pm logo

வளர்ப்பு மகள்
(பாகம் 2, அத்தியாயம் 11-20)
சு. சமுத்திரம்‌


vaLarppu makaL (novel),
part 2 (chapters 11-20)
by cu. camuttiram
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

வளர்ப்பு மகள்
சு. சமுத்திரம்‌

Source:
வளர்ப்பு மகள் ( & இந்திர மயம் )
சு. சமுத்திரம்
திருவரசு புத்தக நிலையம்,
13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை -600 017
முதற் பதிப்பு ஜூலை 1980; ஆறாம் பதிப்பு டிசம்பர் 2002
பதிப்பாசிரியர்: வானதி திருநாவுக்கரசு
விலை ரூ.50.00
ஒளி அச்சு : ஏகலைவன், சென்னை - 600 041.,
Printed at : Mani offset, Chennai - 5.
---------
இதனுள்....
ஆய்வேடு காட்டும் வளர்ப்பு மகள்
1. வளர்ப்பு மகள்
2. இந்திரமயம்
---------

வளர்ப்பு மகள்
அத்தியாயம் 11


விடிய விடியத் தூங்காமல், கொட்டக் கொட்ட விழித்ததால் மல்லிகாவின் கண்கள் கரித்தன. லேசாகத் தலை சுற்றியது. ஒன்பது மணி வரை பித்துப் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். அன்று கல்லூரி விடுமுறையாதலால் அப்பா கண்டுக்கவில்லை. அம்மா, மணப்பெண்ணை திட்ட விரும்பவில்லை.

குளியலறைக்குப் போய், ஷவரை திறந்து விட்டாள். சாரல் மழை போல், கம்பி மத்தாப்பு போல் விழுந்த நீர்க் கற்றைகள் முடிக் கற்றையோடு மோதி, முதுகு வழியாக இறங்கிய போது அவளுக்கு ஓரளவு இதமாக இருந்தது. அதே சமயம் ராமன், சரவணன் இரண்டு அம்மாக்கள், இரண்டு அப்பாக்கள் மாறி மாறி வந்து போனார்கள். தெருப்பொறுக்கியாக வாழும் ராமனை அவளால் கட்டிக்க முடியாது. அப்படி கட்டாமல் அந்த வீட்டில் அவளால் இருக்கவும் முடியாது. இருந்தாலும் முகமறியாப் பருவத்திலேயே பார்த்துப் பழகிய, இந்த அப்பாவையும் அம்மாவையும் விட்டு விட்டு அவளால் பிரிந்திருக்க முடியாது.

மல்லிகா சிந்தித்து சிந்தித்து சிந்தனையே இல்லாமல் போனாள். இந்த ராமன் இல்லாமலே இந்த அம்மாவுடனும் இந்த அப்பாவுடனும் வாழணும். எப்படி? எப்படி?

அவள் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்து விட்டாள். ராமனைக் கட்டிக்க முடியாது என்று அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்ல வேண்டும்.

குளித்து விட்டு, பீரோவில் இருந்த புதுப் புடவையைக் கட்டாமல் உடுத்திய புடவையையே கட்டிக் கொண்டு சமையல் அறைக்குள் நின்ற பார்வதியின் பக்கம் வந்தாள். “அம்மா” என்றாள் குழைந்தும் இழைந்தும்.

பார்வதி, அவளை வினா நெற்றியோடு பார்த்த போது, மல்லிகா தயங்கி மயங்கி, தத்திக் கொண்டே பேசினாள்:

“எனக்கு ராமன் வேண்டாம்மா... வேண்டாம்மா...”

மல்லிகாவால், மேற்கொண்டு பேச முடியவில்லை. அம்மாவின் மார்பில் தலை வைக்கப் போனாள். அதற்குள் அவள் முகம் போன போக்கிற்கும், சிவந்த கண்களுக்கும் பயந்து போய் சுவரில் முகம் புதைத்து அழுதாள்.

நடித்துப் பழகிய பெரிய அண்ணனின் சகவாச தோசத்தால், மல்லிகாவின் அழுகையையும் ஒரு நடிப்பாகக் கருதி ஒரு நடிப்புக்காகக் கூட ஆறுதலாகப் பேசாமல், பார்வதி பொறிந்தாள்.

“நீ எதுக்கு அழுவுறேன்னு எனக்குத் தெரியும். எவனோ ஒரு கஸ்மாலத்துக்கிட்ட (இது ராமன் கடன் கொடுத்த வார்த்தை) ரோட்டுல தளுக்கிப் பேசிக்கிட்டு நின்றதை ராமன் சொன்னான். ரோட்டுல காதல்... வீட்டுல... இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்கிறது மாதிரி நடிக்கிறியாக்கும். எல்லாம் அவரு கொடுத்த இளக்காரம்.”

மல்லிகாவிற்கும், லேசாகக் கோபம் வந்தது.

“எதுக்கும்மா வீண் பேச்சு. ராமனை என்னால் கட்டிக்க முடியாது. அவ்வளவுதான்.”

“எதிர்த்துப் பேசுகிற அளவுக்கு வந்திட்டியா? எதிர்த்தாப் பேசுறே? இந்த வீட்டுல இருக்கணுமுன்னா ராமனைக் கட்டியாகணும். இல்லைன்னா... மரியாதையாய் உன் அப்பன்வீட்டைப் பார்த்துப் போ...”

மல்லிகா பெட்டிப் பாம்பாக அடங்கிப் போய் நின்றாள். அதே சமயம் அப்பாவிடம் வாதாடி, வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையோடும் இருந்தாள். எது நடந்தாலும் அம்மாவை விட்டு அவளால் பிரிந்திருக்க முடியாது. ‘அப்பாவைப்’ பார்க்காமல் இருக்கவும் முடியாது. அதோடு அவளால் ‘அந்த ஆள்’ வீட்டிற்குப் போய் இருக்கவும் முடியாது.

பார்வதி பேசினால் பேசிக் கொண்டே போகிறவள். அதுவும் ‘எதிரி’ பேச்சை நிறுத்தி விட்டால், எகிறிப் பேசக் கூடியவள். பேசினாள்.

“வாயைத் திறந்து சொல்லுடி. ராமனைக் கட்டிக்க முடியுமா? முடியாதா? ஏண்டி பேச மாட்டேங்கிறே? நீதான் சரியான கள்ளியாச்சே... உன் அம்மாவுக்கு இருக்கிற திமிரு உனக்கில்லாம போகுமா? போகுமான்னேன்? சரியான நரிக்குறத்தியாச்சே உன் அம்மா.”

மல்லிகாவால் பேசாமல் இருக்க முடியவில்லை.

“உன் நாத்தனாரை அப்படிப் பேசாதம்மா.”

“என்னடி, இன்னுமாடி எதிர்த்துப் பேசறே? உன் அம்மாவைப் பேசினால் ரோஷம் வருதோ? அந்த மேனா மினுக்கியை பேசினால், கோபம் வருதோ? எச்சி இலைக்காரிக்குப் பிறந்தவளுக்கு எச்சிக்கலை புத்திதானே இருக்கும்?”

மல்லிகா கண்களை உருட்டிக் கொண்டே பார்வதியைப் பார்த்தாள். ஏதோ ஒரு உண்மை அவளுக்குத் தட்டுப்பட்டது. இவள் அம்மா இல்லை. ஆயிரம் தான் எடுத்து வளர்த்திருந்தாலும், இவள் அம்மாவாக மாட்டாள்... அம்மாவாக மாட்டாள்.

“என்னையாடி மொறைக்கிறே? உன் அம்மா புத்தி போகுமா?”

“எங்க அம்மாவை அப்படிப் பேசாதீங்க, அத்தை.”

பார்வதி உச்சி முதல் உள்ளங்கால் வரை அதிர்ந்து போனாள். இதுவரை அவள் கேட்டறியாத வார்த்தை. இதுவரை அவளுக்குச் சொல்லிக் கொடுத்தும் சொல்ல மறுத்த வார்த்தை; ஒரே வார்த்தையில், எத்தனை விஷயங்களைக் கொட்டி விட்டாள்? அவளுக்கே தன்னை அவள், அம்மா என்று சொல்லாமல் போனதில் ஒரு ஆத்திரம். வளர்த்த பாசம் குலுக்கிய ஆத்திரம். அந்த ஆத்திரத்தை அவள் வார்த்தைகளாக்க நினைத்த போது, அருகாமையிலேயே ஒரு குரல் கம்பீரமாக ஒலித்தது.

“மல்லிகா... சைக்கிள் ரிக்‌ஷா கொண்டு வந்திருக்கேன். வாம்மா நம்ம வீட்டுக்குப் போகலாம்.”

பெருமாள், மீசை துடிக்க நின்றார்.

மல்லிகாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ‘அந்த ஆளைப்’ பார்த்தாள். அவர், தன் கண்களைத் துடைத்துக் கொள்வதைக் கண்டாள். அவர் கைகால்கள் தாமாக ஆடுவதை, அவள் உணர்ந்தாள். ஏதோ ஒரு உணர்வு உந்த, மெள்ள, மிக மெள்ள, அவரை நோக்கி நடந்தாள். மெள்ள நடந்த மகளை, அவர் வேகமாகப் போய் அணைத்துக் கொண்டார். பிறகு ஒரு குழந்தை போல் கேவிக் கேவி அழுதார். பிறகு தன் அழுக்காடை பட்டு, மகளின் மேனி மாசுபடக் கூடாது என்று நினைத்தவர் போல் சற்றே விலகிக் கொண்டு, அவள் இரு கரங்களை மட்டும் பற்றிக் கொண்டு, “வாம்மா போகலாம். உனக்கு எந்தக் குறை வச்சாலும், இந்தப் பாவி... அன்பில் மட்டும் குறை வைக்க மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டு, அவர் நடக்க, மல்லிகா, அம்மாவை மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டே நடந்தாள். அவள் மடியில் புரண்டு அழவேண்டும் போல் அவளுக்குத் தோன்றியது. தன்னை வளர்த்தவளைக் கட்டிக் கதற வேண்டும் போல அவளுக்குத் தோன்றியது. என்றாலும் தந்தையின் பின்னால் நடந்தாள். ஒரு கையில் போட்டிருந்த தங்க வளையலையும், கழுத்தில் தொங்கிய செயினையும் கழற்றி, ஊஞ்சல் பலகையில் போட்டுவிட்டு நடந்தாள். ராமனுக்காக நடந்தாள். சரவணனுக்காக நடந்தாள். வளர்த்த அப்பா வரட்டும் என்று காத்திருக்கும் உணர்வில்லாமலே நடந்தாள்.

இதற்குள், வெளியே இருந்து வந்த ராமனுக்கு, முதலில் விஷயம் புரியவில்லை. பேயடித்தவள் போல் நின்று கொண்டிருந்த சித்தியும், கலங்கியவாறே போகும் மல்லிகாவையும் பார்த்ததும், அவனுக்கு விஷயம் புரிந்து விட்டது. பெருமாளை மேலும் கீழுமாகப் பார்த்தான். ஆசாமியை அடித்து விடலாம்...

“யோவ்... இன்னாதான்யா உன் மனசிலே நெனைப்பு? இது உன் பொண்ணாகவே இருக்கட்டும். அதுக்கினு ஒரு ‘கொல்கை’ இல்லையா? சின்ன நய்னா இல்லாத சமயத்துல, வூட்டுக்குள்ளே பூந்து, கலாட்டா பண்ணிட்டு ஒரு பொண்ண கடத்திக்கினு போனால், இன்னாய்யா அர்த்தம்? யோவ், அவள விடுறியா இல்ல செமத்தையா வாணுமா?”

பெருமாள், சற்று நின்று அவனை முறைத்தார். மல்லிகா, அப்பாவின் முதுகுப் பக்கம் பதுங்கிக் கொண்டாள். அவனை கால்கள் இரண்டையும் சேர்த்துப் பிடித்து, தலை கீழாகத் தூக்கி நெற்கதிரை அடிப்பது போல் அடிக்கலாமா என்று கூட நினைத்தார். இருந்தாலும், மகள் கணக்கில் தானும் ஒரு ரவுடி என்பது தெரியக்கூடாது என்பது போல், “உனது வேலையைப் பார்த்துக்கிட்டுப் போய்யா...” என்று கத்திவிட்டு, அப்படி, படித்த மகளுக்கு எதிராகக் கத்தியிருக்கக் கூடாது என்பது போல் லேசாக வெட்கப்பட்டுக் கொண்டே நடந்தார்.

ராமனுக்கு அவர் ‘வீக்’காக பதில் கொடுத்தது, பலத்தைக் கொடுத்தது. “யோவ், கஸ்மாலம், மல்லிகாவை விடுறியா, இல்ல வயித்தக் கீறட்டுமா?” என்று சொல்லிக் கொண்டு அவரை நெருங்கிய போது, வெளியே நின்ற சைக்கிள் ரிக்‌ஷாக்காரர் உள்ளே வந்தார்.

அவரும் மேனியெங்கும் ‘பச்சை’க்காரர். ராமனை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டே, “ஏண்டா... சோமாறி... சின்ன மனுஷன் பெரிய மனுஷன் வித்தியாசம் வாண்டாம்? அவரோட பொண்ணை அவரு கூட்டிக்கினு போனா, உனக்கென்னடா கயிதே. இன்னொரு வாட்டி அவரைத் திட்டு பார்க்கலாம். மவனே, நெஞ்சில் கீறி, மஞ்சாச் சோத்தை வெளில புட்டுப் பூட்றேன்” என்று கர்ச்சித்த போது, “படா கில்லாடிங்க தாய்யா... பிளான்ல வந்திருக்கீங்கோ” என்று கூறிவிட்டு, ராமன் ‘சைட்’ வாங்கிய போது பெருமாளும், மல்லிகாவும், ரிக்‌ஷாவிற்கு அருகே வந்து விட்டார்கள். “ஏறும்மா” என்றார் அவர்.

மல்லிகா வீட்டுக்குள் திரும்பிப் பார்த்தாள். உள்ளே ஊடுருவிப் பார்த்தாள். வாசல் படிக்கட்டில் பார்வதி திபிரமையுடன், பின் தலையில் இரண்டு கைகளையும் பின்னி, விழி ஆடாமல், வெறித்த பார்வை மாறாமல், பைத்தியக்காரி போல் நின்றதைப் பார்த்த மல்லிகாவால் தாள முடியவில்லை. “அம்மா... அம்மா...” என்று கேவிக் கொண்டே அழுதாள். அந்த அழுகையைப் பார்த்ததும், பார்வதியும், நெருங்கி வந்து நின்று கொண்டு அவளைப் பார்த்தாள். ‘வந்திடும்மா, வந்திடும்மா’ என்று இதயம் வாய்க்கு ஆணையிட, மூளை அதற்குத் தாளிட்டது. ஆனால் கண்கள் மட்டும் யாருடைய ஆணைக்கும் கட்டுப்பட விரும்பாதது போல், நீரைக் கொட்டின.

எப்படி இருந்த மகள், எப்படியெல்லாம் இருக்கப் போகிறாளோ என்று கடந்த காலமும் எதிர்காலமும் நிதர்சனமான நிகழ்காலத்தில் சந்திக்க, பெருமாள், மகளை கைத்தாங்கலாக ரிக்‌ஷாவில் அமர்த்தி விட்டு, “நீ ஏம்மா அழுவுறே? உன்னை இந்த கதிக்கு விட்டவங்களை, நான் சும்மா விடப் போறதில்லை. மளிகைக்கடையும் அரிசி மாவு மில்லும் உன் பேர்ல தான் இருக்கு! வழக்குப் போட்டு வாங்குறேனா இல்லியான்னு பாரு” என்று சபதம் போட்டு விட்டு, ரிக்‌ஷாவில் ஏறினார். ரிக்‌ஷாக்காரர் பெடலை மிதிக்கப் போனார்.

மல்லிகா, கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, “நீங்கள் அப்பா மேல வழக்குப் போடுறதா இருந்தால் நான் உங்களோடு வரமாட்டேன் வரமாட்டேன்” என்று குழந்தை போல் விம்மினாள்.

பெருமாள், தன் மகளை பெருமையோடு பார்த்து விட்டு, அவள் முதுகில் தட்டினார். பிறகு “பிச்சைக்காரப் பயலுவ காசு, நமக்கெதுக்கும்மா” என்று சொன்னார். அதற்கு அவள், “அப்பாவை அப்படியெல்லாம் திட்டப்படாது” என்று கலங்கியவாறே சொன்ன போது, பெருமாள் குழந்தையானார். குலுங்கி அழுதார்.

“இன்னாய்யா... நீ குயந்த மாதிரி, அழலாமா? சரியான ஆளய்யா?” என்று சொல்லிக் கொண்டே, ரிக்‌ஷாக்காரரும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

ரிக்‌ஷா நகர்ந்தது. பதினாறு ஆண்டு காலமாக அவள் பார்த்து உணர்ந்து உய்த்த இடத்தைவிட்டு நகர்ந்தது. ரிக்‌ஷா சக்கரங்கள் சுழலச் சுழல, பார்வதியின் தலையும் அதே வேகத்தில் சுழன்றது.
--------------
அத்தியாயம் 12


கணவன், அண்ணனை எதுவும் செய்துவிடப் போகிறாரோ என்று கண்கலங்க, வாசல் திண்ணையைப் பிடித்துக் கொண்டு நின்ற செல்லம்மாவுக்கு, மனம் மரண அவஸ்தைப்பட்டாலும், லேசான ஆறுதல். அண்ணனைச் சுற்றி எப்போதும் ஆள் இருக்கும். இவரால் அடிக்க முடியாது. அதோடு இவ்வளவு ரவுடித்தனம் செய்யும் இவரும், அண்ணனைக் கண்டதுமே, பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போகிறவர். ஒரு வேளை, இவர் கலாட்டா செய்து, இவரையே போலீசில் பிடித்துக் கொடுத்து... இருக்காது... இருக்காது. என் அண்ணனைப் பற்றி எனக்குத் தெரியும். அடிப்பதற்கு முதுகைக் காட்டினாலும் காட்டுவாரே தவிர, முதுகில் குத்த மாட்டார். ஒருவேளை, அண்ணன் இல்லாமல்... வேறு யாராவது இருந்து... அட கடவுளே...

தவித்துக் கொண்டிருந்த செல்லம்மாவுக்கு, முதலில் எதிரே வந்து கொண்டிருந்த ரிக்‌ஷா மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. பிறகு அதிலிருந்து உருவங்களைப் பார்க்கப் பார்க்க ரிக்‌ஷா மறைந்து, பெருமாளும், மல்லிகாவும் மட்டுமே தெரிந்தார்கள். பின்னர் மல்லிகா மட்டுமே அவள் கண்களில் நிறைந்தாள்.

ரிக்‌ஷா வந்து நின்றவுடனேயே, செல்லம்மாவின் கண்களில் நீர் கீழே விழுந்தது. மல்லிகாவை, முதுகோடு சேர்த்து அணைத்து, தன் கைகளாலேயே இறக்கிவிட்டு, பின்னர் அவளை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டு “என் ராசாத்தி... என் ராசாத்தி... வந்துட்டியாம்மா...” என்று கதறினாள்.

சத்தங்கேட்டு, அவளின் பையன்களும், பெண்களும் வந்தார்கள். பிரசவத்திற்காக வந்திருக்கும் அவள் மூத்த மகள் சந்திரா, தங்கையின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதாள். ஏழைகள், தங்களுக்கு இஷ்டப்பட்டவர் வேதனையில் வேகும்போது, தங்களால் செய்யக்கூடிய ஒன்று, அந்த வேதனையைப் பகிர்ந்து கொள்வது போல், அழத்தான் முடியும் என்பது போல், அத்தனை பேரும் அழுதார்கள். இதனால், தெருக்கூட்டம் அங்கே திரண்டு வந்தது. உள்ளே இருந்த இருபது குடித்தனக்காரர்களும், அங்கே குழுமினார்கள். ‘டிக்னிட்டி’ பார்க்கும் ‘வீட்டுக்கார அம்மா’ கூட தெருவுக்கே, அதுவும் நடுத் தெருவுக்கே வந்து விட்டாள்.

பெருமாளுக்கு என்னவோ போலிருந்தது. படித்த பெண் முன்னால், இப்படியா, ‘ரீசன்ட்’ இல்லாமல் அழுவது? அவள் என்ன நினைப்பாள்? அதோடு, அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியவர்களே அழுதால்... அவர், வழக்கமாகக் கத்தாமல், படித்த மகளுக்கு மரியாதை கொடுப்பவர் போல் பேசினார்.

“நம்ம பொண்ணு... நம்மகிட்ட வந்திருக்காள். எங்கே வரணுமோ... அங்கே வந்திருக்காள். சந்தோஷப் படாமல் அழுதால் எப்படி...”

மல்லிகா, அவர்களை நிமிர்ந்து பார்த்தாள். அவர்கள் அனைவரும், அவளுக்கு முன்பு பார்த்தறியாத புது மனிதர்களாகத் தெரிந்தார்கள். அந்த எலும்புக் கூடுகளுக்குள்ளும், இதயங்கள் இருப்பதை, அவள் தேடாமலே கண்டாள். அக்காளின் தோளில் கை போட்டுக் கொண்டு, அம்மாவின் கண்களை, இடுப்பில் செருகியிருந்த தன் கைக்குட்டையை எடுத்து, துடைத்தாள்.

எப்படியோ, மல்லிகா, அந்த முட்டு வீட்டுக்குள் வந்து உட்கார்ந்தாள். அவள் அக்காள், அவள் உட்காருவதற்கு முன்பே, தனது கல்யாணப் புடவையை, நன்றாக மடித்து அடுப்புத் திட்டை ஒட்டியிருந்த மந்திட்டில் அதைப் போட்டு பரப்பிவிட்டு, தங்கையை உட்காரச் சொன்னாள். தம்பி ஒருவன், மல்லிகாவிற்கு வெளியே இருந்து வாங்கிக் கொண்டு வந்த ஒரு ஓலை விசிறியை எடுத்து வீசினான். செல்லம்மா, தன் புது மகளையே பார்த்தாள். அவள் பிறந்த போது, குழந்தை எப்படி இருக்கிறது என்பதை அறியும் ஆவலில், பிரசவ மயக்கம் தீர்ந்த மறுநிமிடமே, எப்படி பார்த்தாளோ, அப்படிப் பார்த்தாள். பெருமாள், தலையில் கை வைத்து, யோசித்துக் கொண்டிருந்தார். இனிமேல் குதிரையை விடணும்... ‘பட்டையை’ ஒழிக்கணும்.

மல்லிகாவும், அவர்கள் அன்பில் கட்டுண்டு, மெய்மறந்து இருந்தாள். அந்த வீட்டைப் பார்த்து முன்பு முகஞ்சுழித்த அவளுக்கு, அந்த வீட்டு மனிதர்களைப் பார்க்கப் பார்க்க நெஞ்சமெல்லாம் நிறைந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு அவரவர், தத்தம் வேலைகளைப் பார்க்கத் துவங்கிய போது அவளுக்குத் தனிமை வாட்டியது. தான் செய்தது சரியா என்று கூடத் தோன்றியது. எங்கேயோ போய்விட்டதாக நினைத்த அவள் அம்மா, ஒரு மசால் தோசையுடன் வந்து மகள் முன்னால் காணிக்கை செலுத்துபவள் போல் நின்றதைப் பார்த்ததும், அவள், தாயாகி தாயாகாமல் போன அந்த காய்ந்தவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள். பிறகு, மசால்தோசையை வேண்டாமென்று சைகை செய்தாள்.

வருவோர் - போவோர், “இப்படியா செய்துட்டாங்க” என்போர், “இருந்தாலும் நீ வரப்படாது” என்போர் இப்படியாக பலர் வந்து பேசியதைக் கேட்டுக் கேட்டு, ஏதோ ஒரு பெரிய ஜனச்சங்கிலியில், தான் ஒரு வட்டமாக இருக்கும் லேசான - மிக லேசான பெருமிதத்தில் மல்லிகா அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

இரவு வந்தது. எங்கே படுப்பது? உள்ளே மூட்டைப் பூச்சிகள். வெளியே கொசுக்கள். ‘டன்லப் பில்லோ’ கட்டில் கிடையாது. மேலே மின்விசிறிக்குப் பதிலாக, ஒரு பெருச்சாளிதான் சுற்றிக் கொண்டு வந்தது. மல்லிகா தயங்கிக் கொண்டே நின்ற போது, ‘பிள்ளைத் தாய்ச்சியான’ அவள் அக்காள் சந்திரா, கோரப்பாயை விரித்து தன் கல்யாணப் பட்டுப் புடவையை, இரண்டாக மடித்து, கைகளால் தேய்த்து, பாயின் மேல் விரித்தாள். செல்லம்மாள், ஒரு கிழிந்த தலையணையை எடுத்து, வீட்டுக்காரரின் துண்டால் அதைச் சுற்றி, பாயின் விளிம்பில் வைத்தாள். பையன்கள் அக்காளுக்கு, யார் விசிறி வீசுவது என்ற சர்ச்சையில் ஈடுபட்டார்கள். ஒருவனுக்கொருவன், அடித்துக் கொண்டிருப்பான். வெளியே அப்பா இருப்பது தெரிந்து, வெறும் சர்ச்சையில் தான் இருந்தார்கள். பெருமாளோ, இவர்கள் அடித்துக் கொண்டிருந்தாலும், கண்டிக்க மாட்டார். அவர் பிரச்சினை அவருக்கு. மல்லிகாவின் எதிர்காலத்தை நினைக்க நினைக்க அவருக்கு தனக்கு நிகழ்காலமே இல்லாதது போல் தோன்றியது. தாங்க முடியாத இதயச் சுமை ஒரு கிளாஸ் போட்டுட்டு வரலாமா... ஒரே ஒரு கிளாஸ்... இன்னைக்கு மட்டும்... நாளையில் இருந்து நிறுத்திடலாம்.

