pm logo

tirunAvukkaracar tEvAram -
tirumuRai 5 part 1, verses (1 - 509)
(in tamil script, unicode format)

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள், பாடல்கள் (1 - 509)
ஐந்தாம் திருமுறை முதற் பகுதி




Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany.
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding.
Proof-reading and addition of brief comments: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
PDF version: Mr. P.I.Arasu, Toronto, ON, Canada.

This webpage presents the Etxt in Tamil script in Unicode encoding.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள் பாடல்கள் (1- 509)
ஐந்தாம் திருமுறை முதற் பகுதி

உள்ளுறை
5.001 கோயில் (1-11)
5.002 கோயில் (12-21)
5.003 திருவரத்துறை (22-31)
5.004 திருவண்ணாமலை (32-41)
5.005 திருவண்ணாமலை (42-51)
5.006 திருவாரூர் (52-61)
5.007 திருவாரூர் (62-73)
5.008 திருஅன்னியூர் (74-83)
5.009 திருமறைக்காடு (84-93)
5.010 திருமறைக்காடு (94-104)

5.011 திருமீயச்சூர் (105-114)
5.012 திருவீழிமிழலை (115-125)
5.013 திருவீழிமிழலை (126-135)
5.014 திருவிடைமருதூர் (136-146)
5.015 திருவிடைமருதூர் (147-152)
5.016 திருப்பேரெயில் (153-163)
5.017 திருவெண்ணியூர் (164-174)
5.018 திருக்கடம்பந்துறை (175-184)
5.019 திருக்கடம்பூர் . (185-195)
5.020 திருக்கடம்பூர் . (196-205)

5.021 திருவின்னம்பர் (206-215)
5.022 திருக்குடமூக்கு (216-225)
5.023 திருநின்றியூர் (226-235)
5.024 திருவொற்றியூர் (236-245)
5.025 திருப்பாசூர் (246-256)
5.026 திருவன்னியூர் (257-265)
5.027 திருவையாறு (266-275)
5.028 திருவையாறு (276-285)
5.029 திருவாவடுதுறை (286-295)
5.030 திருப்பராய்த்துறை (296-306)

5.031 திருவானைக்கா (307-316)
5.032 திருப்பூந்துருத்தி (317-326)
5.033 திருச்சோற்றுத்துறை (327-337)
5.034 திருநெய்த்தானம் (338-347)
5.035 திருப்பழனம் (348-357)
5.036 திருச்செம்பொன்பள்ளி (358-367)
5.037 திருக்கடவூர்வீரட்டம் (368-378)
5.038 திருக்கடவூர்மயானம் (379-386)
5.039 திருமயிலாடுதுறை (387-397)
5.040 திருக்கழிப்பாலை (398-406)

5.041 திருப்பைஞ்ஞீலி (307-316)
5.042 திருவேட்களம் (317-326)
5.043 திருநல்லம் (327-337)
5.044 திருவாமாத்தூர் (338-347)
5.045 திருத்தோணிபுரம் (348-357)
5.046 திருப்புகலூர் (358-367)
5.047 திருவேகம்பம் (368-378)
5.048 திருவேகம்பம் (379-386)
5.049 திருவெண்காடு (387-397
5.050 திருவாய்மூர் (398-406)
----------

5.1 கோயில் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

1 அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே.       5.1.1

2 . அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.       5.1.2

3. அரிச்சுற் றவினை யால்அடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.       5.1.3

4. அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோர் அடிமைபூண் டேனுக்கே.       5.1.4

5. ஊனி லாவி உயிர்க்கும் பொழுதெலாம்
நானி லாவி யிருப்பனென் னாதனைத்
தேனி லாவிய சிற்றம் பலவனார்
வானி லாவி யிருக்கவும் வைப்பரே.       5.1.5

6. சிட்டர் வானவர் சென்று வரங்கொளுஞ்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்
சிட்டர் பாலணு கான்செறு காலனே.       5.1.6

7. ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர்
திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார்
விருத்த னார்இளை யார்விட முண்டவெம்
அருத்த னார்அடி யாரை அறிவரே.       5.1.7

8. விண்ணி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு
எண்ணி றைந்த இருவர்க் கறிவொணாக்
கண்ணி றைந்த கடிபொழில் அம்பலத்
துண்ணி றைந்துநின் றாடும் ஒருவனே.       5.1.8

9. வில்லைவட் டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லைவட் டம்மதின் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுதல் உண்மையே.       5.1.9

10. நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் னெஞ்சுள் இருக்கவே.       5.1.10

11. மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம் பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற
மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே.       5.1.11

திருச்சிற்றம்பலம்
--------------


5.2 கோயில் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

12 பனைக்கை மும்மத வேழ முரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.       5.2.1

13. தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை
மூர்த்தி யைமுத லாய ஒருவனைப்
பார்த்த னுக்கருள் செய்த சிற்றம்பலக்
கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ.       5.2.2

14. கட்டும் பாம்புங் கபாலங் கைமான்மறி
இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ.       5.2.3

15. மாணி பால்கறந் தாட்டி வழிபட
நீணு லகெலாம் ஆளக் கொடுத்தவன்
ஆணி யைச்செம்பொன் அம்பலத் துள்நின்ற
தாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ.       5.2.4

16. பித்த னைப்பெருங் காடரங் காவுடை
முத்த னைமுளை வெண்மதி சூடியைச்
சித்த னைச்செம்பொன் அம்பலத் துள்நின்ற
அத்த னையடி யேன்மறந் துய்வனோ.       5.2.6

17. நீதி யைநிறை வைமறை நான்குடன்
ஓதி யையொரு வர்க்கு மறிவொணாச்
சோதி யைச்சுடர்ச் செம்பொனின் அம்பலத்
தாதி யையடி யேன்மறந் துய்வனோ.       5.2.6

18. மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணினன்
பைகொள் பாம்பரை யார்த்த பரமனார்
செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள்
ஐய னையடி யேன்மறந் துய்வனோ.       5.2.7

19. முழுதும் வானுல கத்துள தேவர்கள்
தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால்
எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனை
இழுதை யேன்மறந் தெங்ஙனம் உய்வனோ.       5.2.8

20. காரு லாமலர்க் கொன்றையந் தாரனை
வாரு லாமுலை மங்கை மணாளனைத்
தேரு லாவிய தில்லையுட் கூத்தனை
ஆர்கி லாவமு தைமறந் துய்வனோ.       5.2.9

21. ஓங்கு மால்வரை ஏந்தலுற் றான்சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்
தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப்
பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ.       5.2.10

திருச்சிற்றம்பலம்
--------------


5.3 திருவரத்துறை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

22 . கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு உண்ட
உடலு ளானையொப் பாரியி லாதவெம்
அடலு ளானை அரத்துறை மேவிய
சுடரு ளானைக்கண் டீர்நாந் தொழுவதே.       5.3.1

23 . கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியை
விரும்பொப் பானைவிண் ணோரு மறிகிலா
அரும்பொப் பானை அரத்துறை மேவிய
சுரும்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.       5.3.2

24. ஏறொப் பானையெல் லாவுயிர்க் கும்மிறை
வேறொப் பானைவிண் ணோரு மறிகிலா
ஆறொப் பானை அரத்துறை மேவிய
ஊறொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.       5.3.3

25. பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலா
இரப்பொப் பானை இளமதி சூடிய
அரப்பொப் பானை அரத்துறை மேவிய
சுரப்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.       5.3.4

26. நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர்
மெய்யொப் பானைவிண் ணோரு மறிகிலார்
ஐயொப் பானை அரத்துறை மேவிய
கையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.       5.3.5

27. நிதியொப் பானை நிதியிற் கிழவனை
விதியொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அதியொப் பானை அரத்துறை மேவிய
கதியொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.       5.3.6

28. புனலொப் பானைப் பொருந்தலர் தம்மையே
மினலொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அனலொப் பானை அரத்துறை மேவிய
கனலொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.       5.3.7

29. பொன்னொப் பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர்
மின்னொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அன்னொப் பானை அரத்துறை மேவிய
தன்னொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.       5.3.8

30. காழி யானைக் கனவிடை யூருமெய்
வாழி யானைவல் லோருமென் றின்னவர்
ஆழி யான்பிர மற்கும் அரத்துறை
ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே.       5.3.9

31. கலையொப் பானைக்கற் றார்க்கோ ரமுதினை
மலையொப் பானை மணிமுடி யூன்றிய
அலையொப் பானை அரத்துறை மேவிய
நிலையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.       5.3.10

திருச்சிற்றம்பலம்
----------------


5.4 திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

32. வட்ட னைமதி சூடியை வானவர்
சிட்ட னைத்திரு வண்ணா மலையனை
இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும்
அட்ட னையடி யேன்மறந் துய்வனோ.       5.4.1

33. வான னைமதி சூடிய மைந்தனைத்
தேன னைத்திரு வண்ணா மலையனை
ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
ஆன னையடி யேன்மறந் துய்வனோ.       5.4.2

34. மத்த னைமத யானை யுரித்தவெஞ்
சித்த னைத்திரு வண்ணா மலையனை
முத்த னைமுனிந் தார்புர மூன்றெய்த
அத்த னையடி யேன்மறந் துய்வனோ.       5.4.3

35. காற்ற னைக்கலக் கும்வினை போயறத்
தேற்ற னைத்திரு வண்ணா மலையனைக்
கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்த
ஆற்ற னையடி யேன்மறந் துய்வனோ.       5.4.4

36. மின்ன னைவினை தீர்த்தெனை யாட்கொண்ட
தென்ன னைத்திரு வண்ணா மலையனை
என்ன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
அன்ன னையடி யேன்மறந் துய்வனோ.       5.4.5

37 மன்ற னைமதி யாதவன் வேள்விமேற்
சென்ற னைத்திரு வண்ணா மலையனை
வென்ற னைவெகுண் டார்புர மூன்றையுங்
கொன்ற னைக்கொடி யேன்மறந் துய்வனோ.       5.4.6

38. வீர னைவிட முண்டனை விண்ணவர்
தீர னைத்திரு வண்ணா மலையனை
ஊர னையுண ரார்புர மூன்றெய்த
ஆர னையடி யேன்மறந் துய்வனோ.       5.4.7

39. கருவி னைக்கடல் வாய்விட முண்டவெந்
திருவி னைத்திரு வண்ணா மலையனை
உருவி னையுண ரார்புர மூன்றெய்த
அருவி னையடி யேன்மறந் துய்வனோ.       5.4.8

40. அருத்த னையர வைந்தலை நாகத்தைத்
திருத்த னைத்திரு வண்ணா மலையனைக்
கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்த
அருத்த னையடி யேன்மறந் துய்வனோ.       5.4.9

41. அரக்க னையல றவ்விர லூன்றிய
திருத்த னைத்திரு வண்ணா மலையனை
இரக்க மாயென் உடலுறு நோய்களைத்
துரக்க னைத்தொண்ட னேன்மறந் துய்வனோ.       5.4.10

திருச்சிற்றம்பலம்
----------------------


5.5 திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

42. பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்
இட்ட மாக இரந்துண் டுழிதரும்
அட்ட மூர்த்திஅண் ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே.       5.5.1

43. பெற்ற மேறுவர் பெய்பலிக் கென்றவர்
சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும்
அற்றந் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
நற்ற வத்தொடு ஞானத் திருப்பரே.       5.5.2

44. பல்லி லோடுகை யேந்திப் பலஇலம்
ஒல்லை சென்றுணங் கல்கவர் வாரவர்
அல்லல் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
நல்ல வாயின நம்மை அடையுமே.       5.5.3

45. பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர்
ஓடிப் போயினர் செய்வதொன் றென்கொலோ
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போகுநம் மேலை வினைகளே.       5.5.4

46. தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே.       5.5.5

47. கட்டி யொக்குங் கரும்பி னிடைத்துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
அட்ட மூர்த்திஅண் ணாமலை மேவிய
நட்ட மாடியை நண்ணநன் காகுமே.       5.5.6

48. கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்
பாணி நட்டங்க ளாடும் பரமனார்
ஆணிப் பொன்னினண் ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே.       5.5.7

49. கண்டந் தான்கறுத் தான்காலன் ஆருயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
அண்டத் தோங்கும்அண் ணாமலை கைதொழ
விண்டு போகுநம் மேலை வினைகளே.       5.5.8

50. முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின்
அந்தி வாயொளி யான்றன்அண் ணாமலை
சிந்தி யாஎழு வார்வினை தீர்த்திடுங்
கந்த மாமலர் சூடுங் கருத்தனே.       5.5.9

51. மறையி னானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்
உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப்
பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.       5.5.10

திருச்சிற்றம்பலம்
--------------------


5.6 திருவாரூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

52. எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்
முப்போ தும்பிர மன்றொழ நின்றவன்
செப்போ தும்பொனின் மேனிச் சிவனவன்
அப்போ தைக்கஞ்சல் என்னும்ஆ ரூரனே.       5.6.1

53. சடையின் மேலுமோர் தையலை வைத்தவர்
அடைகி லாவர வைஅரை யார்த்தவர்
படையின் நேர்தடங் கண்ணுமை பாகமா
அடைவர் போல்இடு காடர்ஆ ரூரரே.       5.6.2

54. விண்ட வெண்டலை யேகல னாகவே
கொண்ட கம்பலி தேருங் குழகனார்
துண்ட வெண்பிறை வைத்த இறையவர்
அண்ட வாணர்க் கருளும்ஆ ரூரரே.       5.6.3

55. விடையும் ஏறுவர் வெண்டலை யிற்பலி
கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல்
உடையுஞ் சீரை உறைவது காட்டிடை
அடைவர் போல்அரங் காகஆ ரூரரே.       5.6.4

56. துளைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்
வளைக்கை யாளையோர் பாக மகிழ்வெய்தித்
திளைக்குந் திங்கட் சடையிற் திசைமுழு
தளக்கஞ் சிந்தையர் போலும்ஆ ரூரரே.       5.6.5

57. பண்ணின் இன்மொழி யாளையோர் பாகமா
விண்ணி னார்விளங் கும்மதி சூடியே
சுண்ண நீறுமெய்ப் பூசிச் சுடலையின்
அண்ணி யாடுவர் போலும்ஆ ரூரரே.       5.6.6

58. மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறும் இறைவனார்
கட்டு வாங்கங் கனல்மழு மான்றனோ
டட்ட மாம்புய மாகும்ஆ ரூரரே.       5.6.7

59. தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நான்மறை யோதும்ஆ ரூரரே.       5.6.8

60. உண்டு நஞ்சுகண் டத்துள் அடக்கியங்
கிண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்
கொண்ட கோவண ஆடையன் கூரெரி
அண்ட வாணர் அடையும்ஆ ரூரரே.       5.6.9

61. மாலும் நான்முக னும்மறி கிற்கிலார்
கால னாய அவனைக் கடந்திட்டுச்
சூல மான்மழு வேந்திய கையினார்
ஆலம் உண்டழ காயஆ ரூரரே.       5.6.10

திருச்சிற்றம்பலம்
----------------


5.7 திருவாரூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

62. கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன பூதங்கள்
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்
அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே.       5.7.1

63. எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்த மில்புகழ் ஆரூர் அரனெறி
சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே.       5.7.2

64. வண்டு லாமலர் கொண்டு வளர்சடைக்
கிண்டை மாலை புனைந்தும் இராப்பகல்
தொண்ட ராகித் தொடர்ந்து விடாதவர்க்
கண்டம் ஆளவும் வைப்பர்ஆ ரூரரே.       5.7.3

65. துன்பெ லாமற நீங்கிச் சுபத்தராய்
என்பெ லாம்நெக்கி ராப்பக லேத்திநின்
றின்ப ராய்நினைந் தென்றும் இடையறா
அன்ப ராமவர்க் கன்பர்ஆ ரூரரே.       5.7.4

