pm logo

திருப்புல்லாணிமாலை
(ஆசிரியர் தெரியவில்லை)


tiruppullANimAlai
(author not known)
In tamil script, Unicode/utf-8 format



Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned images version of this work
The etext has been prepared via Distributed Proof-reading implementation
of Project Madurai and we thank the following volunteers for their help:
Mr. Sakthikumaran, S. Karthikeyan, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan, Sonia and S. Subathra.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
The literary work is presented in Tamil script, Unicode /utf8 format.
This file was first put online on 10 October 2008.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருப்புல்லாணி மாலை

Source
ஸ்ரீ:
திருப்புல்லாணிமாலை.
இது மதுரைத்தமிழ்ச்சங்கத்துச் செந்தமிழ்ப்பத்திராதிபர்
திரு.நாராயணையங்காரால் பரிசோதிக்கப்பெற்றது.
செந்தமிழ்ப்பிரசுரம்-38
மதுரை: தமிழ்ச்சங்கமுத்திராசாலைப் பதிப்பு.
1915.
----------

முகவுரை

தெய்வப்புலமைத் திருவள்ளுவராற் செய்யப்பெற்ற திருக்குறளின் திட்பநுட்பம் பொருந்திய கருத்துக்களைத் தொன்றுதொட்டுப் பலதமிழ்ப்புலவரும் தத்தம்பாடலுக்கிடையே வேண்டுமிடங்களில் எடுத்தாளுவது பலருமறிந்ததே.

அம்மட்டினமையாது "முன்னோர்மொழிபொருளேயன்றியவர் மொழியும். மொழியும், பொன்னேபோற்று" வாராகித் "தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப்பெய்யும் (பெரு)மழை" யென்றவப், பொய்யில் புலவன் பொருளுரை# என மணிமேகலையிற் சீத்தலைச் சாத்தனாரும், "சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின்" எனவும், "வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை" எனவும் திருக்களிற்றுப்படியாரில் உய்யவந்ததேவரும், "தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி, வலைப்பட்டார் மற்றையவர்" என நெஞ்சுவிடுதூதிற் கொற்றவன்குடி உமாபதிசிவாசாரியாரும், சொற்றொடர்களாகவும், முழுச்செய்யுளாகவும் அருமை பாராட்டி எடுத்தாளுவாராயினர்.

பின்னுஞ்சிலர், திருக்குறளினோரதிகாரப் பொருளுக்கும் ஓரொரு சரிதத்தை உதாரணமாகநாட்டி, அதனைமுடிக்கும் ஓரொரு குறள்வெண்பாட்டை யிறுதியிற்கூட்டி, வேற்றுப்பொருள்வைப் பென்னுமணிபெற வெவ்வேறுபாமாலைகளுச் செய்துபோந்தனர்.

அப்பாமாலைகளாவன சோமேசர்முதுமொழிவெண்பா, சிவசிவவெண்பா, இரங்கேசவெண்பா, வடமலைவெண்பா என்னு மிவைகளாம்.

இம்முறைபற்றியே இப்பாமாலையும், திருக்குறளின் ஓரோரதிகாரத்தில் ஓரொருகுறட்பாவை மேற்கோளாகவைத்து, அதற்கிசைந்த விஷயங்களையமைத்துத் திருப்புல்லாணியிற் கோயில்கொண்டெழுந்தருளிய தெய்வச்சிலைப்பெருமாள்பேரிற் றோத்திரரூபமாகிய 133 கட்டளைக் கலித்துறைச் செய்யுளால் இயற்றப்பட்டிருக்கிறது

இதில், கட்டளைக்கலித்துறையுள், குறள்வெண்பாவையமைத்திருக்குந் திறமையினருமை பாராட்டத்தக்கதே. இசையாலும் எதுகைமோனைகளாலும் ஒன்றற்கொன்று வேறுபட்ட விருதிறப்பாட்டிற் கேகதேசத்தில் ஐக்கியந் தோன்றப்பாடுமிடதுண்டாகிமிடர்ப்பாடு பலவாதலால், ஒரோவழி மேற்கோளில் ஓரோரெழுத்து விரித்தும், தொகுத்தும், வகையுளிகொண்டும் படிக்கத் தக்கதாயிருக்கிறது. இடையிடையே சிலகுறள்களுக்குள்ள அதிகாரப் பொருளைக்கருதாது, தோத்திரத்துக்கேற்றவாறு பிறிதுபொருள்கொள்ளவும், சொற்சுவை பொருட்சுவை சுருங்கவும் பாடப்பட்டிருக்கிறது.

ஒருபிரதியே கிடைத்தமையால், பிழையறப்பரிசோதிப்பதற்கும், சிதைந்த இடங்களில் உண்மைப்பாடங்கண்டெழுதுவதற்கும் இயலாமற்போயிற்று ஆயினும், ஒருவாறு இடையிடையே வீழ்ந்திருந்த எழுத்துப்பிழையைத் திருத்தியும், சிதைந்த இடங்களில் வேண்டுஞ்சொற்களைப் பிறைக்குறி () கொடுத்தமைத்தும் இம்முறை வெளியிடப்பெறுகிறது. இப்பாமாலையியற்றிவரது பெயர்முதலியவொன்றும் நன்கு விளங்கவில்லை. விளங்கியபின் வெளியிடப்படும்.

இந்நூலெழுதிய ஏட்டுப்பிரதியைச் சங்கத்துக்குக்கொடுத்துதவிய ஸேதுஸம்ஸ்தானவித்வான் ஸ்ரீமத் ரா. ராகவையங்காரவர்களுக்கு இச்சங்கத்தார் நன்றிபாராட்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

# மணிகேலை காதை 22, அடி 59-61

      இங்ஙனம்,
      திரு. நாராயணையங்கார்,
      செந்தமிழ்ப்பத்திராபதிபர்

திருப்புல்லாணிமாலை.


ஸ்ரீ
காப்பு.

பொன்மாலை சாத்தும் புயமாலை யேழ்புவ னம்புரக்கு
மன்மாலை மேல்வைத்த புல்லாணி(மாயனை) வள்ளுவனார்
சொன்மாலை யேற்றிக் கவிநூற்று முப்பத்துமூன்றுரைக்கப்
பன்மாலை நாட்டுங் குருகூரன் (பாதம் பணிகுவனே)

(அவையடக்கம்)
திருவள் ளுவர்குறட்பாவைக் கலித்துறைச் செய்யுளிற்சேர்த்
தருள்புல்லை மாலைக் க(ழல்பணிந் தேத்தலின் யாருமன்னோன்)
பெருமைகண் டென்சொலைப் புன்சொலென் னாதன்பு(பெற்றதெனக்)
கருதி மதிப்பர் பரிதி மதிப்பெருங் காலமுமே.

நூல்.

1. அறத்துப்பால்.


கடவுள் வாழ்த்து.

