pm logo

தாயுமான சுவாமிகளின்
திருப்பாடற்றிரட்டு - 2


tAyumAna cuvAmikaLin
tiruppATaRRiraTTu - part 2
In tamil script, unicode/utf-8 format



Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India for providing a scanned images version of the work.
Etext preparation and proof-reading:
This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons for their help in the preparation and proof-reading of the etext:
Mr. Sakthikumaran, S. Karthikeyan, R. Navaneethakrishnan and S.. Subathra.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This page was first put online on 2 August 2008.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தாயுமான சுவாமிகளின்
திருப்பாடற்றிரட்டு


source of the work:
தாயுமான சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய "திருப்பாடற்றிரட்டு"
திருத்தணிகை சரவணப்பெருமாளையர் அவர்கள் பிரதிக்கிணங்க பரிசோதிக்கப்பட்டு
ஊ. புஷ்பரதசெட்டியார் தமது சென்னை கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்டது
பிரஜோற்பத்தி வருடம்
-----------

உ : சிவமயம்
திருச்சிற்றம்பலம்
தாயுமானசுவாமிகள் திருப்பாடற்றிரட்டு - 2
14. ஆகாரபுவனம்.-சிதம்பர ரகசியம்
15. தேன்முகம்
16. பன்மாலை
17. நினைவொன்று
18. பொன்னைமாதரை
19. ஆரணம்
20. சொல்லற்கரிய
21. வம்பனேன்
22. சிவன்செயல்.
23. தன்னையொருவர்
24. ஆசையெனும்

14. ஆகாரபுவனம் - சிதம்பர ரகசியம்.

ஆகாரபுவனமின்பாகாரமாக
      வங்ஙனேயொருமொழியாலகண்டாகார
யோகானுபூதிபெற்றவன்பராவிக்
      குறுதுணையேயென்னளவுமுகந்தநட்பே
வாகாரும்படிக்கிசைகிண்கிணிவாயென்ன
      மலர்ந்தமலரிடைவாசம்வயங்குமாபோற்
றேகாதியுலகமெங்குங்கலந்துதானே
      திகழனந்தானந்தமயத்தெய்வக்குன்றே.             (1)

அனந்தபதவுயிர்கடொறுமுயிராயென்று
      மானந்தநிலையாகியளவைக்கெட்டாத்
தனந்தனிச்சின்மாத்திரமாய்க்கீழ்மேல்காட்டாச்
      சதசத்தாயருட்கோயிற்றழைத்ததேவே
யினம்பிரிந்தமான்போனானிடையாவண்ண
      மின்பமுறவன்பர்பக்கலிருத்திவைத்துக்
கனந்தருமாகனமேதண்ணருளிற்றானே
      கனிபலித்தவானந்தக்கட்டிக்பேறே.       (2)

பேரனைத்துமணுவெனவேயுதறித்தள்ளப்
      பேரின்பமாகவந்தபெருக்கேபேசா
வீறனைத்துமிந்நெறிக்கேயென்னவென்னை
      மேவென்றவரத்தேபாழ்வெய்யமாயைக்
கூறனைத்துங்கடந்தவெல்லைச்சேடமாகிக்
      குறைவறநின்றிடுநிறைவேகுலவாநின்ற
வாறனைத்தும்புகுங்கடல்போற்சமயகோடி
      யத்தனையுந்தொடர்ந்துபுகுமாதிநட்பே.       (3)

ஆதியந்தமெனுமெழுவாயீறற்றோங்கி
      யருமறையின்னமுங்காணாதரற்றநானா
பேதமதங்களுமலையமலைபோல்வாதப்
      பெற்றியரும்வாய்வாதப்பேயராகச்
சாதகமோனத்திலென்னவடவானீழற்
      றண்ணருட்சந்திரமௌலிதடக்கைக்கேற்க
வேதகசின்மாத்திரமாயெம்மனோர்க்கும்
      வெளியாகவந்தவொன்றேவிமலவாழ்வே.       (4)

விமலமுதற்குணமாகிநூற்றெட்டாதி
      வேதமெடுத்தெடுதித்துரைத்தவிருத்திக்கேற்க
வமையுமிலக்கணவடிவாயதுவும்போதா
      தப்பாலுக்கப்பாலாயருட்கண்ணாகிச்
சமமுமுடன்கலப்புமவிழ்தலுமியாங்காணத்
      தண்ணருடந்தெமைக்காக்குஞ்சாக்ஷிப்பேறே
யிமையளவுமுபகாரமல்லால்வேறொன்
      றியக்காநிர்க்குணக்கடலாயிருந்தவொன்றே.       (5)

ஒன்றாகிப்பலவாகிப்பலவாக்கண்ட
      வொளியாகிவெளியாகியுருவுமாகி
நன்றாகித்தீதாகிமற்றுமாகி
      நாசமுடனுற்பத்திநண்ணாதாகி
யின்றாகிநாளையுமாய்மேலுமான
      வெந்தையேயெம்மானேயென்றென்றேங்கிக்
கன்றாகிக்கதறினர்க்குச்சேதாவாகிக்
கடிதினில்வந்தருள்கூருங்கருணைவிண்ணே.       (6)

அருள்பழுத்தபழச்சுவையேகரும்பேதேனே
      யாரமிர்தேயென்கண்ணேயரியவான
பொருளனைத்துந்தரும்பொருளேகருணைநீங்காப்
      பூரணமாய்நின்றவொன்றேபுனிதவாழ்வே
கருதரியகருத்ததனுட்கருத்தாய்மேவிக்
      காலமுந்தேசமும்வகுத்துக்கருவியாதி
விரிவினையுங்கூட்டியுயிர்த்திரளையாட்டும்
      விழுப்பொருளேயான்சொலும்விண்ணப்பங்கேளே.       (7)

விண்ணவரிந்திரன்முதலோர்நாரதாதி
      விளங்குசப்தருஷிகள்கனவீணைவல்லோ
ரெண்ணரியசித்தர்மனுவாதிவேந்த
      ரிருக்காதிமறைமுனிவரெல்லாமிந்தக்
கண்ணகன்ஞாலம்மதிக்கத்தானேயுள்ளங்
      கையினெல்லிக்கனிபோலக்காட்சியாகத்
திண்ணியநல்லறிவாலிச்சமயத்தன்றோ
      செப்பரியசித்திமுத்திசேர்ந்தாரென்றும்.       (8)

செப்பரியசமயநெறியெல்லாந்தன்றன்
      றெய்வமேதெய்வமெனுஞ்செயற்கையான
வப்பரிசாளருமஃதேபிடித்தாலிப்பா
      லடுத்ததந்நூல்களும்விரித்தேயனுமானாதி
யொப்பவிரித்துரைப்பரிங்ஙன்பொய்மெய்யென்ன
      வொன்றிலையொன்றெனப்பார்ப்பதொவ்வாதார்க்கு
மிப்பரிசாஞ்சமயமுமாயல்லவாகி
      யாதுசமயமும்வணங்குமியல்பதாகி.       (9)

இயல்பென்றுந்திரியாமலியமமாதி
      யெண்குணமுங்காட்டியன்பாலின்பமாகிப்
பயனருளப்பொருள்கள்பரிவாரமாகிப்
      பண்புறவுஞ்சௌபானபக்ஷங்காட்டி
மயலறுமந்திரஞ்சிக்ஷைசோதிடாதி
      மற்றங்கநூல்வணங்கமௌனமோலி
யயர்வறச்சென்னியில்வைத்துராசாங்கத்தி
      லமர்ந்ததுவைதிகசைவமழகிதந்தோ.       (10)

அந்தோவீததிசயமிச்சமயம்போலின்
      றறிஞரெல்லாநடுவறியவணிமாவாதி
வந்தாடித்திரிபவர்க்கும்பேசாமோனம்
      வைத்திருந்தமாதவர்க்குமற்றுமற்று
மிந்த்ராதிபோகநலம்பெற்றபேர்க்கு
      மிதுவன்றித்தாயகம்வேறில்லையில்லை
சந்தானகற்பகம்போலருளைக்காட்டத்
      தக்கநெறியிந்நெறியேதான்சன்மார்க்கம்.       (11)

சன்மார்க்கஞானமதின்பொருளும்வீறு
      சமயசங்கேதப்பொருளுந்தானொன்றாகப்
பன்மார்க்கநெறியினிலுங்கண்டதில்லை
      பகர்வரியதில்லைமன்றுட்பார்த்தபோதங்
கென்மார்க்கமிருக்குதெல்லாம்வெளியேயென்ன
      வெச்சமயத்தவர்களும்வந்திறைஞ்சாநிற்பர்
கன்மார்க்கநெஞ்சமுளவெனக்குந்தானே
கண்டவுடனானந்தங்காண்டலாகும்.       (12)

காண்டல்பெறப்புறத்தினுள்ளபடியேயுள்ளுங்
      காட்சிமெய்ந்நூல்சொலும்பதியாங்கடவுளேநீ
நீண்டநெடுமையுமகலக்குறுக்குங்காட்டா
      நிறைபரிபூரணவறிவாய்நித்தமாகி
வேண்டுவிருப்பொடுவெறுப்புச்சமீபந்தூரம்
      விலகலணுகுதன்முதலாம்விவகாரங்கள்
பூண்டவளவைகண்மனவாக்காதியெல்லாம்
      பொருந்தாமலகம்புறமும்புணர்க்கையாகி.       (13)

ஆகியசற்காரியவூகத்துக்கேற்ற
      வமலமாய்நடுவாகியனந்தசத்தி
யோகமுறுமானந்தமயமதாகி
      யுயிர்க்குயிராயெந்நாளுமோங்காநிற்ப
மோகமிருண்மாயைவினையுயிர்கட்கெல்லா
      மொய்த்ததென்கொலுபகாரமுயற்சியாகப்
பாகமிகவருளவொருசத்திவந்து
      பதிந்ததென்கொனானெனுமப்பான்மையென்கொல்.       (14)

நானென்னுமோரகந்தையெவர்க்கும்வந்து
      நலிந்தவுடன்சகமாயைநானாவாகித்
தான்வந்துதொடருமித்தால்வளருந்துன்பச்
      சாகரத்தின்பெருமையெவர்சாற்றவல்லா
ரூனென்றுமுடலென்றுங்கரணமென்று
      முள்ளென்றும்புறமென்றுமொழியாநின்ற
வானென்றுங்காலென்றுந்தீநீரென்று
      மண்ணென்றுமலையென்றும்வனமதென்றும்.       (15)

மலைமலையாங்காட்சிகண்காணாமையாதி
      மறப்பென்றுநினைப்பென்றுமாயாவாரி
யலையலையாயடிக்குமின்பதுன்பமென்று
      மதைவிளைக்கும்வினைகளென்றுமதனைத்தீர்க்கத்
தலைபலவாஞ்சமயமென்றுந்தெய்வமென்றுஞ்
      சாதகரென்றும்மதற்குச்சாக்ஷியாகக்
கலைபலவாநெறியென்றுந்தர்க்கமென்றுங்
      கடலுறுநுண்மணலெண்ணிக்காணும்போதும்.       (16)

காணரியவல்லலெல்லாந்தானேகட்டுக்
      கட்டாகவிளையுமதைக்கட்டோடேதான்
வீணினிற்கர்ப்பூரமலைபடுதீப்பட்ட
      விந்தையெனக்காணவொருவிவேகங்காட்ட
வூணுறக்கமின்பதுன்பம்பேரூராதி
      யொவ்விடவுமெனைப்போலவுருவங்காட்டி
கோணறவோர்மான்காட்டிமானையீர்க்குங்
      கொள்கையெனவருண்மௌனகுருவாய்வந்து.       (17)

வந்தெனுடல்பொருளாவிமூன்றுந்தன்கை
      வசமெனவேயத்துவாமார்க்கநோக்கி
யைந்துபுலனைம்பூதங்கரணமாதி
      யடுத்தகுணமத்தனையுமல்லையல்லை
யிந்தவுடலறிவறியாமையுநீயல்லை
      யாதொன்றுபற்றினதனியல்பாய்நின்று
பந்தமறும்பளிங்கனையசித்துநீயுன்
      பக்குவங்கண்டறிவிக்கும்பான்மையேம்யாம்.       (18)

