pm logo

பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 4
4. தில்லை சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்


tillai civakAmiyammai piLLaittamiz
(piLLaittamiz kottu - part 4)
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Mrs Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation
of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 4
4. தில்லை சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ் (குறிப்புரையுடன்)


Source:
பிள்ளைத் தமிழ்க் கொத்து (குறிப்புரையுடன்)
PILLAI-T-TAMIL-K-KOTTU (WITH NOTES)
Edited by T. CHANDRASEKHARAN. M.A., L.T.,
Curator, Government Oriental Manuscripts Library, Madras
AND THE STAFF OF THE LIBRARY
Under the orders of the Government of Madras
1956, Price Rs. 9-0-0.
MADRAS GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS SERIES No. 50
------------

"ஏத்தருந்தலம் எழிற் புலியூரே'' என்பதன்படி இத்தலம் விராட்புருடனுக்கு இருதயத்தானமாகக் கூறப்படுகிறது. சிவபிரானுக்கு ஆயிரக்கணக்கான கோவில்களிருப்பினும் கோவில் என்று சிறப்பித்துக் கூறப்படுவது இஃதொன்றே. பூலோக கைலாசமென்று சைவர்களாலும் திருச்சித்திரகூடம் என்று வைணவர்களாலும் போற்றப் பெறுவது இது. பஞ்சபூத தலங்களுள் எல்லாப் பூதங்களும் தோன்றிநின்று விளங்க இடந்தந்து நிற்கும் ஆகாசத்தலமாய் விளங்குகிறது. காண முத்தி கிடைப்பது தில்லையாகும்.

சிதம்பரத்தின் தெற்கில் நான்குமைல் தூரத்தில் காவேரியின் கிளையாகிய கொள்ளிடம் ஓடுகின்றது. மணிமுத்தா நதியென 326-ஆம் பாட்டில் குறிக்கப்படும் வெள்ளாறு வடக்கே ஓடுகிறது. இவ்வெள்ளாற்றில் தான் மேற்கூறிய மணிமுத்தா நதி கலந்துவிடுகிறது. பாலமான் என்னும் சிற்றாறு நகரத்திற்கும் புகைவண்டி நிலையத்திற்கும் இடையே தெற்கிலிருந்து வடக்காக ஓடுகிறது. இது கங்கைப் பேராறு காசியில் தெற்கு வடக்காக ஓடுவதை நினைப்பூட்டுகிறது.

கற்பகவிநாயகர் - கற்பகம் போல அடியார்களின் கருத்தறிந்து முடிக்கவல்ல பெருமானாதலின் "கற்பக விநாயகர்" எனப் பெயர் பெற்றார். மேற்குப் பார்த்த சந்நிதி. துதிக்கையைச் சேர்த்து ஏழு கைகள் கொண்டவர். இவர் தல விநாயகராதலால் முதற்கண் இவர் துதி காணப்படுகிறது.

சிவகாமியம்மை - ஒற்றைக்கால் மண்டப விநாயகராலயத்தினின்று சிவகங்கையை வலமாகச் சுற்றி வரும்போது சிவகங்கைக்கு மேற்கே விளங்கும் ஆலயமாகும். நின்ற திருக்கோலமாக இவ்வம்மை விளங்குகிறார். இவ்வம்மைக்கே பூரத்தைத் தீர்த்த விழாவாகக் கொண்ட 10-நாள் திருவிழா நடைபெறும். இவ்வம்மை சிலாரூபமாக உள்ளது. மற்றும் சிவகங்கையின் தென்பாகத்திலுள்ள சிற்சபையில் நடராசர் பக்கத்தில் விக்கிரக ரூபமான சிவகாமசுந்தரி விளங்குகிறார். இவருக்கு ஆனி, மார்கழி மாதங்களில்தான் நடராசருடன் சேர்ந்து விழா நடைபெறும். பச்சைநிறத் திருமேனியுடையவர். திருமங்கல நாண் இவரது திருக்கழுத்திலே மிளிரும். வலத் திருக்கரம் செங்கழுநீர் மலரேந்தியிருக்க, இடத்திருக்கரத்தைக் கீழே தொங்கவிட்டு ஒடுங்கிய நிலையுடையவராக உள்ளார்.

இத்தலம் புலியூர், புலிசை, தில்லை, சிதம்பரம் எனப் பாட்டுக்களில் குறிக்கப்படுகிறது. அருணகிரியாரும் தம் திருப்புகழில் புலிகண்டவூர், பெரும்புலியூர், புலிசை என்று ஆளுவதால் 342- முதல் 346 வரையுள்ள செய்யுட்களில் பொற்பிலிசையென வருவது பொருளுக்கு ஒத்திருப்பினும் வழக்கை நோக்க 'பொற்புலிசை' யென்றிருப்பதே நன்று எனத் தெரியவரும். இது பற்றிக் குறிப்பிலும் காணலாம்.

காப்புப் பருவத்தில் முதற்பாட்டு எடுத்துக்கொண்ட பிரதிக்கேற்ப ‘நடங்காட்டில்' என்பது திருவாலங்காடாயிருந்து ஆசிரியரின் வழிபடு கடவுளாவரோ என்ற ஐயத்தால் போடப்பட்டுள்ளது. பின்னரே அடையாறு நூல்நிலையப் பிரதியால் திருச்செந்தில் எனத் தெரிந்தது. எனவே பிரதிபாடப்படி தில்லை நடராசரைக் கொள்க. இரண்டாவது பாட்டின் தலைப்பும் தவறியது குறிப்பில் காணலாம். மூன்றாவது பாட்டும் நடராசரையே குறிக்கலாம் எனக் குறிப்புரையில் கூறப்பட்டுள்ளது. இப்பாட்டின் பொருளை நோக்கின் விபூதியைப் பற்றிய வணக்கமாகவும் கொள்ளலாம். அறிஞர் குற்றம் களைந்து குறைபெய்து வாசிப்பார்களாக.

326- ஆம்பாட்டில் “உழும் மானை முனிந்து" என்பது உழும் + மா +ன் + ஐ என்று பிரித்து உழும் எருமைக் கடாக்களை என்று பொருள் கொள்ள வேண்டும். இங்கு ‘ன்’ சாரியை. இங்ஙனம் வருவதனை Xix - பக்க முதற்கண் காணலாம். 327-ஆம் பாட்டில் "ஒரு நாலரசும் பசும்பொற்கால்" என்பதற்கு "ஒப்பற்ற நான்கு முதன்மையான வேதங்களும் பொன் மயமான நான்கு கம்பங்களாகவும்" எனப் பொருள் கொள்க. 338-ஆம் பாட்டு தேவிபாகவதக் கருத்துப்படி "சர்வம் சத்திமயம்" என்பதாய் அமைக்கப்பட்டுள்ளது. பிரமனி டத்தில் இராசச குணத்தையும், விஷ்ணுவினிடத்தில் சாத்வீக குணத்தையும், உருத்திரனிடத்தில் தாமசகுணத்தையும் தந்து படைக்க, காக்க, அழிக்க ஏவுகிறாள் என்று அதில் கூறப்பட்டுளது. 348-ஆம் பாட்டில் அம்மையின் முத்தம் மும்மலங்களையும் போக்கவல்லது என்று ஆசிரியர் கூறுகின்றார். இம்மலம் அறிவற்றதும் சடத்தன்மை வாய்ந்ததும் நெல்லிற்கு உமியும் முளையும் செம்பிற்குக் களிம்பும் போன்று ஆன்மாவை அனாதியே பற்றி நிற்பது என்பதை 644-ஆம் பக்க பிரதிபாட மூலம் உணரலாம்.

372-ஆம் பாட்டில் "குயில் வடிவு கொண்டதொரு கோதையைச் சார்ந்திடும்" என்பது வில்லியனூர் என இப்போது வழங்கும் வில்லைத்தல கோகிலாம்பிகையையும் குறிக்கலாம். 379-ஆம் பாட்டு தூண்கள், ஓடுகள், ஆணிகள் முதலியன புனிதத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுவதைச் சொல்லோவியமாக்குகிறது, உருத்திரபீடத்தின் கண் வேதங்கள் ஆறும் (சிட்சை, வியாகரணம் முதலியன) பொன்மயமான ஆறு தம்பங்களாகவும், சதாசிவபீடத்தின்கண் நான்கு வேதங்களும் (ருக், யசுர் முதலியன) நான்கு பொன்மயமான தம்பங்களாகவும் விளங்குகின்றன. இதனையே "ஆறு சாத்திரம் நாலுவேத மதி தூணா'' என்றார். பிரமபீடத்தில் 28- ஆகமங்களும் (காமிகம் முதல் வாதுளம் ஈறாக 28- தம்பங்களாக விளங்குகின்றன. விட்டுணு பீடத்தின் கண் 5- பூதங்களும் (பிருதிவி, அப்பு முதலியன) 5- தம்பங்களாக விளங்குகின்றன. இதனையே "ஆகமங்க......... தூணுத்திரம்” என்றார். சிற்சபையில் பிரமா, விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் 5- பீடங்களாயுள்ளனர் என்பதனையிது காட்டுகின்றது. 64-கலைகளும் (அக்கரவிலக்கணம் முதல் அவத்தைப் பிரயோகம் ஈறாக) 64-கைம்மரங்களாக உள்ளன. நாடிகள் 72000-உம் ஆணிகளாக விளங்குகின்றன. சிற்சபையின் தென்குறட்டில் அமைந்துள்ள பலகணிகள் ஒவ்வொன்றிலும் 96 துவாரங்கள் உள. அவைகள் 96 தத்துவங்களைக் காட்டுகின்றன. உச்வாச நிசவாசங்களாகிய உயிர்ப் புக்கள் 21600- மேலே கைம்மரங்கள் மீது சேர்க்கப்பெற்ற தங்க ஓடுகளாக விளங்குகின்றன.

373-ஆம் பாட்டில் சந்திரகுலத்தில் பிறந்த அரசன் ஒருவன் தன் குதிரையுடன் சிவகங்கையில் மூழ்கி பொன்னிறம் பெற்றான் என வருவது இரணியவர்மன் வரலாற்றினும் வேறுபட்டதாக எப்புராணங்களிலும் காணக்கூடாத செய்தியாக விளங்குகிறது. 399-ஆம் பாட்டில் பந்தாடும்போது பந்து அம்மையின் உறுப்புக்களின் நிறங்களைக் கவர்தல் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழில் "மருள்கான்ற நெஞ்சழக்கை" என்ற பாடலையும் "மையரி நெடுங்கணோக்கம் படுதலும் கருகிவந்து கைபுகிற் சிவந்து காட்டும் கந்துகம் பலவுங் கண்டார்''. (மிதி - காட்சிப் பட. 16.) என்ற கம்பராமாயணச் செய்யுளையும் நினைவூட்டுகிறது. 407 ஆம் பாடலில் "அங்கோடு மிங்கோடும் வந்தோடும் உயிர்கள் போல்'' என்ற அடியின் கருத்து, ''பூசலினெழுந்த வண்டு மருங்கினுக் கிரங்கிப் பொங்க மாசுறு பிறவி போல வருவது போவதாகிக்...'' (மிதிலைக்கா. 10) என்ற கம்ப ராமாயணப் பாடலினும் உள்ளது. “கண்கள் கயலென்னக்" என்ற 417-ஆம் பாட்டும், திரிபுரசுந்தரி பிள்ளைத்தமிழில் “செங்கய லொடுங்கண்கள்'' என்ற பாட்டும் பாகம்பிரியாவம்மை பிள்ளைத் தமிழில் "துள்ளும் பொருங்கய லிரண்டருகினும் " என்ற பாட்டும்,

"பங்கயக் குவளை யாம்பல் படர்கொடி வள்ளை நீலஞ்
செங்கிடை தரங்கங் கெண்டை சினைவரா லினைய தேம்பத்
தங்கள் வே றுவமை யில்லா வலியவந் தழுவிச் சாலு
மங்கையர் விரும்பி யாடும் வாவிகள் பலவுங் கண்டார்.''
மிதிலைக்கா. 17.)
என்ற கம்பராமாயணப் பாட்டினை யொத்தல் காண்க. 420-ஆம் பாட்டில் குயில் சிறுங் குறும்பிழைத்தல் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் 'கந்தங்கமழு நறுங்களபக்...' என்ற பாட்டினாலுணரலாம். சீவக சிந்தாமணி 79-ஆம் பாடல் நச்சர் உரையாலும் அறியலாம். சிறு பொதும்பரினின் றொடித்து விளையாடியும் என்பது பிரதிபாடப்படி "ஒளித்து விளையாடியும்" என்றிருப்பின் ".... காணெனை யென்னாத் தன்னேரில்லா ளங்கொரு கொய்பூந் தழைமூழ்கி யின்னேயென்னைக் காணுதி ....'' (பூக்கொய். 31) என்ற கம். ராமா. பாட்டுக்கு ஒத்திருக்கும். ''மைந்தர் தன் சொற்கேட்கில்... குதலைமொழி யாடியருளே,'' என்ற அடிகள் " குழலினிது .... கேளாதவர்.'' ''மக்கண்மெய் ... செவி க்கு.'' என்ற குறள்களைப் பின்பற்றியுளது.

இப்பிள்ளைத்தமிழ் மற்ற பிள்ளைத்தமிழினும் மிக்கதாய், 120 பாடல்களும் 12- பருவங்களும் பெற்று விளங்குகிறது. அம்மானைப் பருவம் 9 - பாட்டுகளே பெற்றுள்ளது. ஆண்டாள் பிள்ளைத் தமிழில் இறுதியில் காமநோன்புப் பருவம் பெற்று 11-பருவமாக விளங்குவது காணத்தக்கது. அம்மானைப் பருவத்தில் குதலைமொழி யாடுகவென 3 - பாடல்களும், பாவையாடுக என்று 3-பாடல்களும், கழங்கு ஆடுவாயாக என்று 2- பாடல்களும் அம்மானையாடுக என 2- பாடல்களும் கூறப்பட்டுள்ளன. ஊசலுக்குப் பிறகே நீராடல் அமைந்திருப்பது புதிய அம்சம். பந்தாடற் பருவம் புதியதாய் இதில் விளங்குகிறது. சீவகசிந்தாமணியிலும் 125, 150, 151-பாட்டுக்கள் பந்தடித்தலைப்பற்றி விளக்குகின்றன. இது பெண்கள் விளையாட்டென அறியலாம். ஊசலுக்குப் பின்னர் அம்மானையும், நீராடலும் புறனடைப் பருவமென அடையார் டாக்டர். உ. வே. சாமிநாதையர் நூல் நிலையத்தின் ஏட்டுச் சுவடிகளில் உள்ளன. தமிழன்பு:- இவ்வாசிரியர் சைவசமயப்பயிற்சியும் சித்தாந்தமு மிக்கவரென ஊகிக்கலாம். 347-ஆம் பாடலில் “வடகலை நூல் துலங்கமணக்கும் திராவிடத்தின் சுவையே மணக்கும் பிராகிருத மருவி மணக்கு முலகளிக்கும் மகிமை தரு மந்திர மணக்கும் மலையு முருக்கு மியலிசையும்” என்று வடகலை தென்கலைகளைப் பாராட்டியதும், தெள்ளு தமிழ்த்தில்லை (305) தெளிதமிழ்ச்சுவை கூறுந் (312), எல்லையின் முத்தமிழ் மூவரும் (322), ஊனமில் செந்தமிழ் மாலை புனைந்தனை (325), தமிழ்சேர் புலியூர் (331), இனியமுத் தமிழமிழ்த்தி (337), முத்தமிழ் சொற்கழகத்தவர் (334), தமிழ்மணக்குங் குமுதமுத்தம் (354), தமிழ்க்கேயுதவும் சதகோடி (361), கழகமுத்தமிழ் பாடும் (393), என்று பாடல்களில் தமிழைப் பாராட்டியதும் கண்டு மகிழத் தக்கன. 410-ஆம் பாடலில் தாய் தந்தையராகவும் துன்பத்தை நீக்கினவராகவும் சிவகாமியம்மையைப் பாராட்டுகின்றார். மற்றும் எப்போதெனை வாழ்விப்பாய் (333) அடியேன் மிடியுங்கெட (364) கொடியேனும் வணங்கிட (365), பாவியேனு முனது பாதநம்பி மனமூசலாட (415) என்பன நோக்கத்தக்கன. அடையார், டாக்டர். உ. வே. சாமிநாதையர் நூல் நிலையத்தில் உள்ள மிகவும் சிதலுற்ற ஓலைச்சுவடியில் பாதி ஒடிந்த ஏட்டில் “இப்பிள்ளைத்தமிழ்... திருச்செந்திற் ...கவிசெய்தான்'' எனக் காணப்படுவதால் திருச்செந்தில்மா நகரில் உள்ள ஓர் புலவரால் செய்யப்பட்டதென அறியலாம். மிகுந்த பாதி ஏடு தேடியும் கிடைக்கவில்லை.
இவ்வாசிரியர், இருக்கும் எல்லாப் பிரதிகளினும் (அடையார் நூல் நிலையப்பிரதி உள்பட) எளியமக்கள் றகரத்திற் கெல்லாம் கொச்சையாகத் தகரம் வழங்குமாறுபோல ஆளுதலால் மாத்து (377) கத்தை (374, 377, 378) என அவ்வாறே போடப்பட்டுளது. மற்றும் ஐம்பத்தொருவர் என்பது அன்பத்தொருவர் என்றும், குவலயம், இதயம், தவழ்ந்திடுவ என்பன குவலையம் இதையம், தவிழ்ந்திடுவ என்றும் காணப்படுகின்றன. இதில் முதலிரண்டும் போலி.

இப்பிள்ளைத்தமிழ் அச்சிட்ட பின்னர், இப்பிள்ளைத்தமிழின் மூன்று ஓலைச்சுவடிகள் அபூர்த்தியாய் அடையார், டாக்டர். உ. வே. சாமிநாதையர் நூல்நிலையத்திலுள்ளதாகத் தெரிந்து அவைகளின் பிரதிபாடம் நன்மை பயக்குமெனக் குறித்து வந்து இறுதியில் சேர்த்துள்ளோம், அப்பிரதிகளால் ஆசிரியர் பெயர் அரைகுறையாகத் தெரிந்ததோடு 371-ஆம் பாட்டில் “முக்கணிலோர் கொற்றமதியாள்'' 2-வது வரியிலும் “முக்கீற்று நீற்றுமதியாள்'' 4-வது வரியிலும் காணப்படுவதும் காப்புப்பருவத்தில் திருமாலுக்கு அடுத்தபடி திருமகள் துதியும் அதன் பின்னரே பிரமன் துதியும் வருவதும் அறியப்பட்டது. இதற்கான வகையில் அன்புடன் மனமுவந்துதவிய அடையாறு, டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலைய நிர்வாகிகட்கு என் நன்றியுரித்து.
இப்பிள்ளைத்தமிழ் டிஸ்கிருப்டிவ் காடலாக்கு 324-ஆம் எண்ணுள்ள ஓலைச்சுவடியினின்று வெளியிடப்படுகிறது. சரிபார்த்தலுக்கு மூவருடக் காடலாக்கு 2860, 2619-எண்ணுள்ள ஓலைப்பிரதிகள் பயன்பட்டன.
_______

தில்லைச் சிவகாமி அம்மைப் பிள்ளைத்தமிழ்

கற்பக விநாயகர் துதி
வெண்பா

305. தெள்ளுதமிழ்த் தில்லைச் சிவகாம சுந்தரிமேற்
பிள்ளைத் தமிழ்கூறும் பேதையேற் - குள்ளுசடைக்
கங்கைபெற்றான் கங்கைபெற்றான் கற்பக நற்பேர்பெற்றான்
கங்கைபெற்றான் கங்கைபெற்றான் காப்பு.
--------------

காப்புப் பருவம்

திருவேலங்காடு. நடராசர்
306. சீர்பூத்த பராபரத்தி லுதித்த பராசத்தி
      சிவகாம சுந்தரியாய்ச் செகமனைத்தும் பூப்ப
பார்பூத்த விராட்புருட னிதைய புண்டரீகப்
      பசும்பொகுட்டில் விளையாடும் பைந்தொடியைக் காக்க
பேர்பூத்த நான் குருவ நான்கருவ நடுவே
      பேருருவ மருவமெனப் பெறுநவ பேதத்தின்
தூர்பூத்த சத்திசதா சிவத்துச்சி பூத்து
      துலங்குதிரு[1]நடங்காட்டில் விளங்குசபா பதியே. (1)
பிரதிபாடம் : - [1]. நடங்காட்டி,

பொது. - வேறு
307. உருவாகி யருவாகி யொளியாகி வெளியாகி
      யுள்ளும் புறம்புமாகி
யோரெழுத் தீரெழுத் தஞ்செழுத் தெட்டெழுத்
      தொன்றிரண் டைந்தெட்டினால்
விரிவாகி யெண்பத்து நான்கு நூ றாயிர
      மித்தையைந் தாறாறென்
வேறாகி வேதாந்த நாதாந்த மானதொரு
      மெய்ப்பொருளி னைப்பரவுவாந்
தருஞான மீச்சைகிரி யாசத்தி யொடுபஞ்ச
      சத்திமோ கினிவிந்துமான்
றனுகரண புவனபோ கமுமாகி யளவிலாச்
      சகலநிட் களமுமாகி
திருஞான சபையினிற் சிற்சத்தி யாகியே
      திகழ்பரா சத்தியான
சிவகாமி யம்மையை யருளோடும் பிரியாத
      திருவுளம் காத்தருளவே.       (2)
-
தில்லை நடராசர்
வேறு
308. இருவினைக்களி றோடத் தாக்கிடு
      மெழுபிறப்பிற வானிற் றூக்கிடு
மெமதுயிர்த்துணை யாகக் காத்திடு
      மிமையவர்க்கிடை யூறைப் போக்கிடு
நிருமலப்பொருள் ஞானப் பாற்றது
      நிருவிகற்பனு பூதித் தேற்றது
நிகழ்பிறைச்சுடர் போன்முக் கீற்றது
      நெடுமறைச்சிகை மீதிற் பூத்தது
திருபுரைப்பெயர் ஞானப் பார்பதி
      திருவருட்சிவ காமித் தாய்க்கிது
திகழ்தரப்புனை தூளிக் கேற்பது
      திருநுதற்கணி யாகச் சேர்க்கவே
கருதுமுச்சிர மாகச் சீர்த்தது
      கரம்விழிக்கதிர் கால்முக் கூற்றது
கனகசிற்சபை ஞானக் கூத்துறு
      கடவுளர்க்கனு பூதிக் காப்பதே.       (3)

பிரணவம்
வேறு
309. மிடறு திருந்திய குரலிசை வண்டின
      மிடலுறு பங்கயமேல்
விரைமக ரந்தமு நறவு மருந்திட
      விழைவுறு தென்புலியூர்
கடவுளர் வந்தடி பரவ வரந்தரு
      கருணை சுரந்தருள்சீர்
கமழ்சிவ சுந்தரி மனது மகிழ்ந்திட
      வினிது புரந்திடவே
யுடலுயி ரொண்பொருண் மறைமுடி வின்புக
      லுபநிட விஞ்சையெனா
வுளதில தென்பது மொளிவெளி யென்பது
      மொழிவற நின்றதெனா
பெடைநடை மங்கையோ டிலகுதிரி யம்பகர்
      பெறுசெவி யின்புறவே
பெரிது மொழிந்திட வொருமொழி யென்றுள
      பிரணவ மந்திரமே.       (4)

விநாயகர்
வேறு
310. ஐந்து கரமுந் தோணான்கு
      மாறு தலையு நால்வாயு
மடிக ளிரண்டுங் கொம்பொன்று
      மத்தி [1]யலர்கற் பகமொன்று
முந்தி யெனப்பாய் மும்மதமும்
      ஒருத்தண் முகமும் படைத்தருளு
[2]மொருவன் றனையே யெஞ்ஞான்று
      முள்ளன் புருகப் பணிந்திடுவாந்
தந்தை யுடற்செம் பாதியுடன்
      றானோர் பச்சைப் பாதியுங்கண்
[3]டானோ ரரையுந் தோடொன்றுந்
      தடந்தோ ளிரண்டுங் கிளியொன்றுஞ்
சிந்தை மகிழ்செந் தாளொன்றுஞ்
      செழுங்குங் குமஞ்சேர் கொங்கையொன்றுஞ்
சிவகா மித்தாய் தனையென்றுஞ்
செழுங்கோ விலிற்காத் தருள்கென்றே.       (5)

பிரதிபாடம் : -
[1]. அத்தியல் கற்பகம் ஒன்றும், அத்தியகலக் கற்பம் என்றும்,
[2]. ஒருவன்றனைப் பேறெஞ்ஞான்றும்,
[3¨]. தானோன்றரையும்,

முருகன்
வேறு
311. வெள்ளியும் பொன்னுங் கொழித்தகி லரைத்து
      விரிகதிர்த் தரளமுந் துகிருந்
தெள்ளுகல் லோலக் காவிரிப் புலியூர்
      சிவகாம சுந்தரித் தாயை
முள்ளரை முளரிப் பொகுட்டில் வீற்றிருக்கு
      முதல்வனை முடிதுளங் கிடத்தா
யெள்ளுறப் புடைக்கும் வள்ளி நாயகனை
      யினிதுகாத் திடப்பணி குவமே.       (6)

திருமால்
புயவகுப்பு
312. மரகதக் கிரிதோள்கள் மகரமைக் கடன் மார்ப
      மழைமுகிற் புயன்மேனி [1]வண்ணமேய் தீர்த்தனை
மதகரிக் கிடர்தீர முதலைகக் கிடவாயை
      வகிர்கதிர்த் தனியாழி யண்ணலைப் பாற்கட
லூரகமெத்தையின் மீதி லறிதுயிற்றுயில்வோனை
      யுலகமுற் றினும்வாரி யுண்ணுமுற் சேட்டனை
யொளிர்சிறைக் கணைவாரி யுலரவிட் டெதிர்போரி
      லுறுமரக் கரைநூறு மண்ணலைப் போற்றுதும்
நரைதிரைக் குடில்போக நரகினுக் கிரையான
      நரர்தமைத் துதியாமல் நன்மையிற் சேர்த்தேமை
நலிகலிக் கடலேறி நவநிதிக் கரைசேர
      நலமிகப் பெருவாழ்வு நண்ணுறக் காப்பவள்
திருவுளத் தினிலேறு தெளிதமிழ்ச் சுவைகூறுந்
      [2]தெளிமதிப் புலவோர்கள் மும்மையிற் போற்றிய
சிவகதிப் புலியூரின் மருவுதற் பரையான
      திருவருட் சிவகாமியம்மையைக் காக்கவே.       (7)

பிரதிபாடம் :
[1]. வண்ணமெய்த் தீர்த்தனை
[2]. தெரிமதி

பிரமன்
வேறு
313. நால்வகைத் தோற்றமு [1மெழுவகைப் பிறவியும்
      நண்ணுமிரு வினையும் வழுவா
நான்குபத் தெண்மர்க்கு முப்பத்து முக்கோடி
      நாதர்க்கும் மற்றெவர்க்கும்
பால்வகை வகுத்தண்ட முழுதும் படைத்தினிய
      பதுமபீ டத்திருக்கும்
பரமனைப் பிரமனைக் குரவனைக் கரமலர்ப்
      பதஞ்சொரிந் தஞ்சலிசெய்வாம்
மால்வகைச் செபமாலை வலையமொரு கையினின்
      மழலைவாய்க் கிள்ளையொருகை
மருங்கொருகை யொருகையிற் பல்மலரும் வைத்தினிய
      மன்னுயிர்க் கருள்சுரக்குஞ்
சூல்வகை யறிந்திடச் சிவனலது சுருதியுஞ்
      சொல்லொணா வதிரகசியஞ்
சோதியதி காரசிவ காமசுந் தரிதனைத்
      தொழுதுகாத் தருள்புரியவே. (8)

பிரதிபாடம் : [1].தோற்றமுடன் எழுவகை.

திருமகள்
வேறு
314. பல்லுயிர்த் தொகையாவும் வல்லிதிற் காட்டிய
      பிள்ளையைப் பெறுதாயை வெல்ல விற்பூட்டிய
பல்லம்விட் டடலாதி வள்ளலைத் தாக்கிய
      பலவயத்தனை யீனு நல்லகற் பாட்டியை
மல்லலுற் றுலகேழு மொல்லையிற் பூத்தொளிர்
      வல்லிதழ்ச் சுருள்போல விள்ளுகொப் பூழ்ப்பரன்
வல்லுரத் தினில்வாழு மெல்லியைப் பாக்கிய
      வல்லியைத் தொலையாத செல்வியைப் போற்றுதும்
மல்லுடுக் கண்ணேர மல்லிகைப் பூப்பல
      கொள்ளுமைக் குழலாளை முல்லையிற் பொற்கவி
னொல்லையிற் றணியாளை வள்ளையிற் காட்டிய
      வள்ளினைப் பொருசேலை வெல்லுகட் சேப்பியை
செல்லலுற் றவர்வாதை யெல்லைவிட் டோட்டிய
      புல்லுமெய்ச் சிவலோக மொல்லையிற் காட்டிய
செல்வமுற் றியவாழ்வை யள்ளிவைத் தாட்டிய
      தில்லையிற் சிவகாம வல்லியைக் காக்கவே.       (9)

கலைமகள்
வேறு
315. முத்திக்கு வித்தாகி ஞானக் கொழுந்தாகி
      முதிரும்வேர்ச் சுருதியாகி
முடியாத சங்கீத சாகித்தி யங்களே
      முலையரும் பாகிமலர்க்கண்
சித்திதரு சத்தமுஞ் சோதிடமு மாகியே
      செந்தளிர்க் கைகள்கலையாய்த்
தித்தித்த பேரின்ப நற்கனி பழுக்குஞ்
      செழுங்கொடி தனைப்பணிகுவாம்
பத்தியாய்ச் சந்திரன் சூரியன் கண்களாய்ப்
      பகிரண்ட மகுடமாகிப்
பாதலம் பாதமாய் மாதிரந் தோள்களாய்ப்
      படிகடல் நிதம்பதடமா
யுத்தரிக மேகமாய்ச் செம்பொன்மலை வெள்ளிமலை
      யுபையகொங் கைகளாகியே
யுலகமாய் விளையாடு சிவகாம சுந்தரியை
      யுலவாது காத்தருளவே.       (10)

சப்தமாதர் முதலியோர்
316. சத்தமா தாவையும் நவசத்தி மாரையுந்
      தகுபத்திர காளிதனையுஞ்
சந்திரசூ ரியர் தமையு முப்பத்து முத்தேவர்
      தமைவீர பத்திரர்தமையுஞ்
சித்தமகிழ் 1திருவொத்த யாமத்தர் தம்மையுஞ்
      சிவபூத கணர்தம்மையுஞ்
சிவகங்கை ஞானபர மானந்த சத்தியொடு
      தீர்த்தசத் திகடம்மையு
மெத்திசையு மேற்றிடும் பிரமசா முண்டியுட
      னெண்டிக்குப் பாலர்தமையு
மிருவருக் கொருவரையு மொருவருக் கிருவரையு
      மெப்பொழுது மேபணிகுவாம்
முத்திதரு சிவகாம சுந்தரி திருக்கோவில்
      மூதண்ட கோளமளவு
முடியாத பாதலமு மப்புறமு மிப்புறமு
      முறைமையிற் காத்தருளவே.       (11)

பிரதிபாடம் : [1]. திருவொத்தர்.
--------------------------------

செங்கீரைப்பருவம்

317. ஒருவாறு முணர்வரிய பிரமத்தி லொருசோதி
      யுற்பத்தி யாகியதுநீ
யொருசிறிய பச்சைப் பசுங்குழவி யாகியே
      யோரைந்து [2முத்தியுலகம்
வருநாத மாம்ஞான தவிசில் விளையாட
      வருசரா சரமுமாட
மல்காந்து மெல்லக் கவிழ்ந்துவிளை யாடவே
      மன்னுயிர்கள் யாவுமாட
விருதாளு மூன்றியிரு கையுமூன் றித்தலை
      யெடுத்துத் தவழ்ந்திடவுமே
யிருவினையு மின்பமுந் துன்பமுந் தலையெடுத்
      தெப்புவன முந்தவழவே
திருவாழ்வு தரமன்றில் விளையாட வருகுழவி
      செங்கீரை யாடியருளே
தில்லைமா நகர்மருவு சிவகாம வல்லியே
      செங்கீரை யாடியருளே.       (1)
பிரதிபாடம்: [2]. மூர்த்தியுலகம்.

318. ஆதார சத்தியன் பத்தொருவர் யாழ்வீணை
      தாளமா குளியராக
மமருமுப் பத்திரண் டறுபத்து நாலுமித்
      திறமாதி பாடியாட
சூதான மானகுண் டலிசத்தி நடுநிலைச்
      சுழிமுனா சத்தியுடனே
துலங்குமிடை பிங்கலைச் சத்திய ருனைக்கண்டு
      தொழுது நடனங்களாடப்
பாதார விந்தமலர் பரவியருள் பாடவே
      பஞ்சகிர்த் தியசத்தியாய்ப்
பத்திசேர் நாற்பத்து முக்கோண சத்தியொடு
      பரசுதிரு புரசத்தியுஞ்
சீதாம் புயத்தவசி லருகுவிளை யாடநீ
      செங்கீரை யாடியருளே
தில்லைமா நகர்மருவு சிவகாம வல்லியே
      செங்கீரை யாடியருளே.       (2)

319. பவளவார் சடையாட மாணிக்க மணியொளிரு
      படம்விரித் தாடவரவம்
பத்துபிறை யக்கறுகு கொக்கிறகு மாடவிரு
      பக்கநடு முக்கணாடத்
துவளவார் குழையாட அவியாது புகையாது
      சுடருமொரு கையிலாடத்
துடியாட வொருகை யொருகையஞ்சலென்றிடச்
      சுற்றியொரு கையாடவே
தவளவாய்ச் சில்லரிக் கிண்கிணிக் குஞ்சிதத்
      தரளதா மரையாடநற்
றாள்தா மரையொன்று முயலகன் முதுகொன்று
      தருசிலம் புடனாடவே
திவளவான் முறுவலுட னம்பலவ ராடநீ
      செங்கீரை யாடியருளே
தில்லைமா நகர்மருவு சிவகாம வல்லியே
      செங்கீரை யாடியருளே.       (3)

320. பரிமளக் குழலிலணி பொற்பாளை பொற்சுட்டி
      பருதிபிறை பட்டமாடப்
பத்தியாய் வச்சிரக் குழையாட காதினிடை
      பலமணிக் கொப்புமாட
மரகதப் படலமணி மகரமக ரிகையாட
      வாகுவலை யங்களாட
மாணிக்க மெல்வளையு முன்கையின் முதலரியு
      மருவுபொற் சரியுமாட
அரதன மதாணியுட னுதரபந் தனமாட
      வணியுமே கலையுமாட
வாடகப் பாடகங் கிண்கிணி சதங்கையும்
      அலம்புமிரு சிலம்புமாட
திருவுள் மகிழ்ந்துசிற் றம்பலவ ராடநீ
      செங்கீரை யாடியருளே
சிவசிதம் பரமருவு சிவகாமியம்மையே
      செங்கீரை யாடியருளே.       (4)

321. மறிதிரைப் புணரியைப் புணருவாய்ப் புனலுண்டு
      மாலிருஞ் சூல்கொண்டுமின்
மழைகிடந் துருமிடுஞ் சுடர்மணிக் குடுமிநெடு
      மால்வரைச் சாரல்சேருங்
குறுவிழிப் புகர்முகக் களிநல்லியா னைக்குலங்
      குவடுகுலு றப்பிளிறிவெண்
கோடலைத் தோடமுட் காடகத் தடைகின்ற
      கோளரிக் குருளைமுட்காந்
தெறுழ்வலிக் களிநிமிர்த் துளைசிலிர்த் தழல்சிந்த
      வெரிகண் டிறந்துநெடுவா
லெடுத்துடன் முறுக்கிப் புடைத்துமுழை வாய்பிளந்
      திவர்கற் பதுக்கைநெறியத்
தெறிவுறு குறிஞ்சிவரு [1வேடனைப் பெறுகுழவி
      செங்கீரை யாடியருளே
சிவசிதம் பரமருவு சிவகாமியம்மையே
      செங்கீரை யாடியருளே.       (5)
பிரதிபாடம்: [1]கிழவனை.