66. முருட்டு மெத்தையில் முன்கிடத் தாமுனம்
அரட்டர் ஐவரை ஆசறுத் திட்டுநீர்
முரட்ட டித்தவத் தக்கன்றன் வேள்வியை
அரட்ட டக்கிதன் ஆரூர் அடைமினே.       5.7.5

67. எம்மை யாரிலை யானுமு ளேனலேன்
எம்மை யாரும் இதுசெய வல்லரே
அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற்
கம்மை யாரைத்தந் தார்ஆரூர் ஐயரே.       5.7.6

68. தண்ட ஆளியைத் தக்கன்றன் வேள்வியைச்
செண்ட தாடிய தேவர கண்டனைக்
கண்டு கண்டிவள் காதலித் தன்பதாய்க்
கொண்டி யாயின வாறென்றன் கோதையே.       5.7.7

69. இவண மைப்பல பேசத் தொடங்கினாள்
அவண மன்றெனில் ஆரூர் அரனெனும்
பவணி வீதி விடங்கனைக் கண்டிவள்
தவணி யாயின வாறென்றன் தையலே.       5.7.8

70. நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார்
காரொத் தமிடற் றர்கனல் வாயரா
ஆரத் தர்உறை யும்மணி ஆரூரைத்
தூரத் தேதொழு வார்வினை தூளியே.       5.7.9

71. உள்ள மேயொன் றுறுதி யுரைப்பன்நான்
வெள்ளந் தாங்கு விரிசடை வேதியன்
அள்ளல் நீர்வயல் ஆரூர் அமர்ந்தவெம்
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே.       5.7.10

72. விண்ட மாமலர் மேலுறை வானொடுங்
கொண்டல் வண்ணனுங் கூடி அறிகிலா
அண்ட வாணன்றன் ஆரூர் அடிதொழப்
பண்டை வல்வினை நில்லா பறையுமே.       5.7.11

73. மையு லாவிய கண்டத்தன் அண்டத்தன்
கையு லாவிய சூலத்தன் கண்ணுதல்
ஐயன் ஆரூர் அடிதொழு வார்க்கெலாம்
உய்ய லாமல்லல் ஒன்றிலை காண்மினே.       5.7.12

திருச்சிற்றம்பலம்
--------------------


5.8 திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

74. பாற லைத்த படுவெண் டலையினன்
நீற லைத்தசெம் மேனியன் நேரிழை
கூற லைத்தமெய் கோளர வாட்டிய
ஆற லைத்த சடைஅன்னி யூரரே.       5.8.1

75 பண்டொத் தமொழி யாளையோர் பாகமாய்
இண்டைச் செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர்
கண்டத் தன்கரி யின்னுரி போர்த்தவன்
அண்டத் தப்புறத் தான்அன்னி யூரரே.       5.8.2

76. பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
துரவை யாகத் துடைப்பவர் தம்மிடங்
குரவம் நாறுங் குழலுமை கூறராய்
அரவ மாட்டுவர் போல்அன்னி யூரரே.       5.8.3

77. வேத கீதர்விண் ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக்கணி
நாதர் நீதியி னாலடி யார்தமக்
காதி யாகிநின் றார்அன்னி யூரரே.       5.8.4

78. எம்பி ரான்இமை யோர்கள் தமக்கெலாம்
இன்ப ராகி இருந்தவெம் மீசனார்
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்
கன்ப ராகிநின் றார்அன்னி யூரரே.       5.8.5

79. வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர்
கந்த மாமலர் சூடுங் கருத்தினர்
சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர்
அந்த ணாளர்கண் டீர்அன்னி யூரரே.       5.8.6

80. ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை யார்குழ லாளையோர் பாகமா
ஆனை யீருரி யார்அன்னி யூரரே.       5.8.7

81. காலை போய்ப்பலி தேர்வர் கண்ணார்நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ்புறங் காடரங் காகவே
ஆலின் கீழறத் தார்அன்னி யூரரே.       5.8.8

82. எரிகொள் மேனியர் என்பணிந் தின்பராய்த்
திரியு மூவெயில் தீயெழச் செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்
கரிய ராகிநின் றார்அன்னி யூரரே.       5.8.9

83. வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும்
அஞ்சு மஞ்சுமோ ராறுநான் கும்மிறப்
பஞ்சின் மெல்விர லாலடர்த் தாயிழை
அஞ்ச லஞ்சலென் றார்அன்னி யூரரே.       5.8.10

திருச்சிற்றம்பலம்
--------------


5.9 திருமறைக்காடு - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

84. ஓத மால்கடல் பாவி உலகெலாம்
மாத ரார்வலங் கொண்மறைக் காடரைக்
காதல் செய்து கருதப் படுமவர்
பாத மேத்தப் பறையுநம் பாவமே.       5.9.1

85. பூக்குந் தாழை புறணி அருகெலாம்
ஆக்கந் தானுடை மாமறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி யீர்அடி யார்தமை
நோக்கிக் காண்பது நும்பணி செய்யிலே.       5.9.2

86. புன்னை ஞாழல் புறணி அருகெலாம்
மன்னி னார்வலங் கொண்மறைக் காடரோ
அன்ன மென்னடை யாளையோர் பாகமாச்
சின்ன வேடம் உகப்பது செல்வமே.       5.9.3

87. அட்ட மாமலர் சூடி அடம்பொடு
வட்டப் புன்சடை மாமறைக் காடரோ
நட்ட மாடியும் நான்மறை பாடியும்
இட்ட மாக இருக்கும் இடமிதே.       5.9.4

88. நெய்த லாம்பல் நிறைவயல் சூழ்தரும்
மெய்யி னார்வலங் கொண்மறைக் காடரோ
தையல் பாகங்கொண் டீர்கவர் புன்சடைப்
பைதல் வெண்பிறை பாம்புடன் வைப்பதே.       5.9.5

89. துஞ்சும் போதுந் துயிலின்றி ஏத்துவார்
வஞ்சின் றிவலங் கொண்மறைக் காடரோ
பஞ்சின் மெல்லடிப் பாவை பலிகொணர்ந்
தஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே       5.9.6

90. விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.       5.9.7

91. திருவி னார்செல்வ மல்கு விழாவணி
மருவி னார்வலங் கொண்மறைக் காடரோ
உருவி னாளுமை மங்கையோர் பாகமாய்
மருவி னாய்கங்கை யைச்சென்னி தன்னிலே.       5.9.8

92. சங்கு வந்தலைக் குந்தடங் கானல்வாய்
வங்க மார்வலங் கொண்மறைக் காடரோ
கங்கை செஞ்சடை வைப்பது மன்றியே
அங்கை யில்லனல் ஏந்தல் அழகிதே.       5.9.9

93. குறைக்காட் டான்விட்ட தேர்குத்த மாமலை
இறைக்காட் டியெடுத் தான்றலை ஈரைந்தும்
மறைக்காட் டானிறை ஊன்றலும் வாய்விட்டான்
இறைக்காட் டாயெம் பிரானுனை ஏத்தவே.       5.9.10

திருச்சிற்றம்பலம்
------------


5.10 திருமறைக்காடு - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

94. பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.       5.10.1

95. ஈண்டு செஞ்சடை யாகத்துள் ஈசரோ
மூண்ட கார்முகி லின்முறிக் கண்டரோ
ஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும்
நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே.       5.10.2

96. அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ
துட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
பட்டங் கட்டிய சென்னிப் பரமரோ
சட்ட விக்கத வந்திறப் பிம்மினே.       5.10.3

97. அரிய நான்மறை யோதிய நாவரோ
பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ
பெரிய வான்கத வம்பிரி விக்கவே.       5.10.4

98. மலையில் நீடிருக் கும்மறைக் காடரோ
கலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோ
விலையில் மாமணி வண்ண வுருவரோ
தொலைவி லாக்கத வந்துணை நீக்குமே.       5.10.5

99. பூக்குந் தாழை புறணி அருகெலாம்
ஆக்குந் தண்பொழில் சூழ்மறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி யீர்அடி கேள்உமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே.       5.10.6

100. வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ
அந்த மில்லி அணிமறைக் காடரோ
எந்தை நீயடி யார்வந் திறைஞ்சிட
இந்த மாக்கத வம்பிணி நீக்குமே.       5.10.7

101. ஆறு சூடும் அணிமறைக் காடரோ
கூறு மாதுமைக் கீந்த குழகரோ
ஏற தேறிய எம்பெரு மானிந்த
மாறி லாக்கத வம்வலி நீக்குமே.       5.10.8

102. சுண்ண வெண்பொடிப் பூசுஞ் சுவண்டரோ
பண்ணி யேறுகந் தேறும் பரமரோ
அண்ண லாதி அணிமறைக் காடரோ
திண்ண மாக்கத வந்திறப் பிம்மினே.       5.10.9

103. விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.       5.10.10

104. அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்
இரக்க மொன்றிலீர் எம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
சரக்க விக்கத வந்திறப் பிம்மினே.       5.10.11

திருச்சிற்றம்பலம்
---------------


5.11 திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

105. தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்
கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே.       5.11.1

106. வந்த னையடைக் கும்மடித் தொண்டர்கள்
பந்த னைசெய்து பாவிக்க நின்றவன்
சிந்த னைதிருத் துந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே.       5.11.2

107. பஞ்ச மந்திர மோதும் பரமனார்
அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார்
நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே.       5.11.3

108. நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம்
வேறு வேறு விரித்த சடையிடை
ஆறு கொண்டுகந் தான்றிரு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.       5.11.4

109. வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ணக் கனல்விரித் தாடுவர்
செவ்வ வண்ணந் திகழ்திரு மீயச்சூர்
எவ்வ வண்ணம் பிரானிளங் கோயிலே.       5.11.5

110 . பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும்
பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்று
மின்னு மேகலை யாளொடு மீயச்சூர்
இன்ன நாள்அக லாரிளங் கோயிலே.       5.11.6

111. படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன்
சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் ணீற்றினன்
விடைகொ ளூர்தியி னான்றிரு மீயச்சூர்
இடைகொண் டேத்தநின் றாரிளங் கோயிலே.       5.11.7

112. ஆறு கொண்ட சடையினர் தாமுமோர்
வேறு கொண்டதோர் வேடத்த ராகிலுங்
கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.       5.11.8

113. வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர்
பூதத் தானென்பர் புண்ணியன் றன்னையே
கீதத் தான்கிள ருந்திரு மீயச்சூர்
ஏதந் தீர்க்கநின் றாரிளங் கோயிலே.       5.11.9

114 . கடுக்கண் டன்கயி லாய மலைதனை
எடுக்க லுற்ற இராவணன் ஈடற
விடுக்க ணின்றி வெகுண்டவன் மீயச்சூர்
இடுக்கண் தீர்க்கநின் றாரிளங் கோயிலே.       5.11.10

திருச்சிற்றம்பலம்
--------------


5.12 திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

115 . கரைந்து கைதொழு வாரையுங் காதலன்
வரைந்து வைதெழு வாரையும் வாடலன்
நிரந்த பாரிடத் தோடவர் நித்தலும்
விரைந்து போவது வீழி மிழலைக்கே.       5.12.1

116. ஏற்று வெல்கொடி ஈசன்ற னாதிரை
நாற்றஞ் சூடுவர் நன்னறுந் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்
வேற்றுக் கோலங்கொள் வீழி மிழலையே.       5.12.2

117. புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான்
வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான்
நினைய நின்றவன் ஈசனை யேயெனா
வினையி லார்தொழும் வீழி மிழலையே.       5.12.3

118. மாடத் தாடு மனத்துடன் வைத்தவர்
கோடத் தார்குருக் கேத்திரத் தார்பலர்
பாடத் தார்பழிப் பார்பழிப் பல்லதோர்
வேடத் தார்தொழும் வீழி மிழலையே.       5.12.4

119. எடுத்த வெல்கொடி யேறுடை யான்றமர்
உடுப்பர் கோவண முண்பது பிச்சையே
கெடுப்ப தாவது கீழ்நின்ற வல்வினை
விடுத்துப் போவது வீழி மிழலைக்கே.       5.12.5

120. குழலை யாழ்மொழி யாரிசை வேட்கையால்
உழலை யாக்கையை யூணும் உணர்விலீர்
தழலை நீர்மடிக் கொள்ளன்மின் சாற்றினோம்
மிழலை யானடி சாரவிண் ணாள்வரே.       5.12.6

121தீரன் தீத்திர ளன்சடைத் தங்கிய
நீரன் ஆடிய நீற்றன்வண் டார்கொன்றைத்
தாரன் மாலையன் றண்ணறுங் கண்ணியன்
வீரன் வீழி மிழலை விகிர்தனே.       5.12.7

122. எரியி னாரிறை யாரிடு காட்டிடை
நரியி னார்பரி யாமகிழ் கின்றதோர்
பெரிய னார்தம் பிறப்பொடு சாதலை
விரியி னார்தொழு வீழி மிழலையே.       5.12.8

123. நீண்ட சூழ்சடை மேலோர் நிலாமதி
காண்டு சேவடி மேலோர் கனைகழல்
வேண்டு வாரவர் வீதி புகுந்திலர்
மீண்டும் போவது வீழி மிழலைக்கே.       5.12.9

124. பாலை யாழொடு செவ்வழி பண்கொள
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலை யாரழல் அந்தண ராகுதி
வேலை யார்தொழும் வீழி மிழலையே.       5.12.10

125. மழலை யேற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்தெடுத் தான்முடி தோளிறக்
கழல்கொள் காலிற் றிருவிர லூன்றலும்
மிழலை யானடி வாழ்கென விட்டதே.       5.12.11
திருச்சிற்றம்பலம்
------------------


5.13 திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

126. என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல்
நன்பொ னேநலந் தீங்கறி வொன்றிலேன்
செம்பொ னேதிரு வீழி மிழலையுள்
அன்ப னேயடி யேனைக் குறிக்கொளே.       5.13.1

127. கண்ணி னாற்களி கூரக்கை யாற்றொழு
தெண்ணு மாறறி யாதிளைப் பேன்றனை
விண்ணு ளார்தொழும் வீழி மிழலையுள்
அண்ண லேயடி யேனைக் குறிக்கொளே.       5.13.2

128. ஞால மேவிசும் பேநலந் தீமையே
கால மேகருத் தேகருத் தாற்றொழுஞ்
சீல மேதிரு வீழி மிழலையுள்
கோல மேயடி யேனைக் குறிக்கொளே.       5.13.3

129. முத்த னேமுதல் வாமுகி ழும்முளை
ஒத்த னேயொரு வாவுரு வாகிய
சித்த னேதிரு வீழி மிழலையுள்
அத்த னேயடி யேனைக் குறிக்கொளே.       5.13.4

130. கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம்
ஒருவ னேஉயிர்ப் பாய்உணர் வாய்நின்ற
திருவ னேதிரு வீழி மிழலையுள்
குருவ னேயடி யேனைக் குறிக்கொளே.       5.13.5

131. காத்த னேபொழி லேழையுங் காதலால்
ஆத்த னேஅம ரர்க்கயன் றன்றலை
சேர்த்த னேதிரு வீழி மிழலையுள்
கூத்த னேயடி யேனைக் குறிகொளே.       5.13.6

132. நீதி வானவர் நித்தல் நியமஞ்செய்
தோதி வானவ ரும்முண ராததோர்
வேதி யாவிகிர் தாதிரு வீழியுள்
ஆதி யேயடி யேனைக் குறிக்கொளே.       5.13.7

133. பழகி நின்னடி சூடிய பாலனைக்
கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய
அழக னேயணி வீழி மிழலையுள்
குழக னேயடி யேனைக் குறிக்கொளே.       5.13.8

134. அண்ட வானவர் கூடிக் கடைந்தநஞ்
சுண்ட வானவ னேஉணர் வொன்றிலேன்
விண்ட வான்பொழில் வீழி மிழலையுள்
கொண்ட னேயடி யேனைக் குறிக்கொளே.       5.13.9

