pm logo

தீபம் நா. பார்த்தசாரதி எழுதிய
நெற்றிக் கண் (சமூக நாவல் ), பாகம் 1


neRRikkan (social novel)
by tIpam nA. pArtacArati, part 1 (chapters 1-7)
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

நெற்றிக்கண் (சமூக நாவல்),
பாகம் 1 (அத்தியாயம் 1-7)
தீபம் நா. பார்த்தசாரதி


Source:
நெற்றிக்கண் (சமூக நாவல்)
தீபம் நா. பார்த்தசாரதி
முதல் பதிப்பு டிசம்பர் 1966; ஏழாம் பதிப்பு ஜூலை 1993
தமிழ்ப் புத்தகாலயம், திருவல்லிக்கேணி, சென்னை 600 005
விலை ரூ. 37.00,
264 பக்கங்கள், உரிமைப் பதிப்பு
---------------

முன்னுரை

நான் தனியே 'தீபம்' இலக்கிய மாத இதழைத் தொடங்கிய பின்பு அதில் எழுதிய முதல் சமூக நாவல் நெற்றிக் கண். இந்திய நாட்டில் சராசரி உழைக்கும் பத்திரிகையாளனுக்கு (Working Journalist) எந்த அளவு சுதந்திரமும், உரிமையும் கிடைக்கின்றன என்பதை ஓரளவு இந்த நாவலிலே சொல்ல முயன்றிருக்கிறேன். ஒரு பத்திரிகையாளனைப் பற்றிய தமிழ்ச் சமூக நாவல் இது. ஒரு பத்திரிகையாளனின் அகப் போராட்டங்களும், புறப் போராட்டங்களும் இதில் வருகின்றன. இதில் நெகிழ்ச்சிமயமாக வந்து வாசகர்களை நெகிழ வைக்கும் பாத்திரம் துளசிதான்! சுகுணனைக் காட்டிலும் துளசிதான் வாசகர்களை அதிகம் உருக்க முடியும் என்று இந்த நாவல் தீபத்தில் நிறைவு பெற்ற போது எனக்கு வந்த ஏராளமான கடிதங்களிலிருந்து தெரிந்தது. என் மற்ற நாவல்களிலிருந்து இது பல அம்சங்களில் தனியாக விலகி நிற்கிறது. ஒரு பத்திரிகையாளனுடைய கண்ணோட்டத்தில் தான் தமிழ் நாட்டுச் சமூக வாழ்வு இந்த நாவலில் நோக்கப்பட்டிருக்கிறது. நாவலைப் படிப்பவர்களும் அதை மனத்தில் கொண்டு படித்தால் நல்லது என்ற வேண்டுகோளுடன் இந்த முன்னுரையை முடிக்கிறேன்.

அன்பன்
நா. பார்த்தசாரதி
--------------

அத்தியாயம் -1

"மனிதனுக்கு உண்மையான வலுவுள்ள கருவி கத்தியும் துப்பாக்கியும் அல்ல. தன்னுடைய நினைப்பும், பேச்சும் செய்கையும் நேர்மையானவை என்று தனக்குள் தானே நம்பி உணர்ந்து பெருமைபடுகிற பெருமிதம் தான் அவனுடைய மெய்யான வலிமை."

-சுகுணன்

பொழுது விடிகிற நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பூக்கிற பூவின் வாசனையைப் போல் விடிகாலைக் குளிரின் இங்கிதமான சூழ்நிலையில் யாரோ ரோஜாப் பூக்களை - வெறும் ரோஜாப் பூக்களையல்ல - பனிபுலராத ரோஜாப் பூக்களை - ஒவ்வொன்றாகப் பறித்து பதித்து ஒரு பிரம்மாண்டமான விசிறியைத் தயாரித்து மெல்ல வீசிக் கொண்டிருப்பது போல மென்மையும் குளிரும் கலந்ததோர் காற்று எங்கும் உலா வரத் தொடங்கியிருந்தது.

விடியும் நேரத்துக்கு எப்போதுமே ஒரு தனி அழகு உண்டு. பன்னீரில் தோய்த்துத் தாமரைப் பூவை வெளியே எடுப்பது போல் உலகம் ஏதோ ஒரு குளுமையில் முங்கியெழுந்து வெளிவரும் இந்த மலர்ச்சியைச் சுகுணன் பல நாள் உணர்ந்து சிந்தித்து அனுபவித்திருக்கிறான். எதிரே நிமிர்ந்து பார்த்தால் பலகணி வழியே ஒரு மங்கலமான புகைப்படம் போலக் கிழக்கே வெளுக்கும் வானம் தெரிந்தது. வட்ட வடிவப் பெருங்குடையாய் வெட்ட வெளியெனப் பரந்து விரிந்து கிடக்கும் நீலவானில் வெண் மேகப் பிசிறுகள் அங்கங்கே மிதந்து கொண்டும், நீந்திக் கொண்டுமிருந்தன. மேல் நோக்கித் தொடங்கிய கண் பார்வை வானவெளியை எட்டிய தொலைவு மட்டும் அவசரமாக அளந்து விட்டுக் கீழே சரிந்தால் காற்றில் மேலெழுவதும், தணிவதும், அலையலையாக மடிவதுமாகக் கதிர் வாங்காத விடலை நெற்பயிர்களின் வயல்வெளிப் பசுமை பொங்கிக் கொண்டிருந்தது.

ஜன்னல் கம்பிகள் அந்த வயல் வெளிகளைத் துண்டு துண்டாகத் தினப்பத்திரிகைகளின் நீள நீளப் பத்திகள் தோன்றுவது போல் தெரியும்படி பிரித்துக் கொண்டு காண்பித்தன. இயற்கையின் பசுமையை - எங்கோ தொலைவிலே நிரம்பிக் கிடக்கும் பசுமையை - இங்கே இதோ அருகிலிருக்கும் இந்த ஜன்னல் கம்பிகள் துண்டு போட்டுக் காட்டுவது கூட ஒரு தத்துவமாகத்தான் தெரிகிறது. இயற்கை நாகரிகத்தை - இரும்பு நாகரிகம் கூறுபோட்டு அழித்து விட முடியாது போனாலும் கூறு போட்டுப் பிரித்து விட்டது போல ஒரு பிரமையான தோற்றத்தை உண்டாக்க முடிகிறதல்லவா?

காலை வேளையில் எதைப்பற்றியாவது எப்படியாவது சிந்திப்பது என்பது பசி வேளையில் உண்ணத் தவிப்பது போல அவனுக்கு ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாயிருந்தது. நாளைக்கு விடிந்தால் உயிர் வெள்ளம் சுழித்தோடும் பட்டினத்து வீதிகளில் சுற்ற வேண்டும். உட்கார்ந்திருக்கும் இடத்தைச் சுற்றி டெலிபிரிண்டர் ஓசை, டைப்ரைட்டிங் ஒலி, டெலிபோன் அலறல், ஸ்பிரிங் கதவுகளைத் திறந்து மூடும் சப்தம், நடுவே எப்போதாவது மின்சாரம் நின்று போகும் போது கொஞ்சம் நிழல் வந்து படிவது போன்ற தற்காலிகமான அமைதி, - எல்லாம் விரைவாக நினைவிற்கு வந்தன அவனுக்கு.

விலகி வந்து எங்கோ அமைதியாயிருக்கும் இந்த விநாடியிலும் தன்னுடைய வழக்கமான அந்தச் சூழ்நிலையை ஒரு கணம் கற்பித்துப் பார்ப்பதோ, பாவித்துக் கொள்வதோ கூடச் சுமையைப் போல் கனத்தது அவனுக்கு. எவ்வளவு பெரிய கனத்தையும் சுமக்கின்ற வலு அவனுடைய மனத்திற்கும் தோள்களுக்கும் இருந்தன. சொக்கப்பா ஜிம்னாஸியத்தில் (உடற்பயிற்சிசாலை) காலையும் மாலையும் பயின்று பயின்று தேற்றியது. தவிரத் தானே தன் உடம்பை வசீகரமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று விநாடிக்கு விநாடி ஓர் அந்தரங்கமான சுயநலத்தோடு முகத்தையும், பரந்த பொன் நிற மார்பையும், திரண்டு செழித்த தோள்களையும் நிலைக் கண்ணாடியிலும், தனிமையிலும் தேடித் தேடிக் கண்டு திருப்திப்படுகிற விடலைப் பருவத்துத் தவிப்போடு அவன் சிரசாசனமும் வேறு பல ஆசனங்களும் முறையாகச் செய்தது கூட உண்டு.

வேதாந்திகளும் சித்தர்களும் உடம்பை வெறுத்து எத்தனையோ பாடல்களைப் பாடித் தீர்த்துவிட்டுப் போயிருந்தாலும் மனிதனுக்கு ஒரு பருவத்தில் தன் உடம்பைத் தானே காதலித்து வளர்க்கத் தவிக்கும் தீவிரமான ஆசை இருக்கத்தான் செய்கிறது.

இன்னும் கூடச் சுகுணனுடைய அந்தரங்கத்தில் அந்த சுயநலம் உண்டு. உடம்பின் சுத்தமும் திட்டமுமே, மனத்தின் ஒழுங்குக்குக் காரணங்களாக அமைவதையும் சொந்த அநுபவத்தில் அவன் உணர்ந்திருக்கிறான். தோளை வயிரமுடையதாக்கி உடற்சோர்வு - பிணி பலவும் போக்கி - அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறாத உடல் - என்று பாடப்பட்டிருக்கும் அத்தகைய வலிமையை - விரும்பிப் பயின்று தேடித் தேடித்தான் அடைந்திருந்தான் அவன். கம்பீரமாக எழுந்து நின்றால் எதிராளியைக் கூசிக் குறுகிச் சிறிதாகி விடச் செய்யும் இந்த தோற்றத்தை உடம்புதான் தனக்கு அளித்திருக்கிறதென்பது அவனுக்கே தெரியும். அவனுடைய தோள்களும் நெஞ்சமும் அதிகமான கனத்தைச் சுமக்கும் ஆற்றலும் வலிமையும் உள்ளவை என்பதில் அவனுக்கே ஒருவிதமான பெருமிதமும் நம்பிக்கையும் உண்டு. அந்த நம்பிக்கையும், பெருமிதமும் கூட இப்போது தளர்ந்து போய்த் துவண்டு விட்டனவோ என்ற சந்தேகமும் இன்று இந்தக் கணத்தில் வேறொரு காரணத்தால் அவனுள் எழுந்தது.

உள்ளக் குமுறலைத் தணித்துக் கொள்வதற்காகவோ அல்லது மிகப் பெரியதோர் உணர்ச்சி நஷ்டத்தினால் ஊமை அழுகையாக அழத் தொடங்கிவிட்ட உள்ளத்திடம் அழுமூஞ்சித் தனத்தைக் கொண்டாடவோ இப்படி இந்தக் கிராமாந்தரத்து 'டிராவலர்ஸ் பங்களா' வைத் தேடி வந்து இரண்டு மூன்று நாட்களைக் கழித்தாயிற்று. இதோ நாலாவது நாளும் விடிந்து கொண்டிருக்கிறது. நகரத்தில் நேரம் பறக்கிற தென்றால் கிராமத்தில் அது நொண்டியடிக்கிறது போலும். எதிரே வயல் வெளிகளுக்கு அப்பால் சூரியோதயம் பொன்னோடையாகப் பெருகி வந்து கொண்டிருந்தது. நாளைக்கு விடியும் போது இப்படி அசல் சூரியோதயத்தை - அசல் முழுமையோடு பார்க்க முடியாதென்பதும் ஞாபகம் வந்தது. பட்டினத்தில் கடிகாரத்தைப் பார்த்தோ, தீராத தூக்கம் திடுதிப்பென்று விழித்தோ, அலாரம் ஒலியைக் கேட்டோதான் சூரியனும் உதித்திருக்க வேண்டுமென்று அநுமானித்து உணரலாம். இந்தக் கிராமத்தில்தான் சூரியன் உதிப்பதும் கூட எத்தனை பெரிய உண்மையாக எத்தனை பெரிய அழகாக இருக்கிறது.

காவியம் படிப்பது போல் அமைதியாக ஆழ்ந்து இரசிக்கத் தக்க இந்தக் கிராமத்தின் அழகுகளோ, இதன் நினைவுகளோ, நாளைக்குப் பட்டினத்திற்குத் திரும்பியதும் மறந்து போகலாம். ஆனால் இன்றைக்கு இதுதான் சாசுவதம். நம் மனத்தை அதிவேகமாக மயக்க வருகிற ஒவ்வோர் அழகும் அந்த விநாடியின் ஒரே சாசுவதமாக நம் முன் வந்து நிற்பது தான் வழக்கம். சாசுவதத்திற்கு எல்லை காலத்தின் நெடுமையில்லை. ஒரு விநாடி சத்தியமாக நின்றாலும் அந்த ஒரு விநாடியும் கூட ஒரு சாசுவதம் தான். இப்படி நினைத்த போது அந்த விநாடிவரை சிரமப்பட்டு மறக்க முயன்று ஓரளவு வெற்றியும் கண்டிருந்த துளசியின் நினைவு தவிர்க்க முடியாதபடி ஏற்பட்டது அவனுக்கு.

துளசி எந்த ஒரு விநாடியில் அவன் முன் - அல்லது அவன் நினைவின் முன் சாசுவதமாக நின்றாளோ - அந்த ஒரு விநாடி இன்று பொய்யாகியிருக்கலாம். ஆனால் அது எந்த ஒரு விநாடியில் நிகழத் தொடங்கியதோ அந்த ஒரு விநாடி உண்மையாகத் தான் இருக்க முடியும். புகழையும் - பொறுப்பையும் தாங்குகின்ற ஆயுதமாய்ப் பழியையும் புகழையும் நிர்ணயிக்கிற சக்தியாய் அவன் கையிலிருக்கிற எழுதுகோலைப் போல் அவன் நினைவும் அவனுள் ஒரு சாசுவதமே.

ஆனால் இனி அப்படி நினைப்பதிலும் கூட ஓர் அர்த்தமுமில்லை. இந்த நேரத்திற்குள் அவள் யாருக்கோ சொந்தமாகியிருப்பாள். முகூர்த்த நேரம் அதிகாலையில் ஐந்தரை மணிக்கு மேல் ஆறேகால் மணிக்குள் ஏதோ ஒரு நாழிகை என்று தானே திருமணப் பத்திரிக்கையில் போட்டிருந்தது? தன் மனத்தை அணு அணுவாக அறுக்கும் அந்த நாளில் அந்த திருமண நிகழ்ச்சியன்று பட்டினத்திலேயே இருக்கக் கூடாதென்றுதானே ஏதோ பெரிதாக எழுதிக் குவித்து அள்ளிக்கொண்டு போய்விடப் போவது போல ஒரு பொய்யைத் தன் மனத்துக்குத் தானே கற்பித்துக் கொண்டு இந்தக் கிராமத்துக்கு ஓடி வந்திருந்தான் சுகுணன்?

எங்கு ஓடி வந்தாலென்ன? நினைப்பிலிருந்து எதையும் வெளியிலெடுத்து எறிய முடிவதில்லையே? உடம்பை விட வேகமாகப் பிரயாணம் செய்து நினைத்த இடத்துக்குப் போக முடிகிற இந்தச் சக்தி வாய்ந்த மனமும் சக்திவாய்ந்த சிந்தனையும் தான் அவனுடைய எழுத்தின் ஆற்றல். செப்பிடு வித்தைக்காரனின் மாத்திரைக் கோலைப் போல நினைத்ததைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் சக்தி அவன் எழுத்துக்கு இருந்தது. அதே நினைவும், சிந்தனையும் துளசியைப் பற்றி நினைக்கும் போதும் தனது இயற்கையான சக்தியோடு வேகமாகப் பிரயாணம் செய்து பட்டினத்துக்கு ஓடி 'ஆபட்ஸ்பரி' - என்னும் அந்த வாடகை அரண்மனையின் வாசலில் இந்த அதிகாலை வேளையில் வரிசை வரிசையாக அணிவகுத்து நிற்கும் கார்களையும், ஓர் அலங்காரத்துக்காகப் பகலிலேயே பூப்பூவாக எரியும் பல வண்ண விளக்குகளையும் கடந்து உள்ளே மணமேடையில் யாரோ ஒருவனுக்கருகே அமர்ந்திருக்கும் வசீகரமான மணக்கோலத்துத் துளசியை அவள் அந்நியமாகி விட்ட வேற்றுமையையும் பொருட்படுத்தாமல் நெருங்குகின்றனவே! செப்பிடு வித்தைக்காரனின் மாத்திரைக் கோலைப் போல் நினைத்த நினைப்புக்கு உடனே எதிரில் உருக்கொடுக்கும் சுகுணனின் கற்பனை ஆற்றல் - அவனைப் போல் சக்தி வாய்ந்த சொற்களுக்கும், சக்தி வாய்ந்த சிந்தனைக்கும் சொந்தக்காரனான ஒரு வாலிப வயதுப் பத்திரிக்கையாளனின் ஆற்றல் - இந்த விநாடியில் துளசி மணப் பந்தலில் எப்படி இருப்பாள், யார் யாரைப் பார்த்து எப்படி எப்படி புன்னகை புரிவாள், யார் யாரை எவ்வாறு வணங்கி ஆசிபெறுவாள் - என்றெல்லாம் சிந்தித்து - அவனுக்கு வேண்டாதவற்றையும் வேதனை தருகிறவற்றையும் சிந்தித்து அவனையே - உருகவும் உணரவும் வைத்தது. 'Word Pictures' - என்பார்களே அதுபோல் ஒரு வார்த்தையும் அதன் உருவமும் சேர்ந்தே நினைவு வருகிற சக்தி வாய்ந்த சிந்தனை அவனுடையது. இத்தகைய சக்தி வாய்ந்த சிந்தனைகளை இணைத்துத் தமிழில் லா.ச. ராமாமிருதம் என்கிற எழுத்தாளர் அற்புதமாய் எழுதுகிற கதைகளை அவன் அவ்வப்போது தேடி விரும்பிப் படிப்பதுண்டு.

ஒரு சொல்லுக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. சொல் தனக்குத் தானே ஒரு வடிவம். இரண்டாவதாகச் சொல் தன்னால் குறிக்கப் படுவது எதுவோ அதுவாக மாறிக் கருவியாக நின்று அதையே உணர்த்துவது மற்றொரு வடிவம். பார்க்கப் போனால் இந்த இரண்டு வடிவமும் வேறு வேறல்ல. ஒன்றே மற்றொன்று. ஒன்றிலிருந்து மற்றொன்று; ஒன்றாயிருந்தது மற்றொன்று - அரும்பாயிருந்தது பூவாகப் பூப்பதைப் போல. பூத்தபின் அரும்பாயிருந்தது என்பது ஞாபகம். பூப்பதற்கு முன் இனிப்பூக்கும் என்பது காரியம். 'அரும்பாயிருக்கிறது - அதனால் - இனிப் பூக்கும்' என்பது காரணம். காரணத்திற்கும் காரியத்திற்கும் நடுவே ஞாபகம் என்பது ஒரு பாலம். சொல்லும் பொருளும் அரும்பும் பூவும் போல அடுத்தடுத்த விளைவுகள். 'துளசி' என்று நினைக்கும் போது அந்த நினைவு அரும்பு - அதையடுத்து அதே வேகத்திலே குமிண் சிரிப்புடனும் துறு துறுவென்று குறும்புத்தனமான அழகுடனும் அந்த வசீகர முகம் 'word picture' போல அவன் நினைவில் வந்து மலர்கிறதே; அது பூ. அந்தப் பூ இப்பொழுது அவனுக்குக் கிடைக்காமல் வெகு தொலைவில் போய் உதிர்ந்துவிட்ட - அப்படி உதிர்ந்து விட்டதாலேயே அவனை வேதனைப் படுத்துகிற பூவும் ஆகும்.

சிந்தனையிலும் செயலிலும் உற்சாகமின்றி மனிதன் தனக்குத்தானே சுமையாக உணர்ந்து வேதனையோடு பிடித்துத் தள்ளித் தள்ளிக் கடத்துவது போல் சுழிக்கும் அந்தமான நாட்களை ஓரிடத்தில் பாரதி தன் கவிச் சொற்களால் 'முடம்படு தினங்கள்' முடமாகிவிட்ட நாட்கள் என்று குறிப்பதைப் போல் துளசியின் திருமணத்தை மறக்க ஓடிவந்து இந்தக் கிராமத்தில் கழித்த நாட்கள் சுமையாக நகர்ந்து நகர்ந்து போனதாகத்தான் சுகுணனும் உணர்ந்திருந்தான். பாரதியின் முழு முழுக் கவிதைகளில் கவிதைத் தன்மையின் சாந்நித்தியம் கொலு வீற்றிருப்பது தவிர இப்படித் தனித் தனிச் சொற்றொடர்களிலும் கூடக் கவிதைத் தன்மை துடிதுடிக்கச் செய்திருக்கும் சொல்லுயிர்ப்புச் சாகஸத்தை ஓர் உணர்ச்சிமிக்க - எழுத்தாளன் என்ற அந்தரங்க சுத்தியோடு அவன் பலமுறை தனக்குத் தானே வியந்திருக்கிறான்.

தன்னுடைய பத்திரிகையின் 'இலக்கிய மேடை' - கேள்வி பதில் பகுதியில் 'கவிதை என்பது என்ன? சுருக்கமான - அர்த்த புஷ்டியுள்ள பதில் தேவை?' - என்பதாகக் கேட்கப்பட்டிருந்த ஒரு நேயரின் கேள்விக்கு, 'மனிதனின் நாகரிகம் பாஷை. பாஷையின் நாகரிகம் கவிதை' என்று தான் முன்பு எப்போதோ பதில் கூறியிருந்ததை இப்போது மீண்டும் நினைவு கூர்ந்தான் சுகுணன். அந்த அழகான - இரத்தினச் சுருக்கமான பதிலுக்காக அப்போது அவனைப் பலர் நேரிலும் கடித மூலமாகவும் பாராட்டினார்கள். ஏன்? துளசியும் கூடத்தான் பாராட்டினாள்.

அவள் சிரிக்கும் போது முதல் சாயல் கண்களிலும் - இரண்டாவது சாயல் இதழ்களிலும், மூன்றாவது சாயல் மோகம் கனிந்து வெறியேறி நிற்கும் அந்த ரோஜாப் பூக் கன்னங்களிலுமாக மலரும். அதாவது அவளுடைய முகத்தில் மூன்று சிரிப்புகள் உண்டு. அந்தக் கண்களும், இதழ்களும், கன்னங்களும், சிரிக்கச் சிரிக்க அவள் 'பூம் பொழில்' காரியாலய அறையில் தன்னைத் தேடிவந்து பாராட்டிவிட்டுப் போன சித்திரம் அல்லது சித்திர நினைவு - இன்னும் அவனுள் காலத்தின் பசுமையாக நிறைந்திருக்கிறது.

பூத்த பூவிலிருந்து பூக்கிற சூட்டில் வேகமாகக் கிளரும் நறுமணத்துக்கு 'வெறி' என்று தமிழில் ஒரு பெயருண்டு. ஒரு பெண்ணின் கனிந்து நிற்கிற அழகு சம்பந்தமாக ஓர் ஆணின் மனத்தில் ஏற்படுகிற வேகமான கிளர்ச்சிக்கும் இந்தப் பதத்தையே இந்தப் புதிய அர்த்தத்தோடு சிந்தித்துப் பார்த்தால் எத்தனை நயமாயிருக்கும்? இப்படிப் பதங்களையும் அர்த்தத்தையும் புதிய தலைமுறைக் கேற்ற புதிய பொருள்களோடு - அல்லது பழைய தலைமுறை உணர்ந்து அங்கீகரிக்கத் தவறி விட்ட ஒரு புதிய நயத்தோடு சிந்திப்பது சுகுணனுக்கு மிகவும் விருப்பமான காரியம். இப்படிச் சிந்திப்பதனாலேயே நாளும் புதுமையாய் வளர்ந்திருந்தான் அவன்.

ஆயிற்று. பொழுது நன்றாக விடிந்து விட்டது. வெயிலில் பசிய வயல்வெளிகள் மனோரம்மியமான மரகதப் பாளங்களாக மின்னத் தொடங்கி விட்டன. இன்று முகூர்த்த நாளல்லவா? ஊரிலிருந்து தள்ளியிருந்த அந்த டிராவல்ஸ் பங்களாவிலும் வந்து கேட்கிறாற் போல எங்கோ கிராமத்துக் கல்யாண வீட்டில் நாதஸ்வரம் இனிமையாய்ப் பொங்குகிறது. பூக்களின் வாசனையிலும் சங்கீதத்தின் ஒலியிலும் மனிதனுடைய பழைய ஞாபகங்களை இயக்கும் ஏதோ ஓர் ஆந்தரிக சக்தி உண்டு போலிருக்கிறது. இதே நேரத்திலோ, அல்லது இதற்குச் சிறிது முன்னாலேயோ துளிசியின் பொன்நிறக் கழுத்திலும் யாரோ ஓர் அந்நியன் நாதஸ்வர ஒலியினால் கிளுகிளுக்கும் உற்சாகமான மனத்துள்ளலோடு தாலி கட்டியிருப்பான்' - என்று எண்ணியபோது துக்கமோ, ஏமாற்றமோ, அல்லது இரண்டுமே சேர்ந்தோ ஓர் உரமான உணர்ச்சி சுகுணனின் நெஞ்சைக் கவ்வி அடைத்தது.

படிப்பு, நெஞ்சுரம், எத்தகைய எதிர்ப்பைச் சுமந்து வருகிற அபிப்ராயங்களையும் தன் முன் வந்ததும், பார்வையாலோ, தோற்றத்தாலோ, சொல்லாலோ, அப்படியே கூசி நிற்கச் செய்து விடுகிற சக்தி - இவையெல்லாமின்றி வெறும் சிறு குழந்தையாயிருந்தால் நெஞ்சை வந்து அடைக்கும் அந்த உணர்வைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவன் அப்போதே கோவென்று கதறி அழுதிருப்பான். 'ஏதோ ஓர் அவசரமான ஆசையில் பிறக்கிற மனிதர்களின் காதல் சத்தியங்கள் வேறு ஏதோ ஓர் அவசரத்தில் அல்லது அவசியத்தில் எத்தனை விரைவாகப் பொய்யாய் விடுகின்றன' - என்றெண்ணிப் புழுங்கியது அவன் உள்ளம். பாலைவனத்துத் தாகத்தைப் போல் தாகமும் தவிப்புமே மாற்றிலாத உணர்வுகளாய் எதிரே சாதனம் எதுவும் தென்படாத தனி ஏமாற்றமே அவன் நெஞ்சில் அப்போது நிரம்பியிருந்தது. அவன் மனக்கண்களில் அந்தக் கடன்காரி துளசி நின்றாள். உணர்வின் சத்தியத்துக்கு வட்டி தராமல் ஏமாற்றுகிறவர்களும் கடன்காரிகள்தானே?

துளசியின் திருமணத்தன்று அவன் தென்படவில்லை என்பதும் அதற்கும் மேலாக அவன் அன்று ஊரிலேயே இல்லை என்பதும் அந்தத் திருமணத்திற்கு அவன் வரவே இல்லை என்பதும் இதற்குள் எத்தனை பேருடைய வாய்களில் எத்தனை விதமான வம்புகளாய்ப் புகுந்து புறப்பட்டிருக்குமென்று தனக்குத்தானே கற்ப்னை செய்ய முயன்றான் அவன். உணர்ச்சி நஷ்டம் தன்னுடையதாயிருக்கும் போது எவ்வளவு சாதுரியமான 'டிப்ளமேட்' ஆக இருந்தாலும் சும்மா இருந்து விட முடியாதென்று அவனுக்கு தோன்றியது. யாருக்கு எந்த அளவு 'டிப்ளமஸி' தேவையோ தேவையில்லையோ, ஒரு பத்திரிகையாளனுக்கு அது அதிக அளவு அவசியம் தேவை. தனக்கு ஒன்றும் நஷ்டமில்லாததுபோல், தான் ஒன்றும் பாதிக்கப்படாதது போல் எல்லாரையும் போல், அவனும் அந்தக் கலியாணத்துக்குப் போய் எல்லோரோடும் சேர்ந்து எல்லார் மேலும் தெளிக்கப்படுகிற பன்னீரில் தானும் நனைந்து, எல்லாரும் கைநனைக்கிற சந்தனக் கும்பாவில் தானும் கைநனைத்து, எல்லாரும் எடுத்துக் கொள்வது போல் பூச்செண்டும் கல்கண்டும் - பட்டும் படாமலும் இரண்டு விரல்களால் எடுத்துக் கொண்டு - விருந்து உண்டு தாம்பூலப் பையோடு திரும்பி வந்திருக்கலாம் தான். ஏனோ தெரியவில்லை, அப்படிச் செய்ய நினைப்பதைக் கூட அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் இயலவில்லை.

உலகத்தை ஏமாற்றுவதை விடக் கேவலமான காரியம் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதுதான். அதைச் செய்வதற்கு அவனால் முடியாமற் போய்விட்டது. மற்றவர்கள் ஏமாற்றும் போது தெரு விளக்கை அணைப்பது போல் உலகத்தின் பொதுவான சத்தியத்தைத் தான் ஒளிகுன்றச் செய்கிறோம். தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் போதோ சொந்த மனத்தையே இருண்டு போகச் செய்து கொள்கிறோம். ஓர் இணையற்ற கலைஞன் என்ற முறையில் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு அந்தத் திருமணத்திற்குப் போக அவனால் முடியாது தான் போய்விட்டது.

உள்ளூரிலேயே இருந்து கொண்டும் அதற்குப் போகாமலிருந்திருக்க முடியும். ஆனால் ஏனோ அதையும் அப்படிச் செய்யத் தோன்றவில்லை. அவசர அவசரமாக எழும்பூர் இரயில் நிலையத்துக்கு ஓடி வந்து இரயில் புறப்படுவதற்கு இன்னும் பதினைந்து நிமிஷங்களே இருக்கும் என்கிற சமயத்தில் எந்த நோக்கமும் எந்த அவசியமும் இல்லாமல் அந்த இரயில் நிற்கிற அந்தஸ்தும், டிராவலர்ஸ் பங்களாவும் இருக்கிற ஒரு குக்கிராமமாகத் தேடி ஞாபகத்துக்குக் கொணர்ந்து அந்த ஊருக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொண்டு இப்படி இங்கு வந்து சேர்ந்திருந்தான் சுகுணன்.

துளசியிடம் இவ்வளவு தாராளமாகப் பழகி இத்தனை தூரம் மனத்தைப் பறிகொடுத்திருக்கக் கூடாதென்று இப்போது ஒரு விரக்தி ஞானம் அவனுக்குத் தோன்றுகிறது. பெரும்பாலான ஞானங்கள் நினைவின் மயானத்தில் - அது பாதிக்கப்பட்ட பிறகு தானே தோன்ற முடியும்? மனிதன் பாதிக்கப்பட்ட பிறகு தான் அவனுள் அசல் ஞானமே பிறக்க முடியும் போலிருக்கிறது. 'இடிந்து தரைமட்டமாகிப் போன அரண்மனையில் - உடைந்த செங்கல்களுக்கிடையே ஒரு அரசந்துளிரோ; அத்திக்கன்றோ, பசுந்தலையை நீட்டி மேலெழுவது போல் மனிதனுடைய ஞானமும் அவனுடைய நம்பிக்கையின் சிதைவுகளுக்கிடையேயிருந்து தான் தோன்றலாமோ என்னவோ?' - என்றெண்ணி - இப்படி எண்ணுவதும் ஓர் அழுகுணித் தத்துவமாகத் தோன்றி உடனே - இவற்றையெல்லாம் மறக்கவும் முயன்றான் சுகுணன். ஒழுங்காக வரிசைப்படுத்தி நினைக்கவும் முடியாமல் - ஒழுங்காக வரிசைப் படுத்தி மறக்கவும் முடியாமல் அவன் மனத்தின் பலவீனமான எல்லையில் நினைவுகள் துடித்துத் தவித்துக் கொண்டிருந்தன அப்போது.

அவனுடைய பல வர்ணனைகளுக்கு அவளுடைய அழகு ஒரு சாட்சியாகவோ தூண்டுதலாகவோ இருந்திருக்கிறதென்பதை அவனாலேயே இப்போது மறக்கவோ மறுக்கவோ முடியாது. உலகுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவள் அவனுடைய எழுத்துக்குத் தூண்டுதலாகவும், எழுதும்போது சாட்சியாகவும், எழுதி முடித்த பின் ரஸிகையாகவும் இருந்திருக்கிறாள். சின்ன சின்ன அரிசிப் பல் வரிசையின் நெருக்கமான அமைப்போடும் - எயிறு என்று பழைய தமிழில் சொல்லுகிறார்களே - அத்தகைய பல்லழகோடும் - அவள் கலீர் கலீரென்று சிரித்துப் பாராட்டிய பாராட்டுக்கள் அவனை வசீகரித்ததும், மின்னுகிற கருமையோடு சிற்றலையிட்டுக் கற்றை கற்றையாகப் புரளும் அவளுடைய மோகனமான கூந்தலும் - அந்தக் கூந்தலின் கருமைக்குக் காதோரம் ஒரு மாற்று நிறம் போலச் செவிகளில் அவள் அணிந்திருந்த பொன் வளையங்களும் - அந்த வளையங்களை விடப் பொன் நிறமான செவிகளும், கைவிரல்களால் தொட்டு மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும் போன்ற அழகிய கழுத்தும், - அவனை வசீகரித்தன! 'தோழி' என்ற தன்னுடைய புகழ் பெற்ற நாவலில் முன்பு அவன் ஒரு சிறு கவிதை எழுதியிருந்தான்.

"முகிலுமிருளும் கலந்துபின்
மூண்டுசரிந்த கருங்குழலாள்
துகிலும் பட்டும் புனைந்துபின்
குயிலும் தேனும் இணைந்துபின்
கூவிப் பதிந்த சொல்லிசையாள்
வெயிலும் ஒளியும் செம்பொனும்
வீதமாகச் சமைத்த மேனியினாள் -"

என்ற அந்தக் கவிதைக்கு அவள் உடம்பே அவனறிந்த சாட்சி. பல அழகிய சம்பாஷணைகள் அவளிடம் பேசிப் பேசியே அவனுக்குக் கிடைத்திருந்தன. மிக நெருக்கமாக அமர்ந்து அவளிடம் இதமாகப் பேசி ஒருவர் மனம் மற்றவர் மனத்தில் கரைவது போல் நெகிழ்ந்திருந்த சமயத்தில் ஒரு நாள், "துளசி நீ ஒரு மாலை..." என்று அவன் உணர்ச்சி மேலிட்டு அவளைப் பாராட்டினான்.

"இந்த வீரரின் அழகிய கம்பீரமான புஜங்களை இப்படி அலங்கரிக்க முடியுமானால் நான் மாலையாக இருப்பதைப் பற்றி எனக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை" - என்று அவள் அன்று அதற்கு மறுமொழி கூறியிருந்தாள்.

ஒருவர் மனத்தில் மற்றவர் மனம் கரைய - ஒருவர் நினைவில் மற்றவர் நினைவு பதிய, ஒருவர் உணர்வில் மற்றவர் உணர்வு சேர - சோர - அவர்கள் பழகிய நாட்கள் பல. பழகிய விதங்கள் பல. அவள் ஓர் அபூர்வமான அழகி. கண்களால் சிரிப்பாள். கன்னத்தில் நகை பூக்கும். இதழ்களால் காணுவாள். விழிகளால் உண்ணுவாள். கைகளால் பேசி உணருவாள். மனத்துக்கு நயமான வாத்தியத்தை எடுத்து நாமே விரும்பி வாசிப்பது போல் அவளோடு பேசுவதே ஒரு சுகமான அனுபவமாகும். அத்தகையவளை இன்று உணர்ச்சிப் பூர்வமாக மற்றொருவனிடம் இழந்து நஷ்டப்பட்டது அவனுக்குப் பேரிழப்புத்தான். ஆனால் இந்த நஷ்டம் கூடத் தன்னை இன்னும் தீரனாக மாற்ற முடியுமோ என்பதாகவும் ஓர் அந்தரங்கத் துடிப்பு அவனுள் இருந்தது. பொற்கிண்ணத்தில் ஒளி நிழல் படிவது போல் முகம் முழுவதும் குறுகுறுவெனச் சிரிக்கும் அவள் அழகு அவனை ஏமாற்றி விட்டு போனதே அவனுக்கு இனி ஒரு பெரிய தூண்டுதலாகவும் செய்யலாம்.

அரைத்தால், நசுக்கி வழித்தெடுத்தால் வாசனை பிறப்பிக்கிற சந்தனக் கட்டையைப் போல் கலைஞனுடைய மனத்தை அலைத்தாலோ அரைத்தாலோ அந்த வேதனையும் ஒரு கலைத் தன்மையைத்தானே பிறப்பிக்கும்? கலைஞனுடைய துக்கத்துக்கும் கூடக் கலைமதிப்பு உண்டு தானே?

அந்த அதிகாலையில் அந்தக் கிராமாந்தரத்து அமைதியில் 'நானும் இருக்கிறேன்' என்பது போல் டி.பி. வாசலிலிருந்த வேப்பமரத்திலிருந்து ஒரு குயில் இரண்டு முறை கூவியது. எதிரே மரங்கள் அணிவகுத்த சாலையில் விகாரமான ஓசையோடு கடமுட வென்று ஒரு கட்டைவண்டி, மெதுவாக அவசரமின்றி நகர்ந்து கொண்டிருந்தது. அதை அடுத்து மூச்சு இரைக்க நெற்கதிர் அறுத்த கட்டுடன் இரவிக்கை அணியாத நாட்டுப்புற பெண் ஒருத்தி தலை சுமையோடு களத்துக்கு விரைந்து கொண்டிருந்தாள். எங்கோ இறவைக் கிணற்றில் கவலை இறைக்கும் ஓசை தூரத்து ரேடியோ அஞ்சலைப் போல் கேட்டுக் கொண்டிருந்தது. சுகுணன் எழுந்து நின்று சோம்பல் முறித்தான். வழக்கம் போல் மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறியில் இடித்து விடும் அளவிற்குக் கைகள் உயரப் போயின. சாதாரணமான உயரமுள்ள மனிதர்களை மாதிரியாக வைத்துத்தான் இந்த டி.பி. கட்டிடமெல்லாம் கட்டியிருப்பார்கள் போலிருக்கிறது.

பாத்ரூமில் தண்ணீர் நிரப்பியாகி விட்டதென்கிற செய்தியை டி.பி. வாட்ச்மேன் வந்து தெரிவித்து விட்டுப் போனான். அதோடு இன்னொரு செய்தியையும் அவன் சிரத்தையோடு தெரிவித்தான்.

"சாயங்காலம் தாசில்தார் காம்ப் வாராரு. அதற்குள்ளாற... இடத்தைக் காலி பண்ணிட்டா நல்லதுங்க" -

"கட்டாயம் காலி பண்ணி விடுவேன். நீ கவலைப் படாதே. எனக்கு மூன்றரை மணிக்கு இரயில்" - என்றான் சுகுணன்.

"எக்ஸ்பிரஸ் ரெண்டு விநாடிகள் தான் இங்கே நிற்கும். மூண்ரைக்கு ரயிலுண்ணா மூணு மணிக்கே ரயில்டேசனுக்குப் போயிடணுங்க..." - என்று கிராமத்துக்கே உரிய அதிக சிரத்தையோடு பதில் வந்தது வாட்ச்மேனிடமிருந்து.

சிரத்தை - அசிரத்தை - இரண்டையும் வேகமாகக் கணித்து முடிவு பண்ணுகிற கிராமத்து மனப்பான்மையை அந்த வாட்ச்மேனிடம் கண்டான் சுகுணன். தாசில்தார் வருவதனால் அவன் அங்கு மேலும் தொடர்ந்து தங்கியிருப்பதில் அசிரத்தையும், அவன் மூன்றரை மணி இரயிலுக்குப் போய்விடப் போவது குறித்து அதிக சிரத்தையும் காண்பித்த அந்த வாட்ச்மேனைப் பற்றிச் சிந்தித்து உள்ளூறச் சிரித்துக் கொண்டான் சுகுணன். கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டுப் பெட்டியைத் திறந்து குளிப்பதற்காகச் சோப்பும் துவாலைத் துண்டும் எடுக்கப் போன போது மேலாகக் கிடந்த துளசியின் கலியாணப் பத்திரிகை கண்ணில் பட்டது. கைகள் தயங்கின. அதைக்கண்டு மனம் மறுபடி அழத் தொடங்கியது.

...சுபமுகூர்த்தம் நிகழ்வதாய்ப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, மேற்படி முகூர்த்தம் சென்னை ஆபர்ஸ்ட்பரியில் நிகழ்வதால் தாங்கள் தங்கள் பந்துமித்திரர்களுடன் முகூர்த்தத்திற்கும் மாலையில் வரவேற்பிற்கும்..."

மேலே படிக்க முடியாமல் மனம் கனமாகியது. கைகள் தளர்ந்து சோர்ந்தன. சோர்வோடு சோர்வாக ஒருகணம் முரட்டுத்தனமான பாவனை ஒன்றும் ஏற்பட்டது. இப்படிக் கோழையாக விலகி ஓடிவந்து மறைந்து கொள்ளாமல் எல்லாரையும் போல் அந்தக் கலியாணத்திற்குத் தானும் போய்த் துணிச்சலாகத் துளசியையும் அவளுக்குக் கணவனாகிற யாரோ ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டரையோ, பி.இ. இஞ்சினீயரையோ - அந்த மணமகனையும் - பார்த்து கலியாணம் விசாரித்துக் குத்தலாக இரண்டு வார்த்தை பேசிவிட்டும் வந்திருந்தால் அவளுக்கு எப்படி இருந்திருக்கும் என்றும் ஒரு குரூரமான கற்பனை அவனுள் எழுந்தது. அப்படிச் செய்து அவளை வதைக்காமல் இப்படி ஓடிவந்து தான் ஒளிந்து கொண்டது தவறு என்று அவனுக்கே தோன்றியது. பார்க்கப் போனால் இந்த இரண்டு மூன்று நாட்களில் அவன் கைகள் பிரமாதமாக ஒன்றும் எழுதிக் கிழித்து விடவில்லை. காகிதம் வரை வருவதற்குக் கூட வடிவும் ஒழுங்கும் பெறாமல் மனத்திலேயே எழுதி மனத்திலேயே கிழிந்தது தான் அதிகம். நாளைக்குக் காலை எழும்பூர் போய் இறங்கித் திருவல்லிக்கேணி சென்று அறையில் பெட்டி படுக்கையைப் போட்டு விட்டுக் குளித்துச் சிற்றுண்டி முடித்துக் கொண்டு அலுவலகத்துக்குப் போனால் 'கம்போஸுக்கு மேட்டர் உண்டா சார்?' - என்று ஆவலோடு கேட்கவரும் பூம் பொழில் அச்சகத்து ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடுவுக்கு என்ன பதில் சொல்வது?

இதுவரை துளசிக்கு அடுத்தபடி சுகுணன் எழுதும் எழுத்துக்களின் முதல் இரசிகர் இந்த நம்மாழ்வார் நாயுடுதான். அவன் மேலும் அவன் எழுத்துக்கள் மேலும் ஒரு தந்தையின் பாசத்தோடும் அன்போடும் உரிமை கொண்டாடிப் பேசுகிற நாணயமான தொழிலாளி அவர். சுகுணன் 'மிஷினில்' ஏறிக் கொண்டிருக்கிற ஃபாரத்தில் வண்டி வண்டியாகக் 'கரெக்ஷன்' போட்டுக் கொடுத்தாலும் நாயுடுவுக்கு கோபமே வராது.

"இதென்னா புச்சா நம்பளுக்குள்ளே? வழக்கந்தானே சார்" - என்று சிரித்துக் கொண்டே அவனிடமிருந்து கரெக்ஷனை வாங்கிச் செல்வார் நாயுடு.

எழுதி எழுதிக் குவிக்கிற காகிதங்களைப் படித்துப் பாராட்டவும், 'இப்படி இருந்தால் நல்லாயிருக்கும்' என்று அபிப்ராயம் சொல்லவும் துளசி இனிமேல் வரமாட்டாள். பழைய காலத்தில் அரண்மனைகளில் அரசர்கள் உண்ணும் உணவை அவர்கள் உண்பதற்கு முன்பாகவே உண்டு ருசியைப் பற்றி முதலியேயே சோதித்துச் சொல்வதற்கு 'உண்டு காட்டிகள்' என்பதாக ஒருவகை ஊழியர்கள் இருப்பார்களாமே; அதுபோல அவனுடைய எழுத்தின் ருசியைச் சரிபார்த்து அவனுக்கே சொல்ல நம்பிக்கையான ஆள் இனி யாரும் இல்லை. இனிமேல் அவனுக்குப் பொறுப்பு அதிகம். தன் எழுத்தின் தரத்தை விலகி நின்று கொண்டு தானே படைக்கிறவனாகவும் தானே படிக்கிறவனாகவும் வேறு வேறு எல்லைகளில் மாறி இருந்து அவன் தனக்குள் தீர்மானம் பண்ணவேண்டும். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும், 'தனக்கு வேறு ஆதரவுகளும் வேறு நம்பிக்கைகளும், சாசுவதமில்லை - கடைசிவரை சாசுவதம் தன்னுடைய சொந்த நம்பிக்கையும், சொந்த மனமுமே அன்றி வேறல்ல' - என்று இப்படி உணருகிறாற் போல ஒரு நிகழ்ச்சியாவது நிச்சயம் வராமற் போகாதென்று இப்போது சுகுணனுக்குத் தோன்றியது.

குளித்துவிட்டு வந்ததும் - சிந்தனை மேலும் சுறுசுறுப்படைந்து மனத்தில் உறைக்கிற மாதிரி - அவளுக்கு - அதுதான் அந்தக் கடன்காரி துளசிக்கு ஏதாவது எழுதவேண்டுமென்று சுகுணனுக்குத் தோன்றியது. வெளிப்பார்வைக்கு அது திருமண வாழ்த்தைப் போல் இருந்தாலும் - அவள் கையில் கிடைக்கிற போது - அவள் அதைப் படிக்கிற போது அவள் இதயத்தைச் சுடும்படி அது இருக்க வேண்டும் என்று தீர்மானம் பண்ணிக் கொண்டவனாக அந்தத் தீர்மானத்தைச் சில விநாடிகள் கூடத் தள்ளிப் போடப் பொறுக்காத தீவிரத்தோடு உடனே வாட்ச்மேனைக் கூப்பிட்டு, 'உள்ளூர்த் தபாலாபீஸில் போய் 'கிரீட்டிங்' பேப்பரும் ஸ்டாம்பும் கவரும்' - வாங்கி வருமாறு கூறிச் சில்லறை கொடுத்தான் சுகுணன்.

அந்த வாட்ச்மேனுக்கு 'கிரீட்டிங் கவர்' - என்ற வார்த்தை வாயில் நுழையவில்லை. ஆகவே ஒரு துண்டுத் தாளில் அதைத் தனியே எழுதிக் கொடுக்க வேண்டியதாயிற்று. பத்தே நிமிஷத்தில் சைக்கிளில் போய் கிரீட்டிங் கவர் பேப்பர் - ஸ்டாம்பு வாங்கி வந்துவிட்டான் வாட்ச்மேன். கிராமாந்தரத்துத் தபால் நிலையமாகையால் நீண்ட நாட்களாக யாரும் வாங்காமல் பழுப்படைந்திருந்த கிரீட்டிங் தாளும் கவரும்.

திருமணம் காலையிலேயே முடிந்திருக்குமென்றால் இந்த வாழ்த்தை 'நேர் பார்வைக்கு' என்று உறையில் எழுதி அவள் பேருக்கே அனுப்பினால் இது அவளிடம் நேரில் கிடைக்குமென்று சுகுணனுக்குத் தெரியும்.