மூதுரை வள்ளு வரக ரமுத லவெழுத்தெல்லா
மாதி பகவன் முதற்றே யுலகென லாயமைத்த
நீதி யுனையன்றி நீணில முய்ய நெறிமற்றுண்டோ
மாதவ புல்லைத் தலத்துமென் னெஞ்சத்தும் வாழ்பவனே.       (1)

வான்சிறப்பு.
விண்ணன்று விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றடற்றும் பசியென லாற்புல்லை யூரின்மழை
வண்ணஞ்சிறந்தவன் வந்தருளாவிடில்வாடுமுயிர்த்
தண்ணம் பயிரெனற் கையமுண் டோவிச் சகதலத்தே.       (2)

நீத்தார்பெருமை.
குறைந்தா ரெனாத்துறந் தார்பெரு மைதுணைக் கூறின்வையத்
திறந்தாரை யெண்ணிக் கொண் டற்றென லாலிற வாதுனைச்சேர்
துறந்தார் பெருமை யறிந்துமென் போலிகள் சொல்லவற்றோ
மறந்தார்க ணீமறந்தேனுஞ்சொல் லாய்புல்லை வாமனனே.       (3)

அறன்வலியுறுத்தல்.
பொன்னாட்டிறையோ டயிராணிபோற்றுமம் போருகப்பூ
மின்னாட்கு நாயக மென்றும்புல் லாணியில் வீற்றிருக்கு
மன்னார்க் கடியவர் சொல்வ ரழுக்காறவாவெகுளி
யின்னாச் சொனான்கு மிழுக்கா லியன்ற தறமெனவே.       (4)

இல்வாழ்க்கை.
மையற்ற வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுக்
தெய்வத்துள் வைக்கப் படுமென்பர் புல்லைத் திருநகர்வா
ழையற் கடிமைப்பட் டில்வாழ்க்கை நீதி யமைந்தவரை
மெய்மைக் கருத்(து)றச் சொல்வதன் றோவந்த மேன்மைகளே.       (5)

வாழ்க்கைத்துணைநலம்.
தருந்தக்க நாண்மட மச்சம் பயிர்ப்புத் தரித்தபெண்ணிற்
பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மையுண் டாகப்பெறிற்
பொருந்தச்சொல் லத்தன்மை புல்லைப்பி ரான்றிருப் பூவடியை
வருந்தித் தவம்புரி மாதர்கற் பல்லது மற்றில்லையே.       (6)

புதல்வரைப்பெறுதல்.
வாட்டமின் மக்கண்மெய் தீண்டலுடற்கின்ப மற்றவர்சொற்
கேட்டலின் பஞ்செவிக் கென்றனர் தேவகித் தாய்க்குத்தந்தை
யேட்டலர்த் தார்வசு தேவனுக்கின்புற் றிருமையின்பங்
காட்டவந் தானிந்தக் காசினிக் கேபுல்லைக் காகுத்தனே.       (7)

அன்புடைமை.
வற்றாத வன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்தின்
புற்றாரெய் துஞ்சிறப் பென்பது காணி வுலகுதனிற்
கற்றா ருனதன்பர்க் கல்லாமல் வஞ்சக் கயவர்க்கென்று
சற்றா கிலுமுரை யார்புல்லை வாழுந் தனிக்கொண்டலே.       (8)

விருந்தோம்பல்.
மூக்கிற்கு மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்தென்ப ராற்சென்று நூற்றுவர்பா
லேக்குற் றிடாது விதுரன் மனைவிருந் தென்னநின்றான்
காக்கத் தனிப்பொரு ளானான்புல் லாணியிற் கார்வண்ணனே.       (9)

இனியவைகூறல்.
அல்லலுண் டாக்கிய வல்லவை தேய வறம்பெருகு
நல்லவை நாடியினிய சொலினென்று நாட்டுதலாற்
கல்லெனும் பாவங் கரை(யுந் தருமங்)கலிக்குமன்பிற்
சொல்லினி தாகத்தென் புல்லைநல்லானைத் துதிப்பவர்க்கே.       (10)

செய்ந்நன்றியறிதல்.
உள்ளுதினைத்துணைநன்றிசெயினும்பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வாரென லாலிக் குவலயத்தில்
விள்ளொரு போதொரு போதெடுத்தேத்த மிகவெனக்கொண்
டள்ளலம்போருகன்மேற்பதம்புல்லை யரிநல்குமே.       (11)

நடுவுநிலைமை.
தேடாது புல்லையில் வந்தாயென்சிந்தையிற்சேர்ந்துவிளை
யாடாய்சமன்செய்துசீர்தூக்குங்கோல்போலமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணியென லானடுக் கூறிநின்றாள்
வாடா மலரின்கணீடூழி யான்புக்குவாழ்வதற்கே.       (12)

அடக்கமுடைமை.
கமலமின் வாழ்வுடையோர்புல்லைமாநகரீரடக்க
மமரருளுய்க்கு மடங்காமை யாரிருளுய்த்துவிடு
முமதடி பெற்றடங் குற்றோ ரமரரு ளுய்ப்பர்மைக்கூற்
றெமதடிபெற்றடங் காரிருள் சேர்வ ரெனச்சொல்வனே.       (13)

ஒழுக்கமுடைமை.
பழுக்கும் பழமொழி பாரொழுக் கம்விழுப் பந்தரலா
லொழுக்க முயிரினு மோம்பப்படுமென் றுரைப்பர்நெஞ்சே
செழிக்குந் திருப்புல்லை மால்பதத் தன்பிற் றிருந்துவையே
லிழுக்கமில் லாமை யொழுக்கம் விழுப்பமெல் லாந்தருமே.       (14)

பிறனில்விழையாமை.
எய்த மதன்கணை தாங்கா தெளிதென வில்லிறப்பா
னெய்துமெஞ் ஞான்றும் விளியாதுநிற்கும் பழியெனலான்
மைதவழ் மேனியன் புல்லையெம் மாயன் மலரடிக்கீ
ழுய்திறஞ் சேர்பவர் சேரார் பிறரில் லுறும்பழியே.       (15)

பொறையுடைமை.
ஆவிக்கொடியவ ராயொறுத் தாரையொன் றாகவையாரேவைப்பரே§
பொறுத்தாரைப்பொன் போற்பொதிந் தென்னப்புல்லைத்
தேவப் பொரையினன் றெவ்வைவை யாதிங் கொருபொருளாய்ப்
பூவிற்பொன் போற்பொதிந் தேவைப்பன் வாழப் பொறைமின்னையே.
§ ஏகாரம் விரிக்கப்பட்டிருகக்கிறது.       (16)

அழுக்காறாமை.
அழுக்கக லாவழுக் காறுடை யார்க்கது சாலுமொன்னார்
வழுக்கியுங் கேடீன் பதுவென லாலென் மனத்தழுக்காற்
றிழுக்கறு தற்கு னிணையடி யேத்தியிறைஞ்சுதற்கு
முழுக்கதி யெய்துதற் கென்றோ தினம்புல்லை முன்னவனே.       (17)

வெஃகாமை.
பையாய் நிறைபொன் படுபயன் வெஃகிப்பழிப்படுவ
செய்யார் நடுவின்மை நாணுபவரெனச் செப்பினரான்
மெய்யார் பயனென் றுனைக்கொள்வர் வேறொன்றை வெஃகுவரோ
மையார்கண் மாமங்கை மார்பாதென் புல்லையில் வாழ்விண்டுவே.       (18)

புறங்கூறாமை.
சொற்கிசை வாமெனக் கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ்சொல்
லற்கமுன் னின்றுபின் னோக்காச்சொ லென்ப ரறிவுடையோர்
கற்கியுருவெடுத் தோன்புல்லை மால்கம லச்சரண
மெற்கெனக் கூறிப் புறங்கூறிடாம லிருப்பதென்றே.       (19)

பயனிலசொல்லாமை.
நட்படி யார்க்கருள் புல்லைப் பிரான்றிரு நாமமனத்
துட்பய னீதென் றுரையாத மாந்தரை யோகடல்சூழ்
மட்கட்பயனில்சொற் பாராட்டு வானை மகனெனன்மக்
கட்ப தடியென(லென்றோத வள்ளுவர் காட்டியதே.)       (20)