135. ஒருத்தன் ஓங்கலைத் தாங்கலுற் றானுரம்
வருத்தி னாய்வஞ்ச னேன்மனம் மன்னிய
திருத்த னேதிரு வீழி மிழலையுள்
அருத்த னேயடி யேனைக் குறிக்கொளே.       5.13.10

திருச்சிற்றம்பலம்
----------------


5.14 திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

136. பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
ஈச னெம்பெரு மான்இடை மருதினிற்
பூச நாம்புகு தும்புன லாடவே.       5.14.1

137. மறையின் நாண்மலர் கொண்டடி வானவர்
முறையி னான்முனி கள்வழி பாடுசெய்
இறைவன் எம்பெரு மான்இடை மருதினில்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.       5.14.2

138கொன்றை மாலையுங் கூவிள மத்தமுஞ்
சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்
என்று மெந்தை பிரான்இடை மருதினை
நன்று கைதொழு வார்வினை நாசமே.       5.14.3

139. இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும்
எம்மை யாளும் இடைமரு தன்கழல்
செம்மை யேதொழு வார்வினை சிந்துமே.       5.14.4

140. வண்ட ணைந்தன வன்னியுங் கொன்றையுங்
கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனார்
எண்டி சைக்கும் இடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே.       5.14.5

141. ஏற தேறும் இடைமரு தீசனார்
கூறு வார்வினை தீர்க்குங் குழகனார்
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்
கூறி யூறி உருகுமென் உள்ளமே.       5.14.6

142. விண்ணு ளாரும் விரும்பப் படுவர்
மண்ணு ளாரும் மதிக்கப் படுபவர்
எண்ணி னார்பொழில் சூழிடை மருதினை
நண்ணி னாரைநண் ணாவினை நாசமே.       5.14.7

143. வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள் சூடுங் கருத்தனார்
எந்தை யென்னிடை மருதினில் ஈசனைச்
சிந்தை யால்நினை வார்வினை தேயுமே.       5.14.8

144. வேத மோதும் விரிசடை அண்ணலார்
பூதம் பாடநின் றாடும் புனிதனார்
ஏதந் தீர்க்கும் இடைமரு தாவென்று
பாத மேத்தப் பறையுநம் பாவமே.       5.14.9

145. கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற் பாவைநல் லாரினுந்
தனிமு டிகவித் தாளு மரசினும்
இனியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே.       5.14.10

146. முற்றி லாமதி சூடும் முதல்வனார்
ஒற்றி னார்மலை யாலரக் கன்முடி
எற்றி னார்கொடி யாரிடை மருதினைப்
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே.       5.14.11

திருச்சிற்றம்பலம்
---------------


5.15 திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

147. பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் வைகும் அயலெலாம்
இறைவன் எங்கள் பிரானிடை மருதினில்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.       5.15.1

148. மனத்துள் மாயனை மாசறு சோதியைப்
புனிற்றுப் பிள்ளைவெள் ளைம்மதி சூடியை
எனக்குத் தாயையெம் மானிடை மருதனை
நினைத்திட் டூறி நிறைந்ததென் னுள்ளமே.       5.15.2

149. வண்ட ணைந்தன வன்னியும் மத்தமுங்
கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனை
எண்டி சைக்கும் இடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே.       5.15.3

150. துணையி லாமையிற் றூங்கிருட் பேய்களோ
டணைய லாவதெ மக்கரி தேயெனா
இணையி லாஇடை மாமரு தில்லெழு
பணையி லாகமஞ் சொல்லுந்தன் பாங்கிக்கே.       5.15.4

151. மண்ணை யுண்டமால் காணான் மலரடி
விண்ணை விண்டயன் காணான் வியன்முடி
மொண்ணை மாமரு தாவென்றென் மொய்குழல்
பண்ணை யாயமுந் தானும் பயிலுமே.       5.15.5

152. மங்கை காணக் கொடார்மண மாலையைக்
கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை
நங்கை மீர்இடை மருதரிந் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே.       5.15.6

இப்பதிகத்தில் 7,8,9,10,11-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

திருச்சிற்றம்பலம்
-------------


5.16 திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

153. மறையு மோதுவர் மான்மறிக் கையினர்
கறைகொள் கண்ட முடைய கபாலியார்
துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்
பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே.       5.16.1

154. கணக்கி லாரையுங் கற்றுவல் லாரையும்
வணக்கி லாநெறி கண்டுகொண் டாரையுந்
தணக்கு வார்தணிப் பாரெப் பொருளையும்
பிணக்கு வாரவர் பேரெயி லாளரே.       5.16.2

155. சொரிவிப் பார்மழை சூழ்கதிர்த் திங்களை
விரிவிப் பார்வெயிற் பட்ட விளங்கொளி
எரிவிப் பார்தணிப் பாரெப் பொருளையும்
பிரிவிப் பாரவர் பேரெயி லாளரே.       5.16.3

156. செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்
உறுவிப் பார்பல பத்தர்கள் ஊழ்வினை
அறுவிப் பாரது வன்றியும் நல்வினை
பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே.       5.16.4

157. மற்றை யாரறி யார்மழு வாளினார்
பற்றி யாட்டியோர் ஐந்தலைப் பாம்பரைச்
சுற்றி யாரவர் தூநெறி யால்மிகு
பெற்றி யாரவர் பேரெயி லாளரே.       5.16.5

158. திருக்கு வார்குழற் செல்வன சேவடி
இருக்கு வாய்மொழி யாற்றனை யேத்துவார்
சுருக்கு வார்துயர் தோற்றங்க ளாற்றறப்
பெருக்கு வாரவர் பேரெயி லாளரே.       5.16.6

159. முன்னை யார்மயி லூர்தி முருகவேள்
தன்னை யாரெனிற் றானோர் தலைமகன்
என்னை யாளும் இறையவ னெம்பிரான்
பின்னை யாரவர் பேரெயி லாளரே.       5.16.7

160. உழைத்துந் துள்ளியும் உள்ளத்து ளேயுரு
இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல்
அழைக்கும் அன்பின ராய அடியவர்
பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே.       5.16.8

161. நீரு லாநிமிர் புன்சடை யாவெனா
ஏரு லாவனங் கன்றிறல் வாட்டிய
வாரு லாவன மென்முலை யாளொடும்
பேரு ளாரவர் பேரெயி லாளரே.       5.16.9

162. பாணி யார்படு தம்பெயர்ந் தாடுவர்
தூணி யார்விச யற்கருள் செய்தவர்
மாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன்
பேணி யாரவர் பேரெயி லாளரே.       5.16.10

163. மதத்த வாளரக் கன்மணிப் புட்பகஞ்
சிதைக்க வேதிரு மாமலைக் கீழ்ப்புக்குப்
பதைத்தங் கார்த்தெடுத் தான்பத்து நீண்முடி
பிதக்க வூன்றிய பேரெயி லாளரே.       5.16.11

திருச்சிற்றம்பலம்
---------------


5.17 திருவெண்ணி - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

164 . முத்தி னைப்பவ ளத்தை முளைத்தவெந்
தொத்தி னைச்சுட ரைச்சுடர் போலொளிப்
பித்த னைக்கொலும் நஞ்சினை வானவர்
நித்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.       5.17.1

165. வெண்ணித் தொன்னகர் மேயவெண் டிங்களார்
கண்ணித் தொத்த சடையர் கபாலியார்
எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு
அண்ணித் திட்டமு தூறுமென் நாவுக்கே.       5.17.2

166. காற்றி னைக்கன லைக்கதிர் மாமணி
நீற்றி னைநினைப் பார்வினை நீக்கிடுங்
கூற்றி னையுதைத் திட்ட குணமுடை
வீற்றி னைநெரு நற்கண்ட வெண்ணியே.       5.17.3

167. நல்ல னைத்திகழ் நான்மறை யோதியைச்
சொல்ல னைச்சுட ரைச்சுடர் போலொளிர்
கல்ல னைக்கடி மாமதில் மூன்றெய்த
வில்ல னைநெரு நற்கண்ட வெண்ணியே.       5.17.4

168. சுடரைப் போலொளிர் சுண்ணவெண் ணீற்றனை
அடருஞ் சென்னியில் வைத்த அமுதினைப்
படருஞ் செஞ்சடைப் பான்மதி சூடியை
இடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே.       5.17.5

169. பூத நாதனைப் பூம்புக லூரனைத்
தாதெ னத்தவ ழும்மதி சூடியை
நாத னைநல்ல நான்மறை யோதியை
வேத னைநெரு நற்கண்ட வெண்ணியே.       5.17.6

170. ஒருத்தி யையொரு பாகத் தடக்கியும்
பொருத்தி யபுனி தன்புரி புன்சடைக்
கருத்த னைக்கறைக் கண்டனைக் கண்ணுதல்
நிருத்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.       5.17.7

171. சடைய னைச்சரி கோவண ஆடைகொண்
டுடைய னையுணர் வார்வினை தீர்த்திடும்
படைய னைமழு வாளொடு பாய்தரும்
விடைய னைநெரு நற்கண்ட வெண்ணியே.       5.17.8

172. பொருப்ப னைப்புன லாளொடு புன்சடை
அருப்ப னையிளந் திங்களங் கண்ணியான்
பருப்ப தம்பர வித்தொழுந் தொண்டர்கள்
விருப்ப னைநெரு நற்கண்ட வெண்ணியே.       5.17.9

173. சூல வஞ்சனை வல்லவெஞ் சுந்தரன்
கோல மாவருள் செய்ததோர் கொள்கையான்
காலன் அஞ்ச வுதைத்திருள் கண்டமாம்
வேலை நஞ்சனைக் கண்டது வெண்ணியே.       5.17.10

174. இலையி னார்கொன்றை சூடிய ஈசனார்
மலையி னாலரக் கன்றிறல் வாட்டினார்
சிலையி னான்மதி லெய்தவன் வெண்ணியைத்
தலையி னாற்றொழு வார்வினை தாவுமே.       5.17.11

திருச்சிற்றம்பலம்
-------------


5.18 திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

175. முற்றி லாமுலை யாளிவ ளாகிலும்
அற்றந் தீர்க்கும் அறிவில ளாகிலுங்
கற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப்
பெற்ற மூர்தியென் றாளெங்கள் பேதையே.       5.18.1

176. தனகி ருந்ததோர் தன்மைய ராகிலும்
முனகு தீரத் தொழுதெழு மின்களோ
கனகப் புன்சடை யான்கடம் பந்துறை
நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே.       5.18.2

177. ஆரி யந்தமி ழோடிசை யானவன்
கூரி யகுணத் தார்குறி நின்றவன்
காரி கையுடை யான்கடம் பந்துறைச்
சீரி யல்பத்தர் சென்றடை மின்களே.       5.18.3

178. பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
வண்ண நன்மல ரான்பல தேவருங்
கண்ண னும்மறி யான்கடம் பந்துறை
நண்ண நம்வினை யாயின நாசமே.       5.18.4

179. மறைகொண் டமனத் தானை மனத்துளே
நிறைகொண் டநெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டனுறை யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவினை தீரத் தொழுமினே.       5.18.5

180. நங்கை பாகம்வைத் தநறுஞ் சோதியைப்
பங்க மின்றிப் பணிந்தெழு மின்களோ
கங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறை
அங்க மோதி அரனுறை கின்றதே.       5.18.6

181அரிய நான்மறை ஆறங்க மாயைந்து
புரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன்
கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை
உரிய வாறு நினைமட நெஞ்சமே.       5.18.7

182. பூமென் கோதை உமையொரு பாகனை
ஓமஞ் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தாற்
காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை
நாம மேத்தநந் தீவினை நாசமே.       5.18.8

183. பார ணங்கி வணங்கிப் பணிசெய
நார ணன்பிர மன்னறி யாததோர்
கார ணன்கடம் பந்துறை மேவிய
ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே.       5.18.9

184. நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை
மேலால் நாஞ்செய்த வல்வினை வீடுமே.       5.18.10

திருச்சிற்றம்பலம்
-------------


5.19 திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

185. தளருங் கோளர வத்தொடு தண்மதி
வளருங் கோல வளர்சடை யார்க்கிடங்
கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக்
களருங் கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே.       5.19.1

186. வெலவ லான்புலன் ஐந்தொடு வேதமுஞ்
சொலவ லான்சுழ லுந்தடு மாற்றமும்
அலவ லான்மனை யார்ந்தமென் றோளியைக்
கலவ லான்கடம் பூர்க்கரக் கோயிலே.       5.19.2

187. பொய்தொ ழாது புலியுரி யோன்பணி
செய்தெ ழாவெழு வார்பணி செய்தெழா
வைதெ ழாதெழு வாரவர் எள்கநீர்
கைதொ ழாவெழு மின்கரக் கோயிலே.       5.19.3

188. துண்ணெ னாமனத் தால்தொழு நெஞ்சமே
பண்ணி னான்முனம் பாடல துசெய்தே
எண்ணி லாரெயில் மூன்றும் எரித்தமுக்
கண்ணி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.       5.19.4

189. சுனையுள் நீல மலரன கண்டத்தன்
புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக்
கனையும் பைங்கழ லான்கரக் கோயிலை
நினையும் உள்ளத் தவர்வினை நீங்குமே.       5.19.5

190. குணங்கள் சொல்லியுங் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர் அன்புடை யாரெலாம்
வணங்கி வான்மலர் கொண்டடி வைகலுங்
கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே.       5.19.6

191. பண்ணி னார்மறை பல்பல பூசனை
மண்ணி னார்செய்வ தன்றியும் வைகலும்
விண்ணி னார்கள் வியக்கப் படுவன
கண்ணி னார்கடம் பூர்க்கரக் கோயிலே.       5.19.7

192. அங்கை ஆரழ லேந்திநின் றாடலன்
மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடைக்
கங்கை யானுறை யுங்கரக் கோயிலைத்
தங்கை யாற்றொழு வார்வினை சாயுமே.       5.19.8

193. நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.       5.19.9

194. பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும்
மணங்க மழ்மலர்த் தாமரை யானவன்
பிணங்கும் பேரழல் எம்பெரு மாற்கிடங்
கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே.       5.19.10

195. வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்றலை
அரைக்க வூன்றி அருள்செய்த ஈசனார்
திரைக்குந் தண்புனல் சூழ்கரக் கோயிலை
உரைக்கும் உள்ளத் தவர்வினை ஓயுமே.       5.19.11

திருச்சிற்றம்பலம்
----------------


5.20 திருக்கடம்பூர்க்கரக்கோயில் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

196. ஒருவ ராயிரு மூவரு மாயவன்
குருவ தாய குழகன் உறைவிடம்
பருவ ரால்குதி கொள்ளும் பழனஞ்சூழ்
கருவ தாங்கடம் பூர்க்கரக் கோயிலே.       5.20.1

197. வன்னி மத்தம் வளரிளந் திங்களோர்
கன்னி யாளைக் கதிர்முடி வைத்தவன்
பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும்
மன்னி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.       5.20.2

198. இல்லக் கோலமும் இந்த இளமையும்
அல்லற் கோலம் அறுத்துய வல்லிரே
ஒல்லைச் சென்றடை யுங்கடம் பூர்நகர்ச்
செல்வக் கோயில் திருக்கரக் கோயிலே.       5.20.3

199. வேறு சிந்தை யிலாதவர் தீவினை
கூறு செய்த குழகன் உறைவிடம்
ஏறு செல்வத் திமையவர் தாந்தொழும்
ஆறு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.       5.20.4

200. திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர்
மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம்
பொங்கு சேர்மணற் புன்னையும் ஞாழலுந்
தெங்கு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.       5.20.5

201. மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கெலாம்
எல்லை யான பிரானார் இருப்பிடங்
கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை
நல்ல சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.       5.20.6

202. தளரும் வாளர வத்தொடு தண்மதி
வளரும் பொற்சடை யாற்கிட மாவது
கிளரும் பேரொலி கின்னரம் பாட்டறாக்
களரி யார்கடம் பூர்க்கரக் கோயிலே.       5.20.7

