பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் 
"மகபதி"  (நாடகம்) 
makapati (play) 
by pammal campanta mutaliyAr
In tamil script, unicode/utf-8 format
 
 
Acknowledgements: 
Our Sincere thanks go to the Digital Library of India 
for providing us with scanned images version of the work online.
Etext preparation and proof-reading: 
This etext was produced through Distributed Proof-reading approach. 
We thank the following persons in the preparation and proof-reading of the etext: 
R. Aravind, M. Gayathri, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan,
P. Thulasimani, N. Pasupathy Sasikumar and Anbu Jaya. 
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2012.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation 
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. 
Details of Project Madurai are available at the website 
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
 
  பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் 
"மகபதி" (நாடகம்) 
 
 source:  
ஷேக்ஸ்பியர் மஹாகவி ஆங்கில பாஷையில்
எழுதிய "மெக்பத்" என்னும் நாடகத்தின்
தமிழ் அமைப்பு
ப, சம்பந்த முதலியார், பி.ஏ.பி.எல்.,
அவர்களால் இயற்றப்பட்டது.
   முதற் பதிப்பு
   சென்னை டௌடன் கம்பெனியாரால் அச்சிடப்பட்டது
   1910
    காபிரைட் செய்யப்பட்டிருக்கிறது                    விலை அணா 12
---------------------
கத நூலாசிரியரால் இயற்றப்பட்ட மற்றத் தமிழ் நாடகங்கள். -"லீலாவதி-
லோசனை," "கள்வர் தலைவன்," "இரண்டு நண்பர்கள்," "மனோஹரன்"
"சத்ருஜித்," "சாரங்கதான்," "யயாதி," "வேதாள உலகம்,"
"காலவரிஷி," "அமலாதித்யன்," "காதலர் கண்கள்,"
"பேயல்ல பெண்மணியே," "ரத்னாவளி," முதலியன),
----------------------------------------------------------
                            INSCRIBED
                                            TO
                    THE BELOVED MEMORY OF
                                MY PARENTS
-----------------------------------------------------------
     மகபதி 
______
  நாடக பாத்திரங்கள். 
தனகராஜன்...      ...      ...                சகேத நாட்டு மன்னன்.
மால்கோமளன், தனலாபன்    ...     ...                தனகராஜன் புதல்வர்கள்.
மகபதி, பானுகோபன் )  ...      ...                தனகராஜன் சேனைத் தலைவர்கள்.
மேகதூமன், லவணகன், ரோஷன்,  
மீனதூதன், அங்குசன், கேதுநேசன்    ...    ...                 சகேத நாட்டுச் சீமான்கள்.
பாலையன்    ...    ...                  பானுகோபன் புதல்வன்.
சிவார்த்தன் (வயோதிகன்) ... சிங்களச் சேனைத் தலைவன்.
சிவார்த்தன் (இளைஞன்)    ...  யான் புதல்வன்.
சேந்தன்       ...    .....     ....      மகபதியைச் சார்ந்த ராணுவவீரன்.
மகபதி மனைவி  ... ... ... ...
மேகதூமன் மனைவி ...    ...
ஓர் பாங்கி, ஓர் சிங்கள வைத்தியன், ஓர் சகேத நாட்டு வைத்தியன், 
ஓர் ரண வீரன், ஓர் காவற்காரன்,  ஓர் வயோதிகன், கனவான்கள், 
படைவீரர்கள், தூதர்கள், சேவகர்கள், கொலைஞர்கள் முதலானோரும் 
மூன்று மாயாவிகளும், பானுகோபன் அருவமும், இன்னும் மற்ற அருவங்களும்.
கதை நிகழிடம். - நான்காம் அங்கத்தில் கடைசியில் சிங்களத்திலும்,
மற்றதெல்லாம் சகேத நாட்டிலும்.
---------------------
மகபதி
 முதல் அங்கம்
முதல் காட்சி. 
   
இடம்-  ஓர் காட்டுப் பிரதேசம். இடியும் மின்னலும்.
மூன்று மாயாவிகள் வருகின்றன.
மு.மா. மறுபடி மூவரும் எவ்விடம் சோ்வோம்? இடியிலோ, மின்னிலோ ஏற்ற 
          மழை தன்னிலோ?
இ.மா. கோலாகலம் முடிந்ததும், கொடும் போர் தோற்று வென்றதும்.
ழ.மா. அது ஆதித்தன் அஸ்தமிக்கு முன்னாம்.
மு.மா. இடம் எதில்?
இ.மா. வனமதில்
ழ.மா. சந்திப்போம் மகபதியைச் சார்ந்து அவ்விடம்.
மு.மா. கரும் பூனையே கணமதில் வருவேன்.
இ.மா. கூப்பிடுகின்றது மண்டுகம்.
ழ.மா. கொஞ்சம் பொறுத்து எல்லோரும்:   தேற்றம் களங்கமாம், களங்கம் தேற்றமாம்
           மூடு பனியிலும் மூசு காற்றிலும் மறைந்து நாமுமே, பறந்து போகுவோம்.
                (போகின்றன.)
     காட்சி முடிகிறது.
----------------------------
அங்கம் 1. 
 இரண்டாம் காட்சி.
   
 
இடம் -  புரசையருகில் ஓர் பாசறை. உள்ளே யுத்தகோஷம்.
தனகராஜன், மால்கோமளன், தனலாபன், லவணகன், சேவகர்களுடன் வந்து, 
ரத்தம் சொரிகின்ற  ரணவீர னொருவனைச் சந்திக்கின்றனர்.
த.  ரத்தஞ் சொரிகின்ற ரண வீர னிவனார்? அவனிருக்கும் நிலையைக் 
          காணுங்கால், கலகத்தின் தற்கால ஸ்திதியை அவன் உரைத்திடக் 
          கூடுமென நினைக்கின்றேன்.
மா.  கடுஞ் சிறையினின்றும் என்னை மீட்கக் கொடும் போர் புரிந்த குன்றா 
         வீரன் இவனே யாம் - வாராய் வீர நேயனே. வெம் போரினை நீ விட்டபொழுது 
         இருந்த நிலையை, எடுத்துரைப்பாய் எம் மரசற்கு.
ர. தண்ணீரில் நீந்தும் தளா்ந்த இருவர், ஒருவரை யொருவர் கட்டிப் பிடித்து, 
          இருவரும் தமது வித்தையை மறந்து தத்தளிப்பதேபோல், நெடுங் கால் நின்றது 
          நிலைமை யறியொணா வண்ணம். கருணையிலா மேகதானவல்லபன், 
          கலகத்திற் கேற்ற காதகன்-அதற்குத் தக்கபடி கடுகிப்பெருகுங் கொடுங்குணங்கள்  
          குறைவின்றி அவனிடங் குடிகொண் டிருக்கின்றன -  குடக்குத் தீபங்களினின்றுங் 
           கூர்மையாம் ஈட்டிக்காரர்களையும் வலி பொருந்திய வாள்வீரர்களையும் 
          பெற்றவனானான் அதிர்ஷ்ட தேவதை, பாழாம் அவன் சச்சரவின் பக்கலில் 
         உதவி செய்து, கலகக்கார காதகன் கட்டழகிபோல் காணப்பட்டாள் - எல்லா 
         மிருந்தும் ஏதும் பயன்படாதபடி சுத்தவீரன் மகபதி-அப் பெயர் தகும், அவருக்கே 
         நன்றாய் -  அதிர்ஷ்டமதை அலட்சியஞ் செய்யதவனாகி, வீர வாளை வீசிய 
         வண்ணம், வீழ்ததிய கொலையில் வெம் பொறி சிதற, வீர லட்சுமியின்  
சூரமகனென,
         பாதகன் எதிர்ப்படும் வரை வழி வகுத்துச் சென்று, காதக னுடலைக் கபாலமுதல் 
         கால்வரை கட்டைபோல் பிளந்து, அவனருந் தலையை அலங்கத்தில் நாட்டுமுன்,
         கைகள் ஓய்ந்திலர்.
த.  உற்றவ னாவ னுத்தம வீரன்! புகழ்தகு சீலன்!
ர.  காந்தியைக் கொடுக்கும் கதிரவ னுதிக்கும் கிழக்குத் திக்கினின்றும், நாவா 
          யழிக்கும் பெரு மழைகளும், நானில மஞ்சும் பேரிடிகளும் சில சமயங்களில் 
          உண்டாவதேபோல், தோற்றும்  க்ஷேமகரமெனக் கருதும் ஊற்றினிடையே 
          உண்டாகிறது உற்பாதம். கேளும் சகேத நாட்டுக் கோமானே, கேளும். தர்ம 
          தேவதையானது வெற்றி வேல் புனைந்து வெதும்பிய அவ் வீரரை வென்னிட் 
          டோடச் செய்தவுடனே, நாரீவன நாதன், நாடி அச்சமயத்தை, தீட்டிய 
          ஆயுதங்களுடனும் கூட்டிய புதுச் சைனியங்களுடனும் மாட்டினான்  மறுபடியும் 
          போரை.
த.  நமது வீரர், மகபதி பானுகோபரை, மருண்டிடச் செய்ய வில்லையா இது?
ர. ஆம் சுட்டுக் குருவி கருடனையும், பெட்டை முயல் சிம்ஹத்தையும் பயப்படச் 
           செயவதேபோல். உண்மையை நான் உரைப்பதாயின், அவர்கள் இரு மடங்கு 
          வெடி மருந் தூட்டப்பட்ட பெரும் பீரங்கிகளைப் போலிருந்தனரெனக் கூறல் 
          வேண்டும். ஆகவே அவர்கள் இரு மடங்கு அதிகமாய் அடித்து வீழ்த்தினர் 
           அந்தப் பகைவரை. இங்ஙனஞ் செய்தது, வெட்டுகளினின்றும் பாயும் வெங் 
          குருதியில் ஸ்நானஞ் செய்ய வேண்டியோ, அல்லது பாரதப்போரைப் பாருளோர் 
          மறந்திடா வண்ணமோ, அறைகிலேன் நான்-எனக்கு மூர்ச்சை வருகிறது, என் 
          காயங்கள் உதவியை விரைவில் வேண்டுகின்றன,
த.  உன் காயங்கள் உனக்கு வாய்த்த வண்ணம் உன் வார்த்தைகளும் 
           உனக்கேற்றனவாகவே யிருக்கின்றன; இரண்டும் உன் பெருமையைக் 
          குறிக்கின்றன- போங்கள், ரண வைத்தியர்கள் அவனுத குதவச் செய்யுங்கள்.
  (ரணவீரனைச் சில சேவகர்கள  அழைத்துச் செல்கின்றனர்,)
         ரோஷன் வருகிறான்.
   யார் இங்கே வருவது?
மா. ரோஷ நகரத்துச் சீமான்.
ல. அவர் கண்களூடே என்ன ஆத்திரங் காணப்படுகிறது  விந்தையாய் விஷயங்களை 
          எடுத் துரைக்க வருவோர் இவ்வாறே வெருண்டு நோக்குவர்.
ரோ.  வேந்தர் நெடுங்கால் வாழ்வா ராக!
த.  எங்கிருந் துற்றாய், ஏற்ற புகழ்ச் சீமானே?
ரோ.  நாரீவன நாதன் கொடிகள் நான்கு புறத்திலும் ஆகாயத்தை வெட்கிடச் 
           செய்து, நம்மவரை உட்கிடச்  செய்யும், வாபீ நகரத்தினின்றும் வந்தேன் வேந்தே!  
           நாரீவன நாதன் தானே, பயப்படச் செய்யும் சைனியங்களுடன், அக் கொடிய 
           ராஜத் துரோகி காந்தாரக் கோமகன் பக்க உதவியைக் கொண்டவனாகி, 
           அருங் சார் ஆரம்பித்தனன். அதைக் கண்டு விரலட்சுமியின் மருகனாம் மகபதிக் 
          கோமான். முன் கொண்ட ஜயத்தினால் பின்னும் மதித்தவனாகி, எதிர்த்த பட்ச 
          மெல்லாந் தானும் எதிர்த்து, வீரத்திற் கெதிர் வீரங் காட்டி, படைக்குப் படையை 
          மோதி, அடங்கா அவன் ஆற்றலை அடியுடன் அழித்தனன். முடிவினைக் கூறிட, 
          முற்றிலும் வெற்றி நம்முடைய தாயது.
த.  மிகவும் சந்தோஷம்!
ரோ.  இப்பொழுதோ நாரீவன நாதன் ஸுவர்ணன். நம்மிடம் சமாதானம் 
           நாடுகிறான். சாந்தனார் குளத் தருகில் பதினாயிரம் பொன்னை நமக் கிறையாகக்  
          கொடுக்கும் வரையில், மடிந்த அவன் சைனியத்தை மண்ணிற் புதைத்திட, 
           உத்தர வளிததோ மில்லை.
த.    காந்தாரக்  கோமான் இனி நம்மைக் கபடமாய் மோசஞ்செய்யான்; 
            உடனே சென்று அவன துயிரைக் கொண்டு, அவனது பட்டத்தை மகபதிக்குச் 
           சூட்டி மகிழ்விப்பாய்.
ரோ.     அங்ஙனமே செய்விக்கின்றேன்.
த.      அவன் இழந்தது, மகபதியின் வெற்றி மார்பில் விழுந்தது  
         [எல்லோரும் போகிறார்கள்.]
  காட்சி முடிகிறது.
------------
அங்கம் 1. 
 மூன்றாங் காட்சி.
    
                                            
     இடம்-- புரசை அருகில் ஓர் கானம்.
      இடி முழக்கம்
      மூன்று மாயாவிகள் வருகின்றன.
மு.மா.    எங்கு போயிருந்தாய், என் னருந் தங்காய்?
இ.மா.      பன்றிக் குட்டிகளை மென்றுகொண் டிருந்தேன்.
மூ.மா.    தங்காய், நீ யெங் கேகினை?
மு.மா.    மாலுமியின் மனைவி யொருத்தி மடிமேல் மாங்காய்கள் வைத்து மென்றாள்,     
          மென்றாள், மென்றாள். " ஒன்று கொடேன்" என்றேன் நான். " அடி போ, பிசாசே!" 
           என்று அறைந்து கூவினாள். அவளது புருஷன் ஆலப் புழைக்குப் போயிருக்கிறான்  
          அம்புலியென்னும் நாவாய்மீது. சல்லடைமே லங்கு சடுதியில் சென்று, 
          வாலொன் றில்லா வானரம்போல நான் செய்கிறேன், செய்கிறேன், செய்கிறேன்!
இ.மா.     தகுந்த தோர் காற்றைத் தருவே னுனக்கு.
மு.மா.    பட்ச முடையாய் நீ யெனக்கு.
மூ.மா.   மற்றொன்றை யென்னிடங் கொள்ளுவை.
மு.மா.    மிகுதி யெல்லாம் என்னிடம் உள்ளவை, திரை கடல் மாலுமிகள் 
            தெரிந்திடுந் திக் கெங்கணும் பரவிடு மவைகள் பறந்தோடி; அவனது தாழ்ந்த 
            இமைகள் உரக்க மென்பதை ஒன்றும் அறியாது இரவு பகலாய் ஏங்கிடச் செய்து, 
            வைக்கோலைப்போல் வற்றிடச் செய்கிறேன் அவனை. ஒன்பதுக் கொன்பது 
            வாரம் நைந்து கரைந் துருகி விரைந்து நைவான்.  அவன்றன் மரக்கல 
            மழியாவிடினும் காற்றுப் புயலால் கலக்கப்பட்டிடும். இதோ பார் 
            என்னிடமிருப்பதை. 
இ.மா. காட்டு எனக்கு, காட்டு எனக்கு.
மூ.மா.  திரைகட லோடித் திரும்பிய பண்பாய், மாண்ட மீகாமன் பெரு விரலிது 
                காண்பாய்! 
                                   [உள்ளே யுத்த பேரிகை.]
மூ.மா. பேரிகை, பேரிகை! மகபதி வருகை!
மூவரும். மாயாவி மங்கையர் மற்றுமே கைகோர்த்து
                       ஆழாழி மீதிலும் ஒரு நிலந் தன்னிலும்
                       இவ்விதம் ஏகுவர் இவ்விதம் ஏகுவர்
                       மும்முறை யுனக்கே மும்முறை யெனக்கே
                        மறுபடி மும்முறை யொன்பதாய் முற்றிட.
                போதும்! ஸ்! பூர்த்தியாயது மந்திரம்!
                 மகபதியும், பானுகோபனும் வருகிறார்கள்.
ம. களங்கமுந் தெளிவும் ஒருங்கே கூடிய இதைபோ லோர்தின மிதுவரை கண்டிலன்.
பா. இதற்கும் புரசைக்கும் எத்தனை தூரம் என்பார்? - என்ன  இவைகள்? வற்றலா 
           யுலர்ந்து, அலங்கோலமா யாடையணிந்து, இந் நிலவாசிகளைப்போற் 
          காணாவிடினும், அதன்மீ திருக்கின்றனவே? - உயிர் உள்ளனவோ நீங்கள்? 
          மாந்தர் உம்மை யின்னாரென வினவத்தக்கவைகளோ நீங்கள்?  தேரலாய்த் 
          தொங்கும் உங்கள் உதடுகளின்மீது ஒவ் வொருத்தியும் ஒரே காலத்தில் பிளவுடை  
          விர லொன்றை வைத்தலினால் நீங்கள் நான் கூறுவதை யறிவதாகக் 
          காட்டுகிறீர். நீங்கள் ஸ்திரீ ஜாதியா யிருக்கவேண்டும். ஆயினும் நீவிர் 
          அவ்வா றிருப்பதாக எண்ணுவதை யுங்களுடைய தாடிகள் ஆஷேபிக்கின்றன.
ம. கூறுங்கள் கூடுமானால், நீவிர் யாவர்?
மூ.மா. வாராய் மகபதி! வாழ்வாய் நீயும் காஸ்மீரச் சீமானே!
இ.மா.  வாராய் மகபதி! வாழ்வாய் நீயும் காந்தாரச் சீமானே!
மூ.மா. வாராய் மகபதி! வாழ்வாய் நீயும்! வாழ்வாய் வேந்தனாயினி!
பா. ஏன் ஐயா! ஏன் திடுக்கிடுகிறீர் இனியனபோல் செவிபடும் இவைகளைக் 
           குறித்து? ஏன் பயந்ததுபோல் காண்கிறீர்? சத்தியத்தின்மீ தாணைப்படி, 
           நீங்கள் உருவிலா அருவங்களோ, அல்லது வெளிக்குத் தோற்றுவதேபோல் 
           உண்மையில் உள்ளவரோ?- என் னருமைத் தோழனுக்குத் தற்காலே
           அருமையையும், இனி வரப்போகின்ற தோர் பெரும் பெருமையையும், அதன்மேல்  
           அரசனாவான் என்னும் ஆசையையுங் கூறி, அவரை ஆச்சரியத்திற் 
           கட்டுப்பட்டவராக ஆக்கினீா். எனக்கோ ஒன்றுங் கூறுகிலீா் நீர். 
           வருங் காலத்தின் வகை யறிந்து, எது விளையும் எது விளையாது எனக் கூற
           வகை யுமக் குண்டேல், உமது விருப்பையும் வேண்டாது. வெறுப்பிற்கும் அஞ்சாது  
           நிற்கும் என்னுடன் பேசுவீர்.
மு.மா. வாராய்!
இ.மா. வாராய்!
ழூ.மா. வாராய்!
மு.மா. மகபதியைவிடத் தாழ்ந்தவ னாயினும் மதிக்கப்படுவாய் மேம்பட்டவனாய்!
இ.மா.. அவனைப்போல் அதிர்ஷ்டசாலி யன்று, ஆயினும் அவனைவிட 
            அதிர்ஷ்டசாலி!
ழூ.மா. மன்னர்கள் உன்னிடம் உதிப்பார்கள், உலகில் நீ மன்னனாகாவிடினும்! 
             ஆகவே வாரீர் மகபதி, பானுகோபரே!
மு. மா. பானுகோப, மகபதியரே வாரீர்!
ம. பொறும், அறை குறையாய்ப் பேசுவர்களே! அதிகமாய்க் கூறும் எனக் கின்னும் 
           ஜனகன் மரணத்தால் நான் காஸ்மீரச்சீமா னானதை அறிந்திருக்கிறேன். ஆயினுங்  
           காந்தாரத்திற் கெப்படி? காந்தாரச் சீமான் சுகத்தோடு கூடிய உத்தம புருஷனா 
           யுயிரோ டிருக்கிறார். நான் அரச னாவதோ நம்பிக்கையி னெல்லைக்குட் 
           கிட்டப்படுவ தன்று, காந்தரச் சீமானாவது எவ்வளவு கடினமோ அங்ஙனமே 
           அதுவும். சொல்வீர், எவ்விட மிருந்து இந்த ஆச்சரியகரமான அறிவு வுமக்குக்
           கிடைத்தது? இந்தப் பாழாம் கானத்தில் ஏன் எங்கள் வழியினைத் தடுத்து இந்த 
           உற்பாதங்களை யுரைக்கின்றீர்? சொல்வீர், உங்கள்மீ தாணை யிடுகிறேன்.
                             (மாயாவிகள் மறைந்துபோகின்றன.)
*.    நீரிற் குமிழிபோல் இந் நில வுலகிலும் இருக்கின்றதுபோலும். அவைகளுட் 
          சோ்ந்தவை யிவைகள். எங்கு சென்று மறைந்தன அவைகள்?
ம. ஆகாயத்துள், உருவமா யிருந்து அருவமாகி காற்றுடன் காற்றாய்க் கரந்தன-
           இன்னுங் கொஞ்சம் இருந்திருக்கலாகாதா?
பா. நாம் பேசுகிறபடி யேதேனும் பொருள்கள் இங்கிருந்தனவோ? அல்லது புத்தியைச் 
          சிறையிட்டுப் பயித்தியத்தை விளைவிக்கும் மூலிகை யேதேனும் மூடத்தனமாய்ப் 
          புசித்தோமா?
ம. மன்னர்க ளாவர் நினது மைந்தர்கள்.
பா. மன்ன னாவாய் நீ.
ம. காந்தாரச் சீமானுங்கூட ; அங்ஙன மன்றே அறைந்தது ?
பா. அதே மாதிரி அவ் வசனங்களாற்றான்-யா ரிங்கே வருவது?
ரோஷனும், அங்குசனும் வருகிறார்கள்.
ரோ. மகபதி, அகஸ்மாத்தாய் நமது ரேசா் வெற்றியைப்பற்றி கேள்வியுற்றார்; 
            கலகக்காரனுடன் போர் புரிந்த உனது பேராண்மையைக் கருதுங்கால், உனது 
            செய்கையால் தனக் குண்டான ஆச்சரியமும், உன்னைப் புகழவேண்டு மென்கிற
           பேரவாவும், ஒன்றை யொன்று மிகுந்திட, ஒன்றுமோ கூறச் சக்தியற்றவ ராயினர்.  
           அங்ஙன மிருக்கையில், அன்றைத் தினமோ நடந்தேறிய மற்றைக் காரியங்களைக்  
          கருதுவாராகி நாராசீலரது நற் பெரும் படை மத்தியில், உன் கரமானது
         கொன்று குவித்த பிணக் குவியலனூடே, ஒன்றும் அஞ்சாது உயர்ந்து நிற்பதைக் 
         கண்டனர். மழைக் காலத்து நீர்த்தில்லைபோல் ஒருவர்மீ தொருவராய் 
         ஒற்றா்க ளோடோடியும் வந்து தனது ராஜ்ஜியத்தைக் கடும் போர் விளைத்துக் 
         காத்த உனது புகழைச் சுமந்தவராய், அவர்முன் வாரிக் கொட்டினர்.
அ. நமது தலைவராம் மன்னர், தமது சந்தோஷத்தை யுனக்குத் தெரிவிக்கும்படி 
          எங்களை யேவினர் உனக்குச் சன்மானஞ் செய்யும் பொருட் டன்று, வோ்
          சந்நிதானத்திற்குக் கொண்டேகும் பொருட்டே யாம்.
ரோ. பின் வரும் பெருமைக் கோர் முன் குறிப்பாக அவர் பொருட் டுன்னைக் காந்தாரச் 
          சீமா னெனும் பட்டப் பெயரால் அழைக்கும்படி கட்டளை யிட்டா ரென்னை.
பா. என்ன, பேய்கள் புகலுமோ மெய்யினை?
ம. காந்தாரச் சீமான் உயிருட னிருக்கின்றாரே, இந்த இரவல் மாியாதையால் 
         என்னை யேன் ஏளனஞ் செய்கிறீர்கள்?
அ. காந்தாரச் சீமானா யிருந்தவன், உயிருட னிருக்கின்றான் இன்னும், தான் 
          இழக்கத் தகுந்த தன துயிரைத் தாங்கி நிற்கின்றான் பெருந் தண்டனைக் 
          குட்பட்டவனாகி. நாரசீலர் படையுடன் தானும் ஒன்றாய்ச் சோ்ந்தனனோ, 
          அல்லது மறைவாயவர்கட்கு உதவி புரிந்தனனோ, அல்லது இரண்டையுமிழைத்து  
          தன் நாட்டிற்கு இறுதியைத் தேடினனோ அறிகிலேன் நான், ராஜத்துரோகி யென்று  
          ருஜூவில் தீர்மானிக்கப் பட்டு, உன்னத பதவியை ஒருமிக்க இழந்தனன்.
ம. (தனக்குள்) காஸ்மீர மாயது, காந்தாரச் சீமா னாயது. எதனினும் மேலானது 
            இன்னும் இருக்கின்றது பின்னால்- நீங்கள் எடுத்துக்கொண்ட கஷ்டத்திற்காக 
            வந்தனம். (பானுகோபனைப் பார்த்து) உனது மைந்தர்கள் மன்னர்க ளாவார் 
            என மதிக்க வில்லையா நீர்? காந்தாரச் சீமான் பட்டம் எனக்குத் தந்தவர்கள், 
           அவர்களுக்கு அந்த உன்னத ஸ்திதியைக் கொடுப்பதாக 
          வாக்களித்திருக்கிறார்க ளல்லவா?
பா. அதை முழுவதும் நம்புவதாயின், காந்தாரச்சீமான் பட்டம் பெற்றது மின்றி 
            மன்னனது மகுடத்தையே அடையும்படி உன்னை யுத்து மன்றோ? ஆயினும் இது  
           ஆச்சரியகரமே, பன் முறைகளில் நம்முடைய பழிக்கு நம்மை யிழுக்கும்
          பொருட்டு மெய்யினை யுரைக்கும் பொய்யாம் பேய்களும், பிறகு கொடும் 
          பாபச் செயல்களில் நம்மைக் கொண்டுபோய் மூழ்த்தும்பொருட்டு, முதலில் 
          அற்ப விஷயங்களில் உண்மையை யுரைத்து நம்மைத் தம் வச மாக்குகின்றன- 
          தம்பிமாரே, வாருங்கள், உங்களுடன் ஒரு வார்த்தை-
ம. (தனக்குள்) இரண் டுண்மைகள் கணக்காயின. அவை பின்வரும் முக்கியமாம் 
          மகுடாபிஷேக விஷயத்தைக் குறிக்கும் நற் சகுனமாம் முற்கூறுகள்போலும. 
          உங்களுக்கு மிகவும் வந்தனம் ஐயா- தெய்வீகமாய்த தொியப்படுத்தியது 
          தீமையா யிராது, நம்மையா யிராது-தீமையாயின், முடிவில் வெல்வதற்கு 
          அறிகுறியாக, முதலில் ஏன் எனக் குரைத்திருக்க வேண்டும் நான் காந்தாரச் 
          சீமானாகிய வுண்மையை? காந்தாரச் சீமா னாகினேன் நான்- நன்மை யாயின், 
          சுபாவத்திற்கு விரோதமாய், உள் ளிருக்கும் என் னிதயம் விலாப் புறத்திற் 
          போய் மோதி, எனது ரோமங்களெல்லாஞ் சிலிர்த்து நிற்க, அப்படிப்பட்ட 
          கொடுந் தொழிலைக் கருதிடவும் ஏன் என்னுள்ளம் இசைக்கின்றது? ஆபுத்து 
          எதிரில் நேரிடுங்கால் நமக் குண்டாம் பீதியைவிட என்ன நேரிடுமோ என்று நாம்
          எண்ணி ஏங்குவதே அதிக பயத்தைத் தருவதாம் மனத்தில் எண்ணமா யிருக்கும் 
          அருவமாம் கொலையானது, எனது ஆண்மையை யெல்லாம் அடியுடன் அசைத்து,  
          பஞ்சேந்திரியங்களின் தொழிலையும் பாழக்கி, இப்பாதகத்தை யெல்லாம்
          இருப்பதுபோல் எண்ணச் செய்கிறது.
பா. அதோ பாரும் நமது நண்பன் ஏதோ ஆலோசனையில் மூழ்கிக் கிடக்கின்றான்.
ம. (தனக்குள்) அதிஷ்ட வசத்தால் நான் அரச னாவ தானால், அவ்வதிர்ஷ்ட வசமே, 
          நான் முயலாமலே எனக்கு முடி சூட்டி வைக்கும்.
பா. நமது புதிய உடைகள் பழங்கத்திற்கு வருமுன் எப்படி நமது  உடலிற் படிந்து 
           நிற்காவோ, அங்ஙனமே அவனது புதிய பட்டங்களும் அவன்மீது தங்குகின்றன.
ம. (தனக்குள்) வருவது வரட்டும். காலமும் மணியும், மிகுந்த  கஷ்ட தினங்களிலும் 
           விரைந்தே யோடும்,
பா. தோழா, மகபதி, உனக்காகக் காத்துக்கொண் டிருக்கிறோம் நாங்கள்.
ம. உங்கள் மன்னிப்பை யெனக்குத் தந் தருளவேண்டும். மட்டித் தனமுள்ள என் 
         மூளை கடந்த விஷயங்களைப்பற்றி கலங்கி நின்றது. என் இனிய நண்பர்களே, 
         நீங்க ளெடுத்துக் கொண்ட கஷ்டமானது ஒவ்வொரு தினமும் நான் கவனிக்கும் 
         வண்ணம், என் மனமெனும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் வரையப்பட் 
         டிருக்கின்றது. நாம் மகாராஜாவிடம் போவோம்-நடந்த விஷயத்தைப்பற்றி 
         யோசியும். பிறகு, நமக்கு அவகாச மிருக்குங்கால் இிடையில் யோசித்ததைக் 
         குறித்து, நமது மனத்தில் இருப்பதை வெளிப்படையாய் ஒருவருக் கொருவர் கலந்து  
         பேசுவோம்.
மா. மிகவும் சந்தோஷத்துடன்.
ம. அதுவரையில் போதும்-வாரீர் நண்பர்களே!
                                  (எல்லோரும் போகிறார்கள்.)
காட்சி முடிகின்றது.
-------------------------------------------
அங்கம் 1. 
நான்காம் காட்சி.
    
