pm logo

பண்டார சாத்திரம் - சித்தாந்த சிகாமணி
அம்பலவாண தேசிகர் (திருவாவடுதுறை ஆதீனம்)


paNTAra cAttiram - cittAnta cikAmaNi
by ampalavANa tEcikar of tiruvAvaTuturai AtInam
In tamil script, unicode/utf-8 format



Acknowledgements:
Our Sincere thanks go to Mr. S. Ganesh and Shaivam.org for providing a soft copy of this work
and for permissions to include this work as part of the Project Madurai collections.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பண்டார சாத்திரம் - சித்தாந்த சிகாமணி
அம்பலவாண தேசிகர் (திருவாவடுதுறை ஆதீனம்)


சாதித்த தெல்லாம் தவமேனும் சற்குருவைப்
பேத்தால் எல்லாம் பிழையாகும் - வேதத்(து)
அறம்புரிந்த தக்கனுக்கன்(று) ஆக்கினைவந்துற்ற
திறம்புரிந்த வாறாம் தெளி.       (1)

வஞ்சமே செய்வாய் மருவுங் குருவோடு
நெஞ்சமே நீகதியில் நிற்பதெந்நாள் - கொஞ்சி
உருகித் தமரோ(டு) உறைவாய்நன் முத்திக்(கு)
அருகமென்பது எவ்வா(று) அறை.       (2)

நாமெங்கே முத்தி நடையெங்கே நன்னெஞ்சே
தீமங்கை இன்பே திளைகுமால் - காமன்கை
அம்புற்ற புண்மெய்யில் ஆறியபோ(து) அன்றோதன்
செம்பொற்றாள் ஈவான் சிவன்.       (3)

சலக்குழியின் மிக்க சகதியில்லை அங்கச்
சலக்குயை இன்பே திளைகுமால் - காமன்கை
அம்புற்ற புண்மெய்யில் ஆறியபோ(து) அன்றோதன்
செம்பொற்றாள் ஈவான் சிவன்.       (4)

ஒளியானும் உற்ற இருள் மாதருமே ஒத்துத்
தெளியநடஞ் செய்வதனைத் தேரின் - ஒளிநடத்தைக்
கண்டபே காணார் கருதி இருள்நடத்தைக்
கண்டபேர் காணார் கதி.       (5)

தாணுவினோ(டு) ஒத்துச் சரியாய் நடம்புரியும்
வாணுதலார் கூத்து மறைப்பல்ல - ஆணவத்தை
ஒட்டியபேர்க் கெல்லாம் ஒளிப்பான அரன் அதனைத்
தெட்டியபேர்க் காமாந் தெரிவு.       (6)

கூட்டித் தனுவைக் குறித்துயிர்மேல் நின்றீசன்
ஈட்டுவிக்கச் செய்யும் இயல்பாமால் - நாட்டுமலம்
இல்லையென்ப தாகும் இசைந்த கருனைநலம்
அல்லவென்ப தாமாம் அரற்கு.       (7)

தோற்றம் இறப்பும் சொலுமீசன் தன்செயலென்
மாற்றுதற்கு வேறொருத்தர் மன்னுவதாம் - சாற்றும்
அரவு கடித்தவிடம் ஆங்கதனை மீட்க
வருமவர்போ லாமாம் மதி.       (8)

மலமே பிறப்பிறப்பை மன்னுவிக்கும் ஈசன்
நலமே அவையகற்றி நண்ணும் - மலமருக்கன்
சன்னிதியில் நில்லாத் தகுமிருல்போல் தக்க அரன்
சன்னிதியில் நில்லாது தான்.       (9)

பேதித்து நெஞ்சம் பிரியாமால் நின்றீசன்
சாதித்து திடக்கருவி தந்ததால் - ஆதித்தன்
காட்டுவதே போலெவர்க்கும் காட்டுவதே அல்லால்பொய்
ஈட்டுவிக்கச் செய்யான் என் றெண்.       (10)

வாதித்த தேது மலமாமால் ஆங்கதனைச்
சேதித்தல் ஈசன் திறமாகும் - ஆதித்தன்
போலெவர்க்கும் காட்டிப் பொருந்துவதே அல்லால்பொய்
மாலெவர்க்கும் வையான் மறந்து.       (11)

