pm logo

தீபம் நா. பார்த்தசாரதி எழுதிய
நெற்றிக் கண் (சமூக நாவல் ), பாகம் 2


neRRikkan (social novel)
by tIpam nA. pArtacArati, part 2 (chapters 8-14)
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

நெற்றிக்கண் (சமூக நாவல்),
பாகம் 2 (அத்தியாயம் 8-14)
தீபம் நா. பார்த்தசாரதி


அத்தியாயம் - 8

சமூக வாழ்வில் ஏற்கெனவே எட்டுப்படிகள் ஏறிவிட்ட குடும்பங்களுக்குத்தான் ஒன்பதாவது படி அருகிலிருக்கிறதே ஒழிய முதல் படியில் கூட ஏற முடியாத குடும்பங்கள் இன்னும் அப்படியே தானிருக்க முடிகிறது.

சுகுணனுக்கும் ரங்கபாஷ்யத்துக்கும் பகை ஏற்பட்ட பின் ஓர் இரண்டு மாத காலம் காரியாலய வாழ்க்கையில் மிகவும் கசப்பான அனுபவங்கள் நிகழ்ந்தன. சுதந்திரமான மனப்பாங்கும் தன்னம்பிக்கையும் உள்ள ஒருவன் மற்றவர்களுக்கு அடங்கியோ கட்டுப்பட்டோ நடப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதை இந்த அனுபவங்களால் சுகுணன் நன்றாக உணர முடிந்தது. சுகுணனை 'ரூஃப் கார்டன்' விருந்துக்கு அழைக்க வந்திருந்த தினத்துக்கு ஒரு வாரம் கழித்துத் துளசி தன் கணவனோடு திடீரென்று டெல்லிக்குப் புறப்பட்டுப் போக வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்திருந்தது. சந்திரசூடன் ஐ.சி.எஸ். அவர்களின் சிபாரிசினாலோ அல்லது தயவினாலோ துளசியின் கணவனுக்கு டில்லியில் ஒரு பெரிய இன்ஜினியரிங் கம்பெனியில் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் மாதச் சம்பளம் வருகிறாப் போல உத்தியோகம் ஒன்று கிடைத்திருந்தது. இந்த உத்தியோகம் கிடைப்பதற்காகத்தான் நீண்ட நாள் நண்பரான சந்திரசூடன் வெளிநாட்டுப் பயணம் முடிந்து தற்செயலாகச் சென்னை வந்திருந்த போது அவரைக் கூப்பிட்டுக் குலாவி விருந்து கொடுத்து அவருடைய வெளிநாட்டு அனுபவங்களைக் கட்டுரைத் தொடராக வெளியிடுவதாய் வாக்களித்து, எல்லாம் செய்திருந்தார் நாகசாமி. ஏழைகளும் மத்தியதரக் குடும்பத்தினரும் பிரதிபலன் பாராமல் அன்புக்காகவும், உபசாரத்துக்காகவும் மனிதர்களைப் போற்றவும், விருந்து வைக்கவும், புகழவும் செய்கிறார்கள். பணக்காரர்களும், வியாபாரிகளுமோ, காரியமில்லாமல் எதையுமே செய்வதில்லை. காரியத்தைச் சாதித்துக் கொடுக்கிற சக்தியில்லாதவர்களுக்கும் எதையுமே அவர்கள் செய்வதில்லை. செய்வதை நேரடியாகச் செய்யாமல் நாசூக்காகச் செய்வதற்கும் அவர்களுக்குத்தான் தெரியும் என்பதைச் சுகுணன் மிக அருகிலிருந்து கண்டிருந்தான். எனவே நாகசாமி நினைத்த கணத்திலேயே தன் மாப்பிள்ளைக்கு இவ்வளவு பெரிய உத்தியோகம் தேட முடிந்ததைப் பற்றிச் சுகுணன் சிறிதும் ஆச்சரியமடையவில்லை. அவரால் இது முடியாமல் போயிருந்தால்தான் அவனுக்கு ஆச்சரியமாயிருந்திருக்கும். சமூக வாழ்வில் ஏற்கெனவே எட்டுப்படிகள் ஏறிவிட்ட குடும்பங்களுக்குத் தான் ஒன்பதாவதுபடி அருகிலிருக்கிறதே ஒழிய முதல் படியில்கூட ஏற முடியாத குடும்பங்கள் அப்படியே தானிருக்க முடிகிறது. ஏற்கெனவே எட்டுப்படி ஏறிவிட்ட சௌகரியமுள்ள குடும்பங்களின் அடுத்த தலைமுறை இளைஞர்கள் கழிசடைகளாகவே இருந்தாலும் - மெடிகல் காலேஜ் அட்மிஷன், என்ஜீனியரிங் காலேஜ் அட்மிஷன், பெரிய உத்தியோகம், வெளிநாட்டுப் பிரயாண வசதி, எல்லாமே எட்டாவது படியில் நிற்பவனுக்கு ஒன்பதாவது படிபோல் மிக அருகிலேயே இருக்கின்றன. ஆனால் முதல் படிக்கும் கீழே இருக்கும் சமையற்காரச் சர்மாவின் பிள்ளை சுந்து, தோட்டி முனுசாமியின் மகன் குப்பு, அப்பளமிடும் அம்மாளுவின் பெண் அலமு, போன்றவர்கள் இரண்டாவது படியில் கூடச் சரியாக ஏற முடிவதில்லை. இந்திய சமூக வாழ்வில் சோஷலிசம் என்கிற சமதர்ம மலர்ச்சி கூட எட்டுப்படி ஏறியவர்களுக்குத்தான் பயன்படுகிறதே ஒழிய முதல் படியிலிருந்து ஏங்குகிறவர்களுக்கு மேலே ஏற வசதியின்றி இருப்பதை எண்ணிச் சுகுணன் அடிக்கடி மனத்தில் வெதும்பியிருக்கிறான். இந்தச் சமதர்ம மலர்ச்சி வியாபகமாகவும், நன்றாகவும் பூரணமாகவும் ஏற்படுவதற்கு என்ன வழி செய்ய முடியும் என்ன வழி செய்ய வேண்டும் என்பது அவன் சிந்தனையில் ஒரு தாகமாகவே இருக்கிற நிலையைப் பெற்றிருந்தது. தந்தையின் பணம் துளசியின் கணவனை 'என்ஜீனியரிங்' படிப்புப் படிக்க வைக்கிற அளவு வசதி செய்தது. பின்பு மாமனாராகிய துளசியினுடைய தந்தை தம் செல்வாக்கினால் இரண்டாயிர ரூபாய்க்கு மேல் மாத வருமானம் வருகிறாற்போல் உத்தியோகம் தேடிக் கொடுத்து விட்டார். இப்படி இரண்டு செல்வாக்குகளுக்கு நடுவே இருக்கிற பிள்ளைகள் தான் சராசரி இந்திய சமூக வாழ்வில் சௌகரியத்தை அடைய முடிகிறதென்று தோன்றியது. சுகுணனுக்கு இருந்த காரியாலய வேதனைகளிலும் கசப்பான அனுபவங்களிலும் துளசியின் கணவனுக்கு உத்தியோகம் கிடைத்து விட்டதென்ற இந்தச் செய்தி கூடத் தெரிந்திருக்க நியாயமில்லை. துளசியே ஒருநாள் அதிகாலையில் இதச் சொல்லிவிட்டுப் போவதற்காக அவனைத் தேடி அறைக்கு வந்திருந்தாள். அப்போதிருந்த மனநிலையில் அவனால் அவளை மலர்ச்சியோடு வரவேற்று பேச முடியவில்லை. அவளாலும் அவன் முன் மலர்ச்சியோடு நின்று பேச முடியவில்லை. சொல்ல வந்ததைப் பேசுவதற்குச் சொற்களைத் தேடி நிற்பவள் போல் அவள் தயங்கினாள். தேடிய சொற்கள் வராமல் அழுகைதான் பொங்கிக் கொண்டு வந்தது அவளுக்கு. அவளுடைய அழுகை செவியில் ஒலிப்பதற்கு முன் கீழே தலையைக் குனிந்தவாறு மௌனமாயிருந்த சுகுணன், அந்த நிகழ்ச்சிக்கு மனம் இரங்கி மெல்லத் தலை நிமிர்ந்து,

"விடிந்ததும் விடியாததுமாக இங்கே வந்து இப்படி அழுவதற்கு என்ன வந்துவிட்டது இப்போது?" என்று மெல்ல வினவினான்.

"அவருக்கு டெல்லியில் உத்தியோகம் ஆகியிருக்கிறது."

"அவருக்கு என்றால் எவருக்கு?"

இந்த 'அவருக்கு' அவனுள் எரிச்சலூட்டியிருக்க வேண்டும் போல் ஒலித்தது அவன் கேள்வி. அந்தக் கேள்வியின் தொனி புரியாமல் அதற்கு எந்த விதத்தில் மறுமொழி கூறுவதென்று தயங்கினாள் துளசி. பின்பு 'அவருக்கு உத்தியோகமாகிவிட்ட'தென்று வாக்கியத்தின் மகிழ்ச்சியில் விருப்பாகவோ, வெறுப்பாகவோ தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ள விரும்பாதவளைப் போல, "அதுதான்... அப்பாவின் மாப்பிள்ளைக்கு டெல்லியில் உத்தியோகம் ஆகிவிட்டது..." என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள். அவள் அப்படிக் கூறிய உடனே சுகுணனும் தன் கடுமையை விடாமல், "அப்பாவின் மாப்பிள்ளைக்கு என்றால்? ஓ... புரிகிறது? அதாவது 'உன் கணவருக்கு' டெல்லியில் உத்தியோகமாகிவிட்டதென்று என்னிடம் சொல்லிவிட்டுப் போக வந்திருக்கிறாய் இல்லையா?" என்று குத்தலாக வினவினான். ஒன்றும் சொல்ல முடியாமல்... சொல்லத் தோன்றாமல் - 'இப்படி நீங்கள் மேலும் ஒரு வார்த்தை பேசினால் கூட இனி என்னால் தாங்க முடியாது. நான் அழுதுவிடுவேன்' என்பது போல் ஏக்கத்தோடு அவனைப் பார்த்தாள் துளசி. அவனும் அமைதியாக அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். இடையில் நிலவிய மௌனமே அப்போது இருவர் உணர்வுகளையும் பேசியது.

"அவர் தான் முதலில் போகிறார். நான் இரண்டு வாரம் கழித்துப் போக வேண்டியிருக்கும். டெல்லியில் குடியிருக்க இடமெல்லாம் கிடைத்து அவரிடமிருந்து தந்தி வந்ததும் அப்பா என்னைக் கொண்டு போய் விட ஏற்பாடாகியிருக்கிறது..."

"பரவாயில்லை இதற்காக எல்லாம் இனி நான் கவலைப் பட முடியாது துளசி. இது உன் வாழ்க்கையின் சொந்தக் காரியம்."

"இன்னும் எனக்கு வாழ்க்கையே ஏற்படவில்லை. அதற்குக் காரியங்களும் சொந்தமாக இல்லை. நான் நினைத்த வாழ்வு என் மனத்திலே கருகிவிட்டது."

"இருக்கலாம்! ஆனால் இனிமேல் உலகத்துக்கு எடுத்துச் சொல்ல முடியாத ஊமை ஏமாற்றம் இது. இதை நீ மறந்துவிடப் பழகிக் கொள்வது நல்லது..."

"ஆறுதலாக இரண்டு வார்த்தை சொல்லமாட்டார்களா? இப்படிக் கடுமைக்கும் உதாசீனத்துக்கும் நான் பாத்திரமில்லை. இவற்றை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது...!"

அவன் பதில் பேசாமல் இருந்தான்.

"தயவு செய்து ஏதாவது ஆறுதலாகச் சொல்லி எனக்கு விடைகொடுங்கள்."

மேஜை மேல் கிடந்த அரைக் காகிதம் ஒன்றை எடுத்து அதில் எதையோ எழுதி மௌனமாக அவளிடம் நீட்டினான் சுகுணன். அவள் அதை வாங்கிப் படித்தாள்.

"வீரர்களின் கம்பீரமான தோள்களை அலங்கரிக்க வேண்டிய மணமாலைகள் சந்தர்ப்ப வசத்தால் கோழைகளின் தளர்ந்த கைகளில் சூட்டப்பட்டு விடுவதும் உண்டு" என்று அதில் எழுதியிருப்பதைப் படித்து விட்டு நீர் திரையிட்டு மல்கி மறைக்கும் விழிகளால் அவனை ஏக்கத்தோடு பார்த்தாள் அவள்.

"இதுதான் மீண்டும் உங்கள் பதிலா?"

அவன் ஆமாம் என்பது போல் மௌனமாகத் தலையை அசைத்தான். அவள் நடைப்பிணமாக வெளியேறினாள். சில கணங்களில் வாயிலில் கார் புறப்படும் ஓசை கேட்டது. அவன் எழுந்து ஜன்னல் பக்கமாகத் திரும்பிக் கண்ணாடியைக் கழற்றி விட்டு உள்ளே விழிக்கடையில் அரும்பியிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். ஏதோ தோன்றி மாடி வராந்தா வரை வந்து அவன் தெருவருகே பார்த்த போது அவளுடைய கார் கண்பார்வைக்குத் தென்படாமல் மறைந்திருந்தது. பெருமூச்சு விட்டபடி அறைக்குத் திரும்பி வந்து உட்கார்ந்தான் சுகுணன். இதற்குப் பின் சில மணி நேரங்கள் அவனுக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. துளசிக்கு அவளுடைய வாழ்வின் பொறுப்பையும் நிலையையும் உணர்த்தவே அவன் அப்படிக் கடுமையாக நடந்து கொண்டான். அவளைப் போலவே அவனும் உருகி ஏங்கிப் பேசிக் கொண்டிருந்ததால் இருவருடைய பேச்சுக்கும் ஒரு முடிவே இராது. அப்படிப் பேசினால் அதன் பின் அவளாலும் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் டெல்லியில் போய் நிம்மதியாக இருக்க முடியாது. உணர்ச்சி மயமாகவும், பிரித்தெடுக்க முடியாதபடியும் தன்மேல் பிரியம் வைத்துவிட்ட அவளுக்கு அவளுடைய புதிய நிலைமையை உணர்த்த வேண்டிய கடமை அவனுக்கு இருந்தது. அவள் தன்னைச் சுற்றி சுற்றித் திரிவதைத் தவிர்க்க வேண்டிய பொறுப்பு அவள் மீதிருந்த அதிக அன்பின் காரணமாகவே அவனுக்கு வந்திருந்தது இப்போது. அந்தக் கடமையை அவன் செய்தான். அவள் அதைப் புரிந்து கொள்ள முடியாது - புரிந்து கொள்ளவும் வேண்டாமென்பது தான் அவன் கருத்து. முதலில் தனியே அவனைச் சந்திக்க வந்த இரண்டு தினங்களுக்குப் பின் மறுபடியும் தன் கணவனோடு ஒருமுறை விட்டுக் கொடுக்காமல் உடன் வந்தவள் போலத் தோன்றினாள் அவள்.

"முதலில் இப்போது நான் மட்டும் தான் புறப்பட்டுப் போவதாயிருந்தது. அப்புறம் மாமா யாரோ தெரிந்தவர் மூலம் குடியிருக்க இடத்துக்குக் கூட ஏற்பாடு செய்து விட்டார். அதனால் துளசியும் இப்போது என்னுடனேயே வருகிறாள்" என்றான் துளசியின் கணவன். துளசி ஒன்றும் பேசவில்லை. ஏதோ பொம்மை போல உடன் வந்திருந்தாள்.

"கங்ராஜுலேஷன்ஸ் விஷ்யூ ஆல்... சக்ஸஸ்" என்று துளசியின் கணவனிடம் ஒரு முறைக்காக மகிழ்ச்சி தெரிவித்தான் சுகுணன். துளசி ஒன்றுமே பேசாமலிருப்பதைக் கண்ட அவள் கணவன், "என்ன துளசி? நீ ஒன்றுமே பேச மாட்டேனென்கிறாயே?" என்று அவளைக் கேட்டே விட்டான்.

அந்த வித்தியாசம் அவன் மனத்திலே பெரிதாகி விடாமல் ஒப்புக்கு ஏதோ பேச முயன்றாள் துளசி. அந்தப் பேச்சில் மனம் இல்லை. உணர்வின் பிரதிபலிப்பும் இல்லை. விடைபெறும் போது கணவனின் சொற்களோடு சேர்த்தே அவள் சொற்களும் இணைந்து ஒலிக்கும்படி ஏதோ சொன்னாள். அவனும் வாசல் வரை சென்று கார்க் கதவருகே நின்று வழியனுப்பினான். மறுநாளோ அதற்கடுத்த நாளோ இரவு விமானத்தில் கணவனோடு டெல்லிக்குப் புறப்பட்டு விட்டாள் துளசி. நாட்கள் யாரோ மந்திரம் போட்டு ஓடச் சொன்னாற் போல ஓடிவிட்டன. பெண்ணையும் மாப்பிள்ளையையும் டெல்லியில் குடிவைப்பதற்காக உடன் சென்றிருந்த நாகசாமி சந்திரசூடன் ஐ.சி.எஸ். அவர்களின் பிரயாணக் கட்டுரைத் தொடரை உடனே பிரசுரிக்க ஏற்பாடு செய்யுமாறு அங்கிருந்தே சுகுணனுக்கு ஒரு 'எக்ஸ்பிரஸ் டெலிவரி' லெட்டரும் எழுதிவிட்டார். கடிதத்தை அப்படியே காலைமலர் சர்மாவுக்குக் கொடுத்தனுப்பி விட்டான் சுகுணன். கட்டுரைத்தொடரை அடுத்த வாரமே வெளியிடுவதாக அறிவிப்புப் போட வேண்டுமென்று சுகுணனை வற்புறுத்தினார். கட்டுரைத்தொடர் அடுத்த வாரமே வெளிவருமென்று அதிக ஆர்வத்தோடு சர்மா நாகசாமிக்குத் தந்தியும் கொடுத்து விட்டார். பூம்பொழில் இதழில் வெளியிடத் தகுதி உண்டா இல்லையா என்று நிர்ணயிக்கும் பொறுப்பை அந்தப் பிரயாணக் கட்டுரை விஷயத்தில் சுகுணன் மேற்கொள்ள விரும்பவில்லை. அது நாகசாமியின் காரிய ஆசை என்றோ, சர்மாவின் பேராசை என்றோ கருதி விட்டு விட்டான். ஏற்கெனவே சர்மா நாகசாமியிடம் 'சந்திரசூடன் ஐ.சி.எஸ்.ஸின் கட்டுரைகளை வெளியிடுவதில் சுகுணனுக்கு அவ்வளவாக விருப்பமில்லை' என்று சொல்லிக் கோள் மூட்டியிருப்பார் போலிருந்தது. அதற்குப் பிறகு நாகசாமி இரண்டொரு முறை சுகுணனிடம் அழுத்தமாகவும் வன்மையாகவும் பேசியதிலிருந்து இது தெரிந்தது. ரங்கபாஷ்யம், சர்மா இருவருமே தன்னைப் பற்றி நாகசாமியிடம் கோள்மூட்டி நெருப்பு வைத்து வருவதாக அவனால் அநுமானிக்க முடிந்திருந்தது. அந்தக் கட்டுரைத் தொடரைப் பற்றிய உண்மைக் கருத்தை இப்போதும் அவன் தெரிவித்தால், 'கட்டுரையை வெளியிடச் சுகுணனுக்குச் சம்மதமில்லை' என்றே மீண்டும் இரகசியமாக நாகசாமிக்கும் கடிதம் எழுதினாலும் எழுதி விடுவார் சர்மா. நாகசாமியைக் காக்கை பிடிப்பதில் சர்மாதான் அந்தக் காரியாலயத்தில் முதல் பரிசு வாங்கத் தகுதியானவர். நாகசாமி என்றைக்குப் பிறந்தார், அவருடைய பிறந்த நாள் எந்த மாதம் எந்தத் தேதியில் எந்த நட்சத்திரத்தில் வருகிறதென்று சுகுணனுக்கோ டைம்ஸ் நாயருக்கோ தெரியாது. ஆனால் சர்மாவுக்கு இம்மாதிரி விஷயங்களில் அதிகமான கவனம் உண்டு.

நாகசாமியின் பிறந்த நாள் என்றைக்கோ அன்றைக்கு அதிகாலையிலேயே ரோஜாப்பூ மாலையும் கையுமாக சாந்தோமில் அவருடைய பங்களா வாசலில் போய் நிற்பார். இப்படிக் காரியங்களால் நாகசாமியைச் சரியாகக் குளிப்பாட்டி வைத்திருப்பவர் அவர். சுகுணனோ இது போன்ற செயல்களை அசிங்கமாகக் கருதுபவன். 'பாரதியார் பிறந்த தினத்தைப் போலவோ, விவேகானந்தர் காந்தியடிகள் பிறந்த தினங்களைப் போலவோ' நாகசாமியை போன்ற சோம்பேறிப் பணக்காரர்களின் பிறந்த தினத்தையும் கொண்டாடுவது அசிங்கம் என்பது அவன் கருத்து. பிறந்த தினத்தைக் கொண்டாடும் படியாக இந்தச் சுயநலவாதிகள் தேசத்துக்கு எதுவும் செய்வதில்லை என்று நினைப்பவன் அவன். இவர்கள் சுயநலத்துக்காகப் பணம் சேர்ப்பதும் செல்வாக்குச் சேர்ப்பதும் சந்ததிகளுக்குச் சொத்து மீதப் படுத்தி வைத்து விட்டுப் போவதும் தவிர இவர்கள் தேசத்துக்குச் செய்யும் தொண்டு ஒன்றுமில்லை என்றெண்ணி இவர்களை வெறுத்தான் அவன். பத்திரிகைத் தொழிலைப் பற்றி 'ஃபோர்த் எஸ்டேட்' என்றும் 'பேனா வீரனின் சத்திய யுத்தம்' என்னும் இலட்சியவாதிகளின் புத்தகங்களில் வாசித்தும், சொற்பொழிவுகளில் கேட்டும் இளமையிலேயே அதில் நாட்டம் கொண்டவன் அவன். அந்தத் தொழிலில் நுழைந்து பார்த்த பின்பு இப்போதோ தன்னம்பிக்கை இல்லாதவர்களும், இலக்கிய உணர்ச்சியே அற்றுப் போனவர்களும் அறிவின்மையினால் புத்தியிலே பேடிமைப் பட்டுப் போனவர்களுமாக சர்மாவைப் போல் பலர் அதில் நிறைந்திருப்பதைப் பார்த்து நொந்து போயிருந்தான் அவன். 'திலகரும், பாரதியாரும், சத்திய வேட்கையோடு பத்திரிகை நடத்திய தேசமா இது?' என்று அவனுக்கே சந்தேகமாயிருந்தது. எனினும் இந்தச் சூழ்நிலையைப் பார்த்து அவனுடைய நக்கீர தைரியம் பெருகியதே ஒழியச் சிறிதும் குறையவில்லை. ஒரு பத்திரிகையாளனுக்கு முக்கியமான தேவை நிறையச் சம்பளமோ, போக வரக் காரோ, டெலிபோன் பங்களா வசதிகளோ அல்ல; தன்னம்பிக்கைக்கு அழிவு வரும் போது இவற்றையெல்லாமே துச்சமாக மதித்துக் கொண்டு நிலைமையைத் 'தூ' என்று தள்ளி விட்டுக் கொள்கையோடும் சத்தியத்தோடும் நிமிர்ந்து விலகி நிற்கிற தைரியம் தான் வேண்டும் என்பதை ஆணித்தரமாக உணர்ந்திருந்தான் அவன். சந்தையில் மீன் கடை வைத்திருப்பவர்களுள் இருப்பதைப் போன்ற கீழ்த்தரமான பெருந்தன்மை கூட இங்கே இல்லையே என்று உள்ளூர வருந்தினான் அவன்.

துளசியும் டெல்லிக்குப் போய்விட்ட பிறகு அவன் தன் பாசத்தையோ அன்பையோ, கருணையையோ செலுத்துவதற்குத் தகுதியான மனிதர்கள் யாருமில்லை. துளசியிடம் குத்தலாகவோ ஆத்திரமாகவோ பேசினால் கூட அந்தப் பேச்சின் மறுபுறமாக அவன் மனத்தில் கருணையும் பிரியமும் நிரம்பியிருக்கும். இப்போதோ காரியாலய அநுபவங்களும், ரங்கபாஷ்யம் மறைமுகமாக அவனுக்குச் செய்த கெடுதல்களும் அவனை மிகவும் கடுமையாகவும் காலூன்றி நின்ற தீமையை எதிர்த்துப் போரிடும் சக்தியைப் பெற்ற கொள்கை மறவனாகவும் ஆக்கியிருந்தன. யார் எத்தனை உயரத்திலிருந்து நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று அழுத்திச் சொல்லும் - அடித்துச் சொல்லும் நெஞ்சுரத்தையும், சொல்லுரத்தையும், கொள்கை மறங்களாக போற்றினான் அவன். இந்த மாறுதல்களாலும், இதே சமயத்தில் அவன் பூம்பொழிலில் எழுதியிருந்த ஒரு காரசாரமான தலையங்கத்தினாலும், அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் மகாநாட்டைச் சென்னையில் நடத்தி உழைக்கும் பத்திரிகையாளர் தலைவர்களாகிய கோஷ் முதலியவர்களை வரவழைத்துப் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் பெரும் பத்திரிகை முதலாளிகளுக்கு எதிராகச் சில தீர்மானங்களை நிறைவேற்றியதாலும் - நாகசாமி அவனைத் தம் எதிரியாகக் கருதத் தொடங்குகிற சூழ்நிலை படிப்படியாக மிகச் சில வாரங்களிலேயே உருவாகிவிட்டது.

அந்தச் சமயத்தில் முன்பு தேசிய இயக்க காலத்தில் பல முறை சிறை சென்றவரும் பாரதி பாடல்களுக்குத் தடை இருந்த காலத்திலேயே அதைத் தெருத் தெருவாகப் பாடிச் சென்றவருமாகிய மகாதேவன் என்ற அசல் தியாகி ஒருவர் தம்முடைய சிறிய முதலீட்டை வைத்து 'நேஷனல் டைம்ஸ்' - என்ற ஆங்கிலத் தேசிய வார இதழ் ஒன்றை சென்னையிலிருந்து தொடங்கியிருந்தார். பின்பு நாளடைவில் அது தினசரியாகியது. அந்தரங்க சுத்தியோடும் உண்மைத் தேசிய உணர்வுடனும் அவர் தொடங்கியிருந்த அந்தப் பத்திரிகைக்கு 'நியூஸ் பிரிண்ட்' காகிதம் போதுமான அளவு கிடைக்கவில்லை. காகிதத்தை வாங்கிப் பத்திரிகை அடிக்க அவரிடம் வசதியில்லை. இந்த நிலைமையை ஒரு நாள் சுகுணனிடம் சொல்லி வருந்தினார் தியாகி மகாதேவன். சுகுணனுக்கு இது வியப்பை அளித்தது. சினிமா நட்சத்திரங்களின் படங்களை அச்சிட்டுப் படிக்க ஒன்றுமில்லாமல் பார்க்க மட்டுமே பத்திரிகை நடத்துபவர்களுக்குக் கூட டன் டன்னாக நியூஸ் பிரிண்ட் வழங்கும் அரசாங்கம் தேசிய இலட்சியத்தை முன் வைத்துப் பத்திரிகை நடத்தும் ஒரு நல்லவருக்குச் சாதாரண வசதியைக் கூடத் தராததைக் கண்டு வருந்திய அவன் 'விற்கிற பிரதிகளுக்கு மேல் பல மடங்கு அதிகமாகப் பொய்க் கணக்குக் காட்டி நியூஸ் பிரிண்ட் காகிதத்தை மலிவில் ஏராளமாக வாங்கிப் பெரும்பகுதியான மீதத்தை மிக அதிகமான கள்ள விலைக்கு விற்கிற பலரை வாழவிட்டு இம்மாதிரி நல்லவர்களுக்கு அரசாங்கம் உதவாததைக் கண்டித்துப் பொதுவாக ஒரு தலையங்கம் பூம்பொழிலில் எழுதியதோடு அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் யூனியன் வெளியீடான 'தி வாய்ஸ் ஆஃப் ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட்'டிலும், இது பற்றி ஒரு கண்டனக் கடிதம் வெளியிட ஏற்பாடு செய்திருந்தான். இதன் பலனாகக் குறைபாடு உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுத் தியாகி மகாதேவனுக்கு நியூஸ் பிரிண்ட் கிடைக்க வழி பிறந்தது. தாமே இரகசியமாகச் செய்து கொண்டிருக்கிற ஒரு காரியத்தைக் கண்டித்துத் தம் பத்திரிகையிலேயே தலையங்கம் வந்ததை நாகசாமி அவ்வளவாக இரசிக்கவில்லை. மேலும் நாகசாமியை ஒத்த பெரும் பத்திரிகை முதலாளிகளான பண முதலைகள் சிலரும் இந்தத் தலையங்கத்தைக் கண்டித்துக் கூறி நாகசாமியை நெருக்கினார்கள். நாகசாமி ஆத்திரமடைந்தார். உடனே 'மாருதி பப்ளிகேஷன்ஸ்' குரூப் வெளியீடான எந்தப் பத்திரிகையின் ஆசிரியரும் நிர்வாகத்தைக் கலந்து கொள்ளாமல் எதையும் எழுதலாகாதென்ற சுற்றறிக்கை நாகசாமியின் கையெழுத்திட்டு எல்லாருக்கும் வந்தது. கெடுபிடிகள் அதிகமாயின.

