 
 
 
உறையூர் தே. பெரியசாமி பிள்ளை அருளிய
ஸ்ரீமெய்கண்டதேவர்  நான்மணிமாலை 
sri meikaNTatEvar nAnmaNimAlai of 
uRaiyUr periyacAmi piLLai
In tamil script, unicode/utf-8 format
 
Acknowledgements: 
Our Sincere thanks go to the Digital Library of India 
for providing us with scanned images version of the work online.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach. 
We thank the following persons in the preparation and proof-reading of the etext: 
S. Karthikeyan, Nalini Karthikeyan, Mithra,R. Navaneethakrishnan and Thamizhagazhvan. 
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. 
This file was put online first on 16 Sept. 2010 
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation 
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. 
Details of Project Madurai are available at the website 
 http://www.projectmadurai.org/ 
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
 
 
  
 உறையூர் தே.பெரியசாமி பிள்ளை அருளிய
ஸ்ரீமெய்கண்டதேவர்  நான்மணிமாலை. 
 சிவமயம்  : திருச்சிற்றம்பலம்.
Source: 
 ஸ்ரீஞானசம்பந்த குருப்யோநம:
  நொச்சியமென்றுவழங்கும் தேவாரவைப் புத்தலமாகிய 
எச்சிலிளமர்ப்பதி ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை.
இது உறையூர்ச் சைவசித்தாந்த சபைத்தனசாலாதிபரும்
கு.தா. லாலாப்பேட்டைச சித்தாந்த ஞானப்பிரகாச சபைத்தலைவரும்
ஆகிய மேற்படி உறையூர் தே.பெரியசாமி பிள்ளையால் இயற்றப்பெற்று,
பூவாளூர்  சைவசித்தாந்த சங்கத்தின் அங்கத்தினரும் இந்நூலாசிரியர் 
மாணாக்கருமாகிய  மேற்படி பூவாளூர் அ.ரா. அமிர்தஞ்செட்டியாரால்,
பதிப்பிக்கப்பெற்றது.
1919* 
------------------------
 உ:   சிவமயம்.
   இந்நூலின் பாயிரத்திலுள்ள நடுவெழுத்தலங்காரக் குறிப்புரை. 
1.  விண்ணின்பேர், தூலப்பேர், வெறியின்பேர், கடிப்பேர், மெல்லியர்  
காலணியின்பேர், சென்னியர் பேர், கட்பேர், என்னும் இவற்றின் 
பரியாய நாமங்கள் நபம், பஞ்சு, அசம், காவல், தண்டை, பாணர், 
பார்வை என்பன, இவற்றின் நடுவெழுத்துக்கள், பஞ்சவண்ணர், ஏனைய 
முதல் கடை எழுத்துக்கள், நேர்நேராகப் புணர்ந்துழி எய்தும் பதங்கள், 
நம்,       (இருள்)பசு, அம், கால், தடை, பார், பாவை என்பன.
2.  மாலுமி, வானரம், மாற்றார், மாமை, புன் காலி, என்பனவற்றின் 
பரியாய நாமங்கள், மீதான், மந்தி, எதிரி, காமர், பாதிரி, என்பன. 
இவற்றின் நடுவெழுத்துக்கள் காந்திமதி, ஏனைய முதல், கடை 
எழுத்துக்கள் நேர்நேராகப் புணர்ந்துழிவுண்டாகும் பதங்கள், 
மீன், மதி, வரி, கார், பாரி, என்பன.
ஆருத்ரா தரிசன மகா புண்ணிய காலத்திலே ஸ்ரீசிதம்பர க்ஷேத்திரத்தில்  
இந்நூலைப் பிரசுரிக்க வேண்டுமென்னும் பேரவாவால் விரைவிற் 
பதிப்பித்த படியால் இந்நூலிற் கூறப்பெறுஞ் சைவசித்தாந்த 
நுட்பங்களை விளக்கி ஓர் குறிப்புரை எழுத வெண்ணியிருந்த என் 
எண்ணந் தடையுற்ற தல்லாமற் சிலவிடங்களிற் பதிப்புப் பிழைகளும் 
நேர்ந்தன. அவற்றை யெல்லாமறிஞர்கள் திருத்திக்கொள்வார்களாக.
      (23)வது பக்கத்தில்       (24)வது செய்யுளில் விடுபட்ட      (20)வது வரி,
நூற்றிதழ்த் தாமரை மேற்றவன் பதமும்
       இங்ஙனம்
         அ. ரா. அமிர்தம்
.
                             உ
                          சிவமயம்.
                      திருச்சிற்றம்பலம்
   சிறப்புப்பாயிரங்கள். 
 திருக்கயிலாயபரம்பரை தாயுமானசுவாமிகள்மரபு எச்சிலிளமர் 
மெய்கண்டதேவராதீனத்திற்குரிய  சிவப்பிரகாசசுவாமிகள்  அருளியவை.
சொல்லாரும் பொன்னிவளஞ் சுரந்தாரும் புனனாட்டிற் சுடரி னோங்கி, 
வில்லாருங் கொடுமுடிகண்மேலாருந் தென்கயிலை விலங்க னாப்ப, 
ணெல்லாரு நன்மணிகளிழைத்தாரும் புரிசைநிறை யிளமர்மேவிக்,
கல்லாருங் கல்விநலங் கலந்தாருந் தெருளுமடங்கவின வாரும்.                  (1)
சீரோங்கு திருக்கயிலைத் திருநந்தி மரபுதித்ததேவ னெங்கோன், 
பாரோங்கு சந்தான பரம்பரைமெய் யடியர்தினம் பணிவிற் சாத்துந், 
தாரோங்குசேவடிக டழைத்தோங்கு மெய்கண்ட தலைவற்கன்போ, 
டேரோங்கு பாமாலை யியம்பினனான் மணிமாலை யேவ னென்னில்.           (2)
தருவுறையூ ரைவண்ணத் தகையுறையூர் வேதநெறித் தலைவர் கீர்த்தி, 
மருவுறையூ ராகமச்செம் மதியுறையூ ரெக்கலையு மதிக்கச் சாற்றக், 
குருவுறையூரென்புமருள் கொடையுறையூ ரெவ்வளமுங் குறையாதோங்குந், 
திருவுறையூர் முத்தியருட் டிரு வுறையூராமுறையூர் செப்புங் காலே.                                     (3)
இவ்வுறையூ ரினிதமரு மிருங்கொடையா னுயர்தேவ ராய னென்னுந், 
தெவ்வரிடர் களைவலத்தான் செய்தவத்தா லவதரித்த தீரன் மார, 
னொவ்விடா வுருநலத்தா னுயர்கல்விப் பெருவளத்தா னொழுக்கமன்போ, 
டெவ்வமிலா வாசார வியற்கையுளான் றவந்தானத் திறைவ னின் னும்.                                      (4)
கைவண்ணத் துடையானுங் கதிர்வண்ணத் தலரானுங் காணற் கெட்டா, 
வைவண்ணப் பெருந்தகையினருத்தயா மப்பூசை யன்பா லாற்று, 
முய்வண்ணத் திறமுடையா னுயர் சைவ சித்தாந்த வுணர்வேயோங்கச், 
செய்வண்ணம் பலசபைகள் சேர்த்தளிப்பானவன்பெரிய சாமிச் செம்மல்.                                    (5)
தொண்டனா மிவன்றனக்குத் தோழனா மெல்லோர்க்குந் தொல்பூவாளூ, 
ரண்டர்நா யகற்போற்று மமிர்தநா மத்தகையா னறிந்திந் நூலைப், 
பண்டி தபா லரும்படித்துப் பத்திநலம் பெறவெண்ணிப் பரிந்த லேகங்,
கொண்டெழுதி டாவெழுத்திற் குயிற்றியரங் கிடையுலவக்கொடுத்தான் மன்னோ.                                           (6)      
                         
