pm logo

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 32 (3322-3331)
ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடுதூது


Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - 32 (3322-3331)
sri cuppiramaNiya tEcikar nenjcuviTu tUtu
In tamil script, unicode/utf-8 format



Acknowledgements:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for providing us with a photocopy of the work.
This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
Senthan Swaminathan, Venkatesh Jambulingam, Nalini Karthikeyan
R. Navaneethakrishnan, D. Ganesan and Subathra (Subbu).
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was first put online on 15 Feb. 2010

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 32 (3322-3331)
திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடுதூது

உ -சிவமயம்

3322 காப்பு
வரமணிமா டத்தா வடுதுறைவா ழுஞ்சுப்
பிரமணிய தேசிகன்பாற் பெட்புற்-றுரமணியி
னாய்ந்துதஞ்ச மாயொருகோட் டண்ண லருட்கிலக்கு
வாய்ந்துநெஞ்சே தூதுசென்று வா.

நூல்
3323
பூமேவு செங்கமலப் பொற்றவிசின் மேயவனு
மாமேவு மார்பினெடு மாயவனு-மோமே       1

வரும்பொருட்பே றெய்து மருண்ஞான சித்தி
தருங்கரும பூமியெனச் சாற்ற-லொருங்குணர்ந்து       2

நால்வேத மோது நகுநீற்றா லைந்துபதத்
தால்வேறு மம்மரையென் றாயாமே-மேல்கீழு       3

மன்னமு மேனமு மாய்ப்பறந் தும்புகுந்து
மின்னமுங் காணா வியல்பினான்-முன்னமே      4

பாசங் கலந்த பசுக்களி லோர்வகைக்கா
நேசங் கலந்த நிகழ்ச்சியால்-வாச      5

மளையு மிதழிமதி யஞ்சடில முன்னா
விளையும் பலவும் விலக்கி-வளையும்      6

பிறைதவழு மாடமலி பேரா வடுதண்
டுறைதவழும் புண்ணியத்தாற் றோற்று-மிறைவ      7

னொருமா னெமக்கொளிக்க வோர்கை யமரு
மொருமா னொளித்த வொருவன்-பெருமான்      8

மதிமறைத்த மாசெக்கு மாற்றி யருள
மதிமறைத்த மாசடையா வள்ள-னிதிய      9

மிருள்கண்ட யாமவ் விருள்காணா வண்ண
மிருள்கண்டங் காட்டா திருப்போன்-பொருள்கண்ட      10

மானிடனே யென்ன மருவி யிருந்தாலு
மானிடனே யென்ன வயங்குவா-னீனவுல      11

காயதரைங் கந்த மறுப்பவரொன் றல்லாமுட்
டேயதரென் பார்பரனா மென்பாருஞ்-சேய்மையிற்கண்      12

டாலுமிரு கைதலைமே லாக்கிமன நெக்குருகிச்
சாலும்வணக் கஞ்செய் தவாச்சிறப்பான்-வேலரசர்      13

தன்னடிநீ ழல்வைகத் தாவாத் திருவரசின்
மன்னடிநீ ழல்வைகு மாதேவன்-றுன்னடியார்      14

நந்தான மென்கயிலை நந்திமுதன் மெய்கண்டான்
சந்தான மோங்கத் தழைத்தருள்வோன்-முந்தான*       15

...... ........ ........ ......... ***
*** (இதற்குப் பின்னுள்ள 4-கண்ணிகளடங்கியபகுதி ஏட்டிற் சிதைந்து
போய்விட்டமையாலும் வேறு பிரதி அகப்படாமையாலும் அவை
இங்கே பதிப்பிக்கப்படவில்லை. )       16-19

எண்ணி யுழலு மிருளகற்ற வெங்கள்பா
னண்ணி யமரு நகுபரிதி-கண்ணிய      20

வாலங் கலந்தசுவை யாரமுத மானாலு
மாலங் கலவாத வாரமுதஞ்-சாலு      21

மறப்புக் குணத்தை மருவியுழ லெங்கள்
பிறப்புத் தபப்பிறந்த பெம்மான்-சிறப்புறலாற்      22

பொன்னை யினிதளித்துப் போகவென்னா தெங்களுக்குத்
தன்னை யினிதளிக்குந் தம்பிரான்-முன்மறைத்த      23

தொன்றேயென் றோதி யொழித்தெம்மை வேறுபடுத்
தொன்றே யருள்புரியு மொன்றானா-னன்றதோர்       24

கற்றார் புரிபிழையுங் கைகுவித்துக் கூப்பிடுத
லற்றார் குணமு மறமறப்பான்-பற்றாச்      25

சுரவடிவி லெங்கண்மனந் தோயாமை யெண்ணி
நரவடிவங் கொண்டுவந்த நம்மான்-விரவுபுழ      26

மென்பயிர் போல விடயத் தரிப்புண்டு
துன்புறுவேங் கட்கோர் துணையானா-னன்பமையு      27

நாதாந்த முத்தியருண் ஞானவினோ தன்றெளிவாம்
வேதாந்தன் பேறொன்றும் வேண்டாதான்-போத      28

நரனென் றிருந்தாலு ஞானமிலா தாரு
மரனென் றறிய வவிர்வா-னுரனுடைய      29

வல்லரக்க னேற்று மலையாத தாய்ப்புரத்தி
னெல்லரக்க வாங்க லியலாதாய்ச்-சொல்லரக்கு      30

மிக்க புகழாழி மேவிச் சுழலாதாய்ப்
பக்க மரியப் படாததாய்த்-தொக்ககய      31

லாழி கரவாதா யான்ற தமிழ்முனிகைப்
பாழியறிந் தஞ்சப் படாததாய்-வாழி      32

பொறையருவி யெஞ்ஞான்றும் போற்றிவறந் தாலு
நிறையும்வள நல்கு நிலைத்தாய்-மறைபுகல      33

வாய்ந்ததரு வைந்தோ டழகியசிந் தாமணியும்
வாய்ந்த பெருங்கருணை மாமலையான்-றோய்ந்தகா      34

ராணவந் தீர்ந்த வறிவாங் குறிஞ்சியெனு
நீணவ மாயநில நின்றெழுந்து-காணவெழு      35

காமமெனும் பாலை கடந்தேறி மாயையெனு
நாமநெடு முல்லை நகப்புகுந்தே-யேமமென      36

வுற்ற பசுக்கவர்ந்தாங் கோங்காய ராயவைவர்
முற்ற வுஞற்றுதொழின் மோதியே-செற்ற      37

வுளமா மருதநிலத் துற்று விடயக்
குளமாய வெல்லாங் குலைத்துத்-தளமாருங்      38

கண்ணாய நெய்தல் கலந்துமலக் கட்டுற்றா
ரண்ணாமே யெவ்விடனு மாய்ப்பெருகி-யெண்ணா      39