வேறு
322. அல்லி மலர்த்தவி சேறி யிருந்துல
      [2]கன்றீ கின்றோனு
மல்லர விற்றுயி லாதி புரந்துள
      வின்றாய் நின்றோனும்
வல்லை யழித்தழி யாது நடம்புரி
      மஞ்சு ணஞ்சோனும்
வல்லி யிடைச்சசி மாதிரு கொங்கை
      மணந்தோ யுங்கோவு
மெல்லை யின்முத்தமிழ் மூவரு மன்பிய
      லெஞ்சா நெஞ்சோரும்
எள்ளரு மெய்ப்புலி யோடு பதஞ்சலி
      யென்போருங் கூடி
சில்லரி வச்சிறு பாதம் வணங்குமை
      செங்கோ செங்கீரை
தில்லை நகர்ச்சிவ காம சவுந்தரி
      செங்கோ செங்கீரை.       (6)
பிரதிபாடம்:[2] கின்றீநின்றோனும்.

323. அவ்விய முற்றிடு லோக [3]வசந்தரை
      யங்கோ டிங்கோடு
மவ்வுட லுற்றுயி ரூசல் பொருந்து
      மற்பாவஞ் சோர
வெவ்விய துக்க சுகானு பவங்கள்
      வெறும்போ கம்போக
விள்ளரு முத்தி பெறாத வரும்பெறல்
      வெம்பா சம்பாறத்
தவ்வில மத்தள தாள வளத்தொடு
      சங்கீதங் கோடி
சல்லரி யொத்திட ஞான நடம்புரி
      தண்டாள் கண்டோர்கள்
திவ்விய முற்ற சபாபதி பங்கினை
      செங்கோ செங்கீரை
தில்லை நகர்ச்சிவ காம சவுந்தரி
      செங்கோ செங்கீரை.       (7)
பிரதிபாடம்: [3] வசுந்தரை

324. கூறுரு வைத்தெரி யாடி கரத்தொரு
      கோதை யெடுத்ததுபோற்
கோல மதிக்கதிர் வாயி லெடுத்தெழு
      கோளர வைக்குலைவாய்ப்
பீறி யெடுத்து நிலாவு மெறித்திட
      வோடி நடித்திடுசீர்
பேறு படைத்த கலாப மயிற்பரி
      யேறும் விறற்சேயும்
வீறு துதிக்கையோ ரானை முகத்தனை
      மாறுதுதிக் கைகொடே
வேறு துதிக்கையி னாலடும் வேழமு
      மெத்திசை யுந்தொழவே
ஆறு சிரத்தைம் முகத்தனு மேத்துமை
      யாடுக செங்கீரை
யாதி யெனுஞ்சிவ காம சவுந்தரி
      யாடுக செங்கீரை.       (8)

325. மாதவ ரன்பு கரைந்த வர்சிந்திய
      மாவடு செங்கீரை
வாய்க மரின்பம் விடேலென வந்தருள்
      வாழ்வினர் செங்கீரை
கோதறு மஞ்சரி சூடினர் பங்கினை
      குங்கும செங்கீரை
கோமள மஞ்சன மாடு மிளங்கொடி
      கொஞ்சிய செங்கீரை
யோது பசுங்கிளி மேதகு சங்க
      முலாவிய செங்கீரை
யூனமில் செந்தமிழ் மாலை புனைந்தனை
      யுங்கொடு செங்கீரை
ஆதர வாகி யணங்கின ராடின்
      ராடுக செங்கீரை
யாதி யெனுஞ்சிவ காம சவுந்தரி
      யாடுக செங்கீரை       (9)

326. பாதள முந்திள வாளை யெழுந்துழு
      வானை முனிந்துபலாப்
பழம்விழ வாழைப் பழம்விழ மாவின்
      பழம்விழ வும்பாயுந்
தாதவிழ் தாமரை யோடை [1]விழாறு
      தடாக நெடுங்கரைசூழ்
தண்கா விரியொடு வண்கா விரிமலர்
      தருமணி முத்தாறும்
போதவிழ் சண்பக மாதவி தாதகி
      [2]போதணை மாதளைநீள்
பூகம் விளைந்திடு பாகு கரும்புகள்
      பொன்சொரி செஞ்சாலி
ஆதிநி றைந்திடு தென்புலி யூரினை
      யாடுக செங்கீரை
ஆதி யெனுஞ்சிவ காம சவுந்தரி
      யாடுக செங்கீரை.       (10)
பிரதி பாடம் : [1] வழாறு. [2 ] போதனை, போதளை:
-------------------------------

தாலப்பருவம்

327. ஒருநா லரசும் பசும்பொற்கா
      லொருவா யருவா யுருவாகு
மொருமாணிக்க மணித்தொட்டி
      லுருவாய்ச் சிற்றம் பலந்தவிசாம்
அருவாம் பொருணான் கவைபூட்டி
      யாடுங் கதிர்ச்சங் கிலியாக்கி
யகண்ட பரிபூ ரணவீட்டி
      லதன்மே லுகந்து துயில்கூரத்
திருநா விருக்கும் பாரதியுஞ்
      செழுந்தா மரையிற் செழுந்திருவுந்
திருத்தா ரணியு முருத்திரையுந்
      [3]திரோதா னத்தின் மனோன்மணியுந்
தருசீ ராட்டும் பெரியபரா
      சத்தி தாலோ தாலேலோ
தண்ணம் புலியூர்ச் சிவகாமித்
      தாயே தாலோ தாலேலோ.       (1)
பிரதி பாடம்: [3] திரோதாசத்தி.

328. ஒருதாய் வயிற்றும் பிறவாமே
      யொருவர் முலையு முண்ணாமே
யுந்திக் கொடிவா ளொசியாமே
      யுருவத் தவசி லுகளாமே
வரிவிற் புருவம் பிறழாமே
      மைக்கண் முகிழ்த்து விழியாமே
வள்ளைக் குழையும் பிடியாமே
      மணிவா யதரந் துடியாமே
வெருவிக் கனவின் மருளாமே
      விம்மிக் குரலுங் கம்மாமே
மிளிர்பூந் தொட்டி லுதையாமே
      விரலூ றமுதஞ் சுவையாமே
தருநாண் மதிபோல் நாடோறும்
      வளர்வாய் தாலோ தாலேலோ
தண்ணம் புலியூர்ச் சிவகாமித்
      தாயே தாலோ தாலேலோ.       (2)

329. கல்லோ லங்க டாலாட்டக்
      கவிகைப் படத்து மாணிக்கக்
கல்லா யிரங்கள் விளக்கெரிப்பக்
      கடற்கட் செவிப்பூந் தொட்டிலிலும்
மெல்லா வுலகு மெடுத்துண்டாங்
      கெழிலா லிலைப்பூந் தொட்டிலிலு
மிருகண் டுயிலு மாண்பிள்ளைக்
      கிளைய பச்சைப் பெண்பிள்ளாய்
தொல்லா யிரத்தெட் டண்டமெல்லாந்
      துலையா நூற்றெட் டுகம்புரக்கும்
சூரைத் துலைக்குஞ் சரவணப்பூந்
      தொட்டிற் குழவி தனைப்பெற்றே
சல்லா பத்தின் றாலாட்டும்
      மதலாய் தாலோ தாலேலோ
தண்ணம் புலியூர்ச் சிவகாமித்
      தாயே தாலோ தாலேலோ.       (3)

330. எள்ளில் விளைந்த நறுந்தயில
      முச்சிக் கணிந்து பசுந்தாது
[1]மிளம்பச் சறுகு மரிசனமு
      மிலங்கத் திமிர்ந்து வான்கங்கை
யள்ளித் திரட்டும் புனலாட்டி
      யலர்பூந் துகிலா னீர்துவட்டி
யணிமூக் குருவி விழியூதி
      நிலக்காப் பணிந்தஞ் சனமெழுதி
யுள்ளங் குளிரத் திருமுகத்தி
      னொருதண் மதியி னிளம்பிறைமூன்
றுதித்த தென்வெண் பொடி சாத்தி
      யொளிர்சித் தாடை யணிபூட்டித்
தள்ளி மணித்தொட் டிலிலாட்டும்
      மதலாய் தாலோ தாலேலோ
தண்ணம் புலியூர்ச் சிவகாமித்
      தாயே தாலோ தாலேலோ.       (4)
பிரதிபாடம் : [1] மின்பச்சறுகும்

331 தேனே கரும்பே சருக்கரையே
      தெவிட்டா வமுதே யுவட்டாத
செல்வச் செருக்கே தருக்கான
      செஞ்சொற் கிளியே செழுங்குயிலே
மானே பிடியே மடமயிலே
      வாழைப் பழத்தின் பலாப்பழத்தின்
மதுரம் பழுத்த மாம்பழத்தின்
      வடித்தே யெடுத்த தேன்குழம்பே
யூனே யுயிரே யுயிர்க்குயிரே
      யுள்ளே புறம்பே நடுவேவா
ழொளியே வெளியே யொளிக்கொளியே
      யொளியில் விளைந்த கருணையெல்லாந்
தானே வடிவாய் வந்துதித்த
      மதலாய் தாலோ தாலேலோ
தமிழ்சேர் புலியூர்ச் சிவகாமித்
      தாயே தாலோ தாலேலோ.       (5)

வேறு
332. கொற்றாய் மறையோ துற்றாய் தாலோ தாலேலோ
      கொப்பாய் குழையாய் பொற்பாய் தாலோ தாலேலோ
விற்றாய் விளைவாய் வைத்தாய் தாலோ தாலேலோ
      வெற்பாய் வெளியாய் நிற்பாய் தாலோ தாலேலோ
முற்றே வரையே பெற்றாய் தாலோ தாலேலோ
      முத்தே மணியே சித்தே தாலோ தாலேலோ
நற்றார் புலியூ ருற்றாய் தாலோ தாலேலோ
      நற்றாய் சிவகா மித்தாய் தாலோ தாலேலோ.       (6)

333. நச்சா ருளமே கச்சாய் தாலோ தாலேலோ
      நச்சா ரரவக் கச்சாய் தாலோ தாலேலோ
வைச்சே [1]முலையாய் விச்சே தாலோ தாலேலோ
      மற்ற ருனையார் பெற்றார் தாலோ தாலேலோ
இச்சா கிரியா சத்தி தாலோ தாலேலோ
      யெப்போ தெனைவாழ் விப்பாய் தாலோ தாலேலோ
விச்சா தரர்பூ சிப்பாய் தாலோ தாலேலோ
      மெய்த்தாய் சிவகா மித்தாய் தாலோ தாலேலோ. (7)
பிரதிபாடம் : - [1]முளையாய்.

334. முற்றா முலையாய் முற்ற வலியாய் தாலேலோ
      முத்தா நதியாய் நற்கா விரியாய் தாலேலோ
பொற்றா மரைமே னற்கோ மளமே தாலேலோ
      பொற்பூர் புலியூ ரிற்பூருவமே தாலேலோ
கற்றா ருளம்வாழ் சொற்கோ கிலமே தாலேலோ
      கைக்கே செபமா லைக்கே கிளியாய் தாலேலோ
வெற்றாய் வெளியுள் ளுற்றா யொளியாய் தாலேலோ
      மெய்த்தாய் சிவகா மித்தாய் தாலோ தாலேலோ. (8)

335. பொற்பூ மணமே பொற்பூ நிறமே பூமாதே
      பொற்கே கயமே சொற்கா வியமே பூவாயே
தற்பூ ரணமே தற்கா ரணமே தாவாதே
      தற்போ தமெலாம் விட்டே யகலா தார்வாழ்வே
கற்பூ ரவிபூ தித்தூளித நீள் காபாலி
      கட்கா மினிமோ கக்கா தலிநீ காமாரி
விற்போ னுதலாய் வெற்போன் மதலாய் தாலேலோ
      மெய்த்தாய் சிவகா மித்தாய் தாலோ தாலேலோ. (9)

336. எக்கா லமுமே நிற்பாய் நீயே வீயாதே
      யெத்தே வருமே செத்தே போவார் சாவாதே
அக்கார் விடமே துய்த்தார் பரனீயானாதே
      யப்போ தமிர்தாய் வைத்தாய் வேயார் தோளாயே
தக்கோர் தமை வாழ் விப்பாய் தாயே மாதாவே
      தப்பா நிதியே பொற்பார் கோதாய் கோமாதே
மிக்கா ருனையா ரொப்பார் விமலாய் தாலேலோ
      மெய்த்தாய் சிவகாமித்தாய் தாலோ தாலேலோ. (10)

சப்பாணிப்பருவம்

337. கட்டுறு சுருங்கிடைத் துடிகொட்டி வட்டம்வரு
      கடவுள்கொடு கொட்டிநடனங்
கண்டுதா ளங்கொட்ட வுனதுசெங் கையினாற்
      கற்றிடக் கொட்டுவதுபோற்
கொட்டமிடு மவுணர்வாய் குருதிகொட் டப்புடை
      குடைந்துகுடர் மாலையிட்டுக்
கொட்டிநட மிட்டிடுங் கொட்டாத நெட்டிலைக்
      குடுமிவேற் குழவிமுத்த
மிட்டுமுத் தாடவா வென்றுகைக் கொட்டல்போ
      லினியமுத் தமிழமிழ்த்தி
யிருகைமலர் கொட்டல்போ லெட்டுமிரு பத்துநா
      லெட்டிலக் கத்தவர்க்கும்
சட்டுவத் திட்டமுது கொட்டுமுன் கையினாற்
      சப்பாணி கொட்டியருளே
தற்பரா சத்தியே சிவகாமி யம்மையே
      சப்பாணி கொட்டியருளே.       (1)
-
388. முட்டா மரைப்பொகுட் டரசனுங் குரைகடல்
      முகட்டர வணைச்செல்வனுங்
முக்கட் டிருக்கடவு ளுங்கண்டு முடிபணிய
      முறைமுறை யழைத்துலகெலாங்
கட்டாக நீபடைத் திடுகநீ காத்திடுக
      களைகநீ யென்று வெள்ளைக்
கலையுடன் பொன்னிறக் கலையுடன் றோலுடைக்
      கலையுமே யருள்கையினா
லெட்டாத பேரின்ப மெட்டவரு மந்திர
      மிசைத்திடு பசுங்கிள்ளையு
மெட்டினையு மறவா திரட்டுசெப மாலையு
      மென்றுநா லெட்டறமுமே
தட்டாது வைத்தளித் திடுமுனது கையினாற்
      சப்பாணி கொட்டியருளே
தற்பரா சத்தியே சிவகாமி யம்மையே
      சப்பாணி கொட்டியருளே.       (2)

339. கற்பகத் தருவுமே நீலநிதி பதுமநிதி
      கள்ளமுற்ற துதேனுவுங்
கட்டுமுட் டுண்டது கொடுத்திடுங் கொடையினிற்
      கடைபடுஞ் சிந்தாமணி
பொற்புலவு சங்கநிதி பங்கமுறு சலமுறும்
      பொழியுமழை முகில்குமிறிடும்
புவிமீது நவநிதிய நல்நீதி யாகவே
      புகலா துலர்க்குமுதலா
மற்புதமு நித்தியமு மட்டமா சித்திகளு
      மகிலவலை யம்புரக்கு
மத்திறமு முத்தியு மளிக்குமோ வென்றுநின்
      னங்கைமலர் கொட்டுவதுபோற்
தற்பர கலாசத்தி சகலாக மத்தியே
      சப்பாணி கொட்டியருளே
தற்பரா சத்தியே சிவகாமி யம்மையே
      சப்பாணி கொட்டியருளே.       (3)

340. அடிதொடங் கிப்புடையு மிடையுள்ளு முடிகாறு
      மடையுமைம் பொறிவிடையமு
மாசையொடு வெகுளியு மயக்கமொடு முக்குணமு
      மலகிலிடை பிங்கலையுமோ
ரிடைகிடந் தலம்வந்து திரிநனவு கனவுமற்
      றிறைவிநின் னடிபற்றியே
யிலகுமெய்ச் சிவயோக ரிதையமலர் கொட்டியே
      யிருகைமல ருங்கொட்டவே
படியடங் கலுநின்று பார்த்திடந் தோறுநின்
      படிவமே கண்டுபணியும்
பரமஞா னியர்கள்கண் களித்தங்கை கொட்டவே
      படருமுக் காலமுணரும்
சடிலமுனி வர்கள்கண்டு தமதங்கை கொட்டவே
      சப்பாணி கொட்டியருளே
தற்பரா சத்தியே சிவகாமி யம்மையே
      சப்பாணி கொட்டியருளே.       (4)

341. ஐவரைப் பெற்றே வளர்த்திடுங் கையினா
      லைந்தொழிலு மருள்கையினா
லைம்பெரும் பூதம மைத்திடுங் கையினா
      லலகிலா வுயிரனைத்தும்
பைவரு குரம்பையி லடைத்துவிளை யாடுசிறு
      பம்பரச் செங்கையினாற்
பற்றயம ராசன்வரு போதஞ்ச லென்றெமைப்
      பாதுகாத் தருள்கையினால்
மொய்வரைக் கரசன்மக ளாகிமுக் கண்ணனார்
      முழுமணக் கோலமதனில்
முளரிமலர் விரல்கொடுத் தருள்கையி னாலில்
      முலைத்தழும் போடுவளையற்
றைவரு தழும்புவைத் தருள்கையி னாலினிய
      சப்பாணி கொட்டியருளே
தற்பரா சத்தியே சிவகாமி யம்மையே
      சப்பாணி கொட்டியருளே.       (5)

வேறு
342. வெட்சி மலர்ப்பத மொப்ப நடப்பது
      கற்ப வனப்பேடை
மெச்ச நடித்து வியப்பொடு கற்பன
      பச்சைமயிற் சாயல்
கட்சி வனக்குயில் பச்சை மடக்கிளி
      கற்பன சொற்பூவை
கட்கம லச்செய லொப்ப வரிப்பெடை
      கற்ப வுனைப்போல
வெட்செய லெத்தனை கற்றில மெப்படி
      நிற்ப வெனக்கூடி
வெட்கின வெட்கி யிருப்ப திலச்சை
      யற்ப மெனப்பேசி
கொட்சிறை கொட்டுவ கட்டழ குற்றவள்
      கொட்டுக சப்பாணி
குற்ற மகற்றிய பொற்பி லிசைக்கொடி
      கொட்டுக சப்பாணி.       (6)

343. முத்து நிரைத்தபல் முக்கனி யொத்தசொல்
      முச்சி மலர்க்கோதை
முத்தமிழ் சொற்கழ கத்தமர் பொத்தக
      முத்தி யருட்பாதம்
வித்துரு மத்தினை யொத்த சிவப்பிதழ்
      மெச்சிடைக் கச்சோதம்
வெற்றி நுதற்சிலை மைக்கண் மலர்க்கணை
      வெற்பு முலைப்பூவை
யுத்தமி பத்தினி கற்பு மிகுத்தனி
      யுற்றொளிர் பொற்றோளி
யுற்பல கைத்தலி பச்சை நிறப்பிடி
      யொப்பிடு மத்தாணி
கொத்துறு தத்துவ மத்தி லிருப்பவள்
      கொட்டுக சப்பாணி
குற்ற மகற்றிய பொற்பி லிசைக்கொடி
      கொட்டுக சப்பாணி.       (7)

344. பச்சை நிறத்தி மிகுத்த சிவப்பி
      பளுங்கின் வெளுப்பான
பற்பல சாத்தினி பத்தி விளக்கிடு
      பத்தரு ளக்கோயி
லிச்சையி லுற்றனை துச்சி லெனத்தளி
      விட்டிலை பொற்பாத
மெற்குளம் வைத்தனை கற்குள முற்ற
      வெழிற்கம லப்போதின்
அச்சுத னச்சுத னச்சுழி வுற்றழி
      வுறவே ரதிக்காக
வற்பி னெழுப்பி மலர்க்கணை யிக்கு
      மளித்த மலர்ப்பாணி
குச்சரி கச்சரி கச்ச புடத்தொடு
      கொட்டுக சப்பாணி
குற்ற மகற்றிய பொற்பி லிசைக்கொடி
      கொட்டுக சப்பாணி.       (8)

345. நித்தில முத்தரு வித்தெரி யற்பெரு
      நெட்டுரு விற்சூழ
நெட்டர வத்தெழு செக்கர் மணிச்சுட
      ருச்சி முடிப்பூணக்
கைத்தல சக்கர நற்பரு திச்சுடர்
      பக்க முறச்சீத
கட்கம லச்சுனை மிக்க [1]விழிக்கிணை
      கட்டழ கிற்காண
வைத்த நகைப்பெரு வட்ட மணிச்செவி
      யிட்ட குழைகோல
வற்புறு பச்சை நிறக்கழை போற்புய
      மச்சுத னொப்பான
கொத்துறு வெற்பர சற்கொரு புத்திரி
      கொட்டுக சப்பாணி
குற்ற மகற்றிய பொற்பி லிசைக்கொடி
      கொட்டுக சப்பாணி.       (9)
பிரதிபாடம் : - [1]விழிக்கணை.

346. கற்ற வருக்கருள் கற்பக மைப்புய
      லொத்த கழைத்தோளி
கற்புர நற்புழு கப்பிய பொற்கள
      பத்தொடு கத்தூரி
யுற்றிடு மத்தக மொத்த தனத்திரு
      யுற்றி தமியிப்பூவி
லொப்பென 2வைத்திட லெப்புவனத்திலு
      மொப்பிலி பற்றாரை
வெற்றிகொள் முக்கணி பொற்கணி யக்கணி
      வித்தகி முத்தார
வித்துரு மப்பணி சித்திர நற்பணி
      மெய்க்கணி பொற்பூணி
கொற்றவை மற்றுள சத்திகள் நத்தினர்
      கொட்டுக சப்பாணி
குற்ற மகற்றிய பொற்பி லிசைக்கொடி
      கொட்டுக சப்பாணி.       (10)
பிரதிபாடம் : - [2]வைத்திடு வெப்பு வனத்திலும்.
------------------------------------

முத்தப்பருவம்

347. சுருதி மணக்குஞ் சிவாகமத்தின்
      றோற்ற மணக்கும் வடகலைநூற்
றுலங்க மணக்குந் திராவிடத்தின்
      சுவையே மணக்கும் பிராகிருத
மருவி மணக்கு முலகளிக்கும்
      மகிமை 1தருமந் திரமணக்கும்
மலையு முருக்கு மியலிசையும்
      வளர்மந் திரமத் திமதாரம்
பெருகி மணக்குஞ் சமையநெறி
      பிறழாச் சகல சாத்திரமும்
பேதா பேத வகைமணக்கும்
      2பேரம் பலநா டகத்தாளத்
தரும மணக்குங் கனிவாயிற்
      றழைசேர் முத்தந் தருவாயே
தழைக்கும் புலியூர்ச் சிவகாமித்
      தாயே முத்தந் தருவாயே.       (1)
பிரதிபாடம்: [1]திருமந்திர - [2] பேரம்பல நாடகத்தானத்.

348. செயிருற் றிடுதீ வினைபோக்குந்
      தீராப் பிறவித் துயர்தீர்க்குஞ்
செனிக்கும் பிறவி தொறுஞ்சேர்ந்து
      செறிசஞ் சிதமு நீறாக்கும்
பயிலுற் றிடுமா காமியமும்
      பழுதாம் பூதப் பவுஷியமும்
பற்றாப் பற்றற் றிடுமாயைப்
      பாசிப் பாச வாசனையு
முயிரிற் கலந்த மும்மலமு
      மூறுங் களிப்பு மொருங்ககற்று
முமியுந் தவிடு முளையும்போ
      லுறுதத் துவத்தின் வேரறுக்குந்
தயிரிற் பிறைபோற் சிவமாக்குந்
      [1]தழை சேர் முத்தந் தருவாயே
தழைக்கும் புலியூர்ச் சிவகாமித்
      தாயே முத்தந் தருவாயே.       (2)
பிரதிபாடம்: [1]தகை சேர்

349. முத்தார் நகையால் முத்தநின்பால்
      முகமா மதியால் முத்தநின்பால்
முகிற்கூந் தலினால் முத்தநின்பால்
      முலையா னையினால் முத்தநின்பால்
நத்தார் களத்தால் முத்தமின்பால்
      நயனக் கயலால் முத்தநின்பால்
நடுக்கட் செவியால் முத்தநின்பால்
      நறுநெற் படியால் முத்தநின்பால்
கைத்தா மரையால் முத்தநின்பால்
      கன்னற் சிலையால் முத்தநின்பால்
கழைத்தோ ளதனால் முத்தநின்பால்
      கனிவாய் முத்த முனக்கரிதோ
சத்தாய்ச் சித்தாய்ச் சத்சித்தாய்த்
      தகைசேர் முத்தந் தருவாயே
தழைக்கும் புலியூர்ச் சிவகாமித்
      தாயே முத்தந் தருவாயே.       (3)

350. மச்சத் துழியிற் பிறந்தமுத்தம்
      வராகத் திடையிற் பிறந்தமுத்தம்
மார்பத் தணியும் வேயீன்ற
      மணிவாய் முத்தஞ் சுவைத்தருளும்
பச்சைக் கிளியே மாணிக்கப்
      பவழக் கோவைக் கனிவீழிப்
பழமா துளமிந் திரகோபம்
      பங்கே ருகப்பூ முருக்கிலவ
முச்சித் திலக மரக்காம்ப
      லுறழும் பசுந்தேன் கசிந்தூறு
முள்ளும் புறம்பு மணநாறு
      முனது கனிவாய் மணிமுத்தஞ்
சச்சைச் செழுங்குங் குமதனத்தாய்
      தகைசேர் முத்தந் தருவாயே
தழைக்கும் புலியூர்ச் சிவகாமித்
      தாயே முத்தந் தருவாயே.       (4)

351. கண்ணா லுனது மலர்ப்பாதங்
      கண்டே களிக்க விருகரமுங்
கமழ்பூ மலரால் பூசிக்கக்
      காலுன் கோயில் வலஞ்செய்ய
எண்ணார் செவிக்குள் நின்கீர்த்தி
      யிசையே கேட்கத் தலைவணங்க
வேழேழ் செனன மெடுத்தாலு
      மென்நா நின்னைத் தொழுதேத்தப்
பெண்ணா ரமுதே மலையரையன்
      பெற்ற மதலாய் உலகமெல்லாம்
பிறக்க வேண்டிப் பிறந்தபிள்ளாய்
      பேரா னந்த வெள்ளத்திற்
தண்ணா ரமுதச் சுவையூறுந்
      தகைசேர் முத்தந் தருவாயே
தழைக்கும் புலியூர்ச் சிவகாமித்
      தாயே முத்தந் தருவாயே.       (5)

வேறு
352. அகில முற்றும் பலவுயிர்க்குந்
      திடமளிக்குஞ் சடமெனா
வருடழைக் கும்படி யளிக்குந்
      தொழிலுடைப்பங் கயனும்வாழ்
சிகர வெற்புந் திகிரிவெற்புஞ்
      செகமனைத்தும் சுழலவே
திரைகடற்செம் [1]புனலலைக்குஞ்
      சுதையளிக்கும் புயனும்வான்
ககன முற்றுங் குடியிருக்குங்
      கடவுளர்கொன் றிடுவதோர்
கடுவினைத்தின் றுயிரளிக்குங்
      கருணைவைக்கும் பரனுமே
தகவுனைக்கண் டவர்துதிக்குந்
      தருகமுத்தந் தருகவே
சபையி னிற்சுந் தரியெமக்குந்
      தருகமுத்தந் தருகவே.       (6)
பிரதிபாடம்:- [1]புனல்கலக்கும்,

353. கனல்விளைக்குங் கிளையின் முத்தங்
      கதழெ ரிக்கண் பொரியுமே
கடுந டைச்செம் புகர்முகத்தின்
      கரியின்முத்தங் கரியுமே
புனல்விளைக்கும் புயலின் முத்தம்
      கதறிடிக்கண் சிதறுமே
புதுமதிக்கண் டிகழு முத்தங்
      குறுமுயற்கொண் டொளிருமே
தினவிளைக்கும் கழையின் முத்தங்
      திருகணிக்கண் குழையுமே
செறியிதழ்ச்செங் கமல முத்தங்
      களிறினிச்சென் றுளருமே
தனதுமுத்த முனது முத்தம்
      தருகமுத்தந் தருகவே
சபையி னிற்சுந் தரியெமக்குந்
      தருகமுத்தந் தருகவே.       (7)

354. சிமிழினிற்றண் டரள முத்தஞ்
      செகமனைத்தும் பெறினுமே
சிறிது மத்தங் கதிபெறச்சிந்
      தையினினைக்குங் குறியிலேங்
[1]குமிழினிற்றண் டரள முத்தங்
      குளிர்மதிப் பிஞ்செனினுமே
கொளநினைக்கும் பரிசி லைக்குங்
      குமமணக்குங் கமுகின்வா
யமிழ்தினிற்றண் டரள முத்தங்
      ககிலகற்பங் கெடினுமே
யழிவில் பொற்பங் கதுவெமக்கும்
      பெறுதல்சற்றுங் கருதிலேந்
தமிழ்மணக்குங் குமுத முத்தந்
      தருகமுத்தந் தருகவே
சபையி னிற்சுந் தரியெமக்குந்
      தருகமுத்தந் தருகவே.       (8)
பிரதி பாடம்: [1]குமிழிநிறத்தண்டாள முத்தம்.

355. குமரி வெற்பன் குமரி தக்கன்
      குமரிமுற்றுங் குமரியே
குமரர் முக்கண் குமரர் முக்கண்
      குமரர்பெற்றுங் குமரியே
அமர ருக்கங் கமராரைக் கொன்
      றமர்தவிர்த்த வமரியே
யமரி நற்சங் கரிமுலைக்குஞ்
      சரிநிலைப் பொன் சிகரியே
திமிர முட்குந் தினகரற்குங் -
      கிரணமுய்க்குங் கருணியே
திருமகட்குங் கலைம கட்குந்
      திறமளிக்குந் தமரியே
தமரின் முத்தந் தமரின் முத்தந்
      தருகமுத்தந் தருகவே
சபையினிற்சுந் தரியெமக்குந்
      தருகமுத்தந் தருகவே.       (9)
-
356. வலையி னிற்செங் கயலையுய்க்கும்
      பிணையையச்சம் புரியுமா
வடுவை யுப்பின் படலவிக்குங்
      கடுவினைப்பின் றொடருமே
யலையி னைச்சென் றலையவைக்குஞ்
      சுதையினைத்தின் றுமிழுமே
யலரி னைச்சென் றலர்படுக்கும்
      பகழியைக்கண் டிகழுமே
கொலைய டைக்குஞ் சமனிறக்கும்
      படிவிழிக்குங் குமரியே
குறுகி நிற்குங் குழையடர்க்குங்
      கமலமைக்கண் கமலையே
தலையளிச்செங் கருணை வைக்கும்
      தருகமுத்தந் தருகவே
சபையி னிற்சுந் தரியெமக்கும்
      தருகமுத்தந் தருகவே.       (10)
--------------------------------

வருகைப் பருவம்

357. மகமே ருவைநேர் கோபுரமோ
      வானூ டளாவு மாமதிலோ
வளர்பாம் புரியோ வாயிற்கால்
      மணிமண் டபமோ காவணமோ
அகமே மகிழ்கல் லூரிகளோ
      வணிமா ளிகையோ சூளிகையோ
[1]வளர்பூங் கொடிஞ்சி நெடுந்தேரோ
      வணிவீ திகளோ பலகோடி
உகமே விளங்குஞ் சினகரமோ
      ஒளிர்கற் றளியோ நேர்த்திகளோ
யுயர்சா ளரமோ வாவியமோ
      லொன்றா லொன்றுங் குறைவில்லாச்
செகமே புகழும் புலியூர்வாழ்
      திருவே வருக வருகவே
தேயா மதியே சிவகாமித்
      தாயே வருக வருகவே.       (1)
பிரதிபாடம் : [1]அலர்.

358. நந்தா வனங்கள் பூவிசிறி
      நனைதேன் சுவறித் தான்விசிற
நறும்பொற் பாளை யினைக்கவரி
      நாளி கேரங் கமுகிரட்ட
மந்தா நிலம்பன் னீர்தெளிப்ப
      மலர்த்தா மரைகள் விளக்கெடுப்ப
மணியாழ் ஞிமிறு வாசிப்ப
      மயில்க ளாடக் குயில்பாடக்
கொந்தா ரிலவ மாலவட்டங்
      கூந்தற் கமுகு குடைபிடிப்பக்
குவளை விழிப்பச் செஞ்சாலிக்
      குலவேந் தரசு கொலுவிருக்குஞ்
சிந்தா மணிப்பொற் புலியூர்வாழ்
      திருவே வருக வருகவே
தேயா மதியே சிவகாமித்
      தாயே வருக வருகவே.       (2)

359. கருந்தா முளகக் கடைசியர்தங்
      கண்ணே தண்ணீ ரிடைசுழலக்
கயலா மெனவே கிழநாரை
      கரைவாய் கவரக் காத்திருக்கும்
பருந்தாழ்ந் திறைஞ்சப் பறந்துசுற்றும்
      பள்ளப் பயல்கள் பறிதூக்கும்
பழமீன் கரும்பின் முத்துநிலாப்
      பார்த்தே மலர்த்தா மரைமுகிழ்க்கும்
பெருந்தாழ்க் குவளை முகையவிழ்க்கும்
      பிள்ளை யெனச்சூற் சங்கணைக்கும்
பெடைமென் குமரி மடவன்னம்
      பெறுமுட் டைகளென் றடைகிடக்கும்
செருந்தாழ்ச் சோலைப் புலியூர்வாழ்
      திருவே வருக வருகவே
தேயா மதியே சிவகாமித்
      தாயே வருக வருகவே.       (3)

360. வாழ்வே வருக வெமதுகண்ணின்
      மணியே வருக மணியூடு
வந்தே விளங்கு மொளிவருக
      வளரு [1]மொளிக்கு மொளிவருக
தாழ்வே யகலும் சிவம்வருக
      தழைக்குஞ் சிவத்தின் செயல்வருக
சகல வுயிர்க்கு முயிர்வருக
      சகமு முயிருந் தான்பூத்த
பூவே வருக பூவுலகம்
      பூத்தே காய்த்துப் பழுத்தவத்தின்
பொருளே வருக பொருளாகிப்
      போகம் விளைக்கு மானந்தத்
தேவே வருக புலியூர்வாழ்
      திருவே வருக வருகவே
தேயா மதியே சிவகாமித்
      தாயே வருக வருகவே.       (4)
பிரதிபாடம்: - [1]ஒளிக்குளொலி

361. கொழிக்குங் கருணை மழைமுகிலே
      குழையா நறுங்குங் குமக்கொழுந்தே
கொழுங்கற் பகமே கோமளமே
      கோமே தகமே மரகதமே
யிழைக்கு மணிப்பூ ணணிகலமே
      யிழையா முழுச்சிந் தாமணியே
யெழுந்த வொளிர்பொன் மலர்க்கொழுந்தே
      யெழுபுன் பிறவிக் கொருமருந்தே
தழைக்கும் பெருவாழ் வருள்சிவமே
      தவமே ஞானத் தனிவிளக்கே
தமிழ்க்கே யுதவுஞ் சதகோடி
      சங்க நிதியே சரோருகமே
செழிக்கும் புலியூர் வாழ்வருக
      திருவே வருக வருகவே
தேயா மதியே சிவகாமித்
      தாயே வருக வருகவே.       (5)

வேறு
362. திரிபுர சுந்தரி வருக வேவெகு
      தேவ துரந்தரி வருகவே
தினகர குண்டலி வருக வேமுக
      சீதள மண்டலி வருகவே
மரகத வண்கொடி வருக வேமயி
      டாசுர சங்கரி வருகவே
வசிகர [1]மங்கலி வருக வேவசு
      தேவர் வணங்குமை வருகவே
பரிபுர முண்டகி வருக வேபர
      வாதவர் கண்டகி வருகவே
பரசிவ ரஞ்சகி வருக வேபரி
      வாகிய நெஞ்சகி வருகவே
கரதல கந்தரி வருக வேகலி
      கால புரந்தரி வருகவே
கனக சிதம்பரி வருக வேசிவ
      காம சவுந்தரி வருகவே.       (6)
பிரதிபாடம் - [1]மங்களி
-
363. அரகர சங்கரி வருக வேயசு
      ரேசர் பயங்கரி வருகவே
யமலி சுமங்கலி வருக வேயதி
      ரூப வலங்கரி வருகவே
சிரகர சிந்துரி வருக வேசிர
      மாலி திகம்பரி வருகவே
சிவசிவ வம்பிகை வருக வேசிவ
      லோக திரியம்பிகை வருகவே
பரம நிரந்தரி வருக வேபரி
      பூரண பஞ்சமி வருகவே
பவள விளங்கொடி வருக வேபற
      வாத பசுங்கிளி வருகவே
கருணை தருந்திரு வருக வேகயி
      லாய பரம்பரி வருகவே
கனக சிதம்பரி வருக வேசிவ
      காம சவுந்தரி வருகவே.       (7)
-
364. குமரி குறுந்தொடி வருக வேகுர
      வேகமழ் கொந்தளி வருகவே
குடநிகர் கொங்கைகள் வருக வேகுட
      காவிரி கங்கையள் வருகவே
அமரி பசும்பிடி வருக வேயடை
      யார்படை வென்றவள் வருகவே
யடியவர் கும்பிட வருக வேயடி
      யேன்மிடி யுங்கெட வருகவே
தமருக விஞ்சையள் வருக வேசதுர்
      வேத விபஞ்சியள் வருகவே
தயகுண பஞ்சரி வருக வேசக
      லாகம மஞ்சரி வருகவே
கமல முகந்தவள் வருக வேகரு
      ணாகர வம்பிகை வருகவே
கனக சிதம்பரி வருக வேசிவ
      காம சவுந்தரி வருகவே.       (8)

365. அவமதி பொன்றிட வருக வேயழி
      யாநிதி தந்திட வருகவே
யகில பவங்கெட வருக வேயக
      லாவிப வந்தர வருகவே
சிவகதி தந்திட வருக வேசிவ
      போகம் விளைந்திட வருகவே
திருவடி தந்திட வருக வேசெக
      மாயை தெளிந்திட வருகவே
குவலைய முய்ந்திட வருக வேவளர்
      கோயில் விளங்கிட வருகவே
குறைக டவிர்ந்திட வருக வேகொடி
      யேனும் வணங்கிட வருகவே
கவலை தவிர்ந்திட வருகவேகலி
      கால பவங்கெட வருகவே
கனக சிதம்பரி வருக வேசிவ
      காம சவுந்தரி வருகவே.       (9)

366. மறமலி கஞ்சுகி வருக வேமற
      வாதவர் நெஞ்சகி வருகவே
மதுபதி கஞ்சகி வருக வேமது
      வால்நிறை யுந்துளி வருகவே
பருவத நந்தினி வருக வேமுது
      பாரதி யிந்திரை வருகவே
பரகதி தந்திட வருக வேபசு
      பாச மகன்றிட வருகவே
பொறையில் மிகுந்தவள் வருக வேபுலி
      யூரினில் வந்தவள் வருகவே
புரமெரி தந்தவள் வருக வேபுவ
      னாதிக டந்தவள் வருகவே
கறையர் கங்கணி வருக வேகணை
      யோவெனும் வெங்கணி வருகவே
கனக சிதம்பரி வருக வேசிவ
      காம சவுந்தரி வருகவே.       (10)
----------------------------------

அம்புலிப்பருவம்

(சாமம்)
367. சிவனிடப் பாகத் திருந்துவிளை யாடுமிவள்
      செஞ்சடையில் விளையாடுநீ
சிவனிடக் கண்ணுமிவள் கண்ணாகு நீயுமோ
      சிவனிடக் கண்ணதாகும்
கவனமுறு கலையுள துனக்கிவ டனக்குமோ
      கவனமுறு கலைவாகனங்
ககனவிபு தர்க்கமுத முதவுநீ யிவளுமோ
      கருணைவிழி யமுதமுதவும்
பவனமுறு பாற்கட லுதிக்கும்நீ யிவளுமோ
      பராபரக் கடலுதிக்கும்
பைங்குவளை நண்பநீ யிவளுமோ செங்கைப்
      பசுங்குவளை நண்பினேந்தும்
அவனிமிசை யிருவர்களு நிகராகு முகமன்ன
      வம்புலீ யாடவாவே
வம்பலவ ருடன்மருவு சிவகாமி யம்மையுட
      னம்புலீ யாடவாவே. (1)

(பேதம்)
368. வடிவெலா நின்கட் களங்கமுள திவடன்
      மனத்துங் களங்கமுளதோ
மதிமுகப் பிள்ளைதனை மதியா திருப்பதுன்
      மதிகுறைந் திடுதலாலோ
முடியின்மிசை நீயிருந் தாலுமிவ ளடியிணையை
      முடியொடும் பணியவிலையோ
முயலுள துனக்கிவ டனக்குமோ புலியுளது
      முதுபுலியை முயல்வெல்லுமோ
படியின்மிசை கடிதுவா வாரா திருந்திடிற்
      பாரா திருந்துவிடுமோ
பதஞ்சலி யெனும்பெரிய பாம்பினை யெடுத்துநம்
      பாவைதிரு முன்வைத்திடு
மடியினா லமுதம் 1பலித்தலு மறிந்திலைகொ
      லம்புலீ யாடவாவே
யம்பலவ ருடன்மருவு சிவகாமி யம்மையுட
      னம்புலீ யாடவாவே.       (2)
பிரதிபாடம்: [1]பிலுத்தல்.

