antima kAlam (a novel)
by Re. Karthigesu of Malaysia
(in tamil script, unicode format)

அந்திம காலம்
(நாவல்)
ரெ.கார்த்திகேசு




Etext preparation & Proof-reading: Prof. R. Karthigesu, Penang, Malaysia
Etext prep in pdf format: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

Source Acknowledgements:
Publisher: Muhil Enterprise, 38 Jalan Selasih 19, Taman Selasih, 68100 Batu Caves, Malaysia.
Year of Publication: 1998
Author: Prof. R. Karthigesu,
Email: kgesu@pd.jaring.my, 356-W Lengkok Pemancar, 11800 Penang, Malaysia.

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2003

You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

Notes on the Author:
ரெ.கார்த்திகேசு ஓய்வு பெற்ற தொடர்புத் துறை (mass communication) பேராசிரியர். இந்நாவல் தவிர "வானத்து வேலிகள்"; "தேடியிருக்கும் தருணங்கள்"; "காதலினால் அல்ல" என்ற மூன்று நாவல்கள் மற்றும் "புதிய தொடக்கங்கள்"; "மனசுக்குள்"; "இன்னொரு தடவை" என்னும் சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.


அந்திம காலம்
(நாவல்)
(ரெ.கார்த்திகேசு)

அந்திம காலம் - 1


மழைத் தாரைகள் காரின் முன் கண்ணாடியில் வீசி அடித்துக் கொண்டிருந்தன. காரின் கூரையில் விழுந்த மழை நீர் கண்ணாடியில் ஆறாக வழிந்து கொண்டிருந்தது. இடை விடாத பொழிவு. அகலமான கண்ணாடியெங்கும் மழை வரைகின்ற ஓவியங்கள். காரின் வைப்பர் அந்த ஓவியங்களை இடை விடாது அழித்துக் கொண்டிருந்தது.

டடக்...டடக்...டடக்... டடக்.

அழிக்க அழிக்கப் புதிது புதிதாக ஓவியங்கள். அழிவது பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாத மழை. அழிப்பதைப் பற்றி குற்ற உணர்ச்சியும் தயக்கமும் கொஞ்சமும் இல்லாத வைப்பர்.

டடக்... டடக்.. .டடக். அழி... அழி... அழி. வரை... வரை... வரை. டடக்... அழி.. டடக்... வரை... டடக்... அழி... டடக்... வரை.

எது முதல்? எது தொடர்? வரைதல் முதலா, அழிதல் முதலா?

சுந்தரத்தின் கார் அந்த நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்றிருந்தது. அந்தக் கடுமையான மழையில் அவர் காரை ஓட்ட விரும்பவில்லை. பார்வை தௌிவாக இல்லை. இரண்டடிக்கு முன்னால் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. மருத்துவ மனைக்குப் போய்விட்டு வீடு திரும்புகிற வழியில் இப்படித் திடும் என மழை பிடித்துக்கொண்டது.

வேணுமானால் முன் விளக்குகளைப் போட்டுக் கொண்டு நிதானமாக ஓட்டலாம். கண்ணாடி உள்ளே பனி படரும் போது துடைத்து விட்டுக் கொள்ளலாம். இந்த மழைக்குப் பயந்து வேறு யாரும் காரை நிறுத்தி விட்டதாகத் தெரியவில்லை. கார்கள் வழக்கம் போல் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு காரும் அவர் காரைக் கடக்கும் போது சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை சர்ரென்று கிழித்து அவர் காரின் மீது பாதியை ஊற்றிக் குளிப்பாட்டி விட்டுத்தான் செல்லுகிறது.

ஆனால் அவருக்கு அப்படி அவசரம் ஒன்றும் இல்லை. வீடு பக்கத்தில்தான். பத்து நிமிடம் நின்று மழை தணிந்ததும் போகலாம். மற்றவர்களுக்கு அவசரம் இருக்கிறது. அவருக்கு இல்லை. மற்றவர்களுக்கு ஆயிரம் வேலைகள். அவருக்கு அப்படி ஒன்றும் இல்லை. ஓய்வு பெற்று விட்ட மனிதனுக்கு ஏன் அவசரம்? அவசரமாக வேலை செய்து காலத்தை விரைவாக ஓட்டி... அப்புறம் என்ன செய்வது? ஓய்வெடுப்பதைக் கூட வெறுப்பாக்கிவிட்ட வேலை ஓய்வுக் காலத்தில் அவசரம் ஒன்றும் இல்லை.

இங்கே இப்படி இந்தக் காருக்குள் உட்கார்ந்திருப்பது நிம்மதியாகக் கூட இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கிறது. இந்த மழை இத்தனை கொடூரமாகப் பெய்தும் அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை. பட்டாம் பூச்சியாகவிருக்கும் பியூப்பாவை இறுக்கிக் காப்பாற்றும் கூடு போல அவரை இந்தக் கார் பத்திரமாகப் பாதுகாக்கிறது. சுற்றிலும் தண்ணீர் வடூந்து வெள்ளமாகிவிட அவர்மட்டும் நனையாமல் காய்ந்திருக்கிறார். தலைக்கு ஆறு அங்குலத்திற்கு மேலே தண்ணீர். தோளுக்கு இரண்டு அங்குலம் பக்கத்தில் தண்ணீர். காலுக்கு ஓரடி கீழே வெள்ளம். ஆனால் அவர் மேல் ஒரு துளியும் தண்ணீர் இல்லை.

என்ஜின் ஓடிக்கொண்டிருக்கிறது. குளிர் சாதனக் கருவி கீழ் சுருதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணாடியில் ஆவி பரவாமல் இருக்க அது வேண்டியிருந்தது. அதனால் பரவும் குளிருக்கு அவருடைய வெப்பமான மூச்சே மாற்றாக இருக்கிறது. மழையின் "சோ" என்ற ராகமும் கூரையில் அது போடும் தட தட தாளமும் ரசிக்கும்படியாகக்கூட இருந்தன. இது பாதுகாப்பான இடம். இது நிம்மதியான சூழ்நிலை.

அதோ தண்ணீரைக் கிடூத்துக்கொண்டு போகும் லாரியில் அந்த லாரி உதவியாளன் பாதி நனைந்தவாறு போகிறான். லாரியின் தார்ப்பாலின் துணி கிழிந்து கிடக்கிறது. அவனுக்குப் பாதுகாப்பில்லை. மோட்டார் சைக்கிளில் மழைக்கோட்டு அணிந்தவாறு போகிறவனுக்கும் முகம் நனைவதைத் தவிர்க்க முடியவில்லை. அவன் பின்னால் உள்ள பெண் மழைக் கோட்டும் இல்லாமல் முதுகில் மழை வழிய பிளவ்ஸ் உடம்போடு ஒட்டிக்கொள்ள வெட்கப்படக் கூட வசதியில்லாமல் கணவனை -- ஒருவேளை அண்ணனாகக் கூட இருக்கலாம் -- கட்டிக் கொண்டு போகிறாள். இங்கே ஒருவன் சைக்கிளை பஸ் பிரயாணிகள் நிற்கும் நிழல் கூடத்தில் வைத்து விட்டு மழைக்குக் காப்புத் தேடியிருக்கிறான். ஆனால் மழை அவன் காலடியில் வெள்ளமாக ஏறி அவனை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

ஆனால் அவர் பாதுகாப்பாக, நனையாமல், குளிரில்லாமல், சூடாக, நிம்மதியாக, காரின் உள்ளே கர்ப்பப்பைக்குள் குழந்தை போல இருக்கிறார். நான் கடலின் மத்தியில் தீவாக இருக்கிறேன். நான் பாலைவனத்தின் மத்தியில் சோலையாக இருக்கிறேன். பாதுகாப்பாக இருக்கிறேன். அர்ஜுனா! மாதங்களில் நான் மார்கழி. காலங்களில் நான் வசந்தம்.

டடக்...டடக்...வரை... டடக்...டடக்...அழி.. .டடக்...வரை...டடக்...அழி...

எது பாதுகாப்பு? எது நிம்மதி? யார் இந்த உலகில் பாதுகாப்பாக நிம்மதியாக இருக்கிறார்கள்? அதோ மழையில் அவதிப்பட்டு நிற்கும் அந்த சைக்கிள்காரன் இன்னும் பத்து நிமிடங்களில் மழை விட்டதும் உடம்பை வழித்து விட்டுக் கொண்டு சைக்கிளில் ஏறி வீடு போய்ச் சேருவான். அடுத்த பத்து நிமிடங்களில் அவன் உடல் காய்ந்து விடும். திடகாத்திரமாக இருக்கிறான். இன்னும் ஐம்பது வருடங்கள் உயிரோடு இருப்பான்.

நான் பாதுகாப்பாக இருக்கிறேன். அடுத்த பத்து நிமிடங்களில் மழை விட்டதும் ஜோராக காரோட்டி வீட்டுக்குப் போய்விடுவேன். ஆனால் என் உடல் அழுக ஆரம்பித்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் முற்றாகச் செத்துப் போய்விடுவேன்.

யாருக்கு இருக்கிறது பாதுகாப்பு? என்னுடைய தற்காலிகச் சுகத்துக்கும், அவனுடைய தற்காலிகத் துன்பத்துக்கும் என்ன பொருள்? ஏ சைக்கிளோட்டியே! இங்கே வா! இந்தக் காரையும் சுகத்தையும் எடுத்துக் கொள். உன் இடத்தில் இருந்து நான் நனைகிறேன். வெள்ளம் என் கணுக்கால்களை நனைத்து முழங்கால் வரைக்கும் வந்தாலும் பரவாயில்லை. உன் மீதியிருக்கும் ஐம்பது வருடங்களை எனக்குக் கொடுப்பாயா? மாற்றிக் கொள்வோமா?

கண்களில் கண்ணீர் படர்ந்தது. ஸ்டியரிங் சக்கரத்தைக் கைகள் அழுத்திப் பிசைந்தன. நெற்றியை மெதுவாக அந்த சக்கரத்தில் சாய்த்து மௌனமாக அழுதார். அவர் அழுகைகூட பாதுகாப்பாக இருந்து. பிறர் பார்வை பட்டு அவமானப்படுத்தாத சுகம்.

ஒரு யுகம் போல் மனசுக்குத் தோன்றினாலும் பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிருக்காது. மின்னல் தெறிப்புக்களாக அவை மனசுக்குள் ஓடின. வாழ்ந்த வாழ்க்கை, வளர்ப்பு, படிப்பு, தொடூல், கல்யாணம், மனைவி, குழந்தைகள், எல்லாம் துண்டு துண்டாக, குழந்தை மனம்போன போக்கில் வெட்டி ஒட்டின ஒட்டுப்படம் போல....

மழையின் படபடப்பு தணிந்திருந்தது. "சோ" என்ற சத்தம் இல்லை. தலை நிமிர்ந்து பார்த்தார். வானம் தௌிந்திருந்தது. தூவானம். சூரிய வௌிச்சமும் வானவில்லும் கூடத் தோன்றியிருந்தன. சைக்கிள்காரன் இருக்கையைத் தட்டித் துடைத்துவிட்டு சைக்கிள் மேல் உட்கார்ந்து ஜிவ்வென்று போனான்.

இரண்டு உள்ளங்கைகளையும் தேய்த்துச் சூடாக்கிக் கண்களையும் கன்னத்தையும் முகத்தையும் துடைத்துச் சுத்தமாக்கினார். பின்பார்வைக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டு, பின்னால் கார் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, கியரைப் போட்டு, கை பிரேக்கை விடுவித்து, மெதுவாக, பத்திரமாகக் காரை வீட்டை நோக்கிச் செலுத்தினார்.

*** *** ***

அவருடைய காரை கேட்டின் முன் கண்டதும் ஜிம்மி ஓடிவந்தது. கேட்டின் பின்னாலிருந்து துள்ளிக் குதித்தது. பின்னங்கால்களில் நின்று முன்னங்கால்களைக் கோர்த்துக் கொண்டு முகமன் சொல்லிற்று. நாக்குத் தொங்க வாய் விரிந்து சிரித்தது. ஒரு இரண்டு மூன்று மணி நேரம் வௌியே போய் வந்தாலும் ஏதோ பத்து நாட்கள் பார்த்திராத நண்பனைக் கண்ட கொண்டாட்டம். என் அன்பு நாயே! உன்னைப் போல் என்னை என் மனைவியும் குழந்தைகளும் கூட வரவேற்பதில்லை. உனக்கு இது எப்படி வாய்த்தது? நான் போடும் சில எலும்புத் துண்டுகளுக்காகவா இத்தனை உற்சாகமான நன்றி செலுத்துகிறாய்? அதற்காகவா இந்த ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற இங்கு வரும் அத்தனை பேரையும் பார்த்துக் குலைத்து இந்த உலகத்தையே விரோதித்துக் கொள்ளுகிறாய்?

காரிலிருந்து இறங்கி கேட்டைக் கொஞ்சமாகத் திறந்து ஜிம்மியைக் கூப்பிட்டுச் சங்கிலியில் கட்டினார். சரணடைந்து தலை கொடுத்துக் கட்டுப்பட அது வழக்கம் போல சம்மதித்தது. கட்டாவிட்டால் கேட்டைத் திறந்ததும் வௌியே ஓடி விடும். பிற நாய்களிடம் சண்டை போட்டுக் கடிபட்டு வரும். சாலையில் போகும் மோட்டார் சைக்கிளோட்டிகளைத் துரத்தும்.

காரை உள்ளே கொண்டு வந்து நிறுத்தினார். கேட்டைச் சாத்தினார். ஜானகி எங்கே இருக்கிறாளோ தெரியவில்லை. அவளிடம் விஷயத்தைத் தருணம் பார்த்துச் சொல்ல வேண்டும். அதிர்ச்சியைக் குறைக்கும் வகையில்... "இதெல்லாம் சாதாரண விஷயம்தான்" என்ற தோரணையில்... "எந்த மானுடன் சாகாவரம் வாங்கி வந்திருக்கிறான் இந்த உலகத்தில்..." என்ற தத்துவ முன்னுரையோடு...

ஜானகி சமயலறையிலிருந்து பரபரப்பாக வௌியே வந்தாள். "ஏங்க இவ்வளவு நேரம்?" பதில் சொல்ல வாயெடுத்த போது...

"ராதா போன் பண்ணுனாங்க... இப்பதான்.."

அவசரமான விஷயமாகத்தான் இருக்க வேண்டும். இல்லா விட்டால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வழக்கமாகத் தொலைபேசியில் அழைத்துப் பேசும் மகளின் செய்தி இத்தனை மூச்சுத் திணறும் அவசரத்தில் வௌிப்படக் காரணமில்லை. வேறு முக்கிய விஷயம் தன் அவசர நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்று முதல் நிகழ்ச்சியைத் தள்ளிப் போட்டதில் ஒரு வக்கிரமான நிம்மதி இருந்தது.

"என்ன விஷயம் ஜானகி..?"

"மறுபடி பிரச்சினையாம்..."

"பிரச்சினைன்னா?"

"அந்தப் பாவி மறுபடி போட்டு அடிச்சிருக்காங்க..." அவள் கண்களில் நீர் கட்டியது.

"ஏனாம்?"

"என்னமோ மறுபடியும் பணம் கேட்டானாம்" கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பேசினாள்.. "முடியாதின்னு சொன்னாளாம். வார்த்தை முத்திப் போய் அடிக்கிற அளவுக்கு வந்திருக்கு!"

மனத்தில் திகீரென்றது. எத்தனை அன்பாக இந்த மகளை வளர்த்தோம் இருவரும். கொஞ்சி குளிப்பாட்டி, படிக்க வைத்து, அவள் படிக்க விழித்திருக்கிற நாட்களில் தாங்களும் விழித்திருந்து... பட்டதாரியாக்கி, அவள் விரும்பியவனைத் தாங்கள் விரும்பாத போதும், அவள் விருப்பத்தை ஏற்று, அவனையே அவளுக்கு மணாளனாக்கி... வீடு பிடித்துக் கொடுத்து... குழந்தைப் பேறு பார்த்து... இப்படி அடிபடவா? எப்படி இவர்கள் வாழ்க்கை கசந்து போனது? ஏன் இவர்கள் காதல் வாழ்க்கை வன்முறைக்குள் வீழ்ந்தது? மனசுக்குள் கேட்டுக் கொண்டார். வாய்விட்டு யாரிடம் கேட்பது?

"நம்ப என்ன செய்றது ஜானகி?"

"அவ இன்னைக்கே புறப்பட்டு வர்ராளாம் இங்க! போனைக் கீழே வச்சதும் பேக்க எடுத்துக்கிட்டு வந்திடுவேன்னு சொன்னா..."

"பஸ்ஸிலியா...?"

"இல்லைங்க. அவ கார்ல... பையனையும் கூட்டிட்டுத் தானா ஓட்டி வரப் போறாளாம்..."

"ஒண்டியாவா? என்ன ஜானகி நீ? இதுவரைக்கும் அவ ஒண்டியா காரை ஓட்டி வந்ததில்லையே! ஏன் சரின்னு சொன்ன?"

"நான் என்ன சொல்றது? நான் புறப்பட்டுட்டம்மான்னு சொல்லிட்டு போன வச்சிட்டா. நான் என்ன பண்ண முடியும்?"

இப்போது மணி ஏழாகி விட்டது. கோலாலம்பூரிலிருந்த இப்போது புறப்பட்டாலும் இந்தப் பினாங்கு வந்து சேர நான்கு மணி நேரம் ஆகும். இரவுப் பிரயாணம். இதற்கு முன் இப்படித் தனியாக வந்ததில்லை. மூன்று வயதுக் குழந்தையையும் கூட்டிக்கொண்டு, இரவில், மழைக்காலத்தில், மனத்தில் வெறுப்பையும் எரிச்சலையும் கோபத்தையும் சுமந்து கொண்டு, இடைவிடாத 110 கிலோமீட்டர் வேகத்தில், மனசை வசியப்படுத்தி மூளையை மரத்துப் போகச் செய்யும் நெடுஞ்சாலையில்... நினைக்க பயமாக இருந்தது. விபத்துக் காட்சிகள் தோன்றித் தோன்றி மறைந்தன.

"சே! நீ அவளத் தடுத்திருக்கணும் ஜானகி!" என்று சொல்லி அசந்து நாற்காலியில் உட்கார்ந்தார்.

"எப்படிங்க தடுக்கிறது? இன்னும் அங்க இருந்து அவனோட சண்டை போட்டு உதை வாங்கவா? இங்கவாவது வந்து ரெண்டு நாள் நிம்மதியா இருக்கட்டும்னு வரச் சொல்லிட்டேன்"

உண்மைதான். ராதா தன் கணவனிடம் அடிபடுவது இது முதன் முறையல்ல. இந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இது அதிகமாகிவிட்டது. அவர்கள் குடும்ப வாழ்க்கையில் பலவித விஷங்கள் கலந்து விட்டன. மருமகன் சிவமணி அதற்கு முக்கிய காரணம். அவனுக்குக் குறுக்கு வடூயில் முன்னேறவேண்டும் என்ற பேராசைகள் அதிகம்.

எல்லாம் அவனுடைய குற்றம் என்றும் சொல்லிவிட முடியாது. பெற்றோர்கள் என்ற கோணத்தில் இருந்து பார்க்கும்போது ராதாவின் மேல் பரிதாபம் தோன்றினாலும், அவளுக்கும் விட்டுக் கொடுத்துப் போகமுடியாத பண்பு உண்டு. கோபம் வந்தால் மூர்க்கமாக மாறிவிடுவாள். பிடிவாதம் உண்டு.

"எனக்குக் கொஞ்சம் டீ கலக்கிக் கொண்டா ஜானகி!" என்றார். ஜானகி மீண்டும் கண்களைத் துடைத்துக் கொண்டு சமையலறைக்குப் போனாள்.

ராதாவின் குறைகளை ஜானகி ஒருநாளும் ஏற்றுக் கொண்டதில்லை. எல்லாக் குறைகளும் மணியிடம்தான் என்பது அவள் கருத்து. ராதாவும் சிவமணியும் காதல் கொண்ட காலத்திலிருந்தே மணியை அவளுக்குப் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் சிவமணியிடம் அப்போது ஒன்றும் கெட்ட பழக்கங்கள் இல்லை. ஆனால் தன் அன்பு மகளின் மனத்தை வௌியில் இருந்து வந்து ஆக்கிரமித்துக் கொண்டவன் என்ற பொறாமை ஆரம்பத்திலிருந்து உண்டு. தம்பதிகள் மகிழ்ச்சியாக இருந்த வரை அதை அடக்கி உள்ளே போட்டிருந்தாள். அந்த உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியதும் அவள் முழுக் கோபமும் உக்கிரமாகத் தலையெடுத்துவிட்டது.

ஆனால் அந்த விரிசல் பிளவாகி அவன் அவளை அடிக்கத் தொடங்கிவிட்டான் என்று கேள்விப் பட்டபோது அவரும் அவனை ஒரு மிருகமாகத்தான் நினைத்தார். இந்த நாகரிகக் காலத்தில், இந்த நாகரிகக் குடும்பத்தில் இப்படி நடப்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ராதாவின் வாழ்க்கைத் துன்பங்கள் ஏற்கனவே அவருடைய மனத்தின் ஒரு மூலையில் பாரமாக உட்கார்ந்திருந்தன. இன்றைக்கு நடந்தவற்றைக் கேள்விப்பட்ட பிறகு அந்த பாரம் உட்கார்ந்திருந்த இடம் ரணமாகிவிட்டது. அதிலும் இன்றைக்கு டாக்டரிடம் சென்று மரண ஓலை பெற்றுக் கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத நிலையில், இன்னும் ஒரு ஈட்டியா இப்படிப் பாய வேண்டும்?

எவ்வளவு துன்பங்களுக்கு இந்தச் சின்ன மனத்துக்குள் இடம் இருக்கும்? எவ்வளவு பாரம்தான் இந்தப் பைக்குள் போட்டு வைக்க முடியும்? இது எவ்வளவு போட்டாலும் தளர்ந்து விரிந்து கொடுத்து ஏற்றுக் கொள்ளுகின்ற பையா? அல்லது இதற்கும் எல்லை உண்டா? உடையும் கன அளவு உண்டா? அல்லது விரும்பினால் கருங்கல்லாகவும் விரும்பினால் ரப்பர் பையாகவும் மனிதன் இதனை மாற்றிக் கொள்ள முடியுமா?

ஜானகி ஆவி பறக்கும் டீயோடு வந்தாள். அவர் முன் மேசையில் வைத்தவாறு கேட்டாள்: "இப்படி இங்க மழை பேஞ்சுக்கிட்டு இருக்கே, அவ வர்ர வழியெல்லாம் மழை பேயுமோ என்னமோ தெரியிலியே!"

பெய்யும் என்று ஒரு வாரமாகமே வானிலை அறிக்கையில் சொல்லி வருகிறார்கள். மேற்கு மலேசியாவில் கரையோரப்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை, மேகமூட்டம், தாழ் நிலங்களில் வெள்ளம் என்றுதான் தொலைக்காட்சிச் செய்தியில் சொல்லுகிறார்கள். இந்த நிலையில் ஜானகிக்கு என்ன ஆறுதல் கூறமுடியும் அவரால்?

"மழை இருக்கத்தான் செய்யும். என்ன பண்றது? மெதுவா ஓட்டி வந்தா ஹைவேயில ஒண்ணும் ஆபத்தில்ல. கவலப் படாத! எல்லாம் பத்திரமா வந்து சேந்திருவாங்க ரெண்டு பேரும்!" ஜானகிக்குச் சொன்னாரா தனக்குத் தானே சொல்லிக்கொண்டாரோ தெரியவில்லை.

ஜானகி மீண்டும் மழைத் தாரைகள் விழ ஆரம்பித்திருந்த வீட்டுக் காம்பவுண்டை திறந்திருந்த கதவுகள் வழியாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ராதாவின் நினைவும் அவளுடைய அந்த நேரத்துத் துன்பமும் அவள் மனத்தை முற்றாக ஆக்கிரமித்திருந்தன. என் அன்பு மனைவியே, புதிய துயரம் வந்ததும் காத்திருந்த இன்னொரு துயரத்தை மறந்து விட்டாயே! அப்படித்தானா வாழ்க்கை! "இப்போது" என்பதுதான் முக்கியம். இப்போது நிகழ்வதுதான் நெஞ்சில் நிறைகிறது. இப்போதுதான் உண்மை.

நான் ஒருமாதமாக தலை கடுமையாக வலிக்கிறது என்று சொன்னதும் வயிற்றைப் புரட்டிக் கொண்டு வாந்தி வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னதும் டாக்டர் பரிசோதனைக்குப் பலமுறை சென்று வந்ததும் இன்று பரிசோதனை முடிவு தெரிந்து கொள்ள மத்தியான வேளையில் நான் டாக்டரிடம் சென்றதும் உன் மனத்தின் கொல்லைப் புறத்தில் புதையுண்டு போய்விட்டன. மகளின் துயரம் மரமாக உன் வாசற்புறத்தில் வளர்ந்து விட்டது. அதையே பார்த்துக் கொண்டிருக்கிறாய். அவள் அடிபட்டதை, அவள் காரில் ஏறிக் கோபமாக ஓட்டி வரும் காட்சியை, உன் பேரன் அந்தக் காரின் ஓரத்தில் தொத்திக் கொண்டு வருவதை, மழை பொடூந்து வெள்ளக்காடாகிவிட்ட நெடுஞ்சாலையில் உன் மகளின் கார் இருளைக் கிழித்துக் கொண்டு வரும் அபாயகரமான காட்சிகளை கற்பனை செய்தவாறு இருக்கிறாய்.

என் அன்பு மனைவியே! மனசை இப்படி நைந்து போக விட்டு விடாதே. நான் சொல்லுகின்ற செய்தியைத் தாங்கிக்கொள்ள உனக்கு இன்னும் உரம் வேண்டும். இது பெரிது. உன் மகளின் செய்திகள் உன் மனதுக்குத் துப்பாக்கி ரவைகள் என்றால் என் செய்தி ஆயிரம் டன் டிஎன்டி. தயாராக இரு. பக்கத்தில் எதையாவது உறுதியாகப் பிடித்துக் கொள். மயக்கம் வரும். ஆண்டவனை வேண்டிக்கொள்.

ஜானகி திடீரென்று தலை நிமிர்ந்து அவர் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள். "சரி, டாக்டர் என்ன சொன்னாரு? அதக் கேக்காம ராதா கதயே பேசிக்கிட்டு இருந்திட்டேனே!"

டீ கோப்பையைக் கீழே வைத்தார். ஜானகி முகத்தைப் பார்த்தார். இதை உன்னால் தாங்க முடியுமா? நீ உன் மகள் நினைவில் குலைந்திருக்கும் இந்தத் தருணத்தில் இந்தக் கல்லை உன் தலையில் போடட்டுமா? நான் சாவதற்குத் தயாராக இருக்கிறேன். ஆனால் உன்னை வதைப்பதற்குத் தயாராக இல்லை. மனிதன் வதை படுவதில் துன்பம் இருந்தாலும் கண்ணியம் உண்டு. ஆனால் மற்றவர்களை வதைப்பதில் கண்ணியமில்லை. என் அன்பு மனைவியே! இந்தச் செய்தி காத்திருக்கலாம். நான் உன்னை விதவையாக்கப் போவது நிச்சயம். ஆனால் அது நாளைக்கே நடக்கப் போவதில்லை. அது இன்னும் சொஞ்ச நாள் காத்திருக்கலாம். உனக்கு இந்த ஓரிரவுக்குப் போதிய துன்பங்கள் மனத்தில் இருக்கின்றன. இன்றிரவு உன் மகளைப் பார்த்துக் கதைகளைக் கேட்டறிந்து நாம் இருவரும் நம் புண்களில் செருகிக் கொள்ள பல வேல்கள் காத்திருக்கின்றன. இப்போது இது வேண்டாம்.

"இன்னும் லேப்ல இருந்து பரிசோதனை முடிவு வரலியாம் ஜானகி. ரெண்டொரு நாள்ல தெரியும்னு டாக்டர் சொல்றார்"

"இன்னைக்குக் கண்டிப்பா வந்திரும்னு சொன்னாங்களே..."

"சொன்னாங்க. இப்ப இல்லைங்கிறாங்க. என்ன பண்றது?"

"உங்களுக்கு வலி எப்படி இருக்கு?"

"பரவால்ல. சாப்பாட்டில கொஞ்சம் கட்டுப்பாடா இருக்கச் சொன்னார்."

கொஞ்சம் கால அவகாசம் வாங்கிக் கொண்டார். ஜானகி முகம் மீண்டும் மழைத் தாரைகளை நோக்கித் திரும்பியது. மழைத்தாரைகள் என்ற வெள்ளித்திரையில் ராதா - மணி இவர்களின் வாழ்க்கைப் படம் ஓடுகிறது என்று நினைத்துக் கொண்டார். காதல், பிரிவு, வீரம் கொஞ்சமும் கலக்காத அடிதடி, சில புண்கள், ஏராளமான கண்ணீர்... இப்படி அவல ரசங்கள் நிறைந்த திரைக்கதை. இதன் முடிவை இப்போதைக்கு இந்த வெள்ளித்திரையில் காண முடியாது. அதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.

இந்தக் கதையின் முடிவில் பழங்காலப் பாணியில் "சுபம் சுபம்" என்று போடமாட்டார்கள். புதிய பாணியில் டைரக்டரின் முடிவுரையாகத் தமிழ்ப் பண்பாட்டை போலித்தனமாக மிகைப் படுத்தும் குரலும் கேட்காது. விளக்குகள் மீண்டும் பளிச் பளிச்சென்று எரிந்து கற்பனை உலகிலிருந்து நம்மை நிஜ உலகுக்கு கொண்டு வராது. இது முடிந்தது என்று எழுந்து காரில் ஏறி வீடு போய்ச் சேர முடியாது. ஏனென்றால் இது வாழ்க்கை. நிஜ உலகுக் கதை.

இல்லை. இதுவும் நிஜ உலகு இல்லை. இதுவும் மாயைதான். இதற்கு அப்பால் இருக்கிறது ஒன்று. ஜானகி! அதை நான் விரைவில் தெரிந்து கொள்ளும் காலம் வந்து விட்டது.

"நான் போய் குளிச்சிட்டு வந்திட்றேன் ஜானகி!" என்றார்.

ஜானகி தன் நினைப்பில் இருந்தாள். பதில் சொல்லவில்லை. எழுந்து குளிக்கப் போனார்.


*** *** ***

ஷவர் சுகமாக இருந்தது. வெந்நீர் உடம்பில் வழிந்தோடுவது தோலுக்கு இதமாக இருந்தது. உள் உடல் வேதனை இப்போது தெரியவில்லை. மேல் உடல் சுகம் மட்டுமே தெரிந்தது. ஆனால் தோலைத் தேய்க்கும் போது ஆங்காங்கே கருமை கட்டியிருந்த இடங்களில் கொஞ்சம் வலி தெரிந்தது.

ஜெனரல் ஆஸ்பத்திரியின் புற்று நோய்ப் பிரிவில் அந்த இரண்டு டாக்டர்களும் துன்பமோ மகிழ்ச்சியோ இல்லாத இயந்திரத் தனமான குரலில் அவருடைய மருத்துவ அறிக்கையை வாசித்து விளக்கிக் காட்டியது திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.

"திரு சுந்தரம். உடம்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்டார் டாக்டர் ஷகாபுதீன்.

"அப்படித்தான் இருக்கிறது டாக்டர். தலை வலி சில நேரங்களில் தாங்க முடியவில்லை. வயிற்றில் எப்போதும் ஒரு குமட்டல் உணர்ச்சி. சாப்பிட முடியவில்லை. சாப்பிட்டால் உடனே வயிற்றுப் போக்கு வந்துவிடுகிறது. இரவில் சில நேரங்களில் உடல் நடுங்குகிறது" என்றார் சுந்தரம்.

டாக்டர் டான் கேட்டார்: "உங்கள் அன்றாட காரியங்களைக் கவனிக்க போதிய பலம் இருக்கிறதா?"

"கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். ஆனால் கொஞ்சம் ஏதாகிலும் வேலை பார்த்தவுடன் உடல் அசந்து விடுகிறது"

டாக்டர் டான் கையிலிருந்த கோப்பிலிருந்து தாள்களைப் புரட்டியவாறு சொன்னார்.

"உங்கள் நோய் அடையாளங்களைப் பார்த்து நாங்கள் சந்தேகப்பட்டது சரியாகப் போய்விட்டது. உங்கள் கபாலம் முதுகுத் தண்டு ஆகியவற்றின் "ஸ்கேனிங்" முடிவுகள் வந்திருக்கின்றன. உங்கள் ரத்தப் பரிசோதனையும் எலும்பு "மேரோ" பரிசோதனை முடிவுகளும் வந்துவிட்டன. கல்லீரல் "பயோப்சி" முடிவும் வந்திருக்கிறது."

சுந்தரம் அவர்கள் முகத்தை ஆவலுடன் பார்த்தார்.

ஷகாபுதீன் சொன்னார்: "உங்கள் மூளையில் ஒரு கட்டி இருக்கிறது. ஆபத்தான புற்று நோய்க்கட்டி. இரத்தப் பரிசோதனையில் வெள்ளை அணுக்கள் மிக அதிகமாக இருக்கின்றன. கல்லீரலில் புண் இருக்கிறது. இவை நிச்சயமாக உங்களுக்குப் புற்று நோய் இருப்பதற்கான ஆதாரங்கள்."

இதயத்தில் பாறை தாக்கிற்று. ஆனால் அதன் முழு வலியும் இன்னும் தெரியவில்லை.

"அப்படியா? உண்மையாகவா டாக்டர்?"

"ஆமாம். எல்லாப் பரிசோதனைகளும் செய்து விட்டோம். சந்தேகம் ஒன்றும் இல்லை!"

"ஆரம்பக் கட்டமா, முற்றி விட்டதா எப்படி...?"

"மூளையில் இருந்து உடம்பின் மற்ற உறுப்புக்களுக்கும் பரவ ஆரம்பித்து விட்டது. மிக விரைவாகப் பரவுகிறது. முற்றுவது மிக விரைவாக நடை பெறும்"

சுந்தரத்துக்கு நாக்கு வறண்டிருந்தது. "என்ன ஆகும் டாக்டர்?"

"இப்போது ஆகிக் கொண்டிருப்பது போலத்தான். தலைவலியும் மயக்கமும் இன்னும் அதிகமாகும். கல்லீரல் வீங்கி விடும். சாப்பாட்டில் ருசி போய்விடும். சாப்பாடு தங்காது. தோலில் ரணங்கள் உண்டாகும். அந்த ரணங்கள் சுலபத்தில் ஆறாது. உள் உறுப்புக்களில் புண் ஏற்பட்டால் ஆறாது. போகப்போக எந்த உறுப்பு புண்ணாகும் என்று சொல்ல முடியாது!"

இப்போதே வயிற்றில் அமிலங்கள் ஊறிப் புண்ணாய்ப் போவது போல உணர்ந்தார். கபாலத்துக்குள் மூளை மடிப்புக்களில் புழுக்கள் நௌிவது போன்ற ஒரு கண நேரக் கற்பனை. தலைகுனிந்து மௌனித்திருந்து கேட்டார்.

"மருந்துகள், சிகிட்சை...?"

"இங்கு நாங்கள் செய்வதற்கு அதிகம் இல்லை. அறுவை சிகிட்சை முடியாது என்று முடிவு செய்து விட்டோம். கட்டி உண்டாகியிருக்கும் இடம் மிக அபாயமானது. மௌன்ட் மிரியம் புற்று நோய் மருத்துவ மனையில் அட்மிட் பண்ணிக் கொள்ளுங்கள். ரேடியோதெராப்பியும் கெமோதெராப்பியும் ஆரம்பித்து விடுவார்கள். நாங்கள் விரிவான ரிப்போர்ட் தருகிறோம்!"

"எப்போது போக வேண்டும்?"

"எங்களைக் கேட்டால் இப்போதே அம்புலன்ஸ் வரச்சொல்லி அனுப்பி விடுவோம். அவ்வளவுக்கு முற்றியிருக்கிறது. ஒரு நாளும் கடத்தக் கூடாது. ஆனால் முடிவு உங்களுடையது"

"குணமாகிவிடுமா டாக்டர்?" கேள்வியில் குழந்தைத்தனம் இருந்தது. பயம் இருந்தது.

"அதை நாங்கள் சொல்ல முடியாது திரு. சுந்தரம். புற்று நோய் மருத்துவ மனையில் நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சோதித்துச் சொல்லுவார்கள். அதுவும் ரேடியோதெராப்பியும் கெமோதெராப்பியும் ஆரம்பித்த பிறகுதான் உத்தேசமாகச் சொல்ல முடியும். நீங்கள் விரைவாகப் போவது நல்லது. இதில் கடிதம் இணைத்திருக்கிறோம்! ரிப்போர்ட்டும் இருக்கிறது!" ஒரு பெரிய உறையைத் தந்தார்கள்.

ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு வௌியே வந்த பிறகு மனம் அந்த முடிவுகளை மறுதலித்தது. அந்த டாக்டர்களின் அறிக்கையின் மேல் சந்தேகம் வந்தது. ஏதோ இரண்டு நாட்கள் பரிசோதித்துவிட்டு இத்தனை நிச்சயமாகச் சொல்லுகிறார்களே! எப்படி இவர்களுக்குத் தெரியும்? கொஞ்சம் தலை வலி வந்துவிட்டால் புற்று நோய் என்ற அர்த்தமாகிவிடுமா? இந்த 57 வயதில் கொஞ்சம் அசதி, கொஞ்சம் அஜீரணம், கொஞ்சம் வயிற்றுப் போக்கு, கொஞ்சம் தலைவலி இயற்கைதானே! வேறு ஒரு நல்ல டாக்டரைப் பார்த்துக் கேட்க வேண்டும். உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். அரசாங்க ஆஸ்பத்திரி என்றால் இப்படித்தான். ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்குச் சென்று வேறு நல்ல டாக்டர்களைப் பார்க்க வேண்டும்.

காரில் வந்து உட்கார்ந்த போது சாவியைத் திருப்ப முடியாமல் கை நடுங்கிற்று. டாக்டர்களின் அறிக்கையின் மேல் பட்ட சந்தேகம் திடுமெனக் கரைந்து விட்டது. இவர்கள் நிபுணர்கள், என்னைப் போல் ஆயிரம் கேஸ் பார்த்தவர்கள். இவர்கள் சொல்லுக்கு அட்டியில்லை என்ற உண்மை தாக்கிற்று.

காரை எடுத்து வௌியாகி, ஜாலான் ஹோஸ்பிட்டல் சாலையிலிருந்து மெதுவாக நிதானமாக ஓட்டி வந்தார். ஜாலான் சுல்தான் அஹமட் ஷாவில் நுழைந்து தன் வீட்டுக்குப் போகும் வடூயில் தஞ்சோங் தொக்கோங் சுற்றுவட்டத்துக்கு வந்த போது இந்த விஷயத்தை ஜானகியிடம் எப்படிச் சொல்லுவது என்ற கேள்வி எழுந்தது. காரின் வேகம் குறைந்தது. தஞ்சோங் பூங்காவில் உள்ள தன் வீட்டுக்குப் போகும் பாதையில் திரும்புவதற்கு பதிலாக கர்னி டிரைவுக்குத் திரும்பினார். ஓரமாக நிறுத்திவிட்டு கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் சடசடவென மழை பிடித்தது. அங்குதான் காரைப் போட்டுவிட்டுக் காத்திருந்தார். தன் நோயின் கனத்தை அசை போட்டுப் பார்த்து அழுது தௌிந்தது அப்போதுதான்.

வெதவெதவென்றிருந்த சுடு நீர் வழிந்தவாறிருந்தது. உடம்பை வருடிக்கொண்டிருந்தது. இந்த சுகங்களை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். இவை நெடுநாட்களுக்கு நிலைப்பவை அல்ல. எத்தனை நாட்களுக்கு இப்படித் தானாக எழுந்து வந்து ஷவரைத் திறந்து சோப் தேய்த்துக்கொண்டு துண்டால் உடம்பைத் துவட்டிக்கொள்ள இயலுமோ தெரியவில்லை. டாக்டர் சொல்வதைப் பார்த்தால் யமதூதர்கள் வாசலில் காத்திருப்பதாகத்தான் தோணுகிறது.

ஏன் இப்படி 57 வயதில் எனக்கு அழைப்பு? என்ன குற்றம் செய்தேன்? எனக்குத் தெரிய 90 வயது வரை வாழ்ந்தவர்கள் இருக்கிறார்களே! பிரபல இடைநிலைப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் பதவியை கௌரவமாக வகித்து எல்லாரிடமும் நல்லவர் என்று பெயரெடுத்து, கோலாகலமாக ஓய்வு பெறும் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் ஆசிரியர்களின் அன்புக் கண்ணீர் மல்கும் பிரியா விடையைப் பெற்று இன்னும் ஈராண்டுகள் ஆவதற்குள்...

ஒருவேளை இது இறைவன் என்னைத் தண்டிக்கின்ற வேளை போலும். மகள் ராதாவின் வாழ்க்கை போன இரண்டாண்டுகளாகவே சரிந்து கொண்டிருக்கிறது. வௌிநாட்டுக்குப் படிக்கப் போன மகன் வசந்தன் இரண்டாண்டுகளாகப் பரிட்சையில் தோல்வி கண்டு திரும்பி வராமல் பணத்தைக் கரைத்துக் கொண்டிருக்கிறான். ஓய்வு பெற்றதில் வருமானம் நின்று போய் பென்ஷன் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இப்போது இந்த நோய்.

புற்றுநோய் மருத்துவ மனைக்குப் போவதா இல்லையா? ரேடியோதெராப்பிக்கும் கெமோதெராப்பிக்கும் சம்மதிப்பதா இல்லையா? முடிவுகள் எடுக்க வேண்டும். சிரமமான முடிவுகள். கெமோதெராப்பி பற்றி அவருக்குக் கொஞ்சம் தெரியும். கதிரியக்கம் பாய்ச்சுவார்கள். வயிறு குமட்டிக் கொண்டு வரும், தலைமயிர் உதிர்ந்து மொட்டையாகும். இரவில் தூக்கம் வராது. தலை சுற்றியவாறிருக்கும்.

அவர் மனதுக்குள் பீதி படர்ந்தது. கால்கள் தளர்ந்தன. குளியலறைச் சுவரில் சாய்ந்தார்.

"எவ்வளவு நேரமா குளிக்கிறிங்க? சீக்கிரம் வாங்க! நான் சாப்பாடு எடுத்து வச்சிட்டு ராதாவுக்கும் பையனுக்கும் தங்கிறதுக்கு ரூம் தயார் பண்ணனும்!"

ஜானகி வௌியிலிருந்து சத்தம் போட்டார்.

சுந்தரம் ஷவரைத் திருகி அடைத்தார். தண்ணீர் நின்றது. தோல் ரணங்கள் நோகாமல் டவலை ஒத்தி ஒத்தி எடுத்தார்.

மகளுக்கு அறை மட்டும் தயார் பண்ணுவதோடு உன் கடமை முடிந்துவிடாது ஜானகி. கையோடு இந்தக் கணவனுக்கும் ஒரு கல்லறை தயார் பண்ணி விடு.
--------------

அந்திம காலம் - 2


பத்தரை மணிக்கு அவர்களின் மனப் படபடப்பு தொடங்கியது. ஜானகி அர்த்தமில்லாமல் சமையலறைக்கும் வாசலுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். எட்டு மணியளவில் தான் சாப்பிட்ட சூப்பையும் இரண்டு ரொட்டித் துண்டுகளையும் ஜீரணிப்பதில் சிரமத்துடன் தலையில் லேசான வலியுடன் சுந்தரம் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்து, திரையில் என்ன நடக்கிறது என்பதை உள்வாங்கிக் கொள்ள முடியாமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது ஜானகியின் நடையையும் வாசலில் தோன்றித் தோன்றி மறையும் கார் விளக்குகளின் வௌிச்சத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். அதில் ஏதாவது ஒன்று ராதாவின் காராக இருக்காதா என்ற நப்பாசை தோன்றித் தோன்றி அமிழ்ந்து கொண்டிருந்தது. மத்தியானம் டாக்டர் கொடுத்த மரணச் செய்தியும் ராதாவின் துயரமும் மனத்துக்குள் சுழன்று சுழன்று ஓடிக்கொண்டிருந்தன.

பதினொரு மணியளவில் ஜானகி ஒரு நிமிஷ நீளத்திற்கு வாசலில் நின்று வடூயை வெறித்துப் பார்த்தாள். "எங்கேயாவது வழியில நின்னு போன் பண்ணக் கூடாது? கொஞ்சங்கூட பொறுப்பில்லாத புள்ள..." என்று முனகிக் கொண்டாள்.

பதினொன்று முப்பதுக்கு சடசடவென மழை பெய்யத் தொடங்கியது. ஜானகி அசந்து நாற்காலியில் உட்கார்ந்து விட்டாள். "இப்படி மழை பெய்யுதே!" என்றாள்.

தொலைக்காட்சியில் ஏதோ ஓர் ஆங்கிலப் படத்தில் இரண்டு தரப்பினர்கள் துப்பாக்கியால் தட தடவென சுட்டுக் கொண்டார்கள். பலர் சுருண்டு வீழ்ந்தார்கள். ஆனால் எங்கும் ரத்தம் சிந்திக் கிடக்கவில்லை. அப்படியே ரத்தம் சிந்தும் காட்சிகள் இருந்திருந்தால் தணிக்கைக் குழு அவற்றை இரக்கமில்லாமல் வெட்டி எறிந்திருக்கும் என சுந்தரம் நினைத்துக் கொண்டார்.

தொலைக்காட்சித் துப்பாக்கிப் போர் பார்க்கச் சோர்வாக இருந்தது. தலையைத் திருப்பி வாசலைப் பார்த்தார். மழைத் தண்ணீர் வழிந்து சிறு சிறு ஆறுகளைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது.

"ஏங்க எதுக்கும் வீட்டுக்குப் போன் பண்ணி புறப்பட்டுட்டாளா இல்லையான்னு கேட்டிருவமா?" என்றாள் ஜானகி.

சுந்தரம் யோசித்தார். கேட்கலாம். ஏதாவது தகவல் கிடைத்தால் ஆறுதலாக இருக்கும். ஆனால் புறப்பட்டு நெடு நேரமாயிற்று என்று தகவல் வந்தால் ஜானகியின் பீதி இன்னும் அதிகமாகும். அதைவிட மருமகன் சிவமணி போனை எடுத்தால் என்ன பேசுவது என்று தெரியாது. அவனிடம் சொல்லிவிட்டு வருகிறாளா, சொல்லாமல் வருகிறாளா ஒன்றும் தெரியவில்லை. இந்த நிலையில் ஏதாகிலும் பேசப்போய் பிரச்சினை விபரீதமாகிவிடலாம்.

"கொஞ்சம் பொறுத்திருந்து பாப்போம் ஜானகி. மழையினால தாமதமாகலாம். பாக்கலாம்" என்றார். ஜானகி மீண்டும் மௌனத்தில் ஆழ்ந்தார்.

தொலைக்காட்சியில் ஒரு ஹெலிகாப்டர் பறந்தது. ஒரு துப்பாக்கியின் முனை தெரிந்தது. துப்பாக்கி வெடித்தது. அடுத்த ஷாட்டில் ஹெலிகாப்டர் ஒரு தீப்பந்தாக மாறி பூமியை நோக்கி விழுந்தது. அதன் பாகங்கள் நெருப்புத் துண்டங்களாகச் சிதறி விழுந்தன.

சுந்தரத்தின் தலையின் வலதுப் பொட்டில் சுரீர் என்று வலித்தது. முகத்தைச் சுளித்து அந்தப் பக்கத்தைத் தடவிக் கொண்டார். வலி மறைந்து விட்டது. ஆனால் மனத்தில் கிலி வந்து புகுந்தது. என்ன செய்தி அனுப்புகிறாய் என் உடலே? உன்னை விடமாட்டேன் என்கிறாயா? சித்திரவதைக்குத் தயாராயிரு என்கிறாயா? உன் காலம் முடிகிறது, அதைக் கவனிக்காமல் தொலைக்காட்சி ஒரு கேடா என்கிறாயா?

பொறு, பொறு. இன்றிரவு உன்னைப் பற்றி அதிகம் யோசிக்க எனக்கு நேரமில்லை. என் மகள் பற்றிய செய்தி முடிவாக வேண்டும். அதன் பின் உன்னைப் பற்றி யோசிக்கிறேன்.

நெஞ்சில் லேசாகக் குமட்டல் வந்தது. தொண்டையைக் கனைத்து அடக்கிக் கொண்டார்.

மழை பட்டென்று நின்றுவிட்டது. முன்வாசல் மரத்தின் இலைகளிலிருந்து தண்ணீர் சொட்டுகின்ற ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

பதினொன்றே முக்காலுக்கு கேட்டின் முன்னால் பளீரென்று விளக்குகள் தெரிந்தன. கார் "பீப்" என்று ஹாரன் அடித்தது. ஜானகி முகத்தில் உயிர் வந்தது. "இதோ வந்திடுச்சிங்க. போய் கேட்டத் தெறங்க" என்றாள். சுந்தரம் எழுந்து சென்று கேட்டைத் திறந்தார். காரை காம்பவுண்டுக்குள் கொண்டுவந்து நிறுத்தினாள் ராதா.

அவர் கேட்டைச் சாத்தி வருவதற்குள் பரமா காரை விட்டு இறங்கினான். "தாத்தா" என்று கூவிக்கொண்டு ஒடிவந்தான். "பரமா... வா... வாடா கண்ணு" என்று அவனைக் கட்டித் தூக்கிக் கொண்டார். தூக்க முடிந்தது. மூன்று வயதுக் குழந்தை இலேசாகத்தான் இருந்தான். போனமுறை பார்த்தற்கு இப்போது இளைத்திருந்தான்.

"தாத்தா, டோன்ட் கால் மி பரமா. மை நேம் இஸ் பிரேம்..." என்றான் குழந்தை.

"மத்தவங்களுக்கு நீ பிரேம்... தாத்தாவுக்கு நீ பரமாதான்" என்று முத்தமிட்டார். பேரனுக்குத் தமிழ் பேசத் தெரியாது. மலேசியாவில் தமிழ்க் குடும்பங்களின் நடுத்தர வர்கத்துப் பழக்க வழக்கங்களுக்குப் பலியானது அவனுடைய குடும்பம். பிரேம் என்று அவன் பெற்றோர்கள் நாகரிகமாக வடநாட்டுப் பேராக வைத்திருந்தார்கள். சுந்தரத்திற்கு அந்தப் பெயர் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அந்தப் பெயரை பரமா என மாற்றிக் கூப்பிட்டார்.

பரமா திமிறிக் கொண்டு பாட்டியிடம் ஓடினான். ஜானகி அவனைத் தூக்கி முத்தமிட்டாள். ராதா ஒரு சிறிய துணிப் பையையும் கைப் பையையும் எடுத்துக் கொண்டு காரை விட்டு இறங்கினாள். சுந்தரம் போய் அவள் துணிப் பையை வாங்கிக் கொண்டார்.

"ஏம்மா இவ்வளவு நேரம்?" என்று ஜானகி கேட்டாள். அவள் குரலில் படபடப்புப் போய் ஆறுதல் வந்திருந்தது.

"வர்ர வழியெல்லாம் ரொம்ப மழைம்மா. அதான் மெது மெதுவா வரவேண்டியதாப் போச்சி!" என்றாள்.

"வழியில நின்னு போன் பண்ணியிருக்கலாமே!"

"போன் பண்ண வசதியில்ல. பிரேமுக்கு சாப்பாடு வாங்கிக் குடுக்க ஒரு இடத்தில நிப்பாட்னதத் தவிர வேற எங்கியுமே நாங்க நிக்கல..." என்றாள்.

"சரி, சரி. வா. சாப்பாடு வச்சிருக்கேன். வந்து துணி மாத்திட்டு சாப்பிடு" என்றாள் ஜானகி.

"பாட்டி. கிவ் மீ சொக்கலேட்" என்றான் பரமா.

"வா. மொதல்ல சோறு சாப்பிடு! அப்புறந்தான் சொக்லேட்" என்று அவனைத் தூக்கியவாறு உள்ளே போனாள்.

ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும், அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தவாறு மீண்டும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்தார் சுந்தரம். இப்போது ஏதோ நகைச்சுவைப் படம் நடந்து கொண்டிருந்தது. வரிக்கு வரி வெடிச்சிரிப்பு கேட்டது. கறுப்பர்கள் சிலரும் வெளுப்பர்கள் சிலரும் ஆண்களும் பெண்களுமாக சரிசமமாக ஜீன்ஸ் அணிந்து கொண்டு பெரிய பெரிய சப்பாத்துக்களுடன் வீட்டினுள் நடந்து கொண்டு பேசிப் பேசிச் சிரிக்க வைத்தார்கள். அதில் உள்ள போலித் தனத்தை சுந்தரம் நினைத்துப் பார்த்தார். இவர்கள் நாட்டில் இவர்கள் இப்படிக் குலவிக் கொள்வதில்லை. தொலைக் காட்சியில்தான் இது. வாழ்க்கையில் இவர்கள் நாட்டிலும் சரி, உலகத்தில் வேறு எங்காகினும் சரி, இத்தனை சிரிப்பில்லை. ராதாவின் வாழ்க்கையில் சிரிப்பில்லை. என் வாழ்க்கையில் இனி சிரிப்புக்கு இடமில்லை.

மீண்டும் தலைக்குள் சுரீர் என்று வலித்தது. முகம் சுளித்துப் பல்லைக் கடித்துக் கொண்டு பொட்டைத் தடவினார். வலி வலது முன் கையில் இறங்கி முறுக்கியது. இடது கையால் பிசைந்து விட்டுக் கொண்டார். யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தார். அவரவர் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சியில் மட்டும் வடை பொரிப்பது போல சர் சர்ரென்று சரஞ்சரமாகச் சிரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.


*** *** ***

சாப்பாட்டு மேசையில் மௌனம்தான் கனத்திருந்தது. பரமாவுக்கு முன்னால் குடும்பக் கதைகள் பேசவேண்டாம் என ராதா நினைத்திருக்க வேண்டும். பரமா அது வேண்டும் இது வேண்டும் என்று அடம் பிடித்து எதையும் சாப்பிடாமல் சோர்ந்து தூங்கி விழுந்தான். ராதா சாப்பாட்டை முடித்துக் கொண்டு அவனைத் தூங்க வைக்க அறைக்குள் போனாள். ஜானகி பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்திருந்தாள்.

தலையிலும் வயிற்றிலும் வலி இப்போது வருவதும் போவதுமாக இருந்தது. சிறிய சிறிய அலைகளாக, சுருட்டிச் சுருட்டி...

வலி தணிந்த நேரங்களில் சுந்தரத்தின் மனம் ராதாவின் குடும்ப வாழ்க்கையைச் சுற்றிச் சுற்றி வந்தது.

இவர்களின் இந்தச் சண்டைகள் கடந்த மூன்று வருடங்களாகவே நடந்து வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் முற்றிக்கொண்டுதான் போகிறதே தவிர சமரசமாவதாகத் தெரியவில்லை. தம்பதிகளுக்கிடையில் உண்மையான அன்பிருந்தால் இது இப்படி மோசமாக வேண்டாமே என்று சுந்தரம் நினைத்துக் கொண்டார். அந்த அன்புச் சுனைகள் எப்படியோ வற்றிவிட்டன. அந்த வறட்சியிலிருந்து காய்ந்த எரிந்த துகள்கள் பறக்கின்றன. புதிய புல் பச்சைகள் வளர முடியாத உரமிடூந்த வெள்ளை மணலாக அது ஆகிக் கொண்டு வருகிறது.

இத்தனைக்கும் இவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். ராதா கோலாலும்பூரில் ஒரு பிரபலப் பொருளகத்தில் அதிகாரியாக இருந்தாள். சிவமணி கம்ப்யூட்டர் கம்பெனி ஒன்றில் உயர் அதிகாரியாக இருந்தான். ராதாவின் பொருளகத்தில் அவனுக்குக் கணக்கு. அங்குதான் சந்தித்தார்கள். அந்த சந்திப்பில் மந்திரம் இருந்திருக்க வேண்டும். அவனைப் பற்றி வேறொன்றையும் அறிந்து கொள்ளாமலேயே அவனோடு தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டாள்.

அவனை முதன் முறையாக ராதா வீட்டுக்கு அழைத்து வந்த போது சுந்தரமும் ஜானகியும் அவனை அன்பாகத்தான் வரவேற்றார்கள். ஆனால் சிவமணியின் பேச்சும் போக்கும் சுந்தரத்திற்குப் பிடிக்கவில்லை. சளசளவென்று பேசினான். எல்லா நேரமும் தன் வேலை, உத்தியோக உயர்வு, தன் நண்பர்கள், பங்குச் சந்தை, அதில் எப்படி விரைவாகப் பணம் புரட்டுவது என்பது பற்றிப் பேசினான். சுந்தரத்தைப் பற்றியோ அவரின் குடும்பம் பற்றியோ ஒன்றும் அறிந்து கொள்ள அவனுக்கு ஆர்வம் இருக்கவில்லை. ராதாவிடம் மட்டும் முற்றாக மயங்கிப் போயிருக்கிறான் என்று தெரிந்தது. அவளை "டார்லிங், டார்லிங்" என்று அழைத்து அவர்கள் முன்னிலையிலேயே அடிக்கடி அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்தான். ராதா அந்தப் பிடியில் கிறங்கிப் போயிருப்பதும் தெரிந்தது.

ராதா கண்டிப்பாகவும் ஒழுக்கம் போதிக்கப்பட்டும் அளவான பாசத்தோடும் வளர்க்கப் பட்டவள். சுந்தரம் பிள்ளைகளிடம் பாசமாக இருப்பாரே தவிர கொஞ்சுவது அதிகம் இல்லை. இப்படிக் குடும்பத்தில் மிதமான, மிகைப்படுத்தப்படாத, வௌிப்படுத்தப் படாத பாசம் அவளுக்கு ஒரு குறையாகக் கூட அமைந்து விட்டிருக்கலாம். இப்போது இங்கே இன்னொரு ஆண் கட்டுப்பாடில்லாமல், வெட்கப்படாமல் வௌிப்படையாகக் கொஞ்சுகிறபோது தந்தையிடம் கண்ட குறையை நிறைவு செய்து கொள்ளுகிறாள் என்று அவருக்குத் தோன்றியது. இதைத் தவிர இந்த சிவமணியென்கிற ஆண்பிள்ளையிடம் இவள் கண்ட சிறப்புக்கள் அதிகமாக இருக்க முடியாது.

ஜானகிக்கும் அவனைப் பிடிக்கவில்லை. ராதாவும் சிவமணியும் திரும்பப் போனபிறகு அதை வௌிப்படையாகவே சுந்தரத்திடம் சொன்னாள்.

"ஏன் பிடிக்கல உனக்கு?" என்று கேட்டார் சுந்தரம்.

"என்ன மாதிரி ஜனங்களோ தெரியிலிங்க. அவனோட சொந்தக்காரங்க யாரையும் நமக்குக் கொஞ்சங்கூட அறிமுகமில்ல. முன்ன பின்ன கேள்விப்படாத ஆளுகளா இருக்காங்க" என்றாள். அப்படியானால் அவளுக்கு உறுதியான காரணங்கள் இல்லை. தான் தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லாமல் போனது, முன்பின் தெரியாத ஒருவன் தன் அனுமதிக்குக் காத்திராமல் தன் சொத்தை அபகரித்துப் போகும் உணர்வு இவைதான் காரணம் என்று தெரிந்து கொண்டார்.

"இதையெல்லாம் இப்ப நெனச்சி என்ன பிரயோஜனம் ஜானகி? உன் பெண்ணோட கண்களக் கவனிச்சியா? அவன் முகத்திலேயே அது நெலச்சிப் போச்சி. அந்தக் காதல்ல இருந்து அவள மீட்க முடியாது. அதோட அவ படிச்ச பொண்ணு. பட்டதாரி. அவளுடைய கணவனத் தேர்ந்தெடுக்கிற அளவுக்கு அவளுக்குப் புத்தியிருக்காதா?" என்றார்.

"உங்களுக்கு ஒண்ணும் தெரியாது! பட்டப் படிப்பு படிச்சிட்டா எல்லாந் தெரிஞ்சதுன்னு அர்த்தமா? வாழ்க்கையில அனுபவப்பட வேண்டாமா? நான் அவளுக்குப் புத்தி சொல்றேன். என் பேச்சக் கேப்பா!" என்றாள் ஜானகி.

கேட்கவில்லை. அடுத்த முறை வீட்டுக்கு வந்த போது ராதாவைத் தனியாக அழைத்து ஜானகி பேசினாள். கட்டினால் அவனைத்தான் கட்டுவேன் என ஒரே போடாகப் போட்டுவிட்டாள் ராதா. அவன் அன்போடு நடந்து கொள்ளுகிறான். அவள் சொல்வதையெல்லாம் மதிக்கிறான். எந்நாளும் அவளுடனேயே குழையக் குழைய வருகிறான். தடபுடலாக உடுத்துகிறான். தன்னுடைய அந்தரங்க விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக நீதான் என் தேவதை என்று சொல்லிவிட்டான். அவளைத் தான் பூஜிக்கின்ற பீடத்தில் உயர்த்தி வைத்துவிட்டான். இந்த நிலையில் நிர்தாட்சண்யமாக, நடுநிலையாக அவனை எப்படி எடை போட முடியும் அவளால்? ஜானகி தோற்று விட்டாள்.

திருமணம் பேச அவன் பெற்றோர்கள் வந்தபோது தடங்கல்கள் நிறைய வந்தன. தங்கள் பிள்ளையைப் போலவே அவர்களும் அவர்களைப் பற்றியே நிறையப் பேசினார்கள். "எங்க சொந்தக்காரங்க ஏராளம் பாருங்க! உலகம் பூரா இருக்காங்க. என் தம்பி ஆஸ்த்திரேலியாவுல செட்டில் ஆகியிருக்கு. சிவமணிக்குப் பொண்ணக் குடுக்க காத்திக்கிட்டு இருக்காங்க. இவனுக்குத்தான் குடுத்து வைக்கில!" என்று அவன் அம்மா பிரகடனப் படுத்தி, போனால் போகிறதென்று இதற்கு உடன்பட்டதை மறைக்காமல் சொன்னாள். பின்னர் கொஞ்சமும் தயங்காமல் வரதட்சணையைப் பற்றியும் கேட்டாள் அந்த அம்மா.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரம் அந்த இடத்தில் மட்டும் உறுதியாகத் தௌிவாகச் சொன்னார். "அம்மா, நான் வரதட்சணை கொடுக்க மாட்டேன். அந்தப் பேச்சையே எடுக்க வேணாம். பொண்ணுக்கு நாங்க கொஞ்சம் பணம், நகைகள் தனியா வச்சிருக்கிறோம். அதக் கொடுப்போம். ஆனால் அது எவ்வளவுன்னு நீங்க கேக்கிறதும் நாகரிகமில்ல, நாங்க சொல்றதும் நாகரிகமில்ல!" என்றார். சம்பந்தியம்மாள் அடங்கிப் போனாள். ஆனால் அவள் முகம் தொங்கிப் போனது.

ஆனால் திருமண சமயத்தில் பல விஷயங்களில் அவள் அவர்களை நச்சரித்துக் கொண்டேயிருந்தாள். திருமணத்தன்று அவள் ஆர்ப்பாட்டம் சொல்லிமுடியவில்லை. ஆனால் சுந்தரமும் ஜானகியும் காரியம் கெடக்கூடாது என ஒத்துப் போனார்கள்.

திருமணம் முடிந்த ஓராண்டு அவர்கள் வாழ்க்கை இன்பமாகத்தான் இருந்தது. அப்புறம் பரமா கருத்தரித்துப் பிறந்தான். அதன் பின் சின்னச் சின்ன விரிசல்கள் ஆரம்பித்தன. சிவமணி பங்கு மார்க்கெட்டில் திடீர் பணக்காரனாக ஆசை கொண்டு கொஞ்சம் பணத்தை இழந்தான். சுந்தரம் கொடுத்துச் சரிகட்டினார். மீண்டும் அவனுக்குப் பணமுடை வந்தபோது சுந்தரம் மறுத்துவிட்டார். ராதா தன் சேமிப்பிலிருந்து கொடுத்தாள். அதற்கப்புறம் அப்படிக் கொடுக்க அவள் தயங்கியபோது சண்டைகள் தொடங்கின. அப்புறம்தான் இந்த அடிதடிக் கொடுமை.

*** *** ***
பரமாவைத் தூங்கப் போட்டுவிட்டு ராதா ஹாலில் வந்து உட்கார்ந்தாள். உடை மாற்றி இரவு டிரஸ் போட்டிருந்தாள். மேக்கப் கலைந்து எண்ணெய் முகமாக இருந்தாள். ஜானகியும் எல்லாவற்றையும் கழுவித் துடைத்துவிட்டு அங்கு வந்து உட்கார்ந்தாள். சுந்தரம் தொலைக்காட்சியை அடைத்தார்.

"நீ வந்திருக்கிறது உன் புருஷனுக்குத் தெரியுமா அம்மா?" என்று கேட்டார்.

"தெரியாது. தன் அட்டகாசங்கள் முடிஞ்சதோட ஆள் தன் காரை எடுத்துக் கொண்டு வௌியே போயாச்சி!" என்றாள் ராதா.

"என்னம்மா பிரச்சினை உன் வீட்டில...?" என்று கேட்டார்.

"எல்லாம் எப்போதும் உள்ள பிரச்சினைதான் அப்பா! அந்த மனுஷன் வரவர மிருகமாகிகிட்டு வர்ராரு. கொஞ்சம் விவகாரம் வந்திட்டா கைய நீட்டிட்றாரு!"

"என்ன விவகாரம், புதுசா?"

"என்னமோ புதுசா ஒரு பிஸ்னஸ்ல பணம் போடப் போறாராம். அதுக்கு என் சேமிப்பில இருக்கிற பணம் வேணுமாம். நான் முடியாதின்னேன். அதுக்குப் பலவிதமான ஏச்சு பேச்சு. அது முத்தினவொண்ண கையில பிடிச்சித் தள்றது, அறையிறது! நான் என்ன அவருக்கு வேலைக்காரியா, அடிமையா இதெல்லாம் ஏத்துக்கிட்டு போறதுக்கு?" கண்களை கசக்கிக் கொண்டாள்.

"என்ன மாதிரி ஜென்மம் இந்த மனுஷன்? அவங்க அப்பா அம்மா வளர்த்த வளர்ப்பு அப்படி. ஆந்த ஜனங்கள அப்ப இருந்தே எனக்குப் பிடிக்காது" என்று தான் முன்னால் சொல்லமுடியாமல் மறைத்து வைத்திருந்த குறைகளைக் கொட்டித் தீர்த்தாள் ஜானகி.

"அவங்க அம்மாகாரி மாசத்துக்கு ஒருதடவ வந்ததிர்ராம்மா ஊட்டுக்கு. வந்து என்ன தூபம் போடுவாளோ தெரியில. அவ போனவுடனே இந்த மனுஷன் என்னக் கறிக்க ஆரம்பிச்சிடுவாரு!" என்றாள் ராதா.

சுந்தரம் யோசித்துச் சொன்னார். "நான் உனக்கெதிரா பேசிறதா நெனைக்காதம்மா. உன் புருஷன் முரடனா மாறிக்கிட்டிருக்கான் அப்படிங்கிறத ஒத்துக்கிறேன். ஆனா நீ கொஞ்சம் அடங்கிப் போய் விட்டுக் கொடுத்து மாத்தலாமில்லியா? குடும்ப ஒத்துமை முக்கியம் இல்லியா? இப்படி கோவிச்சிக்கிட்டு வீட்ட விட்டு வந்திட்டா விஷயம் முத்திப் போய் ஒட்ட முடியாத அளவுக்கு ஒடஞ்சிடுமே அம்மா!"

ராதா சீறினாள். "அந்த 'பாஸ்டர்டோட' நான் இனிமே இருந்து குடும்பம் நடத்த முடியாது அப்பா. முடியவே முடியாது. அவன் மனுஷன் இல்ல மிருகம்!"

அந்தச் சொற்களின் கடுமை அவரைத் தாக்கிற்று. இவளை இத்தனை மென்மையாக வளர்த்திருந்தும் இத்தனை வன்முறை இவள் மனத்திலும் வாயிலும் எப்படி வந்து விளைந்தது?

"ராதா! எல்லா மனுஷருக்குள்ளேயும் மிருகங்கள் இருக்கத்தான் செய்யுது. அந்த மிருகத்த எழுப்பிறதுக்கு எடங் குடுக்கும் போது அது எழும்பி வந்து சீறுது. இப்ப நீ ஒரு கொடிய பாம்பாகச் சீறலியா? அப்படித்தான். இந்த முகந் தெரியாத, இனந்தெரியாத மிருகங்கள நாம் அடிச்சித் துவச்சி அடக்க முடியாதம்மா. அடிக்க அடிக்க அது புதுசா உயிரெடுத்து இன்னும் சீறும். உன்னக் கொல்ற வரையில அது உன்னத் துவம்சம் செய்யும். "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி"ன்னு திருக்குறள்ள இருந்து நான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்ல..." சிறு வயதில் தன் குழந்தைகளுக்குத் தமிழும் திருக்குறளும் அவர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அது இப்போது ஞாபகப் படுத்தக் கை கொடுத்தது.

"அப்பா! அந்த மனுஷனப் பத்திப் புரியாம பேசிறிங்க. நான் அவன மிருகம்னு சாதாரணமா சொல்லல. மொதல்ல வாயால திட்டினாரு. பொறுத்துக்கிட்டேன். அப்புறம் பிடிச்சித் தள்ள ஆரம்பிச்சாரு. பொறுத்துக்கிட்டேன். அப்புறம் அடி, கிள்ளல். இப்ப என்ன நடக்குது தெரியுமா அப்பா?"

நைட் டிரசைக் கொஞ்சம் தூக்கி துடையைக் காட்டினாள். தளும்புகள். திட்டுத் திட்டாக... "சிகிரெட்டால சூடு வைக்கிறாருப்பா..." விம்மி அழுதாள்.

மனம் நைந்தது. எப்படி மனிதன் முற்றாக இப்படி மிருகமாகிவிட முடியும்? மிருகத்திலும் இது கொடிய மிருகம். இன்னொரு சக மிருகத்தைச் சித்திரவதை செய்கின்ற கொடிய மிருகம். இரையாக ஒரு பறவையை தாடையில் பற்றியவுடன் பகுதி பகுதியாக அதை நீண்ட நேரம் சித்திரவதைச் செய்து கொல்லுகின்ற விஷப் பாம்பு.

தன் உள்ளத்திலும் சினம் சீறி எழுவது தெரிந்தது. இப்படிச் செய்யப் பட்டால் தான் கூட கத்தியைத் தூக்கி தன் எதிராளியைக் கொல்ல முடியும் என்று தோன்றியது. மருமகன் இப்போது தன் முன் இருந்தால் "அட மிருகமே" என்று சீறி அவனை அடித்திருப்பேன் என்று தோன்றியது. உடலில் நோய் இருந்தாலும், இதனால் எனக்குத்தான் ஆபத்து என்று தெரிந்தாலும் அவற்றையெல்லாம் அந்தக் கணத்தில் மறந்துவிட்டு பழி வாங்கும் உணர்ச்சிக்குத் தான் முற்றாக ஆட்படமுடியும் எனத் தெரிந்தது.

ஆனால் அந்த எதிர்ச்செயலும் ஒரு மிருக உணர்வுதான். மிருகங்கள்தாம் கொஞ்சமும் யோசிக்க இடமில்லாமல் தங்கள் தற்காப்புக்காக வெறும் உணர்ச்சி நிலையில் எதிர்க்கின்றன. ஆனால் அறிவு நிலையில் மனிதன் அப்படிச் செய்யக் கூடாது. தன்னுடைய எட்ரினலின் சுரப்பிக்கு அவன் முற்றாக அடிமைப்பட்டுப் போக முடியாது. நீதி என்று ஒன்று இருக்கிறது. கொள்கை என்று ஒன்று இருக்கிறது. ஒழுக்கம் என்றும் வாழ்க்கை நெறி என்றும் உள்ளன. இவற்றுக்குக் கீழ்தான் மனிதன் செயல்படவேண்டும்.

57 வயதில் தனக்கு இது புரிகிறது. ஆனால் 33 வயதில் வாழ்க்கையின் சுகங்களை உணர்ச்சி நிலையில் உடல் ரீதியில் அனுபவிக்கக் காத்திருக்கும் மகளுக்கு அதைச் சொல்ல முடியுமா?

விம்மும் மகளை ஜானகி அணைத்துப் பிடித்திருந்தாள். சுந்தரம் மௌனமாக இருந்தார். அவள் விம்மல்கள் தணிந்த நேரத்தில் சொன்னார்.

"ஏம்மா! இந்த விஷயம் ரொம்ப முத்திப் போச்சின்னு தெரியுது. இத இப்படியே விட்டுட்டா குடும்பம் செதஞ்சி போயிடுமே. பிள்ளை ஒண்ணு இருக்குங்கிறதும் ஞாபகத்தில வச்சிக்க. ஆக உங்கள சமரசப் படுத்தி வைக்க நாங்க ஏதாவது செய்ய முடியுமா? சிவமணியக் கூப்பிட்டு நான் சீரியசாப் பேசிப் பாக்கட்டுமா?"

கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னாள்: "அது இனிமே நடக்காதப்பா. சமரசம் பண்ணி வைக்கிற கட்டத்தையெல்லாம் தாண்டியாச்சி. அவரு தயாரா இருந்தாலும் நான் தயாரா இல்ல. என்னால முடியாது. அந்த நரகத்தில இருந்து நான் விடுபடணும். எனக்கு விடுதலை வேணும்!"

"அப்படின்னா...?"

"விவாக ரத்துக்கு மனுச் செய்யப் போறேம்பா!"

மீண்டும் உள்ளத்தில் சம்மட்டி அடி விழுந்தது. எத்தனை எளிதாகச் சொல்லுகிறாள்! எவ்வளவு பெரிய விஷயத்தை எத்தனை சிறிய சொற்களில் சொல்லுகிறாள்!

விவாக ரத்து இந்த நவீன காலத்தில் எல்லா சமுகங்களுக்கிடையே நடக்கிறதுதான் ஆனால் குடும்ப வாழ்வில் அந்த நிகழ்ச்சி ஏற்படுத்துகின்ற பூகம்பங்கள் சாதாரணமானவையல்ல. அதுவும் ஒழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் மதித்து நடந்த ஒரு குடும்பத்தில் இப்படி நடக்கும் போது... நீதிமன்றத்தில் ஏறி, குடும்ப ரகசியங்களைப் பொத்தாம் பொதுவில் அலசி, சொத்துப் பகிர்வுக்குப் போராடி, குழந்தைகளைப் பிரித்தெடுக்க சட்ட நுணுக்கங்கள் தேடி... இதற்காகவா ஊரறியப் பந்தல் போட்டு, மேளம் கொட்டி, அக்கினி வலம் வந்து, ஆயிரம் தெய்வங்களைத் துணைக்கழைத்து, நூறு சத்தியங்கள் செய்து திருமணம் செய்து கொள்வது?

தானும் ஜானகியும் வாழ்வில் எவ்வளவோ சண்டைகள் போட்டாயிற்று. ஆனால் மண முறிவு என்பதை நினைத்துக் கூடப் பார்ததில்லை. இளவயதில் வீட்டை விட்டுப் போய் ஓரிரு இரவுகள் கோபத்தில் வௌியே கூட இருந்து விட்டு வந்திருக்கிறார். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் அறிவும் நிதானமும் எந்நாளும் உணர்ச்சிகளை வென்றிருக்கின்றன. தங்களுக்குப் பிடித்தமான ஆசைகளை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அவர்கள் இருவரும் வென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெண் முறிவுக்குத் தயாராக இருக்கிறாள். விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்த்திருக்கிறாளா?

"ஏம்மா! இதனால ஏற்படக் கூடிய பின் விளைவுகள யோசிச்சிப் பாத்தியாம்மா?"

"பின் விளைவுகள் வர்ர மாதிரி வரட்டும். அதையெல்லாம் அனுபவிச்சித்தான் ஆகணும். ஆனா அதையெல்லாம் யோசிச்சி நான் காலம்பூரா இந்த பாஸ்டர்ட் கிட்ட அடிமையா இருந்து அடியும் உதையும் வாங்கிறதா அப்பா? இப்ப இவர் கிட்ட பணிஞ்சி போனா இன்னும் மோசமாத்தான் போவாரு! அப்ப எனக்கு எப்ப விடிவு? முடியாதப்பா, இனிமே முடியவே முடியாது!"

இல்லை. இவள் விளைவுகளை இன்னும் யோசிக்கவில்லை. தன் நலனைத்தான் யோசிக்கிறாள். தான் துன்பப் படக் கூடாது என்றுதான் நினைக்கிறாள். தன் குழந்தையின் துன்பமும் தன் கணவனின் துன்பமும் தன் பெற்றோர்களின் குடும்ப மானமும் இவளுக்கு இந்தக் கணத்தில் பெரிதாகத் தெரியவில்லை. தன் நலனுக்கு முன்னால் வேறு எதையும் இவள் பொருட் படுத்தவில்லை.

ஆனால் "இந்தக் காரணங்களையெல்லாம் எண்ணி நீ துன்பப் படு" என்று யோசனை சொல்ல நான் யார்? குழந்தையின் நலனுக்காகவும் குடும்பத்தின் நலனுக்காகவும் உன் தன்னலத்தைத் துறந்துவிடு என்று ஒரு தியாகத்தை அவள் மீது திணிக்க நான் யார்?

நவீன காலத்து வாழ்க்கையைத் தன்னலம்தான் இயக்குகிறது. அவள் இயங்குகின்ற சமுதாயத்தில் தனி மனிதரின் முக்கியத்துவமும் பெண் விடுதலையும் பெண் முன்னேற்றமும்தான் கருப் பொருள்களாக இருக்கின்றன. ஜானகியும் அவரும் பிறந்த தலைமுறையோடு குடும்பம் சமுதாயம் பொது நலம் என்ற உணர்ச்சிகள் முடிந்து விட்டன.

சிவமணியும் இந்தத் தலைமுறை ஆண்மகன்தான். முன்னேறு, உன்னை வளர்த்துக்கொள், கல்வி பெருக்கு, பொருள் பெருக்கு என்ற உந்துதல்களைத் தன் சூழ் நிலையில் பெற்று வளர்ந்தவன். அவன் ஆசைப்படும் அளவுக்கு, அவன் நண்பர்கள் அடைந்த அளவுக்கு அவனுக்கு முன்னேற்றம் இல்லாத போது அவனுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. வாழ்க்கையில் பணம் சேர்ப்பதைத் தவிர வேறு லட்சியங்கள் இருக்கின்றன என்பது அவனுக்குத் தெரியவில்லை. கையில் பணம் நிறைய இல்லாவிட்டால் குடும்பம் நடத்த முடியாது என நினைக்கிறான். அந்தப் பணத்தைப் பெற பல குறுக்கு வழிகளை நாடுகிறான். அது அவனிடமிருந்து நழுவிப் போகும் போது அவன் நெஞ்சில் பயமும், கோபமும் எரிச்சலும் நிறைகின்றன.

சுந்தரம் ஜானகியைத் தானாகப் பார்த்து விரும்பிப் பேசிப் பழகிக் காதலித்துத்தான் மணந்து கொண்டார். அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தபோது அவர் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர். முன்னூறு நானூறு வெள்ளிக்கு மேல் சம்பளம் பார்த்ததில்லை. அந்தக் காசில் சின்ன வீட்டில் சிக்கனமான வாழ்க்கைதான் வாழ முடிந்தது. ஆனால் அது செழிப்பான வாழ்க்கை. அன்பு கொடூத்த வாழ்க்கை.

ஜானகி அடங்கி கணவனுக்கு அடிமை போல் நடந்தாள். ஆனால் அவர் அவளை அடிமையாக நடத்தவில்லை. பல விஷயங்களில் ஜானகியையே எஜமானாக நடக்கவிட்டார். அவள் விடுதலை கேட்கவில்லை. இவராகவே அதைக் கொடுத்திருந்தார். அந்த வாழ்க்கை நிம்மதியாக இருந்தது. பண்பாட்டோடு இருந்தது. இவர்கள் எந்தக் காலத்திலும் பொருளாதார உச்சத்தில் இல்லாவிட்டாலும் அவர்களைச் சுற்றியுள்ள சமுதாயம் அவர்களை மரியாதையாகப் பார்த்து அன்போடு பேசியது.

ஏதாகிலும் காரணத்தால் அந்த மரியாதையையும் அன்பையும் மற்றவர்கள் அவர்களுக்குக் காட்டவில்லை என உணர்ந்தால் அவர்கள் அதை வற்புறுத்திப் பெறவில்லை. அவர்கள் எந்தக் காலத்திலும் எந்த விஷயத்திலும் முன்னுக்கு நிற்க வேண்டும் என்று முயன்றதில்லை. ஆனால் பல வேளைகளில் அவர்கள் முன்னுக்கு நிறுத்தி வைக்கப் பட்டபோது தங்கள் கடமையைப் பொறுப்புடன் ஆற்றியிருக்கிறார்கள்.

அந்தப் பண்புகள் இந்த இளைய தலைமுறையைப் போய்ச் சேரவில்லை. குடும்பம் தந்த பண்புகளை விட வௌியில் உள்ள ஆடம்பர உலகம் தந்த பண்புகளே இவர்களிடம் பதிந்துள்ளன. தங்கள் சூழ்நிலையிலிருந்து பலவற்றைத் தாங்களே கற்றுக் கொண்டார்கள். மிகச் சிறு வயதிலேயே பெற்றோர்களை அந்நியப் படுத்திக்கொண்டு தங்கள் சகவயது மக்களோடு இணைந்து வாழ்க்கையின் எல்லாவித இன்பங்களையும் அனுபவிக்கத் துடித்து, பின் அதனால் - இப்போது ராதாவின் வாழ்க்கையில் நடப்பது போல - எல்லாவிதத் துன்பங்களையும் அனுபவிக்கிறார்கள். வேண்டாம் என்று சொல்வது, நீங்கியிருப்பது, ஒதுங்கியிருப்பது இவர்களுக்குப் பழக்கமில்லை. கொடு என்பதும் அனுபவிப்பதும் முழுகுவதும் பின்னர் துன்பப்படுவதும் இவர்கள் வாழ்க்கையாக இருக்கிறது. "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இல" என்பது இவர்களுக்கு ஒரு காலும் புரியாது.

ஜானகி என்ன சொல்வது என்று தெரியாமல் விக்கித்திருந்த வேளையில் சுந்தரமும் சொல்லிழந்து உட்கார்ந்திருந்தார். அந்த மௌனத்தில் இத்தனை நேரம் அடங்கியிருந்த வயிற்றின் நோய் தலை தூக்கிற்று. எங்கோ ஆழத்தில் ஒரு சிறிய தீப்பொறியாக ஆரம்பித்தது விறு விறுவென்று பற்றி எரிமலையாக வெடித்தது. அம்மா என்று வாய்விட்டுக் கத்த வேண்டிய நேரம்தான். ஆனால் அதற்குப் பதிலாக மௌனத்தைத் தூள் தூளாக உடைப்பது போல் டெலிபோன் மணி அலறியது. வயிற்றில் வலி கப்பென்று அடங்கிவிட்டது.

வயிற்றை லேசாகத் தடவியவாறு அவர் எழுந்து கடிகாரத்தைப் பார்த்தார். ஒன்றே கால். இந்த நடு நிசியில் யார் போன் பண்ணுவார்கள்?

மனத்தின் அடியில் யாராக இருக்கலாம் என்ற உத்தேசம் இருந்தது. ராதாவின் முகத்திலும் ஜானகியின் முகத்திலும் இருந்த கலவரத்தைப் பார்த்த போது அவர்கள் உத்தேசமும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தெரிந்தது.

டெலிபோனைக் காதில் வைத்து "ஹலோ" என்றார்.

"ராதா அங்க வந்தாளா?" ஒரு ஹலோ இல்லை, வணக்கம் இல்லை, யார் பேசுவது என்ற கேள்வி இல்லை. அவனுடைய அவசரம்தான் அவனுக்குப் பெரிது.

"யார் சிவமணியா பேசிறது?"

"சொல்லுங்க மாமா! வந்தாளா?"

"ஆமாப்பா. இங்கதான் இருக்கா!"

"ப்ளடி, ஸ்டுப்பிட் வூமன். ஒரு வார்த்தை என் கிட்ட சொல்லாம என் பிள்ளையையும் தூக்கிட்டுப் போயிட்டா!"

அவன் கோபத்தோடு அவர் போட்டி போட விரும்பவில்லை. "உன்கிட்ட நல்ல முறையில சொல்லிட்டுப் புறப்பட்ற சூழ்நிலை உன் வீட்டில இல்லைன்னு நெனைக்கிறேன்!" என்றார் அமைதியாக.

"அவளப் பேசச் சொல்லுங்க!"

சுந்தரம் போனைப் பொத்திக் கொண்டு ராதாவைப் பார்த்தார். "சிவமணி பேசணும்கிறதும்மா!"

ராதா கையை பலமாக ஆட்டினாள். மாட்டேன் என்றாள். முகத்தைத் திருப்பிக் கொண்டாள். சுந்தரம் போனில் சொன்னார்.

"அவ இப்ப இங்க இல்லப்பா. தூங்கிட்டான்னு நெனைக்கிறேன்!" பொய்தான். அந்தத்தருணத்தில் ஏன் பொய் இந்த வாய்க்குள் வந்தது எனத் தெரியவில்லை. நிலைமையை இன்னும் மோசமாக்க வேண்டாம் என்பதாலா? "புரை தீர்ந்த நன்மை பயக்கும்" என்பதாலா?

"எனக்குத் தெரியும் மாமா! எங்கிட்ட பேசமாட்டேங்கிறாள்ள? ஓக்கே. நாளக்கு ராத்திரி புறப்பட்டு நான் அங்க வர்ரேன். அவ என்ன செஞ்சான்னு உங்க கிட்ட சொல்றேன். உங்க மக செஞ்சது சரிதானான்னு நீங்களே சொல்லுங்க!" போனை வைக்கப் போனவன் திடீரென்று கேட்டான்: "பிரேம் எப்படி இருக்கான்?"

"நல்லா இருக்காம்பா. அசந்து தூங்கிறான்"

"மாமா! யூ ரிமெம்பர் திஸ். உங்களுக்கும் சொல்றேன், அவளுக்கும் சொல்றேன். பிரேம் என் பிள்ளை. எங்கிட்ட இருந்த பிரேம பிரிக்க நெனைச்சான்னா நான் கொலைகாரனாயிடுவேன்னு சொல்லுங்க!" படார் என்று போனை வைத்தான்.

சுந்தரம் வயிற்றில் அந்த வலி எரிமலை இன்னொருமுறை வெடித்துக் குழம்பு கக்கி அடங்கியது. முகம் சுளித்து வயிற்றைப் பிசைந்தார்.

"என்னப்பா?" என்று கேட்டாள் ராதா. அவள் தன் வலியைப் பற்றிக் கேட்கவில்லை. டெலிபோன் உரையாடலைப் பற்றிக் கேட்கிறாள் என்பதை அவர் ஞாபகப் படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.

வயிற்றைப் பிசைந்தவாறு சொன்னார். "மணி நாளைக்கு ராத்திரி இங்க வருதாம்மா. பிரேம் அவரோட பிள்ளைங்கிறத ஞாபகப் படுத்தச் சொன்னிச்சி!"

"ஆமா. அதில கொறச்சல் இல்ல! பத்து மாசம் சுமந்து பெத்துப் போட்டாரில்ல!"

இன்னொரு எரிமலை வயிற்றுக்குள் வெடித்து குழம்பு வடூந்து தணிந்தது. என் வேளை வந்து விட்டதா? இத்தனை விரைவாகவா? மத்தியானம் தண்டிக்கப்பட்டு இரவுக்குள் தண்டனை நிறைவேற்றமா?

"ஜானகி! நான் போய் படுக்கிறேன். உடம்பு சரியில்ல..." படுக்கை அறையை நோக்கி நடந்தவர் திரும்பி ஜானகியைப் பார்த்துச் சொன்னார். "ஜானகி. நேரமாச்சி வந்து படு. ராதாவையும் படுக்க விடு. களைப்பா இருக்கும்."

ஜானகி அரை குறையாகத் தலையாட்டினாள்.

ஜானகிக்குத் தெரியாது. நான் கூப்பிடும் அர்த்தம் புரியாது. இந்தத் துயரம் கப்பிய சூழ்நிலையில் என் சூசகங்கள் புரியா.

ஜானகி, சீக்கிரம் படுக்கைக்கு வா. நான் செத்துப் போகும் வேளை வந்துவிட்டது. உன்னிடம் தனிமையில் சொல்லி விடைபெற்றுக் கொள்ள வேண்டும். சீக்கிரம் வா என் அன்பு மனைவியே! உன் மகள் துயரத்தை அவள் மெதுவாக அனுபவிக்கட்டும். உனக்கென தனித்துயரங்கள் நான் ரகசியமாய் வைத்திருக்கிறேன். உன்னிடம் தந்து நான் போக வேண்டும். வா. விரைந்து வா.
----

அந்திம காலம் - 3


ஆனால் ஜானகி நெடு நேரம் வரை வரவில்லை. மகளுடன் பேசியவாறே இருந்தாள். மகளின் காயப்பட்ட மனத்தின் நோவுகளுக்கு வடிகால் தேவைப் படுகின்றது. தாயின் மடியில் அதனைக் கொட்டிக் கொண்டிருக்கிறாள். இங்கே சுந்தரத்தின் உண்மையான உடல் நோவுக்கு அன்பு ஒத்தடம் கொடுக்க வேண்டிய மனைவியை மகள் பறித்துக் கொண்டு விட்டாள்.

சுந்தரத்துக்குத் தலைக்குள் மின்னல்கள் வெட்டின. வயிறு குமட்டியது. நெஞ்சுக்குள் ஏறி தொண்டை வரை வந்தது. குளியலறைக்கு ஓடி கழுவு பேசினில் குனிந்து குமட்டினார். ஒன்றும் வரவில்லை. எச்சில் மட்டும் துப்பினார். அந்தக் குமட்டலின் தீவிரத்தில் கண்களில் கண்ணீர் வந்தது. நெஞ்சு எரிந்தது. குழாயைத் திறந்து முகம் கழுவித் துடைத்தவாறு கண்ணாடியில் பார்த்தார்.