நிலமா விசும்பு நிறைந்தென்றும் வற்றா
நலமாமா னந்த நதியான்-புலமாரு      40

முப்பகுதி யாயவுயிர் முத்தி பெறவாழு
முப்பகுதி மாயை முழுநாடன்-செப்பரிய      41

மெய்யாய வன்பர் விடயக் கரவருறல்
செய்யா மனமாந் திருநகரான்-கொய்யா      42

மரைமல ராளி மனச்சாலை நின்றும்
விரையநால் வாயில் வெளிப்பட்-டுரைசிறந்து      43

மண்ணக மெல்லா மருவிப் பரந்தோடி
விண்ணக மெல்லாம் விராய்த்தாவி-யெண்ண       44

வொருநாட்டிற் காடா யுறைகுவதல் லாம
லொருநாட்டில் வெற்பா யுறைந்தும்-பெருநாட்டி       45

லேனையபோல் வெந்புறத்தி லேந்துவதல் லாதுதலை
மேனை யுறாது மிகத்தரித்துஞ் - சோனைக்       46

கடலுலக மீர்த்துக் கடுகி நடக்கு
முடலின் மறைப்பரிமா வுள்ளா - னடல்சேரு       47

மூலமல வேரென்னு மொய்கூர் தறிமுறித்துச்
சால மலமாந் தளையறுத்து - ஞாலமுத       48

லாறாறு தத்துவ மாய படைதுரந்து
மாறாத கன்ம மரஞ்சாய்த்துக் - கூறு      49

மனமாம் பரிமாவை மாய்த்துமத வேள்கைச்
சினமாங் கரும்பொடியச் சீறி - யினமாங்      50

குடருங் கொழுவுங் குருதியு மென்புந்
தொடரு நரம்பொடு தோலு - மிடையிடையே      51

வைத்த தடியும் வழும்பும் வெளித்தோற்ற
மொய்த்த கருந்தோலின் மூட்டொழியக் - கைத்து      52

மடமா தரைமிதித்து வைத்த சமயத்
தடமார் படுகுழிசா ராம - லிடமார்      53

குறையாத வானந்தக் கொள்ளைநீ ராடி
மறையா கமமா மணிக - ணிறைய      54

விருபாலுந் தூங்கி யிரட்ட வெழுந்து
வருபான்மை ஞானமத மாவா - னொருநான்கு      55

சொல்லாய பூவைச் சுவையாய தேனொழுகப்
புல்லா வழுவாய புல்லியெலா -- மில்லாமற்      56

கற்று நிரம்பாக் கவியாங் கவிகளெலா
முற்று வருத்தா வுரவடையா - முற்றுமுண      57

ரான்றோ ரெனச்சொ லளிக்கணங்கண் மொய்த்தளையச்
சான்றோர்சொ லன்பாந் தகுநாரால் - வான்றோயுஞ்      58

செந்நா வெனுங்கரத்தாற் சீர்தொடுத்து வாட்டமொன்று
மன்னா வகையமைபா மாலையான் - பன்னயமார்      59

சித்தாந்த சைவமொன்றே தேற்றமற் றுள்ளவெலாம்
பித்தாந்த மென்றெடுத்துப் பேசுதல்போ - லொத்தபல      60

வண்டாடு மாலையொடு மண்ணின்று வான்கிழித்துக்
கொண்டாடு காவிக் கொடியாளன்-றொண்டர்      61

கடியாத பேரொலியாய்க் கற்றோராற் சொல்லி
முடியாத நாத முரசான் - குடியாகுந்      62

தானமல ராளிமுன்னோர் தங்களைக்கொண் டைந்துதொழி
லானவைநன் காற்றுவிக்கு மாணையான்-ஞான      63

வரமணிய வாவினரே வாஞ்சித் திடுஞ்சுப்
பிரமணிய தேசிகனெம் பெம்மா-னுரமா      64

ரொருநமச்சி வாய னுயர்நமச்சி வாயன்
குருநமச்சி வாயனெங் கோமா-னருள்சான்      65

மகர மதியின் வயங்குமுத னாளி
னிகரிலபி டேகமுத னீடும்-புகரிலா      66

வாரா தனங்கொண் டருளிமறு நாட்பகலி
லேரா ரடியவரெண் ணில்லாரோ-டோருமமு      67

துண்டுளார் யோகசித்தி யுற்றுளார் ஞானசித்தி
கண்டுளா ராவரெனக் கைகுவித்து-மண்டிவரு      68

மான்றவடி யாரோ டறுசுவை யாரமுது
தோன்ற வினிதுகை தொட்டருளிச்-சான்றவரு      69

ணூலை யினிது நுனித்தமதி யார்க்குப்பின்
வோலை முழுதும் விரித்தருளி-மாலைவர      70

மாமுனிவர் தூய்மை மருவுநறு நீராட்டி
யேமுறுமெய் யொற்றாடை யிட்டதற்பின்-காமன்வலி      71

வென்றதிறங் காட்டி விளங்குறுகற் றோயாடை
யொன்ற வரையி லுடுத்தருளி-நன்றமையு      72

மாதனத்து மேவி யருகமரும் வட்டகையின்
மாதனத்தி னாளும் வயங்குவதாய்-மோதும்      73

பசுமலநீ றாக்கியுயர் பண்பே யருளப்
பசுமலநீ றாக்கியமை பண்பாய்-வசுவி      74

னடுத்தவையெல் லாம்புனித மாக்குதிரு வெண்ணீ
றெடுத்தவைய வங்குலவ வேற்றி-விடுத்தசுட      75

ரொன்பான் மணியு மொளிர்தருசிந் தாமணியும்
வன்பார் கவுத்துவ மாமணியு-மன்பி      76

லொருதிரண மாக்கு முருத்திராக் கங்கள்
பொருவில் சிரமுதலாப் பூண்டு-கருது      77

மிருவ ரழுக்கறுப்ப வேற்றசடா மோலி
யிருவரிரு கைகொடுப்ப தேற்றே-யொருவரினி      78

தெங்கண் மணிமோலி யென்னவொளிர் பாதுகைமற்
றங்கணெதிர் வைப்ப வவற்றிவர்ந்து-துங்க      79

முரசு முழவ முருடு திமிலை
பரசு தடாரி படகம்-விரசு      80

பலவு மெழுந்து பரம்பி முழங்க
நிலவு பிறவு நிகழக்-குலவு      81

திருவா வடுதுறைவாழ் செல்வன்வந்தா னெம்மு
ளொருவா வொருவன்வந்தா னுற்றார்-மருவு      82

பிறப்பு முழுதொழிக்கும் பேராளன் வந்தான்
சிறப்பருள் செம்மல்வந்தான் றிண்பா-ருறப்புகுந்த      83

