pm logo

'திருவள்ளுவமாலை'
சங்கப்புலவர்களால் பாடப்பட்டவை


tiruvaLLuva mAlai
by several poets of sangam period
In tamil script, unicode/utf-8 format



Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

'திருவள்ளுவமாலை'
சங்கப்புலவர்களால் பாடப்பட்டவை


திருவள்ளுவமாலைப் பாடல்கள் சங்கப்புலவர்களால் பாடப்பட்டவையாகும். இந்தத் தொகுப்புநூல் உருவான காலம் கி. பி. 11 ஆம் நூற்றாண்டு.

அசரீரி /உடம்பிலி

திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோ
டுருத்தகு நற்பலகை யொக்க- விருக்க
வுருத்திர சன்ம ரெனவுரைத்து வானி
லொருக்கவோ வென்றதோர் சொல்.         (01)

பல இடர்ப்பாடுகள், எதிர்ப்புகளுக்கிடையே மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் தம் முப்பாலை(திருக்குறளுக்கு ஆசிரியர் இட்டபெயர்) அரங்கேற்றினார். அரங்கேற்றத்தின் முடிவில் வானத்திலிருந்து ஓர் அசரீரிச்சொல் பாராட்டி எழுந்தது. அதுகுறித்து எழுந்த பாடலே இது.

(பொழிப்புரை) உருத்திரசர்மன் கழகப் பலகையிடத்துத் திருவள்ளுவருடன் ஒக்கவிருக்க வென்று வானில் ஓர் உரையெழுந்த்து.
----------------

நாடா முதனான் மறைநான் முகனாவிற்
பாடா விடைப்பார தம்பகர்ந்தேன்- கூடாரை
யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின்
வள்ளுவன் வாயதென் வாக்கு.         (02)

(பொழிப்புரை) பாண்டிய வேந்தே!நான் படைப்புக் காலத்தில் நான்முகன் நாவிலிருந்து நான்மறை பாடினேன்; இடைக்காலத்திற் பாரதம் பாடினேன்;இன்று வள்ளுவன் வாயது என் பாட்டு.
-------------

இறையனார்

என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்- குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் றெய்வத் திருமலர்போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்.         (03)

(பொ-ரை.) திருவள்ளுவரின் திருக்குறள் நெடுங்காலஞ்செல்லினும் தேன் சொரியுந்தன்மையதான விண்ணக மலர்போலும்.
-------------

உக்கிரப் பெருவழுதியார்

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
றான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த- நூன்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ்
சிந்திக்க கேட்க செவி.         (04)

(பொ-ரை) நான்முகன் வள்ளுவனாகத் தோன்றிக் கூறிய முப்பால் நூலை , என்தலை வணங்குக; வாய்வழுத்துக; மனம் ஊழ்குக (தியானிக்க) செவி கேட்க.
---------------

கபிலர்

தினையளவு போதாச் சிறுபுன் னீர்நீண்ட
பனையளவு காட்டும் படிததான்- மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி.         (05)

(பொ-ரை) வீட்டுப் பறவைகள் வள்ளைப்பாட்டிற் குறங்கும் வளநாட்டரசே! திருவள்ளுவர் திருக்குறளின் சொற்சுருக்கப் பொருட்பெருக்கம். புல்நுனிப் பனித்துளி பனைவடிவைத் தன்னுள்ளடக்கிக் காட்டினாற் போலும்.
---------------

பரணர்

மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞால முழுதும் நயந்தளந்தான்- வாலறிவின்
வள்ளுவரும் தங்குறள்வெண் பாவடியால் வையத்தா
ருள்ளுவவெல் லாமளந்தா ரோர்ந்து.         (06)

(பொ-ரை ) திருமால் குறளாய்த் தோன்றித்தன் இருபேரடியால் உலகனைத்தையும் அளந்தான்; ஆனால் திருவள்ளுவர் தம்குறளின் இரு சிற்றடியால் மாந்தர் கருத்தனைத்தையும் அளந்தார்.
---------------

நக்கீரர்

தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளா
லானா வறமுதலா வந்நான்கு- மேனோர்க்
கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும்
வாழியுல கென்னாற்று மற்று        (07)

