Acknowledgements:
Etext-Input keying, adding descriptive notes to verses, Proof reading,
preparing of Web versions in TSCII & Unicode 
This webpage presents the Etext in Tamil script in Unicode/utf-8 encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
You need to have Unicode Tamil font installed on your computer
and the browser set to display webpages with "utf-8" charset.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to
preparation of electronic texts of tamil literary works and to distribute them
free on the Internet. Details of Project Madurai are available at the website.
You are welcome to freely distribute this Tamil file, provided this header
page is kept intact
 1 அகத்திணை இயல் (116)
 2 களவு இயல் (54)
 3 வரைவு இயல் (29)
 4 கற்பு இயல் (10)
 5 ஒழிபு இயல் (43)
பூமிசை நடந்த
வாமனை வாழ்த்தி வடமலைச் சென்னி
ஈண்டிய கடவுளர் வேண்டலிற் போந்து
குடங்கையின் அலைகடல் அடக்கி ஈண்டிய
தென்மலை இருந்த இருந்தவன் இயற்றமிழ்
கெழீய அகப்பொருள் தழீய நோக்கி
வழிகொடுத்து நிறீஇ வகுத்துப் புலப்படுத்தாங்கு
இகப்பில் அகப்பொருள்விளக்கம் பகர்ந்தனன் எழுதி
செந்தமிழ் நாட்டு மைந்தன் குரிசில்
பாற்கடல் பலபுகழ் பரப்பிய
நாற்கவிராச நம்பி என்பவனே
பூமலி நாவன் மாமலைச் சென்னி
ஈண்டிய இமையோர் வேண்டலின் போந்து
குடங்கையின் விந்த நெடுங்கிரி மிகைதீர்த்து
அலைகடல் அடக்கி மலையத்து இருந்த
இருந்தவன் தன்பால் இயல் தமிழ் உணர்ந்த
புலவர் பன்னிருவருள் தலைவனாகிய
தொல்காப்பியன் அருள் ஒல்காப் பெரும்பொருள்
அகப்பொருள் இலக்கணம் அகப்படத் தழீஇ
இகப்பரும் சான்றோர் இலக்கிய நோக்கித்
தொகுத்து முறைநிறீஇச் சூத்திரம் வகுத்தாங்கு
அகப்பொருள் விளக்கம் என்று அதற்கு ஒரு நாமம்
புலப்படுத்தி இருள் அறப் பெருள் விரித்து எழுதினன்
மாந்தரும் தேவரும் வாழ்த்த முக்குடைக்கீழ்
ஏந்தெழில் அரிமான் ஏந்து பொன்அணைமிசை
மதி மூன்று கவிப்ப உதய மால்வரைக்
கதிர் ஒன்று இருந்தெனக் காண் தக இருந்து
தத்துவம் பகர்ந்தோன் சரணம் பொருந்திய
உத்தமன் புளிங்குடி உய்யவந்தான் எனும்
முத்தமிழ் ஆசான் மைந்தன் இத்தலத்து
இருபெரும் கலைக்கும் ஒருபெரும் குரிசில்
பாற்கடல் புகழ் பரப்பிய
நாற்கவிராச நம்பி என்பவனே
மலர்தலை உலகத்துப் புலவோர் ஆய்ந்த
அருந்தமிழ் அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை
பெருந்திணை என எழு பெற்றித்து ஆகும் 1
அதுவே
பு¨¨ந்துரை உலகியல் எனும் திறன் இரண்டினும்
தொல் இயல் வழாமல் சொல்லப் படுமே 2 
அவற்றுட்
கைக்கிளை உடையது ஒருதலைக் காமம் 3 
ஐந்திணை உடையது அன்புடைக் காமம் 4
பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் 5
குறிஞ்சி பாலை முல்லை மருதம்
நெய்தல் ஐந்திணைக்கு எய்திய பெயரே 6 
அவைதாம்
முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் எனமுறை
நுதற்பொருள் மூன்றினும் நுவலப் படுமே 7 
நிலமும் பொழுதும் என முதல் இருவகைத்தே 8
வரையே சுரமே புறவே பழனம்
திரையே அவைஅவை சேர்தரும் இடனே
என ஈர் ஐவகைத்தனை இயல் நிலமே 9 
பெரும்பொழுது என்றா சிறுபொழுது என்றா
இரண்டு கூற்றது இயம்பிய பொழுதே 10 
காரே கூதிர் முன்பனி பின்பனி
சீர் இளவேனில் வேனில் என்றாங்கு
இருமூன்று திறத்தது தெரி பெரும்பொழுதே 11 
மாலை யாமம் வைகறை எற்படு
காலை வெங்கதிர் காயு நண்பகல் எனக்
கைவகைச் சிறுபொழுது ஐவகைத்து ஆகும் 12 
கூதிர் யாமம் முன்பனி என்றிவை
ஓதிய குறிஞ்சிக்கு உரிய ஆகும் 13 
வேனில் நண்பகல் பின்பனி என்று இவை
பான்மையின் உரிய பாலைதனக்கே 14 
மல்கு கார் மாலை முல்லைக்கு உரிய 15
இருள் புலர் காலை மருதத்திற்கு உரித்தே 16
வெய்யோன் பாடு நெய்தற்கு உரித்தே 17
மருதம் நெய்தல் என்றிவை இரண்டிற்கும்
உரிய பெரும்பொழுது இருமூன்றும்மே 18 
ஆரணங்கு உயர்ந்தோர் அல்லோர் புள் விலங்கு
ஊர் நீர் பூ மரம் உணா பறை யாழ் பண்
தொழில் எனக் கருவி ஈர் எழு வகைத்து ஆகும் 19 
விறல்சேய் பொருப்பன் வெற்பன் சிலம்பன்
குறத்தி கொடிச்சி குறவர் கானவர்
குறத்தியர் கிளி மயில் மறப்புலி குடாஅடி
கறைஅடி சீயம் சிறுகுடி அருவி
நறுஞ்சுனை வேங்கை குறிஞ்சி காந்தள்
ஆர் அம்தேக்கு அகில் அசோகம் நாகம்
வேரல் ஐவனம் தோரை ஏனல்
கறங்கிசை தொண்டகம் குறிஞ்சியாழ் குறிஞ்சி
வெறிகொள் ஐவனம் வித்தல் செறிகுரல்
பைந்தினை காத்தல் செந்தேன் அழித்தல்
செங்கிழங்கு அகழ்தல் முழங்கு வீழ் அருவியொடு
கொழுஞ்சுனை ஆடல் குறிஞ்சிக் கருப் பொருளே 20 
கன்னி விடலை காளை மீளி
இன்நகை எயிற்றி எயினர் எயிற்றியர்
மறவர் மறத்தியர் புறவு பருந்து எருவை
கழுகு செந்நாய் கல்கெழு குறும்பு
குழி அறும்கூவல் குராஅ மராஅ
உழிஞ்சில் பாலை ஓமை இருப்பை
வழங்கு கதிக்கொண்டன செழும்பதி கவர்ந்தன
பகைத்துடி பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சமம்
பகல் சூறை ஆடல் பாலைக் கருப் பொருளே 21 
நெடுமால் குறும்பொறை நாடன் தோன்றல்
வடுவில் கற்பின் மனைவி கிழத்தி
இடையர் இடைச்சியர் ஆயர் ஆய்ச்சியர்
கான வாரணம் மான் முயல் பாடி
குறுஞ்சுனை கான்யாறு குல்லை முல்லை
நிறங்கிளர் தோன்றி பிறங்குஅலர்ப் பிடவம்
கொன்றை காயா மன்றலம் குருந்தம்
தாற்று கதிர் வரகொடு சாமை முதிரை
ஏற்றுப்பறை முல்லை யாழ் சாதாரி
சாமை வரகு தரமுடன் வித்தல்
அவைகளை கட்டல் அரிதல் கடாவிடல்
செவிகவர் கொன்றைத் தீங்குழல் ஊதல்
மூஇனம் மேய்த்தல் சேஇனம் தழுவல்
குழுமிய குரவையொடு கான்யாறு என்று இவை
முழுதுடல் ஆடல் முல்லைக் கருப் பொருளே 22 
இந்திரன் ஊரன் பைந்தார் மகிழ்நன்
கெழுதகு கற்பின் கிழத்தி மனைவி
உழவர் உழத்தியர் கடையர் கடைச்சியர்
மழலை வண்டு ஆன மகன்றில் நாரை
அன்னம் போதா நன்னிறக் கம்புள்
குருகு தாரா எருமை நீர்நாய்
பெருகிய சிறப்பின் பேரூர் முதூர்
யாறு மனைக்கிணறு இலஞ்சி தாமரை
நாறுஇதழ் கழுநீர் நறுமலர்க் குவளை