தீவினையச்சம்.
சீர்க்குளறிவினு ளெல்லாந் தலையென்ப தீயசெறு
வார்க்குஞ்செய்யாவிட லென்றத னாற்கொல்கொல் வரளரக்கன்
போர்க்கு மெலிதல்கண் டேநாளை வரவின்று போவெனவிப்
பார்க்கு ளுரைத்ததென் சொல்வேன் புல்லாணிப் பதியண்ணலே.       (21)

ஒப்புரவறிதல்.
தொல்கா சினியி லிடனில் பருவத்து மொப்புரவிற்
கொல்கார் கடனறி காட்சி யவரென லோர்தருமன்
செல்கானி னூற்றுவர் சொல்கோதி னாற்றவர்சீரமுது
நல்கா யெனநல்கி னான்புல்லை மாலருணன்மைபெற்றே.       (22)

ஈகை.
கரந்தில ராயளிப் பார்க்குமின் னாதிரக் கப்படுத
லிரந்தவ ரின்முகங் காணு மளவென் றியம்புதலால்
வரந்தர வேண்டுமென் றுன்பாற்சொல்லேனை வலியவந்தாள்
புரந்தரன் பூசிக்கும் புல்லையில் வாழுந்தி பூத்தவனே.       (23)

புகழ்.
போத நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப் போற்
றாதுபுத் தேளுல கென்றார் புவிக்க ணருள்செயலா
லோது புகழ்கண் டயன்போற்றுந் தென்புல்லை யூரனைச்சென்
றேதமில் லாதுபுத் தேளுல கேத்த லியல்(வ)துவே.       (24)

அருளுடைமை.
வம்பூ டிலாவருட் செல்வஞ்செல் வத்துட்செல் வம்பொருட்செல்
வம்பூ ரியார்கண் ணுமுளவென் றோதினர் மன்னியசெல்
வம்பூ தலத்துன் னருட்செல்வ மல்லது மற்றுமுண்டோ
வம்பூ தியமல ரோன்றந்தை யேபுல்லை மாநிதியே.       (25)

புலான்மறுத்தல்.
உண்ணமு(தும்)பர்க் குதவுபுல் லாணி யொருவனந்நா
ளுண்ணவ னித்தலத் துண்ணாமை யுள்ள துயிர்நிலையூ
னுண்ணவண் ணாத்தல்செய் யாதள றென்றறிந்தோர்நரகி
னுண்ணலி யாருல குண்டபெம் மானரு ளுண்மையுற்றே.       (26)

தவம்.
தளிவிடு மோவன்றிப் புல்லைக் காசு தயை வெள்ளத்தோர்
துளிவிடு மோவறி யேன்வன் னி்சுடச் சுடரும்பொன்போ
லொளிவிடுந் துன்பஞ் சுடச்சுட நோற்கிற்பவர்க் கொப்பதாய்
வெளிவிடு மாதவஞ் செய்யேற்கை யோபுகல்வேறில்லையே.       (27)

கூடாவொழுக்கம்.
வேதங்கள் காணவு மெட்டா னெழுத்து விளங்குமெட்டான்
சீதங்க ளார்மலர்ச் செல்விக்கு வாய்த்த திருப்புல்லையான்
பாதங்கள் சேர்(ந்துய்க)வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம்
பூதங்க ளஞ்சு மகத்தே நகுமெ(னும்)புன்மையற்றே.       (28)

கள்ளாமை.
காற்றார் பொழிற்புல்லை மாலே யளவின்க ணின்றொழுக
லாற்றார் களவின்கட் கன்றிய காத லவரெனலா
னேற்றா னயன தளவின்கணின்றனை வெண்ணெயுண்டல்
சாற்றாய் களவின்கட் காதலுன் விந்தையைச் சாற்றுவதே.       (29)

வாய்மை.
தாய்மலர் மங்கை தழைத்தபுல் லாணிவந் தாய்பொய்ம்மையும்
வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனிற்
றூய்மன மெய்ந்நன்மை யாதேனு மின்றிச் சொலும்பொய்ம்மைய
னாய்மெலிந் தேனைமெய் யாளாக் கினியுன் னடியிணைக்கே.       (30)

வெகுளாமை.
நஞ்சினத் திற்கொடி தாக நகையு முவகையுங்கொல்
லுஞ்சினத் திற்பகை யும்முள வோபிற வென்றுரைத்த
வெஞ்சினத் தீமையெனைமேவி டாதுனை வேண்டினன்மெய்
மஞ்சினத்த த(ா* புல்லை வ)ந்தாய் சுகாநந்த வாரிதியே.       (31)

இன்னாசெய்யாமை.
அன்னவன் றன்னுயிர்க் கின்னாமை தானறி வானென் கொலோ
மன்னுயிர்க் கின்னா செயலென்ற வள்ளுவர் வாய்மைகண்டும்
பின்னும் பிறருக்கின் னாமைசெய் பேதை யிருளகலப்
பொன்னுறு சோதியைக் கண்டுகொண் டேன்றிருப் புல்லையிலே.       (32)

கொல்லாமை.
ஆதி யருந்தமிழ் வள்ளுவ னல்லா றெனப்படுவ
தியாதெனின் யாதொன்றுங் கொல்லாமை சூழு நெறியெனலா
லோது முயிரைக்கொல் லாமைநல் லாறுற் றுனதுதிருப்
பாத மலர்ப்பணி யான்செய்வ னோபுல்லைப் பார்த்திபனே.       (33)

நிலையாமை.
ஒன்றில்லை யுன்செய லல்லா னெருன லுளனொருவன்
இன்றில்லை யென்னும் பெருமை யுடைத்திவ் வுலகுதனிற்
கொன்றில்லை யென்னுங் கொலைபொயுள் ளேன்புல்லைக் கோவெனையா
ணன்றில்லை யாயி னிலையில்லை யாளி னரகில்லையே.       (34)

துறவு.
நானோக்கி நின்செய னின்பொரு ளென்னமெய் நல்குபுல்லைச்
சேனோக்கி மாநண்ப யானென தென்னுஞ் செருக்கறுப்பான்
வானோர்க் குயர்ந்த வுலகம் புகுமென்று வையகத்து
ளானோர்க்கு வள்ளுவர் மேனா (ளுரைத்த)ன ரன்புவைத்தே.       (35)

மெய்யுணர்வு.
கருவார் பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்செம்
பொருள்காண் பதறிவென் றோதின ராற்றிருப் புல்லைநக
ரருண்மால் சிறப்பென்னுஞ் செம்பொருள் வாழ்வுடைத்தாதலினால்
வருபே ரறிஞர்கண்டேழ்பிற விப்புன்மை மாற்றுவரே.       (36)

அவாவறுத்தல்.
தென்னம் புவியகத் தின்ப மிடையறா தீண்டுமவா
வென்னுந்துன் பத்துட்டுன் பங்கெடி னென்ன விசைத்துமுன்னோர்
பொன்னின்பெண் மண்முத லாசையுட் சிக்கிப் புலம்பிநொந்தேன்
பின்னின் றெனைப்புரப் பாரில்லை புல்லைப் பெருந்தகையே.       (37)

ஊழ்.
பற்றின் கருத்தின் படிநுண் ணியநூல் பலகற்பினு
மற்றுந்தன் னுண்மை யறிவே மிகுமெனின் மாந்தரெல்லாங்
கற்றிங் கிருக்கினு முண்மை யறிவுனைக் காண்பதன்றி
முற்றும் பொருளினி யுண்டோ புல்லாணி முகில்வண்ணனே.       (38)
அறத்துப்பால் முற்றும்.
----------------
2. பொருட்பால்.