203. உற்றா ராயுற வாகி உயிர்க்கெலாம்
பெற்றா ராய பிரானார் உறைவிடம்
முற்றார் மும்மதி லெய்த முதல்வனார்
கற்றார் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.       5.20.8

204. வெள்ளை நீறணி மேனிய வர்க்கெலாம்
உள்ள மாய பிரானார் உறைவிடம்
பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்
கள்வன் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.       5.20.9

205. பரப்பு நீரிலங் கைக்கிறை வன்னவன்
உரத்தி னாலடுக் கல்லெடுக் கல்லுற
இரக்க மின்றி இறைவிர லாற்றலை
அரக்கி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.       5.20.10

திருச்சிற்றம்பலம்
-------------


5.21 திருவின்னம்பர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

206. என்னி லாரும் எனக்கினி யாரில்லை
என்னி லும்மினி யானொரு வன்னுளன்
என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே.       5.21.1

207. மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கணால்
கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ
தட்டி முட்டித்தள் ளாடித் தழுக்குழி
எட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே.       5.21.2

208. கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன்
புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை
அனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர்
எனலும் என்மனத் தின்னம்பர் ஈசனே.       5.21.3

209. மழைக்கண் மாமயி லாலும் மகிழ்ச்சியான்
அழைக்குந் தன்னடி யார்கள்தம் அன்பினைக்
குழைக்குந் தன்னைக் குறிக்கொள வேண்டியே
இழைக்கு மென்மனத் தின்னம்பர் ஈசனே.       5.21.4

210. தென்ன வனென்னை யாளுஞ் சிவனவன்
மன்ன வன்மதி யம்மறை யோதியான்
முன்ன மன்னவன் சேரலன் பூழியான்
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே.       5.21.5

211. விளக்கும் வேறு படப்பிறர் உள்ளத்தில்
அளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக்
குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே
இளக்கும் என்மனத் தின்னம்பர் ஈசனே.       5.21.6

212. சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர்
கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள்
படைக்க ணாற்பரு கப்படு வான்நமக்
கிடைக்க ணாய்நின்ற இன்னம்பர் ஈசனே.       5.21.7

213. தொழுது தூமலர் தூவித் துதித்துநின்
றழுது காமுற் றரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதுங் கீழ்க்கணக் கின்னம்பர் ஈசனே.       5.21.8

214. விரியுந் தண்ணிள வேனலில் வெண்பிறை
புரியுங் காமனை வேவப் புருவமுந்
திரியும் எல்லையில் மும்மதில் தீயெழுந்
தெரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே.       5.21.9

215. சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும்
முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக்
கனிய வூன்றிய காரண மென்கொலோ
இனிய னாய்நின்ற இன்னம்பர் ஈசனே.       5.21.10
திருச்சிற்றம்பலம்
------------------


5.22 திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

216. பூவ ணத்தவன் புண்ணியன் நண்ணியங்
காவ ணத்துடை யானடி யார்களை
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துடை யான்குட மூக்கிலே.       5.22.1

217. பூத்தா டிக்கழி யாதேநீர் பூமியீர்
தீத்தா டித்திறஞ் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்தா டுங்காளி தன்விசை தீர்கென்று
கூத்தா டியுறை யுங்குட மூக்கிலே.       5.22.2

218. நங்கை யாளுமை யாளுறை நாதனார்
அங்கை யாளொ டறுபதந் தாழ்சடைக்
கங்கை யாளவள் கன்னி யெனப்படுங்
கொங்கை யாளுறை யுங்குட மூக்கிலே.       5.22.3

219. ஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல்
ஏதா னுமினி தாகும் மியமுனைச்
சேதா ஏறுடை யானமர்ந் தவிடங்
கோதா விரியுறை யுங்குட மூக்கிலே.       5.22.4

220. நக்க ரையனை நாடொறும் நன்னெஞ்சே
வக்க ரையுறை வானை வணங்குநீ
அக்க ரையோ டரவரை யார்த்தவன்
கொக்க ரையுடை யான்குட மூக்கிலே.       5.22.5

221. துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவ னாய்ப்பார்த்தன் மேற்கணை தொட்டவெங்
குறவ னாருறை யுங்குட மூக்கிலே.       5.22.6

222. தொண்ட ராகித் தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக்
கொண்ட வன்னுறை யுங்குட மூக்கிலே.       5.22.7

223. காமி யஞ்செய்து காலம் கழியாதே,
ஓமி யஞ்செய்தங் குள்ளத் துணர்மினோ
சாமி யோடு சரச்சுவ தியவள்
கோமி யும்முறை யுங்குட மூக்கிலே.       5.22.8

224. சிரமஞ் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்
பரம னைப்பல நாளும் பயிற்றுமின்
பிரமன் மாலொடு மற்றொழிந் தார்க்கெலாங்
குரவ னாருறை யுங்குட மூக்கிலே.       5.22.9

225. அன்று தானரக் கன்கயி லாயத்தைச்
சென்று தானெடுக் கவுமை யஞ்சலும்
நன்று தான்நக்கு நல்விர லூன்றிப்பின்
கொன்று கீதங்கேட் டான்குட மூக்கிலே.       5.22.10

திருச்சிற்றம்பலம்
-------------------


5.23 திருநின்றியூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

226. கொடுங்கண் வெண்டலை கொண்டு குறைவிலைப்
படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர்
நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர்க்
கடுங்கைக் கூற்றுதைத் திட்ட கருத்தரே.       5.23.1

227. வீதி வேல்நெடுங் கண்ணியர் வெள்வளை
நீதி யேகொளப் பாலது நின்றியூர்
வேத மோதி விளங்குவெண் தோட்டராய்க்
காதில் வெண்குழை வைத்தவெங் கள்வரே.       5.23.2

228. புற்றி னார்அர வம்புலித் தோல்மிசைச்
சுற்றி னார்சுண்ணப் போர்வைகொண் டார்சுடர்
நெற்றிக் கண்ணுடை யாரமர் நின்றியூர்
பற்றி னாரைப்பற் றாவினைப் பாவமே.       5.23.3

229. பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் மல்கி அயலெலாம்
நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.       5.23.4

230. சுனையுள் நீலஞ் சுளியும் நெடுங்கணாள்
இனைய னென்றென்று மேசுவ தென்கொலோ
நினையுந் தண்வயல் சூழ்திரு நின்றியூர்ப்
பனையின் ஈருரி போர்த்த பரமரே.       5.23.5

231. உரைப்பக் கேண்மின்நும் உச்சியு ளான்றனை
நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர்
உரைப்பொற் கற்றைய ராரிவ ரோவெனிற்
திரைத்துப் பாடித் திரிதருஞ் செல்வரே.       5.23.6

232. கன்றி யூர்முகில் போலுங் கருங்களி
றின்றி ஏறல னாலிது வென்கொலோ
நின்றி யூர்பதி யாக நிலாயவன்
வென்றி யேறுடை எங்கள் விகிர்தனே.       5.23.7

233. நிலையி லாவெள்ளை மாலையன் நீண்டதோர்
கொலைவி லாலெயில் எய்த கொடியவன்
நிலையி னார்வயல் சூழ்திரு நின்றியூர்
உரையி னாற்றொழு வார்வினை ஓயுமே.       5.23.8

234. அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதில் எய்திமை யோர்தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.       5.23.9

235. எளிய னாமொழி யாஇலங் கைக்கிறை
களியி னாற்கயி லாய மெடுத்தவன்
நெளிய வூன்ற வலானமர் நின்றியூர்
அளியி னாற்றொழு வார்வினை யல்குமே.       5.23.10

திருச்சிற்றம்பலம்
-------------------


5.24 திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

236. ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை
ஒற்றி யூருமப் பாம்பும் அதனையே
ஒற்றி யூர வொருசடை வைத்தவன்
ஒற்றி யூர்தொழ நம்வினை ஓயுமே.       5.24.1

237. வாட்ட மொன்றுரைக் கும்மலை யான்மகள்
ஈட்ட வேயிரு ளாடி இடுபிணக்
காட்டி லோரி கடிக்க எடுத்ததோர்
ஓட்டை வெண்டலைக் கையொற்றி யூரரே.       5.24.2

238. கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின்
ஆற்றுத் தண்டத் தடக்கு மரனடி
நீற்றுத் தண்டத்த ராய்நினை வார்க்கெலாம்
ஊற்றுத் தண்டொப்பர் போலொற்றி யூரரே.       5.24.3

239. சுற்றும் பேய்சுழ லச்சுடு காட்டெரி
பற்றி யாடுவர் பாய்புலித் தோலினர்
மற்றை யூர்களெல் லாம்பலி தேர்ந்துபோய்
ஒற்றி யூர்புக் குறையும் ஒருவரே.       5.24.4

240. புற்றில் வாளர வாட்டி உமையொடு
பெற்ற மேறுகந் தேறும் பெருமையான்
மற்றை யாரொடு வானவ ருந்தொழ
ஒற்றி யூருறை வானோர் கபாலியே.       5.24.5

241. போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர்
மாது தாழ்சடை வைத்த மணாளனார்
ஓது வேதிய னார்திரு வொற்றியூர்
பாத மேத்தப் பறையுநம் பாவமே.       5.24.6

242. பலவும் அன்னங்கள் பன்மலர் மேற்றுஞ்சுங்
கலவ மஞ்ஞைகள் காரென வெள்குறும்
உலவு பைம்பொழில் சூழ்திரு ஒற்றியூர்
நிலவி னானடி யேயடை நெஞ்சமே.       5.24.7

243. ஒன்று போலும் உகந்தவ ரேறிற்று
ஒன்று போலும் உதைத்துக் களைந்தது
ஒன்று போலொளி மாமதி சூடிற்று
ஒன்று போலுகந் தாரொற்றி யூரரே.       5.24.8

244. படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர்
சடைகொள் வெள்ளத்தர் சாந்தவெண் ணீற்றினர்
உடையுந் தோலுகந் தாருறை யொற்றியூர்
அடையு முள்ளத் தவர்வினை யல்குமே.       5.24.9

245. வரையி னாருயர் தோலுடை மன்னனை
வரையி னால்வலி செற்றவர் வாழ்விடந்
திரையி னார்புடை சூழ்திரு வொற்றியூர்
உரையி னாற்பொலிந் தாருயர்ந் தார்களே.       5.24.10

திருச்சிற்றம்பலம்
------------------


5.25 திருப்பாசூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

246. முந்தி மூவெயி லெய்த முதல்வனார்
சிந்திப் பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார்
அந்திக் கோன்றனக் கேயருள் செய்தவர்
பந்திச் செஞ்சடைப் பாசூ ரடிகளே.       5.25.1

247. மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்
தொடர்ந்த வல்வினை போக்கிடுஞ் சோதியார்
கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர்
படர்ந்த நாகத்தர் பாசூ ரடிகளே.       5.25.2

248. நாறு கொன்றையும் நாகமுந் திங்களும்
ஆறுஞ் செஞ்சடை வைத்த அழகனார்
காறு கண்டத்தர் கையதோர் சூலத்தர்
பாறி னோட்டினர் பாசூ ரடிகளே.       5.25.3

249. வெற்றி யூருறை வேதிய ராவர்நல்
ஒற்றி யேறுகந் தேறு மொருவனார்
நெற்றிக் கண்ணினர் நீளர வந்தனைப்
பற்றி யாட்டுவர் பாசூ ரடிகளே.       5.25.4

250. மட்ட விழ்ந்த மலர்நெடுங் கண்ணிபால்
இட்ட வேட்கைய ராகி யிருப்பவர்
துட்ட ரேலறி யேனிவர் சூழ்ச்சிமை
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே.       5.25.5

251. பல்லில் ஓடுகை யேந்திப் பகலெலாம்
எல்லி நின்றிடு பெய்பலி யேற்பவர்
சொல்லிப் போய்ப்புகும் ஊரறி யேன்சொலீர்
பல்கு நீற்றினர் பாசூ ரடிகளே.       5.25.6

252. கட்டி விட்ட சடையர் கபாலியர்
எட்டி நோக்கிவந் தில்புகுந் தவ்வவர்
இட்ட மாவறி யேனிவர் செய்வன
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே.       5.25.7

253. வேத மோதிவந் தில்புகுந் தாரவர்
காதில் வெண்குழை வைத்த கபாலியார்
நீதி யொன்றறி யார்நிறை கொண்டனர்
பாதி வெண்பிறைப் பாசூ ரடிகளே.       5.25.8

254. சாம்பற் பூசுவர் தாழ்சடை கட்டுவர்
ஓம்பல் மூதெரு தேறு மொருவனார்
தேம்பல் வெண்மதி சூடுவர் தீயதோர்
பாம்பு மாட்டுவர் பாசூ ரடிகளே.       5.25.9

255. மாலி னோடு மறையவன் றானுமாய்
மேலுங் கீழும் அளப்பரி தாயவர்
ஆலின் நீழல் அறம்பகர்ந் தார்மிகப்
பால்வெண் ணீற்றினர் பாசூ ரடிகளே.       5.25.10

256. திரியு மூவெயில் செங்கணை யொன்றினால்
எரிய வெய்தன ரேனும் இலங்கைக்கோன்
நெரிய வூன்றியிட் டார்விர லொன்றினாற்
பரியர் நுண்ணியர் பாசூ ரடிகளே.       5.25.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசூர்நாதர்,
தேவியார் - பசுபதிநாயகி.

திருச்சிற்றம்பலம்
-----------------


5.26 திருவன்னியூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

257. காடு கொண்டரங் காக்கங்குல் வாய்க்கணம்
பாட மாநட மாடும் பரமனார்
வாட மானிறங் கொள்வர் மணங்கமழ்
மாட மாமதில் சூழ்வன்னி யூரரே.       5.26.1

258. செங்கண் நாகம் அரையது தீத்திரள்
அங்கை யேந்திநின் றார்எரி யாடுவர்
கங்கை வார்சடை மேலிடங் கொண்டவர்
மங்கை பாகம்வைத் தார்வன்னி யூரரே.       5.26.2

259. ஞானங் காட்டுவர் நன்னெறி காட்டுவர்
தானங் காட்டுவர் தம்மடைந் தார்க்கெலாந்
தானங் காட்டித்தன் றாளடைந் தார்கட்கு
வானங் காட்டுவர் போல்வன்னி யூரரே.       5.26.3

260. இம்மை அம்மை யெனவிரண் டும்மிவை
மெய்ம்மை தானறி யாது விளம்புவர்
மெய்ம்மை யால்நினை வார்கள்தம் வல்வினை
வம்மின் தீர்ப்பர்கண் டீர்வன்னி யூரரே.       5.26.4

261. பிறைகொள் வாணுதற் பெய்வளைத் தோளியர்
நிறையைக் கொள்பவர் நீறணி மேனியர்
கறைகொள் கண்டத்தர் வெண்மழு வாளினர்
மறைகொள் வாய்மொழி யார்வன்னி யூரரே.       5.26.5

262. திளைக்கும் வண்டொடு தேன்படு கொன்றையர்
துளைக்கை வேழத்தர் தோலர் சுடர்மதி
முளைக்கு மூரற் கதிர்கண்டு நாகம்நா
வளைக்கும் வார்சடை யார்வன்னி யூரரே.       5.26.6

263. குணங்கொள் தோளெட்டு மூர்த்தி இணையடி
இணங்கு வார்கட் கினியனு மாய்நின்றான்
வணங்கி மாமலர் கொண்டவர் வைகலும்
வணங்கு வார்மனத் தார்வன்னி யூரரே.       5.26.7

264. இயலு மாலொடு நான்முகன் செய்தவம்
முயலிற் காண்பரி தாய்நின்ற மூர்த்திதான்
அயலெ லாம்அன்ன மேயும்அந் தாமரை
வயலெ லாங்கயல் பாய்வன்னி யூரரே.       5.26.8

. இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.       5.26.8

265. நலங்கொள் பாகனை நன்று முனிந்திடா
விலங்கல் கோத்தெடுத் தானது மிக்கிட
இலங்கை மன்னன் இருபது தோளினை
மலங்க வூன்றிவைத் தார்வன்னி யூரரே.       5.26.10

திருச்சிற்றம்பலம்
---------------


5.27 திருவையாறு - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

266. சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன்
பொந்து வார்புலால் வெண்டலைக் கையினன்
முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடித்
தந்தி வாயதோர் பாம்பர்ஐ யாறரே.       5.27.1

267. பாக மாலை மகிழ்ந்தனர் பான்மதி
போக ஆனையின் ஈருரி போர்த்தவர்
கோக மாலை குலாயதோர் கொன்றையும்
ஆக ஆன்நெய்அஞ் சாடும்ஐ யாறரே.       5.27.2

268. நெஞ்ச மென்பதோர் நீள்கயந் தன்னுளே
வஞ்ச மென்பதோர் வான்சுழிப் பட்டுநான்
துஞ்சும் போழ்துநின் நாமத் திருவெழுத்
தஞ்சுந் தோன்ற அருளும்ஐ யாறரே.       5.27.3

269. நினைக்கும் நெஞ்சினுள் ளார்நெடு மாமதில்
அனைத்தும் ஒள்ளழல் வாயெரி யூட்டினார்
பனைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்
அனைத்து வாய்தலுள் ளாரும்ஐ யாறரே.       5.27.4

270. பரியர் நுண்ணியர் பார்த்தற் கரியவர்
அரிய பாடலர் ஆடல ரன்றியுங்
கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கெலாம்
அரியர் தொண்டர்க் கெளியர்ஐ யாறரே.       5.27.5

271. புலரும் போது மிலாப்பட்ட பொற்சுடர்
மலரும் போதுக ளாற்பணி யச்சிலர்
இலரும் போதும் இலாதது மன்றியும்
அலரும் போதும் அணியும்ஐ யாறரே.       5.27.6

272. பங்க மாலைக் குழலியோர் பால்நிறக்
கங்கை மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை மாலை மதியமுங் கண்ணியும்
அங்க மாலையுஞ் சூடும்ஐ யாறரே.       5.27.7

273. முன்னை யாறு முயன்றெழு வீரெலாம்
பின்னை யாறு பிரியெனும் பேதைகாள்
மன்னை யாறு மருவிய மாதவன்
தன்னை யாறு தொழத்தவ மாகுமே.       5.27.8

274. ஆனை யாறென ஆடுகின் றான்முடி
வானை யாறு வளாயது காண்மினோ
நான்ஐ யாறுபுக் கேற்கவன் இன்னருள்
தேனை யாறு திறந்தாலே யொக்குமே.       5.27.9

275. அரக்கின் மேனியன் அந்தளிர் மேனியன்
அரக்கின் சேவடி யாளஞ்ச அஞ்சலென்
றரக்கன் ஈரைந்து வாயும் அலறவே
அரக்கி னானடி யாலும்ஐ யாறனே.       5.27.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொற்சோதீசுவரர், தேவியார் - அறம்வளர்த்தநாயகி.
திருச்சிற்றம்பலம்
-------------


5.28 திருவையாறு - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

276. சிந்தை வண்ணத்த ராய்த்திறம் பாவணம்
முந்தி வண்ணத்த ராய்முழு நீறணி
சந்தி வண்ணத்த ராய்த்தழல் போல்வதோர்
அந்தி வண்ணமு மாவர்ஐ யாறரே.       5.28.1

277. மூல வண்ணத்த ராய்முத லாகிய
கோல வண்ணத்த ராகிக் கொழுஞ்சுடர்
நீல வண்ணத்த ராகி நெடும்பளிங்
கால வண்ணத்த ராவர்ஐ யாறரே.       5.28.2

278. சிந்தை வண்ணமுந் தீயதோர் வண்ணமும்
அந்திப் போதழ காகிய வண்ணமும்
பந்திக் காலனைப் பாய்ந்ததோர் வண்ணமும்
அந்தி வண்ணமு மாவர்ஐ யாறரே.       5.28.3

279. இருளின் வண்ணமு மேழிசை வண்ணமுஞ்
சுருளின் வண்ணமுஞ் சோதியின் வண்ணமும்
மருளு நான்முகன் மாலொடு வண்ணமும்
அருளும் வண்ணமு மாவர்ஐ யாறரே.       5.28.4

280. இழுக்கின் வண்ணங்க ளாகிய வெவ்வழல்
குழைக்கும் வண்ணங்க ளாகியுங் கூடியும்
மழைக்கண் மாமுகி லாகிய வண்ணமும்
அழைக்கும் வண்ணமு மாவர்ஐ யாறரே.       5.28.5

281. இண்டை வண்ணமும் ஏழிசை வண்ணமுந்
தொண்டர் வண்ணமுஞ் சோதியின் வண்ணமுங்
கண்ட வண்ணங்க ளாய்க்கனல் மாமணி
அண்ட வண்ணமு மாவர்ஐ யாறரே.       5.28.6

282. விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமுங்
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்
விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமு மாவர்ஐ யாறரே.       5.28.7

283. ஊழி வண்ணமும் ஒண்சுடர் வண்ணமும்
வேழ ஈருரி போர்த்ததோர் வண்ணமும்
வாழித் தீயுரு வாகிய வண்ணமும்
ஆழி வண்ணமு மாவர்ஐ யாறரே.       5.28.8

284. செய்த வன்றிரு நீறணி வண்ணமும்
எய்த நோக்கரி தாகிய வண்ணமுங்
கைது காட்சி யரியதோர் வண்ணமும்
ஐது வண்ணமு மாவர்ஐ யாறரே.       5.28.9

285. எடுத்த வாளரக் கன்றிறல் வண்ணமும்
இடர்க்கள் போல்பெரி தாகிய வண்ணமுங்
கடுத்த கைந்நரம் பாலிசை வண்ணமும்
அடுத்த வண்ணமு மாவர்ஐ யாறரே.       5.28.10

திருச்சிற்றம்பலம்
-----------------


5.29 திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

286. நிறைக்க வாலியள் அல்லளிந் நேரிழை
மறைக்க வாலியள் அல்லளிம் மாதராள்
பிறைக்க வாலிப் பெரும்புனல் ஆவடு
துறைக்க வாலியோ டாடிய சுண்ணமே.       5.29.1

287. தவள மாமதிச் சாயலோர் சந்திரன்
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம்மிறை
அளவு கண்டிலள் ஆவடு தண்டுறைக்
களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே.       5.29.2

288. பாதி பெண்ணொரு பாகத்தன் பன்மறை
ஓதி யென்னுளங் கொண்டவன் ஒண்பொருள்
ஆதி ஆவடு தண்டுறை மேவிய
சோதி யேசுட ரேயென்று சொல்லுமே.       5.29.3

289. கார்க்கொள் மாமுகில் போல்வதோர் கண்டத்தன்
வார்க்கொள் மென்முலை சேர்ந்திறு மாந்திவள்
ஆர்க்கொள் கொன்றையன் ஆவடு தண்டுறைத்
தார்க்கு நின்றிவள் தாழுமா காண்மினே.       5.29.4

290. கருகு கண்டத்தன் காய்கதிர்ச் சோதியன்
பருகு பாலமு தேயென்னும் பண்பினன்
அருகு சென்றிலள் ஆவடு தண்டுறை
ஒருவன் என்னை யுடையகோ வென்னுமே.       5.29.5

291. குழலுங் கொன்றையுங் கூவிள மத்தமுந்
தழலுந் தையலோர் பாகமாத் தாங்கினான்
அழகன் ஆவடு தண்டுறை யாவெனக்
கழலுங் கைவளை காரிகை யாளுக்கே.       5.29.6

292. பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத்
தஞ்ச மென்றிறு மாந்திவ ளாரையும்
அஞ்சு வாளல்லள் ஆவடு தண்டுறை
மஞ்ச னோடிவள் ஆடிய மையலே.       5.29.7

293. பிறையுஞ் சூடிநற் பெண்ணொடா ணாகிய
நிறையு நெஞ்சமும் நீர்மையுங் கொண்டவன்
அறையும் பூம்பொழில் ஆவடு தண்டுறை
இறைவன் என்னை யுடையவன் என்னுமே.       5.29.8

294. வையந் தானளந் தானும் அயனுமாய்
மெய்யைக் காணலுற் றார்க்கழ லாயினான்
ஐயன் ஆவடு தண்டுறை யாவெனக்
கையில் வெள்வளை யுங்கழல் கின்றதே.       5.29.9

295. பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான்
மிக்க வாளரக் கன்வலி வீட்டினான்
அக்க ணிந்தவன் ஆவடு தண்டுறை
நக்கன் என்னுமிந் நாணிலி காண்மினே.       5.29.10

திருச்சிற்றம்பலம்
-------------------


5.30 திருப்பராய்த்துறை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

296. கரப்பர் கால மடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே.       5.30.1

297. மூடி னார்களி யானையின் ஈருரி
பாடி னார்மறை நான்கினோ டாறங்கஞ்
சேட னார்தென் பராய்த்துறைச் செல்வரைத்
தேடிக் கொண்டடி யேன்சென்று காண்பனே.       5.30.2

298. பட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர்
நட்ட மாடுவர் நள்ளிருள் ஏமமுஞ்
சிட்ட னார்தென் பராய்த்துறைச் செல்வனார்
இட்ட மாயிருப் பாரை அறிவரே.       5.30.3

299. முன்பெ லாஞ்சில மோழைமை பேசுவர்
என்பெ லாம்பல பூண்டங் குழிதர்வர்
தென்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
அன்ப ராயிருப் பாரை அறிவரே.       5.30.4

300. போது தாதொடு கொண்டு புனைந்துடன்
தாத விழ்சடைச் சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்கவென் றேத்திப் பராய்த்துறைச்
சோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே.       5.30.5

301. நல்ல நான்மறை யோதிய நம்பனைப்
பல்லில் வெண்டலை யிற்பலி கொள்வனைத்
தில்லை யான்றென் பராய்த்துறைச் செல்வனை
வல்லை யாய்வணங் கித்தொழு வாய்மையே.       5.30.6

302. நெருப்பி னாற்குவித் தாலொக்கு நீள்சடைப்
பருப்ப தம்மத யானை யுரித்தவன்
திருப்ப ராய்த்துறை யார்திரு மார்பின்நூல்
பொருப்ப ராவி இழிபுனல் போன்றதே.       5.30.7

303. எட்ட விட்ட இடுமண லெக்கர்மேற்
பட்ட நுண்டுளி பாயும் பராய்த்துறைச்
சிட்டன் சேவடி சென்றடை கிற்றிரேல்
விட்டு நம்வினை யுள்ளன வீடுமே.       5.30.8

304. நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடை
மருப்ப ராவளைத் தாலொக்கும் வாண்மதி
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்ப ராயிருப் பாரை அறிவரே.       5.30.9

305. தொண்டு பாடியுந் தூமலர் தூவியும்
இண்டை கட்டி இணையடி யேத்தியும்
பண்ட ரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே.       5.30.10

306. அரக்கன் ஆற்றல் அழித்த அழகனைப்
பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை யேத்துமின்
பொருக்க நும்வினை போயறுங் காண்மினே.       5.30.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருப்பராய்த்துறைநாதர்,
தேவியார் - பசும்பொன்மயிலம்மை.

திருச்சிற்றம்பலம்
--------------------


5.31 திருவானைக்கா - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

307. கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள்
ஆனைக் காவிலெம் மானை அணைகிலார்
ஊனைக் காவி யுழிதர்வர் ஊமரே.       5.31.1

308. திருகு சிந்தையைத் தீர்த்துச்செம் மைசெய்து
பருகி யூறலைப் பற்றிப் பதமறிந்
துருகி நைபவர்க் கூனமொன் றின்றியே
அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.       5.31.2

309. துன்ப மின்றித் துயரின்றி யென்றுநீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
என்பொன் ஈசன் இறைவனென் றுள்குவார்க்
கன்ப னாயிடும் ஆனைக்கா அண்ணலே.       5.31.3

310. நாவால் நன்று நறுமலர்ச் சேவடி
ஓவா தேத்தி யுளத்தடைத் தார்வினை
காவா யென்றுதங் கைதொழு வார்க்கெலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே.       5.31.4

311. வஞ்ச மின்றி வணங்குமின் வைகலும்
வெஞ்சொ லின்றி விலகுமின் வீடுற
நைஞ்சு நைஞ்சுநின் றுள்குளிர் வார்க்கெலாம்
அஞ்ச லென்றிடும் ஆனைக்கா அண்ணலே.       5.31.5

312. நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.       5.31.6

313. ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலுங்
கழுக ரிப்பதன் முன்னங் கழலடி
தொழுது கைகளாற் றூமலர் தூவிநின்
றழும வர்க்கன்பன் ஆனைக்கா அண்ணலே.       5.317

314. உருளும் போதறி வொண்ணா உலகத்தீர்
தெருளுஞ் சிக்கெனத் தீவினை சேராதே
இருள றுத்துநின் றீசனென் பார்க்கெலாம்
அருள் கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே.       5.31.8

315. நேச மாகி நினைமட நெஞ்சமே
நாச மாய குலநலஞ் சுற்றங்கள்
பாச மற்றுப் பராபர ஆனந்த
ஆசை யுற்றிடும் ஆனைக்கா அண்ணலே.       5.31.9

316. ஓத மாகடல் சூழிலங் கைக்கிறை
கீதங் கின்னரம் பாடக் கெழுவினான்
பாதம் வாங்கிப் பரிந்தருள் செய்தங்கோர்
ஆதி யாயிடும் ஆனைக்கா அண்ணலே.       5.31.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சம்புகேசுவரர்,
தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
-------------------


5.32 திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

317. கொடிகொள் செல்வ விழாக்குண லையறாக்
கடிகொள் பூம்பொழிற் கச்சிஏ கம்பனார்
பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்
அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.       5.32.1

318. ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப்
பார்த்த னோடு படைதொடு மாகிலும்
பூத்த நீள்பொழிற் பூந்துருத் திந்நகர்த்
தீர்த்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.       5.32.2

319. மாதி னைமதித் தானொரு பாகமாக்
காத லாற்கரந் தான்சடைக் கங்கையைப்
பூத நாயகன் பூந்துருத் திந்நகர்க்
காதி சேவடிக் கீழ்நா மிருப்பதே.       5.32.3

320. மூவ னாய்முத லாயிவ் வுலகெலாங்
காவ னாய்க்கடுங் காலனைக் காய்ந்தவன்
பூவின் நாயகன் பூந்துருத் திந்கர்த்
தேவன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.       5.32.4

321. செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில்
உம்ப ராரவ ரோடங் கிருக்கிலும்
பொன்பொ னார்செல்வப் பூந்துருத் திந்நகர்
நம்பன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.       5.32.5

322. வல்லம் பேசி வலிசெய்மூன் றூரினைக்
கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான்
புல்லம் பேசியும் பூந்துருத் திந்நகர்ச்
செல்வன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.       5.32.6

323. ஒருத்த னாயுல கேழுந் தொழநின்று
பருத்த பாம்பொடு பான்மதி கங்கையும்
பொருத்த னாகிலும் பூந்துருத் திந்நகர்த்
திருத்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.       5.32.7

324. அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்
கருத நின்றவர் காண்பரி தாயினான்
பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச்
சதுரன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.       5.32.8

325. செதுக றாமனத் தார்புறங் கூறினுங்
கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும்
பொதுவின் நாயகன் பூந்துருத் திந்நகர்க்
கதிபன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.       5.32.9

326. துடித்த தோல்வலி வாளரக் கன்றனைப்
பிடித்த கைஞ்ஞெரிந் துற்றன கண்ணெலாம்
பொடிக்க வூன்றிய பூந்துருத் திந்நகர்ப்
படிக்கொள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.       5.32.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புஷ்பவனநாதர்,
தேவியார் - அழகாலமர்ந்தநாயகி.

