pm logo

சமுத்திரம் எழுதிய
மூட்டம் (நாவல்)


mUtttam (novel)
by cu. camuttiram
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

மூட்டம்‌
சு. சமுத்திரம்‌

(பாபர்‌ மசூதியை இடிக்கப்பட்ட கொடுமையை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல்‌ தமிழ்‌ நவீனம்‌)

Source:
மூட்டம்‌
சு. சமுத்திரம்‌
முதல் பதிப்பு- அன்னம்‌, 1994 ஜூன்‌; இரண்டாம்‌ பதிப்பு- ஏகலைவன்‌ , 1996 ஜுலை
விலை ரூ. 80
நூல்‌ கிடைக்கும்‌ இடங்கள்‌: மணிவாசகர்‌ பதிப்பகம்‌, பாரிமுனை, சென்னை- 104.
கிறித்துவ இலக்கியச்‌ சங்கம்‌, பார்க்‌ டவுன்‌, சென்னை- 3.
ஏகலைவன்‌ பதிப்பகம்‌, 9, இரண்டாவது குறுக்குத்‌ தெரு, டாக்டர்‌ ராதாகிருஷ்ணன்‌ நகர்‌, சென்னை-1.
-------
அணிந்துரை

பூக்கடைக்கு விளம்பரம்‌ தேவையில்லை. சு.சமுத்திரத்தின்‌ படைப்புகளுக்கு, முன்னுரை-அணிந்துரை எல்லாம்‌ தேவையில்லை. அவருக்கென்று ஒரு வாசகர்‌ வட்டம்‌ ஏற்கனவே உள்ளது. அந்த எளிமையான நடை, அதற்குள்‌ உள்ளாடிக்கிடக்கும்‌ ஒருவகை சமூக நையாண்டி அவரின்‌ படைப்புகளுக்கு தனிக்‌ கவர்ச்சியைத்‌ தந்து கொண்டிருக்கின்றன. த.மு.எ. ச. மீதுள்ள மதிப்பின்‌ காரணமாகவே இந்த அணிந்துரையைக்‌ கேட்டிருக்கிறார்‌ என நினைக்கிறேன்‌.

“செம்மலர்‌” ஏட்டில்‌ தொடராக வெளிவந்த இந்த நவீனத்திற்கு ஒரு தனிச்‌ சிறப்பு உண்டு. பாபர்‌ மசூதியை இடித்து இந்தியாவின்‌ மானத்தைக்‌ கப்பலேற்றினார்களே, அந்தக்‌ கொடுமையை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல்‌ தமிழ்‌ நவீனம்‌ இதுவாகத்தான்‌ இருக்கும்‌. தன்‌ காலத்தில்‌, தன்‌ கண்‌ முன்னால்‌ நடக்கிற அவலங்களை, அநீதிகளைக்‌ கருப்பொருள்‌ ஆக்குவதுதான்‌ ஒரு சமூகப்‌ பொறுப்புள்ள படைப்பாளியின்‌ கடமையாக இருக்கும்‌. பாரதியின்‌ கவிதைகளில்‌ மட்டுமல்ல, அவரின்‌ கதைகளிலும்‌ கூட அந்தக்‌ காலத்தின்‌ ஆகப்பெரும்‌ பிரச்சினையான அடிமை விலங்கு அடிச்சரடாய்‌ வந்துள்ளது. இன்று நம்‌ கண்முன்னால்‌ ஒரு மாபெரும்‌ அக்கிரமம்‌ நடந்துள்ளது. 450 ஆண்டுகளுக்கும்‌ மேலாக இருந்த ஒரு சின்னம்‌- இந்தியப்‌ பழமையின்‌ பாரம்பரியத்தின்‌ ஒரு சின்னம்‌- தகர்த்துத்‌ தரைமட்ட மாக்கப்பட்டது. தேச ஒருமைப்பாட்டு உணர்வின்‌ மீது பேரிடி வீழ்ந்தது. மூவாயிரத்திற்கும்‌ மேற்பட்டோரின்‌ உயிர்கள்‌ பிடுங்கப்பட்டன. அவர்களில்‌ பெரும்பாலோர்‌ சிறுபான்மை சமூகத்தினர்‌. இவ்வளவு பெரிய கொடுமை எத்தனை எழுத்தாளர்களின்‌ நெஞ்சைக்‌ குலுக்கியது? எழுத்தாளப்‌ பிரபலங்களில்‌ சு.ச.வைத்‌ தவிர வேறு யாரும்‌ இதை வைத்து நவீனம்‌ படைத்ததாய்த்‌ தெரியவில்லையே!

சமகால வாழ்வைக்‌ கலையழகோடு பிரதிபலிக்கும்‌ கண்ணாடிகளாக இலக்கியங்கள்‌ திகழ வேண்டும்‌. இங்கோ பல கண்ணாடிகள்‌ ரசம்‌ பூசப்படாதவையாக உள்ளன. அவற்றின்‌ வழியாகப்‌ பார்த்தால்‌ எழுத்தாளர்களின்‌ சுய வக்கிரங்களே, சுய குழப்பங்களே தெரிகின்றன. இவர்களிலிருந்து சு.ச. மாறுபட்டவர்‌ என்பது திண்ணம்‌. இவரது படைப்புகள்‌ வாழ்வின்‌ படப்பிடிப்புகள்‌. அவ்வாறே இந்த “மூட்டமும்‌'” உள்ளது.

இந்த நவீனத்தின்‌ பெயரே ஆயிரம்‌ அர்த்தங்களைச்‌ சுமந்து வருகிறது. இன்று இந்திய வாழ்வை ஒரு “மூட்டம்‌'" சூழ்ந்து வருகிறது. ஒரு தாய்‌ வயிற்றுப்‌ பிள்ளைகள்‌ மத்தியில்‌ பிளவுகள்‌, பிரிவுகள்‌ திட்டமிட்டு மூட்டப்படுகின்றன. அதிலும்‌ படித்தவர்கள்‌ நெஞ்சில்‌ புதுப்புதுக்‌ குழப்பங்கள்‌ உருவாக்கப்படுகின்றன. இந்த நவீனத்தில்‌ வரும்‌ இரண்டு ஆசிரியர்கள்‌ அந்நியோந்நியமாக இருந்த அழகு என்ன; பின்னர்‌ அது சிதைவு பட்ட கோரம்‌ என்ன!

மதம்‌ மனிதனை உருவாக்கவில்லை; மனிதன்தான்‌ மதத்தை உருவாக்கினான்‌. இந்த மெய்யைப்‌ பொய்யாக்கிக்‌ காட்டத்தான்‌ ஒரு சுயநலக்‌ கூட்டம்‌ விடாது வேலை செய்து வருகிறது. ஆனாலும்‌ மனம்‌ சோரத்‌ தேவையில்லை. அமுக்கப்படும்‌ இயல்பான மனிதநேய உணர்வுகள்‌ "விடுபட்டுக்‌ கிளம்பவே செய்யும்‌. பல நூறு ஆண்டுக்கால வரலாற்றில்‌ தமிழசம்‌ எத்தனையோ மதமோதல்களைக்‌ கண்டிருக்கிறது. அவற்றையெல்லாம்‌ மீறித்தான்‌ அது நிலைபெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. பிற மாநிலங்க ளோடு ஒப்பிடும்போது தமிழகத்தில்‌ சகிப்புத்‌ தன்மை யையும்‌. நல்லிணக்கமும்‌ எவ்வளவோ சிறப்பாக உள்ளது என்று தான்‌ கூற வேண்டும்‌. இதற்காக எத்தனையோ பெரியவர்கள்‌ பாடுபட்டிருக்கிறார்கள்‌, எத்தனையோ முற்போக்கு இயக்கங்கள்‌ பணிபுரிந்திருக்கின்றன. அவர்கள்‌ விதைத்த விதை என்றும்‌ வீணாய்ப்‌ போய்‌ விடவில்லை. மதப்‌ பெரியார்களின்‌ சதித்திட்டங்களையெல்லாம்‌ மீறி இங்கே இந்து- முஸ்லிம்‌-கிறிஸ்துவ ஒற்றுமை நிலவி வருவது அதற்குச்‌ சாட்சி. இந்த நவீனமும்‌ நம்பிக்கை மிகுந்த இந்த அடிப்படை யதார்த்தத்தோடு நிறைவு பெற்றிருக்கிறது. இந்த நவீனத்தின்‌ கதாபாத்திரங்கள்‌ நம்‌ மத்தியில்‌ உலவி வருபவர்கள்‌ தாம்‌. ஓர்‌ ஊரே முற்றுகையிடப்படுவதும்‌, போலீஸ்‌ அட்டூழியமும்‌ கூட புதிது அல்ல தான்‌. பத்திரிகை களில்‌ வந்த செய்திகள்‌-நமக்கு அவை செய்திகள்‌; சு.ச.விற்கோ அவற்றில்‌ இலக்கியம்‌ தட்டுப்பட்டிருக்கிறது. இதன்‌ மூலம்‌ மனித குலத்தின்‌ மீது பாசமிக்க ஓர்‌ உள்‌ ளத்தை வாசகர்கள்‌ கண்டு கொள்வார்கள்‌. சமகால வாழ்வு பற்றிய படைப்புகளில்‌ செய்தி அதிகமாகவும்‌, இலக்கியம்‌ குறைவாகவும்‌ இருப்பதாக சில நவீன பண்டிதர்கள்‌ முகஞ்சுளிக்கிறார்கள்‌. அப்படியா? அது உண்மையெனில்‌ ஏன்‌ இந்த மோதாவிகள்‌ இலக்கியம்‌ குறைவு படாமல்‌ சமகால வாழ்வைப்‌ பிரதிபலிக்கக்‌ கூடாது?

ஏன்‌ மனக்குகை மர்மங்களை, அதுவும்‌ மர்மமான மொழியில்‌ எழுதிப்‌ பயமுறுத்த வேண்டும்‌? அழகியல்‌ ஊனப்பட்டு விடக்கூடாது என்பதில்‌ முற்போக்கு எழுத்தாளர்களுக்கும்‌ முழு உடன்பாடு தான்‌. ஆனால்‌ அதை ஒரு சாக்காகக்‌ கூறிக்‌ கொண்டு நமது வாழ்வை நேரடியாகப்‌ பாதித்துக்‌ கொண்டிருக்கும்‌ பிரச்சினைகளைத்‌ தொடாமல்‌ தப்பித்து ஓடுவதை நாம்‌ அங்கீகரிக்க முடியாது. இந்த நவீனத்தில்‌ ஒரு முக்கியமான பிரச்சினை தைரியமாகவும்‌ இலக்கிய சீதனத்தோடும்‌ எதிர்‌ கொள்ளப்‌ பட்டிருக்கிறது. சிறுபான்மை மக்களின்‌ வாழ்வை, உணர்வுகளை பெரும்பான்மை வகுப்பைச்‌ சார்ந்த ஒருவர்‌ சித்தரிப்பது ஆரோக்கியமான முன்னுதாரணமாக உள்ளது. சு.ச.விற்கு நமது வாழ்த்து உரித்தாகிறது.

      இரா.கதீரரசன்‌
      பொதுச் செயலாளர்‌
தமிழ்‌ நாடு முற்போக்கு எழுத்தாளர்‌ சங்கம்‌
-----------
பதிப்புரை

அயோத்தி மசூதி தகர்ப்‌பிற்குப்‌ பிறகு பத்திரிகைகளில்‌ தலையங்கங்களும்‌, வார இதழ்களில்‌ சிறுகதைகளும்‌, சினிமா உலகில்‌ திரைப்படங்களும்‌ வந்துள்ளன. ஆனால்‌ எங்களுக்குத்‌ தெரிந்து இதில்‌ யார்‌ பக்கம்‌ நியாயம்‌ உள்ளது என்பதை எந்த படைப்போ அல்லது திரைப்படமோ சுட்டிக்‌ காட்டவில்லை.

எலியும்‌ பூனையும்‌ மாதிரி சண்டை போடாதீர்கள்‌ என்று பிடித்துத்‌ தின்னும்‌ பூனையையும்‌, பிடிபடும்‌ எலியையும்‌ ஒரே தட்டில்‌ வைத்துத்தான்‌ சித்தரித்தன. ஆனால்‌ சு. சமுத்திரம்‌ இந்த நாவலில்‌ யார்‌ பக்கம்‌ நியாயம்‌ இருக்கிறது என்‌பதைத்‌ திட்ட-வட்டமாக தெரிவித்து இருக்கிறார்‌. வகுப்புக்‌ கலவரம்‌ என்று வரும்‌ போது அதை சுயநல சக்திகள்‌ எப்படி பயன்படுத்திக்‌ கொள்கின்‌றன என்பதையும்‌ சித்தரித்திருக்கிறார்‌.

நெல்லை மாவட்டத்தில்‌ மேலப்பாளையம்‌ என்ற கிராமத்தில்‌ பெரும்பான்மையாக வாழும்‌ முஸ்லீம்‌ மக்கள்‌ சுற்றிவளைக்கப்பட்ட கொடுமையை மையமாக வைத்து இந்த மூட்டத்தை உருவாக்கியிருக்கிறார்‌.

இந்த நாவல்‌ பற்றி வாசகத்‌ தோழர்கள்‌ ஒரு வரி எழுதிப்போட்டால்‌ நன்றியுடையோம்‌.

-ஏகலைவன்‌ பதிப்பகம்‌
-------------

மூட்டம் - அத்தியாயம் 1


ஒரு பக்கம் வேப்பமரமும், மறுபக்கம் புளியமரமும் துவாரபாலகர்களாய் தோற்றம் காட்ட, அதற்குப் பின்னாலிருந்த அந்த மசூதி கம்பீரமாகக் காட்சியளித்தது. ஆனாலும் அதன் கம்பீரத்திற்கு மொக்கை மகுடம் சூட்டப்பட்டது போல், அதன் மாடி ஜன்னல்களோ, கதவுகளோ இல்லாமல் ஆங்காங்கே பொந்துகளைக் காட்டிக் கொண்டு காட்சியளித்தது.

அந்தப் ‘பூச்சியில்லாத’ கட்டிடத்திற்கு வெளியே தரையிலிருந்து குறுக்கு நெடுக்குமாய் கட்டப்பட்ட சாரத்தில் பூச்சி புழுக்கள் மாதிரியான, அரை நிர்வாண ஆண்களும், தாங்கள் ஆனா அல்லது பெண்ணா என்று அந்தக் கணத்தில் எந்தப் பிரக்ஞையுமில்லாமல் உடையே உடைந்து போக இயங்கிக் கொண்டிருந்த பெண்களுமாக கரணம் தப்பக்கூடிய மரண விளிம்பில் நின்றபடி கைகளைத் தூக்கிக் கொண்டிருந்தார்கள்.

காண்ட்ராக்டர் ராமலிங்கம் “என்னய்யா வேலை செய்றிங்க வேல...” என்று அவர்கள் வேலை செய்வதைச் சரியாக பார்க்காமலேயே ஒரு கத்துக் கத்திவிட்டு வெளியே வந்தவர், தன்னையே கண்காணிப்பதுபோல் பார்த்த திவான் முகமதுவைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டார். பதில் கும்பிடு பற்றிக் கவலைப்படாமலே, “வேலையா பாக்கீக வேல... கூலிய மட்டும் கூட்டிக் கேட்டா எப்படி?” என்று திவானைக் கண்கள் நோட்டமிட, அந்த மசூதியின் நுழைவு வாயிலுக்கு மீண்டும் போய் ஒரு எகிறு எகிறினார்.

தொழுகைக்காக வருகிறவர்களின் தலைகள் தொலைவில் கூடத் தெரியாத நேரம். சூரியன் மேற்குத் திக்கில் நோயாளியாகி, கண்ணை மூடி மூடித் திறந்து கொண்டிருந்த வேளை.

அந்த மசூதியின் எதிர்த் திக்கிலிருந்தும், கிழக்குத் திசையிலிருந்தும் ஏழெட்டுப் பெண்கள். தெற்கில் ஒரு பத்துப் பெண்கள். தலைகளில் கோஷாக்கள் இல்லை. அதை ஈடுகட்டுவது போல் நெற்றிக்கு கோஷா போட்டது மாதிரி தலைமுடி தாறுமாறாகச் சிதறிக் கிடக்க, நெற்றிகளை ரத்தமாக்கிய குங்குமக்காரிகள். என்றாலும் இளசுகள் பிளாஸ்டிக் குங்குமப் பொட்டை வைத்திருந்தனர். பெரிதுகள் நெற்றி போதாது என்பதுபோல் சிவப்பு சூரியன் மாதிரி ஆன பொட்டுகள் வைத்திருந்தனர். உல்லி உல்லி வாயில், சுங்கடி போன்ற விதவிதமான சேலைகளில் வந்த இளம் பெண்கள், நடுத்தரங்கள். கழுத்தில் கிடக்கும் மஞ்சள் சரட்டை ஜாக்கெட்டிற்கு வெளியே காட்டுவது மாதிரியாக சிலர். அது தெரியாததுபோல் ஜாக்கெட்டில் விளிம்புபோல் அவற்றை ஆக்கிக் கொண்டவர் பலர். சில பெண்கள் முரட்டு டயரில் நெய்யப்பட்டது மாதிரியான சேலை கட்டியிருந்தார்கள். அத்தனை பேரும் கூலிப் பெண்கள். இடுப்பிலோ அல்லது தோளிலோ துவண்டு கிடந்த குழந்தைகளைச் சுமந்து வந்தார்கள். அப்படியும் ஒரு குழந்தை ஒருத்தியின் இடுப்பிலிருந்து இன்னொருத்தியின் தலையில் சூட்டிய பூ மொத்தையை பறிக்கப் போனது.

அத்தனை பெண்களும், அந்த மசூதி வாசலில் ஒப்புக்குக்கூட நின்று நிதானிக்காமல், சொந்த வீட்டிற்குள் போவதுபோல் போனார்கள். இடுப்பு வழியாய் இறங்கப்போன குழந்தைகளை ஒரு குலுக்குக் குலுக்கி மேலே ஏற்றிக்கொண்டும், தோளில் கிடந்த குழந்தை களின் தலைகளை வருடிக் கொடுத்தும் அந்த மசூதிக்குள் நேற்று எங்கே நின்றார்களோ அங்கே நின்று கொண்டார்கள்.

திவான் முகமது அந்தப் பெண்களை ஒரு தடவை பார்த்துவிட்டு, மறுதடவை ராமலிங்கத்தைப் பார்த்தார். பின்னவருக்கு லேசான மகிழ்ச்சி. திவான், அவரைப் பார்த்துச் சிரித்துவிட்டார். அதுவே பெரிய காரியம். காரியம் கைகூடியது மாதிரிதான். மேலும் அவர் கவனத்தை அதிகமாய்க் கவருவதற்காக சாரத்திலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த ஒரு சித்தாள் பெண்ணை “மேலே ஏறுவியா, இல்ல கீழே இறங்கி ஒரேயடியா போறியா?” என்று ஒரு அதட்டுப் போட்டார். அதை திவான் ஆமோதிப்பது போல் தலையை மெல்ல மெல்ல ஆட்டுவது போல் இருந்தது.

இதுதான் சாக்கு என்று ராமலிங்கம் பேசப்போனார். இதற்குள் திவானின் கவனம் கலைந்தது.

ஒரு நாற்பது வயது அய்யப்ப பக்தர். காக்கா கறுப்பு வேட்டி, அதைவிட கட்டிக் கறுப்பான சட்டை, கழுத்தில் துளசி மாலை, தோளில் ஒரு குழந்தை. முன்னால் போன மனைவியிடம் குழந்தையை நீட்டிவிட்டு மசூதிக்கு வெளியே ஒதுங்கப் போனார். ஆனால், அவர் மனைவி அந்த வாசலில் நின்றபடி ஒரு முறைப்பு முறைத்ததால், அவர் ஓடுவதுபோல் நடந்து அவளையும் தாண்டி மசூதிக்குள் போனார். ஆனாலும் பெண் வாடைபடாத இடம் என்று ஒன்றை அவரே அனுமானித்துக் கொண்டு தனித்து நின்றார். அவரைப் பார்த்து லேசாய்ச் சிரித்த திவான் மீண்டும் ராமலிங்கத்தைப் பார்த்தபோது, ராமலிங்கத்திற்கு அது நல்ல சகுனமாகப் பட்டது.

ராமலிங்கம், பேச்சை எப்படித் துவக்குவது என்று யோசித்து எதிரே பார்த்தார். மசூதிக்கு இருநூறு அடி தள்ளி காதர் பாட்சாவும் முத்துக்குமாரும் ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டுப் பேசிக் கொண்டிருந்தனர். காதர் பாட்சா, ஒரு லுங்கியை அது தேவையில்லை என்பது போல தூக்கிப் பிடித்துக் கொண்டு கரடு முரடான ஒரு மோட்டா சட்டையை தடவிவிட்டபடியே, முத்துக் குமாரை தோளில் தட்டி எதையோ பேசிச் சிரித்தான். அவனைப் போலவே இருபத்தாறு வயது இளைஞனான முத்துக்குமார் பேண்ட் போட்ட ஒரு சிலாக்கன். அதன் காலரைத் திருகியபடியே பாட்சாவைப் பார்க்காமல் எதிர்வீட்டு ஜன்னலைப் பார்த்தான். அங்கே பப்பாளிப்பழம் ஒன்று பதியம் போட்டது போல் திடீரென்று தோன்றியது. பிறகு அதற்குக் கால் கை முளைத்து ஒரு கொடியாய் ஆனதுபோல் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து அங்குமிங்குமாய் நடமாடிக் கொண்டிருந்தது. காண்ட்ராக்டர் ராமலிங்கத்திற்கு, இது சுப சகுனமா, அல்லது அபசகுனமா என்று தெரிய வில்லை. ஆனாலும், அவர்களையே மூலதனமாக வைத்துப் பேச்சை துவக்குவது என்று தீர்மானித்து,

“அதோ பாருங்க பாய்... காதரு இன்னிக்கு தொழுகைக்கு வாரது ஆச்சரியமாயிருக்கு, என்ன விசேஷம்? அப்படியே வந்தாலும் ஒரு மட்டு மரியாதை வேண்டாம். தலையில் ஒரு குல்லா வேண்டாம். அதோ பாருங்க... அந்த முத்துக்குமாருப் பய கண்ணு எந்தப் பக்கமா போகுது பாருங்க. நானும் பாக்கேன். தினமும் அந்தப் பய அதே இடத்துல வந்து காக்கா கண்ணா பாக்கான். இதுக்கு இந்த காதர் பாட்சா உடந்தை. நீங்க ஏதாவது செய்யணும்.”

திவான் முகமது, அந்த ஆண் ஜோடியையும், அதற்கு எதிர்பக்கம் கோஷா போடாமலே தலையைக் காட்டிய ஆயிஷாவையும் நோட்டமிட்டார். உடம்பு இயல்பாக எரிந்தாலும், அந்த ஹாஜி அஜீஸுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்பது மாதிரியான ஒரு திருப்தி. அதே சமயத்தில், நிலைமையை, பார்வையைத் தாண்டிப் பழகும் கட்டத்திற்கு விட்டுவிடக்கூடாது என்ற ஒரு பொறுப்புணர்ச்சி. அவர்களைப் பார்க்கப் பார்க்கத் தான் ஒரு ஜமாத் தலைவர் என்கின்ற எண்ணமும் கூடவே வந்தது. ராமலிங்கத்தைப் பார்த்துப் பட்டும் படாமலும் பேசினார்.

“எல்லாம் எங்க காதர் பாட்சாவால... அவனுக்கு இது தெரியாமலா இருக்கும்? ஏதாவது தட்டிக் கேட்கலாமுன்னா எதிர்த்துப் பேசுவான். நீயாவது முத்துக்குமாருட்ட கொஞ்சம் சொல்லேன்.”

“நான் சொல்லாம இருப்பேனா பாய்? அவன் அப்பன் துரைசாமிகிட்ட சொல்லி கையக் கால கட்டி போடும்படியா சொல்றேன். அப்புறம் காக்கா...”

திவான் உஷாரானார். பாய் பாய் என்று சொல்லும் இந்த ராமலிங்கம் ‘அண்ணாச்சி’ என்ற அர்த்தத்தில் காக்கா என்ற வார்த்தையை போட்டுவிட்டார் என்றால், ஏதோ ஒரு சமாச்சாரத்திற்கு அவர் காக்கா பிடிப்பதாகத்தான் இருக்கும். அவரை ‘சொல்லு’ என்பது மாதிரி திவான் பார்த்தபோது, ராமலிங்கம் தலையைச் சொறிந்தபடி பேசினார்.

“கட்டுப்படியாகல காக்கா... என்ன மட்டும் நீங்க விட்டால், இது வரைக்கும் செலவழிச்ச மூணு லட்ச ரூபாயும் தொலையட்டும்னு ஓடிப்போய்டுவேன். நல்ல காரியமாச் சேன்னு மசூதியோட முதல் மாடியைக் கட்டுறதுக்கு சம்மதிச்சேன். ஆனாலும் இரும்புக்கும், சிமிண்டுக்கும், அதோ கூலி அதிகமா கேட்கிறாங்களே அந்தக் குடிகாரப் பயலுக, அவங்களுக்குத் தெரியுதா என்ன? ஏதோ என்னை, கையக் கடிக்காமலேயாவது நீங்க பாத்துக்கணும்.”

திவான் முகமது, ஆசாமி எவ்வளவு செலவழித்திருப்பார் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அந்த மொக்கை மாடியை கண்களால் ஒரு குத்துமதிப்பீடு செய்வது போல் பார்த்தார். ஒரு லட்ச ரூபாய்கூட செலவழித்திருக்க மாட்டான். அவன் சொல்றதுல மூன்றில் இரண்டு பொய். காண்ட்ராக்டர் மீண்டும் புலம்பினார்.

“உங்களையும் கவனிச்சுக்கிறேன் காக்கா. நான் என்னமோ உங்களைக் கவனிக்க மாட்டேன் என்கிற மாதிரி பார்க்கிறீங்களே. போங்க காக்கா.”

திவான் முகமது, இப்போது ராமலிங்கத்தை காக்கா மாதிரியே சாய்த்துப் பார்த்தார். இவன் தம்பியாகப் பிறக்கவில்லை யென்றாலும், தம்பி மாதிரிதான். ஆனாலும், பங்காளி என்று வரும்போது அண்ணன், எப்படி தம்பியைப் பார்ப்பானோ அப்படியே ராமலிங்கத்தைப் பார்த்தபடி பட்டும்படாமலும் பதிலளித்தார்.

“ஆகட்டும் பார்க்கலாம்.”

“அப்பாடா, இப்போதாவது என் வயித்தில் பாலை ஊத்தினிங்க பாய்.”

திவான் லேசாக முகஞ்சுளித்தார். காரியம் ஆவதற்காக காக்கா (அண்ணன்) என்கிற வார்த்தையைப் பயன்படுத்திய இந்த காண்ட்ராக்டர், அது முடிந்துவிடும் என்று தெரிந்த உடனேயே ‘பாய்’ என்று பேச்சை மாற்றியது அவருக்குச் சிறிது, நெஞ்சைத் தட்டத்தான் செய்தது. ஆனாலும் அவர் கவனிப்பதாகச் சொன்னதால், காக்கா பாயானது பெரிதாகத் தெரியவில்லை. நாளைக்கே, தன்னை அவர் கவனிக்கணும்... பைசல் செய்துக்கலாம். திவான், காண்ட்ராக்டர் காதைக் கடித்தார்... “இதுவரைக்கும் செலவழிச்சதை நாளை பைசல் செய்துக்கலாம் வீட்டுக்கு வா... செக்கு தாறேன்...” இந்தச் சமயத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி கவனிக்க வேண்டும், எந்த விகிதாச்சாரத்தில் கவனிக்க வேண்டும் என்பதைப் பேசுவதற்காகவோ என்னவோ வேப்பமரத்திற்குப் பின்னால் ஒதுங்கினார்கள். அப்போது நான்கைந்து பேர் மசூதிப் பக்கம் வருவதைப் பார்த்து விட்டு திவான் முகமது அந்த மசூதி வாயிலுக்குக் கம்பீரமாக நடந்து வந்தார். ராமலிங்கம் பின்னால் நொண்டியடித்து நடந்தார். அங்கே வந்த நான்கைந்து பேரும் திவானைப் பார்த்தபடி நின்றார்கள். திவானோ, அந்த அய்வரில் அமீரை மட்டுமே நோட்டமிட்டார். ‘ஐம்பது வயதுக்குப் பிறகும் தாடி வைக்காத இவனெல்லாம் எவன்...? தலையில் ஒரு தொப்பி கூட வைக்காமல் கைக்குட்டையைக் கட்டியிருக்கான். உடம்பு மட்டும் தடியங்காய் மாதிரி வச்சிருக்கான். இவனெல்லாம் ஒரு முஸ்லீமாம்.’

என்றாலும், ராமலிங்கம், திவானைப் போல் அமீரைப் பார்க்கவில்லை. அவரையும் அங்கீகரிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவர் போல் அவருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, திவானிடம் தான் பொதுச் சமாச்சாரங்களைத்தான் பேசியதாக ஒரு அனுமானத்தை ஏற்படுத்தும்படிப் பேசினார்.

“என்ன பாய் சொன்னீங்க? தொழுகையை மேல் மாடிக்குக் கொண்டு போறீங்களா. கீழ்த் தளத்து எல்லைச் சுவரை இடிச்சுட்டு ஷட்டர் போடணுமா?”

திவானும் புரிந்து கொண்டு அதற்கேற்பப் பேசினார்.

“உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது ராமு. ஷட்டருதான் போடணும்.”

இப்போது அமீர் குறுக்கிட்டார்.

“ஷட்டர் வேண்டாம், மூச்சு முட்டும். ஒத்தை செங்கலுல சுவர் எழுப்பிடலாம்.”

“அப்ப மட்டும் மூச்சு முட்டாதா?”

“சொல்றத முழுசா கேளுங்க ராமலிங்கம். மேல் கூரை ‘பீமுக்கும்’ சுவருக்கும் இரண்டடி இடைவெளி விட்டுட்டா எப்படி மூச்சு முட்டும்?”

திவான் முகமது அவர்களுக்குள் நடந்த பேச்சுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தவர், திடீர்த் தாக்குதல் போல் பேசினார்.

“இடைவெளி விடுறது இஸ்லாமுக்கு விரோதம்.”

“எப்படி விரோதம்? நம் பெண்டு பிள்ளைகள இங்கே கீழ்த்தளத்துக்கு வரவழைச்சு, மேல் தளத்துல அப்பப்ப நடக்குற உபதேசத்தை கேட்க வைக்கணும்னு ஜமாத்து முடிவு செய்துட்டு. அதனால்தான் மாடியே கட்டறோம். இங்கேயும் அவங்கள ஜெயிலுல வைக்கறது மாதிரி ஷட்டர் போடணும்னு சொல்றீங்களே.”

“என்ன பேச்சு பேசற அமீர் பிறத்தியான் பார்க்கலாமா?”

“பிறத்தியார நாம பாக்கலையா? பிறத்தியான் நடக்கும் போதும் பாக்கான். பஸ்ஸுல போகும்போதும் பக்கத்துல இடிச்சுக்கிட்டு நிக்கறது மாதிரி நிக்கான். இங்கேயும் பார்க்கிறவன் பார்க்கத்தான் செய்வான். அப்படியே பார்த்தாலும் அவன் மோசமா பார்க்கான்னு ஏன் நினைக்கணும். வீட்டுலயும் தெருவிலயும்தான் துணியால கோஷான்னா, மசூதியிலயும் இரும்பு கோஷாவா?”

திவான், பதிலுக்கு ஏதோ திருப்பிக் கொடுக்கப்போனார். அதற்குள் காதர் பாட்சா முத்துக்குமாரை விட்டுவிட்டு, அந்தப் பக்கமாக ஓடிவந்தான். முத்துக்குமாரோ அவனை அங்கே நிறுத்தி வைக்காமல், ஆயிஷாவை கண்ணடிக்க முடியாது என்று நினைத்தானோ, இல்லை பேச்சு சுவாராசியத்திற்காக அழைத்தானோ, தெரியவில்லை - அவனை ஓடிவந்து இழுத்தான். இதற்குள் அமீர், காதர்பாட்சாவைப் பார்த்து கையாட்டினார். அதில் ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதைப் புரிந்து கொண்ட காதரும் முத்துக்குமாரைச் செல்லமாக ஒரு தள்ளு தள்ளிவிட்டு அமீர் பக்கமாக ஓடி வந்து நின்று திவானைப் பார்த்துவிட்டு, அமீரைப் பார்த்து கண்ணடித்தான். இதைப் பார்த்துவிட்ட திவான் முகமது ஆத்திரம் தாங்காமல் முகத்தைப் புற்று போலாக்கி நாக்கை நாகப்பாம்பாய் வெளியே நீட்டியபடி, குறுக்கும் நெடுக்குமாய் நடந்தார். ராமலிங்கத்தைத் திட்டி அந்தத் திட்டை அவர்களுக்கு மறைமுகமாக கொடுக்கப் போனார். இதற்குள் -

பாங்குச் சத்தம் ஒலித்தது. ‘அல்லாஹி... அக்பர்... அல்லாஹி... அக்பர்’ என்று அனைவருக்கும் பரிச்சயப்பட்ட வார்த்தைகளோடு, இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமே புரிந்த இன்னும் சில அரேபிய வார்த்தைகள். உடனே தெருப் பக்கமாக மெத்தனமாய் நடந்து கொண்டிருந்தவர்கள் கூட இப்போது மசூதியை நோக்கி வேக வேகமாய் வந்து கொண்டிருந்தார்கள்.

அந்த மசூதிக்கும், அதன் வளாகத்தில் உள்ளடங்கிய தர்காவிற்கும் இடையே அதன் வெளிக்கோட்டில் ஹவுது-செவ்வகத் தொட்டி, பச்சைப் பசேலென்று கருணைக் கடலின் அணுத்திரட்சியாய்க் கண் சிமிட்டியது. பாசி படர்ந்த உட்சுவர். ஆன்மீகம் வழுவழுப்பானது என்பது போன்ற தோற்றம். ஒவ்வொருவரும் வரிசை வரிசையாய் நின்று ஒரு ஈயப் போணியை எடுத்து நீரேற்றி, முன் கைகளைக் கழுவினார்கள். முட்டிக் கால்களில் மிச்ச மீதியின்றி அள்ளிப் போட்டார்கள். பிறகு வாயை மூக்கோடு சேர்த்து அலசி தொப்பியையோ, அல்லது கட்டிய கைக்குட்டையையோ எடுத்துவிட்டு தலையை ஈரக்கையால் அலசி விட்டபடி சரஞ்சரமான பெண்களையும், இடையிடையே அழுது தீர்க்கும் குழந்தைகளையும் ஒப்புக்குக் கூட பார்க்காமலேயே தொழுகைத் தளத்திற்குள் நுழைந்தார்கள். திருக்குரான் கூறும் ‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லா’வின் திருப்பெயரை இதயத்தில் வைத்தபடியே, அந்தத் திருப்பெயர் இதயத்திலிருந்து ஒளிக்கீற்றாய் உதடுகளைப் பிரகாசப்படுத்தியதுபோல் அனைவரும் தொழுகைத் தளத்திற்குள் போனபோது -

கால் கைகளை அலம்பிவிட்டு, சம்சுதீன் அந்த தர்காவை நிமிர்ந்து பார்த்தான். அதன் மேல் விதானம் அபிராமி கோயிலின் கோபுரக் கலசம்போல் தெரிந்தது. அதன் உச்சியிலுள்ள பிறை நிலவும், அவனுக்குப் பிறைசூடிய பித்தனின் கோயிலை நினைவுக்குக் கொண்டுவந்தது. அபிராமி வணங்கும் கடவுள்... இப்போது அவளும் அந்தக் கோயிலில் நிற்பாள்... சீக்கிரமாய்த் தொழுகையை முடித்து விட்டுப் போக வேண்டும். கோயிலைத் தாண்டிய பூங்காவில் காத்திருப்பாள்.

சம்சுதீன் தொழுகைத் தளத்திற்குள் நுழையாமல், அப்படியே குன்றி நின்றான். ஒரு பெண்ணைப் பற்றிய எண்ணம், அவள் யாராக இருந்தாலும் அவளைப்பற்றிய எண்ணம் இப்போது, இந்தத் தொழுகையின் சமயத்தில் வருவது தன்னுள் இருக்கும் இறை நம்பிக்கையான ஈமானைக் குலைப்பதாகாதா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். இனிமேல் தொழுகைக்கு வரும்பொழுது இப்படிப்பட்ட எண்ணத்தோடு வருவதில்லை என்றும், அப்படி வந்தால் தொழுகை செய்வதில்லை என்றும் தீர்மானித்தான். அவன் மனதுக்குள் தொழுகையா? அபிராமியா? என்று நடுவர் இல்லாமலே ஒரு பட்டிமன்றம் நடைபெற்றது. பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்த அல்லாவைத் தவிர மற்ற எண்ணம் அப்போதைக்கு வரக் கூடாது என்று மருந்தைக் குடிக்கும் போது குரங்கை நினைக்காதே என்று சொல்லப்பட்டவன்போல் அங்குமிங்குமாய்ப் பார்த்தபடியே நின்றான். பிறகு அபிராமி இந்நேரம் கோயிலை முடித்து விட்டு- (அவனுக்குத் தெரியும் அவள் கோயிலுக்கு போவது அவனைப் பூங்காவில் பார்க்கத்தான்.) பூங்காவில் காத்திருப்பதை நினைத்துக் கொண்டான். ஆகையால் அரைக்கிணறு தாண்டியதுபோல் இரு வேறுபட்ட மனநிலையில் தொழுகை செய்யக்கூடாது என்று நினைத்தவன் போல் திரும்பிக் கூடப்போக நினைத்தான். அப்போது அவன் தந்தை திவான் முகமது தொழுகைக் கூடத்திலிருந்து அவனைக் கண்களால் சுண்டியிழுக்க அவன் சண்டி மாடு மாதிரி தந்தையை நோக்கி நடந்தான்.

தொழுகைத் தளத்தில் வெளியே அந்நியர் இடுப்பில் அலைமோதிய குழந்தைகளின் அழுகைச் சத்தம்; அவர்களை அதட்டும் தாய்மைச் சத்தம்; காக்கை குருவிகளின் சீழ்க்கைச் சத்தம்; அத்தனை சத்தா சத்தங்களுக்கும் அப்பாற்பட்டவர்களாய் அனைவரும் வீராசனம் போட்டதுபோல் உட்கார்ந்திருந்தார்கள். மண்டியிட்டு உட்கார்ந்து கைகள் குவிய, வாய்கள் எதையோ ஓதிக் கொண்டிருக்க அசைவற்று இருந்தார்கள். தொழுகைக்கு என்றே நெய்யப்பட்ட முப்பது அடி நீள கோரைப்பாய்... அதன் நான்கடிப்பரப்புக்கு வேலிபோல் இன்னொரு பாய். இப்படி முப்பது முப்பத் தைந்து பாய்கள், அந்தத் தளத்தையே ஒரு பாய்த் தரையாக ஆக்கியிருந்தன. அத்தனை பேர் வாய்களிலும் ஒரு முணு முணுப்போ, சின்ன சத்தமோ எழவில்லை. தலைகுனிந்து இருந்த அத்தனை பேரிடமும் ஏதோ ஒரு மவுனதாகம். ஒரு பக்தி வேகம்... ஒரு நம்பிக்கை ராகம்.

நீண்ட நெடிய கோரைப் பாய்களை சின்னச் சின்னத் தட்டுப் பாய்களாய்க் காட்டும் தொழுகையாளர்களுக்கு முன்னால் இமாம் தனித்திருந்தார். மற்றவர்களைப் போல் வட்டவட்டமான பக்தித் தொப்பியோ, கிரிக்கெட் தொப்பியோ, குறைந்தபட்சம் காந்தி குல்லாவோ போடாமல் வெள்ளை வேட்டி, வெள்ளைச்சட்டையுடன் ஒரு வெள்ளைத் தலைப்பாகை கட்டிய ராமலிங்க சுவாமிகள் மாதிரியான தோற்றம். அவருக்கு முன்னால் கஃபா என்னும் கடவுள் ஆலயம் இருக்கும் மேற்குத் திசையை மனதில் பதிய வைக்கும் ஒரு திரைச்சீலை... மேலே சிறுத்து, கீழே பருத்து உள்ளடங்கிய சுவர்ப் பகுதிக்கு உடை போட்டது மாதிரியான பச்சைத் துணி, அங்குமிங்கும் ஆடாமல் அசையாமல் அசைவற்றும் அசைவித்தும் ஒரு கம்பீரமான கருணைத் தோற்றத்தைக் காட்டும் பச்சை வண்ணம்...

இமாம் எழுந்தார். அவரோடு சேர்ந்து மற்றவர்களும் எழுந்தார்கள். சாத்தான் எச்சில் உமிழும் இடமாகக் கருதப்படும் தொப்புளில் இரண்டு கைகளையும் மடித்து அனைவரும் எழுந்தனர். பிறகு காதுகளில் கரங்களைச்சாய்த்து வைத்து அப்படியே மண்டியிட்டு நெற்றி தரை தட்டக் குனிந்தார்கள். அது மாலைத் தொழுகையான ‘மக்ரீப்’ என்பதால், ஏழு தடவை ‘ரகாயத்’ செய்து தொழுகை முடித்தனர். மனக்கடல்கள் இப்போது அலை எழுப்பவில்லை. அந்த அலைகள் இல்லாத அலையற்ற ஆழ்கடலுக்குள் போனதுபோன்ற ஏகாந்தம்; மூச்சு முட்டாத அடிவாரத்திலிருந்து வாழ்க்கையின் சேதாரங்களைப் பொருட்படுத்தாதது போன்ற ஒரு ஒருமை. சம்சுதீன்கூட, வலுக்கட்டாயமாக வந்த அபிராமியின் எண்ணத்தை மறக்கடிக்க அவளது சின்னச் சின்னக் குறைகளைக் கூட தன்னையறியாமலேயே நினைத்துப்பார்த்து, இப்போது அல்லாவிடம் அப்படியே ஒன்றிவிட்டவன் போல் கண்கள் சொருக நின்றான்.

அத்தனை தொழுகையாளர்களும் ஒருவர் பின் ஒருவராக வெளியே வந்தார்கள். அவர்களில் இளைஞர்கள், பெண்களைப் பார்த்து ஒதுங்கிவிட்டு தர்காவிற்குள் போனார்கள். நடுத்தர மனிதர்கள் அந்தப் பெண் கூட்டத்தின் பக்கத்தில் வந்தார்கள். ஒவ்வொரு குழந்தையையும் உற்று உற்றுப் பார்த்துவிட்டு அதனதன் நெற்றிப் பொட்டிற்கருகே வாயைக் குவித்து ஊதி துவா சொன்னார்கள். இப்படிப்பத்து பேர் ஊதி விட்டார்கள். ஆனாலும் பெண்கள் கூட்டம் பிரியவில்லை. தொழுகைத் தளத்திலிருந்து படி இறங்கும் இமாமையும், அமீரையும் அவர்கள் கண்கள் மொய்த்தன.

இமாமும் அமீரும், ‘எல்லா வஸ்துக்களின் பேரிலும் சக்தி வாய்ந்த யாதொரு இணையுமில்லாத’ அல்லாவை நினைத்தபடியே அந்தக் குழந்தைகளை நெருங்கினார்கள். அப்போது மவுனத்தைக் கலைக்கும் காலடிச் சத்தம்; பத்து பதினைந்துபேர் உள்ளே நெருக்கியடித்து ஓடி வந்தார்கள். யாரிடம் முதலில் செல்லலாமென்பது போல் அவர்கள் கண்கள் அங்குமிங்குமாய் அலைபாய்ந்தன. அல்லாவை நினைக்கும் போதும், அவர் பெயரில் காரியம் ஆற்றும்போதும் கவனம் கலையக்கூடாது என்ற திருக்குரான் ஆணைப்படி காலடிச் சத்தங்களைப் பொருட்படுத்தாமல் துவா செய்த இமாமுக்கும், அமீருக்கும் காத்து நிற்பது போல் நின்றார்கள். பிறகு அது வரைக்கும் காத்திருக்க முடியாது என்பதுபோல், அந்தப் பக்கமாக வந்த திவான் முகமதுவிடம் ஒருத்தர் உரத்துக் கத்தினார்.

“அயோத்தியில் பாபர் மசூதிய தரைமட்டமாக்கிட்டாங்களாம். ‘காபீர்கள்’ நம்ம மசூதியை தவிடுபொடியாக்கிட்டாங்களாம்... ஓ... அல்லா.”