அவள் வீட்டில் அவளுக்குச் செல்லமும் உரிமையும் அதிகம். அவள் பெயருக்கு வருகிற கடிதத்தை அவளைத் தவிர வேறு யாரும் பிரிக்கமாட்டார்கள். அவள் வீட்டில் இல்லாமல் வெளியே எங்காவது புதுமணமான ஜோடியாய்க் கணவனோடு சினிமா, கடற்கரை என்று போயிருந்தாலும் அவள் வந்த பின் அவளே கடிதத்தைப் பார்ப்பாள் என்று உறுதி செய்து கொண்டு, "வீரர்களின் கம்பீரமான தோள்களை அலங்கரிக்க வேண்டிய மணமாலைகள் சந்தர்ப்பவசத்தால் கோழைகளின் தளர்ந்த கைகளில் சூட்டப்பட்டு விடுவதும் உண்டு போலும்" என்று முத்து முத்தாக எழுதிக் கீழே சுகுணன் என்று கையெழுத்தும் இட்டு மேலே 'மண வாழ்த்து' என்று தலைப்பும் போட்டு - உள்ளே வைத்து உறையை மூடி அஞ்சல் தலையும் ஒட்டி ஆத்திரந்தோய தபாலுக்கு அனுப்பியபோது - எப்போதோ இலக்கிய விவகாரங்களில் தகுதியற்ற எதையாவது பத்திரிகையில் கடுமையான சொற்களில் குத்தலாகச் சாடி எழுதி முடிக்கிற வேளையில் உண்டாகுமே ஒரு கோபமான மனநிறைவு - அந்த மாதிரி மன நிறைவு தான் இன்றும் இந்த விநாடியில் அவனுக்கு உண்டாகியிருந்தது.

தன்னுடைய சொற்கள் தான் நியமித்து அனுப்பிய கடுமையோடு போய் இன்னொருவரைத் தாக்கித் துன்புறுத்தும் என்று நினைக்கிற போதுதான் மனத்துக்கு எத்தனை சுகமாயிருக்கிறது? சாயங்காலம் அந்தக் கிராமத்திலிருந்து தன் கடிதம் எந்த இரயிலில் பயணம் செய்யுமோ அதே இரயிலில் சென்னைக்கு பிரயாணமாகிற போதும் இந்தத் தார்மீகக் கோபத்தோடு கூடிய மனத்திருப்தியே அவனிடமிருந்தது.
--------------

அத்தியாயம் -2

பழக்கப்பட்டு விட்ட மனிதனால் ருசிகளில் எப்போதுமே ஏமாற முடிவதில்லை. இன்னொருவர் மேல் நாம் வைக்கிற நம்பிக்கை அல்லது இன்னொருவர் நம் மேல் வைக்கிற நம்பிக்கை - பிரியம், அன்பு, அநுதாபம், ஆதரவு - இவையெல்லாம் கூட வாழ்க்கையில் மனிதன் கண்டு விட்ட மனத்தின் உணர்ச்சி பூர்வமான ருசிகள்தான்.

நல்ல வேளையாகத் தென்னிந்திய இரயில் மார்க்கங்களில் சில பகுதி இரயில்களுக்குப் 'பார்ஸல் பாஸஞ்ஜர்' - என்று தற்செயலாகவே ஒரு பொருத்தமும் காரணமும் அமையும்படி பெயர் கொடுத்திருக்கிறார்கள். இந்த இரயிலில் வந்தவர்களையோ, வருகிறவர்களையோ, பிரயாணத்தைப் பற்றி விசாரித்தால் கூட 'பார்ஸலில் வந்தேன்' - என்றே மறுமொழி கூறுகிறார்கள். இப்படிச் சொல்வதில் ஒரு குத்தல் அல்லது இரயில்வேக்காரர்களை நிரந்தரமாகச் சபிக்கும் ஒரு சாபம் இருப்பதாகத் தோன்றியது சுகுணனுக்கு. கொண்டதையும் கொள்ளாததையும் எப்படியோ அள்ளித் திணித்துப் பார்ஸல் செய்து பொட்டணம் கட்டுவது போல்தான் இந்த இரயில்களில் பிரயாணிகள் குழந்தைகளும் குட்டிகளுமாகத் திணியுண்டு - இடியுண்டு வருகிறார்கள்.

தான் புறப்பட்ட நிலையத்துக்கு அடுத்த நிலையத்திலேயே குழந்தை குட்டிகளோடு புகுந்த ஒரு பெரிய குடும்பத்துக்குத் தன் இடத்தைத் தியாகம் செய்துவிட்டு நிற்கத் தொடங்கிய சுகுணனுக்குச் சென்னை எழும்பூர் நிலையம் வருகிறவரை மறுபடி உட்கார இடம் கிடைக்கவே இல்லை.

போன ஆண்டு சென்னையிலிருந்து - ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட பத்திரிகைப் பிரிதிநிதிகளின் தூது கோஷ்டியில் தானும் ஒருவனாகப் போயிருந்த போது டோக்கியோவுக்கும் ஒஸாகாவுக்கு மிடையே பிரயாணம் செய்த இரயில் சுத்தமும் அழகும், நேரம் தவறாத வேகமும், பிரயாணிகள் உட்காருவதற்குத் தாராளமான இடவசதியும், இருந்ததை இப்போது நினைவு கூர்ந்தான் சுகுணன். அப்படி நினைவு கூர்ந்தபோது தான் பிரயாணம் செய்து கொண்டிருந்த இரயிலையும் வளர்ச்சியடைவதில் மந்தகதி போடும் தன் தேசத்தையும் சிந்திக்கவே கொஞ்சம் வெட்கமாயிருந்தது அவனுக்கு.

இந்திய இரயில்வேயில் பிரயாணிகளுக்கும், சாமான்களுக்கும், தனித்தனி புக்கிங் ஆபீசுகள் இருப்பது ஒன்று மட்டும்தான் பெரிய வித்தயாசமாகத் தோன்றியதே தவிர, வேறு வித்தியாசங்கள் எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. தீவிரமாகச் சிந்திக்கப் பழகிவிட்ட ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் இவற்றை நினைப்பதிலிருந்து அவனால் தன்னைத் தவிர்த்துக் கொள்ள முடியவில்லை. பார்க்கப் போனால் அவன் கண் விழித்துப் பிரயாணம் செய்த நேரத்தில் இந்திய இரயில்வேயைப் பற்றியும், எப்போதோ ஜப்பானுக்குப் போய்விட்டு வந்ததைப் பற்றியும், டோக்கியோ இரயில் நிலையத்தில், 'இந்த நிலையத்துக்குள் வரும் இரயில்களையும் இங்கிருந்து புறப்படும் இரயில்களையும் கொண்டு உங்கள் கடிகாரத்தில் நேரத்தைச் சரிசெய்து கொள்ளலாம்' - என்று ஜப்பானியர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வதைப் பற்றியும் நினைத்த நேரம் மிகவும் குறைவுதான். அவன் அதிக நேரம் மாற்றி மாற்றி நினைத்த நினைவோ வேறொன்றாயிருந்தது.

நிற்கவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் பிரயாணம் செய்த நேரத்தில் துளசியைப் பற்றித்தான் அதிக நேரம் நினைத்திருந்தான் அவன். தான் ஏன் இனிமேலும் அவளைப் பற்றி இப்படி நினைக்க வேண்டுமென்று - அவளை நினைப்பதை உடனடியாகத் தவிர்க்கத் துணியாத தன் மனத்தின் மேலேயே ஆத்திரம் வந்தது அவனுக்கு. இனிப்பு, கார்ப்பு, புளிப்பு, உப்பு இவைகளைப் போல் அன்பும் தவிர்க்க முடியாத ருசிகளில் ஒன்றாக வாழ்வில் இடம் பெற்றிருக்கிறது. பழக்கப்பட்டு விட்ட மனிதனால் ருசிகளில் எப்போதுமே ஏமாற முடிவதில்லை. இன்னொருவர் மேல் நாம் வைக்கிற நம்பிக்கை அல்லது இன்னொருவர் நம்மேல் வைக்கிற - பிரியம், அன்பு, அநுதாபம், ஆதரவு - இவையெல்லாம்கூட வாழ்க்கையில் மனிதன் கண்டு விட்ட மனத்தின் உணர்ச்சிபூர்வமான ருசிகள். இந்த நீண்டகால ருசிகளை அத்தனை சுலபமாக மனிதனால் மறந்து விட முடியாது போலிருக்கிறது! சொல்லப்போனால் நாவின் ருசிகளை விட இந்த மனத்தின் ருசிகளுக்குத்தான் மனித வாழ்வில் தவிர்க்க முடியாத இடம் உண்டு என்பது நிருபணமான உண்மையாகத் தோன்றியது.

மனித மனத்தின் இந்த ருசிகளில் எப்போதும் தேவையானவையும் எப்போதும் விரும்பப்படுகிறவையுமான சில நியாயமான ருசிகளைப் பொருளாகக் கொண்டுதான் உலக மகா கவிகளின் காவியங்கள் எல்லாம் படைக்கப்பட்டிருக்கின்றன. நாவின் ருசிகள் மனித வாழ்வின் தேவையை மட்டுமே படைக்கின்றன. மனத்தின் ருசிகளோ - அவை தான் மனித வாழ்வையே அந்தப் பெயருக்குரிய கௌரவத்துடன் செம்மையாக உருவாக்குகின்றன.

அன்பிலும், கருணையிலும் ருசிகண்டு ருசிகண்டு வளர்ந்தவன் சுகுணன். தான் இன்னொருவரைச் சூழும்போதே அன்பு வெள்ளமாக நெருங்கிச் சூழ்ந்து பெருக வேண்டுமென்று நினைக்கிற சுபாவம் அவனுடையது. தன்னைச் சூழ்கிறவர்களும் அப்படியே சூழவேண்டுமென்று நினைத்துத் தவிக்கிற மலர்மனம் அவனுடையது. கடந்த சில நாட்களாக அந்த மனம் ஏமாற்றத்தால் இறுகிக் கடுமையாகியிருந்தது. கொதிப்படைந்திருந்தது. விரக்தியுற்றிருந்தது.

*****

அந்த அதிகாலையில் எழும்பூர் நிலையத்தின் படிகளுக்குக் கீழே எந்தவிதமான மாறுதலோ, சிறப்போ விளைந்து விடாமல் சென்னை வழக்கம் போல் தானிருந்தது. தண்ணீர் அலை அலையாக ஓடுவதற்குப் பதில் நிறைய மனிதர்களும் டிரான்ஸ்போர்ட் பஸ்களும், வாடகைக் கார்களும், சைக்கிள்களும், ரிக்ஷாக்களும் நிதானமாக ஓடுகிற ஒரு மகாநதியைக் கற்பனை செய்தாற்போல் இந்தச் சென்னை நகரத்து வீதிகளைத் தனக்குள் பலமுறை கற்பனை செய்திருக்கிறான் அவன். கிழிந்த டயர்களும் தோல் துண்டுகளுமாகத் தான் இருக்குமிடத்தை அறிவிப்பதற்குத் தம்மளவில் தரைமேல் உண்டாக்கிய ஒரு சிக்கனமான ஷோரும் போல் நாலைந்து செருப்புக்களைக் கொலு வைத்துவிட்டுக் காத்திருக்கும் செருப்புத் தொழிலாளிகளும், ஆப்பிளுக்கு துணியால் துடைத்துப் பாலிஷ் போடும் ஆப்பிள் பழக்கடைக்காரரும், யாரோ ஒரு முக்கியமான தலைவர் கைதாகி விட்ட செய்தியோடு இருக்கும் தினசரி வால்போஸ்டர்களை வரிசையாகத் தொங்கவிட்டிருக்கும் பத்திரிகை ஸ்டால்களுமாக எழும்பூர் நிலையத்தின் எதிர்ப்புறம் திரும்பத் திரும்ப ஒரே விதமாக அச்சடித்த ஒரு புத்தகத்தின் பக்கம் போலிருந்தது.

காட்டப்படும் வேகத்தினாலும், பரபரப்பினாலும் மனிதர்கள் நுழைந்து வெளிவரும் இராட்சதச் சுறுசுறுப்பினாலும் 'மீல்ஸ் ஃபேக்டரி' அல்லது 'டிபன் ஃபேக்டரி' என்று சொல்லத்தக்க இரண்டொரு கலகலப்பான ஓட்டல்களும் எதிரே வழக்கம் போல் தானிருந்தன. எதிர்ப்புறத்தை ஓரிரு விநாடி நிதானமாகப் பார்த்துவிட்டு மனத்தில் வேண்டியதும் வேண்டாததுமான சிந்தனைகளோடு டாக்ஸியையோ, ஆட்டோ ரிக்ஷாவையோ எதிர்நோக்கி நின்ற சுகுணன் எதிர்பாராத சந்திப்பு ஒன்றிற்கு ஆளானான். 'துளசி'யின் வீட்டு டிரைவர் எதற்காகவோ அந்த வேளையில் அங்கு எழும்பூருக்கு வந்திருந்தான். கார் பார்க்கிங்கில் பார்த்த போது எத்தனை கார்களுக்கு நடுவில் நிறுத்தப் பட்டிருந்தாலும் தனியே அடையாளம் தெரியக்கூடிய அந்த மூக்குச் சப்பையான 'ஓக்ஸ்வாகன்' - காரும் இப்போது சுகுணனின் பார்வையில் தெரிந்தது.

"என்னா சார்? வர்ரீங்களா? கலியாணத்தன்னிக்கும் காணவேயில்லியே... எங்கனாச்சும் வெளியூர்லே ஜோலியா பூட்டிங்களா?" - என்று விசாரித்தான் அந்த டிரைவர்.

அவனுடைய கேள்வியில் எழுப்பப்பட்ட சந்தேகத்துக்கு மறந்தாற் போலப் பாவித்துக் கொண்டவனாக ஒரு பதிலும் சொல்லாமலே - தெரிந்தே வேண்டுமென்றே கை நழுவ விடுகிற ஒரு பொருளைப் போல அந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டு "இந்த அதிகாலை நேரத்திலே எழும்பூருக்கு எங்கே வந்தாய் அப்பா? யாராவது ரயில்லே வாராங்களா? அழச்சுக்கிட்டுப் போக வந்திருக்கியா?" - என்று அவனிடம் வேறு கேள்வியைக் கேட்டான் சுகுணன்.

"இல்லீங்க. புதுசாக் கலியாணமான மாப்பிள்ளை ஐயாவும், துளசி அம்மாவும் கோடைக்கானலுக்கு ஹனிமூன் போறாங்களாம். ஐயா டிக்கட் ரிசர்வ் பண்ணிட்டுவரச் சொன்னாரு. அதுக்காகத்தான் வந்தேன்" - என்றான் டிரைவர்.

அவனுடைய இந்தப் பதில் மனத்தில் இன்னொரு முள்ளைக் குத்தினாற் போலிருந்தது சுகுணனுக்கு. இரண்டு மூன்று விநாடிகள் தயங்கிவிட்டு "வாரீங்களா சார்? அறையிலே கொண்டு விட்டுப் பிட்டுப் போறேன்" - என்று கேட்ட டிரைவருக்கு, "இல்லே! நான் போய்க் கொள்கிறேன். உன் காரியத்தைப் பார்" - என்று கச்சிதமாகப் பதில் வந்தது சுகுணனிடமிருந்து.

பதினைந்து நிமிடங்கள் சடுகுடு விளையாடுவது போல இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக அலைந்து ஓட்டம் பிடித்து மீண்ட பின் டாக்சி கிடைத்தது. டாக்சியில் போகும் போதும் ஏதேதோ நினைவுகள். அதாவது போக வேண்டிய இடத்தை டாக்ஸிக்காரனுக்குச் சொல்லவும் மறந்துவிட்ட அளவிற்கு நினைவுகள். டாக்சி எழும்பூரிலிருந்து நேர் கிழக்கே ஓடி இடது பக்கம் திரும்பிப் பாலம் ஏறி இறங்கி அப்புறம் வலது புறம் மூர்மார்க்கெட், சென்ட்ரல் நோக்கி ஓடத் தொடங்கிய பிறகுதான் - பக்கங்களில் பார்த்துப் பரபரப்போடும் பதற்றத்தோடும் வழிமாறிவிட்டதை உணர்ந்து - டிரைவருக்கு அறிவிக்கத் தோன்றியது. அதன் விளைவு - கோட்டை நிலையம் போய் - அப்புறம் - போர் நினைவுக் கட்டிடம் (வார் மெமோரியல்) மெரீனா எல்லாம் சுற்றிச் சுங்குவார் தெரு வழியே - திருவல்லிக்கேணி பெரிய தெருவுக்குப் போய் நின்றது டாக்சி.

வாடகையைக் கணக்குத் தீர்த்து டாக்சியை அனுப்பிவிட்டுப் பெட்டிப் படுக்கையோடு படியேறி மாடிக்குப் போனான் சுகுணன். கையிலிருந்த சாமான்களை அவன் கீழே வைத்து விட்டுச் சாவியை எடுத்துத் தன் அறையைத் திறந்த போது - பக்கத்து அறைக்காரருக்குத் தபால்காரர் எக்ஸ்பிரஸ் டெலிவரி கடிதம் ஒன்றைக் கொடுத்துக் கையெழுத்து வாங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. இன்னும் சிறிது நேரத்தில் என்னுடைய 'அந்த மணவாழ்த்துக் கடிதமும் சாதாரணத் தபாலில் - துளசிக்குக் கிடைக்கும்' - என்று நினைத்துக் கொண்டான். அவன் அவளுக்கு எழுதியிருக்கும் அந்த வாக்கியங்கள் மறுபடி ஒவ்வொரு சொல்லாக அவனுக்கு நினைவு வந்தது.

'வீரர்களின் தோள்களை அலங்கரிக்க வேண்டிய மணமாலை சந்தர்ப்ப வசத்தால் கோழைகளின் கைகளில்...'

காரியாலய முகவரிக்கு எழுதாமல் அறை முகவரிக்கே வழக்கமாக எழுதும் இரண்டொரு நெருங்கிய நண்பர்களின் கடிதங்கள் கதவிடுக்கு வழியாகப் போடப்பட்டுக் கிடந்தன. அதில் ஒரே ஒரு கடித உறை மட்டும் தபால் தலையோ, முத்திரையோ, எதுவுமில்லாமல் - கனத்த உரையின் மேல் 'சுகுணன் அவர்கள், அறை எண் 9, கண்ணப்பா லாட்ஜ், பெரிய தெரு, சென்னை - 5' - என்று சுத்தமாகத் தமிழில் முகவரி டைப் செய்யப் பெற்றதாயிருந்தது. முன்புறமோ பின்புறமோ அதில் எங்கும் அனுப்பியவர் முகவரியோ வேறு குறிப்போ எதுவுமே இல்லை. இந்த மாதிரி வேளைகளில் மனத்தில் தோன்றும் ஒரு தற்செயலான ஆனால் அதே சமயத்தில் பின்னால் சரியாயிருக்கப் போகிற ஓர் அநுமானத்தோடு 'தான் அறையைப் பூட்டிக் கொண்டு அவசரமாக இரயிலேறி வெளியூர் போனபின் துளசி யாரிடமாவது இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கக் கூடும்' என்று எண்ணிப் பிரித்துப் பார்த்தால் அநுமானம் தவறாதபடி அது துளசியின் கடிதமாகவே இருந்தது.

தன் கையெழுத்தினால் எழுதக் கூசியோ, பயந்தோ - அவளே ஜாக்கிரதையோடும், பயத்தோடும், எச்சரிக்கையோடும் அந்தக் கடிதத்தைத் தமிழில் டைப் செய்திருந்தது அவனுள் இன்னும் அதிகமாக ஆத்திரமூட்டியது. ஒரு மனிதனுடைய உறவை அடைவதிலும் விலக்குவதிலும் பெண்ணுக்குத்தான் எத்தனை ஜாக்கிரதை? எத்தனை முன்னெச்சரிக்கை? எத்தனை சம்பிரதாயமான பயங்கள்? அவசர அவசரமாகக் கடைசித் தாளை விரித்துக் கையெழுத்தைப் பார்த்தான். அதுவும் அவளுடைய சொந்த எழுத்தினால் இல்லை. 'உங்களுடையவள் - அபலை' என்ற வார்த்தைகளும் கூட டைப் செய்யப்பட்டே இருந்தன. அதன் மேலிருந்த ஆத்திரம் காரணமாகக் கடிதம் எழுதுவதற்கென்றே தயாரிக்கப்பட்ட பஞ்சு போன்ற மெல்லிய தாளில் எழுதப்பட்டிருந்தும் அந்த இலேசுக் காகிதங்கள் கூடத் தன் கைகளில் கல்லாய்க் கனப்பதுபோல் அப்போது உணர்ந்தான் சுகுணன். இதற்குள் எதிர்த்த அறைக்காரரும் பக்கத்து அறைக்காரரும் குசலம் விசாரிக்க வரவே - அவர்களிடம் ஒப்புக்கு ஏதோ பேசி அனுப்ப வேண்டியிருந்தது. அவளுடைய அந்தக் கடிதத்தைப் படிக்காமல் அசிரத்தை செய்ய வேண்டும் போல் வெறுப்பாகவும் இருந்தது. உடனே அவசர அவசரமாக அதைப் படித்து விட்டு ஆத்திரப்பட வேண்டும் போலவும் இருந்தது. இந்த உணர்ச்சிக் குழப்பத்தில் என்ன செய்வதென்று தயங்கி அவளுடைய அந்த டைப் செய்யப்பட்ட கடிதத்தை அப்படியே தனியாக எடுத்து வைத்துக் கொண்டு தபாலில் வந்து கிடந்த மற்றக் கடிதங்களை எடுத்துப் படிக்கலானான் சுகுணன்.

அந்த ஆண்டு பி.இ.என். மகாநாடு டெல்லியில் நடக்கப் போவதாகவும் அதற்கு அவன் அவசியம் வர வேண்டுமென்றும் டெல்லியிலிருந்து நண்பன் மணி எழுதியிருந்தான். இந்த முறை அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர்களின் பெடரேஷன் சென்னையில் கூடுவதற்கு அவனால் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா? என்று கல்கத்தாவிலிருந்து 'கோஷ்' கேட்டிருந்தார். இன்னொரு கடிதம் கிராமத்தில் ஆசிரியையாக வேலை பார்க்கும் அவனுடைய சகோதரியிடமிருந்து வந்திருந்தது.

படித்துக் கொண்டிருந்த கடிதங்கள் எல்லாம் படிக்காமல் ஒதுக்கி வைத்துவிட்ட ஒரு கடிதத்தையே பலமாகவும் அவசரமாகவும் நினைவுப்படுத்திக் கொண்டிருந்தன. ஒரு காரியத்தை முதலில் செய்துவிடுவது எத்தனை பெரிய சிரத்தையோ அத்தனை பெரிய சிரத்தைதான் 'அதைக் கடைசியில் செய்வதற்காகத் தனியே மீதம் வைத்திருக்கிறோம்' என்று ஒவ்வொரு வினாடியும் நினைத்தபடியே முதலில் செய்யும் மற்றக் காரியங்களை வேகமாகச் செய்வதும். முழு வாக்கியத்தின் அர்த்தம் நாமே பாவனையாகக் கற்பித்து அதன் முடிவில் போட்டு வைக்கிற ஒரு கடைசிப் புள்ளியில் போய் முடிவையும் முடிந்து விட்ட நிரூபணத்தையும் பெறுவது போல் கடைசியாகச் செய்ய வேண்டுமென்று பிரித்து ஒதுக்கி வைப்பதாலேயே சில காரியங்களுக்கு முதன்மையும் முக்கியமும் சிரத்தையும் உண்டாகி விடுகிறது. துளசியின் கடிதத்திற்கும் இப்போது அப்படி ஒரு சிரத்தை தானாகவே அவன் விரும்பாவிடினும் உண்டாகியிருந்தது.

அவ்வளவு நேரம் அணைக்கட்டி நிறுத்தியிருந்த ஆர்வம் மீறிப் பெருக, அந்தக் கடிதக் கத்தையைக் கையிலெடுத்தான் சுகுணன். கடிதத்தின் மேற்புறம் தேதி - நேரம் மணி நிமிடம் கூட டைப் செய்யப்பட்டிருந்தது. இரவு பதினோரு மணிக்கு மேல் தன் அறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டு இந்தக் கடிதத்தை இரகசியமாக 'டைப்' செய்திருந்தாள் அவள்.

'என்றும் என் வழிபாட்டுக்குரிய தெய்வத்திற்கு' என்று புது மிஷினில் புதுப் பச்சை ரிப்பன் மாட்டி அடித்தாற்போல் பச்சை நிற எழுத்துக்கள் முதல் வரியாகத் தனியே எடுக்கப்பட்டுக் காவியத்திற்குக் கடவுள் வாழ்த்துப் போலவோ, காப்புப் போலவோ அணிவகுத்து முன் நின்றன. அந்த ஒரு வரியைப் படித்த விநாடியில் மேகம் மழையாகக் கொட்டி மறைந்தாற் போல் அவள் மேலிருந்த ஆத்திரம் கருணையாகப் பெருகி மறைந்தது. பார்க்கப் போனால் நீண்ட வாழ்க்கையின் எந்த நிலையிலும் எந்த இடத்திலும் பெண் என்பவள் ஓர் அபலைதான். இந்த நிலையில் ஒருத்தி சந்தர்ப்பவசத்தினால் தன்னுடையவளாக முடியவில்லை என்பதற்காக அவளை வெறுப்பது எவ்வளவு சுயநலமானது? அல்லது சிறுபிள்ளைத்தனமானது? - என்று இப்படி எண்ணியபோது - தன்னை மணந்து கொள்ள முடியாமல் போய்விட்டது என்ற ஒரே காரணத்துக்காகத் துளசியை உதாசீனம் செய்வது பக்குவமான செயலாக அவனுக்கே படவில்லை. திடீரென்று எதற்காகவோ அவள் மேலே தான் பெரிதாகப் பரிதாபப்பட வேண்டும் போலவும் அனுதாபப்படவேண்டும் போலவும் மிக விரைவாக அவன் உணர்ச்சி மாறியது. அந்தக் கடிதத்தை அவள் தொடங்கியிருந்த ஒழுங்கு, மரியாதை, சிரத்தை, பயம், அவளுடைய புன்னகையைப் போல் சுத்தமான அந்தப் புதிய பச்சை நிற டைப் எழுத்துக்கள் - எல்லாம் சேர்ந்து அவன் மனத்தை இளகச் செய்துவிட்டன. இந்த விநாடி அவன் மனம் ஒரு கவிஞனின் மிக மென்மையான சத்துவ குணத்தோடிருந்தது.

"என்னைத் தயை செய்து - பெருந்தன்மையோடு மன்னித்து விடுங்கள். சொல்லாமல் கொள்ளாமல் எல்லா ஏற்பாடும் செய்து முடித்துவிட்டு அப்பா இப்படி என் அபிப்பிராயத்தையோ ஆசையையோ நான் வெளியிட ஒரு மணி நேர அவகாசம் கூடத் தராமல் திருமணம் என்ற பிரமிப்பான காரியத்தைத் திடுமென்று எனக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்துவாரென்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

'வாழ்க்கை நாம் திட்டமிட்டபடி எதிர்வருவதில்லை. அது தான் திட்டமிட்டபடி நம் முன் நேர்கிறது' - என்று உங்களுடைய "பாலைவனத்துப் பூக்கள்" என்ற நாவலில் நீங்கள் எழுதியிருக்கிற கடைசி வாக்கியங்களைத் தான் நினைக்கிறேன் இப்போது. எங்கள் வீட்டில் எனக்கு எவ்வளவோ உரிமையும், செல்லமும் உண்டு என்று பேர். ஆனால் இந்தத் திருமண சம்பந்தமாக மட்டும் ஏனோ என்னை ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் இப்படி நிர்க்கதியாய் விட்டு விட்டார்கள்.

ஒலியாக வெளிப்பட்டு அபிப்பிராயங்களையும் அங்கீகாரங்களையும் தேடாமல் மனத்தினுள்ளேயே அடங்கிவிடும் கற்பனையாய் சங்கீதத்தைப் போல இனி நினைப்பின் எல்லையிலேயே தங்கி மரியாதை பெற வேண்டிய பொருளாகிவிட்டது நம் காதல்.

என்னுடைய இந்தக் கையாலாகாத வாக்கியத்தைப் படித்ததும் என்னைக் கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் போலக் கோபமும் ஆத்திரமும் வரும் உங்களுக்கு. அப்படி உங்கள் கோபத்திற்கும், ஆத்திரத்திற்கும் பொருளானால் கூட மகிழ்ச்சியாயிருக்கும் எனக்கு. ஏனென்றால் நான் எந்தக் கோபத்துக்குப் பாத்திரமாகிறேனோ அந்தக் கோபம் உங்களுடையது. நிதானமாக என் நிலையைச் சிந்தித்தீர்களானால் என் மேல் கோபம் வருவதற்குப் பதில் அநுதாபம் தான் வரும் உங்களுக்கு. நான் உங்களோடு நெருங்கிப் பழகியதையும், உங்கள் எழுத்துக்களின் மேல் மோகம் கொண்டதையும், பத்திரிகையின் உரிமையாளர் என்ற முறையில் அப்பாவைக் காண்பதற்காக எங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்த போதெல்லாம் தேவைக்கதிகமான உரிமையும், உறவும் பாராட்டி உங்களை ஓடியாடி உற்சாகமாக உபசரிப்பதையும் வெறும் இரசிகத் தன்மை என்று மட்டுமே அப்பாவால் எப்படிச் சாதாரணமாக நினைத்து ஒதுக்கி விட முடிந்ததென்பது தான் எனக்கே ஒரேயடியாக விளங்கவில்லை. இந்த விஷயத்தில் அப்பா இப்படி என்னைக் கைவிட்டு விடுவாரென்று நான் நினைக்கவில்லை. இதில் உங்களை விட எனக்குத் தான் பேரிடி.

நான் பெண். 'பெண்கள் பிறக்கும் போதே முன்னெச்சரிக்கையோடு கூடப் பிறந்திருக்கிறார்கள்' - என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே; அந்த முன்னெச்சரிக்கை கூடச் சரியான சமயத்தில் எனக்கு இல்லாமல் போய் விட்டது. நான் தான் நன்றாக ஏமாந்து போனேன். எதையும் வெளியில் சொல்லவும் முடியாது உள்ளேயே அழுது புழுங்க வேண்டும். உள்ளேயே நொந்து வேக வேண்டும். இந்த ஏமாற்றத்தோடு வாழவும் வேண்டும். அல்லது வாழ்ந்து கொண்டே ஏமாற வேண்டும். நீங்கள் ஆண்பிள்ளை ஏமாற்றத்தைக் கூட விரக்தியாகவோ, தைரியமாகவோ மாற்றிக் கொண்டுவிட முடியும். நான் தான் இதில் பெரிய பாவி. நாளைக்கும் அதற்குப் பின்பும் விடியப் போகிற ஒவ்வொரு தினமும் இனி எனக்குப் பெரிய சுமை தான். இந்த விநாடியிலும் கூட வெகுண்டெழுந்து அப்பாவிடம் போய் "எனக்கு இந்தக் கலியாணத்தில் சம்மதமில்லை. நான் சுகுணன் அவர்களை என் நாயகராக வரித்து விட்டேன். தயைசெய்து இப்போதே இந்தக் கலியாணத்தையும் இதன் ஆரவார ஆடம்பரத் தடல்புடல்களையும் உடனே நிறுத்தி விட்டுத் திருப்பதிக்கோ திருநீர் மலைக்கோ அழைத்துப் போய் என்னையும் என் சுகுணனையும் இணைத்து வையுங்கள். எங்கள் அன்பைக் கௌரவிப்பது போல் எங்கள் திருமணம் எளிமையாக நடந்தால் போதும்" - என்று கண்ணைக் கசக்கிக் கலகம் செய்யலாம். அப்படிச் செய்தால் அதன் விளைவு உங்களைப் பாதிக்கும். நீங்கள் ஏதோ என்னைச் சொக்குப் பொடி போட்டு மயக்கி என் குழந்தை மனத்தைக் கெடுத்து விட்டதாக மற்றவர்கள் அப்பாவிடம் கோள் மூட்டுவார்கள். உங்கள் மேல் அநாவசியமாக அப்பாவுக்கு ஆத்திரம் வரும்.

இரண்டு தினசரிகளையும் ஒரு வாரப் பத்திரிகையும் ஒரு மாதப் பத்திரிகையும் உட்கொண்டு விளங்கும் இந்தப் பெரிய பத்திரிகை நிறுவனத்தில் உங்கள் மேல் பகைமையும் பொறாமையும் உள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாததல்லவே? வெகுண்டெழுந்து குமுறி இதை மறுப்பதற்குச் சந்தர்ப்பமும் உரிமையும் இருந்தும் கூட நிதானமாகச் சிந்தித்த பின் உங்களுக்காகவே நான் ஊமையானேன்.

என்னுடைய இழப்பை நான் உணர்கிறேன். அதே சமயத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையாயிருக்க வேண்டியவளென்ற முறையில் உங்கள் எதிர்கால நலனையும் நான் காக்க வேண்டியவளாயிருக்கிறேன். இந்தத் தாபம் - என் நெஞ்சின் சதையைப் பிய்த்தெடுத்துக் கொண்டு வருகிறாற் போன்ற இந்த விம்மல் வீண் போகாது. இன்னொரு பிறவியிலாவது நம் நினைவு கைக்கூடும். 'சாதாரண மனிதர்களின் வேதனை தான் அவர்களுக்குத் தவம். எல்லோராலும் தவம் செய்யக் காட்டுக்குப் போய்விட முடியாது. பலருக்கு அவர்கள் படுகிற வேதனைகளும் துக்கங்களுமே அடைய வேண்டியதை அடைகிற தவமாக இருக்கும்' - என்று நீங்களே எழுதியிருக்கிறீர்கள். இனிமேல் இந்தக் கடிதத்தில் என்ன எழுதுவதென்று தெரியவில்லை. எவ்வளவோ மலைமலையாக எழுத மீதமிருப்பதாகவும் என் மனம் கனத்துப் போயிருக்கிறது. நீங்கள் இந்தக் கலியாணத்திற்கு நிச்சயமாக வரமாட்டீர்கள் என்று என் மனம் சொல்கிறது. அதை வைத்துக் கொண்டும் வம்பு பேசுவார்கள். உலகத்துக்காக எல்லாரையும் போல் நீங்களும் கலியாணத்தன்று தலையைக் காட்டி விட்டுப் போய் விடுவது நல்லது. கல்யாணத்தில் உங்களைப் பார்த்தாலும் எனக்கு அழுகை வரும். பார்க்கா விட்டாலும் அழுகை வரும். கடைசியாக ஒரு வேண்டுகோள். அந்தரங்க சுத்தியான இந்த வேண்டுகோளுக்கு வேறெந்த அர்த்தமும் கற்பித்துக் கொள்ளாதீர்கள். மணக்கோலத்தில் என்னை ஒரு முறை ஒரே ஒரு முறையாவது உங்கள் கண்களால் நிமிர்ந்து தாராளமாகப் பாருங்கள். அந்த ஒரு விநாடியிலாவது உங்கள் பார்வையில் நான் மணமகளாவேன். மற்றவர்கள் என்னை வற்புறுத்தி உட்கார வைத்து அப்படி அலங்கரிப்பதற்கு என்னளவில் நான் உள்ளம் குளிர முடியுமானால் நீங்கள் என்னைக் கண்ணெடுத்துப் பார்க்கிற அந்த ஒரு கணத்தில் தான் அது முடியும். 'யாருக்காகவோ இவள் அலங்கரித்துக் கொண்ட அலங்காரம் தானே?' - என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். நான் என்னை அலங்கரித்துக் கொள்ளவில்லை. திருமணத்துக்காக நான் அலங்கரிக்கப்படுவேன். மணமேடைக்காக நான் தயார் செய்யப்படுவேன். 'தீடீரென்று எத்தனையோ பேர் என்னென்னவோ வந்து இந்த உலகத்தை விட்டுப் போய்விடுகிறார்களே; அது மாதிரி இந்த விநாடியில் செத்துத் தொலைந்து போய்விட்டால் எத்தனை நிம்மதியாயிருக்குமென்று எனக்கு இப்போது தோன்றுகிறது. இந்த மாதிரி சமயங்களில் நினைத்த போது சாகிற சக்தி மட்டும் மனிதர்களுக்கு இருந்துவிட்டால்?' - என்று எண்ணத் தோன்றுகிறது.

நமக்குத் தெரிந்தவரை இந்த மாதிரிச் சாவை வரப்பிரசாதமாக அடைந்த ஒரே ஒருத்தி சிலப்பதிகாரப் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி தான். அவள் பாக்கியசாலி. பந்தலில் வாழை மரமும் தோரணமும் கட்டுவது போல் நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என் கைகளிலும் கழுத்திலும் தங்கமும், வைரமுமாக நகைகளைக் கட்டி என்னை அலங்கரிக்கப் போகிறார்கள். உங்களைப் போல் ஆண்கள் கொடுத்து வைத்தவர்கள். காதலில் இழந்தாலும் அழுகை வராது. பரம்பரையாக ஆண் குலத்துக்கே கல் மனம். நாங்களோ காரணத்தை மறைக்க முடிந்தாலும் கண்ணீரை மறைக்க முடியாது. எதிர் வரும் இன்னொரு பிறவி எதிலாவது - இந்த ஞாபகமும் சுவடும் நமக்கு நினைவில்லாவிடிலும் கடவுள் நம்மைக் கணவன் மனைவியாக இணைக்கட்டும். இந்தப் பிறவியை - எனக்குப் பிடிக்காமல் நான் தாலிக்கயிற்றால் சிறையிடப்படும் இந்த வாழ்வை ஒரு கெட்ட சொப்பனம் போல அவசரமாக ஓட்டி விட வேண்டும் போல இப்போது நான் பறக்கிறேன். நினைப்பினாலும் பாவனையினாலும் நான் உங்கள் அடிமை. நீங்கள் தான் என் இதயத்தை ஆளுகிறீர்கள். அடிமைகள் ஆளுகிறவர்களுக்குச் சமாதானம் கூறுவது அதிகப் பிரசங்கித் தனமாயிருக்கும். எனவே திடுமென வந்த இந்தப் பேரிடிக்கு ஒரு சமாதானமும் கூறத் தோன்றவில்லை எனக்கு. இனி வேறென்ன எழுதுவது? படித்ததும் ஞாபகமாக இதைக் கிழித்தெறிந்து விடுங்கள்.

இப்படிக்கு,
உங்களுடையவள் - அபலை

இந்தக் கடிதத்தைப் படித்தவுடன் உள்ளூரிலேயே இருந்து துளசியின் திருமணத்திற்குப் போயிருக்க வேண்டுமென்று தோன்றியது சுகுணனுக்கு. அடுத்த கணமே போகாமல் தான் வெளியூரில் போய்த் தலைமறைவானது தான் சரியென்று தோன்றியது. அந்தக் கடிதம் அவனுள் உண்டாக்கிய உணர்ச்சிக் குழப்பத்தின் காரணமாக நிச்சயமாய் நிர்ணயமாய் அவனால் எந்த உணர்விலும் காலூன்றி நிற்க முடியவில்லை. அந்தத் திருமணத்திற்கு அவன் வராததைக் காரியாலயத்திற்குப் போனதும், யார் யார், எப்படி எப்படி நேராகவும், குத்தலாகவும், விசாரிப்பார்கள் என்று இப்போதே கற்பனை செய்ய முயன்றான் அவன். அதையும் கூட அவனால் தொடர்ந்து நினைக்க முடியவில்லை.

'கடிதத்தைக் கிழித்தெறியுங்கள்' - என்று எழுதத் துணிந்ததிலிருந்து அவள் தன்னை எவ்வளவு அந்நியமாகவும், அவநம்பிக்கையாகவும் எண்ணிப் பயந்திருக்க முடியும் என்று நினைத்த போது அப்படி எழுதிய அவள் மேல் அவனுக்கு தாங்க முடியாத கோபம் வந்தது. கடிதத்தை, அவள் எழுதியது போல் கிழிக்கவில்லை. பத்திரமாகப் பெட்டியடியில் வைத்துவிட்டுக் குளிக்கப் போனான். காரியங்கள் எப்போதும் போல் வழக்கமாக இயங்கின.

மனதைத் திடப்படுத்திக் கொண்டு காரியாலயத்திற்குப் போகிற வழியில் அவனுடைய முதலாளியும் - துளசியின் தந்தையுமாகிய - மாருதி பப்ளிகேஷன்ஸ் க்ரூப் ஆஃப் மாகஸின்ஸ் - அதிபர் - நாகசாமியை - சாந்தோம் ஹைரோடிலுள்ள அவர் வீட்டிற்குப் போய் கண்டு, பட்டும், படாமலும் கலியாணத்தன்று ஏன் வரவில்லை என்று அவர் கேட்டதற்கு அவனால் ஏதோ சாக்குக் கற்பித்துச் சொல்ல முடிந்தது. அது கூட அப்போது பொருத்தமாகவும் சொல்ல இயைபாகவும் வந்தது. நல்ல வேளையாக அவருடைய வீட்டில் அவரது முன்புறத்து அறையிலேயே காரியம் முடிந்து விட்டது. உள்ளே போக வேண்டிய அவசியமோ துளசியையோ அவள் கணவனையோ பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமோ நேரவில்லை. நாகசாமி கச்சிதமாகப் பேசி ஒரு 'டிரிங்கும்' வரவழைத்துக் கொடுத்து தாம்பூலப் பையோடு அவனை வழியனுப்பி வைத்தார்.

"உள்ளே போய்த் துளசியையும் பார்த்துவிட்டுப் போங்களேன். உங்கள் கதைகளின் முதல் ரசிகையாச்சே?" - என்று விடை கொடுக்கிற சமயத்தில் அவர் உபசாரமாகச் சொல்லிய வார்த்தையை,

"அதற்கென்ன அப்புறம் பார்த்துக் கொண்டால் போயிற்று. இந்த அவசரத்தில் எதற்கு?" என்று சுகுணனால் நாசூக்காகத் தட்டிக் கழித்துவிட முடிந்தது.

தாம்பூலப் பையோடு வாசலிலேயே முன்னுணர்வுடன் காக்க வைத்திருந்த டாக்சியில் ஏறிக்கொண்டு "மாருதி பிரஸ்ஸுக்குப் போ" - என்று ஊரறிந்த பேரறிந்த இடமும் சொல்லியபின் நிதானமாகக் கையிலிருந்த தாம்பூலப் பையைப் பார்த்து அதில் எழுதியிருந்த மணமக்களின் பெயரை அப்போது தான் புதிதாகப் படிப்பது போல், சுகுணன் தனக்குத் தானே ஒரு முறை படித்துக் கொண்டான். தோள்கள் விம்மித் தணிய ஒரு பெருமூச்சு நெஞ்சடியிலிருந்து எழுந்து சரிந்தது.

டாக்சி காரியாலய வாயிலில் நின்றது; கணக்குத் தீர்த்து அனுப்பிவிட்டு உள்ளே படியேறினால் - சொந்தக் காரைத் தானே ஓட்டிக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு அவசர அவசரமாக அவனைப் பின் தொடர்ந்த அட்வர்டிஸ்மெண்ட் மானேஜர் ரங்கபாஷ்யம் பிடித்துக் கொண்டார்.

"தி ஒன்லி நோடபிள் ஆப்ஸென்ஸ் இஸ் யுவர்ஸ்!"

"அதற்கென்ன செய்வது? ஊரில் ரொம்ப முக்கியமான காரியம். தவிர்க்க முடியவில்லை."

காரியாலத்தில் ஒவ்வொருவரும் அவன் திரும்பி வந்தால் அவனிடம் இதைத்தான் கேட்கவேண்டுமென்று சொல்லிப் பேசி வைத்துக் கொண்டார் போல அதே வாக்கியத்தை அதே ஆங்கிலத்தில் இழுத்தாற் போல கூறி நிறுத்தி அவன் முகத்தைப் பார்க்கலானார்கள். தேர்ந்த பத்திரிகையாளரின் சாமர்த்தியத்தோடு சுகுணன் பொறுமையிழக்காமல் ஒவ்வொருவருக்கும் நிதானமாகப் பதில் சொல்லித் தனக்குத் தானே திருப்தியோடு அந்தக் காரியத்தைச் செய்து கொள்ள வேண்டியிருந்தது. தன்னுடைய அறைக்குப் போய் மின் விசிறியைக் கடிதங்கள் பறந்து விடாமல் அளவாகப் போட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்தால் - சொல்லி வைத்தது போல் ஃபோன் மணி அடித்தது. நாகசாமி தான் பேசினார்.

"நீங்க வீட்டுக்கு வந்திருந்தப்பவே கொடுக்கணும்னு நினைச்சேன் மறந்துபோச்சு. குழந்தை கல்யாண போட்டோ ஒண்ணு அனுப்பறேன்! இந்த வார இஷ்யூவிலேயே ரைட் ஹாண்ட் சைடிலே வரமாதிரி முதல் ஃபாரத்திலேயே ஒரு அரைப்பக்கம் நல்ல பார்டராக் கட்டிப் போட்டுடுங்க..."

டக்கென்று - எதிர்ப்பக்கம் டெலிபோன் வைக்கப்பட்டுவிட்ட ஓசையையும் காத்திருந்து கேட்ட பின்பே - அவசரமில்லாமல் பொறுத்திருந்து விட்டுத்தான் தன் பக்கம் ரெஸீவரை வைத்தான் சுகுணன்.

கடிதங்கள், அந்த இரண்டு மூன்று நாளில் வந்திருந்த கதைகள், கட்டுரைகள், கொஞ்சம் பருமனான கட்டாகக் குவிந்திருந்த கவிதைகள் எல்லாம் தனித்தனியே அவன் மேஜையில் இருந்தன. மேஜை மேல் இலேசாக ஒரு மெல்லிய தூசி மூட்டம் - விரலை வைத்தால் அடையாளம் பதிகிற மாதிரிப் பரவியிருந்தது; அப்போது அன்று அவன் மனம் இருந்ததைப் போல. மணியை அடித்தான். பையன் வந்து மேஜையைத் துடைத்துவிட்டுப் போனான். பக்கத்து அறை அதே மாருதி பப்ளிகேஷன்ஸைச் சேர்ந்த தினசரி இதழான காலை மலரின் ஆசிரியர் அறை. இரண்டிற்குமிடையே ஒரு தடுப்பு உண்டு. அங்கே டெலிபிரிண்டர் இயங்கத் தொடங்கி விட்டதற்கு அடையாளமாக ஒலி எழுந்தது. தொலைவில் அதே காம்பவுண்டிலிருந்து அச்சகத்தின் இயந்திர முழக்கம் ஜன்னல் வழியே மெல்லக் கேட்டுக் கொண்டிருந்தது. கடிதங்களைப் படிக்க எடுத்த சுகுணன் யாரோ உள்ளே வருவதற்கடையாளமாக ஸ்பிரிங் கதவு கிரீச்சிடவே நம்மாழ்வார் நாயுடு சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தார்.

"என்னங்க இப்படிச் செய்திட்டீங்க?"

"எதை எப்படிச் செய்தேன் நாயுடு?"

"அதுதான்... நம்ம ஐயா கொழந்தை கல்யாணத்தன்னிக்கிப் பார்த்து வெளியூருக்கு எங்கோ பூட்டீங்களே சார்! உங்க கதைன்னாத் துளசீம்மாவுக்கு உசீர். பாவம்! நீங்க வராதது அதுக்கே கூட வருத்தமாயிருந்திருக்கும்."

"என்ன செய்வது நாயுடு? காரியம் தவிர்க்க முடியாதது."

"நீங்க ஒருத்தர் தான் வராத ஆளு சார்..."