லாந்தர் விளக்கு அணைக்கப்பட்டது. அந்த இரவில், மல்லிகாவைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த குடித்தனக்காரர்கள், வெளித்தளத்தில், கணவன் மனைவி சகிதமாய், ரெட்டை ரெட்டையாகவும், பிள்ளைகள் சகிதமாகவும், வரிசை வரிசையாகப் படுத்தார்கள். மல்லிகாவும் படுத்தாள். அப்படியே தூங்கிப் போனாள். பட்டு மெத்தை கொடுக்காத சுகத்தை, அந்தப் பாய் கொடுத்தது. தப்பு... பாய் கொடுக்கவில்லை. அந்தப் பாயை விரித்த ஜீவன்களின் பாசம் கொடுத்தது.

நள்ளிரவு.

குடித்தனக்காரர்களின் குழந்தைகளில் ஒன்றோ, இரண்டோ இப்பாரி போட்ட போது, திடீரென்று தூக்கம் கலைந்து எழுந்தாள் மல்லிகா. கட்டில் மெத்தையில் படுத்திருப்பதாக நினைத்து எழுந்தவள், பாயைப் பார்த்துத் திடுக்கிட்டாள். அன்றைய தினம் நடந்தவை அனைத்தும் உறக்கம் கலைந்து ஒரு கணம் நிர்மலமாக இருந்த அவள் மனதில், உலுக்கிக் கொண்டே வந்து உட்கார்ந்தது. தலையில் இருந்து வந்ததா, வயிற்றில் இருந்து வந்ததா என்று இடம் தெரியாத அந்த சுமை நிகழ்ச்சிகளின் - அனலான நெருப்புக் கட்டிகள் அவள் இதயத்தில் சட்டென்று பட்டு சரியாகப் பிடித்துக் கொண்டது.

மல்லிகா, அம்மா பார்வதியை நினைத்த போது, முடங்கிக் கிடந்த செல்லம்மாவின் முகமே தெரிந்தது. அப்பா சொக்கலிங்கத்திற்குப் பதிலாக, பெருமாள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவளுக்கு, தியாகராய நகரில் இருக்கும் அப்பாவையும், அம்மாவையும் உடனே பார்க்க வேண்டும் போலிருந்தது. அவர்கள் கால்களைக் கட்டிக் கொண்டு கதற வேண்டும் போலிருந்தது. அவர்கள், இவள் தலையை ஆதரவாகக் கோதிவிட வேண்டும் போலவும் துடித்தாள். எதையும் எதிர்பார்க்காத பாசத்தின் உச்சக்கட்டத்திற்கு வந்தவளாய், அவள் செல்லம்மாவை எழுப்பினாள்.

கண்ணைக் கசக்கிக் கொண்டே எழுந்த செல்லம்மா “என்னம்மா” என்றாள்.

“அம்மாவிடம் போகணும்... அப்பாவைப் பார்க்கணும், இப்பவே பார்க்கணும்.”

“இப்போ எப்டிம்மா முடியும்...”

“அப்பாவைப் பார்க்கணும்... அம்மாகிட்ட போகணும்...”

“இன்னைக்கு மட்டும் பொறும்மா...”

“முடியாது. இப்பவே பார்க்கணும்.”

“கவலைப்படாதம்மா... நாளைக்கு... எப்பாடு பட்டாவது ஒரு கட்டில் வாங்கிடுறோம். ரெண்டு நாளையில்... மெத்தை வாங்கிடுறோம்...”

“அய்யோ... நான் கட்டில் மெத்தைக்காக... அவங்களை பார்க்கணுமுன்னு சொல்லல... தெருவுல நின்றாவது நான், என் அப்பாவையும், அம்மாவையும் பார்க்கணும்... பார்த்தே ஆகணும்... இப்பவே பார்க்கணும்...”

“இப்போ எப்படிம்மா முடியும்... நடு ராத்திரி...”

“பரவாயில்ல... பார்க்கணும்...”

“அது எப்படிம்மா...”

“அப்பா... அம்மா...”

“ஏம்மா அழுகிற?”

“அப்பா... அம்மா... வாங்கப்பா... வாங்கம்மா... என்னால அங்க வர முடியல... நீங்களாவது வாங்க...”

“மல்லிகா... அம்மா சொல்றதக் கேளும்மா...”

“அப்பா... அம்மா... அம்மா... அம்மா... அப்பா...”

மல்லிகா போட்ட கூச்சல் அழுகையில், அப்போது அழுது கொண்டிருந்த சின்னப் பிள்ளைகள், தாங்கள் அவளை விட பெரிய பிள்ளைகள் என்பது போலவும், அவள், தங்களை பெரிய பிள்ளைகளாய் ஆக்கிவிட்டது போலவும், அவர்கள் அழுகையை நிறுத்திய போது, அவள் மேலும் பலமாக அழுதாள்.

“அப்பா... அம்மா... அப்பா... என் அப்பா... என் அம்மா...”

எல்லோருமே, அங்கே கூடிவிட்டார்கள். வேறு வேறு வீடுகளில் இருந்தவர்கள் கூட, வெளியே வந்து, நடைக் கதவைத் தட்டினார்கள். மல்லிகா, அழுகையை நிறுத்தவில்லை.

“அப்பாவைப் பார்க்கணும். அம்மாவைப் பார்க்கணும். யாராவது கூட்டிட்டுப் போங்க... அய்யோ... எங்க அப்பாவைப் பார்க்கணும்... அம்மாவை...”

பெருமாள், மகளையே பார்த்துக் கொண்டு நின்றார். உள்ளம் கலங்கியதால், கண் கலங்கியது. பிறகு, இந்தக் கலக்கத்திற்குக் காரணமான சொக்கலிங்கத்தின் மீது கொலைத்தனமான கோபம் ஏற்பட்டது. கோபத்தை சிறிது குறைத்துக் கொண்டே பேசினார்.

“உன் இஷ்டம்... உனக்கு இங்க இருக்கிறது பிடிக்கலன்னா, இப்பவே கொண்டு விடத் தயாராய் இருக்கேன்... என் மானத்தை விட்டு, உன்னை... அங்கே கொண்டு விட்டுட்டு, அவன் கிட்டே மன்னிப்பு வேணுமுன்னாலும் கேட்கிறேன். ஏன்னா... இந்த அம்பது வருஷமா மானத்தோட வாழ்ற எனக்கு, அந்த மானத்தை விட நீதான் முக்கியம். ஆனால் ஒண்ணு. உன்னை அந்த கேடு கெட்ட ரவுப் பயலுக்கு கட்டிக் கொடுக்கத் துணிந்தவங்க. எதுக்கும் துணிந்த பாவிங்களாத்தான் இருப்பாங்க... நீ மட்டும் அவங்க சொந்த மகளாய் இருந்தால் இப்படி அந்த சோதாப் பயலுக்கு காவு கொடுக்கிற எண்ணம் வருமா? இனிமேல், அந்த வீட்ல, நீ, ராமன் பயலை கட்டிக்காம இருக்க முடியாது. இனிமேல் நீ அங்கே போனால், அவளுக்கு இளக்காரமாய் போய்விடும். உன்னை... எப்படி வேணுமுன்னாலும் செய்யலாம் என்கிற தைரியம் வந்துவிடும். என்னாலயும் தட்டிக் கேட்க தகுதியில்லாமல் போயிடும். இவ்வளவு நீ அழுறே... சொக்கலிங்கத்துக்கோ, அவன் பெண்டாட்டிக்கோ... நிஜமாகவே உன் மேல் பாசம் இருந்தால் இங்கே வந்து கூட்டிட்டுப் போகலாமே? என்னை, ரெண்டு அடி அடித்துவிட்டு கூட கூட்டிட்டுப் போகலாமே... நான் திருப்பியா அடிப்பேன்? உன்னை இங்கே கொண்டு வந்ததுல நான் சந்தோஷப் படுறேன்னு நினைக்கிறியா... நீ நல்லா இருக்கணும் என்கிறதுதான் எனக்கு முக்கியம்மா... நான் பாவி... நான் பாவி...!”

பெருமாள், தன் தலையிலே அடித்துக் கொண்டார். ஆனால் அழவில்லை.

மல்லிகா, அப்பாவையே பார்த்தாள். அவருக்குள்ளே எவ்வளவு பாசம். எவ்வளவு அன்பு. தியாகராய நகருக்குப் போனால், அப்பா, அம்மாவோடு, ராமனையும் பார்க்க வேண்டியதிருக்குமே...

மல்லிகா முடங்கிப் படுத்தாள். செல்லம்மா, மகள் தலையை எடுத்து, தன் மடியில் போட்டுவிட்டு, குழந்தையை குலுக்குவது போல் குலுக்கினாள். மல்லிகா, கை கால்களைச் சுருட்டிக் கொண்டு, முடங்கிக் கொண்டே இருந்தாள்.
--------------
அத்தியாயம் 13


தியாகராய நகர் வீட்டுக் கதையும், இதே கதை தான்.

மல்லிகா, தந்தையுடன் வெளியேறிவிட்ட செய்தியை, கடைப் பையன் ஒருவன் மூலம் கேள்விப்பட்ட சொக்கலிங்கம், கல்லாவில் போடப் போன காசுகளை, சிறிது நேரம் அப்படியே வைத்துக் கொண்டிருந்தார். பின்பு கடையில் இருந்து, மேலே ஒரு கம்பி வட்டத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்று வளையத்தைப் பிடித்துக் கொண்டே, கீழே இறங்கி ஓடாக் குறையாக நடந்தார்.

வாசலுக்கு வந்ததும், “என் மகளை துரத்திட்டியாடி பாவி எங்கே இங்கே... இங்கே வாடி... அவள் போன பிறகு உனக்கென்னடி இங்கே வேல...” என்று குரல் கொண்ட மட்டும் கத்திக் கொண்டே, படியேறினார். இப்படி மனைவியை, அவர் எப்போதும் பேசியதில்லை. ‘கடைப்’ பயல், விவகாரத்தை ‘ஊர்ப்பய பிள்ளை’ என்று தன்னை அடிக்கடி திட்டும் பார்வதிக்குப் பாதகமாகச் சொன்னதால், சொக்கலிங்கம் மனைவியைத் தீர்த்துக் கட்டிவிடுவது என்ற உறுதியுடன் தான் கத்தினார். பார்வதி, வெளியே வரவில்லை. பயங்கரமான நிசப்தம். களையான ஒன்று, அங்கே இல்லை என்பதைக் காட்டுவது போல் ஒரு வெறுமை. நடக்கக் கூடாதது ஒன்று நடந்து, அப்படி நடந்ததை மாற்ற முடியாதபடி இன்னொன்று புகுந்து விட்டது என்பது போல், ராமன், தன் தோள்களை வளைத்துக் கொண்டே, அங்கே நின்றான். சின்ன ‘நாய்னா’வைப் பார்த்ததும், ஒரு பக்கமாக ஒதுங்கிக் கொண்டான்.

ஊஞ்சல் பலகையில், மல்லிகா விட்டு விட்டுப் போன ஸ்கேலை எடுத்துக் கொண்டே, வாயில் தகாத வார்த்தைகளை வீசிக் கொண்டே, சொக்கலிங்கம் சமையலறைக்குள் போனார். போனவர், வாயடைத்துப் போய் நின்றார். பார்வதி சமையலறை மூலையில், தலையை வைத்துப் புரண்டு கொண்டே, “போயிட்டியாடி... போயிட்டியாடி... என் ராசாத்தி போயிட்டியாடி... எங்களை விட்டுட்டுப் போக உனக்கு எப்படியடி மனம் வந்தது” என்று புலம்பிக் கொண்டிருந்தவள், கணவனைப் பார்த்ததும், கட்டிப் பிடித்து அழுதாள். ஒரு நாளும் தரக் குறைவாகப் பேசாத கணவன், இன்று, கடந்த இருபத்தைந்தாண்டு கால தாம்பத்திய வாழ்க்கைக்கு ஒட்டு மொத்தமாக, வட்டியும் முதலுமாக திட்டித் தீர்க்க, சுரணை இல்லாதவளாய், அவரது காலில் தலைபட புரண்டாள். மனைவி நடிக்கிறாளோ என்று கூட சொக்கலிங்கம் முதலில் நினைத்தார். இல்லை நடக்கவில்லை. அப்படி இருந்தால், இப்படிப் பித்துப் பிடித்தவளாய் இருக்க மாட்டாள். இப்படி காலில் புரண்டு கதற மாட்டாள். அவளையே சிறிது நேரம் பார்த்துவிட்டு ‘அவள் மெய்யும், மெய்மையும், உடலும் உள்ளமும் ஒருங்கிணைய அழுகிறாள்’ என்பதை அவருக்குரிய அனுகூலங்களாக வைத்து, “என்னடி நடந்தது, எதுக்காக அந்த குடியன் கூட போயிட்டாள்” என்று படபடப்பாகவும், அதே சமயம் மனைவி மீது பரிதாபம் சொட்டும் படியாகவும் கேட்டார். மனைவியை, இந்த மாதிரி அழவைக்கிற நிலைமைக்கு, அடித்துப் புரள்கிற அளவுக்கு, மல்லிகா கொண்டு போய் விட்டு விட்டாளே என்று அவருக்கு தன் வளர்ப்பு மகள் மீதும் கோபம் ஏற்பட்டது.

பார்வதி அவரைப் பார்த்து அழுது கொண்டே விளக்கினாள்.

“ராமனைக் கட்டிக்க முடியாதுன்னாள். உன் அம்மா வீட்டுக்குப் போயிடுடின்னு, ஒரு பேச்சுக்கு சொன்னேன். எங்கேயாவது போயிடுன்னு, ஒரு தாய்க்காரி கோபத்துல சொல்றது மாதிரி சொன்னேன். சொல்லியிருக்கக் கூடாதுதான். நான்.... பாவி... எந்த நேரத்துல அப்படிச் சொன்னேனோ... அந்த நேரத்துல... அந்த குடிகாரப் பாவி வந்திருக்கான். என் செல்லக்கண்ணை கூட்டிக்கிட்டு போயிட்டான். போயேண்டி, போயேண்டி, நான் செத்தாடி போயிடுவேன். அய்யோ, என் மனசு கேட்க மாட்டேங்குதே... கேட்க மாட்டேங்குதே...!”

“இப்ப அழுது என்னடி பிரயோஜனம்... இந்த புத்தி அப்பவே இருந்திருக்கணும்...”

“என் புத்திதான், இரப்பாளப் புத்தி. நான் படிக்காத முண்டம். அவளுக்குப் புத்தி... எங்க போச்சு? ‘இது என் வீடு, நீ வேணுமுன்னா போ. நான் போகமாட்டேன்’னு அவள் சொல்லக்கூடாதா? இது, அவள் வீடுதானே. அவள் எப்படிப் போகலாம்? எப்படிப் போகலாமுன்னேன்...”

“சரி எழுந்திரு. எல்லாம் இந்த ஓணான் பயலால் வந்த வினை. நாம ரெண்டு பேரும் போய், அவளைக் கூட்டிக்கிட்டு வருவோம். முகத்தைக் கழுவுடி. ராமனுக்கு உன்னைக் கொடுக்க மாட்டோமுன்னு சொல்லி, கூட்டிக்கிட்டு வரலாம், கிளம்புடி...”

பார்வதி, பெருமூச்சு விட்டுக் கொண்டே எழுந்தாள். அவள் முகம் திடுக்கிடுவதைப் பார்த்து சொக்கலிங்கம், அந்த முகத்திற்கு எதிர் திசையைப் பார்த்தார். அவளின் மூத்த அண்ணன் ராமசாமி பல்லைக் கடித்துக் கொண்டு நின்றார். இருவரும், தன் பிரசன்னத்தைப் பார்த்து விட்டார்கள் என்பது நிச்சயமானதும், வில் போல் கோணியிருந்த தன் வாய் வழியாக சொல்லம்புகளைத் தொடுத்தார்.

“ஏய்... பார்வதி... அவருக்குத்தான் அறிவில்லை, உனக்குமா இல்லை? உங்க சொந்த மகளாய் இருந்தால் வாசல்படியைத் தாண்டுவாளா? சரி... போனதே போனாள், தோளோடு தோளாய் வளர்த்த மச்சான் கிட்ட சொல்லாமல் போவாளா? சரி, அப்படியே போகட்டும்; போற வழியில், இவருகிட்ட சொல்லிட்டுப் போகலாமில்ல? ஏன் போகலே? எல்லாம் திட்டம். அப்பனும் அவளும் போட்ட திட்டம். ஏதாவது சாக்கு சொல்லி வெளியேறி, அப்புறம் வழக்குப் போட்டு, சொத்தைப் பிடுங்கி, என் தங்கச்சியை மொட்டையடிக்கணும் என்கிற திட்டம்.”

சொக்கலிங்கம் மைத்துனரை உதாசீனப்படுத்துபவர் போல் மனைவியிடம், “சரி, நேரமாகுது. உன் அண்ணன் பிரசங்கத்தை அப்புறமாய் கேட்கலாம். இப்போ புறப்படு” என்றார்.

பார்வதி புருஷனையும் அண்ணனையும் மாறி மாறிப் பார்த்தாள். இடது காலை நகர்த்தாமல், வலது காலை மட்டும் நகர்த்தினாள். ராமசாமி உபதேசம் செய்பவர் போல் பேசினார்.

“எனக்கென்ன, போகணுமுன்னா போங்க. அங்கே போனதும், அந்த குடிகாரன் வாயில வந்தபடி பேசப் போறான். அரிவாளத் தூக்கிக்கிட்டு இவரை வெட்டினாலும் வெட்டுவான். எனக்கென்ன, போயிட்டு வாங்க. உங்களுக்கெல்லாம் பட்டாத்தான் புத்தி வரும்...”

இப்போது சொக்கலிங்கம் தயங்கினார். தங்கையின் கணவர் அவரை நேருக்கு நேராக நின்று திட்டமாட்டார். இருந்தாலும் இவரு சொல்றது மாதிரி, அரிவாளை கிரிவாளை தூக்கினால்? இவளை மானபங்கமாய் பேசிவிட்டால்...?

சொக்கலிங்கத்தின் மனதில் உதித்த அச்சமும் சந்தேகமும் அவர் பேச்சில் நன்றாக ஒலித்தது.

“என்ன பார்வதி... போகலாமா, வேண்டாமா... சொல்லு...”

பார்வதி சொல்வதற்கு முன்னால், அண்ணனை நோக்கினாள்.

“என்னை ஏன் பார்க்கறே? போறதுன்னால் போ. ஆனால் ஒண்ணு. அவள் கூட நீ சேருறதாய் இருந்தால் இனிமேல் என்னை அண்ணன்னு சொல்லப்படாது. உன்னை தூசி மாதிரி நினைச்சிட்டுப் போனவளை நீ கூட்டிக்கிட்டு வந்தால், எங்களை தூசின்னு நினைச்சதா அர்த்தம். அவளை சேர்க்கிறதாய் இருந்தால், எங்களை தள்ளி வச்சிடு. அவள் இனிமேல் இந்த வீட்டுக்குள்ள கால் வச்சால், நாங்க கால் வைக்க மாட்டோம். அப்புறம் உனக்கும் எங்களுக்கும் ஒட்டும் கிடையாது; உறவும் கிடையாது. இவரு காலத்துக்குப் பிறகு, ‘மல்லிகா திட்டினாள். அவள் அப்பன் அடிக்க வரான்’னு எங்க கிட்ட வந்து கண்ணைக் கசக்கக் கூடாது. நாங்க ஒண்ணும் கேட்கமாட்டோம். உன் தலையிலே என்ன எழுதியிருக்கோ, அதை என்னால மாத்த முடியுமா? வேணுமுன்னால் போ...”

பார்வதி பயந்து விட்டாள். தள்ளாத வயதில், மல்லிகா, தான் இப்போது அவளிடம் எப்படி நடந்து கொண்டாளோ, அப்படி தன்னிடம் அவள் நடந்து கொள்வது போலவும், அம்மா என்று சொல்லாமல் அத்தை என்று சொல்வது போலவும், அவள் அப்பா பெருமாள் தன்னை நாயே பேயேன்னு திட்டுவது போலவும், அழுது கொண்டு அண்ணன் வீட்டுக்குப் போனால் அங்கே கதவு சாத்தப்படுவது போலவும் கற்பனை செய்தாள். பயத்தில் அவள் உடம்பெல்லாம் ஆடியது. அண்ணனைப் பார்க்கும் போது, அதிகமாக ஆடியது. இறுதியில் திட்டவட்டமாகப் பேசினாள்.

“எங்க... அண்ணியைப் பார்த்துட்டு வாரேன்... அண்ணி... வீட்லதான அண்ணா இருக்காங்க...”

ராமசாமி, ‘பிளஸ்’ மாதிரி தலையாட்டினார். பார்வதி புறப்பட்டாள். அண்ணியிடம் நடந்ததைச் சொல்லி அழவேண்டும்! ராமசாமி, தங்கையுடன் போய் விட்டார்.

சொக்கலிங்கம், தனிமையில் தவித்தார். கடைக்குப் போக மனமில்லை. யாருக்காக சம்பாதிக்க வேண்டும்?

ஓரிரு நாட்கள் ஓடின.

“இந்தாங்கப்பா” என்று சொல்லி, இரவில் மாத்திரையை நீட்டும் மகளில்லை. “இதை மருந்துன்னு நினைக்காமல், நாம் சாப்பிடுற ஆகாரத்தில் ஒன்றுன்னு நினையுங்கப்பா” என்று, தாயாக, மகளாக, பாட்டியாக, பரம்பொருளாகச் சுற்றி வந்து சொல்லும் மகளைப் பார்க்கத் துடித்தார். எப்படிப் போவது? பெருமாள் ஏதாவது பேசினால்... மகளின் செல்லக் கையில், செல்லமாகக் கொண்டு வரும் பாலை, ஆனந்தமாகக் குடித்த வாய், தானாக உளறியது. மாத்திரை கொடுத்த மல்லியை நினைத்து, அவர் வழக்கமாகச் சாப்பிடும் மாத்திரையைக் கூட மறந்தார். விளைவு...

சொக்கலிங்கம் படுக்கையில் விழுந்தார். ஆஸ்பத்திரியில் சேரும் அளவிற்கு, சீரியஸ் இல்லை. அதே சமயம் அரவை மில்லுக்குப் போகும் அளவிற்கு லேசாகவும் இல்லை. எப்படியோ தேறிக் கொண்டிருந்தார்.

நண்பகலில் தூங்கிவிட்டு கண் விழித்த சொக்கலிங்கம், மனைவி, வியர்த்துக் கொட்ட வெளியில் இருந்து வருவதைப் பார்த்து விட்டு, “அண்ணன் வீட்டுக்குப் போனியா” என்று கேட்ட போது, பார்வதி அழுது விட்டாள்.

“அவளைப் பார்க்காமல் இருக்க முடியல. அவள் முகத்தையாவது பார்த்துட்டு வரலாமுன்னு, அந்தத் தெரு வழியா நடந்தேன். வீட்டுக்குள்ள இருந்த வெளியில் வந்தவள், என்னைப் பார்த்துட்டு, முகத்தைத் திருப்பிக்கிட்டு போயிட்டாள். சொல்லுங்க நான் அந்த அளவுக்கு பாவியா...?”

சொக்கலிங்கம் எதுவும் சொல்லவில்லை. கண்களை மூடிக் கொண்டார். அப்படியும் நினைவுகளை மூட முடியாததால், மீண்டும் கண்களைத் திறந்து சூனியமாகப் பார்த்தார். மல்லிகாவைப் பார்ப்பதற்காக, ‘தற்செயலாகப்’ போவது போல் போன பார்வதியின் கண்களில், மல்லிகா தட்டுப்பட்டது போல் மல்லிகாவின் கண்களில் பார்வதி அகப்படவில்லை. இது பார்வதிக்குத் தெரியாது. அது இருவருக்கும் தெரியாது.

பார்வதி, பொருமிக் கொண்டிருக்க, சொக்கலிங்கம் சூடான கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்க, அவள் அண்ணன் ராமசாமி இன்னொரு பணக்காரத் தம்பியான சுப்பையாவோடு அங்கே வந்தார். முதலில் அத்தானுக்கு வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்தார். அப்புறம்...

“மல்லிகா வந்து பார்த்தாளா?” என்றார்.

“அவள் என்ன எங்க பிள்ளையா, வர்றதுக்கு” என்றாள் பார்வதி.

“ஒரு வேளை, எனக்கு சுகமில்லாதது அவளுக்குத் தெரிந்திருக்காது” என்றார் சொக்கலிங்கம்.

இப்போது ராமசாமியையே தோற்கடிப்பதுபோல் சுப்பையா எகிறினார்.

“‘தான் பெறணும் பிள்ளை, தன்னோட பிறக்கணும் பிறவி’ என்கிறது சும்மாவா? மல்லிகாவிற்கு தெரியாதுன்னு எங்களை நம்பச் சொல்றீங்களாக்கும். அவள் தம்பிகிட்ட, மூணு நாளைக்கு முன்னால கடைப் பயல்கள் சொன்னாங்களாம். அவன் சொல்லாமலா இருப்பான்? உம் மகளாய் இருந்தால் வராமல் இருப்பாளா? போதாக் குறைக்கு, உம் தங்கச்சி புருஷன் உம்மை கோர்ட்டில் நிறுத்தப் போறானாம்... கோர்ட்டுல நிக்கறதுக்கு உமக்கு பலம் வரதுவரைக்கும் காத்திருக்கப் போறானாம். அப்புறம் வழக்காம். மல்லிகாவும் நோட்டீஸ் அனுப்பறதுக்கு கையெழுத்து போடுறேன்னு சொல்லி விட்டாளாம்.”