இறைமாட்சி.
கட்பது மப்பெண் ணாசோ டரசிற் கதித்தபுல்லைக்
குட்பெரு மானைக்கொண் டாடிற் படைகுடி கூழமைச்சு
நட்பரணாறு முடையா னரசரு ளேறெனத்தன்
பெட்பெளி யோனும் பெறும்பா ரரசு பெருக்கமுற்றே.       (39)

கல்வி.
எண்ணம்ப னெண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கென் பதுபுல்லைக் கஞ்சமலர்ப்
பெண்ணின்ப நாதனெண் சீரெழுத் தன்றிப் பிறிதுமுண்டோ
மண்ணின்கண் மாடு மறுமைக்கண் வீடும் வழங்குதற்கே.       (40)

கல்லாமை
நார்முற் றிடாநின்ற கல்லா தவரு நனிநல்லர்கற்
றார்முற்சொல் லாதிருக் கப்பெறி னென்ப தகத்திலெண்ணெண்
சீர்முற்றுங் கற்றவர் கல்லான்பொல் லானெனச் செப்புமெனைப்
பார்முற்றுங் காப்பவன் காப்பான்புல் லாணிப் பதியினின்றே.       (41)

கேள்வி.
அத்தனை செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ்செல்
வத்துளெல் லாந்தலை யென்றுரைத் தார்புல்லை வாழ்மலர்ப்பெண்
சித்த மனநின சீர்த்தியைக் கேட்குஞ் செவிக்குநிகர்
ஒத்திடன் மற்றில தாற்செவிச் செல்வ முயர்வனவே.       (42)

அறிவுடைமை.
இறைவ திருப்புல்லை மாலே திருவுள்ள மென்கொலெவ்வ
துறைவ துலக முலகத்தொ டவ்வ துறைவதறி
வறைவது நூல்கண் டுலகத் தியல்பறி யாதுநின்ற
மறைவது மாறநின் பேரறி வென்று வருமெனக்கே.       (43)

குற்றங்கடிதல்.
பவமன்னு துன்ப வினையணு காதுபற் றுள்ளமென்னு
மிவறன்மை யெற்றுள்ளு மெண்ணப்படுவதொன் றன்றெனநூற்
றுவர்மன்ன னெஞ்சினெண் ணாமைகண் டைவ ருடன்றுணைச்சென்
றவனென்னு மாதிபுல் லாணிப் பிரான்ற னடியவர்க்கே.       (44)

பெரியாரைத்துணைக்கோடல்.
தழுவியென் றம்மிற் சிறியார்தம் மிற்பெரி யார்தமரா
வொழுகுதல் வன்மையு ளெல்லாந் தலையென் றுரைத்தனரான்
முழுமுத லோன்பெரும் புல்லையிற் கண்ணனை முற்றுமைவர்
தொழுது வலிமைபெற் றோங்குத னாளுந் துலங்குவதே.       (45)

சிற்றினஞ்சேராமை.
காப்பு மனநல மன்னுயிர்க் காக்க மினநலமெல்
லாப்புக ழுந்தரு மென்றார் நலமென் றமைவதுநின்
பூப்பத மெண்ணு மனமின மெய்யன்பர் புல்லைவளர்
மாப்பது மாசனி கொண்காசங் காழி மலர்க்கையனே.       (46)

தெரிந்துசெயல்வகை.
ஏக்காலொ ராக்கங் கருதி முதலிழக் குஞ்செய்வினை
யூக்கா ரறிவுடை யாரென்ப தாற்புல்லை யூரமுதல்
போக்கா திருத்துதன் றந்தைமற் றாக்கம் பொருந்தலின்றி
வாக்கா லுரைத்துண்மை வாழ்ந்தா னிரணியன் மைந்தனன்றே.       (47)

வலியறிதல்.
போக்கற்ற வென்றுயர் போக்கிவந் தாட்கொள் புகழுநல்லோர்
வாக்கிற் கியைபுல்லை மாலே யுடைத்தம் வலியறியா
ரூக்கத்தி னூக்கி யிடைக்கண் முரிந்தார் பலருலகி
லாக்கப் பெருவலி நீயென்று கண்டுண ராதவரே.       (48)

காலமறிதல்.
சீரார் பருவத்தொ டொட்ட வொழுக றிருவினையே#
தீராமை யார்க்குங் கயிறென லாற்செங் கதிர்மகற்கு
நேரா யுரைத்தொர் வரையின்க ணாட்செல நின்றிலங்கைப்
போராடல் வென்று திருவையுற் றான்புல்லைப் பூரணனே.
# ஏகாரம் விரிக்கப்பட்டிருகக்கிறது.       (49)

இடனறிதல்.
பள்ளத் திரைகடற் சேதுவுண் டாக்கப் பரிதிகுலத்
துள்ளுற்ற வள்ளல்புல் லாணி யிடங்கண் டுவந்துசென்று
விள்ளற் கருஞ்சமர் வென்றான் றொடங்கற்க வெவ்வினையு
மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின்னல்ல தென்பதுவே.       (50)

தெரிந்துதெளிதல்.
தமேவும் பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்கரு
மமேகட்டளைக்கல் லெனல்கண்டு வான வரைவளர்வித்
துமேலு மவுணரைத் தேய்த்து மதிசயந் தோன்றநின்றா
னிமேதினி யுண்டுமிழ் வோன்புல்லை யூரி லிருப்பவனே.       (51)

தெரிந்துவினையாடல்.
அன்றாய்ந் தவர்சொ லிதனையிதனா லிவன்முடிக்கு
மென்றாய்ந் ததனை யவன்கண் விடலென லாற்கனகக்
குன்றார்ந்த கொங்கைச் சனகியைத் தேடக் குறித்துநல்கும்
ஒன்றாம்பொ னாழியை மாருதி பாற்புல்லை யூர்முகிலே.       (52)

சுற்றந்தழால்.
நத்தாற் றிகழ்வயற் புல்லாணி நாரண னல்கருளின்
பத்தாற்சொ லாதர வாற்றொண்டர் சூழப் படுமனநே
யத்தாற் கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கியசுற்
றத்தாற் சுற்றப்படு மென்றுமுன் னோர்கண் டறைந்ததுவே.       (53)

பொச்சாவாமை.
உறுதியுள் வள்ளுவ ரோதல்பொச் சாப்புக்கொல் லும்புகழை
யறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கென லாலுனது
நறுமலர்ப் பாதத்தை நான்மறந் தாற்புகழ் நன்மையினிப்
பெறுவதற் கோர்செயல் காணேன்புல் லாணிப் பெருந்தகையே.       (54)

செங்கோன்மை.
அயாவென் றுனைப்புகழந்தணர் நூற்கு மறத்திற்குமா
தியாய்நின் றதுமன் னவன்கோல் புல்லாணித் திருவரசு
தயாநிதி முன்னின்கைச் செங்கோ லிராக்க தரைவென்றன்றோ
மெயாயொலி வேதந் தருமமெக் காலும் விளங்குவதே.       (55)

கொடுங்கோன்மை.
மாற்றார் படையன்றி வன்கொடுங் கோல வரையல்லற்பட்
டாற்றா தழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும்படை
காற்றா மரைப்புல்லை மாயோ னளக்குமிக் காசினியின்
மேற்றா னிவையன்றி யென்சொல்வர் சீரற்ற வேந்தரையே.       (56)