 
இடம்-புரசை. அரண்மனை.
வாத்யகோஷம். தனகராஜன், மால்கோமளன், தனலாபன், லவணகன்,
        வேலைக்காரர்கள் வருகிறார்கள்.
த. காந்தாரன் கொலை செய்யப்பட்டனனோ? அவ் வேலையைப் பூண்டு 
         சென்றவர் இன்னும் திரும்பிலரோ?
மா. எம் மிறையே, அவர்கள் இன்னும் திரம்பி வந்திலர். ஆயினும் அவன் மடிந்ததைப் 
          பார்த்த ஒருவனுடன் கண்டு பேசியுள்ளேன்; அவன் தனது துரோகத்தை யெல்லாம்  
          ஒன்றும் ஒளியாது ஒப்புக்கொண்டு, மகாராஜாவின் மன்னிப்பை வேண்டி, தான் 
          இழைத்த தவறிற்காக மிகவும் வருத்தப் பட்டதாகவும், என்னிடம் தெரிவித்தான். 
          அவனது ஆயுளில், தன் ஆவியை விட்டுப் பிரிந்ததைவிட வேறொன்றும் 
         அத்தனைப் பொருத்த முடையதா யில்லை; தன்னுடைய பொருள்களெல்லா-
         வற்றினும் மிகச் சிறந்ததான தன் உயிரை, அவன் துச்சமாகப் பாவித்துத் துறந்தது, 
          சாகும் தருணத்தில் இப்படிச் சாதலே மேன்மை உடைத்து, என்று அவன் கற்றுப்
         பழகி நீங்கியதுபோல் காட்டியது.
த. அகத்தி னழகை முகத்திற் கண்டறிவத அசாத்தியமான  கலையாம். சந்தேகம் 
          சிறிது மின்றி நான் பூரணமாய் நம்பியிருந்த சீமா னவன்-
மகபதி, பானுகோபன், ரோஷன், அங்குசன் வருகின்றனர்.
         உத்தமனாம் உறவினனே வாராய்!- நான் உனக்குத் தக்கபடி நன்றியறிந்தவனா 
         யிராமை யெனும் பழி, என்மீது பெரும் பாரமா யிருந்தது இதுரை நான் எவ்வளவு 
         துரிதமாய் உனக்குக் கைம்மாறு செய்யப் பறந்தோடினும், நான் பிடிக்கக் கூடாதபடி,  
         அதற்கும் முற்பட்டு ஓடுகின்றாய். உனக்குத் தக்கபடி கைம்மாறு செய்ய, எனக்குச் 
         சக்தி யிருக்கும்படி, இதைவிட நீ எனக் கிழைத்த உதவி குறைந்திருக்கலாகாதா 
         வென்று கோரும்படி செய்கிறது; உள்ளதை யெல்லாம் உனக்குக் கொடுத்த 
        போதிலும், இன்னும் உனக்குக் கொடுக்க வேண்டியது அதிகம் உள்ளது, என்று 
         கூறுவதொன்றே, எனக்கு மிகுதியா யுள்ளது.
ம. எந்த ஊழியம் அரசற்குச் செய்வதற்கு அதிகமாய்க் கடன் பட்டுள்ளேனோ, அதைச் 
          செய்து முடித்தலே, அதற்குக் கைம்மாறு பெறுத லாகும். தங்களுடைய கடைமை 
          எங்களுடைய கடைமையை அங்கீகரிப்பதே யாகும் எங்கள் கடைமை உங்கள் 
           அரசையும் ஆட்சியையும், அன்பிற்குரிய மக்களையும் ஆட்களையும், காப்பதே 
          யாம். ஆகவே உங்களது புகழைக் காத்து உங்களது அன்பைப் பெறுதற்கு, எதை 
          நாங்கள் செய்தபோதிலும். எங்கள் கடைமையை நாங்கள் 
          நிரிவேற்றியவராகிறோமே- யொழிய வேறொன்று மில்லை.
த. நல் வரவாகுக உனக்கிங்கு!- நா னுனக் கிழைக்கும் கைம்மாறு வே ரூன்றி, பெறும் 
          விருக்ஷமாய் வளா்ந் தோங்குமாறு நான் முற்றிலும் பிரயத்தனப்படுகின்றேன்,- 
          உயர் குண உத்தமனாம் பானுகோபா, தாலவும் நமது நன்கு மதிப்பை நீயும்
          பெற்றனை, ஆகவே நீ எனக் கிழைத்த உதவியையும் நன்றாயறியவேண்டும்
          உலகம் உன்னை அன்புடன் ஆலிங்கனம் செய்து என்னிதயத்தில் 
          தாங்குகின்றேன்.
பா. அவ்விடத்தே நான் வளா்வதாயின் தேனா லுண்டாம் பலன் தம்முடையயே 
            யாகும்.
த. எனக் கிருக்கும் அதிக சந்தோஷமானது அங்காதபடி அதிகரித்துதண்ணீர்த் 
          துளிகளில் கரந்து மறைவதேபோல் காட்டுகின்றது,-குழந்தைகளே, உறவினரே, 
           சீமான்களே, என்னருகி லிருக்கும் நீங்க ளனைவரும், நமக்குப் பின் இவ்
         வரசை, நமது மூத்த குமாரன் மால்கோமளன் அடையும் படி நாம் ஏற்பாடு 
          செய்கிறோம் என்பதை அறிவீர் இனி நாம் அவனுக்கு இளவரசு பட்டம் 
          கட்டுவோம். இப் பெருமையை அவன்மாத்திரம் தனியா யடையாதபடி, உயர் 
          பதவியின் சின்னங்கள், ஒளி தரும் நட்சத்திரங்களைப்போல், தக்கவர் எல்லோர் 
          மாட்டும் பிரகாசித்தல் வேண்டும்.- இனி வாரநாசிக்குப் புறப்படுவோம், அவ்விடம்  
          அன்புத் தளையால் உம்மை இன்னும் அதிகமாய்க் கட்டி யணைப்போம்.
ம. மற்ற கஷ்டமெல்லாம் உமதுபொருட்டு மேற்கொள்வதன்று;  ஏற்பாடுக ளனைத்தும் 
           ஏற்றவாறு செய்யும்படி நான் முன்னால் ஏகி, தாம் வருவதைக் கூறி, எனது 
          மனைவியின் காதுகளை இ்ன்புறச் செய்கிறேன் ஆகவே, தாழ்ந்து நான் விடை
          பெற்றுக்கொள்ளுகிறேன்.
த. காந்தாரச் சீமானே! போய் வாரும்.
ம. (ஒரு புறமாய்) இளவரசு பட்டமா! இது என் வழி யடைக்கும் கல்லாம்; இதன் 
          முன் இடறியேனும் நான் விழவேண்டும், அல்லது இதைத் தாண்டியேனும் 
          குதித்திடல் வேண்டும். உடுக்காள்! உங்களது ஒளியை மறைத்திடுங்கள் ! எது
          கடுமையாம் காதகக் கோரிக்கைகளை காந்தி என்பது காணாதிருக்கட்டும், 
         கை செய்வதை கண் பாராதிருக்கட்டும் ஆயினும் நடந்தேறிய பின் கண்ணானது 
         எதைப் பார்ப்பதற் கஞ்சிடுமோ அது நடந்தேறிடுமாக!    (போகிறான்.)
த. உரைப்பது உண்மையே உத்தம பானுகோபா; குறைவிலா வீரம் அவனிடம் 
           குடிகொண்டி ருக்கிறது, அவனது பெருமையே எனக்குப் பே ருவகை தருகின்றது. 
           அதுவே எனக்கு அருமையாம் விருந் தாகிறது. நாம் அவனைப் பின்பற்றிச்
          செல்வோம். நம்மிடம் அவனுக் குள்ள பரிவினால் நம்மை நல் வரவழைக்க நமக்கு  
          மன்னே எகி யிருக்கிறான் இவனே உயர் வொப்பிலா உத்தம உறவினன்.
                                (வாத்யகோஷம் எல்லோரும் போகிறார்கள்.)
காட்சி முடிகின்றது
-------------------------------    
அங்கம் 1. 
 ஐந்தாங் காட்சி. 
    
இடம் -  வாரநாசி  மகபதியின் மாளிகை
மகபதியின் மனைவி ஓர் கிருபத்தைப் படித்த வண்ணம் வருகிறாள்.
ம.ம   "ஜயம் பெற்ற தினம் சந்தித்தன ரென்னை. மனிதர்கள் அறிவினும் மேம்பட்டது 
         அவர்களிடம் குடிகொண்டிருக்கிற தென்பதை ஐயந் திரி பற ஆராய்ந் தறிந்தேன். 
         அவர்களை யின்னும் வினவ நான் வேட்கை யுற்றபொழுது அவர்கள் காற்றுடன் 
         காற்றாய்க் கரைந்து கரந்தனர், அந்த ஆச்சரியத்தில் மூழ்கி நான் அசை வற்று 
         நிற்கையில், அரசனிடமிருந்து தூதர் வந்து, அவனை வரு மென்னைக் "காந்தாரச்
         சீமான்" என விளித்தனர் அந்ததப் பட்டத்தினால்தான் சிறிதுமுன், இந்த மாயாவிச்  
         சகோதரிகள் என்னை யழைத்து,  "வாழ்வாய் மன்னனா யினிமேல்" என்று இனி 
         வருங் காலத்தைக் குறிப்பிட்டனர். என் பெருமை யனைத்திற்கும் உரிமை 
         பூண்ட பெண்ணரசியே! உனக் கினி வாக்களிக்கப்பட்டிருக்கின்ற உத்தமப் 
         பதவியை யறியாது, சந்தோஷத்தில் உனக்குரிய பகுதியை நீ யிழக்கா வண்ணம், 
         இதை யுனக்குத் தெரிவித்தல் நலமென வெண்ணி அறிவித்தேன். இதை 
         யுன்னிதயத்தில் மறவாது வைத்து சுகமாய் வாழ்ந்திடுவாய்-"  காஸ்மீரச் சீமானாகி  
         காந்தாரச் சீமானு மானீா், வாக் களித்த வண்ணம் மற்றொன்றும் ஆகுவீர். 
        ஆயினும் உமது சுபாவத்தைக் கருதுங்கால் அஞ்சுகின்றேன். சீக்கிரமான 
        மார்க்கத்தைச் சிக்எகனப் பிடியா வண்ணம், மனுஷ்ய ஜன்மத்திற்குரிய கருணை 
        ரசம் உம்மிடம் மட்டின்றி குடிகொண்டிருக்கிறது உன்னதத்தை யடைய இச்சை 
        யிருக்கிற தும்மிடம், பெரும் பதவியை யடைய வேண்டுமெனும் பேரவா இல்லா
        தவரன்றுநீர், ஆனால் அதனோடுண்டாங் கஷ்டமின்றி யதைப் பெற விரும்புவீர். 
        எந்த உன்னதத்தை யடைய அவா வுண்டோ, நாட விரும்புவீர் அதை நற்செயலால்.  
        வஞ்சனை செய்ய நெஞ்சந் துணியீர், ஆயினும் மோச வழியால் வெல்ல 
        ஆசைப்படுவீர் காஸ்மீரக் கனவானே! "அதைப் பெற விரும்பினால் இதைச் 
         செய்துதான் தீர வேண்டும்" என்பதை நன் கறிவீர். ஆயினும் அதைச் செய்யாம 
         லிருக்க வேண்டும் என்னும் விருப்பத்தைவிட, செய்வதற் கஞ்சும் வெறுப்பே
         உம்மிடமுள்ளது. வாரு மிங்கே விரைவில்! விதியும் மாயையின் உதவியும், உமது 
         சிரசிற் சூட்டியதுபோன்ற செம்பொன் மகுடத்தை நீர் பெறுவதற்குத் தடையா 
         யிருப்பதையெல்லாம், என் நாவின் வல்லமையால் பறந்தோடச் செய்து,
         எனது தைாியத்தை யுமது செவியி னுட் புக விடுகின்றேன்.
[ஓர் தூதன் வருகிறேன்.]
          என்ன உன் சமாசாரம்?
தூ. இன்றிரவு அரசா் இங்கு வருகிறார்.
ம.ம. இவ்வா றுரைக்க வுனக்குப் பித்தம் பிடித்திருக்க வேண்டும். உனது எஜமான் 
           அவருட னில்லையோ? அங்ஙன மிருந்தால் ஆயத்தப்படுத்துப்படி 
          அறிவித்திருப்பா ரன்றோ அவர்?
தூ. மன்னிக்க வேண்டும், அது உண்மைதான். நமது சீமானும் வருகிறார். என்னுடன் 
         வேலை செய்யும் ஒரு ஆள் அவருக்கு முன்னால் விரைந் தோடிவந்து மூச்சுத் 
         தடுமாறி மடிந்தது போல் மூா்ச்சையாய்க் கிடக்கிறான், அவனுக்கு இந்தச்
         சமாசாரம் கூறத்தா னிருந்தது மூச்சு.
ம.ம. அவனுக்குச் சிகிச்சை செய்யுங்கள். அவன் முக்கியமான செய்தி கொண்டு
         வந்திருிக்றான். (தூதன் போகிறான்.) மரணத்திற்காக என் மாளிகையிற் புதும் 
         மன்னவன் தனகன் வரவைக் கூவி யழைக்குங் காகத்தின் குரலுங் கம்மி 
        யிருக்கின்றது சாக்காட்டின் நினைவுடன் சாா்ந்து நிற்குஞ் சவப்பை சாசங்களே! 
        இங்கு வந்து என் பெண்மையைப் போக்கி விடுங்கள். உள்ளங் கால்முதல் 
        உச்சி யளவாகப் பூரணமாகக் கடுங் குரூரத்தினால் பூரிக்கச் செய்யு மென்னை! 
        என்னுடலிலுள்ள இரத்தத்தைத் தடிக்கச் செய்யுங்கள். சுபாவத்தினா லுற்பவிக்குங் 
         கருணையினால் என் குரூரமான எண்ணததினின்றும் நான் தளரா வண்ணம், 
         அன்றியும், என் முயற்சிக்கும் அதன் முடிவுக்கும் இடையில் நின்று சமாதானஞ்
        செய்யாதபடி, பச்சாத்தாபம் உட் புகும் மார்க்கத்தை நிச்சயமாய் அடைத்துவிடுங்கள்  
        யமனார் ஏவலாளிகளே! கண் ணில்லாக் கபந்தங்களாய் இயற்கையா லுண்டாம் 
        இடுக்க ணருகில் எங்கு நீ ருற்றபோதிலும், ஸ்திரீயாம் என் ஸ்தனத்தினிடையுள்ள 
        அமிர்தத்தை ஆலகால விஷமா யாக்குவீர்! அந்தகாரமே! என்னருகில் வாராய், 
        கூா்மையான என் கத்தி அது உண்டுபண்ணுங் காயத்தைக் காணாதபடியும், 
        ஆகாயத்தின் வெளிச்சமானது அந்தகாரத்தின் மீப்போர்வையை நீக்கிப் பார்த்து 
        "நிறுத்து, நிறுத்து" என்று தடுக்கா வண்ணமும், நரகத்தின் நல்ல கரும் புகையா
        லுன்னை மூடிக்கொள்வாய்"-
[ மகபதி வருகிறான்.]
        காஸ்மீரச் சீமானே! காந்தாரக் கோமானே! இனி வரப்போகிற பெரும் வாழ்வால் 
        இவ் விரண்டிலும் உயர்ந்தோனே! மௌட்டியமாம் தற்காலததினின்றும் உமது 
        நிருபங்க ளென்னை உன்னதமாம் எதிர்காலத்திற்குக் கொண்டேகின. இனி
        வரப்போகின்றதை இக்ஷணமே நான் உற் றுணருகிறேன்.
ம. கண்ணினுமினிய காதலியே, தனகன் இவ்விடம் வருகின்றார் இன்றிரவு.
ம. ம. வந்து, எப்பொழுது போகிறா ரிவ்விட மிருந்து?
ம. நாளைக்கு, அவர் நிச்சயத்திருக்கிறபடி.
ம.ம. ஓ! ஒரு நாளுங் காணான் ஒள்ளிய சூரியன் அந்த நாளை! என் நாதா, உமது 
          முகமானது மனிதர்கள் ஆச்சரியமான விஷயங்களைப் படித் தறியத் தக்கதோர் 
          புத்தகம்போல் விளங்குகிறது. காலத்தின் கண்ணைக் கவர காலத்திற் கொத்தபடி
          காணும். கண்ணினாலும் கையினாலும் வாக்கினாலும் நல் வரவழைப்பதுபோல் 
          காட்டும் அழகிய புஷ்பத்தைப்போல் மேலுக்குக் காட்டி அதன் கீழிருக்கும் 
        அரவாயிரும். வருகின்றவருக்கு நாம் தக்க ஏற்பாடு செய்யவேண்டும். இன்றிரவு 
        நடக்கவேண்டிய பெரும் வேலையை என் வசம் ஒப்பிவியும். அது இனி வரப் 
        போகின்ற எல்லா இரவு பகல்களுக்கும் நமக்கே அர சுரிமையையும் அதிகாரத்தையும்  
        அளித்திடும்.
ம. இன்னும் இதைப்பற்றி ஆலோசிப்போம் நாம்.
ம.ம. முகத்தைமாத்திரம் தெளிவாய் வைத்திடும்; முகத்தை வேறு படுத்தல் எப்பொழுதும் 
          பயத்தை வரவழைத்தலாம்.- மற்றதை யெல்லாம் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.
                                  (போகிறார்கள்.)
                    காட்சி முடிகிறது.
-------------------------------  
அங்கம் 1. 
 ஆறாம் காட்சி. 
    
 
இடம்- மகபதியின் அரண்மனை முற்றம்.   தீவர்த்தி வெளிச்சம்.
தனக்ராஜன், மால்கோமளன், தனலாபன், பானுகோபன், லவணகன்,
மேகதூமன், ரோஷன், அங்குசன், வேலைக்காரர்கள்  வருகிறார்கள்.
த. இந்த மாளிகையானது ரம்மியமான இடத்திற் கட்டப்பட்டிருக்கிறது. காற்றானது 
          மெல்லென வீசி, நமது ஐம்பொறிகளுக்கும் இனிய சந்தோஷத்தை யுண்டு
          பண்ணுகிறது.
பா. இள வேனிற் காலத்து விருந்தாளியாம் ஆகாயத்தை யளாவிய மாளிகைகளில் 
          கூடு கட்டும் இச் சிறு பட்சி, இவ் விடத்தில் விரும்பித் தன் இனிய இருப்பிடத்தைச்  
          செய்து கொண்டபடியால், இவ் விடத்தில் ஆகாயத்தின் காற்றானது அழகுற 
          வீசுகிறதென ஒப்புக்கொண்டதாகும். இம் மாளிகையில், அலங்கம் கோபுரம் 
          உன்னத ஸ்தான மெங்கணும், இச் சிறுபட்சி ஊச லாடும் தன் கூடு கட்டி முட்டை
         யிட் டிருக்கின்றது. அவைகள் அதிகமாய்க் கூடு கட்டி வாழ்ந்து வரும் இடங்களி 
         லெல்லாம் காற்றானது அதிக ரமணீயமா யிருக்கிறதை நான் கண்டிருக்கிறேன்.
[மகபதி மனைவி வருகிறாள்.]
த.  இதோ, இதோ நமக்கு விருந்தளிக்கும் பெண்மணி.- நம்மைப் பின் தொடரும் 
          அன்பானது சில சமங்களில் நமக்கு அதிக கஷ்டத்தையே தருகின்றது. ஆயினும் 
         அதை அன்பெனக் கருதி அதைக் கொண்டாடுகிறோம். இதனால் நீங்கள்
           படும் கஷ்டத்திற்காக ஈசன் நமக்குச் சன்மானம் செய்யும்படி பிரார்த்திக்க 
          வேண்டிய மார்க்கத்தையும், உமது கஷ்டத்தின்பொருட்டு என்னை வந்தனம் 
          செய்ய வேண்டிய மாக்கத்தையும், உங்களுக்கு நான் கற்பிக்கிறேன்.
ம.ம. நாங்கள் செய்யும் மரியாதை யெல்லாம், ஒவ்வொரு விஷயத்திலும் 
            இரட்டிக்கப்பட்டு, அதன்மேலும் இரு மடங்காகச் செய்யப்பட்டாலும், மகாராஜா  
           அவர்கள் எங்கள் வீட்டிற்குச் செய்த அளவிடக் கூடாப் பெரும் மரியாதைகளுக்கு
          எதிரில் வைத்திடவும். ஏலாத, அற்பத் தன்மை உடையனவாம். முன் பிருந்ததுடன்,  
          கடைசியிற் செய்த கௌரவங்களையுங் கணக் கிட்டுப் பார்த்தால், எந் நாளும் 
          ஈசன் உமக்கருளும்படி பிரார்த்திப்பது எங்கள் கடைமை யாகும்.
த.  காந்தாரச் சீமா னெங்கே?  நாம் அவரை அதிக விரைவில் தொடா்ந்து வந்தோம். 
          அவருக்கு முன்னால்இங்கு வந்து சேரவேண்டுமென்றும் எண்ணி யிருந்தோம். 
          ஆனால் அவர் நன்றாய்ச் சவாரி செய்கிறார்.  அன்றியும் அவரது பெருத்த
          அன்பானது, அவர் குதிரையை யுந்தும் முள்ளைப்போல் அதிக கூா்மை 
         யானதால், நமக்குமுன் தன் வீடு வந்து சேரும்படி உதவிய தவருக்கு. அழகிய 
         சீமாட்டியே, நாம் உமது விருந்திரையாக வந்தோம் இன்றிரவு.
ம.ம.  உங்களுடைய ஊழியர்கள் தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும், 
          தங்களுடையதென்று கூறும் எல்லாவற்றையும்,  தங்கள் மனப்போல் கணக்கிட்டுப்  
          பார்த்துக்கொண்டு தங்களுடையதை தங்களிடம ஒப்புவிக்க எக்பொழுதுஞ்  
          சித்தமாயிருக்கிறார்கள்.
த.  என்னை மகபதியிட மழைத்துச் செல், அவர்மீது ததிக அன்பு வைத்தோம்.  
          நம் தருளானது அவ ரிடத்தில் இன்னும் அதிகமாய் விருத்தி யுடையும் நாம் 
          போவோம் வாராய்.
                                  (போகிறார்கள்.)
    காட்சி முடிகின்றது.
----------------------------
அங்கம் 1. 
 ஏழாங் காட்சி. 
    
இடம்-மகபதியின் மாளிகை.
வாத்யகோஷம் வெளிச்சங்கள். அநேகம் பரிசாரகர் போஜன பாத்திரங்கள் 
முதலியன கொண்டு போகிறார்கள். பிறகு மகபதி வருகிறான்.
ம. செய்ததும் அதனுடன் எல்லாம் முடிவதானால், அதைச் சீக்கிரஞ் செய்து முடித்தலே
          தகுதியாம். கொலையானது பிற்பயனை யெல்லாம் பாழாக்கி அழித்து, தன் 
         முடிவினால் வெற்றியைப் பற்றுமாயின், இவ் வொரு கொடுந் தொழில்
         அனைத்திற்கும் ஆதியும் அந்தமு மாவதானால், இங்கே யிவ்விடத்திலேயே, 
         காலமெனும் வேலையின் கரையிலே, திட்டையிலே, எல்லாம் தீர்ந்திடுவதானால், 
         இனி வரும் வாழ்வை எதிர்த்துக் குதித்திடுவோம்.  ஆயினும் இவ் விஷங்களி
         லெல்லாம்  நியாய மொன்று இவ்விடத்திலேயே இருக்கின்றது. நாம் கொடிய 
         ஏவல்களுக்கே கற்பிக்கின்றோம் அவைகள் நம்மிடமிருந்து கற்றவின், 
        கற்பித்தவனையே கசக்கி வாட்ட அவன் மீதே திரும்புகின்றன. இரு பக்கமும் 
        சமமாக்கும் இந்த  நியாயமானது, நாம் விஷ மூட்டிய கிண்ணத்திலிருக்கும் 
        உணவை நாமே ருசிக்கும் படி, உந்துகின்றது. இங்கு வந்திருக்கும் அவரைக் 
         காத்திடவேண்டியது இரு மடங்கு என் கடைமையாம் முதலில் நான் அவரது 
        ஆளுகைக் குட்பட்டவன், அன்பிற் குரிய பந்து, இவை யிரண்டுமே நான் 
        எண்ணிய தீத் தொழிலுக்குத் திருடமான ஆஷேபனை களாம் பிறகு, என் 
        விருந்தினர் அவர்; ஆகவே அவரைக் கொலை செய்யவரும் தீத் தொழிலுக்குத் 
        திருடமான ஆக்ஷேபனைகளா;ம் பிறகு, என் விருந்தினர் அவர்; ஆகவே அவரைக் 
        கொலை செய்யவரும் கொடியோனைத் தடுக்கும் வண்ணந் தாப்பாளிட
        வேண்டிய தன்றோ என் கடைமை? கத்தியை நானே கையி லேந்துவ தன்றே! 
         அன்றியும், இந்தத் தனகராஜன் தன் அருங்குணங்களை யெல்லாம் அதிக 
        சாந்தத்துடன் வகித்து, தன் உன்னதப் பதவியில் உள்ளந் திரி ப்னிறி நடந்த  
உத்தமரா
        யிருக்கின்றார் ஆகவே அவர் அருங் குணங்க ளெல்லாம்,  அவரது ஆவியைப் 
        போக்கலென்னும் அம் மஹா பாதகத்தை, செய்வமே வந்து தெள்ளிய குரலால் 
         எடுத்துத் தூற்றுவதேபோல் அனைவரும் பழித்திடச் செய்யும். பச்சாத் தாபமானது 
         இப்பொழுதுதான் பிறந்த பச்சைப் பாலனைப்போல், கண்ணுக்குப் புலப்படாக் 
         காற்றையே கடிமா வாக ஊா்ந்து, பல திசைகளிலும் பறந் தோடி, பயங்கரமான 
         இப் பாதகத்தைப் பலருடைய கண்களுக்கும் புலப்படச் செய்து, அவர்கள்  
சொரியுங்
         கண்ணீரினால் காற்றினது ஆற்றலையே அடக்கிவிடும் – அதிக வுயரந் துள்ளிக் 
        குதித்துத் தன் காலைத் தானாக உடைத்துக்கொள்ளத் தாவிடும் பே ரவாவினைத் 
        தவிர, என தெண்ணத்தி லென்னை யுந்துதற்கு வேறொரு உந்து முள்ளும் 
         என்னிடங் கிடையாது.
[மகாபதி மனைவி வருகிறாள்.]
         என்ன இப்பொழுது? என்ன விசேஷம்?
ம.ம. அவர் சாப்பிட்டு முடியுஞ் சமய மாயது.-ஏன் அந்த அறையை விட்டு வந்தீர்?
ம. அவர் என்னைப்பற்றி கேட்டாரா?
ம.ம. ஆம், கேட்டார், அதை அறியீரா நீர்?
ம. இவ் விஷயத்தில் இதைக் கடந்து செல்லோம். இப்பொழுது தான் அவர் 
          என்னைக் கௌரவப்படுத்தி யிருக்கிறார். அன்றியும் நான் எல்லாவித 
         ஜனங்களும் என்னை நன்கு மதிக்கும்படி செய்திருக்கிறேன்; அப் பெருமையை 
        நான் புதிதாய் மேற்கொண்டு விளங்கச் செய்வதை விட்டு அத்தனை விரைவில்
         எறிந்துவிடுதல் ஏற்றதன்று.
ம.ம. குடி ளெறியால் மதி மயங்கி யிருந்ததோ வுமது கோரிக்கை, ஆதியில் இவ் 
          விஷயத்தில் ஆயத்தப்பட்டபொழுது? பிறகு தூங்கி இப்பொழுது கண் விழித்ததோ,  
         முன்பு தாராளமா யிழைத்ததை, இப்பொழுது பயத்துடன் நடுங்கிப் பார்த்திட? 
         இதுமுதல் உமது காதலையும் இதைப்போலவே யெண்ணுவேன். 
         இச்சையிலிருப்பதுபோல், உமது சொந்தச் செய்கையிலுஞ் சௌரியத்திலும் 
         ஒரே மாதிரியா யிருக்கவுள்ளம் நடுங்குகிறீரோ? வாழ்க்கைக் கோர் உத்தம
         பூஷண மென்று நீர் கருதும் ஒன்றை யுடையவராகி, உமது மதிப்பிலேயே 
         பயங்காளியாய்ப் பழிக்கப்பட்டு "நான் துணியேன்" என்பது "நான் விரும்புகிறேன்"  
         என்பதை யிடைவிடாது பின் தொடரச் செய்து, பழய கதையி லுள்ள எளிய
         பூனையைப்போல் உயிர் வாழ வுள்ளங்கொண்டீரோ?
ம. போதும் நிறுத்து, உன்னை வேண்டிக்கொள்ளுகிறேன். மனிதனாய்ப் பிறந்தவன் 
          செய்வதற் கேற்றவை யெல்லாம் செய்யத் தைரிய மிருக்கின்ற தென்னிடம், 
          அதற்குமேல் செய்யத் தைரியப்படுவோன் மனித னன்று
ம.ம. ஆனால் எந்த மிருகம் அது, இத் தொழிலை உம்மை யெனக்குத் தெரிவிக்கும்படி 
          செய்தது? உமக்குச் செய்யத் தைாியமிருந்த பொழுது, அப்பொழுது நீர் 
          மனிதனா யிருந்தீர்  நீர் இருந்ததினும் உந்நத ஸ்திதியை யடைவதற்கு, 
          மனிதர்களுக் கிருப்பதைவிட அதிக ஆயத்தமுடையவரா யிருந்தீர்.
          அப்பொழுதோ காலமு மிடமுங் கைகூட வில்லை ஆயினும் அவ் விரண்டையுஞ் 
          சிருஷ்டித்துக் கொள்ளச் சித்தமா யிருந்தீர். இப்பொழுதோ அவைகளாக 
          ஏற்பட்டன ஆகவே தக்கபடி யவைகள் வாயத்தது உம்மைத் தளரச் செய்கிறது.
         நான் பாலூட்டி யிருக்கிறேன், என் பாலை யருந்தும் பால்கன்மீது வைத்திடும் 
         பட்சம் என்ன அருமையான நோக்கிப் புன்னகை புரிந்துகொண் டிருக்கும்பொழுதே  
         பற்களில்லா அதன் வாயினின்றும் என் பயோதரத்த யீர்த்து அதன் தலையை 
        யுடைத்திருப்பேன் தரையின்மீது மோதி, நீர் இதற்காகச் சத்தியஞ் செய்தபடி 
        நான் செய்திருப்பேனாயின்!
ம. ஒரு வேளை நாம் தவறுவோ மாயின்?
ம.ம. நாம் தவறுவோம்! உமது தைரியத்தைமாத்திரம் பிடிப்புள்ள இடத்தில் 
         முடிக்கிவிடும், பிறகு நாம் தவற மாட்டோம். தனகராஜன் உறங்குங்கால் –அதுவும்
         இன்றைத்தினம் அவர் செய்த கடும் பிரயாணம் அவருக்குத் தூக்கம் நன்றாய் 
        வரச் செய்யும்-அவரது இரண்டு காவலாளிகளையும் மதுபானம் அதிகமாய்க் 
         கொள்ளச் செய்து, மூளைக்குக் காவலாளியாகிய மதியை மங்கச் செய்து, அறிவின் 
        இருப்பிடத்தை சக்தி யற்றதாய் ஆக்கிவிடுகிறேன். பன்றியைப் போல் உறங்கி, 
         மடிந்தவர்கள்போல் மதுபானத்தால் அவர்கள் மதி மயங்கிக் கிடக்கும்பொழுது, 
         காவலிழந்த தனகனை, நீரும் நானு மென்னதான் செய்யக் கூடாது? நாம் புரியும்
         பெருங் கொலையின் அறி குறிகளை அவர்கள் சுமக்கச் செய்வோ மாயின், எதையும்  
         வகிக்கத் தக்க அந்த வேலையாட்கள்மீது எந்தப் பழிதான் நாம் போட லாகாது?
ம. ஆண் பிள்ளைகளையே நீ பெறுவாயாக, எதற்கும் அஞ்சா உன் ஆணவம் ஆண் 
         மக்களையே உண்டாக்கல் வேண்டும்! அவரது அறையிலே உறங்கும் மயங்கிக் 
         கிடக்கும் அவ் விருவர்களையும் இரத்தத்தினால் குறி செய்து, அவர்களுடைய 
         கத்திகளையே உபயோகிப்போ மாயின், அவர்களே செய்ததாக எல்லோராலும் 
         எண்ணப்படாதா?
ம.ம. அவர் மடிந்ததற்காக நாம் பாராட்டும் அழுகைக் கோஷ்டத்தையும் 
           துக்கத்தையும் கண்டு எவன் வேறாக அதை மதிக்கத் தைரியம் கொள்வான்?
ம. நான் தீர்மானித்துவிடடேன். என் னுடலி லுள்ள அவயவங்களை யெல்லாம் 
         இப் பயங்கரமான தொழில் புரிவதற்கு முடுக்குகின்றேன். போ; வெளிக்கு 
         வெகு அழகாய்க் காட்டி மோச வழியில் காலத்தைக் கழி மோசஞ்ச செய்யும் 
         ஹிருதயம் அறிந்ததை, மோசம் செய்யும் முகமானது மூடிக் காக்க வேண்டும்.             
(போகிறார்கள்.)
   காட்சி முடிகின்றது.
---------------------------
இரண்டாம் அங்கம். 
  முதல் காட்சி. 
     
இடம்-மகபதி யரண்மனையின் முற்றம்.
பானுகோபனும், அவனுக்கு முன்னால் ஒரு தீப் பந்தத்தைக் கையிற்கொண்டு பாலையனும், வருகிறார்கள்.
பானு. இரவு எவ்வளவு ஆயிருக்கும், பையா?
பா. சந்திரன் மறைந்துவிட்டான் நான் மணி யடித்ததைக் கேட்கவில்லை.
பானு. பனிரண்டு மணிக்குச் சந்திரன் மறைகிறான்.
பா. இல்லை யண்ணா, இ்ன்னும் பொறுத்து என்று எண்ணுகிறேன். பானு. பொறு, 
          என் கத்தியை வாங்கிக்கொள். வியர்த்தமாக எரிவானேன் என்பதுபோல் 
         ஆகாயத்தின் விளக்குகளெல்லாம் அவிந்து போயின. அதையும் நீயே 
          யெடுத்துக்கொள். மறுத்தற் கரிய நித்திரையானது பெருஞ் சுமையைப்
         போலென்னை வருத்துகின்றது, ஆயினும் உறங்க எனக்கு விருப்ப மில்லை. 
         கருணைக் கடலே! சும்மா இருக்கும்பொழுது சுபாவத்தால் எனக் குண்டாம் 
         கெட்ட எண்ணங்களை அடக்கி ஆளும்-
[தீப் பந்தம் பிடித்த ஒரு சேவகனுடன் மகபதி வருகிறான்.]
         என் கத்தியைக் கொடு. யார் அங்கே?
ம. ஒரு நேயன்.
பானு. என்ன ஐயா, தாங்க ளின்னும் படுக்கப் போகவில்லையா? அரசா் உறங்கப் 
           போய்விட்டார். அவர் இதுவரையி லில்லாதபடி மிகுந்த சந்தோஷத்தி லிருந்தார், 
           உமது உத்தியோ கஸ்தருக்கெல்லாம் உயர்ந்த வெகுமதிகளை யனுப்பி 
          யிருக்கின்றார். விருந் தளிப்பதில் உவமை யில்லா உத்தமியெனப் பெயரிட்டு 
          இந்த வைடுரியத்தை யுமது மனைவிவசம் ஒப்புவிக்கச் சொன்னார் அளவிடக்கூடா  
          அக மகிழ்ச்சியில் மூழ்கி யிருக்கின்றார்.
ம. ஆயத்த மில்லாதபடியால் நமது மனமானது குறைக்குக் குற்றேவல் புரியவேண்டி 
          வந்தது. அன்றேல் மட்டின்றிச் செய்து மகிழ்ந்திருப்போம்.
பானு. எல்லாம் சரியாயது-நான் கனவு கண்டேன் நேற் றிரவு, நாம் கண்ட மாயாவிச் 
          சகோதரிகள் மூவரைப்பற்றி கொஞ்சம் உண்மையை அவைகள் உமக்குத் 
          தெரிவித்தன.
ம. அவர்களைப்பற்றி நான் நினைப்பதில்லை. ஆயினும் ஒரு மணி அவகாசம் நமக்கு
          வாய்த்திடுமாயின் அவ் விஷயத்தைப்பற்றி வார்த்தை யாடுவதில் கழிப்போம் 
          அதை, உமக்கும் அவகாச மிருப்பதானால்.
பானு. உமக்கு விருப்பமா யிருக்குஞ் சமயமே.
ம.  என் மனத்தி னிச்சைப்படி நீரும் ஏற்பதானால், அச் சமயம் வாய்க்குங்கால், 
            உமக்கும் உன்னதமாம் பெருமையை யுண்டு பண்ணூம் அது.
பானு.  விருத்தி செய்ய முயல்வதில் இருப்பதை யிழக்காமல், மனத்தைக் களங்க 
           மற்றதாய் வைத்து, மன்னற் குரிய கடமையில் பிறழாதவனாயு மிருப்பதானால், 
          உமது புத்தி மதியைக் கேட்க விரும்புவேன்.
ம. நல் லுறக்கம் உண்டாகுக அதுவரையி லுக்மகு!
பானு.  பாக்கியம் ஐயா, உமக்கும் அப்படியே கோருகிறேன்.
                  (பானுகோபனும், பாலையனும் போகிறார்கள்.)
ம. நீ போய், உனது தலைவியை எனது பானம் சித்தமானவுடன் மணியினை 
          அடிக்கும்படி நான் வேண்டியதாகச் சொல். படுக்கப்போ நீ.          
         (வேலையாள் போகிறான்.)
கட்கமா அது, என் னெதிரில் நான் காண்பது, கைப் பிடு என் கரத்தின் புறமாக? 
         இதோ, கைப்பற்றுகிறேன் கெட்டியா யுன்னை. கையிற் காணேன் உன்னை, 
        ஆயினுங் கண்ணூக்குப் புலப்படுகின்றாய் இன்னும். கொலைக் குரிய தோற்றமே, 
         கண்களுக்குப் புலப்படுவதேபோல் கைக்கு அகப்படமாட்டாயா என்ன?- 
         அல்லது மருண்ட மனத்திற்கு மாத்திரம் தோற்றுங் கட்கமோ நீ? வெப்பத்தால் 
         குழப்பப்பட்ட மூளையினின்றும் உண்டாம் மாய்கையின் சிருஷ்டியோ?
         இன்னும் உன்னைக் காண்கின்றேன், இப்பொழுது என் உறையினின்றும் நான் 
         எடுக்கும் உடைவாளைப்போல் பரிசிக்கத் தக்க உருவம் உடைத்தாய்த்தான் 
        தோற்றுகிறாய். நான் போய்க்கொண்டிருந்த வழியை யெனக்குச் சுட்டிக் காட்டு
        கின்றாய்! இதுபோன்ற ஆயுதத்தையே நான் உபயோகிக்க எண்ணினேன். எனது 
         கண்கள் மற்ற இந்திரியங்களைப் பார்க்கிலும்மடத்தன்மை யடைந்தனவா யிருத்தல்  
         வேண்டும், அன்றேல் அவைகள் அனைத்தையும்விட அதிக மேம்பட்டதா 
          யிருக்கவேண்டும். மறுபடியும் நான் உன்னைக் காண்கின்றேன்; கூா்மையாம் 
          உனது நுனியில் கட்டியிருக்கின்றது இரத்தம்! அங்கு நான் அதை மன்பு 
          காணவில்லையே!-  இதெல்லாம் ஒன்று மில்லை; நான் செய்யப் புகுங் கடுந்
          தொழிலே என் கண்களுக்கு இவ்வாறு தோற்றச் செய்கிறது-இப்பொழுது 
          உலகத்தின் ஒரு பாதி பாகத்தில் சிருஷ்டி யெல்லாம் ஜீவன் அற்றதுபோல் 
         காணப்படுகிறது இமையினால் மூடப்பட்ட உறக்கமானது கடுங் கனவினால்
         கலக்கப்படுகிறது; மாயாவிக ளெல்லாம் தங்கள் மருள்  கொண்டாட மாநில 
         மெங்கணூம் பலியிடும் சமயம் இது. வெதும்பிச் சிலிர்த்த வெங் கொலையானது 
         காவலாளி கூப்பிடுவதேபோல், இரவில் ஜாமந்தோறும் குரைத்திடும் கோ
         நாயால் எழுப்பப்பட்டு, இம்மாதிரி மெல்லெனத் திருட்டுத்தனமாய், இந்திரன் 
         அகல்யையை அணையச் சென்ற அடியுடன், தன் எண்ணத்தைப் பூா்த்தி செய்யும்  
        இடத்திற்கு பூதப் பைசாசத்தைப்போல் நடக்கின்றது. நடுக்கமற்ற, உறுதியாய் 
        ஸ்தாபிக்கப்பட்ட நா நிலமே, என் காலடிச் சப்தத்தைக் கேளாதே!- அதனால், 
        அவைகள் போகும் வழியை யறிந்து, வெறுங் கற்களும் நான் இருக்கு மிடத்தை 
         வெளியிடுமென நான் அஞ்சவேண்டிவரும், அன்றியும் தகுந்த இச்சமயத்தில் 
         அக் கொடுங் கொலை, நிறைவேறாதபடி தடைபடும். நான் பயப்படும்வரை, 
        அவர் உயிருட னிருக்கிறார்; செய் தொழிலின் சூட்டினை வாய்ப்படும் 
        வார்த்தைகள் தணித்துக் குளிரச் செய்கின்றன. (ஒரு மணி அடிக்கிறது.)  நான் 
        போகிறேன், வேலை முடிந்தது மணியானது என்னை அழைக்கின்றது.- தனகனே! 
         அதைக் கேளாதீர். அது உம்மை நரகத்திற்கோ, சுவர்க்கத்திற்கோ அழைத்துச் 
         செல் லும் பறையின் நாதமாம்!
         