-----------
 திருக்கயிலாய பரம்பரைதிருவாவடுதுறை ஆதீனத்து அடியார்
குழாங்களிலொருவராகிய  பரமசிவசுவாமிகள்  அருளியவை
விண்ணோங்கும் பொழிலுறந்தைப் பெரியசா மிக்கவிஞர் வேந்தர் வேந்துத், 
தண்ணோங்கு மெச்சிலிளமர்ப்பதிமெய் கண்டகுரு சரணப் போதுக், 
கெண்ணோங்கு மணிமாலை யெண்ணைந்து கவிம லரி னியற்றியிந்தான், 
மண்ணோங்கு மன்பதைக்குக் கண்ணோங்குமணியெனவே மதிக்க மா தோ.
அத்தகைய னறிவுறுத்தப் பல கலையு மாய்ந்து வருப*மாத ராம, 
வித்தகன்ற பூவாளூர் தனிலுறையுஞ்சித்தாந்த மேன்மை சான்ற, 
வுத்தமனெப் பெற்றவரும் நனிபகர வுளங்கொண்டே யோங்கந்* நூலைப்,
புத்தமுத மெனப்புலவர் கொண்டாட வாசயற்றப்புகழ்பெற் றாயீன.
-----------
 திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்து அடியார் 
குழாங்களிலொருவராகிய  சண்முகசுவாமிகள்  அருளியவை
மடல்விர்ந்து மதுவொழுகும் பொழிலுடுத்த விளச்மர்நகர் மடத்தின் மேவு, 
முடனிறைந்த வுயிரினிகர் சந்தான குருத்தலைவ னு** பாதத், 
திடன்மிகுந்த பயனளிக்கு மெனவொருநான் மணிமாலை யிசைத்தா னத்தைக் 
கடல்வருநல் லமுதென்கோ கண்டென்கோ வன்றியெதைக் கரைவ னம்மா                                  (1)
இத்தகைய நூலியம்ப விருத்தவஞ்செய் தானுறத்தை யெழுந்த சீமா 
னுத்தமநற் கல்வியறி வருள்தவந்தா னம்பலவு மொருங்கு வ**** சத்த
சத்தி னிலையுணர்ந்தோன் சந்தானா சிரியர்பதந் தலைமேற் கொள்ளுஞ் 
சுத்தனுயர்ந் தார்மதிக்கும் பெரியசா மிப்பெயர்கொள் சுகிர்தன் மாதோ                              (2)
---------
திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்து அடியார் 
குழாங்களிலொருவராகிய   சொக்கலிங்கசுவாமிகள் அருளியவை
திருக்கயி லாய பரம்பரை யுதித்த சிவப்பிர காச  மெய்க்குரவ 
னிருக்குமெய் கண்ட தேவனின் மடத்தி லெழுந்தமெய் கண்டமா மணிதாட 
கருக்கனி வொனிரு நான்மணி மாலை மணித்தன் னவனெவ னென்னின் 
மருக்கம ழுறத்தைச் சைவசித் தாந்த மாசபைத் தனபதி யின்னும்.           1
சீர்வளர் கமலச் செம்மலும் மகிழத் தேவரா யத்தவ னீன்றோன்? 
பார்வள ருறையூர் பஞ்சவண் ணேசப் பண்ணவ ரருத்தயா மத்தி 
னேர்வளர் தூயக் கட்டளை யினிதி னியற்றிடுந் தவநெறி பூண்டோன்,
கார்வளர் கொடையன் சைவ நூ லாதி கலையுணர் பெரியசாமியரோ.                 2
-----------
தில்லைவளாகம் சிவானந்த நிலய மடாலயத்திற்குரிய
ஆனந்த சண்முகசரணாலயசுவாமிகள் அருளியவை.
திருவி னான்றநற் சிவப்பிர காசமெய்க் கவர்க்குத்
தருவி னான்றவித் தகமருண் மெய்கண்ட தலைவ
னுருவினான்றவுள வொளியொளி யுதவிடு தாட்கம்
மருவி னான் றநான் மணியெனு மாலைசொற் றனனால்.             1
கரிய சாமியுங் காணுதற் கரியநற் பதமெய்த்
தெரிய சாமியின் றிருவடித் துணையகம் புனைதற்
குரிய சாமிபொன் னுறைதரு கோழியம் பதியிற்
பெரிய சாமியெப் பெரிய நம் போற்றுதா னலனே.                     2
பைகண்ட மாடனும் பாரதி கேள்வனும் பாடுகின்ற
மைகண்ட மூர்த்திதன் மாணரு வாலிந்த மாநிலத்தில்
மெய்கண்ட தேசிகன் மேல்மணிமாலை விளம்பலுற்றான்
கைகண்ட முக்கனி யோடுயர் சீனியுங் கைத் திடவே.                   3
-----------
ஞானசித்திப்பத்திராதிபரும் சைவபரசாரகருமாகிய யாழ்ப்பாணம் 
வண்ணார்பண்ணை வித்வான் சி. தாமோதரம்பிள்ளையவர்கள் இயற்றியவை.
பூமேவு திறத்தவனும் பொறிமேவு நிறத்தவனும் போற்றவென்றுந், 
தாமேவுந் திருவுறந்தை பைவண்ண நாதரிடந் தாங்கு மம்மைத், 
தேமேவு மன்பனருட் சைவநூற்றுறைபலநாந் தெரிக்கத் தேர்ந்தோன்,
நாமேவு கலைவாணி யருட்புதல்வன் றெருட்புலவர் நயக்கும் மன்னான்.
பெய்கண்ட கொண்டலென வெந்நாளுங் கொடுத்துதவும் பெரிய சாமி, 
பொய்கண்ட வறுமூவர் புறப்பொழிய வோரறுவர் போற்ற வோங்குஞ், 
செய்கண்ட வெச்சிலிள மர்ப்பதியில் வாழுமெங்க டேவனான,
மெய்கண்ட குரவனான் மணிமாலை யொன்றுசொற்றான் விளங்க மாதோ.
-------- 
 
 சித்தாந்தசரபம் அஷ்டாவதானம் 
பூவை. கலியாணசுந்தரமுதலியாரவர்கள்  இயற்றியவை 
கங்கையினுஞ் சிறந்தகொள் ளிடக்கரையி னொச்சியப்பேர் கவினுற் றோங்குங், 
                காகஞரு மெச்சிலிள மர்ப்பதிம டாலயத்திற் கருணை வாய்ந்த, 
எங்கள்குருமெய்கண்ட மணியின்சீ ரெவ்வெவரு மேத்தி டற்கே,
              யெழிற் றவசி காமணிநற் செந்தமிழ்சி காமணிபல்லியலுலாவும், 
மங்குரள ழெயிலுறையூர் வருபெரியசாமிநா வளர்கோ மான்றான். 
              மகிமையுறு சுத்தாத்து விதப்பொருள்க ளாங்காங்கு மலிந்து தோன்ற, 
தங்கியசொன் னயம்பொலியு நான்மணிமா லைப்பனுவற்றகவாச் சொற்றான், 
               தக்கமே தாவியாக ணனிவியந்து கொண்டாடிச் சாற்ற மாதோ.
இன்னநூ லிற்சைவ மணங்கமழ்வ தனைநோக்கியிவாபா னாளும், 
மன்னியவை திகசைவ சிந்தாந்த நூலுணர்ந்த மதிமிக் கோனாங், 
கன்னல்விளை பூவாளூரமிர்தவிற் பனவறிஞன் கனிவி னோடும், 
நன்னயவச் சினிலேற்றித் தமிழ்நாடு குதுகலிக்க நல்கி னானால்.
-------
திருப்புத்தூர்ப்புராணம், திருவுசாத்தானமென்னும், சூதவனபுராணமுதலிய 
பன்னூலாசிரியராகிய  காரைக்குடி சொக்கலிங்கசெட்டியாரவர்கள் 
இயற்றியவை.
பொன்னிறத்துக் கார்வணன்கட் போந்தவிரு சத்திமார் புகழ்வ லத்துந், 
தன்னிடத்து முறுமிளையசாமிக்கு மொருபெரிய சாமியாய, 
முன்னிபத்தொண்முகப்பொல்லா முதுகுரவச் சிவாகமங்கண் முழுதுந்தேற்றச், 
சின்மபத்துள் ளொளிவிளக்கித் திருவெண்ணைய யமர்ந்தருண்மெய் கண்ட தேவன்.
அன்னதனி வெண்ணெய்நக ரருட்கொலுவீற் றிருகருளு மதனைப் போல, 
இன்னிலஞ்செய் பெருந்தவத்தா லெச்சிலிளமர்ப்பதியி லெழுந்து நாளும், 
உன்னரிய திருக்கோல முழுவலன்பர்க் கெளிதருளியொளிரு மேன்மை, 
பன்னரிது பிறராலென் றொருகோட்டு மாதங்கப் பரம னான.
*ப்பெரிய சாமிதன தொண்பெயர்கொ ளொருபுனித னகத்து ணின்றே, 
செப்பரிய மெய்கண்ட சிவகுருசி காமணியின் றெய்வ வாய்மை, 
எப்பெரிய வருஞ்சிரங்கொண் டின்புறநான் மணிமாலை யெனுநூலோங்க, 
ஒப்பரிதா யருளினனே லுதன்பெருமைமற்றினியா ருரைக்க வல்லார்.
---------
௸. அவதானியார் மாணாக்கர் வண்ணக்களஞ்சியம்
 காஞ்சி நாகலிங்கமுதலியாரவர்கள்  இயற்றியது.
அத்துவித மெய்கண்ட பாலகுரு மணிமாட்சி யகிலத் தோங்க, 
சுத்தவை திகசைவ சித்தாந்த வுண்மையெலாந் துலங்கி நிற்கும், 
மெத்தியநான் மணிமாலைசொற்றிட்டான் செந்தமிழின் மேன்மை தேர்ந்த,
புத்திமா னுறையூர்நற் பெரியசா மிப்பெயர்கொள்புலவ ரேறே.
----------
மகாவித்வசிரோமணி சதாவதானம் ஸ்ரீமத் நா. கதிரைவேற் 
பிள்ளையவர்கள் பிரதமமாணாக்கரும் சென்னை வேதாகமோக்த 
சைவசித்தாந்த சபையின் கௌரவ காரியதரிசியுமாகிய புரசை
 மு. பாலசுந்தரநாயகரவர்கள்   இயற்றியவை.
கலைவலா ருள்ளக் கனிவொடு நவிலுங் காவிரி யுபநதி யென்னுங், 
குலையவிர் சோலைக் கொள்ளிடக் கரையிற் குலவுநொச் சியமெனக் கூறுந், 
தலையுறும் மெச்சி லிளமர்நற் பதியிற் றழைபெருங் கோயிலினாளும், 
நிலைபெற விளங்கு மெங்குரு மணியி னிலைமையா ருரைத்திட வல்லார்.
அத்தகை யண்ண லாயமெய் கண்ட தேவனா ரடிமல ரென்றும், 
பத்தியா யேற்றிப் பாருள வலவர் பண்புடன் காணவிஞ் ஞான்று, 
உத்தமச் செய்யு ளுருப்புகண் மிளிர வொருபெரு நான்மணி மாலை, 
வித்தகமோங்க விளம்பின னன்கு மேதினி வியந்திடவம்மா.
அன்னவன் யாவ னென்றரை வாருக் கவனியிலாருறை யூரில், 
முன்னவன் சீர்த்தி தனைமற வாததேவரா யப்பிள்ளை மொய்ம்பின், 
துன்னிசெய் தவத்தான் மகவெனத் தோன்றிச் சொல்லருங் கலைபலதேர்ந்தே, 
மன்னுபே ரன்பு கொண்டநம் பெரிய சாமியாம் புலவர்கோ மானே.
-----------
மகாவித்வான் ஸ்ரீமத் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்கள்
 
