rAmAyaNa veNpA
(of maturakavi Srinivasa Aiyengar)
part 2/ Cantos 5 & 6
(in tamil script, unicode/utf-8 format)

மதுரகவி ஸ்ரீனிவாச ஐயங்கார் இயற்றிய

இராமாயண வெண்பா - பாகம் 2
காண்டங்கள் 5 & 6




Etext Preparation (input & proof-reading) : Mr. & Mrs. Devarajan, Durham, NC, USA
Webpage preparation : Dr. Kumar Mallikarjunan, Blacksburg, VA, USA

This Etext file has the verses in tamil script in Unicode/UTF-8 encoding format


© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

About the author & Source Acknowledgements:

Madurakavi Srinivasa Ayyangar is the author of this work. He lived in a small village in Madurai district during the early part of twentieth century. (He is different from Madurakavi Azhwar (one of the twelve Azhwars). He is well known for the innumerable poems composed by him. He had left the manuscript copy of this work with Madurai Tamil Sangam. It was printed and published by Thiru. R. Govindarajan, Chennai in 1990 with financial assistance provided by Govt. of India. We are grateful to him for having accorded permission to publish it in Project Madurai. The present release contains only the moolam of the work and does not include the notes and commentaries in the printed book.


இராமாயண வெண்பா - இரண்டாம் பாகம் (5, 6-வது காண்டங்கள்)

இராமாயண வெண்பா - முதல் பாகம்

5. சுந்தர காண்டம்

6. யுத்த காண்டம் (பாடல்கள் 1- )


இராமாயண வெண்பா

5. சுந்தர காண்டம்


5.1. கடல் தாவு படலம்

வேந்தர் முடிவிளங்கும் விண்ணோர் புனைமுடியாம்
மாந்தர் குறைதீர வருமருந்தாய் - ஆய்ந்தமலர்த்
தேனுஞ் சுரும்பும் செறியும் செழுந்தடமும்
கானும் கடந்தான் கழல்....1

எடுத்த உருவம் இலங்கை அளவாக
அடுத்துறைந்த வானரங்கள் அஞ்சப் - புடைத்துயர்தோள்
கொட்டினான் ஆர்த்தான் குலிசத் திறைபதியை
எட்டினான் பார்த்தான் எழுந்து....2

மன்னிலங்கு கோபுரமும் மாடமும்பொன் மாமதில்சூழ்
மின்னிலங்கு வீதி விலாசமும்சேர் - தென்இலங்கை
கண்டிணைத்தோள் கொட்டிக் ககன்முகடுங் காசினியும்
விண்டதிர வார்த்தான் வெகுண்டு....3

இருண்ட கிரிச்சிகரம் ஏறிடிமுன் வீழ
உருண்ட தெனவே ஒடுங்கி - வெருண்டு
புரப்பணைகள் தேயப் புரண்டனபோர் ஆண்மை
கரப்பணைய மாகக் கரி....4

பரிவதன மாக்கள் படர்முழையில் மன்னி
தெரிதரத்தோள் ஆகம்எலாம் தேர்ந்து - புரகரனார்
வாட்கயிலை வெற்பெடுத்து வன்பிழந்து மாழாந்த
தோட்கபடன் ஒத்தார் துயர்ந்து....5

உண்ணமுத மூட்டி உயிர்போல் வளர்த்தமணி
வண்ணக் கிளிகள் மனம்தளர - நண்ணரிய
தந்துணைவர் மார்பந் தழுவினார் மீச்சென்றார்
கந்தருவ நல்லார் கசிந்து....6

ஆயிடையி லங்கதனை ஆதியோர் மாருதியைத்
தாய்அருள்தி என்றுள் தழைந்துரைப்ப - தூயவனும்
நன்றெனவே கொண்டு நயந்தான் நனிமலர்தூய்
அன்றமரர் ஏத்திடவே ஆங்கு....7

மார்பொடுக்கி வாலெடுத்து வன்றான் உரமடக்கி
வார்தடக்கை நீட்டி வலியிணைத்தோள் - மேருஎனக்
கண்டஞ் சுருங்கக் கடுங்கால் எனஎழுந்தான்
அண்ட முடியுறிஞ்ச ஆங்கு....8

கல்லும் மரமும் கடுங்களிறும் மற்றெவையும்
புல்லும் பிறவும் புணரிமேல் - வில்உடையெம்
கோமான்றன் தூது குறித்தடைவ போலடைந்த
தாமநெடு மாருதிபின் தான்....9

அறந்தாறே செல்லும் அறத்தோன்றல் நாகப்
புறத்தாய வெகப் புதுக்கால் - நிறத்தார்மைக்
கல்லோல மெற்றக் கரையரும்பாக் கங்களெலாம்
உல்லோல மாய துலைந்து....10

அரன்அயன்தன் தோளாய் அரிசிரமாய் ஆக
உரனடிவான் மற்றை உறுப்புத் - தருமன்முதற்
பாலகராய்த் தேவர் பலமயிராய் உற்றதென
மேலெழுந்தான் வீரன் விசைந்து....11

நல்லறங்கள் ஓங்க நனிமீச் செலுமிறைவன்
வல்லரக்கன் தன்மகளை வான்சிறையில் - அல்லுறுத்தும்
காற்கருதார் உண்டோஅக் கற்பணியைக் காணுமா
பாற்கடல்மேற் செல்லும் பரிசு....12

வாளெயிற்று மின்னிலங்க வண்ணமணிக் குண்டலம்விற்
கேளெறிப்ப வானங் கிளர்ந்தெழுவான் - நீளுறுப்பொன்
வல்லிலங்கை வன்மழையான் மாய்தரப்பெய் வாளரியாற்
செல்எழுந்த தொத்தான் செறிந்து....13

நேமி வரைவளைத்து நீண்மதியை மேன்மூடி
வாமநெடு மேருவினை வாலாக்கிக் - கோமுதலோர்
திண்கா லிடைவிடுத்த சீர்க்கதலி யாங்கமைந்தான்
விண்கா லெழுந்தான் விரைந்து....14

திசையளவா யுள்ள திமிங்கிலமே யாதி
இசையளவு கொண்டவுயிர் எல்லாம் - விசையளவாய்ப்
பொன்றி மிதந்து புணரி யிடைப்பொலிந்த
ஒன்றின்மேல் ஒன்றா உலைந்து....15

பன்னரிய மாலை படரருவி பாடுறத்தண்
பொன்னின் சிகரம் பொலியவே - மன்னியது
கைநாகம் மன்னான் கடுங்கால் எனச்செலுங்கால்
மைநாகம் என்னும் மலை....16

காசினியை முன்னம் கரந்தான் தனைவீட்டிப்
பூசுரர்கள் போற்றப் புணரிவாய்த் - தேசுபுனை
வாராக மோங்க மலைபோல் எழுந்தநெடு
வாராக மோங்க வளர்ந்து....17

கண்ணங் கமலக் கயமிலகக் கற்பகத்தின்
வண்ணச் செழுந்தார் மலியவே - நண்ணரிய
வெந்தகையான் மானதத்துள் மேவிஎழும் பொன்முடியார்
இந்திரனை ஒப்ப எழுந்து....18

இத்திறநே ரெய்தும் இரும்பொறையை எண்தவத்தோன்
சித்திரநேர் என்னத் திகைத்துடனே - அத்தலையில்
உந்தா உயர்ந்தான் உவரித் தலைமுடிகீழ்
அந்தோ விழுந்த தமிழ்ந்து....19

ஆராத காதல் அதுமுன்ற அக்குன்றம்
ஓர்மா னிடனாய் உழைஉற்றே - பேராள
நிற்குரியேன் நின்னடியேன் நேர்மையுளேன் நின்னேவ
லுக்குரியேன் என்றான் உவந்து....20

முன்னோன் விலங்கல் முழுதும் சிறையரிந்த
அன்னாள் எனைஉன் அருந்தாதை - உன்னாப்
புணரியிடை வீழ்த்துப் புரந்தான் புவியில்
இணர்முடிய தாராய் இனிது....21

அப்பெரியோன் தன்மகன்நீ ஆதலினால் ஆண்டகையீங்கு
இப்பொழுதென் மேற்றங் கிளயாறித் - துப்புறயான்
தந்தருள்வ கோடி தடைஉரையேல் என்றுரைத்தது
அந்தமிலாக் காதல் அமைந்து....22

நல்லறிவன் உன்னி நயமுடையா னென்றறிந்து
சொல்லுரையாற் றேறிஎதிர் சொல்லுங்கால் - எல்லையிலா
வன்முடிக ளோடும் மருங்கொளிர்ந்த தாங்கருணப்
பொன்மலிந்த நீலப் பொருப்பு....23

கண்டான் வியந்தென் கருத்தனை முற்றியலால்
உண்டேன் இருந்திங் குறவாடேன் - விண்டேனாய்
மீண்டுறுங்கால் நின்பால் விருந்தாவன் என்றுரைத்தான்
பூண்டபுகழ்ப் பூணான் பொலிந்து....24

முன்பிடைபின் னோரின் முதலாம் புகழுடையோர்
என்பு முயிரும் இனிதீவர் - அன்புடையார்
தஞ்சீர்மை சொல்லத் தரமன் றயரலென்றான்
அஞ்சா வலியுடையான் ஆங்கு....25

சின்னஞ் சிறுகாற் செழுங்கனிஎன் றெண்ணிநமை
முன்னங் கடுகு முயற்சியான் - இன்னும்
விசைந்தான்என் றெண்ணி வெயிலவனும் அஞ்ச
விசைந்தான்நம் மாருதியு மேல்....26

அக்கால் அமரர் டலறிவா னாங்கேவப்
புக்காள் சுரசைப் பெயர்புனைவாள் - நக்கா
முழைவாய் திறந்து முனிந்துரைத்தாள் ஒன்றும்
விழையானை நோக்கி மிடைந்து....27

என்வாயை அன்றி இடமிங் குனக்கரிது
மின்வா ளெயிற்று மிடற்குரங்கே - முன்வாய்ந்த
நற்பசிக்கு நானென்றாய் நல்லைநீ என்றுரைத்தாள்
வெற்பரக்கி யானாள் வெகுண்டு....28

நேர்வாய்ப் புகுந்துறுவன் நேரிழைநீ தின்னிஎன
வார்வாய்ப் புகுந்து வளர்ந்தான்பின் - கார்வாயு
மின்னலென வந்தான் வெளியேஅவ் விண்ணவர்கள்
பொன்னலர்கள் தூவப் புகழ்ந்து....29

ஆயதுகண் டன்னை அனையாள் புகழ்ந்தேத்தத்
தூயவனு மாசி சொலிஏகி - மேயபொழுது
அங்கார தாரை அடைந்தாள் அனல்போல்
இங்கார் கடத்திர் என....30

ஆர்ப்பரித்தாள் ஆரென் றதட்டினாள் ஆலமெனச்
சீர்த்த பிறைப்பல் திகழவே - தீர்த்தரங்கப்
பூவுலகம் கொள்ளும் புழைவாய் திறந்துயிர்த்தாள்
மாவலியான் மாருதிமுன் வந்து....31

இப்புழைவாய் எல்லை இதுவே வழிஎன்ன
வெப்புருவங் கொண்டு விரைந்தணுகித் - துப்புடையாள்
செய்ய குடர்பறித்துச் சென்றான் திறற்கலுழன்
வெய்தெழுந்த வாபோல் விரைந்து....32

வெங்கட் கனகன் விரிமார் பிடந்தநர
சிங்கம் எழுந்த செயலேபோல் - அங்கரக்கி
மாழாந் துயிர்பதைப்ப வான்மீ தெழுந்தான்பொற்
கேழார்ந்த மெய்யான் கிளர்ந்து....33

இங்குற்றான் என்றார் இமையோ ரிமையாமுன்
அங்குற்றான் என்றார் அறிகிலா - துங்கச்
செழுங்கற் பகநறும்பூச் சிந்தினார் தேவர்
உழுந்துற்ற போதுள் உவந்து....34

இத்தன்மை எய்தும் இறைவன் எமக்குகந்த
அத்தன் தனக்கே அருந்தூதன் - பத்திப்
பவளத்திண் மால்வரைபோற் பாய்ந்தான் படரும்
கவளத்திண் மாவிற் கதித்து....35

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.2. ஊர்தேடும் படலம்

கண்டானி லங்கைக் கடிநகருங் காவலும்விண்
கொண்டார்ந்த கோபுரமும் கோமறுகு - மண்டாவு
மாடமும் மற்றும் வளமும் வளமமைந்த
கூடமும் காவுங் குறித்து....36

இன்னகரோ பொன்னகர மென்றே யெடுத்துவமை
பன்னவல்லார் கூறாத பாடெவனோ - மன்னுந்
தவத்தா லடைந்ததுவோ தானெதுவோ வென்றான்
சிவத்தாரு டையான் தெரிந்து....37

அரன் கயிலை வெற்புகொண் டான்றதுநேர் மாடப்
புரன்கமலப் புத்தேள் புலனால் - வரன்பொலிய
தென்னிலங்கை என்றுபெயர் செய்தமைத்தான் கொல்லோ
மின்னிலங்க வென்றான் விரித்து....38

பொன்னாற் புதுக்கிப் புனைமணிகண் மேற்பதித்து
மின்னா லழுத்தி வெயிற்கதிரோன் - முன்னாரப்
பூசி மெழுகிப் புனைமாட மெண்ணரிய
காசின்மலை யென்பார் கணித்து....39

பொன்ன கரமேகம் புதுமையா ரின்னகர
மன்னுநிழன் முன்னுவரி மன்னுதலால் - துன்னரிய
பாகமுறு மொண்கவிதைப் பாவலர்கள் யூகமுற
நாகவுல கென்பார் நயந்து....40

மாலை யுறுமணிமேன் மாடமும்வா னட்டிலுறு
சாலையு நீராடுந் தனியிடமும் - கோலமுடன்
மண்ணுங் கனக வனைகுன்றும் மாலமைய
நண்ணுமால் வான நதி....41

அந்தப் புரமு மருங்காவும் மாடளியார்
சந்தப் புரமும் தனியிடமும் - கந்தருவத்து
ஆடரங்கும் அங்கயற்க ணாழியனை யாரிருந்து
பாடரங்கும் வான்கற் பகம்....42

கதிரொளிசெல் லாது கனலியே காது
நுதியிலைவேற் காலனெதிர் நோக்கான் - சதமகனார்
மாலும் புகாது வரையுங்கால் வானுலவுங்
காலும் புகாது கலந்து....43

வல்லரக்கன் தன்னை வழுத்துவோ வாண்மலரான்
புல்லுந் தவத்தைப் புகழ்துமோ - நல்லியனூல்
சீரிற் புரிந்தான் செயலைப் புகழ்துமோ
யாரைப் புகழ்தும் மறிந்து....44

மந்தார நீழல் வயங்குகின்ற மாண்பதனால்
நந்தாத விண்மே னடத்தலாற் - றந்தாரு
மாவரைநா வல்லோர் வழுத்தலான் மாட்சிமைசால்
தேவரையும் ஒக்கும் சிறந்து....45

பள்ளி யறையும் பரிநிரையார் பந்திகளும்
வள்ளுறுமால் யானையுறும் வாரிகளும் - விள்ளரிய
சேணுற்ற திண்டேர்ச் செழுமணிமா டம்பிறவும்
ஆணிக் கனக அமைந்து....46

வானிடையும் செல்வ வளியனைய வேகத்த
பூனிறத்த போரிற் புகழுறுவ - நானமெனக்
கந்தங் கமழ்வ கணிப்பில் கடும்பரியின்
பந்தியொரு கோடி படர்ந்து....47

ஒருகை இருகொம் பொடுமும் மதநால்
வருவா யுறுமை வணமுடைய - தருசினமார்
நீடுங் கிரியை நிகர்வ நெடுங்கரியின்
கூடமொரு கோடி குறித்து....48

மண்ணதிரச் செல்வ வளிவானிடை யடைவ
கண்ணிமையிற் காதங் கடுகுவன - வெண்ணரிய
சேடவிர்ந்த மாமணியாற் தேசுறுவ திண்டேரின்
மாடமொரு கோடி மதிப்பு....49

கந்தார வீணைக் களியமுதங் கான்றொழுக
மந்தார வான மடநல்லார் - பைந்தாமத்
தாடுவார் வண்மை யரக்கியர்க ளாங்கமையப்
பாடுவா ருள்ளம் பதிந்து....50

தொழுகின்றார் ஆகித் துயரால் அயர்ந்து
விழுகின்றார் அன்பு வெறுத்தார் - பழுதின்
முழுகின்றா ரின்பமற மூடியபன் னோயா
லழுகின்றா ரில்லை யவண்....51

நீரி னெருப்பி னெடும்பனியி னீர்வளஞ்சூழ்
பாரி லிருந்து பலபலநாள் - தீரமுறு
மெய்த்தவத்தாற் பெற்ற விளைவன்றோ வேலரக்கர்
எத்தவத்தாற் பெற்ற திது....52

வண்ணத் துளப மணிவண்ணன் வைகுதற்கோர்
கண்ணிற் சிறந்த கடிநகரம் - எண்ணுந்
திறன்மலரான் காலவரை சீர்கெடுத லுண்டோ
அறமுளதே யாகி லயர்ந்து....53

சாற்றுங்கா லென்னே தடமா மலருடையான்
போற்றுங் கமலப் புராதனன்மா - லாற்றலுறுஞ்
சீதரனுக் கேற்ற திருத்தல மீதென்றறிய
வேத முரையா விதம்....54

எந்திரத்தேர் மற்று மிவுளித்தேர் மீச்சென்மணி
மந்திரத்தேர் மேவி மதிசிறந்த - தந்திரத்தின்
உற்றோர் மறுகி னுழையிருந்து போதருவர்
மற்றோர் மறுகின் மகிழ்ந்து....55

என்னப் பலவுநினைந் தெண்ணி யிகல்கடந்தோன்
பொன்னிற் பொலிந்த பொழில்வரைமேற் - பன்னரியோர்
மேக மெனக்கொடியோர் மேவுவரென் றேயிருந்தோ
னாகஞ் சுருக்கினா னாங்கு....56

மறைப்பொருளைப் பொய்யெனச்சொன் மாண்பிலார்நெஞ்சி
லறத்துறையை நீத்தா ரமைச்சில் - புறத்திருண்மை
யெங்கும் பரந்த தெழுப்பரியு டையான்தேர்
பொங்கலைநீர் மேல்பாற் புக....57

வல்லரக்கர் கோமான் மதியார் புகழ்பாடா
மல்லன் மிதிலை மகராசன் - செல்விதனை
நேர்சிறைக்கண் வைத்த நெடுந்தீ வினைப்பயனாற்
கார்புரந் தாகுங் கலந்து....58

அக்கா லரக்க ரடலோதை யண்டமுறத்
திக்காதி யெவ்விடத்துஞ் செல்குவார் - புக்காய்த்
தரியுலகஞ் செல்வா ரமரர் கணமுன்னி
விரைகுவர்த மெண்மேல் வெறிந்து....59

கடலெழுந்த தாண்டனுமன் கார்வரையிற் பாய
மடலெழுந்த தாரிலங்கை மன்ன - னடலமைந்த
நீணிலாக் கொற்ற நெடுங்குடைவீழ்ந் தாங்குமணி
வாணிலா முற்று மதி....60

வடிகொண்ட சீர்த்தி யனம்மாருதி தன்கையாற்
பொடியுண் டுயிரிழந்து போன - கடியுண்
கராவனைய சால கடங்கரி னேயானது
இராவிடைவந் தோங்கு மிருள்....61

இவ்வழி யிலைய னெதிர்ந்தா னிரவியொடு
செவ்வொளிய திங்கள் செலவறியாத் - தெவ்வரிய
வான முகடுறிஞ்ச மாமணியின் வாளொளிசேர்
தான நெடுமதிலைச் சார்ந்து....62

சென்னியி லங்கைத் திருமகளார் தோற்றமறப்
பொன்னெழினி யாத்ததெனப் பொற்பமையு - மன்னுமணி
மின்வாய் நெடுமதில்வாய் வேந்தரவின் வாயனைய
மன்வாயில் கண்டான் மதித்து....63

ஏழுலகில் வாழ்வனமற் றெல்லா வுயிருமொன்றாய்ச்
சூழுவரி யென்னத் தொடர்ந்தாலும் - பாழியுறும்
இன்னிலைய வாயி லிடையடங்கு மென்றுரைத்தான்
மன்னிலைகொள் தோளான் மதித்து....64

சூலத்தர் கார்முகத்தர் தோமரத்தர் சூழ்விழியால்
மாலத்தர் வேல்வா ளடற்கரத்தர் - பாலத்தர்
எண்ணரியர் வெள்ள மிருநூ றெனுமவர்பால்
நண்ணினா னின்றா னனி....65

அக்கடலைத் தாயிங் கடைந்தே னரிதன்று
மைக்கடலின் மிக்குடைய வன்சேனை - யிக்கடலைத்
தாவலரி தென்று தகைந்தயன்சென் மாருதியை
யாவனடா வென்றா ளெதிர்ந்து....66

நாலிரண்டு தோளுடையாள் நால்முகத்தா ணாஞ்சிலொடு
சூலமுத லாயுதத்தின் தோற்றத்தாள் - காலன்
கலங்குங் கனலுருவக் காரிழையாள் காவல்
இலங்கைமா தேவி யெழுந்து....67

பல்வண்ணத் தூசுடுத்தாள் பல்வண்ணப் பன்மணியாள்
பல்வண்ணங் கொண்ட பணிமுலையாள் - நில்லடநீ
யென்றதட்டி வந்தா யெனையாதென் னென்றாள்
குன்றுருத்த தன்னாள் குறித்து....68

எத்தகைய தேவ ரெனினு மிவணடையச்
சித்தங் கலங்குவர்கள் தீவினையா - லுத்தமநீ
யென்னோ வுயிரிழப்பா யேகுகநீ யென்றிசைத்தாண்
முன்னாள் விதிப்படியே மூண்டு....69

நன்னூன் முறையறிந்த நாயகனு நங்கைநல்லாய்
என்னே யுனக்கிழவிங் கெய்தினாற் - பொன்னாரு
மின்னகரங் காண்டற் கியன்றே னெளியனெனச்
சொன்னமொழி கேட்டாள் துணிந்து....70

வஞ்ச முடையனிவன் வானரமு மல்லனென
நெஞ்சழன்று பொங்கி நெடுஞ்சூலம் - தஞ்சமென
வேவினாளைய னிருங் கரத்தாற் பற்றிநிலந்
தூவினான் கண்டாள் தொடர்ந்து....71

மற்றும் படையை வழங்காமுன் வவ்வினன்விண்
செற்றமுற வீசத் திறற்கரத்தாற் - பொற்றொடியு
மெற்றிநா ளையனிவள் பெண்ணெனக் கருதி
யெற்றினான் அங்கை எடுத்து....72

விசையசனி வீழ விழுந்தருவ டென்ன
பசையறவே வீழ்ந்தாள் பதைத்தாள் - அசைவில்வலி
மாருதியை நோக்கி வகுத்தாள் வழிகுருதி
வாருதியை மேவ மருண்டு....73

நன்னலங்கள் வாய்ந்தோய் நளிர்மலர்ப்புத் தேளெனையிப்
பொன்னகரங் காக்கப் புகன்றான்யா - னன்னவனை
எத்தனையாண் டைய விவண்வாழ்வ தென்றுரைப்ப
அத்தன் மொழிந்தா னறிந்து....74

வஙுரங்கொன் றுன்னை மலர்க்கரத்தாற் றாக்கியகா
லென்பதநீ காண்டி யெழிலிலங்கைப் - பொன்புரிபின்
கேடுறு மாலென்று கிளத்தினா னவ்வாறே
பாடமைந்தே னென்றாள் பரிந்து....75

நிற்கரிய தொன்றுளதோ நீதி யுடையாயென்
றெற்கலன்கள் பூண்டா ளிசைத்தேக - மற்குலவு
வன்புயத்தான் மேரு மதில்கடந்தப் பாற்புகுந்தான்
முன்பனடி வாழ்த்தி முயன்று....76

கடலு மறலுங் கடுவிடமுங் கூட்டி
யுடலுங் கரமு மொளிர - வடவரையைக்
கால வமைத்தநெடுங் கண்படைகொள் வானையிதென்
ஆவமோ வென்றா னடைந்து....77

விடநேர் துயில்வான் வழிபிழை சோரக்
கடைவாய் நறவொடுமூன் காலப் - புடைபேரா
வந்தகனோ வென்ன வயிர்த்தான்மெய் யாற்றலரு
வெந்தொழிலா னென்றான் வியந்து....78

பத்துத் தலையுடைய பாதகனா ரல்லனிவ
னெத்தகைய பேர்வழியோ வென்றுன்னா - வத்தலைவிட்
டாயிரமாடங் களரிதிற் கடந்து சென்றான்
நாயகியை நாடி நனி....79

சந்திகளு நல்லறத்தின் சாலைகளுந் தாரணியார்
பந்திகளும் பாடும் பனித்துறையு - மந்திரமும்
ஆவிநுழை யாவகமு மடைந் தனனத்
தேவிதனை நாடித் திரிந்து....80

வானவரும் மண்ணுலகின் மானவரு மற்றுலகத்
தேனையரு மேத்த விண்ணடைந்த - ஞான
நடையா னகநாடி நன்றெனவே கண்டான்
விடைபோ னடையான் விரைந்து....81

நல்லறமன் னானுருவே நண்ணியவ ணுற்றதென
சொல்லரிய புண்ணியனைச் சூழ்ச்சியினால் - மல்லமைந்த
தோளானு நோக்கிச் சுகுணனிவ னென்றறிந்தான்
வேளாண்மை வென்றான் வியந்து....82

ஆயிரம் பத்தாயிரமோ ராயிரமா டங்களெல்லாம்
ஏயெனுமுன் சென்றா னிகல்வல்லான் - சாயற்
சதமகனார் வைகுந் தனிச்சிறையுங் கண்டான்
இதுவோ விதியென் றெதிர்ந்து....83

அங்ககன்ற பின்னை யரிவையர்தம் நாப்பணொரு
மங்கு லெனத்துயிலு மாமகனை - யிங்கிவனோ
செவ்வே ளிவன்கரியன் தேருங்கா லென்றுரைத்தான்
அவ்வே ளடலொழிந்தா னாங்கு....84

வீர னிவன்மகனாய் மேவத் தவம்புரிந்தான்
பேரருமை சொன்னாற் பெரிதன்றோ - தீரனிவன்
தன்போ ரரிதென்று சாற்றினான் றானகன்றான்
மின்போலு மெய்யான் விரைந்து....85

அதிகாயன் வீரத் தடலக் கயன்பல்
அதிகார வீர ரமையுஞ் - சதிராரு
மாடமொரு கோடி மருவினான் மால்தூதன்
கூடமொரு கோடி குறித்து....86

எத்தகைய மாட மெனினுங் கடந்தனன்பின்
சத்த முகிலுவரி தானெனெவே - நித்தமுகந்
தார்கழி வேலை யனையதணி யார்நடுவட்
பேரகழி கண்டான் பெயர்ந்து....87

அவ்வேலை தாய்வந் தடைந்தே னகழியெனு
மிவ்வேலை தாவ லெளிதன்றான் - மைவேலை
யேழும் வளைந்த தெனுமாறிது வென்றான்
வாழி யனுமான் மதித்து....88

வெம்மடங்க லன்னான் விரியகழி முன்விரைவின்
மும்மடங்கு வேக மொடுதாவித் - தெம்மடர்வேற்
கோமான் புகழிற் குலவினான் கொற்றநெடும்
தேமாண்பு டையான் தெரிந்து....89

பாதி யிரவிற் பனிரெண்டு யோசனையா
யேதமறு நூலோ ரியம்பியவா - றோது
மருவிலக்க மூன்றாய் வகுத்த மறுகெல்லா
மொருவனே சென்றா னுணர்ந்து....90

பரிதுயின்ற காலாட் படைதுயின்ற கோபக்
கரிதுயின்ற கள்ளுண் களியார் - வரிதுயின்ற
வூடினா ரன்றி யுறங்கினார் மற்றெவரும்
வீடினா ரென்ன மிடைந்து....91

வேலரக்க மன்னருறை வீதி கடந்தப்பான்
மேலவனு மேகி விரைந்தடல்சேர் - ஆலமனான்
காத லியக்கியர்தங் கண்மறுகுங் கண்டகன்றான்
ஓதியிமைப் பதன்மு னுற்று....92

வண்டினமே சென்று வழுத்தாயோ நீலமணிக்
கண்டர்வரை யெடுத்த காதலர்க்குக் - கெண்டைவிழி
நல்லார்க்குக் காமனிகர் நாதருக்கு நாடறிந்த
வல்லார்க்கென் னுள்ள மயல்....93

காந்த வரையோவக் காதலனார் காமருறு
மேந்து முலையா யிரும்போநீ - வாய்ந்தவிளஞ்
சூரியனோ தோன்றல் துணைமலரோ நின்நயனம்
வாரிழையே யென்றாளோர் மாது....94

உண்ணா ளுறங்கா ஞயிர்ப்புறாள் ஊசலொடு
மண்ணார் கழங்கம் மனையாடாள் - கண்ணார்
மடலூரன் மாறாண் மணிக்கணீர் வார
குடமானுமா முலையோர் கொம்பு....95

முன்னொருக்கால் வந்தான் முகங்கொடான் மொய்குழால்
பின்னொருக்கால் வந்தென் பிறழ்முலையை - மன்னுதற்கு
மாலை யளித்தான் வரக்காணே னென்றுளைந்தோர்
மாலை யிருந்தான் மருண்டு....96

மயில்விடுத்தாள் பின்னும் வரக்காணாள் மாழ்கி
குயில்விடுத்தாள் கொம்பிற் குழைந்தாள் - அயிலிணைத்த
கண்முத் தரும்பக் கலுழ்ந்தாளோர் காமரிளம்
பெண்முத்த மானாள் பெயர்ந்து....97

அத்தகைய மாதர் அகங்கடந்தான் விஞ்சையர்தம்
புத்தமுத நல்லார் புதுமாடப் - பத்திகடந்
தேகினான் மான்முகன்ற னேந்திழையாள் கோயிலிடை
மாகமார் தோளான் மதித்து....98

வானரம்பை மாதர் மணிமலர்ப்பூந் தாள்வருட
ஆனையிருங் கோட்டா லமைத்திடுவி - தானநிழன்
மஞ்சத்தின் மீத்தண் மலரணையிற் கண்டுயிலும்
அஞ்சத்தைக் கண்டான் அயிர்த்து....99

மானனைய வம்மயிலை மன்னுநெடு மாருதியுஞ்
சானகியா மென்னச் சலங்கொண்டான் - போனது
நல்லறமு மென்றான் நகையோடு நாணுமுற
அல்ல லுழன்றான் அயிர்த்து....100

கன்னங் கருங்குழலக் காரிகையார் கற்பொழுக்கம்
இன்னலுற நீக்குங் கொலென்றுரையா - மன்னறிவான்
முற்று முணர்ந்தான் முழுமதிநே ரொண்வதனம்
செற்ற மறுங்குணத்தான் றேர்ந்து....101

மானிடர்தம் பெண்ணோ வலியவுணர் மாதரசோ
ஏனை யிலக்கணங்க ளெய்துறினும் - நானமுறும்
பூங்குழல்கள் சோரப் புலம்புவாள் போகமெலாம்
நீங்குறுமா லென்றான் நினைந்து....102

அங்ககன்ற பின்னை யணிமாடத் தாரகைக்கோர்
திங்க ளெனவே திகழ்தரும்பொற் - பைங்கனகத்
தோளரக்கன் மாளிகைக்கட் டோன்றினான் தோன்றாத
நாளுடைப்பே ராள னனி....103

காராடும் வண்ணக் கடல்கிடந்த காட்சியனை
வாராடு மாமுலையார் வன்குழுவிற் - போராடும்
மத்தக் கரிபோன் மலரணையிற் கண்டுயில்கொள்
பித்தனைக்கண் கண்டான் பெயர்ந்து....104

திக்கசங்கள் வென்ற திறலானைச் சீதையினால்
நெக்குருகி நின்ற நிலையானைச் - சக்கரமும்
நேர்பாரும் வச்சிரமு நீண்மழுவும் தோளாத
மார்பானைக் கண்டான் மதித்து....105

அப்புவிழி யாசை யனலூற வாகமெலாங்
கொப்புளத்தின் வேர்வை கொதித்தூறச் - செப்பரிய
பத்துத் தலைய நெடும்பாந்தளென நெட்டுயிர்க்குங்
குத்திரனைக் கண்டான் குறித்து....106

கண்டான் விழியிற் கனலொழுகக் கைபிசைந்து
விண்டா னிவனை விறலொடுங்கத் - தண்டாத்
தனிமுடிகள் பத்துந் தரைசிதறத் தாக்கி
யினியகல்வ னென்றா னெழுந்து....107

வானவர்க்கு மாமறைதேர் வாணருக்கு மானிடராம்
ஏனையர்க்குந் தாயா யெனையாளுஞ் - சானகியை
வஞ்சித்த பாதகனை மாய்த்திடே னேகுவனேல்
வஞ்சித்தேன் யானன்றோ வந்து....108

நல்லடிமை யென்ற நனியுரையா லாவதுவோ
புல்லியவிப் பாதகனைப் பொன்றிடவே - மல்லமைதோள்
நாலைந்தும் போக்கி நனியெழுவ லென்றுருத்தான்
மேலைந்தும் வென்றான் வெகுண்டு....109

அங்கவனை வீட்டி யமைவ னெனவெழுவான்
இங்கழகன் றென்ன வினிதுணர்ந்தான் - பொங்கிமிக
மூலம்பார்த் தெல்லா முடிக்குந் திறமுறினுங்
காலம்பார்த் தன்றோ கடல்....110

என்னா லிவனிறக்கு மென்பதெவன் யானுமிவன்
தன்னால் வெலவரிது சாற்றுங்கால் - முன்னாடி
யெற்றுவனே லைய னிருஞ்சிலைக்கு மேற்றமுறாக்
குற்றமுறு மென்றான் குறித்து....111

அம்மாடம் பிற்படப்போ யந்தோவிம் மாநகரம்
எம்மாடுந் தேடி யிழையணியை - விம்மாது
கண்டிலே னாற்றுவதென் காலவினை யென்றினைந்தான்
மண்டமரின் வல்லான் மருண்டு....112

கொன்றனனோ வண்மைக் குலமகளைப் பேழ்வாயால்
தின்றனனோ வப்புறத்தே சேர்த்தானோ - அன்றியவன்
என்செய்வா னென்றறிவே னேழையே னென்றுழைந்தான்
பொன்செய்பூந் தாரான் புலர்ந்து....113

எருவைக் கரச னியம்பிய மெய்மாற்றம்
புரையுற் றனவோ புகலிற் - பரிவுற்றே
நின்றுளைப்ப தென்னோ நிலையிலா வாக்கையினி
இன்றுலப்ப னென்றா னிருந்து....114

நம்பெருமான் முன்னணுகி நாயகனே நாயகியை
யம்புவியி லெங்கு மறிவுறேன் - துன்பமுறக்
கண்டிலே னென்று கரைகுவனோ வென்றயர்ந்தான்
பண்டைமறை யாய்ந்தோன் படர்ந்து....115

இன்ன பலவுநினைத் தெண்ணி யிகல்கடப்பான்
முன்னறையா ரோர்பொழிலை முன்னினான் - இன்னிலையிற்
பூங்குழலைக் கண்ணிற் பொருந்திலே னென்னிலுயிர்
நீங்கிடுவ லென்றா னினைந்து....116

இத்தகையோ னெண்ணில் எழின்மலர்ப் பூஞ்சோலையிடை
அத்தனையு ளேத்தி யருகடைந்தான் - இத்தலையிற்
பொய்க்கார் மனத்திருளே போல்வான் சிறையிருந்தாள்
மெய்க்காதை சொல்வாம் விரித்து....117

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.3. காட்சிப் படலம்

ஆல மனைய வரக்கியர்கள் நாப்பணிடை
நீல மனைய நெடுங்கண்ணீர் - காலுறவே
இன்ன லுழத்தங் கிருந்தா ளிறகிழந்த
அன்னப் பறவைபோ லாங்கு....118

மஞ்சாடுங் காயா மலர்மாரி மாமழையோடு
அஞ்சாரு மஞ்சனமே யாதியதாய் - நெஞ்சாரு
மாவி யுருக வகத்தெணுங்கா லாலியுறுங்
காவி புரையுநெடுங் கண்....119

எண்ண லெழுத லிசைத்த லெழின்மலர்ப்பூங்
கண்ணுறவே நோக்கல் கவினறிதல் - உண்ணுதலோ
டெல்லா மிராம னெனத்துயிலுங் கொண்டறியாள்
பொல்லா மணிநேரப் பொன்....120

தேரிழந்த மெய்யா டிரள்சடையாம் பூங்குழலாள்
மாசடைந்த செய்ய மதிமுகத்தாள் - நாசிமுனை
நோக்குற்ற கண்ணினா ணுண்ணறிவா லையனிடை
யேக்குற்ற நெஞ்சா ளினைந்து....121

வரும்வருமென் றெண்ணி வடதிசையை நோக்கித்
திருவளரு மார்பன் சிறந்த - கருணையமு
துள்ளுறவே தேக்கியு றைந்தா ளுயிர்கொண்டு
வள்ளமுலைத் தெள்ளரிக்கண் மான்....122

வற்கலையன் வாண்முகத்தன் வண்ணத் தனுக்கரத்தன்
நற்கலையன் றம்பியொடு நண்ணியே - கற்படர்ந்து
கானிடையான் செல்வன் கலங்கநீ யென்றுரைத்த
பான்மையுளங் கொள்வாள் பரிந்து....123

மெய்த்திருவு மூழின் விளைவும் விளைதருநாள்
ஒத்திருக்கு நன்முகத்தை யுன்னுவாள் - சத்திக்
கரன்வலியைக் கட்டுக் கரிசறுத்துக் காட்டு
முரன்வலியை யோர்வாள் உளைந்து....124

மன்னு மிதிலை மகராசன் மன்னவையிற்
றுன்னும்பொழுது துணை விழியா - மின்னமுதா
நோக்கியகண் ணோக்க நுனித்தா ளிருந்தாளைத்
தாக்கணங்கா ளேக்கமுறத் தான்....125

கங்கைக் கரையிற் கருதுங் குகற்கருளுந்
துங்கக் குணமுஞ் சுகமொழியும் - பொங்கரிடை
புல்லிறுத்துக் காகம் புரந்ததுவு முன்னியுன்னி
வல்லியிடை மாழ்கு மயர்ந்து...126

ஏயவோர் தன்மையொடு மெண்ணரிய வல்லரக்கர்
ஆயிழையர் மூளும் அனந்தலுறச் - சேய
வரிசடையாங் கூந்தன் மடமாது சொற்றாள்
திரிசடையை நோக்கித் தெரிந்து....127

அன்னை யனையா யகத்துணர்தி யாகமிசைத்
துன்னு மிடப்பாற் றுடிக்கின்றது - உன்னின்
மிதிலைவா யித்துடியே மேவியதான் மன்றல்
வதுவைநல மேவிய தம்மா....128

மாதரசி வெங்கான் வரும்பொழுதும் வல்லரக்கர்
நாத னுருமாறி நணும்பொழுதும் - பேதமுற
வாமந் துடித்திலவால் மங்கையிது சொற்றிடெனக்
கோமடந்தை சொற்றாள் குழைந்து....129

கற்புடைய பொன்னே கலக்கமெவ னிப்பொழுதே
நிற்கியையுஞ் சோபனநீ நின்றிரங்கேல் - விற்பிடித்த
மாமேகந் தன்னை மருவுவைநீ யென்றுரைத்தாள்
தூமேவு நல்லா டுணிந்து....130

மற்று முரைத்தாள் மணிமிதிலை நாடிமணிப்
பொற்றநிற வள்ளைப் புழைச்செவிவா - யுற்றிநகர்
தும்பியிசை பாடுவதாற் றோகைவருந் தூதுரைப்பா
னம்பனிவ ணேவ நனி....131

செந்துகில னெண்ணெய்ச் சிரமுடையான் பேயொடுநாய்
உந்தியதேர் மீதி லுறைந்தானாய் - தந்திரமுஞ்
சுற்று முமற்றுந்தற் சூழத் தெனாதுதிசை
யுற்றடைந்தான் கண்டாய் உவந்து....132

சிங்கார நந்தனமுஞ் சீர்மைகெட வேர்பறிந்த
மங்காய் பிடிகண் மதம்பொழிந்த - கொங்கார்த்த
கற்பகமும் புன்புலாற் கானங் கமழ்ந்தனகாண்
அற்பொழுதில் விற்பொலிய வாங்கு....133

மற்றுங்கே ளம்மா மயன்மகடன் பூங்குழலின்
கற்றை யவிழ்ந்து கழன்றனகார் - மங்கைநல்லார்
மங்கலநாண் மற்றொருவர் வாங்கிடா திற்றனவிப்
பங்கமிது வென்னோநீ பார்....134

இன்னுங் கேளம்மா வெழிலே றிரண்டுடனே
துன்னு முழுவைத் தொகைவளைந்து - மன்னியபூ
மாவனத்திற் சென்றுயிர்கண் மாய்த்தகல வோர்மயிலுங்
காவொழிந்த துள்ளங் களித்து....135

பல்விளக்கஞ் சூழப் படர்விளக்கொன் றேந்தியங்கை
அல்விளக்க மெய்த வரவிந்தை - வல்லரக்கர்
மன்றாம மாட மனையிருந்து வந்துறைந்தா
ளென்றாதை யில்லி னிடம்....136

இக்கனவு காணு மிடையெழுப்பி யென்னைநீ
புக்குணரச் செய்தாய் புனமயிலே - யக்கனவு
நின்ற தெனவுரைப்ப நேரிழையு நீதியினாய்
நன்றெனவே சொற்றா ணயந்து....137

ஆய பொழுதி லரக்கியர்க ளாற்றலுளார்
தீயனையர் வஞ்சனையிற் தேர்ந்துளார் - பேயனையர்
நாய்முகத்தர் நட்பி னரிமுகத்தர் ஞானமிலார்
ஆயிரத்தின் மேலார்க ளாங்கு....138

வாய்வயிற்றி னுள்ளார் மழுவெழுவாள் சூலத்தார்
தீய விழிமுன்பின் திகழ்ந்துளார் - மேயதுயில்
விட்டுணர்ந்தார் சூழ்ந்தார் விரைநாண் மரைமலரின்
மட்டவிழ்பூந் தேனை வளைந்து....139

அப்பொழுதிற் கண்டா னனுமான் அலைகடல்வாய்
நற்பவளக் கொம்பை நலனீங்காக் - கற்புடைய
மாமணியைத் தூண்டா மணிவிளக்கை வள்ளல்புயங்
காமுறுபூந் தேனையிரு கண்....140

என்றா யிருந்தா ளெனைத்துயிரு மெவ்வுயிருங்
குன்றா நலனடையுங் கோளாக - வின்றே
குலமு நலமுங் குடியுங் குறித்த
வலமுமெனக் கென்றான் மகிழ்ந்து....141

இலக்கணமுஞ் சீரு மெழிலு மியல்புஞ்
சொலத்தகுந்த மற்றைத் துறையுஞ் - சிலைப்புயத்தான்
எம்பிரான் சொற்ற எமதனையே யென்றறிந்தான்
வம்புலாந் தார்க்கான் மகன்....142

மாசுண்ட பொன்னின் வயங்குவாள் வாண்முகமத்
தேசிழந்த திங்களெனத் தேம்புவாள் - பேசரிய
கற்பணியைப் பூண்டாள் கருதுங்காற் கண்டதுண்டோ
வற்பணியார் மெய்மைக் கழிவு....143

யான்செய்த மாதவமோ வன்றே லருளுடையான்
தான்செய்த வாடாத் தனித்தவமோ - வான்செய்த
நல்லுலகு செய்தவமோ நாகாப திர்தவமோ
சொல்லரிய தென்றான் துதித்து....144

மாதவர்க்குங் கற்பகக்கா வானவர்க்கு மற்றுயர்ந்த
வேதியர்க்கு நன்மை விளைக்குமாற் - பாதகனார்
வெங்கட் சிறையகத்தின் மேவி யெனைப்புரந்த
நங்கையிவ ணோற்ற நலம்....145

என்றிவை யெண்ணி யிரும்பொழில் வாயுற்றுழியப்
புன்றிறலான் வந்தான் பொருப்பெனவே - வென்றித்
திசையானை வென்ற செருக்கிலக நின்ற
விசையா ளிருந்த விடம்....146

கத்து திரைக்கடலிற் காயுங் கதிரவனிற்
பத்து முடியும் பளபளென - மத்து
மலையன்ன திண்டோண் மலையிலகு வாகு
வலையங்கள் காசின் மலிந்து....147

ஒள்ளுடைவாள் தாங்க வுருப்பசிவான் மேனகையாள்
வெள்ளடைக ளீய விளக்கனையார் - கள்ளொழுகும்
பாடல்கனியப் பதத் தாட னநடனத்
தாடல் புரிய வறிந்து....148

கன்னங் கரிய கருமுகிலின் மின்னலென
முன்னூல் திகழ முழுமணியான் - மன்னியபூ
ணாரகே யூர மழகெரிப்ப வாதித்தன்
சீருதையஞ் செய்த தென....149

மன்னீல மால்வரையின் மன்னும்வெயி லென்னமணிப்
பொன்னாடைச் சோதி பொலியவே - தென்னாரு
மந்தரத்தின் வீழருவிமான மணியுந் தரியங்
கந்தர நின்றாரக் கலந்து....150

சந்திரனை யொத்த தனிவெண் குடைநிழற்ற
பந்துரஞ்சேர் வெண்கவரி பாடசைய - வெந்தறுகட்
பேராக்க மாதர் பெரும்படைக ளேந்திவரக்
காருருக் கொண்டென்னக் கனன்று....151

இந்திரனு மேனையிமை யவருமெவ் வுலகுந்
தந்தமுள மாழ்கிச் சலிப்படையச் - சந்தனத்தின்
கந்தங் கமழக் கயிலைப் பொருப்பிடந்தோன்
வந்தடைந்தா னெம்மோய் வயின்....152

இனையானைக் கண்டானி வன்செயலு மற்ற
வினையாவுந் தோன்றுமென மேவி - நினையாவெங்
கோமகனை யேந்தியுளங் கொண்டிருந்தா னோர்தருவின்
மாமருவும் வாயு மகன்....153

மங்கையரு மாடவரு மற்றகல வல்லரக்கன்
நங்கை யிருந்துழியி னண்ணினான் - சிங்கமெதிர்
கண்டகுலப் பிடியிற் காரிகை முள்ளுலைந்தாள்
கெண்டைவிழி சோரக் கிளர்ந்து....154

வல்லுழுவை கண்டவிள மான்பிணை போலுள்ளமயர்ந்
தல்லலுறுஞ் செவ்விய முதினை - மெல்லையிலாக்
காத லுடனெதிர்வன் கண்ணனையுங் கண்டுளைந்தான்
ஓதவரி தாவியருள் வோன்....155

மறைவாழி யையன் வலம்வாழி மேலோர்
துறைவாழி மாதர் துகடீர் - நிறைவாழி
சானகியும் வாழியெனச் சாற்றினான் றாவரிய
ஞான குணாகரனா னான்....156

அப்பொழுது வல்லரக்க னாய்தொடியு னின்பமெனக்
கெப்பொழுது நல்கி யிரங்குவீர் - அப்புமலர்
ஐங்கணையாற் பங்கமுற வாற்றுவனோ வென்றிசைப்பான்
நங்கைதனை நோக்கி நயந்து....157

தேனாருங் கஞ்சத் திருவே செகம்புரக்குங்
கோனகி யுள்ள குலத்தேவர் - நாணாளும்
வந்து வணங்க வளையா வரசமைவேன்
நொந்தயர்த னன்றோ நுவல்....158

அழகுங் குணமு மழியா நலமும்
பழக வினிமைதரு பண்புங் - கழியாத்
தெருளுணர்வும் பெற்றனைநின் சிற்றிடையிற் பொன்னே
யருளொழிந்த தென்னோ வறை....159

இந்திரன்றன் வாளு மிமையோ ரடற்படையும்
உந்தரிய நேமி யொடுமழுவு - மந்தகையிர்
திக்கசங்கள் வென்ற திறன்மருமத் துற்றிடுமோ
வுக்குறுவ தல்லா லொடிந்து....160

பூவுலகுந் தேவருறை பொன்னுலகு மற்றுமுள
கோவுலகு நின்பணிமை கொண்டேத்த - மாவனையீர்
எல்லையிலாச் செல்வத் திருந்த லிகழ்தியோ
புல்லறிவா லந்தோ புலர்ந்து....161

ஊனுடலைப் பேணி யுயிர்சுமந்த வாட்கையுடை
மானிடரை யோர்பொருளாய் வைக்கிலே - னானதுநீ
கண்டிருந்து மென்னோ வீண்காலங் கழிக்கின்றாய்
வண்டிருந்த கூந்தான் மருண்டு....162

அணியிழாய் காத லடங்காத தாக
பிணியகல வாழ்வியெ னப்பேணி - மணிவாண்
முடிகீ ழுறவே முழுமா மலைபோல்
அடிமேல் விழுந்தா னயர்ந்து....163

விடம்போலுஞ் சொற்செவிவாய் மேவுதலும் வெம்பி
யிடம்பேரா மின்போ லிருந்தாள் - திடம்பேராச்
சிந்தையொடு நோக்கித் திரணம்போற் செப்பினாள்
வெந்தழல்போல் வானை வெறுத்து....164

ஏடா நிருதற் கிறையே யிரக்கமிலா
மாடே யறிவிலாவன் பேயே - நாடாமல்
என்சொன்னாய் வாழ்நாட் கிறுதியேன் செய்வாய்வான்
மின்செய்த தென்ன விரைந்து....165

ஆழி மழைக்கண்ண னருத னாடவர்கோன்
பாழியந்தோள் வீரன் படுசரத்தா - லேழைமதி
நின்முடிகள் பத்துநிலன் வீழுந் திண்ணமீது
கன்மனத்தா யெனழிவாய் காண்....166

மாயமா னேவி மதியிலாய் வண்மையிலாய்
நாயுருவங் கொண்டு நனிகவர்ந்தாய் - தூய்மையிலாய்
இத்தொழினிற் கேற்ற விணையிலா வீரமோ
மத்தரெவ ருன்போல் வரை....167

அறிவிலாச் சிந்தை யனுலோம னாவாய்
நிறனறிவான் சேயிளையோ னிற்கப் - பறைதருநின்
வில்லாண்மை காட்டாய் மெலிவுற்றா யஞ்சினைநீ
புல்லாண்மை யேனோ புகல்....168

மற்றொருவர் தாரமதை வவ்வுதலு மாயத்தாற்
கொற்ற மேயாமே குறையாம - லற்ற
மராமரமே யென்ன வணங்குதலு மங்கா
வுராவுவலி யாமே யுனக்கு....169

பத்திரண்டு திண்டோட் பழுவ முறப்பிணித்து
முற்றுசிறை வைத்த முரண்வேந்தைச் - செற்ற
பரசுடையா னாற்றல் படும்பரிசு கண்டாய்
உரைசெயவும் வல்லா யுனை....170

என்சொல்லா னின்னை யெரியெழவே செய்வலது
மின்செய்த மேகமெனும் வேந்தர்கோன் - பொன்செய்த
கார்முகத்துக் கோரிழிவு காணு மெனவிருந்தேன்
ஏர்முகத்தி லில்லா யிவண்....171

பொன்னுலக மாளும் புரவலரும் பூவுலக
மன்னவரும் பெண்பழியான் மாய்வுற்றா - ரின்னரெனச்
சொற்றொருக்க வற்றோ துறையறிந்து தோற்றமறக்
கற்றறிந்த நீசா கணித்து....172

செந்தா மரையருட்கட் சேவகனார் பேரெழிற்க
ணந்தா தருந்தெ னயனவளி - வெந்தாறுங்
கொள்ளி யனைய குலப்பதரே கோளுறுமோ
தள்ளிலுப்பை நுண்மதுவைத் தான்....173

காமனுக்குத் தாதை கடவுளர்க்கு நாயகனிப்
பூமனர்க்கு வேந்தன் புகழ்ச்சிலையான் - தாமரைக்கண்
அஞ்சனப்பொன் மேனி யழகனைக்கண் டாயெனிலென்
மஞ்சறியா பெண்ணாய் மனத்து....174

அந்தோ கெடுவாய் அரசு மருங்குலமுங்
கொந்தார் நினது குலமுடியுஞ் - சிந்தா
முடிதியோ தீயோய் முதலோடு மண்மேற்
படுதியோ வுள்ளம் பரிந்து....175

அவ்வுரையைக் கேட்டான் அனலொழுகுங் கண்ணினனாய்
கவ்வையுறு துன்பக் கடலாடி - மவ்வலந்தார்க்
காமனையு மீறுங் கதமூளக் காதலெழச்
சேமமற நின்றான் றிகைத்து....176

மான்விழியாய் நீயியம்பு மானிடரை வாட்கிரையாய்த்
தான்புரிவ லேழத் தனமுடையாய் - மீனமெனுங்
கண்கலுழி பாயக் கலங்குவைநீ யென்றொழிந்தேன்
பெண்கனிகா ணென்றான் பெயர்ந்து....177

கொல்லுவா னுன்னைக் குறித்தேன் குறித்தமுறை
நல்லதல வென்றுளத்து நாடினேன் - எல்லைநிகர்
வாளுருவல் பெண்மிசையோ வன்பழியா மென்றறிந்தேன்
வேளுதவ வென்றான் விதிர்ந்து....178

அரக்கியரை நோக்கி யமைவனநீ ராய்ந்து
விரைக்குழலைத் தேற்றுமென விண்டான் - கருத்துறவே
றெண்ணினான் சென்றா னிவையனைத்து மாருதியுங்
கண்ணினான் பார்த்தான் கனன்று....179

எற்றுமின் கையா லெறிமின் கறங்கெனவே
சுற்றுமின் பற்றி துணித்திரண்டாய் - வெற்றுடலைத்
தின்னுமி னென்பார் தெளிப்பார் திரப்படைகள்
மின்னுறழ வோச்சி வெகுண்டு....180

பேதைநீ யென்னோ பிழைத்தாய் பிழைப்பில்லா
வேத முணர்ந்த விழுத்தவத்தோன் - சாதியினின்
மிக்குயர்ந்தோன் றன்மேல் வெறுப்ப தெவன்வேண்டாம
லிக்கணமே கொல்வா மினி....181

மண்ணிற் சிறந்த மடவாரும் வானவர்தங்
கண்ணிற் சிறந்தவெழிற் கன்னியரு - மண்ணலருள்
தாமுறுமோ வென்று தயங்குவரேற் றார்குழலாய்
நீமதியா தென்னோ நினைந்து....182

என்றியம்ப ஒன்று மியம்பா திருந்தனளக்
குன்றனைய கொங்கைக் குலமடமா - னன்றிதுவே
காலமென விஞ்சை கருதினான் காற்றுதவும்
ஆலகண்ட னொப்பா னறிந்து....183

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.4. உருக் காட்டு படலம்

அக்கா லரக்கியர்கள் யாரு மயர்ச்சியகம்
புக்கார் துயிற்சி பொருந்தினார் - மைக்கோலத்து
அம்பர் விழியாளு மறிந்தா ளயர்வுற்றாள்
கொம்பர்போ லுள்ளங் குழைந்து....184

மாதம் பத்தாயும் வரவறியேன் மன்னவனை
யேதம்பத் தாயிரங்க ளெய்துவேன் - சீதை
யெனப்பிறந்தே னென்னி லிலங்கிழை யருண்டோ
மனத்திடையே நோக்கின் மதித்து....185

ஆரமுதே தேனே யருமைத் திரவியமே
கார்முகிலே தாமரைக்கட் காகுத்தா - நேர்மையிலா
வன்சிறையி லெத்தனைநாள் வைகுவேன் வந்தருள்வாய்
பொன்செய்த தோளுடையாய் போந்து....186

தென்றலவே வெண்ணிலவே சீகரத்தெண் கார்க்கடலே
யன்றிலே யல்லா யடுவிடமே - வென்றிச்
சிலையானைச் சேவகனைத் தேர்கிலிரோ சேர
வுலைவேனைக் காண வுவந்து....187

கண்ணனே காயா கடன்மேக நீலமணி
வண்ணனே யெங்கண் மணிவிளக்கே - யெண்ணமெல்லாம்
போக்கினையோ வுள்ளம் புழுங்கினையோ பொய்யுறவிங்
காக்கினையோ வென்பா ளயர்ந்து....188

மாயத் தரக்கன் மனையுளா ளென்றதற்பின்
தேயத்தார் பாடவத்தைச் சிந்தித்தே - வேயுந்
திறலுடையா னெண்ணந் திரிந்ததோ வென்பாள்
அறமெலிந்தா ளந்தோ வயிர்த்து....189

எக்கா லரக்கனிருஞ் சிறையில் வைகினன்யான்
அக்கா லுயிர்துறவா தல்லலுடன் - இக்காலுந்
தாழ்ந்தே னெனைப்போலச் சாற்றுங்காற் றாரணிமேல்
வாழ்ந்தா ரெவரே மருண்டு....190

மாயமான் பின்னெனது மாமணியைப் போக்கியரு
காய விளையோ னகன்றேகத் - தீயவுரை
செய்தேன் பழியவரைச் சேருமோ வென்றுரைப்பாள்
நெய்தாவும் வேல்விழியா ணெக்கு....191

என்றினைந்து பின்னு மிவையுணர்ந்தா ளிப்பொழுதே
பொன்றல்நல மென்னப் பொழிலிடத்து - மன்றன்மலர்
மாதவிவாய்ப் பந்தர் மருவினாண் மாருதியும்
மீதமைய மென்பா னிருந்து....192

அன்னாய் வருந்த லடியே னபிராமன்
தன்னாணைத் தூதன் றளரலினி - யென்னா
அடிமேற் றொழுதா னனைத்துலகும் போற்றுங்
கொடிநே ரிடைமுன் குழைந்து....193

எண்டிசையு நாடி யெழிலார் மயிலணங்கை
கண்டடைதி யென்னக் கடிதேவ - வொண்டொடியே
வந்தனன்கா ணென்றான் மகமுனிவர் வானோர்கள்
தந்தவத்தா லுற்றான் தகைந்து....194

மாற்றாரே யாக மறைந்து புறங்கவர்தற்
கேற்றாரே யாக விறுதியிடைத் - தோற்றா
மருந்தன்ன நாமம் வழங்கினா னன்றோ
பெருந்துணையா யம்மா பெயர்ந்து....195

அரக்கருரை யல்லன் அறமுடையான் மெய்மைக்
குரக்குருவு கொண்ட குணத்தான் - இரக்கமுளா
னென்றுருகி யைய யிவணெய்தியநீ யாரையென்றாள்
மன்றலர்ந்தார்ப் பொன்றளிர்க்கை மான்....196

அன்னா யுனைப்பிரிந்த வண்ண லபிராமன்
பன்னாக வேந்தன் படர்வலிசான் - மின்னார்
மணிமுடியான் சுக்கிரிவ மன்னவனை நட்டான்
அணிமுடியுங் கோலு மளித்து....197

அன்னவன்றன் முன்னோ னடல்வாலி யென்றுறைவோன்
மன்னிலங்கை யாதிபனை வால்விசியால் - பொன்னுலகு
மெவ்வுலகுங் காண விருஞ்சிறையின் முன்வைத்தான்
தெவ்வர்நகை செய்யச் செறுத்து....198

அத்திறலான் தன்னை யருளாள னம்பொன்றால்
இத்தலை யினின்றுவா னேற்றியே - முத்தனைய
நன்னகையீர் முன்ன நவின்றவா றேயரசு
மன்னவருள் செய்தான் மகிழ்ந்து....199

அவ்வரசன் றன்னமைச்சன் யானடியே னாகப்பேர்
வெவ்வரசன் மைந்தன் விழுத்தவத்தோய் - செவ்வித்
திருநாதன் வேறிருந்து செப்புரையாற் றென்பால்
வருவேன் பெயருமனு மான்....200

மற்றைத் திசையடவே வானரங்க ளென்போல்வார்
பற்றித் தொடர்ந்தார் பனிமொழியா - யுற்ற
செயலீ தெனமொழிந்தான் றெண்டிரைநீ ராழிக்
கயநீர் கடந்தான் களித்து....201

அம்மொழிகள் யாவு மறிந்தா ளமுதனையா
ளெம்மையா ளைய னெழின்மேனி - செம்மையுற
தேர்ந்தனையேற் செப்புகெனச் செப்பினான் எக்கலையும்
ஆய்ந்த வுளத்தா னறிந்து....202

இளங்கதிரை யொக்கு மிணையடிகட் கம்மா
தளங்கெழுமு தாமரையுஞ் சாற்றில் - வளங்கெழுமு
நற்பவளக் கொம்பு நலம்புரையா தென்னிலெவை
யொப்புளதா மென்பே னுணர்ந்து....203

கற்பகத்தின் றண்முகிலுக் காமர்பெறச் செந்நிறஞ்சேர்
நற்பவளக் கொம்பு நலஞ்சிறந்த - பொற்பின்
விரற்குவமை யாமேல் வெயிலவனுக் கம்மா
பரற்றுணைதா னென்பார் பரிந்து....204

மகத்தவர்கள் போற்றும் வயிர மணியை
நகக்குவமை கூறி னகையே - மிகைப்படவே
னற்கணைக் காவ நவிலுங்கா னண்ணுமென்பார்
பொற்கணைக்காற் காகும் பொருள்....205

வண்டலம்பும் பூந்துழாய் மாதவன் றனூர்தியெனு
மெண்டவஞ்சேர் புள்ளி னெருத்தினமைந் - ஓடகையார்
வண்ணத் திசையின் மதமாக் கரிநாணுந்
தண்ணென் துடைக டமக்கு....206

மன்நந் தினமார் வரமா னதிச்சுழியு
பொன்னுந்தி யென்னும் பொலிவெய்தா - மின்னுமணித்
தோட்குவமை கூறியவத் தூங்கனிறத் தொண்கரமுங்
கோட்படா தாமோ குணத்து....207

அழகொழுகுஞ் செய்ய வபிராம னாகம்
அழலொழுகு மம்புயத்தி னான்ற - குழலினிய
நல்லுரையா ளென்று நலனமைய வாழுவனேற்
சொல்லுந் தரமோ துதித்து....208

திரண்டழகு வாழ்ந்து திருவுறைந்து பொன்னின்
உருண்ட குலச்சிகர மொத்துத் - தெருண்டவிழிக்
காரிகையர் நோக்கங் கவர்ந்துயரும் பொற்புயங்கட்
காருவமை சொல்வா ரறிந்து....209

ஏழுலகுங் காப்பா னிவண்வந் துறையனையே
ஆழியான் செங்கை யவிர்சங்கம் - வாழியநின்
கந்தரத்துக் கேயுவமை காட்டினாற் காகுத்தன்
கந்தரத்துக் கேதுவமை காண்....210

மான்மறுவு மின்றி வளர்கலையார்ந் தோர்மதியம்
வாமருவு மேனு மலர்மாதே - கான்மருவும்
பூந்துழாய் மாலைப் புரவலன்றன் வாண்முகத்துக்கு
ஆந்தகைமை யாமோ வறி....211

மேன்மையிலா வித்துருமம் வேசியத்தார்ச் சேவகன்வாய்க்
கென்மதிகொண் டாய்த்துரைப்ப ரீடெனவே - நன்மருவாய்
செந்தா மரையைத் தெரிக்குமேற் சேண்மதியால்
நந்தா துறுமே நனி....212

சம்பகமோ தாமரையிற் சார்ந்துறைந்த கோபமதைப்
பண்புறவே பற்றப் படரோதி - வண்பரிசோ
வென்னும் மூக்குக் கிணையியம்பு மாறுளதோ
அன்னையே தேற லரிது....213

தேனாருங் கஞ்சத் திருவே சிவன்முதலாம்
வானோர்க் கருண்மா மழைபொழியுங் - கானார்
துளவணியான் கண்ணின் றுணையுலகி னம்மா
வுளதெனலெவ் வாறோ வுரை....214

இருநாளிற் றோன்றி யிறைமறுவு மெய்தா
தொருநாளு மல்கா துயரா - துருவார்ந்த
பொற்றநிறத் தோர்பிறைதான் போதருமேற் பூமகனார்
நெற்றி நிகராகு நேர்....215

அண்டமுண்ட வாயா னரவிந்தக் கையுறுங்கோ
தண்டமென மற்றொருவில் சாருமேல் - ஒண்டொடியே
கண்ணிணைகட் கேற்ற கவின்சேர் புருவநிக
ரெண்ணலா நேராக வே....216

நெய்த்துக் குழன்று நெறிந்து கலைசுருண்டு
மைத்துச் செறிந்து மணம்புரிந்து - சுத்தமுற
நீண்டு கனிந்து நிறஞ்சேர் தலைக்குவமை
யாண்டுரைக்க லாகு மறிந்து....217

அன்ன மொழிகேட் டயர்வு மகத்தடங்கா
இன்னுவகைப் பண்பு மியவாளை - நன்னுதான்
மன்ன னுரைத்த வகைக்குறியு முண்டெனவே
சொன்னவில லுற்றான் றொழுது....218

மானகரில் வைகுதிநீ வாரலரி தாகுமென
மீனவிழி சேப்ப வெகுளியொடுந் - தானயலே
முந்தியதுங் காண மொழிமோ வெனவுரைத்து
வந்ததுவுஞ் சொல்வாய் வகுத்து....219

கானிடையி னுய்ப்பான் கனகமணித் தேர்கடவு
நூனவிலு மேதை முகநோக்கித் - தேனுரையாற்
பூவையொடு கிள்ளைநலம் போற்றுகநீ யென்றுரைத்தான்
மேவுறநீ சொல்வாய் விரித்து....220

என்றமையச் சொல்லி யெடுத்தா னிருள்கீறி
குன்றுதையஞ் செய்த குலக்கதிரி - னொன்றும்
மணியாழி நீட்டினான் வாணுதலி கண்டாள்
பிணியாழி நீந்தப் பெயர்ந்து....221

பிழைத்தபொருள் கண்ட பெரும்பேறு கொல்லோ
அழைத்தவமு தெய்தியநே ராகித் - தழைத்தெழுந்த
ஆவியுடனீங்கி யடைந்த வடைவுகொலோ
பூவைவிழி கண்ட பொருள்....222

ஆழமறியா வலைகடலில் வீழ்ந் துடல்கால்
ஊழி வலத்தா லொருவங்கம் - ஏழையெதிர்
புக்கெதிர்ந்தா லுற்ற பொலிவாங் கடைந்தனளுண்
மிக்குவகை கொண்டமட மின்....223

வாங்கினாண் மென்முலைமேல் வைத்தாண் மனத்துவகை
யோங்கினாள் கண்முத்து திர்த்துயிர்த்தாள் - வீங்கினாள்
வேர்த்தாண் மயிர்ப்புகை மேவினாள் வேல்விழியாற்
பார்த்தாள் பதைத்தாள் பரிந்து....224

கண்ணிழந்தார் கண்பெற்ற காட்சியினுங் காதலுறும்
விண்ணிழந்தார் விண்பெற்ற மேன்மையினும் - எண்ணிழந்தார்
எண்பெற்ற தன்மையினு மெய்தரிய நல்லுவகைப்
பண்பெற்றா ளுள்ளம் பரிந்து....225

இத்தகையளான விணைக்கயற்கட் பூங்கொடி நேர்
முத்தநகை மடமான் முன்னின்ற - வித்தகனை
யென்னுயிரும் வாழ்வு மிகபரமு மீய்ந்தனையென்று
உன்னியிவை சொற்றா ளுவந்து....226

எங்கோ மகனுக் கிருந்தூது வந்தெனது
பங்கமெலாம் நீத்துயிரும் பாலித்தாய் - இங்குனக்குச்
செய்யுங்கைம் மாறுளதோ தெய்வமுநீ செல்வமுநீ
அய்யனுநீ யன்னையுநீ யால்....227

எக்கடலு மெக்கிரியு மெவ்வுலகு மெப்பொருளு
மெக்குலமு மொக்க விறந்தாலும் - மிக்கறிவோ
யின்றெனவே யென்று மிறவா திருத்தியென்றாண்
மன்றற் குழற்கயற்கண் மான்....228

யாண்டை யிராம னிருந்தா னிளவலொடும்
யாண்டை நினையெதிர்ந்த தின்பமுற - ஈண்டறியச்
சொற்றிடுக வென்றுரைப்பச் சொற்றான் றுளக்கமற
முற்றுமுத லீறாய் மொழிந்து....229

அவ்வுரையா லய்ய னயர்வு மடைந்ததுவுஞ்
செவ்வியுறத் தேர்ந்தா டெருமந்தாள் - கவ்வையற
வுள்ளங் களித்தா ளுவரிதா யுற்றபடி
வள்ளல்மொழி யென்றாள் மகிழ்ந்து....230

நின்னருளுண் டாமே னெடுவறுமைல் கார்க்ககடறாய்
நன்னருறு மாறே நனியடியேன் - மன்னவனார்
ஆணையொடு மாழி யகன்றடைந்தே னன்னையென்றான்
மாணரியே றன்னவனு மான்....231

இத்தகைய மேனியொடு மெவ்வா றிருங்கடறாய்
அத்தவிவ ணுற்றனைநி னாற்றலோ - மெய்த்தவமோ
வேறெதுவோ மாயத்தின் விஞ்சையோ வென்றுரைத்தாள்
ஊறுவகை யுற்றா ளுளத்து....232

என்றலுமே விண்ணி னெழுந்தா னிருங்கனகக்
குன்றெனவே பன்மணியார் குண்டலங்கள் - நின்னொளிறத்
தாரா பதங்கடந்து சார்ந்தான்விண் டாவரிய
போரேறு வீரன் பொலிந்து....233

கண்ணிணைசான் றாகக் களித்தாள் கடல்ஞாலம்
வண்ணக் குறளுறுவாய் மாயவனார் - மண்ணளந்த
காட்சியதோ வென்னக் கருதினாள் கங்கையென
மாட்சிமைசால் செங்கயற்கண் மான்....234

அஞ்சினே னய்ய வடங்குவா யென்றுரைப்பக்
கஞ்ச முகமலர்ந்த காட்சியான் - வஞ்சிமலர்ப்
பாதார விந்தம் பணிந்தான் பழவுருக்கொண்
டாதார மாவா னமைந்து....235

வெற்றியாய் நின்பெருமை விண்ணவரும் மேவுவரோ
முற்றுணர லாகுமொழி யுளதோ - எற்றுதிரை
யிக்கடலொன் றோமற் றெழுகடலுந் தாவும்வலிக்
கொற்றவனீ யென்றாள் குறித்து....236

வெவ்வரக்கர் வெஞ்சிறையில் மீண்டேன் விளிவுறேன்
எவ்வமினி யுண்டோ வெனக்கையா - செவ்விபெறு
நாயகனை யுற்ற நலனடைந்தே னென்றுரைத்தாள்
வேயமைதோட் சேயரிக்கண் மின்....237

அன்னையே யென்னினுமிக் காற்றலுளார் வானரத்தின்
மன்னர்தமை யெண்ணில் வரம்புளரோ - அன்னவர்கள்
ஏவக் கடவ வியற்றுவோ னென்றுரைத்தான்
கோவுற்ற தோளான் குறித்து....238

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.5. சூடாமணிப் படலம்

நஞ்சனையான் மாநகர்வாய் நாணாளும் நங்கையிவள்
எஞ்சலுற நோக்கி இரக்கமுறா - நெஞ்சிடையோர்
நல்லுணர்வு தோன்ற நவின்றான் நளினமலர்
வல்லிமுக நோக்கிஅனு மான்....239

இனியொற்க மெண்ணா யிசைத்திடுதல் கேட்டி
முனியற்க வென்று மொழிந்தான் - தனியுற்ற
நுண்ணிடைநிற் கொண்டு நொடிப்பொழுதில் நாயகன்பால்
நண்ணுவன்யான் என்றான் நயந்து....240

கொந்தளப்பொற் கோலக் குயிலேஎன் கோலமுறு
மந்தரப்போற் றோளிடைநீ வைகவே - வந்தெதிர்த்த
பாதகரை வீட்டிப் படர்வேன் பருவரலால்
நீதளர லென்றான் நினைந்து....241

இன்நகரை யங்கையிடத் தேகெனினும் ஆரணங்கே
சொன்னபடி ஆற்றும் துணிவுடையேன் - மின்னனையாய்
ஏறுகடி தென்ன இருதாள் மலர்பணிய
கூறும் எதிர்மொழியக் கொம்பு....242

கற்றனைநீ எல்லாக் கலையு மதற்குரிய
முற்றுணர்வுக் கேற்ற முறைஎன்றான் - நற்றவஞ்சேர்
ஆண்டவனை அன்றி யயலொருவ ரங்கமொன்றும்
தீண்டுறுதல் ஒண்ணாது தேர்....243

அன்றியும் மையன் அடற்சிலைக்கோ ரீனமுண்டாம்
என்றறிதி யாழி எழில்இலங்கைக் - குன்றொருங்கச்
சுட்டிடுவ லந்தோவோர் சொல்லாற் றுகளாகக்
கட்டவிழுந் தாராயிக் கால்....244

அரசுவெறுத்து அந்தணரை ஆதரிப்பான் கானம்
விரசு தவம்புரியும் மேலோன் - கரிசர்குலக்
கட்டறுத்து மீட்கிலனேல் கற்பொழுக்கங் காசினியில்
விட்டுணர்த்தி மாள்வேன் வெறுத்து....245

தீண்டுறுதல் அஞ்சிச் செனிபத் துடையோர்நாய்
கீண்டுபுவி யோடு கிளர்ந்ததுவும் - ஆண்டகைநீ
புக்குணர்ந்தாய் அன்றோ புலனில்லாப் பொன்மொழிய
ரக்கரில்நீ சொற்றாய் அறிந்து....246

கார்நிறத்துக் கொண்டல் கணையாலப் பாதகன்தன்
போர்முகத்துப் புன்தலையைப் போக்குறுநாள் - தார்நிறத்து
நற்சிகரக் குன்றனையாய் நாயுண் பொழுதல்லால்
இச்சிறையி னீங்கேன் இனி....247

ஈதுமுடி வாகும் இனிஎம் பொருபான்பால்
போதல்புரி யென்னப் புகலுங்கால் - ஏதமிலாய்
ஐயன்பாற் சென்றால் அறைவதெவன் யானென்ன
துய்யவிடை சொல்வாள் தொகுத்து....248

பின்னுரைத்த மாற்றம் பெயர்வா யுரைத்தியால்
இன்னமொரு திங்கள் இருப்பல்யான் - மன்னவனும்
வாரா தொழிவனேல் மண்ணரிய வானுலகஞ்
சேரா தொழியேன் தெரி....249

தமிவனத்தில் ஈன்ற விளந்தன்னங் கற்றாவின்
அமைவதனத் தான்ற குறியாற்றன் - கமையுறுசு
தந்திரமற் றாங்கு தமியேன் இருந்துபரிசு
அந்தரநீ சொற்றிடுக ஆங்கு....250

கண்ணகன்ற வாவி கயலுகளும் மாநகர்வாய்
நண்ணும் பொழுதெனது நாயகன்பால் - தண்ணெனுநீள்
கங்கையிடை யெற்குக் கடன்கழிக்கச் செய்குவாய்
அங்கையால் அய்யா அடைந்து....251

மஞ்சார்ந்த மாட நகரவாய் வந்தடைந்தால்
எஞ்சா வலிசேர் இறையோனைத் - துஞ்சாத
கண்ணாற்கு உரைத்தி கனக முடிபுனைய
மண்ணாளு மாறு மகிழ்ந்து....252

மன்னு மிதிலை மணிநகர்வாய் மன்னர்பிரான்
தன்னனைய செங்கைத் தனிமலர்கொண் - டென்னிருகை
தொட்டநா ளெண்ணினுமோர் தோகையரை யெண்ணேனென்று
இட்டவரம் சொல்வாய் எடுத்து....253

இத்தகைய மாற்றம் இசைத்தியெனச் சொற்றருளும்
புத்தமுதம் ஒத்தமலர்ப் பூங்கொடியைச் - சித்தம்
வருந்தே லெனமொழிந்தான் வாரிதிநீர் தாவி
மருந்தேபோல் வந்தான் மதித்து....254

என்றும் இறவா யிறப்பதுவும் எம்இறையோன்
சென்றுமுடி சூடித் திகழ்வதுவும் - நன்றறியா
வல்லரக்கன் மாளான் வலிகொண்டு வாழ்வதுவும்
சொல்லிலிது மெய்யாம் அந்தோ....255

வஞ்சன் சிறைமீட்ட வல்லானும் அல்லானாய்
வெஞ்சிலை கைக்கொண்டு விபுதேசர் - எஞ்சும்
குறைமுடியான் மீளும் குணமுடையா னாமே
நிறைகதிர்கா லுண்டோ நினை....256

என்போல் பலருளர்அவ் வெண்ணுடையார்க் இவ்வரக்கர்
மின்போல் இடையாய் விறன்மிகுத்த - வன்போரில்
பந்தாடும் பான்மையன்றிப் பாரம்எவன் அன்னையே
அந்தோ அயரேல் அகம்....257

மின்னின் உருமின் வெயிலிற் கடுங்கணைகள்
மன்னும் பொழுது வலியரக்கர் - சின்னமுறும்
வன்றலைகள் சிந்தி மறிகடலில் வீழுவன
அன்றில் அனையா அறி....258

காகமும் பேயும் கழுதும் கவந்தமும்பல்
யூக முடற்று முடற்செருவின் - மாகமுடி
வஞ்சகர்த மூன்றெவிட்டு மாறுண் டுழல்வனநீ
அஞ்சொன்மயில் நோக்கிடுக ஆங்கு....259