369. விற்பகரு முத்தம் பிறக்குநின் கிரணத்தின்
      வேயீன்ற முத்தமணிய
வேய்புரை பசுந்தோளின் மிடறெனும் பூகத்தின்
      வெண்முத்த மும்பிறக்கும்
பொற்புறு விமானத்தி லுலகவிரு ளகலவே
      பொன்வரையை வலம்வருவைநீ
பொற்புறு விமானத்தில் புந்தியிரு ளகலவிவள்
      பொன்னடியை வலம்வருகுவார்
கற்புடைய கன்னிய ருனைப்பணிய லாகாது
      கன்னியிவ ளைப்பணியவே
கற்பது மிகுத்திடு மெப்போது முப்போதுங்
      காணப் படாதுன்னையே
யற்புத மிதற்குமே லெவனுளது வினையகல
      வம்புலீ யாடவாவே
யம்பலவருடன் மருவு சிவகாமியம்மையுட
      னம்புலீ யாடவாவே.       (3)

370. பாகாய மொழிவஞ்சி முகமா யிரங்கலைகள்
      பளபளத் திடுமதியமே
பச்சைப் பசுங்கதிரின் [1]நறவுண்டு பசியாது
      பசித்தணி சகோரம்விழியே
போகாத குறுமுயற் கறையு மிருபுருவமும்
      பொட்டிடு நுதற்குறியுமே
புரியளக பந்தியுஞ் சிகழிகையு மழியாது
      புடையிலிடு பரிவேடமே
வாகாய மாணிக்க மணிமன்றுள் நடனமிடு
      வள்ளலுண்ணக் குறைபடா
வளர்கலைப்பெண்பிள்ளை நின்னோ டொப்பென்னவே
      மன்னுசெஞ் சடைமுடியின்மே
லாகாய கங்கையுடன் விளையாடு மதியமே
      யம்புலீ யாடவாவே
யம்பலவ ருடன் மருவு சிவகாமி யம்மையுட
      னம்புலீ யாடவாவே.       (4)
பிரதிபாடம் : [1]பறவாது.

371. முழுமுகத் திங்களொடு நெற்றியொரு பாதிமதி
      முக்கீற்று நீற்றுமதியாள்
முடியிலொரு கீற்றுமதி யடியிலொரு கீற்றுமதி
      முக்கணிலோர் கொற்றமதியாள்
கொழுநகைப் பிறையுமிரு பதுநகைப் பிறையினொடு
      கொத்துமுத் துப்பிறையினாள்
கும்பிடுந் தாமரைகள் குவியுமிசை யமுதொழுகு
      குமுதங்கள் முகைவிண்டிடும்
பழுதகலும் வெண்டிங்கள் வடிவமிவள் வடிவெலாம்
      பசுபாச விருளகற்றும்
பதியெனும் பருதியொடு கூடிக் கலந்திடும்
      பலகோடி சந்திரகலையே
அழிவிலாப் பெண்பிள்ளை வடிவாகி வந்ததா
      லம்புலீ யாடவாவே
யம்பலவ ருடன்மருவு சிவகாமி யம்மையுட
      னம்புலீ யாடவாவே.       (5)

(தானம்)
372. மயில்வடிவ நம்மன்னை வந்துவிளை யாடலாம்
      வாராது ராகுகேது
வந்தாலு மென்னபயம் மகன்வா கனத்துக்கு
      வலியதோ ரிரையதாகும்
குயில்வடிவு கொண்டதொரு கோதையைச் சேர்ந்திடுங்
      குற்றமும் பற்றற்றிடும்
குறையாது கலைகளுங் கயரோக வினையறுங்
      குறுமுயற் கறையுமகலும்
வெயில்வடி வினைச்சேர்ந்த சோபமுந் தீர்ந்திடும்
      வேண்டிய வரம்பெறலுமாம்
விரிசெனா மித்தைதவிர் தெரிசனா முத்தியும்
      வெற்றியும் பெற்றுவரலாம்
அயில்வடிவு கொண்டமுக் கண்ணியிவள் விளையாட
      வம்புலீ யாடவாவே
யம்பலவ ருடன்மருவு சிவகாமி யம்மையுட
      னம்புலீ யாடவாவே.       (6)

373. ஏகாம லேனந் தொடர்ந்துவரு நின்குலத்
      தெழிலரசு மேனமுடனே
யேறிவரு புரவியுஞ் சிவகங்கை மூழ்கியே
      யினியபொன் னிறமானதும்
போகாத வெண்குட்ட மதுபோக வடிவெலாம்
      பொன்வடிவு தானாகவே
பொன்மகுட கெவுடதே சக்குரிசில் பெற்றதும்
      புவியினிற் கண்டதிலையோ
மோகா விகாரத்தின் முனிவரன் கோபத்தின்
      முன்னிட்ட சாபத்தையு
மூளா தொழிக்கலா மாளா வரம்பெற்று
      முற்றுமே வாழலாகும்
ஆகாத நின்கட் கருங்குட்ட முந்தீரு
      மம்புலீ யாடவாவே
யம்பலவ ருடன்மருவு சிவகாமி யம்மையுட
      னம்புலீ யாடவாவே.       (7)

(தண்டம்)
374. பச்சைமால் பஞ்சசய னத்தின்மேல் நீவெண்
      படாமென விருந்ததிலையோ
பங்கே ருகக்கடவுள் சொன்னபடி கேட்டுநீ
      பகலிரவு திரியவிலையோ
கச்சையாய் நச்சரா வைப்புனையு முன்மத்தர்
      காணப்படா முடியின்மேற்
கத்தைச் சடைச்சக் களத்தி முற்றத்தினில்
      காத்தே கிடக்கவிலையோ
விச்சையா யண்டங்க ளெல்லாம் பெறும்பிள்ளை
      யினிதுவிளை யாடநின்னை
யிங்குவா வென்னவே யங்குநீ வாரா
      திருப்பதுவு மேழைமதியோ
அச்சமோ கருவமோ யிவளில்நீ மிச்சமோ
      வம்புலீ யாடவாவே
வம்பலவ ருடன்மருவு சிவகாமி யம்மையுட
      னம்புலீ யாடவாவே.       (8)

375. சுந்தரக் கடவுளாற் சூடுண்ட மன்மதன்
      சுடர்முடிக் குடையானநீ
தொண்டுபட் டடையார் புரஞ்சுட் டிடப்பண்டு
      சுழல்கின்ற தேர்வண்டிநீ
கந்தரத் தேவர்தின் றுமிழ்கின்ற சக்கைநீ
      காலினாற் றேய்பட்டநீ
கைச்சட்டு வத்தினால் வெட்டுண்ட வரவுண்டு
      கக்கிட்ட வுச்சிட்டம்நீ
மந்தரக் கிரியான மத்தொடுஞ் சுழல்பட்டு
      வாரியிற் கடைபட்டநீ
வாவென்று நின்னையொரு பொருளா யழைப்பதுவும்
      வாரா திருப்பதென்னோ
அந்தரத் தினிலொளித் தாலு[1]மினி விடுவரோ
      வம்புலீ யாடவாவே
வம்பலவ ருடன்மருவு சிவகாமியம்மையுட
      னம்புலீ யாடவாவே.       (9)
பிரதிபாடம்:- [1]உனை.

376. இதழ்மடித் தேயிருதின் றெழுசினத் தசுரனுட
      லிருபிளவி னொருபிளவுசென்
றிடியெனப் பிளிறியிடும் பொறியெனத் திண்டாட
      வேனைய பிளவுசென்றே
கதழ்சகத் திரமூடி கொடியகட் செவிதின்று
      காளமே கப்பீலிவான்
கங்குலி னெடுத்தாட வேலெடுத் தாடுமொரு
      கந்தனிவள் மைந்தனாகுஞ்
சதமுற வழக்கிலா யிரகோடி யண்டங்க
      டவழும்வெண் டிங்கள்முத்துந்
தண்டாது வருமகிமை கண்டா லுனக்குமதி
      தானுமதி யுண்டாகுமோ
அதிகமுறு மண்டலத்தில் மதிகள்வரு முன்னமே
      யம்புலீ யாடவாவே
யம்பலவருடன் மருவு சிவகாமி யம்மையுட
      னம்புலீ யாடவாவே.       (10)
----------------------------------

சிற்றில் பருவம்

377. அடிமுடியு மாயிரத் தெட்டுமாத் துச்செங்க
      லழகுறச் சுவரியற்றி
யட்டதிக் குங்கால்கள் நட்டுமக மேருநடு
      வசையாத தூணிறுத்தி
யிடையிலறை வீடுபதி னாலென வகுத்துமுக
      டினியசெம் பொற்கத்தையிட்
டெழுகிணறு கட்டியிர வும்பகலும் எரியவே
      யிருவிளக் கிட்டுவைத்துப்
படியிலகு பதவிப் பழங்கள் மடுக்கிவிளை
      பச்சைநெல் லிருநாழியிற்
பல்லுயிரு முண்டுதேக் கிட்டிடு மடுக்களைப்
      பலவடுப் புஞ்சமைப்பித்
திடமருவு பெருவீடு கட்டிவிளை யாடுமுமை
      சிறுவீடு கட்டியருளே
சிவகாம சுந்தரி யெனும்பெரிய விமலையே
      சிறுவீடு கட்டியருளே.       (1)

378. மண்பற்று கால்கள்வைத் தூனினாற் சுவர்வைத்து
      வலியகைம் மரமும்வைத்து
வாசலொன் பதும்விட்டு மோட்டுவளை பக்கத்து
      வளைவரிச் சலுநரம்பாற்
பண்பெற் றிடக்கட்டி மேலெல்லாந் தோலுடன்
      பலமயிர்க் கத்தையிட்டுப்
பழவினைச் சேர்கட்டி யின்பதுன் பங்கள்கண்
      பாத்துண விளக்குமேற்றி
எண்பத்து நான்குநூ றாயிரம் பேதமா
      மினியசிறு வீடுதோறு
மெவ்வுயிர் களுங்குடி யிருந்துவிளை யாடவே
      யின்னமு மழித்தழித்துத்
திண்பெற்ற பலவீடு கட்டிவிளை யாடுமுமை
      சிறுவீடு கட்டியருளே
சிவகாம சுந்தரி யெனும்பெரிய விமலையே
      சிறுவீடு கட்டியருளே.       (2)

379. ஆறுசாத் திரம்நாலு வேதமதி தூணாக
      மங்களிரு பத்தெட்டுடன்
[1]ஐம்பெரும் பூதங்கள் பதினெண் புராணங்க
      ளரியசிறு தூணுத்திர
மேறுகலை யறுபத்து நாலுகைம் மரநாடி
      யெழுபத் திரண்டாயிர
மெழில்வரிச் சுடனாணி புவனமிரு நூற்றோடு
      மிருபத்து நாலுகமலங்
கூறுதொண் ணூற்றாறு தத்துவம் பலகணிகள்
      கும்பமொன் பதுவாசலுங்
குலவுசிற் றோடுமிரு பத்தோரா யிரமுடன்
      கூறுமறு நூறுமாகத்
தேறுமொரு வீடுகட் டிக்குடி யிருக்குமுமை
      சிறுவீடு கட்டியருளே
சிவகாம சுந்தரி யெனும்பெரிய விமலையே
      சிறுவீடு கட்டியருளே.       (3)
பிரதிபாடம் :- [1]வன்பெரும்பூதங்கள்.

380. மறுதே ருருட்டிவரு பொய்த்தேரை யொத்தபெரு
      வாழ்வைக் குறித்துலகெலாம்
வலசாரி யிடசாரி வருமிந்தி ரன்தேரும்
      வளர்தூளி படலமாக
உறுதே ருருட்டிவொரு மறுதேரி லாதண்ட
      மோராயிரத் தெட்டுமே
யொருகுடைக் கீழாகு மேலாகு தேவர்களு
      முருவுசிறு தூளாகவே
எறிதே ருருட்டிவரு சந்திரசூ ரியர்தேரு
      மெழுதூளி படலமறைய
விந்திரஞா லத்தே ருருட்டிவரு சூரனுட
      லிருபிளவு தானாகவே
சிறுதே ருருட்டிவரு சிறுவனைப் பெறுசிறுமி
      சிறுவீடு கட்டியருளே
சிவகாம சுந்தரி யெனும் பெரிய விமலையே
      சிறுவீடு கட்டியருளே.       (4)

381. பொன்மணற் சிற்றிலின் முத்தரிசி குத்தியே
      பொன்முச்சி லிற்புடைத்துப்
புஷ்பரா கக்குழிசில் செந்தே னுலைப்பெய்து
      புதியவச் சிரவடுப்பின்
பன்மணிப் பவளவிற கிட்டுமா ணிக்கமணி
      பற்றிட நெருப்புமூட்டிப்
பச்சைமணி பச்சடி பொறிக்கறிகள் கோமே
      தகப்பல விதக்கறியுடன்
நன்மணத் தொடுசமைத் திடுசோறு சேடியர்
      நலம்பெற வடித்துவைப்ப
நஞ்சமுண் டவரமுது கொண்டு பசிதீரவே
      நல்லபா லடிசிலிடநீ
சின்மயக் கணவர்தா முண்டுவிளை யாடவே
      சிற்றில்விளை யாடியருளே
சிவகாம சுந்தரி யெனும்பெரிய விமலையே
      சிற்றில்விளை யாடியருளே.       (5)

வேறு
382. பத்தி மிகுத்தவர் மாதவ ரன்பு
      படைத்தவர் பக்கலின்வாழ்
பச்சை நிறத்தவ ளேசிவ சங்கரர்
      பட்ச மிகுத்தவளே
சத்தினி சத்தினி பாத மடைந்தவர்
      தற்பரை சிற்பரையே
சக்கரை முக்கனி தேனோ டளைந்திடு
      சற்குணி நிற்குணியே
வித்தகி வித்திம வான்மக ளென்றிட
      வெற்பி லுதிப்பவளே
விற்கணை யொத்த புரூர நெடுங்கணி
      மெய்க்கணி யக்கணியாய்
சித்தினி பற்பினி சாமளி சங்கினி
      சிற்றி லிழைத்தருளே
சிற்சபை யிற்சிவ காம சவுந்தரி
      சிற்றி லிழைத்தருளே.       (6)

383. முற்பர தத்து நிதான நடம்புரி
      முக்கணர் பொக்கணர்சீர்
முத்தமிழ் சொற்றவர் வேத மொழிந்தவர்
      முத்தியளித் தருள்வார்
தற்பர தத்துவர் கீத மறிந்தவர்
      தர்க்கமு மிட்டிடுவார்
தக்கனை யட்டவர் காமனை வென்றவர்
      சத்து மசத்தும்விடார்
அற்பர தத்துவர் நீபுனை தந்திடு
      மத்தனை சிற்றிலுமே
யப்போ தழித்தரு ளாமவ ரின்று
      மழிப்ப ரெனக்கருதேல்
சிற்பர சிற்குணி தேவி திகம்பரி
      சிற்றி லிழைத்தருளே
சிற்சபை யிற்சிவ காம சவுந்தரி
      சிற்றி லிழைத்தருளே.       (7)

384. சித்த மகிழ்ச்சியின் மூவர் விளங்கிடு
      சிற்றி லிழைத்தவணீ
சிட்டி நுதற்றொழி லாகி நிகழ்ந்திடு
      சிற்றி லிழைத்தவணீ
சித்தர் தயித்தியர் தேவ ருறைந்திடு
      சிற்றி லிழைத்தவணீ
சிற்றுயி ரைக்கொடு காலன் வணங்கிடு
      சிற்றி லிழைத்தவணீ
சித்தென முச்சக மாயை புரிந்திடு
      சிற்றி லிழைத்தவணீ
சிக்கற நற்சிவ போகம் விளைந்திடு
      சிற்றி லிழைத்தவணீ
சித்தியு முத்தியு மாகி நலங்கிளர்
      சிற்றி லிழைத்தருளே
சிற்சபை யிற்சிவ காம சவுந்தரி
      சிற்றி லிழைத்தருளே.       (8)

385. பச்சை மடக்கிளி பாசிழை பைந்தொடி
      பச்சை மயிற்பெடையே
பச்சிள நீர்த்தன பார விளங்கொடி
      பச்சை மடப்பிடியே
அச்சுத னுக்கிளை யாய்கள வின்கனி
      யச்சுறு மைக்குழலாய்
யச்சிவ னச்சொடு தேர்பொடி சிந்திடு
      மச்சுதனைப் பெறுவாய்
வச்சிர வச்சிரன் மார்பு பிளந்திட
      வச்சிர வச்சிரவேல்
வச்சிர கற்புடை தோளுடை மைந்தனை
      வச்சிர மெனப்பெறுவாய்
செச்சை மலர்ச்சிறு பாணி வருந்திடு
      சிற்றி லிழைத்தருளே
சிற்சபை யிற்சிவ காம சவுந்தரி
      சிற்றி லிழைத்தருளே.       (9)

386. எத்தனை யெத்தனை கால மிருந்திட
      விப்படி யிப்படியே
யெத்தனை யெத்தனை கோடி 1நவண்ட
      மிழைத்தனை சிற்றிலெனா
அத்தனை சிற்றிலு மோடி வளைந்துமு
      னத்த ரழித்தனரா
மக்கிர மத்தவ ராமவர் தங்குண
      மப்படி நிற்கிலையால்
உத்தமி பத்தினி யாதி பரம்பரி
      யுற்றிடு கற்புடையா
யுற்பலம் வைத்திடு பாணி வருந்தியு
      முற்றிடு பொற்றுகளாற்
சித்திர விசித்திர மாக வளம்பெறு
      சிற்றி லிழைத்தருளே
சிற்சபை யிற்சிவ காம சவுந்தரி
      சிற்றி லிழைத்தருளே.       (10)
பிரதிபாடம் :- [1]நவகண்டம்.
------------------------------------

அம்மானைப்பருவம்

387. முழுமதியி னமுதமுந் தெண்டிரைப் பாற்கடலின்
      முன்கடைந் திடுமமுதமும்
முத்திதரு மோவதனை யொப்பென வுரைத்திடினு
      முக்கனி சருக்கரையொடு
பழுதகல பசுந்தேனு மிருசெவிக் கின்பம்
      பயக்குமோ காமதேனின்
பாற்சுவையு நாற்சுவைக் கொஞ்சுகிளி யின்சொலும்
      பாசவிரு ணீக்கிவிடுமோ
வழுவகலு மிம்மைக்கு மறுமைக்கு முத்திதரும்
      மற்றினி யுரைப்பதென்னோ
மைந்தர்தன் சொற்கேட்கில் இன்பம் செவிக்கெனும்
      வாய்மையும் பொய்ம்மையாமோ
குழலினிது யாழினிது மன்றுநின் மழலைவாய்க்
      குதலைமொழி யாடியருளே
குழகன்மகிழ் சிவகாம சுந்தரிநின் மழலைவாய்க்
      குதலைமொழி யாடியருளே.       (1)

388. சூக்குமை விளங்குபை சந்திமத் திமையொடு
      துலங்குவை கரியாகியே
சொல்லரு மிலஞ்சியுர னொடுகண்ட முச்சியொலி
      தொடுநாசி யொடுகலந்தே
வாக்கினி லெழுந்துபல் லண்ணமிதழ் நாவினில்
      வழங்குமழ லைச்சொல்லுமே
மைந்தரைக் கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றின்ப
      மாதா பிதாவுமெய்தும்
பாக்கியந் தரவந்த மாதா பிதாவுநீ
      பரவுமெங் குலதெய்வநீ
பழுதகலு முயிருநீ யுடலுநீ யுடலினிற்
      படருமைம் புலனுநீயே
கூக்குரல் குயிற்பூவை கொஞ்சுகிளி யஞ்சுநின்
      குதலைமொழி யாடியருளே
குழகன்மகிழ் சிவகாம சுந்தரிநின் மழலைவாய்க்
      குதலைமொழி யாடியருளே.       (2)

389. வல்லதெய் வப்பாவை மானிடப் பாவையொடு
      வாழ்விலங் கின்பாவையும்
மறிதிரைப் புனலிடை வழங்கிடும் பாவையும்
      மருவுபற வைப்பாவையு
மொல்லையி னெளிந்துதா மூர்ந்திடும் பாவையு
      முறுதா மரப்பாவையு
மொருபொருப் பாவைமுத லைம்பொறிப் பாவையு
      முற்றிடும் பாவையெல்லா
மெல்லறிவு 1சாக்கரக் கனலொடு சுழித்திட
      னெழுபூத சாரவடிவா
மெண்பத்து நாலிலக் கத்தான கொள்கையி
      லெண்ணிறந் திடுகாலமும்
பல்லுயிர்ப் பாவைவிளை யாடுநற் பூவைபொற்
      பாவைவிளை யாடியருளே
பரமசிவ காமசுந் தரியம்மை யினியபொற்
      பாவைவிளை யாடியருளே.       (3)
பிரதி பாடம் : [1]சாக்கரக்கனலொடு சுழித்தியுட

390. கன்னியர் மணற்சிற்றில் விளையாடு போதுமுக்
      கண்ணிநீ தேவியெனவுங்
கடவுள்மண வாளனென மணமாலை சூட்டவுங்
      கமழ்சட்டு வம்பழக்கி
யின்னமுத மூட்டியே பிள்ளையெண் மர்த்திரியு
      மேணையிற் றாலாட்டியு
[2]மெமதுபே ராட்டிநீ வீணழற் பாலையென
      விருகையி னாலெடுத்து
மன்னுவிழி நீர்துடைத் தூறு[3]பா லுண்ணுகென
      மணிவாயின் முத்தமிட்டு
மார்பத் தணைத்தரும் பாமுலை கொடுத்தயலின்
      மற்றுநாளிற் கவிழ்ந்து
பன்னுமொழி சேடிய ருடன்கூடி மேருபொற்
      பாவைவிளை யாடியருளே
பரமசிவ காமசுந் தரியம்மை யினியபொற்
      பாவைவிளை யாடியருளே.       (4)
பிரதி பாடம் : [2]எமது போராட்டினீ; [3] பாலுண்ணுதேன்

391. நாடருஞ் சாம்பூ நதச்செம்பொன் மாலையுடன்
      நவமணி யணிந்தபாவை
நவம்பெறும் புவனங்கள் முழுவதுந் தன்வயின்
      நடத்தவே வந்தபாவை
கூடருங் குடிலையுங் கூடவந் திடுபாவை
      குவலையத் ததிசெயமெனாக்
கொல்லியம் பாவையுங் கும்பிடு பசும்பாவை
      குலவுபல் லுயிர்கட்கெலாம்
வீடருங் கைத்தா யெனுஞ்சித் திரப்பாவை
      விந்தைமோ கினிமானுமே
மேவுதன் வடிவமென மேவிளங் கிடுபாவை
      மெய்ப்பொருளி னைப்பரவினோர்
பாடவந் தவர்சித்தி முத்திவடி வானபொற்
      பாவைவிளை யாடியருளே
பரமசிவ காமசுந் தரியம்மை யினியபொற்
      பாவைவிளை யாடியருளே.       (5)

392. பாந்தண்மா ணிக்கமணி பொற்பூவின் மரகதம்
      பத்திபாய்ந் தாடலெனவும்
பைந்தா மரைப்பொகுட் டுறுகுறுங் கெண்டைநிரை
      பாய்ந்துவிளை யாடலெனவு
மாந்தளிரின் மிசையோடி வந்துவந் திளமாவின்
      வடுவசைந் தாடலெனவும்
மதரரிக் கண்கணின் பலமணிக் கொப்பின
      மறிந்துவிளை யாடலெனவுஞ்
சாந்திளங் கொங்கைமிசை நின்கணவர் கண்கடாந்
      தாவிவிளை யாடலெனவுந்
தண்டாது வரிவண்டு செங்காந்தண் மலர்மீது
      தண்டாது நுகர்வதெனவுங்
காந்திதரு [1]செம்பொன்னிசை யிந்திர நறுநீலக்
      கழங்குவிளை யாடியருளே
கனகசிற் சபையில்வாழ் சிவகாம சுந்தரி
      கழங்குவிளை யாடியருளே.       (6)
பிரதிபாடம் :- [1] செம்பொன்னிழை

393. [1]பழகுபெறு பச்சிளங் கிள்ளையொடு கொஞ்சியும்
      பஞ்சரம் வளர்கற்றுறும்
பஞ்சிறைப் பூவைக்கு மென்மொழி பயிற்றியும்
      பன்மணி யிழைத்தபடிவக்
குழமணப் பிள்ளை கொடு வண்டல்விளை யாடியுங்
      குங்குமச் சேறாடியுங்
கொடுங்கையாழ் குரலிசை நரம்பினொடு பாடியுங்
      குறுமலர்ச் செண்டாடியு
மழகுபொலி பேராய வெள்ளத்தில் விளையாடி
      யணிசுண்ண நீராடியு
மன்னத்தி னீலக் கலாபமயி லானந்த
      மார்ந்தேறி விளையாடியுங்
கழகமுத் தமிழ்பாடு மிகுளைய ரோடுபொற்
      கழங்குவிளை யாடியருளே
கனகசிற் சபையில்வாழ் சிவகாம சுந்தரி
      கழங்குவிளை யாடியருளே.       (7)
பிரதிபாடம் :. [1]பழகுபொற்.

வேறு
394. சந்திர சூரிய ரோதையதாய்த்
      தார கணம்பதி யாரமதாய்த்
தரிசுகள் சுருதிக டானாகத்
      தனவரை தமனிய வரையாகச்
சுந்தர விருகர மெறிதரவே
      சுழன்று சுழன்றிட வலம்வரவே
சுரிதரு கூந்தலு முகிலெனவே
      துலங்கு நுடங்கிடை மின்னெனவே
யிந்திர வில்லிட விருபுருவ
      மிழையணி மணிசொரி துளியெனவே
யெங்கணு மதிவிழி கயலெனவே
      யெதிரிடு கண்ணடி யெனவரவே
அந்தரி யுலகினில் யாவருக்கு
      மம்மே யம்மனை யாடுகவே
யரசே யரகர சிவகாமி
      யம்மே யம்மனை யாடுகவே.       (8)
-
395. வடிவும் பளபள வெனமாலை
      மணமுங் குமுகுமு வெனநீல
வரியும் மொகுமொகு வெனமுன்கை
      வளையுங் கிலுகிலு வெனவேறா
முடியுந் தளையவிழ் தரமூரல்
      முகமும் நிகநிக வென மார்பின்
முலையுந் தளதள வெனவாயின்
      மொழியுங் குலுகுலு வெனநூலின்
இடையும் மின்மின லெனவாடை
      யெழிலுந் தகதக வெனவோரை
யெறியுங் கலகல வென[1]வோத
      லிசையும் நமநம வெனநாவின்
நடையுஞ் சிவசிவ வெனவெங்க
      ளம்மே யம்மனை யாடுகவே
யரசே யரகர சிவகாமி
      யம்மே யம்மனை யாடுகவே.       (9)
பிரதிபாடம் : [1]வேதவிசையும்

பந்தாடற் பருவம்

396. சந்திரசூ ரியர்தமைச் சில்லெறிந் தாடவளைச்
      சக்கரவா ளக்கிரிதனைச்
சக்கரம தாகவே ராகுகே துக்கயிறு
      தான்சுற்றி விளையாடியே
அந்தரத் தாரா கணங்கழற் காயாக
      வாடிமக மேருகிரியை
யம்பரந் தனிலாடு பம்பரம தென்னவே
      யாயிரம் படமாடுறும்
விந்தைமா ணிக்கநற் கயிறுகொடு விளையாடி
      வெள்ளிவே தண்டமொழிய
மேலெண் டிசாமுகமு மூதண்ட கூடத்து
      வேதண்ட மத்தனையுமே
பந்துவிளை யாடிவரு மைந்தனைப் பெறுசிறுமி
      பந்துவிளை யாடியருளே
பங்கயச் சிவகாம சுந்தரியென் னம்மையே
      பந்துவிளை யாடியருளே.       (1)
-
397. செந்தா மரைப்பதம் [2]பந்தசைந் தாடவிரு
      திருமுழந் தாள்பந்துமே
திண்புவி பதிந்தாட வினியபந்துக் கொண்டை
      செண்டுடன் பந்தாடவே
நந்தாத குங்குமக் கொங்கைபந் தாடவிரு
      நயனங் கழங்காடவே
நவமணி யிழைத்தகுழை செவியிலம் மனையாட
      நட்சத்திர மாலையுடனே
சந்திரோ தையச்சுட்டி யுஞ்சலா டப்பணிகள்
      சதுரங்கம் விளையாடவே
சதகோடி சிலதியர்கள் புடைசூழ நவகோடி
      சத்திய ருடன்கூடியே
பந்தாட வேதண்ட மூதண்ட கூடங்கள்
      பந்துவிளை யாடியருளே
பங்கயச் சிவகாம சுந்தரியென் னம்மையே
பந்துவிளை யாடியருளே.       (2)
பிரதிபாடம் : [2] பந்தசைந்தாடவரு.

398. முத்திபெறு மூதண்ட கோளபா தளமளவு
      முதுசித்து விளையாடல்போல்
முட்டைதனில் வித்தினில் நிலத்தினிற் பைதனில்
      முளைத்தள விலாதபேதந்
தத்துவன வூர்வன தவிழ்ந்திடுவ நிற்பன
      தனித்தனி பறப்பனவுமே
சத்தொடு நடப்பன கிடப்பன விருப்பன
      தருக்கொடு முறுக்கிநெளியா
வித்தக மிதத்திடுவ சொற்றிடுவ கத்துவன
      வெத்தனை யிரைத்துமிரையா
விப்படி வகுத்தபல செப்புடலின் மாறாம
      லென்றுமே மாறிமாறி
பத்திபெறு பல்லுயிர்ப் பந்தொளித் தாடுமுமை
      பந்துவிளை யாடியருளே
பங்கயச் சிவகாம சுந்தரியென் னம்மையே
      பந்துவிளை யாடியருளே.       (3)

399. செங்கைச் சிவப்பினாற் பவளமணி நிறமெனத்
      திருமேனி யொளிதவழவே
செம்பவள நிறமெலாம் பச்சைநிற மாகவே
      திகழ்நீல வரிவிழியினா
லங்குநறு நீலநிற மாகித் திரும்பிமணி
      யதரஞ் சிவப்பேறவே
யதுகண்டு நகைபுரிய வெளிரிவண் டரளவடி
      வாகியே படியிலடிபட்
டுங்கிநின் றோடியிரு குங்குமக் கொங்கையரு
      கூடுபொன் னிறமூடியே
யொளிருமள கப்பந்தி யருகிலெறி யப்பந்து
      முறுகறுப் புந்தியிடவே
பங்கயக் கடவுள்வெண் முத்தினாற் றைத்தபொற்
      பந்துவிளை யாடியருளே
பங்கயச் சிவகாம சுந்தரியென் னம்மையே
      பந்துவிளை யாடியருளே.       (4)

400. பிடித்திடுங் கிள்ளையும் பிறழுமயி லன்னமும்
      பிள்ளைநா கணைவாய்ப்புளும்
பெரிதுநடை நொடிபா வனைக்கினித் தண்டனை
      பிறக்குமென வேபறக்க
அடித்திடுங் கந்துகங் கண்டு சக்கரவாக
      மஞ்சிப் பறந்தொளிக்க
வஞ்சன விழிக்குநிக ரானசஞ் சரிகமுட
      னணிதிகழ்ச் சகோரம்வெருவ
பொடித்தெழுங் குங்குமக் கொங்கைக்கு நிகரென்று
      புகல்கின்ற தென்னையென்று
பூந்தவள நகைசெய்து காந்தளங் கையினால்
      [1]போர்கட் டடிப்பதென்ன
படித்தலந் தன்னிலெதிர் நின்றபாங் கியருடன்
      பந்துவிளை யாடியருளே
பங்கயச் சிவகாம சுந்தரியென் னம்மையே
      பந்துவிளை யாடியருளே.       (5)
பிரதிபாடம் :- [1]போகட்டடிப்பதென்ன.