துங்க மலிஞான சூரியன்வந் தானுயிரின்
பங்க மறுக்கும் பரன்வந்தா-னெங்கள்      84

குருசாமி வந்தான் குணக்குன்று வந்தா
னருண்ஞான மூர்த்திவந்தா னன்பர்-பெருவாழ்வாந்      85

தம்பிரான் வந்தான் றழைசுப் பிரமணிய
நம்பிரான் வந்தா னலமாரு-மெம்பிரான்      86

வந்தான்வந் தானென்று மாண்பார் திருச்சின்ன
நந்தா வொலியெழுப்பி நன்குவர-முந்தா      87

தரம்பெருக வாலவட்டந் தாலவட்டம் பற்றி
வரம்பெருக வோர்பான் மலிய-நிரம்பு      88

முழுமதிய மேலமர்வான் முந்திமுயன் றென்ன
வெழுகவிகை செய்யுநிழ லேய்ப்பத்-தழுவு      89

பெரும்புகழ்வெவ் வேறாய்ப் பெயர்ந்து பெயர்ந்து
விரும்பலுறத் துள்ளும் விதம்போ-லரும்பு      90

பவளக்காற் சாமரைகள் பற்பலவு மொய்த்துத்
திவளத் தலைபனிப்புச் செய்ய-விவளவெனாக்      91

கோணாத தண்டமொடு கோணலுறு தண்டமு
நாணாளு நீங்கா நலங்காட்டப்-பேணா      92

வலர்மகர தோரணங்க ளாயு மொலியல்
பலவு நெருங்கிப் பரம்பக்-குலவுதிற      93

லோதுவார் பல்லோ ரொருங்குதே வாரங்க
ளோதுவா ராய்த்தாள மொத்தலொடு-போதவெளி      94

வந்து மணிச்சிவிகை வாயோர் களங்கமிலா
விந்துநிறைந் தென்ன வெழுந்தருளி-முந்து      95

மனைதுறந்தார் செஞ்சடிலம் வைத்தாரஃ தின்றி
நினையு மழித்தலுற்ற நீரார்-புனையுமரைக்      96

கீளொடு கோவணத்தார் கேடில்கர பாத்திரத்தா
ராளொடுவாழ் வாமில் லறத்தமர்ந்தார்-நாளுஞ்      97

சரியை கிரியை தவயோக ஞானம்
விரியவனுட் டிக்கும் விருப்போர்-தெரிய      98

வுலகம் பழியா துறுவேடம் பூண்டா
ருலகம் பழிக்க வுவப்பா-ரிலகு      99

திரிபுண் டரத்தார் திகழ்கண் மணியார்
விரிதரவுத் தூளனமே மேயார்-பரியு      100

மரனடியார் தொண்டி னமைந்தா ரளவாச்
சுரர்புகழ்கோ யிற்பணியே சூழ்வார்-விரவு      101

மடியாருக் கன்னமுத லாதரித்து நல்கு
நெடியார் தியான நிறைந்தார்-கடியார்      102

மலர்தொடுப்பார் தீபம் வயக்குவார் மற்றும்
பலர்புகழுஞ் சாத்திரங்கள் பார்ப்பார்-நிலவுபொரு      103

ளாய்வார் வினவுவா ரங்கைகொட்டி நட்டமிட்டுத்
தோய்வாரா னந்தத் தொடுகடலில்-வாய்வார்      104

துதியா ரயன்முதலாச் சொல்லும் பிறரை
மதியா ரருளே மதிப்பார் - கதியா      105

ரிவர்மு னனைவோரு மேத்திக்கை கூப்பிக்
கவரடையா நெஞ்சங் கரைந்து - சிவசிவவென்      106

றார்ப்பாரோர் சில்லோ ரரகரவென் றானந்தம்
போர்ப்பாரோர் சில்லோர் புடைநெருங்க - வேர்ச்சிவிகை      107

செம்மையுறு காட்சிச் சிவிகை கொடுத்தடைந்தார்
தம்மை யியக்குவார் தாங்கிவர - வெம்மைக்      108

கதிர்பன் னிருகோடி காணவெளிப் பட்ட
முதிர்விற் பெருந்தீப மொய்ப்ப - வதிர்சிலம்பிற்       109

பொன்னங்கொம் பன்னார் புகுந்துநீ ராசனஞ்செய்
தன்னம் பெயர்ந்தாங் கயலொதுங்க - முன்னம்      110

விரைமலர்கள் சிந்தி விரைச்சாந்தம் வாரிப்
புரையறப்பெய் வாரும் பொலிய - வுரைசிறந்த      111

மெய்கண்டான் சந்ததிக்கு மேன்மேல் விளக்கமுறப்
பெய்கண்டா னாய பெருமானே - வையம்      112

புகழ வருங்குரவர் போரேறே ஞானந்
திகழ வவதரித்த தேவே - யிகழ்வில்       113

வரமணியே யெங்கள்பெரு வாழ்வே யருட்சுப்
பிரமணிய தேசிகனே பெட்பி-னுரமணிய      114

முன்னமே செய்தோ முயங்கு தவத்தையினி
யென்ன குறையுடையோ மென்பாருஞ்-சொன்னகதிர்      115

முன்னமிரு ணின்றாலு முற்று முணர்ந்தோய்நின்
முன்னமிரு ணில்லாது முற்றுமென்பார்-நன்னயமார்      116

சித்தாந்த சைவமன்றிச் சேரமற் றுள்ளவெல்லாம்
பித்தாந்த மேலும் பிறப்பென்பா-ரித்தரணி      117

பெற்றபே றுண்டோ பெருவானி னீபயில
லுற்றநா ளாதி யுரையென்பார்-கற்ற      118

குருமணிநீ யாரையுமாட் கொண்டு புரக்க
வருமணியோ வென்று வகுப்பார்-பெருகொளிசால்      119

விண்மணியே ஞான விளக்கே யடியேங்கள்
கண்மணியே யென்று கரைதருவா-ரெண்ணுமுழு      120

மாயப் பெருஞ்சாரு வாகன்முத லோருமரு
ளேயப் பொலிவா ரினியென்பார்-தோயும்      121

பகுதி யளவே பகரைந் திரவோர்
தகுதிவெண்ணீ றென்றணியச் சார்ந்தார்-மிகுதி      122

யுனியா மெடுத்திங் குரைப்பதெவ னெல்லா
மினிமாறில் சைவமே யென்பார்-நனிபுரியும்      123

வேலையொழிந் தான்பிரமன் வெய்ய நரகிலிடும்
வேலையொழிந் தானியமன் மேன்மேலுஞ்-சாலவருள்      124

வீசி யனைத்துயிர்க்கு மெய்ச்சுப் பிரமணிய
தேசிகன் செய்யுந் திறத்தென்பார்-மாசி      125