அறிவாகியானந்தமயமாயென்று
      மழியாதநிலையாகியாதின்பாலும்
பிரியாமற்றண்ணருளேகோயிலான
      பெரியபரம்பதியனைப்பெறவேவேண்டி
னெறியாகக்கூறுவன்கேளெந்தநாளு
      நிர்க்குணநிற்குளம்வாய்த்துநீடுவாழ்க
செறிவானவறியாமையெல்லாநீங்க
      சிற்சுகம்பெற்றிடுகபந்தந்தீர்கவென்றே.       (19)

பந்தமறுமெய்ஞ்ஞானமானமோனப்
      பண்பொன்றையருளியந்தப்பண்புக்கேதான்
சிந்தையில்லைநானென்னும்பான்மையில்லை
      தேசமில்லைகாலமில்லைதிக்குமில்லை
தொந்தமில்லைநீக்கமில்லைபிரிவுமில்லை
      சொல்லுமில்லையிராப்பகலாந்தோற்றமில்லை
யந்தமில்லையாதியில்லைநடுவுமில்லை
      யகமுமில்லைபுறமுமில்லையனைத்துமில்லை.      (20)

இல்லையில்லையென்னினொன்றுமில்லாததல்ல
      வியல்பாகியென்றுமுள்ளவியற்கையாகிச்
சொல்லரியதன்மையதாயான்றானென்னத்
      தோன்றாதெல்லாம்விழுக்குஞ்சொரூபமாகி
யல்லையுண்டபகல்போலவவித்தையெல்லா
      மடையவுண்டுதடையறவுன்னறிவைத்தானே
வெல்லவுண்டிங்குன்னையுந்தானாகக்கொண்டு
      வேதகமாய்ப்பேசாமைவிளக்குந்தானே.       (21)

தானானதன்மயமேயல்லாலொன்றைத்
      தலையெடுக்கவொட்டாதுதலைப்பட்டாங்கே
போனாலுங்கர்ப்பூரதீபம்போலப்
      போயொளிப்பதல்லாதுபுலம்வேறின்றா
ஞானாகாரத்தினொடுஞேயமற்ற
      ஞாதுருவுநழுவாமனழுவிநிற்கு
மானாலுமிதன்பெருமையெவர்க்கார்சொல்வா
      ரதுவானாலதுவாவரதுவேசொல்லும்.       (22)

அதுவென்றாலெதுவெனவொன்றடுக்குஞ்சங்கை
      யாதலினாலதுவெனலுமறவேவிட்டு
மதுவுண்டவண்டெனவுஞ்சனகனாதி
      மன்னவர்கள்சுகர்முதலோர்வாழ்ந்தாரென்றும்
பதியிந்தநிலையெனவுமென்னையாண்ட
      படிக்குநிருவிகற்பத்தாற்பரமானந்த
கதிகண்டுகொள்ளவுநின்னருள்கூரிந்தக்
      கதியன்றியுறங்கேன்மேற்கருமம்பாரேன்.       (23)

பாராதிவிண்ணனைத்துநீயாச்சிந்தை
      பரியமடலாவெழுதிப்பார்த்துப்பார்த்து
வாராயோவென்ப்ராணநாதாவென்பேன்
      வளைத்துவளைத்தெனைநீயாவைத்துக்கொண்டு
பூராயமாமேலொன்றறியாவண்ணம்
      புண்ணாளர்போனெஞ்சம்புலம்பியுள்ளே
நீராளமாயுருகிக்கண்ணீர்சோர
      நெட்டுயிர்த்துமெய்மறந்தோர்நிலையாய்நிற்பேன்.       (24)

ஆயுமறிவாகியுன்னைப்பிரியாவண்ண
      மணைந்துசுகம்பெற்றவன்பரையோவென்னத்
தீயகொலைச்சமயத்துஞ்செல்லச்சிந்தை
      தெளிந்திடவுஞ்சமாதானஞ்செய்வேன்வாழ்வான்
காயிலைபுன்சருகாதியருந்தக்கானங்
      கடன்மலையெங்கேயெனவுங்கவலையாவேன்
வாயில்கும்பம்போற்கிடந்துபுரள்வேன்வானின்
      மதிகதிரைமுன்னிலையாவைத்துநேரே.       (25)

நேரேதானிரவுபகல்கோடாவண்ண
      நித்தம்வரவுங்களையிந்நிலைக்கேவைத்தா
ராரேயங்கவர்பெருமையென்னேயென்பே
      னடிக்கின்றகாற்றேநீயாராலேதான்
பேராதேசுழல்கின்றாயென்பேன்வந்து
      பெய்கின்றமுகில்காளெம்பெருமானும்போற்
றாராளமாக்கருணைபொழியச்செய்யுஞ்
      சாதகமென்னேகருதிச்சாற்றுமென்பேன்.       (26)

கருதரியவிண்ணேநீயெங்குமாகி
      கலந்தனையேயுன்முடிவின்காட்சியாக
வருபொருளெப்படியிருக்குஞ்சொல்லாயென்பேன்
      மண்ணேயுன்முடிவிலெதுவயங்குமாங்கே
துரியவறிவுடைச்சேடனீற்றினுண்மை
      சொல்லானோசொல்லென்பேன்சுருதியேநீ
யொருவரைப்போலனைவருக்குமுண்மையாமுன்
      னுரையன்றோவுன்முடிவையுரைநீயென்பேன்.       (27)

உரையிறந்துபெருமைபெற்றுத்திரைக்கைநீட்டி
      யொலிக்கின்றகடலேயிவ்வுலகஞ்சூழக்
கரையுமின்றியுன்னைவைத்தாரியாரேயென்பேன்
      கானகத்திற்பைங்கிளிகாள்கமலமேவும்
வரிசிறைவண்டினங்காளோதிமங்காடூது
      மார்க்கமன்றோநீங்களிதுவரையிலேயும்
பெரியபரிபூணமாம்பொருளைக்கண்டு
      பேசியதுண்டோவொருகாற்பேசுமென்பேன்.       (28)

ஒருவனவன்யானைகெடக்குடத்துட்செங்கை
      யோட்டுதல்போனான்பேதையுப்போடப்பை
மருவவிட்டுங்கர்ப்பூரமதனிற்றீபம்
      வயங்கவிட்டுமைக்கியமுன்னிவருந்திநிற்பே
னருளுடையபரமென்றோவன்றுதானே
      யானுளனென்றும்மெனக்கேயாணவாதி
பெருகுவினைக்கட்டென்றுமென்னாற்சுட்டிப்
      பேசியதன்றேயருணூல்பேசிற்றன்றே.       (29)

அன்றுமுதலின்றைவரைச்சனன்கோடி
      யடைந்தடைந்திங்கியாதனையாலழிந்ததல்லா
லின்றைவரைமுத்தியின்றேயெடுத்ததேக
      மெப்போதோதெரியாதேயிப்போதேதான்
றுன்றுமனக்கவலைகெடப்புலைநாயேனைத்
      தொழும்புகொளச்சீகாழித்துரையேதூது
சென்றிடவேபொருளைவைத்தநாவலோய்நஞ்
      சிவனப்பாவென்றவருட்செல்வத்தேவே.       (30)

தேவர்தொழும்வாதவூர்த்தேவேயென்பேன்
      றிருமூலத்தேவேயிச்சகத்தோர்முத்திக்
காவலுறச்சிவவென்வாக்குடனேவந்த
      வரசேசும்மாவிருந்துன்னருளைச்சாரப்
பூவுலகில்வளரருணகிரியேமற்றைப்
      புண்ணியர்காளோவென்பேன்புரையொன்றில்லா
வோவியம்போலசைவறவுந்தானேநிற்பே
      னோதரியதுயர்கெடவேயுரைக்குமுன்னே.       (31)

ஓதரியசுகர்போலவேனேனென்ன
      யொருவரிலையோவெனவுமுரைப்பேன்றானே
பேதமபேதங்கெடவுமொருபேசாமை
      பிறவாதோவாலடியிற்பெரியமோன
நாதனொருதரமுலகபார்க்கவிச்சை
      நண்ணானோவென்றென்றேநானாவாகிக்
காதன்மிகுமணியிழையாரெனவாடுற்றேன்
      கருத்தறிந்துபுரப்பதுன்மேற்கடன்முக்காலும்.       (32)

காலமொடுதேசவர்த்தமானமாதி
      கலந்துநின்றநிலைவாழிகருணைவாழி
மாலறவுஞ்சைவமுதன்மதங்களாகி
      மதாதீதமானவருண்மரபுவாழி
சாலமிகுமெளியேனிவ்வழக்குப்பேசத்
      தயவுவைத்துவளர்த்தவருட்டன்மைவாழி
யாலடியிற்பரமகுருவாழிவாழி
      யகண்டிதாகாரவருளடியார்வாழி.       (33)
--------

15. தேன்முகம்.

தேன்முகம்பிலிற்றும்பைந்தாட்
      செய்யபங்கயத்தின்மேவு,
நான்முகத்தேவேநின்னா
      னாட்டியவகிலமாயை,
கான்முயற்கொம்பேயென்கோ
      கானலம்புனலேயென்கோ,
வான்முகமுளரியென்கோமற்றென்
      கோவிளம்பல்வேண்டும்.       (1)

வேண்டுவபடைத்தாய்நுந்தைவிதிப்படிபுரந்தானத்தைக்,
காண்டகவழித்தான்முக்கட்கடவுடானினையவாற்றா,
லாண்டவனெவனோவென்னவறிகிலாதகிலநீயே,
யீண்டியவல்லறீரவெம்மனோர்க்கியம்புகண்டாய்.       (2)

சுண்டனவல்லவென்றே கழித்திடுமிறுதிக்கண்ணே,
கொண்டதுபரமானந்தக்கோதிலாமுத்தியத்தாற்,
பண்டையிற் படைப்புங்காப்பும் பறந்தன மாயையோடே,
வெண்டலைவிழிகைகாலில்விளங்கிடநின்றான்யாவன்.       (3)

விளங்கவெண்ணீறுபூசிவிரிசடைக்கங்கைதாங்கித்,
துளங்குநன்னுதற்கண்டோன்றச்சுழல்வளிநெடுமூச்சாகக்,
களங்கமிலுருவந்தானேககனமாய்ப்பொலியப்பூமி,
வளர்ந்ததாளென்னவுள்ளமன்றெனமறையொன்றின்றி.       (4)

மறைமுழக்கொலிப்பத்தானேவரதமோடபயக்கைண்,
முறைமையினோங்கநாதமுரசெனக்கறங்கவெங்,
குறைவிலாவணநிறைந்துகோதிலா நடனஞ்செவா,
னிறையவனெனலாமியார்க்குமிதயசம் மதமீதலால்.       (5)

அல்லலாந் தொழில்படைத்தே
      யடிக்கடியுர்வெடுதே,
மல்லன் மாஞாலங்காக்க வருபவர்
      கடவுளென்னிற்
றொல்லையாம் பிறவிவேலை
      தொலைந்திடா திருணீங்காது
நல்லதுமாயைதானு
      நானெனவந்துநிற்கும்.       (6)

நானெனநிற்குஞானஞானமன்றந்தஞான,
மோனமாயிருக்கவொட்டாமோனமின்றாகவேதான்,
றேனெனருசிக்குமன்பாற் சிந்தைநைந்
      துருகும்வண்ணம்,
வானெனநிறைந்தானந்தமா
      கடல்வளைவதின்றே.       (7)

இன்றென விருப்போமென்னினென்றுஞ்
      சூனியமமுத்தி,
நன்றொடுதீதுமன்றி நாமுன்னே
      பெறுமவித்தை,
நின்றதுபெத்தந்தானே
      நிரந்தரமுத்தியென்னி,
னொன்றொருவரைநான்கேட்க
      வுணர்வில்லைகுருவுமில்லை.       (8)

இல்லையென்றிடினிப்பூமியிருந்தவாறிருப்போமென்னி,
னல்லவன்சாருவாகனான்சொலுநெறிக்குவீணிற்,
றொல்லையே னாகமாதி தொடுப்பதேன் மயக்கமேதிங்,
கொல்லைவந்திருமினென்னவுறவுசெய்திடுவனந்தோ.       (9)