காஞ்சி வஞ்சி பூஞ்சினை மருதம்
செந்நெல் வெண்ணெல் அந்நெல் அரிகிணை
மன்றன் முழவம் மருதயாழ் மருதம்
மன்றணி விழாக்கோள் வயல் களைகட்டல்
அரிதல் கடாவிடல் அகன்குளம் குடைதல்
வருபுனல் ஆடல் மருதக் கருப்பொருளே 23 
வருணன் சேர்ப்பன் விரிதிரைப் புலம்பன்
பரும அல்குல் பரத்தி நுளைச்சி
நுளையர் நுளைச்சியர் பரதர் பரத்தியர்
அளவர் அளத்தியர் அலைகடல் காக்கை
சுறவம் பாக்கம் பெறல்அரும் பட்டினம்
உவர்நீர்க் கேணி கவர்நீர் நெய்தல்
கண்டகக் கைதை முண்டகம் அடம்பு
கண்டல் புன்னை வண்டுஇமிர் ஞாழல்
புலவு மீன் உப்பு விலைகளில் பெற்றன
நளிமீன் கோட்பறை நாவாய் பம்பை
விளரியாழ் செவ்வழி மீன் உப்புப் படுத்தல்
உணங்குஅவை விற்றல் மீன் உணக்கல் புள் ஓப்பல்
நெடுங்கடல் ஆடல் நெய்தல் கருப்பொருளே 24 
புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும்
இரங்கலும் இவற்றின் நிமித்தமும் எனஆங்கு
எய்திய உரிப்பொருள் ஐயிரு வகைத்தே 25 
அளவில் இன்பத்து ஐந்திணை மருங்கில்
களவு கற்பு என இரு கைக்கோள் வழங்கும் 26 
இயற்கைப் புணர்ச்சி இடம்தலைப்பாடு
பாங்கற் கூட்டம் பாங்கியிற் கூட்டம் என்று
உணர்த்திய களவில் புணர்ச்சி நால் வகைத்தே 27 
மெய்க்கிளை யாழோர் வேண்டும் புணர்ச்சிமுன்
கைக்கிளை நிகழ்தல் கடன் என மொழிப 28 
அதுவே
காமம் சான்ற இளமையோள் வயில்
குறிப்பறிகாறும் குறுகாது நின்று
குறிப்படு நெஞ்சொடு கூறல் ஆகும் 29 
மறையோர் மன்னவர் வணிகர் சூத்திரர் எனும்
இறையோர் தத்தமக்கு எய்தும் மற்று அதுவே 30 
அதுவே
மொழிந்தோர் நால்வரும் ஒழிந்த ஐந்நிலத்துறை
இழிந்தோர் தம்முள் உயர்ந்தோரும் எயதுப 31 
தெய்வம் தன்னின் எய்தவும் கிழத்தியின்
எய்தவும் படூஉம் இயற்கைப் புணர்ச்சி 32 
இயற்கைப் புணர்ச்சி தெய்வத்தின் எய்துழி
முயற்சி இன்றி முடிவது ஆகும் 33 
உள்ளப் புணர்ச்சியும் மெய்உறு புணர்ச்சியும்
கள்ளப் புணர்ச்சியுள் காதலர்கு உரிய 34 
பொருவிறந்தோற்கு பெருமையும் உரனும்
நல்நுதல் கச்சமும் நாணும் மடனும்
மன்னிய குலங்கள் ஆதலின் முன்னம்
உள்ளப் புணர்ச்சி உரியது ஆகும் 35 
காட்சி முதலாச் சாக்காடு ஈறாக்
காட்டிய பத்தும் கைவரும் எனினே
மெய்உறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே 36 
பகற்குறி இரவுக்குறி எனும் பான்மைய
புகற்சியின் அமைந்தோர் புணர்ச்சி நிகழ் இடனே 37 
இல்வரை இகந்தது பகற்குறி இரவுக்குறி
இல்வரை இகவா இயல்பிற்று ஆகும் 38 
ஒருவழித் தணத்தல் வரைவிடை வைத்துப்
பொருள்வயில் பிரிதல் என்று இருவகைத்து ஆகும்
நிறைதரு காதல் மறையினிற் பிரிவே 39 
அவற்றுள்
ஒருவழிதணத்தற்குப் பருவம் கூறார் 40 
வரைவிடைவைத்துப் பொருள்வியின் பிரிவோர்
இருதுவின் கண் உடைத்து என்மனார் புலவர் 41 
களவு வெளிப்படா முன்னும் பின்னும்
விளையு நெறித்தென விளம்பினர் வரைவே 42 
நான்கு வகைப் புணர்வினும் தான்றெருண்டு வரைதலும்
களவு வெளிப்படா முன் வரைதல் ஆகும் 43 
உடன் போய் வரைதலும் மீண்டு வரைதலும்
உடன் போக்கிடை ஈடுற்று வரைதலும்
களவு வெளிப்பட்ட பின் வரைதல் ஆகும் 44 
அவற்றுள்
உடன்போய் வரைதல் ஒருவகைத்தாகும் 45 
அவண்மனை வரைதலும் தன்மனை வரைதலும்
என மீண்டு வரைதல் இருவகைத் தாகும் 46 
ஆற்றுற அஞ்சினும் அவன் வரைவு மறுப்பினும்
வேற்று வரைவு நேரினும் காப்புக்கை மிகினும்
ஆற்றுறத் தோன்றும் அறத்தொடு நிலையே 47 
தலைவி பாங்கிக்கு அறத்தொடு நிற்கும்
பாங்கி செவிலக்கு அறத்தொடு நிற்கும்
செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும்
நற்றாய் தந்தை தன்னையார்க்கு அறத்தொடு
நிற்கும் என்ப நெறி உணர்ந்தோரே 48 
ஒருபுணர் ஒழிந்தவற்று ஒருவழி தணப்பவும்
வரைவிடைவைத்துப் பொருள் வயிற் பிரியவும்
இறைவனைச் செவிலி குறிவயில் காணவும்
மனைவயிற் செறிப்பவும் வருத்தம் கூறின்
வினைவயிற் கண்ணும் வினவாக் கண்ணும்
அனநடைக்கிழத்தி அறத்தொடு நிற்கும் 49 
முன்னிலைப் புறமொழி முன்னிலை மொழிகளில்
சின்மொழிப் பாங்கி செவிலிக்கு உணர்த்தும் 50 
செவிலி நற்றாய்க்குக் கவலையின்றி உணர்த்தும் 51
நற்றாய் அறத்தொடு நிற்குங் காலைக்
குரவனும் தன்னையும் குறிப்பின் உணர்ப 52 
பாங்கி தலைவியை வினவும் செவிலி
பாங்கியை வினவும் பாங்கி தன்னையும்
நற்றாய் தானும் வினவும் செவிலியில்
பொன்தொடி கிழத்தியை உற்று நோக்கின் 53 
ஆங்குடன் போய்உழி அறத்தொடு நிற்ப
பாங்கியும் செவிலியும் பயந்த தாயும் 54 
களவின் வந்த கற்பும் பொற்புஅமை
களவின் வழிவாராக் கற்பும் என்றாங்கு
முற்படக் கிளந்த கற்பு இருவகைத்தே 55 
குரவரில் புணர்ச்சி வாயிலில் கூட்டம் என்று
இருவகைத்து ஆகும் கற்பின் புணர்ச்சி 56 
அவற்றுள்
களவின் வழிவந்த கற்பின் புணர்ச்சி
கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே
உடன்போய வரைதலும் உண்மையான 57 
மறையில் புணர்ச்சியும் மன்றப் புணர்ச்சியும்
இறைவற்கு எய்தல் உண்டு இருவகை கற்பினும் 58 
காதல் பரத்தையர் காமக் கிழத்தியர்
பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தி என்று
அன்னவர் உரியர் அவை இரண்டிற்கும் 59 
அவருள்
காதல் பரத்தையர் களவிற்கு உரியர் 60 
ஒழிந்தோர் மன்றப் புணர்ச்சிக்கு உரியர் 61
பரத்தையின் பிரிதல் ஓதற்குப் படர்தல்
அருள்தகு காவலொடு துதில் ககறல்
உதவிக்கு ஏகல் நிதியில் கிகத்தல் என்று
உரைபெறு கற்பில் பிரிவு அறுவகைத்தே 62 
அயன்மனைப் பிரிவயற் சேரியின் அகற்சி
புறநகர்ப் போக்கு இவை புரவலர்க்கு உரிய
பரத்தையின் பிரியும் பருவத்தான 63 
கெழீஇய காமக் கிழத்தியர் பொரட்டாத்
தழீஇய அயல்மனைத் தலைவன் பிரியும் 64 
பின்னர் வரைந்த பெதும்பையும் பரத்தையும்
இன்னியல் விழவும் ஏதுவாக
அவன் அயல் சேரியின் அகலும் என்ப 65 
விருந்தியல் பரத்தையை பெருந்தேர் மிசைகொண்டு
இளமரக்காவின் விளையாடற்கும்
புனல் ஆடற்கம் புறநகர்ப் போகும் 66 
ஊடல் அவ்வழிக் கூடும் கிழத்திக்கு 67
கொளை வல் பாணன் பாடினி கூத்தர்
இளையர் கண்டோர் இருவகைப் பாங்கர்
பாகன் பாங்கி செவிலி அறிவர்