வேறு
401 கொங்கை வெற்பென வேய சைந்து
      குலுங்க முத்தெனவே
குங்கு மச்சிறு வேர்வை சிந்திட
      நொந்து சிற்றிடையே
தங்கு பொற்கொடி போனு டங்கிட
      வங்கண் மைக்கயலே
தங்கு நற்குழை மேல்ம றிந்திட
      வந்து பொற்பிடர்மேல்
கங்குல் மைக்குழ லேச ரிந்திட
      மங்கை யர்க்கரசே
கந்த ரக்குர லோசை யுமிகு
      விங்கி தத்துடனே
பங்க யத்திரு வேவி ளங்கிடு
      பந்த டித்தருளே
பங்க யச்சிவ காம சுந்தரி
      பந்த டித்தருளே.       (6)

402 கண்செ விக்குழை யாளர் கண்டொளிர்.
      கண்ப சப்புறவே
கண்க றுப்புற வாழ்கு டங்கை
      கடுஞ்சி வப்புறவே
தண்சு டர்ச்சிறு பாட கங்கள்
      சதங்கை யொத்திடவே
சண்ப கப்புது மாலை சிந்திட
      வண்டொ லித்திடவே
யெண்சொ லிச்சொலி மாறி யங்கை
      யிரண்டு மொத்திடவே
யெஞ்சு சிற்றிடை நூனு டங்க
      விருந்து பொற்புடனே
பண்சொ லிச்சிறு தாள மொத்திடு
      பந்த டித்தருளே
பங்க யச்சிவ காம சுந்தரி
      பந்த டித்தருளே.       (7)

403. பஞ்ச கிர்த்திய மேயு கந்தவர்
      பங்கி னிற்பவளே
பஞ்ச வர்க்கொரு தூது சென்றவர்
      தங்கை நற்பரையே
பஞ்ச வத்திர சோதி யந்தரி
      மந்தி ரப்பொருளே
பஞ்ச லட்சண காவி யம்புக
      லஞ்ச னக்குயிலே
பஞ்சர க்கிளி பாணி கொஞ்சிய
      வஞ்சி நற்கொடியே
பஞ்சு ரத்தெழு கீதம் விஞ்சுவி
      பஞ்சி வித்தகியே
பஞ்சி யொத்திடு பாத சிந்துரி
      பந்த டித்தருளே
பங்க யச்சிவ காம சுந்தரி
      பந்த டித்தருளே.       (8)

404. பந்த னைப்பிணி தீர வந்தவள்
      பந்த டித்தருளே
பைந்த மிழ்ப்புலி யூரு றைந்தவள்
      பந்த டித்தருளே
பந்தி னைத்தன பார மந்தரி
      பந்த டித்தருளே
பைந்த ளிர்த்திரு மேனி யம்பிகை
      பந்த டித்தருளே
பந்த மற்றப வானி யம்பிகை
      பந்த டித்தருளே
பந்த ரிட்டுல கேழு நின்றவள்
      பந்த டித்தருளே
[1]பைந்த ருக்கிணை யானசங்கரி
      பந்த டித்தருளே
பைந்தொடிச்சிவ காம சுந்தரி
      பந்த டித்தருளே.       (9)
பிரதிபாடம் : [1]பைந்தருக்கிளை.

405. பைம்பொன் முத்தணி சோதி தந்திடு
      பந்தடித்தருளே
பஞ்ச ரத்தின மேபு னைந்திடு
      பந்த டித்தருளே
பண்பு வைத்திம வான்வ ழங்கிடு
      பந்த டித்தருளே
பங்கி னிற்சுப மேபி றந்திடு
      பந்த டித்தருளே
பண்டு நற்பசு பாசம் வந்திடு
      பந்த டித்தருளே
பஞ்ச கிர்த்திய மேவி ளைந்திடு
      பந்த டித்தருளே
பஞ்ச சத்திநல் வாம தந்திரி
      பந்த டித்தருளே
பைந்தொ டிச்சிவ காம சுந்தரி
      பந்த டித்தருளே.       (10)
---------------------------------

பொன்னூசற்பருவம்

406. பொன்னூச லாடமுகி லளகாட விக்கருகு
      பிறைமகர குண்டலங்கள்
பெரியவள் ளைச்செவியி [1]லிருபருதி போலப்
      பிறங்குசிற் றூசலாட
மன்னூச லாடமுத் தாரவட மிருகொங்கை
      மதிமீதி லுடுவென்னவே
வட்டமிடு பச்சைவி லிரட்டைவரி வில்லென்ன
      வாகுவலை யங்களாட
வென்னூச லாடும்வினை தன்னூச லாடாம
      லிருபாத கமலத்திலு
மினியதம னியமிழைத் தணியுநூ புரமாட
      வெழின்மனோ வொடுகலாபம்
பொன்னூச லாட 2விருமின்னூச லாடவே
      பொன்னூச லாடியருளே
பொன்னம் பலச்செல்வி சிவகாம வல்லியே
      பொன்னூச லாடியருளே.       (1)
பிரதிபாடம் : [1]மதிபருதிபோல. 2இடை.

407. செறியுமல ரிடைவண்டு தேனுண்டு மீண்டும்
      திரும்பித்தி ரும்பிவரல்போற்
றீவினையு நல்வினையும் வந்துவந் தேபோய்த்
      திரும்பித்தி ரும்பிவரல்போ
லறிவுமைம் பொறிதோறும் விடாமல் விடையம்
      அடுத்தடுத் தோடிவரல்போ
லங்கோடு மிங்கோடும் வந்தோடு முயிர்கள்போ
      லலகிலிடை பிங்கலைகள்போ
லெறிசுடர் விளங்குவிண் மணிபலகை யாகவுல
      கிடையான வடமேருவு
மிரசதக் கிரியுநடு தூணாக வண்டமுக
      டேறுமுத் திரமாகவே
பொறியா வினுக்கரசு மாணிக்க வடமான
      பொன்னூச லாடியருளே
பொன்னம் பலச்செல்வி சிவகாம வல்லியே
      பொன்னூச லாடியருளே.       (2)

408. இரவுபகல் மதிபருதி பெரிதூச லாடவுயி
      ரெழுவகைப் பிறவிதோறு
மினியசிற் றூசலா டப்பஞ்ச பூதங்க
      ளெங்குநின் றூசலாட
நரகொடு 1சுவர்க்கத்தி லுறுபோக புவனத்தில்
      நாடுமுயி ரூசலாட
நல்வினைக டீவினைக டுன்பமுட னின்பங்கள்
      நாடோறு மூசலாட
விரவுமும் மூர்த்திகளு முத்தொழிலு மெக்காலும்
      வீடாம லூசலாட
வீடுதரு மணிமன்று நாடகங் கண்டவர்
      விமானங்க ளூசலாட
பொருவில்மண வீசன்முக் கணனூச லாடவே
      பொன்னூச லாடியருளே
பொன்னம் பலச்செல்வி சிவகாம வல்லியே
      பொன்னூச லாடியருளே.       (3)
பிரதிபாடம் : [1]துறக்கத்தி:

409. மின்சொரி பசும்பொன் விமானம் வருமாமகளிர்
      விறலிய ரெனக்குழுமியே
விளரியா ழிசைமூரல் மருவுசில் லரிமுழவு
      விஞ்சைமெல் லியரிரட்டக்
கொன்சொரியும் வேல்விழிப் பஞ்சினடி வஞ்சியிடை
      கொஞ்சுகிளி யஞ்சொன்மடவார்
குமரிமயி லெனவருகு கவரிபணி மாறவே
      கோடிசிவ சத்தியருடன்
தென்சொரி பசும்பாகு விளைகிளவி மங்களஞ்
      சிலதியர்கள் பலகூறவே
சிற்றால வட்டம்விசி றிப்பாரி சாதமலர்
      சிவிறிபன் னீர்தூவவே
பொன்சொரி பசும்பாவை புதியபொற் பூவையே
      பொன்னூச லாடியருளே
பொன்னம் பலச்செல்வி சிவகாம வல்லியே
      பொன்னூசலாடியருளே.       (4)

410. அன்னையே தாயேயென் மாதா பிதாவேயென்
      னாவியே பூவில்வாழு
மன்னமே யென்னமே யின்னமே கன்மத்தி
      லலையாம லெனைவைத்திடும்
மன்னுநீ பின்னுநீ முன்னுநீ யல்லாமல்
      மற்றுமொரு தெய்வமுளதோ
மற்றொப்பி லார்பஞ்ச கர்த்தாவை யும்பெற்ற
      மாதாவு நீதானெனிற்
கன்னியே குமரியே கன்னிகா ரத்திற்
      களித்தவிரு கொங்கைமயிலே
கன்னலே மின்னலே யின்னலே தீரவரு
      கருணா கரக்கவுரியே
பொன்னிசூழ் புலிசைவாழ் பொன்னிறப் பூவையே
      பொன்னூச லாடியருளே
பொன்னம் பலச்செல்வி சிவகாம வல்லியே
      பொன்னூச லாடியருளே.       (5)

வேறு
411. நாறு பூமலர் விடாது நந்தவன
      வாடை வீச வொருபால்
நாளி கேரவிள நீர்கள் சிந்தமுது
      வாளை பாய வொருபால்
வீறு சோலைதொறும் வீழுமென் கனியின்
      வேரி பாய வொருபால்
மேவு சேறுழுது நாறு கொண்டுநடும்
      வேலை வேலி வொருபா
லாறு போல்கழையி னீர்கள் பொங்கவதி
      னாலை பாயவொருபா
லால வாலநிறை சாலி பொன்சொரியு
      மாறு பாயவொருபா
லூறு கேணிபுடை சூழ்சிதம் பரிபொன்
      னூச லாடியருளே
யோதும் வேதசிவ காமசுந் தரிபொன்
      னூச லாடியருளே.       (6)

412. ஊழி யூழிதொறும் வாழ்சுமங் கலிபொன்
      னூச லாடியருளே
யூர்வி மானம்வரு வாம தந்திரிபொன்
      னூச லாடியருளே
யோவில் மோனசிவ யோகர்நெஞ் சகிபொன்
      னூச லாடியருளே
யூறுதே னொழுகு வாசமஞ் சரிபொன்
      னூச லாடியருளே
யோடி யோடியொழி யாதுவந் திடுபொன்
      னூச லாடியருளே
யோடை சூழ்புலிசை வாழுமம் பிகைபொன்
      னூச லாடியருளே
யோதொ ணாதபர லோகசங் கரிபொன்
      னூச லாடியருளே
யோதும் வேதசிவ காமசுந் தரிபொன்
      னூச லாடியருளே.       (7)

413. காசு லாவிய கலாப கஞ்சுளிபொன்
      னூச லாடியருளே
காரி மாரிகவு மாரி சுந்தரிபொன்
      னூசலாடியருளே
வாச மேவுபுலி யூரில்வந் தவள்பொன்
      னூச லாடியருளே
மாசி லாதமணி யானவங் கணைபொன்
      னூச லாடியருளே
பாச மானதுவி மோசனந் தருபொன்
      னூச லாடியருளே.
பாரி சாதமணம் வீககொந் தளிபொன்
      னூச லாடியருளே
ஊச லாடும்வினை தீரவந் தவள் பொன்
      னூச லாடியருளே
யோதும் வேதசிவ காமசுந் தரிபொன்
      னூச லாடியருளே.       (8)

414. ஆதி போதனிய னாகியஞ் சனிபொன்
      னூச லாடியருளே
[1]ஆர பார்வதி காரசங் கரிபொன்
      னூச லாடியருளே
நீதி நூனெறி வழாதசைந் திடுபொன்
      னூச லாடியருளே
நீல லோசனவி சாலவஞ் சினிபொன்
      னூச லாடியருளே
நாத கீதநவ கீத ரஞ்சகிபொன்
      னூச லாடியருளே
ஞான தேசகி பிநாகநெஞ் சகிபொன்
      னூச லாடியருளே
யோதை நாதன்மகி ழாயியம் பிகைபொன்
      னூச லாடியருளே
யோதும் வேதசிவ காமசுந் தரிபொன்
      னூச லாடியருளே.       (9)
பிரதிபாடம் : [1]ஆரவாரவடு கார சங்கரி,
-----------------------------
415. காது லாவுகுழை தோளிவர்ந் தொளிர்பொன்
      னூச லாடவிருள்சேர்
கார பாரகுழல் சூழும்வண் டுகள்பொன்
      னூச லாடமுலைமார்
மீது லாவுமது மாலைமஞ் சரிபொன்
      னூச லாடவிருபால்
வீசு சாமரைகள் மூசும் வெண்டிரையி
      னூச லாடவொளிசேர்
பாத தாமரையி னூபுரங் களொலி
      யூச லாடமிகவே
பாவியே னுனது பாத நம்பிமன
      மூச லாடமுதுநீ
ரோதை சேர்புலிசை வாழுமம் பிகைபொன்
      னூச லாடியருளே
யோதும் வேதசிவ காமசுந் தரிபொன்
      னூச லாடியருளே.       (10)
-------------------------------

நீராடற்பருவம்

416. அடியிணைகள் புடவிதிக ழண்டமுக டதுமகுட
      மட்டதிக் கும்புயங்க
ளலைகட லுடுத்ததுகில் [1] புடைபெருகு மிருகண்க
      ளரியசூ ரியசந்திரர்
வடகயிலை மகமேரு விருகொங்கை தாரகண
      மார்பணியு முத்துமாலை
வாடையொடு கோடையும் நாசியிடை பிங்கலைகள்
      வடிவெலாம் நின் வடிவமே
[2]யிடையிலணி முழுகிவிளை யாடுதட முண்டென்
      றெவர்க்குமே புகலவரிதா
மென்றாலு மண்டங்க ளெல்லா மிதக்கவே
      யினியநட னம்புரிந்து
புடைபெயரு மானந்த வெள்ளத்தி லாடுமுமை
      புதியநீ ராடியருளே
புனிதசிவ காமசுந் தரியமிர்த வாரியே
      புதியநீ ராடியருளே.       (1)
பிரதிபாடம் :- [1] புடைபெயரும், [2]இடையினீ,
--------------------------------
417. கண்கள்கய லென்னக் கணைக்கால் வராலெனக்
      கைவிரல்கள் களிறென்னவே
கமழ்முழந் தாளிணைக ளுக்குஞெண் டென்னவே
      கமலவடி கமடமெனவே
வண்களமும் வெண்சங்க மென்னவே வீசவே
      வளராசை வலைவீசவே
மைவிரவு சுருளோதி சைவலம தென்னவே
      வார்காது வள்ளையெனவே
பெண்கள்மன மருளவிரு கொங்கைமுக நகைமுகம்
      பெரியதா மரையென்னவே
பிரசவிதழ் குமுதமென வுரைசெய்தும் பிகளொடு
      பெடைவண்டு புடைசுழலவே
புண்கொள்நெடு வேலனைய கண்கள்களி கொள்ளவரு
      புதியநீ ராடியருளே
புனிதசிவ காமசுந் தரியமிர்த வாரியே
      புதியநீ ராடியருளே.       (2)

418. பாராட வேதண்ட வேராட மூதண்ட
      பகிரண்ட கூடமாடப்
பாதாள மாடவெகு வேதாள மாடமிகு
      பலசீவ கோடியாடத்
தாராட வாழ்வுதலை மாலையா டச்சூடு
      தவளவெண் பிறையாடவே
தமனியப் பொதுவினின் றாடுநின் கணவனார்
      தலைமீது நின்றாடுவாள்
சீராடி விளையாட வவளுடன் கூடித்
      திளைப்பவே துளையமாடிச்
சித்தங் களித்துமுத் தாடயள காடவித்
      திரும்பிக் குடைந்தாடியே
போராடு கங்கையுட னுறவாடல் போலவே
      புதியநீ ராடியருளே
புனிதசிவ காமசுந் தரியமிர்த வாரியே
      புதியநீ ராடியருளே.       (3)

419. பாகீ ரதன்றந்த கங்கைப்பிர வாகம்
      பரந்துவரு கின்றநாளிற்
பவளவார் சடையொடும் பிறைத்தோணி விட்டுநம்
      பரமன்விளை யாடலெனவே
யேகாந்த மாகியசு காந்தயோ கந்தனி
      லிருந்துசிவ பூசைபுரியு
மேகாம் பரந்தனிற் காமாட்சி யம்மையு
      மேகம்ப நதியாடல்போ
லாகாய கங்கைசர சுவாதியமுனை காளிந்தி
      யதலபா தாளகங்கை
யண்டபகி ரண்டங்க ளணுவென மிதந்திடு
      மனாதிநதி யதுவுமுனிபாற்
போகாத காவேரி யும்பெருகி வருகின்ற
      புதியநீ ராடியருளே
புனிதசிவ காமசுந் தரியமிர்த வாரியே
      புதியநீ ராடியருளே.       (4)

420. நறுமலர்ப் பூங்கா வனந்தனி லெழுந்தருளி
      நாண்மலர்க டளிர்கள்கொய்தும்
நாடகக் கணிகைநிகர் கோலக் கலாபமயில்
      நடனங்க ளினிதுகண்டுங்
குறுநடைக் குமரிமட வன்னமொடு கூடியே
      குலவிமெல் லெனநடந்துங்
குயில்களொடு கூவியுங் கிளிகளொடு பேசியுங்
      குயில்சிறுங் குறும்பிழைத்துஞ்
[1]சிறுபொதும் பரினின் றொடித்துவிளை யாடியுஞ்
      சேடிய ருடன்கூடியுஞ்
சிறுதும்பி யம்மனை கழங்குதெள் ளேணமொடு
      சிவிறிநீர் விளையாடியும்
பொறிவரிப் பாவை[2]பொற் குரவைவிளை யாடியும்
      புதியநீ ராடியருளே
புனிதசிவ காமசுந் தரியமுத வாரியே
      புதியநீ ராடியருளே.       (5)
பிரதிபாடம்: - [1]சிறுபோதும் பரினின் நொடித்து. [2] போற்குரவை.
-----------------------------------
வேறு
421. காலிற் கிண்கிணி சிலம்புக ளொலித்திடக்
      காஞ்சன மணிக்காஞ்சிக்
கலையி ரங்கிட வதரமும் வெளுப்புறக்
      கண்களுஞ் சிவப்பேறக்
கோலக் குங்குமக் கொங்கைகள் குலுங்கிடக்
      கொடியிடை துடியாடக்
குலவு நீரிடைத் தோன்றிடு தோழியர்
      குளித்தெதிர் விளையாட
மாலைக் கூந்தலில் சாந்தமு மேனியில்
      மான்மதங் கத்தூரி
வாடை யுங்குடை நீர்கடந் திடமுலை
      மாமணிக் குடநீந்தி
யாலிக் குஞ்சில சேடியர் சிலருட
      னாடுக புதுநீரே
யாட லஞ்சிவ காமசுந் தரியுமை
      யாடுக புதுநீரே.       (6)

422. நெருப்பிற் பூத்தபொற் பூந்தொடை மாணிக்க
      நீரிடை நிழற்றோன்ற
நீரிற் பூத்தபொற் பூவினைப் பாரென்று
      நீரிடை யவியாமல்
விருப்பிற் செஞ்சுடர்க் கொழுந்துவிட் டெரிகின்ற
      விளக்கினைப் பாரென்றும்
விழித்துக் கண்களைக் கெண்டைகள் 1மேய்கின்ற
      வியப்பினைப் பாரென்றும்
பருப்ப தக்குயந் தாமரை யரும்பெனப்
      பருமத்தைப் பாரென்றும்
பச்சை வெண்ணிறஞ் சிவப்பொடு பொன்னிறம்
      பத்தியாய்ப் புனல்கண்டே
யரும்பு நன்னகைச் சிலதியர் விருப்புற
      வாடுக புதுநீரே
யாட லஞ்சிவ காமசுந் தரியுமை
      யாடுக புதுநீரே.       (7)

423. பாங்கிற் றோன்றிடும் பாங்கியர் வடிவெலாம்
      படிமநற் கலந்தொன்றும்
படிவிளங் கிடவொரு வர்தா மிருவராய்ப்
      பார்த்ததி சயந்தோன்றக்
கோங்க ரும்பிடவே முல்லையு முகிழ்த்திடக்
      குமிழுடன் குலைக்காந்தட்
கூடிப் பூத்திட வண்டுக ளார்த்திடக்
      கோவையின் கனிதோன்ற
வாங்கி வஞ்சியுங் காஞ்சியு மலர்ந்திட
      வஞ்சியின் கொடியாட
மயிலு மன்னமும் கிள்ளையும் பூவையும்
      வந்திடப் புனலூடே
ஆங்கு நின்பர மானந்தத் துறையினி
      லாடுக புதுநீரே
யாட லஞ்சிவ காமசுந் தரியுமை
      யாடுக புது நீரே.       (8)

424. குளித்து மூழ்கியும் நீந்தியும் வாய்ந்திடுங்
      கூந்தலுஞ் சரிந்தோடக்
குங்கு மத்துட னரந்தமுங் கலந்திடக்
      [1]குளித்திடும் புனலூடே
ஒளித்து நீள்கரை யேறியு மோய்ந்துநின்
      றொருவர்மே லொருவர்தா
முறுக்கும் வண்புன லிறைத்துமென் சிவிறியி
      லுறுநறும் புனலூடே
தெளித்து மங்களம் பாடியு மாடியுஞ்
      சிலதியர் விளையாடத்
திரைக்கு மேழ்கட லொருசிறு துளியெனச்
      சிவானந்தப் பெருவெள்ள
மளிக்கு நின்பெருங் கருணைபோற் பெருகநீ
      யாடுக புதுநீரே
யாட லஞ்சிவ காமசுந் தரியுமை
      யாடுக புதுநீரே.       (9)
பிரதிபாடம்: [1]குடைத்திடும்.

425. வாழி வாழியென் றேத்திடக் கலைமகள்
      மங்களம் பலகூறி
வாழி வாழியென் றேத்திடத் திருமகள்
      மகிழ்பல் லாண்டுகள்கூறி
யூழி யூழியும் வாழியென் றேத்திட
      வுருத்திரை யெனுந்தேவி
யுகந்து வாழியென் றேத்தியே வாழ்த்திட
      வொளிர்திரோ தானத்திற்
தோழி மாருடன் வாழியென் றேத்திடச்
      சுகமனோன் மணிசத்தி
சூழ்ந்து மற்றுள சத்திகள் யாவருஞ்
      சோபனம் பலகூற
ஆழி சூழ்புவி வாழியென் றேத்தநீ
      யாடுக புதுநீரே
யாட லஞ்சிவ காமசுந் தரியுமை
      யாடுக புது நீரே.       (10)
தில்லைச் சிவகாமி அம்மைப் பிள்ளைத்தமிழ் முற்றிற்று.
---------------------

தில்லைச் சிவகாமி அம்மைப் பிள்ளைத்தமிழ்க் குறிப்புரை

305. தமிழ்த்தில்லை - தமிழ் வழங்கும் தில்லை. சடைக் கங்கை பெற்றான் கங்கை பெற்றான் - சடையில் கங்கையைத் தரித்த சிவனைப் போல் கங்கையைத் தனது சடைத்தலையிலும் பெற்ற விநாயகன்; கற்பக நற்பேர் பெற்றான் - கற்பக விநாயகர் என்ற பெயரைப் பெற்றவன். சிதம்பரத்திலுள்ள விநாயகருக்கு இப்பெயர். கம் + கை + பெற்றான் - கங்கைபெற்றான், மதநீரொழுகும் தும்பிக்கையைப் பெற்றவன்; கங்கை பெற்றான் - சிவன் தேவியான கங்கைக்கு மைந்தன், இங்கு ஒற்றுமை பற்றி பார்வதியின் மைந்தனானாலும் கங்கைக்கும் மைந்தனாகக் கூறப்பட்டது. கம் - நீர்; இது மதநீரைக் காட்டிற்று. முதலிலுள்ள கங்கை பெற்றான் என்பது கம் + கை பெற்றான் என்றாக்கி பிரம கபாலத்தைக் கையிலே பெற்றவன் என ஒற்றுமைபற்றி விநாயகருக்கே ஆக்கலுமாம். தமிழ் - இனிமையெனலுமாம்.

காப்புப் பருவம்
306. விராட்புருடனுக்குச் சிதம்பரம் இதய ஸ்தானமாகக் கூறப்படுகிறது. இமயமலை நெற்றியாகக் கூறப்படுகிறது. புண்டரீகம் - தாமரை; பொகுட்டு - தாமரைக்கொட்டை; விராட்புருடன் - உலகம்; பேர்பூத்த நான்குருவம் - மகேசன், ருத்திரன், மால், அயன்; நான்கு அருவம் - சிவம், சத்தி, நாதம், விந்து; பேர் உருவ அருவம் - சதாசிவம்; தூர்பூத்த - வேரினின்று தோன்றிய; துலங்கு - விளங்கும்; நவம் - ஒன்பது; இதன் விரிவை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் 69-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. பிரமாண்டமாகிய சரீரத்திலே இடைகலை நாடி இலங்கையிலும், பிங்கலை நாடி இமயமலையிலும் சுழுமுனை நாடி தில்லை வனத்திலும் ஓடுகின்றன. தில்லை - ஓர் வகை மரம். இச்சுழுமுனை நாடியில்தான் என்றும் இறைவன் ஆனந்தத் தாண்டவம் புரிகின்றார். நடங்காடு திருவாலங்காடாயிருக்கலாம். இது காஞ்சீபுரத்திற்கருகிலுள்ள நடராசர் ஸ்தலம். ஒரு பிரதியின்படி இது தில்லை நடராசரையே குறிக்கிறது. (1)

307. வெளி - ஆகாயம்; ஓரெழுத்து - ஓம் என்பது. இது வடமொழியில் ओ என ஓரெழுத்தாக நிற்கும்; கொடிக்கவி கடைசி பாட்டின் படி 'சி' என்பதுதான் தக்கதாகும். ஈரெழுத்து ‘சிவ' என்பது. அஞ்செழுத்து 'சிவாயநம' என்பது; எட்டெழுத்து - ஓம்-ஆம் (ஹாம்) அவ்வும் (ஹெளம்) - சிவாயநம' என்பது; ஐந்து - ஐந்துகலைகள்; ஆறு ஆறு என -36 தத்துவங்கள் என்ற; தருஞானம் இச்சை கிரியாசத்தி - ஞான சத்தி, இச்சாசத்தி கிரியாசத்தி எனக் கூட்டுக. பஞ்சசத்தி - ஆதிசத்தி, இச்சாசத்தி, பராசத்தி, கிரியாசத்தி, ஞானசத்தி; விந்து - இது பரவிந்து, அபரவிந்து என இருவகைப்படும். பரவிந்து என்பது உன்மனாகலாதி காரியப் பிரபஞ்சம்; ஒரு பிரதேசத்திலுண்டாய் ஒடுங்கின மகாமாயை யினது ஓரிடம். இந்தப் பரவிந்து சூக்குமை, அதிசூக்குமை, மிருதை, அமிருதை வியாபினியாகிய கலைகளை வியாபித்திருக்கும். இக்கலைகள் அபரவிந்துவைப் பிரேரிக்கும். அபரவிந்து நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்திய தீதை முதலிய கலைகளைப் பிரேரித்து நிற்கும். பராற்பவவிந்து - இதனைச் சமனை யென்பர். மான் - அசுத்த மாயை; தனு - உடல்; கரணம் - இந்திரியங்கள்; சகலம் - உடலுறுப்புக்களுடன் கூடியது. நிட்களம் - உருவின்மை; தனுவாவது:- சராயுசம், அண்டசம், சுவேதசம், உற்பிசம் ஆகிய நால்வகை யோனிகளிலும் பிறப்பதாய் தேவர் பதினொரு நூறாயிரமும், மானிடர் ஒன்பது நூறாயிரமும், தாவரம் பத்தொன்பது நூறாயிரமும், மிருகம் பத்து நூறாயிரமும், பறவை பத்து நூறாயிரமும், நீர்வாழ்வன பத்து நூறாயிரமும், ஊர்வன பதினைந்து நூறாயிரமும் ஆகிய எழுவகைத் தோற்றத்திலும் 84-லட்சயோனி பேதமாயிருக்கும். அத்தனு தூலமாகவும், சூக்குமமாகவும் காரணமாகவுமிருக்கும். கரணம்:- அத்தனுவுக்கேற்ற பல விதங்களாயிருக்கும். புவனம்:- இருநூற்றிருபத்து நான்கிலுமுள்ள ஊரும், நாடும், தேயமுமாய்ப் புண்ணிய கன்மமுடையவர்கட்குச் சுவர்க்காதி பதங்களுமாயிருக்கும். போகமாவது:- அவரவர் கன்மத்துக்கேதுவான உண்பன, தின்பன, குடிப்பன, நக்குவன, விழுங்குவன, உடுப்பன, முடிப்பன, பூண்பன, பூசுவன, பெண்டு, பிள்ளை, சுற்றம், பொன், மணி முதலிய பிரபஞ்சமாயிருக்கும். இப்பாட்டு தில்லை நடரா சரைப்பற்றியது. மித்தை - யோனிபேதம் அழியும் மாலைத்தாகலின் இச்சொல் யோனிகளைக் காட்டிற்று; மோகினி - சுத்தமாயை. (2)

308. இருவினைக் களிறு - உருவகம்; இருவினை - நல்வினை, தீவினை; நல்வினையும் பிறத்தற் கேதுவாகலின் இங்ஙனம் கூறினர். களிறு - யானை; இதனை “இருள்சே ரிருவினையும் சேரா விறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு'' என்றார் வள்ளுவர். எழு பிறப்பு இற - ஏழு பிறப்புக்களும் முடிவடையுமாறு; வான் - இங்கு மோட்சத்தைக் காட்டிற்று; இடையூறு - துன்பம்; பாற்றது - குணத்தையுடையது; பால் - பகுதி; நிருவிகற்ப + அனுபூதி, அகரம் தொகுத்தல், வேறுபாடில்லாத பிரமாணங்களைக் கொண்டறிந்த அனுபவ அறிவு எனப் பொருள். தேற்றது - தெளிவையுடையது; முக்கீற்றது - மூன்று கீற்றுகளையுடையது; மறைச்சிகை - உருவகம் ; சிகை - குடுமி; திருபுரைப் பெயர் - திரிபுரசுந்தரி என்ற பெயர்; தூளி - விபூதி; சீர்த்தது - சிறப்பையுடையது; கதிர்கால் -கிரணங்களை வெளிவிடும்; கடவுளர்க்கு அனுபூதி என்க. இம்மூன்று பாடல்களும் தில்லை நடராசரைப் பற்றியவையே. இங்ஙனமே கோயிற்புராணத்தின் முதல்மூன்று பாட்டுக்களில் காண்க. (3)

309. மிடறு - தொண்டை; மிடலுறு - வலிமை பொருந்திய; விரை - வாசனை; நறவு - தேன்; மறை முடிவின் புகல் உபநிட விஞ்சை - வேதமுடிவில் கூறப்படும் உபநிடதமாகிய வித்தை; உளது இலது என்பதும் ஒளி வெளி என்பதும் என்று பிரிக்க; வெளி - ஆகாயம்; மொழிவற - சொல்லொணாதபடி; பெடை நடை - அன்னப்பெடை போன்ற நடை; பெடை - இங்குப் பெண் அன்னத்தைக் காட்டிற்று; திரியம்பகர் - சிவன்; மங்கை - இங்கு உமாதேவியைக் காட்டிற்று; ஒருமொழி பிரணவ மந்திரம் - ஒப்பற்ற மொழியான ‘ஓம்' என்ற பிரணவ மந்திரம்; பிரணவ மந்திரம்:- இதுமூன்றக்ஷரமாய், மூன்று பதமாய், மூன்றர்த்தப் பிரகாசமாய் ஏகாக்ஷரமாய் ஏகபதமாய், ஏகார்த்தப்பிரகாசமாய் இருக்கும். இதில் முதலெழுத்தாகிய அகரம் ஒப்பற்ற முதல்வனாகிய பகவானைத் தெரிவிக்கும். மத்திய பதமான உகரம் அவதாரண வாசியாயிருக்கும். மூன்றாவதான மகரம் ஆத்மவஸ்வரூபத்தை விளக்கும். இம்மூன்று எழுத்துக்களும் மூன்று வேதங்களின் சாரமாகும். இதன் முதலெழுத்துக்குப் பொருள் ரக்ஷகம்; ஆனமையால் அத்தொழிலுக்குரிய தர்மம் சகல ஐச்வர்யத்தோடு கூடிய ஈச்வரனுக்கேயன்றி மற்றவருக்கில்லாமையால் அது பகவானைத் தெரிவிக்கும், மற்ற அக்ஷரங்கள் முன் சொன்னபடி உணர்த்தும். இது வைத்துதி, தாமசி, நிர்க்குணாவிர்த்தி என மூவிதப்படும். இது சகல தேவர்க்கும் பிறப்பிட மாயும் மந்திரங்களுக்கெல்லாம் மூலமாயுமிருக்கும். இது சமஷ்டி, வியஷ்டி என இருவிதப்படும். இதனை வேத ஆரம்பத்திலும் முடிவிலும் உச்சரிப்பர். இதனை உத்கீதையெனவும் சுத்தமாயையெனவும் கூறுவர். இதில் எல்லா உலகங்களும் எல்லாச் சுருதிகளும் தோன்றி ஒடுங்குமென்பர். இவ்வாறு இம்மந்திரத்தைப்பற்றிச் சூதசம்ஹிதையில் கூறியுளது. ஒருமுறை பிரமன் திரிலோகங்களை நீறாக்க அதினின்றும் அக்கினி, காற்று, சூரியன் தோன்றினர். மீண்டும் தபாக்கினியால் அவைகளையழிக்க மூன்று வேதங்கள் உண்டாயின. அவற்றையு மழிக்க அவற்றினின்றும் அகர உகர மகரங்கள் உண்டாயின. அம்மூன்று எழுத்துக்களையும் திரட்டி 'ஓம்' என வைத்தனன். வலம்புரிச் சங்கின் வடிவினது இது. அகரம் பிர்மாவையும் உகரம் விஷ்ணுவையும் மகரம் உருத்திரனையும் குறிக்குமென்பாரும் அகரம் விஷ்ணுவையும் உகரம் உருத்திரனையும் மகரம் பிரமாவையும் குறிக்குமென்பாருமாக சைவ வைணவ மதத்தவர் இப்பிரணவப் பொருளில் மாறுபடுவர். அகரம் பிரமத்தைக் குறித்தலால் அந்தப் பிரமத்தை விஷ்ணுவென்றும் சிவனென்றும் இஷ்டமான பெயர்களால் வழங்குவதன் குறிக்கோள் ஒன்றேயாம். (4)

310. தோள் நான்கு - தும்பிக்கையும் ஒரு கையாதலால் இதனை நீக்க மிகுதி நான்கு கரத்திற்கும் நான்கு தோள்களாயின. மாறுதலை - மாறினதலை - ஈண்டு யானை முகத்தைக் குறிக்கிறது. நால்வாய் - தொங்குகின்றவாய்; கொம்பு - தந்தம்; ஒரு தந்தத்தை ஒடித்து மேருமலையில் பாரதம் எழுதியதால் இங்ஙனம் கூறினர். உந்தி - நதி; ஒருத்தண்முகம் - ஒப்பற்ற மலர்ந்த முகம்; எஞ்ஞான்றும் - எப்போதும்; செம்பாதி - செம்மை நிறம் பொருந்திய பாதிபாகம்; செம்மை + பாதி - செம்பாதி; “ஈறுபோதல் இடையுகரம் இ ஆதல்'' என்ற சூத்திரம் காண்க; தானோர் பச்சைப் பாதியும் - தான் ஒப்பற்ற பசுமை நிறம் பொருந்திய பாதிபாகமும்; தான் என்பது உமாதேவியைக் காட்டியது. சிவன் செந்நிறமும், அவனிடம் பாதிப்பாகம் பெற்ற உமைக்குப் பச்சைநிறமுமுண்மையால் இங்ஙனம் கூறினர். திருமாலைப் "பச்சை மாமலைபோல் மேனி" என்பதனால் அவர் தங்கைக்கும் கொள்ளப்பட்டது. பச்சை நிறமுடைமையால் "கௌரி'' எனப்பட்டாள். தான் என்ற இடைச் சொல் தேற்றத்தைக் குறித்தது. பாதியுங்கண் என்பது பாதி யங்கண் என்றிருப்பின் நன்று. (5)

311. வெள்ளியும் பொன்னும் கொழித்து - வெண்பொன்னும் செம்பொன்னும் அலைகளால் கரைகளில் ஒதுக்கி, இதனால் தான் காவிரிக்குப் "பொன்னி'' என்ற பெயருண்டாயிற்று; அகில் அரைத்து - அகில் எனும் வாசனைப் பொருளைக் கற்களில் தாக்கி அரைப்பித்தும்; தரளமும் துகிரும் தெள்ளு கல்லோலக் காவிரி - முத்தும் பவளமும் கொழிக்கும் நீரலைகளையுடைய காவிரிநதி; முள்ளரை முளரிப் பொகுட்டு - முட்களை யிடையிலேயுடைய தாமரைக் கொட்டை; பொகுட்டு - ஈண்டு மலரைக் காட்டிற்று; முதல்வன் - பிரமன்; முடிதுளங்கிடத்தாய் எள்ளுறப் புடைக்கும் வள்ளி நாயகன் - தலைவணங்கும்படி இகழ்ச்சியடையத் தண்டிக்கும் முருகன்; முருகன் பிரமனைப் பிரணவ மந்திரத்திற்குப் பொருள் கேட்க அவன் பொருள் கூறாது திகைக்கவே குட்டிக் கந்தமாதனத்திற் சிறையிட்டனர். பின் சிவபிரான் கட்டளையால் சிறை நீக்கிச் சிவமூர்த்திக்குப் பிரணவத்தின் பொருளை உபதேசித்தார். சிவகாமசுந்தரித் தாயைக் காத்திட வள்ளிநாயகனைப் பணிகுவமே என முடிக்க. (6)