முகம் கருத்துத் தொங்கிக் கிடந்தது. கண்களைச் சுற்றிக் கருமை இருந்தது. முகத்தில் வெள்ளை மயிர்கள் துளிர்த்திருந்தன. பார்க்கப் பாவமாக இருந்தது. சென்ற வருடம் வரை எப்படி இருந்தேன்! "நீங்க ரிட்டையராகப் போறிங்களா? அப்படி வயசே தெரியலியே" என்று எத்தனை பேர் சொன்னார்கள்! இந்த இரண்டாண்டுகளுக்குள் இத்தனை மாற்றங்களா?

மெதுவாகப் படுக்கைக்கு வந்து சாய்ந்தார். மெதுவாகச் சுழலும் காற்றாடியிலிருந்து வரும் காற்றின் வருடல் இதமாக இருந்தது. மெத்தையின் தாங்கல் சுகமாக இருந்து. மிருதுவான தலையணையின் அணைப்பு ஆறுதலாக இருந்தது. ஆனால் மனம் ஜானகிக்கு ஏங்கியது. "ஏங்க, என்ன செய்யுதுங்க உங்களுக்கு?" என்ற படபடப்பு மிக்க கேள்விக்கும் அவள் கைகள் நெஞ்சை நீவிவிடும் சுகத்துக்கும் ஆசைப்பட்டது. ஆனால் ஜானகி மகளின் துயரத்துக்கு பாரந்தாங்கியாக அங்கேயே இருந்தாள்.

தொண்டையில் புளிப்புணர்ச்சி இருந்தது. வயிற்றின் பக்க வாட்டில் லேசான மழுங்கிய வலி இருந்தது. கல்லீரலா? சிறுநீரகமா? குடல் வாலா? எந்த உள் உறுப்பு இப்போது புண்ணாகிப் போனது? என்ன குற்றம் செய்து விட்டேன் இந்தத் தண்டனைக்கு? அதுவும் இப்படி அடுக்கடுக்கான தண்டனைகளுக்கு? எந்தத் தெய்வம் இப்படி என்னைத் தருணம் பார்த்துக் கொல்லுகிறது?

சுந்தரம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்தான். ஆனால் மனிதனால் எக்காலத்திலும் தன் குறுகிய மூளைக்குள் புரிந்து கொள்ள முடியாத பிரம்மாண்டமான சக்தி என்ற அளவில்தான் தெய்வத்தை நம்பினார். காடன் மாடன் கருமாரி என்ற தெய்வங்கள் மேல் அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. கோவில்களிலும் அவர் சடங்குகளைச் சமூக இயல்பு கருதி இயந்திரமாகச் செய்வது தவிர நம்பிக்கையுடன் செய்ததில்லை. கோவில்களில் கண்மூடி மனம் குவித்த நேரங்களில் அந்த உருவமில்லாத அறிதற்கு அப்பாற்பட்ட சக்திக்குத்தான் அவர் வணக்கமும் நன்றியும் அர்ப்பணித்திருக்கிறார். கருவறையில் உள்ள உருவத்திற்கு அவர் எந்த நாளும் பயந்ததில்லை.

அதுதான் குற்றமோ? தான் நம்ப மறுத்த தெய்வங்களில் ஒன்று தனக்குப் புத்தி போதிக்க முடிவு செய்து விட்டதோ? தான் மரியாதை செய்ய மறுத்துவிட்ட தேவதை ஒன்று தன்னை நின்று கொல்லுகிறதோ? "உன் மூளையில் தெய்வ பக்தி வராததால் புற்றுப் பிடித்துச் சாவாயாக!" என்று கொடிய தெய்வம் ஒன்று சபித்துவிட்டதோ?

மரண வேளையில் வரும் பயங்கள் மனத்தைப் பிடித்துக் கொண்டன என்று உணர்ந்து கொண்டார். அந்தப் பயத்தை மறுக்க விரும்பவில்லை. மறுத்து ஆகப்போவது ஒன்றுமில்லை. சரி! நான் பிடிவாதக்காரனில்லை. தெய்வங்களே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கம். எந்தத் தேவதையை நான் அவமதித்தேனோ அந்தத் தேவதை என்னை மன்னிக்குமாக. என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டுமோ செய்து விடுகிறேன். தெய்வம் இல்லை என்று சொல்லும் பிடிவாதம் என்னிடம் இல்லை.

இயற்கையாகவே 'நான் இருக்கிறேன்' என்று எந்தத் தெய்வமும் இதுவரை அவரை நம்ப வைத்ததில்லை. நம்பிக்கையாளர்கள் கதை கதையாகச் சொல்வது போல அவர் ஆபத்து வேளைகள் எதிலும் எந்தத் தெய்வமும் அவர் முன் வந்து தோன்றியதில்லை. அவர் கனவில் வந்து "எனக்கு ஆடு வெட்டிப் போடு" என்று சொன்னதில்லை. கோவில்களில் தீப தூபங்களுக்கிடையிலும், நாதஸ்வர மேளத்தின் ஒலிக்கிடையிலும் மந்திரங்களுக்கிடையிலும் எந்தத் தெய்வமும் அவரைப் பார்த்து "பக்தா" என்று சிரித்ததில்லை. சிலைகளின் அழகுணர்ச்சியில் அவர் லயித்திருக்கிறார். ஆனால் சிற்பம் என்ற நிலையிலிருந்து தெய்வம் என்ற நிலைக்கு அவர் நம்பிக்கை திரும்பியதில்லை.

என் மனம் அழுக்குகள் நிறைந்தது போலும்; ஆணவம் நிறைந்தது போலும்; அதனால்தான் தெய்வ நம்பிக்கை என்பது எந்த நாளும் என் உள்ளத்தில் நிலைக்க மாட்டேனென்கிறது என நினைத்துக் கொண்டார். அவரறிய எத்தனை பேர் தீவிர நாத்திகவாதம் பேசியிருந்து மதிய வயதில் மகா பக்தர்களாக மாறியிருக்கிறார்கள்! எத்தனை பேர் வாழ்க்கையைக் குடியென்றும் கூத்தியென்றும் மூர்க்கமான வெறியோடு அனுபவித்து விட்டு பின்னர் ஏதாவது ஒரு சாமியாரிடம் சரணடைந்து எல்லாம் துறந்து கைகட்டிச் சேவகம் செய்து காலம் கழிக்கிறார்கள்!

அவர் அறிவு தெரிந்த நாளிலிருந்து ஒருகாலும் விதண்டாவாதமாக நாத்திகம் பேசியது இல்லை. வாழ்க்கை இன்பங்களை அத்தனை மூர்க்கமான வெறியோடு அணுகியதும் இல்லை. அவர் வாழ்நாள் முழுவதும் மிதமானவராக அமைதியானவராக இணக்கமானவராக இருந்திருக்கிறார். அவருடைய நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் அவருடைய மனசுக்குள்ளேயே நடந்த மௌனப் போராட்டங்கள்தாம். ஜானகியிடம் கூட அவர் அதிகம் வாதம் பண்ணியதில்லை. அவள் கோயிலுக்கும் சடங்குகளுக்கும் வலியுறுத்திக் கூப்பிடும் நேரங்களில் முனுமுனுத்துக் கொண்டாவது போய் வந்திருக்கிறார்.

ஆனால் அவர் மனது பொய்களைத் தீவிரமாக மறுத்திருக்கிறது. தன் அறிவு நம்ப மறுத்த எதையும் அவர் மனசு நம்புவதாக நடித்ததில்லை. "தன்னஞ்சறிவது பொய்யற்க" என்று வாழ்ந்திருக்கிறார். அறிவு முதிராத பிள்ளை வயதில் செய்திருக்கும் குற்றங்கள் அல்லாமல் வயது வளர்ந்து அறிவில் தௌிவு வந்த பிறகு அவர் முடிந்த அளவு நேராகத்தான் வாழ்ந்திருக்கிறார். பல வெறிகள் மனத்தில் கொப்புளித்துக் கொப்புளித்து வந்திருந்தாலும் தனது பலவீனமான வேளைகளில் எல்லாம் அவர் சாய்ந்து விடாமல் இருந்திருக்கிறார்.

இளவயதில் ஆத்திசூடி படித்த நாட்களிலிருந்து அறமாக இருக்க வேண்டும் எனவும் சினம் ஆறுதல் வேண்டும் என்றும் இயல்வது ஈயவேண்டும் என்றும் எண்ணெழுத்து போற்ற வேண்டும் என்றும் ஊக்கம் கைவிடக் கூடாது என்றும் மனத்தில் எழுதி வைத்துக் கொண்டார். பின்னர் நன்னூலும் திருக்குறளும் படித்துப் பாடமும் செய்து கொண்டார். முயற்சியை நம்பினார். உறவு சுற்றம் என்பனவற்றுக்கு வரை முறைகள் வைத்துக் கொண்டார்.

பின்னர் திரு வி.க., மு.வ., கி.ஆ.பெ., அப்துற்றஹீம், தமிழ்வாணன் போன்றவர்களும் அவருக்கு வாழ்க்கையைப் பல்வேறு நிலைகளில் உணர்த்திக் குழப்பியும் தௌிவு படுத்தியும் விட்டார்கள். அறிவார்ந்த உரைகள் அவருக்குப் பிடித்தன. ஆனால் தெய்வ பயம் எந்த நாளும் அவருக்கு ஏற்படவில்லை. பக்தி இலக்கியங்களில் உள்ள உருக்க உணர்வும் அன்பும் மொடூயழகும் பிடித்தன. ஆனால் புராணங்கள் வேடிக்கைக் கதைகளாகவே தோன்றின. அவற்றின் மீது நம்பிக்கையையும் ஈடுபாட்டையும் பக்தியையும் ஒரு நாளும் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

அதுதான் பிழையோ? தான் பயந்து மரியாதை செலுத்தியிருக்க வேண்டுமோ? அறிவுக்கு முக்கியத்தும் கொடுத்து இந்த உலகை உண்மையில் ஆட்சி செலுத்தும் சக்தி மிக்க தெய்வங்களை மதிக்காமல் செருக்கினால் அவர்களை அவமதித்து விட்டேனோ? கடவுளர்களின் மேல் அசையாத நம்பிக்கை வைத்து தபசு செய்யும் முனிவர்களுக்கு அருள அவர்கள் தபசைக் கலைக்க வரும் செருக்குமிக்க அரக்கர்களைத் தெய்வம் தண்டிக்குமாமே! "ஹாஹ்ஹா" என்று சிரித்துக் கொண்டு கையில் கதை தூக்கி வரும் அசுரர்களை, தலையைச் சுற்றி ஒளிவளையம் உள்ள சட்டை அணியாமல் நிறைய நகைகள் போட்டுக் கொண்டு இடுப்புக்குக் கீழ் சேலையணிந்த பெண்முகம் கொண்ட கடவுளர்கள் தோன்றித் தண்டிப்பதை சினிமாவில் பார்த்திருக்கிறோமே! அது உண்மைதானோ? என் ஆணவத்தால் நான் அசுரன் ஆகி எந்த முனிவனின் தவத்தையாவது கலைத்திருப்பேனோ? போன பிறப்பில்...?

வலி தணிந்து உடல் சுகப்பட்ட இடைவேளையில் இந்த நினைப்புக்களினால் அவருக்குச் சிரிப்பும் வந்தது. பயத்தில்தான் என்னென்ன எண்ணங்களெல்லாம் வருகின்றன! ஆனால் நம்பக் கூடாது என்பதில் அவர் முரட்டுத் தனம் கொண்டவர் அல்ல. ஏ தெய்வங்களே! நான் உங்களுக்கு எதிரானவன் அல்ல. நான் அசுரன் அல்ல. முனிவர்கள் தவம் செய்வதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. எந்த முனிவனின் தவத்தையும் நான் கலைக்க மாட்டேன். அப்படி ஒருவரைக் கண்டால் சில கணங்கள் வியப்போடு வேடிக்கை பார்த்துவிட்டு மரியாதையாக ஓசையில்லாமல் ஊறு செய்யாமல் அப்பால் போய்விடுவேன். ஓ தெய்வங்களே! என் மனம் திறந்திருக்கிறது. நீங்கள் வரலாம். என்னை நம்பிக்கைப் படுத்தலாம். ஓ தெய்வங்களே! நீங்கள் ஆட்கொள்ளுவதற்கு ஒரு ஆத்மா தேவையானால் நான் தயாராக இருக்கிறேன்.

தலைக்குள் இன்னொரு எரிமலையின் ஆரம்ப உறுமல் கேட்டது. அதை மனம் நிதானிப்பதற்கள் அது வெடித்தது. தலையில் மட்டுமல்ல, வயிற்றில், முதுகுத் தண்டில் ஒரு அரிவாள் வெட்டு விழுந்தது. இரண்டாகப் பிளந்தது. "அம்மா" என்று அவர் வாய்விட்டுக் கத்தியபடி படுக்கையில் எழுந்து உட்கார்ந்து தலையைப் பிடித்துக் கொண்டு இரண்டாக மடிந்து விழுந்த அந்த நேரத்தில் தற்செயலாகக் கதவைத் திறந்து உள்ளே வந்த ஜானகி "என்னங்க, என்ன ஆச்சு?" என்று பதறி அவர் தோள்களை அணைத்தாள்.

எரிமலைக் குழம்பு வழிந்து தணிந்தவுடன் அவர் தலைநிமிர்ந்து ஜானகியின் தோள்களில் சாய்ந்தார். முகம் வேர்த்திருந்தது. உடம்புச் சூடு ஏறியிருந்தது. கண்கள் செருகியிருந்தன. "ஏங்க, என்ன செய்யுதுங்க, ஏன் இப்பிடி இருக்கிங்க...?" என்று ஜானகி கலவரத்துடன் அடுக்கடுக்காகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

மூச்சிளைக்கப் பேசினார். "வலி ரொம்ப கடுமையா போச்சி ஜானகி!" என்றார்.

"எங்கிட்ட நீங்க சொல்லவே இல்லைய... அன்னைக்கு டாக்டர் கொடுத்த மருந்து இன்னும் கொஞ்சம் இருக்க... சாப்படிறிங்களா?"

சரி என்றார். ஜானகி அவரைத் தலையணையில் சாய்த்துவிட்டுப் போய் சுடுநீரும் மாத்திரையும் கொண்டு வந்தாள். அவற்றை விழுங்கிச் சுடுநீரை உறிஞ்சியவுடன் வலி தணிந்தது போல் இருந்தது.

"எப்ப இருந்து இப்படி அவதிப் பட்றிங்க? என்ன கூப்பிட்டிருக்கக் கூடாது?" என்று ஜானகி கோபமாகப் பேசினாள்.

இனி இவளிடம் மறைத்து வைக்க முடியாது. இன்றிரவு பட்டென்று உயிர் போய்விட்டால் நான் பொய் பேசி துரோகம் செய்தவனாகி விடுவேன். என்னோடு வாழ்க்கையை முப்பதாண்டுகளுக்கு மேலாகப் பகிர்ந்து கொண்டவளிடம் நல்ல முறையில் சொல்லி விடை பெற்றுக்கொள்ளாமல் நான் போய்விட முடியாது.

மகள் துயரம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதை எண்ணி என் துயர் மறைத்து ஜானகியிடம் பொய்க்காரனாகத் தான் போய்ச் சேர்ந்தால் ஆத்மா சாந்தியடையாது. ஆத்மா சாந்தியடைவது என்றால் என்ன என்று சரியாக விளங்கவில்லை. ஆனால் அப்படியென்று ஒரு நிலை இருக்குமானால் அதைத் தவிர்க்க வேண்டும். என் செய்தி எத்தனை அதிர்ச்சியை அவளுக்குக் கொடுத்தாலும் சரி. அதைச் சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன். அதைத் தெரிந்து கொள்ள அவள் கடமைப் பட்டிருக்கிறாள்.

"ஜானகி. டாக்டர் இன்னும் முடிவு சொல்லலன்னு அப்ப உங்கிட்ட மறைச்சிப் பேசினேன். ஆனா டாக்டர் முடிவு சொல்லிட்டார்!"

ஜானகி திகைத்திருந்தாள். முகம் இன்னும் கலவரம் அடைந்தது. படுக்கையின் ஓரத்தில் உட்கார்ந்தாள். சுந்தரமும் தலையணையில் சாய்ந்தவாறு படுக்கையில் உட்கார்ந்துதான் இருந்தார். வரப் போவது கெட்ட செய்தி என்பதை ஜானகியால் ஊகிக்க முடிந்தது. அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தவாறு கேட்டாள்: "என்ன சொன்னார் டாக்டர்?"

பெண்ணே! உன் உலகம் சரியப் போகிறது. உன்னைத் தயார் படுத்திக்கொள். இது உன்னை வீழ்த்தும் செய்தி. ஆனால் வீழ்ந்து விடாதே. விழப் போகுபவன் நான். என் பக்கத்தில் இருந்து என்னைத் தாங்கிக்கொள்ள வலுப் பெற்றவளாக இரு.

"லேப் பரிசோதனை முடிவுகள் எல்லாம் வந்திருச்சி ஜானகி! எனக்கு வந்திருக்கிறது மூளைப் புற்று நோய். ரொம்ப முத்திப் போன நிலமை. உடம்பெல்லாம் பரவி இருக்கு. இப்படியே விட்டா மரணம் ரொம்ப சீக்கிரம் வந்திரும்னு சொல்றாரு!"

இதோ. எல்லாம் சொல்லிவிட்டேன். கொட்டிக் கவிழ்த்து விட்டேன். என் மனத்தைத் தற்காலிகமாகத் துடைத்து சுத்தப்படுத்திவிட்டேன். விளைவுகள் உன்னைப் பொறுத்தவை. அழப் போகிறாயா விழப் போகிறாயா, எழப் போகிறாயா, என்று பார்க்கிறேன். நோய்க்கு நான் பலி. நீ வேடிக்கை பார்க்கலாம். ஆனால் இந்தச் செய்திக்கு நீ பலி. நான் வேடிக்கை பார்க்கிறேன்.

ஜானகியின் மருண்ட விழிகளில் இருந்து ஓரிரு துளிகள் உருவாகி வடூந்தன. "நெஜந்தானாங்க நீங்க சொல்றது?"

தனக்கு சாதகமல்லாதவற்றை மனம் நம்பாது. ஒருவேளை தவறாக இருக்கலாமோ என மறு உறுதி தேடும். என் காதுகளில் கேட்டது பிரமையாக இருக்கலாம். மறுமுறை அதே மாதிரி கேட்டால்தான் உறுதி. மறுமுறை வேறு மாதிரி கேட்டு முதல் முறை கேட்டது தவறாகிப் போகலாம் என்ற நப்பாசை மனத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கும்.

"நெஜந்தான் ஜானகி. இவ்வளவு கடுமையான விஷயத்த உறுதிப்படுத்திக்காமயா சொல்லுவேன்?"

"ஒரு வேளை அந்தப் பரிசோதனை தவறா இருந்தா?"

"இல்ல ஜானகி. அதெல்லாம் வீண் சந்தேகங்கள். இப்ப பாத்தியே, அந்த வலியில நான் துடிச்சத, அத விடவா உறுதி வேணும்?"

முகத்தைப் பொத்திக் கொண்டு விம்மினாள். சுந்தரம் அவளை அழவிட்டார். திடீரென்று சுந்தரத்தின் நீட்டியிருந்த கால்களில் ஜானகி முகத்தைப் புதைத்துக் கொண்டாள். விம்மியவாறிருந்தாள். அவர் தலை முடியைக் கோதிவிட்டார். அதைத் தவிர வேறு என்ன செய்வதென்று தோன்றவில்லை.

பல மௌனமான கணங்கள் கடூந்ததும் சுந்தரம் சொன்னார்: "அழுது என்ன பண்றது ஜானகி? தைரியமா இரு! தனியா உன் கால்ல நிக்க பழகிக்க... என்னைக்காவது ஒரு நாள் போகிற உயிர்தானே. போகட்டும். இதுக்காக அழுது, அழுது வாழ்க்கய நரகமாக்கிக்க முடியாது."

திடீரென எழுந்து உட்கார்ந்தாள் ஜானகி. "ஏன் இப்படி சாவு, சாவுன்னு பேசிறிங்க? நோய் வந்தா எல்லாருமே செத்துத்தான் போயிர்ராங்களா? எத்தனையோ சிகிச்சைகள் இல்லையா? டாக்டர் சிகிச்சை பத்தி ஒண்ணும் சொல்லலியா?" என்று கேட்டாள்.

"சொன்னார். மௌன்ட் மிரியம் புற்று நோய் ஆஸபத்திரியில போய் ரேடியோதெராப்பி சிகிச்சை ஆரம்பிக்கச் சொன்னார். ஆனா அந்த சிகிச்சை இந்த நோயைவிடக் கொடுமையானது ஜானகி. எனக்கு அதில ஆசையில்ல. அதோட இந்த நோய் ரொம்ப விரைவாப் பரவி முத்தியிருக்கு. சிகிச்சை பலனளிக்குமா அப்படிங்கிறது நிச்சயமில்ல..."

"என்ன நிச்சயமில்ல? நாம் கண்டிப்பா போகத்தான் வேணும். உங்களுக்கு என்ன அப்படி வயசாகிப் போச்சி இப்படி விட்டுக் குடுத்திட்றதுக்கு? நாளைக் காலையிலேயே போவோம் வாங்க! உடனடியா சிகிச்சைய ஆரம்பிச்சிடுவோம். நான் இருக்கேன் உங்க பக்கத்தில. உங்களுக்கு வேண்டியது எல்லாம் நான் செய்றேன். உங்களுக்கு எல்லாம் நல்லாயிடும். கவலப் படாதீங்க. இனிமே சாவப் பத்தி பேசாதீங்க. நான் சாவித்திரி மாதிரி. யமன் கிட்ட இருந்து உங்கள மீட்டுக் கொண்டாறேன்! நான் நம்புற தெய்வம் என்னக் கைவிடாது பாருங்க." அவரின் தோள்களைக் குலுக்கிக் குலுக்கிப் பேசினாள். அவர் மனசுக்குள் நம்பிக்கை நீர் சுரந்தது. வயிறு அடங்கிப்போய் சாந்தமாக இருந்தது.

என் அன்பு மனைவியே! எந்தத் தெய்வம் நீ நம்புகிற தெய்வம்? என்னைத் தண்டிக்கிற அதே தெய்வமா? இப்போதுதான் புராணங்களின் மேல் நம்பிக்கையில்லாதவன் நான் என்பதை மனசுக்குள் நினைத்துப் பார்த்தேன். உடனே புராணக் கதையைச் சொல்லி என் மனத்தில் நம்பிக்கையை விதைத்து விட்டாயே! எனக்கு இது பாடமா? எல்லாம் தெரிந்தவன் என்று நினைத்துக் கொள்ளாதே என்ற அறிவுரையா?

நான் மரண பயத்தில் சோர்ந்துவிட்ட நிலையிலும் நீ இத்தனை நம்பிக்கையுடன் இருக்கிறாயே, இதுதான் நம்புகிறவனுக்கும் நம்பாதவனுக்கும் இடையில் உள்ள வித்தியாசமா? இதுதான் உண்மையா? அல்லது மரண வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட இருக்கும் என் உயிர் ஏதாவது கையில் கிடைக்கும் ஒரு நம்பிக்கையை பற்றிக்கொண்டு கரை ஏற ஏங்குகிறதா? ஏதாக இருந்தாலும் இது ஆறுதலாக இருந்தது.

"சரி ஜானகி. ரேடியோதெராப்பிக்கு நான் தயார். ஆனா ராதா இருக்கும் போது எப்படி? அவ திரும்ப போகட்டும். ஓரிரண்டு நாள் பாத்திருந்து செய்யலாம்" என்றார்.

"அவ இருந்தா என்ன, இல்லாட்டா என்னங்க! அவ இன்னிக்கி வருவா, நாளக்கிப் போவா! எப்படியாச்சும் தொலையட்டும். அவ வசதியப் பாத்து நாம் காத்திருக்க வேணாம். நாளக்கிக் காலையிலேயே போவோம்!"

எப்படி எடுத்தெறிந்து பேசிவிட்டாள்! இத்தனை நேரம் பெண்ணின் கதை கேட்டு உருகி உருகி வழிந்து கணவனைக் கூட மறந்து தாயாக இருந்த நீ, இப்போது மனைவியாக அவதாரம் எடுத்து கணவனுக்காக பெண்ணின் துயரத்தை இப்படி உதறித் தள்ளிவிட்டாயே. ஏ பெண்ணே, நீ ஒரு நாளில், ஒரு மணியில் எத்தனை அவதாரங்கள் எடுப்பாய்?

"அப்படியில்ல ஜானகி. அவ இப்ப இருக்கிற நெலையில இந்த விஷயத்தச் சொல்லி அவள இன்னும் கலவரப் படுத்தாத. அவளுக்கோ மருமகனுக்கோ ஏன் நம் பையனுக்குக் கூட இந்த விஷயம் தெரிய வேண்டாம்!"

"ஏங்க?"

"எல்லாரும் என்ன 'ஐயோ பாவம்னு' பரிதாபப்பட்டு பேசிறதையும் பாக்கிறதையும் என்னால சகிச்சிக்க முடியாது. என்னோட நோய் என்னோட இருக்கட்டும். நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கட்டும். மத்தவங்க பரிதாபத்துக்கு என்ன ஆளாக்கிடாத! நோயோட கொடுமய விட மத்தவங்க காட்டிற அனுதாபம் எனக்கு இன்னும் கொடுமையானதா இருக்கும்!"

"சரிங்க. இது நமக்குள்ளேயே இருக்கட்டும்!" என்று ஜானகி ஒத்துக் கொண்டாள்.

நிமிர்ந்து வாழ்ந்து பழகியவர். மற்றவர்களுக்கு உதாரணமாக இருந்து வாழ்ந்தவர். ஒரு இடைநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக ஆயிரம் மாணவர்களையும் ஐம்பது அறுபது ஆசிரியர்களையும் கண்டிப்பாக ஆண்டு அவர்களுடைய வியப்பையும் மரியாதையையும் பெற்றவர். பள்ளியின் அணிவகுப்புக்களில் முதல் மரியாதை பெற்றவர். பள்ளியின் காலை மாணவர் ஆசிரியர் அசெம்பிளியில் அவர் குரல் ஒலிபெருக்கியில் ஒலிக்கும்போது கூட்டத்தின் மௌனத்தை ஆண்டவர். மாபெரும் சபைகளில் மாலைகள் பெற்றவர். ஆகவே மற்றவர் முன் கூனிக் குறுகி நிற்க முடியாது. இவன் உள்ளே சொத்தையாகப் போய்விட்டான் என்று மற்றவர்கள் ரகசியமாக தன் முதுகுப்பக்கம் பேசுவதை அனுமதிக்க முடியாது. வாழும் வரை நிமிர்ந்திருக்க வேண்டும். உள்ளே கரையான்கள் அரித்துக் கொண்டிருந்தாலும் மேலே உரமான மரமாக இருக்க வேண்டும்.

அவர் யோசித்துக்கொண்டே இருந்தார். ஜானகி அவர் மார்பில் சாய்ந்து கிடந்தாள். அவள் கை அவர் நெஞ்சின் மேல் கிடந்தது. அவருடைய கை அவள் தலையை வருடிக் கொண்டிருந்தது. கணங்கள் மௌனமாக நகர்ந்து கொண்டிருந்தன.

ஆனால் எத்தனை காலங்கள் இந்த ரகசியத்தைக் காப்பாற்ற முடியும்? எத்தனை நாள் இந்த நோயுடன் தலை நிமிர்ந்து நடக்க முடியும்? உடல் இளைக்க ஆரம்பித்த பின் அதை மற்றவர் கண்களிலிருந்து மறைப்பது எப்படி? நெஞ்சுக் கூடு வௌியே தெரிவதையும் முகத் தசைகள் வற்றிப் போவதையும் மறைப்பது எப்படி? ரேடியோதெராப்பி ஆரம்பித்தால் தலை மயிர் உதிர்வதை மறைப்பதெப்படி? தொப்பி போட்டுக் கொள்ளலாமா? அப்புறம் தொப்பி போட்ட காரணத்தை எப்படி விளக்குவது?

ஏன் மறைக்க வேண்டும்? எல்லாம் ஒரு அகந்தைதானோ? மற்றவர்கள் பரிதாபப்படும் நிலையில் ஒருவன் ஆகிவிட்டால் மற்றவனுக்குக் குறைந்தவனாக ஆகிவிடுவானோ? பரிதாபப்படுபவன் உயர்ந்தவன்; பரிதாபத்துக்கு உட்பட்டவன் தாழ்ந்தவன். அப்படி ஆகிவிடுவதை மனம் எண்ணி வெட்கிக்கிறதோ? ஏன் வெட்க வேண்டும்? என்னைப்பற்றி மற்றவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பது பற்றி நான் கவலைப்படுவது ஏன்? இது உயிர் வாழ்வு பற்றிய பிரச்சினை அல்லவா? உயிர் பிழைப்பதுதான் பெரிது. இந்தச் சாவை முடிந்த அளவு வெல்லுவதுதான் பெரிது! அந்தப் போராட்டத்தை மற்றவர்கள் பார்த்துப் பரிதாபப்படுகிறார்களா, இச்சுக் கொட்டுகிறார்களா அல்லது உள்ளுக்குள் நையாண்டி செய்கிறார்களா என்பது பற்றி எனக்கேன் கவலை?

ஆனால் எந்த அளவுக்கு? எவ்வளவு காலம் இந்தப் போராட்டம் நடக்க முடியும்? உடல் தளர்ந்து தோல் வற்றி திரைகள் தோன்றி கால்கள் நடக்கும் சக்தி இழந்து சுவாசகோசம் தன்னிச்சையாக மூச்சிழுக்கும் சக்தியில்லாமல் குழாய்கள் பொருத்தி காற்றும் திரவமும் செலுத்தப்பட்டு, தொண்டைக் குழி வற்றி இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லுகின்ற சக்தியும் இல்லாமல் போகும் வரையிலா?

அந்தக் காட்சி அவரைத் துன்பப்படுத்தியது. அந்த நிலை வந்துவிட்டால் அந்தப் படுக்கையில் கிடக்கும் உடல் இந்த சுந்தரமாக இருக்காது. அது ஒரு ஆளுமை இல்லாத, பெயரிட்டிழைக்கத் தகுதியில்லாத காய்ந்த கட்டையாக இருக்கும். அப்படித்தான் ஆகக்கூபாது.

"ஜானகி" என்று மெதுவாகக் கூப்பிட்டார்.

"ஏங்க! மறுபடி வலியா?"

"அதில்ல ஜானகி. தலையில இப்ப வலியில்ல! ஆனா நெஞ்சில ஒரு வலி வந்திருக்கு!"

"நெஞ்சிலியுமா?" நெஞ்சை நீவிவிட்டாள்.

"அதில்ல ஜானகி. நெஞ்சில வலியில்ல. நெனப்பில வலியிருக்கு!"

"அப்படின்னா?"

பொறுத்திருந்து தைரியம் கூட்டிச் சொன்னார்: "நீ சொல்ற வைத்தியமெல்லாம் நான் பண்ணிக்கிறேன் ஜானகி. அது எவ்வளவு வேதனையாயிருந்தாலும் பரவால்ல. ஆனா அதெல்லாம் பலிக்காம நான் படுத்துட்டேன்னு வை. அப்போ என்னோட உயிர செயற்கையா பிடிச்சி வைக்க வேணாம் ஜானகி. பலவிதமான குழாய்களப் பொருத்தி என்ன வதைக்க வேணாம். என்ன அமைதியாச் சாகவிட்டிரு..."

கையைத் தூக்கி வாயைப் பொத்தினாள். "ஏன் இப்படி சாவப் பத்தியே பேசிறிங்க? வேணான்னு சொன்னேன்ல..." என்றாள்.

"நான் சாவுக்காக பயந்து இப்படி உளறல ஜானகி. முழு நினைவோட தைரியத்தோடதான் சொல்றேன். இப்ப சொல்லலேன்னா பின்னால பேசக்கூட முடியாத நெலையில எப்படிச் சொல்றது? அதுக்காகத்தான்"

அவள் பதில் சொல்லவில்லை. மெதுவாக விம்மிக் கொண்டிருந்தாள். பிறகு மௌனம்தான் தொடர்ந்தது.

அந்த இருளில் ஒரு விமானம் எங்கோ உயரே பறக்கும் சத்தம் கேட்டது. அவருடைய நாய் குரைத்தது. மோட்டார் சைக்கிள் ஒன்றின் ஒலி தூரத்தில் தொடங்கி பெரிதாகி அருகில் வந்து குறைந்து தேய்ந்து மறைந்தது. யாரோ காரை ஸ்டார்ட் செய்து ஓட்டிச் சென்றார்கள். மிகப் பக்கத்தில், அடுத்த வீடா..? அவர் விழித்தவாறு இந்த ஓசைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். மணி என்ன இருக்கும்? நாலா? நாலரையா?

கண்கள் செருகியது நினைவிருந்தது. ஆனால் தூக்கம் வந்த நேரம் தெரியவில்லை. தூக்கம் வந்து கௌவிக்கொள்ளுகின்ற வேளை யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்தால் அது தூக்கமில்லை.

*** *** ***

ஐந்தரை மணிக்கு விழித்துக்கொண்டார். அந்தக் குறைந்த நேரமாவது உடல் துன்பப் படுத்தாமல் தூங்க விட்டதே என்று மகிழ்ச்சியடைந்தார்.

ஜானகி இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்பாமல் மெதுவாகக் கட்டிலை விட்டு இறங்கினார். குளியலறை போய் வந்தார். அறைக் கதவைத் திறந்து வௌியே வந்தார்.

வீட்டுக்கு வௌியே சென்று வெள்ளி முளைக்கின்ற விடிகாலை வேளையை அனுபவிக்க வேண்டும் என நினைத்தார். கதவைத் திறந்து இருளில் வௌியே வந்தார்.

ஜிம்மி படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்து வந்து முன்னங்கால்களை நீட்டிச் சோம்பல் முறித்துவிட்டு அவருடைய காலை முகர்ந்து பார்த்து உரசி நின்றது. அதன் தலையைச் சொறிந்து குலுக்கி விட்டார். அது தலையைச் சிலிர்த்துக் கொண்டு அவர் கையை நக்கியது.

குளிர்ந்த காற்று, பனி தோய்ந்த காலைக்காற்று முகத்திலும் நெஞ்சிலும் வீசியது. மழை இல்லை. ஆனால் காற்றில் குளிர் இருந்தது. இருள் இன்னும் விலகவில்லை. தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வாசலுக்கு முன்னால் இருந்த வேப்ப மரத்தின் இலைகள் நேற்றைய மழையின் ஈரத்தில் சிலுசிலுத்துக் கொண்டிருந்தன. அதன் பக்கத்தில் நிறைமாத கர்ப்பிணியாக குலை தள்ளியிருந்த செவ்விளனி மரத்தில் ஓலைகள் சிலிர்த்துக் கொண்டிருந்தன.

காற்றை ஆழப் பருகினார். உடல் இலேசாக இருந்தது. நலமாக இருந்தது. தனக்கு எல்லாம் நன்றாக ஆகிவிடும் என்று தோன்றியது. நேற்றிரவின் பயங்களும் அழுகையும் ஜானகியுடனான உரையாடலும் தேவையில்லாதவை போன்று தோன்றின. அவை பொய் என்றும் இந்தக் கணந்தான் நிஜம் என்றும் தோன்றியது. இந்தக் கணத்தில் உண்மை இருக்கிறது. இந்தக் காற்றில் ஜீவன் இருக்கிறது. மேலே சில நட்சத்திரங்களுடன் தௌிந்த வானம். கீழே உறுதியான பூமி. அதிலே நேராக நிற்கின்ற என் கால்கள். இந்த உண்மைகள் நெஞ்சுக்கு இதமாக இருந்தன. நம்பிக்கை ஊட்டின. தனக்காகக் காத்திருக்கும் சாவை எண்ணிச் சிரித்தார். என்றோ படித்த பாரதியார் பாடல் நினைவுக்கு வந்தது.

"காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கின்றேன்"

அப்போதுதான் ராதாவின் கார் நேற்று நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் இல்லை என்பதை கவனித்தார். எங்கே போயிற்று? எப்படி... என்ன... திருடன் யாராவது ராத்திரியில்... இல்லையே, ஜிம்மி விட்டிருக்காதே!

உள்ளே வந்தார். ஹால் மேஜையில் அந்தக் கடிதம் கிடந்தது. ஆங்கிலத்தில் "அப்பாவுக்கும், அம்மாவுக்கும்" என்று அந்த உறையில் எழுதப் பட்டிருந்தது. ராதாவின் கையெழுத்து. நாற்காலியில் உட்கார்ந்து உறைக்குள்ளிருந்து கடிதத்தை எடுத்தார். கார் சாவி ஒன்று உறைக்குள் இருந்து விழுந்தது. கண்ணாடியைப் போட்டுக் கொண்டு படித்தார்.

ஒரு பக்கக் கடிதம்தான். ஆனால் படிக்கப் படிக்கக் கையில் பாறையாகக் கனத்தது. படித்து மெதுவாக மடித்து வைத்தார். அது காற்றில் படபடக்காமல் இருக்கக் கார் சாவியை அதன் மேல் பாரமாக வைத்தார்.

இப்படியா செய்து விட்டாள்? என் மகளா? என் வளர்ப்பில் வளர்ந்த மகளா? எங்கு தவறு செய்தேன்? நான் நட்டு நீர்வார்த்து நேராக்கி வளர்த்த மரம் இப்படி இளவயதிலேயே கோணலாகப் போனதெப்படி?

அவர் நெஞ்சு வலித்தது. தலை வலித்தது. முதுகிலும் வலி ஆரம்பித்திருந்தது. நாற்காலியில் சாய்ந்து கண்ணை மூடினார்.

------

அந்திம காலம் - 4


சுந்தரத்தின் வாழ்க்கை அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நேரானதாகத்தான் இருந்திருக்கிறது.. இளமையில் அவருடைய குறும்புகள் பெற்றோரினால் அடக்கப் பட்டிருந்தது உண்மைதான். ஆனால் இடைநிலைப் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்த நாளிலேயே ஒழுக்கமும் நேர்மையும் அவரிடம் படிந்து விட்டன. அதிகம் பேசாத அடக்கமான புத்திசாலியான பிள்ளை என்ற பெயர் எடுத்திருந்தார். தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் படித்த நீதிகளும் சமயநூல்களும் அவ்வப்போது அவரை நேர்படுத்தக் கைகொடுத்தன.

அவர் தந்தை ஓரளவு கண்டிப்பானவர்தான். ஆனால் அன்பானவர். அவருக்குக் கோபம் விரைந்து வந்தாலும் அதே வேகத்தில் தணிந்து விடும். அப்பா ஒரு காலத்தில் வீட்டில் ஒரு பிரம்பு வைத்திருந்தார். அந்தப் பிரம்பை எடுத்து ஆட்டியிருக்கிறாரே தவிர அடித்ததாத சுந்தரத்துக்கு ஞாபகமில்லை. ஆனால் பிரம்பைக் கையில் எடுக்கும் அளவுக்குப் போய்விட்டால் தான் செய்த குற்றத்தை எண்ணி சுந்தரத்தின் மனம் தானே சுருங்கித் தண்டனை விதித்துக் கொள்ளும். ஒன்று ஒரு வேளை சாப்பிடமாட்டார். அல்லது அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டு மணிக் கணக்கில் தனிமையில் இருப்பார்.

அவருடைய தாய் அவரைப் பெற்ற ஐந்தாறு ஆண்டுகளில் அடுத்த பிள்ளைப் பேற்றின் போது பெரியம்மை நோய் கண்டு அந்தப் பிள்ளையையும் இழந்து தானும் இறந்து போனார். தன் தாயைப் பற்றிய நினைவுகள் ஒரு கனவு போலக் கூட அவருக்கு இருக்கவில்லை. தாய் என்பவள் எப்படிப் பட்டவள் என்பது பற்றித் தன் நண்பர்களின் தாயர்களைப் பார்த்துத்தான் அவர் கணித்து வைத்திருந்தார். அந்தத் தாயன்புக்கு அவர் சில முறை ஏங்கியதுண்டு. ஆனால் தந்தையின் அன்பால் அது ஓரளவு சரியாகியது.

தாய் இறந்த பின் அவர் குடும்பத்தில் அவரும் அவருடைய அக்காள் அன்னபூரணியும் அவருடைய தந்தை ஆகிய மூவருடன் கொஞ்சம் மனநோய் பிடித்தவளான அப்பாவின் விதவைச் சகோதரி ஒருத்தியும் இருந்தாள். அந்த அத்தையின் கணவர் இளவயதிலேயே ஆற்றில் மூழ்கி இறந்து விட்டாராம். அந்தச் சம்பவத்தின் போது அவர் அலறியதையும் முழுகியும் அந்த அத்தை அருகில் இருந்து பார்த்தாளாம். அத்தைக்கு நீச்சல் தெரியாது. ஆனாலும் தன் கணவனின் மரணத்துக்குத் தான்தான் பொறுப்பு என்ற குற்ற உணர்ச்சி ஆழப் பதிந்து விட்டது. அதிலிருந்து கிணற்றிலிருந்து கடல் வரை தண்ணீரைக் கண்டால் அவள் நடுநடுங்கிப் போவாள். பெரிய அண்டாவில், தொட்டியில் தண்ணீர் பிடித்து வைத்தாலும் பயம்தான்.

அத்தை அதிகமாகப் பேசி சுந்தரம் பார்த்ததில்லை. திடீர் திடீர் என்று "தண்ணிப்பக்கம் போவியா, போவியா?" என அன்ன பூரணியையும் சுந்தரத்தையும் முதுகில் அடிப்பாள். அது வலிக்காது. விளையாட்டு அடிதான். அதைப் பார்த்து இருவரும் சிரிக்கக் கற்றுக் கொண்டார்கள். ஆனால் அத்தை வீட்டு வேலைகள் அத்தனையையும் பொறுப்பாகச் செய்வாள். நன்றாக ஆக்கிப் போடுவாள். ஆனால் சாப்பாடு எப்படி இருக்கிறது என்று கூடக் கேட்க மாட்டாள். சாப்பிடு என்று சொல்லவும் மாட்டாள். சுந்தரத்திற்கு அவள் ஓர் இயந்திரம் போலவே தென்பட்டாள். சொன்னதையெல்லாம் செய்வாள்.

சாப்பாடு துணி உட்பட எதையும் வாங்கித் தா என்று யாரிடமும் அவள் கேட்டதில்லை. வாங்கிக் கொடுத்தால் பிரித்தும் பார்க்கமாட்டாள். சுந்தரத்தின் இளவயதில் அத்தை என்று ஒரு ஜீவன் வீட்டில் இருப்பதை அவர் கவனித்தது கூட இல்லை. வீட்டில் கதவு இருப்பது போல ஒரு ஜடமாக இருந்தாள். ஆனால் அவர்களைக் காப்பாற்றினாள்.

பிற்காலத்தில் அத்தையைப்பற்ற நினைக்கும் போதெல்லாம் அவள் எல்லாம் அறிந்த ஒரு ஞானியாகத்தான் இருக்க வேண்டும் என்று சுந்தரம் நினைத்துக் கொள்வார். தன்னுடைய இன்ப, துன்ப உணர்ச்சி நரம்புகளை முற்றாக வெட்டி எறிந்து விட்ட ஞானி. கடமையை மட்டும் செய்து பலனை எதிர்பார்க்காத கர்ம ஞானி. அந்தச் சலனமில்லாத உள்ளத்தோடு அவள் உடலும் உரமாக இருந்தது. ஒரு நாளும் அத்தை உடல் நலமில்லாமல் படுக்கையில் சாய்ந்து சுந்தரம் பார்த்தில்லை.

அக்காள் அன்னபூரணி அவரை விட நான்கு வயது மூத்தவள். அப்பா அவர்கள் இருவரையுமே தமிழும் ஆங்கிலமும் படிக்க வைத்தார். அக்கா அந்தக் கால மூன்றாம் பாரம் படித்ததோடு ஆசிரியர் பயிற்சிக்குப் போய்விட்டாள். சுந்தரம் தமிழ்ப் பள்ளி முடித்து ஆங்கில இடைநிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

அக்கா ஆசிரியப் பயிற்சி முடிந்து வேலைக்குப் போன முதலாண்டில் அப்பா ஒருநாள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படுக்கையில் விழுந்தார். ஸ்ட்ரோக் என்றார்கள். ஒரு பக்கம் சுத்தமாக விளங்கவில்லை. வாய் பேச முடியவில்லை. மருத்துவ மனைப் படுக்கையில் இருந்தவாறு இரண்டு பிள்ளைகளையும் ஏக்கமாகப் பார்க்க மட்டும்தான் முடிந்தது. ஒரு கை கொஞ்சம் தூக்க முடிந்தது. அந்த ஒரு கை அசைவிலும் கண்களின் உருட்டலிலும் தலையின் அசைவிலும் அவர் காட்டுகின்ற சமிக்ஞைகளில்தான் அவருக்கு வேண்டியது என்னவென்று ஊகித்துத் தண்ணீர் தந்து, வியர்வை துடைத்து, முதுகையும் நெஞ்சையும் நீவிவிட வேண்டும்.

அத்தை சமைத்த கஞ்சிச் சாப்பாட்டை பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் அப்பாவுக்கு வாயில் ஊட்டிவிடும் வேலை சுந்தரத்துக்குத்தான். அக்கா தூரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்தாள். பள்ளிக் கூடம் விட்டு வீட்டிற்குப் போய் சாப்பிட்டு விட்டு மாலை நாலு மணிக்குத்தான் ஆஸ்பத்திரிக்கு வர முடியும். அவள் வந்த பிறகுதான் சுந்தரம் வீட்டுக்குப் போவார்.

இப்படி தவணை வைத்துக்கொண்டு, அப்புறம் இரவு சாப்பாடு எடுத்துக் கொண்டு போய் அவரும் அக்காவுமாய் அவருக்கு ஊட்டி அவரைச் சுத்தப்படுத்திவிட்டு வீட்டுக்கு வருவார்கள்.

ஒருநாள் சுந்தரமும் அன்னபூரணியும் எல்லாம் முடிந்து வீட்டுக்குத் திரும்பப் புறப்பட்ட வேளையில் அன்னத்தின் கையை அவர் பிடித்துக் கொண்டார். தலை கண் சமிக்ஞையில் சுந்தரத்தின் கையைக் கொண்டு வரச் சொன்னார். அவர் கையைக் கொண்டு போனதும் இருவரின் கைகளையும் தன் ஒரு கைக்குள் பிடித்துக் கொண்டு அழுத்தினார். அன்னபூரணியை இரக்கமாகப் பார்த்தார். "இவனை உன்னிடம் ஒப்படைக்கிறேன்" என்று அவர் கண்கள் சொல்லியதை அன்னம் புரிந்து கொண்டாள். கொஞ்ச நேரம் அழுது பின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.

மறுநாள் சுந்தரம் கஞ்சி எடுத்துச் சென்றபோது படுக்கை காலியாக இருந்தது. நர்ஸ் சவக் கிடங்கைக் காட்டினாள்.

வீட்டுக்கு ஓடிவந்து அக்காவுக்குக் காத்திருந்து அவள் வந்தவுடன் தூரத்து உறவினர்களுக்குப் போன் செய்து மற்றவர்கள் சொல்லச் சொல்ல ஈமக் கடன்களை செய்து முடித்தார் சுந்தரம்.

அத்தை ஒரு சொட்டுக் கண்ணீரும் விடவில்லை. வீட்டுக்கு வந்த உறவினர்கள் நண்பர்கள் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் யார் யார் என்ன வேலைகள் ஏவினாலும் செய்தாள். அன்றிரவு எல்லாம் ஓய்ந்திருந்த நேரத்தில் அவள் தனக்குள் ஏதோ முனகுவது கேட்டது. சுந்தரம் பக்கத்தில் போய் நின்று கேட்டார். "தண்ணிக்கிட்ட போகாதேன்னா யார் கேக்கிறாங்க? ஏன் போகணும் தண்ணிக்கிட்ட? தண்ணி முளுங்கிடுன்னு தெரியாது? இப்ப முளுங்கிடிச்சே! இன்னும் யார முளுங்கப் போவுதோ? சொன்னா கேப்பாங்களா? தண்ணிலதான் போய் நிப்பாங்க!"

சுந்தரம் பக்கத்தில் போய் "அத்தை" என்று கூப்பிட்டுப் பார்த்தார். அவள் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. "தண்ணி தண்ணி" என்றே முனகிக் கொண்டிருந்தாள்.

அப்பா என்ற ஆதாரம் போய்விட்ட பயமும் துயரமும் மனத்தைக் கவ்விக் கொண்டிருந்தாலும் தன்னைச் சுற்றி இருந்தவர்கள் நல்லவர்களாக இருந்தது சுந்தரத்துக்குப் பெரிய பலமாக இருந்தது. அப்பாவும் அவர்களை அப்படி ஒன்றும் நிராதரவாக விட்டுவிட்டுப் போய்விடவில்லை. அவர்கள் இருந்த வீடு சின்ன வீடாக இருந்தாலும் சொந்த வீடு. பேங்கிலும் ஒரு இரண்டாயிரம் வெள்ளி வைத்திருந்தார். அக்காவுக்குச் சில நகைகள் செய்து போட்டிருந்தார்.

அப்பாவின் நண்பர் ஒருவர் இராம கிருஷ்ணன் என்பவர் மட்டும்தான் அவர்கள் குடும்பத்துக்கு அணுக்கமானவராக இருந்தார். அடிக்கடி வீட்டுக்கு வந்து அப்பாவோடு பேசிக்கொண்டிருப்பார். சுந்தரமும் அன்னமும் அவரை மாமா என்று கூப்பிடப் பழகிக்கொண்டார்கள். அவர் ஒரு வழக்கறிஞரைப் பார்த்துப் பேசி வீட்டை அவர்கள் இரண்டு பேரிலும் எழுதவும் பொருளகத்தில் உள்ள கணக்கை அக்கா பேரில் மாற்றிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். அதே நண்பர் அக்காவுக்கு இன்னொரு பெரிய நன்மையையும் செய்ய முன் வந்தார்.

"அன்னம். இது இப்ப ஆம்பிள இல்லாத வீடா போச்சி. இது நல்லதில்ல. எனக்குத் தெரிஞ்ச தங்கமான பையன் இருக்கான். நான் சொல்லி ஏற்பாடு பண்ணுறேன். சீக்கிரத்தில கல்யாணத்த பண்ணிக்கம்மா" என்றார்.

அக்கா வெட்கத்தோடு மறுத்துவிட்டாள். "தம்பி படிப்பு முடிஞ்சி ஒரு வேலைக்குப் போகட்டும் மாமா. பிறகு பாப்போம்" என்றாள். அன்று தட்டிக் கடூத்தவள்தான். அதற்கப்புறம் கல்யாணத்தையே அக்கா நினைத்துப் பார்க்கவில்லை. அப்படியே உறைந்து போனாள். அவளிடம் வந்து பேசியவர்கள் எல்லாம் அடங்கிப் போனார்கள்.

சுந்தரம் சீனியர் கேம்பிரிட்ஜ் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தன் வகுப்பு நண்பன் வீட்டுக்கு ஒன்றாக இருந்து படிக்கப் போன காலத்தில்தான் அந்த நண்பனின் தங்கை ஜானகியை அங்கு சந்தித்தார். அந்த நண்பன் நாராயணனின் தந்தை போத்தல் கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். அவர் வீட்டில் மூட்டை மூட்டையாக போத்தல்களும் டின்களும் அடுக்கிக் கிடக்கும். சாக்கின் மணமும் சணலில் மணமும் வீட்டின் முகப்பிலிருந்து சமயலறை வரையில் எந்த நாளும் இருக்கும்.

நாராயணனின் அப்பா வீட்டில் இருந்தால் ஒரு நிமிஷம் கூட சட்டையோடு இருக்க மாட்டார். அவருக்கு இந்த ஊரில் ஒரு மனைவி, தமிழ்நாட்டில் ஒரு மனைவி. வருடத்தில் மூன்று நான்கு மாதங்கள் ஊரில்தான் இருப்பார். வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் ஒன்று போத்தல்களையும் டின்களையும் எண்ணிக் கொண்டிருப்பார். அல்லது பணத்தை எண்ணிக்கொண்டிருப்பார்.

சுந்தரத்தைப் பார்த்தால் உற்சாகமாகப் பேசுவார். அவனை ஒரு பெரிய மனிதனாகவே நடத்துவார். நாராயணன் மேல் அவருக்குச் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. "சுந்தரம். இந்தப் பயபுள்ளைக்கி படிப்பே ஏறமாட்டெங்குது. கணக்கு சுத்தமா வரமாட்டேங்குது. என்னோட மூத்தவ புள்ளங்க, எங்க ஊர்ல, கணக்கில கெட்டின்னா அப்படிக் கெட்டி. ஏன் தெரியுமா? அங்க படிப்ப சொல்லிக்குடுக்கிற விதம் அப்படி. வாத்தியாருங்க தோல உரிச்சிப்பிடுவாங்க.... இங்கதான் வாத்தியாருமாருக பிள்ளைகளுக்குப் பயப்பட்றாங்கள! அப்புறம் புள்ளங்க எப்படி படிக்கும்? சுந்தரம்! நீ எப்படியாவது இவனுக்குக் கணக்குச் சொல்லிக் குடுத்து பரிட்சையில பாஸ் பண்ண வை!" என்பார்.

நாராயணன் சுந்தரத்திடம் கணக்குக் கற்றுக் கொண்டானோ என்னவோ, ஆனால் சுந்தரம் அவன் தங்கை ஜானகியிடம் காதலை நன்றாகக் கற்றுக் கொண்டார். கொஞ்ச காலமே பள்ளிக்கூடம் போய் "பொம்பிள பிள்ளைக்கு படிப்பு எதுக்கு?" என்று தகப்பனால் நிறுத்தப்பட்டு வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட அவளிடம் கட்டுப்பாடான குடும்பங்களில் வளர்க்கப்பட்ட பெண்களுக்கே உரிய வெகுளித்தனம், பாமரத்தன்மை இருந்தது. அதோடு சின்னச் சின்ன கிண்டல்கள், சடையை வீசியும் தாவணியை விரல்களில் சுருட்டியும் கால் விரல்களால் மண்ணைக் கிளறியும் தருகின்ற கவர்ச்சி, ஒளிந்து ஒளிந்து கண்களால் மட்டும் காதல் செய்தி அனுப்பும் சாமர்த்தியம், "நம்ப வீட்டில எல்லாம் சாப்பிடுவாங்களா?" என்று மறைமுகமாகப் பேசி மூக்கு முட்டச் சாப்பாடு போடும் அன்பு, சாப்பாடு போடும் சாக்கில் அம்மாவுக்குத் தெரியாமல், பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அண்ணனுக்குக் கூடத் தெரியாமல் அவன் கையைப் பிடித்துக் கிள்ளுகிற குறும்பு எல்லாமாக அவனுக்குப் பலவிதமான பாடங்கள் நடத்தும் காதல் பள்ளிக் கூடமாக அவள் இருந்தாள்.

நாராயணன் சீனியர் கேம்பிரிட்ஜ் பரிட்சையில் தோற்றுப் போனான். சுந்தரம் நல்ல முறையில் தேர்ச்சி அடைந்தார். ஆசிரியர் வேலைக்கு மனுப் போட்டார். அவருக்கு இங்கிலாந்தில் உள்ள கெர்க்பி நகரில் ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ள இடம் கிடைத்தது.

அக்காவிடம் விடைபெற்ற போது அவள் அவரை அணைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினாள். "பத்திரம் தம்பி! பத்திரம்! வெள்ளக்காரங்க ஊர். ஒழுக்கத்த பாதுகாத்துக்க. சாப்பாடு ஜாக்கரதை! அடிக்கடி லெட்டர் போடு" என்று அனுப்பி வைத்தாள். அத்தையிடம் சொல்லிக்கொண்ட போது "தண்ணிப் பக்கம் போகாத!" என்று மட்டும் சொன்னாள். தண்ணிப் பக்கம் போகாமல் இங்கிலாந்துக்கு எப்படிப் போவது என்று அவன் அத்தையிடம் விவாதம் செய்ய விரும்பவில்லை.

நாராயணனிடம் சொல்லிக் கொள்வது போல அவர்கள் யாரும் வீட்டில் இல்லாத நேரமாகப் போய் ஜானகியிடம் சொன்னார். முந்தானையைக் கண்களில் திணித்துக் கொண்டு "என்ன மறந்துடுவிங்க! யாராச்சும் வெள்ளக்காரியக் கட்டிக்கிட்டு வந்துடுவிங்க!" என்று உண்மையில் அழுதாள்.

"அழுவாத ஜானகி. என்ன பைத்தியமா இருக்கிற? ரெண்டு வருஷத்தில உன்னோட சுந்தரமாவே வந்து உன்னையே கட்டிக்கிறேன்!" என்று அவளை அணைத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்த நேரத்தில் எங்ககேயோ வௌியே போயிருந்த நாராயணன் திடீரென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். "என்ன நடக்குது இங்கே?" என்று அவன் போட்ட சத்தத்தில் ஜானகியும் சுந்தரமும் திடுக்கிட்டு நின்றனர்.

"சுந்தரம் இது நல்லா இருக்கா ஒனக்கு? எங்க அப்பாரு பாத்திருந்தார்னா என்ன நடந்திருக்கும் இந்நேரம்? உங்க ரெண்டு பேரையும் வெட்டிப் போட்டிருப்பாரு!" என்று கர்ஜித்தான்.

அந்த நேரத்தில் சுந்தரத்தின் மனத்தில் குற்ற உணர்வு அதிகமாக இருந்தது. செய்யக் கூடாத தவற்றைச் செய்து விட்டோம், தனக்கும் குடும்பத்திற்கும் மாறாத அவமானத்தை வாங்கித் தந்துவிட்டோம் என்ற உணர்ச்சியே ஓங்கியிருந்தது. நாராயணன் முன்னால் தலை குனிந்து நின்றார். வீட்டுக்குப் போய் அறைக்குள் தன்னைப் பூட்டிக்கொண்டு நாள் கணக்கில் வௌியே வராமல் தனக்குத் தானே தண்டனை விதித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

நாராயணன் அவரைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வௌியே போனான். ஒதுப்புறமான இடத்தில் வைத்து கேட்டான்.

"உங்களுக்குள்ள தகாத மொறையில ஏதாச்சிம் நடந்திச்சா?"

இல்லை என தலையாட்டினார்.

"தோ பாரு சுந்தரம், இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும். நீ படிக்க வௌிநாட்டுக்குப் போற சந்தர்ப்பத்தில நமக்குள்ள அனாவசியமா சண்டை வேணாம். இதோட விட்டுடு. அப்பா ஊர்ல ஜானகிக்கு மாப்பிள்ள பாத்து வச்சிருக்காரு. அதனால அவள மறந்திட்டு வேலயப் பாரு. சொல்லிட்டேன் ஆமாம். எங்கப்பா முரட்டு ஆசாமி. அவருக்கு இந்த விஷயம் போனா கத்திய தூக்கிக்குவாரு, பாத்துக்க!"

அவன் உள்ளே சென்று சுந்தரத்தின் முகத்தில் அறைவது போலக் கதவை தடால் என்று சாத்தினான்.

வீட்டுக்குத் திரும்பும்போது மனம் அவமானத்திலும் குற்ற உணர்ச்சியிலும் கூனிக் குறுகியிருந்தாலும் வீட்டுக்கு வந்த பின் கோபத்தில் சிலிர்த்து எழுந்தது. அவரை அது வரை யாரும் இப்படி இக்கட்டான சந்தர்ப்பத்தில் பிடித்துக் கொண்டு அவமானப் படுத்தியதில்லை. என்ன செய்துவிட்டேன் என்று என் முகத்தில் அறைந்தால் போல் கதவைச் சாத்தினான் நாராயணன்? என்ன குற்றத்துக்காக அவன் அப்பன் கத்தியைத் தூக்க வேண்டும்? நான் அவர்களுக்குத் தகுதியில்லாத மாப்பிள்ளையா? எந்த வகையில் குறைந்து விட்டேன்? ஒரு இளம் பெண்ணிடம் அன்பு செலுத்துவது - அது காதலேயானாலும் சரிதான் - எந்த விதத்தில் குற்றம்? எந்த நீதி நூலிலே இது குற்றம் என்று சொல்லியிருக்கிறது?

மனத்தைத் தௌிவு படுத்திக் கொண்டார். தன்னை இப்படி அவமானப் படுத்தியவர்களிடம் புறமுதுகிட்டு ஓடிவிடக் கூடாது என்ற வைராக்கியம் மனத்தில் எழுந்தது. ஆனால் இருந்து போராட சந்தர்ப்பங்கள் சரியாக இல்லை. அக்காவின் உதவி பெற்றுத்தான் இதை நடத்தியாக வேண்டும் என்று முடிவு செய்தார்.

மறுநாள் பயணத்திற்குப் பெட்டிகளையெல்லாம் அடுக்கிக் கொண்டிருந்த போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அக்காவிடம் சொன்னார்:

"அக்கா உங்கிட்ட ஒரு முக்கிய விஷயம் சொல்லணும்!"

அன்னம் அவர் முகத்தை ஆவலுடன் பார்த்தாள்.

"இந்த நாராயணனுக்கு ஒரு தங்கச்சி இருக்கு தெரியுமா அக்கா, ஜானகின்னு பேரு...." நடந்ததையெல்லாம் தயங்கித் தயங்கிச் சொன்னார்.

"அக்கா எனக்கு இப்ப கல்யாணத்துக்கு அவசரமில்ல. ஆனா அவளக் கட்டிக்கிறேன்னு வாக்கு குடுத்திட்டேன். இப்ப அவள என்னமோ ஊரு மாப்பிள்ளைக்கு கட்டி வைக்கப் போறாங்களாம். அதுக்குள்ள..."

அன்னம் பெருச்சு விட்டாள். "தம்பி! நம்ப வீட்ல பெரியவங்க இல்ல. நான் அந்த இராம கிருஷ்ணன் மாமாவ வரச்சொல்லி அவங்ககிட்ட பேசிப் பாக்கிறேன். நீ இப்ப அதப் பத்தி யோசிச்சி மனசக் குழப்பிக்காம போயிட்டு வா!" என்று அவனை அனுப்பி வைத்தாள்.

கெர்க்பியில் அவர் போய்ச் சேர்ந்ததிலிருந்து அக்காவிடமிருந்து கடிதங்களில் பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருந்தன.

முதல் கடிதத்தில்: "நானும் இராம கிருஷ்ணன் மாமாவும் போய்ப் பேசினோம். எடுத்தெறிந்து பேசி விரட்டாத குறையாக அனுப்பிவிட்டார்கள். ஜானகியின் அப்பாவை விட உன் நண்பன் நாராயணன்தான் மிகவும் குதிக்கிறான். கொஞ்சம் நாள் கோபம் ஆறவிட்டு மீண்டும் போய் பேசிப் பார்க்கிறோம்!"

அடுத்த கடிதத்தில்: "ஜானகி எப்படியோ என்னைத் தேடி ரகசியமாக வீட்டுக்கு வந்துவிட்டாள். வேற மாப்பிள்ளைக்குக் கட்டி வைத்தால் செத்துப் போவேன் என்று சொல்லிப் போயிருக்கிறாள்!"

"போனவாரம் மீண்டும் போய்ப் பேசினோம். பழைய கதைதான். ஜானகியும் உன்னை விரும்புகிறாள் என்று எடுத்துச் சொன்னேன். அதன் பலனாக அவளுக்குத்தான் உதை விழுந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை!"

"தம்பி, நேற்று ஜானகி தன் துணிகளைத் தூக்கி அள்ளிக்கொண்டு நம் வீட்டுக்கு வந்து விட்டாள். அவள் அப்பா ஊரில் மாப்பிள்ளை ஏற்பாடு செய்து விட்டாராம். இவள் மறுத்ததும் அடித்திருக்கிறார். ஆகவே ஓடிவந்து விட்டாள். நான் போலிசில் சென்று இந்த விஷயத்தைப் புகார் செய்திருக்கிறேன்."

"ஜானகியின் அம்மாவும் அண்ணனும் வந்து ஜானகியை மீண்டும் அழைத்துக் கொண்டு போனார்கள். அவள் அழுதுகொண்டே போயிருக்கிறாள்"

"தம்பி! நேற்று ஜானகியோடு அவள் அம்மாவும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். ஜானகியின் அப்பா ஊருக்குப் போயிருக்கிறார். தான் கல்யாண ஏற்பாடு செய்யப் போவதாகவும் அதன்பின் ஜானகியை ஊருக்கு அழைத்து வரும்படியும் அவள் அம்மாவுக்கு உத்தரவு போட்டுப் போயிருக்கிறார். அவள் அம்மாவுக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை. அவருக்கு உன்னைத்தான் பிடித்திருக்கிறது. நாராயணன் எப்படியானாலும் ஜானகியை ஊருக்கு அனுப்பியே தீருவேன் என என்னிடம் சவால் விட்டுப் போயிருக்கிறான். அவனுடைய அப்பனுடைய முரட்டுப் புத்திதான் அவனுக்கு இருக்கிறது. நடப்பது நடக்கட்டும். ஜானகியை ஊருக்கு அனுப்ப வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன்."

அதன் பின்னர் அக்கா ஒரு தந்தி அனுப்பியிருந்தாள். "ஜானகியின் தந்தை இந்தியாவில் மாரடைப்பால் இறந்து போனார். கல்யாணம் ரத்தாகிவிட்டது."

ஜானகியின் தந்தை அவர்களுக்கென்று ஒரு காசும் விட்டுப் போகவில்லை. இருந்த வீடும் வாடகை வீடு. நாராயணனுக்கு அவர் வியாபாரத்தில் கொஞ்சமும் நாட்டமில்லை. அவன் ஏதோ சில்லறை வேலைகள் பார்த்து வீட்டை மறந்து திரிய ஆரம்பித்துவிட்டான். இருந்த சரக்குகளை வந்த விலைக்கு விற்று அவர்கள் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த போது சுந்தரம் பயிற்சி முடிந்து திரும்பினார்.

சுந்தரத்துக்குப் பினாங்கிலேயே ஒரு பள்ளியில் வேலை கொடுத்திருந்தார்கள். வேலையை ஏற்றுக்கொண்டு ஜானகியைப் போய்த் தைரியமாகப் பார்த்து வந்தார். நாராயணன் உடைந்து போயிருந்தான். அவர்கள் குடும்பம் பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது.

அன்னம் இராம கிருஷ்ணன் மாமாவையும் அழைத்துக் கொண்டு முறையாகப் போய் பெண் கேட்டு நாள் குறித்துத் திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தாள். இராம கிருஷ்ணன் மாமா தன் மனைவியோடு வந்திருந்து எல்லா உதவிகளையும் செய்தார். தங்களுக்கு உறவுகள் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாமல் இருந்தும், இராம கிருஷ்ணன் மாமா போன்றவர்கள் நட்பையே உறவாக ஆக்கிக் கொண்டு இப்படி உதவி செய்வதை எண்ணிப் பார்த்துச் சுந்தரம் மகிழ்ந்தார். நல்லவர்கள் பிற நல்லவர்களைக் கவருவது இயற்கைதான் போலும். அப்பா நல்லவராக இருந்துதான் இராம கிருஷ்ணன் போன்று ஆதாயம் கருதாத அன்பு மனம் கொண்டவர்களை நண்பர்களாகப் பெற்றிருக்கின்றார். தானும் அக்காவும் நல்லவர்களாக இருப்பதினால்தான் அந்த நல்ல நண்பர்களைத் தங்க வைத்துக் கொண்டிருக்க முடிகிறது. தான் தொடர்ந்து நல்லவராக இருந்த வர இவை நல்ல காரணங்கள் என்று சுந்தரம் முடிவு செய்து கொண்டார்.

ஜானகியைப் பெண் பார்த்து வந்த அன்றைக்கே சுந்தரம் தன் மனத்தில் உறுத்திக் கொண்டிருந்த அந்த விஷயத்தை மாமாவிடம் சொல்லி அன்றிரவே அந்த விஷயம் குடும்பச் சபையில் அலசப் பட்டது.

மாமாதான் ஆரம்பித்து வைத்தார்.

"ஏன் அன்னம். தம்பிக்குத்தான் எல்லாம் பேசி முடிச்சாச்சி. ரெண்டு பேரும் வேலையும் செய்றிங்க. இப்ப உன் கல்யாணத்தப் பத்தி யோசிக்க வேணாமா?" என்று கேட்டார்.

அன்னம் வெட்கப்பட்டாள். தலை குனிந்து பேசினாள். "இப்ப ஏன் மாமா இந்தப் பேச்சு? தம்பி கல்யாண வேல தலைக்கு மேல கிடக்குது" என்று தட்டிக் கடூத்தாள்.

"வேல என்னம்மா பெரிய வேல! நான் இதுவரைக்கும் நூறு கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன். இது பெரிய வேல இல்ல. ஆனா உன் முடிவச் சொல்லு. அந்தப் பையன், நான் ரெண்டு வருஷம் முன்ன சொன்னேனே அதே பையன், இன்னும் கல்யாணம் ஆகாமத்தான் இருக்கான். ஒன்னப் பாத்திருக்கான். அவனுக்குப் புடிச்சிருக்கு. தங்கமான புள்ள. சரின்னு சொல்லு. தம்பி கல்யாணத்தோட ஒரே பந்தல்ல முடிச்சிருவோம்."

மௌனமாக இருந்தாள். சுந்தரம் பேசினார். "அக்கா! நீ இப்படி இருக்கும்போது நான் மட்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கே அது அவ்வளவு மகிழ்ச்சியா இல்லக்கா. மாமா சொல்றது போல நீயும் கல்யாணம் பண்ணிக்கிட்டின்னா அதுவே ரெட்ட மகிழ்ச்சியா இருக்கும்! சரின்னு சொல்லுக்கா..." என்றாள்.

அன்னம் யோசித்தாள். "மாமா. கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு எனக்கு ஒண்ணும் வைராக்கியம் இல்ல. ஆனா இந்த மாதிரி திடீர்னு பண்ணிக்க வேணாம் மாமா. தம்பிக்கு தாய் போல நான் முன்ன நின்னு செஞ்சி வைக்கணும்னு நெனச்சிக்கிட்டு இருக்கிற போது நானும் மாலை போட்டுக்கிட்டு மணவறையில உக்காந்துட்டா எனக்கே திருப்தியா இருக்காது! இந்தக் காரியம் நல்ல படியா முடியட்டும். அப்புறம் எப்ப கல்யாணம் தேவைன்னு தோணுதோ அப்ப நானே மாமாகிட்டயும், தம்பி கிட்டயும் சொல்றேன்!"

அவர்கள் இருவரையும் முறியடித்துவிட்டு வீராங்கனையாக வேறு வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள் அன்னம்.

கல்யாணம் அடக்கமாக ஆனால் எல்லார் மனத்திலும் மகிழ்ச்சி பொங்க நடந்தது. ஜானகி மகிழ்ச்சியிலும் காதலிலும் பூரித்திருந்தாள். ஆனால் சுந்தரத்திற்கு எல்லாவற்றையும் விட ஒரு வெற்றியுணர்ச்சியே அதிகம் இருந்தது. காரணங்கள் இல்லாமல் தன்னை அவமானப்படுத்திய நாராயணனையும் அவன் தந்தையையும் ஒரு மானப் போரில் வெற்றி கொண்ட மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. ஆனால் தான் களத்தில் இல்லாமல் இங்கிலாந்தில் உட்கார்ந்து கொண்டு நடத்திய அந்தப் போரில் தேரையும் ஓட்டி வில் வளைத்து அம்பும் விட்டவளாய் இருந்த அக்காவின் மீது அவருக்கு நன்றி உணர்ச்சியும் பக்தியும் கூட வளர்ந்திருந்தன.

திருமணத்தின் போது வீடு கலகலவென்றிருந்தது. பல காலம் மங்கல நிகழ்ச்சிகள் நடை பெற்றிராத அந்த வீட்டில் எல்லாரும் ஓர் ஈடுபாட்டுடன் ஓடியாடினார்கள். திருமணத்திற்கென்று சேமித்து வைத்திருந்தவளைப் போல அக்கா எந்தச் செலவென்றாலும் ஏன் என்று கேட்காமல் தன் கைப்பையிலிருந்து காசு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

கல்யாணத்தின் போது பின்னாலிருந்து மட்டும் வேலை செய்து கொண்டு கூட்டத்திலிருந்து ஒளிந்து கொண்டிருந்த அத்தையைத் தாலி கட்டும் நேரத்தில் முன்னால் இழுத்துக்கொண்டு வந்தாள் அக்கா. தம்பதிகள் அக்காவின் காலில் விழுந்து எழுந்தவுடன் அத்தையின் காலிலும் விழப் பண்ணினாள். அத்தை கால்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். ஆனால் அவர்கள் தலையைத் தொட்டாள். அவள் எந்த நேரத்திலும் "தண்ணிக்கிட்டப் போகாதே!" என்று சொல்லப் போகிறாள் என்று சுந்தரம் எதிர்பார்த்த நேரத்தில் படபடப்போடு உள்ளே ஓடிவிட்டாள்.

அத்தை அவர்கள் முதலிரவு அறையை அலங்கரித்து வைத்திருந்த விதம் அதிசயமானதாக இருந்தது. மல்லிகைப் பூவும் ரோஜா இதழுமாக கம கமவென்று கமழ்ந்திருந்தது. வர்ணத் தாள்கள் கட்டிலின் மேல் சரஞ்சரமாகப் பின்னிக் கட்டப் பட்டிருந்தன.

தனக்குள் சுருட்டிக்கொண்டு முடங்கிப்போய் கிடக்கும் அத்தைக்கு இத்தனை கலையுணர்ச்சி இருக்க முடியுமா? அவள் மனம் வளமாகத்தான் இருக்கிறது. கற்பனைத் திறனுடன் இருக்கிறது. ஆனால் வௌியில் முடங்கிவிட்டதைப் போன்ற தோற்றத்தை மட்டும் காட்டிக் கொள்கிறாளோ? அப்படிக் காட்டிக்கொண்டால்தான் உலகம் தன்னைச் சும்மா விடும் என்றும் அந்தத் தனிமையில் பாதுகாப்பு இருக்கும் என்றும் எண்ணுகிறாளோ!

அன்றிரவு அவருக்குப் படபடப்பு மிக்க இரவாக இருந்தது. அது பெண்ணின்பம் பருகுகின்ற இரவு. இதற்கு முன் அவருக்கு அந்த அனுபவம் இருந்ததில்லை. புத்தகத்திலும் படத்திலும் பார்த்ததுதான். அவரின் நண்பர்கள் அவரைப் பலமுறை அந்த இன்பத்தை வாடகைக்குப் பருக அழைத்திருக்கிறார்கள். ஆனால் அவருக்கு ஆசையிருந்தாலும் தைரியம் இருந்ததில்லை. இதனால் அவர் கேலிக்குள்ளாகியிருக்கிறார். நண்பர்கள் அடுத்த நாளில் அனுபவங்களை மிகைப்படுத்தியும் சுவைப் படுத்தியும் சொல்லி அவர் மனத்தை அலைக்கடூத்து இரவுகளில் படுக்கையில் புரளச் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் பின்னர் ரகசியமாக டாக்டரை நாடி ஊசி போட்டுக்கொண்டு வெட்கத்துடன் தலை குனிந்திருக்கும் நிலை வந்த போது அவர் தனக்குள் மகிழ்ந்திருக்கிறார்.

அந்த ஆபத்துக்களை யெல்லாம் தாண்டி இன்று அந்த அனுபவம் சட்டபூர்வமாக பெரியோர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு தான் விரும்பிய பெண்ணுடன் நிகழ்வதாக இருந்தும் மனத்தில் ஒரு பயமும் குற்ற உணர்ச்சியும் கூட இருந்தது. பால் உறவு என்பதே ஏதோ ஒரு குற்றம் போல மனத்தில் பதிந்திருந்து. ஏன் என்று விளங்கவில்லை. எல்லோருக்கும் இயற்கை விதித்து வைத்திருக்கிறது என்று தெரிந்தும் சமுதாயம் அது செய்யத் தகாத ஒன்று போலவே மறைத்தும் ஒதுக்கியும் வைத்திருப்பதுதான் காரணமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

ஜானகி அறைக்குள் நுழைந்த போது கண்ணைப் பறிக்கும் பச்சைப் பட்டுப் புடவை கட்டி மோகமூட்டும் தேவதையாக இருந்தாள். இதற்கு முன் என்றுமில்லாத வெட்கம் அவளிடம் வந்து குடி கொண்டிருந்தது. படுக்கையின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டுத் தலையைக் குனிந்து கொண்டு அவர் தொடு முன் தோளைக் குறுக்கிக் கொண்டு... அவளுக்கும் குற்ற உணர்ச்சிதான் போலும். சமுதாயம் இந்த உறவை சடங்கு பூர்வமாக அனுமதித்திருக்கிறது என்ற உண்மை இன்னும் மனத்தில் உறுதியாக உட்காரவில்லை.

"ஏன் ஜானகி! என்னப் பாத்தா தொழு நோய்க்காரன் மாதிரி இருக்கா?" என்று கேட்டார்.

"ஐயோ, ஏன் அப்படிச் சொல்றிங்க? ராஜாவாட்டம் இருக்கிங்க!"

"நான் ராஜா மாதிரி இருந்தா நீ ராணி மாதிரி கம்பீரமா இருக்க வேண்டியதுதான! ஏன் என்னவோ கைதி மாதிரி கூனிக் குறுகிப் போய் இருக்கிற?"

"வெக்கம் இருக்க வேணாமாங்க கொஞ்சம்? உங்களப்போல நான் இங்கிலாந்தையும் அமெரிக்காவையும் கண்டவளா, தைரியமா இருக்க?"

அணைப்புக்குக் கொஞ்சமாக இடம் கொடுத்தாள். பயம் கொஞ்சம் தௌிந்தவுடன், பேசத் தைரியம் வந்தவுடன் "மாமி ரொம்ப நல்லவங்க!" என்றாள்.

"மாமியா? எந்த மாமி ஜானகி?"

"அதுதான் உங்க அக்கா. உங்களுக்கு அவங்க அம்மா மாதிரின்னா எனக்கு மாமி மாதிரிதான! வேற யாரு இருக்காங்க நான் ஆசயா மாமின்னு கூப்பிட?" அப்புறம் அக்காவைப் பற்றி நிறையப் பேசினாள். முடிந்த பின் அத்தையைப் பற்றி நிறையப் பேசினாள். தன் தாயின் விதவை வாழ்க்கை பற்றிப் பேசினாள். தன் தந்தையின் துரோகங்களைத் திட்டித் தீர்த்தாள். தன் அண்ணனின் ஊதாரித்தனம் பற்றிப் பேசினாள்.

"ஏன் ஜானகி இப்படிக் குடும்பக் கதைகளைப் பேசித் தீர்க்கிறதுக்குத்தான் முதலிரவுன்னு வச்சிருக்காங்களா?" என்று கேட்டார் சுந்தரம்.

"போங்க உங்களுக்கு ரொம்ப அவசரம்!" என்றாள். அதன் பின் "ஆமா உங்களுக்கு ஆண் குழந்த வேணுமா, பெண் குழந்த வேணுமா?" என்று கேட்டாள். அன்று இரவு அவள் ஆக செக்சியாகப் பேசிய பேச்சு அது ஒன்றுதான்.

"ஏன் கேள்வி? ஒவ்வொரு வகையிலும் ஒரு அரை டஜன் பெத்துப் போட்டுடேன்!"

"ஐயோ, போங்க" என்று அவள் சிரித்து அவர் மேல் விழுந்தவுடன் அந்த அன்பு அருவிகளின் சங்கமம் ஆரம்பமாகியது.

இரண்டு மூன்று நாட்கள் மாமியார் வீடு போதல் மறு உண்ணல் என்று கடூந்தவுடன் இருவரும் கொடிமலைக்குச் சென்று இரண்டு நாட்கள் தேனிலவு கடூத்து வந்தார்கள்.

அவர்கள் வீடு வந்த இரவு அக்கா அவர்கள் இருவரையும் அழைத்தாள். இருவர் கையையும் பிடித்து ஒரு பத்திரத்தை அவர்கள் கையில் திணித்தாள்.

"என்ன அக்கா இது?" என்று கேட்டார் சுந்தரம்.

சிரித்துக் கொண்டே சொன்னாள்: "என் கல்யாணப் பரிசு. இந்த வீடு நம்ப ரெண்டு பேர் பேர்லியும் இருந்தது. இப்ப அத உங்க ரெண்டு பேர் பேருக்கும் எழுதி வச்சிட்டேன்!"

அதிர்ந்து போனார்."ஏன் அக்கா இப்படி செஞ்ச? இதுக்கு என்ன தேவை வந்தது இப்ப?"

"உங்களுக்கு எதிர் காலத்தில தேவை வரும் தம்பி. அப்ப நீங்களா வந்து எங்கிட்டக் கையேந்தி நிக்க வேணாமில்லையா?"

"முடியாது அக்கா. இந்த வீட்டில பாதி உன்னோட. இது அப்பாவோட சொத்து. அதுக்குள்ள பணத்தையாவது நீ வாங்கிக்கத்தான் வேணும்!" என்றான்.

"எனக்கு எதுக்குத் தம்பி பணம்? என்னுடைய சேமிப்பே எனக்குப் போதும். அதோட அந்த சேமிப்பில ஒரு பகுதிய எடுத்து இன்னொரு புது வீட்டுக்கும் முன் பணம் கொடுத்திட்டேன். எல்லாம் இராம கிருஷ்ணன் மாமா மூலமாத்தான். வீடும் இப்ப ரெடியாயிடுச்சி!"

"எங்க இருக்கு அந்த வீடு?"

"மாமா இருக்கிற இடத்திலதான். தைப்பிங்கில!"

"தைப்பிங்கிலியா? அவ்வளவு தூரத்தில நமக்கு எதுக்கு வீடு?"

அப்புறம் அமைதியாக விளக்கினாள். தைப்பிங் பள்ளிக்கூடம் ஒன்றிற்குத் தான் மாற்றல் கேட்டு எழுதியிருந்ததாகவும் மாற்றல் கிடைத்து விட்டதாகவும் அடுத்த பருவம் பள்ளி தொடங்கும் போது போய் வேலை ஏற்க வேண்டும் என்றும் சொன்னாள்.

சுந்தரத்துக்கு மனம் உடைந்தது. ஜானகி அழவே ஆரம்பித்துவிட்டாள். சுந்தரம் கேட்டார்:

"ஏன் அக்கா இப்படி பண்ணின? நாங்க என்ன செஞ்சோம் உனக்கு?"

"தம்பி! நீங்க இளசுங்க. உங்க வாழ்க்கைய உங்க இஷ்டம் போல நீங்க நடத்தணும். நான் ஒருத்தி இருந்துகிட்டு உங்க மேல அதிகாரம் செலுத்திக்கிட்டு இருக்கக் கூடாது. அதோட அத்தைக்கு வயசாகிக்கிட்டு வருது! உங்க இளவயசில அவுங்க உங்களுக்கு பாரமாகிடக் கூடாது. ஆகவேதான் நாங்க ரெண்டு பேருமா கொஞ்சம் தனியா, இதோ கூப்பிடு தூரத்தில இருக்கிற தைப்பிங்கில, போய்த் தங்கிடப் போறோம்! உங்களுக்கு ஏதா ஒண்ணு வேணுமின்னா உடனே வந்து செஞ்சிட்டுப் போறோம்! இதுதான் எல்லாருக்கும் நல்லது தம்பி!"

அக்கா உறுதியானவள். எதையும் ஆழச் சிந்தித்துத் திட்டமிட்டுச் செய்பவள். மனதுக்குள் நினைத்து விட்டாளானால் மாற்ற முடியாது என்று சுந்தரத்துக்குத் தெரியும்.

அடுத்த மாதத்தில் அத்தையையும் அக்காவையும் தைப்பிங்கில் கொண்டு புது வீட்டில் இறக்கி அவள் வீட்டில் ஒரு வேளை உணவும் சாப்பிட்டு வந்தார்கள்.

அக்காவும் அத்தையும் அந்த வீட்டில் ஏற்படுத்திய வெறுமை ராதா பிறந்த பின்தான் தீர்ந்தது.

-----

அந்திம காலம் - 5


குடும்பம் சீராக நடந்து வந்தது. திருமணமான சில ஆண்டுகள் கடூத்துத்தான் ராதா பிறந்தாள். அதற்கு இரண்டாண்டுகள் கடூத்து வசந்தன் பிறந்தான். "வகைக்கு அரை டஜன்" என்று அவர்கள் பேசியது வேடிக்கைக்காகத்தான். அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும் என்ற அறிவு இருவருக்கும் இருந்தது.

அக்கா இரண்டு குழந்தைகளின் பிரசவத்தின் போதும் அத்தையையும் அழைத்துக் கொண்டு உடன் வந்திருந்து எல்லா வகையிலும் உதவினாள். அவர்கள் ஊர் பிரிந்து வாழ்ந்தாலும் பாசம் மிகுந்ததே தவிர குறையவில்லை. விடுமுறை நாட்களில் சுந்தரமும் ஜானகியும் குழந்தைகளும் தைப்பிங் அத்தையின் வீட்டிற்குச் சென்று இருந்து வருவதென்பது ஒரு சடங்காகவே ஆகிவிட்டிருந்தது.

சுந்தரம் அர்ப்பணிப்பு உணர்வுள்ள நல்ல ஆசிரியராக இருந்தார். பள்ளிக்கூடத்தின் எந்தப் பொறுப்பையும் அவர் தட்டிக் கழிப்பதில்லை. அதோடு தன்னை வளர்த்துக் கொள்ளவும் அவர் தவறவில்லை. வேலை பார்த்த காலத்திலேயே மாலை வேளைகளில் பள்ளி உயர்வுச் சான்றிதழ் கல்வியை தனியார்ப் பள்ளியில் கற்று நல்ல முறையில் தேரினார். தனது சேவையின் பத்தாம் ஆண்டு நிறைவு பெற்ற போது பல்கலைக் கழகத்தில் சென்று பயில மனுச் செய்து இடம் கிடைத்தவுடன் கல்வி அமைச்சுக்கு மனுச் செய்து மூன்றாண்டுகள் விடுமுறையும் அரைச் சம்பளமும் பெற்று மலாயாப் பல்கலைக் கழகத்தில் பயின்று சரித்திரத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் பட்டமும் பெற்றார்.

அவர் கோலாலும்பூரில் சென்று படித்த மூன்றாண்டுகளுக்கும் தைப்பிங்கிலிருந்த அத்தையை ஜானகிக்குத் துணையாக அக்கா அனுப்பி வைத்திருந்தாள். ஆகவே எந்தச் சிரமமும் தெரியவில்லை. ஜானகியும் குடும்பத்தைத் திறமையாக நடத்தக் கற்றுக் கொண்டாள். படிப்புக் குறைவுதான் என்றாலும் அறிவுக் குறை உள்ளவள் அல்ல. அவள் தகப்பனின் அடக்குமுறையால் வௌி உலகம் தெரியாமல் வெகுளியாக வளர்ந்து விட்டாலும் சுந்தரம் கொடுத்த சுதந்திரத்தில் அவள் திறமைகள் ஒளிர்ந்தன.

சுந்தரம் பட்டம் பெற்று வந்த கையோடு பினாங்கில் உள்ள மிகப் பெரிய, பழமைப் புகழ் வாய்ந்த பினேங் ஃப்ரீ ஸ்கூலுக்கு அவரை சரித்திர ஆசிரியராக மாற்றினார்கள். அந்தப் பள்ளியில் சுந்தரத்திற்கு ஏராளமான ஆசிரியர்கள் நண்பர்களானார்கள். சுந்தரத்தோடு நண்பர்கள் வீட்டுக்குப் போக வர இருக்க ஜானகியும் அந்தச் சீன மலாய் சக ஆசிரியர்கள் குடும்பத்தோடும் கலந்து பழகத் தெரிந்து கொண்டாள்.

ஆங்கிலமும் மலாயுங்கூட கற்றுக்கொண்டு பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்த காலங்களில் அவர்களுக்கு வீட்டில் பாடம் சொல்லிக் கொடுக்கவும் செய்தாள். சுந்தரத்திற்கு அவளைப் பார்க்கும் நேரமெல்லாம் பெருமையாக இருந்தது.

சுந்தரம் பள்ளிக்கூடத்தில் கடைபிடித்த நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு, கடமை தவறாமை இவற்றைக் கண்டு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாலிப் அவரை கட்டொழுங்கு ஆசிரியராக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். சுந்தரத்திற்கு அந்தப் பொறுப்பு பிடிக்கவில்லை.

"இஞ்சே தாலிப், நான் பொறுப்புகளுக்கு பயந்தவன் அல்ல என்பது தங்களுக்குத் தெரியும். ஆனால் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பலர் பணக்காரர்கள், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களின் பிள்ளைகள். அவர்களில் பலர் கெட்டிருக்கிறார்கள், மற்றவர்களையும் கெடுத்து வருகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இப்பொழுது உள்ள கட்டொழுங்கு ஆசிரியர் இதைக் கண்டும் காணாததுமாய் இருக்கிறார். என்னால் முடியாது. நான் நடவடிக்கையில் இறங்கினால் இவர்களின் பகை வரும். உங்களுக்கும் தொந்திரவுதான். என்னை விட்டு வேறு யாரையாவது நியமிப்பதுதான் நல்லது! என்னை விட சீனியரான பல ஆசிரியர்கள் இங்கே இருக்கிறார்களே" என்றார்.

"சுந்தரம், நீங்கள் சொல்லுகின்ற அதே காரணங்களுக்காகத்தான் இந்தப் பொறுப்பை உங்கள் தலையில் சுமத்துகிறேன். இந்தப் பள்ளியின் மாணவர்கள் ஒழுக்கக் குறைவைப் பற்றி மாநிலக் கல்வித் துறைக்கே முறையீடுகள் போயிருக்கின்றன. என்னைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். இப்போதுள்ள கட்டொழுங்கு ஆசிரியர் பொறுப்பை சரிவரக் கவனிக்கவில்லை என்பது தௌிவாகி விட்டது. கல்வித் துறையில் உங்களைப் பற்றிச் சிலர் அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களே உங்கள் பெயரை முன் மொடூந்தார்கள். ஆகவே எங்கள் நம்பிக்கையெல்லாம் உங்கள் மேல் இருக்கிறது. தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றார்.

தலைமை ஆசிரியர் இத்தனை வலுவாகக் கூறிய பிறகு சுந்தரத்தால் மறுக்க முடியவில்லை. அந்தப் பள்ளிக் கூடத்தில் தன் சக ஆசிரியராக இருந்து உற்ற நண்பராகிவிட்ட இராமச்சந்திரனிடம் மட்டும் தனியே கலந்து பேசினார்.