தர்காவிற்குள், ஒரு ஜிப்பா மனிதரின் மயிலிறகிற்கு முகங்கொடுத்த இளவட்டங்கள் ஓடி வந்தார்கள். மசூதியை விட்டு விலகி வீட்டுக்குச் சென்றவர்கள் திரும்பி வந்தார்கள். அந்த வளாகத்தில் அங்குமிங்குமாய்ச் சிதறி நண்பர்களோடு குடும்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்த அத்தனை பேரும் தாவித் தாவி, குதித்துக் குதித்து அந்தப் பக்கமாய் வந்தனர். அத்தனை பேருக்கும் நடந்ததை நம்ப முடியவில்லை. ஆகாயத்தையே பார்த்தார்கள். சேதி சொன்னவர்களை சிலர் திடுக்கிட வைத்தும் தலைப்பாய்த் துண்டை சடைபோல் முதுகில் போட்டிருந்த இமாமை, திடுக்கிடப் பார்த்தார்கள். இமாம், கண் விழிக்காமலேயே அசந்து நின்றார். திவான்முகமது மலைத்துப் போனார். அமீர், ஆதரவுக்காக காதர்பாட்சாவைக் கண்களால் தேடிக் கொண்டிருந்தார். இதற்குள் மசூதி இருந்த அந்தத் தெருவின் இரு பக்கமும் உள்ள கடை கண்ணிகளில் இருந்தவர்களும் உள்ளே வந்தார்கள். கூட்டம் மசூதியிலிருந்து தெரு வரைக்கும் நீண்டு கொண்டே போனது. பெண்கள் திண்ணைத் தூண்களில் சாய்ந்து பாதி கோஷாக்களோடு விவரம் புரியாமல் நின்றார்கள். மசூதிக்குள் ஒரே கூக்குரல். ‘அல்லா அல்லா’ என்ற அவலச் சத்தம். ‘இன்சா அல்லா’ என்ற தெளிவுச் சத்தம். ஒவ்வொருவருக்கும் தத்தம் வீடே இடிக்கப்பட்டு அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டது போன்ற தவிப்பு. ஒருவரையொருவர் இயலாமையில் பார்க்கும் கையறுநிலை, சொந்தக் கால்களை சொந்தக் கைகளே வெட்டிப் போட்டது போன்ற பிரமை.

விவரத்தை மெல்லக் கேள்விப்பட்ட இந்துப் பெண்கள் இப்போது திட்டித் தீர்த்தார்கள்.

“பாழாப்போற பயலுக. மசூதி இருந்தா இருந்துட்டுப் போகட்டுமே? இவங்களுக்கு என்ன வந்துட்டு? இடிச்சவங்க கையில கரையான் அரிக்க. வாயில புத்துவர. மாரியாத்தா. இடிச்ச பயலுவள இடிஞ்சு போக வையி தாயி! அடக்கடவுளே... இப்படியா ஒரு மசூதிய இடிப்பானுங்க?”

இந்தப் பெண்கள் தங்களுக்குள் இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு சற்றுத் தள்ளி நின்ற ஆண்கள் கூட்டத்தில் ஒரே சத்தம்.

“பழிக்குப்பழி வாங்கணும். இந்த ஏரியாவுல ஒரு இந்துக் கோயில இருக்க விடக்கூடாது. புறப்படுங்கடா. இது ஒரு ஜகாத். யோசிக்க நேரமில்லை. இன்சா அல்லா. முதல்ல அபிராமி கோயில இடிக்கணும்.”

அந்தப் பெருங்கூட்டத்திலிருந்து, ஒரு சின்னக் கூட்டம் கிளை விடப்போனது. கட்டிடத் தொழிலாளர்கள் கீழே வைத்திருந்த மண்வெட்டிகளை ஆயுதங்களாகவும், இரும்புக் கம்பிகளை வேல்களாகவும், பாண்டு பாத்திரங்களை கேடயங்களாகவும் வைத்துக் கொண்டு அது புறப்படப் போனது. சாரங்களில் நின்ற பெண்களும் ஆண்களும் அங்கே நிற்பதா, கீழே இறங்குவதா என்று தெரியாமல் புலம்பி நின்றார்கள். கூட்டம் அவர்களையும் பார்த்துக் கீழே இறங்கும்படி சமிக்ஞை செய்வது போல் இருந்தது. அது, தங்களைத் தாக்குவதற்கா, அல்லது மசூதி மாடியைக் கட்டியது போதும் என்று சொல்வதற்கா என்பது புரியாமல் தொழிலாளர் கூட்டம் திக்குமுக்காடியது. என்னவென்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு விபரீதம் நடந்திருக்கிறது என்பது மட்டுமே அவர்களுக்குப் புரிந்தது.

ஜமாத் தலைவர் திவான் முகமதுவும், ஹாஜி அஜீஸும், தீப்பெட்டித் தொழிற்சாலை அதிபர் நூருல்லாவும் ஆங்காங்கே கூட்டத்திடம் கோபதாபமாய்ப் பேசுவதுபோல் கைகால்களை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். அதே சமயம், அமீரும் காதர் பாட்சாவும் இன்னும் ஒரு சிலரும் கிளைவிடப் போன கூட்டத்தை உரிமையோடு பின்னுக்குத் தள்ளினார்கள். அவர்களது மோவாய்களைப் பிடித்து கெஞ்சினார்கள். “அல்லா பாத்துக்குவான் இன்சா அல்லா. இங்கே இருக்கவங்க நமக்கு எதிரியில்ல.” அந்தக் கூட்டமும் அவர்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவது போல் தோன்றியது. ஆனாலும் தொலைவில் வானமே வெடிப்பது போன்ற சத்தங்கள். நட்சத்திரங்கள் தரையிறங்குவதுபோன்ற ஒளிக்கீறல்கள். கண்ணுக்குத் தெரிந்த டவுன் பக்கம் வாணவேடிக்கைகள் நடந்து கொண்டிருந்தன. நாலு தெருக்கள் தாண்டிய ஐந்தாவது இந்துத் தெருவில் கூட சின்னச்சின்ன வேட்டுச் சத்தங்கள்.

அந்த ஜகாத் கூட்டம், இப்போது காதரையும், அமீரையும் ஒதுக்கித் தள்ளியது. கோபத்தில் குப்புறத் தள்ளியது. நிலை குலைந்து விழுந்தவர்களை மிதிக்காமல், அவர்களுக்குச் சலுகை காட்டுவதுபோல் தாண்டிக் கொண்டே போனது. பின்புறமாய்த் திரும்பிய கூட்டத்தின் பக்கம் முகம் திருப்பி தங்களோடு சேரும்படி கைகளை ஆட்டியது. அந்தக் கரங்கள் மண்வெட்டி, கடப்பாரை சகிதமாகக் கைகளை ஆட்டின. தங்களோடு ஜகாத்துக்கு வராதவர்களை வெட்டிப் போடுவோம் என்பது மாதிரி ஆடின. பாதிப்பேர் பயந்துபோய், அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டனர்.

கீழே கிடந்த அமீரும் பாட்சாவும் ஒருவரை ஒருவர் ஆதரவாகப் பிடித்துக்கொண்டே எழுந்தார்கள். குழந்தைகள் சுகம் தேடி வந்த பெண்களுக்கு ஏதாவது நடந்து விடக்கூடாதே என்பது போல் அவர்கள் விழுந்தடித்து ஓடி, அந்தப் பெண்கள் கூட்டத்திற்கு முன்பு கைகளை நீட்டி மனிதச் சங்கிலியாய் நின்ற போது, ஒரு மோட்டா சேலை கட்டிய பெண் அவர்களையே சாடினார்.

“என்னா பாய் நீங்க? எங்கள ஏதாவது செய்வாங்கன்னு நீங்க நினைக்கிறதே தப்பில்லையா. டில்லியிலயோ கில்லியிலயோ எந்தப் பய மசூதியை இடிச்சாலும் அவன் யாரு, நாம் யாரு, எங்களுக்கு நீங்கதான் அண்ணன்மாரு. நாங்கதான் உங்க அக்காதங்கச்சிங்க. எங்கள யாரும் ஒண்ணும் பண்ணமாட்டாங்க.”

அமீர் கண்களைத் துடைத்து, காதர் பாட்சாவின் தோள்பட்டையை தன் ஈரக் கைகளாலேயே தட்டிக் கொடுத்து, அந்தப் பெண்களைச் சுட்டிக் காட்டினார். மீண்டும் அந்தப் பெண்கள் திட்டித் தீர்த்தார்கள்.

“பாழாய்ப் போற பயலுவதாயா பிள்ளையாய் இருக்கிற நம்மள கூட பிரிச்சிடுவாங்க போலிருக்கே. ஊரு உலகத்துல ஒரு டாக்டராலயும் சுகப்படுத்த முடியாத நம்ம பிள்ளைய நோயும் நொடியும் இந்த மசூதியில் வந்துதான் சுகமானது. எந்த நொறுங்குவானோ அயோத்தியில் போயி மசூதிய இடிச்சிருக்கான் பாரு... ஏலா... ராசாத்தி எந்த இடத்தில இடிச்சாளாம்...”

சம்சுதீன் தடுமாறினான். அபிராமி தனக்காக காத்திருப்பாளே என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஆனாலும் அந்த மசூதி இடிபாட்டில் அவள் காத்திருத்தல், அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அவள் கிடக்கிறாள்.

சம்சுதீன், இப்போது, அபிராமியை பார்க்கப் போவது இல்லை என்று தீர்மானித்தான். அதே சமயம் அந்த ஜகாத் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வதா, அல்லது வீட்டில் போய் முடங்கிக் கொள்வதா, என்றும் புரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தான்.

மசூதிக்கு வெளியே வந்த அமீர் தொலைவில் வேக வேகமாய் போய்க் கொண்டிந்த இஸ்லாமியக் கூட்டத்தை வெறித்துப் பார்த்தார். இனி மேல் தன்னால் செய்யக் கூடியது ஏதுமில்லை என்பது போல் தவித்துப் பார்த்தார். அவர் பக்கமாக வந்த காதர்பாட்சா தோளிலும், முத்துக்குமார் தோளிலும் ஆதரவு தேடி இரண்டு கைகளைப் போட்டபடியே அவலமாகப் பேசினார்.

“இந்து மதம் எரிமலையாய் வெடிச்சதுனால, இஸ்லாமும் பூகம்பமாகக் குலுங்குதே. இந்த பூகம்பத்துக்கும் அந்த எரிமலைக்கும் இடையிலே எத்தன பேர் சாகப் போறாங்களோ? எத்தன பெண்கள்...”

அமீரால், அதற்கு மேல் பேச முடியவில்லை. “அல்லா அல்லா” என்று மட்டுமே அவர் வாய் அரற்றியது.
------------

அத்தியாயம் 2

போர்க்குரலாய் ஒலித்த மின்சார மணியின் ஓசை கேட்டு, உள்ளறைக்குள் இருந்த அபிராமி, புத்தகமும் கையுமாய், வளையல் சத்தத்துடன் கதவைத் திறந்தாள். எதிரே நின்றவர்களைப் பார்த்து அச்சப்படவில்லையானாலும், சிறிது அசந்துவிட்டாள். ஒருவரைப் பார்த்ததும் புன்முறுவலான வாய், எஞ்சிய மூவரைப் பார்த்ததும் தானாய் அடைபட்டது. கால்களோ அகலப்பட்டன. அவளது குடும்பத்துக்கு மிகவும் பழக்கமான சங்கரசுப்பு கூட அசத்தி விட்டார். சாதாரனமாய் பட்டும் படாமலும் திரு நீறு பூசுபவர், அன்று பட்டை அடித்திருந்தார். ஒரு நாளும் இல்லாத சந்தனமும், அதன்மேல் சவாரி செய்த குங்குமமும் அவருக்குப் புதியவை.

என்றாலும், அந்த வித்தியாசத்தை, அபிராமி பெரிதாக எடுத்துக் கொள்ளாத வகையில் மீதி மூவரும் காட்சியளித்தார்கள். அவர்களில் ஒருவர் முப்பது; இன்னொருவன் பதினெட்டு வயதுப் பையன்; மூன்றாமவன் நாற்பது வயது நடுத்தரம். எல்லோரும் சொல்லி வைத்ததுபோல் கிட்டத்தட்ட ஒரே நிறம். மண்சிவப்பு நிறம். உச்சி முதல் பாதம் வரை கோணல் இல்லாத ஒரு செங்குத்தான கோட்டை வரையலாம் என்பது போன்ற உடல்வாகுக்காரர்கள். முழங்கால் வரை நீண்ட காக்கி டவுசர்கள். அவற்றை கவ்விக் கொண்டிருப்பது போன்ற வெள்ளைச் சட்டைகள். ஒவ்வொருத்தர் கையிலும் காக்கி நிறத்தாலான ஒரு குண்டாந்தடி.

அபிராமி, அவர்களின் 'சண்டியர்'த்தனமான பார்வைக்குச் சிறிது பயந்தவளாய், சங்கரச்சுப்பு மீது மட்டுமே பார்வையை நிலைநாட்டி, அவர்களை வரவேற்பது போல் ஒடுக்கிப் பிடித்த கதவை விசாலப்படுத்தினாள். எட்டு முழ மல்வேட்டிக்காரர் சங்கரசுப்பு, அந்த வீட்டிற்குள் சர்வசாதாரணமாக நுழைந்தபோது, யூனிபாரக்காரர்கள் பூட்சுகளைக் கழற்றக் கீழே குனிந்தார்கள். அந்தக் குனிவு கூட உடற்பயிற்சி போல் தோன்றியது.

அபிராமி இனிமையோடு சொன்னாள். “எங்கள் வீட்டிற்குள் வாரதுக்கு, பூட்சைக் கழட்ட வேண்டாம். அப்படியே வாங்க,” அந்த யூனிபாரக்காரர்கள், அவளை தங்கள் இயக்கத்தில் ஒரு பெண் தொண்டராக அங்கீகரித்தது போல், யூனிபார்மாக புன்னகை செய்தபோது, வேட்டி மனிதரான சங்கசுரப்பு, வெட்டி மனிதர் போல் முகம் சுளித்தார். பிறகு உபதேசித்தார்.

“எதை விட்டாலும் ஆச்சாரத்தை விடப்படாதும்மா. நாம் இப்படி விட்டதாலதான், துலுக்கப்பயலுக இந்த ஆட்டம் ஆடுறானுக.”

அபிராமி அவர் முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டதை, சம்சுதீனுக்கு எதிராய் விடப்பட்ட சவாலாய்க் கருதி, நெளிந்தாள். அதனால் லேசாகக் கோபம் கூட வந்தது. ‘காபி வேணுமா’ என்று கேட்கப் போன வாயை உதடுகளால் பூட்டிக் கொண்டாள். ஆனாலும் சங்கரசுப்பு மூச்சு இழுப்பதைப் பார்த்துவிட்டு, சிறிது பரிதாபப்பட்டுச் சொல்ல வந்ததைச் சொன்னாள்.

“காபி வேணுமா, இல்லே சூஸ் வேணுமா?”

“சூஸ் சாப்பிட்டு விட்டு அப்புறம் காபி சாப்பிட்டால் நல்லா இருக்கும். என்ன அப்படி பார்க்கிறீங்க! இது என்வீடு மாதிரி? இந்த ‘பாப்பா’ என் கண்ணு முன்னாலேயே பிறந்து வளர்ந்த பொண்ணு. நில்லு அபிராமி, தப்பாச் சொல்லிட்டேன். மொதல்ல காபி கொடு. அப்புறம் சூஸ் கொடு. அப்போதான், தொண்டையும் வயிறும் வெயிலில் இருந்து ஏ.ஸி.க்குள்ள வந்தது மாதிரி இருக்கும்.”

அபிராமி சிரித்தாளோ இல்லையோ, அந்த யூனிபாரக்காரர்கள், மாநிறமும் பூஞ்சை உடம்பும் தெத்துப் பற்களும் கொண்ட சங்கரசுப்புடன் சேர்ந்து சிரித்தார்கள்.

அவர்களுக்கு எதிரே தொலைவில் பூஜை அறையின் நுழைவாயிலில், அன்னை அபிராமி, திரிசூலமும் கையுமாய், சிங்கமும் ஆசனமுமாய் உள்ள திரைச் சீலை ஒதுக்கப்பட்டு, அந்த அன்னை இப்போது துணிக்கோடுகளாய் சுருக்கப் பட்டாள். அப்படி ஒடுக்கிய கையை நிமிர்த்தியபடியே, பழனிவேல் வெளிப்பட்டார். நெற்றி முழுக்க விபூதிக் குவியல், அதில் கலப்படமான குங்குமம். கருமேக நிறம், அதனாலோ என்னவோ, மின்னல் போன்ற பற்கள். முறுக்கேறிய உடம்பு, குத்திட்டு நின்ற முடிகளால், பாசிப்பாறை போன்று தோன்றிய மார்பு, தொப்புளைத் தொட்ட டாலர் செயின். “வாங்க, வாங்க,” என்று சொன்னபடியே அந்தக் குரலுக்கு ஏற்ப அவசரமாய் நடக்காமலும், அவமரியாதையாக நிற்காமலும், அழுத்தம் திருத்தமாய் நடந்து, எதிரேயுள்ள ஒற்றை சோபாவில் உட்கார்ந்தார். அவர் அப்படி உட்காரும் வரை பொறுக்காத சங்கரசுப்பு, சலித்துக் கொண்டார்.

“நீங்க இப்படி அம்பாளை விழுந்து விழுந்து கும்பிடுறிங்க! நீங்களும் நானும் கும்பிட்டு என்ன பிரயோசனம்? நேற்று ராத்திரி, பஸ் ஸ்டாண்டு பிளாட்பாரத்தில் இருந்ததே ராமர் கோயிலு - அதையும், சொக்கட்டான் குடியிருப்பு பக்கத்துல மாரியம்மன் கோவிலையும், முஸ்லிம் பயல்க உடைச்சுட்டாங்க. நம்ம அபிராமி கோயிலு வாசலுக்குள்ள கூட வந்துட்டாங்க.”

பழனிவேல் முகத்தை கோபத்தனம் ஆக்கியபோது யூனிபார நடுத்தரம், அவர் முகத்தைப் பார்த்தபடியே சங்கரசுப்புடன் பேசியது.

“நாம பதிலுக்கு என்ன செய்தோம் என்கிறதையும் தலைவர் கிட்ட சொல்லுங்க”

தலைவர் என்ற வார்த்தையைக் கேட்டு பழனிவேல், ஆச்சரியமாகத் தலையை நிமிர்த்திய போது, சங்கரசுப்பு சிரிப்பும் கும்மாளமுமாய் சேதி சொன்னார்.

“சும்மா சொல்லக் கூடாது. ராத்திரி இவங்க தலைமையிலே நம்ம ஆட்கள் தூள் பரப்பிட்டாங்க. அபிராமி கோயிலுக்குள்ள நுழையப் போன துலுக்கனுகள சாத்து சாத்துன்னு சாத்திட் டாங்க... அபிராமி மட்டும் காளியம்மனாய் இருந்திருந்தால். அவனுவள ஆடு, கோழி பலி கொடுக்கிற மாதிரி, அங்கேயே கொடுத்திருபானுக. பின்ன என்னங்க எத்தனை நாளைக்குத்தான் வளையல் போட்டு கிட்டு இருக்கது...நேத்து நம்ம ஆட்களோட ராஜ்ஜியந்தான்.ஒரே வாண வேடிக்கை. அணுகுண்டு மாதிரி வெடி வெடியாய் போட்டாங்க... அதுவும் மசூதிங்களுக்கு முன்னாலேயே போட்டாங்க.. அப்புறமா ஸ்ரீராமர் படத்தை எடுத்துக்கிட்டு ஊர்வலம் போனாங்க. எல்லாரும் கடையை மூடிட்டாங்க. ஆனாலும் எனக்கு ஒரு வருத்தம். முஸ்லிம் பயலுக கடையை மூடுனா மூடுறான். நம்ம இந்துப் பயலுவ எதுக்காக மூடனும்? எப்படியோ நேத்து டவுணுல எல்லா சாய்பு பயலுகளும் பம்மிக் கிடந்தாங்க.”

பழனிவேல் மோவாயைச் சொறிந்தபடியே பேசினார்; “இவ்வளவு நடந்திருக்கு; எனக்குத் தெரியாமப் போச்சே. ஆனாலும் இந்துக்களும் கடையை மூடுனதுல தப்பில்ல. எரிற கல்லுக்கு இந்து, முஸ்லிம்னு தெரியுமா? இந்துக் கடையில முஸ்லிம் வேல பாக்கான். அதோடு இந்து யாரு, முஸ்லிம் யாருன்னு கண்டு பிடிக்க முடியாது பாருங்க.”

அந்த யூனிபாரக்காரர்கள் முகம் சுளித்தார்கள். பழனிவேலையே ஒரு முஸ்லீமைப் பார்ப்பது போல பார்த்தார்கள்.

ஆனால் சங்கரசுப்பு சமாளித்தார்.

“இதுக்குத்தான் இந்துக்களுக்கு ஒரு தனி அடையாளம் வேணுமுன்னு வாதாடுகிறோம். ஒவ்வொரு முஸ்லீமும், ஒரு தொப்பிய வைச்சிருக்கிற மாதிரி, ஒவ்வொரு இந்துவும் சட்டையில ஒரு காவிக் கொடிய குத்திக்கணும்.”

“இப்போ எந்த சாய்பு தொப்பி வைக்கான். காலம் ரொம்ப மாறிட்டு.”

“நீங்க வேற... நேத்து ராத்திரி பார்த்தீங்கன்னா தெரியும். வீம்புக்கு வச்சது மாதிரி முஸ்லிம் ஒவ்வொருத்தன் தலையிலும் ஒரு தொப்பி.”

“அப்புறம் என்ன விசயமாய்...”

“விசயமில்லாம வருவோமா?... இந்துக்களான நாம், ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கோம். இங்க கூட ஏதாவது கலாட்டா வரலாம். அதனால, நம்ம முன்னணிக்கு ஒரு வலுவான தலைவர் தேவை. அது நீங்களாகத்தான் இருக்க முடியும்.”

“வெளிப்படையா வேண்டாமுன்னு நினைக்கேன். என் தொழிலுல ஆளும் கட்சிக்கு அனுசரணையா போகணும் பாருங்க... ”

“நீங்க ஒண்ணு... இப்போ ஆளும் கட்சில கூட ஆதரவு இருக்குதுங்க.”

“ஆனாலும்...”

“நீங்க மட்டும் முன்னணிக்குத் தலைவராய் இருக்க மறுத்துட்டால், அப்புறம் இந்தப் பகுதியில இந்துக்கள் இருக்கிறதும் ஒண்ணுதான். சாகிறதும் ஒண்ணுதான். பாருங்க... நான் சொல்லி முடிக்கவும் மணி அடிக்கிது பாருங்க... டெலிபோன் மணிதான். ஆனாலும் மணி மணிதான்.”

சங்கரசுப்பு பேசப்பேச, குழைவாய் உட்கார்ந்து இருந்த யூனிபாரக்காரர்கள், அந்த யூனிபாரங்களைப் போல் தங்களுக்கும் கஞ்சி போட்டு இஸ்த்திரி செய்யப்பட்டது போல் நிமிர்ந்திருந்தார்கள். அணி வகுப்பு தோரணை உடல் முழுவதும் தெரிந்தது. இதற்குள் பழனிவேல் நிதானமாக எழுந்தபோது மணிச்சத்தம் நின்றது. ஆனாலும் ஒரு இனிமையான சத்தம்... சிங்கி தட்டுவது மாதிரியான சத்தம். அபிராமியின் சத்தம், ‘ஒரு நிமிடம்... அப்பா இருக்கார்,’ என்ற கனிவான சத்தம்.

சாம்பல் நிற டிரேயில், நான்கு கண்ணாடிக் குவளைகளோடு வந்த அபிராமியும் பழனிவேலும் வராண்டாவின் நடுப்பக்கம் ‘கிராஸ்’ செய்தார்கள். அபிராமி கொடுத்த பழரசத்தை யூனிபாரக்காரர்கள் உற்றுப் பார்த்தார்கள். காவிக்கலர் சூஸ்... ஸ்ரீ ராமனுக்கு கண்களை மூடி நன்றி சொல்லிக் கொண்டார்கள். ஆண்டவன் அற்புதத்தை எப்படிக் காட்டுகிறான்.

சூஸ் மட்டுமா காவி... அந்தக் கண்ணாடிக் குவளையும் காவி நிறம். இவளுக்கு ஒரு காவிச் சேலை கட்டி விட்டால்... சர்வ பொருத்தம்...

அந்தக் கண்ணாடிக் குவளைகளை, அவர்கள் பயபக்தியோடு வாங்கிக் கொண்டபோது, உள்ளறையில் சாதாரணக் குரலில் பேசிய பழனிவேல், போகப் போக உரத்துப் பேசுவது கேட்டது. அப்புறம் அதுவே கத்தலாகி இறுதியில் கசிந்து போனது. சங்கரசுப்பு, உடம்பை நெளித்து ஒரு காதை மேல் நோக்காய்த் தூக்கி ஒட்டுக் கேட்க முயற்சித்தபோது, அபிராமி கண்ணாடிக் குவளைகளை மாறி மாறிப் பார்த்தபடியே, ஆர அமரக் குடிப்பவர்களை எரிச்சலோடு பார்த்தாள். ஒருத்தர் பாதி கிளாசை வைத்த போது, அவர் மிச்சம் வைக்கிறார் என்று அந்தக் குவளையை அவள் எடுக்கச் சென்ற போது அந்த ஆசாமி, இரண்டு கைகளையும் வைத்து, அதைத் தூக்கி வாய்க்குக் கொண்டு போனார். அவள் சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

அபிராமியும் பழனிவேலும் மீண்டும் அதே அறையில் கிராஸ் ஆனார்கள். பழனிவேல் அணில்வால் மாதிரி அடர்த்தியான தன் மீசையை வடக்கயிறு மாதிரி முறுக்கிய படியே, தமது இருக்கையில் ஆங்காரமாய் உட்கார்ந்தார். சங்கரசுப்புக்கு விசயத்தை கேட்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. பழனிவேலுவின் உதடுகள் வெடித்தன. அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்ட போது சத்தம் ஏற்பட்டது.

“பாருங்க இந்த அநியாயத்தை-உலக வங்கி திட்டத்துல. நம்ம ஆற்றுக் கால்வாயிலே கான்கிரீட் போட்டு... கரையிலும் கார் போகிற அளவுக்கு ரோடு போட விளம்பரம் கொடுத்தாங்க... நானும் டெண்டர் கொடுத்திருந்தேன்... நாலு லட்ச ரூபா டெபாசிட் வேற கட்டுனேன்... மூணுகோடி ரூபாய் திட்டம்... மெட்ராஸ்ல கோட்டை வரைக்கும் சூட்கேஸோட போயிட்டு வெறுங்கையோட வந்தேன். கடைசியில் என்னடான்னா அந்த காண்டிராக்ட, திவான் முகமதுக்கு கொடுத்தாச்சாம். இவ்வளவுக்கும் அவன் டெண்டர் கூடப் போடல, இத நான் விடப் போறதா இல்லை... இவ்வளவுக்கும் நான் கட்சிக்காரன்னு பேரு... அந்த திவான் முகமது முஸ்லீம் லீக்கு...”

“இது யாரோட வேலையா இருக்குமுன்னு நினைக்கீங்க?”

“எல்லாம் நம்ம மாவட்ட மந்திரி அப்துல்லா இருக்கான் பாருங்க, அவனோட வேலை... இவ்வளவுக்கும் அவன் எலக்ஷன்ல நிக்கும்போது ஒரு லட்ச ரூபா அழுதேன். போஸ்டர் அடிச்சுக் கொடுத்தேன். அவன் தொகுதியில் அடியாட்களை அனுப்பி கள்ள ஓட்டு கூட போட வச்சேன்... இந்த திவான், ஒரு பைசா கூட கொடுக்கல. கடைசில மந்திரி அப்துல்லா அவன் சாய்பு புத்தியக் காட்டிட்டான் பாருங்க... எனக்கு வேண்டிய ஒருத்தர் போய்க் கேட்டால், ‘உங்க ஆளுக்கு இருக்கிற சாராயக் கடைங்க போதாதா... சினிமா தியேட்டருங்க பத்தாதுன்னு திருப்பிக் கேட்கானாம்...”

அந்த நீண்ட நெடிய ஆற்றின் கிழக்குப் பகுதியில், இதே உலக வங்கித் திட்டத்தில் கால்வாய்க்கு கான்கிரீட் போட்டு, கரையை சாலையாக்க இன்னொரு பிரமுகர், ஏழு கோடி ரூபாய் டெண்டரில், ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவாய்ச் செலவழித்து, ஆறுகோடியை அமுக்கி விட்டாராம்... கான்கிரீட் கால்வாயைச் சரி பார்ப்பதற்கு முன்பே, மாமூலாக நடந்த பொறியாளர்களைக் கைக்குள் போட்டும், மனச்சாட்சிப்படி நடந்த அதிகாரிகளைப் பந்தாடியும், கான்கிரீட் போட்டதாக கணக்கு செய்யப்பட்ட கால்வாயில் அவசர, அவசரமாக தண்ணீரைத் திறந்து விடச் செய்துவிட்டாராம். இதனால் கான்கிரீட் போடக் கொட்டப்பட்ட மணல், இப்போது தண்ணிரையே அடைத்துக் கொண்டதால், அந்தக் கால்வாயை தூர் எடுக்க இன்னொரு டெண்டர் விடப் போகிறார்களாம். அதையும் அந்தப் பிரமுகரே எடுக்கப் போகிறாராம். இந்த மேற்குப் பகுதிக் கால்வாயிலும், அவரைப் போலவே நான்கில் மூன்று பங்கு பணத்தை அமுக்குவதற்கு 'புளு பிரிண்டே’ தயாரித்து வைத்திருந்த பழனிவேல், இப்போது இருக்கையில் சோர்ந்து சாய்ந்தார். அவர் கண்கள் மட்டும் தீக்கட்டிகளாய்த் தங்களைத் தாங்களே எரித்துக் கொண்டிருந்தன...

காத்திருந்த உலக வங்கி காண்டிராக்ட்காரியை நேற்று வந்த திவான் தட்டிக் கொண்டு போயிட்டான். யாரை விட்டாலும் அவனை விடக்கூடாது.

சங்கரசுப்பு, நிதானமாக எழுந்தார். பழனிவேல் இருக்கைக்குப் பின்பக்கமாய்ப் போய் அவரது முதுகைத் தட்டிக் கொடுத்தார்; தடவிக் கொடுத்தார். பிறகு மீண்டும் தமது இருக்கைக்கு வந்து, யூனிபாரக்காரர்களை ஒரே பார்வையில் வட்டமிட்டு விட்டு, விரக்தியான குரலில் பேசினார்.

“இதுக்குப் பெயர்தான் ‘இஸ்லாம்’ என்கிறது. நம்ம இந்துக்களுக்கு இருக்கிற பெருந்தன்மை அவங்களுக்குக் கிடையாது. எனக்குத் தெரியும் அந்தக் குல்லாக்காரன் ஜெயிக்கிறதுக்கும், அமைச்சர் ஆகுறதுக்கும் நீங்க என்ன பாடுபட்டீங்கன்னு.”

“என்ன பாடுபட்டு என்ன பிரயோசனம்... கடைசில நன்றி கெட்டத்தனமா...”

இதுக்குப் பெயர் நன்றி கெட்டத்தனமில்ல... இஸ்லாமுன்னு பேரு!”

“இருக்கட்டும்... இருக்கட்டும்... ரெண்டு சாய்பு பயல்களும் எங்க போறாங்கன்னு பார்த்துடலாம்...”

“பாக்கனுமுன்னா, இப்பவே பாக்கணும். நம்ம மாவட்டத்துக்கு ஒரு இந்து மந்திரி வேணுமுன்னு நாம் போராடனும். அதற்கு நல்ல சந்தர்ப்பம் இப்ப வந்திருக்கு...”

பழனிவேல், எப்படி என்பது போல் புருவங்களை உயர்த்தினார். அவர் வாயைத் திறப்பதற்கு முன்பே யூனிபார நடுத்தர வயதுக்காரர் மார்தட்டிப் பேசினார்.

“பாபர் மசூதியை இடிச்சதுக்கு, இஸ்லாமியர் கலாட்டா செய்ய ஆரம்பிச்சுட்டாங்க... அப்படியே அவங்க, கலாட்டாவை இடையில் விட்டாலும், நாம அவங்கள விடமுடியாதபடி கலாட்டா செய்யச் செய்யனும். நம்ம டவுனத் தாண்டி தேரிப்பக்கம் இருக்குது பாருங்க... மலைமேலே முருகன் கோவில்... அதுக்குக் கீழே மசூதி இருக்குது பாருங்க. அத நாம இடிச்சாகனும்... அப்ப பதுங்கிக் கிடக்கிற முஸ்லீமும் பாய்ஞ்சி வருவான்... பல தலை உருளும்... உருளட்டுமே... இப்ப என்ன உருளாமலா இருக்குது... படுகளத்துல ஒப்பாரி எதுக்கு... இந்த கொலைக்கெல்லாம் மந்திரி அப்துல்லாதான் காரணமுன்னும், அவன் பதவி விலகணுமுன்னும் ஆர்ப்பாட்டம் செய்வோம்... அப்போ அவன் பதவி விலகித்தான் ஆகனும்... அதுக்குப் பிறகு திவான் முகமது காண்ட்ராக்டை கேன்சல் செய்றது பெரிய காரியமா என்ன...”

பழனிவேல் ரசித்துக் கேட்டார். அமைச்சர் அப்துல்லா அப்போதே ராஜினாமா செய்து விட்டது. போலவும், இவருக்கே அந்த காண்டிராக்ட் கிடைத்து விட்டது போலவும், ஒரு சுகமான ஆனந்தக் களிப்பு. அதே சமயம் முருகன் கோவிலுக்கு முன்னாலேயே உருவான மசூதியை இடிப்பதா என்ற மனச்சாட்சியின் சின்னக் குத்தல்... அபிராமி சிறுமியாய் இருக்கும்போது, அவளுக்கு ஆஸ்த்துமா மாதிரியான ஈளை மூச்சு... அந்த மசூதிக்குப் போய்த்தான் சுகமாச்சு...

பழனிவேல், எந்த மசூதியை இடித்தாலும், அந்த மசூதியை இடிக்கக் கூடாது என்று கண்டிப்பாக பேசப் போனார். அப்போது ஒரு தபால் இளைஞன் உள்ளே வந்தான். மணியார்டர் பாரத்தையும், ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளையும் அவரிடம் நீட்டினான். அதன் அடிவாரத்தில் எழுதப்பட்ட தகவலைப் படித்ததும் பழனிவேல், அந்த பாரத்தையும், ரூபாய் நோட்டையும் அவனிடமே சுருட்டிக் கொடுத்தார். பிறகு கத்தினார்.

“அந்த பயல் பணம் அனுப்பினால் நீயும் கொண்டு வந்திடனுமா? வாங்க மறுத்துட்டேன்னு, அவன் மூஞ்சியிலேயே எறி. ஏன் அப்படி பேமுழி முழிக்க... உனக்கும் அழுவுறேன்... இந்தாம்மா தனம், ரெண்டு ரூபா கொண்டு வா.”

இந்த மாதிரியான சமயங்களில் மட்டுமே, கணவனிடம் ‘அம்மா’ மரியாதை வாங்கும் தனம்மாள், அந்த மரியாதை உடனடியாக ஏற்றுக்கொள்ளப் படவில்லையானால், அவ மரியாதையாகி விடும் என்பதை உணர்ந்தவள் போல், அவசர அவசரமாக இரண்டு ரூபாயைக் கொண்டு வந்து தபால்காரனின் கையில் வைத்தாள். பழனிவேலுக்கு பற்றி எறிந்தது. எப்படி அவன் கையை இவள் தொடலாம்... என் கையில் கொடுத்தா கொடுக்க மாட்டேனா... திருட்டு முண்ட...

பழனிவேல், தன் கோபத்தை, “குனிஞ்சு வாங்கேன்டா”, என்று தபால்காரனிடம் காட்டினார். அந்த இளைஞனுக்கு வாங்க விருப்பமில்லை. ஆனால் வாங்கித்தான் ஆகனும்... மறுத்தால் ‘நான் கொடுத்து நீ வாங்க மாட்டியா...’ என்று அடித்தாலும் அடிப்பார்... போலீசுக்குப் போனால், ‘பெரிய மனுஷனை அடிக்க வச்சுட்டியே’ என்று, அவங்களும் ரெண்டு சாத்து சாத்தலாம்...”

தபால் இளைஞன் போனதும் பழனிவேல் குதியாய்க் குதித்தார்.

“அபிராமி பில்டிங்கில், பத்தி பத்தியாய் கட்டி இருக்கேன் பாருங்க... கடையிங்க... அதுல கடைசி கடைய தெரியாத்தனமாய், காதர் பாட்சா என்கிற சாய்பு பயலுக்கு விட்டேன்.”

“முஸ்லீமா இருந்தாலும் குல்லா போடமாட்டானே... உருட்டுக்கட்டை மாதிரி... அவன்தானே.”

“அந்தப் பயலேதான்... மற்ற கடைக்கு வாடகை ஏத்துனது மாதிரி அவனுக்கும் ஏத்தினேன்... இவன் என்னடான்னா, அவங்கிட்ட போயி யாருமே அதிக வாடகை கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கான். அவனுக கேட்கல... எல்லோரும் வாடகையக் கூட்டிக் கொடுத்தப்போ... இந்தப் பய பழைய வாடகையை கொடுத்தான்... நான் திருப்பிக் கொடுத்திட்டேன்... இவன் என்னடான்னா எனக்கு அந்த பணத்தை இப்படி மணியார்டர் அனுப்புறான்... அந்த பில்டிங்ல வருசக் கணக்கில் இருக்கிற நம்ம பயலுக சும்மா இருக்கானுங்க... ஆறு மாதத்துக்கு முன்னே வந்த காதர் பய என் கண்ணுலயே விரல்விட்டு ஆட்டப்பாக்கான்...”

“இதுக்குப் பேர்தான் ‘இஸ்லாம்’ என்கிறது. இதனால் தான் நம்ம தலைவர் சொல்றார்- இது இந்துக்களோட காலமில்ல... டிசம்பர் ஆறு, அதாவது நேற்றில் இருந்து இந்துக்களோட் பொற்காலம் துவங்கி இருக்குன்னு சொல்றார்.’

“நீங்க சொல்றது... ஒரு வகையில்,.. ஒருவகையில என்ன எல்லா வகையிலயும் சரிதான்... இதனால்தான் எனக்கு மணியார்டர் அனுப்பி இருக்கான்.”

இளைய யூனிபாரம் இப்படிச் சொன்னது.

“இந்து... இளிச்சவாயன்னு...”

இதற்குள் யூனிபாரம் நடுத்த்ரம் ஆவேசித்த்து.

“ஏன் கவலைப்படுறீங்க... இப்போ அவங்க என்ன செய்தாங்க என்பது முக்கியமில்ல... நாம் என்ன செய்யுறோம் என்கிறது தான் முக்கியம்... காதர்பாட்சாவோட கையையோ, காலையோ எடுக்க வேண்டியது எங்க பொறுப்பு... விசயத்த எங்ககிட்ட விட்டுருங்க. ஆனால் ஒரு கண்டிசன்... நீங்கதான் நம்ம முன்னணிக்குத் தலைவராய் இருக்கனும்...”

பழனிவேல் அப்போதே முன்னணித் தலைவரானது போல ஆணையிட்டார்.

“டவுனுக்கு வெளியே, முருகன் கோயிலுக்கு கீழ் இருக்கிற மசூதியை தரை மட்டடமாக்குவோம்... அப்போ அந்தப் பயலுக வருவான்க... காதர்பாட்சாவும் வந்துதானே ஆகனும்... அங்கேயே அவனை வெட்டி பொலி போடணும்... இதுக்கு நான் இப்போ என்ன செய்யனுமுன்னு சொல்லுங்க... முன்னணித் தலைவர் என்கிற முறையில் கேட்கேன்.”

“அப்பாடா, கேட்கிறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா. நீங்க பெரிசா ஒன்னும் செய்ய வேண்டாம். கத்தி, கம்போட ஒரு நூறு ஆட்கள அனுப்புங்க... இப்போதைக்கு ஒரு இருபதாயிரம் ரூபாய்... போலீஸ்ல, இந்து போலீஸ்தான் அதிகமா மாமூல் கேட்கான்... அவங்க கண்ண மூடினாத்தானே, நாம ஏதாவது செய்ய முடியும்.”

“சரி, பணமும் ஆளும் வந்துட்டதா நினைங்க.”

அவர்கள் எழுந்திருக்கப் போனபோது, ஜோல்னா பையோடு அபிராமி வந்தாள். அவர்கள் கால்களை வளைத்துக் கொள்வதற்காக கண்களால் வளைத்துப் பார்த்தாள். தந்தையைப் போல் வைரப்பட்ட உடம்பு வைராக்கியமான பார்வை. யோசித்துவிட்டுப் பேசாமலும், யோசிக்காமல் பேசாமலும், யோசித்துக் கொண்டே பேசுவது போன்ற லாவகம்.

மகளை பழனிவேலு வியந்து பார்த்துக் கொண்டே மற்றவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். “இவள் எப்படிப் பிறந்தாள்னு ஓங்களுக்குத் தெரியாது?”

சமையலறைக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த தனம்மாள் திடுக்கிட்டாள். என்னத்த உளறப் போகிறாரோ என்று பதை பதைத்து, மகளிடம் பேசப் போகிற சாக்கில், அங்கே போய்க் கொண்டிருந்தாள். உடனே பழனிவேல் அவளுக்குப் பார்வையாலேயே கோஷாப் போட்டார். “தேவடியா முண்டை, இங்கென்னடி வேலை” என்று உதடுகளை ஒலி எழுப்பாமல் அபிநயம் செய்து காட்டினார். அந்த அம்மா பயந்து போய் உள்ளே ஓடியபோது, பழனிவேல் மானிட அபிராமி பிறந்த வரலாற்றை விளக்கினார்.

“எனக்கு கல்யாணமாகி பத்து வருடமாய்க் குழந்தை இல்லை. எங்க மாமியார் கூட கொழுந்தியாளைக் கட்டிக்கச் சொன்னாங்க. நாம என்ன முஸ்லீமா... மூணு பொண்டாட்டி கட்டிக்கிறதுக்கும், தலாக் செய்யுறதுக்கும்... ஆண்டவன் விட்ட வழியின்னு இருந்தேன்... ஆனாலும் மனசு கேட்கல... ஒரு பெரியவர் சொன்னபடி ‘அபிராமி’ கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி போய் அபிராமி அந்தாதியைப் படிச்சேன்... சரியா பத்தாவது மாதம் இவள் பிறந்தாள். இவள் என்னை தந்தையாய்ப் பார்த்தாலும், நான் இவளை அம்மாவாத்தான் பாக்கேன்.”

பழனிவேலால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. குரல் தழு தழுத்தது. தவம் செய்து பெற்ற தன்மகள், கல்லூரியில் திவான் முகமது மகனோடு, ‘இஸ்க்கு, தொஸ்க்கா’ நடப்பதாய் ஒரு மொட்டை கடுதாசி வந்ததிலிருந்து, அவர் மனமும் மூளியாய்ப் போனது. சாடை மாடையாய்ப் பார்த்ததில், அது உண்மை போலவும் தோன்றியது.

சங்கரசுப்பு, ஒரு போடு போட்டார்.

“பாப்பா, பாக்கிறதுக்கு அசல் ‘அபிராமி’ மாதிரிதான் இருக்காள்.”

அபிராமிக்கும் பெருமை பிடிபடவில்லை. தெய்வ அபிராமியின் ஒரு கூறு, ‘தான்’ என்பதில் ஒரு பெருமிதம். தலைக்கு மேல் ஒரு மஞ்சள் ஒளி வட்டம் இருப்பது போன்ற அனுமானம். மற்ற பெண்களைப் போல் அல்லாமல், தான் ஒரு தெய்வப் பிறவி என்ற நம்பிக்கை...

அபிராமி புறப்பட்டாள். அவள் காலடிச்சத்தம் ஒய்ந்ததும், பழனிவேல் சங்கரசுப்புவின் காதுகளில் கிசு கிசுத்தார்.

“அப்புறம் அவன்... நயினார் முகமதுவின் மகன் சம்சுதீன்னு ஒரு வாத்திப் பயல் இருக்கான். காலேஜ்ல வேல பாக்குற நம்ப இந்துப் பெண்கள் கிட்ட ஏடாகோடமாய் நடக்கானாம். அவனை ஏதாவது செய்வதாய் இருந்தால் இப்பதான் செய்யனும்.”

