரவு தவிர்ந்தமை பாடீரே. 57

சேர பாண்டியரை வென்றலை கூறிக் குற்றல்

529
மன்னர் புரந்தரன் வாளபயன் வாரண மிங்கு மதம்படவே
தென்ன ருடைந்தமை பாடீரே சேர ருடைந்தமை பாடீரே. 58

சேர பாண்டியர் வணங்கியமை கூறிக் குற்றல்

530
வணங்கிய சேரர் மணிமுடியும் வழுதியர் தங்கண் மணிமுடியும்
பிணங்கிய சேவடி பாடீரே பெருமான் திருவடி பாடீரே. 59

வடவேந்தரை வென்றமை கூறிக் குற்றல்

531
ஒளிறு நெடும்படை வாளபயற் குத்தர பூமிய ரிட்டதிறைக்
களிறு வரும்படி பாடீரே கடமத நாறுவ பாடீரே. 60

பகைவர் பணிந்தமை கூறிக் குற்றல்

532
பௌவ மடங்க வளைந்தகுடைப் பண்டித சோழன் மலர்க்கழலில்
தெவ்வர் பணிந்தமை பாடீரே சிலையா டியவலி பாடீரே. 61

உலகம் இன்புற ஆண்டமை கூறிக் குற்றல்

533
எற்றைப் பகலினும் வெள்ளணிநாள் இருநிலப் பாவை நிழலுற்ற
கொற்றக் குடையினைப் பாடீரே குலோத்துங்க சோழனைப் பாடீரே. 62

கருணாகரனைப் பாடிக் குற்றல்

534
வண்டை வளம்பதி பாடீரே மல்லையுங் கச்சியும் பாடீரே
பண்டை மயிலையும் பாடீரே பல்லவர் தோன்றலைப் பாடீரே. 63

தொண்டையர் வேந்தனைப் பாடிக் குற்றல்

535
காட்டிய வேழ வணிவாரிக் கலிங்கப் பரணிநங் காவலன்மேற்
சூட்டிய தோன்றலைப் பாடீரே தொண்டையர் வேந்தனைப் பாடீரே. 64

குலோத்துங்கன் புகழ் பாடிக் குற்றல்

536
இடைபார்த்துத் திறைகாட்டி இறைவிதிருப் புருவத்தின்
கடைபார்த்துத் தலைவணங்குங் கதிர்முடி நூறாயிரமே. 65

பலவேந்தர் அடி வணங்கல் கூறி குற்றல்

537
முடிசூடு முடியொன்றே முதலபய னெங்கோமான்
அடிசூடு முடியெண்ணில் ஆயிரம் நூறாயிரமே. 66

திறைதரா வேந்தர் அழிந்தமை கூறிக் குற்றல்

538
முடியினால் வழிபட்டு மொழிந்ததிறை யிடாவேந்தர்
அடியினால் மிதிபட்ட அருவரைநூ றாயிரமே. 67

பார்வேந்தர் படும் சிறுமை கூறிக் குற்றல்

539
தார்வேய்ந்த புயத்தபயன் தன்னமைச்சர் கடைத்தலையிற்
பார்வேந்தர் படுகின்ற பரிபவம்நூ றாயிரமே. 68

மறை ஓம்பியமை கூறிக் குற்றல்

540
தாங்காரப் புயத்தபயன் தண்ணளியாற் புயல்வளர்க்கும்
ஓங்கார மந்திரமும் ஒப்பிலநூ றாயிரமே. 69

பாராண்ட புகழ்பாடிக் குற்றல்

541
போர்தாங்குங் களிற்றபயன் புயமிரண்டு மெந்நாளும்
பார்தாங்கப் பரந்தீர்ந்த பணிப்பணநூ றாயிரமே. 70

திருமால் எனப் பாடிக் குற்றல்

542
நாற்கடலைக் கவித்தகுடை நரதுங்க னமுதமெழப்
பாற்கடலைக் கடைந்தருளும் பணைப்புயநூ றாயிரமே. 71