அன்னியத்தில் தன்னினைவை ஆக்குவார் தங்களுக்கும்
மன்னி அரன் பால்நினைவை வைப்பார்க்கும் - தின்னும்
தனுவினையை ஈயத் தகுவதல்லால் மோக
நினைவினைஉற் றீயான் நினைந்து.       (12)

காட்டும் கதிரவன் அக்கண் அதனுக் கில்லைமுன்
ஈட்டும் பொருள்மே இசையுமால் - கூட்டும்
அரனெவர்க்கும் இல்லைம்ற் றாற்சகமே நோக்கி
வருமதனால் நெஞ்சே மதி.       (13)

சுத்தம் அசுத்தமெனச் சொல்லியவோ ராங்கவைக்கும்
அத்தன் பிரேரகமே ஆகுமால் - பித்தருக்கங்(கு)
அன்னியத்தை நோக்கி அறிவிப்பான் மற்றவர்க்குத்
தன்னையே நோக்குவிப்பான் தான்.       (14)

பேதித்தார் தங்களுக்கும் பின்னமறத் தம்மடியில்
சாதித்தார் ஆர்க்கும் சரியேனும் - வதித்த
தீய மலமறுப்பான் சேர்ந்தார் தமக்கடியை
ஐயமறச் சேர்ப்ப்பான் அரன்.       (15)

எல்லார் நினைவுக்கும் ஏற்றபடி யேகருணை
நல்லான் பிரேரிக்கும் நன்மைகேள் - பொல்லா
வினையிருத்து வார்க்கும் விரும்பியதோர் முத்தி
தனையிருத்து வார்க்குஞ் சரி.       (16)

எல்லார் நினைவுகும் ஏற்றபடி யேகருணை
வல்லான் தனுவினையை வைத்தநெறி - பொல்லா
மலமறுப்ப தாமால் வருநரக சொர்க்க
நிலையிருத்து வானேல் நினைந்து.       (17)

ஆவியின்மேல் இச்சை அடைவதல்லால் ஆங்கதன்மேல்
கோபமே இல்லை குறிக்குங்கால் - மேவியதோர்
ச்ன்னியத்தில் இச்சை அகற்றி அறி வானந்தத்
தன்னியல்பே ஆக்குதற்குத் தான்.       (18)

மலமெ அறியாமை மற்றுயிரைத் தீண்டும்
நிலையே அதற்கிலவாய் நிற்கும் - மலையா
அறிவே உயிர்க்காமால் ஆங்கதன்மேல் ஏறும்
பிறிவதற்காய் உற்றதெண்டப் பேறு.       (19)

நின்மலமாய் ஆவி நிகழ்மலத்தைப் பற்றுதற்கு
முன்மலமொன்(று) உண்டாய் மொழிவதாம் - பன்முதலும்
உள்ளபோ(து) ஆவி ஒருப்பட்டுப் பின்மலத்தைத்
தள்ளுங்கால் நின்மலமாம் தான்.       (20)

தண்டி மலமுயிரைத் தாவுமேல் ஆவிக்குத்
தெண்டிப்பே இல்லையெனச் செப்புவதாம் - அண்டி
உயிருக்கு புத்தி உரைப்பதல்லால் தீய
செயிருக்(கு) உரைப்பதில்லைத் தேர்.       (21)

வசிப்புண்டார் தம்மை வசிக்குமலம் தேவால்
தெசிப்புண்டால் ஆங்கவனைத் தீண்டா - நசிப்பில்லாக்
கண்ணை மறைக்குங் கடிய இருட்கதிரை
நண்ணியகட் கின்றாம் நவை.       (22)

மலமே தெனவேண்டா மற்றுயிர்மேல் நின்ற
புலமேல் எழுந்தநெடும் பொய்யாம் - இலமேல்
இருந்(து) அவத்தைச் செய்யாதே ஏதேனும் ஈசன்
தரும் தவத்தை நெஞ்சே தரி.       (23)

அறியாமை என்றும் அகண்டிதமால் ஆவி
பிறியாமல் நிற்குமந்தப் பேறால் - குறியாம்
தனுவோ(டு) இசையினும்பின் தக்கவினை தானாம்
நினைவோ(டு) இசையின்மால் நேர்.       (24)

