pm logo

ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை எழுதிய
மணிமேகலைச் சுருக்கம் - பாகம் 1
உரைக் குறிப்புக்களுடன்


maNimEkalaic curukkam, with notes
by auvai turaicAmi piLLai
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை எழுதிய
மணிமேகலைச் சுருக்கம், உரைக் குறிப்புக்களுடன்‌ - - பாகம் 1


Source:
மணிமேகலைச் சுருக்கம்
உரைக் குறிப்புக்களுடன்

திருப்பதி கீழ்க்கலை யாராய்ச்சிக் கழகத் தமிழ் விரிவுரையாளர்
வித்துவான் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதியது
திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் திருநெல்வேலி :: சென்னை 1943, கழக வெளியீடு – 346

[All Rights Reserved]
Published by The South India Saiva Siddhanta Works Publishing Society, Tinnevelly, Ltd., Tirunelveli :: Madras.
April 1943
The B. N. Press, Madras.
--------
கழக வெளியீடு
செந்தமிழ் மொழியிலுள்ள முப்பெருங் காப்பியங்களில் ஒன்றாயது மணிமேகலை
கதைப் போக்கோடு தொடர்க்க சிறந்த செய்யுட்பகுதிகளைத் திரட்டிக் கோத்து, விடுபட்ட சில கதைப் பகுதிகளையும் உரைநடையி லெழுதித் தொடர்பு படுத்தி எல்லாப் பக்கங்களிலும், தெளிவான உரைக் குறிப்புக்கள் தந்து விரிவான ஆராய்ச்சி முன்னுரை யோடு இந்நூல் சுருக்க விளக்கமாக இயற்றப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி, சென்னை
---------
பொருளடக்கம்
ஆராய்ச்சி முன்னுரை
முன்னுரை
நூல்
1. விழாவறை காதை
2. ஊர் அலர் உரைத்த காதை
3. மலர்வனம் புக்க காதை
4. பளிக்கறை புக்க காதை
5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை
6. சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை
7. துயிலெழுப்பிய காதை
8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை
9. பீடிகை கண்டு பிறப்பு உணர்ந்த காதை
10. மந்திரம் கொடுத்த காதை
11. பாத்திரம் பெற்ற காதை
12. அறவணர்த் தொழுத காதை
13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
14. பாத்திர மரபு கூறிய காதை
15. பாத்திரங்கொண்டு பிச்சை புக்க காதை
16. ஆதிரை பிச்சையிட்ட காதை
17. உலக அறவி புக்க காதை
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை
19. சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை
20. உதயகுமரனை வாளால் எறிந்த காதை
21. கந்திற்பாவை வருவது உரைத்த காதை
22. சிறைசெய் காதை
23. சிறைவிடு காதை
24. ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
25. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை
26. வஞ்சிமாநகர் புக்க காதை
27. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை
28. கச்சிமாநகர் புக்க காதை
29. தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை
30. பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை
----------------
References are numbered sequentially and collected at the end for each chapter/காதை !
------

பதிப்புரை

'மணிமேகலை ' என்பது தமிழில் உள்ள பழைய பெருங்காப்பியங்கள் ஐந்தனுள் ஒன்று. கண்ணகி கோவலன் வரலாறு கூறும் மற்றொரு பெருங்காப்பியமாகிய சிலப்பதிகாரம் என்னும் அரிய நூலோடு தொடர்புடையது. கோவலனுக்கு மாதவியிடமாகப் பிறந்த மணிமேகலையின் வரலாற்றினை விரித்து விளக்குவது. அறம் பொருள் இன்பம் வீடு என நூல்களில் நுவலுதற்குரிய பெரும் பொருள்கள் நான்கனுள், அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றும் சிலப்பதிகாரத்திலும், வீடு என்பது மணிமேகலையிலும் கூறப்பட்டுள்ளன என்பதனாலும் இவ்விரண்டு பெருநூல்களின் தொடர்பு விளக்கமாகின்றது.

சிலப்பதிகாரம் இயற்றிய ஆசிரியர் இளங்கோவடிகளால் 'தண்டமிழ் ஆசான் சாத்தன்' எனச் சிறப்பிக்கப் பட்ட சீத்தலைச் சாத்தனார் என்னுங் கடைச்சங்க காலத்துப் புலவர் பெருமானால் இந்நூல் தமிழ் நலம் விளங்க இயற்றப்பட்டுள்ளது. இன்னோசை கனிந்த எளிய இனிய நடையமைந்து இது திகழ்கின்றது. மணிமேகலை பெளத்த சமயத்தைச் சார்ந்து வாழ்ந்தவளாதலால், அச்சமய உண்மைகளை அங்கங்கும் இது பெருக விரித்துச் செல்கின்றது.

மேலும், தமிழ்நாட்டின் இயற்கையழகுகள், கடல் மலை காடு நாடு நகர் ஆறு தீவு கோட்டம் சாலை மன்றம் முதலியவற்றின் விளக்கங்கள், சிறந்த அறவுரைகள், சமய வாத விரிவுகள் முதலிய அறிதற்குரிய பொருள்கள் இந் நூலில் அழகுபெற எடுத்துக் காட்டப்படுகின்றன. இந் நூலாலன்றி வேறு வகையினால் அறிந்துகொள்ளுதற்-கியலாத சில வகுப்பினரைப்பற்றியும் அவர்களுடைய பழக்க வழக்கங்களைப் பற்றியும், சிலதெய்வப் பெயர்களைப்பற்றியும் அத்தெய்வங்களை வழிபடும் முறைமைகளைப் பற்றியும் இதனுள் குறிப்புக்கள் வருகின்றன. வள்ளுவர் திருக்குறளை, வகையறிந்து பயன் கொள்ளும் நன்னலத்தையும் மக்கள் நூலின் வாயிலாகப் பெற்று இன்புறலாம். இவ்வாற்றால் “மணிமேகலை நூல் நுட்பங் கொள்வதெங்ஙன்?" எனப் பிற்காலத்துச் சான்றோரும் இதன் அருமையை அறிந்து வியந்து கூறியிருக்கின்றனர்.

மணிமேகலை, முப்பது காதைகளும் பதிகம் என்னும் ஓர் உறுப்புங்கொண்டு, 'சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் பயின்ற' அகவற்பாவில், சற்றேறக்குறைய ஐயாயிரம் வரிகளால் அமைந்துள்ளது. கதைப்போக்கும் நலங்களும் கெடாதவகையில் 'சுருக்கப் பதிப்பு' ஒன்றிருப்பின், மக்கள் இந்நூல் நலங்களையும் நூனுட்பங்களையும் எளிதில் விரைய அறிந்து இன்புறக் கூடும் என்னுங் கருத்தால், 'மணிமேகலைச் சுருக்கம்' என இப் பதிப்பினை இப்போது கழகம் வெளியிடுகின்றது. இதற்குமுன், 'சீவகசிந்தா மணிச் சுருக்கம்', 'சிலப்பதிகாரச் சுருக்கம்' என ஏனைப் பெருங்காப்பியச் சுருக்கங்களும் கழகம் வெளியிட்டுள்ளமை தமிழ் மக்கள் அறிவர். அவற்றைப்போலவே இம் மணிமேகலைச் சுருக்கப் பதிப்பிலும், செய்யுட் பகுதிகளின் இடையிடையே கதைத் தொடர்புகளைச் சுருங்க உரைநடைப் படுத்திச் சேர்த்தும், அடியில் ஒவ்வொரு பக்கத்திலும் உரைக்குறிப்புக்கள் கொடுத்தும் இந்நூல் இயற்றப் பட்டிருக்கின்றது.

கழகத்தார் விரும்பியபடி, ஏனைப் பெருங்காப்பியச் சுருக்கங்களை அமைத்துதவிய வித்துவான் திரு. ஒளவை சு. துரைசாமிப்பிள்ளையவர்களே இதனையும் அழகுற அமைத்துதவினர். இவர்கள்பாற் கழகம் தன் அன்பார்ந்த நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொள்கின்றது.

தமிழ்மக்களும் கல்லூரித் தலைவர்களும் இந்நூல் வரிசைகட்குத் தக்க ஆதரவுகள் தந்து ஊக்கமுண்டாக்குவார்களென்று நம்புகின்றோம்.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
-----------

மணிமேகலைச் சுருக்கம்
ஆராய்ச்சி முன்னுரை

முருகன் துணை

மணிமேகலை யென்பது ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று என்பது தமிழுலகு நன்கறிந்த செய்தியாகும். பண்டை நாளில் விளங்கியிருந்த நூலாசிரியர், உரையாசிரியர் பலரும் பெரிதும் ஈடுபட்ட தமிழருமை வாய்ந்தது, இந்த அரிய 'காப்பிய நூல்'கற்பனைக் களஞ்சியமாக விளங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள் தாம் அருளிய திரு வெங்கைக் கோவையில், "கொந்தார் குழல் மணிமேகலை நூல் நுட்பம் கொள்வதெங்ஙன்" என்றும், அம்பிகாபதி என்பவரால், அம்பிகாபதிக் கோவைக்கண், "மாதவி பெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதே" என்றும் தொனி நயம்படப் போற்றி யுரைத்த அருமையுடையது; அழகிய செம்பாகமான நடையழகு வாய்ந்தது; ஏனைச் சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் என்ற இரண்டினும் எளிய நடை பொருந்தியது; ஆங்காங்குச் சிதறித் தோன்றும் வளையாபதி, குண்டலகேசி என்ற காப்பியச் செய்யுட்களை நோக்க அவற்றினும் நடையழகு சிறந்திருப்பது; காவிரிப்பூம்பட்டினம், வஞ்சி, காஞ்சி முதலிய பெரு நகரங்களின் பண்டைச் சிறப்பை எடுத்துக் காட்டுவது; இயற்கையழகை இனிது காட்டி மகிழ்வுறுத்துவது; புத்த தருமங்களையும், பண்டை நாளில் தமிழகத்தில் நிலவிய பல சமயக் கருத்துக்களையும் விளங்க அறிவிப்பது. "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்"தின் தொடர்ச்சியாக, கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளான மணிமேகலையின் துறவு நெறியைச் செஞ்சொற் சுவை ததும்பச் சொல்லும் சீர்மை யுடையதுமாகும்.

I. நூலாசிரியர் :


1. பெயர் : இக் காப்பிய நூலை ஆக்கிய சான்றோர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்போராவர். “வளங்கெழு கூலவாணிகன் சாத்தன், மாவண் தமிழ்த்திற மணிமேகலை துறவு, ஆறைம்பாட்டினுள் அறிய வைத்தனன் " என்று இந்நூற் பதிகம் கூறுகின்றது. "ஞகாரை முதலா" என்ற தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர வுரையில், ஆசிரியர் பேராசிரியர், "சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும், கொங்கு வேளாற் செய்யப்பட்ட தொடர்நிலைச் செய்யுளும் போல்வன" என்று கூறுவதும் அப் பதிகக் கூற்றுக்கு நல்ல சான்று பகருகின்றது. இவரை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தன் என்றும், சீத்தலைச் சாத்தன் என்றும் அறிஞர் வழங்கி யிருக்கின்றனர்.

இங்ஙனம் வழங்குவதை நோக்கின், இவரது பிறந்தவூர் சீத்தலை யென்பதும், வாணிகம் செய்தற் பொருட்டு மதுரையில் இருந்தவர் என்பதும் அறியப்படும். சீத்தலை என்னும் இவ்வூர், இப்போது திருச்சிராப்பள்ளி ஜில்லா பெரம்பலூர்த் தாலூகாவில் உளது என்பர். கூலமாவது நெல், வரகு, தினை, சாமை முதலிய பதினெண்வகைப் பொருள்களின் பொதுப் பெயர்.

இனி, சீத்தலை யென்பதை ஊர்ப்பெயராகக் கொள்ளாது, ஒரு காரணம் பற்றி வந்த பெயராகக் கொண்டு, காலஞ் சென்ற டாக்டர் உ. வே. சாமிநாதையர் பின்வருமாறு கூறுவர் : "சங்கத்தில் அரங்கேற்றுவித்தற் பொருட்டு வரும் நூல்களிற் பிழைகள் காணப்படுந்தோறும், ஆக்கியோர்களைக் குற்றம் கூறுதற்குத் துணியாராய், 'இந்தப் பிழைகளைக் கேட்கும்படி நேரிட்டதே' என்று மனம் வருந்தித் தமது தலையைக் குத்திக் கொள்வாரென்றும், அதனால் தலை புண்பட்டுச் சீயோடிருந்தமையின் சீத்தலைச் சாத்தனாரென்பது இவர்க்குப் பெயராயிற் றென்றும் கூறுவர்; 'வள்ளுவர் முப் பாலால், தலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு' என்று மருத்துவன் தாமோதரனார் திருக்குறளைச் சிறப்பித்துக் கூறிய செய்யுளில் இதனைக் குறிப்பித்திருத்தலும், 'இயற்பெயர் சினைப் பெயர் ' என்பதன் உரையில், ஆசிரியர் இளம்பூரணர் முதலியோர் சினைமுதற் பெயருக்கு உதாரணமாக, 'சீத்தலைச் சாத்தன்' என்னும் இவர் பெயரைக் காட்டி யிருத்தலும் இக்கொள்கைக்கு ஆதாரங்களாக அமைவது காண்க" என்பர்.

இனி, நற்றிணையுரைகாரரான பின்னத்தூர் அ. நாராயணசாமி அய்யர், அந்நூலின் பாடினோர் வரலாற்றுப் பகுதியுள், நம் சாத்தனாரைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார் : "சீத்தலை யென்பது ஓர் ஊர்; செந்தலை, முகத்தலை, கழாத்தலை, இரும்பிடர்த்தலை என்பவை போல. பெருஞ்சாத்தன், பேரி சாத்தன் முதலியோரின் வேறு படுத்த இவர் இயற்பெயர் ஊர்ப்பெயர் புணர்த்திச் சீத்தலைச் சாத்தனார் எனப்பட்டது. சீத்தலையென்னு மூர் திருச்சிராப் பள்ளி ஜில்லா பெருமளூர்த் தாலுக்காவில் உள்ளது. திருவள்ளுவ மாலையில் வரும் மருத்துவன் தாமோதரனார் பாடலில் 'தலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு' என்று இருத்தலானே அதற்கேற்பச் 'சீத்தலை - சீப்பிடித்த தலை ' என்று கதை கட்டிக் கூறுவாருமுளர். தலைக்குத்து ஒருகால் இருந்திருப்பினும் இருக்கலாம்; அதுபற்றிச் சீப்பிடித்தல் ஒரு தலை யன்மையின், சீத்தலைக்குச் சீப்பிடித்த தலையென்று பொருள் கூறுதல் பொருத்தமாகத் தோன்ற-வில்லை" என்பது.

இவ்விருவர் கூறும் கூற்றுக்களை நோக்கின் நற்றிணை யுரைகாரர் கூறுவதே இயற்கையில் பொருந்துவதாகத் தோன்றுதலால், எதிர்காலத்தே அறிஞர் ஆராய்ந்து உண்மை துலக்குங்காறும் சீத்தலை யென்பதை ஊர்ப்பெயராகக் கோடலே சிறப்பு என்க. இதனைத் திரு. உ. வே. சாமிநாதையரும் ஒருவாறு உடன்பட்டுச் "சீத்தலை யென்னும் ஊரிலுள்ள ஐயனார் பெயராகிய சீத்தலைச் சாத்தனார் என்பது இவரது இயற்பெயரென்று ஒரு சாரார் கூறுவர்" என்று உரைத்துள்ளார்.

2. பிறப்பு வளர்ப்பு : இவருடைய பெற்றோர் பெயரும் பிறப்பு வளர்ப்பு வரலாறும், வாழ்க்கைத் துணை, மக்கட்பேறு முதலிய நலங்களும் இதுகாறும் சிறிதளவும் தெரிந்தில.

3. காலம் : இவருடைய பாட்டுக்கள் சில சங்க இலக்கிய மெனப்படும் தொகை நூல்களிற் காணப்படுகின்றன. இவர் சிலப்பதிகாரம் பாடியருளிய இளங்கோவடிகளுடன் இருந்திருக்கின்றார். அடிகள் சிலப்பதிகாரம் பாடுதற்கேற்ற வேட்கைத் தீயைக் கொளுத்தியவரும் இவரே; அது முடிந்தபின், அதனை அடிகள் சொல்லக் கேட்டவரும் இவரே. ஆகவே, அடிகள் காலமே இவரது காலமாமென்பர். அடிகள் இற்றைக்குச் சற்று ஏறக்குறைய 1800 ஆண்டுகட்கு முன்னிருந்தவர் என்பது அறிஞர் முடிபு. திருமணக் காலத்தில் "மாமுது பார்ப்பான் மறைவழி" காட்டலும், "தீவலம் செய்தலும்" சங்க இலக்கிய காலத்தில் இல்லை; இந்நூலுட் கூறப்படும் தருக்க முடிபுகள் நான்கு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தனவாகத் தோன்றுகின்றன. இன்னோரன்னவற்றைக் கொண்டு ஆராயும் அறிஞர், அடிகள் காலம் கி.பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டாகலாம் என்பர். இக் கூற்று மெய்ப்பிக்கப்படுமாயின், அடிகள் காலத்தோடு சாத்தனார் காலமும் தெளிவாகிவிடும். காவிரிப் பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதும், மதுரை மாநகர் கண்ணகியாரால் எரியூட்டப்பெற்றதும் இவர் காலத்தே நிகழ்ந்திருக்கின்றன.

4. இவர் காலத்திருந்த அரசர் : இவர் காலத்தே சோழ நாட்டில் கரிகால் வளவனும், பாண்டி நாட்டில் நெடுஞ் செழியனும், சேரநாட்டில் செங்குட்டுவனும் ஆட்சி புரிந்திருக்கின்றனர். இவரால், சோழருள் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், கிள்ளிவளவன், இளங்கிள்ளி, நெடுமுடிக் கிள்ளி, வென்வேற்கிள்ளி என்போரும், பாண்டியருள் நெடுஞ்செழியனும், சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறனும், சேரருள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பிறரும் இந்நூற்கண்ணும் பிறாண்டும் சிறப்பிக்கப்பெற் றிருக்கின்றனர். இவர் காலத்துப் புலவர் பெருமக்களை நோக்கின், மேலே கூறிய முடிவேந்தர் மூவரையும் பாடிய புலவர் பெருமக்கள் பலரும் இவர் காலத்துச் சான்றோர் என்பதொன்றே அமைவதாம். இவரை இளங்கோவடிகள், தமது சிலப்பதிகாரத்தில் குறிக்க நேரும்போதெல்லாம், "தண்டமிழ்ச் சாத்தன்" (பதி) என்றும், "தண்டமிழாசான் சாத்தன்," "நன்னூற் புலவன்" (காட்சி) என்றும் சிறப்பித்து ஓதியுள்ளார். இவற்றை நோக்கின், இவர் அடிகட்கு ஒரு கால் தமிழாசிரியராக இருந்திருக்கலாமோ என்று நினைத்தற் கும் இடமுண்டாகின்றது.

5. நன்மாறன் தொடர்பு : இவன் பாண்டியர் மரபினன். நன்மாறன் என்ற பெயரினர் பலர் இருந்தமையின் இவனை அவரிற் பிரித்துக் கூறுவார், சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் எனச் சான்றோர் சிறப்பித்திருக்கின்றனர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய நன்மாறன் எனப் பலர் இருந்திருத்தல் காண்க. துஞ்சுதல், இறத்தல். ஆகவே, நம் சீத்தலைச் சாத்தனாரால் பாடப்பெறும் பெருமை வாய்ந்த நன் மாறன் சித்திர மாடம் என்னுமிடத்தே இறந்தவன் என்பது விளங்கும்.

இந் நன்மாறன், இவர் புலமை நலத்தை வியந்து பெரிதும் ஆதரித்துள்ளான். இவன் இறந்தது கேட்டோ, அதற்கு முன்னர் இவன்பால் சென்றிருந்த தன்னை ஆதரித்தது கண்டோ, இவர் தன்னைப் பேணிச் சிறப்பித்த நலத்தை ஓர் அழகிய பாட்டால் இனிது உரைத்துள்ளார். அப்பாட்டுக் கையறுநிலையாக இன்மையின், நேரிற் கண்டு பாடியதாகவே கோடல் வேண்டும். அவனைக் கண்டபோது, அவனுடைய அணிகிளரும் அழகிய மார்பும் தாள் வரை நீண்ட தடக்கை யும் பிற நற்பண்பும் இவர் உள்ளத்தே நன்கு பதிந்துவிட் டன. அதனால்,

"ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்
தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி !

என்று தொடக்கத்தே எடுத்தோதி இன்புற்றார். பின்பு, அவன் அளிக்கும் திறத்தை,

"வல்லை மன்ற நீ நயந்தளித்தல்,
தேற்றாய், பெரும, பொய்யே என்றும்
காய்சினம் தவிராது கடலூர்பு எழுதரும் '
ஞாயிறனையை நின் பகைவர்க்கு;
திங்கள் அனையை எம்ம னோர்க்கே" (புறம். 59)

என்று மனங்குளிரப் பாடி மகிழ்ந்திருக்கின்றார். இடை யறாது பன்னாள் பகைமை செய்யினும், நன்மாறன் வலி சிறிதும் குன்றாது போருடற்றி வென்றி யெய்திய சிறப்பைக் "காய்சினம் தவிராது கடலூர்பு எழுதரும் ஞாயிறனையை" என்று உவமை-யடையால் எய்துவித் தோதும் இயல்பும், "தேற்றாய் பெரும பொய்யே” என அவன் கொடைமடச் சிறப்பும் அழகு கனிய உரைக்குந் திறம் உன்னுந்தோறும்
இன்புறுவிக்கின்றது.

6. ஏனைப் பாட்டு நலம் - பொது : இம் மணிமேகலை யொழிய, சங்க இலக்கியங்களுள், மேலே நன்மாறனைப் பாடிய புறப்பாட்டு ஒன்றும், அகத்தில் ஐந்தும், நற்றிணையில் மூன்றும், குறுந்தொகையில் ஒன்றுமாகப் பத்துப் பாட்டுக்கள் காணப்படுகின்றன.[$] புறமொழிந்த ஒன்பதும் அக னைந்திணைப் பாட்டுக்களாதலின், அவற்றை முறையே ஆராய்வது சீத்தலைச் சாத்தனாரது புலமை நலத்தைக் காண்டற்கு இனிய வாயிலாகும். அகப்பாட்டுக்களின் திணை வகுப்பு, முதற்பொருளும், அஃது இல்வழிக் கருப்-பொருளும், இரண்டு மில்லையாயின், உரிப் பொருளும் அடிப்படையாகக் கொண்டது. அந்நெறியே நோக்கின், இப் பாட்டுக்கள் ஒன்பதும், குறிஞ்சித் திணையில் இரண்டும், பாலையில் மூன் றும், முல்லை மருதங்களில் தனித்தனியே ஒவ்வொன்றும், நெய்தலில் இரண்டுமாகும். ஆகவே இவர் பாலை, குறிஞ்சி, நெய்தல் என்ற மூன்று நிலத்துக் கருப்பொருளையே மிகுதியாகப் பாடும் பான்மையுடையவர் என்பது புலனாகும்.
--
[$] திருவள்ளுவமாலையில் இவர் பாடியதாக ஒரு வெண்பா காணப்படுகிறது.

உரிப் பொருள் நெறியே தூக்கி யாராயின், குறிஞ்சித் திணையில் மூன்றும், முல்லையில் நான்கும், மருதத்தில் இரண்டும் அடங்குகின்றன. எனவே, பாலை நெய்தல்கட்குரிய உரிப் பொருளைப் பாடுதலில் இவர்க்கு விருப்பம் மிகுதியும் இன்மை எய்துகின்றது. இவ்வியல்பே, இம் மணிமேகலைக் காப்பியத்தும் விளங்கித் தோன்றுகின்றது. இவ்வாறு முதல், கரு, உரி என்ற பொருள் மூன்றாலும் ஆராய்ந்த வழி, முல்லைத் திணையும் இவராற் பாடப்பெற்றிருத்தல் இனிது விளங்கவும், பின்னத்தூர் திரு. அ. நாராயணசாமி அய்யரவர்கள் " இவர் முல்லை யொழிய ஏனை நானிலங்களையும் புனைந்து பாடியுள்ளார்" என்று கூறியுள்ளார். ஒருகால், அவர்,

"வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந் திறுத்தென,
மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச்
செம்புற மூதாய் பரத்தலின், நன்பல
முல்லை வீகழல் தா அய், வல்லோன்
செய்கை யன்ன செந்நிலப் புறவின் " (அகம்.134)

என வரும் சீத்தலைச் சாத்தனாரது முல்லைப்பாட்டினைக் காணாது போயினர் போலும்; கண்டிருப்பின் இவ்வாறு கூறாரன்றே !

7. குறிஞ்சித் திணை : தலைமைப் பண்பு முற்றும் நிரம்பிய ஒருவனும் ஒருத்தியும் தம்மில் தாமே எதிர்ப்பட்டுக் காதல் கொள்கின்றனர். இக்காதல், நன்கு உருக்கொள்ளும் வாயிலாகக் கூறும் இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என்பவை நிகழ்கின்றன. தனக்கும் தலை மகட்கும் உண்டாகிய காதலன்பு முறுகிச் சிறப்பது குறித்துத் தலைமகன் விரைய வரைந்து கொள்ளாது, பகலினும் இரவினும் தலைவியும் தோழியும் குறிக்கும் குறிவழி வந்து கூட்டம் பெற்றுச் செல்கின்றான். இதனைத் தோழி நினைந்து, "இவர் தம் களவொழுக்கம் பிறர்க்குப் புலனாயின் யாவர்க்கும் இகழ்ச்சி யுண்டாம்; அதனால் தலைமகற்கும் ஏதமாம்; தலைமகளும் உயிரிற் சிறந்த பெருநாணம் உடையளாதலின் இறந்து படுவாள்" என்றெல்லாம் எண்ணி, அத் தலைமகன் தெருண்டு வரையுமாறு தகுவனவற்றைக் கூறத் தொடங்குகின்றாள். இதனை வரைவு கடாதல் என்பர். தலை மகனைக் குறியிடத்தேனும் பிறாண்டுத் தனித்தேனும் காண லுற்றால், வெளிப்படையாகவே சில கூறி, விரைய வரைந்து கொள்ளுமாறு வேண்டுவள்; தங்கள் கடிமனையின் சிறைப் புறத்தே கண்டால், பிறர் செவிப்படினும் அவர்கள் ஐயுறா வண்ணம், மறைத்த சொற்களையே சொல்லி அவனை வரைவு கடாவுவள்.

ஒருநாள், தலைமகன் பகற்காலத்தே, தலைவியும் தோழியும் விளையாட்டயரும் குறியிடத்திற்கு வந்திருக்கின்றான். அவனைத் தோழி கண்டு, "எம் தலைவிக்கும் நினக்கும் உளதாகிய தொடர்பு அலராகிவிட்டது; அதனால் அவள் எய்தும் வருத்தம் மிகப் பெரிது; அதனினின்றும் நீ அவளைக் காத்தல் வேண்டும் என்று யாம் பல முறையும் இரந்து நின்றேம். நீயோ எம் வேண்டுகோளை ஏற்று அருளாயா கின்றனை" என்ற கருத்துப்பட,

"கானலம் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப
மலரேர் உண்கண் எம் தோழி எவ்வம்
அலர்வாய் நீங்க நீ அருளாய் ",

என்கின்றாள். அது கேட்கும் தலைமகன், "அதற்காகத் தானே இவ்வாறு ஒழுகுகின்றேன்" என்று உரைக்கின்றான். தோழி, வருத்த முற்று, "இல்லையில்லை; அருளுதல் மெய்யாயின், இதுகாறும் நீட்டியாது இவளை வரைந்து கொண்டிருப்பாய்; அருள்வாய் போலத் தோன்றி அருளாமையே செய்கின்றாய்; இவ்வொழுக்கம் ஒருகால் புறத்தார்க்கு நன்கு தெரிந்துவிடின், அப்போழ்தும் இதுபோலவே பொய்ப்பாய் போலும்! நீ பொய்க்கினும், அன்று யாம் வண்டலாடு மிடத்தே அவ் வண்டல் சிதையத் தேரொடு வந்து, எம் தலைவியின் புது நலத்தை நுகர்ந்தபோது, நீ செய்த சூளும் பொய்யாகுமோ? இக் கடலே எமக்கு அறிகரியாக உளது, காண்" என்பாளாய்,

"தடவுநிலைப் புன்னைத் தாதணி பெருந்துறை
நடுங்கயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
வண்டற் பாவை சிதைய வந்து நீ
தோள் புதிது உண்ட ஞான்றைச்
சூளும் பொய்யோ, கடல் அறி கரியே" (அகம். 320)

என்று கூறுகின்றாள். இதனைக் கேட்கும் தலைமகனோ, "இவர்கள் மெய்யாகவே ஊரவர் எடுக்கும் அலர்க்கு அஞ்சி யலமருகின்றனர்; இவர்களை இனியும் வருந்த விடுவது முறையன்று" எனத் தெருண்டு வரைந்து கொள்ளத் துணி குவன். இதுவே தோழி கூறிய தன் கருத்தும் பயனுமாகும்.

இனி, ஊரவர் அலரெடுத்துரைக்கும் குறிப்பும், அதனினின்றும் தலைமகளைக் காத்தற்குரிய பொறுப்பும் தலைமகற்கு உணர்த்தக் கருதுகின்ற தோழி, உள்ளுறையால் அவன் உணர்ந்து கொள்ளுமாறு உரைக்கின்றாள். தலைமகனைக் கண்டு, "கானலஞ் சிறு குடிப் பெருநீர்ச் சேர்ப்ப" என்பவள், ஊரவர் கூறும் அலரை உள்ளுறுத்து,

"ஓங்கு திரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீ இத்
திமிலோன் தந்த கடுங்கண் வயமீன்
தழையணி யல்குல் செல்வத் தங்கையர்
விழவயர் மறுகின் விலையெனப் பகரும்
கானலஞ் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப"

என்கின்றாள். இதன்கண் திமிலோனாகிய பரதவன் கொணர்ந்த வயமீனை, அவனது செல்வத் தங்கையர் எடுத் துச் சென்று மறுகிடத்தே விற்பர் என்றது, நின்னால் இவட்கு உண்டாகிய வேறுபாட்டினை, ஏதில் மகளிர் எடுத்து ஊரிடத்தே அலர் கூறுகின்றனர் என்ற தாகும்.

இனி, இவ்வலரால் உண்டாகிய துன்பத்தைப் போக்குதற்கு உரியவன் தலைமகனே என்றும், அதற்கு ஏற்றது உடனே செய்தல் வேண்டும் என்றும் தோழி கூறக் கருதி,
அதனையும் உள்ளுறையால்,

"நெடுங்கழி துழை இய குறுங்கா லன்னம்
அடும்பமர் எக்கர் அஞ்சிறை யுளரும்
தடவு நிலைப் புன்னைத் தாதணி பெருந்துறை"

என்று கூறுகின்றாள். இதனால் கழிபடிந்து துழவிய அன்னம், நனைந்த தன் சிறகினை எக்கரை யடைந்து உலர்த்துவதுபோல, தலைமகளும் இவ்வூரவர் எடுத்த அலர்மிகு வருத்தத்தை நின்னை யடைந்து போக்கிக் கொள்ளற்குரியள் என்றாளாயிற்று.

வந்த போதும் வண்டற்பாவை சிதைய வந்தாயாதலின், இப்போதும் எம் புது நலம் கெட்டு வருந்த ஒழுகுகின்றாய். இவ்வாறு பிறர்க்கு எய்தும் கேடு கருதாது ஒழுகும் நீ எம்பால் அன்று செய்த சூளும் பொய்ப்பையாயின், அதனை மெய்ப்பித்தற்கு அறிகரியாகக் கடலுண்டு என்பாள், "கடலறிகரியே" என்று கூறுகின்றாள். இவ்வண்ணம் ஒரு பணிப் பெண் தலைமகனை நெருங்கிக் கூறல் தகுமோ எனின், “உறு கண் ஓம்பல் தன்னியல்பாகலின், உரியதாகும் தோழிகண் உரனே" என ஆசிரியர் தொல்காப்பியனார் வழுவமைத்திருக்கின்றார்.

இப்பாட்டு நெய்தற்குரித்தாயினும் குறிஞ்சி வந்து மயங்கிய திணை மயக்கமாகும்.

இனி, பகற் குறிக்கண் வந்த தலைமகனை இவ்வாறு நெருங்கிக் கூறிய தோழி, ஒருகால் அவன் இரவுக் குறிக்கண் வந்து சிறைப்புறத்தானாதலை அறிகின்றாள்; உடனே, இரவுக் குறியிடத்தும் தலைமகள் போந்து அவனைத் தலைப் பெய்து கூடற்கு இயலாதவாறு ஊரவர் உறங்காது விழித் திருத்தலைக் காட்டி, இம் முட்டுப்பாடு நீங்க, விரையவரைந்து கோடலே தக்கது என்று அவற்கு உணர்த்தக் கருதி,

"கல்லக வெற்பன் சொல்லில் தேறி
யாம் எம்நலன் இழந்தனமே; யாமத்து
அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொ டொன்றிப்
புரையில் தீமொழி பயிற்றிய உரையெடுத்து
ஆனாக் கெளவைத் தாகத்
தான் என் இழந்தது இவ்வழுங்க லூரே?" (நற். 36)

என்று கூறுகின்றாள். "யாம் வெற்பனது சொல்லைத் தேறி, நலன் இழந்தமையின் உறங்காது விழித்திருப்பேமாக, இவ்வூர் உறக்கமின்றி ஆரவாரத்துடன் இருத்தற்கு இஃது எதனை இழந்தது?" என்று சொல்லுமுகத்தால், தலைப்பெய்தற்கு முடியாமையும், அலர் மிகுதியும் குறிப்பிடுதல் காண்க.

இதனோடு தலைமகற்குத் தம் தந்தை தன்னையரால் ஏத முண்டாகுமோ என அஞ்சும் அச்சமும் உடன் தோன்றி வருத்தும் வருத்தத்தை உள்ளுறையில் வைத்து,

"குறுங்கை யிரும்புலிக் கோள்வல் ஏற்றை,
பூநுதல். இரும்பிடி புலம்பத் தாக்கித்
தாழ்நீர் நனந்தலைப் பெருங்களிறடூஉம்
கல்லக வெற்பன் "

என்றுரைக்கின்றாள்.

இதன்கண், புலியேறு, பிடி புலம்புமாறு களிற்றையடும் என்றது, எம் ஐயன்மார் யாம் வருந்துமாறு தலைமகனைப்பற்றி வருத்துவரோ என்று அஞ்சுவதனைக் குறிப்பித்தாளாம்.