"....."

"எல்லா எழுத்தாளரும் கூட வந்திருந்தாங்க... முக்காவாசி நாளு பெங்களூர்லியே கிடப்பாரே அந்தக் கவிஞர் சார் கூட வந்திருந்தாருன்னாப் பார்த்துக்குங்களேன்..."

-சுகுணன் புன்முறுவல் செய்ய முயன்றான்.

"சரி போவுது. கொழந்தை கல்யாணப் படம் இந்த இஷ்யூவிலியே வரணும். இதோ ஐயா படம் அனுப்பிச்சிருக்காரு... சைஸ் போட்டுக் கொடுங்க... மங்களகரமா யெல்லோ பார்டர் கட்டிடறேன். உங்க 'டம்மியிலே' லீடர் ஃபாரத்திலேயே மூணாம் பக்கம் வலது புறம் மேலாக இதுக்கு அரைப் பக்கம் குறிச்சுக்குங்க சார்..."

சுகுணனின் நீண்ட விரல்களோடு கூடிய அழகிய வலது கை ஓர் இயந்திரம் போல் எழும்பி முன் நீண்டு அந்தப் படத்தை வாங்கியது. நிச்சலமான முகத்துடன் தன் முகத்திற்குத் தனது பாவனையே முகமூடியாக்கிக் கொண்டாற்போல ஊடுருவும் கண்களால் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான் அவன். எல்லாக் கல்யாணப் புகைப்படங்களைப் போலத்தான் அதுவும் இருந்தது. படத்தில் அவள் கூடத் தாராளமாகச் சிரித்துக் கொண்டுதான் நிற்கிறாள்.

"இன்னா சார்! படத்தில் கொழந்தை ரொம்ப நல்லா சிரிச்சிக்கிட்டிருக்கில்ல?..."

"பிரமாதமாயிருக்கிறது..."

"ஏன் சார்? ஊர்லேயிருந்து வந்தப்புறம் என்னவோ மாதிரியிருக்கீங்களே? என்ன விசயம்? உடம்புக்குச் சுகமில்லியா?"

-சுகுணன் இரண்டாவது முறையாக புன்முறுவல் புரிய முயன்று இயலாமல் தோற்றான். ஆனால் அதைச் சாதுரியமாக மறைத்துக் கொண்டு படத்தின் பின்புறம் சைஸ் அளவு குறித்து வழக்கம் போல் கையெழுத்துப் போடப் பேனாவை அருகில் கொண்டு போய் விட்டுத் திடீரென்று மனம் மாறி,

'கையெழுத்து இல்லாட்டிதான் என்ன?' - என்று படத்தை அப்படியே நாயுடுவிடம் நீட்டினான்.

"பிளாக் பண்ண அனுப்பு நாயுடு! ஐயா கூடக் கொஞ்ச நேரத்துக்கு முன்னே ஃபோன் பண்ணினார்..."

"சர்த்தான்! அப்புறம் வந்து பேசிக்கிறேன் சார்! நீங்க 'மூட்'லே இல்லே..." என்று ஏதோ தனக்குத் தோன்றியதைக் கூறிவிட்டுப் போனார் நாயுடு.

மறுபடி ஃபோன் மணி அடித்தது.

"நான் தான் துளசி..."

நீண்ட நேரம் விம்மி விம்மி அழுதபின் வருகிற தளர்ந்த சாயலில் சோக கீதமாய் ஒலித்தன வார்த்தைகள்.

ஒன்றும் பேசாமல் ஃபோனுடன் அப்படியே இருந்தான் சுகுணன்.

"நான் தான் துளசி..."

- இப்போது அவள் அழுவதே தெளிவாக ஃபோனில் கேட்கிறது.

"கங்ராஜுலேஷன்ஸ்! இப்போதுதான் உங்கள் திருமணப் புகைப்படத்தை 'பிளாக்' செய்ய அனுப்பி வைத்தேன். படம் ரொம்ப நன்றாயிருக்கிறது" என்று குத்தலாகச் செயற்கையானதும் புதுமையானதுமான மரியாதையோடு அவளை விளித்துச் சொல்லிவிட்டுப் பட்டென்று டெலிபோன் ரெஸீவரை வைத்தான் சுகுணன். தன்னுடைய வார்த்தைகள் தான் நியமித்து அனுப்பிய கடுமையோடு போய் அவளைத் தாக்கியிருக்கும் என்ற திருப்தியோடும் ஆனால் அந்தத் திருப்திக்காகப் பெருமைப்படுவதில் ஒத்துழைக்க மறுக்கும் கருணைமயமான அந்தரங்க மனத்தோடும் சிறிது நேரம் என்ன செய்ய வேண்டும், என ஒன்றுமே தோன்றாமல் எதிரே தெரியும் ஸ்மோக் கிளாஸோடு கூடிய நடுவாக மறைக்கும் அந்தச் சிறிய ஸ்பிரிங் கதவைப் பராக்குப் பார்த்தான் சுகுணன்.

மறுபடி டெலிபோன் மணி.

சில விநாடிகள் எதிர்ப்புறம் குரலே இல்லை. பழகிப் போன குரலுக்குரியவளின் அழகை மட்டும் தெளிவாகக் கேட்கிறது. அந்தக் கடன்காரியின் அழுகையும் இனிமையாகத்தான் ஒலிக்கிறது!

"இதென்ன ஒப்பாரி?"

"நான் உடனே உங்களைப் பார்க்கணும்..."

"....."

"அங்கே வருகிறேன்..."

"இங்கேயா...? கூடாது வேண்டவே வேண்டாம்..."

பதில் இல்லை. எதிர்ப்புறம் துளசி டெலிபோனை வைத்தாகிவிட்டது. இந்த முறை அவள் முந்திக் கொண்டாள். அவன் என்ன செய்வதென்றறியாமல் திகைத்தான்.
-----------------

அத்தியாயம் -3

அபலைகள் மிகப்பல சமயங்களில் தங்களையே காப்பாற்றிக் கொள்ள முடிவதில்லை... அவ்வாறிருக்கும் போது, அவர்கள் தங்கள் வார்த்தைகளைக் காப்பது எப்படி?

செவியில் ஏற்ற செய்தியின் பரபரப்பு அடங்கச் சில வினாடிகளாயின. உடல் குப்பென்று வேர்த்து ஓய்ந்தது. அவளை அங்கு எதிர்கொள்வதா அல்லது அவள் வருவதற்குள்ளேயே அங்கிருந்து புறப்பட்டு விடுவதா என்ற கேள்வியும் - அந்தக் கேள்வியை ஒட்டிய உணர்ச்சிப் போராட்டமும் சுகுணனின் மனத்துள் மூண்டன. திடீரென்று எதையும் சிந்திக்க முடியாத ஒரு நிலை - மேஜை மேல் குவிந்திருந்த எந்த வேலைகளையும் - தொடர்பாகச் செய்ய முடியாத உணர்ச்சிகளுடனும் தாபங்களுடனும் அவள் அங்கு வந்து தன்னை எதிர்கொள்ளப் போகிறாள் என்ற எண்ணமும், அவளைத் துணிவுடனும் நிச்சலனமாகவும் தான் எதிர் கொள்வதா, வேண்டாமா, என்ற குழப்பமுமாக அந்த விநாடியில் அவன் இருந்தான். அவனைச் சுற்றி அவனுடைய உணர்விலோ, ஞாபகத்திலோ, உறைக்காமல், அந்த மிகப்பெரிய அலுவலகம் வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. அலுவலகத்தின் பல்வேறு அறைகளில் ஒலிப்பதும், ஓய்வதும் மீண்டும் ஒலிப்பதுமாக டெலிபோன் மணிகள், கலீர் கலீரென்று ஊறிச் சிலிர்க்கும் ஊற்றுப் போல் கேட்டுக் கொண்டிருந்தன. வேகமாய் ஆட்கள் அங்கும் இங்குமாக மாறி மாறி நடக்கும் காலடி ஓசை ஒருபுறம், 'பைண்டிங்' ஆகி வெளியூருக்குப் பார்சல் போகவேண்டிய பத்திரிகைகள் அடுக்கப்படும் ஓசை ஒருபுறம். டயர்ச் சக்கரங்களோடு கூடிய நீள நீளமான கட்டை வண்டிகளில் ரோட் ரோலர்களைப் போல் 'உருளை உருளை'யாக வந்து இறங்கும் நியூஸ்பிரிண்ட் பேல்கள் வண்டிகளிலிருந்து கீழே தள்ளப்பட்டுக் கோடௌனுக்குள் உருட்டிச் செல்லப்படும் சத்தம் ஒருபுறம், டீயும், காப்பியுமாக வந்து காலியானதும் கலகலக்கும் 'காண்டீன்' டவரா டம்பளர்களின் ஒலி ஒருபுறம். ஆனால் இவை எல்லாம் சுகுணனின் செவிகளில் வழக்கம் என்ற போர்வையினால் மூடப்பட்ட பழைய பழகிய ஞாபகங்களாய் மறந்து போயிருந்தன.

வளைகள் கலின் கலினெனப் பாட மெட்டிகள் கிணுங் கிணுங்கெனத் தாளமிட யாரோ ஒருத்தி அங்கே தன்னைத் தேடி வரப் போவதைப் பற்றியே குமைந்து கொண்டிருந்தது அவன் ஞாபகம். கடந்த சில நாட்களாக வராமலிருந்து விட்டு இன்று தான் முதன் முதலாக அலுவலகத்துக்கு வந்திருப்பதால் 'துளசி சந்திக்க வரப்போகிறாள்' - என்ற ஒரே காரணத்துக்காக - அலுவலகத்துக்குள் வந்து உட்கார்ந்த சூட்டோடு அங்கிருந்து உடனடியாக வெளியேறவும் முடியாது போலிருந்தது. ஒன்றையும் செய்ய முடியாத ஊமைக் குழப்பமாக அன்று அவன் மனநிலை இருந்தாலும் செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருந்தன. அடுத்த வாரத்துப் பூம்பொழிலில் பிரசுரிப்பதற்காக வந்திருக்கும் கையெழுத்துப் பிரதிகளிலிருந்து தகுதியானவற்றைத் தேர்ந்தெடுத்து அச்சுக் கோப்பதற்குக் கொடுக்க வேண்டும். பூம்பொழிலில் அவன் தானே எழுதுகிற தொடர்கதைப் பகுதியில் அடுத்த வாரத்துக்கானவற்றை எழுதியாக வேண்டும். இவ்வளவு வேலையிருந்தும் ஒரு வேளையும் ஓடவில்லை. இடைவேளை வந்துவிட்டதற்கு அறிகுறியாகப் பக்கத்து அறையில் டிரான்ஸிஸ்டர் ரேடியோ ஒலிக்கத் தொடங்கிவிட்டது. 'காலை மலர்' ஆசிரியருக்கு இடைவேளையில் பொழுதுபோக்கு இந்த டிரான்சிஸ்டர் ரேடியோதான். தன்னுடைய மனத்தின் அந்தரங்கமான சோகத்திற்கு உணர்ச்சியால் மெல்லிய சோகக் கோடுகள் இழைப்பது போல 'மனவியாலகிஞ்சரா' - என்று 'நளின காந்தியை' யாரோ ரேடியோவில் பாடிக் கொண்டிருந்தார்கள். பாட்டு உடனே எங்கோ எழுந்து வேகமாக ஓடவேண்டும் போல அவன் உணர்ச்சியை முடுக்கிற்று.

மேஜை மேலிருந்த கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள், திருத்துவதற்காக வந்திருந்த அச்சுப்படிகள், எல்லாவற்றையும் அப்படி அப்படியே டிராயரில் அள்ளி திணித்து விட்டு உடனே எழுந்து ஓடிவிட வேண்டும் போலிருந்தது சுகுணனுக்கு.

இதற்கிடையில் அலுவலகத்துக் காண்டீன் பையன் மேஜை மேல் தேநீரைக் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனான். மறுபடி தானே அவளுக்குப் போன் செய்து 'இங்கே வராதே! நாளை அல்லது நாளன்றைக்கு வேறெங்காவது சந்திக்கலாம்' என்று சொல்லிவிடக் கை துறு துறுத்தது. 'இங்கே வராதே' - என்று மட்டும் கூறினால், அப்படி மறுத்துக் கூறுவதையே ஒரு தீவிரக் கோபமாக எடுத்துக் கொண்டு அவள் கட்டாயம் வந்து விடுவாள் என்றெண்ணி அதற்கு ஒரு மாற்றாகத் தான் 'நாளை அல்லது நாளன்றைக்கு வேறெங்காவது சந்திக்கலாம்' - என்று அவன் கூற விரும்பினானே தவிர உண்மையில் இன்னொருவனுடைமை ஆகிவிட்ட அவளைச் சந்திக்கவோ பேசவோ அவன் நிச்சயமாக விரும்பவில்லை. அதற்காக அவளே தேடி வரும் போது - அவளுடைய தந்தையின் சொந்தக் காரியாலயத்திலேயே 'உள்ளே நுழையாதே' என்றோ 'தயவு செய்து வெளியே போ' - என்றோ அவளிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டு துரத்தவும் வெறுக்கவும் கூட அவனால் முடியாது. அவள் வருகிற போது காரியாலய அறையில் தான் மட்டும் தனியே இருப்பதை விட வேறு யாராவது தன்னுடன் கூட இருப்பது நிலைமையைச் சமாளிப்பதற்கும் வசதியாயிருக்கும் என்று தோன்றியது அவனுக்கு. சில தினங்களுக்கு முன்வரை தன் அன்புக்கும், அதிகாரத்திற்கும், எழுத்தாற்றலுக்கும் அடிமை போல் மயங்கி வசியமாயிருந்த ஓர் அழகியை இன்று இந்த விநாடியில் தன்னிலிருந்து அந்நியமாகவும் வேற்றுமையாகவும் பிரித்து நினைப்பதற்கு என்ன காரணமென்று நிதானமாகச் சிந்திக்கக் கூட இப்போது அவன் நெஞ்சில் அவகாசமில்லை.

அடுத்த வார அட்டைப் படத்துக்கு எதை வரையலாம் என்று கலந்து பேசுவதற்காக சித்திரக்காரர் சிவன் வந்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் அங்கு வந்து விட்டால் நல்லதென்று கருதியவனைப் போல் அவரை நிறைய நேரம் உட்கார்த்திப் பேச வைக்க முயன்றான் சுகுணன். அதுவும் முடியவில்லை. அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வேறு ஏதோ காரியமிருக்கிற தென்று போய்விட்டார் அவர்.

இராயபுரத்தில் எங்கோ ஒரு வாசக சாலை ஆண்டு விழாவுக்குத் தலைமை வகிக்க வர முடியுமா என்று அந்த வாசக சாலைக் காரியதரிசி ஃபோன் செய்தார். அவரோடு ஃபோன் பேசியும் முடித்தாயிற்று. மற்ற வேலைகளை எல்லாம் நாளைக்கு வந்து பார்த்துக் கொள்ளலாம். புறப்பட்டுப் போய்விட வேண்டியதுதான் என்று அவன் துணிந்து அங்கிருந்து புறப்படத் தயாராகி விட்ட சமயத்தில் டெலிபோன் மணி அடித்தது. காரியாலய முகப்பிலிருந்த வரவேற்பு அறையிலிருந்து 'துளசீம்மா வந்திருக்காங்க... இதோ உங்க அறைக்கு வராங்க...' என்று டெலிபோன் ஆபரேட்டர் அறிவித்தாள். அவன் டெலிபோன் ரெஸீவரை வைத்து விட்டுத் தலைநிமிர்வதற்குள்ளாகவே அவனுடைய அறையை நடுவாக மறைத்துக் கொண்டிருந்த ஸ்பிர்ங் கதவுகளின் கீழே நலுங்கிட்ட சிவப்பு மறையாத தந்தப் பாதங்கள் இரண்டு தயங்குவது தெரிந்தது. புடவையின் சரிகைக் கரைக்குக் கீழே தந்த வார்ப்புகளாய்த் தெரிந்த அந்தப் பாதங்களில் அவை இப்போது வேறு யாருக்கோ சொந்தமென்று சிவப்பு மையினால் அடிக் கோடிட்டுக் காட்டினாற் போல் நலுங்கு இட்டிருந்தார்கள். பளிங்கின் வெண்மை நிற மெருகினால் மின்னும் அந்தச் சிறிய பாதங்கள் வெண்ணிறம் முடிந்து நலுங்கு இட்ட செம்பஞ்சுக் குழம்பின் தழல் நிறம் அடியாகக் கோடு பற்றியிருந்த இடத்தில் மெட்டியோடு மனத்தைக் கொள்ளையிடும் ஓர் அழகு புலப்பட்டுத் தெரிந்தது. தன்னிலிருந்து அந்நியமாகி விட்ட அந்த அழகுக்கு மரியாதை செய்வது போல் அவன் பார்வை பிரிந்து விலகி நிமிர்ந்தது. நேரெதிரே ஸ்பிரிங் கதவின் மேல் வளைந்து நெளிந்து முடிச்சுப் போன்ற மோதிரம் அணிந்த மெல்லிய அழகிய நீண்ட பொன்நிற விரல்கள் பற்றி அதைத் திறந்தன. "உள்ளே வரலாமா?"... அவள் கேட்ட கேள்வியில் உள்ள துயரம் முட்டிக் கொண்டு நிற்பது தெரிந்தது. பதில் சொல்வதற்கும் விருப்பமில்லாமல் அலட்சியப்படுத்துவதற்கும் துணிவில்லாமல் சில விநாடிகள் மௌனம் சாதித்தான் சுகுணன். திருமணம் முடிந்த சுவடு நீங்காமல் - மணக்கோலத்தின் அழகும் பொலிவும் அவற்றை விடப் பெரிதாக முகத்திலும் கண்களிலும் வந்து தெரியும் சோகமுமாக - அவள் துவண்டு நிற்பதை கண்டு கோபமும் கருணையும், ஒளியும் நிழலும் போல மாறி மாறித் தோன்றும் மனநிலையில் இப்படி ஓர் அசந்தர்ப்பத்தை தங்களுக்குள் ஏற்படுத்திய விதியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது சுகுணனுக்கு. இதற்கு முன்னால் பல முறை துளசி கலீர் கலீரெனச் சிரித்துக் கொண்டே புள்ளி மானாகத் துள்ளிக் குதித்து ஓடி வந்து உரிமையோடும், சுதந்திரத்தோடும் தன் அறைக்குள் நுழைந்திருப்பதையும், இன்று அவளே தன் எல்லையைத் தானே பிரித்து நிறுத்திக் கொண்டவளைப் போல் தயங்கி நிற்பதையும் அந்த ஒரு விநாடியில் இணைத்து நினைத்தான் சுகுணன். மறுபடி துயரம் கனத்துப் போய் அழுகை கன்றியிருந்த அவள் குரல் அவன் செவிகளில் ஒலித்தது.

"உள்ளே வரலாமா?"

"ஆகா! தாராளமாக வரலாம். உங்களுடைய அலுவலகம் இது. நீங்கள் இங்கே வரக்கூடாதென்று சொல்ல நான் யார்?"... மிகவும் சுபாவமாகச் சொல்வது போல் சொல்லப்பட்ட தன்னுடைய இந்த வார்த்தைகள் எத்தனை கடுமையாக, எத்தனை ஆழமாக அவளைப் போய்த் தாக்கும் என்பது தெரிந்து தான் அவன் இப்படிப் பேசியிருந்தான். அவள் மெல்ல நகர்ந்து - அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துப் பதில் சொல்வதற்குத் தைரியமில்லாதவள் போல் உள்ளே நுழைந்து ஒதுங்கி நின்றாள். அவளோடு அவள் உள்ளே நுழையும் போதே மங்கலமும் நிறைந்ததொரு நறுமணமும் உடனிகழ்ச்சியாக உள்ளே நுழைந்து நிறைந்தது. மனத்தை மிக மோகனமான நினைவுகளில் சாரச் செய்து சுழற்றிச் சுழற்றி மயக்கும் நறுமணம் அது. அந்த நறுமணமும், உள்ளே நுழைவதற்காக அவள் நாலைந்து முறை அடிபெயர்த்து வைத்த போது 'கிணிங்', 'கிணிங்', என்று தாளமிட்ட அவள் கால் மெட்டிகளின் ஓசையும் இன்னும் அவன் நாசியிலும் செவிகளிலும் நிறைந்து விட்ட ஞாபகமாக நின்றன. இருவருக்குமிடையே நிலவிய அந்த மௌனத்தை அவனாலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

"ஏன் நிற்கிறீர்கள்? உட்காருங்களேன் இப்படி" - என்று மிகவும் சுபாவமாகப் பேசுவது போல் சுபாவமில்லாத புதிய மரியாதைகளை அவளுக்கு வழங்கி அதன் மூலமாகவே ஓர் அந்நிய பாவத்தை அவள் அறியும்படி செய்தான் சுகுணன். பதில் ஒன்றும் சொல்லாமல் அவனெதிரே வந்து போகிற பார்வையாளர்கள் உட்காருவதற்காகப் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்காரவும் செய்யாமல் மேலே போக வழியில்லாத இடத்தில் புகுந்துவிட்ட பூந்தென்றல் போல் அலைந்து அசைந்து ஒதுங்கி நின்றாள் அவள். ஒரு காலத்தில் இந்த முகத்தைத் தூண்டுதலாகக் கொண்டு இந்தக் கருமை துறுதுறுக்கும் வண்டுக் கண்களில் பார்வை கலந்து - இவற்றை இரசித்த மோகத்தோடு தான் பாடிய

கோல முகமதியிற் சிறுநாணக்
      குங்குமப் பூச் சிவந்து
நீல விழிமலரிற் சில கோடி
      நெஞ்சி னுரை யுவந்து
கால மளந்திடும் சிறுபோதிற்
      காவிய மனைத்தும் நீயாகி

-என்ற வரிகள் இப்போது நினைவு வந்தன அவனுக்கு. வரந்தர வேண்டிய நேரத்தில் ஏமாற்றி விட்ட தேவதையை உபாசித்துவிட்ட அப்பாவிப் பக்தனாகத் தான் இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. எதிரே வந்து நிற்கும் அவள் மேல் ஆத்திரமேற்படவோ, இறையவோ அவனுக்கு வாய் வரவில்லை. காரணம் அவள் வந்து நிற்கிற அலுவலகம் அவளுடைய தந்தையினுடையதென்பதோ அவள் இன்னொருவருடைய மனைவியாகி விட்டாள் என்பதோ மட்டும் அன்று. உணர்ச்சியையும் மீறி அந்த விநாடி அவனுள் சுரந்த கருணை தான் காரணம். 'இலக்கியத்தில் மிக உயர்ந்த குணம் கருணை தான். நதிகளைப் போல் பெருகும் கோபம், தாபம், வீரம், தீரம், ஆசை, பாசம் எல்லாம் போய்ச் சங்கமமாகிற பரந்த இலக்கியக் குணம் கருணையாகிய கடல்தான் என்பதை உலக மகா கவிகள் எல்லோரும் நிரூபித்திருக்கிறார்கள்' - என்று பல இலக்கியக் கூட்டங்களில் தானே பேசியிருப்பது நினைவு வந்தது அவனுக்கு. மேலே அலைபாய்ந்து பொங்கினாலும் அடியூற்றைப் போல் சுரக்குமிடம் தெரியாமல் பெருகும் இந்தக் கருணையைத் தன்னால் தவிர்க்க முடியவில்லை என்பதை அப்போது அவனே உணர்ந்தான். நலுங்குச் சாயம் புலராத அந்த மோதிரக் கையிலிருந்து கண்ணீரால் கசங்கிய ஒரு 'கிரீட்டிங் கவர்' வந்து அவன் மேஜை மேல் உதிர்ந்தது.

"இதை விட அதிகமாக என்னைச் சித்திரவதை செய்வதற்கு வேறு வார்த்தைகள் ஏதும் உங்களுக்குக் கிடைக்கவில்லை போலிருக்கிறது...?"

"வெறும் வார்த்தைகளில் என்ன இருக்கிறது? இந்த உலகில் யார் அவற்றைக் காப்பாற்றி மதித்து மரியாதை செய்கிறார்கள்? கேவலம் - மறப்பதற்குச் சுலபமுள்ள பலவீனமான சத்தியங்கள் அவை. வார்த்தைகளை நாம் மதிப்பதைச் செயலினால் மட்டுமே நிரூபிக்க முடிகிற உலகம் இது? செயலினால் நிரூபிக்க முடியாதவர்கள் வெறும் வார்த்தைகளைப் பற்றிப் பேசி என்ன ஆகப் போகிறது...?"

"அபலைகள் மிகப் பல சமயங்களில் தங்களையே காப்பாற்றிக் கொள்ள முடிவதில்லை. வார்த்தைகளைக் காப்பது எப்படி? எல்லாம் தெரிந்த நீங்களே என் வேதனைப் புரியாமல் இப்படி வார்த்தைகளால் என்னை வதைக்கலாமா?"

"உங்களை வதைப்பதற்குக் கடைசியாக என்னிடம் மீதமிருக்கிற ஒரே ஒரு கௌரவமான ஆயுதம் வார்த்தை தான்."

"'துளசி' என்று வாய் நிறையக் கூப்பிட மாட்டீர்களா? ஏன் இந்த 'உங்களை', 'நீங்கள்' எல்லாம் போடுகிறீர்கள். நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இப்படி?"

"உன் மனத்தைக் கேள்! என்ன பாவம் செய்தாய் என்பதை அது சொல்லும் உனக்கு."

- சுகுணன் எவ்வளவோ கடுமையாக இருக்க முயன்றும் அவன் மனத்தினுள் அடியூற்றாகச் சுரந்த கருணை அவனை வென்று விட்டது இம்முறை. 'உங்கள் மனத்தைக் கேளுங்கள்' - என்று தான் கடுமையாகச் சொல்ல நினைத்தான் அவன். ஆனால், 'உன் மனத்தைக் கேள்' - என்று தான் சொல்ல வந்தது. அந்த ஒரு வினாடி வெற்றி அவள் மனத்தில் பூச்சொரிந்திருக்க வேண்டும். அதற்கு அடையாளமாக அத்தனை வேதனையிலும் அவள் முகம் ஒரு விநாடி மலர்ந்தது.

மேலே அவளிடம் ஒன்றும் பேச விரும்பாதவளைப் போல் மேஜை மேல் அவள் வைத்திருந்த அந்த கிரீட்டிங் கவரை எடுத்துப் பிரித்து, "வீரர்களின் தோள்களை அலங்கரிக்க வேண்டிய -" என்ற தன்னுடைய அந்த வாசகத்தை யாரோ ஓர் அந்நியன் புதிதாகப் படித்துப் பார்ப்பது போல் மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு அதை அப்படியே ஏழெட்டுத் துண்டுகளாக உறையுடன் கிழித்துத் தனக்குக் கீழே இருந்த குப்பைத் தொட்டியில் போட்டான் சுகுணன். அதற்காகவே காத்திருப்பவள் போல் அவள் சீறத் தொடங்கினாள்:-

"எழுதிய வார்த்தைகளைக் கிழித்தெறிந்து விடுவது சுலபம். ஆனால் இப்போது நீங்கள் கிழிப்பதற்கு முன்பே அது உங்களுக்கு மிகவும் வேண்டிய ஒருத்தியின் மென்மையான மனத்தைக் குத்திக் கிழித்திருக்கிறதென்பதை நீங்கள் உணரப் போவதில்லை."

"ஓர் இலக்கிய ஆசிரியன் என்ற முறையில் நான் நினைப்பதையும், படைப்பதையும் வெளியிடத் துணை நிற்கும் என் மொழியைத் தவிர எனக்கு வேண்டியவர்கள் யாருமில்லை. நான் இந்த வாக்கியங்களை எழுதும் போது என் மனம் எவ்வளவு புண்பட்டு எழுதினேன் என்பது தான் எனக்கு இப்போது நினைவிருக்கிறதே ஒழிய, இது யாரைப் போய்ச் சேருமோ அவர்கள் உணர்வுகளின் விளைவுகளைப் பற்றி நினைக்கவோ, அநுமானிக்கவோ எனக்கு அவகாசமில்லை! அவசியமும் கூட இல்லை..."

"அவ்வளவு வித்தியாசமாக உங்களால் இருக்க முடியுமானால் நீங்கள் ஆபட்ஸ்பரிக்கே வந்திருக்கலாமே?"

"எதற்கு? உன் மணக்கோலத்தைப் பார்க்கத்தானே? அது எனக்கு அத்தனை அவசியமான காரியமில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள் எந்தக் கோலத்தைப் புனைந்து கொண்டாலும் அதனால் அழகாயிருக்க முடியாதென்று எனக்குத் தெரியும்... துளசி!"

"... இது அபாண்டம்! எந்த நம்பிக்கைக்கும் நான் துரோகம் செய்யவில்லை. ஏதோ ஓர் அசந்தர்ப்பத்தினால் என்னுடைய நம்பிக்கையே எனக்குத் துரோகம் செய்து விட்டது. இப்போது இவ்வளவு பேருக்கு நடுவில் இந்த இடத்தில் என்னைப் பொறுக்க முடியாமல் கதறி அழவைக்க வேண்டுமென்று உங்களுக்கு ஆசையாயிருக்கிறது போலத் தோன்றுகிறது. அதனால்தான் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்..."

"தவறு, எனக்கு எந்த ஆசையும் கிடையாது. உன்னை மகிழ்விக்கவோ, உனக்கு ஆறுதலுரைக்கவோ எப்படி எனக்கு ஆசை கிடையாதோ, அப்படியே உன்னை அழவைக்கவும் எனக்கு ஆசை கிடையாது. அப்படி ஆசைப் பட எனக்கு உரிமையும் கிடையாது. நமக்குள் இப்படியெல்லாம் பேசிக் கொள்ள இடமிருக்க வேண்டாம் என்பதற்காகத் தான் நீ ஃபோன் செய்த போதே உன்னை இங்கே வரக்கூடாதென்று கண்டிப்பாகச் சொன்னேன்..."

"என்னுடைய கடிதத்தைப் பார்த்த பின்பும் உங்களுக்கு மனம் இளகவில்லை?"

"உன் கடிதம் என் அறையில் போடப்பட்ட தினத்தில் நான் வெளியூருக்குப் போய்விட்ட காரணத்தினால் அன்று அதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இல்லை. இன்று காலையில் திரும்பி வந்த பின்புதான் நான் அதைப் பார்த்தேன். நீ பல கதைகளும், நாவல்களும் படித்திருக்கிறாய்? அந்த இலக்கிய அப்பியாசம் உனக்கு மனம் உருகும்படியாக ஒரு நல்ல கடிதத்தை எழுதக் கற்றுக் கொடுத்திருக்கிறது."

"தயை செய்து இப்படிக் குத்தலாகப் பேசாதீர்கள்! நான் விரும்பிப் படித்த நாவல்களும் கதைகளும் உங்களுடையவை தான்."

"அதற்காக நான் ஏதாவது நன்றி செலுத்த வேண்டுமென்று நீ எதிர்பார்க்கிறாயா துளசி?"

"இவ்வளவு கடுமையாகக் கேட்டால் நான் என்ன பதில் சொல்வது? - 'கோ'வென்று கதறி அழுதுவிடலாம். அதைக்கூட இங்கே செய்துவிட முடியாது. இது 'உங்கள்' காரியாலயம். இரசாபாசமாகிவிடும். என்னைக் காப்பாற்றிக் கொள்ளா விட்டாலும் உங்களையும் உங்கள் கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டியது என் கடமை..."

"காதலின் கௌரவத்தையே காப்பாற்றத் தவறியவர்களால் கடமையின் கௌரவத்தை அத்தனை சுலபமாக காப்பாற்றி விட முடியுமா என்ன?"

ஸ்பிரிங் கதவு கிரீச்சிட்டது. யாரோ உள்ளே வருவதாகத் தோன்றவே குரலைத் தணித்துப் பேச்சை நிறுத்தினான் சுகுணன். துளசியும் கண்களைத் துடைத்துக் கொண்டு பதற்றத்தோடு திரும்பினாள். ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடு சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தார். அவர் கையில் மெஷினில் ஏற்றுவதற்குத் தயாராக 'மேக்கப்' செய்யப்பட்ட ஃபாரத்தின் அச்சுத் தாள்கள் இருந்தன. திடீரென்று துளசியை அங்கே கண்ட ஆச்சரியம் அடங்க இரண்டு விநாடிகளுக்கு மேல் ஆயிற்று நாயுடுவுக்கு.

"வாம்மா குழந்தை! ஏன் கலியாணத்துக்கு வரல்லேன்னு சாரைக் கேட்டியாம்மா? அதை விட இவருக்கு வேறே அப்பிடி இன்னா தலை போற காரியமிங்கறேன்?"

"நீங்கதான் கேட்கணும் நாயுடு..." என்று துளசி செயற்கையாகச் சிரிக்க முயன்றாள். சுகுணன் இவர்கள் இருவரையுமே பொருட்படுத்தாதது போல் நாயுடு கொண்டு வந்திருந்த அச்சுத்தாள்களில் மூழ்கத் தொடங்கினான்.

"அடடே! இதென்னமா நின்னுகிட்டே இருக்கிறே - உட்காரு சொல்றேன்..." - துளசி அதுவரை நின்றதை வியந்தபடி ஒரு நாற்காலியை அவளருகே ஒதுக்கினார் நாயுடு.

"பரவாயில்லை நாயுடு! நான் உட்காரப் போவதில்லை. உங்க சார் நான் இங்கே உட்காருகிற மாதிரி இடங்கொடுத்துப் பேசவில்லை..."

"இவர் கிடக்கிறாரு. காலைலேருந்து ஒரு மாதிரி தான் இருக்காரு..."

இப்போதும் சுகுணன் தலைநிமிரவே இல்லை.

"உன் கலியாண போட்டோ வந்திருக்குது குழந்தை! சார் கிட்டக் கொடுத்து 'சைஸ்' கூடப் போட்டு வாங்கியாச்சு. இந்த வாரமே பூம்பொழில்லே போடப் போறோம். அதைக் கொண்டாரட்டுமா? பார்க்கிறியா?"

துளசி ஒரு விநாடி தயங்கினாள். அவள் முகத்தில் மலர்ச்சி மறைந்தது. பின்பு நிதானமாக நாயுடுவிடம் கூறினாள்: -

"ம்... கொண்டாங்க..." நாயுடு ஓடினார்.

- ஐந்தே நிமிடங்களில் நாயுடு படத்தோடு வந்தார். துளசி அதைக் கையில் வாங்கி வைத்துக் கொண்டாள்.

"நான் அப்பாவிடம் சொல்லி வேறே படம் வாங்கித் தரேன் நாயுடு! இது அவ்வளவு நல்லாவாயிருக்கு?" - என்று அவள் வார்த்தைகளை இழுத்த போது,

"அதுக்கென்னமா உன் இஷ்டப்படி செய்யி" என்றார் அவர். பத்துப் பதினைந்து நிமிடங்களில் அவர் சுகுணனுடைய அறைக்கு வந்த காரியம் முடிந்து விட்டது. அச்சுத் தாள்களோடு அவர் திரும்பி விட்டார். திரும்பிப் போனவர் மீண்டும் உடனே திரும்பி வந்து கதவைத் திறந்து, "படம் நல்லதா உனக்குப் பிடிச்சதாப் பார்த்துச் சீக்கிரம் அனுப்பிடு குழந்தை! இந்த வாரமே வந்தாகணும்?" என்று மறுபடியும் துளசியிடம் ஞாபகப்படுத்தி விட்டுப் போனார். அவர் போன மறுகணமே சுகுணன் தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே அவன் கண்களுக்கு முன்பாகவே அந்தப் புகைப்படத்தை வெறுப்போடும் ஆத்திரத்தோடும் சுக்கல் சுக்கலாகக் கிழித்து அவன் காலடியிலிருந்த குப்பைத் தொட்டியில் வீசினாள் துளசி.

"இது தவறு துளசி! இங்கு வருகின்ற எதையும் பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ கிழித்தெறியவோ ஆசிரியருக்குத் தான் உரிமை உண்டு..."

"நிராகரிப்பதற்குக் கூட ஓர் உரிமை வேண்டும் போலிருக்கிறது."

"....."

சுகுணனால் இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை.

"இப்போது உங்களுக்குத் திருப்திதானே?"

"என்னுடைய திருப்தி அதிருப்திகளை இன்னொருவர் சம்பந்தப்பட்ட உணர்வுகளாக இனிமேலும் நான் விடவேண்டிய அவசியமில்லை துளசி! நீ செய்வதெல்லாம் உனக்கே நன்றாயிருக்கிறதா? பழையபடி குழந்தைத் தனமாகத் தனியே புறப்பட்டு நீ இப்படி இங்கே என்னைப் பார்க்க வரலாமா? வந்தது தான் வந்தாய்! எவ்வளவு நேரம் இப்படி இங்கே தனியாக விவாதித்துக் கொண்டு நிற்பது? இதோ பார்! இது நான் காலையில் உன் வீட்டுக்கு வந்து உன் தந்தையைக் கண்டு கலியாணம் விசாரித்த பின் வாங்கிக் கொண்டு வந்த தாம்பூலப்பை. அங்கு வந்திருந்த போது காலையில் நான் ஏன் உன்னைப் பார்க்கவில்லை? இனிமேல் நாம் பழகுவதற்கு எல்லைகள் உண்டு. அது எனக்குப் புரிந்து விட்டது. உனக்கும் புரிய வேண்டும். இனி நீ தொடங்கியிருக்கும் வாழ்வு தான் உனக்கு ஞாபகமிருக்க வேண்டுமே ஒழிய இப்படி அடிக்கடி என் முன் வந்து நான் இழந்த வாழ்வை எனக்கு ஞாபகப்படுத்துவது உனக்கே நியாயமாகப் படுகிறதா துளசி?" - இதைச் சொல்லும் போது சுகுணனுக்குக் குரல் உடைந்து தொண்டை கரகரத்தது. பேச்சை நிறுத்தி ஒரு கணம் நேற்று வரை செல்லக் குழந்தையாகத் துள்ளிக் குதித்து விட்டு இன்று வெளியே வாய் விட்டுக் குறை சொல்லவோ தூற்றவோ முடியாத ஓர் உணர்ச்சி நஷ்டத்தினால் திகைத்துப் போய் நிற்கும் அந்தக் காதல் அநாதையைப் பரிவோடு பார்த்தான் சுகுணன். அந்த ஒரு கணத்தில் அவள் அநாதையாவதற்குக் காரணமாக அவளிலிருந்து பிரிக்கப்பட்ட மற்றோர் அநாதை தான் என்பது அவனுக்கு நினைவில்லை. இந்த விதமான கதாபாத்திரங்களிடம் இயற்கையாகவே மேலெழும் எல்லையற்ற பெரும் பரிவுடனே ஒரு கதாசிரியன் என்ற முறையில் அவளைப் பார்த்தபோது அவன் மனம் நெகிழ்ந்து இளகியிருந்தது. அத்தனை தவிப்பிலும் சோகத்திலும் கூட மணக் கோலத்தின் பொலிவு நீங்காததொரு சாயல் அவளிடம் இருந்தது. இன்னும் அவள் உட்காரவில்லை. ஒதுங்கினாற் போல நின்று கொண்டுதான் இருந்தாள். சுகுணனுக்கு மனத்தினுள் ஒரு தயக்கம் உண்டாயிற்று.

'துளசி வந்ததிலிருந்து இங்கேயே நின்று என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். ஏதோ திருமணமான பின்பு அலுவலகத்தில் எல்லாரையும் பார்த்துப் பேசிவிட்டுப் போக வந்தது போல் தமிழ் நாளிதழ் காலை மலர் ஆசிரியரிடம் பத்து நிமிடம், மாதம் இதழ் மல்லிகை ஆசிரியரிடம் பத்து நிமிடம், ஆங்கில தினசரி 'மெட்ரோ பாலிடன் டைம்ஸ்' ஆசிரியரிடம் பத்து நிமிடம் என்று எல்லோரிடமும் பேசிவிட்டு இந்த வரவைப் பொதுவாகவும் சாதாரணமாகவும் செய்துவிட்டுப் போகலாம் இவள். இங்கேயே நின்று என்னிடம் மட்டுமே கண்களைக் கசக்கிக் கொண்டு உருகினால் நாளைக்கு இவர்கள் கூடிக்கூடி வம்பு பேச இதுவும் ஒரு நிகழ்ச்சியாகி விடுமென்பது ஏன் தான் இவளுக்குப் புரியவில்லையோ?" என்றெண்ணி வருந்தினான் சுகுணன்.

'பெண் இயற்கையாகவே பேதை. மனம் பலவீனமாயிருக்கிற வேளைகளில் அவள் இன்னும் அதிகத் தடுமாற்றமுள்ள பெரும் பேதையாகி விடுகிறாள்' என்பதைத் தவிர அப்போது வேறெந்த முடிவுக்கும் அவளைப் பற்றி அவனால் வர முடியவில்லை. ஏற்கெனவே அவன் துளசியின் திருமணத்தன்று வெளியூர் போய் விட்டதை வைத்துக் கொண்டு அதற்குத் தனியாக ஏதோ ஓர் அர்த்தம் கற்பிக்க முயலுகிறவர்களைப் போல் 'நோடபிள் ஆப்ஸென்ஸ்' - என்று அவனிடமே அளக்கிறவர்களால் அவன் ஊர் திரும்பிய முதல் நாள் காலையிலேயே துளசி அலுவலகத்துக்கு அவனைத் தேடி வந்து கண் கலங்கி நின்றாள் என்பதை வலுவான செய்தி ஆதாரமாக வைத்துக் கொண்டு என்னென்ன வெல்லாமோ பேசமுடியுமே! இதை நினைத்து அவன் தயங்கினான் என்றாலும் ஏதோ வேண்டாத பொருளைப் பிடித்து வெளியே தள்ளுவதைப் போல் துளசியை வலுவில் வெளியே அனுப்பவும் கடிந்து பேசவும் கூட அவனுக்குத் துணிவில்லை. இப்படி அவன் எண்ணிக் கொண்டிருக்கும் இதே வேளையில் துளசியின் மனத்தினுள்ளும் இதே விதமான நினைவுகள் நிலவியிருந்தன போலும். அது அவள் பேசிய வார்த்தைகளிலிருந்து தெரிந்தது. தன்னுடைய அந்த வேண்டுகோளை மிக மிக விநயமாக அவனிடம் வெளியிட்டாள் அவள்.

"தயவு செய்து ஒரு பத்து நிமிஷம் எனக்கு அனுமதி தாருங்கள். நான் இன்று இங்கே வந்தது எல்லாருக்கும் தெரியும். காலை மலர் சர்மாவையும், டைம்ஸ் நாயரையும், ரங்கபாஷ்யம் சாரையும் இரண்டிரண்டு நிமிஷம் பார்த்ததாகப் பேர் பண்ணி விட்டு வந்து விடுகிறேன். வீண் வம்புக்கு இடம் வைப்பானேன்?" என்று துளசி கூறிய போது அவளும் தானும் நினைவில் கூட ஒன்றாயிருப்பதை எண்ணி உள்ளூற மகிழ்ந்தான் அவன். 'நட்பிலும், காதலிலும் இரண்டு பேர் ஒன்றாக நினைக்கிறோம்' - என்ற உணர்வே பெருமிதம் தருகிறதென்று தோன்றியது அவனுக்கு. ஆயினும் அவளுக்கு அவன் கூறிய பதில் தன் கோபத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்தது.

"நான் யார் உனக்கு அனுமதி கொடுப்பதற்கு? இரண்டு நிமிஷம் தான் பேசிவிட்டு வரவேண்டுமென்று கண்டிப்பு ஒன்றுமில்லையே. நீ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். யாரோடு வேண்டுமானாலும் பேசலாம்."

"நான் யாரென்று சுலபமாகக் கேட்டுவிட முடியும் உங்களால். நான் பெண். அத்தனை சுலபமாக எல்லாவற்றையும் மறந்து நான் என்னைப் பிரித்துக் கொண்டு விட முடியாது. ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்குக் கட்டுப்பட்டிருப்பதாக எண்ணும் உணர்ச்சியை இன்னும் விட்டுவிட முடியாத காரணத்தால்தான் உங்களிடம் அனுமதி கேட்கிறேன். எனக்கு அவர்களையெல்லாம் பார்த்து ஆக வேண்டியது ஒன்றுமில்லை. இங்கே இன்று நான் வந்தது உங்களைப் பார்க்க மட்டும்தான். இதை என் இதயம் அறியும். நீங்களும் அறிவீர்கள். ஆனால் மற்றவர்கள் இதை வைத்துக் கொண்டும் வம்பு பேசுவார்கள் என்பதால் என்னுடைய இந்த வரவை ஒரு பொதுக் காரியமாக்குவது போல் கடனே என்று அவர்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது. பார்த்து விட்டு மறுபடியும் இங்கு உங்களிடம் வருவேன்."

"என்னிடம் எதற்கு? இன்னும் இங்கு என்ன மீதமிருக்கிறது?" - சுகுணனின் இந்தக் கேள்வி துளசியைக் கண் கலங்க வைத்தது.

'திடீரென்று என்மேல் உங்களுக்கு இத்தனை உதாசீனம் பிறப்பானேன்? கொஞ்சம் ஆதரவைப் பிச்சையிட மாட்டீர்களா?' - என்று கேட்பவள் போல் கலங்கிய கண்களுடன் அவன் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தாள் அவள்.

"நீங்கள் கண்டிப்பாக இங்கு இருக்க வேண்டும். கால் மணி நேரத்தில் மறுபடியும் நான் உங்கள் அறைக்கு வருவேன். உங்களிடம் எனக்கு இன்னும் கொஞ்சம் பேச வேண்டும்."

"பேசி என்ன ஆகப்போகிறது துளசி? இப்படி குழந்தை போல் கண்கலங்காமல் இருக்க உனக்குத்தான் இனிமேல் நிறைய மனோ திடம் வேண்டும்."

"உங்களைப் போல் திடீரென்று பழகியவர்களை வெறுக்கவும் உதாசீனம் செய்யவும் துணிகிற அளவு அத்தனை மனோதிடம் எனக்கு இல்லைதான்..."

"ஏன் இல்லை? படிப்படியாக எல்லாம் வரும்! உண்மையில் பார்க்கப் போனால் இந்த ஏமாற்றமோ, சோகமோ என் முன் பிழியப் பிழிய அழுவதை விட வேறு எந்த விதத்தில் உன்னைப் பாதித்திருக்கிறது துளசீ? பார்க்கப் போனால் கோடைக்கானலுக்கு 'ஹனிமூன்' போக ஏற்பாடு செய்வதைக் கூடப் பாதிக்காத சோகம் இது."

இப்படி சொல்லிக் குத்திக் காட்டியவுடன் தான் செய்தது தவறு என்பது போல் உதட்டைக் கடித்துக் கொண்டான் சுகுணன். அவள் முகம் அதைக் கேட்டு வாடியது. அந்த முகம் வாடிய விதத்தைப் பார்த்ததும், தான் ஆத்திரத்தில் அவசரப்பட்டு விட்டதைச் சுகுணன் உணர்ந்தான். அவளோ மிக நிதானமாக அந்த வருத்தத்தை அங்கீகரித்துக் கொண்டு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளைப் போல் சுகுணனுடைய மேஜையில் இருந்த டெலிபோனை எடுத்தாள். அந்த மேஜையிலிருந்த இரண்டு டெலிபோன்களில் ஒன்று காரியாலய 'எக்ஸ்சேஞ்சு'டன் இணைந்தது. மற்றொன்று நேரே அங்கிருந்தே 'டயல்' செய்ய முடிந்த தனி டெலிபோன். அந்தத் தனி டெலிபோனைக் கையிலெடுத்துத் தன் வீட்டு எண்ணுக்கு டயல் செய்தாள் துளசி. இப்படிச் செய்யும் போது செயற்கையாக வரவழைத்துக் கொள்ளப்பட்ட ஒருவகை மலர்ச்சியும் சிரிப்பும் அவள் முகத்தில் தென்பட்டன. சுகுணன் அவளுடைய உரையாடலைக் கவனித்துக் கேட்பதிலிருந்து அந்த நிலையில் அந்த இடத்தில் தன்னை விலக்கிக் கொள்ள முடியவில்லை.