காமக்கிழத்தி காதற் புதல்வன்
விருந்து ஆற்றாமை என்று இவை ஊடல்
மருந்தாய் தீர்க்கும் வாயில்கள் ஆகும் 68 
ஓதல் தொழில் உரித்து உயர்ந்தோர் மூவர்க்கும் 69
அல்லாக் கல்வி எல்லார்க்கும் உரித்தே 70
அறப்புறம் காவல் நாடு காவல் எனச்
சிறப்புறு காவல் திறம் இருவகைத்தே 72 
அவற்றுள் அறப்புறம்காவல் அனைவர்க்குமுரித்தே 73
மற்றைக் காவல் கொற்றற்கு உரித்தே 74
வேதமாந்தர் வேந்தர் என்று இருவர்க்கும்
தூது போதல் தொழில் உரித்து ஆகும் 75 
சிறப்புப் பெயர் பெறில் செப்பிய இரண்டும்
உறற்குரி மரபின ஒழிந்தோர் இருவர்க்கும் 76 
உதவி அந்தணர் ஒழிந்தோர்க்கு உரித்தே 77
பரத்தையில் பிரிவும் பொருள்வயில் பிரிவும்
உரைத்த நால்வர்க்கும் உரிய ஆகும் 78 
இழிந்தோர் தமக்கும் இவற்றுண் மேம்பட்டவை
ஒழிந்தனவாம் என மொழிந்தனர் புலவர் 79 
கல்வி முதலா எல்லா வினைக்கும்
சொல்லி அகறலும் சொல்லாது அகறலும்
உரியன் கிழவோன் பெருமனைக் கிழத்திக்கு 80 
சொல்லாது அகலினும் சொல்லும் பாங்கிக்கு 81
குறிப்பின் உணர்த்தலும் பெறற்கரும் கிழத்திக்கு 82
காலில் சேறலும் கலத்தில் சேறலும்
ஊர்தியில் சேறலும் நீதியாகும் 83 
புலத்தில் சிறந்த புரிநூல் முதல்வர்க்குக்
காலத்தில் சேர்தல் கடன் என மொழிப 84 
வலன் உயர் சிறப்பின் மற்றை மூவர்க்கும்
குலமட மாதரொடு கலமிசைச் சேறலும்
பாசறைச் சேறலும் பழுது என மொழிப 85 
ஓதல் முதலா ஓதின ஐந்துனும்
பிரிவோன் அழுங்கற்கும் உரியன் ஆகும் 86 
இல்லத்து அழுங்கலும் இடைச்சுரத்து அழுங்கலும்
ஒல்லும் அவற்கு என உரைத்திசினோரே 87 
தலைவி தன்னையும் தன் மனந்தன்னையும்
அலமரல் ஒழித்தற்கு அழுங்குவது அல்லது
செல்த் தோன்றல் செல்வான் அல்லன் 88 
அவற்றுள்
ஓதற் பிரிவு உடைத்து ஒரு மூன்றியாண்டே 89 
துதிற் பிரிவும் துணைவயின் பிரிவும்
பொருள்வயிற் பிரிவும் ஓர் ஆண்டுடைய 90 
பூத்த காலை புனை இழை மனைவியை
நீராடியபின் ஈராறு நாளும்
கருவயிற்று உறூஉங் காலம் ஆதலின்
பிரியப் பெறாஅன் பரத்தையின் பிரிவோன் 91 
ஓதற்கு அகன்றோன் ஒழிந்திடை மீண்டு
போதற்கு இயையவும் புலம்பவும் பெறாஅன் 92 
தூதும் துணையும் ஏதுவாகச்
சென்றோன் அவ்வினைநின்று நீட்டித்துழிப்
புலந்து பாசறைப் புலம்பவும் பெறுமே 93 
பூத்தமை சேடியில் புரவலர்க்கு உணர்த்தலும்
நீத்தமை பொறாது நின்று கிழவோனைப்
பழிக்கும் காமக்கிழத்தியைக் கழறலும்
கிழவோர் கழறலும் வழிமுறை மனைவியைக்
கொழுநனொடு வந்து எதிர் கோடலும் அவனொடு
பாங்கொடு பரத்தையை பழித்தலும் நீங்கிப்
புறநகர்க் கணவனெடு போகிச் செறிமலர்ச்
சோலையும் காவும் மாலையும் ழனியும்
மாலை வெள்அருவியும் மலையும் கானமும்
கண்டுவிளையாடலும் கடும்புனல் யாறும்
வண்டு இமிர் கமல வாவியும் குளனும்
ஆடிவிளையாடலும் கூடும் கிழத்திக்கு 94 
வாயில் வேண்டலும் வாயின் ஓர்வித்தலும்
சேயிழை ஊடல் தீர்த்தலும் போய் உழி
அவள் நலம் தொலைவு கண்டு அழுங்கலும் அவன்வயின்
செல்ல விரும்பலும் சென்றவற்கு உணர்த்தலும்
சொல்லிய கூற்றெனச் சொல்லும் கிழவோன்
வரவு மீண்டு வந்து அரிவைக்கு உணர்த்தலும்
அணிநலம் பெற்றமை அறியான் போன்றவட்
பணிவொடு வினாதலும் பாணற்கு உரிய 95 
செலவில் தேற்றலும் புலவியில் தணித்தலும்
வாயில் வேண்டலும் வாயில் நேர்வித்தலும்
தெரியிழை விறலிக்கு உரிய ஆகும் 96 
செல்வம் வாழ்த்தலும் நல்லறிவு கொளுத்தலும்
கலன்அணி புணர்த்தலும் காமநுகர்பு உணர்த்தலும்
புலவி முதிர் காலைப் புலங்கொள ஏதுவில்
தேற்றலும் சேய்மை செப்பலும் பாசறை
மேற்சென்று உரைத்தலும் மீண்டுவர உணர்த்தலும்
கூற்றரு மரபின் கூத்தற்கு உரிய 97 
மடந்தையை வாயில் வேண்டலும் வாயில்
உடன்படுத்தலும் அவள் ஊடல் தீர்த்தலும்
கொற்றவற்கு உணர்த்தலும் குற்றேவல் செய்தலும்
சென்று முன் வரைவு செப்பலும் அவன்திறம்
ஒன்றிநின்று உரைத்தலும் வினைமுடி புரைத்தலும்
வழிஇயல்பு கூறலும் வழிஇடைக் கண்டன
மொழிதலும் இளையோர் தொழில் என மொழிப 98 
தீதுடைப் புலவி தீர்த்தலும் அவன்வரல்
காதலிக்கு உரைத்தலும் கண்டோர்க்கு உரிய 99 
இளமையும் யாக்கையும் வளமையும் ஏனவும்
நிலையாத் தன்மை நிலை எடுத்து உரைத்தலும்
செலவு அழுங்குவித்தலும் செலவு உடன் படுத்தலும்
பிறவும் எல்லாம் மறையோர்க்கு உரிய 100 
நன்மையின் நிறுத்தலும் தீமையின் அகற்றலும்
சொன்னவும் பிறவும் சூத்திரர்கு உரிய 101 
சேயிழைக் கிழத்தியை வாயில் வேண்டலும்
வாயின் நேர்வித்தலும் வயங்கு துனி தீர்த்தலும்
வினைமுடித்ததன்பின் வியன்பதி செய்த்து என
இனைவோன் தேற்றலும் பாகற்கு இயல்பே 102 
பிரிவுழி விலக்கலும் பிரிவு உடன்படுத்தலும்
பிரிவுழித் தேற்றலும் பிரிவுழி அழுங்கலும்
பிறவும் உரிய இறைவளை பாங்கிக்கு 103 
முன்வரும் நீதியும் உலகியல் முறைமையும்
பின்வரும் பெற்றியும் பிறவும் எல்லாம்
தெற்றெனக் கூறல் செவிலித் தாய்க்கும்
உற்றறிவர்க்கும் உரியன ஆகும் 104 
குடிபிறந்தோரை வடுப்படுத்து உரைத்தலும்
மனைவியைப் பழித்தலும் வாடா ஊடலுள்
தலைவற் கழறலும் மனைவிக்கு அமைந்த
ஒழுக்கமும் காமக் கிழத்திக்கு உரிய 105 
கிழவோன் தன்னையும் கிழத்தி தன்னையும்
இகழ்தலும் தம்மைப் புகழ்தலும் நிகழ்பெருள்
கரத்தலும் பரத்தையர் கடன் என மொழிப 106 
பரத்தையர் காதற் பரத்தையைப் புகழ்தலும்
தம்மை இகழ்தலும் தம்முளும் கூறுப 107 
இளையர் கிழவோர்க்கு இரவும் பகலும்
களைதல் இல்லாக் கவசம் போல்வர் 108 
இருவகைப் பாங்கரும் ஒருபெருங் குரிசிற்கு
இன்னுயிர்த் துணையா இருபெரும் குரவரும்
தன்னை அளித்த தகைமையோரே 109 
தோழி செவிலி மகளாய்ச் சூழ்தலோடு
உசாத்துணையாகி அசாத்து அணிவித்தற்கு
உரிய காதல் மருவிய துணையே 110 
செவிலி நற்றாய் தோழி ஆகி
அவலம் நீக்கி அறிவும் ஆசாரமும்
கொளுத்தி தலைவியை வளர்த்த தாயே 111 
அறிவர் கிழவோன் கிழத்தி என்று இருவர்க்கும்
உறுதி மொழிந்த உயர் பொரம் குரவர் 112 
ஒருவன் தனக்கே உரிமை பூண்டு
வருகுலப் பரத்தையர் மகளிர் ஆகிக்
காமக்கு வரைந்தோர் காமக் கிழத்தியர் 113 
யாரையும் நயவா இயல்பில் சிறந்த
சேரிப் பரத்தையர் மகளிர் ஆகிக்