(பொ-ரை) தாமே எல்லாவற்றையும் அறிந்து நாற்பொருளையுங் குறள் வெண்பாவால் எல்லார்க்கும் எளிதாயறிவித்த திருவள்ளுவர்க்கும் மழைபொழியும் முகிலுக்கும் உலகம் என்ன கைம்மாறு செய்யவல்லதாம் ?
--------------

மாமூலனார்

அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்
றிறந்தெரிந்து செப்பிய தேவை- மறந்தேயும்
வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற்
கொள்ளா ரறிவுடை யார்.        (08)

(பொ-ரை) அறமுதலிய நான்கையும் உள்ளவா றுலகிற் குணர்த்திய தெய்வப் புலவரை , மறந்தேனும் மாந்தனாகக் கொள்ளும் அறிவிலியின் கூற்றை அறிவுடையோர் கொள்ளார்.
--------------

கல்லாடர்

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனி
னன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென
வெப்பா லவரு மியைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி.         (09)

(பொ-ரை) அறுவகை மதத்தாரும் ஒருபொருளின் இயல்பை இன்னதென்று ஒருமதத்தார் கூறின், அதைமறுத்து வேறாகக் காட்டுவர் ஏனை மதத்தாரெல்லாரும் , ஆனால் திருவள்ளுவர் தம் முப்பாலிற் சொன்னவற்றையோ உண்மையென்று எல்லாரும் ஒத்துக்கொள்வர்.
------------

சீத்தலைச் சாத்தனார்

மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியு
மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவுந்
தாமுடைய மன்னர் தடமுடிமேற் றாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்.         (10)

(பொ-ரை) திருவள்ளுவரின் முப்பால் , மலை , நாடு ஆறு நகர் , முரசு, கொடி , குதிரை, தமிழ் ஆகியவற்றை மும்மூன்றாகக் கொண்ட மூவேந்தரின் முடிமாலை போல்வதாம்.
--------------

மருத்துவன் தாமோதரனார்

சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன்அளாய்
மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில் - காந்தி
மலைக்குத்தும் மால்யானை வள்ளுவர் முப்பாலால்
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு.         (11)

(பொ-ரை) மலையப் பகையென்று குத்தும் யானைபோலும் அரசே! சீந்திற் சருக்கரையும் சுக்குப் பொடியும் தேனுங் கலந்து மோந்தால், யாருக்குந் தலைவலி நீங்கிவிடும். திருவள்ளுவர் திருக்குறளைப் பார்த்தபின் சீத்தலைச்சாத்தனாருக்குப் பிறர் பாடல்களால் ஏற்பட்ட தலைவலி நீங்கிற்று.
-----------------

நாகன் தேவனார்

தாளார் மலர்ப்பொய்கை தாம்குடைவார் தண்ணீரை
வேளாது ஒழிதல் வியப்பன்று - வாளாதாம்
அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனார்'
முப்பால் மொழிமூழ்கு வார்.         (12)

(பொ-ரை) தாமரைக்குளத்திற் குளிப்பார் பிறகுளத்தை விரும்பார்.அதுபோல் திருவள்ளுவரின் திருக்குறளைக் கற்றார் பிற நூல்களை விரும்பார்.
-------------------

அரிசில்கிழார்

பரந்த பொருள் எல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறும் சேரச் - சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லார்ஆர் வள்ளுவர்அல் லால்.         (13)

(பொ–ரை.) விரிவுபட்டுக் கிடக்கும் வெவ்வேறு பொருள்களையெல்லாம் ஒழுங்காகக் கூறுபடுத்திச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலில் வள்ளுவரன்றி வேறு யார்?
------------------

பொன்முடியார்

கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின்று அளந்த குறளென்ப - நூல்முறையான்
வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார்
தாம்நின்று அளந்த குறள்.         (14)

(பொ–ரை.) மாலையணிந்த அரசே! முன்பு காசிபன் தந்த குறள் மண்ணில் நின்று உலகத்தை அளந்தது; இன்று திருவள்ளுவர் தந்த குறள் மண்ணிலும் விண்ணிலும் நின்று உலகத்தையளந்தது.
-----------------