   காட்சி முடிகின்றது.
------------------------------------
அங்கம் 2. 
 இரண்டாம் காட்சி .  
    
இடம்-அதே யிடம்.
மகபதி மனைவி வருகிறார்.
ம.ம. அவர்களுக்கு மதி மயக்கத்தைக் கொடுத்தது எனக்கு மனோ திடத்தைத் தந்தது. 
          அவர்கள் உணா்ச்சியை யழித்தது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது-
          பொறு!-  கேட்போம்! சீறியது ஆந்தை! எல்லாவற்றிலும் கடுங் குரலையுடைய 
          சுடுகாட்டுப் பட்சியிடுங் கூச்சல்!- இந் நேரம் பிரவேசித் திருப்பார் கதவுகள் 
          திறக்கப்பட் டிருக்கின்றன; மதி மயங்கிக் கிடக்குங் காவலாளிகள் தங்கள் காவலை  
          மறந்து குறட்டையி லிருக்கின்றனர். மரணமும் உயிர் வாழ்க்கையும், 
         அவர்களுயிருட னிருக்கின்றார்களோ இல்லையோ வென்று அவர்களைப்பற்றி 
          மன்றாடும்படி, அவர்கள் மதுபானத் தில் மருந் திட் டிருக்கிறேன்.-
ம. (உள்ளே) யார் அங்கே? என்ன அது?
ம.ம. ஐயோ! அவர்கள் விழித்திருக்க வேண்டுமென அஞ்சுகிறேன், வேலை 
          முடியவில்லைபோலும்!- முடிந்தால் பய மில்லை, முடிக்காமற் போனாலோ 
          நாம் நாச மடைவோம்-பொறு! அவர்கள் உடைவாட்களைச் சித்தமாய் 
          வைத்தேனே!- அதை யவர் தப்புதற்கிடமில்லை. அவர் உறங்குங்கால் என்
          தந்தையைப்போல் என் கண்ணுக்குப் புலப்பட் டிராவிட்டால் நானே செய்து 
          முடித்திருப்பேன்-இதோ என் கணவர்!
                மகபதி வருகிறான்.
ம. நான் செய்து முடித்தேன் வேலையை-உனக்கொரு சப்தங்  கேட்கவில்லையா?
ம.ம. நான் கேட்டது ஆந்தையின் சீறலும் கோட்டான் கீச்சலுமே நீர் ஏதாவது 
           பேசினீரோ?
ம. எப்பொழுது?
ம.ம. சற்று முன்.
ம. நான் கீழே யிறங்கிய பொழுதா?
ம.ம. ஆம்.
ம. பொறு!-இரண்டாவது அறையி லுறங்குவது யார்?
ம.ம. தனலாபன்.
ம. இது துக்ககரமான தோற்றம்     (தன் கைகளைப் பார்த்து)
ம.ம. துக்க கரமான தோற்றம் என்று சொல்வது தான் பயித்தியத்தின் மாற்றம்.
ம.   தூக்கத்தில் நகைத்திட்டா னொருவன்; மற்றொருவன் "கொடுங் கொலை" 
          யெனக் கூவினான்; அதனால் ஒருவரை யொருவர் விழிக்கச் செய்தனர். 
          பக்கலில் நின்று அவர்கள் பகர்ந்ததைக் கேட்டேன் ஆனாலவர்கள் 
        ஈஸ்வரனைத் தியானஞ் செய்துவிட்டு மறுபடியும் உறங்கப் போய்விடடார்கள்.
ம.ம. இரண்டு பெயர் ஒருங்கே படுத் துறங்குகின்றனர்.
ம. ஒருவன் "ஈஸ்வரன் நம்மை ரக்ஷிப்பாராக" என்று கூவினான், மற்றவன் 
          அதற்கு "அப்படியே ஆகுக" என்றான், இருவருங் கொலைஞன் கரங்களுடன் 
          இப்படி நான் இருந்ததைக் கண்டதேபோல். அவர்கள் பயத்தை யுற்றுக் கேட்ட
          நான், "ஈசன் நம்மை ரக்ஷிப்பாராக" என்று அவர்கள் கூறியபொழுது "அப்படியே 
          ஆகுக" என்று கூற என்னால் முடியாமற் போயது.
ம.ம. அதை யவ்வளவு ஆழ்ந்து ஆராயாதீர்.
ம. ஆயினும் "அப்படியே அகுக" என்று கூற ஏன் என்னால்  கூடாமற் போயிற்று?-
           கடவுளின் கருணை யெனக் கன்றோ அதிகமாய் வேண்டி யிருந்தது, அங்ஙன 
          மிருந்தும் அதைக் கோரிட என் நா எழாது என் தொண்டையிற் சிக்கியதே!
ம.ம இவ் வேலைகளை யெல்லாம்பற்றி இவ்வாறு யோசித்தல் சாியான வழி யன்று, 
          இப்படிச் செய்தல் நமக்கு உன்மத்தம் உண்டுபண்ணும்.
ம. "உறங்காதே யினி! மகபதி உறக்கத்தைக் கொல்கிறான்" என்று ஒரு குரலை 
          நான் கேட்டதுபோல் தோற்றிய தெனக்கு! ஒரு பாபமு மறியா வுறக்கம்! 
          துயரத்தால் விண்டதை யெல்லாம் ஒருங்கு சோ்த்துச் சுகப்படுத்துந் தூக்கம்! 
          ஒவ்வொரு நாளின் உயிர் வாழ்க்கையின் மரணம்! கஷ்டத்தின் களை தீர்க்கும் 
          ஸ்நானம்! புண்பட்ட மனத்தினைக் குணப்படுத்தும் மருந்து பேரியற்கை
          யினிரண்டாம் வரிசை! வாழ்க்கையின் விருந்தில் உத்தம புஷ்டி யளிக்கும்
           உணவு!-
ம.ம. என்ன நீர் சொல்வது?
ம.  வீட்டி லுள்ளவர்களுக் கெல்லாம் "உறங்கவேண்டாம் இனி" என்று மறுபடியுங் 
           கூவியது "காஸ்மீரன் உறக்கத்தைக் கொன்றான், ஆகவே காந்தாரன் இனிக் 
          கண்ணுறங்கான்,  மகபதி இனிக் கண் ணுறங்கான்."
ம.ம. யார் இவ் வாறு கூச்ச லிட்டது? என்ன, என் சீமானே, உத்தமமான உமது 
          மனோ திடத்தை, இவ் வாறு உன்மத்தமாம் விஷயங்களைப்பற்றி யோசித்து 
         உறுதி குன்றச் செய்கின்றீர். போம், கொஞ்சந் தண்ணீர் கொணா்ந்து 
         அழுக்குடை இச் சாட்சியை அறவே கழுகிவிடும். அவ்விடமிருந்து இக் 
         கட்கங்களை யேன் கொண்டு வந்தீர்? அவைகள் அங்கேயே யிருக்கவேண்டும். 
          அவைகளை யுள்ளே கொண்டுபோய் உறங்குங் காவலாளிகளை இரத்தத்தினாற்
          பூசிவிடும்.
ம.  நான் மறுபடியும் போகேன் இனி; செய்ததைப்பற்றி நினைக்கவும் என் நெஞ்சம் 
          நடுங்குகின்றது மறுபடியும் அதைப் பார்ப்ப தென்றால் என் மனம் பொறாது.
ம.ம.  எண்ணத்திற் றிடமில்லா ஏழையே, கொடும் இ்ந்தக் கட்கங்களை என்னிடம்.
           உறங்குபவர்களும், உயிர் நீத்தவர்களும், சித்திரிக்கப்பட்ட  சித்திரங்களே, 
          பாலகனுடைய கண்களே படத்திலெழுதிய பைசாசங்களைக் கண்டு பயப்படும். 
          அவர் உடலினின்றும் உதிரம் பெருகுவதானால், அதைக் கொண்டு காவலாளிகள்  
          முகத்தைப் பூசிவிடுகிறேன்;  அவர்கள் செய்த பிழைபோல் தோற்றவேண்டும்  
அது.
                             (போகிறாள், உள்ளே கதவைத் தட்டுகிற சப்தம் கேட்கிறது.)
ம.  எங் கிருந்து வருகிறது அக் கதவைத் தட்டுகிற சப்தம்? எனக்கே னிப்படி 
          யிருக்கின்றது? ஒவ்வொரு சப்தமும்  என் உள்ளத்தை நடுங்கும்படி செய்கிறதே! 
         என்ன கைகள் இவைகள்? ஆ! என் கண்களை அப்படியே பறிக்கின்றனவே. 
         வருணனது சமுத்தித்தி லுள்ள சுத்த ஜலமெல்லாம் என் கையி லுள்ள ரத்தத்தைக் 
          கழுகிச் சுத்தி செய்யாதோ? அன்றே! இந்த என் கரமானது சப்த சாகரங் களிலுள்ள  
          ஜல மனைத்தையும் உரு மாற்றி பச்சைத் தண்ணீரை யெல்லாஞ் செந்நீ ராக்கிடுமே.
மகபதி மனைவி மறுபடி வருகிறாள்.
ம.ம.  எனது கரங்களும் உமது கரங்களின் நிற மாயின. ஆயினும் அத்தனை 
           வெண்மையான இருதயத்தை யுடைத்தா யிருப்பதற்கு வெட்கப்படுகிறேன்.-
          (உள்ளே கதவைத் தட்டுகிற சப்தம்)
         தெற்கு வாயிலில் கதவைத் தட்டுகிறது என் செவியிற் படுகிறது-நாம் நம் தறைக்குப்  
         போவோம். கொஞ்சம் சுத்த ஜலம் நம்மை யித் தொழிலி னின்றும் சுத்தி செய்து
        விடுகிறது ஆகவே எவ்வளவு சுலப மிது! உனது மன உறுதி உம்மைத் தனியே 
         விட்டுப் பிரிந்ததுபோலும்.
                                (உள்ளே கதவைத் தட்டுகிற சப்தம்)
          கேளும்! இன்னுங் கதவைத் தட்டுகிறார்கள். உமது இரா உடையை யணிந்து 
          கொள்ளும், இல்லாவிடின் நாம் அழைக்கப்படும்பொழுது ஏதோ இரவெல்லாம் 
          காத்திருந்தவர்கள் போல் காணப்படுவோம்-உமது எண்ணங்களில் அத்தனை
          ஏழ்மையா யேங்கி நிற்காதீர்.
ம. நான் செய்ததை நான் பார்க்கவேண்டியவந்தால் என்னையே நான் அறியா 
         திருத்தல் நலம்
                        (உள்ளே கதவைத் தட்டுகிற சப்தம்)
         கதவைத் தட்டுஞ் சப்தத்தால் கண் விழியும் தனகனே!- அவ்வாறு செய்வீராக 
         என உண்மையிற் கோருகிறேன்!
                     (போகிறார்கள்)
       காட்சி முடிகின்றது.
-----------------------------
 அங்கம் 2. 
 மூன்றாங் காட்சி.  
     
இடம் - அதேயிடம்.
ஒரு காவற்காரன் வருகிறான்.
கா. {உள்ளே கதவைத் தட்ட} தோ பாரு! கதவெத் தட்றாங்க இதுக்குள்ளோ! – 
        இந்த நரவம் இண்ணு சொல்றாங்களே, அதுக்கு ஒரு கதவெ வெச்சி 
        என்னெப்போலே ஒரு காவக் காரனெ போட்டா, அவன் தட்ரவங்களுக் கெல்லாம் 
        கதவெத் தொறக்றத்துக்குள்ளோ தலெ மொட்டெ கெய்வனாப் போவான்.                
         [உள்ளே கதவைத் தட்ட]
        தட்டு! தட்டு! தட்டு! குட்டி சயித்தான், யார்ராப்பா அங்கே? கொபேரன் சம்பத்து 
         வரப்போவுதிண்ணு தூக்கு போட்டுக்கினு செத்துப்பூட்ட குடியானவென் - அப்பா,
        குடியானவனே, வா வுள்ள, இங்கே கொஞ்சம் வெப்பமாயிர்க்கும், அந்த 
        வேர்வெயெ தொடைக்க தளுவங்க ஆப்டமட்டுங் கொண்டா       
         [உள்ளே கதவைத் தட்ட]    
        தட்டு! தட்டு! தட்டு! நீ யார்ராப்பா, காட்டேறி மவுனே? வாஸ்த்தவுமா, இவரு 
        பொய் சாச்சி சொல்ற மானுபாவரு. இந்தப் பக்கம் சொன்னது பொய் யிண்ணு 
         அந்தப் பக்கம் சத்யம்  பண்ணீடுவாரு, அந்தப் பக்கம் சொன்னது பொய் யிண்ணு
        இந்தப் பக்கம் பெறமாணம் பண்ணீடுவாரு. சாமிமேலே ஆணெப்படிக்கி இண்ணு 
        சொல்லி, அப்றம் சொன்ன பொய்யெ கணக்குப் பண்ண முடியாது. ஆனாலும் 
        பொய்யெச் சொல்லி சொர்க்கம் போவ முடியல்லெ பாவம்! - வாங்க
        உள்ள பொரட்டாளியே.    [உள்ளே கதவைத் தட்ட]
           ஏ, இன்னம் பாரு - தட்டு! தட்டு! தட்டு! இப்பொ யாரப்பா அங்கே யிர்க்றது? -  
             ஓ தாங்களா, தாயாருக்குப் பண்னதாலியிலே கொஞ்சம் பொன் திருடிக்கின 
         தெக்கத்தி தட்டான். ஐயா தட்டாரெ, வாங்க, இங்கே ஒங்க பொன்னெ
        யெல்லாம் நல்லா உருக்க வைக்கலாம்.
                                    [உள்ளே கதவைத் தட்ட]
        தட்டு! தட்டு! ஒரு நிமிசங்கூட சும்மா வுடாதீங்கோ! நீ யாரப்பா? இந்த எடம் 
         நரவமா யிருக்க, இவ்ளவு குளிர்ச்சியா இர்க்கக் கூடாது. இங்கே காவக்காரப் 
         பிசாசா யிர்க்கவெ மாட்டேன் இனிமேலே. எந் நேரமும் போயி போட்டு
         கொளுத்திக்கினு இர்க்ற எடத்துக்கு, ஒய்ங்கா போராங்களே ஒவ்வொரு 
         ஜாதியிலேயும் பெர்ய மனுசாளா, அவங்கள்ளெ கொஞ்சம் பேரெ உள்ள 
         உடலாம்னு பாத்தே! சமய மில் லெ இப்பொ.                                                  
         [உள்ளே கதவைத் தட்ட]
          இதோ இதோ காவக்காரனெ மறந்துப்பூடாதிங்கொ சாமி!
                                      [கதவைத் திறக்கிறான்.]
            மேகதூமனும், லவணகனும் வருகிறார்கள்.
மே.    ஏன் அப்பா, நீ உறங்கப் போவதற்கு நெடு நாழிகை சென்றதோ நேற் றிரவு, 
          இது வரையில் படுத் துறங்கும்படி?
கா.     ஆமாஞ் சாமி, கோயி கூவுரவரெக்கும் குடிச்சிக்கினு இர்ந்துட்டோம் ராத்ரி.
மே.   உன் எஜமான் எழுந்து விட்டாரோ?
                   மகபதி வருகிறாள்.
நாம் கதவைத் தட்டியது அவரைக் கண் விழிக்கச் செய்தது.
   இதோ அவர் வருகிறார்.
ல.     சுதினம் உனக்குச் சீமானே.
ம.     சுதினம் உங்க ளிருவருக்கும்.
மே.   ஐயா, அரசர் எழுந்தனரோ?
ம.      இல்லை யின்னும்
மே.      காலையில் வந்து தன்னைக் காணும்படி கட்டளையிட்டா ரெனக்கு.
           அக்காலத்தை யேறக்குறைய கடக்கவிட்டேன்.
ம.        நான் உம்மை யவரிடம் அழைத்துச் செல்கிறேன்.
மே. இது உமக்குச் சந்தோஷத்தைத் தரும்படியான ஓர் கஷ்டமென்பதை நான் 
           அறிந்திருக்கிறேன்; ஆயினும் இது அவற்று ளொன்றாம்.
ம. இஷ்டத்துடன் புரியும் கஷ்டமே, அக் கஷ்டத்தைப் போக்கும் ஔஷதமாம். 
          இதுதான் கதவு.
மே. நான் தைரியமாய் உள்ளே பிரவேசிக்கிறேன், அது எனக்கு  ஏற்படுத்தப்பட்ட 
          வேலையே.
                                     [போகிறான்.]
ம. இவ் விடமிருந்து அரசர் எங்கேனும் போகிறாரா?
ல. ஆம், அப்படித்தான் ஏற்பாடு செய்தார் அவர்.
ல. நேற்றிரவு நிரம்ப உற்பாதங்கள் உள்ளதா யிருந்தது. நாங்கள் படுத் துறங்கிய 
          விடத்தில் உன்னத சிகரங்க ளெல்லாம்  பெருங் காற்றால் கீழே தள்ளப்பட்டன; 
         ஆகாயத்தில் அழு குரல் கேட்டதாகக் கூறுகின்றனர்; மனத்தைத் திடுக்கிடச் 
         செய்யும் மரணக் கூக்குரல் கேட்டதாம்; கெட்ட காலத்துக்கேற்றபடி புதிதா 
         யுதிக்கும் அக்னியால் நேரும் அநர்த்தங்களும், கலக்க முடை கோலாகலங்களும், 
         பயங்கரமான பாஷையால் முன் னறிந்து தெரிவிக்கபட்டனவாம். சாக்குருவி 
         இரவெல்லாம் சத்தமிட்ட வண்ணம் இருந்ததாம்;  பூமியே வெப்ப மடைந்ததாயும் 
         பூகம்ப முண்டானதாயும்  சிலர் கூறுகின்றனர்.
ம. கஷ்டமான இரவாய்த்தான் கழிந்தது.
ல. எனது இளமையாம் கியாபகத்திற்குள்ளே இதற்க்கு ஈடானத்தை எடுத் துரைக்க 
          என்னால் முடியாது.
மேகதூமன் மறுபடி வருகிறான்.
மே. அந்தோ! கோரம்! கோரம்! கோரம்! மனத்தினால் அதை  நினைக்க முடியாது, 
          நாவினால் அதைக் கூற முடியாது!
ம.  என்ன சமாசாரம்? ல. 
மே. விபரீத மெல்லாம் ஒருங்கு சேர்ந்து உற்பாதமாய் விளைந்திருக்கின்றது! 
         மா பாதகமாங் கொடுங் கொலை, மன்னரது  மகுடாபிஷேகம் செய்யப்பட்ட 
         மண்டையைப் பிளந்து உள்ளிருக்கும் ஜீவனைக் கவர்ந்து சென்றது!
ம. என்ன சொல்லுகிறீர் நீர்? உயிரையா?
ல. மகாராஜாவைப்பற்றியா சொல்லுகிறீர்?
மே. அறையுட் புகுந்து, உமது கண்களாற் கண்டு கருத் தழியுங்கள்! என்னைக் 
           கூறும்படி கேளாதீர்; கண்டு நீங்களாகக்  கூறுங்கள்!
                             [மகபதியும், லவணகணும் போகிறார்கள்.]
          எழுந்திருங்கள் எல்லோரும்! அபாய மணியை அடியுங்கள்!  - கொடுங் கொலை! – 
          ராஜத் துரோகம்! - பானுகோபரே!  தனலாபரே! மால்கோமளரே! எழுந்திருங்கள்! 
          சாக்காட்டைப்போல் வேஷம் தரிக்கும் இவ் வுறக்கத்தை யுதறிவிட்டு 
          உண்மையான சாக்காட்டையே உமது கண்களாற் காணும்!  எழுந்திரும்! 
          எழுந்திரும்! பெரு முடிவின் பிம்பத்தைப்  பாரீர்!  மால்கோமளரே! பானுகோபரே! 
          உங்கள் சமாதிகளிலிருந்து எழுவதுபோல் எழுந்து, அருவங்களைப்போல் 
         நடந்துவந்து இந்த அகோரத்தைக் கண்ணாற் காண்பீர்!
                                   [மணி அடிக்கின்றது.]
மகபதி மனைவி வருகிறாள்.
ம.ம. என்ன சமாசாரம், இப்படிப்பட்ட பயங்கரமான படையொலி, இம் மாளிகையில் 
           படுத்துறங்குபவர்களை ஒருங்கு சேரப் படுக்கையினின்றும் எழுப்புகின்றது? 
          சொல்லும் சொல்லும்! 
மே. அந்தோ! என் னருமையாம் அம்மணி! - நான் சொல்லக்  கூடியது நீங்கள் கேட்கத் 
           தக்கதன்று; ஒரு ஸ்திரீயின் காதில் அதை நான் உரைப்பேனாயின் பிறகு நான் 
          ஸ்திரீ ஹத்திக்கு ஆளாக வேண்டியவனே.
ஐயா, பானுகோபரே! பானுகோபரே! நமது தலைவராம்  மன்னர் 
        கொலையுண்டிருக்கிறார்!
ம.ம. ஐயோ! அந்தோ! என்ன? நமது வீட்டிலா?
பானு. எங்கு நேர்ந்தாலும் கொடிய பாதகமே! அப்பா, தூமா, நீ  கூறியதை நீயே 
          மறுத்து, அப்படியன்று என அறைந்திடாய், உன்னை வேண்டிக்கொள்கிறேன்.
மகபதியும், லவணகனும் மறுபடியும் வருகிறார்கள்.
ம. இது நடந்தேறுமுன் ஒரு மணி காலம் முன்னதாக நான் மடிந்திருந்தேனாயின், 
         பாரில் நான் பாக்கியசாலியாக வாழ்ந்தவன் என எண்ணியிருப்பேன். இனி, 
         இக்ஷணமுதல்  மண்ணாம் மானிட வாழ்கையிலென்ன மாட்சிமை 
         யிருக்கின்றது? எல்லாம் பொம்மைக் கூத்தாம். புகழும் கருணையும் 
         பொன்றின; உயிரெனும் மதுவானது உரியப்பட்டது,  இந்த யந்திரத்தில் 
        திப்பித்தான் மிகுந்தது, வீம்பு பேச.
மால்கோமளனும், தனபாலனும் வருகிறார்கள்.
தன. என்ன கெடுதி நேர்ந்தது?
ம. உங்களுக்கே; உள்ளத்தில் அறியாதிருக்கின்றீர் நீர் அதை;  உங்கள் உதிரத்தி 
          னுற்பத்திற்கு ஆதி காரணமா யிருந்த  ஊற்றானது அடைக்கப்பட்டது, நிர்மூலமாய்  
         அழிக்கப்பட்டது. 
மே. கோமானும் உமது தந்தை கொல்லப்பட்டார்.
மா. அந்தோ! யாரால்?
ல. அவரறையிலிருந்தவர்கள் தான் அதைச் செய்ததாகத் தோற்றியது. அவர்களுடைய 
          கைகளிலும் முகங்களிலும் ரத்தம் படிந்திருந்தது, உடைவாட்களிலும் அப்படியே; 
          அவைகள் உதிரம் துடைக்கப்படாது அவர்கள் தலை யணை மீது கிடக்கக் 
          கண்டோம். அவர்கள் பயித்தியம் பிடித்தவர்கள்போல் விழித்தார்கள். எம் 
          மனிதனுயிரும் அவர்கள் கையிற்பட்டு பிழைப்பதரிது.
ம. ஆயினும் கோபாவேசத்தில் அவர்களைக் கொன்றோமே என்றெனக்கு 
          வருத்தமாய்த் தானிருக்கிறது. 
மே. ஏன் அப்படிச் செய்தீர் நீர்?
ம. ஒரு வினாடியில் புத்தி கலங்கினவனாயும், புத்திசாலியாயும்,  கோபா 
          வேசங்கொண்டவனாயும், சாந்தத்தை வகித்தவனாயும், ராஜ நன்றி 
          யுடையவனாயும், பழிவாங்காது வாளா இருப்பவனாயும், எவன் இருக்கக் கூடும்?  
          ஒரு மனிதனாலு மாகாது.  அடக்க முடியா எனதன்பின் ஆத்திரமானது, 
          அறிவின் நிதானத்தை அழித் தோட்டியது. வெளுத்த அவர் திருமேனி 
          சிவந்த அவர் உதிரத்தால் சித்திரிக்கப்பட்டு, வெட்டப்பட்ட  அவரது காயங்கள், 
         அழித்திடும் பாழானது புகுவதற்கு சுபாவத்தில் விட்ட வழியேபோல் வெடித்துக் 
         காட்ட, தனகராஜன் ஒரு புறம் தளர்ந்து கிடந்தார்; மற்றொரு புறம், 
         அவரைக் கொன்ற கொடும் பாபிகள், அவர்கள் மோசத்  தொழிலின் வர்ணத்தால் 
          பூசப்பட்டவராய், அவர்களது  உடைவாட்கள் அவலட்சணமாய் உதிரத்தால் 
         உரையிட்டதுபோல் தோன்றக் கிடந்தனர். அன்பை வகித்த இருதய
         மொன்று உடையவனாய், அந்த இருதயத்தில் அந்த அன்பை வெளிப்படுத்தத் 
         தக்க தைரியமுடைய எவன்தான், வாளா பார்த்திருப்பா னதை?
ம.ம. ஐயோ! என்னைக் கொண்டுபோங்கள் இவ்விடமிருந்து!
மே. அவர்களைக் கவனியுங்கள் ஜாக்கிரதையாய்.
மால். [ஒரு புறம் தனலாபனுடன்] பேசப்படும் இந்த விஷயமெல்லாம் 
          நம்மதாயிருக்க, நாம் ஏன் வாய் மூடியிருக்கின்றோம்?
த.   [ஒரு புறம மால்கோமளனுடன்] நமது விதி, எந்த பொந்திலேனும் பதுங்கி யிருந்து, 
          நம்மீது பாய்ந்து நம்மைப் பற்றக்  காத்திருக்கும் இவ்விடத்தில் நாம் என்ன 
         பேசக்கூடும்? நாம் போய்விடுவோம், நமது கண்களின் நீர் இன்னும் காய்ச்சி
          சித்தம் ஆகவில்லை.
மா.  [ஒருபுறம் தனலாபனுடன்] நமது பெரும் துயரமும் அடியெடுத்து வைக்க 
         ஆயத்தப்படவில்லை.
பானு. அவர்களை கவனியுங்கள் ஜாக்கிரதையாய்.
                                   [மகபதியின் மனைவியை வெளியே கொண்டு போகின்றனர்.]
         வெளிப்படுவதினால் வெந்துயர் அதிகமுறும், நமது ஏழ்மையாம் பேதமைகள் 
         ஏற்றபடி மறைக்கப்பட்டபின், நாம் அனைவரும் சந்தித்து, இன்னும் இதைப்பற்றி 
         அறியும் பொருட்டு, இக் கொடுங கொலையைக் குறித்து விசாரிப்போம்.
         எப்படி யிருக்குமோ, என்னும் பயங்களும் எண்ணங்களும், நம்மை நடுங்கச் 
          செய்கின்றன. சகலமும் வல்ல ஜகதீசன் சன்னிதியில் நான் நிற்கின்றேன்; 
          அவ்விடமிருந்து, கபடத் தனமாய் மூடி நிற்கும் ராஜத் துரோக மெனும் 
          மோசத்துடன், கையில் வா ளேந்தி கடும் போர் புரிவேன்.
மே.     நானும் அப்படியே.
எல்லோரும்.  எல்லோரும் அப்படியே.
மே.    புருஷர்களுக் குரிய பௌரஷத்தை விரைவில் வகித்தவராய்
         சபா மண்டபத்திற் சந்திப்போம் அனைவரும்.
எல்லோரும். சரி, அப்படியே செய்வோம்.
             [மால்கோமளனும், தனபாலனுந் தவிர மற்ற எல்லோரும் போகிறார்கள்.]
மா.    என்ன செய்யப்போகிறாய் நீ? அவர்களுடன் நாம் சகவாசம் செய்ய லாகாது. 
          உள்ளே உரைத்திடா வருத்தத்தை வெளியிற் காட்டுவதென்னும் வேலையை 
          கபட குண முடையவன் வெகு எளிதிற் செய்து முடிக்கிறான். நான் சிங்களம்
          புறப்படுகிறேன்.
த.          நான் யவனத் தீபம் போகிறேன். நாம் தனித் தனி நமது அதிர்ஷ்டத்தைத் 
          தேடுவதே நம்மைத் தக்கபடி காத்திடும் நிலையாகும். நா மிருக்கு மிடத்தில் 
          நர மனிதர்களுடைய நகைப்பே நம்மைக் கொல்லும் நாராச மாகும், உற்ற 
          உறவினரே பற்றிய பாதக ராவார்.
மா.      எய்யப்பட்ட இந்தப் பாண மானது இன்னும் கீழே விழவில்லை; நம்மைக் 
          காப்பதற்குத் தக்க வழி அதன் குறிப்பின் வழியில் நில்லாமையே. ஆகவே கடிமா 
         ஏறுவோம் கடிதினில்; விடை பெற்றுச்  செல்வதில் வீண் காலம் போக்காது,
         விரைந்து போவோம். கருணை யில்லா விடத்தினின்றும் நம்மைக் காத்திடும் 
          பொருட்டுக் கரந்து செல்வது கபடமாகாது.
                                            [இருவரும் போகிறார்கள்.]
 
           காட்சி முடிகின்றது.
    ---------------------------------
 அங்கம் 2. 
  நான்காவது காட்சி.  
       