வெருவந்தசெய்யாமை.
சங்கோடு சக்கரஞ் சேர்புல்லை மால்கஞ்ச னாருயிரை
அங்கோட மாய்த்த தறியார்கொ லோவெருவந்தசெய்வார்
செங்கோ னெறியொன் றிலனாய் வெருவந்த செய்தொழுகும்
வெங்கோல் னாயி னொருவந்த மொல்லைக் கெடுமென்பதே.       (57)

கண்ணோட்டம்.
செயத்தக்க பாவத் தினுமேற்செய் தேனைத் திருவருள்கூர்ந்
துயத்தக்க வாறுசெய் யாய்பெயக் கண்டுநஞ் சுண்டமைவர்
நயத்தக்க நாகரி கம்வேண்டுபவ ரென்ப்புகன்றார்
பயத்த(க்கரா) சலங் காத்தருள் புல்லைப் பதிக்கொண்டலே.       (58)

ஒற்றுடல்.
எற்றின்றி யொற்றுமுரைசான்ற நூலுமிவையிரண்டுந்
தெற்றென்க மன்னவன் கண்ணென்ப ரீதுன் செயல்பொருந்தும்
முற்றின்ப மன்னர் முறைமைநின் பாத முளரியின்மேற்
பற்றென்று நான்பெறு வேனோபுல் லாணிப் பதிக்கொண்டலே.       (59)

ஊக்கமுடைமை.
புல்லாய்வந் துள்ள முடைமை யுடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கிவிடுமென்ப தாலுனை நெஞ்சில்வைத்தோ
ரெல்லாரும் வாழ்வர் திருப்பாற் கடலிடத் தேபிறந்த
நல்லாளை நெஞ்சிற்கொள் புல்லாணியம்பதி நாயகனே.       (60)

மடியின்மை.
நெடிய திருப்புல்லை நாரண னேநெடு நீர்மறவி
மடிதுயினான்குங் கெடுநீரார் காமக் கலனெனுமக்
கொடிய வினையணு காதெளியேனைநின் கோகனகத்
தடியிற் படியவைத் தாண்டுகொண்டா(யென்னருட்கடலே).       (61)

ஆள்வினையுடைமை.
அருள்விளை செல்வத் திருப்புல்லை யூரண்ணலேமுயற்சி
திருவினை யாக்கு முயற்றின்மை யின்மை புகுத்திவிடும்
பெருகநின் றாட்பணிக் காளாய் முயற்சிபெற்றாந்திருவே
தருக முயற்றின்மை யாங்கலி தீருந்தகையெனக்கெ.       (62)

இடுக்கணழியாமை.
எடுத்தூதுவேயினிசைவாசு தேவன்புல்லைக்கிறைநீர்
நடுத்தா ரணியிற் சிறியேனை நாடி நகைமகிழ்ச்சி
கொடுத்தாள்வ னோவிடுக் கண்வருங் கான குகவதனை
யடுத்தூர்வதஃதொப்ப தில்லென லாற்றனடியனென்றே.       (63)

அமைச்சு.
ஒல்லைத்தெரிதலுந்தேர்ந்துசெயலு மொருதலையாச்
சொல்லலும் வல்ல தமைச்சது நீயமைச் சுக்கொடுத்த
வல்லவ மென்முலை வல்லவள் பொன்மகள் வல்லவதென்
புல்லையில் வந்தனை வந்தனை செய்யப் புவியெங்குமே.       (64)

சொல்வன்மை.
உற்றவுரைகள் பலசொல்லக் காமுறு வர்மன்றமா
சற்ற சிலசொல்ல றேற்றா தவரென லாயசில
சொற்றுதியாதுனை வஞ்சகர் பாற்பல சொற்சொலக்கா
முற்றலைந்தேன்கலிதீர்த்தருள் புல்லை முகில்வண்ணனே.       (65)

வினைத்தூய்மை.
எடுக்கப் படாவிடுக் கட்படினும்மிளி வந்தசெய்யார்
நடுக்கற்ற காட்சி யவரென்பர் நானினி நல்குரவாற்
றிடுக்கிட்டிளிவரல் செய்யக்கண் டென்னைச் சிரிப்பரன்றோ
வடுக்கட்பிராட்டிமணாளாபுல் லாணியென் மன்னவனே.       (66)

வினைத்திட்பம்.
யாவுங் கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கினெற்
றாவிழு மந்தரு மென்பத னாலுனடிமிசைநீங்
காவிருப் பம்பெற் றமைதற்கு வந்து கருணைசெய்வாய்
மூவடி மண்பலி முன்கேட்கும் புல்லை முதற்பொருளே.       (67)

வினைசெயல்வகை.
ஆட்சிகொள் சூழ்ச்சி முடிவு துணிவெய்தலத்துணிவு
தாழ்ச்சியுட்டங்குதறீதென லால்விசை யற்குநன்றாய்க்
காட்சிதந்தெண்ணமரிற்றுணி வெய்தக் கலக்கமுறா
மாட்சிமெய்ஞ் ஞானம் புகன்றான் றிருப்புல்லை வாழ்கண்ணனே.       (68)

தூது.
துன்றிய வன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்றென் லாலமை வோனிவனே
சென்றிட(வேண்டுமெ)னத்தூது புல்லைச் செழுமுகிலை
நன்றிசைத்தன்று பொறையோன் விடுத்தன னாட்டினுக்கே.       (69)

மன்னரைச்சேர்ந்தொழுகல்.
பதினா லுலகிற்கு மன்னவன் புல்லைப் பதியரிய
முதலோ னருளுறப் போற்றுநெஞ்சேமுன்னவன்மறுத்தாற்
கதியேது போற்றி னரியவை போற்றல் கடுத்தபின்றேற்
றுதல்யார்க் குமரிதென் றோதினர் வள்ளுவ ருண்மையுற்றே.       (70)

குறிப்பறிதல்.
(மொண்டோதம் பெய்முகில் வண்ணா) முகத்தின் முதுக்குறைந்த
துண்டோ வுவப்பினுங் காயினுந் தான்முந் துறுமெனலாற்
பண்டோ ருலகர்க்குன் பாதத்திற் சொக்கும் பதுமமலர்
கண்டோதினார்முகத்திற்கிணையாய்ப்புல்லைக் காவலனே.       (71)

அவையறிதல்.
அடைபே ருணர்வத்திருப்புல்லை யா(னிடத்தா)முணர்வ
துடையார்முற்சொல்லல் வளர்வதன் பாத்தியுணீர்சொரிந்தற்
றிடைவே றிடத்துநின் புன்கவி யேற்றிநெஞ் சேபயனென்
படையாழி நாதன் கவிநா யகன்(புகழ்பாடுவையே).       (72)

அவையஞ்சாமை.
பல்லாயிரம்பெருங்கோடியண்டங்கள் பணியநின்ற
புல்லாணி மெய்யரைப் போற்றாது பொய்யரைப் போற்றல்கற்றுங்
கல்லாமை கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்து
நல்லா ரவையஞ்சு வாரென மேலவர் நாட்டலினே.       (73)

நாடு.
இளமைந்தர் மாதர் செறிவோங்க வன்பிணி யின்மைசெல்வம்
விளைவின்ப மேம மணியென்ப நாட்டிற்கிவ் வைந்துமிக்க
வளமென்ற பாண்டிநன் னாட்டிற் றிருப்புல்லை வைகுந்தமே
லுளனங்கிருந்து நிறைந்தா னுலகி னுயிர்க்குயிரே.       (74)

அரண்.
நிலையுடைவேந்தர்க்கு வள்ளுவர் சொன்மணி நீருமண்ணு
மலையு மணிநிழற் காடு முடைய தரண்வகுத்தார்
கொலைபுரி கூற்றமெம் மேல்வரும் போதுபொற்கோதைமகி
ழலைகடல் வாய்ப்புல்லை யச்சுதன் பாத மரணெமக்கே.       (75)