மாணாக்கரி லொருவரும் எச்சிலிளமர் மெய்கண்ட தேவராதீன 
வித்வானுமாகிய  பாலகுருகவிராயரவர்கள்   இயற்றியவை.
எங்குரவற் கினியனுறை யூர்ப்பெரிய சாமிவள்ளலிளமர் மேவு, 
நங்குரவன் மெய்கண்ட முனிவனான் மணிமாலை நவின்றா னான்ற, 
பொங்குபெரு மகிழ்ச்சியினா னாமதனைக் கைக்கொண்டே போற்றிப் போற்றிக்,
கங்குலபக லறவெழுந்த வின்புருவ மடைவமிங்குகணங்கொ ளீ*              1
புத்தமுதம் போலினிக்குஞ் சிவஞான போதமுனம் புகன்ற யெம்மா, 
னித்தமிழி னுளமகிழ்வ னெனவுரைக்கல் லியப்பன்றே விரத்தி னாதி, 
யுத்தமருங் கொளுவரன்றே வெனதுபிள்ளைத் தமிழினையு முவந்துகொண்ட, 
வத்தனவ னெத்தமிழுக் கன்புசெயான் முத்தமிழுக் கரசே யன்றோ.                                2
---------
மதுரைத்தமிழ்ச்சங்க வித்வானும் திரிசிரபுரம் எஸ்.பி.ஜி காலேஜ் 
தமிழ்த்தலைமைப் பண்டிதரும் ஆகிய 
 ந.மு. வேங்கடசாமிநாட்டாரவர்கள்  இயற்றியது.
அகவையொரு மூன்றதனிற் சிவஞான போதநூலகில முய்யத், 
தகவுடனே யருள்பெருமா னெச்சிலிள மர்ப்பதியிற் சாரும் நங்கள், 
பகலனைய மெய்கண்ட சற்குருஞான மணிமாலை பரிவிற் சொற்றான்
புகழ்பொருண்மிக் குடையனுறை யூர்ப்பெரிய சாமியெனும் புலவ ரேறே.
-----------
சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
ஸ்ரீஞானசம்பந்த குருப்யோ நம: -
 ஸ்ரீ மெய்கண்டதேவர் வைபவசங்கிரகம்    
 
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
திருவெண்காட்டுத் தேவாரம்
திருச்சிற்றம்பலம்.
கண்காட்டு நூதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டி லுறைவானும் விடைகாட்டுங் கொடியானே
சைவசமயாசாரியார் நால்வருள் ஆளுடைய வரசும் ஆளுடையநம்பியும் 
திருவவதாரஞ் செய்தருளியமகா மகிமைதங்கிய நடுநாட்டினகண 
திருததூங்கானை மாடமெனத் திருநாவுக்கரசு நாயனார் தமது 
தேவாரத் திருப்பதிகத்துட் கூறியருளிய திருப்பெண்ணாகட
க்ஷேத்திரத்திலே குருலிங்க சங்கம பத்தியிற் சிறந்த அச்சுதர்
களப்பாளரென்னும் ஒரு வேளாளகுலதிலகர் நெடுங்காலம் 
பிள்ளைப்பேறின்மையால் வருந்தித் தமது குலாசாரியாருக்கு 
விண்ணப்பஞ்செய்ய அவர் பெரிதும் ஆராய்ந்து திருநெறித்தமிழ் 
வேதமாகிய தேவாரத் திருவருட்பாத் திருமுறையிற் கயிறுசாத்திப்
பார்த்தருளினார். 
அங்ஙனம் பார்க்கவே திருஞான சம்பந்தமூர்த்தி 
நாயனார் திருவாய் மலர்ந்தருளிய "கண்காண்டு நூதலானும்" 
என்னும் முதற்றிருக் குறிப்பையுடைய திருவெண்காட்டுத் 
திருப்பதிகத் திலே இரண்டாந்திருப்பா சுரமாகிய
    பேயடையா பிரிவெயதும் பிள்ளையினோ டுவளநினை
    வாயினவே வரம்பெறுவரையுறவேண் டாவொன்றும்
    வேயனதோளுமைபங்கன வெண்காட்டு முக்குள நா
    தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே
 