பத்து மணிமுடியும் பத்திரண்டு திண்தோளும்
வித்தகனார் வாளி விசையினாற் - கொத்தறவே
மண்மேல் விழுந்து மறிவனவும் காண்கிற்பாய்
எண்மேல் உடையாய் இருந்து....260

நீல மலைபோல் நெடியோன் எனதுபுயக்
கோல மலைமேற் குலவவே - ஆலமன்ன
வஞ்சகர்மேல் வாளி மழைபொழியும் மாட்சிமையை
அஞ்சொன்மயில் நோக்காய் அறிந்து....261

இத்தகைய மாற்றம் இயம்புதலும் இன்னமுத
முத்தநகை மூரன் முகமுடையான் - சுத்தத்
திருவிழியால் நோக்கித் திருமால் தனக்கீது
உரையெனவே ஓதும் உணர்ந்து....262

காகத்தை நல்லருளாற் காத்ததுவும் யான்வளர்த்த
தோகைச் சுகந்தனக்குச் சோதியெழிற் - கேகயர்மான்
தன்பெயரை ஈய்ந்ததுவும் தானுரைப்பாய் தாடாளற்
கன்பொருவா முன்பா அடைந்து....263

என்றினைய பன்னி எடுத்தாள் இருள்கீறி
துன்றிரவி யன்னவெழிற் சோதியறா - தொன்றுமணித்
தூசிற் பொலிந்த சுடர்மணியைக் கண்மணியின்
வாசக் குழலாள் மதித்து....264

மங்காத சூடா மணிஇ•து மாதவனுக்கு
அங்காகு மாஓர் அடையாளம் - சிங்காது
கோடிநீ என்று கொடுத்தாள் குளிர்மிதிலை
நாடியாம் அன்னை நயந்து....265

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.6. பொழிலிறுத்து படலம்

சூடா மணியைத் தொழுது கரம்ஏந்தி
வாடா மலரோன் வரம்பெற்றான் - பாடார்ந்த
இப்பொழிலை வேர்பறிய ஈண்டொழிப்பன் என்றுயர்ந்தான்
எப்பொழிலுங் காப்பான் எழுந்து....266

வாளுலவும் பொற்கனகன் மார்பிடந்த மாநகர
கோளரியே என்னக் குலவுவான் - தாளிற்
துகைத்தான்விண் ணோங்கும் துடவையெலாம் மாள
அகைத்தான்வன் தாளால் அடர்ந்து....267

விரிந்தபதம் உந்துதலால் வேரோடு மற்றும்
கரிந்து பொரிந்து கனலாய் - நெரிந்து
பொடியாய்த் துகளாகப் போனதுவே பொன்னங்
கடிசேர் மலர்க்குரிய கா....268

காட்சியுறு நாமத்தாற் காசினியிற் காணவொணா
மாட்சிமைபெற் றார்தல் வழக்கன்றோ - பூட்சிமைசால்
வானரம்பை மாதர் வனப்பெயர்கொண் டார்ந்தமட
வானரம்பை உற்றனஅவ் வான்....269

எத்திறனால் வாய்ந்த திணையிமையோர் மங்கையர்தம்
மெய்த்தருண மார்ந்தமுலை விந்தையென - வத்திறனை
கண்டறிதும் என்னக் கணிப்பான் நெடுந்தாழை
விண்டடைதல் போலும் விரைந்து....270

மாற்றர் இமையோர் வலனடைது மேலரக்கர்க்கு
ஏற்றான் முனியு மெனநினைந்தோ - காற்றோன்
கடுங்கால் விசைத்தெறிந்த காமரங்க ளெல்லாம்
நடுங்கா மறிந்த நனி....271

மாகத்தா ரேகும் நெடும்மந்தாரம் வல்லிசையான்
மேகத்தோடு இம்பர் விரைந்துறுவ - நாகத்திற்
சத்தியபா மைக்காய்த் தருக்கொண்ட டைதருமால்
அத்தனே யாகும் அவை....272

நட்புற்றார்க் கோரலக்கண் நண்ணுமே னாளும்உளம்
பெட்புற்றார் ஆதரிக்கும் பெற்றிபோல் - மட்பெற்றார்
தன்னிலைமை மாய்த்தெழுதிண் டாருவொடும் புக்கனவாற்
சொன்னிலைமை மேவா சுகம்....273

மகமுறையி னோர்மனைவாய் மன்னினார் தங்கள்
அகமுறையில் உற்ற அடைவே - நகுமலர்வாய்
நந்தனத்தில் உற்ற நறுமலர்க்கா விண்அடைந்த
சுந்தரன்கை எற்றத் துனைந்து....274

தாவரிய மாருதியின் தாமரைக்கை யூறுறலால்
மேவரிய விண்ணவரின் மேவினவாற் - காவுறுதண்
பொன்னான் மணியால் பொலியும் தருவினங்கள்
மின்னால் உயர்வான் விரைந்து....275

தம்மலர்க்க ணோரார் தரியலர்க் கோரூனமுற
அம்ம மகிழுறுவ ஆதலினால் - தெம்மவர்தங்
காமரங்கள் வீழக் களித்தார் கழலிமையோர்
பூமலர்கள் வாழ்த்திப் பொழிந்து....276

ஏத்தரிய வல்லரக்கன் எய்தரிய நற்றவத்தாற்
பூத்த மதுவார் பொழிலீயான் - காத்தபொருள்
தீவினையான் மாய்ந்த செயலேபோற் றீர்ந்ததுவெம்
பாவம்வென்ற துண்டோ பகைத்து....277

ஆண்டகைதன் கைமலரால் ஆகாசஞ் சென்றனநீள்
மானடருவி னாய மதுகரங்கள் - சேண்டருவாழ்
கார்ச்சுரும்ப ரோடு கடிமணங்கொண்டு இன்மதுவுண்டு
ஆர்த்ததுசிங் காரம் அமைந்து....278

ஆய பொழுதில் அரக்கியர்கள் வாய்வெரீஇ
சேயவனை நோக்கித் திருந்திழையே - நீஇவனைத்
தேர்தியோ வெற்பிற் சிறியனோ என்றிசைத்தார்
மாருதியை நோக்கி மருண்டு....279

அன்ன பொழுதில் அனுமான் அருஞ்சமித்தந்
தன்னை எடுத்தான் தனிஇலங்கைப் - பொன்னகர்மேல்
வீசினான் வல்லிடியில் வீழ்தலுமே வல்லரக்கர்
கூசினார் உள்ளங் குழைந்து....280

ஊழி யிறுதி உருத்திரனை ஒப்புடையான்
ஆழி யனைய அரிவேந்தன் - பாழிமக
மேருபோல் நின்ற விறனோக்கி வெய்துயிர்த்தார்
நீரொழுகும் தூசார் நினைந்து....281

சென்றனர்க டேவர் திசைக்கரியின் கோடொசித்த
வென்றி யுடையான் விரைமலர்த்தாள் - குன்றெனவீழ்ந்து
ஆண்டகை நின்சோலை அழிந்தது ஒருகுரங்கால்
காண்டருதி என்றார் கலந்து....282

கூற்றமோ அன்றேல் கொதித்தெழுந்த ஆலநுகர்
ஏற்றுகைக்குந் தேவோ இனியாரோ - யாற்றற்
குரங்கெனவே தோன்றியதெங் கோவேநீ கொண்ட
வரங்களின்மே லாந்தோண் மலை....283

என்ற பொழுதில் எழுபொழிலும் எஞ்சலுற
குன்றனதோள் கொட்டிக் குரக்கேறு - நின்று
பொடித்தபோர் வெய்யோன் புழைச்செவியி னூடங்கு
இடித்தபே ரோதை இடி....284

செம்பொற் கிரியின் சிகரம் சினத்தீயால்
கம்பித்தது என்னக் கருத்தழிந்தான் - வெம்பிப்போர்
வல்லாரை ஏவியவண் வானரத்தைக் கொண்டுறுதிர்
கொல்லாதி என்றான் குறித்து....285

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.7. சம்புவாலி வதைப் படலம்

சூலம் பரிதி தொடர்தோ மரஉலக்கை
பாலங் கணைகப் பணம்பரிகம் - கோலெழுக்கைக்
குந்தம் குடாரம் குறித்தார் தரித்தார்மை
வந்ததென வந்தார் வளைந்து....286

ஆல மனையா ரனல்ஒழுகுங் கண்ணினார்
நீல மலையில் நிலவுவார் - கோலப்
பிறைஎயிற்றார் மேகம் பிழிந்துஉண்பார் ஊனை
நிறைவயிற்றார் உற்றார் நிரைந்து....287

அறத்தினைவேர் போக்கி அருளினையே தின்று
மறத்தினையே மூட்டி வளர்த்தார் - புறத்தினிஎன்
தாயறியா மாயத் தகையார் சதமகனை
வாயுரையால் வென்றார் வலிந்து....288

வந்தார் மலைபோல் வளைந்தார் கடல்போல
நொந்தார் குரங்கெனவே நூழில்பெற - முந்தெதிர்ந்தே
ஆரவா ரித்தார் அழியா வலனுடைய
வீரவா ரத்தார் வெகுண்டு....289

கிட்டினார் உற்றார் கிளர்ந்தார் கிளர்ந்தனுமற்
திட்டினார் வெம்பித் தெளிந்துருத்தார் - முட்டிக்
கதைவாள்கள் ஒச்சிக் கடுத்தார்கள் வெம்போர்
விதவாழ்க்கை கொண்டார் வெகுண்டு....290

கண்டான் கரிய கடல்போல் வருமவரை
விண்டார் நெடும்தருவை வேரோடுங் - கொண்டான்
அரைத்தான் புவியோடு அளற்குழம்பொன் றாக
இரைத்தான் கரத்தால் எடுத்து....291

வால்முறிந்த சூலக் கரமுறிந்த வெங்கதைவாள்
வேல்முறிந்த செய்யும் வினைமுறிந்த - தோல்முறிந்த
என்புமுறிந்த இணைத்தோள் முறிந்தன பேர்
அன்பன்விசைத் தெற்று மரத்தால்....292

கழுத்தும் தலையும் கரமும் கணித்த
எழுத்து முடிந்தா ரிறந்தார் - வழுத்தரிய
சொல்வீரம் பேசித் தொடர்ந்தார் தொடர்முழைவாய்ப்
பல்வீரர் அம்மா பதைத்து....293

பிளந்தான் சிலரைப் பிசைந்தான் சிலரை
உளர்ந்தான் சிலரை யொருத்தான் - அளந்தறிய
வாலால் சிலரை மடித்தான் வருஞ்சிலரைக்
காலால் கடித்தான் கனன்று....294

விண்டுவிண்டு முந்தினரை விண்டுவிண்டு அங்கவிசை
கொண்டுகொண்டு கங்கபந்தி கூடவே - கண்டகண்ட
திக்கடங்க மிக்கடைந்து தெற்கடங்க விக்கிரமத்து
உக்கரமத்தி ருந்துடற்றும் ஊங்கு....295

சண்டவிசை கொண்டுசய மென்றுவகை கொண்டெதிர்கொள்
கண்டகரை விண்டுஉடல்கள் கண்டமுற - மண்டையொடு
கண்டமும் அடங்கவிசை மண்டுகழ றுண்டமுற
மண்டிஎதிர் கொன்றனன்அம் மா....296

கங்கபந்தி யும்கவந்த கண்டமும்க லந்துமுந்த
அங்கமும்தெ றிந்துசிந்த வங்கையாற் - பங்கமுற
மாட்டிஉளம் வாட்டமுற வாட்டிவழி யோட்டமுற
வீட்டியிசை நாட்டினன்மேல் மேல்....297

வீரவலி பேசி வெயிற்படைகள் கொண்டுஎதிர்ந்தோர்
ஓரொருவர்க் கோரொருவ னாகியே - காருருவ
வஞ்சர்நெஞ்ச ழிந்துசிந்த அங்கணங்க ளும்கலங்க
அஞ்சியஞ்சி நின்றொதுங்க வண்டர்பந்தி யும்குலுங்க
மஞ்சிநின்ற ழிந்தசெம்புண் வந்தசிந்து சிந்தடங்க
வெஞ்சினங்க ளும்துறத்து வெம்பியம்ப - ரந்திருந்து
நஞ்சுலைந்த தென்னவங்க நந்தவந்த கன்னடுங்க
வஞ்சமறக் கொன்றான் மலைந்து....298

தும்பையந்தார்க் கொன்றைஅணி சூடு மவனாவான்
அம்பரமேற் பொன்முடியு மாரவே - தம்பமென
மண்டுபடை அண்டமுற மண்டுபண்டு துண்டமுற
வண்டர்களி கொண்டுலவ வண்டர்மிடி கொண்டுலைய
விண்டுவிண்டு வந்தவரை வெங்கைஅறை கொண்டடங்க
குண்டைவந்த தென்னவந்த குஞ்சரங்களும் நொறுங்க
பண்டினும் கிளர்ந்தெதிர்ந்து பங்கமுற வண்டமுழு
துண்டவன் நின்றான் ஒறுத்து....299

அடித்தான் சிலரை அரைத்தான் சிலரைப்
பிடித்தான் சிலரைப் பிசைந்தான் - வடித்தாமத்
தோளும் கரமும் துடையும் சுடர்முடியும்
தாளும் சிதறத் தகைந்து....300

மலையும் கடலும் மலையும் திசையும்
தலையும் அயனார் தடமும் - நிலையிலாக்
காரும் பொழிலுங் கடியிலங்கை என்றிசைக்கும்
ஊரு மரக்க ருடல்....301

அஞ்சினோ மைய வபைய மபையமெனத்
துஞ்சினார் கையால் தொழுதுஉலைந்தார் - வெஞ்சினத்துத்
தாளாற் சிலர்க டளர்ந்தார் தருக்அகற்றார்
தோளாற் சிலர்க டுகைந்து....302

ஊழிக் கடையில் உருத்திரமா மூர்த்தியென
வாழிக் கருணைநெடு மாருதியும் - பாழிப்
படைமுறுக்கி நின்றான் பனிமலர்தூய் வானோர்
நடனவிற்றி ஏத்த நனி....303

அத்தன்மை கண்ட அணிமலர்ப்பூங் காவிடைக்கா
வைத்தநெடு வானோர் மனநடுங்கிப் - பித்தன்
செவித்துளையிற் செப்பினார் சேனனயெலாம் மாண்ட
புவித்தலத்தில் என்னாமுன் புக்கு....304

கேட்ட பொழுதில் கிளரும் சினமூள
நாட்டம் சிவப்ப நகையோடும் - வாட்டடக்கை
வாளரியே றன்னசம்பு மாலி முகநோக்கிக்
கேளிதுநீ என்றான் கிளர்ந்து....305

இப்பொழுதே வல்லையவ ணேகினைநீ புன்குரங்குக்
கொட்படக்கித் தாம்பு கொடுவிசித்துத் - துப்பின்
விரைந்துறுதி என்றான் விரியிலங்கை மூதூர்த்
துரந்தரபோ கத்தான் துனிந்து....306

யான்பெற்ற பேறுஇவரில் யார்பெற்றார் என்றுவந்தோர்
வான்பெற்ற தேர்மேல் மருவினான் - தேன்பெற்ற
கற்பகப்பூஞ் சோலைக் கடவுளருங் கண்ணிமைப்பக்
கற்பகநேர் தோளான் கடிது....307

தன்சேனை யும்பிறராற் றந்தபெருஞ் சேனையொடு
மன்சே னையும்சூழ் வரச்சென்றான் - பொன்சாயற்
பூங்கமலத் தேவளித்த போர்ப்படையும் மற்றுளபேர்
ஓங்கும்படை யோடு உருத்து....308

கார்மேற் கரியும் கரிமேற் கடும்பரியும்
தேர்மேற் கவனத் திறலாளும் - பார்மேற்
கடல்போற் கனல்போற் கடுங்கால் விசைபோல்
உடனா வரவே உடுத்து....309

இருளும் பிறையும் இருங்கனலும் இன்னும்
மருளுந் திளைந்தோர் மலையின் - திரளுருவ
தென்னு மாறுற்ற இருங்கரியும் வாளரக்கர்
மன்னுமாத் தூசும் வளைந்து....310

சுற்றளவு மேலுந் துலங்குபுசென் றொட்டலரை
வெற்றி மகுட மிசைதாக்கி - முற்றுரையும்
கைக்குறியும் ஆசனமும் காற்குறியும் காண்டருமெய்க்
கற்கியுட னேகக் கலந்து....311

அந்தகற்கு மாணை யறைவா ரளவரிய
கந்தரத்திற் கந்தரமும் காட்டுவார் - சந்ததமும்
வெற்றியல்லால் வேறு வினையறியார் வெஞ்சினத்துப்
புற்றரவம் ஒப்பார் புகைந்து....312

முரசுசங்கு பேரி முருடாதி ஏங்கத்
திரைசெய் கடலிற் செறிந்து - விரசுறுமத்
தானைவள நோக்கித் தனித்தோ ரணமிருந்தான்
வானவர்கள் போற்றும்அனு மான்....313

அண்டம் குலைய அரக்கர் குடல்நடுங்க
எண்டிசையின் மாவும் இரிந்தோட - விண்டலஞ்சேர்
மீனுதிர வார்த்தான் விரைமலர்ப்பூந் தொங்கலணி
வானுயர்தோள் கொட்டியஅனு மான்....314

அக்காலை வாளரக்கர் ஆற்றற் படைமாரி
மைக்காரிற் பெய்ய வலியானும் - புக்காய்ந்து
எழுவொன்று நாடி எடுத்தான் அரைத்தான்
குழுவொன்று சேரக் குழைந்து....315

பல்லிழந்து பற்றும் படையிழந்து வீரவலிச்
சொல்லிழந்து வாகைத் தொழிலிழந்து - வில்லிழந்து
மார்பிளந்து தோளிழந்து வாகிழந்து சேகிழந்து
தேரிழந்து நின்றார் சிலர்....316

அற்றுக் கவச மடுங்கை நெடுஞ்சூலம்
அற்றுக் கழலும் அடற்றலையும் - மற்றுச்
செழுந்தோளும் வாளுந் திறனு மிழந்தார்
உழுந்தோடு முன்னர் உருண்டு....317

மதமுறிந்து வாகை வலிமுறிந்து மாறாக்
கதமுறிந்து தாலக் கரத்தின் - விதமுறிந்து
கோடிழந்து மாகக் கொடியிழந்து கிம்புரியின்
மாடிழந்து நின்றமத மா....318

வாசியால் யானையந்த மாவாற் கடும்பரித்தேர்
ஆசறுமத் தேரால் அடலரக்கர் - நாசமுறக்
கொன்றான் நமனுங் குலைந்தான் குறித்துணர்ந்து
நின்றான் ஒருவன் நினைந்து....319

தூசிநிரை தூசியாய்ச் சொல்லுங் களபமெலாம்
பேசுங் களபப் பெருங்குழம்பாய் - வாசியுறுங்
கூளியருங் கூளியராய்க் கூவிரமுங் கூவிடமாய்
மாளும்வகை கண்டான் மருண்டு....320

ஆனை பரிதேர் அடல்வாட் படைமுதலா
ஏனை அரக்கர் உடலெல்லாம் - பேன
வரைக்கடலிற் சோரிவெள்ள மண்டுதலுங் கண்டான்
திரைப்பரிதேர் தூண்டிச் சினந்து....321

ஒன்றுபத்து நூறா உடற்பகழியோர் தொடையில்
நின்று துரப்ப நெடுவில்லால் - ஒன்றும்
படாவகையே செய்தான் பலாசவன மொப்பான்
கெடாவழியான் வீரங் கிளர்ந்து....322

எழுவிருந்தால் வீர மிழவானென் றெண்ணி
அழலுறுமோ ரம்பா லறுப்ப - விழியிமைமுன்
தேரிடையே புக்குச் சிலையால் அவன்றலையைப்
பாரிடையே வீழ்த்தான் படர்ந்து....323

கண்டனர் காவற் கடுந்தேவர் கானடுங்கி
விண்டனர்கள் வேந்தன்பால் மேவினார் - மண்டமரிற்
சாதேவ மாலியொடு சாய்ந்தார் நிருதரெலாம்
மாதேவ என்றார் மருண்டு....324

என்றலுமே கண்கள் எரியொழுக வென்னரசு
நன்றெனவே மின்னொழுக நக்கிடிபோற் - சென்றரியை
யானே பிடித்துஉறுவ லென்னமு னைவகையே
றானார் அறைவார் அடுத்து....325

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.8. பஞ்ச சேனாபதி வதைப் படலம்

பூவுண்ணும் வாழ்க்கையுறும் புன்கவிமேல் போதியெனின்
மாவண்ணத் தேவர் மதிப்பரோ - பாவுண்ணும்
எம்பெருமை எண்ணா திருந்தனையே னேழுலகோர்
தம்பெருமை வென்றார் தடுத்து....326

மூவரையும் வென்று முழுவரசு செய்திடுநின்
சேவகம்மென் னாகுந் திறலோனே - காவிடைவாழ்
கூனற் குரங்கின்மேற் கோபமெவன் கொள்ளுதிநீ
யூனச் செயலென்றார் ஓர்ந்து....327

நீவிரே சென்று நெடும்புகழ்கொண் டார்திர்என
ஏவினான் ஏவ இறைஞ்சினார் - மூவுலகும்
வெல்லுந் திறலார் விடைகொண்டு அடைந்தனர்பாய்
வல்லியங்க ளென்ன வளைந்து....328

எண்ணரிய யானை யிவுளிக் குழாநெடுந்தேர்
வண்ணப் படையார் வயவீரர் - மண்ணெழுந்த
தூளிநெடு வானகடு தூர்ப்பத் துனைவலத்து
மீளிபோல் சென்றார் விரைந்து....329

பூதங்கள் ஐந்தும் பொறிஐந்தும் புக்கனபோல்
நாதங்கொள் தேர்மேல் நணுகினார் - சீதங்கொள்
வாரியென வந்த வகைநோக்கி மாருதியும்
வாருமென நின்றான் மதித்து....330

இந்திரனார் வேலும் எமனார் முளைஎழுவும்
இந்தணிந்தான் கையினெரி மழுவும் - முந்தரிய
வாளுரத்தர் காலுரத்தர் வாகைப் படையுரத்தர்
தோளுரத்தர் சூழ்ந்தார் துனிந்து....331

திகைக்கரியின் கோடணிந்த திண்குழையர் செந்தீப்
புகைப்படல நாசிப் புழையர் - மிகைப்படுசீர்
வெற்றித் தனதன் விழுநிதியங் கொள்ளைகொண்டார்
பற்றித் திருகிப் படர்ந்து....332

நீலநிறத்து இந்திரனை நேர்கடவும் வெண்கரியின்
வாலதிபின் பற்றி வலித்தெதிர்ந்தார் - காலனையும்
கட்டிச் சிறைப்படுத்துங் காளமனை யாரரியின்
முட்டிப் பொருவார் முனைந்து....333

இப்பஞ் சவர்மற் றெரிகடனேர் சேனையொடும்
செப்பரிய ஆண்மைத் திறலான்முன் - கப்புடைநா
வைந்தலைய பாந்த ளரசெனவே யாற்றலொடு
வந்தனர்கள் தீவாய் மடித்து....334

தோரணத்தின் மேலிருந்த தோன்றல் உலகளந்த
வாரணக்கை மாயன் வடிவென்னக் - காரணத்தின்
எங்குமுள னென்ன எடுத்தான் எழுவொன்றை
சிங்கவே றென்னச் சினந்து....335

கரனெரிய வீரக் கழனெரியக் கன்னேர்
உரனெரிய மண்டை யுருள - வரனுடைய
வாளும் கரமும் மடிந்தொடிய மாட்டினன்வெங்
கோளரிஏ றென்னக் கொதித்து....336

கரமும் செவியும் கதமுங் கதித்த
உரமுங் கொடியும் உலையத் - திரனிழந்து
வாகிழந்து கொற்ற மதமிழந்து பொன்றினதிண்
பாகிழந்து வந்த பகடு....337

வாலு மயிரும் வயிறும் வடித்தவிசைக்
காலுந் தலையுங் கலம்பகம்போல் - மேலுமற
ஒன்றாய்க் குழம்பாய் உதிரத்தோடு உற்றனவாற்
குன்றோங்கும் வாசிக் குழாம்....338

கற்புடைய மாதர் கலந்தார் கணவருடன்
அற்பமைந்தார் ஏது மறியாராய்ப் - பொற்பதுமக்
கண்முத்தங் கான்று கலுழ்ந்தார் கதிர்போல
விண்முற்றங் கண்டார் விழைந்து....339

படையுலர்ந்த தன்மையினைப் பார்த்தார் பயிலும்
அடலுடைய வைவ ரழன்றார் - விடுசரங்கள்
தூர்த்தார் தெளித்தார் சுகன்சுதன்மேற் சூழமரர்
வேர்த்தார் உடலம் விளர்த்து....340

அக்கணத்தின் மாருதியு மக்கணையெல் லாமகற்றி
புக்கொருதே ரேறிப் புரட்டினான் - மிக்கவன்விண்
ஓங்கினான் ஐய னுடன்றெழுவா லோச்சுதலும்
தாங்கினான் விற்படையாற் றான்....341

வில்லொடிந்து நின்றானோர் வெற்பெடுப்பான் தன்னையறிந்து
எல்லெழுவாற் சாட இறவுற்றான் - சொல்லியவன்
நால்வரும் வந்துற்றார் நமனா ரெனவரையின்
மேல்வருதோள் வீரன் மிசை....342

எண்ணரிய வாளி யினத்தால் எழுவடுதோள்
அண்ண லுருமறைத்தர் ஆற்றலார் - விண்ணிடையோர்
தேரெடுத்து வீசத் திரிந்தான் செயலற்றுப்
பாரிடையில் வீழ்ந்தான் பதைத்து....343

கண்ணிமைக்கும் முன்னர்க் கடிதவன்மேற் பாய்ந்துலைந்து
விண்ணிடையில் ஏக மிதித்தொருப்ப - எண்ணரிய
தேவருங்கை கொட்டிச் சிரித்தார்மற் றாங்கெதிர்ந்த
மூவரும்வந் தேற்றார் முனிந்து....344

ஓரொருவ ரோருலக மொக்கவெல்லு மாற்றலுளார்
பாருருவும் விண்ணுருவும் பல்பகழி - மாருதியின்
திண்ணாக முற்றுஞ் செறியும் படிபொழிந்தார்
எண்ணாகம் ஒப்பார் எதிர்ந்து....345

ஆகங் குருதிநீ ராறோட வாங்கனுமன்
மாகந் தடவும் மணித்தேர்க்குள் - ஏகமற
மற்றிரண்டு தேரு மணிக்கையால் வாரியெடுத்து
எற்றினான் விண்மேல் எடுத்து....346

தாவும் பரியும் தனிச்சூ தரும்ஒழிய
வேவின் விசையால் எழுவார்தம் - மாவலிசேர்
அங்கையுறு வாளும் அடற்சிலையும் ஆங்கிறுத்தான்
எங்கெழுவ தென்னா எழுந்து....347

மல்லின் மலைவார் மலையாமுன் வானகஞ்சேர்
கல்லடுதோள் வீரன் கடுங்கரத்தல் - வல்லவர்தந்
தோள்க ளிறுத்துச் சுடற்போற் புவியிழிந்தான்
கோளரிஏறு ஒப்பான் கொதித்து....348

மற்றொருவ னின்ற வலியறிந்தான் மாருதியும்
இற்றனைநீ யென்ன இசைத்தெழுந்தான் - முற்றிடியின்
வன்தலையிற் பாய மடிந்தான் வலியிழந்து
குன்றெனவே வீழ்ந்தான் குலைந்து....349

ஐவரையும் வென்ற வருந்தவனிவ் ஐவரையும்
மொய்வரைய தோளான் முனிந்தொறுத்துக் - கைவரையாம்
வாரணம்போல் தேவர் மலர்தூவ வானுறுமத்
தோரணமேற் கொண்டான் துனைந்து....350

இற்றசெய லெல்லா மிருந்தா ரறிந்திமையோர்
முற்றுவகை உள்ளகத்து மூளவே - கொற்றவர்க்கு
நஞ்சேனை ஐவரொடு நாசமுற்ற தென்றுரைத்தார்
தஞ்சே வகம்ஒடுங்கித் தான்....351

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.9. பாசப் படலம்

வருமுரையைக் கேட்டான் மலர்விழிகள் சேப்ப
ஒருகுரங்கின் தன்செயலி தொன்றோ - மருவுயினிக்
கோளுறுவல் என்னக் கொதிப்பான்முன் கோக்குமரன்
கேளிதுநீ என்றான் கிளர்ந்து....352

முன்னெதிர்ந்து மாண்ட முனைவோ ரெனநினையேல்
என்னைநீ ஐய இவணிருத்தி - மன்னியவக்
கோடற்பூ வுண்ணும் குரக்கினைநின்பாற் கொணர்வல்
ஆடற் கயிற்றால் அசைத்து....353

சிவனல்லன் வேதச் சிரத்திடையே நின்ற
அவனல்லன் மால்அயனு மல்லன் - நவன்மன்னும்
புன்குரங்கொன் றாயிடினும் போரிற் புலனடைக்கு
முன்கொண்டு உறுவேன் முனைந்து....354

வன்மடங்கல் அன்ன வலியானை மார்பிடந்த
மன்மடங்க லென்னும் வலியேனு - முன்மடங்க
நன்முனையில் வென்று நடவே னெனினாத
நின்மகனான் அல்லேன் நினை....355

என்றுரைப்ப வேந்தன் எழுந்துவகை பொங்கநனி
சென்றடைக என்ன விடைசெப்பினான் - நின்றவனும்
இந்திரன் பண்டேற்ற இகலிற் கிடைத்ததனி
எந்திரமேற் சென்றான் எதிர்ந்து....356

கொடியும் குடையுங் குளிர்வா னுலாவப்
படியுந் துகளாய்ப் படிய - இடியின்
முரசுஅதிர சங்க முழங்கவே வந்தான்
வரைபுரையும் தோளரக்கர் மன்....357

மலையெண்ணில் ஆற்று மணலெண்ணிற் கார்கோள்
அலையெண்ணிற் றாரகையும் ஆயிற் - கலைமன்னு
நாற்படையு மெண்ணி நவிற்றலா மென்றுரைப்பர்
நூற்கடலைத் தேர்ந்தோர் துனித்து....358

ஆறிரண்டா மாயிரவ ராற்றலுடைக் கூற்றமனார்
பாறுசூழ் வேல்வாட் படையுடையார் - நீறுபட
மட்படருந் தேரார் மருவினார் வான்வெருவப்
புட்படியுந் தாரான் புறம்....359

மந்திரத்தர் வல்ல மதியமைச்சர் வாள்வலிமைத்
தந்திரத்த ரீன்ற தனையரொடுந் - தந்தைக்கு
அரம்பையரில் வந்தவர்நான் காயிரநூ றோடும்
வரம்பிலர்கள் சூழ வளைந்து....360

மஞ்சணைந்த மார்பில் வயிர மணிமாலை
அஞ்செவிய பொன்னி னணியிலங்க - எஞ்சலிலா
மேகத் திடைவயங்கு மின்போல வாளெயிறு
நாகக் கடைவாய் நக....361

குழையும் கொடியும் குடையும் கரியும்
தழையும் பணிமின் தழையும் - புழையுறும்வாய்
வெள்ளெயிறு மின்னு மிடையிருளும் வெங்கதிரும்
மொண்ணிலவு மோங்கு முடன்று....362

இத்தகைய சேனை இருங்கடலிற் சூழ்வரவோர்
மைத்தகைய வோங்கல் வருவதென - அத்தடந்தேர்
மீதுறுதல் கண்டான் விரிநூற் பரவையினை
ஆதவன்முன் கண்டான் அறிந்து....363

அரக்கர்கோன் இந்திரசித் தன்றிவனோ ராண்மை
கருக்கொண் முகிலனையான் கண்டாற் - செருக்குடையார்
ஏவரே யென்னினுமெ னென்றான் இராமனடிப்
பூவதனை ஏத்திப் புகழ்ந்து....364

ஆயிடை யிலக்க னருந்தோ ரணமிருந்த
நாயகனை நோக்கி நகையோடும் - சீயநிகர்
கோளினரைக் கொன்ற குரக்கிதுவோ என்பான்முன்
கேளிதுநீ என்றான் கிளர்ந்து....365

சூலி வரைஎடுத்த தோன்றலைமுன் பண்டெதிர்ந்த
வாலி குரங்கன்றி மற்றுண்டோ - சால
வுலகியலை எவ்வாறு உணர்ந்தனம் யாமென்றான்
வலனறியும் சூதன் மதித்து....366

ஆயதுவே ஆம்எனினும் அண்டப் புறத்துறினும்
நீஎதிர்கண் டேங்க நிமைப்பதன்முன் - போயொறுப்பல்
எண்ணலைஎன் னாமுன் இடிபோலு ருத்தனடந்த
அண்ணலைநே ராய்அடைந்தான் ஆர்ந்து....367

பார்த்த திசைமுழுதும் பல்பகழி மாரியுற
வேர்த்துடலம் விண்ணோர் வெருவினார் - தீர்த்தனுமக்
கோலவெழுக் கொண்டான் குமைந்தான் கொடிப்படையைக்
காலனுங்கண் டஞ்சக் கனன்று....368

பரியாற் கரியும் கரியாற் பரியும்
அரியால் அரியும் அகைத்தான் - வரிநேர
வந்தோர் உயிரும் மடிந்தான் வலனழியக்
கொந்தாடு தாரான் கொதித்து....369

காலாளுந் தேருங் கரியும் கரையாவெம்
பாலார் கயத்திற் பனியார்ந்த - மாலார்
சரிமலர்ந்த தாமரையிற் தண்டமற முற்றும்
சுசிமலர்ந்த காட்சியினிற் சூழ்ந்து....370

சேனையெலாம் மாண்ட செயலறிந்தான் தேர்கடவி
வானையெலாம் கொண்டான் மணித்தேர்மேற் - சோனை
மழையென்ன வாளி மழைதூவி வந்தான்
கழைமன்னும் தோளக் கயன்....371

ஏவியபல் வாளி எவையும் மழுவொன்றால்
மேவுறா தெற்றி விடையென்ன - நாவுரைமுன்
பார்மேற் திகழ்ந்தான் படர்மாமுகில னையான்
தேர்மேற் குதித்தான் சினந்து....372

பாகோடு மாவும் படுத்தான் படுத்தியவன்
வாகோடு பல்லம்பு மாரியுறச் - சேகோடும்
வில்லுரனிற் பற்ற விசைகொண்டவன் வலிப்ப
ஒல்என்ற தம்மா ஒடிந்து....373

வில்லொடிந்த தென்ன விடைந்தான் விறலோடு
மல்லமைந்த குற்றுடைவாள் வாங்கினான் - வல்லரக்கன்
குத்துதலும் கையாற் குலநுண் பொடியாக்கி
மத்தன்மேற் கொண்டான் வலித்து....374

பற்றிக் கரத்தாற் படர்வெண் பிறைப்பலிற
எற்றிக் குருதி இழிந்தோட - வெற்றுடலைத்
தேய்த்தான் குழம்பாய்ச் சினந்தீர வக்கயனை
பூத்தேவர் வாழ்த்தப் பொலிந்து....375

மானாய்ப் பசுவாய் மறைநவிற்று மந்தணராய்
மானார் வடிவாய் வனப்பறையாய்த் - தேனாகி
உற்றார் சிலரங் கொழிந்தார் சிலர்பிணத்தின்
மற்றாம வீரர் மறைந்து....376

வக்கிரப்பல் வாங்கி மழைபோ னிறங்கருக்கிச்
செக்கர் நிறக்குஞ்சி சிலரடைவார் - புக்கு
வணங்குவர் வாயால் வழுத்துவா ரந்தோ
வணங்குவர் ஆவிக் குலைந்து....377

இத்தன்மை யாக விலங்கையூ ரெங்கணும்தேர்ந்து
ஒத்தழுத வோதை யுவரியென - எத்தலையுந்
திண்டாடத் தேவர் திரிந்தா ரிவைதெரித்தார்
வண்டாடு தாரான்தன் மாட்டு....378

மயன்மகளும் மற்றைமட மங்கையரும் மாழ்கி
அயன்மகன்தன் பேரன் அடிவீழ்ந்து - அயர்வுறுங்கால்
எண்ணாரும் இந்திரசித் தென்பா னிவையறிந்தான்
விண்ணோர் வெருண்டுஇரி யவே....379

உடன்பிறப்பென் றோதும் ஒழியா தகாதற்
கடனிறுத்த தென்னக் கரைந்தான் - விடனடுவெங்
கட்கனலி காலக் கதித்தான் கடவுளரவ்
விட்புலன்விட் டோட வெருண்டு....380

வாரணங்கள் எட்டு மகமேரு வும்கடலும்
தாரணியும் அஞ்சிச் சலிப்பவே - காரணவும்
வாம்பரித்தே ரேறி மருவினான் மன்னவன்மாட்டு
ஏம்பலொடு சென்றான் எதிர்ந்து....381

கண்ணநீர் சோரக் கலுழ்வான் களத்திறந்த
வெண்ணுடைய தம்பிக் கிரங்குவான் - நண்ணரிய
தந்தைமுக நோக்கி இதுசாற்றினான் தாவரிய
சிந்தைஅலங் கொண்டான் சினந்து....382

ஏதையா சிந்தித்து இழைத்தாய் இகல்கடக்கு
சாதகரைச் சாய்க்குந் தருக்கறிந்தும் - பேதமையால்
அக்கயனையும் ஏவி யவனுயிரு முண்டனைநீ
திக்கினிவே றுண்டோபின் செப்பு....383

கிங்கரரை ஆதி கிளர்ந்தா ருயிருண்ணும்
வெங்கட் குரக்கின் விறலிதுவேல் - அங்குறைந்த
மானிடரை எவ்வலியால் வாகை அடைகுதிநீ
கானடைதி போலாங் கணித்து....384

ஆயினுநீ ஐய வயலுளைவ தென்குரங்கை
ஏயெனுமுன் பற்றி எழுவலெனத் - தீயனையான்
போர்ப்பணைகள் ஆர்ப்பப் பொலன்கொடேர் மீச்சென்றான்
வேர்த்துலைய விண்ணோர் மிசை....385

பாரேன மன்ன பருந்தாள் கரியொருபன்
னீரா யிரயிரதத் தெல்லையிதேற் - காரார்ந்த
காலாட் தொகையும் கலினமா வின்தொகையும்
ஆராய்ந்து உரைப்பார்கள் யார்....386

நரியுங் கழுது நமன்நூ தருமாங்கு
இரியும் படியே எதிர்ந்தான் - கரியொடுதேர்
வாசியொடு வீரர் மடிந்தழிவெம் போர்க்களத்துத்
தூசியொடும் வல்லோன் துனைந்து....387

திண்ணகஞ் செங்கட் திறல்வான் மயிர்ச்சீயத்
தொண்ணகத்தா லான்ற உறுப்பெல்லாம் - வண்ணக்
குழம்பாங் கரியிற் குருதிநீர் வெள்ளத்து
உழன்றானைக் கண்டான் உயிர்த்து....388

என்பிறவித் தேனே இளங்கோ எரியேமெய்
அன்பருக்கோ ரன்பொருவா வாண்டகையே - துன்பறியாச்
செல்வக் கொழுந்தேநின் சேவகமும் எங்கொளித்தாய்
வில்வித் தகனே விளம்பு....389

என்புழியி லையன் எதிர்நோக்கி எங்கோமான்
தன்புகழை ஏத்தித் தடந்தேர்மேல் - முன்புகுந்த
இக்கொடியோன் இந்திரசித் தென்றால் இதில்நூங்கு
தக்கதினி எற்கெதுவோ தான்....390

இன்றே யிவனை இறுப்ப னெனில்இலங்கை
மன்றா னிறந்த வகையன்றோ - வென்றே
நினைத்தா னிருந்துழியி னேர்ந்தார் நெருங்கிச்
சினைத்தாம வீரர் சினந்து....391

வேலுங் கணையும் விடஞ்சேர் முனையெழுவுங்
கோலும் மழுவும் கொடுதிசைகள் - நாலும்
வளைந்தாரைத் தென்புலத்து வைத்தான் அரியை
உளந்தேற வைத்தோன் ஒருங்கு....392

பட்டனமால் யானை படர்ந்தனபொற் தேர்க்குலமும்
பட்டனவெம் போர்ப்பரியும் பட்டனவோர் - எட்டுக்
கராசலமும் மஞ்சக் கடுங்கா லளித்தோன்
மராமரங்கொண் டெற்ற மடிந்து....393

எண்ணரிய தானை யிமைப்பொழுதிற் கூற்றுவன்பால்
நண்ணியது கண்டான் நனிஅழன்றான் - எண்ணி
வலிந்தறைகூய் மாருதிமேல் வந்தான் அமரர்
மெலிந்திரிய வென்றான் விரைந்து....394

சேணெறிந்து வென்றான் திசைகலங்கத் திண்சிலையில்
நாணெறிந்து தீயுமிழும் நாவாய்சேர்ந்து - ஏணமைந்த
வாளியால் அங்க மறைந்தான்வன் மாருதிமெய்
வீழிபோற் சேப்ப வெகுண்டு....395

முண்மா விளங்க முனைவா ளிகளுதறி
திண்மா வனையான்பொற் றேர்பாய்ந்தான் - எண்மாவும்
பாகுந் தரையிற் படுத்தினான் பண்ணவர்கள்
மாகங் களிப்ப வயிர்த்து....396

மற்றொரு தேரேறி வழங்காமுன் வாளிமழை
புற்றரவின் உள்ளம் புழுங்கினான் - மற்றாங்கும்
வில்லிறுத்தான் அண்டம் வெடிபடுமா வேகமொடும்
கொல்லடற்போ ரான்முன் குதித்து....397

மல்லணைந்த தோளான் மகவான் இடைப்பறித்த
வில்லெடுத்து வாளி விசைத்தேவ - அல்லலுற
ஊறுபட வொல்கி உளைந்தான் இமைப்பொழுதில்
தேறினான் அங்கஞ் சிலிர்த்து....398

தெற்றினான் தீயோன் செனிமேல் தருவொன்றால்
எற்றினான் மாருதியும் எற்றவே - முற்றும்
குருதிஆ றோடக் குலைந்தான் குலையா
மருவயிரத் தோளான் மகன்....399

தேற்றங்கொண் டேற்றான் செழுவயிரத் திண்சிலையின்
ஏற்றங்கொண்டு எய்தான் எழிலியெனக் - காற்றின்சேய்
தேரோடு பாதகனைச் சேணிடைவிட் டார்த்தனன்பின்
பாரோடு வீழ்ந்தான் பதைத்து....400

குருதிமழை பொழியுங் கொண்மூ வனையான்
நிருதன் விழுந்தா னிமைப்பிற் - கருதிக்
ககலூரா முன்னங் கடிதவன் தேர்யாவு
மிகநூறா நின்றான் மதித்து....401

தேரின்மை தேறித் தெரிந்தான் அயன்படையை
ஏர்மன்னு மானசத்தால் ஏத்தினான் - பார்மன்னும்
மாருதிமேல் விட்டான் மகமுனிவர் வானோர்கள்
சோர்வடைய வெய்யோன் துணிந்து....402

அப்பெரிய வாளி அரவுருக்கொண் டண்ணலுடல்
வெப்படைய வம்மா விரித்ததெனில் - ஒப்பரிய
பார்முழுதும் ஈன்ற பரன்செயல்சா லப்படையின்
பேருருரைக்க வற்றோ பிரித்து....403

பாரவலி ஒடுங்கிப் பாசமொடும் பேசரிய
வீரன் அவனி மிசைசேர்ந்தான் - மேருமலை
வாரரவம் பற்றியநாண் மாகால் வழங்கநெடும்
பாரிடையே வீழ்ந்த படி....404

திகழ்மலரின் மேலிருந்தான் தெய்வப் படையீ
திகழ்தலொணா தென்ன விருந்தான் - அகமகிழ
வார்த்தசுர ருள்ளம் அழிந்தார் அரக்கரெலாம்
சீர்த்தனர்க ளுள்ளம் சிறந்து....405

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.10. பிணி வீட்டு படலம்

அந்தரத்தை உற்றான் அடைந்தன ரக்கரெல்லாம்
வந்திரைத்தார் உள்ள மகிழ்வுற்றார் - நொந்தழுத
மாதரும் வந்தீண்டி வளைந்தார் வழங்கரிய
பேதையரும் வந்தார் பெயர்ந்து....406

குரங்கலதவீ தம்மா கொடுங்காலன் என்பார்
இரங்கலீர் என்பா ரிரைப்பார் - புரங்கடிந்த
முக்கணா னென்ன முனிந்த திதுவென்பார்
உக்கதினி யென்பா ருவந்து....407

பிழைத்ததுவே லூரைப் பிழிந்துண்ணும் என்பார்
அழைத்ததுவோ கூற்றென நின்றார்ப்பார் - மழைக்குழலாள்
சீதை யிருந்த செழுந்தருக்கல் லாதவிதம்
ஏதறிவீ ரென்பார் இருந்து....408

ஆவி அகன்ற அரியென் றசதியுறத்
தாவித் திரியேன்மின் தம்பிகாள் - தாவில்
கதிரொளிய வாண்முகத்தைக் காணு மினோவென்பார்
பதனமினி என்பார் பலர்....409

என்மகனைத் தாவென்பார் என்கொழு நரோடீன்ற
நன்மகனைத் தாவெனவே நண்ணுவார் - பொன்மகனைத்
தேய்த்த குரக்கின் செயலறிதி நம்மவரை
மாய்த்ததிது வென்பார் வலித்து....410

அன்னவுரை கூற அவணடைந்த வாலநிகர்
பன்னரிய வாயிரவர் பற்றினார் - மன்னவன்முன்
கொண்டடைது மென்னக் கொடியோன்முன் கொண்டடைந்தார்
அண்டர்குல மஞ்ச அயர்ந்து....411

ஆடரங்கு மேனிலையும் அம்பொற் சலாகையொடும்
கூடரங்கு மெய்திக் குழாங்கொண்டு - பேடை
மயிலனையார் காண்பான் மறுகணைந்தார் வீரன்
துயிலுறுவான் போலவுடல் சோர்ந்து....412

மந்திரத்தில் ஓய்ந்த வரிவாள் அரவமென
வந்தவரைத் தாக்கும் வலியிலன்போல் - கந்தமலர்த்
தேப்படையை முற்றும் திறமிலிபோற் சென்றசைத்த
யாப்புடனே சென்றான் எழுந்து....413

தசமுகன்மா டெய்தியவன் தன்செருக்கும் வாழ்வும்
புசபலமும் வாகைப் பொலிவும் - நசையளவுங்
காணலாம் என்னுங் கருத்தோடு சென்றனனால்
மாணுலாத் தாரான் மதித்து....414

இத்தகைய மாருதியை இந்திரனை வென்றுதிசை
பத்தும் புகழாற் பரப்பினான் - அத்தலையிற்
தாதைபாற் கொண்டுறுங்காற் சாரர் தனித்தூதர்
ஊதைபோல் வேக மொடும்....415

மாப்புண் டரிகன் வயப்படையா னின்மகன்கை
யாப்புண் டதுகா ணரிஎன்ன - நாப்பறைந்து
விண்டாருக் கீய்ந்தான் வெயில்கான் மணியிமைக்கும்
ஒண்டாம மாலை உவந்து....416

வானரத்தைச் சென்று வதியாமல் யானறியத்
தானடைந்து கொண்மின்எனச் சாற்றுதலும் - மேனிமிர்ந்த
கோதைதாழ் மார்பனுக்குக் கூறினார் கோவுரைத்த
தூதைபோற் சென்றார் உவந்து....417

காருருவப் பாதகராங் காலக் கடுநடுவோர்
மேருவென மாருதியும் மேவினான் - வீரதையால்
எண்டிசையும் வென்றா னிசையோ டிருந்தமணி
மண்டபத்து வல்லே மதித்து....418

அந்திவா னாகியபொ னாடை தரித்திரவி
சந்திரரு மீது தலத்துலங்க - வெந்தகைய
சொல்லிருந்து வண்ணச் சுடர்வெண் பிறையணிந்தோர்
அல்லிருந்தாங் கென்ன அமைந்து....419

நீணிலாக் கற்றை நெடுமதிபோல் வெண்கவிகை
வாணிலாக் கற்றை வழங்கவே - சேணிமிரும்
அண்டப் புறத்து மிருளகற்றி யம்பொன்மணிக்
குண்டலம்வில் வீசக் குழை....420

திக்கயமும் வெள்ளிச் செழுங்கிரியும் தேவருடன்
மிக்கவரும் அஞ்சி விதிர்விதிர்ப்ப - மைக்கடலும்
கூற்றும் விடமும் குயிலும் குழைத்தனைய
தோற்றமொடும் வாசந் துதைத்து....421

தேனரம்பா பாண்டில் செவிக்கினிய சில்லரிப்பண்
வானரம்பை மாதர் வழங்கவே - மானமுற
ஆடினர்பா லோர்முக முள்ளன்புற வுவந்து
கூடினர்பா லோர்முகமும் கொண்டு....422

ஏந்து மணியாடி யிடையோர் முகம்வயங்க
காந்தளங்கைச் சானகியைக் காதல்கொண்டு - வாய்ந்தங்கு
ஒருமுகநின் றோங்க ஒழியாத காமத்து
ஒருமுகநின் றேங்க வுளைந்து....423

உற்றார் முகநின் றொருமுகமும் உம்பர்தம்பான்
மற்றோர் முகமும் மலர்ந்தோங்க - வெற்றி
அமைச்சரொடும் ஓர்முகம் கொண்டா வனபினெண்ணிச்
சமைப்பனசொன் னோக்கித் தழைந்து....424

ஆடலுடன் பாடல் அவையோர் முகம்பயில
கூடல்வலி வானரத்தின் கொட்படக்கிப் - பீடுறுதன்
மைந்தன் தனது வலியோர் முகம்வரைய
கொந்தவிழ்சிங் காதனமேற் கொண்டு....425

இத்தன்மை யோடு மிருந்த இராவணனை
அத்தன்மை வீரனடைந்து எதிர்தாய்ச் - சித்தங்
கனன்றுஅவனைப் பற்றிக் கடிது எழுவலென்ன
முனிந்தனன்வெங் கோளரிபோல் மூண்டு....426

அயன்படையை வீசி அருகுறைந்தோர் உள்ளம்
பயன்கெழும வன்முடிகள் பத்தும் - வயங்ககழி
மாக்கடலில் இட்டு மனக்குறையை முற்றுவனென்று
ஊக்கமுற்றான் வீரன் உருத்து....427

முன்னினைந்த வீரன் முறைஅன் றிவையென்னப்
பின்னினைந்த வெண்ணம் பெயர்த்தனனால் - மன்னும்வள
முற்றிடுங்கான் மற்று முறைபுரிதல் நூலெவையும்
கற்றறிந்த மேலோர் கடன்....428

காலனையொப் பாவானக் காகுத்தன் கைப்பிடித்த
கோல வரிசைக்கைக் கூற்றதனால் - சாலப்
படும்பரிசால் அன்றிஇந்தப் பாதகன்மற் றாரால்
அடும்பரிசான் என்றான் அறிந்து....429

எத்தகையால் வெல்வ திவனை இவனும்எனை
எத்தகையால் வெல்ல திலையெனினும் - அத்தகையே
காலங் கழியும் கருதுங்கால் காலநிலை
சீலமிலை என்றான் தெரிந்து....430

என்றுஅரக்கன் தன்மாட் டெதிர்ந்தானை இக்குரங்கே
கொன்ற தனைவரையுங் கூற்றென்ன - வென்றி
யானென்ன வாற்ற லதுகாண்டி என்றான்
வரன்மன்னு தோளான் மகன்....431

எட்டுத் திசையும் எரிபிறங்க வெள்ளியிடிற்
பட்டசிரிப் பிற்படு புகைவான் - முட்டுறவே
யாவனடா நீஇங் கடைந்தவா றென்என்றான்
தேவரைமுன் வென்றான் செயிர்த்து....432

மாலியோ வண்டுளப மாலியோ வாண்மழுக்கைச்
சூலியோ வெந்தறுகட் சூலியோ - வாலவிடப்
பாப்பரசோ உள்ள பரிசுரைத்தி அஞ்சலென்றான்
காப்புற்றான் மூவுலகுங் கண்டு....433

என்றுரைப்ப நீயுரைத்த வெல்லோரு மல்லேனப்
புன்றிறலா ரேவல்கொடு போந்திலேன் - கன்றுங்
கராமடியச் செற்ற கருணையங்கட் டேவாம்
இராமபிரான் தூதுவன்காண் யான்....434

வேதத்தால் வேதன் விழுந்தவத்தான் மெஞ்ஞான
போதத்தாற் காணரிய பொற்பினான் - நீதத்தான்
மன்னுயிருங் காத்து மறநீத்து அறம்வளர்ப்பான்
இன்னிலத்தில் உற்றான் எழுந்து....435

தேவர் வரழும் செருக்குஞ் செயங்கொடுத்த
மூவர் வரழும் முதலறுத்துத் - தாவில்
கணைஒன்றால் நின்குலத்தைக் கட்டறுப்பான் வந்தான்
இணையொன்றா எம்பெருமான் இங்கு....436

மூவரலன் மற்றை முனிவரலன் முன்னுரைத்த
தேவரலன் வெள்ளிச் சிலம்புமலன் - யாவரெனிற்
சம்பரனைக் கொன்ற தயரதமன் புத்திரனே
இம்பருக்கா யுற்றா னிவண்....437

திகிரிசங்க மொண்கரகஞ் செந்தீ மழுமான்
நகங்கமலம் வேலை நலனீத் - தகங்கலங்கும்
வானவர்க்காய் வில்லேந்தி மானிடனாய் வந்தனன்காண்
மேனவிற்று சீரானிவ் வேள்....438

அக்கமலக் கண்ணற் கடியன்அனு மன்என்பேன்
தெற்கடைந்து நாடித் திரிதியென - மிக்கவனெம்
வாலிசேய் தன்னுரையால் மாதரசைக் காண்டருமா
வேலைதாய் வந்தேன் விரைந்து....439

என்றுரைப்ப மின்னி னெயிறிலங்க நக்குரைத்த
வன்றிறல் சேர்வாலி வலியன்கொல் - வென்றி
அரசியலும் நன்றுகொ லாய்ந்துஉரைத்தி யென்ன
உரைசெய்தான் மாருதியும் ஓர்ந்து....440

அஞ்சலஞ்ச லைய அடுதிறலார் வாலியும்போய்த்
துஞ்சினான் வாலுந் தொலைந்ததுகாண் - மஞ்சனையான்
கைக்கணையால் ஆவி அழிந்தான் கவியரசன்
சுக்கிரிவன் என்றான் துணிந்து....441

வாலியைஎக் காரணத்தால் மன்னவன்கொன் றான்அவன்எப்
பாலிருந்தான் அங்கவன்தன் பத்தினியைச் - சாலும்வலி
அங்கதனார் நாடும் அமைதியெவன் யானறிய
இங்குரைத்தி என்றான் எடுத்து....442

மாதுதனை நாடி வருங்கோமாற் எங்கள்குல
நாதன் உயிரெனவே நட்டனன்பின் - ஏதமெலாம்
போக்கிடுவ லென்று புகன்றான் புகன்றபடி
நீக்கினான் வாலியைமுன் நேர்ந்து....443

நங்க ளரசினொடு நாள்மதியம் வீற்றிருந்த
எங்கண் முதல்வ னினிதேவ - இங்குனது
மாநகர்வந் துற்றேன் வகையீ தெனமொழிந்தான்
மாநகநேர் வாயு மகன்....444

உங்குலத்து வேந்தை ஒறுத்தானுக் கன்பொருவா
இங்கடைந்து சோலை யினம்தூறிச் - சங்கலரை
கொன்றதெவன் தூதுரிமை கூறுவதென் கூறுஎன்றான்
வென்றியந்தார் வெல்லரக்கர் வேந்து....445

அரக்கனைநன் கேய வறத்தமுத மூட்டித்
திருத்துதனன்று என்னத் தெரிந்தான் - மருத்துளப
மாலையான் நாமம் வழுத்தினான் ஆங்குரைத்தான்
வேலைதாய் வந்தோன் விரைந்து....446

நீதியறியாய் நிலை அறியாய் நின்மூடச்
சாதி யொழுக்கம் தவிர்கிலாய் - காதலுற
மாயாப் பழிஅடைந்தாய் வாழ்நாட் இறுதியெண்ணாய்
தோளாற்றல் என்னாத் துணி....447

இன்றோபின் என்றோ இறப்புறும்என் றெண்ணும்உடல்
என்றுநிலை நிற்கும்என எண்ணுவதோ - வென்றிச்
சிலைவலத்தாய் எண்ணிச் செயத்தருவ செய்தி
கலைவலத்தால் ஆய்ந்து கடிது....448

மூவர் வரத்தான் முடியா நலனுடையாய்
ஆவன கொண்டற்றனநீத் தாய்தந்து - நாவலவர்
உள்ளங் களிப்பஉல கோம்பினால் அன்றோநீ
வள்ளல் எனுமன்னவன் ஆவாய்....449

வேதத்துறை அறிந்தாய் வேணியரன் பூசைபுரிந்து
ஆதித்துறை வழுவா தாற்றுவாய் - தீதுறவே
மற்றொருவர் தாரமதை வௌவினால் வாய்மையொடு
கற்றநிலை யாமோநீ காண்....450

மாதரார் காம வசப்பட்டு அறிவிழந்து
காதலொடு சுற்றங் கனமிழந்து - சாதலுறு
மன்னர்தமை எண்ண வரம்புண்டோ மாயவினைப்
புன்னெறியி னீசா புகல்....451

சிறையிருந்த தேவிதனைச் செய்யான் என்றெண்ணி
குறையிரந்து நன்மொழிகள் கூறித் - தறையிரங்கித்
தாழ்ந்து விடுதியோ தாரணியில் நின்போல
வேந்தருண்டோ ஐயா விளம்பு....452

ஆழியான் கைச்சிலையில் ஆர்ந்திலங்கு அம்பரினி
ஊழிவாய்த் தீயின் உறுத்துறுங்கால் - ஏழை
மதிநீ மடிதருவாய் வாய்த்தபதி யோடும்
விதிநாள் அடல்வரமும் விட்டு....453

கற்புடையார் ஆசைக் கனல்மீறக் காய்வதுவும்
நற்பதத்தி னாரை நலிவதுவும் - வெற்பனைய
தோள்வலியோ ஆண்மைத் துறைவலியோ சூட்சியுறும்
ஆள்வலியோ ஒன்றும் அல....454

என்றினைய நீதி இயைய உனக்கெனைநீ
சென்று பணித்திஎனத் தேர்வேந்தன் - ஒன்றி
உரைத்தேன் எனமொழிந்தான் ஒப்பிலா வெற்றி
வரைத்தோளான் வாயு மகன்....455

ஏடா குரங்கே எனக்கோ இயம்பரிய
பீடார் நெறியறியப் பேசுவாய் - கோடாத
தூதென்றாற் சோலையொடு துன்னலரை யாட்டியதென்
ஓதென்றான் தீப்போல் உருத்து....456

எனக்கரிய காட்டுவார் இன்மையாற் சோலை
வனத்தை அழித்தமரின் வந்த - சினத்தவரை
தென்புலத்தில் உய்த்தேன் செயல்ஈ தெனமொழிந்தான்
வன்புலத்தை மாய்த்தான் மதித்து....457

கற்கடித்த தென்னக் கனலொழுகக் கண்களிடை
பற்கடித்து முத்துமுனம் பற்றிநீர் - மற்குரங்கை
கொன்மின் என்றான்வஞ்சக் கொடியோரை நோக்கிவய
வின்முகஞ்சேர் வல்லரக்கர் வேந்து....458

ஆய பொழுதில் அறிவுடைய வீடணனாம்
தூயவன் முன்னோன் முகநோக்கி - நாயகனே
தூதுவரை மாதவரைத் தோகையரைக் கோறலிது
நீதியல என்றான் நினைந்து....459

பூதலத்தில் ஐயா நின்போல்வார் எவரேநல்
தூதுவரைக் கொன்றார் துணியுங்கால் - நீதியிலா
இப்பழியை இந்திரவி யெய்தளவும் ஈறுறுமோ
கற்பழியும் மெய்யழியுங் காண்....460

அஞ்சினோர் நோவால் அபயமென்றோர் ஆண்மையற
வெஞ்சினோர் காஎனநின் றேத்தினோர் - வஞ்சியிடை
மாதரொடு தூதர் மறைஉணர்ந்தோர் தம்மைஐய
ஆதருங்கொல் லார்காண் அறிந்து....461

பின்னவனைக் கொல்லார் பெருஞ்செவிவாய் மூக்கினொடு
மன்னும் முலையரிந்த மந்திரம்போல் - இன்னிலையே
யாஞ்செய்தல் நீதி அழகென் றறிவுறுத்தான்
வான்செய்த புண்ணியமா வான்....462

சாலுந் தகவுரைத்தார் தம்பிஇனி இக்குரங்கின்
வாலறவே சுட்டு வலிநோக்கிக் - கோலநகர்
எல்லை கடத்திடுமின் என்றான் இமையவரை
ஒல்லையடு வாளான் ஒருங்கு....463

பாசம் அகற்றிப் பாவை எனஆர்த்துத்
தூசு முதலாத் தொகுத்ததெலாம் - நாசமுறச்
சுற்றினார் வாலிற் சொரிந்தார் இழுதெண்ணெய்
முற்றினார் வீரர் முனிந்து....464

ஆங்கறிந்தா னையன் அவர்க்கவரே ஆய்தலின்றித்
தீங்கிழைத்தார் நன்றிதெனச் சிந்தியா - நீங்கரிய
மாதவரும்வந் தீண்ட மடுத்தார் வயங்கனலைச்
சீதை அறிந்தாள் திகைத்து....465

என்னுயிரைக் காப்பான் இவணடைந்த இன்துணையை
நன்னர் உறுங்குரக்கு நாயகனை - மன்னுமனைக்
கற்புடையேன் என்னில் கனலாதி என்றுரைத்தாள்
வற்பெரியை நோக்கிமட மான்....466

திருவனையாள் செப்பச் செழுங்கனலிப் புத்தேள்
வெருவி உளங்குளிர வீரன் - உருவவலி
வாலுங் குளிர்ந்து வரையுங் குளிர்ந்துதிசை
நாலுங் குளிர்ந்த நனி....467

நாயகிதன் ஏற்றமிது நன்றெனவே நாயகனும்
மேய விசும்பினிடை மேவினான் - தீயினிடைப்
பற்றியவப் பாதகரும் பாரிடையில் வீழ்ந்தழியத்
தெற்றினான் உள்ளம் செயிர்த்து....468

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.11. எரியூட்டு படலம்

முற்பகையை முன்னி முளரிக் கரமதனாற்
சொற்பரந்த வெள்ளிச் சுடர்க்குன்றம் - அற்புதன்கை
நீண்மழுப்பெற் றாண்மைபெறீஇ நீட்டியது போலுமால்
வாண்முகப்போர் மாருதியின் வால்....469

வாலால் உலகளந்த மாயவன்போல் வானுறநேர்ந்து
ஆலால முண்ட அரன்போல - மாலார்ந்த
கோளொடுநாள் அஞ்சக் கொளுத்தினான் கோநகரை
ஆளுடைய வீரன் அறிந்து....470

அறந்துணையாய் நின்ற அரியுருக்கொண் டாண்மை
செறிந்த புரத்தினைமுன் தீய்ந்த - திறந்தெரியக்
காட்டுவான் என்னக் கடியார் புரத்தினைத்தீ
மூட்டினான் வீரன் முனிந்து....471

முனிந்தெழுநா ளாயு முறைதவிர்ந்தா னென்ன
வனந்தளரத் தீயப்பு மாரி - அனந்தமுறப்
பட்டனவே என்னப் பருந்தீத் திரள்எவணும்
கட்டழியச் சுட்டதுவே காண்....472

காணுருவெஞ் செங்கேழ்க் கனல்உருவி எங்குமுறத்
தூணுருவத் தோளின் துணைதழுவி - மாணுருவக்
கன்னியர்கள் மாழ்கிக் கழிந்தார் கணவரொடுந்
துன்னரிய சுற்றத் தொடும்....473

தொடர்வான் மதகரிகள் தூம்புடைக்கை தூக்கி
கடல்வான் இடியிற் கதறா - மடலாரும்
தோலுரிந்து வெள்ளைவண்ணத் தூங்கலினின் றோய்ந்தனவால்
மாலுரிந்து மான்று மதி....474

மருண்டமட மங்கையர்கள் வாசத்தொடு சோர்ந்து
இருண்டபுர மெங்கும் எரியச் - சுருண்ட
குழலும் எரியின் கொழுந்தும் புரையத்
தழலூ டிறந்தார் தளர்ந்து....475

தளர்ந்துளமும் சாம்பித் தளர்ந்தறிவும் தள்ளித்
தளர்ந்தனர்க ளேனும் தகைசால் - வளர்ந்தபுயத்து
ஆடவரைக் கூடியணை அங்கைதளர் வெய்திலரக்
கோடன்மலர்க் கையார் குழைந்து....476

குழைமுகத்துக் கொம்பனையர் கூர்எரிக்கால் பற்ற
விழைமுகத்துப் பாலர் விரும்பார் - உழைமுகத்துக்
கண்ணநீர் சோரக் கனலெரிவாய்ப் பட்டுழன்றே
எண்ணிலர்கள் மாண்டார் இரிந்து....477

இருங்கனல்வாய்ப் பொற்றே ரெரியிடைப்பட்டுப்
பெருந்த மரமென்னப் பெயர்ந்து - வருங்கடல்வாய்
நீர்போ லுருகி நிலையாய்த் திரண்டதுமைக்
கார்போழு மின்னிற் கலந்து....478

கலந்தவரும் மூடிக் கனன்றவரும் கைசோர்ந்து
உலர்ந்தவரும் ஓடி ஒளித்து - புலர்ந்தவரும்
திக்கறியார் உள்ளம் திகைத்தவரும் தீங்குதலை
மக்களற மாழ்கினரும் வாய்ந்து....479

வாய்த்த பளிக்கறையும் வண்ணச் சிலாதலமும்
ஆய்ந்த மணியால் அழுத்தியபொன் - வேய்ந்தமணி
மாடமும் மற்றும் வயங்குஎரிவாய் உண்டனதிண்
ஆடவர்கள் மாழ்க அடைந்து....480

அடைந்தெரிவாய் மண்ட அடுபடைக ளோடு
மிடைந்தனர்கள் விண்ணின் விசைந்து - தொடர்ந்துறலும்
அங்கம் எரிந்தார் அனலிடையே வீழ்ந்தழிந்தார்
சிங்கஏ றன்னார் திகைத்து....481

திகைத்தலங்கள் எட்டும் செழுந்தூமம் மண்ட
திகைத்துநிலை மாறித் திரிந்த - பகைப்பணைவெம்
தாறுறா வண்செவித்திண் தாக்குரற்கால்வெண் கரியோடு
ஊறுறா மற்றை உவா....482

உவாக்கதிர்வாய் தீவாய் உமிழ்ந்ததழல் பொங்க
தவாத்தலைமை சான்ற தருவார் - அவாத்தரம்இல்
பொன்னுலகும் வெந்துருகிப் பொற்றாரை கான்றனவிண்
மின்னொழுகு மாபோல் விரைந்து....483

விரைந்து உறுதீ மன்னன் விழுமணியால் ஆன்ற
தரந்திகழும் மாடம் தழுவி - பரந்தெரியப்
புட்பகமா னத்துப் பொருந்தினான் தன்கிளையோடு
உட்பரிந்து சென்றான் உயர்ந்து....484

உயர்ந்தரக்கர் மன்னன் உருத்திவையா என்ன
அயர்ந்து உரைப்பார் ஐயஇவண் அண்ணிச் - சயம்பெருகு
மாக்குரங்கு செய்த வகையீ தெனமொழிந்தார்
மேக்குயர்ந்த வீரர் மெலிந்து....485

மெலியன்மின் இன்னே வினைக்குரங்கை வீட்டி
நலிவுறுத்திர் என்ன நவிலச் - சலமுறுத்துத்
தாக்கினார் எண்ணரிய தானைப் படையொடனல்
வாக்கினார் ஓர்எழுவர் வந்து....486

வந்தவரை எல்லாம் மடித்தான் மலர்வதிந்த
அந்தமிலாத் தாயை அடிபணிந்தான் - சிந்தையுவந்து
ஓர்மலையை உற்றான் ஒளியார் அருக்கனென
வீரதைக்கோர் வீரன் விரைந்து....487

விரைமலர்ந்தார் சேவகனாம் வீரனடி உன்னி
குரைகடல்மேல் சென்றான் கொடியோர் - புரம்எறித்த
எந்தையிவன் என்ன இமையோர் தொழுதுஏத்த
கந்தவகன் என்னக் கடிது....488

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


5.12. திருவடி தொழுத படலம்

மைந்நாகம் என்னும் மலைநயனும் கண்டருளிக்
கைந்நாகம் அன்னார் களித்துறையும் - பைந்நாகத்
தண்டேறற் சாரல் தனிநாக மேல்குதியும்
கொண்டான் அறத்துணைஎம் கோன்....489

மால்வாய்ந்த உள்ளத்து மாதா எதிர்கண்ட
பால்வாய்ந்த தண்குதலைப் பாலரென - மேல்வாய்ந்த
மாருதியைக் கண்டு மகிழ்ந்தார் வரும்குறியால்
காரியம்நன்று என்னக் களித்து...490

துள்ளினார் ஓடித் தொழுதார் தொழுதுகையால்
அள்ளினார் ஆடி அழுதயர்ந்தார் - உள்ளுவகைத்
தீந்தேறல் உண்டார் தெளிந்தார் சிறந்தவலி
வேந்தேறு போல்வார் மிடைந்து....491

பல்படையின் ஊறுஉடலில் பார்த்தார் பதைத்துஉயிர்த்தார்
மல்லடுதோள் வீரஇனி மற்றுண்டோ - எல்லையிலா
எவ்வுயிரும் காத்தாய் எமைப்புரத்தாய் என்றுரைத்தார்
அவ்வரைமேல் உற்றார் அடைந்து....492

அங்கதனை முன்னர் அடிவணங்கி யெண்கரசின்
துங்கமலர்த்தாள் தொழுது எழுந்து - செங்கமலத்
தாயிருந்தாள் நம்உயிரைத் தந்தாள் எனஉரைத்தான்
மாயிருந்தோள் வீரன் வடித்து....493

சாகா மருந்துரையைத் தந்தான் முகம்நோக்கி
மாகால் வழங்கும் வலியுடையோய் - ஆகாயத்து
ஆறடைந்த ஆதி அடைந்ததிவண் அந்தமுற
கூறுகென்றார் உள்ளம் குளிர்ந்து....494

ஆளுடையான் தேவி அறைந்ததுவும் ஆணையுறக்
கோளிரவி என்னமணி கொண்டதுவும் - நீள
உரைந்தனன்பின் ஒன்றும் உரையான்தன் வென்றி
உரைப்பரோ மேலோர் உவந்து....495

முன்னோய் பொருததுவும் முற்றியது மூளெரியாற்
துன்னார் புரத்தினைநீ சுட்டதுவும் - அன்னார்
திறன்வருவான் மீண்டதினாற் சேண்புகையாற் சீதை
யுறலரிதாத் தேர்ந்தாம் ஒருங்கு....496

எக்குறைஉண்டு ஐய இனிநம் இறைவன்பால்
மைக்குழலைக் கண்ட வகைபுகல்தும் - புக்கெனவே
சென்றார் அனுமன் உரைத்தேறல்வாய் உண்டுவந்தார்
ஒன்றாகி வீரர் உவந்து....497

காலிற் கடுகி கதிரோன் நடுவணைய
வேலைத் திரைபோல் விறல்வீரர் - கோல
மதுவனத்தை உற்றார் வளர்உவகை பொங்க
மதுவலத்தை உற்றார் மகிழ்ந்து....498

அங்கதன்தன் ஆணை அமைந்தார் அரும்படையிற்
கொங்கணைந்த வண்டு குழலூது - பண்கனிந்த
கொம்பிறால் தூங்கும் குளிர்வனம்புக் கார்கவளக்
கொம்பிறா வண்கரியிற் கூண்டு....499

ஆடுவார் தேனை அருந்துவார் ஆடலுற
ஓடுவார் மற்றொருவர் உண்நறவம் - நாடிப்
பறித்துஉண்பாற் பற்றிப் படருவார் முந்த
வெறித்துஉண்பார் வீரர் மிடைந்து....500

புதுநறவு தேக்கிஎழும் பூசலினை நோக்கி
மதுவனத்தைக் காக்கும் மறவோர் - ததிமுகற்குக்
கூறினார் அங்கதன்தன் கோடானு கோடிபடை
ஊறுமது உண்டதென உற்று....501

என்னாமுன் எய்தி எழிலா டகப்பொருப்பின்
மன்னாமுன் நின்ற வலியோனைக் - கொன்னே
அழிவடுத்தது எம்அரசன் ஆணை அறியாயோ
மொழிதிஎனக்கு என்றான் முனிந்து....502

ஆயிடையில் அங்கதனும் அங்கையால் ஆர்குருதி
வாயிடையே சோர வலிந்துஎற்றிப் - போயினிநின்
வேந்தனுக்கோ தென்ன விடுத்தானவ் வீரரொடும்
போந்திருந்தான் வேறோர் பொழில்....503

அப்பால் அனுமன் அறிந்தியற்றும் ஆண்மையெலாம்
தப்பாதிப் பாவினிடைச் சாற்றினாம் - இப்பால்
உடுக்கண்மதி நேர்வாளை உன்னி வள்ளல்நைவது
எடுத்துஉரைக்கல் உற்றாம் இனி....504

தாமரைக்கட் செங்கனிவாய்த் தாக்கணங்கை யுன்னிநிதம்
ஏமுறுங்கால் வெய்யோன் எழிற்குமரன் - ஆமுரையால்
தேறி இருந்தான் செகம்புரப்பான் வந்தவள்ளல்
வீறுபெறு மாமலையின் மேல்....505

மாதணியை நாடி வரும்அனுமன் என்னுயிர்க்கோர்
காதலுறும் கண்ணம் கருணையான் - ஆதவனார்
மைந்தன்முகம் நோக்கி வகுத்தான் மனத்துயரம்
எந்தைகேள் என்னா எடுத்து....506

தென்திசையில் சென்ற திறல்வான ராதிபர்கள்
பொன்றினரோ அன்றிப் பொருதனரோ - நின்று
பயனின்மை என்னும் பரிசுணர்ந்தார் கொல்லோ
நயனறியேன் ஐயா நவில்....507

திருந்திழையைக் காணார் திறம்என்னாம் என்றே
அருந்தவம் செய்தாரோ அறியேன் - பொருந்தலர்
வஞ்சித்தார் கொல்லோ வரவறியேன் என்றுஉரைத்தான்
வஞ்சித்தார் கொள்வான் மலைந்து....508

ஈதுரைக்கும் எல்வை இருங்குருதி சோர்வுறவான்
ஆதவன்தன் தோன்றல் அடிவீழ்ந்தான் - காதல்
மதுவனத்தைக் காக்கும் மறவருக்கு மூத்த
ததிமுகனார் என்பான் தளர்ந்து....509

என்நடந்த தென்ன இரவிசேய் எம்பெருமான்
தென்அடைந்த சோலை மதுதேக்கியே - முன்அடைந்த
அங்கதனை ஆதியர்வந்து ஆர்த்தனர்வந்து எற்றினர்காண்
எங்களையே என்றான் எடுத்து....510

அம்மொழியைக் கேட்டான் அருக்கன்சேய் ஆண்டகையே
எம்அனைக்கோர் தீங்குறும்என்று எண்ணற்க - அம்மஇனி
ஒன்றோ உலகுக்கு உறும்ஊ தியம்உணர்க
என்றான் உவகை எழ....511

அவ்விடம் உற்றாரை அறைதிஎன ஆளுடையாய்
தெவ்வடர்க்கும் அஞ்சனையார் சேய்முதலோர் - வெவ்வலிசால்
வீரர் பதினெழுவர் மேவினார் சேனையொடும்
ஆர்கலியும் நாண அவண்....512

என்றுரைப்ப வேந்தன் எறுழ்வலிசால் அங்கதன்தன்
மன்றல் மதுக்கா வனம்அன்றோ - சென்றவனை
தாங்குதிநீ என்னச் சரணடைவேன் என்றுபணிந்து
ஆங்குஅவனும் சென்றான் அமைந்து....513

சார்ந்தடியில் வீழ்ந்த ததிமுகற்குத் தக்கஉரை
நேர்ந்தருளி வெங்கதிர்சாய் நேரத்தே - ஆர்ந்தவலி
மேதகையை முன்னே விடுத்துஅடைந்தான் ஆளரிபோல்
சூதகலும் வாலி சுதன்....514

தென்திசைவாய்ச் சேண்மதியம் திண்கால் உடன்விரவி
மன்ற வடதிசைவாய் வந்ததென - குன்றின்
வருவானைக் கண்டான் மதவானைக் கன்று
பெருவானை ஈய்ந்த பிரான்....515

வந்தமலன் தாளை வணங்கான் மலரிருந்த
செந்திருமான் வாழும் திசைநோக்கி - விந்தமென
பார்மேல் தொழுதான் பதினா லெனுமுலகின்
சீர்மேல் புனைந்தான் தெரிந்து....516

ஏற்றஞ்சால் வானும் இரவி யொடுமதியும்
மாற்றஞ்சால் எவ்வுயிரும் வாழவே - தேற்றஞ்சால்
தென்இலங்கை தன்னில் திகழ்ந்தாணின் தேவிமழை
மின்னலென ஞானம் மிக....517

நின்குலமும் மற்றை நெடுங்குலமும் நேர்சனகன்
தன்குலமும் மேலைத் தவர்குலமும் - என்குலமும்
வாழ்வித்துக் கண்ணின் மழைமாரி யாலுடலம்
ஆழ்வித்து இருந்தாள் அனை....518

அறம்துணையோ மற்றும் அருள்துணையோ கற்புத்
திறந்துணையோ மற்றிதனைச் செய்த - மறந்துணையோ
மாதரசிக் கேற்றதுணை வையகமோ வார்கடலோ
யாதுதுணை என்பேன் இனி....519

காண்பது நின்தோற்றம் கழறுவது நின்நாமம்
பூண்பதுநின் ஆசைப் பொருள்கண்டாய் - மாண்புறவே
உண்பதுநின் செவ்வி உறங்குவதுஉன் யோகமதே
யெண்பதுமச் செல்விக் கியல்பு....520

அத்தகைய ளாய அருந்ததியை அவ்வரக்கன்
கைத்தலத்தில் தீண்டி உயிர்காப்பனோ - செய்த்தலையில்
சங்கேற்கும் வெண்மணியைத் தாமரைதன் பத்திரத்தால்
அங்கேற்கு நாடா அறி....521

மனத்துறலாற் தீண்டான் மனமிலார் தம்மை
நினைத்த வழிபடரு நீசன் - சினத்தினொடும்
தூளாய்த் தலைசிதறத் தூமலரோன் இட்டதொரு
மாளாத சாப வழி....522

என்றியம்பி யாவும் இலங்கையிடை நாடியதும்
மன்றன்மலர்ச் சோலையிடை வந்ததுவும் - புன்திறலான்
வந்திறைஞ்சிச் சொன்னதுவும் மங்கைஎதிர் ஓதியதும்
சுந்தரனும் சொற்றான் தொகுத்து....523

பின்விளைந்த வாறும் பெருந்தகைக்குப் பேசியவட்
கின்னுயிர்தந் தீயும் எழிலாழி - தன்னிருகை
தன்னா லளித்ததுவும் சாற்றியதும் ஆங்குரைத்தான்
என்னாளு மாளான் இருந்து....524

இன்னமொரு திங்கள் இருப்பல்யான் ஏகியமேல்
என்னுயிரை மாய்த்திடுவல் என்றதுவும் - பன்னியனை
தந்தவடை யாளமணி தந்தான் சகம்புரப்பான்
வந்தசெய மாருதியா மால். ...525

அம்மணியைக் கண்ட அபிராமற்கு அங்கமெலாம்
பொம்மன் மயிர்ப்புளகம் பூத்ததே - விம்மலொடு
நல்லுவகை பொங்க நவிலாது இருந்தனன்ஓர்
சொள்ளறையுங் காலத் துணை....526

செய்ய கமலத் திருவாழச் சீதைமணிக்
கையென்கோ காதலுறுங் கண்ணென்கோ - தொய்யன்
முலைஎன்கோ தேனேய் மொழிஎன்கோ பாச
வலைஎன்கோ சூடா மணி....527

ஆயிடையில் அங்கதனே ஆதிமுதல் வீரர்எலாம்
மேயினர்கள் வீரனையும் வேந்தனையும் - தூய்மையொடு
புக்கிறைஞ்சி வாழ்த்தப் புகன்றான் பொருளறியும்
சுக்கிரிவன் கையால் தொழுது....528

ஈண்டினியாம் தாழ்த்தல் எவனோ இறைவியையாம்
தேண்டருதல் வென்றிச் செயல்என்ன - ஆண்டகையும்
அன்னதே ஆகவென ஆர்த்தனஅச் சேனைஉவா
மன்னுவரி போல மகிழ்ந்து....529

கவியரசன் ஏவாற் கடலனயை தானை
புவிமுழுது மாகிப் பொலிந்து - சவிமணிவாய்
வண்ணத்தென் பாற்புணரி மன்னியது பன்னிருநாள்
எண்ணிஐய மேன்மேல் எழுந்து....530

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
சுந்தர காண்டம் முற்றிற்று.