312. மரகதக்கிரி தோள்கள் - மரகதமலை போன்ற தோள்கள்; மகரமைக் கடல் மார்ப - சுறா மீன்கள் உலாவும் கரிய கடல் போன்றகன்ற மார்புடைய; மழைமுகிற் புயன்மேனி - மழை பெய்யும் மேகத்தைப்போன்ற புஜத்தையுடைய உடல்; புயம் - புயன், இறுதிப்போலி; வண்ணம் ஏய் தீர்த்தனை - நிறமமைந்த கடவுளை; மதகரி - கசேந்திரன் என்ற யானை; முதலை கக்கிடவாயை வகிர் - முதலை தனது பிடியைவிட வாயைப் பிளக்கும்; கதிர்த் தனியாழி யண்ணல் - கிரணங்களை வெளிவிடும் ஒப்பற்ற சக்கரத் தையுடைய திருமால்; உரகமெத்தை - ஆதிசேடனாகிய படுக்கை; உரகம் - பாம்பு; அறிதுயில் - யோகநித்திரை; உலகம் முற்றினும் வாரி உண்ணும் முற்சேட்டன் - (பிரளயகாலத்தில்) உலக முழுமையும் வாரி உண்ணும்படியான முதன்மையான அழகுள்ளவன்; ஒளிர்சிறைக் கணை - பிரகாசிக்கின்ற சிறகுகளையுடைய அம்புகள்; உலரவிட்டு - வாடுமாறு விட்டு; நூறும் - அழிக்கும்; நரைதிரைக் குடில்போக - மயிர் நரைத்தலும், தோல் சுருங்குதலும் தம்மிடத்தினின்று குடியெழும்பிச் செல்ல; நரர் - மனிதர்; சேர்த்தேமை - சேர்த்த எம்மை என்று பிரிக்க; நலிகலிக்கடல் - வருத்தும் வறுமைக்கடல்; நண்ணுற - அடைய; திருவுளத்தினிலேறு - மனத்திற்குத் தக்க; தெரிமதி - ஆராயும் புத்தி; மும்மை - உம்மை, இம்மை, மறுமை என்னும் முப்பிறப்பு; புலியூர் - சிதம்பரம்; வியாக்கிரபாதர் (புலிக்கால் உடையவர்) என்ற முனிவர் தரிசித்ததால் இப்பெயர் ஏற்பட்டது. தற்பரை - பார்வதி. (7)

313. நால்வகைத் தோற்றம் - கருப்பை, முட்டை, வித்து வேர் முதலியன, வேர்வை ஆகியவற்றினின்று தோன்றுவது. நான்கு பத்து எண்மர் - 48-ஆயிரம் முனிவர்; பால்வகை - விதிவகை; பதும பீடம் - தாமரையாசனம்; கரமலர்ப் பதஞ்சொரிந்து - கைகளாகிய மலரைப் பாதத்தில் சொரிந்து; கரமலர் - உருவகம்; மால்வகை - பெருமை தங்கிய வகை; வலையம் - கைக்கடகம்; மழலை வாய்க் கிள்ளை - குதலைச் சொற்களைப் பேசும் வாயையுடைய கிளி; மருங்கு ஒருகை - இடுப்பிலே யொருகை; சூல்வகை - கருப்ப வகை. ஒருகையில் பல்மலரும் என்ற மூலபாடம் ஒருகை யுற்பலமலர் என்றிருப்பின் பொருள் சிறக்கும். உற்பலம் - குவளை மலர். (8)

314. பல்லுயிர்த் தொகையாவும் வல்லிதிற் காட்டிய பிள்ளை - பலவுயிர்களையும் படைக்கும் பிரமன்; பல்லம் - அம்பு; வள்ளல் - சிவபெருமான்; மன்மதன் சிவபெருமானை எதிர்த்து எரிந்ததும் பின்பு மன்மதன் "பிரத்தியும்னன்'' என்ற பெயரினனாக கண்ணனுக்கு மகனாகப் பிறந்ததும் காண்க. கற்பு + ஆட்டி - கற்பை ஆண்டவள் (கற்புடையவள்); பலவயத்தன் - பலம் பொருந்திய வீரமுடையவன், (மன்மதன்); மல்லல் உற்று - வளப்பமடைந்து; ஒல்லை - விரைவுப் பொருளைக் காட்டுகிறது. கொப்பூழ்ப்பரன் - திருமால், இவரது உந்தியினின்று தாமரை தோன்றி அதில் பிரமனைச் சிருட்டித்து உலகப் படைப்பை நடத்துதலால் உலகேழு பூத்தொளிர் கொப்பூழ்' என்றார்; உரம் – மார்பு; எல்லி - சூரியன் போன்று பிரகாசமுடையவள்; தொலையாத செல்வி - வற்றாத செல்வத்தையுடைய இலக்குமி; மல் உடுக்கள் நேர மல்லிகைப் பூ - வளமான நட்சத்திரங்களைப்போன்ற மல்லிகைப்பூ; மைக்குழல் - கரிய கூந்தல்; முல்லையில் - முலையில், விரித்தல் விகாரம்; பொற்கவின் மிக்க அழகு; ஒல்லையிற் றணியாளை - பழமையினின்று நீங்காதவளை; வள்ளையிற் காட்டிய வள்ளினைப் பொருசேலை வெல்லு கண்சேப்பி - வள்ளைப் பூப்போன்று காட்டிய காதினிடம் போர் செய்கின்ற சேல்மீனை வென்ற கண்களையுடைய சிவப்பு நிறத்தையுடையவள்; செல்லலுற்றவர் - துன்பமடைந்தவர்; வாதை - துன்பம்; செல்வ முற்றிய வாழ்வு - சிவபெருமான்; ஆட்டிய - நடனமாடச் செய்த; சிவனும் பார்வதியும் நடனமாடும்போது சூழ்ச்சியால் சிவன் வென்றார். சிவன் காதினின்று வீழ்ந்த குண்டலத்தை யாருமறியாமல் எடுத்துப் போட்டுக் கொண்டதும் அப்போது தான். (9)

315. வேர்ச்சுருதி - முதற் காரணமான வேதம்; சாகித்தியம் - புலமை; சத்தம் - இசை; செந்தளிர்க்கை - சிவந்த தளிர்போன்ற கைகள்; பத்தியாய் - வரிசையாய்; பகிரண்டம் - அண்டத்தின் வெளி; பாதம் - கால்கள்; மாதிரம் - திக்குகள்; படிகடல் - பூமியைச்சூழ்ந்த கடல்; நிதம்பதடம் - அல்குல்; மேகம் உத்தரிகமாய் என மாறுக; உத்தரிகம் - மேலங்கி; செம்பொன்மலை, வெள்ளிமலை - மேருமலையும், இமயமலையும்; உபையம் - இரண்டு; உலவாது - கெடுதி நேராது. (10)

316. சத்தமாதா - அபிராமி, வராகி, இந்திராணி முதலியோர்கள்; நவசத்தி - வாமை, ஜேஷ்டை, ரௌத்ரீ, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி, மனோன்மணி ஆகியோர். யாமத்தர்:- யக்கியன் மக்கள்; இவர் பன்னிருவர்; சுவாயம்பு மநுவந்தரத்திலுள்ள தேவதைகள். சிவகங்கை - சிவனிடமுள்ள கங்கை; பிரமசாமுண்டி:- கடவுளாகிய சாமுண்டி தேவி, சத்தியினம்சமாகும்; சண்டமுண்டர்களை உமை காளியினால் கொல்வித்துச் சாமுண்டையெனப் பெயரிட்டார். இருவருக்கொருவரையும் ஒருவருக்கிருவரையும் என்பது அர்த்தநாரீஸ்வரரைக் குறிக்கிறது போலும். மூதண்டம் - பழைய அண்டம்; கோளம் - உருண்டை வடிவு; அண்டம் - முட்டை வடிவு போன்றது; அப்புறம் - சுவர்க்கம்; இப்புறம் - பூமி; பத்திரகாளி:- மகிடாசுரன் செய்த துன்பத்தைத் தேவர் சிவமூர்த்தியிடம் கூறவும் அவருக்குக் கோபமுண்டாக அக்கோபமே ஓர் பெண்ணினுருவாய்த் திரண்டது; அதுவே காளியுருவென்பர்; இவள் இரத்தபீசன் எனு மசுரனை ஒரு துளியிரத்தமும் கீழ் விழாது ஆகாயம் மேல் வாயாகவும் பூமி அடிவாயாகவும் அங்காந்து உண்டு மாய்த்தனள். (11)

----------------------------------------
செங்கீரைப்பருவம்
317. ஒருவாறும் - ஒரு விதத்திலும்; பிரமம் - ஏகமாய் சச்சிதானந்தமாய் உலகமுழுதும் தோன்றி யொடுங்குதற் கிடமாயுள்ள பொருளாகிய கடவுள்; சரம் + அசரம் - அசையும் பொருள் அசையாப் பொருள்; மல்காந்து - முதுகு கீழாய்க் கிடக்க; மன்று - அம்பலம்; இருவினை - புண்ணிய, பாபம்; ஐந்து முத்தியுலகம் - பிரமன், விஷ்ணு, உருத்ரன், மகேசன், ஈசன் ஆகியவர்களின் உலகம்; ஞான தவிசு - ஞானமாகிய ஆசனம்; நாதம் - இது சிவவடிவு; தாள் - பாதம். (1)

318. ஆதாரசத்தி:- இவள் உலகத்திற் காதாரமான சத்தி. கூர்ம பீடம், வெள்ளை நிறம், சிரசில் அங்குராகாரம், வரதம், அங்குசம், பாசம், அபயம் உடையவளாய்ப் பூமியைத் தாங்கி நிற்பவள்; சிவன் சத்தியா லதிட்டிக்கப்பட்ட குண்டலனீ சத்தி; முப்பத்திரண்டு இராகத்தில் பாடி அறுபத்துநாலு திருவிளையாடல்களை ஆடிக்காட்ட என்று நிரனிரையாகக் கொள்க; இராகம் 32:- பைரவி, தேவக்கிரியை, குறிஞ்சி, பூபாளம் முதலியன; ஆகுளி - சிறுபறை; சூதானம் - சேமம்; ஆதார சக்திகள் 51- பேராக கூறியிருத்தல் காண்க. குண்டலிசத்தி: ஒரு சத்தி; அது சுழுமுனை நாடியினூடே அநேகங் காந்திகளுடனே பாம்பின் வடிவாயிருந்து உடலை வளைத்து மூலாதாரத்தின் மேலே படத்தை வைத்துக்கொண்டு யோகநித்திரை செய்வது; சுழிமுனை: இஃது இரண்டு பாதங்களின் அங்குட்ட விரல்கள் முதற்கொண்டு தேக மத்தியமான கந்தஸ்தானம் வரை இருகிளையாகவும் அதற்குமேல் பிரமரந்திரம் வரையில் ஒரு கிளையாகவும் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞையென்னு மாறாதார சக்கரங்களையும் அதற்குமேல் துவாதசாந்தம் வரையில் நான்கு சக்கரங்களையும் வியாபித்துப் பிரமரந்திரம் வரையில் சகள ரூபையாகவும் அப்பால் துவாதசாந்தம் வரையில் நிட்கள ரூபையாகவுமிருப்பது. இடைபிங்கலை - இடமூக்கால் வருஞ் சுவாசமும், வலமூக்கால் வருஞ் சுவாசமும் முறையே இடைகலையென்றும், பிங்கலையென்றும் கூறுவர். சந்திரகலை, சூரியகலை எனப்படும். இவைகளைச் சாத்திகளாகக் கூறப்பட்டது காண்க. பாத அரவிந்த மலர் - கால்களாகிய தாமரை மலர் \; பஞ்சகிர்த்திய சத்தி - ஐந்து தொழில்களைச் செய்யும் சத்தியர்; சிருஷ்டி, திதி, சங்காரம் மறைத்தல், அனுக்கிரகம் என்பன. சீத அம்புயத் தவசு - குளிர்ந்த தாமரையாசனம்; பரசு - துதிக்கும்; திரிபுரசத்தி:- ஓர்சத்தி. நாற்பத்து முக்கோண சத்தி - நாற்பத்து மூன்று கோணங்களில் தக்க எழுத்துக்களை நிரப்பிப் பூசிக்கும் சத்திகள். (2)

319. அரவம் மாணிக்க மணியொளிரு படம் விரித்தாட என மாறுக. பத்து - பாதம்; அக்கு அறுகு - எலும்பும், அறுகம்புல்லும்; பிறையும், எலும்பும், அறுகும், கொக்கிறகும் ஆட எனப் பொருள் கொள்க. இருபக்கம் நடு முக்கண் ஆட - இரண்டு பக்கங்களிலும் நடுவிலுள்ள மூன்று கண்கள் ஆட; துவள வார்குழை - மெல்லியதாயிருக்கின்ற நீண்ட குண்டலங்கள்; சுடர் - அக்கினி; துடி - உடுக்கை; அஞ்சல் - பயப்படாதே, இது அபயஹஸ்தம் எனப்படும். தவளவாய் சில்லரிக் கிண்கிணி - வெண்மையுடையவான சிறிய பரல்களையுடைய சிலம்பு; குஞ்சிதத்தாள் - வளைந்த கால்கள்; தரள தாமரை - வெண்தாமரை, உவமவாகுபெயர்; நன்மை + தாள் - நற்றாள்; முயலகன்:- தாருகாவனத்து இருடிகள் சிவமூர்த்தியைக் கொல்ல ஆபிசார யாகஞ்செய்ய அதில் எழுந்த பூதனிவன். இவன் சிவமூர்த்தியிடம் தன் உக்கிர வுருவுடன் வரச் சிவமூர்த்தி இவனை முதுகில் ஊன்றி மிதித்து இடுப்பை யொடித்தனர். ஒன்றுதரு - பொருந்தலைத் தருகின்ற;- திவளவான் முறுவல் - மெலிந்த புன்சிரிப்பு. (3)

320. பொற்பாளை - அழகிய தாழைமடல்; பொற்சுட்டி - பொன்னால் செய்த நெற்றிச் சுட்டி; பருதிபிறை - சூரியபிரவை, சந்திர பிரவையென்னு மாபரணம்; பத்தியாய் - வரிசையாய்; கொப்பு - காதணியினொன்று; மரகதப் படலமணி மகர மகரிகை - பச்சைக் கல்லால் மிகுத்துச் செய்தணிந்த சுறாமீன் போன்ற வடிவமுள்ள குறங்கு செறியெனு மாபரணம்; மாணிக்கம் எல்வளை - மாணிக்கத்தால் செய்த ஒளிவாய்ந்த வளையல். முதன் அரி - முதன்மையான வளையல்; பொற்சரி - பொன்னாலாகிய வளையல்; அரதன மதாணி - இரத்தினத்தால் செய்த பதக்கம்; உதரபந்தனம் - அரைப்பட்டிகை; மேகலை - மாதர் இடைக்கட்டு; ஆடகப் பாடகம் - ஆடகப் பொன்னினால் செய்த பாடகம் என்ற காலணி; அலம்பும் - ஒலிக்கும். (4)

321. - மறிதிரைப் புணரி - மடங்கும் அலைகளையுடைய கடல்; புணருவாய் - சேர்ந்தபோது; வாய் - ஏழாம் வேற்றுமை யுருபு; மால் இருஞ்சூல் கொண்டு - மிகப் பெரிய கர்ப்பங்கொண்டு; மின் - மின்னல் மழை - மேகம்; உருமிடும் - இடிக்கும்; குடுமிநெடு மால்வரை - சிகரத்தையுடைய நீண்ட மயக்கந்தரும் மலை; குறுவிழிப் புகர் முகக்களி நல்லி யானைக்குலம் - சிறிய கண்களும் கபிலநிற முகமும் மதமும் உடைய யானைக்கூட்டங்கள்; குவடு உகுல்உற - சிகரத்தினின்று பனிக் கட்டிகள் சிந்துதல் அடைய; உகுதல் என்பதன் தொகுத்தல் உகுல்; வெண்கோடு அலைத்தோட - தந்தங்களை அசைத்துக்கொண்டு ஓட; முட்காடகத்தடைகின்ற கோளரிக் குருளை - முட்களையுடைய காட்டினிடம் அடைகின்ற கொல்லுதல் வல்ல சிங்கக் குட்டிகள்; உள்காந்து - மனதில் கோப மிகுந்து; எறுழ்வலிக் களிநிமிர்த்து - மிக்க வலியினால் சந்தோஷம் மிகுந்து; எறுழ்வலி - ஒருபொருட்பன்மொழி; உளை சிலிர்த்து - பிடரிமயிர்களைச் சிலிர்த்து; அழல் சிந்த எரிகண்டு இறந்து நெருப்புப்பொறி சிந்தின தீயைக்கண்டு கடந்து; நெடுவால் - நீண்ட வால்; புடைத்து - அடித்து; முழை வாய் - குகை போன்ற வாய்; இவர் கல் பதுக்கை நெறி - சென்று கல் பாறைகளையடைந்து நிற்கும்; நெறி குறிஞ்சி - வினைத்தொகை; அத்தெறிவுஉறு குறிஞ்சி வருவேடன் - அத்தகைய நிலையையுடைய குறிஞ்சி நிலத்தில் வள்ளிக்காக வந்த வேடனான முருகன்; குறிஞ்சிவரு கிழவன் என்பதற்குக் குறிஞ்சி நிலத்திற்கென வந்த உரிமையுடையவன் என்க; கிழவனைப்பெறு குழவியென்பதில் ஓர் நயம் தோன்றுதல் காண்க. மேகந்தங்கும் உயர்ந்த சிகரங்களையுடைய மலைச்சாரலை அடையும் யானைக் கூட்டங்கள் சிகரங்களினின்று பனிக்கட்டிகள் சிந்த அதனால் பயந்து தந்தங்களை யசை த்துக்கொண்டு ஓடவும் காட்டிலுள்ள யானைகளைக் கண்ட சிங்கங்கள் தனது மனதில் கோபமிகுந்து மிக்க வலியால் மகிழ்ந்து பிடரிமயிரைச் சிலிர்த்து நெருப்புச் சிந்தும் காட்டுத் தீயைக் கண்டு கடந்து வாலை முறுக்கி உடல்மீது அடித்துக்கொண்டு குகை போன்ற வாயைத் திறந்து கர்ச்சித்துச் சென்று கல்நிலத்தை யடைந்து நிற்க இவைகளின் இரண்டு கூட்டத்தையு மழிக்கும் குறிஞ்சி நிலத்தில் வரு வேடன் என்க. குறிஞ்சி நிலம் - மலையும் மலையைச் சார்ந்த இடமுமாகும்; மலையினின்று ஓடும் யானைகளைப் பார்த்துச் சிங்கங்கள் மலையைச் சார்ந்த காட்டினின்று ஓடி வால்முறுக்கிக் கோபங்கொண்டு கொல்லுவதற்கு அடைந்து நிற்க அதுபோது எழுந்த காட்டுத் தீயைக்கண்டு ஓடின. எனவே குறிஞ்சி நிலத்தில் யானையும், சிங்கங்களும் வாழ்வது பெறப்பட்டது. (5)

322. அல்லி மலர்த் தவிசு - அகவிதழோடு கூடிய தாமரை மலராசனம்; ஏறியிருந்து உலகு அன்று ஈகின்றோன் - அமர்ந்து உலகைப் படைப்பவன்; அன்று - அசைநிலை; மல்லரவு - வளம் பொருந்திய ஆதி சேடன்; புரந்து உள விண்தாய் நின்றோன் - பாதுகாத்து உள்ள ஆகாய உலகத்தைத் தாவி நின்று ஓரடியாய் அளந்தவன்; வல்லை யழித்து - சீக்கிரத்தில் அழித்து; மஞ்சுள் நஞ்சோன் - அழகிய விஷத்தையுண்ட கரிய கண்டத்தையுடையவன். வல்லியிடைச் சசிமாது - கொடி போன்ற இடையையுடைய இந்திராணி; தோயுங் கோ - சேரும் அரசனாகிய இந்திரன்; மூவர் - ஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர். அன்பியல் எஞ்சா நெஞ்சோர் - அன்பில் குறையாத மன முடையவர்; மெய்ப்புலி - வியாக்கிரபாத முனிவர்; பதஞ்சலி - அத்திரியின் தேவியாகிய அநசூயையிடம் பிறந்தவர். இவர் ஆதிசேடன் அவதாரம். இவர் சிதம்பரமடைந்து வியாக்கிரபாதருடன் இருந்து சிவமூர்த்தியின் நடன தரிசனங் கண்டு களித்தவர்; பாணினி சூத்திரத்திற்குப் பாஷ்யமும் மற்றும் பலவும் இயற்றினார். சில்லரி வச்சிறு பாதம் - சிறிய பால்களையுடைய சிலம்பு தரித்த பாதம். "வணங்கு + உமை" என்க. (6)

323. அவ்வியம் - பொறாமை; லோக வசந்தரை - லோகமாகிய பூமி; அல்பாவம் சோர - இருளாகிய பாவம் நீங்க; சுக + அனுபவங்கள் - சுகானுபவங்கள்; விள்ளரு முத்தி - சொல்லுதற்கரிய மோட்சம்; வெம் பாசம் பாற - கொடிய ஆசை நீங்க; தவ்வில் மத்தளம் - சிதைவில்லாத மத்தளம்; சல்லரி - பம்பை மேளம்; நடம்புரி தண்தாள் - நடனம் செய்கின்ற அழகிய பாதங்கள்; பங்கினை - பங்கைப் பெற்றவளே. "பூமியில் குற்றமுள்ள உயிர்கள் அங்குமிங்கும் ஓடும் உடலில் அடைந்து ஊஞ்சல் போன்று நடமாடி அதனாலுண்டான பாவம் நீங்க" என முதலடிக்குப் பொருள் கொள்க. பாவஞ் சோர, போகம் போக, பாசம் பாற நடனம் புரிகின்ற சபாபதி பங்கினை என்று இயைக்க. (7)

324. கூறுருவைத்தெரி யாடிகரம் - பாதி பாகமான வடிவுள்ள சிவபெருமானது கைகள்; கோதை - மாலை; கோலமதிக்கதிர் வாயிலெடுத்தெழு கோளரவு - அழகிய சந்திரனையும், சூரியனையும் வாயினால் விழுங்கி எழுகின்ற கிரகங்களாகிய இராகு, கேதுக்களான பாம்புகளை; குலைவாய் - ஈரற்குலையினிடம்; பீறியெடுத்து - கிழித்தெடுத்து; நிலாவு மெறித்திட - ஒளிவீச; சீர்பேறு படைத்த - சீர்பெறுதலைப் படைத்த, பேறு - முதனிலை திரிந்த தொழிற்பெயர்; கலாப மயிற்பரி - தோகை யையுடைய மயில்வாகனம்; விறற்சேய் - வலிமை வாய்ந்த முருகன்; வீறு துதிக்கையோ ரானைமுகத்தன் - பெருமை தங்கிய துதிக்கையுள்ள ஒப்பற்ற ஆனைமுகத்தனான கயமுகாசுரன்; மாறு துதிக்கை கொடு - மாறின தும்பிக்கை கொண்டு; சிவபெருமான் தனது கைகளில் மாலையை யெடுத்ததுபோல மயிலும் கோளரவைக் குலைவாய் எடுத்துப் பீறியது என்க. மாறு துதிக்கையானது:- வீரபத்திரர் தக்கன் யாகத்தை யழிக்கும்போது விநாயகர் வெட்டுண்டார். அவர் தலையைப் பூதம் விழுங்கி விட்டது. பின் யானைத் தலையைப் பொருத்தி எழுப்பினர்; அடும்வேழம் - கொல்லும் விநாயகர்; ஆறுசிரத்து ஐம்முகத்தன் - ஆறு தலைகளையுடைய முருகனும் ஐந்து தலைகளின் முகத்தையுடைய விநாயகனும்; ஏத்து + உமை - துதிக்கும் உமாதேவியே. (8)

325. மாதவர் - சிறந்த தவத்தையுடையவர்; அன்பு கரைந்து அவர் சிந்திய எனப் பிரிக்க; வாய்கமர் இன்பம் விடேலென - வாய் திறத்தலாலுண்டாகும் இன்பத்தை விடக்கூடாது என்று; கோதறு மஞ்சரி சூடினர் - குற்றமற்ற பூமாலையைச் சூடின சிவபெருமான்; கோமள மஞ்சனம் ஆடு - அழகிய நீரில் குளிக்கும்; மேதகு சங்கம் - மேன்மை பொருந்திய தமிழ்ச் சங்கங்கள்; ஊனமில் - குறையற்ற; அணங்கினர் - தெய்வப் பெண்கள்; உங்கொடு - உங்காரஞ் செய்தலைக் கொண்டு, (9)

326. பாதளம் உந்து இளவாளையெழுந்து - பாதளத்தினின்று எழும்பிப்பாயும் இளைய வாளை மீன் எழுந்து; பாயுந் தாது அவிழ் தாமரை - பரவிய மகரந்தங்கள் தெரிய மலர்ந்த தாமரை தாமரையோடை - தாமரைகளையுடைய நீரோடை; விழுஆறு - சிறந்த ஆறு; தடாகம் - குளம்; தண்காவிரி - குளிர்ந்த நீருள்ள காவேரி நதி வண்கா விரி மலர் தருமணி முத்தாறு - வளப்பம் பொருந்திய சோலைகளில் விரிந்த மலர்கள் சேர்ந்த மணிமுத்தா நதி; மாதவி - குருக்கத்திச் செடி; போது அணை மாதளை - பூக்கள் சேர்ந்த மாதுளைமரம்; தாதகி - அத்திமரம்; பூகம் - பாக்குமரம்; பொன்சொரி செஞ்சாலி - பொன்னைத் தன் விளைவினால் சொரிந்து தரும் சம்பா நெற்பயிர்கள்; தென்புலியூர் - அழகிய சிதம்பரம்; வாளை மீன்கள் எழுவதால் பலாப்பழம், வாழைப்பழம், மாம்பழம் ஆகியன விழ அதனால் மலர்ந்த தாமரைகளையுடைய ஓடைகளும், சிறந்த ஆறுகளும், குளங்களும் காவேரி நதியும், மணிமுத்தா நதியும், சண்பக மரங்களும், குருக்கத்தியும், பாக்கு மரங்களும், கரும்புகளும், சாலிப்பயிரும் நிறைந்த புலியூர் என்க. பாகு விளைந்திடு கரும்புகள் எனமாறுக. வெல்லப்பாகினை உண்டாக்குகின்ற கரும்புகள் என்று பொருள். (10)
------------------------------------
தாலப்பருவம்
- 327. ஒரு நால் அரசும் பசும் பொற்கால் - ஒப்பற்ற நான்குவகை அரசும் பசிய அழகிய கம்பங்களாகவும், ஒரு வாய் - ஓங்குதலுடையதாய்; மாணிக்க மணித் தொட்டில் - மாணிக்கமிழைத்த அழகிய தொட்டில்; சிற்றம்பலம் தவிசாம் - சிற்றம்பலமாகிய ஆசனத்தில்; சிற்றம்பலம் - ஐந்து சபைகளிலொன்று, சித்சபையெனப்படுவது; பரிபூரணம் - எங்கும் நிறைதல்; உகந்து - விரும்பி; துயில் கூர - தூக்கம் மிக (தூங்க); திருநா - பிரமனதுநா; பிரமனைக் குறிக்கவே "திரு'' எனப்பட்டது. திருத்தார் அணியும் உருத்திரையும் - பகைவர்களை வென்று அவர்களது குடல்களை மாலையாகத் தரிக்கும் உமையினம்சமான உருத்திராணியும்; திரோதானம் - மறைதல்; திரோதாசத்தி: திரோதான என்பதிலுள்ள னகரம் மறைந்துளது; சிவபெருமானுடைய பஞ்ச சக்திகளுள் ஆன்மாக்களுக்கு உலகானுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் ஒரு சக்தி. மனோன்மணி:- சத்தியரில் ஒருத்தி. பராசத்தி:- சிவத்தோடு அபின்னையாயிருப்பர். (1)

328. உந்திக்கொடி - தொப்புள் கொடி; வாள் ஒசியாமே - வாளால் அரியாமல்; பிறந்தவுடன் தொப்புள் கொடியை மருத்துவர் வாளால் அரிவர். உருவத்தவசு - வடிவமாகிய ஆசனம்; உகள் - குதி; வரிவிற்புருவம் - வரிந்து கட்டப்பட்ட வில் போன்ற புருவம்; வள்ளை - வள்ளைக்கொடி போன்ற காதுகள்; அதரம் - உதடு; மருளல் - மருண்டு பார்த்தல்; விரல் ஊறு அமுதம் - விரலைச் சுவைத்தலால் சுரக்கின்ற அமுதம்; நாள்மதி - நாண்மதி; மதி - சந்திரன்; நாள்தோறும் - நாடோறும்; தொப்புள் கொடி:- குழந்தை பிறக்கும் போது தாயின் கருப்பைக்கும் குழந்தையின் தொப்புளுக்கும் இடையில் ஒரு கொடியுண்டு. அதில் இரத்த ஓட்டம் உண்டு. பிறந்த 20-நிமிடத்திற்குப் பிறகு இரத்த ஓட்டம் இராது. அப்போது அரிவர். (2)

329. கல்லோலங்கள் தாலாட்ட - கடலலைகள் தாலாட்ட; கவிகைப் படத்து மாணிக்கக் கல்லாயிரங்கள் விளக்கெரிப்ப - கவிந்துள்ள படங்களிலுள்ள மாணிக்கக் கற்கள் ஆயிரம் விளக்கைப் போன்று பிரகாசிக்க; கடல் கட்செவிப்பூந்தொட்டிலில் - கடலிலுள்ள பாம்பாகிய (ஆதிசேடன்) அழகிய தொட்டிலில்; கட்செவி - பாம்பு, கண்களையே காதாகவுடையதெனும் காரணப்பெயர்; எழில் ஆலிலைப் பூந்தொட்டில் - அழகிய ஆலிலையாகிய அழகிய தொட்டில்; ஆண்பிள்ளை - ஈண்டு திரு மாலைக்குறித்தது; திருமாலின் தங்கையானதால் இளைய பச்சைப் பெண்பிள்ளாய் என்றார். தொன்மை + ஆயிரம் - தொல்லாயிரம்; துலையா - கழியாத, சூரைத் துலைக்கும் - சூரபத்மனெனும் அசுரனையழிக்கும்; தொலைக்கும் - துலைக்கும், போலி; சரவணப் பூந்தொட்டிற்குழவி - சரவணப் பொய்கையில் தாமரைப்பூவாகிய தொட்டிலில் வளர்ந்த ஆறுமுகன்; சல்லாபத்தின் தாலாட்டும் - பேசிக்கொண்டே தாலாட்டும்; கடலில் ஆதிசேடனாகிய அழகிய தொட்டிலிலும், ஆலிலைத்தொட்டிலிலும் தூங்கும் திருமாலிற்கு இளைய பெண்பிள்ளையே! பழைய ஆயிரத்தெட்டண்டங்களையும் அழியாது 108-யுகம் அரசாளவரம் பெற்ற சூரபத்மனையழிக்கும் சரவணப்பொய்கையிற் தாமரைத் தொட்டிலில் ஆறுமுகனாகிய குழந்தையைப் பெற்றுப் பாடிக்கொண்டே தாலாட்டுபவளே! தாலேலோ என்று பொருள் கொள்க. (3)

330. எள்ளில் விளைந்த நறுந்தயிலம் - எள்ளெண்ணெய், இப்போது நல்லெண்ணெய் என வழங்குகின்றனர். உச்சிக்கு - தலைக்கு; இளம்பச்சறுகு - இளைய பச்சை அறுகம்புல்; அரிசனம் - மஞ்சள்; திமிர்ந்து - பூசி அலர் பூந்துகிலால் நீர் துவட்டி - மலர்போன்ற மென்மையான துணியால் உடலைத் துடைத்து; மூக்கு உருவி என்று பிரிக்க; நிலக்காப்பு - பூமியின் மண்ணைக் குழைத்திடும் பொட்டு; அஞ்சனம் - மை; வெண் பொடி - வெண்மையான திருநீறு; இது மூன்றாக இடுவராதலால் ஒரு தண்மதியின் இளம் பிறை மூன்று உதித்ததென என்றார். ஒருதண்மதி ஒருமுகத்திற்கும் இளம்பிறை மூன்று விபூதி மூன்று கீற்றுக்களாக இடுவதற்கும் உவமை; மணித்தொட்டிலில் தள்ளி ஆட்டும் என இயைக்க. (4)

331. உவட்டாத - வெறுக்காத; வெளியே - ஆகாயமே. (5)

332. கொற்றாய் - வெற்றியையுடையவளே; மறையோதுற்றாய் - வேதங்களை ஓதினவளே; கொப்பாய் - கொப்பு எனும் காதணியையுடையவளே; பொற்பாய் - அழகையுடையவளே; விற்றாய் விளைவாய் வைத்தாய் - ஒளியையுடையவளாய், பல சம்பவங்களை நிகழ்த்துபவளாய்ச் செய்தவளே; வெற்பாய் வெளியாய் நிற்பாய் - மலையாய், ஆகாயமாய், நிற்பவளே; முன் தேவரையே பெற்றாய் - முதல் கடவுளான விநாயகரைப் பெற்றவளே; நல் + தார் + புலியூர் உற்றாய் - நல்ல மாலைகளை யணிந்து சிதம்பரத்திலடைந்தவளே. (6)

333. நச்சார் உளமே - உனை விரும்பாதவர் மனமே; கச்சாய் - கைத்தாய் என்பதன் போலி, வெறுத்து நீக்கினார் என்று பொருள். நச்சு ஆர் அரவக்கச்சாய் - விஷம்பொருந்திய பாம்பை இடைக்கச்சாக உடையவளே; வைச்சே முலையாய் - கூரிய உயர்ந்த முலைகளையுடையவளே; சே - உயர்ந்த ; இச்சா கிரியாசத்தி - இச்சாத்தி, கிரியாசத்தி; விச்சாதரர் பூசிப்பாய் - வித்தியாதரரால் பூசிக்கப்படுபவளே; மெய்த்தாய் - உண்மைப் பொருளையறிந்த தாயே; விச்சே - வித்தாயுள்ளவளே. (7)

334. முற்றாமுலையாய் - முதிராத இளைய தனத்தையுடையவளே; முத்தா நதி - மணிமுத்தா நதி; பொற்பூர் புலியூர் - அழகு மிகுந்த சிதம்பரம்; பூருவமே - முதன்மையுடையவளே; சொற் கோகிலம் - பாடும் குயில்; கைக்கே செபமாலைக்கே கிளியாய் - தவ ஒழுக்கத்தினிடத்தும், செபமாலையினிடத்தும் வாழும் கிளியை ஒத்தவளே; ஈண்டு நான்காம் வேற்றுமை ஏழாம் வேற்றுமை உருபில் மயங்கிற்று, வேற்றுமை மயக்கம். வெற்றாய் - வெறுமையையுடையாய், (ஒன்றுமின்மை ). (8)

335. பொற்கேகயம் - அழகிய மயில்; பூவாய் - பூவை என்பதன் விளி, பெண்ணே என்று பொருள்; தற்பூரணமே தற்காரணமே என்று பிரிக்க. தாவாதே - சாயாதே; தற்போதம் - பிரமஞானம்; கற்பூர விபூதித் தூளித நீள் காபாலி என்று பிரிக்க; கண் காமினி மோகக் காதலி நீ காமாரி என்று பிரிக்க; காமினி - பெண்; காமாரி - காமனை அழித்தவள், காம + அரி - காமாரி; அரி - அழி; வில்போல் + நுதலாய் - வில்லைப்போன்ற நெற்றியை யுடையவளே; வெற்போன் மதலாய் - இமயமலை யரசனின் குழந்தையே. (9)