சங்கரசுப்பு பதிலுக்குக் கிசுகிசுத்தார்.

“முடிச்சுடுவோம், உங்க குடும்ப கெளரவம் தானே எங்க கெளரவம்? அப்ப வரட்டுமா... சம்சுதீனை நாங்க கவனிக்கோம். எதுக்கும் அபிராமிக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையாய் சீக்கிரம் பாருங்க...”

பழனிவேல், வாசலைத் தாண்டியவர்களை வழியனுப்பக் கூடத் தெரியாமல் மரத்து விட்டார். கடைசியில அபிராமி சங்கதி இவனுகளுக்கெல்லாம் தெரிஞ்ச பிறகுதான் எனக்குத் தெரிஞ்சிருக்கு... இந்த பாபர் மசூதியை இடிச்சது சரிதான். அபிராமி என்னத் தலைகுணிய வச்சிடுவாளோ... எப்படி வைப்பாள்... சம்சுதீனின் தலை அவன் கழுத்துல இருந்தாத் தானே...

பழனிவேல் கோபமாகக் குமுறி, அதற்கு வடிகால் தேடுவது போல் சமையலறையைப் பார்த்து சத்தம் போட்டபடியே ஓடினார்.

“ஏண்டி திருட்டு முண்ட மகள வளக்கிற லட்சணமாடி...”
--------------

அத்தியாயம் 3

சம்சுதீன், பாபர் மசூதியின் இடிபாடுகள் போலவே முடங்கிக் கிடந்தான்.

சாதாரணமாக, கழுத்தை நேர்க்கோடாக்கி, தலையை நிமிர்த்தி உட்கார்ந்து இருப்பவன், குடைசாய்ந்து கிடந்தான். நாற்காலியின் முதுகு விளிம்பில் தலையைச் சாய்த்து, கால்களை அகல விரித்துப் போட்டு, உடம்பினை நெளிவு சுளிவுகளாக்கிக் கிடந்தான். மேலே மாரடித்து ஒப்பாரி போடுவதுபோல் சத்தமிட்டுச் சுற்றிய துருப்பிடித்த மின் விசிறியைக் கண்களைச் சுழற்றாமலே பார்த்தான். பாபர் மசூதி இடிபட்டதை விட, கல்லூரி சகாக்கள் நடந்து கொண்ட விதம் அவனை உலுக்கிப் போட்டுவிட்டது. ஆண்டாண்டு காலமாக அந்யோன்யமாய்ப் பழகியவர்கள் கூட, இப்போது தன்னை அந்நியமாய்ப் பார்ப்பது போல் அவனுக்கு ஓர் அனுமானம். ஒரு வேளை அவர்கள் நினைப்பது போல்-சொல்லாமல் சொல்லிக் காட்டுவது போல், தான் இந்தியன் இல்லையோ என்ற சந்தேகம். இந்தியனாக அங்கீகரிக்கவில்லையோ என்ற ஆதங்கம்.

பொன்விழாக் காலத்தைக் கொண்டாடும் கட்டத்திற்கு வந்து விட்ட கல்லூரி என்பதனாலோ என்னவோ, அந்த ஆசிரிய அறை ஈயமாய் இளித்தது. பித்தளையாய் வெளுத்துக் கிடந்தது. அதன்சுவர்களில் சுண்ணாம்புத் தோல் பிய்ந்துமண் சதைகள் வெளிப்பட்டன. அந்த செவ்வக அறையில் மரக்கோடு கிழித்ததுபோல் இருபக்கமும் பத்தாம்பசலி மேஜைகள். எதிர்ப்பக்கம் தாவர இயல் ஆசிரியர்களுக்கான கையொடிந்த இருக்கைகள். இவன் உட்கார்ந்திருக்கும் பக்கம் விலங்கியல் ஆசிரியர்களுக்கான இருக்கைகள். சுவர் மூலையில் ஒரு தூசி துப்பட்டை ரேக்கு; அவற்றில் பாழடைந்த புத்தகங்கள்.

சம்சுதீன், கல்லூரிக்கு முன்பாகவே வந்துவிட்டான். அபிராமி அவனுக்காக பஸ் நிலையத்தில் ஒப்புக்கு நிற்பது போல் காத்து நிற்பாள் என்ற உணர்வில்லாமலே வந்து விட்டான். மசூதி பாளையத்தில் இன்னும் கூச்சலும் குழப்பமும் கோபாதாபங்களும் அடங்கவில்லை. போதாக் குறைக்கு டவுன் பக்கம் கோபாதாபத்தோடு போனவர்களில், பலர் தாக்கப்பட்டு ஆங்காங்கே மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கேள்வி. இவற்றையெல்லாம் உள்வாங்க முடியாமல் முன் கூட்டியே வந்தவன், அதற்கு முன்பாகவே ரகுராமன் இருப்பதைப் பார்த்தான். அன்றாடப் பத்திரிகை செய்திகளை அவன் படிக்கத் தேவையில்லை என்பதுபோல், அலசுகிறவர் இந்த ரகுராமன். அந்த ஆசிரியக் கூட்டத்திலே இவன் ஒருவன்தான் அவருக்குக் காது கொடுப்பான். ஆனால் இன்றோ அவனுக்கு வாய்கொடுக்க மறுத்தவர்போல் சும்மா இருந்தார். இவ்வளவுக்கும் செய்திகளுக்குப் பஞ்சமில்லை. பாபர் மசூதி இடிபட்ட மறுநாள் காலை இதுதான். டில்லி, அகமதாபாத், சூரத், பம்பாய் போன்ற நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் நெருப்பில் வெந்தும், துப்பாக்கிக் குண்டுகளால் துளைபட்டும் சின்னாபின்னமான செய்திகள் நிறையவே உள்ளன. சர்வதேச அரசியலில் இருந்து, அந்தக் கல்லூரி நிர்வாகம் சொந்தக்கார ஜூனியர் ஒருவரைப் புதிய முதல்வராய் நியமித்த உள்ளூர் செய்தி உட்பட அனைத்தையும் அலசும் அறிவுஜீவி ரகுராமன். போஸ்னியாவில் முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்படுவது பற்றியும், பாலஸ்தீனத்தில் அரபு மக்கள் நாடோடிகளாகத்திரியும் நிலையையும் சுட்டிக் காட்டும், இதோ இந்த ரகுராமன், இன்று நாடெங்கிலும் சொந்த சோதரர்கள், சோதரிகள் துடிதுடிக்கக் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி அவனிடம் பேச முயற்சி கூடச் செய்யாதது, அவனுக்கு என்னவோ போலிருந்தது. அவள் போட்ட குட்மார்னிங்கைக் கூட மோர்னிங்காக எடுத்தவர்போல் அசைவற்று இருந்தார். இதற்குள் அங்கே வந்த பெரும்பாலான ஆசிரியர்கள் சம்சுதீன் அங்கே இருக்கக்கூடாது என்பதுபோல், திடுக்கிட்டுப் பார்த்துவிட்டு, இருக்கிறானே என்பது போல் மற்றவர்களிடம் கிசுகிசு என்று பேசுகிறார்கள். ஒவ்வொரு முகத்திலும் கிருஷ்ண ஜெயந்தியோ அல்லது ராம நவமியோ வந்தது போன்ற பக்திப் பரவசம்-ஏதோ ஒரு பூரிப்பு-ஆனாலும் அவர்களைச் சும்மா சொல்லக்கூடாது! இந்து மதம் சகிப்புத் தன்மை உள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதுபோல் அவன் அங்கே இருப்பதை சகித்துக் கொண்டார்கள். அதே சமயம், அவன் அங்கு இருப்பதால் மசூதி இடிக்கப்பட்ட மகிழ்ச்சியை, இந்துக்கள் நடத்திய வீர சாகசங்களை பேச முடியவில்லையே என்ற ஆதங்கம், அவர்கள் பார்வையிலிருப்பது போல் சம்சுதீனுக்குப்பட்டது. சிலர் அவனைக் காட்டிக் குறுஞ்சிப்பாய்ச் சிரிப்பது போலவும் தோன்றியது.

சம்சுதீன் அவசர அவசரமாய் வெளியேறினான். திரும்பிப் பாராமலேயே, ஆசிரிய அறைகளும், சோதனைக் கூடங்களும் கொண்ட அந்தத் தாழ்வாரம் வழியாய் நடந்து, அதன் முனையிலிருந்து கீழே குதித்துத் தாமரைப்பூ வடிவில் உருவான சிமிண்ட் வேலைப்பாட்டையும், அதற்கு மேல் இருந்த கொடிக்கம்பத்தையும் பார்த்தான். அமாவாசை, பெளர்ணமி, கிறிஸ்துமஸ் போல் சுதந்திர நாள், விடுதலை நாள், தியாகிகள் தினம் போன்ற நாட்களில் மட்டும் தேசக் கொடியை உச்சியில் பூச்சூடலாய்க் கொண்டிருக்கும் அந்தக் கம்பம், இப்போது வெறும் மொட்டையாகத் தெரிந்தது. ஆங்காங்கே அவனுக்கு உயிர்ப்புள்ளதாய்த் தெரிந்த கட்டிடங்கள், இப்போது மயான அமைதியோடு கூடிய சமாதிகளாகத் தோன்றின. ‘குட்மார்னிங் சார்’ என்ற குரல் கேட்டுத் தலை திருப்பினான். குங்குமம் வைத்த இரண்டு பாவாடை தாவணிகள். கூடவே ஒரு விபூதிப் பையன். கிண்டல் செய்கிறார்களோ? மசூதி இடிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டுகிறார்களோ?

சம்சுதீன், அவர்களைப் பார்த்து பதிலுக்குப் புன்னகை கூடப்பூக்காமல் நடந்தான். மனம் போன போக்கில் நினைத்து, கால் போன போக்கில் நடந்தவன் தனது கால்களுக்கு இடையே ஒரு பந்து சிக்குவதைப் பார்த்தான். ஓடிவந்த இரண்டுபேர், அவனை ‘எடுத்துக் கொடு’ என்று கூடக் கேட்காமல், அவன் கால்களை பலவந்தமாக அகலமாக்கி அந்தக் கால் பந்தை எடுத்துக் கொண்டு போனார்கள். மரியாதைக்குக் கூட ‘சாரி’ என்ற வார்த்தையில்லை. இதுபோதாது என்று ஆங்காங்கே கூடிக் கூடிப் பேசுகிறார்கள். பாபர் மசூதி இடிபட்டதைத்தானோ...?

சம்சுதீனால், அங்கே நிற்க முடியவில்லை. அவனைப் பார்த்தவுடனே ஓடிவரும் உடற்பயிற்சி ஆசிரியரும் என்.சி.சி.மாஸ்டரும் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். எதிரே வந்த முத்துலட்சுமி வழக்கம் போல் அவனைப் பார்த்துச் சிரிக்காமல், அவன் எங்கே பேசி விடுவானோ என்று பயந்ததுபோல் வேறு பக்கமாகத் திரும்பி நடக்கிறாள்.

சம்சுதீன் கூனிக்குறுகி நடந்தான். தள்ளாடிய நாற்காலி நுனியில் அல்லாடியபடியே கிடந்த தாத்தா அப்துல் மஜீத், முன்பு தன்னிடம் முட்டி மோதி ஆற்றொண்ணாத் துயரத்தோடு கதை கதையாய்ச் சொன்ன விவரங்கள் இப்போது விஸ்வரூபமெடுத்து அவன் காதுகளைக் குத்தின. அவன் தாத்தா தீவிர காங்கிரஸ் தொண்டராம். காங்கிரஸ் விடுதலை இயக்க ஊர்வலங்களில் அண்ணல் காந்தியின் படத்தைத் தூக்கிக் கொண்டு முன்னால் போனவராம். ஆனால் அண்ணன்கள் இருவரும் முஸ்லீம் லீக்காம். காங்கிரஸ் ஊர்வலத்திற்குப் போட்டியாக அல்லது முன்னோடியாக ஜின்னாவின் படத்தை எடுத்துக் கொண்டு ஊர்வலமாய்ப் போவார்களாம். நாட்டுப் பிரிவினையும் சுதந்திரமும் ஒருசேர வந்தபோது அவர்கள் பயந்து விட்டார்கள். அதற்கு முன்பே ஒரு புதுக்காங்கிரஸ்காரர் ‘சுதந்திாம் வரட்டும் எங்களுக்கு, அப்போ தெரியும் சேதி’ என்று மிரட்டினாராம். இத்தகைய பயத்தாலோ அல்லது குற்ற உணர்வாலோ அவர்கள் குடும்பத்தோடு பாகிஸ்தான் புறப்பட்டபோது, தாத்தாவையும் கூப்பிட்டார்களாம். இவரோ அவர்களைத் தடுக்கப் பார்தாராம். அவர்கள் மசியாத போது இந்துத் தோழர்களை அனுப்பி, ‘அந்தக் காங்கிரஸ் காரன் மிரட்டினான்னு பயப்படாதீங்க; அவன் இவ்வளவு நாளும் வெள்ளைக்காரனுக்கு வால் பிடிச்சுட்டு, சுதந்திரம் வருமுன்னு தெரிஞ்சு காங்கிரசுக்கு வந்த வியாபாரி. நீங்களோ, தப்போ சரியோ கொண்ட கொள்கையிலே நேர்மையாய் இருந்தவங்க. நீங்க போகக்கூடாது’ என்று சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அண்ணன்கள் பிடிவாதமாய் இருந்திருக்கிறார்கள். என்றாலும், போகும் போது கண்ணீர் மல்கப் பிறந்த மண்ணை முத்தமிட்டுப் போனார்களாம். ஒருபிடி மண்ணை எடுத்து காகிதத்தில் மடித்துப் பையில் வைத்துக் கொண்டார்களாம். அப்படிப் போகும்போது, தமையன்மாரின் பெண் குழந்தைகள் சித்தப்பாவின் காலைக்கட்டி அழுது- உன்னைவிட்டுப் போகமாட்டோம் என்று அரற்றினவாம். ஆண் குழந்தைகள், அவரை ‘வா... வா...’ என்று கைகளைப் பிடித்து இழுத்தனவாம். அண்ணன்மார் ‘ஜாக்கிரதை யாய் இருந்துக்கோடா’ என்று அழதழுது சொன்னார்களாம். தாத்தாவால் தாளமுடிய வில்லையாம். அவர்களை விட்டு எதிர்த்திசையில் ஓடினாராம். வீட்டிற்கு போய் அங்குமிங்குமாய் புரண்டு புரண்டு அழுதாராம். தாத்தா சாவதுவரைக்கும், தமையன்மாரோடு வாழ்ந்த, மசூதிக்குத் தெற்கே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பார்.

அப்போது தாத்தா சொன்னதை கதை மாதிரி எடுத்துக் கொண்ட சிறுவன் சம்சுதீன், இப்போது கண்களைத் துடைத்துக் கொண்டான். தாத்தாவைக் கூட திட்டிக் கொண்டான். மதியாத மண்ணில் எதற்காக இருக்கணும்? இந்நேரம் தாத்தாக்கள் கதை முடிந்திருக்கும். ஆனால் பெரியப்பாக்கள், பெரியம்மாக்கள் இருப்பார்கள். நிச்சயமாக என்னைவிட, என்னை மாதிரியான இங்குள்ள எல்லா முஸ்லிம்களையும் விட சந்தேசமாத்தான் இருப்பாங்க. பேசாம தாத்தாவும் பாகிஸ்தானுக்கு போயிருக்கலாம். அப்படிப் போயிருந்தால் பிறந்த மண்ணிலேயே இப்படிப்பட்ட அந்நியத் தன்மை தந்திருக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட, எல்லோரும் வழங்கிக் கொடுக்கும் அந்நியத் தன்மை இருக்கிறதே, அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். இந்த நாட்டில் ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு சராசரி இந்தியப் பெண்ணைப் போல; அவர்களுக்குப் பிறந்த வீடு முக்கிய மில்லை. புகுந்த வீடு புகுந்த வீடே.

சம்சுதீன், ஒரு அன்னியன் போலவே அந்த அறைக்குள் நுழைந்தான். வழியில் ரஜினிகாந்த் - கமலஹாசன் மகாயுத்தத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்த மாணவ மாணவியர் கூட பாபர் மசூதி இடிபட்டதற்கு சந்தோச விமர்சனம் செய்வது போலத் தோன்றியது. இது போதாது என்று, கல்லூரிக்கு வெளியே வாண வேடிக்கைகள் - ராமபிரான் அப்போதுதான் உயிர்த்தெழுந்து வந்தது போன்ற கோஷங்கள்...

அந்த அறைக்குள், அபிராமி மட்டுமே இருந்தாள். மற்றவர்கள் வகுப்புக்களுக்குப் போயிருக்கலாம்.

அபிராபி, பின்கழுத்து தெரியாதபடி மூடித்திரை போட்டு, அதன் முனையைக் கைப்பிடிபோல் ஒரு சுருக்காக்கி இருந்தாள். வாசலையே வெறித்துப் பார்த்தவள். வழக்கம்போல் துள்ளிக் குதிக்கவில்லை. பொதுவாக இந்த மாதிரி சமயங்களில், அவன் அவளுக்குத் தெரியாமல் அவள் முடியை ஒரு இழுப்பு இழுத்து, அவள் கன்னங்களில் பள்ளங்களை ஏற்படுத்துகிறவன் - ஆனால், இப்போது அவளை வெறுமனே பார்த்தான். அவளோ- அவனைப் பொய்க் கோபத்தோடு பார்ப்பவள், இப்போது அவனே பொய் என்பதுபோல் பார்த்தாள். அப்பா, சாடை மாடையாகச் சுட்டிக் காட்டியது போல் சம்சுதீனுக்கு வாழ்க்கைப்பட்டு அவன் வீட்டுக்குள் கோஷாபோட்டு இருக்க முடியாது. மூலையில் முடங்கினாலும் முடங்குவாளே தவிர, முக்காடு போட முடியாது. பெயரில் கூட எவள் மூலம் பிறந்தாளோ அந்த அபிராமியின் பெயரில்தான் உயிருள்ளவரை நடமாடுவாளே தவிர... ஒரு சாந்த் பீவியாக... அல்லது நூர்ஜஹானாக இருக்க முடியாது.

இருவரும், ஒருவரோடு ஒருவர் பேசவில்லை. அவள் மசூதி இடிக்கப்பட்டதற்கு ஒரு வார்த்தை கூட ஆறுதல் சொல்லவில்லையே என்று சம்சுதீன் குலைந்து போய் உட்கார்ந்தான். அவளுக்கோ, அவன் நேற்று சந்திக்க வராததும், அன்னை அபிராமியின் சித்துவிளையாட்டே என்ற ஒரு நம்பிக்கை. வேறுபக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்- முகத்தை மட்டுந்தான். மனதை அப்படித் திருப்ப முடியவில்லை. ஓராண்டுக்கு முன்பு நடந்த சம்பவங்கள். நெஞ்சில் ஒளியாய் நின்றவை இப்போது நெருப்பாய்ச் சுட்டன.

அவற்றை நினைக்க நினைக்க அவளுக்கு மனம் கேட்கவில்லை. அவன் நிலைகுலைந்து கிடந்த விதம் வேறு, அவள் தாய்மையைத் தூண்டிவிட்டது. எதிர்த்திசையில் இருந்து எழுந்து, அவன் அருகே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டாள். அந்தக் கணத்தில், தெய்வ அபிராமியை மனதிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கிவிட்டு, தன்னை ஒரு சாதாரண அபிராமியாக்கி அவனிடம் கேட்டாள் “நேற்று ஏன் நீங்க வரலே? ஒங்க மனசிலே என்னதான் நினைப்பு? ஏன் வரலேன்னாவது இப்ப சொல்லலாமில்லே?”

சம்சுதீன், அவளை வாயகலப் பார்க்காமல் பல்கடித்துப் பார்த்தான். ‘பாபர் மசூதி இடிபட்டு உலகமே அதைப் பற்றி விமர்சிக்குது. முஸ்லீம் சுமுதாயமே தவியாய்த் தவிக்குது. இவளுக்கு இந்த சமயத்திலே தான் நான் காதலனாய் இருக்கனுமோ? கொஞ்சங் கூட ‘டீசன்ஸி’ தெரியாதவள்!’

“என்ன சம்சுதீன்! உங்க மனசிலே என்னதான் நினைப்பு?”

“ரோம் எரியும் போது நீரோ பிடில் வாசிச்சகதை உnகதை; எதுவும் தெரியாதது மாதிரி கேட்கிறியே? பாபர் மசூதி இடிபட்டதற்கு ஒரு ஆறுதல் இல்ல. எங்க வீடே இடிஞ்சு போனது மாதிரி நான் துடிக்கேன், உனக்கென்னடான்னா நான் உன்னைப் பார்க்க வராததுதான் பெரிசாத் தெரியுது.”

“என்ன சம்சுதீன்! நான் என்னமோ பாபர் மசூதியை இடிச்சது மாதிரிப் பேசுறிங்க.”

“இப்போ கூட உனக்கு அந்த மசூதியை இடிச்சது உறுத்தலயே? நீயும் ஒரு சராசரி இந்துப் பெண் மாதிரி தான் நடந்துக்கிறே?”

“டோன்ட் டாக் ஃபர்தர்! எனக்கு சுயமரியாதை இருக்கு! இந்துப் பெண் என்கிறதிலே பெருமைப்படுறேன்.”

“கடைசியிலே அல்லா உன்னைக் காட்டிக் கொடுத்துட்டார்.”

“ஏன் அபிராமி உங்களையும் காட்டிக் கொடுத்துட்டாள்.”

இருவரும், மனதுக்குள் அரும்பிய மதப்பற்றை, பாபர் மசூதி வழியாகவும் அபிராமி வழியாகவும் வெறுப்பாக மாற்றி அந்த வெறுப்பிலேயே தீக்குளித்தார்கள். அபிராமி அவனிடமிருந்து விலகிப்போய் எதிர் வரிசையில் உட்கார்ந்தாள். மனதை வசப்படுத்த அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியை நெஞ்சுக்குள் ஒப்பித்துக் கொண்டிருந்தாள். சம்சுதீனோ மேஜையில் தலையைக் குப்புறப் போட்டு, இரண்டு கைகளையும் அதற்கு மேல் வளைத்துப் போட்டு அப்படியே கிடந்தான்.

முதல் பீரியட் இறந்து, இரண்டாவது பீரியட் பிறந்ததைக் காட்டும் வகையிலோ என்னவோ கல்லூரி மணி இரு வேறுவிதமாய் ஒலித்தபோது...

அந்த ஆசிரிய அறைக்குள், ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தார்கள். வெள்ளை சபாரி போட்ட ராமானந்தம்; விபூதி குங்கும டாக்டர் முரளி, அந்தக் குங்குமத்தை முறைத்தபடியே பார்க்கும் பகலவன் என்கிற இசக்கி; எலிவால் சடைபின்னிய வாளிப்பான முத்துலட்சுமி, காட்டாமோட்டா சேலைகட்டிய வயதான எலிசபெத்; உதவிப் பேராசிரியனும் மசூதிபாளையத்தைச் சேர்ந்தவனுமான முத்துக்குமார். இவர்கள் தனித்துவங்கள் - அப்படி இல்லாத இன்னும் சிலர் மற்றும் பலர்.

எல்லோருமே, அப்படிக் கிடந்த சம்சுதீனைப் பார்த்தார்கள். அதற்கான காரணத்தைக் கேட்பது போல் அபிராமியைப் பார்த்தார்கள். அவள் இப்போது முகத்தை ‘பெரிய எழுத்து’ அபிராமி அந்தாதி புத்தகத்தால் மறைத்துக்கொண்டாள். ராமானந்தம், சக ஆசிரியர்களைப் பார்த்து கண்சிமிட்டிவிட்டு, அபிராமியையும் நோட்ட மிட்டபடியே கேட்டார்; நாற்பது வயதுக்காரர், சம்சுதீனிடம் ஏதோ கடன் கொடுக்கல் வாங்கலில் ‘சில்லறைச்’ சச்சரவுகளை வைத்திருப்பவர். ஆகையாலோ என்னவோ இப்போது அடாவடியாகவும் ஆனந்தமாகவும் கேட்டார்.

“என்னப்பா சம்சு! ஏன் இப்படி இடிஞ்சு போய்க் கிடக்கிறே?”

சம்சுதீன், ஆவேசமாகத் தலையைத் தூக்கினான். முஸ்லீம்களின் பாதுகாப்பு உணர்விற்கே கேடயமாக இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் குத்திக் காட்டுறான். கிண்டல் பண்ணுறான். இவனை விடப்படாது.

“நான் எப்படிக் கிடந்தால், உங்களுக்கு என்ன சார்? வேணுமின்னா எங்க மசூதியை இடித்தது மாதிரி என்னையும் இடிச்சுப் போட்டிருங்க, ஆப்டர் ஆல் நான் ஒரு முஸ்லீம், சிறுபான்மைக்காரன், இந்த மண்ணில் பிறந்த அந்நியன்.”

ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் குழம்பிப் போனார்கள்.

மறுபகுதியினர் எவராவது அவனுக்குப்பதில் சொல்லட்டுமே என்பதுபோல் அந்த ‘ஒருவரை’ ஒவ்வொருவர் முகத்திலும் தேடிக் கொண்டிருந்தார்கள். முத்துக்குமார் தனது சொந்த ஊர்க்காரனான சம்சுதீனுக்கு ஆறுதல் சொல்வதற்காக அவன் பக்கமாகப் போகப் போனான். அப்போது டாக்டர் முரளி அவனைத் தன் பக்கமாக இழுத்துப் பிடித்துக் கொண்டு, மேஜை மேல் தலையைப் போட்டு அதை நிமிர்த்திக் காட்டிய சம்சுதீன் தலைக்கு இணையாக தனது தலையையும் தாழ்த்தி வைத்துக்கொண்டு இளக்காரமாய்க் கேட்டார்:

“இதுவரைக்கும் வளையல் போட்டிருந்த எங்க ஆட்கள் ஒரு சேஞ்சுக்காக மண்வெட்டியையும், இரும்புக் கம்பியையும் எடுத்தது உனக்குப் பொறுக்கலியா?”

முத்துக்குமாரால் தாள முடியவில்லை. டாக்டர் முரளியிடமிருந்து தன்னை விடுவிடுத்துக் கொண்டு, கோபத்தோடு கேட்டான்.

“அது என்ன சார் எங்க ஆட்கள்? நாம எல்லோருமே ஒரே ஆட்கள் தான்!”

“அப்படித்தான் நாம நினைக்கோம்! ஆனா அவங்க நினைக்கலேயே!”

“உங்க ‘நாம்ல’ என்னைச் சேர்க்காதிங்க!”

டாக்டர் முரளி, அடிக்க வருவதுபோல் பேசிய முத்துக்குமாரிடமிருந்து விலகி, ஒவ்வொரு முகமாகப் பார்த்தார். அனைத்துக் கண்களும் அவர் பார்வையைத் தவிர்த்தன. ஆகையால் அவர் முத்துலட்சுமியைப் புன்னகையோடு பார்த்தார். இதுவரை ‘இன்டெலெக்சுவலான’ அவர், தன்னை அலட்சியப்படுத்தியதையும், இப்போதோ கனிவாய்ப் பார்ப்பதையும் நினைத்து பரவசப்பட்ட முத்துலட்சுமி, ‘நாம்’ என்கிற வார்த்தையில் சங்கமமாகி, தான் ஒரு இந்துப் பெண் என்பதில் பெருமைப்பட்டாள்.

“மசூதியை இடிச்சது தப்பு தான். அதுக்காக நாம ஒப்பாரி போடணும்னு யாரும் எதிர்பார்க்கப்படாது. பெரியார் கூட பிள்ளையார் சிலையை உடைச்சார். எம்.ஆர்.ராதா, ராமனைக் கேவலப்படுத்தினார். நாம் பொறுத்துக்கலையா?” என்றாள் அபிராமி.

சம்சுதீன் மீண்டும் தலையைத் தூக்கினான். அவளை உரிமையோடு கடிந்து கொள்வதாகத்தான் நினைத்தான். பழகிய தோஷத்தில் இந்த சகாக்களின் முன்னாலேயே முன்பு அவளை, எந்த வார்த்தையால் கண்டிப்பானோ அதே வார்த்தையை இப்போதும் சொன்னான்: “அபிராமி பிளிஸ் ஷட் அப்!”

அபிராமிக்கு லேசான தெளிவு. மகிழ்ச்சி கூட. எப்படியோ அவன் பேசி விட்டான் என்கிற சந்தோஷம். ஆனால் டாக்டர் முரளி விடுவதாக இல்லை. நாற்பது வயதானலும், அவருக்கு அவள் மேல் ஒரு கண்.

“ஏய்... சம்சுதீன் உன் மனசுல என்னப்பா நினைப்பு? ஒரு இந்துப் பொண்ணுன்னா, அவ்வளவு இளக்காரமா? அபிராமி சுயமரியாதையும் சுய கருத்தும் கொண்டவள். அவள் என்ன கோஷா போட்டவளா? வாயை மூடிக்கிட்டிருக்க! அவளை ஏன்யா ‘ஷட் அப்’ என்கிற?”

சம்சுதீன், திணறிப் போனான். அபிராமியை தனக்காகப் பரிந்துரைக்கும்படி கண்களால் கெஞ்சினான். இதற்குள் ஒரே கத்தல், கூச்சல்; இதனால் வெளியேயிருந்தும் ஆசிரிய, மாணவப் படையெடுப்புக்கள். அபிராமிக்குத் தான் இப்போது ஒரு இந்துப் பெண் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. டாக்டர்முரளி கேட்டது நியாயமாய்ப்பட்டது. ஏதோ காதலிச்சா, அதனாலேயே அடிமைன்னு பட்டா கொடுத்ததா ஆயிடுமா? அபிராமித் தாயே, என் கண்ணைத் திறந்திட்டடி அம்மா! சம்சுதீன் சமாச்சாரமாய் ஒரு முடிவெடுக்க, இன்னைக்கு உன்னைக் கும்பிட்டது வீண்போகல... தாயே... இப்போ... எப்படிம்மா... நான் நடத்துக்கனும் சர்வேஸ்வரி...

டாக்டர் முரளியின் முகஉந்துதலுக்கு உட்பட்ட அபிராமி இப்போது சம்சுதீனைப் பார்த்து திருப்பிக்கத்தினாள்.

“யு ஷட் அப்.”
------------

அத்தியாயம் 4

அவன் அந்தத் திண்ணைக் கடைக்கு முன்னால் சைக்கிளை நிறுத்தினான். வெள்ளை இனாமல் பிடியின் இருபக்கமும் பிடித்திருத்த முடிமுளைத்த இரும்புகள் போன்ற இரண்டு கரங்களையும் எடுத்தான். சைக்கிளிலிருந்து இறங்காமலே முன் பக்கமாய் குவித்து, ‘பாருக்கு’ இருபக்கமும் கால்களை அகலப் போட்டான். பின்புறமாகத் திரும்பி கருப்பு ரப்பர் கயிறால் கட்டப்பட்ட வெள்ளை ஈச்சம்பாய் கூடையைத் திரும்பிப் பார்த்தான். அதில், விளையாட்டு அரங்க இருக்கைகள் போல் அடுக்கடுக்காய் வைக்கப்பட்ட பச்சை வெற்றிலைக் கட்டுகளில் கை போட்டான். பின்னர் வெற்றிலைக்காம்பு அடிவாரங்களில் பிசினாய் ஒட்டிய பாசியையோ, தூசியையோ அப்புறப்படுத்திவிட்டு, ஐந்து கவுளி வெற்றிலைக் கட்டுக்களை எடுத்து அவளிடம் நீட்டினான். பிறகு நீட்டிய கைகளைச் சுருக்கி, ஏழைகளின் நரம்புகள் போல் வெளிப்படையாய்த் தெரிந்த வெற்றிலைக் காம்புகளை பிடித்துக் கொண்டு ஒரு உதறு உதறினான். உதறிவிட்டு, அந்தக் கடையின் முன்பக்கம் நீளவாக்கில் பொருத்தப்பட்ட மரப்பலகையில் வெற்றிலைக் கட்டை வைத்துவிட்டு, அவளை ஏறிட்டுப் பார்க்காமலே சைக்கிள் இருக்கையில் ஏறி, பெடல்களை ஒரு அழுத்து அழுத்தியபோது -

“யோவ் மூப்பனார்...”

அவன் சைக்கிளை நிறுத்தினான். ஒரு காலை பெடவிலும், மறுகாலைத் தரையிலும் வைத்தபடியே திரும்பிப் பார்த்தான். அவள் தலையையே கையாட்டுவதுபோல ஆட்டினாள். உடனே, அவன் கால்களைத் தரையில் தேய்த்தபடியே, பின்பக்கமாகத் தன்னையும், சைக்கிளையும் கொண்டுவந்தான். உள்ளே நின்ற அவளைப் பார்த்தான். திண்ணையில் கிடந்த சின்னக்குழந்தை படுக்கும் படியான குறுங்கட்டில் இருக்கையில் உட்காராமல், அந்தத் திண்ணை விளிம்பிற்குக் கீழே கால்களை மறைத்து, மார்பகத்திற்கு மரவாடை போட்டதுபோல் மறைத்து உள்நோக்கி நீண்ட ஒரு பலாப்பலகை மறைக்க நின்ற பாத்திமாவைப் பார்த்தான். மாம்பழத்திற்குப் பப்பாளி விதைகளையே கண்களாக்கியது போன்ற தோற்றம். எந்தச் சதையும் ‘எக்ஸ்ட்ராவாக’ இல்லாத நேர்த்தி. குறுக்கும் நெடுக்குமாய்க் கோடுகள் போட்ட சாதா சேலை. கட்டம் போட்ட ஜாக்கெட் கீழே விழப்போகிறேன் என்பதுபோல் தலையிலிருந்து நழுவிக் கொண்டிருந்த கோஷா. அவன், அவளை ஏறிட்டுப் பார்த்தான். எத்தனை நாளைக்குத் தான் இந்த மூப்பனார் பட்டம், கேட்டாக வேண்டும் இப்பவே.

“இந்தாம்மா உன்னைத்தான்! என் பேர் மூப்பனார் இல்ல! மாரியப்பன்.”

பாத்திமா அவனை ஓரம் சாய்த்துப் பார்த்தாள். ஒப்புக்குப் போடுவது போல், தோளில் தொங்கிய சேலை துணியை தலையில் போட்டுக் கொண்டாள். வேலை செய்யும்போது, பேச விரும்பாதவள் போல், வலதுபக்கம் கும்பலாய்க் கிடந்த சோடாப் பாட்டில்களை எடுத்து அவற்றிற்குரிய மரப்பெட்டிப் பொந்துகளில் திணித்தாள். இடதுபக்கம் உள்ள வேர்க்கடலை மிட்டாய் ஜாடியையும், வலது பக்கம் சாக்லேட் ஜாடியையும் இரு கைகளாலும் ஒரே சமயத்தில் நகர்த்தி வைத்தாள். வெற்றிலை அடுக்குகளை எடுத்துப் பின்பக்கம் கூடை மூடியில் வைத்தாள். இதற்குள், அவன் போகப்போவது போல், அவன் நிழல் மேலே எம்புவதைப் பார்த்துவிட்டு, அவள் நிமிர்ந்தாள். உடம்பில் படிந்த தூசி துப்பட்டைகளைத் தட்டி விட்டபடியே கேட்டாள்:

“என்ன சொன்னீக?”

“நான் மூப்பனாரு இல்லன்னேன்.”

“பிறகு எப்படி வெத்திலை வியாபாரம் பாக்கீக?”

“வெத்திலைன்னா மூப்பனாரு; பலசரக்கு கடைன்னா நாடாரு. பேன்சி ஸ்டோருனா சாய்பு: வட்டிக் கடைன்னா மார்வாடி! இப்படியா நினைக்கிறது?”

“அப்போ நீங்க என்ன சாதி?”

“மனுஷன். ஆண் சாதி.”

பாத்திமா, தன்னையும், அவனையும் ரசனையோடு பார்த்தபடி வந்த, ஒரு பிஞ்சில் பழுத்த சிறுமிக்கு, காசை வாங்கிக் கொண்டு சாக்லேட்டைத் திணித்து விட்டு, அவனைப் பார்க்காமல் அந்தத் தெருவைப் பார்த்தாள். அந்தத் தெரு முழுவதும் வண்ணப் பாலம் போட்டது போல் நீண்ட நூல் இழைகளைக் கொண்ட தறிகள். அவற்றிலும் ஆங்காங்கே ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவள் அவனையும் புதிதாய்ப் பார்ப்பது போல் பார்த்தாள். இறுகலான உடம்பு, சுருள் கம்பி மாதிரியான கழுத்து, கனிவான முகம், முறம் மாதிரியான முதுகு, அந்த சைக்கிள் மணி போல் பிசிறு தட்டாத டாண்டாண் சத்தம், சின்னக் கரை போட்ட வேட்டி. அவள், எதிர்த் திசையில் தோன்றிய சில முகச் சுளிப்புகளைப் பார்த்துவிட்டு, கோஷாவை அகலப்படுத்தினாள். அவன் கோபப் பட்டானா அல்லது சாதாரணமாகக் கேட்டானா என்ற புதிரை அவிழ்க்கப் போகிறவள் போல் கேட்டாள்.

“தப்பாக் கேட்டுட்டேனோ?”

“அப்படி நினைச்சா நான் திரும்பி வருவேனா? கோபப்பட்டிருந்தால், ஒரு மொறப்பு மொறச்சுட்டு திரும்பிப் பார்க்காம போயிருப்பேன். ஆமாம்மா.”

“எம் பேரு ஆமாம்மா இல்லை... பாத்திமா.”

“ஏதோ ஒரு மா. ஆமா தினமும் பாக்கேன். நான் கொடுக்கிற வெத்திலைய எண்ணுறதே இல்லையே ஏன்?”

“எல்லாம் ஒரு நம்பிக்கையிலதான். இந்த வியாபாரத்துல மோசடி செய்து தானா நீரு மாடி வீடு கட்டப் போறீரு! இதுல உமக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும்!”

“கிடைக்கிறது முப்பது ரூபாய்... போலீஸ் மாமூல் மூணு ரூபாய். சைக்கிள் கேஸ் அது இதுன்று இரண்டு ரூபா. ஆக மொத்தத்திலே தேறுறது என் வயசுப்பணம். எவ்வளிவுன்னு சொல்றது?”

“இருபத்தைஞ்சு சரிதானே. அப்போ வேற தொழில் பாக்குறது?”

“இந்தக் காலத்துல தொழில்னாலே அது கள்ளச் சாராய்ந்தான்... போலீசைக் கைக்குள்ளே போட்டுக்கிட்டு காய்ச்ச ஆரம்பிச்சுட்டா... போலீசே நம்மனை கைக்குள்ளே போட்டுக்கனும்னு நினைக்கிற அளவுக்கு காசும் சம்பாரிச்சுடலாம். பெரிய மனுசனாவும் ஆயிடலாம். ஆனா இதுல்லாம் தங்குமா? என்னைப் பொறுத்த அளவுலே, உங்க வாப்பாவை மாதிரி தெத்தாமே, திருடாமே உழைச்சுச் சாப்பிடணும்னு நினைக்கேன். உங்க வாப்பா எனக்கு ஒருவழி காட்டறதாச் சொல்லியிருக்கிறார்.”

“எங்க வாப்பாவா! அப்ப உருப்பட்டாப்லதான்...”

“அவருஉருப்பட்டாரோ இல்லையோ, அவராலே நிறைய பேர் உருப்பட்டிருக்கிறாங்கன்னு தெரியும். ஆமா... நானும் அப்பப்பிடிச்சே பாக்கேன். உங்க தெருவிலே ஏன் ஒரு நாளும் இல்லாத வழக்கமா கூடிக் கூடிப் பேசுறாங்க?”

“எங்கேயோ ஆக்ராவிலேயோ, ஐதராபாத்லேயோ பாபர் மசூதின்னு ஒண்ணு இருந்ததாம். அதை இடிச்சுட்டாங்களாம்.”

“புதுசாக் கட்டப் போறாங்களா?”

“தெரியலை... அப்பிடி இடிச்சதுலே ஏதாவது கோளாறு நடந்திருக்கும் போல தோணுது, வாப்பாக் கிட்டே கேட்டுச் சொல்றேன்.”

“நான் மொதல்ல சொல்றதைக் கேள். வாப்பா சாப்பிட்டுகிட்டு இருக்கார். கூடமாட நின்று எது வேணுமின்னு கேளு!”

அந்த ஓட்டு வீட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்ட சம்ரத் பேகத்தை மாரியப்பனும் பாத்திமாவும் திரும்பிப் பார்த்தார்கள். அவள் வாசல்படியைத் தாண்டி, பக்க வாட்டில் உள்ள ஒரு ஒற்றை இரும்புப் பலகை அடைப்பைத் திறந்தது தெரியாமல் திறந்து, மூடியபடியே கடைக்குள் வந்தாள். மோட்டா சேலை. முரட்டு நிறம்-ஜிகினா ஜாக்கெட்- எந்த நேரமும் தலையில் எடுத்துப் போட்டுக் கொள்வதற்காக முதுகுக்குப் பின்னால் இடுப்புப் பக்கம் தொங்கிய ஒரு துணி மடிப்பு. சம்ரத் பேகம், மாரியப்பனைப் பார்த்து சந்தோஷமாகச் சொன்னாள்.

“மாரி உனக்கு ஆயுசு நூறு. இப்பத்தான் இவள் அத்தா உன்னைப் பத்தி பேசிக்கிட்டிருந்தார். நீயும் அவரை மாதிரி யோக்கியமாம். அதனாலே ஒனக்கும் ஒரு வழி பண்ணப் போறாராம். என்னன்னு கேட்கமாட்டேங்கிறீயே. அதான் மூணாவது தெருவிலே இருக்கிற துரைச்சாமி முதலாளி ஒரு மாட்டு வியாபாரி... அவரு தயவுல, ஒங்க ரெண்டு பேருக்கும் நல்ல காலம் பிறக்கப் போவுதாம்... முன்னால இவரு மசூதியில கணக்கப் பிள்ளையா இருத்து திவான் முகம்மது மசூதி நிலத்தை கள்ளக் குத்ததைக்கு விடுறாருன்னு வேலையை விட்டபோது- இவரைத் தாங்கிக்கிட்டவரு துரைச்சாமி முதலாளி. ஏழெட்டு வருசமாஅவரு, மசூதி பாளைய வாரச் சந்தையில் வாங்கிப் போடுற மாடுகளை, இவருதான் புயியரை, புனலூரு, குன்னிக் கோடு மாதிரியான மலையாளம் மாட்டுச் சந்தைக்கு பத்திட்டுப் போறது உனக்குத் தெரியும். இப்படி மாடு பத்தற மத்தவங்க... புண்ணாக்குலேயும் புல்லுக்கட்டிலேயும் கமிஷன் வைப்பாங்களாம். சாராயத்திற்கு பணம் பத்தாம ஒரு மாட்டைக் கூட வித்திட்டு அது தொலைஞ்சு போச்சுன்னு சொல்லி விடுவாங்களாம். இவளோட வாப்பாவுக்கு இப்படிச் செய்யத் தெரியாதே. அதனாலேயே துரைச்சாமி முதலாளிக்கு அவருமேல ஒரு மட்டுமரியாதி. இப்ப அவருக்குப் பிள்ளைகள் தலையெடுத்திட்டதனால அவங்க இவரு அலையக்கூடாதுன்னு சொல்றாங்க. அதனாலே அந்த முதலாளி இவருக்கிட்ட ஒரு இருபதாயிரம் ரூபாயாக் கொடுத்து மாட்டு வியாபாரம் பாக்கச் சொல்லப் போறாராம். லாபத்திலே பாதிக்குப் பாதியாம். அவரு என்னடான்னா ஒன்னையும்கூட்டுச் சேர்க்கப் போறாராம்.”

“அய்யய்யோ... நான் அன்னாடம் காய்ச்சி... ஏங்கிட்டே ஏது பணம்?”

“உங்கிட்டே எவன் பணம் கேட்டான்?”

அந்த மூன்று பேருமே அமீரைத் திரும்பிப் பார்த்தார்கள். மோவாய்க்குக் கீழே யாரோ உலர்த்திப் போட்டது மாதிரி இரும்பு இழைகள் மாதிரியான குறுந்தாடி. அதோடு அடையாளம் தெரியாமல் சங்கமமாகும் மீசை, அளவான உடம்பு. உழக்குச் சட்டை. நல்ல உயரம். முகம் கரடு முரடாயிருந்தாலும், அவர் கண்கள் ஒளி வீசின. உள்வளைந்த பற்கள். நிதானமாகப் பேசினார்.