சொக்கலிங்கம் பேசவில்லை. பேச விரும்பவும் இல்லை. பெரிய மைத்துனர் ராமசாமி, முறையோடு பேசுபவர் போல் எல்லாரையும் முறைத்துக் கொண்டே பேசினார்.

“எதுக்குப்பா வீணா கத்துறே? இன்னைக்கே ஒரு முடிவுக்கு வந்துடணும். அத்தானுக்கு ஒரு லாபத்தைப் போல, நஷ்டம் வந்துட்டால், பெருமாள், பார்வதியை கோர்ட்டுக்கு இழுக்கத்தான் போறான். இப்போதே ஒரு முடிவுக்கு வரணும்...”

“அத்தானுக்கு ஆயுசு நூறு. அப்படிச் சொல்லாதே” என்றார் சுப்பையா.

“நான் அந்த அர்த்தத்துல சொல்லலப்பா. பார்வதிக்கும் ஒரு துணை வேணும். ராமன் பயலை நம்ப முடியாது. முந்தா நாள் பாரு, என்னையே சோடா பாட்டிலை வச்சி அடிக்க வந்துட்டான். அதனால என் சின்ன மாமா பேத்தி இருக்காள் பாரு, கிராமத்துல, அவளை அத்தானுக்கு கட்டி வச்சிடலாமுன்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்றே?”

யாரும் எதுவும் சொல்லவில்லை. பார்வதி பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டாள். சொக்கலிங்கம், ‘முறைகெட்ட பயகிட்ட என்ன பேச்சு’ என்பது போல் குப்புறப் படுத்தார்.

அப்படியும், ஒரு இளம் பெண்ணுடன், தன்னை இணைத்துக் கொள்ளும் இதயத் துடிப்பை, அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நினைக்க நினைக்க, அவருக்கு சுவையாக இருந்தது.
-----------
அத்தியாயம் 14


ஒரு வாரம் செத்து, மறுவாரம் பிறந்தது.

எந்த நிலைக்கு ஒருவர் வந்தாலும், அந்த நிலைக்கு ஏற்ப ஐம்புலன்களும் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்கின்றன என்ற தத்துவத்தை அல்லது விஞ்ஞான உண்மையை, மல்லிகா நம்பத் துவங்கினாளோ இல்லையோ, உணரத் துவங்கினாள்.

அந்தச் சூழல், அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், வெறுக்கவில்லை. ஆதரிக்க முடியவில்லை என்றாலும், அனுசரிக்க முடிகிறது. அவள் வந்த நான்கைந்து நாட்கள் வரை, செல்லம்மா மகளுக்குப் பிடித்தமான இடியாப்பத்தையும், ரவா தோசையையும், தினந்தோறும் ஒரு உடுப்பி ஓட்டலில் இருந்து வாங்கிக் கொடுத்தாள். பிறகு கையில் காசில்லாததால், அந்த வீட்டின் திண்ணையிலேயே, இட்லி கடை போட்டிருந்த ஒரு ஆயாவிடம், கல்லை விடக் கடினமான, கல்லை உடைக்கும் இட்லிகளை, அவளுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டு, கைகளைப் பின்னிக் கொண்டு ஒன்றோடொன்று மோதிய தாய்மையையும், இயலாமையையும் இணைக்கப் பார்த்து, அவை இணைபட முடியாமல் போகவே, வாசல்படியில் சாய்ந்து, வெளிக்கூரையை பற்றற்ற யோகி போல் உற்றுப் பார்த்தாள்.

மல்லிகா புரிந்து கொண்டாள். மறுநாள், அம்மா இட்லி வாங்கக் கூட காசில்லாமல், தன் மூத்த மகள் சந்திராவிடம் “உன்கிட்ட ஏதாவது...” என்று இழுத்த போது மல்லிகா ஒரு ஈயத்தட்டை எடுத்து, பழைய பானையைத் திறந்து, பழையை கஞ்சியை போட்டு சிரித்துக் கொண்டே, ஒரு வெங்காயத்தைக் கடித்துச் சாப்பிட்டாள். செல்லம்மாவுக்கு அந்த வெங்காயம் படாமலே கண்ணீர் வந்தது. மல்லிகா அம்மாவை அதட்டினாள்.

“என்னம்மா நீங்க! நேற்று உங்கள் கூட மார்க்கெட்டுக்கு வந்த போது எத்தனை ஜனங்கள் தெருவில் அடுப்பு வைத்திருக்கிறதைப் பார்த்தேன். மழை பெய்யும் போது தாங்கள் நனைந்தாலும் பரவாயில்லை. அடுப்பு நனையக் கூடாதுன்னு நினைத்து பாவாடையோட நின்னுக்கிட்டு புடவைங்களால அடுப்பை மூடுன எத்தனை பெண்களைப் பார்த்தேன். நாமாவது நாலு பேருக்குத் தெரியாமல் வறுமையை மறைக்க முடியுது. அவர்களால அது கூட முடியவில்லை. மழை பெய்தாலும் ஒண்டுவதற்கு ஒரு இடமும், ருசியா இல்லாவிட்டாலும் சாப்பிடுவதற்கு ஒரு உணவும் இருக்கிற நீங்கள், நான் பழைய கஞ்சியை குடிப்பதற்கா அழுவது? பழைய கஞ்சியிலும் ஊசிப் போன கஞ்சியாப் போன அந்த ஜனங்களை அவமானப் படுத்துறது மாதிரி இருக்கிறது.”

செல்லம்மா, மகளைப் பார்த்து, ஈன்ற பொழுதினும் பெரிது உவந்தாள். உலகத்தில் பலர் கஷ்டப்பட்டாலும், தன்னை மாதிரி யாருமே கஷ்டப்படவில்லை என்று இதுவரை நினைத்து, அதனாலேயே அதிகமாகச் சோகப்பட்டு, அந்த சோகத்திலேயே ஒருவித சுகத்தைச் சுவைத்து வரும் அந்த அன்னைக்கு, மகள் சொன்ன சாதாரண உண்மை அசாதாரணமாகப்பட்டது. மகள் வந்த பிறகு, கணவன் குடிக்காமலேயே வருவதையும், வழக்கம் போல் பேச்சுக்குப் பேச்சு குதிரைகளை உதாரணமாகச் சொல்லாமல் இருப்பதையும், தன்னை அடிக்காமல் இருப்பதையும், சொல்லப் போனால், ஒரு நாள் தன் கன்னத்தைப் பிடித்து, ‘சொல்லத்தகாதபடி’ கொஞ்ச வந்ததையும், இவள், ‘இருந்த வயசுல எங்கேயோ போயிட்டு, இல்லாத வயசுல இப்படியா’ என்று சொல்லி, அவரை அப்புறப் படுத்தியதையும் நினைத்துக் கொண்டாள்.

உண்மைதான். மல்லிகா. அந்த புறச் சூழ்நிலைக்கு ஏற்ப மாறியும், மாற்றியும் வந்தாள். அவள் தந்தை பெருமாள், இப்போது வீட்டுக்கு இரண்டு ரூபாய் அதிகமாகக் கொடுப்பதைக் கேள்விப்பட்டு அகமகிழ்ந்தாள். தந்தை, தனக்கு இரவில் வந்ததும் ரகசியமாகக் கொடுக்கும் ‘கேக்’குகளையும் இதர ஸ்வீட்டுகளையும், அவள் பகிரங்கமாக, பிள்ளைத் தாய்ச்சியான சந்திராவிற்கும், இதர பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்தாள். “என்னால் இது கட்டுப்படியாகாதுப்பா சாமீ! இந்த முட்டாப் பய மக்களும், மிட்டாய் தின்ன ஆரம்பித்தால் யானைக்கு அல்வா வாங்கிட்டு வந்த கதையாத்தான் முடியும்” என்று பெருமாள் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, எங்கேயோ போனார். நிச்சயமாக, வாய்க்குப் ‘பட்டை’ தீட்ட அல்ல.

ஞாயிற்றுக்கிழமைகளில், ஆண்களும், பெண்களுமாகச் சேர்ந்து ‘தாயப் பாஸ்’ ஆடுவதை முதலில் தொலைவில் இருந்தும், பிறகு பக்கத்தில் இருந்தும், ரசித்து விட்டு, இப்போது மல்லிகாவும் சேர்ந்து ஆடத் துவங்கினாள். சாப்பிடுவதற்கு மட்டும் ‘போர்ஷன்களை’ வைத்துவிட்டு, மீதி சகலத்திற்கும் களத்தை (முற்றம் : பொதுத்தளம்) பயன்படுத்தும் ஏழை எளியவர்கள், இளம் பெண்கள், இளைஞர்கள் முதலியோர் ஆயிரக்கணக்கான சினிமாக்களின் காதல் காட்சிகளை அலசிவிட்டு, அருகருகே படுத்தாலும், எந்த வித இச்சைக்கும் தங்களை விருந்தாக்காத பெரும் பண்பு, அவளைப் பெரிதும் கவர்ந்தது. கல்லூரிகளில் பெண்களைப் பார்த்தவுடனேயே ‘விசிலடிக்கும்’ பையன்களையும், மாணவிகள் மொத்தமாகப் போகும் போது தனியாக அகப்படுபவனைப் பார்த்துப் பேசும் கிண்டல் கேலிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கப் பார்க்க, இந்த நாகரிக மைனர்களும், ‘மைனி’களும், அவளுக்கு நாட்டின் எச்சங்கள் போலத் தோன்றின.

மல்லிகா பார்வையாளராக மட்டும் நிற்கவில்லை. அந்த ஏழைபாளைகளின் பிரச்சினைகளில் பங்காளியாகவும் மாறினாள்.

‘இட்லிக்கடை’ ஆயா தங்கம்மாவுக்கு இட்லிக் கணக்கை எழுதிக் கொடுத்தாள். கொத்தனார் வேலைக்குப் போகும் ராக்கம்மாவுக்கு கடிதங்களை எழுதிக் கொடுத்தாள். வாங்கும் சம்பளத்தில் பத்தில் ஒன்றை ஊரில் இருக்கும் சொந்தக்காரர்களுக்கு கடிதங்களாகச் செலவழிப்பவள், அந்தப் பெண். தபால்காரர், குடித்தனக்காரர்களுக்கு கொடுக்கும் கடிதங்களைப் படித்துக் காட்டி, இப்போது, துறைமுகத்தில் மூட்டை சுமக்கும் கந்தசாமி, ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டும் ஆறுமுகம், கோணி தைக்கும் அருணாசலம், சுக்குகாபி விற்கும் சுந்தரம், பீடி சுற்றும் மாரியம்மாள் முதலியோரின் குடும்ப விவரங்கள் அவளுக்கு அத்துபடியாகிவிட்டது. முதலில் பள்ளிக்கூடம் போகும் தம்பிக்கு, பாடம் சொல்லிக் கொடுத்த போது, சிம்மாட்டுடன் வந்த ராக்கம்மா, “எங்களுக்கும் கையெழுத்துப் போடயாவது சொல்லிக் கொடும்மா” என்றாள்.

அன்றே, ஒரு போர்டில்லாத முதியோர் கல்வித் திட்டம் துவங்கியது. பல பெண்கள், அவளைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்து கொண்டு, ‘ஆனா ஆவன்னா’ எழுதத் துவங்கினார்கள். கணவன்மார்களை நச்சரித்து, சிலேட்டு, ‘பல்பங்களை’ வாங்கிக் கொண்டார்கள். மத்தியானம் பானையில் இருப்பது வயிற்றுக்குள் போனதும், மல்லிகாவின் மூளைக்குள் இருப்பது, அவர்களின் செவிக்குள் போகத் துவங்கியது.

எந்த வேகத்தில் சண்டை போடுகிறார்களோ, அந்த வேகத்திலேயே கூடிக் கொள்ளும் குடித்தனக்காரர்களையும், குடித்து விட்டு உதைக்கும் ஆம்புடையான்களுக்கு கால் பிடித்து விடும் பெண்களையும் பார்க்கப் பார்க்க, அவளுக்கு புதியதோர் உலகைக் கண்டுவிட்ட உவகை ஏற்படத் துவங்கியது. ஆனால், இந்த ‘வீட்டுக்கார அம்மாவின்’ போக்குதான் அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில், மல்லிகாவை மாடிக்கு வரவழைத்து பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பாள். ஒரு நாள், மல்லிகாவிற்கு ஒரு ஆர்லிக்சைக் கலந்து கொடுத்துக் கொண்டே, “இந்த வீட்டுல இருக்கறது எல்லாம் பீடைங்க. அதுங்ககிட்ட எதையும் வச்சுக்காதே” என்றாள். ஆனால் மறுநாளே, மல்லிகா அந்த பீடைங்களுக்கு எழுத்தறிவைப் புகட்டுவதைப் பார்த்ததும், அவள், மல்லிகாவுடன் பேசுவதை அடியோடு நிறுத்திக் கொண்டாள். அப்புறம் அவளைப் பார்த்து, முணுமுணுக்கத் துவங்கினாள். எதிர்க்கேள்வி போட முடியாத முணுமுணுப்பு. தான் ஒருத்தி தான் பெண் என்கிற அகங்கார முணுமுணுப்பு. இது போதாதென்று, அவள் தம்பி ஒருவன் பெயர் ரமணனாம். இருபத்தோறு வயது முண்டம். ‘டுட்டோரியல்’ காலேஜில் படிக்கிறானாம். மாடியில் நின்று கொண்டே, மல்லிகாவைப் பார்த்த பார்வை, பாதகப் பார்வை. வயதுக்கேற்ற பார்வை என்றால் தொலைந்து போகிறான் என்று விட்டுவிடலாம். மல்லிகா கூட விட்டிருப்பாள். ஆனால், அவன் பார்வையோ, அவள் குடியிருக்கும் வீடு எப்படிச் சொந்தமோ அது போல் அவளும் தனக்குச் சொந்தம் என்பது போல் பார்க்கும் பழைய காலத்து ஜமீன் பார்வை. அற்பத்தனமான அவனது உரிமைப் பார்வையையும், அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அன்றும் அப்படித்தான்.

சேலையை மார்புவரைக்கும் கட்டிக் கொண்டு, வீட்டின் ஒரு மூலையில் இருந்த குழாய்க்கருகே, மல்லிகா குளித்துக் கொண்டிருந்தாள். ஒரு ஈயப்பாத்திரத்தி, பாதி தண்ணீர் இருந்தது. அவள் அக்காள் சந்திரா, குழாயருகே போய் ஒரு தவலைப் பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்கப் போனாள்.

மாடியில், ரமணன், மல்லிகாவை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையை தடுக்க முடியாத ஆதங்கத்தில், தன் உடம்பைத்தான் மறைக்க முடியாது, முகத்தையாவது மறைக்கலாம் என்று நினைத்தவள் போல், மல்லிகா, ஈயப்பாத்திரத்தில் இருந்த தண்ணீரைத் தலையில் ஊற்றி காலியாக்கிவிட்டு, கண்களை மூடி, முகத்திற்கு சோப்புத் தேய்த்துவிட்டு, பின்பு எரிச்சல் தாங்க முடியாமல் “சீக்கிரமாய் தண்ணீர் பிடிக்கா, முகமெல்லாம் எரியுது” என்று சொல்லிக் கொண்டிருந்த போது, திடீரென்று, ‘தவலை’யுடன் ‘தவலை’ மோதும் சத்தம் கேட்டது.

அப்போது, காலைப் பொழுது மணி சரியாக எட்டரை. இந்த எட்டரை மணி, அங்கே ‘ஏழரை நாட்டான்’ சனி மாதிரி ‘வீட்டுக்கார அம்மாவின்’ குடங்களுக்கு, குடித்தனக்காரக் குடங்கள் வழிவிட வேண்டும். அரைகுறையாக இருந்தாலும் சரி, அப்போதுதான் நீர் பிடித்துக் கொண்டிருந்தாலும் சரி, குடங்கள் எடுக்கப்படவில்லையானால், படிக்கட்டுகளில் தூக்கி, ‘டங்’கென்ற சத்தத்துடன் வைக்கப்படும். கேட்டால் “காலிபண்ணு.”

அந்த வழக்கமான பழக்கப்படி, வீட்டுக்கார அம்மா மாடியில் உதட்டைப் பிதுக்கிக் கொண்டே உலா வந்த போது, வீட்டு வேலைக்காரப் பெண், மடமடவென்று குழாய்ப் படிகளில் இறங்கி, சந்திரா பிடித்துக் கொண்டிருந்த தவலைப் பாத்திரத்தைத் தூக்கி, அங்கிருந்தபடியே சுவருக்கு மேலே தூக்கி, மேல் தளத்தில் வைத்துவிட்டு, எஜமானியின் எவர்சில்வர் தவலைப் பாத்திரத்தை வைத்துவிட்டு, இன்னும் இரண்டு மூன்று சாதாரண தவலைப் பாத்திரங்களைக் கொண்டு வரப் போனாள். சந்திராவோ வாயடைத்து, நெஞ்சடைத்து நின்றாள். அந்த வேலைக்காரப் பெண், உடம்பால் ‘ரூபி’ என்றாலும் குணத்தால் ‘அரூபி.’

“இன்னுமா தண்ணீர் பிடிக்கவில்லை?” என்று சொல்லிக் கொண்டே கண் திறந்த மல்லிகா, எஜமானி பாத்திரங்களால், தங்கள் தவலைப் பாத்திரம் ஒதுக்குப்புறமாக இருப்பதைப் பார்த்துவிட்டு, தவித்தாள்.

அன்றைக்கு வேலைக்குப் போகாத ராக்கம்மா, அந்தப் பக்கமாக வந்து “இந்த அநியாயத்தைக் கேட்டுதான் ஆகணும்” என்று சொல்லிக் கொண்டே, முந்தானைச் சேலையை இடுப்பில் செருகிய போது, மல்லிகா அவளைக் கண்களால் கெஞ்சி, கால்களைப் பிடித்து இழுத்துத் தடுத்துவிட்டாள். இன்னும் இரண்டு மூன்று பெண்கள், ஏதோ கேட்கப் போனார்கள். பிறகு தங்கள் வாடகைப் பாக்கியை நினைத்தவர்களாய், வாய்க்குள்ளிருந்து வரப்போன வார்த்தைகளை அவை உதித்த நெஞ்சங்களுக்குள்ளேயே உலர்த்திக் கொண்டார்கள்.

எப்படியோ ஒரு வழியாகக் குளித்துவிட்டு, அக்காள் கொடுத்த ஒரு அச்சடிப் புடவையை, உடம்பைக் காட்டிய ஈரப் புடவைக்கு மேலே சுற்றிக் கொண்டே, மல்லிகா வீட்டுக்குள் போகப் போன போது, இன்னும் அதே மாடியில், அதே இடத்தில், அதே ‘போசில்’ அதே பார்வையுடன் நின்ற ரமணன், “என்னக்கா நீ, அவங்க குளிக்கிறது வரைக்காவது பொறுக்கக் கூடாதா” என்றான். அவன் சொன்னது அக்காள்காரிக்குக் கேட்கவில்லை. மல்லிகாவிற்குக் கேட்டது. அக்காளுக்கு, தான் சொன்னது கேட்கவில்லை என்பதும், கேட்கக் கூடாது என்பதும் அவனுக்குத் தெரியும். தப்பித் தவறிக் கேட்டிருந்தால், அக்காள், அங்கேயே அவனை வரட்டியைக் காய வைப்பது மாதிரி காய வைத்து விடுவாள் என்பதும் அவனுக்குப் புரியும்.

‘அடடே, இவனுக்குக் கூட மனிதாபிமானம் இருக்கே’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு, நினைப்பில்லாமலே அவனை ஒரு கணம் பார்த்துவிட்டு, மல்லிகா உள்ளே போனாள். அப்படிப் பார்த்தது தப்பாய்ப் போயிற்று. பல சினிமாக்களிலும், கதைகளிலும், கதாநாயகன், பலரை அடித்துப் போட்டுவிட்டு, அவர்களிடம் சிக்கிக் கொண்ட அபலைப் பெண்ணை காப்பாற்றிய பெருமிதத்தில் பார்ப்பானே ஒரு பார்வை - அந்தப் பார்வை தோற்கும்படி ரமணன் ஒரு பார்வை பார்த்தான். பிறகு ‘முதலில் சினிமாவுக்குக் கூட்டிப் போகணும். அப்புறந்தான் மகாபலிபுரம்’ என்று கணக்குப் போட்டுக் கொண்டான்.

கணக்குப் போட்டதோடு அவன் நிற்கவில்லை. கணக்கு நோட்டில் ஒரு தாளைக் கிழித்து, காதல் காவியம் ஒன்றை வரைந்தான். மேல்நாட்டுக் கதையைக் காப்பியடித்து ஒரு எழுத்தாளர் எழுதிய காதல் வரிகளை, அப்படியே அசல் காப்பியடித்து, கடைசியில், “கண்ணே... கலங்காதே. உனக்கு நான். எனக்கு நீ. இருவருக்கும் இடையே யாருமில்லை. யாருமில்லாத சமயத்தில் பேசுவதற்கு நீ துடிப்பது போலவே நானும் துடிக்கிறேன்” என்று எவனோ ஒருவன், எவளோ ஒருத்திக்கு எழுதி, அவள் படிக்கும் முன்பே, இவனுக்குப் படித்துக் காட்டிய வரிகளையும், எழுத்துப் பிழைகளோடு எழுதி, சிலாக் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான்.

மாலை மயங்கி, மையிருட்டு வந்ததும், வீட்டுக்கார அம்மா மெயின் ஸ்விச்சை போடாத சமயத்தில் எதற்கோ நடைவாசலுக்கு வந்த மல்லிகாவின் அருகே போய், அவள் கைக்குள் கடிதத்தைத் திணித்துவிட்டு, வெளியே போய் விட்டான். அநேகமாக சினிமாவுக்கு டிக்கட் ‘ரிசர்வ்’ செய்வதற்காக இருக்கலாம்.

முதலில் திகைத்துப் போன மல்லிகா, எதுவும் புரியாமல் குழம்பிப் போனாள். அதை தெருவிளக்கருகே போய்ப் படிக்கலாமா என்று நினைத்தாள். பிறகு, அதைப் படிக்காமலே, ‘அந்தப் பயல், பகவத்கீதையைப் பற்றி எழுதியிருக்கவா போகிறான்?’ என்று நினைத்து, அவன் என்ன எழுதியிருப்பான் என்பதை அனுமானித்து, அவன் வீட்டுக்குள் வந்ததும், எல்லோரிடமும் அந்தக் கடிதத்தைக் காட்டி, அவனைக் கிழித்துப் போட வேண்டும் என்று நினைத்தாள். அவனை, பாதி காயாத சாயவரட்டிகளாலேயே அடிக்க வேண்டும் என்று நினைத்தாள். அவன், தனக்கு கடிதம் எழுதியிருக்கிறான் என்பதை விட, கஷ்டப்படுகிற ஒரு பெண், பணக்காரப் பையன் கூப்பிட்டால் போய்விடுவான் என்பது போல் அவன் நினைக்கிறான் என்று உணர உணர, அவள் ஒரு பத்ரகாளியாகிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் தனக்கு இவ்வளவு கோபம் இருக்கிறதா என்று கூட ஆச்சரியப்பட்டு அசந்து போனாள்.

அந்தச் சமயத்தில், அவள் தந்தை பெருமாள் வந்தார்.

“என்னம்மா இங்கே நிற்கே? இன்னைக்கு வியாபாரத்துக்குப் போன இடத்துல, ஒரு பயல் என்கிட்ட கேட்காமலே என் கோணி மூட்டையை பஸ்ல ஏத்திட்டான். கோபத்துல லேசாத்தான் ஒரு தட்டு தட்டுனேன். ஒரு பல்லு கீழே விழுந்துட்டுது. கழுதைப் பயலுக்கு, நான் அடிக்கு முன்னாலேயே பல்லு ஆடிக்கிட்டு இருந்திருக்குமுன்னு நினைக்கிறேன். அந்தச் சமயம் பார்த்து, ஒரு போலீஸ்காரன் ஓடி வந்தான். கோணிக் கட்டை அப்படியே போட்டுட்டு, எங்கெல்லாமோ ஓடி, எதிர்ல வந்த பஸ்ல ஏறி எப்படியோ வந்துட்டேன். கடைசில, அவனுக்கு, பல் டாக்டருக்கு இருபது ரூபாய் கொடுக்காத அளவுக்கு லாபம். எனக்கு நூறு ரூபாய் கோணி நஷ்டம். காலத்தைப் பாரு. நாம எட்டடி பாய்ந்தால், நம்ம தரித்திரம் பத்தடி பாயுது. ரேசுக்குப் போகும் போது கூட இப்படி நஷ்டம் வரல” என்றார்.

ஒரு குழந்தை, பள்ளியில் நடப்பதை அம்மாவிடம் சொல்வது போல், தன்னிடம் சொல்வதைக் கேட்டு, அவர் நூறு ரூபாய் நஷ்டப்பட்டதற்காக ஆறுதல் சொல்வதா அல்லது ரமணன் பயல் கொடுத்த கடிதத்தைக் காட்டி, ஆறுதல் பெறுவதா என்பது புரியாமல், அவள் தவித்தாள். இறுதியில், ஒரு முடிவுக்கு வந்தாள்.