கோதமனார்

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று.         (15)

(பொ–ரை.) பிராமணர் நால்வேதங்களையும் ஏட்டில் எழுதினால் அவற்றின் வலிமை கெடுமென்று வாய்ப் பாடமாகவே சொல்லிக் காத்துவருவர்; திருவள்ளுவரின் திருக்குறளையோ ஏட்டிலெழுதினாலும் எவர் படித்தாலும் அதன் வலிமை குறைவதில்லை.
பிராமணர் ஆரிய வேதங்களை ஏட்டிலெழுதாதிருந்தமைக்குக் கரணியங்கள்–
ஏட்டிலெழுதினால் அவற்றின் வெள்ளைக் கோட்டியும் பிள்ளைக் கருத்தும் வெளியாகிவிடுமென்னும் அச்சம்.
ஏட்டிலெழுதினால் எல்லாருங் கற்றுப் பூசாரித்தொழிலை மேற்கொண்டு பிராமணர்க்குப் பிழைப்பில்லாது செய்து விடுவாரென்னும் அச்சம்.
ஏட்டிலெழுதாதிருந்தால் மேன்மேலுங் காலத்திற்கேற்ற திருந்திய கருத்துக்களைச் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்புண்மை.
------------

இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்

ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர்
வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.         (16)

(பொ–ரை.) ஒருவர் திருக்குறள் முழுவதையுங் கற்றபின், பிறருக்கு ஆசிரியராகிக் கற்பிக்கலாம். ஆனால், ஒருவரிடம் மாணவரா யமர்ந்து கற்க நூலில்லை.
----------------

சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்

உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்
தெள்ளுதல் அன்றே செயற்பால - வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப்பகர்வார்
எப்பா வலரினும் இல்.         (17)

(பொ–ரை.) திருக்குறளினுஞ் சிறந்தநூல் ஒன்றுண்டென்று எப்புலவருஞ் சொல்லார். ஆதலால் நாம் செய்யவேண்டியது அதை யுள்ளஞ்செறாது உரைத்துத் தெளிதலே.
---------------

ஆசிரியர் நல்லந்துவனார்

சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருள் எல்லாம் - தோற்றவே
முப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்
எப்பா வலரினும் இல்.         (18)

(பொ–ரை.) எல்லாக் கலைநூற்பொருள்களையும் எடுத்துக்கூறும் திருக்குறளை யியற்றிய, திருவள்ளுவரை யொத்த புலவர் ஒருவருமில்லை.
------------------

கீரந்தையார்

தப்பா முதற்பாவால் தாம்மாண்ட பாடலினால்
முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் - எப்பாலும்
வைவைத்த கூர்வேல் வழுதி மனம்மகிழத்
தெய்வத் திருவள் ளுவர்.         (19)

(பொ–ரை.) பாண்டியன் மனமகிழ நாற்பொருளையும் முப்பாலிற் குறள் வெண்பாவாற் கூறியவர் தெய்வப் புலமைத் திருவள்ளுவரே.
----------------

சிறுமேதாவியார்

வீடொன்று பாயிரம் நான்கு விளங்கறம்
நாடிய முப்பத்துமூன்று ஒன்றூழ் - கூடுபொருள்
எள்ளில் எழுபது இருபதிற்றைந் தின்பம்
வள்ளுவர் சொன்ன வகை.         (20)

(பொ–ரை.) திருக்குறள் அதிகாரத்தொகை:பாயிரம் நான்கு; அறத்துப்பால் முப்பத்து மூன்று; ஊழ் ஒன்று; பொருட்பால் எழுபது; இன்பத்துப்பால் இருபத்தைந்து.
---------------

நல்கூர் வேள்வியார்

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சென்ப - இப்பக்கம்
மாதானுபங்கி மறுவுஇல் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற்கு அச்சு.         (21)

(பொ–ரை.) வட மதுரைக்குக் கண்ணனை நிலைக்களமாகக் கூறுவர்; வைகை மதுரையான தென்மதுரைக்குத் திருவள்ளுவர் நிலைக்களமாவார்.
-----------