பொருள்செயல்வகை.
அருளாள னாமெனப் புல்லைவந்தாய்பொரு ளல்லவரைப்
பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருளெனலாற்
றிருவார் பொருட்செல்வ மெங்கணுந் தானின் றிருவருளால்
வரு(மாதலா)லுன்னை மெய்ப்பொருளாக வழுத்துவனே.       (76)

படைமாட்சி.
மீனவ தாரன் றிருப்புல்லைக் கண்ணனம் மேலவன்சே
ரானென லாலன் றடற்படை தூற்றுவ(ர்க்க) ற்றதன்றோ
வூனயில் வேற்கை நிலைமக்கள் சால வுடைத்தெனினுந்
தானை தலைமக்க ளில்வழி யில்லென்ச் சாற்றுவதே.       (77)

படைச்செருக்கு.
மால்புரி கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்மெய்
வேல்பறி யாநகு மென்னுமவ் வீரரை மேன்முடிவி
னால்பயில் கண்வளர் புல்லைப்பி ரான்கற்ப காடவியிற்
சேல்புரை கண்ணிய ரின்புறச் செய்வனத் தேவரென்றே.       (78)

நட்பு.
பகர்தற் கரிய பரமன்புல் லாணியன் பத்தர்கணெஞ்
சகமலர் மேவிய மைந்தரு ளுண்மை யறிந்துமது
நிகர்சொன் முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்தக
நகநட் பதுநட் பெனவள் ளுவர்மு னவின்றனரே.       (79)

நட்பாராய்தல்.
சொல்லா லழ்ச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொள்லென லாலவ் வகையுரியா
ரில்லாது தாழ்ந்துனைச் செல்லாது நின்ற வெனக்குநின்றா
ளல்லாதொ ராதர வுண்டோபுல்லாணியிலச்சுதனே.       (80)

பழமை.
அழையானை முன்வரும் புல்லைப் பழம்பொரு ளாங்கருணை
மழையா னடிக்கட்பண் பில்லேனை யாவர் மதிப்பர்செந்த
மிழையாய் திருவள் ளுவர்விழை யார்விழை யப்படுப்
பழையார்கட் பண்பிற் றலைப்பி யாதார் பரிந்தென்பவே.       (81)

தீநட்பு.
காதுநின் னாமம் புகாதுபின் னோபொய்க் கனவினுமின்
னாதுமன் னோவினை வேறுசொல் வேறுபட்டார்தொடர்பென்
றோது முரையினைக் கேளாது தீயரு ளுற்றனன்காண்
யாது திருவரு ளோபுல்லை யூரி லெழுமுகிலே.       (82)

கூடாநட்பு.
பன்னாளு நின்று தொழுதகை யுள்ளும் படையொடுங்கு
மொன்னா ரழுதகண் ணீரு மனைத்தென் றுரைக்கவஞ்ச
ரன்னாரை யேன்படைத் தானோவு னுந்தியி லன்றுதித்தோன்
பொன்னாகம் புல்லையிற் பூத்தவ னே(பழம் புண்ணியனே.)       (83)

பேதைமை.
இக்க ணொருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந்தான்
புக்கழுந்தும்# மள றென்றால்வன் பேதையென் போலியர்யார்
கைக்கு மெய்யாயு னருள்பெற வேண்டுங் கணக்கதற்குத்
தக்க வகையொன்று சொல்லாய் புல்லாணித் தயாநிதியே.
# ம்-விரிக்கப்பட்டிருக்கிறது.       (84)

புல்லறிவாண்மை.
ஏது முதவா (வ)றிவிலா னெஞ்சுவந் தீதல்பிறி
தியாதுமில் லைபெறு வான்றவ மென்பதெண் ணிப்புல்லையூர்
நாதனை நோக்கித் தவம்புரி யாது நலமிலர்பாற்
காதலி னோடலைந் தீர்மக்க ளேபலன் காண்பதென்றே.       (85)

இகல்.
பகலன்ன சீலம் படைக்குமின் பத்துளின் பம்பயக்கு
மிகலென்னுந் துன்பத்துட் டுன்பங் கெட்னென் றிசைத்ததனாற்
புகலுன் மலரடி யென்றோர்க் கிகற்(றுன்பப்)புன்மையுறா
தகலு மணுகுநின் பேரின்பந் தென்புல்லை யாதிபனே       (86)

பகைமாட்சி.
பூணார் முலைப்புல்லைப் பூமேலு மங்கை புணர்ந்தருள்கல்
யாணா கொடுத்துங் கொளல் வேண்டு மன்ற வடுத்திருந்து
மாணாத செய்வான் பகையென்னுந் தந்திர மன்னர்க்கென்றார்
நீணா னிலம்புரந் தோயன்றுண் டோவிந் நெறியுனக்கே.       (87)

பகைத்திறந்தெரிதல்.
கோளின்றி நாளும் பகைநாட்பாக் கொண்டொழு கும்பண்புடை
யாளன் றகைமைக்கட்டங்கிற் றுலகென்ப தற்றுநட்பை
நீளும் பகைகொண்டு நின்றேனைப் புல்லையி னின்மகிமைத்
தாளின்வைத் தாளினித் தாளினம் போருகத் தாளின்பனே.       (88)

உட்பகை.
அன்போ டுனைப்பணி யார்(மனம் போல்வல்) லரம்பொருத
பொன்போலத் தேயு முரம்பொரு துட்பகை யுற்றகுடி
யென்போர்முன் னோரென துட்பகை காம மி(கன்)முதலாந்
துன்போடமாற்றிச் சுகானந்தந் தாபுல்லைச் சுந்தரனே.       (89)

பெரியாரைப்பிழையாமை.
ஆந்தவப் பேறுமெய் யர்க்களிப் பாய்புல்லை யாழிசங்க
மேந்தரி யேந்திய கொள்கையார் சீறி னிடைமுறிந்து
வேந்தனும் வேந்து கெடுமென லாற்கபி லன்வெகுளிக்
காந்தலின் மாய்ந்தா ரறுபதி னாயிரங் காவலரே.       (90)

பெண்வழிச்சேறல்
அறிவுகொண் டஞ்சுதற் கஞ்சாது(தன்)மனை யாளையஞ்சு
மறுமையிலாளன் வினையாண்மை வீறெய்த லின்றடக்கப்
பெறுமனைக் கஞ்சி யியமனைக் கெஞ்சி(ய) பேதையரா
யுறுமவர்க் கென்பய(னுண்டாந்)திருப்புல்லை யூரவனே       (91)

வரைவின்மகளிர்.
மாதில கப்பெறு மார்பா மகிதல வாணுதற்கு
மாதில கப்புல்லை வாழ்முகுந் தாதம் மனைபொருந்த(*ா)
தேதில் பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையி
லேதில் பிணந்தழீஇயற்றெனு(நூற்பொரு ளெண்ணிலனே.)       (92)

கள்ளுண்ணாமை.
கோணாத நாணென்னு நல்லாள் புறங்கொடுக் குங்கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கென்பர் புல்லை(பிரான்வெறுக்க)
வீணா மயக்குற்று மெய்மயக் குற்ற வெறிமயக்கள்
ளூ(ணால்வ)ருங்குற்ற மோதுவர் மேற்குற்றா மொன்றில்லையே.       (93)