‘வேண்டாம். இந்த லெட்டரை பெரிசாக்க வேண்டாம். அப்பா அவனை கொலை பண்ணினாலும் பண்ணிடுவார். அதோடு எதிர்வீட்ல இருக்கவங்க, “இவள் வாங்காமலா அவன் கொடுப்பான்னு” கூட கூசாமல் சொல்லலாம். விஷயத்தை அப்படியே விட்டு அவன் மேலும் மேலும் எழுதினால் அப்போ பார்த்துக்கலாம். இப்போ வேண்டாம்.’

மல்லிகா கைக்குள் கசங்கியிருந்த கடிதத்தை, அப்பாவுக்குத் தெரியாமல் இடுப்பில் வைத்து, ஒரு கையால் அதைப் பிடித்து, மறு கையால் அதைக் கிழித்து, பிறகு இரண்டு கரங்களையும் பின்னால் வளைத்து, முதுகுப் பக்கமாகக் கொண்டு போய், கிழிசல்களை மேலும் கிழித்து, கிழே போட்டுவிட்டு, அப்பாவிற்குப் பின்னாலேயே வீட்டிற்குப் போனாள்.

இரவு ஏறிக் கொண்டே இருந்தது.

எல்லோரும் தூங்கி விட்டார்கள். உண்ட களைப்பில் தூங்குபவர்களை விட, உழைத்த களைப்பில் தூங்குபவர்களே அதிகம். படுத்துக் கிடந்த அந்த உழைப்பாளிகள், மூட்டைப் பூச்சிகள் கடிக்க முடியாத அளவிற்கு இறுகியிருந்த அந்த உடம்புகள், உயிர் வேறு, உடல் வேறாய் போனவர்கள் போல் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நூறு ரூபாய் கோணிக்கட்டை பறி கொடுத்த பெருமாள், துண்டை முகத்தைச் சுற்றிப் போட்டுக் கொண்டே, தூக்கத்தில் கூட வெளியே தலைகாட்ட விரும்பாதவர் போல், ஒருவித தப்பிப்பு மனோபாவத்தில், தூங்கிக் கொண்டிருந்தார்.

மல்லிகாவால் தூங்க முடியவில்லை. ரமணன் கடிதத்தைக் கிழித்துப் போட்டவள், இப்போது, தன் நெஞ்ச அணுக்கள் கிழிவது போல் புரண்டு கொண்டிருந்தாள். திடீரென்று அவளுள்ளே ஒரு நினைவு. இந்த சரவணன் ஒரு இளைஞன் தான். இவனை மாதிரி எப்போதாவது, இப்படிக் காட்டுத் தனமாகப் பார்த்திருக்கிறாரா? அவரோடு ஒன்றாக நடந்திருக்கிறேன். கை படும்படியாய் நடந்திருப்பாரா?

திடீரென்று, அந்த நினைவுள்ளே இன்னொரு நினைப்பு. இப்படி ஒரு கடிதத்தை, இந்த சரவணன் எழுதியிருந்தால் எப்படியிருக்கும்? எழுதாத ஒன்றை எழுதியதாய் நினைக்கையில், மேனியெங்கும் இப்படிப் பரவசமானாள். அவர் எழுதியிருந்தால்... எழுதியிருந்தால்... எழுதவில்லையே. சொல்ல வேண்டியதை, சொன்ன பிறகு கூட அவர் எழுதவில்லையே. அவர் எப்படி, எழுதுவார் அந்த விஷயத்தை? இலை மறைவு காய் மறைவாய் சொன்ன பிறகு, அவர் என்னையோ நான் அவரையோ பார்க்கவில்லையே. நான் எங்கே இருக்கிறேன் என்பதை அவர் விரும்பியிருந்தால் கண்டுபிடிக்க முடியாதா? என்ன இது. ஏதோ பீச்சுக்குப் போனது மாதிரியும், சினிமாவுக்குச் சேர்ந்து போனது மாதிரியும், அவர் கையிலடித்து சத்தியம் செய்து கைவிட மாட்டேன்னு சொன்னது மாதிரியும்...

அப்படியும், இப்படியுமாக... நினைத்துக் கொண்டிருந்த மல்லிகா, எப்படியும் அவனைப் பார்க்க வேண்டும் என்று துடித்தாள். எப்படிப் பார்ப்பது? எப்படியாவது பார்க்க வேண்டும். அவனை மட்டுமல்ல. அவள் அப்பாவையும், அம்மாவையும் பார்க்க வேண்டும். ‘அவரை’ப் பார்க்கக் கூட வேண்டாம். ‘அவரைப்’ பார்க்க வேண்டும்.

காலையில் எழுந்ததும், அப்பா எழுவது வரைக்கும், அவள் தளத்திற்கும், வீட்டிற்குமாக நடந்து கொண்டிருந்தாள். அவரோ, நூறு ரூபாய் போனதுக்கு, நூறு மணி நேரம் தூங்கப் போகிறவர் போல் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பாவை எழுப்பலாமா? சீ, கூடாது. அம்மாவிடம் சொல்லிவிட்டு, அவங்களையே அப்பாவிடம் சொல்லும்படி சொல்லிவிட்டுப் போகலாமா?

ஒரு மாதமாகப் பொறுத்திருந்தவள், அந்த ஒரு மணி நேரமும் பொறுக்க முடியாதவளாய் தவித்தாள். அப்பா அனுமதி கொடுப்பார் என்ற தைரியத்தில், அதிகாலையிலேயே குளித்தாள். அக்காளின் கல்யாணப் புடவையை வாங்கிக் கட்டிக் கொண்டாள். தம்பியின் கைக்குட்டையை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டாள்.

பெருமாள் எழுந்தார். ‘டீ’ குடித்தார். சிகரெட் பிடித்தார். மல்லிகா பக்குவமாகச் சொல்வதாக நினைத்து, படபடவென்று பேசினாள்.

“அப்பா, காலேஜுக்குத்தான் போக முடியாமல் போச்சு. அங்கே போய் என்னோட பி.யூ.சி. சர்டிபிகேட்டையும், டிரான்ஸ்பர் சர்டிபிகேட்டையும் வாங்கிட்டு வந்து விடுகிறேன். அப்பா லட்டர் கொடுத்தால் தான் பிரின்ஸ்பால் சர்டிபிகேட் கொடுப்பார். அதனால், அப்பா கிட்ட போய் ஒரு லட்டரை வாங்கிட்டு உடனே - உடனேயே புறப்பட்டு காலேஜில் போய் சர்டிபிகேட்டை வாங்கிட்டு வந்துடுறேன். பி.யூ.சி.யில் முதல் வகுப்பில் வந்த சர்டிபிகேட் என்கிட்ட இருந்தால் எப்போதாவது பிரயோஜனப்படும் இல்லியாப்பா?”

பெருமாள், மகளையே பார்த்தார். சரஸ்வதியே அவதாரம் எடுத்திருபப்து போன்ற தோற்றம். முதல் வகுப்பில் பாஸ் பண்ணியவன், அந்த ‘அற்பப் பயல்’ வீட்டிலிருந்தால் பி.ஏ. முடிச்சிட்டு, எம்.ஏ. படித்துவிட்டு கலெக்டரா கூட போயிருப்பாள். முதல் வகுப்பு வாங்கியவள், முதல் வகுப்பு மட்டும் படித்த சொந்த அப்பன் கிட்ட வந்ததால் படிப்பு சொந்தமில்லாமல் போயிட்டுது. ஏன், நான் அவளைப் படிக்க வைத்தாலென்ன? அது எப்படி முடியும்? அதுல வேற ஒரு மாசம் ஆயிட்டுதே. இந்த கோணிக்கட்டு போனதுக்கே நான் இவ்வளவு வருத்தப்படுறேனே, அவள் கண்முன்னால படிப்பு போனதுக்கு எவ்வளவு வருத்தப்படுவாள்? அப்பனுக்கும் மகளுக்கும் எவ்வளவு பொருத்தம். நான் போலீஸ்காரனுக்குப் பயந்து கோணியை விட்டேன். இவள், ராமனுக்குப் பயந்து படிப்பை விட்டாள். கண்முன்னாலேயே, இரண்டு பேரும் கண்ணாய் நினைத்ததை கைவிட்டு விட்டோம். கோட்டை கட்டி ஆள வேண்டிய என் மகள், படிப்பையே ’கோட்டை’ விட்டுட்டாள்! எப்படி இருந்த மகள். எப்படி இருந்த என் ராசாத்தி. என்னோட ரேஸ் பைத்தியத்தால் அவளுக்கு உதவ முடியாமல் ஆயிட்டு. கடவுளே நீ பயங்கரமான ஜாக்கிடா, உன்னை நம்பி வாழ்க்கைக் குதிரையில் பந்தயம் வைக்க முடியாது.

கணவன், மகளை அனுப்பி வைக்கத் தயங்குவதாக நினைத்து, செல்லம்மா “ஒரு மாதமாய் அடைந்து கிடக்காள். போயிட்டு வரட்டும்” என்றாள்.

பெருமாள், மனைவி சொல்வதை மவுனமாகக் கேட்டுவிட்டு, பிறகு, “உன் இஷ்டம். போகணுமுன்னால் போயிட்டு வா. ஆனால் அந்த ‘அற்பன்’ கிட்ட அதிக நேரம் பேசாதே. அதுக்காக பேசாமலும் வந்துடாதே. ஆயிரந்தான் இருந்தாலும், அவன் உன்னை வளர்த்தவன். கேட்பார் பேச்சைக் கேட்டு கெட்டுப் போன பயல். ஆனால் ஒண்ணு... நீதான் அவனுக்கு எதையாவது வாங்கிட்டுப் போகணுமே தவிர, அவன் கொடுக்கிற எதையும் வாங்கப்படாது. இந்தா நாலு ரூபாய்தான் இருக்கு...”

“ஒரு ரூபாய் ஐம்பது பைசா போதும்பா...”

“பரவாயில்லை. இதுதான் நான் செய்யுற உருப்படியான செலவு. வச்சுக்கோ.”

மல்லிகா, பணத்தை வாங்கிக் கொண்டாள். மீதிக் காசில் அப்பாவுக்கு ரசகுல்லா வாங்கிட்டுப் போகணும். அம்மாவுக்கு மசால் தோசை. நல்லா தின்பாங்க. மிச்சக் காசிருந்தால் சரவணனுக்கு ஒரு கைக்குட்டை.

மல்லிகாவிற்கு வெட்கமாக இருந்தது. அவன் பதிலுக்கு என்ன கொடுப்பான்? என்ன கொடுக்கணும்? இந்த அப்பா, அந்த அப்பாகிட்ட எப்படி எப்படி நடந்துக்கணுமுன்னு சொல்றாரே. நான் சரவணனைப் பார்க்கப் போறதும் தெரிந்தால்... அவர் கிட்டேயும் எப்படி எப்படி நடக்கணுமுன்னு சொல்வாரா?

அப்பா - அம்மாவைப் பார்க்கப் போகிற பாசத் துடிப்போடு, காதலித்தவனை காணப் போகிற நேச நெஞ்சோடு, அவள் புறப்பட்டாள். இதற்குள் விஷயத்தைப் புரிந்து கொண்ட ‘இட்லி’ ஆயா தங்கம்மா “வந்துடு கண்ணு. இருந்துடாதே” என்றாள். ராக்கம்மாள், “நீ மட்டும் இங்கே வர்ல... நான் வீட்டைக் காலி பண்ணிடுவேம்மா...” என்றாள்.

மல்லிகா சிரித்துக் கொண்டே புறப்பட்டாள். பெருமாள் பஸ் நிலையம் வரைக்கும் வழியனுப்ப எழுந்தார். செல்லம்மா தன் வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கொண்டே, ‘அண்ணன் அவளை நாலு அடி அடித்தாவது அங்கேயே இருக்கச் சொல்லணும்’ என்று நினைத்துக் கொண்டாள்.

பெற்றவனும், அவருக்குப் பிறந்தவளும், வாசலைத் தாண்டப் போகிற சமயத்தில் எதிர்ப்பக்கத்தில் இருந்து பெருமாளின் பதினேழு வயது மகன் பரமசிவன் படி வாசலைத் தாண்டினான். சொக்கலிங்கத்தின் அரிசி மண்டியில் வேலை பார்ப்பவன். வேளச்சேரியில் இருக்கும் அந்தக் கடையை கவனித்துக் கொண்டு, அந்த கடைக்கருகே உள்ள ஒரு சின்ன அறையிலேயே தூங்கிக் கொள்பவன். மல்லிகா வந்த பிறகும், இன்று வரை அங்கே தான் இருந்தான். சொக்கலிங்கமும், அவனைப் போகச் சொன்னதில்லை. பெருமாளும் அவனை வரச் சொன்னதில்லை.

பெருமாள், மகனை செல்லமாய் அதட்டினார்:

“என்னடா... காலங் காத்தால, இங்கே ஏதும் அரிசி மூட்டை கொண்டு வந்தியா...”

“ஒரேயடியா வந்துட்டேன்.”

“ஏண்டா?”

”நம்மளால் அங்கே இருக்க முடியாது.”

“அதுக்கு என்னடா அர்த்தம்? சொல்றதைச் சீக்கிரமாச் சொல்லித் தொலையேண்டா.”

“ஒண்ணுமில்ல. வழக்கமா வாரது மாதிரி மாமா கடையில கணக்குப் பார்க்க வந்தார். கூட அந்த சகுனி ராமசாமியும் வந்தாரு. வந்ததும் வராததுமாய் அக்காளை, நன்றிகெட்ட நாயின்னும், கள்ளின்னும் கண்டபடி பேசினாரு. நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். முடியல. ‘எங்க அக்காவை பேசினால், இடுப்பை ஒடிச்சுடுவேன்’ என்றேன். உடனே அவன் ‘உன் அக்காதான் போயிட்டாள், உனக்கு எதுக்குடா இங்கே வேலை? இங்கே நடக்கிறதை அங்கே சொல்றதுக்காக இருக்கியா? மானமுள்ளவனாய் இருந்தால் போயேண்டா’ன்னான். நான் ‘சரிதான் போய்யா’ன்னுட்டு வந்துட்டேன். சரி பசிக்குது, இட்லி இருக்கா?”

செல்லம்மா, பதறிப் பதறிக் கேட்டாள்: “மாமா உன்னை பேசாத போது, நீ எதுக்குடா வந்தே...”

“முதல்ல உன்னை உன் அண்ணன்கிட்ட அனுப்பணும்மா. அக்காளை ராமசாமி கண்டபடி பேசுறான். மாமா தட்டிக் கேட்கல. அப்புறம் என்னை போடாங்கிறான். அதுக்கும் அவரு பேசாமல் இருக்கிறார். மவுனம் சம்மதமுன்னு தானே ஆகுது? அப்படிப்பட்ட மனுஷன் கடையில் எனக்கென்ன வேலை? கட்டுனவனுக்கு ஒரு கடை, கட்டாதவனுக்கு எத்தனையோ கடை. எங்க அக்காளை அவன் பேசின பேச்சுக்கு, ஒரு நாளைக்கு... இந்த ராமசாமியை கவனிக்கத்தான் போகிறேன். என்னைப் பேசினால் பேசட்டும். அக்காவை எப்படிப் பேசலாம்? இவள் கால் தூசிக்கு அவன் பெறுவானா?”

மல்லிகா, தம்பியையே வெறித்துப் பார்த்தாள். அவனைப் போகச் சொன்ன இடத்திற்கு, நான் போகக் கூடாது. தனக்காக வந்த தம்பியை, அவள் அழப் போகிறவள் போலவும், அழுது முடித்தவள் போலவும் பார்த்தாள்.

அவள் சிந்தித்தாள். ‘அதோடு என்னையும் அந்த ராமசாமி எதையாவது பேசி, அதையும் அந்த அப்பா சம்மதத்தோட கேட்டுக்கிட்டு இருந்தால், என்னால தாங்க முடியாது. சரி, சரவணனையாவது பார்க்கலாமா... வேண்டாம். கூடாது. முடியாது. என்னை தோளோடு தோளாய் எடுத்து வளர்த்த அப்பாவே என்னை ஒருத்தர் திட்டும் போது சும்மா இருந்தார் என்றால், பாசமேது? பந்தமேது? இந்த சரவணன் மட்டும், என் புதிய நிலையை தெரிந்ததும், என்னிடம் பாராமுகமாய் இருக்கமாட்டார் என்கிறது என்ன நிச்சயம்? எதுவும் இல்லாத ஏழைகளுக்கு இருக்கக் கூடிய ஒரே சொத்து தன்மானந்தான். அதையும் விட்டால் எப்படி? நூறு ரூபாய் நஷ்டப்பட்டாலும், எனக்கு ஐந்து ரூபாய் நீட்டிய இந்த அப்பா... எனக்காக வேலையை விட்டுட்டு, அதுவும் முதலாளி மாதிரி தனியா நடத்தின கடையை விட்டுட்டு வந்த தம்பி... அங்கே போகாதே, என்று சொல்கிற ஆயா, ராக்கம்மாள் இவர்கள் பாசத்தையே என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவங்க பாசத்தையும் வாங்கித் தின்னு வயிறு குமட்ட வேண்டாம்.’

மல்லிகா வீட்டிற்குள் போய், பட்டுப் புடவையைக் கொடுத்து விட்டு, நூல் புடவையைக் கட்டிக் கொண்டாள். கண் மையை அழித்துக் கொண்டாள். அவளின் அலங்காரம் எதுவுமே உதவவில்லை. ஆனால் அங்கே போவதற்காக அவள் வைத்திருந்த ஒன்றே ஒன்றுதான் அவளுக்கு உதவியது. தம்பியின் கைக்குட்டை!

இடுப்பில், இருப்பது தெரியாமல் செருகியிருந்த கைக்குட்டையை எடுத்து, அவள், கண்களைத் துடைத்துக் கொண்டாள். அப்போதும் துக்கத்தைத் துடைக்க முடியாமல், தன் தொண்டையைப் பிடித்துக் கொண்டாள்.

மல்லிகா, தன்னை மறப்பதற்காக, அந்த ஏழைக் குடித்தனக்காரர்களை அதிகமாக நினைத்து, சேவையில் செயல்பட்டாள்.

ரமணனை, இரண்டு நாளாகக் காணவில்லை. அவளுக்கு, அது ஆச்சரியமாகவும், ஆனந்தமான ஆறுதலாகவும் இருந்தது.
-------------
அத்தியாயம் 15


ஒவ்வொரு வாரமும், ஒரு குடித்தனப் பெண், பொதுத் தளத்தைப் பெருக்கி, மதில் போல் விளங்கும் ‘காவாயைக்’ கழுவி, குழாயடியில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றி, குளியலறையைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். காலையிலும், மாலையிலும் செய்ய வேண்டிய வேலை இது. இதற்கு ‘முறைவாசல்’ என்று பெயர்.

ஒரு நாள், செல்லம்மாவின் ‘முறை வாசல்’. அவள், மார்க்கெட்டுக்குப் போய்விட்டாள். சந்திரா, தன்னைப் பார்க்க வந்த புருஷனை வழியனுப்ப பஸ் நிலையத்திற்குப் போய்விட்டாள். இதர பிள்ளைகள் எங்கோ போய் விட்டன.

மல்லிகா, அந்த மாலைப் பொழுதில், குடித்தனக்காரப் பெண்களுடன், ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். ‘கால்வாய்’ நீர் வழிந்து கொண்டிருந்தது. களத்தில் தூசிகள் படிந்து கிடந்தன. மார்க்கெட்டுக்குப் போன செல்லம்மா, உடனே திரும்பிவிடுவாள் என்பதும், திரும்பியவுடனே, கால்வாயைக் கழுவி, தளத்தைத் தெளித்து, சகல வேலையையும் செய்துவிடுவாள் என்பதும், வீட்டுக்காரிக்குத் தெரியும். தெரிந்து கொண்டே, அவள் தெரியாதவள் போல சீண்டினாள். மாடியில் நின்று கொண்டே போர்ப் பிரகடனம் செய்தாள்.

“பேமானி ஜனங்க முறைவாசல் செய்யாமல் போனால் என்ன அர்த்தம்? இருந்தால் ஒழுங்கா இருக்கணும். இல்லாவிட்டால் எதுக்கு இருக்கணும்? சுத்தத்தோட அருமை இவங்களுக்கு எப்படித் தெரியும்? தெரிந்திருந்தால் இப்படி இருக்க மாட்டாங்களே. இன்னைக்கு அந்தக் கிழவி வரட்டும்.

மல்லிகா, சகப் பெண்களைப் பார்த்தாள். அவர்கள் தங்களைப் போன்ற ஏழைகள் சாகாமல் இருப்பதே தப்பு என்பது போல், அவளைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். பலவீனமாக நோக்கினார்கள். அந்த பலவீனத்தை தனது பலமாக எடுத்துக் கொண்ட வீட்டுக்காரி, இப்போது மல்லிகாவை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டே மேலிருந்தபடியே கேட்டாள்:

“மல்லிகா இது என்ன, தியாகராய நகர் வீடுன்னு நினைக்கிறியா? அம்மா தான் முறைவாசல் பண்ணலன்னா நீ கூட பண்ணப்படாதா? பெரிய ராணின்னு நினைப்போ? மரியாதையா துடைப்பத்தை எடுத்து சுத்தம் பண்ணு. இல்லைன்னால், நாளைக்கே காலி பண்ணுங்கோ. சீச்சி பேமானி ஜனங்க. சேற்றுல புரள்றவங்களை வீட்டுல வச்சால் இப்படித்தான். சீச்சீ...”

மல்லிகாவிற்கு, கோபத்தை விட வருத்தமும், மற்ற பெண்களுக்கு வருத்தத்தை விடக் கோபமும் ஏற்பட்டன. மல்லிகாவிற்கு, ஏதோ ஒரு சோகம், ஏதோ ஒரு வெறி. மடமடவென்று எழுந்து, ஒரு மூலையில் கிடந்த பொதுச் சொத்தான ஒரு துடைப்பத்தை எடுத்துக் கொண்டு குழாயடியருகே, அவளைப் போல் காதறுந்து போய்க் கிடந்த ஒரு’பைட்டியையும்’ எடுத்துக் கொண்டு, சக பெண்களைப் பரிதாபமாகப் பார்த்தாள். அவள் கண்களில் தேங்கிய நீர் அந்தப் பெண்களின் கண்களில் நெருப்பாக மாறியது. அவளது தவிப்பு, அவர்களிடம் கோபத்தனலாகப் போனது. அவளது திகைப்பு, அவர்களிடம் ஒரு தீர்மானமான முடிவாகப் போனது.

‘கொத்து’ வேலைப் பெண்ணான ராக்கம்மாள் எல்லோருக்கும் பொதுவாக, வீட்டுக்கார அம்மாவிடம் நிதானமாகக் கேட்டாள்:

“வீட்டுக்காரம்மா, நீ பண்றது கொஞ்சமும் நியாயமில்லை. யாரையும் இப்படி அட்டகாசமா பேசாதம்மா. அதான் சொல்லிப்புட்டேன்.”

‘இட்லி’ ஆயா இன்னொரு எதிர்க் கேள்வியைப் போட்டாள்.

“குயந்தே, நீ செய்றது நல்லா இல்ல. குயந்தே நல்லா இருக்கோமுன்னு திமிரா பேசாதே குயந்தே. நானு கூடத்தான் பர்மாவுல ஒரு பங்களா வச்சிருந்தேன். ஜப்பான்காரன் குண்டுக்குப் பயந்து ஓடிவரச்ச ஆம்புடையானையும் பிள்ளைகளையும் குண்டுக்குப் பறிகொடுத்துட்டு இங்கே வந்தவள் குயந்தே! பங்களாவும் மோட்டார் பைக்கும் வச்சிருந்த போது கூட, நானு யாரையும் மதிக்காமல் பேசுனதுல்ல. எனக்கே இந்த கதின்னா உனக்கு எந்த கதின்னு நெனச்சிப்பாரு குயந்தே. இந்தப் பச்சைக் குயந்தையை இப்படி அடாவடியா பாய்றதுக்கு எப்படிக் குயந்தே மனசு வருது?”

வீட்டுக்காரிக்கு ஆணவம், ஆத்திரமாகியது. எப்படி கெடக்கிறதுகள் எப்படி பேசுதுங்க. இதுவரைக்கும், ‘ஊட்டுக்காரம்மா, ஊட்டுக்காரம்மா’ன்னு வார்த்தைக்கு வார்த்தை பணிவோடு பேசுற சனியன்கள் எப்படிப் பேசுறது பாருங்க. இவள்களை இப்படியே விட்டு வைக்கப்படாது. முளையிலேயே கிள்ளணும். முளையோடு கிள்ளணும்.

வீட்டுக்காரி, அவர்களைக் கிள்ளுவது போல் பேசினாள்.

“இது நல்லா இல்லை, சொல்லிவிட்டேன். கூட்டமா நின்று, எதிர்த்துப் பேசுற அளவுக்கு தெனாவட்டா? மரியாதையா எல்லாரும் காலி பண்ணிடுங்கோ. அவளைப் பேசினால், உங்களுக்கு என்ன வந்துட்டுது?”

ராக்கம்மாள், சற்று உரக்கவே பேசினாள்: “மல்லிகாவை பேசினால், எங்களைப் பேசினது மாதிரி. எங்களைப் பேசினால் மல்லிகாவை பேசினது மாதிரி...!”

“யூனியன் போடுறீங்களா?”

“அப்படித்தான் வச்சுக்கோயேன்.”

“என்னடி... நீங்க... உங்க மனசுல என்ன தான் நினைக்கிறீங்க? உங்க ஒற்றுமைக்கு பணியுறவள் நானுல்ல. நாளைக்கே வீட்டை காலி பண்ணியாகணும். துடப்பக் கட்டை மூஞ்சிங்க வந்துட்டாளுங்க.”

“டீ போட்டு பேசினே, செருப்பு பிஞ்சிடும்.”