என்னுந் திருப்பாடல் உதயமாகப் பெரிதுமுவந்து அதன் 
செம்பொருளை அச்சுதர்களப்பாளருக்கு விளக்கியருளினார்.
அதன் பின்பு அச்சுதர்களப்பாளர் திருவருளை வியந்து ஆசிரியப் 
பெருந்தகையாரிடத்தே விடைகொண்டு தமது கற்பிற்சிறந்த 
மனைவியாரோடு சுவேதாரணியமென்னும் திருவெண்காட்டுத் 
திருப்பதியையடைந்து அங்குள்ள சோமசூரியாக்கினி யென்னும் 
முக்குளத்தீர்த்தத்திலே விதிப்படி மூழ்கி சுவேதாரணியேசுரரையும் 
பிரமவித்தியா நாயகியாரையும் தரிசித்து வழிபடுவாராயினார். 
அங்ஙனம் வழிபடும் நாளிலே ஒருநாள் சுவேதாரணியேசுரர் அச்
சுதர்களப்பாளருக்குச் சொப்பனத்திலே தோன்றி "மைந்த நீ 
கவலையொழி நினக்கு இத்தமிழுலகமுய்யும் வண்ணம் நமது 
திருக்குமாரனாகிய திருஞானசம்பந்தனெனவே யாவருங் 
கருதும்படி திராவிடவேதச் செம்பொருளைத் தன்னகத்தடக்கிய 
சைவசித்தாந்த சாஸ்திரத்தை யருளிச்செய்து சைவ ஸ்தாபனஞ்
செய்யத்தக்க ஒரு புதல்வனைத் தருகிறோம் அவன் சந்தானாசாரியத் 
தலைமை யெய்திச் சிறந்து விளங்குவன்" எனத் திருவாய் 
மலர்ந்தருளித் தம்முருக்கரந்த
உடனே விழித்தெழுந்த அச்சுதக்களப்பாளர் பெருமகிழ்ச்சி கொண்டு
தமது மனைவியாருக்குத் தெரிவித்து இருவரும் முன்போலவே 
வழிபட்டுவரும் நாளில் நல்லசுபதினத்திலே பரசமய்த்தருக்கு 
நீங்கவும் சுத்தாத்துவித சைவசித்தாந்த ரகசியம் உலகமெங்கணு-
மோங்கவும் பன்னாடுகளிலும் தென்னாடே சிறக்கவும் ஒரு 
திருக்குமாரர் திருவவதாரஞ் செய்தருளினார். அதுகண்ட 
தந்தையார் ஆராமகிழ்ச்சியோடு மகப்பேறு விழவுகொண்டாடி 
தமது குலாச்சாரப்படி சாதகரும் முதலிய சடங்குகளைச் சிவாகமத்தில் 
விதித்தவாறே முடிப்பித்து உரிய பருவத்திலே சுவேதவனப் 
பெருமாள் என்னும் பிள்ளைத் திருநாமம்  தரித்துவழங்கி வருவாராயினர். 
  இங்ஙனமாக சுவேதனப் பெருமாள் பிறைமதிபோல வளர்ந்து 
வரு நாளிலே திருவெண்ணெய் நல்லூரின்கண் வசித்தருளும் 
அவர்தாயுடன் பிறந்தாராகிய காங்கேய பூபதி வேணவாவோடு 
அவரைத் தமது இல்தத்திற்கு எடுத்துக்கொண்டு சென்று பேரன்போடு
வளர்க்க வளர்ந்து இரண்டுவயதிற்றானே அத்திருவெண்ணெய் 
நல்லூர் ஆலயத்தின்கண் எழுந்தருளிய மூத்த நாயனாராகிய 
பொல்லாப்பிள்ளையார் பின்விளைவறிந்து வேதாகமாதிக் 
கலைகளைப் பயிற்றிவர மெய்யுணர் வினரா யெழுந்தருளியிருந்தன.
  இப்படி நிகழும் நாளிலே திருக்கயிலாய மலையிலே அருட்கல்லால 
நீழலிலே படிக ரூபமும் திருநேத்திரமும் உருத்திராக்ஷவடம் சின் 
முத்திரை அமுதகும்பம் சிவஞானபோத மிவைதரித்த சதுர்ப் புயங்களும் 
கொண்டெழுந்தருளிய முதற்குரவரான தக்ஷிணாபிமுக மூர்த்தியை 
முன்னொரு காலத்திலே தொழுது முன்னின்ற நந்தியெம்பெருமானுக்கு 
சிவபெருமானா திருவருள் சுரந்து தமது திருக்கரத்தி லமைந்துள்ள 
சர்வாகம முதன்மையாகியதும் இரௌரவாகமத்திலே எழுபத்து 
மூன்றாவதாகிய பாசமோசனப் படலத்துள்ளே அநுட்டுப்புச் சந்தசாக 
விளங்குவதுமாகிய பன்னிருசூத்திரத்தால் பொலியும் "சிவஞான 
போதம் என்னும் நூலை செவியறு வுறுத்தருளினார்.  
நந்தி பெருமானும் அது கேட்டதுணையானே  எல்லா ஐயமும் நீங்கி 
பெய்ப்பொருள் தெளிந்து பின்னர் அதனைத் தம்மாணாக்கர் 
பல்லோருள்ளுஞ் சிரந்த சனற்குமார முனிகட்குச் செவியறிவுறுத்-
தருளினார். அவர் தம்மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த சத்திய 
ஞானதரிசினிகளுக்குச் செவியறிவு றுத்தருளினார். அவர் தம் 
மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த பரஞ்சோதி மாமுனிவருக்குச் 
செவியறிவுறுத் தருளினார்.
    அப்பரஞ்சோதி மாமுனிவர் தென்மலயத்தமருங்குறு முனிவரைக் 
காணுமாறு திருக்கயிலையை நீங்கி காசி முதலிய க்ஷேத்திரங்களைத் 
தரிசித்துக்கொண்டு  ஆகாய கமன மார்க்கமாகச் செல்லுங்கால் 
திருவெண்ணெய்நல்லூரை அணுகலும் இவருக்குக் கமன சித்தித் 
தடைப்பட்டது; தடைப்படலும் கண்டு ஓர் அதிசயமிருப்ப 
தென்னையெனக் கீழிறங்கி நோக்குவராயினார்; நோக்குங்கால் 
அங்கே மணலிற்றிருக் கோயிலமைக்கச் சிவலிங்கந்தாபித்து, 
பூசை செய்து திருவிளையாட்டயரும் ஐந்து வயதுள்ள சுவேதவனப் 
பெருமாளைக் கண்டு வியந்து தமது ஞானதிருஷ்டியால் திருவருளை 
நோக்கிப் பார்க்குமளவில் சிவபெருமானார் திருவுள்ளக்குறிப்பை 
யுணர்ந்து அம்மெய்யன்புடைய சாமுசித்தருக்குத் திருவருணோக்கம் 
பாலித்து " மெய்கண்டதேவர்" எனத் தீக்ஷாபிதானமளித்துத் 
தமது குருமரபில் வரும் "சிவஞானபோதத்தை" உபதேசஞ் செய்தருளி
இதனை இவ்வுலகிலுள்ளார் உய்யும்வண்ணம் தமிழில் மொழிபெயர்த்து 
வார்த்திகப் பொழிப்புரையும் செய்வாயாக என்று திருவாய் 
மலர்ந்தருளிச் செல்வாராயினார்.
    பின்னர் அங்ஙனங் கேட்டருளிய அம்மழவுரு பெருந்தகையார் 
தமது வரவை யோர்ந்து ஆசிரியர் பணித்தவாறே அச் "சிவஞானபோதத்தை"
மொழிபெயர்த்து வார்த்திகப்பொழிப்புரையுஞ்செய்தருளி அதனைத் 
தம் மாணாக்கர் நாற்பத்தொன்பதின்மருக்குஞ் செவியறிவுறுத் தருளினார்*. 
அவரிற்றலைமை வாய்ந்தவரும் திருத்துறையூரில் ஆதி சைவர் குலத்திற்* 
றிருவவதாரஞ் செய்தருளியவரும் சகலாகம பண்டிதரென்னுங் 
காரணப்பெயர் வாய்ந்தவருமாகிய அருணந்திசிவாசாரியார் 
அதனைத் தம் மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்தவரும் திருக்கடந்தை
என்னும் திருமருதூரில் சாமவேதியர் மரபிலே பராசர மகாரிஷி 
கோத்திரத்திலே திருவவதாரஞ் செய்தருளியவருமாகிய மறைஞான 
சம்பந்த நாயனாருக்குச் செவியறிவுறுத்தருளினார்; அதனை அவர் 
தம்மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்தவரும் விராட் புருடனுக்கு 
இருதயத்தலமாகிய சிதம்பர க்ஷேத்திரத்தில் தில்லை வாழந்தணரில் 
ஒருவராய்த் திருவவதாரஞ் செய்தருளியவருமாகிய உமாபதி சிவாசாரியாருக்குச்
செவியறிவுறுத்தருளினார். மெய்கண்ட தேவராதிய இந்நால்வரும் 
சந்தானாசாரியர் என அடிப்* 
சான்றோரால வழங்கப்பெற்று வழிபாடு நடை பெற்றுவருகின்றது. 
இந்நால்வரும் இவ்வுலகின் கண் ஆங்காங்கு நடாத்தருளிய அற்புதத் 
திருவிளையாடல்களுக்களவில்லை. அவற்றை ஈண்டு விரிப்பிற் பெருகும். 
இவற்றை நன்குணர விரும்புவோர் மெய்கண்ட விஜயம் மெய்கண்ட 
வைபவதீபிகை உமாபதி சிவதிக்விஜயம் முதலிய வடமொழி 
கிரந்தங்களிலும் நந்திமர பட்டவணை மெய்கண்ட தேவலீலை 
சந்தானா சாரியார் புராணம் சந்தான குரவர் புராணசங்கிரகம் 
சூதவனபுராணம் முதலிய தென்மொழி நூல்களிலும் கண்டுணர்வாராக.
தண்பொழில்சூழ் சண்பையர்கோன் றமிழ் ஞானசம்பந்தன், 
விண்பொலிவெண் பிறைச் சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப், 
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார், 
மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.
திருச்சிற்றம்பலம்.
-------------
சிவமயம்.  :  திருச்சிற்றம்பலம்
        திருஞானசம்பந்த குருவே துணை.
    நொச்சியம் என்று வழங்கும் தேவார வைப்புத் தலமாகிய
எச்சிலிளமர்ப்பதி ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை.     
            காப்பு  
 ஸ்ரீ பொல்லாப்பிள்ளையார்
    பூமேவு பொழில்சுலவு மெச்சிலிள மர்ப்பதியிற்பொருந்த வோங்குந், 
தேமேவு சித்தாந்தத் தினகரனா மெய்கண்ட சிவத்தின் செய்ய, 
தூமேவு மலரடிக்கு நான்மணிமா லிகையொன்று சூட்டநாளு, 
மாமேவு மொருகோட்டுப் பொல்லாத பிள்ளைபத மனத்துட் கொள்வாம்.
 
   ஸ்ரீ மெய்கண்டதேவர்  பாயிரம்.  
          ஸ்ரீ பஞ்சவண்ணேசர்.
          நடுவெழுத்தலங்காரம்.
விண்ணினபேர் தூலப்பேர் வெறியின்பேர் கடிப்பேர் 
              மெல்லியர்கா லணியின்பேர் சென்னியர்பேர் கட்பேர், 
நண்ணியவிவ் வேழ்மொழியி னடுவெழுத் துப் பேரார் 
            நவிலுமற்றீ ரேழெழுத்தா னகுமோரேழ் பேரில், 
எண்ணியவீ றொப்பாளோ டிரண்டேறி வந்தே யிருமூன்றி 
            லொன்றகற்றி யெனக் கெழின் மூன்றாருந் 
தண்ணியநான் கினையருளத் தன்னமுமைந் தில்லார் 
             தாவில்புக ழுறையூரின் மேவுபரம் பொருளே.   
            ஸ்ரீ காந்திமதி அம்மை
             நடுவெழுத்தலங்காரம்.
மாலுமிவா னரமாற்றார் மாமைபுன் காலி வருமி
              வற்றி னடுவெழுத்தால் வயங்குதிருப்பேராள், 
எலூ மற்றைத் தசவெழுத்தைம் பதத்திலிடை யாடு 
              மிறைவர்பஞ்ச வண்ணருகே யியையுமெழி லைந்தாள்,
நாலுமொன்று  மிரண்டுமுள நடுங்கிவெளி யோட
                நனிவென்று விலங்குகுழ னயனமுக முடையாள்,
சேலுகளுந் தடம்பணைசூழ் திருவுறை யூ ருறையுந்
                  தேவிசிவ காமியவள் சீர்பரவு மனமே.
         ஸ்ரீ நிருத்த விநாயகர்.
திருத்தகுமா மறைமுடிவிற் றிகழ் தருசீர் மனுவாய
அருத்தமிகு பிரணவத்திற் கரியபரம் பொருளான,
மருத்தபொழிற் றிருவுறந்தை மாநகரி லமருமருள்,
நிருத்தகய முகவள்ள னிறைகழற்றா மரை தொழுவாம்.
          