தோள் இரண்டால் துணித்தமை

543
தாளிரண்டா னிலவேந்தர் தலைதாங்குஞ் சயதுங்கன்
தோளிரண்டால் வாணனைமுன் துணித்ததோ ளாயிரமே. 72

தூது நடந்தான்

544
சூழிமுகக் களிற்றபயன் தூதுநடந் தருளியநாள்
ஆழிமுதற் படையெடுத்த அணிநெடுந்தோ ளாயிரமே. 73

அரிசி புடைத்தல்

545
பல்லரிசி யாவுமிகப் பழவரிசி தாமாகச்
சல்லவட்ட மெனுஞ்சுளகால் தவிடுபடப் புடையீரே. 74

அரிசியை அளத்தல்

546
பாணிகளா னிலந்திருத்திப் படைக்கலிங்க ரணிபகழித்
தூணிகளே நாழிகளாத் தூணிமா வளவீரே. 75

உலையில் இடல்

547
விரற்புட்டி லவைசிறிய விற்கூடை பெரியனகொண்
டுரற்பட்ட வரிசிமுகந் துலைகடொறுஞ் சொரியீரே. 76

துடுப்பும் அகப்பையும்

548
களப்பரணிக் கூழ்பொங்கி வழியாமற் கைதுடுப்பா
அளப்பரிய குளப்புக்கால் அகப்பைகளாகக் கொள்ளீரே. 77

கூழைச் சுவை பார்த்தல்

549
வைப்புக் காணு நமக்கின்று வாரீர் கூழை யெல்லீரும்
உப்புப் பார்க்க வொருதுள்ளி உள்ளங் கையிற் கொள்ளீரே. 78

கூழை நன்கு கிண்டுதல்

550
அழலைக் கையிற் கொள்ளாமே அடுப்பை யவித்துக் கைத்துடுப்பாற்
சுழலச் சுழலப் புடையெங்குந் துழாவித் துழாவிக் கொள்ளீரே. 79

பதம் பார்த்துக் கூழ் இறக்கல்

551
பற்றிப் பாரீ ரினிக்கூழின் பதமுஞ் சுவையும் பண்டுண்ட
மற்றைக் கூழின் மிகநன்று வாரீ ரிழிச்ச வாரீரே. 80

பானைப் பிடித்து இறக்கல்

552
எடுத்துக் கைகள் வேகாமே இவுளித் துணியிட் டிருமருங்கும்
அடுத்துப் பிடித்து மெத்தெனவே அடுப்பி னின்று மிழிச்சீரே. 81

கூழின் மிகுதி

553
ஒருவாய் கொண்டே யிதுதொலைய உண்ண வொண்ணா தென்றென்று
வெருவா நின்றீ ராயிரம்வாய் வேண்டு மோவிக் கூழுணவே. 82

நாத் தோய்க்கின் கூழ் சுவறும்

554
வெந்த இரும்பிற் புகும்புனல்போல் வெந்தீப் பசியால் வெந்தெரியும்
இந்த விடம்பை நாத்தோய்க்கில் இக்கூ ழெல்லாஞ் சுவறாதோ. 83

உண்டு மிகுமோ

555
பண்டு மிகுமோ பரணிக்கூழ் பார கத்தி லறியேமோ
உண்டு மிகுமோ நீர்சொன்ன உபாய மிதுவுஞ் செய்குவமே. 84

உணவுக்குமுன் நீர் வைத்துக் கொள்ளல்

556
வெம்புங் குருதிப் பேராற்றில் வேண்டுந் தண்ணீர் வேழத்தின்
கும்பங் களிலே முகந்தெடுத்துக் குளிர வைத்துக் கொள்ளீரே. 85

நிலத்தைத் தூய்மை செய்தல்

557
சோருங் களிற்றின் வாலதியாற் சுழல வலகிட் டலைகுருதி
நீருந் தௌித்துக் கலம்வைக்க நிலமே சமைத்துக் கொள்ளீரே. 86