ஆசைப் படுவாரை ஆசைப் படுத்துவித்தல்
பேசும் உலகியல்பின் பெற்றியால் - மாசுமலம்
உற்றாரைப் பற்றி உறுவதல்லால் ஒவ்வாமல்
அற்றார்மேற் செல்லா(து) அறி.       (25)

பித்தமுற்றார் தங்களுக்குப் பித்தகல நன்மருந்தை
மத்தகத்தில் தேய்த்து மறிப்பதல்லால் - புத்திசொல்லி
மாற்றியபேர் உண்டோ மலந்தவர்கள் ஆவியின்மேல்
தோற்றுவதே இல்லைத் துணி. (26)

பிடித்தார் தமைப்பிடிக்கும் பேராச் சடமும்
விடுத்தார் தமைவிடுக்கும் வேறாய் - அடுத்தமலம்
தொட்டபேர் தம்மைத் தொடுவதல்லால் தொல்லுயிரைக்
கட்டிப் பிடிப்பதில்லைக் காண்.       (27)

சத்திநி பாதம் சதுர்விதமால் தீயமலம்
முத்தியிலும் நிற்கும் முறையென்னின் - சுத்தமரன்
பாலே எழும் அவன்தன் பண்பால் அறியாமை
மாலே அறுக்குமென மன்.       (28)

மாசற்றார் நெஞ்சின் மருவும் அரனின்றும்
பாசத்தார்க் கின்றாம் பதியென்னில் - ஈசன்
சரியாதி நான்கில் தகுமலமே கேடாய்
வருமால் இலையாய் மதி.       (29)

தீக்கைக்(கு) ஒதுங்கிச் சிதைந்தமலம் தன்வசமே
ஆக்குதலைச் செய்ய அறியாவாம் - நோக்கி
மலமே உளதென்று மன்னுவதே அல்லால்
பெலமேதும் இல்லையெனப் பேசு.       (30)

இருவினையும் ஒத்தால் இசைந்த அரற் கன்பு
மருவுதலால் உண்டோம் மலமால் - உருவினுக்கங்(கு)
ஒத்த பிரார்த்தமரற் கூட்டுதலால் தீயவினை
தொத்துதலே இல்லையெனச் சொல்.       (31)

சேதித்த சேடம் செயற்படுதல் அங்கத்தை
வாதித்த நோய்மாறி வந்ததுவாம் - ஆதித்தன்
முன்னிருல்போல் தீயமலம் முற்றும் சரியாதி
தன்னிலையில் நிற்பார்க்குத் தான்.       (32)

ஒத்த மலத்தோ(டு) உறுவாரைத் தீயநெறிப்
பெத்தரென்ப தாகப் பெறுவதாம் - சித்த
மலத்தை வெறுத்து வரும் அரனை நோக்கும்
நலத்தாரை முத்தரென நாடு.       (33)

மலமுற்றா ரேனும் மன்னுமரன் பாத
நிலையுற்றால் அம்மலமும் நீங்கும் - புலமுற்றும்
பேதித்த மும்மலத்தின் பெற்றியறப் பெற்றியறச்
சாதித்தார்க்(கு) இல்லைமலம் தான்.       (34)

சரியைக்(கு) அனுக்கிரக சத்திகா லாக
வரிசைத் தவத்தோடும் வைத்துத் - தெரிசிக்க
ஈசனே யாகும் எனுமுறைமை எவ்வுயிர்க்கும்
நேசமே யாகும் நிறைந்து.       (35)

மலம்நாலத் தொன்றாக் மாறும்பின் ஈசன்
குலம்நாலத் தொன்றேற்கக் கூறும் - பெலமாம்
இருவினையும் ஒப்பாம் இசைந்ததனுப் போகம்
தரும் அரற்கே யாகத் தரும்.       (௩௬)

நின்ற மலமதனை நீண்ட அரன் பாலன்பால்
கொன்றிடுவ(து) என்றும் குணமாகும் ஆல் - துன்றும்
சரியாதி நான்கில் தகுமரனே தானாய்
வரலால் இலையாம் மலம்.       (36)

சரியாதி நான்கும் தகுமலத்தை வென்று
வரவரவே சித்தமெனும் மாண்பாம் - புரையறவே
ஒன்றாகி நிர்பார் உறுசிவமே ஒத்தவர்பால்
சென்றார்க்குத் தீர்க்குமலத் தீ.       (37)