பிறிதொரு காலத்தே, தலைமகன் தங்கள் கடிமனையின் சிறைப்புறத்தே வந்து நிற்கின்றான். அவனுக்குத், தலைமகள் மேனி வேறுபாடு கண்டு பெற்றோர் இற்செறித்திருத்தலும், அவள் அதனால் தலைமகனைக் கூடலருமை கண்டு வருந்தி யிருத்தலும் உணர்த்தக் கருதி, தலைமகனை நோக்கிக் கூறுவாள்போல மிக்க அறிவு நலம் தோன்றக் கூறுகின்றாள். கூறுவோள் தொடக்கத்தே, தலைவியது வருத்தமும் மேனி வேறுபாட்டினைத் தாய் அறிந்தமையும் எடுத்து,

"தோலாக் காதலர் துறந்து நம் அருளார்;
அலர்வ தின்று கொல் இது என்று நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
அறிந்தனள் போலும் அன்னை .......... "

என்று மொழிர்து, பின் தாயின் செய்கையினை ஓதலுற்று,

”.......... …………...சிறந்த
சீர்கெழுவியனகர் வருவனள் முயங்கி,
நீரலைக் கலை இய ஈரிதழ்த் தொடையல்
ஒண்ணுதற் பெதும்பை நன்னலம் பெறீஇ
மின்னே ரோதி இவளொடு நாளைப்
பன்மலர் கஞலிய வெறிகமழ் வேலித்
தெண்ணீர் மணிச்சுனை யாடின்
என்னோ மகளிர்தம் பண்பென் றோளே" (நற். 339)

என்று சொல்லி முடிக்கின்றாள். இது தாயறிவுறுதலும் காப்பு மிகுதலும் கூறி வரைவு கடாவியதாகும்.

இவ்வாறு பல வகையாலும் வரைவு கடாவப்பெற்ற தலைமகன் பின்பு தெருண்டு, தலைமகளை வரைந்துகொண்டு இல்லிருந்து நல்லறம் புரியத் தொடங்குகின்றான்.

8. முல்லைத் திணை. இல்லிருந்து நல்லறம் செய்யும் தலைமகன், அவ்வறமும் இன்பமும் சிறத்தற் பொருட்டுப் பொருள் குறித்துத் தலைவியைப் பிரிந்து ஏகுகின்றான். அப்பிரிவுத்துயர் தலைவியைப் பெரிதும் வருத்துகின்றது. கூடியிருந்தபோது தலைமகன் தன்னை இறையும் பிரியாது இருந்து இன்புறுவித்ததை நினைக்கின்றாள்; அவன் தன்னை இன்றி யமையாக் காதல் கொண்டொழுகியது அவள் நெஞ்சில் நிலவு கின்றது. அதனால் அவள் தோழியை நோக்கி,

“யாங்கு அறிந்தனர்கொல் ? தோழி ! பாம்பின்
உரி நிமிர்ந் தன்ன உருப்பவிர் அமையத்து
இரைவேட் டெழுந்த சேவல் உள்ளிப்
பொறிமயிர் எருத்தின் குறுநடைப் பேடை
பொரிகால் கள்ளி விரிகாய் அங்கவட்டுத்
தயங்க இருந்து புலம்பக் கூ உம்
அருஞ்சுர வைப்பின் கானம்
பிரிந்துசேண் உறைதல் வல்லுவோரே " (குறுந். 154)

என்று வினவுகின்றாள். என்னைப் பிரிந்துறைய மாட்டாத காதலர் உடைமையது உயர்ச்சி கருதி இப்போது பிரிந்துறைய ஒருப்பட்டாராயினும், அவர் சென்ற கானத்தில் இடையிடையேயுள்ள அருஞ்சுரத்தில், இரைவேட்டெழுந்த சேவலையுள்ளி, அதன் பெடை தனித்திருந்து புலம்பிக் கூவுமதனைக் காண்பரேல் உடனே யான் ஈண்டு அவர் பிரிவாற்றாது புலம்புதலை நினைந்து வந்துவிடுவர்; அற்றாகவும், அவர் வாராது பிரிந்து சேண் உறைகின்றார். அங்ஙன் உறைதற்கு வேண்டும் வன்மையினை எவ்வாறு கற்றனரோ, தெரிந்திலதே" என்பாள், “பிரிந்து சேண் உறைதல் வல்லுவோர் யாங்கறிந்தனர்கொல்" என்று கூறுகின்றாள். இப் பிரிவாற்றாது கூறலும் ஒருவாறு ஆற்றியிருத்தற்கு நிமித்தமாதலின், கருப்பொருளால் இப் பாட்டுப் பாலைக் குரியதாயினும், உரிப்பொருளால் முல்லைத் திணைக்கு உரியதாகின்றது.

தலைமகனது பிரிவை ஒருவாறு ஆற்றியிருக்கும் தலைமகள், அவன் பிரிந்து நெடிது உறைதலை நினைக்கின்றாள்; உடல் மெலிகின்றாள். இதனைக் கேட்ட தோழி, "அன்னாய், நம் தலைவர், பொருளினும் அருளுடைமை பெரிதும் சிறந்தது எனக் கருதும் பெற்றியர். தாம் செல்லும் சுரத்தில், மாவும் புள்ளும் தத்தம் துணையொடு கூடியுறையும் அன்பு நிலையைக் காணுந்தோறும், அவர் உங்களையே உள்ளுவராதலின், விரைய வருவர், வருந்தற்க" என்று தேற்றுகின்றாள். அவட்குத் தலைவி, தோழி, அவர் காதல் நிலையை நீ அறியாய்; யான் அறிகுவன்; அவர்க்குக் காதல் பொருளே யன்றி, நம்பால் அருள் என்று தெளியேன். அருளே அவர்க்குக் காதல் என்று நீ தான் கூறுகின்றாய் " என்ற கருத்துப் பட,

"அறியாய், வாழி, தோழி ...
…….. …….. ……….
அருஞ்சுரக் கவலை நீந்தி என்றும்
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
பொருளே காதலர் காதல்;
அருளே காதலர் என்றி நீயே" (அகம். 53)

என்று செப்புகின்றாள். இதன்கண், தலைவன் பொருளே காதலனாதற்குக் காரணம் கூறுவாள், "என்றும் இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப, நம் மினும் பொருளே காதலர் காதல்" என்று தலைவனது உள்ளத் தன்மையை உள்ளவாறே மொழிகின்றாள். நெஞ்சம் அவ்வாறு வலித்தலால் எழுந்த வன்மையே, கொடிய சுரத்தையும் அவரை இனிது கடந்தேகுமாறு செய்தது என்பாள், சுரத்தின் கொடுமையை விரித்து,

"..... .... …… ......... ...... இருளற
விசும்புடன் விளங்கும் விரைசெலல் திகிரிக்
கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய
நெடுங்கால் முருங்கை வெண்பூத் தாஅய்
நீரற வறந்த நிரம்பா நீளிடை
வள்ளெயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு
கள்ளியங் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரியரை புதைத்த புலம்பு கொள் இயவின்
விழுத்தொடை மறவர் வில்லிட, வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை .......... (அகம். 53)

என்று உரைக்கின்றாள்.

தோழி, வேறே தகுவன கூறித் தேற்றுமுகத்தால், " தலைவர் இளவேனிற் பருவ வரவின்கண் வருவதாகக் கூறியிருக்கின்றார்; அதுவும் இதோ வந்து விட்டது; நீ மேனி வேறுபட்டு வருந்தற்க; அவர் விரைய வருகுவர்" என்று வற்புறுக்கின்றாள். இவ்வாறு பன்முறையும் தோழியால் வற்புறுக்கப்பட்டுளாளாதலின், தலைவி, அவ் வன்புறைக்கு எதிரழிந்து வருத்தம் மிக்கு,

"நெடுஞ் சேணிடைய குன்றம் போகிய
பொய்வலாளர் முயன்று செய் பெரும்பொருள்
நம்மின் றாயினும் முடிக வல்லென
பெருந்துனி மேவல் நல்கூர் குறுமகள்
நோய்மலிந் துகுத்த நொசிவரற் சின்னீர்
பல்லிதழ் மழைக்கண் பாவை மாய்ப்பப்
பொன்நேர் பசலை யூர்தரப் பொறிவரி
நன்மா மேனி தொலைதல் நோக்கி
இனையல் என்றி; தோழி ! சினைய
பாசரும் பீன்ற செம்முகை முருக்கினப்
போதவிழ் அலரி கொழுதித் தாதருந்து
அந்தளிர் மா அத்து அலங்கல் மீமிசைச்
செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம்
இன் இள வேனிலும் வாரார்.
இன்னே வருதும் எனத்தெளித் தோரே" (அகம். 229)

என்று வருந்திக் கூறுகின்றாள். இதன்கண், அவள், தான் இறந்து படினும், தலைவன் கருதிய பொருள் முடிக்க என நினைந்து நோய் மலிந்து, கண்கலுழ்ந்து, பசலை படர்ந்து, மேனி நலம் தொலைந்தமையும், அதுகாணும் தோழி, அவர் இளவேனில் வரவின்கண் வருவர் என்றதும், அவன் வாராமையும் கூறுதல் காண்க.

இனி, இதன்கண் வேறொரு கருத்தும் புலப்படுக்கின்றாள் : அவர் குன்றங்கள் பல கடந்து சென்றுள்ளார். அவ்விடத்தே, களிற்றைப் பிரிந்த மடப்பிடி தன் குழவியுடன் கூடி உண்டற்குரிய குளகினை மறுத்து உண்ணாது உயங்கித் தோன்றுவதைக் கண்டிருப்பர். அதன் செயல், தன்னைப் பிரிந்திருக்கும் என்னை நினைவுறுத்தாது போயிராது. அற்றகவும், பொய்வலாள ராதலின், அவர் அங்'நெடுஞ்சேணிடைய
குன்றம்' போயினர் காண் என்பாளாய்,

"பகல் செய் பல்கதிர்ப் பருதியஞ் செல்வன்
அகல்வாய் வானத் தாழி போழ்ந்தென
நீரற வறந்த நிரம்பா நீளிடைக்
கயந்தலைக் குழவிக் கவியுகிர் மடப்பிடி
குளகு மறுத் துயங்கிய மருங்குல் பலவுடன்
பாழூர்க் குரம்பையின் தோன்று மாங்கண்
நெடுஞ்சேண் இடைய குன்றம் போகிய
பொய் வலாளர் ............" (அகம். 229)

என்று இனைகின்றாள்.

இவள் செய்கை இவ்வாறிருக்க, பிரிந்த தலைமகன் தான் மேற்கொண்ட வினையை முடித்துக்கொண்டு, இவளைக் காண்டற்கெழுந்த வேட்கை பெரிதும் முடுகுதலால், விரைந்து வருகின்றான். அவன் மீளலுறுங் காலம் கார்காலம். மழை நன்கு இனிது பெய்திருக்கிறது; கானம் இனிய காட்சி வழங்குகிறது. காயா மரங்கள் நீலமலரைப் பூத்திருக்கின் றன. தம்பலப் பூச்சிகள் ஆங்காங்குப் பரந்து கிடக்கின்றன. இடையிடையே முல்லை மலர்கள் உதிர்ந்து கிடக்கின்றன. இவற்றைக் காணும் அத்தலைமகன்,

"வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென
மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச்
செம்புற மூதாய் பரத்தலின், நன் பல
முல்லை வீகழல் தா அய், வல்லோன்
செய்கை யன்ன செந்நிலப் புறவு" (அகம்.134)

என மகிழ்ந்து கூறுகின்றான். அப்போது, அவன் கண்ணெதிரே மான் கூட்டம் தோன்றுகிறது. மானேறு பிணை மானைக் கூடும் காட்சியைக் காண்கின்றான். அருள்வள்ளலாதலின், தான் செல்லும் தேரிற் பூட்டிய குதிரையின் செலவு மானின் புணர்நிலைக் கூட்டத்தைக் கெடுக்குமென்று அஞ்சுகின்றான். உடனே பாகனை நோக்கி,

"வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத்
தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க,
இடிமறந்து ஏமதி, வலவ, குவிமுகை
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழுகுலை யன்ன திரிமருப் பேற்றொடு
கணைக்கால் அம்பிணைக் காமர் புணர்நிலை
கடுமான் தேரொலி கேட்பின்
நடுநாட் கூட்டம் ஆகலு முண்டே," (அகம்.134)

என்று சொல்லி மெல்லச் செல்விக்கின்றான்.

9. மருதத் திணை.
இவ்வண்ணம் பொருள் முதலியன ஈட்டலும், ஆண்மைப் பணி புரிதலும், ஈகைமேல் நிற்கும் இசை பெறுதலும் முதலிய நற்செயல் புரிந்து இன்புற்று வாழ்ந்துவரும் தலைமகனுக்குப் பரத்தைமை யொழுக்கம் உண்டாகின்றது. அதனால், அவன் தலைமகளைப் பிரிந்தேகுகின்றான். அவட்குப் பொறாமை மிகுகின்றது. அவளும் தோழியும் அப்புறத் தொழுக்கத்தை மாற்றுதற்குப் பெரும்பாடு படுகின்றனர். ஒருநாள், அவன் பரத்தையிற் பிரிந்து வருகின்றான். தலைமகள், அவனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றாள். தோழியை வாயில் வேண்டித் தலைமகளை யடையத் தலைமகன் விழைகின்றான். அவனை மறுக்கும் தோழி, "ஊரனே, இனி எம்மைப் பேணாது அகன்று சென்று அவளையே பேணுக. அவள் நீ பிரிந்தமையின் இகழ்ந்தன சொல்லிக் கண்ணீர் சொரிந்து சிறு துளி கொண்டு எம் தெருவைக் கடந்து சென்றாள்;
அவள் ஈங்கே இல்லை" என்பாளாய்,

"பெரும் பெயர் மகிழ்ந், பேணாது அகன்மோ
…. ….. …. . . . . . மாண்ட
மதியேர் ஒண்ணுதல் வயங்கிழை ஒருத்தி
இகழ்ந்த சொல்லும் சொல்லிச் சிவந்த
ஆயிதழ் மழைக்கண் நோயுற நோக்கித்
தண்நறுங் கமழ்தார் பரீஇயினள், நும்மொடு
ஊடினள் சிறு துனி செய்து, எம்
மணல்மலி மறுகின் இறந்திசி னோளே" (அகம். 306)

என்று கூறுகின்றாள். பெரும் பொருளை விரும்பும் நினக்கு இயைய ஒழுகப்பண்ணாது, இகழ்ந்த சொல் சொல்லி, நோயுற நோக்கி, தார்பரிந்து, ஊடிச் சிறு துனி செய்து மறுகிடை இறந்து திரியப் பண்ணுதல் நின் தலைமைக்கு அமைவதன்று என்று கூறி மறுப்பாள், "பெரும் பெயர் மகிழ்ந," என்றும், "இதுவோ மற்றுநின் செம்மல்" என்றும் கூறி மறுக்கின்றமை காண்க. மேலும், பரத்தையின் இகந்த செயலைக் கூறி இகழ்கின்றாளாதலின், அவளை, "மாண்ட மதியேர் ஒண்ணுதல் வயங்கிழை ஒருத்தி" எனப் புகழ்வாள் போல இகழ்கின்றாள்.

நாளும் புதிய புதிய பரத்தையரைக் கூடி, நினக்கு வாயிலாகிய பாணன் முதலாயினார் பரவ அவர் மனைக்கண்ணே தங்குகின்றாய் எனத் தலைவனது புறத்தொழுக்கத்தை வெளிப்படக் கூற நாணி, உள்ளுறையால்,

"பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முட்கொம்பு ஈங்கைத் துய்த்தலைப் புதுவீ
ஈன்ற மரத்தின் இளந்தளிர் வருட
வார்குருகு உறங்கும் நீர்சூழ் வளவயல்" (அகம். 306)

என்கின்றாள். பொய்கை பரத்தையர் சேரியாகவும், ஈங்கைத் துய்த்த லைப் புதுவீ புதிய பரத்தையராகவும், மரத்தின் இளந்தளிர் வாயில்களாகவும், குருகு தலைமகனாகவும் உள்ளுறை கொள்க. நின்மனையிடத்தே விளையாட்டயரும் புதல்வன் மார்பிவர்ந்து மகிழ, அதனால் இன்புற்று இனிதிருக்க வேண்டியவனான நீ இவ்வாறொழுகல் நன்றன்று என்னும் பொருள் பயப்ப,

"கழனிக் கரும்பின் சாய்ப்புற மூர்ந்து
பழனயாமை பசுவெயிற் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர" (அகம். 306)

என்று தோழி உரைக்கும் திறம் மிக்க நயமாக இருத்தலைக் காண்மின். கரும்பின் சாய்ப்புறம் தலைவன் மார்பாகவும், யாமை மனையிடத்து விளையாடும் புதல்வனாகவும் கொள்க.

பிறிதொருகால் தலைமகன் பரத்தையிற் பிரிந்தபோது, மீளத் தன் மனையை அடையக் கருதித் தோழியின் கருத் தறிந்து வருமாறு பாணனை வாயிலாக விடுகின்றான். பாணனும் அவ்வண்ணமே போந்து தோழியைக் காண்கின்றான். அவனை வெகுண்டு வாயில் மறுக்கலுற்ற தோழி, "தலைமகன் முன்பு பரத்தையிற் பிரிந்து வந்தபோது வினாயதற்கு ‘யாரையும் அறியேன்' என்றான்; அப்பொய்ம் மொழி இப் போது ஊரெங்கும் பரந்து நடுக்கம் செய்வதாயிற்று" என்று உள்ளுறுத்து,

"இருங்கழி துழைஇய ஈர்ம்புற நாரை
இறகெறி திவலையின் பனிக்கும் பாக்கத்து
உவன் வரின் எவனோ ? பாண ........." (நற். 127)

என்று மொழிகின்றாள். இவண் அவன் வருதலால் ஒரு பயனும் இல்லை யென்பது பட, "உவன் வரின் எவனோ?" என்றது கேட்டதும் பாணன் காரணம் தெரியாது மருண்டு நிற்க, 'தலைமகள் தலைமகனை யின்றியே கானற்குப் பண்டு வண்டலயரச் சென்றது போல இன்றும் செல்வாம் என்கின்றாள். எனவே, தலைமகனையின்றியே தான் தனித்துச்சென்று விளையாட்டயரக் கூடிய அளவு அவட்குத் துனியுண்டாகி விட்டது; இவ்வளவிற்கும் தலைவனது புறத்தொழுக்கமே காரணம்," என்பாள்.

". … …… ….. பேதை,
கொழுமீன் ஆர்கைச் செழுநகர் நிறைந்த
கல்லாக் கதவர் தன்னைய ராகவும்
வண்ட லாயமொடு பண்டுதான் ஆடிய
ஈனாப் பாவை தலையிட் டோரும்
மெல்லம் புலம்பன் அன்றியும்
செல்வாம் என்னும் கான லானே." (நற். 127)

என்று உரைக்கின்றாள். "அவன் சோர்பு காத்தல் கடன் எனப் படுதலின்" (தொல். பொ) தலைமகள் தலைவனின்றியே தன் மனையின் நீங்கிச் சேறல் அறமன்றே; செல்ல ஒருப்பட்டதாகத் தோழி கூறல் வழுவே; ஆயினும், "அறக்கழிவுடையன பொருட்பயம் படவரின்" (தொல். பொ.) அமையும் என ஆசிரியன்மார் கூறுதலின், தோழி இவ்வாறு உரைத்தல் அமையும் என்பர்.

இது கேட்கும் பாணன் அஞ்சித் தலைமகனைக் கொணர்ந்து கூட்டுகின்றான். தலைவன் தலைமகளோடு கூடி இன்புற்று இனிது வாழ்கின்றான்.

10. இப்பாட்டுக்களின் சிறப்பாராய்ச்சி
இதுகாறும் கூறியவாற்றால், நம் சீத்தலைச் சாத்தனாரது பாவன்மை நன்கு தெரியக் கண்டோம். இப்பாட்டுக்களுள் சொல்லப்படும் ஒவ்வொரு கருத்தும் வறிதே செல்லாது. கூறுவோர் உள்ளத்தில் எழும் உண்மைக் கருத்துக்களையும் உடன் உணர்த்திச் செல்லும் இயல்புடையதாய் இருத்தலைக் காண்கின்றோம். பொருட்டுறையின் வரம்பு இகந்தனபோலத் தோன்றுவனவும் நுணுகி நோக்குமிடத்து, அவ்வரம்பு இகவாதே செல்லும் நேர்மை, நம் சாத்தனாரது புலமைத் திறத்தை இனிது காட்டிவிடுகிறது.
இனி, இப்பாட்டுக்களால், இவர் இயற்கைப் பொருள்களைக் கூர்மையுடன் கண்டு, உள்ள தன் உண்மை சிறிதும் மறையாதவாறு உரைக்கும் திறத்தைச் சிறிது காண்டல் வேண்டும். இக்காட்சி, பரந்துபட்டுச் செல்லும் இம்மணிமேகலைக் காப்பியத்தை நுகர்தற்குத் துணை செய்யும்.

குறிஞ்சி நிலத்தே யானைகள் வாழ்வனவாகும். அவை கூட்டம் கூட்டமாகவே வாழ்வன. மேலும், அவற்றுள் களிற்றுக்கும் பிடிக்கும் உண்டாகும் காதலன்பு மிகச் சிறந்த தென்பர். தான் காதலித்த களிறு இறந்துபடின், பிடியானை பலநாள் வரையில் புலம்பிக்கொண் டிருக்குமென யானை வேட்டுவர் கூறுகின்றனர். இவ்வுண்மையை நம் சாத்தனார்,

"குறுங்கை யிரும்புலிக் கோள்வல் ஏற்றை
பூநுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித்
தாழ்நீர் நனந்தலைப் பெருங்களிறு அடூஉம்" (நற். 36)

என்று கூறுகின்றார். யானை பிடிப்போரும் நீர்நிலைக் கண்ணே சென்று பதுங்குவ-ராதலின், புலியும், யானையைத் "தாழ் நீர் நனந்தலைக்" கண்ணே இருந்து தாக்குதலை இவர் கூறுவதைக் காண்மின்.

இரலைமானின் கொம்பு முறுக்குண்டு கணுக்கணுவாய் இருத்தலை நாம் காண்கின்றோம். இதற்கு ஓர் எளிய உவமை காட்டி இதனைக் காணார்க்கு உரைக்க முயலின், அப்போது அதன் அருமைப்பாடு தெற்றெனப் புலனாகிறது. இதனை மிக எளிதாகக் காட்டலுற்ற நம் தண்டமிழாசானாகிய சாத்தனார், வாழைப் பூவை எடுத்து, அதனை மூடியிருக்கும் இதழ்களை நீக்க, எஞ்சியிருக்கும் தண்டினை வேறுபடுத்து இரலை மானின் கொம்பிற்கு உவமை கூறுவார்.

"........... ......... ............... குவி முகை
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழிகுலை யன்ன திரிமருப் பேறு" (அகம். 134)

என்று கூறுகின்றார்.

நீர்நிலையில் நின்று மீன் நாடி யுண்டிருந்த நாரைகள் கரையிடத்திருக்கும் மரங்களில் தங்கித் தம் நனைந்த சிறகுகளை உதறும்போது, அவற்றில் ஒட்டியிருந்து உதிரும் நீர்த் திவலைகள் பனிபோல் துளிக்கும் என்பதை நன்கு கண்டதனால்,

"இருங்கழி துழை இய ஈர்ம்புற நாரை,
இறகெறி திவலையின் பனிக்கும் பாக்கம்' (நற். 127)

என்று இசைக்கின்றார். அன்னங்கள் அத்துணை உயரத்தில் சென்று தங்காது, நீர் நிலையின் அருகிலுள்ள மணல் மேட்டில் இருந்து தம் சிறகுகளை உலர்த்தும் என்பார்.

"நெடுங்கழி துழை இய குறுங்கா லன்னம்
அடும்பமர் எக்கர் அஞ்சிறை உளரும்" (அகம். 320)

என்று உரைக்கின்றார்.

வயலருகேயுள்ள பரந்த ஒரு நீர்நிலையின் கரையில் பிரம்பும் ஈங்கையும் வளர்ந்திருக்கின்றன. அவற்றின் இடையே மாமரம் ஒன்று மிக உயரமாக நில்லாது கிளை விரிந்து தழைத்துத் தளிரொடு தாழ இருக்கிறது. மீனுண் குருகு ஒன்று ஈங்கையின் பூங்கொத்தில் இருப்ப, காற்றால் மாந்தளிர் அதன் புறத்தைத் தடவி யசைய, அஃது இனிது உறங்குகின்றது. இதனைக் கண்ட சாத்தனார் இனிய சொல்லோவியம் எழுதுவாராய்,

"பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய,
முட்கொம்பு ஈங்கைத் துய்த்தலைப் புதுவீ
ஈன்ற மாத்தின் இளந்தளிர் வருட
வார்குருகு உறங்கும் நீர்சூழ் வளவயல் " (அகம். 306)

என்று இசைக்கின்றார். பிறிதோரிடத்தே, பசிய அரும்பும் சிவந்த பூவும் உடைய முருக்க மரத்தில் குயிலொன்று உட் கார்ந்து, அப்போது மலர்ந்த பூக்களைக் கோதி, அவற்றின் தாதினை அருந்துகிறது. பின்பு, அதனை விட்டு நீங்கி, புதுத்தளிர் ஈன்ற மாமரத்தை யடைந்து, அசைகின்ற தளிர்க்கொத் தில் இருந்து கொண்டு கேட்போர் விரும்புமாறு கூவுகிறது. இஃது இளவேனிற் காலத்தின் இயல்பு. இவ்வியல்பினை நன்கு கண்ட சாத்தனார்,

"...... ….. ….. சினைய
பாசரும் பீன்ற செம்முகை முருக்கின் அப்
போதவிழ் அலரி கொழுதித் தாதருந்து
அந்தளிர் மா அத்து அலங்கல் மீமிசைச்
செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம்
இன் இள வேனில்" (அகம். 229)

என்று பாடுகின்றார்.

இறுதியாக ஒன்று காட்டி இப்பகுதியினை முடிக்கின்றாம். நம் சாத்தனார் முல்லை நிலம் ஒன்றைக் காண்கின்றார். அந்நிலம் செம்மண் நிலம். மழை நன்கு பெய்திருக்கிறது. காடு தழைத்துப் பூத்து இனிதாக இருக்கிறது. காயா மரங்கள் நீலநிறமான பூக்களைப் பூப்ப, அவை தரையில் உதிர்ந்து கிடக்கின்றன. அவற்றின் இடையிடையே செக்கர்ச்செவேரென வுள்ள தம்பலப் பூச்சிகள் மேய்கின்றன. அவற்றோடு, புதர்களில் படர்ந்துள்ள முல்லைக் கொடிகள் பூப்ப, அவற்றின் பூக்களும் உதிர்ந்து கிடக்கின்றன. செந்நிலத்தே புல்லின் பசுமையும், காயாம் பூவின் நீலமும், தம்பலப் பூச்சியின் செம்மையும், முல்லைப் பூவின் வெண்மையும் மனக்கண்ணால் கூர்ந்து நோக்கினார் நம் தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோராகிய சாத்தனார். இதனை நமக்கு வழங்க வேண்டுமென்ற அருள், அவரது உள்ளத்தைச் செலுத்த, அதன் வழிநின்று, வினைமுற்றிய சிறப்பும், தன் காதலிமேற் சென்ற பேரன்புமுடைய தலைமகன் ஒருவன் கூற்றில் வைத்து,

"வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென,
மணிமருள் பூவை யணிமலர் இடையிடைச்
செம்புற மூதாய் பரத்தலின், நன்பல
முல்லை வீகழல் தாஅய், வல்லோன்
செய்கை யன்ன செந்நிலப் புறவு" (அகம். 134)

என்று தாமும் ஓர் சொல்லோவியம் தீட்டி விட்டார். இனி, இவை போலவரும் பிறவற்றையும் விரிப்பின் இம்முன்னுரை மிக விரியும் என்று அஞ்சி விடுக்கின்றாம்.
---------------------

II. நூல்.

இதுகாறும், சீத்தலைச் சாத்தனார் பாடிய தொகை நூற்பாட்டுக்களை ஓராற்றால் ஆராய்ந்து அவரது புலமைச் சிறப்பைக் கண்டோம். சொற்களை வறிதே செலவிடாது, ஒவ்வொன்றும் நன்கு பயன்பட வழங்குதலும், இயற்கைப் பொருளை உள்ளவாறே எடுத்துக் காட்டுதலும், வெளிப் படையாகவும் மறைமுகமாகவும் குறிப்பாகவும் உணர்த்தற்குரிய கருத்துக்களை ஏற்றவாறு புலமை நலம் விளங்கக் கூறலும் பிறவும் அவருடைய புலமைப் பண்பாதலை இனிது தெளிந்தோம். இனி, அவர் பாடிய இம் மணிமேகலையின் நலத்தைக் காண்பது வேண்டி, முதற்கண், கதைச் சுருக்கத்தைத் தருகின்றாம்.

இக் காப்பியத்துக்குத் தலைவியாய மணிமேகலை, காவிரிப் பூம்பட்டினத்துப் பெருங்குடி வணிகனான கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள். கோவலன் மதுரையில் கொலை யுண்டது கேள்வியுற்று, மாதவி துறவு பூண்டு பௌத்த சங்கத்து அறவணவடிகள் என்பவர்பால் நால்வகை வாய்மையும் ஐவகைச் சீலமும் கேட்டுத் தெளிந்து அவ்வறத்தை மேற்கொண்டு ஒழுகுகின்றாள். மணிமேகலையும் ஆடலும், பாடலும் அழகும் சிறந்திருந்த போதும், "தாயைப்போல மகள், நூலைப் போலச் சீலை” என்ற பழமொழிக் கிணங்கத் தானும் அப்பெளத்த தருமங்களைப் பின்பற்றி ஒழுகி வருகின்றாள்.

காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா நடைபெறுகிறது. விழாவில் மாதவியும் மணிமேகலையும் கலந்து கொள்ளவில்லை. மாதவியின் தாயான சித்திராபதி, வயந்த மாலையை மாதவி பால் செலுத்தி, அவள் விழாவிற்கு வாராமையால் ஊரவர் அலர் கூறுகின்றனரென உரைத்து வரச் செய்கின்றாள். வயந்த மாலை, மாதவியையும் மணிமேகலை யையும் மலர் மண்டபத்தே காண்கின்றாள். அவட்கு மாதவி,

"மாபெரும் பத்தினி மகள் மணி மேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படா அள்" (2:55-57)

என்று கூறித், தான் மாதவர் உறைவிடம் புகுந்து, அறவணவடிகள் பால் வாய்மையும் சீலமும் கேட்டு அறம்பூண்டொழுகுவதைத் தெரிவித்து இதனைச் சித்திராபதிக்குச் செப்புக என்று விடுக்கின்றாள்.

அப்போது, மாதவி யுரைத்தவற்றைக் கேட்டிருந்த மணிமேகலை கோவலனுற்ற துயர் கேட்டுக் கண்ணீர் வடிப்ப, அந்நீர் அவள் தொடுத்திருந்த பூமாலையை நனைத்து அதன் தூய்மையைச் சிதைக்கவே, மாதவி, அவளைச் சுதமதியுடன் மலர்வனம் புகுந்து புதுப்பூக்கள் வேறே கொணருமாறு பணிக்கின்றாள். இருவரும் விழாவயரும் பல தெருக்களைக் கடந்து, உவவனம் என்னும் அழகிய மலர்ச் சோலையை அடைந்து மலர் கொய்கின்றனர்.

நகரத்தே காலவேக மென்னும் பட்டத்தி யானை மதம் பட்டுத் திரிய, அதனை உதய குமரன் என்னும் அரசகுமரன் அடக்கிப் பணிவித்து, தான் ஒரு தேர் ஊர்ந்து வருகையில், மணிமேகலை மலர்வனம் சென்றிருத்தலைக் கேள்வியுற்று, ஆங்கே குறுகவர, தேரொலி கேட்ட மணிமேகலை, சுதமதியை நோக்கி, உதய குமரன் என்பாற் காதல் மிகக் கொண்டுள்ளான் என்று யான் அறிவேன். இஃது அவன் தேரொலிபோல இருக்கிறதே; இதற்கு யான் என் செய்வேன்" என்று கூறுகின்றாள். சுதமதி மனம் துளங்கி, அருகிருந்த பளிக்கறை மண்டபத்தில் அவளை ஒளித்து விடுகின்றாள். உதயகுமரன் அவளை யணுகி, "மணிமேகலை தனித்து வந்ததற்குக் காரணம் என்னை?" என்று வினவ, சுதமதி, மக்கள் யாக்கையின் புன்மை யியல்புகளை விளங்கக் கூறுகின்றாள். அப்போதில், பளிக்கறையின் உள்ளேயிருந்த மணிமேகலையின் படிவம் அவன் கண்ணிற்குப் புலனாகிறது.

உடனே, மணிமேகலையை யடைய எண்ணி, அவ்வறையின் வாயிலைக் கையால் தடவி நோக்கிக் காணமாட்டாது, "அவள் எத்திறத்தாள்?" எனச் சுதமதியைக் கேட்ப, அவள், ”இம் மணிமேகலை, தவவொழுக்கமும் சபிக்கும் வன்மையும் காமம் கடந்த வாய்மையும் உடையள் " என்று உரைக்கின்றாள். அது கேட்கும் அவன், மணிமேகலை “செவ்வியளாயின் என் செவ்வியளாக" எனச் செப்பி விட்டு நீங்குவோன், "இனி, இவளைச் சித்திராபதியால் சேர்வேன் " என்று சொல்லி ஏகுகின்றான். பின் வெளிவந்த மணிமேகலை, தன் நெஞ்சம் அவன்பால் செல்வது கண்டு, “இதுவோ, அன்னாய், காமத்தின் இயற்கை,” என்று வியந்து, "இதன் இயற்கை இதுவாயின், இஃது என்பால் கெடுக" என்று மொழிந்து நிற்குங்கால், இந்திரவிழாக் காணப் போந்த மணிமேகலா தெய்வம் ஒரு பெண் வடிவிற் போந்து, பளிக்கறையில் இருந்த புத்த பீடிகையை வலங்கொண்டு உயரத்தில் எழும்பி நின்று பலவாறு ஏத்தி நிற்ப, பகற்போது நீங்குகிறது; அந்தியும் இரவும் ஒன்றன்பின்னே ஒன்றாக வருகின்றன.

பின்பு, மணிமேகலா தெய்வம், சுதமதியை அவ்வனத்திற்கு இருவரும் வந்த காரணம் கேட்டறிந்து, "இது முனிவர் வனமாதலை யறிந்து உதயகுமரன் தீங்கு செய்யாது சென்றான்; அவற்கு மணிமேகலைபால் எழுந்த வேட்கை தணிந்திலது; இப்போது வெளியே செல்லின் அவன் அகப் படுத்திக் கொள்வன்; நீவிர் இருவரும் சக்கரவாளக் கோட் டத்திற்குச் செல்க” என்று சொல்ல, சுதமதி, “சுடுகாட்டுக் கோட்டம் எனப்படும் இதனைச் சக்கரவாளக் கோட்டமென்று கூறுதற்குக் காரணம் யாது?" என்று வினவுகின்றாள். அத் தெய்வம் காரணம் கூறுகிறது. சிறிது போதில் சுதமதி உறங்கவும், மணிமேகலையை மயக்கி, அத்தெய்வம் அவளைத் தழுவி யெடுத்துக் கொண்டு சென்று மணிபல்லவம் என்னும் தீவையடைந்து ஆங்கே ஓரிடத்தே அவளை வைத்துவிட்டுச் சென்று விடுகிறது.