“என்னடி சொன்னே? இன்னொரு தடவை சொல்லுடி...”

இப்போது இன்னொருத்தி சவாலிட்டாள்:

“கீழே இறங்குடி கஸ்மாலம். கீழே இறங்குறியா, நானு மேல வரட்டுமா... இன்னொருவாட்டி துடைப்பக் கட்டைன்னு சொல்லுடி பார்க்கலாம். உன்ன கட்டையால சாத்தாட்டால், நானு ‘ஹார்பார்’ கந்தசாமியோட சம்சாரம் இல்லை. கஸ்மால முண்டைக்கு ‘வாழ்வு’ வந்தாலும் வந்தது, இந்த வீடே கஸ்மாலமா பூட்டுது” என்றவள், “மல்லிகா, நீ முறவாசல் பண்ணாண்டாம். துடப்பத்தைக் கீழே போடு. நீ அந்த துடப்பத்த கீழே எறியாட்டால், எங்களை அதனால் அடிக்கிறதுக்குச் சமானம். நீ கிளீன் பண்ணவேண்டாம். அந்த ராங்கிக்காரி செய்றதை செய்துக்கட்டும்” என்று வெடித்தாள்.

“போனால் போகுதுன்னு, பொறுத்துப் பொறுத்துப் போனால், கடைசில, எங்க கண்ணாட்டியையே பேசுறாள். உன்னை இதுவரைக்கு ‘தெனாவட்டுல’ விட்டு வச்சதே தப்புடி. மல்லிகா, சொல்றதக் கேக்கமாட்டே...”

கந்தசாமி மனைவியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டவள் போல் மல்லிகா துடப்பத்தைக் கீழே போட்டாள். ஒரு பகுதியில் ஒன்று சேர்க்கப்பட்டிருந்த தூசிகளும், சருகுகளும், மண் துகள்களும் அப்போதைக்கென்றே, பலமாக அடித்த காற்றில், சற்று மேலே எழும்பி, வீட்டுக்கார அம்மாவின் கண்ணில் படும்படியாக நடனமாடின. அவள் திகைத்து, திக்குமுக்காடி, ஒரு வாய்க்கு ஒன்பது வாய்கள் பதில் சொல்வதால், அதுவே அவளுக்கு ‘முதலிரவை’ப் போல் அல்லாது, முதல் அனுபவமாக இருந்ததால், கன்னத்தை உப்பி, கண்களை உருட்டி, மாடிச் சுவரில் கைகளைக் குத்தி, செல்லாக் கோபத்தை, செலவழிக்க முடியாமல் திண்டாடிய போது, இட்லி ஆயா, நிஜமாகவே சமரசம் செய்ய நினைத்துத்தான் பேசினாள்:

“நான் அதுக்குத்தான் குயந்தே அப்போபிடிச்சே உனக்கு புத்தி சொல்றேன். நம்மோட மரியாதையை நாமதான் காப்பாத்தணும். ஏழைங்க யானை மாதுரி... உட்கார்ந்திருக்கிறது வரைக்கும், சும்மா குந்திக்கிட்டு இருப்பாங்க. எழுந்துட்டாங்கன்னா, அப்பால... யாராலும் கட்டுப்படுத்த முடியாது. நாங்களும் உன்கிட்ட பொறுத்துத் தானே போகிறோம். நீ குழாயடிக்கு வந்துட்டால், நாங்கள் தொலவுல போய் விடுகிறோம். நீ வாசலுக்கு வந்தால், நாங்கள் விலகி நிற்கிறோம். போன மாசம் முப்பது ரூவாய் வாடகைப் பணத்தை முப்பத்தஞ்சா ஏத்துனே, கொடுத்தோமா... இல்லையா? கார்ப்பரேஷன் காரன் வந்தப்போ, நீ முப்பத்தஞ்சு ரூபா வாங்குனாலும், நாங்க பதினைந்துன்னு சொன்னோம்! நீயே சொல்லு குயந்தே... நீயே சொல்லு...”

“அப்படியும் நீ இந்த கக்கூஸ் கதவுக்கு ஒரு தாழ்ப்பாள் போடல. ரெண்டு மாசமா கதவு ஆடுது. இங்கே வந்து இருபது வருஷமாவுது... இன்னும் இந்த வீட்டுல வெள்ளையடிச்சத கண்ணால பார்க்கல. வெற்றிலை போடும்போது சுவர்ல பட்ட சுண்ணாம்பைத் தவிர, எந்தச் சுண்ணாம்பும் படல. இருபது வருஷத்துல ஒருக்கா கூட ஓடு மாத்தல... இதெல்லாம் ஆயா... எதுக்காகச் சொல்றேன்னா, நீ ஒண்ணைச் சொன்னால், அவளுங்க ஒன்பது சொல்ல பாயிண்ட் இருக்கு. அதனால எல்லாரும் அனுசரிச்சுப் பூடணும். நீயும்... அவர்களை... அப்படி தத்தேறித்தனமா பேசியிருக்கப் படாது... அதுகளும் உன்ன வீட்டுக்காரம்மாங்கிற மதிப்பில்லாம... புறம்போக்குத்தனமா பேசியிருக்கப்படாது... சரி... சரி... விட்டுத் தள்ளுங்கோ... வேலையைப் பாருங்கோ.”

குடித்தனப் பெண்கள், விட்டுத் தள்ளுவது போல் தத்தம் வீட்டுக்குப் போய்விட்டார்கள். ஆனால், வீட்டுக்காரி விடத் தயாராக இல்லை. அவர்களை, அந்த வீட்டில் இருந்து தள்ளும் வரையும் அவள் விடத் தயாராக இல்லை. மனதுக்குள்ளே பேசினாள்:

‘என்ன ஆனாலும் பார்த்துட வேண்டியதுதான். என்னோட அண்ணன் மகன் போலீஸ் இன்ஸ்பெக்டராய் இருக்கான். பெரியப்பா மகன், ‘கோட்டையில’ வேலை பார்க்கிறான். பெரிய அண்ணா, நாலுலாரி வச்சுருக்கார். சின்ன அண்ணா வக்கீலாய் இருக்கார். உங்களை மாதுரி கைவண்டி இழுக்கல. கட்டிடம் கட்டுற இடத்துல செங்கல் எடுத்துக் கொடுக்கல. கோணி வாங்கப் போகல. உங்களை... போலீஸ் மருமகன் கிட்ட சொல்லி உதைத்து... ‘கோட்டை’ அண்ணன் கிட்ட சொல்லி சிதைத்து... பெரிய அண்ணாவோட லாரிங்களை வைத்து... மோதியாவது... வக்கீல் அண்ணா மூலம் கோர்ட்டு கோர்ட்டா ஏற்றியாவது... உங்களை... தொலைக்கலன்னா... நான் வீட்டுக்காரி இல்லை... வீட்டுக்காரியே இல்லை...’

இப்படி, தன் சொந்தக்காரர்கள் ஒவ்வொருவரையும், அவர்களின் வேலைகளையும் நினைத்துப் பார்த்த அந்த வீட்டுக்காரி, தன் வீட்டுக்காரனை மட்டும் நினைக்கவில்லை.

சென்னைத் தமிழில் சொல்லப்போனால், அந்த ஆசாமி சரியான ‘டப்பா’. அதுவும் வீடு அவள் பெயருக்கு இருந்ததால், அவர் வெறும் தகர டப்பாவாகப் போனவர். என்றாலும் அந்த தகர டப்பாவை வைத்தாவது, அவர்களுக்கு சலசலப்பைக் காட்ட வேண்டும் என்பது போல், அப்போதுதான் உள்ளே வந்த அவரிடம், குடித்தனப் பெண்கள் சொன்னதை கூட்டி, தான் சொன்னதை ‘அமுக்கி’, அவரை ஊதிவிட்டாள்.

அந்த ஊதலில் பருமனாய்ப் போன அவர், ஒவ்வொருத்தியின் வீட்டு முன்னாலும் வந்து நின்று, “என்ன நினைச்சீங்க. தெரியாமத்தான் கேட்கிறேன். தொலைத்துப் புடுவேன். நாங்க மனசு வச்சால் நீங்கள் இந்தத் தெருவிலே இருக்க முடியாது” என்று கத்திவிட்டு, திரும்பிப் போய்விட்டார்.

குடித்தனப் பெண்கள், குறிப்பாக ராக்கம்மாவும் கந்தசாமியின் மனைவியும் அந்தக் கிளிப்பிள்ளையைப் பார்த்து, சிரித்தார்கள். பிறகு, அவரை அனுதாபத்தோடு பார்த்தார்கள். பிறகு, ‘ஆம்புளைக்கு’ மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைத்து, அது ‘தெரியாம கேக்குற’ ஆம்புளையாக இருந்தாலும் பரவாயில்லை என்று மேலும் நினைத்து, பயந்து விட்டவர்கள் போல், தலைகளை கட்டாயப்படுத்திக் கீழே போட்டுக் கொண்டார்கள். தகர டப்பா, தேர்தலில் வெற்றி பெற்று விட்டவர் போல், மனைவியிடம் ‘டிபன்’ மன்றாடாமல் கிடைக்கும் என்று நினைத்து, அந்த வேகத்திலேயே மாடிக்குப் போய்விட்டார். ‘குடித்தனப்’ பெண்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

இதற்குள் மல்லிகாவின் அம்மா செல்லம்மா வந்துவிட்டாள். நடந்த விவரத்தைக் கேள்விப்பட்டதும், இந்தப் பெண்களிடம், “அய்யோ ஆம்புளைங்களுக்கு தெரிய வேண்டாம். அப்புறம் எங்க வீட்டுக்காரரை கட்டுப்படுத்த முடியாது. என் மகன் பரமசிவம், ஒரே ஆட்டமாய் ஆடுவான்... விஷயம் நம்மோடயே இருக்கட்டும்” என்று சொல்லிக் கொண்டு ‘முறைவாசல்’ செய்யப் போனாள். வீட்டுக்காரி மாடியில் இருந்தே கத்தினாள்.

“செல்லம்மா உன் பொண்ணை அடக்கி வை. செட்டு சேர்த்துட்டு கலாட்டா பண்றாள்... இந்தப் பருப்பு இங்கே வேகாது... ஜாக்கிரதை.”

செல்லம்மா அவளைப் பாராமல், அவள் பேசுவது வரைக்கும் துடைப்பத்தையே பார்த்தாள். பிறகு, செய்ய வேண்டிய வேலையைச் செய்து கொண்டிருந்தாள்.
---------------
அத்தியாயம் 16


இரவு வந்தது. வேலைக்குச் சென்ற எல்லோருமே வந்து விட்டார்கள்.

வெளியே உள்ள களத்தில் பாய்விரித்து, உட்கார்ந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். மல்லிகா, சந்திரா, ராக்கம்மா முதலியவர்கள் இன்னொரு பக்கத்தில் கும்பலாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பெருமாளும் இருந்தார்.

“என்ன நாய்க்கரே... எத்தனை நாளைக்கு... இந்த சைக்கிள் ரிக்‌ஷாவ வச்சிக்கிட்டு அவஸ்தப்படப் போகிறீர்? பேசாம ஒரு ஆட்டோ ரிக்‌ஷா வாங்கப்படாதா?”

“ரிக்‌ஷா மேல இருக்க ‘டாப்பையே’ மாற்ற முடியல. ஆட்டோவுக்கு எங்க போறது? ‘கேக்கேன்னு நீங்க தப்பா நினைக்கப்படாது... உம்ம கூட மெட்ராசுக்கு வந்தவங்கெல்லாம் இன்னைக்கு வீடு வாங்கிட்டான். நீர் இன்னும் அந்த கந்தல் கோணி வியாபாரத்துலேயே கீறது நாயமா... குதிரையைக் குறையும்.”

“குறைக்கிறதாவது, அடியோட விட்டுட்டேன். அப்படியும் கட்டல. பேசாம நம்ம செட்டியார் மாதுரி... துணி வாங்கி ஏலத்துல போட்டு விக்கலாமான்னு பார்க்கிறேன்” என்றார் பெருமாள்.

அதைத் தொடர்ந்து ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக பேச்சு நடந்தது. தேர்தல், அரசியல்வாதிகள், சினிமா, எதையும் விடவில்லை.

‘வீட்டுக்காரம்மா’ மாடியில் இருந்து பார்த்தாள். வசதியே இல்லாத இந்த அசதிகாரர்களால், எப்படி சிரிக்க முடிகிறது? எப்படி ஒற்றுமையாக இருக்க முடிகிறது? அவள் வயிறு எரிந்தது. அப்போது, சில சின்னப் பிள்ளைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ‘இட்லி’ ஆயா, தன் நொள்ளைக் கண்ணுக்கு மருந்து போடப் போனாள். மல்லிகா, தோழிகளுக்கு ஒரு கைக் குட்டையை வைத்து, அதில் எப்படிப் பூ போடுவது என்பதை விளக்கிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று விளக்குகள் அணைந்தன. வீட்டுக்காரி, மாடியில் இருக்கும் ‘மெயின் ஸ்விச்சை’ ‘ஆப்’ செய்தாள். அனைவரும் வாயடைத்துப் போய் நின்றார்கள். ஏதோ பேசப் போன ராக்கம்மா கூட, வம்பு வேண்டாம் என்பது போல், பேசாமல் இருந்தாள். வயிற்றில் எரிந்ததை, விளக்கை அணைத்து, வீட்டுக்காரி ஆற்றிக் கொண்டாள். அப்படியும் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால், அவள் வயிறு, மீண்டும் எண்ணெய் இல்லாத திரி போல் எரிந்தது. அவள் உள்ளே போனாள். தகர டப்பா மச்சான் வெளியே வந்தார்.

“தூங்குங்களேய்யா... இப்படிப் பேசினால் எப்படி? நானு தூங்க வேண்டாமா...”

எதிர்ப்புக் குரல் கொடுக்காமலே, எல்லோரும் தூங்காமலே படுத்தார்கள். இருக்கிற பிரச்சினைகள் ஏராளம். இவன் பிரச்சினை வேறா? வேண்டாம். வீட்டைக் காலி பண்ணச் சொல்லுவான். அப்புறம், வீடு தேடி, தெருத் தெருவாச் சுத்தணும். அவன் வீட்ல ரேடியோ பாடும் போதே நம்மை பேசக் கூடாதுன்னு சொல்றான். ஒழிஞ்சி போறவன்.

அனைவரும் தூங்கி விட்டார்கள். அப்படியே தூங்கிப் போனார்கள். ஆனால், ‘வீட்டுக்காரி’யால் தூங்க முடியவில்லை. இவர்களுக்கு நாம் யாரென்று காட்டணும்! ஒருத்தியையாவது தொலைத்துக் கட்டணும். மல்லிகா சிக்கினால்... நல்லது.

இரண்டு நாட்களில், ரமணன் வந்து விட்டான். அவனைக் காணாமல் கண்ணீர் விட்டு, கலங்கிக் கொண்டிருக்கும் மல்லிகாவை நிம்மதியில் ஆழ்த்துவது போல் வந்து விட்டான். அதே சமயம், தான் எழுதிய கடிதத்தை, அவள் யாரிடமாவது காட்டி, நிலைமை எக்கச்சக்கமாக ஆகியிருக்குமோ என்று உள்ளூர உதறலுடன் வந்தான். எல்லோரும் அவனை உதாசீனம் செய்ததில் அவனுக்குச் சந்தோசம். மல்லிகா சொல்லவில்லை. ஏன் மல்லிகா சொல்லவில்லை? இன்றைக்கு அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும். எப்படியாவது...

மத்தியான வேளை. ‘ஹார்பார்’ கந்தசாமி வேலைக்குப் போகவில்லை. அங்கே வேலை நிறுத்தமாம். படுத்துக் கிடந்தான்.

மல்லிகா, அவன் மனைவிக்கும், இதர பெண்களுக்கும், சிலேட்டில், ‘க,ங,ச’ வை எழுதிக் காட்டிவிட்டு, பிறகு ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தாள். இட்லி ஆயாவும் “பலமா படி குயந்தே... ஆயா காதுல நுழையல...” என்று செல்லமாகச் சிணுங்கிக் கொண்டிருந்தாள்.

வீட்டுக்காரி பார்த்தாள். பாடத்தைக் கேட்டாள் அவளும். மல்லிகாவைப் போல், ‘பாடம்’ புகட்ட நினைத்தாள். திடீரென்று ரேடியோவைப் போட்டாள். பலமாக அதைக் கத்த விட்டாள். அவள் படிப்பது கேட்காதபடி உச்ச நிலையில் வைத்தாள். எல்லாப் பெண்களும், முணுமுணுத்துக் கொண்டார்களே தவிர, அவளை முறைக்கவில்லை.

மல்லிகா, சலிப்போடு எழுந்தாள். எழுந்தவள், நடை வாசல் பக்கமாகப் போனாள். எதிரே, ரமணன் வந்து கொண்டிருப்பது தெரியாமல் போய்விட்டாள். இளித்துக் கொண்டே வந்த ரமணன், அவளிடம் என்ன சொன்னானோ தெரியவில்லை. எப்படி நடந்து கொண்டானோ புரியவில்லை. திடீரென்று மல்லிகா கத்தினாள்.

“முட்டாள்! என்னைப் பற்றி என்னடா நினைத்தாய்? எருமை மாடு... செருப்பு பிஞ்சிடும்... ராஸ்கல்...”

எல்லாப் பெண்களும், அங்கே ஓடினார்கள். ரமணன் எந்தப் பக்கமும் ஓட முடியாமல், ஒளியவும் முடியாமல், எதிர்பார்த்த இனிமை, எருக்கம்பால் போல் அரிக்க, அவன் திணறிக் கொண்டிருந்தான். அந்தப் பெண்களைப் பார்த்ததும் மல்லிகா விம்மினாள். இதற்குள் செல்லம்மாவும், சந்திராவும் பதறிக் கொண்டே வந்தார்கள். ‘ஹார்பார்’ கந்தசாமியும், கண்ணைக் கசக்கிக் கொண்டே வந்தான். ஓடப்போன ரமணனை, ஒருத்தி பிடித்துக் கொண்டிருந்தாள். வீட்டுக்காரி இறங்கிக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா... என்ன பண்ணினான்...”

மல்லிகாவால், முதலில் பேச முடியவில்லை. முயன்றாலும் முடியவில்லை. திக்கித் திணறிவிட்டு துள்ளும் வெட்டுக் கிளிபோல், விட்டு விட்டுப் பேசினாள். பிறகு வேகமாகப் பேசினாள்.

“இவன்... இந்த முட்டாள்... என்... கையைப் பிடித்துக் கொண்டு ‘பதில் லட்டர் எழுதிட்டியா’ன்னு கேக்குறான். இரண்டு நாளைக்கு முன்னால... ஒரு லட்டர் கொடுத்தான்... நான் படிக்காமலே கிழிச்சிட்டேன். அநாவசியமான ரகளை வேண்டாமுன்னு சும்மா இருந்துட்டேன். இன்றைக்கு காலையில் கூட, இவனைப் பார்த்து காறித் துப்பினேன். (அவள் காறித் துப்பியதை ரமனன், அவள் தனக்கு முத்தம் கொடுக்கப் போவதாக சமிக்ஞை செய்வதாய் நினைத்திருந்தான்...) அப்படியாவது இந்த தடிமாடு திருந்திடுவான்னு நினைத்தேன். கடைசியில, என் கையைப் பிடித்து... அப்பா... அம்மா... என்னை எதுக்காகப்பா இங்கே இருக்க வைக்கிறீங்க...? என்னை வந்து கூட்டிட்டுப் போங்கப்பா. என்னை கையை பிடிக்கலாமுன்னு ஒரு காலிப் பயல் நினைக்கிற அளவுக்கு ஆயிட்டேனே... ஆயிட்டேனே... அய்யோ... யாராவது என்னை... தியாகராய நகர்ல கொண்டு விட்டுடுங்களேன்... அப்பா... அம்மா என்னால இங்கே இருக்க முடியாதுப்பா... முடியாதும்மா... அம்மா... அம்மா...”

சுற்றி நின்ற பெண்களால், கோபத்தை அடக்க முடியவில்லை. ஒருத்தி ரமணனின் சட்டைக் காலரையும், இன்னொருத்தி, அவன் கழுத்தையும் பிடித்துக் கொண்டு, “ஏழைப் பொண்ணுன்னால் என்ன வேணுமுன்னாலும் செய்யலாம் என்கிற நெனப்பாடா கஸ்மாலம். காண்டா மிருகம், கோயக் கண்ணா. இருக்க முடியாட்டி உன்னோட அக்காளை இழுக்க வேண்டியது தானடா...” என்று சொல்லிக் கொண்டே, பெண்கள், அவனை ஆளுக்கொரு பக்கமாக இழுத்த போது, ‘ஹார்பார்’ கந்தசாமி, “ஒத்திக் கங்கமே...” என்று சொல்லிக் கொண்டே, ரமணன் மீது பாய்ந்தான். பல பளுவான மூட்டைகளைத் தூக்கும் அவன், அவனை ஒரே தூக்காகத் தூக்கி, உள்ளே கொண்டு வந்து, வீட்டுக்கார அம்மாவின் முன்னால் போட்டான். போடப்பட்டவனை மீண்டும் தூக்கி நிறுத்தி, கன்னத்திலும், காதுகளிலும் கும்மாங்குத்துக்களை விட்டுவிட்டு, பிறகு “ஒயுங்கா இரு... இல்லன்னா... உயிர எடுத்துடுவேன்...” என்று சொல்லிவிட்டு, ஒரு தூணில் போய் சாய்ந்து கொண்டான்.

தம்பி, அடிபடுவது வரைக்கும் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு, பிறகு, அவன் விடுபட்ட பிறகு, வீட்டுக்காரி கத்தினாள்.

“எப்படியோ ஜோடிச்சி இல்லாததையும் பொல்லாததையும் பேசி, என் தம்பிய அடிச்சிட்டீங்க. அவன் கையை இவள் பிடித்தாளா... இவள் கையை அவன் பிடித்தானான்னு தெரியாமலே அடிச்சிட்டிங்க இல்ல? ஓரடிக்கு ஒன்பது அடி கொடுக்கலன்னா... நான் வீட்டுக்காரி இல்ல...”

கந்தசாமிக்குப் போன கோபம் மீண்டும் வந்தது.

“பேசாம போ... மே... பொம்மனாட்டியாச்சேன்னு பாக்கேன். அந்த கம்மனாட்டிய அடக்கத் தெரியல... பேசுறாள் பேச்சு...”

“ஏய்... என்னையாடா... மேன்னு சொல்ற. நான் எருமை மாடாடா. இந்த மல்லிகா... அவனைக் கண்ணடிக்கிறது உனக்குத் தெரியுமா...”

“இந்தா பாரும்மா, யாரை வேணுமுன்னாலும் பேசு. மல்லிகாவைப் பேசுன... வாய்... வெத்திலை பாக்கு போட்டுக்கும். பொம்மனாட்டியாச்சேன்னு பாக்கேன். நீ டா போட்டதக்கூட பொறுத்துக்கினேன்... மல்லியப் பேசுனே... நாறிப் போயிடுவே...”

வீட்டுக்காரி, கீழே கிடந்த தம்பியைத் தூக்கிக் கொண்டே, மாடிக்குப் போய், அங்கிருந்து பேசினாள். ‘அம்மா’ ‘அம்மா’ என்று சொல்லும் ஒருவன், ‘மே’ என்று சொல்லிவிட்ட திகைப்பிலேயே சிறிது நேரம் தடுமாறி விட்டு, தாறுமாறாகப் பேசினாள்.

“என் தம்பிய கைவச்சுட்டல்ல? பாரு வேடிக்கையை... டேய்... ரமணா... இன்ஸ்பெக்டர் அண்ணனுக்கு போன் பண்ணுடா. வக்கீல் அண்ணாவுக்கு டெலிபோன் செய்டா. பெரியப்பா மகனுக்கு தெரியப்படுத்துடா... ரெண்டுல ஒண்ணப் பார்த்துப்புடலாம். பழிக்குப் பழி வாங்காம விடப் போறதுல்ல...”

ரமணன் வெளியே ஓடினான்.

பத்து நிமிடத்தில் ஒரு ஆட்டோ வந்து அலறியது.

இருவரும், ஆட்டோவில் ஏறினார்கள். கந்தசாமி அலட்சியமாக இருந்தான். அவன் மனைவி அழப்போனாள்.

“அய்யோ... போலீஸ் வந்து உன்னைக் கூட்டிக்கினு போனால் நான் என்ன பண்ணுவேன். ஜாமீனுக்குக் கூட ஆளுங்க இல்லியே. போலீஸ்காரன் உதைப்பானே. உனக்கு வேற ஜுரமாச்சே. பூட்ஸ் காலால மிதிப்பானே.”

“சும்மா இரும்மே... போலீஸ்னா கொம்பா...”

மல்லிகா, கந்தசாமியையே பார்த்தாள். போலீஸ்ஆரர்கள் உதைத்தாலும் பரவாயில்லை என்பது போல் அவன் தைரியமாக இருந்தான்.

“அண்ணா... அண்ணா...” என்று விம்மினாள் மல்லிகா. கந்தசாமி அதிர்ந்து போனான்.

“என்னம்மா... நீ... பச்சைக் குழந்தை மாதிரி... இப்போ இன்னாதான் நடந்துட்டுது? உன் பேரு, அனாவசியமாய் கெடுமேன்னுதான் அந்த கம்மனாட்டிய அத்தோட விட்டேன். அயாதம்மா... இந்தாபாரு, நீ அயுறதப் பார்த்துட்டு... அம்மா அயுவுது, அப்பால எனக்கும் கண்ணீர் வருது...”