றிருவா வடுதுறையே திக்கனைத்தும் போற்றப்
பொருவாத தென்று புகல்வா-ரருள்சான்மா      126

சில்லா மணியேமற் றிச்சுப் பிரமணியீ
தல்லா துரைப்பதுள தாங்கொலென்பார்-வல்லபிரா      127

னெற்றிக்க ணீத்தமரு நேய மெவனென்பார்
பற்றிக் கரும்புகொடு பையவந்து-முற்றி      128

யொருவே ளுடற்றாமை யேர்ந்தென்பா ரம்மை
யிருவாள் விழியுமிரு கையாற்-பெருகப்      129

புதையாமை தேர்ந்தென்பார் பொங்குதலை மாலை
யதையே னொழித்ததென்பா ராவா-கதைமாலும்      130

பங்கயனு முன்போற் பரனாம் பரனாமென்
சங்கையடை யாமையாற் றானென்பார்-பொங்கு      131

மதியொழித்த தென்னென்பார் மாசிலா ருக்கே
கதியருளற் கென்று கரைவார்-பொதியு      132

மிதழிமணந் தோளிலுறா தென்னென்பார் செவ்வா
யதுகமழ்த லாலென் றறைவார்-முதுமானொன்      133

றோட்டிவிட்ட தென்னென்பா ரோட்டிவிடா னேலுயிர்கள்
வீட்டி லுறலெவ் விதமென்பா-ரீட்டமுறு      134

மாசடையா னென்னும் வழக்கில்லையென் பாரென்று
மாசடையா னென்னல் வழக்கென்பார்-பேசுமொரு      135

தோகையிடப் பாலனெனச் சொல்லாமென் பாரரைசூழ்
தோகையிடப் பாலனெனச் சொல்லுமென்பார்-வாகை      136

பரசுகைக்கொள் ளாத படியெவனென் பார்நம்
பரசுகைக்கொள் ளும்பரனே யென்பார்-விரசு      137

மருள்விடங்கண் டங்கழித்த வாறென்னோ வென்பா
ரருளமுதங் காணென் றறைவார்-தெருளு      138

மடிநிலந் தோய்குவதென் னாமென்பார் தோயா
விடினியமன் றண்டநம் மெய்யின்-முடியப்      139

படுமே யஃதுணர்ந்து பாரீரோ வென்பா
ரிடுமாறு சென்னிவைம்மி னென்பார்-வடுவரிய      140

னென்பதெவ னென்பார்மெய் யேகம ருள்ளிருந்
தன்பி னமுதுசெய்த தாலென்பா-ரின்பமிகு      141

மிந்தவிதம் யாரு மியம்பித் துதித்துவரப்
பந்த மகற்றும் பவனிவந்தா-னந்தப்      142

பொழுதொருநன் னெஞ்சமே போதுவா ரோடு
தொழுதுவரு மாறு துணிந்தே-யெழுதுமெழில்      143

வீதியிடைப் போந்தேன் விசயன் குனிசிலையான்
மோதி யிடுவதுள முன்னானா-யோதிப்      144

பனிமலர்கள் சாத்தியிரு பங்கயக்கை கூப்பி
முனிவுதவிர்ந் தேத்து முடியுங்-கனியு      145

நெருப்பைக் கரந்திருந்து நீறுகர வாது
விருப்பைச்செய் கின்ற விதத்தா-லொருப்படு      146

காரணத்தைக் காட்டாது காரியத்தைக் காட்டுமெனத்
தாரணியோ ரோதத் தகுநுதலும்-வார்புனற்பூ      147

வொன்றை மலர்த்துபுமற் றொன்றைக் குவித்தல்செயா
தென்று மலர்த்து மிருவிழியு-நன்றுமையாள்      148

கூந்தன் மணத்தினொடு கொள்ளா தடியரன்பாஞ்
சாந்த மணங்கொ டனிமூக்கும்-போந்தோ      149

ரியற்பகையார் பான்மனையை யீதியெமக் கென்ற
தயர்த்ததிரு வாயு மமையப்-பெயர்த்துமிழும்      150

வேடரெச்சி லூனடங்க மெல்லுந் திறந்தீர்ந்தும்
வாடலற்றுத் தோன்று மணிநகையுங்-கூடுபுர      151

மூன்று மவிய முகிழ்க்குந் திறமயர்த்துத்
தோன்றுஞ் சிரிப்புந் துணிபமைய-வான்றர      152

வொருத்தி பதித்த வுகிர்க்குறிகாட் டாது
திருத்தியக போலமுமான் சீறிப்-பொருத்தும்ர      153

பரவொலி யேலாது பற்றா வடியேம்
பரவொலியேற் குஞ்செவியும் பண்டே-விரவுறுமைர      154

வண்ண வடிவொழித்து வாட்டந் தவிர்த்தருளோர்
வண்ணவடி வோடமரு மாமுகமும்-பண்ணமையும்ர      155

பூணின்ப லொத்ததெனப் போற்றற் கிடங்கொடா
தேணி னமைந்த வெழிற்கழுத்து-நாணின்றிர      156

யேமாலை யென்ன வெலும்பணியா தெங்கள்வாய்ப்
பாமாலை சூடும் பணைத்தோளுங்-காமருமால்ர      157

கண்காணி னாணாக் கலங்கொள்விர லுண்மைநிலை
யெண்காணக் கொண்ட வெழிற்கரமு-மண்கார      158

ணொருகுறியு மில்லென் றிருகுறி யுற்று
வருதிறங்காட் டாதவகன் மார்பு-மொருவர்ர      159

மழவையரிந் தூட்டவெழும் வன்பசி தோற்றா
வழகின் வயிறு மமையப்-பழகதளுந்ர      160

திக்கும் பிணங்கத் திகழுங்கற் றோயாடை
நக்கு விளங்கு நலத்தரையும்-பக்குமலம்      161

விண்டொழியக் கூற்றுவன்போல் வெவ்வா ளரக்கன்போற்
றண்டுதல்செய் தோவாத் தளிரடியுங்-கண்டுநனி      162

யாசைப்பட் டேனெஞ்சே யந்தோவக் காரணத்தா
லாசைப்பட் டேனெனநா னாயினேன்-றேசுறமு      163

னன்னங்கா ணானைக்கண் டாரா மயக்கம்பூண்
டன் னங்கா ணாதவளே யாயினேன்-முன்னமொரு      164

கோலங்கா ணானைக் குறுகியிரு கைதொழுது
கோலங்கா ணாமை குற்றுகினேன்-சால      165

வளையாழி மாற்கீந்த வள்ளலைக் கண்டு
வளையாழி தோற்றுமனை வந்தேன்-விளையுமொரு      166

தாய்வெறுக்கப் பட்ட தகையானைக் கண்டடைந்து
தாய்வெறுக்கப் பட்ட தகையானே-னாயுந்      167