 ஸ்ரீ சுப்பிரமணியர்.
தமிழ்மொழி தனக்கோர் தனிப்பெருங் குருவாய்த் தயங்குறு தகமையினாலுந் 
தமிழ்நலம் வேட்டுப் புலவர்கள் பலர்பாற் றகத்தொடர்ந் திட்டமையானும், 
தமிழ்மலர் கொடுதன் சரண்மலர்ப் போற்றுந் தமியனை விலகிடா தளிப்பான், 
தமிழ்மணங் கமழுந் திருவுறை யூரிற் சார்சர வணபவ குகனே.
           ஸ்ரீ சமயாசாரியர் முதலினோர்கள்.
திருஞானசம்பந்தர் திருநாவுகரையர் 
                திருநாவலூர்நம்பி திருவாதவூரர், 
மருவாரு மலர்த்தெரியற் றெருஞ்சேஞ்ஞ லூரர் 
                  வயங்குமருண் மெய்கண்டார் வளருமரு ணந்தி, 
குருவாரு மறைஞான சம்பந்தர் கொற்றங் 
                 குடியார்மற் றிவர்க்குப்பின் குலவினர்கண்மேலும், 
வருவாரென் றிவர்கண்மரு மலர்ப்பதங்கணாளு 
                 மறவாமல் வாழ்த்துகிற்பாம் பிறவாம லினியே.
பாயிரம் முற்றும்.
       நூல்.  
                 வெண்பா. 
சீர்பூத்த தெய்வத் திருவிளமர் மேவியமர்
ஏர்பூத்த மெய்கண்ட வீசனே --கார்பூத்த
மும்மலத்தா னொந்துனது முன்னின்ற நாயேனைச் 
செம்மலர்த்தா டோயவருள் செய்.                 (1)
                கலித்துறை.
செல்லார் பொழிலிள மாப்பதி மேவிய தெள்ளமுதை, 
வல்லார் பரவுறு மெய்கண்ட தேசிக மாமணீயைப், 
பொல்லா ருளத்துட் புகுதாத சோதியைப் போற்றுமின்காள், 
சொல்லார் கடற்புவி யுள்ளீர் பரகதி தோய்வதற்கே.          (2)
              விருத்தம்.
தோற்றமு மீறு முள்ளதன  பாலே கிடத்தலினென்றுனீ சொற்றத் 
தேற்றமார் மொழியின் செம்பொரு ளுணராச் சிதடர்தாந் தோற்றமீ றில்லா,
ஆற்றலார் கடவு ளின்றுகொ லென்ன வாசங்கை நிகழ்த்திமாழ் குவரே, 
ஏற்றமா ரெச்சி லிளமர்நற்பதிவா ழிணையிலா மெய்கண்ட சிவமே.           (3)
           ஆசிரியப்பா.
சிவமே முதலாச் செப்புமோ ராறும்
அனாதியே யென்னத் தனாதுபே ரருளால்
ஆரணமுதலா மேரண வழியால்
எம்மைத் தேற்றிய செம்மையார் செம்மல்
எச்சிலிளமர் மெச்சுறு பதியான்              5
பொய்கண் டகன்ற மெய்கண்டநாதன்
அவனிரு சரண்டொழு தடியேம்
பவமெனும் வன்பகை பாற்றுவ மின்னே.       (4)
வெண்பா.
இன்றே யிருந்த விருண்மலங்கண் மூன்றும்
அன்றே தொடர்ந்த செயலற்றே - நன்றேசார்
எச்சிலிள மாப்பதியி லேய்மெய்கண் டானடியை
உச்சியிற்கொண் டேத்த வுவந்து                 (5)
கலித்துறை
உவப்போ டுனதுயர் சித்தாந்த சைவத் தொழுகலின்றி,  
அவப்போ திழைக்கு மடியேற் கிரங்கி யருள்கிலையேற், 
பவப்போ ரொழிந்துன் பதமல ரெய்தலிப் பாவியென்றோ, 
தவப்பே றெனுமிள மர்ப்பதி சத்ய தரிசினியே.           (6)
விருத்தம்.
சரியைகிரி யாயோக ஞானமென நாளுஞ் சாற்று
                சதுர்ப் பாதமவை தகவேவொவ் வொன்றும் , 
விரியும்வகை நந்நான்காய்ப் பதினாறென் றாகு மெய்ந் 
                 நெறியை நன்குணர்ந்த மேலோர்க ளெல்லாம், 
உரிய நின தொண்சமுக முற்றுபணி யாற்றி ஒப்பரிய பர
                போக முறுவரிழி நாயேன், 
றிரியவல னலதுபணி செய்தறியே னெனையா 
                டிகழெச்சி லிளமரமர் திருமெய்கண் டவனே.        (7)
ஆசிரியப்பா.
கண்டதே காட்சி கொண்டதே கோலம்
உண்டதே போகமண்டலத் தன்றி
பின்றைநா ளுறுசதி யென்றொன் றுலதோ
என்றிறு மாகும் புன்றொழிற் சிலவர்
குழுவிற் சாரா தொழுகுறப் பணித்தும்            5
தத்துவ நியதி தாமே களைந்தே
ஒத்தவந் நிலையி லுறுமுயிர் தானே
பிரமமா மென்னச் சிரமமோ டோதும்
மாயாவாதப் பேயோர் தம்பால்
கட்புலந் தானும் பெட்பொடு படரா               10
விதமே யென்று மிதமென் றுரைத்தும்
காலமே தெய்வங் கருமமே கருத்தாச்
சத்தமே யிணையில் வத்தெனக் கிளைந்து
நாத்திகம் பேசி வாய்த்தழும் பேறியுந்
திரிவோ ருறவை மருவா தளித்தும்             15
கடல் கடை ஞான்று படர்தரவெழுந்த
ஆலவிடங்கண் டோலமென் றோடி
அருந்ததி யனைய பிருந்தையைப் பெட்டுக்
கரவொழுக் காக விரவிட வனையாள்
அக்குறிப் போர்ந்தே சிக்கெனத் தானே     20
பழிப்புறு மிவ்வுட லொழிக்குவ லென்று
தீயினை வளர்த்தி மாய்குறக் கண்ட
அத்தேத் துளமிகப் பித்தே றினனாய்ச்
சாம்பரில் வீழ்ந்து தேம்பித் திரிந்தே
தசமுகன் றனைய னிசைவுடன் வாளால்  25
மாயச் சனகியை யேயவே வெட்டப்
பார்த்து வெரீஇ வேர்த்தழு திரங்கி
இன்னும் பலவாப் பன்னுந் துயரொடு
பலப்பல பிறவி கலப்புற நாளும்
கொண்டே யுழிதரு விண்டே பரமென     30
ஐந்திரு ணூல்வழி வந்தோர் வீழும்
படுகுழி வீழாத் திடவறி வீந்தும்
இன்னோ ரன்ன புன்னெறி மாக்கள்
பின்னெவ ருளரோ வன்னவர் தங்கள்
முன்னரு நில்லா முதன்மை நல்கி        35
தானே வந்து தடுத்தாட் கொண்டு
சைவசித் தாந்த மெய்ந்நெறி வழங்கி
ஆனா வின்பத் தரும்பெறல் வாழ்விற்
செம்மாந் திருக்குந் திருவமின் றளித்தான்
பொல்லா ரருணெறி கல்லா வெற்கும்                  40
நொச்சியம் பதியின் முச்சகம் பரவ
மெய்கண்ட நாம மேவுங்
கைகண்ட வின்பக் கருணையங் கடலே.           (8)
ஸ்ரீ மெய்கண்ட தேவர்.
வெண்பா
கற்ற வறிவாலே காசினியி னின்னருளைப்
பெற்றவரைப் போலே பிதற்றுவேற்-குற்ற
இளமர்ப் பதிவாழு மெந்தையே மெய்கண்டா
தெளிய விரங்கியருள் செய்.                (9)
கலித்துறை.
செய்வான கருவி நிலஞ்செயல் காலநற் செய்பொருளோ, 
டெய்தா வருமிவை யாறு மொருவினை யேற்குமென்பார், 
மெய்யா னுறப்புரி நினவினைக் கென்செயன் மேவக் கொண்டாய், 
மைபார் பொழிலிள மர்ப்பதி மெய்கண்ட மாதவனே.         (10)
விருத்தம்.
தவமே புரிந்து னடிபேணு மன்பர் தமையே யடைந்து தமியேன், 
பவமே தவிர்ந்து பரபோக மாய பயனே திளைக்க வருள்வாய், 
அவமே திரிந்து தினமேகழித்து னடியேன் வருந்த லறமோ, 
நவமே பொருந்து மிளமர்ப் பதிக்க ணவிலுண்மை கண்ட குருவே.        (11)
ஆசிரியப்பா.
குருவென வந்து குவலயந் தன்னில்
இருவினை நீக்கி யெனையரு கிருத்தி
முப்பொரு ளுண்மை மெய்ப்படக் கிளத்துவம்
வாட்டமொன்றின்றி கேட்டிநீ யென்று
 சிவமே சீவன் சேரிருண் மலமே            5
    மாயை யிரண்டென் றாயவோ ராறும் 
    அனாதியே யுளவென் றெனாதுள மொப்ப
    நன்றெடுத் தியம்பி மன்றமற் றவையுடன்
    முற்பொருள் யாமே புற்கல னீயே
மற்றவை நான்கு முற்றநெற் குமியும்          10
    செம்பிற் களிம்பும் பம்பிய வாறே
    நின்னிடை நீங்கா மன்னிருட் கட்டே
              அவற்றுள்
    சிவமா மெம்மியற்செப்புங்காலை
    நித்திய நின்மல நிரஞ்சன நிராமய 
   நிர்க்குண நிச்சல நிர்விகா ரம்பரம்        15
    சுத்தம் முதன்மை தொலைவில் வியாபகம்
    ஏகஞ் சுதந்தர மின்பநிர் விடையம்
    சத்துவ மகண்டிதந் தத்துவா தீதம்
    ஆமிவை முதலாந் தோமறு மியல்பினம்
              அதா அன்று.
  ஆன்ம விலக்கண மறையுங் காலை   20
    எந்நிறஞ் சாரு மந்நிற மேயாய்
    விளங்குந் தூய பளிங்கு போல
    எம்மைச் சாரி னெம்மியல் பேய்ந்தும்
    மலத்தைச் சாரின் மலத்தியல் வாய்ந்தும்
கண்ணுஞ் சார்ந்ததன் வண்ணமே யாயும்    25
சத்தைச் சார்வுழி சத்தே யாயும்
அசத்தைச் சார்வுழி யசத்தே யாயும்
தயங்குந் திறனாற் சதசத் தாயும்
அறிவித் தன்றி யறியா தாயும்
யாமென் றுளமோ தாமன் றுளவாய்        30
எண்ணிறந் தனவாய் நண்ணுவியா பகமாய்
தனவய மிலவாய்த் தலைவனை யுளவாய்ச்
சிற்றறி வோடு சிறுதொழி லினவாய்
மலத்தடை யினவாய் வல்வினைக் கீடாய்ப்
பல்வே றுடலந் தொல்பே ருலகில்          35
எடுத்தெடுத் தெய்க்கு மியல்பின வாயும்
ஆயபல் லியலு மேயவான் மாவே 
அவைதாம்
ஆணவ மொன்றே யமைவிஞ் ஞான
கலர்க ளென்னச் சிலருள ரவரே
அநாதியே யொருமல மமைந்தோ ரென்றும் 40
விஞ்ஞா னாதி விளம்புமை வகையால்
ஏனைய விருமல மிரிந்தோ ரென்றும்
இருவகை யாக வியம்பப் படுமே
அதா அன்று
ஆணவங் கன்ம மமையும் பிரளையா