உண்கலம் அமைத்தல்

558
போர்மண் டலிகர் கேடகத்தின் புளகச் சின்னம் பரப்பீரே
பார்மண் டலிகர் தலைமண்டை பலமண் டைகளாக் கொள்ளீரே. 87

பொன் வெள்ளிக் கலங்கள்
559
அழிந்த கலிங்கர் பொற்பரிசை அவைபொற் கலமாக் கொள்ளீரே
விழுந்த தவளக் குடைமின்னும் வெள்ளிக் கலமாக் கொள்ளீரே. 88

கூழ் பங்கிடக் கருவி கொள்ளல்
560
நிலத்தைச் சமைத்துக் கொள்ளீரே நெடுங்கைக் களிற்றி னிருசெவியாங்
கலத்திற் கொள்ளக் குறையாத கலங்கள் பெருக்கிக் கொள்ளீரே. 89

பகல் விளக்கும் பா ஆடையும்
561
கதம்பெற் றார்க்குஞ் செறுநர்விழிக் கனலு நிணமு மணங்கின்பாற்
பதம்பெற் றார்க்குப் பகல்விளக்கும் பாவா டையுமாக் கொள்ளீரே. 90

உணவுண்ண அழைத்தல்
562
பரிசு படவே கலம்பரப்பிப் பந்தி பந்தி படவுங்கள்
வரிசை யுடனே யிருந்துண்ண வாரீர் கூழை வாரீரே. 91

தலைகளை அகப்பைகளாகக் கொள்ளல்

563
கங்கா புரியின் மதிற்புறத்துக் கருதார் சிரம்போய் மிகவீழ
இங்கே தலையின் வேல்பாய்ந்த இவைமூ ழைகளாக் கொள்ளீரே. 92

மடைப்பேய்களுக்கு ஆணை

564
கிடைக்கப் பொருது மணலூரிற் கீழ்நா ளட்ட பரணிக்கூழ்
படைத்துப் பயின்ற மடைப்பேய்கள் பந்தி தோறும் வாரீரே. 93

பார்ப்பனப் பேய்க்குக் கூழ் வார்த்தல்

565
அவதி யில்லாச் சுவைக்கூழ்கண் டங்காந் தங்காந் தடிக்கடியும்
பவதி பிட்சாந் தேகியெனும் பனவப் பேய்க்கு வாரீரே. 94

சமணப் பேய்களுக்குக் கூழ் வார்த்தல்

566
உயிரைக் கொல்லாச் சமண்பேய்கள் ஒருபோழ் துண்ணு மவையுண்ண
மயிரைப் பார்த்து நிணத்துகிலால் வடித்துக் கூழை வாரீரே. 95

புத்தப் பேய்க்குக் கூழ் வார்த்தல்

567
முழுத்தோல் போர்க்கும் புத்தப்பேய் மூளைக் கூழை நாக்குழறக்
கழுத்தே கிட்ட மணந்திரியாக் கஞ்சி யாக வாரீரே. 96

பார்வைப் பேய்க்குக் கூழை வார்த்தல்

568
கொய்த விறைச்சி யுறுப்பனைத்துங் கொள்ளுங் கூழை வெள்ளாட்டின்
பைத லிறைச்சி தின்றுலர்ந்த பார்வைப் பேய்க்கு வாரீரே. 97

குருட்டுப் பேய்க்குக் கூழை வார்த்தல்

569
ஊணா தரிக்குங் கள்ளப்பேய் ஒளித்துக் கொண்ட கலந்தடவிக்
காணா தரற்றுங் குருட்டுப்பேய் கைக்கே கூழை வாரீரே. 98

ஊமைப் பேய்க்குக் கூழ் வார்த்தல்

570
பையாப் போடு பசிகாட்டிப் பதலை நிறைந்த கூழ்காட்டிக்
கையா லுரைக்கு மூமைப்பேய் கைக்கே கூழை வாரீரே. 99