திருச்சிற்றம்பலம்
--------------------


5.33 திருச்சோற்றுத்துறை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

327. கொல்லை யேற்றினர் கோளர வத்தினர்
தில்லைச் சிற்றம் பலத்துறைச் செல்வனார்
தொல்லை யூழியர் சோற்றுத் துறையர்க்கே
வல்லை யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.       5.33.1

328. முத்தி யாக வொருதவஞ் செய்திலை
அத்தி யாலடி யார்க்கொன் றளித்திலை
தொத்து நின்றலர் சோற்றுத் துறையர்க்கே
பத்தி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.       5.33.2

329. ஒட்டி நின்ற உடலுறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்தவை போயறத்
தொட்டு நின்றுமச் சோற்றுத் துறையர்க்கே
பட்டி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.       5.333

330. ஆதி யானண்ட வாணர்க் கருள்நல்கு
நீதி யானென்றும் நின்மல னேயென்றுஞ்
சோதி யானென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
வாதி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.       5.33.4

331. ஆட்டி னாயடி யேன்வினை யாயின
ஓட்டி னாயொரு காதில் இலங்குவெண்
தோட்டி னாயென்று சோற்றுத் துறையர்க்கே
நீட்டி நீபணி செய்மட நெஞ்சமே.       5.33.5

332. பொங்கி நின்றெழுந் தகடல் நஞ்சினைப்
பங்கி யுண்டதோர் தெய்வமுண் டோ சொலாய்
தொங்கி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்குத்
தங்கி நீபணி செய்மட நெஞ்சமே.       5.33.6

333. ஆணி போலநீ ஆற்ற வலியைகாண்
ஏணி போலிழிந் தேறியும் ஏங்கியுந்
தோணி யாகிய சோற்றுத் துறையர்க்கே
பூணி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.       5.33.7

334. பெற்றம் ஏறிலென் பேய்படை யாகிலென்
புற்றி லாடர வேயது பூணிலென்
சுற்றி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
பற்றி நீபணி செய்மட நெஞ்சமே.       5.33.8

335. அல்லி யானர வைந்தலை நாகணைப்
பள்ளி யானறி யாத பரிசெலாஞ்
சொல்லி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
புல்லி நீபணி செய்மட நெஞ்சமே.       5.33.9

336. மிண்ட ரோடு விரவியும் வீறிலாக்
குண்டர் தம்மைக் கழிந்துய்யப் போந்துநீ
தொண்டு செய்தென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
உண்டு நீபணி செய்மட நெஞ்சமே.       5.33.10

337. வாழ்ந்த வன்வலி வாளரக் கன்றனை
ஆழ்ந்து போயல றவ்விர லூன்றினான்
சூழ்ந்த பாரிடஞ் சோற்றுத் துறையர்க்குத்
தாழ்ந்து நீபணி செய்மட நெஞ்சமே.       5.33.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர்,
தேவியார் - ஒப்பிலாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்
---------------


5.34 திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

338. கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்
புல்லி யார்புர மூன்றெரி செய்தவன்
நெல்லி யானிலை யானநெய்த் தானனைச்
சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே.       5.34.1

339. இரவ னையிடு வெண்டலை யேந்தியைப்
பரவ னைப்படை யார்மதில் மூன்றையும்
நிரவ னைநிலை யானநெய்த் தானனைக்
குரவ னைத்தொழு வார்கொடி வாணரே.       5.34.2

340. ஆனி டையைந்தும் ஆடுவ ராரிருள்
கானி டைநடம் ஆடுவர் காண்மினோ
தேனி டைமலர் பாயுநெய்த் தானனை
வானி டைத்தொழு வார்வலி வாணரே.       5.34.3

341. விண்ட வர்புர மூன்றும்வெண் ணீறெழக்
கண்ட வன்கடி தாகிய நஞ்சினை
உண்ட வன்னொளி யானநெய்த் தானனைத்
தொண்ட ராய்த்தொழு வார்சுடர் வாணரே.       5.34.4

342. முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே
சங்கி யாது சமுத்திர நஞ்சுண்டான்
நங்கை யோடு நவின்றநெய்த் தானனைத்
தங்கை யாற்றொழு வார்தலை வாணரே.       5.34.5

343. சுட்ட நீறுமெய் பூசிச் சுடலையுள்
நட்ட மாடுவர் நள்ளிருட் பேயொடே
சிட்டர் வானவர் தேருநெய்த் தானனை
இட்ட மாய்த்தொழு வாரின்ப வாணரே.       5.34.6

344. கொள்ளித் தீயெரி வீசிக் கொடியதோர்
கள்ளிக் காட்டிடை யாடுவர் காண்மினோ
தெள்ளித் தேறித் தெளிந்துநெய்த் தானனை
உள்ளத் தாற்றொழு வாரும்பர் வாணரே.       5.34.7

345. உச்சி மேல்விளங் கும்மிள வெண்பிறை
பற்றி யாடர வோடுஞ்ச டைப்பெய்தான்
நெற்றி யாரழல் கண்டநெய்த் தானனைச்
சுற்றி மெய்தொழு வார்சுடர் வாணரே.       5.34.8

346. மாலொ டும்மறை யோதிய நான்முகன்
காலொ டும்முடி காண்பரி தாயினான்
சேலொ டுஞ்செருச் செய்யும்நெய்த் தானனை
மாலொ டுந்தொழு வார்வினை வாடுமே.       5.34.9

347. வலிந்த தோள்வலி வாளரக் கன்றனை
நெருங்க நீள்வரை யூன்றுநெய்த் தானனார்
புரிந்து கைந்நரம் போடிசை பாடலும்
பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே.       5.34.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர், தேவியார் - பாலாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்
-----------------


5.35 திருப்பழனம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

348. அருவ னாய்அத்தி ஈருரி போர்த்துமை
உருவ னாய்ஒற்றி யூர்பதி யாகிலும்
பருவ ரால்வயல் சூழ்ந்த பழனத்தான்
திருவி னாற்றிரு வேண்டுமித் தேவர்க்கே.       5.35.1

349. வையம் வந்து வணங்கி வலங்கொளும்
ஐய னைஅறி யார்சிலர் ஆதர்கள்
பைகொ ளாடர வார்த்த பழனன்பால்
பொய்யர் காலங்கள் போக்கிடு வார்களே.       5.35.2

350. வண்ண மாக முறுக்கிய வாசிகை
திண்ண மாகத் திருச்சடைச் சேர்த்தியே
பண்ணு மாகவே பாடும் பழனத்தான்
எண்ணும் நீரவன் ஆயிர நாமமே.       5.35.3

351. மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட
வாக்கப் பாம்பினைக் கண்ட துணிமதி
பாக்கப் பாம்பினைப் பற்றும் பழனத்தான்
தார்க்கொண் மாலை சடைக்கரந் திட்டதே.       5.35.4

352. நீல முண்ட மிடற்றினன் நேர்ந்ததோர்
கோல முண்ட குணத்தான் நிறைந்ததோர்
பாலு முண்டு பழனன்பா லென்னிடை
மாலு முண்டிறை யென்றன் மனத்துளே.       5.35.5

353. மந்த மாக வளர்பிறை சூடியோர்
சந்த மாகத் திருச்சடை சாத்துவான்
பந்த மாயின தீர்க்கும் பழனத்தான்
எந்தை தாய்தந்தை எம்பெரு மானுமே.       5.35.6

354. மார்க்க மொன்றறி யார்மதி யில்லிகள்
பூக்க ரத்திற் புரிகிலர் மூடர்கள்
பார்க்க நின்று பரவும் பழனத்தான்
தாட்கண் நின்று தலைவணங் கார்களே.       5.35.7

355. ஏறி னாரிமை யோர்கள் பணிகண்டு
தேறு வாரலர் தீவினை யாளர்கள்
பாறி னார்பணி வேண்டும் பழனத்தான்
கூறி னானுமை யாளொடுங் கூடவே.       5.35.8

356. சுற்று வார்தொழு வார்சுடர் வண்ணன்மேல்
தெற்றி னார்திரி யும்புர மூன்றெய்தான்
பற்றி னார்வினை தீர்க்கும் பழனனை
எற்றி னான்மறக் கேனெம் பிரானையே.       5.35.9

357. பொங்கு மாகடல் சூழ்இலங் கைக்கிறை
அங்க மான இறுத்தருள் செய்தவன்
பங்க னென்றும் பழனன் உமையொடுந்
தங்கன் றானடி யேனுடை யுச்சியே.       5.35.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
--------------


5.36 திருச்செம்பொன்பள்ளி - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

358. கான றாத கடிபொழில் வண்டினந்
தேன றாத திருச்செம்பொன் பள்ளியான்
ஊன றாததோர் வெண்டலை யிற்பலி
தான றாததோர் கொள்கையன் காண்மினே.       5.36.1

359. என்பும் ஆமையும் பூண்டங் குழிதர்வர்க்
கன்பு மாயிடும் ஆயிழை யீரினிச்
செம்பொன் பள்ளியு ளான்சிவ லோகனை
நம்பொன் பள்ளியுள் கவினை நாசமே.       5.36.2

360. வேறு கோலத்தர் ஆணலர் பெண்ணலர்
கீறு கோவண வைதுகி லாடையர்
தேற லாவதொன் றன்றுசெம் பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ணல் அவனையே.       5.36.3

361. அருவ ராததோர் வெண்டலை யேந்திவந்
திருவ ராயிடு வார்கடை தேடுவார்
தெருவெ லாமுழல் வார்செம்பொன் பள்ளியார்
ஒருவர் தாம்பல பேருளர் காண்மினே.       5.36.4

362. பூவு லாஞ்சடை மேற்புனல் சூடினான்
ஏவ லாலெயில் மூன்றும் எரித்தவன்
தேவர் சென்றிறைஞ் சுஞ்செம்பொன் பள்ளியான்
மூவ ராய்முத லாய்நின்ற மூர்த்தியே.       5.36.5

363. சலவ ராயொரு பாம்பொடு தண்மதி
கலவ ராவதன் காரண மென்கொலோ
திலக நீண்முடி யார்செம்பொன் பள்ளியார்
குலவி லாலெயில் மூன்றெய்த கூத்தரே.       5.36.6

364. கைகொள் சூலத்தர் கட்டுவாங் கத்தினர்
மைகொள் கண்டத்த ராகி இருசுடர்
செய்ய மேனிவெண் ணீற்றர்செம் பொன்பள்ளி
ஐயர் கையதோர் ஐந்தலை நாகமே.       5.36.7

365. வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர்
பைங்கண் ஆனையின் ஈருரி போர்த்தவர்
செங்கண் மால்விடை யார்செம்பொன் பள்ளியார்
அங்க ணாயடைந் தார்வினை தீர்ப்பரே.       5.36.8

366. நன்றி நாரணன் நான்முக னென்றிவர்
நின்ற நீண்முடி யோடடி காண்புற்றுச்
சென்று காண்பரி யான்செம்பொன் பள்ளியான்
நின்ற சூழலில் நீளெரி யாகியே.       5.36.9

367. திரியு மும்மதில் செங்கணை யொன்றினால்
எரிய வெய்தன லோட்டி இலங்கைக்கோன்
நெரிய வூன்றியிட் டார்செம்பொன் பள்ளியார்
அரிய வானம் அவரருள் செய்வரே.       5.36.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகி.

திருச்சிற்றம்பலம்
------------------


5.37 திருக்கடவூர்வீரட்டம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

368. மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை
நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே
கொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலாற்
கலைக்கை யானைகண் டீர்கட வூரரே.       5.37.1

369. வெள்ளி மால்வரை போல்வதோ ரானையார்
உள்ள வாறெனை உள்புகு மானையார்
கொள்ள மாகிய கோயிலு ளானையார்
கள்ள வானைகண் டீர்கட வூரரே.       5.37.2

370. ஞான மாகிய நன்குண ரானையார்
ஊனை வேவ வுருக்கிய ஆனையார்
வேன லானை யுரித்துமை அஞ்சவே
கான லானைகண் டீர்கட வூரரே.       5.37.3

371. ஆல முண்டழ காயதோ ரானையார்
நீல மேனி நெடும்பளிங் கானையார்
கோல மாய கொழுஞ்சுட ரானையார்
கால வானைகண் டீர்கட வூரரே.       5.37.4

372. அளித்த ஆனஞ்சு மாடிய வானையார்
வெளுத்த நீள்கொடி யேறுடை யானையார்
எளித்த வேழத்தை எள்குவித் தானையார்
களித்த வானைகண் டீர்கட வூரரே.       5.37.5

373. விடுத்த மால்வரை விண்ணுற வானையார்
தொடுத்த மால்வரை தூயதோ ரானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததோ ரானையார்
கடுத்த வானைகண் டீர்கட வூரரே.       5.37.6

374. மண்ணு ளாரை மயக்குறு மானையார்
எண்ணு ளார்பல ரேத்திடு மானையார்
விண்ணு ளார்பல ரும்மறி யானையார்
கண்ணு ளானைகண் டீர்கட வூரரே.       5.37.7

375. சினக்குஞ் செம்பவ ளத்திர ளானையார்
மனக்கும் வல்வினை தீர்த்திடு மானையார்
அனைக்கும் அன்புடை யார்மனத் தானையார்
கனைக்கு மானைகண் டீர்கட வூரரே.       5.37.8

376. வேத மாகிய வெஞ்சுட ரானையார்
நீதி யானில னாகிய வானையார்
ஓதி யூழி தெரிந்துண ரானையார்
காத லானைகண் டீர்கட வூரரே.       5.37.9

377. நீண்ட மாலொடு நான்முகன் றானுமாய்க்
காண்டு மென்றுபுக் கார்க ளிருவரும்
மாண்ட வாரழ லாகிய வானையார்
காண்ட லானைகண் டீர்கட வூரரே.       5.37.10

378. அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்கள் இறநெரித் தானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததோ ரானையார்
கடுக்கை யானைகண் டீர்கட வூரரே.       5.37.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர், தேவியார் - அபிராமியம்மை.

திருச்சிற்றம்பலம்
---------------


5.38 திருக்கடவூர்மயானம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

379. குழைகொள் காதினர் கோவண ஆடையர்
உழையர் தாங்கட வூரின் மயானத்தார்
பழைய தம்மடி யார்செயும் பாவமும்
பிழையுந் தீர்ப்பர் பெருமா னடிகளே.       5.38.1

380. உன்னி வானவர் ஓதிய சிந்தையிற்
கன்னல் தேன்கட வூரின் மயானத்தார்
தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெலாம்
பின்னை என்னார் பெருமா னடிகளே.       5.38.2

381. சூல மேந்துவர் தோலுடை ஆடையர்
ஆல முண்டமு தேமிகத் தேக்குவர்
கால காலர் கடவூர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமா னடிகளே.       5.38.3

382. இறைவ னாரிமை யோர்தொழு பைங்கழல்
மறவ னார்கட வூரின் மயானத்தார்
அறவ னாரடி யாரடி யார்தங்கள்
பிறவி தீர்ப்பர் பெருமா னடிகளே.       5.38.4

383. கத்து காளி கதந்தணி வித்தவர்
மத்தர் தாங்கட வூரின் மயானத்தார்
ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொரு
பித்தர் காணும் பெருமா னடிகளே.       5.38.5

384. எரிகொள் மேனி இளம்பிறை வைத்தவர்
கரியர் தாங்கட வூரின் மயானத்தார்
அரியர் அண்டத்து ளோரயன் மாலுக்கும்
பெரியர் காணும் பெருமா னடிகளே.       5.38.6

385. அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை
கணங்கள் சேர்கட வூரின் மயானத்தார்
வணங்கு வாரிடர் தீர்ப்பர் மயக்குறும்
பிணங்கொள் காடர் பெருமா னடிகளே.       5.38.7

386. அரவு கையினர் ஆதி புராணனார்
மரவு சேர்கட வூரின் மயானத்தார்
பரவு வாரிடர் தீர்ப்பர் பணிகொள்வார்
பிரமன் மாற்கும் பெருமா னடிகளே.       5.38.8

இப்பதிகத்தில் 9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.       5.38.9-10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர், தேவியார் - மலர்க்குழன்மின்னம்மை.