கலர்க ளென்னச் சிலருள ரவரே           45
அநாதியே யிருமல மமைந்தோ ரென்றும்
பிரளையத் தான்மல பெந்தம் பெயர்ந்தே
இருமல முடையா ரென்று மென்றும்
இருவித மாக வியம்பப் படுமே
அதா அன்று
ஆணவங் கன்ம மார்தரு மாயை           50
எனுமும் மலங்களு மியற்கையி னுளராய்
சகல ரென்னத் தயங்குனர் பலரே
அதா அன்று
பாச விலக்கணம் பகருங் காலை
ஆணவங் கன்ம மாயைமா யேயம்
திரோதை யென்னத் திகழுமை வகையாய்   55
அவற்றுள்
ஆணவ மேகமா யாருயிர் தோறும்
வெவ்வே றாகி விரகையுந் தொழிலையும்
மறைத்து நின்றே மருவிய தத்தங்
கால வெல்லையிற் கடக்கு மநேக
சத்திக ளுடைத்தாய்ச் சடமா கும்மே        60
கன்மமோ வவ்வணுக் கண்மனம் வாக்குக்
காயமென் றியம்ப வாயமூன் றானும்
இயற்றிய புண்ணிய மிருமபா வம்மே
இவைதாம்
எய்திய பிறப்பி லியற்றிய பொழுதில்
ஆகா மியமென் றடைபவந் தோறும்    65
இங்ஙன மாக வீட்டப் பெற்றுப்
பக்குவ முறும்வரை பகர்மதி தத்துவம்
ஆதர வாக வமைமா யையிலே
கிடக்கும் பொழுது கிளர்சஞ் சிதமென
றிவற்றுள் பக்குவ மெய்திய வைதாம்   70
மேல்வரு முடலையு மெய்யது கொண்டு
துய்க்கப் பெறுஞ்சுக துன்பங் களையுந்
தந்துப யன்படு ததிபிரா ரத்தம்
என்றபி தான மேற்கு மென்ப
இனியே
மாயையோ விந்து மோகினி மானே          75
எனமூ வகையா மிவைகளி னுள்ளே
முன்னவை யிரண்டு மொழியினித் தியமே
பின்னது பின்னதிற் பிறத்தலா வநித்தம்
அவற்றுள்
சுத்தம்நித் தியமாய்த் துலங்குவியா பகமாய்
அருவமாய்ச் சடமா யான்றசொல் வடிவும்    80
சுத்தமா கியபொருள் வடிவுந் தோன்றற்
காதிகா ரணமா யலமரல் செயாதாய்
ஒருமல முடையார்க் குறுதநு முதலாய்
வயங்கு மசுத்த மாயையோ வென்னில்
நித்தம் வியாபக நிகழரு வஞ்சடய        85
எனுநான் கியலோ டியம்பு பிரளையா
கலர்க்குத் தநுவொடு கரண புவன
போகஞ் சுத்தா சுத்தமாய்ப் பொருந்தி
மயக்குஞ் செய்வதாய் மருவுமென்ப
பகுதியின் பான்மை பசருங் காலை       90
விந்துமே லாகி விளங்கி யிருப்ப
தானதின் கீழாய்த் தணிந்த மோகினியின்
தூலமா கியபரி ணாமம தாகி
மும்மலத் தினர்க்கே மொழிதநு கரண
புவனபோ கம்மாய்ப் பொருந்தி நாளும்     95
ஆன்ம வறிவோ டவர்த் தொழி லிவற்றை
ஏகதே சத்தன வாக வியற்றி
மயக்கமே செய்யும் வைந்தவம் விந்தின்
காரிய மாகிக் கலந்திடு முயிரைத்
திரோதையா தென்னச் செப்புங் காலை     100
ஆணவங் கன்ம மார்தரு மாயை
எனுமும் மலங்களை யிருந்தொழிற் படுத்தி
பாகம் வருத்தெம் பகரொடு சத்தியே
இவையே முப்பொரு ணவையி லிலக்கணம்
எனினும்
வண்ணான் புடவையின் மாசினை க்கூட்டி           105
முன்னுள மாசையு முடிப்பதே பொருவயாமே
காரண மதனுக் கியைகா ரியமாய்
மாயை கன்ம மருவறச் சேர்த்து
வன்மலப் பகையை மாற்றுவ நுமக்கே
இதனால்
பக்குவ மெய்திய பான்மையோர் பலமே*       110
அதனால்
ஒருமல முடையார்க் குணர்விற் குணர்வாய்
இருமல முடையார்க் கீரிரு புயமும்
காள கண்டமுங் கண்ணுறு நுதலும்
உறுமோ ருருவோ டுற்றுநன் கருள்வோம்
மானைக் காட்டி மான்பிடிப் பதுபோல்          115
மூழ்குநும் போலு மும்மலத் தார்க்கே
அருள்வான் வேண்டி யருளா லினைய
மானிட வடிவம் வகித்தீண் டெழுந்தனம்
என்று பலவா யெடுத்தெடுத் தியம்பி
கன்றிய மலநோய்க் கட்டகன் றெய்தும்        120
ஒன்றி யொன்றா வுண்மையு முரைத்தே
புழுத்த நாயினும் புன்மையே னாய
கல்லா வறிவிற் கடைப்பட் டேனைத்
தன்னடி போற்றுந் தரத்தி னிறீஇ
இன்னருள் வழங்கி யேன்று கொண்டனன்      125
கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமரம் பாடும் பூமரச் சோலை
வளமெலாங் குலவு மிளமர்நற் பதியில்
ஓங்கொளி ஞானப் பிழம்பாய்
வயங்குமெய் கண்ட மாதவ நிதியே               (12)
வெண்பா.
நிதியை நிலத்தைநன் னேரிழையை வேண்டு
மதியை யுடையார் மருவார்-கதியையெம்
நொச்சியம்வாழ் மெய்கண்டா னோன்றாட்குத்
உச்சிதரே யல்லா துவண்தொண்டுசெயும்.          (13)
கலித்துறை.
உவலைச் சமயிக ளொவ்வா வுரைகொ ண்டுவரிவைப்பிற், 
சவலைப் படுமனச் சங்கடந் தீர்த்துத் தமியனையாள், 
திவளும் பொழிலிள மர்ப்பதி மெய்கண்ட தேவையல்லாற், 
கவலைக் கடற்புகு மெத்தே வரையுங் கருதிலனே.            (14)
விருத்தம்.
கருவேதனை யறவேயருள் கருணைப்பிர காச
உருவேயெனு மிளமர்ப்பதி யுண்மைத்தரி சனியாங்
குருவேகுரு வவன்வாய்மலர் குலவுஞ்சிவ ஞான
மருவேமலர் நூலேயிணை மருவாவள நூலே.         (15)
ஆசிரியப்பா
நூல்பல தேர்ந்த நுண்புல முடைய
செந்தமிழ் மக்காள் செப்புவங் கேண்மோ
வினையி னீங்கி விளங்கிய வறிவின்
முனைவனாகிய முக்கண் மூர்த்தி
ஆதி நாளி லருளிய முதனூல்             5
இருக்கு யெசுரு சாம மதர்வம்
என்றெடுத் தியம்பு மீரிரு மறையுங்
காமிகம் யோகஜஞ் சிந்தியங் காரணம்
அசிதந் தீப்தஞ் சூக்குமஞ் சகச்சிரம்
அஞ்சுமான் சுப்பிர பேதம் விசயம்         10
நிச்சுவா சஞ்சுவா யம்புவ மாக்கி
னேயம் வீரம் ரௌரவ மகுடம்
விமலஞ் சந்திர ஞான முகவிம்
பம்புரோற் கீதம் லளிதஞ் சித்தம்
சந்தா னஞ்சர் வோக்தம் பார               15
மேச்சுரங் கிரணம் வாதுல மென்ன
நாலே ழாக நவிலா கமமும்
எனவிரு வகையா யிலகு மென்ப
அவற்றுள்
உண்மைப் பொருளை யொரேவழி யுணர்த்தா
தவரவர் பக்குவத் தளவிற் கேற்ப           20
பலதே வரையும் பாற்பட வகுத்தே
கரும காண்டங் கஞலுஞ் ஞான
காண்ட மென்ன வீண்டிரு வகையாய்
விளங்குந் திறனால் வேதம் பொதுவாய்
புவியோர்க் குரிய பூருவ மாமே               25
            அதனால்
ஒன்றே பதியவ் வொன்றுஞ் சிவமே
என்றெடுத் தியம்பி யெண்ணி லாருயிர்கள்
அப்பொரு ளெய்துபு வரும்பெறல் வாழ்வில்
தலைப்படு நெறியாஞ் சரியை கிரியா
யோக ஞான வொழுக்கங் களையும்             30
இன்றி யமையா வேனைய பிறவும்
செப்புந் திறனாற் சிவாகமஞ் சிறப்பாய்
சத்தினி பாதத் துத்தமர்க் குரிய
சித்தாந்த மாகித் திகழ்ந்ததை யன்றே
அங்ஙன மாய வவ்வா கமமும்                 35
வடமொழி நன்கு வல்லார்க் கன்றி
ஏனை யோருக் கெட்டுணை யேனும்
பயப்பா டிலவாம் பான்மை யோர்ந்தே
முப்பொரு ளுண்மை முறைபெற வகுத்துக்
கரதலா மலகங் கடுப்பக் காட்டித்               40
திடமுறு மொழியாந் திராவிட மொழியில்
நாற்பா னெறியின் மேற்பா லவற்கே
செவ்விதி னொருநூற் றிகழ்தர வளித்தான்.
அது தான்
தன்பெய ரொருகாற் றாலுறச் சாற்றினும்
வன்பவப் பகையை மாற்று மருந்தாம்        45
சிவஞான போதமென் றெய்வத நூலே
இனியே
அந்நூ லருளிய வருட்பெருங் கொண்மூ
ஆர்கொ லென்னி லடியே முய்யப்
பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ப் பதிதான்
கைதவ மிலாது செய்தவப் பயனான்          50
முந்நூன் மொழிந்த முழுமுதற் பொருளே
இந் நூற் பொருட்டா யிருகண் மூர்த்தியாய்
திருவவ தாரஞ் செய்தருள் செம்மல்
மெய்கண்ட நாம மேவுசிந் தாமணி
கற்றவ ருண்ணுங் கற்பக நறுங்கனி           55
மற்றவ ரறியா மாணிக்க மாமலை
எளியே னுளமு மிளமர்ப் பதியும்
ஒருவா துறையு மொப்பிலாச் சுடரே
ஆதலின்
ஞான காண்ட நன்னூ லாய
சாத்திர மதனைத் தமியே முணர்ந்து          60
எங்ஙனம் வீடுபே றெய்துவ மென்ன
உறுபெருங் கவலை யொழிமி னொழிமின்
அன்னூற் சிரமிசை யமைவிற் றாங்கி
இன்னோ னமரு மிருந்தளி சூழ்ந்து
திருமுன் னின்று செங்கை கூப்பி
ஆனா வமுதே வருவே வுருவே
ஞானா கரனே நன்றே வொன்றே
ஊனே வுயிரே வுணர்வே வுளமே
தேனே பாகே திருவே குருவே
கண்ணே மணியே கதியே நிதியே
என்றெடுத் தேத்தி யிருகணீர் வார
நெஞ்சநெக் குருகி நிற்பீ ராகில்
மலபரி பாகம் வாய்ப்ப
எண்ணிய வெண்ணியாங் கெய்துவிர் நன்கே            (16)
               வெண்பா
நகர மகர நலிய வகரம்
யகர மெனுமெளியே னெய்திச் சிகரம்
எனவிளமர் மேவ வின்பார்மெய் கண்ட
தினகரனே நன்கருளிச் செய்.                (17)
 