சூது.
தீதின் முயலுஞ் சிறுமை பலசெய்து சீரழிக்குஞ்
சூதின் வறுமை தருவதொன் றில்லெனல் சூதுரக
கேதனன் கேடமைந் தானவன் றீயுரை கேட்டவைவ
ரோதுவெங் கானடைந் தோர்புல்லை மாலினங் குய்ந்தனரே.       (94)

மருந்து.
காறழ லையமொத் தற்ற தறிந்து கடைப்பிடித்து
மாறல்ல துய்க்க துவரப் பசித்தென வள்ளுவர் நூல்
கூற லறிந்துடல் பேணுத லுன்னடிக் கோகனகப்
பேறு பெறுந்தவஞ் செய்யவன் றோபுல்லைப் பேரின்பனே.       (95)

குடிமை.
அகிலாண்டம் யாவு மரவிந்தத் தாள்கொண் டளந்தபுல்லை
நகராதி வைகுந்த நாராய ணாநகை யீகையின்சொ
லிகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கென்பது
சகமே லுனைத்தொழும் அன்புடை யார்குடித் தன்மையதே.       (96)

மானம்.
மனைவாழ் வினைமெய் யெனநம்பி (யுன்னை மறந்த)குன்றி
னனையாருங் குன்றுவர் குன்றுவ குன்றி யனையசெயி
னெனவோதி யுஞ்சிறி யேன்மலை போற்பழி யெய்திநின்று
தனியே தளர்ந்தனன் றஞ்சம்புல் லாணித் தயாநிதியே.       (97)

பெருமை மணச்செல்வி யாய்மலர் மாதுறை புல்லிச்செல் வாசிறியா
ருணர்ச்சியு ளில்லைப் பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னுநோக்
கெணிச்சொலு நூலென் னளவிற்கண் டேன்கண்ட தென்னெனினீ
யணைச்சரு ளன்பரைப் பேணிக்கொள் ளாமை யகமுதித்தே.       (98)

சான்றண்மை
கருடற்கு நாயகன் புல்லைப்பி ரான்(கழல் காட்டு) மின்மை
யொருவற் கிளிவன்று சால்பென்னுந் திண்மையுண் டாகப்பெறி
னருமைச்சொல் யான்கண்டு சால்புசற் றேனுமில் லாதுலக்
விருளிற் கலங்க லிளிவென் றுரைப்ப ரெவருமின்றே.       (99)

பண்புடைமை
கோல வளம்புல்லைக் கோவிந்தன் நன்மதிக் கூர்மையற்று
மேலும்பண் பற்றுநின் றேற்கருள் கூர்வித மெவ்விதமோ
நூல்வள் ளுவரன் றரம்போலுங் கூர்மைய ரேனுமரம்
போல்வர்மக் கட்பண்பில் லாதவ ரென்னுமிப் பூதலத்தே.       (100)

நன்றியில்செல்வம்
கெடாதுல கெங்கணுங் கீர்த்தியென் றேசொலக் கேட்டுநச்சப்
படாதவன் செல்வ நடுவூரு ணச்சு மரம்பழுத்தற்
றடாதுசெய் நன்றியில் செல்வத்தார் பாற்சென் றலைந்துநொந்து விடாதெமக் கின்பங் கொடாது விடான்புல்லை மேலவனே.       (101)

நாணுடைமை
ஏணுடை மாந்த ருலகத்து ளோரி ழிகருமத்தா
னாணுத னாணுத் திருநுத னல்லவர் நாணுப்பிற
நீணிலமேலென வோதுதல் கண்டுநின் றெப்பழிக்கு
நாணில னாய்த்திரிந் தேனைவந் தாள்புல்லை நாயகனே.       (102)

குடிசெயல்வகை
திருகற் படாத மன(த்திடத் தாற்) குடி செய்வலென்னு
மொருவற்குத் தெய்வ மடிதற்றுத் தான்முந் துறுமெனலா
லருமக்கள் புல்லையிற் றெய்வச் செயலென் ற்றிந்துகுடி
பெருகச் செயிற்றெய்வ முந்துறற் கையமென் பேசுவதே.       (103)
---------------

3. காமத்துப்பால்


தகையணங்குறுத்தல்
அலாயுதன் பின்னவன் யார்க்குமுன் னோன்புல்லை யண்ணல்வெற்பிற்
சொலாயிழை பேரெழி லென்னை மயக்குமந் தோவணங்கு
கொலாய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொன் மாலுமென்னஞ்
சுலாவு புகழ்த்தமிழ் வள்ளுவ ரோதுத லொப்பென்னவே.       (109)

குறிப்பறிதல்
ஆக்கத்தெண் ணீரமு தந்நா ளமரர்க் களித்துமுது
மாக்கிட்கிந் நாளெய்தப் புல்லைவந் தோன்வரை மங்கைகண்ணோ
டூக்கத் தவன்கண்க ளொத்திட லாற்கண் ணொடுகண்ணிணை
நோக்கொக்கின் வாய்ச்சொற்க ளென்ன பயனு மிலவென்பவே.       (110)

புணர்ச்சிமகிழ்தல்
துனியகல் வித்து மகிழ்ந்துதாம் வீழ்வார்மென் றோட்டுயிலி
னினிதுகொ றாமரைக் கண்ணா னுலகென் றிசைத்தல்கண்டு
கனியித ழுண்டெனைத் தோய்ந்தின்ப வாரியிற் கண்டுயின்றான்
றனிமலர்ந் தாமரைக் கண்ணான்புல் லாணித் தலைவன்வந்தே.       (111)

நலம்புனைந்துரைத்தல்
நிலமே லுறுமல்ர் காணின்மை யாத்திநெஞ் சேயிவள்கண்
பலர்காணும் பூவொர்க்கு மென்ற்யர்ந் தோர்முன் பகர்தல்கண்டு
மலர்மாது வாழ்புல்லை மாயோன் பொருப்பின் மடமயிற்கு
நலமே புனைந்து சொலவேண்டு மோவினி நானுமின்றே.       (112)

காதற்சிறப்புரைத்தல்
மயிலியற் பூமங்கை மன்னன்புல் லாணி வரைக்கணின்சொற்
குயிலொடு யான்கொண்ட நட்பிற்கு வேறொக் குமோவுடம்பொ
டுயிரிடை யென்னமற் றன்ன மடந்தையொ டெம்மிடைநட்
பியல்பென வள்ளுவர் காதற் சிறப்பிற்சொ லீதன்றியே.       (113)

நாணுத்துறவுரைத்தல்
நறுந்துள வப்புயத் தோன்புல்லை நாட்டொரு நங்கையினா
லுற்ந்தனி யாய்மட லூர்தற்கு மாலையுற் றொன்றொடலைக்
குறுந்தொடி தந்தாண் மடலொடு மாலை யுழக்குந்துய
ரறிந்துகொ ளீரென வள்ளுவர் சொல்லுத லத்தன்மையே.       (114)

அலரறிவுறுத்தல்
அலர்மகள் சேர்புல்லை யச்சுத னாட்டி னருங்குணத்தை
யலர்செயல் கண்டுகொண் டேனயல் யாவ ரறிவரினை
யலர்வரு சீர்மல ரன்னகண் ணாளரு மையறியா
தலரெமக் கிந்ததிவ் வூரெனல் போலு மமைந்ததுவே.       (115)

பிரிவாற்றாமை
பொன்கண்ணார் புல்லை யருட்கண்ணர் முன்புணர்ந்தோர்பிரிவு
பின்கண் ணறச்சொல்லின் மேவலென் னாசை பிரிவுரைக்கும்
வன்கண்ண ராயி னரிதவர் நல்குவ ரெனனுநசை
நன்கென்ன வள்ளுவ ரின்கன்னல் போல நவின்றனரே.       (116)