தீக்கைகு காலாகச் சிந்துமால் தீயமலம்
போக்குக்(கு) ஒதுங்கிப் பொருந்தியதால் - ஊக்குமரன்
சேட்டையே மேலாகச் செல்லுங்கால் ஆங்கதுவும்
ஒட்டமே யாமா றுணர்.       (38)

சுத்தமென நான்கினையும் சொல்லியது நற்கருணை
அத்தம்மேல் பத்தி அடைதலால் - பெத்தம்
மலத்தோ(டு) இசைந்துநின்று வாழ்வார்க்காம் தீக்கைக்
குலத்தோரைச் சுத்தமெனக் கொள்.       (40)

மலத்தார் தமக்கு ஆகும் மன்னுபிரா ரத்தம்
இலத்தான் நரகசொர்க்க மேய்வாம் - நலத்தாகும்
ஈசன்பால் நோக்கி இசைவார் சாகோக
நேசமே ஆவார் நிறைந்து.       (42)

மலமொன்(று) அகற்றப்பின் மற்றதெல்லாம் ஈசன்
நிலையொன்ற தாகமிக நிற்கும் - மலைவின்றி
ஈட்டியவா(று) ஆகும் இறையெவர்க்கும் தீயமலம்
வாட்டுயவா(று) ஆகும் மதி.       (42)

பெத்தமுத்தி என்னப் பிறங்கும் உருத்தன்மை
ஒத்த படிகத்(து) ஒழுங்காகும் - சுத்தம்
வரிற்போ(து) ஒளியாகும் வாராத போதிங்(கு)
இருட்போதம் ஆகுமென எண்.       (43)

ஆவி இவைஇரண்டும் அல்லவாம் தீயமலம்
மேவிப் போய்ப் பித்தாய் விளங்குதலால் - தாவுமான்
ஒத்துப் சுதந்திரமாய் ஒன்றுதலால் உண்மையுற்ற
சித்தமவன் ஆகுமெனத் தேர்.       (44)

தத்துவமே விட்டார்க்குத் தத்துவமென தம்மறிவை
அத்தனுக்கே ஈந்தார்க்(கு) அகம் ஏனாம் - சுத்தன்
அரனே எனுமால் அகன்ற உடற் போகம்
வருமே அவன்தாள் மதி.       (45)

பெத்தருக்கெ ஆகும் பிராரத்தம் தீயமலப்
பித்தே தனுவினையாம் பெற்றியால் - சுத்தம்
சிவனே எனுமால் சிறந்தவுடற் போகம்
அவனே எனும்வழுக்க தாம்.       (46)

பித்தமுற்றார் துய்த்தலந்தப் பித்தமால் பேராத
சுத்தமுற்றார் துய்த்தலுமச் சுத்தமன்றோ - ஒத்த
தொழிலனைத்தும் ஆங்கவையே சொல்லியதோர் ஈசன்
எழிலனைத்தும் தானாம் என்(று) எண்.       (47)

பச்சிலையைத் தின்னும் பசும்புழுவைச் செங்குளவி
நச்சியிட அப்புழுப்போய் நண்ணியதால் - இச்சித்துத்
தோற்றுமிலை உண்ணத் துணியாது தொல்பிறவி
மாற்றியபேர்க் கிவ்வாறாய் மன்.       (48)

வினையற்றால் அங்கம் விடுவாம் மனுவாம்
தனுவுற்றால் அவ்வினையச் சார்வாம் - நினைவுற்று
அரனாய்த் திரிவாக்கங்(கு) ஆங்கரனே போக
தரமால் கருணையுருத் தான்.       (49)

ஊக்கிய காமம் உயர்சிவமாம் உற்றதனுத்
தாக்கும் செயலே தரும்வாக்காம் - நீக்குமல
வேதனையே மாற்றி விடுமால் மிகுங்கருணை
நாதனவன் தானே நமக்கு.       (50)

ஊக்கிய காமம் உறும் இலமாம் உற்றதனுத்
தாக்கிஞ் செயலே தகுமதற்கால் - ஆக்குமரன்
பேதமென நோக்கிப் பிறியுமால் தீயமலப்
போதமென நெஞ்சே புகல்.       (51)