'வீக் எண்ட் எடிடோரியல் கான்ஃபரன்ஸ்' என்ற பேரில் வார இறுதியில் சனிக்கிழமை தவறாமல் ஆசிரியர் குழுவின் கூட்டம் ஒன்றை ஏற்படுத்தி அதில் யாரையும் பேசவிடாமல் வாயடைத்து நாகசாமி கெடுபிடிகள் செய்தார். பத்திரிகைகளில் தலையங்கங்கள் எல்லாம் அவர் குரலாகவே வெளிவந்தன. எதைக் கேட்டாலும், "நாங்கள் சம்பளம் கொடுக்கிறோம். நீங்கள் வேலை செய்கிறீர்கள்" என்று பதில் கூறப்பட்டது. சுகுணன் தானாக மனம் வெறுத்து அங்கிருந்து வெளியேறி விட வேண்டும் போலக் காரியங்கள் எல்லாம் நடந்தன. 'இல் ட்ரீட்மெண்ட்' என்னும் அவமரியாதைப் படுத்தல் மெல்ல மெல்ல வேண்டுமென்றேயும், தற்செயலாய் நடப்பது போலவும் செய்யப்பட்டது. ஒருநாள் காரியாலய உபயோகத்துக்காக இரண்டு ரைட்டிங் பேடும் - ஒரு கலர்ப் பென்சிலும் வேண்டுமென்று வழக்கம் போல ஒரு துண்டுத் தாளில் குறித்துக் கொடுத்து 'விளம்பர நிர்வாகி ஸ்டோர்ஸ் இன்சார்ஜ்' ஆகிய ரங்கபாஷ்யத்துக்கு அனுப்பினான் சுகுணன். ரங்கபாஷ்யம் அந்தத் துண்டுத் தாளை வாங்கி வைத்துக் கொண்டு அதை எடுத்துச் சென்ற சுகுணனின் ஊழியனிடம், "என்னப்பா இது? தினம் தினம் கலர்ப்பென்சிலும், நோட்புக்கும் கேட்கிறாங்க! இதென்ன ஆபீஸா, தர்ம சத்திரமா?... கலர்ப் பென்ஸிலையும் நோட்புக்கையும் வெளியிலே எங்கேயாவது கொண்டு போய் வியாபாரம் பண்றாங்களா என்ன? பெரிய நியூஸன்ஸா இல்ல போச்சு. சரி! சரி அப்புறம் இருந்தாப் பார்த்து அனுப்பறேன்னு போய்ச் சொல்லு..." என்று நாகரிகமில்லாமல் பேசினாராம். அன்றைக்குச் சாயங்காலமே ஏதோ காரியமாக அப்போது தயாராகிக் கொண்டிருந்த அடுத்த வாரத்துப் பூம்பொழிலின் 'மேக்அப் செய்த பாரம்' - ஒன்றை வாங்கி வருமாறு தன் ஆள் ஒருவனைச் சுகுணனிடம் அவன் அறைக்கு அனுப்பியிருந்தார் ரங்கபாஷ்யம்.

"ஃபாரம் கேட்கிறதுக்கு - இவர் யாருடா? கண்ட கண்ட மடையன்லாம் எடிடோரியலில் தலையிடற மட்டமான ஆபீஸாப் போச்சு இது! ஃபாரத்தை அவங்களே பார்த்துக்குவாங்களாம்னு போய்ச் சொல்லு..." - என்று மிக மிகக் கடுமையாக அந்த ஆளிடம் பதில் சொல்லி அனுப்பிவிட்டான் சுகுணன். வழக்கமாக இப்படிச் சந்தர்ப்பங்களில் தேடி வந்து, 'லெட் அஸ் ஃபர்கெட்" - (நாம் இதை மறந்துவிடுவோம்) சொல்லும் ரங்கபாஷ்யம் அன்று வரவே இல்லை. கலர் பென்ஸிலும், ரைட்டிங் பேடும் மட்டும் மறுநாள் காலையில் அவன் காரியாலயத்துக்கு வந்த போது அவன் மேஜைமேல் தயாராகக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தன. பத்திரிகையில் அன்று அச்சாக வேண்டிய பகுதிக்குரிய விஷயங்களில் சினிமா விமர்சனமும் இருந்தது. சினிமா விமர்சனத்தை வழக்கமாக எழுதுகிறவர் இரண்டு வார லீவில் போயிருந்ததனால் சுகுணனே அந்த வார விமர்சனத்துக்குரிய படத்தைப் பார்ப்பதற்காகப் பகல் காட்சிக்குப் போய் வந்தான். பகல் காட்சி முடிந்து தியேட்டருக்கு அருகிலிருந்த சிற்றுண்டி விடுதியில் காப்பியையும் முடித்துக் கொண்டு அவன் காரியாலயத்துக்குத் திரும்பவும் வந்த போது மாலை 6 மணி ஆகியிருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் வெளி வந்த ஆங்கிலப் படம் ஒன்றிலிருந்த உத்திகளையும், அதே சமயத்தில் சென்னையில் மாம்பலத்தில் ஒரு தியேட்டரில் பகல் காட்சியாக வந்த வங்காளிப் படம் ஒன்றின் கதையையும் திருடி அவற்றைத் தமிழில் எந்த அளவுக்குக் கெடுக்க முடியுமோ அந்த அளவுக்குக் கெடுத்து இந்தப் படத்தை எடுத்துத் தமது சொந்தக் கற்பனை என்றும் டமாரமடித்துக் கொண்டிருந்தார் இதன் தயாரிப்பாளர்.

"தமிழில் இவ்வளவுதான் கெடுக்க முடியும் போலும்" - என்ற தலைப்புப் போட்டு அதற்கு ஒரு விமர்சனம் எழுதி ஃபோர்மெனிடம் கொடுத்துக் கம்போஸ் செய்ய சொல்லிவிட்டு மாலையில் அறைக்குப் புறப்பட்டு விட்டான் அவன். விமர்சனம் அவனுடைய கடுமையான தாக்குதல்களோடு அடுத்த வாரத்துப் பூம்பொழிலிலும் வெளிவந்து விட்டது.

பத்திரிகை வெளியான தினத்தன்று காலை பதினொரு மணிக்கு அவன் அலுவலகத்துக்குள் நுழைந்ததும் "சார் நீங்க வந்ததும் உடனே வீட்டுக்கு ஃபோன் பண்ணச் சொல்லி ஐயா சொல்லியிருக்கிறார்..." என்றாள் டெலிபோன் ஆப்ரேடர். அறைக்குள் போய் நாகசாமிக்கு டெலிபோன் செய்தான் சுகுணன். நாகசாமி பேசினார். குரல் மிகவும் கடுமையாயிருந்தது.

"இந்த வாரம் சினிமா ரெவ்யூ எழுதியிருக்கிறது யாரு?..."

"ஏன்? நான் தான் எழுதினேன் சார்..."

"ஐ ஆம் வெரி ஸாரி மிஸ்டர் சுகுணன்! எனக்குத் தெரிந்திருந்தால் இந்த விமர்சனம் வந்திருக்கவே விட மாட்டேன். ஸி... வி ஆர்... ரன்னிங் எ பிஸினஸ். பிஸினஸ் பீப்பிளைப் பகைச்சுக்கறாப்பல எழுதிடறது சுலபம். ஆனால் பத்திரிகைக்கு அது எவ்வளவு கெடுதலை உண்டாக்கும்னு உங்களுக்குத் தெரியுமோ?"

"எனக்கு நியாயம் என்று பட்டதைத்தான் எழுதினேன்."

"இது நியாயமே இல்லை! இலட்ச இலட்சமாகச் செலவழிச்சுப் படம் எடுத்தவனுக்குப் பெரிய இன்ஜஸ்டிஸ்! வருஷத்துக்கு எழுபத்தையாயிர ரூபாய் அட்வர்டிஸ்மென்ட் இந்தப் 'பார்ட்டி'யிடமிருந்து மட்டும் நமக்கு வருகிறது என்பது உமக்குத் தெரியுமோ! இல்லையோ? வர வர உங்க போக்கு ஒண்ணும் சரியாப்படலை எனக்கு. சர்மாவும் ரங்கபாஷ்யமும் உங்களைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கா. அதெல்லாம் நிஜம்னுதான் நான் இப்ப நினைக்க வேண்டியிருக்கு. வேறென்ன செய்யறது?" என்று கொதிப்போடு வினாவிவிட்டு அவன் பதிலையே எதிர் பாராதவராக டெலிபோனை 'டக்' என்று முகத்தில் அறைந்தாற் போல் வைத்து விட்டார் நாகசாமி. சுகுணன் எத்தனையோ விதமாகச் சிந்தித்துப் பார்த்தும் அந்தப் படம் குறையற்ற நல்ல படம் என்று விமர்சனம் எழுத வழியே இருப்பதாகத் தோன்றவில்லை. மனச்சாட்சியோடு தான் தன் கடமையை நிறைவேற்றியிருப்பதாக அவன் உணர்ந்தான். அதனால் நாகசாமியின் கோபத்துக்கு அவன் பயப்படவில்லை. அவருக்குக் கோபமூட்டித் தூண்டி விடுகிறவர்களைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை. ஆனால் அன்றிலிருந்து காரியாலயத்தில் அவனுக்கு மறைமுக அவமரியாதைகள் அதிகமாயின. இரண்டு நாள் கழித்து ஒரு நாள் காலையில் அவன் காரியாலயத்துக்கு வந்து அறைக்கு நுழைந்த போது டெலிபோன் இலாகா ஊழியர்கள் உள்ளே ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்த போது,

"இந்த லயனை எடுத்துடச் சொல்லி ஆர்டருங்க. இந்த ரூமுக்கு டெலிபோன் தேவையில்லைன்னு சொல்லிட்டாங்க. ரங்கபாஷ்யம் சாருக்கு இன்னொரு டெலிபோன் இருக்கட்டும்னு இதை அவர் டேபிளுக்கு 'ஷிப்ட்' பண்ணச் சொல்லிட்டாங்க" என்று பதில் கிடைத்தது. கேட்க என்னவோ போலிருந்தாலும் சுகுணன் இதைப் பொருட்படுத்தவில்லை. இதனால் எல்லாம் ஒரு பத்திரிகையாளனின் உள்ளே ஜ்வலித்துக் கொண்டிருக்கிற நெஞ்சக்கனல் அணைந்து விடுமென்று நாகசாமி நினைப்பது தான் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது அவனுக்கு. சௌகரியங்களை இழக்க வைத்து அவமானப்படுத்துவதன் மூலம் அதைச் செய்கிறவர்கள் தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களே ஒழிய அந்தச் சௌகரியங்களை இழக்கும் தீரனை அவர்களால் தாழ்த்திவிட முடியாதென்று நம்பினான அவன். அவனுடைய அறையில் டெலிபோனை அகற்றிக் கொண்டிருத அதே வேளையில் பக்கத்து அறையில் சர்மா டிரான்ஸிஸ்டரை வைத்து உற்சாகமாகப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். உள்ளேயிருந்தவர்கள் டெலிபோனை நீக்கி எடுத்துக் கொண்டு வருகிறவரை அவன் வெளியே நிற்க வேண்டியதாயிற்று.

அவர்கள் போனதும அவன் அறைக்குள் போய் அமர்ந்தான். கம்போஸுக்குக் கொடுக்க வேண்டியவற்றை எடுத்துச் சரிபார்த்துத் திருத்திய பின் - அதை எடுத்துக் கொண்டு போவதற்காகப் ஃபோர்மனை அழைக்கலாமென்ற நினைவில் ஏதோ ஞாபகமறதியாக ஃபோன் இருந்த இடத்தை நாடிய கை ஏமாற்றத்தோடு மீண்டது. பைனைக் கூப்பிட்டுக் கொடுக்கலாமென்று - நீண்ட நாள் உபயோகிக்காமல் உள்ளே டிராயரில் கிடந்த மேஜை மணியை எடுத்து மேஜை மேல் டெலிபோனிருந்த இடத்தில் வைத்துத் தட்டினான். மணி ஓசைக்குப் பதில் இல்லை. எழுந்திருந்து வெளியே வந்து பையனைத் தேடியும் அவன் அகப்படவில்லை. சுகுணன் இவ்வாறு பையனைத் தேடிக் கொண்டு நின்ற போது சர்மா அடுத்த அறையிலிருந்து வெளிவந்து,

"என்ன தேடறேள்? பையனை இங்கிருந்து சர்க்குலேஷன் டிபார்ட்மெண்டுக்கு மாத்திட்டதாகக் கேள்விப்பட்டேனே?" என்று குரலைத் தயங்கினாற் போல இழுத்துப் பேசினார்.

"நானாவது இந்த டிபார்ட்மெண்ட்லேதான் இருக்கேனா? இல்லையா? என்னையும் எங்கேயாவது எனக்குத் தெரியாமலேயே மாற்றியிருக்கப் போகிறார்கள்?" என்று சிரித்தபடியே சர்மாவிடம் கேட்டு விட்டு அச்சுக்குக் கொடுக்க வேண்டியவற்றை தானே கையிலெடுத்துக் கொண்டு ஃபோர்மெனைத் தேடி அச்சகத்தை நோக்கி நடந்தான் அவன். ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடு அவனைப் பார்த்ததும் ஏதோ தயக்கத்தோடு சிரிப்பது போலச் சிரித்தார். அவன் கையெழுத்துப் பிரதிகளை அவரிடம் நீட்டிய போது, "ஒரு நிமிஷம் பொறுத்துக்குங்க சார்! உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..." என்று சைகை காண்பித்து யாரும் இல்லாத ஒரு மூலைக்குச் சுகுணனை அழைத்தார் நாயுடு. சுகுணன் நாயுடுவைப் பின் தொடர்ந்தான்.

"சார் என்னைத் தப்பா நினைச்சுக்காதிங்க. நீங்க எந்த 'மேனுஸ்கிரிப்ட்' கொடுத்தாலும் நான் கம்போஸுக்கு வாங்கப் படாதாம். கொடுக்கிற மேனுஸ்கிரிப்டைப் படித்துப் பார்த்துச் சர்மா சாரும் ரங்கபாஷ்யம் சாரும் 'அப்ரூவ்' பண்ணிக் கையெழுத்துப் போட்டிருந்தால் தான் நான் அதைக் கம்போஸுக்கு எடுத்துக்கணுமாம். இதை ஐயாவே ஃபோன்லே எங்கிட்டச் சொன்னாரு" என்று நாயுடு கூறிய போது சுகுணனின் மனம் கொதித்தது. சமூகத்தின் முதல் 'நெற்றிக் கண்' தனக்கு மிக அருகிலிருந்தே தன்னை வெதுப்பத் திறந்திருப்பதை அவன் உணர்ந்தான். ஆனால் அதில் வெதும்பி விழுந்துவிட அவன் ஒருகாலும் தாயாராயில்லை. 'நெற்றிக் கண்ணை நெருப்பாகத் திறந்தாலும் குற்றம் குற்றமே' என்று உரத்துக் கூறி விட்டு அங்கிருந்து எழுந்து நடக்கத் தயாராயிருந்தான் அவன்.

"என்னை ரொம்ப மன்னிச்சிடுங்க சார்! என் மேலே ஒண்ணும் தப்பில்லை. நான் குழந்தை குட்டிக்காரன்" என்று குழைந்தார் நாயுடு. ரங்கபாஷ்யத்தையும், சர்மாவையும் போல் எல்லாக் கெடுதல்களையும் மறைவாக உடனிருந்தே செய்து கொண்டு நேரிலும் சிரித்துச் சிரித்துப் பேசுகிறவர்களை விடக் காதில் கேட்டதை அப்படியே சொல்லி மன்னிப்புக் கேட்கும் ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடு நாகரிகமான மனிதராகத் தோன்றினார் சுகுணனுக்கு. அச்சகத்திலிருந்து நேரே அலுவலகத்திலிருந்த தன் அறைக்குத் திரும்பிய சுகுணன் அங்கு ஓடிக் கொண்டிருந்த மின் விசிறியையும் பகலிலேயே எரிகிற விளக்கையும் நிறுத்திவிட்டு நிமிர்ந்த நடையோடு வெளியே புறப்பட்டான்.
-----------------

அத்தியாயம் - 9

"நம் மனத்தை நாம் எப்போது அதிகமாகப் பிறருக்கு ஒளித்து விட முயல்கிறோமோ அப்போதுதான் அது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து விடுகிறது"
சுகுணன் அந்தக் காரியாலயத்திலிருந்து ஒரு திடமான முடிவுக்கு வந்தவனாக எழுந்திருந்து வெளியேறும் போது கை இடறி மேஜை மேலிருந்து டேபிள் மணி கீழே விழுந்து உடைந்தது. அதை மறுபடி எடுத்து வைக்கக் குனிந்தவன் - அது நன்றாகவே உடைந்து அந்த உடைதலின் காரணமாகச் செவி பொறுக்க முடியாத கட்டை ஓசையில் அது ஒலித்ததைக் கேட்டு - அந்த அபஸ்வரத்தைப் பொறுக்க முடியாமல் அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் புறப்பட்டிருந்தான் சுகுணன். வழக்கமாக இப்படிப்பட்ட நாட்களில் குழந்தையையும் கிள்ளி விட்டு விட்டுத் தொட்டிலையும் ஆட்டுகிறவர் போல் - சர்மாவும் உடன் வந்து அநுதாபமாகப் பேசும் பாவனையில் அவன் வாயைக் கிளறுவது உண்டு. அவருடைய காலை மலர் - தினசரிக்கு வெளியூர் எடிஷன் 'பேஜ் க்ளோஸிங்' (தினசரிப் பத்திரிகையில் செய்திகளை ஒழுங்குப்படுத்திப் பிரசுரத்துக்குரியவற்றை முடிவாக நிர்ணயிக்கும் ஒரு நேரம்) ஐந்து மணிக்கு. சுகுணனோ மூன்று மூன்றரை மணிக்கே புறப்பட்டு விட்டான். நாயருடைய 'மெட்ரோபாலிடன் டைம்ஸ்' மூன்றரைக்கே தயாராகிவிடும். அது மாலைத் தினசரியாகையால் மூன்று மணிக்கே 'பேஜ் க்ளோஸிங்' எல்லாம் முடிந்து விடும். அதனால் அவன் புறப்படும் போது உடன் புறப்பட்ட நாயர் காரியாலயத்தில் அவனுக்கு ஏற்பட்ட கசப்பான அநுபவங்கள் பற்றி அரைகுறையாகக் காதில் விழுந்ததாகவும் அவற்றிற்காகத் தாம் வருந்துவதாகவும் சுருக்கமாகக் கூறினார். காரியாலய முகப்பிலிருந்து 'கார் பார்க்கிங்' வரைதான் அவனோடு கூட நடந்து வந்தார் நாயர். அப்புறம் அவனையும் காரிலேயே திருவல்லிக்கேணி வரை கொண்டு போய் 'டிராப்' செய்து விட்டுப் போவதாக அவர் கூறியதை அவன் ஏற்கவில்லை. அவருடைய உதவிக்கு நன்றி கூறிவிட்டு நடந்தான் அவன். அப்போது அவனுடைய மனத்தில் பல்லாயிரம் உனர்வுகள் குமுறிக் கொண்டிருந்தன. 'கிரியேடிவ் ரைட்டராக' - அதாவது படைப்பிலக்கிய ஆசிரியனாக இருக்கிற ஓர் 'ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட்டின்' வாழ்வில் இப்படி எல்லாம் ஏற்படுவது இயல்பு தான் என்று தோன்றியது அவனுக்கு. நாகசாமி ஏதாவது கூட்டத்தில் உளறினால் கூட அதை முதல் பக்கத்தில் எட்டுக்காலத் தலைப்புப் போட்டு வெளியிடுவதன் மூலம் அவருடைய தயவைச் சம்பாதித்துவிடும் காலை மலர் சர்மாவைப் போலவோ, 'பிஸினஸ் லைக்' ஆகக் காலந்தள்ளும் 'டைம்ஸ்' நாயரைப் போலவோ தன்னால் காலந்தள்ள முடியாதது சரி என்றே அவன் சிந்தனை சென்றது. அவர்கள் பத்திரிகையில் வெளியிட வேண்டியவற்றை டெலிபிரிண்டரும் நிருபர்களும் தந்திகளும் மொழி பெயர்ப்புக்களுமே அவர்களுக்குத் தந்து விடுகின்றனர். நானோ எல்லாவற்றையுமே சிந்தித்துச் செய்ய வேண்டியிருக்கிறது. கருவிகளிலிருந்து முடிவை எதிர்பார்க்கிறவனுக்கும் மூளையிலிருந்து முடிவு செய்ய வேண்டியவனுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை இப்போது அவன் தெளிவாக உணர்ந்தான். புறப்படும்போது கீழே விழுந்து உடைந்த மேஜை மணியின் ஞாபகம் வந்தது அவனுக்கு. அந்த மணியின் நாதக்கட்டு அதை உடைத்ததும் எப்படிச் சீர்குலைந்து போய்விட்டதோ அப்படியே இந்தப் பத்திரிகைக் காரியாலய உறவும் இனிச் சீர்குலைந்து போவதைத் தவிர வேறு வழி இல்லை என்பது போல் அவனுக்குத் தோன்றியது. தன்மானத்தை மதிக்கத் தெரியாதவர்களை அவன் மதிக்க விரும்பவில்லை.

'பத்திரிகைத் தொழில் விளக்குச் சுடரைப் போன்றது. எட்ட இருந்து அதைப் பார்க்கிற வரை ஒளிமயமாகவும், கவர்ச்சி நிறைந்ததாகவும் தோன்றும். அருகே நெருங்கினால் சுடும். அந்தச் சுடரிலேயே கலந்து விட்டாலோ விட்டிலைப் போல கருகி விழ வேண்டியது தான்' என்று காலை மலர் சர்மா - அடிக்கடி ஓர் ஆஷாடபூதித் தத்துவத்தைச் சொல்லுவார். பத்திரிகைத் தொழிலுக்குப் புதிதாக எந்த இளைஞர்கள் வருவதும் சர்மாவுக்குப் பிடிக்காததாகையினால் அவர் எப்போதும் இப்படியே கூறுவது வழக்கம்.

"நீங்கள் இந்தத் தொழிலிலேயே பழந்தின்று கொட்டை போட்டு வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டே இப்படி மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய வெட்கமாயில்லையா உக்ன்களுக்கு?" என்று சிரித்தபடியே அவர் மனத்தில் தைக்கும்படி அவரை அப்போதெல்லாம் எதிர்த்துக் கேட்டிருக்கிறான் சுகுணன். அதற்கு மறுமொழி கூறாமல் மௌனமாக அவனை ஏறிட்டுப் பார்த்தபடி சர்மா விஷமச் சிரிப்புச் சிரிப்பார். 'என்னைப் போல் இப்படி இருந்தால் பத்திரிகைத் தொழிலில் வெற்றி பெறலாம் தான்' என்று அவர் குறிப்பாகப் பதில் கூறுவது போன்ற மௌனமாக அதைச் சுகுணன் புரிந்து கொள்வதுண்டு. 'எண்ணத்திற் பிறக்கும் எரியே சக்தி' என்று பாரதி கூறியிருப்பது போல், மனத்திற்குள் சூடு சுரணை உள்ளவர்கள் சர்மாவைப் போல் வாழ முடியாதென்பதையும் அவன் உணர்ந்தான். தன்மானத்தை இழந்து கொண்டு உடலும் மனமும் கருகி வாழ்வதை விடத் தன் மானத்தோடு மனம் கருக விடாமல் தப்புவது நல்லதென்று தோன்றியது அவனுக்கு. மனமும் மானமும் கருகித்தான் சர்மாவைப் போன்றவர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். ரங்கபாஷ்யம், சர்மா போன்றவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காகப் பல ஈனச் செயல்களைச் செய்வதை அவன் அறிவான். நாகசாமி, ரங்கபாஷ்யம், காலை மலர் சர்மா ஆகியவர்கள் திடீர் திடீரென்று சந்திர கலசாபிஷேகம், ஸுப்ரபாத தரிசனம், புரட்டாசி சனிக்கிழமை என்று தங்களுக்கு வேண்டிய வேறு பத்திரிகை முதலாளிகள் சிலருடனும், விளம்பர ஏஜென்ஸி நிர்வாகிகளுடனும், நாலைந்து பெரிய பெரிய கார்களில் திருப்பதிக்குப் புறப்பட்டு போவார்கள். சென்னையிலுள்ள பணக்காரர்களுக்குத் திருப்பதி போவதென்பது 'வீக் எண்ட் ரெக்ரியேஷன்' மாதிரி என்று எண்ணியிருந்தான் சுகுணன் - நல்லெண்ணமும் கருணையுமில்லாமல் மனம் கருகிப் போனவர்கள் தெய்வ பக்தியுள்ளவர்களாக நடிக்க முயல்வது ஏன் என்பதை மட்டும் அவனால் விளங்கிக் கொள்ள முடியாமலிருந்தது. 'தீபாவளி மலர்' போட்டால் கூட முதல் பிரதியை வெங்கடாசலபதி பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டுமென்று எடுத்துக் கொண்டு ஓடுகிறவர்கள் - அந்த மலரை உழைத்துப் பாடுபட்டு மலரச் செய்த உதவியாசிரியனுக்கோ அச்சுத் தொழிலாளிக்கோ நாலணா அதிகம் தர மறுக்கும் அளவு கொடியவர்களாயிருக்கிறார்களே என்று சிந்தித்தால் இத்தனை பக்தியும் இத்தனை கொடுமையும் ஒரே மனத்தில் சேர்ந்து இருக்க முடியுமா என்பது தான் அவன் சந்தேகம். ஒன்று பக்தி பொய்யாயிருக்க வேண்டும் அல்லது மற்றொன்று பொய்யாயிருக்க வேண்டும். மற்றொன்று பொய்யில்லை என்பது உறுதியாகத் தெரிந்த பின்போ பக்திதான் பொய்யாயிருக்க வேண்டுமென்று தோன்றியது. ஒரு சமயம் காரியாலயக் கார் டிரைவர் ஒருவன் மூலம் சுகுணனுக்கு இந்தத் திருப்பதி மர்மம் விளங்கியது. அந்தக் கார் டிரைவர் சுகுணனின் எழுத்துக்களினாலே கவரப்பட்டு அவனிடம் பேரன்பு வைத்திருந்தான்.

"இது வேறே சங்கதிங்க! பக்திக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. 'பெங்களூர் போகிறோம்' - 'திருவனந்தபுரம் போகிறோம்'னு புறப்பட்டா - இவங்க 'அங்கே எதுக்காகப் போறாங்க'ன்னு கேட்கிறவர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். 'திருப்பதி போறோம்'னு சொன்னா அப்பிடிச் சந்தேகம் எதுவுமே வராதுங்க. அந்தப் புனிதப் பேருக்கு அப்பிடி ஒரு சக்தி ஏற்பட்டுப் போயிடிச்சு. அந்தப் பேரைப் போர்வையாய்ப் போர்த்திக்கிட்டுப் போயி - எங்க போனாலும் இவங்க வழக்கமாப் பண்ணக்கூடிய அட்டூழியங்களைப் பண்ணிட்டு வர்ரத்துக்கு வசதியாயிருக்குங்க. கம்பெனிகளின் விளம்பர நிர்வாகிகளை - அவர்கள் தங்கள் பத்திரிகைக்கே நிறைய விளம்பரங்களைக் கொடுக்க வேண்டுமென்பதற்காகத் 'தண்ணீர்' - தெளிச்சுப் போக போக்கியங்களில் குளிப்பாட்டிக் கொண்டேயிருப்பார் நாகசாமி. அந்த விளம்பர நிர்வாகிகளையும், தனக்குப் பயன்படக் கூடிய மத்தவங்களையும் திருப்பதி மாதிரிப் புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு அழைத்துப் போய் அவங்களோடு இரண்டு மூன்று நாட்கள் குளிக்காமல், பல் தேய்க்காமல் உட்கார்ந்து சீட்டாடுவதும், குடிப்பதும் வேறு கேளிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதுமாக எல்லாம் நடக்குமுங்க. உங்களுக்குத்தான் தெரியுமே, நம்ப நாகசாமி ஐயாவுக்குப் 'பெங்களூர் ரெப்ரஸன்டிவ்'னு ஒருத்தன் இருக்கானே! நாங்க இங்கிருந்து கார்லே, திருப்பதிக்குப் புறப்படற இதே சமயத்திலே அந்தப் பெங்களூர் ஆளும் அங்கிருந்து ரெண்டு காரிலே திருப்பதிக்குப் புறப்படுவான். ஒரு கார்லே இவங்களுக்கு வேண்டிய 'பாட்டில்கள்'லாம் இருக்கும். இன்னொரு கார்லே. யாரு இருப்பாங்கன்னு நீங்களே தெரிஞ்சிக்கலாமுங்க. யாரோ 'ஒமர் கயாம்'னு ஒரு கவி பாடியிருக்கானுங்களாமுல்ல. 'மதுவும் மங்கையும்'னு அந்தக் கதை தான்! புனித க்ஷேத்திரத்தின் புனிதம் கூட இப்பிடி ஆளுங்க போறதுனாலே குட்டிச்சுவராப் போயிடுமுங்க. இவங்க போற இடம் திருப்பதியாயிருக்கிறதுனாலே இப்படியெல்லாங்கூட நடக்குமுன்னு யாருமே நினைக்க முடியாதுங்க. அட! இதுதான் போகட்டுங்கள். டெல்லிலேருக்காரே மெட்டல் அண்ட் அயர்ன் கம்பெனி அட்வர்டிஸ்மெண்ட் மானேஜர் குப்புசாமி - அந்தக் குப்புசாமியோட மைத்துனி பிரசவத்துக்காக இங்கே மெட்ராஸ் வரான்னா - உடனே ஏர்போர்ட்டுக்கோ - சென்ட்ரல் ஸ்டேஷனுக்கோ - நாகசாமி கார் அனுப்புறாரு. மத்தவங்களுக்கு வசதி பண்ணிக் கொடுத்து இங்கே வசதியை அடையுறாங்கங்கறதுதான் சரிங்க..." - என்று அந்தக் கார் டிரைவர் ஒரு முறை சுகுணனிடம் மனம் திறந்து பேசிய போது கூறியிருந்தான். நாகசாமி, சர்மா, ரங்கபாஷ்யம் ஆகியவர்களைப் பற்றி நினைத்த போது இந்த வேளையிலும் அந்த ஞாபகங்களெல்லாம் அவன் மனத்தில் எழுந்தன.