6. யுத்த காண்டம்

6.1. இராவணன் மந்திரப் படலம்

பாதத் துகளாற்கற் பாறைவடி வங்கயற்கண்
மாதெனச்செய் தோன்கருணை வள்ளலே - போதத்து
ஒருமுதலாய்ப் பல்வேறு உருவாய் நின்றான்என்று
அருமறைகள் ஓதும் அறிந்து....531

வெள்ளப் பரவை வியன்பாற் கடல்எழுந்தோர்
பள்ளப் பரவையிடைப் பாய்ந்ததெனும் - விள்ளரிய
தானை யொடும்எய்திய வண்டங்கினான் தாழ்ந்திறைஞ்சும்
வானவர்க்காய் வந்தருளும் மால்....532

எப்பொருளும் ஆன இராமன் இகல்கடக்கும்
செப்பரிய தானையொடும் சென்றெதிரும் - உப்புவரி
ஏற்றிருப்பச் சொல்லாம் எரிவாய் எரிந்தநகர்
மாற்றலர்தம் செய்கை வடித்து....533

செங்கமலம் மேய திசைமுகனோடு எய்தியவண்
தங்கினிய பண்டைத் தகைமையினும் - புங்கமுற
விச்சையினாற் செய்தான் விச்சுவகன் மாவெனும்
தச்சன்நகர் பொன்னாற் சமைத்து....534

கண்டான்விண் நோக்கிக் களித்தான் கமலமலர்ப்
பண்டாதிக்கு ஏற்ற பலியியற்றித் - தண்டாவின்
தச்சனுக்கு வாய்த்த தகவளித்துத் தானடைந்தான்
நச்சரவம் ஒப்பான் நகர்....535

ஆயிரங்காற் பத்தி அவிர்மண் டபநாப்பண்
சேயொளியார் ஆதனத்தின் தேத்திருந்து - தூய
மதியமைச்சர் தம்மை வருகவெனச் சொற்றான்
கதிரமைச்ச வேலான் கடிது....536

உற்றார் உடன்பிறந்தார் ஓங்குரிமை பூண்டார்நூல்
கற்றார் உடன்கலப்பக் காலுடனே - மற்றாரும்
எய்தா வணங்கா இருத்தினான் ஏடவிழ்பூங்
கொய்தாம வேலான் குறித்து....537

புன்குரங்கொன்று எய்திப் புரிந்த செயலறிந்தீர்
என்பெருமைக்கு எய்தா இழிவுற்ற - மின்பிறங்கும்
மாமகுடம் ஏந்தி வளனியற்று மன்னரசு
தோம்எனவுட் கொண்டேன் துனிந்து....538

கூவமொடு காலும் குருதிநீர் ஊற்றுறுவ
மாவடுவேற் கண்ணார் மலர்க்கூந்தல் - நாவி
மணநாறி இன்னும் வளர்சுறுவை மன்னும்
குணமார் அறியார் குறித்து....539

இராவணன்என்று என்னை இமையோரும் எண்ணிப்
பராவுவரோ நோக்குமின்என் பான்மை - அராஅகிலம்
வென்றி பெற்றம் வீரம்வெளுக்குமே மேதகையீர்
நன்றரசின் வாழ்க்கை நலம்....540

என்றுஅரசின் மேலோன் இயம்ப எரிவிழியா
நின்றயர்தி போலாம் நெடுங்குரங்கைப் - புன்திறலார்
மானிடரை வென்றுனக்கு வாகை தருவலென்றான்
சேனைமுத லாளன் தெரிந்து....541

வெள்ளி மலையெடுத்த வீரம் நினையாமல்
எள்ளுதியோ உன்னை எனஉரைத்தான் - வள்ளை
சகோதரற்கும் மாயப்போர் தான்இயற்ற வல்லான்
மகோதரப்பேர்க் காளை மதித்து....542

ஏயினைஎன் பாற்கொணர்தி எண்குரக்கை யென்றுனது
வாயுரையென் பாலுரைக்க மற்றறியாய் - சோகமுறும்
இச்சிரத்தை என்னாம் இனியென்று எடுத்துரைத்தான்
வச்சிர தந்தத்தான் வகுத்து....543

அன்னவனைக் கைகவித்தான் ஆலம் எனஎழுந்தான்
மன்னவனை நோக்கி வலனுடையோய் - முன்னரிய
வன்முகங்கொண்டு ஏகி வலிமுகங்கள் மாய்ப்பல்என்றான்
துன்முகனாம் வீரன் துணிந்து....544

மாபக்கன் பேயன் வளர்தூமக் கண்ணன்அழற்
கோபக் குருதிக் கொடுங்கண்ணன் - தூப
மகப்பகைஞன் ஆதி வலியார்கள் தத்தம்
அகக்குரிய சொற்றார் அடுத்து....545

வெம்புரை வல்லாரை விலக்கியொரு வெற்பனைய
கும்ப கருணக் கொடுங்கூற்றம் - அம்புவியின்
மற்றொருவர் தாரமதை வவ்வுதலோ வாழ்க்கையினி
இற்றதன்றோ வீரம் எலாம்....546

அயன்குலத்தில் தோன்றிமறை ஆயிரமும் கற்றாய்
பெயர்விலரும் பல்வரமும் பெற்றாய் - மயன்மகளோடு
எண்ணிலாத் தேவியர்கள் ஈங்கிருப்ப வேறுமனை
கண்ணுதலோ செல்வக் களிப்பு....547

தேவருக்கும் மற்றைத் திசைபுரக்குஞ் சேவகர்க்கும்
மூவருக்கும் எய்தா முழுவரசாய்க் - காவல்புரி
கொற்றமெலா மைய குரங்கொன்றாற் கோளுறுமே
இற்றதன்றோ வீரம் இனி....548

அவ்வேளை இந்திரசித்து ஆர்த்தெழுந்து மேகமெனச்
செவ்வே எனது திறலினையும் - வெவ்வேறாம்
பாசம் வலியும் பகராதென் என்றுரைத்தான்
மூசனலை ஒப்பான் முனிந்து....549

வெம்பிஎழும் சேயை விலக்குமதி யான்றவிறல்
உம்ப ருரையா வுரைதந்தாய் - பின்புரிவது
எண்ணகிலாய் பிள்ளைமையா லென்றமைய வீடணனாம்
அண்ணலிது சொற்றான் அறிந்து....550

புல்லறிவு சான்றேன் புகலுரையை ஓர்பொருளா
நல்லதென முற்றும் நனியோர்ந்து - வல்லை
திருவுள்ளத்துக் கேற்றவினை செய்திடுக வென்ன
வுரைவகுத்தான் மெய்மை உணர்ந்து....551

எவளருளால் இவ்வரசி னேற்றமொடு செல்வம்
எவளருளால் வீரத் தியற்கை - எவளருளால்
யாமுதலார் வாழ்வே மவளன்றோ ஈங்குறைந்த
பூமடந்தை யாராயும் போது....552

குரங்குசுட்ட தீயெனவே கோடியோ குன்றா
வரங்கிளரும் மக்கனியின் மாண்பார் - திரங்கிளருங்
கற்பொழுக்கம் அன்றோ கனலுருவாய்ப் பற்றியதை
அற்பமெனக் கொள்ளேன் அயர்ந்து....553

நரர்வலிய ரின்றெனவே நாடிமுதன் மேனாள்
அரன்முதலோர் பாலணுகி யாய்ந்த - வரன்வலியாற்
பெற்றதிலை யத்தகைமை பேணினையே னூன்முறையாற்
கற்ற பயனுண்டாங் கருது....554

வாலி யெனுங்குரங்கின் மாட்சிமையு மாயிரந்தோள்
சாலுநரன் தன்வலியுந் தானறிந்துங் - கால
வினையறிந்துந் தீத்தொழிலை மேவுதலோ வென்றி
முனையறிந்தா லன்றோ முறை....555

சம்பரனைக் கொன்ற தயரதமன் புத்திரரா
உம்பருக்காய் வந்த உரவோர்கள் - வெம்பியெழு
தாடகையைக் கொன்றார் தவக்கோசிகன் உரையால்
நாடறிய வையாவந் நாள்....556

மல்லிறுத்த தோளாய் மணிமிதிலை மேவியநாள்
வில்லிறுத்தான் தாய்சொலிற்கான் மேவினான் - புல்லிறுத்துக்
காகம் புரந்தான் கரனாதியர்க் களைந்து
மாகம் புரத்தான்இம் மன்....557

திரன்உருவத் திண்சிலையாற் செங்கதிரை மூடும்
மரனுருவ வாலி வரனார் - உரனுருவ
வாளியொன்று போக்கி மகத்தவரை அஞ்சலென்றான்
ஆளிபோல் வீரன் அடைந்து....558

வானரங்கள் வானவர்கள் மானிடர்கள் மாமடுவில்
ஆனைமுதலே என அழைப்ப - ஏனெனமுன்
வந்தளித்த மாலே வரலாறிது என்றான்
மந்திரத்திற் சான்றான் மதித்து....559

கற்றோரின் ஆன்ற கவிஞனுரை கேட்டுப்
பொற்றோள் குலுங்கப் புகையோடுந் - தெற்றா
வெரிபிறங்க நக்கறிவி னேற்றமுற்றா யென்றோ
உரைமொழிவ தானான் உருத்து....560

தேவரையும் வென்று திசைக்கரியின் வீறடக்கி
தாவரிய வென்றி தலைப்பெறுநாள் - நீவரைந்த
மூலமால் யானை முறைக்கருளு முன்பனொரு
பாலனோ சொல்வாய்அப் பா....561

அஞ்சலைநீ யைய அறம்புரிவா யாங்கொடியேம்
உஞ்சனைநீ முன்போ லுரனடக்கித் - தஞ்சமெனக்
கானிடன்வாய் மேவிக் கருத்தடக்கிக் கைகுவித்து
மானிடரைப் போற்றிநனி வாழ்....562

என்றுரைப்ப வந்தோ விரணியனென்று உன்னிலுமோர்
வென்றியனவ் விண்டுவினான் மேனாளிற் - தன்திறமை
எல்லா மடங்கி இறந்தமைகே ளென்றுரைத்தான்
மல்லார்தோள் வீடணனா மன்....563

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.2. இரணியப் படலம்

தேவரான் மற்றைத் திசைக்கரியால் தேர்வரிய
மூவரான் மற்றை முனிவராற் - சாவரியான்
பண்டை மறையின் பகர்பொருளா லும்படான்
அண்டமெலா மாள்வான் அரசு....564

ஆக்குவதும் தீயின் அழிப்பதுவும் ஆங்கவற்றைக்
காக்குவதுந் தானே கடன்கொண்டான் - மேக்குயர்ந்த
ஆரணமு நூலும் அவனே இறைஎன்னப்
பூரணமாய் ஓதும் புகழ்ந்து....565

ஓதும் பொழுதும் உறுபகையை உள்ளடக்கிக்
காதும் பொழுதுங் கணிப்பற்ற - வேதநெறி
ஆற்றும் பொழுதும் அவனடியே அன்புறுவார்
தேற்றந் தெரிவார் தினம்....566

ஆயவன்தன் மைந்தன் அறிஞரினும் நல்லறிஞன்
தூயவரிற் தூயன் துழாய்முகிலை - நேயமொடு
நாணாளும் போற்றும் நயன்கெழுமு நற்குணத்தான்
சேணார் புகழ்தவத்தான் தேர்....567

அன்னவனை நோக்கி அருமழை நூலாய்தியெனும்
பன்னரிய தாதை பணிகொண்டு - மன்னுமறை
எல்லாம் உணர்ந்ததுஓ ரேந்தல்பால் ஏகினான்
கல்லது கற்றான் களித்து....568

அந்தணனும் நுந்தை அபிதான மோதுகென
முந்தை மறைமுடிவு முன்னியே - அந்தமிலா
நாரா யணாய நமவோ மெனமொழிந்தான்
ஆராத காதல் அடைந்து....569

ஆகெடுவா யென்னை அவமதித்தா யுந்தையைநீ
சேகுறுஞ்சொல் அந்தோ தெரிவித்தாய் - ஏகியது
சொல்வல் எனநடுங்கித் தோற்றத்தோர் கூற்றமெனு
மல்லவனை உற்றான் மருண்டு....570

தேவனே நின்சிறுவன் செப்பிய செப்பிடஎன்
நாவுரைக்க வஞ்சுமா னாணமின்றிப் - பூவுலகில்
ஏற்றமிலா மாற்றம் இயம்பி மறையோதிலனின்
தோற்ற மறியாச் சுதன்....571

என்சொன்னான் சொல்லுகநீ யென்றுஉரைப்ப மெய்ந்நடுங்கி
புன்சொல்நாச் சொன்னாற் பொறுக்குமோ - நின்சொல்நேர்
அவ்வுரையைக் கூறி னருநரக மாழ்வனென்றான்
தெவ்வடர்க்கும் வேலான்றன் தேத்து....572

நன்றறிது மென்னாவன் நாயகனைக் கூவுகெனச்
சென்றழைப்ப வேவற் றிறல்வல்லார் - அன்றவனும்
புக்கிறைஞ்சி நிற்பவெதிர் புல்லிமறை கற்றதெவன்
இக்கணுரை யென்றான் எடுத்து....573

வேதத்தும் வேதம் விரித்தோர் உணர்ந்த பெரும்
பூதத்து மெல்லாப் பொழிலொடுமைம் - பூதத்து
நின்றவன்ற னாம நினைத்துஉரைத்தே னீதன்றி
ஒன்றிலைவே றுண்மை உனக்கு....574

அப்பெயரே தென்னி லரும்பதத்தை யன்பருக்குத்
தப்பறவே தந்து தனிபுரக்குஞ் - செப்பரிய
நாரா யணாய நமவென் றிடுமனுவே
ஆராய்தி என்றான் அறிந்து....575

முக்கட் பெருமான் முளரிப் பெருந்தலைவன்
மக்கள் முதலெவரு மன்னவனே - மிக்குயரம்
மந்திரத்தால் அன்றோ அருஞ்சிறப்புற் றாரதின்சீர்
நந்திரத்தாற் சொல்லரிது நாடு....576

சாங்கிய யோகத்தின் தகையால் அறிவுறும்அப்
பாங்கருமை யான பரம்பொருளை - ஈங்கெவரே
காணுவார் காணுங்கண் கண்டன்றோ காணுவது
மாணறிவா லையா மதித்து....577

ஓரக்கர மார்ந்து உலப்பிலா மன்னுயிர்கள்
ஆரக்கதி ரார்ந்து அழகுடைத்தாய் - ஈர
விரையிலாப் பல்லிதழ் சேர்மென் பொகுட்டிலின்றோ
புரையிலா ஞானப் பொருள்....578

ஆர்ந்தவிதழ் நாலாயோ ராறாகி யையிரண்டாய்
தேர்ந்த பனிரெண்டு சேர்ந்துளதாய் - ஏய்ந்தபதி
னாறா யிரண்டா அறிந்தவர்தம் பாலறிவு
தேறா தெனமுடிவாந் தேர்....579

என்றறிவன் சொற்ற விதவுரையை யேதமெனக்
கன்றியெழு தூமக் கனன்மண்ட - நின்ற
பகையாளன் தன்பெயரைப் பாயென்ன நீயும்
நகையா வுரைப்பாய் நனி....580

இற்புலியின் நாமம் மிருந்தோ தினால்எலிக்கோர்
நற்பயனும் உண்டுஎன்று நவில்வதுபோல் - எற்கெதிரா
மாற்றாக யென்னோ வழுத்தினைநீ பிள்ளைமையால்
தேற்றாதென் ஆண்மையிது சொல்....581

என்றிவனைக் கொன்மி எனக்குரிய பிள்ளையிலன்
குன்றியல்வே யன்ன குலப்பகைஞன் - இன்றினிநீர்
தாழ்க்கிலீ ரென்னவுரை தந்தான் தனக்கொருவர்
மேக்கிலையென் றாய்வான் வெறுத்து....582

சூலத்தால் வேலாற் சுடர்மழுவால் தோமரத்தால்
ஆலத்தால் தீப்பல் அடல்அரவால் - காலக்
கடுங்கனலாக் காதவினை கற்றாரக் காதல்
படும்பரிசு காட்டினர்அப் பா....583

இத்தன்மை யான எழுதரிய இன்னல்எலாம்
அத்தனையே போற்றி யடையானாய் - சித்தங்
கலங்கா திருந்தான் கருதரிய மேலோர்க்கு
அலங்கார மாகும் அவன்....584

மற்றும் வினைபுரிந்தார் மாளாமை தேர்ந்தரிதின்
ஒற்றர்விரைந் தித்தகைமை ஓதுதலும் - மட்டடந்தோட்
பொன்னவனும் நோக்கிப் புகைந்தான் பொருக்கெனஎன்
முன்னழைத்தி என்றான் முனிந்து....585

ஓடினர்கள் வல்லே உனையழைத்தான் உந்தையென
ஆடவர்கள் நாதன் அருகணைத்து - தாடொழலுஞ்
சிங்கவேறு என்னச் செயிர்த்தடநின் தேவனென்பான்
எங்குறைவான் சொல்க என....586

சொல்லிடத்தும் வேதத் துறையிடத்தும் சூழரியார்
பல்லிடத்தும் வானப் பரப்பிடத்தும் - சில்லிடத்தும்
என்னிடத்தும் நின்னிடத்தும் இத்தூண் இடத்தும்முளன்
மன்னவகாண் என்றான் மதித்து....587

நன்றெனவே பொன்னன் நகைத்தான் நகைத்திடிபோல்
குன்றிடைவீழ்ந்து என்னக் கொடுங்கரத்தால் - நின்றமணித்
தூணின்வாய் எற்றிச் சுரிகையொடு நின்றுருத்தான்
சேணுளோர் அஞ்சத் திகைத்து....588

மந்தரநேர் தூண்வாய் வலியார் நரமடங்கல்
வந்துதித்து வாளவுணர் மாயவினை - சிந்த
இரணியனை மார்பிடத்தே ஏழுலகும் காத்தான்
அரணி இடைக்கனல்போல் ஆங்கு....589

ஆதலால் ஐய அடியேன் உரைத்தவுரை
தீதிலாது என்னத் தெரிந்தருணின் - காதலால்
ஈதுஉரைத்தேன் என்றான் இனவண்டு கிண்டியபூந்
தாதுரைத்த தாருடையான் தான்....590

மந்திரநூல் வாய்மை மனக்கொளான் வாளரக்கன்
சிந்தையனல் பொங்கச் சினங்கொண்டான் - வெந்தகைய
மாலுகந்தீந் தேறலுற வானமுதஞ் சேர்ந்திடினும்
சாலுஞ் சுவையுறுமோ தான்....591

முந்தையரிக்கு அன்பாய் முனைந்தெழுந்து மூளையின்றித்
தந்தைதனைக் கொன்ற தறுகணன்போல் - வெந்திறல்சேர்
எம்மவரைக் கொன்றரசை ஏந்துதியோ வாதைபுரி
மும்மலங்கள் வென்றாய் முனைந்து....592

அன்றிலங்கை எய்தி அரணழிந்த அக்குரங்கை
கொன்றருளல் என்றுமறை கூறினாய் - இன்று
பழியுரைகள் கூறிப் பழிச்சினையன் னோரை
ஒழுதியிவண் என்றான் உருத்து....593

என்றரக்கன் கூற இதுவே நலனென்னத்
தன்றுணைவ ரோடுஞ் சரளமணித் - தெண்டிரைமாடு
உற்றான்வெண் பாற்கடலில் ஓங்கியதிண் சேனையினைக்
கற்றானும் கண்டான் களித்து....594

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.3. வீடணன் அடைக்கலப் படலம்

கடற்கரையை உற்ற கவிஞனும்மெய் ஆழிப்
படைப்புயலை நோக்கும் பரிவால் - இடத்திடைவேறு
எண்ணி இருந்தான் இனத்தோர் உடனிதுகால்
நண்ணினன்பொற் தேர்மேல் நளன்....595

ஆய பொழுதில் அமலன் அருங்கடல்வாய்ச்
சேயவனை உன்னிச் செழுமணியும் - தூய
பவளமுங்கண் டந்தோவப் பாவையுறுப்பு என்றான்
குவளைநேர் கொண்டான் குறித்து....596

அடைக்குருகும் செங்கால் அவிர்பளிக்கு மெய்ய
பெடைக்குருகு நாடிப் பெருவெண் - புடைக்குருகர்
ஒண்சிறகால் மெய்யணைப்ப ஊடுவன கண்டுருகி
மண்புரந்தான் கொண்டான் மயல்....597

சந்தநறுங் கானந் டவழ்ந்தருவித் தண்புன றோய்ந்து
அந்தரத் தண்கடல்வாய் ஆர்ந்தணவி - மந்தமுறுந்
தென்றன்மழை நுண்டிவலைச் சீகரத்தோடு ஆகமுறத்
தன்றுணைத்தோள் நோக்கும் தளர்ந்து....598

வாளறலோ கூந்தன் மணியோ முறுவலணி
நீள்பவளத் துண்டோ நிலவிதழ்தான் - கோளரக்கன்
கொன்றுமிழ்ந்தான் கொல்லோ கொடியேபூங் கொடியேஎன்று
அறன்றயர்ந்தான் ஆளரிஅன் னான்....599

இவ்வண்ண மாதுதனை யெண்ணி யெழில்கொண்ட
மைவண்ணத் தண்ணல் வலிமுகமாம் - செவ்வண்ணச்
சேனைநடு வெய்தித் திகழ்ந்தான் செகம்புரப்பான்
வானவர்க்காய் வந்த திருமால்....600

ஆயிடையில் வீடணனு மானவரோ டெய்திநிலம்
தாய பரனே சரணென்னக் - கூயதொரு
நல்லுரையார் யாரெனு முனண்ணினார் நாகமெனப்
பல்லுடைய வீரர் படர்ந்து....601

அரக்கரிவ ராகு மரிதிவரைப் பற்றித்
தரைத்தலனிற் றேய்மின் தகைமின் - மரக்கிளையாற்
கொன்றுருமிற் குத்திக் கொலைபுரிமின் கோள்களறத்
தின்றிடுமி னென்பார் தெளித்து....602

அப்போது இராமன் அருளால் அடைந்தனர்மெய்த்
துப்பார் மயிந்தன் துமிந்தன்என்பார் - வெப்பார்
படைவிலக்கி யாவர் படர்ந்தவாறு என்னோ
நடைநவற்றி என்றார் நனி....603

முற்றுணர்வு சான்றோன் முழுமலரோன் ஆயவன்முன்
பெற்றமகன் பேரனுக்குப் பின்பிறந்தோன் - கற்றவர்பாற்
பேரன் புடையான் பெயர்ந்தான் பெருங்குணத்தால்
வீரமுறும் வாழ்க்கை வெறுத்து....604

உறுதிமொழி முன்னோற்கு உரைத்தலால் வெய்ய
குறைமொழிகள் கூறக் குறித்த - பொறைகெழுநூல்
வல்லான் துறந்தான் வரவீ தெனமொழிந்தான்
மல்லார் புயத்தனிலன் மற்று....605

நண்றறிவு சான்றீரே நாயகற்குச் சென்றுரைப்பான்
நின்றிருத்தி ரென்ன நிகழ்த்தியே - வன்றனுக்கை
மன்னவன் பாலுற்றான் மயிந்தன் மலையனையார்
அன்னவரைக் காவல் அமைத்து...606

இந்திரவிற் பூண்ட எழிலார் முகிலனைய
சுந்தரப் பாதந் தொழுதெந்தாய் - வந்தவர்தம்
மன்னுளமிற் றென்று வகுத்தான் மதியனிலன்
சொன்ன படியே தொகுத்து....607

அவ்வுரை கேட்டுஐயன் அணிமுறுவல் பூத்துவந்து
மொய்வலியார் தங்கண் முகநோக்கி - இவ்வுரையால்
ஈங்குறுதல் பாலனோ இன்றோ உரைத்திரெனத்
தீங்கனிவாய் விண்டான் தெரிந்து....608

ஆழியாய்நீ ஒன்று அறியாப் பொருளுளதோ
ஏழையேம் யாதிங் கெணியுரைப்பேம் - ஊழ்முறையே
யென்னறிவிற் றோற்றியவா றீங்கிசைப்பன் என்றுரைப்பான்
மின்னு மணிமுடியார் வேந்து....609

முன்னவர்க்கு நீதி மொழிந்ததுவும் ஊழ்முறையே
அன்னவனை நீங்கி அடைந்ததுவும் - உன்னிற்
கரவடமென்று உள்ளங் கருதுமாற் காண்டி
உரவணைந்த தோளாய் ஒருங்கு....610

தஞ்சமுன்னி நம்வயினில் சார்ந்தான் அலன்கொடிய
வஞ்சமுன்னி வந்த வரவாகும் - கஞ்சமலர்
மாதுவாழ் மார்பா மதியிலார் தங்கேண்மை
வேதனையாம் என்றான் வெறுத்து....611

அரக்கர்குணம் நன்றென்று அறைவரோ ஆன்றோர்
கரக்கமுருக் கொள்வார் கயவர் - செருக்குடைய
மாயமான் தன்வரவே மானுமிவன் தன்வரவும்
ஆய்தல் கடன்என்றான் ஆங்கு....612

நன்றறிவு சான்றோர் நயந்தோர் நலிவுடையோர்
தொன்றுமறை கற்றோர் துயருற்றோர் - மன்றலெனும்
செல்வம் இழந்தோர் செயிர்ப்புற்றோர் சேயிழையார்
பல்விசனம் உற்றோர் படர்ந்து....613

வேற்றுமன்னர் செய்கை வெறுத்தோர் சமர்க்களத்துத்
தோற்றரண மென்னத் தொழுதடைந்தோர் - சாற்றியபூம்
பட்ட மிழந்தோர் பயன்பெறுமா றெய்தினோர்
இட்டமுறல் ஏய்ந்தோர் இவர்....614

இத்தகையர் நம்பால்வந்து ஏற்றல் வரவேற்பது
உத்தமமே யாயினுங் குற்றார்கள் - எத்தகையர்
என்றறிதும் வல்லார் எளியோர் அவரென்றான்
குன்றுதழ்தோள் நீலன் குறித்து....615

மற்றவரும் தத்த மனநிலையால் வந்தவன்சீர்
பற்றுதல்பாற் றன்றெனவே பன்னினார்- முற்றுணர்ந்த
மாருதியை நின்கருத்தென் வல்லாய் வழங்குகென
வீரனுரை தந்தான் விரித்து....616

மூவராய் வேத முதல்வனாய் மூவுலகின்
யாவுமாய் நின்ற இறைவனே - மேவரிய
இத்தகையி னானைநல்லா என்னளவில் என்றறிந்தேன்
அத்தகைகேள் என்றான் அறிந்து....617

அன்று கொடியனாம் ஆடல்வலி வாளரக்கன்
கொன்றிடுமி னென்னக் குறிக்குங்கால் - நின்றிவனுந்
தூதர்தமைக் கோறல் துறையன் றெனமொழிந்தான்
வோதுவன வெல்லா முரைத்து....618

நல்ல நிமித்தமெலாம் நான்கண்டேன் ஈங்கிவன்வாய்
எல்லமைந்த மாடத்து இவையன்றிப் - புல்லியவூன்
வாய்ந்த நறவருந்து மார்க்கமிலை அந்தணரில்
ஏய்ந்ததிவன் வாசத் திடம்....619

பகைப்புலத்தோர் தஞ்சமெனப் பாரியோ மென்னின்
நகைப்புலத்த தாய்முடியு நம்ப - தகைப்புலத்து
மேலவரும் எண்ணி விளம்புவரோ நம்வீரம்
நூலறிவால் நோக்கி நுனித்து....620

ஆதலால் அண்ணால் அடியேன் அறிந்தபடி
ஓதினேன் மற்றுன் உளப்படியே - சாதமென
ஆரியனும் நோக்கி அனைவீருங் கேண்மின்எனச்
சீரியன்ற சொல்வான் தெரிந்து....621

மாதவத்து மாருதிசொல் வாய்மையே மற்றினியென்
ஆதரத்தால் வந்தபைய மாவானை - மாதரத்தீர்
கைப்பற்றோம் என்னில் கருதுவரோ காசினியோர்
துப்பற்றோர் என்பார் துணிந்து....622

புறவுக்கு உயிர்கொடுத்த புண்ணியனும் பூவின்
இறவுக்கு உயிர்கொடுத்தங் கேற்ற - மறலிக்கோர்
பூந்தா ளூதைஅளித்த புண்ணியனும் இன்றளவும்
சாந்தாரம் உண்டோ தறை....623

கையடையுற் றானுயிரைக் காவானுங் காரமைதி
செய்யுதவி எண்ணாத் திருவிலியும் - பொய்மொழியா
மாமறையின் நீதி மறந்தாலும் மாண்புடையீர்
தாமுறுவர் அன்றோ தழல்....624

பெடைவலித்துத் தன்னைப் பிடிக்கவரும் வேடற்கு
அடைவுறத்தீ மூட்டி அனல்வீழ்ந்து - உடலொழித்து
நல்லிரையாய் வீடுயர்ந்த நற்புள்ளின் பேருதவி
சொல்லுந் தரமோ துதித்து....625

வன்கரவான் மெய்வருந்தி வாரணநின் றோலமிட
முன்புகுந்து காத்த முராரிதன் - தின்புகழுங்
கேட்டிலிரோ ஆதலினாற் கேளார் எனினுநலம்
நாட்டுதலே நன்றென்றான் நன்கு....626

ஆயவனை நீபோ யழைத்துவா என்றுஅரக்கன்
சேயவனுக் கோதத் திறலரக்கர் - நாயகனை
உற்றா னிரவினெதிர் ஓண்மதியம் புக்கதென
மற்றாம வீரன் மகிழ்ந்து....627

மான்மயிந்தன் தன்னிளவல் வாளரக்கர் கோமாற்கு
வான்மணிதன் மைந்தன் வருகின்றான் - கோனுரையால்
நின்னை அழைப்பவென நெஞ்சுருகித் தானுமெதிர்
மன்னினான் உள்ளம் மகிழ்ந்து....628

அல்லும் பகலும் அணைந்ததென அன்பினோடும்
புல்லி யிருவருமப் போர்வலிசால் - வில்லியெனும்
வண்ணக் கனிவாய் மரகதப்பொன் மாமேனி
அண்ணலுருக் கண்டார் அடுத்து....629

பாற்கடலில் வீற்றிருந்த பான்மையெனப் பல்வலிசால்
மாற்கடஞ்சூழ் வைப்பின் வயங்கொளியார் - சூற்கிளர்ந்த
மேகம்போல் வீற்றிருந்த மெய்ப்பொருளைக் கண்டிவன்பொன்
நாகனே என்றான் நயந்து....630

செம்பவள வாயுஞ் சிறுநகையுஞ் சேவடியும்
வம்பவிழ்ந்த செந்தா மரைமுகமும் - பைம்பொற்
சடைமுடியும் நீனிறமுந் தாழ்கரமுங் கண்டாங்
உடல்புளக முற்றான் உவந்து....631

காண்டொறுமா னந்தநெடுங் கண்ணீர்க் கலுழிபொரப்
பூண்டபே ரன்பு பொலியவே - யாண்டகைதன்
பாதார விந்தம் பணிந்தான் பணியற்றுக்கு
ஆதார மாவான் அணைந்து....632

தொழுதவனைக் கஞ்சத் துணைமலர்க்க ணோக்கி
அழகொழுகு மார்பின் அணைத்துத் - தழுவியிரு
கையா லிருக்கை கனிந்தளித்தான் காரனைய
மையாந்த மேனிநெடு மால்....633

நீருள் ளளவும் நெடுமதிய முள்ளளவும்
பாருள் ளளவும் பராவரிய - காரொடுமென்
பேருள் ளளவும் பிழையிலா தாண்டிடுக
சீரிலங்கை வாழ்க்கைச் சிறப்பு....634

பொருணயந்தீர் புன்பிறவிப் போக்கொழிய வையன்
கருணைமதுத் தேக்கிக் களித்தான் - தெருள்நயந்த
கற்றா ரிவன்றிறத்திற் காசினியில் யாவர்நலம்
பெற்றாரென் றேத்தப் பெரிது....635

என்றும் துயிலா இளையோ யினையோற்குத்
துன்னு மணிமுடிநீ சூட்டுகென - மன்றலுறும்
பாட்டளித்தார் வேந்தன் பரதனுக்குச் சூட்டியது
சூட்டுகென சொற்றான் தொழுது....636

பழுவமதின் மேய பரிசானின் னோடு
எழுவரென ஆனோ மிசையோய் - தருவினையால்
என்னுரையுங் கோடி இகையே லெனமொழிந்தான்
பொன்னுரையாம் மேனிப் புயல்....637

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.4. இலங்கை கேள்விப் படலம்

உடன்பிறந்தா யென்னு முரைக்குவகை பொங்க
புடன்பிறந்த பொன்னிற் பொலியும் - தடங்கதிர்
மாமகுடம் தாங்கி வயங்குதைய னுச்சியுறு
மாமலையி னின்றான் மகிழ்ந்து....638

ஆயிடையி லய்ய னரிக்குலத்து வேந்தனைநீ
சேய மவுலிபுனை சேயோனை - ஏயநெடும்
மானமீ தேற்றி வலம்புரிமி னென்றுரைத்தான்
ஆனதெனச் சென்றான் அவன்....639

வானவர்கள் வாழ்த்தி மலர்சொரியச் சந்தனவி
மானமீ தேற்றி வலம்புரிந்தார் - சேனையொடு
மாகாள மேக மலைவானை வால்வலிசால்
நாகா திபர்கள் நயந்து....640

அக்காலை வெய்யவனும் அத்தமன மாகநெடு
மைக்கார் இருளாய் மலிந்ததே - கைக்காலப்
போராழி கொண்ட புயலே பரமென்றார்
காராழி நெஞ்சிற் கலந்து....641

மையலுறு மாந்தர் மடவா ருயிர்செகுப்பான்
தெய்வக் கருப்புச் சிலைவேடன் - பையவே
சிற்றுடைவாள் கொண்ட செயலே திகழுடுமீன்
பெற்றெழுந்த வானப் பிறை....642

முற்றுசூற் கொண்ட முதுபிடியின் மாமயிலிற்
செற்றமறு மன்னச் செழும்பெடையிற் - பற்றுடையார்
அந்தகைய ராவி அயர்வடைய வந்ததுவே
மந்தமந்த வாடை மணந்து....643

ஆய பொழுதி லயர்வுடைய வய்யனைப்பொன்
ஏய கதிரோ னிளஞ்சிறுவன் - நீயயர்தல்
என்னே செயன்முடிப்ப தென்னே யெனமொழிந்தான்
சொன்னேர்வ வெல்லாஞ் சொலி....644

அருட்பவளாய் விண்ட ணியலங்கன் மோலி
குருக்கிளரும் வல்லரக்கர் கோவின் - உருக்கிளரும்
வாள்வதன நோக்கி மதியோ யிராவணனார்
தோள்வலிசொல் என்றான் தொகுத்து....645

வள்ளலே வெள்ளி வரையெடுத்தான் வாள்வலிமை
தெள்ளுலகத் தேவர் தெரியாதார் - வள்ளுறுதோட்
கும்பகன்ன னென்றோர் கொடுங்கால னொப்புடையான்
உம்பரையும் வென்றான் உருத்து....646

மந்திரசித் தான்ற வலியான் வரிசிலையான்
இந்திரசித் என்றோர் இருங்கூற்றந் - தந்திரத்தோடு
ஏற்றானை இந்திரனை ஏற்றுதளை இட்டனன்காண்
மாற்றார்க்கே றன்ன வலன்....647

அன்னமாய் வேதம் அறைந்தாய் அதிகாயன்
என்னுமோர் கூற்றி னியல்புடையான் - முன்னரிய
மாயவினை யில்லா வலியான் மதுகைவளத்
தேயசுரர்ச் செற்றான் இவன்....648

புகைக்கண்ணன் கும்பன் பிசாசன் குருதி
நகைக்கண்ணன் வேள்வி நலிவான் - பகைக்கதிரை
வென்றானை யாதி விளியா லரத்தரறம்
தின்றா ரளப்பிலர்கள் தேர்....649

சீதரனே மாயவினை தேர்வான் திறலமைச்சன்
மோதரனென் றுள்ளான் முடிவறிவோன் - தீதவித்த
மாதவரைப் போத மயக்கு மயக்குடையான்
காதல் வினையுடையோன் காண்....650

குத்திரமும் வஞ்சக் குணமும் குடிகொளுவார்
எத்தனைசேர் கோடி யெனவுரைக்கேள் - பித்தனொடு
மத்தனிவர் பண்டு மறலியையும் வென்றணிந்தார்
அத்தனே வாகை அணி....651

முப்பரிசை யாதி முதுநகரிற் காவல்புரி
அப்பரிசார் ஆயிரநூற் ஆறுதசத்து - ஒப்புடன்வாழ்
கோடியெனச் சொல்வார் குறிக்கொடி யென்றுரைத்தான்
தோடவிழ்ந்த தாரான் தொழுது....652

இத்தகையா ரெண்ணிறந்தோர் இவ்வனுமன் கையிறந்தோர்
அத்தனேயக் கனையும் ஆங்கரைத்துப் - பத்தி
இலங்கைஎரி யூட்டி யிகன்முடித்த பான்மை
வலங்கொள்தோள் காணாய் மதித்து....653

ஏழுநாள் வானத் திருந்தா னிராவணனும்
வாழியாய் பின்னர் வளநகர - மூழ்முறையே
பண்டைய னாற்றப் பரிந்தானப் பான்மைவலங்
கண்டடைந்தேன் என்றான் களித்து....654

மாருதியை நோக்கி வரிவிற் கருணைநெடு
வாருதி யெனன்ப வலங்கொண்டே - காரனைய
பாவியரை முற்றும் படுத்தனைவிற் பாரமொடும்
ஏவரையான் வெல்வ தினி....655

ஏழுலகுந் தந்த இறைவன் திருப்பதத்தை
வாழியாய் நிற்கே வழங்கினேன் - தாழ்வறவே
இன்றுபோல் என்றும் இருத்திநீ என்றுரைத்தான்
மன்றலந்தார்க் கோசலையார் மன்....656

என்னையாட் கொண்ட இறைவன் திருப்புகழே
பன்னினார் ஆழிப் படைவீரர் - முன்னவனும்
காராழி நீந்திக் கடக்கும் பரிசெவனென்று
ஆராய்தல் உற்றான் அகம்....657

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.5. வருணனை வழி வேண்டு படலம்

முன்னூல் முறையே முறையறிந்து மூவுலகில்
தன்னேரில் லாத தனிப்பரமன் - பொன்னேரும்
புல்லிற் றுயின்றான் புயல்போற் புனலிறையாம்
நல்வருணற் போற்றி நயந்து....658

ஏழ்பொழிலும் ஏழ்கடலும் ஏழ்முகிலும் ஏழ்வரையும்
ஏழ்உலகும் ஏத்திடவே எம்பெருமான் -னேழுநாள்
சாலப் படுத்தான் தனிஇலங்கை யெய்தமணி
மாலப் படைப்பான் வகுத்து....659

ஊழிக் இறுதி யுடையா னுவந்துறுநாள்
ஏழுக்கிறுதி யென வறிந்தான் - ஆழிக்
கடற்கிறைவ னெய்தல்விழி காணான் கனன்றான்
அடற்சிலையை நோக்கி அவன்....660

எப்பொருளுஞ் சான்ற இயம்பினரு மேதமொடோர்
மெய்ப்பொருளை நாடின் விரும்பாரோ - எப்பரிசே
ஆயினுமென் பாலமைதி ஆக்கமுறச் செய்வலென்றான்
மாய்வில்புகழ்க் கோசலையார் மன்....661

சினத்தவரின் மூண்ட செழும்புருவங் கோட்டிக்
கனற்பொரி கண்காலக் கருதிப் - புனற்பரவை
வெந்து நீறாக விடுத்தான் சரமாரி
பைந்துழாய் ஆதிப் பரன்....662

உருமிற் கனலின் ஒளியிற் கொடிய
கருவிற் பகழிக் கணமாய் - மருவத்தண்
கார்க்கடலுந் தீக்கணமாய்க் கண்டனரக் கற்பகத்தார்
மேக்குயரும் வானோர் வியந்து....663

நஞ்சஞ்சார் கண்டன் நளிர்சடையின் நல்லமுதும்
அஞ்சஞ்சார் மேலோன் அணிக்கரமாங் - கஞ்சஞ்சார்
குண்டிகை யீனிருங் கொதித்ததே கோமான்கை
மண்டியதீ மண்டியதீ வாய்ந்து....664

செய்ய மகரத் திமிங்கிலமே யாதியவெம்
ஐயன் பகழி யடுக்குறலான் - மையலொடு
மாண்டு பொரிந்து வகிர்ந்து பொடிந்தனவே
மூண்டகன லோடு முடிந்து....665

மாற்றுவமை செப்புவதென்மாதவத்தால் வாய்ந்தவொரு
நற்றவன்றன் சாப நலிவெய்தப் - புற்றரவம்
ஒப்பான் குலம்போ லொருங்கரியாய் வெந்ததுவே
பப்பா ருவரிப் பயம்....666

வேய்ந்த சரக்குழுவால் வெந்தவுவாச் செயநீர்
வாய்ந்தமணி யாமை வளைசிலையோ - ஆய்ந்துறுபொன்
வங்கத்துப் பாதி வயங்கொளிநீ றாயினவென்று
அங்குரைத்தார் தேவர் அமர்ந்து....667

அவ்வழியி லெவ்வுலகும் அஞ்சி யலங்கொளீஇ
எவ்விதமோ என்றுஉலையு மெல்லைவாய்க் - கவ்வைக்
கடல்வருணன் மாழ்கிக் கடுகினான் அந்தோ
உடலெரியின் மூழ்க ஒருங்கு....668

வல்லுயிர்ப்பு வீங்க வழியறியான் வன்புகையாற்
சொல்லடுத்து மாறத் தொழுகரத்தான் - அல்லலுற
வேந்தா சரணம் விமலா சரணமெனத்
தாழ்ந்தான் வருணன் தளர்ந்து....669

அப்புவாய் விண்ணா யனலா யரியாகி
எப்பொருளு மாகி இணையில்லாய் - முப்புவனந்
தீர்ப்பா யொருமுதனீ சிற்றடிய னேன்றனையுங்
காப்பாய் சரணின் கழல்....670

காரண மாகிக் கருதரிய மாயையிலாப்
பூரணமு மாகிப் பொருள்பலவாய் - ஆரணமும்
ஆகமும் மாகு மகண்ட பரமுதால்
மாமகஞ்செய் தாண்டருளு வாய்....671

என்றடியில் வீழ்வானை எம்பெருமான் றன்கருணை
ஒன்றவெதிர் நோக்கி உருத்தமையால் - நின்றனைநீ
என்னோ மறந்த தெனவாய் புதைத்தழுது
சொன்னான் வருணன் தொழுது....672

பாரிலக்க மாகும் படர்திரைவாய் மீன்விளத்த
போர்விலக்கப் போன பொருடன்னான் - நீர்விளைத்த
நின்முறைமை தேறேன் நெடியோன் எனமொழிந்தான்
பொன்மலரின் றாரானப் போது....673

அஞ்சலை என்றையன் அயில்வாய் முகப்பகழி
வஞ்சமிலா நல்வருணன் வாய்மையால் - விஞ்சுமறு
காந்தாரத் தீவு கலந்தோ ரறவிடுத்தான்
மாந்தாதா நல்வழியா மால்....674

ஆயபொழு தஞ்சி அடிபணிந்து நிற்பவனை
நீயயர லிந்த நெடும்பரவை - ஆயதன்மேல்
செல்லுமா செய்தி திறலோ யெனமொழிந்தான்
மல்லனீர்க் கோசலையார் மன். ...675

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.6. திருவணைப் படலம்

நின்னுருவே யன்ன நெடுந்திரைகொ ணீக்கடல்வாய்
என்னுருவிற் சேது வியற்றியே - பின்னருறுங்
காரியங்கண் முற்றுகநீ என்றான் கடற்கிறைவன்
வீரனையே போற்றி விரைந்து....676

செங்கமல நாதன் றிருக்குமர னாந்திறலோன்
திங்கண்முக நோக்கித் திரைக்கடன்மேற் - துங்க
அணைபுரியு மாகருதி யாற்றுகநீ யென்றான்
இணையொருவர் இல்லா இறை....677

ஈறிலா வெங்க ளிறையோன் திருமொழியை
ஊறிலா வெய்யோன் மகன்உவந்து - வேறிலா
மெய்நளனுக் கோத விரைந்தான் வியப்புறுந்தன்
கைவளனைக் காட்டுவான் கண்டு....678

மாருதியை ஆதி வயவான ரத்தலைவர்
பேருடைய வானரங்கள் பேர்ந்தணுகிப் - பாரிடந்த
வோரேன மென்ன உயர்மால் வரைஉருட்டி
வேரோடுங் கொண்டதுவே மேல்....679

ஓர்மலையைக் காலா லுருட்டி ஒருமலையைப்
பாரமலைச் சென்னி பரிப்பவே - ஓர்மலையை
வாலிடையி லீர்த்திரண்டு மாமலையைத் தோள்கர
மேலிருத்தி வந்த விரைந்து....680

எத்தனையோ கோடியர்க ளெண்ணரியர் வானரத்தின்
உத்தமர்கள் வீசு ஒளியோங்கல் - கைத்தலையில்
தாங்கினான் விஞ்சைத் தருக்காற் றருவமரர்
வீங்கினா ருள்ளம் வியந்து....681

தேணாறு பாயுந் திருத்தடங்கை யேந்தினர்விண்
ஆனாத வீரர் அவைவீச - மீனோடு
மாலைமே கஞ்சிதறி வார்கடல்வாய்ப் புக்கதுவே
சோலைசூழ் விண்ணந் துளைந்து....682

பூவுங் கனியும் பொருதருவும் போரரியுங்
கவுங் கரியும் கடலுறலால் - பாவுங்
குறிஞ்சியே யாயினது கோவுறமுன் கூறப்
பெருங்சமப்பால் வண்ணம் பிறழ்ந்து....683

நானாளும் ஓம்பி நனிபுரத்த நண்பனுக்கோர்
மேனாள் விதியாலோர் வெம்மையுறத் - தானாடி
தாமும் பரிதலெனத் தாமவரை யோடுகடல்
ஏமுறுவல் எல்லாம் இயைந்து....684

எழுந்துவகை பொங்க இரைத்துவரும் வீரர்
விழுந்தமைய வீசுநெடு வெற்பர் - செழுந்தரளத்
தெண்டிரை மாந்துந் திரண்மேக மென்றிடலாம்
மண்டுதலால் மேன்மேன் வளர்ந்து....685

மாருதியென் றேத்தும் வலத்தான் எறிந்தமலை
மேருவினில் வீழ்ந்துருள வீழ்திவலை - காரிற்
பிறந்த துளியென்னப் பெரும்வா னுலகம்
சிறந்தனவா லெங்கும் தெளித்து....686

நீலனெடுங் கையால் நிலம்பிளந்து வீசியமைக்
காலவரை ஆழி கடவுதலான் - மூலமுறும்
பாதலம்வாழ் வெந்தறுகட் பாம்பின் பயங்கூர்ந்து
ஆதரவு பெற்ற தறிந்து....687

ஏத்தரிய வானரரங்கு இட்டநெடும் பன்மணியால்
வாய்த்தபருங் குன்றம் வனைந்தடுக்கிச் - சீர்த்ததனிழ்ப்
பாவலரிற் சேது பயத்தோடி யற்றினனன்
நாவலியை உற்றான் நளன்....688

அளக்கரிய வாழி யளக்கரிடை யாய்ந்து
பளிக்கறைபோ லொன்று படுத்தி - வளப்படுத்தும்
சேதுநலஞ் செப்பத் திசைமுகற்கு மாகுமோ
வேதமெனுந் தன்மை விரித்து....689

காற்றிண்டி வேண்டுங் கனலின்றிக் கைதவமாங்
கூற்றின்றிப் போற்றுங் குணமின்றி - மாற்றரிய
பான்மைத்தாய் நின்ற ப•றிபோ லானதே
மான்மைத்தாய் நின்றவணை மாண்பு....690

ஆதியா மோசனையோ ரையிரு பதாந்தகைத்தாய்
பாதிய கலமரைப் பத்தாகி - நீதிநெறி
வானவருங் கண்டரிதிவ் வாறமைத்தற் கென்னுமணி
யானவணைப் பேரறைவார் யார்....691

இத்தன்மை யாக இயற்றும் அணையறிந்தான்
முத்தன் வியந்து முழுநோக்காய் - பத்தியுற
இங்கியற்றுஞ் சேதுக் இணயெடுத்துச் சொல்வனோ
பங்கயத்தான் என்றான் பரிந்து....692

என்றிசைத்துப் புல்லி எழினளற்கு நல்வருணன்
அன்றளித்த மாலை அளித்தானாய் - வென்றியுறும்
வீரரொடு சென்றான் வியனரவிற் சென்றதெனப்
பேரணைமேல் ஐயன் பெயர்ந்து....693

மாடுருவச் செம்பொன் மணியார் வரநதியங்
ஊடுருவச் சென்ற உவமையெனப் - பாடுருவ
பானிறந்து வெள்ளம் பரிந்தெழுந்து சென்றனவால்
வானுரைக்கும் பேரணைமேல் வந்து....694

ஆய வரோடையன ரிக்குலத்து வேந்தரக்கர்
நாயகனெம் மாருதியு நண்ணவே - தூயநெடு
வாராழி சென்றிலங்கை மாடுறுமோர் வெற்படைந்தான்
நீராழி வண்ணன் நினைந்து....695

ஆயிடையி லய்யன் அருளால் அயர்வின்றித்
தூய நெடுஞ்சேனைத் தொகைக்கெல்லாம் - ஏயமணிப்
பாடிவீ டாற்றிப் பரிந்தான் பனிமலரோன்
நாடியே போற்றும் நளன்....696

தத்தமக்கு வாய்த்த தடம்பதியிற் றாமரைக்கண்
அத்த னருடாங்கி அடைதரலும் - வித்துருமத்
தொண்கொடியை யுண்ணி உருயிர்ப்ப ஊழ்முறையே
வண்கதிருஞ் சென்றான் மறைந்து....697

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.7. ஒத்துக் கேள்விப் படலம்

புன்னைக் குறும்பூப் புனைந்த நறுங்கந்தப்
பின்னற் திரையிற் பெயர்ந்துமணி - என்னத்தண்
சீகரங்கள் வீசியெழுந் தென்றலுடன் வந்ததுசெந்
நாகம்போல் அந்தி நடந்து....698

செக்கர் விழியும் திகழுருவாம் பற்குலமும்
புக்க புதுக்காற் பொரும்உயிர்ப்பும் - மிக்க
இருள்விடமுங் கொண்டாங்கு எழுந்ததுவே யந்தி
மருடரச்செந் நாகமென வான்....699

பொன்அமைந்த திண்தோள் புரவலன்தன் பேரொளிவாய்
மன்னமைந்த வென்றி வரிவிலெனத் - தென்னமைந்து
நட்புறுவார் நெஞ்ச நலனடைத் தோன்றியது
பெட்புறும்அவ் வானப் பிறை....700

சேயிருந்தான் வண்ணந் திகழ்மாதிருந்த விடத்து
ஆயிருந்தா லுள்ளம் அறியானோ - வேயிருந்த
வில்லாளி அல்லலுற வெய்தே வினான்கணைகள்
அல்லானைக் கொண்டான் அணைந்து....701

அவ்வேலை மாயத்து அரியுருக்கொண்டு ஆற்றலுடன்
பொய்வேலை உற்றான் புறத்தேவ - மைவேலை
வண்ணங்கள் மாற்றி வருவாரை மன்னுமதி
அண்ணல் அறிந்தான் அகம்....702

மாயை அடங்கும் வலியானை மாணறிவாற்
தூயமதி கொண்டறியும் தொன்மையரின் - மேயவரை
உள்ளபடி கண்டாங்கு உரைத்தாலும் மேவரிதாய்
வள்ளல்பத முற்றான் மதித்து....703

குருதிநீர் சோரக் கரமதனாற் குத்தி
குரைகழலார் மாணைக் கொடியால் - வரியரவிற்
கட்டினார் கொண்டு கரியோன்முன் காட்டினார்
பட்டிகள்ஈங் கென்னாப் பகர்ந்து....704

ஏழுலகும் தந்த இறையோன் இவரைஎவன்
வாழியீர் மேய செயலென்னோ - வூழினமைத்
தஞ்சமென்றான் அன்றே தகையீ ரெனமொழிந்தான்
கஞ்சமலர்க் கண்ணான் கசிந்து....705

ஆய பொழுதில் அறிவாளன் வீடணனும்
தூயரிவ ரென்று துணியுங்கால் - மாயைஉருக்
கொண்டார் அரக்கரெனக் கோவேயாம் வானரங்கள்
பண்டேயும் என்றார் பரிந்து....706

ஆளுடைய அம்மான் அருண்முறுவல் பூத்துவந்து
நாளுறும்ஓர் விஞ்சை நவிலுங்கால் - மீளக்
குணம்வேறு பட்டுக் குலம்வேறு பட்டு
வணம்வேறு பட்டார் மருண்டு....707

வாதத்திற் சேர்ந்தமணி வங்கத்தால் வேறுபடும்
நீதத்தி னின்ற நிலையாரை - வேதத்தின்
முன்னின்றான் நோக்கி முறையிலீர் நும்வருகை
என்என்றான் அஞ்சே லென....708

வள்ளலே யாங்கள் வலியரக்கர் மன்னேவால்
உள்ளபடியே உணரும் ஒற்றரெனக் - கள்ளவிழ்ந்த
தண்டுளவ மாலைத் தடங்கார் முகிலனையான்
விண்டனன்ஓர் மாற்றம் விரித்து....709

பெற்றுடைய நாளும் பிறவும் ஒருகணையால்
அற்றுருளச் சென்னி அனைத்துலகின் - சுற்றமொடும்
போக்குமா றெண்ணிப் பொருவேலை தட்டனரென்று
ஏற்குமா றோதிர் எதிர்ந்து....710

சிறையிருந்த திட்டைத் தெரியாமை யாலுன்
உறவிருந்தது என்ன உரைப்பீர் - கறையிருந்த
உள்ளத்தீர் என்ன உரையாமுன் உய்ந்தமென
மெள்ளத்தாஞ் சென்றார் விரைந்து....711

அவ்வழியில் வெய்யோன் அரக்கரொடும் ஆராய்ந்து
செவ்வழியோர் மாடம் சிறந்தணுகித் - தெவ்வர்செயும்
ஆரவாரங் கண்டு அரியா தனத்திருந்தான்
காரவா நீர்போற் கலந்து....712

ஆயிடையில் அஞ்சி அயர்கின்ற உள்ளத்தார்
சாய்வில் குரங்குத் தலைவர்தம் - வாய்மை
நினைக்குங்கால் நெட்டுயிர்ப்பு நீங்காதார் உன்னிக்
கனைக்குங்காற் பச்சிரத்தங் கான்று....713

வந்தாரை நோக்கி வலியீர்இவ் வாரிதியைப்
பந்தானம் செய்த பரபரப்பும் - தந்தார்ந்த
மானிடர்பா லுள்ள வரமும் பிறவுமெலாம்
தானுரைத்திர் என்றான் தகைந்து....714

வெற்பெடுத்த திண்தோள் விமலாநல் விஞ்சையினாற்
சிற்பஉருக் கொண்டு திரிதந்தேம் - அற்புதமோ
ஆலுகத் தெணாய்ந்தால் அவ்வானரத் தெணாய்தரலாம்
கால்வலிய வால்வலிய காண்....715

நாட்படுத்த பின்னர் நயனம் சிவந்ததுபின்
கோட்படும்அத் தெண்ணீர்க் குலக்கோமான் - தாள்கமலம்
வீழ்ந்துஇறைஞ்சித் தன்மேல் வியன்சேது செய்கவெனத்
தாழ்ந்தனஅக் கோபத் தழல்....716

எத்தகைய வெற்பெனினும் ஏந்தினர்கள் கார்க்கடலில்
எத்தினர்கள் சேதுவென விள்ளவே - அத்தகைய
பேரோதை வானம் பிளக்குமே என்றுரைத்தார்
காரோத மன்னார்கள் கண்டு....717

மன்னிலங்கை வேலோய் மறுவிலா உம்பியர்க்கே
தென்னிலங்கைச் செல்வத் திறனளித்தான் - அன்னவனே
காட்டினான் எம்மைக் கரியவனார் தண்ணருளால்
மீட்டனம்யாம் என்றார் விரித்து....718

இன்னுமோர் மாற்றங்கேள் எம்பெருமான் நின்கிளையும்
மன்னும் வரமுதலாம் மற்றெவையும் - சின்னமறப்
போகிடுவல் என்று புகன்றான்அப் புங்கவர்கோன்
வாக்கினால் என்றார் மருண்டு....719

அவ்வுரையைக் கேட்ட அடற்சேனை நாதனினித்
தெவ்வரமர் செய்வான் செறுத்தடைந்தார் - அவ்வமரை
இன்னே தடுத்தும் எனினாம் இவணகன்றான்
அன்னாரை ஓட்டான் அறிந்து....720

எண்ணிச் செயல்கருமம்பின் வாங்குவது இழுக்கென்று
எண்ணிற் சிறந்தோ ரியம்பியவா - றுண்ணிற்கும்
ஊக்கமுடன் நிற்பது உரவோர் கடனென்றான்
மாக்கடனேர் சேனைக்கோர் மன்....721

வெற்றியுடற் கோளரிமுன் வீரமெவன் யானையினம்
உற்ற செயலன்றோ உரவோய்நம் - பற்றலர்கள்
யாமெதிர்வ மென்னி லயரே லெனமொழிந்தான்
கோமுதல்வன் தன்முன் குறித்து....722

ஆலமுண்டான் ஒப்ப அழன்றுரைக்கும் அவ்வுரையால்
மாலியவான் நெஞ்சம் மறுகியே - சாலவிது
கற்றாய் கொலுண்மை கழறக்கேள் என்றுஉரைத்தான்
நற்றாய்போல் நாடி நயந்து....723

ஏடலர்ந்த தாராய் இராமபிரான் என்றிசைப்பொன்
கோடமைந்த செங்கைக் குரிசில்என்றும் - பீடமைந்த
நல்லிளையோன் சேடனென்று நாட்டினார் நானிலத்தே
சொல்லுடையார் ஆனார் துணிந்து....724

வாலிமகன் இந்திரனாம் வானரமன் வான்மணியாம்
நீல னெருப்பா நினைவரிய - காலன்எனும்
மாருதியும் மேலை வரனாகு மாறுதித்த
மாருதனாம் என்பார் மதித்து....725

மற்றுமுள வானரரும் வானவரே வந்துதித்த
பெற்றியென அறிந்து பேசுவார் - சுற்றமொடு
பல்வரமு மாண்டு படும்பரிசு பார்த்தறியாய்
வெல்வம்எனும் எண்ணம் விடு....726

சிறையிருந்த செல்வி திருமாதே என்னப்
பொறையிருந்த மேலோர் புகல்வர் - நிறையிருந்த
வீடணனும் மேனாள் விளம்பியது முண்டறிந்து
கோடிநீ என்றான் குறித்து....727

ஆதிநாள் யான்பட் டறிந்துளேன் ஆதலினின்
காதலாற் சொன்ன கருத்திதுஎன - ஓதுதலும்
என்போ லறிவும் விழுமியதே என்றுரைத்தான்
என்சீர்மை எண்ணாய் என....728

வல்வாய்க் கனற்கண் வரிவேங்கை முன்மலைந்த
புல்வாய் போலோடும் புலவரே - சொல்வாய்ந்த
வானரர் என்னின் வலியர்காண் மற்றுஅறிதி
யானஅயர லுண்டோ இவர்க்கு....729

சக்கரத்திற் புள்ளிற் தடமார்பிற் றாக்கியவென்
செக்கர்நிறத் தம்பிற் செயலிழந்து - புக்கடைந்த
செந்திருமல் அன்றோ திறன்மானி டத்துருவில்
வந்திடுமோ சொல்வாய் மதித்து....730

ஆயு ளதிகத் தறிவிழந்தாய் ஆதலின்உன்
பேயறிவு சாலப்பிழை கண்டாய் - வாய்முகிழ்த்து
தெவ்வுரைநீ பேசாது செல்கநீ என்றுஉரைத்தான்
வெவ்வினைசா லவ்வரக்கர் வேந்து....731

அக்கா லிலங்கிழையாள் ஆண்டுறைந் தாளென்றுயரு
மிக்கார் கரத்தால் விளம்புதல்போல் - மைக்கோலக்
காராழி மீதிற் கலந்தான் கதிர்ப்புத்தேள்
ஓராழித் தேர்மேல் உயர்ந்து....732

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.8. தானைகாண் படலம்

வேதாந்தத்து உம்பர் விளங்கிய வாறென்னவே
நாதாந்தப் பேரொளியாம் நாயகனும் - சீதார்ந்த
பொன்னகத்தி னுச்சி பொலிந்தான் பொருபுனல்சூழ்
தென்னிலங்கை காண்பான் தெரிந்து....733

பொன்னுலகின் மற்றும் புவியுலகிற் போகியர்வாழ்
மண்ணுலகில் உற்ற வளநகரம் - தென்னிலங்கை
யாழி கடந்துஎய்தி அறியா திருத்தலினால்
வாழுமால் இன்னும் வளர்ந்து....734

கொங்குண்ட தாராய் குலமணிப்பொற் சோதியுறச்
சங்குண்ட செங்கைத் தடமுலையார் - தங்கெண்டை
போல்விழியால் வாயிற் புலந்தெரியார் புண்படவே
மாலுறுதல் நோக்காய் மதித்து....735

வானத் தியல்படியான் வண்சுதையின் மன்னுதலான்
மானப் பரமமென வானுறலாற் - றேனிற்
சிறந்தாரச் செல்வத் திகழ்மாட மோங்கி
திறந்ததுபா லோதகம்போல் நின்று....736

வாசத்தின் வெண்மையினால் வானதியின் மேலுறலால்
மாசற்ற தண்கிளையின் மன்னுதலால் - தேசிற்
சதிர்பெருகும் வானிற் றயங்கலா லன்னத்து
எதிர்பொருவும் தோகை இனம்....737

எண்ணில் மவுலி இலங்கலால் இம்பரொடு
விண்ணகத்து மேலும் விளங்கலான் - மண்ணவரால்
நோக்கற்கு அருமையால் நோன்சிகரி எவ்வுலகும்
காக்குமுதல் நேராகுங் காண்....738

இன்றினைய எல்லாம் இளையோற் கியம்பியவண்
நின்ற பொழுதில் நெறியில்லான் - பொன்திகழும்
உத்திர கோபுரத் தினும்பரிடை யுற்றான்அவ்
வித்தகரைக் காண்பான் விழைந்து....739

பன்னு மணிப்பை பரப்பியே மேருவரை
துன்னுரகர் வேந்தனெனெனத் தோன்றினான் - கன்னன்மொழிப்
பொற்றொடியை உன்னிப் பொலிவிழந்த பொற்புயங்கள்
பொற்றஉல கேறப் பொலிந்து....740

கம்பவள மாவிற் கலந்து கனியுறும்பொற்பு
அம்பவள வல்லி அனையார்கள் - தண்பவளப்
பொற்கவரி வீசப் பொலிவெண் குடைநிழற்ற
நற்கலைகால் ஒண்மதியின் நன்கு....741

கைப்பரிசை வாட்கரத்தர் கஞ்சுகத்தர் வஞ்சகத்தர்
மைப்பரிசில் ஒன்றும் வணமுடையர் - செப்பரிய
பல்லா யிரப்படையர் பாங்கருற ஓங்கினான்
எல்லார் கிரிபோல் எழுந்து....742

மாணிக்கம் பச்சை வயிரம் வளர்பவளம்
ஆணிப்பொன் நீலம் அவிரணியாற் - சேணுற்ற
ஒன்பான்கோள் ஏகித்து ஒருவழிபட் டால்எனவே
அன்பால் அவிர்த்தான் வளர்ந்து....743

ஆசிலா வாரணத்தின் அந்தத்தை யாகமத்தின்
மாசிலா வானந்த வாரிதியைத் - தேசுலாம்
காளமே கம்போல் கவிவானைக் கண்டனன்றான்
கோளரா என்னக் கொதித்து....744

மங்குல்போல் நின்ற வடிவுடையாள் மைதிலிதன்
அங்கம் புணர்ந்தான் இவனென்ன - இங்கிவன்தன்
மேனியே காட்டியது வேறுளார் தம்மைஎலாம்
நீனவில்தீ என்றான் நினைந்து....745

மைமலைபாற் செம்மலைபோல் மன்னுவான் மன்னவநின்
தெம்முனை வேலானை திறம்பியே - விம்மலுறப்
பின்னவள் தன்மூக்கும் பெருஞ்செவியும் கொய்தொழித்த
மன்னிளையேன் கண்டாய் மதி....746

ஆரமைந்த வேலாய் அவன்பண்டு வாலியொடு
வீரமைந்த அண்டம் வெடிப்பவே - போரமைந்து
முற்கிரியின் மற்சமர முட்டினான் சூரியன்சேய்
சுக்கிரிவன் கண்டாய் துணிந்து....747

தந்தைதனைக் கொன்று தருபழியை எண்ணாது
வந்தனைசெய் தங்கண் மருவுவோன் - மந்தரமா
மத்தாற் கடலைக் கலக்கினான் மைந்தனிவன்
அத்தா அவனை அறி....748

நடந்திரி தருமன் நாயகன் தான்வேலை
கடந்தவனும் வானக் கதிரைத் - தொடர்ந்தவனும்
முப்புரத்தை முன்ன முருக்கினனும் மாகும்இவன்
கொட்பதனை நீஅறியாய் கொல்....749

இங்கிலன்சே னைக்குஅதிப னீலனவனிடபன்
சிங்கவேறு என்னத் திகழுவனோ - நங்கையர்க்கு
காமவேள் அன்னாய் கடற்சேது கட்டியவன்
நாமமுறு பேரான் நளன்....750

ஆற்ற லுடையா னவன்குமுதன் ஆங்கிருவர்த்
தோற்றம் உறுவோர் சுரர்க்கெல்லாம் - ஏற்றமிகும்
ஆயுநூல் ஆய்ந்தோர் அருங்குமர ரந்தகற்கு
மாய்வில் வலத்தார் மதி....751

நின்தோற்றம் ஆதி நெடுந்தகையர் தோற்றுதற்கு
முன்தோற்று ஆண்மை முதுவலியான் - வன்தோற்றத்து
திண்கைமா என்னத் திகழ்வான் செயிர்ப்பறுசீர்
எண்கரசன் கண்டாய் இவன்....752

மற்றையோர் தம்மை வரன்முறையே கூறுதற்கு
முற்றுமோ பன்னாள் மொழிந்திடினும் - கொற்றமிகும்
அண்ணால்நின் சீர்த்திக்கு அளவுண்டோ அற்றெனவே
எண்ணாய்நீ என்றான் இருந்து....753

என்றுரைப்ப வேந்தன் இளமுறுவல் பூத்தரியின்
வென்றிதனையே வியந்து உரைத்தாய் - குன்றிடைவாழ்
மானினங்கள் வாலுளைவாய் வாளரியொன் றாம்எனினும்
தான்எதிர்தல் உண்டோ தகைந்து....754

என்னுங்கால் ஐயன் எதிர்நோக்கி எற்குரியோய்
பன்னுங்கால் உம்பர்ப் பரப்பெல்லாம் - துன்னிருளிற்
சூழ்ந்துநமர் தோற்றம் தெரிவாரைச் சொல்லுகநீ
ஆய்ந்தெனலுஞ் சொல்வான் அறிந்து....755

எறும்பீறா யானைமுதல் எண்ணிறந்த யோனி
உறும்பசுவில் ஒன்றேனும் உன்னிச் - சிறந்தகுணத்து
ஒன்றினான் என்ன உரையாத் தசமுகன்அக்
குன்றுபோல் நின்றான் குறித்து....756

மற்றொன்று பேசாமுன் மாசிலா வானமணி
பெற்ற புதல்வன் பெருஞ்சினத்தான் - புற்றரவம்
நோக்கும் சிறைக்கருடன் நோன்மைசிறி தாகும்வகை
ஊக்கமுறப் பாய்ந்தான் உருத்து....757

முற்பகையை உன்னி முதலருட் பாலிதுவால்
அற்பனை நாம்கோறற் கமையுமெனச் - சிற்பரன்வாழ்
வெண்கயிலை விண்மேல் விசைந்தெழுந்து சென்றதென
வண்கவிமன் சென்றான்அவ் வான்....758

அத்திசையே நின்ற அயிரா வதம்அனையான்
குத்தினன்கை கொண்டு குலைந்தரக்கன் - பத்தொடுபத்து
என்னுங் கரங்கொண்டு இடியேறெனப் புடைத்தான்
பன்னகம்போல் அங்கார்ப் பரித்து....759

நெட்டுடல் நின்று நிணச்சோரி பாய்தரஅத்
துட்டனைவண் காலாற் துகைத்திடலும் - முட்டியெதிர்
திண்கரத்தாற் பற்றித் திரித்தான் திறலுடையான்
வெண்கவியின் வேந்தை வெகுண்டு....760

வெறுத்தானைத் தீயின் விழியிரத்தங் காலச்
செறுத்துகிர்வாள் தெற்றிச் சினந்து - மறித்திருகை
கொண்டமரர் ஆர்ப்பக் கொடியோர் அலமருவ
மண்டகழி இட்டான் வலித்து....761

வலித்தானை வெய்யோன் மணியகழி நின்று
ஒலித்தானை வேந்தை எதிர்உற்றுக் - கலித்தாரப்
பின்னகழி இட்டான் பெருங்கரத்தாற் பற்றினான்
அன்னமரர் மாழ்க அயர்ந்து....762

ஆழ மறியா அகழியிடை வீழ்வதன்முன்
சூழ்கதிரோன் மைந்தன் துணிந்துயர்ந்த - பாழிச்
செழுஞ்சிகரி உம்பர்ச் சிறந்தான் முன்அண்டம்
கிழிந்திடவே ஆர்த்தான் கிளர்ந்து....763

முட்டினர்கள் காலால் முறுக்கினர்கள் முன்னுரையால்
கிட்டினர்கள் உள்ளம் செயிர்ப்புற்றார் - நெட்டுடலில்
செஞ்சோரி ஆழித் திரைவளரச் சேவகமும்
எஞ்சார்கள் என்னோ இவர்....764

சுதைத்தலங்கள் விண்டு துகளாகக் காலின்
உதைத்தனர்கள் வானவரும் உட்கப் - பதைத்துடலம்
விட்டிலர்கள் முட்டி விதம்புரிந்து வீரமொடு
கட்டினர்கள் கையாற் கலந்து....765

மருங்குறையும் வல்லரக்கர் மாய்விலார் நின்றார்
அரம்பையரும் அஞ்சி அகன்றார் - நிரந்தரமும்
வன்போர் புரியும் மதுகை யிடவரென
சொன்போர் புரிந்தார் கொதித்து....766

இக்காலை ஐயன் இரவிசெய் இன்னும்இவண்
புக்கானின் றென்னப் பொருமினான் - மிக்கான
நட்புக் கொருவ நலமிழந்தேன் நல்குரவின்
உட்புக்கேன் என்றான் உயிர்த்து....767

பல்படையும் மாயப் பயிற்சியும்வல் லோனைஎவன்
வெல்குவைநீ யந்தோ விளிவுற்றேன் - கொல்வனெனிற்
பெய்வளையும் இந்தப் பெருநிலமும் பெற்றாலும்
உய்வனோ இன்னும் உயிர்த்து....768

எனக்குதவி யுற்றார்க் கிறுதிவரக் காட்டி
மனக்கினிய மாதோடு மன்னி - வனத்தினைவிட்டு
எப்பாரும் எப்பாரும் இன்னரசு செய்குவனே
அப்பாஎன் அன்பே அடைந்து....769

நிற்கொன்றான் என்னில் நெடுங்கிளையை நீறுபட
விற்கொண்டு நூறி விறலோனைப் - பிற்கொன்றும்
யாதோ பயனுனை விட்டு ஐயாஇழந்தேன்
நீதா னயர்ந்ததென்னோ நேர்ந்து....770

என்று துயருரும்அவ் எல்லைவாய் அவ்விகலோன்
குன்றனைய சென்னிக் குலமுடியார் - பொன்திகழும்
மாமணிகள் வாங்கி மயர்ந்தவனும் வெள்கிடவெங்
கோமகனை உற்றான் குதித்து....771

வானவர்கள் வாழ்த்தி மலர்பொழிய வானரமாச்
சேனையின மார்ப்பத் திறல்வல்லான் - மானவன்முன்
வாங்குமணி வைத்து வணங்கினான் மாதவனும்
ஓங்குமுயிர் பெற்றான் உவந்து....772

வழுவுடையான் போரின் மலிந்தெழுசெஞ் சோரி
கழுவினன் கண்ணீரில் இருகையால் - தழுவிநனி
என்னினைந்தாய் என்செய்தாய் என்றனைவிட்டு எப்பொருளும்
முன்னினைந்தால் அன்றோ முறை....773

வீரத்தின் பான்மை விதிமுதலாம் விண்ணவர்க்கு
நேரோத்த தன்று நினையுங்கால் - சீரிற்
பிறந்தனைநீ என்னோநின் பெற்றிமையை முற்றும்
மறந்தனையால் என்றான் வகுத்து....774

அய்யனே நாயேன் அடிமைத் திறமழகே
மையுறுகான் அன்பின் வலியுடையார் - செய்தனவும்
நாட்டிற் குகப்பெருமான் நாட்டியதும் நாட்டகிலேன்
மீட்டினிஎன் வீர வினை....775

வென்றிலேன் என்னா விரைந்தெய்தி வெய்யவனைக்
கொன்றிலேன் தூதன் குறித்தவற்றில் - ஒன்றிலேன்
காற்கதியில் வல்லவனே காணென்றான் கண்கலுழ்ந்து
பாற்கரன்முன் ஈன்றோன் பணிந்து....776

காயத் தரக்கன் கதிர்முடியார் பைங்கனகந்
தோயக் கதிர்மணியைச் சொன்மேலைத் - தீயொத்த
செங்கேழ்த் திசைக்கவி மன்றேவரி னம்போற்ற
அங்காய்ந்து கொண்டான் அறிந்து....777