இருளில் எழும் ஒளிமற்(று) ஆங்கே யிருளும்
வருமொளிமேற் செல்லுதற்கு வாரா - அருளும்
மலமேல் எழுமலமும் மாற்றியருள் மேலே
செலநினைவ(து) இல்லையெனத் தேர்.       (52)

மலமக மாயா தனுவகலும் கன்ம
நிலையகலப் புரணமாய் நிற்கும் - மலைவறவே
போக்குதலைச் செய்வான்தன் பொன்னடிமேல் நின்றவர்மேல்
ஆக்குதலைச் செய்யான் அரன்.       (53)

மலமுற்றார் துய்ப்பர் மலமே மனுவாம்
நிலையுற்றார் உண்பர்மனு நீதி - அலைவற்ற
ஞானத்தார் துய்ப்பர் நயந்த அருள் நற்றனுவாம்
ஆனத்தால் ஒட்டியதோர் ஆறு.       (54)

பெத்தருக்கே ஆகும் பிராரத்தம் பேராத
முத்தருக்கே இன்றாய் மொழியும்நூல் - சித்தம்
அறியாமை மாற்றி அடங்குமால் முத்தி
பிறியாத நான்குமருட் பேறு.       (55)

முத்தருக்கே ஆகும் மொழியுமருள் மந்திரமே
சித்தமரன் பாலே செலும் அதுவே - ஒத்த
தனுவுமது வாகத் தகுமேமெய்ப் போக
மனுவே அதுவாமவ் வாறு.       (56)

மந்திரத்தை உற்று வருந்தனுவை நீத்தோர்கள்
புந்தியர னாகப் புகுமாமால் - வந்ததனு
ஆங்கவனே ஆமால் அதற்கிசைந்த போகமெலாம்
நீங்கா மலமறுக்கும் நேர்.       (57)

இருவினை ஒப்பில் இசைந்தவுயிர் மாறி
வருமால் தனுவினையவ் வாறாம் - இருவனையும்
சித்தமுற்ற வாறே திரும்புமால் ஒர்படித்தாய்ப்
பெத்தமென்ப தல்லவெனப் பேசு.       (58)

ஒத்த பதத்தை உறுவிக்கும் தாபரமால்
சித்தமலஞ் சங்கமமே தீர்க்குமால் - அத்தனென்றும்
ஆவியே நோக்கி அணையுமால் அற்றாரை
மேவியே நிற்பன் விரைந்து.       (59)

ஈசனாய் எல்லா உயிர்க்குயிராய் நிற்பானும்
ஈசனாய் பூசைக்(கு) இசைவானும் - ஈசனாய்ச்
சாலோக மாதிப் பயனளித்து நிற்பானும்
ஆலோக லிங்கமென மன்.       (60)

மனவாக்குக் காயம் மருவா அரனே
மனவாக்குக் காயம் மருவி - நினைவார்க்கு
மூவுருவே யாகி முதன்மைசிவ லிங்கமாய்
ஏவுருவங் காண்கைக்(கு) இசைந்து.       (61)

மந்திரமே உற்று வருங்கருணை நன்மவுனத்
தந்திரமே உற்றிருக்கும் தன்மையால் - சிந்தித்து
வந்தார் தமக்கே வரங்கொடுத்து நிற்குமே
நந்தாக் கரிணை நலம்.       (62)

தெரிசித்(து) அருச்சனையைச் செய்விப்பார் தங்களுக்கும்
பரிசித்(து) அருச்சனையைப் பண்ணி - உரிசித்தி
யோகமே நோக்கி உழல்வார்க்கும் நன்முத்திப்
பாகமேயார்க் கும்லிங்கம் பார். (63)

தானே சிவலிங்கம் தானாகும் சற்குருவும்
தானேநற் சற்கமமுந் தானாகும் - ஆனமையால்
தங்கும் உயிரில் தரித்த மலமாற்ற
எங்குஞ் சிவமேயென்(று) எண்.       (64)

குருவே சிவலிங்கக் கொல்கையெல்லாஞ் சொல்லி
வருமால் இறையவன்பால் மாலாய் - வருமுயிர்கள்
திய்ய மலமறுத்துச் செய்தியவன் பாலாகப்
பைய நடக்குமெனப் பார்.       (65)

அங்க மலத்தை அகற்றிஅறி வோடறிவாய்த்
தங்கியதே சங்கமத்தின் தன்மையாம் - லிங்கம்
தனையே வழிபட்டுச் சாருமால் ஆர்க்கும்
நினைவே அதுவாமாம் நேர்.       (66)