“உன்கிட்ட எவன் பணம் கேட்டான். மாடு வாங்கி விடுறது என் பொறுப்பு. அதைச் சந்தைக்குக் கொண்டு போறது உன் பொறுப்பு. லாபத்தில் பாதியில் இரண்டு பேருக்கும் பாதிப்பாதி. ஏதோ நான் உனக்கு தர்மம் செய்யிறதாய் நினைக்காத, என்னாலையும் இப்போ மாடு பின்னாலே அலைய முடியல. வேறு ஆளைப் போட்டால் பத்திட்டுப் போற மாட்டை மட்டுமல்ல, என்னையும் வித்துப்புடுவான். ஒன்னைப் பங்காளியாச் சேர்க்கறதிலே எனக்கு நஷ்டமுமில்லை. ஏன்னா உனக்கு லாபமா வர்றபணமும், மாடுபத்தறதுக்குக் கூலியாகக் கொடுக்கிற பணமும் கிட்டத்தட்ட சரியாத்தான் இருக்கும். ஆனாலும் உன்னைப் பங்காளியாச் சேர்க்கிறதனாலே எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்காத குறையைப் போக்கிவிட்டது மாதிரி இருக்குது.”

அமீரின் குரல் தழுதழுத்தது. அவர் அதற்கு மேல் பேசினால் அழுதுவிடுவார் என்பதைப் புரிந்து கொண்டது போல், பாத்திமா பேச்சை மாற்றினாள்.

“யோவ் மூப்பனார்! தப்புத்தான். வெற்றிலைக்காரரே உம்ம வெத்திலைய நாங்க வாங்குறது மாதிரி எங்க கடையிலே பதிலுக்கு ஏதாவது வாங்கப்படாதா? என்னைக்காவது ஒரு கலரு சோடான்னு குடிக்கீரா சரியான கருமி.”

“நீ வேறம்மா, ஒரு நாளைக்கு வாய் ருசி கண்டா அப்புறம் சும்மா இருக்காது. வீட்டுல முடங்கிக் கிடக்கிற பனையேறி அப்பனுக்குப் பொடி வாங்கிக் கொடுக்கக்கூட காசு தேறாது. என்னையே நம்பிக்கிட்டு இருக்கிற தங்கச்சியைக் கரையேத்த முடியாது.”

“அடேயப்பா! ஒரு சோடாவுக்கா இந்தப் பஞ்சப்பாட்டு?”

“சிறு துளி பெருவெள்ளம் என்கிறது மாதிரி, பெரு வெள்ளமும் சிறுசிறு துளியாய்ப் போயிடலாம்!”

“வெத்திலைக்காரரே! நீர் மட்டும் படிச்சிருந்தீரு இன்னேரம் தூள் கிளப்பியிருப்பீரு...”

மாரியப்பனும் தன்னால் படிக்காமலும் தூள் கிளப்பமுடியும் என்பதுபோல் அமீரைக் குறுக்கு விசாரணை செய்தான்.

“என்ன பாய் இது? ராமர் கோவிலை இடிச்சிருக்காங்க? கண்ணால பார்த்தேன். நீங்க என்னடான்னா மசூதியை இடிச்சதாச் சொல்றீங்க? இடிச்சது ராமர் கோவிலா, மசூதியா?”

“இடிச்சது மசூதியைத்தாம்பா! இந்த அக்கிரமம் எங்கேயும் நடக்காது.”

“நீங்கவேற டவுன்ல பெரிய பஸ் ஸ்டாண்டு பக்கம் பிளாட்பாரத்திலே ஒரு ராமர் கோயில் இருந்ததே கிளிக்கூண்டு மாதிரி. அதை யாரோ ராத்திரியோட ராத்திரியா இடிச்சுட்டாங்களாம், அந்தக் கோவிலுக்கு ஒரு பத்து பைசா சூடம் ஏத்தாத பயலுவ கூட இப்போ குதிகுதின்னு குதிக்கானுவ. அத்தக் கோவிலு முன்னால எச்சி துப்புன பயலுவ, உண்டியல் திருடன பயலுவ எல்லாரும் இப்போ ராமருக்கு ஏதோ ஆபத்து வந்திட்டுதுன்று கூப்பாடு போடுறாங்க. என்ன பாய் இதெல்லாம்? வாயில்லா ஜீவன். அவரை எதுக்கு இடிக்கணும்?”

அமீர் எதையோ யோசிப்பது போல் தாடியைத் தடவிவிட்ட போது, மாரி அமீர் மனைவியிடம், தாயிடம் பேசுவதுபோல் பேசினான். “பேகம்மா... நான் வாரேன், காலையில இருந்தே நான் எதுவும் சாப்புடல. தலை சுத்துது... டாக்டர்கிட்டே போனால், பிளட் பிரஷர்னு சொல்லுவான். அதுக்கு முன்னாலேயே வீட்டுக்குப் போறேன்.”

பாத்திமாவிற்கு இதயம் வலித்தது. சம்ரத்யேகம் “எங்க வீட்டுல சாப்பிடு” என்றாள். மாரியப்பன், தன் பாட்டுக்கு சைக்கிளை உருட்டப்போனபோது, அமீர் அவன் மார்பில் தனது வலதுகையை, குறுக்காய் வைத்தபடி “சாப்பிட்டுப்போ” என்றார்.

“வேண்டாம் பாய்.”

“இப்பவே நான் சொன்னபடி கேட்க மாட்டேங்க. அப்புறம் எனக்குப் பங்காளியா மாறின பிறகு எப்படிக் கேட்பே? நீ நல்ல பிள்ளையா நான் சொன்னதைக் கேட்பேன்னு நம்பனுன்னால், நீ இங்கேயே சாப்பிடணும். சாப்பிட்டுட்டு இங்கேயே இரு. உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு... சம்ரத் நான் ஜமாத்துக்கு போய்ட்டு வாரேன்.”

“போனமா வந்தமான்று வாங்க. வாயைத் திறக்கப்படாது... இது வரைக்கும் பட்டபாடு போதும் மாரி! நீ சாப்பிட வா!”

அமீர், ஆங்காங்கே அவரது வரவுக்காக காத்து நின்றவர்களோடு கலந்தார். சின்னச் சின்னக் கூட்டங்கள் ஒன்றாகி, பெருங்கூட்டமாய்ப் போய்க்கொண்டிருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்த சம்ரத் பேகம், மாரியப்பனின் கையைப் பிடித்து இழுத்தபோது, அவன் தயங்கினான். “என்னப்பா இது... பாயுங்க வீட்ல சாப்பிடக்கூடாதுன்னு யாரும் சொல்லிக் குடுத்தாங்களா?” என்று பேகம் கேட்டபோது, மாரியப்பன் அந்த வீட்டுக்குள் முதலாவதாக ஓடினான். அந்த அம்மாள் கொல்லைப்புறக் கதவைத் திறந்து, அங்கே இருந்த சிமிண்ட் தொட்டியைச் சுட்டிக்காட்டி, ஒரு ஈயப்போணியை நீட்டினாள். மாரியப்பன், சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான். நான்கைந்து தெள்ளை மரங்கள். குலை போட்ட வாழைகளை சில்லாட்டைகள் மறைத்துமூச்சு முட்ட பைத்துக் கொண்டிருந்தன. இப்படியே விட்டால் ஒரு தேங்காய் கூடத் தேறாது...

“பேகம்மா ஒரு அரிவாள் குடுங்க!”

அந்த அம்மாள் காரணம் புரியாமல் அரிவாளை நீட்டிய போது, அவன் சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டு அரிவாளை இடுப்பில் சொருகிக் கொண்டு, தென்னை மரத்தில் ஒரே தாவாகத் தாவினான், கீழ்நோக்கிப் போன தலைகளை வெட்டினான். சில்லாட்டைகளின் அடிவாரத்தை அரிவாளால் கோடுகள் போட்டுப் பிய்த்தெறிந்தான். உடனே பாளைகள் தங்கநிறப் பெட்டகத்தில் பச்சை நிறக்காய்களைக் காட்டிக் கொண்டிருந்தன. அவற்றை மாராப்பில் சுமப்பது போல் சுமந்து காற்றில் ஆடிக்காட்டின.

மாரியப்பன் ஐந்த தென்னைமர உச்சிகளையும் துப்புரவாய்த் துலக்கிவிட்டு, கைகால்களைக் கழுவினான். உரிமையோடு கேட்டான்.

“சரி இனிமே சோறு போடுங்க!”

சம்ரத் பேகம் ஒரு கோரம் பாயை எடுத்துப் போட்டாள். சுவரோடு மடித்துப் போட்டாள். அவன் முன்னால் ஒரு தட்டை வைத்தாள். சுடச்சுட ‘களி’ கொண்டு வந்தாள். அந்தக் கேழ்வரகுக்கூழ் நெருப்பில் வெந்து வெப்பக் கட்டியாய்க் கொதித்தது. பேகம், அதன் மேல்விதானத்தில் அகப்பையை வைத்து ஒரு அழுத்து அழுத்தினாள். அது உள்வாங்கி வட்டக் கிணறுபோல் மாறியபோது, சமையலறைக்குள் போய் ஒரு ஈயப்பாத்திரத்தைக் கொண்டுவந்து அகப்பையால் ஊற்றினாள். அந்தப் பகுதிக்கு மட்டுமே அதிகமாய்ப் பரிச்சயப்பட்ட "நறுக்குமல" கருவாட்டுக் குழம்பு... அதை அவசர அவசரமாய்க் களியோடு சேர்ந்து சாப்பிடப் போனவன், அதன் சுவையை அவ்வளவு சீக்கிரம் வயிற்றுக்குள் மூழ்கடிக்க விரும்பாதவன்போல் ஆற அமர ஒவ்வொரு விள்ளலாய்ச் சாப்பிட்டான். கடந்த சில ஆண்டுகளில் இப்படிப்பட்ட சுவை உணவைக் கண்ட தில்லை. அப்பாவுக்கும் கிடைத்தால் சந்தோஷப்படுவார். அவன் பேகத்தைப் பார்த்து, “இனிமே எப்பவும் என்னைச் சாப்பிடுன்னு சொல்லாதீங்கம்மா... அப்புறம் ஒங்களுக்கே மிச்சம் இருக்காது“ என்றான்.

சம்ரத் பேகம், தாய்மையின் பூரிப்பில் பெருமிதப்பட்ட போது, சாப்பிட்டு முடித்து மாரியப்பன் வெளியே வந்தான். பாத்திமாவின் கையிலிருந்த ஒரு பெட்டியைப் பார்த்தான். சதுரமானசெவ்வக மரப்பேழை. அவனைப் பார்தததும் அவள் திறந்தாள். வெல்வெட் மெத்தைப் பகுதிகளில் உள்ள விதவிதமான நகைகளைக் காட்டினாள். அவற்றிற்கு நேர்முக வர்ணனையும் தந்தாள்,

“இது காசி மாலை... இதோ கவின் கம்பு மாதிரி இருக்குதே இது கைவளை, இது காதோட தலை முடியை சேர்த்துக் கட்டுற தோட்டலு... அது சுங்கு. இது தலைகத்தி.”

“எனக்குத்தான் தன்லசுத்துது. எதுக்கு இதெல்லாம்?”

“இது கில்ட்டு மேக்கப் செட்டு. ஏழைங்களோட கல்யாணத்துக்கு வாடகைக்குக் கொடுக்கிறதுக்காக காதர் பாட்சா, வாப்பாவுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதுலயும் லாபத்துல, பாதிப்பாதி...”

“இதுங்களெல்லாம் உனக்குப் போட்டா எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா?”

கலகலப்பாய்ச் சிரித்துப் பேசிய பாத்திமா சட்டென்று வாயடைத்துப் பார்த்தாள். மாரியப்பன், ஆடிப்போனான். ‘நான் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்ய மாட்டேம்மா” என்று கூடச்சொல்லப் போனான். ஆனாலும் அதற்குள் அந்தத் தெருமுனையில் இருந்த சாராயக் கடையில் ஒரு டேப் பாடல். வடக்குப் பக்கம் முகம் திருப்பி நின்ற அந்தக் கடையின் கண்ணாடி அலமாரிகளில் பல்வேறு வண்ண பாட்டில்கள் நவராத்திரி பொம்மைகள் மாதிரி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பொம்மைகளே கூடிப்பாடுவது போல் உறுமி மேளத்தோடான பாட்டு. இருபொருள் தரும் அசிங்கமான பாடல். அதில் எழுதக் கூடியது இதுதான்.

“சாராயம் நான் குடிச்சா நீயும் ஏண்டி ஆடுறே?
சரக்குக்குச் சரக்கா வந்து நீயும் ஏண்டி பாடுறே?”

பாத்திமா, சங்கடத்தோடு தெளிந்தாள். அந்த அப்பர்ஒயின் கடையில் பாடல்கள் ஒலித்ததுண்டு. ஆனால் இப்படி அசிங்கமாய் ஒலித்ததில்லை. அதுவும் இப்படிப்பட்ட சத்தத்தில்!

அவளின் ஒவ்வொரு முகச்சுளிப்பிற்கும் ஏற்ப மாரியப்பனின் உடம்பு ஒவ்வொருவிதமாய் இறுகியது. கத்தியபடியே அந்தக் கடையை நோக்கிப் போனான். உள்ளே நின்ற நான்கு பயல்களை, வெளியே வரும்படி குரலிட்டு நடந்தான்.

“என்னடா நினைச்சிய... அக்கா தங்கச்சியோட பொறக்காத அற்பப் பயலுவளா?”
--------------

அத்தியாயம் 5

அந்த மசூதித் தளத்திற்குள், வரிசை வரிசையாகவும், வரை வரையாகவும் விரிக்கப்பட்ட கோரப் பாய்களில் இப்போது சின்னச் சின்ன இடைவெளிகள் மட்டுமே தெரிந்தன. அந்தப் பாளையத்தில் உள்ள பத்து இஸ்லாமியத் தெருக்களில் எட்டுத் தெருக்களில் வாழும் பீடித் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் தவிர, அனைவருமே ஜமாத்துக்கு வந்து விட்டார்கள்; அப்படி வரும்போது இடையிடையே எதிர்ப்பட்ட இந்துக்கள் சர்வ சகஜமாக பேசியபோது, பெரும்பாலானவர்கள் பதில் பேசவில்லை என்றாலும் நின்று நிதானித்துக் கேட்கத்தான் செய்தார்கள். அந்த மசூதி கம்புக்கட்டுகளோடு தோற்றமளித்தது. சிலருக்கு அதை யாரோ இடித்துப் போட்டது போலவும், இப்போது அதற்கு பேண்டேஜ் போட்டிருப்பது போலவும் தோன்றியது. சாந்தமாக வந்தவர்கள் கூட பாயில் உட்கார்ந்த சகாக்களைப் பார்த்ததும் கோபமுகம் காட்டினார்கள். அப்பாவிகளுக்குக் கூட ஒரு அசுரத்தனம் ஏற்பட்டது. ஒவ்வொரு முகத்திலும் ஒரு பூகம்பம்; ஒவ்வொரு நெஞ்சிலும் ஒரு எரிமலை, பழைய விரோதங்கள் மறக்கப்படவில்லையானாலும், அப்போதைக்கு மறுக்கப்பட்டு அந்தக்கண்களில் புதிய சினேகிதப் பார்வைகள்; சிலர் கையோடு கொண்டு வந்த தினசரிப் பத்திரிகைகளைக் காட்டி, இந்தியாவின் எந்தெந்தப் பகுதிகளெல்லாம் உயிரோடு எரிந்து கொண்டிருக்கின்றன என்பதை விளக்கிக் கொண்டிருந்தார்கள். பெரியவர்கள், பெருமூச்சு விட்டு அசைவற்று இருந்தபோது, சம்சுதீன் உள்பட பல இளவட்டங்கள் கைகளை ஒன்றோடு ஒன்று மோத விட்டு நிலையிழந்து காணப்பட்டார்கள்.

எதிர்த்திசையில் கூட்டத்தை நோக்கி ஜமாத் தலைவர் திவான் முகமது சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தார். இடதுபக்கம் ஹாஜி அஜீஸ்; வலது பக்கம் நூருல்லா. தடித்த மொக்கையான முகமும் உருண்டு திரண்ட உடலும் பருத்தி வெடித்ததுபோல் மின்னும் கருப்பு நிறத்தில் நரைபடர்ந்த தாடியோடும், பெருவிரலையும், ஆள்காட்டி விரலையும் நீட்டி விரித்தது போன்ற மீசையோடும் உள்ள திவான் முகமதுக்கு இடது பக்கம் அஜீஸ்; அந்தப் பகுதியில் மெக்காவிற்கு போய்விட்டு வந்த ஹாஜி; இப்படிப் பலர் போய்விட்டு வந்தாலும் உயிரோடு இருக்கும் ஹாஜி அவர்தான். வலது பக்கம் உள்ள நூருல்லா, ஒல்லி மனிதர். பேசினாலும் பேசாவிட்டாலும் அவருக்கு எப்போதும் உதடுகள் துடித்துக் கொண்டிருக்கும். கண்கள் சராசரிக்கு அதிகமாக சிமிட்டிக் கொண்டிருக்கும். அந்த மூன்று பேருக்குமே பாபர் மசூதி இடிபட்டதை விடத் தங்களது மனக்கோட்டைகள் இடிபட்டதில் ஆவேசம். எப்படியோ கஷ்டப்பட்டும் காலில் விழுத்தும் பெரிய சூட்கேஷ் சாட்சியாக வாங்கப்பட்ட ஆற்றுக் கால்வாய் காண்ட்ராக்டிற்கு, சாராய வியாபாரி பழனிவேல் நீதிமன்றத்தில் ‘இடைக்காலத் தடை’ வாங்கப் போவதாய்க் கேள்விப்பட்ட திவானுக்கு உடம்பு மட்டுமல்ல, உடை கூடப் பற்றி எரிவது போல் இருந்தது. ஹாஜி, எந்த நேரத்தில் மகள் ஆயீஷா, முத்துக்குமார் பயலோடு ‘இஸ்க்கு தொஸ்காக’ப் பார்க்கிறாள் என்பதைக் கேள்விப்பட்டாரோ, அந்த நேரத்தில் இருந்தே இவர் மனம் அவர் வசமில்லை. இரண்டு தடவை எழுந்து மசூதியின் வாசலுக்குப் போய்ப் பார்த்தார். ஒரு தடவை தனது வீட்டுக்கு முன்னால் யாரும் இல்லாததில் ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை அப்புறம் ஏற்பட்ட துக்கம் விழுங்கிவிட்டது. மசூதி வாசலில் நின்று பார்த்தால், முத்துக்குமார் பயல், காதர்பாட்சாபயலோடு நின்று கொண்டு அவனைப் பார்க்காமல் அடுத்த பக்கம் பார்க்கிறான். அந்த ஆயிஷா கழுதையும் ஜன்னலைத் திறந்து வைத்துக் கம்பிகளில் முகம்பதித்து உதடுகளைக் குவிந்தபடி பார்த்தால் கூடத் தேவலை... சிரிக்கிறாள். திரும்பி வந்த அஜீஸ் மூன்றாவது தடவை எழுந்தபோது நூருல்லா, திவான் முகமதின் முதுகுக்குப் பின்னால் கையைக் கொண்டுபோய் அஜீஸைப் பிடித்துக் கொண்டார். அவருக்கும் ஆறுதல் தேவைப்பட்டது. அவரது பீடித் தொழிற்சாலையைச் சேர்ந்த பல பயல்கள் மேலக்கோடித் தெருவில் உள்ள ஒரு நர்சரிப்பள்ளிக் கூடத்தில் முதலாவது யூனியன் அமைப்பதில் தீவிரமாக இருக்காங்களாம். இந்த மூவரோடு சிறிது தள்ளி இமாம் அதே தலைப்பாகையுடன் இருந்தார். அவரை இவர்களோ, இவர்களை, அவரோ பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

திவான் முகமது ஜமாத்தைத் துவக்கி வைத்துக் கோபமாகத்தான் பேசப் போனார். ஆனாலும், தொழுகைத் தளவாசலை ஒட்டி கையில் ஒரு துண்டை, பட்டும் படாமலும் தொங்கப் போட்டபடி நின்ற காண்ட்ராக்டர் ராமலிங்கத்தைப் பார்த்ததும் அவர் கண்கள் கனிந்தன. கைகள் ஊறின. வாய், சினேகித முறையில் சிரிக்கப் போவதுபோல் இருந்தது. ஆனாலும் அவ்ர் உஷாரானார். அதே சமயம், அவருக்கு ரேட்டைக் கூட்டிக் கொடுக்க வேண்டும் என்பதிலும் குறியாயிருந்தார். அவரை அப்போதுதான் பார்ப்பது போலவும், அந்த நேரத்தில் அவர் வரவை அங்கீகரிக்காதது போலவும் தாக்குதல் தொடுத்தார். அதோடு இலேசான எரிச்சல். பழைய ரேட்டுக்கு ஏற்ப வேலையளவில் சில சித்துக்களை செய்து செக்கும் கொடுத்தாகிவிட்டது. மாமூல்தான் வரவில்லை. வந்துட்டான் பெரிசா. “என்ன ராமலிங்கம்? இங்கேயுமா ஒங்க தொல்லை?”

“ஜமாத்திலே எனக்கு நியாயம் வழங்கணும். எல்லா விலையும் கூடிட்டு. பட்ஜெட்டுக்குப் பிறகு சிமெண்ட் கூடக் கிடைக்கமாட்டேங்கு. தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போறது மாதிரியாவது, ஜமாத்து எனக்கு கருணை காட்டணும்.”

கூட்டத்தில் மூன்றாவது வரிசையில் இருந்த சுலைமானுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. இவரும் சின்ன காண்ட்ராக்டர். மசூதி மாடி கட்டும் பணியை தன்னிடம் ஒப்படைக்கும்படி திவான் முகமதுவிடம் மாமூலாகத்தான் கேட்டார். ஆனால் அவரோ தார் ரோடு போடுற அவருக்கு கட்டிடக்கலை கைவராத கலை என்று சொல்லி விட்டார். அவராவது யூனியன் ரோடுகளைப் போடுபவர். ஆனால் இந்த ராமலிங்கமோ பஞ்சாயத்து ரோடுகளைப் போடுபவர். இவருக்குக் கொடுத்துவிட்டார். விடலாமா? விடப்படாது.

“இதோ பாருங்க ராமலிங்கம். நீங்க அதிகமாகப் பணம் வாங்கி இந்த மசூதியை இன்னும் அழகா முடிச்சாலும் என்ன பிரயோசனம்? பாபர் மசூதியை இடிச்சது மாதிரி உங்க ஆட்கள் இந்த மசூதியையும் ஒரு நாள் ஒரு பொழுதாவது இடிக்கத்தான் போறாங்க.”

கூட்டத்தில் ஒரு பகுதி ராமலிங்கத்தை கோபமாகப் பார்த்தது. அதற்கு ஏற்றாற்போல், அவர் நெற்றியில் தீட்டியிருந்த பட்டையும், அதன் மத்தியில் வைக்கப்பட்ட குங்குமமும் வேண்டுமென்றே அவர் வம்புக்கு இழுக்க வந்ததுபோல் பட்டது. பின்வரிசையில் இருந்த சம்சுதீன், அப்பனுக்கே வேட்டு வைப்பது தெரியாமல் வெடிக்குரலில் கத்தினான்.

“முதல்ல அவரை வெளியேற்றுங்க. இந்த ஜமாத்துல ஒரு இந்துக்கு என்ன வேலை? இங்கு நடக்கிறத ஒட்டுக்கேட்டு முன்னணிக்காரங்ககிட்டே சொல்றதுக்கா? சுலைமானுக்கு பாயிண்ட் கிடைத்து விட்டது.

“யோவ் ராமலிங்கம் எவ்வளவுய்யா கூலி கொடுத்தாங்க.”

“பிடிச்சு கட்டி வையுங்கடா அவனை!”

சம்சுதீனும், ராமலிங்கத்துடன் ஒரு நிலத் தகராறில் ஈடுபட்டிருக்கும் இன்னொருத்தரும், சுலைமானும் இப்படிப் பேசியதில் ராமலிங்கம் அதிர்ந்து போனார். இந்தச் சமயத்தில் முதல் வரிசையில் இருந்து அமீர் , ஒரு பக்கம் இருந்த பேராசிரியர் இதயதுல்லாவின் காதில் ஏதோ கிசுகிசுக்க, அவர் அப்படியும் சும்மா இருக்க, இறுதியில் அமீரே உரக்கப் பேசினார்.

“இந்த ராமலிங்கம் நமக்கு எதிரியா? அயோத்தியிலே ராமர் கோவில் இடிக்கிறதுக்குமா டெண்டர் போடுறாரு. ஏன்யா ராமலிங்கம்.உமக்கு சமயம் சந்தர்ப்பம் தெரியாதா?. ..பேசாமப் போங்க.”

“ஒட்டுக் கேட்க வந்தவன் எப்படிப் போவான்?”

பின்வரிசையில் துள்ளி எழுந்த சுலைமானையும், தன்னை நேருக்கு நேராய்ப் பார்த்த அமீரையும் ராமலிங்கம் ஒப்புக்குப் பார்த்து விட்டு, திவானை ஆறுதலாகப் பார்த்தார். அவரும் கத்தினார். கண்ணைச் சிமிட்டியபடியேதான் கத்தினார். ஆனால் காண்ட்ராக்டருக்குக் கத்தியதுதான் காதில் ஏறியதே தவிர, கண் சிமிட்டல் கண்ணில் படவில்லை. “யாருய்யா இவரு? கால நேரம் தெரியாம! நல்ல மனுஷனுக்கு ஒரு சொல்லுப் போதாதா?” என்று திவான் அவரைப் பார்க்காமலே சொன்னபோது, ராமலிங்கம் அடிவாங்கிய மாடானார். மெல்ல மெல்ல தலையைக் குனிந்து கொண்டும், ஒருவேளை கூப்பிடுவார்களா என்பது போல் காதுகளை அனிச்சையாக நிமிர்த்திக் கொண்டும், வெளியே நடந்தார். அவர் நடந்த விதத்தைப் பார்த்து, திவான் அசந்துவிட்டார். ‘பயல் சொன்னபடி பழைய மாமூலைக் கூட தரமாட்டானோ...’

திவான் முகமது பேசப்போன போது, பழனிவேல் கடைகள்ல பேன்சி கடை வைத்திருக்கும் காதர் பாட்சாவும், தாவர இயல் உதவிப் பேராசிரியர் முத்துக்குமாரும் கையோடு கைகோர்த்து உள்ளே வந்தார்கள். கூட்டத்தைப் பார்த்தபடியே ஒரு ஓரமாக நின்றார்கள். கூட்டத்தில் யாரும் அவர்களைப் பொருட் படுத்தாதபோது, ஆயிஷாவின் தந்தை ஹாஜி அஜீஸ் பொரிந்து தள்ளிவிட்டார். பெரிய மைத்துனி மகன் காதரைப் பார்த்துக் கத்தினார்.

“காதரு உனக்கும் இந்தப் பிள்ளையாண்டானுக்கும் ஆயிரம் உறவு இருக்கலாம். அதையெல்லாம் வெளியிலே வச்சுக்கணும். இங்க மட்டுமில்ல. இந்தப் பக்கம் உள்ள தெருவிலேயும் வச்சுக்கப்படாது. இது ஜமாத்து. கிள்ளுக்கீரையில்லை.”

காதர் பாட்சா துடிதுடித்துப் போனான். எதேச்சையாய் முத்துக்குமாரைத் தன் பக்கமாய் அணைத்துக் கொண்டே கேட்டான்:

“என்ன சச்சா, இப்பிடிப் பேசறியே? இவன் தலையிலே குல்லா போடல, சுன்னத் செய்யல என்கிறதைத் தவிர எல்லா விஷயத்திலேயும், இவன் நம்ம கூட இருக்கவன். மசூதி இடிச்சதைக் கேட்டதும் இவன் சோறு தண்ணி கூட சாப்பிடலேன்னு எங்கிட்ட இவங்க அம்மா முறையிடறாங்க. மசூதி இடிப்பு இந்து-முஸ்லிம் கலாட்டாவா மாறாமல் இருக்க இவனும் நானும் ஒரு திட்டம் கூட வச்சிருக்கோம். இதைச் சொல்லத்தான் வந்தோம். இவனைப் போகச் சொல்றது என்னைப் போகச் சொல்றது மாதிரி.”

“நீ இருக்கறதும் இல்லாததும் ஒன்னுதான். உன்னை மாதிரி உதவாக்கரைங்க இஸ்லாமிலே பிறந்ததாலதான் காபீர்கள் பாபர் மசூதியை இடிச்சாங்க. இந்த மசூதியையும் இடிக்கப் போறாங்க.”

அமீர் இப்போது கொதித்துக் கேட்டார்.

“மசூதியையும் கோவிலையும் விட மனுசங்க முக்கியம் காக்கா.”

“தம்பி முத்துக்குமாரு, உன்னால் எவ்வளவு இடஞ்சல் பாரு, இன்னுமா நிற்கிறது?”

முத்துக்குமார் அங்கும் இங்குமாய்ப் பார்த்தான்.

சம்சுதீனைத் தோழமையோடு நோக்கினான். அவனோ, வேறு பக்கமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டான். ஆயிஷாவாலோ அல்லது இயல்பான மனோபாவத்தாலோ இஸ்லாமியனாக மாறவில்லையென்றாலும், அதற்கு மதிப்பு கொடுப்பவன், மசூதி பாளையத்தின் எல்லாத் தெருக் களையும் சொந்தத் தெருக்களாக நினைத்து நடமாடியவன். இப்போது எங்கே நிற்கிறோம், அல்லது நிறுத்தப்பட்டோம் என்பது புரியாமல் திரும்பிப் பாராமலே நடந்தபோது, அவனை காதர் பாட்சா பின்பக்கமாய்ப் போய் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். முத்துக்குமார் கண்ணிரும் கம்பலையுமாய் அவனை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டான். இருவரும் மசூதிக்கு வெளியே வந்தபோது ஜன்னலில் முகத்தை எடுக்கப்போன ஆயிஷா, அவர்கள் நின்ற கோலத்தைப் பார்த்துப் பதறியடித்து வெளியே வந்தாள்.

ஜமாத் தலைவரான திவான் முகமது, மீண்டும் பேசப்போனபோது அஜீஸ் மீண்டும் எழுந்திருக்கப் போனார். முத்துக்குமார் பயல் வீட்டுப்பக்கம் என்ன செய்கிறான். அதற்குள் திவான் பேசிவிட்டதால் அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. திவான் செந்தமிழிலும் இல்லாமல், பேச்சுத் தமிழிலும் இல்லாமல் இடைப்பட்ட தமிழில் எதார்த்தமாகப் பேசினார். அவராலும் உண்மை பேச முடிந்தது.

“நாம் ஏன் கூடியிருக்கோம் என்கிறது உங்களுக்கு நல்லாவே தெரியும், நாமும் இந்த ஊர்ல இரண்டு தெருவில இருக்கிற இந்துக்கள் மாதிரி இந்த மண்ணுலேயே பிறந்தவங்க, நமக்கு பாகிஸ்தானும் தெரியாது. பங்களாதேசும் புரியாது. மேற்குத் திசை நோக்கித் தொழுகை செய்யறதைத் தவிர நாம எல்லாத் திசையிலேயும் இந்தியாவைத்தான் பார்க்கிறோம். இப்படிப்பட்ட நம்மோட பழைய காலத்துப் பாபர் மசூதிய இடிச்சுட்டாங்க. இடிச்சது மட்டுமில்லை. இந்தியாவுலே பல இடங்களிலே முஸ்லீம்களைக் கொன்று குவிக்காங்க. இதை நாம் எப்படிச் சமாளிக்கலாம், கஷ்டப்படுற நம்ம இனத்துக்கு என்ன உதவி செய்யணும் என்கிறதைப் பத்தி ஜமாத் ஒரு முடிவு எடுக்கணும்.”

அமீர், படபடப்பாக பதில் அளித்தார்.

“பங்களாதேஷிலும், பாகிஸ்தானிலும், இன்னும் பல இஸ்லாமிய நாடுகள்ளேயும், இந்துக்களுக்கு எதிராக நடக்கிற வன்முறைகளையும் நாம கணக்கில் எடுத்துக்கணும். நம்மோட முதல் கரிசனம் குறைந்தபட்சம் இந்தப் பகுதியிலாவது இந்து முஸ்லீம் ஒற்றுமையைக் கட்டிக்காக்கிறதாய் இருக்கணும். ‘இஸ்லாம் எமது வழிபாடு. இந்தியா எங்கள் தாய்நாடு’ என்கிறதிலே நமக்குச் சந்தேகம் வரப்படாது. அதே சமயம் இங்கே இருக்கிற இந்துக்களோட நாம வழிவழியா மாமா, மச்சான், சித்தப்பா, பெரியப்பா உறவு வச்சிருக்கிறத மறந்திடக்கூடாது. எங்க பழைய வீட்டுப் பாத்திரத்திலே எங்க தாத்தாவோடபேரு பெருமாள்சாமி என்கிற நயினார் முகமது என்று போட்டிருக்கு. இந்த உறவை மறந்து நம்ம ஆட்களும் நேத்து ராத்திரியோட ராத்திரியா டவுனுல ராமர் கோவிலையும், பிள்ளையார் கோவிலையும் இடிச்சத நாம கண்டிக்கணும்.”

திவான் முகமதுவால் தாள முடியவில்லை. பழைய கணக்குப் பிள்ளையை அந்தத் தொழில் வகையில் பிடிக்க முடியாது போனவர், இப்போது அவரை எங்கே பிடிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்தவர் போல் அங்கே பிடிக்கப் போனார்.

“இஸ்லாமுக்குள்ளேயே அல்லாவையும் ஈமானையும் இளக்காரமாக நினைக்கிறவங்க வந்ததாலதான் நமக்கு இந்த நிலைமை. வயசு வந்த பொண்ணை பட்டப்பகலில் தெருக்கடையில் நிற்கவைச்சு, அதுவும் கோஷா போடாமல் எல்லா கண்ணும் படும்படியாகச் செய்றவங்க ஜமாத்துல பேசறதுக்கு யோக்கியத கிடையாது.”

அமீர் இப்போது எழுந்து நின்றே பதிலளித்தார்.

“நபிகள் நாயகத்தை யாரும் ஸல்னு ஒப்புக் கொள்ளாதபோது, அவரை முதல் முதலா அல்லாவின் தூதராய் ஏற்றுக் கொண்டது ஒரு பெண்தான் என்கிறதை மறந்திடாதீங்க. நபிகள் நாயகத்துக்கு அவரது துணைவியார் கதீஜா அம்மையார் எப்படித்துணை நின்னாங்களோ, அப்படி வறுமைப்பட்ட என் குடும்பத்திற்குத் துணையா நிப்பது என் மகள் பாத்திமா. அவள் எல்லார்கிட்டேயும் சகஜமாகப் பழகிறதை ஒரு இஸ்லாமியப் பெருமையா நினைக்கிறேன். ஊர்க் கண் படும்படியாக நடமாடப் படாதுன்னு, பெனாசீர் பூட்டோகிட்டே கேக்க முடியுமா? பங்களாதேஷில பேகம் கலீதாவிடமோ, முஜிபுர் ரஹ்மான் மகள் கிட்டேயோ கேட்க முடியுமா? அவ்வளவு ஏன்? ஆளுங்கட்சிப் பேச்சாளர் ஜீனத் இந்தப் பக்கம் கூட்டத்திலே பேசுறத்துக்கு வந்துட்டு டி.பி.யிலே தங்கியிருக்கும்போது, அவங்களுக்காக மணிக்னக்கிலே தவம் கிடந்து ஆப்பிள் கூடையையும் லெதர் பேக்கையும் வச்சுக்கிட்டு நானா காத்து நின்னேன்?”

திவான் முகமதுக்கு சுருக்கென்றது. அப்பாவுக்கு ஆதரவாகப் பேசப்போன சம்சுதீன் தோளை அழுத்தி, அந்த ஆதாரத்திலேயே பேராசிரியர் இதயத்துல்லா எழுந்தார். ஓய்வுபெற்ற தமிழ்ப்பேராசிரியர். லோக்கல் பட்டிமன்றங்களுக்கு நடுவர். மணிமேகலையிலும், தேவாரத்திலும் அதாரிட்டி. இப்போது அந்த ஜமாத்தையே இலக்கிய மன்றமாக மாற்றுவது போல் பேசினார்.

“மாற்றம்... மாற்றம்... எங்கும் மாற்றம்... எதிலும் மாற்றம்... இதுதான் சமூக பரிணாம வளர்ச்சி. இது தனி மனிதனுக்கும் பொருந்தும். நாமாக மாறவில்லையானால், எவராவது ஒருத்தர் அல்லது எந்த சக்தியாவது ஒன்று நம்மை மாற்றும். இதுதான் வரலாறு. நமது மூதாதையர்களான இந்துக்களை சீர்திருத்த சமணமும் பெளத்தமும் முன்வந்தன... இது, இந்துக்களின் காதில் ஏறவில்லை. இதனால் எங்கிருந்தோ வந்த முகம்மதியர்கள் நமது மூதாதையர்களை அடித்து அடித்துத் தலையில் குல்லா போடவைத்தார்கள். இந்து மதத்துக்குள்ளேயே அதன் கொடுமை தாளாமல் ஆதிதிராவிட மக்களும் முஸ்லீம்களாக மாறினாங்க. அதனால் இப்போ ஏற்படுகிற இந்து முஸ்லிம் கலவரம் கூட ஒரு பழைய கணக்கைத் தீர்க்கத்தான். இந்தியாவுக்கு வந்த முகமதியரோட மூதாதையரும் ஒரு காலத்தில் ஆரியர்களே!”

திவான் முகமது தலையோடு சேர்த்து தொப்பியைச் சொறிந்த போது, நூருல்லா இடைமறித்தார்.

“நீங்க என்ன சொல்லவாறீங்க புரபஸர். அமீரு. நீயாவது இவரு பேச்சை மொழிபெயர்த்துச் சொல்லு.”

“காலத்துக்கு ஏத்தபடி மாறணும். நம்ம பொண்ணுங்களை கோஷாவில இருந்து நீக்கணும்னு சொல்றார். இல்லன்னா, நம்ம பெண்களே நமக்கு எதிரா போராடுற காலம் வருதுன்னு சொல்றார். இல்லீங்களா ஐயா?”

பேராசிரியர் இதயத்துல்லா தலையாட்டியபோது சம்சுதீன் ஆட்சேபித்தான்.

“சரிங்கப்பா, விஷயத்துக்கு வருவோம். நாம் என்ன முடிவு எடுக்கலாம்?”

வெளிநடப்பு செய்துவிட்டு, மீண்டும் உள்ளே வந்த காதர்பாட்சா வந்ததும் வராததுமாய்ப் பேசினான், மங்கலான சிவப்பன், அதிரடிக் குரலோன்.

“என்ன முடிவு எடுக்கணும் என்கிறதவிட என்ன முடிவு எடுக்கப்படாது என்கிறதுதான் முக்கியம், பாபர் மசூதி இடிக்கப்பட்டது நம்ம வீட்டிலேயே ஒரு இழவு விழுந்தது மாதிரிதான், இல்லங்கல. ஆனால் முற்காலத்திலே இதே மாதிரியான சந்தர்ப்பத்திலே, நபிகள் நாயகத்தினுடைய பாட்டனார் அப்துல் முத்தலிபு எப்படி நடத்துக்கிட்டார்னு யோசித்துப் பார்க்கணும். நகரங்களின் தாயான மெக்காவில், ஏக இறைவனின் முதல் ஆலயமான காபாவை, அபிசீனிய நாட்டு அதிபதி அப்ரஹா என்பவன், யானைப் படையோடு தாக்க வரும்போது, அங்கிருந்த குர்ஷி மக்களோடு நகரத்தைக் காலி செய்யப் போன அப்துல் முத்தலிபு அந்த ஆலயத்தின் மூடியிருந்த திரையைப் பிடித்துக் கொண்டு என்ன சொன்னார். ‘இறைவனே! இது உன்னுடைய வீடு, இதைப் பாதுகாக்க இயலாதவர்களாய் நாங்கள் இருக்கிறோம். ஆகையால் உங்கள் வீட்டை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்?’ என்று அழுதழுது சொன்னாரே... அந்த அழுகை, ஒரு ஒற்றைக் குருவியை உசுப்பி, ஆயிரமாயிரம் குருவிகளை அலகுகளிலும், கால் இடுக்குகளிலும் கற்களைக் கொண்டுவரச் செய்து அபிசீனியப் படையை சின்னாபின்னமாக்கி காபாவைக் காக்கலியா? ஒரு தடவை நபிகள் நாயகமே தன் புதல்வியிடம் என்ன சொன்னார்? ‘அவர்கள் என்னை அடிக்கவில்லை. அல்லாவைத்தான் அடித்தார்கள்’ என்று கோபமற்ற குரலில் சொல்லவில்லையா? ஆகையால் மதவெறியர்கள், பாபர் மசூதியை மட்டும் இடிக்கவில்லை. எவர் தங்களை ஆக்கி, எவர் தங்களை இந்த உலகில் உலவ விட்டாரோ, எவர் தங்களுக்கு வீடுகளைக் கொடுத்தாரோ அவர் வீட்டை இடித்திருக்கிறார்கள். ஆகையால் அல்லா பார்த்துக்குவார். இன்ஸா அல்லா. ஜமாத்தை முடிக்கலாம்.”

எல்லோரும் அசந்து போனார்கள். ‘கேனையன்’ மாதிரி வேட்டியோ, லுங்கியோ கட்டிக் கொண்டு, மசூதிப் பக்கம் வந்தால் கூட, அதைத் திரும்பிப் பார்க்காத காதர்பாட்சா போட்ட போட்டில் அத்தனை பேரும் திகைத்துப் போனார்கள். பேராசிரியர் இதயத்துல்லாவுக்கு மனத்தாங்கல். காதர், எங்கே பட்டிமன்ற நடுவராகி தனக்குப் போட்டியாய் விடுவானோ என்ற பயம். அதே சமயம் தாவர இயல் படித்தாலும் தமிழியலில் தேர்ச்சி பெற்ற முத்துக்குமார், காதருக்கு எழுதிக் கொடுத்திருப்பானோ என்று அவருக்கு ஒரு ஆனந்தமான சந்தேகம். மற்றவர்களோ குறிப்பாக இளவட்டங்களோ, காதர்பாட்சா கலைந்து போகும்படிச் சொல்லாமல் சொல்வதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனாலும் பெரியவர்கள் சிலர் மெளனித்தனர்.

அந்தச்சமயம் பார்த்து இன்னொரு டேப் பாடல்... அதுவும் இருபொருளிலான வார்த்தைகள்... பாட்டிலும் ஒரு சாராய நெடி...

கூட்டம் பரபரத்து. படபடத்தது. இளவட்டங்கள் தரையில் கை ஊன்றாமலே எழுந்தனர். திவானின் முகமது யோசித்தார். பழனிவேல் பயலுக்கு பாடம் சொல்ல... நல்ல சந்தர்ப்பம்... அவன் கோர்ட்ல ‘ஸ்டே’ வாங்கப் போகவே முடியாது. நேரம் இருக்காது. கத்தினார்.

“பழனிவேல் சாராயக் கடையில பாட்டப் பாத்தீங்களா. இதுக்கு மேலயும் பொறுத்தால், நாம முஸ்லீம்கள் அல்ல. திருக்குரானில், ருக்கு இரண்டில் கூறப்படுவது போல், அதோ பாட்டுப் போட்டவர்களின் இதயத்திலும், அவங்கள பாட வச்ச பயல்க மனசிலும் ஒரு நோய் இருக்கு... அல்லா வேண்டும் என்றே அந்த நோயை அதிகமாக்கிட்டான்... ‘இன்சா அல்லா’, எழுந்திருங்க.”

கூட்டம் எழுந்த போது, அமீர் உரத்த குரலில் மன்றாடினார்.

“நாம் தும்ப விட்டுவிட்டு வாலைப் பிடிக்கோம். இஸ்லாமியத் தெருவுல, அந்த மதுக்கடையைத் திறக்க அனுமதிக்கக் கூடாதுன்னு, அப்பவே ஜமாத்துல சொன்னேன். யாரும் காது கொடுக்கல.”

“அப்போ, இந்த மாதிரி பாட்டு போடுறவனுகள சும்மா விடனும் என்கிறியா. நம்ம பொண்ணுக அந்த அசிங்கமான பாட்டைக் கேட்க முடியாம கூனி, குறுகி காதுகளை பொத்திக்கச் சொல்றியா.”

அமீர், திவானுக்குப் பதிலடியாய்ப் பேசினார்.