வானரமன் ஆற்றும் வலிநினைந்து நாணமுறத்
தானிதையத் தைப்ப தனியிரவில் - மானனையார்
கைவிளக்க மேந்தக் கடியோன் மனைபுகுந்தான்
பொய்விளக்க வந்தான் விரைந்து....778

வெங்கரி முனுண்ட விளங்கனியி னுள்ளுடைந்து
பொங்கமளி மீது பொருமியே - தங்கி
மணியிழந்த புற்றரவின் வைகினான் வாகை
அணியிழந்த போற்றோள் அவன்....779

ஆய பொழுதில் அடையார் செயலறிந்து
மாயை வலத்தான் வருங்காலை - ஏய்தரநீ
உற்றவா ரெல்லாம் உரைத்திடுக என்றுரைத்தான்
கொற்றம்போய் நின்றான் கொதித்து....780

பண்டிலங்கை உற்றோன் பதினேழு வெள்ளமுடன்
அண்டமளந்த வனினங் குற்றான் - மண்டும்
வயநாடிப் பூளை மலர்நாடி வாய்ந்த
செயநாடி மேலைத் திசை....781

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.9. அணிவகுப்புப் படலம்

காலன் அனைய கடற்சேனை அத்தொகையின்
நீலன் கிழக்குத் திசைநின்றான் - வாலிமகன்
அங்கதனுந் தென்திசைவாய் அத்தகைய சேனையொடு
தங்கினான் வாகை தரித்து....782

வெங்கிரண மாலை புனைவெய்யோன் தருகுமரன்
அங்கணருட் கொண்டல் அடிபிறியான் - சங்கமுறப்
பத்தேழு வெள்ளம் பரிந்தார்வ மோடமைய
உத்திரவாய் நின்றான் உறுத்து....783

மற்றிரண்டு வெள்ள வலிமுகங்கள் மால்வரைவாய்
உற்றகனி காய்கொண்டு உறுகென்ன - வெற்றிபெற
ஏவினான் வாயில்தொறும் எம்பிரான் உம்பியரை
மேவியறி கென்றான் விரைந்து....784

போர்த்தூடு புக்கார் பொருளீ தெனவுரைத்துச்
சர்த்தூலன் சொல்லத் தகையில்லான் - மாத்திரையின்
மன்னமைச்சர் தம்மை வருகவென வந்திறைஞ்சி
என்னழைத்த தென்றார் இருந்து....785

இருந்தாரை நோக்கி எனக்குரி யீரேமம்
பொருந்தாரை சூழப் புடைசூழ் - திருந்தாரை
எவ்வண்ணம் வேறல் இனியியற்றல் யாதிசைமின்
உய்வண்ணம் என்றான் உளைந்து....786

வேற்படைவாள் ஆதி விறற்படைகண் மிக்கோமை
காற்படையால் வெல்லக் கருதுவோர் - தீர்க்கமிலா
மானிடரே நீயு மயர்ந்தனையோ என்றுரைத்தார்
ஏன வினையமைச்சர் ஏன்று....787

அனற்கிரை யூரை அழித்தானுக் கைய
கனற்படைக ளுண்டே கருதின் - மனக்கதிவாய்
சுக்கிரிவற் குண்டோ சுடர்வாளும் வேலுமினிப்
புக்குணர்க என்றானப் போது....788

என்றுரைப்ப மாலி எரிபோல் விழித்துருத்து
நன்றுரைத்தாய் அல்லை நயனறியாய் - பொன்னுறுமூப்பு
ஆகினையென் வெற்றிக்கு அடாதனவோ வாய்ந்துரைத்தாய்
நீகொடியாய் என்றான் நெறித்து....789

தானைத் தலைவன் தருவேந் தடுபகையோன்
மானத் தலையான் மகோதரனார் - பானக்
களிவதன நோக்கிக் கழறினான் காம
அளிமுரலுந் தாரான் அறிந்து....790

வன்கீழ்த் திசைவாய் வளர்மேற் திசையின்வாய்
தென்மேற் திசைவாய்த் திறந்தெரிந்து - வன்பாற்றும்
வெள்ளமிரு நூறு விரவுறநீர் வெய்துறுமின்
பிள்ளைமைஎண் ணாதீர் பெயர்ந்து....791

உத்தரவா யானின்று உடற்றுவல்நீர் சென்மினென
அத்தகையார்க் காணை அளித்திருப்ப - முத்தனருள்
ஆழ்வார் அருஞ்சமரங் காண்பார் அடைந்தனனாற்
கீழ்வாயவ் வெய்யோன் கிளர்ந்து....792

மெய்யுரைமுன் பொய்யுரைபோல் வீய்ந்தவிருட் கங்குல்வாய்
அய்யனெனு எங்கள் அபிராமன் - வெய்யவன்தன்
சேயினொடுந் தம்பியொடுந் திண்கைச் சிலையினொடும்
ஆயினன்வெம் போர்க்களத்தின் ஆங்கு....793

மருமலத்தார் வீடணனை மாயவனும் நோக்கி
பொருமனத்தாய் தூதொன்று போக்கி - கருமனத்தான்
உள்ளக் கருத்தோர்ந்து உடற்றுதலே பேரறத்தின்
வள்ளலற மென்றான் மதித்து....794

நன்றிதே என்ன நயந்துரைத்தான் வீடணனும்
வன்திறல்சேர் வானரத்தின் மன்னவனும் - இன்றிதுவே
மன்னர்க் குரித்தென்றான் வல்இளையோன் மண்டமரே
உன்னிற் கருத்தென்றான் ஓர்ந்து....795

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.10. அங்கதன் தூதுப் படலம்

மாதவரை வேத மறையோரை வானவரை
ஏத மியற்றி இடர்விளத்தான் - பாதகமுஞ்
செய்யா தனவுள்ளோ தேருங்கால் ஆங்கவனுக்கு
ஐயா அருளல்அழகு அன்று....796

அன்றியும்நம் ஆருயிர்போல் வந்தாற்கு உலகறிய
என்றும் இலங்கைஉனக் கென்றுரைத்தாய் - இன்றிதுநீ
கூறினால் என்னாங் குறிக்கோடி என்றுரைத்தான்
மாறிலா மன்னர் மகன்....797

தம்பிமொழி கேட்டுத் தனிப்புன் முறுவலுடன்
எம்பி அயரேன் முடிவிதுவே - அம்புவியில்
நல்லார் புரியியற்கை நாந்துறந்த னீதியதோ
சொல்லாய்நீ என்றான் தொகுத்து....798

அஞ்சனைசேய் செல்லின் அவனன்றி ஆற்றலுளார்
இஞ்சிலர்என் றெண்ண இயலுமால் - வெஞ்சமர்க்கு
வல்லானவ் வாலி மகனே அமையுமென
நல்லான் அழைத்தான் நயந்து....799

வந்தடியில் வீழ்ந்தோன் வதன மலர்நோக்கி
எந்தகையோர் ஒன்னார் இடைமேவிப் - பைந்தொடியை
விட்டகல்தி அன்றேல் விளைசமரம் செய்கஎனக்
கட்டுரைத்து மீள்கென்றான் கண்டு....800

அற்றடிய னாக அனுமனிக ராயினரென்று
உற்ற உவகைஉளத் தோங்கவே - வெற்றி
எயில்கடந்து கண்டான் இருபதுதோள் கொண்ட
புயல்கடந்து குன்றிடையே போந்து....801

இத்தகய பூதத் திறையை இகல்கடப்போர்
அத்தகையார் மூவருந்தான் ஆவரோ - சித்தம்
வலிந்திவனைப் பற்றி மணிகவர்ந்த எந்தை
மெலிந்தவன்நன் றென்றான் வியந்து....802

வியந்தவன்மாட்டு எய்தி விறலோனும் நிற்க
புயம்பொலியும் நாகமெனப் பொங்கி - இயைந்திருந்த
வல்லரக்கர் கோமான் வலிமுகநீ யாரையிவண்
புல்லுதல்என் என்றானப் போது....803

அருணாதன் வேதத் அமர்நாதன் ஆதிப்
பொருணாதன் ஏவப் புகுவேன் - வெருளாதை
மந்திரமும் வாழ்வும் மதியும் உனக்கருள்வான்
வந்தனன்யா னென்றான் வகுத்து....804

ஆக்கமுடையாய் அரன் அயன்மால் என்பதின்றிப்
பூக்கவரும் புன்குரங்காற் போர்கடப்பான் - நீக்கரிய
ஆழிநீர் தாவ அணைகோலும் ஆங்கவனோ
ஊழியாய் என்பாய் உவந்து....805

மற்றிதுதா னிற்க வருந்தூ துவவுனைமுன்
பெற்றவர்யார் என்னப் பெருந்தகையோன் - கொற்றத்
தயமுகனை வாலாற் சிமிழ்த்தியிசை பெற்ற
வயமுகன்காண் என்றான் வயிர்த்து....806

உந்தை எனக்கே உயிர்த்துணை வனுண்யுள
முந்தை விதியின் முயற்சியினால் - வந்தனைநீ
எற்கினிய மைந்த இனிநீ இவணிருத்தி
கற்புயகாண் என்றான் கனிந்து....807

வஞ்ச மிலாவுயிர் மாளவே வன்சரத்தால்
துஞ்சவடு வானைத் துணைகொண்டாய் - நெஞ்சறிய
வானறிய மண்ணிகழ வாழ்தலினும் நன்றன்றோ
ஊனுயிரைத் தான்விடுதல் ஓர்ந்து....808

என்னரசும் வாழ்வும் இனியுனக்கே ஈய்ந்திடுவேன்
மன்னரசின் வைகி மகிழ்தியெனத் - தன்னரசு
பின்னரசுக் கீய்ந்த பெரியோன் நகைத்திதனைப்
பன்னினனக் கொற்றவனைப் பார்த்து....809

யாமளித்த செல்வ மெனக்களிப்பா னாயினைநீர்
தாமளிப்பான் உற்ற தரமென்னோ - சேமமுற
நாயளிக்கப் பெற்றிடுமோ நல்லரசு சிங்கமெவன்
வாயளித்தாய் வீணுரையேன் வம்பு....810

வாணோக்கி மற்ற வலிநோக்கி மற்றிருபான்
தோணோக்கிச் செவ்வாய் துடிப்பவே - கோணோக்கும்
புன்னுரங்கே வந்த பொருளென் உரைத்தியென்றான்
பொன்பிறங்கு பூணான் புகைந்து....811

நின்மேல் தயைகூர் நிமலன் நினைஎதிர்ந்து
பொன்மேல் திகழும் புனிதையினை - நன்மாற்றந்
தந்து விடுத்திடுக அன்றேற் சமர்க்கெழுகென்று
இந்தவுரை தந்தான் இருந்து....812

மாதா மகிமை வதைத்தநாள் மாமனுயிர்க்கு
ஆதாரம் நீங்க அகற்றுநாள் - சூதார்
கனித்தனமும் மூக்குங் கடிந்தநாள் வாரான்
இனிப்பொருதல் உண்டோ எதிர்ந்து....813

கரன்பட்டு மாருதியாற் காவுங் கடியும்
உரன்பட்டும் மாயஞ்சேர் உங்கள் - வரன்பட்டும்
அக்கன் குழம்பாய் அரைபட்டும் வந்தடையான்
புக்கெதிர்தல் உண்டோ பொர....814

சிம்புளே றன்னானித் தென்னிலங்கைச் செல்வமெலாம்
உம்பி பெறவே உதவுநாள் - கம்புலவு
ஆழி யடைக்குநா ளாய்ந்துஅடுபோ ராற்றல்உறா
ஏழை வருமோ இனி....815

முன்னின்றார் காண முடிமணியை முன்னிழந்து
வென்னின்றார் காண விருதிழந்து - பொன்னின்ற
ஊர்புகுவான் வெற்றி உடையோன்போல் ஊக்கமொடும்
போர்புகுவான் உண்டோ பொர....816

என்றியம்பி வாவென் றெனையேவி னானமலன்
ஒன்றுறுதி சொல்வன் உனக்கினியான் - மன்றல்
மலராளை விட்டு வணங்குக நீயன்றேற்
புலராதி போரிற் புக....817

ஐம்பொறியும் அன்பாய் அடக்கி அறிவோடும்
துன்புழந்து பெற்றுத் தொலையாத - வன்பமைந்த
பல்வரமுங் காற்றிலவம் பஞ்சாகும் பாவியினி
வெல்வதரிது என்றான் விரித்து....818

உற்றவுரை கேளா உயிருண்பான் போலமுனிந்து
இற்றவனைப் பற்றும் எனவோடிப் - பற்றினரைச்
சென்னி உருள திசைதோறும் வீசியெழா
முன்னினான் அய்யன் முனம்....819

வந்திறைஞ்சி நின்ற வலியானை வள்ளலவன்
சிந்தையெவன் என்னத் திறமுடையான் - எந்தையவன்
தன்முடிகள் நின்கைச் சரத்துக்கே தந்தளிக்கும்
வன்மனத்தான் என்றான் வகுத்து....820

ம்ற்றினியென் ஊரை வளைத்துடற்றல் ஆகுமினி
வெற்றியே என்று விளம்புதலும் - சுற்றித்
தெளித்தார்கள் தீப்போற் செயிர்த்தார்கள் தாக்கிக்
களித்தார்கள் மற்கடங்கள் கண்டு....821

கல்லார்ந்த வாரையிடைக் கட்டுங் கொடியினங்கள்
எல்லாம் பறித்தங் கெறிந்ததால் - பொல்லாத
வஞ்ச னிராவணனார் வண்புகழை முற்றுமரிந்
தெஞ்சலுறச் செய்வாரி னேன்று....822

வாயூடு சென்று மரைவளையங் கைக்கொடகல்
வாயூடு நின்று மகிழ்ந்தவால் - தீயாடு
காரொடுநேர் வானின் கதிர்மாப் பெரும்புகழை
வேரொடுகொள் வாரின் விழைந்து....823

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.11. முதற்போர்ப் படலம்

ஆர்வண் கொடிக ளரிக்குலங்க ஆர்த்தளிப்பக்
கார்வண் கொடியுறையுங் காட்சிதான் - ஈரமிலான்
வெள்ளைப் புகழுருவம் வேறுபடக் கார்மருவி
மெள்ளக் கறுத்தனவாம் விண்டு....824

நண்ணரிய வீரர் நரலை ஒலிஅஞ்சத்
துண்ணென் முழக்கினொடு சுற்றினார் - நண்ணலருங்
கொய்யோ வெனவிரைத்துக் கொக்கரித்து வந்தெதிர்ந்தார்
மையோ வெனவே வளைந்து....825

கல்லெடுத்து வீரக் கழலெடுத்துக் காரிடியிற்
சொல்லெடுத்து வாகைத் தொழிலெடுத்து - மல்எடுத்த
வாலெடுத்து வண்ண மரமெடுத்து வந்தனவக்
காலெடுத்த வேகக் கவி....826

மழுக்கொண்டும் வன்றோ மரங்கொண்டும் வாகை
எழுக்கொண்டு மின்னி இடித்துக் - குழுக்கொண்ட
கார்மேகம் ஒப்பக் கலந்தார் கதழெரிக்கண்
தார்வேல் அரக்கர் தகைந்து....827

தாளான் மலையாற் தருவாற் தகைதருபல்
வாளால் நகத்தால் மரிப்புண்டு . நாளாக
உற்றாரும் வன்மை உரைப்பாரும் வால்வலிமை
கற்றாரும் உற்றார் களன்....828

சூலத்தால் வேலால் சுடர்மழுவால் தோமரத்தால்
பாலத்தால் வாளால் பதைத்தாவி - மூலத்திண்
வாலிழந்து மார்பிழந்து வன்பிழந்து துன்புழன்று
காலிழந்த வேகக் கவி....829

மெய்யடுத்தோர் வீச விறலடுத்த விண்வரைகள்
பொய்யடுத்தோர் தங்கள் புறனடுத்துக் - கையொடித்து
வில்லொடித்து வாளொடித்து வேலொடித்து மெய்யெனுமக்
கல்லொடித்துச் சென்றனவே காண்....830

வஞ்சமும் பொய்யு மறமு முடையார்நெஞ்சு
அஞ்சலின்றி யேவும் அயிற்படைகள் - துஞ்சலிலார்
வால்துளைத்து மார்துளைத்து வாய்துளைத்து வன்வயிரக்
கால்துளைத்துச் சென்றதுவே காய்ந்து....831

எங்கும் குருதிநிண மெங்கும் பிணமலைகள்
எங்கும் பறவை இனத்தொகுதி - எங்குங்
கவந்தபந்த மாடுங் கழுது நடமாடும்
அவந்தலைய மொய்யமர்க்கண் ஆங்கு....832

இத்தலையில் வெய்யோன்முன் ஏவியசே னைப்புணரி
உத்தரவாய் மேவி உடற்றவே - மத்தமுறு
கைக்கரியின் ஆங்கு கலந்தான் தருக்கையினாற்
சுக்கிரிவன் என்னும் துரை....833

மெய்முறிந்து வீரர் மிடறொடிந்து வேல்பிடித்த
கைமுறிந்து மேவுங் கரியிழந்து - நெய்வடிந்த
வாண்முறிந்து கொண்ட வயமுறிந்த வான்கவிமன்
தோண்மலர்ந்த தண்டாற் துகைந்து....834

நாற்படையு மாய நவிலூழிக் காற்றெனவே
ஆர்ப்பரையுந் தெரில் அணுகினான் - கார்ப்பருவக்
காளமே கம்போற் சொரிந்தான் கவிக்குலங்கள்
மாளமா வாளி மழை....835

தண்படைகண் மாளத் தரியானச் சாதகனைத்
தென்புலத்தில் ஏற்றல் திறமென்னாப் - பைம்பொனெடுந்
தேர்மேற் குதித்தான் சிலைமுறித்துத் தேய்த்துடலைப்
பார்மேற் குதித்தான் படர்ந்து....836

விட்டிகழும் வெய்யோன் மகனால் விளங்கும்வச்ர
முட்டி உலைந்த முறைநோக்கிக் - கெட்டனர்கள்
வென்னோக்கி ஆர்த்தார் விறனாக வீரரெலாம்
மன்னோக்கி ஆண்மை மதித்து....837.

கார்கிளர்ந்த சேனைக் கடல்கீழ்த் திசைமருவிப்
போர்கிளர்ந்த பெற்றி புறநோக்கிச் - சூர்கிளர்ந்த
மன்னாக வீரர் வரைமரங்கொண் டேற்றனர்கள்
தின்னாக மென்னச் செயிர்த்து....838

வேலுங் கணையும் விடமும் கலந்தவயிற்
கோலும் பிறவு கொடுநாடிக் - காலனென
விட்டேவ மாழ்கி விறனாக வீரர்கணம்
விட்டேவ ரானார் விரைந்து....839

கவிமாலை சிந்திக் களப்படுதல் நோக்கிப்
புவிமாலை கொண்ட புகழோன் - செவிமாலை
வான்தருக்கொண்டு ஆட்டினத்தில் வல்லியம்புக் காலெனவே
தான்படுத்தான் ஏற்றார் தமை....840

கொம்பிழந்து யானைக் குலமழியக் கொண்டவில்லோடு
அம்பிழந்து வீரர் அழிந்தேகத் - துன்புழன்று
வாலிழந்து வாசி மடியத் திரிதந்தான்
நீலனெனும் பேருடையான் நேர்ந்து....841

எரிமுகத்தான் ஈன்ற இளங்காளை அம்பொற்
தருமுகத்தால் சாடத் தரியார் - பொருமுகத்து
நில்லாமை கண்டு நெடுங்கார் முகம்வளைத்து
வல்லானில் வந்தான் வயிர்த்து....842

புற்றரவு மென்னப் புழுங்கினான் போர்க்கவியை
முற்றும் படுப்ப முயல்வான்மேற் - கொற்றமொடு
குன்றொன்று தாங்கிக் கொடியோன் மேலேவினான்
வென்றொன்று தாரான் வெகுண்டு....843

அம்மலையும் ஆலம்போல் ஆங்கணுக அவ்வரக்கன்
தெம்மலையும் வில்லுஞ் செழும்பரியும் - பொம்மலுறு
பாருங் கொடியும் படர்தேரும் பாரழியப்
போகினான் ஆவி புரந்து....844

எங்ககல்வ தென்ன இடும்பனி மைப்பொழுதில்
அங்கவனைப் பற்றி அணிவயிரத் - தன்கரனாற்
தாக்கினான் மூளை தசைகுருதி ஒன்றாகப்
போக்கினான் ஆவி புகைந்து....845

வெம்பானு வன்ன விறலிடும்பன் வன்கரத்தாற்
கும்பானு சாயக் கொடித்தேரான் - அம்பரனும்
வில்லானு மேக மனையான் விரைந்தரியைக்
கொல்லாது கொன்றான் கொதித்து....846

கூற்றவனோ என்னக் கொடுங்கார் முகமதனால்
ஏற்றடுவான் தன்னை எதிர்வீரன் - பாற்றருமோர்
குன்றால் அரக்கர் குழாமொருங்கு நுண்கொதுகின்
ஒன்றாய் அரைத்தான் உருத்து....847

அக்குன்றம் நீறாய் அறுத்தான் அயிற்கணையால்
மைக்குன்ற மன்ன வலியரக்கன் - எக்குன்றும்
ஆகா திவன்வயினென்று ஆங்கோர் மராமரங்கொண்டு
ஏகாமுன் நின்றான் எதிர்ந்து....848

எதிர்ந்தவனைச் சாட இரதமொடு வில்லும்
உதிர்ந்தழியக் காற்கதியும் உட்கப் - பிதிர்ந்தமனக்
காடகனுந் தண்டொடுமக் காற்கதியே காட்டினனவ்
வாதனியால் நன்றி மறந்து....849

வென்காட்டும் வீரனையவ் வெய்யோன் மகனனையான்
முன்காட்டி உற்று முதிர்வலியால் - வன்காட்டு
தண்டமொடு பற்றித் தரியலர்கள் அஞ்சலுற
விண்தொடர விட்டான் வெகுண்டு....850

விண்தொடர்ந்த வெய்யோன் விழியிரத்தங் கான்றிடவே
மண்தொடர்ந்து வாயு மகன்மகன்மேற் - தண்டுகொடு
விண்டதண்ட மென்ன விரைந்துருந்து மோதலுங்
கண்டவண்டர் கொண்டார் களிப்பு....851

களிப்புறுமன் னேரார் கருத்தும் அதுகண்டு
துளக்கமுறும் தன்கிளையின் சோர்வும் - இளக்கமறக்
கண்டவனை எற்றக் கரத்தாற் கருமையறப்
புண்திறந்த சோரிப் புயல்....852

மற்றுமெதிர் கூசான் வயிரத் தடக்கையினாற்
பொற்றடந்தோள் நீலன் பொருப்பனைய - மற்றடமார்பு
எற்றினான் மற்றங் இகல்புரிந்த பெற்றியினைக்
கற்றுரைப்பார் யாரே கணித்து....853

அவ்வேலை நீலன் அரக்கன் அடற்புயத்தும்
வெவ்வாள் உரத்தும் விளித்தெற்ற - மைவார்ந்த
குன்றெனவே வீழ்ந்தான் லுருதிப் புனலொழுக
இன்றிறுதி என்னா இசைந்து....854

அரகத்தன் ஆண்மை அடங்கியே ஆங்குப்
பிரகத்தன் மாயப் பிறங்கும் - வரகத்தர்
ஓடினார் ஊர்வாய் உவந்தார் அரிக்குலங்கள்
ஆடினார் தேவர் அமைந்து....855

தெற்குத் திசைவாய்ச் செறிந்தோர் அறமாண்டார்
சொற்கத் தினுஞ் சுபாரிசனும் - மற்கைக்
கரியனையான் வாலிதரு கான்முளையால் மன்னோ
எரியிடைவாய்ப் பட்டார் என....856

வன்முகஞ்சேர் நூறிரண்டு வாய்ந்தபெரு வெள்ளமொடு
துன்முகனும் ஆவி தொலைவுற்றான் - கன்முகஞ்சேர்
நால்வாய் எனவே நவின்மாருதி கரனால்
மேல்வாய்த் திசையின் வெருண்டு....857

அப்பொழுது தூதர் அடைந்தார் அரக்கனடி
செப்பினர்கள் சேனைத் திறமெல்லாம் - முற்பகலே
மாய்ந்தபிர கத்தன்முதன் மாவீர ரும்வலிபோய்
வீய்ந்தனர்கள் என்னா விழுந்து....858

கேட்டழன்று நன்றினியென் வீரக் கிளர்ச்சியென
நாட்டஞ் சிவந்து நகைபிறங்க - மோட்டமைந்த
எஞ்சேனை செல்க எழுகதேர் என்றிசைத்தான்
மஞ்சே அனையான் வயிர்த்து....859

மைவண்ண வேழ மழைவண்ண வாள்வீரர்
ஐவண்ணப் பாய்மா அணியிரதம் - மொய்வண்ண
ஆழியாம் என்ன அடைதரலால் ஆங்கிருண்ட
பூழியால் எங்கும் புதைந்து....860

விண்ணிடத்தும் பூவாழ் விதியிடத்தும் வெவ்வுரகர்
கண்ணிடத்துஞ் செல்லுங் கதியுடையது - எண்ணரிய
ஆயிரமாப் பூண்ட அடற்றேரில் ஏறினான்
பாயிரநூல் வல்லான் பரிந்து....861

மூலத் தேவன்றி முடியாது முந்துறுதன்
காலத்தே அன்றிக் கழியாத - கோலத்தார்
மெய்க்கவச மில்லா வினையறிந்து வீரமுறு
அக்கவசம் பூண்டான் அறிந்து....862

விண்ணவரை உள்ளம் வெருப்புரிந்து மெல்லியராம்
மண்ணவரை வென்று வலனமைந்தது - எண்ணரிய
வில்லெடுத்தும் வீரவினை யடுத்தும் மேவினான்
செல்லடுத்த சொல்லான் தெளிந்து....863

வானச்சங் கப்புலவர் வாள்விழியார் உண்ணடுங்க
மானச்சங் கத்தொலியும் மன்னவே - ஏனைக்
கடன்முரசு ஆர்ப்பக் கவிகைநிழல் ஓங்க
விடமெனவே வந்தான் விரைந்து....864

பல்கோடி பூதம் படைதாங்கிப் பின்தொடர
பல்கோடி வெற்றிப் படைசூழப் - பல்கோடி
சேமத்தே எய்தச் சிலைதாங்கிச் சென்றனனப்
பாமத்தோள் வீரன் படர்ந்து....865

வானஞ்ச எண்ணும் மனமஞ்ச வாயுடையார்
தானஞ்ச நஞ்சின் தகையானும் - மீனஞ்சு
கண்ணாடன் பாற்பெருகு காதலொடு காலனென
எண்ணார்முன் வந்தான் எதிர்ந்து...866

மானவச்சிங் கார மலைநிகர்தேர் மேல்வயங்குந்
தானவச்சிங் கேறு தனைக்கண்டே - வானவர்க்கம்
அல்லலுற வெய்யோன் அணைந்தானென் றண்ணலுக்குச்
சொல்லினார் தூதர் தொழுது....867

வற்கலையில் ஆடை மருங்கணிந்து வண்ணமணிக்
கற்கவினும் வீரக் கழலணிந்து - புற்குருவ
மாசுணம்வண் கற்பகத்தின் மன்னியவாறு ஒண்கரணில்
ஆசறுமென் கோதை அணிந்து....868

மறந்து புறம்பிறியா மங்கையார் மார்பந்
துறந்தும் துறவாத துன்னான் - சிறந்தவலி
ஆக்கினான் கொண்டது அறிதுமோ அக்கவசம்
வீக்கினான் செவ்வே விரித்து...869

முன்றான் இறுத்த முனியிரண்டும் மொய்கணைபோல்
ஒன்றாகும் என்றும் ஒருமுனியை - வன்றாளில்
ஏற்றினான் நாணி எதிர்ந்தானத் தூசிமுனை
கூற்றின்வாய் ஆர்ப்பக் குறித்து....870

கூற்றத்தோடு ஏற்றக் கொடுங்கார் முகம்வளைத்தங்கு
ஏற்றக்கால் என்றான் இயற்றுமே - மாற்றத்தின்
முன்னே விழுந்து முடிந்தனவால் வானரங்கள்
கொன்னேமெய் ஆவி குலைந்து....871

காற்றும் விடமுங் கனலுங் கடுமழையுங்
கூற்றுங் கலந்து கொடுஞ்சமரம் - ஆற்றுதல்போல்
ஏற்றானை ஏற்றான் இடியன்ன சொல்லொடுதேன்
ஊற்றூறுந் தாரான் உருத்து....872

அந்தரப்பொற் றேரான் அடற்குமரன் வீசியதிண்
சுந்தரப்பொற் குற்றங் கடுங்கணையால் - அந்தரத்தில்
நீறுபட எய்தான் நினையுங்கால் எவ்வுலகும்
மாறுபட வென்றான் மலைந்து....873

மற்றெடுத்த மாமரமும் மால்வரையும் வன்பகழி
விற்றொடுத்து நீறாய் விலக்கியே - கற்றொடுத்த
வன்கவியின் மார்பகத்தே வாயம்பு மாட்டுதலும்
எண்மயங்கி நின்றான் இனைந்து....874

எண்டுளங்கி நின்ற இறையோன் முனமனுமன்
மண்டுளங்க எய்தி மலையொன்று - விண்டுளங்க
ஏவினான் வெய்யோன் இமையாமுன் ஓர்கணையாற்
தூவினான் தூளாய்த் துணிந்து....875

மற்றொருகுன் றேந்தி வலியால் விசைத்தெறிய
மற்றடந்தோள் வாகு வலையத்தோ - டற்றுதிர்ந்து
நீங்கினமை கண்டு நெடியோனெம் மாருதியும்
வாங்கினான் வேறோர் மலை....876

வாங்கினான் தோளினும்வன் மார்பினு மீரைந்துகணை
தீங்கினான் ஏவத் திறங்குறையான் - ஆங்கோர்
மரங்கொண்டு வீர மவுலிமேற் பாகன்
சிரங்கொண்ட தன்றே செயிர்த்து....877

மற்றொருதேர்ச் சூதன் வயமாப் பரிதூண்டப்
புற்றரவின் உள்ளம் புழுங்கியே - வெற்றிடியின்
ஆயிரம்அம்பு ஏவ அயர்ந்தான் அயர்விலான்
மாயிருந்தோள் வீரன் மருண்டு....878

ஆகத்திண் தோளான் அனுமான் அயர்ச்சியுமவ்
ஊகத்திண் தானை உறுந்தளர்வும் - மோகத்திண்
மல்லாடு தோளான் வலியும் அறிந்தெதிர்ந்தான்
வில்லோ டிலக்குவனாம் வேந்து....879

ஆளுங் கரியும் அயமும் அடைந்தவற்றின்
தாளுங் கரமும் தனிச்சிரமுந் - தோளுந்
தலத்துறுவ கண்டான் தகையிலங்கை வேந்தன்
இலக்குவன்றன் ஏவால் எதிர்ந்து....880

தூணியிடைக் கையின் தொழிலுந் தொடைக்குரிய
நாணியிடைப் பாணிபுரி நாள்வினையுங் - காணரியான்
அண்டஞ்சேர் வெற்பின் அணிநாற் படையினத்தின்
கண்டங்கள் கண்டான் கணித்து....881

பொன்மாரி பெய்யும் புயனாடன் புங்கமெலாம்
வின்மாரி கொண்டு விலக்கியே - நென்மாரி
வித்தினால் என்ன விதைத்தான் பகழியெனும்
புத்தரவம் வெய்யோன் புகைந்து....882

அப்போது அனுமன் அயர்வொழிந்து வெற்றிபெறற்கு
இப்போது அமைய எனக்கடுகா - எப்போதும்
வென்றியே அன்றிப் பிறிதொன்றும் வேண்டாமுன்
நின்றுரைப்பான் ஈது நினைந்து....883

மூன்றுலகும் வெற்றி முடித்தாய்நின் தோள்வலிமை
ஆன்றவரெப் பாருள் ளவராவார் - சான்றவரத்து
அவ்வலிமை இன்றென் அடற்கரனுக் ஏற்றதோ
எவ்வரமுங் கொண்டான் இனி....884

பொங்கரவம் பூண்ட புனிதன் தருவரமுஞ்
செங்கமலன் ஈய்ந்த திறல்வரமும் - பங்கமறு
பல்படையும் வண்ணம் படர்புயநா லைந்தினோடு
மல்வலியுங் கொண்டாய் வளர்ந்து....885

மற்கடமாம் மென்கரத்தால் வாய்த்தபுடைப் பாற்றுதியேல்
மிக்கவன்நீ என்று விளம்பியே - புக்கடர்த்து
வாமனமால் தன்கழலில் வானமுற வாள்வலக்கை
தாமமுற நின்றான் தகைந்து....886

என்கரத்தால் எற்ற இறவாய் எனிலுனது
வன்கரத்தால் என்மார் பினிடைப் - புன்குணத்தோய்
இற்றிலேன் என்னில் இகல்புரியேன் நின்னொடென்றான்
முற்றுணர்வின் மிக்கோன் முனிந்து....887

நின்றான் வலியும் நினைவும் அறிந்தினிநீ
வென்றாய் எனையே வெறுங்கையோடு - ஒன்றால்
வெலப்படா என்முன் வெறுவிலாய் வீரஞ்
சொலப்படா தன்றோ துணிந்து...888

வென்றிலா யேனும் விளியாத என்புகழை
என்றுமே கொண்டாய் இதுநிற்க - நின்றினிநீ
குத்தெனவே மார்பு கொடுத்தானக் கூற்றுவனோடு
எத்திசையும் வென்றான் இசைந்து....889

மண்டலமும் வெங்கதிரும் மாமதியும் மால்வரையும்
விண்டலமும் அஞ்சி விதிர்புறவே - கண்டகன்தன்
வன்மார் பிடைப்புடைத்தான் வானவர் கண்டுவப்ப
பொன்மேவும் தாரானப் போது....890

அண்டம் பிளந்த அதிர்ப்பொலியின் ஆன்றபுடைப்பு
உண்ட பொழுதில் உயிர்ப்படங்கி - எண்டுளங்க
உள்ளாடும் வெங்கால் உடற்றுங்கான் மேருவெனத்
தள்ளாடி நின்றான் சலித்து....891

மைக்கார் வரையனைய வாளரக்கன் மார்பிடைத்
திக்கார்ந்த வென்றித் திறற்கரியின் - மிக்காழ்ந்த
வன்பனைகள் வென்கழன்ற மாருதிதன் கைப்புடைப்பாற்
கண்குளிர விண்ணோர் கணம்....892

துயிலுணர்ந்தான் என்னத் துலங்குணர்வு நண்ண
மயன்மகளார் காந்தன் வலியால் - வியனுலகில்
நின்னோ டொருவர் நிகருண்டோ என்றுரைத்தான்
தன்னோ டுவமையிலான் தான்....893

குன்றுங் கரியும் குலவரையுங் கூற்றுமினி
நின்றசதி யாடி நிகழ்த்துமே - அன்றியுமென்
தன்புகழும் நின்புகழே என்றான் தனக்கொருவர்
மன்புவியி னேரிலான் மற்று....894

மற்றினியென் என்கை வலத்தால்நின் வாழுடைநாள்
இற்றிலதாம் என்னில் இனியென்னே - வெற்றிபெற
நின்கடன்கொள் என்றான் நினையுங்கால் எவ்வுலகும்
மின்பிறங்கு மெய்யான் விரைந்து....895

பத்திரட்டி வாய்ந்த பணைக்கையாற் பாபியவன்
குத்துதலும் அணடங் குலங்கவே - எத்திசையும்
வானுஞ் சலித்த மறையுஞ் சலித்தவனு
மானுஞ் சலித்தான் மருண்டு....896

ஆய பொழுதில் அரிக்குலத்தார் யாவர்களும்
ஆயிரம்வெற் பேந்தி அரக்கன்மேற் - தீயுருமின்
விட்டார் விடுமுன் வெறுந்துகளாய் வீழ்த்தினவக்
கட்டாம வேலான் கணை...897

நீண்மலைகள் நீறாய் நெருப்பாய் நெடுந்திசைவாய்
வேண்மருவு பல்வனமும் வெந்திவியத் - தோண்மருவு
வின்மாரி பெய்த வியப்பே வியப்பென்று
சொன்மாரி பெய்தார் சுரர்....898

வானுந் திசையும் மகியும் மகியுடுத்த
கானுங் கடலுங் கணையாக - மானமுறும்
வன்றாட் சிலையொருபத் தேந்தினான் வானவர்கள்
தன்தாட் புனைந்தான் தளை....899

அங்கதன்பத் தம்பால் அயர்ந்தான் அடலுறுமோர்
புங்கமதால் நீலன் புவியானான் - பங்கமிலா
சாம்பவனும் உள்ளந் தளர்ந்தான் கணையிரண்டால்
சாம்பினார் மற்றவருந் தாம்....900

விலக்குவனிவ் வீர வினையென்று வெம்பி
இலக்குவனும் ஏற்றான் இகலோன் - அலக்கணியத்
தம்பெல மாற்றிய வன்கைச் சிலைபத்து
அம்பினால் அட்டான் அறுத்து....901

பூமாரி பெய்தார் புலவோர் புகழுறுமெய்
நாமாரி பெய்தார் நலமுடையோர் - மாமாரி
அன்னானும் வீரன் அழகுடைத்துஉன் ஆற்றலெனச்
சொன்னான் சுரற்போற் துணிந்து....902

யானன்றி நிற்குவமை ஆயுங்கால் நின்முனெனுங்
கோனன்றி யுண்டோ எனக்கூறிக் - கானின்றோர்
ஆதார மின்றென்று அவங்கூர ஏவினனவ்
வேதா அளித்தருளும் வேல்....903

சக்கரமும் ஒண்மழுவும் தான்நாணச் சண்டமொடு
புக்கெதிர்ந்து நேராம் பொருளெல்லாம் - இக்கணத்தே
உண்பனபோல் எய்த ஒருகோலன்று ஆயிரம்கோல்
விண்பரவ விட்டான் வெகுண்டு....904

விட்டசர மெல்லாம் விழுங்கியே வேகமொடு
பட்டிருவி மார்பிற் படருதலும் - கெட்டமெனா
விண்மேல் அயர்ந்து வெருவினார் வானவர்கள்
மண்மேல் அயர்ந்தான்அம் மால்....905

பொன்மால் வரைபோல் பொலிவான் தனையெடுப்பான்
வன்மால் வரைபோல் வலியரக்கன் - கன்மர்பில்
ஊக்கமொடு சென்றான் ஒளிர்வதன மண்டலத்தில்
ஆக்கமது கண்டான் அடைந்து....906

இற்றிலனிங்கு என்னா இருபதுதோள் கொண்டெடுப்ப
முற்றுணர்வி னாற்றனையே முன்பனெனும் - பெற்றியினால்
ஏடவிழ்ந்த தோளான் எழாமையினால் உள்வியந்து
வாடியே சென்றான் மயர்ந்து....907

அரன்கயிலை கொண்டாற் கரிதாக வாங்குத்
திரம்பயிலும் மாருதியுஞ் சிந்தித் - துரன்படர
முன்புகுந்து கொண்டெழுந்தான் மூதுலகின் முற்றியநல்
அன்புடையார்க் கென்னோ அரிது....908

இக்காலை ஐயனும்நம் ஏடவிழ்ந்தார் மாருதிமேற்
புக்கான் அமர்வாய்ப் புயல்போலக் - கைக்காலக்
கோதண்ட நாணெரிந்தான் கோகனக ஆதியர்கள்
காதண்ட வோதை கடிது....909

காற்றென்கோ ஊழிக் கனல்என்கோ கண்ணுதலால்
ஏற்றென்கோ பூதத்து இறைஎன்கோ - மாற்றரிய
ஊழியினில் அண்டமெலாம் உண்டுஓரிலை யிற்துயிலும்
ஆழியான் ஏறும் அயம்....910

அண்டமே ஒத்தான் அனுமனதின் உம்பரிடை
விண்டுவே ஒத்து விளங்கினான் - தண்தரளம்
மாடிருப்ப அன்னம் வளைமயங்கி வண்சினையில்
ஊடிறுக்கும் நாடன் உவந்து....911

தேர்மேல் கருநிறத்துச் செங்கட் சிகியனையான்
கார்மேல் செலுமோர் கருமலையிற் - பார்மேற்றன்
மெய்நிழலால் எங்கும் வெருக்கொளவே வில்லினொடு
ஐயன்மேல் வந்தான் அடர்ந்து....912

வந்தேழு வாளி மழையனையான் மேற்றொடுப்ப
வந்தேழு வாளி யதினறுத்துப் - பைந்தாமக்
கொற்றவனும் ஐந்து கொடுஞ்சரங்கள் ஏவினனக்
கற்றறி விலான்மேற் கனன்று....913

அக்கணைகள் மாற்றி அரக்கன் அடுகணையால்
எக்கணைநேர் என்ன இரண்டேவே - மிக்கவனும்
அவ்விரண்டான் மாற்றி அயனடைந்த சேனையெலாம்
பவ்வமுறக் கொன்றான் படர்ந்து....914

கரியென்கோ தேரின் கணமென்கோ வண்ணப்
பரியென்கோ சுற்றிப் படரும் - அரியென்கோ
மாணுற்ற தாரான் வயவெஞ் சிலையுதைத்த
பாணத்தாற் பட்ட படை....915

விண்ணளந்து நின்ற விரிபிணத்தின் வெற்பதனைக்
கண்ணளந்து நின்ற கரியரக்கன் - மன்ணளந்த
சேவடியான் வண்ணச் சிகரப் புயத்திரண்டம்பு
ஏவினான் தீப்போல வே....916

வண்ண முறுவல் வதனத் தொடுமலர்ந்த
கண்ணன் வயிரக் கணைஒன்றால் - எண்ணரிய
ஊழியினும் மாளா ஒருவில் நடுவறுத்தான்
வாழியென விண்ணோர் மகிழ்ந்து....917

மற்றுஞ் சிலையெடுத்து வாங்குநா ணேற்றாமுன்
செற்றமிலா வீரனவன் தேரமர்ந்த - கொற்றநடை
வெண்பரியும் வெண்குடையும் வெண்கொடியு மற்றவிய
திண்கணையாற் செய்தான் சினந்து....918

மட்டிருக்குந் தாரான் மணிமார் பணிகவசக்
கட்டறுத்து வீரக்கணை ஒன்றால் - வட்டமுறும்
வண்மவுலி பத்தும் வளைவாரி திப்படுத்தான்
விண்மகிழ வானோர் வியந்து....919

காற்றுங் கனலுங் கடுங்காலக் காலவிடக்
கூற்றும் பொருமக் கொடுங்காலம் - ஆற்றலுறு
மண்டலத்தோ டாதனவவ் வாரியிடை வீழ்ந்தற்றே
கண்டகன்தன் மோலிக் கணம்....920

வில்லிழந்து செய்யும் வினையிழந்து வீரமுறு
வல்லிழந்து வாகை வலியிழந்து - எல்லை
முடியிழந்து வெற்றி முரசிழந்து கொற்றக்
கொடியிழந்து நின்றான் குனிந்து....921

தாணோகி நின்ற தகையானைச் சாமியுந்தன்
தோணோக்கி வெம்மைத் தொழிலுடையான் - கோணோக்கும்
வெம்படைஒன் றில்லான் வெறுங்கையான் என்றுரைத்தான்
செம்பவளத் தொண்வாய் திறந்து....922

நல்வினையால் அன்றி நலனறியா யாவருக்கும்
வல்வினையால் வெல்லும் வழக்குண்டோ - பல்வினையும்
அற்றொழிந்து நும்பிக் அரசளித்தாய் ஆகிலினி
பெற்றதிருப் பெற்றிருப்பாய் பின்....923

குன்றுபோல் கோலக் கொடியோடு கொற்றமிலாய்
இன்றுபோய் நாளைவா என்றிசைத்தான் - என்றும்
வலம்புரிகள் மாவாழ் மரைமலரை உன்னி
வலம்புரியும் கோசலையார் மன்....924

பார்மேல் நடந்தான் பதிநோக்கிப் பண்ணவர்தம்
ஊர்மேற் பவனி உலவுவான் - தேர்மேற்தன்
வில்லிழந்து சொல்லும் வினையிழந்து வீரமுடி
எல்லிழந்து வாகை இழந்து....925

திசைக்கரியை எண்ணித் திசைநோக்கான் சேர்ந்த
வசைக்குருகி வானோர் மருவு - நசைக்குரிய
விண்ணோக்கான் மற்றும் வினைநோக்கான் வெய்துயிர்த்து
மண்ணோக்கிச் சென்றான் மருண்டு....926

சூதனைய கொங்கைத் துடியிடையார் தம்விழியுங்
காதலர்தஞ் சொல்லும் கணிப்பரிய - சீதரன்தன்
வாளியே ஒப்ப மயங்கினான் வந்தடைந்தான்
ஆளியே அன்னான் அகம்....927

தெருண் மாலை ஐயன் செருந்தொழிலை உன்னி
மருண்மாலை மேவி வளஞ்சேர் - சுருண்மாலை
நாற்றியபொற் பூவாளி நண்ணினான் நண்ணிலரைக்
கூற்றின்வாய் உய்த்தான் கொதித்து....928

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.12. கும்பகருணன் வதைப் படலம்

திக்கனைத்தும் வென்ற செருவலியான் தன்னாணை
புக்கிறைஞ்சி நின்று புகழ்வாரை - இக்கணத்தே
வாட்டமிலீர் சென்றெவ் வரைப்பினும் வாளரக்கர்க்
கூட்டிதிர்நீர் என்றான் குறித்து....929

உண்ணினைந்த மானத்து உயர்நீ ஒருவழிப்பட்டு
எண்ணிறைந்த சானகியார் இச்செயலைக் - கண்ணுறுங்கால்
என்னினிப்பாள் என்னா இனைந்தானெத் தேவரையும்
முன்னினைப்பின் வென்றான் முனிந்து....930

மூப்பினால் யாக்கை முனியனைய மூதாதை
ஆர்ப்பினான்மெய் நொந்து அயர்வான்முன் - பார்ப்பினான்
உற்றசெயல் எல்லாம் உணர்ந்தருகு செண்றுறைந்தான்
பொற்றவிசின் மீது பொலிந்து....931

என்னுற்ற பெற்றி இசைத்திடுக என்றியம்பி
முன்னுற்ற பாட்டன் முகநோக்கி - பொன்னுற்ற
மின்னினால் ஆயவிறல் வேலத் தசமுகனும்
பன்னினான் எல்லாம் பகுத்து....932

யானிசைத்தல் என்னே எதிர்சமரம் என்றயர்தல்
தானிசைத்தல் ஒன்றும் தவிர்ந்ததோ - மீனிசைத்த
கண்ணாடன் பாற்பெருகு காமத்தால் வந்தவினை
நண்ணாதோ ஐயா நடந்து....933

செம்பொன் வரையிற் திகழும் இலக்குவன்றன்
அம்பொன்றே எச்சமரும் ஆற்றுமே - நம்பவெதிர்
புக்கெதிர்ந்த போரிற் புகலுவதென் போற்றுமவன்
கைக்கணைக் குண்டோ கணக்கு....934

செந்தாமரை அனைய செங்கட் சிறுமுறுவல்
கொந்தார் குவளைக் குளிர்மேனிப் - பைந்தாமக்
கொற்றவன்தன் வீரமினிக் கூறுவதென் கூறுங்கால்
உற்றுரைப்பார் உண்டோ ஒருங்கு....935

சிங்கார மார்புஞ் செறியளக பந்தியெழிற்
கொங்கார மாலைக் குளிர்முடியும் - மங்காத
வண்ண மணிநிறமுங் கண்டார் மறுபிறவி
நண்ணுவரோ கண்டாய் நகம்....936

கற்கொண்ட திண்புயத்துக் காகுத்தன் கைப்பிடித்த
விற்கொண்ட வாளி விசைகொண்டு - முற்கொண்டு
மண்டு திறற்படையின் வன்றலைகள் கொண்டவிசை
கண்டவரு முண்டோ கணித்து....937

ஒருவாளி யேபல் உருவா யிரமாய்
மருவார் மயங்க மருவிச் - செருவூடு
சென்றுருவி மற்றுந் திசையுருவிச் சென்றதாம்
நின்றுறைதல் உண்டோ நிறைந்து....938

கண்ட திரண்டுடனே காணா திரண்டுமனங்
கொண்ட திரண்டுங் குணிந்தறிந்த - பண்டைநெறி
மாதவருங் கண்டு வகுப்பரோ மானிடனாம்
மாதவன்கை வாளி வலி....939

நாட்டமினி என்னே நளினா கரத்துறையும்
வாட்டடங்கண் சானகியார் மற்றவன்தன் - தோட்டுணைகண்
எண்ணுமோ ஈன இராக்கதரைக் கண்ணிமையா
விண்ணுளோர் தம்மை வியந்து....940

மற்றவன்தான் ஏறும் வலிமுகத்தின் மாட்சியினை
முற்றுரைப்பார் உண்டோ மொழியுங்காற் - கொற்றமுறு
மாலூர்தி என்று வகுப்பனேல் மற்றதவுங்
காலூர்தி என்பேன் கணித்து....941

இந்திரனை யாதி எளியரால் ஏற்றமிலா
மந்தரநேர் தோளென் வலிக்குரிய - வெந்தகையார்
நல்லபகை கிட்டியது நான்செய் தவமென்றான்
கொல்லமைந்த வேலரக்கர் கோன்....942

முன்னநீ சொன்ன மொழிகேளாய் மொய்யமர்வாய்
இன்னல் அடைந்தாய் இனியேனும் - பொன்னணங்கை
விட்டிடுக அன்றேல் விதியுந்தச் சுற்றமொடு
பட்டிடுக என்றான் பரிந்து....943

நன்றிதே என்ன நயந்துழியின் நானிலத்தில்
வென்றி விதியார் விலக்கவலார் - நின்று
தடுத்தான்வெம் மாயை தனைப்புரிய வல்லான்
அடுத்தார்க்கு எமனனையான் ஆங்கு....944

ஒன்றிலே நிற்றல் உறுதிப் படுதலிவை
வென்றியே உற்றார் வினையன்றோ - அன்றிக்
கலங்குதிநீ என்னிற் கருதுவரோ கண்டாய்
துலங்கொளிவேற் காளாய் சுரர்....945

மாத்தா னவர்எவர்க்கு மாற்றானெவ் வானவர்க்கு
மூத்தான்புள் ளேறி முனையுநாள் - பார்த்தாசை
எல்லாம் அறிய இகல்புரிந்து வென்கண்ட
வல்லாய்நீ அன்றே மதி....946

வீரத்தால் அன்று விதியாலும் அன்றுநெடுந்
தீரத்தால் அன்றெனவே செப்புவார் - கோரத்து
வெஞ்சமரி லங்சி விடுத்ததென விண்ணுளோர்
வஞ்சிதனை விட்டால் மதித்து....947

யாவரால் வெல்லப் படுவானென்று எண்ணவருந்
தேவராற் போற்றுந் திறமுடையான் - பூவுளான்
தந்த வரத்தின் தனியாண்மைத் தம்பிதனைச்
சிந்தியாது என்னோ செயிர்த்து....948

மற்றவனைக் கண்டால் மானிடரும் வானரமுங்
கொற்றமொ டுங்கியுளங் கூசுவார் - வெற்றியிதன்
மேலுண்டோ என்ன விறலரக்கன் மேதகைநின்
போலுண்டோ என்றான் புகழ்ந்து....949

மால்வரைபோல் நின்ற வலியுடைய கிங்கரர்கள்
நால்வரைநீர் வல்லை நனியேகி - மேல்வரைநேர்
தம்பிதனை இன்னே தருதிர் எனவுரைத்தான்
வம்பவிழ்தார் வல்லரக்கர் மன்....950

வகுத்தபடி செய்துமென மன்னினர்கண் மன்னோ
நகத்துடன்மைந் நாகமலை மானத் - திகைத்தமரர்
அஞ்சினர்க ணோக்க வமளிமேல் ஆர்வமுடன்
துஞ்சினான் தன்னைத் துணிந்து....951

காலன் வசந்துயிலுங் காண மணித்தாக
நீலைமலை போல நெடுந்துயில்செய் - ஆலமனாய்
இன்றெழுக நின்முன் இருந்தரசு செய்கவினி
நின்றழுக யாமும் நினைந்து...952

வந்தார் இரைத்து மழுவால் புடைத்தனர்கள்
கந்தா லுலக்கைக் கழுவதனால் - முந்தாரக்
கல்லாற் புடைத்தார் கடுகளவுங் கண்விழித்தல்
இல்லா திருந்தான் இவன்....953

வன்முசலந் தாக்குதலான் மாலுறக்க நீங்கிஎழுந்து
என்முடியவ் விண்மிசையும் ஏறவே - கன்மலையில்
ஏற்றவணை மீதிருந்தான் எண்குடத்தார் பன்னறவம்
ஊற்றினான் வாய்வாயு வந்து....954

வெம்பசியாந் தீய்க்கு விறகாய துமுடிய
வன்பசியை யாற்றான் மருள்கொண்டான் - தன்பசிக்கோர்
ஆயிரமே றங்காந் தயின்றான் அதன்பின்னும்
ஆயிரங்கோ வுண்டான் அறிந்து....955

கரும்பொறையிற் செங்கணடற் கம்பமதக் கைமா
இருந்ததுபோல் வீண்முடியின் ஏறப் - பொருந்தியணை
மாயிருந்தோள் வீரன் இருந்துழியின் மன்னவனிற்
கூயினன்காண் என்றார் குறித்து....956

தம்முனார் ஏவ தலைக்கொண்டு தன்னிருபால்
பொம்மென் றிரைத்துநகர் போதவே - அம்மவொரு
திண்கால் வரைப்போலச் சென்றானச் சேவகன்மாட்டு
எண்காலன் அன்னான் எழுந்து....957

கடல்கிடந்தது என்னக் கடல்சூழும் வண்கால்
திடர்கிடந்தது என்னத் திகழ்வோன் - மடல்கிடந்த
தண்டா மரைச்சரண் மேற்றாழ்ந்தான் அத்தானவருங்
கண்டாரும் அஞ்சக் கலந்து....958

தாழ்ந்தானை ஏந்தித் தரியலர்க ணெஞ்சமறப்
போழ்ந்தாசை வென்ற புகழுடையோன் - சூழ்ந்தாருங்
கண்டணைத்தது என்னக் கரத்தால்அக் காளைதனைக்
கொண்டணைத்தான் வெம்போர் குறித்து....959

மைதவழுங் குன்றமதில் வந்துதயஞ் செய்தவம்
எய்தரிய பல்கலனும் எல்லமையப் - பெய்துதட
மாக்கரிய னோடையென வாள்வீர பட்டநுதல்
வீக்கினான் வெய்யோன் விரைந்து....960

முற்றினான் இன்ப முழுவாரி யினெழுந்து
சுற்றினான் வாசத் துவரணிந்து - பெற்றவுரு
எட்டினான் ஈய்ந்த இறவா நெருங்கவசங்
கட்டினான் வீரநிலை கண்டு....961

இன்ன தகைமை எதுஈங் கியம்புகென
அன்ன தகைமை அடையலர்கள் - துன்னிநகர்
வந்து வளைத்தார் மனிதரவர் தம்முயிர்நீ
உந்திபோய் என்றான் உருத்து....962

கேட்டிருகண் சேந்தான் கெடுவாயக் கேழ்கிளர்மை
வாட்டடங்கட் சானகியால் மற்றுனது - நாட்டகத்து
வாழ்வெல்லாம் பொன்றும் வகைகொண்டாய் வானவர்தந்
தாழ்வெல்லாம் நந்தமக்கே தான்....963

தானம் பொறுமை தயவொழுக்கங் கற்புநிறை
மானம் இவையோர் வடிவாகி - யானமலர்
மங்கையே கண்டாயம் மைதலியம் மானிடனுஞ்
செங்கண்மால் என்றேநீ தேர்....964

பாவமோ அன்றிப் பழியோநற் பண்ணவர்தங்
கோவமே யாம்செய் கொடுந்தொழிலோ - தீவநிகர்
காரிகைதன் மீதிலடங் காத நெடுங்காதல்
யாரிவ்வினை தீர்ப்பார் இனி....965

பாகுப் பனிமொழியின் பார்வையுநற் பார்வையிலாக்
காகுத்தன் கைச்சமுரங் கார்க்கடல்தாய் - மாகத்திண்
மெய்யோடு மிங்குன் வினையும்நம் பாலிறுப்ப
உய்யுமாறு உண்டோ உமக்கு....966

மட்டவிழுந் தாரோய் மதியிலேன் என்னினுமென்
கட்டுரையுங் கோடி கருங்குழலை - விட்டவரைத்
தஞ்சமெனக் கோடி தடையுண்டேல் வெஞ்சமருக்கு
அஞ்சலைநீ என்றான் அறிந்து....967

மேனடக்கும் பாவ வினையறி வாகிநினைத்
தானழைத்த தன்றிவணிற் தம்பிகாண் - வானமருக்
கஞ்சினையூ னின்னு மருந்தினைபோ யாதரவாய்த்
துஞ்சுதிபோ என்றான் சுளித்து....968

வம்பிட்ட வன்றார் மணிமுடியம் மானிடரைக்
கொம்பிட்டு வாழாது கொக்கரையில் - அம்பிட்ட
கையால் தொழுமக் கடனுனக்கும் உம்பிக்கும்
ஐயா அமைகவினி யாங்கு....969

வானந் தடவு மணித்தேர் வருகவினி
யானஞ் சுதலும் இனியுண்டோ - நீனஞ்ச
மாவாயிங் கென்ன அறைந்தான் அருங்கமலத்
தேவாளி கொண்டான் செயிர்த்து....970

ஆயதுகண்டு ஏகி அடிபணிந்தான் எம்பெரும
நாயனையேன் செய்த நவைஎல்லாம் - நீயுளத்துக்
கொள்ளாது அருள்கஎனக் கூறினான் கூற்றுவன்வாய்
விள்ளாது வென்றான் விரைந்து....971

வென்றியாய் வென்றினியான் மீளுவேன் என்றுரையேன்
பொன்றுவன்யான் பொன்றுவனப் போதேனும் - நன்றெனவே
நாயகியை விட்டு நலங்கோடி நாற்றிசையும்
வேயபுகழ் கொள்வான் விரைந்து....972

மேகநாதப் பெயர்கொள் வேந்தும் அவன்தம்பிகளைப்
பாகமாய் மாளும் பரிசுணர்தி - யாகவத்தி
எற்கொன்றான் என்னில் இராமபிரான் எம்பெருமான்
நிற்கொல்லும் கண்டாய் நினைந்து....973

இன்றொடுநின் கேண்மை இழந்தேன்யான் என்றுருகி
நின்றுவிழி சோர நிலன்வணங்கிப் - பொன்றயங்கும்
வாயில்வாய்ச் சென்றான் மதியா வலத்தினாற்
காயெரியை ஒப்பான் கடிது....974

தேருங் கரியுஞ் செழும்பரியுந் திண்படைக்கை
யாரும் இருபால் அடையவே - வீரமணி
வேகத்திண் டேர்மேல் விளங்கினான் வெற்பனைய
மாகத்தின் தோளான் வயிர்த்து....975

பன்னறவும் பல்லூனும் பல்சகடத் தேற்றியவன்
பின்னடைந்து நல்கப் பெரும்பிலவாய் - தன்னிடையே
அவ்வகையால் வாரி அயின்றான் அடைந்தானப்
புங்கவர்கண்டு ஓடப் புலர்ந்து....976

ஊழிவாய்ப் பூமேல் உருத்தெழுமக் கூற்றுவனிற்
பாழிவாய் திண்டோள் பழியரக்கன் - ஆழிவாய்
மைந்நாகம் என்ன வருவானைக் கண்டயிர்த்தான்
பைந்நாக மேய பரன்....977

காலளவு காயத்தின் கண்ணளவு கண்ணளவும்
வேலளவா மார்பளவு விள்ளரிதென் - நூலளவால்
இத்தகையான் யாரறைதி என்றான் உரைப்பரிய
சித்துருவாய் நின்றான் தெரிந்து....978

மாயோன் உரைப்ப வணங்கினான் வீடணனும்
ஆயோ தனத்துக் கமைந்தெழுவான் - நாயேற்கு
முன்பிறந்தான் மூவுலகு மொய்யமரில் வென்றவற்குப்
பின்பிறந்தான் கண்டாய் பெயர்ந்து....979

ஆரமைந்த சென்னி அரனார் அளித்தநெடுஞ்
சூரமைந்த சூலத் தொடுகரத்தான் - பேரமைந்த
வெண்கரியை மேலிருந்தோன் வீழாமல் விண்டிரித்தான்
திண்பரிவால் பற்றிச் செயிர்த்து....980

காலன் அரசுங் கடவுளர்தங் கோனரசும்
மேலவர்தம் வாழ்வும் வினையில்லாய் - நீலனிறக்
கொண்டல் எனுமின்னோன் கொடுத்துயிலின் நீங்குரிமை
உண்டெலாந் தன்மை உணர்....981

மற்றொருவர் தாரமதை வவ்வுதல் மாபாவமென
கற்றறிந்த நீதி கழறினான் - செற்றமுறு
கண்டகனுஞ் சீறிக் கடுகடுத்தான் போலுமிவன்
தண்டொடுமிங் கேற்றான் தடுத்து....982

என்றவன்தன் செய்கை எடுத்துரைப்ப ஈங்கிவனைக்
கொன்றுபயன் என்றுனது கூட்டுறவு - நன்றெனவே
கூடுமெனிற் கோடுங் குறிப்புணரேன் என்றுரைத்தான்
மாடிருந்த வெய்யோன் மகன்....983

அய்யனும் நன்றென்ற அறிவுடைய வீடணனை
உய்திறமன் னாற்குளத்தில் உண்டாமேல் - எய்தினைநீ
உள்ளக்கருத் தோர்ந்து உறுகஇவண் என்றுரைத்தான்
எள்ளுவனோ வந்தால் எதிர்ந்து....984

தானை வளங்கடந்து தம்முன் அடிவணங்க
மேனிமிர்ந்து புல்லி விழிசோர - வானவர்க்கு
எட்டாத் திருவடைந்தாய் என்செய்தாய் எம்பியிவண்
நட்டாயோ ஐயா நடந்து....985

எண்ணூம் பொருளாய் இறப்பிலா நன்மைதரும்
புண்ணியனை எய்திப் புகழடைந்தாய் - மண்ணிடையில்
தீயனவே செய்து திருந்தியவெம் பாலடைதற்கு
ஆயதெவன் ஐயா அறை....986

மாளாக அத்தேயம் மாயவன்பாற் பட்டுதமற்கு
ஆளாம் பொழுதில் அயர்வின்றிக் - கேளார்நின்
கையாற்றும் எள்ளீர்க் கடன்குடிப்பார் என்றிருந்தேன்
ஐயாஎன் செய்தாய் அயர்ந்து....987

பாவியே எல்லாம் படுகளத்துப் பட்டபின்னர்
ஆவியே அன்னாய் அரும்செல்வ - மேவுதற்கு
போதுகநீ இன்னகர்க்குப் போதுகநீ என்றுரைத்தான்
காதலால் உள்ளம் கசிந்து....988

வீடணனுங் கேட்டு விளம்புவான் மெய்த்தவங்கொள்
ஈடு மெடுப்புமினி இல்லானைக் - கூடியவன்
சேவடியே தஞ்சமெனச் சேர்தியேல் மற்றினியென்
யாவர்நிகர் கண்டாய் இனி....989

புன்குலத்து வெம்பிறவி போக்கி அருண்மலையால்
இன்பளிக்குங் கொண்டலெனக் கீய்ந்தவெலாம் - முன்புனக்கே
தந்தடிமை செய்வன் தகைதரேல் பேரின்பம்
வந்திடுமேல் ஐயா மறுத்து....990

தக்கவைசெய் யாதார் தமரேனுந் தன்னறிவால்
அக்கணத்தே நீப்பது அறிவுடமை - மிக்கபவம்
ஆற்றினதால் அன்றோ தகைஎன்ற றிந்துமுயிர்
மாற்றினான் ஓர்மாத வன்....991

வஞ்சகத்தால் மாதரசை வஞ்சித்த மாபாவி
நஞ்சமென யார்க்கும் நயஞ்செய்யான் - தஞ்சமென
அன்னவனுக்கு ஆக அமரியற்றர் நன்றலவென்று
என்னப் பணிந்தான் இனைந்து....992

கண்ணநீர் அன்னான் கழலலம்பக் காதலுடன்
மண்ணின்மேல் வீழ்ந்து மயர்வானை - வண்ணமணிப்
பொற்றார் அகத்திறுகப் புல்லினான் புல்லியிவை
சொற்றான் விழிநீர் சொரிந்து....993

போருக் குரிய புரிந்தான் தனைமறந்து
பாருக்குள் யாரும் பரிந்தேகக் - காருக்குள்
மின்னனைய வாழ்வை விரும்பியே நும்மொடியான்
மன்றுவனேல் என்னாம் மதி....994

வேதண்டத் தான்அத்தன் வெற்பெடுத்த மிக்கவனம்
மூதண்டத் தான்அத்தன் மொய்கணையால் - மாதண்டப்
பட்டுருள ஆகுஅவத்தே பார்த்தெளியேன் போலிருத்தல்
கட்டழகோ ஐயா கருது....995

காற்றின்சே யாதிக் கவிக்குலத்துக் காவலரை
கூற்றின்வாய் உய்த்துக் குருதிநீர் - ஏற்றிருகை
உண்டலால்ஊர் புக்கு உழல்வனோ என்றுரைத்தான்
அண்டரைமுன் வென்றான் அனன்று....996

மாதவமும் வேள்வி வலமும் மதிநடையும்
நீதியினால் வந்த நெறியொழுக்கும் - போதனையும்
வந்தனையும் நிற்கே மறமுங் கொடுந்தொழிலின்
சிந்தனையும் எங்கட்கே தேர்....997

பண்ணும் விதியின் பயன்படியே யாமன்றி
எண்ணும் படியே இயலுமோ - அண்ணலிதற்கு
உள்ளந் தளரேல் ஒழிகநீ என்றுரைத்தான்
வெள்ளநீர்க் கண்ணான் வெகுண்டு....998

பின்னும் உரைப்பான் பெருந்தவத்தோய் பேதுறல்நீ
மன்னுதிஅவ் வள்ளல் மலரடியே - நின்னொடுஞ்சேர்
உற்பவத்தின் காதல் ஒழிந்ததினி என்றழுதான்
கற்பணைந்த தோளான் கசிந்து....999

வாயும் புலர்ந்து மதியும் புலர்ந்துநிலத்
தோயுங் கடலிற் துளைந்தழுது - நேயமொடு
மீண்டான் வணங்கி மிகுகாதல் உள்ளூற
ஆண்டான் பதுமத்து அடி....1000

வந்திறைஞ்சி எந்தாய் மலர்வாழ் ஒருமுதல்வன்
முந்தை விதியார் முடிக்கவலார் - நிந்தையுறு
வன்குலத்து மான மறமொழியான் என்றுரைத்தான்
தன்குலத்து நற்குணத்தோன் தான்...1001

முன்னவனை நின்முன் முனித்தொறுத்தல் உன்னியிவை
பன்னினம்யார் ஊழிப் பயன்கடப்பார் - என்னலிது
பேசினான் பேசாப் பெருமறைகள் ஆயிரமும்
ஈசன்இவன் என்பான் இனிது....1002

என்றுரைக்கும் காலை இராக்கதத்திண் சேனையெலாஞ்
சென்றெதிர்த்து வெய்ய செருச்செய்ய - குன்றுகொடு
முட்டினார் மோதி முனைந்தார் முனைந்துபல
திட்டினார் வானரங்கள் சேர்ந்து....1003

சூலத்தார் வேலாற் சுடர்மழுவாற் தோமரத்தாற்
பாலத்தாற் பல்லாற் பல்வறையாற் - கூலத்தால்
ஒண்ணகத்தான் மெய்யற்று உலர்ந்தார் நிருதரொடு
கண்ணகத்து வானரங்கள் காய்ந்து....1004

இவ்வகையாய்ச் சேனை இகலியற்றுங் காலையொரு
மைவ்வண்ணக் குன்றம் வருவதெனச் - செய்வண்ணப்
பொற்றேரின் மீது பொலிந்தான் உருத்தடைந்தான்
செற்றார்க்கே றன்னான் செயிர்த்து....1005

நெருப்பென்கோ நீல நிறஞ்சேரும் வண்ணப்
பொருப்பென்கோ அஞ்சப் புலையில் - இருப்பென்கோ
கூற்றென்கோ வெம்போர் குறித்தெழுவான் ஊழியனற்
சீற்றந்தான் என்கோ செயிர்த்து....1006

கையாற் கழலார் கடியாற் பிடியால்விண்
மெய்யாற் றுடையால் விசையதனால் - செய்யாற்றும்
பண்ணைச்சே றென்னப் படுகளதத்துச் செய்தனனவ்
விண்ணைச்சேர் மெய்யான் வெகுண்டு....1007

விண்ணினெடுத் எறியும் வீழாதுவிண் ஏற்றும்
மண்ணினெடுத் எறியும் வானரரைக் - கண்ணுதல்முன்
ஆழிவாய் நீர்படுத்தும் அங்கையால் தேய்த்துதிர்க்கும்
ஊழிவாய்க் கால்போல் உருத்து...1008

நாகத்தின் சேணை நராந்தகனால் நாசமுற்றுப்
பாகத்தின் மேலும் படனோக்கி - மாகத்தின்
விண்வரையொன்று ஏந்தி விடுத்தான்மெய் மீதுபட
நுண்மலரே போன்றுளது நொந்து....1009

வெற்பதுநீ றாகவினைவே றொன்று அறியானப்
பொற்புருவ நீலன் புகைந்தெதிர்தாய் - மற்கரத்தாற்
குத்தினான் காலாற்குமைத்தான் கொடியோனை
மொத்தினான் நீலன் முனிந்து....1010

தட்டு குரங்கின் தகையாய துமுடியப்
பட்ட நுதற்களிற்றின் பான்மையான் - கட்டமைதிண்
வாமக் கரத்தால் வலிந்தெற்ற மண்விழுந்தான்
தாமத்தோள் வீரன் தளர்ந்து....1011

நீலன் அயர நெடுமலைஒன்று ஏந்திவயக்
காலனிவன் என்னக் கடுகிய - ஆலமென
ஏவுதலும் தோட்கிரியின் ஏற்றான் இகல்புரியின்
மூவரையும் வெல்வான் முனிந்து....1012

எற்ற நெடுஞ்சிகரம் எண்ணறுநீ றாகவவன்
மற்றொருகுன் றன்ன மணித்தண்டம் - பற்றினன்கை
ஏவுதலும் மைந்தன் இருகையாற் பற்றியவன்
கூவிரிமேல் நின்றான் குதித்து....1013

நின்றவனை நோக்கி நெடியோய்நீ யாரையுலகு
ஒன்றுங் கவிகட் ஒருவனோ - வென்றியவன்
மைந்தனோ வாயு மகனோ வழங்குதிநீ
உய்ந்திடுமாறு என்றான் உருத்து....1014

வாலினால் நும்முன் வலியடங்கச் சுற்றியரி
நாலுந்தாய் வந்தோன்தன் நற்குமரன் - ஆலமென
உன்னையுமென் வாலா லுடன்இசைத்தெம் ஐயனடி
மன்னுவன்யான் என்றான் வயிர்த்து....1015

தந்தைஉயிர் மாய்த்த தனிப்பகையை எண்ணியன்றே
வந்தனைவெம் போர்க்குநீ வல்லமையென - சிந்தைகொடு
வீசினான் தண்டமது வீசுதலும் வெய்யவன்மேற்
தூசியே ஆயினது சூழ்ந்து....1016

தண்டிறத்தன் கையால் தழுவினான் தன்னைஎதிர்
மண்டியிரு கையால் வலிந்தெற்றப் - புண்டிறந்து
சோரிநீர் வாயால் சொரிந்தான் விழுந்தயர்ந்தான்
மூரியேறு அன்னான் முனிந்து....1017

மண்ணியர்வான் வல்லுயிரும் வாங்குவான் ஆகியுளத்து
எண்ணியொரு சூலம் எடுக்குங்கால் - விண்ணகம்போழ்
வெற்பொன்று நெற்றியின் மேல்விட்டான் எம்மாருதியுங்
கற்பகம்போல் மன்னோ கலந்து....1018

மற்றோருகுன்று ஏந்தி வலியோயிம் மால்வரையால்
இற்றிலைநீ என்னில் இனியுன்னோடு - அற்றமுறப்
போர்புரிவ தில்லைஎன்றான் பொன்னுலகம் போற்றுசெய
ஏர்புரியுந் தாரான் எடுத்து....1019

சொற்றதுநீ நன்று சொலத்தகுந்த மாற்றமதே
அற்றெனினும் மேவும் அடற்பொறையால் - கொற்றமறத்
தோற்றியுடல் கொஞ்சஞ் சுளித்தேன் எனின்நினக்குத்
தோற்றவன்யான் என்றான் துணிந்து....1020

நன்றடா என்று நவின்மா ருதிஎறிந்த
குன்றமொரு கூறு பலகூறாக - நின்றவலித்
தோளின்மேல் ஏற்றான் சுரர்கண்ட கம்வெருவக்
கோளின்மேல் நின்றான் கொதித்து....1021

நஞ்சனையான் மெய்வலிமை நன்றென் றகம்வியந்து
மஞ்சனையான் கோதண்ட வாளிக்கே - எஞ்சுமிவன்
தன்வலிமை என்னத் தனிவியந்தான் மற்றெவர்க்கும்
மன்வலிமை கொண்டான் மதித்து....1022

மாருதிநே ராகும் வலனிலனேன் மற்றிவனோடு
ஆரெதிர்நேர் வார்என் றலங்கூரப் - பேரிமையோர்
இத்தருணங் காப்ப இடரேன்மின் என்றெதிர்ந்தான்
மித்திரையார் தன்சேய் விரைந்து....1023

வில்லெடுத்து நாணெறிந்து வீரக் கணையெனுமச்
செல்லெடுத்துப் பெய்யுந் திறனோரார் - மல்லடுத்த
கண்டகர்தங் காலுங் கழுத்து மறக்கிடந்த
துண்டங்கள் கண்டார் சுரர்....1024

வண்ண நடைக் கலினமாவும் மதகரியுந்
திண்ணென்கொ டிஞ்சிக் செழுந்தேரும் - எண்ணுமுனம்
பூழிவாய்ப் பட்டுருளப் போக்கினான் புங்கமதால்
ஊழிவாய்த்தீப் போல உருத்து....1025.