காதலில் புணர்வோர் காதல் பரத்தையர் 114 
அவர் உளும் வரைதற்கு உரியோர் உளரே 115
மக்களொடு மகிழ்ந்து மனைஅறம் காத்து
மிக்க காம வேட்கை தீர்ந்துழித்
தலைவனும் தலைவியும் தம்பதி நீங்கித்
தொலைவில் சுற்றமொடு துறவரம் காப்ப 116
உளமலி காதல் களவு எனப் படுவ
தொகுநான்கு வேதத்து இருநான்கு மன்றலுள்
யாழோர் கூட்டத்து இயல்பினது என்ப 117 
காட்சி ஐயம் துணிவு குறிப்பறிவு என
மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை 118 
புணர்ப்பதும் பிரிப்பதும் ஆகிய பால்களுள்
புணர்க்கும் பாலில் பொருவிறந்து ஒத்த
கறைவேல் காளையும் கன்னியும் காண்ப
இறையோன் உயரினும் குறைவின்று என்மனார் புலவர் 119 
மடமான் நோக்கி வடிவம் கண்ட
இடமும் சிறந்துழி எய்துவது ஐயம் 120 
எழுதிய வல்லியும் தொழில்புனை கலனும்
வாடிய மலரும் கூடிய வண்டும்
நடைபயில் அடியும் புடைபெயர் கண்ணும்
அச்சமும் பிறவும் அவன்பால் நிகழும்
கச்சம்இல் ஐயம் கடிவன ஆகும் 121 
அரிவை நாட்டம் அகத்து நிகழ் வேட்கை
தெரிய உணர்த்தும் குரிசிற்கு என்ப 122 
இயற்கைப் புணர்ச்சி வன்புறை தெளிவே
பிரிவுழி மகிழ்ச்சி பிரிவுழிக் கலங்கல்
இடந்தலைப்பாடு பாங்கற் கூட்டம்
பாங்கி மதிஉடன்பாடு பாங்கியற் கூட்டம்
பாங்கமை பகற்குறி பகற்குறி இடையீடு
இரவுக்குறியே இரவுக்குறி இடையீடு
வரைவு வேட்கை வரைவு கடாதல்
ஒருவழி தணத்தல் வரைவிடை வைத்துப்
பொருள்வயிற் பிரிதல் என்று ஒரு பதினேழும்
களவிற்கு உரியகிளவித் தொகையே 123 
தெய்வம் புணர்ப்பச் சிந்தை வேறாகி
எய்தும் கிழத்தியை இறையோன் என்ப 124 
கலந்துழி மகிழ்தலும் நலம் பாராட்டலும்
ஏற்புற அணிதலும் என்னும் இம்மூன்றும்
போற்றிய தெய்வப் புணர்ச்சியின் விரியே 125 
வேட்கை உணர்தல் மறுத்தல் உடன்படல்
கூட்டம் என்று இறைவியில் கூட்ட நால் வகைத்தே 126 
இரந்துபின் நிற்றற்கு எண்ணலும் இரந்து
பின்னிலை நிற்றலும் முன்னிலை ஆக்கலும்
மெய்தொட்டுப் பயிறலும் பொய் பாராட்டலும்
இடம் பெற்றுத் தழாலும் வழிபாடு மறுத்தலும்
இடையூறு கிளத்தலும் நீடுநினைந்து இரங்கலும்
மறுத்துஎதிர் கோடலும் வறிதுநகை தோற்றலும்
முறுவல்குறிப்பு உணர்தலும் முயங்குதல் உறுத்தலும்
புணர்ச்சியில் மகிழ்தலும் புகழ்தலும் பிறவும்
உணர்த்திய தலைவியின் புணர்ச்சியின் விரியே 127 
ஐயம் தீர்த்தல் பிரிவு அறிவுறுத்தல் என்று
எய்திய வன்புறை இருவகைத்து ஆகும் 128 
அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தலும்
பெருநயப்பு உரைத்தலும் தெய்வத்திறம் பேசலும்
பிரியேன் என்றலும் பிரிந்து வருக என்றலும்
இடம் அணித்து என்றலும் என்று இவை ஆறும்
மடன்அறத்தெரிந்த வன்புரை விரியே 129 
தலைவன் மாற்றம் தலைவி தேற்றம்
தெளிவாம் என்பர் தெளிந்திசினேரே 130 
செல்லும் கிழத்தி செலவு கண்டு உளத்தொடு
சொல்லலும் பாகனோடு சொல்லலும் இரண்டும்
பிரிவுழி மகிழ்ச்சியின் விரி எனக் கொளலே 131 
மருள்உற்று உரைத்தல் தெருள் உற்று உரைத்தல் என்று
இருவகைத்து ஆகும் பிரிவுழி கலங்கல் 132 
ஆயவெள்ளம் வழிபடக் கண்டு இது
மாயமோ என்றலும் வாயில் பெற்று உய்தலும்
பண்பு பாராட்டலும் பயந்தோர் பழிச்சலும்
கண்பெடை பெறாது கங்குல் நோதலும் எனும்
ஐந்தும் பிரிவுழி கலங்கல்¢ன் விரியாகும்மே 133 
தெய்வம் தெளிதல் கூடல் விடுத்தல் என்று
இவ்ஓர் மூவகைத்து இடந்தலைப்பாடே 134 
தந்த தெய்வம் தரும் எனச் சேறலும்
முந்து உறக் காண்டலும் முயங்கலும் புகழ்தலும்
உடன்புணர் ஆயத்து உய்த்தலும் என ஐந்து
இடந்தலைப்பாட்டின் இலக்கண விரியே 135 
சார்தல் கேட்டல் சாற்றல் எதிர்மறை
நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டல் என்று
ஆங்கு ஏழு வகைத்தே பாங்கற் கூட்டம் 136 
தலைவன் பாங்கனைச்சார்தலும் பாங்கன்
தலைவனை உற்றது வினாதலும் தலைவன்
உற்றது உரைத்தலும் கற்றறி பாங்கன்
கழறலும் கிழவோன் கழற்று எதிர் மறுத்தலும்
கிழவோன் பழித்தலும் கிழவோன் வேட்கை
தாங்கற்கு அருமை சாற்றலும் பாங்கன்
தன்மனத்து அழுங்கலும் தலைவனோடு அழுங்கலும்
எவ்விடத்து எவ்வியற்று என்றலும் அவன·து
இவ்விடத்து இவ்வியற்று என்றலும் பாங்கன்
இறைவனைத் தேற்றலும் குறிவழிச் சேறலும்
இறைவியைக் காண்டலும் இகழ்ந்தற்கு இரங்கலும்
தலைவனை வியத்தலும் தலைவியை வியத்தலும்
தலைவன் தனக்கு தலைவிநிலை கூறலும்
தலைவன் சேறலும் தலைவியைக் காண்டலும்
கலவியின் மகிழ்தலும் புகழ்தலும் தலைவியைப்
பாங்கியொடு வருகஎனப் பகர்தலும் பாங்கிற்
கூட்டலும் என்றுஈங்கு ஈட்டுநாலாறும்
காட்டிய பாங்கற் கூட்டத்து விரியே 137 
முன்னுற உணர்தல் குறையுற உணர்தல்
இருவரும் உள்வழி அவன்வரவு உணர்தல் என்று
ஒருமூன்று வகைத்தே பாங்கிமதி உடன்பாடு 138 
நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்
செய்வினை மறைப்பும் செலவும் பயில்வும் என்று
இவ்வகை ஏழினும் ஐயம் உற்று ஓர்தலும்
அவ்வகை தன்னால் ஐயம் தீர்தலும்
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
பல்வேறு கவர்பொருள் சொல்லின் ஆடலும் என
முன்னுற உணர்தல் மூன்றாகும்மே 139 
பெட்ட வாயில் பெற்று இரவு வலியறுத்தோன்
கண்ணியும் தழையும் ஏந்தி நண்ணி
ஊர்பேர் கெடுதியோடு ஒழிந்தவும் வினாவுழி
யாரே இவர் மனத்து எண்ணம் யாது எனத்
தேர்தலும் என்னம் தெளிதலும் என ஆங்கு
ஓர் இரண்டாகும் குறை உணர்தல் 140 
கையுறை ஏந்தி வந்து அவ்வகை வினாவுழி
எதிர்மொழி கொடுத்தலும் இறைவனை நகுதலும்
மதியின் அவர்அவர் மனக்கருத்து உணர்வும் என்று
இருவரும் உள் வழி அவன் வரவு உணர்தல்
ஒரு மூன்று ஆகும் தெரியும் காலே 141 
ஈங்ஙணம் இயம்பிய இருநான்கு(*) கிளவியும்
பாங்கிமதி உடன்பாட்டது விரியே 142
(*) 2.22=3, 2.23=2, 2.24=3 == 8
இரந்து பின்நிற்றல் சேட்படை மடற்கூற்று
மடல் விலக்கு உடன்படல் மடல்கூற்று ஒழிதல்
குறை நயப்பித்தல் நயத்தல் கூட்டல்
கூடல் ஆயம் கூட்டல் வேட்டல் என்று
ஈராறு வகைத்தே இகுளையிற் கூட்டம் 143 
தலைவனுள் கோள் சாற்றலும் பாங்கி
குலமுறை கிளத்தலும் தலைவன் தலைவி