ராமா தைரியம் வழங்கினார்: "ஒப்புக் கொள்ளு சுந்தரம். நீ ஒரு தலைமை ஆசிரியராக ஆக எல்லாத் திறமையும் உள்ள ஆசிரியர். ஆகவே தேடி வர்ர முக்கிய பொறுப்புக்கள தட்டிக் கடூக்கக் கூடாது. என்னால முடியும்னு காட்டணும். அப்பதான் உன் மேல நம்பிக்கை ஏற்படும். ஆனா இது சிரமமான பொறுப்புத்தான். ரொம்ப எச்சரிக்கையா இருந்துக்க" என்றார்.

சுந்தரம் ஒரு பயத்துடன் ஏற்றுக்கொண்டார். விரைவிலேயே அந்தப் பொறுப்புக்குச் சோதனை வந்தது.

ஓராண்டுக்கு முன் வந்து சேர்ந்த ராம்லி என்ற மாணவன் மாநில அரசியலில் செல்வாக்கு மிக்க ஒருவரின் மகன். முரடன். வீட்டுக்குச் செல்லப் பள்ளை. பள்ளிக் கூடத்தில் படிப்பில் அக்கறையில்லாத சில மாணவர்களுக்கு அவன் தலைவனாக இருந்தான். நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்களையும் அவன் தன் கேங்கில் சேர்க்க முயன்ற போது சுந்தரம் அந்த நல்ல மாணவர்களைக் கூப்பிட்டு அவர்களை எச்சரித்து வைத்தார். "ராம்லியை நான் கண்டிக்க முடியாது. நான் சொன்னால் எதிர்த்து நிற்பான். அவனுக்குப் படிப்பிலும் பள்ளிக் கூடத்திலும் அகக்கறை கிடையாது. நீங்கள் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்கள். ஆகவே கேட்பீர்கள். அவனோடு சேர்ந்து கெட்டுப் போகவேண்டாம். இநதப் பள்ளிக்கூட மாணவர்களின் நற்பெயரைக் காப்பாற்றுங்கள்" என்பதுதான் அவர் அறிவுரை.

ராம்லிக்கு இந்தச் செய்தி எட்டியவுடன் ஆசிரியரை மற்ற மாணவர்களிடம் கேவலமாகத் திட்டிப் பேசினான். இந்தப் பேச்சுக்கள் சுந்தரத்தின் காதுக்கு எட்டியிருந்தாலும் ஆதாரம் ஏதும் இல்லாமல் அவர் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை.

ஒரு நாள் ஒரு பிற்பகல் பொழுதில் அவர் வேறு வேலையாகப் பள்ளிக் கூடம் போயிருந்த பொழுது மாணவன் ஒருவன் அவசரமாக அவருடைய அறைக்கு வந்து ராம்லியும் இன்னும் சில மாணவர்களும் பள்ளிக்கூடத்தின் பின்னால் உள்ள விளையாட்டுத் தளவாடங்கள் வைக்கும் அறையில் இரண்டு மாணவிகளை அடைத்து வைத்து தொந்திரவு செய்வதாகச் சொன்னான். சுந்தரம் அங்கு விரைந்து போனார். கதவு அடைத்திருந்தது. கதவுக்கு முன்னால் ராம்லியின் கும்பலைச் சேர்ந்த ஒரு மாணவன் காவல் நின்றான். திடீரென்று சுந்தரத்தைக் கண்டதும் "ஓய் செகு மரி, செகு மரி" என்று கத்திக் கொண்டு ஓடிவிட்டான். அடுத்த நிமிடம் கதவைப் படீரென்று திறந்து கொண்டு நான்கு மாணவர்கள் நாலாபுறமும் ஓடினார்கள். அவர்களில் மூவரை சுந்தரம் அடையாளம் கண்டு கொண்டார். கடைசியாக வௌியே வந்தவன் ராம்லி. அவன் அவசரப் படவில்லை. நின்று அவரை முறைத்துப் பார்த்து விட்டுத் தன் மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்தான்.

"நில் ராம்லி, இங்கு என்ன செய்கிறாய்?" என்று கேட்டார்.

"உங்களுக்கு என்ன அதைப்பற்றி?" என்று கேட்டுவிட்டு அவன் மோட்டார் சைக்கிளில் ஏறிப் பறந்து விட்டான்.

சுந்தரம் கதவு திறந்து அறைக்குள் நுழைந்த போது பள்ளிச் சீருடைகள் அலங்கோலமாகக் குலைந்த இரண்டு பள்ளிப் பெண்கள் நின்றிருந்தார்கள். அவருடைய கேள்விகளுக்குப் பயந்து பயந்து பதில் சொன்னார்கள். பக்கத்தில் உள்ள ஒரு பெண்கள் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த தாங்கள் விளையாட்டுப் பயிற்சிக்கு வந்ததாகவும் ராம்லியும் அவன் நண்பர்களும் அவர்களை வௌியில் சந்தித்து வேடிக்கையாகப் பேசித் தங்களை இந்த அறைக்குள் அழைத்து வந்து பின்னர் கதவை மூடிவிட்டு முரட்டுத் தனமாக ஆடைகளைக் களைய முயன்றதாகவும் சொன்னார்கள்.

"தப்பாக ஏதாகிலும் நடந்ததா?" என்று கேட்டார்.

"இல்லை. நல்ல வேளையாகச் செகு வந்து விட்டீர்கள்" என்றார்கள்.

அவர்களைத் தன் அறையில் உட்கார வைத்துக் கேள்விகள் கேட்டு பெயர் அடையாளக்கார்டுகள் பதிந்துகொண்டு ஒரு புகார் எழுதிக் கொண்டு தலைமை ஆசிரியர் தாலிபுக்குப் போன் செய்தார். அவர் வீட்டில் இல்லை. போலிசுக்குப் போன் செய்வதா என்று யோசித்து விட்டுத் தலைமை ஆசிரியரைக் கலக்காமல் செய்யவேண்டாம் என்று முடிவு செய்து மாணவிகளை அனுப்பி விட்டார்.

மறுநாள் காலையில் முதல் வேலையாகத் தலைமை ஆசிரியரைப் பார்த்து விஷயத்தைக் கூறி எழுத்து பூர்வமான புகாரையும் அவரிடம் கொடுத்தார். தாலிபுக்குக் கோபத்தில் முகம் சிவந்து விட்டது. "பார்த்தீர்களா சுந்தரம். இவர்களெல்லாம் இந்தப் பள்ளியின் பெயரைக் கெடுக்க வந்தவர்கள் இவர்களைச் சும்மா விடக் கூடாது!" என்று அந்த மாணவர்களைக் கூப்பிடப் பணித்தார்.

இதற்கிடையே பள்ளிக் கூடம் முழுவதும் அந்த செய்தி பரவி பரபரப்பாக இருந்தது. சுந்தரத்தை வடூயில் சந்தித்த ஆசிரியர்கள் "உண்மைதானா? உண்மைதானா?" என்று கேட்டார்கள். செய்தி இவ்வளவு விரைவில் பரவியதற்குக் காரணம் நேற்று தன்னிடம் முதலில் வந்து செய்தி சொல்லி நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த பையனாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் யூகித்துக் கொண்டார்.

ராம்லியும் அவன் நண்பர்களும் ஒன்றும் தெரியாதவர்கள் போல் தலைமை ஆசிரியர் அறைக்கு வந்தார்கள். ஒட்டு மொத்தமாகத் தங்களுக்கும் அந்த சம்பவத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லையென்றார்கள். சுந்தரம் ஆசிரியருக்குத் தங்களை என்றுமே பிடிக்காதாகையால் யாரோ செய்த குற்றத்தைத் தங்கள் மேல் போடுவதாகச் சாதித்தார்கள்.

தலைமை ஆசிரியர் திகைத்தார். அதன் பின் முதலில் வந்து சுந்தரத்திடம் சொன்ன மாணவனை அழைத்துக் கேட்டார்கள். அவன் தயங்கித் தயங்கி அங்குமிக்கும் பார்த்தவாறு சொன்னான்:

"செகு! அந்த அறையில் இரண்டு பெண்களும் சில பையன்களும் நுழைவதைப் பார்த்தேன்! உடனே சென்று செகு சுந்தரத்திடம் சொன்னேன்!"

"யார் அந்தப் பையன்கள்?" என்று கேட்டார் தாலிப்.

"தெரியாது! நான் கவனிக்கவில்லை!"

"ராம்லி என்று நீ சொன்னதாகத்தானே செகு சுந்தரம் எழுதியிருக்கிறார்!"

"தூரத்தில் இருந்த பார்க்கும் போது ராம்லி போல இருக்கிறது என்று சொன்னேன்! ராம்லிதான் என்று சொல்லவில்லை!"

தலைமை ஆசிரியர் சுந்தரத்தைப் பார்த்தார். ராம்லியோ அவனைச் சார்ந்தவர்களோ இந்தப் பையனை மிரட்டியிருக்கிறார்கள் என்பது இருவருக்குமே தெரிந்தது.

அந்தப் பெண்கள் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியைக்கு தாலிப் போன் செய்தார். அந்தப் பெண்களின் விவரங்களைக் கொடுத்து இந்தப் பையன்களைத் தான் அங்கு பள்ளிக்குக் கொண்டு வருவதாகவும் பெண்களை விசாரித்து அடையாளம் காட்டும் படியும் கேட்டுக் கொண்டார்.

தாலிப், சுந்தரம் இருவரும் தங்கள் கார்களிலேயே பையன்களை ஏற்றிக் கொண்டு அந்தப் பள்ளிக்குப் போனார்கள். அந்த இரண்டு சிறுமிகளும் அங்கு தலைமை ஆசிரியை அறையில் காத்திருந்தார்கள். நேற்று நடந்தது உண்மைதான் என ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பையன்களை அடையாளம் காட்டச் சொன்ன போது இவர்கள் அல்ல என்றார்கள். தங்களைக் கெடுக்க முயன்ற பையன்களைத் தங்களுக்குத் தெரியாதென்றும் எந்தப் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூடத் தெரியாதென்றும் சாதித்து விட்டார்கள். இங்கும் ராம்லியின் மிரட்டல் நடந்திருக்க வேண்டும் என்பது சுந்தரத்திற்குப் புரிந்தது.

ஏமாற்றத்தோடு திரும்பி வந்து பையன்களை எச்சரித்துத் திரும்ப அனுப்பினார் தலைமை ஆசிரியர். ராம்லி கேட்டான்: "செகு பெசார்! எங்களை ஏன் எச்சரிக்கிறீர்கள்? செகு சுந்தரம் எங்கள் மீது வீண் பழி சுமத்துகிறார். எங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார். எச்சரிக்கப்பட வேண்டியவர் அவர்தான்! அவர் எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிடில் எங்கள் பெற்றோர்களிடம் சொல்லிப் போலிசில் புகார் செய்யச் சொல்லுவோம்!"

சுந்தரம் அதிர்ச்சியடைந்தார். இவ்வளவு தைரியம் உள்ளவனா? இவ்வளவு கெட்டவனா? இவ்வளவு கெட்டிக்காரனா?

தலைமை ஆசிரியர் சுந்தரத்தைத் தனியாயக் கொண்டு போய் பேசினார்.

"சுந்தரம். ஒரு வேளை நீங்கள்தான் அவசரத்தில் தவறாக அடையாளம் கண்டு விட்டீர்களோ?"

"இஞ்சே தாலிப். அவன் வௌியில் வந்து நின்று என்னிடம் பேசினான்! "உங்களுக்கு என்ன அதைப் பற்றி?" என்று கேட்டு அவனுடைய மோட்டார் சைக்கிளில் ஏறிப் போனான். எப்படி நான் தவறாக அடையாளம் கண்டிருக்க முடியும்?"

தலைமை ஆசிரியர் மேலும் கீழும் நடந்தார். பெரு மூச்சு விட்டார்: "சரி! நான் நம்புகிறேன். ஆனால் சாட்சிகள் சம்பந்தப் பட்டவர்கள் எல்லாம் திரும்பி விட்டார்கள். நீங்களும் உடனடியாகப் போலிசில் புகார் செய்யவில்லை. இப்போதைக்கு இதோடு விட்டு விடுவோம்!" என்றார்.

"அப்போது என் வார்த்தைக்கு என்ன மதிப்பு, இஞ்சே தாலிப்? இம்மாதிரி தறுதலைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டால் நாளைக்கு என்னையும் உங்களையும் யார் மதிப்பார்கள்?" என்று கேட்டார் சுந்தரம்.

தலைமை ஆசிரியர் அமைதியிழந்து அலைந்தார். "சரி. இந்த மாணவர்களின் பெற்றோர்களை நாளை வரவழைத்துப் பேசுவோம்! கண்டித்து வைக்கச் சொல்லுவோம்!" என்றார்.

அன்று பிற்பகல் ராம்லியின் தந்தை டத்தோ யூசுப் மாநில அரசின் பெயர் பொறித்த அதிகார்வ பூர்வ பெரிய காரில் வந்து பள்ளிக்கூடத்தில் வந்து இறங்கினார். முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு தலைமை ஆசிரியர் அறையில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவர்கள் கூறிய புகார்களைக் கேட்டார். இறுதியில் சொன்னார்: "நான் இந்த விஷயத்தை என் பையனிடமும் மற்றவர்களிடமும் விசாரித்து விட்டேன். அவர்கள் இப்படிப்பட்ட தவற்றைச் செய்யக்கூடியவர்கள் அல்ல. உங்கள் கட்டொழுங்கு ஆசிரியர் என் மகன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியால் யாரோ செய்த குற்றத்தை அவன் தலை மேல் சுமத்துகிறார். ஆகவே அவர்தான் தன் தவற்றுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் இந்தக் குற்றச் சாட்டை மீட்டுக் கொண்டு என் மகனிடமும் மற்ற மாணவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் இந்த விஷயத்தை இதோடு விட்டு விடுகிறேன். இல்லையானால் கல்வித் துறைக்கும் போலிசுக்கும் சொல்லி அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்வேன்! இது என் எச்சரிக்கை!" என்றார்.

தலைமை ஆசிரியர் தாலிப் அதிர்ச்சியடைந்திருந்தார். சுந்தரமும் இந்த எதிர்பாராத தாக்குதலின் கடுமையில் அதிர்ந்துதான் இருந்தார். என்ன நடக்கிறது இங்கே? நானா குற்றவாளியாகிவிட்டேன்? இரண்டு மாணவிகள் மானபங்கம் செய்யப் படுவதினின்றும் காப்பாற்றித் தன் கடமையை ஆற்றியதற்குக் கிடைக்கும் பரிசா இது?

தாலிப் சுந்தரத்தைத் தனியாக அழைத்துப் போனார். "சுந்தரம். இந்த விஷயம் இப்படித் திரும்பி விட்டதற்கு வருத்தப் படுகிறேன். ஆனால் உங்கள் குற்றச்சாட்டுக்களுக்கு உரிய சாட்சிகள் எல்லாம் மாறிப் போய் விட்டதால் ஒரு சிறிய மன்னிப்போடு இந்த விஷயத்தை முடித்துவிடுவோம். மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டாம். டத்தோவிடம் மட்டும் கேட்டு மற்றவர்கள் காது படாமல் நம் மூவருக்குள் முடித்துவிடுவோம். அதுதான் இந்தப் பள்ளிக் கூடத்துக்கும் உங்களுக்கும் நல்லது" என்று சுந்தரம் காதில் கிசுகிசுத்தார்.

சுந்தரம் மலைத்திருந்தார். இங்கு வந்திருப்பவர் அதிகாரம் மிக்கவர். அவர் மகன் சொல்லியிருப்பது பொய்யேயானாலும் அவருக்கு அது தெரிந்திருக்க நியாயாமில்லை. பொய்யைப் பொய் என்று அறிந்து கொள்ளாமல் அதைத் தற்காக்க வந்திருக்கிறார். தலைமை ஆசிரியரோ இந்த விஷயத்தை இதோடு முடித்துவிட்டு தன் பெயரையும் பள்ளிக்கூடத்தின் பெயரையும் தற்றகாத்துக் கொள்ள முனைந்திருக்கிறார்.

ஆனால் தான் பேசுவது சத்தியம். ஆகவே தான் இந்த அதிகாரத்துக்கும் பகைக்கும் பொய்க்கும் அடி பணிந்து போக வேண்டியதில்லை. அடிபணிந்தால் இப்போதைக்குத் துன்பங்களைத் தவிர்த்து விடலாம். ஆனால் இந்தத் தோல்வியை வாழ்நாள் முழுவதும் வடுவாகச் சுமந்து வாழவேண்டியிருக்கும். அதில் தனக்குப் பெருமை இருக்காது. ராம்லியும் அவன் நண்பர்களும் பின்னால் சிரிப்பார்கள். சுந்தரம் இப்படி வெகுளித்தனமாகத் தப்புச் செய்து மாட்டிக்கொண்ட கதை ஆசிரியர்கள் மத்தியில் பரவும். அதற்கு இடம் கொடுக்க முடியாது.

இது வரை நிமிர்ந்து வாழ்ந்து விட்டேன். இந்தச் சிறிய விபத்தினால் முதுகு உடைந்தவனாக இனி குனிந்து வாழ முடியாது. எப்படியோ இந்தச் செயலைத் தொடங்கிவிட்டேன். அதனால் பகை விளைந்து விட்டது. "வினை பகை என்றிரண்டின் எச்சம்" விட்டு வைக்காதே, அது மீண்டும் வளர்ந்து உன்னைக் கெடுக்கும் என வள்ளுவர் கூறியிருக்கிறார்.

சுந்தரம் நெஞ்சு நிமிர்ந்து நின்றார். "இஞ்சே தாலிப், டத்தோ யூசோப், நான் இந்தப் புகாரில் கூறியிருப்பவை அனைத்தும் என் நெஞ்சறிய உண்மை. ஆகவே அதை மீட்டுக் கொள்வதோ மன்னிப்புக் கேட்பதோ தேவையில்லாதது. ஆகவே நான் அப்படிச் செய்ய மாட்டேன்! டத்தோ அவர்கள் தன் மகனைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொள்ளலாம்!" என்றார்.

டத்தோ யூசுபும் தாலிப்பும் அதிர்ச்சி அடைந்து காணப்பட்டனர். டத்தோ கோபத்தில் முகம் சிவக்கச் சொன்னார்: "தாலிப்! உங்கள் ஆசிரியர் இதன் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி அறியாமல் பேசுகிறார். இந்தப் பழம் பெருமை வாய்ந்த பள்ளிக்கூடத்திற்கு இந்த வழக்கினால் எவ்வளவு கெட்ட பெயர் என்பதை எண்ணிப் பார்க்கச் சொல்லுங்கள்!"

தாலிப் ஏதோ கூறவந்ததை சுந்தரம் இடை மறித்தார். "இந்தப் பள்ளிக்கூடம் வெறும் கல்லும் மண்ணும் சேர்த்த கட்டிடம். நான் இரத்தத்தாலும் உணர்ச்சியாலும் ஆன மனிதன். ஆகவே பள்ளிக்கூட மானத்தை விட என் மானம் முக்கியமானது. அப்படியே பள்ளிக்கூடம் புனிதமானது என்று பார்த்தாலும் அதைத் தன் தீய செயலால் களங்கப் படுத்தியவன் உங்கள் மகன்! அந்த மாதிரித் தீய செயல்களை வளரவிடாமல் முறியடிக்க வேண்டும் என்று நினைக்கும் நான் இதன் நற்பெயரைக் காப்பாற்றத்தான் நினைக்கிறேன். ஆகவே என் முடிவில் மாற்றம் இல்லை!"

டத்தோ யூசுப் அவர்களை முறைத்துப் பார்த்துவிட்டுக் கதவைப் படீரென அடித்துச் சாத்திவிட்டுப் போனார்.

அடுத்த சில இரவுகள் அவருக்குத் தூக்கம் குறைந்த இரவுகளாகின. ஜானகி அவருக்கு எந்த மாற்று வடூயும் கூறமுடியாமல் முதுகு நீவி கால் பிடித்துத் தூங்கச் செய்தாள்.

தாலிப் இன்னும் ஓரிரு முறை அவரிடம் பேசிச் சமாதானம் செய்ய முயன்றார். இந்த வழக்கு தோற்றுவிட்டால் சுந்தரத்தின் வேலைக்கே ஆபத்து வரலாம் என்றும் சொன்னார். சுந்தரம் இணங்கவில்லை. அவர் தன் சுயமரியாதையைக் காத்துக்கொள்ள வேலை இழக்கவும் தயாரானார். உலகில் நீதி என ஒன்றிருந்தால் தன் உண்மை வெல்லும் எனக் காத்திருந்தார்.

ராமச்சந்திரனுக்கு இந்த விஷயம் தெரிய வந்த போது அவரிடம் வந்து ஆறுதல் கூறினார். "சுந்தரம்! நீ செய்றதுதான் சரி. ஆனா இந்தப் பசங்க ரொம்ப கெட்டவங்க! ஜாக்கிரதையா இரு. ஆனா இவங்களுக்குத் தலை வணங்கி விட்டுக் கொடுத்திராத. உண்மை உன் பக்கம் இருக்கிறவரைக்கும் பயப்பட வேணாம்!" என்று சொன்னார்.

டத்தோ யூசுபும் அவர் மகனும் கல்வி இலாகாவுக்குப் புகார் எழுதிப் போட்டுவிட்டார்கள். துணைக் கல்வி இயக்குநர் எல்லோரையும் கூப்பிட்டு ஒரு சுற்று விசாரித்தார். முதன் முறையாக பலவந்தம் செய்யப்பட்ட பெண்களின் பெற்றோர்களிடமும் அவர் விசாரணை நடத்தினார். எல்லாரும் முதலில் சொல்லிய கதையையே சொன்னார்கள்.

துணைக் கல்வி இயக்குநர் மீண்டும் ஒரு நாள் சுந்தரத்தின் பள்ளிக்கூடத்திற்கு வந்தார். தலைமை ஆசிரியர் அறைக்குள் அவர் முன்னிலையில் சுந்தரத்தை அழைத்துப் பேசினார்:

"இஞ்சே சுந்தரம். எங்கள் விசாரணை முடிந்து விட்டது. புதிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. நீங்கள் குற்றம் சாட்டும் மாணவர்கள் யாரும் அந்தக் குற்றத்தைச் செய்ததற்கான ஆதாரம் இல்லை. ஆகவே உங்கள் சொல் ஒன்று மட்டுமே இருக்கிறது. இதை வைத்து நீங்கள்தான் தவறான குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறீர்கள் என்ற முடிவைத் தவிர வேறு முடிவுக்கு எங்களால் வர முடியவில்லை. ஆகவே உங்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் தர மாநிலக் கல்வி இயக்குநர் தீர்மானித்திருக்கிறார். ஆனால் நீங்கள் நல்ல உதாரணமான ஆசிரியர். உங்கள் சேவை இதுநாள் வரை அப்பழுக்கற்றதாக இருந்திருக்கிறது. ஆகவே சம்பந்தப் பட்டவர்களிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டால் இந்தப் பிரச்சினையை யாருக்கும் பாதிப்பில்லாமல் சுமுகமாக முடிவு செய்யலாம் என அவர் ஆலோசனை கூற என்னை அனுப்பியிருக்கிறார்.

"நீங்கள் கூறிய குற்றச்சாட்டு உண்மையாகவே இருந்தாலும் கூட அதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆகவே வீண் பிடிவாதம் வேண்டாம். மன்னிப்புக் கேட்டுவிடுங்கள் அப்படிச் செய்யவில்லையானால் கல்வி இயக்குனர் எச்சரிக்கைக் கடிதம் அனுப்புவார். அதற்கு மேல் டத்தோ யூசுப் உங்கள் மேலும் பள்ளிக்கூடத்தின் மேலும் வழக்குத் தொடரவும் கூடும். உங்களுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தந்திருக்கிறார். அதற்குள் நீங்கள் மன்னிப்புக் கேட்க இணங்காவிட்டால் அவர் கடித்தில் கையெழுத்திட்டு அனுப்புவார்."

துணை இயக்குநர் போய்விட்டார். சுந்தரம் தமது அறைக்குப் போய் நெடு நேரம் மௌனமாக அமர்ந்திருந்தார். அவருடைய எதிர்காலம் அவர் கண் முன் ஊசலாடிக் கொண்டிருந்தது. உலகம் தனக்கெதிராகத் திரும்பிவிட்டது அவருக்குத் தெரிந்தது. சத்தியம் அவரைக் கைவிட்டுவிட்டது.

உலகம் என்பது நன்மை தீமை என்னும் வேறுபாடு பார்த்து இயங்கவில்லை என்று நினைத்தார். அது இயந்திர கதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. புத்தியுள்ளவர்கள் அதன் போக்கிற்கேற்ப வளைந்தும் நௌிந்தும் பிழைத்துக் கொள்ளுகிறார்கள். தர்மம் நியாயம் என்று நம்பியிருப்பவர்கள் வளைய முடியாமல் முறிந்து விடுகிறார்கள். "கற்றூண் பிளந்திறுவதல்லால் பெரும் பாரம் தாங்கின் தளர்ந்து வளையுமோதான்?" என்றோ படித்தது நினைவுக்கு வந்தது.

ஆனால் நியாயத்திற்காக முறிவதில் பெருமை இருக்கிறது. அதனால்தான் நியாயம் என்பது நிலைத்திருக்கிறது. அதனால்தான் மனித நாகரிகம் வளர்ந்திருக்கிறது. தான் முறிய அவர் தயாராகி விட்டார். மன்னிப்புக் கேட்டு இந்த வேலையைத் தங்க வைத்துக் கொள்வதை விட இதைத் துறந்து விடுவது நல்லது. என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்களுக்கு இதனால் எக்களிப்பு இருக்கும். இந்த ஏமாளி வாத்தியார் தோற்றுவிட்டார் என்று வெற்றி முழக்கம் இடுவார்கள். அதைத் தான் தடுக்க முடியாது. தீமை சக்தி வாய்ந்தது. புயல் போல, வயிற்று வலி போல அதற்குத் தற்காலிக பலம் அதிகம். அதை அந்தக் கணத்தில் எதிர்த்துப் போராடிப் பலனில்லை. ஆனால் இது இறுதியில் அடங்கும். அமைதி நிலைக்கும்.

இப்போது தனக்கு முன்னால் உருவாகி இருக்கின்ற இந்தத் தீய புயலுடன் நான் மோத முடியாது. ஆனால் அதற்காக இந்தத் தீமைக்கு முன்னால் தலை வணங்கவும் முடியாது. ஒதுங்கிவிடலாம் அதுதான் நல்லது. அதற்குப் பின் வாழ்க்கை என்ன ஆகும் என்று யோசிக்கக் கூடாது. யோசித்தால் பயம் வரும். பயம் வந்தால் பணிந்து போகச் சொல்லும். பணிந்து போனால் தீமை வெல்லும்.

ஒரு தாளெடுத்தார். டைப்ரைட்டரில் சொருகி தன் வேலைத் துறப்புக் கடிதத்தைச் சுருக்கமாக எழுதினார். படித்துக் கையெழுத்திட்டார். தலைமை ஆசிரியரின் அறைக்கு வௌியே உட்கார்ந்திருந்த கிளர்க்கிடம் அதைக் கொடுத்தார். அங்கிருந்து நேராக வௌியேறி காரை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

"என்ன இன்னக்கி வெள்ளன வீடு வந்து சேர்ந்திட்டிங்க?" என்று கேட்ட ஜானகியிடம் "நான் வேலய விட்டுட்டேன் ஜானகி" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

மருண்ட விழிகளுடன் "என்ன சொல்றிங்க?" என்று அவள் கேட்டதும் அவள் மார்பில் முகம் புதைத்து அழத் தொடங்கினார்.

இரவெல்லாம் தூக்கமில்லாமல் விழித்திருந்தார். "நியாயம் தோற்றுவிட்டது, நியாயம் தோற்றுவிட்டது" என்று மனது ஓலமிட்டுக் கொண்டே இருந்தது. அப்புறம் "நியாயம் ஏன் தோற்றது?" என்ற கேள்வி எழுந்தது. பொய்க்கும் அநீதிக்கும் புயலுக்குண்டான வேகமும் பலமும் இருப்பது சரிதான். ஆனால் உண்மையும் நீதியும் என்றும் உள்ள மூச்சுக் காற்றல்லவா? அதுதானே இறுதியில் வென்று நிலைக்க வேண்டும். அது தானாக வெல்லுமா? அது வெல்லத் தான் ஏதாவது செய்ய வேண்டுமெனத் தோன்றியது.

மறுநாள் காலையில் வெள்ளென எழுந்தார். குளித்துவிட்டுத் தான் அதிகமாக நுழையாத ஜானகியின் சாமி அறைக்குள் நுழைந்து கும்பிட்டார். பசியாறிவிட்டு காரை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்கள் பள்ளிக்குப் போய்த் தலைமை ஆசிரியைச் சந்தித்தார். சம்பந்தப் பட்ட அந்த இரண்டு சிறுமிகளின் வீட்டு முகவரியைக் கேட்டு வாங்கிக் கொண்டார். தலைமை ஆசிரியை முதலில் தயங்கினாலும் அவருடைய நிலைமையை எண்ணிக் குறித்துக் கொடுத்தார்.

ஆயர் ஈத்தாமிலுள்ள ஒரு அழகிய இரண்டு மாடித் தொடர் வீட்டில் அந்த மலாய்க் குடும்பம் இருந்தது. சென்று அழைப்பு மணியை அடித்தார். வீட்டின் முன் கார் இருந்தது. குடும்பத் தலைவர், அந்தச் சிறுமியின் தந்தை மொக்தார், இன்னும் வேலைக்குப் புறப்படவில்லை. மொக்தாரை அவர் இதற்கு முன் பார்த்ததில்லை. முன்பின் தெரியாது. ஆனால் மனிதர்களின் நற்குணங்களை நம்பி அவர் வந்திருக்கிறார்.

மொக்தாரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதும் அவர் அன்போடு வரவேற்றார். "செகு சுந்தரம். நான் கேள்விப் பட்டிருக்கிறேன் அன்றைக்கு என் மகள் விஷயமாக விசாரிக்க கல்வி அதிகாரி வந்த போது உங்கள் பெயரைச் சொன்னார்" என்றார். மொக்தாரின் மனைவி காப்பி கொண்டு வந்து கொடுத்தார். உயர்ந்த இஸ்லாமிய பண்பாடும் அழகிய மலாய் கலையணர்வும் தவழும் வீடு.

"இஞ்சே மொக்தார், ஒருவர் தான் செய்த நல்ல காரியத்தைச் சொல்லிக் காட்டுவதும் அதற்குப் பிரதியுபகாரத்தை வாய் விட்டுக் கேட்பதும் தமிழர்களாகிய எங்களுக்கும் நல்ல பண்பாடல்ல, மலாய்க்காரரான உங்களுக்கும் நல்ல பண்பாடல்ல. ஆனால் நான் இப்போது வேலையை இழக்கும் நிலையில் நிற்கிறேன். ஆகவேதான் இதை உங்களிடம் வாய்விட்டுக் கேட்க வேண்டியிருக்கிறது.!" என்றார்.

"நீங்கள் ஏன் வேலையை இழக்க வேண்டும்? நடந்தது ஒன்றும் உங்கள் குற்றமில்லையே!" என்று கேட்டார் மொக்தார். தான் வேலை துறந்த நிகழ்வுகளைச் சுருக்கிச் சொன்னார் சுந்தரம்.

"நான் என்ன செய்ய முடியும்?" மொக்தார் கேட்டார்.

"இஞ்சே மொக்தார். அன்றைக்கு உங்கள் மகள் இருந்த நிலையில் நான் அந்த நேரத்துக்குப் போயிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?" என்று சுந்தரம் கேட்டார்.

கேட்டுக் கொண்டிருந்த மொக்தாரின் மனைவி "யா அல்லா!" என்று நெஞ்சில் கையை வைத்துக் கொண்டார். "செகு. நீங்கள் செய்த உதவி மிகப் பெரியது. என் மகளின் மானத்தைக் காப்பாற்றினீர்கள்!" என்றார்.

"அம்மா உங்கள் பெண்ணுக்கு அந்தப் பையன் யார் என்று தெரியும். அவர்கள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள்தான். மாட்டிக் கொண்ட பின் மறைக்கப் பார்க்கிறார்கள்!"

"அப்படியா? யாரோ தெரியாத மாணவர்கள் இழுத்துக் கொண்டு போனதாக அல்லவா சொன்னார்கள்?"

"பொய். நான் கண்ணால் பார்த்தவன் சொல்கிறேன். டத்தோ யூசுபின் மகனைக் காப்பாற்றவும் தான் இசைந்து அங்கு போனதை மறைக்கவும் இப்படிக் கதை சொல்கிறார்கள். எல்லாரும் சேர்ந்து செய்கின்ற சதி இது. இதற்குப் பலியானவன் நான்!"

திருமதி மொக்தார் "யா அல்லா, யா அல்லா!" என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்.

மொக்தார் ஏதோ யோசித்தவாறு இருந்தார். அப்புறம் திடீரென எழுந்து நின்றார். "செகு. எனக்கு வேலைக்கு நேரமாகிவிட்டது. நான் புறப்பட வேண்டும்" என்றார். "உனக்குக் கொடுத்த நேரம் முடிந்து விட்டது. நீ போகலாம்" என அவர் சொல்வதைப் புரிந்து கொண்டார் சுந்தரம். அந்த சந்திப்பு இப்படித் திடீரென முடிந்தது ஏமாற்றமாக இருந்தது.

சுந்தரம் விடை பெற்று வந்தார். கடவுளே! நான் செய்ய வேண்டியதைச் செய்து விட்டேன். நான் செய்தது சரிதானா? இது எப்படிப் போய் முடியும் எனத் தெரியவில்லை. நான் இவர்களுக்குப் பெரிதா? நான் ஒருவன் அவமானப் படுவதும் வேலை இழப்பதும் இவர்களுக்கு ஒரு பொருட்டா?

ஏன் அவர்கள் சுந்தரத்தை ஒரு பொருட்டாக மதிக்க வேண்டும்? அவரை ஒரு பொருட்டாக மதித்து விஷயத்தை நேர் செய்ய முற்பட்டால் பல பேருக்குப் பாதிப்பு இருக்கிறது. டத்தோ யூசுப், அவர் மகன், அந்த இரண்டு சிறுமிகள், பள்ளித் தலைமை ஆசிரியர், பள்ளியின் நல்ல பெயர், கல்வித் துறையின் நல்ல பெயர் எல்லாருக்கும் பாதிப்பு இருக்கிறது.

மாறாக எல்லோரும் தங்கள் தங்கள் சுயநலத்தைப் பாதுகாத்துக்கொள்ள இது நல்ல சந்தர்ப்பம். சுந்தரம் என்ற ஒருவனைப் பற்றிக் கவலைப் படாமல் "அவன் பாவம்" என்று மனதுக்குள் சொல்லிப் புதைத்து விடலாம். புதைத்து விட்டால் குழப்பமும் கலவரமும் இல்லை. யாருடைய பெயரும் கறைபடப் போவதில்லை. சுந்தரத்துக்குப் பதில் இன்னொரு ஆசிரியரை அமைத்துக் கொண்டு பள்ளி ஜாம் ஜாம் என்று நடக்கும்.

என்ன செய்து விட்டேன் நான்? எந்த நம்பிக்கையில் அந்நியர்களிடம், எனக்கு முன் பின் தெரியாதவர்களிடம் நியாயம் கேட்கப் போனேன்? பட்டது போதாதா? இன்னும் இவர்களால் மீண்டும் ஓரு முறை உதாசீனப் படுத்தப்பட வேண்டுமா? தன் சுய கௌரவமும் சுயமதிப்பும் இன்னும் குறைந்து அதள பாதாளத்துக்குப் போக வேண்டுமா?

வீட்டுக்கு வந்து சேர்ந்த போது உள்ளம் மிகச் சோர்ந்திருந்தது. நம்பிக்கைகள் கரைந்திருந்தன. மனத்தின் ஒரு மூலையில் உள்ள கருமை, புகையாய்ப் பெருகி நெஞ்சை கப்பென்று மூடிக் கொண்டது. "என்ன ஆச்சிங்க? எங்க போனிங்க?" என்ற ஜானகியின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் படுக்கையில் சென்று விழுந்தார். கணவரின் வாழ்க்கையிலும் மனசுக்குள்ளும் என்ன நடக்கிறது என்று சரியாகப் புரியாமல் கடவுளை வேண்டியவாறே இருந்தாள் ஜானகி.

இன்னும் ஓர் இரக்கமில்லாத இரவை உறக்கமில்லாத மனிதராக அவர் கடத்தினார்.

காலையில் தொலைபேசி அழைப்பு வந்தது. தலைமை ஆசிரியர் தாலிப் பேசினார். "சுந்தரம் உடனே புறப்பட்டு இங்கு வாருங்கள். கல்வித் துறை துணை இயக்குநர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருகிறார்." என்றார்.

"எதற்காகக் கூப்பிடுகிறீர்கள் சே தாலிப்?" என்று கேட்டார்.

"அதெல்லாம் நேரில் சொல்கிறேன். நல்ல சேதிதான் வாருங்கள்!" என்றார்.

தொலைபேசியைக் கீழே வைத்தார். மனசுக்குத் தெம்பு வந்தது. "சுற்றி நில்லாதே போ, பகையே! துள்ளி வருகுது வேல்!" என்று மனசுக்குள் பாரதி வந்து பாடினான்.

அவர் தலைமை ஆசிரியர் அறையில் நுழைந்த போது டத்தோ யூசுப் அங்கிருந்தார். அவர் மகன் ராம்லியும் இருந்தான். மொக்தாரும் மொக்தாரின் மகளும் இருந்தார்கள். அந்தப் பெண் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தாள். அன்றைக்கு அவளோடு பிடிபட்ட இன்னொரு பெண்ணும் தலைகுனிந்து நின்றிருந்தாள். துணைக் கல்வி இயக்குநரும் இருந்தார்.

தலைமை ஆசிரியர் சுந்தரத்தின் கையைப் பிடித்துக் குலுக்கினார். தொடர்ந்து துணைக் கல்வி இயக்குநரும் வந்து கை குலுக்கினார். "செகு சுந்தரம். மொக்தாரின் மகள் ராம்லிதான் தன்னைக் கெடுக்க முயன்றவன் என்று அடையாளம் காட்டி விட்டாள். ராம்லியும் ஒத்துக் கொண்டான். ஆகவே நீங்கள் இனி மனம் வருந்தத் தேவையில்லை. உங்கள் பிரச்சினை தீர்ந்து விட்டது!" என்றார்.

மொக்தார் வந்து கையைப் பிடித்துக் கொண்டார். "செகு. நீங்கள் என் மகளின் மானத்தைக் காப்பாற்றினீர்கள். அதற்கு அவள் துரோகம் செய்து விட்டாள். நேற்றிரவு அவளிடம் பேசி உண்மையை வரவழைத்தேன். அவளுடைய சிநேகிதியையும் கண்டு பிடித்து உண்மையை உறுதிப் படுத்திக் கொண்டேன். நேற்றே டத்தோவையும் கல்வி அதிகாரியையும் அழைத்து உண்மையைச் சொல்லிவிட்டேன். எங்களை மன்னித்து விடுங்கள்!" என்றார்.

டத்தோ யூசுப் வந்து மனமில்லாமல் கைகுலுக்கினார்.

இத்தனை பேருக்கு முன்னால் அழக் கூடாது என்று முயன்றும் முடியவில்லை. திரும்பிக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டார். உடனே ஜானகிக்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் மனதில் தோன்றியது.

துன்பங்கள், தோல்விகள், வெற்றிகள், களிப்புக்கள், தற்காலிக இன்பங்கள், விபத்துகள், துன்பங்கள், நோய்கள்... நினைவுகள், ஆயிரம் நினைவுகள். என்றைக்கு இந்த சக்கரம் நிற்கும்? இந்த சக்கரத்தில் கையும் காலும் கட்டப்பட்டு, உயரே போய் தலைகீழாகி கீழே வந்து நேராகி மீண்டும் தலை கீழாகி, எப்போது நிற்கும்? எப்போது நிற்கும்? விரைவில் நிற்கப் போகிறது.

கையில் இருந்த கடிதம் நழுவிக் கீழே விழுந்தது. அதைக் குனிந்த எடுக்கப் போனபோது அறைக் கதவில் நிழல் தெரிந்தது. "தாத்தா! வேர் இஸ் மை மம்மி?" என்று கண்ணைக் கசக்கியவாறு கேட்டுக் கொண்டு அங்கு நின்றான் பரமா.

------

அந்திம காலம் - 6


"பரமா! வாடா கண்ணு! தாத்தா கிட்ட வா" என்று கூப்பிட்டார். அவன் கண்களைக் கசக்கிக் கொண்டு நின்ற இடத்திலேயே நின்றான்.

பேச்சு சத்தம் கேட்டு ஜானகி அறையிலிருந்து பரபரப்பாக ஓடிவந்தாள். "ஐயோ! நான் ஒரேயடியா தூங்கிட்டங்க! விடிஞ்சது கூடத்தெரியல!" பரமாவைத் தூக்கிக் கொண்டு அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். "நீங்க வெள்ளனே எழுந்திருச்சிட்டிங்களா? ஏன்? உடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா?"

இனி இது இப்படித்தான் என்று நினைத்துக் கொண்டார். கொஞ்சம் கனைத்தாலும், கொஞ்சம் குனிந்தாலும், வெள்ளன எழுந்தாலும், தாமதமாக எழுந்தாலும் அடுத்த கணம் இவன் செத்துவிடப் போகிறானோ என்ற பயத்துடன் இருப்பாள். சாகப் போவது உண்மைதான். ஆனால் ஒவ்வொரு கணமும் மனத்தால் சாகவேண்டாமே ஜானகி!

"எனக்கு உடம்பு பரவால்ல ஜானகி. ஆனா. இதோ பாரு, உன் மகள் நம்ப ரெண்டு பேரு தலையிலியும் ஒரு பெரிய பாரத்தத் தூக்கி வச்சிட்டுப் போயிருக்கா!" கடிதத்தைக் கொடுத்தார்.

"என்ன கடிதம்? யார் எழுதினது? எங்க ராதா?" என்று படபடத்தாள்.

"பாட்டி! வேர் இஸ் மை மம்மி?" என்று ஜானகியின் மடியில் திமிறினான் பரமா.

"என்னங்க? ராதா அறையில இல்லியா? ராதா..." என்று குரல் கொடுத்துப் பார்த்தாள்.

"படபடக்காத ஜானகி! அவனுக்கு ஏதாகிலும் குடிக்கக் கொடு. அவன விளையாட விட்டுட்டு வா, நான் விவரமா சொல்றேன்" என்றார்.

"என்னமோ மர்மமாவே பேசிறிங்க!" என்று முனுமுனுத்துக் கொண்டே பரமாவை அழைத்துக்கொண்டு சமையலறைப் பக்கம் போனாள். "பரமா! மைலோ குடிக்கிறியா, ஹார்லிக்ஸ் குடிக்கிறியா?" என்றாள்.

"ஐ வான்ட் கொக்கோ கோலா!" என்றான் பரமா.

"அதெல்லாம் இப்ப கிடையாது. மொதல்ல மைலோவக் குடி!" என்றாள்.

சுந்தரம் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு கையிலிருந்த கடிதத்தை மீண்டும் ஒரு முறை படிக்க ஆரம்பித்தார். கடிதம் ஆங்கிலத்தில் இருந்தது.

"அன்புள்ள அப்பா, அம்மா!

"இப்படிக் கடிதம் எழுதி வைத்துவிட்டு இரவோடு இரவாகப் போவது, அதிலும் என் அன்பு மகனை விட்டுப் போவது எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஆனால் எனக்கு வேறு வடூயில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்.

"என் கணவர் என் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார். அவரை நம்பி நான் ஏமாந்து போனேன். என்னைக் காதலிப்பதாக நடித்து என்னைப் பணம் கறக்கும் மாடாக நடத்தத் தொடங்கிவிட்டார். அநாகரீகமான மனிதர். நான் அவர் மேல் இருந்த அன்பையெல்லாம் இழந்து விட்டேன் அவரை நினைத்தாலே வெறுப்பு குமட்டிக் கொண்டு வருகிறது. இனி அவரோடு என்னால் வாழ முடியாது. விவாகரத்துக்கு விரைவில் மனுச் செய்யப் போகிறேன்.

"அப்பா, அம்மா! நான் இவரிடம் வெறுப்புக் கொண்டு ஒரு ஆணின் அன்புக்கு ஏங்கி நின்றபோது ஒரு நல்லவரைச் சந்தித்தேன். அவர் ஒரு ஆங்கிலேயர். எங்கள் பொருளகத்தின் லண்டன் அலுவலகப் பொறுப்பாளர். இங்க அவர் வந்திருந்த போது பழகிக் காதலாகிவிட்டோம்.

"அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறார். என் விவாகரத்து முடிவானவுடன் அவரைத் திருமணம் செய்து கொள்வேன். பிரேமையும் அவர் ஏற்றுத் தன் மகனாக வளர்க்கத் தயாராக இருக்கிறார்.

"நேற்றிரவு இந்த உண்மைகளை உங்களிடம் சொல்ல மனம் வரவில்லை. இரவெல்லாம் யோசித்தும் சொல்லத் தைரியம் வரவில்லை. ஆகவேதான் இந்தக் கடிதம்.

"நான் என் காதலருடன் லண்டன் சென்று வாழ முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். வேலையைத் துறந்து விட்டேன். இன்று லண்டனுக்குச் செல்ல டிக்கெட் எடுத்துவிட்டேன். இது ஒன்றுதான் என் கொடுமைக்காரக் கணவனிடமிருந்து விடுதலை பெறும் ஒரே வழி. என் நிம்மதி இனி என் காதலனிடம்தான். பிரேமை உங்களிடம் விட்டுவிட்டு விடைபெற்றுப் போகத்தான் முக்கியமாக வந்தேன்.

"அம்மா, பிரேமைத் தற்காலிகமாக உங்களிடம் விட்டுச் செல்லுகிறேன். அவனைக் காப்பாற்றுங்கள் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். தற்காலிகமாகத்தான். என் மறுமணம் முடிந்தவுடன் மறுநாளே வந்து அவனைப் பெற்றுக் கொள்வேன். மகனை யார் வைத்துக் கொள்வது என்று அந்த மிருகத்துடன் விவாதித்து கோர்ட் மூலம் முடிவு காண வேண்டும். கோர்ட்டு ஏறும் அவசியம் வந்தால் அவன் செய்த கொடுமைகள் எல்லாவற்றையும் சொல்லுவேன்.

"எந்தக் காரணம் கொண்டும் பிரேமை அந்த மிருகத்திடம் கொடுக்காதீர்கள். அவர்கள் குடும்பத்திடமும் ஒப்படைக்காதீர்கள். அம்மா, பிரேம் என்னைத் தவிர உங்களிடமும் அப்பாவிடமும் மட்டும்தான் ஒட்டியிருப்பான். என் மாமனார் மாமியாருடன் அவனுக்கு ஒட்டுதல் இல்லை.

"அப்பா, அம்மா! உங்கள் கால்களைப் பிடித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன். நான் உள்ளுக்குள் எவ்வளவு வெட்கப்படுகிறேன், ஈனப்படுகிறேன் என்பதை இந்தக் கடிதத்தில் எழுதிவிட முடியாது! ஆனால் என்னை இந்த நிலைக்கு சிவமணி தள்ளி விட்டார். என் துயரத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

"இப்போதைக்கு என் லண்டன் முகவரி நான் தரவில்லை. உங்களுக்குத் தந்தால் சிவமணிக்கு அது போய் அதனால் தொந்திரவு உண்டாகும். ஆனால் லண்டன் சென்று சேர்ந்ததும் உங்களுடன் போனில் தொடர்பு கொள்ளுகிறேன்.

"மீண்டும் என்னை மன்னியுங்கள்! என்னை வெறுக்காதீர்கள்! எனக்கு வேறு வழியில்லை! என் செல்வனைக் காப்பாற்றுங்கள்!

"பிரேம்! அம்மா உன்னை சீக்கிரம் வந்து அழைத்துக் கொள்ளுகிறேன். என் அன்பு முத்தங்கள்

இப்படிக்கு

ராதா

பின் குறிப்பு: காரை விமான நிலயப் பார்க்கில் விட்டுச் செல்லுகிறேன். பார்க்கிங் டிக்கெட் காருக்குள் வைக்கிறேன். காரின் இன்னொரு சாவி இக்கடிதத்துடன் விட்டுச் செல்கிறேன்."

படித்துக் கண்ணாடியைக் கழற்றும் போது "என்னதான் எழுதியிருக்கு இந்த கடிதத்தில? ராதா எங்க போயிட்டா? சொல்லுங்களேன்!" என்ற கேட்ட படியே ஜானகி வந்தாள். பரமா சமயலறையில் தன் மைலோவுடன் இருக்கிறான் எனப் புரிந்து கொண்டார்.

சுந்தரம் கடிதத்தையும் தன் கண்ணாடியையும் அவளிடம் கொடுத்தார். ஜானகி படிக்கத் தொடங்கினாள். படித்து முடிக்கு முன்னரே அவள் கண்களில் நீர்கட்டி வழிய ஆரம்பித்து விட்டது. படித்து முடித்துக் கண்ணாடியைக் கழற்றினாள்.

"பாவி, மூதேவி. இப்படிப் பண்ணியிருக்காள பாத்திங்களா?" என்றாள்.

அவள் பாவியா, மூதேவியா அல்லது தன் வாழ்க்கைத் துன்பங்களுக்கு நிவாரணம் தேடும் சாதாரணப் பெண்ணா என சுந்தரத்தால் தீர்மானிக்க முடியவில்லை. ஒன்று தெரிந்தது. மகள் புதிய சமூக அமைப்பில் தனது சுதந்திரத்தையும் தனது நிம்மதியையும் மட்டுமே பெரிது படுத்தும் சுயநலமியாகிவிட்டாள். இதனால் தன் கணவன், தன் பெற்றோர் தன் குழந்தை பாதிக்கப் படுவார்களே என்பது பற்றிய அக்கறை பின்னுக்குத் தள்ளப் பட்டுவிட்டது. அதைப் பிறகு சமாளித்துக் கொள்ளலாம். தன் காரியம் முதலில் நடந்தாகவேண்டும் என்று நினைக்கிறாள்.

எந்தக் கட்டத்தில் நாம் போற்றி வந்த குடும்பப் பண்புகள், இவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்த விட்டுக் கொடுத்தல், பொறுமையாய் இருத்தல், பிறர் நலம் பேணல், அன்பு காட்டுதல் என்ற பண்புகள் மறைந்து, என் இன்பம், என் வாழ்வு, என் நலம் என்ற பண்புகள் முதன்மை பெற்றன? அநேகமாக அவள் தானாக சம்பாதிக்க ஆரம்பித்து பொருளாதார நீரோட்டத்துக்குள் நுழைந்த போதே அது ஆரம்பித்திருக்க வேண்டும். பணச்சேமிப்பு, தனக்கே சொந்தமான கார் வாங்குதல், இன்ஷூரன்ஸ் வாங்குதல், பங்கு வாங்குதல் என்பதில் அது வலுப் படுகிறது. திருமணத்துக்குப் பிறகு அதே கொள்கைகள் கொண்ட கணவனுடன் சேர்ந்து வீடு வாங்குதல், வீட்டு அலங்காரப் பொருள்கள் வாங்குதல், தம் ஒத்த வயது நண்பர்களைப் பார்த்துப் பார்த்து அவர்களுக்குக் குறையாமல் வாழ முனைதல் என்பதில் அது தீவிரப் பட்டிருக்க வேண்டும். இந்த ஆசையின் உச்சத்தில் கணவனுக்கும் மனைவிக்குமிடையே என் இஷ்டம் உன் இஷ்டம் என்ற விரிசல்கள் தோன்றுகின்றன. இந்த விரிசல்கள் வெடிப்புக்கள் ஆகின்றன. சுயநலம் மேலும் இறுகுகிறது. அன்பு நீர் வற்றி சுயநலச் சூட்டின் வெம்மையில் வாழ்க்கை வறண்டு போய் அற்ற குளத்தில் அறு நீர்ப் பறவைகள் ஆகி....

வௌிநாட்டு வாழ்க்கையின்ஆடம்பரம், வெள்ளைக்காரக் காதலனின் கவர்ச்சி இவற்றில் மயங்கிப் பிறந்த நாட்டையும் அதன் வாழ்க்கை முறைகளையும் புறக்கணிக்கவும் தயாராகிவிட்டாள்

"ஏங்க, நீங்க இப்ப இருக்கிற நிலையில, இந்தப் பிள்ளையையும் என் தலையில போயிட்டு போயிருக்காளே, எப்படிங்க நான் சமாளிப்பேன்...?" ஜானகி அழுதாள்.

"ஜானகி. இதோ பாரு. நான் இன்னும் உயிரோடதான் இருக்கேன். ஆகவே ரெண்டு பேரும் சேந்து சமாளிப்போம். சும்மா அழுதுக்கிட்டு இருக்காம ஆக வேண்டிய வேலயப் பாரு" என்றார்.

இந்த நிலைமை என்னைக் கேட்காமலேயே வந்து விடிந்திருக்கிறது. என் துன்பங்கள் அடுக்கடுக்காகப் பெருகிக் கொண்டிருக்கின்றன. துன்பங்கள் தொடர் தொடராய் வரும் என்பது வாழ்க்கையில் அவர் ஏற்கனவே கற்றுக் கொண்ட பாடம்தான். இன்பங்கள் அடுக்கடுக்காய் வரும் போது களியாட்டம் போடும் இதயம் துன்பங்கள் வரும்போது மட்டும் ஏன் வாழ்க்கையைச் சபிக்க வேண்டும்? சுந்தரம்! இதுதான் தைரியமாக இருக்கும் வேளை. ஜானகிக்கும் தைரியம் கொடுக்க வேண்டிய வேளை. சுந்தரம்! இந்தத் துன்பங்களை எதிர்த்து நில். வாழ்க்கையை நடத்து. வாழ்க்கையை வெல்.

அடி வயிற்றில் சுரீர் என்று வலித்தது. வயிற்றைப் பிசைந்தவாறு குனிந்தார். "என்னங்க?" என்று முதுகைப் பற்றினாள் ஜானகி. சில விநாடிகளில் வலி தணிந்தது.

"இப்படித்தான் ஜானகி, வலி வருது, போவுது"

"சரி நீங்க குளிச்சிட்டு கிளம்புங்க! டாக்டர் சொன்னது போல மௌன்ட் மிரியம் போயிட்டு வந்திருவோம்! இதோ நான் அரை மணி நேரத்தில கிளம்பிர்ரேன்" என்றாள்.

"பரமாவை என்ன செய்யப் போர?" என்றார். விடூத்தாள். அவன் ஒருவன் இருப்பதை ஒரு கணம் மறந்து விட்டாள்.

"அவனையும் கூட்டிட்டுதான் போகணும் வேற என்ன செய்றது?" என்றாள்.

"வேண்டாம் ஜானகி! அவனையும் இழுத்துக்கிட்டு அங்க போய் நின்னு கஷ்டப் பட முடியாது. நான் தனியா போயிட்டு வாரேன்!" என்றார்.

"முடியவே முடியாது. நீங்க இருக்கிற நிலையில தனியா உங்கள விடமாட்டேன்! எல்லாருமா போகலாம், போய் குளிச்சிட்டு ரெடியாயிடுங்க. நான் அதுக்குள்ள மத்தியானம் சாப்பாட்டுக்கு ஏதாகிலும் சமைச்சி வச்சிட்டு வந்திர்ரேன்" என்று பரபரப்பாக எழுந்தாள்.

"இரு ஜானகி. பெரும்பாலும் அங்க போனா அங்கயே தங்கச் சொல்வாங்கன்னுதான் நினைக்கிறேன். அப்படின்னா நீ ஒண்டியா திரும்பி வர முடியாது. அதோட ராத்திரிக்கு சிவ மணி வேற வாரேன்னு சொல்லியிருக்கான். ஆகவே நான் போயி ஆஸ்பத்திரியில படுத்துக்கிட்டா நீ இப்படி இதெல்லாம் ஒண்டியா சமாளிப்ப?"

"எப்படியோ நான் சமாளிக்கிறேன். ஆஸ்பத்திரிக்கு போறத எந்தக் காரணத்தக் கொண்டும் நீங்க தள்ளிப் போட வேணாம்" என்று உறுதியாகச் சொன்னாள்.

இவள் அன்புப் பிடியில் அகப்பட்டுக் கொண்டேன். இனி என் மூச்சுத் திணறும் வரை என்னை அணைத்துக் கொண்டு தொல்லைப் படுத்திவிடுவாள் என்று நினைத்தார். ஆனால் இவளுடைய இந்த அன்பு அரவணைப்புக்கள் இல்லாமல் இருந்தால் நான் எப்போதே செத்துப் போயிருப்பேன் என்றும் நினைத்துக் கொண்டார்.

யோசித்தார். எல்லா ஆபத்துக்களுக்கும் எல்லா வேலைகளுக்கும் உதவும் அவருடைய சக ஓய்வு பெற்ற ஆசிரியர் இராமச்சந்திரனின் நினைவு வந்தது. அதுதான் வடூ.

"சரி. நான் சொல்றத கேளு. ராமச்சந்திரனை வரச் சொல்றேன். அவர் கார்லயே எல்லாருமா போவோம். நான் ஆஸ்பத்திரியில தங்க வேண்டி இருந்தா தங்கிக்கிறேன். உன்னையும் பரமாவையும் அவர் கொண்டு வந்து வீட்டில விட்டிருவாரு. ராத்திரிக்கு சிவமணி வர்ரதுக்குள்ள நான் டாக்டர்கிட்ட அனுமதி வாங்கி வீட்டுக்கு வந்திர்ரேன். உக்காந்து பேசிட்டு நாளக்குக் காலையில மறுபடி ஆஸ்பத்திரிக்குப் போயிட்றேன்" என்றார்.

"சரி" என்றாள். அந்த ஏற்பாட்டில் அவளுக்கும் நிம்மதி தோன்றியிருக்க வேண்டும். சிவமணி ஒரு புயலாக வரப் போகிறான். எப்படிக் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணப் போகிறான் என்று தெரியாது. ராதா ஓடிவிட்டாள் என்ற தகவல் அறிந்ததும் இன்னும் எப்படிக் கொந்தளிப்பானோ சொல்ல முடியாது. அவனைத் தனியாக நேர்கொள்ள ஜானகியால் முடியாது. தன்னுடைய துணை அவளுக்குக் கண்டிப்பாகத் தேவை.

எழுந்து ராமச்சந்திரனுக்குப் போன் செய்தார். ஏன், எதற்கு என்ற கேள்விகள் இல்லாமல் எல்லாவற்றிற்கும் ஒப்புக் கொண்டார் அவர். இவன் உற்ற நண்பன். உடுக்கை இழந்தவனின் கை போன்ற துணை. ராமச்சந்திரனின் மீது நன்றிப் பெருக்கு மனத்தில் ஊற்றெடுத்தது.

தற்காலிகமாகச் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட நிம்மதியுடன் குளிக்க எழுந்தார். வயிறு, முதுகு வலிகள் அறிகுறிகள் இல்லை. உடலில் ஒரு அமைதி நிலவிற்று. ஆனால் சமயலறையில் பரமாவின் அழுகுரல் ஓங்கிக் கேட்டது.

"பாட்டி! வேர் இஸ் மை மம்மி?"

ஜானகி தனக்குத் தோன்றும் தற்காலிக பதில் ஏதாவது சொல்லட்டும் என்று குளியலறைக்குள் நுழைந்தார்.


*** *** ***

குளித்து உடை மாற்றி வந்தபோது ஜானகி உடுத்தித் தயாராக இருந்தாள். பரமாவையும் தயார்ப்படுத்தியிருந்தாள். அவனுக்குக் குடிக்க மைலோ தயார் செய்து பிளாஸ்கில் வைத்திருந்தாள். சாப்பிட பிஸ்கட்டும் சாக்லெட்டும் வைத்திருந்தாள். அவனுக்கு மாற்று உடையும் துடைத்துவிடத் துண்டும் வைத்திருந்தாள். எல்லாம் ஒரு பேக்கில் போட்டு வைக்கப் பட்டிருந்தது.

சுந்தரத்தைக் கண்டவுடன் "இங்க வாங்க" என்று அவரை அழைத்துச் சாமியறைக்குள் நுழைந்தாள். தீபம் காட்டினாள். "வேண்டிக்கிங்க! உங்களுக்கு ஒண்ணும் ஆகக் கூடாதுன்னு வேண்டிக்கிங்க!" என்றாள். குரல் அந்த வேளையில் தளுதளுத்திருந்தது.

கையைக் கூப்பினார். என்ன வேண்டுவது? எல்லாம் தெரிந்த இறைவனாக இருந்தால் அவனுக்குத் தெரியாததென்ன? புதிதாக என்ன சொல்வது? ஆட்டுவிப்பவன் அவன் என்றால் இது அவனுடைய ஆட்டுவிப்புத்தான். நடக்கிறபடி நடக்கட்டும். ஓ தெய்வமே! உன் இஷ்டப்படி செய்! என்னை எடுத்துக்கொள்ள நேரம் வந்து விட்டால் எடுத்துக் கொள். ஆனால் என் மீது மூர்க்கமாக விளையாட வேண்டாம். நான் தாங்க மாட்டேன்.

நான் திருநாவுக்கரசர் போல் சமயத்தை உயிர்ப்பித்து உய்விக்க வந்த பெரிய மனிதனல்ல. நான் சாதாரணன். உலகாயதவாதி. உன் படைப்பில் எண்ணிறந்த புழுக்களில் நான் ஒரு புழு. என் மீது இந்தச் சூலை நோயை எய்திப் பிரயோஜனமில்லை. இந்தச் சோதனையிலிருந்து மீண்டு வந்து செயற்கரிய காரியங்கள் செய்ய என்னால் முடியாது. என்னை விட்டு விடு. நான் வாழ்வில் வேண்டுவதெல்லாம் இன்னும் சில ஆண்டுகள் இதோ இந்த ஜானகிக்குத் துணையாக இருந்து முதுமையில் இவளைக் காதலித்து தள்ளாத காலம் வந்தபோது தானாக செத்துப் போய்விட வேண்டும் என்பதுதான். சின்னச் சின்ன ஆசைதான். எல்லாருக்கும் இருக்கும் ஆசைதான். அதுதான் வேண்டும். அதைக் கொடுத்தால் போதும்.

விழுந்து வணங்கி எழுந்தார். ஜானகி திருநீறு பூசி விட்டாள்.

"ரொட்டி டோஸ்ட் பண்ணட்டுமா?" என்று கேட்டாள். உணவு என்றவுடன் வயிறு குமட்டியது.

"வேணாம்! சாப்பிட முடியாது! காப்பி மட்டும் குடு" என்றார். வரவேற்பறைக்கு வந்து சோபாவில் உட்கார்ந்தார். பரமா வந்து அவர் மடிமீது ஏறினான். அவன் வயதுக்கு அவனுக்கு கனம் இல்லை. ஒரு இறகு போல லேசாகத்தான் இருந்தான்.

"பாட்டி செய்ட் யூ ஆர் சிக்!" என்றான் பரமா. டை கட்டிய சட்டையும் அரைக்கால் சிலுவாரும் போட்டிருந்தான்.

"ஆமா பரமா! அதுக்குத்தான் ஆஸ்பத்திரிக்குப் போறோம்!" என்றார் சிரித்துக் கொண்டே.

அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். "ஆர் யூ கோயிங் டு டை?" என்று கேட்டான்.

காப்பியோடு வந்த ஜானகி கத்தினாள்: "வாய மூடு சனியன! சும்மா இரு" என்றாள். பரமா பயந்து அவர் மடிக்குள் முகம் புதைத்தான். அவனை அணைத்துக் கொண்டார்.

"சும்மா இரு ஜானகி! குழந்தயத் திட்டாத! அவனுக்கு என்ன தெரியும்? பொறுமையாத்தான் பதில் சொல்லணும்" என்றார்.

"அப்படி வளத்து வச்சிருக்காங்க ரெண்டு பேரும். இவங்க போட்டி போட்டு சண்ட போட்றதுல குழந்தைக்கு ஒரு பண்பாட்டச் சொல்லித் தரத் தெரியில. பாருங்க பேசிற பேச்ச!"

அவர் பரமாவின் தலையைக் கோதிவிட்டார். "பரமா. தாத்தா சாகப் போகல. ஆஸ்பத்திரிக்குப் போனா டாக்டர் என்ன குடுப்பாங்க?"

"மெடிசன்!"

"அவ்வளவுதான். மெடிசன் குடிச்சா தாத்தா உடம்பு நல்லாயிடும்!" என்றார். பரமா எப்போது வீட்டுக்கு வந்தாலும் அவனிடம் அவர் விடாமல் தமிடூலேயே பேசுவார். அவன் புரிந்து கொள்வான். ஆனால் அவன் வாயில் மட்டும் தமிழ் நுழைவதில்லை.

கொஞ்ச நேரம் பேசாமல் இருந்து பிறகு கேட்டான்: "வென் வில் மம்மி கம் பேக்?"

"அம்மாதான! கொஞ்ச நாள் கடூச்சி வருவாங்க. நீ கொஞ்ச நாள் தாத்தாவோடயே இரு!" என்றார்.

"டேக் மீ டு மங்க்கி கார்டன்!" என்றான்.

"ஓ எஸ்! கண்டிப்பா!" என்றார். அம்மா இல்லாத குறையை குரங்குப் பூங்காவுக்குப் போவதன் மூலம் சரி செய்து விட முடியுமா? அப்படித்தான் குழந்தை மனம் தன்னைத் திருப்திப் படுத்திக் கொள்கிறது. ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றிக் கொள்கிறது. எனக்குத்தான் பற்றிக்கொள்ள ஒன்றுமில்லை. வாழ்க்கையின் விளிம்பில் இருக்கிறேன். பரமா உனக்கு குரங்குப் பூங்கா இருக்கிறது. பொம்மை இருக்கிறது. ஐஸ்கிரீம் இருக்கிறது. எனக்கு?

இந்தக் குறும்புப் பிள்ளையை ஜானகி எப்படி ஒண்டியாகச் சமாளிப்பாள் என்று நினைத்தவுடன் கலக்கம் வந்தது. வீட்டில் அவர்கள் வேலைக்கு உதவியாகக் கூட யாரையும் வைத்துக் கொள்வதில்லை. அதற்கு இத்தனை நாள் தேவையில்லாமல் இருந்தது. இப்போது?

"ஜானகி! பரமாவை வச்சிக்கிட்டு எப்படிச் சமாளிக்கப் போற?" என்று கேட்டார்.

"காலையில அக்காவுக்குப் போன் பண்ணிட்டங்க! இன்னைக்கே புறப்பட்டு வர்ரன்னு சொன்னாங்க!" என்றாள்.

அக்கா! ஆமாம். அவள் ஒருத்தி ஆபத்து அவசரத்துக்கான காப்புத் தெய்வமாக இருப்பது மறந்து விட்டது. ஆனால்...!

"என்ன சொன்ன ஜானகி? என்னப்பத்தியும் சொல்லிட்டியா?"

"இல்ல. பரமாவ ராதா விட்டுட்டுப் போனத மட்டுந்தான் சொன்னேன். ஆனா அவங்க வந்த பிறகு இத மறைக்க முடியாதுங்க! எதுக்கு மறைக்கணும்? நம்ம உறவாவும் ஆதரவாவும் இருக்கிறவங்ககிட்ட இருந்து எதுக்கு மறைக்கணும். நானும் நீங்களுமே இத உள்ள வச்சி வேகணும்னு சொல்றிங்களா?"

உண்மைதான். இதை உள்ளுக்குள் போட்டு கொதிக்கவைத்துக் கொண்டே இருக்க முடியாது. அக்காவிடம் சொல்லலாம். அழுது ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டாள். அமைதியாகக் கேட்டுக் கொள்வாள். தானும் ஜானகியும் சாய்ந்து கொள்ளத் தக்க உறுதியான தூணாக இருப்பாள்.

அதே போலத்தான் நண்பன் ராமாவிடமும் சொல்லலாம். அவன் ஒருவன்தான் உற்ற நண்பனாக இருக்கிறான். அவனுக்குத் தெரியவேண்டும்.

நினைத்துக் கொண்டிருந்த போது ராமாவின் கார் வௌியில் வந்து நின்றது. அவர்கள் போய் காரில் ஏறினார்கள். "மன்னிக்கணும் ராமா! திடீர்னு கூப்பிட்டு உன்னோட திட்டங்களயெல்லாம் வீணாக்கிட்டேனா?" என்று கேட்டுக்கொண்டே காரில் உட்கார்ந்தார்.

ராமா சிரித்தார். "நம்ம திட்டம் ஒனக்குத் தெரியாததா? காலையில வாக்கிங். அப்பறம் பேப்பர். குளியல். பசியாறிட்டு மறுபடியும் பேப்பர். அப்புறம் மார்க்கெட்டுக்கு போறது! இந்தத் திட்டத்த நீ வீணாக்கினதில எனக்கு ரொம்ப சந்தோஷம் சுந்தரம்!" என்றார். பரமாவைப் பார்த்தார். "ஓ உங்க பேரப்பிள்ள இங்க இருக்கிறாரே! குட் மார்னிங் மிஸ்டர் பரமா!" என்றார்.

"மை தாத்தா இஸ் சிக்!" என்றான் பரமா.

"இந்த சனியன் வாயில நல்ல வார்த்தையே வராது!" என்றாள் ஜானகி.

ராமா அமைதியாகக் காரோட்டினார். ஏன் ஏது என்று ஒன்றும் கேட்கவில்லை.

மௌவுன்ட் மிரியம் மருத்துவ மனைக்குப் போகும்படி சொன்னார். இராமச்சந்திரன் பேசாமல் காரை தஞ்சோங் பூங்கா சாலை வடூயாக ஓட்டினார். சுந்தரத்தின் வீட்டிலிருந்து மௌன்ட் மிரியம் பக்கத்தில்தான் இருந்தது. பத்து நிமிடங்களுக்குள் போய்ச் சேர்ந்து விடலாம்.

சுந்தரம் கேட்டார்: "ஏன் ராமா? எதுக்காக நான் மௌவுன்ட் மிரியம் போறேன்னு கேக்க மாட்டியா?"

ரோட்டில் பதிந்திருந்த கண்களை மீட்காமல் ராமா சொன்னார்: "நீயா சொல்லட்டும்னுதான் காத்திருக்கேன்!"

"நான் சொல்லாமலே இருந்திட்டா?"

"அப்ப அது எனக்குத் தெரியக் கூடாத விஷயம்னு பேசாம இருந்திருவேன்!"

"இதுதான் நட்புக்கு லட்சணமா, ராமா?"

"அப்ப நீ சொல்லாம இருக்கிறதுதான் நட்புக்கு லட்சணமா?"

சுந்தரம் கொஞ்ச நேரம் காருக்கு வௌியே பார்த்தார். பரமாவைத் திரும்பிப் பார்த்தார். அவன் வௌியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். தணிந்த குரலில் சொன்னார். "எனக்குப் புற்று நோய் வந்தாச்சி ராமா! மூளையில் புற்று நோய்! ரொம்ப முத்தின நிலைமை! உடல் பூரா பரவிடுச்சி"

ராமா தன் கனத்த மூக்குக் கண்ணாடிகளூடே சாலையையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒன்றும் சொல்லவில்லை. முகம் இறுகியிருந்தது.

"ஏதாகிலும் சொல்லு ராமா!"

"ஓ கே" என்றார் ராமா.

"என்ன ஓ கே?"

"ஓ கே. அதுக்கு என்ன பண்றது இப்ப? இன்னக்கி நீ! நாளக்கி நானாக இருக்கலாம்!"

"அவ்வளவுதானா?"

முதன் முறையாகத் திரும்பிப் பார்த்தார் ராமா. "எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியில சுந்தரம். ஏதோ வாய்க்கு வந்ததச் சொன்னேன்! இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ள திறமையா வார்த்தகளப் போட்டுப் பேச எனக்குத் தெரியாது!" மீண்டும் சாலையை நோக்கினார்.

அமைதியாகப் போனார்கள். சாலை விளக்குப் பகுதிக்கு வந்து நின்று ஃபெட்டஸ் பார்க் பகுதிக்குள் திரும்பினார்.

குடியிருப்பு வீடுகளிடையே ராமாவின் கார் வளைந்து வளைந்து சென்றது. சந்திர வீதி என்னும் அழகிய பொருளுள்ள ஜாலான் பூலானில் மௌவுன்ட் மிரியம் என்ற அந்த அடக்கமான ஐந்து மாடிக் கட்டடம் இருந்தது. ஆஸ்பத்திரியின் கேட் திறந்தே இருந்தது. ராமா காரை உள்ளே கொண்டு சென்றார்.

"தாத்தா! லுக்! பாட்டி இஸ் கிரையிங்" என்றான் பின் சீட்டிலிருந்த பரமா.


-----

அந்திம காலம் - 7


"ஆண்டவன் என்னும் அன்பில், எல்லா சகோதரர்களும் சகோதரிகளும், அவர்கள் பிரார்த்தனையில் இருக்கும் போதும், கர்த்தரின் சொல்லை அறிவிக்கும் போதும், சாதாரண உடலுழைப்பு வேலை செய்யும் போதும் எல்லாவற்றிலும் எளிமையாக இருக்க வேண்டும். அவர்கள் புகழை நாடக் கூடாது. தற்பெருமை கொள்ளக் கூடாது. தங்கள் நற்செய்கைகளை கடவுளின் நற்செய்கைகளாக நினைத்து அதைப் பற்றிப் பேசாமல் இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் எல்லா நன்மைகளும் உலகாளும் அந்த உயர்ந்த கர்த்தனுக்கே உரியது என நினைந்திருக்க வேண்டும். யாரிடமிருந்து இந்த நன்மைகள் அனைத்தையும் பெருகிறோமோ அவனுக்கே எல்லா நன்றிகளும் உரித்தாக வேண்டும்"

-செயின்ட் பிரான்சிஸ் அசிசி
சேவகர்களின் விதி.

தான் காத்து உட்கார்ந்திருந்த அறையில் மௌன்ட் மிரியம் மருத்துவ மனையின் கையேட்டைப் புரட்டிக் கொண்டிருந்த போது இந்த வரிகள் அவரைக் கவர்ந்தன. பிரான்சிஸ்கன் மிஷனரியின் கீழ் நடத்தப்படும் அந்த மருத்துவ மனையில் கிறிஸ்துவர்களின் சேவை மனப்பான்மை ஒவ்வொரு அம்சத்திலும் இருந்தது.

மௌன்ட் மிரியத்தற்குள் நுழைந்தவுடனேயே கண்ணில் பட்டவர்களையெல்லாம் இவருக்கு என்ன புற்று நோயாக இருக்கும் என்று மனம் ஆராய்ந்து கொண்டிருந்தது. ஆனால் அங்கிருந்த பலரும் சாதாரணமாகத்தான் இருந்தார்கள். சிலர் சிரித்துப் பேசிக் கொண்டும் இருந்தார்கள். உடலளவில் இளைத்திருந்தாலும் உற்சாகமாகக் காணப்பட்டார்கள்.

காலையில் வந்து பதிவு செய்து கொண்டு, மருத்துவ அறிக்கைகளையெல்லாம் சமர்ப்பித்த பின் ஓர் ஓய்வறைக்கு அவரை அனுப்பி அங்கு காத்திருக்கச் சொன்னார்கள். விரைவில் ஒரு சிஸ்டர் வந்து பார்ப்பார் என்று சொல்லிவிட்டுச் சென்றார் ஒரு குமாஸ்தா. ஜானகி, பரமா, ராமா ஆகியோரை வௌியே காத்திருக்கச் சொல்லிவிட்டு அவர் மட்டும் அறைக்குள் சென்று காத்திருந்தார். அங்குள்ள சில நாளிதழ்களையும், இதழிகளையும் புரட்டிக் கொண்டிருந்தார்.

அறை சுத்தமாக இருந்தது. மருத்துவ மனை அறைபோல் இல்லாமல் அலுவலகக் கூட்டம் நடக்கும் அறை போல இருந்தது. அமைதியாக இருந்தது. அவர் மனத்துக்குள் மட்டும் "ஓ" என்று ஒரு பய ஓசை இருந்தது. யாராகிலும் வந்து ஏதாவது சொல்லமாட்டார்களா என்று படபடப்புடன் காத்திருந்தார்.

ஒரு பத்து நிமிடத்தில் கட்டையாக ஒல்லியாக கிறித்துவ கன்னிமார் உடையில் ஓர் அம்மையார் பரந்த சிரிப்புடன் உள்ளே வந்தார். கையில் ஒரு கோப்பு வைத்திருந்தார். "மிஸ்டர் சுந்தரம், என் பெயர் மதர் மேக்டலினா. நீங்கள் என்னை மதர் மேகி என்று கூப்பிடலாம்" என்றார். கையை நீட்டிக் குலுக்கினார்.

கைகுலுக்கினார். "நீங்களும் இந்த மிஸ்டரை விட்டுவிட்டு வெறும் சுந்தரம் என்றே கூப்பிடலாம்" என்றார்.

"நல்லது, நல்லது, சுந்தரம்!" என்று ஒரு முறை பெயரைச் சொல்லிப் பார்த்துக் கொண்டார் மதர் மேகி.

தலையைச் சுற்றிக் கட்டியிருந்த ஸ்கார்ஃப் அழகாக இருந்தது. வெள்ளை வெளேரென்ற தோல் அவரை ஒரு மேற்கத்திய நாட்டினர் என்பதைக் காட்டியது. ஆங்கிலத்தைக் கொஞ்சம் பிரஞ்சு போன்ற ஐரோப்பிய வாடையுடன் பேசினார். அகன்ற நெற்றி. அமைதியான முகம். முப்பது முப்பத்தைந்து வயது இளமைத் தோற்றம் இருந்தாலும் அவருக்கு நாற்பத்தைந்து ஐம்பது வயது இருக்கலாம் என ஊகித்துக் கொண்டார்.

"நான் டாக்டர் அல்ல சுந்தரம். ஓரளவு நர்சிங் பழகியிருக்கிறேன். இங்கு நான் பொது உறவு அதிகாரி போன்ற ஒரு பொறுப்பில் இருக்கிறேன். உங்களுக்கு எங்கள் சிகிச்சை முறை பற்றி கொஞ்சம் அறிமுகப் படுத்துவதுதான் என் வேலை. சிகிச்சையளிக்கும் டாக்டர் பின்னால் உங்களைப் பார்ப்பார்" என்றார்.

"தேங்க் யூ, மதர் மேகி" என்று பலவீனமாகச் சொன்னார் சுந்தரம்.

"உங்கள் விவரங்களை இப்போதுதான் மேலோட்டமாகப் பார்த்தேன். நீங்கள் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் என அறிந்து கொண்டேன்" என்றார்,.

"ஆமாம். இப்போதுதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்"

"மிகவும் மகிழ்ச்சி. என் தகப்பனாரும் ஒரு பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர்தான். இன்னமும் பெல்ஜியத்தில் வேலை பார்த்து வருகிறார். நான் பெல்ஜியம் பிரஜை. இந்த பிரான்சிஸ்கன் மிஷனில் சேர்ந்த பிறகு சேவைக்கு என்னைப் பல நாடுகளுக்கு அனுப்பி விட்டார்கள். போன வருடம்தான் மலேசியாவுக்கு வந்தேன்" என்றார்.

"எங்கள் நாடு பிடித்திருக்கிறதா?" என்று கேட்டார் சுந்தரம். மதர் மேகியின் குரலினிமையில் நோயை மறந்து விட்டு அவருடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும் போல் தோன்றியது.

"அற்புதமான நாடு. இத்தனை இனமக்கள் இவ்வளவு சுமுகமாகப் பழகி வாழ்கிறீர்களே! அதோடு இந்த நாடு எவ்வளவு பசுமையாக இருக்கிறது பாருங்கள். ஆண்டு முழுக்க வெயில் அடிக்கிறது. மழை பெய்கிறது. இதுதான் சுவர்க்கம்" என்றார் மதர் மேகி.

அவருடைய உற்சாகமும் அன்பும் பண்பும் மற்றவர்களிடம் சுலபமாக பூசிக் கொள்ளும் என சுந்தரம் எண்ணிக் கொண்டார். அவருடைய நோய் இப்போதே கொஞ்சம் குணமாகிவிட்டதைப் போல் இருந்தது.

மதர் மேகி கோப்பைத் திறந்தார். "சுந்தரம், உங்கள் நோயைப் பற்றி உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். உங்கள் டாக்டர்கள் சொல்லியிருப்பார்கள்."

பயம் நெஞ்சைத் திடீரென கவ்விக் கொண்டது. தெரிந்த விஷயமாக இருந்தாலும் மரண தண்டனை விதிக்கப் படுவதைக் கேட்கவிருக்கும் கைதி போல மனம் படபடத்தது.

"ஆமாம் சொன்னார்கள். மூளையில் புற்று நோய்க் கட்டி என்று..."

"நீங்கள் படித்தவராக இருப்பதால் நான் அதிகம் உங்களுக்கு தைரியம் சொல்ல வேண்டியிருக்காது"

'சொல்லுங்கள் அம்மா, தைரியம் சொல்லுங்கள்' என மனம் உள்ளுக்குள் கெஞ்சியது.

"முதலில் புற்று நோய் என்றால் அது மரணப் பாதை என யாரும் நினைக்க வேண்டியதில்லை. எத்தனையோ பேர் குணமாகி சாதாரண வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லா நோயையும் போலத்தான் இந்த நோயும். இதைக் குணப் படுத்த எத்தனையோ மருந்துகள் இப்போது உள்ளன."

கேட்க சுகமாக இருந்தது.

"உடலை நாங்கள் குணப்படுத்த எல்லா முயற்சிகளும் செய்வோம். மனத்தளவில் நீங்கள்தான் உறுதியாக இருக்க வேண்டும்"

தாம் உறுதியாக இருக்கிறோமா எனத் தன்னைத் தானே கேட்டுப் பார்த்தார் சுந்தரம். இல்லை. மரண பயம் உலுக்குகிறது. மனம் செத்துச் செத்துப் பிழைக்கிறது.

"நோய் குணமாகும் என்று நம்புங்கள். அந்தச் செயலை இறைவனிடம் ஒப்படையுங்கள். அவனால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும்" என்றார் .

'அவன் என்னைக் கைவிட்டு விட்டான் என்றே தோன்றுகிறது' என மனசுக்குள் சொல்லிக் கொண்டார் சுந்தரம்.

"உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா, சுந்தரம்?" என மதர் மேகி கேட்டது முகத்தில் அறைந்தது போல இருந்தது.

தனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என அவருக்கே சரியாக விளங்கவில்லை. மற்றவர்களைப் பார்த்துப் பார்த்து நம்ப வேண்டும் என்று கட்டாயப் படுத்திக் கொண்டதைத் தவிரத் தாமாகக் கடவுளை நம்புகிற சுய நம்பிக்கை இன்னும் உள்ளத்தில் முற்றாகத் தோன்றவில்லை என்றே தோன்றியது. ஆனால் பழக்க தோஷத்தில் தலை மட்டும் மதர் மேகியின் முன் 'ஆம்' என்று ஆடியது.

"நல்லது. அதுதான் முக்கியம். நம் கையில் ஒன்றுமில்லை. அவன் பார்த்துக் கொள்வான் என விட்டுவிடுவதில் உள்ள நிம்மதி போல் வேறு இன்பம் கிடையாது. உங்கள் மருத்துவ அறிக்கைகளை டாக்டரிடம் கொடுத்துவிட்டேன். அடுத்த வாரம் அவர் உங்களைப் பார்த்து சிகிச்சை பற்றிப் பேசுவார்"

"அடுத்த வாரமா? ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமா?" படபடப்போடு கேட்டார் சுந்தரம்.

"ஆமாம். மன்னித்துக் கொள்ளுங்கள். நிறைய நோயாளிகள் இருக்கிறார்கள். உங்கள் சிகிச்சை ஒரு வாரம் கழித்துத்தான் ஆரம்பிக்கும். இதற்கிடையில் வலி நிவாரணிகள் கொஞ்சம் தருவோம். வலி வரும் போது அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்."

கோப்பிலிருந்து சில கையேடுகளை எடுத்துத் தந்தார். "புற்று நோய் பற்றிய பொதுவான விவரங்களும், ரேடியோதெராப்பி, கிமோதெராப்பி இவை பற்றிய பொதுவான விவரங்களையும் இந்த சிறு புத்தகங்களில் பார்க்கலாம். உடல் சிகிச்சையோடு புற்று நோய் பற்றிய ஒரு பயிற்று நிகழ்ச்சியும் உங்களுக்கு நடத்துவோம். அதற்கு முன் நீங்கள் வீட்டில் இவற்றைப் படித்துப் பார்க்கலாம்"

பல கையேடுகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் சில தமிழிலும் இருந்தன. மார்பகப் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய் பற்றிய படங்கள் சில பயத்தை ஊட்டின. மருந்து செலுத்துகின்ற முறை, பக்க விளைவுகள் பற்றியும் விவரங்கள் இருந்தன.

"டாக்டர் உங்கள் விவரங்களைப் பார்த்துவிட்டு அடுத்த வாரம் இன்னும் சில சோதனைகள் செய்து என்ன சிகிச்சை அளிப்பது என்று முடிவு செய்வார். ஒரு சிகிச்சைத் திட்டத்தை வகுத்து உங்களுக்கு விளக்கிச் சொல்லுவார். அதன்பின்தான் சிகிச்சை ஆரம்பமாகும்" என்றார் மதர் மேகி.

"இங்கு தங்க வேண்டியிருக்குமா மதர்?" என்வறு கேட்டார்.

"பெரும் பாலோர் இங்கு தங்க வேண்டியதில்லை. சிகிச்சை பெற்றுக் கொண்டு வீட்டுக்கே திரும்பிவிடலாம். உங்களுக்குக் குடும்பம் இருக்கிறதா சுந்தரம்?" என்று கேட்டார்.

"இருக்கிறார்கள். மனைவி, இரண்டு பிள்ளைகள், ஒரு பேரப்பிள்ளை. இப்போது கூட மனைவியும் பேரப்பிள்ளையும் வௌியில் இருக்கிறார்கள்!"

"மிக நல்லது. நல்ல அன்பான குடும்பத்தைப் போல வேறு மருந்து உலகத்தில் இல்லை" என்றார் மதர் மேகி.

அந்த நேரத்தில் ஏனோ சுந்தரத்தின் உள்ளத்தில் அந்தக் கேள்வி திடீரென வந்து முளைத்தது. மதர் மேகி இவ்வளவு அன்பாகப் பேசி நெருக்கத்தைக் காட்டியதால்தான் இருக்க வேண்டும்.

"அப்படி இருக்கும் போது நீங்கள் மட்டும் உங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்து விட்டீர்களே!"

மதர் மேகி திகைத்தது போல் இருந்தார். அப்புறம் அவர் முகத்தில் ஒரு புன்னகை படர்ந்தது. "என்னை அதிர்ச்சியடைய வைத்து விட்டீர்கள், சுந்தரம். இதுவரை நான் சந்தித்த எந்த நோயாளியும் என்னை நோக்கி இந்தக் கேள்வியைக் கேட்டதில்லை. தங்கள் துயரத்தில் தங்களைப்பற்றியே சிந்தித்து வருந்திக் கொண்டிருப்பார்களே தவிர, என்னை ஒரு சுமைதாங்கியாக நினைப்பார்களே ஒழிய, என்னைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதில்லை" என்றார்.

"மன்னிக்க வேண்டும். உங்கள் மனத்தைப் புண்படுத்தி விட்டேனோ?"

"இல்லை, இல்லை. என்னை மகிழச் செய்திருக்கிறீர்கள். உங்கள் கேள்விக்கு பதில் சொல்லுகிறேன். என் குடும்பம் அன்பான குடும்பம். இன்னும் அவர்கள் மேல் ஆழமான அன்பு வைத்துள்ளேன். ஆனால் கர்த்தருக்குச் சேவகம் செய்ய வந்ததனால் கர்த்தரின் மந்தைகள் அனைத்தும் என் குடும்பம் ஆகிவிட்டது. ஆகவே என் அன்பு இப்போது உலகத்தவர் அனைவருக்கும். குறிப்பாக வருந்துபவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும். அதற்குப் பிரதியாக நான் சந்திக்கும் அனைவரின் அன்பையும் நான் பெற்றுக் கொள்ளுகிறேன். ஒரு சிறிய குடும்பத்தைப் பிரிந்து ஒரு பெரிய குடும்பத்தில் இணைந்து விட்டேன்"

மதர் மேகியின் பேச்சும் உதட்டில் இருந்த மாறாத சிரிப்பும் கண்களின் கூர்மையும் சுந்தரத்தின் உள்ளத்தைத் தொட்டன. "உங்கள் உள்ளம் மிகவும் பண்பட்டதாக இருக்கிறது!" என்றார்.

"நீங்களும் ஒரு நல்ல மனிதர். உங்களை இங்கு சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இனி இங்கு அடிக்கடி சந்திப்போம். உங்கள் நோய் விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்வேன்."

ஒரு மருந்துச் சீட்டுக் கொடுத்தார். "மருந்துக் கௌண்டரில் சென்று இந்த வலி நிவாரணிகளை மட்டும் இன்று வாங்கிக் கொள்ளுங்கள். டாக்டரைப் பார்க்க வேண்டிய அடுத்த அப்பாயின்ட்மென்ட் இந்தக் கார்டில் எழுதியிருக்கிறேன். குட் பை" என்று எழுந்து போய்விட்டார்.


*** *** ***

வீட்டுக்கு விரைவாகத் திரும்பி விட்டதில் ஜானகிக்குப் பெரிய நிம்மதி என்றாலும் சிகிச்சையை ஒரு வாரம் தள்ளிப் போட்டது அவளுக்குப் பொறுக்கவில்லை. காரில் திரும்புகிற போது "என்ன இப்படித் தள்ளிப் போட்டுட்டாங்களே. மனுஷங்களோட வருத்தம் புரியாதவங்களா இருக்கிறாங்க!" என்று கோபித்துக் கொண்டாள்.

சுந்தரத்திற்கு சிகிச்சை தள்ளிப் போனது ஒரு வகையில் நிம்மதியாக இருந்தது. சிகிச்சையின் பயத்தையும் வலிகளையும் ஒத்திப் போடுவதில் ஒரு நிம்மதி இருந்தது. "ஏன் இப்படி அலட்டிக்கிற ஜானகி? அவங்களுக்குத் தெரியாததா! நமக்குத்தான் நோய் முதன் முதல்ல அனுபவிக்கிறதில அது ரொம்ப பயங்கரமாத் தெரியுது. அவங்க ஆயிரக் கணக்கில பாத்தவங்க. எப்ப அவசரப்படணும், எப்ப அலட்டிக்காம இருக்கலான்னு அவங்களுக்குத்தான் தெரியும்" என்றார்.