"அம்மாவா? நான் தான் துளசி பேசுகிறேன். அப்பா இருந்தால் கொஞ்சம் கூப்பிடேன்..."

"....."

அப்பா வந்து போனை எடுத்திருக்க வேண்டுமென்று அநுமானித்தான் சுகுணன்.

"நான் தான் துளசி. இங்கே நம்ம பூம்பொழில் ஆபீசிலிருந்து பேசறேன் அப்பா. காலையிலே கோடைக்கானலுக்கு டிக்கட் வாங்கச் சொல்லியிருந்தீர்களே; அதை உடனே கான்ஸல் பண்ணிடனும்..."

"....."

"இல்லே! கண்டிப்பா முடியாது. 'அவரி'டமும் நீங்களே எப்படியாவது எடுத்துச் சொல்லிவிட வேண்டும். திடீரென்று உங்களையெல்லாம் விட்டுவிட்டுத் தனியாகப் போகப் பிடிக்கலை. எனக்கு என்னவோ போலிருக்கு! மாப்பிள்ளையிடமும் பக்குவமாக அவர் கோபித்துக் கொள்ளாமல் நீங்க தான் இதைச் சொல்லணும்."

"....."

"ப்ளீஸ். தயவு செய்து நான் சொல்றபடியே கேளுங்க அப்பா..." இந்தக் கடைசி வார்த்தையைப் பேசுகிறவரை அவள் முகத்தில் இருந்த சிரிப்பும் மலர்ச்சியும் மறைந்து மறுபடி அவள் முகம் இருண்டது.

துளசி ஃபோனை வைத்துவிட்டு அவன் பக்கமாகத் திரும்பி "இப்போது உங்களுக்குத் திருப்தி தானே?" என்று கேட்டாள்.

"என்னுடைய திருப்தியைப் பற்றி என்ன? என்னுடைய திருப்தி அதிருப்திகளை இன்னொருவர் சம்பந்தப்பட்டவைகளாக இனிமேலும் நான் விட்டுவிட முடியாது என்றுதான் முன்பே சொன்னேனே?"

"சொல்லுங்கள்! நன்றாகச் சொல்லுங்கள். அதனால் எனக்கென்ன? உங்களுடைய திருப்தி அதிருப்திகளை நான் இன்னும் மதிக்கிறேன். அவற்றுக்காகப் பயப்படுகிறேன். அவற்றால் என் மனம் பாதிக்கப்படுகிறது. உருகிச் சாகிறவள் நான் தானே? உங்களுக்கென்ன வந்தது? அடுத்தவர்கள் மனவேதனையைப் புரிந்து கொள்ளத் தெரியாமல் உதாசீனம் செய்வதும், வெறுப்பதும் தான் மிக உயர்ந்த இலக்கிய குணம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ என்னவோ?..." என்று வார்த்தைகளால் அவனைச் சாடிவிட்டு... இரண்டு கணம் மௌனமாக நின்று - பின்பு மீண்டும், "இதோ வந்து விடுகிறேன்"... என்று கூறி விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டு, 'காலை மலர்' சர்மாவைக் காணச் சென்றாள் துளசி. தான் மறுமொழி கூற முடியாதபடி அவள் சாடிய வார்த்தைகள் இன்னும் சுகுணனின் செவிகளில் நெஞ்சில் ஆழ்ந்து உறைப்பனவாய் ஒலித்தபடி இருந்தன.
---------------

அத்தியாயம் -4

'கடவுளே! மனம் என்பதை ஏன் இத்தனை இரகசியமாகவும் இத்தனை நுணுக்கமாகவும் படைத்தாய்? ஒருவர் மனம் இன்னொருவருக்குப் பூட்டாகவும், ஒருவர் நினைவு இன்னொருவருக்குப் புதிராகவும் ஏன் படைத்தாய்?'

"உங்களுக்கு என்ன வந்தது? அடுத்தவர்கள் மன வேதனையைப் புரிந்து கொள்ளத் தெரியாமல் உதாசீனம் செய்வதும் வெறுப்பதும் தான் இலக்கியக் குணம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ? என்னவோ?" -

-துளசி அறையிலிருந்து வெளியேறிச் சென்ற பின்பும் நீண்ட நேரம் இந்தக் கேள்வி சுகுணனின் செவிகளிலும் மனத்திலும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

-'இவளை நான் மறக்க வேண்டும். அல்லது இவள் என்னை மறக்க வேண்டும்! இந்தப் பாழாய்ப்போன மனித வாழ்க்கையில் சில உணர்ச்சிகளில் ஏமாறினாலோ, ஏமாற்றப்பட்டாலோ, அந்த உணர்வையும் அதிலடைந்துவிட்ட ஏமாற்றத்தையும் மறப்பதற்கு வேறு மாற்றுணர்வே கிடைப்பதில்லை. அதில் காதலும் ஒன்று போலும்' - என்று இப்படி அவன் எண்ணிக் கொண்டிருந்தபோது ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடு இன்னும் சில அச்சகத்து ஊழியர்களோடு வந்து எதிரே நின்றார்.

எதையோ வேண்டி, ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வருகிற நிலையில் இப்போது அவர்கள் வந்து நிற்பதாகத் தோன்றியது சுகுணனுக்கு. சில சமயங்களில் ஏதாவது ஒரு கூட்டத்திற்குத் தலைமை வகிக்க வேண்டுமென்றோ சொற்பொழிவு செய்ய வேண்டுமென்றோ கேட்க வருகிறவர்கள் இப்படிப்பட்ட தயக்கத்தோடுதான் வருவது வழக்கம்.

சுகுணன், நாயுடுவின் முகத்தைப் பார்த்தான். பேச வந்ததைப் பேசலாமே என்று எதிரே நிற்பவரின் சொல்லை வரவேற்பது போன்ற புன்முறுவலொன்று அவன் இதழ்களில் மலர்ந்தது.

"கொழந்தை புறப்பட்டுப் போயிடிச்சுங்களா?" என்று துளசியைப் பற்றி விசாரித்தார் நாயுடு.

இந்தக் கேள்வியைப் பெரிதாக இலட்சியப்படுத்திப் பதிலும் சொல்ல விரும்பாமல் ஒரேயடியாக அலட்சியப்படுத்திப் பதில் சொல்லாமலிருக்கவும் விரும்பாமல், 'பக்கத்து அறைக்குப் போயிருக்கிறாள்' என்று சொல்வது போல் 'காலை மலர்' சர்மாவின் அறைப்பக்கமாகக் கையைச் சுட்டிக் காண்பித்தான் அவன். நாயுடு அதோடு விடவில்லை. மேலும் கேட்டார்.

"கொழந்தை மறுபடி இங்கே வருங்களா?"

"வரவேண்டிய அவசியமோ காரியமோ ஒன்றுமில்லை. ஆனால் வந்தாலும் வரலாம்."

சிறிது நேரத் தயக்கத்திற்கும், மௌனத்துக்கும் பிறகு நாயுடு மீண்டும் மெல்லப் பேச்சைத் தொடங்கினார்.

"உங்க கிட்டத்தான் ஒரு காரியமா வந்தோம் சார்..."

"சொல்லுங்க... என்ன காரியம்?"

"கொழந்தைக்கும், மாப்பிள்ளைக்கும் வர ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் நாங்க பிரஸ் ஒர்க்கர்ஸ் எல்லாரும் உட்லண்ட்சிலே ஒரு விருந்து கொடுக்கலாம்னு எண்ணியிருக்கோம்..."

"ரொம்ப சரி! செய்ய வேண்டியதுதான்..."

"அதுக்கு..."

"அதுக்கு...?..."

"நீங்க தான் தலைமை வகிக்கணும்."

இந்த ஒரே வாக்கியத்தை - இந்த ஒரே வேண்டுகோளை நாயுடுவோடு கூட வந்திருந்த எல்லாருமே சேர்ந்து 'கோரஸ்' பாடுவது போல் ஒன்றாகச் சொல்லி வேண்டினார்கள்.

மறுபடியும் மறுபடியும் நான் விலக விரும்பிய வழிக்கே தன்னை இழுத்துக் கொண்டு போக வருகிற மனிதர்களையும் நிகழ்ச்சிகளையும் அந்தரங்கமாகச் சபித்தவாறே அந்த வெறுப்பின் காரணமாக ஒன்றும் பதில் சொல்லத் தோன்றாமல் மலைத்துப் போய் மௌனமான துயரம் உள்ளே வெதும்ப, அது வெளியே தெரிந்துவிடாமல் மறைக்க முயன்றபடி அவர்கள் முகத்தை ஒவ்வொன்றாக ஏறிட்டும் பார்க்கலானான் சுகுணன்.

அந்தக் காரியாலய அச்சகத்தின் கம்போஸிங் (அச்சுக் கோத்தல்), ப்ராஸஸ் (பிளாக்குகள் தயாரித்தல்), பைண்டிங் ஆகிய எல்லாப் பிரிவுகளிலும் முதன்மைப் பணியாளர்களாயிருந்த எல்லா ஃபோர்மெனும் நம்மாழ்வார் நாயுடுவோடு இதற்காக அவனை அழைக்க வந்திருக்கிறார்கள்.

வெளிப்படையான அறிகுறிகளோ பழக்கவழக்கங்களோ இல்லாமல் இருவர் மனத்தளவில் மலர்ந்த காதல் கருகினால் அந்த வாட்டமும் ஏமாற்றமும் கூட இந்த உலகத்துக்குத் தெரிவதில்லை. வெறும் கதாசிரியனாகவும், கலகலப்பாகப் பழகக்கூடிய நவநாகரிகப் பெண்களின் கூட்டத்திலிருந்து ஒரு வெறும் இரசிகையாகவும் அவனும் அவளும் பழகினது போலப் பாவித்துக் கொண்டு அல்லவா அவளுடைய திருமணப் பாராட்டு விருந்திற்கு அவனையே தலைமை தாங்க அழைக்கிறார்கள்?

'கடவுளே! மனம் என்பதை ஏன் இத்தனை இரகசியமாகப் படைத்தாய்? ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் ஒரு பெரிய பூட்டுத் தொங்குகிறது. ஆனால் அந்தக் கடினமான பூட்டைத் திறந்து பார்க்கும் சாவி வேறு எங்கோ இருக்கிறது. பூட்டைக் கொண்டிருப்பவர் ஒரு புறமும், திறவுகோலையுடையவர் ஒரு புறமுமாகப் பிரிவதும் விலகுவதும் வாழ்க்கை வீதியில் இயல்பாயிருக்கலாம். ஆனால் அந்தப் பூட்டிய மனத்தை மற்றவர்கள் உடைத்துப் பார்க்க வருவது தான் வேதனையான காரியம்' என்பதைச் சுகுணன் அந்த வேளையில் மிக நன்றாக உணர்ந்தான்.

"திருமண விருந்துதானே இது? விருந்திற்குத் தலைமை தாங்கக் கூட ஒருவர் அவசியம் தானா நாயுடு?" என்று அவன் கேட்டதை அடக்கத்தினாலும் விநயத்தினாலும் அவனிடமிருந்து வெளிவந்த வார்த்தைகளாக அவர்கள் எடுத்துக் கொண்டு மேலும் அவனது சம்மதத்தை எதிர்பார்த்து வற்புறுத்தித் தயங்கி நின்றார்களே ஒழிய உள்ளே அவன் மனம் படும் வேதனையை அவர்களால் உணர முடியவில்லை. விருந்து முடிந்ததும் மாலை போடுவதும் மாலை போட்டு முடிந்ததும் நவநாகரிகப் பூச்சூடலாகிய வார்த்தை மலர்களைச் சொற்பொழிவுகளாகத் தொடுத்துப் பேசுவதும் தவிர்க்க முடியாதவை என்பதை அவன் அறிவான். ஆயினும் தனக்கு வேதனை தரக்கூடிய அந்த வாய்ப்பைத் தட்டிக் கழிக்க முயலும் முயற்சியினாலேயே அவன் அப்படிப் பேசினான். அவர்களோ விடவில்லை. கடைசியாக இன்னொரு சாக்கைச் சொல்லித் தப்பிக்க முயன்றான் அவன்.

"இந்த மாதிரி விருந்துக்கும், திருமண வாழ்த்துக்கும் வேறு யாராவது வயதானவர்கள் தலைமை வகித்தால் நன்றாயிருக்குமே? நீங்கள் 'காலை மலர்' ஆசிரியர் சர்மாவையோ 'டைம்ஸ்' நாயரையோ கூப்பிட்டால் என்ன" -

"அதெப்படிங்க? நாங்கள் உங்களைத்தான் கூப்பிடறோம். நீங்களே வந்தாத்தான் நல்லாயிருக்கும்."

சம்மதிப்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலையிலிருந்தான் சுகுணன். இதற்கு மேலும் பிடிவாதமாக அதிலிருந்து தப்ப முயலுகிற கோழைத்தனத்தை அவன் செய்யவில்லை. திருமண விருந்துக்கு தலைமை வகிப்பதாக ஒப்புக் கொண்டு அவர்களை அனுப்பினான். அவர்கள் புறப்பட்டுப் போன சிறிது நேரத்திற்கெல்லாம் காரியாலயத்தில் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு மறுபடி அவன் அறைக்கு வந்தாள் துளசி. வந்தவள் ஆர்வத்தோடு அவனிடம் ஒன்று வேண்டினாள்:

"உங்கள் தொடர்கதையின் அடுத்த வாரப் பகுதி கையெழுத்துப் பிரதியாயிருந்தாலும், அச்சான ஃபாரமாயிருந்தாலும் உடனே எனக்குப் படிக்க வேண்டும்..."

"வெளிவர வேண்டிய பாரம் அச்சாகிவிட்டது. ஆனால் அச்சான பாரம் இங்கு எடுத்து வைக்கவில்லை. அதற்கும் அடுத்த வாரத்துக் கதைப் பகுதியை நானே இன்னும் எழுதவில்லை.

"இதென்ன? எப்போது இந்த டீ டவராவைக் கொண்டு வந்து வைத்தார்கள்? குடிக்கவே இல்லையா? மறந்து விட்டதா?" என்று அவன் மேஜை மேல் கவனிக்கப்படாமல் ஆறிப் போயிருந்த தேநீரைக் காண்பித்துக் கேட்டாள் துளசி.

"மறந்திருக்கும்! அதனால் என்ன இப்போது?" என்று அலட்சியமாக அந்த டவரா-டம்ளரை எடுத்து ஜன்னல் வழியே, ஏதோ ஒரு வெறுப்போடு அதிலிருந்து தேநீரை வெளியே ஊற்றினான் ச்குணன். அவனுடைய அந்தச் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் கேட்டாள்.

"காண்டீன் பக்கமாகப் போய் பையனைச் சூடாக வேறு தேநீர் கொண்டு வரச் சொல்லட்டுமா?"

"எனக்கு வேண்டியதில்லை. ஒருவேளை உனக்குத் தேவையானால் சூடாக வரவழைத்துக் கொள்ளலாம்..."

"இப்போது எனக்குத் தேவை தேநீர் அல்ல. உங்கள் தொடர்கதையின் வெளிவரப் போகும் பகுதி தான் வேண்டும்..."

"ஃபோர்மெனிடம் கேள்! தருவார்."

முன்பெல்லாம் அச்சான முதல் ஃபாரத்தை அவளுக்காக அவன் எடுத்து வைத்துக் கொடுப்பது வழக்கம். இன்று அப்படிச் செய்யவில்லை. அவளே விரைந்து போய் ஃபோர்மெனிடம் வாங்கி வந்தாள். அப்போது மாலை மணி ஐந்து இருக்கும். அவள் வீட்டிற்குப் போய் வருவதாக விடைபெற்ற போது அவன் அமைதியாக விடை கொடுத்து அனுப்பினான். எப்போதும் ஆதரவாக வாசல் வரை - கார்க் கதவு வரை போய் அனுப்புவது வழக்கம். இன்று அதையும் செய்யவில்லை. செய்ய முடியாது, செய்வதும் நன்றாயிராது. ஆனால் செய்யும்படி ஒரு நிர்ப்பந்தம் வந்து சேர்ந்தது. அவள் அங்கிருந்து நகர்ந்ததுமே அவன் அறையில் டெலிபோன் மணி அடித்தது. "துளசி இருந்தால் சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொல்லுங்கள். அவள் கணவர் ஏதோ சினிமாவுக்கு முதல் ஆட்டம் டிக்கட்டை வாங்கி வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்" - என்று அவள் தந்தை நாகசாமி ஃபோன் செய்தார்.

சுகுணன் உடனே காரியாலய முகப்புவரை விரைந்து போய் அங்கே காரில் புறப்படத் தயாராயிருந்த துளசியிடம் கையைக் காண்பித்துக் காரை நிறுத்தி அதை அப்படியே தெரிவித்தான். கணவன் சினிமா டிக்கெட்டோடு வீட்டில் காத்திருப்பதாக அவன் வந்து தெரிவித்ததைக் கேட்டு ஒன்றும் தோன்றாமல் இரண்டு கணம் ஸ்டியரிங்கில் கை வைத்தபடியே இருந்தாள் அவள். பிறகு கீழே இறங்கி ஒரு கணம் நின்றாள்.

சுகுணனோ தகவலைத் தெரிவித்துக் கடமை முடிந்து விட்டது போல விரைந்து உள்ளே திரும்பி விட்டான். சந்திக்காமலிருந்த சில நாட்களை விட இன்று சந்தித்த பின்பே இருவருக்கும் இடையே அதிகத் தொலைவும் பிரிவும் பிறந்து விட்டது போன்ற உணர்வுடன் இருவரும் பிரிந்தனர்.

கார் திரும்பியபோது உள்ளே வேகமாக விரையும் அவன் உருவை அவள் ஒரு வினாடி பார்த்தாள். கண்களில் நீர் பனித்தது. ஓர் இயந்திரம் போல் அவள் கால் இயங்கி வேக விசையை மெல்ல அழுத்தியது. கார் நகர அவளும் சென்றாள்.

ஐந்தரை மணியளவில் சுகுணனும் காரியாலயத்திலிருந்து திருவல்லிக்கேணியில் அறைக்குப் புறப்பட்டு விட்டான்.

முதல் நாளிரவு இரயிலில் உறக்கம் விழித்துப் பயணம் செய்ததனால் மிகவும் சோர்வாக இருந்தது. மனத்தின் சோர்வுகளும் உடலின் சோர்வுகளுமாக இருண்டும் சேர்ந்து அவனை வாட்டின. ஒவ்வொரு நாளும் அலுவலகம் முடிந்து மாலையிலோ, இரவிலோ அறைக்குத் திரும்பியதும், இரண்டாவதாக ஒரு முறை குளிப்பது அவன் வழக்கம். கடுங் கோடைக்காலமாக இருந்து வெப்பம் அதிகமாக வாட்டினாலோ நடுப்பகல் இடைவேளையின் போது கூடக் குளிப்பதற்காகவே அறைக்கு வந்து திரும்புவதுமுண்டு. உடம்பில் வெம்மையோ, வேர்வையோ, கசகசகளைப் போக்கி, நறுமணம் கமழும் ஈரச் சந்தனத்தைப் போல் குளிரக் குளிர வைத்துக் கொள்வது அவனுக்கு மிக விருப்பமான காரியம். அன்றோ குளிக்க வேண்டுமென்று நினைப்பது கூடச் சோர்வாயிருந்தது. பல்லாயிரம் தேள்கள் ஒரே சமயத்தில் கொட்டுவது போல மனத்தில் ஏதோ ஒரு நுட்பமான வலி இசிவெடுத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் வழக்கப் படுத்திக் கொண்டுவிட்ட நல்லொழுக்கங்களின் மேல் அவனுக்கிருந்த பிடிவாதத்தின் காரணமாக அறைக்கு வந்ததும் முதல் வேலையாகக் குளித்து விட்டு வந்தான்.

அதிக வசதிகள் இல்லாத அந்தச் சிறிய அறையைத் தூய்மையாகவும் வைத்துக் கொள்வதில் சுகுணனுக்குப் பிரியம் அதிகம். ஊதுவத்திக் குழலில் மீதமிருந்த கடைசி ஊதுவத்தியும் கொளுத்திவிட்டுப் பாயை விரித்துக் கீழே அமர்ந்து சொந்தமாக வந்திருந்த சில கடிதங்களுக்குப் பதிலெழுதலானான். பி.இ.இன். மகாநாட்டிற்கு டெல்லி வருமாறு கடிதம் போட்டிருந்த நண்பன் தவமணிக்கும், அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் பெடரேஷனுக்காகக் கல்கத்தாவிலிருந்து கோஷ் எழுதியிருந்த கடிதத்துக்கும் பதில் எழுதி முடித்த பிறகு, 'ஓய்விருக்கும் போது கிராமத்துக்கு வந்து தன்னோடு சில நாட்கள் தங்கிவிட்டுப் போக வேண்டுமென்று' - எழுதியிருந்த சகோதரிக்கும் மறுமொழி வரைந்தான். அடுத்த வார பூம்பொழில் 'இலக்கியமேடை' கேள்வி - பதில் பகுதிக்கு வந்திருந்த கேள்வி கடிதங்களை ஒன்றாக அடுக்கிக் கட்டி எடுத்து வந்திருப்பது ஞாபகம் வந்தது. அவற்றை எடுத்து சிலவற்றிற்குப் பதில் எழுதினான். மனம் தனிமையாக, எல்லாவற்றிலும் விடுபட்டுத் தளர்ந்தது போல் உணரும் வேளைகளில் நிறைக் கடிதங்களை எழுதி முடித்தது போலத் தோன்றும்.

மிகவும் குறுகலான பெரிய தெரு என்ற சிறிய வீதியில் இரவும் மனிதர்களும் கவிந்து உலாவத் தொடங்கி விட்டனர்.

நாலு வீடு தள்ளியிருந்த மெஸ்ஸிற்குப் போய் இரவு உணவை முடித்துக் கொண்டு அவன் அறைக்குத் திரும்பினான். அறைக்குள் வசதிகளுக்குப் பஞ்சமானாலும் காற்றுக்குப் பஞ்சமில்லை. படுக்கையில் புரண்டபடி நீண்ட நேரம் எதை எதையோ தொடர்புடனும் தொடர்பின்றியும் சிந்தித்துக் கொண்டிருந்து விட்டு அயர்ந்து உறங்கிப் போனான் சுகுணன்.

மறுநாளும் அதற்கடுத்த நாளும், பத்திரிகை வேலைகளில் மூழ்கினான் அவன். நடுவில், 'படங்கள் சரியாக விழாததனால் திருமணப் புகைப்படங்கள் எதையும் போட வேண்டாமென்று' துளசியே அபிப்ராயப்படுவதால் அப்படியே விட்டு விடுவது நல்லதென்று, பத்திரிகை அதிபர் நாகசாமி அவனுக்கு ஃபோன் செய்து தெரிவித்தார். அவளுடைய திருமணப் படத்தை முதல் பக்கத்தில் பார்டர் கட்டி போட வேண்டுமென்று அவர் தனக்குக் கட்டளையிட்ட போது கடமையை ஏற்று எப்படி அதை வரவேற்றுச் செயல்பட்டானோ, அதே போல இப்போதும் படத்தைப் போட வேண்டாமென்ற இந்தச் செய்தியையும் கடமையுணர்வோடு கேட்டுக் கொண்டான் அவன். ஆனால் இதெல்லாம் துளசி தனது மன வேதனையைத் தவிர்ப்பதற்காகச் செய்யும் காரியங்கள் என்பது அவனுக்கே புரிந்துதானிருந்தது. அவள் அலுவலகத்தில் தனக்கு முன்பே படத்தைக் கிழித்தெறிந்த போதும், வேறு நல்ல படம் தருவதாக ஃபோர்மென் நாயுடுவிடம் பொய் கூறிய போதுமே - இது இப்படித்தான் நடக்குமென்று அவன் அநுமானம் செய்திருந்தான். கடைசியில் அது அப்படியே நடந்தது.

துளசியும், மாப்பிள்ளையும் கோடைக்கானல் போய் இரண்டு மூன்று நாட்கள் தங்கி விட்டுச் சனி இரவு அங்கிருந்து புறப்பட்டு ஞாயிறு காலையில் தான் சென்னை வருவதாகக் கேட்டுவிட்டு ஞாயிறு மாலை விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் அச்சக ஊழியர்கள். இப்போது அவர்களுடைய கோடைக்கானல் பயணம் நின்று போன தகவல் தெரிந்ததும் வெள்ளிக்கிழமை மாலையே விருந்துக்கு ஏற்பாடு செய்து விட்டதாகவும் அன்றே அவன் தலைமை வகிக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டார்கள். சுகுணன் அதற்கும் மறுக்கவில்லை. துயரமோ, ஏமாற்றமோ, தன்னைக் கோழையாக செய்துவிடக் கூடாதென்று தன் மனத்துக்கே ஒரு கட்டுப்பாடு போட்டுக் கொண்டு திருமணப் பாராட்டுக் கூட்டத்துக்குப் போய்வர ஒப்புக் கொண்டிருந்தான் அவன்.

தன்னை வேண்டுமென்றே மிக மிக வஞ்சகமான முறையில் பழிவாங்குவதற்காகவே அவன் அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்க ஒப்புக் கொண்டு வந்திருக்கிறானோ என்று துளசிக்கு உள்ளூற ஒரு பயம் தோன்றினாலும் தோன்றலாம். அவனுடைய கதைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட சில அன்பர்களின் திருமணங்களுக்குத் தலைமை தாங்க அவன் போயிருக்கிறான். அதைப் போலவே இதையும் ஒரு மேடை நிகழ்ச்சியாக நடத்திக் கொடுத்து விட்டுத் தன் அந்தரங்க உணர்ச்சிகளை மனத்திற்குள்ளேயே புதைத்துக் கொண்டு வந்துவிட அவனால் முடியும். ஆனால் இதில் மிக மிகப் பரிதாபத்துக்குரியவள் துளசி தான். விருந்தில் அவன் சாதாரணமாகப் பேசுவதெல்லாம் கூட அவளைக் குத்திக் காட்டிப் பேசுவது போல் அவளுக்குத் தோன்றலாம். அவன் ஒன்றுமே பேசாமல் இருந்தாலோ அதுவும் ஒரு விகல்பமாகவே தோன்றும். முதலில் அச்சக ஊழியர்கள் அளிக்கும் அந்த விருந்திற்கு அவன் தலைமை வகிக்கப் போகிறான் என்பதே அவளுக்குப் பெரிய அதிர்ச்சியாயிருக்கும். அதை வைத்துக் கொண்டும் அவள் என்னென்னவோ நினைக்கலாம். கற்பனை செய்யலாம். ஆனால் இவற்றை எல்லாம் நினைத்து அவன் தயங்கவோ, தளரவோ, அவசியமில்லை.

'சமூக வாழ்வில் ஆண்களுக்குச் சில பொது வசதிகள் இருக்கின்றன. எந்த இடத்திலும் எந்த நிலையிலும் முகம் சிவக்க நாணாமல், கூசாமல், பயப்படாமல் நிற்க ஆணுக்கு ஒரு வசதி இருக்கிறது. 'பெருமையும் வலிமையும் ஆண்மைக்கு உரியன; அச்சமும் மடமும் நாணமும் பெண்மைக்கு உரியன' என்று இவற்றுக்குக் குண எல்லை வகுத்த பழைய இலக்கண ஆசிரியர்கள் எத்தனை கவனமாக எத்தனை நிச்சயமாக எல்லாக் காலத்துக்கும் பொருந்தும்படி அந்த இலக்கணத்தை வகுத்திருக்கிறார்கள்!' என்று அவர்களை ஒரு கணம் சிந்தனையில் நினைத்து வியந்தான் சுகுணன்.

வெள்ளிக்கிழமையன்று மாலை நான்கு மணிக்கே அலுவலகத்திலிருந்து அறைக்குப் புறப்பட்டுப் போய் விட்டான் சுகுணன். குளித்து உடை மாற்றிக் கொண்டு அறையிலிருந்து நேரே உட்லண்ட்சுக்கு வந்து விடுவதாக அவன் மற்றவர்களிடம் சொல்லியிருந்தான். விருந்து முடிந்ததும் மணமக்களைப் பாராட்டி சர்மா, டைம்ஸ் நாயர் இன்னும் சில அச்சக ஊழியர்கள் உட்பட மொத்தம் எட்டு பேர் சொற்பொழிவாற்ற இருப்பதாக ஃபோர்மென் நாயுடு முன்பே சுகுணனிடம் தெரிவித்திருந்தார். இத்தகைய நிகழ்ச்சிகளால் திருமணங்கூட ஒரு வெளிப் பகட்டுச் சடங்காகி விடுவதை அவன் உணர்ந்து சலித்திருந்தாலும் இந்தத் திருமண விருந்தில் அந்தச் சலிப்பைக் கூட அவன் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியாமலிருந்தது.

ஆறு மணிக்கு ஒரு டாக்ஸியில் போய் உட்லண்ட்ஸில் இறங்கி விருந்து நடக்கும் பகுதிக்குள் நுழைந்த போது துளசியும் அவள் கணவனும் உட்பட எல்லாருமே வந்து கூடியிருந்தார்கள். துளசியோடும் அவள் கணவனோடும், நாயரும், சர்மாவும், ஃபோர்மென் நாயுடுவும் அருகிலமர்ந்து ஏதோ சிரிப்புக் கலகலக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். சுகுணன் அருகில் வந்ததும் அவனை மரியாதை செய்து வரவேற்கும் பாவனையில் துளசி எழுந்து நின்றாள். ஃபோர்மென் நாயுடுவும் எழுந்து வரவேற்றார். முறையையும் பொது நாகரிகத்தையும் விட்டுக் கொடுக்க முடியாமல் துளசி தன் கணவனை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவர் நீட்டிய கையை ஏமாறவிடாமல் அவனும் புன்முறுவலோடு பற்றிக் குலுக்கினான். அப்போது அவன் நினைத்தான்:

'கடவுளே! மனம் என்பதை ஏன் இத்தனை இரகசியமாகப் படைத்தாய்?'

எல்லாரும் இருக்கைகளில் அமர்ந்த பின் சில விநாடிகள் வரை ஒருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.

"சார் தான் தமிழில் நம்ம துளசியோட ஒரே ஃபேவரிட் ஆசிரியர்" என்று எதையாவது பேச வேண்டுமென்பதற்காகச் சொல்லுபவர் போல் குறுக்கிட்டுக் கூறினார் சர்மா.

மனத்தின் சத்திய ஆழத்திலிருந்து பிறக்காமல் வெறும் நாக்கு நுனியிலிருந்து உதிர்ந்த அந்தப் போலிப் புகழ் வார்த்தைகள் சுகுணனின் செவிகளில் அபஸ்வரமாக ஒலித்தன. 'துளசியின் ஃபேவரிட் ஆசிரியன்' -அவன் தான் என்பது உண்மையாயினும் சர்மா அதை வெளியிட்ட விதம் அந்தச் சூழ்நிலையில் போலியாக ஒலித்தது. விருந்துக்காக வரிசை வரிசையாய் நாற்காலிகள் போடப் பட்டு அவர்கள் அமர்ந்திருந்த திறந்த புல்வெளியிலிருந்து மேலே தெரிந்த வானத்தில் அப்போதே மினுமினுக்கத் தொடங்கிவிட்ட ஏதோ ஒரு நட்சத்திரத்தைப் பராக்குப் பார்க்கலானான் சுகுணன்.

சிறிது நேரத்தில் விருந்து தொடங்கியது. மேடையில் முக்கியமான நடு இடத்தில் துளசியும் அவள் கணவனும் பிரதம விருந்தினர்களாக அமர்ந்த பின் அவர்களுக்கு வலது பக்கம் சுகுணனும், இடது பக்கம் சர்மா, நாயர் முதலியவர்களும் அமர்ந்து கொண்டார்கள். அச்சக ஊழியர்கள், உழைக்கும் பத்திரிகையாளர்கள், யார் எந்த விருந்தோ கூட்டமோ நடத்தினாலும் அதற்குப் பத்திரிகை அதிபர் நாகசாமி சில காரணங்களால் வருவது வழக்கமில்லை என்பது நன்றாகத் தெரிந்தும், "அப்பா வரலியாம்மா?" என்று துளசியிடம் சம்பிரதாயமாக ஒரு கேள்வி கேட்டு வைத்தார் சர்மா. வரவில்லை என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தாள் துளசி.

விருந்து தொடங்கியது. அந்த அருமையான விருந்தில் இரசித்துச் சாப்பிட முடியாதவர்கள் இருவர் இருந்தனர். ஒருத்தி துளசி, இன்னொருவன் சுகுணன். திட்டமிடாமல் சேர்ந்த இயற்கையாய்த் துளசியின் வலது புறம் சுகுணனும், சுகுணனின் இடது புறம் துளசியுமாக அமர்ந்திருந்ததால் ஒருவர் நிலையை மற்றொருவர் நன்றாக உணர முடிந்தது. அவளுடைய கூந்தலின் மல்லிகை அவனருகே மணந்தது. அவளுடைய சரீரத்தின் இங்கிதமான நளின நறுமணங்கள் அவனுக்கு மிக அருகே கிளர்ந்தன. அவளுடைய கைகளின் வளைகள் அவனுக்கு மிக அருகே ஒலித்தன. வெண்ணெய் திரண்டாற் போன்ற அவளது அந்தப் பளிங்கு முழங்கை அவனுக்கு மிக அருகே இயங்கியது. ஆயினும் அவன் எங்கோ கண்ணுக்கெட்டிய வான மூலையில் மின்னிய ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வேளையில் துளசியின் வீணைக் குரல் ஒலித்தது.

"என்ன இது? ஒன்றுமே சாப்பிடாமல் எங்கோ பாராக்குப் பார்க்கிறீர்கள்?"

"வர வர ருசியே போய் விட்டது..." - என்று ஏதோ நகைச்சுவையாகப் பதில் சொல்வது போல் அவன் கூறிய வார்த்தைகள் அவளைச் சிந்திக்க வைத்திருக்க வேண்டும். அந்த வார்த்தைகளில் அடியுண்டு விழுந்த அவள் இரண்டு விநாடி மௌனத்திற்குப் பின் பதில் சொன்னாள்:

"அதெப்படி? நீங்கள் தலைசிறந்த கதாசிரியர்! எல்லா நல்ல ருசிகளும் உங்கள் பேனாவிலிருந்துதான் பிறக்க வேண்டுமென்று என்னைப் போன்றவர்கள் எல்லாம் தவம் கிடக்கிறோம். உங்களுக்கே ருசி போய்விட்டதென்றால்..." என்று சொல்லி விட்டு அந்தச் சொற்களின் ஆழத்தை மூடி மறைக்க மேலாக ஒரு புன்னகையும் புரிந்தாள் துளசி.

அந்த வார்த்தைகளைக் கேட்டு அவள் பக்கமாகத் திரும்பிக் கண்களைச் சிலகணம் அவள் முகத்தில் ஊன்றி ஒரு பார்வை பார்த்தான் சுகுணன். அந்தப் பார்வை அவள் பேச்சையும் சிரிப்பையும் அப்படியே கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டது.

விருந்து முடிந்தது. ஃபோர்மென் இரண்டு பெரிய ரோஜாப் பூ மாலைகளை அவன் கையில் கொண்டு வந்து கொடுத்தார். அந்த மாலைகளில் ஒன்றைத் துளசியின் கைகளிலும், மற்றொன்றை மாப்பிள்ளையின் கைகளிலும் கொடுத்து அவர்களே ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொள்ளும்படி செய்தான் சுகுணன்.

துளசியின் மெல்லிய விரல்கள் அந்த மாலையைத் தன் கைகளிலிருந்து வாங்க நடுங்குவதை அவன் கவனித்தான். அதைத் தன் கைகளிலிருந்து வாங்கும் போது அவள் கழுத்தும் தோள்களும், தலையும் ஏன் அப்படிக் குழைந்து குனிந்து தயங்கின? அவளையும் அறியாமல் அவனிடமிருந்து அந்த மாலையைத் தன் கழுத்திலேயே ஏற்றுக் கொள்ள அவள் சரீரம் இயற்கையாகக் குழைகிறதா? சில பூக்கள் தென்றல் உராய்ந்ததும் மலருவதுண்டாமே! இன்னும் சில பூக்கள் கைகள் பட்டால் மலருவதுண்டாமே!

'பாழும் கடவுளே! மனம் என்பதை ஏன் தான் இத்தனை இரகசியமாகவும் இத்தனை நுணுக்கமாகவும் படைத்தாய்! ஒருவர் மனம் இன்னொருவருக்குப் பூட்டாகவும் ஒருவர் நினைவு இன்னொருவருக்குப் புதிராகவும் ஏன் படைத்தாய்!'

மாலை மாற்றிய கைகளோடு முகத்தில் இருந்த சிரிப்புப் பூச்சை மேலாகப் பிரித்தெடுத்துவிட்டு அடியிலிருந்த அசல் சோகத்தை மட்டுமே காண முடிந்தாற் போன்ற முகத்தோடு துளசி பதறி நிற்கையிலே, "நான் ஆபட்ஸ்பரிக்கே வந்து உன் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற குறை இனிமேல் உனக்கு இருக்காதே துளசி?" என்று சர்வ சாதாரணமாக நகைச்சுவையோடு கேட்பது போல் அவளை ஒரு கேள்வி கேட்டான் சுகுணன். அதை எல்லாரும் - மாப்பிள்ளையும் கூடச் சிரித்து கைதட்டி வரவேற்றார்கள்.

துளசியின் முகத்திலோ அந்தக் கேள்வியை அவன் கேட்ட போது ஏற்கெனவே இருந்த பூச்சுச் சிரிப்பும் மறைந்து விட்டது. அந்த முகத்தில் இருந்து பொதுவான மகிழ்ச்சியையும் துடைத்தெறிந்துவிட்டது அவனுடைய அந்தக் கேள்வி.

மேடைகளில் பேசிப் பேசிப் பழகிய அனுபவமும், துணிவும், அவனை அந்தத் திருமண விருந்துக் கூடத்தில் நன்றாக நாடகம் ஆட வைத்தன.

திடீரென்று தன்னை எல்லாரிலும் மிகமிக மூத்தவனாக்கிக் கொண்டு, "'மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலன் நன்மக்கட் பேறு' என்று குறள் கூறுகிறது. குடும்பம் ஆரம்பமாவது இருவர் அன்பில். வளர்வது மூன்றாவது அன்பைப் படைப்பதற்காக. இவ்வாறு படிப்படியாக அன்பை வளர்க்கும் ஒரு பண்ணையே நமது பாரத நாட்டு இல்லற வாழ்வு. இந்த இருவர் அன்பில் ஒரு தியாகமயமான புதுத் திருப்பத்தை உண்டாக்குவது மக்கட்பேறு. குழந்தைகள் பிறக்குமுன் கணவன் மனைவி மேலும், மனைவி கணவன் மேலுமே மாற்றி மாற்றி அன்பைச் செலுத்துவதற்கு முடியும். இந்தக் காதல் ஓரளவு சுயநலமானது. தங்களைப் பற்றியது. இந்த அன்பே குழந்தைகள் பிறந்த பின்பு சமூக நலமான பொது அன்பாக மாற முடியும். குடும்ப வாழ்வின் தத்துவமே வீட்டளவில் ஓர் அன்பை வளர்த்து அந்த அன்பை நாட்டளவில் ஒரு சமூகச் சொத்தாக்குவதில் தான் இருக்கிறது. அத்தகைய சீரிய குடும்ப வாழ்வு நாம் இன்று பாராட்டும் இந்த மணமக்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று மனமார விரும்புவதை விட வேறெந்தப் பெரிய வாழ்த்துக்களையும் இவர்களுக்கு நாம் தந்துவிட முடியாது! அடுத்த நமது நிறுவனத்தைச் சேர்ந்த காலை மலர் நாளிதழ் ஆசிரியர் சர்மா அவர்கள் சில வார்த்தைகள் பேசி மணமக்களை வாழ்த்துவார்" - என்று உற்சாகமாகத் தலைமையுரை கூறிவிட்டு இடத்தில் அமர்ந்தான் சுகுணன்.

அமர்ந்தவன் துளசியின் பக்கமாகத் திரும்பியபோது அவள் கண்களில் நீர் சுரந்திருப்பதைக் கண்டான். ஆயினும் அதைக் காணாதது போல் இருந்து விடுவதைத் தவிர அப்போது அவனால் செய்ய முடிந்தது வேறொன்றுமில்லை. அவள் மனம் புண்பட வேண்டுமென்று அவன் எதையும் பேசவில்லை. அவன் பேசிய எதையாவது அவள் தன்னைக் குத்திக் காட்டுவதாக எடுத்துக் கொண்டிருந்தால் அதற்கு அவன் என்ன செய்ய முடியும்? எனவே அவன் துளசியின் பக்கம் பார்ப்பதைத் தவிர்த்துப் பேசத் தொடங்கியிருந்த சர்மாவின் பக்கம் தன் கவனத்தைச் செலுத்தினான்.

சர்மா நகைச்சுவைத் துணுக்குகளைப் பொழிந்து கூட்டத்தில் இருந்தவர்களைச் சிரிப்பிலாழ்த்திக் கொண்டிருந்தார். சர்மாவுக்கு ஒரு பலசரக்கு ஞானம். சங்கீதம், சமையல், சாப்பாடு, சினிமா, டென்னிஸ், பரதநாட்டியம் எல்லாவற்றிலும் 'வகைக்குக் கொஞ்சம் ஞானம் உண்டு'. கடைசிப் பட்சமாகப் பத்திரிகைத் தொழிலிலும் கொஞ்சம் தெரியும். கொஞ்சந்தான்! அவர் பேசுவதிலுள்ள ஹாஸ்யங்களுக்குச் சிரிப்பதை விடப் பேச முடியாமலோ, பேசச் சரியான வார்த்தை வராமலோ மேடையில் அவர், தவிப்பதையும் தடுமாறுவதையும் பார்த்தே கூட்டத்தில் அலையலையாகச் சிரிப்புப் பொங்கும். சென்னையில் பெரும்பாலான புத்தக வெளியீட்டு விழாக்கள், சங்கீத சபாக்களின் கச்சேரிகள், நாடகங்களின் அரங்கேற்றங்கள், இலக்கியக் கூட்டங்கள், ஆகியவற்றில் நிரந்தரமாக அவருக்கு ஓர் இடம் உண்டு. அதாவது நன்றி கூறுவது. ஒரு கூட்டத்திற்குச் சர்மா போயிருந்தால் அந்தக் கூட்ட முடிவில் நன்றி கூறும் பொறுப்பு அவருடையதாகத்தான் வந்து சேரும். இதனால் பொது இடங்களில் அவரைப்பற்றிக் குறிப்பிடும் போதோ பேசும் போதோ காலை மலர் ஆசிரியர் சர்மா என்று சொல்லாமல் "யார்? நம்ம 'நன்றி சர்மா'வையா சொல்கிறீர்கள்!" - என்று குறிப்பிடுகிற அளவு அவருடைய நன்றிப் புகழ் பரவியிருந்தது.

அவருடைய பேச்சிலோ நன்றியிலோ ஒரு சிறப்பு அல்லது சிறப்பின்மை (நீங்கள் எப்படி வைத்துக் கொள்கிறீர்களோ அப்படி) என்னவென்றால் பேசத் தொடங்கிவிட்ட பேச்சையோ கூறத் தொடங்கிவிட்ட நன்றியையோ எந்த இடத்தில், எவ்வளவு நேரத்தில், எப்படி முடிப்பது என்று தெரியாமல் அவர் தவித்துத் தடுமாறுவது தான். முடிப்பது போல் வருவார்! முடிக்கத் தெரியாமல் வேறு விஷயத்துக்குத் தாவி மறுபடி அங்கிருந்து இக்கதைக்கு வரத் தெரியாமல் விழித்துக் கொண்டு நிற்பார். இப்படி இவரை மேடையில் நிறுத்தி இவர் காமெடியன் மாதிரித் தவித்துத் திருதிருவென்று விழிப்பதை வேடிக்கை பார்ப்பதற்காகவே இவரைப் பல கூட்டங்களில் பேச அல்லது நன்றி கூற அழைக்கிறார்களோ என்று கூடச் சுகுணன் சில சமயங்களில் வேடிக்கையாக நினைத்திருக்கிறான். ஆனால் அப்படியும் வேடிக்கையாக நினைத்து விட முடியாது. 'நன்றி சர்மா'வுக்கு மயிலாப்பூர், மாம்பலம், அடையாறு 'ஸ்நாப்'களினிடையே நல்ல செல்வாக்கு உண்டு. இந்த செல்வாக்குக்குப் பயந்து தான் காலை மலர் ஆசிரியராக அவரை வைத்திருந்தார் நாகசாமி. 'இலட்சியத் துடிப்புள்ள புதிய தலைமுறை இளவட்டம் என்ற முறையில் சுகுணனிடம் சர்மாவுக்குக் கொஞ்சம் பயம் உண்டு. அவனை எதிர்க்கவோ அவனிடம் முரண்படவோ அவர் ஒரு போதும் துணியமாட்டார்.

மணமக்களை வாழ்த்தி சர்மா அன்றும் நிறைய நேரம் பேசினார். அவருக்குப் பின் இன்னும் ஐந்தாறு பேர் பேசினார்கள். இறுதியில் ஃபோர்மென் நாயுடுவை நன்றி கூற அழைப்பதற்கு முன், "இன்று நன்றி கூறும் சான்ஸ் நமது சர்மா சாருக்கு இல்லை. சர்மா சார் தயவு செய்து என்னை மன்னித்து விட வேண்டும். இப்போது நாயுடு நன்றி கூறுவார்" என்று சுகுணன் அறிவித்த போது கூட்டத்தில் அலை அலையாகச் சிரிப்பு எழுந்தது. சர்மா கூட விழுந்து விழுந்து சிரித்தார். ஒருத்தி முகத்தில் மட்டும் ஈயாடவில்லை. அவள் தான் துளசி.

மனங்களின் இரகசிய வேதனைகளைப் புறக் கண்களால் காண முடியாத இந்த உலகில் அப்பாவி நாயுடு எதை எதையோ நினைவுபடுத்தி நன்றி கூறிக் கொண்டிருந்தார்.

"நான் இந்தக் கூட்டத்துக்கு நம்ப சுகுணன் ஐயாவைத் தலைமை தாங்கச் சொன்னதுக்கு ஒரு காரணம் உண்டு. துளசிம்மாவுக்கு நம்ப சுகுணன் ஐயா கதை மேலே உசிர். பத்திரிகை பைண்டாகி வெளிவர வரைக்குங் கூட அவங்களாலே பொறுத்துக்க முடியாது. எங்கிட்ட வந்து அச்சான ஃபாரத்தையே வாங்கிட்டுப் போய் தொடர்கதை படிச்சிடுவாங்க. சில சமயம் 'சார்' கிட்டவே கையெழுத்துப் பிரதியைக் கேட்டு வாங்கிப் படிச்சிடும். கதைக்கு இன்னா படம் வருதுன்னு ஆர்ட்டிஸ்டுங்க கிட்டக் கூடப் போய்ப் பார்த்திட்டு வந்திடும். அத்தினி ஆர்வம். அத்தினி ஆசை."