தன்னை உயர்த்தலும் நன்நுதல் பாங்கி
அறியாள் போன்று வினாதலும் இறையோன்
இறைவித் தன்மை இயம்பலும் பாங்கி
தலைவி அருமை சாற்றலும் தலைவன்
இன்றிஅமையாமை இயம்பலும் பாங்கி
நின்குறை நீயே சென்று உரை என்றலும்
பாங்கியைத் தலைவன் பழித்தலும் பாங்கி
பேதைமை ஊட்டலும் காதலன் தலைவி
மூதறிவு உடைமை மொழிதலும் பாங்கி
முன்னுறு புணர்ச்சி முறைஉறக் கூறலும்
தன்னிலை தலைவன் சாற்றலும் பாங்கி
உலகியல் உரைத்தலும் தலைமகன் மறுத்தலும்
பாங்கி அஞ்சி அச்சுறுத்தலும் ஆங்கு அவன்
கையுறை புகழ்தலும் தையல் மறுத்தலும்
ஆற்றா நெஞ்சினோடு அவன் புலத்தலும் அவள்
ஆற்றுவித்து அகற்றலும் ஆகும் நாலைந்தும்
இரந்து பின்நிற்றற்கும் சேட்படுத்தற்கும்
பொருந்துவ என்மனார் தெரிந்திசினோரே 144 
இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன்
மடலே பொருள் என மதித்தலும் பாங்கிக்கு
உலகின் மேல்வைத்து உரைத்தலும் அதனைத்
தன்மேல் வைத்தச் சாற்றலும் பாங்கி
தலைமகள் அவயவத்து அருமை சாற்றலும்
தலைமகன் தன்னை தானே புகழ்தலும்
அலர்முலைப் பாங்கி அருள்இயல் கிளத்தலும்
கொண்டுநிலை கூறலும் என்று இவை ஏழும்
மடற்கூற்றிற்கும் மடல் விலக்கிற்கும்
கடவ என்பர் கற்றறிந்தோரே 145 
தலைவி இளமைத் தன்மை பாங்கி
தலைவற்கு உணர்fதலும் தலைவன் தலைவி
வருத்திய வண்ணம் உரைத்தலும் பாங்கி
செவ்வி அருமை செப்பலும் தலைவன்
செவ்வி எளிமை செப்பலும் பாங்கி
என்னை மறைப்பின் எளிதென நகுதலும்
அந்நகை பொறாது அவன் புலம்பலும் அவள்
தேற்றலும் கையுறை ஏற்றலும் கிழவோன்
ஆற்றலும் என்னும் அவ்வொன்பானும்
குறைநேர்தற்கும் மடற்கூற்று ஒழிதற்கும்
முறைமையின் உரிய முனனுங்காலே 146 
இறைவன் தனக்கு குறைநேர் பாங்கி
இறைவிக்கு அவன் குறை உணர்த்தலும் இறைவி
அறியாள் போன்று குறியாள் கூறலும்
பாங்கி இறையோர் கண்டமை பகர்தலும்
பாங்கியைத் தலைவி மறைத்தலும் பாங்கி
என்னை மறைப்பது என்எனத் தழாஅலும்
கையுறை புகழ்வும் என்று இவ்விரு மூன்றும்
மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தற்கும்
வலிதாகச் சொல்லி மறுத்தற்கும் உரிய 147 
தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தலும்
மறுத்தற்கு அருமை மாட்டலும் தலைவன்
குறிப்பு வேறாக நெறிப்படக் கூறலும்
தலைவியை முனிதலும் தலைவி பாங்கி
தன்னை முனிதலும் தன்கைக் கையுறை
ஏற்றலும் எனமுறை சாற்றிய ஆறும்
வலிதாகச் சொல்லி குறை நயப்பித்தற்கும்
மெலதாகச் சொல்லி மேவற்கும் உரிய 148 
இறைவி கையுறை ஏற்றமை பாங்கி
இறைவர்க்கு உணர்த்தலும் குறிஇடம் கூறலும்
குறிஇடத்து இறைவியை கொண்டு சேறலும்
குறிஇடத்து உய்த்து நீங்கலும் இறையோன்
இடத்து எதிர்ப்படுத்தலும் இயைதலும் புகழ்தலும்
விடுத்தலும் பாங்கி மெல்லியல் சார்ந்து
கையுறை காட்டலும் மையுறைக் கண்ணியைப்
பாங்கிற் கூட்டலும் நீங்கித் தலைவற்கு
ஓம்படை சாற்றலும் உலகியல் மேம்பட
விருந்து விலக்கலும் பெருந்தகை விருந்திறை
விரும்பலும் எனத் தெரிந்த பன் மூன்றும்
கூட்டல் முதலா வேட்டல் ஈறாப்
பாங்கிற்கு வகுத்த நான்கிற்கு உரிய 149 
அற்றம்இல் சிறப்பின் இவ்அறுபத்தொன்றும்(*)
குற்றம்இல் பாங்கியிற் கூட்டத்து விரியே 150
(*) 2.27=20, 2.28=7, 2.29=9, 2.30=6, 2.31=6, 2.32=13 == 61
கூட்டல் கூடல் பாங்கிற் கூட்டல்
வேட்டல் என்று ஒருநால் வகைத்தே பகற்குறி 151 
குறிஇடம் கூறல் முதலாப் பெறல் அரும்
விருந்திறை விரும்பல் ஈறாப் பொருந்தப்
பகர்ந்த பன்னிரன்டும்(*) பகற்குறியே 152
 (*) 2.32 அதனில் காடப்பெற்றுள்ள (மேற்படி
 குறித்த-12) விரிகளை மீண்டும் இங்கு கொள்க 
இரங்கல் வன்புறை இல்செறிப் புணர்த்ல் என்று
ஒருங்கு மூவகைத்து ஒருசார் பகற்குறி 153 
கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம்
பொழுது கண்டு இரங்கலும் பாங்கி புலம்பலும்
தலைவன் நீடத் தலைவி வருந்தலும்
தலைவியைப் பாங்கி கழறலும் தலைவி
முன்னிலைப் புறமொழி மொழிதலும் இன்னுயிர்ப்
பாங்கியொடு பகர்தலும் பாங்கி அச்சுறுத்தலும்
நீங்கற்கு அருமை தலைவி நினைந்து இரங்கலும்
தலைவிக் கவன் வரல் பாங்கி சாற்றலும்
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறுத்தலும்
முன்னிலைப் புறமொழி மொழிந்து அறிவுறுத்தலும்
முன்னின் உணர்தலும் முன்னின் உணர்த்தி
ஓம்படை சாற்றலும் மேம்படு கிழவோன்
தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தலும்
என்ற ஈரேழும் எல்லுக் குறியே 154 
விலக்கல் சேறல் கலக்கம் என்று ஆங்கு
இகப்பின் மூவகைத்§து பகற்குறி இ¨யீடு 155 
இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கலும்
இறைவியைக் குறிவரல் விலக்கலும் இறைமகள்
ஆடிட நோடுக்கி அழிதலும் பாங்கி
ஆடிடம் விடுத்துக் கொண்டு அகறலும் பின்னாள்
நெடுந்தகை குறிவயின் நீடுசென்று இரங்கலும்
வறுங்களம் நாடி மறுகலும் குறுங்தொடி
வாழும் ஊர் நோக்கி மதிமயங்கலும் எனும்
ஏழும் பகற்குறி இடையீட்டு விரியே 156 
வேண்டல் மறுத்தல் உடன்படல் கூட்டல்
கூடல் பாராட்டல் பாங்கியிற் கூட்டல்
உயங்கல் நீங்கல் என்று ஒன்பது வகைத்தே
இயம்பிப் போந்த இரவுக் குறி§யே 157 
இறையோன் இருட்குறி வேண்டலும் பாங்கி
நெறியினது அருமை கூறலும் இறையோன்
நெறியின் தெளிமை கூறலும் பாங்கி
அவன் நாட்டு அணிஇயல் வினாதலும் கிழவோன்
அவள்நாட்டு அணிஇயல் வினாதலும் அவற்குத்
தன்நாட்டு அணிஇயல் பாங்கி சாற்றலும்
இறைவிக்கு இறையோன் குறிஅறிஉறுத்தலும்
நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தலும்
நேரிழை பாங்கியொடு நேர்ந்து உரைத்தலும்
நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்கு உரைத்தலும்
குறியிடை நிறீஇத் தாய் துயில் அறிதலும்
இறைவிக்கு இறைவன் வரவு அறிஉறுத்தலும்
அவள் கொண்டு சேறலும் குறிஉய்த்து அகறலும்
வண்டுறை தாரோன் வந்து எதிர்ப்படுதலும்
பெருமகள் ஆற்றினது அருமை நினைந்து இரங்கலும்
புரவலன் தேற்றலும் புணர்தலும் புகழ்தலும்
இறைமகள் இறைவனை குறிவிலக்கலும் அவன்
இறைவியை இவ்வயின் விடுத்தலும் இறைவியை