சங்கமமும் மிக்க தகுங்குருவும் லிங்கத்தின்
சங்கமமே உற்ற சதுரினால் - லிங்கத்தை
வந்திப்பா ரானார் வருமுலகர் எல்லாம்பின்
சிந்திப்பா ரானார் தெரிந்து.       (67)

நோக்கால் பரிசத்தால் நூலினால் பாவனையால்
வாக்கால்மெய் யோகத்தால் மாற்றுவான் - தாக்குமலம்
ஐந்தினையும் சற்குருவே ஆமால் அறிவென்கை
சந்தயமே இன்றாகும் தான்.       (68)

எல்லா அறிவும் இசைந்தவுயி ரோடிசைந்து
சொல்லாத போதெவர்க்குந் தோற்றாதாம் - நல்லசிவ
லிங்கமே நூலுரைத்து நில்லாதாம் நீள்கருணைச்
சங்கமத்துக் காகத் தகும்.       (69)

புத்திசொல்லிப் பொய்யதனைப் போக்கியதும் பூரணமாம்
அத்தன்மேல் நேசமுற ஆக்கியதும் - சித்தம்
ஒருமித்தார் தம்மோ(டு) உறைவதுவும் முத்திக்
கருமத்தால் உற்ற கடன்.       (70)

ஆவியே ஈசற் கருளுருவே ஆகுமெனக்
கூவுமறை ஆகமத்துங் கொண்டதால் - மேவும்
சிவனே இவனென்று சித்திப்பார் தாமே
அவனாவார் நெஞ்சே அறி.       (71)

உபதேசத் தாலும் உறுநூலி னாலும்
பவதேசம் மாற்றுவிக்கும் பண்பால் - சிவனேசர்
போலே இருந்து பொருந்தியதோர் தீமலத்தின்
மாலே அறுப்பன் மகிழ்ந்து.       (72)

ஆவி திரிந்தபடி ஆகமாம் ஆங்கதுபோல்
மேவும் வினைதிரிந்து வெற்றியாம் - பாவம்
உறுவார்க்கும் மந்திரத்தை ஒன்றினர்க்கும் ஞானம்
பெறுவார்க்கும் இவ்வாறாம் பேறு.       (73)

ஆதலினால் சங்கமத்தை ஆன்மாக்கள் போலேநீ
பேதமென எண்ணிப் பிரியாதே - தீதகல
நோக்குமே எவ்வுயிர்க்கும் நுண்ணியநற் போதமதாய்
ஆக்குமே நெஞ்சே அறி.       (74)

மலமகற்ற ஈந்ததனு மன்னியதை ஆங்கே
நிலையகற்றி நின்மலமாய் நின்று - மலைவறுக்கும்
ஈசனோ டொன்றாய் இசையும் இருவினையும்
மாசறுக்கும் மற்றவர்நே ருற்று.       (75)

இருந்த இடத்தங்(கு) இருவினையும் ஆங்கே
வருந்தியதோர் அன்பாய் மருவித் - தருந்தவர்க்குத்
திய்ய மலமறுக்கும் செய்தியால் நற்கருணைக்(கு)
ஐயமிலை என்றே அறி.       (76)

மூவுருவே எவ்வுயிர்க்கும் முத்தி அளிக்குமால்
மூவுருவில் ஒன்றறவே முத்தியில்லை - மூவுருவும்
ஈசனே தானாய் எழலால் இழிவுயர்வு
பேசுதற்கே இல்லையெனப் பேசு.       (77)

ஆசையற்றார்க்கு உண்டோ அகத்துன்பம் நல்லறமாம்
நேசமற்றார்க்கு உண்டோ நிகழ்சொர்க்கம் - பேசுமலம்
அற்றார்க்கும் உண்டோ அணுகுமுடல் தீயகுலம்
உற்றார்க்கும் உண்டோ குரு.       (78)

அறமுறைவார்க்(கு) இல்லைப்பொய் ஆயிழைமேல் மோகம்
மறமுறைவார்க்(கு) இல்லை அற மாண்பு - துறவுறையும்
முத்தர்க்கே இல்லை மொழியுமுடல் நற்சிவமாம்
ஐத்தர்க்கே ஆவியில்லைத் தேர்.       (79)