வின்மையுமவ் வீரன் விசிகத்து விண்ணுறுவோர்
தன்மையுமே நோக்குன் தறுகண்ணான் - வன்மையினிற்
காருவமை என்ன அறைந்தான் அவன்முனணித்
தேர்நடத்தி வந்தான் செயிர்த்து....1026

தம்பியும்எம் மாருதிதன் தாமத் திருத்தோளிற்
செம்பொன் வரைமேல் திகழ்கின்ற - வெம்பருதி
வீற்றிருந்தது என்ன விளங்கினான் விண்ணவர்கள்
போற்றினார் ஆசி புகன்று....1027

கும்ப கருணன் கொதித்தொருவில் வாங்கியுளம்
வெம்பி யினிநீ விளிவையென - நம்பர்புனை
வாளரவிற் சீறி வகுத்தானோர் மாற்றமிளங்
கோளரியை நோக்கிக் குறித்து....1028

இப்போருக் காதி இருவருக்குந் தம்பிகள்யாம்
ஒப்போதற்கு உண்டோ ஒருவர்க்கே - இப்போதில்
யாமிரு வராற்றும் அமரினாற் தோன்றுமிது
நீமறவேல் என்றான் நினைந்து...1029

இட்டமிலா எங்கை இருகுழையும் மூக்குமரிந்து
இட்ட கரனிலத்தே இட்டிலேன் - மட்டவிழுங்
கூந்தல் மடவார் குழாமேசக் கோநகர்க்குச்
சார்ந்திடேன் என்றான் தகைந்து....1030

வில்லினான் அன்றி வினையுடையாய் நும்போலப்
பல்லெலாந் தோன்றப் படுமுரையால் - வல்லமெனச்
சாற்றுதற்கு யாமெளியேந் தானுணர்க என்றுரைத்தான்
போற்றுதற்கும் எட்டாப் பொருள்....1031

மற்றத்தின் எல்லையென வாளரக்கன் வெம்பகழி
கூற்றத்தின் ஆடல் கொளற்பால - ஆற்றற்பேர்
ஒன்பான் இரட்டி ஒருதொடையில் ஏவினான்
வன்பால் உருமின் வகுத்து....1032

குடக்கண்ணன் வாளிக் குழுவினை எங்கோமான்
அடற்கணையோர் நான்கால் அறுப்பப் - படப்பணியின்
வல்வாய் விடமனைய வாயம்புஓர் ஆயிரம்நீ
வெல்வாயிங்கு என்றான் விடுத்து....1033

எத்திக்கும் போற்றும் இளையோனும் எம்பெருமான்
வித்தம் கணையனைய வெங்கணையால் - அத்தக்க
புங்கமெலாம் நுண்பொடியாய்ப் போக்கினான் பொன்னுலகோர்
அங்கைஎடுத் தார்ப்ப அவன்....1034

மாருதிமேல் ஆறிரண்டு மற்றவன்மே லுற்றவன்மேல்
ஓரிரண்டு வாளி உடலழுத்தி - வாரமிலான்
மைதாவு மேனி வலியான் திசைமறையப்
பெய்தான் கணையின் பெயல்....1035

அக்கணைகள் மாற்றி அடலம்பின் ஆற்றலினால்
மிக்கவன்தேர் நூறி மிடற்பரியுந் - தொக்கமைந்த
கூளியும்வெம் பூதக் குழுவுங் குறைத்தவன்றன்
தோள்விலையும் அட்டான் துணிந்து....1036

தேரிழந்து வாகைச் சிலையிழந்து திண்திறலோன்
பாரிழிந்து போதப் பதாதியெனத் - தீரனெனும்
மாருதிதன் தோளிழிந்து மால்வரையின் நின்றிழந்த
போரரியின் நிண்றான் பொலிந்து....1037

வஞ்சகத்தான் ஏவ மடிவாரின் மும்மடங்கு
விஞ்சிநெடுந் தானை விரைந்தெதிர்ந்து - நஞ்சாமெனத்
தாக்குதலும் வெம்பிச் சரமாரி யின்ஒழித்தான்
தூக்கமிலா மேலோன் சுளித்து....1038

இச்செருவிங் காற்ற இளையோன்மற் றோர்திசைவாய்ப்
பிச்சரிற்பேர் உற்றான் பெரும்போருக்கு - அச்சமொடும்
வானவரும் நின்று மருண்டாரவ் வானரமன்
தானெதிர்போய் ஏற்றான் தடுத்து....1039

தடுத்தொருகுன் றேந்தித் தகையரக்கன் தன்மேல்
விடுத்தலுமவ் வெற்பை வெகுண்டு - பிடித்தொருகை
பற்றினான் நீறு படுத்தினான் பாதகன்கை
பெற்றவலி என்னோ பெரிது....1040

மற்றொருகுன் றேந்தி மலைகுவன்யான் என்றுணரும்
அற்றமொரு சூலம் அரக்கனெடுத்து - இற்றதிவன்
வாழ்வெனவவ் விண்ணோர் மனங்கலங்க ஏவினான்
ஊழியனல் போல உருத்து....1041

விண்ணெலாம் அஞ்ச விரைந்துறுமச் சூலமதை
மண்ணெலாம் ஏத்த வலியினால் - பண்ணுலாம்
பான்மொழிக்காய் வில்லிறுத்த பண்ணவனிற் தொட்டிறுத்தான்
வான்மருந்தோன் ஈன்ற மகன்....1042

நன்றுனது வீரமென நம்பியையவ் வாளரக்கன்
இன்றுரைத்த போர்பொருது மேன்றென்ன - நின்றனொடு
சொல்லிரண்டு கூறேன் துணிதுநீ என்றுரைத்தான்
மல்லமைந்த வாயு மகன்....1043

படையின்றி உள்ளம் பரிவுறுவான் தன்மேல்
இடையொன்றிக் கையினால் எற்றி - உடலொன்றும்
மன்கவியை மெய்யிறுக்கி மாநகர்வாய் ஏகினான்
புன்புலவு மெய்யான் அப்போது....1044

வஞ்சகத்தான் ஊரு மறைந்தொளிரும் அவ்வானரமன்
மஞ்சிற் கரந்திகழும் மாமதியோன் - எஞ்சலுற
நண்ணியது போலும் நலங்குறைந்து நஞ்சரவாய்
உண்ணுழைதல் போலும் உறழ்வு....1045

முன்னாக மன்னன் முனைந்தரக்கன் பாலடங்கப்
பன்னாக வீரர் பதைத்துருக - உன்னோடு
போராற்றேன் என்றும் பொருணினைந்து பின்சென்றான்
நேராற்று மாருதியும் நேர்ந்து....1046

அய்யன் அடிவீழ்ந்து அரக்கன் மகன்தனையவ்
வெய்யவரக்கன் விசித்துடன் கொண்டு - எய்யெனவே
தன்னகர்வாய்ச் சென்றான் தகையோ யெனவழுதார்
பன்னகவாள் வீரர் பதைத்து....1047

கேட்டிருகண் சேந்து கிளரூழிக் காலெனவே
தாட்டுணைகள் பேரத் தடஞ்சிலையோடு - ஊட்டியென
கொல்லுமோ என்னக் குறித்தகல் வாய்சென்றடைந்து
நல்லெழிற்றோள் வீரன் நனி....1048

வின்மாரி தன்னால் விசும்பா றடைத்தலுமப்
புன்வாய வாழ்விற் பொருந்தினான் - வன்மா
மறங்கொண்டு செல்ல வழியின்றி நின்றான்
புறங்கொண்டு நோக்கிப் புகைந்து....1049

வில்லொடுமோர் மேகம் வியனிலத்து வந்ததெனும்
அல்லி மலர்க்கண் அபிராமன் - நல்லெழிலைக்
கண்டனன்தீக் காலக் கடைக்கால் அசனியென
விண்டனைஓர் மாற்றம் விரித்து....1050

பூவுண்ணும் வாழ்க்கைப் பொருவாலி தன்னையுமக்
காவுண்ணும் வாழ்க்கைக் கவந்தனையும் - ஏவுண்ணச்
செய்ததுபோல் என்னனையும்நீ செய்யலாம் என்றுன்னி
எய்தினையோ ஐயா எதிர்ந்து....1051

இலக்குவனை மாருதியை மற்றெதிர்வார் தம்மை
உலப்புறக் கொன்றென் பயன்இங்உன்னை - விலக்கியெதிர்
காக்குமா வந்தாய் கமலக்கட் கார்முகினிற்
போக்கிடுவல் என்றான் புகைந்து....1052

நன்றெனவே ஐயன் நகுவா ளிகளிரண்டு
குன்றனையான் நெற்றிக் குறிகொண்டு - சென்றுருவ
மாட்டுதலும் உள்ளம் மயங்கினான் மற்றவற்கு
வேட்டுயிலும் மேன்மேன் மிக....1053

புண்திறந்த சோரிப் புதுப்புனலால் போர்க்கவிமன்
கொண்டுணர்வு நெஞ்சுங் குளிரவே - முண்டகத்துக்
கண்ணனையுங் கண்டு களித்தானவன் காதொடுமூக்கு
எண்ணுதன்முன் கொண்டான் எழுந்து....1054

தங்கைமுக மென்னத் தரியலன்றன் வன்முகமும்
பங்கமுற வானிற் பறந்தனன்போல் - செங்கதிர்ச்சேய்
தன்றமரைக் கூடினான் தானம் தவமொழுக்கங்
குன்றிலா தோங்கக் குதித்து....1055


அஞ்சனமா மேனி அபிராமன் ஆரணங்கு
வெஞ்சிறையின் மீண்ட விதமெனவே - செஞ்சுடரோன்
மைந்தனைக்கண் டுள்ளம் மகிழ்ந்தான் அவ்வானரும்
உய்ந்தனமென் றார்த்தார் உவந்து....1056

அவ்வேலை வல்லரக்கற்கு ஆரறிவு வந்தணுக
செவ்வேதன் மூக்குஞ் செவியுமற - வவ்வாநின்று
ஆரரிமன் சென்றது அறிந்தான் றனங்கமெலாஞ்
சோரிநீர் பாயச் சுளித்து....1057

வானமும் மண்ணும் மயங்கச் சினங்கொண்டு
தானவரை வெல்லுந் தரமுடையது - ஊனமிலா
வாளோடு கேடகமும் வாங்கினான் வானுலவுங்
கோளோடு நேர்வான் கொதித்து....1058

தோள்புடைத்துக் கூற்றுந் துணுக்கங் கொளவலக்கை
வாள்விதிர்த்துச் சென்று மலைபோலத் - தாள்பெயர்த்து
வீசினான் வானரங்கள் மெய்யற்றார் வீழ்ந்துலைந்தார்
கூசினார் விண்ணோர் குழாம்....1059

தடாதொழிந்தாம் என்னிற் தகைவாள் அரக்கன்
படாதொழியுஞ் சேனைப் பரப்பை - விடாதிறுத்தல்
முற்றுநீ காண்டி முதலோ யெனமொழிந்தான்
கற்றுணருஞ்சாம் பனெதிர் கண்டு....1060

நன்மாற்றம் என்ன நயந்தொருவில் வாங்கியவன்
தன்மாற்றம் அன்ன சரமேழு - புன்மாற்ற
மாறுபடும் உள்ளத்தான் மேலேவ வாட்படையால்
நீறுபட எய்தான்முன் நேர்ந்து....1061

மண்ணுரு வல்ல வடிவாளி யொன்றமலன்
எண்ணுருவ நீண்டோன் இடையேவ - விண்ணுருவக்
கேடகத்தால் மாற்றிக் கிளர்ந்தான் கிளரிமையோர்
வாடகத்த ராக மருண்டு....1062

மற்றுமோர் கோலால் மணிமுறுவல் பூத்தமலன்
கொற்றவாள் அற்றிரண்டு கூறாக - இற்றிருதுண்டு
ஆமாறு வீழ்த்தி அவன்கவசத் துணுழைந்து
போமாறு மெய்தான் புதைத்து....1063

இவ்வேலை வெற்பெடுத்தோன் ஏவிய திண்நாற்படையாம்
மைவேலை அன்ன வளத்தானை - கொய்வாசப்
பூந்துளப மாலைப் புயன்மேற் பொருதருவான்
சூழ்ந்தனர்கள் உள்ளம் சுளித்து....1064

ஊழி முதல்வன் ஒருங்குற் றமர்புரியும்
ஏழிரண்டு கோடி இருங்சேனை - தாழ்வடைய
நீறுறவே நூறியெதிர் நின்றான் முகநோக்கிக்
கூறினான் தன்கருனை கொண்டு....1065

விடன்பிறந்த செங்கண் வினையினோய் நல்லோன்
உடன்பிறந்தாய் ஈவன் உயிரைத் - தடம்புரிக்குப்
போதியோ வன்றேல் பொருதியோ போரிவற்றில்
யாதுன்மனம் என்றான் எடுத்து....1066

நன்றெனது வீரமினி நாசி செவிஇழந்து
பொன்றிடேன் ஆவி புரப்பதினும் - நின்றமரர்
கோளுரவே நோக்கக் கொடுஞ்சமர்நின் னோடியற்றிப்
மாளுவன்காண் என்றான் மதித்து....1067

என்று கொடியோன் இராவணற்கும் ஏந்தரிய
குன்றொன்று தாங்கிக் குறித்தேவ - நின்றமலன்
நீறபட நூறி நெடியோன்கை வேலினையுங்
கூறுபட எய்தான் கொதித்து....1068

கோலால் அழியாது கொற்றக் கவசமென
மாலோன் அரனார் வயப்படையால் - மேலார்ந்த
ஆதவனில் வீழ அறுத்தான் அமர்முனைவாய்
மாதவர்கள் வாழ்த்த மகிழ்ந்து....1069

வன்கவசம் வீய மறத்தண்ட மேந்தியவன்
பங்கமுற நாகப் படைவீரர் - வெங்கையினாற்
சாந்தாகு மாறு தரையோட றைத்தனனால்
பூந்தாம வேலான் பொருது....1070

அத்தண்ட நீறாய் அமைந்தான் அருநாதன்
மத்தன் ஒருவாள் வலத்தேந்தச் - சித்திரஞ்செய்
வாளும் கரமும் மதியும் அரவுமென
வேளிலக வெய்தான்அவ் வேள்....1071

அற்றொழிந்த வெங்கரன்மற் அங்கையார் பெற்றரியை
யெற்ற விரிந்த வெயிறிழித்தே - கொற்றவனும்
அம்பா லறுத்திடமற் றக்கரனும் போயதம்மா
செம்பால் ஒழுகத் திரிந்து....1072

அற்றகரன் முற்றுவரி ஆழ்தமுது தந்தவரை
இற்றெனவே காட்ட இகலரக்கன் - செற்றமோடு
காலினா னாகக் கடல்குழப்பவக் கழலோர்
கோலினால் அட்டான் குறைத்து....1073

மந்திர வாயம்பான் வலக்கழல் இம்மண்ணாக
குந்தினா னாகக் குழுவெல்லாம் - சிந்திடவே
அய்யனும்மற் றொர்கால் அறுத்தான் அயிற்கணையால்
மெய்யறங்கள் ஒங்க விரைந்து....1074

கையிழந்து நீண்ட கழலிழந்து காதகனும்
மெய்யெலாம் அம்பு விரைந்தேக - வெய்யபில
வாயினால் நீண்ட வரைபிடுங்கி ஊதினான்
தீயினார் கண்ணான் தெளித்து....1075

வாயினால் ஊது மலையால்அவ் வானரங்கள்
சாயுமாறு உன்னித் தனுவல்லான் - மேயஇவன்
ஆடல்வலி என்னே அரிதரிதுஎன் றானரக்கன்
நாடியிவை சொற்றான் நயந்து....1076

புறவொன்றால் மங்காப் புகழ்படைத்த புத்தேள்
அறவன் குலத்தீர் அதிகத் - திறனமையும்
வில்வலத்தீர் நாயேன் வினைநோக்கா தாண்டருள்
புல்வலத்தென் தீமை பொறுத்து....1077

நன்றி யறியான் நயமறியான் என்முனிவண்
நின்றவனைக் கொல்லும் நினைவுடையான் - வென்றியைநின்
கையடைகாண் என்றான் கருதுங்காற் கைவேலால்
வையமெலாம் வெல்வான் மதித்து....1078

வரங்கொண்டான் என்ன மதித்தொருவில் வாளி
உரங்கொண்டான் ஏவ உடனே - சிரங்கொண்டு
மைந்நாகம் என்ன மறிகடல் வீழ்த்தியது
பைந்நாகம் அன்ன படை....1079

ஆடினார்கற் பத்த அமரர் அருந்தவத்தோர்
பாடினார் ஐயன் பதமலரைச் - சூடினார்
வன்கவியின் வீரர் மதித்தார் வலமுடையோர்
மன்கவியின் வீரர் மகிழ்வு....1080

கும்ப கருணன் குறித்தடுபோர் ஆற்றலெலாம்
அம்புவியோர் தேற அறைந்தாம்பின் - கம்புலவு
முன்னீர் இலங்கைக் கரசன் முடித்தவினை
தன்னீர்மை சொல்வஇனித் தான்....1081

மோதரனை நோக்கி முதிரா முலைக்கயற்கண்
காதன்மொழி வண்ணக் கருங்கூந்தற் - சீதைதனை
யான்சேரு மாறொன் றருளிதிநீ என்றுரைத்தான
வான்சேர் இலங்கையர்கோ மான்....1082

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.13. மாயாசனகப் படலம்

முன்கொணர்ந்து காட்டி முகிழ்முலையை மோகமெலாம்
நின்கண மாக நிறுத்திடுவல் - புன்கணினி
என்னோ மருத்தனையவ் ஏந்திழையைப் பெற்றெடுத்த
மன்னாக இன்னே வகுத்து....1083

அய்யதுணை நின்னோடு அமைச்சரெவர் என்றணைத்து
பொய்யுருவஞ் செய்து புகுதியெனத் - தையல்
இருந்த நெடுஞ்சோலைவாய் எய்தினான் பேய்க்கு
விருந்தளிக்கும் வேலான் விழைந்து....1084

வானந் தடவு மணிமுடிக ளெல்லிமைப்பக்
கானந் தடவக் கரசால் - மானமைந்த
கண்ணாடன் பாற்பெருகு காதலொடும் வந்தடைந்தான்
மண்ணாசை வென்றான் மகிழ்ந்து....1085

கஞ்சந் தரளம் கனகங் கடலமுதம்
அஞ்சங் குயில்வதன மார்ந்தநகை - விஞ்சுருவ
நன்னோக்கஞ் சொல்லின் நடைபூங் குழலெனவே
தன்னோக்கங் கண்டான் தளர்ந்து....1086

என்ற டியனேனுக் கிரங்குவது நன்றியறிந்து
என்றுன் அருநோக்க மெனக்குறுவது - அன்றிலிளம்
பேடையே அன்னாய் பெருங்காமப் பேய்பிடித்து
வாடுவனோ இன்னும் மருண்டு....1087

தென்றலால் வானச் சிறுபிறையாற் செஞ்சிலைவேள்
மன்றலார் வாளி மலர்மழையால் - என்றுமிலா
இன்னற் கிடமாய் இருந்தினைதல் ஈதருளோ
மின்னற் கொடியாய் விளர்த்து....1088

இன்றிங்கு நாளை இரங்குமென எண்ணியவெற்கு
என்றிரங்கன் மங்காய் இனியேனும் - மன்றற்
குமுதவாய்ச் செந்தேன் கொழுவிய நின்செஞ்சொல்
அமுதம்வார்த் தாள்தி அணைந்து....1089

என்றுரைத்து மாழாந் திருநிலனில் வீழ்ந்திறைஞ்சித்
தன்றுணைக்கை கூப்பத் தடங்கண்ணாள் - குன்றுறைந்த
வன்புலியைக் கண்ட விளமான்போல் அலமந்தாள்
என்புரிவள் அந்தோ இருந்து....1090

புல்லொன்று நோக்கிப் புகன்றாள் பொலிவிழந்த
அல்லொன்று பேயின் அருகணைந்து - செல்லொன்று
மாற்றத்தால் என்னை மருள்வித்தாய் வஞ்சகத்தின்
ஏற்றத்தால் என்னாம் இனி....1091

கருணைக் கடலனையான் காமர் அமுதுண்டேற்கு
இருணிறத்து நாய்போல் எதிர்ந்தாய் - பரிணமித்த
காமப்பேய் ஆட்டக் கழறா தனகழறேல்
ஈமத்தே செல்வாய் இனி...1092

பத்து மணிமுடியும் பத்திரண்டு திண்தோளும்
இத்தலத்தில் வீழ எமதையன் - கைத்தலத்துப்
போற்புருவ வாளி புகுதாமுன் போதியருங்
கற்பறியாய் கொல்லோவிக் கால்....1093

நன்றுதீது என்ன நயந்தறியாய் நங்கையர்தங்
குன்றலறு கற்பின் குணங்குறியாய் - என்று
எரிநரகுக்கு ஏது எனவிக்கடன் மேற்கொண்டாய்
வரும்பழியை என்றாள் வகுத்து....1094

மாதரசி சொற்ற வகைகேட்டு மானமிலான்
காதன்மீ தூறக் கனங்குழாய் - நீறுதிசெய்
மானிடரைக் கொன்றாற்பின் வாழுவதார் தம்மொடென்றான்
ஏன வினையான் எடுத்து....1095

அணுமருவுஞ் சோலை அயோத்தியில் வாழ்வாரை
மணிமிதிலை யாரை வதைத்துத் - துணிவுறுநின்
தாதைதனை என்முன் தருதிரெனச் சாற்றனனிப்
போதுறுவன் என்றான் புகுந்து....1096

வருவதெப் போதும் வருவதே உள்ளம்
பருவரல்கொண் டேதோ பயனே - திருகினொடு
என்னையிம் மாயம் இயற்றினாற் கேதரிதென்று
உன்னினால் சோர்ந்தாள் உணர்வு....1097

அக்காலத்து ஆங்கோர் அரக்கனைமா மாயைவல்லான்
தக்கோர் புகழ்ச்சனகன் தானாக்கி - மைக்கோலக்
கண்ணாள்தன் பாற்கலந்து காட்டினான் கற்பணியும்
புண்ணானாள் நெஞ்சம் புலர்ந்து....1098

உருண்டாள் புகைந்தாள் உயிர்த்தாள் அயிர்த்தாள்
வெருண்டாள் பரிந்தாள் வியர்த்தாள் - மருண்டுமதி
ஏங்கினாள் சால இளைத்தாள் களைத்தாளப்
பூங்குயிலே அன்னாள் பொரிந்து....1099

அறமிலையோ என்னும் அருளிலையோ என்னுந்
திறமிலையோ என்னும் திறமும் - மறமுடையான்
தன்வசமோ என்னுந் தரியாள் உயிரிழந்த
மின்வடிவம் ஆனாள் வெறுத்து....1100

புக்கத்தின் வேண்டும் பொருளளிப்பான் போந்துரிய
மக்களைக்காண் பாருலகின் மன்னனே - தக்கதிலான்
தன்சிறையில் நின்றோள் தனிச்சிறையோடு ஐயவுளைந்
என்சிறைகண் டாயோ இனைந்து....1101

அறஞ்செய்தாய் யார்க்கும் அருள்செய்தா யோநின்
திறஞ்செய்தாய் என்றுஞ் சிதையா - மறஞ்செய்த
பெண்பெற்றாய் ஆதலினிப் பேறுற்றாய் பின்னமிலா
மண்பெற்றாய் ஐயா மருண்டு....1102

நாட்டில் ஒருகருமம் நாட்டினேன் நன்கறியாக்
காட்டில் ஒருகருமங் காட்டினேன் - மீட்டரிய
வல்வினையால் நின்னையுமிவ் வன்கருமத் தாட்டினனித்
தொல்வினைக்கென் செய்வேன் துயர்ந்து....1103

மென்சிறைய வண்டூதும் வேரியந்தார் விண்ணவர்க்காய்
வன்சிறையை மீட்பான் வருநாதன் - என்சிறையை
மீட்பான் வருநாள் வெறுத்துன் சிறைதனையுங்
காட்பானேல் என்னாங் கருத்து....1104

என்றுரைப்ப நங்காய் இனையாதி என்னுடைய
பொன்துளிக்கு செல்வப் பொருளனைத்து - நின்றனக்கே
தந்துனடிமை தலைக் கொள்வேன் என்றுரைத்தான்
மந்தரமே அன்னான் மருண்டு....1105

கீட்டிசைவாய்த் தேவன் கிளரொளியார் பொன்மருடஞ்
சூட்டியுனது ஏவல் துணைக்கொள்வேன் - வாட்டடங்கண்
சுந்தரிநின் காமர்த் துணைத்தோள் நலமருந்தி
உய்த்திடுமா றென்றான் உவந்து....1106

இச்செல்வ மெல்லாம் பெறுகிற்பான் எம்பெருமான்
மெய்ச்சரணம் பூண்ட வினையில்லான் - நச்சியுனை
மெய்க்கலத்தற் பால விழுமியோன் வெஞ்சரமே
பொய்க்கலந்த சொல்லாய் புகைந்து....1107

மாற்றந்தந் துன்னை மருவுவது வல்லமர்வாய்
ஏற்றங்கண்டு ஆடுமது இக்கணமே - கூற்றமுநின்
வல்லுயிரை உண்ட வகையனுமன் வாழ்த்தியென்முன்
சொல்லுவதே கேட்குஞ் சுகம்....1108

என்றியம்ப வெய்யோன் எழுந்துருவி வெஞ்சுரிகை
கொன்றிடுவல் என்னக் கொதிப்புறலும் - நின்று
தடுத்தான் அருகிருந்து தாங்குவான் போல
அடுத்தாரை மாய்ப்பான் அறிந்து....1109

மோதரனார் சொல்லால் முனிவாறி மொய்ம்புடையான்
ஆதனமே லாக வயலிருந்த - பாதகஞ்சேர்
வல்லரக்க னாஞ்சனகன் மாது முகநோக்கி
சொல்லினான் மாற்றந் துணிந்து....1110

என்னுயிர்க்கும் காதல் இறையுயிர்க்கு மென்மகளாய்
நின்னுயிர்க்கும் மங்கா நிலைபெறுவான் - பொன்னுயிர்க்கும்
பூத்தாம மார்பன் புகழ்த்தே வியாயிருந்து
காத்தாள்தி என்றான் கசிந்து....1111

செவித்துணைகள் தீயவன் செப்பியபுன் மாற்ற
நவித்துணையாள் கேட்டுளமும் நாணிப் - புவிக்குள்
வடுத்தவிர்என் தந்தையெனும் மன்னாகில் இச்சொல்
எடுத்துரையான் என்றாள் இனைந்து....1112

நீராளும் பாராள் நிமிமரபுக் கெய்தரிய
சீராளன் அல்லை தெரியுங்காற் - பேராத
வஞ்சனேன் நெஞ்சம் வலியனே என்றுரைத்தாள்
வெஞ்சினத்தால் நீர்சோர விட்டு....1113

அறங்கெடினு நின்னோடும் என்னாவி கெடினும்
நிறங்கெடினுஞ் செல்வத்தால் நேர்ந்த - திறங்கெடினும்
மாக்கனக மேனி மறைமுதலை யன்றிமன
நோக்குவனோ கண்டாய் நுனித்து.....1114

நாளுங் குறைய நலங்குறைய வாள்குறைய
ஆளுங் குறைய அறங்குறைய - நீளும்
நிறைகுறையப் பெற்ற நிலங்குறையக் கற்பின்
முறைகுறையேன் என்றாள் முனிந்து....1115

கேடிருகண் சேந்து கிளரொளிசேர் வாட்கிறையாய்
மாட்டுவல் என்றுள்ளம் வலிப்புறலும் - தோட்டுமலர்
ஏலக் கருங்குழலாள் அஞ்சா திருந்தனளக்
காலத்தின் சீலங் கணித்து....1116

மண்மேற் பழியும் வளரவே வாளெடுத்துப்
பெண்மேல் உறுதல் பிழையன்றோ - விண்மேலுஞ்
சென்ற புகழோய் சினந்தணிதி என்றுரைத்தான்
நண்றறிந்த தீயோன் நயந்து....1117

அப்பொழுது தூதர் அடைந்தார் அவன்செவிவாய்
வெப்பமுறச் சொற்றார் வினையில்லான் - துப்புறழும்
வெஞ்சரத்தால் உம்பி மிகும்வெஞ் சமரியற்றித்
துஞ்சினான் என்னத் துனைந்து....1118

தம்பி இறந்த தனிவார்த்தை கேட்டுமனம்
வெம்பி உளைந்து விழுந்தயர்ந்தான் - அம்பில்
அராவணையான் எய்ய அவனிகுலைந் தேங்க
மராமரம்வீழ்ந் தென்ன மருண்டு....1119

பட்டனனோ என்னும் பதைக்கு முயிர்த்துயிர்க்குங்
கெட்டனனோ என்று கிடந்துருளும் - எட்டுத்
திசைக்கரியை வென்றான் செயலனைத்துந் தேர்ந்து
பகைத்தவருஞ் சொல்லார் பரிந்து....1120

இவ்வேலை பவ்வம் எழும்வாள் மதிமுகத்து
மைவேலை வாட்கண் மயிலனையாள் - பொய்வாசப்
பொற்குடங்கள் ஓங்கிப் புளகரும்பப் பூரித்தாள்
பற்பம்போல் உள்ளம் பரிந்து....1121

என்தம்பி இன்னுயிரை ஈர்த்தான் தனதுயிரை
தென்திசைவாய் சேர்ப்பல் திறமென்னத் - தன்துணையாம்
மந்திரியர் ஆற்ற மருவினான் மந்திரத்துக்
கந்தடுபொற் றோளால் கனன்று....1122

கரிசடைதல் இல்லாக் கருத்துடைய நங்கை
திரிசடையுள் ளன்பிற் தெருட்டத் - துரிசடைத்து
மாசுண்ட கூந்தல் மதிமுகத்து மான்விழியுந்
தேசுண்டாள் மேனி சிறந்து....1123

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.14. அதிகாயன் வதைப் படலம்

மந்திரஞ்செய் மண்டபத்து வீற்றிருந்து வாளரக்கன்
எந்திரம்போல் நின்ற இசையோரைத் - தந்திரமாய்
வீரம்பே சித்திரிதல் வேண்டாம் எனஇசைத்தான்
கூரம்போ என்னக் கொதித்து....1124

செருமுகமும் உற்ற செயலும் செயிர்த்து
வருமுகனை வெல்லும் மதியும் - பொருமுகமும்
வல்லரேம் என்ன வழுத்தினீர் மானிடவன்
பல்லவநோக் காதீர் பயந்து....1125

மருவடைந்த மாலை மணமகளிர் பேணத்
திருவடைந்து நாண மிலீர்சேரச் - செருவடைந்த
வில்லாளி என்னும் விறலுடையீர் வெஞ்சமத்து
வல்லீரேற் செல்மின் மலைந்து....1126

மட்டிட்ட கொங்கை வனமுலைகள் மார்பினிடைப்
பட்டிட்ட மீயும் படியேயக் - கட்டிட்ட
வில்லளி வெஞ்சரநும் வேட்கை தருமென்பீரேற்
செல்லாதிர் என்றான் சினந்து....1127

மதிகாயும் வெண்குடையான் மாலைதாழ் மார்பன்
அதிகாயன் என்னும் அடலான் - துதிமேவும்
வில்வல்லான் மாய வினையில்லான் விண்ணிடிபோற்
சொல்வல்லான் சொன்னான் தொழுது....1128

கெடுத்தனைநின் வாழ்வைக் கிளரமரில் என்னை
விடுத்தனையின் றேநீ விளித்தே - அடுத்தினிஎன்
எண்ணுவது சால எதிர்த்தோர் உயிரனைத்தும்
உண்ணுவதே என்றான் உளம்....1129

தேய்ப்புண்ட எம்பி திறம்போல் எனைமதியேல்
காய்ப்புண்ட வேகக் கடுங்கணையால் - வாய்ப்புண்ட
வானரரை மானிடரை மாய்த்துறுவன் நன்குவிடை
தானருள்தி என்றான் தகைந்து....1130

மகனுரைத்த வாய்மை மனத்துறுதி கொண்டான்
முகமலர்ந்து செல்கெனவே முன்னி - அகமலர்ந்து
தேராதி வெம்படைகள் ஏவினான் செஞ்சிலையாற்
பாராதி வென்றான் படர்ந்து....1131

மண்ணகத்தும் விண்ணகத்தும் மற்றகத்துஞ் செல்வலிய
எண்ணுதற்கு முன்செல் இருங்கதிய - பண்ணமைந்த
ஆயிரமாப் பூண்ட அடற்றேரில் ஏறினான்
மாயிருந்தோள் வீரன் வயிர்த்து....1132

கும்பன் அகம்பன் கொடியோன் நிகும்பனெனும்
வெம்பருதி அன்ன விழியுடையார் - தம்பமெனச்
சுற்றினார் தேரிற் சுடர்த்தோ மரமுலக்கை
பற்றினார் வீரம் பரித்து....1133

எண்ணரிய மாவும் இருங்கரியும் காற்படையும்
மண்ணகல மின்றாய் மருவவே - விண்ணவர்கள்
வேர்த்தார்கள் அஞ்ச விடைபோல் அடைந்தானப்
போர்த்தான மீதுபு குந்து....1134

தாதை உடற்குறையைக் கண்டான் தலையறியான்
வேதனையால் நெஞ்சம் வெதும்பினான் - ஈது
படுத்தானை ஆவி படப்பொருவல் என்ன
எடுத்தான் சிலைநாண் எறிந்து....1135

அடுத்தொருபால் நின்ற அரக்கனை முன்னோக்கி
வடுத்தவிர்என் மாற்றம் மதித்தே - அடற்கை
இலக்குவனை எய்தி இயம்புதியேல் நின்சீர்
சொலத்தகுமோ கண்டாய் துதித்து....1136

எண்ணரிய தம்பி இறப்புக்காய் எண்ணயரும்
அண்ணல் துயரம் அகற்றுவான் - மண்ணயர
வந்தனன்வெம் போர்க்கவன்றன் மைந்தனென முந்துரைத்தி
சிந்தனையில் லாதாய் தெரிந்து....1137

தேவரே யாக திசைக்கரியே யாகவந்த
மூவரே யாக முனிந்துடனே - ஆகவத்தும்
மற்குரிய ராகி வரினும் வடிக்கணையால்
நிற்கொல்வன் என்பாய் நினைந்து....1138

தேரோ பரியோ கரியோ திகழ்தருமோர்
ஊரோ நிதியோ உதவுவேன் - சீரோதும்
ஏர்க்குரிய னாய இலக்குவனை என்னெதிரே
போர்க்குரிய னாக்கும் பொழுது....1139

இத்தனையோ முற்றும் இனிதளிப்பன் ஏகெனவே
அத்துணையே சென்றான் அவன்கடுகிச் - சித்திரத்தின்
காயா வினையான் கழல்மருவக் காகுத்தன்
நீயாரை யென்றான் நினைந்து....1140

முன்வந்த செங்கை முனியாய் முதலெனுநின்
பின்வந்தா னேயறியும் பெற்றியெனப் - பொன்வந்த
நல்லான் இளையோன் நவில்நீ யெனஅவனும்
வல்லாய்கேள் என்றான் வகுத்து....1141

தானவரை வென்றான்தன் தம்பிக்காய் மாழ்குதல்போல்
மானவநின் முன்னோனும் மற்றடைய - வானமரில்
நிற்கொல்வான் வந்தான் நெடும்போ ரதிகாயன்
பொற்குன்ற மன்னாய் பொருது....1142

என்னுடனே போது கெனவே இளங்காளை
தன்னுடனே ரில்லாத் தனுவோடும் - பொன்னுடனேர்
தாமரைக்கண் கோமான் சரண்சூடித் தானடைந்தான்
காமுதலோர் வாழ்த்தக் கடிது....1143

அப்பொழுது வீடணன்நம் ஆளுடைய நாயகணார்
துப்புறழும் பாதத் துணைதொழுது - மைப்புயலில்
வந்தான் சரிதம் வடிப்பக்கேள் என்றுரைத்தான்
கொந்தார் மலர்க்கை குவித்து....1144

முன்னாள் மதுகை யிடவர் முனையமரிற்
தன்னேரி லாத தனிப்பரமன் - கன்னேரும்
ஏற்றத்தால் தண்டத்து இறந்தார் இகலுடைய
மாற்றத்தே மண்மேன் மருண்டு....1145

கஞ்சமலர்க் கண்ணா கதிர்வேன் மதுவென்யான்
துஞ்சியவெம் முன்னோன் துணையாவான் - விஞ்சும்
அடல்வல்லான் பெற்ற அதிகாயன் என்பான்
இடல்வல்லோன் ஏற்போற் இவன்....1146

ஆதலால் வெற்றி அதிகாயன் தன்பரிசிங்கு
ஓதினேன் என்ன உகநாதன் - காதலுறும்
வீடணனை நோக்கி விளம்பினான் வில்லுடனே
மாடணைந்தான் தன்மை மதித்து....1147

போரிற் பொருது புகழுறுவான் வந்ததுயான்
யாரைக்கொண்டு ஐயா அறிவாயோ - வீரத்தால்
ஏந்தும் சிலையோடு இளையோன் எதிர்தருமேல்
நேர்ந்தெதிர்வார் யாரே நினை....1148

பார்தந்தான் வெள்ளைப் பணியார் படர்சடைக்கே
நீர்தந்தான் கோல நிறைமதிக்குச் - சீர்தந்தான்
சூர்தரும்வெந் நோயைத் துடைத்தான் துதியியம்பப்
பேர்தருமால் எம்பி பெயர்ந்து....1149

சங்காழி செங்கை தரித்தாளு நாயகனே
இங்கேயென் தம்பி யெனநிற்பான் - கொங்கார்ந்த
மாலைதாழ் மார்ப வலங்கருதி யேகென்றான்
சோலைசூழ் நாடன் துனைந்து....1150

வங்கியமுங் கோடும் வளர்முரசும் மத்தளமும்
சங்கமொடு பேரி தழங்கமர்வாய் - துங்கச்
சிலையானை ஏத்திச் செயமெனவே சென்றான்
மலையார் புயத்தரக்கர் மன்....1151

கல்லுந் தருவுங் கவிக்குலங்கள் ஏந்திநிற்ப
வில்லுங் கணையு மிடல்வேலும் - வல்லரக்கர்
கொண்டனர்கள் ஆர்ப்பக் குறிப்பதெவன் கோபமொடு
மண்டினர்கள் மேன்மேல் மலைந்து....1152

சுக்கிரிவன் தோன்றல் துமிந்தனவன் துணைவன்
தக்கநெடுஞ் சாம்பன் முதற்றலைவர் - புக்கெதிர்ந்து
தாக்கினார் வஞ்சத்தவர் தந்தனி யாவி
போக்கினார் கல்லாற் பொருது....1153

தும்பையந்தார் சூடுஞ் சுமித்திரையார் கான்முளையும்
வெம்பிப் பொழிந்த விசிகத்தால் - அம்புவியிற்
கையுந் தலையுங் கழுத்துங் கழலொடுநீள்
மெய்யும் இழந்தார் விதிர்ந்து....1154

விண்ணுருவி எண்ணும் விசையுருவி வெற்புருவி
மண்ணுருவிச் செல்லும் வடிவாளி - நண்ணலர்தந்
தோலுருவிச் செல்லுஞ் சுகமுருவித் தோற்றமற
மேலுருவிச் சென்ற விரைந்து....1155

வில்லொன்றே செங்கை விரலிரண்டே வெம்மையுறுஞ்
சொல்லொன்றும் வாளிச் சுடரொன்றே - யல்லொன்று
மெண்ணத் தராவி யிடனொன்றே யென்றெடுத்து
விண்ணுற்றார் சொற்றார் விரைந்து....1156

சோரியாய்த் தொன்னிறமுந் தோன்றாது தொல்கடலும்
ஓரியாய்த் தொக்க உடலமர்வாய் - காரனைய
காலன் தமரும் அயர்ந்தார் கடுவிசைபோய்
மாலிளையோன் ஏற்றமுனை வாய்....1157

பாரகங்கொள் சேனை படுமாறு அறிந்துநெடுந்
தேரகங்கொள் வெம்மைச் சிலைவலியான் - காரகங்கொள்
தாருகனா மத்தோன் தகைந்தான் சமர்முனைவாய்ப்
போரகமார் வாளி பொழிந்து....1158

ஏவியவெவ் வாளி எவையும் அறுத்துடனே
பூவையர் வேளன்னான் பொருகணையால் - ஆவி
அடங்கிடவே தென்பால் அவன்தலையைக் கொய்தான்
நடம்புரியப் பேய்கள் நனி....1159

மற்றும் பொருவான் வருங்காலன் ஆதியர்கள்
கொற்றங் குலையக் கொடுங்கணையான் - மற்றவர்தஞ்
சென்னி யுருளத்திசை தோறுஞ்செய் தொழித்தான்
மின்னிலைய வேலான் வெகுண்டு....1160

பனைக்கைப்பரூ உத்தாள் பணைமதத்த நால்வாய்
முனைக்கட் பெயரா முதன்மைத் - துனைக்கரியோ
எண்ணா யிரத்தொடும்வந் தேற்றுவார் இகல்புரிவான்
விண்ணார் கிரிபோல வே....1161

எண்ணரிய வாதுவரை ஏழ்பொழிலுங் காத்தளிப்பான்
நண்ணியபொன் தாரான் நனிவெகுளா - விண்ணில்
வரங்கொண்ட எல்லாம்இம் மண்ணாக வன்மைச்
சிரங்கொண்டான் அன்றே செயிர்த்து....1162

காலுங் கரமுங் கழுத்துங் கவானொடுநீள்
வாலும் விழியு மதமூன்றுந் - தோலொடுமார்பு
என்புந் தவையும் இழந்ததே எம்மிளையோன்
அம்பின் மழையால் அவண்....1163

கொம்புங் கரமுங் குலையக் குலக்கோமான்
அம்பின் மழையால் அறுப்புண்டு - தம்பமற
முண்மா வெனவே முரணழிய மொய்மதமா
ம்ண்மேல் விழுந்த மரிந்து....1164

பேயுங் கழுகும் பிலவாய்க் கனல்விழிப்ப
நாயும் நரியும் நசைதீர்ந்த - தீயனைய
வான்வாளி பாய மடிந்தவர்தம் மாக்கரியின்
ஊன்முளை தோலிரத்தம் உண்டு....1165

ஆசுகத்தூன் உண்ணூம் அவாப்பெருகிச் சம்பினங்கள்
ஆசுகப்பேய் உண்ணும் அரும்புழைவாய் - ஆசுகத்து
மாக்கவன மாக்குழியின் மன்னி உடலுதிப்பப்
போக்கறவே நின்ற புலர்ந்து....1166

பொன்னார்ந்த மேனிப் புரவலன் கையாசுகத்தீ
முன்னார்ந்த வேழ முனிந்துண்ணப் - பின்னார்ந்த
காற்றெனவே வந்தான் கடுங்காலக் காலளித்த
கூற்றுவனோர் மாமரங்கைக் கொண்டு....1167

ஊழிக் கனல்போல் உருத்தனுமன் எற்றியதிண்
பாழிப் பராரைப் பணைத்தருவாற் - சூழி
மதமிழந்து வெள்ளை மருப்பிழந்து மாறாக்
கதமிழந்த வேகக் கரி....1168

அரைக்குங்கைத் தண்டால் அகல்வானத் தேற்றும்
இரைக்குங்கை அள்ளி வெகுண்டு - தரைத்தலனில்
மாலாக வந்த மதகரி களத்தனையுந்
தோலாக வீரன் துகைத்து....1169

கானுந் திசையுங் கடலுங் கழிக்கரையும்
வானுங் குருதி வளரவே - ஊனருந்தி
கைத்துணங்கை யாலிக் கடும்பா தகரைஎனக்
கைத்துணங்கை இட்டவல கை....1170

மாவாந் தகனெனுமெம் மாருதிமேல் வச்சிரத்தேர்த்
தேவாந்த கன்தீச் சினங்கொண்டு - காலார்ந்த
விண்ணவர்கள் அஞ்சி வெருக்கொளவிட் டான்வெயில்போல்
மண்ணுலாம் வாளி மழை....1171

தேரிற் குதியாச் சிலையிறுத்துச் செந்தறுகண்
காரிற் கருத்தோன் களத்தவியப் - பாரகத்து
முன்கலங்கக் கொன்றான் முழங்குங் கருங்கடல்தாய்
தென்னிலங்கை வைத்திட்டான் தீ....1172

மாருதியை நோக்கியடல் வன்போர் அதிகாயன்
பேருதலெங் கேநீ பிழைப்பில்லாச் - சீரமைந்த
எம்பிதனைத் தேய்த்தாய் இனியுன் உயிர்நமற்கே
உண்பதற்குக் கண்டாய் உணவு....1173

என்றுரைப்ப ஐயன் இதுபிழையா யாயினுமிப்
புன்றலை மூன்றென்னப் பொருந்துவோன் - தென்றிசைக்கே
ஆளாக நின்முன் அரைத்திடுவல் காணென்றான்
மாளாத சீருடையோர் மன்....1174

அற்றெனவே மூன்று தலையரக்கன் ஆர்ப்பரித்து
புற்றரவின் உள்ளம் புழுங்கியெழ - மற்றவனை
அம்மி தரையா அரைத்தான் அதிகாயன்
விம்மலுற வீரன் வெகுண்டு....1175

அழலுங் குருதி அதுவும் விழியிற்
பொழிய உளமும் புழுங்கா - இழிவிற்
சுலவிடா தின்னே சுமித்திரையார் சேய்மேற்
செலவிடாய் என்றிசைத்தான் தேர்....1176

தேரொலியும் மாற்றான் சிலையொலியுந் தேறாதார்
போரொலியும் நோக்கினன்என் புன்தோள்மேல் - நீர்மைபெற
ஏறுகவீங் கென்றான் இளவாள் அரியைஉளம்
மாறிலா வாலி மகன்....1177

இம்மொழியும் நன்மொழியே என்ன இளங்காளை
அம்மொழிதந் தான்தோள் அடிவைத்தான் - வெம்மடங்கற்
புள்ளரசே என்னப் பொலிந்தான் புகழ்க்கவியின்
வள்ளரசு கொண்டான் மகன்....1178

எண்ணருமாப் பூண்ட இகலரக்கன் செம்பொற்றேர்
நண்ணிய வெப்பாலும் நவிலூழிக் - கண்ணிமிர்ந்த
வேகக்கால் என்ன விழுச்சாரி போதருமம்
மாகத்தோள் வாலி மகன்....1179

இற்றபடை யன்றி இருந்தபடை அத்தனையும்
அற்றபின்னே என்னோடு அடர்த்தியோ - மற்றுன்
கருத்தெதுவோ வென்றானக் காதகனைச் செம்பொன்
குருத்தெனவே நின்றவிளங் கோ....1180

சங்கணிந்த செங்கைத் தலைவனொடுஞ் சத்தியொரு
பங்கணிந்த வேணிப் பரம்பொருளும் - இங்குனக்கே
காப்பாய் வரினுங் கலங்குவனோ கார்வண்டு
பாப்பாடுந் தாராய் பயந்து....1181

ஊழி வலியால் உணவாய்ச் சினவரிமுன்
வேழமெதிர் புக்கால் விடுமோகாண் - ஏழையுனை
யானழைத்த தெற்றுக் கறியாய்கொல் என்றிசைத்தான்
தேனழைக்குந் தாரரக்கன் சேய்....1182

சொற்றவா நன்று துணிந்தாய் நின்சொற்படியே
கற்றவா வெம்போர் கடிதாற்றி - முற்றவா
மாறாது வென்றியெனின் மற்றவரை வென்றியென்றான்
பாறாடும் வேலான் பகுத்து....1183

வெம்பருதி அன்னஒரு வெங்கணையக் காதகன்மேல்
வம்புலவுந் தாரான் வகுத்தேவ - அம்பொன்றாற்
பட்டிரண்டு துண்டாப் படுத்தினான் ஏவினன்பின்
எட்டிரண்டு வாளி இசைத்து....1184

அவ்வாளி எல்லாம் அகன்கோ கோசலைநாடன்
வெவ்வாளி கொண்டு விலக்கியே - எவ்வாளி
இவ்வாளிக் கீடென் றிடுமாறு பல்வாளி
அவ்வாளி மேலெய்தான் ஆங்கு....1185

சாந்தளவும் பூண்முலையார் தங்கட் கினியமதன்
ஏந்துஞ் சிலையிளையோன் ஏவியபல் - வாய்ந்தவலிப்
புங்கமெலாம் மாற்றிப் பொழிந்தான் சரமாரி
செங்கை வரையெடுத்தோன் சேய்....1186

வாலிமக வூர்தி வயிரம் படைத்தசிலை
கோலி யொருநூறு குலப்பகழி - ஆலமன்னான்
திண்கவசங் கீறச் செலுத்தினான் தேராக்கன்
மண்கவிழு மாறு மலைந்து....1187

மாற்றந் தவிர்ந்து மலைபோற் சிலையூன்றித்
தேற்றங்கொண் டேற்ற தெறுகண்ணான் - கூற்றமெனப்
பல்லா யிரம்கோடி பாணந் தொடுத்தெய்தான்
வெல்லாயிங் கென்னா விடுத்து....1188

கானுங் கடலுங் கனவரையு நாற்றிசையும்
வானுங் கணையாய் மறையவே - மானமுறும்
வெஞ்செருவென் னாமோ விடிவறியே மென்றுருகி
அஞ்சினார் தேவர் அயிர்த்து....1189

வாலிசேய் நெற்றியின்மேல் மார்பின்மேல் மற்றவன்றன்
மேலவன்மேல் வாளி வெகுண்டேவிப் - பாலனைய
சங்க முழக்கினான் தானவரைப் பண்டமரில்
அங்கம் உழக்கினான் ஆங்கு....1190

அங்கதன் ஆகத் தவிர்குருதி ஆறாகச்
சிங்க மனையான் செயிர்த்தழல்செய் - புங்கமதாற்
பாகன் தலையறுத்துப் பாய்மாக் களம்படுத்தி
மாகவிலும் அட்டான் வயிர்த்து....1191

வேரொறுதேர் ஏறியவன் வேறொருவில் வாங்குதன்முன்
மாறுபட வையமொடு வானமெலாஞ் - சீறரியின்
வான்படைதொட்டு ஏவ மதியோ னவன்கதிராங்
கோன்படைதொட் டார்த்தான் குறித்து....1192

இருபடையுந் தம்மில் இகல்புரிந்து செந்தீ
வருடமே யாக வலியோன் - பரிவுறவே
ஒன்றலபல் வாளி உடலுறுவ ஓட்டினான்
மன்றலந்தார்க் கோசலையார் மன்....1193

அல்லடர் திண்கைமா அதிகாயன் ஆகமெலாஞ்
சல்லடைக்கண் ணாகத் தளர்வில்லான் - செல்லுருத்து
மாமாரி பெய்த வகைவாளி மாரியிளங்
கோமான்மேல் எய்தான் கொதித்து....1194

காற்றரசன் சொல்லாற் கமலா லயத்தவன்ற
ஆற்றல் தருபடையோ டாசுகமும் - ஏற்றமுறக்
கூட்டினான் விட்டான் கொடியோன் தலையுவரி
மாட்டினான் மன்னோ வயிர்த்து....1195

வானவர்கள் ஆர்த்து மலர்சொரிந்தார் வாசவனும்
ஈனமற நீங்கிற் றெனவிசைத்தான் - மானவராங்
காடுறைந்த வாழ்க்கைக் கணமுனிவர் ஆசிசொற்றார்
வீடணனுங் கொண்டான் வியப்பு....1196

சுராந்தகனே யாவான் தொடுசிலைக்கை வல்லஎன்
நராந்தகனும் விண்ணகத்து நண்ணப் - புராந்தகனில்
வெங்கதங்கொள் வாகை விசையமுறும் வாலியருள்
அங்கதனுங் கொன்றான் அறைந்து....1197

கார்மத்தன் வீரக் கரிமேலான் கைச்சிலையான்
போர்மத்தன் ஆவி புரளவே - நீர்மத்தின்
எய்தினான் நீலன் இடித்தான் இமையவரும்
உய்திறம்யாம் என்ன உருத்து....1198

தந்தந் தலைவர் தனியாவி பட்டொழியச்
சிந்தை வெருவித் திறலழிந்தார் - முந்தினர்தம்
ஊரகத்து மேவி உலைந்தார் உயிர்ப்பொறையும்
மாரகத்தர் ஆனார் மருண்டு....1200

முகம்பார்த்தார் எண்ணு முறையறியார் வெம்பி
அகம்பார்த்தார் ஆசை அறியக் - ககம்பார்த்துக்
கண்ணீர் விடுத்துக் கலங்கினார் காலமற
உண்ணீருண்ணீர் என்று உயிர்த்து....1201

இத்திறனாய் அவ்வூர் இடைவந் தயர்வுபட
பொய்த்தவுள நாளும் புழுங்குவான் - மொய்த்தலையாய்
வந்தடைந்த தூதர் வழங்கறியார் மாரியெனச்
சிந்தினர்கள் கண்ணீர் தெளித்து....1202

உற்றபரி சென்னே உரைமின் எனவுருத்தான்
மற்றவருந் தாழ்ந்து வலியோய்நீ - பெற்றவிளங்
கோக்குமரர் ஆவி கொடுத்தார் அமரிலென
ஊக்கமறச் சொற்றார் உயிர்த்து....1203

திசைநோக்கு மானச் செழுந்தீயின் உற்ற
வசைநோக்குங் கண்ணீர் வடிக்கும் - இசைநோக்கி
பொற்பெடுத்த வேணிப் புராரியெழிற் பூங்கயிலை
வெற்பெடுத்த தோளான் மெலிந்து....1204

மாமாலை பூண்டு வருந்தானி மாலையெனும்
பூமாலை வண்ணப் புரிகுழலாள் - தேமாலைச்
செங்கதிர்வேற் போரரக்கன் சேவடிமேல் வீழ்ந்தழுதாள்
மங்கையர்கள் ஏங்கி வர....1205

எற்றினாள் கையால் இனைந்தாள் எழுதுயர
முற்றினாள் மாமுலைமேன் மோதினாள் - வெற்றியுறும்
என்மகனைக் கொன்றாய் இருந்தனையோ என்றிசைத்தாள்
தன்மலர்க்கண் நீர்வாரத் தான்....1206

அழவறியாள் நாதன் அருள்முறையால் அன்றித்
தொழவறியாள் இவ்வாறு சோரப் - பழகினிய
வானாட்டு மங்கையரு மாழ்கினார் என்னிலினி
மேனாட்டல் என்னாம் விரித்து....1207

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.15. நாக பாசப் படலம்

செங்கட் கருநிறத்துச் சீரரக்க நாயகியர்
புன்கட் குரலழுகை போதரவே - வெங்கட்
கரியடக்கும் வெங்காற் கடுங்கோள் அரிவிண்
அரியடக்கும் பேராண்மை யான்....1208

ஆரடுத்த சூலத்து அயிலடுத்த ஆற்றலறப்
பொரடுத்த எந்தை புரண்டான்கொல் - ஊரடுத்த
இவ்வோதை யாதென்று இயம்பினான் ஏங்கியழுந்
தெவ்வோதை கண்டான் செயிர்த்து....1209

வெற்றி நெடுந்தேர் மிசைக்கொண்டான் வெம்பியுளஞ்
சுற்றுநின்றார் அஞ்சத் தொடுகழலான் - பற்றுடைய
மன்னவனைக் கண்டான் மயர்வொழிந்தான் வாட்டமுறற்கு
என்னிபமீங் கென்றான் எடுத்து....1210

செம்போன் வரைபோல் திகழதிகா யன்முதலாம்
உம்பியரை மானிடவர் ஊக்கத்தால் - வெம்பிவிழக்
கொன்றனர்கள் என்றான் கொடுங்கூற்றூ வனையுமுனம்
வென்றதறு கண்ணரக்கர் வேந்து....1211

மானிடரோ கொன்றார் வளைவாய் முழையரியிற்
தானிருந்து நீயே சதிசெய்தாய் - ஆனதினி
ஒன்றோவென் றாலும் உடன்றுவர ஏவுகிலை
என்றான் உருமின் இடித்து....1212

மற்றினியென் சொல்லி வடியம்புக்கு எம்பியுயிர்
உற்றவுணவு என்ன ஒழித்தானைக் - கொற்றநெடுங்
கூற்றுவனார் உண்ணக் கொடுத்திலனேற் கூர்வேலாய்
மாற்றலர்கள் ஏசவெனை வந்து....1213

எம்பியுயிர் மாய இகல்புரிந்தான் தன்னை என்கை
அம்புக் கிரையாய் அளித்திலனேல் - வெம்பி
உரணிழந்த விண்ணவர்கோன் ஒண்படையால் என்னை
வரனிழந்த தாகுமன்றோ மற்று....1214

வஞ்சமிலா எம்பிஉயிர் மாள்வித்தான் தன்னுயிரை
அஞ்சலுறுங் கூற்றுக்கு அளியேனேல் - வெஞ்சமர்வாய்
நன்மொழிதந் தென்சரணம் நண்ணியவவ் விண்ணவர்கள்
இன்மொழியார் ஏச எனை....1215

என்றுரைப்ப மன்னன் இகலுடையாய் நீயெதிர்ந்தால்
நின்றுரைப்பது என்னோ நிலங்கடந்த - வன்திகிரி
ஆழியான் ஆகிலுநிற்கு அஞ்சுவனே என்றுரைத்தான்
ஊழிநாள் மாளான் உவந்து....1216

அண்ணலடி தாழ்ந்து அழியாத சாரிகைதன்
வண்ணமெயிற் பூண்டான் வடிவாளி - எண்ணமைந்த
கைப்புட்டில் தாங்கிக் ககனேந் திரனிழந்த
மெய்த்தனுவுங் கொண்டான் விரைந்து....1217

காற்றுங் கனலுங் கருத்துங் கதிரொளியிற்
தோற்றும் புலனாஞ் சுடர்நோக்கும் - ஆற்றல்பெற
கூட்டி இழைத்தனைய கோலநெடுந் தேர்க்குவமை
காட்டுதல்எவ் வாறோ கணித்து....1218

பொன்னோக்குங் கொன்றைப் புரிசடையான் தன்னொடுமான்
மன்னோக்கும் வானவர்கள் வானகத்தின் - பின்னோக்கும்
பெற்றியது சாலப் பிறங்குவது பேய்க்கொடியாற்
தெற்றியது வண்ணமணித் தேர்....1219

அத்தேரில் ஏறி அடைந்தான் அடையலராம்
எத்தே வருங்கண் டிறைஞ்சவே - புத்தேள்
அராவணியும் வேணி அரனனையன் ஆண்மை
இராவணியென்று ஏத்தும் இவன்....1220

சேமத்தேர் ஆயிரங்கள் செல்லச் செழுங்கனக
வாமத்தேர் மீது வயங்குவான் - நாமத்தார்
ஒள்ளழல்வாட் டானை உரவோர் ஒடுநாற்பான்
வெள்ளமொடும் சென்றான் விரைந்து....1221

வீடணவித் தேர்மேல் விளங்குவான் வெற்றியிவன்
மாடிருந்த தென்ன வயங்குவான் - கோடமைந்த
வில்லணைந்த மேக மெனமேவுவான் தன்மையினைச்
சொல்லென்றான் சொன்னான் தொழுது....1222

ஆரியவிப் போருடையோன் அன்றமரர் வேந்தனைத்தன்
சீரியன்ற பாசத் திடைவிசித்தான் - வீரியர்கள்
யாருமிவற் குவமை யாகார் அறிதியின்று
போரும்வலி தென்றான் புகழ்ந்து....1223

அய்யனுநன் றென்ன அறைந்தான் அடல்னுமன்
செய்யநெடுந் தேர்மீது சேர்தருவான் -வெய்யவன்தன்
கோக்குமரன் ஆகுங் கொடிதுபோர் என்றடைந்தான்
மேக்குவாய் நின்றான் விரைந்து....1224

சங்கன் குமுதன் சதவலியன் தார்ப்பனசன்
அங்கதன்மெய் நீலன் அடல்வேந்தன் - பொங்குதிறன்
சாம்பன் மயிந்தன் துமிந்தன் முதற்றலைவர்
ஏம்பலொடும் ஏற்றார் எதிர்ந்து....1225

வாட்படையும் வீர வயவா னரப்படையும்
நாட்பரவை என்ன நணுகியே - கோட்புலியின்
முட்டினார் மோதி முனைந்தார் முழுவயிரக்
கட்டியே அன்னார் கடுத்து....1226

காலாள் பரிதேர் கரிவாள் அயில்வேல்
மேலாள் கொடியடங்க வீசியே - மாலார்
கெடியடங்க வீரங் கிளர்ந்தார்கள் வாரிப்
படியடங்க வேஆர்ப் பரித்து....1227

நாண்படையுந் தொல்லுருவ நண்ணாது தானழிய
வாற்படையால் வீசி வளர்கரத்தான் - மேற்பொறையிற்
சாந்து படவரைத்தான் தாமத்தோள் மாருதியாம்
ஏந்துபுகழ் உற்றான் எதிர்ந்து....1228

கண்மைத்திண் கார்கோள் கலக்குங் கனவரையாம்
ஒண்மத்தி னின்றும் உலாவியே - வண்மைக்
கவிக்கரசன் சாலக் கலக்கினான் கையாற்
புவிக்குலங்கள் தீயப் புகைந்து....1229

எப்பான் மரமும் இருந்ததோ எம்பெருமான்
கைப்பாலுறுங் கூர்ங் கணையன்ன - துப்பாரும்
வெங்கதங் கொளங்கதனாம் வீரனுருத் தங்கடையார்
பங்கமுற நேரும் பதம்....1230

எம்மலைகள் நின்ற இடபன் எடுத்தெறிய
அம்மலையான் முன்மலைந்து ஆவியறுங் - கைமலையும்
கொய்யுளைமான் தேருங் கொழுங்குருதிப் பேராறு
மையுளைநீர் மேவியது மற்று....1231

எண்கரசன் சங்கனிகற் குமுதன் மாப்பனசன்
வண்கயிலை மானும் வயக்கவையன் - திண்கிரிநேர்
தானா பதிமுதலோர் தாக்குதலாற் தாரரக்கர்
ஊனாகி மாண்டார் உளைந்து....1232

தன்சேனை எல்லாம் தளர்ந்தழியத் தானறிந்தான்
மன்சேனை எல்லாம் மடித்திடுவான் - பொன்சேரும்
வில்வளைத்த மேகமென வந்தானவ் வெண்கயிலை
மல்வளைத்த தோளான் மகன்....1233

ஓரா யரம்பகழி ஓர்தொடையில் ஏவினன்பின்
ஈரா யிரம்பகழி ஏவினான் - கூரார்ந்த
வன்னகத்துச் சேனை மடிந்த தொருகோடி
பன்னகங்கள் என்னப் பரந்து...1234

வானெலாம் வாளி மழையெலாம் வாளியிளங்
கானெலாம் வாளிக் கணம்வான - மீனுலாம்
நீரெலாம் வாளி நிலமெலாம் வாளிநெடும்
பாரெலாம் வாளிப் பரப்பு....1235

மந்திரசித் தான்ற வலியான் வரிவிலக்கை
இந்திரசித் தேவும் எரிவாளி - வெந்திரத்தார்
வாலுருவி வீரர் வலியுருவி மார்புருவி
மேலுருவிச் சென்ற விரைந்து....1236

ஓர்முழுத்த மாதவன்முன் ஒண்கணையால் வெண்கவிகள்
நீர்முழுத்தி வெற்றி நிரப்பினான் - பார்முழுத்த
வாகையெட்டுங் கொண்டான் வலாரிதனை வெற்றிட்டான்
போகமெட்டுங் கொண்டான் பொருது....1237

தன்படைகள் மாயத் தரியானத் தாரரக்கன்
வன்படையை நீண்ட மராமரங்கொண்டு - அன்பதிலா
வஞ்சகத்தீர் என்னஎதிர் மாட்டினான் வானவரும்
உஞ்சனமென்று ஏத்த உருத்து....1238

நன்றுவலி என்ன நயந்தரக்கன் நண்ணரிய
வன்றருவை நூறியொரு வன்கணையாற் - குன்றனைய
மன்கவியின் நெற்றியினும் மார்பினும் ஈரைந்துகணை
முன்கவிய எய்தான் முனைந்து....1239

அப்போது அனுமன் அடற்கரனோர் குன்றேந்தி
இப்போது நீபிழையாய் என்றேவத் - துப்போதும்
பல்கணையான் நீறு படுத்தினான் பாவியவன்
நில்லடா என்றுமுன நேர்ந்து....1240

மல்லெடுத்த தோளாய் வலியடுத்து வான்வளருங்
கல்லெடுத்துக் கற்றசெயல் கண்டனையே - வில்லெடுத்த
வெற்றிஅறிந் துற்றாய் விருந்தன்றோ கூற்றுவனுக்கு
இற்றைநாள் என்றான் எதிர்ந்து....1241

விற்குரியார் நீரே விருத்தவுரை தன்னிலெவன்
மற்குரியே னோடு மலைதியோ - சொற்குரிய
தம்பியொடு மெய்திச் சமர்புரிதி யோவிதனில்
ஒன்றுரைத்தி என்றான் உருத்து....1242

எங்குநின்றான் உங்கள் இலக்குவனாம் ஏழையுயிர்
நுங்குதற்கே வந்தேன் நுனித்தறுதி - சங்கையற
மூவுலகும் ஒன்று முனைந்தாலும் மொய்யமர்வாய்
ஆவிஉய்யீர் என்றான் அதிர்ந்து....1243

செயத்தகுவ சொன்னாய்பொய் செப்பாய்நீ என்ன
வயக்கிரிஒன்று ஏந்தி வலியால் - அயக்கிரிநேர்
வெய்யவன்தன் மார்பினிடை விட்டான் அதுதுகளாய்
நொய்யெனவே ஆகியது நொந்து....1244

ஓரா யிரம்பகழி ஊடுருவ எய்தான்புண்
நீராய்வெண் மேனி நிரம்பவே - போராடும்
மீளக்கால் பொரக்கனக மேருபோல் நின்றயர்
மாக்காலன் அன்னான் மருண்டு....1245

வந்தவந்த வீரர் மகிவாய் இடனாக
அந்தவந்த காந்தன் அனையானும் - கொந்தழல்வாய்
வாளிமழை பெய்து வதைத்தான் தனையிளங்
கோளரியுங் கண்டான் கொதித்து....1246

நம்படைகள் மாய நலிவித்தோ நாமன்றோ
புன்படையான் ஆவி புறத்தெய்த - என்புதிரக்
கூற்றுவன்உங் கைவிதிர்ப்பக் கொல்வன் எனவெழுந்தான்
பாற்றுணரும் வீடணனைப் பார்த்து....1247

வில்லொன்று தாங்கியசெம் மேகம்போன் முன்னெதிர்ந்த
கல்லொன்று தோளானைக் கண்டிவனோ - செல்லொன்று
வண்ணமுளான் நம்பியென வன்சார னாமிவனை
எண்ணுகநீ என்றான் எடுத்து....1248

வில்வளைத்தல் கண்டான் வினையறியான் விண்னவர்கள்
மல்வளைத்த தோளான் மகன்வலியார் - பல்வளைத்த
முண்டமலை கண்டு முனிந்தான் முனிதருமேல்
அண்டமலை மாகு அவன்....1249

மாருதிதன் தோள்மேல் வயங்கினான் மாமுதல்வன்
தாரகநா மப்பேர் தனையுன்னி - வீரத்து
இலக்குவன்என் றேத்தும் எழிற்பெயரை இன்னே
துலக்குவன்யான் என்றான் துணிந்து....1250

தென்னிலங்கை மன்னவன்தன் சேயுந் திகழொளிர்
பொன்னொளி கொள்மேனிப் புராதனனும் - மின்னொளிபாய்
வெங்கணையாம் மாரி விடுத்தார் திசைமுழுதும்
கங்குலாய் மூட வளைந்து....1251

மாவாளி நாக வடிவாளி வன்மையுறுந்
தீவாளி மாயத் திறல்வாளி - கார்வாளி
ஒன்றோபல் கோடி ஒருங்குகோத் தெய்தனர்போர்
வென்றோரின் முன்னோர் வெகுண்டு....1252

எவ்வாளி பெய்தது இடையறுத்த தெவ்வாளி
அவ்வாளி ஈதென்று அறியாராய் - மைவான
வீதியிடை நின்று விழித்தார் இமையோரும்
ஓதி உணரார் ஒருங்கு....1253

கற்றதொழில் எல்லாமக் கார்முகத்தில் காட்டினர்
உற்ற வலியோர் உரவுடையோர் - வெற்றியுறும்
காலம்பார்த் தென்று களிக்குதுமோ வென்றுரைத்தார்
ஆலம்பார்த் தஞ்சும் அவர்....1254

அப்பொழுது வன்தோள் அடல்மா ருதியாகந்
துப்புறழ வாளி தொடுத்தமலன் - பொற்புறுத்தின்
சிற்பமுறுங் கவசத்தேத்து மோரா யிரங்கோல்
தற்பமுளான் எய்தான் தகைந்து....1255

அண்ணல் அறிந்தான் அனுமான்தன் ஆகமெலாம்
புண்ணீராய்ச் சோர்தல் புழுங்கினான் - எண்ணரிய
பன்னூறு வாளி பரப்பினான் பாதகன்மேன்
முன்னூறு எனவே மொழிந்து....1256

அக்குழுவெங் கோலால் அடலேற்ற அரிமாவும்
முற்கரங்கொள் பாகு முறியவே - அக்கபடன்
மான முறுங்கவச மார்பும் பிளந்ததென
வானவர்கள் சொற்றார் மகிழ்ந்து....1257

பாகு மடங்கற் பரியும் பதைத்தாவி
ஏகத்தன் மேனி இருங்குருதி - ஆகவே
கண்டிவன்வில் ஆண்மைக் கடவுளே என்றிசைத்தான்
அண்டமெலாம் வென்றான் அறிந்து....1258

மற்றொருதேர் ஏறி வயப்பகழி ஆயிரத்தோடு
உற்றபல கோடி உதைத்தமலன் - நெற்றியின்மேல்
நூறுகோல் எய்தான் நுவலாமுன் வென்றியென
மாறிலா வீரன் மலைந்து....1259

அப்பகழிக் கொன்றும் அயரான்எம் ஆரியனும்
முப்புரங்கள் தீய்த்த முழுவாளிக் - கொப்புறுமோர்
நூறுகோல் மேனி நுழைப்பித்தான் ஓதரலால்
வீறறவே நின்றான் மெலிந்து....1260

வில்லூன்றி மெய்யயர்ந்து வெய்யோன் மகனுறுங்காற்
செல்லூன்று மேனி திகழனுமான் - பல்லூன்
வெருட்டியுணுங் கூற்றில் விளங்குவான் தேரை
உருட்டினான் காலால் உதைத்து....1261

தேறினான் ஏறுமணித் திண்டேர்கள் அத்தனையும்
நூறினான் வேறு நுவல்வதெனோ - ஆறிலான்
மீக்கொண் டிழிந்ததலால் வேறுவினை செய்ததுண்டோ
தாக்குஞ் சமர்முனையிற் தான்....1262

அக்காலை வெங்கண் அரக்கர்பல் ஆயிரம்பேர்
புக்கார்கள் சுற்றும் புயலெனவே - மிக்கான்மேல்
ஏவினார் பல்படைகள் இற்றழிய மற்றமலன்
தூவினான் வில்லாற் துணிந்து....1263

குண்டலமும் பன்பணியார் கோவையும்பொன் மாமுடியும்
மண்டலம்வீழ் செங்கதிரை மானவே - எண்திறலார்
வாளிமழை தூவி வளைஎயிற்றார் தங்களைவிண்
கோளுறவே கொன்றான் குமைத்து....1264

காலால் உதைத்துறுக்குங் கையாற் பிசைந்திறுக்கும்
வாலா லெடுத்தெறியும் வண்மையிலா - மாலார்ந்த
மையனைய மேனி வடிவாள் அரக்கரையன்று
ஐயனுவந்து ஏறும் அரி....1265

விண்ணில் எடுத்தெறியும் வெற்பின்மேல் எற்றுமணிக்
கண்ணில் உருட்டுங் களித்துருட்டு - மண்ணின்
வலத்தினிடைத் தேய்க்கும் மதியிலார் தம்மை
இலக்குவனன்று ஏறும் இபம்....1266

அக்கணத்து வாலி அருள்புதல்வன் ஆங்கணுகி
இக்கணத்தே தீர்வாய் எனவிசைத்துப் - பொற்கிரிநேர்
தாருவொன்று வாங்கி விடுத்தான் தகையரக்கன்
தேரழிந்த தன்றே செயிர்த்து....1267

தேரழிந்த தன்மை தெரிந்தான் அத்தீயோனும்
ஏரழிந்தது என்ன இமையாமுன் - போரெழுந்த
சீயம்போல் வேரொறுபொன் தேர்ஏறிச் சென்றெதிர்ந்தான்
மாயந்தான் வல்லான் வயிர்த்து....1268

இத்தனைபல் கோடியென எண்ணரிய வாளிமழை
அத்தன்மேல் ஏவ அவையனைத்துஞ் - சித்திரத்திண்
வாளியால் மாற்றி வலியோன் நெடுங்கவசம்
தூளியாச் செய்தான் துணித்து....1269

கவசமிழந்து ஐயன் கடுங்கணையால் வெய்யோன்
அவசமுழந் தாறும் அளவுந் - துவசமுற
மல்லிருவர் ஆகி மலைந்தார்அம் மாதவன்மேற்
செல்லுறழும் வாளி தெரித்து....1270

வில்லிழந்தார் ஐயன் விடுங்கணையால் வேறாக
மல்லிழந்தார் மாருதிதன் வன்கரத்தால் - எல்லமைந்த
தண்டிழந்தார் ஆவி தனக்குதவி தான்புரிந்தார்
உண்டசோறு உண்ணார் உளைந்து....1271

மற்றவரும் ஓடும் வழியறிந்தார் வஞ்சகனும்
உற்ற தனிமைதனை உன்னினான் - இற்றிதுவே
காலமென உன்னியவக் காலடைந்தான் காலமுற
மேல்திசையில் வெய்யோன் விரைந்து....1272

எப்பொருளும் ஆதுயிடை ஈறொன்று இன்றிஎன்றுந்
துப்புறவே தோன்றுஞ் சுபாவமெனும் - அற்பர்மனம்
என்னவே தோன்றும் இருளுறுங்கால் வீடணனும்
பன்னியிவை சொற்றான் பரிந்து....1273

தேங்காவி வாழுஞ் செல்சரங்கள் தெய்வமணிப்
பூங்காவி நாறும் புனல்நாடா - வாங்காலம்
வல்லரர்க்கு என்றுணர்ந்து மாயவினை வல்லானைக்
கொல்லுதிநீ என்றான் குறித்து....1274

தேருடையான் என்னிற் செயமுடையான் அவனமன்
ஊருடையான் ஆக ஒழிப்பனெனப் - போருடைய
வில்லினால் வேறு படவீழ்த்தினான் மென்கழைபோல்
நெல்லுலாம் நாடன் நினைந்து....1275

விழித்திமையா முன்னம் நெடுவிண்ணின் மீக்கொண்டான்
இழிந்தசெயல் அன்னவுரு ஏய்த்தான் - அழற்பிழம்பார்
மானாக வாளிதனை வாங்கினான் வஞ்சமுளான்
மானாகர் அஞ்ச மருண்டு....1276

அக்காலை அஞ்சினன் கொலாமென்று அரிவீரர்
நக்கார்கள் ஐயன் நகுமுனியைப் - பக்கான
அங்கதன் கையாக்கி அனுமான்மேல் நின்றிழிந்தான்
சிங்கஏறு என்னத் திகழ்ந்து....1277

மெய்யுருங்கோல் நீக்கி விளைவறியான் மேருநிகர்
ஐயன் இருப்ப அ•துணரா - மையரக்கன்
விட்டனன் வன்னாக விறல்வாளி வேகமொடும்
வட்டவான் தோள்மேல் வயிர்த்து....1278

எவ்வகைய என்பேன் இலக்குவனிவ் ஏழுலகும்
உய்வகையே வந்தான் உவமையிலாக் - கொய்வகைப்பூந்
திண்டோள் உறப்பிணித்த செய்கையினைத் தேவர்குழாம்
கண்டோட உள்ளங் கசிந்து...1279

மாய மறியான் மயங்கினான் மாருதியும்
தீயவனை இன்னே செருப்பலென - மேயவனைக்
காலனெடும் பாசமெனக் கட்டியது வன்பாசம்
மாலமைதோள் வீர வரை....1280

மற்றைநெடு வீரர் வரையனைய தோள்களெலாம்
இற்றதினி என்ன இரும்பாசஞ் - சுற்றியது
எண்ணரிய கோடி இகல்வாளி எய்தனனவ்
விண்ணுறையும் வெய்யோன் வெகுண்டு....1281

மத்திளங்காய் என்ன வடிவொடுங்க வாளிமழை
கைத்தடங்க ஆவி தளர்வுற்றார் - எத்திறமும்
வல்லான் மகனும் மணிவான் மணிமகனும்
அல்லார் அமர்வாய் அயர்ந்து....1282

எத்தனைபல் கோடியென எண்ணுகேன் கான்முளைமேல்
தைத்தவடி வாலி தனக்கஞ்சான் - மெய்த்தருமம்
ஆவானுக்கு உற்றதற்கு அஞ்சினான் உள்ளுளைந்தான்
பூவார் களத்தே புகைந்து....1283

ஆயிர வாய்வாளி அனலுமிழ வாயரவம்
மீயுருவான் மேரு விசித்ததென - நாயகனார்
மாமேனி ஒவ்வ வளைத்ததுவே வாளரக்கர்
கோமான் மகனரவக் கோல்....1284

இத்தலைஎல் லோரும் எரிவாய்ப் பகழியினும்
மத்தமுறும் பாச வலியாலுஞ் - செத்தவரின்
மண்சோர வெய்யோன் மகனடைந்தான் மாநகரம்
புண்சோரச் சென்னீர் பொடித்து....1285

மங்கலங்கள் ஆர்ப்ப மணிக்குறுவல் மாதர்நல்லார்
ஐங்கணைகள் பாய அடல்வல்லான் - சிங்கமென
இந்திரனை வென்றநாள் இந்தநாள்என் னவிசைத்த
தந்தைதனைக் கண்டான் தளர்ந்து....1286

எண்ணுவதென் சால இராமபிரான் அன்றிமற்றோர்
விண்ணின் மேலுற்றார் விதிவசத்தால் - மண்ணிலினி
எந்தை இனையல் இனியென்று எடுத்துரைத்தான்
மைந்துடைய வில்லான் வகுத்து....1287

இப்பால் இராவணன்பின் என்பான் இழைப்பரியான்
எப்பா லருக்கோஇவ் வெற்றியெனா - மைப்பான்மை
வல்லிருள்வாய் வையகத்து உவந்து மழைபிலிற்றுஞ்
செல்லெனவே நின்றான் திகைத்து....1288

ஒக்குமோ செய்கை உலகத்தார்க் கென்னடைவே
வைக்குமோ வாவி மலராள்கோன் - சிக்கரிய
வன்மாயை யானை மடித்திலேன் வன்தண்டால்
என்மானம் என்றான் இனைந்து....1289

தன்னுணர்வு சோர்வானைத் தாங்கியே தாரனிலன்
என்னிதுநீ சோர்ந்தாய் இவணிருத்தி - உன்னுதல்முன்
ஆரியன்பால் எய்தி அறைதருவல் என்றகன்றான்
சீரியரின் முன்னோன் தெரிந்து....1290

அண்ணன் அழகன் அருளாம் பரமழைநேர்
வண்ணன் கழலை வனங்கியே - எண்ண
ஒடுங்கஉணர் உற்றான் உரைத்தனன்பல் வீரர்
படுங்களத்திற் பட்ட பரிசு....1291

தன்னணையாஞ் செல்வந் தனித்தம்பிக் குற்றசெயல்
மன்னவனுங் கேட்டு மயங்கினான் - முன்னுணர்ந்தும்
எங்ஙனோ என்ன இருந்தான் இமையவரும்
அங்ஙனே சோர்ந்தார் அறிவு....1292

கன்னங் கரியநிறக் காரிருள்வாய்க் காகுத்தன்
தன்னுணர்வு சோரத் தழற்படைவாள் - முன்னுறவே
அண்டர்தொழுஞ் செல்வத்து அடிநோவ ஆங்கடைந்தான்
கண்டனனவ் வீரக் களம்....1293

ஊழிவாய் யாரும் ஒருங்கவியத் தான்ஒருவன்
ஆழிவாய் நின்றாங்கு அனைவோரும் - பாழிவாய்
நாகத்தாற் பட்ட நடுக்களத்து வந்துநின்றான்
சோகத்தாற் சோர்ந்தான் தொடர்ந்து....1294