தொடித்தலை விழுத்தண்டினார்

அறம்நான்கு அறிபொருள் ஏழொன்று காமத்
திறம்மூன்று எனப்பகுதி செய்து - பெறல்அறிய
நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலும் ஒழிந்த பொருள்.         (22)

(பொ–ரை.) அறத்தைப் பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ் என நான்காகவும், பொருளை அரசு. அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி என ஏழாகவும், இன்பத்தை ஆண்பாற் கூற்று, பெண்பாற்கூற்று, இருபாற்கூற்று என மூன்றாகவும் வகுத்து, நாற்பொருளையுங் கூறிய திருவள்ளுவரே வேருபொருளிருப்பினும் அதையறிவார் போலும்!

நாடு அரணுள் அடக்கப்பட்டது.

----------------

வெள்ளி வீதியார்

செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே - செய்யா
அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல்.         (23)

(பொ–ரை.) ஒருவராலும் இயற்றப் படாத வேதமும் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் கூறும் பொருள் ஒன்றே. இவற்றுள் முன்னது பிராமணர்க்கே யுரியது; பின்னதோ எல்லார்க்கும் பொதுவாம்.

குறிப்பு.-ஆரிய வேதத்தைச் செய்யாமொழி யென்றது ஒரு துணிச்சல் மிக்க ஏமாற்று. அதற்கும் திருக்குறட்கும் பொருள்ஒன்றே யென்றது நெஞ்சழுத்தம் மிக்க பொய். இவற்றை நம்பிய புலவரோ தமிழகத்தைக் கெடுத்த தசைப்பிண்டங்கள். திருக்குறளைப் பொய்யாமொழி யென்றமையின், வேதம் பொய்மொழியென்பது எதிர் நிலை யளவையாற் பெறப்படும்.
-------------------

மாங்குடி மருதனார்

ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி

வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர்
உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.         (24)

(பொ–ரை.) திருவள்ளுவரின் திருவாய்மொழி, படிப்பதற் கெளிதாயும் பொருளுணர்தற் கரிதாயுமுள்ள மந்திரநூலாக விளங்கி, தூயவறிஞர் நினைக்குந்தோறும் அவருள்ளத்தை யுருக்கும்.
---------------

எறிச்சலூர் மலாடனார்

பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றே
தூய துறவறம்ஒன் றுஊழாக - ஆய
அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து.         (25)

(பொ–ரை.) திருவள்ளுவர் நன்றாக ஆய்ந்து பாயிரம் நான்கதி காரமும் இல்லறவியல் இருபததிகாரமும் துறவறவியல் பதின்மூன்றதிகாரமும் ஊழ் ஓரதிகாரமுமாக, அறத்துப்பாலை நால்வகையாக வகுத்துரைத்தார்.
-----------

போத்தியார்

அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து
உருவல் அரண்இரண்டு ஒன்றுஒண்கூழ் - இருவியல்
திண்படை நட்புப் பதினேழ்குடி பதின்மூன்று
எண்பொருள் ஏழாம் இவை.         26

(பொ–ரை.) திருக்குறளின் பொருட்பால், அரசியல் இருபத்தைந் ததிகாரமும், அமைச்சியல் பத்ததிகாரமும், அரணியல் ஈரதிகாரமும் பொருளியல் ஓரதிகாரமும், படையியல் ஈரதிகாரமும் நட்பியல் பதினேழதிகாரமும்; குடியியல் பதின்மூன்றதிகாரமுமாக ஏழுபகுதிகளையுடையதாம்.
---------------

மோசிகீரனார்

ஆண்பால் ஏழ்ஆ றிரண்டுபெண்பால் அடுத்தன்பு
பூண்பால் இருபால்ஓர் ஆறாக - மாண்பாய
காமத்தின் பக்கம்ஒரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு.         27

(பொ–ரை.) திருவள்ளுவர் ஆண்பாற்கூற்று ஏழதிகாரமும் பெண்பாற் கூற்றுப் பன்னீரதிகாரமும் இருபாற் கூற்று ஆறதிகாரமுமாக, இன்பத்துப்பாலை மூன்றாக வகுத்துரைத்தார்.
----------------

காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமாம்
மெய்யாய வேதப் பொருள்விளங்கப் - பொய்யாது
தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
அந்தாமரை மேல் அயன்.         28

(பொ–ரை.) நான்முகன் திருவள்ளுவனாகி வடமொழி வேதப் பொருளைத் தமிழில் 133 அதிகாரமாக விளக்கிக் கூறினான்.
---------------

மதுரைத் தமிழ்நாகனார்

எல்லாப் பொருளும் இதன்பால்உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லால்
பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார்
சுரந்தபா வையத் துணை.         29

(பொ–ரை.) எல்லாப் பொருளும் இதன்கண் உள. இதில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை. ஆதலால், உலகத்தார்க்கு இவ்வொரு நூலே போதுமானதாம்.
---------------

பாரதம் பாடிய பெருந்தேவனார்

எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் - முப்பாற்குப்
பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்.         30

(பொ–ரை.) எல்லாப்பொருளையும் எல்லாரும் உள்ளவாறறியுமாறு திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்குப், பாரதம், இராமாயணம் மனுதருமசாத்திரம், நால் வேதம் ஆகிய நான்கே ஒப்பாம்.
-----------------

உருத்திர சன்மகண்ணர்

மணற்கிளைக்க நீர்ஊறும் மைந்தர்கள் வாய்வைத்து
உணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால் - பிணக்குஇலா
வாய்மொழி வள்ளுவர் முப்பால்மதிப் புலவோர்க்கு
ஆய்தொறும் ஊறும் அறிவு.         31

(பொ–ரை.) நீர்நிலை யடுத்த மணலைத் தோண்டுந்தோறும் நீரூறும். குழந்தை வாய்வைத் துறிஞ்சுந்தோறும் தாய்முலை சுரக்கும். அவைபோல், திருக்குறளை ஆராயுந்தோறும் அறிவு பெருகும்.
-------------

பெருஞ்சித்திரனார்

ஏதம்இல் வள்ளுவர் இன்குறள் வெண்பாவினால்
ஓதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததனால்
தாதுஅவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன.         32

(பொ–ரை.) மாலையணிந்த பாண்டிய வேந்தே! திருவள்ளுவர் வேதங்களின் சிறந்தபொருளை யெல்லாம் குறள்வெண்பாவாற் கூறிவிட்டமையால், இவற்றுள் எவை மேம்பட்டவை?
---------------

நரிவெரூஉத் தலையார்

இன்பம் பொருள்அறம் வீடுஎன்னும் இந்நான்கும்
முன்பு அறியச்சொன்ன முதுமொழிநூல் - மன்பதைகட்கு
உள்ள அரிதென்று அவைவள் ளுவர்உலகம்
கொள்ள மொழிந்தார் குறள்.         33

(பொ–ரை.) நாற்பொருளையும் மக்கட்கு அறிவிக்கும்படி இயற்றப்பட்ட நால் வேதங்கள் அவரால் உணர்தற்கு அரியதாயிருந்ததனால், அவற்றை யெளிதா யுணருமாறு திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
-----------------

மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார்

புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல்
சிலவர் புலவர் எனச்செப்பல் - நிலவு
பிறங்குஒளி மாமலைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்குஇருள் மாலைக்கும் பெயர்.         34

(பொ–ரை.) திருவள்ளுவரையும் பிற புலவரையும் புலவரென்று சமமாகச் சொல்லுதல், முழுமதி மாலையையும் காருவா அமாவாசை மாலையையும் மாலையென்றே ஒரே சொல்லாற் குறிப்பது போலும்.
-------------

மதுரை அறுவைவணிகன் இளவேட்டனார்

இன்பமும் துன்பமும் என்னும் இவைஇரண்டும்
மன்பதைக்கு எல்லாம் மனம்மகிழ - அன்பொழியாது
உள்ளி உணர உரைத்தாரே ஓதுசீர்
வள்ளுவர் வாயுறை வாழ்த்து.         35

(பொ–ரை.) மக்களெல்லாரும் தமக்கு வரும் இன்பதுன்பக்கரணியங்களை யறிந்து துன்பத்தினின்று தப்பி யின்புறும்பொருட்டு, திருவள்ளுவர் திருக்குறளை வாயுறை வாழ்த்தாகப்பாடினார்.