எய்திப் பாங்கி கையுறை காட்டலும்
இல்கொண்டு ஏகலும் பின்சென்று இறைவனை
வரவு விலக்கலும் பெருமகன் மயங்கலும்
தோழி தலைமகள் துயர் கிளந்து விடுத்தலும்
திருமகள் புணர்ந்தவன் சேறலும் என்று ஆங்கு
இருபத்தேழும் இரவுக்குறி விரியே 158 
அல்லற்குறி வருந்தொழிற்கு அருமை என்று ஆங்கு
எல்லிக்குறி இடையீடுஇருவகைத்து ஆகும் 159 
இறைவிக்கு இகுளை இறைவரைவு உணர்த்துழித்
தான்குறி மருண்டமை தலைவி அவட்கு உணர்த்தலும்
பாங்கி தலைவன் தீங்கு எடுத்து இயம்பலும்
புலந்து அவன் போதலும் புலந்தபின் வறுங்களம்
தலைவி கண்டு இரங்கலும் தன்துணைக்கு உரைத்தலும்
தலைமகள் அவலம் பாங்கி தணித்தலும்
இறையோன் மேல் பாங்கி குறிபிழைப் போற்றலும்
இறைவிமேல் இறைவன் குறிபிழைப் போற்றலும்
அவள் குறி மருண்டமை அவள் அவற்கு இயம்பலும்
அவன்மொழிக் கொடுமை சென்று அவள் அவட்கு இயம்பலும்
என்பிழை பற்றென்று றைவி நோதலும் எனும்
ஒன்று பன்னொன்றும் அல்லகுறிக்குரிய 160 
தாயும் நாயும் ஊருந்தும் சாமை
காவலர் கடுகுதல் நிலவு வெளிப்படுதல்
கூகை குழறுதல் கோழி குரல் காட்டுதல்
ஆகிய ஏழும் அல்லுக்குறித் தலைவன்
வருந்தொழிற்கு அருமை பொருந்துதல் உரிய 161 
திரட்டி இவ்வாறு செப்பிய ஒன்பதிற்று
இரட்டியும்(*) இரவுக்குறி இடையீட்டு வகையே 162
(*) 2.44=11, 2.45=7 == 18
அச்சம் உவத்தல் ஆற்றாமைஎன
மெச்சிய வரைதல் வேட்கை மூவகைத்தே 163 
பருவரல் வினவிய பாங்கிக்கு இறைவி
அருமறை செவிலி அறிந்தமை கூறலும்
தலைமகன் வருந்தொழிற்கு அருமை சாற்றலும்
தலைமகன் ஊர்க்குச் செல ஒருப்படுதலும்
பாங்கி இறைவனைப் பழித்தலும் பூங்கொடி
இறையோன் தன்னை நொந்து இயல்பட மொழிதலும்
கனவு நலிபு உரைத்தலும் கவின்அழி உரைத்தலும்
தன்துயர் தலைமகற்கு உரைத்தல் வேண்டலும்
துன்புறல் பாங்கி சொல் எனச் சொல்லலும்
அலர்பார்த்து உற்ற அச்சக் கிளவியும்
ஆறுபார்த்து உற்ற அச்சக்கிளவியும்
காமம் மிக்க கழிபடர் கிளவியும்
தன்னுள் கையாறு எய்திடு கிளவியும்
நெறிவிலக்கு வித்தலும் குறிவிலக்கு வித்தலும்
வெறிவிலக்கு வித்தலும் பிறவிலக்கு வித்தலும்
குரவரை வரைஎதிர் கொள்ளுவித்தலும் என
உரைபெற வகுத்த ஒன்பதிற் றிரட்டியும்
வரைதல் வேட்கை விரி எனப்படுமே 164 
பொய்த்தல் மறுத்தல் கழறல் மெய்த்தல் என்று
ஒருநால் வகைத்தே வரைவு கடாதல் 165 
வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பலும்
அலர் அறிஉறுத்தலும் தாய்அறி உணர்த்தலும்
வெறி அச்சுறுத்தலும் பிறர்வரை உணர்த்தலும்
வரைஎதிர் உணர்த்தலும் வரையுநாள் உணர்த்தலும்
அறிவறிஉறுத்தலும் குறிபெயர்த்து இடுதலும்
பகல் வருவானை இரவுவருக என்றலும்
பகலினும் இரவினும் பயின்று வருக என்றலும்
பகலினும் இரவினும் அகல் இவண் என்றலும்
உரவோன் நாடும் ஊரும் குலனும்
மரபும் புகழும் வாய்மையும் கூறலும்
ஆறுபார்த்து உற்ற அச்சம் கூறலும்
ஆறாத்தன்மை ஆற்றக் கூறலும்
காவல் மிக உரைத்தலும் காமம் மிக உரைத்தலும்
கனவுநலி உரைத்தலும் கவின்அழி உரைத்தலும்
எனமுறை நாடி இயம்பிய இருபதும்
வரைவு கடாதல் விரி எனப் படுமே 166 
செலவு அறிஉறுத்தல் செலவு உடன்படாமை
செலவு உடன் படுத்தல் செலவு உடன் படுதல்
சென்றுழிக் கலங்கல் தேற்றி ஆற்றுவித்தல்
வந்துழிநொந்துரை என்று எழுவகைத்தே
ஒன்றக் கூறிய ஒருவழித் தணத்தல் 167 
தன்பதிக்கு அகற்சி தலைவன் சாற்றலும்
மென்சொல் பாங்கி விலக்கலும் தலைவன்
நீங்கல் வேண்டலும் பாங்கி விடுத்தலும் தலைவி
நெஞ்சொடு புலத்தலும் சென்றோன் நீடலில்
காமம் மிக்க கழிபடர் கிளவிவியும்
கோல்தொடிபாங்கி ஆற்றுவித்தலும் அவன்
வந்தமை உணர்த்தலும் வந்தோன் தன்னொடு
நொந்து வினாதலும் வெந்திறல் வேலோன்
பாங்கியொடு நொந்து வினாதலும் பாங்கி
இறைவியை ஆற்றுவித்திருந்த அருமை
கூறலும் என்னும் ஆரிரு கிளவியும்
ஒருவழித் தணத்தலின் விரி எனப்படுமே 168 
பிரிவு அறிஉறுத்தல் பிரிவு உடன்படாமை
பிரிவு உடன் படுத்தல் பிரிவு உடன்படுதல்
பிரிவுழிக் கலங்கல் வன்புரை வன்பொறை
வருவழிக் கலங்கல் வந்துழி மகிழ்ச்சி என்று
ஒருமையிற் கூறிய ஒன்பது வகைத்தே
வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிவே 169 
என்பொருள் பிரிவு உணர்த்து ஏந்திழைக்கு என்றலும்
நின் பொருள் பிரிவு உரை நீஅவட்கு என்றலும்
நீடேன் என்று அவன் நீங்கலும் பாங்கி
ஓடரிக்கண்ணிக்கு அவன் செலவு உணர்த்தலும்
பூங்குழை இரங்கலும் பாங்கி கொடுஞ்சொல்
சொல்லலும் தலைவி கொடுஞ்சொல் சொல்லலும்
வருகுவர் மீண்டு எனப் பாங்கி வலித்தலும்
பருவம்கண்டு பெருமகள் புலம்பலும்
இகுளை வம்பு என்றலும் இறைமகள் மறுத்தலும்
அவர் தூதாகி வந்து அடைந்தது இப்போழுது என
துணைவி சாற்றலும் பிணைவிழி ஆற்றலும்
அவனவண் புலம்பலும் அவன்வருங்காலைப்
பாகன் தன்னொடும் மேகம் தன்னொடும்
சோகம் கொண்டு அவன் செல்லலும் பாங்கி
வலம்புரி கேட்டு அவன் வரவு அறிஉறுத்தலும்
வலம்புரி கிழத்தி வாழ்த்தலும் வந்துழி
நினைத்தமை வினாதலும் நினைத்தமை செப்பலும்
அனைத்தகை அவளை ஆற்றுவித்து இருந்தமை
பாங்கி கூறலும் என ஆங்கு எழு மூன்றும்
வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிவின்
விரி என விளம்பினர் தெரிமொழிப் புலவர் 170
வரைவு எனப்படுவது உரவோன் கிழத்தியைக்
குரவர் முதலோர் கொடுப்பவும் கொடாமையும்
கரணமொடு புணரக் கடி அயர்ந்து கொளலே 171 
வரைவு மலிவே அறத்தொடு நிற்றல் என்று
உரையமை இரண்டும் வரைவிற்கு உரிய
கிளவித் தொகை எனக் கிளந்தனர் புலவர் 172 
வரைவு முயல் உணர்தல் வரைவு எதிர் உணர்த்தல்
வரைவு அறந்து மகிழ்தல் பராவல் கண்டு உவத்தல் என்று
ஒருநான்கு வகைத்தே வரைவு மலிதல் 173 
காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி
காதலிக்கு உணர்த்தலும் காதலி நற்றாய்
உள்ள மகிழ்ச்சி உள்ளலும் பாங்கி
தமர்வரை எதிர்ந்தமை தலைவிக்கு உணர்த்தலும்
அவள் உவகை ஆற்றாது உளத்தொடு கிளத்தலும்
தலைவனைப் பாங்கி வாழ்த்தலும் தலைவி
மணப்பொருட்டாகப் அணங்கைப் பராநிலை
காட்டலும் கண்டோன் மகிழ்வும் என்று ஈட்டிய