காலத்தாற் பற்றுங் கடுங்கோள் உடன்கவின்செய்
நீலத்தார் சோதி நிரம்பவே - ஆலத்து
மேனின்று வெய்யோன் விழுந்தனையான் மேனியின்மேற்
கோனின்று வீழ்ந்தான் குழைந்து....1295

உழைக்கும் உயிர்க்கும் உயிருலைய வாடும்
அழைக்கும் இலக்குவன் என்றந்தோ - மழைப்பருவக்
காரெனவே சோர்ந்து கலுழுங் கசிந்துருகும்
வீரவரை அன்னான் மெலிந்து....1296

வானோக்கும் வாளி மழைநோக்கும் மாருதியைத்
தானோக்கும் வீரர் தமைநோக்கும் - பூநோக்கிப்
பட்டனரோ என்னும் பதிக்கும் உயிர்த்துயிர்க்கும்
மட்டவிழுந் தாரான் மருண்டு....1297

என்தம்பிக் குற்றது இதுவென்னில் ஏழுலகில்
நின்றவரால் என்னோ நிறைவதிவண் - குன்றனைய
மற்கூட்டுங் குற்ற மகிழ்ந்துண்ண வாளியினால்
விற்கூட்டல் செய்வல் விருந்து....1298

அறங்காப்பான் வந்தேற்கு அடைவிது வேன்மற்றென்
திறங்காப்பான் வந்த செருவிற் - புறங்காப்பான்
வீடணயிக் கேடு விளைத்தனைநீ என்றுரைத்தான்
ஏடவிழுந் தாரான் இனைந்து....1299

தன்பிறவிக் குற்ற தனித்துயரந் தாங்கியவன்
அன்புறத்தன் ஆவி அயருங்கால் - முன்பிறிந்த
ஊட்டமற வந்தான்அவ் வல்லிருள்வாய் மாடுறைவான்
நாட்டமுறறுநாகா சனன்....1300

பொற்சிறகர் ஓங்கப் புனைமாமதி யணிந்து
நற்சிலையொன் றேந்தி நவில்கான்முன் - விற்பரவ
எண்டிசையின் நின்ற இருள்கீற மாமேரு
விண்டடைவது என்ன விரைந்து....1301

நாக மணிமகுட மின்னிசைப்ப நாயகனார்
ஏகமுறல் உள்ளம் இசையானாய் - மேகமெனும்
மாமேனி கண்டு மகிழ்வானாய் வானவரை
ஏமேர உள்ளம் எழுந்து....1302

கலங்காத உள்ளம் கலங்கவே கண்டான்
அலங்கார மார்பின் அலைய - இலங்காத
பெற்றிமையை உன்னிப் பெயரா விசையேற
உற்றுணர்வான் வான்மீது ஒளிர்ந்து....1303

வேதங்கள் பாட விரிசிறகர் மேனியொளி
காதங்கள் கோடி கரைசெல்ல - ஓதங்கள்
ஒன்றினோடு ஒன்றுஉறழ உற்றான் ஒளிமகுடம்
என்றெனவே கீறி இருள்....1304

முகிழேறு கைகண் முடியேற முன்னி
நெகிழேற நின்று நினைவான் - மகிழேற
வாக்கினால் ஐயன் மழைமேனி கண்டுவந்து
நோக்கினான் சொல்வான் நுனித்து....1305

காரணமா னார்க்குங் கடவுள்நீ கற்பத்தில்
ஆரணங்கள் பாட அழியாநீ - வாரணமுன்
வந்தளித்தாய் நீயுன் மகமாயை யாரறிவார்
சுந்தரத்தோள் நாதா துதித்து....1306

மூன்றெழுத்தாய் மூன்றின் முதலெழுத்தாய் அவ்வெழுத்தின்
ஆன்ற நிலையை அருமறைக்குந் - தோன்றாத
வந்துநீ யாருன் மகமாயை யாரறிவார்
முத்தருமே அம்மா மொழிந்து....1307

தோன்றாப் பொருள்நீ சுடரொளியாய் வந்ததுநீ
மூன்றாம் பொருள்நீ முதலுநீ - தோன்றி
வரமருள்வாய் நீயுன் வலியார் அறிவார்
பரமினியார்க் குண்டோ பகர்....1308

ஆணாய் அறிவாய் அறிவோர் அறிவிடையுங்
காணா முதலாய்க் கருதரிய - சேணாடர்
உள்ளத்துக் கெட்டா ஒருவன்நீ உன்பெருமை
விள்ளத்தான் ஆமோ விரித்து....1309

மன்பெறுவா னோர்முதலா மாமனிசர் ஈறாக
நன்பெறவிப் புன்பிறவி நண்ணினாய் - என்பெறுவான்
நண்ணினைநீ ஐயாஉன் நண்ணரிய மாமாயை
எண்ணிடவு முண்டோ இருந்து....1310

தேற்றுவார்த் தேற்றித் தெளியாரில் தேற்றரிய
ஆற்றினார்க் குட்பட்டு அழுந்துவாய் - மாற்றரிய
மாயையெலாம் மாற்று மகமாயை யாரறிவார்
மாயமிலார் காண்பார் மதித்து....1311

ஆனந்தம் என்னும் அறிவென்னும் அந்தமிலா
மானந் தொடர்ந்த வரமென்னும் - வானஞ்
சிறந்த பதமென்னுந் திகழ்மறைகள் நான்கும்
அறஞ்சிறந்தாய் உன்னை அறிந்து....1312

ஒருவரால் ஈய ஒருபொருளும் ஏற்காய்
அருமறைகள் ஓதி அறையும் - இருவருக்கும்
வேண்டும் வரமளிக்கும் வித்தகநீ எவ்வுயிர்க்கும்
ஆண்டகைநீ யாரறிவார் ஆய்ந்து....1313

இத்தகைமை பன்னி வருவானை எம்பெருமான்
எத்தகையோன் ஆனாவனிவன் என்றுருகிச் - சித்தங்
கருதுங்கால் நோக்கி மலர்க்கை குவித்துநின்றான்
மருவுங்கால் போல்வான் மகிழ்ந்து....1314

எல்லிரவி முன்னம் இருளென்கெனோ புன்மாயை
நல்லறிவின் முன்னமென நாட்டுகெனோ - வில்ஒளியார்
மாதுளவத் தார்க்கருடன் வன்சிறகர்க் காலுறுங்கால்
ஓதரிய நாகா யுதம்....1315

நன்னெறிக்கோர் தீங்கென்று நண்ணுமோ நண்ணரிய
இன்னலுற்ற வெள்ளம் எழுபதும் - மன்னரிய
பூமாரி பெய்யப் புலவோர் எழுந்ததுவே
மாமாரி பெய்ய மழை....1316

எழுவாரின் முன்னம் இளையான் எழுந்து
தொழுவானை அன்பு தொடர - வழுவாத
மின்னின்ற மார்பின் மிசையணைத்து வண்சிறையான்
முன்னின்று சொன்னான் முதல்....1317

எத்தவம்யாஞ் செய்தேம் எதிர்தோன்றி இன்பவருள்
வைத்தனைகைம் மாறென் வழங்குமோ - உத்தமனே
நீதித் தரும நெறியுடையாய் பண்டுனக்குச்
சாதித்ததென் பயனோ தான்....1318

எத்தகையாய் எப்பெயராய் எவ்வுலகாய் என்றமலன்
சுத்தவிழ் வாய்விண்டு சொல்லுதலும் - மெய்த்தகையோய்
பின்னால் உரைப்பதெனப் பேர்ந்தான் பெருஞ்சிறகர்
மன்னாநின்றார் பறவை மன்....1319

ஈசனு நன்றென்ன இருந்தான் எமைப்புரக்கு
நேசனும் மற்றை நெடியோரும் - ஓசையுற
ஆர்த்தார்கள் அந்த அதிர்ப்பசனி கேட்டுமனம்
வேர்த்தான் அரக்கன் வியந்து....1320

அங்கதன்தன் ஆர்ப்பும் அனுமான் அடற்றொளியும்
பொங்கிருவர் விண்ணான் பொருமொலியு - மங்குல்
இடிக்கின்ற தன்ன இரவிசேய் ஆர்ப்பும்
பொடித்ததுகாண் என்றான் புகைந்து....1321

இத்தன்மை எண்ணி எழுந்தானெழின் முலைப்பூ
கொத்தணிந்த வேணிக் குழைமுகத்தர் - பொய்த்தஇடை
மங்கையர்கள் அங்கை மணிவிளக்கம் ஏந்திவர
வங்கமென வந்தான் மருண்டு....1322

களிமயக்கு மூண்ட கனாமயக்குங் கொண்டார்
அளிமயக்குங் கண்ணார் அடைய - ஒளிமயக்கும்
வாட்கரத்தர் செல்ல மகன்கோயில் வந்தடைந்தான்
கோட்புலியை அன்னான் குறித்து....1323

இலக்குவன்றன் வாளி எழிலியே றுள்ளங்
கலக்கிடவே கண்படையுங் கொள்ளான் - அலக்கணுறப்
பாகலங்கொள் யானை யெனப்பாயணை மேலாவானை
மேகமனான் கண்டான் வியந்து....1324

அழுந்துதுயர் உற்றான் அரிதிருகை ஏற்றி
எழுந்துவழி பாடியற்றற்கு ஏலான் - தொழுந்தகைய
மாமகனைக் கண்டு மயங்கினையோ வென்றுரைத்தான்
கோமகனாம் வல்லரக்கர் கோன்....1325

இந்திரனை யாதி இமையோர் நெடுஞ்செருவில்
நொந்திலன் காணையா நுவலுங்கால் - வெந்திறலார்
வின்மையினும் மேலான வின்மையுளோர் மேதினிமேல்
இன்மைநீ தேர்வா யினி....1326

அத்தகையர் பாசத்து அயர்ந்தார் அயலென்னே
உய்த்துணர்தல் என்ன உரைமிக்கோன் - தத்துவநீ
ஒன்று முணர்ந்திலைகொல் ஒன்னலர் தமார்ப்போதை
என்றனன்குன்று அன்னான் இனைந்து....1327

அவ்வேளை தூதர் அடைந்தார் அவன்செவிவாய்
இவ்வா றெனவே இயம்புதலும் - மைவார்ந்த
கொண்டலே ஒப்பான் கொடுங்கூற் றமும்நடுங்க
விண்டனனோர் மாற்றம் விரித்து....1328

கண்டிரோ வென்கைக் கடுங்கோலால் வென்னிடத்து
மண்டமர்வாய்ப் பட்ட வடுத்தீரான் - தொண்டனாய்
வந்துதவி செய்தான் அம்மாமனிதர்க் கென்கண்டோ
மந்தரத்தோள் வீமனெதிர் வந்து....1329

மன்னுங் களபமுலை மாதவனோ டெத்தனைகால்
என்னெதிரே தோற்றான் எதிர்நில்லான் - பின்னர்த்
தெரிதருவல் நீபோய்ச் செருனருயிர் வீயப்
பொருதுவென்றி என்றான் புகைந்து....1330

இன்றொருநாள் அப்பா இகற்சிரமம் நீக்கியபின்
வென்றிடுவல் நாளை வியனமைந்த - மன்றல்
எழுங்கமலப் புத்தேள் இரும்படையால் என்றான்
மழுங்கறிவு கொண்டான் மகன்....1331

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.16. பிரம்மாஸ்திரப் படலம்

வெற்பெடுத்தோன் ஏவால் விரியுந் திரற்சேனை
பப்புநீர் என்னப் பரந்தே - நெற்பரந்த
தன்பழனத் தாமரையிற் சங்குலவுந் நன்னாடன்
கண்கொளா வேலைக் களம்....1332

அரும்பக்கந் தூமத் தவிர்வான் அடல்மா
பெரும்பக்கன் ஆவி பெயர்த்தார் - சுரும்போக்கு
மாருதிதன் வன்கரத்தால் வாலிமகன் கையால்
சோரிவாய் ஆரத் துகைந்து....1333

நீலன்கை ஓச்ச நெடுந்தருப்போன் மண்ணயர்ந்து
மாலி யடைந்தானவ் வானுலகம் - சூலிநிகர்
வன்பனசன் கையால் மடிந்தான் வயவெய்யோன்
தன்பகைஞன் ஆவான் தகைந்து....1334

தன்தாதைச் சத்துருவாய்ச் சாற்றுந் தரியலன்
வென்றான் உயிருலைய வில்லம்பால் - பின்றாத
வேள்வி நெடும்பகையை விண்ணுலகத் தேற்றினான்
கோளுறக்க நீத்தான் கொதித்து....1335

வச்சிரதந் தப்பேர் வலியான் மலையனைய
அச்சிரசந் திற்பேர் அழியவே - உச்சமுறும்
வில்லடபன் கையான் மடித்தான்மற் றோரைஇனிச்
சொல்லுவதென் மாண்டார் துகைந்து....1336

வந்த பெருஞ்சேனை மடியவே மாத்தூதர்
நொந்தரக்கன் முன்ன நுவலுங்கால் - வெந்திறலாய்
எண்ணுவதென் சால எனக்குவிடை தாவென்
புண்ணியமே இல்லான் புகைந்து....1337

வண்ணக் கரனார் மகனுரைப்பக் கேட்டுமனம்
எண்ணிநீ ஏகென்று எடுத்தோதப் - பண்ணமைந்த
தேர்மீது சென்றான் திறற்படைகள் நான்கும்வரக்
கார்போலும் வெய்யோன் கனன்று....1338

இந்திரசித் தென்பான் இவன்பாலோ கற்றதென
அந்தரத்தோர் கூற அதிரேக - மந்திரத்து
மாமாயை செய்து மடிந்தான் மழையனைய
பூமான்கை வாளி பொர....1339

மற்றும் பொருதார் மடியவே மாத்தூதர்
கொற்றவன்பால் ஏகிக் குறைகூறச் - செற்றமொடு
என்மகனை இன்னே இவண்தருதி என்றுரைத்தான்
கன்மருவு தோளான் கடுத்து....1340

தூதர் அடைந்து தொழுதங் கிவையுரைப்பத்
தாதை சமுகந் தனையடைந்தான் - கோதை
மருமலராற் கற்பகத்து வானவர்கோன் தன்னை
செருவிலால் வென்றான் செயிர்த்து....1341

வந்தடியிற் தாழ்ந்த மகன்மா முகநோக்கி
சிந்தனையென் நீயே இனிச்சென்று - வெந்திறலார்
மானிடர்தம் ஊக்க வலிதொலைத்து வாவென்றான்
தானவரை வென்றான் தகைத்து....1342

செருமடங்கல் ஆயிரஞ்சேர் தெய்வமாத் தேர்மேல்
உருமடங்க வானோர் உலைய - வருமடங்கல்
என்னுமாறு ஏறினான் ஏகினான் நாற்படைகள்
மன்னியே சூழ்ந்து வர....1343

எத்தனைதேர் எத்தனைமா எத்தனையாள் வாசிநிரை
எத்தனைஎன் றெண்ணி இசைத்திடுகேன் - முத்தமிழின்
கல்விகற்பம் என்னக் கருதுவார்க் கெட்டுமோ
சொல்விகற்ப மில்லாச் சுயம்பு....1344

தேரோதை வண்ணச் சிலையோதை செந்தறுகண்
காரோதை வண்ணக் கவியோதை - நீரோதை
விண்ணோதை என்ன விரிந்ததே மேலுலகத்து
எண்ணாரும் அஞ்ச இடித்து....1345

எழுமதத்த நால்வாய் இருங்கோட்ட மூரி
முழுமதத்த நீழன் முனியுங் - கழுமதத்த
விண்ணனைய மேலோன் விதித்த நெறிபிறழாக்
கண்ணனைய வேகக் கரி....1346

வானோக்கி எங்கள் வயமனால் வானுறையுங்
கோனோக்குங் கொற்றங் குறித்தெம்முன்- பூநோக்கி
வாருநீர் என்ன வகையனுமா னித்தமர்வாய்ப்
பாரிடையே சென்ற பரி....1347

அப்படைகள் சூழ அடைந்தான் அமர்க்களத்து
முப்புடைக்காய் வீழ முடத்தெங்கின் - துப்புடைய
வாளைபாய் செல்வ வளநாடன் முன்மாயக்
கோளினான் வெம்போர் குறித்து....1348

வாலோடு துண்டம் வரும்பக்கம் வன்கழுத்து
மேலோடு மேனி விழியுகிர்வாய் - ஏலவே
அன்றில் உருவாய் அணிவகுத்து நின்றெதிர்த்தான்
வென்றியே என்ன விரைந்து....1349

இந்திரன்தந்து ஏக இவன்பறித்துக் கொண்டஏழு
கந்தரமு நாணுங் கலிப்புடையது - அந்தரஞ்சேர்
கால்வளைவாய் ஊதினான் கண்டோருடல் விதிர்ப்பக்
கால்வளையும் வில்லான் கதித்து....1350

அம்முழக்கங் கேட்ட அடல்வான ரச்சேனை
கம்முழக்கங் கேட்டநெடுங் கட்செவியில் - விம்மலுற
எங்குற்ற என்ன இரிந்ததினி அங்கிருந்தார்
சிங்கத்தை ஒப்பார் சிலர்....1351

அங்கதன்றன் தோள்மேல் அவிர்ந்தான் அடலிளையோன்
மங்குலே யன்னானம் மருதிமேற் - சிங்கமென
ஏறினான் கண்டு அமரரேத்தினார் பன்முனிவர்
கூறினார் ஆசி குறித்து....1352

இருவரும்வில் மாரி இடைவிடாது எய்யப்
புரவியொடு யானை பொருதேர் - வரையனைய
தோளரக்கர் ஆவி தொலையவே கண்டுழைந்தான்
காலமுகில் அன்னான் கடுத்து....1353

பட்டநுதல் யானை படுகளத்துப் பட்டொழிந்து
கெட்டனவோ என்றான் கிளரமர்வாய் - மட்டுரையா
மல்லரக்கர் எல்லாம் மடிந்தனரோ என்றுரைத்தான்
வெல்லடர்க்கை வில்லான் வியந்து...1354

மலைநோக்கும் வீரர் மலையனைய வெங்கண்
தலைநோக்கும் வீரர் சரத்தின் - சிலைநோக்கும்
விண்ணோக்குஞ் சோரி வெளநோக்கும் வீய்ந்தவரை
மண்ணோக்குங் கண்ணான் மருண்டு....1355

தலைக்கிரியைக் காணார் தழுவிய தோளுற்ற
முலைக்குறியை நோக்கி முசிந்தார் - அலைப்பெரிய
செங்குருதி ஆற்றில் திகைத்தழுது சோர்வாரை
மங்குலனான் கண்டான் மருண்டு....1356

ஓராயிரங் கோடி தேர்ஒழிய மற்றுள்ளோர்
பாராக மாண்டு பதைபதைத்தான் - நீராடு
மும்மடங்கல் என்ன முனிந்தான் முகமாறத்
தெம்மடங்க வென்றான் செயிர்த்து....1357

தேரோட்டி வந்தான் திசைமுழுதும் வென்றமரர்
போரோட்டி வந்த புகழுடையான் - காரோட்டும்
எல்லுருவம் வாய்நமது ஈசனினை யோன்எனுமவ்
வில்லிருவர் தம்மேல் வெகுண்டு....1358

கார்பூத்த மேனிக் கருணா லையன்ககனம்
பார்பூத்த உந்திப் பரந்தாமன் - ஏர்பூத்த
பாதம் பணிந்து பகர்ந்தான் பசியுறக்க
வாதனையில் லாதன் மதித்து....1359

வில்லொன்று கார்மேக மேனியாய் வேட்டிடுமென்
சொல்லொன்று கேட்டி சுராந்தகனை - மல்லொன்றும்
வாளியால் அந்தகனும் வாய்சுவைக்க வன்தலையைத்
தூளியாச் செய்வல் துணித்து....1360

இறைப்பொழுது நிற்றி இவன்தலையை மண்மேற்
குறைத்திடுவன் அல்லேற் கூசான் - குறிப்புணரான்
வேட்டகத்து நாளும் விருந்துண்டான் அவனென்றான்
தோட்டிணர்ப்பூந் தாரான் தொழுது....1361

ஐய நினதுவலி ஆயுங்கால் அம்புவியிற்
தெய்வ வலியுடையார் தேந்துண்டோ - எய்தினவன்
புன்தலையை வீழ்த்திப் பொறையுயிர்ப் பப்பூத்தேவி
வென்றியென்றான் கோசலையார் வேந்து....1362

மூவுலகும் போற்றும் முழுமுதல்வ னாம்முகுந்தன்
சேவடியைச் சென்னி மிசைசேர்த்தினான் - தாவில்
செழுங் கனகமேனித் திறலாளன் செவ்வே
எழுந்தான் அரிஏறு என....1363

விற்கொண்டு வஞ்ச வினைகொண்டு வெஞ்சினமாஞ்
சொற்கொண்டு சூழுந் தொகையாரை - மற்கொண்ட
கூற்றவனூர் செல்லக் கொடும்பகழி யேவினான்
ஏற்றுடையான் என்ன எதிர்ந்து....1364

மேகம்போல் நின்றரகு வீரனுமெம் மாருதிதன்
மாகத்தேர் வாகு மலையேறி - வேகச்
சுடுசரத்தால் நுண்பொடியாய் தூவினான் சேனை
படுகளத்தே மாண்டு பட....1365

தன்படையுந் தேருஞ் சமர்முனைவாய்த் தானழிய
வெம்பி யுளந்தீ விழிபொழியத் - தம்பமென
நின்றான் திகைத்து நெடுந்தேருந் தானுமாய்
வென்றான் சுரரை வெகுண்டு....1366

முன்னின்றீர் என்னேர் முனைதிரோ மொய்யமர்வாய்
வென்னின்று காட்டி விளித்திரோ - இன்னின்ற
மன்சேனை மாள மடிதிரோ மாற்றமிதில்
என்கோடிர் என்றான் எதிர்ந்து....1367

விற்குரியேம் மாய வினைக்குரியேம் வேறுள்ள
மற்குரியே மற்றும் வகைகொண்ட - நிற்குரிய
போர்க்குரியே மென்று பொருகநீ என்றுரைத்தான்
கார்க்குதவு கையான் கனன்று....1368

தேற்றஞ்சால் உங்கள் செழுங்குருதிச் செம்புனலின்
ஏற்றஞ்சால் என்கை இரண்டினால் - மாற்றஞ்சால்
எம்பியரை யாதி இறந்தோர்க் இருங்கடன்மை
முன்புரிவல் என்றான் முனிந்து....1369

காடரக்கர்க் கெல்லாக் கடன்முறையுஞ் செய்வதற்கு
வீடணனிங் குள்ளான் வினையுந்தை - நீடு
மனக்கினிய தன்மை மறந்துரிய பத்தி
உனக்கியற்றும் என்றான் உருத்து....1370

அவ்வழியில் வெய்யோன் அழன்றமரர் அஞ்சிடவே
வெவ்வனல்தேர் வாளி விரைந்தேவிக் - கவ்வையறு
மாருதியை யாதிநெடு வானரர்கள் ஆகமெலாஞ்
சோரிவரக் கண்டான் றுளைத்து....1371

ஐயன்மேல் மற்றை அடலிளையோன் மேலமரர்
உய்திறமின் என்ன உலையவே - தெய்வச்
சிலைகோலி எய்தான் திசைமுழுதும் வென்றான்
மலைகோலும் வாளி மழை....1372

நன்றூக்க மென்ன நகுமிளையோன் நாரமிலான்
சென்றூக்க முற்ற செழுந்தேரி - நின்நூக்கு
மாமடங்கல் ஆயிரமும் மாமறலி வாய்ப்படுத்தான்
தூமடங்கல் வாளி தொடுத்து....1373

வண்ணத் தேரார்ந்த மடங்கலோ ஆயிரமும்
திண்ணப்பார் சேரத் திறலுடையான் - எண்ணி
இளையான்மேல் அங்கதன்மேல் எண்ணில் கணைஏவி
வளையூதி நின்றான் மகிழ்ந்து....1374

சிங்கஏ றென்னத் திகழியையோன் ஈரைந்து
புங்கமதால் ஒண்கவசம் போக்குதலும் - இங்கினிநம்
ஆற்றலெவன் என்ன அடைந்தானவ் அம்பரத்தே
தோற்றமற வெய்யோன் துனைந்து....1375

விண்ணொளியும் வெய்யோனம் வெள்ளப் பெரும்படையை
மண்ணொழியச் செய்வதன்முன் வள்ளலே - எண்ணரிய
ஆசைமுகன் வாளி அவன்மேற் தொடுப்பனென்றான்
மாசில் இலக்கு மணன்....1376

மாயவனார் வாளி வலியோய் எடுத்தெய்தான்
மூவுலகும் ஆளும் முறையிதெனத் - தாவின்
மதுமலர்த்தார்க் கஞ்ச மலர்க்கண்ணான் கூற
அதுதவிர்த்து நின்றான் அறிந்து....1377

அப்பொழுது வெய்யோன் அறிந்தான் அவர்மனத்தை
இப்பொழுதே செல்வன் எனவெழுந்தான் - செப்பும்
வலங்குறைந்து மீட்டினிஎன் மாய வினைஎன்ன
இலங்கைநகர் உற்றான் இனைந்து....1378

வீடணனை நோக்கி விமலன் விறலுடையோய்
நீடமர்செய் ஒல்லை நெடுஞ்சேனை - வாடியது
சென்றுணவு வல்லை தெரிந்துதவு கென்னவன்
நன்றெனவே சென்றான் நடந்து....1379

தம்பிமுகம் நோக்கித் தகையோய் தகும்படைகட்கு
உம்பருறு பூசை உஞற்றியே - இம்பருறுங்
காலளவுங் காத்தி கடற்சேனை என்றுரைத்தான்
மூலமுறு மூவா முதல்....1380

இலங்கை சென்ற தீயோன் இருந்தாதை யோடுங்
கலந்துரிய மாற்றங் கழறி - வலங்கொளடல்
மோதரனைச் சேனையொடு மொய்யமர்செய் கென்றேவிச்
சூதொன்றி நின்றான் துணிந்து....1381

வானைத் தொடுமிரதம் வாம்பரிசூல் மாமழைநேர்
ஆனைக் குழாமிவைகள் ஆர்த்தெழவே - தேனிற்
சிறந்ததார்க் காளை செருவியற்ற வல்லான்
அறிந்தொருதேர் மேற்கொண்டான் ஆங்கு....1382

மோதரன் வெஞ்சேனை முடுகி நெடுங்களத்து
மோதியெதிர் பொரவு முட்டியால் - ஓதரிய
வானரங்கள் காண மலைந்தனவே வானவருந்
தானவருங் காணத் தகைத்து....1383

வாளினால் வேலின் வலத்தால் மழுப்படையால்
வாளியால் தீயோர் மலையவே - மூளும்வலக்
கையால் நகத்தாற் கழலாற் கருமலையால்
மெய்யாற் பொருதார் வெகுண்டு....1384

வஞ்சமும் மாய வழியும் வழியறியா
நெஞ்சகமுங் கொண்டோர் நெடுந்தேவர் - தஞ்சமுறும்
வானுருவங் கொள்ளும் வகைபுரிந்த வல்இளையோன்
தானமுற ஏவுஞ் சரம்....1385

அந்தகன்தன் வெம்படையை ஆரியனும் ஆய்தெடுத்து
மந்திரமுங் கொண்டு வகுத்தேவ - வந்தவந்த
வல்லரக்கர் எல்லாம் மடிந்தாரவ் வானுலகம்
ஒல்லையிடை உற்றார் உலைந்து....1386

குடச்செவியன் இட்டதுவெங் குன்றனையது உம்பர்
படப்பொருத அந்தகனும் பார்த்த - அடற்கைவலத்
தண்டொன் றெடுத்தான் தகைந்தான் அரக்கரையே
மண்டமரிற் காற்றின் மகன்....1387

தேரென்கோ வெய்யோர் திரளென்கோ செம்முகத்த
காரென்கோ வாசிக் கலியென்கோ - வீரமுறும்
விண்டினாற் பெற்ற வியன்தோள் அனுமான்கைத்
தண்டினாற் பட்டதுவே தான்....1388.

அங்கதன்பின் நீலன் அடற்சாம்பன் ஆதியர்கள்
பொங்கு நெடுஞ்செருவுட் போயினார் - தங்களிடை
இன்ன திசைவாய் இகல்புரிந்தோம் என்றுணரார்
பன்னுதிசை நாலும் படர்ந்து....1389

வில்வலியு மாய வினைவலியும் வேறுள்ள
மல்வலியும் மாயவடு மாருதியாற் - தொல்வலிமைக்
கூற்றுவற்கு நல்விருந்தாய்க் கூட்டினான் கோகனகன்
ஆற்றலுற முன்னே அறிந்து....1390

செற்றமிலா வானரமன் சேனா பதிமுதலாம்
மற்றவர்கள் உற்ற வழியறியான் - குற்றமிலான்
விண்ணாணி ஓதை வினையறியான் வெங்குருதி
முன்னோடக் கண்டான் முனைந்து....1391

அம்பரமும் எண்திசையும் ஆனை பரியிவற்றின்
கொம்புதலை கால்வால் குறைத்துடன் - கொண்டும்பரிடை
அண்ணல் இளையோன் அடல்வாளி ஏகுவது
கண்ணெதிரே கண்டான் களித்து....1392

கந்துகத்தேர் எல்லாங் கனலாய்க் கழைவனத்தில்
வெந்தெரிவ கண்டான் விசிகத்தால் - முந்திளையோன்
சிஞ்சினியின்ஆர்ப்ப பொலியுந் தேர்ந்தான் திசையடங்க
மஞ்செனவே பார்த்தான் மகிழ்ந்து....1393

ஆர்ப்பனுமன் ஆர்ப்பென்று அகமகிழும் ஐயன்முனம்
போர்த்தொழிலின் மிக்கான் புகுந்திறைஞ்சத் - தார்புயனும்
ஐய அரிகுலமன் ஆதியர்கள் எங்ஙனென
மெய்யுணர்வான் சொற்றான் விரித்து....1394

சென்றார்கள் சென்ற திசையில் நடந்ததினி
ஒன்றேனு நன்குணரேன் உற்றதெலா - நன்றேயவ்
வீரர்நினைச் சேரும் விதம்புரிய வேண்டுமென
மாருதியுஞ் சொற்றான் வடித்து....1395

நல்லதுசொற்றாய் எனவே நாயகனும் நஞ்சமுண்டோன்
வெல்லவல்ல வாளி விடுத்தலுமே - ஒல்லையிடைப்
புக்கெரியிற் பொங்கிப் பொருவரிய வெய்யவரை
அக்கணமே மாய்த்த அவண்....1396

உற்றசெயல் ஒற்றர் உரைத்திட மையூரியென
இற்றிதுவே காலம் எனஎழுந்தான் - கொற்ற
முளையிட்டு வானோர் முகநாண வன்கால்
தளையிட்டான் இந்திரனைத் தான்....1397

மன்மகத்துக் கேயுரிய மற்றெவையுங் கொண்டொருநற்
தொன்மரத்தை உற்றான் சுயமரபின் - நன்மறையோர்
அம்பில் சமிதை அமைந்தார் அனல்வளர்த்தார்
தும்பைமல ரிட்டுச் சொரிந்து....1398

கோடசனம் காளமுறுங் கோள்ஆட்டு இருங்குருதி
நீடுதசை பெய்து நிறைவித்தார் - மூடுறுகார்
எட்சொரிந்தார் நன்னிமித்தம் ஏய்ந்தனகண்டு இன்பமுற்றான்
விட்புகுந்தான் வெய்யோன் விரைந்து....1399

விண்மறைந்த மோதரனும் வெள்ளானை மேற்கொண்டு
வண்மைதரு இந்திரன்போல் மாணுருக்கொண்டு - எண்மைதரு
முந்தரக்கர் யாரு முனையமர் ஆகிவர
வந்தனன்வெம் போர்க்கு வளைந்து....1400

இந்திரனம் பாற்பொருதற் கென்னிபமோ வென்றனுமான்
சந்தமுக நோக்கியிது சாற்றுங்கால் - அந்தரஞ்சால்
அந்தகனும் விட்டான் அயன்படையை ஆரியற்கு
முந்திளையோன் தன்மேல் முனிந்து....1401

எண்ணிலா வாளி இடைவிடா தெய்தனன்பின்
அண்ணல் அயர்ந்தான் அனுமானோ - கண்ணிரண்டும்
வெம்பொறிகள் கால விதிர்ந்தான் ஒருகோடி
அம்புருவ மேனி அயர்ந்து....1402

செஞ்சுடரோன் காரி திருமலரோன் நல்வருணன்
மஞ்சுறுதீ விச்சுவகன் மாநிதியோன் - தஞ்சமுறும்
அங்கிசமாய் வந்தோர் அயர்ந்தார் அடல்வாளி
பொங்குபல கோடி புக....1403

மற்றவர்தம் தன்மை வழங்குவதென் வல்லம்பால்
உற்றநிலஞ் சார்ந்தார் உயிருலைந்தார் - சுற்றெவணும்
வெங்குருதி யாக விளைந்ததுவே விண்ணவரும்
அங்கிருந்து சோர்ந்தார் அகம்....1404

வெற்றியென வெய்யோன் விரைந்துநகர் போய்ப்புகுந்தான்
உற்றசெயல் தாதைக் குரைசெய்தான் - கொற்றமுறும்
போர்ச்சிரமும் நீக்குதற்குப் போயினான் தன்னகத்தே
கார்க்களிறு போல்வான் களித்து....1405

தன்பிறவிக் கேற்ற விதிமுறைமை தப்பாது
கொன்படையின் பூசை குறித்தெழுந்தான் - முன்பரவை
மன்னுறக்க நீத்தோர் மனிதவுரு வாகிவந்த
பொன்னுருக்கொள் மேனிப் புயல்....1406

முட்டிட்டுக் காணரிய மூடிருள்வாய் மொய்யனலின்
விட்டிட்டு மின்னும் மிளிர்படைகை - தொட்டிட்டு
வந்தான் நடந்து வலியார் அம்ர்க்களத்தே
சிந்தாகுல முற்றான் தேர்ந்து....1407

அயன்சபிப்ப மாண்ட அகிலம்போல் தோன்றுஞ்
சயன்பரப்பை நோக்கிச் சலித்தான் - நயன்பரப்பும்
உள்ளத்தே கொண்டான் உறுதுயரம் ஓங்கிளநீர்
வெள்ளத்தார் கோசலையார் வேந்து....1408

புவிவேந்தன் ஆகிப் பொறையொழிப்பான் வந்தான்
கவிவேந்தை நோக்கிக் கலுழ்ந்தான் - சவியேந்து
மாருதியை நோக்கி வடித்தான் பெருங்கண்ணீர்
பேருதவி எண்ணிப் பெரிது....1409

மற்றவரை நோக்கி மயர்ந்தான் வளர்கருணை
உற்றதொரு மேக உருவுடையான் - செற்றமொடும்
வெம்பும் அராப்பிணித்த மேருமலை யிற்கிடந்த
தம்பிதனைக் கண்டான் தளர்ந்து....1410

உன்னினான் மாயம் உணர்ந்திலான் உள்ளந்தீ
மன்னினான் என்ன மயங்கினான் - தென்னவென
வண்டார்க்குஞ் சோலை வளநாடன் தம்பிதனைக்
கண்டார்க்கும் உள்ளம் கசிந்து....1411

இணையொருவர் இல்லா இறையோனும் ஆங்குத்
துணையொருவர் இன்றித் துயரத் - திணைமருவும்
புல்லுந் தருவும் புலியாதி வல்விலங்கும்
கல்லும் மயங்கினவே கண்டு....1412

படைக்கலத்துக் கேற்ற பலியமைப்ப ஏகித்
துடைத்தனனென் வாழ்வைத் துயர்தீர் - படைத்துணையைப்
போக்கினேன் என்று பொருமினான் பூவயனோடு
ஆக்கினான் எவ்வுலகும் ஆங்கு....1413

மின்னுருவாய் வந்த விளரிமொழிச் சீதையுமப்
பொன்னுருவாய் வந்தவெழிற் புல்வாயு - பின்னுருவாய்
பின்கடுவா யானகொடும் பெற்றியினால் அன்றோவிப்
புன்கொடுமை என்றான் புலர்ந்து....1414

அறமும் பொருளும் அறிவும் அதற்கான
திறமும்நீ என்னத் தெரிந்தே - விறலுடையேன்
என்னயான் வாழ்ந்தேன் இனிவாழேன் என்னுயிரே
மன்னிளையா என்றான் மயர்ந்து....1415

என்னுயிரும் நின்னுயிரும் ஒன்றே என்னிலிளையோய்
உன்னுடனே வாரா தொழிவனே - கன்னுருவ
வன்னெஞ்ச முற்றேன் வலியனேன் வாழுவனோ
இன்னம் பலநாள் இருந்து....1416

நாடும் பொருளும் நவநிதியும் நல்லுயிரும்
ஈடும் எடுப்பும் இருஞ்சுகமும் - தேடு
மருந்தனைய வள்ளல் மகிழ்ந்துநீ என்ன
இருந்தேனுக்கு உண்டோ இடர்....1417

என்றுபல காலெடுத் துரைக்கும் எம்முறுந்தன்
இன்றுணைக்கை தன்னால் எடுத்தனைக்குங் - குன்றிற்
பெருத்ததோள் நோக்கும் பிறந்திடுவன் என்று
அருத்தியுற மேன்மேல் அயந்து....1418

மன்னுந் துணைக்கை மலரினான் மார்போடு
இன்னுயிரை ஒத்த இளையோனைப் - பின்னியே
உள்ளம் மயங்கினான் ஓய்ந்தான் உறங்கினான்
கள்ளநெடு மாயைக் கடல்....1419

அண்ணல் அயர்ந்தான் அனந்தலுறும் அவ்வளவில்
விண்ணவர்கள் நோக்கி வினையில்லாய் - எண்ணரிய
மாயையிது செய்து மயக்குதியேல் மற்றடியேம்
ஏமஉறலெவ் வாறு இனி....1420

படைப்பாய் படைத்துப் பயன்பெறு மாறெண்ணித்
துடைப்பாய் இதுவே தொழிலாய் - கடப்பாடு
நிற்குரிய தொன்றுண்டோ நீள்மறையின் வேர்முளைத்த
வற்புதனே மாயையிதுவாம்....1421

மாயைக்கு மாயைசெய வல்லாயுன் மாயைதனை
ஆயப் புகுங்கால் அயலொருவர் - வாயாற்
சொலத் தகுவதாமோ சொலத்தகா வேத
நலத்துறையு நாதா நனி...1422

அல்லல் புரியும் அரக்கர் தமைவீட்டி
ஒல்லை அருள்வானிங் குற்றாய்நீ - தொல்லை
மகமாயை காட்டி மயக்குதியேல் யாமெச்
சுகமார வல்லேந் துணிந்து....1423

எண்ணும்பொருளும் எழுத்தும் எழுத்தறிய
நண்ணும் பொருளும் நனியானாய் - கண்ணிற்
சிறந்த பொருளான திருமால்நீ அன்றோ
இறந்தனைபோல் உற்றாய் இவண்....1424

என்றமரர் ஏத்தி இருந்தார் இருந்தூதர்
அன்றரக்கன் தன்மாடு அணுகினார் - நின்றரச
தம்பியொடுஞ் சாய்ந்து தவறினான் தாமரைக்கண்
அன்பனெனச் சொற்றார் அறிந்து....1425

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.17. களங்காண் படலம்

மையாடும் வேலரக்கர் மாற்றங் கேட்டின்னகர
நெய்யாடுக என்ன நிகழ்த்தினான் - பொய்யாத
மானமீ தேற்றி மலர்க்கொடியை மானிடரைத்
தானுணர்த்துக என்றான் தகைந்து....1426

மருத்தனைமுன் கூலி வலியோய் அரக்கர்
பெருத்த உடலனைத்தும் பேணி - கருத்த
கடலிடுதி என்னக் கணித்தவன்அவ் வாறே
திடரடைய விட்டான் தெரிந்து. ...1427

பொன்மானம் ஏற்றிப் புரையறுசீர்க் கற்பமைந்த
நன்மானைச் சூழ்ந்து நவையரக்கர் - வனமானார்
போர்க்களத்தில் உய்த்தார் புலிக்குழாம் சூழ்ந்தெனவே
கார்க்கடலின் மன்னோ கனைத்து....1428

கண்டாள் கணவன் கனகத் திருமேனி
கொண்டாள் துணுக்கங் குயிலெனவே - உண்டாய
துன்பமெலாஞ் சொல்லித் துயர்ந்தாள் துலங்குமெழில்
அன்புருவம் கொண்டாள் அயர்ந்து....1429

கல்லும் இரங்கக் கனியாத கானகத்தே
புல்லும் இரங்கப் பொருகரிய - வல்லிரங்க
வானிரங்க மண்ணிரங்க வல்விலங்கும் வாயிரங்கத்
தானிரங்கல் உற்றாள் தளர்ந்து....1430

பொன்னழுதாள் வண்ணப் புவியழுதாள் போற்றிமைய
மின்னழுதாள் கன்ம வினைஒழுக்கில் - இன்னலுறும்
பாவியருந் தாம்அழுதார் பண்புடைய செங்கமலப்
பூவை இரங்கும் பொழுது....1431

உயிர்த்தாள் உலைந்தாள் உளைந்தாள் குழைந்தாள்
வெயர்த்தாள் அயிர்த்தாள் வெறுத்தாள் - பெயர்ப்பரிய
உட்டெருமந் தளமந்து உம்பரயர்ந்து ஏங்கமணிக்
கட்டவிழுங் கோதைக் கனி....1432

ஆவியே பொன்னே அருங்கலமே ஆரமுதத்
தேவியே சேருந் திருமார்பா - பாவியே
இத்தனைநாள் ஆவி இறவா திருந்தபலன்
இத்தகையோ காண்பால் இனைந்து....1433

அறமே அருளே அகமே அகத்தின்
திறமே வலியே செருவில் - மறமேவு
பாவியரோ வென்றாற் பகருங்காற் பாருலகிற்
பாவமோ வெல்லும் பரிசு....1434

எத்தலையும் இன்பம் இலாதவெனைக் கைப்பிடித்த
அத்தலையே விண்ணோர்க்கு அரும்பொருளே - சுத்த
நிராமயமே ஓர்சுகமு நீயடையக் காணேன்
தராதலத்தில் என்பாள் தளர்ந்து....1435

புறங்காத்து நின்றஎழிற் போரேறே போரின்
மறங்காத்து வள்ளலையுங் காத்தென் - திறங்காப்பான்
நின்ற கொழுந்தா நினைச்சமரில் என்விதியே
கொன்றதென்பாள் கொம்பிற் குழைந்து....1436

குன்றனைய தோளுங் குறுநகையுங் கோலமுற
அன்றலர்ந்த தாமரைநேர் அம்பகமும் - மன்றலுறு
மாணடியும் மார்பும் மதிமுகமும் வஞ்சமுளேன்
காணுநாள் உண்டோ களித்து....1437

என்றரிவை மாழ்குதல்கண்டு ஏர்பெருகு மூன்றுசடைக்
குன்றமுலை நோக்கிக் கொடியனையாய் - அன்றரும்பொன்
மான்விடுத்த மாயமிந்த மாயைகாண் என்றுரைத்தாள்
தேனளித்த சொல்லாற் தெரிந்து....1438

வலனழிய வாவி மடிந்தவரை மாழங்கு
கலனழிந்த கன்னியரைக் கண்டாய் - இலகுகொடி
வாங்குமிடைக் கோங்குமுலை மங்காயிவ் வான்மானம்
தாங்கிடா தம்மா தகைந்து....1439

அன்றியும்நின் அன்பர்க்கு அடுபடையால் ஓர்வடுவுந்
துன்றியதின்று ஆதல்இனிச் சூழ்ந்தயரேல் - என்றுரைப்ப
நின்னுரையே நாளு நினைந்துறுதி கொண்டனன்
அன்னமுரை செய்திருந்தாள் ஆங்கு....1440

மானமீ தேற்றி மடமங்கையர் கள்தற்சூழ
பான்மொழியைக் கொண்டு படர்தந்தார் - நூனத்து
உணவுதவ உற்றானும் ஒல்லை இடையுற்றான்
கணநரிபேய் சூழுங் கணம்....1441

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.18 மருந்துப் படலம்

கண்டான் விழியாற் கடும்போர்க் களமதனை
உண்டாயது எல்லாம் உணர்வுற்றான் - தண்டாத
காதல் உடன்துயிலுங் கண்ணனையுங் கண்ணுற்றான்
மாதுயரங் கொண்டான் மருண்டு....1442

அயன்படையால் உற்ற அமைஎனவுங் கண்டான்
இயம்பிளையோ னுக்காய் இறைவன் - மயர்ந்ததென
அத்தகையுந் தேர்ந்தான் அயலியற்றல் யாதென்று
சித்தமிசைக் கொண்டான் தெளிவு....1443

நற்கலையின் உட்பொருள்தேர் நாவலரால் நல்லறிவாற்
சிற்பமுறு தத்துவங்கள் சேரிடமும் - உற்பவமும்
எல்லாம் உணர்ந்தனர்கள் என்னினும்அன் பென்பதனை
வல்லார் அறிதல் வலிது....1444

உற்றுழியின் நன்மை உதவற் குரியதுணைக்
கொற்றவரை நாடிக் குறித்தெழுந்தான் - செற்றமொடுங்
கைமுறுக்கித் தோன்றுநெடுங் கான்மகனைக் கண்ணுற்றான்
மைமுறுக்கு மேனியான் வந்து....1445

வம்புலாம் மேனி மழைமேல் அழுந்தியகூர்
அம்பெலாம் மாற்றி அடற்கரத்தாற் - பைம்புயலின்
நீரான் முகந்தெளிப்ப நெஞ்சுருகிக் கண்மலர்ந்தான்
வீராதி வீரன் விரைந்து....1446

உரோமஞ் சிலிர்ப்ப உடல்புகள மேறக்
கராமடியச் செற்ற கருணைப் - புராதனனை
மெய்யுணர்வை வாழ்த்தி எழுந்தான் வினைதீர்ப்பான்
ஐயன் அனுமான் அறிந்து....1447

வீடணனும் ஆர்வமுற மெய்யிறுகத் தான்றழுவிக்
கேடினியென் என்று கிளத்திடலும் - நாடிநமை
ஆளுடையான் தன்மை அறைதியென ஆங்கவனுங்
கோளிலனீங் என்றான் குறித்து....1448

மற்றினியென் சாம்பன் வலனழியான் ஆங்கவனை
உற்றுணர்து நல்வினையும் ஓர்ந்தென்ன - மற்றவனை
உற்றார் விதியின் உறும்சுவட்டைத் தானறிந்தான்
கற்றான் கலையனைத்துங் கண்டு....1449

ஐயனோ ஆளும் அனுமனோ ஆர்வமிலா
வெய்யனோ மேதக்க விண்ணவரோ - ஐயமற
ஆளுவான் வந்த அமைவுடையார் யாரென்று
சூளுவான் நெஞ்சிற் துணிந்து....1450

வந்தவரை நோக்கி மதியீர்நீர் யாவரென
உய்ந்தனம்யாம் என்றான் உரையொலிகேட்டு - அந்தமிலான்
பக்கநின்றார் யாவரெனப் பார்தனும னாம்அடியேன்
புக்குநின்றேன் என்றான் புகழ்ந்து....1451

மற்றுமொரு தீங்கு வருமோநம் மாருதியார்
உற்ற பொழுதில் உயிர்முதல்வன் - பெற்றிமையாது
என்றானுக் கைய விளையோற்காய் இன்னலுற்று
பொன்றினான் போன்றான் புலர்ந்து....1452

என்ற பொழுதைய இனித்தாழாது என்னுரையை
இன்றுநீ மேற்கொண்டு இமைப்பதன்முன் - சென்று
மருந்தளித்தாய் என்னிலினி வாழ்வித்தாய் அன்றோ
திருந்துல கேழினையும் சேர்ந்து....1453

இக்கடல்பின் னாக இமைய வரைதாண்டித்
தக்கதொரு பொற்கூடஞ் சார்ந்துறுதி - அக்கணகன்று
எண்ணிடதங் காண்டி இதுகடந்தால் ஈகையெனும்
வண்ணமலை காண்டி மகிழ்ந்து....1454

பொன்மலையாம் அந்தப் பொறைநோக்கி ஆங்ககன்று
நன்மலையா நீலமலை நன்கடைந்து - தன்மநெறி
வானவரு நன்னெறிசால் மாதவரும் மாதவஞ்செய்
மானவழி காண்பாய் மகிழ்ந்து....1455

நீலார்ந்த அம்மலையை நின்றகன்றால் யோசனையோர்
நாலா யிரத்து நனிவைகும் - மாலார்ந்த
மெய்மருந்து காண்பாய் விடிவதற்குங் காண்கிற்பாய்
உய்மருந்தே ஒப்பாய் உவந்து....1456

வீயினும் ஆவி தருமருந்தும் மேனிவெவ்வேறு
ஆயினுமுண் டாக்கும் அருமருந்தும் - போயஉருப்
பின்னுதவு நன்மருந்தும் பெய்தபடையைக் கிளப்புந்
தொன்மருந்துமுண்டு அவணிற் சூழ்ந்து....1457

இத்தகைமை வாய்ந்த எழில்மருந் தைக்காவல்
மெய்த்தகைய ஆழி விரைந்துனது - சித்தம்
அறிந்தகலும் ஐயவினி ஆண்டெழுக என்றான்
செறிந்ததோட் சாம்பன் தெளிந்து....1458

வாமனனாய் நின்ற நெடுமாலோ எனவமரர்
ஏமுறவே கொண்டான் எழிலுருவங் - காமர்
முடியுருவம் ஆன முகடுரிஞ்ச நின்றான்
படியுருவங் காலாய்ப் பரிந்து....1459

செம்பொற் சிறகரொடுந் தெய்வத் திருக்கடல்
உம்பர்ப் பறந்தான் எனவுரவோன் - இம்பரிடை
வால்விசைத்துக் கையிரண்டும் மற்றிரண்டு நீட்டியவன்
மேல்விசைத்தான் அம்மா விரைந்து....1460

காலென்பார் செல்லுங் கடலென்பார் காணரிய
மாலென்பார் கால வகையென்பார் - ஆலநுகர்
ஐயன் இவனென்பார் அலனேல் அடலாழிக்
கையனிவன் என்பார் களித்து....1461

இவ்வாறு எதிர்ந்த உலகெங்கணுமே போற்றிசெய
மெய்வாகை உற்ற விறலுடையோன் - துவ்வார்ந்த
நல்லிமைய முற்றான் நனிவான கமுறைவோர்
சொல்லிடவே ஆசி துதித்து....1462

வம்புலவுங் கூந்தல் மலைமா துடன்கயிலை
அம்பொற் கிரிவாழ் அரும்பொருளை - உம்பர்புகழ்
முக்கட் பரம முதலோனைக் கைதொழுது
புக்கனனவ் வீரப் புலி....1463

மாதுமைக்குக் காட்டி மழுவாளன் வண்ணநுதால்
போதமுறு மின்னோன் புகழ்வாயுக்கு - ஏதமிலென்
அங்கிசமாய் வந்தோன் அனுமான்காண் என்றுரைத்தான்
புங்கமுற எல்லாம் புகன்று....1464

பொற்கூடந் தாண்டிப் புகழ்நிடத வெற்பொருவி
விற்கூட மாகுமக மேருவினை - எற்கூடும்
ஆற்றல் உறுந்தோள் அனுமான் அடைந்தனனாற்
காற்றெனவே மன்னோ கடிது....1465

பூவலங்கள் ஏந்தும் புராதனனாம் வெங்கதிரோன்
மீவலங்கொண் மேருவெனும் வெற்பிடையில் - பாவலஞ்சான்
நன்னா வலங்கடவுள் நன்மரமு நன்கறிந்தான்
மன்னா வலமுடையான் வந்து....1466

அக்கடவுண் மாமலைமேல் ஆர்ந்தமலர்ப் பீடமிசைப்
பொற்கனக மேனி பொலியவே - நற்கமல
மான்முகங்கள் நான்கும் வயங்குறவே வைகியவப்
பான்முகனைக் கண்டான் பரிந்து....1467

பகர்ந்த மலைவடகீழ்ப் பாகத்தில் ஓங்கிச்
சுகந்த மலர்வானோர் சொரியத் - துகந்தமெலாம்
சேயொளிகள் ஆரத் திகழைமுகத் தெண்தோள்
தூயவனைக் கண்டான் தொழுது....1468

பூமகளும் மாமகளும் பொற்பால் அருகிருப்பத்
தாம நறுந்துளவத் தார்துலங்க - ஏமமுயர்
முத்தே வருக்குள் முதலையுங்கண்டு இன்பமுற்றான்
சுந்தாத்துமா ஆவான் தொழுது....1469

மங்கலங்கள் ஆர்ப்ப மணிமுறுவல் வான்மாதர்
திங்கள் நிறக்கவரி சேர்ந்திரட்டப் - புங்கவர்கள்
பொற்றிடவே வாழும் புனிதனையுங்கண் டின்பமுற்றான்
காற்றின்மகன் வாழ்த்திக் கடிது....1470

எண்டிசைக்கா வல்லோர் இருக்கையூணங்கண் டின்பமுற்றான்
மண்டரியே றன்ன வலியுடையான - அண்டர்புகழ்
நற்போக பூமியிடை நண்ணினான் நங்கையர்கள்
பொற்போக மில்லான் பொலித்து....1471

எற்றோ இரவி எழுந்தினி என்வேகம்
முற்றா தெனவே முசிகுவான் - கற்றாய்ந்த
நல்லுணர்வான் மேரு மயக்கமென நன்குணர்ந்தான்
எல்லொளிர்தல் கண்டே இனிது....1472

வேண்டிய நாடித்தமது மெய்யுணரு நற்றவர்வாழ்
பாண்டிய நாடொக்கும் பதிகடந்து - மாண்டகுசீர்
நன்னாடு பின்னாக நண்ணினான் நாகர்புகழ்
மன்னாடு நீல மலை....1473

அம்மலையை நீங்கி அடைந்தான் அருமருந்தார்
செம்மலையை அம்மலைவாழ் தெய்வங்கள் - விம்மலுற
யாவனீ என்ன அறைந்தான் அறிவுறுத்திப்
பாவலனாங் குற்ற பரிசு....1474

எண்ணிய எண்ணம் முடித்தவன்எம் பாற்பரிவிற்
புண்ணியநீ காட்டுகெனப் போயினபின் - வண்ணமுறு
மாலாழி தோன்றி மறைந்ததுமெய் மாருதியும்
மாலாழி உற்றான் மகிழ்ந்து....1475

மீட்டியென் கன்னல் வெறிதாகும் என்றனுமன்
தோட்டனன் கையால்வான் தொடுமலையை - நாட்டமுடன்
ஏந்தி ஒருகையால் இமையார் எடுத்தேத்தப்
போந்தனனவ் வானப் புலம்....1476

உய்வண்ணம் எங்கள் உரவோன் அவணணையப்
பொய்வண்ண மில்லாப் புலமையோர் - மைவண்ணக்
கோமான் அடிவருடக் கோகனகக் கண்திறந்தான்
பூமான் எனையாள் புயல்....1477

வீடணனை நோக்கி வினையிலாய் ஏவியது
நாடினையோ என்ன நவின்றமலன் - நீடுபுகழ்ச்
சிந்துரநேர் சாம்பன் முகநோக்கிச் செப்பினான்
உய்ந்தனையோ வென்றான் உவந்து....1478

எண்கரச நோக்கி எனையாளும் எம்பெருமான்
எண்பதுமத் தான்படைதான் என்செய்யும் - பண்புடைய
மூவர்நீ வேத முதல்வன்நீ முற்றுநீ
யாவர்நிலை தேர்வார் அறிந்து....1479

ஐயனே நின்பெருமை நீயே அறிகிலாய்
பொய்யுளான் ஏவப் புகுபடையுன் - தெய்வத்
திருமேனி தீண்டிற்றோ என்பதுவுந் தேர்தி
தருமம்நீ ஏன்இதற்கோர் சான்று....1480

அன்றியும்நம் மாருதியீண்டு ஆவியுளான் ஆவியறப்
பொன்றினர்க்காய் நன்மருந்திற் போயினான் - சென்று
வருங்காலம் ஆனதினி வருந்தேல் மும்மை
தருங்கால மில்லாய் தளர்ந்து....1481

ஒங்கி உலகளந்த உத்தமனால் நான்முகனாற்
பாங்கு பெறுமுக்கட் பரமனால் - ஏங்குங்
கரியளித்த நேமியாய் காணலாம் அன்றி
அரிதுமற்றோர் காண அது....1482

கடல்கடைந்த நாளுதித்த கார்மேக வண்ண
அடல்கடந்த நேமி அளிப்ப - மடலவிழ்ந்த
வாவியிள வாரிசத்தோன் மாண்டாலும் மாதவனே
ஆவிதருங் கண்டாய் அது....1483

அம்மருந்தை இம்மெனுமுன் னாவனுமன் கொண்டடையும்
விம்மலொழி கென்று விளம்புங்கால் - பொம்மலுற
உத்தரவாய் நின்றோர் ஒலிஎழுந்த ஓதநீர்
தத்துறமேன் மேலுந் தழைந்து....1484

விண்கிழிய வந்த வினைகிழிய வேறுள்ள
மண்கிழிய வெய்யோர் மனங்கிழிய - எண்கருதும்
ஆதரத்தார் உண்மை அறிதருவான் ஆர்த்தனன்எண்
பூதரமு நேராப் புயன்....1485

மற்குன்றத் தோளான் மகவான் மழைதடுக்கப்
பொற்குன்றம் ஏந்தும் பொருளேபோல் - எற்குன்றம்
மானுவான் வந்தான் மகிதலத்து வான்பொருந்த
மீனுலா மாமருந்தின் வெற்பு....1486

தேடற் கரிய திருமருந்தின் செவ்விபெறும்
வாடை உறலால் வரன்படையின் - பீடழிந்து
மெய்கழல் வீரர் விறலோ டெழுந்துமொய்த்தார்
பொய்கலந்தோர் ஏங்கப் புலர்ந்து....1487

இளையான் எழுந்து பணிவானை இன்பம்
அளையார் மார்பின் அணையா - விளையாத
காண்டற் கரிய களிப்பென் கடலுறைந்தான்
மாண்டகைக்கார் அன்னான் மகிழ்ந்து....1488

வஞ்சகமும் பொய்யும் மறமுங் கொடியகொலை
நெஞ்சகமுந் தீமை நிறையொழுக்கும் - விஞ்சுமவர்க்கு
உண்டோநல் காலம் உரைக்குங்கால் ஆங்கொருவி
விண்டார் கடல்வாய் விரைந்து....1489

வானவரும் வானுறையும் மங்கையரும் மாமுனிவர்
ஆனவரு நான்மறைதேர் அந்தணரும் - மானவரும்
துள்ளினார் அள்ளிச் சொரிந்தார் மல்மாரி
வெள்ளவா னந்த மிக....1490

ஆய பொழுதில் அனுமானை எம்பெருமான்
தூய திருக்கண்ணீர் சொரியவே - நேயமொடுந்
தாக்கணங்கு நோவத் தழுவினான் தன்மார்ப
நோக்கினான் பல்கா நுனித்து....1491

மன்னாற் பிறந்தேம் மடிந்தே மறுபடியும்
நின்னாற் பிறந்தோ நெறியுடையோய் - என்னாற்
பெறப்பெறுவ தின்றெனினும் பேரருளாய் என்றும்
இறப்பெறாய் என்றான் இனிது....1492

வானோர் வழுத்தி மகிழ்ந்தார் பல்வானரங்கள்
ஆனோர்கள் வாழ்த்தி அடிபணிந்தார் - கானேயும்
மாமருந்து மூலமிடை வைத்திடுவான் போயினான்
தேமருதார் அஞ்சனையார் சேய்....1493

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.19. மாயா சீதைப் படலம்

இங்கிவ்வாறு ஆக இகலரக்கன் இன்பமுற
அங்கியற்றுங் காதை அறைகுவாம் - பொங்கும்
அளியாட்டும் வாள்கண் அரம்பையர்கள் தம்மை
களியாட்டங் கண்டான் களித்து....1494

உண்டநறை மேல்மேல் உயரவே ஓடரிக்கண்
தொண்டைக் கனிவாய்த் துடியிடையார் - செண்டுமுலை
பற்றினார் அல்குல் பயன்பெறவே காமனருள்
முற்றினார் ஆசை முதிர்ந்து....1495

செவிநயக்குங் சொல்லால் திரள்முலையைப் பற்றி
அவிநயத்தாற் தேருருவை ஆங்குச் - சுவைநயப்பக்
குன்றுருவைக் காட்டிக் குறுமுறுவல் கொண்டனர்பூ
மன்றன்மலர் வாயால் மகிழ்ந்து....1496

கள்ளால் எழுந்த களிமயக்கங் காதலுற
உள்ளார் மயல்வாய் உறக்கைகள் - வள்ளார்ந்த
காம அபிநயங்கள் காட்டவே கண்டிருந்தான்
பூமன்மகன் மகன்சேய் போந்து....1497

மாத்திரையுங் கால வகையும் பிதிதுபட
வார்த்தையுறு பெரும்பாண் மாறவே - சீர்த்தவிசு
நின்றநிலை பேர நினைவுபோம் வண்ணமே
குன்றமுலை ஆனார் குழைந்து....1498

வாய்விளர்த்துக் கண்சிவந்து மாறுபட மாமழலை
தோய்விளரிப் பாடல் சுவையூறத் - தூயமணி
மேகலையும் தாழ்கலையும் மென்கால் அடிவருடப்
போகமார் போன்றார் பொலிந்து....1499

கலைநெகிழச் சங்கங் கழலவே காமர்
முலைநெகிழக் கச்சு முறியத் - தலைநெகிழா
மாமுனிவர் ஆதியர்க்கும் வந்து பொடித்தனவே
காமநீர் வெள்ளக் கடல்....1500

இத்தன்மை நோக்கி இருந்தான் செவியிடையே
மத்தமுறு தூதர் வழங்குரையு - மொய்த்ததிறல்
மற்கடத்தின் ஆர்ப்பும் வயவர்சிலை நாண்தெரிப்பு
முற்படவே கேட்டான் முனிந்து....1501

கள்ளுண்ட உள்ளக் களியுங் கயற்கணினார்
அள்ளுண்ட பானும் அகலவே - புள்ளுண்ட
காகோ தரத்திற் கலந்தான் கருநிறத்தோன்
சேகார் மணிமந் திரம்....1502

ஆங்கவனை நோக்கி அடல்மாலி என்னினியாந்
தீங்கறுநஞ் சேனைத் திரள்வாரி - வாங்குதிரை
விட்டிலமேல் உய்யும் விதமன்றோ வேறுபடக்
கெட்டதுன்னால் என்றான் கிளர்ந்து....1503

மாமேரு வுக்கும் வடபால் உறுமருந்தை
யாமே ஒருவர் அறியவே - நாமேதான்
கோடற் கெளிதோஓர் கோடரத்தால் ஆகுமேற்
பீடினினியென் சொல்லப் பெரிது....1504

இறந்தார் பிறந்தார் எனின்மறங் கொள்வேலாய்
திறந்தான்வே றெண்ணுந் திறமோ - அறந்தானம்
உற்றவருக் குண்டோ உடலூனம் உம்பரினுங்
கற்றினிநீ என்னோ கலை....1505

சானகியை விட்டவர்தஞ் தஞ்சமெனப் பற்றுதியேல்
சோன கரையொப்பேஞ் சுகமாக - ஈனமற
வாழுதுமால் என்ன மடித்துவாய் கண்சிவப்ப
ஊழித்தீ ஆனான் உருத்து....1506

மராமரமேழ் செற்றுவய வாலிதனை மாய்த்து
விராவுமடல் எம்பியையும் வீட்டிப் - பராவுபுகழ்
அத்தனைவெல் வாரிவ் அரக்கரோ அங்கையிலென்
சத்திவடி வேலிருக்கத் தான்....1507

தேரொழிக சேனைத் திறமொழிக திண்திறற்பல்
காரொழிக வாசிக் கலியொழிக - சீருருவப்
பொன்னுருவப் பூவுருவப் பொற்புருவ நற்புருவ
மின்னொருவல் உண்டோ வெறுத்து....1508

என்றரக்கன் கூற இகலரி ஏறன்னவலி
ஒன்றரக்கன் மாமகனும் ஓதுவான் - நின்றுரைப்ப
என்னோ இராமனையவ் ஏடுடையான் அத்திரமுந்
துன்றாது கண்டாய் துணிந்து....1509

மூவரோ அல்லன் முனையமரில் யாம்வென்ற
தெவரோ அல்லன் திறமுடைய - பாவலனாம்
வீடணனார் சொற்ற விழுப்பொருளே என்றுரைத்தான்
ஏடுடைய தாரான் எடுத்து....1510

ஒன்னார் வலியர் எனருளைதல் ஊக்கமன்று
மன்னா வலியின் வலியரென - உன்னாவோர்
மாயை இயற்றி வலந்தருவல் என்றகன்றான்
சீயநிகர் ஆவான் திறத்து....1511

இங்ஙனம் ஈதாக இரவிசேய் ஏழுலகும்
அங்கண் வயிற்றில் அடக்குவான் - செங்கமலத்
தாளிறைஞ்சி வஞ்சன் தனிநகரஞ் செந்தழலாற்
கோளுறுத்து மென்றான் குறித்து....1512

அன்னதே யாகவென அம்பவள வாய்மலர
மன்னும் வயவா னரச்சேனை - துன்னுமழற்
கொள்ளிகொடு நீள்மதிலுங் கோபுரமு மற்றிடமும்
அள்ளியெறிந் தன்றே அடைந்து....1513

மஞ்செனவே அன்பர் மனங்களிப்ப வந்தருள்வோன்
செஞ்சரத்தால் வெந்த திரைக்கடல்போல் - இஞ்சியுடன்
மந்தணஞ்சேர் தென்னிலங்கை வானரர்கைக் கொள்ளியினால்
வெந்தொழிந்த தம்மா வெடித்து....1514

இத்தலையின் உய்த்தமருந்து எத்தனையோ காவதம்போய்
வைத்ததகை உத்தமனும் வந்தடைந்தான் - கைத்தமரர்
கூற்றுவனோ என்றனுங்க கொண்டல்போல் ஆர்த்தரியின்
மேற்றிசைவாய் வந்தான் விரைந்து....1515

மானமுற வந்தவனு மான்புரத்து வாளரிக்கண்
சானகியின் மாயஞ் சமைத்துடன்கொண்டு - ஊனகுவேல்
வெங்கையொடு மேவி விளம்பினான் விண்ணிடைவாழ்
புங்கவரை வென்றான் பொருது....1516

அழல்பற்றும் வாளொளி வாளங்கை நிமிர்த்துக்
குழல்பற்றி இங்கிவளைக் கொன்று - நிழல்பற்றுந்
தண்குடையால் எந்தை தனக்கிழைப்ப னன்மையென்றான்
விண்கடிந்து வென்றான் வெகுண்டு....1517

தக்கதிது வென்றுந் தகாத திதுவென்று
மைக்கடலை ஒப்பாய் வகுத்தறியாய் - வைக்கருங்கண்
மங்கையரைக் கோறல் வலியன்று வீரமன்று
சிங்கவேறு அன்னாய் சினந்து....1518

வானவரென் சொல்லார்ஓர் மாணிழையை நீசெகுத்தால்
தூனகுவேற் காளை சுடுதொழில்ஈ - தானதினால்
நல்லரங்கள் உன்னி நடுநெறியை நாடினையேற்
புல்லுதிநீ என்றான் புகழ்....1519

என்றிரங்கி மெய்யயரும் ஏந்தலைநோக் காவிவளை
கொன்றொழித்தல் உண்டே குறைவீர - இன்றே
அயோத்தியினும் எய்தி அனைவரையுங் கொன்று
சுயேச்சையுடன் மீள்வல்என்றான் சூழ்ந்து....1520

சொன்ன பொழுதாவி துளங்குவான் முன்னரவன்
அன்னவளை வாளால் அரிந்தணியார் - பொன்னமைந்த
புட்பகமீ தேறியும்பர்ப் போயினான் உத்தரவாய்
உட்பகமில் லாதான் உருத்து......1521

நகும்பலையொப் பாளை நனிவானில் வீட்டி
நிகும்பலையிற் போயான் நெடியோன் - அகம்பலவாய்
வேர்த்தான் உளைந்தான் வெறுத்தான் உயிரையெனப்
போர்த்தான் துயரம் புலர்ந்து....1522

எண்ணினான் எண்ணுவன எல்லா இடர்க்கடலில்
நண்ணினான் ஆற்று நலங்கருதி - வண்ணமணி
வண்ணனைக்கண் உற்றான் வணங்கறியான் மாணடிமேல்
மண்ணிடையே வீழ்ந்தான் மருண்டு....1523

என்னையுற்றது என்னை இயம்புகென எம்பெருமான்
தன்னையொத்த செல்வத் தகையாளை - மின்னைஒத்த
வாளாற் துணித்தானவ் வல்லரக்கன் மைந்தனென்றான்
தோளாற்றல் ஒல்கான் துயர்ந்து....1524

செப்பியவம் மாருதியுஞ் சித்திரத்தில் உற்றதுதேர்ந்து
ஒப்பருபல் வீரரும் உயிர்ப்பற்றார் - குப்புறச்சாய்
விண்டருவில் வீழ்ந்து வெறுத்தார் உயிரெனவே
அண்டரும் ஆங்குற்றார் அயர்வு....1525

விண்டிலான் மாற்றம் வெயர்த்திலான் மேனியொன்றுங்
கண்டிலான் உள்ளங் கருதிலான் - புண்டரிகம்
பூத்தமணி நீலவரை போல்வான் பொழிலேழுங்
காத்தளிப்பான் வந்த கடல்....1526

மங்கையால் வந்த மயக்கமென வீடணனுஞ்
செங்கையால் தெண்ணீர் தெளித்துமுகம் - பங்கயத்தண்
கால்வருடக் கண்திறந்தான் கட்செவிமேல் பாற்கடல்தன்
கால்வருடக் கண்துயிலுங் கார்....1527

அய்யன் அரியோன் அமரேசன் தம்பெருமான்
மெய்யன் இராமன் விழிபூப்ப - செய்ய
மொழிகண்டு சொற்றான் முதன்மாய மானின்
வழிகண்டு சொற்றான் வகுத்து....1528

இரக்கமென்ப தம்மா இனிநம்பால் எய்தில்
அரக்கர்பால் நன்மை அளிப்பேம் - புரக்கவுள
நின்கருத்தை நீத்து நெடியோய் இருந்தனையேல்
என்கருத்து முற்றும் இனி....1529

அறத்தால் அறியும் அமரரால் மற்றோர்
திறத்தால் நமக்காவது என்னோ - மறத்தான
விற்றொழிலான் மூவுலகும் வெந்தொழியச் செய்துமென்றான்
மற்றொழிலும் வல்லான் வகுத்து....1530

இளையான் இயம்ப எரிசுடரோன் மைந்தன்
வளையா மதிலிலங்கை மன்னைக் - களையாது
மார்பிற் குதித்தும்யாம் வம்மினோ வென்றுரைத்தான்
காருற்ற தீபோற் கனன்று....1531

அப்பொழுது சொற்றான் அனுமான் அயோத்தியின்மேற்
துப்புறவே சென்றவொரு சூட்சியினைப் - பொற்கனகக்
குன்றுறழ்எண் தோளும் கொடியேறு முக்கண்ணும்
இன்றியிவண் வந்தால் எடுத்து....1532

திண்திறலான் கூறத் திருவாளன் தேம்பியுளம்
மண்டு துயர்வாய் வருந்தவே - கண்டினிநீ
உள்ளம் வருந்தேல் உரைப்பக்கேள் என்றுரைப்பான்
தெள்ளறிவால் வீடணனுந் தேர்ந்து....1533

பத்தினியைத் தெய்வப் பதுமினியைப் பாவையர்கள்
உத்தமியைத் தீண்டி ஒறுப்பனேல் - முத்தலமும்
வாழுமே இன்னமறம் வைகுமே அண்டமெலாம்
போழுமே கண்டாய் புலர்ந்து....1534

ஈங்கிருந்து வாடுதலின் யானேபோய் ஏந்திழையார்
பாங்கடைந்து வாழும் பரிசுணர்ந்து - தேங்குமறைத்
தொண்டுருவ மான சுயம்பே வருவலென
வண்டுருவாய்ச் சென்றானவ் வான்....1535

கண்டனன்தன் கண்ணால் கமல சனத்தனொடிவ்
அண்டமெலாம் ஈன்ற அணியாளைக் - கொண்டஐயம்
போக்கினான் ஆடிப் புகழ்ந்தான் புதுநறவந்
தேக்கினான் என்னச் சிறந்து....1536

வேள்விக் கிரிய விறகும் உழுபடையுங்
கோளுற் றடையுங் குறிகண்டான் - ஆளுற்ற
அய்யனடி தாழ்ந்தான் அறிந்தனவெ லாமுரைத்தான்
வெய்ய இராக்கதர்தம் வேந்து....1537

மகமுடிப்பான் என்னில் வயமடைய வல்லார்
அகனிலத்தில் உண்டோ அறியின் - மிகுதிறத்துச்
சேனை யொடும் சிதைக்கவருள் என்றுரைப்ப
மானவன்நன் றென்றான் மதித்து....1538

அன்பன் இளையோன் அருள்மா முகநோக்கி
என்பகர்வ துண்டினக்கிங்கு ஏற்றசெரு - வன்பறிந்து
தீயோனைக் கொன்றடைக வென்றான் செழுங்கமல
வாயோன் உலகளந்த மால்....1539

மற்றும் பகர்ந்தான் வரன்முறையே மாயவினை
உற்ற செருவின் உபாயமெலாங் - கொற்றமுறுந்
தேவாதி தேவன் திருச்சிலையுங் கைகொடுத்தான்
மூவா முழுமா முதல்....1540

பாணி விரைவின் படியளக்கும் பல்பகழித்
தூணியும்வல் லாண்மைச் சுடாரியுந்தன் - தோணிவந்த
கையாற் றழுவி அளித்தான் கயலுகளுஞ்
செய்யாற்று நாடன் தெரிந்து....1541

நிலம்வந்த சீர்த்தி நெடியோனைத் தாழ்ந்து
வலம்வந்து போற்றி மதியாச் - சலம்வந்த
வீரரொடு சென்றான் விளரிச் சுரும்புமுரல்
ஏருலவு தாரான் எழுந்து...1542

வெள்ளக் கரும்புணரி மேன்மேல் இரைத்தெழுந்து
பள்ளத்திற் பாய்கின்ற பான்மையென - உள்ளத்தில்
ஊக்கமொடுஞ் செண்றாரவ் ஒன்னார் உறைவிடத்து
மாக்கரியை ஒப்பார் வளைந்து....1543

கரிபரிதேர் ஆளிக் கடலால் வளைத்து
விரிதருமொள் நேமி வியூகம் - நிரைவகுத்த
சேனைதனைக் கண்டு செயிர்த்தார் திறமுடைய
வானரமாம் வீரர் மலைந்து....1544

விற்கொண்டும் வஞ்ச வினைகொண்டும் வெய்யனவாஞ்
சொற்கொண்டும் வேலின் தொகைகொண்டு - மற்கொண்டும்
வாள்கொண்டுந் தீய வழிகொண்டும் வல்லரக்கர்
கோள்கொண்டு மேற்றார் குறித்து....1545

பன்னகத்தால் வாலாற் பருங்கரத்தாற் பாரவலிப்
பன்னகத்தாற் காலாற் படர்தருவாற் - பன்னகநேர்
மற்கடத்தார் நற்கடத்து வானுருவ நீத்துதித்த
மற்கடத்தார் ஏன்றார் மலைந்து....1546

அங்கமலை உற்ற அரக்கர் அறக்கறுத்த
அங்கமலை அங்கம் அலையாகவே - அங்கமலை
வம்புலவுங் கோதை மணந்தோன் அபிராமன்
தம்பி தொடுத்தான் சரம்....1547

வாலறுக்கும் நீண்ட வயிறறுக்கு மாவினத்தின்
காலறுக்கும் வால்கை கதுப்பறுக்கு - மேலிடத்து
புக்கவரை அக்கணத்துப் பொற்பழிய மிக்கியற்றுஞ்
சக்கரத்தை ஒத்த சரம்....1548

ஆனை பரிதேரும் அடியாளு முற்றுமுள
சேனையொடு வேள்வி செயுஞ்சடங்கும் - ஆனதெலாம்
இற்றதுகண்டு இற்றோஎன் சேவகமென் றான்உருத்தான்
கொற்றமுறும் வல்லரக்கர் கோன்....1549

மன்னிட்ட வேள்வி வகையும் மறையொலியும்
முன்னிட்ட வேற்கை முரண்படையுந் - தென்னிட்ட
தண்டார் இளையான் சரத்தால் துணிபடுதல்
கண்டான் அனுமான் களித்து....1550

சேனை அழியத் திகைத்தானைச் செய்வேள்வி
மான மழிய மருண்டானை - ஊனத்து
இராவணியை எய்தி இசைத்தான் எனையாள்
புராதனனாம் மாருதிமுன் போந்து....1551

யானெதிர்ந்து வேண்ட அவைமதியாது என்னெதிரே
சானகியைக் கொன்றுரையுந் தந்தபடி - மான
விரதநெறி பூண்ட விழுந்தவனாம் எங்கள்
பரதனைவென் றீரோ படர்ந்து....1552

மற்றிதெலா நிற்க வலியோயெம் மன்னர்பிரான்
கொற்றமுறுந் தம்பியரைக் கொன்றுயிர்கொண்டு - இற்றைநெடு
வேள்வி முடித்த வினையே பெரிதென்றான்
தோள்வலியை உற்றான் தொகுத்து....1553

நீரோ இராவணியார் நீரோசொன் மாறாதீர்
நீரோ அயன்படைமுன் நேர்ந்தெய்தீர் - நீரோதான்
இன்றிறக்க வல்லீர் இனியந்தோ என்றிசைத்தான்
தென்றிசைத்தே வன்னான் சிரித்து....1554