336. வீயாதே - சாவாதே; அக்கார்விடம் - பாற்கடலில் தோன்றிய ஆலகாலவிடம்; துய்த்தார் - உண்டார்; பரன் - சிவபெருமான்; நீ ஆனாதே அப்போது அமிர்தாய் வைத்தாய் - நீ அவரை விட்டு நீங்காமல் அப்போது அவ்விஷத்தை அமிர்தமாகச் செய்தாய்; வேயார் தோளாயே - மூங்கிற்போன்றுள்ள தோளையுடையவளே; கோமாதே - பெண்களுக்கெல்லாம் தலைவியே; விமலாய் - குற்றமில்லாதவளே. (10)

--------------------------------------
சப்பாணிப் பருவம்

337. கட்டுறு சுருங்கு இடைத் துடி - வாரினால் கட்டப்பட்ட, சுருங்கின இடையைப் போன்ற உடுக்கை; கொடுகொட்டி - சிவநிருத்தத் தொன்று; இது திரிபுரம் தீப்பற்றி யெரியக்கண்ட சிவமூர்த்தி யாடியது; புடை குடைந்து - விலாப்பக்கம் கையிட்டு; குடல் - குடர், போலி; கொட்டாத நெட்டிலைக் குடுமிவேற் குழவி - உதிராத நீண்ட இலைபோன்ற உச்சியையுடைய வேலைப்பெற்ற முருகன்; முத்தாட - முத்தமிட்டு விளையாட; இனிய முத்தமிழ் அமிழ்த்தி - இனிய இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழிலும் மூழ்கி; எட்டும் இருபத்து நால்- (8 + 24) 32-லக்ஷணங்களோடு கூடியவராய்; எட்டு இலக்கத்தவர் அஷ்டமூர்த்திகளாயுள்ள சிவபெருமான், (அ) எட்டுக் குணங்களை யுடையவர் ; சட்டுவம் - அகப்பை; அமுது கொட்டும் உன் கையினால் - உணவு பரிமாறும் உனது கையினால்; கடவுள் கொடுகொட்டி நடனமாட அதற்கேற்ற தாளங்கொட்டுவதைப் பார்த்து அதைக் கற்றுக்கொள்ள உனது கையினாற்கொட்டுவது போன்றும், இறுமாந்த அசுரர்களின் வாயினின்று இரத்தம் சொரிய விலாப்புறம் சென்று குடரைப் பிடுங்கி மாலையிட்டுக் கைக்கொட்டி நடனமாடும் வேலையுடைய முருகனை "முத்தமிட வா" என்று கைக்கொட்டி அழைப்பது போன்றும், இனிய மூன்று தமிழிலும் மூழ்கி இருகைகளையும் கொட்டுவது போன்றும், 32- லக்ஷணங்களோடு கூடியவராய் தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல் முதலிய எட்டுக் குணங்களையுடையவரான சிவபெருமானுக்கு அகப்பையினால் உணவு இட்ட கையினால் சப்பாணி கொட்டுக என முடிக்க. கொட்டி நடமிட்டிடுங் குழவி - துடி கொட்டி நடமிட்டிடு முருகன், சூரனது வேற்றுருவாகிய வஞ்சத்தையறிந்து அப்போரை வென்ற முருகன் அக்கடல் நடுவண் திரையே அரங்கமாக நின்று துடி கொட்டியாடினார். 32- லக்ஷணமுடையவர் திருமால் எனலுமாம். சிவன் தாருகாவனத்து முனிவர் பத்தினிகளின் கற்பு நிலையறியச் சென்றபோது 32- லக்ஷணமுடையவரானார். (1)

338. முள் தாமரைப் பொகுட்டரசன் - முள்ளையுடைய தாமரையிலிருக்கும் பிரமன்; முகடு + அரவணைச் செல்வன் - ஆயிரம் முடிகளின் சிகரங்களையுடைய ஆதிசேடனைப் படுக்கையாகவுடைய திருமால்; முக்கண் திருக்கடவுள் - சிவபெருமான்; களைக - அழிக்க; வெள்ளைக் கலை - வெள்ளையுடைய; வெள்ளைக்கலை, பொன்னிறக்கலை, தோல்கலை ஆகியவற்றை முறையே பிரமன், திருமால், சிவன் ஆகியோர்க்குக் கொள்க. அருள் கை - வினைத்தொகை; தட்டாது - தடையில்லாது; நாலெட்டறம் - 32- தருமம்; கிள்ளையும், மாலையும், அறமும் வைத்தளித்திடுமுனது கையென இயைக்க; எட்டினையும் மறவாது என்பது 307-ஆம்பாட்டில் கூறிய எட்டெழுத்தினையாகும். (2)

339. கள்ளமுற்றது தேனுவும் - பாலையுடைய காமதேனு; நவநிதியம்:- கச்சபநிதி, கற்பநிதி, சங்கநிதி, பதுமநிதி, நந்தநிதி, நீலநிதி, மகாநிதி, மகாபதுமநிதி, முகுந்தநிதி என்பன. கட்டுமுட்டு உண்டது - ஆசையினாற் கட்டப்பட்டுக் குறைப்பட்டுக் கேட்டவைகளை; பொற்புலவு சங்கநிதி - அழகு விளங்கும் சங்கநிதி; பங்கமுறு சலமுறும் பொழியுமழை முகில் - குளத்திலுள்ள நீரையடைந்து மழை பொழியும் மேகம்; புகல் + ஆதுலர் - சொல்கின்ற வறியவர்; - அகில வலையம் - பூமியையும் அதைச் சூழ்ந்த பாகத்தையும்; அங்கைமலர் - உருவகம்; அகம்+கை - அங்கை; சகல + ஆகமம் + அத்து + இ = சகலாகமத்தி - 'அத்து' சாரியை; சகல ஆகமங்களையுமறிந்தவள் என்று பொருள். சிந்தாமணி - கேட்டதைத் தரும் ஓர் இரத்தினம். கொடையினில் கடைப்படும் - கொடையினில் மற்றவர்களைக் கடைசி நிலையிலிருத்துகின்ற; கற்பகமும், நீலநிதியும், பதுமநிதியும், காமதேனும், கேட்டவைகளைத் தரும் சிந்தாமணியும், சங்கநிதியும், மேகம் குமுறி புவிமீது நல்நீதியாயிருக்கவே பெய்யும் நவநிதியமும் வறியவர்கட்கு முதன்மையான அற்புதத்தை விளைக்கத் தினமும் அட்டமாசித்திகள் செய்து பூமியைக் காக்கும் அத்தகைய திறமுடைய கைகள் முத்தியைக்கூடக் கொடுக்குமோவென்று வியந்து நின் கைகள் கொட்டுவதுபோற் சப்பாணி கொட்டுவாயாக எனப் பொருள் கொள்க, தற்பர - தெய்வத் தன்மையுடைய; கலாசத்தி - கலைகளை யுணர்ந்த சத்தி. (3)

340. அடிதொடங்கிப் புடையும் இடையுள்ளும் முடிகாறும் - பாதமுதற்கொண்டு பல விஷயங்களால் தாக்கும் இடத்தினின்று நினைக்கும் தலை வரையில்; வெகுளி - கோபம்; முக்குணம் - சத்துவம் இராசசம், தாமதம் என்பன; “ஆசையொடு வெகுளியு மயக்கமொடு'' என்ற அடியை,

“காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய்.”

என்ற குறளோடு ஒப்பிடுக, அலகில் இடைபிங்கலை - அளவில்லாத இடைகலை, பிங்கலை என்பன; இடைகலை சந்திரகலைக்கும் பிங்கலை வலமூக்கினின்று வரும் சுவாசத்திற்கும் பெயர். திரிநனவு - மூன்று ஆசை, மண், பெண், பொன் என்பன. நனவும் கனவும் அற்று இறைவி நின் அடிபற்றியே என்று பிரிக்க. இதைய மலர் உருவகம்; படியடங்கலும் - பூமி முழுதும்; படிவம் - உருவம்; "கண் + களித்து + அகம்+கை கொட்டவே'' என்க; சடிலமுனிவர் - சடையையுடைய முனிவர்கள். (4)

341. ஐவர் - விநாயகன், முருகன், வீரபத்திரர், வயிரவர், ஐயனார் ஆகியோர். இவர்கள் சிவன் படைப்பிலுண்டானதால் இவ்வாறு கூறினர். ஐந்தொழில் - சிருஷ்டி, திதி, சங்காரம், திரோபவம், அனுக்கிரகம் என்பன; பைவரு குரம்பை - கருப்பையினின்று வரு கின்ற உடல். வரைக்கரசன் - இமயமலைக்கரசனான பருவதராசன்; முக்கண்ணன் - சிவபிரான், (காரண விடுகுறிப்பெயர்); முளரிமலர் விரல் - உவமத்தொகை; முளரி - தாமரை; தைவரு - தடவி; வயிரவரைக் காளி பால் ஊட்டி வளர்த்தனள். (5)

342. அனப்பேடை - பெண்ணன்னம்; கற்பென - கற்பது போன்று; கட்சி - பறவைக்கூடு; வனக்குயில் - சோலைக்குயில், பூவை - மைனா; கண் கமலச்செயல் ஒப்ப வரிப் பெடை - கண்னணகிய தாமரையின் தொழிலை ஒத்த பெண் வண்டுகள்; உனைப்போல எள் செயல் எத்தனை கற்றிலம் - உனைப்போல மற்றவைகளை இகழ்ச்சி செய்வதற்கு எந்த அளவும் கற்கவில்லை; இலச்சை - வெட்கம்; கொள் சிறை - கொண்ட சிறகுகளை; பொற்பில் + இசைக்கொடி - அழகில் கீர்த்தி மிகுந்த கொடிபோன்றவளே; சில பிரதிகளில் பொற்புலிசைக் கொடி என்றுளது. இதற்கு அழகிய புலியூரில் உள்ள கொடியொத்தவளே எனப்பொருள் கொள்க, புலியூர் என்பதன் மரூஉ புலிசை; வெட்சி மலர்போன்ற பாதங்களை ஒத்து நடப்பதைக் கற்பனவாக்கிய பெண்ணன்னங்களும் மெச்ச நடித்து ஆச்சரியத்தோடு சாயலைக் கற்பனவாகிய பச்சைநிறத் தோகையுள்ள மயில்களும், தான் கட்டிய கூட்டிலுள்ள கருநிறமமைந்த குயில்களும், பச்சை நிறமுள்ள கிளிகளும், மைனாக்களும் சொல்லைக் கற்பனவாகியும், கண்களாகிய இரு தாமரைகளின் தொழிலைப்போன்று கற்பனவாகிய பெண்வண்டுகளும் உன்னைப்போல மற்ற உவமானப் பொருள்களை இகழ்வதற்கு எந்த அளவும் கற்கவில்லை. எவ்வாறு எதிர்நிற்போம் என்று ஒன்று சேர்ந்து வெட்கினவைகளாய், இவ்வாறு வெட்கியிருப்பது அவமானமும் அற்பமுமாகும் எனப் பேசித் தாங்கள் கொண்ட சிறகுகளைத் தங்கள் உடலிலே தட்டும் அத்தகைய அழகு பொருந்தியவளே சப்பாணி கொட்டுக என்க. (6)

345. முக்கனி - மா, பலா, வாழை என்பன. முச்சி - தலைக் கொண்டை; முத்தமிழ் சொல் கழகம் - மூன்று தமிழையும் பற்றிப் பேசப்படும் சங்கம்; அருள் பாதம் - வினைத்தொகை; பொத்தக முத்தியருள் - புத்தகத்தில் கூறிய முத்திகளைத் தருகின்ற; வித்துருமம் - பவளம்; மெச்சு இடை கச்சோதம் - மெச்சுகின்ற இடுப்பாகிய மின்மினி; மின்மினி விட்டுவிட்டு மின்னுவதால் மின்னல் போன்று உவமை கடறப்பட்டது. நுதற்சிலை - நெற்றியாகிய வில்; மைக்கண் மலர்க்கணை கரிய கண்ணாகிய மலரம்பு; வெற்பு முலை - மலை போன்ற முலை; பூவை - பெண்; கற்புமிகு தனியுற்றொளிர் பொற்றொளி - கற்பு மிகுந்து ஒப்பில்லாத பெருமையடைந்து விளங்கும் அழகிய தோளை யுடையவள்; உற்பல கைத்தலி - நீலோற்பல மலர் தாங்கிய கைத்தலத்தை யுடையவளே; பச்சை நிறப்பிடி - பச்சைநிறமுள்ள பெண் யானையை யொத்தவளே; அத்தாணி - ஆசனம்; கொத்துறு தத்துவ மத்தில் இருப்பவள் - திரண்ட தத்துவுங்களின் நடுவில் இருப்பவள்; மத்தி - நடு. மத்தியில் என்பது மத்தில் என நின்றது. (7)

344. சத்தினி பத்தி - சத்தியை வணங்கும் பக்தி வழிபாடு; துச்சிலெனத் தளி விட்டிலை - ஒதுக்கிடம் என்று தள்ளிவிடவில்லை; தளி - தள்ளி என்பதன் தொகுத்தல்; என் + கு = எற்கு - எனக்கு என்பது பொருள்; எற்கு உளம் வைத்தனை - எனது உள்ளத்தில் வைத்தாய் - எற்கு வேற்றுமை மயக்கம்; கற்குளம் - கல்லால் படி கட்டப்பட்டுள்ள குளம்; அச்சுதன் அச்சுதன் நச்சுழி உற்று அழிவுறவே - திருமாலின் அந்த மகன் (மன்மதன்) சிவபெருமானை அடக்க விரும்பும் போது நெற்றிக்கண்ணின் நெருப்புப்பட்டு அழியவே; ரதிக்காக - அவனது மனைவியான ரதிக்காக; அற்பின் - அன்பினால்; மலர்க்கணை - ஐந்துவித மலரம்புகள்; இக்கு - கரும்பு வில்; மலர்ப்பாணி தாமரை - மலர்போன்ற கைகளை யுடையவளே. (8)

345. நித்திலமுத்து அருவித்தெரியல் பெரு நெட்டுருவில் சூழ - அருவிபோன்ற முத்துக்களாலாகிய மாலை பெருமைபொருந்திய நீண்ட வடிவத்தில் சூழ்ந்திருக்க; நெட்டரவம் - நீண்ட பாம்பு; செக்கர் மணிச்சுடர் - சிவந்த மாணிக்கச் சுடர்; உச்சிமுடிப் பூண - தலையிலுள்ள கிரீடத்தைத் தரிக்க; கைத்தல சக்கர நற்பரிதிச்சுடர் பக்கமுற - கையிடமுள்ள சக்கரத்தின் நல்ல சூரியனைப்போன்ற கிரணங்கள் நாலாபக்கங் களிலுமடைய; மேகங்களால் மறைக்கப்படாமலும் கிரகண மில்லாமலும் இருக்கும் சூரியனை நல்பருதி யென்றார்; சீத கள் கமலச் சுனை மிக்க விழிக்கு - குளிர்ந்த தேனையுடைய தாமரையிருக்கும் சுனையின் மிக்க குளிர்ந்த கண்களுக்கு, நகைப்பெருவட்ட மணிச்செவி - பிரகாசமான பெரிய வட்டம் போன்ற அழகிய காது; குழைகோல - குண்டலம் அழகைக் கொடுக்க; வற்பு உறு பச்சை நிறக்கழை - உறுதியுடைய பசுமை நிறமுடைய மூங்கில்; அச்சுதன் - திருமால்; கொத்துரு வெற்பு அரசற்கு - திரண்ட மலைகளின் அரசனுக்கு. (9)

346. கற்பகம் மைப்புயல் - கற்பகத்தருவும் கரியமேகமும், இவை இரண்டும் கைம்மாறு கருதாமல் கொடுப்பன; கழைத்தோளி - மூங்கில் போன்ற தோள்களையுடையவள்; கற்பூரம், நற்புழுகு, அப்பிய பொற்களபத்தொடு கத்தூரி உள்ளிடு மத்தகமொத்த தனத்து இரு உத்தமி - கற்பூரமும் நல்ல புனுகும் கலந்த அழகிய கலவைச் சாந்தோடு கத்தூரிச் சேர்ந்த யானை மத்தகம் போன்ற இரு தனங்களையுடைய உத்தமியே; இப்பூவில் - இந்தப் பூமியில்; ஒப்பிலி - இணையில்லாதவளே; பற்றாரை - எதிரிகளை; முக்கணி - பார்வதியின் ஓர் பெயர்; பொற்கணி - அழகிய கண்களையுடையவளே; அக்கணி - அம்கணி, அங்கணி என்ற மெலித்தல் வலித்தலானது; முத்தாரம் வித்துருமப்பணி சித்திர நற்பணி மெய்க்கணி பொற்பூணி - முத்துமாலையும் பவளத்தாலாகிய ஆபரணமும் சித்திர வேலைப்பாடுகள் செய்த நல்ல ஆபரணங்களும் உடலில் அணியும் அழகை யுடையவளே; நத்தினர் - விரும்பிச் சேர்ந்தனர். (10)

-----------------------------------
முத்தப்பருவம்

347. தோற்றம் - காட்சி; சுருதி மணக்கும் சிவ ஆகமம் - வேதக் கருத்துக்கள் நிரம்பிய சிவாகமம்; வடகலை நூல் - சமஸ்கிருதம்; பிராகிருதம் - ஓர்மொழி; மலையும் உருக்கும் இயல் இசையும் - மலையையும் உருக்குகின்ற இயற்றமிழும், இசைத்தமிழும்; வளர்மந்திர மத்திம தாரம் பெருகி - மிகுந்த மந்திரங்களும் நடுத்தரமான இசையுமுடைய வைகளாய் அதிகரித்து; பேதா பேதம் - பலவகைகள்; நாடகத்தாள் - கூத்தாடும் பாதத்தை யுடையவளே. (1)

348. செயிருற்றிடு தீவினை - குற்றம் பொருந்திய பாபம்; சஞ்சிதம் - காட்டிய பாபம்; ஆகாமியம் - பிராரத்திற்கிசைய எடுத்த தேகத்திலே அதன் பலம் புசிக்கையில் விருப்பு வெறுப்புக்களா லுண்டாகிய புண்ணிய பாபங்கள்; மாயைப் பாசி - மாயையாகிய பாசி; பாசம் - ஆசை; ஊறுங்களிப்பு - மிக்கு வருகின்ற மகிழ்ச்சி; ஒருங்கு அற்று - முழுதும் - நீக்கி; பூதபவுஷியம் - ஐம்பெரும் பூதங்களினால் ஏற்பட்ட வாழ்வு; - சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்று மூன்று வினைகளுண்டு; மும்மலம் - ஆணவம், மாயை, கன்மம் என்பன.
(2)

349. இப்பாட்டில் முத்துப்பிறக்கும் பலவிடங்களை அம்மையின் அங்கங்களுக்கு உவமைகூறி அங்கங்கு உம்மிடம் முத்தம் தோன்ற வாயினின்று ஒரு முத்தம் தரலாகாதா என்கிறார் புலவர். முத்துப் போன்ற பற்களால் நின்னிடம் முத்தமும், மேகம் போன்ற கூந்தலினால் நின்னிடம் முத்தமும், முகமாகிய சந்திரனால் நின்னிடம் முத்தமும், முலைகளாகிய யானையினால் நின்னிடம் முத்தமும், கண்களாகிய கயலினால் நின்னிடம் முத்தமும், நடுவிடமுள்ள காதால் (கட்செவி - பாம்பு) நின்னிடம் முத்தமும், நன்மையுள்ள நெல் இருநாழியினால் நின்னிடம் முத்தமும், கைகளாகிய தாமரையினால் நின்னிடம் முத்தமும், கரும்பு வில்லினால் நின்னிடம் முத்தமும், மூங்கில் போன்ற தோளினால் நின்னிடம் முத்தமும் இருக்க வாயினின்று முத்தம் கொடுக்க உனக்கு அரிதோ என்று பொருள் கொள்க. மேகம், சந்திரன், யானை, சங்கு, கயல், பாம்பு, நெல், தாமரை, கரும்பு, மூங்கில் ஆகியன முத்துப் பிறக்கும் இடங்களாகும். நத்து - சங்கு; களம் - கழுத்து. இருநாழி நெற்கொண்டு 32-அறம் வளர்த்ததால் “நறு நெற்படியால் முத்தம்" என்றார். சத்தாய் - அழியாததாய்; சித்தாய் - அறிவுள்ளதாய்; (3)

350. மச்சத்துழியில் - மீனிடத்தில்; வராகம் - பன்றி, பன்றிக் கொம்பில் முத்துப் பிறக்கும்; வேய் ஈன்றமணி - சிவன்; மார்பத்து அணியும் - மார்பிலணியும்; மீனிடம் பிறந்த முத்தமும், பன்றிக் கொம்பிடம் பிறந்த முத்தும், மார்பிலணியும் சிவனது வாயினால் கொடுக்கும் முத்தத்தைச் சுவைத்தருளும், பச்சைக்கிளி போன்றவளே என்க; சிவன் திருமால் அவதாரமான மீனின் தலையறுத்தும், வராகத்தின் கொம்பொன்றை யொடித்தும் தண்டித்ததால் மார்பத்தணியும் வேயீன்ற மணி எனப்பட்டார். மாணிக்கம், பவழம், கோவைக்கனி வீழிப்பழம், மாதுளம்பழம், இந்திரகோபம், பங்கேருகப்பூ, முருக்கு, இலவம், உச்சித் திலகம், அரக்காம்பல் இவைகள் வாய்க்கு உவமை கூறப்படுவன. வீழிப்பழம் - விழுதிச் செடியின் பழம். "வீழிவாயின் கனிவாயொரு மெல்லியல்" (கம்பராமா, புனல்விளை-28) இந்திர கோபம்:- இது செந்நிறமான பூச்சி. மழைக்காலத்தில் எங்கும் நடமாடும்; பங்கேருகப்பூ - தாமரைப்பூ; உச்சித்திலகம்:- இது ஒரு பூஞ்செடி, சிவந்த மலருள்ளது. அரக்கு ஆம்பல் - சிவந்த அல்லிப்பூ; உறழும் பசுந்தேன் கசிந்து ஊறும் உள்ளும் புறம்பும் மணம் நாறும் - மேற்கூறியவைகளைப் போன்றுள்ள தேன் கசிந்து சுரந்து உள்ளேயும் வெளியேயும் வாசனை வீசும்; மணிமுத்தம் சச்சைச் செழுங் குங்கும தனத்தாய் - முத்து மணிமாலைகளையும், சிவந்த செழுமையான குங்குமக் குழம்பையுமுடைய தனத்தைப் பெற்றவளே. (4)

351. இப்பாட்டில் கண், கரம், கால், செவி, தலை, நாக்கு இவைகளின் பயனைக் கூறுகிறார். மலையரையன் - இமயமலையரசன். (5)

352. படி அளிக்கும் தொழிலுடைப் பங்கயன் - பூமியைப் படைக்கும் தொழிலுடைய பிரமன்; சிகரவெற்பும் திகிரிவெற்பும் - மேருமலையும், சக்கரவாள மலையும்; திரைகடல் செம்புனல் அலைக்கும் சுதையளிக்கும் புயன் - அலைவீசும் பாற்கடலில் நீரில் கடைந்து அமிர்தம் கொடுத்த திருமால்; வான் ககன....பரன் - ஆகாய முழுவதும் வாழும் தேவர்களைக் கொன்றிடும்படியான ஆலகால விஷத்தையுண்டு உயிர்களைக் காப்பாற்றியவனும் கருணை வைக்கும்படியானவனுமான சிவபெருமான்; பிரமனும், திருமாலும், சிவபெருமானும் தகுதியான உனைக்கண்டு அவர்கள் துதிக்கும்படி அத்தகைய பெருமை வாய்ந்தவளே முத்தந்தருக என்று பொருள் கொள்க. (6)

353. கிளையின் முத்தம் - மூங்கிலினின்று உண்டாகும் முத்து; கதழ் எரிக்கண் பொரியும் - உக்கிரமான நெருப்பினிடம் வறுபட்டுப் போகும்; மூங்கில் ஒன்றோடொன்று உராய்ந்து தீப்பற்றுவதால் "கனல் விளைக்கும் கிளை'' எனப்பட்டது; கடு நடை - விரைந்த நடை; செம்புகர் முகத்தின் கரி - இரத்தம் தோய்ந்து சிவந்த கபில நிறமமைந்த முகத்தினையுடைய யானை; கரி - பண்பாகு பெயர்; கரியும் - நெருப்பினால் காந்திவிடும். யானைகள் ஒன்றோடொன்று சண்டையிடும்போது தந்தத்தில் உராய்வுண்டாகி தீப்பற்றும். அதன் காரணமாக தந்தத்தில் உண்டாகும் முத்துக்களும் கருகிப்போகும். போர் யானையைக் காட்டவே "செம்புகர் முகத்தின் கரி'' எனப்பட்டது. புயல் - மேகம்; கதறு இடிக்கண் சிதறும் - கதறுகின்ற இடி இடிக்கும் போது சிதறிவிடும். புது மதிக்கண் திகழும் முத்தம் - புதிய சந்திரனிடம் விளங்கும் முத்து; குறுமுயல் கொண்டு ஒளிரும் - சிறிய களங்கம் கொண்டு பிரகாசிக்கும்; சந்திரனிடம் களங்கமுள்ளதால் முத்துக்கும் களங்கம் கூறினர்; தின விளைக்கும் கழை - தின்னுவதற்காக விளைவிக்கப்படும் கரும்பு; திருகணிக்கண் - திருகாணிக் கண் என்பதன் குறுக்கல் விகாரம், திருகாணி - திருகு மரைகளுள்ள ஓர் யந்திரம்; கமலமுத்தம் - தாமரையினின்றுண்டான முத்து; களிறு இனிச்சென்று உளரும் - ஆண் சுறாமீன் சென்று சிறகினால் அசைக்கும். மற்ற முத்தங்களெல்லாம் (முத்துக்களெல்லாம்) ஒவ்வொன்றால் கெடுதியுறும், உனது முத்தம் (முத்திகொடுப்பது) கெடாதது. அதனால் தருக என்கிறார் புலவர். (7)

354. சிமிழ் - நகை வைக்கும் பெட்டி; தண் தரள முத்தம் - அழகிய வெள்ளிய முத்துக்கள்; மற்று அங்கு அதி பெற என்க; அதிபெற - அதிகம்பெற; குமிழினில் - நீர்க்குமிழிபோன்ற; பரிசு இலை - தன்மை கிடையாது; குங்கும மணக்கும் கமுகின் வாய் அமிழ்தினில் தண் தரள முத்தம் - குங்கும வாசனை வீசும் பாக்கு மரத்தில் உள்ள அமிர்தத்தைக் காட்டிலும் இனிய வெள்ளிய முத்துக்கள்; அகில கற்பம் கெடினும் - எல்லா உலகமும் அழிந்தபோதிலும்; அழிவில் பொற்பு - அழிவில்லாத அழகு; நகைப் பெட்டியிலிருக்கும் முத்து உலகத்தையே விலையாகப் பெற்றாலும் கொஞ்சமும் ஆசையின்றி அதிகம்பெற மனதில் நினைக்கும் கொள்கையுடையேமல்லோம். நீரின் குமிழ் போன்ற முத்து, குளிர்ந்த இளைய சந்திரனைப் போன்றிருந்தாலும் அவைகளைக் கொள்வதற்கு (பெறுதற்கு) நினைக்கும் தன்மையுடையேமல்லோம். குங்குமப்பூப் போன்று வாசனை வீசும் கமுகிலுள்ள முத்தமானது எல்லா உலகங்களுமழிந்தாலும் அழியாத அழகுள்ள அம்முத்துக்களை யாம் அடையப் பெறுதற்குச் சற்றும் நினைக்கவில்லை. எனவே இனிமை மணக்கும் குமுதமலர்போன்ற வாயினின்று முத்து ஒத்தவளே முத்தம் தருவாயாக என்று பொருள் கொள்க. (8)

355. வெற்பன் - இமயமலை யரசன்; குமரி முற்றுங் குமரி என்பது எப்போதும் இளமைத்தன்மை பெற்றுள்ளதைக் காட்டிற்று. குமரி - கன்னியாகுமரியிலுள்ள பகவதியைக் காட்டிற்று. முதலிலுள்ள குமரர் என்பது முருகனைக் குறித்தது. முக்கண் குமரர் என்றது விநாயகனைக் குறித்தது. இரண்டாவதாகக் கூறிய முக்கண் குமரர் வயிரவரைக் குறித்தது. வயிரவர்:- தாருகனைக் கொன்ற சத்தியின் கோபத்தீ எழுந்து குழந்தைஉருக்கொண்டது. அதனைக் காளி பாலூட்டி வளர்த்தனள். அதைச் சிவமூர்த்தி ஒடுக்க ஒடுங்கி அவரிடமிருந்து எட்டு உருக்கொண்டு வெளிப்பட்டார். இவருக்கும் நெற்றிக்கண் உண்டு. அமரர் - தேவர்; அமரார் - பகைவர்; அமர் - போர்; அமரி - துர்க்கை; அமரிநற்சங்கரி என்று பிரிக்க; முலைக்குஞ்சரி - முலைகளாகிய யானையை யுடையவள்; நிலைப்பொன் சிகரியே - நிலைத்த அழகிய கோபுரங்களை யுடையவளே; திமிரம் உட்கும் தினகரன் - இருளை மடியச்செய்யும் சூரியன்; உய்க்கும் - செலுத்தும்; கருணியே - கருணையுடையவளே; தமரியே - உறவாயுள்ளவளே. (9)

356. பிணை - பெண்மான்; மாவடு - மாங்காயின் வடு; கடு - விஷம்; அலை - கடல்; சுதை - அமிர்தம்; அலர்படுக்கும் - மலரச் செய்யும்; பகழி - அம்பு; கொலைப்படைக்கும் சமன் - கொலை செய்யும் எமன்; தலையளி - பேரன்பு; கயல் மீன், பெண்மான், மாவடு, - கடு, அலை, சுதை, அலர், பகழி ஆகியவை பெண்களின் கண்களுக்கு உபமானமாகக் கூறப்பெறும்; செம்படவர் வீசும் வலைகளில் கயல்மீன்கள் செல்லும்படியும், பெண்மான்களைப் பயப்படும்படியும், மாவடுவை உப்பின் தொகுதியில் அமிழ்த்தும்படியும், விஷத்தைப் பின்தொடர்ந்து செல்லும்படியும், கடலைச்சென்று அலைய வைக்கும்படியும், அமிர்தத்தைத் தின்று உமிழும்படியும், மலரினிடம் சென்று வருத்தும்படியும், அம்பினைக் கண்டு இகழும்படியும், கொலை செய்யும் எமன் இறக்கும்படியும் கண்களை விழிக்கும் குமரியே என்று முடிக்க. மேற்கூறியன கண்களுக்கு உவமையாகாமல் தோற்றனவாதலால் இங்ஙனம் கூறினர். (10)

------------------
வருகைப் பருவம்

357. பாம்புரி - அகழி; காவணம் - பந்தல்; கல்லூரிகள்-. பள்ளிக்கூடங்கள்; சூளிகை - அரண்மனை; கொடிஞ்சி - தேர்மொட்டு; பலகோடி யுகமே விளங்கும் சினகரம் என்று பிரிக்க, (சினகரம் - கோவில்); கல் தளி - கல்லால் கட்டிய கோவில்; நேர்த்தி - அழகுள்ள பொருள், ஆவியம் - உயிர்; சாளரம் - சன்னல். (1)

358. சுவறி - உறிஞ்சி; பூ விசிறி - பூவாகிய விசிறியினால்; நறும்பொற் பாளையினை நாளிகேரம் கமுகு கவரி இரட்ட - நன்மை பொருந்திய அழகிய பாளையினால் தென்னை மரமும் பாக்கு மரமும் சாமரை போன்று மாறி மாறி வீச; மந்தாநிலம் - தென்றற் காற்று; மணியாழ் ஞிமிறு வாசிப்ப - வண்டுகள் அழகிய யாழ்போன்று இசை பாட; கொந்து ஆர் இலவம் ஆலவட்டம் - பூங்கொத்துகள் சேர்ந்த இலவம்பஞ்சு மரம் கால்செய் வட்டம் (பெருவிசிறி) வீச; கூந்தல் கமுகு - குலைக் கூந்தலையுடைய பாக்குமரம்; குவளை விழிப்ப - நீலோற்பலம் மலர; செஞ்சாலிக்குல வேந்தரசு கொலுவிருக்கும் - சிவந்த சாலி நெல்லாகிய நற்குலத்தில் தோன்றிய அரசன் ராச சபையில் வீற்றிருக்கும்; சிந்தாமணிப் பொற்புலியூர் - கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணி எனும் இரத்தினத்தைப் போன்ற அழகிய புலியூர். (2)

359. கருந்தாழ் அளகக் கடைசியர் - கருமையான, பூமியில் தாழும்படியான கூந்தலையுடைய மருதநில மக்கள்; தம் கண்ணே - தங்களது விழிகளே; கிழநாரை - கிழமாகிய நாரை எனும் பறவை, பருந்து ஆழ்ந்து இறைஞ்சப் பறந்து சுற்ற - பருந்துகள் மிகவும் கீழாய்ப் பறந்து சுற்றவும், இறைஞ்ச - குனிந்து; பள்ளப்பயல்கள் பறி தூக்கும் உழவரின் பிள்ளைகள் மீன்களை வாரியெடுக்கும் கூடையைத் தூக்குவார்கள். இதில் பயல்கள் என்பது பகுத்தறிவில்லாப் பிள்ளைகளைக்குறித்தமையால் தூக்கும் என்ற செய்யும் வாய்பாடு வினைமுற்றைக் கொடுத்தார்; பழமீன் கரும்பின் முத்து - பழைமையான மீனினின்றும் கரும்பினின்றும் பிறந்த முத்து. முத்துநிலாப் பார்த்தே மலர்த் தாமரை முகிழ்க்கும் - முத்தினின்று தோன்றும் ஒளியைக்கண்டு தாமரைப்பூக்கள் மூடிக்கொள்ளும்; பெருந்தாழ்க்குவளை முகை யவிழ்க்கும் - மிக்க ஆழத்திலுள்ள குவளையின் மொட்டுக்கள் மலரும்; சூல் சங்கு - கர்ப்பம் கொண்ட சங்கு; பெடைமென் குமரி மட அன்னம் - மென்மையான இளைய பெண் அன்னம்; முத்தினைக் கண்டு தாமரை மலர் மூடுவதும் குவளை மலர் மலர்வதும் தன் பிள்ளையென கர்ப்பம் கொண்ட சங்கு அணைப்பதும் அன்னம் தான்பெற்ற முட்டையென்று அடைகிடப்பதுமான சோலை சூழ்ந்த புலியூர் என்க. செருந்தி + ஆழ் + சோலை - செருந்தி மரங்களால் அமிழ்த்தப்பட்ட சோலை, இகரம் தொக்கது. (3)

360. மணியூடு - மணியினிடையில்; சகம் - உலகம்; பழுத்தவத்தின் - பழுத்த தவத்தின் என்பதிலுள்ள தகரம் குறைந்தது. (4)

361. குழையா - வாடாத; எழு புன்பிறவி - ஏழு அற்பமான பிறவிகள்; சதகோடி - நூறுகோடி; சரோருகம் - தாமரை; வாழ்வு வருக என்பதிலுள்ள 'வு 'கரம் தொக்கது. (5)
362. வெகு தேவ துரந்தரி - மிக்க தேவர்களைக் காப்பாற்றுபவளே; தினகரகுண்டலி - சூரியன் போன்று பிரகாசிக்கக்கூடிய குண்டலத்தை உடையவளே; முக சீதள மண்டலி - முகமாகிய குளிர்ந்த இடத்தை யுடையவளே; வசீகர மங்கலி - யாவரையும் பக்தியால் வசப்படுத்தும் சுபத்தை உடையவளே; வசுதேவர் வணங்கு உமை - திருமால் வணங்கும் பார்வதியே; பரிபுர முண்டகி - சிலம்பணிந்த தாமரை போன்ற பாதத்தை யுடையவளே; பரவாதவர் கண்டகி - துதிக்காதவர்களுக்கு வாளையொத்தவளே; கண்டகம் - வாள்; பரசிவ ரஞ்சகி - மேலான சிவனுக்கு அன்புடையவளே; பரிவாகிய நெஞ்சகி - இரக்கமான மனமுடையவளே; கரதல கந்தரி - கைகள் சிவனது கழுத்திலுடையவளே, இது விடமுண்ட போதாகும்; கலிகாலம் - கலியுகம் (6)