“நாமும் வீரத்தில குறைஞ்சிடல... இப்படி அவனுக பாட்டுப் போடுறாங்கன்னா அதுல ஏதோ ஒரு சதி இருக்குன்னு நினைக்கேன்... இன்னிக்கு காலையிலேயே முன்னணிக்காரங்க அந்தக் கடைக்கு வந்துட்டுப் போனாங்களாம்... அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்... அவங்க சதி வலையில நாம விழுந்திடக்கூடாது... போலீஸ் எதுக்கு இருக்கு...”

“அப்போ, கொக்கு தலையில வெண்ணெய் வைக்கச் சொல்றியா!”

காதர்பாட்சா, அமீருக்குப் பதிலாக திவானுக்குப் பதில் கொடுத்தான்.

“அப்படி வெண்ணெய் வச்சதே நீங்கதான். பழனிவேலு, இஸ்லாமிய தெருவுல ஒயின்ஷாப் திறக்கிறதுக்கு, சிபாரிசு செய்ததும் நீங்கதான்.”

திவான் முகமது திக்கு முக்காடிய போது, நூருல்லா அதட்டுவது போல் பேசினார்.

“போலி விசுவாசிகள் இங்கே நிற்கட்டும்... மானமுள்ள முஸ்லிம்க மட்டும் வரட்டும்... எங்கெல்லாம் இஸ்லாமிய விரோத காரியங்கள் நடக்கோ அதுங்கள தீர்த்துக் கட்டணும்... புறப்படுங்க...!”

அமீர் ஏதோ இடையில் பேசப் போனார். காதர் பாட்சா கூட்டத்தை இடைமறிக்கப் போனான். அதற்குள் இன்னொரு பாட்டு. முன்பு ஒலித்ததை சாதாரணமாக்கும், அசாதாரண ஆபாசப் பாட்டு... இப்போது அமீருக்கும், காதருக்கும் கூடக் கோபம் வந்தது... அப்படியும் அவர்கள் கூட்டத்தை வழிமறித்தார்கள்... கூட்டத்தார் கேட்பதாயில்லை... ஒரே கூச்சல்... ‘ஒடுங்கடா... சுற்றி வளையுங்கடா... இப்படியே விட்டால் நம்ம வீட்லயும் கதவைத் தட்டுவானுவ... வாங்க... வாங்கடா...’
--------------

அத்தியாயம் 6

அந்த மசூதிக்குள் இருந்து ஒரு பெருங்கூட்டம் பீறிட்டு வெளிப்பட்டது; ஆங்காங்கே தெருத்திண்ணைகளில் உட்கார்ந்திருந்த மூதாட்டிகளும், ஜன்னல்களில் கண் பதித்திருந்த பெண்களும் அந்தக் கூட்டத்தை நோக்கி ஓடினார்கள். புடவைக்கு மூடி போலவும், தலைக்கு மகுடம் போலவும், முகத்திற்கு முகமூடி போலவும் உடுத்திய சேலைக்கு மேலே உச்சி முதல் பாதம் வரை மின்னும் கருப்பு நிற அங்கியை அணிந்து, பாதங்களை செருப்பு மறைக்க, வெறும் மூக்கையும் வாயையும் மட்டுமே காட்டிக் கொண்டிருந்த வசதிபடைத்த பெண்களும், பீடிஇலைகளைக் கத்தரித்து அவற்றின் தும்புத் துகளோடு கொண்டைகளில் பூவுக்குப் பதிலாக முந்தானையைச் சொருகி இருந்த பெண்களும் ஓடோடிப் போனார்கள். அந்தக் கூட்டத்திற்கு எதிரே நின்று கைகளை ஆகாயத்தை நோக்கித் தூக்கிக் காட்டியும், முன்பக்கமாய் நீட்டிப் போட்டும் அமைதி காக்கக் கோரினார்கள். அமீரும் காதர்பாட்சாவும் இன்னும் ஒரு சிலரும் அந்தப் பெண் கூட்டத்திற்கு முகப்பாகி கூட்டத்தைப் பார்த்துக் கும்பிட்டார்கள். கூட்டம் கேட்பதாக இல்லை. வழிமறித்த பெண்களுக்கு இடையே ஊடுருவியும், பக்கவாட்டில் கடந்தும் வேகவேகமாக ஓடினார்கள். இதற்குள், பல பெண்கள் அவசர அவசரமாய் தத்தம் சொந்தங்களை கூட்டத்தில் கண்டு, அந்தக் கூட்டத்தைக் கிழித்தபடியே அவர்களைப் பிடித்துக் கொண்டார்கள். இதனால் கூட்டம் அர்த்தநாரீசுவரியாய் ஆனது. சிலர், இதுதான்சாக்கு என்று நின்று கொண்டார்கள். ஆனாலும் பலர் இன்னும் ஆத்திரமூட்டும்படி ஒலித்த டேப்புப் பாட்டைக் கேட்டு பாய்ந்தார்கள்.

கூட்டம் கும்பலாகியது. தாய்க்குல சொந்தங்களிடம் கைகால்களை ஒப்படைத்தவர்கள் கூட இப்போது ஆவேசப்பட்டு அவர்களை லேசாய் தள்ளிப் போட்டு விட்டு ஓடினார்கள்.

அப்படி ஓடிய கூட்டம் அந்த மசூதிக்கு நூறடித் தூரத்தில் உள்ள மூன்று தெரு சந்திப்புக்கு வந்தது. அதே தெருவில் நேராய் ஓடி, அப்புறம் வலது பக்கம் திரும்பினால் சாராயக் கடை கிடைக்கும். ஹாஜி அஜீசும் நூருல்லாவும் திவான் முகமதுவோடு கூட்டத்திற்கு முன்பு வந்து திரும்பினார்கள். கூட்டமும் அவர்களிடம் யோசனை கேட்பதுபோல் இரைச்சலாய் நின்றபோது, தொலைவில் உருண்டு புரண்ட பெண்கள் மீண்டும் அந்தக் கூட்டத்தைப் பிடிக்கப் போவது போல் ஓடிவந்தனர். கூடவே, அமீரும் காதர்பாட்சாவும் கலந்து வந்தார்கள். இதற்கு அஜீஸ், முத்துக்குமாரை மனதில் வைத்து, அவன் தனது மகள் ஆயிஷாவை கல்யாணம் செய்யாமலேயே தலாக் செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்துப் பேசினார். நூருல்லா, தமது பீடித் தொழிற்சாலை நிர்வாக லட்சணத்தை ஒருகை பார்ப்பதற்காக நர்சரிப் பள்ளிக்கூடத்தில் கூட்டம் நடத்தும் யூனியன் பயல்களை குறி வைத்தும், திவான், பழனிவேலுவை மானசீகமாய் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியும் ஆணையிட்டார்கள்.

“முதல்ல கீழ்ப்பக்கம் போங்க, அந்த இந்துத் தெருவில் போய் மாரியம்மன் கோவில்ல இருக்கிற சைத்தான் சிலைகளை எல்லாம் உடையுங்க அந்தக் கோவில் அயோத்தி மசூதி மாதிரி ஆகணும் அங்கேயும் காபீர்கள் அக்கினி திராவகத்தை ஊத்தி வச்சிருக்கிறதா கேள்வி. நாட்டு வெடிகுண்டுகளை சேர்த்து வச்சிருக்கிறதா பேச்சு, எவனாவது கையை ஓங்கினால், அது அப்புறம் தரையில்தான் விழனும்!”

“இதே போல மேலத்தெருப் பக்கமாகவும் போகணும். முஸ்லிம் பள்ளிக்கூடத்திலே முருகானந்தம் மாதிரி காபீர் பயல்களுக்கு என்ன வேலை? நமக்கு எதிராகவே நம் ஆட்களைத் தூண்டிவிடுகிறான். நாம தாங்கிக்க முடியுமா?”

“எல்லாத்தையும் விட அந்த சாராயக்கடை முக்கியம்! நமக்கு மானம் மரியாதை இருக்கு என்கிறத காட்டுறதுக்கு அந்தக் கடையை அடியோட இடிக்கணும்!

எந்தப் பக்கம் போவது என்று யோசித்த கூட்டம், அந்த முப்பெரும் தலைவர்களுக்கும் தங்களுக்கும் இடையே உள்ள உறவில் எந்தப் பக்கம் தராசு முள் சாய்ந்ததோ, அந்தப் பக்கம் பாய்ந்து போனார்கள். இடையிடையே கற்களையும் கம்புகளையும் பெண்களின் ஒப்பாரிப் பின்னணியில் எடுத்துக்கொண்டு பேயோட்டமாக ஓடினார்கள்.

கிழக்குப் பக்கமாக ஓடிய கூட்டம், வழிமறித்த ஒரு கல் கட்டிடத்தின் பாளம் பாளமான சுவர் கற்களை எடுத்துக் கொண்டு, குட்டை மாதிரியான ஒரு பள்ளம் வழியாய் உருண்டோடி, மீண்டும் மலையேறுவது போல் ஏறி, தெற்குப் பக்கம் உள்ள கருவேல மரக்கிளைகளை ஒடித்துக் கொண்டு, தென்முனைக்கு வந்து ஒரு விளையாட்டு மைதானத்தை ஊடுருவிக் கிழக்குப் பக்கம் ஓடி, இந்துக்களின் முதலாவது தெரு முனைக்கு வந்து நின்றது. வெளியே நின்ற பெண்கள் முதலில் அவர்களை சினேகிதமாய்ப் பார்த்துவிட்டு, ஆச்சரியப்பட்டார்கள். கூட்டம் ஏளனமாய் நினைத்து கைகளை ஓங்கி முன்னோக்கி நடந்தபோது, அவர்கள் அலறியடித்து உள்ளே ஓடினார்கள். ஆங்காங்கே நின்ற கணவனையோ, பிள்ளைகளையோ தத்தம் வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு ஓடினார்கள். கதவுகள் சாத்தப்பட்டன. ஜன்னல்கள் மூடப்பட்டன. அப்படியும் தாக்கப்படுவோமோ என்ற அலறல்கள். ‘எய்யோ எய்யோ எம்மோ’ என்ற ஒப்பாரி.

அந்தக் கூட்டம், தங்களை வரவேற்பது போல் தோன்றிய அந்தக் தெருவின் தீவுத்திடல் மாதிரியான ஒரு தூக்கலான இடத்தில், மாரியம்மனை குறி வைத்து நடக்கப் போன போது...

முத்துக்குமார், ஏழெட்டுப்பேரை வலுக்கட்டாயமாகக் கூட்டி வருவது போல் கூட்டிப் போனான். கூட்டம் அதை, சவாலாக நினைத்து கத்திய போது, அவன் தனது இரண்டு கைகளையும் தூக்கியபடியே தனது கூட்டத்திற்கு முன்னால் போய் நின்றான். அலறியடித்து ஓடி வந்த பெண்களை ஆங்காங்கே நிற்கும்படி திரும்பிப் பார்த்து கையாட்டி விட்டு, அவன் கூட்டத்திற்கு முன்னால் மேலும் நெருங்கினான். காதர்பாட்சா, அவன் தோளில் கைபோடப் போன போது, கூட்டம் பாட்ஷாவை பின்னோக்கி இழுத்தது. முத்துக்குமார் அமைதியாய்ப் பேசினான்.

“இதோ உங்ககிட்ட எங்களை ஒப்படைச்சிட்டோம். சிறுபான்மையை பெரும்பான்மை காக்க வேண்டியது முறை. இதைத் தான் நீங்களும் சொல்றீங்க. இங்கே நாங்க சிறுபான்மை. எங்களைக் காக்க வேண்டியது உங்க கடமை. அப்புறம் உங்க இஷ்டம். இதே மாரியம்மன் கோவிலுக்கு நான் ‘வரி’ கொடுக்கல. கோவில் விஷேசம் நடக்கும் போது, டவுனுக்கு போயிடுவேன். ஆனால் இந்தக் கோவில் விசேஷத்துக்கு அஜீஸ் பாய் நன்கொடை கொடுத்திருக்கிறார். நூருல்லா பாய் பத்து தேங்காய்களைத் தந்திருக்கிறார்.”

கூட்டம் அசந்து நின்ற போது, ஒரு குரல் அதட்டியது:

“சும்மா நடிக்காதேப்பா, இங்க சில வீட்டிலேயே திராவகம் ஊத்தி வச்சிருக்கிறது எங்களுக்குத் தெரியும். நாட்டு வெடிகுண்டு இருக்கிறதாம். நாங்க சோதனை போட்டாகணும்!”

“சரி, போடணுமுன்னா போடுங்க! அதுக்கு முன்னால எங்க பெண்டு பிளளைங்கள ஒங்க வீடுகளிலே அடைக்கலமாகக் கொண்டு வந்து விட்டுடறோம்.”

அந்தக் கூட்டத்திற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஏதாவது இசகு பிசகான ஒரு வார்த்தை விழுந்தால் கொலை கூட விழுந்திருக்கலாம். ஆனால் அந்தத் தெருவாசிகளால் தண்ணீர் தெளித்து விடப்பட்ட முத்துக்குமார், தான் கூட்டி வந்த நடுத்தர வயதுக்காரர்களைப் பேசாது தடுத்துவிட்டான். மெளனமாக தலை குனிந்து நின்றான். அப்படியும் அஜீஸின் அக்கா மகன் கத்தினான். காத்திருந்தவன் ஆயிஷாவை, நேத்து வந்த முத்துக்குமார் கண்ணடிப்பதா?

“இவன் நடிக்கான்! இவனைத்தான் முதல்ல முடிக்கணும்! பொல்லாத போக்கிரி!”

காதர்பாட்சா இப்போது கூட்டத்திலிருந்து விடுபட்டு, முத்துக்குமாரின் முன்பக்கம் தனது முதுகைச் சாய்த்த படியே சர்வசாதாரணமாகக் கேட்டான்.

“யாராவது இவனை வெட்டணுமின்னா வெட்டுங்க! அப்படி வெட்டினால், அவன் தலையோட என் தலையும் சேர்ந்துதான் விழும்!”

முத்துக்குமார் உணர்ச்சிப் பெருக்கில் பாட்சாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு விம்மி விம்மி அழுதான். பிறரை அழவைப்பது தவிர , அழுது பழக்கப்படாத அவனைப் பார்த்து காதர்பாட்சாவே ஆச்சரியப்பட்டான். பிறகு அவனைத் தன் பக்கமாய்த் திருப்பி அப்படியே அனைத்துக்கொண்டான். இதற்குள், அமீரும் அங்கே ஓடிவந்தார். அந்தத் தெருவில் இருந்து தள்ளாடித் தள்ளாடி வந்த துரைச்சாமியை அங்கேயே நிற்கும்படிச் சொல்லிவிட்டு, இவர் அங்கே ஓடினார். ‘உங்க மகன் முத்துக்குமாருக்கோ இவங்களுக்கோ எதுவும் நடக்காது முதலாளி’ என்று சொன்னபடியே திரும்பி ஓடிவந்தார். இதற்குள் அந்தக் கூட்டத்திற்குள், ஆங்காங்கே தெருவில் பம்மியும், பயந்து போயும் காணப்பட்ட நட்பு முகங்கள் தெரிந்தன. கூட்டம் சும்மா நின்றபோது, அஜிசின் அக்கா மகனால் அப்படி இருக்கமுடியவில்லை.

“இதுக்குப் பேர்தான் ஜகாத்தா! கேவலம் கேவலம்! இப்பக் கூட சாராயக்கடைப் பாட்டு நிக்கல சுகம் சுகமாம்... பருவ சுகமாம்...”

இப்போது முத்துக்குமார் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பதுபோல் பேசினான்.

“நீங்க அந்தப் பாட்டைத்தான் அசிங்கம் என்கிறீங்க, ஆனால் நான் அந்த சாராயக்கடையையே அசிங்கம் என்கிறேன். வாங்க அந்தக் கடையை அடிச்சு நொறுக்குவோம்.”

முத்துக்குமார் அந்தக் கூட்டத்தைத் தாண்டி அதற்குப் பின்பக்கமாகப் போய் நின்றான். கூட்டத்தின் முகம் திரும்புவதற்காகக் காத்திருந்தான். இதற்குள் அமீரும் காதரும் கூட்டத்திலுள்ள நட்பு முகங்களை நெருங்கி அவர்களைப் பின்பக்கமாகத் தள்ளிவிட்டார்கள். முத்துக்குமாரும், “வாங்க, ஓடி வாங்க” என்று கூட்டத்திற்கு வழிகாட்டியாக ஓடினான். இரண்டு பெரிய வீடுகளுக்கு இடையே உள்ள இடுக்கு வழியாய் ஓடிய கூட்டம், அந்தச் சாராயக் கடை இருந்த வடமேற்குத் திசை நோக்கி போர்ப்பரணிக் குரலோடு ஓடியது. அமீர் வேகவேகமாய் ஓடி முத்துக்குமாரைப் பிடித்துக்கொண்டார். அவரிடமிருந்து முண்டியடித்தவனின் காதில் பலமாக ஓதி, அவனைப் பின்னுக்குப் பிடித்து இழுத்தார். சாராயக் கடைப்பக்கம் நடைபெறக்கூடிய கலாட்டாவில், தனது மதத்தைச் சேர்ந்த எவனாவது ஒரு வெறியன் அவனைத் தாக்கிவிடிக்கூடாதே என்ற பயம். துரைச்சாமி முதலாளியால் தாங்க முடியாது. செத்தே போவார்.

இதற்கிடையே மசூதியிலிருந்து மேலத் தெருப்பக்கமாய் ஓடிய இன்னொரு கூட்டம், அந்தத் தெருமுனைக்கு வந்து லேசாய் நிதானப்பட்டது. நான்கு வீடுகள் கட்டக்கூடிய பெரிய காலி மனையில் பாதி இடத்தில் ஒரு கீத்துக் கொட்டகை, இடையிடையே மூங்கில் தட்டிகள்; முகம்மது நர்சரிப்பள்ளி என்ற பெயர்ப்பலகை அளவுக்குக் கூட இல்லாத சின்னச் சின்ன அறைகள், அதில் உள்ள இரண்டு அறைகள் ஒன்றாக்கப்பட்டு, இருபது இருபத்தைந்து தொழிலாளர்கள் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்க, எதிரே ஒரு நாற்காலியில் சாய்ந்திருந்த மீரானின் தோளில் கைபோட்டபடியே, முருகானந்தம் கையை ஆட்டி ஆட்டிப் பேசிக்கொண்டிருந்தான். சராசரியைவிட அதிக உயரம். அந்த சராசரியை மெலிய வைக்கும் தேகம். ஆனாலும் மைக் தேவையில்லாத பெருங்குரல்.

“ஏழைக்கு ஏழையே எதிரியாகக் கூடாது தோழர்களே! வியாபாரத்தனமான கேளிக்கைகளாலும், கொடூரமான மதவெறியாலும் முதலாளித்துவம் நம்மை அழிக்க வரும்போது நாம், பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்தை கேடயமாகப் போட்டுக்கொண்டு, சமயச் சார்பின்மை என்ற கோட்பாட்டால், அவர்களைத் திருப்பி எதிர்கொள்ள வேண்டும் தோழர்களே! வகுப்புக்களை வர்க்கப்படுத்த வேண்டும் தோழர்களே! இப்போதைய பதட்டமான சூழ்நிலையில் நமது அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றான குறைந்த பட்ச சம்பளம் என்பது...”

தெருமுனையில் நிதானித்த கூட்டத்தோடு கூட்டமாக நின்ற பீடி முதலாளி நூருல்லா கத்தினார். “என்னடா பாத்துக்கிட்டு நிக்கிறிங்க. அயோத்தி மசூதியை இடிச்சுட்டாங்கன்னு நாம அலமோதுறோம். வெந்த புண்ணிலே வேலைப்பாய்ச்சுற மாதிரி பாட்டுப் போடுறான். இங்க என்னடான்னா, ஒரு இந்துப் பயல் துரோகி மீரான் பயல் துணையோட நம்ம பயல்களையே நமக்கு எதிராத் துண்டிவிடுறான். இன்னுமா உங்களுக்கு உணர்ச்சி வரலே?”

கூட்டம் அப்படியும் உணர்ச்சியற்று நின்றபோது, அந்தக் கூட்டங்களில் ஆங்காங்கே விரவி நின்ற நூருல்லாவின் அடியாட்கள் பக்கத்தில் நின்றவர்களையும் தள்ளிக் கொண்டு அந்தக் கூட்டத்தைப் பார்த்து ஓடினார்கள். இதனால் ஆவேசப்பட்ட அந்தக் கூட்டம், அந்தக் கீத்துக் கொட்டகையை இழுத்துப் போட்டது.

கடகட வென்று சாய்ந்த தட்டிகளில் உள்ள மூங்கில் கம்புகளை உருவிக் கொண்டது. முருகானந்தம் பேச்சை பாடங் கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அங்கும் இங்குமாய் அலைமோதினார்கள். அவர்கள் தப்பிப்பதற்கான வாசலைக் கூட்டம் கதவாய் அடைத்தது. மூங்கில் கம்புகளை சுழற்றியது. மீரான் தலையில் ஒரு குத்து. உடனே ரத்த ஊற்று முருகானந்தத்தின் வாயில் ஒரு முஷ்டிக் குத்து. அவன் மல்லாக்கத் தள்ளப்பட்டான். நாலைந்து பேர் அவன் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு அந்த அறைக்கு வெளியே கொண்டுவரப் போனபோது, மீரான் மெல்ல எழுந்தான். எழுந்த வேகத்திற்கு எதிர்வேகத்தில் கீழே தள்ளப்பட்டான். முருகானந்தத்தை மீட்கப் போன தொழிலாளர்கள் மூங்கில் கம்புகளின் சுழற்சிகளில் சிக்கி அங்கும் இங்குமாய் நெளிந்தார்கள். அதை... அந்த அடிதடியை ஆனந்தமாய் ரசித்துக் கொண்டு இருந்த நூருல்லா, ஆங் காங்கே சில அப்பாவித் தொழிலாளர்களைப் பார்த்துவிட்டு, ஆணையிட்டார்.

“பொறுக்கிப் பயலுவளா! எங்கிட்டயா வேலையைக் காட்டுறீங்க? சுகுமாரை விடுங்கடா! மீரானை நொறுக்குங்கடா சண்முகத்தை அடிச்சது போதும்டா. பஷீரை ரெண்டு சாத்துச் சாத்துங்கடா, வில்லியத்தை விடுங்கடா, முருகானந்தத்துக்கு இது போதாதுடா.”

கூட்டம், சகட்டுமேனிக்கு எல்லோரையும் தாக்கியது. தாக்கப்பட்டவர்கள் கீழே விழுந்தும், சுவரில் சாய்ந்தும் திக்கற்று செயலற்று நின்றபோது, அக்கம் பக்கத்துப் பெண்கள் வந்து ஒப்பாரி போட்டார்கள். அந்தப் பக்கமாய்ப் போய்க் கொண்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள், மண் வெட்டியும் அரிவாளுமாய் ஓடிவந்தார்கள். நூருல்லாவுக்குப் பாதிப்பயம். அதோட மீரானை அடித்ததும் சரி; முருகானந்தத்தை மிதிச்சதும் சரி; எல்லாரையும் சகட்டு மேனிக்கு அடித்துப் போட்டுட்டா அவங்க தேற ரெண்டு நாளாகுமே? அது வரைக்கும் பேக்டரி வேலையை யார் பார்க்குறது?

நூருல்லா, தனது கூட்டத்தைக் கையமர்த்திவிட்டுக் கீழே கிடந்தவர்களைத் தலையை ஆட்டி ஆட்டிப் பார்த்துவிட்டு இதம் போட்டுப் பேசினார்.

“இவுங்களுக்கு தவுடு வச்சு ஒத்துங்கடா! இனிமேலாவது ஒழுங்கா இருங்கடா! யாருக்கிட்டே மோதறம்கிறது ஞாபகம் இருக்கட்டும்; நீங்க மோதுறது என்கிட்டே இல்லடா, இஸ்லாம் கிட்டே. சரி சரி அவரவர் வீட்டுக்குப் போங்க!”

ஆனாலும் அந்தக் கூட்டம் வீட்டுக்குப் போகவில்லை. அந்தக் கட்டிடத்தின் முன் கொட்டிவைக்கப்பட்ட மணல் குவியல் மேலும், சல்லிக் குவியல் மீதும் ஏறி அவற்றைச் சிதற வைத்தபடியே எட்டிக் குதித்து, இரண்டு கால் பாய்ச்சலில் சாராயக் கடையைப் பார்த்து ஓடியது.

அந்த முப்பெரும் கூட்டமும், அந்த சாராயக் கடையை மூன்று பக்கமும் சூழ்ந்துகொண்டது. மாரியப்பன் இவ்வளவு சொல்லியும் பாட்டை நிறுத்தாத கடைப்பையன்களில் ஒருவனை அடிக்கக் கையை ஓங்கினான். மற்றவர்கள் அவனை மல்லாக்கத் தள்ள, அவன் கீழே விழுந்து, தள்ளாடி எழுந்தான்.

அந்தக் கூட்டத்திற்குப் பயங்கரமான கோபம். “தாயத்து போட்ட இந்த வெத்திலைப் பயல், குடிச்சிட்டு வேணு மின்னே பாட்டுக்கேத்தபடியே ஆடுறான். நம்மளைக் கிண்டல் பண்ணுறது மாதிரி ஆடிக் காட்டுறான். எவனை விட்டாலும் இவனை விடப்படாது.”

கூட்டத்தில் நான்கைந்து பேர் மேலே எழுந்த மாரியப்பனைக் கீழே இழுத்துப் போட்டார்கள். ஒருவன், இடுப்பில் இடறினான். இன்னொருத்தன் அவன் நெற்றியில் தலையை வைத்து அழுத்தினான். கடையில நின்ற பாத்திமா அலறியடித்து ஓடிவந்தாள். எதையோ சொல்லப் போனாள். ஆனால் கேட்கும் நிலையில் இல்லாத கூட்டம கடைக்குள் இருந்த கணக்குப் பிள்ளையைக் கீழே இழுத்துப் போட்டது; கண்ணாடி ரேக்குகளை பாட்டில்களோடு கீழே தள்ளியது. உள்ளே கையெடுத்துக் கும்பிட்டு நடனமாடிய மூன்று பயல்களை முடியைப் பிடித்து, அந்த முடியே அவர்களைக் கட்டிய கயிறாக அனுமானித்து வெளியே இழுத்தது.

பாத்திமா, மாரியப்பனைத் தொடவும் முடியாமல், விடவும் முடியாமல் சுற்றிச் சுற்றி வந்தாள். தொலைவில் நடந்துவந்த அம்மாவைப் பார்த்து வேகவேகமாய்க் கையாட்டினாள். அப்பாவின் முகத்தை அங்குமிங்குமாய் ஈரக்கண்களால் தேடினாள். இதற்குள் ஒரு குரல் அவளை அதட்டியது. இஸ்லாமியக் குரல்தான். சும்சுதீன் குரல்தான்.

“கோஷாவைப் போட்டுட்டு வீட்டுக்குள் போநாயே?”

பாத்திமா, அப்படியும் போகாமல், இப்படியும் நகராமல் ஓடிவந்த அம்மாவைக் கட்டிப்பிடித்து அழுதபோது, கூட்டத்தில் சில நிதானிகள் மாரியப்பனை மீட்டார்கள். கையெடுத்துக் கும்பிட்ட சாராய பயல்களைப் பார்த்து “ஒடுங்கடா நாயிங்களா!” என்று தப்பிக்க வழி சொன்னார்கள். உடையாரின் மதுபாட்டில்கள் அங்குமிங்குமாய் உடைந்து சிதறிக் கொண்டிருந்த கண்ணாடிச் சத்தப் பின்னணியில் சாராயப் பயல்கள் திரும்பிப் பாராமலேயே ஓடினார்கள். சில பாட்டில்களை இடுப்பில் சொருகிக் கொண்ட ஒரு சிலர், ஒசைப்படாமல் எங்கேயோ போனார்கள்.

இதற்குள் கையெடுத்துக்கும்பிட்டபடியே ஓடிய கணக்குப் பிள்ளையும் சாராயப் பயல்களும் கூட்டத்தின் கண்ணுக் கெட்டும் தொலைவில் நின்றுகொண்டு, இரண்டு கற்களை எடுத்துக் கூட்டத்தை நோக்கி எறிந்தபடியே “எங்க பழனிவேல் ஐயாகிட்டே சொல்லி உங்களை என்ன செய்யப் போறோம் பாருங்கடா” என்று கத்தியபடியே, நின்றதற்கு வட்டியும் முதலுமாக மீண்டும் ஓடினார்கள்.

கூட்டம் கொதித்துப் போனது. பதறியடித்து நின்ற பாத்திமாவைப் பார்த்தபடியே, நடந்ததை நம்ப முடியாமல் வாயில் ரத்த ஒழுகலோடும், தலையில் சிவப்பு எண்ணெயோடும் பித்துப் பிடித்த நின்ற மாரியப்பன் மீது பாயப் போனது. “இவன் அவனுங்களோட சேக்காளி; இவனை அடிக்கறது அவங்களை அடிக்கிறது மாதிரி.”

ஒருத்தன், மாரியின் கையைப் பிடிக்கப் போனான். இன்னொருத்தன் தலையைத் தொட்டுவிட்டான்.

மாரியப்பன் கீழே குனிந்துதலைக்கு மேல் நின்ற கையைத் தனது கையால் ஒரு தட்டுத் தட்டிவிட்டு ஓடினான். மரண மலையின் விளிம்பிலிருந்து வாழ்வுப்பள்ளத்தாக்கில் குதிப்பவன்போல் குதித்துக் குதித்து ஓடினான். குதிகால்கள் குதிரைக் கால்களாயின. கூட்டம் துரத்தியது. திரும்பிப் பார்த்த சாராயப் பயல்கள் அவன் தங்களிடம் வந்துதான் ஆகவேண்டும் என்பதுபோல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால எமதூதனாய் காத்து நின்றார்கள். மாரியப்பன் திணறினான். திக்குமுக்காடினான்.
---------------

அத்தியாயம் 7

குட்டிப் பிரசங்க மேடை மாதிரி மேக்கப் செய்யப்பட்ட அந்த ஆட்டோவிற்குள், காதர் பாட்சாவிற்காக காத்திருந்த முத்துக்குமார், டிரைவரின் முதுகு வழியாகக் கையைவிட்டு ‘ஹாரன்’ அடித்தான். அப்படியும் காதர் வராததால் கீழே குதித்து அந்த ஆட்டோவை வேடிக்கையாய்ப் பார்த்த சிறுவர், சிறுமியரையும், ஆங்காங்கே மூக்கில் விரல் வைத்தபடியே நின்ற பெண்களையும் பெருமிதமாகப் பார்த்தான். ஆயிஷாவைத் தான் காணோம்.

அந்த ஆட்டோவின் டிரைவர் இருக்கையில் இருந்து, பின்புற இருக்கை வரைக்கும், இரு பக்கமும் கதவுகள் போலான மூங்கில் தட்டி சுவரொட்டிகள். ஒன்றில் ஒரு ஒநாயின் கோரமான படம். அதன் பற்கள் மதவாதம் என்ற வார்த்தையின் வடிவில் வரையப்பட்டிருந்தன. அதன் எதிர்ப்பக்கம் ஒரு ஆட்டுக்குட்டி மான்குட்டி மாதிரியான சின்னக்குட்டி அதன் உடம்பில் மனித நேயம் என்ற வார்த்தைகள், இரண்டுக்கும் இடையே ஓநாயை எதிர் கொள்ளப் போர் முகம் காட்டும் கட்டிளங்காளை. அதன் கூரிய கொம்புகளில் முற்போக்குவாதம் என்ற வார்த்தைகள். இதற்குக் கீழே கோடு போட்டது போல் ‘மதவாதம் ஒழித்து மனித நேயம் காப்போம்’ என்ற வார்த்தைகள். ஆட்டோவின் மறுபக்கம் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைச் சித்தரிக்கும் பிரபஞ்சம். அதற்கு மத்தியில் இப்படிப்பட்ட வாசகங்கள்:

‘கடவுள் இருப்பதாக இருந்தால் ஒருவர்தானே இருக்கமுடியும்? அவரை ஏன் கம்சன் சிறையிலும் ஆட்டுத் தொழுவத்திலும் அடைக்கப் பார்க்கிறீர்கள்? அல்லா யாரையும் பழிவாங்கச் சொல்லவில்லை’ என்ற முப்பெரும் மதங்களுக்கான எதிர்வார்த்தைகள். அதற்குக் கீழே இஸ்லாம் ஒரு மதம், இஸ்லாமியரோ நம் இனம் என்ற உபதேச வார்த்தைகள். இவைகளும் போதாது என்று ஆட்டோவின் மேல்பக்கம் ஒரு ஒலிப்பெருக்கி, அதிலிருந்து சிவப்பு நிற ஒயர் பிரிந்து கீழே உள்ள ஒரு சின்ன ஜெனரேட்டரின் உள்ளே போய் ஒரு கை மைக்கோடு இணைகிறது.

முத்துக்குமார், காதர்பாட்சா வீட்டை உற்றுப்பார்த்தான். அறை அறையான அரங்கு வீடு. இந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய அந்தக் காலத்து வீடு. ஒரு அறைக்கு இன்னொரு அறையின் நிலைப்படியே கதவு மாதிரி. உள்ளே ஏதோ ஒருபுலம்பல் கேட்டது.

முத்துக்குமார், பழக்கப்பட்ட அந்த வீட்டுக்குள் படியேறிப் போனான். மூன்றாவது அறையில் காதர்பாட்சா சுவரில் பொருந்திய கண்ணாடியில் தலையை சரி செய்து கொண்டிருந் தான். கீழே அவன் அம்மா நசீமா மூலையில் சாய்ந்து விசும்பிக் கொண்டிருந்தாள். ஆயிஷா, பெரியம்மாவின் கண்ணீரை அவளது முந்தானையாலேயே துடைத்து விட்டு, அவளைத் தூக்கிப் பிடித்தது, யானைக் குட்டியை மான் குட்டி விளையாட்டாய் இழுப்பது போல் இருந்தது. முத்துக்குமாரைப் பார்த்ததும் ஆயிஷா, பெரியம்மாவை விட்டுவிட்டு ஒரு சோகப் புன்முறுவலோடு நிமிர்ந்தாள். நசீமாவோ அவனைப் பார்த்ததும் அழுதழுது ஒப்பித்தாள்.

“நான் இவங்கிட்டே படிச்சுப் படிச்சுச் சொன்னேன். கேக்கலியேப்பா. மத்தவர்களை மாதிரி பழனிவேலுக்கு வாடகையைக் கூட்டி கொடுன்னு சொன்னேனே. பாவிப்பய பழனிவேலு பேன்சிக் கடையை தூள்தூளாக் கிட்டானாமே? ஆறாயிரம் ரூபாய் ரேக்கை வெளியிலே தூக்கிப் போட்டு மண்ணெண்ணெய்யை ஊத்தி எரிச்சானாமே? வாரவன் போறவன் எல்லாம கடையிலிருந்த பிளாஸ்டிக் தொட்டி, வளையலு, லெதர் பேக்கு, தூக்குப்பை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்களாமே. பாக்குறதுக்கு எல்லாம் சின்னப் பொருள் மாதிரி இருந்தாலும், பத்தாயிரம் ரூவாப்பா முத்துக்குமார்! போட்ட சீட்டை ஏலத்திலே எடுத்து வைச்ச கடையாச்சே! எப்படி சீட்டுப் பணத்தைக் கட்டுறது? இவன் அத்தா இறந்துபத்து வருஷத்திலே இப்பத்தான் இவன் தலையெடுத்தான். அதுக்குள்ளே இவனைத் தலையெடுக்காமப் பண்ணிட்டாங்களே அல்லா! எங்கள் ரப்பே நீதான் கேட்கணும்! அல்லா! முத்துக்குமார்! நான் யாருகிட்டே சொல்லுவேன்?”

“அதான் அல்லாகிட்டே சொல்லிட்டியே?” என்று காதர்பாட்சா தலையில் இருந்த சீப்பை எடுக்காமல் கண்ணாடியை முறைத்த கண்களை விலக்காமல் சொன்னபோது, முத்துக்குமார் கீழே குனிந்த நசீமாவின் கைகளைப் பிடித்த தூக்கி “அழாதிங்கம்மா” என்றான். அப்போது காதர்பாட்சா ஒரு போடு போட்டான்.

“முத்து! நான் ரெடிடா! இப்போ கடையைப் பாக்கணுங்குற பொறுப்புக் கூட இல்ல பாரு. அதனாலே நான் இப்போ முழு நேர சமூகத் தொண்டன்.”

“ஏண்டா! உனக்கு மூளையிருக்கா? பழனிவேலு கிட்டே மோதுறதாய் இருந்தால், எல்லாக் கடைக்காரங்களையும் ஒன்னா திரட்டி மோதுன்னு சொன்னேன்- கேட்டியாடா... இப்பப்பாரு, அந்த ரவுடிப் பய செய்திருக்க காரியத்த.”

காதர்பாட்சா பேண்டில் இடதுபக்கப் பையில் வைத்த கைக்குட்டையை வலதுபக்கம் வைத்துக்கொண்டே கண்களைச் சிமிட்டிப் பேசினான்.

“பழனிவேல் கடையை இடிக்கலடா! பஸ் ஸ்டாண்டு பிளாட்பார ராமன் கோயில் இடிப்பட்டதைத் தாங்காமல் பக்தகோடிகள் கடைக்குள் வந்து, துக்கத்தை தாங்கிக்க வளையல்களையும், ரிப்பனையும், பிளாஸ்டிக் சாமான்களையும் எடுத்துட்டுப் போயிட்டாங்க! எனக்கு ஒரு கண்ணு போனாலும் பழனிவேலுக்கு இரண்டு கண்ணும் போயிட்டது. எப்படின்னு கேக்க மாட்டியே? எங்கடையிலே, பிளாட்பாரத்துக் கோவில்லே இருந்து வீசிக்கடாசப்பட்ட ஸ்ரீராமரை பிரதிஷ்டை செய்திருக்காங்களாம். நானாவது பழனிவேலுக்கு ஐநூறு ரூபாய் வாடகை கொடுத்தேன். ஸ்ரீ ராமர் என்ன கொடுப்பார். பாவம் பழனிவேல்... சரி புறப்படலாமா?”

“பாருப்பா, இவனுக்கு சூடு, சொரணை, ரோஷம் இருக்கான்னு கேளு!”

காதர்பாட்சா, அவை மூன்றும் இல்லாதது போல் சிரித்தான். அந்தச் சிரிப்பு முத்துக்குமாருக்கும் தொற்றிக் கொண்டது. அந்த தொற்றுச் சிரிப்போடு ஆயிஷாவைப் பார்த்தான். அவளோடு பல தடவை கண்கள் பேசிவிட்டன. ஒரு தடவை கையைக் கூடத் தலையைச் சொறிவது போல் தலைப்பக்கம் கொண்டு போய் லேசாய் ஆட்டியிருக்கிறான். ஆனால் இவ்வளவு நெருக்கமாய் இப்போது தான் நேருக்கு நேராய்ப் பார்க்கிறான். அவளை அப்படிப் பார்க்க பார்க்க அவள் தூரத்துப் பச்சையில்லை என்று புரிந்தது. ஒரு சின்ன மருவோ பட்டு முடியோ இல்லாத துப்புரவான முகம். ஊதிப்போகாமலும் உள்ளடங்காமலும் உள்ள கண்கள்; பள்ளதாக்காய்ப் போகாமலும், தூக்கலாய் ஆகாமலும் உரிய இடத்தில் உரிய முறையில் இருந்த கண்கள். காதுகளின் மேல் பகுதியை மறைக்கும் சுருட்டை முடி, இடைவெளியில்லாத சடை. அவளிடம் பேசப்போனான். வார்த்தைகள் ஒத்துழைக்கவில்லை. அவள் பேசுங்கள் என்பது போல் உதடுகளைப் பிரித்துக் காட்டி, ஒரு காதை வலது கையால் குவித்து அவன் பக்கம் தலையைச் சாய்த்த போது, பயலுக்குத் தெம்பு வந்துவிட்டது. என்ன பேசலாம் என்று யோசித்து, இறுதியில் எப்படியோ பேசினால் போதும் என்பதுபோல் பேசினான்.

“ஆயிஷா! முதல்ல உங்க பெரியம்மாவை சமையலறைக்கு கூட்டிப் போய் ஏதாவது சாப்பிடக் குடுங்க. கவலைப்படாதிங்கம்மா, கலெக்டர் கிட்டே மனுப்போட்டு நஷ்ட ஈடு கேக்கலாம்”,

ஆயிஷா முகம்சுளித்தாள். ‘எதற்காகப் போகச் சொல்றார்? நான் நின்னா இவருக்கு என்னா? கட்டின பொண்டாட்டிய விரட்டுறது மாதிரி விரட்டறார்? நான் இங்க தான் நிற்பேன். இந்தப் பெரியம்மாவும் சுயமாக போகமாட்டேங்கா; சோறு வேண்டாமின்னும் சொல்ல மாட்டேங்கா...”

சினந்து பார்த்த ஆயிஷாவை, முத்துக்குமார் சிரித்துப் பார்த்தான். அவள் மெல்ல முணுமுணுப்பது கேட்கவில்லையானாலும் அதைப் பார்க்க முடிந்தது. அந்த முணுமுணுப்புச் சுருக்கங்களை அவன் உடனடிச் சிரிப்பாய் விரிவாக்கினான்.

“ஆயிஷா! பெரியம்மாவுக்கு சாதம் கொடுத்துட்டு எனக்கும் ஒரு கிளாஸ்மோர் கொண்டு வாங்க இவன் கிட்டே கத்திக்கத்தி தொண்டை வத்திப் போச்சு!”

ஆயிஷா மீண்டும் முணுமுணுத்தாள். பேர் சொல்லிக் கூப்பிடத் தெரியுது - பிறகு எதுக்கு ‘இங்க’ போடணும்? ஆனாலும் அவள் பெரியம்மாவைத் தூக்க முடியாமல் தூக்கி, சமையலறைக்கு நகர்த்திக் கொண்டு வந்தபோது காதரும் முத்துக்குமாரும் அடுத்த அறைக்குள் வந்தார்கள். காதர் நாற்காலியில் உட்காராமல் மேஜையில் உட்கார்ந்த போது முத்துக்குமார் கேட்டான்.

“ஆயிஷாவை நான் இந்த வீட்டிலே பார்த்ததே இல்லை.”

“இவன் ஒருத்தன், இப்ப அது தான் முக்கியம்!”

“உங்க சித்தி வராமல், மகளை அனுப்பியிருக்காங்களேன்னு கேட்டேன்.”

“அக்கா ஏழையாயிருந்து தங்கச்சி பணக்காரியாய் இருந்தா சீனியாரிட்டி வயசுல நிக்காது. வசதியில் தான் நிக்கும். சித்தி என்ன சாதாரணமா? மெக்காவுக்கு பிளேன்லேயே போயிட்டு, பிளேன்லேயே வந்த ஹாஜி அஜீசோட பீவியாச்சே; எங்கம்மா எல்லாச் சொத்தையும் கீழத் தெரு ராஜலட்சுமிக்கு எழுதி வச்சுட்டு, கடைசியில மோதினாவா வேலை பார்த்த புகாரியோட சம்சாரமாச்சே! எங்கம்மாவுக்கு கால் ஒடிஞ்சாலும், இவங்க தான் அந்தக் காலை இழுத்து இழுத்து தங்கச்சி கிட்ட கால் ஒடிஞ்ச விவரத்தை, கதை மாதிரி சொல்லணும். இல்லைன்னா சித்திக்கு கோபம் வரும். ஆனா ஆயிஷா நல்ல பொண்ணு.”

“நல்ல பொண்ணு மாதிரிதான் தெரியுது காதர்.”

“உங்க பிரண்டு கண்ணுக்கு , நான் நல்ல பொண்ணு மாதிரிதான் தெரியுதாம். கேட்டியா காக்கா.”

முத்துக்குமார் பரவசப்பட்டான். தலை கூரையைத் துளைத்து மேலே போவது போலவும், கால்கள் தரையைத் துளைத்துக் கீழே போவது போலவும் ஒரு விஸ்வரூபக் கற்பனை. கண்கள் அவளுக்கும் தங்களுக்கும் இடையே உள்ள எதையும் பார்க்காமல் அவளை நேரடியாகப் பார்க்கும் அதிசயம். அடுக்கடுக்காய் எண்ணங்களைக் காட்டும் மனம். இப்போது அவளே எண்ணற்ற எண்ண அடுக்கானது மாதிரியானது ஏகாந்தம்! காதர்பாட்சா தான் அந்த மோனத்தைக் கலைத்தான்.

“ஏண்டா ஆயி கேட்குதுல்ல? பதிலுக்கு ஏதாவது பேசேன்?”