     
                இடம்---மகபதியின் கோட்டைக்கு வெளியில்.
         ரோஷனும், ஒரு வயது சென்ற மனிதனும் வருகிறார்கள்.
வ.ம.    எழுப தாண்டுவரை எனக்கு நன்றாய்க் கியாபகம் இருக்கின்றது; இக் காலத்தின் 
          பிரமாணத்தும் எத்தனையோ பயங்கரமும் ஆச்சரியகரமுமான விஷயங்களைப் 
          பார்த்திருக்கிறேன். ஆயினும் இந்த அதி பயங்கரமான இரவு அவற்றை 
         யெல்லாம் அற்ப மாக்கிவிட்டது.
ரோ.    அந்தோ! அண்ணா, அதோ பாரும், குரூரமாம் மனிதனுடைய கொடுஞ் 
           செய்கைகளைக் கண்டு கலங்கி, கொலைக்குரிய அவனதுகொடிய ரங்கத்தை 
          அழிப்பதுபோல், ஆகாயமானது தோற்றுகிறது. கடியாரத்தின்படி பகலே யான
          போதிலும், காரிருள் சூழ்ந்து, கஷ்டத்துடன் ஊர்ந்து செல்லும் கதிரவ 
          னொளியையும் அந்தகாரத்தில் அமிழ்த்திவிடுகிறது. உயிர் தரும் சூரியன் ஒளி தரும்  
         சமயத்தில், இவ்வுலக மெங்கணும் இருளினால் மூடப்படும்படி நேர்ந்தது, 
         நடந்தேறிய கடுஞ் செய்கையைக் கண்டு காரிருளானது வெற்றி கொண்டாடு-
         வதினாலோ, அன்றி பகலவன் அதைப் பார்த்திட வெட்கப்படுவதினாலோ?
வ.ம.       நடந்தேறிய கொடுஞ் செய்கையைப்போல், இதுவும் இயற்கைக்கு முற்றிலும் 
          விரோதமானதே. சென்ற செவ்வாய்க் கிழமை ஆகாயத்தில்  உன்னதமாய் 
          வட்டமிடும் ஒள்ளிய கருடனொன்று, இரவில் எலி பிடித்து வாழும் ஆந்தை 
          யொன்றால்  துரத்திக் கொல்லப்பட்டது.
ரோ.   துரக ஜாதிக்குள் தூயதான அழகும் வேகமும் பொருந்திய தனகனது குதிரைகள், 
           அவைகளின் குணமும் சுபாவமும் மாறினவாய், தங்கள் லாயங்களினின்றும் 
           அறுத்துக்கொண்டு, அடக்கத்திற் குட்படாதனவாய், மனித ஜன்மத்துடனேயே
           மாறாட்டம் கொண்டனவேபோல், வெளியில் ஓடின-- இது அதிக விந்தையாயினும்  
          அவ்வளவும் உண்மையே.
வ.ம.  அவைகள் ஒன்றை ஒன்று தின்றதாகக் கூறுகிறார்கள்.
ரோ.   எதிரில் பார்த்துக்கொண் டிருந்த என் விழிகள் ஆச்சரியமடையும்படி அங்ஙனமே 
           செய்தன.-- நற் சீமான் மேகதூமன் இதோ வருகிறார்.
                                               
                         மேகதூமன் வருகிறான்.
               ஐயா, இப்பொழுது என்ன சமாசாரம்?
மே.        ஏன், தெரியவில்லையா உங்களுக்கு?
ரோ.       இக் கொடும் பாதகச் செயலைச் செய்தது யார் என்று தெரிந்ததா?
மே.    மகபதியினால் கொல்லப்பட்டவர்களே இக் கொலையைச் செய்தவர்கள்.
ரோ.      அந்தோ! என்ன காலம்! அவர்கள் எதற்காக் செய்திருக்க வேண்டும்?
மே.     அவர்கள் ஏவப்பட்டார்கள் மற்றவர்களால்; அரசனது இரு மைந்தர்கள் 
            மால் கோமளனும் தனலாபனும், ஒருவரு மறியாதபடி ஊரைவிட்டு 
           ஓடிப்போய்விட்டார்கள்; அதனால் அவர்கள்மீது அக் கொலை செய்ததாகச் 
          சந்தேகம் தங்குகிறது.
ரோ.         பிரகிர்திக்குப் பின்னும் விரோதமே! என்ன புத்தி யற்ற பேராசை! தன் 
          னுயிருக்குக் காரணமா யிருக்கும் பொருளையே தான் வாயில் போட்டுக் 
          கொள்வதாவது!---- ஆயின் வெகுவாய் இவ் வரசு மகபதியின்பால்தான் 
          சேருமென்று எண்ணுகிறேன்.
மே.     அவர் முன்னமே நியமிக்கப்பட்டு. ஸ்காந்தபுரம்  போயிருக்கிறார் முடி புனைய.
ரோ.    தனகனது பிரேதம் எங் கிருக்கிறது?
மே.     அவரது முன்னோர்களெல்லாம் சமாதி வைக்கப்பட்டு அவர்களது அஸ்திகளை 
            யெல்லாம் காப்பாற்றி வரும் கொலமா கிள்ளைக்குக் கொண்டு
           போயிருக்கிறார்கள்.
ரோ.    ஸ்காந்தபுரம் போகிறீரா நீர்?
மே.          இல்லை அண்ணா; நான் வாபீநகரம் போகிறேன்
ரோ.         நல்லது, நான் அங்கு போகிறேன்.
மே.          சரி-- அங்காவது எல்லாம் சரியாய் நடப்பதைப் பார்ப்பீராக!----
           போய் வாரும்---இல்லாவிடின் புதியவைகளை விட நமது பழைய உடைகளே 
          பொருந்தின வாகும்!
ரோ.         தாதா, போய்வருகிறேன்.
வ.ம.        கடவுள் உன்னைக் காத்து ரட்சிப்பாராக! அங்ஙனமே, கெடுதியை 
           நன்மையாக்கி, பகைவரை நண்ப ராக்கும் ஏனையோர்களையும் என்றும் 
           ரட்சிப்பாராக!
                                                   [போகிறார்கள்.]
           காட்சி முடிகின்றது.
 ---------------
 மூன்றாம் அங்கம்
  முதல் காட்சி
       
இடம் புரசை அரண்மனை
பானுகோபன் வருகிறான்.
பா. மாயாவி மாதர்கள் வாக்களித்தபடி,காஸ்மீரச் சீமானானாய், காந்தாரச் 
          சீமானானாய், மன்னனானாய்,அனைத்தையும் அடைந்தாய், இப்பொழுது; 
          அவற்றை அடையும் பொருட்டு அதிக துர்க் கித்தியம் இழைத்தாய் என்று 
          அஞ்சுகின்றேன் நான்; ஆயினும் இவ் வரசானது உன் சந்ததியில் தங்காதென்றும்,
          என் மூலமாய் அநேகம் அரசர்கள் உதிப்பார்களென்றும் உரைக்கப்பட்டது. 
          அவர்கள் வாயினின்றும் வெளிப்படுவது  உண்மையானால்-அவர்கள் வாக்கின்படி  
         உனக் குரைத்தது முற்றிலும் ஈடேறவில்லையா?-ஏன், உனக் குரைத்தது 
         உண்மையாய் ரூபிக்கப்பட்டதுபோல, எனக்கும் பின்வரும்  உண்மையை 
         முன் உரைப்பவனாகி-அவர்கள் என்னையும் கோரும்படி செய்ய லாகாதா? 
         ஆயினும் பொறு! அதனுடன் நிறுத்துவோம்.
         வாத்யகோஷம். மகபதி அரசனாகவும், மகபதி மனைவி  அரசியாகவும், வருகிறார்கள்.  
        லவணகன், ரோஷன், கனவான்கள், பரிவாரஙகள், சேவகர்  புடை சூழ வருகின்றனர்.
ம. இதோ நமது முக்கியமான அதிதி வந்திருக்கின்றனர்.
ம.ம.அவரை நாம் மறந்திருப்போ மாயின் அது நமது விழவிற்கோர் பெருங் 
         குறையாகி, எல்லாவிதத்திலும் ஈனப்படுத்துவதா யிருந்திருக்கும்.
ம. இன் றிரவு பெரிய தோர் விருந்தினை யளிக்கப்போகிறோம். அதற்கு உம்மை 
          வரும்படி நாங்கள் வேண்டுகிறோம். 
பானு.மகாராஜா அவர்கள் என்னைக் கட்டளையிடலாம். அதன்படி  கீழ்ப்படிந்து 
          நடக்க என் கடமைகளால் என்றுங் கழற்ற  முடியாதபடி கட்டுப்பட் டிருக்கின்றேன்.
ம. இன்று மத்யானம் எங்கேனும் சவாரி போகிறீரோ?
பானு. ஆம்,என் அரசே.
ம. அப்படிக் கில்லாவிடின் இன்றைத் தினத்துச் சபையில்  எப்பொழுதும் ஆழ்ந்ததாயும் 
            நமது நலத்தை நாடியதாயு மிருந்திருக்கின்ற உமது அருமையாம் 
           ஆலோசனையைக் கோரி யிருப்போம்.ஆகவே அதை நாளைத்தினம் அடைவோம்.  
          வெகு தூரம் சவாரி போகிறீரோ?
பானு.இதற்கும் இரவு போஜனத்திற்கும் இடையி லுள்ள காலத்தைக் கவரத்தக்க 
          தூரம். எனது புரவி வேகமாய்ப் போகாவிடின், இரவிலிருந்து ஒரு இரண்டு மணி 
         நான் இரவல்  வாங்க வேண்டி வரும்.
ம. நமது விருந்திற்கு வர மறவாதீர்.
பானு. அரசே,அப்படிச் செய்யேன்.
ம. நமது கொலைக் கஞ்சாக் கொடுந் தாயாதிகள் யவன தீபத்திலும் சிங்களத்திலும் 
           இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். ஈன்ற தந்தையைக் கொன்ற கொடும் 
           பாதகத்தை ஏற்றுக் கொண்டு பிரயச்சித்தம் பேணாது, கட்டுக் கதைகள் கட்டி 
          கேட்பவர் செவிகளை மட்டின்றிப் பூரிக்க முயல்கின்றனர் போலும். நாளை 
          ஆராய்வோம் நன்றா யவைகளைக் குறித்து; அப்பொழுது,அதனோடு, இருவரும் 
          கலந்து ஏற்பாடு  செய்யவேண்டிய ராஜங்க விஷயங்களு மிருக்கின்றன.
          சவாரி புறப்படும் சடுதியில்,போய் வாரும், இன்றிரவு உமது  வருகையை எதிர் 
         பார்ப்போம்.பாலையன் உம்முடன் போகிறானோ?
பானு. ஆம், எம தரசே, எங்கள் வேலை யெங்க ளிருவரையும்  அழைக்கின்றது.
ம. கடிதினிற் செல்வனவும், கால் தளராதவுமான கடிமாக்களின்மீது ஆரோகணித்துச் 
         சடுதியிற் போய் வருவீராக!
                             (பானுகோபன் போகிறான்.)
         இன்றிரவு எழுமணிவரையில் ஒவ்வொருவரும் அவரவர் காலத்திற்கு எஜமானனாய்  
         இச்சைப்படி கழிக்கட்டும். உங்களுடைய சகவாசம் அதிக சந்தோஷத்தைத் 
         தரும்பொருட்டு, சாப்பாட்டு வேளைவரையில் நான் தனித்திருக்கிறேன்.
         அதுவரையில் நீங்கள் சுகமாய்க் காலங் கழிப்பீராக!
                    (மகபதியும் ஒருசேவகனும் தவிர மற்றெல்லோரும் போகின்றனர்)
          அடடே! ஒரு வார்த்தை  யுன்னோடு அந்த மனிதர்கள் நமக்காகக் காத்துக்
         கொண் டிருக்கின்றனரா?
சே. அரண்மனை வாயிலுக் கெதிரில் அவர்கள் காத்திருக்கின்றனர், அரசே.
ம. அவர்களை நம் மெதிரில் அழைத்துவா.
                      (சேவகன் போகிறான்.)
          இப்படி வாழ்தல் ஒன்று மில்லாததாம், ஒரு கஷ்டமும் நம்மை வந்தணுகாதபடி 
          க்ஷேமமாய் வாழ்வதே எல்லாமுடைமையாம் பானுகோபனிடம் எனக் குண்டாம்       
          பயமானது என்னிடம் அழமாய் நிலைபெற்றுள்ளது கம்பீரமான அவனது  
குணத்தில்,
          நான் பயப்படவேண்டீய தொன்று குடிகொண் டிருக்கின்றது. அவன் எதற்கும்
          அஞ்சுபவ னல்லன்; அந்த அஞ்சாமை யென்னும் குணத்துடன், அவனது 
          ஆண்மையை அபாயமான வழியிற்செலுத்தாது அடக்கி ஆளும் அறிவொன் 
          றிருக்கிறது. அவன் அன்றி வேறொருவன் உயிருட னிருப்பதைப்பற்றி நான் 
          உள்ளத்தில் அஞ்சவில்லை. காண்டீபன் எதிரில் கர்ணனது தேஜஸ் எல்லாம் 
          குன்றியது எனக் கூறுவதேபோல், எனது போறி வெல்லால் அவன்முன் 
          இழிவுறுகின்றது. மன்னன் என்று அம் மாயச் கோதரிகள் என்னை முதலில் 
          பெயரிட்டழைத்தபோது தன்னிடம் பேசும்படி அவர்களைக் கடிந்து கூறினான் 
         அவர்கள், பின் வருவன முன் னறிந்து கூறுவார் போல், ஓர் அரச வம்சத்திற்கு 
         ஆதி புருஷனா யாவாயென வாழ்த்தின ரவனை. பயன்படா மகுடம் ஒன்றினை 
         பாபியாம் என் தலையில் வைத்து, மலடாம் செங்கோல் ஒன்றை என் கையிற் 
         பிடிக்கச் செய்தனர், எனக்குப் பின் என் மகப்பேறடையாது என் கையினின்றும் 
         பிடுங்கி வே றெவர்க்கோ ஈதற் பொருட்டு. அப்படி ஆகுமாயின் பானுகோபன் 
         மக்களின் பொருட்டு என் மனத்தைப் பாழாக்கினேன். அவர்களுக்காக தயாநிதியாம்  
         தனகனைக் கொன்று கொடும் பாபி யானேன்;  என் அமைதி யெனும் அரும் 
         பாத்திரத்தில் அவர்கள் நன்மைக்காக அவலத்தை வார்த்துக்கொண்டேன்.  
என்றும்
         அழியா எனது ஆன்மாவாம் அருங் கலத்தை, மனித ருயிரைக் கவரும் மறலியிடம் 
          ஒப்புவித்தேன், அவர்களை. அந்த பானுகோபன் மக்களை, மன்னர்க ளாக்குவிக்கும்  
         பொருட்டு! அங்ஙனம் செய்வதைவிட, விதியே, என்னை நேரில் எதிர்த்து
         கடைசிவரையில் போர் விளைப்பாயாக!---யா ரங்கே?
                  சேவகன் இரண்டு கொலைஞருடன் மறுபடியும்  வருகிறான்.
           நீ போ, கதவருகில் அங்கே நின்று கொண்டிரு, நாம் அழைக்கும் வரையில்.                       
[சேவகன் போகிறான்.] 
            நேற்றைத்தின மல்லவா நாம் கலந்து பேசியது?
மு.கொ. அப்படித்தான்; அரசருடைய சித்தம்.
ம.      நான் உமக் குரைத்த வார்த்தைகளை யெல்லாம் நன்றா யோசித்துப் 
          பார்த்தீர்களா குற்ற மற்ற என் மீது, நான்தான் செய்ததாக நீங்கள் குறை கூறும்படி,  
         முற்காலத்தில் உங்களைத் தலை யெடுக்க வொட்டாமல் துரதிர்ஷ்டத்தில்
         அமிழ்த்தியது அவனே என்று அறிவீர்களாக; கடைசிமுறை உங்களை நான் 
         கண்டபொழுது உங்களுக் கிதை உண்மையாய் ரூபித்தேன்; உங்களுக்கு மேலும் 
         உறுதிமொழி கூறியதும், பிறகு ஏமாற்றியதும், யார் அதற்கு கருவியா யிருந்த 
         தென்பதும், யார் அதற்கு உடந்தையாஇருந்த தென்பதும்,  மற்றெல்லா 
         விஷயங்களையும் ஒவ்வொன்றாய் உங்களுக்கு  விசிதமாகும்படி, எடுத்துரைத்தேன்.  
         அங்ஙன முரைத் திருப்பேனாயின், பித்தம் பிடித்தவனும் அல்லது பாதி 
        பிராணன் போனவனும் கூட, இங்ஙனம் இழைத்தவன் பானுகோபன், என்று 
         ஒப்புக்கொண்டிருப்பான். 
மு.கொ. அதைத் தாங்கள் எங்களுக்குத் தெரிவித்தீர்.
ம. ஆம், அங்ஙனமே செய்தேன், அன்றியும் அதற்கு மேலும்  போனேன், 
          அதற்காகத்தான் நாம் இப்பொழுது இரண்டாம் முறை சந்திப்பது. இதையும் 
          வாளாகப் பொறுத்திருக்கும்படி உம்மிடம் பொறுமை என்பது அவ்வளவு அதிகப்
          பட்டிருக்கின்றதா என்ன? சற்றேனுந் தயையின்றி உங்களைச் சாகச் கிடக்கச் 
          செய்து, உங்கள் உற்றார் உறவினரை ஊரிடு பிச்சையால் உயிர் தரிக்கும் 
         எழைக ளாக்கிய  இந்த உத்தம புருஷனும், அவனது சந்ததியாரும், இன்னும் 
         உலகில் வாழ்ந்திருக்க வேண்டுமென்று ஈசனைத் தியானிக்கும்படி, எந்த 
        வேதமாவது உமக்குப் போதிக்கின்றதா?
மு.கொ. மன்னவனே, நாங்கள் மனிதர்கள்.
ம. ஆம், அட்டவணை யெடுத்தால் அதில் நீங்களும் மனிதராகப்  பிரிக்கப்படுவீர்கள், 
          வேட்டை நாய், கோம்பை நாய், குச்சு  நாய், நீர் நாய், சொறி நாய், மர நாய், 
          கோனாய் எல்லாம்  மொத்தத்தில் நாய் என்று அழைக்கப்படுவது போல். பகுத்
          தறியும் ஜாபிதாவிலோ வேகமுள்ளதென்றும், மெதுவானதென்றும், புத்தி கூர்மை  
          யுடையதென்றும், வீட்டைக் காவல் செய்வதென்றும், வேட்டை யாடுவதென்றும், 
          இயற்கையானது அதற்குக் கொடையா யளித்திருக்கின்ற குணத்தின்படி 
          ஒவ்வொன்றும் பிரிக்கப்பட்டிருக்கின்றது; அவ்வாறு வெவ்வேறாய்ப் பிரிக்கப் 
          படுவதினால், எல்லாம் மொத்தத்தில் ஒன்றைக் கருதப்படாதபடி, அவைகளுக் 
          குரிய அந்தஸ்திற்குத் தக்கபடி மதிக்க்கவும்படுகின்றன. அங்ஙனமே    
          மனிதர்களிலும்; மனிதர்களுடைய வகுப்பில் கடை கெட்டவர்களா யில்லாது 
          ஏதேனும் பதவி யுடையவரா யிருந்தால்  அதைத் தெரிவியுங்கள், உங்கள் உள்ள 
         மறிய உங்களுக்கு ஒரு  வேலை யிடுகிறேன்; அதைச் செய்து முடிப்பதனால் உங்கள்  
         பகைவனும் தன் முடிவை அடைவான், நீங்களும் எனது  ஆப்த அன்பர்களாய் என் 
         ஹிருதயத்தில் அணைக்கபடுவீர்கள்;  அவன் உயிர் வாழ்வதினால் எனக்கு 
         வாழ்வின்றி வருத்தத்தில் இருக்கின்றேன், அவன் உயிர் நீத்தாள் ஒரு குறை
         யின்றிச் சுகமடைவேன். 
இ. கொ. எம் மிறையே, எனக் கிவ்வுலகம் இழைத்த கஷ்ட நிஷ்டுரங்களால், 
           கோபம் கொண்டவனாய் அதற்குப் பிரதி செய்யும் பொருட்டு எதையும் 
          செய்யத் துணிந்திருக்கும் ஒருவன்  நான். 
மு. கொ. கெடுதிகளால் களைப்புற்று, துரதிர்ஷ்டத்தால் ஈர்த் தலைக்கப்பட்டவனாய்,  
          இக் கதியிநின்றும் ஈடேற, அல்லது அப் பிரயத்தனத்தில் இவ் வுயிரைப் போக்கிட,  
          எதற்கும் என்னுயிரை ஆணியிற் படுத்தச் சித்தமா யிருக்கின்ற மற்றொருவன் நான். 
ம. ஆகவே பானுகோபனை உங்கள் பகைவனை அறிவீர்கள் நீங்களிருவரும்.
இ. கொ. மெய்தான், எம் மிறையே.
ம. அங்ஙனமே எனக்கும் அவன் பகைஞன். அவன் உயிர் வாழும் ஒவ்வொரு க்ஷணமும், 
           என்னுயிர் நிலையிற் குத்திக் கொல்வது போன்ற, அத்தனை கொடும் விரோதியாய்  
          என்  அருகாமையி லிருக்கின்றான். ஆகவே கேவலம் எனது அதிகாரத்தைக் 
          கொண்டு அவனை என் கண் ணெதிர்படா வண்ணம் துடைத்து, அங்ஙனம் 
         செய்ததற்கு காரணம் எனது  விருப்பமே என்று கூறிடச் சக்தி யுள்ளவனாயினும் 
         நான் அவ்வாறு செய்ய லாகாது, ஏனெனில் எங்க ளிருவருக்கும் பொதுவான சில 
         ஆப்தர்க ளிருக்கின்றனர்; அவர்கள் அன்பினை நான் அவமதிக்கலாகாது. அவனை  
          நேராக அழித்திடுவே னாயின் அவர்க ளனைவரும் அதைப்பற்றி அதிக வருத்த 
          மடைவார்கள். அது காரணம்பற்றியே மற்றவர் கண்களினின்றும் இத் தொழிலை 
          மறைத்தவனாய உங்களது வுதவியை வேண்டி விரும்புகிறேன்,  சில முக்கியமான 
          நியாயங்களின் பொருட்டு,
               
இ.கொ.    அரசே. நீங்கள் கட்டளை யிடுகிறபடி நாங்கல் நிறை வேற்றுகிறோம்.
மு.கொ.   எங்க ளுயிரதனால்----
ம       உங்கள் எண்ணமானது உங்கள் உடலூடே பிரகாசிக்கின்றது. அதிக மிருந்தா 
          லின்னும் அரை மணிக்குள்ளாக, நீங்கள் எங்கே நிற்க வேண்டு மென்பதையும், 
          உங்கள் வேலையை நிறைவேற்றவேண்டிய சரியான காலத்தையும், தக்கவனான
          ஒரு ஒற்றனைக்கொண்டு உங்களுக்கு அறிவிக்கிறேன்; அது இன்றிரவே 
         முடித்தாக வேண்டும். அரண்மனை யருகில் கூடாது. என்னை ஒரு களங்கமும் 
          அடைய லாகாது என்பதை நீங்கள் எப்பொழுதும் கவனிக்க வேண்டியது; 
          அவனுடன்-- வேலையில் அறை குறை யில்லா வண்ணம்—கூடவே செல்லும் 
          அவன் குமாரனாம் பாலையனும், அந்த இருட்டு வேளையின் குருட்டுக் கதியை 
          யடையவேண்டும்; ஏனெனில், அவன் தந்தையைப்போலவே அவனும் அவனியில்
          இராமை எனக்கு அதி அவசியமாம். நீங்கள் ஒரு புறமாய்ப் போய்த் 
          தீர்மானியுங்கள். நான் பிறகு உம்மிடம் வருகிறேன்
இ.கொ.     நாங்கள் தீர்மானித்துவிட்டோம், அரசே.
ம.        ஆனால் இதோ வந்துவிட்டேன். உள்ளே போய் இருங்கள்.
                                         [கொலைஞர் போகின்றனர்.]
          முடிந்தது வேலை பானுகோபா, உனது ஆன்மா முத்தியடைவதாயின்  
          இன்றிரவே அதன் மார்க்கத்தைச் சத்தியமாய்க் கண்டு விடிக்க வேண்டும.
                   
         காட்சி முடிகின்றது.
------------------------------
 அங்கம் 3. 
  இரண்டாம் காட்சி.
      
    இடம் -  அரண்மனை.
 
          மகபதி மனைவியும் ஒரு வேலைக்காரனும் வருகிறார்கள்.
ம.ம.  அரசரது சபையி னின்றும் பானுகோபர் போய்விட்டாரா?
வே.  ஆம் அம்மணி ஆயினும் திரும்பி வருகிறார் மறுபடியும் இன்றிரவு.
ம.ம. அரசாிடம், அவருக்குச் சாவாகாசமா யிருக்கும்பொழுது, கொஞ்சம் பேச 
          விரும்புகிறே னென்று, நான் சொன்னதாகச் சொல்.
வே. அப்படியே செய்கிறேன் அம்மணி.
ம.ம நாம் விரும்பியதைப் பெற்றும் தமது மனம் நிம்மதி யடையாவிட்டால், 
          நாம் அடைந்தது ஒன்று மில்லை, எல்லாம் இழந்ததே யாகும். ஒன்றை யழித்து 
          சந்தேககரமான சந்துஷ்டியுடன் வாழ்வதினும், நாம் அழித்திடும் பொளாகவே 
         நாமிருப்பது சேஷமகர மாகும்.
              [ மகபதி வருகிறான்..]
         என் நாதா, என்ன இது? யாரைப்பற்றி யோசிக்கின்றோமோ, அவர்கள் மடிந்ததும்,  
         அதனோட மடியவேண்டிய எண்ணங்களை விட்டுப் பிரியாதவராய், மிகுந்த 
         துக்கங்களையே மேம்பட்ட தோழராய்க் கொண்டு, நீர் உன் தன்னந்தனியே 
         இருக்கின்றீர்? திருத்த முடியா விஷயங்களை நினைத்திடவே யாகாது. செய்தானது  
         செய்தானதே.
ம. நாகப் பாம்பை நாம் நசுக்கினோமே யொழிய நசித்திடச் செய்யவில்லை. அது 
          சுவஸ்த மடைந்து முன்போல் ஆகி விடும் பேதையாம் நமது பகையோ, முன்பு 
         அதற்கிருந்த பல்லினைக் கருதி அல்லும் பகலும் அஞ்சாநிற்கும். பயத்துடன் 
         நம துணவை நாம் பருகுமுன், இரவுதோறும் நம்மைப் பீடிக்கும் இப் பயங்கரமான 
         கனாக்களுடன் நாம் படுத் துறங்குமுன், இந் நிலமண்டலமெல்லாம் நிலை 
         குலையட்டும், மூவுலகமும் முற்றிலுக் அழியட்டும். ஓய் வில்லா மனக்கவலையுடன்  
         ஒருங்கே வாழ்வதினும், நமது பதவியை யடைய, நாம் யாரைச் சமாதிக் 
         கனுப்பினோமோ, அவர்களுடனே நாமும் மடிந்து கிடப்பது அதிக உத்தம மாகும். 
         தனகன் சமாதியி லிருக்கின்றார் உலக வாழ்வென்னும் ஜ்வரத்தை
         நீத்தவராய் உறங்குகின்றார் நிம்மதியாய் துரோகமானது தனது முழு ஆற்றலை்மு  
        காட்டி விட்டது இனி கூரிய வாளும், கொடும் விஷமும், உள் நாட்டுப் பகையும், 
         வெளி நாட்டுப் பகைவரும், எதும் அவ ரருகிலும் அண்டாது.
ம.ம. வாரும், என் இனிய நாதா, முறடான இப் பார்வையை மறைத்து மக 
          மலர்ச்ேசியோ டிரும் உமது விருந்தினர் நடுவில் இன்றிரவு உள்ள 
           மகிழ்ந்தவராய்ப் பிரகாசியும்.
ம. அங்ஙனமே இருக்கின்றேன் கண்ணே, நீயும் அங்ஙனமே இருக்க உன்னை 
           வேண்டுகிறேன். உன் கியாபகமானது பானுகோபன்மீ திருக்கட்டும் கண்ணின் 
          பார்வையாலும் நாவின் வார்த்தையாலும் அவனை மிகுந்த உத்தமப் பதவியில்
          வைத்திருப்பதாகத் தெரிவிப்பாய்?-அந்தோ! முகமன் என்னும ஆற்று நீரில் நமது 
         கௌரவத்தைக் கழுகி, அகத்திலுள்ளதை மறைத்திட முகத்தையே மூடியாகக் 
         கொள்ள வேண்டி யிருக்கிறது நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு
ம.ம இந்த விபரிதமான எண்ணங்களையெல்லாம் விட் டொழிக்க வேண்டும் நீர்.
ம. காதலியே, கடும் தேள்கள் குடிகொண் டிருக்கின்றன என்மன முழுவதும். 
          பானுகோபனும் அவனது குமாரன் பாலையனும் உயிரோ டிருக்கின்றார்க ளென்று  
           உனக்குத் தெரியுமே?
ம.ம. இருந்தா லென்ன? அவாகள் சிரஞ்சீவிக ளல்லவே.
ம. அந்த சுக மொன் றுளது இன்னும் அவர்களே நாம் அழித் திடலாம்   ஆகவே நீ 
          சந்தோஷ முள்ளவளா யிரு. வௌவாலானது தன் பொந்தை யடையப் பறந்தேத 
         முன், குட்டிச் சயித்தான் அழைத்திட, சுவற்றுக் கோழி கூவி எல்லோரையும் 
         கொட்டாவி விட்டு உறங்கிடச் செய்யும் முன் பார்ப்பதற்குப் பயத்தைத் தரும் 
         செய்கை யொன்று செய்யப்படும்-
ம.ம. என்ன செய்யப்படப்போகிறது?
ம. வேலை முடிந்து அதனை நீ வியந்திடும்வரையில், கண்ணே,  அதனை நீ அறியா 
           திருப்பாயாக-அனைத்தையும் மூடிடும் அந்தகாரமே, வாராய்! பச்சாத்தாப முடை 
           பகலவன் பரிவுடை கண்ணே, உனது இருளெனும் திரையால் மூடுவாய்
          கண்ணுக்குப் புலப்படாத கோரமாம் உனது சரத்தால், எந் நேரமும் பயத்தால் 
         என்னை வெளுத்திடச் செய்யும், அப பெரும் பத்திரைத்தைப் பல துண்டமாகக் 
         கிழித்து அழித்திடு வாய்!- இருள் சூழ்கின்றது காகமானது உன்னதமான
         மரத்தின் உச்சிக்குப் பறந்துபோகின்றது, பகலின் நற் பிராணிகளெல்லாம் 
         படுத் துறங்க ஆரம்பிக்கின்றன, கடு நிசியின் கபந்தங்களெல்லாம் தததம் 
         இரையைத் தேடத் தொடங்குகின்றன-ஆச்சரியப்படுகின்றாய் நீ என் 
         வார்த்தைகளைக் கேட்டு, ஆயினும் சற்றே பொறுப்பாய் கெட்ட விஷயங்கள்,
          ஆரம்பிக்கப்பட்டபின், கெடுதியினாலேயே பலத்தை யடைகின்றன. ஆகவே 
          வேண்டுகிறே னுன்னை, உடன்படுவா யிதற்கு.                 
  (போகிறார்கள்.)
                 காட்சி முடிகின்றது.
----------------------
  அங்கம் 3. 
     மூன்றாங் காட்சி.
  
 இடம்-  பூந்தோட்டம் அதன் ஒரு புறமாக கதவு ஒன்றின் வழியாய் அரணைமனைக்குப்  
போகிற ஒரு மார்க்கம்.
மூன்று கலைஞர்கள் வருகின்றனர்.
மு.கொ.ஆயின், உன்னை யார் எங்களுடன் போய்ச் சேரும்படி கட்டளை யிட்டது?
மூ.கோ. மகபதி மன்னன்.
இ.கொ. நமது தொழிலையும் நாம் செய்ய வேண்டிய கர்மங்களையும் கணக்காய் 
          ஒப்புவிக்கின்றபடியால் நாம் இவன்மீது சந்தேகங் கொள்ள வேண்டிய நிமித்திய 
          மில்லை.
மு.கொ. ஆனால் எங்கள் பக்கலில் நிற்பாய். வெயிலொன் கிரணங்கன் இன்னும் 
           மேற்குத் திக்கில் கொஞ்சம் வெளிச்சத்தைத் தருகின்றன. பிரயாணி யானவன் 
           காலங் கடந்ததைக் கருதினவனாய் சமயம் வாய்ந்த சத்திரத்திற் போச் சேரக் 
           கடுகிச் செல்கிறான் நாம் காத்து நிற்கம் பொருளும் நம தருகில் கண்ணுகிறது.
மூ.கொ. அதோ குதிரைகளின் காலடி கேட்கிறது. பானு. (உள்ளே) 
          ஓய்! ஒரு வெளிச்சம் கொண்டுவாருங்க ளிங்கே.
இ.கொ. ஆயின் அவர்தா னது. வருவதாகக் காத்திருக்கப்ட்ட மற்றவர்களெல்லாம் 
          வந்துவிட்டார்கள் அரண்மனைக்குள் முன்பே.
மு.கொ. அவரது குதிரைகளைக் கொண்டுபோகிறார்கள்.
மூ.கொ. ஆம், ஏறக்குறைய ஒரு மயில் தூரம். எல்லோரும் செய்வதுபோல் அவரும் 
          வழக்கமாய் அவ்விட மிருந்து அரண்மனை வாயில்வரையில் காலால் நடந்து 
          போவார்.
பானுகோபனும் இகையி லோா் தீப் பந்தத்துடன் பாலையனும் வருகிறாா்கள்.
இ.கெ. வெளிச்சம்! வெளிச்சம்!
மூ.கொ. அவர்தான்.
மு.கொ.  அஞ்சாதீர்கள்.
பானு. மழை பெய்யும் இன்றிரவு.
மு.கொ. ஆனால் அது உன் மண்டைமீது விழட்டும்!
                          (பானுகோபனை எதிா்க்கின்றனர்.)
பான. ஐயோ! துரோகம்! ஓடிப்போ, அப்பா, பாலையா, ஓடு! ஓடு! ஓடு! நீ பழி 
         வாங்கலாம்-ஆ! முறியனே.
            (மடிகிறான் பாலையன் தப்பி யோடுகிறான்.)
மூ.கொ. வெளிச்சத்தை யார் அவித்துவிட்டது?
மு.கொ. அப்படித்தானே மார்க்கம்?
மூ.கொ. ஒருவன்தான் கீழே விழுந்தான் மகன் தப்பி யோடினான்.
இ.கொ. நமது வேலையில் முக்கியமான பாதி லிருதா வாயிற்று.
மு.கொ. சரி, நாம், போய், எவ்வளவு முடித்தோம் என்பதைத் தெரிவிப்போம்.                 (மூவரும் போகிறார்கள்.)
    காட்டி முடிகின்றது.
----------------
 அங்கம் 3. 
   நான்காம் காட்சி.
        