சுகுணனின் மனத்தோடு இரண்டறக் கலந்து உறைந்து போயிருந்த தன்மானத்துக்கும் சுய மரியாதைக்கும் காரணம் காலஞ்சென்ற அவன் தந்தை அவனை வளர்த்திருந்த சூழ்நிலை தான். அவனுக்கு ஆறு வயதும், சகோதரிக்கு இரண்டு வயதும் நடந்து கொண்டிருந்த போது அதிகம் நினைவு தெரியாத பருவத்திலேயே தாயை இழந்து பின் தந்தையின் கண்காணிப்பில் அவர்கள் வளர்ந்து பெரியவர்களானார்கள். அவனும் அவன் தங்கையும் பள்ளிப் படிப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை கோவையில் கழித்தார்கள். அப்போது அவர்கள் தந்தை கோயம்புத்தூர் கிழக்குப் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தார். நாணயத்தையும், ஒழுக்கத்தையும், சுயமரியாதையையும் போற்றுவதில் நெருப்பாயிருந்தவர் அவன் தந்தை. சுகுணனின் தாய் இறந்த பிறகு அவர் இரண்டாவது மணத்தைப் பற்றி நினைக்கவும் இல்லை. தேச சுதந்திரப் போராட்டம் உச்ச நிலையிலிருந்த சமயத்தில் மகாத்மாவின் கொள்கைகள் மேல் ஏற்பட்ட அபிமானத்தாலும் - அந்நிய ஆதிக்கத்தின் கீழ் அடிபணிந்து உத்தியோகம் பார்க்க விரும்பாததாலும் வேலையை உதறி தள்ளிவிட்ட பெருமையும் அவருக்கு இருந்தது. குழந்தைகளையும் அதே நாணயத்தோடும், சுயமரியாதையோடும், கட்டுப்பாட்டோடும் வளர்த்திருந்தார் அவர். கூலி போல் கிடைக்கும் சம்பளத்துக்காகச் சொந்த தேசத்தின் சொந்த சகோதரர்கள் போன்ற தேச பக்தர்களைத் தம் கைகளாலேயே அடித்து நொறுக்க நேர்வதை விரும்பாமல் தான் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறியிருந்தார் அவர். அந்த வேலையை உதறிய பின் சுகுணனையும் அவன் தங்கையையும் கல்லூரிக் கல்வி வரை படிக்கச் செய்து ஆளாக்குவதற்காகப் பூர்வீகச் சொத்து முழுவதையும் அவர் பணயம் வைக்க வேண்டியிருந்தது. அதுவும் போதாமல் - குழந்தைகளைப் படிக்க வைத்து ஆளாக்குவதற்காகக் குமாஸ்தா வேலையிலிருந்து டைப்பிஸ்ட் வேலைவரை கிடைத்த வேலைகளையெல்லாம் பார்த்தும் பொருள் ஈட்டியாக வேண்டிய சிரமமும் அவருடைய முதுமைக் காலம் வரை அவருக்கு இருந்தது. ஆனாலும் அந்தச் சிரமங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் குழந்தைகளை அதிகத் துன்பம் தெரியாமல் வளர்த்தார் அவர். கல்லூரி நாட்களிலேயே எழுத்தாளனாகத் தமிழுலகுக்கு அறிமுகமாகிவிட்ட சுகுணன் படிப்பு முடிந்ததும் சட்டக்கல்லூரியில் சேர வேண்டுமென்று தந்தை விரும்பினார். சுகுணனோ நாகசாமியை நம்பி அவருடைய ஆசை வார்த்தைகளுக்குப் பின்னாலிருந்த போலித் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் பத்திரிகைத் தொழிலில் புகுந்தான். அவனுடைய சகோதரி ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்து தேறிக் கோவைக்கு அருகிலிருந்த சிற்றூர் ஒன்றிலுள்ள பெண்கள் பள்ளியில் ஆசிரியையானாள். மகனும், மகளும் உத்தியோகத்துக்குப் போய்ப் போட்டி போட்டுக் கொண்டு தந்தைக்கு மாதா மாதம் பணம் அனுப்பி அவரைக் கொண்டாடும் ஆசையோடிருக்கையில் அந்த இனிய அநுபவங்களை அடையக் கொடுத்து வைக்காமல் 'என் கடமை முடிந்தது. நான் போய் வருகிறேன்' என்பது போல் போய்விட்டார் அவர். வீட்டுக்கு மருமகனும் மருமகளும் வந்து பார்க்கவேண்டுமென்ற அவருடைய சொந்த ஆசை கூட நிறைவேறுவதற்குள் காலன் அவர் உயிரைப் பறித்துக் கொண்டு விட்டான். சுகுணனுக்குள் நிறைந்து கிடந்த தைரியத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் காரணம், அவன் தந்தை அவனை வளர்த்து ஆளாக்கிய முறைதான். இதைச் சுகுணனே தனக்குள் அந்தரங்கமாக நினைவு கூர்வதுண்டு. அவனுடைய தங்கையும், தைரியத்திலும் நம்பிக்கையிலும் தேறியிருந்தாள். அவளுக்கு மணமாகவில்லை. எந்தப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அவள் ஆசிரியையாயிருந்தாளோ அதே பள்ளியைச் சேர்ந்த விடுதிக்கு வார்டனாகவும் இருந்து அங்கேயே வசித்து வந்தாள் அவள். ஓய்வு ஒழிவில்லாத பத்திரிகைக் காரியாலயப் பொறுப்புக்களால் சுகுணன் சகோதரியைச் சந்திக்க அவளுடைய கிராமத்துக்குப் போய்வர முடியாமலிருந்தது. அவன் அவளைப் பார்த்து ஒரு வருடத்திற்கு மேலாகியிருக்கும். போன வருடம் தன்னிடம் படிக்கிற பெண் குழந்தைகளை 'எக்ஸ்கர்ஷன்' அழைத்துக் கொண்டு அவள் சென்னைக்கு வந்திருந்தாள். அப்போது அவளாக வந்து சுகுணனைச் சந்தித்திருந்தாள். அதன் பின் அவள் வேலை பார்த்து வந்த கிராமத்துக்கு ஒருமுறை போய் வர வேண்டும் என்றும் அவன் பலமுறை திட்டமிட்டும் அப்படிப் போய்வர முடியாமல் தட்டிக் கொண்டே இருந்தது. தங்கையைப் பார்த்துவர ஆவலிருந்தும் அவகாசமில்லாதிருந்தது.

இப்போது பூம்பொழில் காரியாலய வேலையை விட்டு விடலாமென்ற தீர்மானத்துக்கு வந்ததும் - விட்டு விடுதலையாகிச் சிட்டுக் குருவியைப் போல் - வெளியேறலாமென்ற அந்த மனநிலையில் - உடனே தங்கையைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. இன்றிரவு அல்லது நாளைக் காலையில் ஓய்வாக உட்கார்ந்து நாகசாமிக்கு ஒரு கடிதம் எழுதி அதோடு தன் இராஜினாமாவையும் அனுப்பி விடுவதென்ற முடிவுக்கு வந்திருந்தான் அவன். காரியாலயத்திலிருந்து வெளியேறி மெயின் ரோடுக்கு வந்து 'பஸ்' பிடித்துத் திருவல்லிக்கேணியில் அறைக்கு வந்து சேருகிற வரை - இப்படிப் பல நினைவுகள் ஓடின. அவன் அறைக்குப் போய்ச் சேர்ந்த போது அந்தப் பாலக்காட்டுப் பெண் கமலம் அங்கே அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

"ஊரிலிருந்து கொஞ்சம் பணம் மணியார்டர் வந்தது. உங்களுக்கு நான் தரவேண்டிய இருநூறு ரூபாயில் நூறு இப்போது கொடுத்து விடுகிறேன் அண்ணா" - என்று சிரித்துக் கொண்டே ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொடுத்தாள் கமலம். அப்போதிருந்த மனநிலையில் அந்தப் பெண் 'அண்ணா' என்று கனிவாக அழைத்த பாசமும் உறவும் அவனுக்கு மிகவும் இதமாயிருந்தது. அநுபவங்களால் ஏற்படும் கசப்புகள் உறவுகளால் ஏற்படும் உரிமைகளால் மாறுவதும் வாழ்விலுள்ள ஒரு நன்மையாகத் தோன்றியது. சில நாட்களுக்கு முன் காரியாலயத்துக்கு தேடி வந்து அவள் தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு போனதைத் தன்னுடைய பல வேலைகளுக்கு நடுவே அவன் மறந்திருந்தான். இவ்வளவு விரைவில் அந்த மாணவி தன்னிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வருவாள் என்பதையும் அவன் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய மனத்தின் உள் வேதனைகளை மறைத்துக் கொண்டு அவளிடம் பேசலானான் அவன். ஆயினும் எப்படியோ அந்தப் பெண் அவனுடைய முகத்திலிருந்தே அதைக் கண்டுபிடித்து விட்டாள் போலிருக்கிறது.

"ஏன் அண்ணா? என்னவோ போலிருக்கிறீர்கள். உடம்புக்குச் சௌகரியமில்லையா?" என்றே அவனைக் கேட்டு விட்டாள் அவள். 'நம் மனத்தை எப்போது நாம் அதிகமாக ஒளிக்க முயலுகிறோமோ அப்போது தான் அது மற்றவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது' என்று தோன்றியது சுகுணனுக்கு.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. வேலை அதிகம். அலைச்சலும் கொஞ்சம் அதிகம்" என்று சுகுணன் அவளுக்குப் பதில் சொல்லித் தப்பித்துக் கொண்டான். கண்ணப்பா லாட்ஜ் பையனிடம் சொல்லி காபி வரவழைத்துக் கமலத்துக்குக் கொடுத்தான் அவன்.

"இங்கே மட்டும் ஸ்டவ்வும் பாத்திரமும் மற்ற வசதிகளும் இருந்ததோ நானே ஒரு நொடியில் உங்களுக்கு அருமையான காபி தயார் செய்து கொடுத்து விடுவேன் அண்ணா" என்றாள் கமலம். சமூகத்தின் எந்த மூலையிலிருந்தாவது உண்மையை எதிர்த்து உக்கிரமாகத் திறக்கும் நெற்றிக் கண்ணின் வெப்ப மிகுதியை இப்படி ஒரு சிறிய கருணையும் பாசமும் கூடக் குளிர்க்க முடியுமென்று அவன் எதிர்பார்த்திருந்தது கிடையாது. கமலம் அவனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் ஒரு வாரங் கழித்து மறுபடி வந்து பார்ப்பதாகக் கூறி விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.

"இங்கே அறையிலேயே வந்து பாருங்கள்! பூம்பொழில் காரியாலயத்தில் வேண்டாம்" - என்று பொதுவாக அவளிடம் கூறி அனுப்பினான் அவன். கமலம் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்ற போது மாலை ஐந்தரை மணிக்கு மேலாகியிருந்தது. திருவல்லிக்கேணி பெரிய தெரு என்ற குறுகலான தெருவிலே ஜனவெள்ளம் அலை அலையாகப் பெருகத் தொடங்கிவிட்டது. தெரு முனைகளில் பிளாட்பாரத்தில் மல்லிகையும் சாதிப்பூவுமாகப் பூக்கூடைகளும் கடைகளும் பழைய புத்தகம் பத்திரிகைப் பரபரப்புகளும் முளைத்துவிட்டன. மாலை வேளை என்கிற நகர உற்சவம் ஆரம்பமாகி விட்டது. மனத்தில் சுமையும், சிந்தனைகளும், கனத்துவிட்ட அந்த விநாடியில் இத்தனை லட்சம் மக்கள் நிரம்பிய இந்தச் சென்னையில் - இந்த மனச் சுமையையும் கனத்தையும் - கேட்டுத் தோள் மாற்றிக் கொள்ள முடிந்த ஓர் உண்மை நண்பனை உடனே பார்க்க வேண்டும் போல் தவிப்பாயிருந்தது சுகுணனுக்கு. பாலைவனத்தில் தண்ணீர்த் தாகம் எடுப்பது போல் இப்படிச் சமயத்தில் நல்ல மனிதனைத் தேடிச் சந்திக்க வேண்டுமென்ற தாகமும் ஏற்பட்டு விடுகிறது. மனத்தோடு கலக்க முடிந்தவராக - அந்த மனத்தின் சுமையைத் தோள் மாற்றிக் கொள்ள முடிந்தவராக யாரையேனும் உடனே அந்தக் கணமே பறந்து போய்ப் பார்த்து விட வேண்டும் போலிருந்தது அவனுக்கு. துளசியின் நினைவு ஒரு கணம் எழுந்து உள்ளேயே கோபமாக மாறி அடங்கி விட்டது. ஒரு காலத்தில் அவள் தான் அவனுடைய மனத்தின் சுமைகளைத் தோள் மாற்றிக் கொண்டாள். அந்த உண்மையில் இனிமையும் அநுராகமும் கூட இருந்தன. இப்போது அவை இல்லை. அந்த இடத்தில் விரக்தியும் கோபமும் மீதமிருந்தன. இப்போது துளசியைப் போல் மனத்தின் சுமையைத் தோள் மாற்றிக் கொள்ள அவனுக்கு யாருமில்லை. ஆனால் ஓர் உண்மை நண்பனை எண்ணித் தேடியது அவன் மனம். ஏதோ நினைத்துக் கொண்டே வந்த போது கொள்கைகளிலும், சிந்தனைகளிலும், தன்னோடு கருத்தொற்றுமையும் நட்பும் உள்ளவரான 'நேஷனல் டைம்ஸ்' மகாதேவனை எண்ணினான் சுகுணன். அவருடைய 'நேஷனல் டைம்ஸ்' காலை பதிப்பாக வெளியாகும் ஆங்கிலத் தினசரியாகையினால் இரவு பத்து மணி வரை காரியாலயத்தில் இருப்பார் அவர். நேஷனல் டைம்ஸ் காரியாலயம் தம்பு செட்டித் தெருவில் ஒரு பழைய கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்தது. அதே கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் அச்சகமும் இருந்தது.

'கண்ணப்பா லாட்ஜ்' பையனைக் கூப்பிட்டு ஃபோனிலிருந்த பூட்டைத் திறக்கச் சொல்லி ஃபோன் பேசும் கட்டணமாக அவனிடம் சில்லறையையும் எண்ணிக் கொடுத்த பின் நேஷனல் டைம்ஸுக்கு ஃபோன் செய்தான் சுகுணன். மகாதேவன் காரியாலயத்தில் இருந்தார். உடனே அவனையும் வரச்சொல்லி அன்போடு அழைத்தார். குளித்து உடைமாற்றிக் கொண்டு புறப்படும் போதே இரவுச் சாப்பாட்டுக்கு மெஸ்ஸுக்கு வருவதாக உத்தேசமில்லை அவனுக்கு. தம்புச் செட்டித் தெருவிலேயே மகாதேவனையும் அழைத்துக் கொண்டு போய் எங்காவது சப்பாத்தியும் பாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானித்திருந்தான். மகாதேவனிடம் மனம் விட்டுப் பேசினால் நினைவுச் சுமை தோள் மாறும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. மகாதேவன் வெறும் பத்திரிகையாளர் மட்டுமில்லை. சுதந்திரமான பத்திரிகையாளனின் இலட்சியத்துக்கு அவரே ஒரு பதினைந்து வருட கால இயக்கமாகத் திகழந்து வந்தார். அவருடைய பத்திரிகைக்குச் சந்தா கட்டிய விவசாயிகளும், நெசவாளர்களும், தொழிலாளர்களும் ஒரு மூட்டை சோளமாகவும், ஒரு பேல் கைத்தறித் துணிகளாகவும், சில மணங்கு பருத்திகளாகவும், வெல்லமாகவும் கூடக் கட்டியிருந்தார்கள். ஆங்கிலத் தினசரியானாலும் அவருடைய சுயமரியாதையையும், தன்மானத்தையும் கௌரவிப்பதற்காக அந்தப் பத்திரிகையைச் சிலர் பிடிவாதமாக வாங்கினார்கள். தாய்மொழி மட்டுமே அறிந்தவர்கள் ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் அந்தத் தினசரியை வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லி மொழி பெயர்த்துக் கேட்டுக் கொண்டார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலான தினப்பத்திரிகைகளில் அப்போது உதவியாசிரியர்களாயிருந்த பலர் ஒரு காலத்தில் மகாதேவனிடம் உதவியாசிரியர்களாயிருந்து தொழில் பழகியவர்கள். அவர்களெல்லாம் உத்தியோகத்துக்கு விட்டுக் கொடுத்து பணவசதியினால் பெரியவர்களாகியும் அவர் மட்டும் வசதிகளை விட்டுக் கொடுத்துத் தன்னம்பிக்கையைப் போற்றுவதற்காக 'நேஷனல் டைம்ஸ்' - என்ற இலட்சிய இயக்கத்தில் தானே முழுமையாக இறங்கியிருந்தார்.

சுகுணன் அவருடைய காரியாலயத்துக்குப் போய்ச் சேர்ந்த போது டெலிபிரிண்டரில் வந்திருந்த தந்தி ஒன்றைத் தயாரித்துத் தலைப்புக் கொடுத்து உள்ளூர்ப் பதிப்புக்காகச் செய்தியாக்கிக் கொண்டிருந்தார் அவர். அந்தக் காரியத்தில் சிறிது நேரம் அவருக்கு உதவி செய்தான் சுகுணன். பின்பு பொதுவாக இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சினிடையே, "பூம்பொழிலை விட்டு நான் விலகிவிடப் போகிறேன் சார்" என்று சுகுணன் அவரிடம் கூற நேர்ந்தது. அவர் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்து விட்டு வினவினார்.

"ஏன்? என்ன காரணம்?"

"காரணம் ஒன்றில்லை. எத்தனையோ இருக்கிறது. எதைக் கேட்டாலும், 'நாங்கள் சம்பளம் கொடுக்கிறோம். நீங்கள் வேலை செய்ய வேண்டும்' - என்று புத்தியைச் சம்பளத்துக்கு அடகு பிடிப்பது போன்ற தொனியில் பேசுகிறார் நாகசாமி. 'ரீடிங் மேட்டருக்கு' (படிக்கிற விஷயங்கள்) நடுவில் விளம்பரங்கள் போட வேண்டும் என்பதற்குப் பதில் - 'விளம்பரங்களுக்கு நல்ல இடம் போக மீதி உள்ள பக்கங்களில் எதையாவது போட்டுக் கொண்டு தொலையுங்கள்' - என்பது போல் பேசுகிறார்கள். அதைப் பற்றி விவாதித்தால் 'கதை கட்டுரை முதலிய 'ரீடிங் மேட்டர்களுக்கு' நாம் பணம் கொடுக்கிறோம். விளம்பரதாரர்களோ நமக்குப் பணம் கொடுக்கிறார்கள்' - என்று குதர்க்கம் செய்கிறார்கள்."

"தெருச்சுவராயிருந்தால் முழுக்க முழுக்க விளம்பரமே ஒட்டி விடலாம். பத்திரிகையாச்சே? நடுநடுவே படிக்கவும் ஏதாவது இருந்தாலல்லவா தெருச்சுவருக்குப் பத்திரிகைக்கும் கவுரமான கண்ணியமான வித்தியாசம் ஒன்று இருக்க முடியும்?"

"நீங்கள் சொல்வது தான் சரி என்று எனக்குப் படுகிறது சார்! ஆனால் அவர்கள் அப்படி ஒரு வித்தியாசத்தையும் உணரவில்லையே? சுவரில் ஒட்டுகிற விளம்பரங்களை அப்படி ஒட்டாமல் 'பின்' அடித்துப் புத்தகமாகப் பைண்டு செய்தால் போதுமென்று நினைக்கிறார்களே?"

"அப்படியானால் சிரமம் தான்! குடிசைத் தொழில் போல் குத்து விளக்குப் போல் - பத்திரிகையாளர்களாகிய உங்கள் மனத்திலும் என் மனத்திலும் சுடர் விடுகிறதே ஒரு - மூல அக்கினி - அந்த அக்கினிதான் - இந்தத் தொழிலின் பத்தினித் தன்மையை வியாபாரிகளிடமிருந்து என்றும் தனியே பிரித்துக் காக்க முடியும் சுகுணன்!"

மகாதேவனிடம் காரியாலய நிகழ்ச்சிகளை எல்லாம் மனம் திறந்து கூறினான் சுகுணன். எல்லாவற்றையும் ஆதரவாகவும் அநுதாபத்தோடும் பொறுமையாகக் கேட்டார் அவர்.

"இந்த தேசத்தில் உள்ள பொதுவான கஷ்டம் இது! ஒவ்வொரு நல்ல தொழிலும் அது வளர்ந்து பலன் தருகிற நிலையில் பணம் பண்ணும் ஆசை மட்டுமே உள்ள சில வெறும் வியாபாரிகளிடம் போய்ச் சிக்கிவிடுகிறது" என்று கூறிப் பெருமூச்சு விட்டார் தியாகி மகாதேவன்.

"பத்திரிகைக்கு முதல் போடுகிறவர்கள் நாளடைவில் வெறும் 'புரோக்கர்கள்' போல் மாறி விடுகிறார்கள். பம்பாயிலிருக்கிற ஒரு கம்பெனி அட்வர்டிஸ்மெண்ட் மானேஜரின் மனைவிக்குக் காஞ்சிபுரம் பட்டுப்புடவை பிடிக்கிறதென்று தெரிந்தால் இங்கிருந்து விமானத்தில் பட்டுப்புடவையை வாங்கிக் கொடுத்து அனுப்பி அவரைச் சரிக் கட்டுவதிலுள்ள சிரத்தை - பத்திரிகையின் மற்ற விஷயங்களில் இவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது. பத்திரிகைகளை படிக்கிறவர்களும் விளம்பரதாரர்களும் பத்திரிகைகளை நாடும் போது அவற்றில் வெளி வருகிற விஷயங்களின் தரத்தை நிறுத்துப் பார்த்து நாடினால் தான் இனியாவது நல்ல சூழ்நிலை உருவாகும்."

"இதற்கு அவ்வளவு விரைவாக விடிவுகாலம் பிறந்து விடாது சுகுணன்! நீண்ட நாளாகும். இப்போது உங்கள் வரை நீங்கள் என்ன செய்யலாம் என்று பார்ப்போம். நீங்கள் கூறிய விவரங்களிலிருந்து இனிமேல் 'மாருதி பப்ளிகேஷன்ஸ் குருப் கன்ஸர்னில்' நீங்கள் இருக்க முடியாதென்று தான் எனக்கும் தோன்றுகிறது. எத்தனையோ வெற்றி தோல்விகளுக்கு அப்பாலும் ஒரு நல்ல பத்திரிகையாளனிடம் மீதமிருக்க வேண்டியது அவனுடைய 'சொந்த அகங்காரம் தான்' என்று இந்தத் துறையில் அநுபவம் மிக்க ஒரு பெரியவர் சொல்வதுண்டு. இந்த 'அகங்காரத்தை'ப் பத்திரிகைக்காரன் எந்த நிலையிலும் எந்த விலையிலும் விற்று விடக்கூடாது... ஆனால் ஒரு விஷயம்! இதில் நீங்கள் எப்படி முடிவு செய்யப் போகிறீர்களென்றுதான் எனக்குப் புரியவில்லை. இப்போது நீங்கள் பூம்பொழிலில் எழுதி வருகிற 'தொடர்கதை'யை என்ன செய்யப் போகிறீர்கள்? அதத அரைகுறையாக நிறுத்திவிடக் கூடாது. ஆர்வத்தோடு படிக்கிற நல்ல வாசகர்களை அதிருப்திப்படுத்துவது நன்றாயிராது."

"அதைப்பற்றிக் கவலையில்லை சார்! இயற்கையாகவே அது வருகிற வாரம் முடிந்து விடுகிறது. நான் அங்கிருந்து விலகி விட நினைக்கும் முன்பே திட்டமிட்டிருந்த முடிவு அது. தொடங்கி ஒரு வருஷம் ஆகிறது. தானாகவே கதை முடிகிற நேரம் தான்..."

"அப்படியானால் உங்கள் முடிவு சரிதான்; மேலே என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் விரும்பினால் 'நேஷனல் டைம்ஸி'ன் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன. ஆனால் இங்கே என்னிடம் ஒரு கஷ்டம் உண்டு. என்னிடமிருக்கும் குறைந்த சௌகரியங்களையும் நிறைந்த கஷ்டங்களையும் சேர்ந்தே நீங்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டியிருக்கும். இல்லையானால் யாராவது தெரிந்தவர்களிடம் சொல்லி பி.டி.ஐ., நேபன் எங்காவது இடமிருக்கிறதா என்று விசாரிக்கலாம். ஆரம்ப காலத்தில் பல பெரிய பெரிய பத்திரிகை முதலாளிகளிடம் இருந்து அவர்கள் நம்மை ஆட்டிப் படைக்கிற வேதனை பொறுக்க முடியாமல் தான் நானே சுதந்திரப் பறவையானேன். அதனால் என் நண்பர்களுக்கு இப்படி நிலையில் 'உத்தியோகத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்' - என்பது போல் ஒரு போதும் நான் அறிவுரை கூறுவதே இல்லை. பத்திரிகையாளனின் ஒரே ஆயுதம் நியாயமான தைரியம். நிர்வாகத்துக்குப் பயந்து கொண்டே அந்த ஆயுதத்தை அவன் பிரயோகிக்க முடியாதென்பதுதான் என் கருத்து..."
------------------

அத்தியாயம் - 10

வாழ்வின் துயரங்களுக்கு வெறும் நெஞ்சினால் மட்டும் சாட்சியாக நிற்கிற ஊமைத் துணைகளால் ஒரு பயனுமில்லை.

"பத்திரிகையாளன் என்ற தகுதிக்குக் காரணமான துணிவு எதுவோ அது தொழில் பயத்தில் அவிந்து போகும். எனவே சொகுசு நாடும் 'தொழில் பயந்தாங்கொள்ளிகள்' யாராயிருந்தாலும் அவர்கள் தைரியமேயின்றிப் பத்திரிகைத் தொழில் என்ற போர்க்களத்துக்கு வரக்கூடாது" என்றார் மகாதேவன்.

"அந்தத் தைரியத்துக்கு 'நக்கீர தைரியம்' என்று பெயர் சூட்டலாமென்று எனக்குத் தோன்றுகிறது சார்! ஏனென்றால் சமூக வாழ்வில் நியாயமான தைரியத்தோடு எழுந்து நின்று பொய்யையோ, குற்றத்தையோ சாடுகிற ஒவ்வொருவனையும் வெதும்புவதற்கு எந்த மூலையிலிருந்து எப்படிப்பட்ட கொடிய நெற்றிக் கண்கள் திறக்கும் என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாமலிருக்கிறது."

"பழைய நக்கீரன் நெற்றிக் கண்ணில் வெதும்பி விட்டான். ஆனால் புதிய நக்கீரர்களாகிய நம்மைப் போன்ற பத்திரிகையாளர்களோ எத்தனை நெற்றிக் கண் எவ்வளவு உயரத்திலிருந்து திறந்தாலும் சூடுபட்டுக் கொண்டே அநீதியைச் சுட்டெரிக்க வேண்டும்! இங்கே டைம்ஸில் சேர்ந்து என்னோடு எனது கொஞ்ச சௌகரியங்களையும் - அதிக கஷ்டங்களையும் பங்கு கொள்ள நீங்களும் தயாராயிருக்கிறீர்களா?" - என்று கடைசியில் வெளிப்படையாகவே கேட்டார் மகாதேவன்.

"முதலில் என் சகோதரியைப் பார்க்க கோயம்புத்தூர் போய்வர வேண்டுமென்று இருக்கிறேன். திரும்பி வந்ததும் மறுபடி உங்களை சந்திக்கிறேன் சார்" - என்றான் சுகுணன். அவரும் அதற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை. இருவரும் தம்புச் செட்டித் தெருவிலேயே இருந்த ஒரு வடக்கத்திக் கடையில் சப்பாத்தியும் பாலும் சாப்பிட்டு விட்டு வந்து மறுபடியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். நேரம் அதிகமாகி விட்டது. பஸ் போக்குவரவு கூட நின்றிருந்தது. மகாதேவனுக்கு வீடு 'ஐஸ் ஹவுஸ்' பக்கம் இருந்தது.