"அவங்க அவசரப்படாம இருக்கிறதிலியே உன் நோய் அவ்வளவு மோசமில்லன்னு தெரியுதில்ல" என்றார் ராமா. அப்படியும் இருக்கலாம். ஆனால் இது முற்றிப் போன கேஸ். அவசரப்பட்டு ஆகப் போவது ஒன்றுமில்லை என்பதாகவும் இருக்கலாம் என சுந்தரம் மனதுக்குள் நினைத்துக் கொண்டார். ஆனால் அதை வாய் விட்டுச் சொல்லி, மருத்துவ மனைக்குப் போகும் போது இருந்த கடுமை மாறி கலகலப்பாக இருக்கும் சூழ்நிலையைக் கெடுக்க அவர் விரும்பவில்லை. பரமா கூட காரில் ஆடிக் கொண்டே

"ரோ, ரோ, ரோ யுவர் போட், ஜென்ட்லி டவுன் த ஸ்ட்ரீம்,
மெரிலி, மெரிலி, மெரிலி, மெரிலி, லைஃப் இஸ் பட் எ ட்ரீம்..."

என்று நர்சரி ரைம் பாடிக் கொண்டிருந்தான். காரில் இருந்த சுமுகச் சூழ்நிலை அவனையும் உற்சாகப் படுத்தியிருக்க வேண்டும்.

மனிதர்களின் மனநிலைகள் எவ்வளவு சீக்கிரம் மாறிவிடுகின்றன என எண்ணிப் பார்த்தார். இருட்டுகள் எப்போதுமே இருட்டுகளாக இருப்பதில்லை. சாம்பலாக வெளுத்து சுண்ணாம்பாகப் பளிச்சிடுகின்றன. வௌிச்சங்கள் வௌிச்சங்களாகவே இருப்பதில்லை. புகையாக மங்கித் தார் போல கருத்து விடுகின்றன. நிலையானது என ஒன்று இல்லை. மாற்றம்தான் நிலையானது. இந்த ஓடிக்கொண்டே இருக்கும் அருவியில் மகிழ்ச்சியாக மெதுவாக உன் படகைச் செலுத்து. மெரிலி, மெரிலி, மெரிலி....

இன்றிரவு ஒரு கரிய இரவாக இருக்கப் போகிறது என்பதை நினைவு படுத்திக் கொண்டார். சிவமணி வந்திறங்கப் போகிறான். "என் மனைவி எங்கே?" என்று சீறப் போகிறான். அவள் இல்லை என்று அறிந்து வீட்டைக் கலக்கப் போகிறான்.

தலைப் பொட்டில் அவருக்கு வலி தொடங்கியது. வயிற்றில் கொஞ்சம் குமட்டல் இருந்தது.. வீட்டை அடைந்ததும் மாத்திரை போடவேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

காரில் யாரும் பேசவில்லை. ஆனால் பரமா மட்டும் பின் சீட்டிலிருந்து மெல்லிய குரலில் இயந்தரத் தனமாக "மெரிலி, மெரிலி, மெரிலி, மெரிலி" என்று திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருந்தான். சுந்தரத்தின் நெஞ்சில் கொஞ்சமாக இருள் கவிந்தது.


*** **** ****

இருளுக்கு முன் ஒளி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இருள் கவிய வழி இல்லை. சிவமணி என்னும் இருள் இன்றிரவு கவியப் போகிறது என்ற எண்ணத்தோடு மத்தியானம் ஒரு மணி போல் வீடு சேர்ந்து ராமாவின் காரிலிருந்து இறங்கிய போது அவர் வீட்டு வாசலில் அக்கா என்னும் ஒளி பூத்திருந்தது. கார் சத்தம் கேட்டு அன்னம் உள்ளே இருந்து எட்டிப் பார்த்தாள்.

வாய் முழுக்க சிரிப்பாக "எப்ப வந்த அக்கா?" என்று கேட்டுக் கொண்டே இறங்கினார்.

"நான் பதினொரு மணிக்கெல்லாம் வந்திட்டேன் தம்பி. வீடு பூட்டியிருந்திச்சி. பக்கத்து வீட்டு அம்மா சாவி கொண்டாந்து குடுத்தாங்க!" என்றாள் அக்கா.

"அன்ட்டி" என்றவாறு அவளை ஓடிக் கட்டிக் கொண்ட பரமா "தாத்தா இஸ் வெரி சிக்!" என்று அறிவித்தான். ஜானகி "சனியன், சனியன்" எனத் தலையில் அடித்துக் கொண்டே இறங்கினாள்.

சமயலறையிலிருந்து கமகமவென குழம்பு வாசனை வந்தது. அத்தை அடுப்படியில் நின்று சமைத்துக் கொண்டிருந்தாள். "என்ன மாமியும் அத்தையும் வந்தவுடன சமைக்க ஆரம்பிச்சாச்சா?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள் ஜானகி.

அன்னத்தின் முகம் கொஞ்சம் கவலையால் இருண்டது. "என்ன தம்பி ஒடம்புக்கு? ஜானகி ஒண்ணுமே சொல்லலியே!" என்றாள்.

"மெதுவா சொல்றேங்கா. நீதான் வந்திட்டல்ல, இனிமே என் உடம்பு நல்லாயிடும்" என்றார் சுந்தரம். அக்காவைப் பார்த்தது உண்மையிலேயே தெம்பாக இருந்தது.

ராமா அன்னபூரணியிடம் நலம் விசாரித்து காரை எடுத்துக் கொண்டுத் திரும்பத் தயாரானார்.

"அதெல்லாம் ஒண்ணும் முடியாது! கண்டிப்பா நீ சாப்பிட்டுத்தான் போகணும். இன்னைக்கு அத்தையோட சமையல். பிரமாதமா இருக்கும்!" என்று அவரைத் தடுத்து உட்காரப் பண்ணினார் சுந்தரம். ஆனால் தான் சாப்பிட முடியும் எனத் தோன்றவில்லை. மனது உற்சாகமாக இருந்தாலும் வயிறு குமட்டியவாறே இருந்தது.


*** *** ***

சாப்பாடு முடிந்து ராமா காரை எடுத்துக் கொண்டு போய்விட்டார். தனது உதவி எப்போது வேண்டுமானாலும் கூப்பிடும்படி சொல்லிவிட்டுப் போனார்.

ஓய்ந்து உட்கார்ந்த வேளையில் அன்னம் வந்து கேட்டாள்: "என்ன தம்பி உடம்புக்கு? எப்பவும் எங்கியும் சொந்தமா கார ஓட்டிப் போற நீ, உன் நண்பரக் கூப்பிட்டு அவர் கார்ல போற அளவுக்கு உன் உடம்புக்கு என்ன வந்திச்சி? ஆளும் ரொம்ப இளச்சிருக்கியே!"

சுந்தரம் சிரித்தார். "எல்லாருக்கும் போற காலம் ஒண்ணு வருந்தானக்கா! எனக்கு அது கொஞ்சம் சீக்கிரமா வந்திருக்கு அவ்வளவுதான்!" என்றார்.

"என்ன வந்திருக்கு?"

"மூளையில புற்று நோய். ரொம்ப முத்தியிருக்கு!"

அன்னம் அவர் முகத்தை வைத்த கண் வாங்காமல் ஒரு முழு நிமிடம் பார்த்தாள்.

"உண்மையா தம்பி?"

எதிர் பார்த்த எதிரொலிதான். ஒருமுறை சொல்லியவுடன் நம்பக் கூடிய செய்தி அல்ல. முதல் முறை கேட்டது தவறில்லை, பொய்யில்லை, விளையாட்டில்லை என மறுமுறை கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய செய்தி. இரண்டாவது முறையில் "சும்மா பொய் சொன்னேன்" என்ற நிம்மதியான வார்த்தை வராதா என்ற எதிர்பார்ப்பு.

"உண்மைதாங்கா! எல்லா டாக்டர்களும் உறுதிப் படுத்தியாச்சி!"

"சீரியசா!"

"சீரியஸ்தான். சிகிச்சை வெற்றி பெறலன்னா சாவுதான். அதுக்கு முன்னால படவேண்டிய நரக வலியெல்லாம் ஆரம்பிச்சாச்சி!" உணர்ச்சியில்லால் சொன்னார். இதெல்லாம் எனக்குப் பழகிவிட்டது என்ற தொனியுடன்.

"என்ன செய்யிது?" அக்காவின் குரல் தளுதளுக்கத் தொடங்கியிருந்தது.

"தலையில பிளக்கிற மாதிரி வலி. அடிக்கடி மயக்கம். வயித்தில குமட்டல், வாந்தி. வலி. சில சமயத்தில முதுகிலியும் வலி. சோர்வு. சின்ன வேல செஞ்சாலும் உடல் களைப்பு. தூக்கம் பிடிக்கிறதில்ல. சாப்பாடு தங்கிறதில்ல. சாப்பிட ருசியும் இல்ல..." அவர் குரலிலும் தளுதளுப்பு இருந்தது. அக்காவுக்குச் சொல்வது போல தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சுய இரக்கத்தில் ஆழ்ந்து விடுவது அவருக்குத் தெரிந்தது. வயிற்றில வலியும் குமட்டலும் ஆரம்பித்திருந்தன. அடக்கி உட்கார்ந்திருந்தார்.

அன்னம் தலையைக் கைகளில் கவிழ்த்துக் கொண்டு அழத் தொடங்கியிருந்தாள். விசும்பினாள். அவள் தோள்கள் குலுங்கின.

சமயலறைச் சுவருக்குப் பக்தத்திலிருந்து மெல்லிய முனகல் குரல் கேட்டது. "தண்ணிப் பக்கம் போகாத போகாதன்னா யார் கேக்கிறாங்க? ஏன் தண்ணிப் பக்கம் போகணும்? தண்ணில ஏன் எறங்கணும்?" அத்தை அங்கு மறைவாக உட்கார்ந்து தங்கள் உரையாடலைக் கேட்டிருக்கிறாள் எனப் புரிந்து கொண்டார்.

ஜானகி சமயலறை வேலைகளை முடித்து விட்டு அங்கு வந்து உட்கார்ந்தாள். அன்னம் அவளை ஏறிட்டுப் பார்த்தாள். "ஏன் ஜானகி இந்த விஷயத்த எங்கிட்ட முன்னாலிய சொல்லல? எங்கிட்ட இருந்து மறைக்கலான்னு பாத்திங்களா?" என்று கோபமாகக் கேட்டாள்.

"ஐயோ, எனக்கே நேத்து ராத்திரிதான் தெரியும் மாமி. வலிக்குது வலிக்குதுன்னு டாக்டரப் போய் பாத்துப் பாத்திட்டு வந்தாங்க. சாதாரண தலவலி வயித்து வலின்னுதான் நானும் இருந்தேன். ரெண்டு வாரத்துக்கு முன்னதான் ஜெனரல் ஆஸ்பத்திரியில எல்லா டெஸ்டும் பண்ணி நேத்துதான் முடிவு சொன்னாங்க. அப்புறம் ராதா வேற இந்தப் பிள்ளய கூட்டிட்டு ராத்திரி வந்திருந்தாளா? நேத்து இங்க நடந்த கூத்தில எனக்கு தலையே சுத்திப் போச்சி. அப்புறந்தான் காலையில உங்களுக்குப் போன் பண்ணினேன்."

"இதுக்கு மருந்து, சிகிச்சை இருக்கணுமே தம்பி. இப்பதான் மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருக்கே!" என்றாள் அன்னம்.

மதர் மேகியின் முகம் அவர் மனதுக்குள் வந்தது. அவருடைய இனிய சொற்கள் காதில் ஒலித்தன.

"இருக்கு அக்கா. அடுத்த வாரந்தான் மௌன்ட் மிரியம் ஆஸ்பத்திரியில சிகிச்சை ஆரம்பிக்கப் போறாங்க. ரேடியோதெராப்பி, கெமோதெரப்பி கொடுப்பாங்கன்னு நெனைக்கிறேன். அதிலியும் கடுமையான பக்க விளைவுகள் இருக்கு. நெனச்சா பயமாத்தான் இருக்கு!"

"பயந்தா முடியுமா! எல்லாத்தையும் செஞ்சிதான் பாக்கணும். எல்லாம் குணமாயிடும்கிற நம்பிக்கை வேணும். மனசு உற்சாகமா இருக்கணும். கவலப் படக் கூடாது!" அன்னம் பேசுவது மதர் மேகி பேசுவது போல இருந்தது. மதர் அழகிய பிரஞ்சு வாசனை உள்ள ஆங்கிலத்தில் சொன்னார். அன்னம் பாசமான வீட்டுத் தமிழில் சொல்கிறாள். அதுதான் வேறுபாடு.

"பாட்டி கிவ் மீ சொக்கலேட்" என்றவாறு பரமா அங்கு வந்தான்.

"இந்த சந்தர்ப்பத்தில இவன் வேற இங்கு வந்து மாட்டிக்கிட்டான் மாமி!" என்றவாறு அவனை இழுத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டாள் ஜானகி. "நேத்து ராத்திரி அவங்க அம்மா கொண்டாந்து...."

"ஜானகி" என்று அதட்டினார் சுந்தரம். "அந்தக் கதையெல்லாம் பிறகு அக்காகிட்ட தனியா இருக்கும் போது சொல்லு. குழந்தயப் பக்தத்தில வச்சி அவனுக்குக் கலவரத்த உண்டாக்காத!" என்றார்.

ஜானகி அடங்கிப் போனாள். அன்னமும் அமைதியானாள். சமயலறையில் அத்தை விசும்பி அழும் குரல் கேட்டது. சாதாரண புத்தி உள்ளவர்களுக்கே மனதில் இருளை உண்டாக்கும் இந்த நோய்ச் செய்தி அத்தையின் குழம்பிப்போன முதிர்ந்த மனதில் என்னென்ன இருண்ட அதல பாதாளங்களை உண்டாக்குகிறதோ என எண்ணினார்.

இந்த வீட்டில் கருமை படர்ந்திருக்கிறது. இந்த வீட்டினுள் மழை மேகங்கள் சூழ்ந்துள்ளன. இனி இரவில் கடும் புயல் சுழன்று வீசப் போகிறது. தன் மனத்தின் அவலங்களுக்கு ஒரு முடிவு இல்லை என எண்ணினார் சுந்தரம். இது ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் காலம். உறுத்தி வருத்தித்தான் விடும். இதிலிருந்து தப்பிப்பது என்பது இல்லை.

நெஞ்சு குமட்டியது. மெதுவாக எழுந்து குளியலறையை நோக்கிச் சென்றார்.

அந்த வீடு சிவமணியின் வருகையை எதிர் பார்த்துக் காத்திருந்தது.

----

அந்திம காலம் - 8


மாலை 6 மணியளவில் போன் அடித்தது. சுந்தரம் சென்று எடுத்து "ஹலோ" என்றார்.

"வேர் இஸ் தெட் பிச்?" என்றது சிவமணியின் முரட்டுக் குரல்.

அருவருப்போடு கேட்டார்: "யார் சிவமணியா? உன் மனைவியக் கேக்கிறியா?"

"கூப்புடுங்க அவள" என்றான்.

"அவ இப்ப இங்க இல்ல" என்றார்.

"ஓ, போனுக்கு வரமாட்டாளா! நேர்ல வந்து பேசிக்கிறன்னு சொல்லுங்க... மாமா, இப்பத்தான் கோலாலம்பூர்ல இருந்து புறப்பட்றேன். பத்து மணி போல வந்துடுவேன். அவள அங்கயே வெயிட் பண்ணச் சொல்லுங்க!" போனைத் துண்டித்தான்.

மெதுவாகப் போனைக் கீழே வைத்தார். அவன் தனது கைத் தொலைபேசியில் இருந்து பேசுகிறான் என்பதை ஊகித்துக் கொண்டார். அவன் குரலில் மூர்க்கமும் முரட்டுத் தனமும்தான் இருந்தன. தன் மனைவியுடன் சமாதானம் பேச அவன் வரவில்லை. சண்டை போடுவதற்காகவே வருகிறான். வந்தவுடன் தன் மனைவி இங்கு இல்லை எனத் தெரிந்ததும் என்ன மாதிரி ஆர்ப்பாட்டங்கள் பண்ணப் போகிறானோ என அஞ்சினார்.

ஒரு நிமிடம் நண்பர் ராமாவைக் கூப்பிட்டு துணைக்கு இருக்கச் சொல்லலாமா என நினைத்தார். ஆனால் அடுத்த நிமிடம் மனதை மாற்றிக் கொண்டார். ராமாவுக்கு இன்று காலை கொடுத்த தொல்லைகள் போதும். இனியும் அவரைத் தொந்திரவு செய்ய வேண்டாம் என முடிவு செய்தார். மேலும் இது என் குடும்ப விவகாரம். என் சண்டை. நானாகத் தனித்துத்தான் இதை நடத்த வேண்டும். அடுத்தவர் துணையை நாடுவது பெருமையல்ல.

சோர்ந்து டெலிவிஷன் முன் வந்து உட்கார்ந்தார். மத்தியானம் கொஞ்ச நேரம் நிம்மதியாகத் தூங்க முடிந்தது. மாத்திரைகளின் சக்தியாகத்தான் இருக்க வேண்டும். உடல் முழுக்க வலிகள் குறைந்திருந்தன. சோர்வாக இருந்தாலும் நிம்மதியாக இருந்தது.

உட்கார்ந்திருந்த நாற்காலியில் முதுகுக்கு ஒரு தலையணையை முட்டுக் கொடுத்துக் கொண்டார். முதுகுக்கு அந்தச் சுகம் தேவைப் பட்டது. தான் விரைவாகக் கிழமாகிக் கொண்டு வருவதாகத் தோன்றியது.

டெலிவிஷனில் ஏதோ சீன சண்டைப் படம் ஓடிக் கொண்டிருந்தது. பரமா அங்கு உட்கார்ந்து அந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் தன்னை மறந்திருந்தான். "பரமா" என்று கூப்பிட்டார். அவன் டெலிவிஷனில் வைத்த கண் மாறாமல் பின்னோக்கி நடந்து அவரிடம் வந்தான். அவனைத் தூக்கி மடியில் உட்கார வைத்தார். காற்று போல லேசாக இருந்தான்.

அவன் கண்கள் படத்திலேயே இருந்தன. "என்ன பாக்கிற பரமா?" என்று கேட்டார்.

"குங் ஃபூ" என்றான். டெலிவிஷனில் ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டிப் பறக்கும், இடுப்பில் கருப்புத் துண்டு கட்டியிருந்த சீன வீரனின் உதையில் எதிரிகள் சிதறி விழுந்து கொண்டிருந்தார்கள்.

"இந்தப் படம் உனக்கு விளங்குதா கண்ணு?" என்று கேட்டார்.

"ஹீ இஸ் கில்லிங் ஆல் த பேட் பீப்பல்" என்றான் பரமா. ஆமாம். விளங்கிக் கொள்ள அது போதும். இந்த டெலிவிஷன் திரை உலகில் எல்லாப் பாத்திரங்களும் சுலபமாக நல்லவன் கெட்டவன் எனத் தெரிகிறார்கள். கருப்பும் வெள்ளையுமாய் வண்ணம் தீட்டப் பட்டிருக்கிறார்கள். வெள்ளை ஹீரோ கருப்பு வில்லன்களை அடித்து வீழ்த்துவார். இங்கு பண்போ பச்சாதாபமோ தேவையில்லை. வில்லன்கள் எந்த வகையிலும் பரிதாபத்துக்குரியவர்கள் அல்ல. உருவத்தால் கூட அவர்கள் அழகாக இருக்க மாட்டார்கள். ஆனால் ஹீரோ எப்போதுமே அழகாக இருப்பான். இந்த டெலிவிஷன் மொழியைப் புரிந்து கொண்டால் பேச்சு மொழி பற்றி கவலைப்படத் தேவையில்லை.

தாம் சின்ன வயதில் ஆங்கில மொழி கொஞ்சமும் தெரியாத நிலையில் "டார்ஸன்" படங்களும் "கேப்டன் அமெரிக்கா" படங்களும் பார்த்து அனுபவித்ததை நினைத்துக் கொண்டார். அங்கு மொழி புரியாமலேயே கதைகள் தௌிவாக இருக்கும். சண்டைகள் பலமாக இருக்கும். நல்லவனான ஹீரோ எப்போதும் வென்று அப்பாவி மக்களை வில்லன்களிடமிருந்து காப்பாற்றுவான். ஜேன் தொல்லையில் மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் எங்கிருந்தும் வந்து காப்பாற்றி விடுவான். ஜேன் அவனைக் காதல் ஒழுகும் கண்களால் பார்த்து பார்ப்பவர்கள் உள்ளத்தில் பரவசத்தை ஏற்படுத்துவாள்.

வாழ்க்கை இந்தப் படங்களைப் போல் இருந்தால் எத்தனை எளிதாக இருக்கும்! ஜேன் எந்த நாளிலும் வில்லன்களைக் காதலிக்க மாட்டாள். மிருகங்கள் கூட ஹீரோ பக்கத்தில்தான் இருக்கும். ஹீரோவாக இருக்கும் யாரும் வில்லன்களாக மாறமாட்டார்கள்.

ஆனால் வாழ்க்கையில் சிவமணி போன்றவர்கள் ஹீரோவாகக் காட்சி தந்து வில்லன்களாக மாறிவிடுகிறார்கள். ஜேன்களுக்கு முதல் பார்வையில் இவர்கள் ஹீரோக்களா வில்லன்களா என்று சொல்ல முடிவதில்லை.

ஆனால் அந்த வில்லன்களோடு போரிட்டு ராதா போன்ற ஜேன்களைக் காப்பாற்ற நிஜ வாழ்க்கையில் டார்ஸன் போன்ற ஹீரோக்கள் இல்லை. அநேகமாக நிஜ உலகில் ஹீரோக்கள் எங்குமே இல்லை. அப்படி இல்லாததால்தான் டார்ஸன், பேட்மேன், சூப்பர்மேன் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி போன்றோர் போடும் பல்வேறு வேடங்கள் போன்ற கற்பனைகளை ஏற்படுத்தி வைத்துக் கொண்டு மனித குலம் சுகம் கண்டு கொண்டிருக்கிறது. நிஜ உலகில் ஹீரோக்கள் போலீஸ்காரன், வக்கீல், நீதிபதி போன்று சம்பளத்துக்கு வேலை செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிலும் பாதிப் பேர் ஹீரோ வேடத்தில் உள்ள வில்லன்களாகத்தான் இருக்கிறார்கள்.

டெலிவிஷனில் சண்டைகள் ஓய்ந்து சீன ஹீரோவின் காதலி அவனருகில் அணைந்து நின்று அவனைச் சிருங்காரப் பார்வை பார்த்தாள். அவர்கள் இதழ்கள் நெருங்கி வரும் நேரம் தணிக்கையாளரின் கத்தரிப்பில் காட்சி மாறியது.

சண்டை முடிந்து சிருங்காரம் ஆரம்பித்ததும் பரமாவுக்கு படம் பார்க்கும் ஆர்வம் விட்டுப் போய் விட்டது. "தாத்தா, ஐ வான்ட் சொக்கலேட்" என்றான்.

"சொக்கலேட் வேணுன்னா பாட்டியப் போய்க் கேளேன்!" என்றார்.

"ஷீ வில் ஸ்கோல்ட்" என்றான்.

"சரி. பரமா! நான் எடுத்துத் தாரேன். ஆனா அதையே தமிழ்ல கேளு பாப்போம்" என்றார்.

"ஹௌ?"

"தாத்தா! எனக்கு சொக்லேட் வேணும்!"

"தாத்தா! எனக்கு சொக்லேட் வான்ட்"

"இல்ல, சொக்லேட் வேணும்!"

"சொக்லேட் வேணும்" என்றான் மழலையில்.

தட்டிக் கொடுத்தார். எழுந்து அடுப்பங்கரைக்குச் சென்று பிரிட்ஜைத் திறந்து சொக்லட் தேடினார்.

"என்ன தேட்றிங்க?" என்று கேட்டாள் ஜானகி.

"பரமாவுக்கு சொக்லட் வேணுமாம், ஜானகி!" என்றார்.

"ஐயோ குடுக்காதீங்க! சாப்பிட்டு சாப்பிட்டு இருமுறான். வாந்தி கூட எடுக்கிறான்!" என்றாள் ஜானகி.

"ஒரு சின்னத் துண்டு ஜானகி. ஆசையா கேக்கிறான் பாரு!"

ஒரு சிறிய துண்டு உடைத்துக் கொடுத்தாள். "இப்படியே சீனியா குடுத்துப் பழக்கி வச்சிருக்காங்க. பிள்ளைக்கு உடம்பு ரொம்ப கெட்டிருக்குங்க!" என்றாள்.

"அதுக்காக உடனே நிறுத்திட முடியுமா? கொஞ்சம் கொஞ்சமா நிறுத்துவோம்!" என்றார்.

சொக்கலேட்டுடன் பரமாவை நோக்கித் திரும்பிய போது தலை கிர்ரென்று ஒருமுறை சுற்றி நின்றது.


*** *** ***

பத்தரை மணிக்குள் தன் கைத் தொலை பேசியிலிருந்து மூன்று முறை அழைத்து விட்டான். தஞ்சோங் மாலிமில் இருக்கிறேன், தாப்பாவில் இருக்கிறேன், புக்கிட் மேராவில் இருக்கிறேன் என்று சொல்லி ஒவ்வொரு முறையும் ராதாவோடு பேச வேண்டும் என்று அடம் பிடித்தான். "நேராக வா பேசிக் கொள்ளலாம்" என்று சொல்லிச் சமாளித்தார். ஒரு முறை பரமாவை அழைத்துப் பேசினான். பேசிப் போனை வைத்த பரமா "மை பாதர் சேய்ஸ் ஹீ இஸ் கமிங்" என்று மட்டும் சொன்னான். அப்பனைக் காணுகின்ற ஆனந்தம் ஒன்றும் அவன் முகத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.

பதினொரு மணிக்குத்தான் அவனுடைய பாஜேரோ ஜீப் அவருடைய வீட்டின் முன் வந்து நின்றது. ஒரு குட்டி யானை போல இருந்த அந்த ஜீப்பின் இரண்டு விளக்குகளும் தீப்பந்தங்கள் போல் இருந்தன. அந்த விளக்கின் பிரகாசத்தில் சுந்தரத்தின் கண்கள் குறுகிப் போயிருக்க ஒரு ராட்சச நிழல் போல ஜீன்சுடன் கீழே இறங்கினான் சிவமணி. கட்டி வைக்கப் பட்டிருந்த ஜிம்மி அவனைப் பார்த்துக் குரல் வெடிக்கக் குலைத்தது.

ஜீப்பின் விளக்குகளை அணைத்துவிட்டு உள்ளே வந்தான். பெண்கள் அனைவரும் உள்ளே போய்விட்டார்கள். பரமா தூங்கி விட்டிருந்தான்.

"வா சிவமணி" என முகமனுக்காக வரவேற்றார் சுந்தரம்.

"எங்க மாமா என் டியர் வைஃப்? வரச் சொல்லுங்க!" என்றான்.

"உட்காரப்பா! சாப்பிட்டியா, ஏதாகிலும் சாப்பாடு எடுத்து வைக்கச் சொல்லட்டுமா?" என்று கேட்டார். அவனைப் போல மொட்டையாக விவகாரத்தை ஆரம்பிக்கத் தயங்கினார்.

"ஒண்ணும் வேண்டாம். வர்ர வழியில சாப்பிட்டுட்டேன்!" என்றான். "எங்க போயிட்டா ராதா? ஒளிஞ்சிக்கிட்டிருக்காளா? பிரேம் எங்கே?" என்று கேட்டான்.

"பிரேம் தூங்கிட்டான். எழுப்பட்டுமா?" என்றார்.

"வேணாம். அப்புறம். ராதாவ வரச்சொல்லுங்க" என்றான்.

நாற்காலியில் அழுந்த உட்கார்ந்து கொண்டார். "ராதா இங்க இல்லப்பா!" என்றார்.

"எங்க போயிட்டா?" ஆத்திரத்துடன் கேட்டான்.

"எனக்கு விவரமெல்லாம் தெரியாது. கடிதம் எழுதி வச்சிட்டுப் போயிருக்கா. அதுதான் தெரியும்!" கடிதத்தை அவனிடம் நீட்டினார். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. தான் தயங்கித் தயங்கிச் சொல்வதை விடக் கடிதம் தௌிவாகச் சொல்லும். அவள் வார்த்தைகளிலேயே அவனுக்கு உறைக்குமாறு செய்தி போய்ச் சேரட்டும் என்றிருந்தார்.

படித்து முடித்துக் கடித்ததைக் கசக்கி எறிந்தான். "பிளடி பிச், பிளடி பிச்..." என்று கத்தினான். எழுந்து அங்குமிக்கும் நடந்தான். உட்கார்ந்தான். தலையைப் பிடித்துக் கொண்டு குனிந்திருந்தான். அப்புறம் தலையைத் தூக்கி அவரை முறைத்தான். இதற்கிடையே ஜானகியும் அன்னமும் ஒன்றாக வந்து ஹாலில் உட்கார்ந்தார்கள்.

"பாத்திங்களா உங்க மக செஞ்ச வேலய! பாத்திங்களா என்ன தேவடியாத் தனம் பண்ணியிருக்கன்னு! பாத்திங்களா அத்தை! உங்களுக்கெல்லாம் நல்லா இருக்கா இது?" என்று கத்தினான்.

ஜானகி பேசினாள். "எங்கள ஏம்ப்பா சத்தம் போட்ற? எங்களுக்கு இது பத்தி ஒண்ணுமே தெரியாது. உங்க புருஷன் பெஞ்சாதிக்குள்ள உறவக் காப்பாத்திக்க உங்களால முடியில. இதுக்கு வௌியார் நாங்க என்ன பண்ண முடியும்? எங்களுக்கும் கடிதத்தப் பாத்து அதிர்ச்சியாத்தான் இருக்குது!" என்றாள்.

"பொம்பளயா அவ, பொம்பிளயா? பேய். வேசி!" என்றான்.

சுந்தரம் சொன்னார்: "பொறுமையா பேசு சிவா. அக்கம் பக்கத்தில உள்ளவங்க கேட்டா நல்லா இருக்காது. குடும்பத்துக்குத்தான் அவமானம்!" என்றார்.

"எங்க இருக்கு குடும்பம்? அதத்தான் தொலைச்சிட்டுப் போயிட்டாளே!" என்று மீண்டும் கத்தினான்.

"குடும்பம் தொலைஞ்சதுக்கு அவ மட்டுமா காரணம்? நீ நல்லபடி இருந்திருந்தா விஷயம் இவ்வளவு தூரம் போயிருக்குமா?" என்றாள் ஜானகி.

"நான் என்ன பண்ணிட்டேன் இவள? புதிசா ஒரு கம்பெனிய ஆரம்பிச்சி அதில போட இவளக் கொஞ்ச பணம் கடனா கேட்டேன். குடுக்க மாட்டேன்னுட்டா! அதனால கொஞ்சம் சத்தம் போட்டேன். அவ்வளவுதான!" என்றான்.

"இதுக்கு முன்னால ஆரம்பிச்ச கம்பெனி எல்லாம் என்னப்பா ஆச்சி? இதுக்கு முன்னால அவகிட்ட இருந்து வாங்கின கடன் எல்லாம் என்ன ஆச்சி?" என்று ஜானகி கேட்டாள்.

"அத்த, வியாபாரத்தில நட்டம் லாபம்கிறது எல்லாருக்குமே உள்ளதுதான! முதல் கம்பெனி நொடிச்சிப் போச்சின்னுதான் இரண்டாவது கம்பெனி ஆரம்பிச்சேன்!" என்றான்.

பொறுமையாக இருந்த சுந்தரம் கேட்டார்: "அவ காசு குடுக்காதத்துக்காக நீ அவள அடிச்சதா சொல்லியிருக்காளே! அது உண்மையா?"

அவரை முறைத்துப் பார்தான். "ஆத்திரத்தில அப்படி இப்படி தட்டியிருப்பேன். அது ஒரு பெரிசா?"

"சிகரெட்டால சூடு வச்சியா?" என்று கேட்டார்.

"நோ, தவறிப் பட்டிருக்கலாம்!" என்றான்.

"சிவமணி, இந்த மாதிரி ஒரு மனைவிய நடத்திறது நாகரிகமாப்பா?" என்று கேட்டார்.

அவனுக்குக் கோபம் வெடித்துக் கொண்டு வந்தது.

"அவ மட்டும் ரொம்ப ஒழுங்கா! பாருங்க ஒரு வெள்ளக்காரனோட ஓடிப் போயிருக்கா! இதுதானா நீங்க புள்ளய வளத்த லட்சணம்?" என்று கூவினான். தன் குறைகள் வௌிப்பட ஆரம்பித்தவுடன் கூச்சலால் அதை முழுகடிக்க முயன்றான்.

"நாங்க வளர்த்த லட்சணத்தப் பாத்துத்தானப்பா நீ விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட! நீ அவள வச்சிருந்த லட்சணந்தான் அவள இந்த நெலமைக்குத் தள்ளியிருக்கு. நீ அவள அன்பா வச்சிருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா?" என்றார் சுந்தரம். ராதாவின் சிகரெட் சுட்ட தளும்புகள் நினைவுக்கு வந்தன. அதைச் செய்த இந்த மிருகமா வளர்த்த லட்சணம் பற்றிப் பேசுகிறது?

மனத்தைப் பற்றி நின்ற வெறித் தனமான கோபத்தில் உடம்பின் உபாதைகள் மறந்திருந்தன. ஒழுக்கத்தையும் நெறிகளையும் வாழ்நாள் முழுதும் போற்றி நின்ற என்னை ஒரு மிருகமா கேள்வி கேட்பது? என்ற மூர்க்கமே மனதில் நின்றது.

"மாமா, நான் இவளச் சும்மா விட மாட்டேன். எங்க இருந்தாலும் தேடிப் பிடிப்பேன் பாருங்க. பிடிச்சி இவ தலை முடிய பிடிச்சி இழுத்து உதைக்கறனா இல்லியா பாருங்க!" என்றான்.

எழுந்து நின்றார். குரலை உயர்த்தினார்: "போடா. பிடிச்சி இழு! உதை! ஒன்னப்போல பண்பில்லாத மிருகங்களுக்கு வேற என்ன தெரியும்? ஆனா இந்த நாட்டில சட்டம்னு ஒண்ணு இருக்கு. நீ அப்படியெல்லாம் செய்ய அது விட்டுடாது. உன்னக் கம்பி எண்ண வைக்காம விடாது!" என்றார்.

அறை வாசலில் நிழல் தெரிந்தது. பரமா கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றான். ஜானகி போய் அவனை அணைத்துக் கொண்டாள்.

"கம் ஹியர் மை போய்!" என்று சிவா அதட்டிக் கூப்பிட இயந்திரம் போல் அவன் அருகே போய் நின்றான். முகத்தில் பயமும் கலவரமும் இருந்தன.

"உங்க அம்மா என்ன செஞ்சிருக்கா பாத்தியா பிரேம்?" என்று அவனைக் கேட்டான் சிவா.

"சிவா. குழந்தைக்கு நாங்க ஒண்ணும் சொல்லல. அவன பயமுறுத்தாதே!" என்றார் சுந்தரம்.

"வேர் இஸ் மை மம்மி?" என்று கேட்டு அழுதான் பரமா.

"ஷீ இஸ் நோட் யுவர் மம்மி! ஷீ இஸ் எ பிச்!" என்றான் சிவா.

சுந்தரம் பரமாவை தன்னிடம் இழுத்து அணைத்துக் கொண்டார். பரமா அவர் மடியோடு ஒட்டிக் கொண்டு பலமாக இருமினான். பயந்து போய் இருந்தான் எனத் தெரிந்தது. என்ன ஜென்மம் இவன்? பிள்ளையிடமா இப்படிப் பேசுவது? இத்தனை பண்புக் கேடனாகவா மாறிவிட்டான்? ராதா இவனை விட்டு ஓடிப் போனது முற்றிலும் சரி எனப்பட்டது அவருக்கு!

"சிவா. இதெல்லாம் என்ன பேச்சு? அதுவும் பச்சைக் குழந்தை முன்னால. உனக்கும் உன் மனைவிக்கும் உள்ள சண்டைய உங்களுக்குள்ள போட்டுக்குங்க. குழந்தய அதில இழுக்க வேணாம்!" என்றார்.

அவன் குழந்தையை மறந்து விட்டான். "மாமா! இவள நான் கோர்ட்டுக்கு இழுக்காம விடமாட்டேன். இது அடல்டரி. இவ மேல கேஸ் போட்டு லட்ச லட்சமா நஷ்ட ஈடு கேக்கப் போறேன். இவ கத ஊர் முழுக்க சிரிக்கட்டும்!" என்றான்.

இது வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அன்னம் இப்போது கேட்டாள்: "ஏம்பா சிவமணி! இந்தக் கதையெல்லாம் கோர்ட்டுக்குப் போனா ஊர் அவள மட்டும்தான் பாத்துச் சிரிக்குமா? நீ அவளப் பண்ணின கதையெல்லாம் கேட்டு உன்னப் பாத்து சிரிக்காதா?"

அன்னத்தையும் முறைத்துப் பார்த்தான். "ஓஹோ எல்லாரும் ஒரு கேங்கா என் மேலேயே குத்தம் சொல்றிங்களா? அவ உங்க ஊட்டுப் பொண்ணுக்கிறதினால தலயில தூக்கி வச்சிட்டு ஆட்றிங்களா?" என்றான்.

"நாங்க தலையில தூக்கி வச்சிக்கிலன்னாலும், ஒன்னப் போல அவளத் தரையில போட்டு மிதிக்கத் தயாரா இல்ல. அவள் ஒன்னோட கொடுமை தாங்காமத்தானே இப்படி பண்ணியிருக்கான்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பாத்தியா?" என்று கேட்டாள் அன்னம்.

அவன் எழுந்து நின்றான். "நான் போறேன். உங்களோட பேசி என்ன பிரயோஜனம்? நான் யாருங்கிறத உங்களுக்கெல்லாம் காட்றேன்" என்றான். திடீரென பரமாவைப் பார்த்தான். "கமான் போய். போலாம் வா!" என்றான்.

சுந்தரம் திடுக்கிட்டார். பரமா அவர் மடியில் இன்னும் ஆழமாகப் பதிந்தான்.

"அவன ஏன் கூப்பிட்ற சிவா?"

"அவன் என் மகன்! அந்த வேசையோட அவனுக்கு ஒரு சம்பந்தமும் வேண்டாம்! அவன இங்கிருந்து வௌியேத்த வேணும்!" என்றான்.

"வௌியேத்தி எங்க கொண்டி வச்சிக்குவ? வீட்டில அவன யார் பாத்துக்குவா?"

"அதப்பத்தி உங்களுக்கென்ன? என் மகன நான் எப்படியாவது வளத்துக்குவேன்!" என்றான்.

"தாத்தா, ஐ டோன்ட் வான்ட் டு கோ!" என்று அழுதான் பரமா. அவன் தொண்டை விக்கியது. இருமலும் சளியுமாக வந்தது.

"நீ இப்ப என்னோட வாரியா, இல்ல இழுத்து ரெண்டு போடட்டுமா?" என மிரட்டினான் சிவா.

அவனை இறுக அணைத்துக் கொண்டு பேசினார். "சிவா, உன் கோவத்தில உன் பிள்ள வாழ்க்கைய பாழாக்காத! எப்படி பயந்து போயிருக்கான் பாரு! நீ ஒருத்தனா அவன வளர்க்க முடியாது. அவன் எங்களோட இருக்கட்டும். உங்க விவகாரமெல்லாம் முடிஞ்சவுடன அழச்சிக்கிட்டுப் போ!" என்றார்.

கடைசி வார்த்தைகளைக் கேட்டு மீண்டும் பயந்தான் பரமா. "நோ, ஐ டோன்ட் வான்ட் டு கோ!" என்று கால்களை உதைத்துக் கொண்டு அலறினான்.

விருட்டென்று எழுந்து வௌியே போனான் சிவா. வாசலிலிருந்து கத்தினான். "ஓக்கே! கொஞ்ச நாள்தான் மாமா! எனக்கு இன்னொரு பொம்பளயத் தேடிக்கிட்டு பிரேமை என்னோட அழச்சிக்குவேன். அது வரைக்கும் இங்க விட்டு வைக்கிறேன். ஆனா உங்க மகளயும் உங்க குடும்பத்தயும் சும்மா விட்ற மாட்டேன். கோர்ட்டில ஏத்தி சந்தி சிரிக்க வைக்காம விட மாட்டேன்! பாத்துக்கிங்க!"

பாஜேரோவில் பாய்ந்து ஏறினான். என்ஜின் சீறியது. இரண்டு விளக்குகளும் நெருப்பைக் கக்கின. வீட்டின் உள்ளே வௌிச்சம் உஷ்ணமாகப் பாய்ந்தது. ரிவர்சில் எடுத்தான். ரோட்டில் டயர்கள் தேய வேகமாக ஓட்டினான். ஜிம்மி சங்கிலியில் திமிறிக் கொண்டு விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது.

ஜானகி வந்து பரமாவைத் தூக்கிக் கொண்டாள். அவன் விம்மியவாறே இருந்தான். மூக்கில் சளியும் வாயில் எச்சிலும் ஒழுகிக் கொண்டிருந்தன. ஜானகி துடைத்துத் தலையைக் கோதி விட்டாள். அவனைக் கொண்டு படுக்கையில் போட்டு ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தாள்.

அன்னமும் சுந்தரமும் மட்டும் அங்கு உட்கார்ந்திருந்தார்கள். சுந்தரத்தின் கைலி பரமாவின் கண்ணீரிலும் சளியிலும் நனைந்திருந்தது. மாற்ற வேண்டும் என நினைத்தார். ஆனால் எழுந்திருக்கச் சக்தியும் மனமும் இல்லை.

அந்த வீட்டுக்குள் ஒரு புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது. புயல் ஓய்ந்த நிம்மதி இருந்தாலும் அது விளைத்த சேதங்களை அனைவரின் மனங்களும் அசை போட்டுக் கொண்டிருந்தன. மீண்டும் புயல் வருமோ, போன சிவா தன் ராட்சச பாஜேரோவில் திரும்பி வந்து விடுவோனோ என்பதைப் போல சுந்தரம் கொஞ்ச நேரம் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பின்னர் மெதுவாக எழுந்து வௌியே சென்று கேட்டை அடைத்துப் பூட்டினார். ஜிம்மியை அவிழ்த்துவிட வந்த போது அது அவர் கையையும் முகத்தையும் பாய்ந்து பாய்ந்து நக்கியது. அவிழ்த்து விட்ட பின் குதித்துக் குதித்து அவரைச் சுற்றி வந்தது. அதனிடமிருந்து மீண்டு சுந்தரம் உள்ளே வந்து கதவையும் சாத்தினார்.

அன்னம் இருந்த இடத்திலிருந்து கேட்டாள்: "எப்படித் தம்பி இப்படி ஒரு முரடன் நம்ப குடும்பத்தில வந்து சேந்தான்?"

சுந்தரம் சிரித்தார். "என்ன பண்ணுறது அக்கா! நான் செஞ்ச பாவமா, அல்லது ராதா செஞ்ச பாவமோ தெரியில! யாரையோ தண்டிக்கத்தான் இவன தெய்வம் நம்ப குடும்பத்துக்கு அனுப்பியிருக்கு!" என்றார். அன்னம் பேசவில்லை.

தண்டிக்கப் படுவது தானாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இந்த நோய், இந்த முரட்டு மருமகன் எல்லாம் அந்தத் தண்டனையின் பகுதிகள்தான் எனத் தோன்றியது. உடலின் களைப்பு ஆளைத் தள்ளிற்று.

"அக்கா, நான் போய் படுக்கிறேன்!" என்றார்.

"ஒடம்பு ஏதாவது செய்யிதா?" என்று கவலையுடன் கேட்டாள் அன்னம்.

"எப்போதும் செய்றதுதான். புதிசா என்ன செய்ய இருக்கு? ஆனா உடம்பு நோய விடக் களைப்புத்தான் அதிகமா இருக்கு!" என்றார்.

"சரி போய் தூங்கு தம்பி!" என்று அன்னம் எழுந்து உள்ளே போனாள். போய் படுப்பது எளிது. ஆனால் தூக்கம் வருமா எனத் தெரியவில்லை. தெய்வம் எல்லாம் தண்டித்து முடிந்திருந்தால் தூக்கம் கொடுக்கும். ஆனால் தண்டனைகள் மிச்சம் இருந்தால் பஞ்சணை கொடுத்தாலும் தூக்கம் கொடுக்காது. உயிர் கொடுத்தாலும் சுகம் கொடுக்காது. மனம் கொடுத்தாலும் நிம்மதி கொடுக்காது.


சுந்தரம் மெதுவாகப் படுக்கை நோக்கி நடந்தார்.


*** *** ***

தூக்கம் வரவில்லை. கண்கள் சொருகிச் சொருகிப் போனாலும் மூடும் சமயத்தில் எங்காவது வலி வந்தது. ஒரு நேரம் முன் தலையில், ஒரு நேரம் பிடறியில், முதுகில், வயிற்றில் இப்படியே மாறி மாறி. புரண்டு புரண்டு படுத்தார். வலியைத் திசைமாற்ற முயன்று தோற்றார்.

சிவாவிடம் சண்டை போடும் மோது மட்டும் வலி போன இடம் தெரியவில்லை. அப்போது அவனிடம் சண்டையிட எல்லா உயிர்ச் சக்திகளையும் உடல் திரட்டி சேமிப்பில் வைத்திருந்தது. அவனை முறியடிக்க வேண்டும் என்ற வெறியில் மற்ற எல்லா வலிகளையும் தள்ளி வைத்திருந்தது. இப்போது அந்தப் போர்க் களத்தில் வௌி எதிரி மறைய உள் எதிரிகள் உக்கிரமாகத் தலை தூக்கி விட்டார்கள்.

ஒரு முறை வயிறு குமட்ட குளியலறையில் சென்று வாந்தியெடுக்க முயன்றார். ஆனால் ஒன்றும் வரவில்லை. அந்த முயற்சியில் தொண்டை வறண்டு கண்களில் கண்ணீர் மட்டும் வந்தது. முகத்தைக் கழுவித் துடைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்தார்.

அன்னமும் ஜானகியும் சமயலறையில் உட்கார்ந்து மெதுவாகப் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. அன்றைய நிகழ்ச்சிகளை வாய்விட்டுச் சொல்லி ஜானகி அழுகிறாளோ? இந்த இரண்டு நாட்களில் ஜானகிக்குத் தாங்க முடியாத அதிர்ச்சிகள்தான். முதலில் ராதாவின் சோகம், அப்புறம் தனது நோய், காலையில் ராதா வீட்டைவிட்டு ஓடிய செய்தி, பரமா திடீரென்று அவள் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டது, இப்போது இந்த சிவமணி எழுப்பிய புயல்... ஒரே நாளில் இத்தனை அடுக்கடுக்கான அதிர்ச்சிகளா? அவராலேயே நம்ப முடியவில்லை. அன்னம் அவள் கவலைகளுக்கு ஒரு வடிகாலாக வந்திருக்கிறாள். பேசட்டும். பேசித் தணியட்டும் என நினைத்துக் கொண்டார்.

இந்த கரிய இரவுகள் எப்போது விடியும்? தனக்கு விடியல் உண்டா? அல்லது இது எல்லையில்லாத இருளாகித் தன்னை முற்றாக விழுங்கிக் கொள்ளுமா? அப்படித்தான் இருக்க வேண்டும். இது சாயங்காலம், தான் சாயுங் காலமாகத்தான் இருக்க வேண்டும்.

தலையில் எரிமலைகள் வெடிக்க ஆரம்பித்திருந்தன. படுத்தவாறே தலையை இரண்டு கைகளாலும் அழுத்திப் பிடித்தார். மதர் மேகியின் நினைவு வந்தது. "ஓ அன்னையே, ஏன் என் சிகிச்சையைத் தள்ளிப் போட்டாய்?" என மனதுக்குள் கேட்டார். அந்த வெளுத்த கருணை உள்ள முகத்தை நினைத்தார்.

"ஓ என் அன்பு மகனே, உன்னைப் போல் ஓராயிரம் பேருக்குப் புற்று நோய் இருக்கிறது. அத்தனையும் கர்த்தரின் மந்தைகள். அவற்றைப் பார்த்துக் கொள்ள என் தந்தை எனக்கு ஆணையிட்டுச் சென்றிருக்கிறார். நீ ஆயிரம் ஆடுகளில் ஒரு ஆடு. உனக்காக மற்ற எல்லா ஆடுகளையும் நிராகரிக்க முடியுமா? உன் முறை வரும் மகனே, பொறுத்திரு, பொறுத்திரு" என்று மதர் மேகி சொல்வதாகக் கற்பனை செய்து கொண்டார்.

வலி முதுகில் இறங்கியது. வயிற்றுக்குள் நுழைந்தது. குடலைப் பிடித்துத் திருகியது. கல்லீரலைப் பிடித்துப் பிசைந்தது. வலியின் உச்சத்தில் "அம்மா, அம்மா" என முனகினார். ஜானகி பக்கத்தில் இருந்தால் ஆறுதலாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் அவளை வாய்விட்டுக் கூப்பிட மனம் வரவில்லை. அது பயங்கொள்ளித் தனம் எனத் தோன்றியது. என் நோய் என்னுடன்... ஜானகியைக் கூப்பிட்டு ஏன் வருத்த வேண்டும் என்று எண்ணினார்.

இருந்தாலும் இந்த வேதனைக்கு அவள் மார்பு ஒத்தடமாக இருக்கும். அவள் உடம்புச் சூட்டில் இந்த வலி பாதியாகத் தணியும். அவள் புடவைத் தலைப்பில் இந்த வலி வழித்து விடப்படும். அவள் துணைக்காக ஏங்கினார். வயிற்றைப் பிடித்துக் கொண்டு தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு "அம்மா, அம்மா" என முனகினார்.

பட்டுப் போன்ற கரங்கள் அவர் முதுகைத் தடவின. அப்புறம் பட்டுப் பட்டென்று தட்டின. ஜானகியா தட்டுகிறாள்?

"தாத்தா, வை ஆர் யூ கிரையிங்?" என்று கேட்டான் பரமா.

எப்படி வந்தான்? தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து விட்டானா?

"பரமா! என்ன செய்ற இங்க?" என்று கேட்டார்.

"ஐ கெனோட் ஸ்லீப்!" இருமியவாறே சொன்னான். அழுதிருக்கிறான் என்று தெரிந்தது.

"ஏன் கண்ணு?"

"ஐ எம் ஃபிரைட்டன்ட்!" என்றான்.

அவனை அணைத்துக் கொண்டார். ஒரு சிறிய புறாக் குஞ்சு போல அடங்கிக் கொண்டான். இன்று நடந்த சம்பவங்களில் இந்தப் பிஞ்சு மனம் எப்படி வெம்பிப் போயிருக்கும் என நினைத்துப் பார்த்தார். வௌியில் சொல்ல முடியாமல் எத்தனை பயங்கரமான கரிய சிந்தனைகள் அந்த மனத்தில் ஓடியிருக்க வேண்டும்?

நேற்று அவன் அம்மா அவனைக் கைப்பிடியாக இழுத்துக் காரில் ஏற்றி பினாங்குக்குக் கொண்டு வந்தது; இன்று காலை அவள் மறைந்து போனது; அப்பறம் இந்த ஆஸ்பத்திரிப் பயணம்; இன்றிரவு அவன் அப்பன் வந்து படுத்திய கொடுமை; பரமா, எப்படி தாங்கியிருந்தாய்? எப்படித் தாங்கியிருந்தாய்?

அவனை இறுக அணைத்துக் கொண்டார். தாய்க் கோழி போல கைகளுக்குள் அடக்கிக் கொண்டார். அவன் அவர் நெஞ்சுக்குள் ஆழமாக முகம் புதைத்திருந்தான்.

கொஞ்சம் திமிறி முகம் தூக்கிச் சொன்னான்: " தாத்தா, டோன்ட் லெட் மை ஃபாதர் டேக் மீ எவே!"

"நோ டார்லிங்! ஒரு நாளும் அவன் கிட்ட ஒன்ன ஒப்படைக்க மாட்டேன்! நீ தாத்தாகிட்டயே படுத்துக்கோ, படுத்துக்கோ!" என்று மீண்டும் தன் அணைப்பில் இறுக்கினார். அவன் கொஞ்ச நேரம் இருமிக் கொண்டிருந்து தூங்கிப் போனான். அவனை அணைத்திருக்கும் போது அவருடைய வலிகள் அனைத்தும் மறந்து போயிருந்தன.

-------

அந்திம காலம் - 9


அவர் மல்லாந்து படுத்திருந்த போது அந்த இயந்திரத்தின் வட்டமான ஒற்றைக் கண்ணாடிக் கண் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்புறம் அவரை ஒருக்களித்துப் படுக்க வைத்தார்கள். இப்போது அவரால் இயந்திரத்தைப் பார்க்க முடியவில்லை. படுக்கையின் மேல் அவருடைய தலைக்கு நேராக அந்த இயந்திரம் முகம் கவிந்திருந்தது. கொஞ்சம் வலமும் இடமுமாக அசைவது ஓரக் கண்ணில் தெரிந்தது. அந்த அசைவின் போது அதன் பாகங்கள் கிர் கிர்ரென அமைதியான ஓசை எழுப்பின.

இந்த இயந்திரத்துக்கு உயிர் உண்டா? என எண்ணிப் பார்த்தார். இதற்கு உயிர் இல்லை என்று யார் சொல்ல முடியும்? உயிர் என்பது என்ன என்று யாருக்குத் தெரியும்? எந்த விஞ்ஞானி, எந்த வேதாந்தி இந்த உலகில் உயிரின் உண்மையைச் சொல்லியிருக்கிறார்கள்? இதோ இந்த இயந்திரம் என்னைப் பார்க்கிறது. என் தோலுக்குள் ஊடுருவிப் பார்க்கிறது. என் தலைக்குள் அதனால் பார்க்க முடிகிறது. என் மூளை மடிப்புக்களை, என் மூளைச் சோற்றை அதனால் காண முடிகிறது. அந்தச் சோற்றுக்குள் மண்ணாய் வளர்கின்ற புற்றுகளை அதனால் கணிக்க முடிகிறது. அப்புறம் எந்த இடத்தில் இருந்து லேசர் கதிர்களைப் பாய்ச்சினால் மூளையில் வளரும் இந்தப் புற்றைக் கரைக்கலாம் எனத் தீர்மானிக்கிறது. இவ்வளவு செய்ய முடிந்த இந்த இயந்திரத்திற்கா உயிரில்லை!.

ஏ இயந்திரமே! ஓ ஒற்றைக் கண் மிருகமே! என் மூளையை உன்னால் பார்க்க முடிகிறதே, அப்போது என் சிந்தனையையும் உன்னால் பார்க்க முடிகிறதா? நான் உன்னைப் பற்றி இப்போது யோசிப்பதும் உன்னோடு மானசீகமாகப் பேசுவதும் உன்னால் அறிய முடிகிறதா?

இயந்திரம் கிர்ரென்ற சத்தத்துடன் கொஞ்சம் இடப் பக்கம் சாய்ந்தது. இந்த கிர்ரென்ற ஒலி உன் பேச்சா? எனக்குப் பதில் சொல்லுகிறாயா? "ஆம்" என்கிறாயா "இல்லை" என்கிறாயா? இந்த கிர்ரென்ற ஒலி என் கேள்விக்கு நீ தரும் பதில் என்றால் அந்த பதில் "இல்லை" என இருக்க முடியாது. "ஆம்" என்றுதான் இருக்க வேண்டும். ஆம்! நீ உயிருள்ள புத்தியுள்ள இயந்திரம்தான்.

நீ இங்கிலாந்தில் செய்யப் பட்டிருந்தாலும் உனக்கு என் மொழி புரியும். எல்லா மொழிகளும் புரியும். ஏனென்றால் நீ பேசும் மொழி வாய் வழியான மொழியல்ல. நீ எல்லாருடைய மூளையோடும் நேரடியாகப் பேசுகிறாய். எண்ணங்களை அவற்றின் வேரிலிருந்தே அறிந்து கொள்ளுகிறாய். ஆகவே மனித மொழி உனக்குத் தேவையற்றது.

இயந்திரம் கிர்ரென்று கீழிறங்கி காதுக்கு அருகில் வந்தது. என் இனிய இயந்திரமே! என் பேச்சைக் கேட்டு அருகில் வருகிறாயா? காதோடு பேசவா? உனக்கு அருகில் தூரத்தில் என்ற வேறுபாடுகள் தேவையில்லையே. நீ காத தூரத்தில் இருந்தாலும் காதின் அருகில் இருந்தாலும் மனதின் மர்மங்கள் தெரிந்த உனக்கு தூரங்கள் ஒரு பொருட்டல்லவே!

அது கொஞ்சமாக சென்டிமீட்டர் அளவு மட்டும் நகர்ந்தது. இன்னும் நெருக்கமாகவா உயரமாகவா எனக் கண்டு பிடிக்க முடியவில்லை.

இன்னொரு முறை அதன் கண் எப்படியிருக்கிறது எனப் பார்க்கும் ஆசை எழுந்து. கோபத்தில் சிவந்திருக்கிறதா? அன்பில் கனிந்திருக்கிறதா? ஐயோ இவன் நோய் இத்தனை மோசமாக இருக்கிறதே எனக் கசிந்திருக்கிறதா? அவர் தனது விழிகளை ஓரத்திற்குக் கொண்டு வந்து இயந்திரத்தைப் பார்க்க சிரமப் பட்டபோது தலை கொஞ்சம் அசைந்திருக்க வேண்டும்.

"சுந்தரம். தயவு செய்து தலையை அசைக்காதீர்கள். அசைத்தால் படம் சரியாக வராது" என்று குரல் கொடுத்தார் அடுத்த அறையிலிருந்து இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்த ரேடியோகிராபர்.

*** *** ***


இந்த Ximatron என்ற சிமுலேட்டர் கருவி பற்றி நேற்று காலை டாக்டர் லிம் அவருக்கு விளக்கமாகக் கூறியிருந்தார்.

சுந்தரத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்த அப்பாய்ன்ட்மென்ட் படி நேற்று காலை நண்பர் ராமாவின் துணையுடன் அவர் மௌன்ட் மிரியத்திற்கு வந்திருந்தார். ஜானகியை அழைத்து வரவில்லை. அவள் பரமாவுடன் வீட்டிலிருக்க ஒப்புக் கொண்டாள். நோய் பற்றித் தொடக்கத்தில் அவளிடமிருந்த படபடப்பு கொஞ்சம் அடங்கியிருந்தது. தான் ஒருவாரம் உயிர் பிழைத்திருந்து விட்டதால் வரவிருக்கும் ஆபத்து அப்படி ஒன்றும் பெரியதல்ல எனக் கொஞ்சம் ஆறுதல் அடைந்தவள் போல் இருந்தாள். மேலும் அன்னபூரணி அக்காவும் தைப்பிங் திரும்பியிருந்தாள். சில டியூஷன் வகுப்புக்கள் இருப்பதால் அவற்றை முடித்துவிட்டு ஒரு வாரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டு அத்தையை மட்டும் துணைக்கு விட்டுவிட்டு அக்கா தைப்பிங் போய்விட்டாள்.

அவன் அப்பன் சிவமணி வந்து போனதிலிருந்து பரமா சோர்ந்து சோர்ந்து இருந்தான். அடிக்கடி இருமிக் கொண்டிருந்தான். சரியாகச் சாப்பிடுவதுமில்லை. அடிக்கடி அவனுடைய தாயைப் பற்றிக் கேட்டவாறே இருந்தான். பரமாவை கவனிப்பதே ஜானகிக்கு முழு நேர வேலையாக இருந்தது. அத்தை சமையல், வீடு சுத்தப் படுத்துதல் போன்ற எல்லா வேலைகளையும் தானாக தன் மௌனம் கலையாமல் பார்த்துக் கொண்டாள்.

டாக்டர் லிம் சுந்தரத்திடம் அவர் நோயின் எல்லா அம்சங்களையும் கவனமாக விவரித்தார். ஏற்கனவே அரசாங்க மருத்துவ மனையில் இந்த விளக்கங்கள் பெற்றிருந்ததால் இவை சுந்தரத்திற்கு அதிர்ச்சியை ஊட்டவில்லை.

"புற்று நோய் என்பதே ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் நோயுற்று அளவுக்கு அதிகமாக வளர ஆரம்பிப்பதுதான். அப்புறம் அந்த வளர்ச்சிக் கட்டுப் படுத்த முடியாமல் போய் ஆரோக்கியமான செல்களை அவை இயங்க விடாமல் தடுக்கின்றன. பின்னர் இந்தத் தீய செல்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து வெவ்வேறு இடங்களுக்குப் பரவி அங்கும் புற்றுகள் போல் வளர ஆரம்பித்து அங்குள்ள அவயவங்களையும் செயல் படாமல் ஆக்குகின்றன. உங்கள் உடம்பில் இந்த நடவடிக்கை எல்லாம் இப்போது நடக்கிறது. முற்றிய நிலை!"

மௌனமாக இருந்து மீண்டும் சொன்னார்: "இந்த நோய் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியாது. நவீன வாழ்க்கையில் காற்றில் உணவில் அதிகமாகிப் போன தூய்மைக் கேடுகள் என்று சொல்கிறார்கள். அதற்கான ஆராய்ச்சிகள் பல காலமாக நடந்து வருகின்றன. ஆனால் நிச்சயமான முடிவுகள் தெரியவில்லை. ஒரே சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கிடையிலும் சில பேருக்கு புற்று நோய் தோன்றுகிறது. பலருக்குத் தோன்றுவதில்லை. உடல் வாகுவைப் பொறுத்தும் பாதிக்கும் என்று சொல்லலாம். சில பலவீனங்களை நம் பெற்றோரின் உயிரணுக்களிலிருந்தும் பெற்றிருப்போம். விஞ்ஞானம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. இவ்வளவு நாளாக ஆராய்ச்சி செய்து நாம் புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்கத்தான் கற்றிருக்கிறோமே தவிர விடைகளைப் பெறத் தெரிந்திருக்கவில்லை" என்றார்.

இந்த டாக்டருக்கு இந்து சமயம் சொல்லும் ஊழ்வினை பற்றியும் முற்பிறப்புக்களில் செய்த பாவங்களை நாம் சுமப்பது பற்றியும் தெரியுமா என சுந்தரம் நினைத்துப் பார்த்தார். நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மிக அதிகமாகப் படித்த கூர்மையான அறிவுள்ளவர். இவற்றைப் பற்றியெல்லாம் படித்தறிந்திராமல் இருக்க மாட்டார். ஆனால் அவற்றைப் பற்றிப் பேசமாட்டார். ஏனெனில் அவை அறிவியல் உண்மைகளாகக் கருதப் படுவதில்லை. இவர் விஞ்ஞானி. தத்துவங்கள் பக்கம் போய்க் குழப்ப மாட்டார். விஞ்ஞான பூர்வமல்லாத எதையும் தன் தொழிலோடு போட்டுக் குழப்ப மாட்டார்.

அதற்காகத்தான் மதர் மேகி போன்றவர்களை இங்கு வைத்திருக்கிறார்கள். மனிதன் எவ்வாறு இயங்குகிறான் என்று கற்றுத் தௌிந்து அந்த இயக்கத்தைச் சீர்படுத்த டாக்டர் லிம்மின் விஞ்ஞானம் உதவும். ஆனால் அந்த மனிதன் ஏன் இயங்குகிறான் என்பதை மதர் மேகி போன்றவர்கள்தான் சொல்ல முடியும். அந்த இயக்கம் தோன்றுவதற்கும் அடங்குவதற்குமான காரணங்களை இந்த விஞ்ஞானத்துக்கு மேற்பட்ட மெய்ஞானம்தான் விளக்க வேண்டும். அதை மதர் மேகி தெரிந்திருப்பார். ஆனால் அதைக் கல்லூரியில் படித்திருக்க மாட்டார். கர்த்தரை சிந்தையில் நிறுத்தி அவரிடம் சரணடைந்து கேட்டுத் தௌிந்திருப்பார். அதனால்தான் அவரால் எந்த நாளிலும் புன்னகை பூத்த வண்ணம் இருக்க முடிகிறது. இந்த விளக்கங்கள் எல்லாம் முடிந்த பின் மதர் மேகியை ஒருமுறை பார்த்து விட்டுத்தான் போக வேண்டும் என சுந்தரம் முடிவு செய்து கொண்டார்.

அதன் பிறகு சுந்தரத்திற்கு சிகிச்சையளிக்கவிருக்கும் அறை, இயந்திரங்கள் ஆகியவற்றையும் டாக்டர் லிம் கொண்டு காட்டினார். அந்த இயந்திரங்களில் Ximatron என்னும் புதிய சிமுலேட்டர் கருவி பிரம்மாண்டமானதாக இருந்தது.

"சுந்தரம், இந்த Ximatron கருவி உங்கள் மூளையின் பகுதிகளைத் துல்லிதமாக எக்ஸ்ரே எடுத்துக் காட்டிவிடும். மூளையில் கட்டி உள்ள சரியான இடம், அதன் அளவு, அதன் வீரியம் எல்லாவற்றையும் காட்டிவிடும். இந்தப் பாகங்கள் அனைத்தையும் கம்ப்யூட்டர்களே இயக்குகின்றன. ஆகவே மனிதப் பிழை ஏற்படும் வாய்ப்புக்கள் மிகக்குறைவு. அதன் பிறகு அது தரும் படங்களைக் கொண்டு எந்த அளவுக்கு உங்களுக்குக் கதிரியக்கம் பாய்ச்சப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வோம். தலையின் எந்தப் பகுதியின் வடூயாகச் செலுத்துவது என்பதையும் முடிவு செய்வோம். உங்கள் தலையின் பகுதியில் அந்த வழியின் வாசலை மார்க்கர் பேனாவால் கோடு போட்டு வைப்போம். அந்தக் கோடுகள் சில காலத்திற்கு அடூயாமல் இருக்கும். அடுத்த முறை நீங்கள் சிகிச்சைக்கு வரும் போது அந்த இடத்தைக் கண்டறிய இது உதவும்."

Ximatron-ஐத் தொட்டுப் பார்த்தார் சுந்தரம். சில்லென்றிருந்தது. டாக்டர் லிம் சிரித்தார். "இப்போது இதனால் அபாயம் இல்லை. ஆனால் எக்ஸ்ரே பாய்ச்சப்படும் பொழுது நாங்கள் யாரும் அருகில் இருக்க மாட்டோம். அதிகமான எக்ஸ்ரே உடலில் புகுவது நல்லதல்ல. அதனாலேயே புற்று நோய் உண்டாகலாம்" என்றார்.

"ஆனால் நோயாளிகள் மூளைக்குள் மட்டும் எப்படிப் பாய்ச்ச முடிகிறது?"

"இது சாதாரண மனிதர்களுக்கு விஷம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் நோயாளிகளுக்கு இந்த விஷமே மருந்தாகிறது. நாங்கள் உங்கள் புற்று நோய் செல்களை நோக்கிப் பாய்ச்சுகிற லேசர் கதிர்கள் கொள்ளிக் கட்டை போல. நோய் செல்களை இவை தீய்த்து எரித்துவிடும்"

"அப்படியானால் நோயில்லாத நல்ல செல்கள்...?"

"அவையும் கொஞ்சம் தீயத்தான் செய்யும். அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் இந்த Ximatron கருவி இருப்பதால் தீப்படும் இடத்தைக் கட்டுப் படுத்தலாம். ஆரோக்கியமான செல்கள் அதிகமாகப் பாதிக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்யலாம். ஆனால் பயப்படாதீர்கள். நல்ல ஆரோக்கியமான செல்கள் மீண்டும் உயிர்த்து வளர்ந்து விடும். நோய்பட்ட செல்கள் மட்டுமே தீய்ந்து மடியும்"

சுந்தரத்தின் முகத்தில் கலவரம் படர்வதை டாக்டர் லிம் கவனித்திருக்க வேண்டும். "பார்த்தீர்களா! உங்களுக்கு விளக்க வேண்டும் என்ற உற்சாகத்தில் தவறான வார்த்தைகளைப் பயன் படுத்தி உங்களைக் கலவரப் படுத்தி விட்டேன். இந்த கொள்ளிக் கட்டை, தீய்த்து விடுவது என்பதெல்லாம் ஒரு உருவகம்தான். உண்மையில் உங்களுக்கு ஒரு வலியும் இருக்காது. இந்த கதிரியக்கம் பாய்ச்சப்படுவது ஒரு சில நிமிடங்கள்தான். உங்களால் அதைப் பார்க்கவோ உணரவோ முடியாது" என்று விளக்கினார்.

"எவ்வளவு காலத்திற்கு டாக்டர்?" என்று கேட்டார் சுந்தரம்.

"வாரத்திற்கு ஐந்து நாளும் நீங்கள் சிகிச்சைக்கு வரவேண்டும். மூளைக் கட்டிக்குக் கதிரியக்கம் பாய்ச்சலாம். அது எவ்வளவு கரைகிறது என்பதை ஒவ்வொரு நாளும் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும். உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவியிருக்கும் புற்று நோய்க்கு மருந்துகள் கொடுக்கப் போகிறோம். ஒரு நாளைக்கு மூன்று முறை நீங்கள் சாப்பிட வேண்டும். தினசரி ரத்த சோதனை பண்ணி அது தணிகிறதா என்று பார்ப்போம். கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் உங்களுக்கு அந்தக் கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது. அது மருந்தால் தணிகிறதா என்று பார்ப்போம். ஒரு வாரத்தில் தணிய வில்லையானால் அதற்கும் கதிரியக்க சிகிச்சைதான் ஆரம்பிக்க வேண்டும். ஒரு வாரம் கடூத்து அதை முடிவு பண்ணுவோம்!" என்றார்.

"நான் இங்கு தங்க வேண்டுமா?" என்று கேட்டார்.

"வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் காலையில் வந்து கதிரியக்க சிகிச்சை மட்டும் பெற்றுச் செல்லுங்கள். வீட்டுக்குத் திரும்பி உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கலாம். அதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை!" என்றார்.

வீட்டுக்குத் திரும்பி விடலாம் என்ற செய்தி நிம்மதியாக இருந்தது. ஆனால் சந்தோஷமாக இருக்க முடியுமா என்பது தெரியவில்லை. ராதா, சிவமணி, ஜானகி, பரமா என பலரின் துன்பங்களுக்கிடையில் சந்தோஷம் என்பது எப்படி விளையும் என விளங்கவில்லை. ஆனால் டாக்டருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வடூயில்லை என நினைத்துக் கொண்டார்.

கேட்பதற்குத் துடித்துக் கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டார் சுந்தரம்: "டாக்டர் லிம்! இதற்குப் பக்க விளைவுகள் அதிகம் இருக்குமென்று சொல்கிறார்களே?"

"ஆமாம் திரு. சுந்தரம். பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்யும். அதை உங்களுக்குச் சுட்டிக் காட்ட நான் கடமைப் பட்டுள்ளேன். ஆனால் முதலில் இந்த விளைவுகள் கடுமையாக இருந்தால் கூட தற்காலிகமானவை என்பதை நீங்கள் உணர வேண்டும். சிகிச்சை முடிந்த இரண்டு மூன்று வாரங்களில் இவை முற்றாக மறைந்து விடும்.

"முதலில் உங்களுக்குக் கதிரியக்கம் பாய்ச்சப்படும் இடத்தில் தோல் கருத்துப் போகும். புண் உண்டாகும். நாங்கள் கொடுக்கின்ற களிம்புகளை மட்டும் பூசி வாருங்கள். சிகிச்சை நீடிக்கும் வரை களைப்பாக இருக்கும். பசி இருக்காது. வாந்தி குமட்டல் இருக்கும். தொண்டை வறண்டு விடும். புண்ணாகி விட்டதைப் போல் இருக்கும். வலிக்கும்"

சுந்தரத்தின் முகம் கருத்திருந்து.

டாக்டர் அவர் தோள்களைத் தொட்டுச் சொன்னார்: "பாருங்கள் திரு. சுந்தரம். நான் சொல்லும் இந்தப் பக்க விளைவுகள் நீங்கள் இப்போது இந்தப் புற்று நோயால் அனுபவித்து வரும் துன்பங்களை விடக் கொடியவையல்ல. சிகிச்சையினால் ஏற்படும் பக்க விளைவுகள் தற்காலிகமானவை. சிகிச்சை அளிக்காமல் விட்டால் இது நீங்கள் சாகும் வரை நீடிக்கும். ஆகவே பக்க விளைவுகளின் துன்பங்களைச் சிந்திக்காமல் அதனால் வரும் நன்மைகளைச் சிந்தியுங்கள்" என்றார்.

"சரி டாக்டர். நீங்கள் சொல்வது எனக்கு நன்றாகப் புரிகிறது!" என்று புன்னகைத்தவாறே பதில் சொன்னார் சுந்தரம்.

"ஓகே! நீங்கள் தௌிவான ஆளாக இருக்கிறீர்கள். இந்த சிகிச்சைக்கு வேண்டிய மன பலம் உங்களுக்கு இருக்கிறது. அது மிகவும் முக்கியம். நாளைக்குக் காலையில் வந்து விடுங்கள். சிகிச்சையை ஆரம்பித்துவிடுவோம்!" என்றவர் திடீரென்று நினைவு வந்தவர் போல் சொன்னார்: "ஓ! உங்கள் தலைமுடி கொட்டிவிடும் என்பதைச் சொன்னேனா? ஆமாம் தற்காலிகமாகக் கொட்டி மீண்டும் வளர்ந்து விடும். ஆனால் பரவாயில்லை. கொட்டுவதற்கு அப்படி ஒன்றும் அதிகமான முடி உங்கள் தலையில் இல்லை!" சிரித்துத் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு டாக்டர் லிம் போய்விட்டார்.


*** *** ***

அவர் போன பிறகு சுந்தரம் வரவேற்பறைக்குப் போய் மதர் மேகியைப் பார்க்க வேண்டும் என்று கேட்டார். காத்திருக்கச் சொன்னார்கள். ராமாவுடன் ஹாலில் காத்திருந்தார்.

"அன்னைக்கு நீ இந்த மதர் மேகிய எங்கிட்ட காட்டலியே!" என்றார் ராமா.

"நான் என்ன செய்றது ராமா? அறையிலேயே உக்காந்து பேசினாங்க! போயிட்டாங்க! ஏன் கேக்கிற?"

"இல்ல அவங்களப் பத்தி இவ்வளவு அன்பா பேசிறியே, அதினால அவங்களப் பாக்கணுன்னு எனக்கும் ஒரு ஆச!" என்றார் ராமா.

காத்திருந்தார்கள். மதர் மேகி வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிற்று. வந்தவுடன் "சுந்தரம்! ஹலோ!" என்று கை குலுக்கினார். சுந்தரம் ராமாவை அறிமுகப் படுத்தி வைத்தார்.

"ஓ உங்கள் பெயர் ராமாவா? நீங்கள்தான் ராமாயணத்தின் கதைத் தலைவரா?" என்று கேட்டார் மதர் மேகி.

"மதர் மேகி, ராமரின் பெயரைக் கொண்டிருப்பதைத் தவிற நான் ராமாயணம் எல்லாம் படித்ததில்லை. என்னிடம் கேட்காதீர்கள். அநேகமாக ராமாயணத்தைப் பற்றி என்னை விட உங்களுக்கே அதிகம் தெரியலாம்!" என்றார் ராமா.

"நான் ராமாயணம் மொழிபெயர்ப்புச் சுருக்கம் படித்திருக்கிறேன். ராமாயணம் டெலிவிஷனில் பார்த்திருக்கிறேன். ஆகவே கொஞ்சம் தெரியும்!" மதர் மேகிக்கு இந்து சமயம் சொல்லும் வாழ்வுத் தத்துவங்கள் நன்றாகத் தெரிந்திருக்கும் என சுந்தரம் நினைத்துக் கொண்டார். சில கிறித்துவப் பாதிரியார்கள் இந்து மட்டுமல்லாது பௌத்த, இஸ்லாமிய உண்மைகளையும் பாடமாகத் தங்கள் மதக் கல்லூரிகளில் படிப்பதை சுந்தரம் அறிந்திருக்கிறார்.

மதர் மேகி அவர்கள் இருவரையும் ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தார். "உங்களை நீண்ட நேரம் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள். எங்கள் பேஷண்டாக இருந்த ஒரு பத்து வயதுப் பெண் இன்று காலை இறந்து விட்டாள். லியுகேமியா. நல்ல பாசமுள்ள பெண். கேள்விப் பட்டதும் அவர்கள் வீடு சென்று ஜபம் செய்து கர்த்தரிடம் ஒப்புவித்து வந்தேன்." என்றார்.

"அப்படியா? வருந்துகிறேன் மதர் மேகி!" என்றார் சுந்தரம். மனத்தினுள் "உன்னுடைய முறை சீக்கிரம் வருகிறது" என ஏதோ ஒன்று சொல்லிற்று.

"என்ன செய்யலாம்? கர்த்தரின் அழைப்புக்கு நாம் அனைவரும் இணங்கித்தான் போக வேண்டும். சிறுவயதில் இறப்பவர்கள் கடவுளுக்குப் பிரியமானவர்கள் என்று எங்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு."

கனிய முகமுடைய அன்னையே! மரணத்தின் ரகசியம் உனக்குத் தெரிந்துதான் இருக்க வேண்டும். அதனால்தான் நோயின் மத்தியிலும் சாவின் மத்தியிலும் உன்னால் சிரித்துக் கொண்டே வாழ முடிகிறது.

மௌனமாக இருந்து பின் கேட்டார்: "டாக்டர் லிம்மைப் பார்த்து விட்டீர்களா? என்ன சொன்னார்?" சுந்தரம் நடந்தவைகளைச் சொன்னார்.

"நல்லது! டாக்டர் லிம் மிகவும் அக்கறையும் பரிவும் அதே போல கண்டிப்பும் உள்ள டாக்டர். அவர் கையில் நீங்கள் நல்ல குணமடைவீர்கள்" என்றார் மதர் மேகி.

"சிகிச்சையும் பக்க விளைவுகளையும் நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. டாக்டர் எவ்வளவுதான் ஊக்கமூட்டினாலும் பயம் போகவில்லை" என்றார்.

மதர் மேகி சிரித்தார். "சிறு வயதில் எனக்குப் பல் பிடுங்கக் கூட்டிப் போனார்கள். டாக்டரின் அந்தப் பிடுங்கும் குறட்டைக் கண்டதும் நான் போட்ட கூச்சல் அந்த ஊர் முழுக்கக் கேட்டிருக்கும். ஆனால் எனஸ்தீசியா போட்டு பல் பிடுங்கப் பட்ட போது வலியே தெரியவில்லை. வலியை விட வலி பற்றிய பயம்தான் கொடுமையானது" என்றார். களங்கமில்லாமல் வாய்விட்டுச் சிரித்தார். மரணத்தின் ரகசியத்தின் ஒரு பகுதியைச் சொல்லிவிட்டாரோ!

பிறகு தொடர்ந்தார்: "உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா சுந்தரம்? நம் உடம்பின் வலியையெல்லாம் நம்மை உணரச் செய்வது இந்த மூளைதான். ஆனால் இந்த மூளை தனது சொந்த வலியைத் தான் உணரமுடியாது. அதற்கு வலி என்பதே இல்லை. ஆகவே அதை வெட்டினாலும் கொத்தினாலும் எந்தத் துன்பமும் இருக்காது. தன் சொந்த வலியை உணரும் சக்தியை இறைவன் அதற்கு வைக்கவில்லை!"

அவர்கள் அதைக் கிரகித்துக் கொண்டார்களா என்று கொஞ்சம் மௌனமாகக் கவனித்துவிட்டுப் பின் தொடர்ந்தார்: "இந்த உடல் முழுவதும் ஒரே யூனிட். மற்ற இயந்திரங்களைப் போல தனித்தனியாக செய்து பூட்டப் பட்டதல்ல. ஒரே ஒரு செல்லிலிருந்து இரட்டிப்பு இரட்டிப்பாகப் பல்கிப் பெருகியது. ஆகவே உடம்பிலுள்ள பில்லியன், டிரில்லியன் செல்களும் ஒன்றாகப் பிறந்தவை. அத்தனையும் ரெட்டைப் பிள்ளைகள் போல. அதனால்தான் உடம்பின் எந்த இடத்தில் நோய் வந்தாலும் உடலிலுள்ள அத்தனை அவயவங்களும் அதில் ஈடுபடுகின்றன. கால் பெருவிரலில் காயம் பட்டால் கை அங்கு போய் தடவிக் கொடுக்கிறது. முகம் சுளிக்கிறது. இருதயம் ரத்த ஓட்டத்தைத் துரிதப் படுத்துகிறது. வாய் முனகுகிறது. கண் அழுகிறது. பாருங்கள். ஆகவேதான் நோயாளிகளுக்கு சிகிச்சை முழுமையாக அளிக்க வேண்டும். நோயுற்ற பாகத்திற்கு மட்டிலும் மருந்திட்டால் போதாது!" என்றார்.

அப்புறம் கொஞ்ச நேரம் முகமனாகப் பேசிக்கொண்டிருந்த பின், மதர் மேகி தனக்கு வேறு வேலைகள் இருப்பதைச் சொல்லி விடை பெற்றுக் கொண்டார்.

திரும்பி வரும் போது ராமாவுக்கு மதர் மேகி மேல் ஒரு பெரிய பாசமே உருவாகி விட்டது. "நீ சொன்னது சரிதான் சுந்தரம். தன் வாய் புன்னகை மாறாம எவ்வளவு இனிமையா பேசிறாங்க இந்த அம்மா! இவங்க பேச்சிலேயே நோய் தீர்ந்திடும் போல இருக்கு!" என்றார்.

சுந்தரம் வேறு எதையோ யோசித்தவர் போல இருந்தார். மௌனமாக இருந்தார். அவருக்கு உரையாடலில் ஆர்வமில்லை எனத் தெரிந்து கொண்டு அமைதியாகக் காரோட்டினார் ராமா.

சுந்தரம் அமைதியைக் கலைத்தார். "வாரத்துக்கு ஐந்து நாள் வரணும்னு சொல்றாங்களே ராமா!" என்று கவலையுடன் கூறினார்.

"ஆமாம், அதுக்கென்ன இப்போ?"

"நான் கஷ்டப்பட்டாவது கார ஓட்டிக்கிட்டுத்தான் வரணும்!"

"ஏன்? நான் ஒருத்தன் இருக்கும் போது உனக்கு ஏன் அந்தக் கவல?"

"இல்ல ராமா! ஒரு ஆபத்துக்கு உதவுறது வேற மாதிரி. ஆனா வாரத்துக்கு அஞ்சு நாள் நீ வேலயெல்லாம் போட்டுட்டு...!" இந்த மாதிரி வேளைகளில்தான் ஜானகிக்குக் காரோட்டத் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற நினைவு வருகிறது. அவள் அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றிருந்தாலும் இது ஒன்றை மட்டும் கற்றுக் கொள்ளவில்லை.

"இதோ பார் சுந்தரம். எனக்கு ஒண்ணும் அப்படி வெட்டி முறிக்ககிற வேல எதுவும் வீட்டில காத்துக்கிட்டு இருக்கில. அப்படியே வேல இருந்தா உங்கிட்டச் சொல்லி வேற ஏற்பாடு பண்ணிக்கச் சொல்றேன். அதுவரைக்கும் ஒன்ன ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வர்ரது, வீட்டுக்குக் கொண்டு போறது என் வேலன்னு எங்கிட்டயே விட்டிடு!" என்றார் ராமா.

நன்றியுணர்ச்சியுடன் ராமாவைப் பார்த்தார். அந்த நட்புக்கு எவை எல்லைகள்? இன்னும் தெரியவில்லை. இருக்கட்டும். இப்போது இந்த நண்பனின் நெஞ்சில் பரிவும் பாசமும் அதிகமாக இருக்கின்றன. கொஞ்ச நாள் ஓய்வில்லாமல் இந்த வேலையைச் செய்து அவனின் மற்ற வேலைகளுக்கு இது குறுக்கீடாய் இருக்கும் போது அவனாக விலகிக் கொள்வான். அல்லது சூசகமாகச் சொல்வான். அது வரை இப்படியே அவன் திருப்திக்கு அவன் செய்யட்டும்.

அல்லது இந்த நண்பனுக்கு இந்த சேவை சலிக்காததாக இருக்குமோ! "அக்குளத்தில் நெட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலுமே ஒட்டுயுறுவார் உறவு" என்ற பழைய செய்யுள் நினைவுக்கு வந்தது. என்னோடே இருந்து இந்த நண்பனும் துன்பங்களைக் கடைசி வரையில் பகிர்ந்து கொள்ளப் போகிறானா?

பொதுவாக மனித உறவுகளில் அவருக்கு நிரந்தரமான நம்பிக்கைகள் இல்லாமல் இருந்தது. ஒருவர் இன்னொருவருக்கு அன்பின் அடிப்படையில் பிரதி உபகாரம் எதிர்பார்க்காமல் நன்மை செய்து கொண்டே இருக்க முடியும் என அவரால் நம்ப முடியவில்லை. ஒவ்வொரு நன்மையும் ஒரு பிரதி உபகாரத்தை எதிர்பார்க்கும் சுய நலமாகத்தான் இருக்க முடியும் போலும். அந்தப் பிரதி உபகாரம் கிடைக்காது போனால் உதவி செய்வதில் உள்ள ஆர்வமும் குன்றி விடும்.

ஆனால் அவர் வாழ்வில் பலபேர் அந்த அவநம்பிக்கையைப் பொய்யாக்கி வைத்தும் அவரை மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறார்கள். இதோ இப்போதைக்குத் தனக்குக் காரோட்டும் இந்த நண்பன். அதே போல அன்னம் அக்காள். எதை எதிர்பார்த்துத் தனக்காக இத்தனை கஷ்டப் பட்டிருக்கிறாள் இந்த அக்கா!

அத்தை! தாங்கள் போடும் மூன்று வேளை சோற்றுக்காகவும் கட்டும் துணிக்காகவுமா இப்படி வாய் பேசாமல் மாடாய் உழைக்கிறாள். "தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும்" பெருமக்கள் இந்த உலகத்தில் இருந்து இந்த நவீன பொருளாதாரத்திலும் இன்னும் மறைந்து விடவில்லை என எண்ணிக் கொண்டார்.

மதர் மேகி! அவருடைய இனிய முகம் அவர் மனதில் வந்து நின்றது. நோய்க்கும் மரணத்துக்கும் நடுவில்தான் வாழ்வது எனத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். வாழ்க்கையில் பிற இன்பங்கள் இல்லை. குடும்பத்தைத் துறந்தாயிற்று. திருமணம், உடலுறவு என்ற ஆசைகளைத் தீய்த்தாயிற்று. இதையெல்லாம் தீய்ப்பதற்கும் ஒரு Ximatron கருவி இருக்குமா? "ஏசு" என்ற சொல்லே இவற்றையெல்லாம் தீய்த்திருக்கிறது. ஆனால் தீக்கொள்ளியால் கொடுமையாக எரிக்கவில்லை. தன் பார்வையை, தன் சொல்லை, தன் அன்பை, கருணையை ஊற்றாகப் பெருக்கி இந்த சில்லறை இன்பங்களை முழுகடித்துப் பேரின்பத்தைப் பெருக்கியுள்ளது.

"என்ன ஒரே கவலப்பட்ற மாதிரி இருக்குது. எனக்கொண்ணும் இதெல்லாம் சிரமம் இல்ல. பொழுது போகாம கஷ்டப் பட்றவன் நான். ஆகவே என் பொழுது ஒரு மாதிரி போக இது ஒரு வடூ, தெரியுதா சுந்தரம்" என்றார் ராமா.

"சரி ராமா! தேங்க் யூ!" என்றார்.

அப்படிச் சொன்னது போலவே, இன்று காலை சரியாக வீடு வந்து அவரைக் கொண்டு ஆஸ்பத்திரியில் விட்டுவிட்டு, சுந்தரம் Ximatron இயந்திரத்தின் அடியில் படுத்திருக்கும் போது வௌியே வெயிட்டிங் ரூமில் ஓரமாக ஒரு நாற்காலியில் சாய்ந்து கொண்டு குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார் ராமா.

*** *** ***

சுந்தரத்தின் வலது காதுக்கு மேலாக கபாலத்தில் கொஞ்சம் தலைமுடியை வடூத்து விட்டு டாக்டர் லிம் மார்க்கர் பென்னால் கோடுகள் போட்டார். அதுதான் கதிரியக்கம் பாய்ச்சப் படும் வாசல் என விளக்கினார்.

சுந்தரத்தின் தலை அசையாமல் இருக்குமாறு பிடித்து வைத்துவிட்டு டாக்டரும் ரேடியோ கிராபரும் வௌியே போய்விட்டார்கள். டாக்டர் அப்புறம் பேசியது இன்டர்காம் வழியாக மட்டுமே கேட்டது. "சுந்தரம் அசையாமல் இருங்கள். இப்போது லேசர் சிகிச்சை ஆரம்பிக்கப் போகிறோம். ஏறக்குறைய ஒரு நிமிடம்தான். அப்புறம் நீங்கள் எழுந்து விடலாம்."

கணங்கள் யுகங்களாகும் சந்தர்ப்பங்களில் அதுவும் ஒன்று போலும். கிர், கிர்ரென ஓசைகள் கேட்டன. ஆனால் அவர் உடலில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அசையாமல் படுத்திருந்தார். Ximatron-ஓடு பேசிக் கொண்டிருந்தார். தன் புற்று நோய் செல்கள் எரிந்து கருகுவதாகக் கற்பனை செய்து கொண்டார். உடலில் புதிய செல்கள் வளர்ந்து தாம் புதிய மனிதனாக ஆகி வருவதாக நினைத்துக் கொண்டார்.

ஒரு நிமிடத்தில் ரேடியோகிராபர் உள்ளே வந்தார். இயந்திரத்தைத் தள்ளி வைத்தார். "அவ்வளவுதான்! நீங்கள் எழுந்து கொள்ளலாம்" என்றார். அவ்வளவு எளிதில் எழ முடியவில்லை. உடம்பு ஆளைத் தள்ளியது. மெதுவாக எழுந்து உட்கார்ந்தார்.

டாக்டர் லிம் உள்ளே வந்தார். "இன்றைக்கு அவ்வளவுதான் மிஸ்டர் சுந்தரம். வீட்டுக்குப் போய் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிட்டுத் தொடருவோம். மருந்துகள் தயாரித்து வைத்திருக்கிறார்கள். எப்படி எத்தனை முறை என்பதெல்லாம் மருந்துக் கௌண்டரில் சொல்வார்கள். தவறாமல் சாப்பிடுங்கள்!"