சென்ற தெய்வம் உதய குமரனை யடைந்து, அவன் முன்னே நின்று, அரசு முறையின் இயல்பை எடுத்தோதி, "தவத்திறம் பூண்ட மணிமேகலைபால் வைத்த வேட்கை யொழிக" என்று கூறுகிறது. பின்பு, அத்தெய்வமே, சுதமதியை யடைந்து, அவளை யெழுப்பித் தன்னை இன்னா ரென்று அறிவித்து, தான் இந்திரவிழாக் காண வந்ததும் மணிமேகலையை மணிபல்லவத்தே வைத்ததும் சொல்லி, ”மணிமேகலை தன் பழம்பிறப்புச் செய்திகளை யறிந்து கொண்டு இற்றைக்கு ஏழாம் நாள் இங்கே வருவள்; அவள் வேற்று வடிவம் கொள்ளினும் நினக்குத் தன்னை மறைக்காள்; இச் செய்திகளை யான் கூறியதாக மாதவிக்குச் சொல்லுக; அவட்கு என்னைத் தெரியும்; அவள் தான் பெற்ற மகட்குப் பெயரிடும் நாளில், யான்,

”காமன் கையறக் கடுநவை யறுக்கும்
மாபெருந் தவக்கொடி ஈன் றனை யென்றே
நனவே போலக் கனவகத் துரைத்தேன்;" (7 : 36-38)

இதனையும் அவட்குக் கூறி நினைப்பூட்டுக,' என்று சொல்லி நீங்கி விடுகிறது.

மணிமேகலையின் பிரிவாற்றாத சுதமதி வருத்தத்துடன் சக்கரவாளக் கோட்டத்திலுள்ள உலகவறவியின் பக்கத்தே நின்று வருந்த, அங்கிருந்த தூணிற் செய்த பாவையொன்று தெய்வச் சாயை பெற்று, சுதமதியின் பழம்பிறப்புச் செய்தி யும், காவிரிப்பூம் பட்டினத்திற்கு அவள் வந்த வரலாறும் கூறி,

"இன்றேழ் நாளில் இடையிருள் யாமத்துத்
தன் பிறப் பதனொடு நின் பிறப்புணர்ந்து ஈங்கு
இலக்குமி யாகிய நினக்கு இளை யாள் வரும்
அஞ்சல் என்று " (7 : 106-109)

உரைக்கின்றது. சிறிது போதில் பொழுது விடிகிறது. அவள் மாதவிபால் சென்று நிகழ்ந்தது முற்றும் அவட்குக் கூறுகின்றாள். இருவரும் மணிமேகலையின் பிரிவு நினைந்து வருந்தி யிருக்கின்றனர்.

மணிபல்லவத்தே தனித்திருந்த மணிமேகலை விழித் தெழுந்து வேற்றிடமாதலை யறிந்து மனம் மருண்டு, "உவ வனத்தின் ஒருபுறம்போலும் இது" என்று நினைந்து, பின்னர்ச் சுதமதியைக் காணாது கலங்கி, அரற்றியும் உரப்பியும் அலமருகின்றாள்; அங்கும் இங்கும் அலைந்து நோக்குகின்றாள்; கோவலனை நினைக்கின்றாள்; கோவெனக் கதறிப் புலம்புகின்றாள். அவளெதிரே, புத்தனாகிய

"பெருந்தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும்
பொருவறு சிறப் பின் புரையோர் ஏத்தும்
தரும பீடிகை" (8 : 61-63)

தோன்றுகிறது. அதனைக் கண்டதும், அவட்குக் கைகள் அவளை யறியாமலே தலைமேற் சென்று குவிகின்றன; கண்கள் நீர் உகுக்கின்றன. அதனை அவள் மும்முறை வலம் வந்து விழுந்து வணங்கி யெழுகின்றாள். எழும்போதில் அவட்குப் பண்டைப் பிறப்பில், தான் அசோதா நகரத்து இரவிவன்மன் என்னும் வேந்தற்கும் அமுதபதியென்பாட்கும் இலக்குமி என்னும் மகளாய்ப் பிறந்து, அத்திபதியென்னும் அரசன் மகனான இராகுலன் என்பானை மணந்து வாழ்ந்ததும், அவனொடு வாழ்ந்து வருநாளில் பிரமதரும முனிவனை வணங்கி அறங்கேட்டதும், இராகுலன் திட்டிவிடம் என்னும் பாம்பால் இறப்பத் தான் தீப்புகுந்து இறந்ததும், அப்போது அம்முனிவன், நீ வரும் பிறப்பில் மணிபல்லவத்தில் மணி மேகலாதெய்வத்தால் இராகுலனது மறுபிறப்பை அறிவாய் என்று உரைத்ததும் பிறவும் நன்கு தெரிந்து கொள்கின்றாள். உடனே மணிமேகலை அம்மணி மேகலா தெய்வத்தை நினைந்து வருந்துகின்றாள். அப்போது, மணிமேகலா தெய்வம் அங்கே போந்து தரும் பீடிகையைப் புத்தனாகவே எண்ணித் துதித்து நிற்க, அத்தெய்வத்தை நோக்கி, மணிமேகலை இராகுலனது பிறப்பை வினவுகின்றாள். அத்தெய்வம் அவன் பிறப்பும் ஏனைச் சுதமதி மாதவி முதலாயினார் பிறப்பும் கூறி, மணிமேகலைக்கு எதிர்வில் நிகழ விருப்பனவும் வேற்றுருக்கோடல், அந்தரம் திரிதல் என்ற இரண்டிற்கு முரிய மந்திரமும் கூறி நீங்குகிறது. நீங்குங்கால், ஒன்று நினைவு கூர்ந்து,

"மறந்ததும் உண்டென மறித்தாங்கு இழிந்து,
சிறந்த கொள்கைச் சேயிழை, கேளாய் :
மக்கள் யாக்கை உணவின் பிண்டம்;
இப்பெரு மந்திரம் இரும்பசி யறுக்கும் என்று
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து”

சென்று விடுகிறது.

மணிமேகலை, தானும் உடனே புறப்படாது, அம்மணி பல்லவத் தீவிலுள்ள மணற்குன்றம், பூஞ்சோலை, பொய்கை முதலியவற்றைக் கண்டு வருகின்றாள். அவள் எதிரே தீவ திலகையென்பாளொருத்திவந்து மணிமேகலையை யார் என்று வினவ, இவள் தன் பழம்பிறப்பும் இப்பிறப்பும் சேரக் கூறுகின்றாள். மணிமேகலைக்குத் தீவதிலகை தான் இந்திரன் ஏவலால் பீடிகை காவல் புரிந்து வருவதும், பீடிகையின் இயல்பும் கூறி, "இற்றை நாள், இங்கே உள்ள கோமுகிப் பொய்கையில் அமுதசுரபி யென்னும் பாத்திரம் வெளிப்படு நாளாகும். அது முன்நாளில் ஆபுத்திரன் கையில் இருந்தது. நாம் அங்கே சென்றால், அப்பாத்திரம் நின்கைக்கு வரும்;

"ஆங்கு அதிற் பெய்த ஆருயிர் மருந்து
வாங்குநர் கையகம் வருத்துத லல்லது
தான் தொலை வில்லாத் தகைமைய தாகும்." (11 : 48-50)

அதன் வரலாற்றை நின் ஊரில் அறவண அடிகள்பால் கேட்கலாம்; வருக" என்று சொல்லி அப்பொய்கைக்கு அழைத் தேகுகின்றாள். இருவரும் கோமுகியை வலஞ்செய்து நிற்ப, அமுதசுரபி யெழுந்து வந்து மணிமேகலையின் கையில் தங்குகிறது. தீவதிலகை பசிப்பிணியின் கொடுமையைப் பலபடக் கூறி அதனைத் தீர்ப்பதாகிய நல்லறத்தைச் செய்யுமாறு மணிமேகலைக்கு உரைக்க, அவளும் மகிழ்வோடு இசைந்து, "வெயிலென முனியாது புயலென மடியாது" எவ்விடத்தும் எக்காலத்தும் சென்று, பசிப்பிணியால் வாடுவோரைக் கண்டு,

”.......... ........விஞ்சைப் பாத்திரத்து
அகன் சுரைப் பெய்த ஆருயிர் மருந்து அவர்
முகம்கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன்" (11: 116-118)

என்று கூறுகின்றாள். தீவதிலகையும் பெரு மகிழ்ச்சியுற்று, 'இப்பாத்திரம்,

"அறம்கரி யாக அருள் சுரந் தூட்டும்
சிறந்தோர்க் கல்லது செவ்வனம் சுரவாது;
ஆங்கன மாயினை, அதன் பயன் அறிந்தனை " (11: 120-122)

இனி, நீ செல்க' என்று விடுப்ப, மணிமேகலை பீடி கையை வழிபட்டு, வான் வாழியாகக் காவிரிப்பூம்பட்டினம் வந்து, வாடி வருந்தித் தன் வருகை நோக்கியிருக்கும் மாதவி சுதமதி என்ற இருவரையும் கண்டு, அவர்தம் பழம் பிறப்பும், அமுத சுரபியின் இயல்பும் கூறுகின்றாள். யாவரும் மகிழ்கின்றனர். பின்பு மூவரும் அறவணவடிகள் இருக்கும் இடத்துக்குச் சென்று அவரைக் கண்டு வணங்குகின்றனர். மணிமேகலை தான் மலர்வனம் புக்கது முதல் நிகழ்ந்த அனைத்தும் அவர்க்கு உரைக்கின்றாள்.

அறவண அடிகள், மணிமேகலைக்கு மாதவி சுதமதி யென்ற இருவரது பழம்பிறப்பு வரலாறும், முற்பிறப்பில் தான். அவர்களைக் கண்டதும், சக்கரவாளத்துத் தேவரனை வரும் துடிதலோகம் சென்று, பிரபாபாலரை இரப்ப, அவர் அறம் செழித்தல் வேண்டிப் புத்தனாகத் தோன்றியதும், அவன் தோற்றச் சிறப்பும் பிறவும் கூறி, நின்னால் இங்கே பல நிகழ்ச்சிகள் நிகழ விருக்கின்றன; இம்மா தவியும் சுதமதியும் நின்னுடன் புத்தனை வணங்கி அவன் காட்டிய நல்வழிப் படர்குவர்; நீ பெற்ற அமுதசுரபி கொண்டு மக்களது பசிப்பிணி தீர்க்கும் பேரறத்தை மேற்கொள்க " என்று உரைக்கின்றார். மணிமேகலையும் அப்பாத்திரத்தைக் கையில் ஏந்திக் கொள்கின்றாள்.

அதைக் கண்டதும் அவ்வறவணவடிகள், ஆபுத்திரன் வரலாறும், அவன் வீடுதோறும் ஐயமேற்றுக் 'காணார் கேளார், கால் முடப்பட்டோர், பேணுநர் இல்லோர், பிணி யுற்றோர் ' முதலிய பலர்க்கு உணவூட்டிவந்த திறமும், அவற் குச் சிந்தாதேவி இப்பாத்திரத்தைத் தந்ததும், அவன் அதுகொண்டு உணவு தரும் நல்லறம் உவந்து செய்து வந்ததும், இந்திரன் செய்கையும், அவன் சாவகநாட்டிற்குச் செல்லுங்கால் மணிபல்லவத்தில் விடப்பட்டதும், அப்பாத்திரம் பயன்படாமையின், அவன் அதனைக் கோமுகியில் எறிந்துவிட்டு உண்ணா நோன்பு கொண்டு உயிர் துறந்து சென்று சாவக நாட்டில் ஒரு பசு வயிற்றிற் பிறந்து சிறந்ததும், அவனைப் பூமிசந்திரன் என்ற அந்நாட்டு வேந்தன் தனக்கு மகனில்லாமையின் மகனாகக் கொண்டு பேணினமையும் அவன் புண்ணியராசனாய் அரசுரிமை யெய்தியது மெல்லாம் எடுத்துக் கூறுகின்றனர்.

பின்பு அவர், மணிமேகலையை நோக்கி, "இப்போது நாட்டில் வறன் உண்டாகி யிருக்கிறது. நீ இவ்வமுதசுரபியை வறிதே வைத்திருத்தல் முறையன்று" என்று சொல்லி விடுப்ப, அவள் பிக்குணிக் கோலங் கொண்டு திருவோடேந்தித் தெருவில் வருகிறாள். அவளைக் கண்டோர்,

"உதய குமரன் உளங்கொண் டொளித்த
மது மலர்க் குழலாள் வந்து தோன்றிப்
பிச்சைப் பாத்திரம் கையிலேந் தியது
திப்பியம் " (15 : 67-70}

என்று வருந்துகின்றனர். காய சண்டிகை யென்னும் விஞ்சை மகள் வந்து மணிமேகலையைக் கண்டு, "ஆதிரையென்னும் கற்புடையாளின் மனையில், முதன் முதலாக ஐயமேற்றல் நன்று" என்று கூறுகின்றாள். அவ்வாதிரையின் வரலாற்றியும் குறிப்பொடு மணிமேகலை காயசண்டிகையை நோக்க, அவள், ஆதிரை கணவனான சாதுவன் வரலாறும், ஆதிரையின் கற்பு மாண்பும், சாதுவன் நாகரை நல்வழிப் படுத்தியதும், பின்பு அவள் சந்திர தத்தனென்னும் வணிகனது வங்கமேறி வந்து ஆதிரையை யடைந்து அறம் புரியலுற்றதும் விரித்துரைத்து, "அவள்பால் பிச்சை பெறுக" என்கின்றாள். மணிமேகலை மனம் இசைந்து ஆதிரை மனையெதிரே “புனையா ஓவியம் போல" நிற்ப, அவள் அமுதசுரபி நிறைய "மாதிர மடங் கலும் பசிப்பிணி யறுக” என்று உணவைப் பெய்கின்றாள்.

அதுகொண்டு மணிமேகலை பசித்தோர்க்கு உணவளிக்கின்றாள்; உணவோ எடுக்க எடுக்கக் குறையாது சுரக்கின்றது. காயசண்டிகை தன்னைப்பற்றி யிருந்த யானைத்தீ என்னும் நோய் கெடுமாறு உணவுண்டு, தன் வரலாறு முற்றும் கூறித் தொழுது விடைபெற்றுப் போகின்றவள், “உலகவறவியில் பசித்தோர் பலர் உளர்; அங்கே செல்க" என்று சொல்லிவிட்டுப் போகின்றாள். மணிமேகலையும் அவ்வண்ணமே சென்று பசிப் பிணி தீர்க்கும் நல்லறத்தைச் செய்கின்றாள். இவள் செயல் இது வாக, இதனை யறிந்த சித்திராபதி, மாதவியும் மணிமேகலையும் செய்வன நாடக் மகளிர்க்கு அடுப்பன அல்ல எனச் சினங் கொண்டு, வஞ்சினம் மொழிந்து, உதயகுமரனை யடைந்து மணிமேகலையின் செய்தியைக் கூறுகின்றாள். அவன் பண்டு அவளைப் பளிக்கறையில் கண்டதும், தெய்வம் போந்து செங் கோன்மை காட்டி, மணிமேகலையை மறப்பாய் என்றதும் கூற, சித்திராபதி அவனைத் தன மாயமொழியால், மயக்கி விடவும், அவன் மணிமேகலையைக் கண்டு, நற்றவம் பூண்டதற்குக் காரணம் நவில்க என்கின்றான். அவன் தனக்கு முன்பிறப்பிற் கணவனாதலின் அக்கருத்துடன் வணங்கி,

"பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட் டிரங்கலும்
இறத்தலும் உடையது, இடும்பைக் கொள்கலம்,
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்" (18 : 136-139)

என்று சொல்லிச் சம்பாபதியின் கோயிலுக்குள் நுழைந்து காயசண்டிகையின் வடிவுடன் வெளிவருகின்றாள். அதுகண்டு திடுக்குற்ற உதயகுமாரன், தானும் சம்பாபதிமுன் சென்று, "மாயையால் மறைந்த மணிமேகலையைக் காட்டல் வேண்டும்; காட்டியருளா-யாயின், பன்னாளாயினும் பாடுகிடப்பேன்; மணிமேகலையின்றி யான் போகேன்; உன் அடி தொட்டேன்; இஃது என்குறை" யென்று வேண்டுகின்றான். அப்போது அங்கிருந்த பாவைகளுள் ஒன்று தெய்வமுற்று,

"ஏடவிழ் தாரோய் ! எங்கோ .மகள் முன்
நாடாது துணிந்து நாநல் கூர்ந்தனை," (19 : 3-4)

என்கின்றது. அதனால் உதயகுமரன் மனம் வருந்தி, "பின்னர்க் காண்பாம்" என்று சொல்லிக் கொண்டு போய் விடுகின்றான். பின்பு மணிமேகலை காயசண்டிகை வடிவிலேயே சிறைக் கோட்டம் சென்று ஆங்கே பசித்திருந்தோர்க்கு உணவு தருகின்றாள். சிறைக்காவலர் சென்று, அரசற் குணர்த்த, அவன் மணிமேகலையைத் தருவித்து, அமுதசுர பியின் அருமை யறிந்து, "யான் செயற் பாலது யாது?" என்று கேட்கின்றான்; மணிமேகலை “சிறைக் கோட்டத்தைச் சீத்து அறவோர்க்குரிய அறக்கோட்ட மாக்குதல் வேண்டும்" என்று கூற, அவ்வாறே சிறைக்கோட்டம் அறக் கோட்டமாக்கப் படுகிறது.

இச் செய்திகளை யெல்லாம் கேள்வியுற்ற உதயகுமரன், அவளைப் பற்றித் தன் தேர்மேற் கொணர்ந்து அவள் கூறும் வித்தையும் அறிவுடை மொழியும் கேட்க மனங்கொண்டு உலக வறவியை அடைகின்றான். அப்போது, காயசண்டிகையைக் காணாத அவள் கணவன் காஞ்சனனென்பவனும் ஆங்கு வருகின்றான். காயசண்டிகை வடிவில் இருக்கும் மணிமேகலை அவனருகே செல்லாது, உதயகுமரன் பக்கலில் நின்று, நரை மூதாட்டி யொருத்தியைக் காட்டி யாக்கையின் புன்மை கூறித் தெருட்டுகின்றாள். காஞ்சனன் பொறாது, "இவன் இவட்குக் காதலனாயினன்" எனத் தவறாக வுணர்ந்து, ஆங்கே ஓரிடத்தே மறைந்திருக்கின்றான். உதய குமரன் இடையிருள் யாமத்தே வந்து தன் கருத்தை முற்றுவித்துக் கொள்ள எண்ணி, நீங்கி, இடையிருள் யாமத்தே வருகின்றான். அவனைக் கண்டதும் காஞ்சனன் அவன் பின்னே சென்று தன் கைவாள் வீசி உதயகுமரனை வீழ்த்தி, மணிமேகலையைப் பற்றிக் கொண்டு செல்லத் துணிந்து அவள் இருக்குமிடம் போகின்றான். அக்காலை, கந்திற்பாவை காஞ்சனனுக்குக் காயசண்டிகை வான்வழியே போகுங்கால் விந்தாகடிகையின் வயிற்றில் அடங்கிய வரலாற்றைக் கூறி, "உண்மை தெளியாது நீ செய்த தீவினை நின்னை நீங்காது வந்து பற்றும் " என்று தெருட்ட அவன் வருத்தத்துடன் செல்கின்றான்.

மணிமேகலை உறக்கம் நீங்கி நிகழ்ந்தது கண்டு தன் உண்மை வடிவுடன் உதயகுமரனுக்காகப் புலம்ப, கந்திற் பாவை அவளைத் தடுத்து உதயகுமரன் வெட்டுண்டு வீழ்தற் கேதுவாகிய பழம்பிறப்பு வரலாற்றை யுரைத்து, எதிர்காலத்தில் இனி அவட்கு நிகழ விருப்பனவும் தெரிவிக்கின்றது. அது கேட்கும் மணிமேகலை மனமயக்கம் தீர்கின்றாள்; பொழுதும் விடிகிறது.

சக்கரவாளத்து மாதவர் மணிமேகலையால் உதயகுமரற்கு உற்றது தெரிந்து அரசற்குரைப்ப, அவன் மந்திரியாகிய சோழிக ஏனாதியை நோக்கி, ”உதயகுமரனை ஈமத்தேற்றிக் கணிகை மகளாகிய மணிமேகலையைக் காவல் செய்க," என்று கட்டளை யிடுகின்றான்; மணிமேகலை சிறையிடப்படுகின்றாள் .

மணிமேகலை காரணமாகத் தன் மகன் இறந்தது கேட் டறிந்த இராசமா தேவி, அவளை வஞ்சனையால் துன்புறுத்தக் கருதி, அரசனிடம் இனிய நன்மொழி பலபேசி, மணிமேகலையைத் தன்பால் இருக்கச் செய்கின்றாள். மணிமேகலைக்கு மயக்க மருந்தளித்தும், கற்பழிக்க முயன்றும், உணவளியாது விடுத்தும் வருத்துகின்றாள்; மணிமேகலை அவையனைத்தையும் வென்றுவிடுகிறாள். அது கண்டு அஞ்சிய இராசமா தேவிக்கு மணிமேகலை அறம் பல கூறி, உதயகுமான் பழம்பிறப்பு வரலாற்றைத் தெளிய உரைத்து, காமம், உயிர்க்கொலை, பொய் முதலியவற்றின் தீங்குகளைக்காட்டித் தேவியைத் தேற்றி நிற்ப, இராசமாதேவி மணிமேகலையை வணங்க, அது பொறாத மணிமேகலை அவளை வணங்குகின்றாள்.

அப்போது சித்திராபதி போந்து, இந்திரவிழா நடை பெறாதாயின் காவிரிப்பூம் பட்டினத்திற்கு உண்டாகக்கூடிய தீங்கும், மணிமேகலா தெய்வம் கூறியிருக்கும் கட்டுரையும் உரைத்து மணிமேகலையைத் தன்னோடு வரவிடுமாறு வேண்ட, இராசமாதேவி மறுக்கின்றாள். அதே சமயத்தில் மணிமேகலையை மீட்டற்பொருட்டு அறவணவடிகளும் மாதவியும் சுதமதியும் தேவியிடம் வருகின்றனர். தேவி அடிகளை வணங்க, அவர் அவட்கு நிதானம் பன்னிரண்டும் தெளியவுரைத்து, மணிமேகலையை நோக்கி, ”வேற்றிடங்கட்குச் சென்று பிற அறங்களைக் கேட்டுத் திரும்பும்போது, இவ்வறங்களை விளங்க உரைப்பேன்" என்று சொல்லிவிட்டுப் போகின்றார். மணிமேகலையும் வான்வழியாக ஆபுத்திரன் புண்ணியராச னாய்ப் பிறந்து ஆட்சி புரியும் நாட்டையடைந்து, தருமசாவகன் என்னும் முனிவன் இருக்கும் இடத்தில் இருக்கின்றாள்.

அங்கே புண்ணியராசன் வந்து, முனிவனை வணங்கி அறங்கேட்டு, மணிமேகலையை நோக்கி, "இவள் யார்?" என்று வினவுகின்றான். அருகே நின்ற கஞ்சுகி யொருவன் தான் காவிரிப்பூம்பட்டினம் சென்றிருந்தபோது அறவண வடிகளால் சுட்டப்பட்ட மணிமேகலையே இவள் என்று கூற, உடனே மணிமேகலை அரசனை நோக்கி, “அரசே, உன் கையிலிருந்த அமுத சுரபியே என் கைப்புகுந்தது; நீ உன்னை மறந்தனை; உடனே மணிபல்லவத்துக்கு உன் பழம்பிறப்பை அறிய வருக" என்று சொல்லி விசும்பு வழியாக, மணிபல்லவம் சென்று தரும் பீடிகையை வணங்கி நிற்கின்றாள். புண்ணிய ராசன் அரண்மனை யடைந்து, அமரசுந்தரி என்னும் தாயார் தன் பிறப்பு வரலாறு கூறக் கேட்டுத் தான் அரச போகத்தில் ஆழ்ந்து கிடந்தமை நினைந்து வருந்த, அமைச்சன், அரசற்குரிய அறம்பலவும் மொழிகின்றான். அரசன், "யான் மணிபல்லவம் சென்று திரும்புதற்கு ஒரு திங்கட் காலம் பிடிக்கும்; அதுகாறும் இந்நாட்டைக் காத்துவருக" என்று சொல்லி, பிற உரிமைச் சுற்றத்தையும் விட்டு மணி பல்லவம் வந்து சேர்கின்றான்.

அவனை மணிமேகலை யெதிர் கொண்டு சென்று தரும பீடிகையைக் காட்ட, அவன் வணங்கித் தன் பிறப்பைத் தெரிந்து கொள்கின்றான். அங்கே தீவதிலகை போந்து புண்ணியராசனுக்குப் பழம் பிறப்பில் நிகழ்ந்த சிலவற்றைக் கூறி, மணிமேகலையைப் பார்த்துக், காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதும், அதற்குரிய காரணமும் விரியக்கூறி, மாதவியும் சுதமதியும் அறவணவடிகளும் இதனை யறிந்து வஞ்சி-மாநகர்க்குச் சென்று விட்டனர் என்று சொல்லுகின்றாள். மணிமேகலை, பிரியமாட்டாது வருந்தும் புண்ணியராசனைத் தேற்றி, அவனைத் தன் நாட்டிற் கேகுமாறு பணித்துத் தான் மட்டில் வான்வழியாக வஞ்சி நகரை யடைந்து, கண்ணகி கோயிலுக்குச் சென்று வணங்கி நிற்கின்றாள்.

கண்ணகி, தன் கணவன் கோவலனுக்குற்ற தீங்கிற்கு ஏதுவாகிய பழம் பிறப்பு வரலாற்றைத் தான் மதுராபதியிடத்துக் கேட்டதைக் கேட்டவாறே உரைத்து இனி எதிர் காலத்தில் தனக்கு (கண்ணகிக்கு) நிகழ விருப்பனவும் சொல்லி, ”இனி, நீ சென்று பல்வகைச் சமயவாதிகளைக் கண்டு அவர் தம் அறங்களைக் கேட்பாயாக; அதற்கு நீ வேற்று வடிவம் கொள்க" என்று உரைக்கின்றாள். மணிமேகலை, தனக்கு மணிமேகலா தெய்வம் தந்த மந்திரத்தால் ஒரு மாதவன் வடிவு கொண்டு, சமயக் கணக்கர் வாழும் இடம் சென்று, அவர்களுள், பிரமாணவாதி முதல் பூதவாதி ஈறாகப் பலரையும் கண்டு அவர் தம் அறங்களைக் கேட்டுக் கொண்டு, வஞ்சி நகரின் பல அழகிய இடங்களைப் பார்த்து மகிழ்வுற்று, பௌத்தப் பள்ளி யடைந்து அங்கே தவம் பூண்டிருக்கும் கோவலன் தந்தையான மாசாத்துவானைக் காண்கின்றாள். அவனுக்குத் தனக்கு நேர்ந்தது முற்றும் உரைக்கின்றாள். அவனும், தன் வரலாறு முழுதும் கூறி, "அறவணவடிகளும், மாதவியும் சுதமதியும் கச்சிமாநகர்க்குச் சென்று விட்டனர்; அங்கே மழைவளம் இன்மையின் மக்கள் பசியால் வாடுகின்றனர்; ஆண்டுச் செல்க" என்று உரைக்கின்றான்.

மணிமேகலை, தன் உண்மை வடிவுடன் கச்சி நகரையடைந்து அதன் நடுவண் சென்றிருக்க, அவள் வருகையைக் கஞ்சுகன் ஒருவன் அறிந்து, அரசனான இளங்கிள்ளிக்கு உரைக்கின்றான். அரசன், "கந்திற்பாவை கூறியது முற்றும் உண்மையாயிற்று' என்று மகிழ்ந்து மணிமேகலையைக் கண்டு, தன் நாடு வறங் கூர்ந்ததும், தெய்வம் தோன்றி மணி பல்லவத்துப் போலப் பொய்கையும் பொழிலும் சமைக்கு மாறு பணிக்கத் தான் அவ்வாறே செய்ததும் அவட்குக் காட்டுகின்றான். பின்பு, அங்கே, தீவதிலகைக்கும் மணிமேகலா தெய்வத்துக்கும் படிமமும் கோயிலும் நிறுவி விழாவும் சிறப்பும் நிகழ்த்தப்படுகின்றன. மணிமேகலை பின்பு அமுதசுரபி கொண்டு பசிப்பிணியால் வருந்தும் மக்கட்குப் பேருணவு வழங்கி அவர் தம் வருத்தம் போக்குகின்றாள். அச்செய்தி நாடு முழுதும் பரவுகிறது. அறவணவடிகளும் மாதவியும் சுதமதியும் மணிமேகலையிருந்த அறச்சாலைக்கு வருகின்றனர். அவர்களை இனிது வரவேற்று நல்லுண வளித்து மணிமேகலை இன்புறுகின்றாள்.

பின்பு, அறவணவடிகள் காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதும், தாங்கள் மூவரும் கச்சிநகர்க்கு வந்த தும் கூறுகின்றார். மணிமேகலை தனக்கு நிகழ்ந்தன பலவும் கூறித் தான் சமயக் கணக்கர் பலரையும் சமயப் பொருள் கேட்டதும், அவை செம்மையாக இன்மையின் சிந்தையில் வையாமையும் சொல்லித் தனக்குப் புத்தன் சொல்லிய மெய் யறத்தை விளம்புமாறு வேண்டுகின்றாள். அவர் புத்த சமயத்துத் தருக்க நெறியும், பிறவும் கூறுகின்றார். அதன்மேல் மணிமேகலை, "புத்தம் சரணங்கச் சாமி, தர்மம் சரணங்கச் சாமி, சங்கம் சரணங்கச் சாமி” என்றவற்றை மும்முறை சொல்லி வணங்கி அடிகளை இரந்து நிற்க, அவர், அறங்குன்றிய காலத்துப் புத்தர் தோன்றி, போதியின்கண் இருந்ததும், அவர் உரைத்தருளிய பன்னிரு நிதானங்களின் தோற்ற வொடுக்க நெறிகளும் பிறவும் விரியக்கூறி, ”நின் மனத்திருள் நீங்குக" என்று அருளுகின்றனர். மணிமேகலை "தவத் திறம் பூண்டு தருமம் கேட்டுப் பவத்திறம்” அறுவேன் என நோற்கலுறுகின்றாள்.
--------------

III. நூற்புணர்ப்பு



இதுகாறும் கூறிய கதைச் சுருக்கத்தை வகுத்து நோக்கின், மணிமேகலை மலர்வனம் புகுதலும், மணிமேகலா தெய்வத்தால் பின்பு மணிபல்லவம் சென்று தன் பழம் பிறப்பும் அமுதசுரபியும் மந்திரமும் பெறுதலும், பின்னர்க் காவிரிப் பூம்பட்டினம் போந்து பசித்தோர்க்கு உணவளித்தலும், அவனைக் காதலித்த உதயகுமரன் காஞ்சனன் என்னும் விஞ்சையனால் கொலையுண்டலும், அது காரணமாக அவள் சிறைப் படுதலும் சிறை வீடுபெறுதலும், ஆபுத்திரன் நாட்டிற்குச் சென்று அவனை மணிபல்லவம் கொணர்ந்து பழம் பிறப்பறி வித்தலும், அவனின் நீங்கி, வஞ்சிமாநகர் சென்று சமயக் கணக்கர் தம் சமயத்திறம் கேட்டலும், காஞ்சி நகர்க்குவந்து அறவணர் பால் புத்தரோதிய அறம் கேட்டுத் தெளிந்து "பவத்திறம் அறுப்பேன் " என்று நோற்றிருத்தலும் இக் காவியத்தின் சிறப்புடைய நிகழ்ச்சிகளாம் என்பது இனிது விளங்கும்.

இவற்றை நமக்கு உரைக்கப்புகுந்த இந்நூலாசிரியர், இந்நிகழ்ச்சிகளுடன் சுதமதி, தீவதிலகை, காயசண்டிகை, ஆதிரை முதலியோர் வரலாறும், சக்கரவாளக் கோட்டம், தரும் பீடிகை, காவிரிப்பூம்பட்டினம் கடல் கோட்படுதல் முதலியவற்றின் வரலாறும், உதயகுமரன், ஆபுத்திரன், துவதிகன், சுகந்தன், தருமதத்தன், கோவலன் முதலியோர் வரலாறும் எனச் சுமார் பதினைந்துக்கு மேற்பட்ட வரலாறுகளை இணைத்து, விழாவறை காதை முதல் பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை யீறாக முப்பது காதைகளாக விரித்தோதுகின்றார். பதிகம் நீங்கலாகக் காதை முப்பதும் சிறிது குறைய ஐயாயிர மடிகளில் இயன்றுள்ளன.

இக்காப்பிய நிகழ்ச்சியுடன் கிளைக்கதைகள் வந்து இயைந்து செல்லும் செலவு, தொடக்கத்தே ஒரு மலையடியில் தோன்றும் யாறொன்று இடையிடையே தோன்றிவரும் சிற்றாறுகளின் சேர்க்கையால் பெருகித் தங்கு தடையின்றி யேகும் காட்சியினை நினைவில் தோற்றுவிக்கின்றது. காவிரிப் பூம்பட்டினத்தில் கால் கொள்ளும் இக்காப்பிய நிகழ்ச்சி, மணி பல்லவம், சாவக நாடு என்ற இரண்டில் நிகழும் நிகழ்ச்சி வந்து கூட வஞ்சிக்குச் சென்று, பின்பு காஞ்சியை யடைந்து கடை நிலை யெய்துகின்றது. இவ்வாறு பதினைந்திற்கு மேற்பட்ட நிகழ்ச்சியோடு விரவி யொழுகிய போதும், காப்பியப் பொது நிகழ்ச்சி சிறிதும் சிக்குண்டு தெளிவுபடும் திறம் பெறவே இல்லை. இவையாவும் காரண காரிய முறையிலும் எடுத்துக் காட்டு வகையிலும் வந்து இயைவதால், படிப்போர்க்குக் காப்பிய நிகழ்ச்சியைப் பின்பற்றிச் செல்லுதற்குச் சிறிதும் அருமை தோன்றுவது கிடையாது. ஒரு நிகழ்ச்சியைக் கண்டபின் இதன் விளைவு என்னவோ எனப் படிப்போரைத் திகைப்பித்துத் தெளிவிக்கும் புலமைத் திறம் இக்காப்பியக் காலத்தில் இல்லை. அத்திறம் இதன் கண் அமைந்திருந்திருப் பின், இதனிற் சிறந்ததோர் இலக்கியம் வேறே இல்லை யென்றே துணிந்து கூறிவிடலாம்.