அந்தணர்நால்வர்காணவருட்குருவாகிவந்த,
வெந்தையேயெல்லாந்தானென் றியம்பினனெமைப்படைத்த,
தந்தைநீயெம்மைக்காக்குந் தலைவனேநுந்தையன்றோ,
பந்தமில்சித்திமுத்தி படைக்கநின்னருள்பாலிப்பாய்.       (10)
--------

16. பன்மாலை

பன்மாலைத்திரளிருக்கத்தமையுணர்ந்தோர்
      பாமாலைக்கேநீதான்பக்ஷமென்று
நன்மாலையாவெடுத்துச்சொன்னார்நல்லோர்
      நலமறிந்துகல்லாதநானுஞ்சொன்னேன்
சொன்மாலைமாலையாக்கண்ணீர்சோரத்
      தொண்டனேனெந்நாளுந்துதித்துநிற்பே
னென்மாலையறிந்திங்கேவாவாவென்றே
      யெனைக்கலப்பாய்திருக்கருணையெம்பிரானே.       (1)

கருணைமொழிசிறிதில்லேனீதலில்லேன்
      கண்ணீர்கம்பலையென்றன்கருத்துக்கேற்க
வொருபொழுதும்பெற்றறியேனென்னையாளு
      மொருவாவுன்னடிமைநானொருத்தனுக்கோ
விருவினையுமுக்குணமுங்கரணநான்கு
      மிடர்செயுமைம்புலனுங்காமாதியாறும்
வரவரவுமேழைக்கோரெட்டதான
      மதத்தொடும்வந்தெதிர்த்தநவவடிவமன்றே.       (2)

வடிவனைத்துந்தந்தவடிவில்லாச்சுத்த
      வான்பொருளேயெளியனேன்மனமாயைக்
குடிகெடுக்கத்துசங்கட்டிக்கொண்டமோன
      குருவேயென்றெய்வமேகோதிலாத
படியெனக்கானந்தவெள்ளம்வந்துதேக்கும்
      படியெனக்குன்றிருக்கருணைபற்றுமாறே
யடியெடுத்தென்முடியிலின்னம்வைக்கவேண்டு
      மடிமுடியொன்றில்லாதவகண்டவாழ்வே.       (3)

வாழ்வனைத்துமயக்கமெனத்தேர்ந்தேன்றேர்ந்த
      வாறேநானப்பாலோர்வழிபாராமற்
றாழ்வுபெற்றிங்கிருந்தேனீதென்னமாயந்
      தடையுற்றான்மேற்கதியுந்தடையதாமே
யூழ்வலியோவல்லதுன்றன்றிருக்கூத்தோவிங்
      கொருதமியேன்மேற்குறையோவுணர்த்தாயின்னம்
பாழவதிப்படவெனக்குமுடியாதெல்லாம்
      படைத்தளித்துத்துடைக்கவல்லபரிசினானே.       (4)

நானானிங்கெனுமகந்தையெனக்கேன்வைத்தாய்
      நல்வினைதீவினையெனவேநடுவேநாட்டி
யூனாருமுடற்சுமையென்மீதேன்வைத்தா
      யுயிரெனவுமென்னையொன்றா வுள்ளேன்வைத்தா
யானாமையாயகிலநிகிலபேத
      மனைத்தினுள்ளுந்தானாகியறிவானந்தத்
தேனாகிப்பாலாகிக்கனியாய்க்கன்னற்
      செழும்பாகாய்க்கற்கண்டாய்த்திகழ்ந்தவொன்றே.       (5)

ஒன்றியொன்றிநின்றுநின்றுமென்னையென்னை
      யுன்னியுன்னும்பொருளலைநீயுன்பாலன்பா
னின்றதன்மைக்கிரங்கும்வைராக்கியனல்லே
      னிவர்த்தியவைவேண்டுமிந்தநீலனுக்கே
யென்றுமென்றுமிந்நெறியோர்குணமுமில்லை
      யிடுக்குவார்கைப்பிள்ளையேதோவேதோ
கன்றுமனத்துடனாடுதழைதின்றாற்போற்
      கல்வியுங்கேள்வியுமாகிக்கலக்குற்றேனே.       (6)

உற்றதுணைநீயல்லாற்பற்றுவேறொன்
      றுன்னேன்பன்னாளுலகத்தோடியாடிக்
கற்றதுங்கேட்டதுமிதனுக்கேதுவாகுங்
      கற்பதுங்கேட்பதுமையுங்காணாநீத
நற்றுணையேயருட்டாயேயின்பமான
      நாதாந்தபரம்பொருளேநாரணாதி
சுற்றமுமாய்நல்லன்பர்தமைச்சேயாகத்
தொழும்புகொள்ளுங்கனாகனமேசோதிக்குன்றே.       (7)

குன்றாதமூவுருவாயருவாய்ஞானக்
      கொழுந்தாகியறுசமயக்கூத்துமாடி
நின்றாயேமாயையெனுந்திரையைநீக்கி
      நின்னையாரறியவல்லார்நினைப்போர்நெஞ்ச
மன்றாகவின்பக்கூத்தாடவல்ல
      மணியேயென்கண்ணேமாமருந்தேநால்வர்க்
கன்றாலின்கீழிருந்துமோனஞான
      மமைத்தசின்முத்திரைக்கடலேயமரரேறே.       (8)

திரையில்லாக்கடல்போலச்சலனந்தீர்ந்து
      தெளிந்துருகும்பொன்போலச்செகத்தையெல்லாங்
கரையவேகனிந்துருக்குமுகத்திலேநீ
      கனிந்தபரமானந்தக்கட்டியிந்நாள்
வரையிலேவரக்காணேனென்னாற்கட்டி
      வார்த்தைசொன்னாற்சுகம்வருமோவஞ்சனேனை
யிரையிலேயிருத்திநிருவிகற்பமான
      வின்பநிஷ்டைகொடுப்பதையாவெந்தநாளோ.       (9)

எந்தநாளுனக்கடிமையானநாளோ
      வெந்நாளோகதிவருநாளெளியனேன்றன்
சிந்தைநாளதுவரைக்குமயங்கிற்றல்லாற்
      றெளிந்ததுண்டோமௌனியாய்த்தெளியவோர்சொற்
றந்தநாண்முதலின்பக்கால்சற்றல்லாற்
      றடையறவானந்தவெள்ளந்தானேபொங்கி
வந்தநாளில்லைமெத்தவலைந்தேனுன்னை
      மறவாவினபத்தாலேவாழ்கின்றேனே.       (10)
----------

17. நினைவொன்று.

ஞானிகளிடம்பொருளேவல்.

நினைவொன்றுநினையாமனிற்கினகமென்பார்
      நிற்குமிடமேயருளாநிஷ்டையருளொட்டுந்
தனையென்றுமறந்திருப்பவருள்வடிவானதுமேற்
      றட்டியெழுந்திருக்குமின்பந்தன்மயமேயதுவாம்
பினையொன்றுமிலையந்தவின்பமெனுநிலயம்
      பெற்றாரேபிறவாமைபெற்றார்மற்றுந்தான்
மனையென்றுமகவென்றுஞ்சுற்றமென்றுமசுத்த
வாதனையாமாசையொழிமன்னொருசொற்கொண்டே.       (1)

ஒருமொழியேபலமொழிக்குமிடங்கொடுக்குமந்த
      வொருமொழியே மலமொழிக்கு மொழிக்கு மெனமொழிந்த,
குருமொழியேமலையிலக்கு மற்றைமொழி யெல்லாங்
      கோடின்றிவட்டாடல்கொள்வதொக்குங்கண்டாய்,
கருமொழியிங்குனக்கில்லைமொழிக்குமொழிருசிக்கக்,
      கரும்பனையசொற்கொடுனைக்காட்டவுங்கண்டனைமேற்,
றருமொழியிங்குனக்கில்லையுன்னைவிட்டுநீங்காத்,
      தற்பரமாயானந்தப்பொற்பொதுவாய்நில்லே.       (2)

நில்லாதவாக்கைநிலையன்றெனவேகண்டாய்
      நேயவருண்மெய்யன்றோநிலயமதாநிற்கக்
கல்லாதேயேன்படித்தாய்கற்றதெல்லாமூடங்
      கற்றதெல்லாமூடமென்றேகண்டனையுமன்று
சொல்லாலேபயனில்லைசொன்முடிவைத்தானே
      தொடர்ந்துபிடிமர்க்கடம்போற்றொட்டதுபற்றாநில்
லெல்லாருமறிந்திடவேவாய்ப்பறைகொண்டடிநீ
      யிராப்பகலில்லாவிடமேயெமக்கிடமென்றறிந்தே.       (3)

இடம்பொருளேவலைக்குறித்துமடம்புகுநாயெனவே
      யெங்கேநீயகப்பட்டாயிங்கேநீவாடா
மடம்பெறுபாழ்நெஞ்சாலேயஞ்சாதேநிராசை
      மன்னிடமேயிடமந்தமாநிலத்தேபொருளுந்
திடம்பெறவேநிற்கினெல்லாவுலகமும்வந்தேவல்
      செய்யுமிந்தநிலைநின்றோர்சனகன்முதன்முனிவர்
கடம்பெறுமாமதயானையென்னவுநீபாசக்
      கட்டானநிகளபந்தக்கட்டவிழப்பாரே.       (4)

பாராதியண்டமெலாம்படர்கானற்சலம்போற்
      பார்த்தனையேமுடிவினின்றுபாரெதுதானின்ற
தாராலுமறியாதசத்தன்றோவதுவா
      யங்கிருநீயெங்கிருந்துமதுவாவைகண்டாய்
பூராயமாகவுநீமற்றொன்றைவிரித்துப்
      புலம்பாதேசஞ்சலமாப்புத்தியைநாட்டாதே
யோராதேயொன்றையுநீமுன்னிலைவையாதே
      யுள்ளபடிமுடியுமெலாமுள்ளபடிகாணே.       (5)

உள்ளபடியென்னவுநீமற்றொன்றைத்தொடர்ந்திட்
      டுளங்கருதவேண்டாநிஷ்களங்கமதியாகிக்
கள்ளமனத்துறவைவிட்டெல்லாந்துறந்ததுறவோர்
      கற்பித்தமொழிப்படியேகங்குல்பகலற்ற
வெள்ளவெளிக்கடன்மூழ்கியின்பமயப்பொருளாய்
      விரவியெடுத்தெடுத்துவிள்ளவும்வாயின்றிக்
கொள்ளைகொண்டகண்ணீருங்கம்பலையுமாகிக்
      கும்பிட்டுச்சகம்பொயெனத்தம்பட்டமடியே.       (6)

அடிமுடியுநடுவுமற்றபரவெளிமேற்கொண்டா
      லத்துவிதவானந்தசித்தமுண்டாநமது
குடிமுழுதும்பிழைக்குமொருகுறையுமில்லையெடுத்த
      கோலமெல்லாநன்றாகுங்குறைவுநிறைவறவே
விடியுமுதயம்போலவருளுதயம்பெற்ற
      வித்தகரோடுங்கூடிவிளையாடலாகும்
படிமுழுதும்விண்முழுதுந்தந்தாலுங்களியாப்
      பாலருடனுன்மத்தர்பிசாசர்குணம்வருமே.       (7)

வரும்போமென்பனவுமின்றி யென்றுமொருபடித்தாய்
      வானாகிதத்துவத்தைவளைந்தருந்திவெளியா
மிரும்போகல்லோமாமோவென்னுநெஞ்சைக்
      கனன்மேலிட்டமெழுகாவுருக்கு மின்பவெள்ளமாகிக்
கரும்போகண்டோசீனிசருக்கரையோதேனோ
      கனியமிர்தோவெனருசிக்குங் கருத்தவிழ்ந்தோருணர்வா
ரரும்போநன்மணங்காட்டுங்காமரசங்கன்னி
      யறிவாளோவபக்குவர்க்கோ வந்நலந்தான்விளங்கும்.       (8)

தானேயுமிவ்வுலகமொருமுதலுமாகாத்
      தன்மையினாற்படைத்தளிக்குந்தலைமையதுவான
கோனாகவொருமுதலிங்குண்டெனவும்யூகங்
      கூட்டியதுஞ்சகமுடிவிற்குலவுறுமெய்ஞ்ஞான
வானாகவம்முதலேநிற்குநிலைநம்மான்
      மதிப்பரிதாமெனமோனம்வைத்ததுமுன்மனமே
யானாலுமனஞ்சடமென்றழுங்காதேயுண்மை
யறிவித்தவிடங்குருவாமருளிலதொன்றிலையே.       (9)
-------------