"நீங்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று அவரைக் கேட்டான் சுகுணன்.

"என்னைப் பற்றிக் கவலையில்லை. வீட்டுக்குப் போனாலும் போவேன். இங்கேயே 'பழைய பார்சல்' கட்டு ஒன்றைத் தலைக்கு எடுத்து வைத்துக் கொண்டு படுத்தாலும் படுத்து விடுவேன். ஒன்று வேண்டுமானால் செய்யலாம். நீங்களும் திருவல்லிக்கேணிக்கே போக வேண்டியிருப்பதனால் இரண்டு பேருமாகப் பேசிக் கொண்டே நடந்து போய்விடலாம்" - என்றார் மகாதேவன். சுகுணனும் அதற்குச் சம்மதித்தான். மகாதேவனிடம் அவனுக்குப் பிடித்தமான குணங்களில் இதுவும் ஒன்று. வாழ்க்கையின் சௌகரியங்களுக்குத் தன்னை வளைத்துக் கொள்ளாமல் தன்னுடைய அசௌகரியங்களுக்கு ஏற்றபடி வாழ்க்கையை வளைத்துக் கொண்டவர் அவர். பஸ்ஸில், ரிக்ஷாவில், சமயங்களில் நடையில், அவசியமானபோது டாக்ஸியில், என்று போலி ஸ்டேட்டஸ் எதையும் கற்பித்துக் கொண்டு சீரழியாமல் முடிந்தபடி வாழ்கிறவர் அவர். அவருடைய இந்த எளிமையை அவன் மிகவும் விரும்பினான். தங்களைப் பலர் பார்த்துத் தாங்கள் நடந்து போவதைப் பரிதாபமாக நோக்குவது போலவும் - எனவே தாங்கள் மண்ணை மிதித்து நடக்கவே கூடாது என்பது போலவும் - போலியாக கற்பித்துக் கொண்ட 'ஸ்டேட்டஸ்' பாவனையினால் சென்னைப் பட்டினத்துப் பத்திரிகையாளர் சிலர் வசதியற்ற நிலையிலும் கடன் வாங்கிக் கார்களிலே பறப்பதைப் பார்த்திருந்தவன் அவன். அதே ஊரில் மகாதேவனைப் போல் எளிமை கொண்டாடும் சில பத்திரிகையுலக மகாத்மாக்களும் இருப்பது அவனைக் கவர்ந்ததில் வியப்பில்லை.

அவர்களிருவரும் கோட்டை ஸ்டேஷன் பாலத்தில் ஏறி மவுண்ட் ரோட்டுக்காக ஐலண்ட் கிரவுண்ட் நோக்கித் திரும்பிய போது உச்சி நிலா ஒளியில் எதிரே சர் தாமஸ் மன்றோவின் குதிரை வாயு வேகத்தில் பாய்ந்து வருவது போல் அவசரமாக ஒரு பிரமையை உண்டாக்கியது. ஒரு நிமிஷம் நடப்பதை நிறுத்திவிட்டு நின்று கவனித்த போது மன்றோவின் குதிரையும் நின்று விட்டது. நிலா ஒளியில் விசாலமான சாலையில் நட்ட நடுவே அந்தக் குதிரைச் சிலை மிகமிக வசீகரமாகத் தோற்றமளித்தது. அவன் அந்தச் சிலையைக் கூர்ந்து கவனிப்பதையும் அவன் மனத்தில் ஓடும் சிந்தனையையும் அநுமானித்தவராக மகாதேவன் அவனிடம் கூறலானார்.

பதினைந்து வருடங்களாக இந்தச் சிலைதான் என் வாழ்க்கையின் குருவாக இருந்து வருகிறது சுகுணன்! எத்தனையோ சந்தர்ப்பங்களில் எத்தனையோ விதமான மனநிலைகளில் இந்தச் சிலையை நான் பார்க்க நேர்ந்திருக்கிறது. நள்ளிரவில், நடுப்பகலில், வெயில் விரியாத வைகறையில், முன்னிரவில் - என்று எத்தனையோ சமயங்களில் இக்குதிரை வீரனைப் பார்த்திருக்கிறேன். கைநிறையப் பணத்தோடும், கையில் பணமே இல்லாத பேய் வறுமையோடும், வேறு வழியில்லாத காரணத்தால் தம்புச் செட்டித் தெருவிலிருந்து இரவு பத்தரை மணிக்குமேல் இந்தப் பாதையாகத் திருவல்லிக்கேணிக்கு நடந்து போகும் போது - எத்தனையோ முறை இந்தக் குதிரை வீரனின் சிலையிலிருந்து என் வாழ்க்கைத் தத்துவங்களைத் தேடியிருக்கிறேன் நான். நாம் நடந்தால் இந்தக் குதிரையும் அந்தரத்தில் உயிர் பெற்று வேகமாக நகர்வது போலிருக்கும். நாம் நின்றாலோ இதுவும் சிலையாகிவிடும். கையில் வசதியோடு நாம் வேகமாக வாழ்க்கையின் காரியங்களுக்கு ஓடியாடி அலைந்து கொண்டிருக்கும் போது - இந்தச் சிலை போலவே பட்டினம் முழுவதும் உற்சாகமாக ஓடுவதாய்த் தெரியும். கையில் வசதியில்லாமல் நாம் தயங்கி மலைத்து நிற்கிற போது இந்தச் சிலை போலவே பட்டினம் முழுவதும் சிலையாகச் சபிக்கப்பட்டு விட்டது போல் தோன்றும். நாம் ஓடினால் உடன் ஓடுகிற சிலை இது. நாம் நின்றால் உடன் நிற்கிற சிலையும் இதுதான். பட்டினத்தின் வாழ்க்கைத் தத்துவ இரகசியம் - ஞான சூசனை - இந்தச் சிலையில் மறைந்திருப்பதாக எனக்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனமான அங்கீகாரம் உண்டு சுகுணன்" - என்றார் மகாதேவன். அவர் கூறியபடியே பார்க்கிறவர் நின்றால் சிலையும் நிற்பதையும் பார்க்கிறவர் நடந்தால் சிலையும் நகர்வது போல் தோன்றுவதையும் சுகுணன் அப்போது கூர்ந்து உணர்ந்தான்.

"இந்தச் சிலையை அமைத்த சிற்பியைவிடப் பட்டினத்து வாழ்வுக்கு இங்கிதமான ஞானம் சொல்லிக் கொடுப்பவன் வேறு யாரும் இல்லை" என்றார் மகாதேவன்.

"உண்மைதான்!" என்று வழி நெட்டுயிர்த்தான் சுகுணன். மீண்டும் நடந்தார்கள் அவர்கள். பைகிராப்ட்ஸ் ரோடு மூலையில் அவர்கள் வேறு வேறு திசைகளில் விடைபெற்றுக் கொண்டு பிரிந்தார்கள். அறைக்குப் படியேறிய சுகுணனைப் படியிலேயே ஓடி வந்து எதிர்கொண்ட 'லாட்ஜ்' பையன்,

"இன்னிக்குப் பார்த்து எங்க போயிட்டீங்க... சார்? உங்களுக்கு 'டிரங்க்கால்' வந்திருந்தது. ரெண்டு தரம் கூப்பிட்டுட்டாங்க. 'பெண்டிங்'லே வச்சிருக்கேன். வந்து பேசுங்க..." - என்றான். பையன் கூறியதைக் கேட்டுச் சுகுணன் எந்த விதமான பரபரப்பும் அடையவில்லை. தனக்கு எந்த ஊரிலிருந்தும், யாரிடமிருந்தும், 'டிரங்க்கால்' வந்திருக்க முடியுமென்பதை அவன் நம்பவில்லை. வேறு யாருக்காவது வந்த 'டிரங்க்காலை'த் தவறுதலாகத் தெரிவிக்கிறார்களோ என்றுதான் முதலில் எண்ணினான். 'கண்ணப்பா லாட்ஜ்' - பையனோ, "உங்களுக்குத் தான் சார்?... சந்தேகமே இல்லை" - என்று நிச்சயமாகச் சொன்னான். உடனே சுகுணன் டெலிபோனை எடுத்து டயல் செய்து 'டிரங்க் - என்குயரீஸை'க் கூப்பிட்டு விசாரித்தான். விசாரித்த பின்போ பையன் கூறியதுதான் உண்மை என்று தெரிந்தது. டில்லியிலிருந்து அவனுக்கு 'டிரங்க்கால்' வந்திருப்பதாகவும், மறுபடி இன்னும் சிறிது நேரத்தில் கூப்பிடுவதாகவும் - வெளியூர் டெலிபோன்கள் பற்றிய விசாரணைப் பிரிவிலிருந்த பெண் தெரிவித்தாள்.

'டில்லியிலிருந்து துளசியைத் தவிர வேறு யார் தன்னைக் கூப்பிட முடியும்!' என்று சிந்தித்த போது 'ஒரு வேளை - பத்திரிகையாளர் வேஜ் போர்டு (சம்பள விகிதம்) கூட்ட சம்பந்தமாகவோ, பெடரேஷன் கூட்டத்திற்காகவோ 'கோஷ்' டெல்லி செல்ல நேர்ந்து அங்கிருந்து கூப்பிடுகிறாரோ' என்றும் தோன்றியது அவனுக்கு. டில்லியிலுள்ள இரண்டொரு பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நினைவும் அவனுள் எழுந்ததாயினும், தொலைபேசியில் கூப்பிடுகிற அளவு தனக்கும் அவர்களுக்கும் இடையே எந்த அவசரமும் அவசியமும் இல்லையென்றும் தோன்றியது. சிந்தனையில் இப்படிப் பலவிதமாகக் குழம்பிய பின் 'டில்லியிலிருந்து கூப்பிடும் கட்டுப்படுத்த முடியாத இந்த ஆவல் துளசியினுடையதாகத்தான் இருக்க முடியுமென்று' அவனே தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தான். 'டெலிபோன்' விஷயத்தில் நாகசாமியைப் போலவே அவர் மகளும் இருப்பதை எண்ணி உள்ளூரச் சிரிப்பு வந்தது அவனுக்கு. நாகசாமி ஒரு டெலிபோன் வெறியர். அதாவது குறைந்த பட்சம் நாள் ஒன்றிற்கு முப்பது 'டிரங்க்கால்'களாவது போட்டுப் பேசுவார். ஒரு காரியமாவது 'டிரங்க்காலில்' பேசி முடிக்க வேண்டிய அவசர காரியமாக இராது. தபால் கார்டில் எழுதிப் போட்டாலும் நடந்து விடக்கூடிய காரியத்துக்குக் கூட 'டிரங்க்கால்' தான் அவருக்கு. நாலு கூடை மாவடு, ஊறுகாய்க்காக அனுப்பி வைக்க வேண்டுமென்று - மாயவரத்திலுள்ள ஒரு நண்பருக்குத் திடீரென்று அர்ஜெண்டாக ஃபோன் செய்வார். இரண்டு டஜன் காபூல் மாதுளை வாங்கி இரவு விமானத்தில் கொடுத்தனுப்ப வேண்டுமென்று டெல்லிக்கு யாருக்காவது 'டிரங்க்கால்' செய்வார். அதே சமயத்தில் 'மாருதி குரூப் வெளியீடு'களைச் சேர்ந்த அலுவலகங்களில் வேலை பார்க்கும் சர்க்குலேஷன் நிர்வாகி, சப்ஸ்கிரிப்ஷன் நிர்வாகி, முதலியவர்களுக்குச் 'சிக்கனமாக ஆபீஸ் நடத்த வேண்டும்' - என்று உபதேசம் செய்யும் போதோ, 'கூடியவரை எல்லாம் போஸ்ட் கார்டிலேயே எழுதுங்கள். தபால் செலவு நிறைய ஆகக்கூடாது' - என்று அடித்துச் சொல்லுவார். அவரைப் பற்றி நினைத்து இப்படி அவன் உள்ளூரச் சிரித்துக் கொண்டிருந்த போது டெலிபோன் மணி அடிக்கலாயிற்று. டெலிபோனை எடுத்தான் அவன். டெலிபோன் இலாகா பெண்மணி விவரம் சொல்லிய பின் எதிர்ப்புறமிருந்து துளசியின் குரல்தான் மங்கலாக ஒலித்தது.

"கம்பெனி வேலையாக அவர் ஜெய்ப்பூர் போயிருக்கிறார். நான் தான் வீட்டில் தனியாக இருக்கேன். பொழுதே போகவில்லை. சாயங்காலம் அப்பாவுக்கு 'டிரங்க்கால்' போட்டுப் பேசினேன். எப்போது யாரிடம் எதைப் பற்றிப் பேசினாலும் என் ஞாபகம் உங்களைச் சுற்றித்தான் இருக்கு. என்னாலே உங்களையோ, உங்களைப் பற்றிய நினைவுகளையோ மறக்க முடியலே. அப்பாவிடம் பேசற போதும் உங்களைப் பற்றிப் பொதுவாக விசாரித்தேன். நான் விசாரித்த போது அவர் உங்களைப் பற்றி அவ்வளவு சுமுகமாகப் பதில் சொல்லலை. 'நாளுக்கு நாள் எங்களுக்குள்ளே மனஸ்தாபம் அதிகமாகிக் கொண்டு வருகிறது அம்மா! சுகுணன் இனிமேல் அதிக நாள் இங்கே இருப்பாரென்று சொல்ல முடியாது' என்று வேறு சொல்லி என் கலக்கத்தை அதிகமாக்கி விட்டார். அப்பாவிடம் பேசி முடித்துப் ஃபோனை கீழே வைத்த வினாடியிலிருந்து எனக்கு ஒரே கவலையாக இருந்தது. ஒரு வேலையும் ஓடவில்லை. இரவு ஒன்பது மணிக்கு மேல் நீங்கள் எப்படியும் அறைக்கு வந்து விடுவீர்கள் என்று எண்ணிக் கூப்பிட்டேன். முதலில் இல்லை என்றார்கள். பொறுமையோடு டெலிபோனடியில் காத்திருந்தேன். இப்போதுதான் கிடைத்தீர்கள். அதுசரி இரவு இவ்வளவு நேரம் வரை எங்கே போயிருந்தீர்கள்?"

"காரியமிருந்தது, வெளியே போயிருந்தேன்."

"அப்பாவுக்கும், உங்களுக்கும் ஆபீஸில் அப்படி என்ன மனஸ்தாபம்."

"ஒரு முதலாளிக்கும் - தொழிலாளிக்கும் இடையில் எத்தனையோ மனஸ்தாபங்கள் இருக்கும்..."

"நீங்கள் தொழிலாளியா... என்ன?"

"எல்லாரையும் உன்னுடைய அப்பா அப்படித்தான் நடத்துகிறார். அவர் சம்பளம் கொடுக்கிறார். அதனால் நாங்கள் வேலை செய்கிறோம்! சுதந்திரமாக அங்கே நாங்கள் வேலை செய்து விடக்கூடாது!"

சுகுணன் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த போது டெலிபோன் இலாகா பெண்மணி குறுக்கிட்டு 'முதல் மூன்று நிமிடங்கள்' முடிந்து விட்டதாக அறிவித்தாள். அந்த அறிவிப்புக் குரலை அடுத்து அவசரமாகவும் பரபரப்பாகவும் "தயவு செய்து இன்னும் மூன்று நிமிஷம் 'எக்ஸ்டெண்ட்' (விரிவு) செய்யுங்கள்" - என்று வேண்டிக்கொள்ளும் துளசியின் குரலும் டெலிபோனில் கேட்டது.

"அப்பா முன்கோபக்காரர்தான். ஆனால் உங்களை நினைத்தால்தான் எனக்குப் பயமாகவும் கவலையாகவும் இருக்கிறது..."

"எனக்காக நான் கவலைப்படுவதையே விரும்பாதவன் நான். நீ கவலைப்படுவது அநாவசியம். ஒருவருக்காக மற்றவர் கவலைப்படுவது தவிர்க்க முடியாத - அதே சமயத்தில் சொல்லாகவும் வெளிப்படாத வெறும் நெஞ்சின் சாட்சி. வாழ்வின் துயரங்களுக்கு வெறும் நெஞ்சினால் மட்டும் சாட்சியாக நிற்கிற ஊமைத் துணைகளால் ஒரு பயனுமில்லே..."

"இந்த ஒரு விஷயத்தில் மட்டுமில்லையே? பல விஷயங்களில் நெஞ்சுக்கு நெஞ்சு சாட்சியாக மட்டுமே நின்றிருக்கிறோம் நாம்."

"இருக்கலாம்! ஆனால், இன்று அதை எண்ணி என்ன ஆகப்போகிறது துளசி?"

"ஆயிரம் மைல்களுக்கும் அப்பாலிருந்து உங்களையே நினைத்து கவலையால் உருகிக் கூப்பிடுகிறேன் நான். பேச்சினால் என்னைச் சித்ரவதை செய்கிறீர்கள் நீங்கள்..."

அவளுடைய இந்தச் சொற்கள் அழுகை தோய்ந்த குரலில் ஒலித்ததைக் கேட்ட போது சுகுணனுக்கும் வேதனையாகத்தான் இருந்தது.

"நான் இலக்கிய சேவை செய்ய ஆசைப்படுகிறேன். உன் தந்தையோ வெறும் காகித வியாபாரம் செய்ய ஆசைப்படுகிறார். கேட்பார் பேச்சுக்கு வசப்படுகிற கெட்ட குணமும் அவரிடம் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் எனக்கும் அவருக்கும் இனி எப்படி ஒத்து வரும்?"

"உங்களுடைய சக்தி வாய்ந்த எழுத்துக்களாலும் சிந்தனை வளம் மிகுந்த நாவல்களாலும் பூம்பொழிலுக்குப் பல்லாயிரக் கணக்கான வாசகர்களைத் தேடிக் கொடுத்த நீங்கள் அதை விட்டு விட்டு வெளியேறலாமா?"

"வேறு வழி இல்லை! வெறும் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டுச் சம்பளம் பெறும் கூலியாக இன்னும் சிறிது காலம் நான் அங்கே தாமதித்தாலும் எந்த எழுத்தின் சக்தியை நீ இப்போது ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து புகழ்கிறாயோ அந்த எழுத்தின் சக்தியையே நான் இழக்க நேரிட்டு விடும் போலிருக்கிறது."

"எதையும் தீர யோசித்துச் செய்யுங்கள்..."

"இதைச் செய்த பிறகு இனி நாளை வேறென்ன செய்யலாம் என்பதைத்தான் இனிமேல் தீர யோசிக்க வேண்டுமே ஒழிய - இதில் தீரவோ யோசிக்கவோ - இனி ஒன்றுமில்லை..."

"நீங்கள் இப்படிச் சொல்லக் கூடாது! என்னைக் கவலைப்பட்டு அழிய விடாதீர்கள்..."

மறுபடியும் மூன்று நிமிடம் முடியப் போவதற்கான அடையாள ஒலி டெலிபோனில் குறுக்கிட்டது. பரபரப்போடு மேலும் மூன்று நிமிடம் எக்ஸ்டெண்ட் செய்ய வேண்டித் துளசி கெஞ்சினாள். பின்னால் நிறையக் 'கால்'கள் இருப்பதால் மேலும் நீடிப்பது சாத்தியமில்லை என்று கண்டிப்பாகக் கூறி லயனைக் 'கட்' செய்து விட்டாள் டெலிபோன் இலாகா பெண்மணி. மனத்தினுள் ஏதோ ஓர் அரை குறை உணர்வோடும் - ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தவிக்கும் ஓர் அன்பு உள்ளத்துக்காக உள்ளூர வேதனையோடு டெலிபோனை வைத்தான் சுகுணன். இந்தத் தகவலை இவ்வளவு விரைவாகத் துளசி அறிவதற்கு ஒரு வாய்ப்பு நேரும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. தன் மேல் அவளுக்கிருக்கும் அக்கறையினாலும் ஆர்வத்தினாலும் மறுபடியும் டெல்லியிலிருந்து ஓர் அவசர 'டிரங்க்கால்' புக் செய்து பாதியில் நின்ற பேச்சைத் தொடங்குவாளோ என்ற பிரமையில் சிறிது நேரம் ஒரு காரியமும் ஓடாமல் டெலிபோனடியிலேயே உட்கார்ந்திருந்தான் சுகுணன். மறுபடி அவன் எழுந்து அறைக்குள் சென்றபோது மணி பன்னிரண்டரைக்கு மேல் ஆகியிருந்தது. அப்போதிருந்த மனநிலையில் உறக்கமும் அவனை அணுகவில்லை. உடம்பு சோர்ந்தால் வருகிற தூக்கம் மனம் விழித்திருந்தால் வரமாட்டேனென்கிறதே! நாகசாமிக்கு அலுவலக முறைப்படி சுருக்கமாக ஓர் இராஜிநாமாக் கடிதமும் தனிப்பட்ட முறையில் விரிவானதொரு கடிதமும் எழுதினான் அவன். தன்னுடைய தொடர் கதையின் கடைசிப் பகுதியையும் தன்னிடம் அரை குறையாயிருந்த அலுவலகத்து வேலைகளையும் - இரண்டொரு தினங்களில் முடித்து அனுப்பி விடுவதாகவும் அந்தக் கடிதத்தில் அவருக்கு எழுதியிருந்தான் அவன். காரியாலய ஊழியர்களும் ஃபோர்மென் நாயுடு சிலரும் தன்னுடைய வெளியேற்றத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கற்பனை செய்வதில் சிறிது நேரம் கழிந்தது. இப்படி அவன் தானாகவே இராஜினாமா செய்யத் தூண்டுவதற்கான காரியங்களை எல்லாம் செய்திருந்த நாகசாமியும் ரங்கபாஷ்யமும் இதை வரவேற்று மகிழ்வார்கள் என்றே அவனால் நினைக்க முடிந்தது.

அதற்குப் பின் அன்றிரவு துளசி மறுபடி டில்லியிலிருந்து கூப்பிடவேயில்லை. ஒன்று டெல்லி லயனில் அதிக 'கால்'களின் பிரஷர் இருந்து அது அவளுக்குக் கிடைக்காமல் போயிருக்க வேண்டும். அல்லது அவளே மறுபடி கூப்பிடுகிற எண்ணத்தைக் கைவிட்டிருக்க வேண்டும். சுகுணனும் நீண்ட நேரம் விழித்திருந்த பின் அதிகாலையில் சோர்ந்து உறங்கிப் போனான். எழுந்திருக்கும் போது விடிந்து அதிக நேரமாகியிருந்தது. குளித்து விட்டுச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு நேரே தபாலாபீசுக்குப் போய் நாகசாமிக்கு எழுதியிருந்த கடிதங்கள் இரண்டையும் முதல் வேலையாகப் பதிவுத் தபாலில் அனுப்பினான். இரண்டு மூன்று நாட்களில் அங்கு புறப்பட்டு வருவதாகச் சகோதரிக்கு ஒரு முன் கடிதம் எழுதினான். மறுபடியும் அறைக்கு வந்ததும் தன் கடமையை விரைந்து முடித்தாக வேண்டுமே என்ற உணர்வுடன் ஏற்கெனவே பெரும் பகுதி எழுதியும் குறிப்பு அமைத்தும் வைத்திருந்த பூம்பொழில் தொடர் நாவலின் இறுதிப் பகுதியை உருவாக்குவதில் முனைந்தான். மாலையில் தம்புச் செட்டித் தெருவிலிருந்த நேஷனல் டைம்ஸ் காரியாலயத்துக்குச் செல்ல நினைத்திருந்ததனால் - பகலிலேயே பூம்பொழில் வேலையை முடித்து விட எண்ணியிருந்தான் அவன். பகல் சாப்பாட்டுக்குக் கூட அவன் மெஸ்ஸிற்கோ வேறு எங்குமே போகவில்லை. கண்ணப்பா லாட்ஜ் பையனை 'பிளாஸ்க்' நிறையக் காபி வாங்கி வரச் செய்து அருகில் வைத்துக் கொண்டு எழுத்து வேலையில் மூழ்கினான். வேலை முடியும் போது ஐந்தரை மணி. அதையும் சரிபார்த்துப் பதிவுத் தபாலில் பூம்பொழிலுக்கு அனுப்பிவிட்டு மவுண்ட் ரோடிலிருந்தே அவன் தம்புச் செட்டித் தெருவுக்குப் புறப்படும் போது ஆறரை மணிக்கு மேலாகியிருந்தது. பஸ்ஸில் போகும் போது விரைவாகப் பார்வையில் பட்டு மறைந்த சர். தாமஸ் மன்றோவின் சிலை - முதல் நாள் இரவு நண்பர் மகாதேவன் கூறிய தத்துவத்தை நினைவு கூறச் செய்தது. அன்றிரவும் மகாதேவனும் அவனும் நெடுநேரம் 'நேஷனல் டைம்ஸ்' காரியாலயத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். செய்திகளுக்குத் தலைப்புப் போடுவது, மொழி பெயர்ப்பு, புரூஃப் திருத்தல் - ஆகிய சில உதவிகளை அவருக்குச் செய்தான் சுகுணன். அன்று மகாதேவனும், அவனும் 'டைம்ஸ்' காரியாலயத்திலேயே இரவில் தங்கிவிட்டனர். 'டைம்ஸின்' ஸப்ளிமெண்ட் ஒன்று வெளிவர இருந்ததனால் தொடர்ந்து சில இரவுகள் வேலை இருந்தது. மகாதேவன் காரியாலயத்திலேயே தங்கினார். சுகுணனும் சில நாட்கள் அவருக்கு உதவியாக அங்கு அதிக நேரம் செலவழித்தான். அதில் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் மிகுதியாயிருந்தன. அவன் நாகசாமிக்குக் கடிதங்களை அனுப்பிய மூன்றாம் நாளோ, நான்காம் நாளோ அவனுடைய இராஜிநாமாவை எதிர்பார்த்தே தயாராக எல்லாம் கணக்குப் பார்த்து வைத்திருந்தது போல் 'செக்' இணைத்து - இராஜிநாமா ஒப்புதல் கடிதத்தோடு பதில் அனுப்பியிருந்தார் நாகசாமி. பாண்டுரங்கனார் - பூம்பொழிலின் ஆசிரியராக நியமிக்கப்பட்டுவிட்டதாக அன்று மாலையே வேறொருவர் மூலம் கேள்விப்பட்டான் சுகுணன். நாகசாமிக்குப் 'பல் பத்திரிகைக் காவலர்' பட்டமளிப்பு விழா நடத்தியது போன்ற காரியங்களில் முன்பு பாண்டுரங்கனார் ஈடுபட்டது வீண்போகவில்லை என்று இப்பொழுது சுகுணனுக்குத் தோன்றியது. இந்தச் சில நாட்களில் மகாதேவனோடு பழகி உடனிருந்து பார்த்ததில் அவருடைய அநுபவமும், பத்திரிகைத்துறை ஞானமும், தன்னம்பிக்கையும், சிந்தனைச் சுதந்திரமும் அவனை வெகுவாகக் கவர்ந்தன. ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் அவரிடமிருந்த அறிவுச் செருக்கும் அவனுக்குப் பிடித்திருந்தது. சுகுணனிடம் பேசிய போது அடிக்கடி,

'ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு' -

என்ற திருக்குறளைக் கூறி இந்தக் குறளில் கூறப்படுகிறதை ஒத்த பெருமை தான் பத்திரிகையாளனின் பெருமையும் என்று வற்புறுத்துவார் மகாதேவன். பத்திரிகையாளனின் பெருமிதத்தைக் கற்புடன் ஒப்பிடுவார் அவர். இந்த நாட்டில் பத்திரிகை தொழில் வெறும் வியாபாரமாகாமல் தேசபக்தியும் - சேவை மனப்பான்மையும் நிறைந்த இயக்கமாக வேண்டுமானால் மகாதேவனைப் போன்ற பத்திரிகையாளர்களின் கைகளைப் பலப்படுத்த வேண்டுமென்று சுகுணன் நினைத்தான். அவன் பூம்பொழில் வேலையை விட்ட பின் ஒருநாள் அதிகாலையில் ஃபோர்மென் நாயுடு அவனை அறையில் வந்து பார்த்துவிட்டுப் போனார். அவன் பூம்பொழிலிலிருந்து வெளியேற நேர்ந்தது பற்றியும் வருந்தினார். காலை மலர் சர்மாவின் மேற்பார்வையோடு பைந்தமிழ் நாவலர் பா.பாண்டுரங்கனார் பூம்பொழிலின் புதிய ஆசிரியராக வந்து - கந்தபுராணத் தொடர் கட்டுரை எழுத ஆரம்பித்திருப்பது பற்றியும் ஃபோர்மென் நாயுடு தெரிவித்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு காரியாலயத்தின் அச்சக நண்பர்களைப் பற்றிக் கனிவுடன் விசாரித்த பின் நாயுடுவிற்கு விடை கொடுத்தான் சுகுணன். அந்தச் சில நாட்களில் மகாதேவனோடு பழகியதில் அவருடைய பத்திரிகையாகிய இலட்சியப் போராட்டத்தை நடத்துவதற்காக - அவர் படும் துன்பங்களையும் சுகுணன் கண்டிருந்தான்.