தனியானைக் கண்டு தனியாயி னேனென்
றுணிதீர நெஞ்சே சொலக்கேண்-முனியாமன்      168

முன்னு மவனை முயங்கும்வகை நீபுரிவாய்
மன்னுமுனைப் போன்றதுணை வாய்க்குமோ-பன்னுபல      169

வேதாக மங்கள் விதித்த விதியனைத்து
மேதாகு நீயியைவ தில்லையெனின்-மீதாரும்      170

யோக மிருநான்கு முன்னை வயப்படுத்தற்
காக முயலுவன வல்லவோ-போகமுறு<      171

தன்மைக்குஞ் செய்யுந் தவத்திற்குங் கற்றுணரு
நன்மைக்குங் கொள்ளுமொரு நட்பிற்கும்-வன்மைக்கு      172

மீகைக்கு மோர்த னியல்புணர்ந்து முத்திபுண
ரோகைக்கு நீயே யுறுதுணைகா-ணாகையுறு      173

மில்லறத்தா ரைத்துறவி லேற்றுவிப்பாய் மெய்த்துறவா
நல்லறத்தா ரைக்கீழ் நணுகுவிப்பாய்-சொல்லு      174

மறத்தைமற மாக வமைப்பாய் கொடிய
மறத்தையற மாக்குதற்கும் வல்லாய்-சிறப்பி      175

னொடுக்குதலே முத்தி யுனைப்பொறிவா யோட
விடுக்குதலே பந்தவினை மேலு-நடுக்குதலற்      176

றுன்னா லுயர்ந்தவரை யுன்னா விழிந்தவரை
யென்னா வளவிடுதற் கேயுமோ-பன்னாளு      177

மெம்மேனி யேனு மெடுத்தந்தி வானநிகர்
செம்மேனி யாளிவரச் செய்குவா-யம்மாநற்      178

றில்லைவா ழந்தணர்மா தேவ னொடுங்கலவ
வொல்லை யுயர்ந்ததுவு முண்மைநெறி-வல்லபெருங்      179

கோளாளர் நீலகண்டர் கோதை யொருத்திபுகல்
சூளா லிளமை துறந்ததுவும்-வாளா      180

ரியற்பகையார் தம்மனையை யீயேனென் னாது
மயற்பகையை நீத்துயர்ந்த வாறு-மயர்ப்பி      181

விளையான் குடிமாற ரெய்தி யிருளின்
முளைவாரி யன்னமிட்ட மொய்ம்புங் - கிளையோ      182

டமர்மெய்ப் பொருளா ரடாதந்தோ தத்தா
நமரென் றிடைவிலக்கு நண்புஞ் - சமர்செய்விறன்      183

மிண்ட ரடியாரை மேவாது போகியவன்
றொண்டர்புறம் பென்னச் சொலுந்துணிபு - மண்டர்பிரா      184

னேரேயோர் தட்டிலமர் நீதியார் பல்பொருளோ
டாராய வேறி யமர்ந்ததுவும் - பாரா      185

வெறிபத்தர் சீறி யிபமாதி மாய்த்து
மறிவற் றுயர்ந்தபெரு மாண்புங் - குறிபெற்ற      186

வேனாதி நாத ரிரும்பகைவ னெற்றியினீ
றானாமை கண்டுருகி யஞ்சியதும் - வானார்      187

கலைமலிந்த கண்ணப்பர் கண்ணிடந் தப்பு
நிலைமலிந்து பெற்ற நிலையு - முலைவில்      188

கலையர்மனை மங்கலப்பொன் கைக்கொடுநெற் கொள்ளார்
மலைவி றுணிபுற்ற மாண்பு - நிலைவளங்கூர்      189

கஞ்சாறர் மாவிரதர் கையின் மகள்கூந்த
லெஞ்சா தரிந்தெடுத் தீந்ததுவும் - வஞ்சவரி      190

வாள்கொண்டு தாயனார் வண்கழுத்து வேறாக்குங்
கோள்கொண்டு நின்ற குணச்செயலுந் - தாள்கொண்ட       191

வானாயர் கொன்றை யணைந்துருகி யஞ்செழுத்துந்
தானாய வோசைசெவி சார்த்தியது - மானாத      192

சீர்த்திபெறு மூன்றே சிறப்பத் தழீஇக்கொண்டு
மூர்த்தியுல காண்ட முறைமையு - மார்த்தி      193

முருகர்திரு மாலையான் முன்னோ னருளுக்
கருகரா யுற்ற வறனும் -பெருகிப்      194

பரவுருத்தி ரப்பேர்ப் பசுபதியார் நீரில்
விரவுதவஞ் செய்த விதமு - முரவிற்      195

றிருநாளைப் போவார் திருத்தில்லை மன்றுள்
வருநாட்போய்ச் சேவித்த வாறு - மருவு      196

திருக்குறிப்புத் தொண்டர் சிலாவணத்திற் சென்னி
விருப்பறமோ துற்ற விதமுங் - கருப்பறிக்குந்      197

தண்டீசர் தந்தையிரு தாடுணிய வீசுமழுக்
கொண்டீசர் சார்பிற் குறுகியது - மண்டர்புகழ்      198

நாவரசு நீற்றறையு ணண்ணியிருந் தாலமுண்டு
மேவுகட னீந்திய வித்தகமும் - பாவு      199

குலச்சிறையார் யாரையுங்கை கூப்பிப் பணியு
நலச்சிறைசார் புற்றசிவ நண்பும் - வலத்த      200

மிழலைக் குறும்பர் வியப்புறுமெண் சித்தி
யழகிற் பயின்ற வடைவுங் - குழகமைந்த      201

மாதுருவ நீத்து வருகாரைக் காலம்மை
பேதுருவங் கொண்ட பெருங்கோளுந் - தீதுதீ      202

ரப்பூதி யன்ப ரரசரடிக் கன்புசெய்து
செப்பூதி யங்கவர்ந்த சீர்மையுந் - தப்பாத      203

நீலநக்கர் தம்மனையை நீத்திட் டரனருள்பெற்
றேலவழைத் தின்புற் றிருந்ததுவுஞ் - சாலநமி      204

நந்தி யடிக ணகுகுளத்து நீர்மொண்டு
முந்தி விளக்கெரித்த மொய்வலியுஞ் - சந்த      205

வருண்ஞான சம்பந்த ரங்கமா தாகத்
தெருண்ஞான வாய்மலர்ந்த சீரும் - பொருவில்கவிக்      206

காமர் வயிற்றிற் கருவி கொடுகுத்தி
யேமவருள் பெற்ற விருந்திறனும் - பாமருவு      207

மூல ருடம்பொழிய மூவா யிரவருடங்
கோலவர சின்கீழ்க் குலாவியதுஞ் - சாலவுயர்      208

தண்டி யடிக டவாக்குளத்தி னீர்முழுகி
யண்டி விழிபெற் றமர்திறனுந் - தொண்டினியன்      209