18. பொன்னைமாதரை

பொன்னைமாதரைப்பூமியைநாடிடே
னென்னைநாடியவென்னுயிர்நாதனே
யுன்னைநாடுவனுன்னருட்டூவெளி
தன்னைநாடுவன்றன்னந்தனியனே.       (1)

தன்னதென்றுரைசாற்றுவனவெலா
நின்னதென்றனைநின்னிடத்தேதந்தே
னின்னமென்னையிடருறக்கூட்டினாற்
பின்னையுய்கிலன்பேதையனாவியே.       (2)

ஆவியேயுனையானறிவாய்நின்று
சேவியேன்களச்சிந்தைதிறைகொடேன்
பாவியேனுளபான்மையைக்கண்டுநீ
கூவியாளெனையாட்கொண்டகோலமே.       (3)

கோலமின்றிக்குணமின்றிநின்னருட்
சீலமின்றிச்சிறியன்பிழைப்பனோ
வாலமுண்டுமமிர்துருவாய்வந்த
காலமெந்தைகதிநிலைகாண்பதே.       (4)

காணுங்கண்ணிற்கலந்தகண்ணேயுனைச்
சேணும்பாருந்திரிபவர்காண்பரோ
வாணும்பெண்ணுமதுவெனும்பான்மையும்
பூணுங்கோலம்பொருந்தியுணிற்கவே.       (5)

நிற்குநன்னிலைநிற்கப்பெற்றாரருள்
வர்க்கமன்றிமனிதரன்றேயையா
துர்க்குணக்கடற்சோங்கன்னபாவியேற்
கெற்குணங்கண்டெனபெயர்சொல்வதே.       (6)

சொல்லையுன்னித்துடித்ததலாலரு
ளெல்லையுன்னியெனையங்குவைத்திலேன்
வல்லைநீயென்னைவாவென்றிடாவிடிற்
கல்லையாமிக்கருமிநடக்கையே.       (7)

கையுமெய்யுங்கருத்துக்கிசையவே
யையதந்ததற்கையமினியுண்டோ
பொய்யனேன்சிந்தைப்பொய்கெடப்பூரண
மெய்யதாமின்பமென்றுவிளைவதே.       (8)

என்றுமுன்னையிதயவெளிக்குளே
துன்றவைத்தனனேயருட்சோதிநீ
நின்றதன்மைநிலைக்கென்னைநேர்மையா
நன்றுதீதறவைத்தநடுவதே.       (9)

வைத்ததேகம்வருந்தவருந்திடும்
பித்தனானருள்பெற்றுந்திடமிலேன்
சித்தமோனசிவசின்மயானந்தம்
வைத்தவையவருட்செம்பொற்சோதியே.       (10)

செம்பொன்மேனிச்செழுஞ்சுடரேமுழு
வம்பனேனுனைவாழ்த்துமதியின்றி
யிம்பர்வாழ்வினுக்கிச்சைவைத்தேன்மன
நம்பிவாவெனினானென்கொல்செய்வதே.       (11)

செய்யுஞ்செய்கையுஞ்சிந்திக்குஞ்சிந்தையு
மையநின்னதென்றெண்ணுமறிவின்றி
வெய்யகாமவெகுளிமயக்கமாம்
பொய்யிலேசுழன்றேனென்னபுன்மையே.       (12)

புன்புலானரம்பென்புடைப்பொய்யுட
லன்பர்யார்க்குமருவ்ருப்பல்லவோ
வென்பொலாமணியேயிறையேயித்தாற்
றுன்பமன்றிச்சுகமொன்றுமில்லையே.       (13)

இல்லையுண்டென்றெவர்பக்கமாயினுஞ்
சொல்லவோவறியாததொழும்பன்யான்
செல்லவேறொருதிக்கறியேனெலாம்
வல்லநீயெனைவாழ்விக்கவேண்டுமே.       (14)

வேண்டுஞ்சீரருண்மெய்யன்பர்க்கேயன்பு
பூண்டநானென்புலமறியாததோ
வாண்டநீயுன்னடியவனானென்று
தூண்டுவேனன்றித்தொண்டனென்சொல்வதே.       (15)

எனக்குளேயுயிரென்னவிருந்தநீ
மனக்கிலேசத்தைமாற்றல்வழக்கன்றோ
கனத்தசீரருட்காட்சியலாதொன்றை
நினைக்கவோவறியாதென்றனெஞ்சமே.       (16)

நெஞ்சுகந்துனைநேசித்தமார்க்கண்டர்க்
கஞ்சலென்றவருளறிந்தேயையா
தஞ்சமென்றுன்சரணடைந்தேனெங்குஞ்
செஞ்செவேநின்றசிற்சுகவாரியே.       (17)

வாரியேழுமலையும்பிறவுந்தான்
சீரிதானநின்சின்மயத்தேயென்றா
லாரிலேயுளதாவித்திரளதை
யோரிலேனெனையாண்டவொருவனே.       (18)

ஒருவரென்னுளத்துள்குங்குறிப்பறிந்
தருள்வரோவெனையாளுடையண்ணலே
மருளனேன்பட்டவாதைவிரிக்கினோ
பெருகுநாளினிப்பேசவிதியின்றே.       (19)

இன்றுனக்கன்பிழைத்திலனானென்றே
யன்றுதொட்டெனையாளரசேயென்று
நின்றரற்றியநீலனைக்கைவிட்டான்
மன்றமெப்படிநின்னருள்வாழ்த்துமே.       (20)

வாழ்த்துநின்னருள்வாரம்வைத்தாலன்றிப்
பாழ்த்தசிந்தைப்பதகனுமுய்வனோ
சூழ்ந்துநின்றதொழும்பரையானந்தத்
தாழ்த்துமுக்கணருட்செம்பொற்சோதியே.       (21)

சோதியேசுடரேசுகமேதுணை
நீதியேநிசமேநிறைவேநிலை
யாதியேயுனையானடைந்தேனகம்
வாதியாதருள்வாயருள்வானையே.       (22)

வானைப்போலவளைந்துகொண்டானந்தத்
தேனைத்தந்தெனைச்சேர்ந்துகலந்தமெய்ஞ்
ஞானத்தெய்வத்தைநாடுவனானெனும்
ஈனப்பாழ்கெடவென்றுமிருப்பனே.       (23)

இரும்பைக்காந்தமிழுக்கின்றவாறெனைத்
திரும்பிப்பார்க்கவொட்டாமற்றிருவடிக்
கரும்பைத்தந்துகண்ணீர்கம்பலையெலா
மரும்பச்செய்யெனதன்னையொப்பாமனே.       (24)

அன்னையப்பனென்னாவித்துணையெனுந்
தன்னையொப்பற்றசற்குருவென்பதென்
னென்னைப்பூரணவின்பவெளிக்குளே
துன்னவைத்தசுடரெனத்தக்கதே.       (25)

தக்ககேள்வியிற்சார்ந்தநற்பூமியின்
மிக்கதாகவிளங்குமுதலொன்றே
யெக்கணுந்தொழயாவையும்பூத்துக்காய்த்
தொக்கநின்றுமொன்றாய்நிறைவானதே.       (26)

ஆனமானசமயங்களாறுக்குந்
தானமாய்நின்றுதன்மயங்காட்டிய
ஞானபூரணநாதனைநாடியே
தீனனேனின்பந்தேக்கித்திளைப்பனே.       (27)

தேக்கியின்பந்திளைக்கத்திளைக்கவே
யாக்கமாயெனக்கானந்தமாகியே
போக்கினோடுவரவற்றபூரணந்
தாக்கிநின்றவாதன்மயமாமதே.       (28)

அதுவென்றுன்னுமதுவுமறநின்ற
முதியஞானிகண்மோனப்பொருளது
வெதுவென்றெண்ணியிறைஞ்சுவனேழையேன்
மதியுணின்றின்பவாரிவழங்குமே.       (29)

வாரிக்கொண்டெனைவாய்மடுத்தின்பமாய்ப்
பாரிற்கண்டவையாவும்பருகினை
யோரிற்கண்டிடுமூமன்கனவென
யாருக்குஞ்சொலவாயிலையையனே.       (30)

ஐயமற்றவதிவருணர்க்கெலாங்
கையிலாமலகக்கனியாகிய
மெய்யனேயிந்தமேதினிமீதுழல்
பொய்யனேற்குப்புகலிடமெங்ஙனே.       (31)

எங்ஙனேயுய்யயானெனதென்பதற்
றங்ஙனேயுன்னருண்மயமாகிலேன்
றிங்கள்பாதிதிகழப்பணியணி
கங்கைவார்சடைக்கண்ணுதலெந்தையே.       (32)

கண்ணிற்காண்பதுன்காட்சிகையாற்றொழில்
பண்ணல்பூசைப்பகர்வதுமந்திரம்
மண்ணொடைந்தும்வழங்குயிர்யாவுமே
யண்ணலேநின்னருள்வடிவாகுமே.       (33)

வடிவெலாநின்வடிவெனவாழ்த்திடாக்
கடியனேனுமுன்காரணங்காண்பனோ
நெடியவானெனவெங்குநிறைந்தொளி
ரடிகளேயரசேயருளத்தனே.       (34)

அத்தனேயகண்டானந்தனேயருட்
சுத்தனேயெனவுன்னைத்தொடர்ந்திலேன்
மத்தனேன்பெறுமாமலமாயவான்
கத்தனேகல்வியாததுகற்கவே.       (35)

கற்றுமென்பலன்கற்றிடுநூன்முறை
சொற்றசொற்கள்சுகாரம்பமோநெறி
நிற்றல்வேண்டுநிருவிகற்பச்சுகம்
பெற்றபேர்பெற்றபேசாப்பெருமையே.       (36)

பெருமைக்கேயிறுமாந்துபிதற்றிய
கருமிக்கையகதியுமுண்டாங்கொலோ
வருமைச்சீரன்பர்க்கன்னையொப்பாகவே
வருமப்பேரொளியேயுன்மனாந்தமே.       (37)

உன்மனிக்குளொர்பரஞ்சோதியாஞ்
சின்மயப்பொருளேபழஞ்செல்வமே
புன்மலத்துப்புழுவனபாவியேன்
கன்மனத்தைக்கரைக்கக்கடவதே.       (38)

கரையிலின்பக்கடலமுதேயிது
வரையினானுனைவந்துகலந்திலே
னுரையிலாவின்பமுள்ளவர்போலவித்
தரையிலேநடித்தேனென்னதன்மையே.       (39)

மையுலாம்விழிமாதர்கடோதகப்
பொய்யிலாழும்புலையினிப்பூரைகாண்
கையிலாமலகக்கனிபோன்றவென்
னையனேயெனையாளுடையண்ணலே.       (40)

அண்ணலேயுன்னடியவர்போலருட்
கண்ணினாலுனைக்காணவும்வாவெனப்
பண்ணினாலென்பசுத்துவம்போயுயும்
வண்ணமாகமனோலயம்வாய்க்குமே.       (41)

வாய்க்குங்கைக்குமெளனமௌனமென்
றேய்க்குஞ்சொற்கொண்டிராப்பகலற்றிடா
நாய்க்குமின்பமுண்டோநல்லடியாரைத்
தோய்க்குமானந்தத்தூவெளிவெள்ளமே.       (42)

தூயதானதுரியவறிவெனுந்
தாயுநீயின்பத்தந்தையுநீயென்றாற்
சேயதாமிந்தச்சீவத்திரளன்றோ
வாயும்பேரொளியானவகண்டமே.       (43)

அகண்டமென்னவருமறையாகமம்
புகன்றநின்றன்மைபோதத்தடங்குமோ
செகங்களெங்குந்திரிந்துநன்மோனத்தை
யுகந்தபேருனையொன்றுவரையனே.       (44)

ஐயனேயுனையன்றியொருதெய்வங்
கையினாற்றொழவுங்கருதேன்கண்டாய்
பொய்யனாகிலும்பொய்யுரையேன்சுத்த
மெய்யனாமுனக்கேவெளியாகுமே.       (45)