ஹார்பரில் நியூஸ் பிரிண்ட் ரீல்கள் வந்து கிடக்கும். பணம் கட்டிக் 'கிளியர்' செய்ய முடியாததால் உள்ளேயே குமையும் ஊமைத் துன்பத்தோடு - அதை மற்றவர்களிடம் சொல்லி அவர்களையும் வேதனைப் படுத்தாமல் - தமக்குள்ளேயே வைத்து வேதனைப்படும் சுபாவமுள்ளவர் மகாதேவன். பூம்பொழில் காரியாலயத்திலிருந்து வெளியேறிய போது தனக்குக் கிடைத்த தொகையையும், வழக்கமாகத் தன்னுடைய நாவல்களை வெளியிடும் ஒரு பதிப்பாளரிடமிருந்து வாங்கிய தொகையுமாக ஒரு பத்தாயிரம் ரூபாய் வரை அவருக்கு உதவ முன் வந்தான் சுகுணன். மகாதேவன் முதலில் தயங்கினார் - மறுத்தார். தனக்குக் கஷ்டமே இல்லை என்பது போல் சுகுணனிடம் சிரித்துப் பேசி மழுப்பினார். சுகுணன் மிகவும் வற்புறுத்திய பின் "சிநேகிதர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் பெரும்பாலும் சிநேகிதத்தைப் பணயம் வைக்கிற காரியமாக முடிந்து விடுகிறது. அதனால் தான், பயப்படுகிறேன்" என்றார். அதற்கும் சுகுணன் சரியானபடி பதில் கூறினான்:

"நீங்களும் அப்படிப்பட்ட சிநேகிதரில்லை; நானும் அப்படிப்பட்ட சிரமம் தரும் சிநேகிதனாக மாறிவிடப் போவதில்லை. ஆகவே தயங்காமல் நான் தருவதை வாங்கிக் கொள்ளுங்கள். இதை வாங்கிக் கொள்ளத் தயங்குகிறவரை என்னை உண்மை நண்பனாக நீங்கள் அங்கீகரிக்கவில்லை என்று தான் கருதுவேன்."

"இதற்கு அப்படி அர்த்தமில்லை சுகுணன்! எனக்கு வரும் சிரமங்களுக்கு என் நண்பர்களை ஒவ்வொருவராக நான் பணயம் வைக்கக் கூடாது என்று தான் பார்த்தேன். 'பாங்கர்'களாகவும் வர்த்தகர்களாகவுமுள்ள பெரும் பத்திரிகைகளின் முதலாளிகளோடு கருத்து மாறுபட்டு வெளியேறி நான் சொந்தமாகப் பத்திரிகை நடத்துவதால் - வர்த்தகர்கள் என்னைப் பழிவாங்குவதற்காக விளம்பர ஆதரவுகளை தருவதில்லை. பொதுமக்களோ இந்த நாட்டில் பழக்கத்துக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். அவர்களைப் புதியதற்கும் நல்லதற்கும் பழக்கப்படுத்த அதிக முயற்சி வேண்டியதாயிருக்கிறது. 'கன்ஸர்வேடிவ்' மனப்பான்மை தழும்பேறிப் போன தேசத்தில் எண்ணங்களை மாற்றவே பெரும் புரட்சி தேவைப்படுகிறது. நான் சிரமப்படுவதற்கு அதுதான் காரணம். இவ்வளவிற்கும் என் பத்திரிகையை எனக்காகவே பலர் பிடிவாதமாக வாங்குகிறார்கள். பணமாகக் கொடுக்க முடியாதவர்கள் தானிய மூட்டைகளாகவும், பண்டங்களாகவும் கூடச் சந்தாக்கட்டி என் பத்திரிகையை வாங்குகிறார்கள். ஆனால் வாங்குகிற இந்தச் சிறுபான்மையினரை விட வாங்காமல் என்னை தவிக்கவிடும் பெரும்பான்மையோரை நினைத்துத் தான் நான் ஏங்குகிறேன் சுகுணன்..."

"உங்கள் ஏக்கம் நாளடைவில் தீர்ந்துவிடும் சார்! உங்களைப் பிடிவாதமாக ஆதரிக்கிறார்கள் என்று கூறினீர்களே, அந்தச் சிறுபான்மையினரில் ஒருவனாக - என்னையும் எண்ணி இதை ஏற்றுக் கொள்ளுங்கள். இது இப்போது உங்கள் காரியத்துக்கு பயன்படட்டும். மறுபடி எனக்குத் தேவையான போது இதை உங்களிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறேன்" - என்று சொல்லி அந்தத் தொகையை அவரிடம் கொடுத்தான் சுகுணன். சமூகத்தில் எந்தெந்த வடிவில் குற்றங்களும், தீமைகளும், பிழைகளும் மலிந்திருக்கின்றனவோ - அந்தந்தக் குற்றத்தை அங்கங்கே எதிர்த்து நின்று, இதில் குற்றமிருக்கிறது - என்று சொல்ல எழுந்திருக்கும் யாரோ ஒருவனை எத்தனை நெற்றிக் கண்கள் திறந்து வெதுப்புகின்றன என்று எண்ணிப் பார்க்கவே துன்பமாயிருந்தது சுகுணனுக்கு. இப்படி நெற்றிக் கண்களால் வெதும்பி மனம் நமத்துச் சாம்பலாகிவிடாமல் துணிந்து வெளியேறியவர் என்ற முறையில் 'நேஷனல் டைம்ஸ்' மகாதேவனை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. மகாதேவனுடைய முயற்சிக்கு கிடைக்கிற ஆதரவும் வெற்றியும் இந்த நாட்டின் சுதந்திர சிந்தனையாளனுக்குக் கிடைக்கிற முதல் ஆதரவும்... முதல் வெற்றியுமாக அமையுமென்று அவன் நம்பினான். பூம்பொழிலை விட்ட பின்பு 'நேஷனல் டைம்ஸின்' ஸப்ளிமெண்ட் வேலைகளிலும் மகாதேவனோடு உதவியாயிருப்பதிலும் அவனுடைய நேரத்தில் பெரும் பகுதி கழிந்து கொண்டிருந்ததனால் அவன் தன்னுடைய அறையில் தங்குவதே அபூர்வமாயிருந்தது. அப்படியே அவன் அறைக்குப் போனாலும் பதினொரு மணி - பன்னிரண்டு மணி என்று அகாலத்தில் தான் போக முடிந்தது. மறுபடி அதிகாலையில் எழுந்து நீராடி விட்டுத் தம்புச் செட்டித் தெருவுக்குப் போக வேண்டியிருந்ததனால் டெல்லியிலிருந்து மீண்டும் துளசி கூப்பிட்டாளா - இல்லையா - என்ற தகவலைக்கூட அவன் தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. அப்படி இடைவிடாமல் அவருக்காக உழைப்பதில் ஒருவிதமான ஆத்ம திருப்தியையும் நிறைவையும் உணர்ந்தான் சுகுணன்.

இப்படிச் சுறுசுறுப்பாக அவனுடைய நாட்கள் கழிந்து கொண்டிருக்கையில் ஒருநாள் அதிகாலையில் அதிசயமும் ஆனால் எதிர்பார்த்திருந்ததுமான ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை நேரத்தில் சிறிதும் எதிர்பாராத வேளையில், எதிர்பாராத தொலைவிலிருந்து துளசி நேரே அவனைச் சந்திப்பதற்காக அறை வாசலில் வந்து இறங்கினாள். ஒரு டாக்ஸியிலிருந்து டில்லி நாகரிகம் அவள் கையில் பிணைத்திருந்த 'வானிடி பாக்'குடன் கீழிறங்கிய துளசியைப் பார்த்தவுடன் 'அவள் எப்போது டில்லியிலிருந்து வந்தாள்? ஏன் டாக்ஸியில் வந்து இறங்குகிறாள்? ஒரு வேளை நேரே விமானத்திலிருந்தே இங்கு வருகிறாளா?' என்றெல்லாம் சுகுணனின் மனதில் கேள்விகள் எழுந்தன. அவள் டாக்ஸியிலிருந்து கீழிறங்கி வந்த போது அவனோ அறையைப் பூட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவளுக்கோ அவனைப் பார்த்ததும் பேச்சே வரவில்லை. கண்கலங்கி அழுது விடுவது போன்ற துயர மோனத்துடன் எதிரே வந்தாள் அவள்.

"சௌக்கியமா? ஏது இப்படி திடீரென்று சென்னைப் பக்கம்?" - என்று அவன் தான் முந்திக் கொண்டு அந்யோந்யம் தெரியாது வேற்றுமைக் குரலில் அவளை விசாரித்தான்.

"திடீர் திடீரென்று எல்லாக் காரியங்களும் நடக்கிற போது இது அப்படி என்ன பெரிய காரியம்?" என்று கோபத்தோடு ஆரம்பித்தாள் அவள். அவளுடைய அழுகையையோ ஆத்திரத்தையோ தெருவில் வைத்து உரையாடிக் கொள்ள முடியாத நிலையில் மறுபடி மேலே போய் அறைக் கதவைத் திறந்து அவளை உள்ளே வருமாறு அழைத்தான் சுகுணன்.

"டெலிபோனில் பேசிய மறுநாளே காலையில் விமானத்தில் வந்து இறங்கியிருப்பேன். அவர் ஊரிலில்லாததால் முடியவில்லை. நேற்றுத்தான் வந்தார். உடனே எனக்கு அப்பாவைப் பார்க்கணும் போலிருக்குன்னு பொய் சொல்லி இராத்திரி விமானத்துக்கே அவரிடம் டிக்கட் வாங்கச் சொன்னேன். 'சென்னைக்கு ஃபோன் பண்ணி உங்கப்பாவிடம் சொல்லிக் காலையில் மீனம்பாக்கத்துக்குக் கார் கொண்டுவரச் சொல்லிடட்டுமா?' என்று விமான நிலையத்தில் வழியனுப்ப வந்த போது கேட்டார் அவர். 'வேண்டாம்! நானே மீனம்பாக்கத்திலிருந்து அப்பாவுக்கு ஃபோன் பண்ணிக் கார் வரவழைத்துக் கொள்கிறேன்' - என்று சொல்லித் தப்பித்துக் கொண்டேன். வீட்டிலிருந்து கார் வந்து விட்டால் இங்கே வர முடியாது. நேரே அங்கே போக வேண்டியிருக்கும். அதனால் தான் டாக்ஸியில் வந்தேன்."

"இருக்கட்டுமே! நான் எங்கே ஓடிப் போகிறேன்! என்னைப் பார்க்க இத்தனை அவசரமென்ன துளசி? அதற்காக டாக்ஸியில் வருவானேன்? வீட்டிற்குப் போய்விட்டே வந்திருக்கலாமே?" - என்று சுகுணன் கூறியதை அவள் இரசிக்கவில்லை.

"ஏன் இப்படிப் பேசமாட்டீர்கள்? நீங்கள் செய்த அநியாயத்தை ஃபோர்மென் நாயுடு எனக்கு எழுதின கடிதத்தில் தெரிவித்திருந்தார். எப்படித் துணிந்தீர்கள் இதைச் செய்வதற்கு?"

"எதைச் செய்வதற்கு?"

"ஏன் ஒன்றுமே தெரியாதது போல் நடிக்கிறீர்களோ தெரியவில்லை? இராஜிநாமா செய்து விட்டு வெளியேறும்படி இப்போது என்ன நடந்து விட்டது?"

"எவ்வளவோ நடந்திருக்கிறது. உனக்கு ஒன்றும் தெரியாது. அதனால் தான் நீ இப்படிக் கேட்கிறாய்! ஒருவனை 'வெளியே போய்விடு' - என்று சொல்லி நேரடியாக அனுப்புவதை விட அதிக அவமானப்படுத்துவது, வெளியே போவதற்கான காரியங்களை மறைமுகமாக ஏற்பாடு செய்வதுதான். கால் நூற்றாண்டு காலமாக இப்படி ஆட்களை வெளியே அனுப்புவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதைக் கற்றுப் பழகியவர்கள் உன் தந்தையும் ரங்கபாஷ்யமும். உன்னுடைய ஆசையும் ஆர்வமும் இதை ஒன்றும் செய்துவிட முடியாது. என் மேலிருக்கிற பிரியத்தையும் - அன்பையும் - அநுதாபத்தையும் இந்தச் சமயத்தில் நீ வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்வது கூட உனக்குக் கெட்ட பெயரை உண்டாக்கும். நீ யார் மேல் அன்பு வைத்திருக்கிறாயோ அவர் மற்றவர்களிடம் மறைமுகமாக அவமானப்படுவதைக் கூட நீ விரும்ப மாட்டாய் என்று நான் உன்னை நம்பலாமல்லவா?"

துளசி இதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை. வெளியே நின்றிருந்த லாட்ஜ் பையனிடம் காபி வாங்கி வருமாறு குறிப்புக் காட்டினான் சுகுணன்.

"ஒரு நல்ல பத்திரிகை, எதிர்காலத்தில் இனிமேல் நீங்களில்லாமல் சீரழிந்து போகுமே என்ற கவலையால் அதற்கு உரிமையாளரின் மகள் என்ற முறையிலில்லாமல், அதை இதுவரை விரும்பி வாசித்தவள் என்ற முறையிலாவது நான் வருந்தித்தானே ஆக வேண்டும்?"

"எவ்வளவுக்கு எவ்வளவு சீரழிகிறதோ அவ்வளவுக்கவ்வளவு நிறைய விற்பனையாகுமென்று அதை நடத்துகிறவர் எதிர்பார்க்கிறாரோ, என்னவோ? மனிதர்களைக் கூலிகளாகவே எதிர்பார்க்கிறவர்களிடம் உத்தியோகம் பார்ப்பது போல் பெரிய ஆயுள் தண்டனை வேறு எதுவும் இருக்க முடியாது துளசீ?"

இதற்கும் அவள் மறுமொழி கூறவில்லை. தரையைப் பார்த்தபடி கண் கலங்கி நின்றாள். பையன் காபியோடு வந்தான். சுகுணன் அதை வாங்கி இரண்டு 'கிளாஸ்'களில் பகிர்ந்து ஊற்றி ஒன்றைத் தான் வைத்துக் கொண்டு மற்றொன்றை, "காபி சாப்பிடு துளசி" என்று அவளிடம் நீட்டினான். சிறிது தயங்கிய பின் அவள் அதை வாங்கிக் கொண்டாள். துளசி காபியை குடித்துக் கொண்டிருக்கும் போது அவன் அவளிடம் கூறலானான்:

"நாளை மாலை இரயிலில் நான் கோயம்புத்தூர் போகிறேன். திரும்பி வர ஒரு வாரம் ஆகும். தங்கையைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. இதுவரைதான் பத்திரிகை வேலை ஓய்வில்லாமல் இருந்து வந்தது. இப்போது நான் சுதந்திர மனிதன்..."

"என்னைப் பலவிதமான நினைவுகளிலும் வேதனைகளிலும் சிறைப்படுத்தி விட்டு நீங்கள் உங்களைச் சுதந்திர மனிதரென்று சொல்லிக் கொள்கிறீர்களே; இது எத்தனை பெரிய கொடுமை?" - என்று காபி கிளாஸை மேஜையில் வைத்துவிட்டுக் கேட்டாள் துளசி.

"உணர்ச்சிகள் அவரவர் பாவவனையைப் பொறுத்தவை துளசீ! இதிலிருந்து உனக்குக் கிடைக்கிற வாழ்க்கையை நீ சரியாகப் பாவித்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது" - என்று சுகுணன் அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கியபடியே கூறியபோது அவன் தன்னைத் தவிர்த்துத் தவிர்த்து மறுமொழி உரைப்பதை பொறுக்காமல் அவள் வேதனைப்படுவது தெரிந்தது. சுகுணனே மேலும் கூறினான்:

"உன்னிடம் ஒரு வேண்டுகோள் துளசீ? தயவு செய்து அதை நீ ஏற்றேயாக வேண்டும். வீட்டுக்குப் போய் அப்பாவிடம் என்னுடைய இராஜிநாமாவைப் பற்றி நேரடியாகவோ, குறிப்பாகவோ நீ எதுவுமே கேட்கக் கூடாது. உனக்கும் அது நல்லதில்லை, எனக்கும் அது நல்லதில்லை. மணமாகிக் கணவனோடு வாழத் தொடங்கிவிட்ட நீ, உன் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு விடக்கூடாது. இன்னும் நீ பேதையாகவே இருப்பதை நான் விரும்பமாட்டேன். உலகத்தைக் கற்றுக் கொள். அப்படிக் கற்பதை அசட்டை செய்தோ, மறந்தோ கற்பனையில் வாழாதே. அதனால் பல அவதூறுகள் கிளைத்துப் பெருகும்."

"இப்போது சொன்னீர்களே, இதற்கு என்ன அர்த்தம்?"

"உனக்கே புரியும். நன்றாக யோசித்துப் பார்..."

"என் தவிப்புப் பெரியது. உங்களுக்காகத்தான் டில்லியிலிருந்து பதறிப்போய் ஓடி வந்தேன்."

"நம்புகிறேன். ஆனால் உலகத்திற்கு இனி அதைச் சொல்ல முடியாது. மனிதர்களின் காதல் சத்தியங்கள் தோற்ற பின் உலகத்திற்கு அவை செல்லாக் காசுகளாகி விடும். வீட்டுக்குப் போய் மரியாதையாய், லட்சணமாய் 'அப்பா உங்களைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அதனால் உடனே வந்தேன்" - என்று சொல்! அதை உலகம் ஏற்கும். அசடு போல், 'சுகுணன் சார் இப்போது பூம்பொழிலில் இல்லையாமே?' - என்று கேட்காதே! அப்படி நீ கேட்பதை எந்த உலகமும் நல்லபடி ஏற்றுக் கொள்ளாது..."

"உங்களுடைய பேச்சில் முதலிலிருந்தே என்னைத் தவிர்த்து விட முயல்கிறீர்கள்?" - என்று பதில் கூறிய குரல் நெகிழ்ந்து அழுகையே வந்துவிட்டது அவளுக்கு. சுகுணனுக்கும் அந்த வேதனை பொறுக்கவில்லை. மிக அருகில் நெருங்கி, உரிமையின் பழக்கத்தால் முன் போலவே அவளைத் தொடவந்த கைகளை நாணயமாகவும், ஒழுங்காகவும் கட்டுப்படுத்திக் கொண்டு, "துளசீ!" - என்று கனிவான குரலில் அவளை அழைத்தான் சுகுணன்.

அவள் நன்றாகத் தலை நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.

"நான் உன் நெஞ்சிலிருக்கிறேனா இல்லையா?"

"உங்களைத் தவிர வேறொன்றும் என் நெஞ்சில் இல்லையே!"

"அப்படியானால் என் வார்த்தைகளுக்கும் அந்த மரியாதையைச் செய்! என்னை நம்பு. ஏனென்றால் நான் உன்னை நம்புகிறேன். இந்த நம்பிக்கைக்கு உடம்பும் - உடம்பும் சேர்ந்து வாழ்வது மட்டும் இலட்சியமில்லை. மணங்கள் கலப்பது மிகப்பெரிய காரியம். அதைப் பல சமயங்களில் பலர் உலகுக்கு நிரூபிக்க முடிவதில்லை. அப்படி நிரூபிக்க முடியாததை நீ ஒரு குறையாக எண்ணி வாடாதே" - என்ற போது சுகுணனின் குரலும் சோகத்தில் நெகிழ்ந்து கரகரத்தது.
-------------

அத்தியாயம் - 11

உலகத்தில் மற்றவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் அதிகமாக இல்லையானாலும் அவ்வப்போது விசாரிக்கிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

'வெட்டு ஒன்று துண்டு இரண்டாக' எதையும் பட்டுக் கத்தரித்தாற் போல எழுதத் தெரிந்த சுகுணன் அப்போது துளசியிடம் அப்படிப் பேசித் தவிர்க்க முடியாமல் தவித்தான். உணர்ச்சிகளை எதிர்கொள்ளும் போது எல்லா மனிதர்களும் பேதைகளாவதிலிருந்து தப்ப முடியாது போல் தோன்றியது. ஆசைப்படுவதற்கும் அருவருப்படைவதற்கும் சொந்த மனங்கள் மட்டும் இல்லாவிட்டால், யார் யாரோடு வாழவேண்டுமென்று மனிதர்கள் நிர்ணயிக்கிறார்களோ அப்படியே வாழ்ந்து விடலாம். தான் மனத்தில் நிர்ணயித்தபடி வாழமுடியாது போய் - 'இன்னொருவர் நிர்ணயித்தபடி வாழ்கிறோம்' என்ற நினைப்பே, வைத்தியர்கள் மருந்து கொடுத்துத் தீர்க்க முடியாத ஒரு நோய் தான். மனத்தின் அந்தரங்கமான புண்களை ஆற்ற முடியாத வரை மனிதன் கண்டுபிடித்திருக்கும் எல்லா மருந்துகளுக்கும் ஒரு தோல்வியும் உண்டு போலிருக்கிறது என்று எண்ணினான் சுகுணன். துளசியைச் சமாதானப்படுத்தி அவளுடைய வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்கு அன்று அந்தக் காலை வேளையில் மிகவும் சிரமப்பட்டான் அவன். துளசியின் பதற்றத்தையும், அவள் டில்லியிலிருந்து பறந்து ஓடி வந்திருக்கும் நிலையையும், அவளை வீட்டுக்கு அனுப்பிய பின் தனக்குள் நிதானமாகச் சிந்தித்த போது, காதல் தோல்விகளின் போது நிச்சயமாக அநுதாபத்திற்குரியவர்கள் பெண்களே என்று தோன்றியது அவனுக்கு. அப்படிச் சிந்தித்த போது துளசியின் மேல் அதுவரை ஏற்பட்டிராத எல்லை வரை அவனுள் பரிவு பெருகி வளர்ந்தது. ஒரு பெண்ணின் மேல் சத்தியமாகப் பொங்குகிற இந்தப் பரிவிற்குத்தான் காதல் என்று உலகில் பெயர் சொல்லுகிறார்கள் போலிருக்கிறது என்பதையும் சுகுணன் அப்போது உணர்ந்தான். துளசியின் தாபங்களையும், வேதனைகளையும் எண்ண எண்ண அவள் தன்னை மறக்கின்ற வரை - தன்னுடைய நினைவுகளே அவளுள் எழ முடியாதபடி தான் எங்காவது கண் காணாத தேசத்திற்கு ஓடிப்போய் இருந்துவிட வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது. போய்ச் சேர்ந்த இடத்தில் மன நிறைவோடு வாழவும் முடியாமல், பின் தங்கிய நினைவுகளையும் காதல் சத்தியங்களையும் மறக்கவும் முடியாமல் அவள் படும் வேதனைகளைப் பார்த்த பின்பு அவளைக் குற்றவாளியாகவும் அவனால் எண்ண முடியவில்லை. தந்தையின் முன் கோபத்திற்குப் பயந்து திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிற சமயத்தில் தன் மனத்திலிருப்பதைத் திறந்து காண்பிக்க முடியாத அபிப்பிராயக் கோழைத்தனத்திற்கு அவள் ஆளாகிவிட்டதாகவே நினைக்க முடிந்தது. சூழ்நிலைக்குப் பயந்து - பொது அபவாதம் வந்து விடுமோ என்று அஞ்சித் தீரர்களும், இலட்சியவாதிகளுமாகிய ஆண்களே, பல சமயங்களில் சமூக மேடை என்ற தளத்தில் நாகரிகமாக நின்று மனத்தை மூடிக் கொண்டு விடுகிற அளவு அபிப்பிராயக் கோழைத்தனமுள்ள நாட்டிலே, பேதைமை நிறைந்த பெண்ணொருத்தி நூலிழையளவில் தன் அந்தரங்கத்தை வெளிகாட்டிக் கொள்ள முடியாதவளாகி விட்டாள் என்பதை - அவன் உள்ளூர மன்னிக்கவும் இப்போது தயாராயிருந்தான். பல நாவல்களில் - பல சிறுகதைகளில் - பல விதமான கதாபாத்திரங்களின் மனச்சித்திரங்களை வரைந்து வரைந்து அநுபவப்பட்ட அவனுடைய சிந்தனை இந்தப் பிழையை 'இது நேரக் கூடியது தான்' - என்று அங்கீகரிக்கத் துணிந்தது. ஆனால் சிந்தனை அங்கீகரிப்பதை உணர்வு அங்கீகரிக்க மறுத்த சமயங்களில் துளசியின் மேல் அவன் கோபம் கொண்டு கொதிக்கவே நேர்ந்திருந்தது. சிந்தனையையும், உணர்வையும் இணைக்கிற அளவு விவேகானந்தராகவோ, காந்தியாகவோ அவன் ஆகியிருக்கவுமில்லை. மனிதனின் இயற்கைக் குணங்களாக இரத்தத்தோடு இழைகிற மான ஈனங்கள், கோபதாபங்கள் எல்லாம் உணர்வுகளில் இருக்கும் போது சிந்தனை மட்டும் தனித்துச் செயல்பட வழியில்லாதவனாகவே இருந்தான் அவன். துளசி சென்ற சிறிது நேரத்திற்குப் பின், காபி கொண்டு வந்த கிளாஸ்களை எடுக்க வந்த லாட்ஜ் பையன், "இன்னா சார்! அந்தம்மா கோவிச்சுக்கிட்டுப் போயிட்டாங்களா?" - என்று அர்த்தமும், சம்பந்தமும் இல்லாமல் ஒரு நிமிஷம் நின்று சிரித்துக் கொண்டே வினாவிய போது, "ஒண்ணுமில்லே! கிளாஸை எடுத்துக் கொண்டு போ..." என்று மட்டுமே சுகுணனால் பதில் கூற முடிந்தது. பெண்ணின் மேல் அல்லது பெண்மை என்ற வசீகர சக்தியின் மேல் தான் இந்த உலகத்துக்கு எத்தனை கருணை? எத்தனை பாசம்? எத்தனை மயக்கம்? என்று உலகை வியந்தும் அப்போது ஒரு சிந்தனை தோன்றியது அவனுள். விமான நிலையத்திலிருந்து நேரே டாக்ஸியில் தன் அறைக்கு அவள் வந்த பரபரப்பு, அழகின் சோகமாக எதிர் நின்று அழுவது போன்ற குரலில் மன்றாடியது, எல்லாமாகச் சேர்ந்து கண்ணப்பா லாட்ஜ் பையனைக் கூடப் பாதித்திருப்பதை உணர்ந்தான் அவன். சம்பந்தமில்லாமல் யாராவது கேட்கும் இப்படிக் கேள்விக் கூட, ஒரு நினைப்பைப் படைக்கிற சக்தி பெறுவது வியப்பாகத்தானிருந்தது. துளசி மனம் மாறும்படி கண் காணாமல் நீண்ட காலத்துக்கு வேறெங்காவது போய்விட வேண்டும் போல ஒரு விரக்தியும் அப்போது அவனுள்ளே எழுந்தது.

இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து வெளியாகிற தமிழ்த் தினசரி ஒன்றின் இலக்கியப் பகுதியான வாராந்திர வெளியீட்டைக் கவனித்துக் கொள்ள ஓர் ஆசிரியர் தேவை என்று முன்பு ஒருமுறை சம்பந்தப்பட்டவர்கள் தன்னை வந்து அழைத்தது இப்போது ஞாபகம் வந்தது அவனுக்கு. அதே போல மலேயாவிலுள்ள கோலாலம்பூரிலிருந்தும் ஓர் அழைப்பு இருந்தது. முன்பு இந்த அழைப்புக்களை ஏற்றுக் கொண்டு அங்கெல்லாம் போய் அமர்ந்து விடாமல் நினைப்பிலும் நேரிலும் ஒரு மயக்கமாக ஓர் இனிய சொப்பனமாக நின்று தடுத்த புன்னகை துளசியுடையதுதான். இப்போது 'அங்கெல்லாம் கூடப் போகலாமே' - என்று துணிகிற அளவுக்கு அவனுள் வேதனையூட்டக் கூடியதும் இன்று புன்னகையில்லாத துளசியுடைய முகம் தான். 'அன்பு செய்கிற பெண் மனிதனின் வாழ்க்கையை எப்படி ஆட்டிப்படைக்கிறாள்' - என்று நிதானமாக ஒரு விநாடி நினைத்த போது அவனுள் உணர்வு அந்த நினைவை ஏற்றது. அறிவு அந்த நினைவை விவாதித்தது. இந்தச் சிந்தனைகள் குழம்பும் மனநிலையோடு அவன் வெளியே புறப்பட்டான். பி.ஆர்.அன். சன்ஸ் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறித் தம்புச் செட்டித் தெருவிற்குப் போகுமுன் சென்ட்ரலில் இறங்கிக் கோயம்புத்தூருக்கு டிக்கட் வாங்கச் சென்ற போது டிக்கட் 'கௌண்டர்' க்யூவில் எதிர்பாராத விதமாக உறவினர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொண்டபின்,

"என்னப்பா? எங்களுக்கெல்லாம் எப்போது சாப்பாடு போடப் போகிறாய்?" என்று உலகியல் வழக்கப்படி திருமணத்தைப் பற்றி விசாரித்தார் அவர். உலகத்தில் மற்றவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் அதிகமாக இல்லையானாலும் விசாரிக்கிறவர்கள் அதிகமாக இருக்கிறார்களென்று தோன்றியது. இந்த விசாரணை உலக வழக்கில் ஒரு பொது நாகரிக வழக்கம்.