எல்லோரும், ஒரு வித திடுக்கிடும் எதிர்பார்ப்புடன் இருந்த போது, ஒரு டாக்சியில் இருந்து, இரண்டு போலீஸ்காரர்களும், சப் இன்ஸ்பெக்டரும், வீட்டுக்காரியும், ரமணனும் இறங்கினார்கள். வீட்டுக்காரி, “இவன் தான். இவள் காலரைப் பிடித்தாள். அதோ அவள் கழுத்தை நெரித்தாள். இந்த செல்லம்மா தான் தூண்டி விட்டது. இவளத்தான் மொதல்ல உதைக்கணும்” என்றாள். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு.

சப் - இன்ஸ்பெக்டர், பேசாமல் கோபத்தோடு நின்ற போது, போலீஸ்காரர்களில் ஒருவர், கந்தசாமியை நெருங்கினார்.

“ஏண்டா சோமாறி... நீ பெரிய ரவுடியா...”

“நான் பெரிய ரவுடியும் இல்ல. சின்ன ரவுடியும் இல்ல. சாதாரண மனுஷன் சார்.”

“எதிர்த்தா பேசுறே கயிதே.”

“உன்னை என்ன பண்றோம் பாரு... இந்தாப்பா, இவன் கையை மடக்கிக் கட்டு” என்றார் சப்-இன்ஸ்பெகடர் கோபமாக.

ஒரு போலீஸ்காரர், கந்தசாமியின் கைகளை வளைத்துப் பிடிக்கப் போனார்.

மல்லிகா, நடப்பதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். பிறகு மூச்சை இழுத்துப் பிடித்தாள். ஏதோ ஒன்று, அவளுள் பிறந்து, அவளுள் வளர்ந்து, அவளுள் நின்று, அவளை விட பெரிதானது போல் தோன்றியது. கல்லூரி மேடைப் பேச்சின் போது நிற்பாளே... அப்படிப்பட்ட கம்பீரம்... அப்படிப்பட்ட அஞ்சாப் பார்வை.

“எக்ஸ்க்யூஸ் மீ... நீங்க சப் - இன்ஸ்பெக்டர் தானே...”

“பார்த்தால் எப்படித் தெரியுது?”

“சார்... இந்த அகங்காரமான பேச்சு வேண்டாம். நீங்கள் நடந்ததை விசாரிக்காமலே ஒருத்தரை மட்டும் உதைக்கப் போகிறது சட்ட விரோதம். அந்த அம்மாவோட அண்ணன் இன்ஸ்பெக்டர். அவரோட செல்வாக்குல நீங்கள் வந்திருகீங்கன்னு தெரியும். இவன்... என்னைக் கெடுக்க வந்தான். என் அண்ணா அவனை தற்காப்புக்காக அடித்தது உண்மைதான். நான் இப்பவே புகார் எழுதித் தர்றேன். கெடுக்க முயற்சி செய்கிறவனை நீங்கள் பதினைந்து நாள் காவலில் வைக்கணும். நான் வேணுமுன்னாலும் ஸ்டேஷனுக்கு வாரேன். இப்படி இல்லாமல், அண்ணனை மட்டும் நீங்க கூட்டிக்கிட்டு போறதாய் இருந்தால், நான் போலீஸ் கமிஷனர் கிட்ட போயிட்டு, அப்படியே முதலமைச்சர் கிட்டயோ, கவர்னர் கிட்டயோ போக வேண்டியதிருக்கும்.” மல்லிகா ஆங்கிலத்திலேயே பேசினாள். தாய்மொழியில் பேசுவதை அதிகாரிகள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்ற அவல நிலையை உணர்கிறவள் போல.

சப் - இன்ஸ்பெக்டர் சிறிது யோசித்துவிட்டு, “மிஸ்டர் ரமணன்... நீங்களும் ஸ்டேஷனுக்கு வாங்க. யோவ்! கந்தசாமியோட கையை விடுய்யா...” என்றார்.

ரமணன், அக்காளுக்குப் பின்னால் ஒளிந்தான். “அண்ணா போன் போட்டு சொன்ன பிறகும்... இவனையா கூப்பிடுறீங்க...” என்று வீட்டுக்காரி சொன்ன போது, மல்லிகா, பிடிக்க வேண்டிய இடத்தைப் பிடித்தாள்.

“பார்த்தீங்களா சார்... என் அண்ணா அவரை அடிச்சார்னு நீங்கள் வரவில்லை. யாரோ போன் பண்ணினாங்கன்னு, நீங்கள் வந்திருக்கீங்க...”

சப்-இன்ஸ்பெக்டருக்கு, வீட்டுக்காரி மீது கடுமையான கோபம். துப்புக்கெட்ட மூதேவி! அப்பன், குடிலுக்குள் இல்லைங்கிறது மாதிரி... போன் சமாச்சாரத்தை சொல்றாளே...”

பிறகு, சப்-இன்ஸ்பெக்டர், வந்தவேகம் எங்கேயோ போக, சிரித்துக் கொண்டே பேசினார்.

“நீங்கல்லாம் பெரியவங்க... ஒற்றுமையாய் இருக்கணும். ஒரு தாய் மக்கள் மாதிரி பழகணும். ரமணன் உங்களுக்கு சிஸ்டர் இருக்கிறது அல்லவா! அதே மாதிரி இந்த பாப்பாவையும் பார்க்கணும். மல்லிகா நீங்களும், அவர் தற்செயலாப் பார்க்கிறதையும் தப்பா நினைக்கப் படாது. கந்தசாமி இனிமேல் கைநீட்டுற வேலையை வச்சுக்காதே. நாங்கள் எதுக்காக இருக்கோம்? இனிமேல் இந்த மாதிரி ரகளை வந்தால், லாக்கப்பில் தள்ளிடுவேன்.”

“எல்லோரையுந்தானே சார்” என்றாள் மல்லிகா.

“ஆமாம்... எல்லோரையுந்தான்... யாராய் இருந்தாலும்... எங்களுக்கு ஒரே மாதிரிதான்.”

சப்-இன்ஸ்பெக்டர், கீழே விழுந்தாலும் மண்படாத லத்திக் கம்பை தட்டிக் கொண்டே, போலீஸ்காரர்களுடன் போய்விட்டார். எல்லோரும் மல்லிகாவைப் பெருமிதத்துடன் பார்த்தார்கள். என்னமாய்... இங்கிலீசுல விளாசுகிறாள்... அடேயப்பா.

வீட்டுக்காரி, அடைகாக்கும் கோழி மாதிரி, வீட்டுக்குள் அடைந்து கொண்டாள். வெளியே தலைகாட்டவில்லை.

அதே சமயம், ‘இட்லி’ ஆயா பேசுவது, காதுக்குள் விழுகிறது.

“நீ நிசமாவே... ராசாத்தி குயந்தே... ராசாத்தி... நீ காட்டியும் இல்லாட்டா நம்ம கந்தசாமியை... போலீஸ்காரங்க... கந்தலி கோலமா ஆக்கியிருப்பாங்க... நீ... தியாகராய நகர்ல... பெரிய வீட்ல இருந்து இங்கே வந்தப்போ... ஆயா அழுதேன் குயந்தே... அழுதேன்... ஆனால் ஆண்டவனாப் பாத்துத்தான் ஒன்னை... அனுப்பி இருக்கிறார் குயந்தே... அனுப்பி இருக்கார்.”

மாலையில் வீட்டுக்கு வந்ததும், விஷயத்தைக் கேள்விப்பட்ட பெருமாள் “எடுடி... கத்தியை” என்றார். பரமசிவம் பாயப் போனான். செல்லம்மா புருஷனையும், மல்லிகா தம்பியையும் பிடித்துக் கொண்டார்கள்.
---------------
அத்தியாயம் 17


ஒரு வாரம், சொல்லாமல் கொள்ளாமல் ஓடியது.

எதிரிகள் ஒட்டு மொத்தமாகச் சேரும்போது, அவர்களில் மிகவும் ஏலாத ஏழை மீது தான், அதிகமாகக் கோபம் வரும் என்பார்கள். இதுபோல், வீட்டுக்காரிக்கும், ஊசிப்போன இட்லிபோல் தோன்றும், ‘இட்லி ஆயா’, தங்கம்மா மீதுதான் அளவுக்கு மீறி ஆத்திரம் வந்தது. சமயத்தை எதிர்பார்த்திருந்தாள்.

அந்த வீட்டின் வெளித் திண்ணையில், ஆயா கடை போட்டிருந்தாள். கரிப்புகையாலேயே கறுத்துப் போன ஒரு ஸ்டவ் அடுப்பில் நெருப்பு மூட்டி, வாணலியில் உளுத்தம் பருப்பு மாவை, பிடித்துப் போட்டுக் கொண்டிருந்தாள். அவை, ‘கடுக்கண்கள்’ கழட்டப்பட்ட காதுகள் மாதிரி, ‘மெது’ வடைகளாக மலர்ந்து கொண்டிருந்தன. ஏற்கெனவே சுடப்பட்ட இட்லிகள், ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்தன. கூடத்தின் வளைவில் கட்டப்பட்டிருந்த கோணி, பாதி தூரம் தொங்கிக் கொண்டிருந்தது. நான்கைந்து கண்ணாடிப் பாத்திரங்களில் பல்பம், நிலக்கடலை மிட்டாய் போன்ற வகையறாக்கள் நிரம்பி இருந்தன. சில பெண்கள் இட்லிகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருசில சிறுவர்கள், வேர்க்கடலை மிட்டாய்களையும், கையில் இருந்த காசுகளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

காலையில் எட்டு மணிக்கு எழும் வீட்டுக்காரி, அன்று சீக்கிரமாக துயில் கலைந்திருக்க வேண்டும். திண்ணைக்கு அருகே வந்து, அதனுடன் ஒட்டிப் போட்டிருந்த கம்புத் தூணைப் பிடித்துக் கொண்டே, முதலில் செருமினாள். ஆயா, திரும்பிப் பார்த்ததும் கர்ஜித்தாள்.

“ஆயா... ஒன்கிட்ட எத்தன தடவ சொல்றது... போன வாரமே... இனுமேல் திண்ணையில்... கடை போடப்படாதுன்னு சொன்னோமுல்ல? ஒன் செவிட்டுக் காதுல விழலியா... நான் சொல்லியும்... திண்ணையை பிடிச்சிட்டு இருந்தால் என்ன அர்த்தமின்னேன்... ஒன்னால திண்ணையக் காலி பண்ண முடியுமா... முடியாதா? எனக்கு இப்போவே தெரியணும்...”

ஆயா, அவளையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தாள். மலர்ந்த வடைகள் வாணலியில், கருகிக் கொண்டிருந்தன.

“ஒன்னத்தான்... சொல்றது காதுல விழல? ஒனக்குல்லாம் சொல்றதோட நிறுத்திக்கிறது தப்பு...”

ஆயா மன்றாடினாள்.

“குயந்தே... நீ சின்னப் பிள்ளையா இருக்கும்போதே போட்ட கடை குயந்தே... ஒனக்குக் கூட அப்போ ஓசில வடை தந்திருக்கேன் குயந்தே... ஒன் நயினா... இந்த வீட்டை வாங்குமுன்னால... இருந்த புண்ணியவான் தான்... நான் படுற கஷ்டத்தைப் பாத்துட்டு, ‘தங்கம்... பேசாம திண்ணையிலேயே... இட்லி வடை போடு... நீ போட்டால்... திண்ணையிலே வழக்கமா உட்காருற ரௌடிப் பசங்களையும் பகைக்காமலே விரட்டிப்பிடலா’முன்னு சொல்லி அந்த மவராசன் தான் கடைபோட காசு கூட கொடுத்தார்... ஒன் நயினாவும் கண்டுக்கல... முப்பது முப்பத்தஞ்சு வருஷமா... இங்கேயே கடை போட்டிருக்கேன் குயந்தே... நீ காலி பண்ணச் சொல்றது நாயமா குயந்தே...”

‘குயந்தே’ இப்போது, கூப்பாடு போட்டது.

“ஒன் மனசில என்னதான் நினைச்சிகிட்டே... திண்ணைய... அசிங்கமா வைக்க முடியாது... மரியாதியா... இப்பவே... கீழே இறங்கு... இறங்குறியா... இல்ல இறக்கட்டுமா?”

“இப்படிச் சொன்னா எப்படி குயந்தே... இந்த தள்ளாத வயசுல... எங்கே குயந்தே போவேன்...”

“எங்கேயாவது போ... எனக்கென்ன... தெருவுல போற நாய்க்கெல்லாம்... நான் இடம் பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா...”

“எனக்கு எதுக்கு மரியாதி கொடுக்காட்டாலும்... வயசுக்காவது மரியாதி கொடு குயந்தே... நாயி நரியின்னு வாய்க்கு வந்தபடி பேசாத குயந்தே... அப்புறம் ஒன் வாய்தான் அழுவிப் போயிடும் குயந்தே...”

“அந்த அளவுக்கு திமுறு வந்துட்டா ஒனக்கு... பாத்துப்புடலாம்...”

வீட்டுக்காரி, பயங்கரமாக பல்லைக் கடித்துக் கொண்டு கோணியை அறுத்தாள். ஆயாவின் ஸ்டவ் அடுப்பை தரதரவென்று இழுத்து, திண்ணைக்குக் கீழே போட்டாள். இந்த முயற்சியில், வாணலியில் கொதித்த எண்ணெய், ஆயாவின் கை காலில் விழுந்தது. அவள் சதையை வேகவைத்து கொதித்தது. ஆயா, வலி பொறுக்க முடியாமல் கத்தினாள்.

“அய்யோ... மாரியாத்தா... இந்த அநியாயத்த கேட்க ஆளில்லையா... ஆளில்லையா? குயந்தே... வீட்டுக்கார குயந்தே... இந்த எண்ணைய எடுத்து என் மேல வாணுமுன்னாலும் கொட்டு... ஆனால் என்னோட... ‘பொயப்ப’ கெடுத்திடாத குயந்தே... கெடுத்திடாதே...”

வீட்டுக்காரி விடவில்லை. ஆயாவின் இட்லி தட்டையும் எடுத்துக் கீழே போட்டுவிட்டு, கண்ணாடிப் பாத்திரங்களையும் இறக்கிவிட்டு, ஆயாவின் கைகளைப் பிடித்து “மொதல்ல கீழே இறங்கு... ஒங்களுக்குல்லாம் வாயால சொன்னால் பத்தாது” என்று கீழே இழுத்த போது, ராக்கம்மா வந்தாள். வீட்டுக்காரியின் கை போகிற இடமெல்லாம் ஆயாவின் உடம்பு முழுவதும் ஒட்டு மொத்தமாக, பூசணிப்பழம் மாதிரி அலைக்கழிவதைப் பார்க்கப் பார்க்க, அவளுக்குத் தான் என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை. வீட்டுக்காரியின் கையைப் பிடித்து, மடக்கித் தள்ளினாள். அந்த வேகத்தில், வீட்டுக்காரி எதிரே இருந்த குறுந்திண்ணையில் நெற்றி மோத, அலங்கோலமாக விழுந்தாள். அதை விட, அதிக அலங்கோலமாக சத்தம் போட்டாள்.

“என்னையாடி... அடிச்சிட்டே... என்னையாடி... அடிச்சிட்டே... அய்யோ... எனக்குத் தலை சுத்துதே... தலை சுத்துதே...”

கீழே கிடந்த வீட்டுக்காரியை, ராக்கம்மா தூக்கி நிறுத்த முயற்சி செய்த போது, தரையில் தேய்த்ததால் சிராய்ப்பாகி, மரத்தின் பட்டையைக் கீறினால், செக்கச் செவேலென்று வரும் மரச்சதை மாதிரி ஆயாவின் சதைப் பகுதியில் ரத்தம் கசிந்தது. ஆயா அதை கையால் பிதுக்கிப் பார்த்துக் கொண்டே மௌனமாகப் பார்த்தாள்.

இதற்குள் சத்தங்கேட்டு, மல்லிகா உட்பட எல்லோரும் வந்தார்கள். ரமணன் அக்காவை வந்து தாங்கிப் பிடித்துக் கொண்டான். வீட்டுக்காரி, பிரளயப் புலம்பலை பிரசவித்தாள்.

“பிளான்போட்டாடி வந்திங்க? என்னை கை நீட்டியாடி அடிச்சே... அடிச்ச கையில... காப்பு மாட்டுறேனா... இல்லியான்னு பாரு. ஒரு அடிக்கு... ஒன்பது அடி வாங்கித் தராட்டால்... என் பேரு... என்... பேரு...”

வீட்டுக்காரி, தன் பெயரையே ஞாபகப்படுத்த முடியாமல் திணறிவிட்டு, பிறகு “ஏ... ரமணா... போலீஸுக்கு... போன் பண்ணிட்டு வாடா... இன்னுமாடா நிக்கே... எருமை மாடு...” என்றாள்.

ரமணன் வெளியே ஓடினான். ராக்கம்மா, வீட்டுக்காரியை பயந்தவள் மாதிரியும், பயப்படுத்துபவள் மாதிரியும் பார்த்துக் கொண்டிருந்த போது, மல்லிகா, ஆயாவின் குருதி படர்ந்த கால் பகுதியை, கைக்குட்டையால் துடைத்து விட்டு, அக்காள் சந்திராவைப் பார்த்த போது, அவள் வீட்டுக்குள் போய், தேங்காய் எண்ணெய் கொண்டு வந்தாள். மல்லிகா, எண்ணெயை ஊற்றி, ஆயாவின் காலில் தேய்த்தாள். கட்டிய கணவனையும் பெற்ற பிள்ளைகளையும் ‘குண்டு’க்குக் கொடுத்து விட்டு, கடந்த முப்பதாண்டு காலத்திற்கும் மேலாக, அன்பின் பரிச்சயம் கிடைத்தாலும், அதன் அரவணைப்புக் கிடைக்காமல், உள்ளூர ஏங்கிக் கொண்டிருந்த ஆயா, மல்லிகாவின் அன்பில் நெகிழ்ந்து குழைந்து மேனியெங்கும் பரவசமாக, ஆனந்தமும், சோகமும் மறைந்து, அவை இரண்டிற்கும் அப்பாற்பட்ட ஞானிகளின் குறிக்கோள் போல் தோன்றும் அடையாளம் கண்டாலும் காட்ட முடியாத ஒரு பேருணர்வு ஆட்கொள்ளப் பட்டவளாய், ஆயா விம்மினாள். தன்னையறியாமலே, வீட்டுக்காரருக்குக் கூட நன்றி சொல்லிக் கொண்டாள்.

இதற்குள், ராக்கம்மாவும் கந்தசாமியின் மனைவியும் கீழே இருந்த ஸ்டவ்வை எடுத்து திண்ணையில் வைத்தார்கள். இட்லி தட்டை ஒழுங்கு படுத்தி வைத்தார்கள். ‘கோணிக் கதவை’ கட்டி முடித்தார்கள்.

வீட்டுக்காரி, அவளைத் தடுக்கப் போனாள். கந்தசாமியின் மனைவி “இனிமே... கொலை விழுண்டி” என்று அதட்டிய போது, வீட்டுக்காரி தெருவுக்கே வந்து, போலீஸ்காரர்களை எதிர்பார்த்து நின்றாள். தெருவெங்கும் கூட்டம்.

போலீஸ் வந்தது. ‘வானோடு’ வந்தது.

ஒரு போலீஸ்காரர் ‘வான்’ கதவை முற்றிலும் திறந்து கொண்டு வெளிப்படும் போதே, “யாரும்மே... ராக்கம்மா... யாரும்மே தங்கம்மா...” என்று அதட்டினார்.

“நான் தான் ராக்கம்மா...” என்றாள் அந்தப் பெயருக்குரியவள் கம்பீரமாக.

“அந்த அம்மாவை எதுக்குமே அடிச்சே...”

மல்லிகாவிற்கு, விஸ்வரூபம் எடுத்தது போலிருந்தது. கல்லூரி மேடையில் சிலிர்த்து நிற்பாளே அப்படி.

“ஸார்... ஒரு விஷயம்... தெரியாமத்தான் கேக்குறேன்... சட்டம் எல்லோருக்கும் சமமுன்னா... சட்டத்தை அமல் செய்கிறவங்க... எல்லோரையும் சமமாய் நினைக்கணுமுன்னு அர்த்தம்... அவங்க... பணக்காரி... அதனால் அம்மா... இவங்க... ஏழை... இதனால ‘மே’. ஒரு வேளை... பணக்காரியை ஒரு மாதிரியும்... ஏழையை இன்னொரு மாதிரியும் கூப்பிடணுமுன்னு சட்டத்துக்கு ‘அமெண்ட் மெண்ட்’ எதுவும் வந்திருக்கா... தெரியாமத்தான் கேக்கேன்...”

போலீஸ்காரர்கள், மல்லிகாவைப் பார்த்தார்கள். கம்பீரமாக நின்ற ராக்கம்மாவைப் பார்த்தார்கள். பரிதாபமாகப் பார்த்த ‘இட்லி’ ஆயாவைப் பார்த்தார்கள். இது... ஸ்டேஷன்ல கவனிக்க வேண்டிய விவகாரம்... இந்தப் பொண்ணு... இங்க... கலாட்டாவை உண்டு பண்ணினாலும் பண்ணிடுவாள்.

முன்கோபி என்று பெயரெடுத்த ஒரு போலீஸ்காரரே, இப்போது சாந்த சொரூபியாகப் பதிலளித்தார்.

“நாங்களும்... மனுஷங்கதாம்மா... விசாரிக்காம எதுவும் செய்ய மாட்டோம்... ராக்கம்மா... வேன்ல ஏறு... ஆயா... நீயும் ‘வேன்ல’ ஏறு...”

“எக்ஸ்யூஸ் மி ஸார்... ஆயாவை... இந்த அம்மா காலைப் பிடித்து ‘வயலண்டா’ இழுத்ததுல... இதோ பாருங்க... ரத்தத்தை... இதோ பாருங்க... சதை பிஞ்சி வந்துருக்கதை... இந்த ராக்கம்மா மட்டும், சமயத்துல வராட்டால், எங்க ஆயா... கீழே விழுந்து... போக வேண்டிய இடத்துக்குப் போயிருக்கலாம்... ஆயாவை... பலாத்காரமாய் இழுத்த... இந்த வீட்டுக்கார அம்மாவையும்... நீங்க ‘வேன்ல’ ஏத்தணும்...”

ஒரு போலீஸ்காரருக்குக் கோபம் வந்தது.

“நீ லிமிட் தாண்டிப் போறேம்மா...”

“இதை விட்டு லிமிட்டைத் தாண்டி... நீங்க கொண்டு போறதாய் இருந்தால்... எல்லாரையும் கொண்டு போகணும்...”

“இல்லன்னா...”

“நாங்க... எல்லாரும்... வேனுக்கு முன்னால... நிற்கப் போறோம்... எங்களை பிணமாக்கிட்டு வேணுமுன்னால்... ஒங்க வேன் போகட்டும்... இதுல எல்லாருமே ஏழை பாழைங்க... செத்துப்போனால்... தேரெடுக்கக் கூட காசில்லாதவங்க... அதனால... இந்த வேனாலயே... எங்களை மோதி கொன்னுட்டு... அப்படியே எங்க பிணத்தையும் எடுத்துப் புதைச்சுட்டுப் போயிடுங்க...”

மல்லிகா, சொன்னதுடன் நிற்காமல், வேனுக்கு முன்னால் போய் நின்றாள். ‘இட்லி’ ஆயா, மெள்ள மெள்ள நடந்து, மல்லிகாவுடன் சேர்ந்து கொண்டாள். கந்தசாமியின் மனைவி, ஓடிப் போய் நின்றாள். தயங்கி நின்றபடி, கைகளை நெறித்துக் கொண்டிருந்த செல்லம்மாவை, சந்திரா தள்ளிக் கொண்டே போய், வேனுக்கு முன்னால் போய் நின்றாள். அந்த வீட்டின் அத்தனைப் பெண்களும், வழி மறிப்பது போல் நின்ற போது, வழியெங்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெருங் கூட்டத்தின் ஒரு பகுதியும், வேனுக்கு முன்னால் போய் நின்றது.

போலீஸ்காரர்கள், வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டார்கள். அதாவது யோசிக்கத் துவங்கினார்கள். ஒருவர், ஒயர்லஸ் மூலம், கமிஷனர் அலுவலகத்திடம் தொடர்பு கொண்டார். ‘லத்தி சார்ஜ் பண்ணலாமா’ என்பது மாதிரி கேட்டார். ஆனால் அங்கிருந்து, டெப்டி கமிஷனர் வந்து பார்க்கப் போவதாக தகவல் வந்தது. போலீஸ்காரர்களின் முகங்களிலும், கரங்களிலும் முறையே ஈயும், லத்திக் கம்பும் ஆடவில்லை. ‘வேன்’ முன்னால் நின்ற கூட்டம், நேரம் ஆக ஆக, கம்பீரப் பட்டுக் கொண்டு வந்தது.

கால் மணி நேரத்திற்குள், வெளியே ஒரு கம்பியை நீட்டிக் கொண்டு, ஜீப் வந்தது. டெப்டி - கமிஷனர் இறங்கினார். போலீஸ்காரர்களின் சல்யூட்டுக்கள், அவரின் நடைக்குத் தாளமாக இருந்தது.