"சரி டாக்டர்" என்றார் சோர்வாக.

"உடல் களைப்பு அதிகமாகும். சாப்பாட்டில் ஆசை இருக்காது. ஆனால் முயன்று சாப்பிடுங்கள். உடம்புக்குச் சத்து வேண்டும். காரமான எண்ணெய் மிக்க ஆகாரங்கள் சாப்பிடாதீர்கள். கொஞ்சம் தண்ணீராகவும் சூப்பாகவும் செய்து சாப்பிடுங்கள். பால், தண்ணீர் நிறைய அருந்துங்கள்" என்றார்.

நன்றி சொல்லி உடைகளைப் போட்டுக் கொண்டு மெதுவாக நடந்து வௌியில் வந்தார். கதவுக்கு வௌியே கதிரியக்க சிகிச்சைக்காக நோயாளிகள் கியூவில் நின்றார்கள். அவர்களுடைய உறவினர்களும் சூழ்ந்து நின்றதால் அந்தப் பகுதி முழுவதிலும் நடப்பதற்கு மட்டும் இடம் விட்டு நெருக்கடி மிகுந்திருந்தது.

இத்தனை பேருக்கா புற்று நோய் கண்டிருக்கிறது? ஓராண்டில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புற்று நோய் சிகிச்சைக்காக மௌன்ட் மிரியத்துக்கு வருவதாக மதர் மேகி கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதிலும் மூளையிலும் தலைப்பகுதியிலும் புற்று நோய்க் கண்டவர்களே அதிகம் எனவும் கூறியிருந்தார்.

சிகிச்சைக்காக வரிசை பிடித்து இருந்தவர்களில் பலர் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் உட்கார்த்தி வைக்கப் பட்டிருந்தார்கள். கழுத்தில், மார்பகத்தில், கருப்பையில், நுரையீரலில் இப்படி பல இடங்களில் புற்று நோய் கண்டவர்கள்.

இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது தெய்வம் தண்டிப்பதற்குத் தன்னை மட்டும் தனியாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை எண்ணி ஆறுதல் தோன்றியது. ஆனால் ஆரோக்கியமாய் பழுதில்லாதவனாய் சாமானியனாய் உலவிக்கொண்டிருந்த என்னை இந்தக் கூட்டத்துடன் தெய்வம் சேர்த்து விட்டதுவே என்ற அடங்காத துயரமும் வந்து தங்கியது.

மருந்துக் கௌன்டரில் கலர் கலராக பல மருந்துகள் கொடுத்தார்கள். எப்படி சாப்பிட வேண்டும் என்றும் சொன்னார்கள்.

நாற்காலியில் சாய்ந்து தூங்கிவிட்ட ராமாவின் அருகில் போய்த் தட்டி எழுப்பினார். தலை குலுங்கி எழுந்தார் ராமா. "முடிஞ்சதா சுந்தரம். சீச்சீ, படுத்துத் தூங்கிட்டம் பாரு!" என்றார்.

"அதினால என்ன ராமா! உனக்கும் களைப்புத்தான!" ராமாவுடன் காரை நோக்கி நடந்தார்.


*** *** ***

மாலையில் வீட்டில் சோர்ந்து படுத்திருந்த வேளையில் டெலிபோன் அடித்தது. கை நீட்டி மெதுவாக எடுத்து "ஹலோ" என்றார்.

"அப்பா, ராதா பேசிறேன்!" என்றாள். துணைக் கோளம் வழியாக இங்கிலாந்திலிருந்து பாய்ந்த குரல் ஒரு வித எதிரொலியுடன் இருந்தது.

"ராதா! எப்படிம்மா இருக்கே? இப்பதான் கூப்பிட மனசு வந்ததா உனக்கு?" என்றார். குரலில் கோபம் தொனித்துவிட வேண்டாம் என கவனமாகப் பேசினார்.

"லண்டன்ல இருந்துதான் பேசிறேன் அப்பா. எப்படியிருக்கிங்க?" என்றாள்.

"ஏதோ இருக்கிறோம்மா!" என்றார்.

"அப்பா, உங்ககிட்ட பேசவே வெக்கமா இருக்கு. என்ன மன்னிச்சிருங்க..." குரல் குழைந்தது. அழுகிறாள் எனத் தெரிந்தது.

"சரி, சரி. செய்றத செஞ்சிட்டு இப்ப அழுது என்ன புண்ணியம்! அங்க நீ சுகமா இருக்கியாம்மா?" என்று கேட்டார்.

"இங்க சுகமா இருக்கேம்பா. ஹென்றி ரொம்ப நல்லவர். அன்பானவர். நீங்க அவர ரொம்ப விரும்புவிங்க அப்பா!" என்றாள்.

அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என எண்ணிக் கொண்டார்.

"பிரேம் எப்படியிருக்கான் அப்பா?" என்று கேட்டாள்.

"இருக்கிறாம்மா! உன்னக் கேட்டபடி இருக்கிறான். ஏக்கத்தில அவனுக்கு அடிக்கடி உடம்பு கூட சரியில்லாம போயிடுது" என்றார்.

"அவனுக்கு உடம்புக்கு என்னப்பா?" என்றாள். மீண்டும் குரல் தளுதளுத்திருந்தது.

"சும்மா இருமல் காய்ச்சல்தான். மருந்து வாங்கிக் கொடுத்திருக்கிறோம். சரியா போயிடும்னு நெனைக்கிறேன்!" என்றார்.

அப்புறம் பரமாவைக் கூப்பிட்டுப் பேசினாள். "வை ஆர் யு நோட் கமிங் டூ தாத்தாஸ் ஹவுஸ்?" என்று பரமா கேட்டான். என்ன பதில் சொன்னாள் என்று தெரியவில்லை.

"ஐ எம் சிக். தாத்தா இஸ் அல்சோ சிக்" என்று அறிவித்தான் பரமா.

பின்பு ஜானகியைக் கூப்பிட்டுப் பேசினாள். "இப்படி பண்ணிட்டுப் போயிட்டியே ராதா, இது உனக்கே நல்லா இருக்கா!" என்று ஜானகி திட்ட ஆரம்பித்த போது சுந்தரம் சைகை காட்டி அவளை அடக்கினார்.

பின்னர் சுந்தரம் மீண்டும் டெலிபோனை வாங்கிப் பேசினார். சிவமணி வந்து விட்டுப் போனதை அவளுக்கு அறிவித்தார்.

பின்னர் "ஏம்மா! ஏதாச்சும் ஒண்ணுன்னா உன்ன எப்படி நாங்க தொடர்பு கொள்றது? ஒன்னோட டெலிபோன் நம்பரக் கொடுக்கிறியா?" என்று கேட்டார்.

"இப்ப வேணாம்பா! பின்னால கொடுக்கிறேன். நானே உங்களுக்கு அடிக்கடி போன் பண்ணித் தெரிஞ்சிக்கிறேன்!" என்றாள்.

"அப்பா, என் பிரேமை பத்திரமாப் பாத்துக்குங்க! எப்படியும் ஒரு ரெண்டு மாசத்துக்குள்ள நான் வந்து அவன அழச்சிக்கிட்டு வந்திர்ரேன்பா. மறுபடி என்ன மன்னிச்சிக்குங்க அப்பா! நீங்களும் அம்மாவும் என்ன மன்னிச்சிடுங்க" அழுது கொண்டே போனை வைத்தாள்.

ஜானகி அவளைத் திட்டியவாறே இருந்தாள். "தறுதல, தறுதல! எப்படித்தான் இந்தக் குடும்பத்தில வந்து பொறந்தாளோ!" என்று புலம்பினாள்.

ஊழ்வினை வசமாகத்தான் அவள் வந்து இந்தக் குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும். ஊழ்வினை பற்றி மீண்டும் சிந்தித்தார் சுந்தரம். எத்தனை வகையாக இது தோன்றும்? எந்த வினைக்கு என்ன தண்டனை? இந்த உலகில் நாம் நீதிமன்றங்களில் இந்தக் குற்றத்திற்கு இந்தத் தண்டனை என விதித்திருப்பதைப் போல தெய்வம் விதித்து வைத்திருக்கிறதா? எந்தக் குற்றம் செய்தால் புற்றுநோய்த் தண்டனை விதிக்கப்படும்? எந்தக் குற்றம் செய்தால் மூன்று வயதுப் பிஞ்சுப் பருவத்தில் அப்பாவையும் அம்மாவையும் பிரிந்து வாழும் தண்டனை விதிக்கப்படும்? எந்தக் குற்றம் செய்தால் அன்புக் கணவன் அநியாயக்காரனாக மாறி தோலில் எரியும் சிகெரெட்டால் சுடுகின்ற தண்டனை விதிக்கப்படும்? எந்தக் குற்றம் செய்தால் கணவனை இளவயதில் பறிகொடுத்து விட்டு வாழ்நாள் முழுவதும் தண்ணீருக்கு பயந்து வாய்பேசாமல் தன்னை மற்றவர்களுக்கு அடிமையாக்கிக் கொண்டு பிரமை பிடித்து வாழும் தண்டனை விதிக்கப்படும்?

"இவ்வளவு நாளாக ஆராய்ச்சி செய்து நாம் புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்கத்தான் கற்றிருக்கிறோமே தவிர விடைகளைப் பெறத் தெரிந்திருக்கவில்லை." டாக்டர் லிம்மின் குரல் மனத்தின் ஆழத்தில் எதிரொலித்தது.

------

அந்திம காலம் - 10


அன்று பகல் முழுவதும் பயங்கரமானதாக இருந்தது. தலை சுற்றல் கொஞ்சமும் ஓயவில்லை. தலையணையில் தலைசாய்ந்திருந்த போதும் ஏதோ பாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பது போன்ற உணர்வே இருந்தது. தலையில் விண் விண்ணென்ற வலி இருந்தது. வயிறு குமட்டியவாறே இருந்தது. சாப்பாட்டை நினைக்கவே முடியவில்லை. ஜானகி ஏதோ சூப் செய்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினாள். இரண்டு கரண்டி சாப்பிட்டு 'குவேக்' என்று குமட்டினார். அப்புறம் அதைத் தொட முடியவில்லை. மாலை மடிந்து இருள் படரத் தொடங்கிய அந்த வேளையில் சோபாவுக்குள் வயிற்றைப் பிசைந்து கொண்டு சுருண்டு படுத்துவிட்டார்.

முன்னிரவில், இன்னமும் கொஞ்சம் மிச்சமாய் இருக்கும் பின்மாலை வௌிச்சத்தில், பிரகாசிக்க முடியாமல் மஞ்சளாய் மங்கியிருக்கும் மின்சாரக் குமிழிகளின் வௌிச்சத்தில், வீடு வெள்ளையும் மஞ்சளும் கலந்த ஒளியில் இருந்தது. ஒரு வாழும் வீட்டுக்குரிய அமைதியான ஒலிகள் அவர் காதுகளை வந்தடைந்தன. அடுப்பில் ஏதோ தாளிக்கும் ஒலி; பைப்பைத் திறந்து தண்ணீர் வடூய விட்டுப் பாத்திரங்களை அலசி எடுக்கும் ஒலி; பீங்கான் தட்டுகளை மேசையில் வைக்கும் ஒலி; இவற்றுக்கெல்லாம் பின்னணியாக அடுப்பங்கரையில் எந்நாளும் பாடியவாறிருக்கும் வானொலி ஆறிலிருந்து ஏதோ ஒரு சினிமாப் பாட்டு; "அடுப்பக் கொஞ்சம் கொறச்சி வைங்க அத்தை" என்ற ஜானகியின் பணிவான குரல்; ஜானகியும் அன்னமும் தணிந்த குரலில் பேசிக் கொள்ளும் வார்த்தைகள் புரியாத ஒலி; எண்ணெய் மணம்; தலைக்கு மேல் சுருதி பிசகாமல் விர் விர்ரென்று சுழன்று கொண்டிருக்கும் விசிறி.

குடும்பத்தின் ஒலிகள், மணங்கள், வௌிச்சங்கள். இவையெல்லாம் சேர்ந்ததுதான் வீடு. இது நல்ல வீடு என்று நினைத்துக் கொண்டார்.

மனமும் உடலும் சோர்ந்திருக்கும் போதுதான் இந்த ஒலிகள் தௌிவாகக் கேட்கின்றன. உற்சாகமாக இந்தக் குடும்பச் சூழ்நிலையில் ஒருவனாக ஆடியோடிக் கொண்டிருந்த நாட்களில் இந்த ஒலிகள் மீது கவனம் இருந்ததில்லை. இந்த ஒலிகள் பின்னணியில் இருந்தன. இன்று ஆட்டம் ஓட்டம் ஓய்ந்து விட்ட போது இந்த ஒலிகள் முன்னணியில் இருக்கின்றன. இவற்றின் சுகம், குடும்பச் சூழ்நிலையில் இவை வகிக்கின்ற இடம் இப்போதுதான் தெரிகிறது. இது விகாரங்கள் இல்லாத சராசரிக் குடும்பம் என்று நினைத்துக் கொண்டார். துன்பங்களும் இன்பங்களும் கலந்து இருக்கின்ற மிதமான குடும்பம்.

ஆனால் இப்போது துன்பம் ஓங்கியிருக்கும் காலம். பென்டுலம் துன்பத்தின் பக்கமாக ஓங்கியிருக்கிறது. இது இறங்குமா? இன்பம் ஓங்குமா? ஓங்கும். பென்டுலம் திரும்பும். ஆனால் அதற்கு முன் தன்னை விழுங்கிவிட்டு இந்த வீட்டில் ஓர் இழவு நடந்து ஒப்பாரிகள் முடிந்த பின்னர் மெதுவாக அமைதி மீண்டு இன்பம் ஓங்கும். அதற்கு இன்னும் நீண்ட காலம் பிடிக்கலாம்.

இன்றைக்கு என்ன கிழமை? செவ்வாயா? இரண்டு வார சிகிச்சை முடிந்து மூன்றாவது வாரத்தில் மீண்டும் இரண்டு நாட்கள் சிகிச்சையில் ஓடிவிட்டன. டாக்டர் கொடுத்த மருந்துகளை ஜானகி நேரம் தவறாமல் அளந்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.

மருந்தின் பக்க விளைவுகள் கடுமையாக இருந்தன. குரல் ரணமாகிவிட்டது. தண்ணீர் குடித்தாலும் வலித்தது. பசி என்பது என்ன என்று மறந்து விட்டது. தலை புண்ணாக இருந்தது. கதிரியக்கம் பாய்ச்சப்படும் அந்த இடம் கருத்துத் தீய்ந்து விட்டது. வலித்தது. அந்தப் பக்கம் திரும்பிப் படுக்க முடியாமல் ஒரு பக்கமாகவே ஒருக்களித்துப் படுக்க வேண்டியிருந்தது. உடல் முழுதும் தோல் ரணம் அதிகமாகிவிட்டது. குளிக்க, துவட்ட முடியவில்லை. டவலைத் தண்ணீரில் நனைத்து ஒத்தி ஒத்தி எடுக்க வேண்டியிருந்தது. தூக்கம் வரவேண்டிய வேளைகளில் அதற்குப் பதிலாக மயக்கம்தான் வந்தது. தலை முடி கொட்டத் தொடங்கியிருந்தது.


*** *** ***


நேற்று மௌன்ட் மிரியம் போயிருந்த போது, எக்ஸ்ரேக்களைப் பரிசோதித்து விட்டு டாக்டர் லிம் பெருமூச்சு விட்டுப் பேசினார். "சுந்தரம், இரண்டு வாரம் முழுக்கக் கொடுத்த சிகிச்சை அவ்வளவாகப் பலன் தரவில்லை."

"அப்படியென்றால்...?" சுந்தரம் கவலையோடு கேட்டார்.

"புற்று நோய் செல்களின் வளர்ச்சி தடைப்படவில்லை. கொஞ்சம் செல்கள் தீய்ந்துள்ளன. ஆனால் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை.

அமைதியாக இருந்தார்கள். டாக்டர் லிம் எக்ஸ்ரே படத்தைப் பெரிதாக்கிக் காட்டும் மானிட்டர் திரையில் பல கோணத்தில் அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார்.

"இன்னும் ரெண்டு மூன்று நாள் ரேடியோதெராப்பியையும் கெமோதெராப்பியையும் தொடருவோம். பலன் இல்லையானால் இதை நிறுத்தி விடுவோம்."

"நிறுத்தி விட்டு..?"

டாக்டர் யோசித்தார். "இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு புதிய புற்று நோய் ஆராய்ச்சியாளர் நம் மருத்துவ மனைக்கு வருகிறார். மலேசியர்தான். அமெரிக்காவில் ஆராய்ச்சியை முடித்து சில புதிய உத்திகளோடும் மருந்துகளோடும் திரும்ப வருகிறார். இங்கு தங்கியிருந்து மேலும் சில ஆராய்ச்சிகளைச் செய்யப் போகிறார். என்னோடு இணைந்து பணியாற்றப் போகிறார். அவரிடம் உங்களைக் காட்டப் போகிறேன்" என்றார்.

வாழ்க்கை எனக்கு எதிராக இருக்கிறது. தெய்வங்கள் என்னைக் கைவிட்டு விட்டன. ஒரு புதிய டாக்டர் வந்து இந்த விதியை மாற்றி எழுதிவிட முடியாது எனத் தோன்றியது. எனக்கு மரணம் என்பதை எழுதி உறுதிப் படுத்தியாகி விட்டது. ஆனால் அது சாதாரண மரணமாக அமையக் கூடாது என மேலே முடிவு செய்யப்பட்டு தீர்ப்பு எழுதப் பட்டிருக்கிறது. 'இந்த சுந்தரம் என்ற குற்றவாளி ஆறு மாதங்கள் சித்திரவதை செய்யப்பட்டு, இவனது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக அழுகிய பின் இறுதியாக மூச்சுத் திணறலுடன் சாக வேண்டும் என்பது இந்த தேவலோக நீதி மன்றத்தின் முடிவு. முதலாவதாக மூளையின் சில பாகங்கள் அழுக வைக்கப் படும். அதன் பின்னர்...'

"சுந்தரம். கவலைப் படாதீர்கள். இந்த நோய் உங்களுக்கு எப்படி ஒரு சவாலோ அப்படியே எனக்கும் ஒரு சவால்தான். இதைக் கட்டுப் படுத்த என்னால் ஆன அனைத்தையும் செய்வேன். இதற்கிடையில் டாக்டர் ராம்லி வந்ததும் நாம் நடத்தும் போரில் அவரும் பக்க பலமாக இருப்பார்" என்றார் டாக்டர் லிம்.

"வேறு பலன் இல்லா விட்டாலும் உங்கள் ஆராய்ச்சிகளுக்கு என் நோய் பயன் படுவதில் எனக்கு மகிழ்ச்சிதான்" என்றார் சுந்தரம்.

டாக்டர் லிம் சிரித்தார். "நல்லது, நல்லது. அந்த மனப் போக்குதான் வேண்டும்" என்றார்.


*** *** ***

சென்ற வாரத்து நினைவுகளுக்கு ஊடே கொஞ்சமாகத் தூக்கம் வந்தது போல் இருந்து அது கலைந்த நேரத்தில் பலவீனமாகக் கண்ணைத் திறந்து பார்த்தார். பரமா கொஞ்சம் தூர நின்றவாறு அவரைக் கவனித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவனைப் பார்த்துப் புன்னகைத்துத் தலையசைத்துக் கூப்பிட்டார். மெதுவாக பக்கத்தில் வந்து நின்றான். அவனைப் பார்த்து சோர்ந்து புன்னகைத்தார்.

"தாத்தா, ஆர் யூ சிக்?" என்று கேட்டான்.

"ஆமாம்!" என்று தலையாட்டினார்.

அருகில் வந்து அவர் மடியில் கை வைத்து முகத்தையே கூர்ந்து பார்த்தான்.

"வை ஆர் யு சிக்?" என்று கேட்டான்.

'அது தெரிந்தால் வாழ்க்கையின் ரகசியம் புரிந்துவிடும் என் அன்பு பேரப்பிள்ளையே!' என்று எண்ணிக்கொண்டு அவனை அணைத்துக் கொண்டார்.

"சீக்கு எல்லாருக்கும் வரும் பரமா! வந்து வந்து போகும். என்ன செய்றது? உடம்புன்னு இருந்தா சீக்கு வரத்தான் செய்யும்!" என்றார்.

அவர் பக்கத்தில் நெருக்கமாக வசதியாக உட்கார்ந்து கொண்டான்.

"ஐ ஏம் அல்சோ சிக்! சீ!" இருமிக் காட்டினான். அவன் நெஞ்சில் சளி கட்டியிருப்பது தெரிந்தது.

அவனுடைய இருமலும் சளியும் அவருக்கும் கவலையாகத்தான் இருந்தது. எப்போதும் சோர்ந்து இருந்தான். அவனுடைய எடையும் குறைந்து கொண்டே வந்தது. ஜானகி அவனை இரண்டு மூன்று முறை கிளினிக்குக் கொண்டு சென்று வந்தாள். அங்கிருந்து தனியார் குழந்தை நோய் நிபுணரிடமும் கொண்டு சென்றிருந்தாள். இருந்தும் அவன் இருமலும் சோர்வும் அவனை விட்டுப் போனதாகத் தெரியவில்லை.

ஜானகியும் அன்னமும் அடுப்படியில் வேலை முடித்து அந்தப் பக்கமாக வந்தார்கள். ஜானகி பரமாவை அவரிடமிருந்து பிரித்து அழைத்துக் கொண்டாள். "பரமா! தாத்தா படுத்திருக்கும் போது தொந்திரவு பண்ணாதேன்னு சொன்னேனா இல்லியா?" என்று அவனை அதட்டினாள். அவன் சிணுங்கினான்.

சுந்தரம் மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். இந்த இரண்டு பெண்களும் பார்க்கின்ற வேளையில் துவண்டு கிடந்து தனது இயலாமையைக் காட்டிக் கொள்ள அவர் விரும்பவில்லை.

"ஏதாகிலும் குடிக்கக் கொண்டு வரட்டுமாங்க?" என்று கேட்பாள் ஜானகி.

வேண்டாம் என்று தலையாட்டினார். "அதிருக்கட்டும் ஜானகி. பரமா இப்படி இருமிக்கிட்டே இருக்கானே, டாக்டர் என்னதான் சொல்றாரு?"

"அதாங்க கிளினிக்கில குடுத்த மருந்தில ஒண்ணும் மாற்றத்தக் காணும். குழந்தை டாக்டர் நாதன்கிட்ட காட்டியிருக்கு. அவர் ரெண்டு தடவ ரத்த சாம்பிள் எடுத்து சோதனைக்கு அனுபியிருக்கிறாரு. நாளன்னைக்குத்தான் முடிவு வருமாம். போய்ப் பார்த்தாத்தான் தெரியும்" என்றாள் ஜானகி.

அன்னம் பேசினாள்: "பிள்ளைக்கு அப்பா அம்மாவ இப்படித் திடீர்னு பிரிஞ்சிருக்கிறதே பெரிய பாதிப்பா இருக்கும் தம்பி. சின்னப் பிள்ளதானே! ஏக்கத்திலேயே சோர்ந்து போய் சீக்கும் வந்திரும்."

"வென் இஸ் மை மம்மி கமிங் பேக்?" என்று கேட்டான் பரமா.

"ஆமா! பாத்துக்கிட்டே உக்காந்திரு. ஒங்க அம்மா ஒன்னத் தேடி வரப்போறா" என்று வெடுக்கென்று பேசினாள் ஜானகி.

"ஜானகி, கொழந்த கிட்ட அப்படிப் பேசாதேன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்!. ஏற்கனவே நொந்து போன கொழந்த! நாமில்லையா அவன்கிட்ட அன்பா இருக்கணும்!" என்று கோபப்பட்டார் சுந்தரம். கோபப்பட உடம்பில் தெம்பிருப்பது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.

ஜானகி பரமாவின் தலைமுடியைக் கோதி விட்டவாறே பேசினாள். "கொழந்த மேல எனக்கு என்னங்க கோவம்? இந்தப் பாவி இப்படி நம்பள விட்டுட்டுப் போயிட்டாளேன்னுதான்..."

பரமா பாட்டியின் மடியில் பாசமாகச் சாய்ந்தான்.

அன்னம் திடீரெனப் பேசினாள். "தம்பி! சனிக்கிழம, ஞாயித்துக் கிழம ஒனக்கு சிகிச்சை கெடையாதுதான?" என்று கேட்டாள்.

"ஆமா கிடையாது! ஏன் கேக்கிற அக்கா?" என்று கேட்டார்.

"இல்ல, இந்த வாரம் வெள்ளிக் கிழம எல்லாருமா என்னோட தைப்பிங் வந்திடுங்க! ரெண்டு நாள் அங்க வந்து ஓய்வா இருங்க. தைப்பிங் லேக் கார்டன்ல போய் உக்காந்தா உன் நோயில பாதி குறைஞ்சிடும்! என்ன சொல்ற?" என்று கேட்டாள்.

நல்ல திட்டம்தான். தைப்பிங் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த ஏரிக் கரையும் ரொம்பப் பிடிக்கும். அந்த நினைப்பிலேயே ஒரு குளுகுளுப்பு இருந்தது. ஆனால்...

"நல்ல திட்டந்தாக்கா. ஆனா அவ்வளவு தூரம் பிரயாணம் பண்ணனுமே!" என்றார்.

"பிரயாணம் என்ன பெரிய பிரயாணம்? என்னோட கார்லியே உன்ன அழச்சிக்கிட்டுப் போறேன். ஏறி ஒக்காந்தா ஒரு மணி நேரத்தில தைப்பிங்! அப்படியே களைப்பா இருந்தா இடையில இளைப்பாற எத்தனையோ இடம் இருக்கு!"

ஜானகியின் முகத்தைப் பார்த்தார். "என்ன சொல்ற ஜானகி?" என்றார்.

"போறது நல்லதுதாங்க. நீங்களும் வீட்டுக்குள்ளயே கெடக்கிறிங்க. இந்த மாற்றம் நல்லதுதான்!" என்றாள்.

உண்மைதான். இந்த உடம்பின் உபாதைகளுக்கு இடம் கொடுத்து இருந்த இடத்திலேயே முடங்கிக் கிடக்க முடியாது. நோய் இன்னும் இடம் எடுத்துக் கொள்ளும். இன்னும் உற்சாகமாக வளரும். அதை உதாசீனம் செய்ய வேண்டும். உடம்பு சோரும் நேரங்களில் உள்ளத்துக்கு உற்சாகம் ஏற்படுத்த வேண்டும். இந்த நோயைப் புறந்தள்ள வேண்டும். புதிய காற்றும் காட்சிகளும் உள்ளத்துக்குக் கள்ளூட்டினால் உடம்பின் உபாதைகள் தாமாக மறையும்.

அவர் எண்ணங்களைப் பிரதிபலிப்பது போல பரமா உற்சாகமாகச் சொன்னான் "ஓக்கே தாத்தா, லெட் அஸ் ஆல் கோ டு தைப்பிங்!" ஜானகி சிரித்துக் கொண்டே அவனை உச்சி மோந்தாள்.

வார இறுதியில் தைப்பிங் போவதென முடிவாயிற்று. அந்த எண்ணமே எல்லார் மனத்திலும் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அந்த வாரம் முடிவதற்குள் வாழ்க்கையில் இன்னொரு இடி விழவிருக்கிறது என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.


*** *** ***

வியாழனன்று சிகிச்சைக்குப் போனபோது டாக்டர் லிம்மோடு மதர் மேகியும் இன்னொரு இளம் மலாய் டாக்டரும் இருந்தார்கள். டாக்டர் லிம் சுந்தரத்திற்கு அந்தப் புதியவரை அறிமுகப் படுத்தி வைத்தார். "மிஸ்டர் சுந்தரம், இவர் டாக்டர் ராம்லி. அன்றைக்குச் சொன்னேனல்லவா, இவர்தான்!"

டாக்டர் ராம்லி உட்கார்ந்திருந்த வாக்கில் கை குலுக்கினார். முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டிருந்தார். சிரிப்பற்ற கடுமையான முகம். மிகவும் சீரியசான ஆராய்ச்சியாளராக இருப்பார் போலும் என சுந்தரம் நினைத்துக் கொண்டார்.

மதர் மேகி என்றும் போல் மாறாத சிரிப்புடன் இருந்தார். "ஹலோ சுந்தரம்! உங்கள் வியாதியால் எங்கள் மருந்துகளையெல்லாம் நீங்கள் முறியடிப்பதாக டாக்டர் லிம் சொல்கிறாரே, உண்மைதானா?" என்று கேட்டுச் சிரித்தார்.

சுந்தரத்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. "சாகப் போகிறவனை ஒரு வீரனாக்கப் பார்க்கிறீர்கள்" என்றார்.

டாக்டர் லிம் பேசினார். "சுந்தரம், டாக்டர் ராம்லி உங்கள் மருத்துவ வரலாற்றை எல்லாம் பார்த்து விட்டார். மேலும் சில சோதனைகள் மேற்கொள்ளவிருக்கிறார். ரத்த சோதனையும் பயோப்சியும் செய்வார். உங்கள் மருந்துகளை ரத்துச் செய்து விட்டேன். அடுத்த திங்கள் கிழமை நீங்கள் வரும் போது டாக்டர் ராம்லி பரிசோதனைகள் முடித்து புதிய சிகிச்சை ஆரம்பிப்பார்."

டாக்டர் ராம்லி முதன் முறையாகப் பேசினார். "சில புதிய மருந்துகள் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளன. அமெரிக்காவில் இப்போதுதான் இவற்றைப் பயன் படுத்த அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் மலேசியாவில் சோதனை முறையில் இவற்றைப் பயன் படுத்த நான் தனி அனுமதி வாங்கியிருக்கிறேன். அந்த உண்மையை உங்களிடம் நான் தெரிவிக்க வேண்டியது கடமை" என்றார். ஏக அமெரிக்க வாடையுடன் ஆங்கிலம் பேசினார். அவர் குரல் கொஞ்சம் முரட்டுத் தனமாகவும் இருந்தது.

மதர் மேகி குறுக்கிட்டார். "உண்மையில் மலேசியாவில் இந்த மருந்தைப் பெறப் போகும் முதல் புற்று நோய் நோயாளி நீங்கள்தான். ஆகவே நீங்கள் குணமடைவது அல்லது குணமடையாமல் இருப்பது என்பது இந்த மருந்தின் வெற்றி தோல்விக்கு ஒரு சோதனையாக அமையும். அதனால்தான் உங்கள் முன்னேற்றத்தை அணுக்கமாகக் கவனித்து மற்ற நோயாளிகளுக்கு இதை அறிவிக்கும் பணியை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த டாக்டர்களுடன் நானும் இங்கிருக்கிறேன்!" என்றார்.

சுந்தரத்திற்கு என்ன சொல்வது என்று தோன்றவில்லை. அன்னையே, நான் முழுகிக் கொண்டிருக்கிறேன். என்னைக் கரையேற்ற நீங்கள் வீசும் கயிறு கந்தலாய் இருந்தால் என்ன, பொன்னிழையால் செய்திருந்தால் என்ன? எனக்கு அவற்றின் வித்தியாசம் தெரியாது. எதுவாக இருந்தாலும் நான் பிடித்துக் கொள்ளுவேன்.

"மதர் மேகி. நான் தயார். இந்த நோய் என்னை உருக்குகின்றது. அதிலிருந்து என்னை மீட்க நீங்கள் முடிவு செய்யும் எந்த மருந்துக்கும் எந்த சோதனைக்கும் நான் தயார். நான் பிழைத்தால் ஹீரோ. பிழைக்காவிட்டால் தியாகி. இரண்டு வேஷங்களும் எனக்குச் சம்மதம்தான்" என்றார்.

"பலே, பலே! சரியாகச் சொன்னீர்கள்" என்றார் மதர் மேகி.

டாக்டர் ராம்லி சுந்தரத்தின் ஃபைலைப் பார்த்தவாறு பல கேள்விகள் கேட்டுக் குறித்துக் கொண்டார். பெரும்பாலும் இப்போது சாப்பிடும் மருந்தின் பக்க விளைவுகளைப் பற்றியே அவை இருந்தன.

பின்னர் படுக்கையில் படுக்க வைத்து உடம்பின் பல பாகங்களையும் அழுத்திப் பார்த்தார். வலிகளைக் குறித்துக் கொண்டார். வாயைத் திறந்து கண்களைப் பிதுக்கி வயிற்றைத் தட்டிப் பல குறிப்புகளை எழுதினார். டாக்டர் லிம்மும் அவரும் மருத்துவ மொழியில் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

அதன் பின் எக்ஸ்ரே அறைக்கு அழைத்துச் சென்று டெக்னீஷியனிடம் சொல்லிப் பல எக்ஸ்ரேக்களை எடுக்க வைத்தார் டாக்டர் ராம்லி.

முடிந்தவுடன் ஓர் ஊசியுடன் அறைக்குள் வந்தார். தோள்பட்டையில் கிருமிநாசினி தடவி மென்மையாகக் குத்தி மருந்தை மெதுவாகப் பாய்ச்சிய பின் ஊசியை உருவித் துடைத்து விட்டார்.

"இது என்ன மருந்து?" சுந்தரம் சந்தேகத்துடன் கேட்டார்.

"புதிய மருந்து. முன்பு சாப்பிட்ட மருந்துகளால் உங்களுக்கு ஏற்படும் குமட்டலையும் வயிற்றுப் பிரட்டலையும் தலை மயக்கத்தையும் இது குறைக்கும் சக்தியுள்ளது. நீங்கள் வீடு திரும்பலாம். இனி திங்கள் கிழமை வாருங்கள். வீட்டில் மீதியுள்ள எந்த மருந்தையும் இனி சாப்பிட வேண்டாம். திங்கள் கிழமை புதிய சிகிச்சை பற்றி உங்களுக்கு விளக்குகிறேன்" என்றார். அந்தக் குரலில் இருந்த கண்டிப்பு அவர் பேச்சைக் கட்டளையாக்கிற்று.

கதவு வரை போய் அதைத் திறக்கப் போன டாக்டர் திரும்பிச் சுந்தரத்தைப் பார்த்தார். "உங்களுக்கு ஞாபகப் படுத்த வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்" என்றார்.

"நீங்கள் ஞாபகப் படுத்த வேண்டியதில்லை. திங்கள் கிழமை தவறாமல் வந்து விடுவேன். அதைத் தவிர இந்த உலகத்தில் எனக்கு இப்போது வேறு முக்கியமான வேலைகள் ஏதுமில்லை" என்றார் சுந்தரம். இந்த டாக்டரிடம் கொஞ்சம் வேடிக்கை பேசி அவரது இறுக்கத்தைத் தளர்த்த வேண்டும் என்று நினைத்தார்.

"நான் சொல்லியது அதுவல்ல. நான் யார் என்பதை உங்களுக்கு ஞாபகப் படுத்த வேண்டும். அது என் கடமை"

"நீங்கள் டாக்டர் ராம்லி..."

"ஆமாம். டாக்டர் ராம்லி பின் டத்தோ யூசுப். உங்கள் முன்னாள் மாணவன். நினைத்துப் பாருங்கள்"

கதவை மூடிப் போய்விட்டார்.

ராம்லியா? தான் கட்டொழுங்கு ஆசிரியராக இருந்த போது தன்னை இக்கட்டில் மாட்டிவிட்ட ராம்லியா? கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையில் உருப்பட மாட்டான் என்றும், எதிர்காலத்தில் கயவனாகப் போவான் என்றும் தான் கணித்து வைத்திருந்த அந்த விஷமி ராம்லியா?

என்ன நினைப்பதென்று தெரியவில்லை. அதனால்தான் தன்னிடம் இப்படிக் கடுமையாக நடந்து கொள்கிறாரா? நெஞ்சில் இன்னும் வஞ்சம் வைத்துக் கொண்டிருக்கிறாரா? அவரிடம் இப்போது வசமாக மாட்டிக் கொண்டேனா?

ஊசி போட்ட இடத்தைப் பார்த்தார் சுந்தரம். இலேசான எரிச்சல் ஆரம்பித்திருந்தது.


*** *** ***

"புதுசா ஒரு டாக்டர் வந்திருக்காரு ராமா!" ராமாவுடன் காரில் திரும்பும் போது சுந்தரம் சொன்னார்.

"அப்படியா! வௌிநாட்டுக்காரரா? புற்று நோய் நிபுணரா?" என்று கேட்டார் ராமா.

"மலேசியர்தான். மலாய்க்காரர். ஆராய்ச்சியாளர். அமெரிக்காவில ஆராய்ச்சிகள் முடிச்சி வந்திருக்காராம். புதுசா மருந்துகள் கொண்டாந்திருக்கிறாராம்"

"அடடே! அப்ப உன் வியாதி சீக்கிரம் குணமாயிருமா?"

யோசித்தார். "தெரியில. அடுத்த வாரம் வரைக்கும் பொறுத்திருந்து பார்க்கணும். ஆனா, டாக்டரப் பார்த்தா பயமாயிருக்கு ராமா!"

"பயமா இருக்கா? ஏன்?"

"டாக்டர் யாருன்னு தெரிஞ்சா நீ கூட பயப்படுவ"

ராமா வியப்பாகப் பார்த்தார். "என்ன சொல்ற சுந்தரம்?"

"டாக்டர் வேற யாருமில்ல. ராம்லி. டத்தோ யூசுப்போட மகன். ஃப்ரீ ஸ்கூல் பழைய மாணவர்"

"ராம்லியா? ஒரு பொண்ண கெடுக்கப் பாத்து உன்ன ஆபத்தில மாட்டி வச்சான, அந்த ராம்லியா?"

"அவனேதான்"

ராமா மௌனமானார். கொஞ்ச நேரம் இருந்து பேசினார். "அதுதான் பயமாயிருக்குன்னு சொல்றியா? பழசயெல்லாம் இன்னும் ஞாபகம் வச்சிருப்பார்னு சொல்றியா?"

"அப்படித்தான் தெரியிது ராமா! என்னோட ஃபைலைப் பார்த்து நான் யார்னு தெரிஞ்சிக்கிட்டும் எங்கிட்ட சுமுகமா பேசல. தன்ன கடைசி நேரம் வரைக்கும் அடையாளம் காட்டிக்கில. மொகத்தை இறுக்கமா வச்சிக்கிட்டு மொரட்டுத் தனமா பேசிறாரு. கடைசியா எல்லாம் முடிஞ்சப்பறம்தான் "நான் யாருன்னு தெரியுதா"ன்னு ஒரு மிடுக்கா கேட்டுட்டுப் போறாரு."

ராமா யோசித்தார். "சேச்சே, நீ நினைக்கிறது சரியில்ல சுந்தரம். இளவயதில எப்படி இருந்தாலும் இத்தனை தூரம் படிச்சி முன்னேறி ஒரு டாக்டராகி ஆராய்ச்சியாளராகி அறிவாளியா இருக்கிற ஒருத்தரோட மனசில பழைய அர்த்தமில்லாத வெறுப்புகள் இருக்க முடியாது. ஒரு டாக்டரோட பயிற்சி அதுக்கு இடங்கொடுக்காது."

"எத்தனை டாக்டர்கள் அயோக்கியர்களா இருக்காங்கன்னு தெரியுமா ராமா? மனித உணர்ச்சிகளை வெல்றதுக்கு டாக்டர்கள் ஒண்ணும் துறவிகள் இல்லியே!"

"இல்ல சுந்தரம். அப்படி நெனைக்காதே! அப்படியே ராம்லி உன்னப் பழி தீர்க்கணும்னு நெனைச்சாலும் நீ அவர்கிட்ட பேஷன்டா இருக்கிற நேரத்தில உன் பலவீனத்தப் பயன் படுத்தி அப்படிச் செய்யமாட்டார். மருத்துவ நெறி அதுக்கு இடங்கொடுக்காது!"

"அப்படின்னா என்ன பூரணமா சுகப் படுத்தி அப்புறமாதான் கொல்வாருன்னு சொல்றியா?"

ராமா பெரு மூச்சு விட்டார். "ஏன் இப்படி வக்கிரமா யோசிக்கிறியோ தெரியில. உனக்கு நம்பிக்கையூட்ட என்னால முடியாது" என்றார்.

ஊசி போட்ட இடத்தில் இன்னமும் எரிச்சல் இருந்தது. என்ன விஷத்தை என் உடலுள் ஏற்றினான்? மதர் மேகியிடமும் டாக்டர் லிம்மிடமும் பேசி இந்தப் புதிய டாக்டரும் புதிய சிகிச்சையும் எனக்கு சம்மதமில்லை என்று சொல்லி டாக்டர் ராம்லியிடமிருந்து விடுபட வேண்டும் என சுந்தரம் நினைத்துக் கொண்டார்.

ஆனால் வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் நெஞ்சுக் குமட்டலும் வயிற்றுப் புரட்டலும் முற்றாக நின்றிருந்தன. மூளை தௌிவாகி தலை கனமற்றிருந்தது. முதன் முறையாக வயிறு பசிக்கக் கூடச் செய்தது. வீட்டுக்குப் போனதும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. பல வாரங்களுக்குப் பிறகு உண்மையிலேயே பசியெடுத்து ஆகாரத்தின் மீது வெறுப்பு வராமல் ஆசை வந்திருப்பதில் மகிழ்ச்சி ஏற்பட்டது.

அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. வீடு சேர்ந்ததும் தலையை மீண்டும் சுற்ற வைக்கும் செய்தி காத்திருந்தது.

*** *** ***

பகவான் ஸரீ இராமகிருஷ்ணர் உபதேசம்; பக்கம் 266; பகவான் நோய்வாய்ப்பட்டுள்ள தமது நண்பர் கெஷாப் சந்திர சென்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார்:

"காலைப் பனி நீரை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தோட்டக்காரன் ரோஜாச் செடியைச் சுற்றி வேர் வரை மண்ணைத் தோண்டி எடுத்து விடுகிறான். அந்தப் பனி ஈரத்தை வாங்கிக் கொண்டு அந்தச் செடி இன்னும் நன்றாகத் தழைக்கிறது. அதனால்தான் உன்னையும் கடவுள் வேர் வரை பிடித்து உலுக்குகிறார் போலும். நீ குணமானதும் பிரம்மாண்டமான காரியங்களைச் சாதிக்கப் போகிறாய் போலும்.

"நீ நோய் வாய்பட்டிருக்கிறாய் என்று கேள்விப் படும் போதெல்லாம் என் மனநிலை தடுமாறுகிறது. உன் நோயைப் பற்றிக் கேள்விப் பட்டதும் அன்னையிடம் சென்று விடியற்காலை வேளைகளில் அழுதிருக்கிறேன். "அன்னையே! கெஷாப்பிற்கு ஏதாவது நடந்து விட்டால் நான் கல்கத்தாவில் யாருடன் பேசுவேன்?" என்று கேட்டிருக்கிறேன். கல்கத்தா வந்தடைந்ததும் அன்னைக்கு பழங்களும் பலகாரங்களும் படைத்து உன் நலத்துக்காக வேண்டியிருக்கிறேன்!"

அந்தத் தடிப்பான ஆங்கில புத்தகத்தை மெதுவாகக் கீழே வைத்தார் சுந்தரம். போனவாரம்தான் ராமா இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். The Gospel of Ramakrishna. "இராம கிருஷ்ணா ஆசிரமத்திற்குப் போயிருந்த போது இதைப் பார்த்தேன். உனக்காகத்தான் வாங்கினேன். உனக்குத்தான் இப்போ உக்காந்து படிக்க நிறைய நேரம் இருக்கே! படிச்சுப்பார்!" என்றார்.

பரமா வரவேற்பறையில் சோபாவிலேயே உறங்கிக் கொண்டிருந்தான். அவன் மூச்சு மெதுவாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. டாக்டர் அவனுக்கு வலி நிவாரணி கொடுத்திருந்தார். அது அவனை மயக்கிப் போட்டிருந்தது.

அவனைப் பற்றி செய்தி கேள்விப்பட்டுத் தான் வாயடைத்துப் போனபிறகு, மனத்தில் சூறாவளி அடித்துத் தணிந்த பிறகு, ஏனோ இந்தப் புத்தகத்தில் அமைதி தேடவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

மத்தியானம் மௌன்ட் மிரியத்திலிருந்து திரும்பியதும் ராமாவுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டுக் கொஞ்சம் உற்சாகமாகவே நடந்து வீட்டுக்குள் நுழைந்தார் சுந்தரம். ஜானகியும் அன்னமும் ஹாலிலேயே அவருக்காகக் காத்திருந்தது போல் இருந்தார்கள்.

"ஜானகி! ஒரு புது டாக்டர் அருமையான மருந்து கொடுத்தார். தலை சுத்தெல்லாம் டக்குன்னு நின்னு போய் வயிறே பசிக்க ஆரம்பிச்சாச்சி. சாப்பிட ஏதாவது இருக்கா?" என்று கேட்டார்.

ஜானகி சரேலென்று எழுந்து உள்ளே போய் அவருக்குச் சாப்பாடு எடுத்து வைத்தாள். சாம்பார் ரசத்துடன் சாப்பிட்டார். கொஞ்சமாகத்தான் சாப்பிட முடிந்தது என்றாலும் ருசித்துச் சாப்பிட்டார். சாப்பிடும்போதே இந்த டாக்டர் ராம்லியின் கதையையும் சொல்ல மறக்கவில்லை. ஜானகி பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். "ஊம்" கூடப் போடவில்லை.

"என்ன நான் நல்ல நல்ல கதை சொல்லிக்கிட்டிருக்கேன் நீ பாட்டுக்கு கவனிக்காம இருக்க?" என்று கேட்டார்.

"கவனிச்சிக்கிட்டுத்தாங்க இருக்கேன். இப்படி அதிசயமா நல்லா சாப்பிட்றிங்களே, அதுவே சந்தோஷந்தான்!" என்றாள் உற்சாகமில்லாமல்.

"பரமா எங்க?"

"தூங்கிறான்"

திடீரென்று நினைத்துக் கொண்டு கேட்டார். "ஆமா ஆஸ்பத்திரிக்குப் போனியே, பரமாவப் பத்தி டாக்டர் என்ன சொன்னார்?"

ஜானகி எழுந்து நின்றாள். "சாப்பிட்டு வாங்க, சொல்றேன்."

சரேலென்று ஹாலுக்குப் போய்விட்டாள். அவருக்கு அப்புறம் சாப்பாடு இறங்கவில்லை. கைகழுவி வௌியே வந்தார்.

"என்ன ஜானகி பதில் சொல்லாம வௌிய வந்துட்ட?"

ஜானகி அன்னத்தை ஒட்டிக்கொண்டு சூம்பிப் போய் உட்கார்ந்திருந்தாள். அன்னத்தின் முகமும் கருத்திருந்தது.

"சொல்லு ஜானகி!"

ஜானகி விசும்பினாள். அன்னத்தின் தோளில் தலை சாய்த்தாள். தேம்பி அழுதாள்.

"என்ன அக்கா, என்ன விஷயம்? ரெண்டு பேரும் இப்படி இருக்கிங்க?" வயிறும் நெஞ்சும் மீண்டும் கலவரமடைந்தன. கால் பலவீனமானது. உட்கார்ந்து கொண்டார்.

அன்னம் பேசினாள். "பரமாவோட ரத்தப் பரிசோதனை முடிவு வந்திருக்கு தம்பி. இன்னும் சில பரிசோதனைகள் பண்ணனுங்கிறாரு டாக்டர். ஆனா..."

"ஆனா...?"

"80, 90 சதவிகிதம் தௌிவாகத் தெரியுதுன்னு சொன்னார்."

"என்ன தௌிவாத் தெரியுது...?"

"பரமாவுக்கு லியுகேமியா தம்பி! இரத்தப் புற்று நோய்!"

நாற்காலியில் சாய்ந்தார். வயிறு புரண்டு அடங்கிற்று. செறிக்காத சோறும் ரசமும் சாம்பாரும் புளித்த குழம்பாகத் தொண்டைக் குழாய் வடூயே பீய்த்துக் கொண்டு ஏறி இறங்கி நெஞ்சை எரித்தன.

"நெஜமாவா அக்கா? நிச்சயமாவா?"

அன்னம் "ஆம்" என்று தலையாட்டினாள்.

'உண்மைதானா? சரியாகத் தெரிந்து கொண்டீர்களா? டாக்டர் தப்பு செய்து விட்டாரோ? இரத்தப் பரிசோதனையில் தவறு நடந்திருக்குமா?' இப்படி இன்னும் பல கேள்விகள் கேட்க நினைத்து கேட்காமல் சோர்ந்து போனார். இவை அலுக்க வைக்கும் கேள்விகள். மனத்தின் அலைச்சலை அதிகப் படுத்தும் கேள்விகள்.

இன்னொரு சோக நாடகம், இரண்டாம் காட்சியாக இன்றிரவு நடக்கிறது. பல தீய தெய்வங்கள் ஒன்று கூடி இந்த நாடகத்தை நடத்தி அனுபவிக்கின்றன. "ஒன்ஸ்மோர்" என்று கேட்டு மீண்டும் பார்த்து கைகொட்டி அனுபவிக்கின்றன. "ஐயோ பாவம்" என்று இச்சுக்கொட்டி ரசிக்கின்றன.

என்ன சொல்ல முடியும் ஜானகிக்கும் அக்காவுக்கும்? ஆறுதல் கூறத்தான் வேண்டும். எந்த வார்த்தைகளில் கூறுவது?

"பரவால்ல விட்டுத் தள்ளு ஜானகி! ஆறிலும் சாவு, நூறிலும் சாவு"

"அழாதே அக்கா! அழாதே ஜானகி! நான் இருக்கேன்!"

"தெய்வம் விட்டபடி நடக்கட்டும்"

"நான் முதல்ல போயிட்றேன் ஜானகி! இதையெல்லாம் பார்த்து சகிச்சிக்கிட்டு இருக்க முடியாது!"

"ஐயோ தெய்வமே! உனக்குக் கண்ணில்லையா?"

மனத்தில் நினைத்து நினைத்துப் பார்த்தார். எந்த வார்த்தைகள் இந்த சந்தர்ப்பத்திற்குச் சரியாக இருக்கும்? நெடு நேரம் யோசித்திருந்தார்.

பகல் நேரம் அப்படியே சோகத்தின் இறுக்கம் தளராமல் நகர்ந்தது. மாலை வந்தது. அப்போதுதான் இந்த இராமகிருஷ்ண போதனையைக் கையில் எடுத்தார்.

பக்கம் 267: பகவான் கூறுகிறார்:

"கடவுள் இரண்டு சந்தர்ப்பங்களில் சிரிக்கிறார். இரண்டு சகோதரர்கள் நிலத்தைப் பிரித்துக் கொள்ளும்போது, ஒரு கயிற்றைக் குறுக்கே போட்டுவிட்டு "இந்தப் பக்கம் என்னது, அந்தப் பக்கம் உன்னது" என்று சொல்லும்போது 'இந்த அண்டமே என்னுடையது. இதில் என்ன அந்தப் பக்கம் இந்தப் பக்கம்?' என்று சிரிக்கிறார்.

"கடவுள் மீண்டும் சிரிப்பது எப்போது என்றால் அழுது அரற்றும் ஒரு தாயைப் பார்த்து ஒரு மருத்துவர் "பயப்படாதே அம்மா! இந்தப் பிள்ளையை நான் குணப்படுத்துகிறேன்" என்று சொல்லும் போது. கடவுள் ஒரு பிள்ளையின் காலம் முடிந்து விட்டது என்று தீர்மானித்து விட்டாரானால் யாரும் அந்தப் பிள்ளையை மீட்க முடியாது என்று அந்த மருத்துவருக்குத் தெரியாதா?"

-----

அந்திம காலம் - 11


தட்டாம் பூச்சி ஒன்று சுற்றிச் சுற்றி பறந்த பின் ஒரு இலை மீது வந்து அமர்ந்தது. பரமா மூன்றாம் முறையாக பதுங்கிப் பதுங்கிப் போய்ப் பிடிக்க முயன்றான். ஆனால் ஐஸ்கிரீம் சாப்பிட்டதில் பிசுபிசுத்துள்ள அவன் விரல்கள் அதன் இறக்கை மீது மூடுகின்ற கடைசி தருணத்தில் அது சர்ரென்று பறந்து போய் இன்னொரு இலையில் உட்கார்ந்தது. அவன் கோபத்தில் ஒரு சுள்ளியைத் தூக்கி வீசினான். அது எங்கோ போய் விழ தட்டாம் பூச்சி அரண்டு போய் ஏரியை நோக்கிப் பறந்தது.

"பட்டுக் கருநீலப்புடவை" என பாரதியார் வருணித்தாரே, அப்படி பளபளத்துக் கிடந்தது அந்தத் தைப்பிங் ஏரி. அது ஓர் ஓய்வான சனிக்கிழமையின் மாலை நேரம். ஓய்வு தேடி வந்த ஏராளமான மக்கள் அந்த ஏரிப் பூங்கா முழுவதும் இருந்தாலும் சுந்தரம் உட்கார்ந்திருந்த இடத்தில் ஓர் ஏகாந்தம் இருந்தது. அந்த அகண்ட ஏரியின் இந்த மூலை தனக்கும் பரமாவுக்கும் மட்டும் என்று எல்லை வகுத்துக் கொண்டது போல ஜனநடமாட்டம் குறைந்த ஒரு மூலையில் ஒரு மரத்தினடியில் அவர் சென்று உட்கார்ந்திருந்தார். ஏரியை ஒட்டிச் செல்லும் சாலையிலிருந்து வரும் கார்கள், மோட்டார் சைக்கிள் ஒலிகள் செவியைத் தாக்கினாலும் இந்த ஏரியின் அமைதியில் அவை கரைந்தன.

"இத்தனை ஒலிகள் இங்கு வந்து உலவுகின்றனவே, இவற்றில் எது இந்த ஏரியின் மொழி?" என்று யோசித்துப் பார்த்தார். ஏரியின் நீர்ப்பரப்பினைப் பார்த்தார். இலேசான காற்றில் கொஞ்சம் சலசலத்ததைத் தவிர வேறு ஒலிகள் அந்த நீரிலிருந்து வரவில்லை. "ஏரியின் மொழி மௌனம்" என எண்ணிக் கொண்டார். அது பேசுவதில்லை. அது அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு ஒரு யோகியைப் போல இருக்கிறது.

லாருட் மலையின் நிழலில் அந்தத் தைப்பிங் ஏரி பரந்திருந்தது. அந்த மலைத் தொடரில்தான் உல்லாசத் தளமான மேக்ஸ்வெல் மலை இருக்கிறது. ஒருகாலத்தில் ஈயச்சுரங்கமாக இருந்து பின் ஏரியாக மாறியிருந்தது அந்த நீர்ப்பரப்பு.

அன்னம் பல ஆண்டுகளுக்கு முன் தைப்பிங் வர முடிவு செய்த போது இராம கிருஷ்ணன் மாமா இந்த ஏரிக்குப் பக்கமாக உள்ள அழகிய வீடமைப்புப் பகுதியான இனிய தமிழ்ப் பெயரைக்கொண்ட 'தாமான் இளையதம்'யில்' இந்த வீட்டை வாங்கிக் கொடுத்திருந்தார். தைப்பிங் ஏரிப் பூங்காவை ஒட்டி ஓடுகிற இந்த சாலையிலிருந்து ஜாலான் கம்போங் பெர்ச் வழியாக மூன்று நிமிடம் நடந்தால் அந்த தாமான் இளையதம்பி கண்ணுக்குத் தெரிந்து விடும். மரங்கள் அடர்ந்த சோலை அந்தப் பகுதி. அந்தத் திருப்பு முனையில் ஒரு சிறிய இந்துக் கோயிலும் உருவாகியிருந்தது.

தைப்பிங் வரும்போதெல்லாம் அக்காவின் வீட்டிலிருந்து மாலை வேளைகளில் அவர் நடந்தே இந்த ஏரிக்கு வந்து விடுவார். குழந்தைகளோடும் ஜானகியோடும் வந்து உலவிக் குலவிய நாட்கள் பல.

அப்போது அக்கா சேர்த்து வைத்திருந்த பணம் வைப்புத் தொகைக்கு மட்டும்தான் சரியாக இருந்தது. இப்போது கடன் முழுவதையும் கட்டி அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்கிறாள். தைப்பிங்கிலேயே இன்னொரு இடத்தில் இன்னொரு சிறிய வீட்டையும் வாங்கி வாடகைக்கு விட்டுத் தன் பென்ஷன், அந்த வாடகை, டியூஷன் வருமானம் என மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

பரமாவும் இப்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறான். நேற்றுப் புறப்பட்டு தைப்பிங் வந்ததுமே அவனுக்கு ஒரு உற்சாகம் வந்து விட்டது. இருமிக்கொண்டும் பலவீனமாகவும் இருந்தாலும் அவன் மனம் மாற்றத்தின் காரணமாக மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

ஆனால் சுந்தரத்துக்கு அப்படியில்லை. டாக்டர் ராம்லியின் மருந்து கொடுத்த ஒரு சில மணி நேர நிவாரணத்துக்குப் பிறகு பரமா பற்றிய செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சியில் அவர் மனம் பயங்கர இருளில் ஆழ்ந்துவிட்டது. அந்த இருளில் உடம்பின் உபாதைகளும் அதிகமாயின. வாந்தியும் வயிற்றுப் புரட்டலும் அதிகமாயின. வழக்கமான தலைவலி பயங்கரமாக வந்து தாக்கியது. இரவில் தூக்கத்தை எதிர்பார்த்து தலை சுழலும் மயக்தத்திலேயே கழித்தார்.

பரமாவின் செய்திக்குப் பிறகு அன்றும் அடுத்த நாளும் தைப்பிங் பிரயாணம் பற்றி யாருக்கும் பேசத் தோன்றவில்லை. ஆனால் இரவில் அன்னம் தீர்மானமாகச் சொன்னாள்: "தம்பி, சொன்ன மாதிரி நாளைக்கு தைப்பிங் போறோம்."

சுந்தரம் தயங்கினார்: "என்ன அக்கா, இந்த நெலமையில...!"

"எந்த நெலமையில...? இப்படி நடந்திடிச்சின்னு உக்காந்து அழுதுக்கிட்டே இருக்கிறதா? வேணாம். கண்டிப்பா போவோம். பரமாவோட மருத்துவ சோதனை கடைசி முடிவு திங்கள் கிழமைதான் தெரியும். உனக்கும் திங்கள் கிழமை வரையில சிகிச்சை ஒண்ணுமில்ல. அப்புறம் என்ன?"

சுந்தரத்திற்கு அது சரியெனப் பட்டது. எல்லோரும் புறப்பட்டு வந்து விட்டார்கள்.

வந்த மறுநாளான இன்று மாலை தமக்குக் கொஞ்சம் தனிமை வேண்டும் என ஏரிக்குப் புறப்பட்டார். அனைவரும் தடுத்தார்கள். "வீட்டில இருந்து ஓய்வெடுக்கிறதுக்கு பதிலா ஏங்க போய் அலையிறிங்க?" என்று மறுத்தாள் ஜானகி.

"இது அலைச்சல் இல்ல ஜானகி! நான் தனிமையில சில விஷயங்கள யோசிக்க வேண்டியிருக்கு! என்னப் போகவிடு!" என்றார்.

ஜானகி கொஞ்சம் பயத்தோடு பார்த்தாள். "அப்படின்னா இருங்க! நானும் வாறேன்" என்றாள்.

சுந்தரம் அவளைப் பார்த்துச் சிரித்தார். "ஏன் ஜானகி, நான் தைப்பிங் கொளத்தில விழுந்து தற்கொலை பண்ணிக்குவேன்னு பயப்பட்றியா? சும்மா இரு. தனிமைன்னு சொன்னேன்ல. நீயும் கூட வந்தா அது தனிமையா இருக்காது. ஒரு மணி நேரம் உக்காந்திருந்து வந்திருவேன்" என்று புறப்பட்டார்.

ஆனால் பரமா விடவில்லை. "தாத்தா டேக் மீ என்ட் கோ!" என்றான்.

"ஐயோ, வேணாங்க! உங்களப் போட்டு அலைக்கழிச்சிருவான்! அவனுக்கும் உடம்பு சரியில்ல" என்றாள் ஜானகி.

ஆனால் பரமாவின் துணை அப்போது தனக்கிருந்தால் நல்லது என அவருக்குத் தோன்றியது. இருவருமே நாள் குறிக்கப்பட்டுவிட்ட மரண தண்டனைக் கைதிகள். ஒருவருக்கொருவர் துணையாக இருக்கலாம்.

அவனையும் அழைத்துக் கொண்டு மெதுவாக நடந்து ஏரிக்கரையை வந்தடைந்தார். தயக்கத்துடன்தான் அனுப்பி வைத்தாள் ஜானகி.

ஏரியை ஒட்டிய சாலைக்கு அப்பால் பிரம்மாண்டமாக வளர்ந்திருந்த மழை மரங்கள் தங்கள் கிளைகளைச் சாலையைத் தாண்டி விரித்து ஏரியின் நீரைத் தொட முயன்று கொண்டிருந்தன. அந்தக் கிளைகள் சாலையைப் பந்தலாக மூடியிருந்தன. வாகனங்களும் பாதசாரிகளும் வெயில் படாமல் உல்லாசமாகப் போய் வர அந்த இயற்கைப் பந்தல் உதவியது.

அந்த மரங்களைப் பார்த்தால் பல கைகளைக் கொண்ட ஒரு அழகிய நாட்டியக்காரி அபிநயித்து நிற்பது போல அவருக்குத் தோன்றியது. அந்த மரத்தின் கிளை நீண்டு வளைந்து தண்ணீரைத் தொட முயன்ற காட்சி மைக்கலாஞ்சலோவின் வத்திக்கன் தேவாலயக் கூரை ஓவியத்தில் கடவுளின் விரல் மனிதனை நோக்கி நீண்டு தொட்டும் தொடாமல் நிற்கிறதே அதை அவருக்கு நினைவு படுத்தியது.

மரம் முழுவதிலும் காளான்கள் பூத்திருந்தன. ஏதோ ஒட்டுண்ணிச் செடிகள் பொத்தான் பொத்தானாகப் பூத்து பற்றிக்கொண்டு சரம் சரமாகத் தொங்கின. கிளைகளின் முடிவில் குட்டி உதய சூரியன்களாக ஆயிரம் பூக்கள். அந்தக் கிளைகள் தண்ணீரை அள்ள ஏந்திய கைகளாய் தொட்டும் தொடாமலும்....

எங்கும் உயிர் பூத்துக் குலுங்குகிறது. இதோ இந்தத் தட்டான் பூச்சிகளில்... இந்த நீர்ப்பரப்பில் நீந்தும் நீர்ச்சிலந்திகளில்... உள்ளே திரியும் மீன் குஞ்சுகளில்... தவளைச் சினைகளில்... எங்கும் உயிர் இருக்கிறது.

ஆனால் இதோ இங்கே ஓர் உயிருக்கு முடிவு நாள் நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிறது. பூக்கு முன்னே ஒரு பூவுக்கு கருகும் தண்டனை பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.

எனக்கும்தான் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நான் வாழ்ந்து சிலவற்றையெல்லாம் அனுபவித்துப் பார்த்துவிட்டேன். எனக்கு இது சாயுங்காலம். எனக்கு இது அந்தி. கொஞ்சம் சீக்கிரமாக இந்தப் பொழுது சாயவேண்டும் என்று இருக்கிறது. அது பரவாயில்லை.

ஆனால் இதோ இவனுக்கு இது விடிகாலைப் பொழுதல்லவா? கிழக்கு வெளுக்கும்போதே அஸ்தமனமா? அரும்பிலேயே கருகிப் போவதா?

இந்த ஏற்பாடு எனக்குப் புரியவில்லை. இறைவனா? இயற்கையா? ஏதோ ஒன்று ஒரு திட்டம் வைத்துக் கொண்டு இப்படிச் செயலாற்றுகிறது. இந்தத் திட்டத்தின் பின்னே வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏன் எனக்கு இந்தத் திடீர் நோயைக் கொடுக்க வேண்டும்? கொடுத்த பின் என் அந்திம காலத்தில் ஏன் இந்தச் சின்னப் பிள்ளையைக் கொண்டு வந்து என்னிடம் சேர்க்க வேண்டும்? சேர்த்த பின் ஏன் அவனுக்கும் நாள் நிர்ணயிக்க வேண்டும்? நாங்கள் இருவருமாக இணைந்து சென்று ஆற்ற வேண்டிய வேலைகள் சொர்க்கத்தில் காத்திருக்கின்றனவா? அல்லது நாங்கள் இருவரும் சென்ற பிறவியில் ஒரே மாதிரி குற்றம் செய்து இந்தத் தண்டனையைப் பெற்று வந்தோமா? தெரியவில்லை. புரியவில்லை.

பரமா சோர்ந்து போய் அவரை நோக்கி நடந்து வந்தான். "திஸ் பூச்சி இஸ் வெரி நோட்டி!" என்றான்.

"ஏன் பரமா? பூச்சி உன்ன என்ன பண்ணுது?" என்று கேட்டார்.

"ஐ வாண்ட் டு கேட்ச் ஹிம். பட் ஹீ பிளைஸ் எவே!" என்றான்.

"அந்தப் பூச்சிக்கு என்ன பேர் சொல்லு பாப்போம்?"

"ஐ டோன்ட் நோ" என்றான்.

"தட்டாம் பூச்சி! சொல்லு!"

"தட்டாம் பூச்சி!" என்று திரும்ப சொன்னான்.

"தட்டாம் பூச்சி, பறந்து போச்சி! சொல்லு பாப்போம்!"

"தட்டாம் பூச்சி, பறந்து போச்சி!" மழலையில் ஆனால் சுத்தமாக ஒப்புவித்தான்.

அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வளர்ப்பில் தமிழ் இருந்தால் எந்தக் குழந்தையால் தமிழ் பேச முடியாது. இவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்கிறான். ஒரு வெறுப்பும் இன்றிப் பேசுகிறான். குழந்தையின் மனத்தில் ஒரு மொடூ மீது வெறுப்பு எப்படி வரும்? பெற்றோரின் அசிரத்தைதான் இந்த மத்தியதர வர்க்கக் குடும்பங்களில் தமிழ் அடூந்து போவதன் காரணம் என நினைத்தார்.

இப்படிச் செய்தாலென்ன? எனக்கு மீதியிருக்கும் இந்தச் சில நாட்களில் - வாரங்களோ வருடங்களோ தெரியவில்லை - அவனுக்கும் எஞ்சியிருக்கும் இந்தச் சில நாட்களில் - அவையும் வாரங்களோ வருடங்களோ தெரியவில்லை - அவனுக்கு நல்ல தமிழை அக்கறையோடு சொல்லிக் கொடுத்தாலென்ன?

நோயெனும் தீயில் விட்டில் பூச்சிகள் போல அவர்கள் சிறகெரிந்து விழ மீதியிருக்கும் இந்தச் சில நாட்களில் தமிழைக் கற்பித்தலும் கற்றுக் கொள்ளுதலும்தான் அவர்கள் இருவருக்கும் வாழ்க்கை இலட்சியம் என்று விதிக்கப் பட்டிருப்பதாக அவருக்குத் திடீரெனத் தோன்றியது.

"பரமா! தாத்தா ஒனக்குத் தமிழ் சொல்லிக் குடுக்கிறேன். கத்துக்கிறியா?" என்று கேட்டார்.

"ஐ நோ ஹவ் டு ஸபீக் டமில்!" என்றான்.

வியந்தார். "எப்படித் தெரியும்?" என்று கேட்டார்.

"மை ஃபாதர் டோட் மீ!"

மேலும் வியந்தார். அந்த முரடனா? வாழ்க்கையில் உன்னதமான எதையும் அறிந்து கொள்ளும் திறமையற்ற அந்த அப்பனா தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறான்?

"சரி! என்ன சொல்லிக் குடுத்தார் உங்கப்பா?" என்று கேட்டார்.

"மை ஃபாதர் ஆல்வேய்ஸ் சேய்ஸ் "போடா மடையா!"

நினைத்தது சரியாக இருந்தது. தனது அநாகரிப் பழக்க வழக்கங்களைத்தான் இந்தப் பிள்ளைக்குக் கற்றுக் கொடுத்து வேடிக்கை பார்த்திருக்கிறான். சில குடும்பங்களில் தமிழை இந்த வேடிக்கை விளையாட்டுக்களுக்குத்தான் பயன் படுத்துகிறார்கள். சினிமாவில் வருகின்ற கொச்சைப் பேச்சுக்களை மனப்பாடம் செய்து பரிமாறிக் கொண்டு சிரித்து மகிழத்தான் பயன் படுத்துகிறார்கள்.

"அதெல்லாம் வேணாம் பரமா! நான் நல்ல தமிழ் சொல்லித் தாறேன். கத்துக்கிரியா?"

"யெஸ்" என்றான்.

"சரின்னு சொல்லு பாப்போம்!"

"சரி தாத்தா!" என்றான். தாத்தாவை அவனாகச் சேர்த்துக் கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.

"சரி. இப்ப உன் பேர எப்படிச் சொல்லுவ?

"மை நேம் இஸ் பிரேம்" என்றான்.

அதையே தமிழ்ல சொல்லு! என் பேர் பிரேம்!"

"என் பேர் பிரேம்!" அப்படியே திருப்பிச் சொன்னான்.

"பாட்டி எனக்குப் பசிக்கிது"

"பாட்டி எனக்குச் சாக்லேட் குடு!"

"தாத்தா எனக்குத் தூக்கம் வருது"

அவர் சொல்லச்சொல்ல எல்லாம் அழகாகத் திருப்பிச் சொன்னான்.

"இப்ப பரமா, கொஞ்சம் கஷ்டமானது சொல்றேன். கத்துக்கிறியா?" என்றார்.

"ஐ கேன்" என்றான்.

"முடியும்னு சொல்லு!"

"முடியும் தாத்தா!" மீண்டும் தாத்தா கொஞ்சலாய் வந்தது.

தயங்கி மெது மெதுவாக, சீர் சீராகச் சொன்னார்.

"அகர..."

"அகர..:"

"முதல..."

"முதல..."

"எழுத்"

"எழுத்"

"தெல்லாம்..."

"தெல்லாம்..."


"ஆதி"

"ஆதி"


"பகவன்"

"பகவன்"

"முதற்றே"

"முதறே.."

"இல்ல... முதற்றே..."

"முதற்றே"

"உலகு"

"உலகு"

எல்லாவற்றையும் அவன் கோர்த்து முழுமையாகச் சொன்ன போது அவருக்குக் கண்களில் நீர் சுரந்தது. அவன் பெற்றோரின் மத்திய தர வர்க்க விகாரங்களுக்குள் இவனை முற்றாக இழந்து விட்டேன் என்று எல்லாவற்றையும் கைகழுவிவிட்ட நிலையில் இப்படி ஒருநாள் இவன் வாயில் நான் திருக்குறள் கேட்கக் கொடுத்து வைத்திருக்கிறேனே என நினைத்துக் கொண்டார். "குழலினிது யாழினிது என்பர்" நினைவுக்கு வந்தது. அவனை அணைத்து முத்தம் கொடுத்தார்.

"பரமா! வீட்டுக்குப் போனதும் அன்னம் பாட்டி ஜானகிப் பாட்டி ரெண்டு பேருக்கும் சொல்லிக் காட்டிறியா என்று கேட்டார். இந்த சாதனையைத் தன் குடும்பத்துக்குப் பறைசாற்ற வேண்டும். இந்த வெற்றியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தக் கேடயத்தை உயர்த்திப் பிடித்து திடல் முழுக்கச் சுற்றி ஓடி வரவேண்டும்.

"சரி தாத்தா! "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு!" சொல்லிக் காட்டிச் சிரித்தான். "ழ" அழகாக வந்து விழுந்தது.

"சரி! வா வீட்டுக்குப் போவோம்" அவசரமாக எழுந்தார். எழுந்த வேகத்தில் தலை விர்ரென்று சுற்றியது. அந்த பிரம்மாண்டமான மழை மரத்தின் விரிந்த கிளைகள் ராட்டினக் குடை போல சுற்றின. அப்படியே தடுமாறி விழுந்தார்.

"தாத்தா! தாத்தா" என பரமா கத்தியது கேட்டது. 'ஐயோ இந்தக் குழந்தையை இப்படித் தனியாக விட்டுவிட்டுப் போகிறோமே' என்ற நினைப்பு அந்த நிலையிலும் அவரைத் தாக்கியது. அந்த நினைவோடு கண்களில் கரிய இருள் படர்ந்தது.


*** *** ***

"நான் அப்பவே சொன்னேன் தனியா போகாதீங்கன்னு! சொன்னா கேக்கிறிங்களா?" என்று ஜானகி அழுதாள்.

"சும்மா இரு ஜானகி! இப்ப என்ன நடந்து போச்சி? கொஞ்சம் அவசரமா எந்திரிச்சதில தலை சுத்தி மயக்கம் வந்திருச்சி! இது பெரிய விஷயமா? எல்லாருக்கும் நடக்கிறதுதானே!" என்றார்.

"இப்படியே நீங்க தண்ணிக்குள்ள விழுந்திருந்திங்கன்னா என்ன ஆயிருக்கும்?"

என்ன ஆகியிருக்கும்? உரிய நேரத்தில் ஆட்கள் வந்து தூக்காமல் இருந்தால் மூச்சுத் திணறி உயிர் போயிருக்கும். ஒன்றும் நட்டமில்லை. நோயில் அழுகிச் சாவதை விட இந்த இனிய ஏரியின் அரவணைப்பில் செத்து விடுவது எவ்வளவோ சுகம். எவ்வளவோ கௌரவம்.

பரமா "தாத்தா, தாத்தா" என்று அலறியதைக் கண்ட பக்கத்திலிருந்த இரண்டு மலாய்க்கார இளைஞர்கள் ஓடிவந்து அவரைத் தூக்கினார்கள். அவர்களில் ஒரு இளைஞனுக்கு முதலுதவி தெரிந்திருந்தது. இடுப்பில் சிலுவாரைத் தளர்த்தி விட்டு, கால்களைத் தூக்கி தலைக்கு ரத்தம் பாயப் பண்ணினான். மற்றவன் முகத்தில் கொஞ்சம் தண்ணீரைத் தௌிக்க அவர் கண்களுக்குள் ஒளி பூத்து ஓரிரு நிமிடங்களில் நினைவு திரும்பியது.

அவர் கண்ணைத் திறந்ததும் அந்த இளைஞன் தன் பக்கத்தில் வைத்திருந்த குளிர்பான டின்னை அவரிடம் நீட்டினான். அவர் வாங்கி ஆழப் பருகி காய்ந்திருந்த தொண்டையை நனைத்துக் கொண்டார். நன்றி சொன்னார். தனக்கு ஒன்றுமில்லை. சிறு மயக்கம்தான் என்றார். மருண்டு நின்ற பரமாவை அணைத்துக் கொண்டார்.

வீடு எங்கே என்று கேட்டறிந்து அவரைக் கைத் தாங்கலாகப் பிடித்து வீடு வரை கொண்டு வந்து சேர்த்து விட்டு அந்த இளைஞர்கள் விடை பெற்றுப் போனார்கள். அன்னம் அவர்களுக்கு பலமுறை நன்றி சொல்லி அனுப்பி வைத்தாள்.

ஜானகியின் அரற்றல் ஓயவில்லை. தான் தனியாக ஏரிக்குப் போனது தப்பு என்று சாதித்தாள். அவரால் அவளை எதிர்த்துப் பேச உடம்பில் சக்தியிருக்கவில்லை. இந்த நோய்க்கு பயந்து வீட்டுக்குள் அறைக்குள் படுக்கையில் சுருண்டு கிடந்து உலர்ந்த கீரைத் தண்டு போல வதங்கிப் போவதில் ஒரு பெருமையுமில்லை என்பதை அவளுக்கு அவரால் விளங்க வைக்க முடியவில்லை. அவளுடைய அணைப்பு அன்பு அணைப்பே ஆனாலும் அதற்குள் கட்டுண்டு தன் நடமாட்டச் சுதந்திரத்தை விட்டுக் கொடுத்து விடுவதில் கௌரவமில்லை எனத் தனக்குள் எண்ணிக் கொண்டார்.

இந்தக் கலவரத்தில் தான் முதலில் செய்ய வேண்டும் என எண்ணிய காரியம் மறந்தே போய்விட்டது. நினைவு வந்தவுடன் சொன்னார்:

"போதும் ஜானகி. இப்ப இதக் கேளு. அக்கா நீயும் வா! இதக் கேளு!" என்றார்.

அவர்கள் இருவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்ட பிறகு பரமாவை நோக்கிச் சொன்னார்:

"பரமா, எங்கே நான் சொல்லிக் குடுத்தத பாட்டிக்குச் சொல்லிக் காட்டு பாக்கலாம்!" என்றார்.

"பாட்டி எனக்கு சாக்லேட் குடு" என்றான் பரமா.

சிரித்தார். "அது இல்ல கண்ணு! திருக்குறள். "அகர முதல!" என அடி எடுத்துக் கொடுத்தார்.

கொஞ்சம் தயங்கித் தயங்கி ஒப்புவித்தான்: "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு!"

அன்னம் கை தட்டினாள். "அடேயப்பா! தமிழே பேசத் தெரியாத பிள்ள ஒரு மணி நேரத்தில திருக்குறளே ஒப்புவிக்குதே!" என்றாள்.

"எல்லாம் வளர்ப்பிலதான் இருக்கு அக்கா! பிள்ளைகள் பச்சைக் கொடிகள் மாதிரி. நாம் எப்படிப்பட்ட பந்தல் போட்டுப் படர விட்றோம்கிறதப் பொறுத்துத்தான் அவங்க வளர்ரதும் படர்ரதும் அமையும்!" என்றார்.

ஜானகி அவனை அணைத்து உச்சி மோந்தாள். தொடர்ந்து அவள் முகம் சூம்பியது. கண்களிலிருந்து கண்ணீர் கசியத் துடைத்து விட்டுக் கொண்டாள்.

"பாட்டி! ஐ ஏம் டயர்ட்!" என்றான் பரமா.

"வா கண்ணு! ஒடம்ப தொடச்சிட்டு சாப்பிட்டிட்டு படுக்கலாம்!" என்றாள்.

"ஐ டோன்ட் வான்ட் டு ஈட்!" என்றான். அவள் அவனைக் கையோடு குளியலறைக்கு அழைத்துச் சென்றாள்.

சுந்தரம் பெருமூச்சு விட்டார். "இந்தக் குழந்தய நம்மோடயே விட்டிருந்தா எப்படியோ வளர்த்து எடுத்திருக்கலாம். ஒரு பண்பில்லாத அப்பன், அக்கறையில்லாத தாய் இவங்க கையில இருந்து இப்ப எல்லாம் முடியப் போற காலத்தில இங்க வந்து சேந்திருக்கான் பாரு அக்கா!" என்றார்.

"என்ன பண்றது, தம்பி! அதனோட விதி அப்படி! " என்று மட்டும் சொன்னாள் அன்னம்.

டெலிபோன் அலறியது. எழுந்து சென்று எடுத்து "ஹலோ" என்றாள்.

எதிர்க் குரல் கேட்டு "ஆமா! அன்னம்தான் பேசிறது! ராதாவா?" என்றாள்.

"ஆமா ராதா இங்கதான் இருக்காங்க. பிரேம் இங்கதான் இருக்கான்! இதோ உங்கப்பாகிட்ட பேசு!" என்று போனை அவர் கையில் கொடுத்து "ராதா, லண்டன்ல இருந்து பேசுது!" என்றாள்.

கையில் வாங்கி "ஹலோ ராதா!" என்றார்.

"அப்பா! வீட்டுக்குப் போன் பண்ணினேன். பதில் இல்ல. ஒரு வேள அன்னம் அத்தை வீட்டுக்குத்தான் போயிருப்பீங்கன்னுதான் இங்க போன் பண்ணினேன்!" என்றாள்.

பரமாவின் நலம் பற்றி மீண்டும் மீண்டும் விசாரித்தாள். அவன் நினைவாகவே இருப்பதாகச் சொன்னாள். பரமாவைக் கூப்பிட்டாள். அவன் குளியலறையிலிருந்து பாதி ஈரத்தில் ஓடிவந்தான். இருமிக் கொண்டே போனை வாங்கினான்.

குழைந்து குழைந்து இருவரும் பேசினார்கள்.

"தாத்தா ஃபெல் டவுன் நியர் த லேக்!" என்றான். "ஐ எம் சிக்" என்று இருமிக் காட்டினான். "ஐ டோன்ட் வாண்ட் டு கோ வித் அப்பா!" என்றான். "வென் ஆர் யூ கமிங் பேக்?" என்று கேட்ட போது அவனுக்கு அழுகையே வந்து விட்டது.

சுந்தரம் போனை வாங்கிக் கொண்டார். இவளுக்கு உண்மையச் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என அவருக்குத் தோன்றியது. இவள் தாய். இவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

"ராதா! நான் சொல்றத அமைதியா கேளம்மா. பரமாவுக்கு கடுமையான நோய். இன்னும் சில சோதனைகள் பண்ணவேண்டியிருந்தாலும் பெரும்பாலும் உறுதியாயிடுச்சின்னு டாக்டர் சொல்லியிருக்காரு"

"என்னப்பா? என் டார்லிங்குக்கு என்ன? சீக்கிரம் சொல்லுங்க" என்று படபடத்தாள்.

"படபடக்காதேம்மா! படபடத்து அங்கிருந்த வாக்கில டெலிபோன்ல அழுது பிரயோஜனமில்ல! அமைதியா கேட்டுக்க!"

"சரி சொல்லுங்க!"

"பரமாவுக்கு லியுகேமியாவாம். கொஞ்சம் முத்திப்போன நெலமதான்னு டாக்டருங்க சொல்றாங்க."

"லியூகேமியாவா?" சொல் அவள் தொண்டையில் சிக்கிக் கொண்டது. "அப்பா! என்ன சொல்றிங்க? நல்லா இருந்த பிள்ளைக்கு எப்படி வரும்...?"

"நல்லா இருக்கிறதா நீ நெனைச்சா போதுமா அம்மா! உனக்கும் உன் புருஷனுக்கும் இடையில நடந்த சண்டையில குழந்தைக்கு உள்ளேயே வளர்ர நோய கவனிக்க நேரமில்லாம போச்சி...!"

விக்கினாள். டெலிபோன் அமைதியானது. அவரும் அமைதியாக இருந்தார். பின் பேசினாள்.

"உறுதியா அப்பா?"

மீண்டும் அதே கேள்விகள். அதே வழக்கமான சந்தேகங்கள். அப்படி இருக்க முடியாது என்ற பிடிவாதம்.

"இன்னும் ஒண்ணு ரெண்டு டெஸ்ட் இருக்கு, ஆனா, அப்படித்தாம்மா!"

"ரொம்ப வலியில இருக்கிறானாப்பா? இப்ப கூட நல்லாத்தானே பேசினான். கொஞ்சம் இருமினான். அவ்வளவுதான?"

"ரொம்ப சோர்ந்திருக்காம்மா. சாப்பாடு கொறஞ்சு போயி ரொம்ப மெலிஞ்சிருக்கான். உள்ளுக்குள்ள அவனுக்குள்ள வேதனைய சொல்லத் தெரியுமா பிள்ளைக்கு...?"

"அப்பா! நான் இப்பவே புறப்பட ஏற்பாடு பண்றேன். அவனுக்கு என்ன ட்ரிட்மன்ட் கொடுக்க முடியுமோ அத ஏற்பாடு பண்ணிடுங்க. பணம் நான் கொடுக்கிறேம்பா. அவனுக்காக இன்சூரன்ஸ்கூட எடுத்து வச்சிருக்கிறேன்"

"எங்களால முடிஞ்ச எல்லாம் செய்யிறோம்மா. நீ சீக்கிரமா புறப்பட்டு வா!" என்றார்.

"அப்பா! என் பிள்ளைய பாத்துக்குங்க! உங்களதான் மல போல நம்பியிருக்கேன்!" அழுதாள்.

'இந்த மலை உள்ளுக்குள் புரையோடித் தானும் சரிந்து விழக் காத்திருக்கும் அந்தக் கதை இப்போது உனக்கு வேண்டாம் என் அன்பு மகளே!' என மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

"அப்பா!" மீண்டும் விம்மினாள். "அப்பா! அவருக்கு, சிவமணிக்கு தெரியுமா?" என்று கேட்டாள்.

"இல்லம்மா! சொல்ற சந்தர்ப்பம் இன்னும் வரல. எங்களுக்கே ரெண்டு நாளைக்கு முந்திதான் தெரிஞ்சது. அதோட டாக்டர் வர்ர வாரம்தான் கடைசி சோதனைய உறுதிப் படுத்திறதா சொல்லியிருக்காரு. அதத் தெரிஞ்சிக்கிட்டு..."

"வேண்டாம்பா! சொல்லவே வேணாம். அந்த அரக்கனுக்கு சொல்ல வேணாம்!"

"ராதா! அது சரியில்லம்மா. உனக்கு அவன் அரக்கனா இருக்கலாம். ஆனா இந்தப் பிள்ளைக்கு தகப்பன் இல்லியா? எப்படிம்மா மறைக்க முடியும்?"

"அப்பா! அவன் கிட்ட சொல்லாதீங்க! என் பிள்ளய அவன் கிட்ட குடுத்திறாதீங்க! நான் வர்ர வரைக்கும் அவன் அங்கயே உங்ககிட்ட இருக்கட்டும். அவன பினாங்கிலேயே வச்சி சிகிச்சை பண்ணுங்க. எவ்வளவானாலும் நான் கொடுக்கிறேம்பா! நான் உங்களுக்குப் பணம் அனுப்பி வைக்கிறேம்பா!" என்று மீண்டும் பெரிதாக அழுதாள்.

"போதும் ராதா! அமைதியா இரு. எங்களால முடிஞ்சத செய்யிறோம்!" என்றார்.

மீண்டும் பரமாவை அழைத்துப் பேசினாள். அவன் ஏதேதோ பேசி "டோன்ட் கிரை அம்மா!" எனத் தானும் அழ ஆரம்பித்தான்.

சுந்தரம் அவனிடமிருந்து டெலிபோனை மெதுவாகப் பறித்து ராதாவுக்குச் சமாதானம் சொல்லி வைத்தார். ஜானகியை "பேசுகிறாயா" எனச் சைகையால் கேட்டபோது மாட்டேன் எனக் கண்டிப்பாகத் தலையாட்டி மறுத்துவிட்டாள்.

அன்று இரவு எவ்வளவு வற்புறுத்தியும் பரமா சாப்பிட மறுத்துவிட்டான். அன்னம் கொஞ்சம் இனிப்பான ஓட்ஸ் கலந்து தண்ணீராகக் கொடுத்ததை சிரமப்பட்டுக் குடித்தான். இருமிக் கொண்டே இருந்தான்.

முன்னிரவில் டெலிவிஷன் முன்னால் குடும்பம் முடங்கியிருந்த வேளையில் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த சுந்தரத்தின் மடியில் வந்து தலைவைத்துப் படுத்துக் கொண்டான். அவனைத் அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்தவாறிருந்தார் சுந்தரம். அரைத் தூக்கத்தில் இருந்தவன் திடீரென தலை தூக்கிக் கேட்டான்:

"அகர முதல எழுத்தெல்லாம்... தென் வாட் தாத்தா?"

"ஆதி பகவன் முதற்றே..."

"உலகு" என முடித்தான் பரமா. அவரைப் பார்த்துச் சிரித்தான். தலை சாய்த்துக் கொண்டான் தூங்கிப் போனான்.

அவன் பேச்சை மனதுக்குள் திரும்பத் திரும்ப அசை போட்டார். அந்த மழலையை எண்ணிப் பெருமைப் பட்டார். அவனுக்கு இந்தக் குறளைச் சொல்லிக் கொடுத்து விட்டதில் தான் ஏதோ மலையளவு சாதித்ததாக எண்ணிக் கொண்டார். அதைச் சரியாகப் பாடம் செய்து அவன் ஒப்புவித்துவிட்டதில் தன் நோய்த் துன்பங்கள் பாதி கரைந்து போனதாக அவருக்குத் தோன்றியது.

"சொல்லு மழலையிலே - கண்ணம்மா
துன்பங்கள் தீர்த்திடுவாய்
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கம் தவிர்த்திடுவாய்"

பரமாவின் தகப்பன் மூர்க்கமாக ஒரு திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதை அவர் அப்போது அறிந்திருக்க ஞாயமில்லைதான்.

----

அந்திம காலம் - 12

இரவெல்லாம் புரண்டு கிடந்து, விட்டுவிட்டுக் கண் விழித்திருந்தும் கூட நாலரை மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. ஜானகியும் இரவெல்லாம் புரண்டு கொண்டிருந்தாலும் அந்த அதிகாலையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். படுத்தவாறே ஜன்னல் பக்கம் தலை திருப்பிப் பார்த்தார். தூரத்து சாலை விளக்கின் மங்கிய மஞ்சள் வௌிச்சம் தவிர காலையின் அடையாளங்கள் எதுவும் தெரியவில்லை. மேற்கு நோக்கிய தன்னறைக்கு சூரிய வௌிச்சம் தாமதமாகத்தான் வரும் என்றாலும் சாதாரண நாட்களில் வானம் வெளுக்கப் போகும் அடையாளங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சில அதிகாலை வேளைகளில் வானம் தௌிவாக இருந்தால் மறையவிருக்கும் சந்திர ஒளி ஜன்னல் வழியே தெரியும். இளமையில் சீக்கிரம் விழிப்பு வந்து விட்டால் அந்த வௌிச்சம் தெரியும் போது படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னலருகே வந்து சந்திரனை உற்றுப் பார்க்காமல் இருந்ததில்லை. அப்போது அதில் இருக்கும் மயக்கம் - காதல் - சொல்லி விளக்க வைக்க முடியாததுதான். ஆனால் இப்போது அந்த ஒளியைப் பார்க்கும் போது இதயத்தின் ஒரு பக்கத்தில் அந்த மோகனம் புகையாகப் படர்ந்தாலும், மூளை குறுக்கிட்டு "இந்த ஒளி வெறும் பிரதிபலிப்புத்தான்; இது ஒரு செத்த, வறண்ட கோளம்" என்று சொல்லி அந்தப் புகையைக் கலைத்து வாழ்க்கையை வறட்சி ஆக்குகிறது.

படுக்கையை விட்டு மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். முன்பு இப்படி எழுந்து உட்கார்ந்ததும் உடம்பை முறித்து நரம்புகளைத் தளரப் படுத்தும் பழக்கம் இருந்தது. இப்போது முடியாது. உடம்பின் எந்தப் பாகத்தையும் யோசித்து அசைக்க வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் ஏதாவது ஒரு புண்பட்ட தசையில் வலி வெடித்து முகம் சுளித்துக் கழுத்து வலித்து அவதிப்பட வேண்டிவரும்.