வாயுறை வாழ்த்தாவது, முன்பு வெறுப்பை விளைப்பினும் பின்பு நலம் பயக்கும் நன் மருந்துபோற் பயன்படும் அறிவுரை வாயுறுத்தும் மருந்து.
-------------

கவிசாகரப் பெருந்தேவனார்

பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புநதம்
ஆவிற்கு அருமுனியா ஆனைக்கு அகரும்பல்
தேவில் திருமால் எனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா.         36

(பொ–ரை.) பூவிற்குத் தாமரையும், பொன்னிற்கு நாவற் சாறமும், ஆவிற்குக் காமதேனுவும் யானைக்கு ஐராவதமும், தேவிற்குத் திருமாலும், நூலிற்குத் திருக்குறளும் சிறந்தனவாம்.
------------

மதுரைப்பெருமருதனார்

அறம்முப்பத் தெட்டு பொருள்எழுபது இன்பத்
திறம்இருபத் தைந்தால் தெளிய - முறைமையால்
வேதவிழுப் பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓதஅழக் கற்றது உலகு.         37

(பொ–ரை.) திருவள்ளுவர், அறத்தை முப்பத்தெட் டதிகாரங்களாகவும் பொருளை எழுபததிகாரங்களாகவும் இன்பத்தை இருபத்தைந் ததிகாரங்களாகவும் வகுத்து, வேதப் பொருளைக் குறள் வெண்பாவாற் கோவைபடக் கூறியதால், உலகம் தீயொழுக்கத்தினின்றும் தீர்ந்தது.
--------------

கோவூர்க் கிழார்

அறம்முதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம்
திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதே
முன்னை முதுவோர் மொழி.         38

(பொ-ரை.) நாற்பொருளையும் மக்கள் ஆய்ந்து தெளிதற்பொருட்டுத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்கு முந்துநூல் ஒன்றும் நிகராகாது.
---------------

உறையூர் முதுகூற்றனார்

தேவிற் சிறந்ததிரு வள்ளுவர் குறள்வெண்
பாவிற் சிறந்திடும்முப் பால்பகரார் - நாவிற்கு
உயலில்லை சொற்சுவை ஓர்வில்லை மற்றும்
செயலில்லை என்னும் திரு.         39

(பொ-ரை.) தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் திருக்குறளை ஓதாதவரின் நாவிற்கு இன்சொற் சொலவில்லை; உடம்பிற்கு நல்வினையில்லை என்று கருதித் திருமகள் அவரிடஞ் சேரான்.
----------------

இழிகண் பெருங்கண்ணனார்

இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும்
செம்மை நெறியின் தெளிவுபெற - மும்மையின்
வீடவற்றின் நான்கின் விதிவழங்க வள்ளுவனார்
பாடினர் இன்குறள்வெண் பா.         40

(பொ-ரை.) இம்மை மறுமைக்கும் எழுபிறப்பிற்கும் பயன்படவும் நாற்பொருளும் நடைபெறவும், திருவள்ளுவர் திருக்குறளியற்றினர்.
----------------

செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார்

ஆவனவும் ஆகாதனவும் அறிவுடையார்
யாவரும் வல்லார் எடுத்தியம்பத் - தேவர்
திருவள்ளுவர் தாமும் செப்பியவே செய்வார்
பொருவில் ஒழுக்கம் பூண்டார்.         41

(பொ-ரை.) மக்களுக்கு வேண்டியவற்றையும் வேண்டாத வற்றையும் அறிஞரும் எடுத்துச் சொல்லுமாறு, திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட் கூற்றுக்களையே, ஒழுக்கத்தில் உயர்ந்தோர் கடைப்பிடிப்பர்.
---------------

செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்

வேதப்பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் - ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.         42