வெளியினின்றவெளியாய்விளங்கிய
வொளியினின்றவொளியாமுன்றன்னைநான்
றெளிவுதந்தகல்லாலடித்தேவென்று
களிபொருந்தவன்றோகற்றகல்வியே.       (46)

கல்லையுற்றகருத்தினர்கார்நிறத்
தல்லையொத்தகுழலினராசையா
லெல்லையற்றமயல்கொளவோவெழிற்
றில்லையிற்றிகழுந்திருப்பாதனே.       (47)

திருவருட்டெய்வச்செல்லிமலைமக
ளுருவிருக்கின்றமேனியொருபரங்
குருவைமுக்கணெங்கோவைப்பணிநெ*ஞ்சே
கருவிருக்கின்றகன்மமிங்கில்லையே.       (48)

கன்மமேதுகடுநரகேதுமேற்
சென்மமேதெனைத்தீண்டக்கடவதோ
வென்மனோரதமெய்தும்படிக்கரு
ணன்மைகூர்முக்கணாதனிருக்கவே.       (49)

நாதகீதனென்னாதன்முக்கட்பிரான்
வேதவேதியன்வெள்விடையூர்திமெய்ப்
போதமாய்நின்றபுண்ணியன்பூந்திருப்
பாதமேகதிமற்றிலைபாழ்நெஞ்சே.       (50)

மற்றுனக்குமயக்கமென்வன்னேஞ்சே
கற்றைவார்சடைக்கண்ணுதலோனருள்
பெற்றபேரவரேபெரியோரெலா
முற்றுமோர்ந்தவர்மூதுரையர்த்தமே.       (51)

உரையிறந்துளத்துள்ளவிகாரமாந்
திரைகடந்தவர்தேடுமுக்கட்பிரான்
பரைநிறைந்தபரப்பெங்ஙனங்ஙனே
கரைகடந்தின்பமாகக்கலப்பனே.       (52)

கலந்தமுத்திகருதினுங்கேட்பினு
நிலங்களாதியுநின்றெமைப்போலவே
யலந்துபோயினமென்னுமருமறை
மலர்ந்தவாய்முக்கண்மாணிக்கச்சோதியே.       (53)

சோதியாதெனைத்தொண்டருட்கூட்டியே
போதியாதவெல்லாமௌப்போதிக்க
வாதிகாலத்திலுன்னடிக்காந்தவ
மேதுநான்முயன்றேன்முக்கணெந்தையே.       (54)

எந்தநாளைக்குமீன்றருடாயென
வந்தசீரருள்வாழ்கவென்றுன்னுவேன்
சிந்தைநோக்கந்தெரிந்துகுறிப்பெலாந்
தந்துகாக்குந்தயாமுக்கணாதியே.       (55)

கண்ணகன்றவிக்காசினியூடெங்கும்
பெண்ணொடாண்முதலாமென்பிறவியை
யெண்ணவோவரிதேழைகதிபெறும்
வண்ணமுக்கண்மணிவந்துகாக்குமே.       (56)

காக்குநின்னருட்காட்சியல்லாலொரு
போக்குமில்லையென்புந்திக்கிலேசத்தை
நீக்கியாளுகைநின்பரமன்பின
ராக்கமேமுக்கணானந்தமூர்த்தியே.       (57)

ஆனந்தங்கதியென்னவென்னானந்த
மோனஞ்சொன்னமுறைபெறமுக்கணெங்
கோனிங்கீந்தகுறிப்பதனால்வெறுந்
தீனன்செய்கைதிருவருட்செய்கையே.       (58)

கையினாற்றொழுதேத்திக்கசிந்துள
மெய்யினாலுனைக்காணவிரும்பினே
னையனேயரசேயருளேயருட்
டையலோர்புறம்வாழ்சகநாதனே.       (59)

சகத்தின்வாழ்வைச்சதமெனவெண்ணியே
மிகுத்ததீமைவிளையவிளைக்கின்றே
னகத்துளாரமுதாமையநின்முத்தி
சுகத்தினான்வந்துதோய்வதெக்காலமே.       (60)

காலமூன்றுங்கடந்தொளிராநின்ற
சீலமேநின்றிருவருளாவிந்த்ர
சாலமாமிச்சகமெனவெண்ணிநின்
கோலநாடுதலென்றுகொடியனே.       (61)

கொடியவெவ்வினைக்கூற்றைத்துரந்திடு
மடிகளாம்பொருளேநினக்கன்பின்றிப்
படியிலேழமைபற்றுகின்றேன்வெறு
மிடியினேன்கதிமேவும்விதியின்றே.       (62)

விதியையும்விதித்தென்னைவிதித்திட்ட
மதியையும்விதித்தம்மதிமாயையிற்
பதியவைத்தபசுபதிநின்னருட்
கதியையெப்படிக்கண்டுகளிப்பதே.       (63)

கண்டகண்ணுக்குக்காட்டுங்கதிரெனப்
பண்டுமின்றுமென்பானின்றுணர்த்திடு
மண்டனேயுனக்கோர்பதினாயிரந்
தெண்டனென்பொய்மைதீர்த்திடல்வேண்டுமே.       (64)

வேண்டும்யாவுமிறந்துவெளியிடைத்
தூண்டுவாரற்றசோதிப்பிரானின்பாற்
பூண்டவன்பர்தம்பொற்பணிவாய்க்குமே
லீண்டுசன்மமெடுப்பனனந்தமே.       (65)

எடுத்ததேகமிறக்குமுனேயெனைக்
கொடுத்துநின்னையுங்கூடவுங்காண்பனோ
வடுத்தபேரறிவாயறியாமையைக்
கெடுத்தவின்பக்கிளர்மணிக்குன்றமே.       (66)

குன்றிடாதகொழுஞ்சுடரேமணி
மன்றுளாடியமாணிக்கமேயுனை
யன்றியார்துணையாருறவார்கதி
யென்றுநீயெனக்கின்னருள்செய்வதே.       (67)

அருளெலாந்திரண்டோர்வடிவாகிய
பொருளெலாம்வல்லபொற்பொதுநாதவென்
மருளெலாங்கெடுத்தேயுளமன்னலா
லிருளெலாமிரிந்தெங்கொளித்திட்டதே.       (68)

எங்குமென்னையிகலுறவாட்டியே
பங்கஞ்செய்தபழவினைபற்றற்றா
லங்கணாவுன்னடியிணையன்றியே
தங்கவேறிடமுண்டோசகத்திலே.       (69)

உண்டவர்க்கன்றியுட்பசியோயுமோ
கண்டவர்க்கன்றிக்காதலடங்மோ
தொண்டருக்கெளியானென்றுதோன்றுவான்
வண்டமிழ்க்கிசைவாகமதிக்கவே.       (70)

மதியுங்கங்கையுங்கொன்றையுமத்தமும்
பொதியுஞ்சென்னிப்புனிதநின்பொன்னடிக்
கதியைவிட்டிந்தக்காமத்திலாழ்ந்தவென்
விதியையெண்ணிவிழிதுயிலாதன்றே.       (71)

அன்றெனச்சொலவாமெனவற்புத
நன்றெனச்சொலநண்ணியநன்மையை
யொன்றெனச்சொனவொண்பொருளேயொளி
யின்றெனக்கருள்வாயிருளேகவே.       (72)

இருவரேபுகழ்ந்தேத்தற்கினியரா
மொருவரேதுணையென்றுணராய்நெஞ்சே
வருவரேகொடுங்காலர்கள்வந்தெதிர்
பொருவரேயவர்க்கென்கொல்புகல்வதே.       (73)

புகழுங்கல்வியும்போதமும்பொய்யிலா
வகமும்வாய்மையுமன்புமளித்தவே
சுகவிலாசத்துணைப்பொருடோற்றமாங்
ககனமேனியைக்கண்டனகண்களே.       (74)

கண்ணுணின்றவொளியைக்கருத்தினை
விண்ணுணின்றுவிளங்கியமெய்யினை
யெண்ணியெண்ணியிரவும்பகலுமே
நண்ணுகின்றவர்நான்றொழுந்தெய்வமே.       (75)

தெய்வம்வேறுளதென்பவர்சிந்தனை
நைவரென்பதுநற்பரதற்பர
சைவசிற்சிவனேயுனைச்சார்ந்தவ
ருய்வரென்பதும்யானுணர்ந்தேனுற்றே.       (76)

உற்றவேளைக்குறுதுணையாயிந்தச்
சுற்றமோநமைக்காக்குஞ்சொலாய்நெஞ்சே
கற்றைவார்சடைக்கண்ணுதல்பாதமே
பற்றதாயிற்பரசுகம்பற்றுமே.       (77)

பற்றலாம்பொருளேபரம்பற்றினா
லுற்றமாதவர்க்குண்மையைநல்குமே
மற்றும்வேறுளமார்க்கமெலாமெடுத்
தெற்றுவாய்மனமேகதியெய்தவே.       (78)
----------

19. ஆரணம்.

ஆரணமார்க்கத்தாகமவாசி
யற்புதமாய்நடந்தருளுங்
காரணமுணர்ந்துங்கையுநின்மெய்யுங்
கண்கண்மூன்றுடையவென்கண்ணே
பூரணவறிவிற்கண்டிலமதனாற்
போற்றியிப்புந்தியோடிருந்து
தாரணியுள்ளமட்டுமேவணங்கத்
தமியனேன்வேண்டிடத்தகுமே.       (1)

இடமொருமடவாளுலகனைக்கீந்திட்
டெவ்வுலகத்தையுமீன்றுந்
தடமுறுமகிலமடங்குநாளம்மை
தன்னையுமொழித்துவிண்ணெனவே
படருறுசோதிக்கருணையங்கடலே
பாயிருட்படுகரிற்கிடக்கக்
கடனதோநினைப்புமறப்பெனுந்திரையைக்
கவர்ந்தெனைவளர்ப்பதுன்கடனே.       (2)

வளம்பெறுஞானவாரிவாய்மடுத்து
மண்ணையும்விண்ணையுந்தெரியா
தளம்பெறுந்துரும்பொத்தாவியோடாக்கை
யானந்தமாகவேயலந்தேன்
களம்பெறுவஞ்சநெஞ்சினர்காணாக்
காட்சியேசாக்ஷியேயறிஞ
ருளம்பெறுந்துணையேபொதுவினினடிக்கு
முண்மையேயுள்ளவாறிதுவே.       (3)

உள்ளமேநீங்காவென்னைவாவாவென்
      றுலப்பிலாவானந்தமான
வெள்ளமேபொழியுங்கருணைவான்முகிலே
வெப்பிலாத்தண்ணருள்விளக்கே
கள்ளமேதுரக்குந்தூவெளிப்பரப்பே
கருவெனக்கிடந்தபாழ்மாயப்
பள்ளமேவீழாதெனைக்கரையேற்றிப்
பாலிப்பதுன்னருட்பரமே.       (4)

பரம்பரமாகிப்பக்குவம்பழுத்த
பழவடியார்க்கருள்பழுத்துச்
சுரந்தினிரங்குந்தானகற்பகமே
சோதியேதொண்டனேனின்னை
யிரந்துநெஞ்சுடைந்துகண்டுயில்பொறாம
லிருந்ததுமென்கணிலிருட்டைக்
கரந்துநின்கண்ணாற்றுயில்பெறல்வேண்டிக்
கருதினேன்கருத்திதுதானே.       (5)

கருத்தினுட்கருத்தாயிருந்துநீயுணர்த்துங்
காரணம்கண்டுசும்மாதான்
வருத்தமற்றிருந்துசுகம்பெறாவண்ணம்
வருந்தினேன்மதியின்மைதீர்ப்பா
ரொருத்தராருளப்பாடுணர்பவர்யாவ
ருலகவர்பன்னெறியெனக்குப்
பொருத்தமோசொல்லாய்மௌனசற்குருவே
போற்றிநின்பொன்னடிப்போதே.       (6)

அடியெனுமதுவுமருளெனுமதுவு
மறிந்திடினிர்க்குணநிறைவு
முடியெனுமதுவும்பொருளெனுமதுவு
மொழிந்திடிற்சுகமனமாயைக்
குடிகெடவேண்டிற்பணியறநிற்றல்
குணமெனப்புன்னகைகாட்டிப்
படிமிசைமௌனியாகிநீயாளப்
பாக்கியமென்செய்தேன்பரனே.       (7)