“உங்களை பொண்ணுன்னு அங்கீகரிச்சனே. அதுக்குச் சந்தோஷப்படுங்கன்னு நான் சொன்னா அவங்களுக்கு கோவம் வரும். எனக்கெதுக்கு வம்பு?”

“மாதிரிப் பெண்ணுன்னு சொல்ல வந்தேன்னு சமாளியேண்டா.”

ஆயிஷா உதட்டைக் கடித்தபடியே சிரித்தாள். முத்துக்குமார் சிரித்தபடியே உதட்டைக் கடித்தான். இருவரையும் மாறி மாறிப் பார்த்தகாதர் எதையோ பெரிதாய்க் கண்டு பிடித்துவிட்டு, அதை உலகுக்கு முதல் முதலாய் அறிவிக்கும் விஞ்ஞானி போலப் பேசினான்.

“இப்போ நம்ம டவுனு பத்தி எரியுது! நம்ம மசூதிப் பாளையமும்பத்தி எரியப் போவுது! சாராயக் கடை போனதை பழனிவேலு ஒரு கெளரவ பிரச்சனையா எடுக்காம இருக்கப் போறதில்லை. இதுவே இந்து முஸ்லீம் கலவரமா மாத்தப்பட்டாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்ல. ஆனாலும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு வழி- ஒரே வழி இருக்கு. என்ன வழின்னு தான் கேளுங்களேன்.”

“சொல்லாட்டா உனக்குத்தான் தலைவெடிச்சுடுமே?”

“சரி வெடிக்கும் முன்னால சொல்லிடறேன். பழனிவேல் மகள் அபிராமிக்கும் திவான் முகம்மது மகன் சம்சுதீனுக்கும், அவங்க ஒருவரை ஒருவர் காதலிப்பதாலே அவங்களுக்கு போலீஸ் காவலில் கல்யாணம் செய்து, இந்து.. முஸ்லீம்னு சொல்லிக்கிட்டுத் திரியறவங்கள தலைகுனிய வைக்க லாம்னு நினைச்சேன். ஆனால் அந்தக் காதல் கிளிகள் இப்போ சண்டைக் கோழிகளாக மாறிட்டதுங்க. யாராவது ஒரு இந்துப் பயலும் ஒரு முஸ்லீம் பொண்ணும் காதலிச்சா சொல்லுடா. பப்ளிக்காகல்யாணம் செய்து இந்து-முஸ்லீம் ஒற்றுமையைக் கட்டிக் காப்பாத்தலாம்.”

காதர்பாட்சா, அந்த இருவரையும் நோட்டமிட்டான். அவர்களோ அதைக் கவனிக்கவில்லை. கவனிக்க நேரமுமில்லை. ஒருவர் மீது ஒருவர் நிலைநாட்டிய கண்கள் பின்வாங்க மறுத்தன. ஒன்றுக்கு ஒன்று இணையாய் புன்னகைத்த உதடுகள் ஒட்டிக் கொள்ள மறுத்தன. இதனால் காதர்பாட்சாதான் மீண்டும் கேட்டான். “என்னடா சொல்றே?”

“உனக்கு விளையாடறதுக்கு நேரமில்லையாடா?”

“நான் சீரியசாத்தாண்டா சொல்றேன். யாராவது இருந்தால் சொல்லுடா. அவங்க எனக்கு சொந்தமாக இருந்தாக் கூட பரவாயில்லடா. இன்னைக்கே போலீஸ் பாதுகாப்பிலே தாலிகட்டி ஊர்வலமா வந்துட்டா, பல தாலிகளை நாம் காப்பாத்தலாம்.”

சமையலறைக்குள் இருப்பதாக் எல்லோரும் நினைத்த நசீமா அங்கே கத்திக்கொண்டே ஓடிவந்தாள்.

“ஒங்களுக்கு மூளையிருக்குதா? முன்னப்பின்ன யோசிச்சிங்களா? அப்படியே கல்யாணம் நடத்தினால் முஸ்லீம் பெண்ணை இந்து கடத்திக்கிட்டு போனது மாதிரியும், இந்துப் பெண்ணை முஸ்லீம் கடத்திக்கிட்டு போனது மாதிரியும் கதை கட்டிவிட்டு, கடைசிலே குத்துப்பழி வெட்டுப்பழி வரும். நான் மகாத்மாகாந்தி இறந்தப்போ நடந்த கலவரத்தைக் கண்ணாலேயே பார்த்தவள். யாருக் காவது அப்படி ஒரு எண்ணம் இருந்தால் விட்டுடுங்க.”

“நீ வேற பெரியம்மா, காதர் அண்ணன் விளையாட்டுக்குச் சொல்றான்.”

“விளையாட்டுத்தான் வினையாகும்...!”

“இல்ல ஆயி, நிசமாவே.”

ஆயிஷாவும் முத்துக்குமாரும் தங்களுக்கு அப்போதே கல்யாணம் நடந்துவிட்டதுபோல் ஒருவரையொருவர் கண்களால் சல்லடையிட்டார்கள். ஏதாவது பேசினால் என்ன என்பது மாதிரி ஒவ்வொரு பல்லையும் ஊடுருவிப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள் அவர்கள். அப்படிப் பார்ப்பதைப் பார்த்த நசீமா பயந்து விட்டாள். ஆயிஷாவைக் கிட்டத்தட்ட தூக்கிக் கொண்டே அடுத்த அறைக்குள் ஓடினாள்.

ஏழெட்டுப்பேரைக் கொண்ட ஒரு கூட்டம் உள்ளே வந்தது. முருகானந்தம் தலையில் ஒரு கட்டு. அந்தக் கட்டு டிங்க்சர் அயோடினாலோ அல்லது ரத்தத்தாலோ ஒரு சதைக்கட்டி போலவே தோன்றியது. மீரான் கழுத்தில் பட்ட வெட்டுப் பள்ளத்தில் ஒரு களிம்பு கண்ணாடி மாதிரி பளித்சிட்டது. ஒருத்தனுக்கு ஒரு விரல் வளைந்திருந்தது. இன்னொருத்தனுக்கு மேல் உதடு சிதைந்திருந்தது. அவர்களைப் பார்த்ததும் காதர் பாட்சா கத்தினான்.

“மீரானுக்கு மூளை கிடையாதுங்கிறது உலகறிஞ்ச விஷயம். உனக்குமா முருகானந்தம்? வீடே பற்றி எரியிறபோது பீடிக்கு நெருப்பு கேட்ட மாதிரி. பாபர் மசூதி விவகாரத்திலே ஊரே கொதிச்சு நிக்கும்போது, நீ குறைந்த பட்ச சம்பளத்திற்கு கூட்டம் போட்டியாக்கும்? உனக்கு வேற நாள் கிடைக்கலையா? டாக்டர் கிட்ட காட்டினியா- செப்டிக் ஆகப்போகிறது...”

முருகானந்தம் மீரானைவிட்டுக் கொடுக்க விரும்பாதவன் போல் நிலைமையை விளக்கினான்.

“மசூதி இடிக்கும் முன்னாலேயே நாள் குறிச்ச மீட்டிங். அப்ப கூட என்ன பேசினேன்கிறே? நாம் அடிப்படை சம்பளத்தைக் கொடுக்க சொல்றது... இப்படிச் சொல்லி முடிச்சுட்டு, இப்போ அதைக் கேட்க சமய சந்தர்ப்பம் வரலே. இப்போ நம்ம கடமை வகுப்புக் கலவரம் வராமத் தடுக்கிறதுதான்னு சொல்லப் போனேன்! அதுக்குள்ள பாவிப் பயல்கள் வந்து பேசப்போன வாயிலே குத்திடானுக! முதுகுல தோளில் குத்தியிருந்தால் பேசியிருப்பேன்.”

எல்லோரும் சிரித்தார்கள். அந்தச் சிரிப்போடு சிரிப்பாக காதர் பாட்சா ஒரு விஷயம் சொன்னான். அவர்களுக்கு அதை விளக்கியும் சொன்னான்.

“வெளியில நிக்கிற அலங்கார ஆட்டோவிற்குள்ள துண்டுப் பிரசுரம் இருக்கு. எடுத்து ஒவ்வொரு வீடா குடுங்க. நானும் முத்துக்குமாரும் அந்த ஆட்டோவில போய் டவுனுல பிரச்சாரம் செய்துட்டு வரோம்.”

“நாங்களும் தயாரிச்சுருக்கோம் - ஒங்களுக்கும் தாறோம்...!”

இதற்குள் நசீமா ஆயிஷாவை தோளில் கைபோட்டு, அப்படியே ஆதாரமாகப் பிடித்துக் கொண்டு அங்கே வந்தாள். கே.பி. சுந்தராம்பாளுக்கு விபூதியை அழித்து விட்டு தலையில் கோஷா போட்டால் எப்படியோ அப்படிப்பட்ட தோற்றம். இன்னும் சொல்லப் போனால் இஸ்லாமிய ஒளவையார் பரபரப்பாய்க் கேட்டாள்.

“வேண்டாம்ப்பா, வம்பை விலைக்கு வாங்காதீங்கப்பா. உலகமே கொந்தளிச்சு நிக்குது. சூறாவளியிலே சிக்கின துரும்பா ஆயிடாதீங்கப்பா!”

“சிறு துரும்பும் பல்குத்த உதவும்மா, இன்ஸா அல்லா. பத்திரமாய் வீட்டுக்குத் திரும்புவோம். ஏன்னா எங்க பக்கம் அல்லா மட்டும் இல்ல. ஸ்ரீராமரும் இருக்கார்.”

எல்லோரும் எழுந்தார்கள். கையில் மோரை வைத்திருந்த ஆயிஷா முத்துக்குமாரை மட்டும் தனிப்படுத்தி அதைக் கொடுப்பது முறையில்லை என்பது மாதிரி தயங்கினாள். இதற்குள் எல்லோரும் வீட்டுக்கு வெளியே வந்தார்கள். ஆயிஷா, வாசலிலே சரிபாதி நின்றபடி பின்பக்கமாக மறைத்து வைத்த அந்த மோர் டம்ளரை முத்துக்குமாரின் தலை நிமிரும் போதெல்லாம் அவன் கண்ணில் படும்படி முன்பக்கம் கொண்டு வந்தாள். வேறு கண்கள் படும்போது அதைப் பின் பக்கமாகக் கொண்டு போனாள். எப்படியோ முத்துக்குமாரின் கண்களில் அவளும், அவள் கை பிடித்திருந்த மோர் டம்ளரும் பட்டுவிட்டது. புரிந்து கொண்டான். ஆட்டோ உருமிக் கொண்டிருக்கும் போதே அவன் உள்ளே ஓடி வந்தான். அவள் அவன் கையில் தன்கை படாமல் இருக்க அந்த டம்ளரை ஒரு முக்காலியில் வைக்கப் போனபோது, அவன் அந்தக் கையோடு சேர்த்து மோர் டம்ளரைப் பிடித்தான். அவள், அவன் காதுகளில் கிசுகிசுத்தாள். “ஜாக்கிரதையாப் போங்க. நீங்க திரும்பி வரது வரைக்கும் உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு இருப்பேன்” வெளியே நின்றவர்கள் “முத்து, முத்து” என்று கத்தினார்கள். முத்துக்குமார் அவளை உற்றுப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்து விட்டு மோரைக் குடித்துக் கொண்டே வெளியே ஓடி வந்தான்.

பீடித் தொழிலாளர்கள் கைதட்ட, முத்துக்குமாரும் காதர்பாட்சாவும் அந்த ஆட்டோவில் ஏறிக் கொண்டார்கள். ஆட்டோ பறந்து கொண்டிருந்தது. தொழிலாளர்களும் துண்டுப் பிரசுரங்களோடு போய் விட்டார்கள். ஆயிஷா அந்த ஆட்டோவை முத்துக்குமாராக அனுமானித்து ஒரு கையில் கண்களைத் துடைத்தபடி இன்னொரு கையை ஆட்டினாள். ஒரு கரம் அப்படி ஆட்டிய கரத்தைக் கவ்விப் பிடித்தது. அவளது தந்தை ஹாஜி அஜீசின் கை. குரானை கரைத்துக் குடித்தவரின் கை.
--------------

அத்தியாயம் 8

அந்த நகரின் வால்முனையில் உள்ள தியேட்டர். அது வரை நடந்து வந்த புதிய படத்தை எடுத்துவிட்டு, அன்றைக்கு மட்டும் சம்பூர்ண ராமாயணத்தின் புதிய காப்பியைக் காட்டினார்கள்; அப்படியும் அது காலைக் காட்சிதான். அதுவும் ஓசிதான். பட்டிதொட்டி பதினாறுக்கும் சாதித் தலைவராக விளங்கும் பழனிவேலுவின் வேண்டுகோளின்படி, எல்லோருமே கத்தி, கடப்பாரை, கம்புகளோடு கூடிவிட்டார்கள். தியேட்டர் வளாகத்திலேயே மதிய சாப்பாடு. இப்போது பொதுக் கூட்டம். அந்தக் கூட்டத்திற்கு இடையிடையே வாய்க்கால் வரப்புப் போல் குண்டாந்தடி ஏந்திய குண்டர்கள் மாதிரியான தொண்டர்கள். ஆங்காங்கே, பட்டொளி வீசிப்பறக்காத, மக்கிப்போன காவிக்கொடிகள்.

மேடைக்குப் பின்னணியாக, வில்லேந்தும் ஸ்ரீராமர், அரக்கனைக் கீழே மிதித்து ஆனந்தக் கூத்தாடும் நடராஜர், ராட்சஸனை ஒழிக்கும் திரிசூலி, அத்தனையும் கோபாவேச தெய்வப் படங்கள் - வாழைப்பழ ஊதுபத்தி சாட்சியோடும், மாலை மரியாதைகளோடும் வைக்கப்பட்டிருந்தன. காண்ட்ராக்டர் ராமலிங்கம் அங்கிருந்த சுவாமிஜியையும், பழனிவேலையும் ஒரு பார்வை பார்த்து விட்டும், ஒரு கூழைக் கும்பிடு போட்டுவிட்டும் வரவேற்புரை நிகழ்த்தினார்.

“நாம் முதலில் இந்து. அப்புறம்தான் மனிதன். இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கே தெரியும், மசூதிபாளையத்தில் உள்ள மசூதி மாடியைக் கட்டிக் கொண்டிருந்தவன் நான். விலைவாசிக்கு ஏற்ப எனக்கு ரேட்டை கூட்டிக் கொடுப்பதாகக் கூடச் சொன்னார்கள். ஆனால் எப்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டதோ அப்போதே அறியாமையிலிருந்து நான் விடுபட்டு, ஒரு இந்துவாகி விட்டேன். செலவழித்த பணமான மூன்று லட்ச ரூபாய் போனால் போகட்டும் போடா என்று வேலையை நிறுத்தி விட்டேன். இப்படித் தான் ஒவ்வொரு இந்துவும் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு முஸ்லீமின் மமதையும் அடங்கும். இமயமலையில் கடுந்தவம் செய்து நம் தவப்பயனாய் இங்கு வந்தருளியுள்ள சுவாமிஜி ஜெய் ராமானந்தா உங்களிடையே இப்போது பேசுவார்.”

ஜரிகை வேட்டியும், பட்டுச் சட்டையுமாய் கிழட்டுக் கல்யாண மாப்பிள்ளை மாதிரி வந்திருந்தார் பழனிவேல், அந்தக் ‘கழுதை களவாணிப்பய’ காண்ட்ராக்டர், தலைவர் என்ற முறையில் தன்னைப் பேசக் கூப்பிடாதது அவருக்கு வருத்தந்தான். அதுவும் இருவகையில் நிம்மதி, சாதிக் கூட்டங்களில் ஆபாசமான வார்த்தைகளால் பேசிப் பழகியவர். இங்கே அப்படிப்பட்ட வார்த்தைகள் வந்து விடக்கூடாது.

பழனிவேல், அவருடைய ஒரே சொல்லுக்காக வந்திருக்கும் உருண்டு திரண்ட அந்தக் கூட்டத்தைப் பார்த்தார். கூட்டத்தின் முன் வரிசையில் உள்ள பெண்களில் தனியழகாய்த் தோன்றிய மகள் அபிராமியைப் பார்த்தார். நெற்றியில் நீளமான வெள்ளைக்கோடு. அதில் உருளையான சந்தனம். அதற்கு மேல் குங்குமம். அன்னை அபிராமியே அங்கே திரிசூலம் இல்லாமல் உட்கார்ந்திருப்பது போன்ற தோரணை. மகளைப் பெருமிதப்பட்டுப் பார்த்த அவர், பலத்த கைதட்டலுக்கு இடையே மைக் பக்கம் போன ஜெய் ராமானந்தாவைப் பார்த்தார். மூன்றாண்டுகளுக்கு முன்பு வீட்டுக்கு வந்து அடிக்கடி காசு கேட்ட மனிதன் - அதுவும் காலில் விழாத குறையாக. ஒரு தடவை இவர், “உழைச்சு பிழையேன்யா” என்று கூடச் சொல்லிருக்கிறார். அப்புறம் ஆளைக் காணவில்லை. ஜெயிலுக்குப் போனானோ எங்கே போனானோ, இப்போது இமயமலையில் பிறந்து அங்கேயே தவம் செய்தது மாதிரி எங்கிட்டேயே கரடி விடுறான். கரடியோ - புரளியோ அவனால் ஒரு காரியம் ஆகவேண்டும். சங்கரசுப்பு மோசம் செய்துவிட்டான். கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கலாம். தப்பில்லை தான். ஆனால் அறுநூறு ரூபாய் வாடகை வரக்கூடிய கடையை எப்படி ஸ்ரீராமர் கோவிலாக மாற்றலாம்? சுவாமிஜியின் காதுகளைக் கடித்தாகிவிட்டது. கரங்களைச் சொறிந்தாகி விட்டது. மனை சாஸ்திரப்படி அங்கே ஸ்ரீராமர் இருக்கக்கூடாது என்று சுவாமிஜி சொல்லியிருக்கிறார். அப்படியும் சங்கரசுப்பு அசையவில்லையானால், ராத்திரி யோடு ராத்திரியாய் ஸ்ரீராமரை இடித்துப் போட்டுவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டுவிட வேண்டியதுதான். சாராயக் கடையை தவிடுபொடியாக்கின பயல்களுக்கு சரியான பாடம். இப்போ இங்கே கூடியிருக்கதே, இடிபட்ட சாராயக்கடைக்கு நீதி கேட்டுத்தானே.

சுவாமிஜிக்குக் கூட்டம் கை தட்டவில்லை, மேடையிலிருந்த சங்கரசுப்பு, அப்படித் தட்டும்படி இரண்டு கைகளையும் தட்டி கூட்டத்தைத் தூக்கப் போவதுபோல் மேலே கொண்டு போனபோதும் அந்தக் கூட்டம் அசையவில்லை. பழனிவேல் கையாட்டிய போதுதான் பயங்கரமாய்த் தட்டியது. அவரே நிறுத்தும்படிச் சொல்லுமளவிற்கு அது ஒரு கைதட்டுக் கூட்டமாகியது.

சுவாமிஜி, மாலை மரியாதைகளையும், பொன்னாடைகளையும் கண்களால் எடைபோட்டு வாங்கிக் கொண்டு பேச்சைத் துவக்கப் போனார். காவிவேட்டி, காவிச்சட்டை... அதே நிறத்திலான கால் கைகள்... அதே நிறத்திலான முகம்; எண்ணெய் தடவிவிட்டது போன்ற தாடி... அதில் வெண்ணெய் தடவி விட்டது போன்ற லேசான நரை முடி. பேட்டைத் தனமான பார்வை. இதோ அவரே பேசப் போகிறார்.

“ஜெய்ராம்! எல்லோரும் சொல்லுங்க! ஜெய்ராம்...”

சும்மா இருந்த கூட்டம், பழனிவேலு கையாட்டியதும், ஒற்றை மனிதனாய்க் கத்தியது.

“செயராம்... செயசெயராம்...”

சாமியார் முகம் சுளித்தார். அவர்களின் முழக்கத்திற்கு திருத்தம் கொண்டு வந்தார்.

“அப்படிச் சொல்லப்படாது. நான் சொல்ற மாதிரியே ‘ஜெய்ராம்’ என்று சொல்லணும். செயசெயராம்னு சொல்லக் கூடாது. ஏனென்றால் நமது கொள்கை ஒரு நாடு. ஒரு மதம். ஒரே கலாச்சாரம் என்பது. ஆகையால் இனிமேல் எந்த பக்தனும் ஜெய்ராமுக்குப் பதிலாக செயசெயராம் என்றால், அது பாவமாகக் கருதப்படும். ராமா அல்ல, ராம். செயஅல்ல, ஜெய். சொல்லுங்க பார்க்கலாம். ஜெய்ராம்...”

“செய்ராம் செய்ராம்”

“என்னத்தை செய்யப் போரீங்க? நீங்க சொல்றதைப் பாத்தா நாம், ராமனுக்காக எதுவும் செய்யாமல் அவரே தனக்குத்தானே ஏதாவது செய்யனும் என்று நினைப்பது போல் இருக்கிறது. சொல்லுங்கள். ‘ஜெய்ராம், ஜெய்ராம்’ ஒங்களுக்கு ‘ஜெ’ பிடிக்காதா... பிடிக்கணும்... வேற வழியில்லை...”

கூட்டத்தின் முக்கால்வாசிப் பேருக்கு ‘ஜெ’ வரவில்லை. ஆனால் அபிராமிக்கு வந்தது. கம்பீரமும் இனிமையும் குரலில் கலக்க ‘ஜெய்ராம்’ என்றாள். ஆனால் அவளுக்கு ஒரு வருத்தம். சுவாமிஜி, அவளை இந்தப் பூலோகத்தில் பிறப்பித்த அன்னை அபிராமியைப் பற்றியும் முழங்கியிருக்க வேண்டும். ஆனாலும் ஒரு சமாதானம் ஸ்ரீராமன் யார்? அன்னை அபிராமியின் சகோதரன்தானே? தாய்மாமன் பேரைச் சொன்னால் தப்பில்லையே...

சுவாமிஜி, ஒரு கையைத் தூக்கி விரல்களை முஷ்டியாக்கி, அதுவே ஒரு குட்டிக் குண்டாந்தடிபோல் தோன்றப் பேசினார்.

“இந்துக்களே! இந்துக்களே! நீங்கள் எல்லாம் இந்துக்களா... இந்துக்களே...! இந்து என்பவன் யார்? எவனொருவன், இந்து ஆலயம் இருக்குமிடத்தில் இருக்கும் மசூதியைத் தகர்ப்பானோ, எவனொருவன் வர்ணாஸ்ரம தர்மத்தைக் கடைப்பிடிப்பானோ, எவனொருவன் இந்த நாட்டிலே இருக்கும் ‘பாகிஸ்தானியர்களை’ தட்டிக் கேட்பானோ, எவனொருவன் காவிக் கொடியைக் கரம் ஏந்திப் பிடிப்பானோ அவனே இந்து; அவள்தான் இந்து.”

சுவாமிஜி பேசிக் கொண்டே போனார். முஸ்லிம் படையெடுப்பு, ஒளரங்கசீப்பின் அட்டுழியம். மூன்று பொண்டாட்டி, இஸ்லாமியச் சட்டம், தலாக் போன்ற பலவேறு ‘விஷ’யங்களை விளக்கிக் கொண்டு போனார். கூட்டம் தூங்கப் போனது. அதற்குள் வெளியே ஒரு உரத்த குரல். மணியடிப்பது மாதிரியான மைக் வழியான குரல். பாதிப்பேர் விழுந்தடித்து வெளியே ஓடிவந்து நின்றபோது. அந்த ஆட்டோவே தனது உச்சித் தலைமூலம், உரத்துக் கத்துவது போல் தோன்றியது.

“பெரியோர்களே தாய்மார்களே ஒளியின் வேகம் அதாவது, ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் வேகம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் மைல், நமது சூரியனிலிருந்து அந்த ஒளி பூமிக்கு வருவதற்கு நான்கு நிமிடம் ஆகிறது. இப்படிப் பல நட்சத்திரங்களிலிருந்து ஒளி வருவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் கூட ஆகின்றன என்றால், இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு பரந்து விரிந்து உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்தப் பூமி, பிரபஞ்சக் கடலில் ஒரு துளிதான். கோடி கோடியே கோடி சூரியன்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. இயற்கையில் ஒவ்வொன்றுமே ஒரு அற்புதம், காலையில் பூக்கும் மலர்கள், மாலையில் பூக்காது; மாலையில் பூக்கும் மலர்கள் காலையில் கண் திறக்காது. வண்டுகளும் அப்படியே. பரிணாம போட்டியின் பக்குவமே இந்தப் பூக்கள். இந்த வண்டுகள்; இப்படிப்பட்ட இந்த அற்புதக் கிரகத்தில் விஞ்ஞான யுகம் வேகவேகமாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று சொல்வது பாசிசம், அதாவது கொடுங்கோன்மை. இப்படிச் சொல்கிறவர்கள் ஆதிதிரா விடர்களைத் தள்ளி வைத்தது ஏன்? இப்பவாவது ஆதி திராவிடர் வீட்டில் பெண் கொடுக்கல், வாங்கல் செய்வார்களா? இல்லை வயல் வெட்டிக்குப் போகும் உங்களுடைய கூலியைக் கூட்டித் தருவார்களா? ஆகையால் பெரியோர்களே! ஒரே கலாச்சாரம் என்பது, கண்ணால் கூட வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாத கழுதையாக இருக்க வேண்டும் என்று சொல்வது மாதிரி, அடாவடித்தனமானதும் கூட. ஆனால் இந்தியர்களாகிய நாம் கழுதைகள் இல்லை. பல்வேறு நிறத்திலான குதிரைகள். சண்டைக் குதிரைகள் அல்ல. இந்த நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லும் சவாரிக் குதிரைகள். பிறத்தியார் நிலத்தில் கட்டிய வீட்டைக் கூட இடிக்க முடியாத இந்தக் காலத்தில் பழமையான ஒரு மசூதியை, இடிப்பது...”

வெளியே நின்ற கூட்டம் அப்படியே நின்றது. சிலர் கை தட்டக்கூடப் போனார்கள். அதற்குள் பழனிவேல், சங்கரசுப்பு வகையறாக்களோடு வந்து ஆட்டோவை முறைத்தார். கூட்டம் நிதானித்ததைப் பார்த்த முத்துக்குமாரும் காதர்பாட்சாவும், ஆட்டோவிலிருந்து இறங்கி வெளியே வந்தார்கள். முத்துக்குமார் கை மைக்கில் பேசப் பேச, காதர்பாட்சா தலையை ஆட்டினான். பழனிவேலால் தாங்க முடியவில்லை.

“நாம் பள்ளுப்பறைகளைக் கட்டணும்னு சொல்றான். நம்ம பொண்ணுகளை பள்ளுப்பறைகளுக்குக் கொடுக்கணும்னு சொல்றான். இன்னுமாடா பாத்துக்கிட்டு நிக்கிறிக? இதுக்காடா கூட்டி வந்தேன்?... நம்மை வம்புக்கு அழைக்கிறது மாதிரி, ஆட்டோவை அனுப்பி இந்துமத விரோதப் பிரச்சாரம் செய்யுற மசூதிபாளையம் மண்டியிடனும்”

அந்தக் கூட்டம், உடம்பை நெளித்தபோது குண்டாந்தடி சீருடைக்காரர்கள், அந்த ஆட்டோவைப் பார்த்து ஓடினார்கள். அப்படியும், காதரும் முத்துக்குமாரும் தங்கள் பாட்டுக்கு இயங்கியபோது, டிரைவரால் பொறுக்க முடியவில்லை. ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி, அவர்கள் இரண்டு பேரையும் ஆட்டோவுக்குள் தூக்கிப்போட்டு வண்டியை எடுத்தார். ஆட்டோ அந்த டவுனின் பிரதான சாலை வழியாக ஓடி, பின்னர் அதிலிருந்து கிளைவிட்ட குப்பிச்சாலையில் தாவி மசூதி பாளையத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. பின்னால் குண்டாந்தடித் தொண்டர்களும், கூட்டமும் கற்களை எடுத்து எடுத்து ஆட்டோவின் மேல் எறிந்து எறிந்து ஓடியது. ஆட்டோவின் ஒலிபெருக்கிக்கு சில விழுப்புண்கள். பல கற்கள் ஆட்டோவின் பின் திரையைக் கிழித்து உள்ளே பாய்ந்தன. உள்ளே என்ன செய்தனவோ ஏது செய்தனவோ? ஆனாலும் ஆட்டோ அவர்களுக்கு ‘கடுக்காய்’ கொடுத்தபடியே ஓடியது.

அந்தக் கூட்டம் ஆயுத பாணியோடு ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றது. மசூதிபாளையம் கண்ணுக்குத் தெரிந்த இடம். பழனிவேல் இப்போது சுவாமிஜியோடும், சங்கரசுப்புவோடும், ராமலிங்கத்தோடும் அங்கே வந்தார். மசூதிபாளையத்திற்குச் சிறிது தொலைவில் உள்ள ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு போகும் குழாய்களைப் பார்த்தார். மேலே பறந்த மின்சாரக் கம்பங்களையும், டெலிபோன் கம்பிகளையும் நோட்டம் விட்டார். ஆவேசமாகக் கத்தினார்.

“இங்கே நில்லுங்க, இப்படியே நில்லுங்க... எந்த சாய்புவையும் உள்ளேயும் விடப்படாது. வெளியேயும் விடப்படாது. அவங்க இந்த வழியா வந்துதான் ஆகணும். அந்தப் பக்கம் ஏரி. இந்தப் பக்கம் குளம். பின்பக்கம் மலை. பொந்துக்குள்ள இருக்கிற பெருச்சாளி மூட்டம் போட்டால் வெளியில வராமலா இருக்கும்? என்னடா பார்த்துக்கிட்டு இருக்கீங்க? அந்தத் தண்ணிக் குழாயை உடையுங்க, சாய்புப் பயலுவ எப்படி தண்ணி குடிக்கானுவன்னு பார்க்கிறேன். சங்கரசுப்பு நீங்க தொண்டர்களை கூட்டிக்கிட்டு ஏரிப் பக்கம் போங்க. மதகை அடையுங்க. டெலிபோன் ஒயரை வெட்டுங்க... டேய்... டேய்... அது மின்சாரக் கம்பிடா... தொடாதே... அதுக்கு... அப்புறமா ஒரு வழி செய்யலாம்.”

குண்டாந்தடித் தொண்டர்கள் சொல்லப் பொறுக்கவில்லை. நான்கைந்து பேர்களிடமிருந்து - அவர்கள் காரணம் புரியாமலே வைத்திருந்த கடப்பாரைக் கம்பிகளைப் பறித்தார்கள். ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றை வழி மறித்துக் கட்டிய ஏரியிலிருந்து தண்ணீர் சுமந்து பாதி மண்ணில் புதைபட்டும், மீதி வெளியே தெரிந்தும் நெருப்புக் கோழியாய் வெளிப்பட்ட நான்கு சிமெண்ட் குழாய்கள் பக்கம் போய்க் கம்பீரமாய் நின்றார்கள். பிறகு தங்களது ‘கர சேவைக்கு’ ஸ்ரீராமனைத் துணைக்கழைக்க கண்களை மூடித் தியானித்தார்கள். அந்தக் கண்கள் மீண்டும் திறந்ததும் நெடுஞ்சாண்கிடையாய்க் கிடந்த குழாய்கள் மேல் இரும்புக் கம்பிகள் மோதின. அந்தக் குழாய்களில் ஒரு பகுதி வார்ப்பு இரும்பால் வடிக்கப்பட்டதால் , குத்தப் போன கம்பிகள் திருப்பித் தாக்கப்பட்ட்துபோல் அந்தக் குழாய்களிலிருந்து நழுவின. ஆனாலும் அந்தக் குழாய்களில் வெள்ளை வெள்ளையான காயங்கள் ஏற்பட்டன. பழனிவேல் கூட்டத்தை ஏவிவிட்டார். அத்தனை பேரும் குழாய்ப் பக்கம் ஓடினார்கள். அவற்றை உடைப்பதில் உள்ள உழைப்பின் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட படித்த சிலர் இரண்டு மூன்று காவிக் கொடிகளை சாலைப் பக்கம் நட்டுக் கொண்டு இருந்தார்கள்.

அரை மணி நேரத்திற்குள், அந்தக் குழாய்கள் குற்றுயிரும் குலையுயிருமாய்த் துடித்தன. அவற்றிலிருந்து ஓடிய தண்ணீர் முதலில் கண்ணிராயும், பிறகு செந்நீராயும் வெளிப்பட்டது. ஆங்காங்கே சின்னப் பிள்ளைகள் வீடுகட்டி விளையாடுற மாதிரியான சின்னச் சின்னக் குளங்கள்! குழாய்களை உடைத்துக் களைத்துப் போனவர்கள் அந்தத் தண்ணீரையே தாகத்திற்குக் குடித்தார்கள். அடித்துப் போட்ட மாட்டின் ரத்தத்தை புலி குடிக்குமே அப்படி. சிலர் கையலம்பிக் கொண்டார்கள். இதற்குள் டெலிபோன் கம்பிகள் தலைகீழாய்த் தொங்கின. சங்கரசுப்பு பழனிவேலிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.

“இன்னும் அரை கிலோ மீட்டர் வரைக்கும் குழாய் போகுதே, அதில இருக்கிற தண்ணிர் அவனவனுக்கு ஒரு நாளைக்கு போதுமே இப்படி விட்டுக் கொடுக்கலாமா?”

“நீர் எந்தக் காலத்திலேயாவது விவசாயம் பார்த்திருந்தால் தெரியும்... இந்தப் பக்கம் பள்ளம். அந்தப் பக்கம் மேடு, அதோ பாருங்க. தண்ணீர் தபதபன்னு தரையில விழுகிறதை...”

சங்கரசுப்பு, திருப்தியோடு தலையாட்டிய போது, பழனிவேல் கூட்டத்திற்கு ஆணையிட்டார்:

“ரோட்டை மறிச்சுக்கிட்டு நில்லுங்கப்பா. இப்படி மனிதச் சங்கிலி மாதிரி இல்ல, இரும்பு வேலி மாதிரி நிக்கணும்...”

இதற்குள் குண்டாந்தடித் தொண்டர்கள் கூட்டத்தை பிய்த்துப் பிய்த்து வரிசையாக்கினார்கள். தென்முகமாய் ஐம்பது பேரும், வடமுகமாய் ஐம்பது பேரும் நிறுத்தப்பட்டார்கள். மற்றவர்கள் அங்கும் இங்கும் சிதறி நின்றார்கள். மசூதிபாளைய முனையில், ஒரு கூட்டம் திரண்டு நிற்பது தெரிந்தது.

சிறிது நேரத்தில், மசூதிபாளையத்தில் இருந்து ஒரு கார் வந்தது. குண்டாந்தடித்தொண்டர்கள் அதைப் போகவிடாமல் சாலை மறியல் செய்தபோது, உள்ளே அந்தக் காரையே நொறுக்கிவிட்டு வெளியே வரப்போவது போல் ஒரு கர்ப்பிணிப் பெண் அலைமோதினாள். அவள் அம்மா கண்ணீரும் கம்பலையுமாய் காரைச் சூழ்ந்தவர்களிடம் மன்றாடினாள்.

“ஆம்பளைங்க வந்தா வம்புன்னு எம்புருஷனையும், மருமகனையும் அங்கேயே விட்டுட்டு நான் மட்டும் இவளைக் கூட்டிக்கிட்டு வாரேன். தயவு செய்து கருணை காட்டுங்க. அண்ணே நீங்கதான் பழனிவேலு-ஒங்களை திவான்முகம்மது வீட்டிலே பலதடவை பார்த்திருக்கிறேன்... எங்களை... அவரு எப்பவுமே சேர்த்துக்க மாட்டாரு. நீங்களும் சேர்க்காட்டி எப்படி? நான் கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்த பொண்ணுண்ணே... ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகாட்டி வாயும் வயிறுமாய் செத்துப்போவாண்னே... கருணை காட்டுங்கண்ணே.. அல்லா உங்களுக்கு அருளுவார்ண்ணே...! வழிவிடுங்கண்ணே...!”

பழனிவேலு வேறுபக்கமாக நடந்தபோது, ஒரு குண்டாந்தடி அதட்டியது.

“அல்லா உங்களுக்கு மட்டும் அருளினால் போதும். எங்களுக்கு ராமர் இருக்கார், ஒங்களுக்கு வழிவிட எங்களுக்குப் பைத்தியமா? முதல்ல ஆஸ்பத்திரிக்கு ,போவிங்க. அப்புறம் கலெட்டர்கிட்டே போவிங்க. போலீஸ் இங்க வரும், படுகளத்திலே ஒப்பாரி கூடாதும்மா. திரும்பிப் போ! திரும்பிப் பார்க்காமே போ!” இன்னொரு சீருடை குறுக்குக் கேள்வி போட்டது.

“இப்பக்கூட இந்தப் பொண்ணு வயித்துக்குள்ளே பஞ்சை அடைச்சிக்கிட்டு நடிக்கமாட்டான்னு என்ன நிச்சயம்?”

அம்மாக்காரி, மீண்டும் மீண்டும் கெஞ்சினாள். அதற்குள், உள்ளே கிடந்த பெண், சன்னம் சன்னமாய் குரல் இழந்து கொண்டிருந்தாள். இன்னொரு குண்டாந்தடி அதட்டியது.

“ஏண்டா நீ டிரைவரா இல்ல... எருமமாடா காரை எடுத்துக்கிட்டு போறியா... இல்லை... அதை காயலாங்கடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பவா...

இப்போது, தாய்க்காரியின் முகம் வெளுத்தது. கண்கள், சிறிது நேரம் மூடின. அவள் திறந்தபோது, எதிரே தோன்றிய அரிவாள்களையும், உள்ளுறுப்புகளைத் தோண்டி எடுக்கக் கூடிய சூரிக்கத்திகளையும், தொட்டாலே ரத்தம் குடிக்கும் வேல் கம்புகளையும், இழுத்துப் பிடித்துக் கவ்வும் சைக்கிள் செயின்களையும் கண்டன. இதற்குள் இரண்டு மூன்று பேர் அந்தக் காரை அங்கும் இங்கும் முஷ்டிகளால் குத்தினார்கள். ஆனாலும் அங்கே நின்ற சாதா கூட்டத்திடம் பச்சாதாபம் மேலோங்கியது. ஆனாலும் பழனிவேல் பார்த்த பார்வையில் கட்டுப்பட்டது. வெளியே கோபப்படுவது போல் பாவலா செய்து கொண்டும், உள்ளுக்குள் அழுது கொண்டும் நின்றது. பிணம் போல் கிடந்த மகளைப் பார்த்தபடியே தாய்க்காரி காருக்குள் ஏறினாள். கார் பின்பக்கமாய் நகர்ந்து, அப்புறம் தென்பக்கமாய்த் திரும்ப ஓடியது. கூட்டத்திற்கு, பின் கண்ணாடி டி.வி.காட்சி போலத் தெரிந்தது. அந்தக் கர்ப்பிணிப் பெண் கைகளை மீண்டும் மீண்டும் மேலே தூக்குகிறார். தாய்க்காரி அவற்றை இழுத்துப் பிடிக்கிறார் கூட்டம், பழனிவேலுவை குற்றம்சாட்டும் தோரணையில் பார்த்தபோது, அவர் ஆணையிட்டார். “எவ்வளவு நாளானாலும் சரி... இங்கேயே நிற்கணும்... இப்படியே நிற்கணும்... ஆறுமணி நேரத்திற்குப் பிறகு சைடில நிற்கறவுங்க இங்க வரணும். நீங்க அங்க போகணும், மசூதி பாளையத்திலிருந்து இந்தப் பக்கம் ஒரு காக்கா குருவிகூடப் பறக்கக் கூடாது. நீங்க என்னனெல்லாம் சாப்பிடுவீங்களோ அதெல்லாம் உங்களைத் தேடி இங்க வரும். உறையும் பாக்கெட்டும் தானா வரும். இந்தச் சமயத்தில் மசூதி பாளையத்தில் முனையில் கூட்டம் அதிகமானது போல் தோன்றியது. ஆகாயத்தை நோக்கிக் கைகளை வளைத்தது கண்ணில்பட்டது. இங்கிருந்து பலர் அவர்களை நோக்கி ஓடப்போனார்கள். சிலர் அவர்களைத் தங்கள் பக்கம் வரும்படி சவால் விட்டார்கள். ‘செய்ராம் செய்ராம்’ என்ற முழக்கங்கள்! அப்போது பார்த்து ஒரு ஸ்கூட்டர் சத்தம்...

அந்தப் பிரதான சாலையிலிருந்து சம்சுதீன் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தான். அவனுக்கு விபரம் தெரியாது. பழனிவேலுக்கு ஆத்திரம். அதனால் அவனுக்குக் காத்திருக்க வேண்டுமென்ற நடப்பு புரியாமல், புத்திமட்டாகக் கத்தினார்:

“அதோ வரான் பாரு திவான் முகம்மதுவோட பயல்... காலேஜில் இந்துப் பெண்கள் கிட்ட வம்பு பண்ற பயல்... செருக்கி மகனை ஒரே போடாப் போடுங்கடா! ஒடுங்கடா! பிடிங்கடா!”

அந்தக் கூட்டத்தில் ஒரு பகுதி ஆயுத பாணியாய் சம்சுதீனைப் பார்த்து ஓடியது. சிறிது நேரம் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பிரமித்து நின்ற சம்சுதீன், அந்த ஸ்கூட்டரைத் திரும்பப் பார்த்தான். அதற்குள் எல்லாம் முடிந்து விடும் என்பதை உணர்ந்தவன் போல் அந்த ஸ்கூட்டரிடமிருந்து விடுபட்டு தலைதெறிக்க ஓடினான். கூட்டமோ ‘செய்ராம்’ ‘செய்ராம்’ என்று கத்தியபடி அவனைத் தொடர்ந்து துரத்தியது.
--------------

அத்தியாயம் 9

அந்த வீட்டின் அகமும் புறமும் போல், மாரியப்பன் ஒடுங்கிக் கிடந்தான்.

அந்த வீட்டின் பின் பகுதியில் பன்றிக்குடில் மாதிரியான ஒரு பொந்து அறை. வெளி அடைப்பு இல்லாதது. தட்டு முட்டுச் சாமான்களைப் போட்டு வைப்பதற்காக அமைக்கப்பட்ட அந்தப் ‘பொந்தில்’ அவன் அதே வகைப் பொருள் மாதிரியே கிடந்தான். தலையை நிமிர்த்தினால் அது தட்டும் என்பதால், அசல் காயலான்கடை கோணி மாதிரியே சுருண்டு கிடந்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு இதோ அந்த அமீர் வீட்டிற்குள் தென்னை மரத்தில் ஏறியும், கருவாட்டுக் களியைச் சாப்பிட்டும் நடமாடிக் கொண்டிருந்தவன் தான். ஆனால் இப்போது வேறுவழியில்லை. அந்த வீட்டிற்குள் அவ்வப்போது ஆட்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது நடக்கும் முற்றுகையில் இவனைப் பற்றி என்ன சொன்னாலும் எடுபடாது என்பதால், அந்த வீட்டினரின் விருப்பத்திற்கு விரோதமாகவே அங்கே பன்றியிலும் கேவலமாய், உள்ளே வருகிறவர்களை வேட்டை நாய்களாய் அனுமானித்துக் கொண்டு ஒரு விநோதப் பிராணியாகக் கிடக்க வேண்டியதாயிற்று. அன்று சாராயப் பயல்களுக்கும். ஜகாத் படைக்கும் இடையே மாட்டிக் கொண்ட அவன் எப்படித் தப்பினோம் என்பதை இன்னும் கூடச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தச் சாலையில் ஓடியவன் பக்கத்தில் உள்ள கருவேல மரக்காட்டில் குதித்து, கையிலும் காலிலும் முட்கள் முரட்டுத்தனமாக உட்போக எப்படியோ அமீரின் வீட்டுப் பின் பக்கம் வந்து விட்டான். அவன் அப்படி வருவான் அல்லது வரவேண்டும் என்று எதிர்பார்த்தது போல் பாத்திமா பின் கதவைத் திறந்து வைத்திருந்தாள். அவன் அந்த வாசலுக்கு மத்தியில் நின்று கொண்டு குமுறிக் குமுறி அழுதபோது, அவள் முன்வாசல் பக்கம் ஓடிக் கதவைச் சாத்தப் போனாள். அப்போது, அந்த வீடும்-குறிப்பாக அவளும் அந்தச் சூழலில் தன்னை ஏற்றுக் கொள்ள மறுப்பதாக அனுமானித்து, அவன் அந்த வீட்டின் கொல்லைப்புற வேலியைத் தாண்டப் போன போது, பாத்திமா ஓடிவந்து அவன் கைகளைப் பலவந்தமாகப் பிடித்து, பிடரியில் கைபோட்டு வீட்டிற்குள் இழுத்துச் சென்றாள். அந்த இருவருக்கும் அப்போதோ அல்லது இப்போதோ இப்படி ஒருவரை ஒருவர் தொட்டது பற்றிய ஒரு பிரக்ஞை கூட ஏற்படவில்லை.