(பொ-ரை.) திருவள்ளுவர் ஆரிய வேதப்பொருளைத் தமிழுலகம் அறிதற்பொருட்டுத் தமிழில் விரித்துரைத்தார். ஆதலால், திருக்குறளில் மக்கள் கருதும்பொருள்களெல்லாம் உள்ளன
---------------

வண்ணக்கஞ் சாத்தனார்

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது
சீரியது என்றொன்றைச் செப்பரிதால் - ஆரியம்
வேதம் உடைத்து தமிழ்திரு வள்ளுவனார்
ஓதுகுறட் பாஉடைத்து.         43

(பொ-ரை.) வடமொழியையும் தென்மொழியையும் ஒப்பு நோக்கி இது சிறந்தது என்று ஒன்றைச் சொல்ல முடியாது. வடமொழியில் வேதமுள்ளது; தென்மொழியில் திருக்குறள் உள்ளது. ஆதலால், இரண்டும் சமமே.
----------------

களத்தூர்க் கிழார்

ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும்
தருமம் முதல்நான்கும் சாலும் - அருமறைகள்
ஐந்தும் சமயநூல் ஆறும்நம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்.         44

(பொ-ரை.) இருக்குமுதல் பாரதம் ஈறான வேதங்கள் ஐந்தும் வேதவழிப்பட்ட சாத்திரங்கள் ஆறும், திருவள்ளுவர் நூலிலடங்கும்; ஆதலால் ஒருவர் உய்வதற்கு, ஓரெதுகையும் ஈரெதுகையுமாகிய இருவகைக் குறளாலு மமைந்த முப்பாலிற் சொல்லப்பட்ட நாற்பொருளையும் அறிந்தாற் போதும்.
-----------------

நச்சுமனார்

எழுத்துஅசை சீரடி சொற்பொருள் யாப்பு
வழுக்கில் வனப்பு அணிவண்ணம் - இழுக்கின்றி
என்றெவர் செய்தன எல்லாம் இயம்பின
இன்றிவர் இன்குறள்வெண் பா.         45

(பொ-ரை.) எழுத்து முதல் வண்ணம் ஈறாகச் சொல்லப்பட்ட எல்லாம் அழகாக எவ்வெக்காலத்தில் எவ்வெவராற் சொல்லப்பட்டனவோ, அவையெல்லாம் இக்காலத்து இத்திருவள்ளுவரால் இயற்றப்பட்ட இனிய குறள் வெண்பாக்களிற் சொல்லப்பட்டுள்ளன.
----------------

அக்காரக்கனி நச்சுமனார்

கலைநிரம்பிக் காண்டற்கு இனிதாகிக் கண்ணின்
நிலைநிரம்பும் நீர்மைய தேனும் - தொலைவுஇலா
வான்ஊர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர்முப்
பால்நூல் நயத்தின் பயன்.         46

(பொ-ரை.) மதியமும் முழுமதியும் முப்பால் நூலும் முறையே பதினாறுகலைகளாலும் அறுபத்துநான்கு கலைகளாலும் நிறைந்து காண்பதற்கும் ஆராய்தற்கும் இனிதாகி, புறக் கண்ணிற்குத் தண்மையும் அகக்கண்ணிற்குப் பண்பும் உடைத்தாயினும், முப்பால் நூலால் விளையும் பயன் மதியினிடத்துண்டோ?
----------------

நப்பாலத்தனார்

அறம்தகளி ஆன்ற பொருள்திரி இன்பு
சிறந்தநெய் செஞ்சொல் தீதண்டு - குறும்பாவா
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு.         47

(பொ-ரை.) திருவள்ளுவர் அறத்தை அகலாகவும், பொருளைத் திரியாகவும் இன்பத்தை நெய்யாகவும், சொல்லை நெருப்பாகவும், குறட்பாவைத் தண்டாகவும் கொண்டு, உலகத்தோரின் அகவிருளை நீக்கும் விளக்கேற்றினார்.
----------------

குலபதி நயனார்

உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துஉள்ள
தள்ளற்கு அரிய இருள் தள்ளுதலால் - வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்கும்எனக்
கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு.         48