கருவுற்ற பேய்க்குக் கூழ் வார்த்தல்

571
அடைத்த செவிகள் திறந்தனவால் அடியேற் கென்று கடைவாயைத்
துடைத்து நக்கிச் சுவைகாணுஞ் சூற்பேய்க் கின்னுஞ் சொரியீரே. 100

மூடப்பேய்க்குக் கூழ் வார்த்தல்

572
பொல்லா வோட்டைக் கலத்துக்கூழ் புறத்தே யொழுக மறித்துப்பார்த்
தெல்லாங் கவிழ்த்துத் திகைத்திருக்கும் இழுதைப் பேய்க்கு வாரீரே. 101

நோக்கப் பேய்க்குக் கூழ் வார்த்தல்

573
துதிக்கைத் துணியைப் பல்லின்மேற் செவ்வே நிறுத்தித் துதிக்கையின்
நுதிக்கே கூழை வாரென்னும் நோக்கப் பேய்க்கு வாரீரே. 102

கூத்திப் பேய்க்குக் கூழ் வார்த்தல்

574
தடியான் மடுத்துக் கூழெல்லாந் தானே பருகித் தன்கணவன்
குடியா னென்று தான்குடிக்குங் கூத்திப் பேய்க்கு வாரீரே. 103

விருந்துப் பேய்க்கும் ஊர்ப்பேய்க்கும் கூழ் வார்த்தல்

575
வருகூழ்ப் பரணிக் களங்கண்டு வந்த பேயை முன்னூட்டி
ஒருகூழ்ப் பரணி நாமிருக்கும் ஊர்க்கட் பேய்க்கு வாரீரே. 104

கனாக்கண்டு உரைத்த பேய்க்குக் கூழ் வார்த்தல்

576
இரவு கனவு கண்டபேய்க் கிற்றைக் கன்றி நாளைக்கும்
புரவி யுரித்தோற் பட்டைக்கே கூழைப் பொதிந்து வையீரே. 105

கணக்கப் பேய்க்குக் கூழ் வார்த்தல்

577
இணக்க மில்லா நமையெல்லாம் எண்ணிக் கண்டே மென்றுரைக்குங்
கணக்கப் பேய்க்கு மகங்களிக்கக் கையா லெடுத்து வாரீரே. 106

பேய்கள் உண்ணல்

578
மென்குடர் வெள்ளை குதட்டிரே மெல்விர லிஞ்சி யதுக்கீரே
முன்கை யெலும்பினை மெல்லீரே மூளையை வாரி விழுங்கீரே. 107

579
அள்ளி யருகிருந் துண்ணீரே அரிந்திடு தாமரை மொட்டென்னும்
உள்ளி கறித்துக்கொண் டுண்ணீரே ஊதி வரன்றிக்கொண் டுண்ணீரே. 108

580
தமக்கொரு வாயொடு வாய்மூன்றுந் தாமினி தாப்படைத் துக்கொண்டு
நமக்கொரு வாய்தந்த நான்முகனார் நாணும் படிகளித் துண்ணீரே. 109

581
ஓடி யுடல்வியர்த் துண்ணீரே உந்தி பறந்திளைத் துண்ணீரே
ஆடி யசைந்தசைந் துண்ணீரே அற்ற தறவறிந் துண்ணீரே. 110

வாய் கழுவல்

582
கொதித்த கரியின் கும்பத்துக் குளிர்ந்த தண்ணீர் தனைமொண்டு
பொதுத்த தொளையாற் புகமடுத்துப் புசித்த வாயைப் பூசீரே. 111

வெற்றிலை போடுதல்

583
பண்ணு மிவுளிச் செவிச்சுருளும் பரட்டிற் பிளவும் படுகலிங்கர்
கண்ணின் மணியிற் சுண்ணாம்புங் கலந்து மடித்துத் தின்னீரே. 112