363. அசுரேசர் - இராட்சதர்களுக்குத் தலைவர்; சிரகர சிந்துரி - தலையைக் கையிலே உடைய திலகம் அணிந்தவளே, இது 'ருரு' என்ற அரக்கனை அவன் தவநிலையில் கொன்ற போதாகும்; சிரமாலி திகம்பரி - தலைகளை மாலையாக அணிந்த பார்வதியே; திரி அம்பிகை - திரிகின்ற அம்பிகை என்று வினைத்தொகையாக்குக; அல்லது 'ஸ்திரி' என்பதன் வடசொல்லாகக் கொண்டு இருபெயரொட்டுப் பண்புத் தொகையாக்குக; பஞ்சமி - துர்க்கை; கனகசிதம்பரி - பொன்மயமான சிதம்பரத்தில் வசிப்பவள். கமழ் கொந்தளி - நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே; குடம் நிகர் கொங்கைகள் - குடத்தையொத்த தனங்களை யுடையவள்; அமரி - யுத்தத்தைச் செய்பவளே; பசும்பிடி - பசுமை நிறம் பொருந்திய பெண்யானையை யொத்தவளே; அடையார் படை - பகைவரது சேனை; மிடி - துன்பம்; தமருக விஞ்சையள் - உடுக்கையடிக்கும் வித்தையை யுடையவளே; சதுர்வேத விபஞ்சியள் - நான்கு வேதமாகிய வீணையை யுடையவளே; தயகுணபஞ்சரி - இரக்கமாகிய குணத்தை இடமாக பெற்றவளே; சகல ஆகம மஞ்சரி - எல்லா ஆகமங்களையும் பூமாலையாக வுடையவளே; கமலம் உகந்தவள் - தாமரையைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டு சந்தோஷித்தவள்; கருணாகர அம்பிகை - கருணையின் இருப்பிடமான பார்வதியே; ஆகரம் - இருப்பிடம். (8)

365. அவமதி பொன்றிட - நிந்தனை யழிய; அழியா நிதி - வற்றாத செல்வம், அகில பவங்கெட - எல்லா பாவங்களும் நீங்க; அகலா விபவம் - நீங்காத வாழ்வு; குவலையம் - இங்கு இடவாகு பெயராய்ப் பூமியி லுள்ள மக்களைக் குறித்தது. (9)

366. மறம் மலி கஞ்சுகி - வீரம் மிகுந்த பாம்புக் கங்கணத்தை யுடையவளே; கஞ்சுகம் - பாம்பு; மதுபதி கஞ்சகி - தேன் பதிந்துள்ள தாமரையில் வசிப்பவளே; மது - தேன்; துளி - துளி போன்றவள்; நந்தினி - மகள்; பாரதி - சரசுவதி; இந்திரை - இலக்குமி; பொறை - பொறுமை; புரம் எரி தந்தவள் - திரிபுரங்களை நெருப்பிட்டவள்; புவன ஆதிகள் தந்தவள் - பூமி முதலிய எல்லாவற்றையும் படைத்தவள்; கறை அரவு கங்கணி - விஷக் கறையுள்ள பாம்பைக் கங்கணமாக அணிந்துள்ளவளே; அரவு என்பது அர எனக் குறைந்து நின்றது; கணையோவெணும் வெங்கணி - அம்போ என்று சொல்லும் கொடிய கண்களையுடையவளே. (10)

----------------------
அம்புலிப்பருவம்

367.
சிவகாமியம்மை சந்திரன்
1. சிவனின் இடப்பாகத்தில் இருந்து விளையாடுவாள். சிவந்த சடையில் விளையாடுவான்
2. சிவனிடக்கண் (சிவனது இடப்பக்கமாகிய இடம்) ஆவாள். சிவனிடக்கண் (சிவனது மூன்று கண்களில் இடப்பக்கம் இருக்கும் கண்) ஆவான்.
3.கவனமுறுகலை வாகனம் - ஆகாயத்திலடையும் இடபவாகனம் (கலை -விலங்கேற்றின் பொது). கவனமுறு கலையுள்ளான் - வளர்வதும் குறைவதுமான கலக்கம் நிறைந்த 16-கலைகளையுடையான்.
4. கருணைவிழியினால் அமுதங் கொடுப்பாள் ஆகாயத்திலுள்ள தேவர்க்கு முதற் பதினாறு நாளில் அமுதங் கொடுப்பான்.
5. பராபரக் கடலிலுதித்தவள். நாகலோகம் வரை ஆழ்ந்த பாற் கடலிலுதித்தவன். .
6. சிவந்த கைகளில் குவளை மலரை யேந்துவாள். குவளை மலருக்கு நண்பன். (சந்திரன் தோன்றினவுடன் மலரும். எனவே இங்ஙனம் கூறினர்). (1)

368. வடிவெலாம் உன்னிடம் களங்கமுண்டு. இவளிடம் மனத்திலும் களங்கம் (குற்றம்) இல்லை. சந்திரன் போன்ற முகத்தையுடைய பெண்பிள்ளையை மதியாதிருப்பது உனது மதி குறைந்திடுதலாலோ! (புத்தி குறைவதாலோ (அ) தேய்வடைவதாலோ) சிவன் முடியின்மீது நீயிருந்தாலு மிவள் பாதத்தை ஊடல் தீர்க்க சிவன் பணியும்போது முடியிலுள்ள நீயும் பணியவில்லையா. உனக்கோ முயல் (களங்கம்) உளது. இவளுக்கோ புலி (புலியாடை) யுளது. புலியை முயல் வெல்ல முடியுமா. பூமியின்மீது விரைந்து வா, வாராதிருப்பாயானால் உன்னைக் கவனிக்கமாட்டாளா? பதஞ்சலியென்று கூறும் ஆதிசேடனை எடுத்து நமது சிவகாமியம்மையின் முன் வைத்திடுவார் சிவன். மற்றும் முலை மேற்றிரளினால் சிவனுக்கு அமுதம் (பால்) கொடுத்ததையும் அறியவில்லையோ எனவே சந்திரனே ஆடவா என அழைக்கிறார். இங்குச் சிலபிரதிகளில் மடியினாலென்றும் உளது. அதற்கே பொருள் கூறப்பட்டது. சிவகாமியம்மன் தன்முன் பாம்புகட்கெல்லாம் அரசனான ஆதிசேடனை வைத்திருக்கிறாள். ஆனால் சந்திரனோ ராகுகேதுக்களால் திகைப்புண்டு பயப்படுகிறான். சந்திரன் தன் அமிர்தம் தேவர்கட்கிட்டும் அவர்கள் ஆலகால விஷத்திற்குப் பயப்பட்டு உயிரிழக்கப் பயந்து ஒளிந்தனர். இவளது தன அமிர்தத்தையும் அதர அமிர்தத்தையுமுண்ட சிவனோ அதைக்கண்டு பயப்படாது உண்டார். எனவே இதனால் அம்பிகை, சந்திரன் இவர்கட்குள்ள பேதம் தெரிகிறது. (2)

369.
சந்திரன் சிவகாமியம்மை
1. இவன் கிரணத்தினின்று ஒளிவாய்ந்த முத்துப் பிறக்கும். (சந்திரனுக்கு முத்துப்பிறப்பது ஒன்று கூறி சிவகாமிக்கு இரண்டிடம் கூறியதால் சந்திரன் தாழ்ந்தான்.) மூங்கிலையொத்த தோளினிடத்தும், கழுத்தாகிய பாக்குமரத்திடமும் பிறக்கும். வேயீன்ற முத்தம் - சிவபெருமான். வேதங்கள் பிரளய காலத்தில் தமக்கு ஆபத்து ஒன்றும் இல்லாதிருக்க வேண்டுமென்று கேட்டபடி சிவன் கட்டளையால் மூங்கிலாக வந்து அவை பிறக்க அவற்றில் தான் முத்தாகத் தோன்றின ராதலால் இங்ஙன் கூறினர்.
2. அழகுவாய்ந்த விமானத்தில் உலகவிருள் நீங்க மேரு மலையை வலம் வருவான். அழகிய விமானத்தில் தேவர்களும் தங்களது அஞ்ஞான புத்தியினிருள் நீங்க இவளது பாதத்தைச் சுற்றிவருவர்.
3. கற்புடைய பெண்கள் வணங்க மாட்டார்கள். இவளை யாவரும் பணிவதால் கற்கும் கல்வி மிகும். கற்பு + அது - கற்பது, அது பகுதிப் பொருள் விகுதி - பெண்கள் கற்பு எனலுமாம்.
4. எந்நேரமும் குறிப்பாக மூன்று காலங்களில் பார்க்கக் கூடாது. (சதுர்த்தி, கிரகணகாலம், உதயகாலம் இவைகளில் பார்க்கலாகாது. அங்ஙனம் பார்த்தால் பரிகாரம் செய்யவேண்டும்). எப்போதும் காணலாம்.
(3)

370. பாகாய மொழி ........ மதியமே - வெல்லப்பாகை யொத்த மொழியையுடைய வஞ்சிக்கொடிபோன்ற பார்வதியின் முகம் ஆயிரங்கலைகளோடு (சந்திரன் வளரும் பங்கு) பிரகாசிக்கும் சந்திரனேயாகும், இதனால் பதினாறு கலைகளையுடைய சந்திரனையும் ஆயிரம் கலைகளையுடைய முகம் பெற்ற அம்மையையும் பிரித்தார். ஏகாரம் - பிரிநிலை; பச்சை... ....விழியே - பசுமையான கிரணத்தின் தேனையுண்டு பசியாமல் பசியைத் தணிக்கும் சகோரப்பறவையை யுடையது கண்ணேயாகும். சந்திரனது நிலவைச் சகோரப்பறவையுண்டு பசி அப்போது தணியும். அம்மையின் விழி ஒளியின் நிலவையுண்டு சகோரம் பசியைத் தணித்தலோடு எப்போதும் பசியாமலுள்ளது; பேதம் காண்க. போகாத ... குறியுமே - எப்போதும் நீங்காத சிறிய களங்கம் இரண்டு புருவங்களும் பொட்டு வைத்துக்கொள்ளுகின்ற நெற்றியிலுள்ள அடையாளமுமேயாகும். சந்திரனுக்குக் களங்கம் அழகைச் சிதைக்கிறது. உமையம்மையின் முகமாகிய சந்திரனுக்குப் புருவங்களின் கருமையும், பொட்டிடுகின்ற நெற்றியின் பாகமும் அழகுமிக்கு விளங்குகின்றன; இங்கும் அம்மையையும் சந்திரனையும் பிரிக்கிறார். அழியாது .... சிகழிகையுமே அழியாமல் பக்கத்திலிடுகின்ற வட்டமான பரிவேடம் சுருண்ட கூந்தல் தொகுதியும் மயிர்முடி மாலையுமேயாகும்; சந்திரன் பக்கத்திலுள்ள பரிவேடம் எப்போதாவது காணப்பட்டு மறைகிறது. ஆனால் அம்மையின் சுருண்ட கூந்தற்றொகுதியும் மயிர் முடிமாலையும் மறையாமல் இருக்கின்றன; இங்கும் பேதம் காண்க. ஆகாய மாணிக்க ... பெண்பிள்ளை - ஞான ஆகாயம் எனப்படும் அழகிய சிற்றம்பலத்தில் நடனம் செய்கின்ற நடராசர் இதழமிர்தம் பருகக் குறைப்படாமல் வளர்கின்ற அழகு மிக்க அம்மையார். இங்குச் சந்திரன் கலையமிர்தத்தைப் பிதிர்க்கள் அருந்தத் தேய்கிறான். ஆனால் அம்மையின் அமிர்தமோ சிவனின் விஷத்தை நீக்கியதோடு கொடுத்த அம்மையையும் அழகுறச் செய்தது. எனவே இதிலும் பேதம் காண்க. ஒப்பென்னவே என்பதில் ஏகாரம் எதிர்மறை. (4)

371. முழுமுகத் திங்க...........மதியாள் - முகமாகிய திங்களோடு நெற்றியாகிய ஒருபாதிச் சந்திரனையும் மூன்று கீற்றாக உள்ள திருநீறாகிய சந்திரனையும் உடையவள்; இவள் பல சந்திரனை யுடைமையால் பேதம் தொனித்தது. இங்ஙனமே பின்வருவனவற்றையும் கொள்க. முடியிலொரு.......... மதியாள் - தலையில் ஒரு கீற்றுச் சந்திரனையும் பாதத்தில் ஒரு கீற்றுச் சந்திரனையும், (சிவபெருமான் ஊடலின்போது பார்வதியின் பாதத்தில் வீழ்ந்து வணங்கும் போது சந்திரனும் பாதத்தில் படுவதால் இங்ஙன் கூறினர்) மூன்று கண்களில் ஒப்பற்ற வெற்றியுடைய சந்திரனையும் உடையவள். இவ்வடியில் சிவன்தன்மை அம்மைக்கும் கூறப்பட்டது. கொழுநகை............ பிறையினாள் - கொழுவிய ஒளிவாய்ந்த சிரித்தலாகிய பிறையும் இருப்பது பற்களாகிய பிறைச் சந்திரனோடு தொகுதியான முத்தினாலாகிய பிறையாபரணத் தையுமுடையவள், பற்களைப் பிறைச் சந்திரனாக உருவகித்தார். கும்பிடும் ......... வடிவம் - கும்பிடுவதை யொத்த தாமரை மலர்கள் குவியச் செய்யும்படியானதும் மேல் தேன் ஒழுகின்ற அல்லியரும்புகள் மலரச் செய்யும்படியான களங்கமில்லாத வெண்மையான சந்திரன் போன்ற வடிவம். பழுதகலும் என்னவே சந்திரனுக்குக் களங்கப் பழுதும் அம்மைக்கு அஃதின்மையும் கூறப்பட்டதால் பேதம் தொனித்தது. இவள் வடிவெலாம்... அகற்றும் - சந்திரன் வடிவின் ஒளியால் உலகவிருள் ஒழிகிறது. அம்மையின் வடிவவொளியால் பசு, பாச இருள் ஒழிகிறது. எனவே இதிலும் பேதம் காண்க. பதியெனும் பருதியொடு ............ கலையே - சந்திரன் தன் தலைவனாகிய சூரியனோடு ஒரு கலையோடு கூடிக் கலந்திடுவான். இது அமாவாசை தினம் நிகழும் என்பர். ஆனால் அம்மையோ எப்பொருட்கும் இறைவனாகிய சிவபெருமானோடு கூடி அர்த்தநாரியாக பலகோடி சந்திரகலைகளோடு கலந்து இருப்பாள். இதிலும் பேதம் காண்க. பசு - ஆன்மா. (5)

372. மயில் வடிவம் நம்மன்னை - இது சென்னையிலுள்ள மயிலாப்பூரில் கற்பகாம்பிகை மயில் வடிவமாகி ஈசுவரரைப் பூசித்தபோது அவர் கபாலமேந்திய கையினராகக் காட்சி தந்ததைக் காட்டுகிறது. இதனை ‘மயில் பூசிக்க வுற்றவர் கபாலக் கரத்தினர் கஞ்சம் போன்றாடிய தாளைப் பழிச்சுதும்' என்ற திருமயிலைப் பிள்ளைத்தமிழ் காப்புப் பருவத்தில் காண்க. மற்றும் கீழ்க்காணும் வரலாறும் உண்டு. மாயவரம் என்னும் தலத்தில் பார்வதி மயில் வடிவமாகிச் சிவனைப் பூசிக்கச் சிவபெருமான் ஆண்மயிலாக நடனஞ்செய்து மறைந்தருள இறைவனை யெண்ணிப் பிரிவாற்றாது பூசித்தார். இத்தலம் மயிலாடுதுறை, மாயூரம் எனவழங்கும். பெருமான் பெயர் மாயூரநாதர். தேவி பெயர் அஞ்ச னாயகி; மகன் வாகனம் - மகனான முருகன் வாகனம் (மயில்). இராகு, கேதுக்கள் பாம்புகளாதலால் மயிலுக்கு வலியதோ ரிரையதாகும் என்று கூறினர். குயில் வடிவு கொண்டதொரு கோதை:- மாயூரம் எனும் மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள நல்லக் குடியிலே கோயில் கொண்ட நாதன் பெயர் ஆலந்துறையப்பர் என்றும், நாயகியின் பெயர் குயிலாண்ட நாயகி என்றும் வழங்குதலால் அம்மை குயில் வடிவு கொண்டாள் என்பது விளங்குகிறது. திருநாவுக்கரசர் குறித்த 'குயிலாலந்துறை' அதுவே எனக் கொள்ளப்படுகிறது. முயற்கறை - களங்கம்; வெயில் வடிவு - சூரியன்; சோபம் - சோர்வு; விரிசெனா மித்தை தவிர் - விரிந்த செனித்தலையுடைய யோனிகளை நீக்கின; அயில் வடிவு கொண்ட முக்கண்ணி - வேல் போன்ற வடிவு கொண்ட மூன்று - கண்களை யுடையவுள். (6)

373. ஏனம் ஏகாமல் தொடர்ந்துவரு என்று பிரித்துச் சேர்க்க பாபம் போகாமல் தொடர்ந்து வருகின்ற என்று பொருள் கொள்க. நின்குலத்து எழில் அரசு - உனது சந்திரகுலத்தில் தோன்றிய அரசன்; ஏனம் - பன்றி; புரவி - குதிரை; சந்திரகுலத்தரசன், பன்றி, அவன் ஏறிவந்த குதிரை ஆகியன சிவகங்கையில் மூழ்கி பொன்னிறம் பெற்றனர் என்று கூறப்பட்டுள்ளது. மோகா விகாரத்தின் முனிவரன் கோபத்தின் சாபம் - தாரையின் மீது கொண்ட மோகக் கவலையால் பிரகஸ்பதி கோபத்தினால் கொடுத்த தேய்வடையும் சாபம்; போகாத ....... குரிசில் பெற்றது - முற்காலத்திலே சூரியவம்சத்து அரசனொருவனுக்குச் சிங்க நிறமுள்ள குமரன் பிறக்க அவனுக்குச் சிங்கவருமன் எனப் பெயரிட்டனர். இவன் வெண்குட்ட முடையவன். சிறிது நாளில் இராஜ்யத்தைத் துறந்து வெகு தூரம் வந்து கடைசியில் சிதம்பரத்தை யடைந்து பதஞ்சலி, வியாக்கிரபாதர்களைக் கண்டு அவர்கள் அனுக்கிரகத்தால் சிவகங்கையில் மூழ்கி வெண்குட்டம் நீங்கி உடம்பு பொன்னிறம் அடைந்து இரணியவன்மன் எனப் பெயரடைந்து அரசாண்டு தில்லையில் சிவத்திருப்பணி செய்து முத்தியடைந்தனன். இவன் 3-ஆம் சிம்மவர்மன் (கி.பி. 550-575) என்பர். இம்மூன்றாம் சிம்மவர்மனே ஐயடிகள் காடவர்கோன் என்பர். மாளாவரம் - சாகாத வரம். (7)

374. மால் - திருமால்; வெண்படாம் - வெண்மையான துணி; பங்கேருகக் கடவுள் - பிரமன்; கச்சை - அரைக்கச்சு; நச்சு அரா - விஷம் பொருந்திய பாம்பு; உன்மத்தர் - சிவபெருமான்; காணப் படாமுடி - பிரமன் அன்னமாக வடிவெடுத்தும் முடியைக் காண முடியாததால் காணப்படாமுடி எனப்பட்டது. கத்தைச்சடைச் சக்களத்தி முற்றத்தினில் - கத்தையாகவுள்ள சடையினிடத்தமர்ந்த சக்களத்தியான கங்கையின் வாசலில்; விச்சையாய் - கண்கட்டி வித்தை போன்று; ஏழை மதி - அறியாமையையுடைய புத்தி; இவளில் நீ மிச்சமோ - இவளைக் காட்டிலும் நீ அதிகமோ. (8)

375. சுந்தரக் கடவுள் - சிவபெருமான்; சந்திரன் மன்மதனுக்குக் குடையானது பற்றி "மன்மதன் சுடர்முடிக் குடையான நீ'' என்றார். தொண்டுபட்டு அடையார்புரம் - அடிமையாகி பகைவர்களான அரக்கர்களின் திரிபுரத்தை; சந்திரன், சூரியன் திருமாலின் கட்டளையால் திரிபுரம் எரிக்குங் காலத்துத் தேருக்குச் சக்கரமானார்கள்; தேர் வண்டி - தேர்ச் சக்கரம்; கந்தரத் தேவர் ......... சக்கை நீ - ஆகாயத்திலுள்ள தேவர்கள் சந்திரனது வளரும் போதுள்ள அமுதத்தை உண்ணுவர். எனவே உண்டபின் சக்கையே எஞ்சுமாதலால் இங்ஙன் கூறினர். காலினால் தேய்பட்ட நீ - தக்கன் யாகத்தில் வீரபத்திரன் சந்திரனைக் காலினாற் றேய்த்தான்; எனவே இங்ஙனம் கூறினார்; கைச்சட்டுவத்தினால்………………உச்சிட்டம்:- திருமால் மோகினி உருக்கொண்டு பாற்கடல் கடைந்த அமிர்தத்தை அசுரர்க்குத் தாராது அவர்களை மயக்கித் தேவர்கட்கே தரும்போது இரு அசுரர்கள் தேவ உருக்கொண்டு தேவர்களுடன் உட்கார்ந்து அமுதம் வாங்க அச்சூழ்ச்சியைச் சூரியனும், சந்திரனும் திருமாலுக் கறிவிக்க திருமால் பரிமாறின சட்டுவத்தாலேயே தட்டி வெட்டினார். அவைகள் இராகு, கேதுக்களாகி சூரியன், சந்திரன் மீது பகை கொண்டு விழுங்கி உமிழ்கின்றன. சட்டுவம் - அகப்பை; அரவு - கேது எனும் பாம்பு; உச்சிட்டம் - எச்சில்; வாரி - பாற்கடல்; சந்திரன் பாற்கடல் கடைந்தபோது 'தறி' யானதால் ‘வாரியிற் கடைப்பட்ட நீ' என்றார். அந்தரம் - ஆகாயம். (9)

376. இருஇதழ் மடித்தே தின்றெழு சினத்தசுரன் - இரண்டு உதடுகளையும் மடித்து அவைகளைத் தின்றுவிடுவதைப்போன்று எழும் கோபமுடைய சூரபத்மன்; இடியெனப் பிளிறிடும் பொறி - இடிபோன்றொலிக்கும் சேவல் கொடியடையாளம்; கதழ் சகத்திரம் மூடி - விரைந்து ஆயிரம் தோகைகளால் மறைத்து; கட்செவி தின்று - பாம்புகளைத் தின்று காளமேகப் பீலிவான் கங்குலின் எடுத்தாட - காளமேகங்களைக் கண்டு தனது தோகையை விரித்து மேகத்தினால் செறிந்த இருளில் ஆட; காளமேகம் - சப்த மேகங்களிலொன்று; சதமுற வழக்கில் ஆயிரங்கோடி அண்டங்கள் தவழும் வெண்திங்கள் முத்தும் தண்டாது வரும் - நிலையையுடைய முறைமையில் ஆயிரங்கோடி அண்டங்களில் விளங்கும் வெள்ளிய சந்திரனின்று உண்டான முத்துக்களும் குறையாது வரும். உனக்கு மதி தானும் அதி உண்டாகுமோ எனப்பிரிக்க. ஒவ்வொரு அண்டத்திற்கும் ஒவ்வொரு சந்திரனான தால் “அதிகமுறு மண்டலத்தில் மதிகள் வருமுன்னமே" என்றார். முருகன் சூரபன்மனை வென்றதால் அவன் ஆண்ட ஆயிரத்தெட்டுக் கோடி அண்டங்களிலுமுள்ள தனித்தனி சந்திரன் முத்துக்களைத் தருவானாதலால் இங்ஙனம் கூறினர். (10)

சிற்றில் பருவம்

377. அடிமுடியும் - அடிப்பாகமும் மேல்பாகமும்; மகமேரு நடு வசையாத தூண் - மேருமலையை நடுவில் அசையாத தூணாக்கி; அறை வீடு - அறைகளாகத் தடுக்கப்பட்ட வீடு; பதினாலு - மேலேழு, கீழேழு உலகங்கள்; முகடு - வீட்டினுச்சி; எழுகிணறு - ஏழு சமுத்திரங்களைக் குறித்து இங்ஙனம் கூறினர். இருவிளக்கு - சூரியன், சந்திரன் என்ற இரண்டு விளக்குகள்; பதவிப் பழங்கலம் - பதவிகளாகிய பழைய பானைகள்; தேக்கிட்டிடும் - தெவிட்டும்; அடுக்களை - சமையல் வீடு; திட மருவு - வலி பொருந்திய; உமாதேவி சிவபெருமானிடம் இருநாழி நெற்கொண்டு 32-அறம் வளர்த்ததால் "பச்சைநெல்.............சமைப்பித்து" என்று கூறினார். இதனை "இமையமலையரையன் மகடழுவக்கச்சி யேகம்பர் திருமேனி குழைத்த ஞான்று, சமயமவை யாறினுக்குந் தலைவிக் கீசர் தந்தபடி யெட்டுழக்கீராழி நெல்லு, முமை திருச்சூ டகக்கை யாற்கொடுக்க வாங்கி யுழவுதொழிலாற் பெருக்கி யுலகமெல்லாம், தமது கொழுமிகுதிகொடு வளர்க்கும் வேளாண் டலைவர் பெரும்புகழு லகிற்றழைத்தன்றே." (சேக்கிழார் புராணத் திருவிருத்தம்) என்பதில் உணர்க. (1)

378. மண்பற்று கால்கள் வைத்து - மண்ணைப் பற்றுகின்ற கால்கள் அமைத்து; ஊனினால் - மாமிசத்தால்; சிலபிரதிகளில் ஊணினால் என உள்ளது; கைம்மரம் - வீட்டின் பாய்ச்சு மரம்; வாசலொன்பது - நவத்துவாரங்கள்; மோட்டுவளை பக்கத்து வளைவரிச்சலும் - வயிற்றுப்புறமுள்ள எலும்புகளாகிய உத்திரத்தையும், சிறிய எலும்புகளாகிய வரிச்சல்களையும்; பழவினைச்சேர்கட்டி - பழைய புண்ணிய பாபங்களாகிய தானியங் கொட்டும் இடம் கட்டி; இன்ப துன்பங்கள் பாத்துண கண் விளக்கு மேற்றி - இன்ப துன்பங்களைப் பகுத்துணர்ந்தனுபவிக்க கண்களாகிய விளக்கு ஏற்றி; எழுவகைப் பிறவியில் 84-லட்சம் யோனி பேதம் என்பர். எனவே எண்பத்து நான்கு நூறாயிரம் பேதம் என்றார். (2)

379. ஆறுசாத்திரமும், நாலுவேதங்களும் பெரிய தூணாகவும், 28- ஆகமங்கள், ஐம்பெரும் பூதங்கள், 18- புராணங்கள் சிறிய தூணாகவும் உத்திரமாகவும், அறுபத்துநாலு கலைகளும் கைம்மரமாகவும் (வீட்டின் பாய்ச்சுமரம்), எழுபத்திரண்டாயிரம் நாடிகள் வரிச்சலுடன் ஆணிகளாகவும், உலகங்கள் இருநூற்று இருபத்து நாலும் தாமரைப்பூ வடிவாகச் செய்யப்பட்ட தட்டமாகவும், தொண்ணூற்றாறு தத்துவம் சன்னல்களாகவும், ஒன்பது வாசல்கள் கும்பங்கள் (கலசம்) ஆகவும், பொருந்திய இருபத்தோராயிரத்து அறுநூறு சுவாசங்கள் சிறிய ஓடுகளாகவும் தெளிவடையும் ஒப்பற்ற வீடுகட்டிக் குடியிருக்கின்ற பார்வதியே சிறுவீடு கட்டுவாயாக என்று பொருள்கொள்க. (3)

380. மறுதேருருட்டிவரு பொய்த்தேரையொத்த பெருவாழ்வைக் குறித்து - தேரழிந்தபோது மற்ற சேமத்தேரில் வருவதைப்போன்று ஓர் உடல் அழிந்தால் மற்றொரு உடலில் புகுந்து வரும் பொய்த்தேரையொத்த மனித வாழ்வைக் குறிப்பது போன்று; உலகெலாம் வலசாரி, இடசாரிவருமிந்திரன் தேர் - உலக முழுவதும் வலப்பக்கமும் இடப்பக்கமுமாக சுழன்றுவரும் இந்திரன் தேர்; வளர் தூளிபடலமாக - அழிய; உறுதேர் உருட்டிவொரு மறுதேர் இலாது - தன்னையடைந்த தேரைச் செலுத்தி ஒப்பற்ற மற்ற தேர்கள் இல்லாமல்; அண்டம் ஓர் ஆயிரத்தெட்டும் ஒரு குடைக்கீழாகும் மேலாகு தேவர்களும் உருவுசிறு தூளாக ஆயிரத்தெட்டண்டங்களையும் ஒரு வெண் கொற்றக் குடையின் கீழாகுமாறும் வானிலுள்ள தேவர்களின் வடிவமும் குன்றிச் சிறியதாகுமாறும்; எறிதேர் - எரிதேர் என்பது எதுகை நோக்கி நின்றது; சந்திரசூரியர் தேரும் எழுதூளிபடலம் மறைய - சந்திரசூரியர் தேரும் இந்திர ஞாலத்தேரினால் எழும்பிய புழுதியின் தொகுதியால் மறைய; சூரன் - சூரபத்மன்; இவன் சிவபிரான் தந்த இந்திரஞாலத் தேர் கொண்டு சண்டை செய்தான். பின் மாயை செய்தும் ஆற்றாது கடல் நடுவண் மாமரமாக நிற்க அதனை முருகன் வேலால் இருபிளவாக்கினார். (4)

381. முச்சில் - முறம்; புஷ்பராகம் - ஓர்வகை ரத்தினம்; குழிசி - பானை; குழிசியில் என்பது குழிசில் என நின்றது; உலை - உலைநீர்; பவளவிறகு - பவளமாகிய விறகு; பச்சைமணி பச்சடி - மரகதக் கற்களாகிய பச்சடி; கோமேதகம் பொறிக்கறிகள் - கோமேதகமே பொறித்தலாலுண்டான பதார்த்தங்கள்; நஞ்சமுண்டவர் - சிவபிரான்; அமுது கொண்டு - சாப்பிட்டு; பாலடிசில் - பால்கலந்த உணவு. (5)

382. மாதவர் - மிகுந்த தவஞ்செய்யும் முனிவர்; சத்தினி சத்தினி என்பது வலியுற இரட்டித்தது போலும்; சத்தினி பாதமடைந்தவர் - சிவசத்தி பதிந்ததனால் சாயுச்சிய பதவியடைய இச்சிப்பவர்; தற்பரை - உமை; அளைந்திடு - கலந்திடு; நிற்குணி - குணாதீதமானவள்; வித்து இமவான் மகள் என்றிட - காரணமாக இமயமலையரசன் மகள் என்று கூறுவதற்காக; விற்கணையொத்த புரூர நெடுங்கணி - வில்லையும் அம்பையும் முறையே ஒத்த புருவத்தையும் நீண்ட கண்களையும் உடையவளே; மெய்க்கு அணியக் கணியாய் - உடலுக்கு அழகுடைய கண்களையுடையவள்; சித்தினி, பற்பினி, சாமளி, சங்கினி ஆகியவை உமாதேவியின் பெயர்கள். சிற்பரன் என்பதன் பெண்பால் சிற்பரை. (6)

383. முக்கணர் - சிவபெருமான்; பொக்கணர் - விபூதிப் பையையுடையவர்; முத்தமிழ் சொற்றவர் - மூன்று தமிழையும் அகத்தியருக்குச் சொன்னவர்; அல் பரதத்துவர் - தீமையல்லாத மேலான தத்துவங்களை யறிந்தவர்; கீதமறிந்தவர் - இராவணன் சாமகீதம் பாடி கைலையினின்று மீண்டது காண்க. அட்டவர் - அழித்தவர்; தர்க்கமிட்டது - நக்கீரரோடு மகளிர் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டென வாதித்தது காண்க. அப்போது அழித்தருளாமவர் - அப்போது அழித்தருளியதையுடைய அவர்; திகம்பரி - பார்வதி; சிற்சபை - சிற்றம்பலம். (7)

384. மூவர் - திரிமூர்த்திகள்; சித்தம் - மனம்; சிட்டி - உண்டாக்கப்படுவன ; நுதல் - நெற்றி; பிரமனைச் சிவபெருமான் சத்தியிடம் பிறக்கச்செய்து படைப்புத் தொழிலுக்காக்கினர். இங்ஙனமன்றிப் பிரமன் சிவபெருமான் நெற்றியில் பிறந்ததையும் ஒற்றுமைபற்றி ஏற்றதாகக் கொள்ளலாம். தயித்தியர் - அசுரர்; முச்சகம் - மூன்று உலகம்; சிக்கு அற - துன்பம் நீங்க; இழைத்தவள் + நீ - இழைத்த வணீ. (8)

385. பசுமை + இழை - பாசிழை; இழை - ஆபரணம்; பச்சிள நீர்த்தன பாரம் - பசுமையான இளநீர் போன்ற தனத்தின் பளு; பிடி - பெண்யானை; அச்சுதன் - திருமால்; களவின்கனி அச்சுறும் மைக்குழலாய் - களாப்பழத்தையே பயப்படுத்தும் அவ்வளவு கரிய கூந்தலையுடையவளே; அச்சுதன் - அழிவில்லாதவன்; இங்கு விநாயகரைக் குறித்தது; சிவன் திரிபுரசங்கார காலத்தில் விநாயகனை நினையாததால் அச்சு முதலியன முறிய பின் விநாயகனைத் தொழுது புறப்பட்டனர். அதுவே "அச்சிறுபாக்கம்" என்று கூறப்படும் ஊராகும்; வச்சிர வச்சிரன் மார்பு பிளந்திட - வச்சிராயுதத்தையுடைய வச்சிரதேகத்தையுடைய இந்திரன் மார்பு பிளக்குமாறு; "வைச்சிர" என்பது ‘வச்சிர' என்றானது. வை - கூர்மை; வச்சிர கல் புடை தோள் - வச்சிர மலையையும் புடைக்கும் அத் தகையவலிவுடைய தோள்; மைந்தன் - முருகன்; செச்சை - வெட்சி; பாணி - கைகள்; வச்சிர வச்சிரன் மார்பு .............................. ...................... மைந்தனை :- முருகன் இளைய வயதில் மேருமலையின் முடிகளைப் பறிப்பதும் கதிரவனைத் திங்கள் மண்டலத்தில் எறிவதும் கருடனையும் வாசுகியையும் போர் செய்யச் செய்வதும் போன்ற விளையாடல்களைச் செய்தார். இவ்வாறு செய்யத் தேவர்கள் கலங்கி முருகனைக் கண்டு எதிர்த்தார்கள். இந்திரன் தலைமை வகித்துப் போர் தொடங்கி வஜ்ராயுதத்தை எறிய அது முருகன் மீது பட்டுத் தூளாயிற்று. ஐராவதத்தையும் ஆற்றலிழந்து விழச் செய்தார். பின்பு இந்திரன் வேலொன்றை ஏவ அது ஒரு சிறு புற்போல முருகன்மீது பட்டது. முருகன் இந்திரன் முடியை ஒரு கணையினாலும், கொடியை ஒரு கணையினாலும் மார்பு கவசத்தை ஒரு கணையினாலும் அழித்தார். மார்பிலே ஏழு கணைகளை விட அவன் சோர்ந்து வீழ்ந்தான். இறுதியில் தேவர்கள் பின்னிட நாரதரால் இறந்தவர்களை எழுப்பினர். (9)

386. கோடி நவண்டம் - பல புதுமையான உலகம்; நவ + அண்டம் - நவண்டம், அகரம் தொகுத்தல்; ஓடி வளைந்தும் உன் அத்தன் அழித்தனராம் - ஒடியும் வளைந்தும் உனது தலைவன் அழித்தனராகிய; அக்கிரமத்தவராம் அவர் தம் குணம் அப்படி நிற்கு + இலை எனப்பிரிக்க; நிற்கிலை - உனக்கு இல்லை; உற்பலம் வைத்திடு பாணி - குவளை மலரைத் தாங்கிடும் கைகள்; பொற்றுகள் - பொன்னாகிய தூள்; பார்வதிக்குக் கரும்புவில்லும் குவளை முதலிய மலரம்புகளு முண்டாதலால் "உற்பலம் வைத்திடு பாணி" என்றார். ஆண்மக்களின் சிற்றில் பருவத்தில் ஆண்குழந்தைகள் பெண்கள் கட்டிய சிற்றிலைக் கலைப்பராதலால் "அத்தனை சிற்றிலும் ... நிற்கிலை " என்றார். (10)
-
அம்மானைப் பருவம்