மழை நீரின் கனம் தாங்காமல் தாழ்ந்து சாயும் பூச்செடி போல் சுகுணனின் தலை தாழ்ந்தது. இந்த விநாடியில் துளசியின் இதயத்தில் இரத்தக் கண்ணீர் வடியும் என்ன செய்வது? இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் வெளி நடிப்புச் செய்ய ஓர் ஆண் மகனால் முடியும். அந்த நடிப்பைத்தான் சுகுணனும் இப்போது நயமாகவும் நாடகமாகவும் செய்து கொண்டிருந்தான். துளசியோ தவித்துக் கொண்டிருப்பாள். தன்னைப் பழி வாங்குவதற்காகச் சுகுணனே இப்படி ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தாரோ என்று கூட அவள் கற்பனை ஓடலாம்.

சுருக்கமாக நாயுடு நன்றி கூறி முடித்துவிட்டார். அச்சக ஊழியர்கள் பலர் மணமக்களுக்கு ஏதேதோ பரிசுகள் வழங்கினார்கள். அதில் பெரும்பாலான பரிசுகள் சுகுணனின் 'பாலைவனத்துப் பூக்கள்' என்ற நாவலின் விலையுயர்ந்த பரிசுப் பதிப்பாக இருந்தன. வீட்டுக்குப் புறப்படுமுன் அவள் சுகுணனிடம் விடைபெற வந்தாள். வார்த்தைகளைப் பேச நா எழாத நிலையில் வருகிறேன் என்று பொம்மைப்போல் தலையசைத்தாள். சுகுணனே செயற்கை புன்முறுவலோடு அவளிடமும் அவள் கணவனிடமும் சேர்ந்தே இரண்டு வார்த்தைகள் கலகலப்பாகப் பேசி விடை கொடுத்தான்.

"குடும்ப வாழ்க்கை எப்படி முதலில் வீட்டு அன்பையும் பிறகு நாட்டு அன்பையும் வளர்ப்பதற்கு ஏற்ற முறையில் இந்தத் தேசத்தில் வகுக்கப்பட்டிருக்கிறது என்பதை விளக்கி ஒரு கருத்தைச் சொன்னீங்களே அது ரொம்ப ரொம்ப நல்லாயிருந்திச்சுங்க" என்று அவனைப் புகழ்ந்தார் நாயுடு.

"என்னய்யாது? திடீர்னு நன்றி கூறுகிற சான்ஸ் இன்று சர்மாவுக்கு இல்லைன்னு! என்னை பிடிச்சு வம்பிலே இழுத்து விட்டுப்பிட்டீரே?" என்று சர்மா அவனருகில் வந்து குழைந்தார்.

"அது உங்கள் பிறப்புரிமையாயிற்றே! அதனால் நீங்கள் கோபித்துக் கொள்வீர்களோ என்றுதான் அப்படிச் சொன்னேன்" என்று கூறினான் சுகுணன். மறுபடியும் சுற்றியிருந்தவர்களிடையே சிரிப்புப் பொங்கியது. இத்தகைய பாராட்டுக் கூட்டங்களில் எல்லாம் ஆரம்பத்திலும் முடிவிலும், இப்படிச் சொல்லி சில வெற்றுச் சிரிப்பலைகள் பொங்க, நடுவே எங்கோ சிலர் மனம் புண்பட்டு அழுது புழுங்குவது தான் பட்டினத்து நாகரிகம். மனிதனுடைய சத்தியத்துக்கும் மனோதர்மத்துக்கும் சாயம் பூசி ஏமாற்றி விடுகிற பொய் வண்ணமான இந்தச் சிரிப்பு என்கிற தரக்குறைவான - மங்கலான வர்ணம் தான் இன்றைய நகரங்களின் பல பொது நிகழ்ச்சிகளில் பரவலாகப் பூசப்பட்டு விடுகிறது என்று நினைத்து உள் மனத்தில் தவித்தான் சுகுணன்.

துளசி அந்தக் கூட்டத்திலிருந்து போகும்போது கழுத்து வரை முட்ட முட்ட அழவேண்டிய துயரத்தோடு கனத்துப் போயிருக்கிறாள் என்று அவன் மனத்துக்குப் புரியும். ஒரு காலத்தில் அவள் இருந்த மனம் அது! இப்போதும் அவள் அங்கு இல்லையென்று சொல்லித் தீர்த்துவிட முடியாது. இருப்பதாகப் பகிரங்கமாகச் சொல்லிக் கொள்ளவும் முடியாது. அது ஒரு நுணுக்கமான வேதனை.

விருந்துக்கு வந்திருந்த எல்லாரிடமும் பேசி விடை பெற்றுக் கொண்டு அவன் அறைக்குத் திரும்பும் போது இரவு பத்தரை மணிக்கு மேலிருக்கும். அந்த நேரத்திலும் வேர்வை அடங்க இன்னொரு முறை குளிக்க வேண்டும் போலிருந்தது. உடம்பில் அணுவளவு வேர்வை இருந்தாலும் அவனுக்கு உறங்க வராது. தூங்குவதைக் கூடச் சுத்தமான உடம்போடு செய்து பழகியாயிற்று. இதனால் இரயிலில் போகும்போது வசதியான மெத்தை இடம் ஆகியவற்றோடு முதல் வகுப்பில் போனால் கூட அவனால் உறங்க முடியாது. சிறிது ஓசை கூட அவன் தூக்கத்தைக் கலைத்து விடும். பல்லி சுவரில் ஊர்கிற ஓசையில் அல்லது கிசுகிசுக்கிற ஓசையில் பலமுறை நடு இரவில் விழித்துக் கொண்டு எழுந்திருக்கிறான் அவன். இத்தனை நுணுக்கமான உணர்வுகள் இருப்பதால்தான் அந்தரங்கமாக உணர்ச்சி நஷ்டங்களையும் ஏமாற்றங்களையும் தாங்கிக் கொள்ள இயலாத தவிப்பை அடைகிறோமே என்று கூடத் தனக்குத் தானே சிலமுறை இதை ஒரு பலவீனமாகக் கூடப் பாவித்துக் கொண்டு சிந்தித்திருக்கிறான் சுகுணன். மேலோட்டமான உணர்வுகளே உள்ள பலருக்கு நடுவே ஆழமான உணர்வுகள் உள்ளவனாக மனத்தினால் விலகி வாழ்வதும் ஒரு பலமா அல்லது பலவீனமா என்பதைப் பல சமயங்களில் அவனால் முடிவு செய்ய இயலாமலே போயிருக்கிறது.

திருவல்லிக்கேணி பெரிய தெரு கண்ணப்பா லாட்ஜ் என்பது சென்னை நகரில் பிரம்மசாரிகளை அடைத்துப் போட்டு வாடகை வாங்குகிற (அ) தர்ம சத்திரங்களில் ஒன்று. அறைகளுக்கு எல்லாவற்றுக்குமாகக் கிழக்குக் கோடியில் நான்கு பொதுக் குளியலறைகளும் நடுக்கூடத்தில் ஒரு பொது டெலிபோனும் கூட உண்டு. எல்லா அறைக்காரர்களுக்கும் வருகிற ஃபோன் கால்களை வந்து சொல்ல ஒரு பையன் லாட்ஜில் இருக்கிறான். அறையிலிருந்த யாராவது வெளியே போன் செய்ய முடியாதபடி பெரும்பாலான நேரங்களில் டெலிபோனில் புளியங்கொட்டைப் பருமனுக்கு ஒரு சிறிய பூட்டுத் தொங்கும். லாட்ஜ் நடத்துகிறவருக்குக் 'கைலி' ஏற்றுமதி வியாபாரம். இலங்கை, மலேயாவுக்குக் கைலி, லுங்கி ஏற்றுமதி செய்வது அவர் தொழில். அறைகளில் ஒன்று திருவாளர் கண்ணப்பா அவர்களின் கைலி ஏற்றுமதி அலுவலகமாக இருந்தது.

கைலிகளுடன் சமயாசமயங்களில் கடத்தலாக வருகிற சிங்கப்பூர்க் கைக்கடிகாரங்கள், செண்ட் வகைகள், டெரிலின் ஷர்ட்டிங் துணிகள், டிரான்சிஸ்டர்கள் வியாபாரமும் இரகசியமாக உண்டு. இந்தக் கடத்தல் வேலையில் ஈடுபடும் அழுக்கடைந்த பழைய கார்கள் நாலைந்து 'லாட்ஜின்' கீழே தெருவில் ஓரமாய் வரிசையாய் நிற்கும். அத்தனை கார்களையும் காணவில்லையானால் கள்ளிக்கோட்டைக்கோ, மங்களூருக்கோ, வேதாரணியத்துக்கோ, சிதம்பரத்துக்கு அருகில் கவரப்பட்டு என்ற கடற்கரைக்கோ, சரக்குக் கடத்திவர அத்தனை 'ரதங்களும்' புறப்பட்டுப் போயிருப்பதாக அர்த்தம். இந்தக் கள்ளக்கடத்தல் ரதங்களையும் இவற்றின் இரகசியப் போக்குவரவு இயக்கங்களையும் நடத்தச் சீவாத தலைமயிருடன் புலித்தலையும், பாம்பும், தேளும், பூரானும், முதலையும், டிசைன் போட்ட கைலிகளைக் கட்டிக் கொண்டு ஐந்தாறு மர்ம மனிதர்களும் அவரிடம் உண்டு. கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் கண்ணப்பா அவர்களின் மற்றோர் உபதொழிலான 'அழகு ராணிப் பதிப்பகம்' இருந்தது. திருமூலமாமுனிவர் திருவாவடுதுறை அரசமரத்தடியில் தவமிருந்து நூறு ஆண்டுகளுக்கு ஒரு திருமந்திரம் சிரமப்பட்டு அருளியது போலல்லாமல் இலக்கிய சாதனையை இன்னும் கொஞ்சம் வேகமாக மாற்றி ஆண்டுக்கு ஒரு நூறு துப்பறியும் மர்ம நாவல்கள் வீதம் வெளியிட்டு அவற்றையும் கைலியோடு இலங்கைக்கும் மலேயாவுக்கும் ஏற்றி அனுப்புவது ராணிப் பதிப்பகத்தின் தலையாய பணிகளில் ஒன்றாக இருந்தது.

தமிழ்நாட்டு சினிமா நட்சத்திரங்களின் வருடாந்திரக் காலண்டர் ஒன்றை விதவிதமான வண்ணப்படங்களோடு வெளியிட்டு இலங்கை, மலேயா முதலிய நாடுகளில் 'மார்க்கெட்' அடிப்பதும் கண்ணப்பாவின் தொழில் இரகசியங்கள். இன்னும் 'இல்லற இன்ப விதங்கள்' - 'காதலிக்க எழுபத்திரண்டு வழிகள்' - 'இன்பம் இங்கே' என்பது போல டீக்கடையிலும் பீடிக்கடையிலும் கூட விலைப்போகும் சில மாயப் (மாயும்) பிரசுரங்கள் எல்லாம் கூட உண்டு. அரைக்கப் டீயை நாலு பேராகப் பங்குப் போட்டுக் குடித்துவிட்டு இம்மாதிரி அமர இலக்கியங்களைப் படைத்துக் கொடுத்து அன்றாடச் செலவிற்கு இரண்டு மூன்று வாங்கிக் கொண்டு கண்ணப்பாவுக்குச் சலாம் போட்டு விட்டுப் போகக்கூடிய ரெடிமேட் எழுத்தாளர்கள் நாலைந்து பேரும் அழகு ராணிப் பதிப்பகத்தில் உண்டு. இதில் சிலர் 'எழுத்து சீஸன்' டல்லாயிருக்கும் போது தேள், பூரான், பாம்புடன் கூடிய கலர் கைலியைக் கட்டிக் கொண்டு கடத்தல் கோஷ்டியிலும் கூடப் போய் ஐக்கியமாவதுண்டு.

மாடியில் 'லாட்ஜ்' அறைகள் நிறைந்த ஹாலில், திடீர் திடீரென்று நடு இரவில் பன்னிரண்டு மணிக்கும் ஒரு மணிக்கும் டெலிபோன் மணி அடிக்கும். அந்த வேளையிலும் அதை எடுப்பதற்கு கண்ணப்பாவின் ஆள் ஒருத்தன் அதனருகிலேயே பழி கிடப்பான். கள்ளக் கடத்தல் சம்பந்தமான சாதக பாதகச் செய்திகளை அறியக் கண்ணப்பாவுக்கு அந்த டெலிபோன் தான் ஒரு கேந்திரமான செய்திக் கருவி. போர் முகாம்களில் வயர்லெஸ் ரேடியோவுக்குள்ள அத்தியாவசியம் இங்கே இந்த டெலிபோனுக்கு உண்டு. ஏதோ ஒரு நாள் இரவு ஒன்றரை மணிக்கு டெலிபோன் மணி விடாமல் அடித்தது. அதற்குக் காவலாகப் பழிகிடக்க வேண்டிய கண்ணப்பாவின் ஆள் அன்று இரவில் இரண்டாவது ஆட்டம் படம் பார்க்கப் போய்விட்டதால், உறக்கம் தடைப்பட்ட சுகுணன் அறையிலிருந்து கூடத்துக்கு வந்து மணி அடிப்பதையாவது நிறுத்தலாம் என்கிற எண்ணத்தில் டெலிபோனை எடுத்தான். எதிர்ப்புறம் 'கிருஷ்ணகிரியிலிருந்து டிரங்கால்' என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து ஒரு முரட்டுக் குரல் கரகரப்பான தொனியில் 'நம்பர் 8866 கிருஷ்ணகிரிக்கும் சேலத்துக்கும் நடுவே பஞ்சராயி நின்னு போச்சு' என்று ஒரே வாக்கியத்தை இரண்டு மூன்று முறை சொல்லி விட்டு டெலிபோனை வைத்துவிட்டது. மறுநாள் காலையில் கண்ணப்பாவின் ஆட்களும் அறையும் பரபரப்பாயிருந்த அலங்கோலத்தில் தான் 8866 எண்ணுள்ள கார் கடத்தல் பண்டங்களுடன் வரும்போது பிடிபட்ட செய்தியே அப்படிப் பூடகமாகக் கூறப்பட்டதாக உணர்ந்தான் சுகுணன். அப்படிப் பல இரகசிய வாக்கியங்கள் கள்ளக் கடத்தல் உலகில் உண்டாம்.

அன்று துளசியின் திருமண விருந்திலிருந்து திரும்பி வந்து நீராடி முடித்த பின்பும் உறக்கம் வராமல் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தான் சுகுணன். அப்போது மணி பதினொன்றரை ஆகியிருந்தது. வெளியே வழக்கம் போல டெலிபோன் மணி கிணுகிணுத்தது. 'சரிதான் கண்ணப்பாவின் கடத்தல் ரதங்களில் ஏதோ ஒன்று ஏதோ ஒரு வழியில் சிக்கிவிட்ட செய்தி வருகிறது' என்று எண்ணியபடி சுகுணன் ஒரு கணம் தனக்குத்தானே சிரித்துக் கொண்டு புத்தகத்தை மேலே படிக்கத் தொடங்கினான்.

ஆனால் என்ன ஆச்சரியம்? ஃபோனடியில் வழக்கமாகப் பழிகிடக்கும் கண்ணப்பாவின் ஆள் ஓடிவந்து, "சார் உங்களுக்குப் ஃபோன் வந்திருக்குது" என்றான்.

அச்சகத்தில் பத்திரிகைக்காக இரவு மெஷினில் ஓடும் ஃபாரத்தில் ஏதாவது அச்சுப்பிழை அல்லது சந்தேகம், அல்லது கரெக்ஷனில் ஓவர் எடுக்க முடியாமற் போகிற செய்தியைத் தெரிவிக்கச் சில சமயம் டீயூடியில் உள்ள ஃபோர்மென் அவனை ஃபோனில் கூப்பிடுவது வழக்கம். இன்றும் அப்படி ஏதாவது சந்தேகம் வந்திருக்கும் போலும் என்றெண்ணியபடி அன்று மெஷினில் ஓடுகிற ஃபாரத்தின் விஷயங்களை நினைவுக்குத் தந்துகொண்டே எழுந்து வந்து டெலிபோனை எடுத்தான் சுகுணன்.

"துளசி பேசுகிறேன். முதலில் இந்த அர்த்த ராத்திரி வேளையில் தொந்தரவு கொடுப்பதற்காக மன்னிக்கணும்."

"சரி..."

"உங்களை ஒன்று கேட்கணும். எவ்வளவோ அடக்கியும் எம் மனசு பொறுக்காமல் ஃபோனில் கூப்பிட்டேன்..."

"அதற்கென்ன கேளேன்?"

"விருந்துக் கூட்டத்தில் என் கையில் மாலையைக் கொடுத்துவிட்டு 'ஆபட்ஸ்பரிக்கே வந்து உன் கல்யாணத்தில் கலந்து கொள்ளவில்லை என்கிற குறை இனி உனக்கு இருக்காது துளசி' என்று சிரித்துக் கொண்டே கூறினீர்களே, அதற்கு என்ன அர்த்தம்?"

"என்ன அர்த்தம் என்று கூறுவதை விட, என்ன அர்த்தம் இல்லை என்று கூறிவிடுவது இப்போது எனக்குச் சுலபமாயிருக்கும் துளசி?"

"என்ன!"

"விசேஷமாக எந்த அர்த்தமும் இல்லை என்பது தான் அது."

"இல்லை? நிச்சயமாக நீங்கள் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். நீங்கள் சாதாரணமான அர்த்தத்தில் அந்த வார்த்தைகளை அங்கே சொல்லவில்லை; உங்களுடைய வார்த்தைகளும் அர்த்தங்களும் எனக்கு நன்றாகத் தெரியும்..."

"அப்படியானால் என்னிடம் கேட்க வேண்டிய அவசியமே இல்லையே! அதுதான் உனக்கே தெரிகிறதே..."

எதிர்ப்புறம் குரல் தேய்ந்து விசும்பல் ஒலி எழுந்தது. அழுவதைப் போன்றதோர் சோக இனிமை ஃபோனில் பெருகி இழைந்தது.

"அசட்டுப் பெண்ணே! வீணாக மனத்தை அலட்டிக் கொள்ளாதே" என்று கூறிவிட்டு, அவளுடைய பதிலுக்குக் காத்திராமல் டெலிபோனை வைத்துவிட்டான் சுகுணன். வீணை வாய் படைத்து அழுவதைப் போன்ற அந்த இனிய குரலை இன்னும் கொஞ்சம் கேட்கவேண்டுமென்று ஆசையாயிருந்தும் ஒரு பிடிவாதத்தைக் காப்பாற்ற முயலும் ஆண்மையின் கட்டுப்பாட்டோடு மனமின்றிதான் போனை வைத்திருந்தான் அவன். அதற்குப் பிறகு நாலைந்து நாள் துளசியை அவன் பார்க்கவில்லை. சுகுணனுக்கு எழுத ஓய்வும் அவசியமும் இருந்தது. நிறைய எழுதினான்.

அன்று வியாழக்கிழமை மாலை ராயவரத்தில் முன்பே ஒப்புக் கொண்டிருந்த அந்த வாசகசாலைக் கூட்டத்திற்குப் போனான் சுகுணன். அன்று காரியாலயத்தில் நிறைய வேலை இருந்ததனால் ஐந்தே முக்கால் மணிக்குமேல்தான் அங்கிருந்து அறைக்குத் திரும்ப முடிந்தது. காரியாலயத்திலிருந்து அறைக்கு வந்த டாக்சியையே 'வெயிட்டிங்'கில் நிறுத்தி வைத்துவிட்டு, அவசர அவசரமாகக் குளித்து உடை மாற்றிக் கொண்டு அங்கிருந்து அதே டாக்சியில் ராயவரத்துக்கு விரைந்தான் அவன். ஏதோ ஒரு குறுகலான சந்தில் நுழைந்து புகுந்து ஒதுக்குப்புறமாக இருந்த அந்த வாசகசாலையைத் தேடிப் போக வேண்டியிருந்தது. வழக்கம்போல யாரோ ஒரு மந்திரி அந்த விழாவுக்கு வருவதால் தெருவில் பத்தடிக்கு ஒரு போலீஸ்காரர் வீதம் நின்றிருந்தார்கள். அதனால் விழா நடக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பது சுலபமாயிருந்தது.

மந்திரி வாசகசாலையில் கட்டப்பட்டிருந்த 'புதுபிளாக்' கட்டிடமொன்றைத் திறந்து வைத்துவிட்டுப் பத்து நிமிடம் பேசிய பின் தமக்கு வேறு எங்கோ மற்றொரு கூட்டமிருப்பதாகக் கூறி விட்டுப் போய்விட்டார். சுகுணன் விழாவை மேலே நடத்த வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொண்டு மேடை மேல் அமர்ந்து கீழே வரிசையாக மடக்கு நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர்களை ஒரு நோட்டம் விட்ட போது துளசியும் அவள் கணவனும் முன்பக்க வரிசையொன்றில் நடுவாக வந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டு வியந்தான்.

'புதுமணத் தம்பதிகள் கடற்கரைக்கும், சினிமாவுக்கும், உல்லாசப் பயணத்திற்கும் போவதைக் காண்பதுண்டு. இவள் என்னடா என்றால் எனது பேச்சைக் கேட்க வேண்டுமென்பதற்காகக் கணவனையும் வற்புறுத்தி இங்கே அழைத்து வந்திருக்கிறாளே' என்று எண்ணினான் சுகுணன். அவள் செய்திருப்பது பெரிய அநியாயமாகத் தோன்றியது அவனுக்கு. ராயவரத்தில் எங்கோ குறுகலான சந்தில் ஒதுக்குப்புறமான மூலையில் தெருவை வளைத்து முடிந்த மட்டும் பந்தல் போட்டுச் சேறும் சகதியுமான அந்தத் தெருவிலேயே மடக்கு நாற்காலைகளை வரிசையாகப் போட்டு நடத்துகிற அந்த வாசகசாலை ஆண்டு விழாவில் தான் பேசப் போவதை இவள் கேட்டு என்ன ஆகப் போகிறது? அப்பாவிப் பெண்! இப்படித் தொடர்ந்து பல அசட்டுக் காரியங்களைச் செய்து கணவனிடம் கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ளப் போகிறாளே என்று அவளுக்காகவும் மனம் இரங்கியது.

கூட்ட நிகழ்ச்சி தொடங்கியது. அவன் அவர்கள் வந்திருப்பதை மறந்து காரியங்களைக் கவனிக்க வேண்டியதாயிற்று. அவனே தலைமையுரை பேச எழுந்து 'சகோதரர்களே! சகோதரிகளே!...' என்று பேசத் தொடங்கியபோது மட்டும் 'இன்று கூட்டத்தில் நான் கணவருடன் வந்திருப்பதைப் பார்த்துத் தெரிந்து கொண்டும், வேண்டுமென்றே என்னைக் குத்திக்காட்டுவதற்காகத் தானே 'சகோதர சகோதரிகளே' என்று பேசத் தொடங்கினீர்கள்?' என்பதாகத் துளசி ஃபோன் செய்து அன்றிரவே அரற்றத் தொடங்கி விடுவாளோ? என்று விநோதமாக ஒரு சந்தேகமும் எழுந்தது அவனுக்குள்.

மனத்தில் பயமும் குற்ற உணர்வும், தாழ்வு நினைவும் வந்து சுமந்துவிட்டாலே பின்பு எல்லாம் விகல்பமாகத்தான் தோன்றும். ஆனால் இந்தத் தயக்கம் ஒரு கணம் தான். அப்புறம் ஆற்றொழுக்குப் போல் ஒரே நிலையாக அவன் பேச்சு மேலே வளர்ந்தது. கூட்டம் தெருவிலிருந்தாலும் அமைதியாக எல்லாரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாசகசாலைக்கு அடிக்கடி நன்கொடை தருகிறவரோ என்னமோ ஒரு பிரபல நடிகர் நடுக்கூட்டத்தில் வந்து முன் பக்கமாக அமர்ந்து பேச்சின் கவனத்திலிருந்து நீங்கி எல்லோரும் சில நிமிடங்கள் தன்புறம் திரும்பச் செய்தார்.

சுகுணனுக்கு இந்த நடிகர் மேல் ஆத்திரம் மூண்டது.

'மந்திரிகள் கூட்டத்தில் பாதியிலேயே போய் விடுவார்கள். நடிகர்கள் பாதிக்கு மேல் தான் வருவார்கள். அப்படிப்பட்ட விநோதமான விச்த்திரமான நாட்டில் நாம் வாழ்கிறோமென்பது உங்களுக்கு ஒவ்வொரு கணமும் நினவிருக்க வேண்டும்' என்று பேச்சினிடையே குத்தலாக இரண்டு வாக்கியங்களைத் தொடுத்து விட்டான் அவன். அவ்வளவுதான். உடனே கூட்டத்தில் சில பகுதிகளில் மெல்ல ஒரு சலசலப்புக் கிளம்பியது.
---------------

அத்தியாயம் - 5

ஒருவர்க்கு மற்றொருவர் அர்ப்பணமாகி விடுகிற நிச்சயமான காதல் என்பது முனிவர்களின் தவச்சாலைகளில் பக்தி சிரத்தையோடு அணையாமல் காக்கப்படும் வேள்வித் தீயைப் போல் என்றும் அவியாமல் உள்ளேயே கனிகிறது.

"இந்த நூற்றாண்டின் இந்தத் தலைமுறையில் காரண காரியங்களைச் சிந்திக்காமலே விருப்பு வெறுப்புக்களில் அழுந்தி நிற்கிற கெட்ட வழக்கம் தமிழ் மக்களை எப்படியோ எப்போதோ நோய் போலப் பற்றிக் கொண்டுவிட்டது. அவசரமாக வெறி கொண்டது போல் மேல் விழுந்து வலிய விரும்புகிறார்கள். அதே அவசரத்தோடு வெறிகொண்டது போல் மேல் விழுந்து வலிய வெறுக்கிறார்கள். விருப்பு வெறுப்புக்களுக்கு அடிப்படை நியாயம் ஒன்றும் கிடையாது. வெள்ளப் பெருக்கில் தத்தளிப்பவர்கள் கைக்குக் கிடைப்பதை அவசரமாகப் பற்றிக் கொள்வது போல் நிர்ப்பந்தம் காரணமாக ஏதேனும் ஒன்றைக் கொள்கையாகப் பற்றிக் கொள்கிறார்களே தவிர நியாயமாகச் சிந்தித்துச் செயல் படுகிற கொள்கை நிதானத்தைக் காணோம்" - என்று மனக் கொதிப்புத் தணியாமல் மேலும் ஆவேசமாக வளர்ந்தது அவன் பேச்சு.

அவனுடைய பேச்சிலிருந்து அழுத்தமும் ஆவேசமும் துணிவின் உறுதி தொனிக்கும் குரலும் கூட்டத்தின் சலசலப்பை அடங்கச் செய்தன. யாரோ ஒருவர் நடுவில் துண்டுச் சீட்டில் கேள்வி எழுதிக் கொடுத்தனுப்பினார். கேள்வி அந்தச் சந்தர்ப்பத்திற்கோ - அப்போது அவன் பேசிக் கொண்டிருந்த பேச்சிற்கோ பொருத்தமில்லாமலிருந்ததுடன் தனிப்பட்ட முறையில் அவனை வம்புக்கு இழுப்பதாகவும் அமைந்திருந்தது. நடிகரையும், அரசியல்வாதியையும் பற்றிச் சொற்பொழிவின் தொடக்கத்தில் அவன் குறிப்பிட்ட உண்மைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர் அந்தக் கேள்வியைக் கேட்டிருப்பதாகத் தோன்றியது. அவர் அந்தக் குறிப்பிட்ட நடிகருக்காகவே உயிர் வாழும் விசிறி போலிருக்கிறது.

'பத்திரிகை முதலாளியின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்றபடி மனிதர்களைப் புகழவும், வெறுக்கவும் பழகிக் கொண்டுவிட்ட ஒரு நிறுவனத்தில் வயிற்றுப் பிழைப்பை நடத்தும் நீங்கள் இலட்சியம் பேசுவது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா?' - என்ற கேள்விக்குக் கீழே 'கூட்டத்தில் ஒருவன்' - என்று எழுதிவிட்டு அந்தக் கேள்வியைக் கேட்டவர் தன்னைத் தப்பித்துக் கொள்ளவோ, மறைத்துக் கொள்ளவோ முயன்றிருந்தார்.

"இந்தக் கேள்வியைக் கேட்கும் தைரியசாலி நான் தான் என்று தன் பெயரைக் கூடத் தெரிவித்து விட விரும்பாது ஒரு கேள்வியைக் கேட்டிருப்பதால் இதற்குப் பதில் சொல்லிவிட வேண்டியது அவசியம் என்று எண்ணுகிறேன்" - என இப்படித் தொடங்கி அவன் மறுமொழி கூறிய போது கூட்டத்தில் உற்சாகமான கைத்தட்டல் ஒலி எழுந்தது. உள்ளூறச் சுகுணன் சில சமயங்களில் இந்த விதமான பொதுக் கூட்டங்களையும், சொற்பொழிவுகளையும், தவிர்க்க விரும்பினான். பசியையும், சபலங்களையும் போல் மனிதன் நிரந்தரமாக விட முடியாத பலவீனங்களில் ஒன்றான புகழ் தான் இப்போது இந்தப் பொது மேடைகளில் எல்லாம் மலிவாகச் செலவழிக்கப்படுகிறது. தலைவர் பேச்சாளரைப் புகழ்வதும், பேச்சாளர் தலைவரைப் புகழ்வதுமாகப் பெரும்பாலான மேடைகள் ஒரு சம்பிரதாயச் சடங்காக அமைவதைக் கண்டு பலமுறை தனக்குள் மனம் வெதும்பியிருக்கிறான் சுகுணன்.

'பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்' - என்ற பழமொழியை இனிமேல் மாற்றிக் கொள்ள வேண்டியதுதான். பத்தோடு பதினொன்றாக அந்தப் பசியையும் பறந்து போகச் செய்துவிடுகிற புதுப் பசி ஒன்று இருக்கிறதே? புகழ்ப்பசி! வயிறு பசித்தவர்கள் பணப்பசி பிடித்து அலைகிறார்கள். பணப் பசி தீர்ந்தவர்கள் புகழ்ப்பசி பிடித்து அலைகிறார்கள். வயிற்றுப் பசி தீர்ந்து கையில் வசதிப்பசி பிடித்ததும் புகழ்ப்பசி கோரமாக வாயைத் திறக்கிறது. இந்தியாவின் நகரங்களில் சௌகரியமுள்ள மனிதர்களுக்கு இப்போது புகழ்ப்பசிதான் பிடித்து ஆட்டுகிறதென்று தோன்றியது. சிலரைப் புகழ்வதற்காகவே பல கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. சுதந்திரப் போராட்ட காலத்தில் கூட்டம் கூடிச் செயலாற்ற வேண்டிய அவசியம் இருந்தது. அந்தச் சுதந்திர இலட்சியம் கைகூடிய பிறகோ, மனிதர்கள் தனித்தனியாகவும் அந்தரங்க சுத்தியோடும் இன்று நாட்டுக்குக் கடமையாற்ற வேண்டியிருக்கிறது. கூட்டங்கள் அந்தத் தனித் தனிக் கடமையுணர்ச்சியை மறக்கச் செய்து விடுவதாகத் தோன்றியது சுகுணனுக்கு. அன்று அந்தக் கூட்டம் முடிந்ததும் சுகுணனின் மனத்தில் இத்தகைய உணர்வுகளே மேலோங்கியிருந்தன. யாரோ ஒரு நடிகரிடம் நிறைய நன்கொடை வாங்கிக் கொண்டு அவரைப் புகழ வேண்டிய கட்டாயத்துக்காகவே அவர்கள் அந்த வாசக சாலை ஆண்டு விழாவை நடத்தியிருப்பதாக இப்போது உணர்ந்தான் அவன்.

கூட்டம் முடிந்ததும் துளசியும் அவள் கணவனும் மேடையருகே வந்தார்கள். மேடையருகில் ஆண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததனால் துளசி சிறிது தொலைவில் ஒதுங்கியே நின்று கொள்ள வேண்டியதாயிற்று. அவள் தன் கணவனிடம் ஏதோ சொல்லி மேடைக்கு அனுப்பினாள். துளசியின் கணவன் மேடையேறி வந்து புன்முறுவலோடு தன்னைத்தானே மீண்டும் அறிமுகம் செய்து கொண்டு சுகுணனைச் சந்தித்தான். சுகுணனும் அந்த இளம் நண்பரைப் புன்முறுவலோடு வரவேற்றான். "உங்களைத் திருவல்லிக்கேணியில் 'டிராப்' செய்துவிட்டுப் போகிறோம். இன்று உங்கள் பேச்சு மிக நன்றாயிருந்தது. இதை எப்படியும் தவறவிடாமல் கேட்டுவிட வேண்டுமென்று என் மனைவி ஆசைப்பட்டாள். அவள் ஆசை நிறைவேறியதுடன் இனிமேல் உங்கள் சொற்பொழிவுகளை ஒன்றுவிடாமல் கேட்க வேண்டுமென்று எனக்கும் இன்று ஒரு புதிய ஆசை உண்டாகியிருக்கிறது" - என்ற பொருளில் ஆங்கிலத்தில் கூறினான் துளசியின் கணவன்.

'மனிதனின் மனத்தை அவனறியாமலே திறப்பதற்குப் பிறர் பயன்படுத்துகிற சுலபமான கள்ளச் சாவி இந்த விதமான முகமன் வார்த்தைகள் தான்' - என்றெண்ணியவனாகத் தனக்குத்தானே சிரித்துக் கொண்டான் சுகுணன். முகத்தில் கலக்கமோ, துயரமோ தெரியாமல் பிளாஸ்டிக்கில் வார்த்தெடுத்தது போல் நகரங்களின் கல்லூரி முகப்புக்களிலும், தியேட்டர் வாயிலிலும் திரியும் செல்வக் குடும்பத்து இளைஞர்கள் பலரிடமிருக்கும் நாகரிகப் பேச்சும் சிரிப்பும் துளசியின் கணவனிடமும் இருந்தன. ஆணின் மனமில்லாததோடு பெண்ணின் முகமுள்ள பல இளைஞர்கள் அங்கங்கே நகரங்களில் கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தென்படுவார்களே - அவர்களில் ஒருவனைப் போலத்தான் எதிரே நின்ற துளசியின் கணவனும் அப்போது தோன்றினான்.

தேசக் கவலையோ, வீட்டுக் கவலையோ இல்லாமல் உயர் தர உத்தியோகங்களையும், சொகுசான காதல் வாழ்வையும் கனவு காணக்கூடிய இந்த விதமான இளைஞர்கள் - அதாவது, செலூலாய்ட் பொம்மைகளைப் போல் சாதாரணமான காரணங்களுக்காகவே உடைந்துவிடக் கூடிய ஆண்மையற்ற இளைஞர்கள் பலர் இந்த நூற்றாண்டில் எங்கும் அதிகரித்திருப்பதைச் சுகுணன் பலமுறை பல இடங்களில் கண்டு மனம் நொந்திருக்கிறான்.

இன்றைய இந்தியாவின் வறுமைகளைப் பற்றியோ, நாளைய இந்தியா எதிர்கொள்ள வேண்டிய துயரங்களைப் பற்றியோ, நினைப்போ, கவனமோ, கவலையோ இல்லாமல் - தன்னையே மையமாக வைத்துத் திரைப்படக் கதையைப் போல் ஒரு சொப்பன வாழ்க்கையைக் கனவு காணும் இம்மாதிரி இளைஞர்கள் பெருகப் பெருக இந்தியா ஆண்மையில் வறுமையடைகிறது என்று தோன்றியது. இத்தகைய இளைஞர்களைப் பற்றி 'மீசை முளைத்த பெண் பிள்ளைகள்' - என்று சுகுணன் முன்பு துளசியிடமே சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் கேலி செய்திருக்கிறான். 'புலி நகம் பதித்த தங்கச் சங்கிலி அணிந்து கொள்ளுதல்', 'சுருள் சுருளாக முடி வளர்த்தல்', இவை தவிரப் பெரிய தேசிய இலட்சியங்கள் எதுவும் பதியாத விடலை மனத்தோடு கல்லூரிப் படிகளிலிருந்து கீழிறங்கும் இது போன்ற இளைஞர்களிலிருந்து மனவலிமை மிக்கவர்களான இராமகிருஷ்ணரோ, காந்தியோ, மனவலிமையோடு உடல் வலிமையும் மிக்கவர்களான சிவாஜியோ, நேதாஜியோ, மறுபடி இந்தியாவில் தோன்றி வர முடியுமா? - என்று விநோதமாகத் தனக்குத்தானே அடிக்கடி ஒரு கேள்வி கேட்டுப் பார்த்துக் கொள்வது அவன் வழக்கம்.

'இப்படி ஓர் அப்பாவி இளைஞன் தனக்குக் கணவனாக வரவேண்டுமென்று துளசி கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். என் எழுத்துக்களோடும் என்னோடும் எத்தனை அந்தரங்கமாகப் பழக முடியுமோ அத்தனை அந்தரங்கமாகப் பழகி இலக்கிய ருசிகளை உணர்ந்த மனப்பாங்குடனே வாழ்க்கையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் துளசி. பெண்ணே ஓர் அழகு. அவளிடம் ஞானமோ, கல்வியோ, சங்கீதமோ, நடனமோ, சேர்ந்திருந்தால் அது அவளுக்கு மற்றோர் அழகாகி விடுகிறது. அழகின் பல்வேறு ருசிகளையும் ருசிகளின் பல்வேறு அழகுகளையும் பழகிக் கொண்டு விட்ட துளசியைப் போன்ற இளம் பெண் ஒருத்தி - 'சொகுசாக வாழ்வது' - என்பதைத் தவிர வேறு ருசிகள் எதையும் எதிர்பாராத ஒருவனோடு வாழ்வில் எவ்வளவு தூரம் கை கோத்துக் கொண்டு நடந்து போக முடியும்?

துளசியின் நிலை சிந்திப்பதற்கே வேதனை தருவதாக இருந்தது. இப்படி வாழ்வில் எதிர்பார்த்ததை அடையாமல் ஏமாறிய ஓர் அழகிய பேதைப் பெண்ணைக் கதாபாத்திரமாகக் கொண்டு எழுத நேர்ந்தால் அந்தக் கதாபாத்திரத்தினிடம் சுகுணனுக்கு எத்தனை பரிவு பெருகுமோ அத்தனை பரிவு இப்போது இப்படிச் சிந்திக்கும் வேளையில் மட்டும் துளசியினிடமும் ஏற்பட்டது.

துளசியின் அந்தக் கதையில் பாதிக்கப்பட்ட மற்றொரு கதாபாத்திரம் தானே என்பதை மறந்துவிட்டு நினைத்தாலோ மனம் கருணை மயமாக மாறியது. தான் நிற்கும் எல்லையைத் தனியே தவிர்த்துக் கொண்டு மற்றவற்றை எல்லாம் விலகியிருந்து பார்த்தால் கற்பனையாளனின் மனம் தான் எவ்வளவு பெருந்தன்மையுடைய தாயிருக்கிறது? இந்த எல்லையில் நின்று பார்க்கிற போது மட்டும் அவனுக்குத் துளசியின் மேல் கோபமே வரவில்லை. காவியங்களின் மிக உயர்ந்த குணமான கருணை அவன் உள்ளத்தே பெருகி நிறைந்தது. அன்று அந்தக் கூட்ட முடிவில் அநாவசியமாகத் துளசியின் மனத்தைப் புண்படுத்த விரும்பவில்லை அவன். மறுக்காமல் அவர்கள் இருவருடனுமே காரில் போய்த் திருவல்லிக்கேணியில் இறங்கிக் கொண்டான்.

காரில் போகும் போது சுகுணன் அதிகம் பேசவில்லை. துளசி ஆர்வமடங்காமல் கேட்ட இரண்டொரு கேள்விக்கு மட்டும் சுருக்கமாகப் பதில் சொன்னான். துளசியின் கணவன் காரை ஓட்டிக் கொண்டு வந்ததனால் பின்புறக் கதவுகள் திறக்க முடியாத ஒரு பக்கக் கதவுள்ள அந்த 'ஓக்ஸ்வாகன்' காரில் சுகுணன் முன்புறம் ஏறிக் கொண்டான். துளசி பின்புறம் தனியே சிறை வைக்கப்பட்டது போல் ஏறிக் கொண்டிருந்ததனால் அவள் முகத்தைக் கூடச் சுகுணனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. திருவல்லிக்கேணி பெரிய தெருவில் - அறைக்கு நாலு விட்டு முன்பாகவே இருந்த மெஸ் வாசலிலேயே அவன் இறங்கிக் கொண்ட போது துளசி காரிலிருந்து கீழே இறங்கி அவனுக்கு விடை கொடுக்க வேண்டுமென்று ஒரு வேளை எண்ணியிருக்கலாம். ஆனால் ஒற்றைக் கதவுப் பிரச்னையால் அதுவும் முடியாமல் போயிற்று.

மெஸ்ஸில் சாப்பாடு முடிகிற நேரம். அதற்கு முன்னறிவிப்பு சாம்பார் ரசம் போலவும் (தண்ணீர் பெருகி), ரசம் சாம்பார் போலவும் (அடிவண்டல் வரை வற்றி) ஆவது தான். ஏறக்குறைய அப்படி ஆகிற நேரம் வந்திருந்தது. காய்கறிகள் நிறையக் கடுகு மயமாகவும், பருப்பு மயமாகவும் வெளிவந்தன.

தன்னை நினைத்துத் தவித்துக் கொண்டு போகும் ஒருத்தியின் ஞாபகம் உள்ளே சுடும் வேதனையில் உணவைச் சுவையில்லாமல் உண்டு முடித்து விட்டு அறைக்குப் போய்ச் சேர்ந்தான் சுகுணன்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவர்க்கு மற்றொருவர் அர்ப்பணமாகி விடுகிற நிச்சயமான காதல் என்பது முனிவர்களின் தவச்சாலைகளில் பக்தி சிரத்தையோடு அணையாமல் காக்கப்படும் வேள்வித் தீயைப் போல் உள்ளேயே கனிகிறது. வாழ்வின் சோர்வுகளில் அது அணைவதில்லை. நீறு மட்டுமே பூக்கிறது.

மனத்தை ஒரு முகப்படுத்துவதற்காக ஏதேனும் நல்ல புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம் என்று புத்தக அலமாரியருகே போனவன் நீண்ட நாட்களாக அங்கேயே கவனிக்கப்படாமல் கிடந்த ஒரு புகைப்பட ஆல்பத்தினால் கவனம் கவரப்பட்டு அதை முதலில் எடுத்தான். ஒரு காலத்தில் அவன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் படங்களை எல்லாம் துளசி அதில் பத்திரமாக ஒட்டி அலங்கரித்து அழகுபடுத்திக் கொண்டு வந்தாள். அவன் வெளிநாடு சென்று வந்த காலத்தில் எடுத்த புகைப்படங்களும் அதில் இருந்தன. ஒருமுறை விமான நிலையத்தில் கல்கத்தாவிலிருந்து பத்திரிகையாளர் பெடரேஷன் காரியமாக வந்திருந்த நண்பர் கோஷைத் திரும்ப வழியனுப்ப அவன் போயிருந்த போது துளசியும் கூட வந்திருந்தாள். அப்போது தற்செயலாக வேறுகாரியமாக அங்கு வந்திருந்த சுகுணனுக்கு மிகவும் வேண்டிய புகைப்படக்காரர் ஒருவர் அவனையும், துளசியையும் இருவரும் அருகருகே நெருங்கி நின்ற நேரத்தில் அவர்களே அறியாதபடி ஒரு படம் பிடித்துவிட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்தப் புகைப்படக்காரரான நிருபர் மிக நன்றாக வந்திருந்த அந்தப் படத்தைக் கொண்டு வந்து காண்பித்த போது தான் சுகுணனுக்கே அது தெரியும். படத்துக்காக நிற்கிறோம் என்ற எச்சரிக்கையும் ஏற்பாடும் இல்லாமல் இருவருமே தற்செயலாக இயல்பாய்ச் சிரித்துப் பேசிக் கொண்டு நிற்கும் போது எடுக்கப்பட்ட படமாகையினால் அது மிகமிக அழகாயிருந்தது.

படத்தில் துளசி கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கும் பூஞ்செடியைப் போல் பொலிவுறச் சிரித்துக் கொண்டிருந்தாள். எப்போதுமே இனிமையாயிருக்கிற இராகங்களில் எப்போதாவது சில சமயங்களில் புதிய கற்பனைகளும், சங்கதிகளும் பிடிபடுகிறாற் போல் அந்தப் படத்தில் அவள் இயல்புக்கும் அதிகமாகவே அழகாயிருப்பதாகச் சுகுணன் அவளிடம் அன்று கூறிய போது அவள் அதை மறுத்தாள்.

"என்னை விட நீங்கள் தான் அதிக அழகாயிருக்கிறீர்கள் இந்தப் படத்தில்" - என்று அவள் அப்போது அவனை மட்டுமே வியந்திருந்தாள்.

"ஒருவர் மேல் இன்னொருவர் சத்தியமான பிரியம் வைத்துவிட்டால் சொந்த ஆழகு சம்பந்தமான தற்பெருமை கூடப் போய் விடுகிறது பார்த்தாயா துளசி? இந்தப் படத்தில் நீதான் அழகாயிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நான் தான் அழகாயிருப்பதாக நீ சொல்கிறாய். எவ்வளவு சுலபமாக, எவ்வளவு புனிதமாக, எவ்வளவு நம்பிக்கையாக, எவ்வளவு சத்தியமாக ஒருவர் மற்றொருவருக்காக விட்டுக் கொடுக்கிறோம் பாரேன்" என்று தான் அன்றைக்கு மனம் நெகிழ்ந்து அவளிடம் சொல்லியது கூட இப்போது சுகுணனுக்கு நினைவு வந்தது.

ஞாபகங்களையும், அவற்றைப் பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் மறுபடி காண விரும்புகிற நைப்பாசையையும் தவிர்க்க முடியாமல் அந்த ஆல்பத்தை எடுத்துப் பிரித்து விமான நிலையத்தில் எடுக்கப் பெற்ற பழைய படம் இருந்த பக்கத்தை விரித்தான் சுகுணன். மேஜை விளக்கின் ஒளியில் அந்தப் படம் பளீரென்று பிரகாசமாகத் தெரிந்தது. முன்பு அந்தப் படத்தை ஆல்பத்தில் வைக்கும் போது கூட, 'அதை ஆல்பத்தில் வைக்கலாமா கூடாதா' என்பது பற்றி துளசிக்கும் அவனுக்கும் இடையே ஒரு சிறிய விவாதம் நடந்திருக்கிறது. அதை ஆல்பத்தில் வைக்கக் கூடாதென்று அவன் வாதாடினான். 'அப்படித்தான் வைப்பேன்' என்று அவள் பிடிவாதம் பிடித்து அதை வைத்திருந்தாள். அந்தப் படத்தின் பின்புறம் அப்போது அவள் ஏதோ எழுதியதாகக் கூட அவனுக்கு நினைவிருந்தது. நான்கு ஓரமும் படம் சொருகப் படுவதற்காக அமைந்திருந்த மடிப்புகளிலிருந்து பூக்கொய்வது போல் படத்தை மெல்ல விடுவித்துப் பின்புறம் பார்த்தான் அவன்.

"உவமையும் பொருளும் போல் ஒருமனம் இருவடிவம்" - என்று எழுதியிருந்தது. முத்து முத்தாகத் துளசியின் கையெழுத்து தான் அது. திடீரென்று ஒரு விநாடி உள்ளே எழுந்த சினத்தீயின் அனலில் - அந்தப் படத்தை அப்படியே கிழித்தெறிந்து விட வேண்டும் போல் கை துடிதுடித்தது. ஆனால் அடுத்த விநாடி அப்படிச் செய்யவும் மனம் வரவில்லை.