"முதலில் தங்கைக்கு அல்லவா நடக்க வேண்டும்?" - என்று சுகுணன் கூறியதை அவர் ஏற்பது போல் தோன்றவில்லை.

"நீதான் மூத்தவன். உனக்குத் தானே முன்னால் ஆக வேண்டும்? உன் தங்கையை நீயும் உன் மனைவியுமாக மனையில் இருந்தல்லவா தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும்?" - என்று விவாதித்தார் விடாகண்டரான அந்த உறவினர். சந்தித்த இடத்தில் விசாரித்த சம்பிரதாய விசாரணையை அவர் சம்பிரதாயமாக முடித்துக் கொண்டு போகாமல் வளர்த்துவதாகச் சலிப்படைந்த சுகுணன் "கொஞ்சம் அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. மறுபடி சந்திக்கும் போது நிறையப் பேசலாமே?" என்று புன்னகையும் கை கூப்புதலுமாக விடைபெறுகிற விதத்தில் தப்ப முயன்றான். அந்த உறவினர் அப்போதும் விடவில்லை. "எங்காவது வெளியூருக்குப் பயணமோ? பத்திரிகைக் காரியமா? சொந்தக் காரியமா?" என்று அப்போது அவன் டிக்கட் வாங்க வந்த பயணத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டார். ஒரு விநாடி அவருக்கு மறுமொழி கூறத் தயங்கிய சுகுணன் அடுத்த விநாடியே அந்தத் தேவையில்லாத போலித் தயக்கத்தைக் கலைத்தெறிந்தவனாக, "நான் இப்போது பத்திரிகையில் இல்லை" என்றான். இந்த உண்மையை அவரால் இரசிக்க முடியவில்லை.

"ஏன் அப்படி? அட பாவமே! நல்ல சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தார்களே? நிறையப் பேரும் இருந்தது..."

"....."

"இந்தக் காலத்திலே வேலையை விடப்படாது. அதுலேயும் நல்ல சம்பளம் கிடைக்கிற இடத்தை நிச்சயமா விடவே படாது."

"....."

"அப்ப நான் வரேன்..."

அவரே விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார். 'நீ ஒரு வேலையில்லாத வெட்டிப் பேர்வழி! உன்னோடு பேசிக் கொண்டு நிற்க எனக்கு நேரமில்லை' என்று சொல்லாமற் சொல்வது போல அந்த உறவினர் கத்தரித்துக் கொண்டு புறப்பட்டு விட்டதாகத் தோன்றியது. வயிறு முட்டத் தின்கிறவனைப் பஞ்சப் பசியிலடிபட்ட பட்டினிக்காரன் பார்ப்பது போல் - மனிதனின் சம்பளம் முதலிய சௌகரியங்களையும், பதவி - பிரசித்தி - முதலிய சௌகரிய நிழல்களையும் மற்றவர்கள் கவனித்துக் கொண்டே இருப்பது போலவும் அவை அவனை விட்டு நீங்குகிற போது அல்லது அவன் அவற்றை நீக்கிக் கொண்டு 'இப்போது நான் தனி' என்று நிற்கிற போது அந்தக் கவனிப்பையும் வியப்பையும் மற்றவர்கள் விட்டு விடுவது போலவும் தோன்றியது. இப்படி அலட்சியம் செய்வது கூட ஒரு விதத்தில் நெற்றிக் கண்ணைத் திறந்து வெதுப்புவது போல் தான். பிரேம் போட்டுச் சட்ட மடித்து மாட்டிய படம்போல் மனிதனும் வாழ வேண்டுமென்றுதான் சராசரியாக மற்றவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் மனிதனுக்கோ சட்டத்தைக் கழற்றிக் கொண்டு வரவும், வேறு 'பிரேம்' வேண்டுமென்று மாறவும் வளரவும், இயல்பான ஆசை, தூண்டுதல்கள் எல்லாமிருக்கிறது. அந்த உறவினரை நினைத்து - அவர் பரபரப்பாக விசாரித்த ஆர்வத்தையும், அவர் நினைத்த 'பிரேமில்' அவன் மாட்டப்பட்டிருக்கவில்லை என்றறிந்ததும், அவர் புறக்கணித்து விட்டு ஓடிய வேகத்தையும் - நினைத்துத் தனக்குள் தானே சிரித்துக் கொண்டான் சுகுணன்.

சென்ட்ரல் நிலையத்திலிருந்து மறுபடி பஸ் ஏறி அவன் தம்புச் செட்டித் தெருவிற்குப் போன போது - அந்தத் தெருவின் இரு முனைகளிலும் அங்கங்கே சுவர் விளிம்புகளில் அரசு முளைத்த சில கட்டிடங்கள், கிடங்குகளின் ஓரம் ஈச்சம் பாயை மூங்கில் கழியில் நட்டு அதற்குள்ளேயே இரவில் முடங்குவதும், பகலில் துறைமுகத்தில் மூட்டை தூக்குவதுமாக வாழும் கூலிகளின் குடும்பங்களைப் பற்றிச் சிந்தனை வந்தது. 'இவர்கள் வாழ்வைப் பார்த்து வியக்கவும் வியக்காமலிருக்கவும் யாருமே இருக்க மாட்டார்கள் போலிருக்கிறது' என்று தோன்றியது. இவர்களைப் போன்றவர்களைப் பார்த்து அநுதாபப்படவும் பட்டினத்து வாழ்க்கை வேகத்தில் இடமில்லை. வியக்கவும் வழியில்லை. ஒன்று பட்டணத்தில் தேவைக்கு மீறிக் கொண்டாடுகிறார்கள்? அல்லது அளவுக்கு மீறி அலட்சியம் செய்கிறார்கள். கொண்டாடுவதற்கும் அலட்சியம் செய்வதற்கும் நடுவிலுள்ள அவசியமான பல அளவுகள் - மதிப்பீடுகள் இங்கு இல்லை என்றே நினைத்தான் அவன்.

'நேஷனல் டைம்ஸ்' காரியாலயத்தின் படிகளில் ஏறி அவன் மாடிக்குச் சென்ற போது மகாதேவன் ஏதோ தந்தி ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். சுகுணனைப் பார்த்ததும் முகமலர்ந்து வரவேற்ற அவர்,

"ஒரு காரியம் உங்களால் ஆக வேண்டும் சுகுணன்! தந்தி வேறு வந்துவிட்டது. இப்போது நாம் தயாரித்துக் கொண்டிருக்கிற 'இண்டஸ்டிரியல் ஸப்ளிமெண்ட்'டிலேயே இந்தக் கட்டுரையும் வந்தாக வேண்டும். கூனூருக்கும் உதகமண்டலத்திற்கும் நடுவே கிராம போன் ஊசிகள் தயாரிக்கிற தொழிற்சாலை ஒன்றிருக்கிறது. அந்தத் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று கேட்டிருந்தேன். வரச்சொல்லித் தந்தி அடித்திருக்கிறார்கள். நீங்கள் ஏதோ கோயம்புத்தூர் போக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே. போனால் இதையும் முடித்துக் கொண்டு வந்து விடலாமல்லவா?" என்று அவனைக் கேட்டார்.

சுகுணனும் அதற்கு இணங்கினான். அவருக்கு உழைக்கிறோம் - உதவுகிறோம் என்ற எண்ணத்தில் அறிவையும், இலட்சியத்தையும் இரு கண்களாகக் கொண்டு அயராமல் முயலும் ஒரு சுதந்திரப் பத்திரிகையாளனுக்குப் பாடுபட்டுத் துணை நிற்கும் பெருமிதத்தைப் பெற்றான் சுகுணன். அன்று மாலை வரை டைம்ஸ் காரியாலயத்திலே கழிந்தது. மறுநாள் மாலை ஊருக்குப் பயணம் இருந்ததனால் 'டைம்ஸுக்கு' அவன் போகவில்லை. அறையிலேயே இருந்தான். பகலில் கடைவீதிக்குப் போய்த் தங்கைக்குச் சில பொருள்கள் வாங்கிக் கொண்ட பின் மறுபடி அறைக்கு அவன் வந்த போது துளசியிடமிருந்து ஐந்தாறு முறை ஃபோன் வந்ததாக லாட்ஜ் பையன் சொன்னான். அப்படிப் பையன் சொல்லிக் கொண்டிருந்த போதே மறுபடி ஃபோன் அடித்தது. 'பையன்' ஃபோனை எடுத்து விட்டு, "உங்களுக்குத்தான்" - என்று சுகுணனிடம் நீட்டினான். 'மாலையில் அவனைப் பார்க்க வரலாமா?' என்று ஃபோனில் கேட்டாள் துளசி.

"ஊருக்குப் போவதாக நேற்றே சொல்லியிருந்தேனே?" என்றான் சுகுணன்.

"என்றைக்குத் திரும்பி வருகிறீர்கள்?"

"ஒரு வாரம் வரை ஆகலாம்."

"அதற்குள் அப்பா என்னைப் பத்திரமாக டில்லிக்கு விமானம் ஏற்றித் திரும்ப அனுப்பிவிடுவார்..." என்று அவள் ஏக்கத்தோடு கூறிய குரலுக்கு அவன் ஒரு மறுமொழியும் சொல்லத் தெரியாமல் தயங்கினான். முன்பெல்லாம் அவன் வெளியூர் புறப்படுகிற நாளானால் காலையிலேயே அவன் அறைக்கு வந்து சூட்கேஸில் பிரயாணத்துக்கு வேண்டிய புத்தகங்கள் துணிமணிகள் எல்லாம் அடுக்கி வைத்துவிட்டுப் போவாள் அவள். அவனே சொந்தமாகப் பெட்டியில் துணிமணிகளை அள்ளி வாரிப் போட்டுக் கொண்டு புறப்பட்டது அவள் திருமணத்தன்று வெளியூருக்கு ஓடிய பயணம் தான். துளசி அடுக்கி எடுத்து வைத்தால் பெட்டியில் எல்லாம் வரிசையாக, நளினமாக - அழகாக அடுக்கப்பட்டிருக்கும். எதுவும் மறக்கப்பட்டிருக்காது. அவள் திருமணத்தன்று அவன் வெளியூருக்கு ஓடியபோது தானே தன் பெட்டியில் சாமான்களை வைக்கும் சமயத்தில், 'இனி நான் தனி. என் பெட்டியில் பிரயாணச் சாமான்களை எடுத்து அடுக்கும் போது எந்த அழகான கைகளின் வளைகள் கலீர் கலீரென்று இதுவரை ஒலித்தனவோ அந்த அழகான கைகளின் வளைகள் இனி இங்கு ஒலிக்காது' - என்று ஞாபகம் வந்தது. இப்படி அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்த இந்த ஞாபகத்தை அந்த விநாடியே பொய்யாக்குகிறவளைப் போல், "நான் வந்து பெட்டியில் புத்தகங்கள் எல்லாம் எடுத்து வைக்கட்டுமா?" - என்று அப்போதே துளசி அவனிடம் ஃபோனில் கேட்டாள். "வேண்டாம் நேரம் நிறைய இருக்கிறது. நானே பார்த்துக் கொள்கிறேன்" - என்று தான் இன்று இப்போது அவனால் அவளுக்குப் பதில் சொல்ல முடிந்தது. எதிர்ப்புறம் ஃபோனில் சில விநாடிகள் மௌனம் நிலவியது. பின்பும் அவள் குரல் கரகரத்தது:

"என்னைப் பிரித்து வித்தியாசமாக நினைக்க ஆரம்பித்து விட்டீர்கள்..."

"அப்படி நினைக்க வேண்டுமென்று உலக வழக்கு நிர்ணயம் செய்திருக்கிறது துளசி...!"

"போகட்டும்! எனக்கு கொடுத்து வைக்கவில்லை. முடிந்தால் இன்னும் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி ஒரு வாரம் இங்கு இருப்பேன். நீங்கள் திரும்பி வந்ததும் உங்களைப் பார்த்து நிறையப் பேச வேண்டும். உடனே டில்லிக்குத் திரும்ப எனக்கு மனமில்லை..."

"அதுவும் இனி அநாவசியம்..."

"உங்களுக்கு எல்லாமே அநாவசியம் தான். நான் கூடத் தானே?"

"....."

"நான் உங்களுக்காக இன்னும் ஒரு வாரம் இங்கு பழி கிடந்தால் கூட நீங்கள் திரும்ப மாட்டீர்கள்... வேண்டுமென்றே போகிற இடத்தில் நாளாக்கினாலும் ஆக்குவீர்கள். இப்போதே சொல்லி விடுங்களேன். இங்கு நான் காத்திருக்கவா, வேண்டாமா?"

"உன் இஷ்டம் துளசி..." - என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான் சுகுணன்.

வைத்த சுவட்டோடு மறுபடி ஃபோன் மணி சீறிற்று. எடுத்தான். அவள் தான் மீண்டும் பேசினாள்.

"ஏன் இப்படிப் பேசப் பிடிக்காமல் ஃபோனை 'டக்'கென்று வைத்து விட்டீர்கள்? அத்தனை வெறுப்பா என் மேல்?"

"நீயாக அப்படி நினைத்துக் கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் துளசி?"

- என்று அவன் ஆறுதலாக ஓரிரு வார்த்தைகள் விசாரித்த பின்பே அவள் திருப்தியோடு ஃபோனை வைத்தாள். எவள் பேதையாகி ஒருவனை விடாமல் ஓடி வந்து துரத்துகிறாளோ அவளுடைய அன்பு கூடச் சலிப்பது உண்டு போலிருக்கிறது. ஒரேயடியாக இனிப்பு உண்பது போல் வந்து மோதும் அன்பு வெள்ளம் மனிதனைப் பிரமிக்கச் செய்து விடுவதால் மோத வருகிற அந்தப் பிரமையோடு எதிர் பொங்கிக் கலக்கவும் முடியாது மலைத்துப் போகிறது. சுகுணனும் அப்போது அப்படி மலைத்த நிலையில் தான் இருந்தான். அந்த ஏமாற்றம் அவனையும் தவிக்க வைத்தது என்பது உண்மைதான். ஆனால் அந்தத் தவிப்பை ஆண்மையின் பெருமிதத்தோடு அடக்கியாண்டு பேச முடிந்தது அவனால். அவளால் அது முடியவில்லை.

மெல்லிய பலவீனமான சிறகுகளையுடைய பறவைகள் அதிக உயரம் பறக்க முடிவதில்லை. ஆனால், அவை அதிக உயரம் பறக்கிற பறவைகளை எல்லாம் விட அழகாகவும், மென்மையாகவும், இங்கிதமாகவும் தோன்றுகின்றன. குயிலைப் போல், கிளியைப் போல், சிட்டுக் குருவியைப் போல், மைனாவைப் போல், பெண்ணின் அன்பிற்கும் மெல்லிய சிறகுகள் தான் உண்டு போலிருக்கிறது.

அன்று மாலை இரயில் புறப்படும் போது அத்தனை மன வேதனைகளுக்குமிடையில் கூடப் பிரயாணக் குறுகுறுப்பு அவன் மனத்தில் இருந்தது. இரயில் புறப்படு முன் கடைசி நிமிஷத்தில் எப்படியோ மின்னல் போல் துளசியும் ஒரு விநாடி வந்து கண் கலங்கி நின்றாள்.

'விடாமல் துரத்தும் இந்த மெல்லிய காதல் பறவையின் சிறகுகள் வலிக்குமே' என்று அவனுள்ளம் இரத்தம் கசிந்து மனம் புண்ணாயிற்று. அவளை ஆளவும் அவனுக்கு உரிமையில்லை. கண்டிக்கவும் உரிமையில்லை! தான் டில்லி திரும்புவதற்குள் அவசியம் அவன் வந்து விட வேண்டும் என்று மன்றாடிக் கொண்டே, "நானே செய்தது. ரயிலில் சாப்பிட வசதியாயிருக்கும்" - என்று ஒரு டிபன் பொட்டலத்தையும் எடுத்து நீட்டினாள் துளசி. அவை மறுக்கும் துணிவின்றி அவன் வாங்கிக் கொண்டான்.

"மனிதர்கள் நாடும் சுகங்கள் இப்படி அல்பமானவைதான். ஆனால் இந்த அல்பமான சுகங்களைத் தானே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் காவிய குணங்களாகக் கொண்டாடியிருக்கிறார்கள்?"

துளசியின் ஆசைகளை ஒரு வேதாந்தியாக நின்று 'அல்பமானவை' என்று அவன் எடை போட முடியும். ஆனால் கவியாக நின்று அல்பமாக எடை போட முடியாது. கவி இரத்தினங்களையும் மணிகளையும் நிறுத்துச் சிறிய பொருளுக்கும் பெருமதிப்புக் கணிக்கிறவன். கவிகள் தான் உலகத்தின் முதல் தரமான அல்ப சந்தோஷிகள். அவர்களுடைய நிறுவையில் மனிதர்களின் ஆசாபாசங்களுக்கும் விலை மதிப்பு அதிகமாகத் தான் கணிக்கப்படுமே ஒழியக் குறைவாகக் கணிக்கப்படுவதில்லை. அந்தக் கவி நிறுவையில் துளசி ஓர் இரத்தினமாக அவன் மனத்தில் ஒளிர்ந்தாள். இரயிலில் ஒரு மலையாள தினப்பத்திரிகையின் தலைமை நிருபர் அவனோடு பயணம் செய்தார். சென்னையில் ஆண்டிற்கொருமுறை நிகழும் 'தென் பிராந்திய ரிப்போர்ட்டர்ஸ் கில்டின்' மகாநாட்டில் அவரை அடிக்கடி பார்த்திருக்கிறான் அவன். அதனால் இருவரும் பல துறைகளைப் பற்றி உரையாடிக் கொண்டே செல்ல முடிந்தது. திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் சென்னைக்கும் தென்பகுதிக் கேரளத்திற்கும் இணைப்பு ஏற்படுத்துகிறது. பல மொழிப் பிரதேசங்களை ஊடுருவி ஓடும் இரயிலுக்கு எப்போதுமே ஒரு பத்திரிகையின் நல்ல சிறப்பு மலர் போன்ற அழகு உண்டு. அந்த அழகு, அந்தப் புத்துணர்வு, அந்தப் பிரயாணத்தின் குறுகுறுப்பு எல்லாமே துளசியின் மனத்தில் உள்ள வேதனைகளை எண்ணி உருகுவதிலிருந்து தற்காலிகமாக அவனை விடுதலை செய்திருந்தன. ஜோலார்பேட்டை தாண்டியதும் மலையாள நண்பர் உறங்கத் தொடங்கி விடவே சுகுணனும் 'பெர்த்'தில் படுக்கையை விரிக்கலானான். துளசியின் சிற்றுண்டிப் பொட்டணத்தை அரக்கோணம் கடந்ததுமே காலி செய்தாயிற்று. அது அப்போதிருந்த அவன் பசிக்கு மிகவும் குறைவாயிருந்ததாலும் கொடுத்தவளின் பிரியத்தினாலும் மன நிறைவினாலும் வயிறே நிறைந்துவிட்டது போல் பரிமளித்தது. வயிற்றை நிரப்பக் கூடியது சோறே ஆனாலும் யாரோ ஒருவர் நம் மேல் உயிரை வைத்து அன்பு செய்கிறார்கள் என்ற ஞாபகம் தான் மனத்தை நிரப்புகிறது. மனத்தை நிரப்ப இப்படி ஓர் அன்பு தென்படுகிற நேரத்தில் வயிற்றை நிரப்ப வேண்டிய பசி கூட ஞாபகத்தில் உறைப்பதில்லை. 'நாம் இன்னார் மேல் உயிரை வைத்திருக்கிறோம் - நம் மேல் இன்னார் உயிரை வைத்திருக்கிறார்கள் - என்ற நம்பிக்கை தான் வாழ்க்கையை நடத்துகிறது' - என்றெண்ணிய போது அந்த எண்ணத்தின் திருப்தியிலேயே துளசி தன்னுடன் வாழ்வது போல் உணர்ந்தான் சுகுணன். முன்பு பலமுறை அவளைக் கோபித்தது - ஆத்திரப்பட்டது எல்லாம் கூடத் தன்னுடைய மனப்பக்குவமின்மையினால் தான் செய்த தவறுகளோ என்று கூட அவன் அந்த வேளையில் நினைக்கலானான். ஒரு நினைப்பைப் பிரயாணத்தின் போது நினைத்தால் அதன் போக்கே தனி.

மனிதனின் தீர்க்கமான கூரான நினைவுகள் திட்டங்கள் எல்லாம் அவனுடைய ஏதாவதொரு பிரயாணத்தின் போதுதான் உருவாகின்றன போலும். பிரயாணத்தின் போது வருகிற சிந்தனைகள் வைகறையின் பனி புலராத மலராத மலர்களைப் போல் புதுமையாகவும் பொலிவாகவும் அமைகின்றன. அப்படிப்பட்ட பல பொலிவான நினைவுகளுடன் உறவாடி உறவாடி உறங்கவே வெகு நேரமாயிற்று சுகுணனுக்கு. உடனே சிறிது நேரத்தில் விடிந்தது போல் கோவையும் வந்துவிட்டது. இரயில் தூக்கத்தில் இரவும் வேகமாக ஓடிவிடுகிறது. பனி மூடிய கோவை - அந்த மஸ்லீன் துணி போர்த்தாற் போன்ற நளினக் கோலத்தைக் 'கொச்சி எக்ஸ்பிரஸ்' வருகிற நேரத்திற்காகவே புனைந்து கொண்டு காத்திருந்தாற் போலத் தோன்றியது.

'வைகறையைத் தெய்வங்கள் படைக்கின்றன. நடுப்பகலை அரக்கர்கள் ஆள்கிறார்கள். இரவை மன்மதன் கைப்பற்றுகிறான். மறுபடியும் காலையில் தேவர்களின் தெய்வசக்தி அதை மீட்டுகிறது' என்று 'பாலைவனத்துப் பூக்கள்' நாவலை எழுதிய போது ஓரிடத்தில் தான் குறிப்பிட்டிருந்ததை 'கொச்சி எக்ஸ்பிரஸ்' - கோவை நிலையத்தில் புகுந்து நின்ற அந்த பூங்காலையில் எண்ணினான் சுகுணன். கீழே மங்கலாகத் தெரியும் நகரை விட மேடான கோவை இரயில் நிலையத்தில் இறங்கியதும் அந்த நேரமும் நகரமும் மேற்கு நாட்டு நகரங்களுக்கு இணையாகத் தோற்றமளித்தன. அந்த மண்ணோடு எங்கோ ஒரு மூலையில் மறைந்து இளமை நினைவுகள் அவனுள் எழுந்தன. அங்கே வளர்ந்தது, வாழ்ந்தது, படித்தது, ஆசைப்பட்டு ஆசைப்பட்டு, ஆசைப்பட்ட பத்திரிகைத் தொழிலுக்கே தேர்ந்தெடுக்கப்பட்டுப் பத்திரிகைத் தொழிலுக்காக இதே போல் ஒரு நாள் சென்னைக்கு இரயிலேறியது எல்லாம் நினைவு வந்தன. இதே போலக் கொச்சியிலிருந்து சென்னைக்குப் போகும் எக்ஸ்பிரஸ் கோவை நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு மாலையில் அவன் இரயிலேறியதும் இத்தனை ஆண்டுகள் சென்னை வாசியாயிருந்து வாழ்க்கையின் உச்சபட்சமான சூதுவாதுகளையும், நன்மை தீமைகளையும் தெரிந்து கொண்டு இன்று திரும்புவதுமே ஞாபகத்தில் அலையாடின.

கொங்கு நாட்டின் வெள்ளை மனம், 'அப்ப வாரேனுங்க...' என்பது போல் இழுத்து இழுத்துப் பேசும் கொங்கு நாட்டின் அன்பான உரையாடல் எல்லாம் அவனுள் மறைந்திருந்தன; மறந்திருந்தன. இன்றோ மறுபடி நினைவு வருகின்றன. வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்க சென்னையை விடச் சிறந்த இடமில்லை. வாழ்க்கையை அனுபவிக்கவோ சென்னையில் இடமில்லை. 'டிரெயினிங் ஸ்கூல்' படிப்புப் போல் தான் சென்னை வாசம். 'டிரெயினிங்' கிடைக்கிற இடத்திலேயே அதன் பலனை எதிர்பார்ப்பது சாத்தியமில்லை என்று தோன்றியது. சுகுணன் கோவை நிலையத்தில் இறங்கி நின்று நெட்டுயிர்த்தான். கீழே அகன்ற வீதிகளில் கோவையின் தேசீய வாகனங்களாகிய 'ஆட்டோ' ரிக்ஷாக்கள் விரைந்து கொண்டிருந்தன. தொலைவில் பஞ்சாலைப் புகைப் போக்கிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்தன. சிறிதும் பெரிதுமாகப் புதிய முறையில் நவீனக் கட்டிட எழுச்சிகள் காலத்தையும் நகரின் தோற்றத்தையும் புதுமையாக்கிக் கொண்டு கண்ணுக்கு முன்னால் மங்கலாகத் தோன்றின.

--------------

அத்தியாயம் - 12

'நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே' - என்று சிவபெருமானையே எதிர்த்து நின்று நியாயம் பேசிய நக்கீரன் பிறந்த போதே உலகத்தின் துணிவுள்ள முதல் பத்திரிகையாளன் பிறந்துவிட்டான்.

வழக்கமாகப் பார்க்கும் மனிதர்கள், வழக்கமாக நடமாடும் இடங்கள், இவற்றை நீக்கி வெளியூருக்கு வந்த உற்சாகம் மனத்தில் இருந்தது. கோவை நிலையத்திலிருந்து அண்ணூருக்குப் போக வாடகைக் கார் தேடும் முயற்சியில் ஈடுபட்டான் சுகுணன். மிகச் சில ஆண்டுகளில் கோயம்புத்தூர் எவ்வளவோ வளர்ந்திருந்தது. குண்டூசி முதல் இயந்திரங்கள் வரை எல்லாவற்றையும் உருவாக்கவல்ல பல பெரிய தொழிற்சாலைகள் தோன்றியிருந்தன. சத்தியமங்கலம் சாலையில் கணபதியைக் கடப்பதற்குள்ளேயே பல பெரிய தொழிற்கூடங்கள் புதியனவாகவும் நவீனமான தோற்றம் உடையனவாகவும் தென்படத் தொடங்கி விட்டன! சுண்ணாம்பு கலப்புடன் சுக்கான் கல்லும் மண்ணுமாகத் தெரியும் கோவையின் பூமியயப் பல இடங்களில் கட்டிடங்களுக்காக வானம் தோண்டிக் குவித்திருந்தார்கள். சென்னையிலும், பிறபெரிய நகரங்களிலும் கட்டிடங்கள் எழுகிற விரைவையும், ஆடம்பரத்தையும் காணும் வேளைகளில் எல்லாம் இனி உழுவதற்கும் விளைவதற்கும் மண்ணே மீதமிருக்காதோ என்று ஒரு மலைப்பான எண்ணம் சுகுணனுக்கு அடிக்கடி வருவதுண்டு. பாரதத்தின் இருண்ட கிராமங்களையும் எழுத்தறிவில்லாத மக்களையும் மனத்திற் கொண்டு காந்தியடிகள் போராடிய சுதந்திரப் போர் நகரங்களை மட்டுமே வளர்க்கும் ஒருதலைப் பட்சமான வெற்றியாகப் போய் விட்டதோ என்ற சந்தேகம் கூட அவனுள் அடிக்கடி எழுந்ததுண்டு. அண்ணூரில் கோவையின் வளர்ச்சி தென்படவில்லையாயினும், வளர்ச்சிக்கு அருகிலிருக்கும் ஒரு சூழ்நிலை தென்பட்டது. சாலையின் இருபுறமும் செழிப்பான பருத்திச் செடிகளில் வெளேரென்று பருத்தி பூத்திருந்தது. இடையிடையே கரும்புத் தோட்டங்கள் பசுந்தோகைகளைச் சிலிர்த்துக் கொண்டு செழுமையாகத் தோன்றின. விடுதிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அவள் அங்கேயே தங்கி வசித்து வந்தாள். சகோதரியோடு தானும் தங்க முடியாது என்பதைச் சுகுணன் நினைவு கூர்ந்தான். வாடகைக் கார் பள்ளிக்கூட விடுதிக்குள் நுழைந்த போது எதிரே தென்பட்ட ஒவ்வொருவரும் தன்னையும், காரையும் வியப்புடன் ஏறிட்டுப் பார்ப்பதை சுகுணன் உணர முடிந்தது. கார் விடுதி முகப்பில் நின்றதும் வராந்தாவில் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்த நாலைந்து பெண்கள் பரபரப்பாகப் படியேறி மேலே மாடிக்குப் போய்ச் சுகுணனின் சகோதரியை அழைத்து வந்தனர். தனிமையில் சலித்துச் சலித்துத் தன் வரவைப் பற்றி கற்பனையும் ஆவலும் காண்பித்த தங்கை தன்னிடம் படிக்கிற பெண்களிடம் எல்லாம் அதைப் பற்றிச் சொல்லிப் பெருமையடித்துக் கொள்ள தொடங்கியிருக்க வேண்டுமென்று அவனால் அநுமானம் செய்து கொள்ள முடிந்தது. ஆவல், வியப்பு, ஆகிய உணர்வுகளில் எல்லாம் மரத்துப் போயிருந்த பட்டினத்து மனிதர்களிடையே இருந்து விட்டு, எதிலும் ஆவலும், வியப்பும் நிறைந்த சிற்றூர் மனிதர்களைச் சூழ்வது திடீரென்று ஏதோ ஒரு விதமான விடுதலையும் சுதந்திரமும், கிடைத்து விட்டதைப் போல் மகிழச் செய்தன. அந்த மகிழ்ச்சியில் இனம் புரியாததொரு குறுகுறுப்பும் இருந்தது.