படர்மெலிந்திரங்கல்
அன்புசெ யின்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற்
றுன்ப மதனிற் பெரிதென வள்ளுவர் சொல்லியதாற்
றென்புல்லை யூரர் செயலென்ன மேவெனச் சேர்ந்தவன்னோர்
பின்பிரி வாற்பெற்ற துன்பமற் றின்பம் பெறுவதற்கே.       (117)

கண்விதுப்பழிதல்
வானோர்க் கிறைபுல்லை மால்வரக் கண்டு வராதவின்று
சேனோக் கிரங்கிக் கிலுழும தென்புத் திகதுமெனக்
தாநோக்கித் தாமே கலுழு மிதுநகத் தக்கதுடைத்
தேநோக்கி முன்பின் வருந்தலென் றெள்ளற் கிடம்பெற்றதே.       (118)

பசப்புறுபருவரல்
மறந்தார் மனத்தினை விட்டகன் றார்புல்லை மாமகள்பாற்
சிறந்தார் மயலிற் பயந்தெனென் றாரவர் செய்கைவிள்ளா
ரறந்தானன் றேபசந் தாளிவ ளென்பதல் லாலிவளைத்
துறந்தா ரவரென்பா ரில்லென வள்ளுவர் சொல்வதொத்தே.       (119)

தனிப்படர்மிகுதி
பொன்னர மார்பினன் புல்லாணி யூரன் புணருநல
முன்ன திருக்கிலென் மின்னாசை கொள்ளு மொருதலையா
னின்னாது காமங்காப் போல விருதலை யானுமினி
தன்னா ளுரையுண்மை யுன்னா ளின்னாளி லறிவிக்கவே.       (120)

நினைத்தவர்புலம்பல்
வள்ளல்புல் லாணியெம் மால்புணர் சீர்மற வேன்வருத்தம்
தள்ளவொண் ணாதெனில் யான்மறந் துய்வதெத் தன்மைநெஞ்சிற்
கொள்ள(ன்) மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியே
னுள்ளினு முள்ளஞ் சுடுமென் பவர்சொல் லுறுதிகண்டே.       (121)

கனவுநிலையுரைத்தல்
மாதவர் புல்லை மலர்மே லிருந்த மடந்தைமன்ன
ராதவ ரென்(முன்) கனவில்வந் தென்னை யணைந்தனர்காண்
காதலிற் காதலர் தூதொடு வந்த கனவினுக்கி
யாதுசெய் வேன்கொல் விருந்தெனி லென்னினி யான்செய்வதே.       (122)

பொழுதுகண்டிரங்கல்
பலவா யொன்றாய்நின் றெனையாண்ட புல்லைப் பதித்திருமங்
கலவாசு தேவ ரகலா தகலுமிக் காலங்கண்டோ
குலவாசைக் காதல ரில்வாழி மாலை கொலைக்களத்தே
திலர்போ லவரு மெனத்தேர்ந்து வள்ளுவர் செப்பியதே.       (123)

உறுப்புநலனழிதல்
படியொடு வான்பணி(யும்) புல்லை மாயன் (பனிவரையிற்)
பிடியொடு நேர்வார் பிரிவைச் சிதையுறுப் பேவிளம்புங்
கொடியொடு சேணிற் செலுங்கொடி யார்கொடு மையுரைக்குந்
தொடியொடு தொல்கவின் வாடிய தோனெனச் சொல்லல்கண்டே.       (124)

நெஞ்சொடுகிளத்தல்
சுவையின் னிதழுண்டு சென்றவர் புல்லைவந் தோருழைச்செல்
லுவை கண்ணொடேக வரைக்காண்டற் கோவருத் தாதெனைநீ
திவையுள்ள மேவள் ளுவருங்கண் ணுங்கொளச் சேறிநெஞ்சே
யிவையென்னைத் தின்னு மவர்க்காண லுற்றென் றிசைத்தனரே.       (125)

நிறையழிதல்
அணிமலர் சூடி யிதம்பேசி யென்னை யணைய்மனந்
துணிபுல்லை வெண்ணை நுகர்மாயக் கள்வன்சொற் கண்டுகொண்டோ
மணிமொழி வள்ளுவர் தாமெனக் காகப்பன் மாயக்கள்வன்
பணிமொழி யன்றோநம் பெணமை யுடைக்கும் படையென்றதே.       (126)

அவர்வாயின்விதுமபல்
கண்ணாரப் பூம்பொழிற் புல்லாணிக் கண்ணன் கமலத்தினென்
கண்ணாரத் தன்முன் கலந்தான் பசப்புக் கலந்ததின்றென்
கண்ணாரத் திண்புயத் தோடு மினிக்காண் கமற்கொண்கனைக்
கண்ணாரக் கண்டபி னீங்குமென்மென் றோட் பசப்புக்களே.       (127)

குறிப்பறிவுறுத்தல்
அணைந்தருள் புல்லைத் தண் ணந்துறை வன்றணந் தானெனல்யான்
கணந்தனிற் காண்ப னதற்குமுன் கைவளை காட்டிற்றன்றே
துணிந்து பிரிவினைச் சொல்லுதன் முன்னவந்தண் ணந்துறைவன்
றணந்தமை நம்மினு முன்ன முணர்ந்த வளையென்னவே.       (128)

புணர்ச்சிவிதும்பல்
பாடற்பண் செந்தமி ழாழ்வார்சொற் புல்லைப் பதிபுணர்ச்சி
நாடற்கென் றெய்திலன் சென்றானெஞ் சென்செய்யு நான்கலவி
யாடற்கின் றூடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து
கூடற்கட் சென்றதென் னெஞ்செனல் போலிக் குவலயத்தே.       (129)

நெஞ்சொடுபுலத்தல்
உவண்ந் தனைக்கொண்ட புல்லையுள் ளோர்திரு வுள்ளம்பொன்போ
லவரங் கிருத்த லறியா தெனைவிட் டவரிலுற்றாய்
கவனஞ் செறியுநெஞ் சேயவர் நெஞ்சவர்க் காதல்கண்டு
மெவனெஞ்சே நீயெமக் காகத தென்ன விசைத்தலொத்தே.       (130)

புலவி
முக்கட் புராரிக்கு முன்னின்ற புல்லை முகில்புலவி
கைக்கச்செ யாதெனை மேவிடு மோசெய் கலவியின்மு
யக்கத்திற் குப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றா னீள விடலென்று வள்ளுவர் விள்ளுவரே.       (131)

புலவிநுணுக்கம்
புல்லாணி மால்வெற்ப கண்ணாற் பொசிப்பர் பொருள்விழையன்
பில்லார்நின் மார்புனைத் தீண்டேன்முன் வள்ளுவர் பெண்ணியலா
ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன்ப ரத்தநின்மார்
பல்லார் குழல்சொற் புலவி நுணுக்க மறைந்தனரே.       (132)

ஊடலுவகை
பூமின் கெழுநன்றென் புல்லாணி நாட்டிற் புணர்ச்சியினுந்
தோமொன்றி லார்க்குநன் றூடல தின்பஞ் சொலற்கெளிதோ
யாமென்றறிஞ ருணலினு முண்ட தறலினிது
காமம் புணர்தவி னூட லினிதெனக் கண்டனரே.       (133)

காமத்துப்பால் முற்றும்

திருப்புல்லாணிமாலை முற்றிற்று.
----------

This file was last revised on 10 Nov. 2021
Feel free to send corrections to the webmaster (pmadurai AT gmail.com).