இவ்வாறு இம்மணிமேகலை வரலாற்றை நம் சாத்தனார் ஆற்றொழுக்காகச் சொல்லிச் செல்வதன் நோக்கம் யாதாகும்? உலகில் மக்கள் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு காரணம்பற்றி நிகழ்கின்றதேயன்றி வேறில்லை; அக்காரணம் முன்னைப் பிறவியினும் தோன்றும்; இப்பிறவியினும் தோன்றும். மக்கட்கு உண்டாகும் நலந்தீங்குகள் யாவும் காரணமாகிய முன்னை வினையின் பயனே; பிறப்புப் பலமாறி னும் வினைப்பயன் விடாது வந்து பற்றும் என்ற ஒன்றை வற்புறுத்துதலே இவர் நோக்கமாக உடையர் என்பது தோன்றுகிறது. இவ்வகையில் இவர் நோக்கமும் இளங்கோவடிகள் நோக்கமும் ஒன்றாதல் விளங்கும். ஏனைச் சமயக் கணர் தம் சமயப் பொருள் காட்டி, புத்த சமயத்தின் கருப் பொருளை உணர்த்தல் வேண்டும் என்பது இரண்டாவதே யாகும்.

இனி, இக்காப்பியத்தை உரைக்கப்புகுந்த இவர், மணிமேகலையை மலர்வனத்துக்குக் கொணரக் கருதி, விழாவறை காதையால் இந்திரவிழா நிகழ்ச்சியைப் புலப்படுத்தி, ஊர் அலர் உரைத்த காதையால், மாதவியும் மணிமேகலையும் தவவொழுக்கினரானது உணர்த்தி அதுவாயிலாக மணிமேகலையை மலர்வனம் புகுவிக்கின்றார். அப்பொழுது, மணிமேகலை தனித்துச் செல்லுதல் கூடாது என்பதை வற்புறுத்து முகத்தால் தனித்துவந்து கெட்ட தன் வரலாற்றைத் தோழியாகிய சுதமதியைச் சொல்விக்கின்றார்.

இனி, மணிமேகலையை மணிபல்லவத்துக்குக் கொண்டு போகக் கருதிய சாத்தனார், உதயகுமரனுக்கு மணிமேகலைபால் உள்ள காதலைத் தோற்றுவித்து, அவனை அவ்வனத்திற்கு வருவிக்கின்றார். அவனது ஆண்மையை காலவேகத்தை அடக்கினா னென்பதாலும், மணிமேகலைக்கும் அவன்பால் காதலுண்மையை அவன் தேரொலி கேட்டு அவள் சுதமதிக்கு உரைக்கும் உரையாலும் தெரிவித்து, அவனின் நீக்குவது காரணமாக மணிமேகலா தெய்வத்தை வருவித்து மணிமேகலையை மணிபல்லவத்துக்குக் கொண்டு போகின்றார். மணிபல்லவத்தில் மணிமேகலையின் பழம்பிறப்பு வரலாறும், தரும பீடிகை வரலாறும், அமுதசுரபி வரலாறும், தீவதிலகை வரலாறும் வந்து சேர்கின்றன. இங்கே மணிமேகலா தெய்வத்தால் கொடுக்கப்பெறும் மந்திரம், பின்பு அவள் உலக வறவியில் உதயகுமரன் கைப்படாது தப்பற்குக் காயசண்டிகை வடிவு கோடற்கும்; அரசன் தேவி கற்பழிக்க முயன்ற போது ஆணுருக்கோடற்கும்; சமயக் கணக்கர்பால் சமயப் பொருள் கேட்டற்குத் தவத்தோன் வடிவு கோடற்கும்; அரசன் தேவி உணவு கொடாது துன்புறுத்த நினைத்த போது, உணவு துறந்திருத்தற்கும்; வான்வழியாக மணி பல்லவத்திருந்து காவிரிப்பூம்பட்டினம், ஆங்கிருந்து சாவக நாடு, வஞ்சி, காஞ்சி முதலிய இடங்கட்கும் சேறற்கும் பயன் படுகிறது. காயசண்டிகையின் வரலாறு உதயகுமரனைக் கொல்லுதற்கும், அதுவே வாயிலாக மணிமேகலையைச் சிறைப்படுத்தற்கும் உதவுகிறது. ஆதிரையின் வரலாறு அமுதசுரபியில் பெய்த சோறு கொடுக்கக் குறைபடா வளம் பெறுதற்கு ஓராற்றால் மதிப்புத் தருகிறது. ஆபுத்திரன் வரலாறு அமுதசுரபியோடு இணைந்து நல்வினையின் மாண்பை எடுத்துக் காட்டுகிறது.

இவ்வாறே சக்கரவாளக் கோட்டம், கந்திற்பாவை யென்றவற்றின் வரலாறுகளும், இந்திரவிழா வரலாறும், அதனைக் காவிரிப்பூம்பட்டினத்தார் மறத்தற்கு ஏதுவாகும் வரலாறுகளும், கற்புடை மகளிரைக் காமுறுவார் எய்தும் கேட்டிற்கு வேண்டும் எடுத்துக் காட்டுக்களும் பிறவும் முன்னே கூறியவாறு இக்காப்பிய நிகழ்ச்சியில் ஆங்காங்கு வந்து சேர்கின்றன. அவற்றை ஈண்டு விரிப்பதால் பயனில்லை .

எங்குச் செல்லினும் மாதவியுடன் சுதமதி பிரியாது வருதற்குக் காரணம் கூறுவார், மணிமேகலையின் பழம் பிறப்பில் உடன் பிறந்தவளாயிருந்த வரலாறும், மணிமேகலைக்கு உதயகுமரன்பாலும், அவனுக்கு மணிமேகலைபாலும் காதலுண்டாயதற்குக் காரணமாக, அவன் முன்னைப் பிறப்பில் இராகுலன் என்ற பெயருடன் கணவனாயிருந்தான் என்ற வரலாறும், அவன் கொலையுண்டதற்குக் காரணம், அப்பிறப்பில் அவன் தன் மடையனைக் கொன்ற வரலாறும் பிறவும் காட்டப் படுகின்றன. மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்குத் துணை செய்தற்கு உரிய காரணமும், கோவலன் மதுரையில் கொலையுண்டதற்குற்ற காரணமும் ஈங்கும் கூறப்படுகின்றன.

இவ்வாறு நிகழும் நிகழ்ச்சி யொவ்வொன்றிற்கும் முன் னைப் பிறவியிற்செய்த வினையைக் காட்டுமிடத்து, காஞ்சனன் உதயகுமரனைக் கொலை செய்தற்கும், கண்ணகி மதுரையை எரித்தற்கும் காரணம் அவரவர் வரலாறே காட்டு தலால், இத் தீவினைப் பயனை மறுபிறவியில் நுகரக்கடவர் என்றும் கூறி விடுகின்றார். உயிர்கள் தம் வினைப்பயன் நுகர்தற்குப் பிறந் தும் இறந்தும் மீட்டும் பிறந்தும் வரும் என்பதை நேரிற் கண்டு காட்டுதற்குச் சான்றாக அறவணவடிகள் வந்து சேர் கின்றார்.
------------------

IV. நூலிற்கண்ட சிலருடைய குணஞ்செயல்கள்.

இக்காப்பியத்தின்கண் வரும் ஆண்களும் பெண்களும் மிகப் பலராதலின், அவருள், மணிமேகலையின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையோரை மட்டில் எடுத்துக் கொள் வாம். ஆடவரில், மாவண்கிள்ளி, உதயகுமரன், ஆபுத்திரன், அறவணவடிகள், காஞ்சனன் என்போரும், பெண்மக்களில், மணிமேகலை, மாதவி, சுதமதி, காயசண்டிகை, இராசமாதேவி, சித்திராபதி, என்போருமாவர்.

1. மாவண்கிள்ளி. உதயகுமரனுக்குத் தந்தையாகிய இவ் வேந்தன் பெயர் மாவண்கிள்ளி யென்றே கூறப்படு கிறது. ஒரு காலத்தே இவனைப் பகைத் தெதிர்த்த சேர பாண்டியர்களைக் காரியாறு என்னும் யாற்றின் கரையில் தன் பின் பிறந்தோனால் வென்று வாகை சூடினான். (மணி. 19 : 119-27) இவன் மனைவியின் பெயர் சீர்த்தி யென்பது. இவன் அரசுமுறை கோடாச் செங்கோன்மையும் மானமும் உடை யன். இவன் ஒரு நாள் தன் தேவியுடன் பூங்காவில் இனி திருக்கையில் மணிமேகலை காயசண்டிகை வடிவுடன் சிறைக் கோட்டம் புகுந்து உணவளிப்பதனைக் காவலர் போந்து கூறக் கேட்டு, அவளை உடனே தன் முன் வருவித்து, வினவ, அவள் அமுத சுரபியின் சிறப்பைக் கூறினாளாக, அதனைக் கேட்டதும், அவள் செயலை வியந்து பாராட்டி, "யான் செயற்பாலது என்?" என்று வினவுகின்றான். பின்பு அவள் விரும்பியவாறே சிறைக்கோட்டத்தை மாற்றி அறவோர்க்கு உரிய கோட்ட மாக்குகின்றான். உதயகுமரன் காஞ்சனனால் கொல்லப்பட்டதைக் கூறவந்த சான்றோர், அதனைக் கூறாது, பத்தினிப் பெண்டிரையும் தவமகளிரையும் காமுற்றுக் கெட்ட வேந்தர் சிலர் வரலாறுகளைக் கூற, இவ்வேந்தன் அவர்தம் குறிப்பறிந்து,

"இன்றே யல்ல என்றெடுத் துரைத்து,
நன்றறி மாதவிர் / நலம்பல காட்டினிர்;
இன்றும் உளதோ இவ்வினை?" (22 : 163-65)

உரையும் " என்று வினவுகின்றான். அவர்கள் உதயகுமரன் கொலையுண்டது கூறுகின்றனர். மகன் தவறு செய்ததனால் அவன் பொருட்டு வருந்தாது, மந்திரியை நோக்கி,

”யான் செயற் பாலது இளங்கோன் தன்னை
தான் செய்ததனால் தகவிலன் விஞ்சையன் " (22 : 206-207)

எனக் காஞ்சனன் செய்கையை வெறுத்துரைப்பதும்,

"மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்று எனில் இன்றால்; (22 : 208-209)

என அரசு முறையின் அமைதி கூறலும்,

“மகனை முறைசெய்த மன்னவன் வழி ஓர்
துயர்வினை யாளன் தோன்றினன் என்பது
வேந்தர் தம்செவி யுறுவதன் முன்னம்
ஈங்கு இவன் தன்னையும் ஈமத் தேற்றிக்
கணிகை மகளையும் காவல் செய்க' (22 : 210-14)

என்பதனால் அவனுடைய மானவுணர்வும், மணிமேகலையைச் சிறை செய்யும் ஆட்சி நலனும் இனிது புலனாகின்றன.

மணிமேகலை சிறையில் இருக்கும்போது அவளைத் தன் பால் கொண்டு வைத்துத் தீங்கிழைக்க எண்ணி வந்து அர சனை வேண்டிய அவட்கு அச்சோழர் பெருமான் அவளது உட்கருத்தை யுணராது, மகன்பால் குற்ற முண்மையும் மணி மேகலைப்பால் அஃது இன்மையும் தேர்ந்து அரசி அம் மணி மேகலையின் சிறப்புணர்ந்து அவளைத் தன்னோடு உடனிருக்க விரும்புகின்றாள் என்று வியந்து,

"சிறப்பின் பாலார் மக்கள்; அல்லார்
மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது
அறிந்தனை யாயின் இவ் வாயிழை தன்னைச்
செறிந்த சிறைநோய் தீர்க்க'" (23 : 31-34)

என்று சொல்லுகின்றான். இதனால் இவனுடைய உள்ளம் மிக்க நேர்மையுடைய பென்பது நன்கு விளக்கமெய்துகிறது.

2. உதயகுமரன். இவன் மாவண் கிள்ளிக்கு மகன்; மிக்க ஆண்மையும் மனவன்மையு முடையவன். காவிரிப்பூம்பட்டினத்தில் விழா நிகழும் போது காலவேக மென்னும் பட்டத்தி யானை மதம்பட்டுத் திரிய, அதனை இவனொருவனே அடக்கி யொடுக்குகின்றான் (4 : 44-6). மணிமேகலைபால் இவனுக்குப் பெருங் காதலுண்டு. எட்டி குமரன் ஒருவனால் அவள் மலர்வனம் சென்றிருப்பது தெரிந்து வருபவன், உவ வனத்தே சுதமதியைக் கண்டு மணிமேகலை இளமை நலம் கனிந்திருக்கும் திறத்தை வெளிப்படமொழிந்து,

"மாதவர் உறைவிடம் ஒரீ இ மணிமேகலை
தானே தமியள் இங்கு எய்தியது உரை" (4 : 103-4)

என்று வினவ, அவள் செவ்வன் இறைமொழியாது யாக்கை யின் இயல்புகூற அமைதியுடன் கேட்கின்றான். பளிக்கறை யில் மணிமேகலையின் உருவம் தெரியக் கண்டதும் காமத்தீ யெழுந்து அவன் உள்ளத்தைக் கடாவ, பளிக்கறையின் உள் புகக் கருதி வாயில் தேடிக் காண்கின்றான், மாட்டாமையின், சுதமதியை நோக்க, அவள் மணிமேகலை ' தவவொழுக்கி னள்; சாபம் தரும் வன்மையள் ' என்று அச்சுறுப்ப, அத
னால் ஒருவாறு மனம் நீங்கிச் செல்வோன்,

"சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழீ இ?
நிறையு முண்டோ காமம் காழ்க்கொளின் ?
செவ்விய ளாயின் என் செவ்விய ளாக " (5:19-21)

என்று சொல்லிச் செல்கின்றான். செல்கின்றவன் மணிமேக லையை “ வவ்விய நெஞ்சினனாய்ச் செல்கின்றான். தவவொழுக் கம் பூண்டாளாயினும், காமச் செவ்வி முதிர்ந்தவழித் தன் செவ்வியளாவள் என்று நினைத்தலின், அவனை ஆசிரியரும், " வவ்விய நெஞ்சமொடு அகல்வோன் " (5: 22) என்கின்றார். பின்பு அவன் சுதமதியின் வரலாறு கேட்பது தோழியிற் கூட்டம் பெற முயல்வோன் கூற்றாக இருத்தலும் நோக்கற் பாலது. அற்றாக, இதன் அரும்பத வுரைகாரர், " அவ்விய நெஞ்சமொடு அகல்வோன்" என்று கொண்டு, “ஒளவியம் பிறர்க்கு இவள் உரியளாதல் கூடுமோ என்பதால் உளதாகிய பொறாமை" என்று கூறுகின்றார். அவன் அவ்வாறு நினைத் தற்கு வேண்டும் ஏது ஒன்றும் அவள் அவன்பால் நடந்து கொண்டதிலோ, அவன் கூறுவனவற்றிலோ இல்லாமையால், அவ் வரும்பதக் குறிப்புப் பொருந்தாமை யுணரப்படும்.

சுதமதியின் வரலாறு கேட்டதும், அவளால் மணிமேக லையைப் பெற முடியாதென்று அவன் உணர்ந்தமை தோன்ற,

"வஞ்சி நுண்ணிடை மணிமே கலை தனைச்
சித்திரா பதியால் சேர்தலும் உண்டு" (5 : 81-82)

என்று செப்பிவிட்டுச் செல்கின்றான். இதனாலும் அவன் எப் போதும் அவ்விய நெஞ்சத்தனாகாமை தெளியப்படும்.

உதயகுமரன் மணிமேகலையை வவ்விய நெஞ்சினனாதலை உணர்ந்த மணிமேகலா தெய்வம் அவன் முன் தோன்றி, செங்கோன்மையின் சிறப்புணர்த்தி,

"தவத்திறம் பூண்டோள் தன் மேல் வைத்த
அவத்திறம் ஒழிக" (7:13-4)

என்று உரைக்கவும், அவன் அஃது ஒழியாது, இருத்தலை யும், மணிமேகலை ஓடேந்திப் பிச்சையேற்று இல்லோர்க்கு உதவுதலையும் அறிந்த சித்திராபதி அவனிடம் போந்து அவன் மயங்கத் தகுவன கூறியபோது, அவன் தான் அவளைப்பளிக் கறையில் கண்டு பாவையென்று ஒருவாறு எண்ணிவரத் தெய் வம் தோன்றி, அவள் பால் கொண்ட நினைவை யொழிக என்றதைச் சொல்லி,

"தெய்வங் கொல்லோ திப்பியங் கொல்லோ
எய்யா மையலேன் யான் " (18 : 84-5)

என்று கூறுகின்றான்; அவன் "எய்யா மையலை 'ச் சித்திரா பதி தன்மதி நுட்பத்தால் மாற்றிவிடலும், அவன் " இடங் கழி காமமொடு அடங்கானாகி, " மணிமேகலையைக் கண்டு,

" உடம்போடு என் தன் உள்ளகம் புகுந்து என்
நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி!
நோற்றூண் வாழ்க்கையின் நொசிதவம் தாங்கி
ஏற்றூண் விரும்பிய காரணம் என்? எனத்" (18:120- 23)

தானே தனித்து நிற்கும் போது அவளைக் கேட்க வேண்டு மென்று நினைத்துச் சென்றவன், அவளை அவ்வாறே கண்ட விடத்துத் தான் நினைத்தபடியே வினவாது,

"நல்லாய்! என் கொல் நற்றவம் புரிந்தது?
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப" (18: 126-7)

அவனது மனத்தடுமாற்றம் அறிந்து, மணிமேகலை "கேள்வியாளரில் தோட்ட செவியை நீ யாகுவையெனில் " என்று தொடங்கிச் சில கூறுகின்றாள். அது நிற்க, இவன், அவளை நேரிற் கண்டதும், அவளது தவநிலையும், தெய்வம் கூறியதும், சுதமதி சொல்லும் கெஞ்சை அலைப்ப, அலைப் புண்டு, “ கேட்கலாமோ, ஆகாதோ," என்று, தனக்குள் தடு மாறிப் பின்பு சிறிது தேறி நயமாகக் கேட்டல் நன்று என்று துணிந்து, "நல்லாய், என்கொல் நற்றவம் புரிந்தது? சொல் லாய் " என்று துணிந்து கேட்கின்றான். இதனால், மணிமேக லையின் வனப்புக் கண்டுடைந்த மனவலி, சுதமதியும் தெய்வ மும் கூறியவற்றால் கலங்கியதாயினும், சித்திராபதியின் சொல்லால் ஒருவாறு திண்ணிதாகியும் மீட்டும் அம்மணி மேகலையின் தவ வுருவால் கெட்டழி தலைக் காண்கின்றோம்.

மணிமேகலை காயசண்டிகை வடிவில் தோன்றலும், "மணிமேகலை மறைந்து சம்பாபதியின் கோயிலில் உள்ள சுதைப் பாவைகளுள் ஒன்றாயினாள் போலும்; இவளைச் சம் பாபதியால் பெறலாம்" என எண்ணி, அத்தெய்வத்தின் முன்நின்று, தன் வேட்கை நன்கு புலப்பட,

“மாயையின் ஒளித்த மணிமேகலை தனை
ஈங்கு இம் மண்ணீட்டு யாரென உணர்கேன்;
ஆங்கவள் இவள் என்று அருளா யாயிடின்
பன்னா ளாயினும் பாடு கிடப்பேன்
………. …………… ……….
முதியா ளுன் றன் கோட்டம் புகுந்த
மதிவாண் முகத்து மணிமேகலை தனை
ஒழியப் போகேன்; உன்னடி தொட்டேன்
இது குறை " (18 : 155-172)

என்று கூற, இவன்பால் மனத்தெளிவின்மை கண்ட அத் தெய்வம், ஒன்றும் கூறாதொழியப் பாவையொன்று, "எம் சம்பாபதிமுன் தகா தன மொழிந்து நல்கூர்ந்தனை " என்கின்றது.

இவற்றை யெல்லாம் கேட்டுப் பெருங் கலக்கமுற்றுச் செல்லும் உதயகுமரன் தனக்குள்ளே,

"அங்கவள் தன் திறம் அயர்ப்பாய் என்றே
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம்;
பையர வல்குல் பலர்பசி களையக்
கையி லேந்திய பாத்திரம் திப்பியம்;
முத்தை முதல்வி அடி பிழைத் தாய் எனச்
சித்திரம் உரைத்த இதூ உம் திப்பியம் ' (19: 9-14)

என்று நினைத்து, " இதனைப் பின்னும் காண்பாம்," என்று செல்கின்றான். இவற்றால் எல்லாம் மனமாற்ற முறாது மணி மேகலைபாற் கொண்ட காமத்தால் மனவலி யுடையனாய்ச் செல்லும் இவனது செலவு குறிக்கத் தக்கது; இவன் கற்ற கல்வி இப்போது துணை செய்கின்றதில்லை; 'காதல் மிக் குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால்" எனத் திருத்தக்க தேவர் கூறுவது உண்மை யா தல் காண்க.

மணிமேகலை வேண்டுகோட் கிசைந்து, சோழ வேந்த னான மாவண்கிள்ளி சிறைக்கோட்டத்தை அறக்கோட்ட மாக்கியது கேள்வி யுறுகின்றான் உதயகுமரன்; அவனுக்கு அவள் பால் எழுந்த காமவேட்கை அளவு கடந்து மிகுகிறது. அறிவு, ஆண்மை, நேர்மை, நாணுடைமை, மானம் முதலிய நற்பண்பு பலவும் கெட்டழிகின்றன. அவளது முயக்கின்பம் கிடைக்காவிடினும், அவளுரைக்கும் விச்சையும் முதுக்குறை முதுமொழியுமேனும் கேட்டுத் தன் வேட்கையைத் தணிக் கக் கருதுகின்றான்.

”....... ……. தோட்டார் குழலியை
மதியோ ரெள்ளினும் மன்னவன் காயினும்
பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று,
பற்றினன் கொண்டு என் பொற்றே ரேற்றிக்
கற்றறி விச்சையும் கேட்டு, அவ ளுரைக்கும்
முதுக்குறை முதுமொழி கேட்குவன்" (20 : 13-18)

என்று அவன் மனம் கொண்டு செல்கின்றான். உலக வறவி யில் இவன் வரவு கண்ட மணிமேகலை இவன்பால் வந்து, இவன் காதற் குறிப்புணர்ந்து, அதனை மாற்ற நினைந்து, தகுவன பல கூறுகின்றாள். அக்கூற்றால், " மணிமேகலையே காயசண்டிகை வடிவில் இருக்கின்றாள்; மாயவிஞ்சையால் என்மனம் மயக்குறுக்கின்றாள்; இவளை இடையிருள் யாமத்துப்போந்து கொண்டேகல் வேண்டும்" என்று துணிந்து மீள்கின்றான். பின்பு இடையிருள் யாமத்தே போந்து விஞ்சையனால் கொல்லப்படுகின்றான்.

3. ஆபுத்திரன் : இவன் வரலாறு ஆபுத்திரன், புண் ணியராசன் என்ற இருகூறாய் அடங்கும். இதனைப் பாத்திரம் பெற்ற காதையில் தோற்றுவாய் செய்து, ஆபுத்திரன் திறமறி வித்த காதையில் அவன் பிறப்பும் வளர்ப்பும் அறம் செய்த லும் கூறி, பாத்திர மரபு கூறிய காதையில் அவன் சிந்தா தேவியால் அமுதசுரபி பெற்றதும், இந்திரன் சூழ்ச்சியால் அறஞ்செய்தற் கிடனின்றாகச் சாவகநாடு செல்லுதலும். வமி யில் மணிபல்லவத்தே இறத்தலும் சாவகநாட்டில் அவன் பிறத்தலும் உரைத்து, பாத்திரங் கொண்டு பிச்சைபுக்க காதையில், அந்நாட்டு வேந்தனான பூமிசந்திரன் என்பானால் வளர்க்கப்பெற்றுப் புண்ணியராசனாய் அரசனாதலும், ஆபுத் திரன் நாடடைந்த காதையில் மணிமேகலை அவன் அரசாளும் சாவக நாடு செல்லுதலும், ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதையில் மணிமேகலை அவனை மணிபல்லவத்திற்கு வருவித்துப் பழம் பிறப்புணர்வித்துப் பின்பு அவன் நாட் டிற்குச் செல்லுவித்தலும் கூறப்படுகின்றன. இவற்றால், இம் மணிமேகலைக் காப்பியப் பகுதிகள் பதிகம் ஒழிந்த முப் பதனுள் ஆறுகாதைகள் இவ்வாபுத்திரன் வரலாறு கூறுவன வாதல் உணரப்படும்.

ஆபுத்திரன் இளம்பூதி யென்னும் அந்தணனுக்கு வளர்ப்பு மகனாய் வளர்ந்து நன்னூல் பலவும் கற்று விளங் குங்கால், மறையோர் வேள்வியில் கொலை செய்தற்பொருட் டுக் கொணர்ந்திருந்த பசுவைக் கண்டு மனமிரங்கி அதனை இரவிற் கொண்டு போகையில், அந்தணர் வந்து அவனைப் பற்றிப் பலவாறு வைது ஏசியபோது. 'நோவன செய்யன் மின் நொடிவன கேண்மின்" (13 : 50) என்று கூறி, பசு மக்கட்குப் பயன்படுந் திரத்தை எடுத்தியம்புவது, அவனு டைய அருள் நிரம்பிய உள்ளத்தின் அழகையும் அறிவின் ஒட்பத்தையும் புலப்படுத்துகிறது.

பின்பு அவ்வந்தணர்கள் அவனை " ஆமகனாதற்கு ஒத் தனை" என்று இகழ்ந்துகூற, அவன், "உங்கள் முனிவர் கூட்டத்தே அசலன், சிருங்கி, விரிஞ்சி, கேசகம்பளன் என் பவர் முறையே பசு, மான், புலி, நரி என்ற இவற்றிற்குப் பிறந்தவரல்லரோ?" என்று அவர்களைத் தெருட்டலும், அவர்கள் தெருளாது, இவனைக் " காப்புக்கடை கழிந்து கண வனை யிழந்து' கெட்ட சாலி யென்னும் பார்ப்பனி மகன் என்று இகழ்கின்றனர். அவர்களை நோக்கி, ஆபுத்திரன் நகைத்து, பிறப்பால் உயர்வு தாழ்வில்லை யென்பதை விளக்கு முகத்தால்,

"மாமறை மாக்கள் வருகுலம் கேண்மோ :
……….. ……….. ………………
கடவுட் கணிகை காதலஞ் சிறுவர்;
அருமறை முதல்வர் அந்தணர் இருவரும்;
புரிநூல் மார்பீர் ! பொய்யுரை யாமோ?
சாலிக் குண்டோ தவறு" (13 : 93-98)

என்று சொல்லுகின்றான்.

இவன் மதுரைக்குச் சென்று, தெருக்கள் தோறும் ஐய மேற்றுக், காணார், கேளார் முதலிய பலர்க்கும் உணவூட்டும் அறம் செய்தலும், அவ்வூரிலுள்ள சிந்தாதேவி கோயிலில் தங்கியிருத்தலும் இவனுடைய நற்பண்புகளாகும். நெடுந் தொலை நடந்து இளைத்தும் பசித்தும் ஒருநாள் நள்ளிரவில் வந்து நின்றோரைக் கண்டு இவன் வருந்தவும், சிந்தாதேவி தந்த அமுதசுரபி பெற்று இவன் அவர்கட்கு உணவூட்டி மகிழ்தலும் சிந்தாதேவியைப் பரவுதலும் அறிவுக்கு இன்பந் தருவனவாகும்.

இவனுடைய அறச்செயற்கு மகிழ்ந்து போந்த இந்தி ரன் இவனைக் கண்டு, தான் இந்திரனென்றும் ' வேண்டும் வரம் கேள்' என்றும் உரைக்கும் போது, இவன் அவனைக் கண்டு நகைத்து,

"அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்பு நர்,
நற்றவம் செய்வோர், பற்றற முயல்வோர்,
யாவரு மில்லாத் தேவர் நன்னாட்டுக்கு
இறைவனாகிய பெருவிறல் வேந்தே " (14: 40-43)

என்பதும், “எனக்கு இவ் வமுதசுரபியென்னும் ஓடே அமை யும்" என்பான்,

"வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து அவர் "
திருந்து முகம் காட்டும் தெய்வக் கடிஞை " (14 : 44-45)

என்பதும் பிறவும் இவனது பற்றற்ற உள்ளத்துறவை நன்கு புலப்படுக்கின்றன.

சாவக நாடு வறுமையுற்றது கேள்வியுற்று அங்கே வங்க மேறிச் செல்லும் ஆபுத்திரன் வங்கமாக்களுடன் மணிபல்ல வத்தில் இறங்கி யிருக்கையில், அவர்கள் இவனை அங்கேயே தனிப்ப விட்டுச் சென்றுவிடுகின்றனர். இவனோ சாவகநாட் டில் உண்ண உணவின்றிப் பசிப்பிணியால் வருந்தும் உயிர் கட்கு உணவளித்து உவப்பிக்கும் நல்லறத்தைச் செய்தற் குத் தான் இயலாதிருப்பது தெளிந்து, மனம் வருந்தி, மணிபல்லவத் தீவில் மக்கள் ஒருவரும் இல்லாமையால்,

"மன்னுயி ரோம்பும் இம் மாபெரும் பாத்திரம்
என் உயி ரோம்புதல் யானோ பொறேஎன்
……………. …………… ……….
சுமந்து என் ? பாத்திரம் " (14: 87-90)

என்று வருந்தி உண்ணா நோன்பிருந்து உயிர்விடுதலும், உயிர் விடுங்கால் அப் பாத்திரத்தைக் கோமுகிப் பொய்கை யில் எறிபவன்,

"அருளறம் பூண்டு ஆங்கு ஆருயி ரோம்புநர்
உளர்எனில் அவர்கைப் புகுவாய்" (14: 93-94)

என்று உரைத்தலும் அவனது தனக்கென வாழாத் தகைமை யினைக் காட்டுகின்றன.

ஆபுத்திரன் பின்பு சாவக நாட்டில் பசுவயிற்றிற் பிறந்து ' பூமிசந்திரனால் வளர்க்கப்பெற்றும் புண்ணியராசனாய் அரசா ளும் திறத்தை நம் சாத்தனார் சில சொற்களால் விளக்கிவிடு கின்றார். அது,

"நாக புரம் இது, நன்னக ராள்வோன்
பூமிசந்திரன் மகன் புண்ணிய ராசன்;
ஈங்கிவன் பிறந்த அந்நாள் தொட்டும்
ஓங்குயர் வானத்துப் பெயல் பிழைப் பறியாது;
மண்ணும் மரனும் வளம்பல தரூஉம்;
உண்ணின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் " (24 : 169-74)

என வருவது.

புண்ணியராசனாகிய ஆபுத்திரனை, ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் முதற்கண், தருமசாவகன் என்னும் முனிவன் தவப்பள்ளியில்,

"அறனும் மறனும் அநித்தமும் நித்தத்
திறனும் துக்கமும் செல்லுயிர்ப் புக்கிலும்
சார்பிற் றோற்றமும் சார்பறுத் துய்தியும்
ஆரியன் அமைதியும் " (25: 3-6)

அமைவுறக் கேட்டு மகிழும் நிலையில் நமக்குக் காட்டுகின்றார். அங்கே மணிமேகலை பெண்ணிணையில்லாப் பெருவனப்பும், காமனோடு இயங்காக் கண்ணிணை இயக்கமும் கொண்டு நிற் கின்றாள். அப்போது, அவன்,

“அங்கையிற் பாத்திரம் கொண்டு அறங்கேட்கும்
இங்கு இணையில்லாள் இவள் யார்?" (25:9-10)

என்று முனிவனை வினவுவது இவனுடைய மனத்தூய்மை யும் நல்லொழுக்கமும் நன்குவிளங்கத் தெரிவிக்கின்றது.

அங்கே நின்ற கஞ்சுகன் ஒருவன், மணிமேகலையைப் பற்றித் தான் அறிந்தது கூறுவான்,

”கள்ளவிழ் தாரோய் கலத்தொடும் போகிக்
காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன்,
மாதவன் அறவணன் இவள் பிறப் புணர்ந்து ஆங்கு
ஓதினன் என்றுயான் அன்றே உரைத்தேன் " (25 : 15-18)

என்கின்றமையின், அறவண அடிகளை ஆபுத்திரன் புண்ணி யராசனாகிய பின்பு அறிந்திருத்தல் பெறப்படுகின்றது.

பின்பு, மணிமேகலை அவனுக்கு அவன் பழம் பிறப்புச் செய்தியைக் குறிப்பித்து மணிபல்லவம் வருக என்று சொல்லிவிட்டு வான் வழியாகச் சென்றது கண்டும், புண்ணிய ராசனாகிய தான் ஆன் வயிற்றிற் பிறந்தது அமரசுந்தரியால் அறிந்தும் ஆபுத்திரன் மனம் மாறுபட்டு, அரசபோகமும் காமக் களியாட்டும்,

"தூவறத் துறத்தல் நன்றெனச் சாற்றித்
தெளிந்த நாதன் என் செவிமுதல் இட்டவித்து
ஏத மின்றாய் இன்று விளைந்தது
மணிமே கலை தான் காரண மாக" (25 : 92-5)

என்று மொழிகின்றான்; சனமித்திரன் என்னும் மந்திரி, துறத்தல் நன்றன்று என்றற்கு அவன் தோன்றுதற்குமுன் இருந்த நாட்டின் நிலைமை கூறி, அதன்பின்,

"நீயொழி காலை நின் நா டெல்லாம்
தாயொழி குழவி போலக் கூஉம் :
துயர்நிலை யுலகம் காத்த லின்றி நீ
உயர்நிலை யுலகம் வேட்டனை யாயின்
இறுதி யுயிர்கள் எய்தவும், இறைவ!
பெறுதி விரும்பினை யாகுவை யன்றே;
தன்னுயிர்க் கிரங்கான் பிறவுயிர் ஓம்பும்
மன்னுயிர் முதல்வன் அறமும் ஈதன்றால்;
மதி மாறு ஓர்ந்தனை, மன்னவ " (25: 110-18)

என்கின்றானாக, அது கேட்கும் ஆபுத்திரன், அவற்கு இசைந்து, "ஒரு திங்கட் காலத்தே திரும்ப வந்து சேர்வேன்; அதுகாறும் நாடாட்சி காத்தல் நினக்குக் கடன்," என்பவன், "மணிபல்லவம் வலம் கொள்வதற்கெழுந்த, தணியாவேட்கை தணித்தற் கரிதால் '" (25 : 120-1) என உள்ளத்தின் நினைவை ஒளியாது உரைக்கின்றான்.

மணிபல்லவத்தில் ஆபுத்திரன் தன் பழம் பிறப்பும், தன் பொருட்டு, வங்கமாக்கள் திரும்பப் போந்து உயிர்விட் டதும் பிறவும் அறிந்து வருந்த, மணிமேகலை அவனைத் தேற்றி, " மன்னுயிர்க்கு உண்டியும் உடையும் உறையுளும் வழங்குவதே நல்லறம்" என்று தெளிவிக்கின்றாள். அவட்கு அவன்,

ஃ“என் நாட் டாயினும் பிறர் நாட்டாயினும்
நன்னுதல் உரைத்த நல்லறம் செய்கேன்;
என் பிறப் புணர்த்தி என்னை நீ படைத்தனை;
நின் திறம் நீங்க லாற்றேன் யான் " (25: 234-35)

என்று தன் நன்றியறிவும் பிரிவருமையும் புலப்படுத்துத் தன் பெருந்தகைமையை நம் நெஞ்சத்தே நிறுவுகின்றான்.