               கலித்துறை
செய்யா வினைகளை யேசெக மீதினிற் செய்துமன
நையா வுழன்றது போதுமென் றேயின்று னற்சமுகம்
உய்வா னனியுளங் கொண்டடுத் தேனினி யுன்னருளே
மொய்வாய் மலர்த்தட நொச்சிய மெய்கண்ட முன்னவனே          (18)
              விருத்தம்.
முற்பலப்பல வுற்பவத்து முயன்றுநற்றவ முற்றிய மோனஞான 
                வரோதயப்பர முத்தராமவ ரன்றியே 
புற்புதம்பொரு முடலையேநிலை யென்றுபொய்ப்பொருள் 
               செய்துவெம் பூவையார்வய மாகிவீண்படு புன்மையாளருக கொல்லுமோ, 
கற்பகப்பொழிற்கண்டு மண்டிவை கமழ்செழுங்கவி  னுக்கொருக் 
              காலுமொவ்வில மொவ்விலம் மெனக்கருதிவான்மறை யத்திகழ்,
அற்புதப்பல சோலைசூழ்தரு மணிகொணொச்சிய நச்சிய 
              வமலரூபமெய் கண்டதேசிகனான்றநூற்பொருள்காணவே.       (19)
               ஆசிரியப்பா.
    காடும் மலையுங் கனலும் புனலும்
    தேடி யோடித் தெறுபசிக் குடைந்து
    காயுங் கனியுங் காற்றுஞ் சருகும்
    அருந்திப் பன்னா ளருந்தவங் கிடந்தே
5.  என்பெழும் யாக்கைய ராகி யென்னே
    வாணாள் கழிப்பீர் வீணே முனிவீர்
    தாமாந் தன்மை சார்ந்தார்க் கருளும்
    ஓமாம் புலியூ ரொண்பதி தோன்றி
    சரியை கிரியைத் தனிநிலை தேர்ந்தே
10. எண்வகை யோகப் பண்பது முற்றி
    அம்மைகுண் டலியாற் செம்மைநல் லமிர்தம்
            உண்டுண் டுறங்கா வுலப்பிலா னந்தச்
            சண்முக முனிவன் றருதவச் சுதனாய்
            வருமொரு பெரியோன் மறைசை நகரெழு
       15.  தாயும் மான தயாபர மூர்த்தி
            வழிவரு தூய மாசிவ வேதியன்
            அவராஜ யோக வவல மகற்றும்
            சிவராஜ யோகத் தேசிகர் மாமணி
            பொய்கண்ட ஞானப் புன்மை தவிர்க்கும்
       20.  திருமெய் கண்ட சிவாசா ரியன்றன்
            செங்கம லப்போ தங்கழற் பாதப்
            பற்றே பற்றாப் பற்றி யுய்ந்தோன் 
            வடமொழி தென்மொழி மருவும் மகோததி
            சுத்தாத் துவிதச் சித்தாந் தச்சுடர்
       25.  சிவப்பிர காசத் தெள்ளபி தானம்
            கொண்டொளிர் கோமான் குணங்கெழு தனது
            பன்மா ணவரோடு நன்மா மலர்கொடுத்
            தூய்த்தொழு தேத்துந்தேத்துளிப்பொதும்பர்
            காவிரி நதியின் கரைமருங் கொளிரும்
       30.  இளமர் வளநக ரெய்தி யாங்கண்
            திப்பியம் பொலியுஞ் சினகரத் தமர்ந்த
            ஒப்பிலாத் தூய வொள்ளொளிப் பிழம்பை
            மெய்கண்ட தேவ வித்தகப் பொருளைக்
            குடந்தம் பட்டுக் குழைந்தினி தேத்தில்
35. ஐயுற வில்லா தன்னே
    எப்பதம் வேண்டினு மெய்துதன் மெய்யே.        (20)
             வெண்பா 
மெய்கண்ட தேவை விழுப்பொருளை வித்தகனைக்
கைகண்ட வின்பக் கனியினை - உய்கொண்ட
சித்தாந்த நன்னிலையச் சேணார் பொழிலிளமர்
கத்தாவைக் காண்பதுவே கண்.              (21)
             கலித்துறை
கண்ணா ரொளிவிண் கதிரொளி யோடு கலப்பதுபோல், 
தண்ணா ருனதருட் டாரக மோடு தகக்கலந்துப், 
புண்ணா ருளத்த னிரண்டறக் கூடிப் பொலிவதென்றோ, 
எண்ணான் கறம்பயி னொச்சிய மெய்கண்ட வெம்மிறையே.         (22)
             விருத்தம் 
இறையுமெம் பவநோ யகற்றிவீ டளித்தற் 
                கிசைந்திலா யென்னினு மெழில்சேர், 
குறைவினின் சந்தானத்தெழு மடியார்க் 
                 குறுகியன் னவர்பணி குயிற்றி,
இறைகெழு நின்னூற் பொருள்விசா ரணைசெய் 
                 திருக்குமா றேனுநன் கருள்வாய், 
முறைகண்முன் னான்கு முழங்குறு மிளமர் 
               முதல்வனே மெய்கண்ட மணியே.          (23)
             ஆசிரியப்பா
          மணிபல குயிற்றி யணிகெழு மாளிகை
          மேனிலத் தமரும் பானலங் கண்ணியர்   
ஆடவ ரொடுதா மூடலிற் றீர்த்த
விலைவரம் பறியாக் கலன்பல மறுகில்
வயந்தரு சிறாரின் சயந்தனந் தடையும்        5
வளமலி செல்வத் திளமர்நன் னகரில் 
உலகிருள் சீக்கு மிலகொளிப் பரிதியின்
ஆருயிர்த் திரளைச் சேரிரு டேய்த்துத்
தவாதுறை ஞான திவாகர னாய
மெய்கண்ட தேவச் சைவசித் தாந்த           10
பரமா சாரியன் வரசரோ ருகமென்
பொற்கழல் போற்று மொற்கமி லடியார்
திரிமல மகன்று திருவரு ளோடே
விரவுறு மின்ப மெய்ந்நிலை யாய
ஒன்றி யொன்றா வுயர்பதமொன்றே           15
வேட்டன ராகி விரிகதி ரிரவி
எங்கெழுந் திடினு மிங்கெமக் கென்னென்
றிருப்பதை யன்றி யிதனின்வே றாய
ஐந்தரு நீழ லிந்திரன் பதமும்
ஆயிரம் பணாமுடிக் காய்சினத் தனந்தன்      20
மீமிசைத் தியில்கூர் நேமியோன் பதமும்
ஏனைய பிறவு மெய்த
நினைவது முளதோ கனவிலு மிலையே.           (24)
வெண்பா.
இலையெ பிரமமென்ப தெம்மையலா தென்னும்
புலையார் புவிக்கோர் பொறையாய் - அலைவாரே.
அல்லாது நொச்சியமெய் கண்டாருக் கன்புசெய்து 
நல்லாரா யுய்வாரோ நன்கு.               (25)
கலித்துறை.
நன்றே யுனதடி போற்றுந் திரமிலின் னாயனையேற்
கென்றே யுனதரு ளெய்துங்கொ லோவென வெண்ணியெண்னி, 
நின்றே னெனக்குனை யல்லாற்கதியிந்த நீணிலத்தில், 
இன்றே யிளமர்மெய் கண்டா யெளியனை யேன்றுகொளே.           (26)
விருத்தம்.
ஏன்று கொண்டிங் கென்னை நின்ன திணையடிக்குத் தொண்டென, 
கான்று விட்ட சோறே னப்ப வஞ்ச வாழ்வைக் காட்டினை, 
தோன்று மற்றி தற்குமேலும் வேறு பேறு சொல்வதென், 
சான்று நின்ற நொச்சி யந்த ழைமெய் கண்டசாமியே.          (27)
ஆசிரியப்பா.
சார்ந்தார்க் காத்தற் றலைவர் தங் கடனென்
றொருவா தொளிருன் றிருவாய் மொழியை
உளங்கொண் டாய்வுழி யுலகோர் மூன்றினும்
மூவா ஞான முழுமுதற் றலைவன்