(பொ-ரை.) நெஞ்சத் தாமரையை விரியச் செய்து அகவிருளை நீக்குந் திருக்குறளும், நீர்த்தாமரையை விரியச் செய்து புறவிருளை நீக்கும் கதிரவனும், குணத்தால் ஒக்குமென்று கொள்ளத்தகும்.
------------------

தேனிக்குடிக் கீரனார்

பொய்ப்பால பொய்யேயாய்ப் போயின பொய்அல்லா
மெயப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலின்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து.         49

(பொ-ரை.) தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரின் திருக்குறளைக் கற்று அல்லது கேட்டு அறிந்ததனால், மக்கள் மனத்தில் மெய்த் தன்மையான வெல்லாம் மெய்யாகவும் பொய்த்தன்மையான வெல்லாம் பொய்யாகவும் விளங்கிவிட்டன.
-------------------

கொடிஞாழல் மாணிபூதனார்

அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்
திறன்தெரிந்தேம் வீடு தெளிந்தேம் - மறன்எறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயால்
கேளா தனவெல்லாம் கேட்டு.         50

(பொ-ரை.) பகைவென்ற பாண்டிய! திருவள்ளுவர் வாயினின்று, இதற்குமுன் கேட்டிராதவையெல்லாம் கேட்டு நாற்பொருளின் இயல்பையும் நன்றாய் அறிந்தேம்.
-------------

கவுணியனார்

சிந்தைக்கு இனிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய
நன்நெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய இன்குறள்வெண் பா.         51

(பொ-ரை.) நாம் நல்லொழுக்க வழியை அறிதற்பொருட்டுப் புலமை மிக்க திருவள்ளுவர் இயற்றிய இனிய குறள்வெண்பாக்கள் ஆராய்ந்தால் மனத்திற்கும் கேட்டாற் செவிக்கும் ஓதினால் நாவிற்கும் இன்பந்தருவன; தொன்றுதொட்டு வரும் இருவினைகளாகிய நோய்கட்குச் சிறந்த மருந்தாவன.
-----------------

மதுரைப் பாலாசிரியனார்

வெள்ளி வியாழம் விளங்குஇரவி வெண்திங்கள்
பொள்என நீக்கும் புறஇருளை - தெள்ளிய
வள்ளுவர் இன்குறள் வெண்பா அகிலத்தோர்
உள்இருள் நீக்கும் ஒளி.         52

(பொ-ரை.) வெள்ளி வியாழன் கதிரவன் திங்கள் என்பன புறவிருளை நீக்கும் ஒளிகளாம். அவைபோலத் திருவள்ளுவரின் இனிய குறள் வெண்பா அகவிருள் நீக்கும் ஒளியாம்
---------------

ஆலங்குடி வங்கனார்

வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும்
தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் - தெள்ளமுதம்
உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால்
வண்தமிழின் முப்பால் மகிழ்ந்து.         53

(பொ-ரை.) திருவள்ளுவர் பாட்டின் தீஞ்சுவைக்குத் தெள்ளமுதமும் ஒவ்வாது. தெள்ளமுதைத் தேவர் மட்டும் உண்டு சுவைப்பர்; முப்பாலமுதையோ உலகத்தாரனைவரும் உண்டு சுவைப்பர்
--------------

இடைக்காடர்

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.         54

(பொ-ரை.) திருக்குறளின் சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் நோக்கின், ஒவ்வொரு குறளும், கடுகின் நடுவில் துளைசெய்து அதில் எழுகடல் நீரையும் பாய்ச்சி, மேலும் அது அளவிற் குறுகும் வண்ணம் சற்றுத் தறித்துவைத்தாற் போன்றதாம்
-------------

அவ்வையார்

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.         55

(பொ-ரை.) திருக்குறளின் சொற்சுருக்கத்தையும் பொருட்பெருக்கத்தையும் நோக்கின், ஒவ்வொரு குறளும், கடுகினும் மிக நுண்ணிய அணுவைத் துளையிட்டு அதில் எழுகடல் நீரையும்

திருவள்ளுவமாலை முற்றிற்று
-------------------

This file was last updated on 20 June 2021.
Feel free to send the corrections to the webmaster.