4. அறவணவடிகள்: இவரை அறவணன் என்றும், அற வணர் என்றும் வழங்குதலின், இவர் இயற்பெயர் அறவணன் என்றே தெரிகிறது. இவர் மணிமேகலை, மாதவி, சுதமதி, உதயகுமரன் முதலியோரின் முற்பிறவிக்காலத்தே இருந்து வாழ்ந்துவரும் பெரு முதியோராக இருக்கின்றார். மணி மேகலை அறிவறியும் காலத்து இவர் முதியோராய் இருப்பதனை,

"நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின்
உரை மூதாளன்" (12 : 3-4)

என்று இந்நூலாசிரியர் கூறுதல் காண்க. மணிமேகலையைச் சிறைவீடு செய்தற்கு இவர் இராசமாதேவிபால் வந்தபோது, அவளும் இவரது முதுமை கண்டு,

“நாத்தொலை வில்லை யாயினும் தளர்ந்து
மூத்ததிவ் யாக்கை வாழ்க பல்லாண்டு." (24 : 99-100)

என்று கூறுதல் காண்க.

கோவலன் மதுரையில் கொலையுண்டது கேட்டு வரும் திய மாதவிக்கு இவரே வாய்மை நான்கும் சீலமைந்தும் உரைத்துத் தவநெறிப் படுத்துகின்றார் (2 : 60-69); மணி மேகலை மணிபல்லவத்திலிருந்து அமுத சுரபியுடன் திரும்ப வந்ததும், இவரைக் கண்டு வணங்கி, நிகழ்ந்தது கூற, அவட்கு இவர், மாதவியும் சுதமதியுமாகிய இருவரும் முற் பிறப்பில் தாரை வீரை என்ற பெயரின ராய்க் கச்சய நாட்டு வேந்தனான துச்சயனுக்கு மனைவியராய் இருந்ததும், அவ் வேந்தனை, இவ்வடிகள் கண்டு வீரையும் தாரையும் மாய்ந்த செய்தி யறிந்ததும் கூறி,

"ஆடுங் கூத்திய ரணியே போல
வேற்றோ ரணியொடு வந்தீரோ" (12:51-2)

என்று கூறுகின்றார்.

இவர் புத்தன் கூறிய நல்லறம் நாட்டிற் பெருகாமைக்கு இரங்கிக் கூறுவன இவரை அறவணவடிகள் என்பது ஏற் புடையதே என்றற்குச் சான்று பகர்கின்றது. மாதவி, சுத மதி யென்ற இருவரது பழம்பிறப்பைத் தான் அறிந்தமை கூறுமிடத்து, புத்த தருமம் பரவாமைக்கு இரங்கி,

"தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமைசால் நல்லறம் பெருகா தாகி
இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி,
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண்ணடைந்தாங்குச்
செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்லென்று
உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது;
தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
உண்டென வுணர்த லல்லது யாவதும்
கண்டினிது விளங்காக் காட்சி போன்றது;
சலாகை நுழைந்த மணித்துளை யகவையின்,
உலா நீர்ப் பெருங்கடல் ஓடா தாயினும்,
ஆங்கத் துளை வழி உகுநீர் போல
ஈங்கு நல்லறம் எய்தலும் உண் டெனச்
சொல்லலும் உண்டுயான்; சொல்லுதல் தேற்றார்
மல்லல் மாஞாலத்து மக்களே" (12: 57-71)

என்றும், புத்தர்பிரான் தோன்றுங் காலத்தில்,

"பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல,
அளவாச் சிறு செவி அளப்பரு நல்லறம்
உளமலி யுவகையோடு உயிர்கொளப் புகூஉம்". (12 : 79-81)

என்றும் கூறுதலால் அறியலாம். மேலும், இவர் புத்தரது திருவடி பரவுதலே உட்கோளாக வுடையரென்பது,

”போதி மூலம் பொருந்திய சிறப்பின்
நாதன் பாதம் நவைகெட ஏத்துதல்
பிறவி தோறும் மறவேன் " (12: 101-103)

என்பதனால் விளங்குகிறது.

இவர் மணிமேகலை, மாதவி, சுதமதி முதலாயினார்க்கு எதிர்வில் நிகழ இருப்பனவற்றையும் தெரிந்துரைக்கும் அறிவு நலம் சான்றவர். அவ்விருவரையும் கூறுமிடத்து முற் பிறவியில் துச்சயனுடன் பாதபங்கய மலையைக் கண்டு பரவிய காரணத்தால்,

"ஈங்கிவர் இருவரும் இளங்கொடி நின்னோடு
ஓங்குயர் போதி உரவோன் திருந்தடி
தொழுது வலங்கொண்டு தொடர்வினை நீங்கிப்
பழுதில் நன்னெறிப் படர்குவர் காணாய் " (12:110-13)

என்று உரைக்கின்றார். தீவதிலகையும் மணிமேகலா தெய் வமும் கூறியவாறே, இவ்வறவண வடிகள் மணிமேகலையின் எதிர்காலத்தை யுரைத்து, ஆபுத்திரன் வரலாற்றையும் விரி யக் கூறுகின்றார். கூறுபவர், ஆபுத்திரன் மணிபல்லவத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்விடுங்கால் தான் சென்றிருந்த தாகவும், அப்போது அவனை, இவர் “ என்னுற்றனையோ ?" என்று கேட்க, அவன், " தன் உற்றன பல தான் எடுத்துரைத் தனன்" (14: 67-8) என்றும் கூறுகின்றார். ஆபுத்திரன் புண்ணியராசனாய் ஆ வயிற்றில் தோன்றியவன்று நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கண்டு, சக்கரவாளக் கோட்டத் தேவர் பலரும் * கந்திற்பாவையை வினவ, அது,

"மணிபல்ல வத்திடை மன்னுயிர் நீத்தோன்
தணியா உயிருயச் சாவகத் துதித்தனன்,
ஆங்கவன் தன் திறம் அறவணன் அறியும் என்று
ஈங்கென் நாவை வருத்தியது" (15:36-39)

என்று உரைக்கின்றார். இவ்வாறு உரைத்தவர் முடிவில் மணிமேகலையை நோக்கி, “இக் காவிரி நாட்டில் வறமுண்டாகி விட்டது; நீ விரைந்து சென்று இவ்வமுத சுரபியால் பசித் தோர்க்கு உணவளிப்பாயாக" என்பார்,

"வெண்திரை தந்த அமுதை வானோர்
உண்டொழி மிச்சிலை யொழித்து வைத்தாங்கு
வறனோடு உலகின் வான் துயர் கெடுக்கும்
அறனோடு ஒழித்தல், ஆயிழை, தகாது" (15: 51-4)

என்று சொல்லி விடுக்கின்றார். இதனால், உயிர்கட்கு உண வளிக்கும் நல்லறத்தில் மிக்க ஊக்கமுடையர் இவர் என்பது விளங்குகிறது.

மணிமேகலையைச் சிறைமீட்டற் பொருட்டு, இவ்வடி கள் மாதவி சுதமதி என்ற இருவருடன் இராசமாதேவிபால் வர, அவள் இவரை வணங்கி வழிபட்டது கண்டு, அவட்கு அறங்கூறத் தொடங்கி, முதற்கண், மகன் இறந்தது குறித்து,

"தேவி கேளாய், செய்தவ யாக்கையின்
மேவினே னாயினும் வீழ்கதிர் போன்றேன்;
பிறந்தார், மூத்தார், பிணி நோ யுற்றார்,
இறந்தார் என்கை இயல்பே; இதுகேள் " (24 : 101-4)

என்று கூறிப் பின் பேதைமை முதல், வினைப்பயன் ஈறாக வுள்ள பன்னிருவகை நிதானங்களையும் விளக்கி, மணிமேகலையை நோக்கி, இவற்றின் பகுதிகளைத் தான் பிற்கூறுவதா கச் சொல்லி விடுக்கின்றார்.

கச்சிநகர்க்கண் மணிமேகலை இருந்து அறஞ் செய்தலைக் கேள்வியுற்று இவ்வடிகள் ஏனை மாதவியும் சுதமதியுமாகிய இருவருடன் அவள் பால் சென்று அவள் இட்ட உணவுண்டு, காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதற்குரிய கார ணத்தைக் கூறுகின்றார். அது கேட்கும் அவள் இவ்வாறே தனக்குத் தீவதிலகை செப்பியதாக வுரைத்துத் தனக்கு அறங்கூற வேண்டுமென வேண்ட அவற்றைத் தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை என்ற இரண்டாலும் விரித்துரைக்கின்றார்.

5. காஞ்சனன் : இவன் காயசண்டிகை யென்னும் விஞ்சை மகட்குக் கணவன். அதனோடு, உதயகுமரனைக் கொன்ற தனால், இக் காப்பியத்தில் ஒரு தொடர்பு பெறுபவன். இன்றேல், சுதமதியைக் கெடுத்தொழிந்த மாருதவேகன் என்னும் விஞ்சையன் போலப் பெயர் மறைந்து போயிருப் பன். " அக்கரை தீர்ந்தபின் அக்கை மகள் சக்கை" என்று கருதும் மாருதவேகன் போலாது, இக் காஞ்சனன் தன் மனைவி காயசண்டிகைபால் கழியாக் காதல் கொண்டிருப்ப வன். காயசண்டிகை தன் செருக்கினால் முனிவன் சாபத் துக்கு இலக்காயது கண்டும், சிறிதும் வெறாது, அவள்பாற் சென்ற காதலால், இக் காஞ்சனனும் மிக இரங்கி,

"ஆரணங் காகிய அருந்தவன் தன்னால்
காரண மின்றியும் கடுநோ யுழந்தனை" (17:53-4)

என்று கூறுகின்றான். அவள் வானூடேகும் மந்திரம் மறந் ததும், யானைத் தீயால் வருந்துவதும் கண்டு வருந்தி, கனி யும் கிழங்கும் நல்லன கொணர்ந்து தருகின்றான். அவனே, அவள் பசி வருத்தம் கண்டு ஆற்றாது,

"சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
கம்ப மில்லாக் கழிபெருஞ் செல்வர்,
ஆற்றா மாக்கட்கு ஆற்றுந் துணையாகி
நோற்றார் உறைவதோர் நோனகர் உண்டால்;
பலநாளாயினும் நிலனொடு போகி
அப்பதிப் புகுக" (17:62-67)

என்று அருளுடன் கூறுகின்றான். இவ்வாறே ஆண்டு தோறும் காவிரிப்பூம்-பட்டினத்தில் இந்திரவிழா நிகழுந் தோறும் வந்து அவள் பசித் துன்பம் கண்டு வருந்திவிட்டுச் செல்கின்றான்.

இத்துணைக் காதலுடைய இவன் மணிமேகலை காயசண் டிகை வடிவிலிருப்பக் கண்டு, அவளைக் காயசண்டிகையே எனக் கருதிவிடுகின்றான். உதயகுமரன் போலக் கூர்த்த அறிவில்லாமையின், அவளது புறத்தோற்றத்தையே கண்டு மயங்கி விடுகின்றான் இக் காஞ்சனன். உதயகுமரன் தொடக் கத்தே காயசண்டிகையே என்று மயங்கினும் அவள் சொல்லும் செயலும் நோக்கி உண்மை யறிந்தது போல இவ் விஞ் சையன் நோக்கவில்லை. மணிமேகலை உதயகுமரனைக் கண்ட தும் அவன்பாற் செல்லவே, இவன் மனம் பொறாமையால் மூடப்படுகிறது. வெகுளி யெழுகின்றது. உண்மை யறிவு கலங்கி விடுகிறது. அவன் தனக்குள்ளே,

"தற்பா ராட்டும் என் சொற்பயன் கொள்ளாள்,
பிறன் பின் செல்லும்; பிறன் போல் நோக்கும்;
மதுக்கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப்
பவளக் கடிகையின் தவள வாள் நகையும்
குவளைச் செங்கணும் குறிப்பொடு வழாஅள்;
ஈங்கிவன் காதல னாதலின், ஏந்திழை
ஈங்கொழிந்தனள் " (20: 71-78)

என்று சொல்லி, மனம் சினத் தீயால் வெதுப்பப் படுகின்றான். மணிமேகலையான காயசண்டிகையை முதற்கட் கண்ட தும், அவள் அமுத சுரபி கொண்டு உணவளித்தலை வியந்து,

"இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம்
ஒன்றே யாயினும் உண்போர் பலரால்;
ஆனைத் தீநோய் அரும்பசி களைய,
வான வாழ்க்கையர் அருளினர்கொல்?" (20: 33-36)

என்று கூறுவதால் அவன் காதல்நிலை குன்றாமை பெறப்படுகின்றது.

இப்பெற்றியோனுக்கு உதயகுமரன்பால் செற்றமுண் டாதலும், அவனை மறைவிருந்து கொலை செய்தலும் இக்காலத்தும் நிகழும் நிகழ்ச்சி போல்வனவே யாகின்றன. ஆயி னும், ஒருயிரை அது நின்ற உடலினின்று நீக்குதலாகிய கொலைவினையை அரசரன்றிப் பிறர் செய்தற்கு உரியரன்மை யின், இதனையுணர்ந்த அரசனான மாவண்கிள்ளி, இக் காஞ் சனனைப்பற்றிக் கூறுமிடத்து, "யான் செயற்குரிய கொலையை அவ்விஞ்சையன் செய்தமையின், அவன் தகவிலன்" என்று இகழ்ந்துரைக்-கின்றான்.

6. மணிமேகலை: மணிமேகலை மாதவிக்கும் கோவலனுக் கும் பிறந்த மகளாயினும் கண்ணகிபால் சிறந்த அன்பும் தொடர்பும் கொண்டு வளர்ந்திருக்கின்றாள். இதனை மாதவி, இவளைப்பற்றிக் கூறும்போது, " காவலன் பேரூர் (மதுரை) கனையெரி யூட்டிய, மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை" (2 : 54-5) என்று கூறுதலால் அறியலாம். ஆனால், மணி மேகலை வஞ்சிமாநகர் சென்று கோயில் கொண்டிருந்த கண் ணகியைக் கண்டபோது, அக்கண்ணகிக் கடவுள், கோவலற் குற்ற துன்பத்தை " எம்மிறைக் குற்ற இடுக்கண் " (26:11) என்று சொல்லக் காண்கின்றோமேயன்றி, மணிமேகலையை, என்மகளே என்றோ, எம்மிறை மகளே என்றோ சொல்லக் காண்கிலோம்.

மணிமேகலை பேரழகு படைத்தவள். இதனைச் சுதமதி, "மணிமேகலையின் கண்ணிற் சொரியும் நீர்த்துளியைக் காணின் காமன் தன் படையை எறிந்துவிட்டு உடல் நடுங்கு வன்; 'ஆடவர் கண்டால் அகறலு முண்டோ, பேடியரன்றோ பெற்றியின் நின்றிடில் " (3: 20-5) என்று கூறுவதாலும், மலர்வனம் சென்றபோது மணிமேகலையின் தவ வடிவு கண் டோர், ' அணியமை தோற்றத் தருந்தவப் படுத்திய தாயோ கொடியள் தகவிலள் ' (3: 149-50) என்றும் கூறுவதாலும், ஆபுத்திரன் நாடடைந்தபோது அவளைக் கண்ட அவன், " பெண்ணிணை யில்லாப் பெருவனப் புற்றாள் " (25 : 7) என்றலினாலும் பிறவற்றாலும் அறியலாம்.

உதயகுமரன் தன்பால் காதல் கொண்டுள்ளான் என் பதை வயந்தமாலை மாதவிக்குரைப்பக் கேட்டு, அவன்பால் மணிமேகலை யுள்ளத்தே காதல் பிறக்கின்றது. அதனை யுணர்ந்து, அவன் தேரொலி கேட்டு அவன்பால் தன்னுள் ளம் சென்று ஒடுங்குதலையறிந்து “ என் செய்வேன்" என்ற லும் (4: 79-84); அவன் பளிக்கறைக்கு வந்தபோது அவ னைக் கண்டதும் அவள் மனத்தில் காதல் எழுதலும், அதனை அவன் செய்த இகழ்ச்சிக் குறிப்பு நினைந்து கெடுக்க முயன் றும், "இகழ்ந்தனனாகி நயந்தோனென்னாது புதுவோன் பின் றைப் போயதென் நெஞ்சம், இதுவோ அன்னாய் காமத் தியற்கை " (5: 88-90) என்றலும்; "இதுவோ வாயின் கெடுக தன் திறம் ” என்றலும் பிறவும் அவள் தான் பெற்ற கல்வியறிவு, சமய நூலறிவு என்ற இரண்டாலும் தன்னையும் தன் மனத்தையும் வேறு வைத்து எண்ணி மனத்தை அறி வால் அடக்கும் திறல் பெற்றிருப்பதைக் காட்டுகின்றன.

கோவலனுற்ற கொடுந்துயர் கேட்டு இவள் கண்ணீர் சொரிந்து புலம்பு தலும், மணிபல்லவத்தே தனித்தபோது, தனிமையாற்றாது சுதமதியை நினைந்து, "சுதமதி யொளித் தாய், துயரம் செய்தனை," " மனம் நடுக்குறூஉம்; மாற்றம் தாராய்; வல்லிருள் கழிந்தது; மாதவி நடுங்கும்; எல்வளை வாராய், விட்டகன்றனையோ?" எனத் தன் இளமைப் பண்பு தோன்ற அழுபவள்,

"விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள்
வஞ்சம் செய்தனள் கொல்லோ அறியேன் " (8: 25-26)

என்று கூறலும் பிறவும் அவளுடைய மெல்லியற் பொறையை விளக்குகின்றன.

புத்த பீடிகையைக் கண்டு தன் பிறப்புணர்ந்த மணி மேகலை, உடனே, "காதலன் பிறப்பும் காட்டாயோ?" (10 : 66) என்று விழைதல் அவள் உள்ளத்தே காதற்குறிப்பு அறாது நிலவுதலும், அம்பலத்தே உணவு நல்கும் அறம் செய் யும்போது, உதயகுமரன் போந்து "நல்லாய் என்கொல் நற்ற வம் புரிந்தது?" என்று வினவ, இவள்,

“என்னமர் காதலன் இராகுலன் ஈங்கிவன்
தன்னடி தொழுதலும் தகவென வணங்கி" (18: 128- 9)

அதனோடு நின்றொழியாது, - காதல் வெள்ளத்தால் ஈர்ப் புண்டு,

"அறைபோய் நெஞ்சம் அவன்பா லணுகினும்
இறைவளை முன்கை ஈங்கிவன் பற்றினும்
தொன்று காதலன் சொல்லெதிர் மறுத்தல்
நன்றி யன்று என நடுங்கினள் மயங்கி" (18: 130-33)

அவனுடன் பேசலுற்றனள் என ஆசிரியர் கூறலும், பின்பு அவ்வு தயகுமரன் விஞ்சையனால் கொலையுண்டது கண்டதும் ஆறாத் துயருற்று, காயசண்டிகை வடிவு நீங்கித் தன் உண்மை வடிவுடன் தோன்றி, அவனைக் காண்டலால் எழும் காதல் தன் கருத்து முழுதும் கவர்ந்து கொள்ளவே, பழம் பிறப்பில் அவன்பால் தான் கொண்டிருந்த ஆராக் காதலால் தீயில் விழுந்து உயிர் விட்டது சொல்லி,

"பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும்
யான் நினக்கு உரைத்துநின் இடர்வினை யொழிக்கக்
காயசண்டிகைவடி வானேன், காதல!
வாய்வாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின்
வெவ்வினை யுருப்ப விளிந்தனையோ " (21 : 19-24)

என்று அரற்றிப் புலம்பி அவனைத் தழீ இக் கொள்ள நெருங் குதலும், கந்திற்பாவை "செல்லல் செல்லல் சேயரி நெடுங் கண்" என்று கூறித் தடுத்தலும் நோக்கின், பழம் பிறப் புணர்ந்தும் உயிரோடு தொடர்ந்து நின்ற காதல், அவள் உள்ளத்தே இருந்து, பிறகு ஓரிடத்தும் எழாமையின் பெரிதும் கெட்டமை தெரிகிறது. சிறிது நின்ற அத் தொடர்பும் இராசமாதேவி மணிமேகலையின் அடிவீழ்ந்து வணங்கிய போது, தானும் அவள் அடிவணங்கி, " தகுதி செய்திலை; காதலற் பயந்தோய் " (23: 145-7) என்று கூறுமிடத்துத் தோன்றிக் கெடுகின்றது.

இக் காதற் குறிப்பு உள்ளத்தே நிலவினமையின் உதய குமரனைக் காணுந்தோறும் அவன் தன்னை விடாது நயத்தற்கு ஏற்ற குறிப்புக்கள் இவள் பால் நிகழ்ந்தன; இன்றேல் அவன் இவளை இடையிருள் யாமத்திற் போந்து எடுத்தேக நினைத்தற்கு ஏதுவே இல்லாது போயிருக்கும். இக் குற்றம், சோழவேந்தன் "கணிகை மகளையும் காவல் செய்க", என் றற்கு அமைதி செய்கின்றது.

அமுத சுரபியின் இயல்பு கேட்டதும், இவட்குத் தானும் பசித்த மாக்கட்கு உணவு நல்கும் நல்லறம் புரிய வேண்டும் என்ற வேட்கை மிக்கு எழுகின்றது; வறியோரின் வறுமை நிலை அவள் மனக்கண்ணில் இனிது தோன்றுகிறது; இவற்றை ஒளியாது உரைக்கலுற்று,

"துய்ப்போர் தம்மனைத் துணிச்சித ருடுத்து,
வயிறு காய் பெரும்பசி யலைத்தற் கிரங்கி
வெயிலென முனியாது புயலென மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன்
அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்" (11 : 109 - 114)

என்று மொழிகின்றாள்.

மணிமேகலையின் பழம் பிறப்புணர்வும், எதிர்கால நிகழ்ச்சி யுணர்வும் அவட்கு வாராதிருப்பின் அவள் வாழ்க் கையே வேறு வகையில் திரும்பி யிருக்கும். இவட்கு மணி மேகலா தெய்வமும் தீவதிலகையும் அறவண வடிகளும், கந் திற் பாவையும், கண்ணகி கடவுளும் மாசாத்துவானும் பெருங் காவல் செய்வதுபோல இவ் வுணர்வுகளைக் கொளுத்தினமையின், இவள் தன் வாழ்வைத் தூய்மையாக நடத்தி அறப்பயனைப் பெற நேர்ந்தது. இவளுடைய இயற்கை யறிவு யாண்டும் தனித்து நின்று ஒரு நிகழ்ச்சியையும் நிகழ்த்தவில்லை. இதனை, மணிபல்லவத்துத் தனித்துப் - புலம்பலும், உதயகுமரனைக் கண்டு உள்ளம் குழைதலும் பிறவும் இனிது விளக்கி விடுகின்றன.

வஞ்சி நகரத்தே கண்ணகியைக் கண்டு, அழுது நின்று,

"அற்புக்கடன் நில்லாது நற்றவம் படராது
கற்புக்கடன் பூண்டு நும்கடன் முடித்தது
அருளல் வேண்டும் " (26 : 7-9)

என்று வினவலும், சமயக்கணக்கர் தம் திறம் அறியப் போந்தவள், நிகண்ட வாதியை நோக்கி, ஆராய்ச்சித் திறம் பட

"........... ............ நீயுரை : நின்னால்
புகழுந் தலைவன் யார்? நூற்பொருள் யாவை?
அப்பொருள் நிகழ்வும் கட்டும் வீடும் மெய்ப்பட விளம்பு " (27 : 167-70)

என்று வினவலும், காட்சி, அனுமானம் என்ற இருவகை அளவைகளையும் உடன்படாத பூதவாதியைத் தெருட்டு முகத்தால்,

”......... ………….. …………. நின்
தந்தை தாயரை அனுமானத்தால் அலது
இந்த ஞாலத்து எவ்வகை யறிவாய்" (27 : 283-85)

எனக் கூறலும் பிறவுமாகியவற்றிற்கு அவள் மேலே கூறிய வாறு கொண்ட உணர்வும் நல்லோர் துணையுமே காரணமாதல் துணியப்படும்.

மணிமேகலையின் சிறப்பனைத்திற்கும் தோற்றுவாயாக மாதவி இவளை இளமையிலேயே நாடக மகளிர்க்குரிய துறை யில் செலுத்தாது விலக்கிய செயல் நினைக்குந்தோறும் இறும்பூது பயக்கின்றது. கச்சிநகர்க்கண் இவள் பாத பீடிகையையும், தீவதிலகை, மணிமேகலா தெய்வம் என்ற இவர்கட்குக் கோயிலையும் அரசனைக் கொண்டு அமைத்துச் சிறப்புச் செய்தது அவராற் பெற்ற அறிவுக்கு நன்றி செலுத்தியதாகும்.

7. மாதவி : இவள் காவிரிப்பூம்பட்டினத்துக் கணிகை யருள் சித்திராபதி யென்பாட்கு மகள்.. இவள் ஆடல், பாடல், அழகு என்ற மூன்றினும் தலைசிறந்து விளங்கி, கோவலன் நட்புப் பெற்று மணிமேகலையைப் பயந்தவள். கோவலன் மதுரையிற் கொலையுண்டிறந்தது கேட்டு வருந்தி, துறவு பூண்டு, புத்த சங்கத்தைச் சேர்ந்து அறவணவடிகள் பால் அறங்கேட்டு ஒழுகி வருகின்றாள். தன்னைப்போலவே தன் மகள் மணிமேகலையும் நல்ல கல்வியறிவும் அழகும் பெற் றிருப்பினும் இளமையிலே அறத் துறையில் ஒழுகுமாறு விடுகின்றாள். இவள் இதனால் அறச்செயலும் அருளுள்ள
மும் உடையளாதல் பெறப்படும்.

இவள் உள்ளத்தை மாற்றி நாடகக் கணிகையர்க்குரிய செயலில் ஈடுபடுத்தற்கு முயன்ற சித்திராபதி, மாதவியின் தோழியான வயந்தமாலையை அம் மாதவிபால் விடுப்ப, அவள் போந்து கூறியவற்றைக் கேட்டு மாதவி, சிறிதும் மனம் மாற்றம் எய்தாது,

"காதல னுற்ற கடுந்துயர் கேட்டுப்
போதல் செய்யா உயிரொடு நின்றே
பொற்கொடி மூதூர்ப் பொருளுரை யிழந்து
நற்றொடி நங்காய் நாணுத் துறந்தேன் " (உ : ஙஅ-சக)

என்றும், மணிமேகலையைத் தவநெறிப் படுத்தலே தக்கது என்றும், தான் புத்த சங்கத்தை யடைந்து அறவணவடி களைச் சரண்புக, அவர்,

“பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்;
பிறவார் உறுவது பெரும்பேரின்பம்;
பற்றின் வருவது முன்னது; பின்னது
அற்றோர் உறுவது; அறிக, என் றருளி,
ஐவகைச் சீலத் தமைதியும் காட்டி,
உய்வகை இவை.; கொள் " (உ : சுசு-சுக)

என்று உரைத்ததையும் கூறுதலால், அவள் உள்ளம் அற நெறிக்கண் உறைத்து நிற்றலை அறிகின்றோம்.

தன் மகளாகிய மணிமேகலைபால் மாதவிக்கிருக்கும் அன்பு தாயன்பாயினும் மிகச் சிறந்ததாகும். மாதவி மணி மேகலையைப் பயந்து பெயரிடும் நாளிலே மணிமேகலா தெய் வத்தால், தன் மகள் மணிமேகலை, 'காமன் கையறக் கடு நவை யறுக்கும் பெருந் தவக்கொடி" (எ : ஙசு-எ) என்று பாராட்டப் பெற்றதைக் கனவால் அறிந்திருப்பது, அவட் குத் தன் மகள் பால் பேரன்பு கொள்ளற்குத் தக்க ஏதுவா கிறது. இதனால், மணிமேகலை மணிபல்லவத்துக்குக் கொண் டேகப்பட்டது சுதமதியால் அறிந்து, "நன்மணி யிழந்த நாகம் போன்று அவள், தன்மகள் வாராத் தனித்துயருழப்ப, இன்னுயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்" (எ : கஙக-ஙக) என்று ஆசிரியர் குறிக்கின்றார். மேலும், அவள், மணி மேகலை மணிபல்லவம் சென்ற ஏழாம் நாள் வந்தும் இனியும் வாராமை கண்டு வருந்துவதனை,

“வழுவறு தெய்வம் வாய்மையின் உரைத்த
எழுநாள் வந்தது; என் மகள் வாராள்;
வழுவாய் உண்டு " (கக : க உ அ-ஙO)

என்று மயங்குகின்றாள்.

தன்பால் வந்த மணிமேகலை, " தாயே” என்று சொல் லித் தன்னைத் தழீ இக் கொள்ளாது, பழம் பிறப்பைச் சுட்டி,

"இரவி வன்மன் ஒருபெரு மகளே,
துரகத் தானைத் துச்சயன் தேவி,
அமுத பதி வயிற்று அரிதின் தோன்றித்
தவ்வைய ராகிய தாரையும் வீரையும்
அவ்வைய ராயினிர்; நும்மடி தொழுதேன்;
வாய்வ தாக மானிட யாக்கையின்
தீவினை யறுக்கும் செய்தவம் நுமக்கு ஈங்கு
அறவண வடிகள் தம்பால் பெறுமின் " (கக : கஙங-ச0)

என்று கூறலும் மாதவி அற்புதமுற்று அயர்ந்து போகின் றாள். அதற்குப் பின் அவள் பால் மிகுதியும் சொல்லா டலோ சிறப்புச் செய்கையோ உண்டாகவே இல்லை. அவள் அறவணன் கூறியது போல, முற்பிறப்பில் பாதபங்கய மலை யைப் பரசிய பயனால், போதி மாதவன் திருந்தடி வணங்கி, அவன் கூறிய அறநெறிக்கண் நிற்கின்றாள்.
இந்நெறி நிற்கும் மாதவி அவ்வப்போது மணிமேகலை செயலை அறிந்து வருகையில், மணிமேகலை வேந்தனால் சிறை செய்யப்பட்டுப் பின் அரசமாதேவியுடன் இருப்பதை அறி கின்றாள். அவள் மனம் படாதபாடு படுகிறது. அதனைச் சீத்தலைச் சாத்தனார்,

"மணிமே கலை திறம் மாதவி கேட்டுத்
துணிகயம் துகள்படத் துளங்கிய வது போல்
தெளியாச் சிந்தையள் சுதமதிக் குரைத்து
வளியெறி கொம்பின் வருந்திமெய்ந் நடுங்கி' (உச : அக-சு)

துன்புற்று, - (வயிறு வருந்தச் சுமந்து பெற்றவளன்றோ !) அறவணரை வணங்கி அவரை யழைத்துக் கொண்டு அரசமா தேவிபால் வந்து சேர்கின்றாள்.

மணிமேகலை நீங்கிய பின், அறவணரோடே யிருந்து முடிவில் கச்சிமாநகர் போந்து, ஆங்கே மணிமேகலை அமைத் திருந்த அறச்சாலையில் அவள் அளித்த அமுதுண்டு இனி திருந்து அறம்புரிந்து வருகின்றாள்.

8. சுதமதி : இவள் சண்பை நகரத்துக் கௌசிகன் என் னும் பார்ப்பனனுக்கு மகள்; இளமையிலேயே தாயை யிழந் தவள். தந்தையால் வளர்க்கப்பட்டு ஒருநாள் பூஞ்சோலையில் தனித்துப் பூக்கொய்திருக்கையில், மாருதவேக னென்னும் விஞ்சையனால் கவரப்பட்டுக் கற்பிழந்து காவிரிப்பூம்பட்டி னத்தே அவனால் கைவிடப்பட்டவள்; இவளைத் தேடித் திரிந்து போந்த கௌசிகன் பிச்சையுண்டு வாழ்கையில், அவனைப் பசுவொன்று முட்டி வயிற்றைக் கிழித்துக் குட ரைச் சரிவிக்க, அவனை யேற்று ஆதரிக்கச் சமணர் கூட்டம் மறுத்து வருத்தவே, இவளும் அவனுடன் பெருந்துய ருழப்ப, பின்பு, சங்க தருமன் என்னும் புத்த முனிவனால் அவன் ஆதரிக்கப்பெற்று உடல் நலம் பெற்றுப் புத்தனோதிய நல்லறம் கேட்ப, தந்தையுடன் புத்த சங்கத்தை யடைந்து தானும் அறங்கேட்டு மாதவியுடன் மணிமேகலைக்குச் செவிலி போல் இருந்து வருபவளாகும்.

இவள் நல்ல சொல்வன்மையும் இடமறிந்து நலமுரைக் கும் தன்மையு முடையவள். இவள், மாதவி, மணிமேகலையை மலர்வனம் செல்ல விடுத்தபோது, அவள் தனித்தேகல் கூடாதென்றற்கு, அம் மணிமேகலையை "ஆடவர் கண்டால் அகறலுமுண்டோ, பேடியான்றோ பெற்றியின் நின்றிடில் " (3 : 24-5) என்றலும், தன் வரலாறு கூறலும், இலவந்திகை, உய்யானம், சம்பாதிவனம், கவேரவனம் முதலியவற்றின் இயல்பு கூறி விலக்கலும், செல்லுதற்குரிய உவவனத்தை,

"அருளும் அன்பும் ஆருயி ரோம்பும்
ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்
பகவன தாணையிற் பன் மரம் பூக்கும்
உவவனம் என்பதொன் றுண்டு " (ங : நிக.சுஉ )

என்று உரைத்து, அதன் இயல்பும், அஃது ஏற்பட்டதற் குரிய காரணமும் கூறும் வகையும் பிறவும் மிக்க நயமுடை யனவாகும்.

உவவனத்தின் காட்சியை இச் சுதமதி மணிமேகலைக்குக் காட்டலுற்று,

"குழலிசைத் தும்பி கொளுத்திக் காட்ட
மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய
வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர்,
மயிலா டரங்கின் மந்திகாண் பன காண்;
மாசறத் தெளிந்த மணி நீர் இலஞ்சிப்
பாசடைப் பரப்பில் பன்மலர் இடைநின்று
ஒருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை
அரச வன்னம் ஆங்கினி திருப்பக்
கரைநின் றாலும் ஒருமயில் தனக்குக்
கம்புட் சேவல் கனைகுரல் முழவாக்
கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய் " (ச : ங -கங)

என்பன முதலாகக் கூறிச் செல்வது இயற்கைக் காட்சியில் அவட்கிருக்கும் ஈடுபாட்டினை எடுத்துக் காட்டுகிறது.

மணிமேகலையைத் தேடிப் பளிக்கறைக்கண் உதய குமரன் வரக் கண்டு உளம் நடுங்கிநிற்கும் இவள், அவன் மணிமேகலையைப் பற்றி வினவ, அவற்குத் தவமகளாதலின் அத் தகுதி தோன்ற, உடலின் இயற்கையைக் கூறத் தொடங்கிவிடுகிறாள்; இதற்குத் தோற்றுவாயாக அவள் கூறுவது அவளது நாநலத்தைப் புலப்படுத்துகிறது.