ஊனுண்பார்க் கில்லை உயிரிரக்கம் ஒண்புசை
தானில்லார்க் கில்லைத் தகுங்கதிநேர் - கோனடியை
வந்திப்பார்க் கில்லை வருநிரயம் ஆங்கவனைச்
சிந்திப்பார்க் கில்லை வருநிரயம் ஆங்கவனைச்
சிந்திப்பார்க் கில்லைமலத் தீ.       (80)

சாதியுற்றார்க் கில்லைத் தகுஞ்சமயம் சங்கமமம்
நீதியுற்றார்க் கில்லை நிக்ழ்சாதி - பேதமற்ற
அங்கத்தார் தங்களுக்கங் காவியில்லை ஆவியுறும்
சங்கத்தார்க் கில்லைஉடல் தான்.       (81)

மனம்கவர்ந்தார்க் கில்லை வருந்துறவு மாயாச்
சினம் கவர்ந்தார்க் கில்லைத் தெளிவே - அனங்கனம்பின்
புண்ணுற்றார்க் கில்லைப் புனிதம் பொருந்துமரன்
கண்ணுற்றார்க் கில்லைமதன் காண்.       (82)

பொய்யுற்றார்க் கில்லை புகழுடம்பு போகத்தின்
கையுற்றார்க் கில்லை கருதுமறம் - மெய்யுற்றுக்
காமித்தார்க் கில்லை உயிர் காட்டாமல் மேலன்பைச்
சேமித்தார்க் கில்லைச் சிவன்.       (83)

ஆசையுற்றார்க் கில்லை அருட்செல்வம் ஆங்கரன்பால்
நேசமுற்றார்க் கில்லை நெடியமறம் - மாசற்ற
நெஞ்சினார்க் கில்லை நிகழ்குறைவு தீதைவிட
அஞ்சினார்க் கில்லை அரன்.       (84)

திருவினை உற்றார்க்குத் தீதில்லைச் செங்கண்
ஒருவனைற் றார்க்குயர் வில்லைக் - குருவவனை
ஐயுற்றார்க் கில்லை அருளுடைமை ஆங்கவன்தன்
மெய்யுற்றார்க் கில்லை வினை.       (85)

கற்றவர்க்கே இல்லைக் கரிசறுத்தல் கற்றநெறி
உற்றவர்க்கே இல்லை உறுங்கரிசு - மற்றுடலைச்
சேதித்தார்க் கில்லைத் திரிமலமெய்த் தேவோடு
சாதித்தார்க் கில்லையுயிர் தான்.       (86)

சீவனுற்றார்க் கில்லை சிவமச் சிவமச் சிவமென்னும்
தேவனுற்றார்க் கில்லையந்தச் சீவனென்கை - ஆவதனால்
அங்காங்கி யாக அடையும் உயர்பிழிவாம்
மங்காதே வைக்கும் வரம்.       (87)

வாளுற்றார்க் கில்லை வருங்கருணை மன்னுதவக்
கோளுற்றார்க் கில்லை கொடுங்கோபம் - வேளுற்ற
நெஞ்சினார்க் கில்லை நிகழ்மரபு தீதைவிட
அஞ்சினார்க் கில்லை அறம்.       (88)

மரத்தில் உருவமைக்க மாறும் மரத்தைக்
கருத்தில் அமைக்கவுருக் காணாத் - திருத்துமரன்
காணுங்கால் ஆவியினைக் காணாமெய் யாவியினைக்
காணுங்கால் காணா தரன்.       (89)

சித்திரமும் நற்சுவருஞ் சேருங்கால் ஒன்றாம்நற்
சித்திரமே காட்டாதிச் சேர்சுவரைப் - புத்திதனைத்
தேற்றும் அரனே செலுமுயிரைக் காட்டாமல்
தோற்றியவா றென்னத் துணி.       (90)

இரும்பினைப்பொ ன்னாக்கும் இயைந்த குளிகை
திரும்பியிரும் பாக்குதலைச் செய்யா - விரும்புமலம்
போக்குவதே அல்லாற்பின் போனதனை ஆருயிர்மேல்
ஆக்குதலைச் செய்யான் அரன்.       (91)
--------------------


This file was last updated on 21 June 2021.
Feel free to send the corrections to the webmaster.