இடம்-அரண்மனையில் ஓர் சபா மண்டபம்.
விருந்து சித்தப்படுத்தி யிருக்கின்றது.
மகபதி, மகபதி மனைவி, ரோஷன், லவணகன், கனவான்கள,  வேலையாட்கள் வருகின்றனர்.
ம. அவ ரவர்களது வாிசைக் கிரமம் அவர்களுக்குத் தெரியுமே  ஆகவே உட்காருங்கள் 
          ஒரே முறையாக அனைவருக்கும் நல்வரவு உரைக்கிறோம்.
கனவான்கள். மகாராஜா அவர்களுக்கு மிகவும் வந்தனம்.
ம. விருந்தினருடன் நாமுங் கலந்து அவர்களுக் குபசரணை செய்வோம் ஊழியனாய். 
          நம் தரசி சிம்மாதனத்திலேயே வீற்றிருக்கட்டும்,  ஆயினும் தக்க சமயத்தில் 
          அவளது உபசரணையையும் விரும்புவோம்.
ம.ம. நமது நேயர்களுக் கெல்லாம் நீர் அதை எனக்காகக் கூறும். என் 
           ஹிருதயமானது அவர்கள் வருகையைக் கண்டு இன்புறுகின்றது.
முதல் கொலைஞன் கத வருகில் வருகிறான்.
ம. பார், அவர்க ளெல்லாம் நமது மன மகிழ்ச்சியால் உன்னைச சூழ்கின்றனர். இரு 
          பக்கமும் சாியாயது, இதோ இங்கு மத்தியில் நான் உட்காருகிறேன். 
          சந்தோஷத்தைக் குறைவு படுத்தாதீர்கள், கொஞ்சம் பொறுத்து மது பானம்
         செய்வோம் அனைவரும் ஒருங்கு சோ்ந்து-
                              (கத வருகிற் போய்)
           உன் முகத்தில் இரத்தம் இருக்கின்றது.
மு.கொ. ஆயின் அது பானுகோபருடையது.
ம. அது அவன் உள் ளிருப்பதினும் உன் வெளியி லிருப்பது உத்தமமாய்த் 
          தோற்றுகிறது. அவன் தீர்த்து விடப்பட்டானா?
மு.கொ. அரசே, அவர் கழுத்து அறுப்புண்டு கிடக்கிறார் அதைச் செய்தேன் 
           அவர்பொருட்டு நான்
ம. கழுத்தை அறுப்பவர்களுக்குள் நீதான் மிகுந்த கெட்டிக் காரன். பாலையனுக்கு 
           அவ்விதம் செய்தவன் அவனும் நல்ல கெட்டிக்காரனே நீயே யரையும் 
           செய்திருப்பையேல், உன்னை யொப்பார் ஒருவரு மில்லை.
மு.கொ. எம திறையே, பாலையன் தப்பி யோடிப்போய்விட்டான்.
ம. ஆயின் எனது நடுக்கம் என்னை மறுபடி நாடுகின்றதே! இல்லாவிடின், ஒரு 
         குறையு மின்றி, தடங் கல்லைப்போல் தளராதவனாயும், சிலையைப்போல் 
         சலிக்காதவனாயும், ஆகாயத்தைப்போல் அகன்று அனைத்தையுங் கவருவோனாயும்  
         இருந்த திருப்பேன், இப்பொழுதோ அஞ்சுதலாலும், அமரிக்கை யற்ற
         சந்தேகங்களாலும், அடைக்கப்பட்டு, அமிழ்த்தப்பட்டு அல்லற் பட்டவனா 
         யிருக்கின்றேன். ஆயினும் பானுகோபனைப் பற்றி சந்தேக மில்லையே?
மு.கொ. இல்லை எம்மிறையே. ஒவ்வொன்றும் உயிரை மாய்க்க வல்ல ஒரு இருபது 
           ஆழமான வெட்டுக் காயங்களை மண்டையில் உடையவராய் சந்தேக மின்றி 
           செத்துக் கிடக்கின்றார் அகழ் ஒன்றில்.
ம. அதற்காக வந்தனம் உனக்கு. (தன்னுள்) வயது முதிர்ந்த  அரவம் அங்கே 
           கிடக்கின்றது. தப்பி யோடிய குட்டியோ பருவ காலத்தில் படு விஷத்தை 
          உண்டாக்கத் தக்க சுபாவத்தை யுடைத்தா யிருக்கிறது. பல் லிலை யிப்பொழு 
          ததற்கு - நீ போய்விடு. நாளை நாம் மறுபடி கலந்து பேசுவோம்.
                         (சொலைஞன் போகிறான்.)
ம.ம.  என் அரும் நாதா, நீங்கள் அனைவரையும் சந்தோஷிப்பிக்கிறீர் இல்லை. 
           விருந்தினரை அடிக்கடி சந்தோஷமாய் உண்டுகளிக்கும்படி வேண்டாத 
           விருந்தானது, விற்கப்பட்டதேயாம். ஏற்ற இடம் இல்லமே வயிற்றை நிரப்புதற்கு; 
           வெளியே போவதென்றால் உணவிற்கு உருசியைத் தரும் ரசம் மரியாதையே, 
          அதில்லாமல் ஒருங்கு சோ்தல் வியர்த்தமேயாம்.
ம. இனிமையாய்க் கியாபகப்படுத்தினை! இப்பொழுது பக்குவமாம் ஜீரணம் பசியைப் 
          பின் தொடருமாக, அவ் விரண்டையும் பின் தொடருமாக ஆரோக்கியம்.
ல. மகாராஜா அவர்கள் தயை செய்து உட்காருவாராக.
   ஆசனத்தில் உட்காருகின்றது.
ம. நமது நற் குண முடை நேயனாம் பானுகோபர் இவ்விட மிருப்பின், நமது தேசத்து 
          அருமை பெருமையெல்லாம் இக்கூறைக்குள் அங்கியாதா யிருக்கும் இப்பொழுது.  
          அவர் தவறிப் போவதற்குக் காரணமா யிருக்கும் ஆபத்திற்காகப் 
          பரிவடைவதைவிட, பட்ச மின்மையினால் வாராதிருக்கிறாரென எதிர்த்துப் 
          பகர்ந்திடப் பிரிய முள்ளேன்!
ரா. அரரே, அவர் வராமை அவர் வாக் களித்ததின்மீது பழியைச் சுமத்துகிறது. 
          மகாராஜா அவர்கள் எங்களுடன் உட்கார்ந்து எங்களைக் கௌரவப்படுத்தக் 
           கோருகிறோம்.
ம. எல்லாப் பீடங்களும் நிறைந் திருக்கின்றனவே.
ல. இதோ உமக்காக ஓர் ஆசனம் காலியாய் வைக்கப்பட் டிருக்கிறது, அரசே.
ம. எங்கே?
ல. இதோ எம் இறையே,-மகாராஜா அவர்கள் எதைக் கண்டு  பயப்படுகிறார்?
ம. உங்களில் யார் இதைச் செய்தது? கனவான்கள். எதை எம்மிறையே?
ம. நான் செய்தேன் என்று உன்னால் உரைத்திட முடியாது. இரத்தம் படிந்த உன்
           தலையை ஆட்டாதே யென் னெதிரில்!
ரா. ஐயா, நாம் எழுந்திருப்போம். அரசா்க்குத் தேகம் சௌக்கிய மில்லை.
ம.ம. உட்காருங்கள் உத்தம நேயர்களே! எனது நாதன் அடிக்கடி யிப்படி யிருப்பதுண்டு 
           சிறு வயதுமுதல் இப்படி யிருந்திருக்கிறார். உங்களை வேண்டிக்கொள்கிறேன், 
           உட்காருங்க ளப்படியே. இம் மதி மருக்ஷிமறைந்திடும க்ஷணத்தில் மற்றொரு 
          யோசனைக்குமுன் முற்றிலும் சாியாய்விடுவாா். அவரை அதிகமா யுற்றுப் 
          பார்ப்பீ ராயின் அவருக்குக் கோபம் விளைத்து, அவரது மருக்ஷியையும் அதிகப்
         படுத்துவீர்கள். புசியுங்கள், அவரைக் கவனியாதீர்கள்-
(ஒரு புறம் மகபதிக்கு) நீரும் ஒரு மனிதனா?
ம. ஆம் அதிலும் நமனையே நடுங்கிடச் செய்யவல்ல ஒன்றையும் எதிர்த்துப் 
           பார்த்திட அத்தனைத் தைரிய முடையவனே.
ம.ம. ஐயோ! இதென்ன பயித்தியம்! உம்முடைய பயந்தான்  இவ்வாறு உம்மை 
           வர்ணிக்கச் செய்கிறது. ம்மைத் தனகனிடம் அழைத்துச் சென்றது என்று 
          உனரத்தீரே, அந்த ஆகாயத்தில் தோன்றிய உடை வாளே யிது. இதென்ன
          உதறலும் பதறலும்? உண்மையான பயத்தை்ப்போல் பாசாங்கு செய்வதாகும் 
          இவைகளெல்லாம், பனிக் காலத்தில் குளிர் காயுங்கால், பாட்டியின் கட்டளைப்படி  
          பெண்பிள்ளை யொருத்தி புகலும் கதைக்குப் பொருந்தியனவா யிருக்கும்!
          வெட்கக் கேடு! ஏன் உமது முகத்தை அப்படி வைத்துக் கொள்ளுகின்றீர் ? 
          என்ன யோசித்தாலும் வெறும் பீடத்தைத்தான் விழித்துப் பார்க்கின்றீர் முடிவில்.
ம. பொறு! பார் அங்கே! பார்! பார்! ஆ! என்ன சொல்கிறாய்? ஏன்? எனக்கென்ன 
          வந்தது? உன்னால் தலையை யசைக்க முடியுமாயின் வாயையும் திறந்து பேசு-
          இடு காடும், கல் லறைகளும் நாம் புதைத்தவர்களை மறுபடியும்
          திருப்பி யனுப்புவதாயின் நமது பிணங்களை யெல்லாம் கழுகுகளின் வயிற்றில் 
          அடைக்கலம் செய்யலாம்
                     (அருவம் மறைகின்றது.)
ம.ம. என்ன இது, பித்தத்தினால் உமது ஆண்மை யெல்லாம் அழிந்ததா?
ம. நான் இங்கு நிற்பது உண்மை யானால், நான் அவனைக் கண்டேன்!
ம.ம. சீ! வெட்கக் கேடு!
ம. இதற்கு முன் பண்டைக் காலத்தில் நமது நியாய சட்டங்கள் துன்பத்தை யொழித்து 
          நமக்கு இன்ப முண்டாக்கு முன், பன் முறை இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. ஆம், 
          அதற் கப்புறமும் காதுகள் பொறுத்திடாதபடி கொடுங் கொலைகளும்
          செய்யப்பட் டிருக்கின்றன. மூளை வெறி வந்தவுடன் மனிதன் மரணத்தை யடைந்து  
          அதனுடன் முடிவு பெற்ற அக்காலமு, இருந்தது. இப்பொழுதோ, தலை  
மண்டையில்
         இருபது மரண காயங்களுடன் கொல்லப்பட்டவர்கள், எழுந்திருந்து நம்மை நமது 
         பீடங்களி லிருந்து தள்ளுகிறார்கள். அப்படிப்பட்ட கொலையைப்பார்க்கிலும் இது 
         ஆச்சரியகரமானதே.
ம.ம. என் அருமை நாதனே, உமது உத்தம நண்பர்கள் உமக்காகக் காத்திருக்கின்றனர்.
ம. நான் மறந்தேன்-எனது உத்தம நேயர்களே, என்னைப் பற்றி யோசியாதீர், 
          எனக்கு ஓர் வித விந்தையான வியாதி யுண்டு, என்னை அறிந்தவர்கள் அதை 
          யொரு பொருட்டாகமதியார்கள். வாருங்கள், அன்பும் ஆரோக்யமும் 
          அனைவர்க்கும் பிறகு நான் உட்காருகிறேன். எனக்குக் கொஞ்சம் மது 
          கொடுங்கள், நிறைய வாருங்கள். இங் குட்கார்ந்திருக்கும் அனைவருடைய 
          சந்தோஷத்தின் பொருட்டும், நாம் இங்கு காணாதிருக்கிற நமது பிரிய நேயன் 
          பானுகோபர்  க்ஷேமத்தின் பொருட்டும் நான் மதுபானஞ் செய்கிறேன் அவர் 
          இங்கு வருவாராக எனக் கோருகிறேன். அனைவருக்கும், அவருக்கும், நாம் 
          கேஷ்மத்தைக் கோரி குடிக்க விரும்புகிறோம்.
கனவான்கள். எங்கள் கடமையும் உமது கோரிக்கையும்!
           மறுபடியும் அவரும் வருகிறது.
ம. போய்விடு! என் கண்முன் நில்லாதே! மண்ணானது உன்னை மறைத்திடட்டும்! 
           உனது என்புகளில் நிண மில்லை. உனது  இரத்தமானது சிலிர்த்துக்கிடக்கிறது. 
           விழித்து மிரட்டும் அந்த உனது கண்களில் பார்க்கும் சக்தி கிடையாது!
ம.ம. கனவான்களே, இவருக்கு வழக்கமாய் வருவதாக இதை யெண்ணுங்கள். வேறு  
          ஒன்று அன்று. தற்கால சந்தோக்ஷத்தைக் கெடுக்கின்றதே அது ஒன்றுதான்.
ம. எதை யெல்லாம் மனிதனாய்ப் பிறந்தவன் எதிர்த்திடத் தைரிய முள்ளானோ, 
           அவை யனைத்தையும் எதிர்த்திடத் தைரியமுள்ளேன், நான். கரடு முறடான 
          உஷ்டிர தேசத்துக் கரடியைப்போல் நீ வருவதாயினும் வா, அல்லது  
கொம்பினைப்
          படைத்த காண்டா மிருகம்போ லாயினுஞ் சரி; அன்றேல்  அரக்கான் தேசத்துப் 
          பதினா றடி வேங்கையாய் வருவதாயினும் வா, இதைத் தவிர வே றெந்த வுரு 
          எடுப்பதானாலும் எடு, கொஞ்சமேனும் என் நெஞ்சமான தஞ்சாது. இல்லாவிடின் 
          மறுப்படியும் உயிர் பெற்து, உடைவாளுடன் யுத்தகளத்திற்கு உன்னுடன் ஏகும்படி  
          கேள். அபபொழுது  நான் மன நடு்ங்கி மறுப்பே னாயின், இளம் பெண்ணின்
          குழு பெயன்ன ஏளனஞ் செய் யென்னை. போ இவ்விடம் விட்டு! கோரமான 
          சாயையே! பொய்யாம் அருவமே!  போ, போ! 
                               [அருவம் மறைகின்றது.]
ஏன் இப்படி-மறைந்தபின் மறுபடியும் நான் மனிதனானேன், உங்களை 
          வேண்டுகிறேன், உட்காருங்கள்
ம.ம. மகிழ்ச்சியை யெல்லாம் மாறிடச் செய்து, கூடிய நண்பரையெல்லாம் விபரீதமான 
          கோலாகலத்தினால் பிரிந்திடச் செய்தீர்.
ம. கோடை காலத்தில் இடி வீழ்வதேபோல் இப்படிப்பட்ட விஷயங்கள் நோ்ந்தால், 
          எங்ஙனம் நமக்கு ஆச்சரியம் உண்டாகாமற்போகும்? இப்படிப்பட்ட 
          தோற்றங்களைக் கண்டும் பயத்தினால் என் முகம் வெளுத்ததுபோல்  
வெளுக்காது,
          உன் முகத்தில் சுபாவமான வர்ணம் சிறிதும் மாறாது வைத்திருக்க வல்லாய் நீ, 
          என்று நான் இப்பொழுது எண்ணுங்கால், என் மன நிலையே எனக்குத் 
          தெரியாதிருக்கும்படி  செய்கிறாய்.
ரோ. என்ன தோற்றங்கள், எம் அரசே?
ம.ம. உங்களை வேண்டுகிறேன், அவருடன் பேசாதீர்கள். வர வர அவர் வியாதி 
          அதிகரிக்கின்றது. கேள்விகள் அவருக்குக் கோபத்தை விளைக்கின்றன. எல்லோரும்  
          உத்தரவு பெற்றுக்கொள்ளலாம் உடனே-வரிசைக் கிரமமாய்ப் போக
          வேண்டிய நிமித்தமில்லை, எல்லோரும் ஒன்றாய்ச் செல்லுங்கள்.
ல.  நாங்கள் வருகிறோம், மகாராஜாவுக்கு விரைவில் தேகம் சுவஸ்தமாகுக!
ம.ம. எல்லோரும் சுகமாய்ப் போய்வருவீர்களாக!
                    (கனவான்களும், சேவகர்களும் போகிறார்கள்.)
ம. அது எப்படியும் இரத்த பலி வாங்கும். ரத்தமானது ரத்தத்தினாலேயே திருப்தி 
          யடையுமென்கிறார்கள் கற்களும்  இடம் பெயர்ந்திருக்கின்றனவாம், கானக 
          மரங்களும் வாய் விட்டுப் பேசி யிருக்கின்றனவாம்-மந்திரவாதிகள், தாம்
         அறிந்த மந்திர உச்சாடனங்களினால் எவ்வளவோ இரகசியமாய்க் கொலை 
         புரிந்தவர்களையும், கோட்டான் காக்கைகங் குருவி முதலியவைகளைக் கொண்டு,  
         வெளியில் இழுத்து விட் டிருக்கிறார்கள். இராத்திரி என்ன பொழு தாயது?
ம.ம. இதுவோ, அதுவோ என்னும்படி வைகறையுடன் வழக்காடுஞ் சமயம்.
ம. நாம் கட்டளை யிட்டாபோதிலும் மேகதூமன் நம் சன்னிதானத்தில் வரமாட்டேன் 
         என்கிறானா? இதற் கென்ன செல்லுகிறாய் நீ?
ம.ம. நீர் அவனை வரும் படி யழைத்தீரோ?
ம. அப்படித்தான் எதோ கேள்விப்படுகிறேன். ஆயினும் நான்  ஆளைவிட்டுப் 
          பார்க்கிறேன். அப்படிப்பட்டவர்கள் ஒவ்வொருவன் வீட்டிலும், ஒரு சேவகனை 
          நான் சம்பளங் கொடுத்துச்சரிப்படுத்தி வைத்திருக்கிறேன். நாளைத்தினம் 
          போகிறேன், அதி காலையில் போகிறேன், அந்த மாயச் சகோதரிகளிடம்
          அவர்கள் இன்னும் அதிகமாய்த் தெரிவிக்கும்படி செய்கிறேன். ஏனெனில் 
          இப்பொழுது நான் எல்லாக் கெடுதியையும், எந்தக் கெட்ட மார்க்கத்தினா லாவது 
         அறியவேண்டுமென நிச்சயித் திருக்கிறேன். என் னொருவன் நலத்தின் பொருட்டு 
         மற் றெல்லாக் காரணங்களும் கரைந்தழியும்படி செய்கிறேன். இரத்த வெள்ளத்தில்  
          அடி வைத்துச் சென்றிருக்கிறேன். இனி நான் நீந்திச் செல்ல நெஞ்சந் 
          துணியாவிட்டால், திரும்பிச் செல்வதானது அக் கரைக்குப் போதலைப்போல் 
          அவ்வளவு கஷ்டமானதே. என் தலையில் அநேக ஆச்சரியகரமான விஷயங்கள் 
         இருக்கின்றன, அவைகளை யெல்லாம் நான் கையாள வேண்டும் அவைகளைப்
         பகுத்தறியுமுன் அவகைளை முடித்திடல் வேண்டும்.
ம.ம. எல்லாச் சுபாவங்களுக்கும் இன்றி யமையாத உறக்கத்தைத் 
             துறந்திருக்கிறீர் நீர்.
ம. வா, உறங்கப்போவோம் நாம். என்னிடத்தி லுள்ள வியக்கத்தக்க குற்றமெல்லாம் 
           ஆரம்பத்தி லுண்டான் பயமே அதைக் கஷ்டப்படுத்திப் பழக்கவேண்டி யிருக்கிறது-  
           செய்கையில் நாம் இன்னும் சிறுவர்களே!
             
காட்சி முடிகின்றது
----------------------------------
  அங்கம் 3. 
  ஐந்தாம் காட்சி
                
 
இடம்-அரண்மனையில் ஓர் அறை.
லவணசனும், மற்றொரு பிரபுவும் வருகிறார்கள்.
நான் முன்பு மொழிந்தன வெல்லாம் உமது எண்ணத்திற் பட்டிருக்க வேண்டும், அவற்றைக் கொண்டு இன்னும் அா்த்த  
விசேஷத்தை அறியலாம். நான் சொல்வதெல்லாம், எல்லாம் விந்தையாய் நடந்தேறிய என்பதே. தயாள குணமுடை  
தனகன்மீது மகபதி பச்சாத்தாபம் கொண்டார் உடனே அவர் மாண்டார். அதி வீரனான பானுகோபர் அா்த்த  
ராத்திரிக்குமேல் உலாவிச் சென்றார் உமக் கிஷ்டமிருந்தால் அவரைக் கொன்றது பாலையன் என்று நீர்  
உரைத்திடலாம்; ஏனெனில் பாலையன் ஊரைவிட் டோடினான். மனிதர்கள் அா்த்த ராத்திரிக்குமேல் நடமாட லாகாது.  
மால்கோமளனும் தனலாபனும் உத்தம குணமுடைய தங்கள் தந்தையைக் கொன்றிட என்ன கொடியர்களா யிருக்க  
வேண்டு மென்னும் எண்ணம் எவருக்குத்தான் இராது?
இந்தப் பாழும் உண்மை மகபதிக்கு எவ்வளவு மனத் துயரம் உண்டாக்கியது! மதுபானத்திற் கடிமைகளாய் தூக்க  
மயக்கத்தாற் கட்டுண்ட, ஆம் மாபாதகர்கள் இரண்டு பெயரையும், அவர் உடனே உண்மையிற் கோபம்கொண்டு  
கிழித்தெறிய வில்லையா? அது எவ்வளவு உத்தம குணத்துடன் செய்யப்படது? அன்றியும் அது எவ்வளவு  
புத்திசாலித்தனம்? ஏனெனில் அம் மனிதர்கள் இல்லை யென்று மறுத்ததைக் கேட்க உயி ருள்ள எந்த மனிதனுக்கும்  
கோபம் பிறந்திருக்கும் ஆகவே நான் சொல்வ தென்னவென்றால், எல்லாவற்றையும் அவர் சரியாகத் தான் நடந்தேறும்படி  
செய்திருக்கிறார்; தனகனது மைந்தர்கள் அவரது கையிற் படுவார்களானால்-அங்ஙனம் படாதபடி அவர்களை ஈசன் காத்து  
ரட்சிப்பாராக!- தகப்பனாரைக் கொன்ற பழிக்குத் தக்க தண்டனை இன்ன தென்பதை அவர்கள் அறிவார்களென்று  
எண்ணுகிறேன்; அங்ஙனமே பாலையனும் அறிவான். ஆயினும் நிறுத்துவோம்!- ஏனெனில், வெளிப்படையாய்ப்  
பேசினதாலும், கொடுங்கோ லரசன் விருந்திற்கு வந்து தன்னைத் காட்டாதபடியாலும், மேகதூமன் அவமானத்தில்  
வாழ்கிறதாக நான் கேள்விப்படுகிறேன். ஐயா, அவன் எங்கே உறைகின்றா னென உரைக்கக் கூடுமா உம்மால்?
தனகனது குமாரன், தன் பிறப்பிற் குரியதை இக் கொடுங்கோன் மன்னன் அவனிடம் கொடாது வகிக்க, சிங்களத் தரசன்  
அவையின்கண் வாழ்ந்துவருகிறான்; அவ்விடம்
மிகுந்த செய்வ பக்தி யுள்ள இடபார்த்தன் அவனை நன்கு மதிப்பதனால், அதிர்ஷ்ட வசமானது அவனை அக் கதிக்குந்  
கொணா்ந்தும், அவனுக் குரிய உயர்ந்த மரியாதையி னின்றும் அவனைக் குறைக்க வில்லை. பரிசுத்தனான அந்த  
அரசனிடம் சென்று, அவனது உதவியால் வட மாகாணத்துச் சீமானையும் சுத்தவீரனான சிவார்த்தனையும் எழுப்பிவர,   
மேகதூமன் அவ்விடம் போயிருக்கிறான்; இவர்கள் உதவியாலும்-எடுத்த கருமத்தை முடித்திட ஈசன் கருணையாலும் - நாம்  
மறுபடியும் வயிற்றிற்கு உண்டியைப் பெறலாம், இரவுகளில் நித்திரை கொள்ளலாம், நமது விழாக்கள் விருந்து களினின்றும்  
ரத்தம் படிந்த கத்திகளைக் களைந் தெறியலாம், 
நன்றி யறிதலுடை கீழ்ப்படித லுள்ளவர்க ளாகி அடிமைத்தனமின்றி சன்மானம் பெறலாம். இவைகளெல்லாம் இல்லையே  
யென்று ஏங்குகின்றோ மிப்பொழுது. இதை யெல்லாம் கேட்டு, கோபம் அதிகப்பட்டு, அரசர் ஏதோ யுத்தம் செய்யச் சித்தப்  
படுகின்றனர்.
ல. மேக தூமனுக்குச் சொல்லி யனுப்பினாரா ?
பி. அனுப்பினார்; அத்தூதன் 'ஐயா நான் வரமாட்டேன் ' என்கிற கண்டிப்பான உத்தரம் 
           பெற்று, "இந்தப் பதிலை நான்  சுமந்திடச் செய்வதற்காக நீர் வருந்தவேண்டி 
          வரும்" என்பான்போல், ஊம் கொட்டி, முகத்தைச் சுளித்துப் புறங்காட்டிச்  
           சென்றான்.
ல. அவனது புத்தியானது எவ்வளவு தூரத்தில் அவனை நிற்கும்படி ஏற்பாடு செய்ய 
            வல்லதோ, அத்தனைத் தூரத்தில் ஜாக்கிரதையா யிருக்கும்படி, இது அவனுக்குப்  
            போதிக்கலாம் நன்றாய். கொலை பாதகன் கரத்தின்கீழ் கஷ்டப்படும் இத் 
            தேசத்திற்குச் சீக்கிரம் நன்மை யுன்டாகுமென்றும் அவனது வார்த்தையை, எந்தத்  
            தேவையாவது சிங்களத்  தரசனது சபைக்கு ஓடிச்சென் றறிந்து, அவன் வருமுன், 
           திரும்பி வந்து தெரிவிக்குமாக !
பி.  அவனுடன் எனது பிரார்த்தனைகளையும் அனுப்புகிறேன். 
          [போகிறார்கள்]
                               காட்சி முடிகின்றது.
    நான்காம் அங்கம் 
  முதல் காட்சி. 
                