மல்லிகா, டெப்டிக்கு முன்னால் நின்று கொண்டு “நீங்களே விசாரிங்க ஸார்... இதோ... இந்த ஆயாவைப் பாருங்க ஸார்... முப்பது வருஷமா... இந்தத் திண்ணையில... கடை போட்டு... வாழ்கிறவள்... இந்தம்மா... ஆயாவை... கீழே இழுத்துப் போட முயற்சி செய்த போது... இந்த ராக்கம்மா, ஆயா அடிபடாமல் இருக்க இந்த அம்மாவை தள்ளியிருக்காள்... இந்த அம்மா மேலே பட்ட காயம் தற்செயலானது... ஆயா மேலே பட்டது அடாவடித்தனமானது... ஆனால் ஒங்க போலீஸ்காரங்க... ஆயாவையும், ராக்கம்மாவையும் ‘வேன்ல’ ஏறச் சொல்றாங்க... இந்த அம்மா ஏறக்கூடாதாம்... என்ன ஸார் நியாயம்? அதனால தான் சொல்றோம்... ஒண்ணு... எங்களையும் கூட்டிக்கிட்டு போங்க... இல்லேன்னா கொன்னுட்டுப் போங்க... இதைத் தவிர... ஏழை பாழைகளால என்ன செய்ய முடியும்... ஏழைகள் ஒற்றுமையாய் இருக்கக் கூடிய ஒரே விஷயம்... இந்த மாதிரியான அவல நிலையில்தான்...”

டெப்டி கமிஷனர், தன் பெல்ட்டைப் பிடித்துக் கொண்டே யோசித்தார். இரண்டு தரப்பையும், ‘வேனில்’ ஏற்றாத போலீஸ்காரர்கள் மீது அவருக்குக் கோபம் வந்தது உண்மைதான். ஆனாலும், அந்த உண்மையை முகத்தில் கோர தாண்டவமாட விடவில்லை. அமைதியாகப் பேசினார்.

“நடந்தது நடந்துட்டு... இனிமேல் ஒற்றுமையாய இருக்கதாய்... இரண்டு தரப்பும் எழுதிக் கொடுத்தால்... இதோடு விட்டுடுறோம்... இல்லன்னா...”

மல்லிகா... பதிலளித்தாள். “ஸார்... எலியும், பூனையும் சண்டைப் போடுதுன்னு சொல்வது மாதிரி இது... ஏன்னா... சண்டையைத் துவக்குனது இந்த அம்மா... அதனால அதை முடிக்க வேண்டியதும் அவங்க தான்... இருந்தாலும் பரவாயில்லை. பெரியவரான ஒங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நாங்க தகராறை முதலில் துவக்க மாட்டோமுன்னு எழுதிக் கொடுக்கோம்... சந்திராக்கா... ஒரு பேப்பர் கொண்டுவா...”

மல்லிகா, சந்திரா கொடுத்த காகிதத்தில் மடமடவென்று எழுதினாள். எல்லோரும் கையெழுத்துப் போட்டார்கள். ஆயாவால் தான் முடியவில்லை.

“குயந்தே... நீ சொல்லிக் கொடுத்த கையெழுத்து இதுக்கா பயன்படணும் குயந்தே...”

“இதுக்குத்தான் பயன்படணும். படிச்சுப் பட்டம் பெற்ற பலர், தங்கள் கையெழுத்தை... எது எதுக்குல்லாமோ போடும் போது, நீங்க உரிமையை நிலை நாட்டற போராட்டத்துக்காகப் போடுறதுக்கு பெருமைப் படணும் ஆயா.”

வீட்டுக்காரம்மா, பேசாமல் நின்றாள். இன்ஸ்பெக்டர் அண்ணன் பெயரைச் சொல்லி, எழுதாமல் இருந்து விடலாம் என்று தான் நினைத்தாள். ஆனால் இங்கிதம் தெரியாத ரமணன், அக்காவுக்கு உதவி செய்வதாக நினைத்து, ஒரு காகிதத்தை எடுத்து எதையோ எழுதி, அவளிடம் கையெழுத்துப் போட நீட்டினான்.

மல்லிகா இடைமறித்தாள்.

“ஸார்... ஆயாவோட... திண்ணைக் கடையை ஒன்றும் செய்ய மாட்டேன்னு எழுதிக் கொடுக்கச் சொல்லுங்க சார்.”

டெப்டி - கமிஷனர், தலையாட்டிக் கொண்டே பேசினார்.

“ஆமாம்மா... அதையும் எழுதிடுங்க... வேணுமுன்னா ஸிவில் கேஸ் போட்டு கடையை எடுங்க... கிரிமினலா போகாதீங்க...”

வீட்டுக்காரி, எழுதமாட்டாது எழுதியதில், ஆயா கடைக்குப் பாதுகாப்பு அங்கீகாரம் கொடுத்து எழுதி, முக்கி முணங்கி கையெழுத்துப் போட்டாள்.

டெப்டி - கமிஷனர், அதை வாங்கிக் கொண்டு, ஜீப்பில் ஏறப் போனார். ஆயா பேசாமல் இருப்பாளா?

“போலீஸ் குயந்தைங்கா... என் கையால சுட்ட இந்த வடையைத் தின்னுட்டுத்தான் நீங்க போகணும்...”

டெப்டி - கமிஷனர் சிரித்துக் கொண்டே சொன்னார்: “பரவாயில்லை ஆயா... வடைகளை விற்று... பணம் பண்ணு ஆயா” அப்பாவித்தனமாகப் பதிலளித்தார்.

“இனிமேல் யாரும் வாங்க மாட்டாங்க... குயந்தே... நாழியாயுட்டுது.”

டெப்டி - கமிஷனர் சிரித்துக் கொண்டே, மெதுவடைகளை சைகை காட்ட, போலீஸ்காரர் அதை பொட்டணமாக்கினார். டெப்டி, ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து, ஆயாவின் மடியில் போட்டு விட்டு, ஜீப்பில் ஏறினார். வாங்குகிறவர்கள், கொடுத்து விட்டுப் போவதைப் பார்த்து கூட்டம் ஆச்சரியப்பட்டு, ஆனந்தப்பட்டது.

வீட்டுக்காரி, மாடிக்கு ஓடினாள். சிறிது நேரத்தில் ரமணனும் பின்னால் ஓடினான். அவனை அவள் திட்டுவது இன்னும் கும்பல் கலையாமல் இருந்த கூட்டத்திற்கு நன்றாகக் கேட்டது.
------------
அத்தியாயம் 18


ஒரு வாரம் ரகளை இல்லாமலே ஓடியது.

மல்லிகா, பெண்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போது, வெளியே இருந்து வந்த அவள் தந்தை பெருமாள், வீட்டுக்குள் போனவுடனேயே, அம்மாவுடன் கோபமாகப் பேசுவது கேட்டது. மல்லிகா வீட்டுக்குள் போனாள். செல்லம்மா, புருஷனிடம் எதிர்க் கேள்விப் போட்டாள்.

“எங்க அண்ணன் இப்படிச் செய்ய மாட்டார்... மாட்டார்.” செல்லம்மா திருப்பிக் கத்தினாள்.

“உங்க அண்ணனேதாண்டி... சட்டாம்பட்டியில் லிங்கராஜாவோட தங்கச்சியாம். வயது பதினேழாம். இந்த சோம்பேறிப் பயல் கட்டிக்கப் போறான். நிச்சய தாம்பூலம் ஆயிட்டு. இந்த அநியாயத்தை முருகன் கோவிலுல வச்சு நடத்தப் போறாங்களாம்... பன்னாடப் பயலுக... கட்டுறதே கட்டுறாங்க... கோயிலுல வச்சா கட்டணும்?”

“எங்கண்ணாவா... அட... கடவுளே...”

“உன் அண்ணனே தாண்டி... நீ அடிக்கடி சொல்லுவியே... ‘எங்கண்ணா உங்களை மாதுரி குடிகாரன் இல்ல... குதிரைக்காரன் இல்லே’ன்னு. இப்போ சொல்றதக் கேளுடி. கெட்டப் பழக்கம் உள்ளவன் அயோக்கியனும் இல்ல... அது இல்லாதவன் யோக்கியனும் இல்ல... ஒரு பதினேழு வயசுப் பெண்ணை... பெற்ற மகள் மாதுரி நினைக்க வேண்டிய வெள்ளரிப் பிஞ்சை... இந்த கழுதப்பய திங்கப் போறானாம். பாவம்... அந்தப் பொண்ணு... சித்திக்காரியோட கொடுமை தாங்க முடியாம... எப்படியாவது... ஊர்ல இருந்து ஒழிஞ்சா சரின்னு பேசாம இருக்காம். புலிக்குப் பயந்து ஓநாய்கிட்ட போன கதை... இப்போ... சொல்லுடி... ‘பாயிண்ட்’ இருந்தும் சொத்துக்கு ஆசைப்பட்டு அவன் மேல வழக்குப் போடாத உன் குடிகாரப் புருஷன் யோக்கியனா? இல்ல... சொத்து நமக்கு வரக் கூடாதுன்னு... ஒரு சின்னஞ்சிறிச அழிக்கிற உன் அண்ணனா? ஏண்டி வாய் மூடிவிட்டாய்? இவன் கெட்ட கேட்டுக்கு... கல்யாண நோட்டீஸ் அடிச்சிருக்கான்... மல்லி... உன் அம்மாவுக்கு... இதை படித்துக் காட்டும்மா.”

பைக்குள் ‘சஸ்பென்சாக’ வைத்திருந்த கல்யாண அழைப்பிதழை, பெருமாள் மகளிடம் நீட்டினார். அதை தனக்குள்ளேயே படித்த மல்லிகா, அந்த எழுத்தை நம்பாதவள் போல், எழுத்தில்லாத பின் பகுதியைப் புரட்டினாள். ஒரு இளம் பெண்ணும், இளைஞனும் கைகோர்த்து நிற்பது போன்ற படம். ‘இளைஞன்’ படத்திற்கருகே ஐம்பதைத் தாண்டும், ‘சொக்கலிங்கம்’ என்ற எழுத்துக்கள். அதற்குக் கீழே ‘பேச்சியம்மாள்’ என்ற வார்த்தை.

மல்லிகா, அழைப்பிதழை வாயில் வைத்துக் கடித்துக் கொண்டே, யோசித்தாள். பெண் விடுதலை பேசும் இந்தக் காலத்திலா இப்படி? ஒருத்தி, ஏழையாகப் போய்விட்டால், அவளை யாரும் வாங்கலாம் என்பது இன்னும் நடக்குதே. மாமா சொத்தைக் காப்பாற்ற நினைத்தால், இந்த பேச்சியம்மாவையே தத்து எடுத்து மகளாய் வளர்க்கலாமே! அப்பாவா இப்படிச் செய்கிறார்? அப்பா அல்ல, அப்பாவோட பணம்... பணத்தை, வாலிபமாய் பெண்கள் நினைக்கிறார்கள் என்கிற அகங்காரம். இதைத் தடுத்தே ஆகணும்... தற்காப்பு என்று எண்ணி, தற்கொலைக்குச் சமமான ஒரு காரியத்திற்கு உடன்படும் பேச்சியம்மாவைக் காப்பாற்றியாகணும்...

மல்லிகா, அமைதியாக, ஆணித்தனமாகப் பேசினாள்.

“வாங்கப்பா... வக்கீலைப் பார்க்கலாம்.”

“எதுக்கும்மா...”

“சொக்கலிங்கத்தோட அரவை மில் என் பேர்ல இருக்கு... மளிகைக்கடை என் பேர்ல இருக்கு... அதோட நான் அவரோட வளர்ப்பு மகள். தத்து எடுக்கதுக்கும் சட்டம் இருக்கு. வாங்கப்பா... வக்கீலிடம் போகலாம்.”

செல்லம்மா பதறினாள்.

“மல்லிகா... என்னம்மா... இது?”

“இது உங்களுக்குப் புரியாதும்மா... இது ஒரு இளம் பெண்ணோட விவகாரம். விற்பனைக்கு வந்திருக்கிற ஒருத்தியோட எதிர்காலப் பிரச்சினை... வாங்கப்பா போகலாம். பணம் இருக்கா?”

“கோணி வாங்க ஐம்பது ரூபாய் இருக்கு.”

“பரவாயில்ல... நாம பட்டினி கூட கிடக்கலாம். கேணியில் ஒரு பெண்ணை தள்ளப் போவதை... நாம் பார்த்துட்டு நிற்கப்படாது... வாங்கப்பா...”

மல்லிகாவும், பெருமாளும் புறப்பட்டார்கள். செல்லம்மாவுக்கு, ஒன்றும் ஓடவில்லை. குடித்தனப் பெண்களுடன் இரண்டறக் கலந்து, ஒருவித சமூகப் பிரச்சினையில் தன்னைப் பிணைத்துக் கொண்ட பெருமிதத்தில் மகளும், அந்த மகளைப் பெற்ற பெருமிதத்தில் தந்தையும் நடந்தார்கள்.

பெருமாளுக்கு, வக்கீலைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இல்லை. குடித்துவிட்டு போலீசிற்குப் போய், கோர்ட்டில் நிறுத்தப்படும் போதெல்லாம், அவருக்கு வழக்கறிஞர் பரிச்சயங்கள் நிறைய ஏற்பட்டிருந்தன.

இருவரும் ‘மண்ணடி’யில் இருந்த ஒரு வக்கீல் வீட்டுக்குப் போனார்கள். வக்கீல், பெருமாளைப் பார்த்து, “இன்னுமா... குடியை விடல” என்றார். மல்லிகா, “வணக்கம் சார்” என்றதும், பதிலுக்கு “வணக்கம்” என்றார். அறிமுகங்கள் முடிந்தபிறகு, மல்லிகா, ‘அப்பா’ வீட்டில் தான் வளர்ந்த விவரத்தையும், வாழ்க்கை முறையையும் சொல்லிவிட்டு, பேச்சியம்மாவின் கல்யாணத்தை நிறுத்துவதற்காகவே, இந்த நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகச் சொன்னாள்.

“அது பாயிண்ட் ஆகாதும்மா” என்றார் வக்கீல்.

“பாயிண்டா பண்ணிப் பாருங்களேன் சார்.”

வக்கீல் யோசித்துவிட்டு, சொன்னார்: “ஆல்ரைட். சொக்கலிங்கத்திற்கு ஒரு நோட்டீஸ் விடுவோம். அந்த நோட்டீஸ்ல ஒரு நகலை, பேச்சியம்மாவுக்கு அனுப்பி வைக்கலாம். கல்யாணம் தானாய் நின்னுடும். பேச்சியோட சித்திக்காரி, மூச்சுப் பேச்சில்லாமப் போயிடுவாள்.”

வக்கீல், மல்லிகாவிடம் வக்காலத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். குமாஸ்தாவைக் கூப்பிட்டு பாயிண்டுகளைக் கொடுத்தார். அனுபவப்பட்ட குமாஸ்தா. “இந்த வழக்குல நிச்சயம் ஜெயிச்சிடுவோம் சார். எவ்வளவு பெரிய ‘வீக்’ கான வக்கீலாலும் இந்த கேஸ்ல ஜெயிச்சுடலாம்” என்ற போது, அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்புக் கிட்டாத வக்கீலும் ‘வீக்’காகச் சிரித்துக் கொண்டார்.

அப்போது, “கூப்பிட்டிங்களாமே அப்பா” என்று பழக்கப்பட்ட குரல் ஒன்று கேட்டு, தலை நிமிர்ந்த மல்லிகா, “நீங்களா” என்றாள். சரவணனும் “நீங்களா” என்றான்.

சரவணனும் மல்லிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போது, பெருமாளும் வக்கீலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“காலேஜ்ல... இவங்க... சாரி... நான் படிக்கிற காலேஜ்ல இவங்களும் படித்தாங்க. ஆமாம். எதுக்காக காலேஜ் வரவில்லை? படிப்பை அரைகுறையாவா விடுவது?” என்று சரவணன் இழுத்த போது, மல்லிகா சிறிது நிலை தடுமாறினாள். உதட்டைக் கடித்துக் கொண்டு அவனை சாய்வாகப் பார்த்தாள். பிறகு, “காலேஜ் தான் கண்ணுக்குள்ளேயே நிற்குது” என்றாள். “அவ்வளவு பெரிய கட்டிடத்தை எப்படியம்மா தாங்கிக்கிறே” என்று வக்கீல் ‘விட்’ அடித்த போது, அவளை விடாமல் பார்த்த சரவணன் அவர் சொன்னதைப் புரிந்து கொண்டவன் போல், தலையை ஆட்டினான். அவளுக்கு அது அழகாகத் தோன்றியது.

பெருமாளும், மல்லிகாவும் எழுந்தார்கள். சரவணன் பஸ் நிலையம் வரை வந்து, அவர்களை வழியனுப்பினான். பெருமாள், அவனிடம் குழந்தை மாதிரி நடந்த விஷயங்களை, ஏற்ற இறக்கத்தோடு சொன்னார்.

பஸ் புறப்பட்டது. பெருமாள் அவனைப் பார்த்து, “நம்ம வீட்டுக்கு ஒரு தடவ வா தம்பி” என்றார்.

மல்லிகா, “எங்க வீடு... சின்ன வீடு” என்று சொல்லிச் சிரித்தாள்.

“எனக்கு வீடு முக்கியமில்ல... வீட்டில் இருக்கிற ஆட்கள் தான் முக்கியம்” என்று சரவணன் விடை பெற்றான்.

பஸ் இருக்கையில் இருந்தபடி, திரும்பித் திரும்பிப் பார்த்த மல்லிகா, அப்பா தன்னையே கவனிப்பது போல் தெரிந்ததால், லேசாக நாணப்பட்டுக் கொண்டாள்.
------------
அத்தியாயம் 19


அடிமேல் அடியடித்தால் அம்மியே நகரும் போது, சொக்கலிங்கத்தை சொக்க வைப்பது, மைத்துனர்மார்களுக்குச் சிரமமாகவில்லை. ஏற்கெனவே சட்டாம்பட்டி இளம் பெண்ணுடன், தன்னை இணைத்துப் பார்த்து, லேசாகத் திருப்திப்பட்டுக் கொண்ட அவரிடம், “உமக்குன்னு ஒரு குழந்தை இருந்திருந்தால்... இந்த மல்லிகா மாதுரி நடக்குமா? தான் பெறணும் பிள்ளை... தன்னோட பிறக்கணும் பிறவி” என்று சொல்லும் போதெல்லாம், சொக்கலிங்கம் “போங்கப்பா” என்று சிணுங்கி மைத்துனன்மார்களின் வயிற்றில் நிஜமாகவே, ‘கிச்சுக் கிச்சு’ காட்டினார்.

பிறகு, ஒரு சமயம் திருச்செந்தூர் கோவிலுக்குப் போகும் சாக்கில், அவரைச் சட்டாம்பட்டிக்குக் கூட்டிப் போய், பேச்சியம்மாவைக் காட்டினார்கள். “என்னை சித்திகிட்ட இருந்து காப்பாத்துங்க தாத்தா” என்பது மாதிரி பார்த்த பேச்சியின் பார்வையை, சொக்கு, காதல் சமிக்ஞையாக எடுத்துக் கொண்டார்.

அப்புறம் சென்னைக்கு வந்த பிறகு, சொக்கலிங்கமே “எனக்குன்னு ஒரு பிள்ளை பிறக்க வேண்டாமா...” என்று சொல்வதும், உடனே, மைத்துனன்மார்கள் அவருக்கு ‘கிச்சு கிச்சு’ காட்டுவதும், கடைப் பையன்களுக்கே, தங்களையே யாரோ ‘கிச்சு கிச்சு’க் காட்டுவது போல் சிரிப்பைக் கொடுத்தது.

பார்வதிக்கு, அண்ணன்மார்களின் திட்டம் புரியவில்லை. அவர்களிடமே, அவள் சொன்ன போது “ராமன், மல்லிகா இருந்தால் தான் உருப்படுவான். அவனை... சுவீகாரம் எடுத்தால், மச்சான் மண்டையப் போட்ட உடனே கோவிந்தா. சட்டாம்பட்டிக்காரியைக் கட்டினால்... உனக்கு அடக்கமாய் இருப்பாள். கிராமத்துப் பொண்ணு பாரு” என்றார்கள்.

சொக்கலிங்கம் தன் சொந்தக்காரப் பெண்ணைக் கட்டிவிட்டால், அப்புறம் சொத்தை பரிபாலனம் செய்யலாம் என்று பார்வதியின் சின்ன அண்ணன் நினைத்தார்.

பெரிய அண்ணன், இதைப் புரிந்து கொண்டு, “அது எப்படிடா?” என்றார். உடனே சின்னவர் “உன் பெண்ணை... என் மைத்துனன் என்ஜினியருக்கு முடிக்கலாமுன்னு நினைக்கேன். இப்போதான் ‘எப்படி’ன்னு யோசிக்கிறேன்” என்றார். அதனால், எதிர்ப்பை அகற்றிக் கொண்டே “எப்போடா... அந்தக் கல்யாணத்தை வைக்கலாம். எப்போடா இந்தக் கல்யாணத்தை வைக்கலாம்” என்றார் பெரியவர். பொது எதிரியான மல்லிகாவைக் கழித்துக் கட்டியாகிவிட்டது. இன்னொரு பொது எதிரியான ராமனையும் கழட்டி விட வேண்டும் என்ற பொது லட்சியம் அவர்களை ஒன்றுபடுத்தியது.

பார்வதி, இதை படிப்படியாகப் புரிந்து கொண்டாள். கணவனிடம், கதறிப் பார்த்தாள். அண்ணன்மாரின் பாசம், வெறும் பாசாங்கு என்பதைப் புரிய வைக்கப் பார்த்தாள். ஆனால் சொக்கலிங்கம், அவளிடமே பல தடவை “நான் எதுக்கு சொல்றேன்னா பேச்சி...” என்று, பேச்சியம்மாவையே பேச்சுக்குப் பேச்சு சொன்னதால்... அது முற்றிவிட்ட பைத்தியம் என்பதைக் கண்டு கொண்டாள். சகித்துக் கொள்ளப் பார்த்தாள். ஒரு தடவை “என் மகள் மல்லிகா கிட்டேயே போயிடுறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். சொக்கலிங்கம் அவளைப் பிடித்துக் கொண்டார். அவள், மார்க்கெட்டுக்குப் போகும் போது கூட கடைப்பையன்கள் மூலம் கண்காணித்தார். பார்வதியும் யோசித்தாள். எந்த முகத்தோடு என் மகளிடம் போக முடியும்? அவளை என்ன பாடு படுத்திவிட்டேன்... அவள் மனம் எப்படிக் கலங்கியிருக்கும்... அவள் இங்கே இருந்தால், இப்போ எப்படி இருக்கும்...!

பார்வதி யோசித்துக் கொண்டிருந்த போது, பின் யோசனை இல்லாமலே, சொக்கலிங்கத்திற்கும் பேச்சியம்மைக்கும் கல்யாணம் நிச்சயமாகி, தேதியும் குறித்தாகி விட்டது. சட்டாம்பட்டியில் இருந்து, சித்திக்காரி வந்து, வாயெல்லாம் பல்லாகப் பேசி, பணத்தை வாங்கிக் கொண்டு போய்விட்டாள். இனிமேல் பேச்சியைப் பிடித்துக் கொடுக்க வேண்டியது தான் பாக்கி.

விஷயத்தைக் கேள்விப்பட்ட ராமன் கொதித்தான். ‘ஒரு நாள் சின்ன மாமா கடையில், ஏதோ ‘தமாஷா’ சோடா பாட்டில் வீசினால், சோமாறி மாமன்கள் இப்படியா பண்றது. அந்த ‘கிழவன்’ இன்னாதான் நினைச்சிருக்கிறான். ஒரே பூடு பூட்டாத்தான் புத்தி வரும்! எனக்கு சொத்து தாரதாய் சொல்லிட்டு, என்னான்டயே, வேலையைக் காட்டுறான் கஸ்மாலம்’ என்று கொதித்து எழுந்தான். வயிறு முட்டக் குடித்து விட்டு, சொக்கலிங்கத்தின் முன்னால் வந்து கத்தினான்.

“கிழவா... அந்தப் பெண்ணோட வயசென்ன ஒன்னோட வயசென்ன... யோசித்துப் பாருடா... அப்பாவிப் பொண்ணை ஏண்டா கெடுக்கிறே கஸ்மாலம்? மவனே... இப்போ சொல்றது தான், எப்போ சொல்றதும்... நீ எனக்கு சொத்து தராட்டியும் பரவாயில்லே... பேசாம மல்லிகாவை... கூட்டிக்கினு வா... அவள் எனக்கு வேண்டாம். ரீசண்டான மாப்பிள்ளையாப் பார்த்து கல்யாணம் செய்து வை. இல்லே... ஏண்டா கஸ்மாலம் பேச மாட்டே? சாவுற வயசுல ஆசயப் பாரு... ஏய்... டேய்... ஏய்...”

சொக்கலிங்கம் அதிர்ந்து போனார். அந்த ரவுடி சொன்ன வார்த்தை என்னும் சேற்றுக்குள்ளும், மனிதாபிமானம் என்ற செந்தாமரை பூத்திருப்பதைக் கண்டார். வீணான அவப்பெயருக்கு ஆளாகிவிட்டோமே என்று வருந்தினார். அதே சமயம், பேச்சியம்மாவையும் அவரால் மறக்க முடியவில்லை. இப்படி, என்ன செய்வதென்று அவர் தவித்துக் கொண்டிருந்த போது, மல்லிகாவிடம் இருந்து சொத்துக்கு உருமை கோரி நோட்டீஸ் வந்தது. அது அவருக்கு, தனது ஈமச் சடங்கிற்கான பத்திரிகை போல் தெரிந்தது. அதில் கறுப்பு பார்டர் போட்டிருக்கும்! இதை, கறுப்புக் கவுன் போட்ட வக்கீல் அனுப்பியிருக்கிறார்.