புரையேற்றம் நீங்குவதற்கு மருந்து

584
பெருக்கத் தின்றீர் தாம்பூலம் பிழைக்கச் செய்தீர் பிழைப்பீரே
செருக்கும் பேய்காள் பூதத்தின் சிரத்தின் மயிரை மோவீரே. 113

பேய்கள் களிப்பு மிகுதியால் கூத்தாடல்

585
என்று களித்துக் குமண்டையிட்டே ஏப்ப மிட்டுப் பருத்துநின்ற
குன்று குனிப்பன போற்களத்துக் கும்பிட் டேநட மிட்டனவே. 114

பாடி நின்று ஆடின
586
வாசி கிடக்கக் கலிங்கரோட மானத னேவிய சேனைவீரர்
தூசி யெழுந்தமை பாடிநின்று தூசியு மிட்டுநின் றாடினவே. 115

வென்றி பாடி ஆடின

587
பொருகை தவிர்ந்து கலிங்கரோடப் போக புரந்தரன் விட்டதண்டின்
இருகையும் வென்றதொர் வென்றிபாடி இருகையும் வீசிநின் றாடினவே. 116

பேய்கள் களிப்பு மிகுதியால் விளையாடல்

588
வழுதியர் வரைமுழை நுழைவடி விதுவென மதகரி வயிறுகள் புகநுழை வனசில
எழுதிய சிலையவர் செறிகடல் விழுமவை இதுவென வழிகுரு தியின்விழு வனசில. 117

உருள்வன சில மறிவன சில

589
உருவிய சுரிகையொ டுயர்கணை விடுபடை உருள்வடி விதுவென உருள்வன சிலசில
வெருவிய வடுநர்த முடைவடி விதுவென விரிதலை யதனொடு மறிவன சிலசில. 118

பேய்கள் குலோத்துங்கனை வாழ்த்துதல்

590
உபய மெனும்பிறப் பாளரேத்த உரைத்த கலிங்கர் தமைவென்ற
அபய னருளினைப் பாடினவே அணிசெறி தோளினை வாழ்த்தினவே. 119

வயப் புகழ் வாழ்த்தின

591
திசையிற் பலநர பாலர்முன்னே தெரிந்துரைக் குஞ்சிசு பாலன்வைத
வசையில் வயப்புழ் வாழ்த்தினவே மனுகுல தீபனை வாழ்த்தினவே. 120

பொன்னித் துறைவனை வாழ்த்தின

592
பொன்னித் துறைவனை வாழ்த்தினவே பொருநைக் கரையனை வாழ்த்தினவே
கன்னிக் கொழுநனை வாழ்த்தினவே கங்கை மணாளனை வாழ்த்தினவே. 121

உலகுய்ய வந்தானை வாழ்த்தின
593
ஆழிக ளேழுமொ ராழியின்கீழ் அடிப்பட வந்த வகலிடத்தை
ஊழிதொ றூழியுங் காத்தளிக்கும் உலகுய்ய வந்தானை வாழ்த்தினவே. 122

கரிகாலனோடு ஒப்பிட்டு வாழ்த்தின
594
பூப்பது மத்தன் படைத்தமைத்த புவியை யிரண்டா வதும்படைத்துக்
காப்பது மென்கட னென்றுகாத்த கரிகாலச் சோழனை வாழ்த்தினவே. 123

வாழ்த்து

595
யாவ ருங்களிசி றக்க வேதருமம் எங்கு மென்றுமுள தாகவே
தேவ ரின்னருள் தழைக்க வேமுனிவர் செய்த வப்பயன்வி ளைக்கவே. 124

596
வேத நன்னெறி பரக்க வேஅ பயன் வென்ற வெங்கலிக ரக்கவே
பூத லம்புகழ்ப ரக்க வேபுவி நிலைக்க வேபுயல்சு ரக்கவே. 125

கலிங்கத்துப் பரணி முற்றிற்று



This page was first put up on November 28, 2001 and last revised to TSCII 1.7 version on 14 March 2002
Please send your comments and corrections to the Webmaster(s) of this site