"வா! அண்ணா! இப்போதுதான் என்னைத் தேடி வர வழி தெரிந்ததா?" என்று புன்னகையோடு முகம் மலர எதிர் கொண்ட தங்கையை, "சௌக்கியமா பவானி?" என்று அன்புடனே விசாரித்தான் சுகுணன்.

"ஹெட்கிளார்க் வீட்டு மாடியில் நீ தங்கிக் கொள்ள இடம் ஏற்பாடு செய்திருக்கிறேன். வா! நானும் கூட வருகிறேன். காரிலேயே போய் விடலாம்" என்று அவனோடு பக்கத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் பவானி. நீண்ட நாள் அவளைப் பார்க்காமல் இருந்து விட்டுத் திடீரென்று இப்போது பார்க்கிற வேளையில் பொலிவாகவும் வனப்பாகவும், அவள் வளர்ந்திருந்திருப்படு போல் தோன்றியது சுகுணனுக்கு. படிக்கிற பெண்கள் அவளிடம் வைத்திருக்கும் அன்பையும், பிரியத்தையும் காணப் பெருமையாயிருந்தது அவனுக்கு. அந்த ஊருக்கு திருவிழா வந்து விட்டதைப் போல் அவன் வரவைக் கொண்டாடினாள் தங்கை. படிக்கிற பெண்களிடமும், சக ஆசிரியைகளிடமும், அவளுக்கு இருக்கும் செல்வாக்கைப் பார்த்து வியந்தான் சுகுணன்.

"உங்களைப் போல் பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்குவதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்று ஹெட்கிளார்க் மிகவும் விநயமாகத் தன் வீட்டிற்குள் அவனை வரவேற்றார். எதிர்ச்சாரியிலும் அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்தும் ஒரு கொத்து முகங்கள் எட்டிப் பார்க்க வாடகைக் காருக்குப் பணம் கொடுத்தனுப்பி விட்டுச் சுகுணன் ஹெட்கிளார்க் வீட்டில் அவருடைய மூன்றாவது மகள் என்று சொல்லிப் பவானி அறிமுகப்படுத்தி வைத்த யுவதி அவனுக்குக் காபி கொண்டு வந்து கொடுத்து விட்டு - அவனுடைய நாவல்களையும், தொடர் கதைகளையும் ஒவ்வொன்றாகப் பெயர் சொல்லி அவற்றைத் தான் பலமுறை திரும்பத் திரும்பப் படித்திருப்பதாகச் சொன்னாள்.

"அப்படியா! நிரம்ப மகிழ்ச்சி" - என்று அவளுக்கு மறுமொழி கூறிய சுகுணனை இடைமறித்து "இவளுடைய தற்கால இலட்சியம் கதைகளைப் படிப்பது, எதிர்கால இலட்சியம் யாராவது ஒரு நல்ல எழுத்தாளரைக் கணவனாக அடைவது" என்று பவானி கேலியில் இறங்கினாள்.

"தற்கால இலட்சியத்தைப் பற்றி ஒன்றும் பயமில்லை. ஆனால் எதிர்கால இலட்சியம் தான் பயப்படும்படியாக இருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே சுகுணன் கூறிய போது ஹெட்கிளார்க் மகள் நாணி உள்ளே ஓடி விட்டாள்.

பகல் உணவுக்குப் பின் ஓரிரண்டு மணி நேரம் அமைதியாக உறங்க முடிந்தடு. மூன்று மணிக்குப் பவானி வந்து அவனை எழுப்பி விட்டாள்.

"பள்ளிக்கூட இலக்கிய மன்றத்தின் சார்பில் இன்று நீ பேச வேண்டுமென்று ஹெட்மிஸ்டர் ரொம்ப வற்புறுத்துகிறாள் அண்ணா!" என்றாள் அவள்.

'வந்த இடத்திலும் இதேது பெரிய வம்பாகிவிட்டது' என்று தட்டிக் கழிக்க முயன்றான் அவன். பவானி வற்புறுத்தவே மேலும் மறுக்க்த் துணிவின்றிச் சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டான் அவன். பள்ளிக்கூடத்துத் தலைமை ஆசிரியை அசடுவழியச் சிரித்துக் கொண்டே, "இந்தப் பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பத்திரிகையில் அவசியம் நீங்கள் ஏதாவது எழுத வேண்டும்", என்று ஒரு புகழ் மீனுக்குத் தூண்டிலைப் போட்டு வைத்தாள். மாணவிகள் அவன் பேச்சை மிகவும் ஆர்வத்தோடு கேட்டார்கள். அன்றிரவு அவன் பவானியோடு விடுதிலேயே சாப்பிட்டான். பத்திரிகைத் தொழிலின் புகழிலும் ஒளியிலும் உள்ள அபாயம் அந்தப் புகழையும் ஒளியையும் அடியொற்றி வரும் பொறாமைகளையும், பகைகளையும் தாங்குவதுதான். தான் அடைந்தாற் போன்ற கோபதாபங்களையோ, சலிப்பு அலுப்புக்களையோ அடையாமல் பவானி அந்தப் பள்ளிக் கூடத்தில் பூப்போல் மலர்ந்து வாடாமல் மணம் பரப்பிக் கொண்டிருப்பதை எண்ணிச் சுகுணன் பூரிப்படைந்தான். இரண்டு நாள் அந்தச் சிற்றூரிலே இருந்துவிட்டு - மூன்றாம் நாள் உதகமண்டலத்திற்குப் புறப்பட்ட போது பவானியும் இரண்டு மூன்று நாள் லீவு போட்டுவிட்டு அவனோடு புறப்பட்டாள். உதகமண்டலத்துக்குப் போகும் போதுதான் 'பூம்பொழில்' வேலையை உதறிவிட்டதைப் பற்றித் தங்கையிடம் முதல் முதலாகத் தெரிவித்தான் அவன். அவனையும் அவன் பிடிவாதங்களையும் பற்றி நன்றாக உணர்ந்திருந்த பவானி, "ஏன் வேலையை விட்டு விட்டாய்?" என்று கேட்கவில்லை - "இனிமேல் என்ன செய்வதாக உத்தேசம்" என்று மட்டுமே கேட்டாள் - அதற்கு அவன் கூறிய பதிலும் உறுதியானதாக இருந்தது.

"யார் தன்னிடம் குற்றமற்றவனாய்ப் பிறருடைய குற்றங்களை எடுத்துக் காட்டுகிறானோ அவனை நோக்கிச் சமூகத்தின் நெற்றிக் கண்கள் திறக்கத்தான் செய்யும். குற்றம் செய்கிறவர்களின் நெற்றிக் கண் திறக்கிற அளவு அவர்களைக் கொதிப்படையச் செய்ய முடியாத எழுதுகோல் வெறும் மரக்கோல் தான். என் எழுதுகோல் மரக்கோலாயிருந்ததில்லை. இனியும் அப்படி இருக்கப் போவதில்லை; சொற்களை அணிவகுத்து நிறுத்திப் போராடுகிறவன் வெற்றி பெற நீண்டகாலம் பிடிக்கும். ஏனென்றால் அவன் ஆயுதங்கள் பொருள் தெளியப் பொருள் தெளியப் பலமடைகின்ற வார்த்தைகளாக நிற்கின்றன" என்று அவன் கூறிய மறுமொழி மிகவெளிப்படையாக அவளுக்குப் புரியாவிட்டாலும் அதில் ஒரு திடமிருப்பதை அவள் உணர்ந்தாள்.

"சத்தியமங்கலத்து மாமா உன் ஜாதகம் எங்கிருக்கிறதென்று மாதத்திற்கு ஒருமுறை வந்து கேட்டுவிட்டுப் போகிறார்?" என்று அவனுடைய திருமணத்தைப் பற்றி மெல்ல அவனுக்கு நினைவூட்டினாள் பவானி.

"வெட்கப்படாமல் அவரிடம் உன் ஜாதகத்தை முதலில் குறித்துக் கொடு பவானி!" என்று நாணத்தினால் சிவக்கும் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தபடி மறுமொழி கூறினான் சுகுணன்.

"ஏதோ நாலு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு நான் இப்படி இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா அண்ணா?" என்று அவனை மடக்கிக் கேட்டாள் பவானி. அந்தப் பேச்சு அவ்வளவில் மேலே தொடராமல் நின்றுவிட்டது. உதகமண்டலத்திலிருந்து அவர்கள் திரும்பிய நாளன்று அதிகாலையில் முதல் பஸ்ஸில் அங்கிருந்து புறப்பட்டிருந்ததனால் மலையிலிருந்து கீழே மேட்டுப்பாளையத்திற்கு இறங்குகிற வழியில் பாக்கு மரக் கூட்டங்களிடையே பஸ் வரும் போது திருமண வீட்டில் மணப்பது போல் பாக்கு மரம் பூத்து மணந்த அந்த மங்கல நறுமணத்தைப் பற்றிச் சுகுணன் பவானியிடம் வாய் ஓயாமல் புகழ்ந்து கொண்டே வந்தான். உதகையிலிருந்து திரும்பிய தினத்தன்று மாலையில் அவர்கள் மருதமலைக்குப் போய் வந்தார்கள். அண்ணனும் தங்கையும் மறுநாள் அதிகாலையில் பேரூருக்குப் போய் வந்தார்கள். சிறு சிறு அலைகளுடன் ஓர் ஓரமாக நீர் சிலிர்த்து ஓடும் நொய்யல் நதிக்கரையில் தென்னை மரக் கூட்டமும் கொய்யா மரக் கூட்டமுமான அந்த இடம் சுகுணனுக்கு மிகவும் விருப்பமானது. கோவையின் பரபரபு ஒடுங்கி அமைதியும் அழகும் விலகி இருக்குமிடம் என்பதால் சிறு வயதிலிருந்து பேரூரை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

அன்று பகலில் சிங்காநல்லூரிலுள்ள ஓர் உறவினர் வீட்டிற்கு அவனும் பவானியும் சாப்பிட அழைக்கப்பட்டிருந்தார்கள். உணவு முடிந்ததும் அவர்களுடைய அழைப்பின் நோக்கம் மெல்ல மெல்ல வெளிப்பட்டது. சுகுணனுடைய ஜாதகம் வேண்டுமென்று மெதுவாக ஆரம்பித்தார் அந்த உறவினர். அண்ணனும் தங்கையும் அந்தக் கேள்வியை நாசூக்காகத் தட்டிக் கழித்துவிட்டு அங்கிருந்து தப்பினார்கள்.

"அண்ணாவையே கேளுங்களேன். நான் சிறியவள், என்னைக் கேட்டால் நான் என்ன செய்ய முடியும்?" என்றாள் பவானி.

"இப்போது அதற்கென்ன அவசரம்? தங்கைக்குத்தான் முதலில் வரன் பார்க்க நினைத்திருக்கிறேன். எனக்கு இப்போது சாத்தியமில்லை. 'ஜர்னலிசத்தில், ஒரு பெரிய 'டிப்ளமா' வாங்குவதற்காக அமெரிக்காவோ, ஐரோப்பாவோ, போக எண்ணமிருக்கிறது. போனால் திரும்ப நாளாகும். அப்புறம் தான் இதைப் பற்றிச் சிந்திக்க முடியும்..." என்று ஒரே போடாகப் போட்டான் சுகுணன். சாயங்காலம் அவன் கோவைக்கு வந்து நீலகிரி எக்ஸ்பிரஸில் - சென்னை புறப்பட்டபோது பவானிக்கு அழுகையே வந்து விட்டது. "ஏதோ மூன்றாம் மனிதர்கள் சந்தித்துக் கொள்வது போல் எப்போதாவது சந்தித்துக் கொள்கிறோம். மறுபடி எப்போது பார்ப்போம் என்று உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது..."

"அப்படிச் சந்திக்கிற சந்திப்பில் தான் உறவு, பாசம் எல்லாம் அதிகமாகச் சிலிர்த்தெழுகிறது பவானி! சிறு குழந்தை போல் அழாதே... எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! இது பொது இடம்! கடிதம் எழுதினால் அறை விலாசத்துக்கு எழுது. மறந்து போய் இனியும் 'பூம்பொழிலுக்கு' எழுதாதே..." - என்று தங்கைக்கு ஆறுதல் கூறி விடைபெற்ற போது சுகுணனும் மனம் நெகிழ்ந்து தான் போயிருந்தான். மனிதர்களின் பலவீனம் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொள்வதில்தான் இருக்கிறதென்று தோன்றியது. தங்கையின் அந்த அழகிய முகம் - உயரமான வாளிப்பான தோற்றம் - கோவை நிலையத்தின் மேடையில் மங்கி மறைந்த போது உணர்வு அவன் மனத்தைப் பிசைந்தது. உள்ளே ஒரு சோகம் வந்து கவிந்து விலகியது.

'போனதும் ஞாபகமாகக் கடிதம் எழுதுங்கள்' - ஒரு வேண்டுகோள், 'சுவாமி எவிடைக்கா போகுந்தது?' - என்று யாரோ ம்லையாளத்தில் யாரையோ விசாரிக்கும் ஒரு குழைவான குரல், அர்த்தமில்லாமல் இரயிலோடு கலந்து ஓசையில் சங்கமமான சில குரல்கள் - சில வார்த்தைகள் - காதில் விழுந்தன. வண்டி விரைந்து விட்டது.

'எங்கே போகிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?' சதா காலமும் இதயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிற - இருக்க வேண்டிய இந்தக் கேள்வியை இரயில் பயணத்தின் போது மட்டும் கேட்டுப் பார்த்துக் கொள்கிறோமா என்ன? மனத்தினால் போவதும், வருவதும், தங்குவதும் கூடப் பிரயாணங்களானால் மனிதன் பிரயாணத்தைத் தவிர வேறெதுவும் செய்யவில்லல என்றாகிவிடும். அப்படி ஆகுமானாலும் அது ஒரு தத்துவம் தான். சுகுணன் அமர்ந்திருந்த அந்தப் பெட்டியில் மொத்தம் ஏழு பேர் இருந்தனர். மூவர் பெண்கள். நாலு ஆண்களில் சுகுணனுக்கு எதிர் வரிசையில் அமர்ந்திருந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் இரயிலில் இவன் ஏறி உட்கார்ந்த விநாடியிலிருந்து - அவனை உற்று உற்றுப் பார்ப்பதும் - ஏதோ கேட்க நினைப்பவர் போல் தயங்குவதுமாக இருந்தார். சுகுணன் அதைக் கவனித்தாலும், அவராகக் கேட்கட்டுமே என்று இருந்தான். இரயில் விரைந்து நகரத் தொடங்கியதும் அவராகப் பேச்சைத் தொடங்கினார்.

"... நீங்கள்... தொகுதி எம்.எல்.ஏ. அல்லவா?" என்று அவர் வினாவிய போது ஒரு விநாடி திகைத்த பின், "இல்லை நான் எந்தத் தொகுதி எம்.எல்.ஏ.யுமில்லை" - என்று மறுத்தான் சுகுணன். அப்படியும் அவர் விடவில்லை.

"மன்னிக்க வேண்டும். தயவு செய்து நீங்கள் யாரென்று நான் அறிந்து கொள்ளலாமா?" என்று இப்படி விசாரிக்கும் விசாரணைக்கு ஆங்கிலம் தான் நாகரிகம் என்று கருதினாற் போலத் தமிழிலேயே பேசிக் கொண்டு வந்தவர் இதை மட்டும் ஆங்கிலத்தில் விசாரித்தார். சுகுணன் ஆங்கிலத்திலேயே அவருக்கு மறுமொழி கூறத் தொடங்கியதோடன்றித் தொடர்ந்து பேசிய போதும் சரமாரியாக ஆங்கிலத்தைத் தொடுத்த போதும் அவர் ஆற்றாமையோடு தம்முடைய தோல்வியை ஒப்புக் கொள்வது போல் மீண்டும் தமிழில் உரையாடத் தொடங்கிவிட்டார். இரயிலிலோ பஸ்ஸிலோ, விமானத்திலோ, பயணம் செய்யும் போது சராசரி இந்தியன் அடுத்தவனுக்குச் சுதேசி மொழி தெரியாதென்று நினைத்து ஆங்கிலம் பேசுவதற்குப் பதில் தனக்குத் தெரியும் ஆங்கிலத்தைத் தனது சுய விளம்பரங்களில் ஒன்றாக அடுத்தவனுக்குக் காண்பித்தே தீர வேண்டுமென்பதற்காகவே ஆங்கிலம் பேசுகிறான். சராசரி இந்தியனிடம் இந்த மனப்பான்மை கிளர்ந்திருப்பது நாகரிகங்களில் ஒன்றாகத் தோன்றினாலும் சில சமயங்களில் போலியாகவே வளர்ந்து விடுகிறது. ஆங்கிலத்தில் வினாவிய அந்தச் சக பிரயாணியிடம் சுகுணன் முற்றிலும் ஆங்கிலத்திலேயே விரைந்து உரையாடத் தொடங்கிய போது போர்க்களத்தில் ரவை தீர்ந்து போய் வெற்றுத் துப்பாக்கியோடு பேந்தப் பேந்த விழிக்கும் கோழையைப் போல் சொற்கள் தீர்ந்து போன ஆற்றாமையோடு வேறு வழியின்றி மறுபடி தமிழுக்கே வந்தார் அவர். ஆயினும் அவரைச் சிறிது நேரம் தவிக்க விடவேண்டுமென்று குறும்புத்தனமாகத் தீர்மானித்துக் கொண்டு விட்ட சுகுணன் வேண்டுமென்றே தன் ஆங்கிலத்தில் கடுமையான பிரஞ்சு, லத்தீன் வார்த்தைகளைப் போட்டு அவரைத் திணற அடித்தான். அவருக்குப் புத்தி வந்து விட்டது.

"உங்களிடம் நிறையப் பேசணும் சார்" - என்று அவர் திரும்பத் திரும்பத் தமிழில் அபயக் குரல் கொடுத்த பின்பே அவரிடம் மீண்டும் தமிழில் உரையாடத் தொடங்கினான் சுகுணன். 'இவரை இவ்வளவு தண்டித்தது போதும்' என்று தோன்றியது அவனுக்கு. சுதேசி வாழ்க்கைக்காக ஆயிரங்காலம் போராடி விட்டுத் தம்மை மறந்து விதேசியாகவே வாழும் இந்தியர்களை எண்ணும் போது அவனுக்குப் பாரதியாருடைய 'நடிப்புச் சுதேசிகள்' என்ற பாடல் நினைவுக்கு வந்தது. சுதேச உணர்வு வராதவரையில் சுதேச இலட்சியங்கள் எல்லாமே போலியாகத்தான் போய்விடுகின்றன. 'சக பிரயாணி தன்னிடம் நிறைய பேசுவதற்கு என்ன இருக்கிறது?' என்றெண்ணி அவன் தயங்கிய போது அவரே தொடர்ந்தார்.

"கதை - கிதை - எழுதுகிறீர்களே...? அதற்கு ஏதாவது பணம் கொடுப்பார்களோ, இல்லையோ?" - இப்படிப்பட்ட கேள்விகள் சராசரி மனிதனின் இலக்கிய ஞானம் எவ்வளவிற்கு இந்த நாட்டில் வளர்ந்திருக்கிறது அல்லது வளரவில்லை என்பதைக் காட்டுபவை. இலக்கியத்தைப் பற்றி அக்கறை கவலை பொறுப்புகள், எல்லாம் அறவே இல்லாவிட்டாலும் பணத்தைப் பற்றிய அக்கறை, கவலை எல்லாம் இங்கு இருக்கிறது. ஒரு மனிதனை உயிருடனே வெயிலில் நிறுத்தி வைத்துத் திறந்த முதுகிலே ஆணி அறைவது போன்ற கேள்விகள் இவை. அதனால் இவற்றை எதிர்கொள்ளும் போது கோபம் அல்லது சலிப்புத் தவிர வேறெதையுமே சுகுணன் கண்டதில்லை. இப்போதோ கோபம் தான் முன் நின்றது.

"பணம் நிறையக் கிடைத்தால் நீங்களும் எழுதலாம் என்று நினைக்கிறீர்கள் அல்லவா?" - என்று சிரித்துக் கொண்டே அவரைப் பதிலுக்கு வினாவினான் அவன். அவனுடைய அந்தச் சிரிப்புக்குப் பின்னால் கோபமிருப்பது புரியாமலேயே அவர் பேச்சைத் தொடர்ந்தார்.

"இல்லை! ஆயிரம் இரண்டாயிரம் கொடுப்பதாகச் சொல்கிறார்களே; அதுதான் கேட்டேன்..." என்ற போது 'இதற்குக் கூட ஆயிரம் இரண்டாயிரம் கொடுக்கிறார்களே' என்று அவர் வியப்பதோ, அலட்சியம் செய்வதோ சொற்களுக்கு அப்பால் தொனிப்பதைச் சுகுணனால் புரிந்து கொள்ள முடிந்தது.

"ஆயிரம் இரண்டாயிரம் என்ன? ஐயாயிரம் ஆறாயிரம் கூடக் கொடுக்கிறார்கள். சிறுகதை நாவலுக்குப் பெரிய பெரிய போட்டிகள் வைத்துக் கால் லட்சம் அரை லட்சம் கூடக் கொடுக்கிறார்கள். சினிமாவுக்குக் கதை எழுதினால் இன்னும் நிறையக் கூடக் கொடுப்பார்க. கதை வெளிவந்த பின் யாராவது கேஸ் போட்டுப் பரிசு பெற்றதோ, படமாக வந்ததோ, திருட்டுக் கதை என்பதையும் நிரூபிப்பார்கள்."

"நீங்கள் கேலி செய்கிறீர்கள் சார்... வெறும் பணத்தைத் தவிரப் புகழும் இதில் இருக்கிறதே?"

"புகழ், பழி பொறாமை, பகை, நட்பு, எல்லாம் தான் இதில் இருக்கிறது. 'நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே' - என்று சிவபெருமானையே எதிர்த்து நின்று நியாயம் பேசிய நக்கீரன் பிறந்த போதே உலகத்தின் முதல் பத்திரிகையாளன் பிறந்து விட்டான். அவன் பொருளை நாடி நியாயம் பேசவில்லை. நியாயத்தை நாடியே நீதி பேச வேண்டும் என்று பிடிவாதமாக நீதி பேசினான். பொருட் பயனை நாடி மட்டும் நீதி பேசினால் ஒரு வேளை அந்த நீதியின் தரம் - இன்றைய பத்திரிகைகளின் தரத்தைப் போல் சீரழிந்துவிடும்."

"இன்றைய பத்திரிகைகளின் தரம் எந்த விதத்தில் சீரழிந்து விட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? மூன்று இலட்சம் நான்கு இலட்சம் விற்கிற தமிழ்ப் பத்திரிகைகள், எல்லாம் இங்கு இருக்கின்றன. சோதிடத்திற்காக எழுபது பத்திரிகைகள், சினிமாவுக்காக நூற்றுக்கு மேற்பட்ட பத்திரிகைகள் எல்லாம் இங்கு வளர்ந்திருக்கின்றனவே?"

"இருக்கலாம்; ஆனால் பண்பாடும், பொது அறிவும் எவ்வளவு வளர்ந்திருக்கின்றன? தய்வு செய்து இதற்கு மட்டும் சுருக்கமாக பதில் கூற வேண்டுகிறேன்."

சுகுணனின் இந்தக் கேள்விக்கு அவரால் மறுமொழி கூற இயலவில்லை. பேச்சை வேறு பக்கமாகத் திருப்பினார் அவர். அவன் விடவில்லை. மேலும் விவாதித்தான்.

"ஆழமாகச் சிந்திக்காமல் உங்களைப் போல் நாலு பேர் எல்லாம் வளர்ந்து விட்டதாக மக்கள் நடுவிலும், மேடையிலும் பேசி விடுகிறீர்கள். பத்திரிகைக்காகப் பத்திரிகை விற்காமல் சோதிடத்துக்காகவும், சினிமாவுக்காகவும், பகுத்தறிவுப் போட்டிகளுக்காகவும், பத்திரிகை விற்பது ஒரு பெருமையா? கோவில் வாயிலில் பூக்கடை இருக்கிறது என்பதற்காக மக்கள் கோவிலுக்கு வருகிறார்கள் என்று பெருமைப்பட நியாயமிருக்கிறதா?"

"இது குடியரசுக் காலம். மக்களுக்குப் பிடித்த அம்சங்கள் எல்லாம் பத்திரிகையில் இருக்க வேண்டும். மக்களில் பலவிதமான சுவையுடையவர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவர் சுவைக்கும் ஏற்றார் போல பத்திரிகையில் ஏதாவது இருக்க வேண்டும். மக்கள் கேட்பதைக் கொடுக்காவிட்டால் புறக்கணிக்கிற காலம் இது..."

"நாங்கள் விரும்புவது இது, 'ஆகவே இதைப் பற்றியே இன்று பாடம் நடத்துங்கள்' - என்று ஏதாவதொரு நடிகையின் பெயரைச் சொல்லி மாணவர்கள் ஆசிரியரை வற்புறுத்தினால் கூடக் குடியரசுக் காலத்துக்குக் கட்டுப்பட்டு அப்படியே நடத்த வேண்டுமென்று கூறுவீர்கள் போலிருக்கிறதே? அறிவுத் தொழில் தொடர்புடைய கல்வி, பத்திரிகை, கலைகள் முதலிய துறைகளில் - கொடுப்பவர் பெறுபவர் என்ற உறவு - விற்பவர் வாங்குபவர் உறவு போல் - வியாபார ரீதியாகவே முற்றிலும் மாறி விடுவது நல்லதில்லை. நல்ல கல்வி வளர - நல்ல இலக்கியம் வளர - நல்ல கலைகள் பெருக அது துணை செய்யாது. 'விற்பவர் - வாங்குபவர்' - உறவை விடத் தரத்திற் சிறந்த வேறொரு உரமான உறவு கல்விக்கும், கலைக்கும், இலக்கியத்திற்கும் தேவைப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

"காலம் போகிற வேகத்திற்கு ஒத்து வராத கருத்துக்களைக் கூறுகிறீர்கள். இவையெல்லாம் இப்போது யாருக்குப் புரியும்?" என்று அலுத்துக் கொண்டார் அவர். அந்த வேளையிலே அவரை யாரென்று விசாரிக்கலானான் சுகுணன். போத்தனூரில் ஏதோ ஒரு பவுண்டரி மானேஜராய் இருப்பதாக அவர் தெரிவித்தார். விசாரணை தன்னைப் பற்றியதாய்த் திரும்பவே அவர் பேச்சில் சிக்கனம் கடைப்பிடித்துவிட்டுப் 'பெர்த்தில்' ஏறித் துண்டை விரித்துப் படுக்கத் தொடங்கி விட்டார். தன்னைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள முயலுவது அநாகரிகமென்றும், தான் மட்டும் மற்றவர்களளப் பற்றித் துறுதுறுப்பாகத் துளைத்து விசாரிக்க இடமுண்டு என்றும் கருதாத நாகரிக மனிதனே உலகில் இருக்க மாட்டான் போல் தோன்றியது.

இரவு நேரத்து இரயிலில் உறக்கம் வராமல் உறக்கம் வந்தாலும் உறங்க இடமில்லாமல் நெடுநேரம் சிந்தித்தபடியே பிரயாணம் செய்தான் சுகுணன். கோயம்புத்தூரைப் பற்றி - தங்கையைப் பற்றி, தங்கை வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்தைப் பற்றி, பத்திரிகைத் தொழிலைப் பற்றி - தனது எதிர்காலத்தைப் பற்றி எல்லாம் தான் அவன் சிந்தனையில் மாறி மாறி வந்தன. 'துளசி இன்னும் சென்னையில் இருப்பாளா; அல்லது டில்லிக்குத் திரும்பி இருப்பாளா? - என்றும் நடுவில் ஒரு சிந்தனை மனத்தை அழுத்தி விட்டு மறைந்தது. நேரம் ஆக ஆக ஓடும் இரயிலின் அடைக்கப்படாத ஜன்னல் வழியே ஊடுருவும் காற்றில் குளிர்ச்சி அதிகமாகிக் கொண்டிருந்தது. குறட்டை ஒலியும், மனிதர்கள் தாறுமாறாகக் கிடந்து தூங்கும் காட்சிகளும் - இரவு நேரத்து இரயிலின் அசதியைக் காட்டின. சென்றடைய வேண்டிய ஊர் விடிந்ததும் வருகிறார்போல் முந்திய இரவு முழுவதும் பயணம் செய்கிற இரயிலுக்கு ஒரு சோபை உண்டு. விடிகிற வேளளயில் உற்சாகத்தில் நாமே ஓடி வந்து அந்த இடத்தை அடைந்து விட்டாற் போன்று மாயமாகக் காலை அரும்பியதும் அரும்பாததுமாகப் புது ஊர் வந்து சேரும். முதல் நாள் இரவிற் புறப்பட்ட நகரின் ஓசைகள், உறவுகள், உணர்வுகள் கனவாக நைந்து மறப்பதற்குக் கூட அவகாசமில்லாதது போல் மறுநாள் எதிர் வருகிற ஊர்களுக்குப் போகும் போதெல்லாம் தவறாமல் இந்த உணர்வை அடைந்திருக்கிறான் சுகுணன்.