இடம் - ஓர் குகை. நடுவில் எண்ணெய்க் கொப்பரை காய்ந்து கொண்டிருக்கிறது.
                    இடி முழக்கம்.
                  மூன்று மாயாவிகள் வருகின்றன.
மு. மா.     முடுகிவாரிப் பூனை மும்முறை கூவியது.
இ. மா.      ஓட்டுப் பள்ளி ஒன்பது சொல்லிற்று.
மூ. மா.     களை கூட்டுகின்றது கறுப்பு ஆந்தை, வேளை ஆயது வேளை ஆயது.
மு. மா.     கொப்பரையை நாமுந் தப்பாமற் சுற்றி விஷத்தைப் பொழிந்து கஷாயமாக் 
            கிடுவோம். குளிர்ந்த கல்லில் ஒளிந்துருந்து முப்பத் தொருநா ளிரவும் பகலும் 
            படுத்து றங்கிப் படுவிஷ மாக்கிய தேரையே நீயும் வேகுவாய் முதலில்.
மூவரும்.    எண்ணெய் கொதிக்கக் கண்ணைப் பறிக்க, கட்டை யெரிய, முட்டை கரிய !
இ. மா.      சாரைப் பாம்பின் கோரப் பல்லே எண்ணெயி னீயுந் திண்ணென வேகு, 
             பல்லியின் கண்ணுந் தவளையின்  விரலும் வவ்வால் தோலுங் கவ்வுநாய் நாவும்  
             நாகப் பாம்பின் நாவின் பிளவும் பொட்டைப் புழுவின் கொட்டுங் காலும்     
             ஒந்தியின் காலும் ஆந்தையின் இறகும் மந்திரம் பலிக்கத் தந்திர மாக வெந்து 
             நீறாய்ப் பந்தப் படுங்கள்
மூவரும். எண்ணெய் கொதிக்கக் கண்ணைப் பறிக்க, கட்டை யெரிய, முட்டை கரிய!
மூ. மா. ஆளியின் முதுகின் வாளிபோன் முள்ளும்,
        கோனாய்ப் பல்லுங், கொடுஞ்சு ராவின்
         முந்தும் வயிறும், மந்திர வாதிதன்
         கடைவாய்ப் பல்லுங் காள ராத்திரியில்
         பொறுக்கி யெடுத்த பூனைக் காஞ்சியும்,
         நாஸதிகம் பேசும் சமணன் நாவும்
         கிரணந் தன்னில் கிரஹித் தெடுத்த
         கற்றா மரையுங் கடாவி னீரலும்
         யவனன் மூக்கும் ஸ்ரமணன் உதடும்
         விதவை பெற்று வீதியி லெறிந்த
         தலைச்சன் பிள்ளையின் விலையில் மண்டையும்
         ஒன்றாய் வெந்து நன்றா யிறுகுவீர்
         புலியின் குடரைப் பொலிவுறச் சேர்த்து
         கொப்பரை தன்னில் கொதித்திடச் செய்வோம்.
மூவரும். எண்ணெய் கொதிக்கக் கண்ணைப் பறிக்க, கட்டை யெரிய, முட்டை கரிய!
இ.மா. குரங்கின் ரத்தமொடு குளிர்ந்திடச் செய்தால்  விரைவின் மந்திரங் குறைவின்றிப் 
             பலிக்கும்
                   (அதைச் சுற்றி வந்து கூத்தாடுகின்றன.)
பெருவிரலில் தினவு   எடுக்கிறது நினைவு
பெரியதோர் பழி     வருகிற திவ்வழி!           
        (உள்ளே கதவு தட்டப்படுகிறது)
          ஏவன் வந்தாலுமே  தாள்திறந் தாளுமே!
              மகபதி வருகிறான்.
ம. கடு நிசிக் கள்ள கறுத்த கபந்தங்களே! என் செய்கிறீரிங்கே?
மூவரும். காரணப் பெய ரில்லாக் கடுமையாங் காரியம்!
ம. உங்கள் உச்சாடத்தின்மீது ஆணை வைத்து உங்களை நான்  கேட்கின்றேன்.-
           எவ்விதம் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும்  எனக்கு எடுத் துரைப்பீர். காற்றினைக்  
           கட் டவிழ்த்துவிட்டு கற் கோபுரங்கள் கீழுற மோதிடச் செய்யினும், நுரை கடல்
           கரை புறண்டு கப்பல்களை யெல்லாம் நிலை தடுமாறிடச்செய்து நிர்மூல 
           மாக்கினும், பச்சைப் பயிர்க் ளெல்லாம் பாழாக்கப் பட்டாலும், உன்னத 
           விருக்ஷங்க ளெல்லாம் ஒருங்கே விழுவதாயினும், மாளிகைக ளெல்லாம் 
           அவைதமைக் காப்போர் தலைமீது விழுந் தழிததிட்டாலும், எழு நிலை மாடங்க 
          ளெல்லாம் அஸ்திவாரம்வரை ஏராளமாய்ச் சாய்ந்திட்டாலும், உலகில் உள்ள 
          அரும் பொருள்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மோதி அழிந்து யுகாந்தத்தையே  
          வெட்கிடச் செய்யினும், செய்க! வினவுவதற்கு நீர் விடை யளிப்பீா்.
மு.மா. பேசுவாய்.
இ.மா. வினவுவாய்.
மூ.மா. பதில் உரைப்போம்.
ம.மா. எங்கள் வாயினின்றுங் கேட்டிட விருப்பமோ, அன்றேல்  எமது எஜமானர்
          வாக்கினின்றுங் கேட்டிட விருப்பமோ?
ம. அழையுங்கள் அவர்களை, அவர்களை நான் காணட்டும்.
மு.மா. ஒன்பது குட்டியையும் ஒருங்கே தின்ற பன்றியின் ரத்தத்தைப் பார்த்து வாருங்கள்
           தூக்கிடப் பட்டான் ரத்தத்தில் துவைக்கப்பட் டூறிய எருமையின் கொழுப்பை 
           எறியுங்கள் தீயில்.
மூவரும்.   உயர்ந்த தேனும் தாழ்ந்த தேனும்  ஒரு க்ஷணத்தில் வருக.  உன்னையும் 
            உன் தொழிலையும் யுக்தியாய்க் காட்டுக.
இடி முழக்கம்.
முதல் அருவம்--கவச மணிந்த ஓர் தலை தோற்றுகிறது.
ம.   என் தன் சிந்தனைக் கெட்டாச் சக்தியே! உரைப்பாய் என்னிடம்--
மு. மா.   உன் மனதி லுள்ளதை அறியும் அது; அது உரைப்பதைக்கேள். 
              அதனுடன் ஒன்றும் உரைத்திடாதே.
மு.அ.  மகபதி! மகபதி! மகபதி! மேகதூமனுக் கஞ்சுவாய்!  வாபீநகரத் தலைவனுக்கு 
            அஞ்சுவாய்!--போதும், போகிறேன்!
[கீழே யிழிகின்றது.]
ம.  நீ யேதா யிருந்தபோதிலும் எனக் குரைத்த எச்சரிக்கைக்கு  வந்தனம். நான் 
           பயந்ததையே பகுத் துரைத்தாய் சரியாய்.  ஆயினும் இன்னொரு வார்த்தை--
மு.மா.  கட்டளைக்குக் கட்டுப்படாது அது. இதோ இன்னொன்று,  முந்தியதைப் 
           பார்க்கிலும் சக்தி அதிக முடையது.
இடி முழக்கம்.
இரண்டாம் அருவம்--இரத்தம் பூசப்பட்ட குழவி  தோற்றுகிறது.
இ.அ.    மகபதி! மகபதி! மகபதி!
ம.   கவனித்துக் கேட்பேன், காதுகள் மூன்றுடையனாயினும்.
இ.அ.  கொலைக் கஞ்சாதே, கொஞ்சமுந் தைரியங் குன்றாதே, கொண்ட 
          எண்ணங் கைவிடாதே; மனிதன் சக்தியை மதித்துப் பதரென மகிழ்வுட னிருப்பாய்,  
          ஏனெனில் பெண் வயிற்றிற் பிறந்த எவனாலும் மகபதி மாளான்.
[கீழே யிழிகின்றது.]
ம. ஆயின் மேகதூமா, வாழ்வாய் மண்மீது. உன்னிடம் நான் அஞ்சுவ தென்? ஆயினும் 
          நான் உறுதியை இரு மடங்கு  ஸ்திர மாக்கி, விதியினிடமிருந்து பிரமாணம் 
         பெறுகின்றேன். என் உள்ளம் நடுங்க பயம் அதனுட் புகுங்கால், அது உரைப்பது 
         உண்மையன்று எனக் கூறி, கனத்த இடியையும் கவனிக்கா துறங்கும்படி, நீ 
         மரிப்பையால்!
              இடி முழுக்கம்.
மூன்றாவது அருவம். கிரீடம் அணிந்த ஒரு குழுந்தை கையில் ஒரு செடியைக் கொண்டுவருகிறது.
மன்னன் மகவைப்போல் உற்பவித்திடும் இது என்? தனது சிறிய முடியின்மீது 
          மன்னற் குரிய மகுடமொன் றணிந்திருக்கின்றதே?
மூவரும். அது கூறுவதைக் கேளும், அதனுடன் பேசாதீர்.
மூ.அ. அரியினைப்போல் அதி ரோஷ முள்ளவனா யிரு. எவன் வருத்துகின்றான், 
           எவன் கோபிக்கின்றான், எங்கே கலகக்காரர்கள் இருக்கின்றனர் என்பதை 
           யெல்லாம் கொஞ்சமுங் கவனியாதே. பெரும் பரணிக் கானம் உயர் தூமசினக் 
           கோட்டையிடை அவனை யெதிர்த்து வருமளவும், மகபதி மாண்டிடான்.                  (கீழே  
யிழிகின்றது.)
ம. அது என்றும் நடவாது. கானகத்தைக் கடந்து செல்லும்படி கட்டளை 
          யிடுபவனெவன்? வையத்தில் வேரூன்றியிருக்கும் விருக்ஷத்தை இடம் விட்டுச் 
          பெயரச் செய்வ தெங்ஙனம்? நமக்கு நன்மையே குறிக்கின்றன! நலமே! 
          பரணிக்காடு பெயர்ந்தெழு மளவும் கலகமானது தலையெடுக்க வேண்டாம். 
          உன்னதப் பதவியி லிருக்கும் மகபதி மனித ஆயுள் முழுதும் வாழ்ந்து, காலகதியால்  
          சுபாவத்தின் வழக்கப்படி தன் ஆவி பிரிவான்-ஆயினும் என் இருதயமானது
          இன்னொன் றறியத் துடிக்கின்றது. எனக் குரையும்- அதைக் கூறிட உமக்கு மந்திர  
          சக்தி யுண்டேல் - பானுகோபன் சந்ததி இவ் விராஜ்ஜியத்தை என்றேனும் 
         ஆள்வாரோ?
மூவரும். இன்னும் அறிய எத்தனப்படாதே.
ம. நான் எப்படியும் அறியவேண்டும். இதை யெனக்கு மறுப்பீராயின் முடிவிலாச் சாபம் 
          உமது முடிமேல் வீழுமாக!  எனக்குத் தெரிவியுங்கள்-ஏன் அந்தக் கொப்பரை 
          கீழேயிழிகின்றது?-இது என்ன சப்தம்?
                              (வாத்ய கோஷம்.)
மு.மா. காட்டு!
இ.மா. காட்டு!
மூ.மா. காட்டு!
மூவரும். கண் ணெதிர் காட்டுவீர் அவன் மனதினை வாட்டுவீர் சாயைபோல் 
            தோன்றி மாயமாய்ப் போவீர்!
எட்டு அரசா்களின் அருவங்கள் கோலமாய்ப் போகின்றன.
அவற்றுள் கடைசி யாசன் அருவம் கையிலோர் கண்ணாடியுடன் வருகிறது.
பானுகோபன் அருவம் பின்னால் வருகிறது.
ம. உருவத்தில் பானுகோபனை ஒத்திருக்கின்றனை மிகவும், ஒழிந்து போ! உனது
           மகுடமானது என் கண் மணிகளை கரிந்திடச் செய்கிறது-பொன் வண்டைய 
          மணிந்த உனது தலைமயிர், முதலில் தோன்றியதின் கேசத்தைப் போலிருக்கிறது?  
          மூன்றாவ தொன்று முன்னதைப்போலவே இருக்கிறது-கோரமான குரூபிகளே! 
          இதை ஏன் எனக்குக் காட்டுகிறீர்கள்? நான்காவது?- கண்காள்! கிளம்புங்கள்!
          என்ன! ஆகாயம் முட்டிக் கொள்ளும் அத்தனைத் தூரம் போமா என்ன இவ்வரிசை?  
          - இன்னொன்று!- ஏழாவது? நான் இனிப் பாரேன்- இன்னும் எட்டாவது 
         தோன்றுகிறது, தன் கரத்தி லோர் கண்ணாடியுடன், அதில் இன்னும்  அநேக 
         உருவங்கள் தெரிகின்றன-அவற்றுள் சில, இரண்டு மகுடங்களையும் மூன்று 
         செங்கோல்களையும் தாங்கியபடி, நான் காண்கிறேன்- கோரமான காட்சி!- 
         இப்பொழுது  தெரிகின்றது இது உண்மையென்று. உடலெல்லாம் ரத்தம் படிந்த 
          பானுகோபன் என்னைப் பார்த்து நகைத்து, அவர்களெல்லாம் தன் சந்ததி யென 
          எனக்குக் காட்டுகின்றான் - என்ன இது அப்படித்தானா?
                           (அருவங்கள் மறைகின்றன.)
மு.மா. ஆம், ஐயா, இதெல்லாம் அங்ஙனமே; ஆயினும் மகபதியிதனைக் கண்டு 
          ஏன் மருட்சி கொண்டு நிற்கவேண்டும்? வாருங்கள், அண்ணன்மாரே, அவரது 
          உள்ளத்தில் உற்சாக முண்டாக்கி, நமது வேடிக்கைகளில் மேலலானதைக் 
          காட்டுவோம். நீங்கள் கை கோர்த்துக் குரவைக் கூத்தாடும் பொழுது, நாதம் 
          உண்டுபண்ண நற் காற்றினில் உச்சாடனம்  செய்கிறேன்.  அவரை நல்வர
         வழைத்ததற்கு நமது கடமையை முடித்தோ மென நமது பேரரசன் கூறட்டும் 
          பெரு மகிழ்ச்சியோடு.
               (சங்கீதம். மாயாவிகள் கூத்தாடி விட்டு மறைந்து போகின்றன.)
ம. எங்கே அவைகள்? போய்விட்டனரா?- இக் கேடு கெட்டவேளை பஞ்சாங்கத்தில் 
           என்றும் பாழாய்க் கிடக்குமாக!-  யாரங்கே வெளியில்? வா இங்கு உள்ளே!
           லவண்கன் வருகிறான்.
ல. மகாராஜாவின் சித்தம்?
ம. கோரமாம் மாயாவிகளைக் கண்டனையா நீ?
ல. இல்லை, அரசே.
ம. நீ யிருந்த இடம் அவர்கள் வரவில்லையா?
ல. வரவே யில்லை, அரசே.
ம. அவர்கள் கரந்து செல்லுங் காற்றானது கெட் டழித்து போகுமாக! அவர்களை 
          நம்புவோர்க் ளெல்லலாம் அப்படியே யழிந்து போவார்களாக!- குதிரைகள் 
          வேகமாய் வந்த சப்தங் கேட்டேன் நான்-யார் இப்பொழுது வந்தது?
ல. அரசே, இரண்டு மூன்று பெயர்கள் வந்தனர், மேகதூமன்  சிங்களத்திற்கு 
          ஓடிவிட்டதாகச் செய்தி உமக்குக் கொண்டு  வந்திருக்கின்றனர்.
ம. சிங்களற்திற்கா ஓடிப்போய்விட்டான்?
ல. ஆம், என் அரசே.
ம. காலமே! என் கொடுந் தொழில்களுக்கு முன்னால் கடந்து செல்கின்றாய். பறந்திடும் 
          எண்ணத்தைப் பற்றுதல் கடினம், கருத்துடன் காரியமும் ஒருங்கே ஏகாவிட்டால் 
          இட்சண முதல் என் மத்தில் எண்ண முதித்தவுடன் கையானது காரியத்தை 
          முடித்திடல் வேண்டும். இப்பொழுதே, எனது எண்ணங்களுக்குச் செய்கைகளால் 
          முடி சூட்டிட, எண்ணியதும் செய்து முடிக்கின்றேன்; மேகதூமனது  
கோட்டையைத்
          திடீரென்று எதிர்க்கிறேன், வாபீ நகரத்தைப் பற்றுகிறேன், அவனது மனைவி 
          மக்கள் கால்வழியி லுதித்த எல்லாப் பேதை  உயிர்களையும், கத்தியின் கூரிற்கு 
          இரை யாக்குகின்றேன்.  மூடனைப்போல் டம்பம் இனி பேசுதல் வேண்டாம் இந்த
          எண்ணம் ஆறிடுமுன் வேலையைச் செய்து முடிக்கின்றேன்-  ஆனால் பார்த்தது 
          போதும் இனி!, எங்கே இப் பிரபுக்கள்? வா, அவர்க ளிருக்குமிடம் என்னை 
          அழைத்துச் செல்,
                          (போகிறார்கள்.)
              காட்சி முடிகின்றது.
-----------------------
 அங்கம் 4. 
    இரண்டாம் காட்சி.  
    
இடம்-வாபீநகரம் மேகதூமன் கோட்டை.
  மேகதூமன் மனைவியும், அவனது குழந்தையும் ரோஷனும் வருகிறார்கள்.
மே.ம. அவர் என்ன செய்தார், நாட்டைவிட்டு ஓடிப்போகும்படி
யாக?
ரோ. அம்மா, தாங்கள் சற்று பொறுமையுட னிருக்கவேண்டும்.
மோ.ம. அவருக்கே பொறுமை யில்லாமற் போயிற்றே; இல்லாவிடின்  ஓடிப்போகும்படி 
          பித்தம் பிடிக்குமா? நமது செய்கைகளினால் துரோகிக ளாகாவிட்டாலும், நமது 
          பயமானது நம்மை  அங்ஙனம் ஆளாக்குகின்றது.
ரோ. அவர் புத்தியினாற் செய்தாரோ அல்லாது பயத்தினாற் செய்தாரோ 
            அங்ஙனம், என்பதை அறிகிலீா் நீர்-
மோ.ம. புத்தி! தான் எவ்விடத்தினின்றும் ஓடிப்போகின்றாரோ  அவ்விடத்திலே, தனது 
          மனைவி, தனது குழவிகள், தனது  சகல ஐஸ்வர்யம், எல்லாவற்றையும் விட்டுப் 
          போதலா புத்தி? அவருக்கு எங்கள்மீது பட்சம் இல்லை. சுபாவத்திலிருக்க 
          வேண்டிய பிரியமென்பது அவரிடம் கிடையாது. சுட்டுக் குருவி யிருக்கிறதே, 
          பட்சிகளி ளெல்லாம் அற்பமானது, அதுவும் ஆந்தை வந்து எதிர்த்தால், தன் 
          கூட்டிலிருந்து தனது கஞ்சுகளைக் காப்பாற்றச் சண்டைபோடும்.  எல்லாம் 
          பயம்தான், பட்ச மென்பது கிடையாது எல்லா நியாயத்திற்கும் விரோதமாய் 
          எங்களை விட்டு ஓடியதினால், அதில் புத்தியும் அவ்வளவு சிறிதுதான்.
ரோ. அண்ணி, தங்கள் மனத்தைக் கொஞ்சம் அடக்கிக் கொள்ள வேண்டுகிறேன்.
           உம்முடைய கணவன், உத்தம புருஷன், புத்திமான், தீர்க்காலோசனை யுள்ளவர், 
           காலத்திற்கேற்ற கர்மத்தை நன்கு அறிந்துள்ளவர். அதற்குமேல் கூறிட எனக்குத்  
          தைரியமில்லை. காலம் கெட்டுக்கிடக்கின்றது, நாம் தூரோகிகளாக  
          மதிக்கப்படுகிறோம், அங்ஙன மிருக்கிறோமென நாம் அறியுமுன்னமே! அப்படி 
          ஒரு கால் இருக்கலலாம் என்று அஞ்சுவதினால் அந்த வதந்தியை நாம் ஒப்புக்
          கொள்ளாகிறோம். ஆயினும் எதைப்பற்றி அஞ்சுகிறோ மென்பதை அறியா 
          திருக்கிறோம்; அலங்கோலமாய்க் கலக்கப்பட்ட ஆா்கலியின்மீது தத்தளித்து 
          இத் திக்கில் செல்கிறோமென் றறியாது எத்திக்கிலும் செல்கிறோம்-உங்களிடம்
          நான் உத்தரவு பெற்றுக்கொள்ளுகிறேன். அதிக பொழுது கழிவதன்முன் திரும்பி 
         இவ்விடம் வருகிறேன் கடை கெட்ட ஸ்திதியை யடைந்த பிறகு, ஒன்று 
         அடியுடனாவது அழியவேண்டும், அல்லது படிப்படியா யேறி முன் னிருந்த
          நிலைக்குப் போய்ச் சேரவேண்டும்-அப்பா, அழகிய குழந்தாய் - உன்னை ஸ்வாமி
          ரட்சிப்பாராக!
மே.ம. தகப்பானா ரிருந்தும், தகப்பான ரில்லாதவனே அவன்.
ரோ. நான் ஒரு மடையன், தானினிமேல் இங்கிருப்பேனாயின், எனக்கும் அவமானமா 
            யிருக்கும் உங்களுக்கும் கஷ்டமாயிருக்கும்-நான் உடனே போகிறேன்.          
(போகிறான்,)
மே.ம அடே பையா, உங்கள் அப்பா இறந்துபோய்விட்டார்- இப்பொழுது என்ன 
            செய்யப்போகிறாய்? எப்படி வாழ்வாய்?
கு. பட்சிகள் வாழ்வதுபோல், அம்மா.
மே.ம. என்ன, புழுக்களையும் பூச்சிகளையும் தின்றா?
கு. என்ன அகப்படுகிறதோ அதைக் கொண்டு, என்று சொன்னேன் அப்படித்தானே 
             அவைகள் வாழ்கின்றன?
மே.ம. பேதைப் பட்சியே! வேடனது வலைக்கும், பொறிக்கும், யந்திரத்திற்கும், 
             ஒன்றிற்கும் அஞ்சமாட்டாய் நீ.
கு. நான் ஏன் அஞ்சவேண்டும் அம்மா? பேதைப் பட்சிகளைப் பிடிக்க பொறிகள் 
            வைக்கப்படுகிற தில்லையே. நீங்கள் எவ்வளவுதான் சொன்னபோதிலும் 
            என் தகப்பனார் இறக்கவில்லையென்று தெரியும் எனக்கு.
மே.ம  ஆம். அவர் இறந்துதான் போய்விட்டார். நீ தகப்பனாரில்லாமல் என்ன 
          செய்வாய்?
கு. அல்ல, நீங்கள் புருஷன் இல்லாமல் என்ன செய்வீர்கள்?
மே.ம. ஏன், எந்தச் சந்தையிலும் எனக்கு இருபது பெயரை நான்  விலைக்கு 
            வாங்கிக்கொள்ளலாமே.
கு. ஆனால்அவர்களை மறுபடியும் விற்கவே விலைக்கு வாங்குவீர்கள்.
மே.ம நிரம்ப புத்திசாலித்தனமாய்த்தான் பேசுகிறாய்; உண்மையில் உனக்கு அவ்வளவு 
           புத்தி யிருந்தால் போதும்.
கு. என் தகப்னால் ஒரு துரோகியா, அம்மா?
மே.ம. ஆம் அப்படித்தான் ஆனார்.
கு. துரோகி என்றால் யார் அம்மா?
மே.ம. ஏன், சத்தியம் செய்து பொய்த்துப்போவோனே.
கு. அப்படிச் செய்வோர்களெல்லாம் துரோகிகளா?
மே.ம. அப்படிச் செய்யும் ஒவ்வொருவனும் ஒரு துரோகிதான்,   அப்படிப்பட்ட 
           ஒவ்வொருவனையும் தூக்கி லிடவேண்டியதுதான்.
கு. ஆனால் பொய்யாகச் சத்தியம் செய்வோர்களை யெல்லாம் தூக்கிலிட வேண்டுமா?
மே.ம ஒவ்வொருவனையும்.
கு. ஆா் அவர்களைத் தூக்கி லிடுவது ?
மே.ம. ஏன், சத்தியவான்கள்.
கு. ஆனால் இந்தப் பெய்ச் சத்தியம் செய்வோர்க ளெல்லாம் முண்டங்களாக இருக்க 
          வேண்டும்; பொய்ச் சத்தியம் செய்வோர்கள் எத்தனை பெய ரிருக்கின்றனர்! 
          அவர்களெல்லாம்  ஒன்றாய்ச் சோ்ந்தால் சத்தியவான்களை உதை உதை என்று 
          உதைத்து அவர்களைத் தூக்கில் போட்டுவிடலாமே?
மே.ம. ஜகதீசன் உன்னைக் காப்பாற்றுவாராக! குட்டிக் குரங்கே!- அதிருக்கட்டும், 
          உன் தகப்பனா ரில்லாமல் என்ன செய்யப் போகிறாய்?
கு. அவர் இறந்துபோ யிருந்தால் நீங்கள் அவருக்காக அழுவீர்கள் அப்படி 
          அழுவதற்கு உமக்கு இஷ்ட மில்லாமற் போனால், சீக்கிரத்தில் எனக்கு இன்னொரு  
          தகப்பனார் கிடைப்பாரென்பதற்கு அது தக்க அறி குறியாகும்.
மே.ம. பேதை வாயாடி, என்ன பேசுகின்றான்!
        [ ஒரு தூதன் வருகிறான்.]
தூ. அம்மா, உம்மை ஈசன் காப்பாற்றுவாராக! என்னை உங்களுக்குத் தெரியாது, 
           ஆயினும் நீர் கற்ற மற்ற குணமுடையவர் என்பதை முற்றிலும் அறிவேன்.
           விரைவில் உம்மை ஏதோ அபாயம் வந்து அணுகுகிறதெனச் சந்தேகப்படுகிறேன்;
           ஒரு சம்சாரத்தில் வாழ்பவனுடைய புத்திமதியை எடுத்துக்கொள்ள 
          இஷ்ட மிருக்குமாயின் இவ்விடத்தில் இராதீர்; உமது குழந்தை குட்டிகளோடு 
          இவ்விடம் விட்டோடிப் போய்விடும். இவ்வாறு உம்மை பயப்படுத்துவதில் அதிக
          முறடனா யிருக்கிறேனென்று நான் எண்ணுகிறேன்; இதனிலும் கெடுதியை 
          உமக்குச் செய்வது கொடிய காதகமாகும், அதுவே உம்மருகில் வந்திருக்கிறது.- 
          ஈசன் உம்மை இரட்சிப்பாராக!- நான் இனி இங் கிருக்கலாகாது,
                                (போகிறான்.)
மே.ம. நான் எங்கே ஓடிப்போவது? நான் ஒரு தீங்கும் செய்யவில்லையே. ஆயினும் 
            எனக்குக் கியாபகம் வருகிறது, இப் பாழும் உலகில் நான் உயிர் தரிக்கின்றேன். 
           கெடுதியைச் செய்வதே பெரும்பாலும் புகழத் தக்க காரியமா யிருக்கிறது,  
நன்மை
           புரிவதும் சில சமயங்களில் அபாயகரமான தவறாகிறது ஆகவே, அந்தோ! நான் 
           ஏன் "நான் ஒரு தீங்கும் இழைக்கவில்லை" என்னும் பெண்டிருக் குரிய நியாயத்தை  
           எடுத்துரைக்கிறேன்?-என்ன இந்த முகங்கள்?
  [கொலையாளிகள் வருகின்றனர்.]
கொ. எங்கே உனது கணவன்?
மே.ம. உன்னைப் போன்றவன் கண்டு பிடிக்கத் தக்க, அப்படிப்பட்ட அகத்தியான 
           இடத்தில் இல்லாதிருப்பாராக எனக் கோருகிறேன்.
கொ. அவன் ராஜத் துராகி!
கு. செம்பட்ட மயிருடைய பாதகா! நீ பொய் பேசுகின்றாய்!
கொ. என்ன சொன்னாய் எலிக் குஞ்சே?   
 (அவனைக் குத்துகிறான்.)
         துரோகி வயிற்றி லுதித்த குட்டியே!
கு. என்னைக் கொன்றுவிட்டான்! அம்மா, நீங்கள் ஓடிப்போங்கள், உங்களை 
             வேண்டுகிறேன்!      (சாகிறான்.)
   (கொலை! கொலை! என்று கூவிக் கொண்டே மோகதூமன் மனைவி 
          ஓட அவளைப் பின்பற்றி கொலையாளிகள் ஓடுகின்றனர்.)
                   காட்சி முடிகின்றது.
-----------------------------
 அங்கம் 4. 
      மூன்றாங் காட்சி.  
       