“என் மகளா... இப்படிச் செய்துவிட்டாள்? என் மகள் என்றால் இப்படிச் செய்வாளா... செல்லக்கிளியே... இதுக்கா உன்னை வளர்த்தேன்... இதுக்கா உன்னை தத்து எடுத்தேன்? இதுக்கா... இதுக்காம்மா?” அவருக்கு அழுகையே வந்துவிட்டது.

ஓரிரு நாட்கள் ஓடின. சட்டாம்பட்டியில் இருந்து, கல்யாணம் கிடையாது என்று வந்த கடிதத்தை, பார்வதி, பிரித்துப் படிக்குமுன்னாலேயே, அந்தக் கடிதம், எங்கிருந்து வந்தது என்ற விவரம் தெரியும் முன்னாலேயே, சொக்கலிங்கம் மார்பைப் பிடித்துக் கொண்டே கத்தினார்.

“எய்யா... எம்மா... நெஞ்சை வலிக்கே... நெஞ்சு...”

சொக்கலிங்கம், மார்பைப் பிடித்துக் கொண்டே படுக்கையில் விழுந்தார். “என்னாங்க... என்னாங்க” என்று சொல்லிக் கொண்டே ஓடி வந்த பார்வதியின் வார்த்தைகள் தன் காதில் விழும் முன்பே, அவர் படுக்கையில் விழுந்தார்.
---------------
அத்தியாயம் 20


அப்பாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது சரிதானா என்று யோசித்து யோசித்து, மல்லிகாவிற்குத் தலை குழம்பியது.

அப்போது, மல்லிகாவின் தம்பி பரமசிவத்திடம், சரவணன் ஒரு காகிதத்தை நீட்டி, விசாரித்துக் கொண்டிருந்தான்.

மல்லிகாவிற்கு, நாடி நரம்பெங்கும் ஏதோ ஒன்று வியாபித்தது. சொல்ல முடியாத, சொன்னாலும் விளங்காத அச்சத்தையும், அதே சமயம் அஞ்சாமையையும், துன்பத்தையும், அதேசமயம் இன்பத்தையும் ஏக்கத்தையும், அதே சமயம் எதிர்ப்பையும், பலமுனைப் பார்வையும், அதே சமயம் ஒரு முனைப்பட்ட உள்ள உணர்வையும் கொடுக்கும், ஏதோ ஒரு சுகம்... ஏதோ ஒரு...

சரவணனிடம், உள்ளத்தை முன்னால் விட்டு, உவகை முட்ட அவள் பின்னால் நடந்தாள். மெல்ல மெல்ல நடந்தாள். இருபதடி தூரத்தில், குடித்தனத் தோழிகளை பத்துத் தடவை திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே, போனாள். பிறகு, “வக்கீல் அப்பா அனுப்பி இருப்பாங்க... இல்லன்னால் வரவா போறீங்க...” என்று அவனுக்குக் கேட்கும்படியாகப் பேசுவதாய நினைத்து, தனக்கே கேட்காமல் பேசினாள்.

சரவணன், அவளையே பார்த்தான். உல்லி உல்லிப் புடவைக்குப் பதிலாக, சின்னாளப்பட்டி காதில் ‘ரிங்’ இல்லை. கழுத்தில் செயின் இல்லை. கையில் வளையல்கள் இல்லை. ஆனால் இவற்றை விட மேலான ஏதோ ஒன்று அவளிடம் இருப்பது போல் தோன்றியது. காதலா... கனிவா... சேவை கொடுக்கும் திருப்தியா...

தட்டுத்தடுமாறி சரவணன் ஏதோ பேசப் போன போது, குடித்தனப் பெண்கள் ‘ஏதோ இருக்கு’ என்பது போல் பார்த்த போது, மல்லிகாவின் அம்மாள் செல்லம்மா, “அய்யோ... கடவுளே... எங்க அண்ணனுக்கா... என் உடன்பிறப்புக்கா” என்று தலையில் அடித்துக் கொண்டே வந்தாள். மல்லிகா துடித்துப் போய், அம்மாவின் கரங்களைப் பற்றிய போது, அவள் “உங்க அப்பாவ... தண்டையார்பேட்டையில்... மணிக்கூண்டுக்குப் பக்கத்தில் இருக்கிற நர்சிங்ஹோமில் சேர்த்திருக்காம். பிழைக்கிறது கஷ்டமாம்... அய்யோ... அண்ணா” என்று அரற்றினாள். பிறகு “‘மல்லிகா... மல்லிகா...’ன்னு சொல்லுக்குச் சொல்லு புலம்புகிறாராம்” என்று சொல்லிப் புலம்பினாள்.

மல்லிகா விக்கித்து நின்றாள். கல்லாகி, மீண்டும் பெண்ணான அகலிகை, உடனே கல்லானது போல, குளிர்ச்சியை விரும்புவளை, கொட்டும் உறைபனிக் காலத்தில் பனிக்கட்டிக்குள் போட்டதுபோல், மலர்க்காடு பிணக்காடாய் ஆனது போல், துவண்டு நின்றாள். “மல்லிகா மல்லிகான்னுதான் புலம்புகிறாராம்” என்று அம்மா சொன்ன வார்த்தைகள், மலைப்பாம்பாய் மாறி, அவளை விழுங்கிக் கொண்டிருந்தது. புலியாய் மாறி, அவள் மீது பாய்ந்து கொண்டிருந்தது.

மல்லிகா, சரவணனை ஏறிட்டுப் பார்த்தாள், கேட்டாள்: “சைக்கிளில் தானே வந்தீங்க...”

“இல்ல, ஸ்கூட்டரில்...”

“என்னை ஸ்கூட்டரில் கொண்டு விட முடியுமா?”

சரவணன், செல்லம்மாவைப் பார்த்தான். அவள், அந்தச் சமயத்திலும், ஊர் வாய்க்குப் பயந்தவளாய் “நாம ரெண்டு பேரும் போகலாம் மல்லிகா” என்றாள்.

மல்லிகா, வெறி பிடித்தவள் போல் கத்தினாள்.

“என்னால்... ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது சரவணன்! உங்களால் என்னைக் கொண்டு போய் விட முடியுமா... முடியாதா... இவ்வளவுதானா நீங்கள்...”

மல்லிகா, வெளியே ஓடினாள். எந்தக் கால்களைப் பிடித்து, தத்தித்தத்தி நடந்தாளோ, அந்தக் கால்களைப் பிடித்துக் கதற வேண்டும். பெறாமலே பெற்று, கண்படும் என்று கட்டுப்படுத்தியும், கட்டுப்படுத்தினால் துவள்வாள் என்று விட்டுப் பிடித்தும், உயிரிலும் உயிராய் வளர்த்த அப்பாவை, உடனே பார்த்தாக வேண்டும்.

மல்லிகா, தலைவிரி கோலமாக ஓடிக் கொண்டிருந்தாள். அருகே வேகமாக வந்து நின்ற சரவணன் ஸ்கூட்டரைப் பாராமலே ஓடினாள். பிறகு அந்த ஸ்கூட்டர் சற்று முந்திப் போய், வழிமறிப்பது போல் நின்ற போது, பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவன் தோளைப் பிடித்துக் கொண்டாள். ஆனால், அதில் எந்தவித ஸ்பரிசமும் ஏற்படவில்லை. முதன் முதலாக, கண்ணெல்லாம் நிறைந்தவன் மேல் கைபட்ட நாணம் இல்லை. ஓடிக்கொண்டிருக்கும் ஸ்கூட்டருக்கு முன்னால், சொக்கலிங்கம் நின்று கொண்டிருப்பது போன்ற பிரமை. இதனால் “பார்த்து... பார்த்து” என்றாள். சொக்கலிங்கம், அந்த ஸ்கூட்டருக்கு முன்னாலேயே ஓடுவது போன்ற இன்னொரு பிரமை இதனால் “சீக்கிரம் சீக்கிரம்” என்றாள்.

சொக்கலிங்கத்தின் கால் பக்கம், பார்வதி சோகமாக உட்கார்ந்திருந்தாள். “எதுக்கும் ஒரு உயில் எழுதி வச்சிடுங்க” என்று மைத்துனன்மார்கள், சுற்றி நின்று உபதேசம் செய்து விட்டு, பார்வதியைக் கூட்டிக் கொண்டு வெளியே எங்கேயோ போயிருந்தார்கள். வாசலில் வழி மறிக்கப் பார்த்த நர்சை தள்ளி விட்டுவிட்டு மல்லிகா உள்ளே ஓடினாள்.

“அப்பா... அப்பா... என் அப்பா!”

மல்லிகா, அப்பாவின் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டே விம்மினாள். அவர் காலில் தலை வைத்துப் புரண்டாள். கன்னத்தைத் தடவி விட்டுக் கதறினாள்.

“அப்பா... அப்பா... என் அப்பா!”

மேகத்தைக் கீறிய இடியைப் போல், இடியைக் கீறிய மின்னலைப் போல், மின்னலைக் கீறிய ஒளியைப் போல், அவள் தன்னைக் கீறி, தன் இதயத்தையே வெளியே எடுத்து வைப்பவள் போல், “அப்பா... அப்பா...” என்றாள்.

சொக்கலிங்கம் மல்லிகாவின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். “வந்திட்டியாம்மா... வந்திட்டியாம்மா” என்று அவரது வாய், வார்த்தைகளைத் தோற்றுவித்த போது, அவர் “என்னை விட்டுட்டு... உன்னால் எப்படிம்மா இருக்க முடிஞ்சுது? என்னால் முடியல... அதனாலதான் இந்த கதி” என்று அவர் அடம்பிடிக்கும் சிறுவனைப் போல் கோபமில்லாதக் கோபத்துடன், மிஞ்சுவது போல் கெஞ்சியும், கெஞ்சுவது போல் மிஞ்சியும் எழுந்து உட்கார்ந்தார். கட்டில் விளிம்பில் சாயப் போன அவரை, மல்லிகா தன் மார்போடு அணைத்துக் கொண்டார்.

இதற்குள் உள்ளே வந்த டாக்டர், “கொஞ்சம் பேசலாம் என்று சொன்னால் இப்படியா பேசறது” என்றார். ஆனால், ‘பேஷண்ட்’ கொலாப்ஸ் ஆகாமல், குத்துக் கல்லாய் ஆனதில் - அவரை அப்படி ஆக்கியதில் பெருமைப்பட்டார்.

“மல்லி... மல்லிகா” என்று சொல்லிக் கொண்டே பார்வதி உள்ளே ஓடி வந்தாள். இருவரில், யார் முதலில் அணைத்தது என்று தெரியாமல், ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்கள்.

“அம்மா... அம்மா...”

“ஏண்டி அழுவுறே... ஏண்டி இப்படி இளைச்சிட்டே. என்னை நினைச்சியா... இனிமேல்... என்னை விட்டுப் போவியா... போவியாடி...?”

“அழாதிங்கம்மா... அழாதிங்கம்மா...!”

மீண்டும், இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்கள்.

பார்வதி, மகளின் தலையை கோதிவிட்டுக் கொண்டே, “டாக்டர், இனிமேல் உங்கள் மருந்து கூட தேவையில்லை. இவர் இப்பவே நடப்பார்” என்றாள். உடனே டாக்டர் “ஆனந்தத்திலேயும் அதிர்ச்சி வரப்படாதும்மா” என்றார். “மருந்து வேண்டாம் என்றால் எப்படி?”

இதற்குள், பெருமாளும், செல்லம்மாவும் பிள்ளை குட்டிகளோடு வந்து நின்றார்கள். பெருமாள், உணர்ச்சி வசப்பட்டு, சொக்கலிங்கத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “எந்த பயலுவளோ... நீங்கள்... சாகணுமுன்னு நான் சொன்னதாய் கோள் சொன்னாங்களாமே. சத்தியமாய் சொல்லுகிறேன்... உங்கள் சொத்துக்கு நான் ஆசைப்படல. அந்தப் பொருந்தாத கல்யாணத்தால... பேச்சியும்... என் தங்கை பார்வதியும் அவஸ்தப்படக் கூடாதுன்னு தான் நோட்டீஸ் அனுப்பினேன். மற்றபடி...”

சொக்கலிங்கம் சிரித்துப் பேசினார்.

“அதெல்லாம் எதுக்குடா பேசுற... ஆமாம்... உன்னை குடிக்கக் கூடாது... குதிரைகிட்ட போகக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருப்பேன். அப்போ... நான் சொல்லும்போது கேட்கல. இப்போ மல்லி சொல்லாமலே நிறுத்திட்டியாம். என்னடா நியாயம்...”

பெருமாள் மகிழ்ந்து போனார். சின்ன வயதிலேயே ‘டா’ போட்டுப் பேசியவர்கள். கல்யாணம் ஆன பிறகும் ‘டா’ போட்டவர்கள். சொக்கலிங்கம், பகையை மறந்துட்டார்.

“அந்தப் பெருமை உனக்குத்தானடா... மல்லி உன்னோட பொண்ணுதானடா...”

இருவரும், ‘டாட்டா’ காடாமல், ‘டா’ போட்டுப் பேசியதைக் கேட்ட பார்வதியின் அண்ணன்மார்கள், முகஞ் சுழித்தார்கள். இவர்கள் ஒன்றாகச் சேர்ந்தால், அருமைத் தங்கை என்னாவது? பெரியவர், அதட்டிக் கூப்பிட்டார்.

“பார்வதி... கொஞ்சம் வெளியில் வாரீயா... உன்கிட்ட தனியாய் பேசணும்.”

மல்லிகாவையே பார்த்துக் கொண்டிருந்த பார்வதி, எரிச்சலோடு பதிலளித்தாள். “நான் உயிரோட இருக்கும் போதே, இன்னொருத்திக்கு ஏற்பாடு பண்ணுனவங்க... என்ன அண்ணன்? என்ன தம்பி? நான் வெளியில வரவும் வேண்டாம். நீங்கள் உள்ளே நிற்கவும் வேண்டாம்.”

அண்ணன்மார்கள் அதிர்ச்சியுடன் போனார்கள். சொக்கலிங்கம், அப்போதுதான் ஒரு மூலையில் ஒதுங்கி நின்ற சரவணனையும், ஒரு பெண் பட்டாளத்தையும் பார்த்து விட்டு, மல்லிகாவை அர்த்த புஷ்டியாகப் பார்த்தார்.

மல்லிகா நாணிக்கொண்டே, “அவர் பெயர் சரவணன். என்னோட நண்பர். அவங்க... என்னோட... அந்த வீட்டுல இருக்கிற சகோதரிங்க... அக்காளுங்க...”

சொக்கலிங்கம், சரவணனைப் பார்த்துவிட்டு பேசாமல் நின்று கொண்டிருந்த பெண்களைப் பார்த்தார். மாயையால், கடவுள் தன்னை அலங்கரித்துக் கொண்டாலும், அந்த மாயை எப்படி கடவுளாகாதோ, அது போல், அரவை மில்லும், மளிகைக் கடையும் வாழ்க்கைக்குத் தேவையென்றாலும், அவையே வாழ்க்கையாகாது என்பதை மரண விளிம்பில் நின்ற போது புரிந்து கொண்ட சொக்கலிங்கம், “உட்காருங்கம்மா” என்றார்.
------------
அத்தியாயம் 21


மல்லிகா, ஒரு வாரம் நர்சிங் ஹோமிலேயே இருந்தாள். அப்பாவுக்கு, ஜூஸ் பிழிந்து கொடுத்தும், கால்களைப் பிடித்துவிட்டும், கைவிரல்களை நெட்டி முறித்தும் கவனித்துக் கொண்டாள். மாலை வேளையில், அப்பாவையும் அம்மாவையும் கூட்டிக் கொண்டு அருகே இருந்த பூங்காவிற்குப் போனாள்.

சொக்கலிங்கம் தேறிக் கொண்டே வந்தார்.

அந்த ஒரு வார காலத்தில், சரவணன், இரண்டு தடவை வந்தான். முதலில் வரும்போது, “இந்தா... நீ சொன்னது மாதுரியே... அப்பா டிராப்ட் போட்டிருக்கார். ஸ்டாம்ப் இருக்கிற இடத்தில் கையெழுத்துப் போட்டு வைத்துக்கோ...” என்றான். ‘நீங்க’வை, அவன் ‘நீ’யாக்கியதில் மல்லிகா, தானும் அவனும் ஒன்றானது போல, சிரித்தாள்.

மேலும் ஓரிரு நாட்கள் விடைபெற்றன.

வாழ்க்கையில் இருந்து விடைபெறாத அளவிற்கு நன்றாகத் தேறிய சொக்கலிங்கம், நர்சிங் ஹோமிலிருந்து விடைபெறும் நாள் வந்தது. செட்டியார் காரும், வந்து நின்றது.

பார்வதி, மல்லிகாவிற்கு தலைவாரி, பின்னலிட்டாள். இரட்டைப் பின்னல். கண்ணுக்கு மையிட்டாள். தண்டையார்பேட்டையில் வாங்கிய, நைலக்ஸ் புடவையை கட்டாயப்படுத்தி, கட்டிக் கொள்ள வைத்தாள். மல்லிகாவிற்கு, தியாகராய நகர் வீட்டை நினைக்கவே ஆனந்தமாக இருந்தது. எப்போது போவோம் என்பது போல், அவசர அவசரமாக பிளாஸ்டிக் கூடையை எடுத்து வைத்தாள். அப்பாவின் சூட்கேசை தூக்கி டிரைவரிடம் கொடுத்தாள். ‘தியாகராய நகர் போனதும், ‘ஷவர் பாத்’தில் குளிக்க வேண்டும்! டன்லப் பில்லோ கட்டிலில் படுத்துப் புரள வேண்டும்! டி.வியைப் போட்டு, கிரிக்கெட் மேட்சைப் பார்க்க வேண்டும்! என்ன... இந்த அப்பா... இன்னுமா... டாக்டரிடம் பேசிக்கிட்டு இருக்கிறார்.

பெருமாளும், மனைவி மக்களோடு வந்து விட்டார். பரமசிவம் பயல் மட்டும், மாமாவை சங்கடத்துடன் பார்த்தான். கால் மணி நேரத்தில், குடித்தனப் பெண்களும் வந்து விட்டார்கள். கந்தசாமியின் மனைவி, கண்ணீர் விட்டுக் கொண்டே வந்தாள். யாரது... அடடே... இட்லி ஆயாவா...

மல்லிகா, இட்லி ஆயாவை, நைலக்ஸ் புடவையோடு போய் நின்று, அணைத்துக் கொண்டாள். ஆயா, அங்கே வந்து சொக்கலிங்கத்திடம், “இந்தப் பிள்ளையாண்டான் தான் சொக்கலிங்கமா... பெரியபாளையாத்தாகிட்டே... ஒரு வாட்டி போயிட்டு வா நாய்னா... உனக்கு ஒண்ணும் வராது” என்றாள்.

பிறகு, மல்லிகாவின் காதோடு காதாக “நீ நல்லா இருப்பே குயந்தே... நீ... இங்கேயே இருக்கணுமுன்னு சொல்லத் தோணினாக்கூட... சொல்ல விரும்பல குயந்தே... ஏன்னா... நீ இருக்க வேண்டிய இடம் அதுதான் குயந்தே... ஆனால் அடிக்கடி வந்து, முகத்த காட்டிட்டுப் போ குயந்தே... எங்களை மறந்துடாதே குயந்தே... நீ மறக்க மாட்டே குயந்தே...”

‘இட்லி’ ஆயா, தன் பொட்டல் கண்களைத் துடைத்துக் கொண்டாள். தன் மடியில் கொண்டு வந்திருந்த ஒரு இட்லியை எடுத்து, மல்லிகாவின் வாயில் ஊட்டினாள். மல்லிகா, ஆயாவையே பார்த்தாள். கடந்த நாற்பது வருடமாய், பாசத்தைப் பார்த்திருக்க மாட்டாளோ...

பெருமாள் சத்தம் போட்டார்.

“ராகு காலம் வரப் போவுது. சீக்கிரம்... மல்லி... இன்னுமா பேசி முடிக்கலே. வண்டில ஏறும்மா...”

காரில், சொக்கலிங்கம் ஏறிக் கொண்டார். பார்வதியும் ஏறிக் கொண்டாள். மல்லிகா போவதற்காக கார் கதவைப் பிடித்துக் கொண்டே, டிரைவர் நின்றார்.

காருக்குள் போகப் போன மல்லிகா, ‘இட்லி’ ஆயாவைப் பார்த்தாள். கந்தசாமியின் மனைவியைப் பார்த்தாள். ‘பீடி சுத்தும்’ காமாட்சியைப் பார்த்தாள், சைக்கிள் ரிக்‌ஷாக்காரர் மனைவி மாரியம்மாளைப் பார்த்தாள். அங்கே இல்லாத ராக்கம்மாவைப் பார்த்தாள். இவர்களை விட்டுவிட்டுப் போகக்கூடாது... இவர்களை செல்வத்தில் தான் என்னால் புரள வைக்க முடியல... அவர்கள் வறுமையில் வாடும் போது, துணையாகவாவது நிற்கணும்... வீட்டுக்காரி மீண்டும் இட்லி ஆயாவை இம்சை செய்யப் பார்க்காள்னு மாரியம்மாள் சொன்னாள். இந்த ராக்கம்மா வேற கஷ்டத்துல இருக்காள்... இவர்கள் கொடுமைப்படுத்தப் படாமல் இருக்கணுமுன்னா, இவர்களை கொடுமைப்படுத்த முயன்றாலும் முடியாதுன்னு ஒரு எண்ணம் வரணும்... அந்த எண்ணத்தின் சின்னமாக... நான் இவர்களோடயே இருக்கணும்... பிறகு, ஒரு முடிவுக்கு வந்துவிட்டவள் போல், காரில் ஏறாமலே, குடித்தனப் பெண்களைப் பார்த்தாள். “அப்பா! நான் இவர்களோடேயே இருந்து விடுகிறேன்.”

சொக்கலிங்கம் பதறினார்.

“என்னம்மா சொல்றே... என்னம்மா சொல்றே?”

“கவலைப்படாதிங்க அப்பா... நான் இனிமேல் உங்கள் பெண் தான். அடுத்த ஜென்மமுன்னு இருந்து, நினைக்கிறது நிறைவேறும் என்றால் நான் உங்கள் பெண் தான். இங்கே... நான் இருக்க வேண்டிய கட்டாயம். இதனால... அங்கே வராமல் போகமாட்டேன். காலையில், இங்கேன்னால், சாயங்காலம் அங்கே. ஒரு நாளைக்கு தியாகராயநகர், இன்னொரு நாளைக்கு வண்ணாரப் பேட்டை... பரமசிவம்... கார்ல ஏறுடா...”

பார்வதி, கண்ணீரும் கம்பலையுமாகப் புலம்பினாள்.

“என்னம்மா இது... இன்னுமா யோசிக்கிற... நான் பழைய பார்வதி இல்ல... அதோட உன்னை வளர்த்தவடி. மடியில் போட்டுத் தாலாட்டியவள்... தோளில் தூக்கிக் கொஞ்சுனவள்... இதை விட... நீயே... என்னைக் கொன்னுடுடி...”

“சத்தியமாய்... சொல்றேன், நீங்கள் தான் என்னோட அம்மா... நீங்கள் சம்மதிக்காத எந்த விஷயத்திலேயும் ஈடுபட மாட்டேன். அது கல்யாணமாய் இருந்தாலுஞ் சரி...” என்றாள் மல்லிகா.

சொக்கலிங்கம் மல்லிகாவின் முகத்தைப் பார்த்த போது, அவள், அவரிடம் “இந்தாங்கப்பா... சொத்துல எனக்கு உரிமை கிடையாதுன்னு... நான் எழுதியிருக்கிற பத்திரம்...” என்று சொல்லி, சரவணன் கொடுத்திருந்த காகிதத்தை நீட்டினாள்.

சொக்கலிங்கம், அதைப் பிரித்துப் படிக்கப் போன போது பார்வதி, அதைப் பிடுங்கி, சுக்குநூறாகக் கிழித்துப் போட்டுவிட்டு, “உன் மனசில் என்னடி நெனச்சிக் கிட்டே... பல்லு உடைஞ்சிடும்” என்றாள் அழுது கொண்டே...

மல்லிகா மன்றாடினாள்.

“என்னை மன்னிச்சிடுங்க அம்மா... நான் செய்தது முட்டாள் தனந்தான். எனக்கு உங்கள் மேலதான் ஆசையே தவிர... மற்றதுல ஆசையில்லை என்கிறதை காட்டுவதற்காக எழுதினேன். தப்புன்னா மன்னிச்சிடுங்கள். இல்லன்னா, உங்கள் மகளை நல்லா அடியுங்கள்... இந்தாங்க கன்னம்...”

மல்லிகா, முதுகைக் குனிந்து, முகத்தைக் காட்டிய போது, பார்வதி அதில் முத்தமிட்டாள். மல்லிகா, சமரசம் செய்தாள்.

“சரிம்மா, நீங்கள் இப்போ புறப்படுங்கள். நான் காலையில் அங்கே வந்துட்டு... சாயங்காலம் இங்கே வந்துடுறேன்...”

கார் புறப்பட்டது. செல்லம்மா ஏறிக் கொண்டாள். பெருமாள், “தங்கசாலை வரைக்கு வாரேன். பள்ளிப்பட்டுல கோணி கிடக்குது” என்று சொல்லிக் கொண்டே முன்னிருக்கையில் ஒட்டிக் கொண்டார்.

கார் போய்விட்டது.

மல்லிகா, ‘இட்லி’ ஆயாவை தன் பக்கமாய் சேர்த்துப் பிடித்துக் கொண்டே, இதர குடித்தனப் பெண்களுடன் சேர்ந்து இணைந்து, பிணைந்து நடந்தாள்.

(முற்றும்)

This file was last updated on 12 July 2021
Feel free to send the corrections to the webmaster (at pmadurai AT gmail.com)