ஒரு காலத்தின் ஞாபகத்தை இன்னொரு காலத்தில் கிழிப்பதால் தான் என்ன பயன்? படங்களைப் பத்திரப் படுத்துவதோ, சேர்த்து வைப்பதோ அவனுக்கு வழக்கமில்லை. துளசிதான் பூம்பொழில் ஃபோர்மெனிடம் சொல்லி அழகிய ஆல்பமொன்று பைண்டு செய்து வாங்கி எல்லாப் படங்களையும் சேகரித்து இப்படி ஒட்டி அவன் அறையில் கொண்டு வந்து வைத்திருந்தாள். ஒரு காலத்தில் இரண்டு பேரும் ஒரே ஞாபகமாயிருந்தார்கள். இப்போது தனித்தனி ஞாபகங்களாகி விட்டாலும் பழைய ஒருமையை மறக்கவும் முடியவில்லை; தவிர்க்கவும் முடியவில்லை.

எவ்வளவு வேகமாக அந்த ஞாபகங்களை வரவழைத்துக் கொள்ள முயன்றானோ அவ்வளவு வேகமாக உடனே அவற்றை மறந்து வேறெதையாவது நினைக்க வேண்டும் போல ஆற்றாமையும் வந்தது. ஆல்பத்தைத் தூக்கி வைத்துவிட்டு ஏதோ புத்தகத்துடன் மறுபடி நாற்காலியில் வந்தமர்ந்தான். புத்தகத்தில் மனம் செல்லவில்லை. எத்தனையோ பல நாட்களில் எத்தனையோ பல சமயங்களில் எழுதுவதற்காக அவன் விரும்பிய தனிமை இன்று இந்த விநாடியில் வேதனை தருவதாயிருந்தது. சொந்த நினைவுகளோடு தனியே இருக்கும் அந்த நிலையே விரோதியோடு தனியே விடப்பட்டது போன்ற உணர்வைக் கொடுத்தது அவனுக்கு. எங்காவது வெளியே ஓடிப்போய் 'இது பெரிய உலகம் - இங்கு பயமில்லை' - என்பது போல் மனிதர்களோடு ஒட்டிக் கொள்ள வேண்டும் போலத் தாபமாயிருந்தது. அறைக்கதவைப் பூட்டிக் கொண்டு ஏதோ நினைத்துக் கொண்டவனாகக் கடற்கரைக்குப் புறப்பட்டான் சுகுணன்.

மாநிலக் கல்லூரியருகே பைகிராப்ட்ஸ் ரோடும் கடற்கரைச் சாலையும் கலக்குமிடத்தில் தமிழ்த் தாத்தாவின் சிலை கடலை நோக்கியபடி இருட்டில் எதையோ மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. மங்கிய நீல வண்ணத்தில் மேகம் நனைவது போல் இதமான ஒளியுடன் கடற்கரை விளக்குகள் தென்பட்டன. மணலில் இறங்கி உட்புறமாகத் தெற்கு நோக்கிச் செல்லும் சாலையில் காற்றாட நடக்கலானான் சுகுணன். கடற்காற்று உடலில்பட்டுத் தடவியதும் ஏதோ ஒரு புத்துணர்ச்சி பிறந்தது. வியாபாரமெல்லாம் முடிந்து இரவில் குடும்ப சகிதம் காரில் வந்து காற்று வாங்கும் சௌகார்பேட்டை தங்கசாலைத் தெரு சேட்கள், சௌகர்கள், கடற்கரையில் காருடனும், கைகளில் பாடும் டிரான்சிஸ்டர் ரேடியோக்களுடனும் தென்பட்டனர். ஒரு மூலையில் ஓர் ஆங்கிலோ இந்தியப் பெண்ணைத் தழுவினாற் போல பாண்ட் ஸ்லாக் அணிந்த இளைஞர் ஒருவர் நடனமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அவன் போய்க் கொண்டிருந்த சாலையில் அவனுக்கு நேரெதிர் திசையில் அவனைக் கடந்து விரைந்த பெரிய கார் ஒன்றிலிருந்து ஒரு கணம் காற்றோடு வந்து பாய்ந்த உயர்தர செண்ட் வாசனை, மல்லிகைப்பூ மணம், கடற்கரை மேகக் குவியலில் அடங்கித் தெரியும் சிறிய நிலவு, தொலைவில் டிரான்சிஸ்டரிலிருந்து கேட்கும் லதா மங்கேஷ்கரின் நளினமான குரல் எல்லாமாகச் சேர்ந்து ஏதோ பெரிதாகக் கற்பனை செய்ய வேண்டும் போல அவன் மனத்தைக் கிளரச் செய்தன. புகுவதற்கு உடல் கிடைக்காத ஆவியைப் போல் அந்தக் கற்பனை பேயாய் அலைந்ததே ஒழிய இன்னதென்று ஒரு வடிவில் வந்து உருவாகவில்லை.

நடந்து கொண்டேயிருந்தவன் - தற்செயலாக எதிரே வந்த மற்றொரு காரின் மேல் பார்வை சென்றதுமே திடுமெனத் தலைகுனிந்து விலகினான். துளசியும், அவள் கணவனும் அதில் வந்து கொண்டிருந்தார்கள். துளசி காரை டிரைவ் செய்து கொண்டிருந்தாள். அவள் கணவன் அருகே அமர்ந்திருந்தான். அவள் கூந்தலில் ஒரு கூடை பூச்சரிந்து கொண்டிருந்தது. விளக்கு வெளிச்சத்தில் எதிரே நடுச்சாலையில் தனியே நடந்துவரும் அவனை அவள் பார்த்து விட்டிருக்க வேண்டும். கார் அவனருகே வந்து நின்றுவிடும்போல் அத்தனை மெதுவாக வேகம் குறைந்தது. சட்டென்று சாலையிலிருந்து விலகி மணலில் இறங்கி விரைவாக இருளில் நடப்பதன் மூலம் அதைத் தவிர்த்தான் சுகுணன். அந்த நிலையில் அவன் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. கால்கள் மணலில் சோர்ந்தன. எனினும் அவசரமாக விரைந்து அப்போது அவளையோ அவள் கணவனையோ சந்தித்து விடாமல் தப்பிக்க வேண்டுமென்ற ஆவலும் பரபரப்புமே கால்களை உந்தின. அவன் செய்தது போலவே அவர்களும் வீட்டிற்குப் போய் உணவை முடித்துக் கொண்டு வேறு பொழுது போகாமல் கடற்கரைக்குப் புறப்பட்டிருக்க வேண்டும். நல்ல வேளையாக வேகம் குறைந்து மெதுவான கார் ஒரு விநாடி அங்கு நின்றபின் மறுபடி வடக்கு நோக்கி விரைந்து விட்டது.

அந்த இரவில் அந்த நிலையில் துளசியையும், அவள் கணவனையும் சந்தித்து அவர்கள் தனிமையைப் பாழடிக்கவோ, தன் மனத்தை வேதனைப் படுத்திக் கொள்ளவோ அவனுக்கு விருப்பமில்லை. மாலையில் ராயபுரம் வாசகசாலைக் கூட்டத்திற்கு அவள் தன் கணவனோடு வந்து உட்கார்ந்திருந்ததே அவனுக்குச் சரியாகப் படவில்லை. துளசியின் பேதமை அவனுக்குப் பிடித்ததென்றாலும் இனியும் அவள் பேதையாக இருப்பதனால் அவளை மணந்து கொண்ட அந்த இன்னொருவர் பாதிக்கப்படலாம் என்னும் உணர்வே அவனை இப்படி எண்ண வைத்தது. இரவு ஒன்பது மணிக்கு மேல் துளசி சும்மா இருந்தாலும் அவள் அம்மாவோ, அப்பாவோ கூட, "ஏனம்மா துளசீ! மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு கடற்கரைப் பக்கமோ ஏதாவது சினிமாவுக்கோ போய்விட்டு வாயேன்! எதுக்கு இப்படி இந்த நாற்காலியே சதமென்று புத்தகத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறாய்?" - என்று தலையில் பூ வைத்து அலங்கரித்துவிட்டுத் தூண்டியிருக்கலாம். வாழ்க்கை அப்படித் தூண்டப்படுவதுதான். புதிதாக மணமானவர்கள் மேல் எல்லோரும் காண்பிக்கிற பொதுக்கருணை அல்லது பெருந்தன்மை இதுதான் என்பதை அவனால் உணர முடிந்தது.

காரை ஓட்டிக் கொண்டு வந்த துளசி தன்னைப் பார்த்து விட்டாளென்றுதான் அவனுக்குத் தோன்றியது. அப்போது அங்கே தன்னைப் பார்த்ததே அவளைக் கலங்கி நிலைகுலையச் செய்திருக்குமென்று எண்ணினான் அவன். கணவன் ஒன்று கேட்க அவள் ஒன்று பதில் சொல்ல நினைவு ஒருபுறம் உடல் ஒருபுறமாக அடுத்த சில மணி நேரங்கள் அவள் தத்தளிப்பதாக அவனால் கற்பனை செய்யவும் முடிந்தது. அவளுக்கு அந்த நிலைமையை உண்டாக்கியதற்காகத் தன்னைத் தானே கடிந்து கொண்டான் அவன்.

'எவ்வளவு சுலபமாக எவ்வளவு புனிதமாக எவ்வளவு நம்பிக்கையாக எவ்வளவு சத்தியமாக ஒருவர் மற்றொருவருக்கு விட்டுக் கொடுக்கிறோம்; பாரேன்?' - என்ற தன் வாக்கியத்தை நினைவு கூர்ந்தான் அவன். இன்னும் அதிக பட்சமாக இன்னும் பெருந்தன்மையாக இந்த வேதனையை மறந்து அமைதியடைகிற அளவு விட்டுக் கொடுக்கும் பக்குவம் தனக்கு வரவேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. 'மோகத்தைக் கொன்றுவிடு; அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு' - என்று பாரதி பாடியிருப்பது எத்தனை பொருத்தமாயிருக்கிறதென்று இந்த விநாடியில் வியந்தான் அவன். மோகத்தை பொறுத்த வரையில் அது ஒரு சுகமான நம்பிக்கை. அந்த நம்பிக்கை மனிதனிடமிருந்து அழியவும் நேரலாம். ஆனால் அதுவே மனிதனை அழிக்க விட்டு விடக் கூடாதுதான். எலியட்ஸ் ரோடு காந்தி சிலைப்பகுதி கடறகரை வரை நடந்து வந்தாகி விட்டது. மறுபடி வந்த வழியே திரும்பினால் துளசியைச் சந்திக்க நேருமோ என்ற பயத்தில் காந்தி சிலையருகே மேலே ஏறிக் கடற்கரைச் சாலையில் திரும்பி நடந்தான் சுகுணன். கடற்கரையை விட்டு நீங்கி விரைவில் அறைக்குத் திரும்பினால் போதும் போல் மனத்தில் விரைவு மூண்டிருந்தது. 'யாரைத் தவிர்க்க விரும்புகிறோமோ, அவர்களையே மறுபடி மறுபடி சந்திக்க நேர்கிற அளவுக்கு இந்த உலகம் எத்தனை சிறியதாயிருக்கிறது' - என்று உலகை எண்ணி வியந்தபடி அவன் அறைக்குப் போய்ச் சேர்ந்தான். சுகுணனுக்குத் தன் மனத்தின் வேதனையை எதிலாவது கொட்ட வேண்டும் போலிருந்தது. எதை எழுதினாலும் அதில் மனவேதனைதான் சுருதி சேரும் போல் ஒரு தவிப்பு உந்தியது. அமைதியான இரவில் 'கடற்கரைத் தாழம்பூ' - என்ற பெயரில் ஒரு கவிதை எழுதினான் அவன்.

பூத்துப் பொலிந்திருந்தாய் - நறும்பூவே
      பொன்னின் மெருகேறிப்
      பொலி மின்னின் ஒளியேறிக்
கீற்று வெடித்திருந்தாய் - மணமென்னும்
      காற்றுத் தேரேறிக்
      கன்னிமை கனிந்திருந்தாய்
நேற்று மலர்ந்தது நீயறிவாய் - உப்பு
      நெடுங்கடல் தானறியும்
      உவர்க்கரை மணலறியும்
வேற்று மனிதர்கள் யாரறிவார் - ஒரு
      வேதனை பேசிடும்
      உள்ளம் மணமானால்
சாற்றப் பிறரில்லை - போய்ச்
      சாரக் கரமில்லை
      சரியத் தோளில்லை
ஏற்றுச் சூடக் குழலில்லை - சொல்
      எடுத்து மொழியக் கவியில்லை
      இணைத்து மொழியப் பதமில்லை
போற்ற முடியாக் காதல்போல் - உயிர்
      போம்வரை வேம் நெஞ்சம்
      வேம்வரை போம் நினைவு
நாற்றில் மடியும் பயிர்போல - வெறும்
      நாற்றக் கடலுள் சிறுமடலாய்
      நானும் நீயும் உதிர்ந்திடுவோம்!

நினைப்பின் தற்செயலான வார்ப்பில் கவிதை எப்படி வந்ததோ அப்படியே அதை எழுதிவிட்டு அவன் உறங்கச் சென்ற போது மணி பதினொன்றரைக்கு மேல் ஆகியிருந்தது. சில இடங்களில் பதங்களை மாற்றிச் சொல் மெருகும் பொருள் மெருகும் கொடுத்து ஓசை நயத்தைச் செப்பனிட வேண்டும்போல் தோன்றினாலும் அப்போது அதைச் செய்ய இயலாமல் சோர்வு வந்து தடுத்தது. காலையில் அதைச் செய்து கொள்ளலாம் என்று எண்ணிச் சுகுணன் கவிதையை அப்படியே விட்டிருந்தான். தூங்கத் தொடங்கியபோது மணி என்ன இருக்கும் என்று நினைவிராத ஏதோ ஒரு நூலிழை விநாடியில் தூக்கம் அவனைப் பற்றி ஆண்டிருந்தது. ஆனால் ஒரு விநாடிதான் தூங்கி முடிந்தது போலிருந்தது. அதற்குள் வேகமாகப் பொழுது விடிந்துவிட்டது. அந்தக் கண நேரத்தைப் போன்ற ஆழ்ந்த தூக்கத்திலும் அவன் ஒரு கனவு கண்டிருந்தான். 'கடற்கரைத் தாழம்பூ' என்ற கவிதை பூம்பொழிலில் வெளிவந்து அதைத் துளசியும் படித்துவிட்டு அவனிடம் வந்து கோபத்தோடு ஏதோ ஒரு கேள்வி கேட்பது போன்ற சொப்பனம் அது.

'சாற்றப் பிறரில்லை - போய்ச்
சாரக் கரமில்லை
சரியத் தோளில்லை'

என்ற வரிகளை என்ன அர்த்தத்தில் அவன் எழுதியிருக்க முடியும்? என்று அவனிடமிருந்தே அறிந்து கொள்ள முயலுகிறாள் துளசி. அவன் அதற்குப் பதில் சொல்வதற்குள் உறக்கம் கலைந்து விழித்து விடுகிறது. அன்று காலையில் எழுந்திருந்த போதே அவனுக்கு மிகவும் தளர்ச்சியாக இருந்தது. அவன் நீராடித் தலை துவட்டிக் கொண்டு திரும்பிய சமயத்தில் எதிர்பாராமல் பத்திரிகை அதிபர் நாகசாமியிடமிருந்து அவனுக்கு ஃபோன் வந்தது. அவனுடைய அறை எண்ணுக்கு அவர் ஃபோன் செய்வது எப்போதாவது அபூர்வமாக இருக்கும். அவசர ஆத்திரத்திற்குக் கூப்பிடுவதற்காக அவன் தன் லாட்ஜ் டெலிபோன் எண்ணையும் அறை எண்ணையும் அலுவலகத்தில் கொடுத்திருந்தான். நாகசாமியும் அதை அலுவலகத்திலிருந்து தான் விசாரித்துத் தெரிந்து கொண்டிருக்க முடியும். யாரோ ஒரு முக்கியமான உத்தியோகப் பிரமுகர் டில்லியிலிருந்து தன் வீட்டிற்கு வந்திருப்பதாகவும், அவரை அவனும் சந்தித்து அறிமுகம் செய்து கொள்வது நல்லதென்றும் கூறினார் அவர். சரியாகக் காலை பத்துமணிக்குச் சாந்தோமிலிருக்கும் தமது பங்களாவுக்கு அவனை வந்துவிடச் சொல்லி உத்தரவு போட்டார் அவர். அங்கே போனால் அவரைச் சந்தித்துவிட்டு அப்புறம் அப்படியே காரியாலத்துக்குப் போகத்தான் நேரம் சரியாயிருக்கும். காலைச் சிற்றுண்டி காபியை முடித்துக் கொண்டு ஒன்பதரை மணிக்கு ஒரு டாக்ஸி பிடித்து அவன் புறப்பட்டான். டாக்ஸி நாகசாமியின் பங்களா காம்பவுண்டுக்குள் நுழைந்த போது முன்புறம் மரத்தடிப் புல் வெளியில் துளசியும், அவள் கணவனும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. திருமண விருந்தின்போது அச்சக ஊழியர்கள் அவளுக்கு அன்பளிப்பாக வழங்கிய சுகுணனின் நாவல்கள் சில அவளருகே கிடந்தன. அவள் அந்தப் புத்தகங்களைக் காண்பித்துத் தன் கணவனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். இதற்குள் டாக்ஸி அவர்கள் அமர்ந்திருந்த இடத்தைக் கடந்து பங்களாவின் போர்டிகோவுக்குள் போய் நின்றுவிட்டது. அந்த இடத்தில் மறுபடி காரியாலயம் திரும்புவதற்குச் சுலபமாக வாடகை வாகனங்கள் எவையும் அருகில் கிடைக்க வழியில்லை என்பதால் வந்த டாக்ஸியையே சொல்லி நிறுத்தி வைத்துவிட்டு உள்ளே போனான் சுகுணன். நாகசாமியும், அவருடைய நண்பரும் முன் ஹாலிலே அமர்ந்திருந்தனர். நாகசாமி சுகுணனை உற்சாகமாக வரவேற்று அந்த நண்பருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

"இவர்தான் மிஸ்டர் சந்திரசூடன், ஐ.சி.எஸ். டெல்லியிலே டெபுடி செக்ரெட்டரியாக இருக்கிறார். எனக்கு மிகவும் வேண்டியவர். சமீபத்தில் அரசாங்கக் காரியமாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்துவிட்டு வந்திருக்கிறார். 'லிட்டரேசரிலே' கூட ரொம்ப ஈடுபாடு உண்டு" என்று நாகசாமி சொல்லிக் கொண்டே வந்தபோது பைப்பில் புகைத்துக் கொண்டிருந்த அந்த ஐ.சி.எஸ். அதிகாரி பைப்பை வாயிலிருந்து எடுத்து விட்டு, "தமிழில் நான் அதிகம் படிச்சதில்லை. மன்னிக்கணும். 'லிட்டரேசர்னு' நாகசாமி சொன்னதை இங்கிலீஷ் என்று மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் நீங்கள்" - என்று குறுக்கிட்டார்.

"அப்படியா! மிக்க மகிழ்ச்சி" என்று ஒப்புக்குப் பதில் சொல்லி வைத்தான் சுகுணன். அவனுக்காக நாகசாமி வரவழைத்த காபியைக் குடித்துவிட்டு அவன் தலைநிமிர்ந்ததும் ஐ.சி.எஸ். அதிகாரி அவனிடம் ஒரு கேள்வி கேட்டார்.

"தமிழில் ஸ்டாண்டர்டா இதுவரை ஒண்ணுமே வரலே போலிருக்கே? நீங்க என்ன நினைக்கிறீங்க... மிஸ்டர் சுகுணன்...?"

சுகுணனுக்கு கடுமையான கோபம் வந்தது. ஆனால் அதை அடக்கிக் கொண்டு, "ஸ்டாண்டர்டுன்னா நீங்க எதை அளவுகோலாக வைத்துச் சொல்கிறீர்கள்? அல்லது அநுமானிக்கிறீர்கள்?" என்று கேட்டான்.

"இல்லை! எனக்குத் தெரிந்த மட்டில்தான் சொல்கிறேன்."

"உங்களுக்குத்தான் தமிழில் அதிகம் பரிச்சயம் இல்லையென்று நீங்களே முதலில் சொல்லிவிட்டீர்களே?" என்று அந்தக் கேள்வியின் கடுமை எதிராளிக்குத் தெரிந்து விடாதபடி சிரித்துக் கொண்டே அவரைக் கேட்டான் சுகுணன். அந்த விவாதத்தைத் தவிர்க்க விரும்பிய நாகசாமி நடுவில் குறுக்கிட்டு, "அதிருக்கட்டும்! இப்போது நம் சந்திரசூடன் ஒரு காரியம் செய்திருக்கிறார். அவர் சுற்றிப் பார்த்த நாடுகளைப் பற்றி ஆங்கிலத்தில் மிக அற்புதமாக ஒரு பிரயாணக் கட்டுரைத் தொடர் எழுதியிருக்கிறார். அதை நாம் ஏதாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எனக்கு ஆசை" என்றார் நாகசாமி. இதைச் சொல்லிய அளவில் சந்திரசூடன் ஐ.சி.எஸ். முகம் மலர்ந்தார். சுகுணன் பரிதாபமாக நாகசாமி மேலும் என்ன சொல்லப் போகிறாரோ என்பதற்காக அவர் முகத்தைப் பார்த்தான்.

"ரியலி... இட் இஸ் வொண்டர்புல்... மிஸ்டர் சுகுணன்" என்று அந்தப் பிரயாணக் கட்டுரைத் தொடரைப் பற்றி மீண்டும் குறிப்பிட்டார் நாகசாமி. சுகுணன் ஒன்றும் பதில் சொல்லத் தோன்றாமல் இருந்தான். தமிழ்நாட்டில் மொழியுணர்வும், தரமான இலக்கிய உணர்வும் பெருகாததற்குச் சமூகத்தில் அதிக வசதியுள்ள சென்ற தலைமுறை உயர் வர்க்கத்தாரும், மிகக் குறைந்த வசதியுள்ள அடிமட்டத்தாருமே காரணமாயிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. உயர் வர்க்கத்தார் தமிழை இலட்சியம் செய்வதில்லை. அடி மட்டத்தாருக்கு வயிற்றைக் கழுவுவதைத் தவிர வேறெதையும் இலட்சியம் செய்ய நேரமில்லை. ஏதோ சில நடுத்தர வர்க்கத்தார் தான் மொழியுணர்வையும் தங்களுடைய பல சிரமங்களிடையே கட்டிக் காக்க வேண்டியிருக்கிறது. 'சந்திரசூடன் ஐ.சி.எஸ். தாய்மொழிப் பற்றில்லாமல் ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்துத் தமிழில் அதையே தன் பெயரில் வரச் செய்ய முடிகிறது. மொழியையும் இலக்கியத்தையும் பற்றிக் கவலையே இல்லாமல் நாகசாமி பல பத்திரிகைகளை நடத்த முடிகிறது. அடித்துத் தள்ளுகிற பத்திரிகைக் காகிதங்களை விற்க எங்கெங்கோ ஏஜண்டுகள் இருப்பது போல் புத்தியின் ஏஜண்டுகளாக இவர்களிடம் என்னைப் போல் சிலர் ஆசிரியர் குழுவில் சிக்கிக் கொள்கிறோம். அவ்வளவுதான்!' - என்று வேதனையோடு சிந்தித்தான் சுகுணன். துளசியையும், ஃபோர்மென் நாயுடுவையும் போல் புதிய தலைமுறையின் வளர்ச்சியைப் புரிந்து கொண்டு சிலர் இரண்டு வர்க்கத்திலிருந்துமே இந்தப் பக்கம் கவரப்படலாம். ஆனால் பலர் இன்னும் கவரப்படவில்லை என்பது மனத்தை வருத்தத்தான் செய்தது. சொந்த தேசத்தின் இலக்கியப் பாரம்பரியம், சொந்த மொழியின் அழகுகள், சொந்த நாட்டின் பெருமிதங்கள், இவற்றை எல்லாம் அலட்சியப்படுத்துகிறவர்களைச் சந்திக்க நேரும் போது அவன் மனம் இன்று போல் இப்படித்தான் பலமுறை குமுறிக் குமுறி அடங்கியிருக்கிறது.

இப்போது நாகசாமி எதற்குக் கூப்பிட்டனுப்பியிருக்கிறார் என்பது குறிப்பாக அவனுக்குப் புரிந்து விட்டது. சந்திரசூடனும் அவருடைய ஐ.சி.எஸ். பட்டமும் சேர்ந்து படைத்த ஆங்கிலப் பிரயாணக் கட்டுரைத் தொடரைத் தான் கொண்டு போய்த் தமிழாக்கி அழகுபடுத்தி அவர் பெயரில் பூம்பொழிலில் வரச் செய்ய வேண்டும் போலிருக்கிறது. இந்த நூற்றாண்டில் இந்த இடம் மாறிய ஆசைகள் மனிதர்களுக்கு மிகமிகச் சாதாரணமாக வருகின்றன. 'டாக்டருக்குச் சினிமாவில் நடிக்க ஆசை. நடிகருக்கு அரசியல் தலைவராக நைப்பாசை. ஓட்டல்காரருக்குச் சங்கீதம் பாட விருப்பம்' என்று கையிலிருக்கிற கடமையையும் சரியாகச் செய்யாமல், ஆசைப்படுகிற காரியத்துக்கும் போதிய தகுதியில்லாமல் பலர் வாழ்க்கையைக் குழப்பிக் கொள்வதை அவன் கூர்ந்து கவனித்திருக்கிறான். சந்திரசூடனுக்காக அநுதாபப்பட்டுக் கொண்டே நாகசாமி எடுத்துக் கொடுத்த அந்த டைப் செய்த ஆங்கிலக் கத்தையை வாங்கிக் கொண்டான் அவன். மற்றொரு பெரிய அட்டைப் பெட்டியில் ஒரு வண்டி வெளிநாட்டுப் புகைப் படங்களையும் அள்ளிப் போட்டு எடுத்துக் கொடுத்திருந்தார் சந்திரசூடன்.

"ஒரு பத்து வாரம் வருமில்லையா?" என்றார் நாகசாமி.

"வரலாம். பார்க்கிறேன் சார்..."

"எப்படியும் பார்த்துப் போட்டுடணும்... நல்லாத் தானிருக்கும்..." என்று மறுபடியும் அழுத்தினார் நாகசாமி.

"ஐ திங்..." என்று சந்திரசூடன் வேறு சுகுணனிடம் ஏதோ பேசத் தொடங்கினார்.

"ஐ வில் கோ த்ரூ தி ஸ்கிரிப்ட், இன்பார்ம் யூ சார்..." என்று அவன் அவர் பேச்சைக் கத்தரித்த விதம் அவருக்கே சங்கடத்தை உண்டு பண்ணினாலும் அவனை நோக்கி வாடிய முகத்தோடு புன்முறுவல் பூக்க முயன்றார் சந்திரசூடன். சுகுணன் அப்படிப் பேச்சை வெட்டியது நாகசாமிக்குக் கூடப் பிடிக்கவில்லை. அவர் முகமும் சற்றே வாடியது. இதற்குள் துளசியும் அவள் கணவனும் கூடத் தோட்டத்திலிருந்து உள்ளே வந்து விட்டார்கள். அவள் கையிலிருந்த சுகுணனின் நாவல் புத்தகங்களைத் தற்செயலாகக் கவனித்த சந்திரசூடன் ஐ.சி.எஸ். அவற்றை அவளிடமிருந்து கேட்டு வாங்கி அலட்சியமாகப் பக்கங்களைப் புரட்டினார்.

"இந்த இரண்டையும் பதினேழாவது முறையாக இப்ப படிக்கிறேன் மாமா..." என்று துளசி அந்த ஐ.சி.எஸ்.காரரிடம் ஆர்வமடங்காமல் சொல்லியபோது,

"சச் எ... கிரெஸி ரைட்டிங்..." என்று ஏதோ சில ஆங்கில வார்த்தைகளை மென்று முழுங்கினார் அவர். சுகுணன் அங்கு வந்திருப்பதைத் தான் அறிந்த இந்தக் கணமே மறுபடி தான் அந்த வரவைக் கொண்டாட விரும்பியவளைப் போல, "சாப்பிட ஏதாவது கொண்டு வருகிறேனே? ஜூஸ், காபி, டீ, ஏதாவது...?" என்று அவனருகே வந்து முகம் மலர்ந்தாள் துளசி.

"ஆயிற்று..." என்று சுருக்கமாகவும் அடக்கமாகவும் பதில் வந்தது சுகுணனிடமிருந்து. அவன் விடை பெற்றுக் கொண்ட போது துளசி மட்டும் வாயில்வரை வந்து வழியனுப்பினாள். டாக்ஸி நகருவதற்கு முன் ஒரு விநாடி கார் கதவருகே நெருங்கிய துளசி, "இப்படி அகாலத்தில் எதற்காக கடற்கரை மணலில் கால் வலிக்கச் சுற்றுகிறீர்கள்? தூக்கம் கெட்டால் உடம்பு என்னத்திற்காகும்?" - என்று மெல்லிய குரலில் விசாரித்த போது, "நான் எங்கே கடற்கரைக்கு வந்தேன்? நேற்று அறையை விட்டு நான் எங்குமே போகவில்லையே?" என்று திட்டமிட்டுப் பொய் சொன்னான் அவன். துளசியின் முகம் பின்னால் மறைந்தது. டாக்ஸி விரைந்து விட்டது. க்டற்கரையில் முதல் நாளிரவு தான் பார்த்தது அவன் தானா இல்லையா என்று தெரிந்து கொள்ளத் துளசி இந்தக் கேள்வியை மிகவும் சாதுரியமாகக் கேட்டிருந்தாள். அவள் அதைத் தெரிந்து கொண்டால் வீணாக மனத்தை அலட்டிக் கொள்வாளே என்பதற்காக அவன் பொய் தான் சொன்னான். 'நாம் பார்த்தது சுகுணனில்லை - பாவம்! வேறு யாரோ போலிருக்கிறது' - என்று நினைத்தாவது அவள் நிம்மதி பெறட்டுமே என எண்ணியே அவன் அதை மறைத்தான். 'தான் கணவனோடு காரில் உல்லாசமாகக் கடற்காற்று வாங்க வந்ததாக' - அவன் எண்ணி மறுகுவானோ என நடுங்கும் அவள் உள்ளத்துக்கு அந்த நடுக்கத்தையே மேலும் வளர்க்கும் பதிலைத் தான் தெரிவிக்கலாகாது என்ற காதல் பெருந்தன்மையை அந்தக் கணத்தில் சுகுணன் காப்பாற்றினான். காதல் என்பது பின்வேறு எங்கு தான் இருக்கிறது? 'அவன் அகாலத்தில் கடற்கரை மணலில் அநாதை போல் கால்தேயச் சுற்றித் திரிகிறானே?' என அவள் இன்னும் உருகுகிறாள். 'அது அவளுக்குத் தெரியாமலிருந்தால் அவள் மனம் புண்படாதே' என்று அவன் அவளுக்கு இரங்கிப் பொய் சொல்லுகிறான். அசல் காதலில் தான் எப்படி எப்படித் தியாகம் செய்கிறார்கள் மனிதர்கள்? எவ்வளவு சத்தியமாக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கிறார்கள்? தன்னுடைய நம்பிக்கைகளை ஒருவனிடம் பூரணமாக ஒப்படைத்து விட்ட ஒருத்தியின் உடம்பை அப்புறம் வேறு யார் மணந்து கொண்டால் தான் என்ன? உண்மையில் அந்த நம்பிக்கைகளை ஆள்கிறவன் அல்லவா அவள் மனத்தை ஆள்கிறான்? உடம்பு மிக மிகச் சிறிய உண்மையாகி விடுகிற அளவு காதலில் மனம் தொடர்பான இரகசியத் தியாகங்கள், ஆதரவு அபிமான அந்தரங்கங்கள் மலைமலையாக எவ்வளவோ இருக்கின்றனவே! காரியாலயத்திற்குப் போகிற வழியெல்லாம் டாக்ஸியில் இந்த நளின நினைவுகளே அவன் மனத்தில் ஓடின. துளசியின் மென்மை அவனை உள்ளூர அவளுக்காக இரங்கச் செய்தது. பேதைகளை மன்னிக்கத் தயாராயிருப்பவன் தான் ஆண் மக்களிலேயே தீரனாக இருக்க முடியுமென்று இப்போது அவன் நம்பினான். துளசியைக் கடந்த சில நாட்களில் சில சொற்களில் சில வாக்கியங்களில் சில சந்தர்ப்பங்களில் தான் புண்படுத்தினாற் போல் நடந்து கொண்டதற்காகக் கூட அவன் மனம் இப்போது தனக்கு உள்ளேயே வருந்தி அழுதது. நரம்புகளில் முறுக்குத் தளர்ந்ததும் வாத்தியங்களின் இசையில் இனிமை குறைவது போல் உடம்பைக் கட்டியாளும் காதலில் நாதக் கட்டு குலைந்து அபசுவரம் விழுகிற நேரமும் வரலாம். மனத்தைக் கட்டியாளும் காதல் என்றும் சுருதி பேதமில்லாதது என்பதற்கு உவமையே தேட வேண்டியதில்லை என அவன் எண்ணினான்.

அவன் காரியாலயத்திற்குள் நுழைந்ததும் நுழையாததுமாக சர்மா அவனுடைய அறைக்குத் தேடி வந்திருந்தார்.

"சுகுணன்! உங்ககிட்ட நாகசாமி சந்திரசூடன் ஐ.சி.எஸ்.ஸோட 'டிராவல் எஸ்ஸேஸ்' ஏதோ கொடுத்திருக்காராமே!"

"ஆமாம்! அதற்கென்ன வந்தது இப்போது?"

"ஒண்ணும் வரலே! இப்பத்தான் அந்த விவரத்தை எனக்கும் ஃபோன் பண்ணிச் சொன்னார்..."

"என்ன செய்யச் சொன்னார் உங்களை?"

சர்மா இதற்குச் சரியாகப் பதில் சொல்லாமல் மழுப்பினார். நாகசாமியிடம் ஒரு கெட்ட குணம். ஒரே காரியத்தை ஒரே சமயத்தில் பத்துப் பேரிடம் சொல்லி வைப்பார். அதனால் பத்துப் பேருக்கும் அந்தக் காரியத்தின் மேல் சிரத்தை வராது. அவரைப் போல் மனிதர்கள் மேல் அவநம்பிக்கைப்படும் பிறவி உலகில் வேறொன்று இருக்கவே முடியாது. தன்னைக் கூப்பிட்டு அதைக் கொடுத்துவிட்டு அதற்கு மேலும் அவநம்பிக்கையோடு நாகசாமி அதே விஷயத்தைச் சர்மாவுக்கும் ஃபோன் செய்திருப்பதை அவன் விரும்பவில்லை. சர்மாவோ மேலும் மேலும் அவனை துளைத்தார்.

"கட்டுரை எப்படி இருக்கு? ஏதாவது தேறுமா?"

"பக்கத்து சண்முகபவனில் சரியாக எழுதப் படிக்கத் தெரியாத டேபிள் கிளீனர் பையன்கள் சில சமயம் நீரும் நானும் காபி குடிக்கிற போது பத்திரிகையில் போடச் சொல்லித் தமிழில் கவிதை எழுதிக் கொடுப்பார்கள் இல்லையா? அப்படித்தான் இருக்கும் இந்த ஐ.சி.எஸ். காரரின் எழுத்தும்" - என்று சர்மாவுக்குச் சுடச்சுடப் பதில் கொடுத்ததோடு, அந்தக் கத்தையை அவரிடமே தூக்கிக் கொடுத்து விட்டான் சுகுணன். சர்மா கொண்டாட்டத்தோடு அதை வாங்கிக் கொண்டு போனார். இந்த விதமான பெரிய மனிதர்களைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்காகச் சர்மா எதையும் செய்வார். அவருடைய என்சைக்ளோபீடியாவில் ஜெர்னலிசம் (பத்திரிகைத் தொழில்) என்பதற்கே பெரிய மனிதர்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளும் ஒரு கருவி என்பதாகத்தான் அர்த்தம். எனவே அதைத் தமிழ்ப் படுத்தும் பொறுப்பை அவரிடமே விட்டு விட்டான் சுகுணன். கொஞ்ச நேரத்தில் ஃபோர்மென் நாயுடு வந்தார். தனது 'கடற்கரைத் தாழம்பூ' கவிதையைச் செப்பனிட்டு அவரிடம் அச்சுக்குக் கொடுத்தான் அவன். நாயுடு நகர்ந்ததும் டெலிபோன் மணி அடித்தது. நூறு துப்பறியும் நாவல்களுக்கு மேல் எழுதிய 'தலை சீவி' என்னும் புனைப்பெயருக்குரிய எழுத்தாளரின் குரல் டெலிபோனில் சுகுணனிடம் இரைந்தது.

"என்ன சார் இது! அநியாயமா இருக்குது. நம்ப நாவல் 'ஏரிக்கரைப் படுகொலை'யை ரிவ்யூவுக்கு அனுப்பினா அதுக்கு நீங்க இப்படித்தான் மட்டமா மதிப்புரை எழுதறதா?"

"எப்படி எழுதியிருக்கிறது? எங்கே படியுங்களேன்; கேட்கலாம்..." வேண்டுமென்றே அவர் வாயாலேயே அதை ஒருமுறை படிக்கச் செய்ய வேண்டுமென்று குறும்புத் தனமாகச் சுகுணன் விரும்பினான். அவர் அதைப் ஃபோனில் படித்தார்.

"மன்னிக்கவும்! இந்நாவலை ஏற்கனவே ஆங்கிலத்தில் ஆர்தர் கானன்டாயில் என்பார் எழுதியிருக்கிறார். ஆர்தர் கானன்டாயில் எப்போது தமிழ்நாட்டில் திரு அவதாரம் செய்து 'தலைசீவி' என்று புனைப்பெயரும் சூடிக் கொண்டார் என்பது நமது காரியாலயத்தாருக்கு இன்னும் விளங்கவில்லை..."

"இப்பிடியா எழுதுவாங்க...?"

"வேறு எப்படி எழுத வேண்டும் சொல்லுங்களேன்?"

-எதிர்ப்புறம் கோபத்தோடு டெலிபோனை வைத்து விட்டார் தலைசீவி. சுகுணனும் சிரித்துக் கொண்டே டெலிபோனை வைத்துவிட்டுக் காரியாலயத்திற்கு வந்திருந்த தபால்களைக் கவனிக்கத் தொடங்கினான். கதவு திறக்கப்பெற்று எதிரே நிழல் தட்டியது. அவன் தலை நிமிர்வதற்குள் அந்த மென்மையான குரல் அவன் செவிகளில் ஒலித்தது.

"மன்னிக்கவும்; உள்ளே வரலாமா?" - என்று கேட்டபடி கைகளில் புத்தக அடுக்குடன் தயங்கி நின்றாள் ஒரு பெண். பார்த்தால் ஏதோ கல்லூரியில் படிக்கிற பெண் மாதிரித் தோன்றினாள் அவள்.

"வாருங்கள்! உங்களுக்கு என்ன வேண்டும்?"

"நான் நேற்றுதான் உங்களுடைய 'பாலைவனத்துப் பூக்கள்' என்ற நாவலைப் படித்து முடித்தேன். உடனே உங்களைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. வந்தேன்."

"உட்காருங்கள்..."

- அவள் உட்கார்ந்தாள். அவளது குரலில் மலையாள மழலை தொனித்தது.

"உங்களுக்கு ஊர்?"

"பாலக்காடு! இங்கே ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறேன். உங்கள் நாவல் நேற்றிரவு முழுவதும் என்னை அழ வைத்து விட்டது. அதைப் படித்த பிறகு என் மனத்தில் புண்ணாக உறைந்து போயிருக்கும் சில நிகழ்ச்சிகளை உங்களிடம் சொல்லி ஆறுதல் பெறலாமென்று தோன்றியது..."

"இன்றைக்கு நீங்கள் கல்லூரிக்குப் போகவில்லையா?"

"காலையில் லீவு சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். மத்தியானம் போகவேண்டும்..." - அவள் குரலில் ஏதோ ஒருவிதமான சோகம் இடறுவதைச் சுகுணனால் உணர முடிந்தது. அவள் முகத்தை கூர்ந்து நோக்கினான் அவன்.
--------------

அத்தியாயம் - 6

"நெஞ்சுக் குழியிலிருந்து தண்ணீர்த் தாகம் எடுப்பது போல், மனித ஆன்மாவுக்குள் ஒரு தாகம் உண்டு. அது தான் சத்தியதாகம்-"

கதையில் துன்பப்படுகிறவர்களைப் படைத்துப் படைத்து அனுபவம் அடைந்தவனால் கூட அசல் வாழ்க்கையில் துன்பப் படுகிறவர்களை நேரே கண்டுவிட்டால் ஓரிரு கணங்கள் திகைத்துப் போவதைத் தவிர, வேறொன்றும் செய்ய முடிவதில்லை. அப்படி ஒரு திகைப்புடன் தான் அந்தப் பெண்ணை எதிர் கொண்டான் சுகுணன். காரியாலயத்து அறையில் முன்பின் அறிமுகமில்லாத ஒரு பெண் தன்னுடைய நாவல்களைப் படித்து அவற்றில் ஈடுபட்ட ஈடுபாட்டையே அறிமுகமாகக் கருதித் தேடி வந்து கண் கலங்க அமர்ந்திருப்பதை அவன் உணர்வது போலவே பார்க்கிற எல்லாரும் உணர்வார்களென்று சொல்ல முடியாது. பல்வேறு இரசிகர்களும், இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் அடிக்கடி அவனைத் தேடிக் காரியாலயத்திற்கு வருவது வழக்கம் தானென்றாலும், சுற்றியிருப்பவர்களுக்கு அது எந்த விதத்தில் பிடிக்கவில்லை என்பதையும், எந்தக் காரணத்தால் அதைக் கண்டு அவர்கள் உள்ளூற அசூயைப்படுகிறார்கள் என்பதையும் அவ்வப்போது அவன் அநுமானம் செய்து தெரிந்து கொள்ளத் தவறிவிடவில்லை. நடுநடுவே அழுகையும் உணர்ச்சிப் பெருக்கும் குறுக்கிடுவதைத் தவிர்க்க முடியாமல் அவனிடம் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தாள் அவள். அந்த முகத்தில் எப்போதோ எதனாலோ வந்து தங்கிவிட்ட சோகத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் குறுகுறுப்பான அழகு நிறைந்த முகம் அவளுடையதென்பதைக் கண்டான் சுகுணன். அந்தப் பெண் சொல்லத் தயங்கிய அல்லது கூசியவற்றைப் பற்றி அதிகமாகத் துளைத்துத் துளைத்துக் கேள்விகள் கேட்காமல் குறிப்பாக உணர வேண்டியவற்றைக் குறிப்பாக உணர்ந்து, கேட்டே அறிய வேண்டியவற்றைக் கேட்டு அறிந்து, எந்த விநாடியிலும் அவளைத் தர்மசங்கடமான நிலையில் வைக்காமல் உரையாடினான் சுகுணன். ரோஜாப் பூக்களின் இதழ்கள் ஒன்றோடொன்று எவ்வளவு வலுவாக அல்லது வலுவில்லாமல் பொருந்தியிருக்கின்றனவோ அப்படித்தான் பெண்ணின் சொற்களும், மற்றொருவருடைய பதில் வார்த்தை, அதைத் தீண்டும் போதோ எதிர்கொள்ளும் போதோ மென்மை தவறினால் அது உதிர்ந்து விடுகிறது அல்லது குலைந்து விடுகிறது என்பது சுகுணனின் கருத்து. வாத்தியங்களில் சுருதி சேர்ப்பது போல் பெண்களிடம் நளினமாகப் பேசவேண்டும் என்று அநுபவத்தில் உணர்ந்திருந்தான் அவன். பழைய தலைமுறையில் தஞ்சை மாவட்டத்தினைச் சேர்ந்ததும் இந்தத் தலைமுறையில் பாலக்காட்டினதாக ஆகிவிட்டதுமான ஒரு குடும்பத்தில் ஓட்டல் சமையற்காரரான ஓர் ஏழைத் தந்தையின் பதினொரு பெண்களில் ஒருத்தியாக அவள் பிறந்ததாகச் சுகுணன் அறிந்து கொண்டான். தன் குடும்பத்தின் பயங்கரமான ஏழ்மைச் சூழ்நிலையையும் பிறவற்றையும் சொல்லி முடித்துவிட்டுச் சில கணங்கள் தயங்கியவளாக அடுத்துத் தான் சொல்ல இருப்பதை எப்படித் தொடங்குவதென்று தன் பேச்சுக்கு முகம் செய்யத் தெரியாமல் இருந்தாள் அவள். சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின் பெண்களுக்கே உரிய எதிர்பாராத சாமர்த்தியத்தோடு அவள் தன் பேச்சைத் தொடங்கினாள்.

"'கிழிந்த புடவையும் எண்ணெய் காணாத தலையும் தளர்ந்த நடையும் இடுப்பில் குழந்தையுமாக இந்தத் தேசத்தின் பெரிய நகரங்களின் வீதிகளில் அங்கங்கே பிச்சைக்குத் திரியும் அபலைப் பெண்களைக் காணும் போதெல்லாம் 'வந்தே மாதரம்' - என்று சொல்ல என் வாய் தயங்குகிறது உண்மையான பாரதமாதா இந்த அபலைப் பெண்களிடம் அல்லவா இருக்கிறாள்! இவர்களுக்கெல்லாம் சரியான சமுதாய மதிப்புக் கிடைக்கிற வரை என் பாரதத் தாய் நான் செய்யும் வணக்கத்தை உண்மையாக ஏற்பாளா என்று எனக்குப் பயமாயிருக்கிறது. சகோதரிகளைப் பிச்சைக்கு அலைய விட்டுவிட்டு நான் தாயை வணங்குவதில் அர்த்தமோ மரியாதையோ எப்படி இருக்க முடியும்?'- என்று நீங்கள் 'பாலைவனத்துப் பூக்களி'ல் எழுதியிருக்கிறீர்கள். அப்படி எழுதியிருக்கிறவரிடம் நான் மனம் விட்டுப் பேசுவதற்குத் தயங்கக்கூடாது. ஆனாலும் கூட நான் கேட்க வேண்டியதைக் கேட்க எனக்குத் தயக்கமாயிருக்கிறது. என் சகோதரிகளில் மூத்தவர்கள் நாலு பேருக்குக் கல்யாணமாகி விட்டது. அடுத்த மூன்று பேர் ஊரிலேயே பள்ளிக்கூட டீச்சராகவும் அலுவலகங்களில் டைப்பிஸ்டுகளாகவும் உத்தியோகம் பார்த்துக் குடும்பத் தேரை இழுத்துச் செல்வதில் தந்தைக்கு துணையாயிருக்கிறார்கள். இன்னும் மூன்று பேர்கள் குழந்தைகள். பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள். நான் தான் கல்லூரியை எட்டிப் பார்த்திருக்கிறேன். சகோதரிகளின் சம்பாத்தியத்திலிருந்து மாதா மாதம் ஏதோ எனக்குக் கொஞ்சம் பணம் வரும். ஆனால் ஹாஸ்டல் கட்டணத்திற்கும் கல்லூரிக் கட்டணத்திற்கும் அது பற்றாது. இங்கு மைலாப்பூரில் எங்களூர் டாக்டரம்மாள் ஒருத்தி இருக்கிறாள். நான் கல்லூரி விடுதியின் சுவர்களுக்குள்ளே சிறைப்பட்டு விடாமல் வெளியே தனிப்பட்டவர்களால் பெண்களுக்கென்று நடத்தப்படும் ஒரு சேவாதள ஹாஸ்டலில் தங்கியிருப்பதால் காலை, மாலை - விடுமுறை நாட்களில் வெளியே போக வர வாய்ப்பு உண்டு.