இருமூன்றும் ஒன்றும் வரைவு மலிதற்கு ஆம்
விரி என விளம்பினர் மெய் உணர்ந்தோரே 174 
முன்னிலை முன்னிலைப் புறமொழி என்று ஆங்கு
அன்ன இருவகைத்து அறத்தொடு நிலையே 175 
கையறு தோழி கண்ணீர் துடைத்துழிக்
கலுழ்தல் காரணம் கூறலும் தலைவன்
தெய்வம் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை
எய்தக் கூறலும் இகந்தமை இயம்பலும்
இயல் பழித்து உரைத்துழி இயல்பட மொழிதலும்
தெய்வம் பொறைகொளச் செல்குவம் எனறலும்
இல்வயில் செறித்தமை சொல்லலும் செவிலி
கனைஇருள் அவன் வரக் கண்டமைக் கூறலும்
என்முறை இயம்பிய ஏழும் புனையிழைத்
தலைவி அறத்தொடு நிலைதனக்கு உரிய 176 
எறிவளை வேற்றுமைக்கு ஏது வினாவினும்
வெறி விலக்கிய வழி வினாவினும் பாங்கி
பூவே புனலே களிறே என்று இவை
ஏதுவாகத் தலைப்பாடு இயம்பும் 177 
மின்னிடை வேற்றுமை கண்டுதாய் வின்வுழி
முன்னிலை மொழியான் மொழியும் செவிலி 178
என்றுடன் விளம்பிய எல்லாம் களவியல்
நின்றுழி அறத்தொடு நிற்றலின் விரியே 179 
போக்கே கற்பொடு புணர்ந்த கவ்வை
மீட்சி என்று ஆங்கு விளம்பிய மூன்றும்
வெளிப்பாட்டுக் கிளவியின் வழிபடு தொகையே 180 
போக்கு அறிஉறுத்தல் போக்கு உடன்படாமை
போக்கு உடன்படுத்தல் போக்கு உடன்படுதல்
போக்கல் விலக்கல் புகழ்தல் தேற்றல் என்று
யாப்பமை உடன்பொக்கு இருநான்கு வகைத்தே 181 
பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்தலும்
ஆங்கு அவன் மறுத்தலும் அவள் உடன்படுத்தலும்
தலைவன் போக்குடன் படுதலும் பாங்கி
தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தலும் தலைவி
நாண்அழிபு இரங்கலும் கற்பு மேம்பாடு
பூண்முலைப் பாங்கி புகறலும் தலைவி
ஒருப்பட்டு ஒழுகலும் விருப்பு உடைப் பாங்கி
சுரத்தியல் வைத்துழி ச் சொல்லலும் பாங்கி
கையடை கொடுத்தலும் வைகிருள் விடுத்தலும்
அவன் சுரத்து உய்த்தலும் அசைவு அறிந்து இருத்தலும்
உவந்து அலர் சூட்டி உண் மகிழ்ந்து உரைத்தலும்
கண்டோர் அயிர்த்தலும் காதலின் விலக்கலும்
தன்பதி அணிமை சாற்றலும் தலைவன்
தன்பதி அடைந்தமை தலைவிக்கு உணர்த்தலும்
என்று இவை ஒன்பதற்று இருவகைக் கிளவியும்
ஒன்றிய அன்பின் உடன் போக்கு விரியே 182 
செவிலி புலம்பல் நற்றாய் புலம்பல்
கவர்மனை மருட்சி கண்டோர் இரக்கம்
செவிலி பின் தேடிச் சேறல் என்றாங்குக்
கற்பொடு புணர்ந்த கவ்வை வகைத்தே 183 
வினவிய பாங்கியின் உணர்ந்த காலை
இணையல் என்போர்க்கு எதிர் அழிந்து மொழிதலும்
தன்னறிவு இன்மை தன்னை நொந்து உரைத்தலும்
தெய்வம் வாழ்தலும் இவ்ஒரு மூன்றும்
இலங்கிழைச் செவிலி புலம்புதற்கு உரிய 184 
செவிலி அறத்தொடு நிற்றலிற் கவலையிற்
பாங்கி தன்னொடும் பாங்கியர் தம்மொடும்
அயலார் தம்மொடும் பயில்இடம் தம்மொடும்
தாஙகலள் ஆகிச் சாற்றிய எல்லாம்
பூங்கொடி நற்றாய் புலம்பற்கு உரிய 185 
நிமித்தம் போற்றலும் சுரம் தணிவித்தலும்
தன்மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கலும்
இளமைத் தன்மைக்கு உளமெலிந்து இரங்கலும்
அச்சத்தன்மைக்கு அச்சம்உற்று இரங்கலும்
எனஇவை ஐந்தும் மனைமருட்சிக்குரிய 186 
ஆயமும் தாயும் அழுங்கக் கண்டோர்
காதலின் இரங்கல் கண்டோர் இரக்கம் 187 
ஆற்றா தாயை தேற்றலும் ஆற்றிடை
முக்கோர் பகவரை வினாதலும் மிக்கோர்
ஏதுக் காட்டலும் எயிற்றியொடு புலம்பலும்
குராவொடு புலம்பலும் சுவடு கண்டு இரங்கலும்
கலந்துடன் வருவோர்க் கண்டு கேட்டலும் அவர்
புலம்பல் தேற்றலும் புதல்வியைக் காணாது
கவலை கூர்தலும் எனும் இவை ஒன்பானும்
செவிலி பினதேடிச் சேறற்கு உரிய 188 
முற்பட மொழிந்த முறை எழு முன்றும்
கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரியே 189 
தெளித்தல் மகிழ்ச்சி வினாதல் செப்பல் என
வெளிப்பட உரைத்த மீட்சி நால் வகைத்தே 190 
தலைவி சேண்அகன்றமை செவிலிதாய்க்கு உணர்த்தலும்
தலைவன் தம்ஊர் சார்ந்தமை சாற்றலும்
தலைவி முன்செல்வோர் தம்மொடு தன்வரல்
பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தலும் ஆங்கவர்
பாங்கியர்க்கு உணர்த்தலும் ஆங்கவர் கேட்டு
நற்றாய்க்கு உணர்த்தலும் நற்றாய் கேட்டவன்
உளங்கோள் வேலனை வினாதலும் எனவுடன்
விளம்பி இருமுன்று மீட்சியின் விரியே 191 
மடந்தையை உடன் போய் வரைந்து மீடற்கும்
அவள்மனை வரைதற்கும் தன்மனை வரைதற்கும்
இவை ஐந்தும் உரிய செவிலிக் கூற்று ஒழித்தே 192 
வினாதல் செப்பல் மேவல் என்று இறைவன்
தனாதில் வரைதல்தான் மூவகைத்தே 193 
பணிமொழி நற்றாய் மணனயர் வேட்கையில்
செவிலியை வினாதலும் செவிலிக்கு இகுளை
வரைந்தமை உரைத்தலும் வரைந்தமை செவிலி
நற்றாய்க்கு உணர்த்தலும் உற்று ஆங்கு இருவரும்
தலைவி இல் வந்துழி தலைவன் பாங்கிக்கு
யான் வரைந்தமை நுமக்கு இயம்பு சென்று என்றலும்
தானது முன்னே சாற்றியது உரைத்தலும்
என்னும் இவ்வைந்து மின்னிலை வேலோன்
மன்னிய தன் மனை வரைதலின் விதியே 194 
ஆதி ஒன்று ஒழித்து அல்லன நான்கும்
மாதினியுடன் உடன்போய் வரைந்து மீடற்கு
நீதியின் உரிய நினையும் காலை 195 
இருவர் இல்லிற்கும் இயைந்த பன்னொன்றும்
ஒருவகை மீண்டு வரைதலின் விரியே 196 
போக்கு அறிஉறுத்தல் வரவு அறிஉறுத்தல்
நீக்கம் இரக்கமொடு மீட்சி என்று ஆங்கு
உடன்போக்கு இடையீடு ஒருநால் வகைத்தே 197 
நீங்கும் கிழத்தி பாங்கியர் தமக்குத்
தன் செலவு உணர்த்தி விடுத்தலும் தலைமகள்
தன் செலவு ஈன்றாளுக்கு உணர்த்தி விடுத்தலும்
ஈன்றாட்கு அந்தணர் மொழிதலும் ஈன்றாள்
அறத்தொடு நிற்றலின் தமர் பின் சேறலைத்
தலைவி கண்டு தலைவர்க்கு உணர்த்தலும்
தலைமகள் தன்னை தலைமகன் விடுத்தலும்
தமருடன் செல்பவள் அவன்புற நோக்கிக்
கவன்றாற்றலும் என நுவன்றவை ஆறும்
உடன்போக்கு இடையீட்டிற்கு விரியாகும்மே 198 
தன்ஊர் வரைதலும் தன்மனை வரைதலும்
என்னும் இவ்விரண்டு ஒழித்து எவற்றினும் கிழவோன்
அந்தணர் சான்றோர் முன்னிட்டு அருங்கலம்
தந்து வரைதல் தகுதி என்ப 199
பொற்பமை சிறப்பில் கற்பெனப் படுவது
மகிழ்வும் ஊடலும் ஊடல் உணர்த்தலும்
பிரிவும் பிறவும் மருவியது ஆகும் 200 