  இடம் -  சிங்களம், அரண்மனைக் கெதிரில்.
          மால்கோமளனும், மேகதூமனும் வருகிறார்கள்.
மா. பா ழடைந்த நிழல் ஏதேனும் தேடிப் பிடித்து அவ்விடம்  நமது வயிற் றெரிச்சலை 
         அழுது ஆற்றுவோம்.
மே. அதைவிட பகைவ ருயிரினைப் போக்கிடும் கட்கத்தைக் கரத்தில் கெட்டியாய்ப் 
           பிடித்து, உத்தமா்களைப்போல், கீழே பட்டுக் கிடக்கும் நமது பிதுரார்ஜிதத்தைப்  
           பாதுகாப்போம்.  ஒவ்வொரு புதிய காலையிலும் புதிய விதவைகள் வெம்பி
          அழுகின்றனர்; தந்தை தாயரைப் புதிதா யிழந்த தனையர்கள் கூக்குரலிடு்கின்றனர்;  
          சகேத பூமியுடன் தானும் துக்கித்து தானும் வாய்விட் டாற்றுவதேபோல், 
          பிரதி தொனிசெய்திட, புதிய துக்கங்கள் ஆகாயத்தின் முகத்தில் மோதுகின்றன.
மா. நான் எதை நம்புகிறேனோ அதற்காகத் துக்கப்படுவேன்,  எதை அறிகின்றேனோ 
          அதை நம்புவேன்; எந்தக் கஷ்டத்தை மாற்ற வல்லேனோ, அதற்கு அவகாசமானது  
         அனுகூலமாயிருக்கு மாயின், அதை ஆற்றுவேன். நீ எடுத்துரைத்தது அங்ஙனமே 
         இருக்கலாம் ஒருகால். அவனது பெயரை உச்சாித்தலே நமது உள் நாவையும் 
         வெந்துபோகச் செய்யும்; இக் கொடுங்கோன் மன்னன், ஒரு கால் உத்தமனாக 
          மதிக்கப்  பட்டான்; அவனிடம் நீயும் அதிக பிரியமுள்ளவனா யிருந்தாய்; அவன் 
          உன்னிடம் இன்னும் அதிகமாய் நெருங்கித் தீண்ட வில்லை. நான் ஒரு வாலிபனே;  
          என்னைக் கொண்டு அவன் உனக்குக் கைம்மாறு செய்யும்படியான காரியம் நீ
         ஏதேனும் செய்து முடிக்கலாம், கோபம் கொண்டிருக்கும் தேவதையைக் 
         குணப்படுத்த குற்ற மற்ற ஆட்டுக் குட்டியை பலியாகக் கொடுப்பது 
          புத்திசாலித்தனமாகும்.
மே. நான் துரோக குண முடைய வ னல்ல.
ம.   ஆயினும் மகபதி அப்படிப்பட்டவனே. சக்கிரவர்த்தியின் கட்டளையை 
           நிறைவேற்றுவதில் சாந்த குண முள்ள ஒரு உததமனும் சன்மார்க்கத்தினின்றும்          
          பிறழ லாகும். ஆயினும் நான் உனது மன்னிப்பைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
          இயற்கையால் உனக் குண்டான குணத்தை, எனது எண்ணங்கள் மாற்றத் 
          தகுந்தனவல்ல; மிகுந்த நற்குணம் வாய்ந்த ஒருவன் கெட் டழிந்ததனால், மற்ற 
          உத்தமா்களெல்லாம் நமது நற்குணத்தைவிட் டொழிவ தில்லையே; தீயவை 
          யெல்லாம் நற்குணம் வாய்ந்தவகைகளைப்போல் மேலுக்குக் கட்டிய
          போதிலும், நற்குணமானது தன்னுருவை மாற்றிடக் காரணமில்லை.
மே. எனது கோரிக்கைக ளெல்லாம் பாழாயின.
மா. எனக்கு எதனால் சந்தேகம் பிறந்ததோ அதனாலேயே உனக்கு அங்ஙனமா 
           யிருக்கலாம். போய் வருகின்றேன் என்றும் சொல்லாமல் அவ்வளவு திடீரென்று 
          உனது பெண்டு பிள்ளைகளை-அன்பிற் குரிய பலமாம் பாசங்களை, முயற்சிக்கு
          இன்றி யமையாக் காரண பூதங்களை-ஏன் விட்டு வந்தாய்? நான் சந்தேகிப்பது, 
          உனக்கு அவமானத்தை உண்டுபண்ணூம் பொருட் டன்று, என்னைக் காப்பாற்றிக்  
         கொள்ளும் பொருட்டே, எனக் கருதுவாயாக. நான் உள்ளத்தில் எண்ணுவது 
         எதுவே யாயினும் நீ உத்தம குணமுடையவனா யிருக்கலாம்-
மே. என் பேதை தேயமே! இன்னும் நீ பீடழிய வேண்டியதே! கொடுங்கோன் மன்னா, 
           உனது அஸ்திவாரத்தை உறுதிப்படுத்திக்கொள். ஏனெனில் நற்குணமானது 
           உன்னை  எதிர்த்திட நாணுகின்றது! உனது காதகத் தொழில்களை
          அஞ்சாது வெளியில் அணிந்திடு; உனது பட்டம் ஊா்ஜிதமாகிவிட்டது!-ஐயா, 
          நான் போய் வருகிறேன். இக் கொடுங்கோல் அரசனது ஆளுகைக்குக் 
          கீழ்ப்படிந்துள்ள தேயத்தை, நிதியுடை கிழக்கு நில மண்டலத்தோடு சோ்த்துக்
          கொடுத்தாலு, நீர் எண்ணும்படியான அப்படிப்பட்ட பாதகன் ஆகமாட்டேன்.
மா. கோபித்துக்கொள்ளாதே உன்னிடம் முற்றிலும் சந்தேகமுடையவனாய் 
         உரைத்திட வில்லை நான் நமது நாடு கொடு்ங்கோலுக் குட்பட்டு நைந் தழிகின்றது  
         என்றே எண்ணுகிறேன் நான் அது கண்ணீர்விட் டழுகிறது, தன் இரத்தத்தைச் 
         சொரிகிறது ஒவ்வொரு தினமும் ஒரு புதிய காயத்தைப் பெற்று உடலமெல்லாம் 
         புண்ணடைகின்றது. ஆயினும் எனது சுதந்திரத்தின்பொருட்டு சண்டை செய்ய
         அநேகர் தங்களது ஆயுதங்களை ஓங்குவார்களென்று எண்ணுகிறேன்; அன்றியும்  
         இவ்விடம், தயாள குணமுடைய சிங்களத்து அரசன், அநேகம் ஆயிரம் வீரர்களை 
         உதவியா யளிப்பதாக வாக்களித் திருக்கிறான். ஆயினும், இவை யெல்லாம் 
         இப்படி யிருந்தபோதிலும், இக் கொடுங்கோன் மன்னனது தலைமீது என் பாதத்தை  
         வைத்து மிதித்திடும்பொழுது, அல்லது அதை எனது கத்தியினால் குத்தித் தூக்கிடும்  
         பொழுது,  அப்பொழுதும் பாக்கிய மற்ற என் தேசம், முன் பிருந்ததைவிட  
அதிகமான
         கெடுதிகளை யுடையதாய், எப்பொழுதையும் விட துன்மார்க்கங்கள் ஏறிட்டதாய், 
         அவனுக்குப்பின் அரசாளுபவனால், இன்னும் அதிக இன்னலை அடையும்.
மே. அவர் யாரா யிருக்கலாம்?
மா. நான், குறித்திடுவது என்னைப்பற்றியே; அவைகள் வெளிப்படும்பொழுது 
           காதகனான மகபதியும், கறந்த பாலைப்போல் களங்க மற்றவன், என்றும் 
           எல்லையில் அடங்கா எனது துா்க் குணங்களுடன் சீா் தூக்கி பார்க்குங்கால்,  
          அவனை ஒரு பாபமு மறியாத பசு வென்றும், நமது பேதை மாந்தர்களெல்லாம்
          எண்ணும்படி, வேறு வேறு விதமான துா்க்குணங்களெல்லாம் என்னிடம் 
         விளைந் துள்ளன என்பதை நான் அறிவேன்.
மே. பாழ் நரகத்தினின்றும் பொறுக்கி எடுத்தாலும், மகபதியாம் இப் பாவியைவிட 
           கொடிய பாதகன் அகப்படுதல் அரிதாம்.
மா. அவன் குரூரன், காமாதுரன், போருண்மேல் பேராசை  யுடையவன், மோசக்காரன், 
          முழுப் புரட்டன், துராக்கிரமிப்பவன், துா் எண்ண முடையவன், துா்க் 
          குணங்கள் ஒன்றேனும் குறையின்றி ஒருங்கே குடிகொண் டிருப்பவன், இதை 
          எல்லாம் ஒப்புக்கொள்கிறேன்: ஆயினும் எனது காமததிற்கோ கங்குகரை 
          யென்பதில்லை, உமது பெண்சாதிகள், பெண்கள், தாய்மார், கன்னியர் அனைவரும்  
          கற்பழிந்தாலும் அதனை ஆற்ற முடியாது; எனது தீர்மானத்தைத் தடைசெய்து
          எதிர்துதிடும் எதனையும், ஒரு புறம் தூக்கித் தள்ளி எனது இச்சையைத் திர்ப்தி 
         செய்வேன். இப்படிப்பட்டவன் அரசாளுவதைவிட அந்த மகபதியே மேலாகும்.
மே. சுபாவத்தில கரையின்றி மித மிஞ்சுதல் கொடுமையாம்!  சுகமாய்த் தாங்கள் 
          அனுபவித்துக்கொண்டிருந்த சிம்மாசனத்தினின்றும் அகாலத்தில் விட் டிழிந்து, 
          அநேக அரசா்கள் அதோகதி யடையும் படி அக் குணமானது செய்திருக்கிறது. 
          ஆயினும் உனக் குரிமையானதை நீர் மேற்கொள்ள அஞ்சவேண்டாம் இன்னும்.  
           நீர் விரும்பும் சிற்றின்பங்களை வேண்டிய மட்டும் ரகசியமாய் அனுபவித்து 
          வெளிக்கு மாத்திரம் வேட்கை யில்லாதவராய்க் காட்டி தற்காலத்து மனிதர் 
          கண்ணில் மண்ணைப் போடலாகும் நீர். உமது விருப்பிற் கிசையும் மடந்தையர்  
          வெகுவா யுண்டு கற்பிற்கே தங்களை உரிமையாக்க விரும்பும் மாதர்களை, 
          அவர்கள் மனம்  அவ் வழி செல்வதை அறிந்தும், வாயிற் போட்டுக்கொள்ள
         வேண்டுமென்னும் அப்படிப்பட்ட கோரமான குணம் உம்மிடம் இராது.
மா. இதனோடு, துா்க் குணங்களால் ஆக்கப்பட்ட என் சுபாவத்தில், எதனாலும் 
           அடக்க முடியாத பொருள்மேல் அவா ஒன்றும் சோ்ந்திருக்கிறது அதன்பொருட்டு,  
           நான் அரசனாவேனாயின், பிரபுக்களை யெல்லாம் அவர்களது நிலங்களின்
           பொருட்டு கொன்று குவித்திடுவேன் ஒருவனது ஆபரணங்களை விரும்புவேன், 
           மற்றொருவனது மாளிகையை இச்சிப்பேன் எனக்கு எவ்வளவு அதிகமாய்க் 
           கிடைக்கின்றதோ, அவ்வளவும் இன்னும் அதிகமாய் இச்சிக்க எனக்கு அவா
          வினைத் தரும் அதன்பொருட்டு, நல்லோரையும் ராஜ பக்தியுடையவர்களையும், 
          அவர்களது பொருளைப் பறித்திட அழிக்க வேண்டி அநியாயமான சச்சரவுகளை 
           யுண்டுபண்ணுவேன்.
மே. நடு வேனிற் காலத்தைப்போல் கடிதினில் மாறிடும் காமத்தைவிட இப் பொருள் 
           நசையாம் பேராசை அதிக ஆழமாய்ப் பிடிப்புள்ளது, வேரூன்றி நன்றாய் வெந்துயா  
           விளைப்பதாகும் அது, மடிந்த நமது மன்னர்க்களைக் கொன்ற கூரியவாளா 
          யிருந்திருக்கிறது ஆயினும் நீர் அஞ்சவேண்டாம் உம்முடைய சொந்த மாக்கி, 
           உமது மனத்தையும் பூரணம் செய்யும்படியான செல்வம் நிறைந் துள்ளது 
           சகேதபூமி. மற்ற நற்குணங்களுடன் சீா் தூக்குங்கால் இத் துா்க்குணங்க-
         ளெல்லாம் தாம் பொறுக்கத் தக்கனவே.
மா. அத்தகைய நற்குணம் என்னிடம் அறவே கிடையாதே. அரசா்களுக்கு 
          அணிதலம்போன்ற அருங் குணங்களான  தர்மம், சத்யம், அடக்கம், ஸ்திரபுத்தி, 
          தானம், விடா முயற்சி, தயை, பணிவு, பக்தி, பொறுமை, தைரியம், தளராமை 
          முதலியன அணுவளவேனும் என்னிடம் அகப்படா . ஆனால் ஒவ்வொரு விதமான  
          துா்க்குணத்தின் பிரிவுக ளனைத்தும் ஒவ்வொன்றையும் அநேக விதமாய்ச் 
          செய்து முடித்திட, என்னிடம் செறிந்திருக்கின்றன அன்றியும், எனக்குச் சக்தி
          மாத்திரம் இருக்குமாயின், நான் ஒற்றுமை என்னும் இனிய அமிர்தத்தை அரு நரகிற்  
          கொட்டி, உலகத்தின் ஐக்கியத்தை யெல்லாம். ஒழித்துக் கலங்கிடச்செய்து, 
          லோகமெல்லாம் க்ஷேமத்தை யிழந்து வாய்விட் டலறிடச் செய்வேன்.
மே. அந்தோ! சகேத நாடே! சகேத நாடே!
மா. அப்படிப்பட்ட ஒருவன் அரசாள அருகனானால், நீ பேசு நான் மேற் 
          சென்னபடி குணமுடையவனே.
மே. அரசாளுவதற் கருகனா? அன்று உயிர் வாழ்வதற்கே அருகனல்ல- அந்தோ! 
           துரதிர்ஷ்டம் பிடித்த தேசமோ, கொலைக் கஞ்சாது கொடுங்கோ லரசு புரியும் 
          பாத்யதை யில்லாப் பாதகன் ஆள உனது நற்காலத்தை எப்பொழுது நீ மறுபடி
          யும பார்க்கப்போகின்றாயோ உனது அரச வம்சத்தில் உண்மையில் உதித்தவரே, 
          தனது குறைகளை எடுத்துக் கூறும் தனது வாக்கினாலேயே சபிக்கப்பட்டு நின்று, 
          தனது வம்சத்தையே வைது பாழாக்குகின்றாரே! உத்தமரான உமது தந்தை மருள் 
         ஒன் றில்லா மக ரிஷி போன்ற மன்னனாயிருந்தார் உம்மை ஈன் றெடுத்த 
          அன்னையாம் அரசி, பாதத்தால் நிற்தைவிட, பணிந்திட்ட காலம் அதிகமா யுடை
          யவளாய், தான் வாழ்ந்த ஒவ்வொரு தினமும் ஈசனுக்குத் தன் னுயிரை 
           அா்ப்பணம் செய்து மறித்தாள். நீர் க்ஷேமமாய் வாழ்வீராக, நான் போய் 
            வருகிறேன்! உம்மைக் குறித்தே நீர் குறை கூறிக்கொள்ளும் இத் தீமைகள் 
          சகேத பூமியி னி்ன்றும் என்னைப் பராரி யாக்கிவிட்டன-என் னிதயமே!
          உனது கோரிக்கையானது இவ்விடம் முடிகின்றது.
மா. மேகதூமா, உனது உண்மையான நற்குணத்தினின்றும்  உதித்த, இந்த உத்தமமான 
         துயரம், நான் உன்மீது கொண்ட மாசுடைச் சந்தேகங்களை எனது மனத்தினின்றும்  
        அறவே துடைத்து, உனது உண்மையையும் உத்தம குணத்தையும் என்னை 
         ஒப்புக்கொள்ளும்படி செய்துவிட்டது. பேய்க் குணமுடை பாதகனாம் மகபதி, 
         இவ்விதம் என்னைப் பன்முறை தொடா்ந்து, தன் பட்சம் என்னைச் சாரும்படி
         செய்ய முயன்றான்; ஆகவே எதையும் அவசரப்பட்டு நம்பாதிருக்கும்படி பொறுமை  
         யுடைய எனது புத்தியானது என்னை வலிக்கின்றது அனைவர்க்கும் மேலா 
        யிருக்கும் அந்த ஜகதீசன் உனக்கும் எனக்கும் சாட்சியா யிருக்கட்டும்,
         ஏனெனில் இப்பொழுதே உனது எண்ணத்திற்கு என்னை உட்படுத்திக் கொண்ட 
         குறைகளை யெல்லாம் நான் மீட்டுக் கொள்ளுகிறேன். இவ்விடமே, என்மீது 
         நான் குவித்த கொடுமைகளையும் குறைகளையும் எனது சுபாவத்திற்கே
         முற்றிலும் விரோதமானவை யென்றும், அவைகள் என்னிடம் இல்லனவென்றும்  
         மறுக்கின்றேன். இன்னும் நான் மாதரை அறிந்தவ னல்லன். பொய் புகன்றவனு 
         மல்லன்; எனக்குரிமையானதையும் துராக்கிரமமாக எடுத்துக்கொள்ள எண்ணங் 
         கெண்ட தில்லை; கூறிய மொழியி னின்றும் ஒரு பொழுதும் பிறழ்ந்தே னில்லை, 
         ஒரு பேயையும் மற்றொரு பேய்க்குக் காட்டிக் கொடேன்; உண்மையில் நான் 
         சந்தோஷப்படுவது என் உயிர் வாழ்வி லிருப்பதினும் குறைந்த தன்று.
          முதல் முதல் நான் பொய் யுரைத்தது இப்பொழுது என்னைப்பற்றி 
          எடுத்துரைத்தேனே இதுதான். உண்மையில் என்னிட முள்ள குணமானது, 
          உன்னுடையதாம், நமது பேதைத் தேயத்தினுடையதாம், உன் திச்சைப்படி 
         அதை ஆட்கொள்ளலாம். நமது தேயத்தை நோக்கியே, வயோதிகனான 
         சிவார்த்தன் நீ இங்கு வருவதற்குமுன் பதினாயிரம் போர் வீரர்களுடன், 
         முன்னமே சித்தமாகி, புறப்பட்டுக் கொண் டிருந்தான். இப்பொழுதே நாம் 
        ஒருங்குசோ்ந்து செல்வோம்; நமது பட்சம் நியாய மிருப்பதேபோல் 
        அதிர்ஷ்ட வசமும் நமது பக்கலி லிருக்குமாக! என்ன மௌனமா யிருக்கின்றாய் நீ?
மே. இப்படிப்பட்ட பிரியமும் அப் பிரியமுமான விஷயங்களை ஒரே காலத்தில் கேட்டு,
           இவற்றுள் எது உண்மை யெனக் கண்டுபிடிப்பது கஷ்டமா யிருக்கிறது.
           ஒரு வயித்தியர் வருகிறார்.
மா. சரி மற்றது பிறகு-அரசா் வெளியே வருகிறாரா, நான் அறிய வேண்டுகிறேன்?
வ. ஆம் ஐயா அவரால் சுவஸ்தமடையும்படி பேதை மாந்தரது பெருங் கூட்டமொன்று 
          அவருக்காகக் காத்து நிற்கின்றது; அவர்களது வியாதி வயித்திய சாஸ்திரத்தின் 
          முயற்சியை யெல்லாம் வியர்த்த மாக்குகின்றது ஆயினும் அவர்
          ஸ்பர்சித்த மாத்திரத்தில் அவர்கள் உடனே சுவஸ்த மடைகின்றனர், 
          அவரது கைகளுக்கு அப்படிப்பட்ட மகத்துவத்தை ஜகதீசன் அளித்திருக்கின்றார்.
மா.  வயித்தியரே, உமக்கு வந்தனம் செய்கிறேன்.
                      (வயித்தியர் போகிறார்.)
மே. அவர் கூறுவது எந்த வியாதியைப்பற்றி?
மா. அதை கொடு நோய் எவ்வாறே கூறுகின்றார் இது இவ்வருங் குண மமைந்த 
          மன்னரிடத் துள்ள ஓர் அற்புதமான செய்கையாம் நான் இங்கு வசிக்க 
          ஆரம்பித்த பிறகு பன்முறை அவர் இதைச் செய்ததைக் கண்டிருக்கிறேன். 
          அவர் ஜகதீசனைக் குறித்து எங்ஙனம் பிரார்த்தனை செய்கிறாரோ அது
          அந்த ஜகதீசனே நன்கு அறிவார். தேக மெங்கணும் வீங்கிரணப்பட்டு, 
          கண்ணிற்குப் பரிதாபமாய், ரண வயித்தியர்களால் தீராதென்று கைவிடப்பட்ட,
          ஆச்சரியகரமான நோய்களால் பீடிக்கப்பட்ட மனிதரை, அவர், பவித்திரமான 
          மந்திரங்களை உச்சரித்து, பொன்னாற் செய்த குளிசத்தை அவர்கள் கழுத்தில் 
          கட்டி, சுவஸ்தப்படுத்துகிறார். இந்த சுவஸ்தப்படுத்தும், ஆசியாம் அருங் 
         குணத்தை, அவருக்குப் பின்வரும் மன்னருக்கு, அவர் வைத்துவிட்டுப் போவதாகச்
         சொல்லப்படுகிறது. இந்த அபூர்வமான நற்குணத்துடன், பின் வருவனவற்றை 
         முன் னறிந்து கூறும் சக்தியும் ஈஸ்வரன் அருளால் பெற்றிருக்கிறார்; இன்னும் 
         அநேக ஆசீர்வாதங்கள் அவர் அரசாட்சியைச் சூழ்ந்து நிற்கின்றன, 
         இவைகளெல்லாம் அவர் அருள் நிறைந்தவரென நமக்கு அறிவிக்கின்றன.
                         ரோஷன் வருகிறான்.
மே.        அதோ பாரும், யார் இங்கு வருகிறது?
மா.        என்னுடைய தேசத்தவரே, ஆயினும் அவரை அறியேன் நான்.
மே.       எனது நற்குணம் குன்றா இனிய பந்து, நல்வர வாகுக உமக்கிங்கு.
மா.       அவரை அறிவேன் இப்பொழுது நான். நாம் ஒருவரை யொருவர் 
          சீக்கிரம் அறிந்தவர்க ளாகும்படி ஈசன் அனுக்கிரகம் செய்வாராக!
ரோ.     ஐயா, அப்படியே ஆகுமாக!
மே.      சகேத நாடு, முன் பிருந்த ஸ்திதியிலேயே இருக்கின்றதா?
ரோ.     அந்தோ! எளிய தேசமே! தன்னைத் தான் அறியவே தயங்குகின்றது. 
          அதை நமது தாய்ப் பூமிஎனக் கூற லாகாது, ஸ்மசான பூமி யெனவே கூற 
          வேண்டும். அவ்விடம், ஒன்று மறியாதவன் தவிர, வேறொன்றும் ஒரு முறை 
          நகைப்பதையும் காண்கிறோ மில்லை; அவ்விடம் பெருமூச்சும் புலம்பலும்
         ஆகாயத்தைப் பேதிக்கும் கூக்குரலும் கேட்கப்படுகிறதே யொழிய, 
         கவனிக்கப்படுகிறதில்லை; அவ்விடம் தேறுத லில்லாப் பெரும் துயரமானது 
         சாதாரணமான மனோபாவமாய்த் தோன்றுகிறது; சாப்பரை அடித்தால் 
         இறந்தவன் எவன் என்றும் கேட்பா ரில்லை அங்கு; நற்குண முடையோர் 
         உயிர்கள், அவர்கள் முடியில் தரிக்கும் புஷ்பங்கள் வாடுமுன் பொன்றுகின்றன; 
         அரு நோய் வருமுன் ஆருயிர் பிரிகின்றது.
மே.     அந்தோ! ஒன்றும் விடாதே யுரைத்தீர், ஆயினும் அவ்வளவும் உண்மையே.
மா.     கடைசி துக்கம் என்ன?
ரோ.    ஒரு மணிக்குமுன் நடந்ததை எடுத் துரைப்பவன் பழய கதை உரைப்பதாகப் 
         பாவிக்கப்பட்டு ஏளனத்துக் குள்ளாகிறான் ஒவ்வொரு நிமிஷமும் ஒன்று 
         புதிதாய்க் கிளம்புகின்றது.
மே.         என் மனைவி எப்படி யிருக்கிறாள்?
ரோ.        ஏன், சுகமாய்.
மே.         என்னுடைய குழந்தைக ளெல்லாம்?
ரோ.        அவர்களும் சுகமாய்த்தான்.
மே.          கொடுங்கோன் மன்னன் அவர்கள் க்ஷேமத்தை நாசஞ் செய்
            திட முயல வில்லையே?
ரோ.       இல்லை நான் அவர்களை விட்டு வந்தபொழுது அவர்கள் 
            நிம்மதியாய்த்தான் இருந்தார்கள்.
மே.        வாய்ப் பேச்சிற்கு இத்தனா லோபமேன்? உண்மையை உரை என்ன
             சமாசாரம்?
ரோ.       நான் பாரமாய் வகித்த சமாசாரங்களை இங்கு உமக் கறிவிக்க சுமந்து
         கொண்டு வந்த பொழுது, ஆயுதபாணிகளாய் அநேகர் புறப்பட்டிருப்பதாக 
         ஓர் வதந்தியைக் கேள்வி யுற்றேன்; கொடுங்கோன் மன்னனது சைனியம் 
         ஆயத்தப் பட்டதை நான் கண்டபடியால், இது எனது நம்பிக்கைக்கு
        ருஜீவாயது. உதவி செய்ய வேண்டிய சமயம் இதுவேசகேத பூமியில் உமது 
        கண் பார்வையானது வீரர்களை உத்பவிக்கச் செய்யும், தங்களுடைய 
        கடுந் துயர்களைக் களைந் தெறிவதற்காக நமது அரிவையரையும் அமா் 
         புரியச் செய்யும்-
மா. நாம்அங்கு போகப்போகிறது அவர்களுக்கு க்ஷேமத்தைத் தருவதாகுக 
           தயாள குண முடைய சிங்களத் ததிபன் சுத்த வீரனாய சிவார்த்தனையும், 
           பதினாயிரம் வீரரையும் நமக்குதவியாக வளித்திருக்கின்றார் இந்த  
சிவார்த்தனைப்
           பார்க்கிலும் சிறந்த சுத்த வீரன் இப் பரத கண்டலத்திலேயே கிடைப்ப தாிது.
ரோ. அந்தோ! இந்த சந்தோஷ சமாசாரத்திற்குச் சமானமான  ஒன்றால் உங்களுக்குப் 
         பதிலுரைக்க அசக்தனா யிருக்கின்றேனே என்னிடத்தி லுள்ள வார்த்தைகளோ 
        எந்தக் கர்ணேந்திரியங்களிலும் சிக்காதபடி, யாரு மற்ற கானகத்தில்
        கூவிடத் தக்கனவாம்.
மே. அவைகள் எதைப்பற்றியவை? பொது ஜன நன்மையைக் குறித்தனவோ? 
           அல்லது மனிதன் ஒருவன் மனத்தை வாட்டும் துயரமோ?
ரோ. உத்தம குணமுடைய எம் மனதும் அத் துயரத்தைக் கொஞ்சம் பகிர்ந்து 
            கொள்ளாமற் போகாது ஆயினும் அதில் அதிக பாகம் உம்மைப் பொறுத்தே யாம்.
மே. அது என்னுடையதானால், அதை என்னிட மிருந்து ஒளிக்காதீர், 
           அதைச் சீக்கிரம் எனக்கு ஒப்புவியும்.
ரோ. தாம் இதுவரையில் கேட்ட எல்லாச் சப்தங்களைவிட மிகவும் 
         கெடுதியானவைகளை உமது செவி யுட்புகச் செய்வதற்காக, அவைகள் 
         எனது நாவை எப்பொழுதும் நிந்திக்கா திருட்பனவாக
மே. உம்! அதை இன்னதென்று நான் ஊகித் தறியக்கூடம்.
ரோ. உமது கோட்டையைத் திடீரென்று பற்றிக்கொண்டனர்  உமது மனைவி 
          மக்களைக் குரூரமாய்க் கொன்றுவிட்டனர்  அவர்கள் மடிந்த விதத்தை 
         உரைப்பதென்றால், கொல்லப் பட்ட பேதைகளின் கணக்கில் உமது 
        மரணத்தையும் ஒருங்கு சோ்த்துக் கணக்கிடுவ தாகும்.
மா. கருணைக் கடலாம் கடவுளே! என்ன அப்பா! உன் முகத்தை அவ்வாறு 
         மூடிக்கொள்ளாதே; உன் துயரத்தை வாய் விட்டாற்று வாய்விட் டாற்றாத துயரம், 
         அதன் பெரும் பாரத்தை சகிக்காத இருதயத்திடம், பிறந்து மாளும்படி
         அதின் காதில் ஓதுவதாம்.
மே. என் குழுந்தைகள் கூடவா?
ரோ. மனைவி, மக்கள், ஆட்கள், அகப்பட்டவ ரெல்லாம்.
மே. நான் அந்தச் சமயத்தில் அங் கில்லா திருக்கவேண்டும்! என்னுடைய 
           மனைவிகூடவா கொல்லலப்பட்டாள்?
ரோ. முன்பே சொன்னேனே.
மா. உன் மனத்தைத் தேற்றிக்கொள் இச் சாக்காடாம் துயரத்தைச் சுவஸ்தப்படுத்த, 
           நமது பெரும் பழிவாங்கலைக் கொண்டு, தக்க ஔஷதங்களை நாம் 
           செய்துகொள்வோம்.
மே. அவர் குழந்தைகளைப் பெற்றிலர்-என்னுடைய அழகிய குழந்தைகள் 
           அனைத்தையுமா? அனைத்தையும் என்றா சொன்னீா்? ஹா! மா பபாதகக் 
           காதகா! எல்லாமா! என்ன, ஒரே விசையில், குஞ்சு குட்டி தாய் எல்லோரையும் 
           கொல்வதா?
மா. ஆண் மகனாக அதற்காக வாதாடும்.
மே. செய்கிறேன் நான் அங்ஙனமே ஆயினும் ஆண் மகனாக என் துயரத்தையும் 
           வகித்திடல் வேண்டுமே எனக்கு மிகவும் அருமையாம் பொருள்கள் இவ் வுலகில் 
           ஒரு கால் இருந்தனி என்பதை நான் மறப்ப தெங்ஙனம்? ஜகத் ரட்சகன்
           இவைகளை யெல்லாம் கண்ணால் பார்த்தும் அவர்களைக் காத்திடாது வாளா 
           இருந்தாரோ? பாபியாம் மேகதூமனே, உன் பொருட் அவர்கள் எல்லாம் 
           கொல்லப்பட்டார்கள்! நான் ஒன்று மில்லாதவனாயும், அவர்கள் ஆருயிர் 
           கொடுங் கொலையினால் அபகரிக்கப்பட்டது அவர்களது குறைகளுக்காக 
           வல்ல என் குற்றங்களின் பொருட்டே யாம் இனியாவது ஈசன்
           அவர்களுக்குச் சுகத்தை யளிப்பாராக!
மா. இதுவே, உன் வாளினைக் கூாிய தாக்கும் சாணைக் கல் லாகட்டும். உன் 
           துயரமானது கோபமாய் மாறட்டும் உனது மனத்தை மழுங்க விடாதே, 
          அதை உறுதியாக்கி உற்சாகப் படுத்து.
மே. ஹா! பெண்களைப்போல் என் கண்களினால் கண்ணீரை யுகுத்து, என் நாவினால் 
           பிதற்றக் கூடும் என்னால்! ஆயினும் கருணைக் கடவுளே! தடங்கல் அனைத்தை 
          ஔயம் வெட்டித் தள்ளி, இச் சகேத நாட்டுப் பேயையும் என்னையும் எதிர்
          எதிராக நிறுத்தும் எனது வாளின் வீச்சுக்குள்ளாக அவனைக் கொண்டுவந்து 
          விடும் அப்புறம் அவன் தப்புவானாயின், அவனையும் நீர் மன்னிப்பீராக!
மா. ஈதாம் ஆடவனுக் குரிய வார்த்தை. வாருங்கள் நாம் போவோம் அரசனிடம் 
          நமது சைனியம் சித்தமா யிருக்கிறது நாம் செய்ய வேண்டி மிகுதியா 
          யிருப்பதெல்லாம் நாம் விடை பெற்றுக்கொள்ள வேண்டியதே. மகபதி 
        பலிக்குச் சித்தமா யிருக்கிறான், அப் பலியினை யேற்றிட தேவதைகளும் 
         ஆயத்தப்படுகின்றன. கருத்தின் இச்சசைப்படி களிப்புடையவரா யிரும் 
         நீடித்த நிசியாயினும் கழிந்து கதிரவன் உதிக்க வேண்டியதே.
                   காட்சி முடிகின்றது.
-----------------------
  ஐந்தாம் அங்கம்
 
  முதல் காட்சி
            
இடம்-அரண்மனையிலோர் அறை.
   ஓர் வைத்தியனும், ஓர் பாங்கியும் வருகின்றனர்.
வைத். இரண் டிரவு உன்னுடன் நான் காத்திருந்தும், நீ கூறியதினுண்மையை 
           ஒன்றுங் கண்டிலன். அவர்கள் கடைசி முறை உலாவியது எப்பொழுது?
பாங். மகாராஜா யுத்த சன்னாகமாய்ச் சென்றதுமுதல், மகாராணியவர்கள் 
            படுக்கையினின்றும் எழுந்து, தனது போர்வையைப் போர்த்துக்கொண்டு, 
            தனது பெட்டியைத் திறந்து, காகிதத்தை வெளியி லெடுத்து, அதனை மடித்து, 
           அதன்மீதெழுதி, அதைப் படித்து, பிறகு அதை மூடி முத்திரையிட்டு, மறுபடியும் 
           படுக்கப்போனதைப் பாத்திருக்கின்றேன், இவ்வளவும் நல்ல தூக்கத்தி 
           லிருக்கும்பொழுது.
வைத். உறக்கத்தின் பலனை அடைந்தும், விழித்திடுங்கால் செய்திடும் வேலை 
           யனைத்தும் செய்ய, சுபாவமே மிகவும் மாறியிருக்கவேண்டும். இந்த வுறக்கத்தின்  
           கலக்கத்தில் உலாவுதல் முதலிய செய்கைகள் தவிர, எப்பொழுதாவது, 
           அவர்கள் ஏதாவது பேசியதைக் கேட்டிருக்கினறாயா?
பாங். ஐயா, அவர்கள் கூறியதைமாத்திரம் உம்மிடங் கூற மாட்டேன் நான்.
வைத். அதை நீ யென்னிடங் கூறுவதில் தவ றில்லை அன்றியும் நீ அவ்வாறு 
          கூறவேண்டியது அதி அவசியம்.
பாங். உமக்குங் கூறமாட்டேன், வே றெவர்க்குங் கூறமாட்டேன் நான் கேட்டதை 
          நான் ருஜீப்படுத்த சாட்சி ஒருவரு மில்லையே! அதோ பாரும்! அதோ 
          வருகிறார்க ளிங்கே!
மகபதி மனைவி ஒரு விடி விளக்கைக் கையிற் கொண்டு  வருகிறாள்.
இந்த உடையில்தா னெப்பொழுதும் வருவார்கள்-என்னுயிர்மீ தாணைப்படி-
          உறங்குகின்றார்கள் நன்றாய்!-ஒரு பக்கமாய் ஒதுங்கி யிருந்து கவனியும்.
வைத். அந்த விளக்கு அவர்க ளிடம் எப்படி வந்தது?
பாங். அவர்கள் பக்கத்தி லிருந்தது அது, தன் பக்கலில் விளக்கை யெப்பொழுதும் 
            வைத்திருக்கின்றார்கள் அங்ஙனம் கட்டளையிட் டிருக்கின்றார்கள்.
வைத். அதோ பார், அவர்களது கண்கள் திறந்தே யிருக்கின்றன.
பாங். ஆம், அவைகளில் உணா்ச்சியென்ப தில்லை.
வைத். என்ன செய்கிறார்கள் அவர்கள் இப்பொழுது? அதோ பாா்! 
           எப்படித் தன் கைகளைத் தேய்க்கிறார்கள்!
பாங். தன் கைகளைக் கழுவுவதுபோல் அபிநயிப்பது, அவர்களுடைய சாதாரண 
           வழக்கம்.  இம் மாதிரியாகக் கால் நாழிகையைக் கழிக்க நான் கண்டிருக்கின்றேன்.
ம.ம. இதோ, இன்னும் ஒரு கறை!
வைத். கேள்! பேசுகிறார்கள். என்னுடைய கியாபகத்தை ஊா்ஜிதப் படுத்தும்
           பொருட்டு, அவர்கள் வாயினின்றும் வரும சொற்களை வரைந்துவைக்கிறேன்.
ம.ம. ஒழிந்து போ! கடை கெட்ட கறையே! போகிறையா, இல்லையா ?-ஒன்று, 
          இரண்டு ஏன்? ஆயின் செய்யவேண்டிய காலந்தான்-நரக வேதனை!-சீ! 
          பிராணநாதா!-தூ! படைவீரனா யிருந்து பயப்படுகிறீரா? யாருக்குத் தெரிந்தால் 
          தானென்ன, நாம் பயப்படுவா னேன்? உன்னதப் பதவியிலிருக்கும் நம்மை 
          இதற்கு உத்தரவாதம் செய்யும்படி ஒருவராலுங் கேட்க முடியாதே?!-ஆயினும் 
          அந்தக் கிழவனுக்கு உடலில் அவ்வளவு ரத்தம் இருந்திருக்கு மென்று 
          யாரெண்ணியிருப்பார்கள்?
வைத். அதைக் கவனித்தனையா?
ம.ம. வாபீநகரத்துப் பிரபுவிற்குத் தைய லொருத்தி யிருந்தாள்-  எங்கே யிருக்கிறாள் 
           இப்பொழுது அவள்?-என்ன! இந்தக் கைகள் எப்பொழுதும் பரிசுத்த மாகாவா?-
           அது வேண்டாம் இனி! பிராணநாதா! அது வேண்டாம் இனி. நீர்
           திடுக்கிட்டுப் பயந்து எல்லாவற்றையுங் கெடுக்கின்றீர்கள்.
வைத். சரி! சரி! உனக்குத் தெரியக்கூடாத விஷயத்தைத் தெரிந்துகொண்டனை.
பாங். அவர்கள் பேசக்கூடாத விஷயத்தை அவர்கள் பேசியிருக்கிறார்கள், 
         அதற்குச் சந்தேக மில்லை. அவர்கள் அறிந்த விஷயம் அந்த ஈசனுக்குத்தான் 
         தெரியும்.
ம.ம. இதோ, இங்கு இன்னும் இரத்தத்தின் வாசனை யிருக்கிறது. இ்ந்தச் சிறு கையை 
           ஐரான் தேசத்து அத்தர்க ளெல்லாம் சுகந்த முடைய தாயச் செய்யா!-  
           ஹா!-ஹா!-ஹா!
வைத். என்ன பெரு மூச்சு அது! அந்த இருதயத்தில் அதிக துயரம்
          அங்கியிருக்கவேண்டும்.
பாங். அந்த உன்னதப் பதவியே கிடைப்பதாயினும், என் உடலில் அந்த இருதயம் 
          இருக்க ஒப்பிடேன்.
வைத். சரி-சரி-சரி-
பாங்.  சரியா யிருக்குமென்று சுவாமியைப் பிரார்த்திப்போம்.
வைத். இந்த வியாதி யென் வைத்தியத்திற் குட்படாதது. ஆயினும் உறக்கத்தில் 
          எழுந்து நடந்தவர்கள் பரிசுத்த மனத்தினராய் தங்கள் படுக்கையில் ஆவி 
         பிரிந்ததை நான் அறிந்திருக்கிறேன்.
ம.ம. கைகளைக் கழுவிக்கொள்ளும், உமது படுக்கைப் போர்வையைப் 
          போர்த்துக்கொள்ளும் முகம் அத்தனை வெளுத்துக் காட்டாதீர்-  நான் 
          உமக்கு மறுபடியும் கூறுகின்றேன். பா னுகோபன் புதைக்கப்பட்டான் 
          மடிந்த பின் மறுடியும் வரமாட்டான்.
வைத். அதுகூடவா!
ம.ம. படுக்கைக்கு, படுக்கைக்கு! யாரோ கதவைத் தட்டுகிறார்கள். வாரும், வாரும், 
           வாரும், உமது கையைத்தாரும்-நடந்ததை மாற்ற நம்மா லாகாது-படுக்கைக்கு, 
           படுக்கைக்கு, படுக்கைக்கு!               
 (போகிறான்)
வைத். அசங்கியமான விஷயங்களெல்லாம் இரகசியமாய்ப் பேசப்படுகின்றன 
          வெளியில் கோரமான கிருத்தியங்களினால் கோரமான தொந்திரவுகள் 
          விளைகின்றன. கலக்கப்பட்ட மனதுடையவர்கள் தங்கள் இரககியங்களைத் 
          தங்கள் காதிலாத் தலையணைகளிடம் கூறி பாரம் நீங்குவார்கள். மகாராணிக்கு
         வைத்திய னுதவியைவிட தெய்வத்தின் உதவியே அதிகமாய் வேண்டியிருக்கிறது.  
         ஈசனே! ஈசனே! எங்களை யெல்லாம் மன்னிப்பீராக!- அவர்களை 
         ஜாக்கிரதையாய்ப் பார்த்துக்கொள். அவர்கள் அருகினின்றும் தனக்கே 
         கெடுதியையுண்டு பண்ணிக்கொள்ளத் தக்க எல்லா வஸ்துகளையும் எடுத்துவிடு. 
         எப்பொழுதும் அவர்கள்மீது கண்ணா யிரு. சரி, நாம் போவோம், வா. என் 
         மனத்தை மருண்டிடச் செய்து என் கண்களைக் கலக்கிவிட்டார்கள். நான் 
        எண்ணுவ தொழிய எடுத் துரைக்க லாகாது.
பாங்.  நான் வருகிறேன், வைத்தியரே           (போகிறார்கள்.)
             காட்சி முடிகின்றது.
----------------------
 அங்கம் 5. 
       இரண்டாம் காட்சி. 
      
இடம்-தூமசினத் தருகி லுள்ள பிரதேசம்.
யுத்த பேரிகைகளை முழக்கி, துவஜ படங்கள் முதலியன கொண்டுபோகின்றனர்
 மீனதூதன், கேதுநேசன், அங்குசன், லவணகன், போர் வீரர்கள் வருகின்றனர்.
மால்கோமளன், அவனது பந்து சிவார்த்தன், நற் சீமான் மேகதூமன், இவர்கள் 
மூவரும் சிங்க்ளத்துச் சைனியத்தை அழைத்துக்கொண்டு அருகில் வந்திருக்கின்றனர். 
பழி வாங்கவேண்டு மென்கிற எண்ணங்கள் அவர்களிடம் எரிந்து கொண்டிருக்கின்றன அவர்களுடைய சொந்த  
காரணங்கள் மறத்துப்போன மனிதனையும் குருதி பாய்ந்திடும் கோரமான யுத்தத்திற்கு உந்திடச் செய்யும்
அ. பரணிக் காட்டருகில் அவர்களை நாம் நன்கு சந்திப்போம்  அந்த வழிதான் 
          அவர்கள் வருகின்றனர்.
கே. தனலாபன் தன் தமயனுட னிருக்கிறதாக யாருக்காவது தெரியுமா?
ல. அவ ரில்லை அங்கு என்று நான் உறுதியாய்க் கூறக்கூடும்,  ஐயா அங்கிருக்கும் 
         சீமான்கள் எல்லோருடைய ஜாபிதா ஒன்று என்னிடம் இருக்கிறது சிவார்த்தன் 
         பிள்ளை இருக்கின்றான் அங்கு; இப்பொழுதுதான் வாலிபம் வாய்ந்த
         அநேகம் முதிரா இளைஞரும் அவ்விடம் இருக்கின்றனர்.
மீ. கொடுங்கோன் மன்னன் என்ன செய்கிறான்.?
கே. தூமசினத்துப் பெருங் கோட்டையை அதிகமாய்ப் பலப்படுத்திக் 
          கொண்டிருக்கிறான். அவனுக்குப் பயித்தியம் பிடித்திருப்பதாகச் சிலர் 
          கூறுகின்றனர் அவன்மீது அவ்வளவு வெறுப்புக் கொள்ளாத சிலர் அதை 
          வீராவேசம் என்று கூறுகின்றனர். வியாகுலத்தினால் பீடிக்கப்பட்ட
         அவன் மனத்தை அவனால் அடக்கி ஆள முடியவில்லை.
அ. ரகசியமாய் அவன் புரிந்த கொலைகளெல்லாம் தன்னை வந்து பாதிப்பதை 
          இப்பொழுது தான் உணா்கிறான் அவன். இப்பொழுது ஒவ்வொரு நிமிஷமும் 
          உண்டாம் கலகங்கள் அவனிழைத்த நம்பிக்கைத் துரோகத்தைச் சுட்டிக்காட்டி 
          ஏளனம் செய்கின்றன அவனது சைனியங்க ளெல்லாம் அவனது கட்டளைக் 
          கஞ்சி நடக்கின்றனவே யொழிய, அவன்மீதுள்ள பிரிதியா லன்று ஒரு 
          பூதத்தினுடைய சட்டையானது ஒரு குள்ளத் திருடன் உடலின்மீது எங்ஙனம் 
          தளா்ந்து தொங்குமோ, அங்ஙனமே அவனது உன்னதப் பதவியும்
          அவனுக்குப் பொருத்தமா யிராததை இப்பொழுது காண்கிறான்.
மீ. அவன் மனத்தி லிருப்பதெல்லாம், அவ்விடம் இருப்பதன் பொருட்டு தங்கள்மீதே 
         குறை கூறிக்கொள்ளும்பொழுது, ஹிம்சிக்கப்பட்ட அவன் அறிவானது, 
         தன்மீதிலேயே திரும்பி எதிர்த்து நிற்பதைக் கண்டு, எவன்தான் குற்றம்
         கூறுவான்?
கே. நல்லது, உண்மையில் நாம் எவ்விடம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமோ, 
         அவ்விடம் அக் கடமையைச் செலுத்த நடப்போம் நாம். நமது தேசத்தைப் 
         பீடித்திருக்கும் வியாதியைப் போக்கிடும் வைத்தியனைச் சந்தித்து, அவனுடன்
        கலந்து, இப் பீடையைக் கழித்தற்பொருட்டு, நமது தேசத்திலுள்ள உதிர 
        மனைத்தும் சிந்துவோ மாக.
ல.  அல்லது தகுந்தபடி இவ் வரசை வளா்த்து அதனைச் சுற்றியிருக்கும் புல் 
          பூண்டுகளை யெல்லாம் அழித்திட எவ்வளவு வேண்டுமோ, அவ்வளவு 
          சிந்துவோம். நமது படைகளைக் கொண்டு பரணிக் காடு ஏகுவோம்.
(போர்வீரர்களுடன் கடந்து போகின்றனர்)
           காட்சி முடிகின்றது
----------------------------------------------------------
 அங்கம் 5. 
     மூன்றாங் காட்சி. 
    