என்செயலின்றியாவுநின்செயலென்
றெண்ணுவேனொவ்வொருகாலம்
புன்செயன்மாயைமயக்கினென்செயலாப்
பொருந்துவேனஃதொருகாலம்
பின்செயல்யாதுநினைவின்றிக்கிடப்பேன்
பித்தனேனன்னிலைபெறநின்
நன்செயலாகமுடித்திடல்வேண்டுஞ்
சச்சிதானந்தசற்குருவே.       (8)

குருவுருவாகிமௌனியாய்மௌனக்
கொள்கையையுணர்த்தினையதனாற்
கருவுருவாவதெனக்கிலையிந்தக்
காயமோபொய்யெனக்கண்ட
திருவுருவாளரனுபவநிலையுஞ்
சேருமோவாவலோமெத்த
வருவுருவாகியல்லவாய்ச்சமய
மளவிடாவானந்தவடிவே.       (9)

வடிவிலாவடிவாய்மனநினைவணுகா
மார்க்கமாய்நீக்கருஞ்சுகமாய்
முடிவிலாவீட்டின்வாழ்க்கைவேண்டினர்க்குன்
மோனமல்லால்வழியுண்டோ
படியிருளகலச்சின்மயம்பூத்த
பசுங்கொம்பையடக்கியோர்கல்லா
லடியிலேயிருந்தவானந்தவரசே
யன்பரைப்பருகுமாரமுதே.       (10)

-------------

20. சொல்லற்கரிய

சொல்லற்கரியபரம்பொருளே
      சுகவாரிதியே சுடர்க்கொழுந்தே,
வெல்லற்கரிய மயலிலெனை
      விட்டெங்கொளித்தாயாகெட்டேன்,
கல்லிற்பசியநாருரித்துக் கடுகிற்
      பெரியகடலடைக்கு,
மல்லிற்கரிய வந்தகனார்க்
      காளாக்கினையோவறியேனே.       (1)

அறிவிற் கறிவுதாரக மென்றறிந்தே
      யறிவோடறியாமை,
நெறியிற் புகுதாதோர் படித்தாய்
      நின்றநிலையுந்தெரியாது,
குறியற்ற கண்டாதீதமயக்
      கோதிலமுதேநினைக் குறுகிப்,
பிறிவற்றிருக்கவேண்டாவோ
      பேயேற்கினிநீ பேசாயே.       (2)

பேசாவனுபூதியையடியேன்
      பெற்றுப்பிழைக்கப்பேரருளாற்,
றேசோமயந்தந்தினியொருகாற்
      சித்தத்திருளுந்தீர்ப்பாயோ,
பாசாடவியைக்கடந்தவன்பர்
      பற்றுமகண்டப்பரப்பான,
வீசாபொதுவினடமாடுமிறைவா
      குறையாவின்னமுதே.       (3)

இன்பக்கடலிற் புகுந்திடு வானிரவும்
      பகலுந்தோற்றாம,
லன்பிற் கரைந்துகரைந்துருகியண்ணா
      வரசேயெனக்கூவிப்,
பின்புற்றழுஞ்சேயென விழிநீர்பெருக்கிப்
      பெருக்கிப்பித்தாகித்,
துன்பக்கடல் விட்டகல்வேனோ
      சொரூபானந்தச் சுடர்க்கொழுந்தே.       (4)

கொழுந்துதிகழ்வெண்பிறைச்
      சடிலக்கோவேமன்றிற்கூத்தாடற்,
கெழுந்தசுடரேயிமயவரையென்றாய்
      கண்ணுக்கினியானே,
தொழுந்தெய்வமுநீ குருவுநீ
      துணைநீ தந்தைதாயுநீ,
யழுந்தும்பவநீ நன்மையுநீ
      யாவியாக்கைநீதானே.       (5)

தானேயகண்டாகாரமயந்தன்னிலெழுந்து
      பொதுநடஞ்செய்,
வானேமாயப்பிறப்பறுப்பான்வந்துன்னடிக்கே
      கரங்கூப்பித்,
தேனேயென்னைப்பருகவல்லதெள்ளாரமுதே
      சிவலோகக்,
கோனேயெனுஞ்சொன்னினதுசெவிகொள்ளா
      தென்னோகூறாயே.       (6)

கூறாநின்றவிடர்க்கவலைக்
      குடும்பக்கூத்துட்டுளைந்துதடு,
மாறாநின்றபாவியை நீ
      வாவென்றழைத்தாலாகாதோ,
நீறார்மேனிமுக்கணுடை
      நிமலாவடியார் நினைவினிடை,
யாறாய்ப்பெருகும்பெருங்கருணை
      யரசேயென்னையாள்வானே.       (7)

வானேமுதலாம்பெரும்பூதம்
      வகுத்துப்புரந்துமாற்றவல்ல,
கோனேயென்னைப்புரக்குநெறிகுறித்தா
      யிலையேகொடியேனைத்,
தானேபடைத்திங்கென்னபலன்றன்னைப்
      படைத்தாயுன்கருத்தை,
நானேதென்றிங்கறியேனே
      நம்பினேன்கண்டருள்வாயே.       (8)

கண்டார் கண்டகாட்சியுநீ
      காணார்காணாக்கள்வனுநீ,
பண்டாருயிர் நீயாக்கையுநீ
      பலவாஞ்சமயப்பகுதியுநீ,
யெண்டோண்முக்கட்செம்மேனி
      யெந்தாய்நினக்கேயெவ்வாறு,
தொண்டாய்ப்பணிவரவர்பணிநீ
      சூட்டிக்கொள்வதெவ்வாறே.       (9)

சூட்டியெனதென்றிடுஞ் சுமையைச்
      சுமத்தியெனையுஞ்சுமையாளாக்,
கூட்டிப்பிடித்து வினைவழியே
      கூத்தாட்டினையேநினதருளால்,
வீட்டைக்கருதுமப்போது
      வெளியாமுலகவியப்பனைத்து,
மேட்டுக்கடங்காச்சொற்பனம்
      போலெந்தாயிருந்ததென்சொல்வேன்.       (10)

----------

21. வம்பனேன்.

வம்பனேன்கள்ளங்கண்டு மன்னருள்வெள்ளராய,
வும்பர்பாலேவல்செய்யென் றுணர்த்தினையோகோவானோர்,
தம்பிரானேநீசெய்த தயவுக்குங்கைம்மாறுண்டோ,
வெம்பிரானுய்ந்தேனுய்ந்தே னினியொன்றுங்குறைவிலேனே.       (1)

குறைவிலாநிறைவாய்ஞானக் கோதிலானந்தவெள்ளத்,
துறையிலேபடிந்துமூழ்கித் துளைந்துநான்றோன்றாவாறுள்,
ளுறையிலேயுணர்த்திமோன வொண்சுடர்வைவாடந்த,
விறைவனேயுனைப்பிரிந்திங் கிருக்கிலேனிருக்கிலேனே.       (2)

இருநிலமாதிநாத மீறதாமிவைகடந்த
பெருநிலமாயதூய பேரொளிப்பிழம்பாய்நின்றுங்
கருதருமகண்டானந்தக் கடவுணின்காட்சிகாண,
வருகவென்றழைத்தாலன்றி வாழ்வுண்டோவஞ்சனேற்கே.       (3)

வஞ்சனையழுக்காறாதி வைத்திடும்பாண்டமான
நெஞ்சனைவலிதின்மேன்மே னெக்குநெக்குருகப்பண்ணி,
யஞ்சலிசெய்யுங்கையு மருவிநீர்விழியுமாகத்
தஞ்சமென்றிரங்கிக்காக்கத் தற்பராபரமுனக்கே.       (4)

உனக்குநானடித்தொண்டாகி யுன்னடிக்கன்புசெய்ய
வெனக்குநீதோற்றியஞ்சே லென்னுநாளெந்தநாளோ
மனக்கிலேசங்கடீர்ந்த மாதவர்க்கிரண்டற்றோங்குந்
தனக்குநேரில்லாவொன்றே சச்சிதானந்தவாழ்வே.       (5)

வாழ்வெனவயங்கியென்னை வசஞ்செய்துமருட்டும்பாழ்த்த,
வூழ்வினைப்ப குதிகெட்டிங் குன்னையுங்கிட்டுவேனோ,
தாழ்வெனுஞ்சமயநீங்கித், தமையுணர்ந்தோர்கட்கெல்லாஞ்
சூழ்வெளிப்பொருளேமுக்கட் சோதியேயமரரேறே.       (6)

ஏறுவாம்பரியாவாடையிருங்கலையுரியாவென்று
நாறுநற்சாந்தநீறா நஞ்சமேயமுதாக்கொண்ட
கூறருங்குணத்தேயுன்றன் குரைகழல்குறுகினல்லா
லாறுமோதாபசோப மகலுமோவல்லறானே.       (7)

தானமுந்தவமும்யோகத் தன்மையுமுணராவென்பான்
ஞானமுந்தெவிட்டாவின்ப நன்மையுநல்குவாயோ
பானலங்கவர்ந்ததீஞ்சொற் பச்சிளங்கிள்ளைகாண
வானவரிறைஞ்சமன்றுள்வயங்கியநடத்தினானே.       (8)

நடத்தியிவ்வுலகையெல்லா நாதநீநிறைந்ததன்மை
திடத்துடனறிந்தானந்தத் தெள்ளமுதருந்திடாதே
னிடத்திரளனையகாம வேட்கையிலழுந்திமாயைச், சட
த்தினைமெய்யென்றெண்ணித் தளரவோதனியனேனே.       (9)

தனிவளர்பொருளேமாறாத் தண்ணருங்கருணைபூத்த
வினியகற்பகமேமுக்க ணெந்தையேநினக்கன்பின்றி
நனிபெருங்குடிலங்காட்டு நயனவேற்கரியகூந்தல்
வனிதையர்மயக்கிலாழ்ந்து வருந்தவோவம்பனேனே.       (10)

---------------

22. சிவன்செயல்.

சிவன்செயலாலேயாதம் வருமெனத்தேறானாளு,
மறந்தருநினைவையெல்லா மகற்றிதேனாசைவெள்ளங்,
கவாந்துகொண்டிழுப்பவந்தக் கிட்டிலேயகப்பட்டையோ,
பவந்தனையீட்டியீட்டிப் பதைக்கின்றேன்பாவியேனே.       (1)

பாவியேனினியென்செய்கேன்
      பரமனேபணிந்துன்பாதஞ்,
சேவியேன்விழிநீர்மல்கச்
      சிவசிவவென்றுதேம்பி,
யாவியேநிறையவந்த
      வமுதமேயென்னேனந்தோ
சாவிபோஞ்சமயந்தாழ்ந்து
      சகத்திடைத்தவிக்கின்றேனே.       (2)

இடைந்திடைந்தேங்கிமெய்புளகிப்ப
      வெழுந்தெழுந்தையநின்சரண,
மடைந்தனனினிநீகைவிடேலுனக்கேய
      பயமென்றஞ்சலிசெய்துள்,
ளுடைந்துடைந்தெழுது சித்திரப்பாவை
      யொத்துநானசைவறநிற்பத்,
தொடர்ந்து நீயெனையாட்கொள்ளுநாளென்றோ
      சோதியேயாதி நாயகனே.       (3)

ஆதியாய்நடுவா யந்தமாய்ப்பந்தம்
      யாவுமற்றகம்புந் நிறைந்த,
சோதியாய்ச் சுகமாயிருந்த வெம்பெருமான்
      றொண்டனேன்சுகத்திலேயிருக்கப்,
போதியாவண்ணங்கை விடன்முறையோ
      புன்மையேனென்செய்கேன்மனமோ,
வாதியாநின்றதன்றியும்
      புலன்சேர்வாயிலே தீயினுங்கொடிதே.       (4)

வாயிலோரைந்திற் புலனெனும்வேடர்
      வந்தெனையீர்ந்துவெங்காமத்,
தீயிலே வெதுப்பியுயிரொடுந் தின்னச்
      சிந்தை நைந்துருகி மெய்ம்மறந்து,
தாயிலாச் சேய்போலலைந்தலைப்பட்டேன்
      றாயினுங்கருணையாமன்று,
ணாயாமாகியொளிவிடுமணியே
நாதனே ஞானவாரிதியே.       (5)