திருச்சிற்றம்பலம்
----------------


5.39 திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

387. கொள்ளுங் காதன்மை பெய்துறுங் கோல்வளை
உள்ளம் உள்கி யுரைக்குந் திருப்பெயர்
வள்ளல் மாமயி லாடு துறையுறை
வெள்ளந் தாங்கு சடையனை வேண்டியே.       5.39.1

388. சித்தந் தேறுஞ் செறிவளை சிக்கெனும்
பச்சை தீருமென் பைங்கொடி பான்மதி
வைத்த மாமயி லாடு துறையரன்
கொத்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே.       5.39.2

389. அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையுங்
கண்டு வீற்றிருக் குங்கருத் தொன்றிலோம்
வண்டு சேர்மயி லாடு துறையரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.       5.39.3

390. வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொ லாளுமை பங்கன் அருளிலே.       5.39.4

391. குறைவி லோங்கொடு மானிட வாழ்க்கையாற்
கறைநி லாவிய கண்டனெண் டோ ளினன்
மறைவ லான்மயி லாடு துறையுறை
இறைவன் நீள்கழ லேத்தி யிருக்கிலே.       5.39.5

392. நிலைமை சொல்லுநெஞ் சேதவ மென்செய்தாய்
கலைக ளாயவல் லான்கயி லாயநன்
மலையன் மாமயி லாடு துறையன்நம்
தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே.       5.39.6

393. நீற்றி னான்நிமிர் புன்சடை யான்விடை
ஏற்றி னான்நமை யாளுடை யான்புலன்
மாற்றி னான்மயி லாடு துறையென்று
போற்று வார்க்குமுண் டோ புவி வாழ்க்கையே.       5.39.7

394. கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமுந்
தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்
நீல மாமயி லாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே.       5.39.8

395. பணங்கொ ளாடர வல்குற் பகீரதி
மணங்கொ ளச்சடை வைத்த மறையவன்
வணங்கு மாமயி லாடு துறையரன்
அணங்கோர் பால்கொண்ட கோலம் அழகிதே.       5.39.9

396. நீணி லாவர வச்சடை நேசனைப்
பேணி லாதவர் பேதுற வோட்டினோம்
வாணி லாமயி லாடு துறைதனைக்
காணி லார்க்குங் கடுந்துய ரில்லையே.       5.39.10

397. பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தி னானவன் இன்னிசை கேட்டலும்
வரத்தி னான்மயி லாடு துறைதொழுங்
கரத்தி னார்வினைக் கட்டறுங் காண்மினே.       5.39.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாயூரநாதர், தேவியார் - அஞ்சொல்நாயகி.

திருச்சிற்றம்பலம்
-------------------


5.40 திருக்கழிப்பாலை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

398. வண்ண மும்வடி வுஞ்சென்று கண்டிலள்
எண்ணி நாமங்க ளேத்தி நிறைந்திலள்
கண்ணு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம்
அண்ண லேயறி வானிவள் தன்மையே.       5.40.1

399. மருந்து வானவர் உய்யநஞ் சுண்டுகந்
திருந்த வன்கழிப் பாலையுள் எம்பிரான்
திருந்து சேவடி சிந்தையுள் வைத்திவள்
பரிந்து ரைக்கிலு மென்சொற் பழிக்குமே.       5.40.2

400. மழலை தான்வரச் சொற்றெரி கின்றிலள்
குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ
அழக னேகழிப் பாலையெம் மண்ணலே
இகழ்வ தோயெனை ஏன்றுகொ ளென்னுமே.       5.40.3

401. செய்ய மேனிவெண் ணீறணி வான்றனை
மைய லாகி மதிக்கில ளாரையுங்
கைகொள் வெண்மழு வன்கழிப் பாலையெம்
ஐய னேஅறி வானிவள் தன்மையே.       5.40.4

402. கருத்த னைக்கழிப் பாலையுள் மேவிய
ஒருத்த னையுமை யாளொரு பங்கனை
அருத்தி யாற்சென்று கண்டிட வேண்டுமென்
றொருத்தி யாருளம் ஊசல தாகுமே.       5.40.5

403. கங்கை யைச்சடை வைத்து மலைமகள்
நங்கை யையுட னேவைத்த நாதனார்
திங்கள் சூடித் திருக்கழிப் பாலையான்
இங்கு வந்திடு மென்றிறு மாக்குமே.       5.40.6

404. ஐய னேஅழ கேஅன லேந்திய
கைய னேகறை சேர்தரு கண்டனே
மையு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம்
ஐய னேவிதி யேஅரு ளென்னுமே.       5.40.7

405. பத்தர் கட்கமு தாய பரத்தினை
முத்த னைமுடி வொன்றிலா மூர்த்தியை
அத்த னைஅணி யார்கழிப் பாலையெஞ்
சித்த னைச்சென்று சேருமா செப்புமே.       5.40.8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.       5.40.9

406. பொன்செய் மாமுடி வாளரக் கன்றலை
அஞ்சு நான்குமொன் றும்மிறுத் தானவன்
என்செ யான்கழிப் பாலையு ளெம்பிரான்
துஞ்சும் போதுந் துணையென லாகுமே.       5.40.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ண நாதர், தேவியார் - வேதநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
--------------------


5.41 திருப்பைஞ்ஞீலி - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

407. உடையர் கோவண மொன்றுங் குறைவிலர்
படைகொள் பாரிடஞ் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
சடையிற் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க் கில்லை அவலமே.       5.41.1

408. மத்த மாமலர் சூடிய மைந்தனார்
சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால்
பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம்
அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே.       5.41.2

409. விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சிருட் காட்டகத் தாடலான்
பழுதொன் றின்றிப்பைஞ் ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர் தம்வினை தூளியே.       5.41.3

410. ஒன்றி மாலும் பிரமனுந் தம்மிலே
நின்ற சூழ லறிவரி யானிடஞ்
சென்று பாரிட மேத்துபைஞ் ஞீலியுள்
என்றும் மேவி யிருந்த அடிகளே.       5.41.4

411. வேழத் தின்னுரி போர்த்த விகிர்தனார்
தாழச் செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
தாழைத் தண்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
யாழின் பாட்டை யுகந்த அடிகளே.       5.41.5

412. குண்டு பட்டுக் குறியறி யாச்சமண்
மிண்ட ரோடு படுத்துய்யப் போந்துநான்
கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
அண்ட வாணன் அடியடைந் துய்ந்தனே.       5.41.6

413. வரிப்பை யாடர வாட்டி மதகரி
உரிப்பை மூடிய வுத்தம னாருறை
திருப்பைஞ் ஞீலி திசைதொழு வார்கள்போய்
இருப்பர் வானவ ரோடினி தாகவே.       5.41.7

414. கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல்
பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார்
பேடு மாணும் பிறரறி யாததோர்
ஆடு நாகம் அசைத்த அடிகளே.       5.41.8

415. காரு லாமலர்க் கொன்றையந் தாரினான்
வாரு லாமுலை மங்கையோர் பங்கினன்
தேரு லாம்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
ஆர்கி லாவமு தையடைந் துய்ம்மினே.       5.41.9

416. தருக்கிச் சென்று தடவரை பற்றலும்
நெருக்கி யூன்ற நினைந்து சிவனையே
அரக்கன் பாட அருளுமெம் மானிடம்
இருக்கை ஞீலியென் பார்க்கிட ரில்லையே.       5.41.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர்,
தேவியார் - விசாலாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்
--------------


5.42 திருவேட்களம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

417. நன்று நாடொறும் நம்வினை போயறும்
என்று மின்பந் தழைக்க இருக்கலாஞ்
சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே.       5.42.1

418. கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்
விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு
திருப்ப னாகில் எனக்கிட ரில்லையே.       5.42.2

419. வேட்க ளத்துறை வேதியன் எம்மிறை
ஆக்க ளேறுவர் ஆனைஞ்சு மாடுவர்
பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்
காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே.       5.42.3

420. அல்ல லில்லை அருவினை தானில்லை
மல்கு வெண்பிறை சூடு மணாளனார்
செல்வ னார்திரு வேட்களங் கைதொழ
வல்ல ராகில் வழியது காண்மினே.       5.42.4

421. துன்ப மில்லை துயரில்லை யாமினி
நம்ப னாகிய நன்மணி கண்டனார்
என்பொ னாருறை வேட்கள நன்னகர்
இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே.       5.42.5

422. கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்
பட்ட வல்வினை யாயின பாறுமே.       5.42.6

423. வட்ட மென்முலை யாளுமை பங்கனார்
எட்டு மொன்றும் இரண்டுமூன் றாயினார்
சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழு
திட்ட மாகி யிருமட நெஞ்சமே.       5.42.7

424. நட்ட மாடிய நம்பனை நாடொறும்
இட்டத் தாலினி தாக நினைமினோ
வட்ட வார்முலை யாளுமை பங்கனார்
சிட்ட னார்திரு வேட்களந் தன்னையே.       5.42.8

425. வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ்
சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே.       5.42.9

426. சேட னாருறை யுஞ்செழு மாமலை
ஓடி யாங்கெடுத் தான்முடி பத்திற
வாட வூன்றி மலரடி வாங்கிய
வேட னாருறை வேட்களஞ் சேர்மினே.       5.42.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசுபதேசுவரர், தேவியார் - நல்லநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
-------------


5.43 திருநல்லம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

427. கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்
இல்லத் தார்செய்ய லாவதென் ஏழைகாள்
நல்லத் தான்நமை யாளுடை யான்கழல்
சொல்லத் தான்வல்லி ரேற்றுயர் தீருமே.       5.43.1

428. பொக்கம் பேசிப் பொழுது கழியாதே
துக்கந் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்
நக்கன் சேர்நல்லம் நண்ணுதல் நன்மையே.       5.43.2

429. பிணிகொள் வார்குழற் பேதையர் காதலாற்
பணிகள் மேவிப் பயனில்லை பாவிகாள்
அணுக வேண்டில் அரனெறி யாவது
நணுகு நாதன் நகர்திரு நல்லமே.       5.43.3

430. தமக்கு நல்லது தம்முயிர் போயினால்
இமைக்கும் போதும் இராதிக் குரம்பைதான்
உமைக்கு நல்லவன் றானுறை யும்பதி
நமக்கு நல்லது நல்ல மடைவதே.       5.43.4

431. உரைத ளர்ந்துட லார்நடுங் காமுனம்
நரைவி டையுடை யானிடம் நல்லமே
பரவு மின்பணி மின்பணி வாரொடே
விரவு மின்விர வாரை விடுமினே.       5.43.5

432. அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும்
வல்ல வாறு சிவாய நமவென்று
நல்லம் மேவிய நாத னடிதொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.       5.43.6

433. மாத ராரொடு மக்களுஞ் சுற்றமும்
பேத மாகிப் பிரிவதன் முன்னமே
நாதன் மேவிய நல்லம் நகர்தொழப்
போது மின்னெழு மின்புக லாகுமே.       5.43.7

434. வெம்மை யான வினைக்கடல் நீங்கிநீர்
செம்மை யாய சிவகதி சேரலாஞ்
சும்மை யார்மலர் தூவித் தொழுமினோ
நம்மை யாளுடை யானிடம் நல்லமே.       5.43.8

435. கால மான கழிவதன் முன்னமே
ஏலு மாறு வணங்கிநின் றேத்துமின்
மாலும் மாமல ரானொடு மாமறை
நாலும் வல்லவர் கோனிடம் நல்லமே.       5.43.9

436. மல்லை மல்கிய தோளரக் கன்வலி
ஒல்லை யில்லொழித் தானுறை யும்பதி
நல்ல நல்லம் எனும்பெயர் நாவினாற்
சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே.       5.43.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - உமாமகேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
--------------


5.44 திருவாமாத்தூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

437. மாமாத் தாகிய மாலயன் மால்கொடு
தாமாத் தேடியுங் காண்கிலர் தாள்முடி
ஆமாத் தூரர னேஅரு ளாயென்றென்
றேமாப் பெய்திக்கண் டாரிறை யானையே.       5.44.1

438. சந்தி யானைச் சமாதிசெய் வார்தங்கள்
புந்தி யானைப்புத் தேளிர் தொழப்படும்
அந்தி யானை ஆமத்தூர் அழகனைச்
சிந்தி யாதவர் தீவினை யாளரே.       5.44.2

439. காமாத் தம்மெனுங் கார்வலைப் பட்டுநான்
போமாத் தையறி யாது புலம்புவேன்
ஆமாத் தூரர னேயென் றழைத்தலுந்
தேமாத் தீங்கனி போலத்தித் திக்குமே.       5.44.3

440. பஞ்ச பூத வலையிற் படுவதற்
கஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை
நெஞ்சி னால்நினைந் தேன்நினை வெய்தலும்
வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே.       5.44.4

441. குராம னுங்குழ லாளொரு கூறனார்
அராம னுஞ்சடை யான்றிரு வாமாத்தூர்
இராம னும்வழி பாடுசெய் ஈசனை
நிராம யன்றனை நாளும் நினைமினே.       5.44.5

442. பித்த னைப்பெருந் தேவர் தொழப்படும்
அத்த னையணி யாமாத்தூர் மேவிய
முத்தி னையடி யேனுள் முயறலும்
பத்தி வெள்ளம் பரந்தது காண்மினே.       5.44.6

443. நீற்றி னார்திரு மேனியன் நேரிழை
கூற்றி னான்குழல் கோலச் சடையிலோர்
ஆற்றி னான்அணி ஆமாத்தூர் மேவிய
ஏற்றி னான்எமை யாளுடை ஈசனே.       5.44.7

444. பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்
கண்ணித் தாகும் அமுதினை ஆமாத்தூர்
சண்ணிப் பானைத் தமர்க்கணித் தாயதோர்
கண்ணிற் பாவையன் னானவன் காண்மினே.       5.44.8

445. குண்டர் பீலிகள் கொள்ளுங் குணமிலா
மிண்ட ரோடெனை வேறு படுத்துயக்
கொண்ட நாதன் குளிர்புனல் வீரட்டத்
தண்ட னாரிடம் ஆமாத்தூர் காண்மினே.       5.44.9

446. வானஞ் சாடு மதியர வத்தொடு
தானஞ் சாதுடன் வைத்த சடையிடைத்
தேனஞ் சாடிய தெங்கிள நீரொடும்
ஆனஞ் சாடிய ஆமாத்தூர் ஐயனே.       5.44.10

447. விடலை யாய்விலங் கல்லெடுத் தான்முடி
அடர வோர்விரல் ஊன்றிய ஆமாத்தூர்
இடம தாக்கொண்ட ஈசனுக் கென்னுளம்
இடம தாகக்கொண் டின்புற் றிருப்பனே.       5.44.11

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அழகியநாதர், தேவியார் - அழகியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
-------------


5.45 திருத்தோணிபுரம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

448. மாதி யன்று மனைக்கிரு வென்றக்கால்
நீதி தான்சொல நீயெனக் காரெனுஞ்
சோதி யார்தரு தோணி புரவர்க்குத்
தாதி யாவன்நா னென்னுமென் தையலே.       5.45.1

449. நக்கம் வந்து பலியிடென் றார்க்கிட்ட
மிக்க தையலை வெள்வளை கொள்வது
தொக்க நீர்வயல் தோணி புரவர்க்குத்
தக்க தன்று தமது பெருமைக்கே.       5.45.2

450. கெண்டை போல்நய னத்திம வான்மகள்
வண்டு வார்குழ லாளுட னாகவே
துண்ட வான்பிறைத் தோணி புரவரைக்
கண்டு காமுறு கின்றனள் கன்னியே.       5.45.3