 
                                  இடம்----தூமசினம். அரண்மனையில் ஓர் அறை.
                                   மகபதி, வைத்தியன், சேவகர்கள் வருகின்றனர்.
ம.    எனக்கு ஒரு செய்தியுங் கொண்டுவர வேண்டியதில்லை; ஓடிப்போகட்டும்
          எல்லோரும்; பரணிக்காடு தூமசினத்திற்குப் பெயர்ந்து வரும்வரையில் நான் 
          பயத்தினால் பீடிக்கப் பட மாட்டேன். மால்கோமளன் என்னுஞ் சிறுவன் என்? 
          பெண்ணின் வயிற்றிற் பிறந்தவன் அன்றோ அவன்? மனிதர்களுக்கு இனி 
         வரப்போகின்றதை யெல்லாம் முன்பே அறிந் துள்ள மாயாவிகள் "ஒன்றும் 
         அஞ்சாதே மகபதி; பெண்ணின் வயிற்றிற் பிறந்த ஒருவனாலும் உனக்குத் 
         தீங்கிழைக்க முடியாது" என்று கூறி யிருக்கின்றன என்னிடம்--- ஆகவே துரோகச் 
         சிந்தையுடைய தலைவரே, நீங்கள் எல்லாம் என்னை விட்டுச் சிங்களத்துச் 
         சீமான்களுடன் போய்ச்சேருங்கள். என்னை யாண்டிடும் மனமும், நான் வகிக்கும் 
        இருதயமும், சந்தேகத்தினால் சாயாது, பயத்தினால் நடுங்குறாது, என்றும்.   
                               ஒரு சேவகன் வருகிறான்.
               பயந்த முக முடைப் படுக்காளிப் பயலே! நீ பாழாய்ப்
               போக! இந்தப் பெட்டையின் முகத்தை எங்கு பெற்றனை? 
சே.        அங்கே - பதினாயிரம் பெயர் -
ம.         பெட்டைகளா, மடையா?
சே.        போர்வீரர்கள், அரசே.
ம.    பெட்டையைப்போல பயந்திடுங் கட்டைத் தடியா! உன் முகத்தைக் கிள்ளிக் 
          கொண்டு, சிவந்திடச்செய்து உன் பயத்தை மறை; யாரடா, அந்தப் போர் வீரர்கள்?  
           ---- மடையா! நீ செத்து மண்ணாய்ப் போக! உன் பயந்த முகத்தைப் பார்த்தாலே 
          எவனுக்கும் பயமுண்டாகும் -  தத்தி மூஞ்சி! யாரடா, அந்தப் போர் வீரர்கள்?
சே.  மன்னிக்கவேண்டும், மகாராஜா, சிங்களத்துச் சைனியங்கள். 
ம.   உன் முகத்தைக் காட்டாதே யென்முன் !
                                                 [சேவகன் போகிறான்]
சேந்தா !- ஏன் மனம் ஒரு வாரா யிருக்கின்றது. நானிதைக் காணுங்கால் - யார் 
          அங்கே? சேந்தா ! - இந்த யுத்தமானது என்னை எப்பொழுதும் சந்தோஷத்திலாவது  
          வைத்திடும் -  அல்லது இப்பொழுதே என்னை அழித்திடும். நான் நெடு நாள் 
          உயிர் வாழ்ந்துவிட்டேன். வற்றலாய் உலர்ந்து பழுத்த சரகைப்போல் என் 
          வாழ்வு வரண்டுவிட்டது. வயோதிகத்தி லொருவன் தன்னைப் பின்தொடர 
          விரும்பும் புகழும், அன்பும், பணிவும், அன்பர் கூட்டமும், நான் அடைவே 
          னென்றெதிர்பார்த்தல் வியர்த்த மாகும்; அவைகளுக்குப் பதிலாக, வெளியில் 
          கூறாவிட்டாலும் உள்ளத்துள்ளே யிருக்கும் சாபனையும், வாயினாற் புகன்றிடும் 
          முகமனும் அடைந்திருக்கிறேன். அதையும் பேதை மாந்தர் மறுப்பார்கள், 
          ஆயினும் அங்ஙனஞ் செய்ய அஞ்சுகின்றனர். சேந்தா !-
                              சேந்தன் வருகிறான்.
சேந்.  மகாராஜாவின் சித்தம் என்ன?
ம.    இன்னும் என்ன சங்கதி ?
சேந்.  அரசே, முன்பு உரைக்கப்பட்டதெல்லாம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. 
ம.    ஆயின், என் என்பினின்றும் நிணமானது துண்டந் துண்டமாய் வெட்டி 
         யெடுக்கப்படும்வரையில் நான் யுத்தம் செய்கிறேன். கொடு என்னுடைய 
          கவசத்தை !
சேந்.  இதற்குள்ளாக அது அவசிய மில்லை.
ம.    நான் அதை அணிந்துகொள்கிறேன்.- இன்னுஞ் சில குதிரை வீரர்களை யனுப்பி 
          சுற்றுப் பிரதேசம் எங்கும் சுற்றிப் பார்க்கச் சொல். பயத்தைப்பற்றி பேசுபவர்களை 
          யெல்லாம் கயிற்றைக் கட்டித் தூக்கி விடச் சொல் - என் கவசத்தை யெனக்குக் 
          கொடு. - வைத்தியரே. உமது நோயாளி யெங்ஙன மிருக்கின்றாள்?
வைத். அப்படி நோய் ஒன்றும் அதிகமாய்க் காணோம், அரசே, - அவர்கள் மனதைச் 
           சஞ்சலங்கள் ஒன்றன்மீ தொன்றாய் அதிகமாய் பீடிப்பதனால், தக்கபடி 
           உறக்கம் வராது கலக்கப்பட் டிருக்கின்றனர்.
ம.     அதற்குத்தான் சிகிச்சை செய்யவேண்டும் நீர். வியாகுலமடைந்த மனதைச்
         சுவஸ்தப்படுத்த முடியாதா உம்மால்? வேரூன்றிய வோர் துயரத்தை ஓர் 
         மனத்தினின்றும் பிடுங்கியெரிந்து மூளையில் வரையப்பட்டிருக்குந் துயரங்களைத்  
         துடைத் தழித்து, இருதயத்தை யேங்கிடச் செய்யும் பெருங்கஷ்டத்தைக் 
        கொடுக்கும் பீடையை, மனத்தினின்று மகற்றி, இன்பத்தைத் தரும் மறதி 
        யென்னும் மருந்தினால் மாற்ற முடியாதா வும்மால்? 
வைத்.  இவ் விஷயத்தில் பிணியாளியே தனக்குச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
ம.     ஆயின் உமது மருந்தைக் கொண்டுபோய் மாட்டிற்குப் போடும் ! 
         அப்படிப்பட்ட ஔஷதம் எனக்கு வேண்டாம் கொஞ்சமும். - வா, என் 
         கவசத்தை யெனக்குப் போடு ; என் செங்கோலைக் கொடு - சேந்தா, அனுப்பு 
        வெளியே - வைத்தியரே, என் பாலையக்காரர்களெல்லாம் என்னை விட்டுப் 
        பறக்கின்றனர் - வா, வா, அப்பா, சீக்கிரம்- வைத்தியரே, எனது நாட்டின் 
        பீடையைப் பரிசோதித்து, அதன் வியாதியைக் கண்டுபிடித்து, சுவஸ்தப்படுத்தி, 
        முன்போல் சுக மடையச் செய்வீராயின், திசை யெங்கணும் பிரதிதொனி 
        யுண்டாகும்படி உம்மைப் புகழ்ந்திடுவேன், அவ்வாறு உமது புகழ் அதிகமாய்ப் 
        பரவும். - எடுத்துவிடு இதை - எந்த நேர்வாளம், பூரம் அல்லது மற்றெந்த
        விரோசனமாவது கொதித்து இந் நாட்டினின்றும் இச் சிங்களவரைக் கழிக்க
        முடியாதா? - அவர்களைப் பற்றி நீர் கேள்விப்படுகிறீர்களா?
வைத். ஆம், அரசே ; மகாராஜா அவர்களுடைய யுத்த சன்னாகமானது அதைப்பற்றி 
            எங்களைக் கொஞ்சங் கேட்கும்படி செய்கிறது. 
ம. இதை யென் பின்னால் கொண்டுவா - பரணிக்காடு தூம சினத் தருகில் வருமளவும் 
         பயப்படேன் நான் சாதலுக்கும் சாக்காட்டிற்கும். [போகிறான்]
வைத். [ஒருபுறமாக] தூமசினத்தை விட்டுத் தொலைந்து போவேனாயின் எந்த லாபமும் 
           மறுபடியும் என்னை இழுத்திடாது  
இவ்விடம். [போகிறார்கள்.]
காட்சி முடிகின்றது.
-----------------    
அங்கம் 5. 
  நான்காவது காட்சி.  
     
 
இடம் - பரணிக்காட்டை யடுத்த  பிரதேசம்.
யுத்த பேரிகையை முழக்கி துவஜ படலங்களைக்கொண்டு போர் வீரர்கள் போகின்றனர்.
மால்கோமளன், வயோதிகச் சிவார்த்தன், அவனது குமாரன், மேகதூமன், மீனதூதன், கேதுநேசன், அங்குசன், லவணகன்,   
ரோஷன் போர்வீரர்களுடன் வருகின்றனர். 
மா. வீடுகளில் பயமின்றி நாம் வசித்திடும் நாட்கள் அருகினில் வந்துவிட்டனவென்று
           நான் நம்புகிறேன். 
மீ. அதைப்பற்றி நாங்கள் அணுவளவும் சந்தேகப்படவில்லை.
சி. இது எந்தக் காடு, நமது எதிரி லிருப்பது ?
மீ. பரணிக் காடு. 
மா. ஒவ்வொரு போர் வீரனும் ஒரு மரத்தின் கிளையைத் தறித்து  தன் முன்னாக 
          எடுத்துக்கொண்டு போகட்டும் ; அப்படிச் செய்வதினால் நமது சைனியத்தின்
         தொகை மறைக்கப்பட்டு, ஒற்றர்கள் போய் நம்மைப்பற்றி உரைத்திடுங்கால் 
         தவறுவார்கள். 
போ. அப்படியே செய்கிறோம். 
சி.   நம்பிக்கை அதிகமா யுள்ள கொடுங்கோன் மன்னன், இன்னும் தூமசினத்திலேயே 
         இருப்பதாக வன்றி வேறொன்றும் கேள்விப்படுகிறோ மில்லை; நாம் அதை 
         முற்றுகை யிடுவதற்கு உடன்படுவான் அவன்.
மா. அதுதான் அவனது பெருங் கோரிக்கை ; ஏனெனில் சமயம் வைக்கும் 
          பொழுதெல்லாம்  அவனது சைனியத்தில் பெரியோர் சிறியோர் அனைவரும். 
          அவனை விட்டு நீங்கி அவனது விரோதிக ளாகின்றனர். அவனுக்குக் கீழ்ப் 
          படிந்திருப்பவர் களெல்லாம் பலவந்தத்தினால் அங்ஙனம் இருக்கின்றனர் ; 
          அவர்கள் மனது அவ்விடம் இல்லை. 
மே. நமது காரியம் கைகூடிய பிறகு நமது உண்மையான தீர்மானங்களை 
           வெளியிடுவோம் ; இப்பொழுது சுத்த வீரர்களாய்யுத்த சன்னத்த ராவோம்.
சி.  நமது உடைமை இன்னது, கடமை இன்னது என்று தக்கபடி, நமக்கு 
         கண்டிப்பாய்த் தெரிவிக்கும்படியான காலம் நெருங்கிவிட்டது. எண்ணமிடும் 
         யோசனைகள் அவைகளின் உறுதி யில்லாக் கோரிக்கைகளை உரைப்பனவாம், 
        கண்டிப்பான முடிவோ கத்தி வெட்டுகளினால்தான் தீர்மானிக்கப்பட 
   வேண்டும். ஆகவே அதைக் குறித்து நமது சண்டையை நடத்துவோம். 
         [எல்லோரும் போர்வீரர்களுடன் கடந்து செல்கின்றனர்.]
                        காட்சி முடிகின்றது. 
----------------
அங்கம் 5. 
 ஐந்தாங் காட்சி.  
                                              
      இடம்:  தூமசினத்துக் கோட்டைக்குள். 
                                     மகபதியும், சேந்தனும் வருகிறார்கள். 
போர்வீரர்கள், பேரிகைகளைப்  முழங்கிக் கொண்டு துவஜங்களைப்
 பிடித்துக்கொண்டு வருகின்றனர். 
ம.      கோட்டையின் வெளி மதில்களில் நமது கொடிகளைக் கட்டித் தொங்க 
           விடுங்கள்; ' வருகின்றனர், வருகின்றனர்' என்றே இன்னும் கூச்சலா யிருக்கின்றது.  
          நமது கோட்டையின் பலமானது முற்றுகை யிடுபவர்களை இகழ்ந்து நகைத்திடும்  
;
         நோயினாலும் பசியினாலும் அனைவரும் நசிக்குமளவும் அவர்கள் முற்றுகை 
         போடட்டும். நமக் குதவி செய்ய வேண்டிய உதவியை அவர்கள்  
பெற்றிராவிட்டால்,
         அவர்களை நாம் தைரியமாய் நேருக்கு நேராக எதிர்த்து, அவர்கள் வந்த வழி 
         வீட்டிற்குத் திரும்பிப்போகும்படி துரத்தி யடிதிருக்கலாம். 
 [உள்ளே ஸ்திரீகளின் அழு குரல் கேட்கிறது.]
                 என்ன சப்தம் அது?
சே.      அது ஸ்திரீகளின் அழு குர லாம், அரசே.        [போகிறான்.]
ம.         பயம் என்பதின் ருசியை சற்றேறக் குறைய முற்றிலும் மறந்துவிட்டேன் நான். 
          இரவில் கூக்குரலைக் கேட்டு என் ஐம்பொறிகளும் குன்றிப் போயிருக்கும் சமயம் 
          ஒன்றிருந்தது,  துக்ககரமான ஒரு கதையைக் கேட்டு எனது உடலி லுள்ள ரோம 
          மெல்லாம் சிலிர்த்து உயிர் பெற்றனபோல நின்றிருக்கும் அப்பொழுது. அபரிதமான  
          கோரங்களை நான் விழுங்கியிருக்கிறேன்; எனது கொலைக் கஞ்சாக் கொடிய 
          எண்ணங்களுக்கு மிகவும் சுபாவமான பீதியானது என்னை இனி ஒரு காலும் 
          திடுக்கிடச்செய்யாது. 
  மறுபடியும் சேந்தன் வருகிறான். 
                  எதற்காக அக் கூக்குரல்?
சே. அரசே, மகாராணி அவர்கள், மரணம் அடைந்தனர். 
ம. இன்னும் கொஞ்ச காலம் பொறுத்து இறந்திருக்கவேண்டுமவள் ; அப்படிப்பட்ட 
          வார்த்தைக்கு அக் காலம் வாய்ந்ததாயிருக்கும் நாளை, நாளை, நாளை என்று 
          நாளுக்கு நாளாக மெல்ல நகர்ந்து செல்கிறது காலந்தம்வரையில் இங்ஙனம், 
         கடந்த நமது நாட்களெல்லாம் மடையர்களை மண்ணாம் மரணத்திற்கு வழி 
         காட்டிக்கொண்டு போய்விட்டன. மெல்லிய சுடரே ! அவிந்து ஒழிந்து போ ! 
         உலக வாழ்க்கை  யென்பது நடமாடும் ஒன்று மில்லாச் சாயை யாம் ; அரங்கத்தில் 
         அரை நாழிகை குதித்துக் கூத்தாடி பிறகு ஒருவரு மறியாத படி மறைந்துபோகும் 
         எளிய நடனாம் மனிதன். அதிக சப்தமும் அட்டஹாசமும் அடங்கியதாயும் 
         அர்த்தத்தில் ஒன்றுமில்லாததாயு மிருக்கும் பயித்தியக்கார னொருவன் பிதற்றிய 
         கதையே யாகும்.
ஒரு தூதன் வருகிறான். 
ஏதோ வாயாட வருகின்றாய் நீ; சீக்கிரம் உன் கதை யாகட்டும். 
தூ. மகாராஜா, நான் எதைப் பார்த்தேனோ அதை உம்மிடம் உரைத்திடவேண்டும், 
           ஆயினும் எப்படிச் செய்வது என்பதை அறிகிலேன். 
ம. சரி, சொல் சீக்கிரம். 
தூ. குன்றின்மீது நான் காவல் காத்து நிற்கையில் பரணிக் காட்டின் பக்கமாக 
          நோக்க, உடனே அக் காடு நடந்து வருவது  போல் தோற்றிய தெனக்கு. 
ம. பொய் பேசுகிறாய் கழுதையே !
தூ. அங்ஙனம் இல்லாவிடின் உமது கோபத்திற்கு நான் ஆளாகட்டும் ; ஒரு காத 
         தூரத்திற்குள்ளாக அது வருவதை நீர் காணலாம்; காடே கடந்து வருகிறதெனக் 
         கூறுகிறேன்.
ம. நீ உரைப்பது பொய்யாயின்,உண வின்றி நீ வற்றலா யுலறுமளவும்,உன்னை 
         அடுத்த மரத்தில் கட்டித் தொங்க விடுவேன் உயிருடன்: உனது வார்த்தை 
        உண்மையாயின், எனக் கம்மாதிரி நீ செய்த போதிலும் அதைக் கவனியேன் நான்.
        முன்பு எனக் கிருந்த நம்பிக்கையை அடக்கி,உண்மை உரைப்பதுபோல்  
        பொய்யினைப் புகன்றிடும் பிசாசின் புறட்டைக் குறித்து சந்தேகப்பட
        ஆரம்பிக்கின்றேன்.  "பரணிக்காடு தூமசினம் வரும் வரையில் அஞ்சவேண்டாம்" 
        என்று  கூறியது.இப்பொழுதோ ஒரு காடு தூமசினம் நோக்கி வருகிறது. யுத்த 
        சன்னத்தமாய் வெளியிற் போவோம்! அவன் உரைப்பது உண்மையாகக் 
        காணப்படு மாயின், இங் கிருந்தும் பிரயோஜன மில்லை, எங்கு பறந்தோடியும் 
        பிரயோஜனமில்லை. ஆதித்தனைப் பார்ப்பதும் எனக்கு ஆயசமா யிருக்கிறது, 
        அண்ட சராசரங்களும் அழிந்து போகுமாக, என்றே கோருகிறேன்! யுத்த பேரிகையை 
   முழங்குங்கள்! பிரளய காலக் காற்று வீசட்டும்! யுகாந்த காலாக்னி தஹிக்கட்டும்!
   எது நேர்ந்த போதிலும் நமது மார்பில் கவசத்துடனாவது  நாம் மாளுவோம்! 
          [அனைவரும் போகிறார்கள்.]
காட்சி முடிகின்றது. 
அங்கம் 5. 
 ஆறாம் காட்சி
இடம்- தூமசினக் கோட்டைக் கெதிரில்.
யுத்த பேரிகைகளை முழக்கி துவஜபடங்களை எடுத்துச்  செல்கின்றனர்.
மால்கோமளன், வயோதிகச் சிவார்த்தன், மேகதூமன், கிளைகளைக் கையில் 
        பிடித்த தங்கள் சைனியத்துடன் வருகின்றனர்.
மா. இப்பொழுது நாம் வேண்டிய அருகாமையில் வந்து விட்டோம்.  உங்களை 
         மறைத்திருக்கும் கிளைகளைக் கீழே எறிந்து விட்டு, உங்கள் உண்மையான 
         சொரூபத்தைக் காட்டுங்கள். அண்ணா, தாங்கள், எனது தாயாதியாம் உத்தம   
        குணம் வாய்ந்த உமது குமாரனுடன், நமது முதல் யுத்தத்தில் சேனாதிபதியாய் 
        நடத்தும், எங்கள் வரிசைக் கிரமப்படி, நாமும் மேகதூமனும், மிகுதியாயுள்ள 
         மற்ற வேலையை மேற்கொள்ளுகிறோம்.
வ.சி.போய் வாருங்கள். கொடுங்கோன் மன்னனது சைனியத்தை  இன்றிரவு மாத்திரம்
         சந்திப்போ மாயின், எங்களால் சண்டைபோட முடியாவிட்டால், நாங்கள் 
         தோற்கடிக்கப் படட்டும்.
மே. நமது யுத்த பேரிகைகளை யெல்லாம் முழங்கச் செய்யுங்கள்; வரப்போகின்ற 
         உதிர வெள்ளத்தையும் சாக்காட்டையும் அறிவிக்கும் அவைகள் உரத்த 
         சப்தமாய்த் தொனிக்கட்டும்.
[எல்லோரும் போகிறார்கள்.]
காட்சி முடிகின்றது.
-------------
 அங்கம் 5. 
 ஏழாங் காட்சி. 
இடம்-கோட்டைக் கெதிரில் வேறொரு இடம்.
யுத்த கோக்ஷம்.
மகபதி வருகிறான்.
ம.*என்னை யோர் கம்பத்திற்குக் கட்டிவிட்டார்கள்; இதை விட்டு நான் ஓட முடியாது. 
          கரடியைப்போல் இம்முறை வருபவர்களை யெல்லாம் நா னெதிர்க்க 
         வேண்டியதுதான்.- பெண் வயிற்றில் பிறவாதவ னெவன்? அப்படிப்பட்டவனுக்கே  
         நான் அஞ்சவேண்டும்-மற்றெவனுக்கும் அன்று.
இளைய சிவார்த்தன் வருகிறான்.
சி.உன் பெய ரென்ன?
ம.*அதைக் கேட்க நீ அஞ்சிடுவாய்.
சி.மாட்டேன், கொடு நரகத்தி லுள்ள கூற்றத்தைப்பார்க்கிலும்  கடுமையான பெயரை 
         நீ வகித்த போதிலும்.
ம.* என் பெயர் மகபதி.
சி. இதைவிட என் காதுகளுக்கு வெறுப்பை யுண்டு பண்ணத் தக்க வேறெப் 
        பெயரையும், பேயும் எடுத்துப் பேச முடியாது.
ம.* அதைவிட அதிக பயங்கரமான பெயரும் எடுத் துரைக்க  முடியாது.
சி. கொடிய பாதகா! நீ கூறுவது பொய் ! என்னுடைய வாளினால் உன் வாயினாற் 
          கூறியது பொய்யென்று ரூபிக்கிறேன்.
        [இருவரும் சண்டை போடுகிறார்கள், இளைய சிவார்த்தன்  கொல்லப்படுகிறான்.]
ம.*பெண் வயிற்றிற் பிறந்தவன் நீ-பெண் வயிற் றுதித்த ஆண் மகனது, ஆயுதங்களை 
         நகைத் திகழ்வேன், கட்கங்களைக் கண்டு சிரித்திடுவேன்.
                         [போகிறான்.] 
                            யுத்தகோஷம்.
                        மேகதூமன் வருகிறான்.
மே.      கோஷ்டம் அந்தப் பக்கந்தான் கேட்கிறது----கொடுங்கோன்மன்னா! 
          கொஞ்சங் காட்டு உன் முகத்தை! என் கரத்தாலன்றி வே றொருவன் கையால் 
          நீ கொல்லப்படுவை யாயின் என் பெண்சாதி பிள்ளைகளி னருவங்கள் 
          என்னை யெப்பொழுதும் பீடிக்கும். கூலிக்காக ஆயுதங்களைக் கையிலேந்தும்
         பேதைக் காலாட்களை நான் வீழ்த்தமாட்டேன். மகபதி, உன்னையாவது 
          கொல்வேன், அல்லது மழுங்கப்படாத கூருடன், எனது வாளை, உபயோகியாது 
         உறையி லிடுவேன்.----அங்கேதான் நீ யிருக்கவேண்டும்----இப் பெருங் 
         கூச்சலெல்லாம் யாரோ ஓர் பெரிய மனிதனைக் குறித்ததாய்த்தானிருக்க 
         வேண்டும். அதிர்ஷ்ட வசத்தால் நான் அவனைக் கண்டு பிடிப்பேனாக, 
         அது தவிர, நான் வேண்டுவது வேறொன் றில்லை.                                                                     
[போகிறான்.]
                        யுத்தகோஷம்.
               மால்கோமளனும் வயோதிகச் சிவார்த்தனும்
                              வருகிறார்கள்.
வ.சி.     அரசே, இவ் வழி----கோட்டையானது எளிதில் கைப்பற்றப்பட்டது. 
        கொடுங்கோன் மன்னனது பிரஜைகள் இருபுறமும் சண்டை போடுகின்றனர். 
        பெரிய தலைவரெல்லாம் தமது தைரியத்தை நன்றாய்க் காட்டுகின்றனர் சமரில்; 
        ஜெயம் உம்முடையதுதா னென்றே கூறவேண்டும். இனிச் செய்ய வேண்டிய 
         ததிக மில்லை.
மா.           நமது பகைவரிற் சிலர் தமது பாணங்கள் நம்மீது படாதபடி பக்கலில் 
           விழவேண்டு மென்று எய்வதைக் கண்டேன்.
வ.சி.        தாங்கள் கோட்டைக்குட் பிரவேசிக்கலாம்.
                                                    [போகிறார்கள்.]
                             யுத்த கோஷம்.
                   மறுபடியும் மகபதி வருகிறான்.
ம.      புத்தி யில்லா ரஜபுத்ரனைப்போல் என் வாளாலே என்னுயிரை நான் ஏன் 
          போக்கிக்கொள்ளவேண்டும்? பிராணிகளை நான் பார்க்கும் சக்தி எனக்கிருக்கும் 
         வரையில் காய வடுக்களே அவர்களுக் கணிகலமாகத் தோற்றுகின்ற தெனக்கு.
                 மறுபடியும் மேகதூமன் வருகிறான்.
மே.        திரும்பு, யமனே, திரும்பு!
ம.     எல்லா மனிதர்களிலும் உன்னையே யெதிர்ப்படாது வந்தேன் நான். ஆயினும்
          பிழைத்துப் போ, உன் உறவினரைக் கொன்ற பாரமே என் ஆன்மாவிற்குப் 
          போதும்.
மே.       உன்னுடன் பேச வார்த்தை யில்லை யென்னிடம்: என் பதில் என் 
             வாளிலிருக்கின்றது: கொலைக்கஞ்சா பாதகா! உன் கொடுமையைக் 
           கூறிடவும்  சொற்களில்லை..
                                       [அவர்கள் சண்டை போடுகின்றனர்.]   
ம.     உன் முயற்சியை வீ ணாக்குகின்றனை: என்னைக் காயப்படுத்த முயல்வதைவிட,
         அத்தனை எளிதில், உன் கண்ணுக்குப் புலப்படா இக்காற்றை உன் கை வாளால் 
         வடுப் படுத்தலாம்: உனது வாளை வெட்டுபடத் தக்க தலைகளின்மீது வீசு: ஒரு 
        மாயையால் சூழப்பட்டிருக்கிறது என் னுயிர்; பெண் வயிற்றுதித்த எந்த 
        மனிதனாலு மதைக் கொல்ல முடியாது.
மே.       ஆனால் அம் மாயையில் இனி நம்ரபிக்கை வையாதே! இது வரையில் நீ 
         சேவித்து வந்த பிசாசம், மேகதூமன் தன் தாயின் உதரத்தினின்றும் அகாலமாய்க் 
         கீர்ந் தெடுக்கப்பட்டான் என்று உனக்கு உரைக்கட்டும்.
ம.          என்னிடம் அங்ஙன முரைக்கும் அந் நா பாழாய்ப் போகுமாக! எனது 
          ஆண்மையை யெல்லாம் அது அடக்கிவிட்டதே! நமது செவிகள் இன்ப மடையும்படி  
          வார்த்தைகளால் பிரமாணம் செய்து, முடிவில் நமது கோரிக்கைகளை  
அழித்திட்டு,
          இரு பொருள்படப் புரட்டுத்தனமாய்ப் பேசிடும், இத் திருட்டுப் பிசாசங்களை 
          எப்பொழுதும் நம்ப லாகாதினி. நா னுன்னுடன் சண்டை செய்யேன்.
மே. படுக்காளியே! ஆயின் எனது சிறையாக ஒப்புக்கொள். உலகத்தோ ரெல்லாம் 
          உன்னை விநோதக் காட்சியாகக் காணும்படி வாழ்ந்திரு. அபூா்வமான 
         மிருகங்களைக் கூட்டில் அடைப்பதுபோல் உன்னையும் அடைத்து, வெளியில், 
         "இதற்குள் ஓர் கொடுங்கோன் மன்னனைக் காணலாம் நீ்ங்கள்" என்று ஒரு 
         கொம்பில் எழுதித் தொங்கவிட்டு வைக்கின்றோம்.
ம. சிறுவனான மால்கோமளன் பாதத்தில் வீழ்ந்து பணியும் பொருட்டும், கண்ட 
         ஜனங்களெல்லாம் என்னை ஏளனஞ் செய்து காறித் துப்பவும், நான் உனக்குச் 
        சிறையா யகப் படேன். பரணிக்காடு தூமசினம் வந்தபோதிலும், பெண்ணாற் 
        பெற்றெடுக்கப்படாத நீ, என்னை எதிர்த்தபோதிலும், நான் கடைசிவரையில் 
        ஒரு கை பார்த்தே விடுவேன். வெட்டு மேகதூமா! "பொறு, போதும்" என்று 
        முதலி்ல் கூறுபவன் நாசமாய்ப் போகட்டும்!
               (சண்டை செய்துகொண்டே போகின்றனர்.)
          
 யுத்தகோஷம்
        சைனியங்கள் திரும்பி வருகின்றன ஜெயகோஷம். மால்கோமளன், 
        வயோதிகச் சிவார்த்தன், ரோஷன், பிரபுக்கள், சைனியங்கள், யுத்தபேரிகை 
        முழுங்க துவஜ  படங்களுடன் திரும்பி வருகின்றனர்.
மா. நாம் காணாது தேடுகிற நண்பரெல்லாம் சுகமாய்த் திரும்பி  வருவாராக.
வ.சி. சிலர் போகவேண்டியதே நாம் காண்கிற இவர்களைக் கணக் கிடுங்கால், 
          இவ்வளவு பெரிய யுத்தத்தில் அதிக எளிதில் ஜெயீத்தோ மென்றே கொள்ளல் 
          வேண்டும்.
மா. மேகதூமனைக் காணோம், உமது வீரனான மைந்தனையுங் காணோம்.
ரோ. ஐயா, வீரனான உமது மைந்தன் வீரர்களின் கடமைப்படி  வீர சுவர்க்கம் 
          புகுந்தான். சுத்த வீரனாகத் தக்க வயது வரையில், அவன் ஆயுள் விதிக்கப்-
         பட்டிருந்ததுபோலும் அவ் வயது வந்ததாகத் தன் வல்லமையினால் அவன் 
         ருஜுப்படுத்தியவுடன், நின்ற இடத்தினின்றும் நிலை பெயராது, அதி 
        சூரனைப்போலாவி நீத்தான்.
வ.சி. ஆனால், அவன் மடிந்தானா?
ரோ. ஆம், அப்படியே படு களத்தினின்றும் எடுத்து வந்து விட்டோம், அவனது 
         வீரத்திற் கேற்றபடி நீர் விசனப்படுவதாயின் உமது துக்கம் முடிவில்லாத தாகும்.
வ.சி. மார்பினிற் காயத்துடன் மாண்டானா?
ரோ. ஆம், முன்புறத்திலேயே.
வ.சி. சரி, அனால்! ஜெதீஸ்வரன் சேவக னாவான் அவன்! என் தலையில் 
         எத்தனைக் கேச முண்டா அத்தனை மைந்தர்கள் எனக் கிருந்தபோதிலும் 
        இதைவிட மேலான மரணத்தை அவர்களுக்குக் கோரமாட்டேன் அவன் 
        சரமகவி யதனோடு பாடி யாயிற்று.
மா. அவன் இன்னும் அதிக துக்கம் பாராட்டத் தக்கவன் அதை அவன்பொருட்டு 
         நான் பாராட்டுவேன்.
வ.சி. அதற்குமேல் அவன் பாராட்டத்தக்கவ னல்லன். அரும்போர் புரிந்தே 
          பிறந்ததின் பயனைத் தீர்த்ததாகக் கூறுகிறார்கள். ஆகவே, ஈசன் அவனுக் 
         கருள் செய்வாராக! இதோ வருகிறது புதிய சந்தோஷம்.
   
  மேகதூமன் மகபதியின் சிரசைக் கொண்டுவருகிறான்.
மே. வேந்தே! வாழ்வீராக! இனி உம்மை அங்ஙனமே நாங்கள் வாழ்த்தவேண்டும். 
         பாரும் இதோ, கொடுங்கோன் மன்னது தலை யெங்கே நிற்கின்றதென! காலமானது  
         கட் டவிழ்க்கப்பட்டது. உமது ராஜயத்தி லுள்ள உத்தமா்க ளெல்லாம் உம்மைச் 
         சூழ்ந்து நிற்கின்றனர். அவர்கள் மனத்தில் நான் கூறிய வந்தனத்தையே 
         அவர்கள் எண்ணுகின்றனர். என்னுடன் அவர்களும் எனது வந்தனத்தை 
        வாய்விட்டறைந்திடும்படி வேண்டுகிறேன்- சகேதநாட்டு மன்னா! செய விஜயீபவ!
எல்லோரும். சகேதநாட்டு மன்னா! ஜெயவிஜயீபவ!
                            (வாத்யகோஷம்.)
        நம்மிடம் உங்களில் ஒவ்வொருவருக்கும் உள்ள அன்பினைக் கணக்கிட்டு, 
         பதிலுக்குப் பதில் செய்து சம மாக்குமுன், நாம் அதிக காலத்தை விருதாவில் 
         கழிக்கமாட்டோம். எனது மோமகர்களும் பநதுக்களுமான நீங்கள் இனி 
         சிற்றரசா்களாவீர்கள் சகேத நாட்டில், அப் பெருமையை முதல் முதல் 
         வகித்தவர்கள் நீங்களே யாவீர்கள். கொடுங்கோன் மன்னன், கவனமாய்ப் 
         பார்த்து தங்களைப் பிடிக்க வைத்த பொறிகளினின்றும் தப்பிப் பிழைக்கும் 
         பொருட்டு, அயல் தேசங்களைச் சார்ந்த நமது நண்பரை நமது தேசத்திற்கு
         அழைக்க வேண்டியது, இறந்த கொலைக் கஞ்சா இப் பாதகனுக்கும், எல்லோரும் 
         எண்ணுகிறபடி தானாகக் கோரமாம் தற்கொலை புரிந்துகொண்டு மடிந்த 
         ராக்ஷசிபோன்ற இவன் மனைவிக்கும், உடந்தையா யிருந்து, கொடுந் தொழில்
         புரிந்தவர்களை யெல்லாம் வெளிக்குக் கொண்டுவரவேண்டியது, இன்னும் 
         இவைபோன்ற நாம் செய்யக் காத்து நிற்கும் மற்றக் கர்மங்களையும், ஈசன் 
         கருணையினால், இடம் காலம் இவைகளைக் கருதி வரிசைக் கிரமமாகச் செய்து
         முடிப்போம். ஆகவே அனைவர்க்கும் ஒன்றாயும், ஒவ்வொருவருக்கும் 
         வெவ்வேறாகவும் வந்தனம் செய்து, ஸ்காந்தபுரத்தில் நமது மகுடாபிஷேகத்தைக் 
        காண, வரவழை கின்றோம்
               (செயகோஷம் போகிறார்கள்)
           காட்சி முடிகின்றது.
     நாடகம் முற்றது  
-------------------------
This file was last updated on 10 June 2012. 
Feel free to send corrections to the webmaster.