மூர்க்கனார் சூது முயன்றாடி மெய்யடியார்
யார்க்கு முவகை யருண்மாண்பும் - பார்க்குளுயர்      210

சோமாசி மாறர்வன் றொண்டர்க்கே யாளாகித்
தாமாறி லின்பந் ததைந்ததுவும் - போமாறொன்      211

றில்லா சாக்கியனா ரெண்ணியெண்ணி நாடோறுங்
கல்லா லெறிந்து களித்ததுவும் - வல்ல      212

சிறப்புலியா ரன்புடையார்ச் சேர்ந்துபணிந் தேத்தி
மறப்பிலமு தூட்டும் வகையு - மறப்பான்மை      213

விள்ளாச் சிறுத்தொண்டர் வேண்டு மகவரிந்து
தள்ளாக் கறிசமைத்த தன்மையு - மெள்ளா      214

வருளிற் கழறிற் றறிவார்மா வூர்ந்து
தெருளிற் கயிலைசென்ற சீரு - மருளில்      215

கணநாத ரன்பிற் கரிசில்பணி யாற்றிக்
கணநாத ராய்ப்பொலிந்த கற்பும் - புணர்பெருமைக்      216

கூற்றுவனார் மோலிய்யெனக் கொய்மலர்த்தாள் கூற்றினுக்கோர்
கூற்றுவனார் சூட்டக் குலவியதுந் - தேற்றுபுகழ்ச்      217

சோழர் சடிலமுடி தோன்றக்கண் டாரழலி
னாழங் குளிர வழுந்தியதும்- வாழுநர      218

சிங்க முனையரையர் சேரவிகழ்ந் தாற்கிரட்டித்
தங்க மளித்த தவாப்புகழுந் - துங்கவதி      219

பத்தர் வறுமை பரந்தகா லத்துமொரு
மித்தங் கொருமீன் விடுத்ததுவு - மொத்தகலிக்      220

கம்ப ரடிமை கலந்தடிய ரோடுவர
நம்புமனை கைதடிந்த நன்மையும் - வம்பில்      221

கலியர் விளக்கெரிக்குங் காட்சி குறையா
தொலிமிடற்று வாள்பூட் டுரவும் - வலியதிறற்      222

சத்தியா ரீசர்கழல் சார்ந்தார் தமையிகழும்
புத்தியார் நாவரிதல் போற்றியது - மெத்திசையுங்      223

கண்டேத்து மையடிகள் காடவர்கோன் வெண்பாவைக்
கொண்டேத்து மேன்மை குலவியதும் - பண்டுகணம்      224

புல்லர் விளக்கிட்டுப் போற்றுதற்கு முட்டுவர
நல்ல முடிகொளுத்து நன்மையுஞ் - சொல்லவரு      225

காரியா ரெங்குங் கவிபாடி யண்ணலருள்
வாரியா ரப்பெற்ற வன்மையு - மூரி      226

நெடுமாறர் நீறணிந்து நெல்வேலி வென்று
தடுமா றிலாதிருந்த சார்பும் - விடுமாறில்      227

வாயிலார் தூய மனக்கோயிற் பூசித்துத்
தாயிலார் பாதநிழல் சார்ந்ததுவு - மேயும்      228

முனையடுவார் மாற்றார் முனையடுசெம் பொன்னால்
வினையடுவா ராய விதமும் - வனைகழற்      229

சிங்கர் மனைவி திருமலர்கை தொட்டதென்று
பங்க மறத்தடிந்த பான்மையுந் - துங்க      230

விடங்கழியார் சோரரென வெய்தினார் தம்மைத்
திடங்கழியா தோர்ந்துவிட்ட சீரு - மடங்காச்      231

செருத்துணையா ரோர்மன்னர் தேவியார் மூக்கின்
பொருத்துணையா தீர்ந்த புகழுந் - திருத்து      232

புகழ்த்துணையா ரென்பார் புனித னருள
நிகழ்த்துமொவ்வோர் காசுபெற்ற நீரு - மிகழ்ச்சிதவிர்      233

கோட்புலியார் பாலுண் குழவுங்கூ டாதென்று
வாட்புலியார்க் கீந்த வளத்திறனும் - வேட்குமொரு      234

பூசலார் மிக்க பொருடேடி யாலயஞ்செய்
தேசலா ராதிருந்த வின்றிறனு - மாசகலு      235

நீற்றின் பெருமை நினைமங்கை யர்க்கரசி
போற்றி யமைந்த புகழ்ப்பேறுஞ் - சாற்றரிய      236

நேசனா ரன்பர்பா னேசனார் கோவணந்தந்
தீசனார் பேரருண்மிக் கெய்தியதும் - பாசமகல்      237

செங்கட்சோ ழப்பெருமான் செம்பொற் றளிபலசெய்
தங்கட்டீ ராவன் பமைந்ததுவுந் - துங்கத்      238

திருநீல கண்டர் செழும்பலகை யேற
வொருநீல கண்ட ருவப்பும் - பொருவில்      239

சடையரிசை ஞானியார் தாவாப் பெரும்பே
றடைய வமைந்த வருளும் - விடையுடையா      240

ராணைமேற் றாங்கி யருணாவ லூரர்வெள்ளைக்
கோணை மதமாமேற் கொண்டதுவும் - வீணை      241

யுறாநெஞ்சே மற்றனைத்து முன்னாலே யன்றோ
மறாநின்சீர் யாவர் வகுப்பார் - வெறாதவருட்      242

டாயே யணையாய் தவறுறுமோ நங்கரும
நீயேதூ தாக நிகழுங்கான் - மாயமன்றே      243

முன்ன முயன்று முடிகா ணரிதாய
வன்ன முகமுன் னணையுமோ - முன்னமொரு      244

பச்சை மயிலையொரு பாலடக்கி பாங்கரின்றோர்
பச்சைமயில் சென்றாற் பயன்படுமோ - வச்சை      245

மதனைச் சுமத்தலினால் வாகையிலாக் கிள்ளை
யிதனைச் செயற்குவலி யாதே - சுதமகல      246

வன்றுசடைக் காட்டி லடங்கிக் கிடக்குமுகி
லின்று புரிவ தெதுகண்டாய் - துன்றுபொருட்      247

பாவை யடியர் பகரவேற் குஞ்செவிகள்
பூவை குழறுமொழி போற்றுமோ - பாவையெனுந்       248

தோழி யுரிமை துணிந்தனுப்பி னாற்றிருமுன்
வாழி யடைய வலியளோ - பாழிமதன்      249

சின்னமா யெங்குந் திரிந்துகூ வுங்குயிலம்
முன்னவன்பாற் சேறன் முடியாதே-மன்னு      250