நீயே யாக நிகழக் காண்டலில்                    5
அடியே னின்றுன் னங்கழ லெய்தினன்
சிவப்பிரகாசத் தேசிகன் முதலாம்
தவப்பிர காசர் தரும்பணி யுவந்தே
இளமர்ப் பதிவயினினிதுவீற் றிருக்கும்
மெய்கண்டதேவ விமலமா மணியே           10
வழுவா நின்னுரை வாய்ப்பத்
தொழுவேன் றுயரத் திடைப்பதுன் கடனே
வெண்பா.
உன்கடனே யன்றோ வொதியேனை யுய்வித்தல்
என்கடவே னேழை யிழிதகையேன் - மின்கடவழ்
மாட மலியிளமர் வாழ்மெய்கண் டாநின்னில்
தாடலைபோற் கூடுநிலை தா.                  (28)
கலித்துறை.
தாரா தொழியி லுயர் சிவ போகந் தரணிமிசை 
யாரா தரிப்பவ ருன்னடி யேனை யளவில்பவந்
தீரா தடைந்தலுத் தேனினி யேனுமித் தீப்பிறவி
வரா தருளிள மர்ப்பதி மெய்கண்ட வானவனே           (29)
விருத்தம்.
வானநாட் டகத்தும் வாய்த்திடா வளமை மலியிள மர்ப்பதி வைகும் , 
ஞானநா யகனே மெய்கண்ட சிவ மே நாடுகே வலத்தினின் றெடுத்துத் , 
தீனனேன்றனையிச் சகலத்தி லுய்த்த திருவருட் டிறத்தையாய்வுழிமேல், 
மானமார் சுத்த மளித்திடற் கன்றோ மற்றதும் வழங்குவ தென்றே.         (30)
ஆசிரியப்பா.
என்றுபன் னிருவ ரிம்பரிற் றோன்றிப்
புறத்துறு மிருளைப் போக்குதற் பொருவத்
தேவர் திருவாய்ச் செவ்விதின் மலர்ந்த
செந்தமிழ்ப் பன்னிரு திகழ்சூத் திரமும்
ஆருயிர்த் திரளி னகத்திரு ணீக்கி                5
அருஞ்சிவ ஞானப் பெருங்கதிர் பரப்பி
விளங்கு மென்ன வெள்ளறி வுடையேன்
தொகையாற் றொழிலாற் சொற்றன னேனும்
உபமா னத்தினு முபமே யம்மே
சிறப்புடைத் தென்னச் செவ்வதி னன்கு           10
தேர்ந்தே னன்றித் தெளியே னல்லேன்
விரிபொழி லிளமர் மேவும்
மெய்கண்ட தேவ விரைந்தரு ளெனையே        (31)
வெண்பா 
என்னைநின் னைத்தன்னை யிற்றெனக்காட் டாத
முன்னை யிருண்மலத்தை மோதியேப் - பின்னையே
நீயே நா னாக நிலவருள் செய்யிளமர்
ஆயேநேர் நன்மெய்கண் டாய்.               (32)
கலித்துறை.
ஆய்ந்தா யலைமெயச் சிவஞான போதத் தரும்பொருளைத், 
தோய்ந்தா யலையிள மர்ப்பதி மெய்கண்ட தூயனடி , 
ஏய்ந்தா யலைமற் றவனடி யாருற வேழைநெஞ்சே, 
காய்ந்த யலைமட வார்மய லென்கொல் கதியுனக்கே.            (33)
விருத்தம்.
உனையே யலதொரு கதிவே றிலையெனு 
                முரையெ யலதுனை யொருநாளும், 
புனையே னலர்கொடு புகழேன் றதிகொடு 
                  பொருளே யெனநனி மனமார,
நினையே னெனினுமு னடியே னெனுமொழி 
                 நிலமேல் வரையிடு சுடர்நேராம், 
பினையே யுனதெண மெதுவோ மெய்யுணர் 
                பேரா ரிளமர்ப் பெருமானே.           (34)
ஆசிரியப்பா.  
பொண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ப் பதியில்
செந்தமிழ் நாடு செய்பெருந் தவத்தால்
வந்தவ தரித்த மாசிலா மணியே
எய்ப்பினில் வைப்பே யிலகொளி விளக்கே
மெய்கண்ட தேவச் சைவமா முகிலே                5
திப்பியம் பழுத்த தேசிக வடிவே
சத்தறி வின்பத் தற்பரம் பொருளே
இளம ரமுதே யெளியேன் பேறே
தேவர் திருமுன் செய்விண் ணப்பம்
ஒன்றுள ததுதா  னொதியே னென்றுஞ்              10
சுடுநர கழுந்தித் துன்புழந் திடினும்
நின்னடி மாட்டு நிறைபே ரன்பே
ஈங்கிது நினகின் றீவதன் றென்னில்
உலகினி துய்வா னொருநீ யுரைத்த
தன்னே ரில்லாத் தனிச்சிவ ஞான          15
போத மென்னுஞ் சாத நூலின்
பொருளினை யேனும் புந்தி
மறவா திருக்கும் வரமளித் தருளே.            (35)
வெண்பா
தரும வடிவாய்த் தழைமெய்கண் டானைத்
திருவிளமர் மேவித் தினமுங் - கருதி
அருச்சிப்பார் யாரே யவரேயென் னாளுங்
கருச்சிக்கார் காண்பார் கதி.               (36)
கலித்துறை.
கல்லா ரவையி னடுவிருப் பேனைக் கருணையினால்
நல்லா ரவையி னடுவினிற் கூட்டியிஞ் ஞாலமிசைப்
பொல்லா ரருணெறிப் போதம் வழங்கிப் புரந்தனனால்
செல்வார்பொழிலிள மர்ப்பதி மெய்கண்ட தேசிகனே.         (37)
விருத்தம்.
தேவரும் வியக்கு மிளமர்நற் பதியிற் சிறந்தொளிர் மெய்கண்ட சிவமே, 
சீவனா மெனக்கு மலம்வியா பகமோ திகழ்வியாப் பியங்கொலோ வென்னின், 
மேவருமிரண்டு மன்றது வியாத்தி விலக்கிட விலகிடுமென்னில், 
ஓவுற வொழிப்ப தென்றுமற் றெந்தா யொழிப் பவ ருனையலால் யாரே.          (38)
ஆசிரியப்பா.
ஏடார் கமலப் பீடார் மனையில் 
பொற்பவீற் றிருக்கு முற்பவப் புத்தேள்
தாழா தியற்று மேழேழ் புவியில்
வெவ்வேறாக விளங்கும் பிறவி
அன்னா டொட்டே யிந்நாள் காறும்           5
எளியே னேய்ந்தவை யிலக்கங் காணில்
வானின் மீனும் வண்புவி மணலும்
ஆருயிர்த் தொகையு மமையு மென்ப
அன்றியு மனைய வாழ்பவந் தோறும்
எய்திய துன்போ விதிற்பன் மடங்கே         10
இனுமிப் பிறவி யெய்து மென்னில்
என்றே யெளியே னெய்துவ னின்னை
இறப்பும் பிறப்பும் மெய்துபல் துன்பும்
என்று நினக்கே யியற்கையா மென்னில்
ஆண்டவ னெனநீ யடியவ னெனெயான்      15
இருத்தலி னென்னே யெய்துறு பயனே
ஆதலின்
இளமர்ப் பதியி லேய்மெய் கண்ட
தேசிக மணியே சிறியேன்
வன்பவ நீக்கி வழங்கருட் சீரே.            (39)
வெண்பா.
 
மெய்கண்டான் வாழி விளங்க வவனுரைத்த 
தெய்விகநூல் வாழிச் செகம்வாழி- சைவந்
தழைக்குமவன் சந்தானஞ் சந்தமுன் வாழி
செழிக்குமினூல் வாழி சிறந்து.
 
 எச்சிலிளமர்ப்பதி  ஸ்ரீ மெய்கண்டதேவர்
நான்மணிமாலை முற்றுப்பெற்றது.  
ஸ்ரீ மெய்கண்டதேவர் மென்கழல் வாழ்க.
வெண்பா.
மாயாவா தப்பேயை மாற்றி யெனையாண்ட
தூயா திருவுறந்தைத் தோன்றலாம் - நேயாகேள்
நீயருளு மெய்கண்ட நீணான் மணிமாலை
நாயடியே னோரவரு ணன்கு.         (40)
அ. ரா. அ.
பூவாளூர்.
 
This file was last revised on 12 Nov. 2021. 
Feel free to send corrections to the webmaster (pmadurai AT gmail.com).