காலையும் மாலையும் விடுமுறை நாட்களிலும் அந்த டாக்டரம்மாள் வீட்டில் நோயாளிகளின் மாதாந்தர ஃபீஸ் பில் போடுவது ஆஸ்பத்திரித் தேவைகளை அவ்வப்போது வாங்கிவைப்பது, ஸ்டோர் ரூம் பொறுப்பு ஆகியவற்றைக் கவனித்து வந்தேன். மாதம் நூறு ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் ஓரளவு சௌகரியமாகவே காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தேன். ஆண்கள் நாணயமாகவும் சமுதாயப் பொறுப்புடனும் நடந்து கொள்ளத் தயாராயிருந்தால் தான் பெண்கள் எந்த இடத்திலும் எந்த நிலையிலும் உத்தியோகம் பார்க்கலாம். ஆனால் பல இடங்களில் அப்படி இருப்பதில்லை. முக்கால்வாசி நேரம் வெளியில் 'விசிட்'களுக்கும், பிரசவம் பார்க்கும் டாக்டரம்மாள் என்பதால் சில சமயங்களில் அகாலமான இரவு நேரங்களில் கூட வெளியே சுற்றப் போக வேண்டியிருக்கும் அந்த அம்மாளுக்கு. அவளுடைய கணவர்..." என்று சொல்லியவள் சிறிது தயங்கிவிட்டு, "அவர் பெயரை நான் இங்கே சொல்ல வேண்டாமென்று நினைக்கிறேன். ஊரறிந்த பிரமுகர் அவர். பக்திமான்களுக்கு நடுவே நிரந்தரமான ஆஸ்திகராகவும் அங்கீகரிக்கப்பட்டு விட்டவர். தனிமையில் என்னிடம் நேர்மைக் குறைவாக நடந்து கொள்ள முயன்றார் என்ற நான் மட்டுமறிந்த உண்மையை உலகத்துக்குச் சொல்ல முயல்வதால் ஒரு பயனுமில்லை. உலகம் அதை அவ்வளவு விரைவாக நம்பிவிடப் போவதும் இல்லை. வசதியற்றவர்கள் உரத்த குரலில் எழுந்து நின்று உண்மையைக் கூறினாலும் அது நம்பப்படுவதில்லை. வசதியுள்ளவர்கள் மெல்லிய குரலில் இருந்த இடத்திலிருந்தே பொய்யைக் கூறினாலும் அது இந்த சமூகத்தில் உடனே நம்பப் படுகிறது. வசதிகளையும் வாழ்க்கையையும் சரியான உயரத்துக்கு - அத்தனை பேரும் கவனிக்கிற நிலை எதுவோ அந்த நிலைக்கு - வளர்த்து மேடை போட்டுக் கொண்டால் தான் அப்புறம் உண்மையையும், பொய்யையும் அது உண்மையாகவோ பொய்யாகவோ ஒப்புக் கொள்ளப்படுகிறார் போலப் பேச முடியும் போலிருக்கிறது. இந்த நிலையில் என்னைப் போன்ற அபலைப் பெண் வேறென்ன செய்ய முடியும்? தேவைக்காகச் சம்பாதிப்பதை விட நான் என்னை அழிந்து போய் விடாமல் காப்பாற்றிக் கொள்வதுதான் முக்கியம். என் நிலைமை இரண்டுங்கெட்டானாகி விட்டது. 'அம்மா! உங்கள் கணவர் இப்படிப்பட்டவராக இருக்கும் போது நான் இங்கே வேலைக்கு வருவது முடியாத காரியம்' என்று அந்த டாக்டரம்மாளிடம் நான் சொல்லக் கூட முடியவில்லை. அப்படிச் சொன்னால் அது அவர்கள் குடும்ப வாழ்வில் கலகத்தை உண்டாக்கலாம். எனவே நான் சொல்லாமல் கொள்ளாமல் வேலையிலிருந்து நின்று விட்டேன். இன்று காலையில் அந்த டாக்டரம்மாள் ஹாஸ்டலுக்கு ஃபோன் செய்து என்னைக் கூப்பிட்டு, 'ஏன் வரவில்லை?' - என்று கேட்டாள்.

'ஃபைனல் வருடமாயிருப்பதால் படிப்பு அதிகமாக இருக்கிறது. உங்களிடம் சொல்வதற்குப் பயமாயிருந்தது. அதனால் சொல்லாமலே நின்று விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள் அம்மா!' - என்று ஒரு விதமாகப் பதில் சொல்லி மழுப்பி விட்டேன். மேலே என்ன செய்வதென்று தான் தெரியவில்லை. அந்த நூறு ரூபாய் இல்லாவிட்டால் இங்கே சென்னையில் காலம் தள்ளிப் படிப்பது என்பது முடியாத காரியம். படிப்பை நிறுத்தி விட்டு ஊருக்குத் திரும்பிவிடலாமென்று நினைக்கிறேன். இரண்டு மூன்று வருடப் படிப்பைச் சிரமப்பட்டுத் தள்ளிய பின் கடைசிச் சமயத்தில் இப்படி ஒரு சோதனை வருகிறதே என்று எண்ணும் போது படிப்பை நிறுத்தி விட்டுத் திரும்பவும் தயக்கமாயிருக்கிறது. துன்பம் நிறைந்த இந்தச் சூழ்நிலையில் தான் உங்களுடைய 'பாலைவனத்துப் பூக்கள்' நாவலை நான் படிக்க நேர்ந்தது. அதைப் படித்து முடித்ததுமே இந்த நிலையில் நான் அறிவுரை கேட்க வேண்டிய மனிதர் நீங்கள் தானென்று என் மனத்துக்குத் தோன்றியது. நான் இப்படித் தைரியமாகத் தேடி வந்தது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆனால் உங்கள் எழுத்து என்னை உங்களிடம் பரிபூரணமான நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. என்னைப் போல் துன்பப்படுகிற அபலைப் பெண்களைப் பற்றித் தானே நீங்கள் பாலைவனத்துப் பூக்களில் எழுதியிருக்கிறீர்கள்?" -

இந்த விநாடி வரை அவளிடம் குறுக்குக் கேள்விகள் கேட்கவோ, வினாக்களைத் தொடுக்கவோ செய்யாத சுகுணன் இப்போதுதான்,

"தயை செய்து உங்கள் பெயரை நான் அறிந்து கொள்ளலாமா?" என்று மெல்ல வினாவினான்.

"என் பெயர் கமலம். தந்தையும் சகோதரிகளும் 'கமலி' என்று செல்லமாக அழைப்பார்கள்" -

"உங்களைப் போன்ற புதிய தலைமுறைப் பெண்களெல்லாம் ஒரு விஷயத்தை அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும் மிஸ். கமலம்! பெண்ணின் வாழ்வு வீட்டுப் படிகளின் உள்ளேயே திருப்தியாக நடக்க முடிந்த தலைமுறையில் இன்று நாம் வாழவில்லை. புதிய தலைமுறைப் பெண் வீட்டுக்கு இப்பால் வெளியேறியும் வாழ வேண்டியிருக்கிறது. பழகும் இடங்களும் வாழும் எல்லைகளும் பெருகப் பெருகப் பெண் முன்னேறுகிறாள் என்பதை விடத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பை மிகப் பல சமயங்களில் தானே நிர்வகிக்க வேண்டியவளாகிறாள் என்பதுதான் பொருத்தமாயிருக்கும். உங்களைப் பொறுத்தவரையில் இதுவரை எல்லாப் பொறுப்பையும் நீங்கள் சரியாகத்தான் நிறைவேற்றியிருக்கிறீர்கள். சொந்த ஊரைவிட்டு இவ்வளவு தொலைவிலுள்ள மற்றொரு நகரத்தில் தனியாகப் படிக்க வருகிறவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுகிற பொறுப்புள்ளவர்களாயிருப்பதே இந்தக் காலத்தில் அபூர்வமாயிருக்கிறது. நம்பிக்கையும் நாணயமுமில்லாத கோழைத்தனமான சில இளைஞர்களைக் காதலித்து ஏமாறுகிறவர்கள் சிலர். உங்களிடம் முறை தவற முயன்ற டாக்டரம்மாளின் கணவரைப் போன்ற ஆஷாடபூதிகளிடம் சிக்கிச் சீரழிகிறவர்கள் சிலர். இராவணனைப் போல் பெண்களைத் தூக்கிச் சென்று சிறை வைக்கிற காலமில்லை இது. அதே சமயத்தில் தூக்கிப் போகாமலும் சிறை வைக்காமலுமே பெண்களுக்குக் கெடுதல் செய்யக் கூடிய நாகரிக இராவணர்கள் - இராமர்களைப் போன்ற பாதுகாப்பான பாவனையில் திரிகிற சமூகம் இது. இராவணவர்களும் கூட இராமனைப் போல் தோன்றி, நடித்துப் பிறரை நம்பச் செய்கிற கோலம் கொண்டு திரிவதால் தான் இன்று மனிதர்களை நல்லவர்கள் கெட்டவர்களாகப் பிரித்து இனங்கண்டுபிடிப்பது அருமையாயிருக்கிறது. வாழ்க்கை எந்த மூலையிலோ அழுகியிருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் எந்த இடத்திலிருந்து அழுகத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் சரியாகத் தெரியவில்லை. அரசியலிலா, சமுகப் பிரச்னைகளிலா, மதத்திலா, ஒழுக்கத்திலா, எங்கு அழுகத் தொடங்கியிருக்கிற தென்பது மட்டும் தெளிவாக விளங்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்த அழுகல் எந்த இடத்தில் தொடங்கி இருக்கிறதோ அந்த இடத்தோடு அப்படியே நின்றுவிடாது. அழுகல் முழுவதும் பரவினால் தான் கெடுதல் என்பதில்லை. அழுக ஆரம்பித்து விட்டது என்பதே கெடுதல் தான். இந்த அழுகலைப் பார்த்து மனம் கொதித்துச் சமூகத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் நியாயத்தையும் உண்மையையும் அணுக வேண்டுமென்று என்னைப் போன்றவர்கள் அறிவுத் தொழிலாளிக்கே உரிய நக்கீர தைரியத்தோடு எழுந்து நின்று குமுறினால் அதற்கு எதிராக நெற்றிக் கண்ணைத் திறக்க யாராவது ஒரு வலிமை மிக்க மனிதர் அல்லது மனிதக் கூட்டம் வந்து சேருகிறது. சமூகத்தில் ஒவ்வோர் உண்மைக்கும் எதிராக அந்த உண்மையால் பாதிக்கப்படுகிற ஒரு வலிமையான மனிதனின் அல்லது மனிதர்களின் நெற்றிக் கண் திறந்து அந்த உண்மையை உரைத்தவனைச் சுடவோ, வெதுப்பவோ தயாராயிருக்கிறது. அந்த நெற்றிக்கண் தான் இன்றைய சமூகத்தில் நியாயத்தைச் சிந்திப்பவன் அல்லது சொல்பவனின் பெரிய எதிரி. அந்த டாக்டரம்மாளின் கணவர் யார் என்று நீங்கள் பெயர் சொல்வதற்குக் கூடப் பயப்படுகிறீர்களே; அதற்கு என்ன காரணம்? நம்மை அறிந்தோ அறியாமலோ, உணர்ந்தோ உணராமலோ, இந்தக் கடுமையான கண்பார்வைக்கு நாம் பயப்படுகிறோம்."

"பயப்படாவிட்டால் அதன் காரணமாக நம் வாழ்க்கை நிச்சயமாகப் பாதிக்கப்படுகிறதே சார்!"

"ஒப்புக் கொள்கிறேன் மிஸ் கமலம்! அவர்களுடைய பார்வை நம்மைச் சூடுவதும் நம்முடைய பார்வை அவர்களைச் சுட முடியாததும் தான் அதற்குக் காரணம்" என்றான் சுகுணன்.

அவன் கூறியவற்றை ஆழ்ந்து சிந்தித்து வியப்பவள் போல் அவள் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள். சிறிது நேரத்திற்குப் பின்,

"உங்களுடைய பயனுள்ள காலத்தை அதிக நேரம் வீணாக்கி விட்டேன் சார்! தயவு செய்து இன்று இந்த நிலையில் எனக்கு ஏதாவது அறிவுரை கூற முடியுமா நீங்கள்...?" என்று ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தித் தயங்கித் தயங்கித் தொடுத்துக் கேட்டாள் அவள்.

"உண்மையாகவே துன்பப்படுகிறவர்களுக்கு வெறும் அறிவுரையை மட்டும் வழங்கிப் பயனில்லை என்று கருதுகிறவர்ன் நான். உங்களுக்கு ஆட்சேபணையில்லையானால் என் உதவியை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம். நீங்கள் படிப்பைத் தொடருவதற்கு என்னால் முடிந்தவரை நான் உதவ முடியும். பின்பு உங்களால் எப்போது முடியுமோ அப்போது நீங்கள் எனக்குத் திருப்பிக் கொடுத்தால் போதும்..."

"இந்த உதவியைக் கேட்கவோ ஏற்றுக் கொள்ளவோ கூட எனக்குப் பயமாயிருக்கிறது சார்! பாவம் உங்களுக்கு உங்கள் குடும்பத்தில் எத்தனை சிரமங்களோ?"

"குடும்பமா? எனக்கா? இன்று இந்தத் தேசத்தில் இப்படி உங்களைப் போல் கஷ்டப்படுகிற சகோதரிகள் எல்லாரும் என் குடும்பம் தான். இன்று வரை வேறு குடும்ப பாரம் எனக்கில்லை" என்று சொல்லி அவளை நோக்கிப் புன்முறுவல் பூத்தான் சுகுணன்.

"என்னால் உங்களுக்கு அநாவசியமான சிரமம்..."

"சிரமம் என்ன இருக்கிறது இதில்? ஏதோ இன்று நான் உதவக்கூடிய நிலையிலிருக்கிறேன். நாளை எப்படியோ? உதவக் கூடிய நிலையிலிருக்கிற போது தான் இன்னொருவருக்கு உதவி செய்கிற மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் நான் அடைய முடியும்."

"உங்களைப் போல் வாழ்க்கையை இத்தனை கருணை மயமான கண்களோடு பார்க்கிறவர்கள் அபூர்வம் சார்..."

"தயவு செய்து உங்களுக்கு உதவுவதை எனது ஒரு கடமையாக எண்ணித் திருப்திப்பட விடுங்கள். நீங்கள் என்னிடமே அதை வியக்கவோ புகழவோ செய்வது எனக்குப் பிடிக்காத காரியம். சகோதரிகள் தமையனிடம் பெறுகிற உதவியை எங்காவது புகழ்வதுண்டா மிஸ் கமலம்?"

கமலம் கண்களில் நீர் நெகிழ அவனை நோக்கிக் கைகூப்பினாள். அங்கு வந்த நாளிலிருந்து இல்லாத அபூர்வ வழக்கமாய் அன்று முதன் முதலாக ஆபீஸ் கணக்கில் ஒரு வவுச்சர் எழுதிக் கொடுத்து இருநூறு ரூபாய் தன் கணக்கில் அட்வான்ஸ் வாங்கி அவளுக்குக் கொடுத்தான் சுகுணன். அந்த ரூபாய் நோட்டுக்களை அவனிடமிருந்து வாங்கிக் கொள்ளும்போது கமலத்தின் தளிர் விரல்கள் பயபக்தியினால் நடுங்கின.

"ஒருவரை ஒருவர் பழகி அறிந்த பின்னால் கூட நம்ப மறுக்கும் இந்தப் பட்டினத்தில் இப்படி நம்புகிறீர்களே; இது எத்தனை பெருந்தன்மை?" - என்று நன்றி பெருகும் குரலில் நாத்தழுதழுக்க ஏதோ சொல்லத் தொடங்கிய அவளை இடைமறித்து,

"இப்படித் திரும்பத் திரும்ப வியப்பது தான் என்னை அகௌரவப்படுத்துவதற்குச் சரியான வழி மிஸ் கமலம்!" - என்று சொன்னான் சுகுணன். அவள் விடைபெற்றுக் கொண்டு போவதற்கு முன், "எப்போதாவது என் உதவி தேவைப்பட்டால் இங்கே காரியாலயத்துக்காவது என் அறைக்காவது ஃபோன் செய்யுங்கள்" என்று கூறிக் காரியாலய எண்ணையும் அறை விலாசத்தோடு டெலிபோன் எண்ணையும் குறித்துக் கொடுத்தான் சுகுணன். அவள் தலை மறைந்ததும் அடுத்த அறையிலிருந்து சர்மா ஓடி வந்து, "குட்டி யாரு?" என்று தம் வயதிற்குத் தாம் அப்படியும் விசாரிக்கலாம் என்பது போன்ற உரிமையுடன் அந்த சமயத்தில் வழக்கமான விஷமம் தொனிக்கக் கேட்டார். அவரிடமுள்ள கெட்ட பழக்கங்களில் இதுவும் ஒன்று. சுகுணனுடைய அறைக்குப் புதியவர்களாக யார் தேடி வந்து விட்டுப் போனாலும் அக்கறையாக அதைக் கவனித்து வைத்திருந்து வந்தவர்கள் தலை மறைந்ததுமே அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டை வெடித்துவிடும் போன்ற பரபரப்புடன் அங்கு வந்து விசாரிப்பார் அவர். பல சமயங்களில் அவருடைய இந்தச் செயலை உள்ளூற வெறுத்திருக்கிறான் சுகுணன். இன்று அவர் வந்து விசாரித்த விதமும் விசாரணை செய்த வார்த்தைகளும் அவனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. ஆத்திரத்தோடு பதில் கூற நினைத்து முடிவில் அவரைத் தன்னிடம் மன்னிப்புக் கேட்க வைக்கும் படியான பதிலாக அதைக் கூறினான் சுகுணன்.

"ஒன்று விட்ட பெரியப்பாவின் பெண். எனக்குத் தங்கை முறை வேணும்" - என்று அவன் உறவு சொன்னவுடன்,

"மன்னிக்கணும்! எப்படியோ விசாரித்து விட்டேன்" - என்று வார்த்தைகளிலும், முகத்திலும், அசடு வழிய நின்றார் சர்மா. அவருடைய விசாரணையிலிருந்த அநாகரிகமான வார்த்தைகளைக் கேட்டுக் குமுறிய காரணத்தினால் அவரைக் கூசச் செய்ய வேண்டுமென்ற முனைப்புடனே தான் வேண்டுமென்று இப்படி ஓர் உறவைக் கற்பித்தான் சுகுணன். இந்தப் பெண் கமலத்தை போல் எத்தனையோ அபலைகள் பாரத தேசம் எங்கும் நகரத் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டு இருப்பது போல் ஒரு பிரமை அன்று அவன் மனத்தில் தோன்றியது. அதன் காரணமாக மனமும் வலித்தது. சமூகத்தில் தனக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதை விட அதிகமான கௌரவத்துக்குப் பேராசைப்படும் அந்த ஐ.சி.எஸ். அதிகாரியையும், சமூகத்தில் தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய கௌரவத்துக்கே போராடும் இந்தப் பெண்ணைப் போன்ற அபலையையும் சேர்த்து நினைத்தால் இந்த முரண்பாட்டையே அடிப்படையாக வைத்து இன்னும் நிறையச் சிந்திக்க வேண்டும் போல மனம் கனத்தது சுகுணனுக்கு.

"கமலத்தைப் போன்றவர்களின் குருத்துப் பருவத்து வாழ்வை இந்த வறுமையும் வசதிக் குறைவும் எப்படி எப்படி வாட்டி விடும்?" - என்பதை மற்றவர்கள் உணர முடிவதை விடச் சுகுணனால் அதிகம் உணர முடிந்ததற்குக் காரணம் இளமையில் கல்லூரிப் படிப்பின் போது காலை மாலை வேளைகளில் ஒரு மார்வாரி கடையில் கணக்கெழுதிச் சம்பாதித்துத்தான் துயருற்ற அநுபவங்கள் அவனுக்கு இன்னும் மறக்கவில்லை. தகப்பன் சம்பாதித்துக் கட்டிய பங்களாவிலும் காரிலும் கோயில் காளையாய்ச் சுற்றும் பல உல்லாச இளைஞர்களுக்கு நடுவே முகம் மலரவோ, சிரிக்கவோ கூடத் தகுதியும் உற்சாகமுமில்லாதது போல் பயந்து கூசிக்கூசி வாழ்ந்த தனது அந்த மாணவ வாழ்க்கையை அவன் ஒரு நாளும் மறந்து விட முடியாது தான். தானும் கெட்டுக் கொண்டு தன்னைச் சுற்றி ஒரு பத்துப் பன்னிரெண்டு விடலைகளுக்குக் காபி சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து அவர்களையும் கெடுத்து வாழும் மாணவர்கள் சிலரை அப்போதும் அவன் கண்டிருந்தான். இப்போதும் கண்டு கொண்டிருந்தான். மாணவப் பருவத்திலேயே ஒரு கொழுத்த மிராசுதார் மனப்பான்மையோ அல்லது ஜமீன்தார் டாம்பீகமோ இப்படிப்பட்டவர்களுக்கு வந்து விடும். தன்னைச் சுற்றி எப்போதும் ஒரு பத்து மாணவர்கள் இருக்க வேண்டுமென்பதற்காக இவர்கள் தண்டச் செலவு வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்களால் ஒரு விநாடி கூடத் தனியாயிருக்க முடியாது. தனியாக எதையும் எதிர்கொள்ளவும் இவர்களுக்குத் துணிவிராது. காபி குடிக்கவோ, சினிமா பார்க்கவோ, கடற்கரைக்குப் போகவோ, எதற்கும் அந்தப் பத்துப் பேர் கூட வர வேண்டும். கொள்ளைக் கூட்டம் புறப்படுவது போல் சேர்ந்து கூச்சலிட்டு அரட்டையடித்து வெடிச் சிரிப்புச் சிரித்துப் பாதையோடு போகிற நாலு பெண்களைக் கேலி செய்து கொண்டும் போக வேண்டும். கல்லூரி வகுப்பில் ஐந்து 'பீரியட்' என்றால் ஐந்து பீரியடுக்கும் அறைக்குப் போய் ஐந்து தரம் தலைவாரி ஐந்து தரம் சட்டை மாற்றிக் கொண்டு வகுப்புக்கு வர வேண்டும். இப்படி ஊர் மேய்கிற இளைஞர்களைப் பார்த்துப் பயந்து கூசி, 'நாளைய நல்வாக்கை உண்மையில் இவர்களுக்குத்தான் சொந்தமோ? நாம் இப்படியே ஏழ்மையில் நசுங்கி அழிய வேண்டியதுதானா?' என்று அவநம்பிக்கைப் பட்டுக் கொண்டே விலகி இருந்து சிரிக்கப் பயந்து உல்லாசமாகச் சுற்ற நாணி ஒதுங்கிப் படித்த தன் பழைய நாட்களை நினைத்தான் சுகுணன். அன்றைய அந்த வாழ்வில் ஒரு தாகம் தன்னுள் இருந்ததை இன்று அவனால் நினைவு கூற முடிந்தது. அன்று தொடங்கிய அந்தத் தாகம் தான் இன்று இந்த நக்கீர தைரியமாக மாறியிருக்கிறதோ என்று கூட அவன் தனக்குத் தானே சிந்தித்ததுண்டு. நக்கீர தைரியத்தினால் வாழ்க்கையில் சோதனைகளும் எதிர்ப்புகளும் தான் அதிகமாகுமென்று அவனால் உணர முடிந்தும் என்ன காரணத்தினாலோ அந்தத் தைரியத்தை மட்டும் அவனால் விட்டுவிட முடியவில்லை. நெஞ்சுக் குழியிலிருந்து தண்ணீர்த் தாகம் எடுப்பது போல் மனித ஆன்மாவுக்குள் ஒரு தாகம் உண்டு. அதுதான் சத்தியதாகம். சத்தியதாகமுள்ளவன் வாழ்வின் சுகங்களை அடைய முடியாது போகலாம். ஆனால் அவனுடைய அந்தத் தாகமே அவனுக்கு ஒரு பெரிய சுகம் என்பதை அவன் மட்டுமே உணர்வான். அப்படி ஒரு தாகத்தில் சுகத்தை அநுபவித்தவன் அதை விடவே முடியாது. சுகுணனாலும் அந்தச் சுகத்தை விட முடியவில்லை.

அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்த இதே வேளையில் தற்செயலாகச் சுபாவமான அந்தச் சத்திய தாகத்தையும், நக்கீர தைரியத்தையும் காண்பிக்க வேண்டிய சந்தர்ப்பமொன்று அந்தக் காரியாலயத்தில் நேரிட்டது. என்ன காரணத்தினாலோ அன்று காலையில் நாகசாமியையும் அந்த ஐ.சி.எஸ். அதிகாரியையும் சந்தித்த விநாடியிலிருந்தே இந்தத் தாகம் குமுறியது. அந்தப் பெண் கமலம் வந்து கூறிய துன்பங்கள் அதை வளர்த்து விட்டிருந்தன. இப்போது பூம்பொழில் அட்வர்டிஸ்ட்மெண்ட் மானேஜர் ரங்கபாஷ்யம் வந்து மறுபடியும் அந்தத் தாகத்தைப் பெருக்கினார். சுகுணனுக்கும் ரங்கபாஷ்யத்துக்கும் அடிக்கடி இப்படித் தகராறுகள் வர வாய்ப்பு உண்டு. ஆனால் பத்திரிகையின் இலக்கியத் தரத்தையும் அதன் உள்ளடக்கத்தினால் அதற்குக் கிடைக்கிற பெருமையைக் கட்டிக் காக்க வேண்டிய ஆசிரியரின் பொறுப்பையும் சுகுணன் ஒரு போதும் நெகிழ்த்தவோ, விட்டுக் கொடுக்கவோ, இணங்கியதே இல்லை. சராசரி இந்தியப் பத்திரிகையின் முதலாளிகள் எல்லாரும் செய்வதைப் போலவே பத்திரிகையின் புத்தி சம்பந்தமான காரியங்களுக்கு உண்மையில் பொறுப்பாயிருப்பவன் யாரோ அவனுக்கு வெறும் சம்பளத்தை மட்டும் வீசி எறிந்துவிட்டு, 'ஆசிரியரும் அச்சிடுபவரும் வெளியிடுபவரும்' என்று பத்திரிகை முதலாளியே எல்லாவற்றுக்குமாகச் சேர்த்துத் தன்னுடைய பேரைப் போட்டுக் கொள்கிற வழக்கம் தான் நாகசாமியிடமும் இருந்தது. இதைப் பற்றி உழைக்கும் பத்திரிகையாளர்களின் கூட்டங்களில் இரண்டொரு முறை பேசும்போது, 'ஆசிரியரும் அச்சிடுபவரும், வெளியிடுபவரும்' - என்பதோடு சேர்த்து 'விற்பவரும்' என்று கூடப் போட்டுக் கொள்ளலாமே என்று குத்தலாகப் பேசியிருந்தான் சுகுணன். நாகசாமிக்குப் பத்திரிகைத் தொழிலின் கௌரவத்தைப் பற்றியோ, தரத்தைப் பற்றியோ ஒன்றுமே தெரியாது. சுகுணன் துளசியிடமே பலமுறை கேலியாகவும் கடுமையாகவும், 'உன் அப்பா பத்திரிகைகளா நடத்துகிறார்? நிறையவும் விதவிதமான கலரிலும் பேப்பர் அடித்துத் தள்ளுகிற ஒரு பெரிய பேப்பர் மில் நடத்துவதாக அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறார்?' என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறான். நிர்வாக ஊழல்களைத் தொடர்ந்து அநுமதிப்பதும், பத்திரிகையின் தரத்துக்கு உயிர் நாடியாயிருந்து அதைக் காப்பாற்ற வேண்டிய எழுத்தாளர்களைக் குறைவாக நடத்துவதும், இச்சகம் பேசுவதையும் அசிங்கமாக முகஸ்துதி செய்வதையுமே தொழிலாகக் கொண்ட விளம்பர மானேஜர்களையும், சர்க்குலேஷன் மானேஜர்களையும் பத்திரிகையின் உயிர் நாடிகளாக நினைப்பதும் நாகசாமியின் வழக்கங்களாக இருப்பதை உள்ளூற அவன் வெறுத்தான். நாகசாமி மற்றவர்களிடம் பேசும்போது வாய்தவறிச் சொன்னால் கூட 'வீ ஆர் ரன்னிங் எ பிஸினஸ்' - என்று சொல்லுவாரே ஒழிய 'வீ ஆர் ரன்னிங் எ மேகஸீன்' - என்று பூம்பொழிலைப் பற்றியோ தமக்குச் சொந்தமான இன்னொரு பத்திரிகையைப் பற்றியோ சொல்லவே மாட்டார். அட்வர்டிஸ்ட்மெண்ட் மானேஜர் ரங்கபாஷ்யமோ பாவங்களின் அவதாரம். அவருடைய முகத்தில் நடுநெற்றியில் சிவப்புக் கீற்றாக நெளியும் அடையாளம் உள்ளே நிறைந்திருக்கும் அபாயங்களுக்கும், ஒழுக்கக் கேடுகளுக்கும் முன்னெச்சரிக்கையாக முகத்தில் ஒரு சிவப்புக் கோடு போட்டுக் காட்டினாற் போலச் சுகுணனுக்குத் தோன்றுமே ஒழியப் பவித்திரமான வைணவர்களின் சமயச் சின்னமாக அவரைப் பொறுத்தவரையில் மட்டும் அது தோன்றவே தோன்றாது. அவருடைய முன்னோர்கள் அக்னிஹோத்திரம், அக்னிசந்தானம், ஔபாசனம், எல்லாம் செய்து அசல் வேதியர்களாக வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்களென்று சுகுணன் கேள்விப்பட்டிருந்தான். இவரோ தாம் புகுந்துவிட்ட துறைக்குத் தவிர்க்க முடியாத தேவை என்று தாமாகவே கற்பித்துக் கொண்டுவிட்ட குடி, கூத்து, மாமிசம் என்று சகல துறைகளிலும் ஈன நிலைக்குப் போய் விட்டிருப்பதைச் சுகுணன் கவனித்திருக்கிறான். சாதாரணமான தேவைகளுக்காகக் கீழிறங்கி விடுகிற மனிதர்களை அவனால் மனத்தாலும் கூட மன்னிக்க முடியாமலிருந்தது. இத்தனை சூழ்நிலைகளுக்கிடையேயும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த வெளியீடுகளின் 'குரூப்' பில் 'பூம்பொழிலை' முடிந்தவரை தன் பொறுப்பில் தரமாக நடத்திக் கொண்டிருந்தான் அவன். இவ்வளவு சீரழிவுக்குப் பிறகும் எப்போதாவது யாரிடமாவது 'நான் சனிக்கிழமை ராத்திரிப் பலகாரம் சார்! 'ட்வென்டி இயர்ஸா' இதை மட்டும் தவறவிடறதில்லே...' - என்று ரங்கபாஷ்யம் பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டால் அவனுக்குச் சிரிப்புத்தான் வரும். காரியாலய முறைக்காக ஓரளவு கட்டுப்பாட்டுடன் ஒத்துப் போவதைத் தவிர நாகசாமி, ரங்கபாஷ்யம் போன்றவர்களை அவனால் மனமார மதிக்க முடியாமலிருந்தது. அவர்களிடமிருந்த ஊழல்களைப் பார்க்கும் போது தன்னுடைய நக்கீர தைரியத்தோடு நிமிர்ந்து நின்றிருக்கிறான் அவன். இன்று ரங்கபாஷ்யம் அவனை அவனுடைய அறைக்குத் தேடி வந்தது அலுவலக வேலையாகத்தான் என்றாலும் வேண்டா வெறுப்பாக அவரை வரவேற்றான் அவன்.

"மிஸ்டர் சுகுணன்! இந்தச் சமயத்தில் நீங்கள் தான் பெரிய மனசு பண்ண வேணும். பூம்பொழிலில் வரபோகிற இதழில் உங்கள் 'டம்மி'ப் (மாதிரி ஃபார அமைப்பு) படி பத்துப் பக்கம் 'ரீடிங் மேட்டரும்' ஆறு பக்கம் விளம்பரமும் மூன்றாவது பாரத்தில் போட்டிருக்கிறது. அதை எப்படியாவது ஆறு பக்க ரீடிங் மேட்டராகவும் - பத்து பக்க விளம்பரமாகவும் மாற்றிக் கொடுத்தால் நல்லது..."

"நல்லதென்றால் யாருக்கு நல்லது? உங்களுக்கா, எனக்கா? வாசகர்களுக்கா?" என்று சிரித்துக் கொண்டே கொஞ்சம் அமுத்தலாகவே அவரைக் கேட்டான் சுகுணன்.

ரங்கபாஷ்யமும் கொஞ்சம் எரிச்சல் மூட்டுகிறார் போலவே பதில் கூறினார்!

"உங்களுக்குமில்லை! எனக்குமில்லை! பத்திரிகைக்குத்தான்."

"அப்படி நீங்கள் நினைக்கலாம். நான் நினைக்க முடியாது. மூன்றாவது பாரத்தில் பத்துப் பக்க அளவு வருகிறாற் போலச் சிறந்த எழுத்தாளர் ஒருவரின் அருமையான கதை ஒன்று வெளிவர இருக்கிறது. அந்தக் கதையை நாலு பக்கம் குறைத்து ஆறு பக்கமாக 'எடிட்' செய்தால் கதை சீரழிந்து உருக்குலைந்து போகும். கதையை இந்த இதழில் போடாமல் அடுத்த இதழுக்கு மாற்றி விடலாமென்று பார்த்தால் அதற்கும் வழி இல்லாதபடி அந்தக் கதை இந்த இதழில் வெளிவருமென்று சென்ற இதழிலேயே அறிவிப்புச் செய்தாயிற்று. ஒவ்வோர் இதழிலும் பத்திரிகையின் மொத்தப் பக்கங்களான நூறு பக்கங்களில் மூன்றில் ஒரு பங்காக முப்பத்து மூன்று அல்லது அதிகபட்சமாக முப்பத்தைந்து பக்கங்கள் விளம்பரத்துக்கு ஒதுக்க வேண்டுமென்று காரியாலய நடைமுறை இருக்கிறது. இந்த இதழில் முப்பத்தைந்து பக்கம் விளம்பரத்துக்காக விட்டிருக்கிறோம். அப்படி இருந்தும் நீங்கள் இம்மாதிரி வாதிடுவது நன்றாயில்லை. கதைகளைக் கண்டபடி உருக்குலைத்துப் போடுவது நாணயமான காரியமில்லை. நான் ஓர் எழுத்தாளன், அதனால் மற்ற எழுத்தாளர்களின் மனச் சாட்சியை என்னால் புறக்கணிக்க முடியாது."

"ஆனால் ஒன்றை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் மிஸ்டர் சுகுணன்! எழுத்தாளர்களுக்கு நாம் பணம் கொடுக்கிறோம். விளம்பரதாரர்களோ நமக்குப் பணம் கொடுக்கிறார்கள்" - என்று கோபக் குமுறலோடு ரங்கபாஷ்யம் இரைந்த குரலில் ஆங்கிலத்தில் சொல்லி விட்டு எழுந்திருந்த போது,

"மிஸ்டர் ரங்கபாஷ்யம்! ப்ளீஸ் கீப் யுவர் லிமிட்ஸ். ஐ டோண்ட் வாண்டு டிஸ்கஸ் வித்யூ" - என்று தெளிவான குரலில் மனத்தின் ஒரே வலிமையாகிய நக்கீர தைரியத்தோடு இருந்த இடத்தில் இருந்தபடியே அவருக்குப் பதில் கூறினான் சுகுணன்.

"ஐ வில் டேக் திஸ் மேட்டர் டு தி நோட்டீஸ் ஆஃப் தி மானேஜ்மெண்ட்..." - என்று கோபமாக அவனிடம் இரைந்து கத்திவிட்டு வெளியேறினார் ரங்கபாஷ்யம்.

"அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை" என்று அவரைச் சாடி அனுப்பினான் சுகுணன். சொல்லி வைத்தாற்போல் ரங்கபாஷ்யத்தின் தலை மறைந்த மறுகணமே சர்மா சுகுணனின் அறையில் தலை நீட்டினார்.

"அவனிடம் ஏன் வீண் வம்பு வைத்துக் கொள்கிறீர்கள் சுகுணன்? பெரிய ரௌடியாச்சே?" என்று சுகுணனுக்கு அநுதாபப்படுகிறவர் போல் ரங்கபாஷ்யத்தை ஏக வசனத்தில் பேசினார் சர்மா.

"ரௌடியாயிருந்தால் ரயில்வே பிளாட்பாரத்தில் திரிய வேண்டும். புத்தியுள்ளவர்களின் அறிவு இயக்கமாகிய பத்திரிகைக் காரியாலயத்திற்குள் வரக்கூடாது" என்று சர்மாவிடமும் சீறினான் அவன். தனக்கு வேண்டியவர் போல் இப்படி இங்கே வந்து அனுதாபப்படுகிறார் இவர். தான் சொல்லிய இதே கடுமையான வாக்கியங்களைச் சாயங்காலம் ரங்கபாஷ்யத்திடமும் போய்ச் சொல்கிற கெட்ட குணம் சர்மாவுக்கு உண்டு என்பது சுகுணனுக்குத் தெரியும். அவர் போய்ச் சொன்னாலும் சொல்லட்டுமென்று தான் பேசியிருந்தான் அவன். அசத்தியமயமாக வாழ்கிற யாரை எதிரே சந்தித்தாலும் இந்த இருளினருகே அவன் மனத்தின் சத்தியதாகமாகிய ஒளி பெருகித் தோன்றும். சர்மாவின் புறம் பேசும் இழி குணம் தெரிந்திருந்தும் அவர் காது கேட்கும்படியாகவே, 'ரௌடியாயிருந்தால் ரயில்வே பிளாட்பாரத்தில் திரிய வேண்டும்' என்று ரங்கபாஷ்யத்தைக் குறித்து அவன் பேசியதற்குக் காரணம் உள்ளே அநியாயத்தைக் கண்டு குமுறி அளவற்றுப் பெருகிய நக்கீர தைரியம் தான். தன்மானமும் நேர்மையுமுள்ள ஒவ்வொருவனுடைய இரத்தத்திலும் இப்படி ஒரு நக்கீர தைரியம் பெருகி ஓடுவதைத் தவிர்க்க முடியாது என்பதைச் சுகுணன் உணர்ந்திருந்தான். ஈரம் பட்டு நமத்துப் போகிற தீக்குச்சி போல் மனிதர்களுடைய சத்தியம் என்ற நெருப்பில் வாழ்க்கைப் பயம் ஈரமாகப் பெருகி நனைந்து போகாமல் நிமிர்ந்து நிற்கிறவன் யாரோ அவனெல்லாம் இந்த நக்கீர தைரியத்தைத்தான் நாகரிக வீரமாகப் போற்றிப் பாதுகாக்க முடியும். பத்திரிகையாளனின் அல்லது அறிவு இயக்கத்தைச் சேர்ந்தவனின் ஒரே பெருமிதம் இந்த நக்கீர தைரியம் தான் என்பதைப் பலர் மறந்து விடுகிறார்கள். சென்னைப் பட்டினத்துத் தெருக்களில் காகித ஆலைகளாக நடக்கும் பல பெரிய பத்திரிகை நிறுவனங்களில் உதவி ஆசிரியர்களாகவும், பிழை திருத்துபவர்களாகவும், இருக்கிற பலர் முதுகும் வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கைகளும் வளைந்து கூனிப் போய், "ஏதோ காலந்தள்ளணுமே சார்" - என்று ரொம்பவும் அசதியாக வாழ்வதைப் பார்த்துக் குமுறியிருக்கிறான் சுகுணன். ஒரு முறை அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோஷ் வந்திருந்த போது சுகுணனும் வேறு சில தன்மானமிக்க பத்திரிகையாளர்களும் தனியே கடற்கரையிலமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த வேளையில், 'இன்று பண முதலைகளால் நடத்தப்படும் பெரிய பெரிய பத்திரிகைகளில் உண்மையாக வசதிகளையும் சொகுசுகளையும் அனுபவிப்பவர்கள் யார் தெரியுமா?' என்று கேட்கப் பட்ட போது "அக்கார்டிங் டு மை ஸ்டாடிஸ்டிக்ஸ் மோஸ்ட்லி தே ஆர் லோஃபர்ஸ் அண்ட் ஹையர் லெவல் பிம்ப்ஸ்..." என்று கோஷ் கொதிப்போடு பதில் கூறியிருந்ததை இப்போது நினைத்தான் சுகுணன். இந்தத் துறையைப் பற்றிய கசப்பான உண்மைகள் சுகுணனுக்குத் தெரிந்திருந்ததன் காரணமாகவே இதில் அவன் உள்ளம் பயமற்றுத் திடமாக இறுகித் துணிவோடு எந்தப் பொய்யையும் எதிர்த்து நிற்கத் தயாராயிருந்தது. போர் வீரனின் தைரியம் வேறு, அறிவாளிக்குத் தேவையான தைரியம் வேறு. அறிவாளியின் தைரியம் சத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட மடங்காத தைரியமாயிருக்க வேண்டும். சமூகத்தின் எந்த மூலையிலிருந்து யாருடைய நெற்றிக்கண் கொடூரமாகத் திறந்து வெதுப்பினாலும் 'குற்றம் குற்றமே' என்று நிமிர்ந்து நின்று சொல்லுகிற தைரியமே அறிவாளியின் தைரியம். இந்தத் தைரியம் அறிவாளியிடமிருந்து குறையக் குறைய உலகத்தின் அறிவியக்கமே போலியாகிவிடும். போர் வீரனின் தைரியத்தை விடப் புத்தி வீரனின் தைரியம் பல விதங்களில் உலகுக்கு அவசியமானது. புத்தி வீரனின் தைரியம் படிப்படியாகக் குறையக் குறையப் போர் வீரனின் தைரியமும் குறைந்து விடும் என்பது நீண்ட சிந்தனைக்குப் பின் சுகுணனின் முடிவாயிருந்தது. ஆனால் புத்தி வீரர்களாயிருக்க வேண்டிய பத்திரிகையாளர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று நினைத்த சூட்டோடு இங்கு எப்படி இருக்கிறார்கள் என்பதையும் நினைத்தாலோ நெஞ்சில் இரத்தம் வடிகிறது. சினிமா நட்சத்திரங்கள் காய்கறி நறுக்குவதையும், சைக்கிள் விடுவதையும் படம் பிடித்துப் போடுவதற்காக அவர்களுக்குப் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிற சிலரும், மந்திரிகள் பெயரில் கட்டுரை எழுதி வெளியிட்டு அவர்களுக்கு தங்கள் புத்தியை அடகு வைக்கவோ, இரவல் கொடுக்கவோ செய்வதன் மூலம் சோரம் போகிறவர்கள் சிலருமாகச் சமூகத்தின் ஒளியற்ற பகுதிகளில் எங்கெங்கோ எப்படி எப்படியோ திரிய வேண்டியவர்கள் எல்லாம் சந்தர்ப்ப வசத்தினால் புனிதமான - வீரமான பத்திரிகைத் தொழிலில் புகுந்து அந்தத் தொழிலுக்கு வேண்டிய - எந்த நெற்றிக்கண் திறந்தாலும் அசத்தியத்துக்கு அஞ்சாத நக்கீர தைரியம் சிறிதுமின்றி இருக்கிறார்கள். "நக்கீர தைரியத்தினால் போலிப் பெரிய மனிதர்களின் கோபத்துக்கும் சமூகத்தின் சாபத்துக்கும் ஆளாக நேரிடலாம். ஆனாலும் அந்தத் தைரியம் தான் பத்திரிகையாளரின் சேம நிதி. அதைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவன் பத்திரிகையாளனாய் இருப்பதற்கே தகுதியில்லை" - என்று சில கூட்டங்களில் உணர்ச்சி வசமாகக் குமுறிப் பேசிப் பேசி அதன் காரணமாகச் சிலருடைய விரோதத்தையும் சுகுணன் சம்பாதித்துக் கொண்டதுண்டு.

ஃபோர்மென் அன்று மாலை மூன்று மணிக்கு மேல் அடுத்து வருகிற வாரத்துப் பூம்பொழிலின் மூன்றாவது ஃபாரத்தை மேக்கப் செய்து கொண்டு வந்து கொடுத்த போது அதில் தான் விரும்பிய படியே பத்துப் பக்கம் கதையும் ஆறு பக்க விளம்பரமும் மட்டுமே வந்திருப்பதைச் சுகுணன் கண்டான். ரங்கபாஷ்யம் தன்னை மீறி எதுவும் செய்யவில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. இருந்தாலும் தன்னுடைய நியாயமான வெற்றியையும் அவருடைய சரியான தோல்வியையும் அவர் கைப்படவே உறுதி செய்து கொண்டுவிட வேண்டுமென்று சுகுணனுக்குத் தோன்றியது. அந்த ஃபாரத்தின் மேல் அதை அப்படியே ஒப்புக் கொள்வது போல் ரங்கபாஷ்யத்திடம் ஒரு கையெழுத்து வாங்கிக் கொண்டு வருமாறு சொல்லிச் சிரித்துக் கொண்டே அதை எடுத்து நாயுடுவிடம் கொடுத்தான் சுகுணன். நாயுடு ஃபாரத்தை எடுத்துக் கொண்டு ரங்கபாஷ்யத்தின் அறைக்குச் சென்றார். இந்தச் செயல் ரங்கபாஷ்யத்தின் ஆத்திரத்தைக் கிளறும் என்று தெரிந்திருந்தும் - அப்படிக் கிளறினாலும் பரவாயில்லை - தன் வெற்றியை எதிரியின் கைப்படவே ஒப்புக் கொள்ளச் செய்துவிட வேண்டுமென்ற தீரனின் சுபாவத்தோடு நாயுடுவை அனுப்பியிருந்தான் சுகுணன். ஆனால் ரங்கபாஷ்யத்தைப் பற்றி அவன் அநுமானம் செய்தது முற்றிலும் தவறாகப் போய்விட்டது. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு நாயுடு ஃபாரத்தோடு திரும்பி வந்த போது ஆவலோடு அதை வாங்கிப் பார்த்தால், 'ஓ.கே.' என்று ஆங்கிலத்தில் எழுதி அதற்குக் கீழே 'இன்ஷியல்' போட்டு ஸைன் செய்து ஒப்புக் கொண்டிருந்தார் ரங்கபாஷ்யம். அவருடைய இந்தப் பணிவிலேயே ஒரு பெரிய விரோதத்திற்கு ஆரம்பம் இருப்பது போல தெரிந்தது. ஆட்டுக்கிடாய் சண்டையில் வன்மமுள்ள எதிரி ஆடு பின் வாங்கினால் இன்னும் வேகமாக முன் வந்து முட்டப் போவதாகத்தான் அர்த்தம். இதை நினைத்தபடியே அவருடைய அந்தக் கையெழுத்தைப் பார்த்துச் சுகுணன் புன்முறுவல் பூத்தான்.

"ஒண்ணும் சொல்லலீங்க... மேலேயும் கீழேயும் ஏற இறங்கப் பார்த்துப்பிட்டு உடனே கையெழுத்துப் போட்டுட்டாரு" - என்று நாயுடு கூறிய போது, "டர்ட்டி ஃபெலோஸ்" என்று சுகுணனின் உதடுகள் முணு முணுத்துக் கொண்டன. ரங்கபாஷ்யம் பெரிய 'டிப்ளமேட்' என்பது அவனுக்குத் தெரியும். யாரையும் முடிவாக விரோதித்துக் கொள்ளாதது போல நடித்து விட்டு தேவையான விரோதங்களை யானை போல ஞாபகம் வைத்துக் கொண்டு பின்னால் எப்போதாவது சரியாகப் பழி வாங்கிக் கருவறுப்பார் அவர் என்பதும் அவனுக்குத் தெரியும்.
--------------

அத்தியாயம் - 7

"இன்னொருவர் மேல் மனப்பூர்வமாக அன்பு செய்வதாலும், இன்னொருவரால் மனப்பூர்வமாக அன்பு செய்யப்படுவதாலும் தான் மனிதர்கள் நிமிர்ந்து நடக்க முடிகிறது."