மரவா பரணனென்பா ரம்மொழிகேட் டங்கு
விரவாதே தென்றல் விடுத்தா-லுரவாரு      251

முன்னைப்போல் வேறுதுணை யுண்டோ குரவர்பிரான்
றன்னைப்போல் வேறொருவர் தாமுளரோ-வன்னை      252

யனைய குரவர்பிரா னான்ற மரபு
நினைய வகுத்துரைப்ப னீகேள் - புனையவரு      253

காமர் கயிலையிற்சீ கண்ட வுருத்திரன்பா
லேமவருள் பெற்றநந்தி யெம்பெருமான் - றோமில்      254

வழியே வருசனற்கு மார முனிவர்
பழியேது மில்லாத பண்பிற் - கொழியருள்சால்      255

சத்திய ஞான தரிசனிகள் யாவோருந்
துத்தியஞ் செய்பரஞ் சோதியார் - நித்தியமார்      256

மெய்கண்ட தேவர் விளங்குமரு ணந்தியார்
பொய்கண்ட யாரும் புணரருஞ்சீர் - மொய்கடந்      257

தைவாழ் மறைஞான சம்பந்தர் தாளின்மதி
கைவா ழுமாபதியார் காட்சிமிகு - செய்ய      258

வருணமச்சி வாய ரமைசித்த ராய
கருளில் சிவப்பிர காசர் - தெருள்செய்      259

குருநமச்சி வாயர் குலவுமறை ஞானர்
திருவம் பலவாண தேவர் - மருவு      260

முருத்திர கோடியா ரொப்பில்வே லப்பர்
திருத்தி யினிதருளச் செய்து - பொருத்து      261

மிருகுமர சாமிகண்மா சில்லா மணியா
ரருமை யிராமலிங்க ரன்பார் - பெருமையிரு      262

வேலப்ப ரென்று மிளிர்திருச்சிற் றம்பலவர்
பாலக்க ணில்லம் பலவாணர் - சால      263

வருள்சுப் பிரமணிய ரம்பல வாணர்
தெருள்சுப் பிரமணிய தேவர் - பொருள்சான்       264

மரபு நிலையிதுவால் வார்த்தைநீ பேசப்
பரவு சமயம் பகர்வேன் - விரவுநெஞ்சே       265

பூதநான் கின்பம் புரிகுழலார் போகமெனுங்
கோதவுல காய்தரைக்கூடாதே - யேதமிகு       266

கந்தமைந்துங் கெட்டாற் கனமுத்தி யென்றுழலும்
பந்தப் பவுத்தர்முகம் பாராதே - முந்தத்      267

தலைபறித்துப் பாயுடுத்தித் தாந்தவமே பேசிக்
கொலைசெ யமணரைக்கூ டாதே - யலைபுரியுங்       268

கள்ளைக் குடித்துக் களித்துழலும் வாமமதக்
கொள்ளைச் செருக்கருரை கொள்ளாதே - தள்ளாக்      269

கருமமன்றி வேறு கருத்தனிலை யென்று
தெருமருவார் கூட்டஞ்சே ராதே - பொருவினெஞ்சே      270

நின்னையணு வென்று நியாயம் புகன்றுழல்வான்
றன்னை யொருஞான்றுஞ் சாராதே - சொன்ன      271

பகவனுக் குண்டு பரிணாம மென்னுந்
தகவிலைந்தி ராவினர்ச்சா ராதே - யிகவரிய      272

முத்திநிலை யான்மா முதல்வனோ டொக்குமெனும்
புத்தி படைத்தவர்பாற் போகாதே - மெத்துமொளிப்      273

பாலவிழி யாற்குப் பரிணாமஞ் சொற்றுழலு
மாலமைந்தார் கூட்ட மருவாதே- ஞாலமிசைத்      274

தாம்பிரம மாகாமை தஞ்செயலி னாலுணரார்
நாம்பிரம மென்பாரை நாடாதே - யோம்பு      275

திருவா வடுதுறையைச் சேர்ந்து வளங்க
ளொருவாத் திருவீதி யுற்றுப் - பொருவாத      276

தென்முகப்பின் வாயில்வழிச் சென்றுகொலு மண்டபத்தின்
பொன்முகப்பி னுள்ளே புகலுற்று - நன்முகத்திற்      277

சாத்திரங்க ளோதித் தனியமர்வார் சிந்திப்பா
ரேத்திரங்கும் வண்ண மெடுத்திசைப்பார் - பாத்துச்      278

சடைகாய வைத்துத் தனியமர்வா ரன்னோர்
புடையாரை யும்வணங்கிப் போற்றி-விடையா      279

நலமா ரதிகார நாடுதிருச் சிற்றம்
பலமா முனியைப் பணிந்து - பலமியாவுஞ்      280

சேர்தரவுள் ளாற்போய்த் திருமாளி கைத்தேவர்
வார்கழல் போற்றி வணங்கியே - யோருங்      281

குரவர்பிரான் மூல குருநமச்சி வாயன்
பரவுகழல் போற்றிப் பணிந்து - விரவு       282

மிரண்டா மொடுக்க மெனப்புகல்பொற் கோயி
லரண்டா னெனவமரு வானைத் - திரண்ட      283

கலைஞான வாழ்வைக் கருதுவார் பேற்றைத்
தொலையாப் புலவர்குழாஞ் சூழ-வுலையா      284

வினாவிடை பேசி வியப்புற் றமரு
மனாதியுரு வாய வமுதை-யினாதகுண      286

மெல்லாரு நீங்க வினிதுபோ தித்தமரு
நல்லா தரவு நயப்பானைச்-சொல்லு      286

மொருநமச்சி வாயனென வோதப் பொலிந்து
வருநமச்சி வாயனடி வாழ்த்திப்-பொருவாக்      287

குருசாமி கோயில்வலங் கொண்டுபடி யேறிக்
குருசாமி பூசைமுனங் கூடி-யுருகாமெய்      288

யன்பின் வணங்கி யடியா ரமுதுகொள
வன்பி னமர்கோயில் வந்தித்தே-யின்ப      289

விதமார் முதலொடுக்க மென்றிசைபொற் கோயிற்
புதவொர்பான் மெல்லப் புகுந்து-கதமோவி      290

யாங்குநிற்பார் தம்மை யடுத்துச் சமயம்வினாய்ப்
பாங்குபெற வுள்ளாற் பயப்புகுந்து-தேங்குதிரு      291

முன்னஞ்சே வித்து முனிவர்முத லோர்போற்ற
நன்னர்நீ றள்ளியள்ளி நல்கியம-ரன்ன      292

பொழுதுரையா தேபல் புலவர்கவி பாடும்
பொழுது முரையாதே போற்றி-யெழுதுமடல்      293

வாசித்து நிற்பாரை மானிக்கு மப்பொழுது
நேசிக்குந் தன்மை நிறைந்தாராய்ப்-பூசிக்குந்      294