ஞாயிறு முன்னிரவு வாக்கில் தைப்பிங்கிலிருந்து வீடு வந்து சேர்ந்த போது அனைவருமே களைத்துச் சோர்ந்திருந்தார்கள். பரமாவுக்கு உடம்பு அபாயகரமாகக் கொதித்துக் கொண்டிருந்தது. தைப்பிங் டாக்டர் ஒருவர் கொடுத்திருந்த தற்காலிக நிவாரணி மாத்திரைகளில் அவன் காய்ச்சல் போவதும் வருவதுமாக இருந்தது. முனகிக் கொண்டே இருந்தான். மறுநாள் காலையில் ஸ்பெஷலிஸ்ட் சென்டரில் அவனுக்கு டாக்டரைச் சந்திக்கும் முறை இருந்ததால் அன்றிரவு அவனுக்கு மருத்துவ உதவியை அவசரமாகத் தேடுவது தேவையில்லையென அனைவரும் பொறுத்திருந்தார்கள். அன்று இரவு அன்னம் அக்காள் அவனுடனேயே படுத்துக் கொண்டாள்.

வீட்டிலிருந்த இரண்டு ஆண் நோயாளிகளுக்கு இரண்டு பொறுப்பான பெண்மணிகளையும் இப்படி நியமித்துக் கொடுத்திருப்பது, ஆண்டவன் திருவிளையாடல்கள் என்று சொல்கிறார்களே, அவற்றில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என, வயிற்றில் வலி குறைந்து எண்ணங்கள் அலைய ஆரம்பித்திருந்த நேரத்தில் சுந்தரம் நினைத்துச் சிரித்துக் கொண்டார்.

அடிமேலடி எடுத்து வைத்து குளியலறை சென்று முகம் கழுவித் துடைத்து மெதுவாக சமயலறைக்குச் சென்றார். விளக்கைப் போட்டு மின்சாரக் கேத்தலில் தண்ணீர் பிடித்துக் கொதிக்க வைத்து ஒரு கப் காப்பி கலக்கிக் கொண்டார். ஆவி பறக்கும் காப்பியுடன் ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்தார்.

தான் தைப்பிங் போயிருந்த வெள்ளியும் சனியும் வீட்டுக்கு வந்திருந்த கடிதங்கள் பிரிக்கப் படாமல் கிடந்தன. காப்பியை இரண்டு மிடறுகள் உறிஞ்சி பக்கத்தில் வைத்து விட்டுக் கடிதங்களை எடுத்துக் உறையைப் பார்த்தார். பொருளகத்தில் இருந்து சில கடிதங்கள் வந்திருந்தன. தனது வைப்புத் தொகைகள் பழுத்து வட்டி சேர்க்கப் பட்டிருப்பதை அறிவிக்கும் கடிதங்களாக இருக்க வேண்டும். பிரிக்காமலேயே போட்டார்.

பினாங்கு நகராண்மைக் கழகத்திலிருந்து வந்த கடிதம் வீட்டு வரியாக இருக்க வேண்டும். மெதுவாகப் பிரிக்கலாம்.

வசந்தனுடைய கடிதம் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தது. போன ஆண்டு இறுதியில் அவன் தோல்வியடைந்த ஒரு பரிட்சைத் தாளுக்கு மறு அமர்வில் அவன் தேர்ச்சி அடைந்து விட்டதாகவும், புதிய ஆண்டுக்குப் பணம் கட்ட வேண்டும் என எழுதியிருந்தான்.

கட்டிவிடலாம். அவருடைய நிதி நிலைமை நன்றாக இருந்தது. போதுமான பணம் சேர்த்து வைத்திருந்தார். அன்னம் அக்காளைப் போலவே செலவைக் கட்டுப் படுத்தி வரவில் ஒரு பகுதியைச் சேமித்து சொத்தாகவும் வைப்புத் தொகையாகவும் வைத்திருந்தார். அப்படி இருந்ததால்தான் வசந்தனை அமெரிக்காவுக்குப் படிக்க அனுப்ப முடிந்தது. ராதாவுக்குச் செலவைப் பற்றிக் கவலைப் படாமல் கல்யாணம் செய்து வைக்க முடிந்தது.

அவருக்கு இப்போது வந்துள்ள நோய்க்குத் தானாக மருத்துவம் பார்த்துக் கொள்வதென்றால் அவருடைய சேமிப்பு பூராவும் கரைந்திருக்கும். ஆனால் அரசாங்க ஓய்வூதியம் பெறுபவராதலால் மருத்துவச் செலவை அனேகமாக அரசாங்கமே பூராவுமாக ஏற்றுக் கொண்டிருந்தது. அதை நினைத்து நன்றியுடனும் நிம்மதியாகவும் ஒரு பெருமூச்சு விட்டு, மீண்டும் காப்பியை எடுத்துப் பருகினார்.

கிரெடிட் கார்டு கம்பெனியிலிருந்து பில் வந்திருந்தது. அதிலும் கடன் ஒன்றுமில்லை. எல்லாம் கட்டி முடித்துவிட்டார். ஏதாவது ஆடம்பரப் பொருள்களை 'அதைவாங்கினால் இது இனாம்' என்ற ரீதியில் விளம்பரங்கள் அனுப்பியிருப்பார்கள். இந்தக் கார்டு நிறுவனத்துக்கு எழுதிக் கார்டை ரத்துச் செய்து தொலைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டார்.

Pemadam என்ற முத்திரையுடன் போதைப் பொருள் ஒழிப்பு சங்கத்திடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அந்த சங்கத்தில் அவர் நீண்ட நாள் உறுப்பினர். செயலவையிலும் பல காலம் இருந்திருக்கிறார். தலைமை ஆசிரியராக இருந்த போது மாணவர்கள் சம்பந்தப் பட்ட போதைப் பொருள் கருத்தரங்கங்களில் பல முறை ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வாசித்திருக்கிறார். பல அனைத்துலகக் கருத்தரங்கங்களில் மலேசியாவைப் பிரதிநிதித்துக் கலந்து கொண்டிருக்கிறார். ஓய்வு பெற்ற பின்னும் தொடர்ந்து அந்தக் கடமைகளை ஆற்றிக் கொண்டிருந்தார்.

கடிதத்தைப் பிரித்தார். இன்னும் மூன்று மாதங்களில் கனடாவில் நடைபெறவிருக்கும் "பள்ளிக்கூடங்களில் போதைப் பொருள்கள்" என்ற கருப்பொருளிலான மாநாடு பற்றிய விவரங்கள் இருந்தன. அந்த மாநாட்டில் மலேசியாவின் சார்பில் கலந்து கொண்டு கட்டுரை சமர்ப்பிக்க முடியுமா என அதன் செயலாளர் திரு சுலைமான் செலாட் கேட்டு எழுதியிருந்தார்.

'போகலாமா' என ஒரு நப்பாசை எழுந்தது. கட்டுரை எழுதுவது சிரமமில்லை. ஏற்கனவே எழுதிய கட்டுரைகளுக்கான தகவல்கள் இருந்தன. புதிதாக மலேசியாவில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள், புள்ளி விவரங்கள் குறித்து வைத்திருந்தார். அதோடு கானடா நாட்டுக்கு அவர் இதுவரை போனதில்லை. போகலாம். புதிய இடங்களைப் பார்க்கலாம். புதிய மனிதர்களை, அறிஞர்களைச் சந்திக்கலாம். இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

அமெரிக்க, ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் எந்தக் கூட்டத்திலும் தங்களுக்கே உரிய சுய நம்பிக்கையுடன் கவர்ச்சியாகப் பேசுவார்கள். ஜப்பானிய கொரிய ஆய்வாளர்கள் தயங்கித் தயங்கி சரளம் இல்லாத ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஆனால் அவர்கள் ஆராய்ச்சிகளிலும் முடிவுகளிலும் ஆழம் இருக்கும். எல்லாம் மீண்டும் பார்த்து கேட்டு அனுபவிக்க மனதிற்கு உற்சாகமாக இருக்கும்.

'ஆனால், இஞ்சே சுலைமான், அது வரை நான் உயிரோடு இருப்பேனா என்பதே கேள்வியாக இருக்கிறதே!' என்று நினைத்துக் கொண்டார். இஞ்சே சுலைமானுக்குத் தன் நோயின் விவரங்களைத் தெரிவிக்காமல் இந்த மாநாட்டுக்குத் தாம் போக முடியாததற்கு வேறு காரணங்கள் கற்பித்து எழுதிப் போடவேண்டும் என முடிவு செய்து கொண்டார். அதுவும் உடனடியாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர் வேறு ஆளைத் தயார் செய்ய முடியும்.

கப்பை எடுத்து காப்பியை உறிஞ்ச முற்பட்ட போது அது முடிந்துவிட்டிருப்பது தெரிந்தது. கடிதங்களை மேசையில் வைத்து விட்டு வௌியே வந்தார். வௌி வாசல் கதவைத் திறந்த போது குளிர் சில்லென வீசியது.

அவர் வௌியே வரமாட்டாரா என்று காத்துக் கிடந்த ஜிம்மி வழக்கம் போல அவர் அருகே வந்து நின்று வாய் பிளந்து வாலாட்டி காலை நக்கி ஒட்டிக் கொண்டு நின்றது. குனிந்து அதன் தலையைச் சொறிந்து விட்டார். ஒரு நாளாவது இந்த நாய் இந்த விடியற்காலை வேளையில் என் தூக்கத்தைக் கெடுக்கிறீர்களே என்று மனிதர்களை கோபித்துக் கொண்டிருக்குமா என்று நினைத்து வியந்தார். ஜிம்மி அவருடைய முகத்தை நக்க முயன்று தோற்றது.

வௌியே கொஞ்ச நேரம் போய் நடக்கலாமா என யோசித்தார். சாலையில் விளக்குக் கம்பங்களில் சிறு தூசுப் படலத்தை ஒளிப்படுத்தியவாறு விளக்குகள் அமைதியாக எரிந்து கொண்டிருந்தன. தெய்வங்களின் தலைக்கு மேல் ஓவியர்கள் வரையும் ஒளிவட்டங்கள் போன்று அவை தோன்றின. அந்தக் காட்சி கவர்ச்சியாக இருந்தது.

அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் இல்லை. நடக்க வசதியான வேளைதான். ஆனால் உடம்பு இடம் கொடுக்குமா? நேற்று தைப்பிங் ஏரிப் பூங்காவில் பரமாவுடன் பேசி அவசரமாக எழுந்து மயக்கம் போட்டு விழுந்த நினைவுகள் வந்து அவரை அச்சுறுத்தின.

இந்த மனித நடமாட்டமற்ற வேளையில் நடக்கப் போய் எங்காவது தடுக்கி விழுந்து மண்டையைப் போட்டுவிட்டால்...? பாக்கெட்டில் அடையாளக் கார்டு கூட இல்லாத நிலையில், வடூப்போக்கர்கள் கொடுத்த தகவலில் ஆம்புலன்ஸ் வந்து அனாதைப் பிணமென்று தூக்கிப் போய் பொது மருத்துவ மனைப் பிணக் கொட்டகையில் போட்டு...

"தனியா எங்கியும் போகாதிங்கன்னு தலையால அடிச்சிக்கிட்டன, கேட்டீங்களா...!" என்று ஜானகி தன் பிணத்தின் முன் அலறி அழுகின்ற அவலமான காட்சி ஒன்று மனதுக்குள் வந்தது. சோகமாகவும் இருந்தது. சிரிப்பாகவும் வந்தது.

இப்படியெல்லாம் யோசித்து இயலாமையிலும் தன்னிரக்கத்திலும் அவ்வப்போது ஆழ்ந்து விடுவது அவருக்கே வெட்கமாக இருந்தது. இந்த இயலாமையை மனதிலிருந்து ஓட்டுவதற்கு ஒரே வழி எதையும் முயன்று பார்த்து விடுவதுதான் என்று முடிவு செய்து கொண்டார்.

உள்ளே நுழைந்து தம் சட்டையை அணிந்து கொண்டு முன் கேட்டை கொஞ்சமாகத் திறந்து ஜிம்மி திமிறி ஓடுவதற்குள் அடைத்துவிட்டு சாலையில் இறங்கி நடந்தார். ஜிம்மி எரிச்சலில் ஒரு முறை குரைத்து விட்டு கேட்டைச் சுரண்டியது. அதை அலட்சியப் படுத்திவிட்டு நடந்தார்.

அக்கம் பக்கத்து வீடுகள் சுத்தமாக அடைத்துக் கிடந்தன. பெரும்பாலான வீடுகளில் கார் போர்ச்சின் விளக்குகள் எரிந்தவாறிருந்தன. மனித நடமாட்டம் எதையும் காணோம்.

காலைக் குளிர் உடம்பைத் துளைத்தது. அந்த அனுபவம் இனிமையாகத்தான் இருந்தது. இன்னும் இந்த உடம்பில் இதமான குளிரை உணரவும், அந்த இன்பத்தில் உள்ளம் கதகதப்படையவும் போதிய சொரணை இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. விடியற்காலை வேளையின் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும், அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் சக்தி உடம்பிலும் உள்ளவரை தன் வாழ்க்கை நோயில் மரத்துப் போகவில்லை என்ற நம்பிக்கை ஏற்பட்டு உற்சாகப் படுத்தியது.

நள்ளிரவு வேளை பேய்களின் வேளை என்றால் இந்த விடியற்காலை வேளை தெய்வங்களின் வேளையா? எங்கே அவை? வானத்தை அண்ணாந்து பார்த்தார். தௌிவாக இருந்தது. நட்சத்திரங்கள் சில மின்னின. குறைவான மேகங்கள் இருந்தன. தெய்வங்கள் சஞ்சரிப்பதற்கான அடையாளங்கள் தெரியவில்லை.

அந்தத் தேடலே அபத்தம் எனத் தோன்றியது. என்னைப் போன்ற மனிதர்கள் பார்க்க விரும்பிய போதெல்லாம் வந்து குஷிப்படுத்துவதற்காகவா தெய்வங்கள் இருக்கின்றன? தெய்வத்தின் தேடலில் முயற்சியும் வருத்தமும் துயரமும் உருக்கமும் இருக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமில்லாத பக்தி இருக்க வேண்டும். "வருமா வராதா, இருக்கிறதா இல்லையா" என்ற சந்தேகம் கலந்து ஒரு வேடிக்கையாக தெய்வத்தைப் பார்க்க நினைக்கும் தன்னைப் போன்றோருக்கு அது நிறைவேறாது.

"அன்பே தகளியா, ஆர்வமே நெய்யா, இன்புருகு சிந்தை இடுதிரியாய்" இருக்க வேண்டும். அப்டிப்பட்ட சிந்தை எப்படி எப்போது தோன்றும் என்று தெரியவில்லை. நன்றாயிருந்த நாட்களிலும் சந்தேகப் பூச்சு கலந்த நம்பிக்கைதான் இருந்தது. நோயுற்ற நாட்களில் பயம் அதிகமானாலும் சந்தேகம் விடவில்லை.

வெண்கலத் தாம்பாளத்தை புளிபோட்டுக் கறையில்லாமல் தேய்த்து வைத்தால் அதில் சூரிய பிம்பம் தௌிவாகத் தெரிவது போல் கறையில்லாத மனத்தில் இறைவன் பிரதிபலிப்பான் என இராம கிருஷ்ணர் கூறியிருக்கிறார். என் மனதில் கறை துருவாக வளர்ந்திருக்கிறது. எப்படி வருவான் இறைவன்?

திடீரென "ஹம்மென்று" ஒரு ஒலி அசரீரியாக ரீங்காரித்தது. அந்தப் பிரதேசம் முழுவதையும் நிறைத்தது. எங்கிருந்து வருகிறது? என்ன ஒலி? அண்ணாந்து வானத்தைப் பார்த்தார். ஒன்றும் தெரியவில்லை. பின்னர் ஒரு சிறிய குரல் ஒரு பெரிய ஒலி பெருக்கியில் முனுமுனுப்பது கேட்டது: "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..." தொடர்ந்து கம்பீரமான ஒலியில் பாங்கு வந்தது: "அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்...."

முஸ்லிம் பெருமக்களின் காலைத் தொழுகைக்கு அழைப்பு கம்பீரமாக வந்தாயிற்று. இன்னும் கொஞ்ச நேரத்தில் பக்கத்தில் உள்ள கோயில்களிலிருந்து மணியோசையும் நாதஸ்வர ஓசையும் கேட்கும்.

இந்த மண் பக்தி மண். இது உலகின் உன்னதமான சமயங்கள் சமாதான சகவாழ்வு நடத்துகின்ற மண். இஸ்லாத்தின் பாங்கு ஒலியும், கிறிஸ்துவ மாதாகோவில் மணியோசையும், இந்துக்களின் கோயில் நாதசுரமும், பௌத்த பிக்குகளின் மந்திரங்களும், சீனர் கோயில்களிலிருந்து மேளமும் இரத்தப் பெருக்கை ஏற்படுத்தாமல் பக்திப் பெருக்கை மட்டுமே ஏற்படுத்துகின்ற பூமி. நினைக்கப் பெருமிதமாக இருந்தது. இந்த அழைப்புக்களுக்கெல்லாம் தான் கொஞ்சம் அந்நியமானவனாக இருந்தாலும் அந்தப் பெருமிதம் ஒன்றும் குறைந்து விடவில்லை என்று நினைத்துக் கொண்டார்.

மனம் உற்சாகமாக இருந்தாலும் உடல் களைக்க ஆரம்பித்திருந்து. கால்கள் கடுத்தன. இது மோசமாவதற்குள் திரும்பிவிட வேண்டும் என்று திரும்பி நடந்தார். கூடக் கூடப் போனால் அரை கிலோ மீட்டர் நடந்திருப்பார். இவ்வளவுதானா?

அரை மராத்தோன் ஓடியிருக்கிறார். பத்து கிலோமீட்டர் ஜோகிங் போயிருக்கிறார். காற்பந்து நடுவராக இருந்து ஆட்டக்காரர்களோடு திடல் முழுதும் சுற்றி ஓடியிருக்கிறார். இப்போது அரை கிலோ மீட்டர் நடப்பதற்கே இளைக்கிறது.

டாக்டர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்? எந்த மருந்துக்கும் தன் புற்று நோய் செல்கள் மசியவில்லை என டாக்டர் லிம் சொல்லிவிட்டார். இனி டாக்டர் ராம்லி - என் பழைய மாணவர் - என் பழைய பகைவர் - எனக்கு சிகிச்சை ஆரம்பிக்கப் போகிறார். சிகிச்சையா அல்லது மெதுவான வௌியே தெரிந்து கொள்ள முடியாத கொலையா? தெரியவில்லை. ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. சாவு எப்படியும் வரப் போகிறது. டாக்டர் ராம்லி என்னைக் கொல்ல முடிவு செய்து விட்டால் அதுவும் நல்லதுதான். ராம்லி, நீங்கள் என்னைக் கொல்லப் போவது எனக்கு ஒரு தண்டனை அல்ல. என் நோயிலிருந்த எனக்கு விடுதலை அளிக்கப் போகிறீர்கள் அவ்வளவுதான். கொன்று விடுங்கள். நான் இதைக் கருணைக் கொலை என்றே எடுத்துக் கொள்ளுகிறேன்.

ஆனால் பரமாவுக்கு வாழ்வு வேண்டும். அவன் முகை. அவன் மலராக வேண்டும். காயாகிப் பழமாக வேண்டும். அவனுக்குத் தமிழ் சொல்லித் தர எனக்கும் நேரம் வேண்டும். அவன் வாயால் திருக்குறள், தேவாரம், திருமுருகாற்றுப்படை சொல்வதை நான் கேட்க வேண்டும். ஆனால் அவை கூட இப்போது முக்கியமில்லை. இந்த உலகத்தில் எத்தனை இன்பங்கள் இருக்கின்றன! அவற்றில் ஒரு சிறு பகுதியைக்கூடப் பார்த்திராத அவனை சாவு எடுத்துக் கொள்ளுவது எத்தனை கொடுமை?

நான் பலவற்றைப் பார்த்து விட்டேன்! நான் தேய்ந்த நாணயம். அவன் பிழைப்பதற்கு என் சாவு எப்படியாவது பயன்படுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்? டாக்டர் லிம், டாக்டர் ராம்லி! மாற்று உயிர் பொருத்தும் அளவுக்கு உங்கள் மருத்துவம் வளர்ந்திருக்கிறதா? அந்தத் திசையில் பரிசோதனைகள் நடக்கின்றனவா? இங்கே நான் ஒருத்தன் அந்தப் பரிசோதனைக்கு என்னை அர்ப்பணித்துக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

வீடு நெருங்கியபோது உடல் கொஞ்சம் நடுங்கியது. கால்களில் கடுப்பு அதிகமாகியிருந்தது. தலை கொஞ்சமாகச் சுற்றியது. ஒரு விளக்குக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டு நின்று இளைப்பாறினார். இந்தக் காட்சியை ஒரு ஓவியன் பார்த்தால் அழகிய ஓவியமாக்குவான் என நினைத்துக் கொண்டார். ஒரு ஓங்கிய விளக்குக் கம்பம். அதிலிருந்து ஒரு கோமாளியின் கூரான தொப்பியைப் போல் விழும் ஒளி. அதன் அடியில் கம்பத்தைப் பிடித்துக் கொண்டு ஒடுங்கி நிற்கும் நோயாளி. தன்னைப் போல் நிமிர்ந்து நிற்காமல் ஆளை கூன் வளைந்தவனாய் வளைத்துப் போட்டால் நோய் உருவகம் இன்னும் நன்றாக வரும். இலேசான எண்ணெய் வர்ணங்களைக் கலந்து தூரிகையால் வரைந்து "வௌிச்சத்தில் நோய்" என மர்மமான தலைப்பிடலாம். கண்காட்சியில் வைத்தால் பரிசு கூடக் கிடைக்கும். தனக்குள் சிரித்துக் கொண்டார்.

உடம்பு கொஞ்சம் தெம்பானது. தொடர்ந்து நடந்து வீட்டை அடைந்தார். ஜிம்மி கேட்டிற்குப் பின்னிருந்து மகிழ்ச்சியில் குதித்துக் குரைத்தது. வீட்டில் யாரும் இன்னும் எழவில்லை எனத் தெரிந்தது. இந்தக் காலை நடையை தனி ஒருவனாக இத்தனை ரகசியமாக வெற்றிகரமாக முடித்த சாதனையை எண்ணி மகிழ்ந்தார்.

வீட்டின் கதவைத் திறக்கு முன்னரே டெலிபோன் மணி அலறியது. காலை ஆறு மணிக்கு யார் கூப்பிடுகிறார்கள்? நண்பன் ராமாவாக இருக்குமா? இவ்வளவு சீக்கிரம் கூப்பிடக் காரணமில்லையே! ராதாவாக இருக்கலாம். பரமாவின் நோயைக் கேட்டதிலிருந்து போன இரு நாட்களில் மூன்று முறை போன் செய்து அழுதுவிட்டாள். உடனே புறப்பட விரும்பினாலும் எந்த விமானத்திலும் இடம் கிடைக்கவில்லை என்றும் வியாழக்கிழமை விமானத்தில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதாகவும் கூறியிருந்தாள். அவளுக்கு டிக்கட் கிடைத்து விட்டதோ? வருகிறேன் என்று போன் செய்கிறாளோ?

போனை எடுக்க அவசரமாக நடக்க முயன்ற போது தலை கொஞ்சம் கிர்ரென்று சுற்றி நின்றது. இடது கால் தொடைத் தசையில் இறுக்கமும் வலியும் தோன்றின. சில விநாடிகள் நின்று இளைப்பாறினார். போன் தொடர்ந்து அலறியது.

போன் சத்தத்தில் ஜானகி எழுந்து வௌியே வந்து விட்டாள். அவளே போய் அவசரமாகப் போனை எடுத்து தூக்கம் இன்னும் கலையாத குரலில் "ஹலோ" என்றாள்.

பதிலைக் கேட்டு அவள் முகம் திடுக்கிட்டது. அவர் இருக்கும் பக்கம் போனை நீட்டினாள். "சிவமணி! உங்ககிட்ட பேசணுமாம்!" என்றாள் ரகசியமான குரலில்.

சிவமணியா? இந்த நேரத்திலா? கொஞ்சம் நொண்டியவாறு போய் போனை வாங்கிக் கொண்டார். "ஹலோ" என்றார்.

"நேத்தும் முந்தா நாளும் எத்தனியோ தடவ போன் பண்ணினேன், ஏன் யாருமே போன எடுக்கல?" என்று கேட்டான். அந்தக் குரலில் வழக்கமான முரட்டுத் தனம் இருந்தது.

"சிவமணியா? நேத்து குடும்பத்தோட தைப்பிங் போயிருந்தோம்பா!" என்றார்.

"ஏன், என் மகனைக் கொண்டி அங்க ஒளிச்சு வைக்கப் பார்க்கிறிங்களா?" என்றான்.

வீண் வம்பு வளர்க்கிறான் எனத் தோன்றியது. "ஒளிச்சு வைக்க வேண்டிய அவசியம் என்னப்பா வந்தது இப்ப?" என்றார்.

"அந்த பிச் சொல்லியிருப்பா! பிள்ளய கொண்டி எங்கயாச்சும் ஒளிச்சி வச்சிருங்கன்னு...!" என்றான்.

அவன் என்னதான் முரட்டுத் தனமாகவும் கிண்டலாகவும் பேசினாலும் அவனிடம் பரமாவின் நோயைப் பற்றிச் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் இது என்று நினைத்தார். ராதா எவ்வளவுதான் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தாலும் பெற்ற அப்பனிடமிருந்து மறைத்து வைப்பது முறையல்ல என்று எண்ணினார்.

"இல்ல சிவமணி... இதக் கேளு..."

"இதப் பாருங்க!" என்று இடைமறித்து வெட்டினான். "ஒரு முக்கியமான சமாசாரம் சொல்றதுக்காகத்தான் ரெண்டு நாளா கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்."

"நானும் முக்கியமான செய்திதான் சொல்லணும்"

"உங்கக் கதையெல்லாம் அப்புறம் வச்சிக்குங்க. இன்னக்கி ராத்திரி நான் அங்க பினேங்குக்கு வர்ரேன். பரமாவோட துணியெல்லாம் எடுத்து பேக் பண்ணி வைங்க! அவனக் கையோட அழச்சிட்டு வரப் போறேன்!"

அதிர்ச்சியடைந்தார். மூன்று வாரம் ஒரு பேச்சும் பேசாமல் பிள்ளையைப் பற்றி ஒன்றும் விசாரிக்காமல் கிடந்தவன் இன்றைக்கு இப்படி உத்தரவிடுகிறான்.

"வேணாம் சிவமணி. அவன உன்னால ஒண்டியா வச்சி பாத்துக்க முடியாது!"

"என் அம்மா கூட வர்ராங்க! அவங்க பாத்துக்குவாங்க!" என்றான்.

அவருக்குப் புரிந்தது. அந்த அம்மாளின் தூண்டுதலாகத்தான் இருக்க வேண்டும். ராதாவையும் தன் குடும்பத்தையும் பழிவாங்கும் ஒரு வஞ்சமாகத்தான் இதைச் செய்யத் தூண்டியிருக்கிறாளே தவிர குழந்தை மேல் உள்ள பாசத்தினால் அல்ல!

"சிவமணி! நான் சொல்றதக் கேளு...!"

"முடியாது. நான் அன்னைக்கு வந்து கேட்டப்ப பையன் மனச மாத்தி அவன வரவுடாம பண்ணிட்டிக்க. அவன் என் மகன். எங்கம்மா கிட்ட இருக்கட்டும். உங்க சகவாசமே எனக்கு வேணாம்!" என்று கத்தினான்.

அவனுடைய தொனியும் தன்னை எடுத்தெறிந்து பேசிய விதமும் அவருடைய மனதில் ஆத்திர தீக் கொழுந்துகளைக் கிளப்பின. ஆனால் இது ஆத்திரப் படும் நேரம் இல்லை. ஒரு குழந்தையின் வாழ்வு இங்கே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

ஆத்திரத்தை விழுங்கி விட்டு மெதுவாகக் கனிவாகப் பேசினார்: "சிவமணி அவனுக்கு ஒடம்பு ரொம்ப சரியில்லப்பா! ரொம்ப கடுமையான நோய்..."

"அதல்லாம் எங்களுக்குப் பாத்துக்கத் தெரியும். இங்க டாக்டர் இல்லியா? ஆஸ்பத்திரி இல்லியா? நான் ராத்திரிக்கு வருவேன் பையன ரெடியா வச்சிருங்க! எதாச்சும் கோளாறு பண்ணுனிங்க, நான் அடிதடில எறங்கிடுவேன்! விஷயம் போலிஸ் வரைக்கும் போயிடும் ஆமா!" போனைப் படேரென்று அறைந்து வைத்தான்.

கொஞ்சம் நடுங்கிய கையுடன் போனை வைத்தார். என்ன பிறவி இவன்? குழந்தைக்கு நோயென்றால் என்ன நோய் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடிய அக்கறை கூட இல்லை. தன் பொருள் தனக்கு வேண்டும். கொடுக்காவிட்டால் அதைப் பிய்த்துப் பிய்த்துக் குதறிப் போடவும் தயாரான ராட்சசனாக இருந்தான்.

"என்னங்க சொல்றான்?" என்று அதிர்ச்சியோடு கேட்டாள் ஜானகி.

"இன்னக்கி ராத்திரி அவங்க அம்மாவோட இங்க வந்து பரமாவ கையோட அழச்சிக்கிட்டுப் போகப் போறானாம் ஜானகி!"

ஜானகி "ஐயோ" எனத் தலையில் கைவைத்தாள். "இப்படி சீக்கா இருக்கிற பிள்ளையையா...?"

"அதச் சொல்லத்தான் எவ்வளவோ முயற்சி பண்ணினேன்! நீ கேட்டுக்கிட்டுத்தான இருந்த! அவன் எனக்குப் பேசவே சந்தர்ப்பம் கொடுக்கிலியே!"

சோர்ந்து உட்கார்ந்தார். ஜானகியும் உட்கார்ந்து விட்டாள். பேச்சுக் குரல் கேட்டு அன்னமும் அறையிலிருந்து எழுந்து வந்தாள். விஷயத்தைத் தெரிந்து கொண்டு அவளும் கொஞ்ச நேரம் அயர்ந்து உட்கார்ந்து விட்டாள்.

"பரமா எப்படிக்கா?" என்று கேட்டார்.

"ராத்திரி முழுக்கக் காய்ச்சதான் தம்பி! ஒரு தடவ மாத்திர குடுத்தேன். விடிய காலையிலதான் கொஞ்சம் தூங்கிறான்!" என்றாள்.

"ஐ டோண்ட் வாண்ட் டு கோ!" என்று பரமா அன்று அழுத காட்சி நினைவுக்கு வந்தது. சுந்தரத்தின் வயிற்றுக்குள் என்னென்னவோ அமிலங்கள் எல்லாம் சுரந்தன. வயிற்றையும் நெஞ்சையும் திருகின.

கவலையில் தோய்ந்திருந்த அன்னம் திடீரெனத் தலை தூக்கிச் சொன்னாள்: "ஏன் தம்பி! இன்னக்கிக் காலயில டாக்டர் கிட்ட காட்டிட்டு நான் இவனத் தைப்பிங்கில கொண்டி கொஞ்ச நாள் வச்சிக்கிட்டுமா?"

சுந்தரம் தலையாட்டினார். "வேணாம் அக்கா! அத விட வேறு வினையே வேணாம். இப்ப ரெண்டு நாள் தைப்பிங்குக்கு நாம போனது தெரிஞ்சி "பிள்ளைய ஒளிச்சு வைக்கிறிங்களா?"ன்னு கேக்கிறான். இனி நாம் தெரிஞ்சே கொண்டி வச்சா, என்னையும் விட மாட்டான், உன்னயும் சும்மா விடமாட்டான்!"

அன்னம் ஆமோதித்து மௌனமாக இருந்தாள்.

பிறகு சுந்தரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். பின்னர் சொன்னார். "அக்கா அவங்க ரெண்டு பேரும் வரட்டும். வந்தவுடன முடிஞ்ச வர சொல்லிப் பார்க்கலாம். கேக்கலைன்னா அவன்கிட்டயே பிள்ளய ஒப்படைச்சிருவோம்" என்றார்.

"என்ன பேச்சுப் பேசிறிங்க? பிள்ளய கொல்லப் போறிங்களா?" என்று ஜானகி சீறினாள். "ராதா எத்தன தடவ திருப்பித் திருப்பிச் சொன்னா பிள்ளய அவன்கிட்ட குடுக்காதீங்க, குடுக்காதீங்கன்னு!"

"அவ சொல்றது சுலபம் ஜானகி! ஆனா பிள்ளைக்கு உரிமை உள்ளவன் தகப்பன். அவன்கிட்ட இருந்து பிள்ளய பிரிக்கிறது சட்டப்படி குற்றம்" என்றார்.

"உங்க சட்டத்துக்குத் தெரியுமா அவன் எவ்வளவு கொடுமைக்காரன்னு?" என்று கேட்டாள்.

"என் சட்டம் இல்ல ஜானகி! நாட்டினுடைய சட்டம். அவன் அப்பங்காரன் கொடுமைக்காரன்கிறத நிருபிக்கிறதுக்கு நம்மகிட்ட ஒரு ஆதாரமும் கிடையாது. இந்த நிலைமையில இந்த வழக்கு எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் அவன் பக்கம்தான் ஜெயிக்கும்! அந்த வழக்க முறியடிக்கக் கூடிய ஒரே ஒரு நபர் ராதாதான். அவளும் அதச் செய்ய இன்னக்கி ராத்திரி இங்க இருக்கப் போறதில்ல!"

ஏதாகிலும் ஒரு அற்புதம் நிகழ்ந்து இன்றிரவுக்குள் ராதா இங்கு வந்து சேர்ந்து இந்த அபாயத்தைத் தவிர்க்கக் கூடாதா என்று எண்ணினார். ஆனால் அது நப்பாசை என்று அவருக்கே தோன்றியது.

ஜானகியின் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது.

சட்டத்தின் நியாயத்தைப் பற்றி அவர் பேசிய பேச்சுக்கள் அவருக்கே பிடிக்கவில்லை. ஓநாயிடம் ஆட்டுக் குட்டியை ஒப்படைக்கக் கூட சட்டம் இருக்கிறதா? ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு ஒரு ஓநாய் தகப்பன் ஆடு என்று வேஷம் போட்டிருப்பது கண்களைக் கட்டிக்கொண்டிருக்கும் நீதி தேவதைக்குத் தெரியுமா?

காலை பூத்துக் கொண்டிருந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தன்னை அழைத்துப் போக ராமா சரியாக வந்து விடுவார். இந்தக் குடும்பத்தில் என்ன குழப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் இந்த ராமா மட்டும் குழப்பமில்லாத, நேரான மனிதனாக இருக்கிறார். நேரம் தவறுவதில்லை. முறை தவறுவதில்லை. சமாதானங்கள் கூறுவதில்லை. தன் சமாசாரங்களில் அதிகமாகக் குறுக்கிடுவதில்லை. சொன்னதைச் செய்யும் சேவகன். அழும் நேரத்தில் கண் துடைத்துவிடும் உண்மை நண்பன். எங்கிருந்து வந்தான் என் வாழ்க்கைக்குள்...? தன்னைத் தண்டிக்கும் இந்தத் தெய்வங்கள் இடையிடையே சமாதானம் செய்வதற்காகத் தனக்கு அனுப்பியுள்ள அன்பளிப்பாகத்தான் இருக்க வேண்டும் இவன்.

அன்னம் அன்றைய நடவடிக்கைகளை தன் வழக்கமான திறமையுடன் நிர்வாகம் செய்ய ஆரம்பித்திருந்தாள். "சரி, சரி தம்பி! எல்லாம் பிறகு பாத்துக்குவோம். உனக்கு ஆஸ்பத்திரி போக நேரமாச்சி! போய் தயாராயிடு. ஜானகி! எந்திரிச்சி வேலய பாரு. பரமாவ எழுப்பித் தயார் பண்ணிக் கூட்டிட்டுப் போகணுமில்ல!"

குளியலறை போய்த் தயாராக வேண்டும் என மெதுவாக எழுந்தார். ஜானகியும் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.

சமையலறையில் அத்தை எதனையோ வறுத்துக் கொண்டிருந்தாள். தானியங்கள் கருகும் மணம் ஹால் வரை வந்தது. இட்டலிக்குச் சட்டினி தயார் பண்ணிக் கொண்டிருப்பாள் போலும்.

இந்த வீட்டில் இப்போதெல்லாம் சாப்பிடுவதற்கு ஆள் இல்லை என்பதை அவளுக்குச் சொல்லி விளங்க வைக்க முடியவில்லை. அவருக்குச் சாப்பாட்டில் ருசி இல்லை. அவர் சாப்பிடாத பொருள்களை இந்தப் பெண்கள் யாரும் சாப்பிடுவதில்லை. ஆனால் அத்தை சமைப்பதை விடவில்லை.

தனக்கு கெமோதெராப்பி தேவைப்படுவது போல் அத்தைக்குச் சமையல் ஒரு தெராப்பியாக இருக்க வேண்டும். தன் உள்ளத்தில் கொதித்துக் கொண்டு வௌியே பொங்காமல் இருக்கிற உணர்ச்சிகளை இடைவிடாத சமையலறை வேலைகளில் அவள் தணித்துக் கொண்டிருக்கிறாள். அது இல்லையேல் அவளுக்கும் நோய் வந்து விடும்.


*** *** ***

மிக மெதுவாக சவரம் செய்ய வேண்டியிருந்தது. தோல் மிக மென்மையாகிவிட்டது. தொங்கவும் ஆரம்பித்திருந்தது. இழுத்து வைத்து சவர பிளேடை பட்டும் படாமலும் இழுக்க வேண்டும். அப்படியும் அங்கே இங்கே வெட்டி விடுகிறது. இன்று ஒரே ஒரு வெட்டுத்தான் என்பது ஒரு நிம்மதியாகக் கூட இருந்தது.

சவரம் பண்ணி முடித்து முகத்தில் தண்ணீர் அடித்துச் சுத்தப்படுத்தி மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் தன் முகத்தை உற்றுப் பார்த்தார். இந்த இரண்டு மாதங்களில் முகம் இப்படி மாறிப் போகும் என அவர் எதிர் பார்க்கவில்லை. வலியால் சுளித்துச் சுளித்து அதுவே வழக்கமாகி முகத்தில் நிரந்தரமான ஒரு சுளிப்பு இருப்பதுபோல் இருந்தது. தோல் கருத்திருந்தது. சுருங்கியும் வறண்டும் இருந்தது.

முகத்தில் இப்போது வந்திருப்பது... ஆமாம் அந்த வருணனை ஒன்றுதான் சரியாக இருக்க முடியும் - சாவுக்களை. டாக்டர் ராம்லி! இந்தப் பழைய பகைவனைக் கொல்வதைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப் படவேண்டாம். எனக்கு சாவுக்களை வந்து விட்டது. நான் சாவின் விளிம்புக்கு வந்தாகிவிட்டது. நீங்கள் என்னைத் தள்ளாமலேயே இருந்தாலும் நானே தள்ளாடி விழுந்து விடுவேன்.

தாம் இப்படி டாக்டர் ராம்லியிடம் போவது தெய்வ பலிக்கு மாலை போட்டுக்கொண்டு சுகமாகப் போகும் ஆட்டை அவருக்கு நினைவு படுத்தியது. நான் எந்தத் தெய்வத்திற்குப் பலி? வாயில் இரத்தம் கசிய கையில் அரிவாள் ஏந்தி அசுரக் குழந்தையின் தலை மீது பாதம் அழுந்தி நிற்கும் எந்தத் தெய்வம் என்னைப் பலியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது? ஏன் என்னை...?

ஷவரைத் திறந்து விட்டார். சுடு நீர் உடம்பில் வழிந்தது. சுத்தமாக அழுக்குப் போக நுரை நுரையாகச் சோப்புப் போட்டுத் தேய்த்துக் குளிக்க வேண்டும். தலைக்கு நறுமண ஷாம்பூ போட்டு மயிரைப் பூப்போல மென்மையாக்க வேண்டும். துடைத்து உடம்புக்கு நிறையப் பவுடர் போட்டு, தலைக்கு எண்ணெய் விட்டுப் படிய வார வேண்டும். உடம்பு மணக்க மணக்க இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் தெய்வங்கள் மகிழ்ச்சியாக இந்தப் பலியை ஏற்றுக் கொள்ளும். ஏதாகிலும் அழுக்கோ அங்கவீனமோ இருந்தால் தெய்வங்கள் பலியை ஏற்றுக் கொள்ளாதாமே! தெலுங்கிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்ட பல புராணப் படங்களில் சிறு வயதில் பார்த்திருக்கிறார். அவருக்குச் சிரிப்பு வந்தது.

ஆம், தான் சிரிப்புக்குரிய பொருள்தான். விதி ஒரு கொடுமைக்காரக் குழந்தையைப் போல தன்னை ஒரு துவண்ட துணிப் பொம்மையாகப் பாவித்து அடித்துத் துவைத்து மூலைக்கு மூலை தூக்கி எறிகிறது. பொம்மைக்கும் வலியுண்டு என்ற எண்ணமே அந்த ராட்சசக் குழந்தைக்கு இல்லை. காலைத் திருகு! வயிற்றைத் திருகு! நெஞ்சுக் கூட்டைத் திருகு! இரண்டு கால்களையும் பிடித்து எதிரும் புதிருமாக இழு! தலையை நசுக்கு! ஓட்டையிடு! உள்ளே உள்ள பஞ்சைப் பற்றியெறி! சுற்றிச் சுற்றி சுவரில் கொண்டு எறி! சிரி! சிரி! எத்தனை வேடிக்கை! பார், பார், இந்தப் பொம்மை படும் பாடு பார்! சிரி! சிரி!

அவருக்கு அழுகை வந்தது. ஷவரிலிருந்து கொட்டிக் கொண்டிருந்த சுடு நீருடன் கலந்து வழிந்தது.

*** *** ***

உடை உடுத்தி வௌியே வந்த போது ராமா சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து அத்தையின் இட்டிலியை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். "சட்னி ரொம்பப் பிரமாதம்" என்று சொல்லிக் கொண்டிருந்தார். சுந்தரத்தைப் பார்த்ததும் "குட் மோர்னிங்" என்றார்.

"மோர்னிங் ராமா!" என்றார் சுந்தரம்.

"சுந்தரம். அத்தையோட சட்னி ரொம்ப பிரமாதம். வந்து சாப்பிடேன்!" என்றார். அவருடைய உற்சாகம் அந்த வீட்டின் கருமை படர்ந்த சோகத்தை கொஞ்சமாகப் பிரகாசப் படுத்தியது.

"முடியாது ராமா! நீ எனக்கும் சேர்த்துச் சாப்பிடு. குடுத்து வச்சவன்! நான் இதையெல்லாம் சாப்பிட்டால் வயித்தப் பெரட்டும். வழக்கம் போல காப்பியும் ஓட்ஸ் கஞ்சியும் போதும்!"

ஜானகி தயாராக எடுத்து வைத்திருந்தாள். மெதுவாகச் சாப்பிட்டார்.

அடுத்த அறையில் பரமாவை அன்னம் தயார் படுத்திக் கொண்டிருந்தாள். அவனிடமிருந்து வரும் வழக்கமான ஆர்ப்பாட்டமான சத்தம் எதையும் கோணோம்.

"பரமா எப்படி இருக்கிறான் ஜானகி இன்னக்கி?" என்று கேட்டார்.

"காய்ச்சல் இல்லிங்க! ஆனா ரொம்ப சோந்திருக்கிறான். காலையில அவனப் படுக்கைய விட்டு எழுப்ப முடியில. பாத் ரூமுக்குத் தூக்கிட்டுப் போக வேண்டியதாப் போச்சி!" என்றாள்.

"பிரேமுக்கு உடம்புக்கு என்ன?" என்று கேட்டார் ராமா. அவருக்கு இன்னும் விஷயம் தெரியாது. போன வெள்ளிக் கிழமையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகள் ஏதும் ராமாவுக்குத் தெரியாது.

"நான் ஆஸ்பத்திரிக்குப் போற வடூயில சொல்றேன் ராமா! உங்கிட்ட சொல்ல வேண்டிய விஷயம் பலது இருக்கு!" என்று சீரியசான குரலில் சொன்னார் சுந்தரம். ராமா மௌனமாகச் சாப்பிட்டு முடித்தார்.

புறப்படு முன் பரமாவைத் தூக்கி மார்போடு இறுக அணைத்துக் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அவன் துவண்டிருந்தாலும் புதிய உடை போட்டு உடம்பில் சோப்பும் பௌடரும் கலந்த மணத்தோடு சுத்தமாக இருந்தான். நெற்றியில் அவனுக்கு விபூதி பூசிவிட்டிருந்தாள் ஜானகி.

ஒரு மாலை போட்டுக் கொண்ட பலி கடாவின் உருவகம் மீண்டும் அவர் மனதில் வந்து மறைந்தது.

-----

அந்திம காலம் - 13


டாக்டர் ராம்லி, டாக்டர் லிம், மதர் மேகி மூவரும் அந்த அறையில் இருந்தார்கள். போன வாரத்தின் எக்ஸ்ரே படங்கள் அவற்றை ஒளிப்படுத்தும் பெட்டியின் மேல் தொங்கிக் கொண்டிருந்தன. அவரது கபாலம், நெஞ்சுக்கூடு, இடுப்பு என்ற உறுப்புகள் கருப்புப் புகைப் பின்னணியில் எலும்புக் கோடுகளாகத் தெரிந்தன. அவரது பழுதடைந்த செல்களை எலக்ட்ரான் நுண்பெருக்காடியில் பதிவு செய்து கணினியில் உயிரூட்டப்பட்ட வடிவங்கள் ஒரு கணினித் திரையில் மூன்று பரிமாணங்கள் கொண்ட படங்களாகச் சுற்றியவாறிருந்தன. "சுந்தரம் s/o சாமிநாதன்" என்ற தலைப்பிட்ட கோப்பு ஒன்று மேசையில் கிடந்தது. டாக்டர் ராம்லி வந்த இந்தச் சில நாட்களில் அந்தக் கோப்பில் இன்னும் பல குறிப்புகள் சேர்ந்து அது தடிப்பாகி விட்டிருந்தது.

டாக்டர் ராம்லி ஒரு மாணவனுக்குப் பாடம் நடத்துவது போல ஒரு சுட்டும் கம்பைக் கையில் வைத்துக் கொண்டு கணினித் திரையையும் எக்ஸ்ரே படங்களையும் சுட்டியவாறு தமது தடிப்பான குரலில் அமெரிக்க ஆங்கிலத்தில் உணர்ச்சி காட்டாமல் பேசினார்.

"மிகவும் அபூர்வமாக சில புற்று நோய் செல்கள் கதிரியக்கத்துக்கு மசிவதில்லை. அதற்கு மேலாக அவற்றை ஒழிப்பதற்காக ஊட்டப்படும் மருந்துகளையும் விரைவில் எதிர்க்கக் கற்றுக் கொண்டு செழிக்கின்றன. அப்படித்தான் உங்கள் உடலில் நிகழ்ந்து வருகிறது. சில பேருக்கு என்டிபயோட்டிக் மருந்துகள் கொடுக்கும்போது உடலிலுள்ள சில நோய்க் கிருமிகள் சாவதற்கு பதிலாக அதை மெதுவாக எதிர்க்கக் கற்றுக் கொள்ளுகின்றனவல்லவா, அது போல. இதோ பாருங்கள்: இது நீங்கள் இங்கு வந்து சேர்ந்த போது எடுத்த மூளை செல். இது இரண்டு நாட்களுக்குப் பிறகு. இது முதல் வார முடிவில். இது இரண்டாம் வார முடிவில். இது மூன்றாம் வார முடிவில் கடைசியாக எடுத்தது. மூன்று வாரக் கதிரியக்கம், மூன்று வார மருந்துகளின் முடிவில் அந்தப் புற்று நோய் செல்கள் முதலில் கொஞ்சமாக அழிந்து பின் பெருகியிருக்கின்றன."

கணினியில் அவர் சில பொத்தான்களைத் தட்ட அந்தப் பெருக்கம் விரைவு படுத்திக் காட்டப்பட்டது. அந்த கொலை செல்கள் அழகிய வண்ணங்களில் இருந்தன. ஒன்றின் மேல் ஒன்றாக ஏறிப் புற்றாகக் கட்டியிருந்தன.

"இந்தப் புற்று நோய் செல்கள் இப்போது உங்கள் உடலில் பல இடங்களில் பரவியிருப்பதை இரத்தப் பரிசோதனை முடிவுகள் காட்டுகின்றன. எக்ஸ்ரேயிலும் இருக்கிறது. உங்கள் எலும்புக்குள் உள்ள எலும்புச் சோற்றையும் இவை பாதித்துள்ளன. அதனால் இரத்த சோகை கடுமையாகியிருக்கிறது."

அந்த அறையில் ஒளியைக் குறைத்து வைத்திருந்தார்கள். பாதி இருளில் இருந்தது. வௌியில் உள்ள ஒலி உள்ளே புக முடியாமல் முற்றாகத் தடுக்கப்பட்ட அறை. ஏர் கண்டிஷனின் மெல்லிய சுருதி மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. டாக்டர் லிம்மோ மதர் மேகியோ சுந்தரமோ டாக்டர் ராம்லியின் பேச்சைக் கொஞ்சமும் தடை செய்யவில்லை.

"தொடர்ந்து கெமோதெராப்பியில் உங்களுக்குக் கொடுக்கப் படும் மருந்துகளை அதிகரித்தால் அவை உங்கள் நல்ல செல்களையும் அடூத்து விடும். இப்போதே கல்லீரலில் ஒரு பகுதியும் இடது சிறுநீரகமும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வயிற்றில் புண்கள் தோன்றியிருப்பதற்கும் இந்த மருந்துகள்தான் காரணம். உங்கள் வயிறு உணவைச் சிரமப்பட்டுத்தான் ஏற்கிறது. இது தொடர்ந்தால் வயிற்றின் சுவர்களில் துளை ஏற்பட்டு விடும்."

இப்படி என் நோய்க்கு விடிவே கிடையாது என்று எனக்கு அறிவிப்பதற்காகவா அமெரிக்கா போய் படித்து வந்திருக்கிறீர்கள் டாக்டர் ராம்லி? நீங்கள் மருத்துவரா மரணத்தின் தூதரா? என் நோய் குணமாகாது என இப்படி அறிவியல் பூர்வமாக இரண்டு சாட்சிகளை வைத்து அறிவித்து விட்டால் என்னைக் கொல்ல வேண்டும் என்கின்ற உங்கள் லட்சியம் எளிதாக நிறைவேறிவிடும் அல்லவா? அதுதான் நீங்கள் இங்கே நடத்துகிற நாடகம் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார் சுந்தரம்.

"ஆகவே இந்த வழக்கமான மருந்துகளை உங்களுக்குத் தொடர்ந்து கொடுத்து வருவதில் பயன் இல்லை என நானும் டாக்டர் லிம்மும் கருதுகிறோம்" டாக்டர் லிம் தலையாட்டி அதனை ஆமோதித்தார்.

டாக்டர் லிம், மதர் மேகி! மருத்துவப் போர்வையில் நடத்தப் படும் இந்த டாக்டர் ராம்லியின் சூழ்ச்சிகளை எப்படி உங்களுக்கு நான் விளக்கிச் சொல்லப் போகிறேன் என மனதுக்குள் சோர்ந்து போனார் சுந்தரம். அவர்கள் இருவரின் கவனமும் முற்றாக டாக்டர் ராம்லியின் மீது இருந்ததே தவிர சுந்தரத்தின் மீது இல்லை.

"பழைய மருந்துகள் உங்களுக்கு உதவா என நாங்கள் உறுதியாக நம்பியதால்தான் இந்தப் புதிய சிகிச்சை முறைய உங்களுக்கு அளித்துப் பார்க்க நான் முடிவு செய்தேன். இந்தப் புதிய முறை டாக்டர் லிம்முக்குப் பரிச்சயமில்லாத முறை ஆதலால் இந்த சிகிச்சைக்கு நானேதான் முற்றாகப் பொறுப்பேற்றுக் கொள்வேன்!"

எவ்வளவு வசதியாகப் போய்விட்டது! என நினைத்துக் கொண்டார். பரிவு மிக்க டாக்டர் லிம்மின் கைகளிலிருந்து என்னை முற்றாக எடுத்துக் கொண்டால் அப்புறம் நான் உங்கள் கையில் பொம்மை. நீங்கள் விரும்பியவாறு என்னை ஆட்டுவிக்கலாம்.

"இந்தப் புதிய சிகிச்சையில் உங்களுக்கு நான் ஹோர்மோன்தெராப்பியை அறிமுகப் படுத்தப் போகிறேன். உங்கள் இயற்கை ஹோர்மோன்கள் சிலவற்றைத் தணிக்கவும், இன்னும் சிலவற்றைப் பெருக்கவுமாக இவை வேலை செய்யும். செயற்கை ஹோர்மோன்கள் சிலவற்றையும் உங்கள் உடலில் செலுத்துவேன். ஏற்கனவே பெண்களுக்கு மார்பகப் புற்று நோய்க்கு இதனைப் பயன் படுத்தியிருக்கிறோம். ஆண்களுக்கு அதிகம் பயன் படுத்தியதில்லை. ஆண்களின் ஹோர்மோன் சுரப்பிகளில் வேலை செய்கின்ற புதிய மருந்துகள் இவை. அமெரிக்காவில் 55% பலன் கண்டிருக்கிறோம்." நிறுத்தினார்.

சுந்தரம் இடை மறித்து முதன் முறையாகப் பேசினார்: "55% பலன் கண்டிருந்தால் 45% பலன் இல்லை என்றுதானே அர்த்தம்?"

"ஆமாம் அப்படித்தான் அர்த்தம். அதை உங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் சொன்னேன்!"

"பலன் இல்லை என்றால் எப்படி?"

"சில வேளைகளில் ஹோர்மோன்களில் நாம் நினைக்கும் மாற்றம் ஏற்படுவதில்லை. மாற்றம் ஏற்பட்டாலும் செல்களில் இவை ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை"

"மாற்றங்கள் ஏற்படுத்தா விட்டாலும் நோயை அதிகரிக்காது இல்லையா?"

"நோயை இந்த ஹோர்மோன்கள் அதிகரிக்காது. உண்மைதான். ஆனால் ஹோர்மோன்கள் மாறும் என்று நாம் காத்திருக்கும் மூன்று முதல் நான்கு வார காலத்தில் வேறு பல வழக்கமான மருந்துகளை நிறுத்தி விடுவதால் புற்று நோய் செல்கள் அந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு விரைவாக முற்றி விடலாம். அதுதான் அபாயம்!"

வேறு ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் அவற்றைக் கேட்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றவில்லை. கேட்டால் நல்ல பதில்கள் வரும் என்றும் தோன்றவில்லை. டாக்டர் ராம்லி தொடர்ந்தார்:

"ஹோர்மோன்தெராப்பியின் பக்க விளைவுகள் சில கடுமையானவை. மார்பும் கழுத்தும் வீங்கலாம். தொண்டை கரகரப்பாகலாம். உங்களுக்குள் பய உணர்ச்சி அதிகமாகலாம். பயங்கரமான பிரமைகள் தோன்றலாம்! ஆனால் இவை யாவும் தற்காலிகமானவைதான். சில ஓரிரவில் தோன்றி மறைந்து விடக் கூடியவை. இந்த பக்க விளைவுகள் தோன்றத் தோன்ற அவற்றை முறியடிக்க நான் மாற்று மருந்துகள் கொடுப்பேன்"

என்னைக் கொல்வதென்று முடிவு செய்த பிறகு இந்தச் சித்திரவதைகளையும் நீங்கள் செய்து பார்க்கத் துணிந்து விட்டீர்கள் போலும் என்று எண்ணிக் கொண்டார். ஆனால் அவருக்குப் பெரிய அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை. தெய்வங்கள் அவருடைய முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்த விஷயம்தான். ராம்லி அவர்களின் தூதுவர்தான்.

"நீங்கள் இந்தப் புதிய சிகிச்சை முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது எந்த விதத்திலும் கட்டாயமில்லை. மறுத்து விடலாம். மறுத்து விட்டால் நாங்கள் உங்களைக் கைவிட்டு விட மாட்டோம். பழைய மருந்துகள் உங்களுக்குத் தொடர்ந்து கொடுப்போம். யார் கண்டார்கள்? இந்த நான்காவது வாரத்தில் அவை பயன் தர ஆரம்பிக்கலாம். அவற்றின் மூலம் உங்கள் புற்று நோய் குணமும் ஆகலாம். அந்த சாத்தியக் கூற்றை யாரும் மறுக்க முடியாது."

திடீரென அவருக்கு அந்த நப்பாசை தோன்றியது. இந்த டாக்டர் ராம்லியின் மரணப் பிடியிலிருந்து தப்ப, அல்லது தவணை பெற்றுக் கொள்ள இது ஒரு வழி எனத் தோன்றியது.

"அப்படியானால் இன்னும் ஒரு வாரம் பழைய சிகிச்சையைத் தொடர்ந்துவிட்டு, அப்புறம் இதைப்பற்றி யோசித்தால் என்ன?" என்று ஆர்வத்துடன் கேட்டார்.

"ஆமாம் அப்படிச் செய்யலாம். ஆனால் தொடர்ந்து இந்த மருந்துகள் இப்போது போலவே பலனளிக்காமல் இருந்தால் எந்த நேரத்திலும் உள் உறுப்புகள் ஒன்றில் உங்களுக்கு ரத்த ஒழுக்கு ஏற்பட்டு விடலாம். இந்த அபாயத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இரத்த ஒழுக்கை உடனடியாக அடைக்காவிட்டால் மருத்துவ உதவிக்கு அப்பால் நீங்கள் சென்று விடுவீர்கள்!"

"அதாவது செத்து விடுவேன் என்கிறீர்கள்!" என்றார் சுந்தரம்.

"ஆமாம். அப்படித்தான்!" என்றார் டாக்டர் ராம்லி.

மற்ற இருவரின் முகங்களையும் பார்த்தார் சுந்தரம். டாக்டர் லிம் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். மதர் மேகி அந்த புன்னகைக் கோடு மாறாத முகத்துடன் இருந்தார்.

டாக்டர் ராம்லியைப் பார்த்தார். நீ என்னை ரட்சிக்க வந்த தெய்வமா கொல்ல வந்த யமனா என்பதைப் பார்த்து விடுவோம் ராம்லி! என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு "சரி! டாக்டர் ராம்லி! நான் இந்த ஹோர்மோன்தெராப்பிக்குச் சம்மதிக்கிறேன்" என்றார்.

டாக்டர் ராம்லி அந்த பதிலைக் கேட்டு மகிழ்ந்தவராகவோ வருந்தியவராகவோ தெரியவில்லை. வழக்கம் போன்ற சீரியசான முகத்துடன் அவருடைய கோப்பைத் திறந்து ஏதோ பத்திரங்களை வௌியில் எடுத்தார். மேசைமேல் வைத்தார்.

"சரி! நீங்கள் அப்படிச் சம்மதிப்பதானால் சில பத்திரங்களில் கையெழுத்திட வேண்டும். இந்த அபாயங்களைத் தாங்கள் உணர்ந்துள்ளதாகவும் அவற்றை உணர்ந்து இந்தப் புதிய சிகிச்சை முறைக்கு முழு மனதுடன் சம்மதிப்பதாகவும் சட்ட பூர்வப் பத்திரங்கள் தயாரித்திருக்கிறோம். அதில் நீங்கள் கையெழுத்துட வேண்டும்!" என்றார் ராம்லி.

"இது ஏன் தேவை?" என்று கலவரத்துடன் கேட்டார் சுந்தரம்.

"இது இந்த மருத்துவ மனைக்கும் டாக்டர்களுக்கும் இன்சூரன்ஸ் வழக்குகளிலிருந்து தற்காப்பு அளிக்கும். நாங்கள் தவறான மருந்துகளை உங்களுக்குக் கொடுத்ததாக வழக்குகள் பின்னால் எழுந்தால் அதை முறியடிக்க இவை சான்றாக இருக்கும். இதை உறுதிப் படுத்திக்கொள்வதற்காகத்தான் இவ்வளவும் உங்களுக்கு விளக்கிச் சொன்னேன்!" என்றார் ராம்லி.

சுந்தரம் பெருமூச்சு விட்டு அமைதியாக இருந்தார். எல்லா வகையிலும் இந்த டாக்டர் கெட்டிக்காரர். என் கழுத்துக்குக் கத்தியை வைத்து விட்டு, அறுத்ததற்கு நான் பொறுப்பில்லை என்று என்னிடமே கையெழுத்தையும் வாங்கிக் கொள்ளும் அபார புத்திசாலி. ராம்லி! உன் கெட்டிக்காரத் தனத்தை உன் பழைய ஆசிரியர் என்ற முறையில் மெச்சுகிறேன்.

மதர் மேகி முதன் முறையாகப் பேசினார். "சுந்தரம். உங்களுக்கு யோசிக்க அவகாசம் வேண்டுமானால் நேரம் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் குடும்பத்தாரோடு பேசி முடிவு செய்வதானாலும் சரி. வேண்டிய அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்!" என்றார்.

மதர் மேகியின் அன்பு முகத்தைப் பார்த்தார் சுந்தரம். வழக்கம் போல் அதில் கருணையும் சிரிப்பும் இருந்தன. சுந்தரம் கேட்டார்: "மதர் மேகி இதில் நான் கையெழுத்திடு முன் உங்களிடம் தனியாக ஒரு அரை மணி நேரம் பேசலாமா?"

மதர் மேகி கொஞ்சமும் யோசிக்கவில்லை. "கண்டிப்பாகப் பேசலாம். வாருங்கள் என்னறைக்குப் போகலாம். டாக்டர்கள் அவர்கள் வேலையைப் பார்ப்பார்கள். நாம் எப்பொழுது பேசி முடிக்கிறோமோ அப்பொழுது அடுத்த நடவடிக்கையைப் பற்றி யோசிக்கலாம்" என்றார்.

மதர் மேகி எழ அனைவரும் எழுந்து விட்டார்கள். சுந்தரத்தின் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டு அவரைத் தன் அறைக்கு வடூநடத்திச் சென்றார் மதர் மேகி.


*** *** ***

மதர் மேகி அறையில் ஒரு தெய்வீகம் இருந்தது. அதிகமாகத் தளவாடச் சாமான்கள் இல்லாத எளிமையான அறை. ஏசு சிலுவையில் தொங்கும் பெரிய படம் ஒன்று இருந்தது. நாங்கள் பாரம் சுமக்கவே பிறந்தவர்கள் என்று அனைவருக்கும் அறிவிப்பது போல் இருந்தது அந்தப் படம். சுந்தரம் கொஞ்ச நேரம் அந்தப் படத்தை உற்றுப் பார்த்து விட்டுப் பேசினார்.

"மதர் மேகி, என்னைப் பலவகையிலும் தண்டிப்பதற்கு எல்லா தீய தெய்வங்களும் சேர்ந்து முடிவு செய்திருக்கின்றன. என்னைச் சித்திரவதை செய்ய வேண்டும் என்றும், அணு அணுவாகக் கொல்வதென்றும் முடிவு செய்திருப்பது போல் தெரிகிறது!"

மதர் மேகி அமைதியாகக் கேட்டார். பிறகு சொன்னார். "சுந்தரம் நீங்கள் அப்படி நினைக்க வேண்டியதில்லை. இந்த நோயை கடவுள் கொடுத்த தண்டனை என்று நினைக்க வேண்டாம். ஒரு சோதனை என்று நினைத்துக் கொள்ளுங்கள்! தனக்கு விருப்பமானவர்களைத்தான் இறைவன் எப்போதும் சோதிப்பானாம்" என்றார்.

"நான் என் நோயை மட்டும் கருதி இப்படிச் சொல்லவில்லை மதர் மேகி!" என்றார்.

"அப்புறம்?"

பெரு மூச்சு விட்டார். தயங்கினார். மெல்லச் சொன்னார்: "எனக்கொரு ஒரு பேரப் பிள்ளை இருக்கிறான். மூன்று வயது. என் மகளின் பிள்ளை. என் புற்று நோய் உறுதி செய்யப்பட்ட அதே நாளில் என் வீட்டுக்கு வந்து சில சந்தர்ப்பங்களினால் பெற்றோர்களைப் பிரிந்து என் பொறுப்பில் விடப்பட்டு வந்து எங்களோடு தங்கியிருக்கிறான். வந்ததிலிருந்து இருமலும் காய்ச்சலுமாக இருந்தான். டாக்டரிடம் கொண்டு காட்டினோம். அவனுக்கு..."

எப்படி அவரையும் மீறி இந்த உணர்ச்சி தொண்டைக்குள் வந்ததோ தெரியவில்லை. தொண்டை அடைத்து விக்கியது. அவர் எவ்வளவோ அடக்க முயன்றும் முடியாமல் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. டாக்டர் மேகி அவர் கையைப் பிடித்து மெதுவாக அழுத்தினார்.

"அவனுக்கு லியூகேமியா என்று மருத்துவப் பரிசோதனைகள் காட்டுகின்றன. இன்றைக்கும் மருத்துவ மனைக்குப் போயிருக்கிறான். இன்றைக்குத்தான் அது உறுதியாகும்!" வழிகின்ற நீரைக் கூடத் துடைக்காமல் நிமிர்ந்து மதர் மேகியின் முகத்தைப் பார்த்தார். 57 வயது ஆண்பிள்ளை ஒரு மேற்கு நாட்டுப் பெண் முன் அழுவது அவருக்கே வெட்கமாக இருந்தது. ஆனால் உணர்ச்சிகள் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கவில்லை.

மதர் மேகி அவருடைய தோளில் கை வைத்தார். "அப்படியா! மிக வருந்துகிறேன் சுந்தரம். நான் சமாதானம் எதையும் கூற முயல்வதற்கு முன் இதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இந்த விஷயத்தை நீங்கள் டாக்டர் லிம்மிடமும் டாக்டர் ராம்லியிடமும் சொல்ல வேண்டும். இந்தப் புற்று நோய்க்குப் பாரம்பரிய காரணங்கள் அல்லது தலைமுறைக் காரணங்கள் இருக்கின்றனவா என அவர்கள் ஆராய்வார்கள்.

"அது எப்படியிருந்தாலும் உங்களுக்கும் உங்கள் பேரக் குழந்தைக்கும் ஒரே நேரத்தில் புற்று நோய் வந்து தாக்கியிருப்பது எந்த மனிதரையும் உருக்கக்கூடிய ஒரு விஷயம்தான். ஆனால் மீண்டும் ஒரு முறை இதை ஒரு தெய்வத் தண்டனை என நீங்கள் நினைக்க வேண்டாம். உங்களையும் உங்கள் பேரப் பிள்ளையை மட்டும்தான் இந்த நோய்களுக்குக் கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிறார் என நினைக்க வேண்டாம். அந்த நினைவு உங்களைக் கடவுளிடமிருந்து அன்னியப் படுத்தி விடும். இது நீங்கள் கடவுளை நெருங்கியிருக்க வேண்டிய நேரம். கோபப்பட்டு விலகி நிற்க வேண்டிய நேரம் அல்ல.

"ஆயிரக் கணக்கில் மில்லியன் கணக்கில் மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள். மரணத்தைப் போலவே நோய்களும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதை முன்னின்று எதிர்க்கப் பாருங்கள். அது உங்கள் உடலை அடிமைப் படுத்தினாலும் மனத்தை அடிமைப் படுத்த விடாதீர்கள்" என்றார்.

"என் கதை இன்னும் முடியவில்லை மதர் மேகி! நீண்ட கதை. உங்கள் நேரத்தை வீணாக்குவதற்கு மன்னியுங்கள்!" என்றார்.

"சொல்லுங்கள் சுந்தரம். நோயாளிகளின் மனதுக்குள் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிவதும் எங்கள் சிகிச்சையில் ஒரு பகுதிதான். ஆகவே என் நேரத்தை வீணாக்குவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். நீங்கள் சொல்ல நினைப்பதையெல்லாம் சொல்லலாம்!" என்றார்.

கண்ணீரைத் துடைத்துவிட்டு மெதுவாக ராதாவைப் பற்றிச் சொன்னார். அவள் கணவனைப் பற்றிச் சொன்னார். அவர்கள் வாழ்க்கையின் விரிசல் பற்றிச் சொன்னார். பரமா தன் பொறுப்புக்கு வந்து சேர்ந்த சூழ்நிலைகளைச் சொன்னார். சிவமணியின் மிரட்டலையும் அவன் இன்றிரவு வரவிருக்கும் விஷயத்தையும் சொன்னார்.

மதர் மேகி எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார். அவர் கேட்கக் கேட்க சுந்தரத்தின் மனது கொஞ்சம் இலேசானது. ஆனால் இந்த அந்தரங்கமான குடும்பக் கதையையெல்லாம் ஏன் ஒரு வேற்றுப் பெண்ணிடம் சொல்லுகிறோம் என்ற வெட்கமும் எழுந்தது. ஆனால் மதர் மேகியை ஒரு வேற்றுப் பெண்ணாகவும் நினைக்க முடியவில்லை. தான் வெகு காலத்திற்கு முன் இழந்து முகமும் மறந்து போன தாய் போல அவர் இருந்தார்.

சுந்தரம் கதையை நிறுத்தி சோர்ந்து மௌனம் சாதித்த ஓரிடத்தில் மதர் மேகி சொன்னார். "உங்களுக்கு என்ன ஆறுதல் கூறுவதென்று எனக்குத் தெரியவில்லை. எனக்கே நடந்திருந்தாலும் உங்களைப் போலத்தான் குலைந்து போயிருப்பேன். ஆனால் இப்படியெல்லாம் அடுத்தடுத்து நடப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் சுந்தரம். அது என்னவென்று நமக்குச் சரியாகப் புரியமாட்டேனென்கிறது. நீங்கள் இதைக் கடவுளின் தண்டனை என நினைப்பதால் உங்களுக்கு ஓர் உண்மைக் கதை சொல்கிறேன். கேட்கிறீர்களா?" என்று மதர் மேகி சுந்தரத்தின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார். சுந்தரம் சரி என்று தலையாட்டினார்.

"அமெரிக்காவில் வெர்ஜினியாவில் ரோய் சல்லிவன் என்ற ஒரு மனிதர் இருந்தார். 1942-க்கும் 1977-க்கும் இடையில் இந்த மனிதரை மின்னல் ஏழு முறை விரட்டி விரட்டித் தாக்கியிருக்கிறது. முதல் தாக்குதலில் அவர் தன் பெருவிரல் நகத்தைப் பறி கொடுத்தார். அடுத்தது அவருடைய புருவங்களை எரித்தது. அதற்குப் பிந்தைய தாக்குதல்களில் தோள்பட்டை, கால், மார்பு, வயிறு ஆகிய உறுப்புக்களில் கடுமையான தீப்புண்கள் ஏற்பட்டன. அவர் தலைமுடி இரண்டு முறை தீப் பிடித்துக் கொண்டது. இந்தக் கதையை கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் நீங்கள் பார்க்கலாம். ஆனால் இதனால் எல்லாம் இறக்காத இந்த மனிதர் 1983-இல் தன்னுடைய காதலி இவரை மறுத்ததனால் மனமுடைந்து இறந்து போனாராம். இது தெய்வ தண்டனை என்றா நாம் எடுத்துக் கொள்வது?

"எரிமலை வெடிக்கிறதே என்று பயப்படுகிறோம். ஆனால் அதனால்தான் நிலத்திற்கு வளமான எரு கிடைக்கிறது. காடுகள் எரிகின்றனவே என்று கவலைப் படுகிறோம். அதனால்தான் நோய்வாய்ப்பட்ட பழைய பெரிய மரங்கள் எரிந்து புதிய கன்றுகள் வளர முடிகிறது. அந்த நெருப்பினால்தான் காடுகள் செடூக்கின்றன. கடலுக்கடியில் பூகம்பம் ஏற்பட்டு அலைக்கழிக்கிறது. கப்பல்களைக் கவிழ்த்து கடல் பொங்கி மீனவர் கிராமங்களை அடூக்கிறது. ஆனால் அதுவே கடலுக்கு மத்தியில் புதிய நிலத்தை உருவாக்கி புதிய உயிர்களையும் உற்பத்தி செய்கிறது. ஆகவே இந்த உலக நியதிக்கு இதெல்லாம் உட்பட்டதுதான் எனத்தான் நாம் அமைதி கொள்ள வேண்டும்" என்றார்.

சுந்தரம் கேட்டுவிட்டுச் சொன்னார். "மதர் மேகி, இவற்றையெல்லாம் நான் சொன்னது இப்போது நான் சொல்லப் போவதற்கு ஒரு முன்னுரையாகத்தான். இதையும் கேட்டுவிட்டு இதெல்லாம் எனக்கொரு தண்டனை என்று நான் நினைப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்று சொல்லுங்கள்!"

மதர் மேகி அவருடைய கண்களைக் கூர்மையாகப் பார்த்தவாறு அடுத்து வரும் செய்திக்காக ஆர்வத்துடன் காத்திருந்தார்.

"இந்த டாக்டர் ராம்லி இருக்கிறாரே, இவர் என்னுடைய பழைய மாணவர்" என்று ஆரம்பித்தார்.

"உங்கள் பழைய மாணவரா? சொல்லவே இல்லையே! அவருக்குத் தெரியுமா?" என்றார்.

"அவருக்குத் தெரிந்துதான் எனக்குச் சொன்னார்!" என்றார். பின் அந்தப் பழைய காலத்தில் தன் பள்ளியில் ராம்லி செய்ததையும் தான் அவரைப் பிடித்ததையும் அந்த சம்பவம் முடிவடைந்த விதத்தையும் சுருக்கமாகச் சொன்னார்.

"என்ன ஒரு விசித்திரம்? அவரே உங்களுக்கு டாக்டராக வந்திருக்கிறாரே!" என்றார் மதர் மேகி.

"டாக்டராக வந்திருக்கிறாரா, யமனாக வந்திருக்கிறாரா என்பதுதான் இப்போது என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி!" என்றார் சுந்தரம்.

மதர் மேகி வியப்புடன் அவரைப் பார்த்தார். "என்ன சொல்கிறீர்கள்? அந்தப் பழைய பகையை இன்னும் நினைவில் வைத்து உங்களுக்குத் தீங்கு செய்யப் போகிறார் என்றா?"

சுந்தரம் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

"இல்லை சுந்தரம். அந்த எண்ணமே எனக்கு அருவருப்பாக இருக்கிறது. ஒரு டாக்டருக்கு இப்படி ஒரு சிந்தனை தோன்றும் என்று கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. நீங்கள் இதை மிகவும் பெரிது படுத்திக் கொண்டு பயப்படுகிறீர்கள்."

டாக்டர் ராம்லி தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட முறை பற்றியும் தன்னுடன் சுமுகமாகப் பேசாமல் பரிவு காட்டாமல் இருப்பது பற்றியும் மதர் மேகிக்குச் சொன்னார்.

"டாக்டர் ராம்லியின் சமூக உறவு கொஞ்சம் நயமில்லாமல் இருக்கலாம் ஒத்துக் கொள்ளுகிறேன். அதைப் பகைமை, வஞ்சம் என அர்த்தப் படுத்திக் கொள்ள முடியுமா? பல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியிலேயே முழுதாக மூழ்கி விடுகிறார்கள். நோயாளிகளை கேஸ்களாக நினைக்கிறார்களே தவிர மனிதர்களாக நினைப்பதில்லை. அப்படி இருப்பதால்தான் இந்த மாதிரி மருத்துவ மனைகளில் என்னைப் போன்றவர்களையும் வைத்து மனித நேயத்தை வளர்க்கிறார்கள். டாக்டர் ராம்லி அப்படிப் பட்டவர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. உணர்ச்சிகளுக்கு இடங் கொடுக்காத ஆராய்ச்சியாளர். எனக்கும் அவரைக் கொஞ்ச நாளாகத்தான் தெரியும். ஆனால் இவரைப் போன்று பல உணர்ச்சியே காட்டாத பல டாக்டர்களை நான் என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். டாக்டர் உணர்ச்சியைக் காட்ட ஆரம்பித்தால், அல்லது நோயாளியின் சுக துக்கங்கள் தன்னைப் பாதிக்க அனுமதித்தால் அவரால் அவருடைய கடமையை ஆற்ற முடியாது சுந்தரம்!"

சுந்தரம் கேட்டார்: "டாக்டர் ராம்லிக்கு என் மேல் பகைமை இல்லை என்பதை எப்படி உறுதிப் படுத்திக் கொள்வது?"

மதர் மேகி பெருமூச்சு விட்டார். பின்னர் பேசினார். "இரண்டு வழிகள் உள்ளன. இந்த சிகிச்சை வேண்டாம் என நீங்கள் ஒதுக்கிவிட்டு முன்பு போல் டாக்டர் லிம்மிடமே சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் புதிதாகக் கிடைக்கும் சிகிச்சை முறையை நீங்கள் பயன் படுத்திக் கொள்ள முடியாமல் போகும். இரண்டாவது வழி..."

மதர் மேகி நிறுத்தி யோசித்தார். "ஒரு டாக்டரிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதே ஒரு மானப் பிரச்சினையாக இருக்கும் என அஞ்சுகிறேன். ஆனால் நீங்கள் சந்தேகம் கொண்டிருப்பதால் உங்கள் சந்தேகத்தை அவரிடமே சொல்லி விளக்கம் கேட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன். அப்படிச் செய்ய நான் தயார்!" என்றார்.

சுந்தரத்திற்கு அது பிடித்திருந்தது, "சரி! இதை மட்டும் நீங்கள் உறுதி செய்து கொண்டால் அந்தப் பத்திரங்களைக் கையோடு கொண்டு வாருங்கள். டாக்டர் ராம்லியின் புதிய சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டு கையெழுத்துப் போட நான் தயார்" என்றார் சுந்தரம். சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள இதுதான் வடூ என்று தோன்றியது. சந்தேகப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துப் பிழைப்பதை விட ஒரேயடியாக இதை வௌிப்படுத்திச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

"இங்கேயே இருங்கள்!" என்று சொல்லிவிட்டு மதர் மேகி அறையை விட்டு வௌியேறினார்.

வெற்றுச் சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரம். "தவறு செய்து விட்டாய் சுந்தரம்! ஒரு டாக்டரின் மேல் தேவையில்லாத சந்தேகத்தை எழுப்பிவிட்டாய். பள்ளிக்கூட நாட்களில் ராம்லி செய்த தவறு உறுதியாகத் தெரிந்தது. குற்றம் சாட்டியதில் நியாயம் இருந்தது. ஆனால் இன்று ராம்லி ஒரு டாக்டர். அவர் மேல் சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டி அவர் நல்ல பெயருக்கும் களங்கம் விளைவித்து மருத்துவத் துறைக்கும் களங்கம் விளைவிக்கிறாய்!" என உள்ளம் சொல்லிக் கொண்டே இருந்தது. குழம்பி உட்கார்ந்திருந்தார்.

மதர் மேகி ஒரு பத்து நிமிடங்களில் திரும்பிவிட்டார். அவர் கையில் அந்தப் பத்திரங்கள் இருந்தன. சுந்தரத்தைப் பார்த்துச் சிரித்தார். "சுந்தரம். நான் தௌிவாகக் கேட்டுவிட்டேன். டாக்டர் ராம்லி அந்தச் சம்பவத்தையே மறந்திருந்தாராம். உங்களை இங்கு பார்த்ததும்தான் அந்தப் பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்ததாம். தன் மனதில் பகையில்லை என்று மட்டும் சொன்னார். ஆனால் உங்கள் மனதில் சந்தேகம் இருந்தால் இந்த சிகிச்சையை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது என்று சொன்னார். என் ஆலோசனையும் அதுதான்! ஒரு நாள் எடுத்துக் கொள்ளுங்கள். இன்றிரவு உங்கள் குடும்பத்தாரோடும் மனம் திறந்து பேசுங்கள். நாளைக்குக் கையெழுத்துப் போடுவது பற்றி முடிவு செய்யுங்கள்" என்றார்.

சுந்தரம் கை நீட்டி அந்தப் பத்திரங்களை வாங்கிக் கொண்டார். "மதர் மேகி! ஏற்கனவே தேவையில்லாத சந்தேகங்களை எழுப்பி உங்களையெல்லாம் குழப்பிவிட்டேன். வருத்தி விட்டேன். இனியும் நானும் காத்திருந்து உங்களையும் காக்க வைத்துக் குழப்ப விரும்பவில்லை! எங்கே என்று சொல்லுங்கள், கையெழுத்துப் போடுகிறேன்!" என்றார்.

மதர் மேகி கோடுகளைக் காட்ட கையெழுத்தைப் போட்டார். போடும் அந்த நேரத்திலேயே ராம்லி தன்னுடைய குற்றச் சாட்டை இவ்வளவு சாதாரணமாகத் தள்ளி விட்டாரே என்ற ஒரு சந்தேகம் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது.

-----

அந்திம காலம் - 14


அவர்கள் வீடு வந்து சேர மணி மூன்றாகிவிட்டது. சுந்தரத்தை வீட்டு வாசலிலேயே இறக்கிவிட்டு ராமா போய்விட்டார். வீட்டுக்குள் வந்த போது வீட்டில் அத்தை மட்டுமே இருந்தாள். காலையில் பரமாவோடு ஆஸ்பத்திரிக்குப் போன ஜானகியும் அன்னமும் இன்னும் திரும்பவில்லை என்று தெரிந்தது. பரமாவுக்கு என்ன முடிவு என்று தெரிந்து கொள்ள மனம் தத்தளித்தது.

காரை எடுத்துக் கொண்டு தாமாக ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்குப் போகலாமா என நினைத்தார். ஆனால் அதற்கு உடல் இடம் கொடுக்காது எனத் தெரிந்தது. கால்கள் தளர்ந்திருந்தன. கால் கை தசையில் இறுக்கமான பிடிப்புகளும் வலியும் இருந்தன. இரத்த ஓட்டம் குறைந்துவிட்டிருந்தது தெரிந்தது. கொஞ்சம் நடந்தாலே இளைத்தது. இன்று காலை நடக்க முயன்று பட்ட அவதியை நினைத்துக் கொண்டார். ஜானகியும் அன்னமும் செய்தி கொண்டு வரட்டும் என்று காத்திருந்தார்.

அத்தை கதவின் ஓரத்தில் அவருக்கு என்ன உணவு வேண்டும் என்று கேட்பது போல் எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். அவருக்கு வயிறு பசித்தது. "சாப்பாடு இருக்கா அத்தை? எனக்குக் கொஞ்சம் சோறும் ரசமும் எடுத்து வையேன்!" என்றார். அத்தை விரைந்து சமையலறைக்குப் போனாள்.

வயிறு பசிப்பதற்குக் காரணம் டாக்டர் ராம்லிதான். அவர் போட்டுவிட்ட ஊசிதான்.

தான் கையெழுத்திட்டுக் கொடுத்த பத்திரங்களைப் பெற்றுக் கொண்டு ஒருமுறை கையெழுத்தைச் சரி பார்த்தார். ஒரு வார்த்தையும் பேசவில்லை. மதர் மேகி அவரிடம் கேட்ட கேள்வி பற்றியோ தங்கள் பழைய ஆசிரியர் - மாணவர் தகராறு பற்றியோ வாய் திறக்கவில்லை. அவருடைய முகம் என்றும் போல்தான் இருந்தது. கசப்போ இனிப்போ காரமோ ஒன்றும் இல்லை. சுந்தரமும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகவே இருந்தார்.

தாமாக ஒரு ஊசியை எடுத்து ஒரு குப்பியிலிருந்து மருந்து நிரப்பி அவருடைய கையில் குத்தி விட்டார். சில மாத்திரைகளைக் கொடுத்துத் தண்ணீர் கொடுத்து விழுங்கச் சைகை காட்டினார். சில மருந்துகள் அவர் பெயர் எழுதப் பட்டு தயாராக இருந்தன. அவற்றை சுந்தரத்திடம் கொடுத்தார்.

"இவற்றை எப்படிச் சாப்பிடுவதென்று லேபிலில் எழுதியிருக்கிறது. தவறாமல் சாப்பிடுங்கள். இன்றிரவு தொண்டை வீங்கிக் கரகரக்கக் கூடும். இந்த மாத்திரைகள் அதைத் தணிக்கத்தான். சாப்பிடுங்கள். அதிகம் பேசவேண்டாம். இது தூக்க மாத்திரை. தேவை ஏற்பட்டால் மட்டும் சாப்பிடுங்கள். நாளைக்காலை ஒன்பதரை மணிக்கு என்னை வந்து பாருங்கள்!" என்றார்.

ஏதாவது பேசாமல் போகக் கூடாது. அது பகைமையை வளர்க்கும் என எண்ணினார் சுந்தரம். "இப்போது போட்டீர்களே, அது என்ன ஊசி?" என்று கேட்டார்.

"அது அன்றைக்குப் போட்டதைப் போலத்தான். வாந்தி குமட்டலைக் குறைத்துப் பசியைக் கொடுக்கும்!" என்றார் ராம்லி. அன்று அவர் கொடுத்த மருந்து நல்ல பலன் கொடுத்ததை சுந்தரம் நினைத்துப் பார்த்தார்.

தயங்கித் தயங்கிச் சொன்னார்: "டாக்டர், மதர் மேகி உங்களிடம் பேசியது பற்றி...!"

"ஆமாம். அது சின்ன பழைய விஷயம். அதை மறந்து விடுங்கள். நாளைக்குப் பார்ப்போம்!" என விடை கொடுத்து வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார் டாக்டர் ராம்லி.

கொஞ்சமும் பிடி கொடுக்கவில்லை. தனது சந்தேகங்களைப் போக்கிச் சுமுகத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதில் அவருக்குக் கொஞ்சமும் அக்கறை இல்லை எனத் தெரிந்தது. உள்ளே என்ன நினைக்கிறார் என்பது கொஞ்சமும் புரியவில்லை.

வீட்டுக்கு வரும் வழியில் ராமா கேட்டார்: "என்ன சொல்றாரு நம் ராம்லி?"

"ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறாரு ராமா! இந்த விஷயத்தைப் பெரிசாகவே எடுத்துக்கில. மறந்திருங்கன்னு மட்டும் சொன்னார்."

"அப்புறம் என்ன? மறந்திடு சுந்தரம்! நான் அப்பவே சொன்னேன்ல, இதெல்லாம் மனசில வெச்சிக்க மாட்டார்னு!"

"ஆனா ஒரு கடுமையான முகமூடி போட்டுக்கிட்டே பேசிறாரு. சுமுகமே இல்ல!"

"அது முகமூடின்னு நீ நெனைக்கிற! அதுவே அவருடைய முகமாக இருக்கலாம் இல்லியா?"

சாப்பாட்டு மேசையில் அமர்ந்ததும் ராம்லியின் முகம் நினைவுக்கு வந்தது. அது முகமா முகமூடியா என்பதை அவரால் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் அவர் கொடுத்த அந்த மருந்து அன்று போலவே இன்றும் விரைவான பலன் கொடுத்தது. வயிற்றிலும் நெஞ்சிலும் குமட்டல் முற்றாக நின்றிருந்தது. பசித்தது. சோற்றின் மேல் ஆசை வந்தது. ஆனால் பரமாவின் நினைவு வந்ததும் மீண்டும் வயிறு கொஞ்சம் கலவரம் அடைந்தது. அடக்கிக் கொண்டு சோற்றைக் கொஞ்சமாகப் பிணைந்து ஒரு கவளம் அள்ளி வாயில் வைத்த போது வாசல் மணி அடித்தது.

எட்டிப் பார்த்தார். ஒரு கூரியர் வேன் நின்றிருந்தது. சிப்பந்தி ஒருவர் ஒரு பெரிய கடித உரையுடன் இறங்கினார். சுந்தரம் கை கழுவி வௌியே சென்று கையெழுத்திட்டு அதை வாங்கிக் கொண்டார். இங்கிலாந்திலிருந்து வந்திருந்தது. அனுப்பியவர் பெயர் முகவரி உரையில் எழுதியிருக்க வில்லை.

கிழித்துப் பார்த்தார். ஒரு காப்புறுதிப் பத்திரம் இருந்தது. ராதாவின் கையெழுத்தில் குறிப்பு ஒன்று இருந்தது.

"அப்பா, பிரேமின் மருத்துவக் காப்புறுதி அனுப்பியிருக்கிறேன். மருத்துவ மனையில் காட்டுங்கள். எல்லாச் செலவையும் ஏற்றுக் கொள்வார்கள். என் கண்மணியைப் பார்த்துக் கொள்ளுங்கள். விமானத்தில் இடம் கிடைத்ததும் வருகிறேன். ராதா"

பணத்துக்குக் குறைச்சலில்லை. இந்தத் துன்பங்களுக்கிடையே அது ஒன்றுதான் நிம்மதி. உன் நோய்களை நீ ஓய்வாக அனுபவிக்க நான் உனக்கு வேண்டிய பணம் கொடுக்கிறேன் என ஆண்டவன் சொல்கிறானா? இந்தப் பணத்தைக் கொடுத்து உடல் நலத்தை வாங்க முடியுமா? இந்தப் பணத்தைக் கொடுத்து உயிரை வாங்க முடியுமா?

இறைவனே! உன் பெயரில் இந்த உலகில் எங்காவது பொருளகம் இருக்கிறதா? இதோ இந்தக் காப்புறுதிப் பணத்தையும் என் உயிரையும் அங்கு வைப்புத் தொகையாகக் கட்டுகிறேன். என் பேரனின் உயிரை மீட்டுக் கொடுப்பாயா?

காப்புறுதியை மேசை மீது வைத்துவிட்டு சாப்பாட்டு மேசையில் வந்து அமர்ந்தார். மெதுவாகச் சாப்பிட்டார். இனிமையாக இருந்தது. அமுதமாக இருந்து. அத்தையின் சமையல் தொண்டையில் இறங்கி வயிற்றில் சுகமாகத் தங்கியது. அற்ப சுகம்தான். ஆனால் அனுபவிக்கும் போது எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது?

எதுவும் சிரமத்திற்குப் பிறகுதான் தெரிகிறது. சாப்பிடாமல் வாடிக் கிடந்த பின் சாப்பாட்டின் அருமை தெரிகிறது. நடக்க முடியாமல் முடங்கிக் கிடந்த பின்னர்தான் நடையின் அருமையும் காலின் அருமையும் தெரிகின்றன. இவற்றின் அருமை தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தண்டனைகளா? வௌிச்சத்தின் அருமை தெரியாத அறிவிலியே, கொஞ்ச நாள் இருட்டறையில் இருந்து தண்டனை அனுபவி. அதன் பின் சாதாரண வௌிச்சமே உனக்கு அபூர்வமாகத் தெரியும். அதை உனக்குக் காட்டுகிறேன் என இறைவன் விதித்திருக்கிறானா?