"இளமை நாணி முதுமை யெய்தி
உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்
செறிவளை மகளிர் செப்பலு முண்டோ ?
அனைய தாயினும் யானொன்று கிளப்பல்" (ச: க0 எ-கக்க)

என்பது அது. "மணிமேகலை எத்திறத்தினள் " என்று கேட்கும் அவ்வு தயகுமரனை அச்சுறுத்தி வெருட்டவும், அவன் மனம் வருந்தா வகையில் அவன் நலத்தைப் புகழவும் கருதி, முதற்கண் அவன் நலத்தை வியந்தாள் போன்று,

“குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின்
முருகச் செவ்வி" (ரு : கங-கச)

என்று புகழ்ந்துரைத்து, மணிமேகலையின் தவநிலையை யோதுவாளாய்,

”நின், முருகச்செவ்வி முகந்து தன் கண்ணால்
பருகாள்;[$]*ஆயின், பைந்தொடி நங்கை
ஊழ்தரு தவத்தள்; சாப சரத்தி
காமற் கடந்த வாய்மையள்" (ரு : கச.கஎ)

என்று சொல்லுகின்றாள்.
----------
[$]ஆயின் - ஆராய்ந்து நோக்கின்.

அதற்குமேல் அவன் சுதமதி வர லாற்றைக் கேட்கின்றான். அவனுக்குத் தன் வரலாற்றைக் கூறுமுன், தன் வரலாறறிந்தால் அவன்பால் தோன்றும் காமக் கிளர்ச்சி கண்டு, தனக்கு ஏதேனும் தீங்கு நினைப் பனோ என்று அஞ்சி, முன்னதாகவே,

"வார்கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி,
தீநெறிப் படரா நெஞ்சினை யாகுமதி" (ரு : உ அ-க)

என்றுரைப்பதும், தன் நிலைமையைத் தெரிவிப்பாளாய்,

"தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்
இன்பச் செவ்வி மன்பதை எய்த
அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின்
அறக்கதி ராழி திறப்பட உருட்டிக்
காமற் கடந்த வாமன் பாதம்
தகைபா ராட்டுத லல்லது யாவதும்
மிகைநா இல்லேன்; வேந்தே வாழ்க" (ரு: எங-எக)

என்றுரைப்பதும் அவளது அறிவு நுட்பத்துக்கு அமைந்த சான்றுகளாகும்.

9. காய சண்டிகை : இவள் காஞ்சனன் என்னும் விஞ்சையனுக்கு மனைவி, அவனொடு வருங்கால் பொதியிலின் அருகே ஒரு காட்டாற்றில், விருச்சிகனென்னும் முனிவன் உண்டற்கு வைத்திருந்த நாவற்கனியைத் தன் செருக்கினால் காலாற் சிதைத்து, அவன் இட்ட சாபத்தால் வானூடு செல் லும் மந்திரம் மறந்து, யானைத்தீ யென்னும் நோயுற்று வருந்துபவள்; தன் பசித்தீ யவித்தற்குக் காவிரிப்பூம்பட்டினத்தே தங்கி யிருந்தவள்; கற்புடைய மகளிரின் இயல் பறிந்தவள்.

இவள் தான், மணிமேகலை அமுதசுரபி பெற்றுக் காவி ரிப்பூம்பட்டினம் வந்த பின், அவளை, முதற்கண் ஆதிரை யென்பாளின் மனைக்கண் ஐயமேற்கச் சொல்லுகின்றாள்; ஆதிரையின் வரலாற்றை உரைப்பவளும் அவளே. மணி மேகலையை உலக வறவிக்குச் செல்க என்று சொல்லுமிவள், அதன் இருப்பை,

துக்கம் துடைக்கும் துகளறு மாதவர்
சக்கரவாளக் கோட்டமுண்டு; ஆங்கு அதில்
பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்
உலக வறவி யொன்றுண்டு; அதனிடை
ஊரூர் ஆங்கண் உறுபசி யுழந்தோர்,
ஆரு மின்மையின் அரும்பிணி யுற்றோர்
இடுவோர்த் தேர்ந்தாங்கு இருப்போர் பலரால்;
வடுவாழ் கூந்தல், அதன்பாற் போக " (கஎ : எடு - அஉ)

என்று உரைப்பது இனிதாக இருக்கிறது. இவள் தான் வருந்திய யானைத் தீயின் கொடுமையை,

"நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி,
அடலரு முந்நீ ரடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம்
அணங்குடை யளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டழற் கடும்பசிப்
பட்டேன் என் றன் பழவினைப் பயத்தால் " (கஎ : க -கச)

என்று விளக்குந்திறம் நன்றாக இருக்கிறது.

இவள் செல்லும்போது விந்தாகடிகை யென்பாளது வயிற்றிற் பட்டு இறந்து போகின்றாள்.

இவளது வடிவு கொண்டு, மணிமேகலை அறம் செய்த தனால் தான், காஞ்சனன் உதயகுமரன்பால் பொறாமையும் செற்றமும் கொண்டு கொலை புரிகின்றான். இதனை அவன் வரவு கண்டதும் மணிமேகலை நினைக்கவில்லை; உதயகுமரன் இறந்த பின்பே, உணர்ந்து அவ் வடிவினை அவள் உதறி நீங்குகின்றாள்.

10. ஆதிரை : இவள் வரலாறு இம் மணிமேகலைக் காப்பியத்தில் நெருங்கிய தொடர்புடையதன்று; மணிமேக லைக்கு முதற்கண் பிச்சையிடும் பேறு ஒன்று தான் இவட்கு இந் நூலில் கிடைக்கின்றது. இவள் கற்பிற் சிறந்தவள்; கணவன் சாதுவன் என்பவனோ "வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி" கணிகை மாதரின் கூட்டத்தால் கெட் டழிந்தவன். கெட்ட பொருளை யீட்டற்குச் சென்றிருந்த போது, ஏறிச் சென்ற கலம் கெடவே, தப்பி வந்தோர் அவன் இறந்தான் என ஆதிரைக்குச் சொல்ல, அவள் தீப்புக் விரும்பி, தீமூட்டி அதில் விழுகின்றாள்; தீ அவளைக் கொல்லவில்லை. தீயில்,

"விரைமலர்த் தாமரை யொருதனி யிருந்த
திருவின் செய்யோள் போன்று இனி திருப்ப "

அவளே வருந்தி,

"தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன்,
யாது செய்கேன்!" (கசு : ஙங - சு)

என்று ஏங்குகின்றாள். அசரீரி தோன்றி, "சாதுவன் இறக்கவில்லை; நாகர் தீவில் இருக்கின்றான்; வந்து சேர் வான்" என்கின்றது. அவள் வீடு போந்து,

" கண்மணி யனையான் கடிதீங் குறுக' எனத் தன் கணவன் பொல்லா வொழுக்க முடையனாகிய தறிந்தும் - வெறாது அவனையே நினைந்து,

"புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம் அ
ரும்பெறல் மரபிற் பத்தினிப் பெண்டிரும்
விரும்பினர் தொழூஉம்" (கசு : ச அ - ருக)

பெருமையுடன் வாழ்கின்றாள். சாதுவனும் நாகர்க்கு நல்அறம் கூறித் தெருட்டி வந்து ஆதிரையுடன், " தன்மனை நன் பல தானம் " செய்கின்றான்.

11. இராசமா தேவி: இவள் சோழன் மாவண் கிள்ளியின் மனைவி; உதயகுமரனைப் பெற்ற தாய்; சீர்த்தி யென்பது இயற்பெயர். இவள் மாவலியின் குலத்து வந்தவள் என் பார், நம் சாத்தனார்,

"நெடியோன் குறளுரு வாகி நிமிர்ந்து தன்
அடியில் படியை அடக்கிய அந்நாள்
நீரிற் பெய்த மூரி வார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி யென்னும் திருத்தகு தேவி" (கக : ருக -டு )

என்று கூறுகின்றார். இவ் வரசியை முதற்கண் நமக்குக் காட்டலுற்ற சாத்தனார், சோழர் பெருமான் கண்டு உளம் சிறக்கும் விரைப்பூம் பந்தரும் பிற இனிய காட்சிகளும் அமைந்த வேனிற் பூம்பொழிற்கண் கொணர்ந்து நிறுத்து கின்றார். அப் பொழிற் சிறப்பை,

"கொம்பர்த் தும்பி குழலிசை காட்ட,
பொங்கர் வண்டினம் நல்லியாழ் செய்ய,
வரிக்குயில் பாட, மாமயில் ஆடும்
விரைப் பூம் பந்தர்" (கக: டு எ - சு 0)

முதலியவற்றை விரித்துரைக்கின்றார்.

உதயகுமரன் இறந்தது கேட்டு வருந்தும் இவட்குத் தேறுதல் கூறற்கு வந்த வாசந்தவை யென்பாள், அவன் --சாக்காட்டினை இகழ்ந்து,

“தன் மண் காத்தன்று, பிறர்மண் கொண்டன்று
என்னெனப் படுமோ நின்மகன் மடிந்தது! ம
ன்பதை காக்கும் மன்னவன் தன் முன்
துன்பம் கொள்ளேல்" (உங : க எ - 20)

என்று சொல்லிவிட்டுப் போகின்றாள். மகன் இறந்த துயர மும் வாசந்தவை சொன்ன இகழ்ச்சி யுரையும் அரசியின் உள்ளத்தைச் சிதைக்கின்றன. மணிமேகலைபால் அவட்கு ஆறாச் சின முண்டாகிறது. மணிமேகலையின் நிலைமையைக் கெடுக்க வேண்டு-மென்று ஒரு தீய நினைவு உண்டாகிறது. இதனை மறைத்துக் கொண்டு, அரசன்பாற் சென்று, முதற் கண் தன் மகனை இகழ்ந்து,


"பிறர்பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து
அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன் "

என்று கூறி,

"கரும்புடைத் தடக்கைக் காமன் கையற
அரும்பெறல் இளமை பெரும்பிறி தாக்கும்
அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்குச்
சிறைதக் கன்று செங்கோல் வேந்து' (உங : உரு - கூ0)

என்று செப்புகின்றாள். அரசன் மகிழ்ந்து, சிறை வீடு செய்கின்றான். மணிமேகலையைத் தானே அழைத்துச் சென்று தீங்கு செய்யின் பழியாமென்று கருதி, அவளே தன்னோடு இருக்க வருமாறு,

"என்னோடு இருப்பினும் இருக்க; இவ் இளங்கொடி
தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் " (உங : நடு - ஙசு)

என்று சொல்வது அவளது சூழ்ச்சித் திறனைக் காட்டுகிறது.

தன் மனையிடத்தே மணிமேகலைக்கு அவள், மயக்க மருந்து கொடுக்கின்றாள்; கல்லா இளைஞன் ஒருவனை யழைத்து அவளைக் கற்பழிக்க முயல்கின்றாள்;

"மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று
உய்யா நோயின் ஊண் ஒழிந்தன ளெனப்
பொய்ந்நோய் காட்டிப் புழுக்கறை" (உங : ருஅ- சு 0 )

ஒன்றில் அடைக்கின்றாள். இவற்றாலெல்லாம் மணிமேகலை சிறிதும் மேனி வருந்தாது இருப்பக் கண்டு, அஞ்சி நடுங்கி, உண்மை யுரைப்பாளாய்,

"செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன் !
என்மகற்கு உற்ற இடுக்கண் பொறாது
பொன்னே ரனையாய்! பொறுக்க" (உங : சு ச-சுசு)

என்று வணங்குகின்றாள். அவள் வணங்குவது தகாது எனக் கருதி மணிமேகலை தானும் அவள் அடிபணிந்து தன் மாண்பினை நிறுவிக்கொள்கின்றாள். பின்பு சித்திராபதி போந்து மணிமேகலையைத் தன்பால் விடுக்க வேண்டுமென்று வேண்டிய போது, நல்லறிவு பெற்ற இராசமாதேவி,

"கள்ளும் பொய்யும் காமும் கொலையும்
உள்ளக்களவு மென்று உரவோர் துறந்தவை
தலைமையாக் கொண்டநின் தலைமையில் வாழ்க்கை
புலைமையென் றஞ்சிப் போந்த பூங்கொடி
நின்னொடு போந்து நின்மனைப் புகுதாள்;
என்னொடு இருக்கும். (உச : எஎ-அ2)

என்று கூறித் தன் பெருந்தன்மையைப் புலப்படுக்கின்றாள்.

12. சித்திராபதி : இவள் மாதவியின் நற்றாய்; நாட கக் கணிகையர்க்குள்ள நலமும் தீங்கும் திரண்டு உருக் கொண்டாற் போல்பவள். இவட்கு மாதவியும் மணிமேகலை யும் அறம் கேட்டு மாதவர் உறையும் பௌத்த சங்கத்தில் இருப்பதில் சிறிதும் விருப்பம் கிடையாது. காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திர விழாவில் மாதவியும் மணிமேகலையும் கலந்து கொள்ளாது புத்த சங்கத்தில் இருப்பதனால் இவள் மிக்க வருத்த மடைகின்றாள்.

“தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்
மணிமே கலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர." (உ : ங -ரு )

இச் சித்திராபதி மிகமிக வருந்துகின்றாள்; ஊரவர் அலர் கூறுகின்றனரெனக் கூறி வருமாறு வயந்தமாலையைச் சங் கத்துக்கு விடுக்கின்றாள். மணிமேகலையின் நலம் புனைந்து கூறி, உதயகுமரனுக்கு அவள் பால் தீராவேட்கை யுண்டாகச் செய்தவளும் இவளே என்று மணிமேகலை சுதமதிக்குக் கூறும் கூற்றால் உணர நிற்கிறது. உதயகுமரனும், பளிக் கறையில் சுதமதியிடம், " வஞ்சி நுண்ணிடை மணிமேகலை தனைச், சித்திராபதியால் சேர்தலும் உண்டு” (5: 81.2) என்று உரைக்கின்றான்.

மணிமேகலை அமுத சுரபி யேந்தி அம்பலம் புக்கது கேட்டு இச் சித்திராபதி கொள்ளும் சினத்துக்கு எல்லை யில்லை .

"மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது,
நகுதக் கன்றே; நன்னெடும் பேரூர்
இது தக் கென்போர்க்கு எள்ளுரையாயது (கஅ : அ-க0)

என்று தொடங்கி, நாடகமகளிரின் இயல்பெல்லாம் விடாது வாய்விட்டுரைத்து, சூள் ஒன்றும் செய்து விடுகின்றாள். அஃதாவது, மணிமேகலையை உதயகுமரனால் பற்றுவித்து அவன் பொற்றேர்மேல் அவளைக் கொணரச் செய்வது ஒன்று; இன்றேல்,

"சுடுமண் ஏற்றி அரங்கு சூழ்போகி'
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்
அனையே னாகி அரங்கக் கூத்தியர்
மனையகம் புகா மரபினன் " (கஅ : சுக-நசு)

ஆவேன் என்பது மற்றொன்று. இவ்வாறு சூள் செய்தவள் உதயகுமரனை அடைகின்றாள். அவன் தனக்குச் சுதமதி, மணிமேகலா தெய்வம் முதலியோர் கூறியதைக் கூறுகின்றான். அவனைத் தெளிவிக்குமுகத்தால் பல கூறி முடிவில், அவன் தடையின்றி முற்படுமாறு, மிக்க விரகுடன்,

”நாடவர் காண நல்லரங் கேறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டிச்
சுருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச்
செருக்கயல் நெடுங்கண் சுருக்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டகம் புக்குப்
பண்தேர் மொழியிற் பயன்பல வாங்கி
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்
பான்மையிற் பிணித்துப் படிற்றுரை யடக்குதல்
கோன் முறை யன்றோ குமரற்கு " (கஅ : காங- கக)

என்கின்றாள். அவனது பேதையுள்ளம் அவள் நினைத்த வாறே பிறழ்ந்துவிடுகிறது.

உதயகுமரன் இறந்ததும், மணிமேகலை சிறைசெய்யப் பட்டதும் இவள் கேள்வியுற்று, அச்சமும் நடுக்கமும் கொள் கின்றாள். இப்பொழுதேனும் மணிமேகலையைத் தான் தன் னோடு அழைத்துச் சென்றுவிட வேண்டுமென்று ஒரு சூழ்ச்சி செய்கின்றாள். மாதவியால் தன் குடிக்குக் குறை வும் மணிமேகலையால் பட்டினத்துக்குத் தீங்கு முண்டாகு மென்று அரசமாதேவிக்குச் சொல்லி, அவள் மனத்தை மாற்றித் தன் கருத்தை முற்றுவிக்கக் கருதுகின்றாள்; அத னால் அவள் தேவிபால் வந்து முதலில் தனக்குண்டான குறையை,

"யானுறு துன்பம் யாவரும் பட்டிலர்;
பூவிலை யீத்தவன் பொன்றின னென்று
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும்,
பரந்துபடு மனை தொறும் பாத்திர மேந்தி
அரங்கக் கூத்தி சென்று ஐயங் கொண்டதும்
நகுத லல்லது நாடகக் கணிகையர்
தகுதி யென்னார் தன்மை யன்மையின் "(உச : கஎ - உச)

என்று சொல்லி, மணிமேகலையால் நகர்க்குத் தீங்கு முண் டாம் என்பதை, முன் நாளில் நெடுமுடிக்கிள்ளி யென்பான், பீலிவளை யென்பாளைத் தேடிச் சென்றபோது சாரணன் ஒருவன் தோன்றி, " இந் நகரத்தே இந்திர விழா நிகழா தொழியின் கடல்கோள் நிகழும்; மணிமேகலா தெய்வத் தால் பிறந்த இந்திர சாபம் இது" என்று கூறியது சொல்லி, இப்போது,

"தன் பெயர் மடந்தை துயருறு மாயின்
மன் பெருந் தெய்வம் வருதலு முண்டென
அஞ்சினேன் அரசன் தேவி" (உச : எ 2 - எச)

என்று உரைத்துத் தேவியை வணங்கிப் பணிவுடன் இரந்து,

“நன்மனம் பிறந்த நாடகக் கணிகையை
என் மனைத் தருக " (உச : எரு - எசு)

என்று வேண்டுகின்றாள். ஈங்கும் அவள் மனத்தே மணி மேகலை ஒரு தவ மகள் என்று தோன்றவில்லை; நாடகக் கணிகையென்று அவள் நவிலுதல் காண்க. ஆனால், தேவியோ மறுத்துவிடுகின்றாள். சித்திராபதி மனம் உடைந்து போய் விடுகின்றாள்.
---------------

V. நூலுட் காணப்படும் சில வரலாற் றுவமைகள் :

இந் நூலுள் வைதிக சமயப் புராண வரலாறுகள் பல உவமைகளாகக் காட்டப்-படுகின்றன. இவ் வரலாறுகளின் குறிப்புக்களே காணப்படுதலின், இந் நூலாசிரியர் காலத்தே, இவை மக்களிடையே நன்கு பயின்றிருந்தமை புலனாகிறது. முருகன் கிரவுஞ்சகிரியை எறிந்த வரலாறு, "குருகு பெயர்க் குன்றம் கொன்றோனன்ன நின் முருகச் செவ்வி" (5: 13-14} என்றும், திருமால் இராமனாய்த் தோன்றிக் கடலணையிட்ட செய்தி, 'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி, அடலரு முந்நீரடைத்த ஞான்று, குரங்குகொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம், அணங்குடையளக்கர் வயிறுபுக்காங்கு " (17:9-12) என்றும், திருமால் வாமனனாய்த் தோன்றி மாவலிபால் நிலம் பெற்றது, “நெடியோன் குறளுரு வாகி நிமிர்ந்து தன், அடியிற் படியை அடக்கிய அந்நாள், நீரிற் பெய்த மூரிவார் சிலை மாவலி " (19: 51-4) என்றும், அசுரர் மோகித்து விழு மாறு திருமகள் கொல்லிப்பாவை வடிவு கொண்டு கூத்தாடி யது, "திருவின் செய்யோள் ஆடிய பாவை" (5: 4) என்றும், நெடியோன் கண்ணனாய்த் தோன்றி இடையர் சேரியில் விளையாடிய செய்தி, "மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ் ஞையும், ஆடிய குரவை யிஃதாம்" (19: 65-6) என்றும், இந்திரன் அகலிகைபாற் பெருவேட்கை கொண்ட செய்தி, “மாதவன் மடந்தைக்கு வருந்து துயரெய்தி, ஆயிரஞ்செங் கண் அமரர்கோன் பெற்றது" (18: 90-1) என்றும், இந்திரன் மகன் சயந்தனை அகத்தியன் சபித்ததும், அங்கிக் கட வுள் முனிவர் மகளிர்பால் வேட்கை யுற்றதும், காமன் தன் மகன் பொருட்டு வாணன் நகரில் பேடிக் கூத்தாடியதும், விசுவாமித்திர முனிவன் பசி மிக்கு நாயூன் தின்றதும் பிறவும் எடுத்துக் காட்டப்படுகின்றன.

இவர் காலத்தே உதயணன் கதை நாட்டில் நன்கு பரவி யிருந்திருக்கிற தென்பதற்குச் சான்றாக, உதயணனைப் பிரச் சோதனனென்ற அரசன் வஞ்சனையாற் பற்றிக்கொண்ட போது, அவ் வுதயணன் மந்திரியாகிய யூகி, தன் சூழ்ச்சி யால் மீட்ட வரலாறு, " கொடிக் கோசாம்பிக் கோமகனாகிய, வடித் தேர்த் தானை வத்தவன்றன்னை, வஞ்சஞ் செய்துழி வான் றளை விடீஇய, உஞ்சையிற் றோன்றிய, யூகி யந்தணன் உருவுக்கு" (15: 61-5) என்று குறிக்கப் பெறுகிறது. திரு வள்ளுவர் தம் திருக்குறளில், "தெய்வந் தொழா அள் கொழு நற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யு மழை" (கு. 55) என்று கூறியது, "தெய்வந்தொழாஅள் கொழுநற் றொழு தெழுவாள், பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்ற அப், பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்" (22: 59-61) என்று காட்டப்படுகிறது.

கரிகால் வளவன், முதுமை வடிவு கொண்டு, தன் இளமை குறித்து இகழ்ந்தோர் வியப்ப, நீதி வழங்கிய செய்தி, " இளமை நாணி முதுமை யெய்தி உரை முடிவு காட்டிய உரவோன்" (4: 107-8) என்று குறிக்கப் பெறுகிறது. இந் நூற்பதிகம் காவிரிப்பூம்-பட்டினத்தின் வரலாறு கூறுகிறது. தொடித்தோட் செம்பியன் தூங்கெயிலெறிந்த தும், மனுச்சோழன் மகனை முறை செய்ததும், சேரன் செங் குட்டுவன் ஆரிய வரசரை வென்று கண்ணகிக்குக் கோயி லெடுத்ததும் இந் நூற்கண் குறிக்கப்பெறுகின்றன.

இந்நூலின் இடையிடையே வேறு பல வரலாறுகள் காட்டப்படுகின்றன; அவற்றை ஈண்டு விரித்தோதின் பெருகுமாதலின் இவ்வளவில் நிறுத்துகின்றாம்.
---------------

VI. இயற்கை நலம் கூறல் :

விழாக் காலங்களில், மக்கட்கு விழாவைத் தெரிவிக்கும் மரபும், விழா நிகழும் நகரை மக்கள் இன்ன வகையில் புனை தல் வேண்டுமெனக் காட்டலும் விழாவறை காதையில் குறிக்கப்படுகின்றன். ஊரலர் உரைத்த காதையில் நாடக மகளிர்க் கென வகுத்த கூத்தும், இசையும், கணிதமும், எனைக் கலைகளும், ஓவியமும் சுருங்கக் குறிக்கப்படுகின்றன. விழாக் காலத்தே, தொகுகின்ற மக்களிடையே துறவிகளும், விடரும், தூர்த் தரும், கட்குடித்தோரும்,பித்தரும் பிறரும் வந்து தொகுவது இயல்பன்றோ; அவர்களை மக்கள் கூடி இகழ்ந்துரைத்து மகிழ்வது முண்டே . அவையாவும், மலர் வனம் புக்க காதைக் கண் உரைக்கப்படுகின்றன.

பளிக்கறை புக்க காதையிலும், சிறைக் கோட்டம் அறக் கோட்டமாக்கிய காதையிலும் பிறாண்டும் பூம்பொழில் களின் இயற்கை யழகுகள் எடுத்தோதப்படுகின்றன. கச்சிமா நகர் புக்க காதை அந் நகரின் பல்வேறு தெரு நலங்களும் பிற வும் கூறுகின்றது.

இவையே யன்றி அந்திமாலைச் சிறப்பும், விடியற் சிறப் பும், மிக அழகாகக் கூறப்படுகின்றன. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதையில், அந்திமாலைப் போதினை ஒரு பெண்ணாக நிறுத்தி,

”குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
குடதிசை மருங்கில் சென்று வீழ் கதிரும்
வெள்ளி வெண் தோடு பொற்றோ டாக
எள்ளறு திருமுகம் பொலியப் பெய்தலும்,
அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை யடைக்க,
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு
ஓங்கிருந் தெங்கின் உயர்மட லேற,
அன்றில் பேடை அரிக்குரல் அழை இச்
சென்று வீழ் பொழுது சேவற் கிசைப்ப,
பவளச் செங்கால் பறவைக் கானத்துக்
குவளை மேய்ந்த குடக்கண் சேதா மு
லை பொழி தீம்பால் எழுதுகள் அவிப்ப,
கன்று நினை குரல மன் றுவழிப் படர,
அந்தி யந்தணர் செந்தீப் பேண,
பைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப,
யாழோர் மருதத்து இன்னரம்பு உளரக்
கோவலர் முல்லைக் குழல்மேற் கொள்ள,
அமரக மருங்கில் கணவனை இழந்து
தமரகம் புகூ உம் ஒருமகள் போலக்
கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமொடு
அந்தி யென்னும் பசலை மெய் யாட்டி
வந்திறுத் தனளால் மாநகர் மருங்கு" (ரு : ககக - சக)

என்று பாடி யிருக்கும் இப் பகுதியும், விடியற் காலத்தைச் சொல்லணி நயந்துறும்,

"காவ லாளர் கண் துயில் கொள்ளத்
தூமென் சேக்கைத் துயில் கண் விழிப்ப,
வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்பப்
புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்க,
புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்பப்
பொறிமயிர் வாரணம் குறுங்கூ விளிப்ப,
பணை நிலைப் புரவி பல எழுந் தாலப்
பணை நிலைப் புள்ளும் பலவெழுந் தாலப்
பூம்பொழி லார்கைப் புள்ளொலி சிறப்பப்
பூங்கொடி யார்கைப் புள்ளொலி சிறப்பக்
கடவுட் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழக்
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ
ஊர் துயி லெடுப்ப உரவு நீ ரழுவத்துக்
காரிருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும்" (எ : ககக - உசு)

என்று பாடி யிருக்கும் இப்பகுதியும் ஒவ்வொருவரும் நன்கு சுவைக்கும் இனிய நலம் பொருந்தி யிருப்பதைக் காணலாம்.
----------

VII. நூலின் பொதுநிலைக் கருத்து :

இந் நூலுட் கூறப்படும் வரலாறும் பிறவமைதிகளும் பொதுவாக வைத்து நோக்கின், இந் நூலாசிரியர் பெண்மையின் அமைதியும், பெண்ணின்பத்தின் சிறுமையும் விளக்கும் கருத்தினராதலைக் காணலாம். உதயகுமரன் வாயிலாக ஆண்மகனுக்குப் பெண்
ணின்பத்தை நுகர்தற்கு எழும் வேட்கையை விரித்தோது வார் அதன் இயல்பை,

"சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழீ இ
நிறையு முண்டோ காமம் காழ்க்கொளின்' (ரு : க க - 20)

என்றும், பிறாண்டும், "மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும், பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று, பற்றினன் கொண்டு '" (20; 14-6) வருவேன் என்றும் அவனே கூறுத லால் நாம் உணரச் செய்கின்றார்.

மணிமேகலைக்கும் இவ்வு தயகுமரன்பால் வேட்கை யெழுந்து அவள் உள்ளத்தை அலைக்கின்றது. அவளே தனக்கு உண்டாகும் வேட்கையின் இயல்பை,

"கற்புத் தானிலள்; நற்றவ வுணர்விலள்;
வருணக் காப்பிலள்; பொருள் விலை யாட்டி யென்று
இகழ்ந்தன னாகி நயந்தோன் என்னாது,
புதுவோன் பின்றைப் போன தென் நெஞ்சம்;
இதுவோ அன்னாய் காமத் தியற்கை " (ரு : அசு - கூ0 )

என்று கூறுகின்றாள். உதயகுமரன் போலாது, அறவோர் கூட்டுறவும், பழம்பிறப் புணர்வும் பிறவும் பெற்றிருந்தும்; மணிமேகலை, உலகவறவிக்கண் காஞ்சனனும் உதயகுமரனும் ஒருங்கிருப்ப, அவ் வு தயகுமரன் பக்கலிலே சென்று நின்று நயமாக உரைக்குமாறு செய்துவிட்டது இவ் வேட்கையெனின் ஆண் பெண் இருபாலாரிடத்தும் எழும் வேட்கை, இருவர் நிறையையும் ஒருங்கழிக்கும் வன்மையுடைய தென்பதை
ஆசிரியர் ஓராற்றால் நிறுவிவிடுகின்றார்.

இதன் தோற்றுவாய் பெண்ணுடம்பில் இருக்கிற தென்று காட்டுவார், மணிமேகலை வாயிலாக, நரைமூதாட்டி ஒருத்தியின் வனப்பிழந்த மேனியை வகுத்துக் காட்டி,

"பூவினும் சாந்தினும் புலால் மறைத் தியாத்துத்
தூசினு மணியி னும் தொல்லோர் வகுத்த
வஞ்சந் தெரியாய் மன்னவன் மகனே" (20: சு எ-க)

என்று முடிபு கட்டுகின்றார்.

இதனால் மகளிர் தம்மைக் காத்துக் கொண்டு ஒழுகும் கடப்பாடுடையர் என்பார்போலப் பலவிடங்களில் அவர் கட்கு வேண்டும் ஒழுகலாறுகளை வற்புறுத்துகின்றார்.

"காதலர் இறப்பின், கனை யெரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்து அகத் தடங்காது
இன்னுயி ரீவர்; ஈயா ராயின்,
நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்;
நளியெரி புகாஅ ராயின் அன்பரோடு
உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்பு நீர் ஞாலத்து " (2: சஉ-அ )

என்றும்,

“காதலன் வீயக் கடுந்துய ரெய்திப்
போதல் செய்யா உயிரொடு புலந்து
நளியிரும் பொய்கை யாடுநர் போல
முளியெரி புகூஉம் முதுகுடிப் பிறந்த
பத்தினிப் பெண்டிர்"
என்றும்,

”கன்னிக் காவலும் கடியிற் காவலும்
தன்னுறு கணவன் சாவுறிற் காவலும்
நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோ னல்லது தெய்வமும் பேணாப்
பெண்டிர்" (கஅ : கஅ - கoஉ)

என்றும்,

"மண்டிணி ஞாலத்து மழைவளந் தரூஉம்
பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகார்” (உஉ : சரு - சு)

என்றும் கூறுவனவற்றாலும் பிறவற்றாலும் நன்மகளிர்க்குரிய ஒழுகலாறுகளை நன்கு பலமுறை வற்புறுத்து தலைக் காணலாம்.

உதயகுமரன் வரலாற்றாலும், ககந்தன் மக்கள் வரலாற் றாலும் ஆண்மகனுடைய வரம்பிகந்த காமமே கொடிதெனக் காட்டி வற்புறுத்துகின்றார். இதனை,

"பத்தினி யில்லோர் பலவறம் செய்யினும்
புத்தே ளுலகம் புகாஅ ரென்பது
கேட்டும் அறிதியோ " (உஉ : ககஎ -க)

என்று கூறுதலால் அறியலாம். பத்தினியுடன் கூடி யுறை வோர் கோடற்குரிய வேட்கை, மகப்பேறு கருதியதே யன்றிப் பிறிதில்லை யென்பது ஒரு சாரார் கருத்து. அதனை மறுத்து, இந் நூலாசிரியர், பத்தினிக்கூட்டம் அறஞ்செய்தற் பொருட்டேயன்றி மகப்பேற்றின் பொருட்டன்று என்பார்,

"இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா;
வளவிய வான் பெருஞ் செல்வமும் நில்லா :
புத்தே ளுலகம் புதல்வருந் தாரார்;
மிக்க அறமே விழுத்துணை யாவது " (உஉ : கஙரு - அ)

என்று ஓதுகின்றார்.

இக் கருத்துக்களோடு வினையுணர்வு ஒன்று இந் நூன் முழுதும் ஊடுருவிச் சென்று நிலவுகிறது. இதனை முன்பும் கூறினாம். ஈண்டு ஒன்றே கூறுவோம். இவ்வுடல் “ வினையின் வந்தது; வினைக்கு விளைவாயது ” (4: 113); “உம்மை வினைவந்து உருத்தல் ஒழியாது" (26: 32) வினைநீக்கமே வீடுபேறு என்பது. இதனை, உதயகுமரன் இறந்த செய் தியை அவன் தந்தை மாவண் கிள்ளிக்குக் கூறவந்த அற வோருள் ஒருவர் கூறுமாற்றால் அறியலாம் :

"மதிமருள் வெண்குடை மன்ன ! நின் மகன்
உதய குமரன் ஒழியா னாக,
ஆங்கு அவள் தன்னை அம்பலத் தேற்றி,
ஓங்கிருள் யாமத்து இவனை ஆங்குய்த்துக்
காய சண்டிகைதன் கணவ னாகிய
வாய்வாள் விஞ்சையன் தன்னையும் கூ உய்
விஞ்சை மகள் பால் இவன் வந்தன னென
வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி,
ஆங்கவன் தன் கை வாளால் அம்பலத்து
ஈங்கிவன் தன்னை எறிந்தது" (வினை) (உஉ : ககச - உலங)

என்பது அவ்வறவோர் வினைமேல் ஏற்றிக் கூறிய கூற்றாகும். இவ் வண்ணமே, மணிமேகலை அரசமாதேவிக்கு, அவள் மகன் இறந்ததற்குக் காரணம் முன்னை வினையெனப் பழம் பிறப்புக் கூறி,

"மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை
உடல் துணி செய்தாங்கு உருத்தெழும் வல்வினை,
நஞ்சுவிழி யரவின் நல்லுயிர் வாங்கி
விஞ்சையன் வாளால் வீட்டிய தன்றே " (உங: அஉ - ரு )

என்று அறிவுறுத்துகின்றாள்.
---------------

VIII. இந் நூலாசிரியர் காட்டிய தருக்க முடிவுபற்றிச் சிறு குறிப்பு :

இந் நூலில் தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதையில் வரும் தருக்க முடிபுகளைப்பற்றி ஆசிரியர் டாக்டர் உ. வே. சாமிநாதையர் பலவாறு முயன்று விளக்கம் பெறாது விட்டு விட்டனர். ஆனால், அவர்க்குப் பின் பலர் இவற்றைத் தம் மால் இயன்றவரை முயன்று ஆராய்ந்திருக்கின்றனர். அவ்வாராய்ச்சியின் குறிப்பை இங்கே தருவது முறையாதல் பற்றிக் குறிக்கின்றாம்.