451. பாலை யாழ்மொழி யாளவள் தாழ்சடை
மேல ளாவது கண்டனள் விண்ணுறச்
சோலை யார்தரு தோணி புரவர்க்குச்
சால நல்லளா கின்றனள் தையலே.       5.45.4

452. பண்ணின் நேர்மொழி யாள்பலி யிட்டவிப்
பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது
சுண்ண மாடிய தோணி புரத்துறை
அண்ண லாருக்குச் சால அழகிதே.       5.45.5

453. முல்லை வெண்ணகை மொய்குழ லாயுனக்
கல்ல னாவ தறிந்திலை நீகனித்
தொல்லை யார்பொழில் தோணி புரவர்க்கே
நல்லை யாயிடு கின்றனை நங்கையே.       5.45.6

454. ஒன்று தானறி யாருல கத்தவர்
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர்
துன்று வார்பொழில் தோணி புரவர்தங்
கொன்றை சூடுங் குறிப்பது வாகுமே.       5.45.7

455. உறவு பேய்க்கணம் உண்பது வெண்டலை
உறைவ தீமம் உடலிலோர் பெண்கொடி
துறைக ளார்கடல் தோணி புரத்துறை
இறைவ னார்க்கிவள் என்கண்டன் பாவதே.       5.45.8

456. மாக யானை மருப்பேர் முலையினர்
போக யானு மவள்புக்க தேபுகத்
தோகை சேர்தரு தோணி புரவர்க்கே
ஆக யானு மவர்க்கினி யாளதே.       5.45.9

457. இட்ட மாயின செய்வாளென் பெண்கொடி
கட்டம் பேசிய காரரக் கன்றனைத்
துட்ட டக்கிய தோணி புரத்துறை
அட்ட மூர்த்திக்கு அன்பது வாகியே.       5.45.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தோணியப்பர், தேவியார் - திருநிலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
------------------


5.46 திருப்புகலூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

458. துன்னக் கோவணச் சுண்ணவெண் ணீறணி
பொன்னக் கன்ன சடைப்புக லூரரோ
மின்னக் கன்னவெண் டிங்களைப் பாம்புடன்
என்னுக் கோவுடன் வைத்திட் டிருப்பதே.       5.46.1

459. இரைக்கும் பாம்பு மெறிதரு திங்களும்
நுரைக்குங் கங்கையும் நுண்ணிய செஞ்சடைப்
புரைப்பி லாத பொழிற்புக லூரரை
உரைக்கு மாசொல்லி ஒள்வளை சோருமே.       5.46.2

460. ஊச லாம்அர வல்குலென் சோர்குழல்
ஏச லாம்பழி தந்தெழில் கொண்டனர்
ஓசொ லாய்மக ளேமுறை யோவென்று
பூசல் நாமிடு தும்புக லூரர்க்கே.       5.46.3

461. மின்னின் நேரிடை யாளுமை பங்கனைத்
தன்னை நேரொப் பிலாத தலைவனைப்
புன்னைக் கானற் பொழில்புக லூரனை
என்னு ளாகவைத் தின்புற் றிருப்பனே.       5.46.4

462. விண்ணி னார்மதி சூடிய வேந்தனை
எண்ணி நாமங்கள் ஓதி எழுத்தஞ்சுங்
கண்ணி னாற்கழல் காண்பிட மேதெனிற்
புண்ணி யன்புக லூருமென் நெஞ்சுமே.       5.46.5

463. அண்ட வாணர் அமுதுண நஞ்சுண்டு
பண்டு நான்மறை யோதிய பாடலன்
தொண்ட ராகித் தொழுது மதிப்பவர்
புண்ட ரீகத்து ளார்புக லூரரே.       5.46.6

464. தத்து வந்தலை கண்டறி வாரிலை
தத்து வந்தலை கண்டவர் கண்டிலர்
தத்து வந்தலை நின்றவர்க் கல்லது
தத்து வன்னலன் தண்புக லூரனே.       5.46.7

465. பெருங்கை யாகிப் பிளிறி வருவதோர்
கருங்கை யானைக் களிற்றுரி போர்த்தவர்
வருங்கை யானை மதகளி றஞ்சினைப்
பொருங்கை யானைகண் டீர்புக லூரரே.       5.46.8

466. பொன்னொத் தநிறத் தானும் பொருகடல்
தன்னொத் தநிறத் தானும் அறிகிலாப்
புன்னைத் தாது பொழிற்புக லூரரை
என்னத் தாவென என்னிடர் தீருமே.       5.46.9

467. மத்த னாய்மதி யாது மலைதனை
எத்தி னான்றிரள் தோள்முடி பத்திற
ஒத்தி னான்விர லாலொருங் கேத்தலும்
பொத்தி னான்புக லூரைத் தொழுமினே.       5.46.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர், தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம்
------------


5.47 திருவேகம்பம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

468. பண்டு செய்த பழவினை யின்பயன்
கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே
வண்டு லாமலர்ச் செஞ்சடை யேகம்பன்
தொண்ட னாய்த்திரி யாய்துயர் தீரவே.       5.47.1

469. நச்சி நாளும் நயந்தடி யார்தொழ
இச்சை யாலுமை நங்கை வழிபடக்
கொச்சை யார்குறு கார்செறி தீம்பொழிற்
கச்சி யேகம்ப மேகை தொழுமினே.       5.47.2

470. ஊனி லாவி இயங்கி உலகெலாம்
தானு லாவிய தன்மைய ராகிலும்
வானு லாவிய பாணி பிறங்கவெங்
கானி லாடுவர் கச்சியே கம்பரே.       5.47.3

471. இமையா முக்கணர் என்னெஞ்சத் துள்ளவர்
தமையா ரும்மறி வொண்ணாத் தகைமையர்
இமையோ ரேத்த இருந்தவன் ஏகம்பன்
நமையா ளும்மவ னைத்தொழு மின்களே.       5.47.4

472. மருந்தி னோடுநற் சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்றெனக் காயவெம் புண்ணியன்
கருந்த டங்கண்ணி னாளுமை கைதொழ
இருந்த வன்கச்சி ஏகம்பத் தெந்தையே.       5.47.5

473. பொருளி னோடுநற் சுற்றமும் பற்றிலர்க்
கருளும் நன்மைதந் தாய அரும்பொருள்
சுருள்கொள் செஞ்சடை யான்கச்சி யேகம்பம்
இருள்கெடச் சென்று கைதொழு தேத்துமே.       5.47.6

474. மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவந்
தாக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள்
நோக்கு வான்நமை நோய்வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சி யேகம்பனே.       5.47.7

475. பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை
பெண்ணொ டாணென்று பேசற் கரியவன்
வண்ண மில்லி வடிவுவே றாயவன்
கண்ணி லுண்மணி கச்சி யேகம்பனே.       5.47.8

476. திருவின் நாயகன் செம்மலர் மேலயன்
வெருவ நீண்ட விளங்கொளிச் சோதியான்
ஒருவ னாயுணர் வாயுணர் வல்லதோர்
கருவுள் நாயகன் கச்சி யேகம்பனே.       5.47.9

477. இடுகு நுண்ணிடை ஏந்திள மென்முலை
வடிவின் மாதர் திறம்மனம் வையன்மின்
பொடிகொள் மேனியன் பூம்பொழிற் கச்சியுள்
அடிகள் எம்மை அருந்துயர் தீர்ப்பரே.       5.47.10

478. இலங்கை வேந்தன் இராவணன் சென்றுதன்
விலங்க லையெடுக் கவ்விர லூன்றலுங்
கலங்கிக் கச்சியே கம்பவோ வென்றலும்
நலங்கொள் செலவளித் தானெங்கள் நாதனே.       5.47.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர், தேவியார் - காமாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்


5.48 திருவேகம்பம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

479 . பூமே லானும் பூமகள் கேள்வனும்
நாமே தேவ ரெனாமை நடுக்குறத்
தீமே வும்முரு வாதிரு வேகம்பா
ஆமோ அல்லற் படவடி யோங்களே.       5.48.1

480. அருந்தி றல்அம ரர்அயன் மாலொடு
திருந்த நின்று வழிபடத் தேவியோ
டிருந்த வன்னெழி லார்கச்சி யேகம்பம்
பொருந்தச் சென்று புடைபட் டெழுதுமே.       5.48.2

481. கறைகொள் கண்டத்தெண் டோ ளிறை முக்கணன்
மறைகொள் நாவினன் வானவர்க் காதியான்
உறையும் பூம்பொழில் சூழ்கச்சி யேகம்பம்
முறைமை யாற்சென்று முந்தித் தொழுதுமே.       5.48.3

482. பொறிப்பு லன்களைப் போக்கறுத் துள்ளத்தை
நெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு றும்மமு தாயவன் ஏகம்பம்
குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே.       5.48.4

483. சிந்தை யுட்சிவ மாய்நின்ற செம்மையோ
டந்தி யாய்அன லாய்ப்புனல் வானமாய்
புந்தி யாய்ப்புகுந் துள்ளம் நிறைந்தவெம்
எந்தை யேகம்பம் ஏத்தித் தொழுமினே.       5.48.5

484. சாக்கி யத்தொடு மற்றுஞ் சமண்படும்
பாக்கி யம்மிலார் பாடு செலாதுறப்
பூக்கொள் சேவடி யான்கச்சி யேகம்பம்
நாக்கொ டேத்தி நயந்து தொழுதுமே.       5.48.6

485. மூப்பி னோடு முனிவுறுத் தெந்தமை
ஆர்ப்ப தன்முன் னணிஅம ரர்க்கிறை
காப்ப தாய கடிபொழில் ஏகம்பம்
சேர்ப்ப தாகநாஞ் சென்றடைந் துய்துமே.       5.48.7

486. ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடுஞ்
சால நீயுறு மால்தவிர் நெஞ்சமே
நீல மாமிடற் றண்ணலே கம்பனார்
கோல மாமலர்ப் பாதமே கும்பிடே.       5.48.8

487. பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்ய னைச்சுடர் வெண்மழு வேந்திய
கைய னைக்கச்சி யேகம்பம் மேவிய
ஐய னைத்தொழு வார்க்கில்லை யல்லலே.       5.48.9

488. அரக்கன் றன்வலி உன்னிக் கயிலையை
நெருக்கிச் சென்றெடுத் தான்முடி தோள்நெரித்
திரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பந்
தருக்க தாகநாஞ் சார்ந்து தொழுதுமே.       5.48.10

திருச்சிற்றம்பலம்
--------------


5.49. திருவெண்காடு - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

489. பண்காட் டிப்படி யாயதன் பத்தர்க்குக்
கண்காட் டிக்கண்ணில் நின்ற மணியொக்கும்
பெண்காட் டிப்பிறைச் சென்னிவைத் தான்றிரு
வெண்காட் டையடைந் துய்ம்மட நெஞ்சமே.       5.49.1

490. கொள்ளி வெந்தழல் வீசிநின் றாடுவார்
ஒள்ளி யகணஞ் சூழுமை பங்கனார்
வெள்ளி யன்கரி யன்பசு வேறிய
தெள்ளி யன்றிரு வெண்கா டடைநெஞ்சே.       5.49.2

491. ஊனோக் குமின்பம் வேண்டி யுழலாதே
வானோக் கும்வழி யாவது நின்மினோ
தானோக் குந்தன் னடியவர் நாவினில்
தேனோக் குந்திரு வெண்கா டடைநெஞ்சே.       5.49.3

492. பருவெண் கோட்டுப்பைங் கண்மத வேழத்தின்
உருவங் காட்டிநின் றானுமை அஞ்சவே
பெருவெண் காட்டிறை வன்னுறை யும்மிடந்
திருவெண் காடடைந் துய்ம்மட நெஞ்சமே.       5.49.4

493. பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன்
உற்ற வன்சடை யானுயர் ஞானங்கள்
கற்ற வன்கய வர்புரம் ஓரம்பால்
செற்ற வன்றிரு வெண்கா டடைநெஞ்சே.       5.49.5

494. கூடி னானுமை யாளொரு பாகமாய்
வேட னாய்விச யற்கருள் செய்தவன்
சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்
காட னாரடி யேஅடை நெஞ்சமே.       5.49.6

495. தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடை யான்கய வர்புரம்
எரித்த வன்மறை நான்கினோ டாறங்கம்
விரித்த வன்னுறை வெண்கா டடைநெஞ்சே.       5.49.7

496. பட்டம் இண்டை யவைகொடு பத்தர்கள்
சிட்டன் ஆதிஎன் றுசிந்தை செய்யவே
நட்ட மூர்த்திஞா னச்சுட ராய்நின்ற
அட்ட மூர்த்திதன் வெண்காடு அடைநெஞ்சே.       5.49.8

497. ஏன வேடத்தி னானும் பிரமனும்
தான வேடமுன் தாழ்ந்தறி கின்றிலா
ஞான வேடன் விசயற்கு அருள்செயும்
கான வேடன்றன் வெண்காடு அடைநெஞ்சே.       5.49.9

498. பாலை யாடுவர் பன்மறை ஒதுவர்
சேலை யாடிய கண்ணுமை பங்கனார்
வேலை யார்விடம் உண்டவெண் காடர்க்கு
மாலை யாவது மாண்டவர் அங்கமே.       5.49.10

499. இராவ ணம் மாமதி பற்றவை
இரவ ணம்உடை யான்றனை உள்குமின்
இராவ ணன்றனை ஊன்றி அருள்செய்த
இராவ ணந்திரு வெண்காடு அடைமினே.       5.49.11

திருச்சிற்றம்பலம்
--------------------


5.50 திருவாய்மூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்
500 எங்கே என்னை இருந்து இடம் தேடிக்க்கொண்டு
அங்கே வந்துஅடை யாளம் அருளினார்
தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாஎன்று போனார் அதுஎன்கொலோ.       5.50.1

501. மன்னு மாமறைக் காட்டு மணாளனார்
உன்னி உன்னி உறங்குகின் றேனுக்குத்
தன்னை வாய்மூர்த் தலைவன் ஆமா சொல்லி
என்னஜ வாஎன்று போனார்அது என்கொலோ.       5.50.2

502. தஞ்சே கண்டேன் தரிக்கிலா தார்என்றேன்
அஞ்சேல் உன்னை அழைக்கவந் தேன்என்றார்
உஞ்சேன் என்றுகந் தேஎழுந்து ஒட்டந்தேன்
வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே.       5.50.3

503. கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன்
ஒழியப் போந்திலேன் ஒக்கவே ஒட்டந்தேன்
வழியிற் கண்டிலேன் வாய்மூர் அடிகள்தம்
கழியிற் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ.       5.50.4

504. ஒள்ளி யார்இவர் அன்றிமற்று இல்லைஎன்று
உள்கி உள்கி உகந்திருந் தேனுக்குத்
தெள்ளி யார்இவர் போலத் தெருவாய்மூர்க்
கள்ளி யாரவர் போலத் கரந்ததே.       5.50.5

505. யாதே செய்துமி யாமலோம்நீ யென்னில்
ஆதே யேயும் அளவில் பெருமையான்
மாதே வாகிய வாய்மூர் மருவினார்
போதே என்றும் புகுந்ததும் பொய்கொலோ.       5.50.6

506. பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு
வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப்போல்
தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேஎனா
ஒடிச் போந்திங்கு ஒளித்தவாறு என்கொலோ.       5.50.7

507.திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே.       5.50.8

508. தனக்கே றாமை தவிர்கென்று வேண்டினும்
நினைத்தேன் பொய்க்குள் செய்திடு நின்மலன்
எனக்கே வந்தெதிர் வாய்மூர்க் கேஎனாப்
புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ.       5.50.9

509. தீண்டற் கரிய திருவடி ஒன்றினால்
மீண்டற் கும்மதித் தார்அரக் கன்தனை
வேண்டிக் கொண் டேன்திரு வாய்மூர் விளக்கினைத்
தூண்டிக் கொள்வன்நான் என்றலும் தோன்றுமே.       5.50.10
-------------
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
ஐந்தாம் திருமுறை முதற் பகுதி முற்றும்.


This webpage was last revised on 8 September 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).