"இவற்றையெல்லாம் தண்டனை என நினைக்க வேண்டாம். சோதனை என எண்ணிக் கொள்ளுங்கள்!" என்ற மதர் மேகியின் சொற்கள் நினைவுக்கு வந்தன.

சரி, நான் இதைச் சோதனை என்று எடுத்துக் கொள்கிறேன். பரமாவுக்கும் இது சோதனையா? இந்தப் பச்சிளம் வயதிலா? இது சோதனை என அவனுக்குத் தெரியுமா? இந்தச் சோதனைக்குப் பின் வாழ்க்கையைப் புதிதாகப் பார்த்து அதன் அருமைகளைப் புதிதாகக் கற்றுக் கொள்ளப் போகிறானா?

இந்தச் சோதனைகள் இல்லாமலேயே வாழ்க்கை அவனுக்குப் புதிதாகத்தானே இருக்கிறது? தைப்பிங் ஏரிப் பூங்காவில் அவன் தட்டாம் பூச்சி பிடிக்க முயன்றதை நினைத்துப் பார்த்தார். புல்லையும் சிறு காட்டுப் பூக்களையும் சிறு கைகளால் பிய்த்து உற்றுச் சோதித்ததையும் நினைத்துப் பார்த்தார். திருக்குறளை மழலையில் சொல்லிச் சிரித்ததை நினைத்ததார்.

எல்லாமே அவனுக்குப் புதியவைதானே! இப்போதுதானே முதலில் தெரிந்து கொள்கிறான். அன்பையும் பரிவையும் தெரிந்து கொள்கிறான். தன் தகப்பனிடமிருந்து வன்முறையையும் தெரிந்து கொள்ளுகிறான். தன் தாயின் அன்பு இருந்தாலும் அவளுக்கு அந்த அன்பைவிட ஏதோ இன்னொரு ஈர்ப்பு இன்னொரு இடத்தில் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுகிறான். தெரிந்து கொண்டு இதன் அர்த்தங்கள் புரியாமல் திணறுகிறான். இப்படி அவன் பாதி கற்றுக் கொள்ளும் வேளையிலேயை தெய்வங்கள் சோதனை வைக்க வேண்டுமா?

"ஏ சுந்தரம்! மடையனே! 57 வயதில் நீ வாழ்க்கையைப் பற்றி என்னதான் கற்றுக் கொண்டாய்?" என்று என்னைக் கேட்பது சரி. எனக்கு சோதனை வைப்பது சரி. "ஏ பரமா என்னும் பையனே! மூன்று வயதாகிவிட்டதே உனக்கு, என்ன கற்றுக் கொண்டாய்?" என அவனுக்குச் சோதனை வைக்கும் கொடுமைக்கார தெய்வம் எது? மதர் மேகி! இதற்கு என்ன பதில்?

சாப்பிட்டு முடிக்கும் வேளையில் வீட்டுக்கு முன் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அன்னம் காரை நிறுத்தி விட்டு இறங்கி வந்தாள். அவர் போய் அவசரமாகக் கை கழுவி துடைத்து வந்தார்.

ஜானகி பரமாவைத் தூக்கிக் கொண்டு இறங்கினாள். அவன் தூங்கிக் கொண்டிருக்கிறானா மயக்கத்தில் இருக்கிறானோ என அவருக்குத் தெரியவில்லை. அவனுக்குப் போர்வை போட்டு சுத்தியிருந்தார்கள். அவர்கள் முகங்களை ஆர்வத்துடன் பார்த்தார் சுந்தரம். "என்ன ஆச்சு அக்கா? ஏன் இவ்வளவு நேரம்?" என்றார்.

"ரெண்டு மூணு டாக்டர்கள் கூடிக் கூடிப் பேசி முடிவு சொல்லி எல்லாம் செட்டில் பண்ண இவ்வளவு நேரமாச்சி தம்பி. இப்பத்தான் விட்டாங்க" என்றாள் ஜானகி.

"என்ன சொல்றாங்க அக்கா?"

"நாம மிந்தி நெனச்சத விட மோசமாகத்தான் இருக்கு. அக்யூட் லியூகேமியான்னு உறுதிப் படுத்திட்டாங்க. பல உறுப்புக்களுக்குப் பரவியிருக்காம். ரத்த சோகை ரொம்ப அதிகமா இருக்காம். மொதல்ல 'போன் மேரோ' (எலும்புச் சோறு) மாற்று அறுவை பண்ணனும்னாங்க. பிள்ளைக்கு சகோதரர்கள் இருக்காங்களான்னு கேட்டாங்க. இல்லைன்னேன். அப்பா அம்மா வரமுடியுமான்னு கேட்டாங்க. இல்ல, தாத்தா பாட்டிதான் இருக்காங்கன்னு சொன்னேன். அப்புறம் அதுவும் வேண்டான்னுட்டு ரேடியோதெராப்பியும் கெமோதெராப்பியுந்தான் ஆரம்பிச்சிருக்காங்க."

தான் பட்ட பாடு அனைத்தும் அவனும் படப் போகிறான் என நினைத்து அவர் உள்ளம் சோர்ந்தது. ஜானகி அவனைக் கொண்டு உள்ளே படுக்கையில் கிடத்தினாள். அவனிடமிருந்து ஒரு சத்தமும் வரவில்லை.

"சிகிச்சை ஆரம்பிச்சாட்டங்களா அக்கா?"

"ஆரம்பிச்சிட்டாங்க. சில மருந்துகள் குடுத்திருக்காங்க. உடனே அட்மிட் பண்ணனும்னு சொன்னாங்க. ஆனா இன்னக்கி ராத்திரி இவனோட அப்பன் வரப்போற கதையைச் சொல்லி கூட்டி வந்திட்டோம். ஆனா முடிஞ்சா இன்னக்கி ராத்திரியே அட்மிட் பண்றது நல்லது தம்பி! அட்மிட் பண்ண ரெண்டாயிரம் வெள்ளி டெப்போசிட் கேக்கிறாங்க!"

ராதா காப்புறுதிப் பத்திரம் அனுப்பியிருப்பதைச் சொல்லி பணத்தைப் பற்றிப் பிரச்சினை இல்லை எனச் சொன்னார்.

"ரொம்ப துவண்டு போயிட்டான் தம்பி. டாக்டர் சொக்கலிங்கம்னு ஒரு ஸ்பெஷலிஸ்ட் வந்து எங்கிட்ட பேசினாரு. புற்று நோய் செல்கள் ரொம்ப வளந்திருக்கு. பல உறுப்புக்கள பாதிச்சிருக்கு. இதக் கட்டுப் படுத்தலன்னா ஒரு மாசம் கூட பிள்ள தாங்கமாட்டான்னு சொல்றாரு!"

அறைக்குள் சென்று அவனைப் பார்த்தார். தன் வேதனைகளை மறந்து அவன் தூக்கத்தில் இருந்தான். ஜானகி அவன் தலையணையைச் சரி செய்து அவனுக்குப் போத்திவிட்டு போர்வையின் விளிம்புகளை உள்ளே சொருகி நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.

"உங்களுக்கு உடம்பு பத்தி என்ன சொன்னாங்க?" என்று கேட்டாள். அவள் குரலில் சோகம் தோய்ந்திருந்தது.

இந்த வீட்டில் நல்ல சேதிக்கு இடமில்லை என்பது உனக்குத் தெரியாதா ஜானகி என்பது போல் அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்து விட்டு "முன்னேற்றம் ஒண்ணும் இல்ல! புது சிகிச்சை ஆரம்பிச்சிருக்காங்க! பாக்கலாம்!" எனப் பெரு மூச்சு விட்டார்.

வாடிப் போன பூவைப்போல் கிடக்கும் அவனை மீண்டும் பார்த்தார். தனக்கும் பரமாவுக்கும் இப்போது ஒரு பந்தயம் நடக்கிறது. யார் முதலில் போவது? பரமா! சாவுக்கு என்னோடு போட்டி போடாதே! தாத்தா முதலில் போகும் வரை காத்திரு! இல்லாவிட்டால் நீ அங்கே தனியாக இருந்து ஏங்குவாய்! நான் போய் நீயும் வந்து சேர, நாம் அங்கே உட்கார்ந்து தமிழ்ப் படிக்கலாம். கண்ணீர் துளிர்த்தது. எழுந்து வௌியே வந்தார்.

டாக்டர் ராம்லியின் மருந்துகள் சில அமிலங்களை அடக்கி வைத்திருந்தாலும் பரமா பற்றிய இந்தச் செய்திகள் வேறு அமில ஊற்றுக்களைத் தோற்றுவித்திருக்க வேண்டும். வயிற்றில் ஒரு புரட்டலும் வலியும் தோன்றின. நெஞ்சு குமட்டியது.

இன்று இரவு சிவமணியும் அவன் தாயாரும் வரப் போகிறார்கள் என்ற நினைவு வந்தது. இன்றிரவு மீண்டும் இடியும் மின்னலுமாக இருக்கப் போகிறது. தயாராகவும் தைரியமாகவும் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டார்.


*** *** ***

ஆறு மணி முதலே காத்திருந்தார்கள். சிவமணியும் அவன் தாயாரும் வந்து சேர்ந்தவுடன் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்கு அழைத்துச் சென்று அவன் தகப்பன் மூலமாகவே பரமாவை அங்கு சேர்க்க வேண்டும் என்பது திட்டம்.

அப்படி சிவமணி ஒத்துக் கொண்டால் அன்றைக்கு இரவு அன்னம் மருத்துவ மனையில் பரமாவுக்குத் துணையாகத் தங்கியிருப்பதாக ஏற்பாடு. ஆகவே தனக்கு மாற்றுத் துணிகளையும் இரவில் குடிக்க மைலோவைக் கலந்து பிளாஸ்கிலும் எடுத்துத் தயாராக வைத்துக் கொண்டாள் அன்னம். பரமாவின் துணிகள் ஒரு தனிப் பையில் இருந்தன.

"ஒத்துக்குவானா தம்பி, உன் மருமகன்? இல்ல பிள்ள செத்தாலும் சரி, எனக்கு என் ரோஷந்தான் முக்கியம்னு தரதரன்னு இழுத்திட்டுப் போயிடுவானா?" என்று கேட்டாள் அன்னம்.

"பார்ப்போங்கா! அப்படி இழுத்திட்டுப் போனாலும் நாம் தடுக்க முடியாது. அவன் பிள்ள, அவன் இஷ்டம்! நாம் என்ன பண்ண முடியும்?" என்றார். பரமா படுத்திருந்த அறையை நோக்கிப் பரிதாபமாகப் பார்த்தார்.

ஏழு மணிக்குத்தான் தன் கார் டெலிபோனிலிருந்து அழைத்தான். "பிரேம் தயாரா இருக்கானா?" என்று கேட்டான்.

"சிவமணி! இதக் கேளு, பரமாவுக்கு உடம்பு சரியில்ல... ஆஸ்பத்திரியில..."

"ஷட் அப்" அவனுடைய பதில் ஒரு கிளவ்ஸ் அணிந்த குத்துச் சண்டைக்காரனின் பலத்துடன் அவர் முகத்தில் குத்தியது. "இந்த சாக்குப் போக்கெல்லாம் தேவையில்ல. அவனுடைய துணியெல்லாம் எடுத்து பேக் பண்ணி வைங்க. நானும் அம்மாவும் அங்க வந்து எறங்குவோம். அவன என் காடியில ஏத்துவோம். உடனே திரும்பிடுவோம். அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட உங்க வீட்டில தங்க மாட்டோம்."

"கேளுப்பா..."

"நான் பினேங் பாலத்துப் பக்கம் இருக்கேன். இன்னும் அரை மணி நேரத்தில வந்திருவேன்." போனைத் துண்டித்தான்.

நாயைக் கட்டி வைத்து முன் கேட்டைத் தயாராய் திறந்து வைத்து அரை மணி நேரம் நெருப்புத் தணலில் இருந்தார்கள்.

ஏழரை மணிக்கு அவனுடைய ராட்சசப் பாஜேரோ ஜீப் வண்டி தீப்பந்தங்கள் போன்ற தன் முன் விளக்குகள் எரிய அவருடைய வீட்டின் முன் வந்து நின்றது. கட்டி வைத்திருந்த நாயின் இடைவிடாத குரைப்புப் பின்னணியில் சிவமணி இறங்கினான். அவன் தாயார் - மிக அபூர்வமாகத் தான் பார்த்துள்ள சம்பந்தியம்மாள் - ஜீப்பிலேயே உட்கார்ந்திருந்தாள்.

கதவருகில் வந்து நின்றதும் அவன் அவரைப் பார்த்துக் கேட்டான்: "எங்க பிரேம்? கொண்டாங்க வௌிய, நான் போகணும்!" என்றான். முகத்தில் கடுமைதான் இருந்தது.

"வா சிவமணி. உள்ளுக்கு வா. உன் மகன்தான, நீ நல்லா அழைச்சிட்டுப் போலாம். ஆனா உள்ளுக்கு வந்து நாங்க சொல்றதக் கேட்டுட்டு அழச்சிட்டுப் போ!" என்றார்.

"தேவையில்ல! அதையும் இதயும் சொல்லி அவன வச்சிக்கப் பாப்பிங்க! நான் இப்படியே போறதுதான் நல்லது!" என்றான்.

"சரி. சந்தோஷம். எப்படியிருந்தாலும் உன்மகன் நடக்கிற நிலமையில இல்ல. நீ உள்ள வந்து அவனப் பாத்திட்டு படுக்கையிலேருந்து தூக்கிட்டுப் போ!" என்றார்.

அவன் திரும்பித் தன் தாயைப் பார்த்தான். "அம்மா! நீ வா. போய்ப் பையனத் தூக்கிட்டு வா!" என்றான்.

சம்பந்தியம்மாள் காரைவிட்டு இறங்கினாள். அவள் முகத்திலும் அனல் பறந்தது. அவள் உள்ளே நுழைய அவர் வடூவிட்டார். அன்னம் அவளைப் பரமா படுத்திருந்த அறைக்கு அழைத்துப் போனாள். சிவமணி ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு கேட்டருகில் இருளான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதற்குள் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தான்.

ஜானகி பரமாவின் பக்கத்தில் அழுதவாறு உட்கார்ந்திருந்தாள். சம்பந்தியம்மாள் பரமாவைப் பார்த்ததும் முகம் சுருங்கினாள். அவன் உடம்பு அப்போது கொதிக்க ஆரம்பித்திருந்தது. அவனைத் தொட்டுப் பார்த்து கையை வெடுக்கென்று எடுத்துக் கொண்டாள்.

"அவன் உடம்புக்கு என்ன?" என்று அன்னத்தைப் பார்த்துக் கேட்டாள்.

அன்னம் அந்த அம்மாளை எரித்துவிடுவது போலப் பார்த்தாள். "இப்பவாவது அந்தக் கேள்வியக் கேக்க மனசு வந்திச்சே உங்களுக்கு! கொஞ்சம் பொறுமையா கேளுங்க. உங்க பேரனுக்குக் கேன்சர். இரத்தக் கேன்சர். பிள்ளை இப்ப சாகப் பிழைக்கக் கெடக்கிறான்!" என்றாள்.

சம்பந்தியம்மாள் மருண்டு போய் பிள்ளையையும் அன்னத்தையும் ஜானகியையும் மாறி மாறிப் பார்த்தாள். "ஏன் இத மிந்தியே சொல்லல?" என்று கேட்டாள்.

சுந்தரம் அறை வாசலில் நின்று பதில் சொன்னார். "நீங்க சொல்ல விட்டாதான சொல்றதுக்கு? எனக்குக் கடுமையான எச்சரிக்கை குடுக்கிறதிலதான் உங்க மகனுக்கு அக்கறை இருந்ததே தவிர நான் திரும்பத் திரும்பச் சொல்ல முயற்சி பண்ணியும் அவர் காது குடுத்துக் கேக்கவே இல்ல. நீங்களே வந்து தெரிஞ்சிக்குங்கன்னு விட்டாச்சி!" என்றார்.

"கேன்சரா?" என்று மீண்டும் சந்தேகமாகக் கேட்டாள்.

"கேன்சர்தான். அக்யூட் லியுகேமியா."

"உண்மையாவா?"

"டாக்டர் சொன்னாதான் நம்புவிங்கன்னா, அங்கேயே போய் கேட்டுக்கலாம். அங்க போகத்தான் நாங்களும் தயாரா இருக்கோம்!"

சம்பந்தியம்மாள் வௌியே போய் சிவமணியைத் தனியாகக் கொண்டு போய் அவன் காதில் குசுகுசுத்தாள். அவன் அவர் பக்கம் குரூரமாகப் பார்த்தான். பின் சத்தமாகச் சொன்னான். "எல்லாம் பொய்ம்மா! பெரிய நாடகம் போட்றாங்க. இப்படி நடக்கும்னு நான் சொன்னேனா இல்லியா! நீ போய் தூக்கிட்டு வா! அவனுக்கு என்ன சீக்கானாலும் கோலாலம்பூர்ல நாம கொண்டி வச்சிப் பாத்துக்கலாம். போ! இவங்க சொல்றத நம்பாத. தூக்கிட்டு வா! நாம் போவோம்!" என்றான்.

சம்பந்தியம்மாள் தயங்கித் தயங்கி மீண்டும் உள்ளே வந்தாள். அன்னத்தைப் பார்த்தாள். "நெசந்தானா நீங்க சொல்றது? இல்ல என் மகன் சொல்ற மாதிரி நாடகம் போட்றிங்களா?" என்று கேட்டாள்.

"நம்புறது நம்பாதது உங்களப் பொறுத்தது. நாங்க என்ன செய்ய முடியும்? உள்ளதச் சொல்லியாச்சி. அவன் படுத்த படுக்கைதான். அவனுக்கு உடனடியா மருத்துவ சிகிச்சை தேவை. ஆனா உங்க மகனுக்கு தகப்பன்கிற முறையில பிள்ளயக் கொண்டு போக எல்லா உரிமையும் இருக்கு. நாங்க எத்தனையோ தடவ வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்குமா அலைஞ்சாச்சி! பரவாயில்ல! அள்ளித் தூக்கிட்டுப் போங்க! வடூயிலேயே செத்துப் போனா நீங்களே ஏற்பாடு பண்ணிப் பொதைச்சிடுங்க!" என்று கூறிவிட்டு அன்னம் அழுதாள்.

சம்பந்தியம்மாள் மீண்டும் மகனிடம் போய் குசுகுசுத்தாள். அவன் "பொய் சொல்றாங்கம்மா" என்று திருப்பித் திருப்பிச் சொன்னது காதில் விழுந்தது. அந்த அரை இருட்டுப் பகுதியில் அவன் கையில் சிகிரெட் முனை எரிந்தது மினுமினுப்பாகத் தெரிந்தது. அவன் கை வீச்சில் அது அங்குமிங்குமாக அலைந்தது.

சம்பந்தியம்மாள் கொஞ்சம் கோபமாகப் பேசியது அவர்கள் காதில் விழுந்தது. "சீக்குப் பிள்ளய நான் வச்சிப் பாக்க முடியாது. நீ வேற யாரையாவது வச்சிப் பாத்துக்க. என்னால ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைய முடியாது. நீயே போய் தூக்கிக்க! நீயே ஆள் வச்சிப் பாத்துக்க!" என்றாள்.

"என்னம்மா இவ்வளவு தூரம் வந்து இப்படிச் சொல்ற!" என்றான்.

"அப்பிடித்தான். நீயே போய் பாரு, உம்பிள்ளய இவங்கள்ளாம் சேந்து என்ன கதியாக்கி வச்சிருக்காங்கன்னு!" அவர்கள் காதில் விழ வேண்டும் என்பதற்காகச் சத்தமாகவே சொன்னாள். விஷத்தைக் கக்கும் வேளை வந்து விட்டால் அது மற்றவர்களைப் பாதிக்காமல் கக்கி என்ன பயன்? சுந்தரம் உள்ளுக்குள் கொதித்தார். ஆனால் அடங்கியிருந்தார்.

சிவமணி கொஞ்ச நேரம் குழம்பியிருந்தான். அங்குமிங்கும் அலைந்தான். பின்னர் சிகரெட்டைத் தூக்கியெறிந்துவிட்டு சப்பாத்தைக் கழற்றி வைத்து விட்டு வீட்டுக்குள் வந்தான். ஜிம்மி மீண்டும் சங்கிலியில் திமிறிக் கொண்டு அவனைப் பார்த்துக் குலைத்தது.

படுக்கையருகில் வந்து பரமாவைப் பார்த்தவாறு நின்றான். அவன் வாயிலிருந்து அந்த அறைக்குள் சிகிரெட்டின் நாற்றம் பரவியது. ஜானகி எழுந்து தள்ளி நின்றாள். படுக்கையின் விளிம்பில் உட்கார்ந்தான். நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். பரமாவின் நெஞ்சில் போர்வையின் மேல் கைவைத்து இலேசாக உலுக்கினான்.

"பிரேம்! லுக் போய்! லுக், டேடி இஸ் ஹியர்" என்றான்.

பிரேம் கண்களை மெதுவாகத் திறந்தான். சிவமணியைப் பலவீனமாகப் பார்த்தான். "டேடி, ஐ எம் சிக்!" என்றான். மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.

ஜானகியைப் பார்த்து முறைத்தான் சிவமணி. "காய்ச்சல்தான அடிக்குது. கேன்சர்னு ஏன் பெரிய பொய்யச் சொல்றீங்க?" என்றான்.

"தூக்கிட்டுப் போப்பா! உனக்கு ஏன் நாங்க பதில் சொல்லிக்கிட்டு இருக்கணும்? கேன்சரா இல்லையாங்கிறத நீயே டாக்டரக் கேட்டுத் தெரிஞ்சிக்க!" என்று சீறினாள் ஜானகி.

கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்தவாறு மகனைப் பார்த்தவாறு இருந்தான். வாசல் பக்கம் நின்றிருந்த சுந்தரத்தைப் பார்த்தான். "எப்ப உங்களுக்குத் தெரியும்?" என்று கேட்டான். அவன் கோபத்தின் சுருதிகள் குறைந்திருந்தன.

"ரெண்டு வாரமா சோதனைகள் நடந்தது. போன வாரம் உத்தேசமாத் தெரியும். இன்றைக்குத்தான் நிச்சயமா சொன்னாங்க! ஸ்பெஷலிஸ்ட் சென்டர்ல சேக்கிறதுக்கு எல்லா ஏற்பாடுகளும் பண்ணிட்டு உனக்காகக் காத்திருக்கோம். அவ்வளவுதான்" என்றார் சுந்தரம்.

தலையைக் குனிந்து கொண்டான். யோசித்தவாறு இருந்தான். பின் தலை தூக்கிக் கேட்டான். "அவளுக்குத் தெரியுமா?"

"எவளுக்கு?"

"உங்க மகளுக்கு!" என்றான்.

அவள் பெயரைக் கூடச் சொல்ல அவனுக்கு நா வரவில்லையே எனக் கோபப் பட்டார். கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னார். "தெரியும்"

"அப்ப அவனப் பார்க்க வர்ராளா? எப்ப வர்ரா?"

யோசித்துச் சொன்னார். "அது எனக்குத் தெரியாது. தெரிந்தாலும் உனக்குச் சொல்றதா இல்ல. பிள்ளை பேர்ல எடுத்த ஆஸ்பத்திரி இன்சூரன்ஸ் பத்திரம் மட்டும் அனுப்பியிருக்கு. இன்னைக்குத்தான் கூரியர்ல வந்தது" என்றார்.

தலை குனிந்தவாறு இருந்தான். அப்புறம் விருட்டென்று எழுந்து வௌியில் போனான். முன்பு சிகிரெட் பிடித்துக் கொண்டு நின்ற அதே இருளில் இன்னொரு சிகிரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். புகைத்தவாறு இருந்தான்.

அவன் தாய் வரவேற்பரையில் ஒரு நாற்காலியின் விளிம்பில் குழம்பிப் போய் அமர்ந்திருந்தாள். இங்கு வந்து மகனோடு சேர்ந்து அடாவடித் தனம் செய்து அனைவரையும் அவமானப் படுத்திவிட்டு குழந்தையைப் பறித்துக் கொண்டு போகவேண்டும் என்று அவள் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறாத ஏமாற்றமும் எரிச்சலும் முகத்தில் தெரிந்தன.

சுந்தரம் இன்னொரு நாற்காலியில் வயிற்றைப் பிசைந்தவாறு உட்கார்ந்திருந்தார். இது மருந்து சாப்பிட வேண்டிய நேரம் என்பது நினைவுக்கு வந்தது. ஆனால் இங்கு நடக்கின்ற நாடகத்தின் இந்தக் காட்சி ஒரு முடிவுக்கு வராமல் தான் எழுந்து போவது நன்றாக இருக்காது என உட்கார்ந்திருந்தார். தலை விண் விண் எனத் தெறித்தது. கால் கை தசைகளை வலி பிசைந்து கொண்டிருந்தது. வயிற்றுத் தசைகளிலும் வலி தோன்றியிருந்தது.

இரண்டு மூன்று நிமிடங்களில் சிகிரெட்டைத் தூக்கி எறிந்துவிட்டுத் திரும்பி வந்தான் சிவமணி. சுந்தரத்தின் முன் நின்றான். "சரி வாங்க! அவனக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணுவோம்! நானும் டாக்டர்கிட்ட பேசணும்" என்றான்.

அந்த முடிவு கிடைத்ததற்கப்புறம் வீடு பரபரத்தது. சாமான்கள் அடுக்கப்பட்டன. காரில் ஏறின.

சுந்தரம் தன் அறைக்குப் போய் மருந்துகளைக் கவனமாகப் பொறுக்கிச் சாப்பிட்டார். ஜானகி கதவைத் திறந்து கொண்டு நுழைந்தாள்.

"ஏங்க! நீங்களுமா ஆஸ்பத்திரிக்கு வரணும்? உங்களுக்கு தலையும் வயிறும் வலிக்குதுன்னு பாத்தாலே தெரியுது. நீங்க மாத்திரை சாப்பிட்டு வீட்ல இருங்க. நானும் அக்காவும் எல்லாத்தையும் கவனிச்சிக்கிறோமே!" என்றாள்.

"இல்ல ஜானகி. இவ்வளவு நடக்கும்போது நான் ஒண்டியா வீட்ல உக்காந்திருக்க முடியாது. நானும் வாரேன். வலி இருக்கத்தான் செய்யிது. ஆனா எல்லாம் கொஞ்சங் கொஞ்சமா பழகிக்கிட்டு வருது! சமாளிச்சிக்கலாம் வா!" என்று புறப்பட்டார்.

உடல் வலி மட்டும் அல்ல. மன வலிகளும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிக் கொண்டுதான் வருகிறது. சமாளிக்க முடிகிறது. ஆனால் அணைகள் உடைகின்ற தருணம் ஒன்று இருக்கத்தானே வேண்டும், அது எப்போதோ என்று எண்ணியவாறு அன்னத்தின் காரில் ஏறி உட்கார்ந்தார்.

அன்னத்தின் சிறிய கஞ்சில் கார் வழிகாட்ட பாஜேரோ ஒரு புலி போலப் பின்னால் வந்து கொண்டிருந்தது.

-----

அந்திம காலம் - 15


அந்த மருத்துவ மனை சுத்தமாக இருந்தது. விசாலமாக இருந்தது. புதிதாக சில டாக்டர்கள் ஒன்று சேர்ந்து பெரும் பணம் முதலீடு செய்து கட்டியது. நுழைவாயில், வரவேற்பறை, அடையாளப் பலகைகள் அத்தனையையும் நவீனமாக பளபளப்பாக இருந்தன. பணியாளர்கள் பணிவுடனும் பரிவுடனும் சுறுசுறுப்பாகவும் இருந்தார்கள்.

பரமாவின் பதிவு மிக வேகமாக நடந்தது. காப்புறுதிப் பத்திரம் பார்த்தவுடன் வைப்புத் தொகை ஏதும் கேட்கவில்லை. தாதியர்கள் வரவழைக்கப்பட்டு குழந்தைகள் வார்டில் ஒரு சுத்தமான அறையில் இன்னும் இரண்டு குழந்தை நோயாளிகளுடன் அவனையும் படுக்க வைத்தார்கள். விசாலமான அறை. பிரகாசமான வர்ணங்களைச் சுவரில் பூசியிருந்தார்கள். குழந்தை ஓவியங்கள் நிறையத் தொங்கின.

டாக்டர் சொக்கலிங்கம் என்ற இனிய முகம் கொண்ட டாக்டர் ஒருவர் பரமாவை உடனே வந்து பார்த்தார். பக்கத்தில் நின்றிருந்த சிவமணியை பிள்ளையின் தகப்பன் என்று அன்னம் அறிமுகப் படுத்தி வைக்கக் கைகுலுக்கினார். "பிள்ளை மிகவும் பலவீனமாக இருக்கிறான்! அவனுக்கு டிரிப் போடுவதுதான் நல்லது" என்று சொல்லி தாதியைக் கூப்பிட்டு டிரிப்புக்கு ஏற்பாடு பண்ணினார்.

சிவமணி டாக்டரிடம் ஆங்கிலத்தில் கேட்டான்: "என்ன நினைக்கிறீர்கள் டாக்டர் சொக்கலிங்கம்?"

டாக்டர் சொக்கலிங்கம் அன்னத்தையும் ஜானகியையும் காட்டி, திருத்தமான தமிழில் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் கலந்து சொன்னார்: "மத்தியானம் இவங்கிட்ட விளக்கமா சொல்லியிருக்கேன். அக்யூட் லியூகேமியா, ரொம்ப வேகமா மத்த உறுப்புக்களுக்குப் பரவி வருது. வயிறு, சிறுநீரகம், ஈரல் எல்லாத்திலியும் பாதிப்பு இருக்கு. கெமோதெராப்பி ஆரம்பிச்சிட்டோம். ரேடியோதெராப்பி நாளைக்குக் காலையில ஆரம்பிச்சிடுவோம்!"

"எதினால இப்படி?" டாக்டர் தமிழ் பேசுவதைப் பார்த்து சிவமணியும் தமிழிலேயே கேட்டான்.

"எப்படின்னு சொல்ல முடியாது மிஸ்டர் சிவமணி. புற்று நோய்க்கான காரணங்களைக் கூற முடியாது. ஏராளமான காரணங்கள ஒரு உத்தேசமாத்தான் கூறலாம். உங்க மகன் கேசில பாரம்பரியத்தையும் கவனத்தில எடுத்துக்க வேண்டியிருக்கு!" என்றார்.

"என்ன பாரம்பரியம்?" என்று கேட்டான் சிவமணி.

"இதோ பிள்ளையினுடைய குடும்பத்தில இவனுடைய தாய் வழி தாத்தாவுக்கு புற்று நோய் இருக்கிறதா போட்டிருக்கே!" என்றார்.

"யாரைச் சொல்றிங்க?"

"மிஸ்டர் சுந்தரம், தாயின் தகப்பன்னு போட்டிருக்கே!"

சிவமணி திரும்பி சுந்தரத்தைப் பார்த்தான். "அப்படியா! உங்களுக்குக் கேன்சரா?" என்று வாய்பிளந்து கேட்டான்.

டாக்டர் சொக்கலிங்கம் திரும்பிச் சுந்தரத்தைப் பார்த்தார். "நீங்கதானா அது? மன்னிக்கணும். நான் உங்கள முன்பு பார்த்தில்லை." கை குலுக்கினார்.

"நெசமா மாமா? உங்களுக்குக் கேன்சரா?" மீண்டும் கேட்டான்.

இந்த விஷயம் இப்படிப் பொதுவில் உடைபடும் என்பது தெரியாமல் போயிற்று. எல்லாருக்கும் சொல்லித் தன்னைப் பரிதாபத்துக்குரிய காட்சிப் பொருளாக ஆக்கிவிடக் கூடாது என்ற அவர் நோக்கம் அங்கு தகர்ந்தது.

டாக்டர் சொக்கலிங்கத்தைப் பார்த்துக் கேட்டார். "உங்களுக்கு எப்படித் தெரியும் டாக்டர்?"

"மௌன்ட் மிரியத்திலிருந்து டாக்டர் ராம்லிகிறவர் போன் பண்ணினார். உங்களுக்கு அவர் புதிய முறை சிகிச்சை ஆரம்பிச்சிருக்கிறாராமே! உங்க குடும்ப விவரங்கள்ள உங்கள் மகள் வழிப் பேரனுடைய நோயைப் பதிவு பண்ணி வைக்கணும்னு விவரம் கேட்டார். செல் ஆய்வுகள் பற்றிய விவரங்களையும் அனுப்பச் சொன்னார். அப்பதான் எங்களுக்கும் இந்த விவரம் தெரியும்."

டாக்டர் சொக்கலிங்கம் சுந்தரத்தின் புற்று நோய் பற்றிய சில விரங்களை மட்டும் மேலோட்டமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். டாக்டர் ராம்லி மேலும் விவரங்களை அனுப்பி வைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும் சொன்னார்.

கொஞ்ச நேரம் மௌனமாகத் தலை குனிந்திருந்த சிவமணி டாக்டரிடம் கேட்டான். "இந்தப் பிள்ளை குணமடைகிற வாய்ப்புக்கள் எப்படி டாக்டர்?"

டாக்டர் சொக்கலிங்கம் யோசித்தார். "வௌிப்படையா சொல்லப் போனா அவன் நோய் ரொம்ப முத்தின நிலையில இருக்கு. ரத்தத்தில வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை ரொம்ப அதிகமாப் போச்சி. அதனால உடம்புக்கு இரத்தம் சக்தியைக் கொண்டு போறது ரொம்பக் குறைஞ்சி ரத்த சோகை ஏற்பட்டு பிள்ளை ரொம்ப பலவீனமாயிட்டான். அந்த வெள்ளை அணுக்களைக் கட்டுப் படுத்த அதிகமான மருந்துகள் உள்ள செலுத்திட்டோம். இதுக்கும் அதிகமா செலுத்தினா அவனுடைய கிட்னிகள், ஈரல் இதெல்லாம் பழுதாயிடும். மருந்த அது தாங்காது. நாளைக்கு ஈரலுக்கு ரேடியேஷன் குடுக்கப் போறோம். அது எப்படி அதை ஏத்துக்கிதுன்னு பாத்திட்டு அப்புறம்தான் ரேடியேஷன அதிகப் படுத்தலாமான்னு பாக்க முடியும்."

"உயிர் பிழைச்சிக்குவானா டாக்டர்?"

"மன்னிக்கணும் மிஸ்டர் சிவமணி! மெடிக்கல் விவரங்களை மட்டும்தான் நான் சொல்ல முடியும். எங்க சிகிச்சை முறைகள் ரொம்ப நவீனமான முறைகள்தான். ஆனா அது கூட சில சமயங்கள்ள இந்தப் புற்று நோயின் வளர்ச்சி வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமப் போகலாம். நம்பிக்கையோட இருங்க. பல நோயாளிகளின் வாழ்க்கையில மருந்துகள விட ஆண்டவன் புரியிற அற்புதம் அதிகம்!"

டாக்டர் விடை பெற்றுப் போய்விட்டார்.

சிவமணி கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தான். அப்புறம் சுந்தரத்தைப் பார்த்துக் கொஞ்சம் இரக்கமான குரலில் கேட்டான்: "எவ்வளவு நாளா உங்களுக்கு...?"

சுந்தரம் பேசவில்லை.

"எங்கிட்ட சொல்லவே இல்லையே!"

மௌனம். ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. இத்தனை அவமானப் படுத்திய பிறகு "வாயை மூடு" என்றெல்லாம் அதட்டிப் பேசிய பிறகு, மரியாதை தெரியாத இந்த முரடன் தன் நோயைப் பற்றிக் கேள்விப்பட்டு இரண்டு வார்த்தைகள் கனிவாகப் பேசிவிட்டான் என்பதால் அவனிடம் உடனடியாக நட்புப் பாராட்டிவிட அவருக்கு மனம் வரவில்லை. கோபம்தான் கொப்புளித்துக் கொண்டு வந்தது.

அருகில் வந்து கையைப் பிடித்தான். "மன்னிச்சிருங்க! நான் ரொம்ப முரட்டுத் தனமா நடந்துக்கிட்டேன்!"

அவன் கையை உதறினார். வேறு பக்கம் பார்த்தார். ஜானகியும் அன்னமும் பார்த்துப் பார்க்காதது போல இருந்தார்கள்.

சிவமணி கொஞ்ச நேரம் அங்குமிங்குமாக அலைந்தான். அவனுக்குச் சிகிரெட் பிடிக்கும் ஆசை வந்து விட்டது. ஆஸபத்திரிக்குள் எங்கும் சிகிரெட் பிடிக்க முடியாதாகையால் அலைகிறான் எனத் தெரிந்து கொண்டார்.

சம்பந்தியம்மாள் இதிலெல்லாம் எதிலும் சம்பந்தமில்லாதவள் போல் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தாள். பின் எழுந்து மகனிடம் போய்ப் பேசினாள். "சிவமணி, நாம் போலாமா? இனி கே.எல். போய்ச் சேரணுமே. உங்க அப்பா வேற தனியா காத்துக்கிட்டு இருப்பாரு!" என்றாள்.

சிவமணி அவள் முகத்தை முறைத்துப் பார்த்தான். "நீதான் இதெற்கெல்லாம் காரணம்!" என்பது போல அந்த முறைப்பு இருந்தது. அப்புறம் மெதுவாக ஜானகியிடம் வந்தான்.

"அத்தை! நான் போகணும். அம்மாவ கொண்டி திரும்ப விடணும். இல்லைன்னா இங்கியே தங்கிப் போவேன். நான் நெனச்சி வந்தது ஒண்ணு, இங்க நடக்கிறது வேறொண்ணு!." சொல்லித் தலை குனிந்திருந்தான். பின் தொடர்ந்தான்: "என் மகனப் பாத்துக்குங்க அத்தை! நான் நாளக்கி நாளன்னிக்கு வரப் பாக்கிறேன். கண்டிப்பா வருவேன். இடையில போன் பண்ணி கேட்டுக்கிறேன்!" என்றான்.

சிலுவார் பைக்குள் கையை விட்டு தன் பணப்பையை எடுத்துச் சில 50 ரிங்கிட் நோட்டுக்களைப் பிடுங்கினான். "இத வச்சிக்குங்க அத்தை! எங்கிட்ட இப்ப இருக்கிறது இவ்வளவுதான். பின்னால கொண்டு தர்ரேன்!" என்றான்.

ஜானகி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். "உன் பணம் எங்களுக்கு வேண்டாம்பா! ராதா அவனுக்கு இன்சூரன்ஸ் எடுத்து வச்சிருக்கா! அதுக்கு மேல செலவுக்கு எங்ககிட்ட காசு இருக்கு!" என்றாள்.

காசை பரமாவின் படுக்கையின் மீது போட்டான். இறுதியாக எல்லா மிடுக்குகளும் தணிந்த குரலில் "என்ன மன்னிச்சிடுங்க! நான் முரடன்! எனக்கு யோசிக்கத் தெரியாது! சரியாப் பேசத் தெரியாது! நான் வர்ரேன்!."

அம்மாவை வா என்று கூடச் சொல்லாமல் விருட்டென்று எழுந்து போனான். சம்பந்தியம்மாள் பின்னாலேயே ஓடினாள்.

அந்த அறையில் இன்னும் இரண்டு குழந்தை நோயாளிகளும் அவர்களுடைய பெற்றோர்கள் சிலரும் உறவினர்களும் இருந்தார்கள். இவர்கள் அனைவரின் முன்னிலையிலும்தான் இந்த நாடகங்கள் நடந்தன. ஆனால் அவர்கள் அனைவரும் சீனர்களாக இருந்ததால் புரிந்தும் புரியாமலும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பரவாயில்லை. என் நோயும் என் குடும்ப ரகசியங்களும் வெட்ட வௌிக்கு வந்தாயிற்று. இனி யார் பார்த்தால் என்ன, பார்க்காவிட்டால் என்ன? என நினைத்தார்.

கனிந்து வந்த இந்த முரட்டு மருமகனிடம் தாங்கள் இப்படி உதாசீனமாக நடந்து கொண்டது சரிதானா என்று எண்ணிப் பார்த்தார். ஆனால் அவன் அவர்கள் மேல் அள்ளி வீசியுள்ள அவமானங்களுக்கு இந்த உதாசீனம் ஒரு பொட்டளவுதான் எனத் தன்னைச் சமாதானம் செய்து கொண்டார்.

நடப்பது ஒன்றும் தெரியாமல் பரமா மயங்கிக் கிடந்தான். அவனுக்கு டிரிப் போட்டிருந்ததோடு இப்போது வாயில் பிராண வாயுக் குழாயும் பொருத்தியிருந்தார்கள். ஒரு பரவௌி மனிதன் போல உடலிலிருந்து ஒயர்கள் தொங்கிக் கொண்டிருக்க அவன் முகம் மேலும் துவண்டு கிடந்தது.

அவருக்கு உடம்பு பலவீனத்தால் நடுங்க ஆரம்பித்திருந்தது. தலையிலும் கை கால்களிலும் வலிகள் கூடியிருந்தன. தலை சுற்ற ஆரம்பித்திருந்தது. வீட்டுக்குப் போவதானால் அக்காவைத்தான் கேட்க வேண்டும். அவள் அவரையும் ஜானகியையும் இந்த இருட்டில் வீட்டில் கொண்டு விட்டுவிட்டு, ஒண்டியாக ஆஸ்பத்திரிக்குத் திரும்பி வரவேண்டும்.

அவள் பக்கம் பார்த்தார். அவள் பரமாவின் முகத்தை வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஒரு பிரமை இருந்தது.

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் அவளுக்குள்? அவளுக்கென்று குடும்பம் இல்லை. இந்த மாதிரிப் பிரச்சினைகள் தன் வாழ்வில் வேண்டாம் என்பதைப் போல திருமணத்தையே தவிர்த்து விட்டவள். ஆனால் எல்லாப் பாரங்களையும் இப்போது அவள் முதுகில்தான் ஏற்றி வைத்திருக்கிறேன் என நினைத்தார். என் நோய், என் பேரப்பிள்ளையின் நோய், என் குடும்பம், என் மகளின் குடும்பத் தகராறு எல்லாம் உன் முதுகில்தானா அக்கா? எப்படி எல்லாவற்றையும் சுமக்கிறாய்? ஏன் சுமக்கிறாய்?

எக்கேடு கெட்டாவது போங்கள். தைப்பிங்கில் ஏரியோரத்தில் என் வசதியான பெரிய வீட்டில் நான் எனக்குத் தொந்திரவே கொடுக்காத ஓர் ஊமை அத்தையுடன் நிம்மதியாக இருக்கப் போகிறேன் என்று ஏன் எங்களைத் தூக்கி எறிந்து விட்டுப் போகவில்லை? எந்த பந்தம் உன்னைக் கட்டி வைத்திருக்கிறது? ஏன் எனக்காக இவ்வளவு செய்கிறாய்? அக்கா! உனக்கு நான் தம்பியா, மகனா?

ஜானகி வந்து தோள்களைப் பிடித்தாள். "ஏன் உங்களுக்கு இப்படி உதறுது?" என்று கேட்டாள்.

அன்னம் தலை நிமிர்ந்து பார்த்தாள். "என்ன வீட்டில கொண்டு விட்டுடு அக்கா!" என்றார். அன்னம் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து வந்து, "வா போகலாந் தம்பி!" என்றாள்.


*** *** ***

வீட்டிற்கு வந்து சேருவதற்குள் உடம்பு அதிகமாக உதறத் தொடங்கிவிட்டது. இப்படிக் காய்ச்சல் வரும் நேரங்களில் போட்டுக் கொள்வதென்று தனி மாத்திரை வீட்டில் இருந்தது. அதைக் கையோடு எடுத்துக் கொண்டு போகாதது தவறு என நினைத்துக் கொண்டார்.

வீட்டில் வண்டியை நிறுத்தி இரண்டு பெண்களுமாக அவரை அணைத்துப் பிடித்தவாறு வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்தார்கள். அவரைப் படுக்கையில் கிடத்தினார்கள்.

ஜானகியிடம் சொல்லி அந்தக் காய்ச்சல் மாத்திரையையும் தூக்க மாத்திரையும் வாங்கி வாயில் போட்டுக் கொண்டு கம்பளிக்குள் சுருண்டார். உடல் கதகதப்பாகி உதறல் கொஞ்சம் அடங்கியது. தொடர்ந்து வந்தது தூக்கமா, மயக்கமா என்பது தெரியவில்லை. ஆனால் நினைவு குறைந்து கண்களுக்குள் புகை மூண்டு இருண்டது. நல்லதுதான் என நினைத்துக் கொண்டார்.


*** *** ***

இருள் கனத்த மையாகக் கவிந்திருந்த நேரம். போன் அடித்தது போல இருந்தது. மூடிய கதவு நோக்கி போர்வையை நீக்கிக் கூர்ந்து கேட்டார். "டிரிங்... டிரிங்..." என்று போன்தான் வரவேற்பறையிலிருந்து விடாமல் அடித்தது. யார் இந்த நேரத்தில்...? ஜானகி அலுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். தலைமாட்டில் அலாரத்தைப் பார்த்தார். இரவு மணி இரண்டு! யார்? யார்?

பரமா பற்றிய செய்தியா? ராதாவா?

ஜானகியை எழுப்ப மனம் வரவில்லை. எழுந்து சென்று போனை எடுக்க முடியுமா? உடம்பு இடம் கொடுக்குமா? பேச முடியுமா?

போர்வையை நீக்கி எழுந்தார். தலை கொஞ்சம் சுற்றி அடங்கியது. கதவு திறந்தார். இரவு விளக்கு ஒன்று மட்டும் மஙகலாக ஹாலில் எரிந்து கொண்டிருந்தது. அந்த அரை இருளில் மெதுவாக அடிமேல் அடி வைத்துப் போனார். போனை எடுத்தார். மெதுவாக "ஹலோ" என்றார். அந்தச் சத்தம் கொஞ்சம் கரகரப்பாக வௌிவந்தது.

பதில் இல்லை. ஆனால் ஏதோ சத்தம் கேட்டது. என்னவென்று முதலில் புரியவில்லை. "ஹலோ" என்றார் மீண்டும். பதில் இல்லை. குழப்பமான ஒரு சத்தம். தவறான எண்ணா? விஷமிகள் விளையாடுகிறார்களா? இப்படித் தன்னைத் துன்பப் படுத்தி?

"ஹலோ" என்றார் மீண்டும்.

"மாமா!" என்று குரல் வந்தது. மாமாவா? சிவமணி குரல் போல...! ஏன் திணறுகிறான்.

"யாரு? சிவமணியா?" என்றார்.

"மாமா!" அழுகிறான். தேம்புகிறான்.

"என்ன சிவமணி?" என்றார்.

"மாமா! என் மகனப் பாத்துக்குங்க! பிளீஸ். என்னால தூங்க முடியில. எனனோட துக்கத்தத் தாங்க முடியில!" என்றான். தேம்பினான்.

"என்னப்பா! அழுவுறியா? ஏன் அழுவுற? நாங்கள்ளா இருக்கமே, பாத்துக்காமயா இருப்போம்? அழுவாத சிவமணி!" என்று ஆறுதல் சொல்ல முயன்றார்.

"மாமா! நான் முரடன். எனக்கு நல்லது கெட்டது தெரியாது. ஆனா உங்களுக்குக் கேன்சர்ங்கிறது தெரிஞ்சிருந்தா அப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டேன்!"

"அத மறந்திருப்பா! சின்ன விஷயம்!" என்றார்.

"மறக்க முடியாது மாமா! நான் பிடிக்க வந்த கைய உதறிட்டிங்கள, அத மறக்க முடியாது"."
.
அவருக்கே தன் செயல் முரட்டுத் தனமாகப் பட்டது. "சிவமணி, நான் அப்படி செஞ்சிருக்கப் படாது. நானும் ஒரு கோவத்திலதான்..."

"என் மூஞ்சில நீங்க அறைஞ்சிருக்கணும். காறித் துப்பியிருக்கணும்...!"

"சே! சே! அது அநாகரிகம்!"

"அதுதான் எனக்குக் கிடையாது மாமா! நாகரிகம் கிடையாது. அதினாலதான் ராதாவும் என்ன விட்டு ஓடிட்டா!"

அந்தக் கதைக்கு அவர் போக விரும்பவில்லை. உடல் தளர்ச்சி மீண்டும் வந்தது. "சிவமணி! பிறகு பேசிக்குவோம். நான் போய் படுக்கணும்!"

"மாமா! உங்களக் கையெடுத்துக் கும்பிட்றேன். என் பையனப் காப்பாத்தி எங்கிட்டக் குடுத்திடுங்க!" என்று மீண்டும் விம்மினான்.

"எல்லாம் பிறகு! மொதல்ல அவன் பிழைச்சி வரட்டும்னு பிரார்த்தன பண்ணு!" என்றார்.

போனை வைத்துவிட்டான். அவர் போனை வைத்துத் திரும்பியபோது ஜானகி தலை முடியைக் சேர்த்துக் கட்டியவாறு பின்னால் நின்றிருந்தாள்.

"யாருங்க?" என்றாள்.

"சிவமணிதான். மனம் உடைஞ்சி பேசிறான். மன்னிப்புக் கேக்கிறான்!" என்றார்.

"ஆமா இன்னைக்கு மன்னிப்பு, நாளைக்கு சண்டை, நாளன்னிக்கு அடி உதை! இதெல்லாம் உருப்படாத ஜென்மங்கள்!" என்றாள். "நீங்க வந்து படுங்க! நான் போன் அடிச்சதே கேக்காம தூங்கிட்டம் பாருங்க!" என்றாள்.

மெதுவாக வந்து படுத்தார். ஆனால் தூக்கம் முற்றாகப் போய்விட்டது. பேசியதில் தொண்டையில் வலி ஏற்பட்டிருந்தது. விடிய விடிய விழித்துப் புரண்டு கொண்டிருந்தார். அடுக்கடுக்கான எண்ணங்கள் வந்தன.

பரமா எப்படியிருப்பான் என எண்ணிப் பார்த்தார். அவன் கண் மூடிக்கிடக்கும் காட்சி நினைவுக்கு வந்தது. அந்தக் கண்மூடல் தூக்கமா, மயக்கமா? பிள்ளைக்கு உள்ளே என்னவெல்லாம் வலியிருக்கும்? எப்படி அவற்றை வௌியில் சொல்லுவான்?

மருமகனை எண்ணிப் பார்த்தார். திருந்தி விட்டானா? அழுதழுது பேசினானே! இதற்கு முன் அவன் அழுது தான் பார்த்ததில்லையே! என்று யோசித்தார். மனித குணம் ஒரு குறிப்பிட்ட வயதில் உருவாகி விட்டால் அப்புறம் அதிகமாகத் திருந்துவதில்லை. வார்ப்பு ஒன்று திடமாக உருவாகி விடுகிறது. தீய குணங்கள் அவ்வளவு சீக்கிரம் மாறிவிடுவதில்லை. சட்டமும் சில சமயம் வாழ்க்கையும் கொடுக்கின்ற தண்டனைகளுக்குப் பயந்து தீய செயல்களிலிருந்து விலகி இருக்கலாம். தற்காலிக விலக்கம்தான். அப்புறம் அடிப்படையில் ஊறிவிட்ட குணம் மீண்டும் தலையெடுக்கும்.

விடிந்தால் சிவமணியின் உள்ளம் இதே போல நினைக்குமா என எண்ணிப் பார்த்தார். இந்த இருட்டில், அவன் மகனுக்கு நேர்ந்துவிட்ட துயரத்தில், இந்த நேரத்தில் அவன் இளகியிருக்கிறான். ஒரு வேளை இரவில் குடித்திருப்பான். குடி அவன் உணர்ச்சிகளை மிகைப் படுத்தியிருக்கலாம். காலையில் அவனுடைய சுற்றுச் சூழல்களும் நண்பர்களும் அவனுக்கே உரிய முரட்டுத் தனமும் அவனை ஆளத் தொடங்கும் போது இப்படி நினைப்பானா? "என் மகனைப் பறித்துக் கொண்டீர்கள்" என்று சொல்ல மாட்டானா? சம்பந்தியம்மாள் சொன்னாளே, 'நீயே போய் பாரு, உம்பிள்ளய இவங்கள்ளாம் சேந்து என்ன கதியாக்கி வச்சிருக்காங்கன்னு!' அப்படிச் சொல்பவர்கள் பேச்சைக் கேட்டுத் தானும் வெறி கொண்டு ஆடமாட்டானா?

மனிதர்கள் அடிப்படைக் குணங்கள் மாறுவதில்லை என்பதாகத்தான் அவருக்குத் தோன்றியது. நல்லவர்கள் தீயவர்களாக ஆக நினைத்தாலும் முடிவதில்லை. அடாவடித்தனம் செய்வதில் சில லாபங்கள் இருக்கின்றன என்று தெரிந்தாலும் அப்படிச் செய்யத் தங்களைத் தாங்களே வற்புறுத்தினாலும் முடிவதில்லை. மனம் இசைந்தாலும் இயல்பு கட்டிப் போடுகிறது.

தீயவர்களும் அப்படித்தான். நன்மை செய்ய நினைத்தாலும் முடிவதில்லை. மனம் இருந்தாலும் இயல்பு அந்தப் பக்கம்தான் தள்ளுகிறது. தீயவன் மனந்திருந்தி வாழ்வது என்பதெல்லாம் சிறுவர் நீதிக் கதைகளுக்கும் தமிழ் சினிமாவுக்கும் சரி. ஆனால் வாழ்க்கையின் இயற்கையான நியதி அவரவர்களைக் கட்டித்தான் வைத்திருக்கிறது.

சிவமணி தீமையில் கட்டுப் பட்டிருக்கிறான். இன்று இரவு இது தற்காலிகத் தளர்ச்சி. நாளை இறுகிவிடுவான்.

பொறுத்திருந்து பார்ப்போம் என நினைத்துக் கொண்டார். தொண்டை வலி அதிகமாயிற்று. தொட்டுப் பார்த்தார். தடித்திருந்தது. வீக்கம் கண்டு வருகிறது என நினைத்துக் கொண்டார். டாக்டர் ராம்லியின் எச்சரிக்கை நினைவு வந்தது.

டாக்டர் ராம்லியும் தன்னுடைய இயல்பில் கட்டுண்டிருக்கிறாரா? என்னதான் டாக்டர் வேஷம் போட்டிருந்தாலும் பழைய தீயவன்தானா? அப்படி இருந்தால் தன் கதி என்ன ஆவது? சுந்தரத்துக்கு குழப்பம் அதிகமாயிற்று.

தொண்டை வறண்டது. படுக்கையின் பக்கத்தில் இருந்த தண்ணீர் போத்தலிலிருந்து ஒரு முழுத் தம்ளர் தண்ணீர் ஊற்றிக் குடித்தார். ஒவ்வொரு மிடறுக்கும் தொண்டை வலித்தது.

நாலரை மணி வரை கடிகாரம் பார்த்திருந்தார். அப்படியானால் ஐந்து மணி வாக்கில்தான் தூங்கியிருக்க வேண்டும்.


*** *** ***

"டிரிங்... டிரிங்..."

டெலிபோன் அலறியதைக் கேட்டுத்தான் கண்விடூத்தார். இமைகளைப் பிரிக்க முடியவில்லை. உடனே படுக்கையை விட்டு எழவும் முடியவில்லை.

ஜானகி எழுந்து விட்டிருந்தாள். அவள் போய் டெலிபோனை எடுத்துப் பேசுவது மூடியிருந்த கதவினூடே மெல்லக் கேட்டது.

"ஹலோ... ஆமா... ராதாவா? ... அம்மாதாம்மா பேசிறேன்."

....

"நேத்து ராத்திரி கொண்டி ஆஸ்பத்திரியில சேத்தாச்சிம்மா."

....

"அவ்வளவு நல்லால்ல ராதா. மயக்கத்தில இருக்கிறான். ரொம்ப முத்திப் போச்சின்னு டாக்டர் சொல்றாரு. இன்னக்கித்தான் ரேடியேஷன் தெராப்பி ஆரம்பிக்கப் போறாங்களாம்."

....

"வியாழக் கிழம உறுதியாயிடுச்சா? சரி! ஆனா விமான நிலையத்தில இருந்து நீயாதான் டேக்சி எடுத்து வரணும். உன்ன வந்து அழச்சிக்க யாரும் இல்ல...!"

....

"அப்பா இருக்காரும்மா. படுத்திருக்கிறாரு."

....

"இல்ல இப்ப பேசமுடியாது."

....

"கோவம் இல்லம்மா! அவரு நெலமய நீயே நேரா வந்து பாத்துக்க!"

....

"டெலிபோன்ல சொல்ல விரும்பில. நீயே நேரே வந்து பாத்துக்க!"

....

"உன் புருஷனுக்குத் தெரியும். நேத்து ராத்திரி இங்கதான் இருந்திச்சி. அவங்க அம்மாவும் வந்திருந்தாங்க. ஆஸ்பத்திரிக்கும் வந்தாங்க!"

....

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ வந்து எல்லாத்தையும் கவனிச்சிக்க. வச்சிரட்டுமா!

....

"சரிம்மா பாத்துக்கிறோம். அழுவாத. அதுதான் வந்து நீயே பாக்கப் போறிய!"

டெலிபோனை வைக்கும் சத்தம் கேட்டது.

எழுந்து உட்கார்ந்தார். தலை சுழன்றவாறு இருந்தது. நிதானப்படவில்லை. ஜானகி கதவு திறந்து உள்ளே வந்தாள்.

"எழுந்திருச்சிட்டிங்களா? ராதா இப்பதான் போன் பண்ணினா!"

"கேட்டேன்! எனக்குக் கொஞ்சம் தண்ணி ஊத்திக் குடு!" தொண்டையிலிருந்து சத்தம் கரகரப்பாக வந்தது.

தம்ளரில் தண்ணீர் ஊற்றிக் கொடுத்ததாள். "உங்க தொண்ட ஏன் இப்படி கரகரப்பா இருக்கு? வலிக்குதா?" என்று கேட்டாள்.

ஆமாம் என்று தலையாட்டிவிட்டுத் தண்ணீரை மெதுவாக விழுங்கினார். தொண்டை வலித்தது.

ஜானகி தடவிப் பார்த்துவிட்டு "வீங்கியிருக்குங்க!" என்றாள்.

"மருந்துதான் காரணம்" என்றார்.

"ராதா வியாழக்கிழம வர்ரது உறுதியாயிடுச்சாம். சாயந்தரம் 3 மணிக்கு கே.எல்.ல இறங்கி அடுத்த பிளைட் எடுத்து 5 மணிக்கு பினாங்கு வர்ராளாம்!"

"தெரிகிறது!" என்று தலையாட்டினார்.

மணி ஏழாகி விட்டிருந்தது. உடம்பு எப்படியிருந்தாலும் எழுந்து தயாராக வேண்டும். மருத்துவ மனைக்கு அழைத்துப் போக ராமா வந்து விடுவார்.

ராமாவைக் கொஞ்சம் வெள்ளன வரச்சொல்லியிருக்க வேண்டும். போகிற வடூயில் ஜானகியை ஸபெஷலிஸ்ட் சென்டரில் விட்டுப் போகவேண்டும். நேற்றுச் சொல்ல மறந்து விட்டது. இப்போது சொல்லலாமென்றால் திடீரென்று அந்த நல்ல நண்பனைத் தொந்திரவு படுத்த மனமில்லாமல் இருந்தது. இப்போதே எவ்வளவோ தொந்திரவு கொடுத்தாகிவிட்டது. அவர் வருகிற நேரத்தில் வரட்டும்.

குளியலறையில் இருந்த போதும் தலை சுற்றிக் கொண்டிருந்தது. எதையும் நேராக நின்று சரியாகச் செய்ய முடியவில்லை.

ஏழரை மணிக்குச் சட்டையை மாட்டிக் கொண்டிருந்த போது ராமா வந்து விட்ட ஓசை கேட்டது. எப்போதும் எட்டு மணிக்கு வருபவர் இன்றைக்கு எப்படி ஏழரை மணிக்கெல்லாம் வந்தார்? வௌியே வந்து அவரைப் பார்த்தார்.

"குட் மோர்னிங்" என்று தன் வழக்கமான சந்தோஷச் சிரிப்போடு சொன்னார் ராமா.

"குட் மோர்னிங் ராமா?". அவர் குரலின் கரகரப்பு ராமாவை வியக்க வைத்தது.

"ஏன் குரல் இப்படிப் பேச்சி...?"

"எல்லாம் மருந்துதான் ராமா! எப்படிப்பா இன்னக்கி வெள்ளனே வந்திட்ட?" என்று கேட்டார்.

"அதான் நேத்து நீங்க பரமாவ ஆஸ்பத்திரியில சேத்திருப்பீங்கன்னு தெரியும். உங்க மருமகன் வந்து பெரிய நாடகம் ஆடியிருப்பார்னு தெரியும். சேதியையும் கேட்டுட்டு தேவையானா ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்கும் போயிட்டு, அப்படியே போவமேன்னுதான் எதுக்கும் வெள்ளனே வந்தேன்!" என்றார்.

கேட்கிறதையெல்லாம் கொடுக்கிறவன் மட்டுமல்ல தோழா நீ, கேளாததையும் குறிப்பறிந்து கொடுக்கிறவன் என்று எண்ணிக் கொண்டு ராமாவைத் தழுவிக் கொண்டார் சுந்தரம்.

--------

அந்திம காலம் - 16


ஓ சிஷ்யர்களே, எல்லாப் பொருள்களும் நெருப்பில் எரிகின்றன. நெருப்பில் எரியும் இந்தப் பொருள்கள் யாவை, ஓ சிஷ்யர்களே?

கண், ஓ சிஷ்யர்களே, எரிகிறது. கண் பார்க்கும் உருவங்கள் எரிகின்றன. கண்ணைப் பார்க்க வைக்கும் நரம்புகள் எரிகின்றன. இந்தக் கண்பார்வையின் மூலமாக என்னென்ன இன்ப துன்ப உணர்ச்சிகளைப் பெறுகிறோமோ, இந்த உணர்ச்சிகள் அனைத்தும் எரிகின்றன.
- கயாவில் புத்த பெருமானின்
தீ உபதேசம்.


பொழுது போகாத அந்த மாலையில் சுந்தரம் தனது சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தவாறு "கருணைமகான் புத்தர்" என்ற புத்தகத்தைப் புரட்டி அங்குமிங்குமாகப் படித்துக் கொண்டிருந்தார்.

நேற்றும் முந்தா நாளும் நிறையப் பேர் அவரைப் பார்க்க வந்த வண்ணமாக இருந்தார்கள். அவருடைய நோய் பற்றிய செய்தியும் அவருடைய பேரப்பிள்ளையின் நோய் பற்றிய செய்தியும் அவருடைய குடும்பத்தைத் தெரிந்தவர்களிடையே பரபரவெனப் பரவியிருந்தது. அவருடைய முன்னாள் சக ஆசிரியர்கள், கல்வி இலாக்கா அதிகாரிகள் சிலர் வந்து கைகுலுக்கி ஆதரவு சொல்லிப் போனார்கள்.

அவர்களுடைய அன்பில் அவர் பெருமிதம் கொண்டாலும், தன் நோயும் பலவீனமும் இப்படி அம்பலப் பொருளாக ஆகிப் போனது வெட்கமாகத்தான் இருந்தது. ஆனால் இது இப்படி வௌிப்பட்டு விட்டதில் ஒரு ஆறுதலும் தோன்றியது. இனி இதைப் பார்ப்பவர்களிடமிருந்தெல்லாம் மறைத்து வைக்க வேண்டும் என்ற மன அழுத்தம் இருக்காது. "ஏன் இப்படி இளைத்துப் போனீர்கள்? ஏன் தலைமுடி கொட்டிவிட்டது?" என்று கேட்பவர்களிடம் மழுப்பிப் பேசவேண்டிய தேவையில்லை. "ஆமாம்! எனக்குப் புற்று நோய்!" என்று அவர்கள் கண்களைப் பார்த்து ஒரு விரக்திப் புன்னகையுடன் நேராகச் சொல்லலாம்.

எல்லாருடனும் கொஞ்சம் கொஞ்சம் பேசினார். தொண்டையின் வீக்கம் தணிந்து குரல் அப்போதுதான் இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருந்தது.

அவர் விளையாட்டு நிகழ்ச்சிகள் பலவற்றில் அதிகாரியாக இருந்து பல ஊர்கள் சுற்றி வந்த போது அவருடன் நின்று பகலில் உழைத்து, இரவில் சகோதர பாசத்துடன் பியர் குடித்துக் குலவியிருந்து, இனப் பாகுபாடு என்பது கொஞ்சமும் நினைவுக்கு வராமல் கொச்சையும் பச்சையுமான நகைச்சுவைகள் பரிமாறிக் கொண்ட சீன, மலாய், பஞ்சாபி நண்பர்கள் வந்து பேசியிருந்து அந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளை நினைவு படுத்தி அவரது வலிகளைக் கொஞ்ச நேரம் மறக்கக் கற்றுக் கொடுத்துப் போனார்கள். சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பலர் விடை பெற்றுச் செல்லும் போது கண்கள் கலங்கியதையும் கண்டிருக்கிறார்.

புற்று நோய் கண்ட மற்றவர்களின் கதைகள் அடுக்கடுக்காய் வந்தன. வென்றவர்கள் கதைகள் கேட்டு மனம் தேறியது. வீழ்ந்தவர்கள் கதை கேட்டுச் சோர்ந்தது.

"இந்தப் புற்று நோய்க்கு இந்த மருந்தாலெல்லாம் பயன் இல்லை. தியானம் பண்ணுங்கள். இந்த நோயிலிருந்து விடுபடுவேன் என சபதம் எடுத்துக் கொள்ளுங்கள். நோயை அகற்று என்று உடலுக்குக் கட்டளையிடுங்கள். நோய் தானாக மறையும்!" என்ற ஆலோசனைகள் வந்தன.

யோகாசனத்திலிருந்து குண்டலினி வரையில் சக்தியுள்ள மாற்று சிகிச்சைகள் அவருக்குப் பிரச்சாரம் செய்யப்பட்டன. "ஒரு அரை கிலோ காரட்டைச் சாறாக்கி தினமும் சாப்பிடுங்கள்" என்பதிலிருந்து பச்சை ஜின்செங்கை பொடியாக்கி சாப்பிடுவது வரை இயற்கை மருந்துகள் உபதேசிக்கப் பட்டன.

"ராஜ யோகாவுக்கு வாருங்கள்" "பாபாவை நம்புங்கள்" "திருத்தணியில் ஒரு சித்தர் இருக்கிறார்" என்ற வடூகாட்டல்கள் பல வந்தன. இத்தனை சுவாமியார்களா இருக்கிறார்கள்? முன் பின் பெயர் கேள்விப் பட்டதில்லை. ஆனால் அவர்களுக்காக உடல் பொருள் ஆவியைத் தரத் தயாராக உள்ள இத்தனை பிடிப்பு மிக்க அடியார்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்திகள் அவருக்குப் புதிதாகவும் வியப்பாகவும் இருந்தன. திருநீறு, குங்குமம் முதல் கங்கா ஜலம் வரை அவருக்குக் கொடுத்துச் சென்றார்கள்.

இவற்றிலெல்லாம் மிகவும் பயன்படக் கூடியதாக இருந்தவை உபதேசம் செய்த நண்பர்கள் அவரிடம் கொடுத்துச் சென்ற புத்தகங்கள்தாம். பைபிளிலிந்து மிக நவீன காலத்து ஊக்குவிப்புச் சிந்தனை குருமார்கள் எழுதிய புத்தகங்கள் வரை வந்திருந்தன. புத்த சமயத்தில் தீவிர ஈடுபாடுள்ள அவருடைய சீன நண்பர் ஒருவர் கௌதம புத்தரின் உபதேச புத்தகம் ஒன்றை விட்டுச் சென்றிருந்தார்.

"ஆனால் ஓ சிஷ்யர்களே, இவை எதனால் எரிகின்றன?

"இவை ஆசையால் எரிகின்றன என நான் சொல்லுகிறேன். இவை காமத்தால் எரிகின்றன. இவை வெறுப்பால் எரிகின்றன. பிறப்பால், முதுமையால், இறப்பால், துன்பத்தால், அழுகையால், ஏமாற்றத்தால் இவை எரிகின்றன.

"ஆகவே இதைப் பார்த்தபின், ஓ சிஷ்யர்களே, ஒரு நல்ல விவேகமான சிஷ்யன் கண்களின் மீது உள்ள ஆசையை அறுக்க வேண்டும். கண்கள் காணும் உருவங்கள் மீது ஆசையை அறுக்க வேண்டும். கண்ணைப் பார்க்க வைக்கும் நரம்புகளின் மீது ஆசையை அறுக்க வேண்டும். இந்தக் கண்பார்வையின் மூலமாக என்னென்ன இன்ப துன்ப உணர்ச்சிகளைப் பெறுகிறோமோ, இந்த உணர்ச்சிகள் அனைத்தின் மீதும் உள்ள ஆசைகளை அறுக்க வேண்டும்."

புத்தகத்தை மெதுவாகக் கீழே வைத்தார். ஆமாம்! உடல் நோயால் பற்றி எரிவது மட்டுமல்ல, உள்ளமும்தான் பாசத்தாலும் பந்தத்தாலும் எரிகிறது. அதைத் தணிக்க வேண்டும் என நினைக்கும் நேரத்தில் இன்னும் தீவிரமாக எரிகிறது. அதுவாக எரிந்து தணிந்த சில கணங்களில்தான் ஓய்வு. ஆனால் ஓய்வு கொடுத்த சில நிமிடங்களுக்குள் இந்த நினைவுத் தீ மீண்டும் பற்றிக் கொள்ளுகிறது.

பரமாவை அவர் செவ்வாய்க்கிழமை மாலை போய் பார்த்ததுதான். அப்போது அந்த மருத்துவ மனை வார்டில் ஜானகியை இலேசாகப் பிடித்துக் கொண்டு நடந்துதான் போனார். பரமாவின் நிலைமையில் அதிக மாற்றம் இல்லை என்று சொன்னார்கள். ரேடியேஷன் ஆரம்பித்து விட்டதாகவும் அதன் முடிவு தெரிய நாட்களாகும் என்றார்கள். அவர் பார்த்த போது அவன் தூங்கிக் கொண்டிருந்தான். அவனுக்குத் தொடர்ந்து டிரிப் போடப் பட்டிருந்தது. வாயால் அவனால் சாப்பிட இயலவில்லை என்றும் சாப்பிட்டாலும் தங்குவதில்லை என்றும் சொன்னார்கள். அவனைப் பார்த்த போது மனம் குப்பென்று தீப்பற்றி எரிந்து.

இன்று என்ன கிழமை? இப்போதெல்லாம் நாளும் கிழமையும் நேரமும் கூட நினைவில் நிற்பதில்லை. பக்கத்தில் உள்ளவர்களைக் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படித் திருப்பித் திருப்பிக் கேட்கும் போது சொல்பவர்கள், இந்த ஜானகி உட்பட, எரிச்சல் அடைகிறார்கள் என அவர்கள் கொடுக்கும் பதிலில் இருந்தே தெரிந்து விடுகிறது. என்னோடு வாழ்வில் பந்தம் கொண்ட இவர்களே இறுதியில் என்னை ஒதுக்கி விடுவார்களோ என்று எண்ணுகிற பொழுதெல்லாம் மனம் பற்றி எரிகிறது.

இன்று என்ன கிழமை? பலமாக யோசித்துப் பார்த்தார். டாக்டர் ராம்லி தனக்கு சிகிச்சை ஆரம்பித்தது திங்கள் கிழமை. பரமாவை மருத்துவ மனையில் சேர்த்தது அன்று இரவில்தான். மீண்டும் செவ்வாய்க் கிழமைதான் பரமாவைச் சென்று பார்த்தது. செவ்வாய்க் கிழமை இரவு கால்கள் மிகத் தளர்ந்து விட்டன. நடக்கமுடியவில்லை. அடுத்த நாள் புதன் கிழமை ராமா ஒரு சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து வீட்டுக்குக் கொண்டு வந்தார்.

அதைப் பார்த்தபோது புத்தர் சொன்னதைப் போல உடம்பின் ஒவ்வொரு நரம்பும் எரிந்தது. அதை எட்டி உதைத்துத் தள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் கால்களில் கொஞ்சமும் பலம் இல்லை. முகத்தில் வெடித்த கோபத்தைப் பார்த்து ராமா சமாதானமாகச் சொன்னார்: "இது தற்காலிகமாத்தான் சுந்தரம். இது மருந்தினுடைய பக்க விளைவுன்னு டாக்டர் ராம்லி சொன்னாரில்ல! ரெண்டு மூணு வாரத்தில அநேகமா சரியாயிடும்னு சொன்னாரில்ல!"

டாக்டர் சொல்வதில் எதை நம்புவதென்று தெரியவில்லை. தன் மீது டாக்டர் ராம்லி பாய்ச்சுகின்ற இந்த மெதுவாக வேலை செய்யும் நஞ்சு அதன் குணத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. செவ்வாய் இரவில் கால்கள் பலவீனமாகிவிட்டன. அன்று இரவில் கண்ணை மூடினால் பயங்கரக் கனவுகள் வந்தன. பாழடைந்த மாளிகைகள், பயங்கரமாய் வாய் பிளக்கும் கட்டில்கள், தீப்பந்தங்களைக் கண்களாய்க் கொண்ட ராட்சச நாய்கள் இப்படியாக மாறி மாறி வந்து பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை அவரை எழுப்பி அப்புறம் ஒரு மணி நேரம் கண்ணை மூட முடியாமல் செய்தன.

நள்ளிரவில் ஒரு முறை அப்படி விழித்த போது ஜானகி என்னமோ துணியை வைத்துப் படுக்கையைத் துடைத்துக் கொண்டிருந்தாள். படுக்கை நனைந்திருந்தது.

புதன் கிழமை காலையில் எங்கிருந்தோ ஒரு பீங்கான் கழிவுத் தட்டு கொண்டு வந்து படுக்கைக்குக் கீழே வைத்தாள். அவள் கொஞ்சமும் முகம் சுளிக்காவிட்டாலும் அவர் உடலும் மனமும் அவமானத்தில் பற்றி எரிந்தன.

அதெல்லாம் நேற்று. ஆகவே இன்று வியாழக்கிழமை. இன்று என்னமோ விசேஷம் இருக்கிறதே! ஜானகி காலையிலேயே பரபரப்பாக ஏதோ பேசினாளே! ஆ! ஞாபகத்துக்கு வந்தது. ஆமாம். இன்றைக்கு ராதா வருகிறாள். இங்கிலாந்திலிருந்து தன் மகனைப் பார்க்க அவள் வந்து சேரும் நாள் இன்றுதான். இப்போது மாலையாகி விட்டது. அவள் வருகின்ற நேரம்தான்.

சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தவாறு வாசலைப் பார்த்தார். எழுந்து நடக்கவேண்டும் என ஆசை ஏற்பட்டது. முயன்றால் எழுந்து எதையாவது பிடித்துக் கொண்டு நடக்கலாம். அப்படி ஒன்றும் கால் முற்றாக விளங்காமல் போய்விடவில்லை. ஆனால் தவறி விழுந்து விடுவோமோ என்ற பயம் அதிகம் ஆகிவிட்டது. யாரையாவது உதவிக்குக் கூப்பிட வேண்டும். கூப்பிடலாம். எல்லாரும் அந்த நேரத்தில் வீட்டில்தான் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்குத் தொந்திரவு கொடுக்க அவர் விரும்பவில்லை.

இரண்டு நோயாளிகளுக்கு விடாமல் பணிவிடை செய்து இரண்டு பெண்களும் களைத்திருக்கிறார்கள். இவர்கள் செய்ய முடியாத வீட்டு வேலைகளைச் செய்து அத்தையும் களைத்திருக்கிறாள். உலாத்தப் போக வேண்டும் என்ற அற்ப ஆசைக்காக அவர்களையெல்லாம் அழைத்துத் தொந்திரவு படுத்தக் கூடாது.

பரமாவின் தந்தை சிவமணியும் இங்குதான் தங்கியிருக்கிறான் என்ற விஷயம் அவருக்குத் திடீரென நினைவுக்கு வந்தது. நேற்று புதன் கிழமை காலை தன் துணிப் பெட்டியுடன் வந்து விட்டான். அவனுடைய குட்டி யானை போன்ற பாஜேரோ, வீட்டிற்கு வௌியில் நின்று அவனை ஞாபகப் படுத்தியது. உபயோகிக்க ஆளில்லாமல் துருப்பிடித்துக் கொண்டிருக்கும் ராதாவின் சின்னக் காரின் பக்கத்தில்தான் அது நின்றது.

இந்த முறை தனியாகத்தான் வந்தான். அவன் தாய் அவனுடன் இல்லை. பணிவுடனும் கனிவுடனும் பேசினான். "மாமா! பிரேம் குணமாகிற வரையில நானே இங்கிருந்து கவனிச்சிக்கிறேன். உங்களுக்கு ஒரு தொந்திரவும் குடுக்க மாட்டேன்! என்ன வீட்டில தங்கவிடுங்க!" என்றான்.

ஜானகி, அன்னம் ஆகியவர்களின் முகங்களைப் பார்த்தார். அந்த முகங்களில் வெறுப்பு இருந்தது. ஆனால் இத்தனை இறங்கி வந்து விட்ட இந்த மருமகனை இரக்கமில்லாமல் விரட்ட முடியவில்லை. என்ன இருந்தாலும் இந்தக் குடும்பத்துக்குள் வந்து விட்டவன். தன் மகளின் கணவன்.

இன்னமும் கணவனா? அது நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் பரமாவின் தந்தை என்ற உண்மையை மாற்ற முடியாது. ஆகவே அவனுக்கு இடங் கொடுத்தார். "சரி, இங்கியே தங்கிக்க சிவமணி! ஆனா வீட்டுக்குள்ள சிகெரெட் பிடிக்காத!" என்றார்.

அன்று இரவு ஜானகி கேட்டாள்: "நீங்க பாட்டுக்கு அவனுக்கு இடங் கொடுத்திட்டிங்கள, நாளைக்கு ராதா வந்தா என்ன ஆகும்னு யோசிச்சிப் பாத்திங்களா? ராதாவ எப்படியாச்சும் பிடிக்கணும்னு திட்டம் போட்டுத்தான் அவன் இப்ப இங்க வந்திருக்கான்!"

இருக்கலாம். ஆனால் பிடிக்க உரிமை உள்ளவன்தான். அந்த உரிமையை அத்தனை எளிதாக அவனிடமிருந்து பறித்து விட முடியாது.

வந்ததிலிருந்து அவனால் தொந்திரவு ஒன்றும் இல்லை. நேற்றிரவு அனைவருக்கும் வௌியிலிருந்து சாப்பாடு வாங்கி வந்து கொடுத்தான். பெரும்பாலும் மருத்துவ மனையில் பரமாவின் பக்கத்திலேயே இருந்து காலம் கழித்தான். அவன் வந்தது அன்னத்துக்கும் ஜானகிக்கும் கொஞ்சம் ஓய்வாகவும் இருந்தது.

இன்று காலை வழக்கம் போல ராமா அவரை மௌன்ட் மிரியத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார். வீட்டிலிருந்தவர்கள் கைபிடித்துத் தாங்கித்தான் ஏற்றி விட்டார்கள். காரிலிருந்து இறங்கியதும் சக்கர நாற்காலி துணையுடன்தான் அவரை உள்ளே அழைத்துச் சென்றார்கள். டாக்டர் ராம்லி வழக்கமான சோதனைகளை நடத்தினார்.

தனது நேற்றைய உபாதைகளை அவரிடம் சொன்னார் சுந்தரம்.

"உடல் பலவீனம் எதிர்பார்க்கப் பட்டதுதான். நீங்கள் சிரமப் பட்டாவது திரவ ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் உடலுக்குச் சத்து இருக்கும். இந்தக் கனவுகள் பிரமைகள் எல்லாம் மருந்தின் பக்க விளைவு. அதைத் தணிக்க இன்றைக்கு மருந்து தருகிறேன். தூக்க மாத்திரையும் தருகிறேன்" என்றார் ராம்லி.

"உங்கள் புதிய மருந்து புற்று நோயைக் கட்டுப் படுத்தும் அறிகுறி தெரிகிறதா?" என்று கேட்டார் சுந்தரம்.

"இப்போது சொல்ல முடியாது. இரண்டு வாரங்கள் போகட்டும். அப்போதுதான் முதல் அறிகுறிகளைப் பார்க்க முடியும்" என்றார்.

கேட்டது ஓரு நப்பாசையில்தான். நம்பிக்கைக்கு ஒரு ஆதாரமும் இல்லை என்று அவருக்கே தெரிந்தது. தான் ஒரு இருண்ட பள்ளத்துக்குள் விழுந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் வேகமாக விழுந்து சாகாமல் ஸ்லோ மோஷனில் அணு அணுவாக விழுந்து செத்துக் கொண்டிருப்பதைப் போல இருந்தது.

தன் உடல் தன்னைக் கைவிட்டுவிட்டது தெரிந்தது. ஆனால் மனத்தையாவது காப்பாற்ற முடியுமா?

கையிலிருந்த புத்ததகத்தை விரித்து இன்னொரு பகுதியைப் படித்தார்:

"பகவானே! நான் முதியவன், தளர்ந்தவன். என் வாழ்நாளைக் கடந்து விட்டேன். தொடர்ந்து நோயில் உழலுகிறேன். என் ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் வழிகாட்டுங்கள்!" என்று நகுலபிதன் கேட்டான்.

"அப்படித்தான் இல்லறத்தவனே, அப்படித்தான்! உன் உடல் தளர்ந்திருக்கிறது, நோயுற்றிருக்கிறது, முதுமை அடைந்திருக்கிறது. ஆனால் இந்த உடம்பைத் தூக்கிச் சுமந்து கொள்ள ஆரோக்கியத்தைக் கேட்கிறாயே, என்ன அறியாமை! உனக்கு நீயே இப்படிக் கூறிக்கொள்: "என் உடல் நோயுற்றாலும், என் உள்ளம் நோயுறக் கூடாது!" இப்படியே கூறி உன்னைப் பயிற்சிப் படுத்திக் கொள்."

"நகுலபிதனுக்கு அது விளங்கவில்லை: "உடல் நோயுற்ற போது உள்ளத்தை நோயுறாமல் வைத்துக் கொள்வது எப்படி?" என சரிபுத்தர் என்னும் இன்னொரு துறவியைக் கேட்டான்.

"தம்மத்தைப் பயின்றிராதவன் தன் உடலையே தானாக நினைக்கிறான். உடல்தான் நான், நான்தான் உடல் என்ற எண்ணமே அவனை ஆண்டிருக்கிறது. ஆகவே உடலின் வாதை அவனுடைய வாதையாகிறது.

"தம்மத்தைப் பயின்றவன் தன் உடலைத் தானாக நினைப்பதில்லை. தான் என்பது தன் உடல் அல்ல என அவனுக்கு விளங்கும். நான் உடல் அல்ல, உடல் நான் அல்ல என்ற எண்ணமே அவனை ஆண்டிருக்கும். ஆகவே உடலின் வாதை அவனது வாதையாகாது. தான் என்பது தன் எண்ணம் அல்ல, எண்ணத்துக்கு அப்பாற் பட்டது என அவனுக்குத் தெரியும்.

"ஆகவேதான் இல்லறத்தவனே, அவனுக்கு உடல் நோயுற்றிருந்தாலும் உள்ளம் நோயுறுவதில்லை!"

விளங்கவில்லை. ஆனால் படித்ததில் ஏதோ ஆறுதல் தோன்றியது..

வௌியே டேக்ஸி வந்து நின்றது. ராதா ஒரு பையுடன் அவதி அவதியாக இறங்கினாள்.


*** *** ***

ராதாவின் வருகை அந்த வீட்டின் அமைதியைக் குரூரமாகக் கலக்கி விட்டது. சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு வௌியில் போக்குவரத்துக் குறைந்திருந்த சாலையைப் பார்த்தவாறு வீட்டின் ஒலிகளைக் கேட்டுக் கொண்டு புத்தரின் போதனைகளில் தன் துயரத்துக்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்த அந்த வேளையில் டேக்ஸியை விட்டு இறங்கிய மகள் "அப்பா" என்ற அலறலுடன் அந்தக் குளத்தில் ஒரு பெரிய பாறையைத் தூக்கிப் போட்டாள்.

ராதா பார்த்துக் கேட்டு அதிர்ச்சியடைய அந்த வீட்டில் பல நிகழ்ச்சிகள் இருந்தன.

"எப்படி இருக்கான் அப்பா என் டார்லிங்? எப்படி இருக்கான்? உண்மையச் சொல்லுங்க!" என்பது அவள் முதலில் கேட்ட கேள்வி. அழுகை, விம்மல், அலறலுடன் அந்தக் கேள்வி இருந்தது.

"இருக்காம்மா! ஆஸபத்திரியோட கண்காணிப்பில இருக்கான்! நீ போய் பாக்கத்தானே போற! அவசரப் படாத! நீயே டாக்டர நேரா பாத்து தெரிஞ்சிக்க!" என்று அவள் தலையைத் தடவிக் கொடுத்ததார்.

"நீங்க ஏன் அப்பா இப்படி இளைச்சிப் போயிருக்கிங்க? உங்க உடம்புக்கு என்ன? ஏன் உங்க மூஞ்செல்லாம் ஒடுக்கு விழுந்து..." கண்களைத் துடைத்துக் கொண்டு உண்மையான வியப்புடன் அக்கறையுடன் அடுத்த கேள்வி கேட்டாள்.

எனக்கு நோய் என்பதை என் வௌி அவயவங்கள் விளம்பரம் செய்யத் தொடங்கி விட்டன. முன்பு உள்ளே அழுக வைத்தாலும் வௌித் தோலில் தெரியாமல் இருந்தது. இப்போது எல்லாம் வௌியாகி விட்டது. யாரிடமும் மறைக்க முடியாது.

ஜானகியும் அன்னமும் வந்து நின்றார்கள். ஜானகி சொன்னாள். "கேளம்மா, இப்பவாவது கேட்டுத் தெரிஞ்சிக்க! ஒன் மகனுக்கு வந்த நோய் வேற ரூபத்தில அப்பாவுக்கு ஏற்கனவே வந்தாச்சி!"

"என்ன சொல்ற அம்மா?"

"அப்பாவுக்கும் கேன்சர்தாம்மா. மூளையில கட்டி ஆரம்பிச்சி இப்ப உடம்பு முழுக்க பரவியிருக்கு!" ஜானகி தலை குனிந்து அழுதாள்.

"அப்படியா! அப்பா! நெசமாத்தான் சொல்றிங்களா?"

இந்தக் கேள்வி இப்போது ஒரு வழக்கமாகப் போய்விட்டது. பலமுறை கேட்டு அலுத்து விட்டது. இந்தக் கேள்வியைக் கேட்பதனால் தன் காதில் விழுகின்ற இந்தக் கெட்ட செய்தி புஸ்ஸென்று பொய்யாகப் போய்விடும் என்று கேட்பவர்கள் எதிர் பார்க்கிறார்களோ?

"ஆமாம்!" எனத் தலையாட்டினார்.

அவள் அவரை அணைத்ததவாறு அவர் முகத்தையும் தலையையும் வெறித்துப் பார்த்தாள். தடவிக் கொடுத்தாள். "இத்தன தடவ நான் போன் பண்ணிப் பேசியும் எனக்கு இது பத்தி ஒரு வார்த்தையும் சொல்லாம மறைச்சிட்டிங்களே அப்பா! ஏன்? நான் உங்க மகள் இல்லியா? எங்கிட்ட சொல்லக் கூடாதா?" என்று அழுதாள்.

"உனக்கு ஒன் சொந்தத் துயரமே ஏராளமா இருக்கம்மா. அதோட இதச் சேர்க்க வேண்டான்னு விட்டிட்டோம். நேரம் வரும்போது நீயா தெரிஞ்சிக்குவேன்னு விட்டுட்டோம். அதான் இப்ப தெரிஞ்சிக்கிட்டியே!" என்றார்.

"ரொம்ப மோசமா அப்பா!"

"ரொம்ப மோசம்தான். பரமா மாதிரிதான்! என் வயசில என்னாலத் தாங்கி உட்கார்ந்து பேச முடியுது. அவன் சின்னப் பிள்ள. உடம்பில பலம் இல்லாம படுத்துட்டான். அவ்வளவுதான் வித்தியாசம்!" என்றார்.

அவர் மார்பில் முகம் புதைத்துக் கொஞ்ச நேரம் தேம்பினாள்.

"ஏன் இப்படி நடக்குதப்பா? நம்ம குடும்பத்துக்கே எல்லாம் ஏன் இப்படி நடக்குது?" என்று கேட்டாள்.

"இது தண்டனை அல்ல, சோதனை. கடவுள் நம்மை நேசிக்கிறார் என்பதற்கு அடையாளம்!" என மதர் மேகி சொன்ன தத்துவங்களை அவளுக்குச் சொல்லிக் காட்ட வேண்டுமென்று முதலில் நினைத்தார். அப்புறம் அந்த பதில் அவளுக்குப் பிடிக்குமோ என்னவோ! பரவாயில்லை, அவளுக்கு வேண்டிய பதிலை அவளே கற்பித்துக் கொள்ளட்டும் என்று அவள் தலையைக் கோதிக் கொடுத்து அமைதியாக இருந்தார்.

அன்னம் குறுக்கிட்டாள். "ராதா, களைச்சி வந்திருக்க. இந்தா டீ போட்டு வைக்கிறேன். போய் குளிச்சிட்டு வா. பிரேமப் போய் பாத்துட்டு வருவோம்! அப்பாவும் ஓய்வெடுத்துக்கிட்டும்" குழப்பம் நிலவும் இடத்தில் திடீரென்று பொறுப்பெடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் முறைப் படுத்துகின்ற தன் திறமையை மீண்டும் அங்கு நிலை நாட்டினாள். அப்புறம் அவளே தொடர்ந்து அந்த மற்ற விஷயத்தையும் அறிமுகப் படுத்தினாள். "இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கே! இனி உன் புருஷன வேற பாத்து கதைகளப் பேசித் தீர்க்கணுமே!" என்றாள்.

ராதா குழப்பத்துடன் திரும்பி அன்னத்தைப் பார்த்தாள். "யாரச் சொல்றிங்க அத்தை?"