இத் தருக்க முடிபுகளை யாராய்ந்து கண்ட டாக்டர். திரு. S. கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் இவை தின்னகர் காலத்துக்கு முற்பட்டனவாதல் வேண்டும் என்கிறார்; மகா மகோபாத்தியாய S. குப்புசாமி சாஸ்திரியார் அவர்களும், எச். ஜாக்கோபி (Hermann Jacobi, Professor of Sanskrit, University of Bonn) என்பாரும், இந் நூன் முடிபுகள் வடமொழியிலுள்ள நியாயப் பிரவேசம் என்ற நூன்முடிபை அடிப்படையாகக் கொண்டனவென்றும், ஆகவே இம் மணி மேகலை, தின்னகர் காலத்திற்குப் பிற்பட்டதாகல் வேண்டும் என்கின்றனர். தின்னகர் கி. பி. நான்காம் நூற்றாண்டில் இருந்தவர் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு; நியாயப் பிர வேசத்தை இயற்றிய ஆசிரியர் சங்கர சுவாமி என்பாரும் அந்த நான்காம் நூற்றாண்டினரே என்பர்.

திரு. அய்யங்காரவர்கள், “இந் நூல், 'ஆதி சினேந் திரன் அளவை யிரண்டே, ஏ தமில் பிரத்தியம் கருத்தளவு என்ன' (29: 47-8) என்றது கொண்டு, இந் நூலாசிரியர் காட்சி, அனுமானம் என்ற இரண்டையுமே அளவையாகக் கொண்டனர்; தின்னகர் நையாயிகர் கூறும் நான்கும் கொண்டு ஆராய்ந்து இறுதி யிரண்டையும் விலக்கி முதலிற் கூறும் இரண்டையுமே கொண்டனர். பக்கம், ஏது, திட்டாந்தம், உபநயம், நிகமனம் என்ன ஐந்துள; அவற்றில் ..... ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும், திட்டாந்தத்திலே சென்றடங்கும்” (29: 57-8; 109-10) என்றது கொண்டு, “இந் நூலாசிரி யர், பக்கம், ஏது, திட்டாந்தம் மூன்றுமே கொண்டார்; தின் னகர் இவ் வைந்தையுமே கொண்டொழிந்தார். தின்னகர் அனு மானத்தைப் பரார்த்தானுமானம், சுவார்த்தானுமானம் என வகுத்து நெடிது ஆராய்ந்து பரார்த்தம் சுவார்த்தத்தில் அடங்கும் என்றாராக, இந் நூலாசிரியர் அனுமானத்தை அவ் வகையில் ஆராயவேயில்லை" என்று கூறினர் எனக் காட்டி, அக் கூற்றை மறுத்து, இந் நூலிற் கூறப்படும் தருக்க முடிபு கள் நியாயப்பிரவேசம் என்ற வடமொழித் தருக்க நூலையே மேற்கொண்டிருக்கிறதென்று, எங்கள் கல்லூரி வடமொழி விரிவுரையாளரான திரு. ஐயாசாமி சாஸ்திரியவர்கள் காட்டு கின்றார்கள்.[$]
----
[$] The Journal of Oriental Research, Madras. Vol. XI. part II page 118-128.

சாஸ்திரியவர்கள் இந் நூலின் இப்பகுதிக்கு எழுதியிருக் கும் பொருள், நூலில் மூலத்தை வைத்து நோக்கிப் பெரி தும் தூய்மை செய்தற்குரித்தாயினும், இம் மணிமேகலைக்கும் நியாயப்பிரவேசத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை களைக் காட்டி யிருப்பது போற்றத்தக்கது. இப்பகுதியையே சிறிது விரிய ஆராய்ந்து வெளியிடக் கருதுகின்றே-னாதலின், தருக்க முடிபு பற்றிய குறிப்பினை இம்மட்டில் நிறுத்திக் கொள்ளுகின்றேன்; இவ்விருவர் கூற்றுக்களின் வன்மை மென்மைகளை ஈண்டுக் காட்டலுறின், இம் முன்னுரை மிக விரியும்.
----------

IX. காப்பிய நிகழ்ச்சி பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பு :

1. மணிமேகலையின் தாயாகிய மாதவி, இசையும் நாட கமும் நன்கு பயின்று அரங்கேறிய காலத்தே புகார் நகரத்தே யிருந்து ஆட்சி புரிந்த வேந்தன் கரிகால் வளவன் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. மணிமேகலை அக் கலையில் வல்லுநளாய் மங்கைப்பருவம் எய்துங் காலத்தே மாவண் கிள்ளி யென்பான் புகார் நகரத்தே ஆட்சி புரிகின்றான். இக் கிள்ளியைக் கரிகால் வளவனுக்கு மகனென்றாதல் பிற தொடர்பு உடையன் என்றாதல் இந்நூல் கூறவில்லை. உதய குமரனை மட்டில், " இளமை நாணி முதுமை யெய்தி, உரைமுடிவு காட்டிய உரவோன் மருகன்" (4: 107-8) என்று கூறுகிறது. மணிமேகலை காலத்தில் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்த கிள்ளியும், மாவண் கிள்ளியின் தம்பி இளங் கோக் கிள்ளியும் தமிழ்ப் பெயரே கொண்டிருப்ப, உதய குமரன் வடமொழிப் பெயர் கொண்டிருப்பது வியப்பும் ஆராய்ச்சிக்கு இடமும் தருகிறது.

2. இமயவரம்பன் நெடுஞ் சேரலாதற்குச் சேரன் செங்குட்டுவன் மகன் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. கண்ணகி கணவனான கோவலன் மதுரையிற் கொலையுண்டது வஞ்சி நாட்டில் அக் குட்டுவன் இருந்து ஆட்சி செய்த கால மாகும். இஃதிங்ஙன மிருக்க, மணிமேகலை கச்சி நகருள் அறம் பூண்டிருந்த மாசாத்துவானைக் கண்டபோது, அவள்; கோவலனுக்கு அவன் குடியில் ஒன்பது தலைமுறைக்கு முன் பிருந்த கோவலன் என்பான் அவ் விமயவரம்பன் நெடுஞ் சேரலாதனுக்கு நீங்காக் காதற் பாங்க”னாயிருந்தான் என் றும், அவ் வேந்தனொடு அவனும் கச்சிநகர்க்குப் போந்து தரும சாரணர் உரைத்த அறம் கேட்டுப் புத்த சைத்தியம் ஒன்று கட்டினான் என்றும் கூறுகின்றாள். இதனால், சேர லாதனுக்கும் செங்குட்டுவனுக்கும் இடையே ஒன்பது தலை முறைக் காலம் கழிந்திருத்தல் தோன்றுவதோடு, சிலப்பதி காரக் கூற்றுக்கு முற்றும் மாறுபடுவது தெரிகிறது. சிலப் பதிகாரம் கூறுவது போலவே, இந் நூலும் செங்குட்டுவன் வடவாரிய மன்னரை வென்று வந்து கண்ணகிக்குக் கோயி லெடுத்த செய்தியைச் சிறிதும் மாறுபாடின்றிக் கூறுகிறது. ' ஆகவே இப் பகுதியும் ஆராய்ச்சிக்கு உரிய தாகின்றது.
---------------

X. முடிப்புரை:

இனி, இவ் வாராய்ச்சி யுரையை முடிப்பதன் முன், இக் காப்பிய அமைப்பும் நடையும் பற்றிய சில குறிப்புக்களைக் கூறுவது நலமென்று தோன்றுகிறது. கோவலனுக்கும் மாதவிக்கும் உண்டாய தொடர்பின் பயனாக மணிமேகலை பிறக்க, அவட்குப் பெயரிடும் சிறப்பு நாளில், கோவலன் ஒரு பெரிய சிறப்பினைச் செய்தான்; அவன் அளித்த கொடையைப் பெறுதற்கு மக்கள் பெருங் கூட்டமாய் வந்தி ருந்தனர்; அப்போது அரசனது பட்டத்தியானை மதங் கொண்டு போந்து, அக் கூட்டத்திருந்த வேதியனொருவனைப் பற்றிக் கொள்ளவே, கோவலன் அவன்பால் இரக்கமுற்று, யானையின் நெற்றியிற் பாய்ந்து அதனை யடக்கி, அவ் வேதி யனை மீட்குமாற்றால் தன் ஆண்மையினை நிலை நாட்டினா னென்று சிலப்பதிகாரம் கூறுகிறது. பிறந்து பெயர் பெறும் நாளிலே தன் தந்தைக்குப் பெரும் புகழ் விளைத்த மணி மேகலையின் பிறப்பு வரலாற்றை இந் நூல் கூறவேயில்லை; மணிமேகலையின் பிறப்பு மாதவி பிறப்புப் போல்வதன்று. சித்திராபதியின் சொல்லும் செயலும் நோக்கின், மாதவிக் குப் பிறப்பு வரலாறு காண்டல் அரிதாம். அதனாற்றான் இளங்கோவடிகள், கண்ணகி கோவலன் என்ற இருவர் பிறப் புக் கூறியவர், மாதவியின் பிறப்புக் கூறாராயினார். மாதவி யின் குணம் செயல்கள் கற்புடை நன்னெறியவாதலின், அந் நெறி வழாது பிறந்த மணிமேகலையின் பிறப்புக் கூறாமைக் குக் காரணம் தெரிந்திலது.

மாதவியும் மணிமேகலையும் இந்திரவிழாவிற் கலந்து தம் ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் மக்களை இன் புறுத்தாமையால், ஊரவர் அலர் தூற்றுகின்றார் எனச் சித்தி ராபதியால் குறிக்கும் இந் நூலாசிரியர், விழாவறை காதை யில் இவ் விருவரும் போந்து மேற்குறித்த பணியை ஆற்றற் குரியர் என்பதனைக் குறிக்கவேயில்லை. ஒன்றனைச் செய்தற் குரியார் அதனைச் செய்யாதொழியின் அன்றோ அலர் பிறக் கும்? நாடகக் கலையை அக் காலத்திருந்த அரசரும் பிற சான்றோரும் நன்கு ஆதரித்தனர் என்பதற்குச் சான்றுகள் பல இருக்கின்றனவே. நாடக மகளிர் தத்தம் நாடகக் கலை நுட்பத்தை மக்கட்கு நன்கு காட்டுமின் என்பதனை வெளிப் படக் கூறாது, " வேறு வேறு சிறப்பின் வேறு வேறு செய் வினை, ஆற்றி மரபின் அறிந்தோர் செய்யுமின்" (1: 56-7) என விழாவறை காதை கூறுதலால் எய்துவித்தார் என்று கொள்வதாயின், மேலே காட்டிய குறைக்கு இடமின்றாம்.

ஆபுத்திரன் மணிபல்லவத்தில் மணிமேகலைபால் விடை பெற்றுச் சென்றவன் என்னானான் என்பதும், காஞ்சனன் உதயகுமரனை வாளால் எறிந்த தீவினைப் பயனை இன்னவாறு நுகர்ந்தான் என்பதும் குறிக்கப்படவில்லை. கண்ணகி மது ரையை எரித்த தீவினைப் பயனை நல்வினைப் பயனின் இறுதி யில் நுகர்ந்து முடிவில் "பிறவி நீத்த பெற்றிய "ளாவள் என்று கூறின இந் நூலாசிரியர், இவர்தம் முடிவு நிலை கூறாமை ஆராய்தற் குரியதாம். இம் முடிவு நிலையே யன்றி, சித்திராபதியின் பிற்கால வாழ்வும் தெரிந்திலது. அறவண வடிகள் மணிமேகலைக்கு அறம் கூறுவதோடு நின்று விடு கிறார்; அவரது முடிவும் தோற்றம்போலத் திடீரென நின்று விடுகிறது. மணிமேகலை, உதயகுமரன் கையிற் சிக்குண்டு தன் தூய்மை கெடாது நீங்கி யிருப்பளேல், இக் காப்பிய அமைதி மிக்க இன்பமாய் இருந்திருக்கும்.

இனி, இந் நூலாசிரியர் பாடியனவாக மேலே காட்டிய சங்க இலக்கியப் பாட்டுக்களையும் இந் நூலிற் காணப் படும் பாட்டுக்களையும் ஒப்பு நோக்கின், இந் நூல் நடை மிக எளிதாக இருப்பது புலனாகும். மேலும், இதன் கண் மிக்க வடசொற்கள் காணப்படுகின்றன. சங்க காலத் தும், அதனையடுத்து வந்த சிலப்பதிகாரக் காலத்தும் காணப் படாத சொல் வழக்குகள் இந் நூலிற் காணப்படுகின்றன. ஏது நிகழ்ச்சி, ஆங்கனம், ஈங்கனம், ஆங்கு, ஈங்கு முதலியன மிகுதியும் பயில்கின்றன. அ, இ என்ற சுட்டிடைச் சொற்கள், அந்த, இந்த எனத் திரிந்து வழங்கும் வழக்குக் கம்பர் காலத்துக்குச் சிறிது முன்னர்த்தான் பயிலுவதாயிற்று. இவ் வழக்கு, சங்க நூற்களுள்ளே கிடையாது. இந் நூலில் இஃது நன்கு வழங்குகிறது. "முறைமையின் இந்த மூதூ ரகத்தே' (26: 63) என்றும், “ இந்த ஞாலத்து எவ்வகை யறிவாய் " (27: 285) என்றும், " அந்த உதவிக்கு ஆங் கவள் பெயரை " (29: 30) என்றும் வருதல் காண்க.

மேலே கூறியவாறு, இந் நூல் நடை சங்க இலக்கியங் களிற் காணப்படும் செய்யுள் நடையின் வேறுபட்டிருத்த லாலும், சங்கச் செய்யுளிற் காணப்படாத வழக்காறு சில இந் நூலிற் காணப்படுதலாலும், இந்நூலுட் காணப்படும் அரசர் வரலாறுகள் சில வரலாற்று நெறிக்கண் நோக்கிய வழி மயக் கந் தருதலாலும் இந்நூலை ஆக்கிய சீத்தலைச் சாத்தனாரது வரலாறு ஆராய்தற் குரியதாகின்றது. சிலப்பதிகாரம் இந் நூலாசிரியரை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று வழங்காது வறிதே சாத்தன் என்றே கூறுகிறது.. இந்நூற் பதிகம் மட்டில் " மதுரைக் கூலவாணிகன் சாத் தன்" என்று கூறுகிறது. தொல்காப்பிய உரைகாரர்களும் இவரைச் சீத்தலைச் சாத்தனார் என்கின்றனரே யன்றி, “ மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் " என்று கூற வில்லை. ஆகவே, இச் செய்தி மிக ஆர அமர இருந்து ஆராய் தற்குரிய தென்பது விளங்கும்.

இவ்வரிய நூலுக்கு ஆசிரியர் டாக்டர். உ. வே. சாமிநா தையர் அவர்கள் அருஞ்சொற் குறிப்பெழுதி வெளியிட்டிருக் கின்றார்கள். இதற்கு விரிந்ததோர் உரை நாவலர் பண்டித. ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களைக் கொண்டு எழுதுவித் துப் பாகனேரி தனவைசிய இளைஞர் தமிழ்ச்சங்கத்தின் வெளி யீடாகத் தமிழ்ப் புரவலர் திருவாளர் மு. காசிவிசுவநாதன் செட்டியா ரவர்கள் பதித்து வருவது மகிழ்தற்குரியதாகும்.

இப் பெரு நூலைச் சுருக்கித் தர வேண்டுமென்று என்னைத் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தினர் பணித்தனர். அவர்கள் நம் செந்தமிழ்க்குச் செய்து வரும் திருப்பணியினை நன்கு கண்டிருக்கும் என் போன்றார், தம் அறிவிற்கு எட்டாத ஒன்றாயினும், இயன்றவளவு செய் தளிக்கும் கடமையுடையராவர் என்பதை யுணர்ந்து இதனைச் செய்யலானேன்.

ஒன்றிற்கும் பற்றாத என்னை இத் துறையில் இயக்கும் உமை யொரு பாகன் திருவருட்கும், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர்க்கும் என் பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

"தென் தமிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி யடைந்தனம் அல்லல் ஒன் றிலமே."

திருப்பதி, ( 25-10-42).       ஔவை. சு. துரைசாமி.
----------------------

மணிமேகலைச் சுருக்கம் - முன்னுரை

வட இமயத்துக்கும் தென்குமரிக்கும் இடைப்பட்ட நிலப்பரப் பாகிய நம் நாட்டுக்குச் சம்புத் தீவு என்பதும் ஒருபெயர். மிகப் பழைய தொருகாலத்தே வடமேருவின் உச்சியில் சம்பு என்பாள் ஒருத்தி தோன்றினாள். அவள் செஞ்ஞாயிறுபோல ஒளிதிகழும் மேனியம், விரிந்த சடையும் கொண்டிருந்தாள். அக் காலத்தே இந் நாட்டில் அரக்கர் தோன்றி நாட்டுமக்கட்கு நாளும் பெருந்துன்பத்தைச் செய்து வந்தனர். அவர்களது பகைமையைக் கெடுத்து நாட்டில் நல்வாழ்வு நிலவுவித்தற்கு அவள் தென்னாடு நோக்கி வந்தாள்.

தென்னாட்டிற்கு வந்த சம்பு, அக் காலத்தே கீழ்க் கடற்கரையில், சம்பாபதி என்றொரு பேரூர் இருப்பது கண்டாள். அதன் பெயர் தன் பெயரோடு ஒற்றுமைப்பட் டிருப்பது கண்டு, அதன் கண்ணே தங்கினாள். அந் நாளில் அப் பேரூரையும் அதனைச் சூழவிருந்த நாட் டையும் ஞாயிற்றின் வழித்தோன்றல்களான சோழ வேந்தர் ஆட்சி புரிந்து வந்தனர்.

சோழ மன்னருள் காந்தன் என்பவன் ஆண்டுவருங்காலத்தில் நீர் அருகி இன்மை மிகுதியாயிற்று. அவன் நீர் வேண்டிப் பெருநோன்பு ஆற்றினான். அக் காலத்தே மேற்கே குடமலையில் [#] அகத்திய முனிவன் இருந்துவந்தான். இவன் காந்தனது நீர் வேட்கை யறிந்து, தன் கைக்குடத்தில் இருந்த நீரைக் கவிழ்த்து ஓர் யாறாகப் பெருகி யோடச் செய்தான். அவ் யாறும் கீழ்க்கடலை நோக்கி ஓடி வருவதா யிற்று.
----
[#] இம் முனிவனைத் தென்னாட்டவர் குறுமுனி யென்றே கூறி வர்தனர். இவன் காலத்தே தென்னாடு போந்த முனிவருள் எவர்க்கும் இவன் வடிவில் குறுகியிருந்ததனால, இவனை அவர்கள் இவ்வாறு கருதிக் கூறுவாராயினர். இவன் தமிழறிவும் குறைந்தவன் என்பது பரஞ்சோதி முனிவர் கூறுதலால் விளங்கும்.
---

அங்ஙனம் வந்த அவ் யாறு சம்பாபதிக்கு அயலே வந்தது. அதுவே காவிரி என வழங்கப்படுவது. அதன் வரவு கண்ட சம்பு என் பாள் மகிழ்ந்து எதிர்கொண்டு, " என்[1] வேணவா தீர்த்த விளக்கே, வருக" என்றாள். அவளை அக் காவிரி வழிபடுவதை முனிவன் அகத்தியன் முகமலர்ந்து நோக்கி, "அன்னாய், இவ் வருந்தவ முதியோள் நின்னால் வணங்குந் தன்மையள்; நீ வணங்கு" என்று சொன்னான்.
அதனைக் கேட்டதும்,
[2] பாடல்சால் சிறப்பின் [3] பரதத்து ஓங்கிய [4] கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி, [5] கோள் நிலை திரிந்து கோடை நீடினும், - தான் நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை ஆகிய அக் காவிரி தொழுது நிற்க, சம்பு மிக்க உவகை பூத்து, " உலகுயிர்களைப் படைத்த செம்மலர்க் கடவுள், படைப்புக்காலத்தே இவ்விடத்துக்குச் சம்பாபதி என என் பெயரை வைத்தான்; இனி, இதற்கு நின்பெயரை இட்டுக் காவிரிப்பூம்பட்டினம் என்கின்றேன். இன்று முதல் இதற்கு இப் பெயரே நிலவுக ” என்றாள். அவ்வண்ணமே காவிரியின் பெயராகிய காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயர் நின்று நிலவுவதாயிற்று.
--------
[1]. வேணவா - வேட்கை மிகுதியால் உண்டாகும் அவா.
[2]. பாடல்சால் சிறப்பு - புலவரால் பாடப்பெறும் சிறப்பு.
[3]. பரதம் - பரதகண்ட ம். [4]. கோடா - வளையாத, முறை பிழையாத.
[5]. கோள் - செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி முதலிய கோள்கள்.
சோழர் குலக்கொடியும், தண்டமிழ்ப் பாவையும் ஆகிய காவிரி என்க. யாறுகளைப் பெண்களாகக் கூறிப் புகழ்தல் பாவலர் மரபு. அதனால் காவிரியை ஈண்டுச் சோழர் தம் குலக்கொடி யென்றார் '; பாண்டி நாட்டு வையையாற்றையும் "வையை யென்னும் பொய்யாக் குலக்கொடி" என்பர்.
--------------

1. விழாவறை காதை

சோழ நாட்டைத் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பி யன் என்பவன் ஆட்சி புரிந்துவரும் நாளில், அகத்தியன் ஒருநாள் அவனிடம் வந்து, "இக் காவிரிப்பூம்பட்டினம் மிக்க சீரும் சிறப்பும் எய்துவது வேண்டி, வானவர் தலைவனுக்கு விழா அயர்க" என்று தெரிவித்தான். அதற்கிசைந்த சோழன், இந்திரனை வணங்கி, "யான் அயரவிருக்கும் இந்திர விழா இருபத்தெட்டு நாள் நிகழும்; அக்கால முழுவதும் நீ வானவர் சூழ என் நகர்க்கண் வந்திருத்தல் வேண்டும்" என வேண்டினான். இந்திரனும் அவ்வண்ணமே வந்திருந்தான். அது முதல் ஆண்டுதோறும் அவ்விழாக் காவிரிப்பூம்பட்டினத்தே நடந்து வந்தது.

தமிழ் நாட்டின் முப்பகுதிகளுள் சேர நாட்டைச் செங்குட்டுவ னும், பாண்டிய நாட்டை வெற்றிவேற் செழியனும் ஆட்சி புரிந்துவர, இச் சோழ நாட்டை நெடுமுடிக்கிள்ளி என்பான் ஆண்டு வந்தான். இவன் சேரன் செங்குட்டுவனுக்கு மைத்துனன் . அதனால், இவனை அவன் "மைத்துனவளவன் கிள்ளி" என்று கருதினான்.

இக் காலத்தே, கோவலன் மதுரையில் கொலையுண்ட நிகழ்ச்சிக் குப் பின், காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த [1]சமயக்கணக்கரும், [2]அமயக்கணக்கரும், பல் வேறு மொழி வழங்கும் வணிகர்களும், [3]ஐம்பெருங் குழுவும், [4]எண்பேராயமும் ஒருங்கு கூடி, "இவ் யாண்டில், நாம் இந்திரவிழா செய்யாவிடின், முசுகுந்தன் என்னும் சோழ மன்னனுக்குத் துணை செய்த பூதம் நமக்கு இடும்பை செய்யும்; சதுக் கப் பூதமும் நகரை விட்டு நீங்கிவிடும்; ஆதலால், இந்திரவிழா கால் கொள்ளல் வேண்டும்" என முடிபு செய்து, முரசறையும் குடியிற் பிறந்த வள்ளுவன் ஒருவனை அழைத்து, "நகர மக்கட்கு இந்திரவிழா நடக்கும் தினத்தைத் தெரிவிக்க" என்றனர்.

அது கேட்ட வள்ளுவன் வச்சிரக்கோட்டம் சென்று, அங்கே இருந்த முரசத்தை யானையின் கழுத்தில் ஏற்றி, " திருவிழையும் இப் பெருமூதூர் வாழ்க; நாட்டில் பசியும் பிணியும் பகையும் இல்லை யாகுக; [5]வசியும் வளமும் சுரக்க " என்று வாழ்த்தி, பின்பு,

“வானம் மும்மாரி பொழிக; மன்னவன்
கோள் நிலை- [6] திரியாக் கோலோன் ஆகுக;
[7] தீவகச் சாந்தி செய்தரும் நல் நாள்,
ஆயிரங் கண்ணோன் தன்னோடு, ஆங்குள
[8] நால்வேறு தேவரும், நலத்தகு சிறப்பின்
[9] பால்வேறு தேவரும் இப்பதிப் படர்ந்து,
மன்னன் கரிகால் வளவன் நீங்கிய நாள்,
இந்நகர் போல்வதோர் இயல்பின தாகிப்
[10] பொன் நகர் வறிதாப் போதுவர் என்பது,
[11] தொல்நிலை யுணர்ந்தோர் துணிபொருள்; ஆதலின்
[12] தோரண வீதியும், [13]தோமறு கோட்டியும்,
பூரண கும்பமும், பொலம் பாலிகைகளும்,
பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்;
காய்க்குலைக் [14] கமுகும், வாழையும் வஞ்சியும்,
பூக்கொடி வல்லியும், கரும்பும் நடுமின்;
பத்தி [15] வேதிகைப் பசும்பொன் தூணத்து,
முத்துத் [16] தாமம் முறையொடு நாற்றுமின்;

விழவு மலி மூதூர் வீதியும், மன்றமும்,
பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்;
[17] கதலி கைக் கொடியும், காரூன்று [18]விலோதமும், .
[19] மதலை மாடமும், வாயிலும் சேர்த்து மின்;
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலர்ப்
[20] பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக, -
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை,
[21] ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின்;
தண்மணல் பந்தரும், [22] தாழ்தரு பெர்தியிலும்,
[23] புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்து மின்;
[24] ஒட்டிய சமயத் துறு பொருள் வாதிகள்
[25] பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்;
[26] பற்றா மாக்கள் தம்முட னாயினும்;
செற்றமும், கலாமும் செய்யா தகலுமின்"

என்று சொல்லி முரசறைந்தான். மேலும், ' இவ்வண்ணம், விழா நடைபெறும் நாலேழ் நாளும் நடத்தல் வேண்டும்; ஏனெனில்,

வெண்மணல் குன் றமும், விரிபூஞ் சோலையும்,
தண் மணல் [27] துருத்தியும், தாழ்பூந் துறைகளும்,

தேவரும் மக்களும் தம்முள் ஒத்துத் திரிவர் " என்று முரசு அறைந்து, நால்வகைப்படையும் சூழ வந்த வள்ளுவன் இந்திர விழாவின் இயல் நலங்களை எடுத்து இயம்பினான்.

-------
[1]. சமயக்கணக்கர் - சமய நூற் புலவர். [2]. அமயக்கணக்கர் - காலநிலை யுரைக்கும் சோதிடர்.
[3]. ஐம்பெருங் குழு - அமைச்சர். புரோகிதர். சேனாபதியர், தூதுவர். சாரணர்.
[4]. எண் பேராயம் - கரணத்தார். கருமகாரர், கனகச்சுற்றம், கடைகாப் பாளர் . நகரமாந்தருட் சிறந்தார், படைத்தலைவர், யானைப்படைத் தலைவர், குதிரைப்படைத் தலைவர்.
[5]. வசி - மழை . [6]. திரியா - திரியாமைக் கேதுவாகிய.
[7]. தீவகச் சாந்தி - இத் தீவகத்தின் நலத்துக்காகச் செய்யப்படும் விழா; என்றது, இந்திரவிழா.
[8]. நால்வேறு தேவர் - வசுக்கள், திவாகரர், உருத்திரர், மருத்துவர்,
[9]. பால்வேறு தேவர் - பதினெண் வகைப்பட்ட கணங்கள்.
[10]. பொன் நகர் - இந்திரனது தலைநகராகிய அமராவதி.
[11]. தொல் நிலை யுணர்ந்தோர் - இவ் விழாவின் பண்டைய நிலைமையை உணர்ந்த அறிஞர்..
[12]. தோரண வீதி - பெருவாயில் வீதி.
[13]. தோமறு கோட்டி - குற்றமற்ற கோயில் வாயில். [14]. கமுகு - பாக்குமரம்.
[15]. வேதிகை - திண்ணை . [16]. தாமம் - மாலை..

[17]. கதலிகைக் கொடி, காழூன்று விலோதம்- துகிற்கொடி விசேடங்கள்.
[18]. பல்வகை வண்ணம் தீட்டிய துகிற்கொடி. விலோதம் என்றும், பல வகையாகக் கத்தரிக்கப்பெற்ற துகிற்கொடி கதலிகைக் கொடி என்றும் கூறுவர்.
[19]. மதலை மாடம் - கொடுங்கை மா...ம்.
[20]. பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம்-நகரின்கண் உள்ள சதுக்கப்பூதம். சதுக்கம் - நான்கு தெருக்கள் கூடும் இடம்.
[21]. ஆறு அறி மரபு - வேறு வேறு செய்வினைகளைச் செய்தற்குரிய நெறி யறிந்து செய்யும் முறைமை.
[22]. தாழ்தரு பொதியில் - தன்னிய சிபல் தாழ்ந்த ஊரம்பலம்.
[23]. புண்ணிய நல்லுரை - தரும உபதேசம். -
[24]. ஒட்டிய சமயத்து உறுபொருள் - தாம் மேற்கொண்டொழுகும் சம பத்தின் துணிபொருள்.
[25]. பட்டி மண்டபம் - கல்விக்கழகம். [26]. பற்றமாக்கள் - அன்பில்லாதவர்.
[27]. துருத்தி - ஆற்றிடை யமைத்த தவு.
---------

2. ஊர் அலர் உரைத்த காதை

இவ்வாறு இந்திரவிழா நடந்துவருநாளில், நாடகமகளிர் தமது நாடகப் புலமை நலத்தைப் பிறர் கண்டு இன்புறக் கண்டு தாமும் இன் புறுவது இயற்கை. இவ்வாறு விழாவிற் கலந்து சிறப்பித்த நாடகமகளி ருள் மா தவியும் அவள் மகள் மணிமேகலையும் காணப்படவில்லை. அத னைக் கண்டறிந்த மாதவியின் தாயாகிய சித்திராபதி என்பவள், மாதவி யின் தோழியாகிய வயந்தமாலையை நோக்கி, "நீ மா தவிபாற் சென்று, நீயும் மணிமேகலையும் விழாவிற்கு வாரா திருப்பது அறிந்து இவ் வூரவர் அலர் கூறுகின்றனர் என உரைத்து வருக' எனச் சொல்லி மா தவி பால் விடுத்தாள்.
வந்த வயந்தமாலை, மாதவி துறவு பூண்டு, அதற்குரிய கோலமும் கொண்டு இருப்பதைக் கண்டு, உள்ளம் புழுங்கி, 'நாடக மகளிர்க்கு இன்றியமையாது வேண்டப்படும் கூத்து, பாட்டு, யாழ் முதலிய அனைத்தும் கரிசறக்கற்று, ஓவிய நூலின் ஒண்பொருளும் தெளிந்து துறைபோகிய நீ, நற்றவம் மேற்கொண்டது நாணுடைத்து என்று பலர் கூடி யுரைக்கும் அலர் நலம் தருவதாக இல்லை, காண் " என்றாள். அவட்கு, மாதவி :

[1] "காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப்
போதல் செய்யா உயிரொடு நின்றே,
[2] பொற்கொடி மூதூர்ப் பொருளுரை இழந்து
நற்றொடி நங்காய்! நாணுத் துறந்தேன்;
காதலர் இறப்பின் [3] கனைஎரி பொத்தி
[4] ஊதுலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
இன்னுயிர் ஈவர்; ஈயா ராயின்,
நன்னீர்ப் [5] பொய்கையின் நளிஎரி புகுவர்;

நளியெரி புகா அராயின், அன்பரோடு
[6] உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம்படுவர்
பத்தினிப் பெண்டிர்; [7]பரப்பு நீர் ஞாலத்து
அத்திறத்தாளும் அல்லள்.

அன்றியும், கணவனுக் குற்ற துயர் பொறாது மதுரை மூதூர்க்கண் அலமந்து தன் மார்பைத் திருகி யெறிந்து, அவ்வூரைத் தீயுண்ணச் செய்த மாபெரும் பத்தினியாகிய கண்ணகிக்கு இம் மணிமேகலை மக ளாவாள். அதனால், அவள், அரிய தவநெறிப்-படுவதல்லது, நாடக மகளிர்க்குள்ள அவநெறிக்கண் செல்லாள். மேலும், இங்கே, மாதவர் உறையும் இவ்விடத்திற்குப் போந்து, இங்கே எழுந்தருளியிருக்கும் அறவண அடிகளின் திருமுன் சென்று அவர் திருவடியில் வணங்கி, மனம் கலங்கி, என் காதலன் உற்ற கடுந்துயரைக் கூறினேன். அவர், திருவுளம் கொண்டு,

”பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்,
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்;
பற்றின் வருவது முன்னது; [8] பின்னது
அற்றோர் உறுவது, அறிக' என் றருளி,
[9] ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி,
'உய்வகை, இவை, கொள் '

என்று அருளினர்; இதனை என்னைப் பெற்ற சித்திராபதிக்கும், ஏனை மகளிர்க்கும் சென்று தெரிவித்திடுக" என்று உரைத்தாள்.

ஆங்கு அவள் உரைகேட்டு அரும்பெறல் மாமணி,
ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர் போன்று,
[10] மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும்
[11] கையற்றுப் [12] பெயர்ந்தனள்.