387. தெண்டிரை - தெளிந்த அலை; அதனை ஒப்பென உரைத்திடினும் முத்திதருமோ - எனப் பிரிக்க, முத்தி - மோட்சம்; காமதேனின் - பசுவின்; பாசவிருள் - ஆசையாகிய துன்பம்; மைந்தர் .................... பொய்ம்மையாமோ "மக்கண்மெய் தீண்டலுடற்கின்பம் மற்றவர் சொற் கேட்டலின்பம் செவிக்கு” என்ற குறளை ஒப்பு நோக்குக; "குழலினிது ................ குதலைமொழி'':- குழலினிது யாழினிது என்ப தம்மக்கள், மழலைச்சொற் கேளாதவர்'' என்ற குறளை ஒப்பு நோக்குக. குழகன் - சிவன்; குதலைமொழி - மழலைச்சொல்; வாய்மை - உண்மை. (1)

388. வாக்குகள் சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்று நான்கு வகைப்படும். இலஞ்சி - நாபி; நாபியினின்று வருவது சூக்குமையெனும் வாக்கு; உரனொடு கண்டம் - நெஞ்சமும், கழுத்தும் (உரம் - மார்பு) இவைகளைக் கொண்டு பிறப்பது மத்திமை; உச்சி - தலை; நாசி - மூக்கு; பல் அண்ணம் இதழ் நாவினில் - பல், மேல்வாய், உதடு, நாக்கு இவைகளினின்று; “கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றின்ப மாதா பிதாவு வுமெய்தும்": கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு, மொண் டொடி கண்ணேயுௗ'' என்ற குறளை நோக்குக. பரவும் - துதிக்கும்; பூவை - நாகணவாய்ப் புள். (2)

389. பாவை - பொம்மை; மறிதிரை - மடங்கும் அலைகள்; வழங்கிடும் பாவை - உலாவுகின்ற மீன், ஆமை முதலியவற்றின் பொம்மைகள், (நீர்வாழ்வன கூறினார்); ஒல்லையின் நெளிந்து தாம் ஊர்ந்திடும் பாவை - விரைவில் நெளிந்து ஊர்வனவற்றின் பொம்மைகள்; உறுதாம் மரப்பாவை - நிலைத்துத் தங்குவனவாகிய மரத்தின் பொம்மைகள்; ஒருபொருப்பு பாவை- ஒப்பற்ற மலைகளின் பொம்மைகள், ‘பொருப்பு’ என்பதில் புகரம் தொக்கது. ஐம்பொறிப் பாவை - மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறியையுடைய பொம்மைகள். எல்லறிவு - ஒளிவாய்ந்த அறிவு; சாக்கிரம் - கலாதிகளுடனே கூடிநின்று சிருட்டி தொடங்கிக் கன்மத்துக்கீடாக நானாயோனிகளிலும் புக்குழன்று சுவர்க்க நரகங்களை யனுபவித்துச் சர்வ சங்கார மளவாகச் சனன மரணப்பட்டுத் திரியும் சகலாவத்தையான தன்மை; பூதசார் வடிவாம் - உடலைச்சார்ந்த வடிவாம்; எண்பத்து நாலிலக்கத்தான கொள்கை - எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதமுடைய கொள்கை; நற் பூவை- நல்ல பெண்ணே; முதற்கண் எழுவகைப் பிறவியையும் பொம்மைகளாகக் கூறியன காண்க. (3)

390. முக்கண்ணி - பார்வதி; கடவுள் - சிவன்; கமழ் சட்டுவம் பழக்கி - வாசனை வீசும் அகப்பையினால் பரிமாறப் பழக்கம் செய்து; இன்னமுத மூட்டி - உணவூட்டி; எண்மர்த்திரியும் ஏணை - எட்டுத் திக்குப் பாலகர் தங்கும் ஆகாயமாகிய ஏணை; பேராட்டி - பெருமை பொருந்திய ஆடுதலையுடையவளே; போராட்டினீ என்பதற்குப்போர் + ஆட்டில் + நீ என்று பிரிக்க. வீணழற்பாலை - வீணாக அழாதே; விழி நீர் - கண்ணீர்; ஊறு பால் - சுரக்கின்ற பால்; மார்பம் - அம் சாரியை; அரும்பாம் முலைகொடுத்து - அரும்பு போன்ற முலையினின்று பால் கொடுத்து. (4)

391. நாடரும் - தேடுதற்கரிய; சாம்பூநதச் செம்பொன் - சாத ரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூந்தம் என்ற நால்வகைப் பொன்களிலொன்று; நவமணி - ஒன்பதுவகை இரத்தினங்கள்; நவம்பெறும் புவனங்கள் - புதுமைபெறும் உலகங்கள்; வயின் - ஏழாம் வேற்றுமையுருபு; குடிலை - சுத்தமாயை. இது கர்த்தாவினுடைய இலயபோக அதிகாரங்களுக்கிடமாய்ச் சுத்தமாய்ச் சடமாய்க் கர்த்தாவுக்குப் பரிக்கிரக சத்தியாய் நித்தமாய் ஒன்றாய்ச் சுத்தா சுத்தமிரண்டாலும் வியத்தமாயிருப்பது; கொல்லியம்பாவை - கொல்லி மலை மீதிருக்கும் பொம்மை. இது கண்டார் உயிருண்ணுந் தன்மை வாய்ந்தது; மிக்க அழகும் வாய்ந்தது; வீடருங்கைத்தாயெனும் - நீங்குதலில்லாத செவிலித்தாயை போன்று; மோகினி - அழகிய பெண் உருவம். (5)

392. பாந்தள் - பாம்பு; பத்திபாய்ந்து - வரிசையாகப் பரவி; குறுங்கெண்டை - சிறிய கெண்டை மீன்கள்; மாவின்வடு - மாங்காயின் பாதிபாகம்; மதரரிக்கண்கள் - மதர்த்த செவ்வரிபரந்த கண்கள்; நின்பலமணிக் கொப்பு இனம் மறிந்து விளையாடல் எனவும் - உனது பல மாணிக்கம் பதித்த கொப்பு எனும் ஆபரணங்கள் மடங்கி விளையாடுதல் போன்றும்; சாந்திளங் கொங்கை - சந்தனம் பூசிய இளைய தனம்; நின் கணவர் கண்கள் தாம் தாவி - உனது கணவனான சிவபெருமான் கண்கள் தாவி; தாம் - அசைநிலை; தண்டாது - நீங்காது; செங்காந்தள் மலர் - சிவந்த காந்தள் பூ (கைகள்); தண்தாது - குளிர்ந்த மகரந்தம்; காந்திதரு - ஒளிதரு; செம்பொன் இசை இந்திர நறுநீலக் கழங்கு - செம்பொன்னினால் இணைந்த மேன்மையான கருமை நிறமுள்ள கழங்கு; பாம்பின் மாணிக்கமணி அழகிய பூவில் பச்சை வரிசையாகப் பதிந்து ஆடுவதைப் போன்றும் தாமரையில் வசிக்கும் கெண்டைமீன் வரிசையுடன் பாய்ந்து விளையாடுவதைப் போன்றும், மதர்த்த கண்கள் நின்பல மாணிக்கங்கள் பதித்த கொப்பு எனும் ஆபரணங்களில் மடங்கி விளையாடுவதைப் போன்றும், சந்தனம் பூசிய இளைய தனத்தின்மீது உனது கணவர் கண்கள் தாவி விளையாடுவதைப்போன்றும், நீங்காது வண்டுகள் காந்தள் மலர்மீது மகரந்தத்தை உண்ணுவது போன்றும் கழங்கு விளையாடு வாயாக என்று முடிக்க. (6)

393. பழகுபெறு - பழகுதலைப் பெற்ற; பஞ்சரம் - கூடு; பூவை - மைனா; பன்மணியிழைத்த படிவக் குழ மணப்பிள்ளைகொடு - பலவகை இரத்தினங்களையிழைத்த உருவத்தையுடைய இளைய மணம் செய்யும் பிள்ளை போன்ற பொம்மை கொண்டு; வண்டல் - ஓர் விளையாட்டு; குங்குமச்சேறு ஆடியும் - குங்குமங் குழைத்துப் பூசியும்; கொடுங்கை யாழ் - வளைந்த யாழ்; அழகுபொலி - அழகு விளங்கும்; ஆயவெள்ளம் - தோழியர் கூட்டம்; அணிசுண்ணம் - அழகிய வாசனைப் பொடி; அன்னத்தின் நீலக் கலாபமயில் ஆனந்தம் ஆர்ந்தேறி விளையாடி - அன்னத்தின்மீதும் நீலத்தோகையுடைய மயிலின்மீதும் ஆனந்தம் பொருந்தி ஏறி விளையாடி; கழக முத்தமிழ்பாடும் இகுளையர் - சங்கத்தின் முத்தமிழையும் பாடும் தோழியர். (7)

394. ஓதை - மதில்; பதிதாரகணம் ஆரமதாய் - ஆகாயத்தில் பதிந்த நட்சத்திரக் கூட்டம் பூத்த நந்தவனமாகவும்; தரிசுகள் சுருதிகள் தானாக – [சிலம்பிலுள்ள] மாணிக்கப் பரல்கள் வேதங்களின் சப்தமாக; தனவரை தமனிய வரையாக - முலைகளாகிய மலைகள் பொன் மலையாகவும்; சுந்தர விருகரம் - அழகிய இரண்டு கைகள்; எறிதர - வீச; சுரிதரு -சுழற்சியமைந்த; நுடங்கிடை மின்என - தளரும் இடுப்பும் மின்னலைப்போன்று; இருபுருவம் இந்திர வில்லிட - இருபுருவங்களும் இந்திரவில்லைப்போன்று வளைய; இழை யணிமணிசொரி துளியென - நகையில் அணிந்த இரத்தினங்கள் சொரிய அவை மழைத்துளி போலவும், கயல் - கயல்மீன் , கண்ணடி - கண்ணாடி. (8)

395. வேறு ஆம்முடி - உடலினின்று வேறுபட்டதாயுள்ள கிரீடம்; தளையவிழ் தரமூரல் முகமும் - இதழ் மலர்ந்ததையொத்த புன்சிரிப்புடைய முகமும்; முடியும் முகமும் "நிகநிக" வென என இயைக்க; நூலின் இடை - நூல் போன்ற மெல்லிய இடை; ஆடையெழில் - ஆடையின் அழகு; ஓரை எறியும் மாதர் விளையாட்டில் அம்மனைகளை வீசும் போது; ஓரை - ஓர் விளையாட்டு; அம்மனை வீசும்போது கையிலுள்ள வளையல்கள் சப்தத்தைச் செய்தன; ஓதல் இசை - சொல்லும் இசை; நாவின் இடை - நாவில் சதாசொல்லுவது; பளபள, குமுகுமு போன்றன இரட்டைக் கிளவிகள். (9)

------------------------------
பந்தாடற்பருவம்

396. சில்லெறிந்தாட - மகிழ்ச்சியுடன் வீசியாட; சில் - குளிர்ச்சி, இங்கு மகிழ்ச்சியைக் காட்டியது. வளைச்சக்கரவாளகிரி - வளைந்த சக்கரவாள மலை; ராகு கேதுக் கயிறு - இராகு கேதுவெனும் பாம்புகளாகிய கயிறுகள்; அந்தரத் தாராகணம் - ஆகாயத்திலுள்ள நட்சத்திரக் கூட்டம்; அம்பரம் - ஆகாயம்; ஆயிரம் படம் - ஆயிரம் தலை களுடைய ஆதிசேடன்; வெள்ளி வேதண்டம் - வெள்ளி மலை; மேல் எண் திசாமுகமும் மூதண்ட கூடத்து வேதண்டம் - மேலுள்ள எட்டுத் திக்குகளினும் பழைய உலகங்களிலுள்ள மலைகள்; உமையவளும் அவள் தன் கணவனும் வீற்றிருப்பதனால் "வெள்ளி வேதண்ட மொழிய'' என்றார். (1)

397. செந்தாமரைப் பதம் - செந்தாமரை மலர்போன்ற பாதம்; முழந்தாள் பந்து - முழங்காலாகிய பந்துகள்; பந்து அசைந்து ஆட - பந்து ஆடித் தளர; பந்துக் கொண்டை - பந்து போன்ற கொண்டை; நந்தாத - கெடாத; நயனம் - கண்; குழை - குண்டலம்; அம்மனையாட - அம்மனைக் காய்போன்று ஆட; கழங்கு ஆட - கழற்காய் போன்று ஆட; சுட்டி - ஓர் வகை ஆபரணம் (சூரியபிறை, சந்திரபிறை என்னும் ஆபரணம். நெற்றியில் தொங்க விடப்படுவது); பணிகள் சதுரங்கம் விளையாட - ஆபரணங்கள் சதுரங்கம் போன்று ஆட்டமாட; சிலதியர் - தோழியர்; இப்பாட்டில் பந்து பல உறுப்புகளுக் குருவகப் படுத்தப் பட்டிருப்பதும், கழற்காயாடல், அம்மனையாடல், ஊஞ்சலாடல், சதுரங்கமாடல் முதலியன உவமிக்கப்பட்டிருப்பதும் காண்க. (2)

398. கோளம் - உருண்டை; சித்து - ஓர்வகை மாயவித்தை; வித்து - விதை; பை - கருப்பை; முளைத்து - தோன்றி; கிடப்பன - படுத்திடுவன; இருப்பன - உட்கார்ந்திருப்பன; தருக்கொடும் முறுக்கி நெளியா இத்தக மிதத்திடுவ - செருக்கொடும் விரைந்து நெளியும் இத்தகைய மிதந்திடு முயிர்கள்; எத்தனை இரைத்தும் இரையா இப்படி வகுத்த - ஒலிப்பவை எத்தனை சப்தமில்லாதன எத்தனை இப்படியாகப் பிரித்த, உயிர்ப்பந்து உயிர்களாகிய பந்துகள்; செப்பு - திசைச் சொல். (3)

399. அம்மை வீசும் முத்துப் பந்து கையிலிருக்கும் போது செம்மையான கையினது சிவப்பினால் பவளமணியின் நிறமாகவும், மேலெழும்பும்போது உடலின் பச்சை நிறத்தினால் பவளநிறம் மாறி பச்சைநிறமாகவும், கரிய கண்களுக்கருகில் வரும்போது கருநிறமுற்றும், திரும்பி வரும்போது உதட்டினிடம் வருங்கால் அதன் சிவப்புநிறம் ஏறவும், அங்ஙனம் நிறங்கள் மாறுவதைக் கண்டு சிரிக்க அச்சிரித்தலின் வெள்ளிய பற்களின் நிலவொளியினால் வெண்மையாகி பழைய வெண்மையான முத்தின் வடிவத்தைப் பெற்றுப் பூமியிலடிப்பட்டு உயர்ந்து ஓடி நின்று இரண்டு, குங்குமக்குழம்பு பூசிய கொங்கையருகு சேர்ந்து பசலை நிறமான பொன்னிறம் பந்தில் மூடப்பெற்று, கூந்தலருகில் வீச அப்பந்தும் கருநிறமுற்றுப் பொருந்த பந்து விளையாடுக எனப்பொருள் கொள்க. முத்துப்பந்து வெண்மை நிறமானதால் அந்தந்த உறுப்புக்களை யடையும்போது அதனதன் நிறங்களைக் கிரகித்துக் கொள்ளும் இயல்புடையது. அதரம் - உதடு; பங்கயக் கடவுள் - பிரமன்; உறு கறுப்பு உந்தியிட - மிக்க கருநிறம் மேற்கொண்டு முன்பு நிற்க. (4)

400. கிள்ளை - கிளி; நாகணவாய்ப் புள் - மைனா; தண்டனை பிறக்கும் - தண்டனை கிடைக்கும்; கந்துகம் - பந்து; சக்கரவாகம் - சக்கரவாகப் பறவை; அஞ்சன விழிக்கு நிகரான சஞ்சரிகம் - மை பூசிய கரிய கண்களுக்கு ஒப்பான வண்டு; சகோரம் - சந்திரன் நிலவை யுண்ணுமோர் பறவை; பொடித்து எழும் - விரைந்து மேலெழும்; பூந்தவள் நகை செய்து - அழகிய வெண்மை ஒளிதோன்றச் சிரித்து; காந்தளங்கை - காந்தள் மலர்போன்ற கை; போர் கட்டடிப்பதென்ன - நெல் தாளை நெல்லுதிரக் கட்டி அடிப்பதைப் போன்று; படித்தலந் தன்னிலெதிர் நின்ற பாங்கியர் - பூமியில் எதிரே நின்ற தோழியருடன்; கொங்கைக்கு நிகர் பந்து ஆகவே அதையும் வென்று ஓட்ட "போர் கட்டடிப்பதைப்போன்று அடி" என்றார் மற்ற கிளி, அன்னம், வண்டு முதலியன ஓடி விட்டதால். (5)

401. நுடங்கிட - அசைய; குழைமேல் - குழையுள்ள காதின் மேல், தானியாகுபெயர்; மை + அங்கண் கயல் - மை பூசிய அழகிய கண்களான கயல்கள்; மறிந்திட - நெருங்க; பிடர் - கழுத்தினடிப் பாகம்; குழல் - கூந்தல்; கந்தரம் - கழுத்து; இங்கிதம் - இன்பம். (6)

402. கண் செவிக் குழையாளர் கண்டு ஒளிர் கண் பசப்புற - மூன்று கண்களையும் செவியில் குண்டலத்தையுமுடைய சிவபெருமான் கண்டு ஒளிர்கின்ற கண் துன்பத்தால் வருந்த; ஆழ் குடங்கை - ஆழ்ந்த உள்ளங்கை; பாடகம் - சிலம்பு; ஒத்திட - தாளம் போட; சிற்றிடை நூல் நுடங்க - சிறிய இடை நூல் போன்று அசைய; எண் சொலிச்சொலி எண்மடங்கு மிக்குச் சொலிக்கும்; சொலிச்சொலி- இரட்டைக் கிளவி; பொற்புடன் - அழகுடன்; பண் சொலிச் சிறு தாளம் - இசை ஒலிக்கும் சிறிய தாளம்; தாளத்தையொத்த பந்து என்க; எண் சொலிச்சொலி யங்கை என்றும் அங்கை மாறி இரண்டும் ஒத்திட எனவும் பிரித்துக் கூட்டுக.

403. பஞ்சகிர்த்தியம் - ஐந்து தொழில்கள்; தூது சென்றவர் - திருமால் (கண்ணவதாரத்தில்); பஞ்ச லட்சணம் காவியம் - ஐந்து வித இலக்கணம் அமைந்த இலக்கிய நூல் (எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன); அஞ்சனம்-கருமை; பாணி கொஞ்சிய பஞ்சரக்கிளி - கையினின்று கொஞ்சிய கூட்டுக் கிளி; பஞ்சுரம் - பாலை நிலத்து இராகம்; விபஞ்சி - வீணை; விபஞ்சியையுடைய வித்தகி என்க. பஞ்சி யொத்திடு பாத சிந்துரி - பஞ்சைப்போன்ற மென்மையான சிவந்த பாதமுள்ள உமையே; சிந்துரி - சிவப்பு நிறமுடையவள். (8)

404. பந்தனைப் பிணி - கட்டாகிய நோய்; பந்தினைத் தன பாரம் அந்தரி - பந்தினைப்போன்ற தனபாரமுடைய அந்தரியே; பந்தமற்ற பவானி- தொடர்பு நீங்கின பவானியே; பவனது மனைவியாதலால் பவானியாயினள்; பந்தர் இட்டு உலகு ஏழும் நின்றவள் என்று பிரிக்க; பைந்தருக்கு இணையான - பசுமையான கற்பகத் தருவுக்குச் சமமாகக் கொடுக்கும், மற்றும் பைந்தரு என்பது பச்சை நிறமுடைய திருமாலைக் குறிப்பின் அவருக்கு இளையான (தங்கையான) சங்கரி என பிரதிபாடத்திற்குப் பொருள் கொள்க. (9)

405. இமவான் - இமயமலையரசன்; சுபம் - நன்மை; வாம தந்திரி - இடப் பாகத்தின் அலங்காரத்தை யுடையவளே. (10)
----------------------------------
பொன்னூசற்பருவம்

406. இக் கருகும் முகில் அளகு - இந்தக் கரிய மேகமொத்த கூந்தல்; பிறை மகர குண்டலங்கள் - பிறைபோன்றதும் சுறா மீன் போன்றதுமான குண்டலம்; வள்ளைச் செவி - வள்ளைப் பூப்போன்ற காது; இரு பருதி - இரு சூரியன்; மன் ஊசல் - நிலைத்த ஊசல்; மதி முத்தாரத்திற்கும், உடு (நட்சத்திரம்) கொங்கைகளுக்கும் உவமையாக்கப்பட்டது காண்க. என் ஊசல் ஆடும் வினை தன் ஊசல் ஆடாமல் - என்னுள் ஊஞ்சலாடும் இருவினைகளும் தன் இஷ்டப்படி சுற்றாது; இனிய தமனியம் இழைத்து அணியும் நூபுரம் ஆட- இனிய பொன்னால் இழைக்கப்பட்டு அணியும் சிலம்பு ஆட; கலாபம் - பதினாறு கோவையுள்ள மணி; இரு மின்னூசலாட - இரண்டு பெண்கள் (திருமகள், கலைமகள்) ஊஞ்சலை ஆட்ட. (1)

407. விடாமல் விடயம் அடுத்தடுத்து ஓடி வால்போல் - அழியாமல் விஷயங்கள் அடுத்தடுத்து வருவது போன்று; அலகில் - அளவில்லாத; எறிசுடர் விளங்கு விண்மணி பலகையாக - வீசுந் தண்சுடர், வெண்சுடர் விளங்கும் ஆகாயம் அழகிய பலகையாகவும்; இரசதக்கிரி - வெள்ளிமலை; அண்ட முகடு ஏறும் உத்திரமாக என்று பிரிக்க; பொறியரவினுக்கு அரசு - படப்பொறியுடைய பாம்புகளுக்கு அரசனான ஆதிசேடன். (2)

408. மதிபருதி - சந்திரனும் சூரியனும், உம்மைத்தொகை; நல்வினைகள் தீவினைகள் துன்பமுடன் இன்பங்கள் நாள்தோறும் ஊசலாட என்று பிரிக்க; வீடு தரும் - மோட்சம் தரும்; பொருவில் மண ஈசன் - ஒப்பற்ற மகிழ்ச்சியையுடைய தலைவன். (3)

409. விறலியர் எனக்குழுமி - பாண்மகளைப் போன்று கூடி; விளரியாழ் - ஓர் வகையாழ்; இசைமூரல் மருவு விஞ்சை மெல்லியர் எனக் கூட்டுக; இசையும், அழகிய பற்களும் பொருந்திய வித்தையைக் கற்ற பெண்கள்; சில் அரி முழவு - இனிய அழகிய குடமுழா; இரட்ட - அசைக்க; கொன்சொரியும் வேல்விழி - அச்சமிகும் வேல் போன்ற கண்; குமரி மயிலென அருகு கவரிபணி மாற - இளைய மயிலைப் போன்று அருகாக சாமரைகளை மாறி மாறி வீச; தென் சொரி பசும்பாகு விளை கிளவி - அழகு மிகும் இளைய வெல்லப்பாகு போன்ற இனிமை விளையும் சொல்; சிலதியர் - தோழியர்; சிவிறி - நீர்வீசுந் துருத்தி. (4)

410. ஆவி - உயிர்; என்னமே - என் அம்மே என்பதன் தொகுத்தல்; இன்னம் - இன்னமும்; மன்னும் நீ - தங்கும் நீ; கன்னிகாரத்தில் - கோங்கு மலரைக் காட்டிலும், முதலாகு பெயர்; கோங்கின் பூவரும்பைத் தனங்களுக்கு உவமை கூறுவராதலால் 'கன்னிகாரத்தில் களித்த விரு கொங்கை' என்றார். பொன்னி - காவிரியாறு (5)

411. நாறுபூ - வாசனை வீசும் பூ; நாளிகேரம் - தென்னை; இளநீர்கள் நீரில் சிந்த அதைக்கண்டு இரையென வாளை மீன்கள் பாய; சிந்த முதுவாளை எனப்பிரிக்க; வீறுசோலை - பெருமை பொருந்திய சோலை; வேரி - தேன்; வீழுமென்கனி - வீழ்கின்ற மெல்லிய பழம்; நாறு - நெல் நாற்று; வேலை வேலி - கடல் சூழ்ந்து வேலியாகவுடைய நிலம்; கழை - கரும்பு; ஆலவாலம் நிறைசாலி - வயல்களில் நிறைந்த சாலிப் பயிர்கள்; ஊறுகேணி - சுரக்கின்ற குளம்; ஆலை - கருப்பஞ்சாறு. (6)

412. ஊர் விமானம் - ஊர்கின்ற விமானம்; ஓவில் - நீங்காத; மஞ்சரி - மாலையை யொத்தவளே; ஓதொணாத - சொல்ல முடியாத; ஊழிதொறும் - யுக முடிவுதோறும். (7)

413. காசு + உலாவிய கலாப கஞ்சுளி - ஆடைகள் நிரம்பிய பதினாறு கோவையுள்ள மணியையுடைய சட்டையையுடையவளே; பாசமானது விமோசனந்தரு எனப் பிரிக்க; கொந்தளி - மயிரையுடையவளே; ஊசலாடும் வினை - மாறி மாறி உடலில் ஊசலாடும் தீவினை; மாசு இலாத மணியான அம்கணை - குற்றமற்ற மணியான அழகிய கண்களையுடையவளே. (8)

414. ஆதிபோதனி அனாதி அஞ்சனி - முதற்காரணமான அறிவுடையவளும், அனாதியானவளும், கருமையானவளுமா யுள்ளவளே; நீதிநூல் நெறி வழாது அசைந்திடு பொன் - எனப் பிரிக்க; வழாது - தவறாது; நீலலோசன விசால வஞ்சனி - கரிய பரந்த கண்களையுடைய பெண்ணே; ரஞ்சகி - இன்பமுடையவளே; ஞான தேசகி - ஞானத்தலைவி: பினாக நெஞ்சகி: - திரிசூலங்கொண்டு தைரியமாயுள்ளவளே; ஓதை நாதன் - சிவபெருமான்; ஆயி - காளியின் பெயர். வஞ்சனி - பெண்: வஞ்சினி என்பது வஞ்சனி என்றிருக்க வேண்டும். (9)

415. தோள் இவர்ந்து ஒளிர் - தோள்மீதெழும்பி பிரகாசிக்கின்ற; காரபாரகுழல் - கரியபாரம் பொருந்திய கூந்தல்; மார் - மார்பு: மதுமாலை - தேன் பொருந்திய மாலை; சாமரைகள் மூசும் வெண்டிரையின் - சாமரைகள் மொய்க்கும் வெண்மையான அலையைப்போல; பாததாமரை - உருவகம்; பாவியேன் - பாபம் செய்தவனாகிய நான்; முதுநீர் ஒதைசேர் புலிசை - நீரொலி சேர்ந்த சிதம்பரம். (10)

-----------------------------------
நீராடற்பருவம்

416. அடியிணைகள் புடவி - இருபாதங்கள் பூமி; திகழ் அண்ட முகடது மகுடம் - விளங்கும் ஆகாய உச்சியே கிரீடம்; அட்டத்திக்கும் புயங்கள் - எட்டுத் திக்கும் புயங்கள்; தாரகணம் - நட்சத்திரக்கூட்டம்; வாடைக் காற்றும், மேலைக்காற்றும் முறையே மூக்கின் சுவாசமான இடைகலை, பிங்கலைகள்; இடையில் அணிமுழுகி விளையாடு தடம் - இடுப்பில் அணியும் ஆபரணம் முழுதும் பரவியுள்ள நிதம்பம். (1)

417. கணைக்கால் வராலென - கணைக்கால் வரால் மீன்போன்று; கைவிரல்கள் களிறென்னவே - கைவிரல்கள் ஆண் சுறாமீன் போன்றும்; கமலவடி கமடமெனவே - தாமரையொத்த பாதம் ஆமையைப்போன்றும்; முழந்தாளிணைகளுக்கு ஞெண்டென்ன - முழங்கால்களுக்கு உவமை நண்டு என்று சொல்லவும்; வண்களமும் வெண்சங்கம் என்ன - வளவிய கழுத்து வெண்மையான சங்கு என்று கூறவும்; வீசவே, வளராசை வலை வீச -வீசுவதற்காக மிக்கு வளர்கின்ற ஆசையாகிய வலையைவீச; மைவிரவு சுருளோதி சைவலமது என்ன - கருமை விரவு சுருண்ட தலைமயிர் பாசியோ என்று கூறவும்; வள்ளை - வள்ளைப்பூ; பெண்கள் மனம் மருள இருகொங்கை முகம் நகைமுகம் பெரிய தாமரை யென்ன - பெண்களின் மனமும் காம மயக்கமடையும்படியான இரண்டு முலைக்காம்புகளும், சிரித்த முகமும் பெரிய தாமரை மலரைப்போன்று இருக்க; பிரசவிதழ் குமுதமென - இனிய அமுதம் கொடுக்கும் உதடு குமுதமலர்போன்றும்; தும்பி - வண்டு; புடைசுழல - பக்கத்தில் சுற்ற; புண்கொள் நெடுவேல் - மாற்றார் மாமிசம் கொண்ட நீண்டவேல்; இப்பாட்டில் நீராடற் பருவத்திற்கேற்ப பல உறுப்புக்கட்கும் நீர்வாழ் வனவற்றையே உவமை கூறின திறம் வியக்கத்தக்கது. (2)

418. பார் - பூமி; வேதண்டவேர் - மலையினடிப் பாகம்; மூதண்ட பகிரண்டகூடம் - பழைய உலகமும் அண்டத்தின் வெளியும்; வேதாளம் - பூதவகைகளிலொன்று; தாராட - மார்பின் மாலையாட; சூடு தவள வெண்பிறை - உச்சியிலுள்ள மிக்க வெள்ளிய பிறைச்சந்திரன்; நின் கணவனார் தலைமீது நின்றாடுவாள் - சிவபெருமான் தலைமீதுள்ள கங்கை தேவி; திளைப்பவே துளையமாடி - நெருங்கி மகிழ்ந்து அனுபவித்து ஆடி, முத்தாட - முத்தமிட; அளக + அடவி-கூந்தலாகிய காடு; குடைந்தாடி - நீரில் மூழ்கியாடி; போராடு - சண்டையிடும். (3)

419. பாகீரதன் - சூரிய வம்சத்தரசன்; சகரன் வழி வந்தவன்; சகரர் மக்கள் கபிலமுனிவர் சாபத்தால் சாம்பராக அவ்வஸ்திகளின் மீது கங்கை நீர் பாயச்செய்து அவர்கட்குச் சுவர்க்கம் அளித்தவன். வார் சடை - நீண்டசடை; பிறைத்தோணி - பிறையாகிய படகு; ஏகாந்தம் - தனி; காஞ்சியில் காமாட்சியம்மை தவஞ் செய்ததால் "ஏகாந்தமாகிய ............... புரியும்" என்று கூறினர். ஏகாம்பரம் - காஞ்சியின் ஒருபாகம்; காமாட்சியம்மையுமே கம்ப நதியாடல்போல் - காமாட்சியம்மையுமே கம்பாநதியில் ஆடுவதுபோல; சிவபெருமான் காமாட்சியம்மையின் தவத்தையழிக்கக் கம்பாநதியைப் பெருக்கெடுக்கச் செய்தார். ஆகாய கங்கை, சரசுவதி, யமுனை, காளிந்தி, பாதாள கங்கை போன்ற காவேரிநதி யென்க, அனாதி நதியதுவும் முனிபாற் போகாத - வேறு முதலின்மையாகிய நதியாகவும், தன்னை வைத்திருந்த முனிவனான அகத்தியனிடம் செல்லாத. (4)

420. நாள்மலர்கள் தளிர்கள் கொய்து எனப் பிரிக்க. நாள்மலர் - அன்றலர்ந்த மலர்; கணிகை - தாசி; குயில்சிறுங்குறும் பிழைத்தும் சிறுவீடு முதலிய கட்டும் சிறிய குறும்புச்செயல்களைச் செய்தும்; பொதும்பர் - சோலை; கிளை முதலியன ஒடித்து விளையாடல்; சிறுதும்பி - குறுகிய நேர விளையாட்டான தும்பியாட்டம், இதைத் தெருவில் பெண்கள் ‘தும்பி துவாட்டி எம்பேரு வெள்ளாட்டி' என்று சொல்லி கை முறுக்கிக் கோத்துச் சுற்றுவதைக் காண்க. தெள்ளேணம் - மகளிர் விளையாட்டினொன்று; பொறி வரிப்பாவை பொற்குரவையாடி - புள்ளிகளையுடைய கோடுகளையுடைய பொம்மையுடன் அழகிய குரவை விளையாடியும். (5)

421. காஞ்சனமணி காஞ்சிக்கலை - பொன்மணிகளாலான எண்கோவை மணியுடைய மேகலை; இரங்கிட - சப்திக்க; அதரம் - உதடு; கோலம் - அழகு; கொடியிடை துடியாட - கொடிபோன்ற இடை உடுக்கை போன்று ஆட; சாந்தம் - குளிர்ச்சி; மான்மதம் - வாசனைப் பொருள்கள்; வாடை - வாசனை; குடை நீர் - வினைத்தொகை; ஆலிக்கும் – களிக்கும். (6)

422. நெருப்பிற் பூத்த பொற்பூந்தொடை மாணிக்கம் நீரிடை நிழல் தோன்ற - நெருப்பைப்போன்று விளங்கும் அழகிய கொன்றைமாலையும் மாணிக்கமாலையும் நீரினிடத்தில் தன் நிழலைத் தோற்றுவிக்க; முறையே பொற்பூவும் மாணிக்கமும் நீரிற் பூத்த பொற்பூவாகவும் கொழுந்து விட்டெரிகின்ற விளக்காகவும் தோன்றின. கண்களை விழித் துக் கெண்டைகள் மேய்கின்ற வியப்பினைப் பாரென்றும் என்று பிரிக்க; கெண்டை - கெண்டைமீன்; பருப்பதக்குயம் தாமரை யரும்பென - மலைபோன்ற முலை தாமரை யரும்பு போன்று; பருமம் - மூவாறு கோவை மணியாபரணம்; உடலினால் பச்சை நிறமும், அழகிய மாலையினால் வெண்ணிறமும், மாணிக்க மாலையால் செந்நிறமும், தனத்தாலும் ஆபரணத்தாலும் பொன்னிறமும் நீர் பெற்றதென்க. தனம் பசலை நிறமுற்றதால் பொன்னிறம் நீர் பெற்றது. அரும்பு நல் நகைச் சிலதியர் - அரும்பு போன்ற பற்களை யுடைய தோழியர். (7)

423. “பாங்கிற்............... தோன்ற” :-பக்கத்தில் தோன்றிடும் தோழியர் உருவமெல்லாம் வெண்மையான நீரில் கலந்து சேரும்படி விளங்கிட, அதனால் ஒருவரே இருவராகத் தெரிய அதிசயித்து; கோங்கு அரும்பிட முல்லையு முகிழ்த்திட எனப் பிரிக்க; ஏ - அசைநிலை; கோவையின் கனி - கோவைப்பழம்; முகிழ்த்திட - மூடிக்கொள்ள; கோங்கம்பூ தனத்தின் அழகு கண்டு அரும்புகளையிடவும் சிரிப்பினொளியால் தோற்று, முல்லை மூடவும், குமிழம்பூவொடு, தொகுதியுடைய காந்தள் பூவும் மூக்குக்கும், கைகளுக்கும் ஒத்தோம் என்று கூறி மலர, இங்ஙனம் மலர்வதைக் கண்டு வண்டுகள் சப்திக்க, கோவைக் கனிபோன்ற உதடு தெரியச் சிரித்து, வளைந்து வஞ்சியும் காஞ்சியும் மலர, வஞ்சிக்கொடி போன்ற இடையசைய, சாயல் கற்க மயிலும், நடை கற்க அன்னமும், மொழியைக் கற்கக் கிளியும், மைனாவும் நீரின் பக்கத்தில் வர அங்கு உனது பரமானந்தத் துறையினில் நீராடுக என்று பொருள் முடிபு கொள்க. (8)

424. அரந்தம் - மஞ்சள், அரத்தம் என்றது மெலித்தல் விகாரமாகியது; ஒளித்தும் நீள் கரையேறியும் ஓய்ந்து நின்று என்று பிரிக்க; உறுக்கும் வண்புனல் - பயமுறுத்தும் வளவிய நீர்; திரைக்கும் ஏழ்கடல் - அலைவீசும் ஏழு கடல்கள். (9)

425. உருத்திரை - உருத்திரன் மனைவி, உருத்திரன் சிவனம்சம்; திரோதானம் - காணாமல் மறைகை; பல சத்திகள் உண்டாதலால் மற்றுள சத்தி யென்றார். (10)


தில்லைச் சிவகாமி அம்மைப் பிள்ளைத்தமிழ்க் குறிப்புரை முற்றிற்று.

-------------------------------------

This file was last updated on 19 Jan. 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)