காலடிச்சத்தமும், வளையல் சத்தமும் கொண்ட கலவைச் சத்தம் கேட்டு மாரியப்பன் கண் திறந்தான். ஜரிகைக் காகிதத்தில் வெள்ளைக் கோடுகள் போட்டது போன்ற சேலை கட்டியிருந்த பாத்திமா தலைமுடி - அந்தத் தலையை யாரோ ஆணி வைத்து அடித்தது போல், அங்குமிங்குமாய்ச்சிதறிக் கிடக்க, எதிரே நின்றாள். அவனைப் பார்க்கப் பார்க்க அவளுக்கும், அவளைப் பார்க்கப் அவனுக்கும் என்னவோ போலிருந்தது. வெளியே துருத்தும் மாரியப்பனின் கண்கள் இப்போது குகைகள் போலாகிவிட்டன. வாயோடு போட்டியிடும் பாத்திமாவின் கண்கள் தங்களது எச்சிலை உமிழ்ந்தன. ஒருத்தனுக்கு மரணத்திலிருந்து தப்பிக்க வேண்டுமே என்ற தாகம்; ஒருத்திக்கு அவனை, அதிலிருந்து காக்க வேண்டுமே என்ற வேகம், இந்தத் தாகத்தோடும், வேகத்தோடும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தபோது, பாத்திமா அவனுக்கு விபரம் சொன்னாள். ஆகாயத்தை நிலவு போல் காட்டிய கூரைமேட்டைப் பார்த்தபடியே, மகாபாரதப் போரை திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் சொன்னானாமே அப்படிச் சொன்னாள்.

“முந்தா நாளும், நேற்றும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணி வந்தது. இன்னிக்கு துப்புரவா ஒரு சொட்டுத் தண்ணிகூட வரலை. முன்னாலே வந்த வெள்ளத்திலே அங்கங்க கிணறுகளும் மணல் மேடாயிற்று. இப்போ தான் துரு எடுக்கப் போனாங்க. அது முடியுமுன்னாலே இப்படிப்பட்ட நிலைமை. ஊர்ஜனமே தெருவுக்கு வந்திடுச்சி. பம்புகளை அடிச்சி அடிச்சி அதோட பிடிங்க தான் கழண்டுச்சி, டவுனிலிருந்து வரவேண்டிய காய்கறியும் வரலை. அரிசி மண்டி ஆறுமுகமும் அதை இழுத்து மூடிட்டு ஓடிட்டார். யாருக்கு என்ன பண்றதுன்னே ஒண்ணும் புரியலே. ஒவ்வொருத்தர் முகமும் பைத்தியம் பிடிச்சது மாதிரியே கண்ணச் சுருக்குது. வாயக் கோணுது. சோறு இல்லாமல் இருக்கலாம், துணிகூட இல்லாம இருக்கலாம். ஆனா தண்ணி இல்லாம எப்படி இருக்கது?”

அவனிடம் ஆறுதல் கேட்பது போலவும், அவனை ஆற்றுப்படுத்துவது போலவும் பாத்திமா பார்த்தாள். அவன் எதையும் உள்வாங்கும் நிலையில் இல்லாதது போல், ஒரு கையை அம்பாக்கி அதில் தலையைப் போடுவதற்காகக் கீழே குனிந்தான். பிறகு மீண்டும் எழுந்து வெளியே நடக்கும் அவலங்களைக் காண விரும்பியது போல் அந்த அறைக் குகையில் இருந்து தவழப் போனான். பாத்திமா, அதன் வாசலை, கையைக் குறுக்காகப் போட்டு அதைக் கதவில்லாத தாழ்ப்பாளாக்கியபோது, அவன் மோவாய் அந்தக் கையில் உரசியது. அவன் பின்வாங்கியபடியே, பசிபட்ட புலிபோல் வார்த்தைகளைப் பாயவிட்டான்.

“என்னை விட்டுடு பாத்திமா, என்னையும், இந்த ஊரையும் இந்த நிலைக்குக் கொண்டு வந்த டவுன் பயலுவ எத்தனை பேரை வெட்ட முடியுமோ அத்தனை பேரையும் வெட்டிட்டு ஜெயிலுக்குப் போறேன். அதுக்கு முன்னாலே எங்கப்பா... அம்மாவையும், தம்பி, தங்கச்சியையும் பார்க்கணும்னு ஒரு ஆசை. இந்நேரம் எப்படித் துடிச்சிக்கிட்டு இருக்காங்களோ? என்னைக் காணோமேன்னு அப்பாவுக்கு உயிரே போயிருக்கும்.”

மாரியப்பன் ஆவேசமாக வெளிப்பட்டு, தடுக்கப்போன பாத்திமாவையும் ஒரு தள்ளு தள்ளிவிட்டு, பின்புறக் கதவில் துருப்பிடித்த தாழ்ப்பாளை இழுத்துக் கொண்டிருந்தான். அது விலகுமோ இல்லையோ கதவு உடைபடப்போவது போல் , "கீச்" போட்டது. பாத்திமாவால் பொறுக்க முடியவில்லை. என்ன செய்கிறோம் என்றும் புரியவில்லை. ஏதோ ஒரு அசுர வேகத்தில், அவன் கழுத்தைச் சுற்றி இடது கையை வளையமாக்கி அவனைப் பின்பக்கமாக இழுத்தாள். அவன் லேசாய் நிலைகுலைந்து தடுமாறிக் கதவை விட்டபோது, பாத்திமா சட்டென்று பாய்ந்து அந்தக் கதவின்மேல் தன் உடம்பைச் சாத்திக் கொண்டாள். பிறகு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவனை நோக்கி “உள்ளே போவும். உள்ளே போவும்” என்றாள். அவன், ஒரு சர்க்கஸ்காரிக்குக் கட்டுப்பட்ட மிருகம் போலவே பின் பக்கமாய் நடந்து நடந்து, ஏதோ ஒரு அனுமானத்தோடு அந்தக் குகை அறையின் விளிம்பிற்கு வந்ததைப் புரிந்து கீழே குனிந்து அந்தக் குகைக்குள் பின்பக்கமாகத் தவழ்ந்தான். பாத்திமா, கதவில் இருந்து விடுபட்டு, அதன் எதிர்ப்புறச் சுவரில் சாய்ந்தபடியே நின்றாள். இப்போது அவனுக்கு அவளிடமிருந்தே ஒரு பாதுகாவல் தேவைப்பட்டதைப் புரிந்து கொண்டாள். வெளியே போய் பெற்றோரிடம் சொல்ல வேண்டுமென்றால், அதற்குள் இவன் ஓடிவிடலாம். என்ன செய்வது என்று புரியாமலும், பிறகு எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று புரிந்தும் அவள், அவனைப் பார்த்தபடியே சுவரில் தலையை அங்குமிங்குமாய் புரட்டினாள். வெளியே ஏற்பட்ட சத்தங்கள் அவர்கள் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலவே வலி கொடுத்தன.

“தண்ணி... தண்ணி” என்று குழந்தைகளின் அவலச்சத்தம். “பசிக்கி... பசிக்கி” என்ற பரிதாபச் சத்தம். முன்பெல்லாம் பசி அறியாமல் இருந்த பணக்காரக் குழந்தைகள், இப்போதும் அதன்தாக்கம் புரியாமல் “வயிறு வலிக்கி... வயிறு வலிக்கி...” என்று புலம்பும் ஓலச்சத்தங்கள். “பொறுங்க... பொறுங்க...” என்ற இயலாமைச் சத்தங்கள். “அல்லா அல்லா!! எங்கள் ரப்பே” என்ற பரிதாபச் சத்தங்கள். இவற்றை எல்லாம் மீறி ஒரு ஒப்பாரிச் சத்தம். “என் பெண்ணைக் கொல்லாமக் கொன்னுட்டாங்களே! வாயும் வயிறுமாய் இருந்த மகளை ஆஸ்பத்திரிக்கு போகவிடாமத் தடுத்து மயானத்துக்கு அனுப்பிட்டாங்களே!” என்ற அலறல். உடனே ஒரு முதியவரின் முதுமைச்சத்தம். இராக்கால நரிபோல ஊளைச் சத்தம்... “வேணுமின்னா இங்க வந்து கொன்னுட்டுப் போங்கடா. இப்படி உயிரோட சித்ரவதை செய்யாதீங்கடா!” என்ற ஒரு பெண்ணின் ஒப்பாரிச் சத்தம்.

அத்தனை சத்தங்களும் மாரியப்பனிடம் ஒரு ஆவேசத்தை எழுப்பியது. ஓங்கிக் குரலிட்டபடியே அவன் மீண்டும் வெளிப்படப் போனபோது, பாத்திமா அந்த குகைக்கு ரத்தமும், சதையுமான திரைச்சீலை போல், சாய்ந்து கொண்டாள். அவன் முகம், முதுகில் உரசுவது போல இருந்தது. உடனே இவள் முதுகை வெளிப்பக்கமாக வளைத்துக் கொண்டாள். பின்பக்கமாய் வாயிருப்பதுபோல, அவனுக்கு பிடரி வழியாக புத்திமதி சொன்னாள்.

“முதல்ல இங்க இருந்து போகணும் என்கிற எண்ணத்தை விட்டுடும்! யாரு கண்ணுலயும் படாம தப்பிக்க முடியாது! நின்னா கத்தியால் குத்துவாங்க! ஓடுனா கல்லால அடிப்பாங்க! எங்க ஆட்களுக்கு ஒம்ம மேலே அவ்வளவு பகை! அதனாலே இப்ப நீருதப்பிக்கணும் என்கிற எண்ணத்தை விடணும்...”

“ஐயோ பாத்திமா! இங்கே இருந்து தப்பிச்சு நான் உயிரோட இருக்கணும்னு ஆசைப்படறது மாதிரி பேசுறியே! அப்படிப்பட்ட எண்ணமே எனக்கு இல்ல. அந்த ஊரையே இப்படி கைகால் வெட்டினது மாதிரி வெட்டிப் போட்ட பயல்கள்ல கைக்கு அகப்படறவன ஒரே வெட்டா வெட்டணுமுன்னுதான் நான் வெளியில போக நினைக்கேன். என்ன விடு பாத்திமா!”

பாத்திமா யோசித்தாள். அவனைக் காபந்து செய்து கொண்டு அப்படியே இருக்கவும் முடியாது. அவனை எப்படி முடக்கிப் போடவேண்டும் என்பதும், அதற்கான வார்த்தைகளும் அவளுக்குத் தெரியும். ஆனாலும் எப்படிச் சொல்ல முடியும்? “நீரு இந்த வீட்டைவிட்டு ஒடுறத யாராவது பார்த்துட்டால் எங்க குடும்பத்தைப் பற்றி என்ன நினைப்பாங்க? என் மானம், மரியாதையும் ஒம்ம மாதிரியே ஓடாதா” ன்னு சொன்னால் அவன் அப்படியே முடங்கிக் கிடப்பான். ஆனால் அப்படிச் சொல்வது அவனையும், தங்களையும் கொச்சைப்படுத்துவதாய் ஆகிவிடுமே என்று யோசித்தாள். அடைக்கலமாக வந்திருப்பவனிடம் குடும்ப மானத்தை தொடர்பு படுத்துவதைவிட அவனைக் கொன்றே போட்டுவிடலாம் என்கிற சிந்தனை.

வெளியே சத்தம் வலுத்தது. பயங்கரமாக வலுத்தது.

பாத்திமா அவன் பக்கமாய்த் திரும்பிக் கேட்டாள்.

“எல்லா சோடாவையும் தாகத்துல தவிச்ச ஜனங்களுக்கு அத்தா கொடுத்துட்டார். ஒமக்காக ஒண்ணே ஒண்ணு எடுத்து வச்சிருக்கேன்... குடிக்கியளா?”

மாரியப்பன் தத்துவம் பேசினான். தானாய் வந்த தத்துவம்.

“சோடா இருக்கு என்கிற எண்ணத்திலே தாகம் கூட லேசாத் தெரியும் - அது தீர்ந்து போயிட்டதா தெரிஞ்சா எல்லாத் தாகமும் ஒண்ணா வரும்.”

பாத்திமா, லேசாகப் புன்முறுவல் பூத்தாள். வீட்டுக்குள் போய் அலமாரியைக் குடைந்து ஒரு கோலிச் சோடாவைக் கொண்டு வந்தாள். அதன் வாயில், பெருவிரலை சொருகி அதை இடது கையால் குத்தினாள். கோலி அசையவில்லை. பிறகு அவனிடம் நீட்டினாள். அவன் பெருவிரலை அந்தச் சோடாவின் வாய்க்குள் விட்டு ஒரே ஒரு அழுத்து அழுத்தினான். அந்தக் கோலி உடையப் போவது போல் கீழே போனது. அவள் அவனை ஆச்சரியமாய்ப் பார்த்தாள். “எப்பா! இரும்பு விரலு...”

மாரியப்பன் அந்தச் சோடாவை எடுத்து அவளிடம் நீட்டினான். அவள், அவனிடம் நீட்டினாள். இருவருக்கும் இடையே சிக்கிய அந்த சோடா நீர் சிந்தப் போனது. பிறகு மாரியப்பன் ஒரு யோசனை சொன்னான்.

“ஆளுக்குப் பாதி பாதியா குடிக்கிறதுக்கு சம்மதிச்சா நான் சோடா குடிக்கேன்.”

“அப்ப முதல்ல நீரு குடியும்”

“இல்ல நீ முதல்ல குடி!”

“நீரு தான்.”

“எச்சிச் சோடாவைக் குடுக்க எனக்கு என்னமோ மாதிரி இருக்கும்.”

“அப்ப முழுசாக் குடியும்.”

“இல்ல. அண்ணாந்து குடிக்கேன். அப்பவாவது மீதியைக் குடிப்பியா?”

பாத்திமா பட்டும்படாமலும் தலையாட்டிய போது, வெளியே ஒரு சின்னக் குழந்தையின் பெரிய சத்தம் தண்ணி தண்ணி என்று சப்த சமுத்திரங்களையும் தேடுவது போன்ற சத்தம் “சும்மா இரு.சும்மா இரு” என்று ஒரு தாய் அதட்டியதும் அந்தக் குழந்தை குரல் இழந்து போகிறது. மாரியப்பன் அதற்கான காரணத்தை யூகித்துச் சொன்னான். “அந்த அம்மா குழந்தையை அடிச்சிருக்கும்! அதுக்கு பயந்து பாவம் சும்மா இருக்குதோ என்னமோ? ஒரு வேளை கத்திக் கத்தி நாக்கு வறண்டு போச்சோ என்னமோ?”

மாரியப்பன் அந்த சோடா பாட்டிலை அவள் கையில் திணித்தான். அவளைப் போகும்படி முதுகைத் தள்ளினான். அவள் புரிந்து கொண்டவள் போல அந்த சோடாவை எடுத்துக் கொண்டபோது, அந்தக் குழந்தையின் ஓலச் சத்தம் மீண்டும் ஒலித்தது. கையில் பிடித்த சோடாவைத் தரையில் ஊன்றி அந்த ஆதாரத்திலேயே எழுந்தாள். முன் கதவையும் திறந்து விட்டாள். அங்கே ஒடுங்கியபடியே நின்றவர்களைப் பார்த்தாள். அந்தக் குழந்தை அந்த சோடாவை ஒரு பயங்கரவாதிபோல் பிடுங்கப் போனது. அவள் அந்தக் குழந்தையின் வாயில் அதை வைத்தாள். திடீரென்று ஒன்று உறைத்தது. மாரி கதவைத் திறந்திட்டு ஓடியிருப்பாரோ?
----------

அத்தியாயம் 10

அபிராமிக்கு அந்தக் காரே நடமாடும் சிறைக்கூடமாய்த் தோன்றியது. சாலை முழுவதும் வியாபித்த தரைப்படகு மாதிரியான கார்- அதில் வெளியே தலை காட்டுவது கிடக்கட்டும். என்ன நடக்கிறது என்பதைக் கூடப் பார்க்க முடியாத கரும்பச்சைக் கண்ணாடி ஜன்னல் அடைப்புக்கள். பினனிருக்கையில் வெல்வேட் இருக்கையின் நெருடல் சுகம் அறியாமல், அவள் குமைந்து கிடந்தாள். முன்பக்கம் பார்க்க முடியாதபடி டிரைவரின் முதுகும் அவருக்கு அருகே இரண்டு முதுகுகளும் வழியை அடைத்தன. இதனால் வேறுவழியில்லாமல் அவள் தலைக்குப் பின்னால் கைகளைப் போட்டுப் பின்னிருக்கையில் சாய்ந்தாள். வீட்டுக்குள்ளேயே பித்து பிடித்துக் கிடந்தாள். வீட்டில் , நாலைந்து பேர், சம்சுதீனை அப்பாவின் ஆட்கள் துரத்தியதாக காதும் வாயுமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளுக்கு மனம் கேட்கவில்லை. என்ன ஆனாரோ? எப்படி ஆனாரோ? அவனைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. “அவனை விட்டுவிடுங்கள். நீங்கள் சொன்னபடியெல்லாம் கேட்கிறேன்” என்று தந்தையிடம் சொல்லக் கூடப் போனாள். முயன்று பார்த்தும் முடியவில்லை. அவள் கோவிலுக்குப் போனால் ‘சார்ஜ்’ ஆகிவிடுவாள் என்பதைப் புரிந்த பழனிவேலுதான் அவளை இந்தக் காரில் அனுப்பிவைத்தார். கூடவே இரண்டு அடியாட்களையும் காவலுக்கோ அல்லது கண்காணிக்கவோ அனுப்பியிருந்தார். கார் இப்போது டவுனுக்கு வெளியே உள்ள தேரிமேட்டைப் பார்த்துப் பாய்ந்தது. கீழே மசூதியும், மேலே முருகன் கோவிலும் உள்ள பாறைமேடு.

கல்லூரியில் மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த ரகளையை அவள் நினைத்துப் பார்த்தாள். இன்னும் பத்துப் பதினைந்து பேர் முன்னிலையில் “ஷட் அப்” என்று அடிக்காத குறையாகக் கத்திய சம்சுதீனின் ‘இஸ்லாமிய ஆணாதிக்கத்தை’அவளால் மறக்க முடியவில்லை. ஒருவேளை அன்று மாலை கல்லூரி முடிந்ததும் அவள் கல்லூரி கேட்டுக்கு வெளியே, ‘அந்த இடத்தில்’ அதாவது பஸ் நிலையத்திற்கும், கல்லூரி வாசலுக்கும் இடையே வழக்கம்போல் நின்ற போது, அந்த சம்சுதீனும் சாலையின் வேலியான வெள்ளை மணல் பாதையில்- வழக்கமான இடத்தில்- ஸ்கூட்டரை நிறுத்தியி ருந்தால், கூடவே ‘ஏறிக்கோ’ என்று என்றைக்கும் சொல்லத் தேவையில்லாததை அன்று சொல்லி யிருந்தால், அவள் ஏறியிருக்கலாம். அல்லது ஸ்கூட்டரின் இடது பக்கம் மட்கார்டோடு ஒட்டிக்கிடந்த நிக்கல் கால் பிடியை அவன் நிமிர்த்தியிருந்தால் கூடப் போதும். குறைந்தபட்சம் அவளைப் பார்த்தும் தலையை ஒரு வெட்டு வெட்டாமல் லேசாகச் சிரித்திருந்தால் கூடப் போதும். ஏனோ, ஒருவித மதவாத எதிர்ப்புரட்சி இருவரிடமும் ஏற்பட்டது. அவன் ‘அல்லா, அல்லா, அவளை ஏற்றுவதும் ஏற்றாததும் உன் இஷ்டம் இன்ஷாஅல்லா’ என்று பிரார்த்தித்தான். இவளும் அப்படியே அபிராமியைப் பிராத்தித்தாள். இப்படி இவர்களின் காதல், அல்லா-அபிராமி யுத்தமாக மாறியபோது, சொல்லி வைத்தாற்போல் பழனிவேலுவே இதே படகுக்காரில் அங்கே வந்தார். காரை நிறுத்தி விட்டு பின்னிருக்கைக் கதவைத் திறந்து மகளைக் கனிவோடு கூப்பிட்டார். அவளுக்கு அழுகை வந்தது. ‘பாருங்கப்பா இவரை! ஏறெடுத்துக் கூடப் பார்க்க மாட்டேங்கார்’ என்று கூடத் தந்தையின் தோளில் புரண்டு முறையிடவேண்டும் என்பது போலவும் இருந்தது. ஆனால் அந்தத் தந்தையின் கண்களில் தோன்றிய வைராக்கியம், இவளையும் தொற்றியது. சம்சுதீனை ‘நீயும் உன் ஸ்கூட்டரும்’ என்பது மாதிரியே பார்த்தாள். தந்தை வெளியில் நிற்கும் போதே அவள் காரில் ஏறிக் கொண்டாள். வழிநெடுக இஸ்லாமியப் பெண்கள் எப்படியெல்லாம் தலாக்கிற்கு உட்பட்டும் , எதிர்த்துப் பேச முடியாமலும் பெண் எந்திரங்களாகச் செயல்படுவதாய், உண்மையையும் பொய்யையும் கலப்படம் செய்து தந்தை சாடைமாடையாகத் தெரிவித்த கருத்துக்களைச் சலனமில்லாமல் கேட்டாள். உடனே அவளுக்கு, உச்ச நீதிமன்றத்தில் சஹானுபானு என்ற இஸ்லாமிய இளம் பெண், கணவனுக்கு எதிராய் வழக்கு போட்டதும், அரசியல் சாசனமே அந்தப் பெண்ணுக்கு எதிராய்த் திருத்தப்பட்டதும் நினைவுக்கு வர தந்தையை ஆமோதிப்பதாய்ப் பார்த்தாள்.

இப்போது, காருக்குள் இருந்த அபிராமியால் மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை. சம்சுதீனைத் திருமணம் செய்வது என்பது - ஒரு முடியாத முடியக் கூடாத விஷயம் என்பதைப் புரிந்து கொண்டாள். ஆனாலும், அவனை மனதில் இருந்து உதற உதற அந்த உருவமும், அவனும் அவளும் சம்பந்தப்பட்ட கடந்த கால சம்பவங்களின் நினைவுகளும் மனதில் தடயத்திற்கு மேல் தடயம் போட்டுக் கொண்டேயிருந்தன. அவள் பின்னோக்கி நினைத்துப் பார்த்தாள். அப்போது கல்லூரிக்கு அவள் புதிது. தாவர இயல் உதவிப் பேராசிரியர் வேலை. எம்.ஃபில், படிக்காமலே தந்தையின் சிபாரிசில் கிடைத்த பதவி. வகுப்புகளுக்குள் இவள் பயந்த தாலோ என்னவோ மாணவ, மாணவியரின் பயமுறுத் தல்களும் அதிகமாயின. ஒருதடவை பி.எஸ்ஸி, பாட்டனி இறுதியாண்டு வகுப்புக்குப் பேராசிரியர் வராததால், அந்தப் பாடத்தை நடத்த வேண்டிய கட்டாயம் இவளுக்கு. ஆண்களும், பெண்களுமான அந்தக் கலப்புக் கூட்டத்தில் முன்கூட்டியே தயாரித்த குறிப்புக்களை துணையாகக் கொண்டு அவள் ‘மகரந்தச் சேர்க்கை’ பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தாள். பூவில் உட்காரும் வண்டு எப்படி அங்கும் இங்குமாய் பயந்து பயந்து பார்க்குமோ அப்படி, உடனே, ஒரு பயல் எழுந்தான். “மேடம், அதோ அவனுக்கு ‘சுயமகரந்த சேர்க்கை’ பற்றிச் சொல்லிக் கொடுக்கணுமாம்” என்றான். அவள் புரியாமல் விழித்த போது, அதைப் புரிந்து கொண்டு வகுப்பே ஒரே வாயாய்ச் சிரித்து. தாழ்வாரத்தில் போய்க் கொண்டிருந்த ஆசிரியர்கள் உள்ளே எட்டிப் பார்த்து விட்டு, தங்கள் பங்குக்கும் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு ‘கண்டுக்காமல்’ போய் விட்டார்கள். இவளோ அத்தனைக் கண்களும் உடம்பை சல்லடையாக்க, அத்தனை வாய்களும் குபிர்ச் சிரிப்பாய்ச் சிரித்து கும்மாளமாய் கைதட்டி இடையிடையே சில அருவருப்பான அபிநயங்களைக் காட்டிய போது, நிலைகுலைந்து சுவரோடு பொருத்தப்பட்ட கரும்பலகையில் சாய்ந்தாள். முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டாள். அப்போது ஒரு குரல் கேட்டு விரல்களை விலக்கினாள். சம்சுதீனின் குரல். இதுவரை அவளிடம் “குட்மார்னிங்”, “வணக்கம்” என்பதற்குப் பதிலாக வேறு எதையுமே பேசாத அந்த இளைஞனின் குரல். மாணவர்களை தன்னந்தனியாய் எதிர்த்துக் கேட்டான்.

“நீங்க நடந்து கொண்டதை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. உங்க அக்காவை இந்த இடத்திலே நிறுத்திப் பாருங்க. ஆர் யூ நாட் அசேம்ட் ஆப் யுவர்செல்ப்? யு கேர்ள்ஸ்! யூ டு கேர்ள்ஸ்...!”

அந்த வகுப்பு அடங்கியது. அது ஆச்சரியமானாலும் உண்மைதான். ஒருவேளை சம்சுதீன் தமிழில் பேசியிருந்தால் எதிர்த்திருந்திருக்கலாம். பேசியது இங்லிஷ்... அதுவும் கான்வென்ட் உச்சரிப்பில். ஆனாலும் ஒரு பயல் ‘இனிமேல இவ்ங்களுக்கு காதல் வரவேண்டியதுதான் பாக்கி’ என்று முணுமுணுத்தது சம்சுதீனுக்கும் கேட்டது- அபிராமிக்கும் கேட்டது- இனிமையாகவே கேட்டது. ஆசிரியர் அறைக்குள் வந்ததும் விம்மியழுத இவளை, சம்சுதீன் தான் தேற்றினான். மாணவர்களின் மதிப்பைப் பெற இரண்டு வழிகளில் ஒன்றைக் கையாள வேண்டும் என்றான். முதலாவதாக பாடத்தில் அவர்களுக்கு தெரியாத அம்சங்களைச் சொல்ல வேணடும். நாம் அவர்களைவிடப் பல மடங்கு படித்தவர்கள் என்ற எண்ணத்தை உணர்ந்த வேண்டும். அவர்களிடம் ‘பிஸினஸ்லைக்காகப்’ பழக வேண்டும். அப்படி திறமையை வளர்த்துக்கொள்ள முடியாது போனால், அவர்களோடு சேர்ந்து ஜோக் அடிக்க வேணடும். பாம்பு தின்கிற ஊரில் நடுத்துண்டு எனக்கு என்கிற மாதிரி. இரண்டாவது வழியைப் பிடிக்காத அபிராமி, அன்றிலிருந்து தாவர இயலில் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய புதிய அதிசயச் செய்திகளைத் தேடிப்பிடித்துப் படித்தாள். வகுப்புகளுக்கும் அதைத் தெரியப்படுத்தினாள். இப்போது மாணவர் பார்வையில் அவள் ஒரு அசட்டு அபிராமியல்ல. அசத்தும் அபிராமி. இதற்கெல்லாம் காரணம் யார்... மாணவர்களிடையே கெளரவத்தைத் தேடிக் கொடுத்தது யார்?

அபிராமிக்கு இப்படிப்பட்ட சம்சுதீன், கண்ணபிரான் போல் அங்கே தோன்றவேண்டும் என்று விருப்பம். அப்படித் தோன்றியிருப்பானோ என்று வெளியே எட்டிப் பார்க்க ஒரு ஆசை.

அபிராமி கார் ஜன்னல் கண்ணாடியை இறக்கப் போனாள். டிரைவர் பின்பக்கம் திரும்பாமலே ஆணையிட்டார். “ஏசி போயிரும்மா திறக்காதிங்க!”

“எனக்கு இயற்கைக் காத்துத் தேவைப்படுது. இந்த செயற்கைக் காற்றை என்னாலதாங்கமுடியல.”

அபிராமி, டிரைவரைப் பொருட்படுத்தாமல் இரண்டு கைகளையும் இரண்டு பக்கமும் நீட்டிக் கண்ணாடிகளுக்குக் கீழே உள்ள நிக்கல் பிடிகளைச் சுழற்றினாள். இரண்டு பக்கமும் கணகளைச் சுழலவிட்டாள். அந்தப் பக்கம் பார்த்தால் இந்தப் பக்கம் நிற்பானோ என்ற சந்தேகம். இந்தப் பக்கம் பார்த்தால் அந்தப் பக்கம் நிற்பானோ என்ற சந்தேகம். இந்தப் பக்கம் பார்த்தால் அந்தப் பக்கம் நின்றவனைக் கடந்திருப்போமோ என்ற அச்சம். கண், காது, மூக்குகளை தனித்துவமாகக் காட்டினாலும் தனித்துவத்தை இழக்காத செவ்வக முகம். தலை இலேசாய் செம்பட்டையாய் இருந்தாலும், அந்தச் சிவப்பு முகத்திற்கு அது ஒரு தங்க முடியாகத் தோன்றுவது போன்ற நேர்த்தி. குழைவான பார்வை- நிறைவான உடம்பு. அந்த உருவத்தை -அந்த முகத்தை “நானிருக்கேன் பயம் ஏன்?” என்பது மாதிரியான அந்தப் பார்வையை அவளால் உதற முடியவில்லை. வழியில் அவன் முகச்சாயல் கொண்டவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவள் காருக்கு வெளியே கழுத்தைத் தூக்கிப் போட்டாள். பிறகு அது அவன் அல்ல என்று தெரிந்ததும், நீட்டிய கழுத்தை வளைத்துப் பிடித்து உள்ளொடுங்கிப் போனாள். அந்தக் கார், அந்த நகரத்தை ஒட்டியும், ஒட்டாமலும் இருந்த மணல் மேட்டின் மறு பெயரான தேரிமேட்டுப் பக்கம் போனது. அந்த மண் கடலில் தட்டுத் தடுமாறி ஓடி ஓர மலைப் பகுதிக்கு போனது. மலை என்று சொல்வது கூடத் தவறு. குன்று என்றும் கூற முடியாது. வெறும் பாறைக் குவியல்கள். அவற்றிற்குச் சிறிது தள்ளி ஏராளமான குடிசைகள். இடையிடையே காரைக் கட்டிடங்கள். அவையும் முறைப்படியாக இல்லை. அந்தப் பாறை வழுக்கலானது; செங்குத்தானது; ஆனாலும் இடையிடையே கால் பாதங்கள் படும்படியான அளவுக்குச் செதுக்கல்கள்; அந்தப்பாறைக்கு மேலே ஒரு கல் கட்டிடம். அதற்கு வெளியே நான்கைந்து கற்சிலைகள்; ஒரு பெரிய வேல்; அந்தப் பாறைக்குக் கீழே, ஒரு முழத் துண்டு கூட இல்லாத பிள்ளையார்; ஏகாங்கி, கூரையோ கொட்டகையா கிடையாது; மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து போனவர்; தும்பிக்கையில் பாசிப்பச்சை தலையில் பொடிப் பொடியான ஓட்டைகள். ஆனாலும் இவருக்கு தோப்புக் கர்ணம் போட்டுவிட்டுத்தான் அவரது தம்பியைப் பார்க்க வேண்டும்.

அந்தக் காரில் இருந்து இறங்கிய அபிராமி அதிர்ந்து போனாள். பிள்ளையாரைச் சுற்றி முப்பது நாற்பது பேரைக் கொண்ட கூட்டம்; பேண்ட் ஸ்லாக் காரர்கள்; லுங்கி கட்டிகள்; அந்தக் கலவைக் கூட்டம் பிள்ளையார் சிலையின் அடிவாரத்தை ஒரு இரும்புக் கம்பியால் குத்திக்குத்தி உள்ளே துளைத்துக் கொண்டிருந்தது -சம்சுதீன் - அந்தக் கல்லூரி உதவிப் பேராசிரியன். அடிவாரத்துக்குள் நுழைந்த அந்தக் கம்பியின் மறுமுனையைப் பிடித்து நெம்புகோலாக்கி கீழே கீழே தள்ளுகிறான். அவனுக்கு இன்னும் நான்கைந்து கைகள் ஒத்துழைப்புக் கொடுக்கின்றன. கம்பி கீழே போகப் போக பிள்ளையார் குடைசாய்ந்து அவர்களிடமே அடைக்கலம் தேடுவது போல் குப்புற விழுகிறார். உடனே இன்னொருத்தன், பிள்ளையாரின் தும்பிக்கையில் ஆத்திரம் தாங்காமல் சுத்தியால் அடிக்கிறான். ஆங்காங்கே குடிசைகள் பக்கம், அவற்றைப் போலவே, அன்றாடக் கூலிகள் ஒடுங்கியும் ஒதுங்கியும் நிற்கிறார்கள்.

அபிராமியால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. டிரைவரும் அடியாள் ஆசாமிகளும் தட்டுத் தடுமாறியபோது, அவள் அந்தப் பக்கமாக ஓடுகிறாள். சம்சுதீனைப் பார்த்து உரிமையோடு கேட்கிறான்.

“சம்சுதீன் நீங்கள்லாம் படிச்சவங்களா? கடைசியிலே... நீங்களும் கற்கால மனிதர்தானா? அயோத்தி மசூதிக்கு இந்தப் பிள்ளையார் என்ன பண்ணுவார்?”

சம்சுதீன், அவளைப் பார்த்து லேசாய்த் திடுக்கிட்டான்.

“எப்படி இருக்கே?” என்றுகூடக் கேட்கப் போனான். அவளது அப்பாவின் அடியாட்கள் துரத்த அவர்கள் கல்லெறியில் ஏற்பட்ட சதைப் பிய்ப்புக்களை ஆதாரமாகக் காட்ட நினைத்தான். உயிருக்குப் பயந்து அடைக்கலமாக இங்கே இந்தக் குடிசைப் பக்கம் வந்ததையும், தன்னைப்போல் அடைக்கலமான இதர முஸ்லீம் இளைஞர்களோடு, மூன்று நாட்களாக சரியான அன்ன ஆகாரமில்லாமல் அல்லாடுவதையும் தெரிவிக்கப் போனான். இதற்குள் இன்னொருத்தன் முந்திக் கொண்டான். அவனுக்கு உடை அலங்காரமாய் இருந்தாலும் முகம் முரட்டுத்தனமாய் இருந்தது.

“பேசாமப் போம்மா! சம்சுதீனுக்கு வேண்டிவள் என்கிறதாலே ஒன்னை விட்டு வைக்கிறோம். இதே கூட்டம் இந்துக்களோட கூட்டமாயிருந்து, நீங்க ஒரு முஸ்லீம் பெண்ணாயிருந்திருந்தால் இந்நேரம் என்னவெல்லாமோ நடந்திருக்கும் ஒன்னைக் கும்பல் கும்பலாக கற்பழிச்சு அந்தப் பாறைப் பக்கம் வீசிப் போட்டிருப்பாங்க!”

அபிராமி பயந்து போனாள். பின்பக்கமாய்த் திரும்பி இன்னும் கார் பக்கமாய் நின்ற தனது ஆட்களைப் பார்த்தாள். அவர்கள் அசைவதாய்த் தெரியவில்லை. இதற்குள், அவளுக்கு பதிலளித்தவனின் பேச்சில் ரசனை கண்டது போல் படித்த தோற்றமளித்த சில படியாத தலைகள் அவளை வெறித்துப் பார்த்தன. அதிலிருந்த கற்பழிப்புத்தனத்தை புரிந்து கொண்டது போல் கரடு முரடான முகங்களில் அழுத்தந்திருந்தமான மீசைகளை வைத்திருந்த குடிசை வாசிகள் அவர்களைத் தடுத்தார்கள். குடிசைப் பக்கம் கோஷாக்களோடு நின்ற பெண்கள் “பெண்பாவம் பொல்லாது. வேண்டாம். வேண்டாம்” என்று சொன்னபடியே ஓடிவந்தார்கள். ஆச்சரியந்தான். ஒரு பெண்ணுக்கு ஏற்படப் போவது அவர்களுக்கு எப்படியோ தெரிந்து விடுகிறது.

அபிராமி, சிறிது விலகி அந்தப்பாறை படிக்கட்டுக்களாய் தோன்றிய கல்வரிசைகளில் மேல்நோக்காய் நடந்தாள். முதலில் மேற்குப்பக்கம் சரிவான பகுதியில் தெளிவாகத் தெரிகிறதே மசூதி. அங்கே போகணும்.

அந்த மசூதிதான், ஆஸ்த்துமாக்காரியாக இருந்தவளை ஆரோக்கியமானவளாக மாற்றிய மசூதி. நெற்றிப்பொட்டில் விழுந்த இஸ்லாமிய துவாதான் அவள் நுரையீரலைச் செப்பனிட்டது. அந்த மசூதியைத் தரிசித்துவிட்டு, உச்சிப்பாறைக்கு போய் முருகனையும் தரிசிக்க வேண்டும். அவளைப் பெறாமல் பெற்ற அன்னை அபிராமியின் இன்னொரு பிள்ளைதானே அவன்? அண்ணன் வீட்டை எட்டிப் பார்க்காமல் போவதா, வந்ததே அதுக்குத்தானே.

நான்கு படிக்கற்களில் ஏறிய அபிராமியின் முன்னால் ஒரு கூட்டம் பக்கவாட்டில் ஏறிக் குறுக்கே நின்றது. சம்சுதீன்தான் இப்போது அந்தக் கூட்டத்துக்குத் தலைவன். அமைதியாகச் சொன்னான்:

“தப்பா நினைக்காதே அபிராமி... ஸாரி... நினைக்காதீங்க அபிராமி. இது உங்களுக்கு எதிரான தனிப்பட்ட செயல் இல்லை. அயோத்தியில் இடையில் வந்ததாகக் கூறப்படும் மசூதி இருக்கக்கூடாதுன்னா, அதோ பரம்பரையாய் இருக்கிற எங்க மசூதிக்கு மேல பத்து வருஷத்துக்கு முன்னாலே வந்த முருகன் கோவில் இருக்க முடியாது. இப்போ இதை இடிக்கப் போறோம். வேணுமுன்னா என்னைத் துரத்துன உங்க கூட்டத்துக் கிட்ட போய்ச் சொல்லு! அந்தப் பேடிகளை, தைரியமிருந்தால் இங்கு வரச் சொல்லு!”

“சம்சுதீன், நான் சொல்றதைக் கேளுங்க! நாங்க உங்களை ஏத்துக்கிறோம். நீங்கதான் எங்களை ஏத்துக்கிறதில்லை. இதுதான் பிரச்சினை. தயவு செய்து வழிவிடுங்க. என்னாலே கோவிலுக்கு போகாமல் திரும்ப முடியாது.”

“நீங்க உங்களத்தான் முக்கியமாய் நினைக்கிறீங்க. எங்களோட உணர்வுகளோ, நான் உயிருக்குப் பயந்து துடிச்ச துடிப்போ உங்களுக்குத் தெரியல; உங்களுக்குத் தெரியவும் தெரியாது; ஏன்னா உங்க மதமே அப்படிப் பட்டது. நான், உங்கப்பன்- அந்த முரட்டுப்பயல், ஏவிவிட்ட வேட்டை நாய்கள்கிட்டே இருந்து தப்பிக்கும்போது அல்லாவை வேண்டிக்கிட்டேன். அதோ மேலே இருக்கிற முருகன் கோவிலை இடிச்சிட்டு, அதோ இருக்கிற மசூதியிலே தொழுகை செய்யுறதா அல்லாகிட்டே வேண்டிக்கிட்டேன். உங்களுக்குப் பல கடவுள்கள். ஒண்ணுக்கிட்டே வேண்டிக் கிட்டு அந்த வேண்டுதலை நிறைவேத்தாமல் அதுக்குக் கோபம் வந்தால் , அந்தக் கடவுளை அலட்சியப்படுத்திட்டு இன்னொரு கடவுள்கிட்டேபோகலாம். ராமர் இல்லாட்டால், ஈஸ்வரன்... ஆனால் நாங்க அப்படியில்லை. எங்களுக்கு ஒரே கடவுள் அல்லா. அவரை ஏமாற்றி அவரோட கோபத்தை... எங்களால் தாங்க முடியாது. தயவு செய்து போறீங்களா?”

சுற்றும் முற்றும் நின்றவர்கள் சிரித்தார்கள். அபிராமி கொதித்துப் போனாள். இந்து மதத்தை அவர்கள் ஏளனம் செய்து சிரித்தது அவளுக்கு அழுகையானது. அதையே ஆவேசமாக்கி, அவர்களை முறைப்பாய் முறைத்தபோது, சம்சுதீன் சவாலிட்டான். “அந்த முருகன் கோவிலை இடிக்கப் போறோம். வேணுமுன்னா, அந்தப் பேடிப்பயல் பழனிவேலையும், அவன் பொட்டைக் கூட்டத்தையும் இங்கே வரச்சொல்.”

அபிராமி சூளுரைத்தாள்:

“முருகன் கோவிலை நீங்க வேணுமின்னா உடையுங்க. இதைப் பத்து மடங்கு பெரிசாக் கட்டி அந்தப் புதுக்கோவிலுக்குள் நான் வரலேன்னா... என் பேரு அபிராமியில்ல... அது மட்டுமில்லே. அந்த மசூதியும், அயோத்தி மசூதி மாதிரி ஆயிடலாம்.”

“நீ உயிரோடு இருந்தாத்தானே இந்தக் கோவிலுக்குள்ளே வரமுடியும்?”

சம்சுதீனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஒருவன் காட்டுக்கத்தலாய்க் கத்தி அபிராமியின் கழுத்தை நெரிக்கப் போவதைப் போல் அதற்கு இருபக்கம் கரங்களைக் கொண்டு போனான். சம்சுதீன், அந்தக் கைகளைக் அல்லாடி அல்லாடிப் பின்னுக்கு இழுக்க போராடிக் கொண்டிருந்தான். இதற்குள் சிறிது தொலைவில் நின்ற கோஷாப் பெண்கள் ஓடோடி வந்தார்கள். அபிராமியை முன்னாலும் பின்னாலும் பிடித்துக் கொண்டு அவளைத் தூக்காத குறையாகத் தூக்கி, அந்தக் கார்ப் பக்கம் கொண்டு போனார்கள். அங்கே நின்று கொண்டிருந்தவர்களைப் பார்தது “நீங்கள்ளாம் ஆம்பிள்ளைகளா? ஒரு பொண்ணைத் தனியாய் அனுப்பிட்டு குத்துக்கல்லு மாதிரி நிக்கீங்களே? மனுசங்களாம் மனுசங்க!” என்றாள் ஒருத்தி. உடனே எல்லாப் பெண்களின் கண்களும் அவர்களைச் சுட்டெரித்துவிட்டு அபிராமியின் முதுகைத் தட்டிக் கொடுப்பதுபோல் ஒருத்தி தடவி விட்டதை அங்கீகரித்த படியே, திரும்பிப் போனபோது, அபிராமி காருக்குள் ஏறி அப்படியே குப்புறப் படுத்தாள். இரண்டு கைகளிலும் கண்ணிர் ஓடி முட்டிகள் வழியாக இறங்கியது. கார் நகருவது போலவும் தோன்றியது. அதன் மீது சில கற்கள் விழுவது போலவும், சரஞ்சரமாய்ச் சத்தம் கேட்டது. டிரைவர் பின்பக்கமாகத் திரும்பி ஆறுதல் சொன்னார்.

“எல்லாம் நன்மைக்கேன்னு நினைங்க அபிராமியம்மா! நம்ம முருகன் சரியான சித்தன். உங்களை இங்க வரவழைக்கிறது மாதிரி வரவழைச்சு, இந்த சம்சுதீன் எப்படிப்பட்டவன்னு உங்களுக்கு காட்டிக் கொடுத்துட்டான் பாருங்க!”