----
[1]. காதலன் - கோவலன்.
[2]. பொற்கொடி மூதூர் - அழகிய கொடிகள் தூக்கிய காவிரிப்பூம்பட் டினம். பொருளுரை - புகழுரை.
[3]. கனைஎரி - மிக்க நெருப்பு. பொத்தி - மூட்டி.
[4]. ஊதுலைக் குருகு - கொல்லன் உலைக்களத்துக் காற்றை யூதும் துருத்தி
[5]. பொய்கையின் நளிஎரி புகுவர் - பொய்கைக்கண் இறங்கி மூழ்குவது போல பெரிய நெருப்பில் வீழ்வர்.
[6]. உடனுறை வாழ்க்கை - பிரியாது கூடியிருக்கும் வாழ்க்கை .
[7]. பரப்பு நீர் ஞாலம் - பரந்த கடல் சூழ்ந்த நிலவுகம்.
[8]. பின்னது...உறுவது - பின்னே கூறிய பேரின்பம் பற்றற்றோர் எய் துவதாகும்.
[9]. ஐவகைச் சீலத்து அமைதி - காமம், கொலை, கள், பொய், களவு என் னும் இவ்வைந்து குற்றங்களையும் முற்றவும் கெடுத்தலால் ஆகும் நலம்.
[10]. மையல் நெஞ்சம் - மயக்கத்தையுடைய நெஞ்சம்.
[11]. கையற்று - செயலற்று; செய்வது தெரியாது மயங்கி.
[12]. பெயர்ந்தாள் - நீங்கினாள்.
-------

3. மலர்வனம் புக்க காதை

மாதவி தன் தோழி வயந்தமாலைக்குத் தன் கணவன் கோவலன் உற்ற துன்பமும், அது வழியாகக் கண்ணகிக் குற்ற கடுந்துயரமும், அவள் பின்னர்ச் செய்தனவும் பிறவும் கூறும்போது ஆங்கிருந்த மணி மேகலை அவற்றைக் கேட்டுப் பெரிதும் வருந்திக் கண்ணீர் வடிக்க லானாள். அதுபோது, மணிமேகலை பூத்தொடுத்திருந்தாளாயினும், அதனை மறந்து அவள் சொரிந்த கண்ணீர் பூமாலையை நனைத்தது. வயந்தமாலை சென்றதும், மணிமேகலை கண்ணீர் சொரிவதைக் கண்ட மாதவி, அவளது கண்ணீ ரைத் துடைத்து, "நின் கண்ணீரால் நீ தொடுத்த [1] தூநீர்மாலை [2] தூத்தகை இழந்தது; இனி, நீயே சென்று தூயமலர்களைக் கொணர்க" என்றாள். அங்கே, அம் மணிமே கலையுடன் சுதமதி என்னும் ஒருத்தி மாலை தொடுத்துக்கொண்டிருந்தாள். அவள், மாதவி கூறியதைக் கேட்டு, அஞ்சி, "மாதவி, மணிமே கலை தனித்துச் செல்வது தகுதியன்று. இவளைத் தெருவில் ஆடவர் கண்டால், அகலார்; பேடிகளே, இவளைக் கண்டால் விருப்பமின்றி யொழிவார். மகளிர் தனித்துச் செல்வதால் உண்டாகும் தீங்கு நீ அறியாய்போலும்; யானே அதற்குப் போதிய சான்று, கேள் ” எனத் தொடங்கினாள் :

"யான் சண்பை நகரத்தில் வாழ்ந்த கௌசிகன் என்னும் வேதிய னுக்கு ஒரே மகள். ஒருநாள் யான் தனியே மலர் வனம் சென்று பூக்கொய்துகொண் டிருந்தேன். அப்போது, மாருதவேகன் என்ற ஒரு விஞ்சையன் இந்தக் காவிரிப்பூம்பட்டினத்தில் நிகழும் இந்திர விழாவைக் காண்டற்கு வந்தான். வந்தவன், வழியில் மலர்வனத்தில் தனியே இருந்த என்னை வானவழியாகத் தூக்கிக்கொண்டு வந்தான். அப்போது யானும் அவன் பான்மையேன் ஆயினேன். பின்பு, அவன் என்னை இந் நகர்க்கண் கைவிட்டுக் கண்ணோட்டமின்றி தன் நாட்டிற் குப் போய்விட்டான். அதுமுதல் யான் இங்கே இருப்பேனாயினேன். ஆதலால், மணிமேகலை தனித்தேகுதல் கூடாது."

இனி, அச் சுதமதி மேலும் கூறலுற்று, " மலர் கொய்யப் போவ தாயின், இலவந்திகை, உய்யானம், சம்பா திவனம், கவேரவனம் என்ற இம் மலர்வனங்கட்குப் போதல் கூடாது" என, அக் கூடாமைக் குரிய ஏதுக்களையும் எடுத்தோதி முடிவில், " உவவனம் போவதே தக் கது" என்று மொழிந்து, அதன் இயல்பைக் கூறத் தொடங்கி,

"அருளும், அன்பும், [3]ஆருயிர் ஓம்பும்
ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்,
பகவனது ஆணையின் பல்மரம் பூக்கும்
உவவனம் என்ப தொன்றுண்டு; அதன் [4] உள்ளது,
விளிப்பறை போகாது [5] மெய்புறத் திடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு; அதன் உள்ளது
தூநிற மாமணிச் சுடரொளி விரிந்த
[6] தாமரைப் பீடிகைதான் உண்டு; ஆங்கு இடின்,
அரும்பு அவிழ்செய்யும்; அலர்ந்தன வாடா;
சுரும்பினம் மூசா [7] தொல்யாண்டு கழியினும்"

என்று சொல்லி, "இதன் திறத்தை உரைக்க மறந்தேன்; இதுகேள்," என மேலும் தொடங்கி, ' யாதானுமொரு தெய்வத்தைக் கருத்துட் கொண்டு, ஒரு பூவை அதன்பால் இடின், அப் பூ அத் தெய்வத்தின் அடியைச் சேர்ந்துவிடும்; எதனையும் நினையாது இடின், அது நீங்காது அங்கேயே கிடக்கும். இனி, இத்தகைய பீடிகை இங்கே நிறுவப் பெற்றதற்குக் காரணம் வினவின், கூறுவல் :

சிந்தை யின்றியும் செய்வினை யுறும் எனும்
[8] வெந்திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்,
செய்வினை சிந்தை இன்றெனின், யாவதும்,
எய்தர்து என் போர்க்கு ஏது வாகவும்,
[9] பயம் கெழு மாமலர் இட்டுக் காட்ட
மயன் பண்டு இழைத்த மரபினது அதுதான்;
அவ்வனம் அல்லது அணியிழை நின்மகள்
[10]. செவ்வனம் செல்லும் செம்மைதான் இலள் :

ஆதலால், மலர் கொய்வதற்கு மணிமேகலையுடன் யானும் போவேன் " என்று இயம்பினாள். அதனை மா தவி உடன்பட்டு மணிமேகலையை விடுப்ப, இருவரும் உவவனம் நோக்கிச் செல்வாராயினர்.

இருவரும் தேர் செல்லும் தெருவில் செல்லும்போது, உண்ணா நோன்பி ஒருவனைச் சூழ்ந்துகொண்டு, கள்ளுண்ணுமாறு இரந்து கேட்கும் களிமகன் ஒருவனைக் கண்டனர்; அவன் பின்னர் பலர் நின்றுகொண் டிருந்தனர். பிறிதொருசார், பித்தெனொருவன், அழு வதும் விழுவதும் அரற்றுவதும் கூவுவதும் எழுவதும் தொழுவதும் பிறவும் செய்வது கண்டு மிகப் பலர் கூடி நின்றனர். ஒருபுடை காமன் வாணன் நகரத்தே பேடிக் கோலங்கொண்டு ஆடிய கூத்துப் போல, சிலர் பேடிக் கோலங்கொண்டு ஆடுவதைப் பலர் பார்த்துக்கொண்டு நின்றனர்; பிறிதொரு மருங்கில்,

[11] சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனை தொறும்
[12] மையறு படிவத்து வானவர் முதலா

எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி [13] வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண்கவர் ஓவியம் கண்டு பலர் வியந்து நின்றனர். வேறிடத்தே, மகளிர் பலர் தம் இளஞ்சிறார் களை யானைமீதேற்றி, [14]"ஆலமர் செல்வன் மகன் விழாக் கால்கோள் காண்மினோ" எனக் கண்டு நின்றனர்.

இக் கூட்டத்தின் இடையே மணிமேகலையும் சுதமதியும் சென்ற னர். மணிமேகலையின் துறவுக்கோலத்தைக் கண்டோருள், பலர் அவளைச் சூழ நின்றுகொண்டு, 'அழகமைந்த உருவினையுடைய இவளை அருந்தவப்படுத்திய தாயோ கொடியவள்; தகவிலள்; இவள் மலர்வனம் புகின், ஆங்கு வாழும் அன்னமும், மயிலும், கிளியும் முறையே இவள் நடைக்கும், சாயலுக்கும், சொல்லுக்கும் தோற்றோ டிப் போகும் " என்றெல்லாம் பரிந்து கூறினர். இவற்றைப் பொருள் செய்யாமல்,

குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
[15] திலகமும் [16] வகுளமும் செங்கால் வெட்சியும்
[17] நரந்தமும் [18]நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமும் தளவமும் [19] முடமுள் தாழையும்
[20] குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண்பகமும்
[21] எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி

வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
[22] சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே
ஒப்பத் தோன்றிய உவவனம் தன்னைத்
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
மலர் கொய்யப் புகுந்தனள் மணிமேகலை.

--------
[1]. தூநீர் மாலை - தூய தன்மையினை யுடைய பூமாலை .
[2]. தூத்தகை - தூயதாகிய தன் அழகு.
[3]. ஆருயிர் ஓம்பும் ஒருபெரும் பூட்கை - நிறைந்த உயிர்களைப் பாதுகாக் கும் ஒப்பற்ற பெரிய மேற்கோள் (துணிவு). ஒழியா - நீங்காத.
[4]. உள்ளது - உள்ளே இருப்பது. விளிப்பு அறை போகாது - ஓசை வெளியே செல்லாது.
[5]. மெய்புறத்து இரு உம் - உள்ளிருப்பவர் உடலுருவத்தை வெளியே காட்டும்.
[6]. தாமரைப் பீ!கை - தாமரைப்பூ வடிவாகச் செய்தமைத்த இருக்கை (பீடம்). |
[7]. தொல்யாண்டு கழியினும் அரும்பு அவிழும் (மலரும்); அலர்ந்தன வாடா; சுரும்பினம் மூசுவது இல்லை .
[8]. வெந்திறல் நோன்பிகள் - சிந்தையின் றியும் செய்வினை உறும் எனும் வெந்திறல் நோன்பிகள் - தம்மை யறியாமலே தாம் செய்யும் வினையிடத்தும் அறம் பாவங்கள் பிறக்கும் என்ற கருத்துடைய வெவ்விய திறல் வாய்ந்த விரதி கள்; எனவே, தாம் அறிவு அறியாதே செய்யும் வினையால் பிறக்கும் அறம் பாவம் தம்மைச் சேரா என்று கருதுபவர் உண்டு என்பதும் 'செய்வினை...ஏது
வாகவும்' என்பதனால் கூறப்பட்டதாம்.
[9]. பயம் - பயன் (தேன்).
[10]. செவ்வனம் செல்லும் - செவ்வையாக (நேராக)ச் செல்லக்கூடிய (வேறே செல்லக்கூடிய).
[11]. சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனை - செங்கற்களால் எடுக்கப்பட்ட உயர்ந்த நிலைகளையுடைய வீடுகள்.
[12]. மையறு படிவம் - குற்றமற்ற தெய்வ வுருவம்.
[13]. வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம் - வெள் ளிய சுண்ணாம்புச் சாந்தினால் விளக்கமுறச் சிற்பிகளால் செய்யப்பட்ட காண் பார் கண்களைக் கவரும் சித்திரம்.
[14]. ஆலமர் செல்வன் மகன் - ஆலின் கீழ் மேவும் சிவனுக்கு மகனான முரு. கன்,
[15]. திலகம் - மஞ்சாடி மரம். [16]. வகுளம் - மகிழ மரம்.
[17]. நரந்தம் - நாரத்தை . [18]. நாகம் - புன்னை .
[19]. முடமுள் தாழை - வளைந்த முள்ளையுடைய தாழை.
[20]. குடசம் - வெட்பாலை மரம். வெதிரம் - மூங்கில்.
[21]. எரிமலர் இலவம் - நெருப்புப்போலச் சிவந்த பூக்களையுடைய இலவ மரம்.
[22]. சித்திரச் செய்கைப்படாம் - சித்திர வேலை செய்யப்பட்.... ஆடை போர்த்தது ஒப்பத் தோன்றிய உவவனம் என்க.
தெய்வப் பீடிகையுள்ள வன மாதலால் இதனைச் சுதமதி " தொழுது " காட்டினாள் என அறிக.
-------------

4. பளிக்கறை புக்க காதை

உவவனம் புக்க சுதமதியும் மணிமேகலையும் காண்பார் கண்களைக் கவரத்தக்க இயற்கையழகு திகழ நின்ற பூங்காவைக் கண்டனர்.

[1] “பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்கு
இருள் வளைப்புண்ட மருள் படு பூம்பொழில்
[2] குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட,
மழலை வண்டினம் நல்யாழ் செய்ய,
வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர்,
[3] மயில் ஆடு அரங்கின் மந்தி காண்பன காண்;
மாசறத் தெளிந்த [4] மணி நீர் இலஞ்சிப்
[5] பாசடைப் பரப்பின் பல்மலர் இடைநின்று,
ஒருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை
அரச அன்னம் ஆங்கு இனி திருப்பக்
கரைநின்று ஆலும் ஒருமயில் தனக்கு,

[6] கம்புட் சேவல் கனை குரல்[7] முழவாக்
கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய்;
[8] இயங்குதேர் வீதி எழுதுகள் சேர்ந்து
வயங்கொளி மழுங்கிய மாதர்நின் முகம்போல்
விரைமலர்த் தாமரை கரைநின்று ஓங்கிய
[9] கோடுடை தாழைக் கொழுமடல் அவிழ்ந்த
வால் வெண் சுண்ணம் ஆடியது இதுகாண்;
மாதர் நின் கண் போது எனச் சேர்ந்து
தாதுண் வண்டினம் மீது [10]கடி செங்கையின்
அஞ்சிறை விரிய அலர்ந்த தாமரைச்
செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு
எறிந்தது பெறா அது இரையிழந்து வருந்தி
[11] மறிந்து நீங்கும் மணிச்சிரல் காண் " எனச்

சுதமதி மணிமேகலைக்குக் காட்டி மகிழ்வித்தாள்.

இவ்வாறு இவ்விருவரும் உவவனத்துப் பொழிலும் பொய்கை யும் வழங்கும் காட்சி யின்பத்தை நுகர்ந்துகொண் டிருக்கையில், நக ரத்திடத்தே பெருங் கிளர்ச்சி யுண்டாயிற்று. சோழ வேந்தனது பட்டத்து யானையான காலவேகமென்பது மதவெறிகொண்டு நகர வீதியில் திரியலுற்றது; மக்கள் கலக்கமுற்று அலமந்து நாற்புறமும் ஓடலாயினர். இச் செய்தி, சோழவேந்தனான நெடுமுடிக் கிள்ளியின் மகன் உதயகுமரனுக்குத் தெரிந்தது. உடனே, அவன் விரைபரி யொன் றின்மேல் இவர்ந்து, விரைந்து போந்து, அவ் யானையை அடக்கி, பாகர் பால் விடுத்து, தான் ஒரு நெடுந்தேர் ஏறி நாடக மடந்தையர் வாழும் தெருவழியே சென்றான். தெருவில் நெடுமனை யொன்றின் மேல்மாடியில், தெருப்பக்கத்தே அமைந்திருந்த பள்ளியறைக்கண், நாடக மடந்தை யொருத்தியொடு [12] எட்டி குமரன் ஒருவன் யாழொன் றைத் தழீ இக்கொண்டு கிடந்தான். அவனைத் தேரிலிருந்து கொண்டே பார்த்த உதயகுமரன், அவனை யழைத்து, " நினக்கு உற்ற இடுக்கண் என்னை? இவ்வாறு மயங்கிக் கிடக்கின்றனையே!" என்று வினவினன். அதுகேட்ட அவ்வெட்டி குமரன்,

[13]"வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போல்
[14] தகை நலம் வாடி மலர்வனம் புகூஉம்
மாதவி பயந்த மணிமேகலை யொடு
கோவலன் உற்ற கொடுந்துயர் தோன்ற
[15] நெஞ்சிறை கொண்ட நீர்மையை நீக்கி,
[16] வெம்பகை நரம்பின் என்கைச் செலுத்தியது;
இதுயான் உற்ற [17]இடும்பை "

என்றான். இதனைக் கேட்டதும் உதயகுமரன், " அவ்வாறாயின் யான் சென்று அவளை என் தேர்மீது ஏற்றி வருவேன்" என்று மொழிந்து உவவனம் நோக்கிச் செல்வானாயினன். அவன் அதனைக் குறுகலும், அவனது தேரிற் கட்டிய மணியொலி உவவனத்தின் உள்ளிருந்த மணிமேகலையின் செவிக்கு எட்டியது. உடனே அவள், சுதமதியை நோக்கி,

“சித்திரா பதியோடு உதயகுமரன் உற்று
[18] என்மேல் வைத்த உள்ளத் தான் என
வயந்த மாலை மாதவிக்கு ஒருநாள்
[19] கிளந்த மாற்றம் கேட்டேன்; ஆதலின்,
ஆங்கு அவன் தேரொலிபோலும், ஆயிழை!
ஈங்கு என் செவிமுதல் [20] இசைத்தது;

என் செய்வேன் " என்று மொழிந்து அஞ்சினள். அஞ்சாத சுதமதி அவளை அழைத்துச் சென்று அவ்வனத்திடையே இருந்த பளிக்கறைக் குள் விடுத்துத் தாழிட்டு, வெளியே வந்து, அதற்கு ஐந்து விற்கிடை அகன்று நின்றாள். உதயகுமரனும் அங்கு வந்து சேர்ந்து, சுதமதியைக் கண்டு மணிமேகலைபால் தனக்குள்ள காதற்காமம் தோன்றப் பல சொற்களைக் கட்டுரைத்தான்.

அவன் உரைத்தவற்றை அமைதியுடன் கேட்ட சுதமதி, உதய குமரனைத் தெருட்டப் புகுந்து,

[21] "இளமை நாணி முதுமை எய்தி
உரைமுடிவு காட்டிய [22] உரவோன் மருகற்கு
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்
செறிவளை மகளிர் செப்பலு முண்டோ ?
அனைய தாயினும் யான் ஒன்று கிளப்பல் :
[23] வினை விளங்கு தடக்கை விறலோய்! கேட்டி:
வினை யின் வந்தது; வினைக்கு விளை வாயது;
புனைவன நீங்கின் புலால்புறத் திடுவது;

மூப்பு [24]விளிவு உடையது; தீப்பிணி இருக்கை;
பற்றின் பற்றிடம்; குற்றக் கொள்கலம்;
[25]புற்றடங்கு அரவின் செற்றச் சேக்கை;
[26] அவலக் கவலை, கையாறு, அழுங்கல்,
[27] தவலா உள்ளம் தன்பால் உடையது;
மக்கள் யாக்கை இது என உணர்ந்து;
மிக்கோய்! இதனைப் புறமறிப் பாராய்"

என்று உரைத்தனள். இச் சொற்கள் அவன் செவியிற் புகுந்து உள் ளத்துச் சென்று சேர்வதன்முன், பளிக்கறைக்குள் ளிருந்த மணிமே கலையின் உருவம் அவன் கண்முன் தோன்றிற்று.

--------
[1]. பரிதியஞ் செல்வன்...பொழில் - ஞாயிற்றினது கதிர்களாகிய சேனை யின் பொருட்டு, இருட் கூட்டம் வளைந்துகொண்டு தங்கும், ஒளியின்மையால் மயக்கத்தைத் தரும் பூம்பொழில்.
[2]. தும்பி குழலிசை கொளுத்திக் காட்ட - தும்பிகள் குழலோசையைச் செய்து ஒலிக்க.
[3]. மயிலாடு அரங்கின் - மயில் தோகையை விரித்து நின்று ஆடும் இடத்தை .
[4]. மணிநீர் இலஞ்சி - லே மணி 3பாலும் தெளிவும் நிறமும் ஒளியு முடைய நீர் நிலை.
[5]. பாசடைப் பரப்பு - பசிய இலைகள் மூடிய நீர்ப்பரப்பு.
[6]. கம்புட்சேவல் - சம்பங் கோழி. [7]. கனை குரல் முழவா - கோழிச் சேவலின் கனைப்போசை முழவோசையாக.
[8]. இயங்கு தேர் வீதி எழு துகள் - தேர் இயங்கு வீதி எழு துகள்; தேர் செல்லுதலால் வீதியில் எழுகின்ற தூசு.
[9]. கோடு உடைத்தாழை - சங்கு உடைந்தாற்போல நிறத்தையுடைய
[10]. வண்டினம் மீது கடி, செங்கை-மேலே மொய்க்கின்ற வண்டினத்தை ஓச்சும் செவ்விய கை.
[11]. மறிந்து நீங்கும் - திரும்பி யேகும்.
[12]. எட்டி குமரன் - எட்டி யென்னும் சிறப்புப் பெயர் அரசனால் கொடுக்கப்பட்ட வணிக குமரன்,
[13]. வகை வரிச் செப்பு - கூறுபாடு பல கொண்டு வரிகளையுடையதாய செப்பு.. செப்பு - பெட்டி.
[14]. தகை - அழகு.
[15]. நெஞ்சிறை கொண்ட நீர்மை - நெஞ்சிலே தங்கியிருந்த இசையறி வின் தன்மை .
[16]. வெம்பகை நரம்பு - நின்ற நரம்பிற்கு மூன்றாவதும் ஆறாவதுமாகிய நரம்பு. கையைச் செலுத்தியது துயரம் என முடிக்க.
[17]. இடும்பை - துயரம்.
[18]. என் மேல் வைத்த உள்ளத்தான் - என் மேல் காதல் கொண்டுளன்.
[19]. கிளந்த மாற்றம் - சொல்லிய சொல். [20]. இசைத்தது - செவியிற் கேட்பதாயிற்று.
[21]. இளமை...உரவோன்: "தம்முள் மறுதலையாயினார் இருவர் தமக்கு முறைமை செய்யவேண்டி வந்து சில சொன்னால், அச் சொல் முடிவு கண்டே ஆராய்ந்து முறை செய்ய அறிவு நிரம்பாத இளமைப் பருவத்தான் " என்று இகழ்ந்த நரைமுது மக்கள் உவக்கும் வகை நரைமுடித்து வந்து, முறை வேண்டி வந்த இருதிறத்தாரும் சொல்லிய சொற்கொண்டு ஆராய்ந் தறிந்து முறை செய்தான் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன்.
[22]. உரவோன் - கரிகாற் பெருவளத்தான்.
[23]. வினை விளங்கு தடக்கை விறலோய் - செய்தற்குரிய செய்கைகளைத் தவறாதே செய்தலால் விளக்க மெய்திய பெரிய கையையுடைய விறலுடைய உதயகுமரனே.
[24]. விளிவு - சாக்காடு.
[25]. புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை - அரவு அடங்கு புற்றின் செற்றச் சேக்கை-ரஞ்சுடைய நாகம் அடங்கியிருத்தற்கு இடமாகும் புற் றுப்போலச் செற்றமாகிய தீக்குணம் தங்கியிருத்தற்குரிய இடம். செற்றம் பகைமை நெடிது தங்குதற்கேதுவாகிய சினம்.
[26]. அவலக்கவலை - வருத்தமும் அதனால் உளதாகும் மனத்தளர்ச்சியும். 4. தவலா உள்ளம் - நீங்காத உள்ளம்.
[27]. புறமறிப் பாராய் - புறம் மறியாகப் பார்ப்பாய். அஃதாவது. புறத்தே தோன்றும் தோற்றத்தை மாற்றி அகத்தே தோன்றும் தோற்றத் தைத் திருப்பிப் பார்ப்பாயாக என்பது; தோலின் வெளித் தோற்றத்தை விலக்கி அகத்தோற்றத்தைக் காண்டல், இதனைப் "பைம்மறியாப் பார்த்தல்' என்றும் கூறுவர்
-------------

5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை

பளிக்கறைக்குள் மணிமேகலையின் உருவம் தோன்றக் கண்ட உதயகுமரன் அப் பளிக்கறைக்குட் செல்ல அதன் வாயிலை நாடினன். அது பளிங்கினால் ஆகியதா தலால், அதனைக் காண முடியவில்லை; அவன் அவ்வறையின் புறச்சுவரைக் கையால் தடவிப் பார்த்துச் சுற்றி வந்தான். வரும்போது மணிமேகலையைக் கண்டு, " சுதமதி! நின் தோழியாகிய மணிமேகலை எத்திறத்தாள் ?" என்று அவ் வுதயகுமரன் வினவினன். அவனுக்கு அவள்,

"குருகு [1] பெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின்
[2] முருகச் செவ்வி முகந்து தன் கண்ணால்
பருகாள். ஆயின், பைந்தொடி நங்கை
[3] ஊழ்தரு தவத்தள்; [4]சாபசரத்தின்
காமற் கடந்த வாய்மையள் என்றே

உணர்தல்வேண்டும்" என்று உரைத்தாள். அதனால் அவன் அமைந் தொழியாது, [5] செவ்வியளாயின் என் செவ்விய ளாகுக" என உரைத்து, "நீ சமண மகளிரிடையே விஞ்சையன் ஒருவனால் கைவிடப் பட்டவள் என்று பலராலும் கூறப்படும் அவளல்லையோ?" அவரிடத் தின் நீங்கி, இங்கே இம் மணிமேகலையுடன் எவ்வாறு வந்தனை?" எனத் தெரியக் கேட்டான். அவனுக்குச் சுதமதி தன் வரலாறு சொல் லத் தொடங்கி,

"[6] வார்கழல் வேந்தே . வாழ்கநின் கண்ணி,
[7] தீநெறிப் படரா நெஞ்சினை யாகுமதி;
ஈங்கு இவள் தன்னோடு எய்திய காரணம்.
[8] வீங்குநீர் ஞாலம் ஆள்வோய், கேட்டருள் :

என் தந்தை என்னையும் என் தாயாகிய தன் மனைவியையும் இழந்து, என்னால் என் குடிக்கு நேர்ந்த குற்றத்தைப் போக்க வெண்ணி, குமரி யாட வடமொழியாளர் பலரொடு வந்தான். வந்தவன் குமரித்துறையிலும் அதன்பின் காவிரித்துறையிலும் நீராடி என்னைத் தேடலாயினன். அவன் ஒருநாள் என்னைக் கண்டு, யான் தனக்கு மகளா தலால், என் னைப் பிரியமாட்டானாய், என்னோடே இருந்து மனைதோறும் இரந் துண்டு வாழ்ந்துவந்தான். ஒருநாள் கன்றீன்ற ஆவொன்று அவன் மீது பாயவே குடல் சரிந்துவிட்டது. அதனைக் கையில் தாங்கிய வண்ணம் அவன் சமணரிடம் தஞ்சம்புகுந்தான். அவர்கள், அவனையும் என் னையும் புறத்தே போக்கி, ' நீவிர் இவ்விடத்திற்கு உரியரல்லீர் ' எனக் கையுதிர்த்துவிட்டனர். யாங்கள், ' யாவரேனும் அறவோர் அகப்படுவ ரோ?' என நகரத்தெருக்களில் அலமந்து திரிந்தோம். அப்போது சங்க தருமன் என்பவன், உச்சிப்போ தில் மனைதோறும் சென்று பிச்சை எடுத்துவருவோன், எங்களைக் கண்டு, கழிபேர் இரக்கம் கொண்டு எம்சா துயர் நீக்கினன். அப் பெரியோன் சங்க தருமன் எனப்படும் புத்த சான்றோனாவன். அவனே, எங்கட்குப் புத்தனது அரு. ளறத்தைப் புகன்று, அப் பெருமான்,

எங்கோன், இயல்குணன்; [9] ஏதமில் குணப்பொருள்;
[10] உலக நோன் பின் பலகதி யுணர்ந்து
தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்;

என்றான். அதுமுதல், யான்,

[11] இன்பச் செவ்வி [12] மன்பதை எய்த
அருளறம் பூண்ட [13] ஒரு பெரும் பூட்கையின்
[14]அறக்கதி ராழி திறப்பட வுருட்டி,
காமற் கடந்த வாமன் பாதம்
[15] தகை பாராட்டுதல் அல்லது யாவதும்
[16] மிகைநா இல்லேன், வேந்தே வாழ்க "

என்று சொல்லி முடித்தாள். இதனைக் கேட்ட உதயகுமரன், " இனி, யான் இம் மணிமேகலையைச் சித்திரா திபதியால் என்பால் சேர்த்துக் கொள்வேன்," என்று அப் பொழிலை விட்டு நீங்கினான். அவன் போனதை யுணர்ந்த மணிமேகலை, வெளியே சுதமதியிடம் வந்து,

கற்புத் தான் இலள், நற்றவ வுணர்விலள்,
[17] வருணக் காப்பிலள் [18]பொருள் விலை யாட்டி என்று
இகழ்ந்தன னாகி [19] நயந்தோன் எனாது
[20] புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்
இதுவோ, அன்னாய், காமத் தியற்கை
இதுவே யாயின் கெடுக தன் திறம்

எனச் சொல்லி நின்றாள். அவர்கள் எதிரில் அழகிய பெண்ணொருத்தி மிக்க நலம் திகழப் போந்து பளிக்கறைப் பீடிகையை வலம்கொண்டு வந்து நின்றாள். அவளை இவர்கள் ஆர்வத்தோடு பார்த்து நிற்கையில் அவள், தெய்வ வுருவுடன் ஓங்கி நின்று,

புலவன், தீர்த்தன், புண்ணியன் [21]புராணன்,
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ;
குற்றம் கெடுத்தோய், [22]செற்றம் செறுத்தோய்
முற்ற வுணர்ந்த முதல்வா, என் கோ;
[23] காமற் கடந்த ஏம மாயோய்
[24] தீநெறிக் கடும்பகை கடிந்தோய், என் கோ;
[25] ஆயிர ஆரத்து ஆழியந் திருந்தடி
நாஆ யிரமிலேன், ஏத்துவது எவன்?

என்று பரவி நின்றாள். அக் காலையில் பகற்போதும் நீங்கிற்று; அந்தி மாலை அழகு திகழ வந்தது. அதனுடைய அவ் வினிய காட்சிக்கண்,

அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் [26] தாமரை யடக்க,
[27] பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு
ஓங்கிருந் தெங்கின் உயர்மடல் ஏற,
அன்றிற் பேடை [28] அரிக்குரல் அழை
இச் சென்று வீழ் பொழுது சேவற் [29]கிசைப்பப்
பவளச் செங்காற் பறவைக் கானத்துக்
குவளை மேய்ந்த [30]குடக்கண் சேதா
முலை பொழி தீம்பால் எழுதுகள் அவிப்ப,
கன்று நினை குரல, [31]மன்று வழிப்படர.
அந்தி யந்தணர் செந்தீப் பேணப்
பைந்தொடி மகளிர் பலர் விளக் கெடுப்ப
யாழோர் [32]மருதத்து இன் நரம்பு உளர,
கோவலர் [33] முல்லைக் குழல்மேல் கொள்ள,
[34]அமரக மருங்கில் கணவனை இழந்து
[35] தமரகம் புகூஉம் ஒருமகள் போல

செஞ்ஞாயிறு மறைந்ததனால் தேம்பிய மேனியுடன் அந்திமாலை யென்னும் அழகி வந்தது போல இருந்தது.

-------
[1]. குருகு பெயர்க் குன்றம் - கிரவுஞ்சம் என்னும் மலை. இதனைக் கான்றவன் முருகன்.
[2. முருகச் செவ்வி - இளமைக் காலத்து அழகு . ¨
[3]. ஊழ்வினையால் தவத்தைமேற் கொள்வாளாயினள்.
[4]. சாபசரத்தின் - சபித்தலாகிய அம்பினால், சபிக்கும் தன்மையை வில்லாகவும், சொல்லை அம்பாகவும் கொள்க.
[5. செவ்வியளாயின் என் செவ்வியளாகுக - காமச் செவ்வியுடையளா யின், எனக்கு அந்நலத்தைத் தரும் இயல்பினளாகுக.
[6]. வார்கழல் வேந்தன் - வரிந்து கட்டப்பட்ட வீரகண்டை யணிந்த உதய குமரன்.
[7]. தீநெறிப்படரா நெஞ்சினையாகுமதி - தீய வழியை நினையாத நெஞ் சுடையனாவாயாக.
[8]. வீங்கு நீர்ஞாலம் - பரந்த கடல் சூழ்ந்த நிலவுலகம்.
[9]. ஏதம் - குற்றம்.
[10]. உலக நோன்பு - உலகியலில் காணப்படும் வாழ்க்கைத்திறம். இத னைக் கண்டு, துன்பமும், துன்பக் காரணமும், துன்பத்தோற்றம், அதனைப் போக்கும் நெறி முதலிய பன்னெறியாகக் கண்டு தெளிந்து, உயிர்கள் மேல் பேரருள் கொள்ளல். இவ்வுலக நோன்பு இந்நூ லில் பயில வழங்கும்.
[11]. இன்பச் செவ்வி - முத்திநிலையாகிய நிருவாண நிலை. [12]. மன்பதை - உயிர்கள்.
[13]. ஒரு பெரும் பூட்கை - ஒப்பற்ற பெரிய மேற்கோள் (துணிவு).
[14]. அறக்கதிர் ஆழி - அறமாகிய ஒளி பொருந்திய சக்கரம்.
[15]. தகை பாராட்டுதல் - நலத்தைப் பாராட்டப் பரவுதல், யாவதும் - சிறிதும்.
[16]. மிகைநா இல்லேன் - வேற எப்பொருளையும் சொல்லுவது இல் லேன்.
[17]. வருணக் காப்பு - வருணக் கட்டுப்பாடு.
[18]. பொருள் விலையாட்டி - பொருளுக்குத் தன் நலத்தை விற்கும் விலைமகள்.
[19]. தயந்தோன் எனது - விரும்புகின்றான் என்று ஒழியாது.
[20]. புதுவோன் பின்றை - புதியனாய் வந்த இந்த உதயகுமரன் பின்னே .
[21]. புராணன் - பழமையானவன்; புராணங்களால் பாராட்டப்பட்டு வன்.
[22]. செற்றம் செறுத்தோய் - பகைமைக்கு இடமாகிய வினத்தைக் கெடுத்தவனே.
[23]. காமற் கடந்த ஏமம் ஆயோய் - காமனது செய்கை முற்றும் அறவே நிகழாவாறு காத்தோம்புதலால் இடையறா இன்பமுடைய னாயினவனே.
[24]. தீநெறிக் கடும்பகை - தீய வழியிற் செலுத்தும் நினைவாகிய மிக்க பகை.
[25]. ஆயிர ஆரத்து ஆழியம் திருந்தடி - ஆயிரம் ஆர்களையுடைய சக்கர ரேகை பொருந்திய திருவடி.
[26]. தாமரை அடக்க - தாமரையின் பூவிதழ் கூம்பி மூடிவிட.
[27]. பூம்பொதி - பூவின் கூம்பிய இதழ். கூம்பும் காலத்துத் தன்பால் தங்கிய பெடையை, தாமரைப்பூ கூம்பி மூடிக்கொள்ள, சேவல், அவ்வித ழைக் கிழித்துத் தன்பெடை பட்ட சிறையை நீக்கி, உடன் கொண்டு சென் றது.
[28]. அரிக்குரல் - அரித்த ஓசை; மெல்லிய குரல்.
[29]. இசைப்ப - தெரிவிக்க.
[30]. குடக்கண் சேதா - வளைந்த கண்களையுடைய செம்மையான ஆ.
[31]. மன்று - ஆநிரைகள் ஊரிடத்தே வந்து சேரும் இடம்.
[32]. மருதத்து இன் நரம்பு உளர - மருதயாழின் இனிய இசையை இசைக்க.
[33]. முல்லைக் குழல் மேல் கொள்ள - குழல் முல்லை மேற் கொள்ள - குழ லிடத்தே முல்லைப்பண்ணைப் பாட.
[34]. அமரகம் - போர்க்க ளம். [35]. தமரகம் - தம்மவர்கள் இருக்குமிடம்.
--------------
continued in part 2
-------------
This file was last updated on 5 Jan. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)