இல்வாழ்க்கையே பரத்தையர் பிரிவே
ஓதல் பிரிவே காவல் பிரிவே
தூதில் பிரிவே துணைவயிற் பிரிவே
பொருள்வயிற் பிரிவே எனப் பொருந்திய ஏழும்
வளமலி கற்பின் கிளவித்தொகையே 201 
கிழவோன் மகிழ்ச்சி கிழத்தி மகிழ்ச்சி
பாங்கி மகிழ்ச்சி செவிலி மகிழ்ச்சி என்று
ஈங்கு நால்வகைத்து ழ்ல்வாழ்க்கையே 202 
தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தலும்
தலைவனைப் பாங்கி வாழத்தலும் தலைவியை
வரையு நாளளவும் வருந்தாது இருந்தமை
உரையாய் என்றலும் பெருமகளுக்கு உரைத்தலும்
தலைவனை பாங்கி வரையு நாளளவும்
நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதலும்
மன்றல் மனைவரு செவிலிக்கு இகுளை
அன்புற உணர்த்தலும் வாழ்க்கை நன்றுஅறைதலும்
மணமனைச் சென்று வந்த செவிலி
பொற்றொடி கற்பியல் நற்றாய்க்கு உணர்த்தலும்
நன்மனை வாழ்க்கைத் தன்மனை உணர்த்தலும்
அன்னவர் காதல் அறிவித்தலும் எனும்
இன்னவை பத்தும் இல்வாழ்க்கை விரியே 203 
வாயில் வேண்டல் வாயில் மறுத்தல்
வாயினேர் வித்தல் வாயின் நேர்தல் என்று
ஆய பரத்தையின் அகற்ச்சி நால் வகைத்தே 204 
காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு
ஏது ஈதாம் இவ்விறைவிக்கு என்றலும்
தனித்துழி இறைவி துனித்து அழுது இரங்கலும்
ஈங்கு இது என் என பாங்கி வினாதலும்
இறைமகன் புறத்தொழுக்கு இறைமகளுக்குணர்த்தலும்
தலவியைப் பாங்கி கழறலும் தலைவி
செவ்வணி உழையர் கண்டு அழுங்கிக் கூறலும்
பரத்தையர் கண்டு பழித்தலும் பரத்தையர்
உலகியல் நோக்கி விடுத்தலில் தலைவன்
வரைவு கண்டு உவந்து வாயில்கள் மொழிதலும்
வரவுணர் பாங்கி அரிவைக்கு உணர்த்தலும்
முதிரா மென்முலை எதிர் கொண்டு பணிதலும்
புணர்ச்சியின் மகிழ்வும் என்றுரைத்த பன்னொன்றும்
உணர்த்த உணரும் ஊடற்கு உரிய 205 
வெள்ளணி அணிந்து விடுத்துழிப் புள்ளணி
மலைவேல் அண்ணல் வாயில் வேண்டலும்
தலைவி நெய்யாடியது இகுளை சாற்றலும்
தலைவன் தன் மனத்து உவகை கூறலும்
தலைவிக் கவன்வரல் பாங்கி சாற்றலும்
தலைவி உணர்ந்து தலைவனொடு புலத்தலும்
பாணன் முதலாப் பாங்கன் ஈறாப்
பேணிய வாயில்கள் பெரியோன் விடுத்துழி
மறுத்தலும் விருந்தொடு வந்துழிப் பொறுத்தல்கண்டு
இறையோன் மகிழ்தலும் இறைமகள் விருந்து கண்டு
ஒளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச்
சீறேல் என்றிவள் சீறடி தொழலும் இ·து
எங்கையர் காணின் நன்று என்றலும்
அங்கு அவர் யரையும் அறியேன் என்றலும்
காமக் கிழத்தியைக் கண்டமை பகர்தலும்
தாமக் குழலியை பாங்கி தணித்தலும்
தனி யாளாகத் தலைமகன் ஊடலும்
அறிவளைப் பாங்கி அன்பிலை கொடியை என்று
இணர்தார் மார்பனை இகழ்தலும் பிறவும்
ஊணர்த்த உணரா ஊடற்கு உரிய 206 
ஆயிழை மைந்தனும் ஆற்றாமையுமே
வாயிலாக வரவு எதிர் கோடலும்
மணந்தவன் போனபின் வந்த பாங்கியோடு
இணங்கிய மைந்தனை இனிதில் புகழ்தலும்
தலைவனைப் புகழ்தலும் சிலைநுதல் பாங்கி
மனைவியைப் புகழ்தலும்இனையவை பிறவும்
அனைவகை மொழிந்த அதன்பாற்படுமே 207 
மூன்று சூத்திரத்து மொழிந்தவை எல்லாம்
ஆன்ற பரத்தையின் அகற்சியின் விரியே 208 
பிரிவு அறிஉறுத்தல் பிரிவு உடன்படாமை
பிரிவு உடன் படுத்தல் பிரிவு உடன் படுதல்
பிரிவுழிக் கலங்கல் வன்புறை வன்பொறை
வருவழிக் கலங்கல் வந்துழி மகிழ்ச்சி என்று
ஒருமையிற் கூறிய ஒன்பது வகைய
கல்வி முதலா எல்லாப் பிரிவும் 209
ஒழிபெனப் படுவ தகப்பாட்டு உறுப்பும்
வழுவும் அமைவும் தழுவியது ஆகும் 210 
திணையே கைக்கோள் கூற்றே கேட்போர்
இடனே காலம் பயனே முன்னம்
மெய்ப்பாடு எச்சம்பொருள்வகை துறை என்று
அப்பால் ஆறிரண்டு அகப் பாட்டு உறுப்பே 211 
அவற்றுள்
முன்னவை இரண்டும் சொன்னவை ஆகும் 212 
தலைவன் தலைவி பார்ப்பான் பாங்கன்
பாங்கி செவிலி என்று ஈங்கு இவ்அறுவரும்
சாற்றிய களவில் கூற்றிற்கு உரியர் 213 
நற்றாய் கண்டோர் பாணன் கூத்தர்
விறலி பரத்தை அறிவர் என்று எழுவரும்
அறுவர் என்ற அவரும் ஆகிய அனைவரும்
குறைவறு கற்பில் கூற்றிற்கு உரியர் 214 
பயந்தோன் தன்னை உயங்கு நோய் அறிவொர்
ஊரவர் அயலோர் சேரியோர் என்று இவர்
முகத்துரை நிகழா அகப்பொருள் அகத்தே 215 
தமர் வரின் இ¨Sடச்சுரம் தன்னில் கிழத்தியோடு
அமர்தரு கிழவோன் ஆணையும் கூறும் 216 
உடன்போய் மீண்ட கொடுங்குழை மடந்தை
பிரிவுழித் தலைவனொடு சுரத்தியல் பேசலும்
பிரிவுழி நெஞ்சொடும் பிறரெடும் வருந்திச்
சொல்லும் உரியள் சொல்லுங் காலை 217 
தலைவன் தலைவியொடு நற்றாய் கூறாள் 218
புணர்ந்து உடன்போயது உணர்ந்த பின்னர்
அந்தணர் தெய்வம் அயலோர் அறிவர்
சிந்தைநோவு அறிவோர் செவிலி பாங்கியொடு
கண்டோர்க்கு உரைக்கும் பண்புடை நற்றாய் 219 
தாயொடும் பாங்கி தான் முதலாரொடும்
சேயிழை செவிலியும் செப்பும் ஆங்கே 220 
தாயர் பாங்கியர் தலைவன் தலைவியோடு
ஏயும் என்ப கண்டோர் கூற்றே 221 
சாற்றா எழுவரும் தலைவன் தலைவியோடு
ஏற்றன கூறுப இடந்தொறும் இடந்தொறும் 222 
நெஞ்சு நாணு நிறைசேர் அறிவும்
செஞ்சுடர் பருதியும் தங்களும் மாலையும்
புள்ளும் மாவும் புணரியும் கானலும்
உள்ளுறுத்தியன்றவும் ஒழிந்தவை பிறவும்
தன்சொல் கேட்குந போலவும் ஏவல்
செய்குந போலவும் தோற்றுந போலவும்
மொய்குழல் கிழத்தி மொழிந்தாங்கு அமையும் 223 
இறையோன் முதலோர் யாரொடும் இன்றித்
தம்மொடு தாமே சாற்றியும் அமைப 224 
கிழவோன் கூற்றும் கிழத்திக் கூற்றும்
பழமறையொன் முதல் பதின்மரும் கேட்ப 225 
இறையோன் முதலா எனைவரும் கேட்ப 226
5.18 இடம்
நெற்¢ப்படு கருமம் நிகழ்வழி இடமே 227
சென்றதும் நிகழ்வதும் எதிர்வதும் எனமுறை
நின்று பொருஞ் உணர நிகழ்வது காலம் 228 
இப்பொருள் பயக்கும் இ·து என்பதுவே 229
இன்னார்க்கு இன்னுழி இன்னது பயக்கும் எனும்
முன்னம் தருவது முன்னம் ஆகும் 230 
நகை முதலாம் இருநான்கு மெய்பாடும்
நிகழ்பொருள் மெய்ப்பட நிற்ப மெய்ப்பாடே 231 
சொல்லே ஆயினும் குறிப்பே ஆயினும்
செல்லி முடித்தல் வேண்டுவது எச்சம் 232 
ஒருதிணைக்கு உரிமை பூணா நிலைமை
பொருள்வகை என்மனார் புலமையோரே 233 
சொல்லிய அல்ல ஒன்றினும் அவற்றோடு