ஞானமேவடிவாய்த்தேடுவார்தேடு
      நாட்டமேநாட்டத்துணிறைந்த,
வானமேயெனக்குவந்துவந்தோங்கு
      மார்க்கமேமருளர்தாமறியா,
மோனமேமுதலேமுத்தி நல்வித்தே
      முடிவிலாவின்பமேசெய்யுந்,
தானமேதவமேநின்னை நானினைந்தேன்
      றமியேனேன்றனை மறப்பதற்கே.       (6)

மறமலியுலகவாழ்க்கையேவேண்டும்
      வந்துநின்னன்பர்தம்பணியா,
மறமதுகிடைக்கினன்றியானந்த
      வற்புதநிட்டையினிமித்தந்,
துறவதுவேண்டு மௌனியாயெனக்குத்
      தூயநல்லருடரினின்னம்,
பிறவியும்வேண்டும் யானெனதிறக்கப்
      பெற்றவர்பெற்றிடும்பேறே       (7)

பெற்றவர்பெற்றபெருந்தவக்குன்றே
      பெருகியகருணைவாரிதியே,
நற்றவத்துணையேயானந்தக்கடலே
      ஞாதுருஞானஞேயங்க,
ளற்றவர்க்கறாதநட்புடைக் கலப்பே
      யனேகமாய்நின்னடிக்கன்பு,
கற்றதுங்கேள்விகேட்டதுநின்னைக்
      கண்டிடும்பொருட்டன்றோகாணே.       (8)

அன்றுநால்வருக்குமொளிநெறிகாட்டு
      மன்புடைச்சோதியேசெம்பொன்,
மன்றுண்முக்கண்ணுங்காளகண்டமுமாய்
      வயங்கியவானமேயென்னுட்,
டுன்றுகூரிருளைத்துரந்திடுமதியே
      துன்பமுமின்பமுமாகி,
நின்றவாதனையைக்கடந்தவர்நினைவே
      நேசமேநின்பரம்யானே.       (9)

யானெனல்காணேன்பூரணநிறைவில்
      யாதினுமிருந்தபேரொளிநீ,
தானெனநிற்குஞ்சமத்துறவென்னைத்
      தன்னவனாக்கவுந்தகுங்காண்,
வானெனவயங்கியொன்றிரண்டென்னா
      மார்க்கமாநெறிதந்துமாறாத்,
தேனெனருசித்துளன்பரைக்
      கலந்தசெல்வமே சிற்பரசிவமே.       (10)
-----------

23. தன்னையொருவர்.

தன்னையொருவர்க்கறிவரிதாய்த்
      தானேதானாயெங்குநிறைந்,
துன்னற்கரிய பரவெளியாயுலவாவ
      முதாயொளிவிளக்கா,
யென்னுட்கலந்தாயானறியா
      திருந்தாயிறைவாவினியேனு,
நின்னைப்பெறுமாறெனக்கருளா
      னலையைக்கொடுக்கநினையாயோ.       (1)

நினையுநினைவுக்கெட்டாத
      நெறிபெற்றுணர்ந்தநெறியாளா,
வினையைக்கரைக்கும்பரமவின்ப
      வெள்ளப்பெருக்கேநினதருளான்,
மனைவிபுதல்வரன்னைபிதா
      மாடுடென்றிடுமயக்கந்,
தனையுமறந்திங்குனைமறவாத்
      தன்மைவருமோதமியேற்கே.       (2)

வரும்போமென்னுமிருநிலைமை
      மன்னாதொருதன்மைத்தாகிக்,
கரும்போதேனோமுக்கனியோ
      வென்னவென்னுட்கலந்துநலந்,
தரும்பேரின்பப்பொருளேநின்
      றன்னைநினைத்துநெக்குருகே,
னிரும்போகல்லோமரமோ
      வென்னிதயமியாதென்றறியேனே.       (3)

அறியுந்தரமோ நானுன்னையறிவுக்கறிவாய்
      நிற்கைனாற்,
பிரியுந்தரமோநீயென்னைப் பெம்மானே
      பேரின்பமதாய்ச்,
செறியும்பொருணீ நின்னையன்றிச்செறியா
      பொருணான்பெறும்பேற்றை,
நெறிநின்றொழுக விசாரித்தானினக்கோ
      வில்லையெனக்காமே.       (4)

எனதென்பதும்பொய்யானெனல்பொய்
      யெல்லாமிறந்தவிடங்காட்டு,
நினதென்பதும்பொய்நீயெனல்பொய்
      நிற்குநிலைக்கேநேசித்தேன்,
மனதென்பதுமோவென்வசமாய்
      வாராதையநின்னருளோ,
தனதென்பதுக்குமிடங்காணேன்
      றமியேனெவ்வாறுய்வேனே.       (5)

உய்யும்படிக்குன்றிருக்கருணை
      யொன்றைக்கொடுத்தாலுடையாய்பாழ்ம்,
பொய்யுமவாவுமழுக்காறும்
      புடைபட்டோடுநன்னெறியா,
மெய்யுமறிவுபெறும்பேறும்
      விளங்குமெனக்குன்னடியார்பாற்,
செய்யும்பணியுங்கைகூடுஞ்
      சிந்தைத்துயரந்தீர்ந்திடுமே.       (6)

சிந்தைத்துயரென்றொருபாவி
      சினந்துசினந்துபோர்முயங்க,
நிந்தைக்கிடமாய்ச்சகவாழ்வை
      நிலையென்றுணர்ந்தேநிற்கின்றே,
னெந்தப்படியுன்னருள்வாய்க்குமெனக்
      கெப்படிநீயருள்செய்வாய்,
பந்தத்துயரற்றவர்க்கெளிய
      பரமானந்தப்பழம்பொருளே.       (7)

பொருளைப்பூவைப்பூவையரைப்
      பொருளென்றெண்ணுமொருபாவி,
யிருளைத்துரந்திட்டொளிநெறியை
      யென்னுட்பதிப்பதென்றுகொலோ,
தெருளத்தெருளவன்பர்நெஞ்சந்
      தித்துத்துருகத்தெவிட்டாத,
வருளைப்பொழியுங்குணமுகிலே
      யறிவானந்தத்தாரமுதே.       (8)

ஆராவமிர்தம்விரும்பினர்க
      ளறியவிடத்தையமிர்தாக்கும்,
பேரானந்தசித்தனெனும்
      பெரியோயாவிக்குரியோய்கேள்,
காரார்கிரகவலையினிடைக்
      கட்டுண்டிருந்தகளைகளெல்லா,
மூராலொருநாள்கையுண
      வேற்றுண்டாலெனக்கிங்கொழிந்திடுமே.       (9)

எனக்கென்றிருந்தவுடல்பொருளும்
      யானுநினவென்றீந்தவண்ண,
மனைத்துமிருந்துமிலதாக
      வருளாய்நில்லாதழிவழக்காய்,
மனத்துட்புகுந்துமயங்கவுமென்
      மதிக்குட்களங்கம்வந்ததென்னோ,
தனக்கொன்றுவமையறநிறைந்த
      தனியேதன்னந்தனிமுதலே.       (10)

------------------

24. ஆசையெனும்.

ஆசையெனும்பெருங்காற்றூ டிலவம்பஞ்செனவு
      மனதலையுங்கால,
மோசம்வரும்வருமிதனாலேகற்றதுங் கேட்டதுந்
      தூர்ந்துமுத்திக்கான,
நேசமுநல்வாசமும் போய்ப்புலனாயிற்
      கொடுமைபற்றிநிற்பரந்தோ,
தேசுபழுத்தருள்பழுத்த பராபரமே,
      நிராசையின்றேற் றெய்வமுண்டோ.       (1)

இரப்பானங்கொருவனவன்வேண்டுவ
      கேட்டருள்செயெனவேசற்றேதான்,
புரப்பான்றனருணடி யிருப்பது போலெங்கு
      நிறைபொருளேகேளாய்,
மரப்பான்மைநெஞ்சினன்யான் வேண்டுவ
      கேட்டிரங்கெனவேமௌனத்தோடந்,
தரப்பான்மையருணிறைவி லிருப்பதுவோ
      பராபரமேசகசநிட்டை.       (2)

சாட்டையிற்பம்பரசாலம்போலெலா
மாட்டுவானிறையெனவறிந்துநெஞ்சமே
தேட்டமொன்றறவருட்செயலினிற்றியேல்
வீட்டறந்துறவறமிரண்டுமேன்மையே.       (3)

தன்னெஞ்சநினைப்பொழியா தறிவிலிநான்
      ஞானமெனுந்தன்மைபேச,
வுன்னெஞ்சமகிழ்ந்தொருசொல் லுரைத்தனையே
      யதனையுன்னியுருகேனையா,
வன்னெஞ்சோ விரங்காதமரநெஞ்சோ
      விருப்புநெஞ்சோ வைரமான,
கன்னெஞ்சோ வலதுமண்ணாங்கட்டிநெஞ்சோ
      வெனதுநெஞ்சங்கருதிற்றானே.      (4)

வாழிசோபனம்வாழிநல்லன்பர்கள்
சூழவந்தருடோற்றமுஞ்சோபன
மாழிபோலருளையன்மௌனத்தா
லேழையேன்பெற்றவின்பமுஞ்சோபனம்.       (5)

கொடுக்கின்றோர்கள்பாற் குறைவை
      யாதியானெனுங்குதர்க்கம்,
விடுக்கின்றோர்கள்பாற் பிரிகிலாதுள்ளன்புவிடாதே,
யடுக்கின்றோர்களுக் கிரங்கிடுந்தண்டமிழலங்க,
றொடுக்கின்றோர்கலைச்சோதியாததுபரஞ்சோதி.       (6)

உலகமாயையிலேயெளியேன்றனை
      யுழலவிட்டனையேயுடையாயரு,
ளிலகுபேரின்பவீட்டினிலென்னையுமிருத்தி
      வைப்பதெக்காலஞ்சொலாயெழிற்,
றிலகவாணுதற்பைந்தொடிகண்ணினைதேக்க
      நாடகஞ்செய்தடியார்க்கெலா,
மலகிலாவினைதீர்க்கத்துசங்கட்டு
      மப்பனேயருளானந்தசோதியே.       (7)

முன்னிலைச்சுட்டொழி தியெனப்பலகாலுநெஞ்சே
      நான் மொழிந்தேனேநின்,
றன்னிலையைக்காட்டாதே யென்னையொன்றாச்
      சூட்டாதேசரணான்போந்த,
வந்நிலையேநிலையந்தநிலையிலே சித்தி
      முத்தியனைத்துந்தோன்று,
நன்னிலையீதன்றியிலைசுகமென்றே
      சுகர்முதலோர்நாடினாரே.       (8)

அத்துவிதம்பெறும்பேறென்றறியாமல்யானெனும்
      பேயகந்தையோடு,
மத்தமதியினர்போல மனங்கிடப்பவின்ன-
      மின்னம்வருந்துவேனோ,
சுத்தபரிபூரணமாய்நின்மலமாய
      கண்டிதமாய்ச்சொரூபானந்த,
சத்திகணீங்காதவணந்தன்மயமாயருள்
      பழுத்துத் தழைத்தவொன்றே.       (9)

தந்தைதாயுநீயென்னுயிர்த்துணையுநீ
      சஞ்சலமதுதீர்க்க,
வந்ததேசிகவடிவுநீயுனையலான்
      மற்றொருதுணைகாணே,
னந்தமாதியுமளப்பருஞ்சோதியே
      யாதியேயடியார்தஞ்,
சிந்தைமேவியதாயுமானவனெனுஞ்
      சிரகிரிப்பெருமானே.       (10)

காதிலோலையைவரைந்துமேற்
      குமிழையுங்கறுவிவேள்கருநீலப்,
போதுபோன்றிடுங்கண்ணியர்மயக்கி
      லெப்போதுமேதளராமன்,
மாதுகாதலிபங்கனையபங்கனை
      மாடமாளிகைசூழுஞ்,
சேதுமேவியராமநாயகன்றனைச்
      சிந்தைசெய்மடநெஞ்சே.       (11)