தொண்ட ருவக்கச் சுருதிப் பொருள்புகறல்
கொண்ட சமயத்துங் கூறாதே-மண்டவரு      295

மன்னர் முதலோர் வணங்க வவர்க்குவப்பு
நன்னரியற் றும்பொழுது நாடாதே-சொன்ன      296

மறையோர் பலரிரக்கும் வார்த்தைசெவி யேற்றுக்
குறைதவிர்க்கும் போதினுங்கூ றாதே-மறைசொல்      297

சிதம்பரமுன் னாய திருக்கோயிற் கெல்லாம்
பதம்பரவு நித்தியமுற் பண்பி-னிதம்பரவ      298

நன்றுவிசா ரித்து நயவாக் குறைதவிர்த்துத்
துன்று பொழுதுமிதைச் சொல்லாதே-சென்று      299

பணிசிறா ரைக்கற்கும் பாடம் வினாவத்
துணியுங்கா லத்துஞ்சொல் லாதே-வணிதருமா      300

னந்தக் களிப்பா னகச்சிலர்வந் தேத்தெடுக்கு
மந்தப் பொழுது மறையாதே - சந்த      301

வுவளகத்து மேவு மொருசமய நோக்கித்
திவளநெஞ்சே நீகூடச் சென்று - தவளப்      302

பொடியணியு மேனியெங்கள் பூரணன்பொற் றாளிற்
படிமிசை வீழ்ந்து பணிந்து - நெடியகுணக்      303

குன்றேமெய்ஞ் ஞானக் கொழுந்தே யருட்கடலே
நன்றே யுயிர்க்கருளு நாயகமே - யன்றே      304

யடுத்தமல பந்த மகற்றவுருக் கொண்டு
மடுத்த பெருங்கருணை வாழ்வே - படுத்தமைந்த      305

மைம்மாறு சிந்தை வயங்கு மடியார்பாற்
கைம்மாறு வேண்டாத கற்பகமே - பொய்ம்மாறெம்      306

பேறேயா னந்தப் பெருக்கேஞா னக்கருப்பஞ்
சாறேமெய் யன்பர் தவப்பயனே - நாறுமருட்      307

சிந்தா மணியே செழுங்காம தேனுவே
சந்தாபந் தீர்க்குந் தனிச்சுடரே - நந்தா      308

வரமணியே கோமுத்தி வாழ்வே யருட்சுப்
பிரமணிய தேசிகப்பெம் மானே - பரவு      309

குருநமச்சி வாயவென்று கொண்டாடி யேத்திப்
பெருகருளுண் டாகநனி பேசி - யொருவரிய      310

பாலை யுணர்த்திப் பசியநறுஞ் செங்கழுநீர்
மாலை கொடுவிரைந்து வா.      311

ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் நெஞ்சுவிடுதூது முற்றிற்று.
------------
தனிப்பாடல்கள்

நேரிசை வெண்பா
3324
கண்ணான் மதனைக் கடிந்ததற்கேற் பப்புரப்பாற்
பெண்ணா ளுறாச்சுப் பிரமணிய - வண்ணால்
திருவா வடுதுறையாய் சிற்றடியே னின்ப
மருவா வடுமாற வை.       1

3325
விருத்தம்
மாமேவு புகழ்த்திருவா வடுதுறைச்சுப் பிரமணிய வள்ள லாய,
தூமேவு குரவன்பேர் சொற்றவுட னென்பிறப்புத் தொலைந்ததம்மா,
பாமேவு மிதுகண்டும் பிறப்பொழிப்பா னிவனென்று பலருஞ் சொல்வார்,
தேமேவு நலந்தெரியென் வாயினையே புகழாத செய்கை யென்னே.       2

3326
உரவுபொலி மறைமுடியாஞ் சிவக்கொழுந்தைப் பரானந்தத் துவாவை நாளுங்,
கரவுதவி ரன்பருளத் தகலாம லமுதூற்றுங் கருணை வாழ்வைப்,
புரவுமலி மெய்ஞ்ஞான வாரிதியைத் துறவரசைப் பொருவி லாத,
பரவுபுகழ்த் துறைசையிற்சுப் பிரமணிய குருமணியைப் பரவி வாழ்வாம்.       3

3327
செல்லார்க்கும் பெருமுழக்க மண்முழக்க மெனமேற் போய்த் திகழ்மா டத்தாற்,
சொல்லார்க்குங் கழனிகளாற் றொலையாத வளங்காட்டுந் துறைசை மேவிக்,
கல்லார்க்கு மல்லார்க்கும் வல்லார்க்கும் வல்லார்க்குங் கணக்கி லாமற்,
றெல்லார்க்கு மெய்ப்பில்வைப்பாஞ் சுப்பிரம ணியகுரவ னிருதாள் போற்றி.       4

3328
தேடுக்கயி லாயபரம் பரைத்துறைசை மேயநமச் சிவாயன்றன்னைக்,
கூடுதன்முன் னுள்ளபதி னால்வருமுற் றோன்றலெனக் கொண்டா ரவ்வா,
றூடுதவிர் தரக்கொண்டும் பிற்றோன்ற லெனவுங் கொண் டுவக்குங் கோமான்,
நீடுபெரும் புகழமைசுப் பிரமணிய குரு மணியை நினைந்து வாழ்வாம்.       5

3329
ஒப்புயர்வில் லவன்சிவன்மூன் றும்முடைமை யாலிர ண்டு மொன்று மேற்றார்,
தப்பறத்தாழ்ந் தவரெனறேர்ந் தனந்திருவா வடுதுறைநற் றலத்துள் வார்தம்,
வைப்பனைய சுப்பிரம ணியகுரவன் றன்பெயரை வகித்து ளாரை,
யெப்படியும் விலக்கலின்மற்றிவன்மூன்று மிலனென்றே யியம்பு வோமே.       6

3330
திருமணியை நிறத்தமைத்த நீன்மணிமெய்ம் மால்பிரமன் றேடிக் காணா,
வருமணியென் னையும்பொருளா வாண்ட சிந்தா மணியன்ப ரகத்தே மேய,
வொருமணியம் பலவாண சிரோமணிகண் மணியடிமை யுவந்தார் கண்ணுட்,
கருமணிவண் டுறைசையிற்சுப் பிர மணிய குருமணியைக் கருத்துள் வைப்பாம்.       7

3331
வஞ்சித்துறை
ஒப்பருந் துறைசைச், சுப்பிர மணிய
அற்புத குரவன், நற்பதந் துணையே.       8
------------

This file was last revised on 13 Nov. 2021
Feel free to send corrections to the webmaster (pmadurai AT gmail.com).