சொற்படையால் மாயத் தொழிலாற் சுடுசரத்தால்
விற்படையால் மாண்டு வினையிழந்தீர் - அற்படையும்
மாமருந்தால் உய்வீர் வலியீர்காண் என்றுரைத்தான்
மாமருப்பொள் மார்பான் மகன்....1555

என்றவன்மேற் கான்மதலை ஏறுடையா னாமெனவே
குன்றொன்று தாங்கிக் குறித்தேவ - நின்றதனைப்
பன்னீறே யாகப் படுத்தினான் பல்கணையால்
வென்னீர்மை யுற்றான் வெகுண்டு....1556

மற்றொருகுன் றேந்தாமுன் மாருதிமேல் வஞ்சமுளான்
புற்றரவ வாளி புகைந்தேவச் - செற்றமொடு
நின்றயர்ந்தான் மற்றோர் நிலையென்னா நீணிலத்திற்
பொன்றினார் போன்றார் புலர்ந்து....1557

இத்தகைமை கண்டான் இளையோன் இனிஅயர்தல்
உத்தமம்அன் றென்ன உளத்துதிப்பச் - சித்திரத்திண்
வில்லொடுஞ் சென்றானவ் வேலைவாய் வந்துநின்றான்
மல்லாடும் வாயு மகன்....1558

அன்றவன்மேல் ஐயன் அருணாம்புய அடிவைத்து
ஒன்றல பல்கோடி உடல்வாளி - வென்றியென
விட்டான் அரக்கன் வெகுண்டான்அவ் அம்பனைத்தும்
அட்டான் கணையால் அறுத்து....1559

ஆயிரம்ஐ ஆயிரம்பல் ஆயிரப்பத் ஆயிரங்கோல்
ஏயெனும்முன் ஏவ இகல்அரக்கன் - நாயகனும்
அக்கணைகள் கொண்டே அறுத்தானவ் அம்பனைத்தும்
தக்கதென வானோர்கள் தாம்....1560

எவ்வமரர் எவ்வசுரர் இவ்வமர்செய் தாரெனவே
அவ்வமரர் ஏத்த அடல்வீரர் - கைவளைத்த
விற்றொடுத்த பற்பல் விதஞ்சேர் விசிகங்கள்
முற்றுரைக்க லாமோ முடிவு....1561

வானெலாம் வான வரம்பெலாம் வாரியில்வாழ்
மீனெலாம் ஏன்று வினையிழந்தோர் - ஊனெலாம்
வாளியே யாக மலைந்தார் வயமுகத்து
மீளியே அன்னார் வெகுண்டு....1562

ஐயைந்து வெம்பகழி ஆரியன்பொன் மேனியின்மேல்
பொய்யுடையான் ஏவ புரிசரத்தால் - வெய்யநெடுந்
தேரழித்தான் கண்டு திறற்பகழி பத்துயர்விண்
ஊரழித்தான் விட்டான் உருத்து....1563

அப்பகழி மத்தகமேல் ஆகவயர்ந்து உள்தெளிந்தான்
இப்பகழிகா வெனவிட் டேவினான் - துப்புடைய
வன்கவசத் துண்ணுழைந்து மார்புருவ வாட்டமுற்றான்
மன்கருணை இல்லான் மருண்டு....1564

இசிகப்படை முதலா எண்ணரிய வன்மை
விசிகத்தொடை அரக்கன் விட்டான் - வசியத்து
வில்லார் நெடியமக மேருபோல் வானவைகள்
எல்லாந் தடுத்தான் எதிர்ந்து....1565

ஆழிக் கனல்இதுவோ என்றமரர் அஞ்சவெய்யோன்
பாழிப் பிரமப் படையேவ - வாழிக்
கதிர்வேற் குமரன் கணித்தான் கருதி
அதுவே தொடுப்பனென ஆய்ந்து....1566

மாமறையுங் காணா மலர்மகள்கோன் ஆணையிது
சேமமுறுக செக தலங்கள் - நாமமுறு
அப்படையும் மாய்க அவற்சாரா தாகவெனச்
செப்பினான் விட்டான் தெரிந்து....1567

விமித்திரையார் வையம் விளங்கிடவே வந்த
சுமித்திரைசேய் ஏவுந் தொடையால் - அமித்திரனெய்
வெய்ய நெடுங்கமல வேதன் படையழிந்த
ஐயமறப் பொய்போல் அவண்....1568

தீயோன் படைமாயச் சேயோன் படையெங்குந்
தீயோட வற்ற திறந்தெரிந்தான் - மீயோடும்
வன்கணையால் தன்வசமே யாக்கினான் வானவர்கள்
மன்களிப்ப வீரன் மதித்து....1569

வீரர்க் கரியதிதன் மேலுண்டோ என்றுபுகழ்ந்து
ஏருற்ற விண்ணோர் இயம்பவே - சீருற்ற
கொன்றையந்தார் வேணிக் கொடியேற் றுடையபிரான்
அன்றுரைப்பான் எல்லாம் அறிந்து....1570

நரநா ரணரிருவர் நாம்வழுத் தற்கொத்த
பரமனார் என்றும் பழையோர் - வரமான
எல்லா உடையோர் இவர்க்குமே லாய்ஒருவர்
இல்லாதார் கண்டீர் இவர்....1571

மேனா எமது குறைகேட்டு வெய்யவரை
வானாள வைப்பான் வரும்பெரியோர் - தேனாருந்
தண்தெரியல் தாருடையீர் சாற்றுவதென் ஆங்கவன்சீர்
கண்டறிதீர் என்றான் கணித்து....1572

பாட்டளிகள் மூசும்பனி மலரோன் பாய்பகழி
மீட்டினமை கண்டு வெகுண்டான்பின் - வாட்டமுற
மாயோன் பகழி விடுத்தான் மணிமலைமேற்
தீயோரிற் தீயோன் சினந்து....1573

கையா யிரமிலகக் காலாயிரந் துலங்க
மெய்யா யிரமும் விரிந்தோங்க - நெய்யாடும்
ஐம்படைக ளோடும் அடைவதுகண் டாங்கிமையோர்
என்புருக நொந்தார் இருந்து....1574

மாற்றுவதெவ் வாறுதனை மாயோன் படையெனவாங்கு
ஏற்ற விளையோன் எதிர்செல்லத் - தோற்றியெதிர்
மீன்வலங்கொண் டேகுமக மேருவினைச் சூழ்ந்ததெனத்
தான்வலங்கொண்டு ஏகியது சார்ந்து....1575

கண்டானவ் வெய்யோன் கணித்தானிக் காவலனே
பண்டாய வேதப் பழம்பொருளென்று - எண்தாவும்
மூலப்படை ஒழிய முப்புரத்தைச் சுட்டபிரான்
சூலப்படை தொடுத்தான் தொட்டு....1576

வேர்த்தாரி மையோர் வெருக்கொண்டார் வெஞ்செருவில்
ஆர்த்தாசை எங்கும் அதிரவே - போர்த்தாமப்
பாரிடமும் பேயும் பரந்துவரப் புக்கதுவே
பாரிடங்கொள் ளாதப் படை....1577

அப்படையைஅப் படைவிட்டு அப்படையத் துப்பின்மோடு
ஒப்பரிய முத்தார் உயர்நாடன் - செப்பரிய
மாமறையு நல்லறமும் வானவருங் கண்டுவப்பக்
கோமுறையே அட்டான் குறித்து....1578

எண்ணு முறையே இகல்கடத்தல் ஈங்கரிதென்று
உண்ணும் கனல்போல் உருத்தெதிரே - நண்ணுசிறு
தாதைமுக நோக்கிச் சலித்தான் சலியாத
கோதைவரி வில்லான் கொதித்து....1579

வெஞ்செருவில் அஞ்சி விளிதலினும் மானிடவர்
தஞ்சமே வண்மைஎனச் சாருவாய் - இஞ்சிநகர்
உற்றோங்கள் எல்லாம் ஒருங்கவிய நீயிருந்து
மற்றாள வோவுன் மனம்....1580

பழிக்கஞ்சி உன்னைப் பகழினான் மாய்ப்பல்
ஒழிக்கின்ற துள்ள ஒருவா - இழித்தகைமை
உன்னாது மானிடரை உற்றனைநீ கற்றவிதம்
என்னே அரியதன்றோ ஈங்கு....1581

பிடிக்கின்ற மாயப் பெரும்பிணக் கற்றார்போல்
நடிக்கின்றாய் சுற்ற நலிய - வடிக்கின்ற
தென்னிலங்கைச் செல்வம் பெறுகிற்பான் தேர்ந்தென்ன
முன்னுரந்து சொற்றான் முனிந்து....1582

பொய்யிலேன் மாயப் புரையிலேன் புண்ணியமும்
மெய்யுரையு மில்லா வுமைவெறுத்து - மையறுசீர்
ஐயனடி வீழ்ந்து அடைக்கலமுற் றேனிதனால்
வெய்யபுக ழுண்டோ விளம்பு....1583

கற்புக் கணிமணியைக் காசிலா வான்மணியைப்
பொற்புக் கணிமணியே போல்வாளை - நற்கமலப்
பூவையரைப் பொன்னைப் பொலன்கொடியைப் பூவைவண்ணன்
தேவியரை வைத்தான் சிறை....1584

அக்கொடிய பாவி அடாதனசெய் தானெனவே
புக்கனன்மெய் வாழ்விற் பொருந்தவே - தக்கதினி
உங்கட் கருநகரே என்னஉனை மாய்ப்பலெனப்
புங்கமொன்று விட்டான் புகைந்து....1585

அப்பகழியைப் பகழி ஒன்றால் அறுத்தனனெஞ்
செப்பரிய செல்வத் திருநாடன் - இப்பொழுதே
வேற்படையால் மாய்கவென விட்டான்அவ் வேற்படைவிண்
பாற்படவே அட்டான் பகைத்து....1586

மானமிலான் வஞ்ச மனங்கொண்டு வீடணனுந்
தான மணிவயிரத் தண்டதனால் - ஏனையவன்
பாகோடு வாசி படுத்தினான் பண்ணவர்தஞ்
சேகோட உள்ளஞ் சினந்து....1587

ஆங்கவர்மேல் ஆயிரம் அம்பாக்கினான் அக்கணத்தே
ஈங்குறுதல் எவ்வ மெனவெழுந்தான் - பாங்குறுவிண்
புக்கதுபோற் புக்கான் புகழுறுதன் தாதைதன்பாற்
மைக்கரியை ஒப்பான் மறைந்து....1588

ஆவி இழத்தல் அரிதன்றோ அன்பினால்
வேழ்வி இழந்து வினையிழந்து - மேவரிதாய்
உற்றனையோ என்றான் உடற்குறிகண் உம்பமுரை
வெற்றியுற வென்றான் வெகுண்டு....1589

பார்தந்தான் தந்த படையும் படர்சடைக்கு
நீர்தந்தான் தந்த நெடும்படையுங் - கார்தந்த
வண்ணத்தான் ஆசுகமும் மாற்றினான் மானிடரென்று
எண்ணத்தான் உண்டோ இனி....1590

உந்திக் கமலத்து ஒருவன் தனிவாளி
வந்தித்தவனை வலஞ் செயுமேன் - மைந்துற்றான்
கட்டுறுமொண் வீரங் கணிக்கரிது காரிகையை
விட்டிடுக வென்றான் விரைந்து....1591

விட்டாரும் ஆவி விடாதாரும் இப்பகையை
அட்டாரும் வாகை அளிப்பரெனக் - கட்டாண்மை
ஏறனையாய் எண்ணி இருந்தேநின் றென்வலிகொண்டு
ஊறுபட வெல்வேன் உருத்து....1592

தேவரையும் வென்று திசைக்கரியை வென்றொருநன்
மூவரையும் வென்றேன் முடியாதேன் - மேவரிய
மானிடரைத் தாழ்ந்து வரம்பெறுதல் உண்டுகொலோ
மீன்விழியை முன்னே விடுத்து....1593

அல்லும் பகலும் அமரரைமுன் வென்றபுகழ்
சொல்லி மருங்குற்று துடியாரைப் - புல்லிநித
நாள்கழித்தி யான்போய் நரராவி உண்பனென்றான்
கோள்வலிப்ப நின்றான் கொதித்து....1594

வெஞ்செருவிற் புக்கினியான் மீண்டுறுவ னென்றிசையேன்
அஞ்சினேன் இன்றுன்மேல் ஆசையாற் - தஞ்சமிலேன்
கூறுமொழி நன்றெனவே கொள்கநீ கோவேயான்
நீறுபடுவே னேல் இனி....1595

என்றிறைஞ்சிப் பொற்றேர் மேலேறினான் ஏத்திமையோர்
அன்றளித்த பல்படைகொண்டு ஐந்தருவி - நின்றிரப்போர்க்கு
எல்லாம் அளித்தான் இருநிதியம் எண்ணரிய
வல்லாண்மை தீர்வான் மலைந்து....1596

எக்கால நின்னை எதிர்வேம் எனவிரங்கிப்
புக்கார் மகளிர் புலம்பவே - கைக்கால
வில்லோடு சென்றான் விதிபிடரி உந்தவந்தோ
கல்லான தோளான் களம்....1597

விண்ணடைந்தான் என்றிளையோன் மெனோக்கி வில்வளைத்துக்
கண்ணிமையான் எண்ணங் கருதுங்கால் - மண்ணிடையில்
பேரரவம் ஒப்பான் பிறங்கியபொற் சில்லிநெடுந்
தேரரவங் கேட்டான் செவி....1598

ஆடற் புரவியோர் ஆயிரங்கொண் டார்ப்பதுநற்
பாடன்மணி கொண்டதுமெய்ப் பாடுற்ற - தீடற்றது
எவ்வுலகுஞ் செல்வதுபண்டு இந்திரன்பாற் கொண்டதுபூஞ்
செவ்விமலி பொற்சிகரத் தேர்....1599

தெண்திரைசெல் வங்கமெனத் தேருதல் கண்டிளையோன்
கண்டகனை ஆவி கடிந்தின்னே - அண்டர்துயர்
மாற்றுவலென்(று) எண்டிசையும் வாளி மழைபொழிந்தான்
கூற்றுவனுஞ் சோரக் கொதித்து....1600

எண்திசையும் வென்ற இராவணன்சே யேழ்கடலும்
மொண்டு சொரியும் முகிலேபோல் - அண்டர்பிரான்
செங்கோல் விளங்கச் சிலையெடுத்த சேவகன்மேல்
வெங்கோல் பொழிந்தான் விரைந்து....1601

பொன்னொத்த மேனிப் புராதனனப் போர்வீரன்
வென்னொத்த ஆவம் விழப்புரிந்து - முன்னொத்த
தேர்ப்பாகன்றன் தன்சிரமுங் கொய்தான் செழுஞ்சிலையால்
ஆர்ப்பாக வானோர் அறிந்து....1602

பாய்புரவி தூண்டிப் பறித்துடலார் வன்பகழி
ஓய்வின் மழைபோல் உருத்தெய்தான் - சாய்வில்வலத்
தன்மையான் வன்மைத் தறுகண்ணான் சாற்றுமவன்
வின்மையார் சொல்வார் விரித்து....1603

தெய்வக் கணைதொடுத்துத் தேரழியாது என்னநினைந்து
எய்வித்து அகத்தால் இமைப்பொழுதில் - மொய்வைத்த
அச்சினோடு ஆழி அகற்றினான் அந்தணர்கை
உச்சிமேற் கொள்வான் உருத்து....1604

மற்றினியென் அம்மா வயவாள் அரக்கனும்விண்
உற்றனன்றன் ஆவிதனை ஓம்புவான் - செற்றமற
முன்பரவி யான்ற தருமூலமற வீழ்பொழுது
வன்பறவை யேபோல் மருண்டு....1605

தான்பெற்ற மாயத் தனிவலத்தாற் சாற்றரிய
வான்பெற்ற தெய்வ வரந்தன்னால் - ஊன்பெற்ற
வின்மாரி யோடும் வினையுடையான் வெய்யநெடுங்
கன்மாரி பெய்தான் கடுத்து....1606

முத்துருக்கொள் சத்துருக்கன் முன்னோன் முனிந்தடல்செய்
புத்தரவை ஒத்தவொரு புங்கமதால் - இத்தரைமேல்
மல்லாடு தோளான் மணிக்கரத்தைக் கொய்தனன்கை
வில்லோடு வீழ விரைந்து....1607

செல்லாளன் இந்திரனைச் சேணிடத்து வென்றவரின்
வல்லாளன் தன்கை வரிசிலையோடு - எல்லாம்
தரைவிழுந்த ஐவாய்த் தனிநாகங் கவ்வும்
பிறைவிழுந்த என்னப் பிறழ்ந்து....1608

கையற்றோம் ஆவதினிக் காணோம் எனக்கதழ்ந்து
பொய்யுற்ற செய்கைப் புலனுடையான் - வையுற்ற
சூலப் படையோடுந் தோன்றினான் தோற்றரிய
மூலப் படையுடையான் முன்....1609

உண்மையான் மூலத் தொருவன் இராமனெனும்
வண்மையோன் என்னில் வயங்கிவனைத் - திண்மையொடுங்
கோறிநீ என்றுஒருகால் கோத்தெய்தான் கோகனகை
வீறுசேர் நாடன் விரைந்து....1610

ஓராழி என்ன உடையான் அயில்முகக்கோல்
காராழி அன்ன கருநிறத்தோன் - தாராழி
வன்தலையைக் கொய்து மலர்தூவ வானுறைவே
சென்றதுவே விண்மேற் திகழ்ந்து....1611

செந்தழர்கண் ணோடுஞ் சிறந்தமணிக் குஞ்சியொடும்
இந்திரவி யோடும் இருஞ்சுடர்சேர் - அந்தரத்து
மேற்கோளின் மண்டலங்கீழ் வீழ்ந்ததென வீழ்த்ததந்தக்
கார்க்கோளன் உத்தமாங் கம்....1612.

தாளின் தளையுந் தனிப்பாசத்து ஆர்த்தநெடுந்
தோளின் சுவடுந் தொலைந்ததினி - நீளுமெழிற்
பொன்முடியில் ஒங்கிப் பொலிவேன் எனப்புகன்றான்
மன்முடியார் வானவர்கோ மான்...1613

தலைகண்டார் வாளரக்கர் தம்முயிரைப் பேணி
நிலைகண்டார் ஊரிடத்து நின்றார் - மலைகண்ட
திண்புயத்தெம் மாருதிமேற் சென்றான் சிலையிளையோன்
மண்களிப்பச் சென்றான் மகிழ்ந்து....1614

வாரி கடைந்தமுதம் வானோர்க் களித்தவன்சேய்
காரி இகலோன் கருந்தலைகொண்டு - ஆர்கலியின்
முற்றூசு செல்ல அடைந்தான் முதிர்சிலையோன்
பொற்றூசான் பாதம் புகழ்ந்து....1615

தன்னையே நோக்கும் தமரேபோல் தானிருந்த
பொன்னையே நோக்கும் புயவனையான் - தன்னெதிரே
கண்டானக் கண்டகனைக் காலனூர் ஏற்றிவயங்
கொண்டான் வரவு குறித்து....1616

தலையிறை வைத்தன்பில் தன்சரணந் தாழும்
மலையனைய தோளானை மாயோன் - அலையருள்சேர்
நெஞ்சோடு புல்லினான் நீளமரிற் பட்டசெழுஞ்
செஞ்சோரி பாயத் திகழ்ந்து....1617

வெஞ்சிறையின் நின்றும் விடுவித்தேன் ஆவனினி
அஞ்சொற் கிளவி அருந்ததியை - தஞ்சமுறும்
வானவரும் அந்தணரும் வாழ்ந்தனரென் றுள்மகிழ்ந்தான்
மானிடரில் வந்த திருமால்....1618

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.20. படைக் காட்சிப் படலம்

செஞ்சோரி வெள்ளத் திரைஒரீஇத் திண்கழல்கள்
நெஞ்சொடு நின்று நிலைமாற - எஞ்சாத
நன்னகரம் புக்கு நடுங்குவார் நாப்புலர்ந்து
மன்னவனைக் கண்டார் மருண்டு....1619

அத்தூதர் ஆண்டகைநின் ஆண்மைப் பெரும்புதல்வன்
எய்த்தாவிச் சென்றான் எனப்புகல - நெய்த்தாம
வாள்கொண்டு வீசினான் வன்குலத்துக் கெல்லாமோர்
கோள்கொண்டான் தீயில் கொதித்து....1620

பருந்து மதினிழலும் போல்பாடும் பாடல்
விருந்துதவி நின்ற மடமின்னார் - இருந்தஇடம்
எங்ஙனோ என்ன இரிந்தான் இகலரக்கன்
பொங்கியவெங் கோபம் பொர....1621

அழுதான் அயர்ந்தான் அயிர்த்தான் அகத்தை
உழுதான் உளைத்தான் உயிர்த்தான் - பழுதாய
ஓவியம்போல் ஆனான் உறுந்தூதர் தாமுரைத்த
மாவிடத்தை உண்டான் மருண்டு....1622

சக்கரத்தை உற்றான் சலதரத்தான் சாற்றியவந்
தக்கரத்தான் ஆதி அமரர்குழாம் - புக்கினிநம்
ஊர்மேல் உலாவுவரே என்றான் உளைந்துளைந்து
கார்மேலு நின்றான் கசிந்து....1623

அய்யனே எங்கள் அருமைத் துரையேயான்
உய்வனோ ஆவி உனைப்பிரிந்து - வையமிசை
என்றுரைத்துச் சென்றான் இகற்குருதிப் பேராறு
சென்றுலவும் போர்க்களத்தே தேர்ந்து....1624

வானர் சிலைதழுவும் மாநீல மால்வரையின்
மானக் கருமேக மண்டலத்திற் - தானத்தே
வீழ்ந்ததனிக் கையினையும் மேனியையுங் கண்டுளைந்தான்
ஆழ்ந்த துயரத்தோடு அழுது....1625

தலையிலா ஆக்கை தனைக்கண்டான் சலித்தான்
மலையின்மேல் வீழ்ந்த மலைபோல் - நிலையிடத்து
மைந்தன்மேல் வீழ்ந்து மறுகினான் வாசநறுங்
கொந்துலாந் தாரான் குழைந்து....1626

அந்தரத்து வானோர் அழுதார் அரம்பையரும்
நொந்தழுதார் காலமென நோவுற்றார் - தந்திரஞ்சேர்
புன்னரியும் பேயும் புலம்பியது போரரக்கர்
மன்னழுத காலை மருண்டு....1627

எக்காலுன் செவ்வி எழின்முகத்தைக் காணுவது
தக்கோர் புகழுந் தனிஏறே - மைக்கான
மாமுகிலே போல்வாயல் வானநாடு உற்றாயோ
ஏமமுற ஐயா இனிது....1628

எவ்வெவ் உலகில் அடைந்தாலும் என்னரசே
அவ்வவ் உலகோர் அரும்பகையே - கவ்வையற
எங்கிருந்தாய் என்செய்தாய் என்று அழுதானேமுறவே
கங்குல் போல்வான் கசிந்து....1629

என்றிரங்கி ஏங்கி எடுத்துமகன் ஆக்கைதனை
குன்றநிகர் மாடக் குலம்புகுந்தான் - சென்றுதிசை
எட்டும் குலக்கரிகள் எட்டும் இகலரவம்
எட்டும்வென் றிட்டான் இனைந்து....1630

கொங்கைமேல் கைபுடைத்துக் கொண்டற் குழல்சோர
பைங்கழல்கள் கன்றப் பதைத்துருகி - அங்கண்
கயன்பெற்ற காவிமலர்க் கண்சோர வந்தாள்
மயன்பெற்ற செல்வ மணி....1631

இந்துமுறி என்று இரண்டுசிலை யோடியங்க
வந்தவொரு மின்போல மைந்தன்மேல் - அந்திரங்கி
வீழ்ந்தாள் குழைந்தாள் வெறுத்தாள் மிகவுளைத்தாள்
ஆழ்ந்தாள் துயரத்து அரி....1632

முன்னப்பார் எல்லாம் முடிந்தாலு நீமுடியாய்
என்னப்பார்த்து உள்ளம் மகிழ்வெய்துவேன் - சென்னியிலா
ஆக்கையுங்கண்டு அந்தோ அஞருறுவான் ஊழ்வினையுந்
தாக்கியதே என்பாள் தளர்ந்து....1633

வெற்றிக் கொருநீ விரைந்திரண்டு கோளரிமா
பற்றிக் கொணர்ந்து பகைமூட்டி - முற்றிலின்கண்
சாற்றரிய செல்வர் தவழ்பருவத்து ஆட்டயர்நின்
ஆற்றன் மறந்துய்வனோ யான்....1634

தேங்குதலைச் செல்வச் சிறுபருவத் தம்புலியை
ஈங்குறுக என்ன இருகரத்துப் - பூங்கலையோடு
உற்றானை ஏந்தி உலாவுவண மென்னிருகண்
எற்றோ வறிவது இனி....1635

யாம்வணங்கற் கொத்த அமரர் குழாமெல்லாம்
தாம்வணங்கத் தெய்வத் தனிச்சிலையால் - தேன்மணஞ்சேர்
மந்தார மாலைபுனை வாசவனை வென்றசெய
மைந்தாவுனை மறவேன் மாழ்ந்து....1636

என்றிரங்கி ஏங்கி இருகண் நீராவியுக
குன்ற முலையாள் குழைதரல்கண்டு - இன்றிதெலாம்
சானகியால் வந்த தனித்துயர மென்றெழுந்தான்
ஊனருவாள் கொண்டான் உருத்து....1637

எழுந்துஇவள்தன் ஆவி இறுதியுற இன்னே
உழுந்துருள்முன் என்றுமுனிந் தோடக் - கழிந்து
தகா தனசெய்வாய் நீஎனவடி யிற்தாழ்ந்து
மகோதரனுஞ் சொல்வான் வடித்து....1638

எட்டுத் திசையின் இருந்தகரி வெண்மருப்பு
வெட்டிப் புகழ்படைத்த வெள்வாளால் - வட்டமுலைப்
பெண்ணரசைக் கொன்று பெரும்பழிநீ சூடுதியோ
நண்ணலர்கை கொட்ட நகைத்து....1639

முந்துற்ற மூவா முழுமலரோன் தன்மரபு
வந்துற்றான் வாழி மறைவல்லான் - இந்துற்ற
நன்னுதலைக் கொன்றான் எனநகைப்பர் நாகத்தே
முன்னுனக்குத் தோற்றார் மொழிந்து....1640

என்றுரைப்ப நன்றென்று எடுத்தவாள் ஆங்கெறிந்தான்
குன்றமணி மாடக் குலக்கோயில் - சென்றணைமேல்
வீறிருந்தான் ஏழுலகும் வெண்குடைக் கீழாண்டபெரும்
மாற்றல் உடையான் அயர்ந்து....1641

ஏணிவரு மென்மகனை இன்னே இருந்தயிலத்
தோணி வளர்த்துகெனச் சொற்றிருப்ப - ஆணைகொடு
புக்கநெடுந் தூதர் புகுந்தார் பொலன்கழலான்
பக்கநின்று சொற்றார் பணிந்து....1642

எத்திக்கும் உள்ள இகலரக்கர் ஈண்டியுளார்
நெய்த்தக்க சோதி நிமிர்வேலாய் - மொய்த்தக்க
உன்னூர் இடம்போதாது ஊங்குநீ காண்டியென்றார்
மின்னுர் எயிற்றார் விரைந்து....1643

மகனிறந்த அத்துயரம் மாற மகிழேறக்
ககனடைந்த சேனை தனைக்கண்டான் - அகனடைந்த
தெண்டிரையோர் ஏழும் ஒருவழியே சேர்ந்ததுகொல்
விண்டுரைப்பீர் என்றான் வியந்து....1644

தானவர்தம் யாகந் தனிற்பிறந்தார் தாமநெடுந்
தானவரை வென்று தருக்குற்றார் - தானமலை
மோகத்தோடு உண்பார் முனிந்துழியின் மூரிநெடுஞ்
சாகத்தீ வத்தரிவர் தாம்....1645

அவர்குசையின் தீவத்து அமர்ந்தோர் அரிய
பவமுழுதுஞ் செய்து பயின்றோர் - புவனம்
உலவிப்பேர் உற்ற உயர்வரங்கள் உள்ளார்
இலவத்தீ வத்தர் இவர்....1646

அண்றிற்றீ உற்றோர் அவர்பவளத் தீவுறைவோர்
மன்றன் மலையத் திடைவதிவோர் - சென்றறியா
புட்கரத் தீவுற்றோர் புகழிறலித் தீவுரைவோர்
இக்கண் உறுவார் இரைந்து....1647

காலனையும் வென்று கணித்தார்பெருஞ் சூலமுளார்
ஆல மனைய அடல்திறத்தார் - சீலமொடு
நன்னறமு நல்லருளு நான்மறையின் நல்லொழுக்கும்
தின்று வளர்ந்தார் சினந்து....1648

எண்ணூவது தீமை இயற்றுவது வன்கொலைகள்
உண்ணுவது கள்ளோடு உயர்நரரூன் - நண்ணலராய்க்
கொள்ளுவது வானவரைக் கூறுங்கால் அல்லொழுக்கம்
விள்ளுவது காம வெறி....1649

ஆழி வறளக் குடிப்பார் அதுவன்றி
ஏழு மலையும் எடுப்பார்மேல் - ஊழிநெடுங்
காற்றெனவே செல்வார் கனல்போல் உருத்தெழுவர்
மாற்றலருக் கஞ்சார் மனம்....1650

இத்திரத்தர் இச்செயலர் இத்தகையர் இப்பெயரர்
இத்தரத்தர் என்ன இயலிசையார் - முத்தமிழின்
நற்றுறைகள் தேர்தருநல் நாவலரும் சொல்லரிது
மற்றிது என்றார் மதித்து....1651

இத்தகைய சேனைஇதற்கு எல்லைஎவன் என்றுரைப்ப
ஒத்தவெள்ளம் ஓரா யிரமுடைய - உத்தமனே
மூலமாத் தானையிது முன்னுதிநீ என்றுரைத்தான்
ஆலம்போல் மெய்யுடையார் ஆங்கு....1652

நீண்டபெருஞ் சேனை நெடுந்தலைவர் தம்மையின்னே
ஈண்டழைத்தி என்ன இசைந்தேகி - ஆண்டணைந்து
சொல்லுதலும் வந்து தொழுதார் தொடுகடலின்
எல்லையிலா வீரர் எழுந்து....1653

வந்தடியில் தாழ்ந்த வயவரைத்தன் மாடணைமேல்
முந்திருத்திச் சொல்லும் முறைமொழிந்து - நுந்தமது
மக்களுமற் றோரும் வலியரோ வென்றுரைத்தான்
திக்கனைத்தும் வென்றான் தெரிந்து....1654

பேயிருக்கும் ஈமப் பிரானருளார் திண்புயத்து
நீயிருக்கச் செல்வ நிறைந்திருக்க - ஆயும்
வரமிருக்க எண்ணுங்கால் மற்றோர் குறையுண்டோ
உரமிருக்கும் வேலுடையாய் ஊங்கு....1655

நின்மனம் வேறாக நெடுந்தமரும் இன்னலுறற்கு
என்மூலம் என்ன இராவணனும் - பொன்மூலம்
உற்றதுவும் மானிடவர் ஊக்கமுந்தன் சேனைவளஞ்
செற்றதுவும் சொற்றான் திகைத்து....1656

நன்று நமதூக்க நரர்கொலோ நாகரையும்
வென்றவரைக் கொன்று விருதுற்றார் - என்றுரைப்ப
வன்னியென்பான் நோக்கியந்த மானிடவர் ஊக்கமென்
பன்னுதிநீ என்றான் பரிந்து....1657

அப்பொழுது மாலியவான் ஆற்றலுடை யாயரிது
எப்பொருளுண் டாங்கவருக்கு ஏழுலகில் - துப்புடையான்
என்றுரைக்கும் வாலி எறுழ்மார்ப கம்பிளந்து
கொன்றுயிரைத் தின்றதொரு கோல்....1658

விற்கரனை ஆதியரை வீட்டியறும் வெற்பெனவே
சொற்கரனை நீட்டித் தொடர்பிறைநேர் - பற்கவந்தன்
விண்ணுலகஞ் சேர விடுத்ததுவும் வேரியந்தார்க்
கண்ணபிரான் வில்லொன்றே காண்....1659

ஊழியனல் அன்ன ஒருகணையால் வெந்ததொரேழ்
ஆழியென நீவிர் அறிந்திலிரோ - பாழியான்
வார்ந்ததனித் தெய்வ வரிசிலையன் றிற்றவொலி
தேர்ந்திலவோ உங்கள் செவி....1660

மற்றினிஎன் அம்மாஓர் வானரம்வந்து இவ்விலங்கை
உற்றவரை வீட்டி ஒருங்கவிய - முற்றெரிவைத்து
அக்கனுடல் தேய அரைத்துவரி ஆம்கடல்தாய்ப்
புக்கதுவே கண்டீர் பொருது....1661

அளவறியா ஆழிக் கணை அமைத்ததையா
விளையறிவோ முக்கு வியப்பன்று - உளவறிந்து
வேண்டுவன நல்கும் வியன்மருந்து கொண்டிம்பர்
மீண்டதுவே அன்றோ வியப்பு....1662

இத்தனையுஞ் சீதை எழிலால் விளைந்ததினி
அத்துவரெஞ் செய்கை அறிந்திலனென்று - உய்த்ததிறன்
மாலியவான் சொல்ல வடித்துணர்ந்து வன்னியெனும்
ஆலமனான் சொல்வான் அவண்....1663

எத்தனையோ சேனைவெள்ள ஈண்டிறப்ப ஏன்றுபொரற்கு
உய்த்துணரா தென்னை உரைத்தியென - இத்தலையில்
நாண்தடுப்ப நின்றேன் நரர்தம்மேல் நற்றாராய்
ஈண்டுபொரற் கென்றான் எடுத்து....1664

என்றுரைப்ப வன்னி எழுந்தவரை இப்பொழுதே
கொன்றுனக்கு வாகை கொடுப்பலென - வன்திறல்சேர்
ஆனைபரி மாவொடுகால் ஆள்இரதம் ஆதிநெடுஞ்
சேனையொடுஞ் சென்றான் செறிந்து....1665

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.21. மூலபலம் வதைப் படலம்

காலபலம் உந்தக் கடுக்கண்டன் வெற்பெடுத்தோன்
மூலபலம் முந்த முடுக்கியே - நீலமுகில்
பெற்றதிரு மேனிப் பிரான்அருளார் சேனையின்மேன்
மற்றொர்திசைச் சென்றான் வயிர்த்து....1666

செம்பொற் பராகஞ் செறியலங்கல் திண்புயத்தர்
உம்பர்ப் பராகம் உறநடப்பார் - கம்பமத
மால்யானை ஆயிரஞ்சேர் வன்மையினார் வாளரவம்
போல்வார் உயிர்ப்பார் புகைந்து....1667

அரவத்திண் கச்சுடையார் அங்க மலைபொங்கும்
அரவச் சிலம்பர் அறுகால் - விரவித்தேன்
மட்டார்ந்த மாலை வயமார்பர் வாள்வயிரக்
கட்டார்ந்த தோளுடையார் கள்....1668

மல்லிட்ட வல்விலங்கும் வானிட்ட மால்வரையும்
பல்லிட்ட துக்கும் பசியுடையார் - அல்லிட்ட
நெஞ்சத்தார் அஞ்சா நிலையுடையார் நீளமர்வாய்
வஞ்சத்துச் செல்வார் வயிர்த்து....1669

பல்லா யிரஞ்சிரங்கள் பல்லா யிரங்கரங்கள்
பல்லா யிரவரத்தின் பாடுறுவார் - எல்லார்ந்த
கூன்பிறையை வாய்முகத்துக் கொண்டனைய கூரெயிற்றர்
ஊன்பிறங்கு நாவார் உவர்....1670

கொடியுங் குடையுங் குலவீ மீதோங்க
இடியுங் கடலும் எனவே - வடியியங்கள்
ஆர்த்தெழவே நாற்றிசையும் அண்டகடா கமெலாம்
போர்த்தெழவே தூளிப் புகை. ...1671

ஆர்த்துறுவர் விண்மேல் அதிர்த்துறவர் அண்டமுகடு
ஈர்த்துறுவர் தீயின் எதிர்ந்துறுவர் - வார்த்தையிடி
என்னவே பேசி இடுத்துறுவர் ஏற்றவரைத்
தின்னவே பார்ப்பர் சினத்து....1672

கொங்கிருந்த கோலக் குழல்கயல்கண் கொம்பனையாள்
பங்கிருந்த ஆதிப் பரம்பொருளை - வண்கயிலை
மால்வரையோடு ஏந்தும் மணித்தோளான் தன்னையொரு
கால்வலியான் என்பார் கணித்து....1673

கையுங் கழலுங் ககனம் வரைநீண்ட
மெய்யுங்கண்டு ஏங்கி வெருக்கொண்டார் - உய்யும்வகை
எங்கனே என்ன இரிந்தார் இமையோரச்
சங்கரனை உற்றார் தளர்ந்து....1674

மண்ணளவு போதா வரம்புடையர் ஆதலினெம்
விண்ணளவும் போத விரைகுவார் - எண்ணிடவும்
உண்டோ இடமிங்கு உளதேல் உரைத்தியென்றார்
விண்டேகு மாங்கண் விரைந்து....1675

எத்தனையோ கோடி இராக்கதர்கள் ஈண்டினரம்
மத்தரைநேர் கண்டு மனந்தளராது - இத்தலைகண்டு
எய்யுமோ வாளி எடுக்குமோ வன்சிலைதான்
செய்யுமோ வீரச் செயல்....1676

என்றுரைப்ப அஞ்சகிலீர் இப்பொழுதே அன்னவரைக்
கொன்றமலன் வாகை கொடுக்குமென - அன்றமரர்க்கு
ஓதினான் மங்கைக்கு ஒருபாகந் தானளித்தோர்
பாதியாய் நின்றான் பரிந்து....1677

ஊழி முடிவில் ஒருங்குகோர் உற்றகடல்
ஏழுமென வந்த இரும்படைகண்டு - ஆழியவெண்
திக்கிரிந்த ஆலந் தெரிந்திருந்த தேவரென
மற்கடங்க ளம்மா மருண்டு....1678

பாதவத்தும் விண்டொடர்ந்த பாதவத்தும் பாங்குறுதண்
பூதரத்துக் கந்தரத்தும் புக்கசில - ஏதினிநம்
ஆவிக் குறுதியென அம்பரத்தே புக்கசில
வாவிப் படிந்தசில வாம்....1679

வெங்கதிரோன் சேயும் விறலனும னாந்தகையும்
அங்கதனும் அல்லார் அனைவோரும் - பொங்கிஎதிர்
ஓடுதலுங் கண்டிதென்கொல் உற்றதெவன் என்றமலன்
நாடினான் செவ்வே நகைத்து....1680

கண்ணளவால் நோக்க அருமையே காணுங்கால்
விண்ணளவும் மண்ணளவும் வேண்டுமே - எண்ணிலிதற்
கோமாறு உள்ளமெங்கன் உற்றதிலை என்றுரைத்த
பூமான் எனையாள் புயல்....1681

ஆழி வரையிடத்தும் அப்புறத்துங் கீழமைந்த
ஏழிடத்து நின்று எழுந்ததிவை - ஊழ்வலியால்
வந்ததெனச் சொல்லி வணங்கினான் மாதவஞ்சேர்
சிந்தனையான் வீடணனுந் தேர்ந்து....1682

பார்த்தறிதிர் இந்தப் படைச்செயலை என்றமலன்
சோர்த்திரியு நந்தத் துணைப்படையை - வார்த்தையினில்
மீட்சிபுரி கென்ன விரைந்தான் விறல்புனையு
மாட்சிமைசால் வாலி மகன்....1683

என்னோக்கி என்செய்தீர் என்முகநீர் நோக்கியொரு
சொன்னோக்கி ஏகுமனச் சொற்றிடலும் - பின்னோக்கி
எம்முயிரைக் காத்து இனியழையேல் என்றகன்றார்
தெம்மடரச் சோர்வார் திகைத்து....1684

இளவரசன் என்னு மிரும்பெருமை எண்ணும்
உளமுடையார் மீள ஒருங்கு - வளனமைந்த
உத்தரவாய் ஓர்வரையை உற்றான் அவருடனே
சித்தமகிழ் வாலிதரு சேய்....1685

பார்த்திலைநீ கொல்லோவிப் பார்முழுதும் விண்முழுதும்
ஆர்த்துவருந் தானை அவதியினை - நீர்த்தரங்க
வாலுகத்தின் எண்ணுடையார் வன்மையினில் வானயனார்
காலனுக்கு மஞ்சார்கள் காண்....1686

ஆறுபடச் செங்குருதி ஆகமெலாம் அப்புமழை
ஊறுபட எய்த சிலையொருவன் - மாறுபட
வெஞ்செருவில் செய்த வினைமறத்தற் குண்டோயாம்
குஞ்சரநே ராவாய் குறித்து....1687

சொல்லுவதென் சாலத் தொழுதேந் தொடர்ந்தெமைப்போர்
அல்லலுறச் செய்வது அறமன்றெனவே - எல்லவரும்
அஞ்சலிசெய் தேத்த அறிவுடைய சாம்பனைநீ
எஞ்சினையென் என்றான் எதிர்ந்து....1688

மருத்தமைய நல்குமனு மானனையாய் வன்மை
இருத்தலிலா இங்கிவரை எண்ணித் - திருத்துதனின்
பேற்றுரிமை யாகப் பிழைத்தனைநீ என்னிலுயர்
ஊற்றமெவன் ஐயா உனக்கு....1689

தந்தாரை ஆவி தளருங்காற் தஞ்சமென
வந்தாரை நீங்கி வரும்வாழ்வில் - முந்தேகி
ஏன்றிரந்தோம் என்னில் இரும்புகழே என்றுரைத்தான்
வாய்ந்ததிறல் வாலி மகன்....1690

சென்னாளில் வீரர் எனச்செப்புவோர் தம்மிலையா
என்னால் அறியாதார் யாவரே - மன்னோதப்
பாற்கடற்தண் சேர்ப்பன் பதுமன் சிவனென்னும்
மூப்பரையுங் கண்டேன் முகம்....1691

வாலியினும் ஆற்றல் வலிமிகுந்த மால்வீரர்
காலமும்வெம் போருங் கணித்தறிவேன் - ஆலநிகர்
ஆவார்தம் வன்மை அவர்க்குண்டோ என்றுரைத்தான்
தேவா எமையாள் திறத்து....1692

என்றுரைப்ப அங்கதன்யா மெல்லாரும் இப்பொழுதே
சென்றிருப்ப தல்லால்யாஞ் செய்வதென்னே - நின்றிருந்து
காண்டுமென மீண்டான் கவிப்பெரிய தானையொடு
நாண்தொடரச் சாம்பன் நடந்து....1693

ஆய பொழுதில் அமலன் இளையோனை
நீயறியா துண்டோ நிகழ்த்துங்கால் - மேயநெடும்
போர்த்தானை அம்பாற் பொடிசெய்வல் போய்ப்புறம்
காத்தாள்க ஐயா கணித்து....1694

மொய்யமரில் வல்ல முடிபத் துடையான்போர்
செய்யுமாறு எண்ணியவண் சேர்ந்தக்கால் - உய்யும்வகை
உண்டோநம் சேனைக்கு உடலறிந்து ஓம்புகநீ
என்றான் உலகுக்கு இறை....1695

நன்றெனவே ஆய்ந்திளையோன் நண்ணுங்கால் நல்லனுமான்
ஒன்றுளத்துக் கொள்க உரவோயென் - குன்றனைய
மற்புயமீ தேறி மலைகநீ என்றுரைத்தான்
அற்புதனைப் போற்றினான் ஆங்கு....1696

மஞ்சனையாய் நின்போல் வழங்கற் குரியார்யார்
தஞ்சமாய் நிற்போர்யார் சாற்றுங்கால் - வெஞ்சருவில்
உன்னாற் செயற்கரியது ஒன்றுண்டோ வாயினுமென்
சொன்னோக் குதிநீ துணிந்து....1697

மல்லுற்ற வீர வரையொத்த மற்புயத்தாய்
அல்லுற்ற தென்ன அரக்கர்பிரான் - கொல்லுற்ற
காயரா வென்னக் கடிதுறுமேல் நம்சேனை
நீயிரா தென்னா நினை....1698

வானுற்ற செல்வ வரம்பெய்தி வண்குடைக்கீழ்த்
தானுற்ற காவற் தலைவேந்தன் - தேனுற்ற
புத்தமுத மாந்திப் பொலிதருதல் யார்தரும்
அத்தவுன்னால் அன்றோ அது....1699

என்றமலன் கூற இதுவேபணி என்ன
சென்றனன்திண் மாருதியுஞ் சேர்ந்துடனே - நின்றவலிச்
சூரியன்சே யாதிநெடுந் தோள்வீர ரும்அடைந்தார்
ஆரியன்றன் சொல்லால் அவண்....1700

வண்கவியின் தானையொடும் வாளினையோன் சென்றதற்பின்
ஒண்கலசந் தாங்கி ஒளியார்ந்த - திண்கரத்து
வில்லேந்தி நின்றான் விடுசூலஞ் சக்கரம்வேல்
மல்லேந்துந் தோளார்முன் மால்....1701

மேன்முகமார் கற்பகத்தார் விண்ணவரும் மெய்மொழியும்
நான்மறைதேர் அந்தணரு நாவலரும் - நூல்முறையால்
வென்றிடுக ஐயன் விரைந்தெழுந்த தானையெலாம்
பொன்றிடுக வென்றார் புகழ்ந்து....1702

உலகழியுங் காலத்து உருத்திரனே யாதி
அலகில் உயிரளிக்கும் ஆற்றல் - வலனமைந்த
தன்னுருவங் கொண்டு தனிப்போர் தொடங்கினனப்
பொன்னுருவப் பூங்குழலான் போந்து....1703

வில்லோடு தோன்றுமொரு மேகம்போல் நின்றவனை
மல்லோடு தோளார் மலைந்தார் - எல்லார்
முடங்குளைய ஏற்றை முழுமதத்த நால்வாய்
அடங்கலுஞ்சென் றேன்றதென ஆங்கு....1704

ஆகா ஒருமனித னாம்கொலிவன் அண்டமெலாம்
ஏகா இமைப்பில் எதிர்த்துவருஞ் - சாகா
வரம்பெற்ற நந்தம் வலியறிந்து நின்று
கரம்பெற்றான் வில்லென்றார் கண்டு....1705

மண்ணுந் திசையும் வளர்கடலும் மாருதமும்
விண்ணுங் கனலும் வெருக்கொண்ட - தண்என்
இணர்த்துழாய் மாலை இராமன்கை வில்லின்
குணத்தொனியால் மன்னோ குலைந்து....1706

உடனடுங்கி மெய்வியர்வும் ஓட விழிசோர
குடனடுங்கி உள்ளங் குலைந்தார் - அடலமைந்த
தீரராய் விண்ணுறையுந் தேவரையும் வென்றபுய
வீரராய் உள்ளார் வெருண்டு....1707

மருண்டசில ஆவி மடிந்தசில மண்மேல்
உருண்டசில நஞ்ச முண்டதொத்தே - வெருண்டசில
மெய்யுங் கழலும் விதிர்ந்தசில வேழமொடு
கொய்யுளைய கிள்ளைக் குழாம்....1708

முத்தமிழுந் தேர்ந்த முழுநாவலர் வசையே
வைத்த கவிபோல் மலரயனார் - உய்த்ததிறல்
கோவம்போல் உண்மைக் குலமுனிவர் நான்மறையோர்
சாவம்போல் எய்தான் சரம்....1709

வானுந் தரையு மலையு மலைவளைந்த
கானுந் திசையுங் கணையாக - நூன்முறையே
ஐயன் எனையாள் அழகன் அருள்மழைநேர்
மெய்யன் விடுத்தான் விரைந்து....1710

ஒருவா ளியேபல் உருவாளி யாகி
மருவார் புயங்கள் மலைபோல் - செருவீழ
சென்றுருட்டி வேழச் சிரமாயிரம் உருட்டிப்
பொன்றுவித்த தம்மா பொருது....1711

ஆயிரந்தேர் ஆயிரம்போர் ஆனைஓர் ஆயிரமா
ஆயிரங் காலாளுயிர் வானாக்குமால் - மேயமணிச்
சங்கார்ந்த செல்வத் தடத்தலர்செந் தாமரையின்
கொங்கார்ந்த நாடனொரு கோல்....1712

மத்தகத்துப் புக்குருவி வாலதியுங் கொய்துதிர
மொய்த்ததுமா றக்கடனீர் மூழ்குமால் - சித்தசனை
முந்து கமலாலயனை மூதண்ட கோடிகளைத்
தந்தபிரான் தந்த சரம்....1713

காலறுக்கு வீரர் கழலறுக்குங் கண்டகர்தந்
தோலறுக்கும் நீண்ட தொடையறுக்கும் - நீலநிறப்
பண்கரும்பு நாள்விரும்பும் பாடலொடு பாடலியுண்
தண்குவளை நாடன் சரம்....1714

தேர்கோடி வாசித் திரைகோடி செம்முகத்திண்
கார்கோடி நூறிக் கனிக்குமா - ஏர்கோடா
அண்ணல் உமையாட்கு அரும்பொருளென் ஆண்டவன்சீர்க்
கண்ணபிரான் ஏவுங் கணை....1715

முடியறுக்குங் காமர் முடியறுக்கு மொய்ய
அடியறுக்குங் கையறுக்கும் ஆனைக் - கொடியறுக்குங்
கந்தரங் காருற்றோன் கடுங்கார் முகமுறித்த
கந்தரத்தோள் நாதன் தொடை....1716

ஏதிங் கிவன்ஒருவன் எண்ணிறந்தோர் தம்மைநொடிப்
போதிடையிற் செற்றான் புரதகனன் - ஆதிநெடுந்
தேவருக்கும் எட்டாத் திருமால் இவனென்பார்
காவருக்கம் வென்றவரக் கர்....1717

ஆரேனு மாக அமர்கருதி அம்மவினி
வாராரை ஏத்தல் வலியாமோ - நேரே
செயம்வருக அன்றேல் செயமொழிக என்ன
வயவரெதிர் ஏற்றார் மலைந்து....1718

பூந்தா மரைமேல் பொருகயல்சேர் நன்னாடன்
நேர்ந்தாரை நேர்ந்த நிலையிலே - ஆய்ந்தாய
அம்பினால் அட்டான் அருமறையும் வானுலகும்
இம்பரும்வாழ் வோங்கி இட....1719

மாய்ந்தார்பின் மாயா வரமுடையார் வன்னிபோல்
ஆய்ந்தார் அமருக்கு அரியனையார் - காய்ந்தவழற்
கண்ணாளர் வஞ்சங் கரவழுக்காறு ஆதியுள
எண்ணாளர் ஏற்றார் எதிர்ந்து....1720

கைப்புரத்து முன்னங் கழற்புரத்துங் காரனைய
மெய்ப்புரத்துஞ் சேந்த விழிப்புரத்தும் - எப்புரத்து
தானொருவ னாகநெடுஞ் சாரிகைவந் தான்கடல்வாழ்
மீனமுத லானான் விரைந்து....1721

ஓரொருவர்க் கோரொருவன் ஆகிஉல கம்புரக்கும்
ஆரியனங் காற்றும் அமர்த்தொழிலைப் - பாரகத்தாங்கு
ஆதியர வேசனிரண்டு ஆயிரநா வாலுமறிந்து
ஓதவொளி தாமோ ஒருங்கு....1722

தலையறுத்து வேகநெடுந் தாளறுத்து வெண்பற்
கலையறுத்து வாளங் கதமார் - மலையறுத்து
வெங்கையறுத் தேந்தும் விறலழித்த தன்றியுடல்
தங்கியதுண் டோவச் சரம்....1723

கார்வாளி வெய்ய கனல்வாளி கட்செவியின்
தார்வாளி வெய்யோன் தனிவாளி - நீர்வாளி
கால்வாளி முக்கண் கதிர்வாளி கட்கமல
மால்வாளி எய்தார் மலைந்து....1724

தெய்வப் படையெவையுந் தெய்வப் படையதனால்
எய்தப் பொழுதே இடையொழித்தான் - செய்முற்றும்
கொங்கேறு செல்வக் குளமுங் குளக்கரையுஞ்
சங்கேறு நாடன் தடுத்து....1725

வேலறுத்து வாளறுத்து வில்லறுத்து வேகநெடுங்
காலறுத்து நீண்ட கரமறுத்துச் - சாலும்
வரமறுத்து வாயறுத்து வஞ்சகர்தம் மாலைச்
சிரமறுத்தான் ஐயன் சினந்து....1726

வில்லெடுத்தால் வில்லறுக்கும் வேலெடுத்தால் வேலறுக்குங்
கல்லெடுத்தால் கல்லறுக்குங் காணுங்கால் - மல்லெடுத்த
மெய்யுடையார் செய்யும் வினையொழிந்தா ராய்இனிதின்
கையறுக்கும் ஐயன் கணை....1727

வைவதப• வாயு மலைநேர் பெரும்புயமும்
எய்த கரமும் இரும்படையுங் - கொய்தபணை
அள்ளற் கமலத்து அரசவன்னங் கண்படுக்கும்
வெள்ளத் திருநாடன் வேல்....1728

பட்டொழிந்த தல்லாலப் பாவியர் பல்படையால்
இட்டமுறச் செய்தது இலைஒன்றும் - முட்டியெதிர்
புக்கெதிர்ந்த தானையெலாம் பொன்னுலகம் போயினவே
முக்கட் படையான் முறிந்து....1729

மேலுற்ற சோரிநெடு வெள்ளத்து வெங்கையொடு
காலற்று வீழ்ந்துழலுங் கைவரைமேல் - மாலுற்ற
வள்ளழுங்காய் ஏந்துபுனல் மந்தரம்போல் ஆடியது
தெள்ளுமணிப் பொற்சிகரத் தேர்....1730

மட்டுவிரி வண்துளப மாயோன் விடும்பகழி
பட்டுருண்ட பொற்றேர் பரியோடு - நெட்டுடலத்து
அம்பினொடுங் காலற்று அழுங்குறா ஆங்குருண்ட
கும்பகன்னன் என்னக் குதித்து....1731

ஆட்டுதிரை வெங்குருதி ஆழ்கடலின் ஈர்த்தோட
கோட்டுதிரை ஆடைக் குலமணித்தேர் - ஈட்டுமணிச்
சங்கவள வாரியிடைத் தாரிதையோடு ஏகுநெடு
வங்கமெனச் செல்வம் மறிந்து....1732

அய்யன் பகழி அடரமீ துற்றகொடி
வையம்வைய மாகி மறிந்ததே - சையத்
தறையொழிந்து மீதுயரத் தாம வைரத்தால்
இறையொழிந்து வீழ்ந்த என....1733

மாலறிந்து விட்ட வசும்பிழம்பார் வன்கணையால்
தோலிருந்து நின்றநெடுந் தோலெலாம் - பாலனைய
வாட்கைக் கமலவரி நெடுங்கண் ஆயிரத்தோன்
பூட்கைக் கடகரியே போல்....1734

எண்ணத் தொலையா இகல்வாளி ஊடுறுவும்
புண்ணில்செஞ் சோரி பொழிந்தவால் - வண்ணமதி
மாமாரி யற்றுநெடு வானுலவும் மாமேகத்
தீமாரி பெய்த தென....1735

வெள்ளத்திரைச் சோரி வேலா வலயத்துப்
புள்ளிக் கதிர்வான் பொலிசெவ்வான் - உள்ளுற்ற
தண்பிறையில் தோன்றும் தனிமும் மதப்புழைக்கை
வண்பிணர்க்கால் ஆனை மருப்பு....1736

பாம்பணைப்புத் தேள்தன் படுகணைப் பாய்ந்தபுழை
யாம்பிலனிற் சோரி யடல்வாரி - காம்பசலத்து
ஓங்கு மதவேழ உடற்புரவி உட்கழிய
வாங்குவன வேழ வரை....1737

பாட்டுச் சுரும்பர்ப் பசுந்துழாய்ப் பச்சைமுகில்
வீட்டுக் குரியோன் விடுங்கணையால் - ஆட்டமுறும்
வீசுதிரைச் சாகரத்தில் வீழ்வனமற்று ஆங்குமணித்
தூசிநிரை வெள்வால் துணிந்து....1738

சேற்றுஞ்செஞ் சோரித் திரையோடுஞ் சென்றனவோர்
வேற்றுமையின் றாக விதியெழுவாய் - மாற்றமற
மண்ணுக்குள் ஆன்ற வயிற்பிறந்த வண்ணமணிப்
பண்ணூக்கு வாவும் பரி....1739

சென்னிறத்து நொய்யநிணச் சேற்றகத்துத் தோன்றுநெடு
மன்னிறத்து வீரர் வதனமெலா - நன்னிறத்தால்
ஏடலர்ந்த செய்ய இரும்பழனத் தம்புயத்தின்
காடலர்ந்த தொப்பாங் கலந்து....1740

இழியுங் கிரியருவி என்ன உடலெங்கும்
பொழியுங் குருதிப் புனலைக் - கழிய
நடிப்பனவாங்கு உற்று மதநால்வாய்க் கைத்தூம்பால்
குடிப்பனவெம் பேயின் குழாம்....1741

தொடுக்கும்அடல் வாளித் தொடையறுத்து மண்மேல்
அடுக்கும் பிணக்குன்று அடையப் - படுக்கின்ற
மேகத்தின் மொய்த்து விளங்கினஊன் உண்டியங்கும்
காகத்தின் ஈட்டங் கலந்து....1742

இத்தகைய வாகி இறந்தார் ஒழிந்தோர்கள்
எத்தகையால் வேறும் இவனையென - மொய்த்துப்
படைக்கலங்கள் வீசிப் படர்ந்தார் பல்கோடி
விடைக்குலங்கள் என்ன வெகுண்டு....1743

வந்தவரை எல்லாம் வடிக்கணையால் வானுலகம்
முந்தவரின் முந்த முடுக்கினான் - எந்துயரம்
எல்லாம் அகன்றவென்றே ஏத்தினார் ஆங்கிமையோர்
சொல்லார் முனிவர் துதித்து....1744

கோடிபன்னீர் ஆயிரமாக் கொண்டபடை மாளவுடல்
நாடுமுடற் குறையொன் றாங்கயுத - கோடியுற
காரைமுனிக் கண்டை கணீரென்னுங் கண்டைதிரி
ஓரைவிடா தாடினவால் ஊங்கு....1745

தேவரென்கோ மீளாத் திறஞ்சால் புடையதனி
மூவரென்கோ மூவர் முனிவரென்கோ - பூவரென்கோ
வேயுடைய வல்வில் விமலனைக்கண்டு ஏத்துகின்ற
வாயுடைய ராவார் மகிழ்ந்து....1746

மூலபல வெம்போர் மொழிந்தா முடியொருபத்து
ஆலநிகர் வெய்யோன் அடற்சிலையோன் - ஏடலர்
குருளார்க்குக் காமனெனக் கூறிளையோன் தன்மேற்
செருவாடல் சொல்வாந் தெரிந்து....1747

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.22. வேலேற்ற படலம்

தேர்கோடி வாசித் திரைகோடி செந்தறுகண்
கார்கோடி வீரர் கணங்கோடி - பார்போத
வந்தான் நெடுந்திசையும் வானகமும் வென்றதனிச்
செந்தாரை வாளான் சினந்து....1748

வந்தனன்வெம் போர்க்கு வலியானென் றெண்ணிவிறல்
வெந்திறலால் வீரர் விரைந்தார்த்து - முந்த
அணிவகுத்து நின்றார் அடற்சிலைகை ஏந்தி
திணிவகுத்த தோளான்முன் சென்று....1749

அரக்கர் படையும் அடலமைந்த வீரக்
குரக்கின் படையுங் குருதி - மரக்கலஞ்செல்
வாரி யிடைப்புகுது மாறமர்செய் தாரவர்தம்
வீரமெவர் சொல்வார் விரித்து....1750

காலாற் ககனமுமிக் காசினியுங் கண்டளக்கும்
வாலால்ந கத்தால் மயிர்ப்புறனால் - மேலான
ஆற்றல்தருந் தோளால் அனுமான் அடற்சிகையார்
கூற்றெனவே கொன்றான் குமைத்து....1751

கூற்றுங் கரமுங் குலைத்தேங்கக் கோகனகஞ்
சேற்றுள் மலருந் திருநாடன் - சாற்றரிய
மாயங்கள் வல்லாரை மாய்த்தான் வளரும்விடம்
தோயுங் கணையால் சுளித்து....1752

கம்ப மதயானைக் கணமுங் கடும்பரியுஞ்
செம்பொற் சிகரச் செழுந்தேருந் - தும்பைபுனை
வீரரும்மண் ணாக விழுந்ததுகண் டான்விழியால்
காரரும்புத் தோளான் கனன்று....1753

தாழ்க்கிலிறை நந்தநெடுந் தானையெலாம் மட்கிறையாய்
பாழ்த்துவிடு மென்று பரபரப்போடு - ஆர்த்தநெடுந்
தேரோட்டி வந்தான் சிலையிளையோன் மேலமரர்
போரோட்டி வந்தான் பொர....1754

ஏற்றாரை ஏற்ற இடத்தே இருங்குருதிச்
சேற்றாறு துஞ்சத் திறலரக்கன் - மாற்றில்
வலிமுகங்கள் என்று வழங்கு பெயர்மாறச்
சிலிமுகங்கள் எய்தான் சினந்து....1755

அம்புயத்தின் போதில் அறுகால் கருவுயிர்க்கும்
வம்புலவுஞ் செல்வ வளநாடன் - தம்பியடல்
மாருதிதன் தோளெனும்பொன் மாகத்தேர் ஏறிநின்றான்
காரனையான் தன்மேல் கதழ்ந்து....1756

சதகோடி அன்ன சரங்கறுமை சான்றோன்
சதகோடி ஏவச் சமர்வாய்ச் - சதகோடி
அம்பினால் அட்டான் அவையனைத்தும் ஆரியற்குத்
தம்பியென நின்றான் தகைந்து....1757

எய்தகணை முற்றும் இருத்தமைகண்டு ஏதமுடன்
வெய்தின் இலக்குவன்தன் மேல்விட்டான் - கொய்துணர்த்தார்
மாலைமுடி வெய்யோன் வடவானல் அத்தினிற்பல்
கோலரங்க உள்ளங் கொதித்து....1758

அவ்வம்புக்கு ஐயன் அனுங்காது அனற்சிகைசேர்
வெவ்வம்பு தொட்டு விடுத்துலகிற் - தெவ்வம்பு
வென்று வயவாகை மிலைந்தான் அலக்கணுற
அன்று புரிந்தான் அடர்ந்து....1759

நொந்தரக்கன் வேறுசில நூழிலமர் ஆற்றுதலும்
அந்தவம ரெல்லாம் அடுமுறையோர்ந்து - இந்திரசித்து
ஓதுமொழி உண்மையென ஓர்ந்தான் உமையொருபங்
காதியருள் பெற்றான் அறிந்து....1760

வானுளோர் தந்த வரஞ்சால் புடையபடை
ஆனதெலாம் ஏவில் அடுமிவனைத் - தானமுறு
மோகப் படையால் முடிப்பேன் எனத்தொடுத்தான்
மாகத்தோள் வல்லரக்கன் மற்று....1761

முக்கட் சிவனை முரணழித்த மோகமெனும்
அக்கட் படைமேல் அணுகுதலுஞ் - சக்கரம்வெண்
கோடணிந்தான் ஏறி கொடுதழித்தி என்றுரைத்தான்
மாடுறைந்த வீடணனும் மற்று....1762

பூமனையும் மற்றப் புலவரையும் பூவாளிக்
காமனையுந் தந்தோன் கடுபடையாற் - தாமமுறு
மோகப் படையை முடித்தான் முடத்தாழை
மாகத்தார் கோசலையார் மன்....1763

மற்றிவனே மாயம் வழங்கிடநம் வாழ்வனைத்தும்
இற்றதென மாமன் எடுத்தீய்ந்த - கொற்றமுறு
வேலெடுத்து விட்டானவ் வீடணன்மேல் விண்ணகமோர்
காலெடுத்து வென்றான் கனன்று....1764

மூன்று லகுந்தந் தமுழுமுதலே ஆயினுந்தீக்
கான்றுயிரைக் கோடுங் கருதுகநீ - தோன்றலிந்த
வட்டவேல் என்று வகுத்தான் வரவறிந்து
திட்டமுறும் வீடணனுந் தேர்ந்து....1765

அஞ்சலஞ்சல் என்ன அருள்வழங்கி ஆரியனும்
எஞ்சலறு பல்படைநேர் ஏவுதலும் - விஞ்சி
வருவதுகண்டு உம்பர் மருண்டார் என்னாமோ
தெரிகிலம்யாம் என்னத் திகைத்து....1766

எண்மையுல கீன்ற இறையுமோர் நாளிறத்தல்
உண்மையினி மாயாது உறும்புகழே - வண்மையொடு
காப்பாரும் என்று கருதினான் தன்மார்பம்
ஏற்பான்முன் நின்றான் எதிர்....1767

வேந்திளையோன் தன்முன் வரும்வீடணனவ் வீடணன்முன்
வார்ந்தநெடு வாலி மகன்வருமவ் - ஏந்தல்முன்
மற்கடமன் தன்முன்வய மாருதியம் மாருதிமுன்
புக்குநின்றான் வல்விற் புயல்....1768

என்னுற்ற பெற்றி இதுவென்று இமையோரும்
பொன்னுற்ற உள்ளம் பொருமினார் - மின்னுற்றது
என்னும் படைபயில்வேல் ஏந்தலகன் மார்புருவி
வென்னெழுந்த தம்மா விரைந்து....1769

வாசியொடு பாகு மடிதருமா வன்றண்டால்
வீசியிட வீடணனவ் வெய்யோன்பத் - தாசில்கணை
அங்கவன்மேல் ஏவிஅடல் மாருதிமேல் ஆயிரங்கோல்
புங்கமுற எய்தான் புகைந்து....1770

முற்றியதென் எண்ணமென முந்தினன்தன் மூதூர்வாய்
கொற்ற முறுங்குரக்குக் கோமானோடு - உற்றவர்நீ
காத்தருடி என்று கணிப்பரும் மாருதியை
ஏத்தினார் இன்னல் இற....1771

உலகளந்த உத்தமனில் ஓங்கினான் உம்பர்
தலனருளும் நன்மருந்துந் தந்தான் - வலனமைந்த
ஏற்றமினி என்னே இளையான் எழுந்துநின்றான்
மாற்றினார் வானோர் பயம்....1772

எழுந்திளையான் வீடணனுக்கு ஏதமின்றே என்னத்
தொழுந்தகையா னோடுந் துணைவில் - விழுந்தபிணக்
குன்றுங் குருதிக் குரைகடலுந் தாயமலன்
சென்றிறைஞ்சி நின்றார் தெரிந்து....1773

யாதுற்ற தன்மை அறைதிரெனச் சாம்புவனப்
போதுற்ற தன்மை புகலுதலுந் - தாதுற்ற
தண்டார் அனுமனையென் சாமிநீ என்றணைத்துக்
கொண்டான யோத்தியர்தங் கோன்....1774

மனுகுலத்தில் ஆன்ற வழிமுறையை ஐய
புனிதமுறக் காத்ததுவே போதும் - இனியுனக்கோர்
ஒப்புரைக்க லாமோ உலகத்து என்றான்கருணை
அப்பனையான் றம்பிதனை ஆய்ந்து....1775

கறையிலா வில்லுங் கணைக்கூடு மற்று
முறைநீக்கி மாருதி முனீய்ந்து - திறமார்
சமர்ச்சிரம் நீப்பானோர் தாழ்வரை மேலுற்றான்
எமர்க்குரிய ஐயன் எழுந்து....1776

கார்வண்ணன் ஏவால் கருணைபெறு வீடணனாற்
போர்வண்ணத்து இற்ற புகழ்ச்சேனைச் - சீர்வண்மை
சூரியன்சேய் ஆதிநெடுந் தோளுடைய ரானவலி
வீரியர்கண் டாருள் வியந்து....1777

விண்ணுக்கோர் எல்லை வியனுலகுக் கெல்லையொடு
எண்ணுக்கோர் எல்லை உளவெனினும் - அண்ணல்
வலனுமிழ்ந்த வெங்கணையால் மாண்ட படைக்கெல்லாம்
அலகுண்டோ என்றார் அறிந்து....1778

ஆவி ஒழித்தாரை அஞ்சுகின்றாம் ஆவியொடு
மேவுங்கால் யார்தாம் விழித்துநிற்பார் - பூவிலயன்
பொன்செய்தார்க் கொன்றைப் புரதகனன் ஆதியர்கள்
என்செய்வார் என்றார் எதிர்ந்து....1779

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.23. இராவணன் வதைப் படலம்

போர்வனத்தைக் கண்டு புலிக்குழாம் போலுடையார்
ஆர்வமொடும் ஐயன் அருகடைந்தார் - ஊர்புகுந்த
நெய்மணங்கொள் வேலான் நெடும்விசும்பு வென்றவன்
செய்திறங்கள் சொல்வாந் தெரிந்து....1780

வானகத்து மாதரைநீர் வல்விரைவில் மாசற்ற
போனகஞ்செய் கென்று புகன்றிட்டான் - ஊன்வேல்
பருந்தூட்டும் வீரர் படைக்கெலாஞ் சால
விருந்தூட்டல் செய்வான் விழைந்து....1781

ஆய பொழுதில் அடைந்தொற்றர் ஐயஇனி
ஏயஉண வுன்பார் எவர்கண்டார் - ஆயிரமாம்
வெள்ளமெலாம் ஐயன் விடுகணையால் மாய்ந்த
அ•துள்ளவா றென்றார் உளைந்து....1782

ஈதென்னே ஓர்ஆயிரம் வெள்ளமோர் முகூர்த்தப்
போதினிலே மாண்டதெனல் பொய்யன்றோ - தூதர்
உரைத்தவை சிந்தைக் கொவாதன வென்றான்தேன்
இரைத்தவாந் தாரான் எடுத்து....1783

மருங்குறைந்த மாலி இதுவார்த்தை யோஐய
ஒருங்க உலகுண் பதனையோரின் - இருங்கடல்வாய்
அத்தீயே அன்றோ அவையடங்க ஆற்றுவதக்
கத்து திரையன்றோ காண்....1784

ஆதலால் மொய்ம்புக்கு அவதியிலையா டமைத்தோட்
சீதையாஞ் செல்வத் திருமகளால் - ஓதரிய
சுற்றமுதல் வாழ்வந் தொலைத்தனைகாண் என்றுரைத்தான்
செற்றமுறக் கேட்டான் சினந்து....1785

வெம்பி யிலக்குவனை வீட்டினேன் வேற்படையா
உம்பர்அறிந் தொல்க உடற்செருவில் - அம்புயக்கண்
முன்னோனுங் கண்டு முடியும் இனிவாகை
என்னதா மென்றான் இருந்து....1786

அத்தூதர் கேட்டார் அரசவது மெய்யிமைப்பின்
மெய்த்தூதிங் குற்ற விறற்குரங்கு - மொய்த்தூதி
வண்டுளருஞ் சோலை மலைமருந்தாங்கு ஈயவற
உண்டெனவே பெற்றான் உயிர்....1787

நாடாஞ் சிவந்து நகைபிறங்க நாசியிடை
மூட்டுந் தழற்புகையும் முந்தவே - தீட்டரிய
ஒண்டாரைக் கோபுரத்தின் உம்பர்அடைந் தான்விழியாற்
கண்டான்படு போர்க் களம்....1788

மலையுருட்டி மற்று மரமுருட்டி மோதும்
அலையுருட்டி வந்தபுனல் ஆற்றில் - விலையுருட்டி
வாரார்ந்த கைமா வளமுருட்டிச் செல்குருதிப்
போராறு கண்டான் புகைந்து....1789

நாவலரை அந்தணரை நான்மறையு நன்கறிந்த
பாவலரை ஏசிப் பரிகசித்த - தீவலிய
மாந்தர்குடி யென்ன வரையிடத்தும் மண்ணிடத்தும்
வீய்ந்தவரைக் கண்டான் வியந்து....1790

தேனோக்கும் வாவித் திருமா மலர்வதியும்
மானோக்க மில்லா வலியாளன் - பூநோக்கி
மோதரனைப் பார்த்து மொழிந்தான் முடிவாக
வேதனையால் நெஞ்சம் வெறுத்து....1791

அங்கனையார் அன்றிஉள ஆடவர்கள் ஆனைபரி
தங்கு இரதமொடு சார்கென்று - பொங்கும்
முரசறைக வென்ன மொழிந்தான் முரட்போர்
செறிந்த தோளரக்கர் மன்....1792

வெள்ளச் சடில விழுப்பொருளை மெய்யுணர்வை
உள்ளத்துப் பூசை உகந்தாற்றித் - தெள்ளுமறை
அந்தணருக் கீய்ந்தான் அவாவடங்க வம்பொன்மணி
சந்தமுறுந் தூசுமுதற் றான்....1793

அம்பொற் கமலத்து அயன்பண்டு அளித்தமணி
செம்பொற் கவசஞ் சிறப்பெய்தக் - கம்பமதத்து
எட்டானைக் கொம்பு இறுத்திட்டு ஆர்த்தான்
ஒட்டாரை வென்றான் உருத்து....1794

மெய்சுவண மொத்த விகங்கபதி யொண்சிறையும்
கொய்சுவன ஆர்த்தொளிசெய் குற்றுடைவாள் - மெய்வலிசேர்
கச்சோடு சாத்திக் கழலணிந்தான் வீரகண்டை
நச்சோடு நேர்வான் நனி....1795

மந்தரத்தைச் சுற்றும் வடம்போல் மணிவலையம்
சுந்தரத்தோள் ஆரச் சுடர்முகுடம் - அந்தரஞ்சேர்
நீலவரை மேலுதித்த நீள்கதிரோன் பத்துறுதல்
போலவொளி வீசப் பொலிந்து....1796

பத்திரண்டு வெண்பிறையிற் பன்முகத்து வாய்கள்தொறுந்
தைத்ததென வெண்பல் தயங்கவே - சுத்தமுழு
மாமதியின் வண்ண மணியார் குடைநிழற்ற
காமனயர்ந்து ஏங்கவெதிர் கண்டு....1797

தானவரை ஆசைத் தலைக்கரியைத் தாக்கிவரும்
வானவரை வென்று வயவாகை - ஆனபொழுது
எத்தன்மை உற்றான் இராவணன்மற்று ஆங்கிருந்தான்
பத்துமுக மின்னப் பரிந்து....1798

அண்டம்பல கொண்டு அடுக்கியவை ஏற்றினுமேற்
கொண்டனையுங் குன்றியினிற் கோகனகன் - பண்டு
படைத்தஉல கெங்கும் பயில்வதுபல் ஆண்மைப்
படைக்கலங்கள் கொண்டந்தப் பார்....1799

அயன்விழியில் அங்கிஇனில் ஆரமுதம் தன்னிற்
பயன்பயிலும் பச்சைப் பரிதன் - வியன்வழியில்
வந்தனவிண் மண்புனல்தீ மற்றிடத்துஞ் செல்வனமா
அந்தமிலாது ஆர்த்த அது....1800

அக்கடவுள் தேரை அருச்சனைசெய்து ஆதியெனும்
மைக்களனை ஏத்தி வலங்கொண்டு - தக்கவலி
வீறடையும் விண்ணோர் வெருக்கொண்டு அகம்வெதும்ப
ஏறினான்சிங் கேறு என....1801

தேரோதை அண்டந் திடுக்கிடவில் நாண்ஓதை
காரோதை எஞ்சக் கடல்தானைப் - போர்ஓதை
மாத்தானை சூழ மருவினான் வண்கயிலை
போத்தான்தன் தோளாற் பெயர்ந்து....1802

வாசத் துளப மணிமார்ப வந்தனன்போர்
ஆசைக் கரியை அடர்தோளான் - பூசல்
வலிமுகங்கள் ஓட வழிக்கொண்டது என்றான்
சிலிமுகம்போல் வீடணன்முன் சென்று....1803

சாய்ந்தமுழு வேதந் தலையெடுப்பத் தானமுளோர்
ஆய்ந்த தவத்தோடு அறமோங்க - வாய்ந்த
செழுந்தார் அமரர் சிரமேல்கை கூப்ப
எழுந்தான் இராமன் இனிது....1804

மிக்கவசஞ் செய்யும் விழிக்கமலை மெல்லணங்கைத்
தக்கவசஞ் செய்யுந் தனிமார்பிற் - புக்குருவா
மாயையுருப் பெற்று வரிந்ததென மன்னுமணி
ஆயகவ சம்புனைந்தான் ஆய்ந்து....1805

அன்ன பொழுதில் அயன்பணியால் உய்த்தனன்செல்
மின்னுகொடி மன்னி விடுமணித்தேர் - பொன்னுலக
நாதனருள் கொண்டு நடாவிமணி வண்ணன்முன்
மாதலிவந்து உற்றான் மகிழ்ந்து....1806

ஆதி அரவாம் அகலத்தில் ஆரணங்கள்
ஓதுந் திருமால் உயரத்திற் - தாதவிழ்தார்
மாருதியாம் ஆசுகத் தில்மற்றினி யென்கூறுவது
தேரின்வளம் எல்லாம் தெரிந்து....1807

மறைவேள்வி ஓதம் மலையுலகு பூதம்
இறைவாத ஆசை இரவு - நிறையும்
புலன்கரணஞ் சோதியிரு போதணிகள் பூண்ட
வலன்பரிமாப் பூண்டதது மற்று....1808

ஆய பொலந்தேர் அணுகுதலும் ஐயனும்புன்
மாயமதோ என்ன மதிக்குங்கால் - ஆயு
முறைமொழியுந் தெய்வமுனி மொழியுந் தேற
மறைமொழிந்த தெய்வவய மா....1809