ரங்கபாஷ்யம் கையெழுத்திட்டு அனுப்பிய அந்த ஃபாரத்தைத் திருத்திச் சரி செய்து நாயுடுவிடம் கொடுத்துவிட்டு அன்று மாலை நாலரை மணிக்கு மவுண்ட் ரோட்டில் சங்கக் கட்டிடத்திற்குள் உழைக்கும் பத்திரிகையாளர்கள் யூனியனின் செயற்குழுக் கூட்டம் இருப்பதனை நினைவு கூர்ந்தவனாக அதற்குப் புறப்பட்டான் சுகுணன். செயற்குழுவில் அவனும் இருந்ததனால் போய் ஆகவேண்டும் என்ற கடமை தவிரவும் அன்று ஒரு முக்கியமான தீர்மானம் கொண்டு வரப்பட இருந்தது. அந்தத் தீர்மானத்திற்கு உத்தியோக பயத்தின் காரணமாகச் சிலருடைய எதிர்ப்பும் இருந்தது. ஆனால் சுகுணனும் அவனையொத்த முற்போக்கான எண்ணமுடைய சிலரும் தீர்மானத்தை எப்படியும் நிறைவேற்றி விடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தனர். சில பத்திரிகைக் காரியாலயங்களில் நிர்வாகிகள் உழைக்கும் பத்திரிகையாளர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ மரியாதைக் குறைவாக நடத்துவதாய்ப் புகார்கள் நிறைய வந்திருந்தன. ஒரு பத்திரிகைக் காரியாலயத்தில் உதவியாசிரியர்களுக்கும் பிழை திருத்துவோருக்கும் காரியாலய நேரத்தில் வெளியிலிருந்து யார் எவ்வளவு முக்கியமான காரியமாக ஃபோன் செய்தாலும் தகவல் தெரிவிக்கவோ பேசவோ அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இன்னொரு காரியாலயத்தில் பத்திரிகை முதலாளி - எந்த உதவியாசிரியரைத் தம் அறைக்குக் கூப்பிட்டுப் பேசினாலும் அவரை விட வயதானவர்களுக்குக் கூட உட்கார ஸீட் கொடுக்காமல் நிறுத்தி வைத்துப் பேசுவதாகப் பலர் குறைப்பட்டுக் கொண்டு யூனியனில் தெரிவித்திருந்தார்கள். இவற்றையெல்லாம் தவிர்க்க 'நிர்வாகிகள் மரியாதையாக நடக்க வேண்டும்' - என்பது போன்ற வாசகம் அடங்கிய 'பாட்ஜ்' ஒன்றைச் சில நாட்கள் தொடர்ந்து உழைக்கும் பத்திரிகையாளர்கள் காரியாலயத்துக்கு அணிந்து செல்ல வேண்டும் என்ற தீர்மானம் தான் அன்று செயற் குழுவில் வர இருந்தது. சுகுணனுடைய அன்றைய மனநிலையில் இந்தத் தீர்மானத்தைப் பற்றி அதிகமாக அக்கறைகாட்ட வேண்டுமென்ற துடிப்பும் கண்டிப்பான ஞாபகமும் வந்திருந்தது அவனுக்கு. செயற்குழுவில் சிலர் தீர்மானத்தை எதிர்த்தார்கள். இந்த 'பாட்ஜ்' அணிந்து செல்கிறவர்கள் யாரென்று கவனித்து வைத்திருந்து நிர்வாகிகள் அவர்களைப் பழி வாங்கினால் என்ன செய்வதென்று வினாவினார்கள் சிலர். "அப்படிப் பழி வாங்குவது முடியாத காரியம். அப்படி யாராவது பழி வாங்கினால் யூனியன் அவர்கள் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கும்" - என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பயப்படுகிறவர்கள் பயப்படத்தான் செய்தார்கள். தீர்மானம் என்னவோ சுகுணனைப் போல் துணிவும் தன்மானமுமுள்ள இளந்தலைமுறைப் பத்திரிகையாளர்களின் பெருவாரியான ஆதரவினால் நிறைவேறிவிட்டது. அது நிறைவேறிய மகிழ்ச்சியோடு ஏழு - ஏழேகால் மணிக்குக் கூட்டம் முடிந்து அவன் அறைக்குத் திரும்பிய போது துளசியும் அவள் கணவனும் அவனைத் தேடி வந்துவிட்டு அறையில் அவனைக் காணாமல் காரில் புறப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அவன் வருவதைப் பார்த்துவிட்டு மறுபடியும் கீழிறங்கினார்கள். ஏதோ ஒரு நவநாகரிக ஓட்டலின் பெயரைச் சொல்லி அதில் 'ரூஃப் கார்டனில்' ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விசேட டின்னருக்கு மூன்று டிக்கட் வாங்கியிருப்பதாகவும் அதற்குச் சுகுணனும் வரவேண்டுமென்றும் துளசியின் சார்பில் அவள் கணவன் வேண்டினான். தான் வேண்டிக் கொள்வது நியாயமாயிருக்காது என்பதற்காகவே துளசி தன் கணவனை விட்டு அதைத் தெரிவிக்கச் செய்தாள். என்றாலும் எங்கே அவன் மறுத்துவிடுவானோ என்ற தவிப்பும் ஆவலும் அப்போது அவள் முகத்தில்தான் அதிகமாகத் தெரிந்தன. சில மாதங்களுக்கு முன்பு வரை சுகுணனும் அவளும் அதே நவநாகரிக ஓட்டலுக்கு எத்தனையோ ரூஃப் கார்டன் டின்னர் சாப்பிடப்போய் வந்திருக்கிறார்கள். அந்த ஞாபகத்தைத் தவிர்க்க முடியாமல் தான் அவள் தன் கணவனை விட்டுத் தன்னைக் கூப்பிடச் சொல்லித் தூண்டியிருக்க வேண்டுமென்று அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

"நீங்கள் ஆபீஸிலிருப்பீர்களோ என்று ஆறு மணிக்கு நானும் இவரும் அங்கே போனோம். அங்கேயிருந்து நாலு மணிக்கே புறப்பட்டு விட்டதாக நாயுடு சொன்னார். அப்புறம் இங்கே வந்தோம். இங்கேயும் காணவில்லையே என்று வருத்தத்தோடு புறப்பட்ட போது கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் நீங்களே வந்துவிட்டீர்கள்" - என்று அவன் மறுத்துச் சொல்லவோ தட்டிக் கழிக்கவோ அவகாசம் கொடுத்துவிட விரும்பாதவளைப் போல் விரைந்து கெஞ்சுவது போல் தொனிக்கும் குரலில் பேச்சைத் தொடங்கினாள் துளசி.

'இவராமே இவர்? பெண்களுக்குத்தான் எத்தனை விரைவாக எத்தனை சுலபமாக உரிமையும் உறவும் கொண்டாட வந்து விடுகிறது?' - என்று உள்ளூற நினைத்து நகைத்துக் கொண்டான் சுகுணன். அன்று அவன் டின்னருக்குப் போகிற மனநிலையிலில்லை.

"இன்று நான் ரொம்பக் களைத்துப் போயிருக்கிறேன். என்னைத் தயவு செய்து விட்டுவிடுங்கள். இன்னொரு நாள் கட்டாயம் வருகிறேன்" - என்று துளசியின் கணவனிடம் நாசூக்காக மறுத்தபோது, "துளசிக்குத்தான் பெருத்த ஏமாற்றமாயிருக்கும் சார்! அவள் தான் வருத்தப்படுவாள். என்ன இருந்தாலும் உங்கள் இரசிகைக்கு நீங்கள் இவ்வளவு பெரிய ஏமாற்றத்தை அளிக்கக்கூடாது" - என்று நிர்விகாரமான மனத்தோடு துளசியையும் கடைக்கண்ணால் பார்த்துச் சிரித்துக் கொண்டே மறுபடி சுகுணனை வற்புறுத்தினான் துளசியின் கணவன்.

"தயவு செய்து என்னை மன்னியுங்கள்..." என்று சுகுணன் மீண்டும் மறுத்தபோது துளசியின் முகம் ஒளியற்றுச் சோபை மங்கியது. கண்களிலும் உதடுகளிலும் மலர்ச்சி மறைந்து வாட்டம் வந்து படிந்தது. அவள் நெட்டுயிர்த்தாள். வாய் விட்டு அழ முடியாத குறையாக மீண்டும் மீண்டும் நெட்டுயிர்த்தாள்.

எந்த நிலையிலும் துளசியின் முகம் வாடுவது சுகுணனுக்கும் அந்தரங்கமாகப் பிடிக்காதுதான். ஒரு செல்லக் குழந்தையைப் பாசத்தோடு கவனிப்பது போல் பிரியத்தின் எல்லை வரை சென்று அவள் மேல் அன்பு வைத்தவன் அவன். அவளுடைய உடல் கிடைக்கவில்லை என்பதனால் அந்த அன்பு இன்று அழிந்து போய்விடாது. ஒருமுறை ஏதோ கவனக் குறைவினால் துளசி தன் கைகளில் நகங்களைக் கத்தி கத்தியாக வளர விட்டிருந்தாள். அவளுடைய பூப்போன்ற மென்மையும் சந்தனம் போன்ற குளிர்ச்சியும் பொருந்திய விரல்களுக்கு அந்த நகங்களின் வளர்ச்சி பொருந்தாமலிருந்தது. அவள் தன்னுடைய திருவல்லிக்கேணி அறைக்கு வந்திருந்த ஒரு சமயத்தில் சுகுணனே சிரித்தபடி எழுந்துபோய்த் தன்னுடைய 'நெயில் கட்டரை' (நகம் வெட்டும் கருவி) எடுத்து வந்து, "துளசி! இந்தப் பூப் போன்ற கைகள் என்னுடையவை. நான் கொள்ள வேண்டியவை. இவை பொலிவற்றிருப்பதை என்னால் சகிக்க முடியாது" - என்று சொல்லியபடியே அழகாக ஒற்றை மோதிரமணிந்த அவள் வலது கை விரல்களைப் பற்றி நகங்களைக் கத்திரிக்கலானான்...

"இதென்ன? நீங்கள் எனக்கு இப்படி எல்லாம் பணிவிடை செய்து கொண்டு?... தயவு செய்து கையை விடுங்கள். நான் அல்லவா உங்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும்" - என்று போலி வெட்கத்தோடு உண்மையில் அந்தப் பிடியில் மகிழ்ந்து கொண்டே அவள் கைப்பிடியிலிருந்து திமிற முயல்வது போல் நடித்தாள் துளசி.

"நிலாக் கதிர்களின் மேல் நட்சத்திரம் விழுந்து கிடப்பது போல் இந்த ஒற்றை மோதிரம் தான் உன் கைக்கு எத்தனை அழகாயிருக்கிறது துளசி?" - என்று அப்போது அவளை வியந்திருந்தான் சுகுணன். அதற்கு அடுத்த வாரம் எழுதிய 'மோதிர விரல்' என்னும் கவிதையில்,

'தீயினில் தளிர்த்ததோர் - பொற்
      செழுங் கொழுந்தெனவே
மாயக் கைவிரலாள் அதில்
      மன்மதன் சொக்கிடும்
கோல மோகனச் சிறு
      மோதிர மொன்றுடையாள்'

என்று சில வரிகள் வந்தன. "இப்படி நீங்கள் ஒவ்வொன்றையும் எழுதுவதாயிருந்தால் இனிமேல் உங்கள் முன்னால் தட்டுப் படுவதற்கே பயப்பட வேண்டும் போலிருக்கிறதே" - என்று இந்த வரிகளைப் படித்துவிட்டுப் பாதி வெட்கமும் பாதிக் கோபமுமாகத் துளசி அவனைக் கேட்டாள்.

"என்ன செய்வது துளசி எனக்கு வேறெந்தப் பெண்களின் கைகளைப் பற்றியும் தெரியாதே?" - என்று சொல்லி நகைத்தான் சுகுணன். அந்தப் பெருமையில் அவளும் மலராக மலர்ந்து குழைந்தாள். அப்படிப்பட்டவள் முகம் வாடும்படி இன்று விருந்துக்கு வரமாட்டேனென்று மறுக்கும் போது அவன் மனமும் அதைச் செய்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தோடும், வேதனையோடும் தான் செய்தது. ஏமாற்றம் என்ற உணர்வின் ஒருபுறம் தவிப்பும், மறுபுறம் ஏக்கமுமாகத் துளசி கணவனோடு காரில் புறப்பட்டாள். போகும்போது, 'போய் வருகிறேன்' - என்று வாய் திறந்து வார்த்தைகளால் சொல்லிக் கொள்வதற்குக் கூடத் தெம்பில்லாமல் கண்ணீர் முட்டிப் பளபளக்கும் விழிகளை அசைத்துத் தலையைச் சாய்த்து 'வருகிறேன்' என்பதுபோல் பாவனை செய்யத்தான் அவளால் முடிந்தது. 'இன்னொருத்தியின் உள்ளத்தில் தான் தவிப்பாகவோ, ஏக்கமாகவோ இருந்து அந்த உள்ளத்தைத் தன்னையறியாமலே வதைத்துக் கொண்டிருக்கிறோமே' - என்று உணரும் போது உள்ளூற எத்தனை வேதனையடைய முடியுமோ அத்தனை வேதனையையும் விட அதிகமான வேதனையோடுதான் அப்போது மாடிப்படியேறி அறைக்குப் போனான் சுகுணன்.

'ஆழமாக வேரூன்றி விடுகின்ற செடியைப் போல், நம்பிக்கை வாய்ந்த பெண், ஆண் பிள்ளையின் மேல் வைத்து விடுகிற பிரியம் தான் எத்தனை நிலையாக ஊன்றிவிடுகிறது?' - என்பதை நினைக்கும் போது அந்த அன்பை நிமிர்ந்து பார்த்து வியந்தது அவன் மனம். மனிதர்கள் தங்கள் உடலில் இரத்தம் சூடேறி ஓடுவதால் மட்டும் நிமிர்ந்து நடக்கவில்லை. உண்மையில் ஒவ்வொருவருடைய வாழ்விலும் எங்கோ கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கிற அசல் அன்பினால்தான் நிமிர்ந்து நடக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைக்கத் தோன்றியது.

'இன்னொருவர் மேல் மனப்பூர்வமாக அன்பு செய்வதாலும் இன்னொருவரால் மனப்பூர்வமாக அன்பு செய்யப்படுவதாலும் தான் மனிதர்கள் நிமிர்ந்து நடக்க முடிகிறது' - என்று சிந்தித்த போது அந்தச் சிந்தனை அழகாகவும் நம்பிக்கைக்கு உரியதாகவுமிருந்தது அவனுக்கு. நீராடி உடை மாற்றிக் கொண்டு அவன் மெஸ்ஸிற்குச் சாப்பிடப் புறப்பட்டபோது... அறை வாசலில் அவன் மாடிப்படி இறங்குவதற்கு இருந்த வேளையில் பைந்தமிழ் நாவலர் பா.பாண்டுரங்கனார் மூச்சு இரைக்க இரைக்கத் தம் கனத்த உடலைச் சுமக்க முடியாமல் சுமந்து படியேறி மேலே வந்து கொண்டிருந்தார். மாடிப்படியில் எதிரே நேருக்கு நேர் சந்திக்கும்படி ஆகிவிட்டதனால் சுகுணனால் பாண்டுரங்கனாரிடமிருந்து தப்பி ஓட முடியவில்லை. தப்பித்து ஓட வழி இருந்தால் பாண்டுரங்கனாருக்கு முன் தலையைக் காட்டாமல் நிச்சயமாகத் தப்பியிருப்பான அவன். அந்த மனிதரிடம் யார் சிக்கிக் கொண்டாலும் - சிக்கிக் கொண்டவருக்கு எத்தனை முக்கியமாக வேறு அவசரக் காரியம் இருந்தாலும் மூன்று - மூன்றரை மணி நேரம் 'போரடி'க்காமல் விடவே மாட்டார். சுகுணன் அவரறியாமல் அவருக்கே 'போர் மாஸ்டர் ஜெனரல்' (Bore Master General) என்று பெயர் சூட்டியிருந்தான். சென்னையில் ஏதோ ஒரு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராயிருந்து ஓய்வு பெற்றவரென்று அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான் சுகுணன். கல்லூரியிலிருந்து அவர் ஓய்வு பெற்றாரா அல்லது அவரிடமிருந்து அந்தக் கல்லூரி ஓய்வு பெற்றதா என்பது சர்ச்சைக்குரிய பிரச்னையாகும். ஓய்வு பெற்ற பின்னர் தாற்காலிகமாக அவர் செய்து கொண்டிருந்த காரியம் ஆகாசவாணியில் அருள்வாக்கு உரைப்பது. சுகமாகவும், கவலையற்றும் விடிகிற அதிகாலையின் இன்பத்தைக் கெடுப்பது போன்ற கட்டைக் குரலில் அருளும் இல்லாமல் வாக்கும் இல்லாமல் எதையாவது சொல்லி 'ரேடியோ' கேட்பவர்களின் வயிற்றெரிச்சலை நாள் தவறாமல் கொட்டிக் கொண்டிருந்தார் இந்தப் பைந்தமிழ் நாவலர். 'இந்தக் குற்றத்தைச் செய்பவர் இன்னார்' என்பதுபோல் 'அருள்வாக்கு' உரை நிகழ்த்துபவர் என்று முன்னால் பெயர் சொல்வதோடு நிற்காமல் உரை முடிந்ததும் மக்கள் தங்கள் கோபத்தை யார் மேல் காட்டுவதென்ற தவிப்புடனிருக்கும் போது - 'இந்தக் குற்றத்தைச் செய்தவர் இன்னார்தான்' என்று சந்தேகத்துக்கிடம் வைக்காமல் பின்னாலும் பெயரைச் சொல்லி விடுவார்கள். 'அருள்வாக்கு' என்ற உபதேசத் தொழிலை அப்படியே குத்தகைக்கு எடுத்தவர் போல் தினந்தோறும் பாண்டுரங்கனாரே அதைச் செய்து கொண்டிருந்ததைக் கண்டு அவரைப் போலவே ஓய்வு பெற்ற வித்துவான்களும், உபதேசம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்களும், ரேடியோக்காரர்களிடம் 'அருள்வாக்கு ஒருவருக்கே சொந்தமானதா?' என்று சண்டைக்குப் போகவே அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். முதல் நாள் அருள்வாக்கின் போது பா. பாண்டுரங்கனார் என்று தமிழில் முதலெழுத்தைச் சொல்லிப் பெயரை அறிவித்தால் மறுநாள் அருள்வாக்கின் போது பி. பாண்டுரங்கனார் என்று வேறு பெயர் போல் தோன்றும்படி ஆங்கிலத்தில் முதலெழுத்தைச் சொல்லி அறிவித்தார்கள். இத்தனைக்கும் மேலாகத் திரு. பாண்டுரங்கனாருக்குப் பூம்பொழிலைப் போலத் தரமான இலக்கியப் பத்திரிகை ஒன்றில் தொடர்ந்து கந்த புராணத்தைப் பற்றியோ பிரபுலிங்க லீலையைப் பற்றியோ ஓர் அறுபது வாரத்துக்கு எழுதித் தள்ளிவிட வேண்டுமென்பது ஆசை. அதற்காகவே சுகுணனைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார் அவர். பாண்டுரங்கனாருக்குத் தமிழையும் இலக்கியத்தையும் விட அதிகமாகத் தெரிந்த கலை, இன்னொருவரைப் பச்சையாகப் புகழ்வது. முகஸ்துதியில் மன்னன். இவற்றிற்கு அநுசரணையானதும் எந்தக் கொம்பனையும் உடனே வசப்படுத்தக் கூடியதுமான உபதொழில் கைரேகை பார்ப்பது. வேதாந்திகள் சில இடங்களில் 'மாயை' தான் கவர்ச்சி மிகுந்தது என்கிறார்களே, அது போல் பாண்டுரங்கனாரைப் போன்ற மனிதர்கள் தான் சென்னைப் பட்டினத்து மாயைகள். இந்த மாயைகளின் கவர்ச்சியோ, செல்வாக்கோ, புகழோ பட்டினத்தில் ஒரு நாளும் குறையாதென்பதை உறுதியாக நம்பலாம் என்று தோன்றியது சுகுணனுக்கு. சமீபத்தில் சிறிது காலமாக நாகசாமியின் கை பாண்டுரங்கனாரிடமிருந்தது. அதாவது பாண்டுரங்கனார் அடிக்கடி நாகசாமியைத் தேடிச் சென்று அவருக்குக் கைரேகை பார்க்கத் தொடங்கியிருந்தார்.

"ஊரில் எத்துனையோ போலிகள் கைரேகை பார்ப்பதாகப் பாமர மக்களை ஏமாற்றித் திரிகின்றன. யாம் அவ்வாறு செய்வதில்லை. 'செருமானிய' நாட்டு (ஜெர்மனி என்பதற்குப் பாண்டுரங்கனாரின் தமிழாக்கம்) அறிஞரொருவர் எழுதியுள்ள சிறந்த இரேகை நூலினைக் கொண்டு யாமறிந்த உண்மைகளைச் சொல்லி வருகின்றோம்" - என்று தனித்தமிழில் - தம்முடைய தொழில் திறமையை எடுத்துச் சொல்லுவது அவர் வழக்கம். பாண்டுரங்கனாரிடம் சில அபாரமான திறமைகளும், சாமர்த்தியங்களும் உண்டு. நாகசாமியைப் போல் தொழிலதிபர்கள், பெரிய மனிதர்கள் யாரையாவது பார்த்தால், "இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நம் முதலமைச்சரைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது தங்களைப் பற்றியும் ஏதோ பேச்சு வந்தது. அவர் அந்தப் பேச்சை மிகவும் விருப்பத்தோடு கேட்டதுமில்லாமல் தங்களைப் பற்றி என்னிடம் அன்போடு விசாரித்தார். நானும் தங்களைப் பற்றி அவரிடம் நிறையச் சொல்லியிருக்கிறேன்" - என்று நடுவாக நாலு வார்த்தைகள் சொல்லி வைப்பார். பெரிய மனிதர்கள், பெரிய மனிதர்களைப் போன்றவர்கள், பிரமுகர்கள், பிரமுகர்களைப் போன்றவர்கள், - புகழுக்கு ஏங்குகிறவர்கள், பணத்துக்கு ஏங்குகிறவர்கள் - எல்லாருடைய பலவீனமும் அவருக்கு நிறையத் தெரிந்திருந்தது. 'முதலமைச்சர் தன்னைப் பற்றிப் பாண்டுரங்கனாரிடம் எதற்காக விசாரிக்க நேர்ந்தது? - பாண்டுரங்கனார் தன்னைப் பற்றி அவரிடம் நிறைய எடுத்துக் கூறுவதற்கு என்ன இருக்கிறது?' என்பதையெல்லாம் யோசிக்கவே யாருக்கும் அவகாசமிராது.

'ஆகா! இந்தப் பாண்டுரங்கனாருக்குத்தான் எத்தனை பெருந்தன்மை? தான் முதலமைச்சரைப் பார்க்கச் சென்ற போது கூட நம்மை நினைவு வைத்திருந்து மறந்துவிடாமல் அவரிடம் நம்மைப் பற்றி நிறையப் பேசியிருக்கிறார்' - என்று பாண்டுரங்கனாரிடம் எல்லையற்ற விசுவாசம் பெருகும்படியாக அவர் நடந்து கொள்வார். இவ்வளவு சாமர்த்தியமிருந்தும் சுகுணனை மட்டும் அவரால் ஏமாற்ற முடியவில்லை. அவன் அவரை உள்ளும் புறமும் அளந்து வைத்திருந்தான். அவரையும் அவரைப் போன்றவர்களையும் பார்த்து எந்த விதமான கவர்ச்சியும் ஏற்படாததோடு - மேலே பட்டுவிட்டால் அரிக்கக்கூடிய ஒரு கம்பளிப் பூச்சியைப் பார்ப்பது போல் பல சமயங்களில் அருவருப்பு மட்டும் ஏற்பட்டிருக்கிறது அவனுக்கு. ஒரு சமயம் பெரிய மாவுமில் முதலாளியொருவருக்கு அறுபதாண்டு நிறைவு வந்தது. சென்னையைப் போன்ற பெரிய நகரங்களில் யார் யாருக்கு எப்போது மணிவிழாக் கொண்டாட வேண்டும்? யார் யாருக்கு எப்போது ஊர்வலம் விட வேண்டும் - என்று கவனித்துக் கணக்கெடுத்துப் புள்ளி விவரம் போட்டு வைத்துக் கொண்டு - ஏற்பாடுகள் செய்து ஒலிபெருக்கித் திருவிழா ஒன்றை அல்லது முகஸ்துதிக் கொடியேற்றும் பாராட்டுப் பிரம்மோற்சவமொன்றை நடத்துவதற்காகவே காத்திருப்பார்கள் சிலர். அந்த மாவு மில் முதலாளிக்கும் அப்படி ஒரு பிரம்மாண்டமான மணி விழா நடந்தது. எல்லாப் பத்திரிகைகளும் அவருடைய படத்தைப் போட்டு 'இந்திரன், சந்திரன், இளைஞரினும் இளைஞராக நம்மிடையே சுறு சுறுப்பாய் உலாவும் இன்னாருக்கு அறுபதாண்டு நிறைந்துவிட்டதென்பதை நம்பவே முடியவில்லை' - என்றெல்லாம் எழுதியிருந்தன. அந்த மாவு மில் முதலாளியின் மணிவிழாவுக்கு ஒருவாரம் இருக்கும்போது ஒருநாள் பகலில் திடீரென்று பரபரப்பாகப் பூம்பொழில் காரியாலயத்துக்கு வந்து சுகுணனைச் சந்தித்து, "நம் பூம்பொழில் அதிபர் நாகசாமி அவர்களுக்கு நெருங்கிய நண்பரும், பி.எஸ்.கே. ஃபிளவர் மில்ஸின் உரிமையாளருமான ஞானசபாபதிக்கு மணிவிழா வருகிறது. அந்தச் சமயத்தில் நமது பூம்பொழில் இதழில் வெளியிட ஏற்றவாறு ஒரு செய்யுள் புனைந்துள்ளேன்" - என்று சொல்லிக் கொண்டே செய்யுள் எழுதப்பெற்ற தாளை எடுத்துச் சுகுணனிடம் சிரத்தையோடு கொடுத்தார் பாண்டுரங்கனார். அந்தச் செய்யுளை வேண்டா வெறுப்பாக கையில் வாங்கினான் சுகுணன்.

பணியாரம் பசையுடனே பன்ரொட்டி
பலப்பலவாய்ச் செய்வதற்கும் சுடுவதற்கும்
சரியான மாவுவகை தருகின்றாய்
சரிதத்தே நின்புகழ்தான் நின்றுலாவும்
பெரியோய் புகழ்க்கெல்லாம் முரியோய்
பெருமைமிகு பி.எஸ்.கே. ஃபிளவர்மில்ஸின்
திருவார்ந்த செயலதிப பொருட்செல்வா நீ
சீராரும் மணிவிழாக்கள் பலவுறுகவே!

என்று தகுதியும் காரணமும் நோக்காமல் குருட்டு விசுவாசத்தோடு பாடப்பட்டிருந்த அந்தக் 'கவிதையை' அருவருப்போடு மேஜை மேல் வைத்துவிட்டு அதைப் பாடிய பாவத்துக்குச் சொந்தக்காரரான பாண்டுரங்கனாரை நிமிர்ந்து பார்த்தான் சுகுணன். அப்போது அவனது வெறுப்பையும், அருவருப்பையும் சிறிது கூடப் புரிந்து கொள்ளாதவராய், "இந்தப் பாடலில் ஒரு சிலேடையையும் இருபொருள் அலங்காரமாக வைத்திருக்கிறேன். 'மாவு வகை தருகின்றாய்' - அதாவது மூன்றாம் அடியில் - 'சரியான மாவு வகை தருகின்றாய்' - என்கிற இடத்தில் - மாவு + வகை என்றும் ஒரு பொருள். மா - பெரிய, உவகை - மகிழ்ச்சி, பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறாய் (மா உவகை தருகின்றாய்) என்றும் ஒரு பொருள். சிலேடை எத்தனை நயமாக வந்து விழுந்திருக்கிறது பார்த்தீர்களா சுகுணன்?" - என்று விளக்க உரை வேறு கூறத் தொடங்கிவிட்டார் பாண்டுரங்கனார். சுகுணனுடைய மனத்திலோ அந்தச் செய்யுளையும் பாண்டுரங்கனாரையும் அருவருப்பாக நோக்கும்போதே அதன் மறுபுறமாக உள்ளே ஒரு துணிவும் நக்கீர தைரியமும் கூடப் பெருகின.

"ஐயா! இந்த மாதிரித் தனி மனிதர்களைத் தேவைக்கதிகமாகப் புகழும் புகழ்ச்சியைச் செய்யுளாக வேறு எழுத வேண்டிய அவசியமென்ன? பத்திரிகையில் இதைப் பிரசுரிப்பதனால் இந்தப் பாடலில் புகழப்படுகிற மாவரைப்பவரும் அவருக்கு வேண்டியவர்களும் திருப்திபடலாம். இலக்கிய ரசனைக்காகப் பத்திரிகை வாங்குகிறவர்களுக்கு இதனால் பத்திரிகையின் மேல் அவநம்பிக்கையும், ஏமாற்றமும் அல்லவா ஏற்படும்?" - என்று சுகுணன் அவரை வினாவிய போது, அவர் அசடு வழியச் சிரித்தபடி, "ஹி ஹி அதற்கில்லை... இவ்வாறு பயன் மரம் நாடிச் செல்லும் பறவைகள் போல் வள்ளல்களை நாடிப் புகழ்தல் புலவர் மரபு" - என்று மரபைச் சாட்சிக்கு அழைத்தார்.

"ரொம்ப நல்லது! இந்த மாதிரிப் 'பயன் மரம் நாடிச் செல்லும் பறவைகள்' - 'புலவர் மரபு' - போன்ற வாக்கியங்களையெல்லாம் ஏதாவதொரு தமிழ்த் துணைப்பாட நூலில் எழுதுங்களேன். வீணாக இப்படிப் புகழ் பாடுதலில் இறங்காதீர்கள் ஐயா!" - என்று சிரித்துக் கொண்டே அவருக்குப் பதில் சொல்லிவிட்டு அந்தக் 'கவிதை'யையும் திருப்பிக் கொடுத்து அனுப்பியிருந்தான் சுகுணன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சிறிது காலம் பாண்டுரங்கனார் சுகுணனைப் பார்க்க வருவதற்குத் துணிவின்றியோ என்னவோ - வரவேயில்லை. அதற்குப் பிறகு 'ஆகாச வாணியில்' காலை வேளையில் அவருடைய கட்டைக் குரலில் அருள் வாக்கு ஒலிப்பதைத் தெருவில் போகும்போதோ கண்ணப்பா லாட்ஜின் எதிர்வீட்டு மாடியில் அதிகாலை ரேடியோ அலறும் போதோ, கேட்க நேருகையில் கம்பளிப்பூச்சி அரிப்பது போலப் பாண்டுரங்கனாரின் ஞாபகம் இலேசாக வந்து போகும். இப்போது இந்த முன்னிரவின் சுகமான வேளையை எல்லாம் பாண்டுரங்கனாரின் 'போரில்' சிக்கிக் கழிக்க வேண்டியிருக்குமோ என்று சுகுணன் வருந்தினான். அன்போடும், பிரியத்தோடும், 'ரூஃப்கார்டனில்' விருந்துண்ண அழைத்த துளசியின் அழைப்பைப் புறக்கணித்து மறுத்தனுப்பிய பாவம் தான் இப்படி உடனே பலித்துப் பாண்டுரங்கனாரின் வருகையாக நேர்ந்து விட்டதோ என்று கூட எண்ணினான் அவன்.

"வந்த காரியத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்கள் ஐயா! எங்கே இப்போதெல்லாம் இந்தப் பக்கத்தில் தென்படுவதேயில்லை? அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பிக்கள், டெப்டி செகரெட்டரிகள், எல்லாரும் நிறைய நண்பர்களாகிவிட்டார்கள் போலிருக்கிறது. அதனால் தான் சாதாரணமானவர்களுடைய கண்களில் படவே மாட்டேனென்கிறீர்கள்?" - என்று குத்தலாகக் கேட்டபோது அவனுடைய அந்தக் கேள்வியை அவர் எந்த விதத்திலும் குத்தலாகவோ நையாண்டியாகவோ எடுத்துக் கொண்டு தயங்கவேயில்லை; பெருமையுடனேயே பதில் சொன்னார்.

"அதையேன் கேட்கிறீர்கள்? 'பை - எலக்ஷனில்' - அதாவது துணைத் தேர்தலில் நின்றால் வெற்றியா, தோல்வியா என்று அறிந்து கொள்வதற்காக - உதக மண்டலத்துக்கே அழைத்துக் கொண்டு போய்விட்டார் ஒரு நண்பர். அங்கே ஒரு தனி பங்களாவிலே மூன்று நாள் கைரேகை எல்லாம் பார்த்து உறுதியாக நிற்கலாமென்று தெரிவித்த பின்புதான் அந்த நண்பருக்குத் தேர்தலில் நிற்பதற்கே துணிவு வந்தது..."

"தேர்தலிலே வெற்றி பெறக் கைரேகை பார்ப்பதை விடப் பொது மக்களின் நம்பிக்கையும் விசுவாசமும் யார் பக்கமிருக்கிறதென்று பார்ப்பதல்லவா முக்கியம்?" - என்று சுகுணன் கேட்ட கேள்விக்கு அவர் மறுமொழி கூறவில்லை. வேறு எதையோ பேசத் தொடங்கினார்.

"அதிருக்கட்டும்! நான் இப்போது வேறு ஒரு காரியமாக உங்களிடம் வந்தேன். திருவல்லிக்கேணி 'பைந்தமிழ் மன்றத்தின்' சார்பில் வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலையில் 'பல்பத்திரிகைக் காவலர்' நாகசாமியைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்தும் விழா ஒன்று நடக்க ஏற்பாடாகி வருகிறது. அமைச்சர் தலைமை தாங்குகிறார். காலை மலர் சர்மா அவர்கள் வரவேற்புக் குழுத் தலைவராயிருக்கிறார். நீங்களும் அந்த விழாவில் நாகசாமியைப் பாராட்டிச் சொற்பொழிவு ஆற்ற வேண்டும். மறுக்காமல் அவசியம் ஒப்புக் கொள்வீர்களென்று நினைக்கிறேன்."

"சொற்பொழிவாற்றுவது இருக்கட்டும் ஐயா! அதென்னவோ 'பல்பத்திரிகைக் காவலர்' - என்று நாகசாமியின் பெயருக்கு முன்னால் ஏதோ ஓர் அடைமொழி கூறினீர்களே; அதற்கென்ன அர்த்தம்?"

"அதுவா? விழா நிகழும் நாளில் நாகசாமி அவர்களுக்குப் பொது மக்கள் சார்பில் நாங்கள் ஒரு சிறப்புப் பட்டமளிக்கப் போகிறோம். அப்பட்டமே 'பல்பத்திரிகைக் காவலர்' - என்பது"

"சொல்வதற்கு என்னவோ போலிருக்கிறதே! 'கல் வைத்த மூக்குத்தி' - என்பது போல் நீங்கள் அவசரமாகச் சொல்லிய போது என் காதில் இது விழுந்தது. அதனால் தான் இரண்டாம் தடவையாகக் கேட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்" - என்று சொல்லிப் பிரிவதற்கு அடையாளமாகக் கையையும் கூப்பி விட்டுச் சுகுணன் அவரிடமிருந்து விடைபெற்று மெஸ்ஸுக்குச் செல்ல முயன்ற போதும் அவர் அவனை அவ்வளவு சுலபமாக விடவில்லை.

"சொற்பொழிவுக்கு என்ன சொல்லுகிறீர்கள்? நிகழ்ச்சி நிரலில் உங்கள் பெயரையும் சேர்த்து அச்சிட்டு விடுகிறேனே..."

"சொற்பொழிவைப் பற்றி என்ன? நாங்களெல்லாம் நாகசாமியின் நிறுவனத்திலேயே இருப்பவர்கள். நாங்களே நான் முந்தி நீ முந்தி என்று அவரைப் புகழ்வது நன்றாயிராது. புகழ்கிற காரியத்தை அருகிலேயே இருந்து பார்த்து பழகியவர்களிடம் ஒப்படைப்பதை விடப் பார்க்காத புதியவர்களிடம் ஒப்படைப்பது தான் பத்திரமானது..." - என்று சொல்லிக் கொஞ்சம் விஷமத் தனமான புன்முறுவலுடனேயே அந்த வேண்டுகோளை அவரிடம் மறுத்தான் சுகுணன்.

"இல்லை! இல்லை! அவசியம் நீங்கள் உரையாற்ற வேண்டும்" - என்று மன்றாடினார் பைந்தமிழ் நாவலர்.

"என்னவோ நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். அப்புறம் உங்கள் விருப்பம்" என்று நாசூக்காக அவரிடமிருந்து அவர் விடை கொடுப்பதற்கு முன்பே வலியக் கத்தரித்துக் கொண்டு மெஸ்ஸை நோக்கி நடந்து விட்டான் சுகுணன்.

மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு சொற்பொழிவாற்ற இணங்கிடவும் முடியாமல், கண்டிப்பாக முடியாது என்று சொல்லி மறுக்கவும் முடியாமல் அவன் தயங்கும்படியான வேண்டுகோளை அவனிடம் விடுத்திருந்தார் பாண்டுரங்கனார். 'என்னால் பேசமுடியாது, மாட்டேன்' என்று நேரடியாக மறுத்து விட்டால், 'உங்கள் விழாவில் நாலு வார்த்தை பேசச் சொன்னேன். மறுத்துவிட்டார்' - என்று நாகசாமியிடமே போய்த் தீ மூட்டுவார் பாண்டுரங்கனார். பேசுவதற்கோ அவனுக்கு விருப்பமில்லை. நிறுப்பதற்கு ஒரு சாதனையுமில்லாமல் மற்றவர்களின் சாதனைகளைத் தன் பெயரில் பணம் கொடுத்து வரவழைத்துக் கொண்டு அதற்காக வெட்கப்படாமல் நிமிர்ந்து நடக்கிறவர்களைச் சுயநலத்துக்காகச் சிலர் பாராட்டுவதும் பட்டம் கொடுப்பதும் போலியான காரியமென்று அவற்றை வெறுத்தான் அவன். நாகசாமிக்காக நடைபெறும் இந்தப் பாராட்டு விழாவிற்கான சகல செலவுகளையும் பாண்டுரங்கனார் நன்கொடை என்ற பெயரில் நாகசாமியிடமே வசூல் செய்திருப்பார் என்பதும் இரகசியமாக அவனுக்குத் தெரியும். இப்படி நிகழ்ச்சிகளையும், இப்படி மனிதர்களையும் சந்திக்கும் போது அல்லது கேள்விப் படும்போது சமூகம் எந்த மூலையிலோ அழுகியிருக்கிறது என்ற அதே எண்ணம்தான் அவனுள் உறுதிப்பட்டது. இந்தப் போலிகளை எதிர்த்து உரத்த சப்தமிட்டுப் பட்டினம் முழுவதும் கேட்கும்படி - பெரிய அபாயச் சங்கு போன்ற குரலில் உண்மையைப் பெரிதாய் முழங்கிக் கூற வேண்டுமென்று அவனுள் ஒரு தைரியம் குமுறியது. அதே சமயம் அந்தத் தைரியத்துக்கு எதிராக எங்கெங்கிருந்து நெற்றிக்கண்கள் திறக்குமென்று சிந்தித்த போது தயக்கமாகவும் இருந்தது.

மறுநாள் காலை அவன் அலுவலகத்துக்குள் நுழைந்து அறையில் போய் அமர்ந்ததுமே ரங்கபாஷ்யம் மானம், வெட்கம் எல்லாவற்றையுமே அறவே துடைத்தெறிந்து விட்டது போன்ற ஒரு வியாபாரப் புன்முறுவலோடு, "லெட் அஸ் ஃபர்கெட் தி பாஸ்ட்... நான் ஏதாவது தப்பாகப் பேசியிருந்தால் மன்னிச்சுடுங்கோ... நீங்களும் பத்திரிகையின் நன்மைக்காகத்தான் பாடுபடறேள். நானும் அதுக்காகத் தான் சிரமப்படறேன். நமக்குள்ளே சண்டை கூடாது" என்று வந்து குழைந்தார். அவருடைய இந்தக் குழைவுக்கு அர்த்தமே இல்லை என்பது சுகுணனுக்கு நன்றாகத் தெரியும். எதிரியின் மனத்தில் பகையை அறவே அமுக்கிவிட்டு எதிரி முன்னெச்சரிக்கையோ, பாதுகாப்போ அற்றிருக்கும் போது அவன் மேல் முழுப்பகையோடும் வைரத்தோடும் பாய்வது போன்ற அந்தரங்கக் குரோதத்தில் ரங்கபாஷ்யம் கெட்டிக்காரர். யாரிடமும் வெளிப்படையாக 'அன்பாபுலராகிக்' கெட்ட பெயரெடுக்கக்கூடாது என்று நினைக்கிற விளம்பர மனம் அவருடையது.

"எப்படி இதில் நினைப்பதற்கு ஒன்றுமில்லையோ அப்படியே மறப்பதற்கும் ஒன்றுமில்லை... உங்கள் காரியத்தை நீங்கள் செய்கிறீர்கள், என் கடமையை நான் செய்கிறேன்" என்று சுருக்கமாக அவருக்குப் பதில் சொல்லி அனுப்பினான் சுகுணன்.

ஒருவனை நேரடியாக எதிர்க்கவோ, பகைத்துக் கொள்ளவோ கூடத் திராணியில்லாத கோழைத்தனமான கெட்டவர்கள் தான் பட்டணத்தில் நிறைய இருக்கிறார்கள் என்று தோன்றியது. நண்பனைப் போலவும், வேண்டியவனைப் போலவும் பழக வசதி செய்து கொண்டு - அந்த வசதியின் மறைவில் உள்ளேயே இரகசியமாகப் பகையை வளர்த்துத் திடீரென்று ஆளை வீழ்த்தும் சில கொடிய நோய்களைப் போல் உருவாகும் நாகரிக எதிரிகளே எங்குமிருப்பதாகத் தோன்றியது சுகுணனுக்கு. ரங்கபாஷ்யத்தின் விரோதத்தை அவன் எப்படி பொருட்படுத்தி மதிக்கவில்லையோ அப்படியே சமரசத்தையும் பொருட்படுத்தி மதிக்கவில்லை. ரங்கபாஷ்யம் எவ்வளவு கெட்டிக்காரர் என்பது அவர் வந்து விட்டுப் போன பத்து நிமிஷங்களுக்குள்ளேயே தெரிந்தது. முதல் நாள் நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடாமல், ஆனால் முதல் நாள் நிகழ்ச்சியின் விளைவாகவே வந்தது போல் நாகசாமியின் கையெழுத்திட்டு ஒரு சுற்றறிக்கை வந்திருந்தது. அதில் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள் விளம்பர இலாகாவைச் சேர்ந்தவர்களோடு மரியாதையோடும் கண்ணியத்தோடும் ஒத்துழைத்து காரியாலயத்தின் விளம்பர வருவாய் பெருகுவதற்கு உதவி செய்ய வேண்டுமென்றும், விளம்பர இலாகாவோடு ஒத்துழைக்க மறுத்து முரண்படுகிறவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கக் காரியாலயத்தாருக்கு உரிமை உண்டென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பதினோரு மணிக்கு ரங்கபாஷ்யம் சுகுணனுடைய அறையில் வந்து சமரசம் செய்து கொள்வது போல் பேசிவிட்டுப் போயிருந்தாரென்றால் பதினொன்றடித்த பத்தாவது நிமிஷத்தில் ரங்கபாஷ்யத்திற்குச் சிறிதும் இதில் சம்பந்தமே இல்லாதது போல் நாகசாமியிடமிருந்து இந்த அறிக்கை வந்திருந்தது. இந்த அறிக்கையைத் தயார் செய்து அனுப்பும்படி நாகசாமியிடம் யோசனை கூறித் தூண்டி எல்லாம் செய்துவிட்டுத் தனக்கு இதில் சம்பந்தமே இல்லாதது போலவும் தான் யாரையுமே பகைத்துக் கொள்ள விரும்பாத - பயந்த சுபாவமுள்ள அப்பாவி போலவும் வந்து மன்னிப்புக் கேட்டுவிட்டுப் போன ரங்கபாஷ்யத்தின் முகத்தை மறுபடியும் நினைவு கூற முயன்றான் அவன். அப்படி முயன்ற போது அந்த முகத்தில் பசுத்தோல் விலகி ஓர் ஓரமாகப் புலியின் கொடுமை இலேசாகத் தெரிந்தது.

'மனிதர்களின் ஒரே திறமை 'சாகஸம்தான்' என்ற உண்மை பட்டினத்துக்கு எவ்வளவு பொருத்தமான மதிப்பீடு!' என்றெண்ணினான் அவன். தைரியம், புத்தி, நேர்மை, சத்தியம் எல்லாம் மனித குணங்கள் என்ற நிலைமை மாறிப் போய் என்ன குணம் என்று சொல்ல முடியாத - நல்லதா கெட்டதா என்று உறைத்துப் பார்த்து மாற்றுக் கண்டு பிடிக்க முடியாத சாகஸம் தான் நாகரிக மனிதனின் பொதுக் குணமாயிருப்பதாக உணர முடிந்தது. இந்தச் 'சாகஸமே' இப்படிப்பட்ட நகரங்களில் மனிதனின் ஒப்புயர்வற்ற 'திறமையாகப்' புகழப்படுகிறது இந்த சாகஸத்தில் வல்லவர்களாயிருக்கிற அரசியல்வாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பிரமுகர்கள், வியாபாரிகள் எல்லாரும் பட்டணமாகிய கடைவீதியில் நல்ல 'ஷோகேஸில்' வைத்து விற்கப்படுகிறார்கள். மற்றவர்கள் விலையாவதில்லை. மற்றவர்களுடைய அசல் திறமையும் அசல் உழைப்பையும் இந்தச் சாகஸங்களைப் போல் விரைந்து கவர்ச்சி செய்வதில்லை என்று சிந்தித்து மனம் நொந்தான் சுகுணன். திறமை தோற்று வெறும் சாகஸம் மட்டுமே வெல்கிற சமூகம் எவ்வளவிற்கு அழுகியிருக்க முடியுமென்பது எண்ணியபோது அந்த அழுகலை அளவிட முடியாது போல் தோன்றியது அவனுக்கு. ரங்கபாஷ்யமும், நாகசாமியும், பாண்டுரங்கனாரும், சந்திரசூடன் ஐ.சி.எஸ்.ஸும் கள்ளக் கடத்தல் கண்ணப்பாவும் இந்த விதமான சாகஸங்களின் வேறு வேறு உருவாக நின்று சமூகத்தை மயக்கும் கலையில் தேர்ந்துவிட்டவர்களாக அவனுக்குத் தோன்றினார்கள். இவர்களை எதிர்க்கும் பாமரர்களின் சத்தியம் கூட இவர்களது அசத்தியத்தை ஒன்றும் செய்ய முடியாது போலிருக்கிறதே என்று எண்ணியபோது அந்த ஆற்றாமை எண்ணத்தையே ஏற்று ஒப்புக் கொள்ள முடியாமலும் அவன் மனம் கொதித்தது.
-------------
continued in part 2 (chapters 8-14)
-----------------

This file was last updated on 19 Jan 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)