சிவமணி அறைக்குள் இருந்து வௌியில் வந்து கதவருகில் நின்றான். ராதா அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்து கண்களில் முள் குத்தியது போல் படீரென்று குனிந்து கொண்டாள். முதலில் அவள் முகத்தில் பயம் இருந்தது. அப்புறம் மெதுவாக ஆத்திரம் பொங்கியது.

முகம் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். சீறினாள். "ஏன் வந்திங்க இங்க? எதுக்காக என் வீட்டுக்கு வந்திங்க? நாந்தான் உங்க மூஞ்சில முழிக்க மாட்டேன்னு போயிட்டேன்ல, அப்புறம் ஏன் என்னத் தொரத்தி வந்திங்க? என் பிள்ளயக் கொல்லவா? ஏன் வந்திங்க?" உச்ச தொனியில் கத்தினாள்.

சிவமணி அவள் அருகில் வந்தான். "டார்லிங். நான் சொல்றதக் கேள். அமைதியா இரு!" என்றான்.

அவனைக் கொஞ்சம் வியப்புடன் பார்த்தாள். அவன் இப்படி நயந்து பேசிப் பார்த்து அவளுக்குப் பழக்கமில்லை போலும்.

அவன் அவள் தோள்களைப் பற்றினான். "இப்ப நம்ப சண்டை முக்கியமில்ல. பிரேம்தான் முக்கியம். அவன் குணமடையிற வரையில நம்ப சண்டய நிறுத்தி வைப்போம்!" என்றான்.

கண நேரம் யோசித்திருந்தாள். "உன்ன நம்ப மாட்டேன்! நீ ஒரு மிருகம்" என்றாள்.

அன்னம் எழுந்து கொஞ்சம் உரத்த குரலில் சொன்னாள். "சிவமணி, ராதா! உங்க சண்டையை எல்லாம் வேற இடத்தில வச்சிக்குங்க. ஏன் ராதா! உங்க அப்பா இருக்கிற நெலயில அவர் முன்னால இப்படிச் சண்ட போட்டு அவரத் தொந்திரவு செய்றது நல்லா இருக்கா?" என்றாள்.

ராதா தன் தந்தையை நோக்கினாள். "இவருகிட்ட சொல்ல வேணான்னு எத்தன தடவ கேட்டுக்கிட்டேன் அப்பா! ஏன் இவர வீட்டுக்குள்ள விட்டீங்க?" என்று கேட்டாள்.

"அவன் உன் பிள்ளையோட தகப்பன். அந்த உரிமய மறுக்க முடியாதம்மா!" என்றார்

கொஞ்சம் அழுது சொன்னாள் "என்ன மன்னிச்சிடுங்க அப்பா! உங்க நிலைமைக்கும் பிரேமோட நெலமைக்கும் நாங்க ரெண்டு பேரும் போட்ற சண்டதான் காரணம். என்னோட பாவங்கதான் உங்க எல்லோரையும் பாதிக்கிது!" தேம்பி அழுதாள்.

சுந்தரம் அவள் தலையை மீண்டும் தடவி விட்டார். "ராதா! அதெல்லாம் இப்ப யோசிக்க வேணாம். ரொம்பக் களைப்பா இருப்ப! போய் குளிச்சிட்டு ஆஸ்பத்திரிக்குப் போய் பரமாவப் பாத்துட்டு வா. மத்ததெல்லாம் பிறகு பேசிக்கிவோம்!" என்றார்.

எழுந்து அறை நோக்கிப் போனாள். அவள் போகும் திசையை ஏக்கமாகப் பார்த்தவாறு சிவமணி நின்றான். பின்னர் ஒரு பெரு மூச்சுவிட்டு வௌியே போனான்.

கேட்டுக்குப் பக்கத்தில் நின்றவாறு ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துப் பிடித்தான்.

"ஆனால் ஓ சிஷ்யர்களே, இவை எதனால் எரிகின்றன? இவை ஆசையால் எரிகின்றன என நான் சொல்லுகிறேன். இவை காமத்தால் எரிகின்றன. இவை வெறுப்பால் எரிகின்றன. பிறப்பால், முதுமையால், இறப்பால், துன்பத்தால், அழுகையால், ஏமாற்றத்தால் இவை எரிகின்றன."

----

அந்திம காலம் - 17


சடசடவென்று மழை பெய்து கொண்டிருந்தது. அவருடைய வார்டிலிருந்து பார்த்தால் மௌன்ட் மிரியத்தின் பின்னால் உள்ள செமினரிக் கட்டடம் தெரிந்தது. இங்குதான் கிறித்துவ சமயத்தைப் பரப்பத் தேவையான குருமார்களைப் பயிற்றுவிக்கிறார்கள். அந்தக் கட்டடத்தைச் சுற்றி வீடுகள் இருந்தன. பினாங்குத் தீவின் மத்திய தர வர்க்கத்தினரின் வீடுகள். சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள், வெள்ளைக்காரர்கள் என்று வேறுபாடு கருதாமல் வாழ்கிறார்கள்.

தங்கள் குடியிருப்புப் பகுதியின் மத்தியில் இப்படி ஒரு உள்ளுக்குள் உறுப்புகள் அழுகும் புற்று நோய்க்காரர்களைக் கொண்ட மருத்துவ மனை இருக்கிறதே என்று யாரும் முகம் சுளித்ததில்லை. மாறாக அந்தக் கட்டடத்தை ஒரு மரியாதை கலந்த அன்புடன் பார்க்கிறார்கள். வாழ்க்கையில் அவலப் பட்டவர்களுக்கு இங்கு உதவப் படுகிறது. இது மானுடத்தின் உன்னதமான கடமைகளில் ஒன்று என மதிக்கிறார்கள்.

அவலப் பட்டவர்களில் நானும் ஒருவன் என நினைத்த போது அழுகை வந்தது. அவலப் பட்டவர்களில் பரமாவும் ஒருவன். ஒரே குடும்பத்தில் அவலப் படுபவர்கள் இரண்டு பேர் இருக்கிறோம். ஒரே நேரத்தில் அவலப் படுகிறோம். இது நீதியில்லை என தெய்வங்களிடம் பலமுறை முறையீடு செய்தாகிவிட்டது. ஆனால் நிலைமை மாறவில்லை. மாறாக தெய்வத் தீர்ப்பையா அவமதிக்கிறீர்கள் என்று இருவரின் தண்டனைகளும் இன்னும் தீவிரமாக்கப் பட்டுள்ளன.

சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு மழைத் தாரைகளினூடே அந்த செமினரிக் கட்டடத்தின் கூரையைப் பார்த்தவாறே இருந்தார்.


*** *** ***

மூன்று வாரங்களுக்கு முன்னால் ராமாவும் சிவமணியுமாக அவரைத் தூக்கிக் காரில் உட்கார வைத்து இங்கு கொண்டு வந்தார்கள். டாக்டர் ராம்லியுடன் டாக்டர் லிம்மும் அன்று அவரை நீண்ட நேரம் பரிசோதித்து அவர்களுக்குள் கலந்து பேசினார்கள். பின்னர் கொஞ்ச நேரத்தில் மதர் மேகியும் அங்கு வந்து அவர்கள் பேச்சில் கலந்து கொண்டார். இப்போதெல்லாம் டாக்டரைப் பார்த்து உடம்பு எப்படியிருக்கிறது என்ற கேள்வியை கேட்கக் கூட அவருக்கு தெம்பு இருப்பதில்லை. மதர் மேகியிடமும் நீண்ட நேரம் கேள்வி கேட்டுத் தொந்திரவு கொடுக்க அவருக்கு முடிவதில்லை. ஆகவே அவர்கள் பேசிக் கொண்டிருக்க அவர் சோர்ந்து படுத்திருந்தார்.

கொஞ்ச நேரம் கடூத்து மதர் மேகி மட்டும் படுக்கையின் பக்கமாக வந்தார். "சுந்தரம், எப்படியிருக்கிறீர்கள்?" என்று வழக்கமான புன்னகையுடன் கேட்டார்.

"அதுதான் நீங்களே பார்க்கிறீர்களே!" என்றார் சுந்தரம்.

"சோர்ந்திருக்கிறீர்கள். ஆனால் நான் பார்த்துள்ள சில மோசமான கேஸ்கள் போல நீங்கள் மனத்தால் சோரவில்லை! அது மிகவும் முக்கியம்!" என்றார்.

பலவீனமாகப் புன்னகைத்தார். சாவுக்கு என்னை நான் ஒப்புவிக்கத் தயாராக இல்லை என்பது உண்மைதான். ஆனால் வாழ்வில் உள்ள எல்லாச் சுவைகளும் மறைந்து கொண்டு வருகின்றன. வாழ்வதற்கு வேண்டிய காரணங்கள் மிகவும் அருகிவிட்டன. தனிமையில் மலமும் ஜலமும் கடூத்து சுத்தப் படுத்திக் கொள்ளும் அடிப்படைகளைக் கூட இழந்து விட்ட பிறகு பிழைப்பு வெட்கம் கெட்டதாகத்தான் போய்விட்டது. ஆனாலும் உயிரை விட்டு விடலாம் என்ற எண்ணம் இன்னும் வரவில்லை.

மதர் மேகி தொடர்ந்து பேசினார்: "மருந்து முறைகளையும் சிகிச்சையையும் கொஞ்சம் தீவிரப் படுத்தி அணுக்கமாக அதைக் கவனிக்கவிருப்பதால் இங்கே மருத்துவ மனையிலேயே நீங்கள் தங்கிக் கொள்வது நல்லது என டாக்டர் ராம்லி கருதுகிறார். டாக்டர் லிம்மின் கருத்தும் அதுதான். என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

உள்ளத்துக்குள் குப்பென்று மறுப்புத் தோன்றியது. என் வீட்டை விட்டு என்னைத் தனிமைப் படுத்துவது என் கூட்டைவிட்டு என்னை வௌியே தூக்கிப் போடுவது போல அல்லவா? இந்த மருத்துவ மனையின் மருந்தும் மரணமும் கலந்த சூழ்நிலையிலா என் முழு நேரமும் கழிவது? என்று எண்ணி அயர்ந்தார்.

ஆனால் ஜானகியின் களைத்த முகம் கண்ணில் தெரிந்தது. தான் உறங்காத இரவுகளில் அவளும் உறங்காமல் மருந்து கொடுத்து, உடம்பு துடைத்து, மல ஜலம் அள்ளி, பின் காலையில் பேரப் பிள்ளையைப் பார்க்கத் தூக்கம் கலையாத முகத்துடன் ஓடுவதை எண்ணிப் பார்த்தார். சில வேளைகளில் அவளும் சரி அன்னமும் சரி தன்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே தூணில் சாய்ந்து தூங்குகிறார்கள்.

ராமா தன் குடும்பத்தை மறந்து எனக்காக ஓடியாடித் திரிகிறார். இன்னும் சிரித்த முகம் மாறாமல் இருக்கிறார். ஆனால் சிரமும் களைப்பும் அவருக்கும் இருக்கிறது.

அவர்களுக்கு ஓய்வு கொடுக்கலாம். நல்லதுதான். ஆனால்...

தன்னை மருத்துவ மனையிலேயே முழு நேரமாகத் தங்கச் சொல்லும் டாக்டர் ராம்லியின் நோக்கம் சரியானதுதானா எனத் தெரியவில்லை. சிகிச்சையில் எந்த முன்னேற்றத்தையும் காணோம். சிகிச்சை எப்படி நடக்கிறது என்பதை அவர் விளக்கிச் சொல்வதுமில்லை. இந்த நிலையில் தன்னை முழு நேரமாகத் தன் பாதுகாப்பில் அவர் வைத்துக் கொள்ள விரும்புவது ஏன்? அவர் தயார்ப் படுத்தியுள்ள தூக்குக் கயிற்றில் தன் கழுத்தை முழுமையாக மாட்டிய பின் கடைசி இறுக்கத்தைத் தானே இழுத்து முடித்து வைத்து மகிழ விரும்புகிறாரா?

"மதர் மேகி! சிகிச்சையில் ஒரு மாற்றமும் தெரியவில்லையே. இந்த நிலையில் ஏன் நான் இங்கு முழு நேரமாகத் தங்க வேண்டும்?" என்று பலவீனமாகக் கேட்டார்.

"அவர் உங்களுக்காக வகுத்திருக்கும் ஹோர்மோன் தெராப்பியில் அடுத்த இரு வாரங்கள் மிக முக்கியமானவை என அவர் நினைக்கிறார். ஹோர்மோன் சுரப்பிகளின் இயக்கத்தை அடிக்கடி சோதித்து மருந்தை அளந்தும் மாற்றியும் கொடுக்க வேண்டும் என்கிறார்! அதற்காகத்தான் இந்த ஏற்பாடு!"

இதில் சுந்தரத்துக்கு அவ்வளவாக நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் தான் நினைப்பதை மதர் மேகியிடம் சொல்லவும் முடியவில்லை. இந்த அன்னைத் தன் வாழ்க்கையில் மனிதர்களின் நல்ல குணங்களின் மீது ஆழமான நம்பிக்கை வைத்திருப்பவர். ஆண்டவனின் நல்ல குணத்தின் மீது நம்பிக்கை வைத்துத் தன்னை அதற்காக அர்ப்பணித்துக் கொண்டவர். அவரிடம் தன்னுடைய அவநம்பிக்கைகளையும் சந்தேகங்களையும் சொல்வதற்கு வெட்கமாக இருந்தது. ஒரு முறை சொல்லி அதனை விரைவாகப் பேசித் தீர்த்து விட்டார். இன்னொரு முறை அந்த விஷயத்தை எழுப்பி எல்லோர் மீதும் சந்தேக நாற்றத்தை அவர் தௌிக்க விரும்பவில்லை.

அதோடு ஜானகியின் களைத்த முகம் மீண்டும் நினைவுக்கு வந்தது. தனக்காக ஒவ்வொரு நாளும் காரை எடுத்துக் கொண்டு அலைகின்ற அன்பு நண்பன் ராமாவின் நினைவு வந்தது. சரியென்று முடிவு செய்து விட்டார்.

"சரி மதர் மேகி! இன்றைக்கு வீடு திரும்பிச் சொல்லிவிட்டு முடிந்தால் இன்று மாலையே வந்து விடுகிறேன்!" என்றார்.

"நல்லது. அப்படியானால் நாம் இங்கே இனிமேல் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கலாம், இல்லையா!" என்று கேட்டு விட்டு டாக்டர்களுக்குத் தகவல் சொல்லப் போனார் மதர் மேகி.

என்னவோ மதர் மேகியுடன் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதில் கூட இப்போது ஆசையில்லாமல் போய்விட்டது.


*** *** ***


விஷயம் கேட்டு ஜானகி அழுதாள். இப்போது எதற்கெடுத்தாலும் சுலபமாக அழுகிறாள். சில சமயங்களில் தனியாக உட்கார்ந்தும் அழுது கொண்டிருக்கிறாள்.

"நான் ஒருத்தி உங்களுக்குப் பணிவிட செய்ய இங்க இருக்கும் போது நீங்க எதுக்கு ஆஸ்பத்திரிக்குப் போய் இருக்கணும்?" என்று கேட்டாள்.

"நானாகவா போய் இருக்கணும்னு சொல்றேன்? டாக்டர்கள்தான் அங்க இருக்கச் சொல்றாங்க ஜானகி!" என்றார்.

அன்னம் வந்துதான் அறிவுடன் பேசினாள்: "ஜானகி! தம்பிய நம்பளால பாத்துக்க முடியாதுன்னு அவங்க இப்படிச் சொல்லல. அடிக்கடி மருந்து குடுத்துப் பரிசோதிக்க வேண்டியிருக்கிறதினாலதான் இப்படிச் சொல்றாங்க. அது தம்பியோட நன்மைக்குத்தானே! பக்கத்திலதான ஆஸ்பத்திரி! எப்ப வேணும்னாலும் போய்ப் பார்க்கலாம! போகவிடு ஜானகி!" என்றாள்.

ஜானகி நீண்ட நேரம் முனகிக்கொண்டும் அழுது கொண்டும் இருந்து அப்புறம் அவருக்கு வேண்டிய அத்தியாவசியத் துணிகளையும் உணவுப் பொருள்களையும் எடுத்து ஒரு பையில் அடுக்கினாள்.

மாலையில் ராமாவின் காரில் ஜானகி, அன்னம் இருவரும் அவரோடு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்து அவரைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டுப் போனார்கள். ஜானகி கவலையோடு திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போனாள்.


*** *** ***

சில மனிதர்களுக்குச் சாவு ஒரு நொடியில் வருகிறது. லாரியில் அடிபட்டு அரைபட்டுப் போய்விடுகிறார்கள். யாரையும் கட்டிப் பிடித்து அழுது "நான் போயிட்டு வாரேன்! என் பிள்ளை குட்டிகளைப் பாத்துக்குங்க!" என்று சொல்ல அவர்களுக்கு நேரமும் தேவையும் இருப்பதில்லை.

சில மனிதர்களுக்குச் சாவு நீண்டதாக இருக்கிறது. சாவின் தொடக்கம் எது என்று புரிவதில்லை. எப்போது முடிந்தது என்பதிலும் தௌிவில்லை. கோமாவில் ஆண்டுக் கணக்கில் கிடந்து செத்துப் போனவர்களுக்கு எந்தக் கணத்தில் உயிர் போயிருக்கும் என்பது மருத்துவர்களுக்குக் கூடத் தெரிவதில்லை.

தன் சாவு மௌன்ட் மிரியத்தின் அந்தப் படுக்கையில் வந்து படுத்தபோது ஆரம்பித்திருக்கிறது என அவர் நினைத்துக் கொண்டார். ஒரு வேளை இதற்கு முன்பே கூட ஆரம்பித்திருக்கலாம். அவர் மூளையில் அந்தப் புற்று நோய் செல் கருக்கொண்ட அந்தக் கணம் தனது சாவின் தொடக்கமாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்கு நாளும் நேரமும் யாராலும் நிர்ணயிக்க முடியாது. டாக்டர்களாலும் கூட முடியாது.

தான் டாக்டர் ராம்லியை சந்தித்த நாளைக் கூடத் தனது சாவின் தொடக்கமாக எடுத்துக் கொள்ளலாம். அந்த நாள் அந்த நேரம் நன்றாக நினைவிருக்கிறது. அவருடைய உணர்ச்சியில்லாத பார்வையில் சாவு கருக்கொண்டிருக்க வேண்டும். அப்போது அது தெரியவில்லை.

ஆனால் அப்போதெல்லாம் அவருக்கு சாவுக்கெதிரான தற்காப்புகள் இருந்தன. வீடு என்று ஒன்று இருந்தது. குடும்பம் என்று ஒன்று இருந்தது. ஜானகியும் அன்னமும் இருந்தார்கள். ராமா எப்போதும் இருந்தார். உயிர் காப்பான் தோழன்.

பிறகு தனக்குப் பிடிக்காத மருமகனும் ஆதரவாக வந்திருந்தான். தன்னை மருத்துவ மனைக்குக் கொண்டு வருவதில், தூக்கிச் சக்கர நாற்காலியில் உட்கார வைப்பதில், "உடம்பு இப்ப எப்படி மாமா?" என்று கேட்பதில் ஆதரவாக, தன் சாவை நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாக பக்க பலமாக இருந்தான்.

பின்னால் மகளும் வந்து சேர்ந்தாள். அழுது ஆர்ப்பாட்டம் செய்வது என்பதே அவளுடைய முக்கிய குணமாக இருந்தாலும் தன் வாழ்க்கைப் பிரச்சினைகளும், தன் மகனின் நோயுமே அவள் மனதைப் பெரும்பாலும் சூழ்ந்திருந்தாலும் "அப்பா, அப்பா" என்று அவள் குழையக் குழைய அழைத்து மனதுக்கு இதமாக இருந்தாள்.

இந்தத் தற்காப்புகளை எல்லாம் எத்தனை சுலபமாக எத்தனை திறமையாக அகற்றிவிட்டார் இந்த ராம்லி! இப்போது நான் முற்றிலும் அவர் கைகளில். நான் இந்தப் படுக்கையில் வந்து படுத்த நேரம்தான் டாக்டர் ராம்லியின் கொலை முயற்சியிலிருந்து எல்லாத் தற்காப்புக்களையும் இழந்த நேரம். ஆகவே இதுதான் என் சாவின் தொடக்கம்.

மருத்தும மனையின் அந்த முதல் இரவு பயங்கரமானதாக இருந்தது. அந்த வார்டில் அதிகமான நோயாளிகள் இல்லை. ஆனால் இருந்த ஓரிருவருக்கு நோய் முற்றிய நிலையில் இருந்தது.

உண்மையான தனிமை என்பது என்ன என்பதை அன்றுதான் உணர்ந்தார். ஜானகி தன் படுக்கையில் இல்லாத தனிமை. தன் படுக்கையே தனக்கு இல்லாமல் போன கொடுமை. தன் வீட்டின் அமைதியான ஒலிகளைக் கேட்டு சுகங்காண முடியாத வெறுமை.

இனி காலையில்தான் வருவார்கள். ஜானகியும் அன்னமும் முறை வைத்துக் கொண்டு வருவார்கள். ஏனென்றால் பரமாவைப் பார்க்க ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்கும் அவர்கள் மாறி மாறிப் போக வேண்டும்.

தொடர்ந்து எத்தனை நாள் இப்படி வருவார்கள்? சலிக்காதா? சலிக்கும். அப்புறம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவார்கள். "நேத்து ஒடம்பு சரியில்ல!" என்று சமாதானம் கூறுவார்கள். "இங்கதான் உங்கள நல்லா கவனிச்சிக்கிறாங்கள அப்புறம் நாங்க ஏன் அடிக்கடி வரணும்!" என்பார்கள். வருகையின் இடை வௌி நீளும். ஏனென்று கேட்டால் எரிச்சல் படுவார்கள். "எங்களுக்கு வேற வேல இல்லியா?" என்று கேட்பார்கள். இந்தத் தனிமை பழகிப் போகும். ஆஸ்பத்திரி வாழ்க்கை அன்றாட வாழ்க்கையாகிவிடும். அப்புறம் இங்குள்ள மற்ற நோயாளிகளின் முகங்களில் பூத்துள்ள வெறுமையும் விரக்தியும் தன் முகத்திலும் பூத்துவிடும்.

ஆஸ்பத்திரியின் மங்கலான விளக்குகளில் இருள் மஞ்சள் பூசியிருந்தது. ஆனால் அவர் மனதுக்குள் இருந்த இருள் கன்னங்கரிய இருளாக இருந்தது. மனதுக்குள் அதள பாதாளங்கள் தோன்றியிருந்தன. அவற்றுக்குள் அவர் உருண்டு விழுந்தவாறிருந்தார். தரை எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை. தரை தட்டப் போவதில்லை என்றே தோன்றியது. ஒருவேளை இப்படி விழுந்த வாக்கிலேயே தன் வாழ்க்கை முடிவுற்று விடலாம் என நினைத்தார்.


*** *** ***


ஆனால் போன இரண்டு வாரங்களில் வீட்டிலிருந்து யாராவது தொடர்ந்து வந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஜானகி உணவு கொண்டு வருவாள். கூடவே இருந்து சாப்பிட உதவிக் கழுவி வைத்து விட்டுச் செல்லுவாள். பெரும்பாலும் கஞ்சியாக்கப்பட்ட உணவுகளை மட்டும்தான் சாப்பிட முடிந்தது. திடப் பொருள்களை ஜானகியின் வற்புறுத்தலால் கொஞ்சம் சாப்பிட்டாலும் பேதியானது. அதையும் அவளே கழுவி எடுக்க வேண்டுமே என்ற பயத்திலேயே திடப் பொருள்களைச் சாப்பிடுவதை விட்டு விட்டார்.

உடல் இளைத்துக் கொண்டே வந்தது. பேசினாலும் மூச்சு வாங்கியது.

ராமா காலையில் வந்தால் அரை மணி நேரம் ஒரு மணி நேரம் இதமாகப் பேசிக்கொண்டே இருப்பார். ஏதாகிலும் புத்தகங்கள் கொண்டு வந்து கொடுத்தவாறு இருப்பார். சுந்தரத்தின் பக்க மேசையில் ஏராளமான புத்ததகங்கள் வந்து சேர்ந்து விட்டன. மதர் மேகியும் சில புத்தகங்கள் கொடுத்திருந்தார். முடியும் நேரங்களிலெல்லாம் படித்தார். கண்களில் தௌிவு குறையவில்லை.

மதர் மேகி முதல் மூன்று நாட்கள் வந்து படுக்கையின் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். மூன்றாவது நாள் பேசி விட்டுப் புறப்படும்போது சொன்னார்: "சுந்தரம். நான் இரண்டு வாரங்கள் இனி வந்து உங்களைப் பார்க்க முடியாது. ரோம் போகிறேன். வத்திக்கனில் எங்களுக்கு ஒரு கருத்தரங்கு நடக்கிறது. அதை முடித்து ஒரு இரண்டு நாள் பெல்ஜியத்திற்குப் போய் என் குடும்பத்தைப் பார்த்துவிட்டுத்தான் திரும்புவேன்!" என்றார்.

"அடடா! நீங்கள் இல்லாமல் எனக்குப் பொழுது போகாதே!" என்றார் சுந்தரம்.

"நீங்கள்தான் நிறையப் புத்தகங்கள் வைத்திருக்கிறீர்களே! உங்களைப் போலத் தீவிரமாகப் படிப்பவரை நான் பார்த்ததில்லை! உங்களைப்போல நிறையப் படிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லையே என நான்தான் பொறாமைப் படுகிறேன்!" என்றார்.

சுந்தரம் தன் புத்தகங்களைத் தேடி "இராமகிருஷ்ணர் அருளுரை" என்ற சிறு புத்தகத்தை எடுத்து மதர் மேகியிடம் கொடுத்தார். "விமானத்தில் போகும் போது படியுங்கள்!" என்றார்.

"மிக்க நன்றி. விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு படித்திருக்கிறேன். அவருடைய குருநாதரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பு. மீண்டும் நன்றி!" என்று எழுந்து நின்றார்.

"மதர் மேகி! வத்திகனில் உள்ள தேவாலயத்தில் மைக்கலேஞ்சலோ ஓவியம் ஒன்று உள்கூரையில் இருக்கிறதாம். அதில் கடவுளின் கரங்கள் மனிதனை நீக்கி நீண்டிருந்தாலும் அவரின் விரல்கள் மனிதனின் விரலைத் தொடாமல் இடைவௌி விட்டு நிற்கிறதாம். அந்த ஓவியத்தை நீங்கள் பார்த்தால் அதன் கீழ் நின்று இறைவனின் விரல்கள் மனிதனை விரைவில் தொடவேண்டும் என எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்" என்றார்.

மதர் மேகி சிரித்தவாறிருந்தார். ஏன் என்று கேட்கவில்லை. "சரி! அப்படியே வேண்டிக் கொள்வேன்!" என்றார்.

"போப்பாண்டவரைக் கண்டாலும் என் அன்பைக் கூறுங்கள்!" என்றார் சுந்தரம் சிரித்துக் கொண்டே.

"இந்தக் கருத்தரங்கின் போது அந்த பாக்கியம் கிடைக்கும் என நினைக்கவில்லை. ஆனால் வத்திக்கனில் இருக்கும்போது இரவில் பிரார்த்தனை பண்ணும் போது இயேசுவிடம் சொல்லி போப்பாண்டவருக்கு உங்கள் அன்பைத் தெரிவிக்கச் செய்வேன்" என்றார்.

"இத்தனை பெரிய தூதுவர் உங்களுக்கு இருக்கும் போது என்ன குறை?" என்றார் சுந்தரம்.

மதர் மேகி அடுத்த படுக்கைக்குப் போய் கொஞ்ச நேரம் பேசியிருந்து போய்விட்டார். அவர் அந்த அறையை விட்டு வௌியேறியதும் தனிமை இன்னும் மோசமானது.

டாக்டர் ராம்லி அவரைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வந்தார். இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு ஒருமுறை வந்து பரிசோதிப்பார். நடுநிசியிலும் வருவார். உதவியாளர்களைக் கொண்டு ரத்தம் எடுப்பார். திடீரென்று எக்ஸ்ரேக்கள் எடுக்கச் சொல்லுவார். ரேடியோதெராப்பிக்கு உத்தரவிடுவார். தான் கொன்று தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்ட ஒரு பகைவனுக்காக ஒரு கொலைகாரன் இத்தனை சிரமப்பட்டு சிகிச்சை செய்வது சுந்தரத்துக்கு ஒரு வேடிக்கையாக இருந்தது.


*** *** ***

இன்று ஏன் இப்படி காலையிலிருந்து அடை மழை பொடூகிறதென்று தெரியவில்லை. இதனால் காலையில் வந்திருக்க வேண்டிய நண்பன் ராமாவையும் காணவில்லை.

அன்று இரவு கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கினார். உடம்பின் வருத்தங்கள் அதிகமாகத் தெரியவில்லை. காலையில் எழுந்து மெதுவாகத் தாமே மைலோ கலந்து குடித்தார். ஜானகியிடம் சொல்லி இன்னொரு டின் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என நினைவு படுத்திக் கொண்டார்.

தாதியைக் கூப்பிட்டுக் குளியலறைக்கு அழைத்துப் போகச் சொன்னார். அந்தச் சீனப் பெண் தோளுக்குக் கீழ் கைகொடுத்து அவரைக் குளியலறையில் விட்டு வந்தாள். வழுக்கி விழுந்து விடுவோமோ என பயந்தார். அதையும் இதையும் பிடித்துப் பிடித்துக் காலைக் கடன்களையும் குளியலையும் முடித்தார். தலை கொஞ்சம் சுற்றினாலும் விரைவில் நிலைப் பட்டது. ஆனால் விரைவில் களைப்புத் தோன்றிவிட்டது. படுக்கையில் சாய்ந்து விட்டார்.

தாதி காலை உணவு கொண்டு வந்தாள். டோஸ்ட், வெண்ணெய், அவித்த முட்டை, காப்பி. சாப்பிட்டார். அத்தனையையும் தங்க வைத்துக் கொள்ள முடிந்தது. உணவு உடம்புக்குக் கொஞ்சம் தெம்பூட்டியது.

தாதியிடம் சொல்லி சக்கர நாற்காலியில் உட்கார வைத்து ஜன்னலோரமாக நிறுத்தச் சொன்னார். அவள் அவரை வசதியாக உட்காரப் பண்ணிவிட்டு மடியில் போர்வையை விரித்து மடித்துச் சொருகிவிட்டு "நீண்ட நேரம் இப்படி உட்கார்ந்திருக்காதீர்கள். மழைநாளாக இருக்கிறது. சளி பிடிக்கும்!" என எச்சரித்துவிட்டுச் சிரித்துப் போனாள்.

வழிந்து கொண்டிருக்கும் மழைத்தாரைகள் அவரை வசியப் படுத்தின. எங்கு எப்பொழுது மழை பொழிந்தாலும் அதில் ஒரு வசியம் இருக்கிறது. மனதை அப்படியே ஈர்த்துவிடுகிறது. அதிலும் இன்று இடியோடும் மின்னலோடும் "சோ" என்ற சத்தத்தோடு பெய்கிறது. மௌன்ட் மிரியத்தின் கூரைகளில் சத்தத்தோடு கொட்டுகிறது. வடிகுழாய்களில் சடசடவென இறங்குகிறது. கால்வாய்களில் சலசலவென ஓடுகிறது.

பக்கமுள்ள மரங்களைக் குளிப்பாட்டுகிறது. அந்த மரங்களில் நீர் கோத்துக் கிளைகள் தாழத் தொங்கின. இலைகள் மழைத் துளிகளை வாங்கிக் குனிந்து தரையில் ஊற்றிவிட்டு மீண்டும் நிமிர்ந்து, வாங்கி, ஊற்றி....

இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் நேரத்தில் தாம் ஒரு சிறுபிள்ளையாகிப் போய் விடுவதாக நினைத்துக் கொண்டார். அதுவும் நல்லதுதான். சிறுபிள்ளையாகிவிட்டால் வாழ்வின் துயரங்கள் மறந்துவிடும்.

உண்மைதானா? சிறுபிள்ளைகளுக்கு வாழ்க்கையின் துயரம் தெரியாதா? பிள்ளைப் பருவத்தில் பல பயங்கள் இல்லையா? இருட்டைப் பார்த்தால் பயம். புதியவர்களைப் பார்த்தால் பயம். மிருகங்களைப் பார்த்தால் பயம். அதிலும் வேடிக்கையாக பயம் காட்டும் பெற்றோர்கள் அல்லது சகோதரர்கள் இருந்து விட்டால் மூலைக்கு மூலை பயம்தான். வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை தலை தூக்கி நிற்கும் அளவுக்கு அவற்றில் உள்ள மர்மங்களுக்கு பயந்து பயந்து சாவதும் சிறு பிள்ளைப் பருவத்தில்தான்.

பரமா அப்படித்தான். எதைப் பார்த்தாலும் முதலில் பயப்படுவான். விளையாட்டுப் பொருள்களில் ஆடும் ஓடும் இயந்திர பொம்மைகள் இருந்தால் பயப்படுவான். பின்னர் பழகிவிட்டால் விளையாடுவான்.

முதல் முதலில் ஜிம்மியைப் பார்த்ததும் அவனுக்கு பயம்தான். தன் தாயின் கழுத்தைக் கெட்டியாகக் கட்டிக் கொண்டு தொங்கினான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரம் கொடுத்த தைரியத்தில் அதன் தோலைத் தடவிக் கொடுக்கப் பழகினான். அதன் பின் ஜிம்மி அவன் முன் பதுங்கி வாலை ஆட்டி குதித்து அவன் முகத்தை நக்கி அவனை வசியப் படுத்தி விட்டது. அப்புறம் அவனும் ஜிம்மியும் கட்டிப் புரண்டிருக்கிறார்கள். அதன் குரைப்பும் அவன் சிரிப்பும் அவர்கள் வீட்டை நிறைத்ததுண்டு. "ஐயோ, இந்த நாய வெரட்டுங்களேன். பிள்ளய போட்டு அழுக்காக்குதே!" என்று ஜானகி கத்துவாள். ராதாவோ சுந்தரமோ அவர்களை வற்புறுத்தி இழுத்துப் பிரித்தால்தான் உண்டு.

ஆனால் இப்போது பரமாவைக் கட்டிக் கொண்டிருக்கும் மிருகம் ஜிம்மியைப் போல மென்மையானதல்ல! அது விளையாடும் மிருகம் அல்ல! அது புற்று நோய் என்னும் கொலைப் பிராணி. அதன் பிடியும் கடியும் விளையாட்டுக்கள் அல்ல. வினைகள். அதைப் பார்த்து பயப்படக் கூட பரமாவுக்குத் தெரியாது. அது ஜிம்மியைப் போல மென்மையான மயிர்ப் போர்வை கொண்ட மிருகம் அல்ல. அதை நாம் அணைக்கவோ தள்ளவோ முடியாது. அதுவே அணைக்கும். இறுக்கும். மூச்சுத் திணற வைக்கும். கொல்லும். அது என்னையும் இப்போது இறுக்கியிருக்கிறது. மூச்சு இப்போது மெதுவாகத் திணறுகிறது. விரைவில் கொல்லும்.

பரமாவின் நிலைமை பற்றி அடிக்கடி அவருக்குத் தகவல் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். அவனுடைய உறுப்புக்கள் செயலிழக்க ஆரம்பித்திருந்தன. கிட்னி செயலிழந்ததால் டயலிஸிஸ் செய்ய ஆரம்பித்திருந்தார்கள் என்று சொன்னார்கள்.

போன வார இறுதியில் டாக்டரின் அனுமதி பெற்று பரமாவைப் பார்க்கப் போனார். ராமாவுடன் சிவமணி வந்திருந்து சக்கர நாற்காலியில் உட்கார வைத்து காரில் ஏற்றி இரண்டு பேருமாக பரமாவின் படுக்கை வரை அவரைக் கொண்டு சென்றார்கள். அன்னம், ஜானகி, ராதா அனைவரும் அப்போது அவனுடன்தான் இருந்தார்கள்.

அவன் படுத்த வாக்கில்தான் இருந்தான். கிட்டத்தட்ட கோமா நிலைதான். அவன் இதயத் துடிப்பு பலவீனமாக இருப்பதாகச் சொன்னார்கள். பலவிதக் குழாய்கள் போட்டிருந்தார்கள்.

சோகம் ஒரு கரிய புகைமூட்டம் போல் கவிந்து நின்ற அந்தச் சூழ்நிலையில் யாரிடம் என்ன பேசுவது என சுந்தரத்துக்குத் தெரியவில்லை. தான் என்ன சொன்னாலும் அந்தச் சூழ்நிலையை அது இன்னும் மோசமாக்குமே தவிர பிரகாசப் படுத்தாது. ஒரு வகையில் தானும் தனது சக்கர நாற்காலியும் அங்கு வந்ததன் மூலமாகவே அந்த சூழ்நிலையை இன்னும் சோகப் படுத்திவிட்டோம் எனத் தோன்றியது.

ராதா கூந்தல் கலைந்து சோர்ந்து நோயாளி போல இருந்தாள். சிவமணி அவள் பின்னால் நின்று தோள்களை அழுத்திக் கூந்தலைத் தடவிவிட்டதை அவள் ஆட்சேபிக்காமல் ஏற்றுக் கொண்டதைப் பார்த்த போது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பரமாவின் இந்த நோயால் ஏதோ ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறதோ?

"ராதாவும் சிவமணியும் ஒரு வகையில சமாதானமாப் போயிட்டதாகத்தான் தெரியுது. ராதா இனி திரும்ப லண்டனுக்குப் போறதப்பத்தி ஒண்ணும் முடிவு பண்ணலன்னு அன்னைக்கிச் சொன்னா! அநேகமா போகமாட்டா போலத்தான் இருக்கு" என்று ஜானகி அவரிடம் ஒரு நாள் சொல்லியிருந்தாள்.

"அப்ப அவளோட அந்த வெள்ளைக்காரக் காதலன் என்ன ஆனான்...?" என்று கேட்டார்.

"அந்தச் சனியனெல்லாம் எனக்குத் தெரியாது. இந்தப் பிள்ளைங்க கோவத்தில அதையும் இதையும் பண்ணிட்டு அப்புறம் இப்படித்தான் சிக்கல்ல மாட்டிக்கிட்டு நிக்கும்" என்றாள்.

பரவாயில்லை. வெள்ளைக்காரக் கலாச்சாரத்தில் இது தீவிரக் குழப்பத்தை ஏற்படுத்தாது. எப்படி தீவிரமாக, எல்லாருக்கும் தெரிய பகிரங்கமாகக் காதலிக்கிறார்களோ, அதே தீவிரத்தில் பகிரங்கமாகப் பிரிந்து விடுவார்கள். அது ஆணையும் பெண்ணையும் வாழ்நாள் முழுக்கப் பிணித்து வைக்கும் கலாச்சாரமல்ல. திருமண பந்தம் எல்லாம் தனி மனித வசதிக்கு ஏற்பத்தான். இன்று வசதியானால் திருமணம். நாளை வசதியில்லையானால் ரத்து. ராதாவின் வெள்ளைக்காரக் காதலன் சரிகட்டிப் போய்க் கொள்வான்.

ஆனால் ராதாவும் சிவமணியும் தங்கள் வாழ்க்கையை அத்தனை எளிதாகச் சரிகட்டிக் கொள்ள முடியாது. சிவமணி இப்போதைய துயரத்தில் ராதாவின் குறைகளை மறந்து அவளை ஏற்றுக் கொள்வது போல் இருக்கிறான். அவளும் அவன் தீயகுணங்களைத் தற்காலிகமாக மறந்திருக்கிறாள். ஆனால் நமது கலாச்சாரத்தில் நாம் பழைய புண்களை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட மாட்டோம். கிளறிக் கிளறிச் சண்டை போடுவோம்.

பரமாவின் படுக்கை அருகில் ராதாவின் தோளைப் பற்றி நிற்கும் சிவமணியைப் பார்த்த போது அவர்கள் வாழ்க்கையில் அந்தக் கிளறல்களும் சண்டைகளும் வக்கிரமாகவும் விகாரமாகவும் ஆகாமல் பார்த்துக் கொண்டால் பிழைத்துக் கொள்வார்கள் என மனதுக்குள் எண்ணிக் கொண்டார்.

டாக்டர் சொக்கலிங்கம் அந்தப் பக்கம் வந்தார். சுந்தரத்தின் கைகளை ஆதரவாகப் பிடித்துக் குலுக்கினார். "மன்னிக்க வேண்டும். இனி உங்கள் பேரப்பிள்ளைக்கு நாங்கள் செய்வதற்கு அதிகமாக ஒன்றும் இல்லை. பிள்ளையின் உறுப்புக்கள் செயலிழந்து வருகின்றன. மூளையும் செயலிழந்து வருகிறது. ஒரே ஒரு நிம்மதி இந்த வலியையெல்லாம் அவன் உணரமுடியாது என்பதுதான்" என்றார்.

சுந்தரம் பலவீனமாகத் தலையாட்டினார். கண்களுக்குள் கண்ணீர் கொப்புளித்தது.

டாக்டர் சொக்கலிங்கம் தொடர்ந்தார்: "உங்கள் வியாதிக்கும் உங்கள் பேரப்பிள்ளை வியாதிக்கும் சம்பந்தம் இருக்கிறது. டாக்டர் ராம்லி சொல்லியிருக்க வேண்டுமே!" என்றார்.

டாக்டர் ராம்லியின் குணாதிசயங்கள் பற்றிப் பேச விரும்பாததால் "சொல்லவில்லை. எப்படி? நீங்களாவது சொல்லுங்களேன்" என்றார்.

"உங்கள் இரண்டு புற்று நோய் செல்களும் அமைப்பில் ஒரே விதமாக உள்ளன. இரண்டுக்குமே மருந்து எதிர்ப்புச் சக்தி தீவிரமாக இருக்கிறது. அதனால்தான் மற்ற நோயாளிகளைக் குணப் படுத்தும் மருந்துகள் உங்களையும் உங்கள் பேரப் பிள்ளையையும் குணப் படுத்த முடியவில்லை! அநேகமாக இது "ஜெனடிக்", அதாவது பரம்பரையாக வருவதுதான். உங்கள் ஜீனில் இது இருக்கிறது. பெரும்பாலும் ஆண் வாரிசுகளுக்குத்தான் வரும் என டாக்டர் ராம்லி கூறுகிறார்" என்றார்.

அப்படியானால் நான்தான் இதற்குக் காரணமா என எண்ணி அந்தக் குற்ற உணர்ச்சியில் மனம் சோர்ந்து போனது.

டாக்டர் சொக்கலிங்கம் தொடர்ந்தார்: "உங்கள் டாக்டர் ராம்லி, ஒரு ஜீனியஸ். அருமையான மருத்துவ ஆராய்ச்சியாளர். இந்தப் புற்று நோய்த் துறை ஆராய்ச்சியால் நம் நாட்டுக்குப் பெரிய பெருமைகளைக் கொண்டு வரப் போகிறார் பாருங்கள்!"

'ஆனால் இந்த டாக்டர் ராம்லி எனது உயிர்ப் பகைவன் என்பது உங்களுக்குத் தெரியாது' என மனதுக்குள் சொல்லிக் கொண்டார் சுந்தரம். டாக்டர் போய்விட்ட வெகு நேரம் வரை பரமாவின் நிலைமைக்கு நான்தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி திரும்பத் திரும்ப மேலெழுந்து கொண்டிருந்தது.


*** *** ***

மழை விட்டது போல் இருந்தது. தூறல் ஆரம்பித்திருந்தது. இலைகளிலிருந்து மழைநீர் கொட்டுவது நின்று சொட்ட ஆரம்பித்திருந்தது. வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது. மழைக்காட்சி அவருக்கும் அலுத்து விட்டது. உட்கார்ந்திருந்த இடத்திலேயே இருப்பது எரிச்சலாக இருந்தது. தாதியைக் கூப்பிட்டு மீண்டும் படுக்கைக்குக் கொண்டு செல்லச் சொல்லலாமா என நினைத்தார்.


தானாக ஏன் நடக்கக்கூடாது என்ற எண்ணம் எழுந்தது. என்ன ஆகிவிடும். கீழே விழுவேன். அடிபடும். பலத்த அடியானால் உயிர் போகும். அவ்வளவுதானே. ஒன்றும் பெரிய விஷயமில்லை.

சக்கர நாற்காலியின் இரண்டு பக்கப் பிடிகளையும் அழுத்திக் காலை ஊன்றி உந்தினார். முழங்கைகளும் கால் தசைகளும் வலியில் கெஞ்சின. இடங் கொடுக்காமல் உந்தி எழுந்து நின்றார். வலிகள் பொங்கி ஆறின.

வலது கால் ஒரு அரையடி நகர்ந்தது. இடது கால் அந்த அரையடியை இழுத்து நிரப்ப, மீண்டும் வலது கால் அரையடி முன்னேறி, இடது, வலது, இடது...!

சக்கர நாற்காலியை விட்டுத் தள்ளித் தள்ளிப் போக படுக்கை கிட்டக் கிட்ட வந்தது. படுத்த படுக்கையாகக் கிடக்கும் ஒரு சீன சக நோயாளி அவருடைய நடை முன்னேற்றத்தைப் பொறாமையுடன் பார்த்தார். வலது, இடது, வலது, இடது...!

கால்களை ஊன்றுவதில் அவற்றின் மீது நடப்பதில் ஒரு தன்னம்பிக்கை தோன்றியது. வலது, இடது, வலது, இடது...!

மனதுக்குள் நம்பிக்கை ஊற்று ஒன்று பொங்கியது. தளர்ந்த கால்களில் கூன் குருகி நடந்தாலும் உள்ளம் நிமிர்ந்திருந்தது. கால்களில் தரை வசப்பட்டதும் மனதில் வானம் வசப்பட்டது. வலது, இடது... நான் நடக்கிறேன்! எனக்கும் என் படுக்கைக்கும் இடையே உள்ள தூரத்தை நான் வெற்றி கொள்ளுகிறேன். எனக்கும் என் சக்கர நாற்காலிக்கும் உள்ள தூரத்தை நான் அதிகப் படுத்துகிறேன்.

ஏ என் சீன சக நோயாளியே! என்னைப் பார்! என் மீது நம்பிக்கை வை! என்னை உதாரணமாகக் கொள்!

மனதுக்குள் பாரதியின் பாடல் ரீங்காரம் செய்தது.

"காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கின்றேன்"

படுக்கையை அடைந்தார். படுக்கையின் விளிம்பைப் பிடித்து வெற்றிப் புன்னகையுடன் நிமிர்ந்த போது வார்டின் வாசலிலிருந்து ராமா அவசரமாக வந்து கொண்டிருந்தார்.

"வா ராமா, வா. மழையைப் பார்த்து பயந்து தாமதமாக வரும் என் தோழனே, நான் இங்கே மலையையே வெற்றி கொண்டிருக்கிறேன். வா என் வெற்றியை என்னோடு சேர்ந்து கொண்டாடு!" என அவருக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்த நேரத்தில், அவர் வாய் திறக்கு முன்னரே ராமா அவசரமாகக் கூறினார்:

"சுந்தரம். பிரேம் போயிட்டாம்பா! காலையில ஒம்போது மணிக்கு அவன் கதை முடிஞ்சது பிரேதத்தை வீட்டுக்குக் கொண்டு வந்திட்டாங்க!" என்றார்.

படுக்கைக்குப் பக்கமாக நின்றது நல்லதாகப் போயிற்று. ராமா கை நீட்டிப் பிடிப்பதற்குள் சுந்தரம் தலை சுற்றி அந்தப் படுக்கையின் மேலேயே விழுந்தார்.


--------

அந்திம காலம் - 18


"மூன்றாவதாக உனக்கு என்ன வரம் வேண்டும்?" என யமன் கேட்டான்.

"ஓ யமனே, ஒரு மனிதன் இறந்து விடும் போது சிலர் அவன் இருக்கிறான் என்றும் சிலர் அவன் இல்லை என்றும் சொல்கிறார்கள். மரணத்தின் தெய்வமே! அந்த ரகசியத்தை நீ எனக்குச் சொல்ல வேண்டும். மரணத்திலிருந்து மனிதன் தப்பிக்க முடியுமா?" என நசிகேதன் கேட்டான்.

"அதை மட்டும் கேட்காதே! இதைப்பற்றி தெய்வங்களுக்கும் சந்தேகமுண்டு. அதைப் புரிந்து கொள்வது எளிதல்ல. அது சூட்சுமமானது. ஓ நசிகேதா! வேறு வரம் கேள்! உனக்குப் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் பொன்னும் குதிரைகளும் நாடுகளும் செல்வமும் நீண்ட ஆயுளும் அழகிய பெண்களும் ரதங்களும் தருகிறேன்" என்றான் யமன்.

"செல்வத்தால் யாருக்கும் நிலைத்த இன்பம் வராது. இந்த ஒரு வரமே வேண்டும். வேறு வேண்டாம். மனிதன் மரணத்திடமிருந்து தப்பிப்பது எப்படி?"

கதோபனிஷத்.


சுந்தரத்தை சக்கர நாற்காலியில் ஓர் ஓரமாக உட்கார வைத்திருந்தார்கள். பலர் வந்து அவர் கைகளைக் குலுக்கி அனுதாபம் தெரிவித்துப் போனார்கள். கோலாலம்பூரிலிருந்து ராதா சிவமணிக்குத் தெரிந்த பலர் வந்திருந்தார்கள். அவருக்கு அவர்களை யார் எனத் தெரியவில்லையானாலும் பலவீனமாகத் தலையாட்டி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பரமாவின் உடலின் மேல் நிறைய வாசனைப் பொருள்கள் தௌித்து வைத்திருந்தார்கள். அவன் உறங்குவது போல இருந்தான். அவன் முகம் தௌிவாக இருந்தது. அவனுக்காக வந்த பூவளையங்கள் வீட்டின் பல பகுதிகளில் வைக்கப் பட்டிருந்தன.

புதிதாக யாராவது வந்த போதெல்லாம் ராதா அலறி அழுதாள். "என் மகனைப் பார்த்திங்களா, என் பச்சப் பிள்ள என்ன விட்டுட்டுப் போயிட்டான் பாத்திங்களா?" என்று அழுதாள். சிவமணி அவள் பின்னால் நின்று அவள் தோள்களைப் பிடித்து "அமைதியா இரு ராதா! அமைதியா இரு!" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

சிவமணியின் தாயும் தகப்பனும் வந்து சோக முகங்களோடு ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார்கள்.

ராமாவும் இன்னும் ஓரிருவரும் மயான வேலைகளைக் கவனிப்பதில் தீவிரமாயிருந்தார்கள். சிறு பிள்ளையாதலால் எரிக்கக் கூடாதென்றும் புதைக்கத்தான் வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

ஜானகி இடிந்து போய் மௌனமாக அழுது கொண்டிருந்தாள். எழுந்து சென்று அவளின் தோள்களைப் பிடித்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால் கால்களில் பலம் இல்லை. அன்னம் மட்டும் அடிக்கொரு தரம் தன் பின்னால் வந்து "எப்படி தம்பி இருக்கு உடம்புக்கு? குடிக்க ஏதாச்சும் கொண்டு வரட்டுமா? கொஞ்ச நேரம் வந்து படுத்திருக்கியா?" என்று கேட்டுக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் வேண்டாம் என்று சொன்னார்.

உடம்பின் வாதை பெரிதாகத் தெரியவில்லை. அது எப்படி இருந்தாலும் பொருட்டில்லை. பரமாவின் அண்மையை விட்டு நான் அகலமாட்டேன். இது அவனுடன் நான் இருக்க முடிந்த கடைசி சில மணி நேரங்கள். அகலமாட்டேன்.

இங்கேயே மயங்கித் தலை குப்புற விழுந்து இறந்து விட்டாலும் பரவாயில்லைதான். பரமாவுக்குத் துணையாகப் போய்ச் சேரலாம்.

பரமாவின் மொட்டுப் போன்ற முகத்தைப் பார்த்தார். "தாத்தா! ஐ வான்ட் சொக்கலேட்!" என்று ஓடிவந்த முகமா இது? "தாத்தா! ஐ டோன்ட் வான்ட் டு கோ!" என்று அழுத முகமா இது? "அகர முதல எழுத்தெல்லாம்..." என்று மழலையில் திருக்குறள் சொல்லித் தன் உள்ளத்தை வானளவுக்கு உயர்த்திய முகமா இது?

அந்த மொட்டை இப்படிக் கொடுமையாகப் பறித்து விட்ட தெய்வத்தை எண்ணி உள்ளுக்குள் சபித்தார். "காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கின்றேன்" என்று ஒவ்வொரு முறையும் தான் கர்வத்தோடு கூவிய போதெல்லாம் காலன்தான் என்னைப் போட்டு மிதித்திருக்கிறான். அவனை வெல்பவர்கள் இல்லையா? நசிகேதன் வென்றானா? நசிகேதன் சாவின் உண்மையைக் கேட்டறிந்தானா? அல்லது பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் பொன்னும் குதிரைகளும் நாடுகளும் செல்வமும் நீண்ட ஆயுளும் அழகிய பெண்களும் ரதங்களும் போதும் என்று கேட்டு வாங்கிப் போனானா? படித்தது இப்போது ஞாபகமில்லை. பரவாயில்லை விரைவில் காலனை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இங்கு நடப்பதெல்லாம் விரைவில் தனக்கு நடக்கவிருக்கும் சடங்குகளுக்கான ஒத்திகைதான் என நினைத்துக் கொண்டார். தன்னை இப்படி வீட்டு நடுவில் கிடத்தி எத்தனை பேர் எப்படியெல்லாம் அழுவார்கள் எனக் கற்பனை செய்து பார்த்தார். ஆனால் அந்த நேரத்தில் யார் அழுகிறார்கள், யார் வருகிறார்கள் என்பதெல்லாம் தனக்குத் தெரியப் போவதில்லை. அது முக்கியமாகவும் இருக்கப் போவதில்லை என நினைத்துக் கொண்டார்.

உடல்தான் இறக்குமாமே, ஆன்மாவுக்கு இறப்பில்லையாமே! "அர்ஜுனா, இவ்வாத்மா வெட்டுண்ணான், வேகான், நனையான், உலரான். இவன் நித்தியமாய், நிறைவாய், நிலையாய், அசைவற்றவனாய் என்றும் இருப்பவனாம்!" என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லியிருக்கிறார்.

ஆன்மா இங்கு நடப்பவற்றைப் பார்க்க முடியுமானால் தன் இறப்புக்கு, தன் உடலுக்குத் தங்கள் மரியாதையைத் தெரிவிக்க யார் யார் வருகிறார்கள், யார் யார் அழுகிறார்கள் என்பது முக்கியம்தான். ஆனால் அந்த ஆன்மாவுக்கு இந்த விருப்பு வெறுப்புக்கள் முக்கியமாகப் படுமா? தன்னை வணக்கம் செய்வோரைக் கண்டு அது ஆனந்திக்குமா? தன்னை வணக்கம் செய்யாதவரைக் கண்டு அது வருந்துமா?

பரமா! நீ ஆன்மாவாக இருக்கிறாயா? இங்கு நடப்பனவற்றைப் பார்க்கிறாயா? உனக்கு இதெல்லாம் விளங்குகிறதா கண்ணா? ஒரு வேளை இறந்து ஆன்மாவாக நீ ஆகிவிட்ட பிறகு நீ குழந்தையாக இல்லாமல் சகல அறிவும் பெற்ற பூரண நிலையில் இருப்பாய்! அப்படியானால் இங்கு நடப்பதை விளங்கிக் கொள்வாய்!

தாத்தா ஏன் அழாமல் இருக்கிறேன் என்று பார்க்கிறாயா? எனக்கு அழுவதற்கு இப்போது சக்தியில்லை. என் உடலில் எல்லாச் சக்திகளும் வடிந்து விட்டன. நான் வெறுங் கூடாக இருக்கிறேன். என் மனத்தில் நீ ஒருத்தன் சிறகடித்தவாறு இருந்தாய். இப்போது நீயும் போய்விட்டபின் அந்த உள்ளமும் வெறுமையாகிவிட்டது. என் உடம்பு ஒரு அழுகும் கூடு. அதன் உள்ளே என் உள்ளம் ஒரு வெற்றுக் கூடுதான். இந்த இரு கூடுகளுக்குள் நான் அர்த்தமில்லாமல் சிறைபட்டுக் கிடக்கிறேன்.

பரமா! உனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்துப் பார்க்க வேண்டும் என்றிருந்தேன். என் வாழ்க்கை வாழ்ந்து அலுத்து விட்ட வேளையில் உன் மரணமும் என் மரணமும் விதிக்கப் பட்டுவிட்ட இந்த வேளையில் இந்த அற்ப ஆசை தோன்றி ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது. அதையும் இல்லாமல் செய்து விட்டாயே கண்ணு!

அனுபவிக்க வேண்டியவை எவ்வளவு இந்த உலகில் இருக்கின்றன? ஓ மரண தெய்வமே! என் பரமா இன்னமும் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் பொன்னும் குதிரைகளும் நாடுகளும் செல்வமும் நீண்ட ஆயுளும் அழகிய பெண்களும் ரதங்களும் பெற்று அனுபவிக்கவில்லையே! அதற்குள் ஏன் அவனைப் பறித்துக் கொண்டாய்?

பரமா! உனக்கு முன் நான் போய் ஆவிகள் தங்கும் உலகம் எதுவாக இருந்தாலும் அங்கு தங்கி உன்னை வரவேற்க வேண்டும் என்று நினைத்திருந்தேனே! ஏன் என்னை முந்திக் கொண்டாய்? பரவாயில்லை இன்னும் சில நாட்களோ, பல நாட்களோ, நானும் வந்து விடுவேன். நோய்த் தொல்லை இல்லாமல் மேகங்களின் மேல் அமர்ந்து நல்ல தமிழ்ப் புலவர்கள் மத்தியில் நாம் தமிழ்ப் படிக்கலாம்.

"சரி சரி! நேரமாச்சி எடுங்க, எடுங்க!" என்றார்கள். உடனே அழுகைகளின் சுருதிகள் கூடின.

என் பரமாவை அன்புடன் முறையாக வடூயனுப்பாமல் நான் இருப்பேனா? என் அன்புப் பேரனே! இந்தத் தாத்தாவின் முத்தத்தைப் பெறாமல் நீ போவாயா?

சக்கர நாற்காலிகளின் பிடிகளை அழுத்தி உந்தி எழுந்தார். அவர் எழுவதைப் பார்த்து இரண்டு பேர் வந்து கைத்தாங்கலாக அவரைப் பிடித்தார்கள். பரமாவின் உடலின் அருகில் போக வேண்டும் என்றார். மெதுவாக நடத்திக் கொண்டு சென்றார்கள். பிணப்பெட்டி அருகில் சென்றதும் அதன் விளிம்புகளைப் பிடித்துக் கொண்டு குனிந்தார். தலை சுற்றும், விழப் போகிறோம் என்ற பயம் வந்தது. விழுந்தால் பரவாயில்லை. அதுவும் செத்து இந்தப் பிணப் பெட்டிக்குள்ளே விழுந்தாலும் நல்லதுதான். பரமாவோடு துணையாகப் படுத்துவிடலாம்.

ஆனால் உடம்பு விழவில்லை. அவர் வேண்டுமளவுக்கு வளைந்து கொடுத்தது. முகத்தை அவன் முகத்துக்கு அருகில் கொண்டு சென்றார். சாமந்திப் பூக்கள், மல்லிகை, ரோஜா, பன்னீர் ஆகியவை கலந்த நல்ல நறுமணம் பரமாவின் உடலிலிருந்து வந்தது.

"ஐயோ அப்பா, உங்க பேரன் உங்கள விட்டுப் போயிட்டான் பாத்திங்களா!" என்று ராதா பக்கத்திலிருந்து அலறினாள்.

அவள் அலறல் காதில் கேட்டுக் கொண்டிருக்கக் குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டார். எழ முடியவில்லை. மீள விரும்பவில்லை. அந்த சங்கமம் அவரை உருக்கிற்று. அவருடைய உடல் குலுங்கிற்று. அவருடைய கண்ணீர் வடூந்து அவன் கன்னங்களை நனைத்தது.

இரண்டு பேர் வலிந்து அவரைப் பிரித்தார்கள். கொண்டு வந்து சக்கர நாற்காலியில் மீண்டும் இருத்தினார்கள்.

"சரி, சரி பெட்டியை மூடலாம்" என்று யாரோ கூறப் பெட்டியை மூடினார்கள்.

"போய் வா கண்ணு! சீக்கிரம் வந்து விடுவேன்! அது வரை தேவதைகள் உன்னைக் கவனித்துக் கொள்வார்கள்!"


*** *** ***

அன்றிரவு தன் வீட்டிலேயே தங்கியிருந்தார். வீடு அமைதியிழந்திருந்தது. அந்த வீட்டில் பல மாதிரி உணர்வுகள் இருந்தன. பரமா போய்விட்ட வெறுமை கனத்திருந்தது. ராதா வாழ்வில் பறிகொடுத்த எல்லாப் பொருள்களிலும் பரமாவின் இறப்பே அவளுக்கு மிகப் பெரிய இழப்பாக இருந்தது. அவளுடைய சோகம் வீடு முழுவதையும் கவ்வியிருந்தது.

அவர் முகத்தை அனைவரும் பாவத்தோடும் பயத்தோடும் பார்த்தார்கள். இந்த சோகம் முடிந்த பின்னர் இன்னொரு பெரிய சோகம் இந்த வீட்டைப் பெரிதாகக் கவ்வப் போகிறது என்ற துயரம் கலந்த எதிர்பார்ப்பு எல்லார் முகத்திலும் இருந்தது. குறிப்பாக அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஜானகி முகத்தில் அந்த பயம் இருந்தது.

இதற்கிடையே ராதா மீது சிவமணி காட்டும் பாசம் ஒரு புதிய நம்பிக்கை விளக்கை அங்கு ஏற்றி வைத்திருந்தது. அவன் அவளுடைய தவறுகள் எதையும் எடுத்துப் பேசவில்லை. அவளை முற்றாக மன்னித்துவிட்டதைப் போலவே நடந்து கொண்டான். அடிக்கொரு தரம் அவள் தோள்களைத் தழுவி ஆறுதல் கூறினான். அவளும் அவனிடம் இணங்கியிருந்தாள். அவன் மார்பில் முகம் புதைத்து அழுவது அவளுக்கு விருப்பமாகவும் நிம்மதியாகவும் இருப்பது போலத்தான் தோன்றியது.

இது நிரந்தரமா தற்காலிகமா என்ற கேள்வி அவர் உள்ளத்தில் எழத்தான் செய்தது. ஆனால் இப்போதைக்கு இது உண்மைதான். அது வரை நிம்மதிதான் என்று எண்ணிக் கொண்டார். எதிர்காலம் எந்தத் திசையில் போகும் என்று யார் கண்டார்கள்? ஏன் அதற்காகக் கவலைப் பட வேண்டும்? எல்லாருடைய எதிர் காலத்திலும் ஒன்றே ஒன்றுதான் நிச்சயமாக இருக்கிறது. மரணம்!

மறுநாள் காலை அவரை மீண்டும் ஆஸ்பத்திரியில் கொண்டு விட ஏற்பாடுகள் நடந்தன. அவருக்கு அதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை. "போகத்தான் வேணுமா அக்கா!" என்று அன்னத்தைப் பார்த்துக் கேட்டார்.

"என்ன தம்பி பேசிற! சிகிச்சைய முடிக்க வேணாமா? போகாம இருந்தா எப்படி?" என்று கேட்டாள் அன்னம்.

ராமாவும் வந்து வலியுறுத்தினார். "பாதில விட்டுட்டா எப்படி சுந்தரம்! கடைசி வரை இருந்து பாத்தாதான நல்லது?" என்றார். "கடைசி வரை" என்பது என்ன என விளங்கவில்லை. மரணம் வரை சிகிச்சை என்றால், மரணத்துக்குக் காத்திருக்கத்தான் மருத்துவ மனைக்குப் போவதென்றால் அது தேவையில்லை எனத் தோன்றியது. ஆனால் சுற்றியுள்ளவர்களின் வற்புறுத்தலை மறுக்க முடியவில்லை.

சிவமணியும் ராமாவும் அவரைக் காரில் ஏற்றிவிட கை கொடுக்க வந்தார்கள். அதை மறுத்துத் தாமாக நிதானமாக நடந்து காரில் ஏறிக் கொண்டார்.


*** *** ***

அவர் அங்கு இல்லாமல் இருந்த ஒரு நாளில் அவருடைய வார்டில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. தன் அடுத்தடுத்த படுக்கைகளில் இருந்த இரண்டு நோயாளிகளையும் காணவில்லை. படுக்கைகளில் புது விரிப்புகள் போடப்பட்டு அடுத்த நோயாளிகளுக்காகத் தயார் செய்யப் பட்டிருந்தன.

மத்தியானம் ரத்தம் எடுக்க வந்த தாதியிடம் விவரம் கேட்டார்.

"அந்தச் சீனக்கிழவர் மண்டையைப் போட்டுவிட்டார். அவருடைய பிரேதத்தை உறவினர்கள் கொண்டு சென்று விட்டார்கள். அந்த இளம் பயனுக்கும் இனி செய்ய முடிந்தது ஒன்று மில்லை என பேர் வெட்டி அனுப்பி விட்டார்கள். அவனை இறக்கும் தறுவாயிலுள்ள நோயாளிகளுக்கான கருணை இல்லத்தில் அவர்கள் குடும்பம் கொண்டு சேர்த்து விட்டது!" என்று உணர்ச்சியில்லாமல் சொன்னாள் அந்தத் தாதி.

இந்த இடத்தில் மரணம் கூத்தாடுகிறது. இங்கு எல்லாரும் அதன் பேய்ப் பிடியில்தான் இருக்கிறோம். இன்றொன்றும் நாளையொன்றுமாக தனது விருப்பத்திற்கு அது மனிதர்களைக் கொய்து தின்கிறது. இது மரணப் பேயின் விருந்துக் கூடம் என்று அவருக்குத் தோன்றியது. இங்கு உட்கார்ந்து கொண்டு மரணம் தன்னைப் பறித்துத் தின்னும் நாளுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டுமா? என்று நினைத்தார்.

இங்கு ஏராளமான டாக்டர்கள் வெள்ளை வெள்ளையாக அங்கிகள் போட்டுக் கொண்டு கழுத்தில் ஸ்டெதஸ்கோப் தொங்க அவசரம் அவசரமாகத் தங்கள் நோயாளிகளைக் கவனித்துக் காப்பாற்றுவதாக நடிக்கிறார்கள். ஏராளமான இயந்திரங்களையும், குப்பி குப்பியாக மருந்துகளையும் வைத்துக்கொண்டு மரண தேவதையோடு பாம்பும் ஏணியும் விளையாட்டு விளையாடுகிறார்கள். இவர்கள் பாய்ந்து பாய்ந்து ஒரு ஏணியில் ஏறினால் இந்த மரணப் பாம்பு தன் முதுகைக் கொடுத்து அவர்களை அதல பாதாளப் பள்ளத்தில் தள்ளி விடுகிறது. அப்புறம் தனக்கு விருப்பமானவர்களை இவர்கள் கண் முன்னாலேயே கொத்திக் கொண்டு போய் தின்கிறது. டாக்டர்கள் இதற்கெல்லாம் ஏதாவது ஒரு மருத்துவப் பெயரைச் சொல்லி விட்டு அடுத்த நோயாளிக்காக அடுத்த ஏணியில் ஏறுகிறார்கள்.

இப்படித்தான் ஏராளமான வெள்ளை அங்கிகள் அணிந்த டாக்டர்களின் கண் முன்னால் மரணம் பரமாவைக் கொத்திக் கொண்டு போயிற்று. என்ன செய்ய முடிந்தது இவர்களால்?

வேண்டாம். இந்த நரகத்தில் இருக்க வேண்டாம். எனக்கு ஓரிரு வார்த்தைகள் ஆறுதல் சொல்லக் கூடிய மதர் மேகி கூட இங்கு இல்லை. இந்த இடத்தில் அன்பும் கருணையும் இல்லை. இங்கு வெறும் மருந்தும் சிகிச்சையும்தான் இருக்கிறது. இது நோயை நீட்டித்து மரணத்தைத் தாமதப் படுத்தும் இடந்தானே யல்லாமல் நோயை ஒடூக்கின்ற இடம் அல்ல.

இங்கிருந்து வௌியேற வேண்டும். அன்பும், அமைதியும், எனக்கு விருப்பமான மனிதர்களும் சூழ்ந்துள்ள என் வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும். உயிரை விடுவதில் இப்போது பயம் ஒன்றுமில்லை. ஆனால் அந்த உயிரை எனது இந்தச் சக நோயாளிகள் போல மருத்துவ மனைப் படுக்கையிலும் கைவிடப்பட்ட கேஸ்கள் காலத்தைக் கழிக்கும் கருணை இல்லங்களிலும் விட மாட்டேன்.

டாக்டர் வந்தவுடன் "உன் மருந்தை நீயே வைத்துக் கொள்" என்று சொல்லி வௌியாகிவிட வேண்டியதுதான் என முடிவு செய்து கொண்டார். டாக்டர் ராம்லியின் சித்திரவதைகளுக்கு இனியும் தன்னை ஆளாக்கிக் கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை. மாலையில் ராமா அல்லது சிவமணி யாராவது ஒருத்தர் தன்னைப் பார்க்க வருவார்கள். அவர்களோடு வீட்டுக்குக் கிளம்பிவிட வேண்டியதுதான்.

அந்த எண்ணமே ஒரு விடுதலை போல இருந்தது. எழுந்து நின்று தமது துணிகளைப் பைக்குள் அடுக்கினார். பிளாஸ்க்கையும் மைலோ டின்னையும் அதற்குள் வைத்தார். புத்தகங்களையும் உள்ளே போட்டார். ஜிப்பை இழுத்து மூடினார்.

வீடு திரும்பிப் புற்று நோயைச் சுதந்திரமாக முற்றவிட்டு, ஜானகியின் மடியில் தலை வைத்தவாறு விரைவில் செத்துப் போகத் தயாராகக் காத்திருந்தார்.


*** *** ***

பிற்பகல் நேரத்தில் டாக்டர் ராம்லி வந்தார். இன்னொரு இளம் டாக்டரும் ஒரு தாதியும் புடை சூழ வந்தார். அவர் படுக்கையின் பக்கத்தில் வந்தவுடன் தௌிவாகத் தெரிந்து கொள்ள முடியாத ஒரு சின்னப் புன்னகையை உதிர்த்துவிட்டு அவருடைய ஃபைலைத் திறந்து ஏதோ குறிப்புகள் எழுதினார். அவருடைய இறுக்கமான முகத்துக்கு அந்தப் புன்னகையே ஒரு பெரிய மாற்றம்தான்.

சுந்தரம் தன் மனதைத் தைரியப் படுத்திக் கொண்டு சொன்னார்: "டாக்டர் ராம்லி! என்னை இந்த சிகிச்சையிலிருந்து விடுவித்து விடுங்கள்" என்றார்.

டாக்டர் ராம்லி நிமிர்ந்து பார்த்தார். "ஏன்?" என்று கேட்டார்.

"இந்த சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே இப்படியே நாளைக் கடத்த நான் விரும்பவில்லை! இந்த மருத்துவ மனைச் சூழ்நிலை எனக்கு வெறுப்பாக இருக்கிறது. என் வீட்டுக்குத் திரும்பி விட விரும்புகிறேன்!" என்றார்.

சில விநாடிகள் அவரை உற்றுப் பார்த்தார் ராம்லி. பின்பு ஃபைலைத் திறந்து ஏதோ வேகமாக எழுதி மூடினார். திரும்பித் தாதியிடம் கூறினார்: "நர்ஸ், இந்த பேஷண்டை டிஸ்சார்ஜ் செய்து விட்டேன். அவரை வீட்டுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!" என்றார்.

சுந்தரத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு கோபக்காரரா இந்த ராம்லி! நோயாளி ஒரு ஏமாற்றத்தில் பேசக் கூடும் என்ற பரிதாபம் சற்றும் இல்லாமல் எடுத்தெறிந்து காரியம் செய்கிறாரே!

அவர் தன்னை அங்கு தங்கியிருந்து சிகிச்சையைத் தொடருமாறு கேட்கக்கூடும் என நினைத்து அதற்குரிய பதில்களைத் தயாரித்து வைத்திருந்த சுந்தரத்திற்கு டாக்டர் இவ்வளவு விறைப்பாகத் தன் சிகிச்சையை முடித்துக் கொண்டது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

ஆனால் அதனால் பாதகமில்லை. போவது என்று முடிவு செய்தாகி விட்டது. போவது உறுதிதான். ஆனால் இந்த டாக்டரின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டு போக வேண்டாம் என்று நினைத்தார். சமாதானமாகப் போவோம் என நினைத்தார்.

மென்மையாகத் தணிந்த குரலில் சுந்தரம் சொன்னார்: "டாக்டர் ராம்லி, என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் கோபம் கொண்டது போல் தெரிகிறது?" என்றார்.

"இல்லை. நான் கோபப்படவில்லை" என்றார் ராம்லி.

"அப்புறம் ஏன் இத்தனை விரைவாக என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு செயல் படுத்தினீர்கள்?" என்று கேட்டார் சுந்தரம்.

"மிஸ்டர் சுந்தரம். உங்களுக்கு நாங்கள் இந்த மருத்தும மனையில் செய்ய முடிந்தது வேறு ஒன்றும் இல்லை!" என்றார்.

அவ்வளவுக்கா இந்த நோய் முற்றிவிட்டது? இனி கருணை இல்லத்தில் இருந்து காலங் கழிக்க வேண்டிய கேஸ்தானா நான்? இத்தனை நேரம் மனதில் இருந்த வீராப்பு இப்போது முற்றாகச் சரிந்து விட்டது.

"அவ்வளவு மோசமாகமா ஆகிவிட்டது என் நோய்?" என்று ஈனசுரத்தில் கேட்டார்.

"அப்படி இல்லை! உங்களை இங்கு வைத்து நாங்கள் சிகிச்சையளிக்க வேண்டிய தேவை ஒன்றுமில்லை. உங்கள் நோய் குணமாகிவிட்டது"

ஒரு காந்த அலை காலிலிருந்து புறப்பட்டு உச்சி வரை ஓடி உடம்பில் குப்பென்று பரவியது. அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார் சுந்தரம். "டாக்டர் ராம்லி! என்ன சொல்கிறீர்கள்?"

"உங்களுக்கு இப்போதெல்லாம் தலை வலிக்கிறதா?"

"அவ்வளவாக இல்லை!"

"நேற்று உங்கள் பேரப்பிள்ளையின் மரணச் சடங்குகளுக்குப் போனீர்களே! அதற்குரிய பலம் இருந்ததா? மயக்கம் வந்ததா?"

"இல்லை"

"வயிற்றுக் குமட்டல், வாந்தி?"

"சில நாட்களாக இல்லை!"

"சாப்பாடு வயிற்றில் தங்குகிறதா?"

"ஓரளவு சாப்பிட முடிகிறது"

"தோலின் ரணம்?"

"குறைந்துதானிருக்கிறது!"

"கால் கைகளின் வலி?"

"குறைந்திருக்கிறது!"

"அன்றைக்கு சக்கர நாற்காலியை விட்டு எழுந்து படுக்கை வரை நடந்து போனீர்களாமே!"

"ஆமாம்!"

"அப்புறம் சிகிச்சையில் ஒன்றும் முன்னேற்றம் இல்லை என்று சொன்னீர்களே! இதெல்லாம் முன்னேற்றம் இல்லையா?"

"முன்னேற்றந்தான்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டு வெட்கித் தலை குனிந்தார் சுந்தரம். ஏன் நான் கவனிக்கவில்லை? என் நோய் என் மீது பிடியைத் தளர்த்தியிருந்தும் என் மனம் என் நோயின் மீதுள்ள பிடியைத் தளர்த்தவில்லையோ? என்னைச் சுற்றியுள்ள அவலங்களில் ஆழ்ந்து போய் எழ முடிந்தும், எழ மனமில்லாதவனாகக் கிடந்து விட்டேனா? வாழ்க்கை என்னை அணைக்க வந்தும் நான் மரணத்தையே தழுவிக் கொண்டு கிடந்து விட்டேனா?

டாக்டர் ராம்லி சிரித்தவாறு நின்றிருந்தார். சுந்தரம் தலை தூக்கிப் பார்த்தார். "உண்மையா டாக்டர் ராம்லி!"

மறுபடியும் இந்தக் கேள்வி அவருக்கே வெட்கமாக இருந்தது. இந்த மனம் ஒரு தடவையில் கெட்ட செய்தியையும் ஏற்றுக் கொள்வதில்லை, நல்ல செய்தியையும் ஏற்றுக் கொள்வதில்லை. மறுமுறை சொல், பலமுறை சொல் என்று வருத்தி வருத்திக் கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ள விரும்புகிறது.

"உங்கள் மூளையின் கட்டி பெரும்பாலும் கரைந்து விட்டது. இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து சாதாரண நிலைக்கு வந்திருக்கிறது. கல்லீரல், கிட்னி எல்லா இடத்திலும் புற்று நோய் அறிகுறிகள் மறைந்து விட்டன. ஹோர்மோன்தெராப்பி உங்கள் உடம்பில் நன்றாக வேலை செய்திருக்கிறது. ஆகவே ரேடியோதெராப்பியை முற்றாக ரத்துச் செய்து விட்டோம். ஆனால் இதனால் உங்கள் நோய் முற்றாகக் குணமாகிவிட்டது என அர்த்தமல்ல. நாங்கள் அதைத் தொடர்ந்து பரிசோதித்துக் கொண்டிருப்போம். ஆனால் இப்போதைக்கு உங்களுடைய உயிரை நீட்டித்து புது ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். நீங்கள் பயமில்லாமல் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பலாம். கெமோதெராப்பிக்கு மட்டும் வந்து போய்க் கொண்டிருங்கள். போவதற்கு முன் சில மருந்துகள் கொடுக்கிறேன்" என்றார் ராம்லி.

படுக்கையிலிருந்து எழுந்து நின்று அந்த டாக்டரைத் தழுவிக் கொண்டார் சுந்தரம். "உன்னைப் பற்றி என்னவெல்லாம் நினைத்தேன் ராம்லி! கடமை வீரனே! என் உயிர் காத்த என் அன்பு மாணவனே! எப்படியெல்லாம் மனதுக்குள் உன்னைத் தூற்றிவிட்டேன். மனிதர்களைப் பற்றிய என் மதிப்பீடு இவ்வளவு தவறாகவா போய்விடும்? நான் முட்டாள். நான் குருடன். நான்... நான்... மிகவும் கொடுத்து வைத்தவன்" என எண்ணிக் கொண்டார். அவற்றையெல்லாம் சொல்ல நா வரவில்லை. அவருடைய கண்களில் கண்ணீர் கோத்து வழிந்தது.

"என்னை மன்னித்து விடுங்கள். டாக்டர் ராம்லி! ஏதோ பழைய விஷயங்களை நினைந்து...."

"பரவாயில்லை. சின்ன விஷயம். நான் எப்போதோ மறந்து விட்டேன். இரண்டு மூன்று நாட்கள் கழித்து கெமோதெராப்பிக்கு அப்பாய்ன்ட்மென்ட் கொடுக்கிறேன். அப்போது உங்களுக்கு முழுமையான ரிப்போர்ட்டும் கொடுக்கிறேன். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். பை, பை!" என்று அடுத்த படுக்கைக்குச் சென்றார் டாக்டர் ராம்லி.

----

அந்திம காலம் - 19


அப்புறம்...?

பரமாவின் பதினாறாம் நாள் சடங்கை ஒரு பண்டாரத்தை வைத்துச் செய்தார்கள். சுந்தரம் கூட இரவு கொஞ்ச நேரம் தூங்கி விடியற் காலையில் எழுந்து அவர்களோடு கடற்கரை வரை சென்று வந்தார்.

சடங்குகள் முடிந்ததும் ராதாவும் சிவமணியும் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு கோலாலம்பூர் திரும்பினார்கள். ராதா சுந்தரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நீண்ட நேரம் அழுதாள். இழந்த மகனை நினைத்து அழுகிறாளா, திடீரென்று கைவிட நேர்ந்த இங்கிலாந்துக் காதலனை நினைத்து அழுகிறாளா, அல்லது சிவமணியோடு சேர்ந்து அனுபவிக்கக் காத்திருக்கும் எதிர்காலத் துன்பங்களை நினைத்து அழுகிறாளா என்று அவருக்கு விளங்கவில்லை. அவள் முதுகை ஆதரவாகத் தடவிக் கொடுத்து விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

சுந்தரம் மூன்றாம் மாதப் பரிசோதனைக்கும் ஆறாம் மாதப் பரிசோதனைக்கும் மௌன்ட் மிரியம் சென்று வந்தார். பினாங்கு பொது மருத்துவ மனையிலும் சோதனைகள் நடந்தன. புற்று நோய் திரும்பவில்லை. ஆனால் முற்றாக இல்லை என்று நிச்சயப் படுத்திக் கொள்வதற்கு ஓராண்டு செல்ல வேண்டும் என எச்சரித்து வைத்தார்கள். "கடவுள் உங்களுக்கு வைத்த சோதனையில் நீங்கள் தேர்ந்துவிட்டதாகத்தான் தெரிகிறது" என மதர் மேகி தன் சிரிப்பு மாறாத முகத்துடன் அவரிடம் கூறியிருந்தார்.

அன்னம் அக்காளும் அத்தையும் தைப்பிங்கிற்குத் திரும்பியிருந்தார்கள். அன்னம் டியூஷன் வகுப்புக்களை மீண்டும் தொடங்கியிருந்தாள். ஆனால் அவள் வாழ்க்கை முன்பு போல் அமைதியாக இல்லை. அத்தை அடிக்கடி நோய்வாய்ப் பட்டுக் கொண்டிருந்தாள். அத்தைக்கும் 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அத்தையை கிளினிக், தைப்பிங் பொது மருத்துவ மனை என்று கொண்டு ஓராண்டுகள் திரிந்தாள். கடைசி முறையாக அத்தை மூச்சிறைக்க வீட்டில் கிடந்த போது உதவிக்கு ஆள் இல்லாமல் ஆம்புலன்சைக் கூப்பிட்டு ஏற்றிக் கொண்டு செல்லும் வழியிலேயே அத்தையின் மூச்சு பிரிந்து விட்டது. சாகும் போதும் அவள் "ஐயோ தண்ணி! தண்ணி!" என்று முனங்கிக் கொண்டுதான் கிடந்தாள் என அன்னம் கூறினாள்.

அத்தையின் ஈமச் சடங்குகளை தைப்பிங்கிலேயே அடக்கமாக நடத்தினாள் அன்னம். சுந்தரமும் ஜானகியும் சென்று உதவிகள் செய்து வந்தார்கள். "தனியாக இருக்க வேண்டாம் பினாங்கில் வந்து எங்களோடு இரு" என்று எவ்வளவோ வற்புறுத்தியும் அன்னம் "பார்க்கலாம், பார்க்கலாம்" எனத் தட்டிக் கழித்துவிட்டாள்.

தைப்பிங்கில் ஈமச் சடங்கை முடித்துக் கொண்டு அவர்கள் பினாங்கு திரும்பிய நாளில் ஜிம்மி சோர்ந்து படுத்திருந்ததைக் கண்டார். அன்றும் அடுத்த நாளும் அது சாப்பாட்டைத் தொடவில்லை. காலையில் சுந்தரம் எழுந்து வௌியே வரும் வேளைகளில் படுத்த இடத்தை விட்டு நகராமல் முகத்தைத் தரையில் பதித்து வாலை மட்டும் தரையில் தட்டி அவரை விழித்து விழித்துப் பார்த்தது.

ராமாவை வரச் சொல்லி இருவருமாக ஜிம்மியைத் தூக்கிக் காரில் போட்டு விலங்கு வைத்தியரிடம் கொண்டு சென்றார்கள். அவர் பரிசோதித்து விட்டு வயிற்றில் கடுமையான புண் இருக்கிறதென்றார். ஏதோ நச்சுள்ள பொருள் சாப்பிட்டிருக்கிறதென்றார். இரண்டு நாள் வைத்துப் பார்க்கிறேன் என்றார். ஆனால் மறுநாள் மாலையில் போன் செய்து ஜிம்மி உயிரை விட்டு விட்டதென்றார். அதன் உடலைப் போய் பார்த்து விட்டு, தடவிக் கொடுத்துவிட்டு அந்த விலங்கு மருத்துவர் மூலமாகவே உடலை எரிக்க ஏற்பாடு செய்து விட்டு வந்தார்கள்.

சுந்தரம் பகலெல்லாம் கவலையாக, ஆனால் தைரியமாக இருந்துவிட்டு அன்று இரவில் அழுதார். ஜிம்மி இல்லாத காலைப் பொழுதுகள் வெறிச்சோடிப் போய்விட்டன.

ஜானகி இரவில் தூங்கவும் மூச்சுவிடவும் சிரமப் பட்டாள். அவளுக்கு ஆஸ்த்துமா கண்டிருக்கிறது என டாக்டர்கள் கூறினார்கள். முதிய வயதில் ஆஸ்த்மா வந்தால் கடுமையாக இருக்கும் என்றும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். அவளுக்குத் திரவ மருந்துகளும் வாயில் வைத்து இழுத்து நுரையீரலுக்குள் நேராக மருந்து செலுத்தும் பம்ப்பும் கொடுத்தார்கள்.

ஜானகியின் சுகமின்மையைக் கேள்விப்பட்டு அவளைப் பார்க்க ராதா தனியாகத்தான் வந்திருந்தாள். சிவமணி வேலையாக இருப்பதாகக் கூறினாள். ராதா கொஞ்சம் தடித்திருப்பது போல் தோன்றியது. ஜானகியின் சந்தேகம் சரியாக இருந்தது. "ராதா மறுபடியும் கர்ப்பமா இருக்குங்க!" என்று சுந்தரத்திடம் மகிழ்ச்சியுடன் அன்று இரவு கூறினாள் ஜானகி. ஆனால் ராதாவின் முகத்தில் அது பற்றிப் பெரிய மகிழ்ச்சி இருந்ததாகத் தெரியவில்லை.

பிறக்கும் குழந்தை ஆணாக இல்லாமல் பெண்ணாக இருந்தால் நல்லது என நினைத்தார். தனது புற்றுநோய் ஜீன் ஆண்களைத்தான் பாதிக்கிறது, ஆண்கள் வழியாகத்தான் பரவுகிறது என்ற நினைப்பு இருந்து கொண்டே இருந்தது. வசந்தனைப் பற்றிய கவலையும் தோன்றியிருந்தது.

சுந்தரத்தின் நோய் குணமானது என்று உறுதிப் பட்டவுடன் இனியும் மகனுக்குத் தெரிவிக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக அவனுக்கு நடந்தவற்றை விரிவாக எழுதினார் சுந்தரம். அவன் டாக்டரிடம் இதைச் சொல்லி தனது உடலையும் அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறியிருந்தார்.

கடிதம் கிடைத்த அன்று அவன் உடனே போன் செய்து பேசினான். இவ்வளவு நடந்திருந்தும் தனக்குச் சொல்லவில்லையே எனக் கோபித்துக் கொண்டான். அடுத்த ஆண்டு இறுதியில் படிப்பை முடித்துக் கொண்டு திரும்பிவிடுவேன் எனச் சொன்னான்.

தைப்பிங்கில் இருந்து தனியாக ஆக்கிச் சாப்பிட்டு டியூஷன் நடத்தி அன்னத்துக்கு அலுத்து விட்டது. ஜானகியின் உடல் நலக் குறைவைக் காரணம் காட்டி சுந்தரம் மீண்டும் ஒருமுறை பினாங்குக்குத் திரும்பும்படி வற்புறுத்தியவுடன் அவள் அதை ஏற்றுக் கொண்டாள். தைப்பிங் தாமான் இளையதம்பி வீட்டையும் வாடகைக்குக் கொடுத்துவிட்டு அவள் ஒரு நல்ல நாளில் பினாங்கில் சுந்தரத்துடன் நிரந்தரமாகக் குடியேறிவிட்டாள்.

ராதாவின் பிரசவம் கோலாலம்பூரிலேயே அவள் மாமியாரின் மேற்பார்வையில் நடந்தது. அவளைப் பினாங்குக்கு அனுப்புவதில் அவர்கள் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை.

தனது அழகிய பேத்தியை எடுத்து உச்சி முகர்ந்து திருப்பிக் கொடுத்து வந்தார்கள். பேரக் குழந்தை பேத்தியாக இருந்ததில் சுந்தரத்துக்குக் கொஞ்சம் நிம்மதி இருந்தது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் வசந்தன் திரும்பி வந்து பெற்றோர்களுடன் கொஞ்ச நாள் இருந்து அப்புறம் கோலாலம்பூரில் வேலை தேடிப் போய்விட்டான்.

அவனுக்குப் பெண் பார்க்கப் பல இடங்களுக்கு அலைந்ததில் சோர்வுற்ற ஜானகி படுக்கையில் விழுந்தவள் ஒருநாள் படுக்கையை விட்டு எழவில்லை. பக்கத்திலேயே படுத்திருந்த சுந்தரத்துக்கும் தெரியாமல் அவள் உயிர் பிரிந்திருந்தது.

அந்த இழப்பை எப்படி ஈடு செய்வது என சுந்தரத்துக்குத் தெரியவில்லை. யாரிடம் என்ன சொல்லி எப்படி நடந்து கொள்வது என்றெல்லாம் அவருக்குப் புரியவில்லை. யாரிடமும் பேசாமல் கண்ணீரும் விடாமல் நடக்கின்ற எந்த சடங்கிலும் அக்கறை காட்டாமல் அவர் இருந்தார். ஆனால் அன்றிலிருந்து அவருடைய பேச்சும் நடமாட்டங்களும் குறைந்துவிட்டன.

நண்பர் ராமா தன் பிள்ளைகளுடன் போயிருக்க கோலாலம்பூர் போய்விட்டார். எப்பவாவது ஒரு முறை சுந்தரத்தைப் பார்க்க வந்து ஓரிரு நாள் அவர்கள் வீட்டில் தங்கிப் போவார்.

அன்னமும் சுந்தரமும் அந்த வீட்டில் இன்னமும் இருக்கிறார்கள். அவருடைய வாழ்க்கைப் பெண்டுலம் மேலும் கீழுமாக ஆடிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அது மேலே போகும் போது உற்சாகப் படுவதையும் கீழே இறங்கும் போது கவலைப் படுவதையும் அவர் குறைத்துக் கொண்டார்.

சுந்தரத்துக்குப் புற்று நோய் அறிகுறிகள் ஏதும் பின்னர் வரவே இல்லை.


(முற்றும்)



This page was first put up on May 5, 2003
Please send your comments and corrections to the Webmaster(s) of this site