பொற்பேற மேலோர் புகழேறப் பூங்குழலார்
கற்பேற விண்ணோர் களிப்பேற - நற்பரமன்
பாரேற உண்மை பரந்தேற வேதியர்தஞ்
சீரேறவே ஏறினான் தேர்....1810

மாசிலா ஞான மணியே வழுத்தரிய
ஈசனே எங்கள் இறைவனே - நீசன்
கதித்ததலை பத்துமற காத்தருள்தி என்று
துதித்தனர்கள் விண்வாழ் சுரர்....1811

ஆரளித்த சூலத்து அயிற்படைக்கு வென்னிட்டோர்
தேரளித்தார் என்னச் சினந்திருகிக் - காரளித்த
வண்ணன்மேல் தேர்விடுக என்றான் மணிக்கயிலை
அண்ணல்மேல் அன்புடையான் ஆங்கு....1812

இன்னமும்யாம் மாயம் இயற்றியுயிர் போற்றுதல்எத்
தன்மையதாம் என்னத் தனித்தேர்மேல் - மின்னும்
வளைஎயிற்றி னோடும் மகோதரன் வந்துற்றான்
முளைமுறுவல் ஆனத்தான் முன்....1813

மாயம் வேறாக மணிநெடுந்தேர் வேறாகக்
காயம் வேறாகக் கரத்தோடுஞ் - சீயமனான்
கந்தரம்வே றாகக் கணையொன்று விட்டொழித்தான்
சுந்தரத்தோள் ஐயன் துனைந்து....1814

சூதுக்கு மாயத் தொடர்புக்குந் தோற்றரிய
தோதுக்கு நல்ல துணையான் - மோதரனை
வீட்டினமை கண்டு வெகுளிபொர வில்முகில்மேல்
ஓட்டிவந்தான் பொற்றேர் உருத்து....1815

சேனையெலாம் மாளாத் திறம்பெறுவான் ஆயினிவன்
வானையுறல் எவ்வா றெனமதித்துச் - சோனைமுகில்
என்னஅடல் வாளிமழை எய்தான் இறப்புரிந்தான்
தன்னெதிர்தான் ஆவான் தகைந்து....1816

விரிந்த கடல்வறண்டு விண்ணெலாஞ் சோரி
சொரிந்திடமெய் யூறு தொடரப் - பரிந்திடும்பல்
துன்னிமித்தந் தோன்றத் துடித்தவிடத் தோள்களெலாம்
துன்னரக்கர் எல்லாந் தொடர்ந்து....1817

இன்னிமித்த நன்னிமித்த மென்றுணர்ந்தான் ஏழ்பொழிலுந்
தன்னிமித்தம் வாட்டந் தனைக்கொள்ளத் - துன்னிமித்தம்
ஆற்றும் புகைக்கேது வாமெனவே வந்துதித்தோன்
கூற்றெனவே ஏற்றான் கொதித்து....1818

சாந்தமொடு கோபந் தருமமுடன் பாவம்
சேர்ந்த மதியோடு செறியிரவு - நேர்ந்ததனி
ஞானமொடு மாய நலத்தினொடு நன்றின்மை
தானெதிர்ந்தது ஒத்தார் தகைந்து....1819

ஆரியனாந் தண்ணத்து அவனும் மடற்காத்த
வீரியனும் வெள்ளியெனும் வெற்போனு - நாரணனும்
தந்தையுமத் தாவச் சவுரியுமே ஒத்தெதிர்ந்தார்
மைந்துடைய வீரர் மலைந்து....1820

காரசங்க ஓரேழ் கடலசங்கக் கண்ணிமையார்
ஊரசங்க அண்டம் ஒருங்கசங்க - வீரசங்கம்
ஊதினான்வாய் வைத்து ருமிடித்த ஒப்பெனவெண்
காதினான் பேரன் கனன்று....1821

அச்சங்கம் அச்சங்கொண்டு ஆர்ப்படங்க அம்பரத்தோர்
எச்சங்கமோ என்று இடையேங்க - மச்சங்கள்
அம்பரத்தில் கம்பமுற ஆர்த்ததணி யார்துளவ
வம்பெறிக்குந் தாரான் வளை....1822

இடிக்கொடியும் வீணை யெழுதுங் கொடியும்
இடித்தனஎன் சாமி இறைவன் - அடற்சிலையின்
நாணொலியும் வெய்யோன் நகச்சிலையின் நாணொலியும்
சேணிமிர்ந்த தன்றே தெளித்து....1823

கூற்றொப்ப வேகக் கொடுங்காலத்து உற்றெழுந்த
காற்றொடுப்ப வெய்ய கனலொப்ப - மாற்றொப்பில்
ஏற்றொப்ப வாளி இடைவிடா தெய்தனர்தம்
வீற்றொப்ப மேன்மேல் விரைந்து....1824

தீவாளி மேகத் திறல்வாளி செஞ்சடையோன்
மாவாளி நாக வடிவாளி - கோவார்ந்த
வெல்வாளி எஞ்சா இருள்வாளி எய்தனர்வான்
வில்வாளி யோடும் விரைந்து....1825

வானெலாம் வான வரம்பெலாம் வான்வளர்ந்த
கானெலா நீண்ட கடலெலா - மீனெலாம்
விண்ணெலாம் விண்ணுலவும் வெற்பெலாம் வெற்பகத்து
மண்ணெலாம் வாளி மழை....1826

இத்தகைமை வாய்ந்த இருவோரும் விற்பலங்கொண்டு
ஒத்தசமர் ஆற்றி உடற்றுதலும் - அத்தலைநின்
றான்மேல் உகந்தான் அருள்பெற்றான் ஆய்ந்தணிதேர்
வான்மேல் விடுத்தான் வலித்து....1827

விடுத்தவடல் வெய்யோன்அவ் விண்ணிடையே நின்று
தொடுத்த அடல்வாளி தொடர - எடுத்தபுயத்து
ஊனேறுந் திண்மை உடற்கவியின் வீரரெலாம்
வானேறி னார்கள் மருண்டு....1828

தேரோடு விண்ணிடையே சென்றதுவுஞ் சேனையெலாம்
பாரோட வாளி பரப்பியது - நேரோட
நோக்கினான் ஐயன் நொடிப்பொழுதில் மாதலிதேர்
மேக்குயர்த்துக என்றான் விரைந்து....1829

இருங்கதிரப் பொற்றேர் இரண்டில் இரண்டு
கருங்கதிர்புக் கார்த்தல் கடுப்ப - சுரும்பிமிரும்
பூந்துழாய் மாலைப் புரவலனும் போரரக்கர்
வேந்தனுமாங் கேற்றார் வெளி....1830

கோள்திரிய விண்ணோர் குலந்திரியக் கூற்றுவனன்
நாள்திரிய எங்கு நலந்திரிய - நீடுசிலைத்
தற்பரனும் அஞ்சாத் தறுகணனுஞ் சாற்றரிய
அற்புதப்போர் செய்தார் அவண்....1831

வானென்கோ வான வரம்பென்கோ மாதவஞ்செய்
கானென்கோ வெண்பாற் கடலென்கோ - மீன்மதியெல்
ஏய்ந்துலவு மண்டிலங்கள் என்கோ இகலுடையார்
வாய்ந்தசெரு வாற்றும் வலம்....1832

முண்டகத்தொண் செங்கேழ் முழுமா மலர்ப்பிரமன்
அண்டமுற்றுஞ் சென்ற தணித்தேர்கள் - மண்டுசமர்
எவ்வகைநின்று ஆற்றினர்கள் என்பதறி கிற்றிலர்விண்
எவ்வகைவா னோரும் இருந்து....1833

கொலைவழங்கும் வெம்மைக் கொடும்பகழி பத்துச்
சிலைவழங்க வெய்யோன் செறுத்துக் - கலைவழங்கும்
அய்யன் அவைதடுத்தது அன்றியமர் ஆற்றிவினை
செய்தநிலை ஒன்றுந் தெரிந்து....1834

இத்தகைய வெம்போர் இயற்றுங்கால் ஏழ்பொழிலும்
வைத்தவிசை மத்தன் வலித்திருகோல் - உய்த்தமலன்
இந்திரன்தேர் ஆர்த்த இடிக்கொடியை வீழ்த்தினனவ்
அந்தரத்தே வீழ அறுத்து....1835

ஏதரிய ஐயன் இருந்தேர்ப் பரியுடலில்
ஆர்த்த பலவாளி அழுத்தியே - சீர்த்தநெடும்
மாருதிமேற் பன்னிரண்டு வாளி மழைபொழிந்தான்
பூதரம்போல் நின்றான் புகைந்து....1836

மற்றும்பல் வாளி வழங்கினான் மாதவனை
முற்றும் மறைத்தான் முனிவோடுஞ் - செற்றமிலா
வானவரும் வானரரும் மாருதியே ஆதியுளார்
ஆனவருங் கொண்டார் அயர்வு....1837

தலைகுலைந்த வானந் தரணி முதலாம்கோள்
நிலைகுலைந்த வேதமொடு நின்ற - கலைகுலைந்த
மண்குலைந்த மேலோர் மனங்குலைந்த மாதவத்தோர்
எண்குலைந்த அந்நாள் இனைந்து....1838

மாற்றான்தன் வீரமும் அம்மாதலிதன் நோவுமுளம்
ஆற்றான் அறிந்தமரர் ஆர்ப்போங்கக் - கூற்றான
வன்கணையால் அக்கணையை மாற்றியவன் மாமணித்தேர்ப்
பொன்கணையை அட்டான் பொருது....1839

முறையிடுமால் யானை முனம்வந் தளித்த
இறைவனிவன் என்ன எவர்க்கும் - அறைதலென்
வந்திருந்தான் ஐயன் மணித்தேர் முடிமீது
மைந்தமைந்த தார்ப்பறவை மன்....1840

வில்லால் இவனையினி வேறலரி தென்றுளத்து
மல்லாடு தோளான் மதித்தடல்சேர் - பொல்லாத
தாமதம் என்றான் தனிப்படையை ஏவினனக்
கோமுதல்வன் தன்மேல் கொதித்து....1841

சிலைவருட மாறாத தீவருடஞ் செல்லின்
கொலைவருடம் பொங்குங் குருதி - அலைவருட
மற்றும் விகிர்த வடிவோடும் வந்ததந்தக்
கொற்றவனை வெல்வான் குறித்து....1842

புன்முறுவல் காட்டிப் புனமா மயின்முருந்தப்
பன்முறுவற் பாகன் படையாலக் - கொன்படையை
அட்டான் அவனும் சுரேசர் தம்படையை
விட்டான் கருணைமுகில் மேல்....1843

பொங்கிப் புவனம் பொடிபடுத்தல் போலுறலும்
அங்கிப் படையால் அவையழிப்பப் - புங்கமொரு
கோடிநூறு ஏவினனக் கொன்றைமுடி நம்பனை
பாடிவரம் பெற்றான் பரிந்து....1844

அக்கணையை அக்கணையால் ஆளுடைய நாயகனுஞ்
சுக்கல்சுக்க லாகநிலந் தூவுதலும் - பொய்க்கொடியோன்
மாதவத்தாற் பெற்ற மயன்படையை ஏவினனச்
சீதரன்மேல் உள்ளஞ் சினந்து....1845

வேந்தற்கு வேந்தன் விதியரனோடு எவ்வுலகும்
மாந்தற் கமையும் வயப்படையைக் - காந்தர்ப்பல்
என்னும் படையால் இறுத்தான் இருதுணியாப்
பொன்னுலகோர் ஏத்தப் புகழ்ந்து....1846

தாருகன்முன் கொண்டதுபல் தானவரை வென்றதுவா
னோருயிரை வென்றது உறுங்கூற்றின் - மேருகிரி
என்னநிமிர் தண்டொன்று எடுத்தான் இலக்குவனார்
முன்னவன்மேல் விட்டான் முனிந்து....1847

அக்கொடிய தண்டம் அனற்பொரியோடு ஆர்த்துறலும்
முக்கடவுள் ஆனான் முனிந்ததனைத் - தக்கபல
கோலினாற் பன்னூறு கூறாகக் கொய்தழித்தான்
காலினாற் சாடுதைத்த கார்....1848

மற்றினியென் மாயம் வழங்குபடை ஏவியிவன்
கொற்றமொடு நாளுங் குறைப்பலென - வெற்றிபுனை
மந்திரமுந் தேவும் வழுத்தினான் மந்தரத்தோள்
சுந்தரன்மேல் விட்டான் தொடுத்து....1849

சாதகமும் பேயுந் தலையா யிரமுடைய
கோதகஞ்சேர் நாகக் கொடும்பணியும் - தோதகஞ்செய்
கண்மருளும் மேகக் கணமும்வர வந்ததந்தத்
திண்மையுறு மாயாத் திரம்....1850

குடச்செவியன் இந்திரனைக் கொற்ற மொடும்வென்றோன்
படைத்தலைவர் காயம் பருத்தோன் - விடத்துவமை
உற்ற பெருஞ்சேனை உலந்தோர்கள் யாருமந்தக்
கொற்றவனை உற்றார் கொதித்து....1851

வளைஎயிற்றர் சூல நெடுவாள் முசலந்தண்டு
முளைஎயிற்றர் தீயனைய மூர்க்கர் - துளைஎயிற்று
வன்மா சுணக்கடுவில் வல்லியிடில் வந்தெதிர்த்து
கன்மாரி பெய்தார் கனன்று....1852

இத்தகைமை கண்ட இராகவன்ஈ தென்புதுமை
தொத்துறுபுன் மாயமருள் சூழ்ச்சியோ - பொய்த்தகையோன்
தோதகமோ மற்றெதுநீ சொற்றிடுக என்றிடலும்
மாதலியுஞ் சொன்னான் வகுத்து....1853

சீரியபல் நூலுணர்ந்து தேற்றரவு செய்திறனை
ஆரியன்பாற் காட்டும் அறிவிலிபோல் - பூரியனாங்
காயெரிக்கண் கார்நிறத்துக் கண்டகன்விட் டான்கடிய
மாயையிது நாதா மதி....1854

எப்பொருளால் மாயை இகல்கடப்பார் எண்தவத்தோர்
அப்பொருள்நீ ஆகில் அரியதெவன் - மைப்புயனேர்
கொற்றவா வானக் குலமணிமுன் கூரிருள்தான்
துற்றிடுமோ என்றான் தொழுது....1855

பூந்தடத்தும் வெள்ளைப் புனல்தடத்தும் பொன்மையிறால்
வார்ந்தமதுப் பாயும் வளநாடன் - ஆர்ந்தவளி
வான்அப்பு அடல்தீ மகியானான் மாற்றரிய
ஞானப் படைதொடுத்தான் நன்கு....1856

உற்ற சமயத்து உதவா உலோபநிறை
வெற்றப் படையேன் விடுத்தமெனாக் - கொற்றமுறு
நீலந் தொடுத்த நிறத்தான் நினைப்பதன்முன்
சூலந் தொடுத்தான் துணிந்து....1857

ஆரணிந்த வேணி அபிராமன் அங்கயல்போற்
கூரணிந்த வாள்கண் குயில்பாகன் - சூரணிந்த
பேயாடும் ஈமப் பெருமான் உருவோடுந்
தீயோடு வந்ததந்தச் சேண்....1858

தீயொத்த காலன் சினமொத்த திண்ணரவின்
வாயொத்த மற்றும் வலியொத்த - வீயொத்த
பங்கயன்றன் சாபப் பணியொத்த பல்படைகள்
சிங்கமனான் உய்த்தான் தெரிந்து....1859

விட்டபடை எல்லாம் விழுங்குதலும் வெய்யோன்முன்
பட்டவிருள் என்னும் பரிசறியா - ஒட்டியிது
செய்யுமா செய்கவெனத் தேற்றரவோடு ஆங்கிருந்தான்
ஐயன் எனனையாள் அரி....1860

அங்கணகல் வானத்து அமரரஞ்ச அம்புயக்கண்
மங்குளனை யானிறந்து மன்னுதலும் - பொங்குசினத்து
உங்கரிப்பப் பல்துகளாய் உற்றதுதிண் கொற்றவையாள்
பங்கணிந்தான் வீரப் படை....1861

மாதவத்தாற் பெற்ற வரத்தால்உய்ந் தாமெனவே
ஆதரத்தால் ஆர்ப்ப அமரேசர் - பாதகத்தான்
வெற்றியொடு மூவுலகும் வென்றவய வாகையின்றோடு
அற்றதென்றான் உள்ளம் அயர்ந்து....1862

ஆதிப்பரஞ் சுடரோ அல்லன் அணிவசை
மீதிற் பொலியும் விதியல்லன் - ஓதிமத்தின்
முந்திருந்தான் அல்லன் முழுப்பரம ஞானியலன்
சிந்தையிடை எண்ணுங்காற் தேர்ந்து....1863

பாடற் சுருதிப் பழமறைகள் ஆயிரமும்
தேடற் கரிய செழும்பொருளே - ஈடில்
இராகவனாய் இம்பர் எழுந்ததோ வென்றான்
அராவனைய தீயான் அறிந்து....1864

ஆற்றல் உடையார் அவரிவரென்று எண்ணுவதோ
தோற்றிடுக வெல்க எனத்துணிந்து - மாற்றில்
சுருதிப் படையுடைய தோன்றல்மேல் விட்டான்
நிருதிப் படைக்கலமுன் நேர்ந்து....1865

பல்லுருவங் கொண்ட பணியுருவில் அப்படையும்
வெல்லும் வகையாகி விரைகுதலும் - மல்லுருவச்
சுந்தரத்தோள் ஐயன் தொடுத்தான் வினதையென்பாள்
தந்தவடற் புத்தேள் சரம்....1866

அவ்வேல் உவணத்து அரசாய்வந்து ஆடுஅரவின்
செவ்வே வரும்படையைத் திண்கழலால் - வவ்வாவிண்
புக்கிடலும் வெய்யோன் புழுங்கினான் தன்பெலத்து
மிக்கதென வெள்ளம் வெறுத்து....1867

வெள்ளைப் பிறையின் விறற்கூர்ங் கணைஒன்றாற்
பிள்ளைத் தனம்உடைய பேதமைதன் - வள்ளை
உடைமகுடந் தாங்கும் ஒருதலையைக் கொய்தான்
சடைமகுடங் கொண்டான் தலை....1868

சிவமல்லாற் செப்புகின்ற சித்திமுதல் எல்லாந்
தவமல்லால் வேறு தருமோ - நவமல்லான்
அற்றதலை போக அறாததலை உண்டெனவே
உற்றதுவே மீள உதித்து....1869

இதம்கிரகம் உற்ற எழில்மா மறைக்குப்
பதங்கிரகம் ஆதி பருத்தோன் - சதங்கொடுநீள்
ஆசுகங்கள் பெய்தான் அருள்மா மழைமுகில்மேல்
தேசுறுதீ என்னச் சினந்து....1870

மல்வலியு மற்ற மதிவலியு மாயவற்கு
வில்வலியு மேன்மேல் விளைந்ததே - சொல்வலிசேர்
பாதகற்கவ் ஏற்றம் படிப்படியாய் மாறியதால்
ஏதமுளார்க் குண்டோ இகல்....1871

அற்றதலை மீளவுறும் அற்புதம்பெற் றானெனவே
ஒற்றைக் கணையால் உவமையிலா - விற்பிடித்த
கையறுத்தான் மள்ளர் கமலங் களைஎனவே
செய்யறுக்கு நாடன் தெரிந்து....1872

அல்லிட்ட காமர் அழகிட்ட அக்கரம்வான்
வில்லிட்ட மேரு விழுந்ததெனச் - சொல்லிட்ட
வட்டமகி மீதுவிழ மற்றொர்கரம் உற்றதவன்
இட்டவரம் பெற்றார் எவர்....1873

வீழ்ந்தநெடு வெங்கரனை வேறோர் கரங்கொடுதார்
வேய்ந்தநெடு மாதலிமேல் வீசுதலும் - ஓய்ந்துதிரங்
கக்கினான் வாயால் கனைத்திருமிக் கண்பிதுங்க
உக்கினான் உள்ளம் உயிர்த்து....1874

மாமரத்தார் கையால் வருந்துவான் தன்னைஒரு
தோமரத்தால் கொல்லத் துணிந்தேவ - காமரத்தால்
வண்டுளரும் பூந்துளவ மாயோன் ஒருகணையால்
துண்டுபட எய்தான் தொடுத்து....1875

அய்யனும்பல் அம்பால் அவன்தலையைப் பன்முறையே
கொய்து நெடுவானுங் குரைகடலுஞ் - சையமெனப்
பார்முழுதும் ஆகப் பரப்பினானப் பங்கயத்தொண்
தாருடையார் போற்றத் தகைந்து....1876

கருமப் படிவக் கயவன் தலைகள்
திருமத் திருமறுவுஞ் செய்கை - நிருமித்த
அற்புதம் ஈதென்ன அறிந்தான் அருள்வடிவாங்
கற்பகநேர் ஐயன் கணித்து....1877

மஞ்சனைய தீயோன் மயிர்க்கால் தொறுமரங்க
வெஞ்சரங்கள் கோடி விரைந்தெய்தான் - கஞ்சமலர்
பீடமேல் அன்னப் பெடியணைத்துச் சேவல்வரும்
ஊடல்ஒழி நாடன் உருத்து....1878

கையரங்க எண்ணூங் கருத்தரங்கக் காலொடுநீள்
மெய்யரங்கக் கண்ணுள் விரித்தடங்க - வெய்யநெடு
வாளிபொர உள்ளம் மயங்கினான் வானமுழு
தாளிதனை வென்றான் அயர்ந்து....1879

ஆடினார் தேவர் அயிர்த்தார் அசுரேசர்
வாடினார் தெவ்வர் வயப்பாகன் - நீடுதிறல்
பேர்ந்தான் எனவே பெயர்த்தான் பெருமணித்தேர்
வேந்தா தரத்தால் வெருண்டு....1880

மாதவனை மாதலியும் வாளரக்கன் உள்மயங்கிப்
போதினிலே கோறியெனப் பூரியர்தஞ் - சாதனைகள்
தக்கதோ என்றான் தசரதற்குச் சேயாகிப்
புக்கபிரான் நீதி புகன்று....1881

அன்ன பொழுதில் அயர்வொழிந்தவ் வாடரக்கன்
என்னை இராமன் எவனென்ன - மன்னியதேர்ச்
சாரதியும் ஐயஎனத் தாழ்ந்துரைசெய் தான்தனது
பாரம்ஈ தென்னப் பணிந்து....1882

உஞ்சையென ஓதியவன் ஒன்றோபல் கோடிகணை
மஞ்சனையான் தன்மேல் வலிந்தேவ - வெஞ்சரனால்
அல்லறுத்த தென்ன அறுத்தயற்பெற் றோன்படையால்
வில்லறுத்தான் அய்யன் விரைந்து....1883

ஒற்றைவில்லோ எற்கென்று உரைப்பதுபோல் ஓர்கோடி
பொற்றவிற்கள் கொண்டு பொரஅவற்றை - கொற்றமுறும்
ஏவினான் மாற்ற எழுமழுத்தண்டு ஆதிபடை
தூவினான் மேன்மேற் சொரிந்து....1884

அத்தனையும் மாற்றி அறுத்தான் அடலிமையோர்
சுத்தமலர் கொண்டு சொரியவே - கொத்தவிழ்தேம்
பூங்காவிற் போதிற் பொரிவண்டு பாண்மிழற்றுந்
தேங்காவி நாடன் சிரித்து....1885

இவன்றலையை இன்னே இருத்தியென வெம்மான்
பவன்றனைமுன் பெற்ற பதியோன் - நவன்றருமா
வன்படையை விட்டான் மகிமீதில் நல்லறத்தில்
அன்படையான் தன்மேல் அனன்று....1886

விட்டபடை வட்ட மணிவீரத் திகிரியுடன்
திட்டமுறச் சென்று தினகரனில் - எட்டுமத
மாகரியை வென்றான் மருமத்துட் புக்குயிருண்டு
ஏகியது விண்மேல் எழுந்து....1887

விண்ணெழுந்து சென்று விரிநீர்த் திரைப்புணரி
நண்ணித் திகழ்சா னவிமூழ்கி - எண்ணுதன்முன்
புக்கதையன் ஆவப் பொலன்கூட்டிற் பொன்னுலகோர்
பக்கமுற ஏத்தப் படை....1888.

மொய்வலமுந் தேசுமொரு முக்கோடி வாழ்நாளும்
மெய்வரமு மானவொரு வெற்பெனவே - அய்யனடற்
திண்கணையால் வீழ்ந்தான் திசையனைத்தும் வென்றபுகழ்
மண்கவிழப் பேழ்வாய் மடித்து....1889

பாலேந்து மின்சொற் பவளவாய்ச் சேயரிக்கண்
மாலேந்துங் கற்புடைய மாமணியும் - கோலேந்தும்
வென்றி முனியுடையான் வெஞ்சினமும் அல்லாது
பொன்றுவனோ என்றார் புகழ்ந்து....1890

அறம்வளர்த்த வேதத்து அகம்வளர்த்த நல்லோர்
திறம்வளர்ந்த யாவுந் தெரிந்தோர் - நிறம்வளர்ந்த
மெய்யான் அயோத்தியர்தம் வேந்தன் விடுபடையால்
வெய்யோன் கவிழ்ந்து விழ....1891

கண்ணீர் பொழிந்து கலங்கிநிற்கும் வீடணனை
எண்ணீர்மை உற்றோய் இரங்குவதென் - மண்ணீர்மை
ஈமக்கடன் இயற்று கென்றான் இரும்புவனஞ்
சேமமுற வந்தான் தெரிந்து....1892

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.24. மீட்சிப் படலம்

மண்ணீர்க் கடன்முடித்து வந்தடியிற் தாழ்ந்தானுக்கு
எண்ணீர்மை எல்லாம் இயம்பினான் - உண்ணீராய்த்
தேவுமாய் வானாய்த் திசையாய்ச் செகதலங்கள்
யாவுமாய் நின்றான் அறிந்து....1893

இலக்குவனை நோக்கி இகலுடையாய் இன்னே
விலக்கமறும் வீடணற்கு மேவித் - துலக்கமுற
மாமகுடஞ் சூட்டி வருவாய் எனவிசைத்தான்
கோமுதல்வன் அன்பாற் குறித்து....1894

நலக்குரிய நாத நவிலுரையை மேற்கொண்டு
இலக்குவனும் சென்றான் இமையோர் - வலத்தரிதாங்கு
ஆதனமும் ஒண்முடியும் ஆழிநறுந் தோயமும்தம்
போதணியுந் தந்தார் புகழ்ந்து....1895

நான்முகன்தன் ஏவால் நவமணியால் நாகர்புகழ்
மான்முகனார் செய்தவொளி மண்டபத்துத் - தேன்முகஞ்சேர்
மஞ்சணியார் வீடணனை வானோர்புத் தேட்புனலால்
மஞ்சனங்கள் செய்தார் மகிழ்ந்து....1896

வாரணங்கள் ஆதியஎண் மங்கலமும் மாமகர
தோரணங்கள் ஓங்கச் சுரர்வாழ - வீரக்
கடிபுனைந்த செங்கமலக் கையால் கனக
முடிபுனைந்தான் செங்கேழ் முகில்....1897

மாதரவா உற்றஎழில் வண்ணமுலை ஊர்மிளைதன்
காதலனைத் தாழ்ந்து கருணையொடும் - பூதரத்திண்
வாகனலற் கீது வகுத்தான் மணிமுடிசேர்
மேகமென நின்றான் விரித்து....1898

ஆரியன்பால் எய்தி அறிவோய் வருமளவும்
ஏரிலங்கை ஆட்சி இயற்றுகென - வீர
இலக்கு வனோடெய்தி இறைவனைக் கண்ணுற்றான்
குலக்குரிய வல்லரக்கர் கோன்....1899

வந்தடியிற் தாழ்ந்த மணிமுடியார் வீடணனை
சிந்தை யுவந்துதழீ இத்திறலார் - அந்தமிலா
வாழ்வடைதி என்று வகுத்தான் மணிமுறுவல்
ஊழிமுதல் நாதன் உவந்து....1900

உற்ற சமையமறிந்து ஒல்கா நலனுதவு
முற்றும் அனுமான் முகநோக்கிச் - சிற்றிடைபால்
செப்பிடுக என்னுமுனம் சென்றான் திருவமர்ந்த
மைப்புயல்சேர் பிண்டி வனம்....1901

ஆடினான் ஐயன் அழியாத ஆயிரம்பேர்
பாடினான் எம்மோய் பதஞ்சிரமேற் - சூடினான்
துள்ளினான் துள்ளிக் குதித்தான் சுகமெனவே
கள்ளருந்து மாண்பிற் களித்து....1902

அன்னாய் அமலன் அடற்கணையால் அவ்வரக்கன்
மின்னார் மணிமுடிகள் வீழ்ந்ததினி - இன்னா
ஒழித்தருள்க என்றான் ஒளியிலங்கை மூதூர்
அழித்தடைந்தான் தீயதனால் அன்று....1903

வட்டக் கனக மதிமுகத்து மானனையாள்
நெட்டிலைவேற் கண்மலர்ந்தாள் நேரிழையும் - உட்டெளிவந்து
ஓங்கினாள் மெய்புளகம் உற்றாள் எழில்பெருக
வீங்கினாள் வண்ணமுலை வெற்பு....1904

தெம்மடங்கும் வில்மிதிலைத் தேத்திறுத்த செவ்வியையன்
வெம்மடல் திண்மை வினாவுளியில் - மும்மடங்கு
கொண்டாள் பெருங்களிப்புக் கூர்ந்தாள் மணிமுறுவல்
விண்டாளோர் மாற்றம் வியந்து....1905

தேனாடுஞ் செவ்விச் சிறகரணி வண்டெனவும்
வானாடுந் தோகை மயிலெனவுந் - தானாடி
ஆவி தரிப்பேற்கு அதுவாய் இருந்தளித்தாய்
ஈவதென்நீ சொல்வாய் இனி....1906

முக்கால மில்லா முகிலுறுவ மூதறிவோய்
எக்காலங் காண்பன் எனநினைவேற்கு - இக்காலம்
ஆருயிர்தந் தென்னை அளித்தாய் அளிப்பதெவன்
ஓருதவி இல்லா உனக்கு....1907

பூவுலகுந் தாழுலகும் பொன்னுலகு மற்றுலகும்
ஆவலொடுந் தந்துனக்கே ஆட்செயினுந் - தேவவிது
சாலுமோ என்றாள் சகமனைத்துந் தானீன்ற
கோலமணிக் கூர்வாய்க் குயில்....1908

அம்பவள வல்லி அதுகூற ஆரியன்தன்
முன்புனையான் காட்டு முறைமையினும் - இன்பமுறத்
தந்தருளுந் தானமது தக்கதோ தாயனைய
இந்துநுதால் என்றான் எடுத்து....1909

வண்ணத் திரிசடையே அன்றியுள மாதரையென்
எண்ணப் படியே எடுத்தெறிந்து - மண்ணிடையில்
கூற்றுவனார் உண்ணக் குமைத்திடுவன் என்றுரைத்தான்
கோற்றொடியை நோக்கிக் குறித்து....1910

அம்மொழியைக் கேட்டாண்டு அரக்கியர்கள் அன்னைபதம்
விம்மலொடு மேவி வெரூஉவடைய - நன்மொழியால்
அஞ்சல்மின் என்ன அருள்வழங்கி அஞ்சனையார்
மஞ்சனுக்குச் சொற்றாள் வகுத்து....1911

மன்விதியால் அன்றியிவர் மற்றெவன்செய் தாரறியின்
என்விதியால் யானிவ் இடருழந்தேன் - நன்மதியோய்
ஆற்றுநின் கோபத் தழலென்றாள் அன்னமென
மாற்றருஞ்சீர் உற்றாள் மதித்து....1912

அப்பொழுது வீடணனம் ஆளுடைய நாயகனார்
துப்பிதழ்வாய் விண்டருளுஞ் சொற்றுணையால் - ஒப்பரிய
கற்பகக்கா உற்றானக் காரிகையைக் கண்ணுற்றான்
அற்புதங் கொண்டான் அகம்....1913

மாற்றரிய கற்பின் மடவரால் வண்ணமுறும்
போற்றரிய கோலம் புனைந்தனைநீ - தோற்றத்து
எழுந்தபுகழ் ஐயன் எழிலுருவங் காண்பான்
எழுந்தருள்க என்றான் இனிது....1914

வானவரும் அந்தணரும் மாதவருங் கற்புடைய
ஆனவருங் காண அருஞ்சிறையில் - யானிருந்த
தோற்றந் தெரிவித்தால் அன்றோவென் தூயநலந்
தேற்றமுறும் என்றாளத் தேன்....1915

மன்பணியீ தன்றி மதிநுதால் வண்ணமுரற்கு
என்பணியீ தன்றெனவவ் ஏந்திழைமால் - தன்பணியேல்
தக்கதென வானத் தகையரம்பையர் ஆதியர்கள்
புக்கனர்கள் மன்னோ புவி....1916

ஒன்றாய் இருந்த உயர்மறையை ஒப்பிகந்தோர்
அன்றா யிரமாய் அமைந்ததெனப் - பின்தாழ்ந்த
வேணிதனை மெல்ல விடுத்தாள் சுருக்குமுறை
மாணரம்பை என்னும் மயில்....1917

வண்பவளச் செவ்வாய் மணிவிளக்கி வாசநறுந்
தண்சுகந்த தானந் தனைத்திமிர்ந்து - பெண்கொடியை
பொன்விளக்கைத் தண்ணம் புனலாலங் காட்டினர்விண்
மின்விளக்கல் என்ன விரைந்து....1918

வாசக் கலவை மணித்தூசும் வண்ணமணித்
தேசிற் புனையுந் திருக்குழையுங் - காசிலொளி
மேகலையு மற்றும் விளங்கிழையும் வேய்ந்தனரப்
பாகடர்ந்த சொல்லார் பரிந்து....1919

மணியொளியில் தேன்சுவையில் வான்மதிய மானில்
அணிமருவும் பூவார் அனத்திற் - பணிமருவு
மானமீது ஏற்றி மடந்தைதனைக் கொண்டணைந்தார்
வானமிழ்த மன்னார் மகிழ்ந்து....1920

கந்திருவ மாதர் கடவுளர்தந் தோகையர்விண்
சுந்தரஞ்சேர் விஞ்சைத் துடியிடையார் - மந்தரநேர்
கொம்மைமுலைச் சாரணர்தம் கோதையர்கள் ஆதியுளோர்
பொம்மலொடுஞ் சென்றார் புகழ்ந்து....1921

மும்மை உலகிருந்தோர் மொய்த்துழியின் மூரியிகல்
வெம்மை அரக்கர் விலக்கொலியை - அம்மவி•து
என்கொலோ என்றான் இறையோன்ஈ தென்றுரைத்தார்
மன்படிவர் ஆனோர் வகுத்து....1922

மிடைந்த அமர்க்களத்தின் வேட்கையொடு மேவி
அடைந்திடுவோர் தம்மை அறிவோய் - கடிந்திடுதற்கு
யாருரைத்தார் அல்லவைநீ ஆற்றுதியோ என்றுரைத்தான்
காருரைத்தால் அன்னான் கனன்று....1923

பூந்தவிசோன் வெள்ளிமலைப் புங்கவனப் பொற்கலையோன்
காந்தையரை அன்றி உளரோகாண் - மாந்தருக்குத்
தக்கதெது சாந்தமன்றோ என்றான்நல் தாயுரையால்
புக்கபிரான் நீதி புகன்று....1924

மாற்ற முரையான்அவ் வாளரக்க மன்னவன்தன்
ஏற்றமதி நொந்து இருந்தனன்பின் - வேற்றலநேர்
மானமீது ஆர்ந்தமட மங்கையிழிந் தாள்கமலக்
கானிலத்தில் தோயக் களித்து....1925

வண்புயமுந் தாழ்கரமும் மாமுகமு மாவடிவுந்
தண்கருணை ஆர்ந்த தடமலரும் - எண்கவரும்
வண்டுழாய் மார்பு மணிப்பவள வாயிதழுங்
கண்டனள்தன் கண்ணால் களித்து....1926

ஊழ்வினையால் மானதமென்று ஓது தடமொருவிச்
சூழ்புவியிற் கானகத்தே துன்னனமோர் - வாழ்வுறலால்
அத்தடனைக் கண்ணுற்ற வாறதுபோல் ஆயினளப்
புத்தமுத மொப்பாள் பொலிந்து....1927

நெஞ்சினால் அன்றியொன்றால் நேரறியா நின்மலனை
வஞ்சனேன் காண வடிவிழியால் - நெஞ்சுவந்து
தூதுரைத்த மாருதிக்கென் சொல்லுவது கைம்மாறிப்
போதுரைத்தல் என்னாம் புகழ்ந்து....1928

என்றியம்பிக் குன்றமிரண்டு ஏந்தியவப் பூங்கொடியின்
நின்றிருந்தாள் ஒல்கி நெடியோன்முன் - பொன்தயங்கும்
விண்ணவரும் மாதவரும் வேதியரும் விஞ்சையரும்
மண்ணவரும் காண வளைந்து....1929

பொன்னிறைஞ்சுந் தெய்வப் புதுநாள் மலர்த்தவிசின்
மின்னிறைஞ்சி நிற்ப விராட்டமலன் - முன்னிறைஞ்சி
வந்தோர் வருந்த வகுத்தான்அவ் வான்மதிய
முந்தார் அரவின் முனிந்து....1930

மன்குலத்தின் தூய்மை மறந்தனைநீ மானமிலாப்
புன்குலத்தின் தீமை பொருந்தினாய் - என்குலத்துக்கு
ஏற்றவள் நீயல்லை இறத்தலரிது என்றுகொலோ
போற்றினைநீ ஆவி புரந்து....1931

கருங்கடலைத் தூர்த்ததுவுங் காரரக்கர் தம்மை
ஒருங்கவற மாய்த்ததும் ஓரின் - அருங்குலத்தின்
என்பழியை நீப்பான் இயற்றியதை அன்றியுண்டோ
நின்பழியை நீப்பான் நினைந்து....1932

நற்குலத் துட்டோன்றி நவையிலா நன்மகளிர்
அற்பமொரு மாசுற்று அணுகிடினும் - நிற்பதிலா
ஆக்கைதனைப் பேணார் அகலுதிநீ என்றுரைத்தான்
வாக்குமனம் எட்டாத மால்....1933

மூட்டழலிற் பொங்கி முனிந்தமலன் கூறுதலுங்
கேட்டயர்த்தார் ஆங்குக் கெழுமினார் - வாட்டடங்கண்
கோதை உளமாழ்கிக் குழைந்தாள் கொழுங்கனல்வாய்ப்
போதலரும் பூங்கொடியே போல்....1934

தூயவனாய் வந்தமதித் தூயோனம் மாருதிதன்
கோதிலுறை கொண்டு குறுகினேன் - நீதிமுகில்
அன்னாய்உன் உள்ளம்மவ் வாறுஆகுமேல் யான்புரிவது
என்னோய் இனிமேல் எதிர்....1935

வாக்கினால் கண்ணால் மனதினால் மற்றொன்றால்
ஆக்கலாந் தீமையிலேன் ஆயிடினுஞ் - சீர்க்கணவன்
ஊறுபடுமாறு ஒன்று உரைத்தால் உலகமொடு
தேறுமோ ஐயந் தெரிந்து....1936

எல்லாந் தெரிந்தவரே என்னினும்ஏர் உற்றமுலை
வல்லார் மனமறிய வல்லாரே - மல்லார்ந்த
பொற்புயனே அற்றேல் புலைச்சிறையில் வைகியவென்
கற்பெவர்க்குக் காட்டுகேன் காண்....1937

இளையோய் இடுதீ எனலும் இறைவற்
தொழுதபோழ்து கண்ணாற் சொலவே - வளையுறுதீ
ஆங்கமைத்தான் உள்நொந்து அலமருமாறு எவ்வுயிரும்
வாங்குசிலை இளையோன் மற்று....1938

அத்தீ அருகில் அனமெனவே அன்னைசெல
முத்தீயும் வெந்து முரணழிந்த - பைந்தாமப்
பாந்தளர சேந்துமிந்தப் பாரகமும் பாற்கடலுஞ்
சாய்ந்ததுளம் வெம்பித் தளர்ந்து....1939

கலையணிந்தான் ஆதிக் கடவுள் அருங்காமர்
இலையணிந்த வேல்விழியார் யாரும் - நிலைதளர்ந்து
மெய்நடுங்க மாமறையும் வேள்விமுதல் நல்லறமும்
உய்தலுண்டோ என்றது உலைந்து....1940

மட்டவிழும் வாவியிலோர் மாணன்னம் புக்கதென
வட்டமுலைக் கோதை வலம்புரிந்து - நெட்டுலகில்
ஆய்ந்தநிறை நீதியிலேன் ஆயிற் சுடுதியெனப்
பாய்ந்தாள்தன் நாதற் பணிந்து....1941

சேர்ந்தாரை மாய்க்குந் திறமுடைய செந்தழல்வான்
ஆர்ந்தேரு மாமதி நேராயினவேல் - தேர்ந்தெங்கும்
ஊறுபுகழ்க் கற்புடைய ஒண்டொடியார் ஆயினார்
வீறுறைப்பார் உண்டோ விரித்து....1942

சேதார்ந்த செங்கமலச் செந்திருவைத் திண்புவன
மாதாவை ஏந்தி எதிர்வந்தான் - மீதார்ந்து
வெந்தெரியு மேனியொடும் வெங்கனலிப் புத்தேள்ச்
சுந்தரத்தோள் நாதன் துதித்து....1943

வண்டாடுந் தாமரைமேல் வைகியவெம் மாதாவை
கண்டாடுஞ் சின்மொழியைக் கார்வண்ணா - தண்டாம
மன்குலா மேனி மறைமுதலே ஐயமுற
என்கொலோ என்றான் எடுத்து....1944

இவ்வெரியுள் தோன்றி எதிர்வந்தாய் யாரையிவண்
எவ்வுரைசெய் தாய்இவளை என்நிமித்தஞ் - செவ்வியற
மெய்சுடாது உற்றனைநீ விள்ளுதிஎன் றான்கமலக்
கையொருவில் ஏற்றான் கனன்று....1945

எப்பொருளும் ஆனாய் எரியிறைவன் எம்மோய்தன்
துப்புடைய கற்புடைத்தீ சுட்டிடலால் - உப்புடைநீர்
புண்புகுந்தால் என்னப் புழுங்குவேன் பொய்யெனவுன்
எண்புகுந்தாற் செய்வது எவன்....1946

வேள்விகளும் மாதவத்தின் மேதகவும் வேட்பதுவும்
நீள்புவியில் ஐயம் நிகழ்த்துழியில் - ஆளுடையாய்
மெய்யுணரு மாறு விரிக்கில் எனதிடத்தே
பொய்யிலைகாண் என்றான் புகழ்ந்து....1947

நெய்யணியும் கூந்தல் நிரைபிறழ்ந்தால் இவ்வுலகம்
உய்யுமோ கண்டாய் எனவுரைத்துப் - பெய்வளையை
அய்யனுழைக் கொண்டு அணுகுதலும் ஆய்ந்துரைத்தான்
செய்ய மணிவாய் திறந்து....1948

பல்லுயிர்க்குஞ் சான்றாய்ப் பயிறலின்நீ உன்னுரையை
நல்லதெனக் கொண்டாமின் நங்கையினிப் - புல்லுதலுக்கு
ஏற்றவளே என்றான் எழுபுவனத்து உள்ளுயிரும்
தேற்றமுற வாழ்வான் தெரிந்து....1949

தெள்விழியாழ்த் தீங்குரலிற் தேன்பாடுஞ் செங்கமலத்து
உள்வயின்வாழ் மூவா ஒருமறையோன் - கள்விரியும்
பொற்றதார் வானோர் புகல்மறையாற் போற்றினராங்கு
உற்றபெரி யோனை உவந்து....1950

ஆரணமாய் ஆரணத்தின் அந்தமாய் அந்தமுறும்
பூரணமாய் நின்ற பொருளாகி - நாரணனாய்
நின்றானே நீயே நிகிலவுல கம்புரப்பான்
நன்றானாய் மானிடனின் நன்கு....1951

பொல்லா இலிங்கப் புரைமாயை மெய்யொருவு
நல்லார் அறிவு நலனுடையாய் - வில்லார்ந்த
மன்னவனாய் வந்த மணியேயுன் மாட்சிமையின்
சொன்னவில்வார் உண்டோ துதித்து....1952

செய்யா மறைமுழுதுந் தேர்ந்துபர மார்த்தமென
அய்யா உனையே அறையுமால் - பொய்யாத
தத்துவமை ஐந்துந் தனியறிவார் தாமறிவர்
வித்தகநீ ஆண்டருள்தி மேல்....1953

மூவுருவாய் வந்த முதலேயிம் மொய்குழலம்
மாவுருவம் அன்றோவிம் மாயமெலா - நீவகுத்தது
எப்பாலார் காண்பார் இனிமொழியேல் என்றுரைத்தான்
பொற்பாதம் ஏத்திப் புகழ்ந்து....1954

வெள்ளேற்று வேணியனும் வேதமுறை ஏத்தினன்பின்
கள்ளேற்ற பங்கயச்செங் காலெகினப் - புள்ளேற்றான்
மன்னுரையால் வந்தான் வழங்குரையை மாறாதான்
பொன்னுரையா மானம் பொலிந்து....1955

வந்தநெடுந் தாதை மலர்ச்சரணம் வீழ்த்திறைஞ்சி
உய்ந்தனன்யான் என்றான் உரைப்பரிய - சந்தமுறு
நற்றா மரையான் நனிமகிழ்வு கொண்டிலங்க
வற்றா அருள்மா மழை....1956

இம்பர்க்குங் கீழேழ் இடவர்க்கும் ஏத்தரிய
உம்பர்க்கும் எட்டா உயர்பதத்தை - நம்பியுனைப்
பெற்றபயன் தன்னால் பெறும்பயனைப் பெற்றனன்
உற்றணைத்தான் உள்ளம் உவந்து....1957

காரார்ந்த வாசக் கருங்குழலைக் கற்பணியை
பாரார்ந்த தெய்வப் பசும்பொன்னை - வாரார்ந்த
கோட்டுமுலைச் செங்கனிவாய்க் கோற்றொடியைக் கூர்விழியை
நாட்டமுறக் கண்டான் நனி....1958

மின்போல் இறைஞ்சு மடமெல்லியலைத் தான்தழுவி
நின்போல் வாருண்டோ நெடுநிலத்திற் - பொன்போல்வாய்
அய்யன் இழைத்த அகங்கருதேல் ஆற்றுமுறை
மெய்யுணதற் கென்றான் விரித்து....1959

விண்ணின்ற வேந்தன் விழைவெய்த வெந்தறுகண்
கண்ணின்ற மாயங் கதழ்ந்தானைப் - புண்ணின்ற
வார்குருதி மாரி வழிந்தோட வென்றசிலை
ஆரியனைக் கண்டான் நினைந்து....1960

அண்ணலொடும் பின்சென்று அருங்கான் இடையடைந்து
விண்ணுலகம் வாழ வியன்சிலையால் - எண்ணரிய
கோற்றானை வன்ற குரிசாலுன் கீர்த்தியெவர்
பாற்றாகும் என்றான் பரிந்து....1961

நெறித்துக் குழன்ற நெடுநீலமே போல்வான்
அறத்துக் கொருகணைகண் ஆவான் - திறத்துவமை
இல்லானை நோக்கியுனக்கு ஈதும்வரங் கோடியென்றான்
மல்லார் புயத்தரசர் மன்....1962

வான்சென்று காண வலித்தேற்கு மன்னவுனை
யானின்று காண அருள்புரிந்தாய் - தேன்நின்று
இன்னுரையுந் தந்தாய் இனிப்பெறுவ தென்னென்றான்
பொன்னுறையு மேனிப் புயல்....1963

உனக்கரிய துண்டோ உரைக்குங்கால் ஐய
எனக்குவகை ஏய்தருமா றெண்ணு - மனக்கினிய
தன்மையருள் என்றான் தசரதனென் றெவ்வுலகும்
சொன்மகிமை உற்றான் தொகுத்து....1964

எம்பியும் என்தாயும் இகலின்றி இன்பமுற
நம்பியருள் என்ன நலமுடையோன் - இம்பரிடை
அன்னதே ஆகவென அந்தரத்துச் சென்றடைந்தான்
மின்னுகதிர் மான மிசை....1965

ஆயிடையில் ஐயன் அருள்மா மதிவதனம்
தூயவரன் ஆதி சுரர்நோக்கி - நீயுளத்து
வேட்டவரங் கோடியென விண்டான் மணிப்பவளங்
கோட்டுசிலை வீரன் குறித்து....1966

சிறந்தவலி கொண்டு செருக்களத்தின் ஏற்றங்கு
இறந்த கவிவெள்ளம் எழவும் - அறிந்தவர்வாழ்
கானகநீர் தேன்காய் கனியாதி கள்வரவுந்
தானருள்திர் என்றான் தழைந்து....1967

ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஏழ்முகிலும் ஏழ்மலையும்
ஊழிமுடிவு உண்டோர் இலையுறங்கும் - ஆழிமுகில்
அன்னாய் அவைபெறுக என்றறைந்து மீட்டுமிவை
சொன்னார் அமரர் தொகுத்து....1968

ஆண்டுபதி னான்கவதி இன்றோடு ஆயினநீ
மீண்டடையாய் என்னில் விழுப்புரிவாய் - மூண்ட
எரிவிழுந்து துஞ்சு இகற்பரதன் என்ன
உரைபுரிந்து போனார் உவந்து....1969

அய்யன் நினைத்தான் அவதிநிலை அன்பவுலகு
உய்யும் வகையுண்டோர் ஊர்தியெனத் - தெய்வ
விமானமுள தென்றிறைஞ்சி வீடணன் கொண்டுய்த்தான்
சமானமிலா வள்ளல்முனந் தான்....1970

வந்தெதிர்ந்த மானமிசை வானாதி மூவுலகுந்
தந்தபிரான் மேவித் தலைவியொடும் - வெந்திறலார்
வீடணனைக் கான்முளையை வெங்கதிரோன் தன்சுதனை
நாடியிவை சொல்முன் நயந்து....1971

என்பொருட்டால் வெம்போர் இகலியற்றி எய்த்தனிர்நீர்
அன்புடையீர் நும்பதிசென்று ஆர்திர்எனக் - கம்பமொடு
மெய்யயர்ந்து தம்முணர்வும் வேறாக வீழ்ந்திறைஞ்சி
உய்துமோ என்பார் உளைந்து....1972

அருமறையுந் தேடி அறியாத நின்பொற்
திருமுடியுந் தேசுந் திறமும் - இருவிழியால்
கண்டுகளிப் பெய்துங் கருத்துடைய காதலெமக்கு
உண்டதனை ஓர்வாய் உவந்து....1973

என்னபிழை செய்தோம் எமைப்பிரிதற்கு எண்ணினைநீ
அன்னபிழை உண்டெனினும் ஐயனே - தன்னைதனை
விட்டகலா மக்களென வேறாகோம் என்றுவிழி
சொட்டினர்கள் கண்ணீர் சொரிந்து....1974

அன்புக்கோர் எல்லை அறியாது நின்றயர்ந்து
முன்புக்கார் தம்மை முகநோக்கி - என்புக்கி
வீறுகெட நிற்பதெவன் மெய்யுடையீர் மானமிசை
ஏறிடுமின் என்றான் இறை....1975

மழைதுளிர்ப்ப வாடி வதிங்கியயர் பைங்கூழ்
தழைவிடுத்த தன்மையெனத் தக்கோன் - கழையிடத்தில்
ஊறிரதம் ஒத்த உரைகேட்டு அகமகிழ்ந்து
தேறினர்கள் யாருந் தெளிந்து....1976

தென்னிலங்கைக் கோமானுஞ் செங்கதிரோன் தன்மகனும்
மன்னிலங்கு அங்கதனும் மாருதியும் - பன்னுமறு
பத்தேழு கோடிப் படைவீர ரும்பிறரும்
ஒத்தேறி னார்கள் ஒருங்கு....1977

பெட்பகஞ்செய் வண்ணம் பிறங்குக்கதிர் மண்டிலநேர்
புட்பக மானத்துப் பொருவரிய - நட்பகஞ்சேர்
கோற்றொடியும் வீரக் கொழுந்தாம் இலக்குவனும்
வீற்றிருந்தார் உள்ளம் விழைந்து....1978

அராவணையான் வேதவதி ஆகியநஞ் சீதைக்கு
இராவணனை ஆதி இகலேற்றோர் - பராவமரிற்
பட்டதெலாங் காட்டிப் படர்ந்தான்தண் சேதுவிடை
இட்டவிமா னத்தில் இருந்து....1979

தண்பொருட்டுத் தாமரைவாழ் தாக்கணங்கே தாரணியில்
நின்பொருட்டால் ஆற்றுமிந்த நெட்டணையில் - அன்புருக்கொண்டு
ஆடுனர்தம் பாவமெலாம் ஆதவனைக் கண்டவிருள்
ஓடுதல்போல் ஓடும் ஒருங்கு....1980

கங்கைமுதல் ஆன கடவுள் நதியிற்படிந்த
துங்கமெலாம் எய்துமிதிற் தோயுனர்க்கு - மங்கைநல்லாய்
வெம்பிறவி வேலை விழவேண்டாம் இனிப்பிறவா
மன்பதவி சேர்வார் மகிழ்ந்து....1981

தாதவிழ் செந்தாமரை வாழ்தையால் சகம்புகழிச்
சேது தெரிசனங்கள் செய்வார்க்குப் - பாதகங்கள்
ஐந்துமினி ஒன்று அறியாத பாதகமும்
நைந்தகலுங் கண்டாய் நனி....1982

கருவணையும் பாவக் கடற்கரையைக் காட்டுந்
திருவணையின் ஏற்றந் தெரித்து - மருவணையும்
பூங்குழற்கு வேறு புகன்றான்முன் புக்கவிடம்
வாங்குவரி வில்லான் வகுத்து....1983

நங்கையுரை கொண்டு நதிதவழுங் கிட்கிந்தை
மங்கையரை ஏற்றி வலங்கொண்டு - திங்கள்தவழ்
சித்திரகூ டத்திடையே சென்றான் தினகரனேர்
அத்திரகூ டத்தில் அமர்ந்து....1984

வெய்ய அரக்கர்குலம் வீட்டி வரிசிலைக்கை
ஐயன்வந்தான் என்ன அகமகிழ்ந்து - துய்யதவ
மன்னு சடைப்புரத்து வாசமுனி வந்தடைந்தான்
தன்னனையார் சூழ்ந்துவரத் தான்....1985

குடையுங் கரமலர்சேர் குண்டிகையுங் கொண்டு
நடைமுனிவன் நண்ணுதலு நாதன் - விடையெனவே
புட்பகத்தின் நின்றிழிந்து போந்திறைஞ்சிப் போற்றினான்
நட்பகங்கொண்டு ஓங்க நயந்து....1986

தாழ்ந்திறைஞ்சி நின்றபெருந் தாடாளன் தன்னையெதிர்
ஆழ்ந்தவருள் கொண்டு அணைந்துருகி - வாழ்ந்தனன்யான்
என்றான் பலகால் எடுத்தாசி கூறினான்
குன்றா முனிவர்குலக் கோன்....1987

தம்பியொடு வீடணனுஞ் சானகியு மாருதியும்
வெம்பருதி சேயுமற்றை வீரரெனு - நம்பியரும்
போற்றினார் வீழ்ந்து பொருவரிய மாதவனுஞ்
சாற்றினான் ஆசி தழைந்து....1988

வேதத் தொலிமுழங்க வேதியர்கள் சூழ்ந்துவர
மாதவத்திற் சான்றோன் மனைகொண்டு - மீதலத்தோர்
பூமாரி பெய்யப் புகுந்தான் புயலனைய
சீமானை மாதவனைத் தேர்ந்து....1989

மருந்துண்ட வானவர்போல் மன்னவனே யான்செய்
விருந்துண்டு செல்கவென வேண்ட - இருந்துண்டு
போதருவல் என்று புகன்றான் பொருவரிய
வேதமுதல் ஆவான் விழைந்து....1990

வாராருக் கேறனைய மாருதியை நோக்கினனீ
சீரார் அயோத்தியினிற் சென்றணுகிப் - பேரார்
பரதனெரி வீழாது பார்த்தறுக என்றான்
சரதநெறி மோதிரமுந் தந்து....1991

ஈங்கமைந்த காதை இயம்பினாம் மற்றினியப்
பூங்குவளை வாவிப் பொறிவண்டு - தேங்கமழும்
போதார் அயோத்திப் புரிவாழ் பரதனிருங்
காதா எடுத்துரைப்பாங் கண்டு....1992

சித்திரகூ டத்திருந்து சேவகன்தன் பாதுகத்தை
வைத்துமுடி மீது வலங்கொண்டு - பத்திஎழில்
நந்திக் கிராம நணுகினான் நற்பரதன்
வந்தித்து வந்தான் மயர்ந்து....1993

காணுவது தென்திசையே காதல் பெறமுடிமேல்
பூணுவது வாமப் புரிசடையே - பேணி
உடுப்பதுவுஞ் சீரையுகத்து உண்பதுவுங் கந்தம்
படுப்பதுவும் புல்விரித்த பாய்....1994

ஆண்டுபதி நான்கு அவதிநாள் இன்றென்று
மூண்டதுயர் முந்த முரணழிந்தான் - ஆண்டகையோன்
வந்திலனென் றெண்ணி மழைக்கண்ணீர் ஆலியுக
நைந்துழன்றான் சிந்தை நலிந்து....1995

வான்பார்க்கும் பைங்கூழ்போல் வள்ளல் வரவதனைத்
தான்பார்த்து நின்ற தனிப்பரதன் - தேன்பார்க்குந்
தண்டெரியற் சத்துருக்கன் தன்னையிடு தீயெனலும்
மண்டவழல் இட்டான் வளர்த்து....1996

அன்னையரும் மாதர் அயோத்திநகர் வாழ்சனமும்
என்னையி• தென்ன விரைத்தேங்க - மன்னுமழல்
உட்குளிப்பான் உள்ளம் ஒருப்பட் டெழுந்துநின்றான்
கட்குளிக்குந் தாரானக் கால்....1997

அன்ன பொழுதில் அனுமான் விரைந்தணுகி
துன்னுமழல் இருகை தொட்டணைத்து - மன்ன
வருந்தேலின் றையன் வருகின்றான் என்றான்
மருந்தே எனக்கடுகி வந்து....1998

ஏற்ற சமயத்து இராகவன்பேர் ஈங்குரைத்தாய்
ஆற்றல் உடையாய்நீ யாரையெனக் - காற்றின்மகன்
நாயடியன் ஆழியிது நன்கறிதி என்றுரைத்தான்
நேயமொடு தாழ்ந்தருகு நின்று....1999

கண்டான் விழியாற் கரமேந்திக் கள்ளதனை
உண்டான் எனவே உவப்புற்றான் - மண்தாவித்
துள்ளினான் துள்ளித் துதித்தான் துயரொருங்கு
தள்ளினான் உள்ளந் தளிர்த்து....2000

வேதியரை மாதவரை வேந்தர்தமை வேறுள்ள
தாதியரை தாய்மார் தமைப்பணிந்தான் - ஆதியறம்
உண்டென்பால் என்றான் உலகம்ஈர் ஏழுமுயர்
கொண்டுலாம் என்றான் குளிர்ந்து....2001

மாருதியை நோக்கியருள் வள்ளல் சரிதமெலாம்
தேர்தருமாறு ஓதுகெனச் செப்பினான் - வீரப்
படையினொடுந் தம்பியொடும் பட்ட பரிசெல்லாம்
இடைவிடாது எல்லாம் எடுத்து....2002

பொன்னுருவம் மன்னும் புயலுருவப் பூமான்போற்
தன்னுருவங் காட்டித் தலைப்பட்டான் - மன்னும்
வரத னெனும்பரத்து வாசனமர் சாலை
பரதனொடும் உள்ளம் பரிந்து....2003

அய்யன் வருவது அறிந்தார் அயோத்திநகர்த்
தையலரும் ஆடவருஞ் சார்ந்தெதிர்ந்தார் - செய்யநறும்
பொன்னால் மணியால் புனைந்து புதுக்கினார்
மின்னால் புனைந்ததென வேட்டு....2004

ஈங்கு நடந்தது இதுவாக எண்தவத்தோன்
ஆங்கு புரிந்தது அறைகுவாம் - வேங்கனல்வாய்
ஆகுதியொன்று ஈய அடைந்தார் அரம்பையர்
மாகமுகில் மின்போல் மகிழ்ந்து....2005

வந்தார் அரம்பையர்கள் வாரிஅமு தாய்அடிசில்
தந்தார் அறுசுவையும் தானமைத்து - நந்தாத
முக்கனியுந் தேனு முதிர்தீஞ் சுவையமைய
மிக்கமணம் மேவ விரைந்து....2006

வெங்கதிரோன் தன்மகனும் வீடணனும் அங்கதனுந்
தங்கிளைய தம்பியொடு சானகியும் - அங்கணனும்
மற்கடமும் எண்கரசும் மற்றவரும் உற்றவரும்
பொற்கலத்தில் உண்டார் பொலிந்து....2007

மருந்துண்ட தென்ன மகிழ்ந்தவர்கள் மேலோன்
விருந்துண்டல் நோக்கி விரும்பி - முருந்துண்ட
பல்லணைந்த வான்குடபாற் பரவை அமுதுண்பான்
எல்லணைந்தான் நாகம் எழுந்து....2008

அவ்வேலை செய்வனசெய்து ஆற்றுங் கடன்முடித்து
மைவேலை அன்ன மணிநிறத்தான் - கைவேலைப்
பஞ்சவணை மீது படுத்தான்தன் பாரியொடும்
கஞ்ச மெனமுகிழ்த்துக் கண்....2009

மற்றவரும் தத்தமக்கு வாய்த்தமலர்ப் பூவணைமேல்
உற்றுறக்கங் கொண்டார் உவரிவாய் - இற்றைவளைக்
கையோன் முடிபுனியுங் காட்சிநாங் காண்டுமென
வெய்யோன் எழுந்தான் விரைந்து....2010

பள்ளி எழுந்து பகலவனைப் போற்றிசெய்து
மெள்ள முனிவன் விடைகொண்டு - வள்ளல்மணி
மானமீ தேறினான் மங்கையொடுந் தம்பியொடும்
ஏனையருஞ் சூழ இருந்து....2011

கான்முளையின் வேகக் கடுமையினு நான்மடங்கு
வான்மருவி எய்துமணி மானமதைப் - பான்மருவு
நற்பரதன்காண நவின்றான் அடைந்தான் நாயகன்முன்
சிற்பரந்தேர் அஞ்சனையார் சேய்....2012

தம்பி யொடுபரதன் தானுறுதல் கண்டிறங்கி
இம்பர் விமானம் இழிகவென - வம்புலவுந்
தண்குழலி யோடும்தன் தம்பியொடுந் தான்இழிந்தான்
மண்குலவ வந்தான் மகிழ்ந்து....2013

சடைமுடியுந் தாழ்சடையுந் தானுமாய் நின்று
படியிறைஞ்சுந் தம்பியரைப் பார்த்தான் - வடிபுனற்கண்
மாரியான் மேனிஎலாம் மண்ணினான் ஆங்கணைத்துக்
காரியே அன்னான் கசிந்து....2014

மானனைய வாட்கண்இள வல்லியொடுந் தம்பியொடுந்
தானமுறுந் தாபதனைத் தாயர்தமைக் - கானமலர்
ஆனஅடி வீழ்ந்தவர்தம் ஆசிநலம் பெற்றுவந்தான்
மானமுறுங் கோசலையார் மன்....2015

வெள்ளி மலைபொருவும் வேரியந்தார்ச் சத்துருக்கன்
வள்ளல் இலக்குவனை வந்திறைஞ்சக் - கள்ளவிழ்தார்த்
தோளால் தழுவித் துடைத்தான் இருவிழிநீர்
வாளாற்றல் கொண்டான் மகிழ்ந்து....2016

கற்புக் கருங்கலனைக் காசிலா நன்மருந்தை
அற்புக் களவறியா ஆரமிர்தை - நற்பரதன்
தண்பரவும் வெண்மதிநேர் தம்பியொடுந் தான்அணுகி
மண்பணிந்து நின்றார் மகிழ்ந்து....2017

குகனோடு தென்னிலங்¨ங் கோமானும் வெய்யோன்
மகனோடு மற்றவரும் வாழ்த்தி - நிகரில்
களவனையான் செய்ய கழல்வணங்கி தம்மில்
அளவாய் நின்றார் அவண்....2018

அண்ணல் உரையால் அயோத்தியினின் றெய்தினரு
மண்ணிடையில் எய்து நெடுவானரரும் - விண்ணவிரு
மானமதில் ஏறி மகிழ்ந்தார் மலர்மாரி
வானவர்கள் தூவ வதிந்து....2019

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


6.25. திரு அபிடேக , திருமுடிசூட்டுப் படலம்

வந்திக் கலாகு மறையோர்கள் வாழ்வுபெறு
நந்திக் கிராம நணுகியே - சுந்தரஞ்சேர்
வண்சடையும் மாற்றி மயிர்வினையு முற்றினான்
மண்பொறையை மாற்றவந்த மால்....2020

தம்பியருந் தானும் தடநீர் படிந்தெழுந்து
வம்பவிழுந் தாம மலர்சூடி - உம்பர்புகழ்
ஒப்பனைசெய் தாற்றி உயர்மணித்தேர் ஏறினான்
கற்பனைஇல் லாதான் களித்து....2021

திண்கவியின் வெள்ள மிறச்செய்தான் திறல்சென்னி
மண்கவிய எய்த வரிசிலையோன் - வெண்கவிகை
பற்றக் கவரிபணி மாற மற்றிளையோன்
மற்றவன்கோல் கொள்ள மகிழ்ந்து....2022

மாதவஞ்சேர் வீடணனும் வண்கதிரோன் தன்சேயும்
போதகமேற் கொண்டு புறம்போதவே - ஏதமிலாப்
போருதவும் அங்கதனாம் புண்ணியன் முற்றூசுசெல
மாருதியின்பின் சென்றான் மகிழ்ந்து....2023

ஆறுபத்தேழ் கோடி அடல்வா னரத்தலைவர்
அறுபத்தேழ் கோடியடல் ஆனைமேல் - வீறுபெற்ற
வண்குடிமீ தோங்கவரும் மானிடரிற் சென்றடைந்தார்
விண்களிப்ப மண்களிப்ப மேல்....2024

ஒன்பான் இரட்டி உறுநிலத்து மன்னவர்கள்
அன்பான் மணிமகுடம் ஆர்ந்திலக - முன்பார்ந்த
கொற்றக் கவிகைக் கொடிநெருங்கக் கூண்டடைந்தார்
வெற்றிப் பறைகறங்க மேல்....2025

சமானமுரை செய்யத் தகாத மணிப்புத்தேள்
விமான மணிமிதிலை மின்னாள் - அமானத்து
அரமகளிர் ஆதி அரிமகளிர் சூழ்ந்து
வரமகிழ்ந்து சென்றார் மகிழ்ந்து....2026

உள்ளங் களிசிறப்ப ஓடைக் கரிமதங்கள்
வெள்ளநீ ராக விடுத்ததே - வள்ளல்பதி
நாலாண்டு கான்மருவி நண்ணினான் என்றுவந்து
காலாண்ட வேகங் கதித்து....2027

வாங்கு சிலைக்கருப்பன் மையலுற மாதர்மிசை
பூங்கணைகள் எய்தான் புறம்போந்தே - மூங்கையரில்
மன்னுந் துரகமனு மானித்த மாமுகிலின்
பின்னுந் திரைக்கடலிற் பேர்ந்து....2028

அன்ன பொழுதில் அயோத்தி நகரடைந்து
மின்னுமணிக் கோயில் விரைந்தெய்தி - பன்னரிய
தன்னையரைத் தாழ்ந்து தலைவனையுந் தாழ்ந்தெழுந்தான்
முன்னைமறை காணா முதல்....2029

குலமுனிவன் செய்யபதக் கோகன கந்தாழ்ந்து
வலமருவு மன்னர் வணங்க - நிலமருவு
ஆளரியார் பீடத்து அமர்ந்தார் அருண்மழைபோல்
வாளரியாய்த் தூண்பிறந்த மால்....2030

வேயுங் கரும்புநிகர் மென்றோட் கருநெடுங்கண்
தேயும் மருங்குல் திரள்முலையார் - ஆயுமணிப்
பொன்னால் உடம்பைப் புதுக்கினார் ஓவியத்தின்
மன்னா தரத்தால் மகிழ்ந்து....2031

போவார் வருவார் புளகரும்பப் பூரிப்பார்
நாவார்ந்த பாடல் நவின்றிசைப்பார் - பூவார
நட்ட மிடுவார் நறுமணங்கள் மெய்யணிவார்
வட்டமுலை மாதர் மகிழ்ந்து....2032


இன்றே பிறந்த பயனெய்தினோம் என்றிசைப்பார்
இன்றே இறவோ மினியென்பார் - இன்றேதான்
மாரன் கணையால் மருண்டேம் எனப்புகல்வார்
வீரன்பால் அன்புடையார் வீழ்ந்து....2033

மண்ணுறையும் மாதர் மடவாய் உடன்கலந்து
விண்ணுறையும் மாதர் விரசுவார் - நண்ணரிய
மங்கலநாள் என்ன வலம்புரிகள் நின்றூத
தங்கலங்கள் எல்லாந் தரித்து....2034

ஆய பொழுதில் அருட்பரதன் தன்னையைய
ஏயநெடு வீரர் எவர்களுக்குந் - தூயதிருப்
பொற்கோயில் உள்ள புதுமைநலங் காட்டுகென்றான்
விற்கார்முகில் அனைய வேந்து....2035

அன்னவால் ஆற்றுவலென்று ஆதவன்சே யாதியுளோர்க்கு
உன்னலாந் தன்மை உணர்வரியது - என்னவாம்
மாடம் பலகடந்து மாமகளுக் கென்றதிரு
மாடமது கண்டார் மகிழ்ந்து....2036

மாணிக்கம் பச்சை வயிரம் வயிடூரியம்
ஆணிக் கனகம் அதிலிழைத்துச் - சேணியற்று
நன்மாடங் கண்டார் நயனங்கள் கூசஇ•து
என்மாடம் என்றார் எதிர்ந்து....2037

வீடணனை யாதியுள வீரருக்கு வேரியந்தார்ப்
பாடணையு மார்பன் பரதாழ்வான் - மாடலர்ந்து
வாய்ந்தமலர்ப் பீடத்தான் வண்கரும்புத் தோளானுக்கு
ஈய்ந்ததிது என்றான் எடுத்து....2038

அன்னதோ என்ன அகம்வியந்தார் ஆங்கெவரும்
என்னையே என்ன இறைஞ்சினார் - பன்னுபல
மாடங் கடந்தொருமா மண்டபத்து வீற்றிருந்தார்
வீடணைந்த தன்னார் வியந்து....2039

ஆவயின் வெய்யோன் அருட்புதல்வன் ஆங்குறைந்
தாவில் பரதன் தனைநோக்கித் - தேவபிரான்
காப்புநாள் என்னோ கருதிலைநீ என்றிருகை
கூப்பிநின்றான் நெஞ்சங் குழைந்து....2040

ஏழ்கடல்நீர் ஏழ்நதிநீர் இங்குறல்எவ் வாறெனலும்
தாழ்வில் அனுமான் தனைநோக்கப் - பாழித்
திருத்தோள்கள் வானுலகஞ் செல்லவே சென்றான்
மருத்தோன் அளித்த மகன்....2041

சமந்தமந்தேர் மாமுனியைத் தானழைத்தி என்னச்
சுமந்தரனுஞ் சென்றதனைச் சொல்ல - அமைந்ததவ
மாதவன்வந் தெய்த வணங்கினார் நின்றளித்த
ஆதனமேல் ஆனான் அமர்ந்து....2042

விரதநெறி பூண்ட விழுந்தவத்தோய் மெய்மைப்
பரத உலகாள் பவருக்கு - அரதனஞ்சேர்
பொன்மவுலி சூட்டிப் புனையுநாள் நாளையென்றான்
சொன்மருவும் வேதியர்கோன் சூழ்ந்து....2043

எட்டுத் திசையில் இருந்தநில மன்னருக்குஞ்
சட்ட முறைதவறாத் தாபதர்க்குங் - கட்டமைந்த
ஓலை விடுத்தான் உயர்ந்தோன் முடிபுனையுங்
காலையுடன் ஓரை கணித்து....2044

வேதியரும் மாதவரும் விஞ்சையரும் வேறுள்ள
சாதியரும் வந்து தலைப்பட்டார் - மேதினியும்
கொள்ளாது இடமெனவே கோர்த்தெழுந்த வேலையெனத்
தெள்ளோதை யோடுஞ் செறிந்து....2045

மாதவஞ்சேர் வண்பரதன் வாலிமகன் சாம்பன்
ஆதவன்சேய் சூழ அணுகினான் - ஓதரிய
காப்புநாள் நாளையெனக் கட்டுரைத்தான் ஆரியற்கு
மூப்பனாய் நின்ற முனி....2046

தரிச்சிணங்கா தாரைத் தனிச்சிலையால் வென்றோன்
கிரிச்சினங்கள் ஆற்றிக் கிளர்ந்தான் - வரிச்சினமும்
வால்வளையுந் தூரியமும் மஞ்சதிர்வ போல்முழங்கச்
சேல்வளையு நீர்நாடன் தேர்ந்து....2047

அயன்பணியால் வானவரும் அற்புதமீது என்ன
மயனியற்று மண்டபத்து வந்தான் - பயன்கெழுமும்
நாற்கடலின் நீரு நதிப்புனலுங் கொண்டுயர்தோள்
மாற்கடங்கொள் வாயு மகன்....2048

சங்க முழங்கத் தனித்தாரை நின்றூத
பொங்குங் கவிகை பொலிந்தோங்க - வெண்கவரி
சேர்ந்திரட்ட யானையின்மேல் தீஞ்சரயு மாநதிநீர்
வேந்தர் கொணர்ந்தார் விரைந்து....2049

பொன்னால் மணியால் புனைந்தமணி யாதனத்து
மின்னோடு வீற்றிருந்த மேகம்போற் - தென்னார்ந்த
அல்லிமலர்த் தாமரைமேல் அன்னம் பயில்மிதிலை
வல்லியொடும் வீற்றிருந்தான் மால்....2050

மங்கலங்கள் பாட மறையோர்கள் ஆசிசொல
சங்கினங்கள் ஆர்ப்பத் தனிமுதலை - எங்கும்
அவிரோத மான அணங்கனை யாள்தன்னை
அவிடேகஞ் செய்தார் அறிந்து....2051

சான்றோர் மறையோர் தவத்தோர் தவத்தொழுக்க
மான்றோர் அபிடேக மாற்றினர்முன் - தேன்தோய்தார்
வேந்தர் இருவர் விறல்மாரு திமுதலோர்
பேர்ந்தபிடே கம்புரிந்தார் பின்....2052

அடிமலரில் அம்புயத்தோன் ஆட்டு மணிக்கங்கை
முடிபுனைந்தான் மூரி முதல்வன் - வடிவமெலாம்
மண்ணூநீர் எங்கண்இனி வைத்துமென வானவர்தாம்
உண்ணுதலே நன்றென்றார் ஓர்ந்து....2053

வல்லி தழுவி மலர்பூத்த வண்காயா
வல்லி வனச மலர்ந்துமழை - நல்லகுளிர்
நீரால் நனைந்திருந்த நேர்மையின் வீற்றிருந்தான்
சீராருஞ் சீதையொடுஞ் சேர்ந்து....2054

தாளும் குறுநகையும் தண்டா மரைவிழியும்
தோளும் கமழும் துழாய்மார்பும் - நீளுமணி
குண்டலம்வில் வீசக் குலவும் திருமுகமும்
கண்டவருக் குண்டோ கலி....2055

சிங்கவணை ஏந்தத் திறலனுமன் சிற்றுடைவாள்
அங்கதன் கையேந்த அடற்பரதன் - பொங்குங்
குடைநிழற்ற மற்றிருவர் கூர்ங்கவரி யற்ற
முடிபுனைந்தான் கோமா முனி....2056

பொய்யிலா வாய்மைப் புகழோடு பொன்னவன்சேர்
மெய்யுலா வியகடிகை வேளையினில் - வையமெலாம்
துள்ளினர்கள் ஆர்ப்பமுடி சூடினான் தொன்மறையோர்க்கு
அள்ளினான் எல்லாம் அளித்து....2057

மதமும் மாரி மழைபொழிய மாதவரும்
வேதியரும் வாழ்ந்து விளம்பவே - கோதைச்
சனகியொடும் வெண்குடைக்கீழ்த் தானிருந்து காத்தான்
அனகன் புவியனைத்தும் ஆங்கு....2058

வாழ்க அயோத்திநகர் வாழ்க இராமபிரான்
வாழ்க மிதிலைவரும் வல்லி - வாழ்கவறம்
வாழ்க மதுரகவிச் சீநிவாச மாமறையோன்
வாழ்அவன் வெண்பா வளர்ந்து....2059

வாழிஅனு மந்தநகர் வாழி மதுரகவி
வாழியவன் நூல்கள் வழிவழியே - வாழியவே
இம்பர் இராமா யணவெண்பா இன்னுரை
கம்பனுடன் வாழி கலந்து....2060


பயன்

இராமாயண வெண்பா இன்தமிழை ஓதிப்
பராவும்வகை தந்தோர்இப் பாரில் - அராவணையான்
தண்ணருளால் என்றும் சதாயுளுடன் நோயின்றிக்
கண்ணியமா வாழ்வார் களித்து....2061

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

யுத்த காண்டம் முற்றும்.

Click here to go to part-1 containing cantos 1 to 4


This file was last revised on 12 Feb 2003
Please send your comments to the webmasters of this website.