அண்டமுமாய்ப்பிண்டமுமாயளவிலாத
வாருயிருக்கோருயிராயமர்ந்தயானாற்,
கண்டவரார்கேட்டவராருன்னாலுன்னைக்
      காண்பதல்லாலென்னறிவாற்காணப்போமோ,
வண்டுளபமணிமார்பன்புதல்வனோடு
      மனைவியொடுங்குடியிருந்துவணங்கிப்போற்றும்,
புண்டரிகபுரத்தினினாதாந்தமௌன
      போதாந்தநடம்புரியும்புனிதவாழ்வே.       (12)

பொறியிற்செறியைம்புலக்கனியைப்
      புந்திக்கவராற்புகுந்திழுத்து,
மறுகிச்சுழலுமனக்குரங்கு
      மாளவாளாவிருப்பேனோ,
வறிவுக்கறிவாய்ப்பூரணமா
      யகண்டானந்தமயமாகிப்,
பிறிவற்றிருக்கும்பெருங்கருணைப்
      பெம்மானேயெம்பெருமானே.       (13)

உரையுணர்விறந்துதம்மை யுணர்பவருணர்வினூடே,
கரையிலாவின்பவெள்ளங் காட்டிடுமுகிலேமாறாப்
பரையெனுங்கிரணஞ்சூழ்ந்த பானுவேநின்னைப்பற்றித்,
திரையிலாநீர்போற்சித்தந் தெளிவனோசிறியனேனே.       (14)

கேவலசகலமின்றிக்கீழொடுமேலாயெங்கு
மேவியவருளின்கண்ணாய்மேவிடமேலாயின்பந்
தாவிடவின்பாதீதத்தனியிடையிருத்திவைத்த
தேவெனுமௌனிசெம்பொற் சேவடிசிந்தைசெய்வாம்.       (15)

நேற்றுளாரின்றுமாளாநின்றனரதனைக்கண்டும்
போற்றிலேனின்னையந்தோபோக்கினேன்வீணேகால
மாற்றிலேன்கண்டானந்தவண்ணலேயளவின்மாயைச்
சேற்றிலேயின்னம்வீழ்ந்துதிளைக்கவோசிறியனேனே.       (16)

போதமென்பதேவிளக்கொவ்வு மவித்தைபொய்யிருளாந்,
தீதிலாவிளக்கெடுத்திருடேடவுஞ்சிக்கா,
தாதலாலறிவாய்நின்றவிடத்தறியாமை,
யேதுமில்லையென்றெம்பிரான்சுருதியேயியம்பும்.       (17)

சுருதியேசிவாகமங்களேயுங்களாற்சொல்லு
மொருதனிப்பொருளளவை யீதென்னவாயுண்டோ
பொருதிரைக்கடனுண்மணலெண்ணினும்புகலக்
கருதவெட்டிடாநிறைபொருளளவையார்காண்பார்.       (18)

மின்னைப்போன்றனவகிலமென்றறிந்து
      மெய்ப்பொருளா,
முன்னைப்போன்றநற் பரம்பொருளில்லை-
      யென்றோர்ந்து,
பொன்னைப்போன்றநின் போதங்கொண்டுன்-
      பணிபொருந்தா,
வென்னைப்போன்றுளவேழையரைய-
      விங்கெவரே.       (19)

தாயுந்தந்தையுமெனக்குறவாவதுஞ்சாற்றி
னாயுநீயுநின்னருளுநின்னடியருமன்றோ
பேயனேன்றிருவடியிணைத்தாமரைபிடித்தே
னாயனேயெனையாளுடைமுக்கணாயகனே.       (20)

காந்தமதையெதிர்காணிற் கருந்தாது
      செல்லுமந்தக்காந்தத்தொன்றா
தேய்ந்தவிடமெங்கேதானங்கேதான்
      சலிப்பறவுமிருக்குமாபோற்,
சாந்தபதப்பரம்பொருளே பற்றுபொருளிருக்கு
      மத்தாற்சலிக்குஞ்சித்தம்,
வாய்ந்தபொருளில்லையெனிற்
      பேசாமைநின்றநிலைவாய்க்குமன்றே.       (21)

பொற்புறுங்கருத்தேயகமாயதிற்பொருந்தக்
கற்பின்மங்கையரெனவிழிகதவுபோற்கவினச்
சொற்பனத்தினுஞ்சோர்வின்றியிருந்தநான்சோர்ந்து
நிற்பதற்கிந்தவினைவந்தவாறென்கொனிமலா.       (22)

வந்தவாறிந்தவினைவழியிதுவெனமதிக்கத்
தந்தவாறுண்டோவுள்ளுணர்விலையன்றித்தமியே
னொந்தவாறுகண்டிரங்கவுமிலை கற்ற நூலா
லெந்தவாறினித்தற்பராவுய்குவேனேழை.       (23)

சொல்லாலும்பொருளாலு மளவையாலுந் தொடர
      வொண்ணாவருணெறியைத்தொடர்ந்துநாடி,
நல்லார்களவையகத்தேயிருக்கவைத்தாய்நன்னர்
      நெஞ்சந்தன்னலமுநணுகுவேனோ,
வில்லாளியாயுலகோடுயிரையீன்றிட்
      டெண்ணரியயோகினுக்குமிவனேயென்னக்,
கல்லாலின்கீழிருந்தசெக்கர்மேனிக்
      கற்பகமேபராபரமேகைலைவாழ்வே.       (24)

சாக்கிரமாநுதனிலிந்திரியம்பத்துஞ்
      சத்தாதிவசனாதிவாயுபத்து,
நீக்கமிலந்தக்கரணம்புருடனோடு
      நின்றதுமுப்பானைந்துநிலவுங்கண்டத்,
தாக்கியசொற்பனமதனில்வாயுபத்து
      மடுத்தன சத்தாதிவசனாதியாக,
நோக்குகரணம்புருடனுடனேகூட
      நுவல்வரிருபத்தைந்தாதுண்ணியோரே.       (25)

சுழுத்தியிதயந்தனிற்பிராணஞ்சித்தஞ்
      சொல்லரியபுருடனுடன்மூன்றதாகும்,
வழுத்தியநாபியிற்றுரியம்பிராணனோடு
      மன்னுபுருடனுங்கூடவயங்காநிற்கு,
மழுத்திடுமூலந்தன்னிற்றுரியாதீத
      மதனிடையேபுருடனொன்றியமருஞானம்,
பழுத்திடும்பக்குவரறிவரவத்தையைந்திற்
      பாங்குபெறக்கருவிநிற்கும்பரிசுதானே.       (26)

இடத்தைக்காத்திட்டசுவானெனப்புன்புலாலிறைச்சிச்,
சடத்தைக்காதிட்டநாயினேனுன்னன்பர்தயங்கு,
மடத்தைக்காத்திட்டசேடத்தால்விசேடமாய்வாழ,
விடத்தைக்காத்திட்டகண்டத்தோய்நின்னருள்வேண்டும்.       (27)

வாதனைப்பழக்கத்தினான்மனமந்தமனத்தா
லோதவந்திடுமுரையுரைப்படிதொழிலுளவா
மேதமம்மனமாயையென்றிடிற்கண்டவெல்லா
மாதரஞ்செயாப்பொய்யதற்கையமுண்டாமோ.       (28)

ஐயவாதனைப்பழக்கமேமனநினைவதுதான்
வையமீதினிற்பரம்பரையாதினுமருவு
மெய்யினின்றொளிர்பெரியவர்சார்வுற்றுவிளங்கிப்
பொய்யதென்பதையொருவிமெய்யுணருதல்போதம்.       (29)

குலமிலான்குணங்குறியிலான்குறைவிலான்கொடிதாம்,
புலமிலான்றனக்கென்னவோர்பற்றிலான்பொருந்து,
மிலமிலான்மைந்தர்மனைவியில்லானெவனவன்சஞ்,
சலமிலான்முத்திதரும்பரசிவனெனத்தகுமே.       (30)

கடத்தைமண்ணெனலுடைந்தபோதோ விந்தக்கருமச்,
சடத்தைப்பொய்யெனலிறந்துபோதோசொலத்தருமம்,
விடத்தைநல்லமிர்தாவுண்டு பொற்பொதுவெளிக்கே,
நடத்தைக்காட்டியெவ்வுயிரையுநடப்பிக்குநலத்தோய்       (31)
     
நானெனவுநீயெனவுமிருதன்மை
      நாடாமனடுவேசும்மா,
தானமருநிலையிதுவேசத்தியஞ்
      சத்தியமெனநீதமியனேற்கு,
மோனகுருவாகியுங்கைகாட்டினையே
      திரும்பவுநான் முளைத்துத்தோன்றி,
மானதமார்க்கம்புரிந்திங்கலைந்தேனே
      பரந்தேனேவஞ்சனேனே.       (32)

தன்மயஞ்சுபாவஞ்சுத்தந்தண்ணருள்வடிவஞ்சாந்த
மின்மயமானவண்டவெளியுருவானபூர்த்தி
யென்மயமெனக்குக்காட்டாதெனையபகரிக்கவந்த
சின்மயமகண்டாகாரந்தக்ஷிணாதிக்கமூர்த்தம்.       (33)

சிற்றரும்பனசிற்றறிவாளனேதெளிந்தான்
மற்றரும்பெனமலரெனப்பேரறிவாகிக்
கற்றரும்பியகேள்வியான்மதித்திடக்கதிச்சீர்
முற்றரும்பியமௌனியாய்ப்பரத்திடைமுளைப்பான்.       (34)

மயக்குசிந்தனைதெளிவெனவிருநெறிவகுப்பா
னயக்குமொன்றன்பாலொன்றிலையெனனலவழக்கே
யியக்கமுற்றிடுமயக்கத்திற்றெளிவுறலினிதாம்
பயக்கவல்லதோர்தெளிவுடையவர்க்கெய்தல்பண்போ.       (35)

அருள்வடிவேழுமூர்த்தமவைகள்
      சோபானமென்றே,
சுருதிசொல்லியவாற்றாலேதொழுந்
      தெய்வமெல்லாமொன்றே,
மருளெனக்கில்லைமுன்பின்
      வருநெறிக்கிவ்வழக்குத்,
தெருளின்முன்னிலையாமுன்னைச்
      சேர்ந்தியான்றெளிகின்றேனே.       (36)

எத்தனைப்பிறப்போவெத்தனையிறப்போ
      வெளியனேற்கிதுவரையமைத்த,
தத்தனையெல்லாமறிந்தநீயறிவை
      யறிவிலியறிகிலேனந்தோ,
சித்தமும்வாக்குந்தேகமுநினவே
      சென்மமுமினியெனாலாற்றா,
வைத்திடிங்கென்னைநின்னடிக்குடியா
      மறைமுடியிருந்தவான்பொருளே.       (37)

வான்பொருளாகியெங்குநீயிருப்ப
      வந்தெனைக்கொடுத்துநீயாகா,
தேன்பொருள்போலக்கிடக்கின்றேன்
      முன்னையிருவினைவாதனையன்றோ,
தீன்பொருளான வமிர்தமேநின்னைச்
      சிந்தையிற்பாவனைசெய்யு,
நான்பொருளானேனல்லனல்லரசே
      நானிறந்திருப்பதுநாட்டம்.       (38)

நாட்டமூன்றுடையசெந்நிற்மணியே
      நடுவுறுநாயக விளக்கே,
கோட்டமில்குணத்தோர்க்கெளியநிர்க்குணமே
      கோதிலாவமிர்தமேநின்னை,
வாட்டமினெஞ்சங்கிண்ணமாச்சேர்த்து
      வாய்மடுத்தருந்தினனாங்கே,
பாட்டளிநறவமுண்டயர்ந்ததுபோற்
      பற்றயர்ந்திருப்பதெந்நாளோ.       (39)

என்னுடையுயிரேயென்னுளத்தறிவே
      யென்னுடையன்பெனுநெறியாய்,
கன்னன்முக்கனித்தேன்கண்டமிர்
      தென்னக்கலந்தெனைமேவிடக்கருணை,
மன்னியவுறவேயுன்னைநான்
      பிரியாவண்ணமென்மனமெனுங்கருவி,
தன்னதுவழியற்றென்னுழைக்கிடப்பத்
      தண்ணருள்வரமது வேண்டும்.       (40)
----------------

This page was last revised on 13 Nov. 2021
Feel free to send corrections to the webmaster.