அபிராமி நிமிர்ந்து உட்கார்ந்தாள். கண்ணிமையின் அடிவாரத்தைக் கைவிரல்களே கத்தியாக கீறிவிட்டாள். அந்த கல் குவியலான பாறை உச்சியைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

“முருகா! முருகா! உன் கருணையே கருணை! உன் விளையாட்டே விளையாட்டு கண்கண்ட தெய்வமே! அவனை, அந்த சம்சுதீனை கண்ணெடுத்தும் பார்க்க மாட்டேன்! இது சத்தியம் முருகா... சத்தியம்...”
--------------

அத்தியாயம் 11

மசூதி பாளையம், மூச்சு மூட்டித் திணறியது.

கடந்த மூன்று நாட்களில், அது அடியோடும் அடியற்றும் மாறிவிட்டது. ஆங்காங்கே தெருக்களுக்கு இடையே தென்படும் கண்ணைப் பறிக்கும் நூல் இழைப் பந்தல்களைக் காணோம். சாலை மறியல் செய்தாற்போல் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களைப் பார்க்க முடியவில்லை. கோலியாடும் சிறுவர்கள், கிளித்தட்டு போடும் சிறுமிகள் என்ன ஆனார்கள். எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரிய வில்லை. சாலைகளைச் சலனப்படுத்தும் வாகனங்கள் தோன்றவில்லை. ஒரு கடை கூட உயிர்ப்பிக்கப்படவில்லை. ஊரே வாயடைத்து, தெருக்கள் கதவடைத்துக் கிடந்தன.

அந்த ஊரின் ஏழு தெருக்களில், ஐந்து தெருக்களில் இருந்த இஸ்லாமியர்கள் அதன் பிரதானத் தெருக்களில் கூட்டம் கூட்டமாய்க் குவிந்தார்கள். வாசலோரமும் ஜன்னலோரமும் நின்ற பெண்களும் பெண் கூட்டமாய் நின்று அப்படித் தனித்திருக்கப் பயந்து, ஆண் கூட்டத்தோடு சங்கமமானார்கள். வளைக்குள் இருந்து வெளியேற முடியாமலும், அதே சமயம் வெளியே இருந்து போடப்படும் மூட்டம் தாங்க முடியாமலும் தவிக்கும் பெருச்சாளிகளின் நிலைமை. மேற்குப் பக்கமுள்ள கருவேல மரக்காட்டைத் தாண்டிப் போகலாம் என்றால், அந்தக் காட்டுக்குள்ளேயும், அதைத் தாண்டிய ஆற்று மேட்டிலும் பழனிவேலு ஆட்களது நடமாட்டம் இருப்பதாகச் செய்தி. கிழக்குப் பக்கம் உள்ள பொட்டல் காட்டைத் தாண்டினால் அதற்குள் வேலி போலான ஒரு கிராமம். அங்கேயும் பழனிவேலுவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்கள். இந்த நிலையில் மசூதி பாளையத்தின் மக்களுக்கு அதற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை. கடைகளில் இருந்த சோடாக்களைக் குடித்தாகிவிட்டது. தாகத்தைத் தடுக்க முடியவில்லை என்றாலும், ஒரளவு தவிர்க்க முடிந்தது. பசிதாங்காமல் வெங்காயத்தைத் தின்று பார்த்தாச்சு. முள்ளங்கியை முழுங்கிப் பாத்தாச்சு. அரிசி புளி மிளகாய் கூட இருக்கு. ஆனால் அவற்றை ஆகாரமாய் ரசவாதம் செய்ய ஸ்டவ்வுக்கு எண்ணெய் இல்லை. மசூதிபாளையம் வாரச் சந்தையில் வாங்கிக் கொள்ள நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள். சந்தை நடக்கவில்லை. டவுனில் இருந்து வரும் மண்ணெண்ணெய் வண்டி வரவில்லை என்பதோடு, இனிமேல் வருமா என்ற சந்தேகம். ஏழைகளின் வீடுகளில் அடுப்புக்கு விறகு இருந்தாலும் ஆக்குவதற்கு அரிசி இல்லை. மூன்று நாளைக்கு அதைச் சேமித்து வைக்க இயலாத அன்றாடம் காய்ச்சிகள். எல்லாம் இருந்தாலும் தண்ணீர் இல்லை. இப்போது ஒரு கிலோ தங்கத்தையும், ஒரு லிட்டர் தண்ணீரையும் காட்டி யாரிடமாவது “இரண்டில் ஒன்று மட்டும் எடு” என்றால், லிட்டர் பாத்திரத்தையே பறிப்பார்கள். அந்த அளவுக்குத் தாகம். தாகப்பட்டுத் தாகப்பட்டு எச்சில் கூட மிச்சமில்லை.

இந்த உடல் வாதைகளைவிட அவர்களின் மன வாதை சொல்லி மாளாது. ஒரு சதவீதம் கூட எதிர் பார்க்காத முற்றுகை. நூறில் ஒரு பங்கு கூட இதுவரை அனுபவித்திராத அத்தனை கொடுமைகள். மாடுகள் பம்மிக் கிடந்தன. ஆடுகள் அலறின. கோழிகளைக் கண்டு ஒதுங்கிப் போகும் பூனைகள் கூட அவற்றைக் கடித்து ரத்தத்தைக் குடிக்கலாமா என்பது போன்ற தாகப் பார்வை.

அமீர் கடையிருக்கும் அந்தப் பிரதானத் தெருவில் தெருவடைத்து நின்ற அத்தனை பேர் முகத்திலும் ஒரு பீதி. குரல் கொடுக்க முடியாத இயலாமை. பேசுகிற சொற்கள் ஏறமுடியாத காது இரைச்சல்கள். பம்பரமாய்ச் சுழன்ற தலைகள். ஒருவர் இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ள முடியாத தலைச் சுற்றுகள். வயிறுகள் கீழே இழுக்கின்றன. தலைகளோ பின்புறமாய் வளைகின்றன. உடம்பு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் உலர்ந்து உலர்ந்து ஈரச்சதைகள் கருவாடாய்க் காய்ந்து போனது போன்ற தோற்றங்கள். இந்தச் சமயத்தில் அந்த ஏழு தெருக்களுக்கும் பயந்துகிடந்த இரண்டு இந்துத் தெருக்களிருந்தும் பலர் பயந்து பயந்து தயங்கித் தயங்கி வந்தார்கள். அந்தத் தெருவுக்கு முன்பு ‘அண்ணாவியாக’ இருந்த துரைச்சாமியை, முத்துக்குமார் கைத் தாங்கலாகப் பிடித்து வந்தான். அவர்களுக்குப் பின்னால் வந்த கூட்டம் பயந்து பயந்துதான் வந்தது. ஆனால் ஏழு தெருக்காரர்களும் அவர்களை ஏறிட்டுப் பார்த்தார்களே தவிர, எந்தக் கோபதாப சமிக்ஞையையும் ஏற்படுத்தவில்லை. இதனால் சிறிது ஊக்கமடைந்த கூட்டம் மெல்ல நடந்து பிறகு ஓடிப் போய் அந்த முஸ்லிம் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து கொண்டது. துரைச்சாமி தட்டுத் தடுமாறி கண்னெல்லாம் நீராகப் பேச முடியாமல் பேசினார்.

“என் ஆயுள் பரியந்தத்துல இப்படிப்பட்ட அரக்கத் தனத்தைப் பார்க்கலயே! தயவு செய்து இந்துக்கள் எல்லோரும் இப்படி இருப்பாங்கன்னு மட்டும் நினைக்காதீங்க. அப்படி அவங்க இந்துக்களா இருந்தால், ரெண்டு தெரு இந்துக்கள் பாதிக்கப்படுவாங்களேன்னு நினைச்சிருப்பாங்க! உங்கள மாதிரிதான் நாங்களும் பட்டினி! உங்கள மாதிரிதான் தாகத்துல துடிக்கோம்! இப்படிச் சொல்றதுனாலே அங்க மறியல் செய்யற இந்துப் பயலுவ எங்களுக்கு ஏதாவது செய்திருக்கணுமின்னு நான் சொல்றதா நினைக்காதீங்கப்பா, அவங்க அப்பிடி எதையாவது அனுப்பியிருந்தாலும் அதை வீசி எறிஞ்சிருப்போம். எங்க ஊர்க்காரனை இந்தப் பாடுபடுத்தறவன் இந்துவாயிருந்தாலும் அவள் எனக்கு எதிரிதான். எந்த நாட்டிலேயும் இல்லாத அநியாயத்தை பண்ணுறாங்களே. கேக்குறதுக்கு நாதியில்லை. ஒரு போலீஸ் கூட எட்டிப் பார்க்கலயே அய்யோ!”

எழுபது வயது துரைச்சாமி அங்குமிங்குமாக தலையை ஆட்டினார். அவர் மகன் முத்துக்குமார் தந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவரது கண்களைத் துடைத்துவிட்ட அமீரிடம் புலம்பினான்:

“எங்கப்பா சக்கரை நோய்க்காரருன்னு உங்களுக்குத் தெரியுமே? வீட்டுல அவருக்குன்னு சப்பாத்தி செய்து வச்சிருக்கோம். சாப்பிடச் சொன்னால் எங்க ஊருக்காரன் ஒருத்தன் பட்டினி கிடந்தால் கூட நான் சாப்பிடமாட்டேன்னு அடம்பிடிக்கார். அவர வீட்டுக்குக் கூட்டிப் போய் ஒரு சப்பாத்தியையாவது சாப்பிடச் சொல்லுங்க காக்கா.”

அமீர், துரைச்சாமி முதலாளியின் முதுகைத் தொட்டார். அவரைத் தன்னோடு சேர்த்து நகர்த்தப் போனார். ஆனால், துரைச்சாமியோ அவர் காதில் கிசுகிசுத்தார். “என்னைப் பற்றி உனக்குத் தெரியுமில்லை. அமீரு நான் சாப்பிடுவனா? அப்படி சாப்பிட்டா என் வயிறு வாங்கிக்குமா? கடவுளே என் ஊர்க்காரரை பாவிக இந்தப் பாடு படுத்துறாங்களே! போன வருசம் வந்த நோயில நான் போயிருக்கப்படாதா?”

அமீரும் முத்துக்குமாரும் அவரை ஆளுக்கொரு பக்கமாய் கைபிடித்து, ஒரு திண்ணையில் உட்கார வைத்தார்கள். காதர்பாட்சா ஓடிவந்து தனது துண்டை எடுத்து அவருக்கு வீசிவிட்டான்.

கூட்டம் அலைமோதியது. கண்ணுக்குத் துல்லியமாய்த் தெரிந்த அந்த முற்றுகைக் கூட்டத்தை பிதியோடு பார்த்தது. அங்கே இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் வரலாம் என்பது மாதிரியான அபாயம். அதற்கு ஏற்றாற்போல் தொலைதூரக் கூட்டத்திலிருந்து ஒரு சிலர் முன்னோக்கி ஓட, அவர்களில் பலர் அவர்களைப் பின்னோக்கி இழுப்பதைப் பார்க்க முடிந்தது. இதனால் இங்கிருந்து சிலர் தத்தம் பிள்ளைகளைப் பார்த்து “வீட்டுக்குள்ள போய் கதவை மூடுங்க. ஜன்னலையும் சாத்துங்க” என்று குரலிட பல பெண்கள் அலறியடித்தார்கள். சிலர் வீடுகளைப் பார்த்து ஓடினாலும், பல பெண்கள் ஆண்களை அப்படி நிர்க்கதியாக நிற்கவிட்டு ஓடி ஒளிய விரும்பவில்லை. கூட்டத்தில் கரைந்து போன திவான் முகம்மது, அஜீஸ், நூருல்லா ஆகியோர் தத்தம் வீட்டு நகை நட்டுக்களை எங்கே புதைக்கலாம் என்பதுபோல் யோசித்தார்கள். நூருல்லாவுக்கு ஒரு கூடுதல் பயம்; அவரால் அடிபட்ட மீரான் முருகானந்தம் வகையறாக்கள், சந்தடி சாக்கில் தன்னை கைவைத்துவிடக் கூடாதே என்ற பயம். ஆகையால் தனக்கு வேண்டியவர்களின் பக்கத்திலேயே பாதுகாப்பாக நின்று கொண்டார்.

கூட்டத்தில் ஒவ்வொருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்களே தவிர எவருக்கும் பேச்சு ஒடவில்லை. ஒருவரையொருவர் ஆறுதல் தேடித்தான் பார்க்க முடிந்ததே தவிர, ஆற்றுப்படுத்துவது போல் பார்க்க முடியவில்லை, இடுப்புக்கு மேலே எந்த உடையும் இல்லாமல் ஆங்காங்கே கிடந்த முதியவர்களும், மூதாட்டிகளும் உயிர் வாதையில் உழன்று கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே வந்த சிறுவர்களிடம் விவரங்கேட்க விரும்பினாலும் பேச முடியவில்லை.

இதற்கிடையே ஆண்களும், பெண்களுமாய்ப் பலர் கூட்டத்திலிருந்து சிறிது விலகி, பழைய சாராயக்கடை இருந்த ஊர் முனைக்குப் போய் முற்றுகைக் கூட்டத்தையே பார்த்தார்கள். “ஐயோ அப்துல்லா” என்ற புலம்பல்கள். “என் மவனே என் மவனே” என்ற அலறல்கள். ஒரு மூதாட்டி பேரனை நினைத்து அந்த நினைவு கொடுத்த நெஞ்சத்தை அடிப்பது போல் நெஞ்சை அடித்தாள். அவள் அருகே நின்ற ஒரு இளம் பெண் அந்த முதியவளைத் தூக்கிவிட்டுக் கொண்டே, வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள். டவுனுக்குப் போய் விட்டு வீடு திரும்பாத கணவன்மாரை நினைத்துக் கதறும் சத்தங்கள். மகன்களை இழந்தது போல் துடிக்கும் தாய்மார்களின் அவலங்கள். இதற்குள், அமீரும் காதர்பாட்சாவும், முத்துக்குமாரோடு அங்கே போனார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிடமும் போய், ஆறுதலாகப் பேசினார்கள். பிறகு அந்தக் கூட்டத்தை ஒருமுகப்படுத்தி, அமீரின் கடைப்பக்கம் கூட்டிக் கொண்டு வந்தார்கள்.

திவான் முகம்மது, அமீரைப் பார்த்துவிட்டு தலைதெறிக்க ஓடிவந்தார். அவர் பின்னாலே இன்னொரு முதியவளும் ஓடிவந்தாள். திவான், அமீரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, கேவிக் கேவி அழுதார். அவரது கைகள் இரண்டையும் தன் தோள்பக்கம் போட்டுக் கொண்டு அழுதார். அமீர் அவர் முதுகைத் தட்டி, அணைத்துக் கொண்டபோது, திவான் அவரிடம் குழந்தைபோல் கேவிக் கேவி அழுதுகொண்டே சொன்னார்.

“என் பையன் சம்சுதீன் என்ன ஆனானோ? முணு நாளா கண்ணுக்கு அகப்படலேயே. ஒருநாள் கூட வீடு வராம இருந்ததில்லை. பாவிப்பயலுவ டெலிபோனையும் கட் பண்ணிட்டானுவ... நான் எதாவது தப்பு செய்திருந்தால் அதை மன்னிச்சு என் மகனைக் கண்டு பிடிச்சுக் கொடு. அமீரு இனி மேல் நீ என்ன சொன்னாலும் நான் கட்டுப்படுவேன்.”

அமீர் “அல்லா காப்பாத்துவான்” என்று சொல்லிவிட்டு அவர் பிடரியைத் தடவிக் கொடுத்தார். இப்போதுதான் அவரும் மனுசன் என்பது மாதிரி பார்த்த திருமதி திவான் முகம்மதுவை ஆறுதலோடு பார்த்தார். ஆனாலும் காதர்பாட்சாவுக்கு கடுங்கோபம். இந்த திவான், ஜமாத்து தலைவராம். ஊரே உயிரோட துடிக்குது. கர்ப்பிணிப் பெண்ணைப் பறிகொடுத்த தாய் பொறி கலங்கி நிக்காள். குழந்தைகள் கண்கள் சாகப் போகிறது மாதிரி சொருகுதுங்க. இவருக்கு இங்கே இருக்கவன்களைப் பற்றிக் கவலையில்ல. எங்கேயோ டவுன்ல. லாட்ஜ்ல பத்திரமாய் இருக்கக்கூடிய சம்சுதீனுக்கு மட்டும் வருத்தப்படுகிறார். இவரெல்லாம் ஒரு இஸ்லாமியன் சீ... சீச்சீ...

இப்போது அந்தக் கூட்டத்தில் அனைவரும் அமீரை ஒரு திடீர்த் தலைவராகவும், காதர்பாட்சாவை ஒரு போர்த் தளபதியாகவும், முத்துக்குமாரைக் கூட ஒரு அமைச்சராகவும் ஏற்றுக்கொண்டது போல் ஒரு சேரப் பார்த்தார்கள். அவர்கள் எந்தப் பக்கமெல்லாம் நகர்கிறார்களோ, அந்தப் பக்கமாக நகர்ந்தார்கள். இந்தச் சமயத்தில் பீடித் தொழிலாளர்களான மீரானும் முருகானந்தமும் தங்கள் தோழர்களோடு அந்தப் பக்கமாக மொய்த்தார்கள். முன்பெல்லாம் எவரையும் ஒரு பொருட்டாக நினைக்காத அஜீஸ், நூருல்லா வகையறாக்கள் இப்போது தங்களைப் பொருட்படுத்தாத கூட்டத்தில் சாதாரணப் பிரஜைகளாக நின்று கொண்டார்கள். நூருல்லா, அந்தத் தொழிலாளர்களைப் பார்த்து ஒருவரின் முதுகுப்பக்கம் ஒளிந்தபடியே, கையெடுத்துக் கும்பிடத் தயாராய் இருந்தார்.

பீடி முதலாளி நூருல்லாவின் உபயத்தில் இன்னும் வாயில் காயம் ஆறாத முருகானந்தம் ஆவேசமாய்ச் சொன்னான்:

“முற்றுகையிடுகிற கூட்டம் கீழ் வெண்மணியை எரிச்ச சக்தியோட வாரிசுங்க. பாபர் மசூதியை இடிச்ச மனித விரோதிகளின் வால்கள். இவங்க மனிதர்களே இல்ல. அதனால் அவங்களை இந்துக்களாகவோ, வேற மதமாகவோ பார்க்கப்படாது. அவங்க, காட்டுல சாதுவான பிராணிகளை மறிக்கிற ஓநாய்க் கூட்டம், அமீர்பாய், நாம் ஏதாவது செய்யணும். இங்க சாகிறதுக்கு அங்க சாகலாம்.”

அமீர், லேசாய் யோசிப்பது போல் கண்கள் பின்னிழுக்க, மோவாய் முன்னிழுக்க ஆகாயத்தைப் பார்த்தார். முருகானந்தம் சொல்வது நியாயமாகவே பட்டது. அவனுக்கு ஆதரவாய்ப் பேசப் போன மீரானை, அது தேவையில்லை என்பது போல் கையமர்த்திய போது, காதர்பாட்சா உஷாராகச் சொன்னான். “காக்கா, நாம ஜகாத்தா போகல. முறையிடத் தான் போறோம். இதை... நாம் ஞாபகம் வச்சுக்கணும். இல்லையாடா முத்துக்குமார்?”

“அடப் போடா... அவன் அவன் உயிருக்குப் போராடிக் கிட்டிருக்கான். இவன் வார்த்தையில வெளையாடிக்கிட்டு இருக்கான். மயிலே மயிலே இறகு போடுன்னா போடுமா? ரெண்டுல ஒண்ண பாத்துட வேண்டியதுதான். காக்கா! நீங்க வாரிகளா? இல்ல நாங்க போகட்டுமா?”

அமீர், முத்துக்குமாரைக் கையமர்த்தினார். அலைமோதிய கூட்டத்திற்குக் கேட்கும்படி உரக்கச்சொன்னார்:

“கையில் எதையும் எடுக்கப்படாது. கோபமாய்க் கத்தவும்படாது. ஆத்திரத்தை அடக்க முடியாதவங்க இங்கேயே நிக்கலாம். நாம் துக்க ஊர்வலமாய்த் தான் போறோம். எங்களை ஏன் இப்படி வாட்டி வதைக்கீங்கன்னு கேட்கத்தான் போறோம். அதுவும் அவங்ககிட்டே இல்லை, அவங்கள கும்பிட்டு வழிவிடச் சொல்லி, கலெக்டர் கிட்டே கேட்கப் போறோம். இந்த நாட்டிலே, அதிரடிப்படை, தனிக்காவல்படை, மாநில ஆயுதந்தாங்கிப் படை, மத்திய ஆயுதந்தாங்கிப் படை, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்லேயும் ஒவ்வொரு படை இப்படி எத்தனையோ விதவிதமான படையிருந்தும், இந்தப் பக்கம் ஒரு கான்ஸ்டபிளைக் கூட அனுப்பலயே! இதுக்குக் காரணத்தையாவது சொல்லுங்கன்னு கேட்கத்தான் போறோம். நம்ம நோக்கம் கண்டிக்கிறது தானே தவிர தண்டிக்குறது இல்ல.”

அமீர், திண்ணைச் சுவரில் சாய்ந்தபடி தட்டுத் தடுமாறிக் கையாட்டி, துரைச்சாமி முதலாளியிடம் லேசாக தலையைக் குனிந்தார். பிறகு “இன்ஸா அல்லா” என்று சொல்லிக் கொண்டு ‘வாருங்கள்’ என்பது மாதிரி கையாட்டிவிட்டு முதலில் நடந்தார். அவர், முன்னால் அழுதபடியே நின்ற சம்ரத் பேகத்தை, தோளைத் தட்டிக் கொடுத்தார். மகள் பாத்திமா கண்ணில் படுகிறாளா என்று பார்வையிட்டார். அவளைக் காணவில்லை. மனைவியின் கையை மென்மையாகப் பிடித்து ஒரு பக்கமாக ஒதுக்கிவிட்டு, அவர் தனியாக நடந்த போது, அவருக்கு இருபக்கமும் காதர்பாட்சாவும் முத்துக்குமாரும் சேர்ந்து கொண்டார்கள். அதற்குப் பின்னால் மீரான், முருகானந்தம் வகையறாக்கள். இவர்களுக்குப் பின்னால் பீடித் தொழிலாளர்கள். அவர்களுக்குப் பின்னால் சாதாரண மக்கள். ரயிலுக்குப் பின்பக்கம் போட்ட என்ஜின் போல கடைக்கோடியில், திவான் முகம்மது, நூருல்லா, அஜீஸ் வகையறாக்கள். அந்தக் கூட்டத்தோடு சேரப் போன இமாமை அமீர் கையைப் பிடித்துக் கூட்டிப் போய் துரைச்சாமி முதலாளியின் பக்கத்தில் உட்கார வைத்துவிட்டு, மீண்டும் ஓடிப் போய்க் கூட்டத்தின் முன்னால் நடந்தார். பின்னால் ஒரு பெண் பட்டாளமே தெரிந்தது. அவலமான அழுகைகள். “திரும்பி வாங்க” “திரும்பி வாங்க” என்பது மாதிரியான கையசைப்புகள். சத்தம் கேட்டு அமீர் திரும்பவில்லை யானாலும், முத்துக்குமார் திரும்பிப் பார்த்தான். ஒரு கல்லில் ஏறித் திண்ணைத் துணை ஒரு கையால் ஆதரவாய்ப் பற்றிக் கொண்டு, மறுகையால் ஆயிஷா கையாட்டினாள். முத்துக் குமாரைப் போக வேண்டாம் என்பதுபோல் இடதுபுறம் இருந்து வலதுபுறம் ஒரு ஆட்டம். வாருங்கள் வாருங்கள் என்பது போல மேலும் கீழும் தலையாட்டு.

முத்துக்குமார், அவளுக்குப் பதிலுக்குக் கையாட்டி, வெற்றி என்பது போல் கட்டை விரலைத் தூக்கிக் காட்டி பிறகு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

தலைகளுக்கு மேல் இரண்டு கைகளையும் தூக்கியபடி அமீர் இப்போது முத்துக்குமாரிடமிருந்தும், காதர்பாட்சாவிடமிருந்தும் விடுபட்டு முன்னால் நடந்தார். நடந்து கொண்டே இருந்தார். பின்னாலுள்ள கூட்டம் வந்தால் வரட்டும்; நின்றால் நிற்கட்டும் என்பதுபோல் நடந்தார். ஆனாலும் அந்தக் கூட்டத்தின் காலடிச் சத்தங்கள் அவருக்குப் பக்கத்திலும் பக்கபலமாயும் ஒலித்தன.

அந்தக் கூட்டம் கால் கிலோ மீட்டர் தூரம் வரை நடந்திருக்கும். திடீரென்று எதிரே குதிரைகள் தெரிந்தன. வெள்ளை வெள்ளையாய் வேன்கள் தெரிந்தன. காக்கி காக்கியாய் ஜீப்புகள் தோன்றின. அமீருக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. கடையில் சர்க்கார் இருக்கத்தான் செய்யுது. உதவிக்கு போலீசை அனுப்பித்தான் வைக்குது. முன்னாலேயே அனுப்பியிருக்கலாம். பரவாயில்லை. ஏதோ வந்தாங்களே அதுவே போதும்.

அமீர் பின்பக்கமாகத் திரும்பாமல் கையைக் கீழே கொண்டு வந்து, கூட்டத்திற்குப் புறங்கை காட்டி நிற்கும்படி சைகை காட்டினார். அவரும் நின்றார். முத்துக்குமாரும் காதர்பாட்சாவும், இரட்டைப் பிறவிகள் போல் நடந்த மீரானோடும், முருகானந்தத்தோடும் முன் வரிசையில் வந்து நின்றார்கள். எதிரே வருகிறவர்களை எதிர் கொண்டு அழைப்பதுபோல் நின்றபோது, அமீர் இருகரம் கூப்பி நின்றார்.

அவர்களுக்கு இருபதடி இடைவெளியில் ஒயர்கள் பொருத்திய இரண்டு ஜிப்புகளும், அதற்குப் பின்னால் மூன்று போலீஸ் வேன்களும் அவர்களை மோதாக் குறையாக ஓடிவந்து நின்றன. பக்கவாட்டில் குதிரைப் போலீசார். வேனில் இருந்தவர்கள், ஒரு கையில் லத்திக்கம்போடும், இன்னொருகையில் கல்லெறியைத் தாங்கும் மூங்கில் கேடயத்தோடும் ஒரு வேனில் இருந்து கீழே குதித்தார்கள். இன்னொரு வேனில் இருந்து துப்பாக்கி தரித்த போலீசார்; குதிரைகள் முன்கால்களைத் தூக்கி அங்கும் இங்குமாய் லாகவமாய்த் துள்ளின. ஒயர் பொருத்திய போலீஸ் ஜீப்பிலிருந்து ஒரு ஆஜானுபாகு மூன்று நட்சத்திரக்குறி மனிதர் கீழே குதித்தார். எடுத்தவுடனேயே அதட்டினார்.

“என்னடா நினைச்சிக்கிட்டீங்க ஒங்க மனசிலே மரியாதையாய்க் கலைஞ்சு போங்க! இல்லாட்டா நடக்கிறதே வேறே.”

அமீர் ‘டா’ போட்டு பேசிய அந்த மனிதரிடம் அடக்கமாகவே பேசினார்.

“நீங்க எங்களைக் காப்பாத்த வந்திருக்கிறதா நினைச்சு சந்தோஷமாய் நிற்கிறோம். நீங்க என்னடான்னா...”

அந்தப் போலீஸ் மனிதர், அமீரை மேற்கொண்டு பேசவிடவில்லை. “டா போட்டு பேசுகிற இந்த ரிங்லிடர் பயகிட்ட என்ன பேச்சு? இவனுக்குக் கண்ணீர்ப் புகைதான் பதில் சொல்லணும் லத்திக் கம்பு தான் குசலம் விசாரிக்கும்.”

காதர் பாட்சா, கூட்டத்தைப் பார்த்துத் திரும்பிக் கத்தினான்.

“இவங்க காப்பாத்த வரல, நம்மள கொன்னுட்டு அதே வேகத்துல நம் பெண்டு, பிள்ளைங்ககிட்ட துஷ்டி கேட்க , வந்திருக்காங்க. சுட்டா சுடட்டும், உடம்பு துடிச்சா துடிக்கட்டும். இவ்வளவு தூரம் வதைபட்டும், பசியால் துடிச்சும் கிடக்கிற நம்மளை அதட்டுற இவங்களை விடப்படாது. இன்ஸா அல்லா. என்ன வேணுமின்னாலும் செய்யட்டும்.”

“நகருங்கடா...”

“நாங்க நகரமாட்டோம். ஒரு அங்குலம் கூட நகரமாட்டோம்.”

முத்துக்குமார் இப்போது தனது தோழன் காதர்பாட்சாவிற்கு தோள் கொடுத்துப் பேசினான்.

“வேணுமின்னா சுட்டுக் கொல்லுங்க. வந்துட்டாங்க பெரிசா ஏன்யா பராக்கு பாக்கீங்க, சுடுங்கய்யா! உங்க துப்பாக்கி எத்தனை பேரை சுடுதுன்னு பார்ப்போம்.”

அந்த மனிதப் போலீஸ் அவர்கள் ஆற்றாமையில் பேசியதை அறியாமையில் பேசியதாகக் கூட நினைக்கவில்லை. ஏதோ வெளிநாட்டுப் படை ஒன்று ஏகே-47 வகைத் துப்பாக்கிகளோடு தமிழகத்தில் தக்காரும் மிக்காரும் இல்லாத போலீஸ் படைக்கு சவால் விடுவதாகவே நினைத்தார். ஒரு பக்கமாய்ப் புலிப் பாய்ச்சல் ஆயத்தத்தோடு நின்ற போலீசாரைப் பார்த்து “டியர் கேஸ், டியர் கேஸ்” என்றார்.

உடனே அவரது ‘டியர்’ போலீஸ் தொண்டர்களில் ஒரு பகுதியினர் ஒரு போலீஸ் ஜீப்பின் பின்பக்கமாக உள்ள இரும்புப் பெட்டிகளில் இருந்து ஈயம் மாதிரியான சதுரக்கட்டையை எடுத்தார்கள். மூன்று சின்னச் சின்ன கட்டங்களைக் கொண்ட அவற்றை எடுத்து கூட்டத்தின் முன்னாலும் கூட்டத்திற்குள்ளும் எறிந்தார்கள். அவற்றில் ஒவ்வொன்றும் தரையில் நேராக விழுந்தது. இரண்டு பக்கங்களில் தெறித்தது. பின்னர் புகை புகையாய் மூச்சு விட்டது. எங்கும் கரும்புகை, அடுப்புக்கரி நிறத்திலான கரும்புகை, காடே எரிந்து கரும்புகையானது போன்ற பெரும்புகை, கண்ணீர்ப்புகை. மாறி மாறி ஆற்று நீர்ப்பாய்ச்சலிலிருந்து மீன்கள் துள்ளித் துள்ளித் தரையில் தாவுவது போன்ற புகைக் குண்டுகள்.

அந்த மக்கள் அங்கும் இங்குமாய்ச் சிதறினார்கள். “கண்ணு போச்சே! கண்ணு போச்சே!” என்று கதறினார்கள். இதற்குள் இத்தகைய பல போராட்டக் களங்களைப் பார்த்த பீடித் தொழிலாளர்களில் சிலர் (இவர்கள் வெளியூர் ஆலைகளிலிருந்து பழிவாங்கப்பட்டு, துரத்தப்பட்டு பீடி பேக்டரியில் சேர்ந்தவர்கள்) துள்ளி வந்த ஒரு சில புகைக் குண்டுகளை, கைகளை வேல் வீச்சாய் வீசி, அவை தரையில் விழுவதற்கு முன்பே தாங்கிப் பிடித்து, பிடித்த வேகத்திலேயே போலீசை நோக்கி அந்த குண்டுகளைத் திருப்பி எறிந்தார்கள். இப்போது அந்த போலீசும் பொதுமக்களைப் போலவே அங்கும் இங்குமாய்ச் சிதறியது. இதனால் ஆத்திரமடைந்த போலீஸ் மனிதர், அங்குமிங்குமாய்த் திரும்பிய போது, அவர் முன்னாலும் ஒரு புகை குண்டு வெடித்து அவர் கண்களை எரித்தது. அந்த எரிச்சலை விட அவருக்கு நெஞ்செரிச்சலே அதிகம். தடியடிப் பிரயோகத்திற்கு ஆணையிடாமலே வாயை அகலப்படுத்தி ஒரே சொல்லாய் உத்தரவிட்டார்.

“யூ இடியட்ஸ்... சூட்மேன் சூட்... இம்மீடியட்லி சூட்...”

“டைம் கொடுக்காதே... சூட்... சுடு... நேராச் சுடு... நானிருக்கேன்... சுடு...”

நான்கைந்து போலீசார் பரம சாதுபோல் எண்ணெய் வழவழப்போடு இருந்த கட்டைத் துப்பாக்கிகளைக் கூட்டத்திற்குக் குறியாக நீட்டினார்கள். ஒருவர் ‘சேப்டிகேஜை’ திறக்காமல் போல்ட்டை இழுத்த போது அது சும்மா இருந்தது. ஆனால் மற்றவர்களோ அந்த துப்பாக்கிகளின் ஒரு பக்கமுள்ள ஒரு இரும்பு வளையத்தை இழுத்து, அவற்றின் மேல் பக்கமுள்ள நீண்ட பிடியைத் தட்டி விட்டபோது தோட்டாக்கள் பறந்தது தெரியவில்லை. மக்கள் ஆங்காங்கே விழுவதுதான் தெரிந்தது. ‘அய்யோ அம்மா’ என்ற அலறல்களோடு பலர் நொண்டிக் கொண்டு ஓடுவதும், ஓடியபடி விழுவதும், விழுந்தபடியே தாவுவதுமாய் அல்லாடினார்கள். ஆங்காங்கே சுடப்பட்ட கொக்குகளைப் போல, சுருண்டு விழுந்தார்கள்.

அமீர் குப்புறக் கிடந்தார். அவரது குதிகால்களில் பிடரியைப் போட்டு முத்துக்குமார் மல்லாக்கக் கிடந்தான். அமீரின் மார்பை ஒரு சின்னத் துளையாய் துளைத்த தோட்டா முதுகு வழியாய் வட்ட வட்டமாய்ச் சுழன்று, முதுகில் ஒரு பெரிய வட்டத்தை ஏற்படுத்தி, அவரைத் தாங்கப் போன முத்துக்குமாரின் மார்பில் பாய்ந்து முதுகில் பெரிய வட்டத்தை ஏற்படுத்தி, அப்படியும் அதன் ரத்தத் தாகம் அடங்காமல், அருகே நின்ற காதர்பாட்சாவின் தோளையும் துளைத்து, அப்புறம் ஆள் கிடைக்கிறதா என்று தேடி ஒரு பொட்டல் பக்கமாய் விழுந்திருக்க வேண்டும்.

அமீரும் முத்துக்குமாரும் ஒற்றை மனிதர் போல் ரத்தக் குழம்போடும், பிய்ந்து போன சதைகளோடும் பிணமாய்க் கிடந்தார்கள். அமீரின் தலையைத் தாண்டிய இடத்தில் ரத்தம் திரவ நிலையிலிருந்து திடப்பட்டு சிவப்புக் கல்லாய் ஒளிர்ந்தது. முத்துக்குமாரின் மார்பிலிருந்து நீரூற்றாய்க் கிளம்பிய குருதி அவன் கால்வழியாக ஆறாய் ஓடிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே சிலர் சுருண்டு கிடந்தார்கள். ஆனாலும் உயிருக்கு ஆபத்தில்லாதவர்கள் போல் அங்கு மிங்குமாய் நெளிந்தார்கள். அப்படியே உட்கார்ந்த காதர் பாட்சா தோளைப் பிடித்துக் கொண்டே, தனது தோழர்களைப் பார்த்து நடந்தான். ஒருவரின் பிடரியையும் இன்னொருவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்து அப்படியே வளைந்து நின்றான். அவன் தோளில் பொங்கிய ரத்த ஊற்று அந்த முன்னாள் மனிதர்களின் பாதங்களிலும், தலையிலும் சொட்டுச் சொட்டாய்த் தெறித்துக் கொண்டிருந்தது.

இதற்குள் அங்குமிங்குமாய்ச் சிதறிய கூட்டம் நடந்ததை நம்பமுடியாமல் உற்று உற்றுப் பார்த்தது. பிறகு முடியாதது நடந்து விட்டதுபோல் ஆங்காங்கே கும்பல் கும்பலாய்க் கூடிக் கீழே கிடந்த கற்களை எடுத்து போலீசை நோக்கி எறிந்து கொண்டே இருந்தது. உடனே குதிரைப்படை போலீஸ் லத்திக் கம்புகளோடு அங்கும் இங்குமாய் பாய்ந்தார்கள். குதிரைகளை, கடிவாளத்தைப் பிடிக்காமலேயே தாவ விட்டார்கள். அங்குமிங்குமாய்க் கம்புகளைச் சுழற்றினார்கள். ஆங்காங்கே ஒரு சில தலைகள் சிவப்பாகிக் கீழே விழுந்து கொண்டிருந்தன. எதிர்த் திசையிலிருந்து பெண்கள் கூட்டம் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அலைமோதி ஓடிவந்தது. தொலைவில் உள்ள முற்றுகைக் கூட்டமும் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்து வந்தது. அதுவரை கால எமதூதர்களாய்ச்செயல்பட்ட போலீசார் இப்போது முதலுதவி மருத்துவர்களானார்கள். ஆங்காங்கே துள்ளத் துடிக்கக் கிடந்தவர்களை தட்டுமுட்டுச் சாமான்களைத் தூக்கிப் போடுவதுபோல் ஸ்டெச்சர்களில் தூக்கி, ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றினார்கள். அந்த போலீஸ் மனிதர், கீழே கிடந்த தோட்டா உறைகளை எடுத்து எண்ணிக் கொண்டி ருந்தார். அவருக்கு செத்தவர்களின் எண்ணிக்கையை விட செலவான தோட்டாக்களின் எண்ணிக்கையே முக்கியமானது. விலை உயர்ந்த தோட்டாக்கள். இந்த சாக்கில் எவனும் பிறத்தியாருக்கு விற்றுவிடக் கூடாது. ஒவ்வொருத்தனும் எத்தனை ரவுண்டு சுட்டான் என்று அப்புறமாய்க் கணக்கு கேட்க வேண்டும். வன்முறைக்கும்பல் ஒன்று காவலர்களைத் தாக்கியதால், அந்தக் காவலர்களே வேறு வழியில்லாமல் குறைந்த பட்ச சக்தியை உபயோகித்து, ஒரு கொடிய சதியை மிகச் சிறிய உயிரிழப்பிலே அடக்கிவிட்டார்கள் என்று பத்திரிகையில் எழுத வைக்க வேண்டும். முதலமைச்சரும் சட்டப் பேரவையில் கண்ணை மூடிக் கொண்டு படிக்க ஒரு அறிக்கை தயார் செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அந்த ‘ஸ்பாட்டில்’ இல்லாத தாசில்தாரைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்தான் சுடும்படி உத்தரவிட்டதாகக் கையெழுத்து போடவைக்க வேண்டும். காயம்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மருத்துவமனையில் ஏதாவது சித்து வேலை செய்ய வேண்டும்.

அந்த மூன்று நட்சத்திர போலீஸ் மனிதரிடம், இரண்டு நட்சத்திர சகாக்கள் ஆலோசித்துக் கொண்டிருந்த போது, மசூதி பாளையத்திலிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடி வந்த பெண்கள் கூட்டத்தில் முன்னால் ஓடிவந்த சம்ரத் பேகம் குப்புறக் கிடந்த அமீரை, அப்படியே வெறித்துப் பார்த்தாள். பிறகு அடியற்ற மரமாய் அவர் மேல் விழுந்தாள். அவர் முதுகில் அங்கும் இங்குமாய் முகம் புரட்டி வட்டக் கிணறாய் இருந்த ரத்தக் கிணற்றில் மூழ்கி ரத்த முகமாய் அரற்றினாள். பிறகு அப்படியே மயங்கி விழுந்தாள். ஆயிஷா மல்லாக்கக் கிடந்த முத்துக்குமாரையே கண் நிலைக்கப் பார்த்தாள். ஏங்கி ஏங்கி அழுதாள். ‘என்னை விட்டுட்டு போயிட்டியே’ என்று வெளிப்படையாய்க் கூட அழமுடியாத கொடுமை மல்லாக்கக் கிடப்பவனை மார்போடு சாய்த்து முட்டி மோதி அழுது அழுது, அவன் ரத்தத்தையும் தன் கண்ணீரையும் கலக்க முடியாத இயலாமையில் தவித்தாள். ஒருவேளை அவளும், அவன் மீது அப்படியே படர்ந்திருப்பாள்; அதற்குள் ஹாஜி அஜீஸ் அவளைப் பற்றி இழுத்தார். முன்பு ஒரு முறை பற்றிய அந்த வேகம் கையில் இல்லை. ‘என்னைப் பிடித்துக் கொள்’ என்பது மாதிரி அந்தக் கை ஆறுதலாகவும், ஆறுதல் கேட்டும் பிடித்தது. மகளை மார்போடு சேர்த்து நகர்த்தினார். துரைச்சாமி தத்தித் தத்தி வந்தார். இரண்டு பிணங்களையும் கண்கள் ஆடாமல் பார்த்தார். வாய் மட்டும் துடித்தது. அங்குமிங்குமாய் தலை ஆடியது. பிறகு அமீரின் மேல் கிடந்த சம்ரத் பேகத்தின் கையைத் தொட்டார். அவள், “காக்கா! காக்கா” என்று அவர் கால்களைக் கட்டிக் கொண்டாள்.

எல்லாம் அடங்கி எல்லாம் முடிந்திருந்தது. காதர்பாட்சா வையும் வேனில் தூக்கிப் போட்டார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டறக் கலந்து நின்றார்கள். பழனிவேல், அந்தப் போலீஸ் மனிதருக்கு சங்கரசுப்பு சாட்சியாய் பட்டும் படாமலும் கைகொடுத்துக் கொண்டிருந்தார். போலீஸ் வேன்கள் பிரேத வண்டிகளாய்த் தோற்றம் காட்டியபோது, பாத்திமா போட்ட சத்தம் அனைவரையும் சுண்டி இழுத்தது. எங்கிருந்து வருகிறாள் என்று எல்லோரும் எட்டிப் பார்ப்பதற்கு முன்பே அவள் அப்பாவின் உடம்பில் அப்படியே விழுந்தாள். “வாப்பா வாப்பா" என்று வாய் பேசியது. அந்த வாப்பாவை மல்லாக்கக் கிடத்தினாள். அவர் முகத்திலும், கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டாள். அவர் கழுத்தில் கைகளை வளையமாக்கி மடியில் போட்டாள். மாறிமாறித் தலையில் அடித்தாள். எவருக்கும் அவளைப் பிடித்திழுக்க தைரியமில்லை. எல்லோரும் வாயடைத்தும், ஒருசிலர் கண்ணடைத்தும் நின்றபோது, மாரியப்பன் துள்ளிக் குதித்து ஓடி வந்தான். “அமீர் பாய்! அமீர்பாய்! என்னைப் பெறாமப் பெத்த அப்பனே!” என்று புலம்பிக் கொண்டே வந்தான். கீழே விழுந்து கிடக்கும் இன்னொரு பிணம் அவன் கண்ணில் படவில்லை. அந்த அமீரின் சடலம் மட்டுமே அவன் கண்களை முள்ளாய் அழுத்தியது. ஊசியாய்த் தைத்தது “அமீர் பாய்! அமீர்பாய்! ஐயய்யோ அமீர் பாய்...”

பாத்திமா, பழக்கப்பட்ட சத்தம் கேட்டதுபோல் திரும்பினாள். அவனைப் பார்த்து மெல்ல மெல்ல எழுந்தாள். பிறகு அவன் மேல் அப்படியே சாய்ந்தாள். அவன் கழுத்தை அப்படியே கட்டிக் கொண்டாள். அவன் அவள் தோளைச் சுற்றிக் கொண்டான். ஒருவர் கீழே சாயாமலிருக்க இன்னொருத்தர் பிடித்துக் கொண்டது போன்ற பிடி. இனிமேல் எப்போதும் ஒருவரை ஒருவர் விடப் போவது இல்லை என்பது மாதிரியான பிடி; அந்தக் கணத்தில்...

எல்லா இந்துக் கண்களும், இஸ்லாமியக் கண்களும் தலைகீழாய்ப் பார்த்தன. தரையைத் துளைத்தன. பிறகு அந்த இரண்டு பேரையும் பார்த்துப் பார்த்து மனிதக் கண்களாய் நிமிர்ந்து கொண்டிருந்தன.

முற்றும்

This file was last updated on 30 June 2021.
Feel free to send the corrections to the Webmaster.