இன்று விடிந்த போது அரக்கோணம் வந்தது. பல் விளக்கிவிட்டு ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் காபி குடித்த பின் சென்னை வருகிற வரை படிக்கலாமென்று அங்கு ஒரு தினசரியைக் கையில் வாங்கிக் கொண்டு மறுபடி இரயிலேறிய சுகுணன் - பத்திரிகையில் கண் பார்வையைச் செலுத்தினான். பத்திரிகையின் நடு தாளை எதிர் ஸீட்டுக்காரர் மெதுவாகக் கேட்டு இரவல் வாங்கி உருவி எடுத்துக் கொண்டு விட்டார். மற்ற நான்கு பக்கங்களையும் படித்து விட்டு - நடுத்தாளுக்காக அவன் காத்திருக்க வேண்டியதாயிற்று. திருவள்ளூர் தாண்டுகிறவரை தினசரியின் நடுத்தாள் அவரிடமிருந்து கிடைக்கவில்லை.

கிடைத்த போது அதில் அவன் கண்களுக்குத் தெரிந்த முதல் செய்தி அப்படியே அதிர்ந்து போகச் செய்வதாக இருந்தது. அதைப் படிக்கவே துணியாமல் அவன் நெஞ்சு 'திக்திக்'கென்று வேகமாக அடித்துக் கொண்டது. இதயத்து உணர்வுகள் விம்மின. குமுறின. 'எப்படி அழாமல் இருக்க முடிகிறது நம்மால்' - என்று அவனே தன்னையும் தன் மனத்திடத்தையும் வெட்கத்தோடு கடிந்து கொள்கிற துயரமான அந்தச் செய்தியை முதலில் படிக்க நேர்ந்திருந்தால் அதற்கப்புறம் அதில் வேறெதையுமே படிக்க அவனுக்கு மனம் ஓடவில்லை. 'இப்படியும் கூட ஒரு துயரம் வருமா?' - என்று எண்ணி எண்ணி மனம் உருகி மாயும் செய்தி தெரிந்தது அங்கே. அச்செழுத்துக்கள் கண்களிலிருந்து மறையாமல் 'அதுதான் உண்மை', 'அதுதான் உண்மை' - என்று எதிரே நின்று கண்களை உறுத்தின. அவனோ கண் கலங்கி மனம் நெகிழ்ந்து உணர்வுதனையிழந்து பதுமை போல் இரயில் பலகணிக்கு வெளியே வெறித்துப் பார்த்தபடி இமையாது வீற்றிருந்தான். நிற்காத சில நிலையங்களைக் கடந்து சென்ட்ரலை நோக்கி விரைந்தது இரயில். இதோ ஆவடி அம்பத்தூர் கூடக் கடந்தாயிற்று. சென்னை நெருங்குகிறது. இப்படி நடக்குமென்று அவன் ஊர் புறப்படும் போது நினைக்கவில்லை. மனிதனைத் திகைக்க வைக்கும் காரியங்கள் எல்லாம் இப்படித்தான் பேரிடியாய் வந்து நிற்கும் போலிருக்கிறது.

'அதிர்ஷ்டமே! உன் கைகளில் நான் யானை பலம் பெறுகிறேன். ஆனால் துயரமே! உன் கைகளில் நான் நலிந்து பலவீனப்பட்டு விடுகிறேன்' - என்று நவநீத கவி ஓரிடத்தில் எழுதியிருந்தது நினைவு வந்தது. இரயில் ஓடுவதாகத் தெரியவில்லை. ஊர்வதாகத் தோன்றியது. செய்தித்தாளை நம்பிக்கையில்லாமல், மறுபடியும் எடுத்துப் பார்த்தான். பொய்யில்லை; உண்மைதான்! நமக்குப் பிடிக்காத உண்மைகள் பொய்கள் ஆகிவிடுவதுமில்லை. நமக்குப் பிடித்த பொய்கள் உண்மைகளாகி விடுவதுமில்லை. ஆசைகள் நமக்குரியவை, ஆனால் விளைவுகள் அப்பாற்பட்டவை. மனிதனுடைய சோகம் ஆரம்பமாகிற எல்லை ஆசைக்கும் விளைவுக்கும் நடுவே இருக்கிறது. நினைப்பும் நிகழ்ச்சிக்கும் ஊடே எங்கோ இருக்கிற அந்த நூலிழை எல்லையில் தான் மனிதர்கள் வெல்லவும் தோற்கவும் முடிகிறது போலும்.
-------------

அத்தியாயம் - 13

சாதாரணமான சிலருடைய மரணத்தினால் ஓர் உயிர் மட்டும் தான் போகிறது. ஆனால் அசாதாரணமான வேறு சிலருடைய மரணத்தினாலோ ஒரு நல்ல இயக்கமே போய் விடுகிறது.

நல்லவர்கள் கெடுதலும் அழிவும் அடைந்து நலியும் அதே வேளையில் தீயவர்கள் பயனும் வளர்ச்சியும் பெறுவது போல் தென்படும் பிரமை நிகழ்ச்சிகள் சில உண்டு. நேஷனல் டைம்ஸ் மகாதேவன் என்ற சிறந்த பத்திரிகையாளர் மாரடைப்பினால் திடீரென்று காலமாகிவிட்ட செய்தி, பத்திரிகையின் மரண அறிவிப்புப் பகுதியில் தென்பட்டுத் துணுக்குறச் செய்த அதே வேளையில்... பைந்தமிழ் நாவலர், பாண்டுரங்கனாருக்கு அரசாங்கத்தாரின் அகாதெமிப் பரிசு அளிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி தெரிந்தது. எத்தனை செய்திகள் தெரிந்தாலும் அவற்றில் கவரப்பட்டுச் செல்லாமல் மகாதேவனின் திடீர் மரணச் செய்தி ஒன்றே சுகுணனின் உணர்வை ஓட்டமறச் செய்து விட்டது. அவருக்காக முந்தைய தினங்களில் உதக மண்டலத்துக்கும் கூனூருக்கும் இடையேயுள்ள கிராமபோன் ஊசித் தொழிற்சாலையைப் பார்த்து விட்டு வந்ததையெல்லாம் கழிவிரக்கத்தோடு நினைவு கூர்ந்தான் சுகுணன். காணி நிலத்தை ஏழை உழவன் உழைத்து உழைத்து... உரமாக்கிப் பயிர் செய்தாற் போல் அவர் தனியாக வளர்த்து நிலைநிறுத்திய 'நேஷனல் டைம்ஸ்'இதழையும் - துன்பங்களையும் வறுமைகளையும் உடைய அவருடைய பெரிய குடும்பத்தையும் நினைத்துக் கவலையிலாழ்ந்தான் அவன். நினைப்பதற்கே தயங்கி மலைக்கக்கூடிய பெருங் கவலையாய் இருந்தது அது. துன்பப்படுகிறவர்களை எதிர்ப்பதில் மரணமும் அல்லவா முந்திக் கொண்டு நிற்கிறது? மகாதேவனின் மரணம் ஒரு தனி மனிதனின் சாதாரண மரணமாக மட்டும் அவனுக்குத் தோன்றவில்லை. ஒரு நல்ல இயக்கத்தின் மரணமாகவும் தோன்றி கவலையிலாழ்த்தியது. நெற்றி வேர்வை நிலத்தில் வழிய உழுது பாடுபட்ட நல்ல உழவன் ஒருவன் அதன் பயனை அடையும் முன் மாண்டு விட்டது போல சுதந்திரச் சிந்தையோடு ஒரு நல்ல பத்திரிகையைத் தொடங்கி வளர்த்தவர், அது ஒளி பெருகி ஓங்கிடக் காணாமல் மாண்டதை எண்ணி எண்ணி வேதனையில் மூழ்கினான் சுகுணன்.

சென்ட்ரல் நிலையத்தில் இறங்கிய போது அதன் கலகலப்பையும், ஆரவாரத்தையும் உணரக் கூட ஆற்றலின்றி ஒரு இயந்திரம் போல் வெளியேறி வாடகைக் காரைத் தேடினான் அவன். மனத்தின் துயரமும் தடுமாற்றமும் அவனை நிற்கவும் முடியாமல் புறத்திலும் தள்ளாடச் செய்தன. மகாதேவனைப் போல் தன்மானமும் தன்னம்பிக்கையும் கொண்டு தனியே வெளியேறிப் பத்திரிகை நடத்திய தீரனின் தோல்வியை அல்லது அழிவை எதிர்பார்த்து ஏங்கிக் கிடக்கும் பெரும் பத்திரிகை முதலாளிகளும், எதிரிகளும், பொறாமைக்காரர்களும் இந்த மரணத்துக்காக உள்ளூற எப்படி எப்படியெல்லாம் மகிழ்ந்திருப்பார்கள் என்றெண்ணியபோது அந்த எண்ணத்தையே அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சாதாரணமான சிலருடைய மரணத்தினால் ஓர் உயிர் மட்டும் தான் போகிறது. ஆனால் அசாதாரணமான வேறு சிலருடைய மரணத்தினாலோ ஒரு நல்ல இயக்கமே போய் விடுகிறது. மகாதேவன் இரண்டாவது விதமான மரணத்தையே அடைந்துவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. அவருடைய இயக்கம் அழிந்து போவதைச் சுதந்திரச் சிந்தனையுள்ள எந்தத் தமிழ்ப் பத்திரிகையாளனும் விரும்ப மாட்டான் என்று சுகுணன் அறிவான். வாடகைக் காரில் நேரே மகாதேவன் வீட்டிற்கு விரைந்தான் அவன். போகிற வழியில் மனத்தில் ஏதோ தோன்றவே ஒரு வெற்றிலை பாக்குக் கடையின் அருகில் காரை நிறுத்தி அன்றைய காலை 'நேஷனல் டைம்ஸ்' - வெளிவந்திருக்கிறதா இல்லையா என்று விசாரிப்பதற்காக இறங்கினான். நல்ல வேளையாக அவன் பயந்தது போல் வராமலில்லை. கடை முன்பு 'டைம்ஸின்' வால்போஸ்டர்கள் தொங்கின, பத்திரிகையும் வந்திருந்தது. ஆனால் தலையங்கமோ செய்திகளோ அதிகம் இல்லை. மகாதேவனின் அருங்குணங்களைப் பாராட்டும் இரங்கற் கட்டுரைகளும், பிரமுகர்களின் அனுதாபக் கடிதங்களும், புகைப்படங்களுமாக எட்டுப் பக்கம் மட்டும் அடித்து வெளியிடப்பட்டிருந்தது. முதல் நாள் நடுப்பகல் பன்னிரண்டு மணிக்கு அவர் திடீரென்று மாரடைப்பால் காலமாகியிருந்தார். மத்தியானம் பன்னிரண்டு மணிவரை அவர் இருந்து கவனித்திருந்தும் மறூநாள் இதழ் நாலு பக்கம் தாம் வெளிவர முடிகிறதென்றால் இனிமேல் நாளை முதல் யார் கவனிப்பில் பத்திரிகை எப்படி வெளிவரும் என்ற கேள்வி பெரிதாக எழுந்தது அவன் மனத்தில்.

"நான் ஒரு நாள் இல்லாமல் போய்விடலாம். ஆனால் இந்தப் பத்திரிகை இல்லாமல் போய்விடக்கூடாது" என்று மகாதேவன் வாய்க்கு வாய் உறுதி கூறும் சொற்கள் நினைவு வந்து சுகுணனைக் கண் கலங்கச் செய்தன. பத்திரிகையை விலைக்கு வாங்கி அவன் கடை வாயிலிலேயே பிரித்துப் பார்த்த போது - வியாபாரத்துக்கும் அதிகமான கருணையோடு, "ஆசிரியர் ரொம்ப நல்லவர்ங்க. திடீர்னு போயிட்டாரு. நாளைக்கு இந்தப் பேப்பர் வருமோ வராதோ?... இதைத்தான் வாங்கிப் படிப்பேனின்னு பிடிவாதமாக இருக்கிறவங்க இனிமே சங்கடப்படுவாங்களேன்னு கவலையாயிருக்கு" - என்றான் கடைக்காரன்.

அதைக் கேட்டுக் கொண்டே வாடகைக்காரை நோக்கி நகர்ந்தான் சுகுணன். கார் மறுபடியும் புறப்பட்டது. ஐஸ் ஹவுஸ் பக்கம் திரும்பி மகாதேவனின் வீட்டுக்கு முன் கார் நின்ற போது - அவர் நீத்துச் சென்ற குடும்பத்தின் கவலையும் - அதைவிடப் பெரிய குடும்பமான இதைத்தான் வாங்கிப் படிப்போமென்று பிடிவாதமாக டைம்ஸை வாங்கிப் படிக்கும் நல்ல வாசகர் குடும்பத்தைப் பற்றிய கவலையும் சேர்ந்தே சுகுணனை வாட்டின. வீட்டு வாயிலில் கூட்டம் கூட்டமாக யார் யாரோ நின்றார்கள். சுகுணனைப் பார்த்ததும் மகாதேவனின் மனைவி கோவென்று கதறியழத் தொடங்கிவிட்டாள். குழந்தைகள் வயது வந்த பையன், பெண் எல்லாரையும் சேர்த்துப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது. வேதனை மிகுதியில் சம்பிரதாயமாகத் துக்கம் விசாரிப்பதற்குத் தேவையான சாதாரணச் சொற்கள் கூட அப்போது அவனுக்குக் கிடைக்கவில்லை. வாயிற்புறம் வந்து பத்து நிமிடத்துக்கு ஒரு தரம் அனுதாபத் தந்திகளைக் கையெழுத்திட்டு வாங்கிய வண்ணம் இருந்தார்கள். துக்கத்துக்கு வருவோர் போவோர் கூட்டம் அதிகமாக இருந்தது. சம்பிரதாயமான துக்கத்தை ஒரு வழியாகக் கேட்டு முடிந்த பிறகு, "ஆபீஸை யார் கவனிக்கிறார்கள்? அடுத்த வாரம் வெளியிட வேண்டிய இண்டஸ்டிரியல் ஸப்ளிமெண்ட் அரைகுறையாக இருக்குமே..." என்று மெல்ல விசாரித்தான் சுகுணன்.

"ஆபீஸ் என்ன வேண்டிக் கிடக்கிறது? பாழாய்ப் போன ஆபீஸ் தானே அவரை இப்படி வாரிக் கொண்டு போயிற்று. இதற்காக இராப் பகலாக உயிரை விட்டு உயிரை விட்டுத்தான் இப்படியாச்சு..." - என்று அந்த அம்மாள் கண்ணீருக்கிடையே குமுறினாள். அப்போதுள்ள நிலையில் அவர்களிடம் இதைப் பற்றி விசாரித்துப் பயனில்லை என்று உணர்ந்த சுகுணன் - மகாதேவனின் மூத்த பையனைத் தனியே வாயிற்புறம் அழைத்துச் சென்று விவரங்களை விசாரித்தான். அவனுக்கும் விவரமாக எதுவும் சரியாகத் தெரியவில்லை.

"கிராமத்திலிருந்து பெரியப்பா வந்திருக்கார்; காலையிலேயே 'டைம்ஸ்' ஆபீசுக்குப் புறப்பட்டுப் போனார், இன்னும் திரும்பி வரவில்லை. போறதுக்கு முன்னே அம்மாவிடமும் பேசி விட்டுத்தான் போயிருக்கார். அநேகமாக மெஷின்மேன், ஃபோர்மென், கம்பாஸீட்டர்களுக்கெல்லாம் இன்னிக்கே கணக்குத் தீர்த்துடறதாக ஏற்பாடு. நாளைக்குப் பேப்பர் வரது சந்தேகம். பிரஸ்ஸையும் விற்கச் சொல்லி அம்மா சொல்லியாச்சு" - என்று பையன் இழுத்துப் பேசி நிறுத்திய போது சுகுணன் அப்படியே திகைத்து நின்று விட்டான்.

அந்த ஏற்பாடு மகாதேவனின் ஆன்மாவையும் கொன்று விடும் போலிருந்தது.

"எங்கேயாவது அடங்கி வேலை பார்த்தாலும் பார்த்திருக்கலாம். மகாதேவன் பத்திரிகை தொடங்கி அதிலேயே செத்துத் தொலைந்தார்! பத்திரிகையும் செத்தது" - என்ற மானக் குறைவான பேச்சு இந்த உலகில் எழாமல் உயிரைக் கொடுத்தாவது தடுத்து விட வேண்டுமென்று அவன் தவித்தான். ஒரு நல்ல பத்திரிகையாளனின் மனத்தை இன்னொரு நல்ல பத்திரிகையாளன் தான் புரிந்து கொள்ள முடியும். மகாதேவனின் அகால மரணத்தை விடக் கொடுமையானது அவருடைய பத்திரிகையின் நிர்பந்தமான மரணம் என்பதை அவன் உயிர்த் தவிப்போடு உணர்ந்தான். துடித்தான்.

'கடைசி நல்ல எழுத்தாளனால் கூட ஒரு பத்திரிகையை இந்த நாட்டில் வெற்றிகரமாக நடக்கும்படி நிலைநாட்டிவிட்டுப் போக முடியவில்லை' - என்ற அவநம்பிக்கையான எண்ணம் பொதுமக்களிடம் நிலைத்து விடவே இது உதவும் என்று அவனுக்குத் தோன்றியது. மகாதேவனுக்குத் தான் செய்ய வேண்டிய மிகப் பெரிய மரியாதை அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டு விடாமல் காப்பது தான் என்று அவனுக்குப் புரிந்தது. உள்ளே ஓடினான். மகாதேவனின் மனைவியிடம் இலட்சியத்தைச் சொன்னால் அந்தத் துக்க வேளையில் அது புரியாது என்பது அவனுக்குத் தெரியும். எனவே இலாப நஷ்டக் கணக்கைத் தொடங்கிப் பத்திரிகையைக் கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தாமலிருப்பது பல வகையிலும் இலாபம் தரும் என்பது போல் பிடிவாதமாக வாதிட நினைத்தான் அவன். அந்த முயற்சியிலும் முதலில் தோல்வியே கிடைத்தது. அவன் கூறியது அவர்களுக்குப் புரியவில்லை.

"பேப்பருக்குக் கடன், மைக்குக் கடன், இட வாடகை நிறைய பாக்கி நிற்கிறதாம்... நான் பெண் பிள்ளை. தனியா எப்படி இதையெல்லாம் அடைக்க முடியும். அப்படியே நடத்தினாலும் அவர் உயிருக்கே எமனாக முடிந்தது - என்னை மட்டும் வாழ வச்சிடப் போறதா என்ன?" என்று தீர்மானமாக மறுத்தாள் அந்த அம்மாள். அப்புறமும் பொறுமை இழக்காமல் அந்த அம்மாளோடு விவாதித்தான் சுகுணன்.

"இவ்வளவு கடனும் இருப்பதால் தான் அதைத் தொடர்ந்து நடத்துவது நல்லதென்கிறேன். அவர் அரும்பாடுபட்டுப் பத்தாயிரம் ரூபாய் வரை விளம்பரங்கள் சேகரித்த 'இண்டஸ்டிரியல் ஸப்ளிமெண்ட்' அரைகுறையாகக் கிடக்கிறது. பத்திரிகை நின்று விட்டாலோ அவ்வளவும் வீண். நடந்தால் அவ்வளவு கடனும் அடையும். அவருடைய ஆசையும் அழியாது. நல்ல காலமும் விரைவில் பிறக்கும். தயவு செய்து இதில் என்னை நம்பி விட்டு விட்டால் உங்களுக்கு நான் நாளை நிச்சயமாக நல்ல பதில் சொல்ல முடியும்" என்று மன்றாடினான் சுகுணன். இறுதியில் ஒரு வழியாக அந்த அம்மாள் மனமிரங்கியது. பையனிடம் விவரம் சொல்லிச் சுகுணனோடு கூட அனுப்பினாள். சுகுணன் மகாதேவனின் மூத்த பையனோடு தம்புச் செட்டித் தெருவிலிருந்து டைம்ஸ் காரியாலயத்துக்கு விரைந்தான். அங்கே மகாதேவனின் சகோதரருக்கும் தொழிலாளர்களுக்கும் விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பேச்சு ஒரு முடிவுக்கு வரவில்லை. சுகுணனைக் கண்டதும் தொழிலாளர்கள் முகமலர்ச்சியடைந்தனர்.

"சார் நீங்களே சொல்லுங்க... ஐயா அரும்பாடுபட்டு வளர்த்ததை ஒரே நாளில் இழுத்து மூடிப்பிட்டு எங்களையெல்லாம் தெருவிலே நிறுத்திடறது உங்களுக்கே சரியாப் படுதா?" - என்று சுகுணனைக் கேட்டார்கள் ஃபோர்மெனும் பிற தொழிலாளர்களும். இதற்குள் மகாதேவனின் மகன் பெரியப்பாவை உள்ளே தனியாக அழைத்துச் சென்று ஏதோ விவரம் கூறவே அவர் திரும்பி வந்து சாவிக் கொத்தைச் சுகுணனிடம் கொடுத்துவிட்டு, "சார்! இனி மேல் உங்க பாடு. பேசித் தீர்த்துக்குங்க" - என்றார்.

"தீர்ப்பதற்கு ஒன்றுமில்லை. போனவருக்கு நாம் செய்கிற பெரிய மரியாதை அவர் நம்பிக்கையைத் தொடர்ந்து செயலாக்குவதுதான்" - என்றான் சுகுணன்.

அடுத்த கணம் டெலிபிரிண்டர் ஒலி சுறுசுறுப்பாக இயங்கியது. அச்சுக் கோர்ப்பவர்கள் விரைந்தார்கள். சுகுணன் கம்போஸுக்குச் செய்தியைத் தயாரித்துக் கொடுப்பதில் ஈடுபட்டான். இன்னொருபுறம் இண்டஸ்டிரியல் ஸப்ளிமெண்டுக்கான வேலைகளும் தொடர்ந்தன.

மகாதேவனின் மறைவு பற்றியும் இதற்குப் பின்னும் அவரை நன்றாக நினைவு கூற ஒரே வழி அவருடைய பத்திரிகை தான் என்பதைப் பற்றியும், சுகுணனே உருக்கமாக ஒரு தலையங்கம் எழுதினான். பம்பரமாகக் காரியங்களைச் செய்து அன்று மாலையில் வெளியாக வேண்டிய சிட்டி எடிஷனையும் அனுப்பி வெளியூர்ப் பார்ஸல்களையும் அனுப்பி முடித்த போது சுகுணன் களைத்து போயிருந்தான். ஆனாலும் தலை சிறந்த இலட்சியவாதி ஒருவர் தொடங்கிய பத்திரிகை ஒரு நாள் கூட நிற்காமல் வெளிவந்து விட்டது என்ற பெருமிதம் மனத்தில் இருந்தது. பத்திரிகை நிச்சயமாய் நின்று போய்விடும் என்று எதிர்பார்த்திருந்த பணப் பெருச்சாளிகளுக்கு அது பெரிய அதிர்ச்சியாகவும் இருந்தது. களைப்போடு அன்றிரவு அவன் அறைக்குத் திரும்பும் போது - வழியில் தாமஸ் மன்றோவின் குதிரைச் சிலையைப் பார்க்க நேர்கையில் மகாதேவனை நினைத்து ஓரிரு கணங்கள் கண் கலங்கினான். அப்படிக் கலங்கிய போது அந்தச் சிலை திகைத்து நிற்பது போலிருந்தது. பத்திரிகை நடத்தி வெற்றி காண வேண்டுமென்ற வைராக்கியத்தோடு மறுபடி நிமிர்ந்து திடமாகப் பார்த்த போது அந்தச் சிலை விரைவாக நகர்வது போலவும் இருந்தது. ஒருநாள் இரவு பிராட்வேயிலிருந்து நடந்தே வீடு திரும்பும் போது இந்தச் சிலையைக் காண்பித்து மகாதேவன் தன்னிடம் கூறிய வாக்கியங்கள் அவனுக்கு அப்படியே நினைவு வந்தன.

"கையில் வசதியோடு நாம் வேகமாக வாழ்க்கையின் காரியங்களுக்கு ஓடியாடி அலைந்து கொண்டிருக்கும் போது - இந்தச் சிலை போலவே பட்டினம் முழுவதும் உற்சாகமாய் ஓடுவதாய்த் தெரியும். கையில் வசதியில்லாமல் நாம் தயங்கி மலைத்து நிற்கும் போது இந்தச் சிலை போலவே பட்டினம் முழுவதும் சிலையாகச் சபிக்கப்பட்டு விட்டது போல் தோன்றும். நாம் ஓடினால் உடன் ஓடுகிற சிலை இது. நாம் நின்றால் உடன் நிற்கிற சிலையும் இதுதான்!"

இந்த வாக்கியங்கள் இவற்றைச் சொல்லிவிட்டுப் போனவரின் மறைவுக்குப் பின் இப்போது இன்னும் அதிகப் பொருள் நிறைவுள்ளவையாகத் தோன்றின அவனுக்கு.

காலையில் இரயிலிலிருந்து இறங்கியதும் நேரே ஐஸ்ஹவுஸ் பகுதியிலிருந்த மகாதேவனின் வீட்டுக்குப் போய் அங்கிருந்து அப்படியே தம்புச் செட்டித் தெருவில் போய் அன்றைய 'டைம்ஸ்' வெளிவர ஏற்பாடுகள் செய்வதில் முனைந்து விட்டதன் காரணமாகச் சுகுணனுக்கு - நீராடவோ, உடை மாற்றிக் கொள்ளவோ கூட நேரமில்லை. அதனால் இரவில் அறைக்குத் திரும்பியதும் வேர்வையடங்க நெடுநேரம் 'ஷவரில்' நின்றான் அவன். தலையில் குளிர்ந்த தண்ணீர் இறங்கியதும் சிந்தனை சுறுசுறுப்படைந்தது. மகாதேவன் விட்டுச் சென்ற 'நேஷனல் டைம்ஸ்'ஐ எப்படி எல்லாம் வளர்த்து 'ஒரு சுதந்திரச் சிந்தனையாளனின் வெற்றியாக அதை இந்த நாட்டுக்கு நிரூபிக்க வேண்டும்' - என்பதைப் பற்றி எண்ணலானான் சுகுணன். டைம்ஸின் முதல் இதழில் சுதந்திரச் சிந்தனையாளர்கள் பத்திரிகை தொடங்குவதைப் பற்றியும் அவர்கள் வெல்வதையும் தோற்பதையும் பற்றியும் குறிப்பிடும் போது கூட,

"எங்கள் போர்க்களம் மிகவும் சிறிது. வசதிகளாலும், கருவிகளாலும் குறைவுடையது. இதில் சிலர் மடியலாம். சிலர் அழியலாம். சிலர் தளரலாம். சிலர் தோற்கலாம். ஆனால் இன்று தோற்கும் ஒவ்வொரு நல்ல தோல்வியும் நாளை வெல்ல வேண்டுமென்று துடிக்கும் பல்லாயிரம் பேனா வீரர்களை உண்டாக்கி விடுகிற சத்தியமான தோல்வியாக இருக்குமே ஒழிய ஒரேயடியாக ஒடுங்கச் செய்து விடுகிற ஊமைத் தோல்வியாக இருக்கவே இருக்காது. எங்களை விட வசதிகளும் கருவிகளும் உள்ளவர்களை வெல்வதற்கு எங்களிடம் மனோபலம் மட்டும் தான் இருக்கிறது. நாங்கள் தளரும் போது எங்களைப் போலவே மனோபலமுள்ள ஆயிரமாயிரம் வீரர்கள் எங்களைத் தொடர்ந்து இந்தக் களத்தில் போரிடுவார்கள் என்ற நம்பிக்கையைப் படைக்க முடியுமானால் அதுவே எங்கள் சாதனையாக இருக்கும்."

-என்று உணர்வு பொங்கப் பொங்க ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அப்போது, இந்த முதல் இதழ் வாக்கியங்களைப் பல முறை படித்துப் படித்து மனப்பாடமே செய்திருந்தான் சுகுணன். அப்போது 'நேஷனல் டைம்ஸின்' ஆரம்ப காலத்தில் அவர் எழுதிய தலையங்கங்களைப் படித்து இரங்கிய வேகத்தில் - நகரின் பல பகுதிகளில் எங்கெங்கோ பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான கம்பாஸிட்டர்களிலிருந்து - புரூப் ரீடர்கள் வரை எல்லாரும் தினசரி 'டைம்ஸ்' வாங்குவதை ஒரு நோன்பாகக் கொண்டிருந்தார்கள் என்பதையும் சுகுணன் அறிந்திருந்தான். அப்படி ஒரு சுய கௌரவத்தையும் - தன்னம்பிக்கையையும் படைத்தவருடைய முயற்சியை வெல்லச் செய்வதில் அதே விதமான சுய கௌரவமும் தன்னம்பிக்கையும் உள்ள அடுத்த தலைமுறைப் பத்திரிகையாளன் என்ற முறையில் தனக்கும் இன்று பெரும்பங்கு உண்டென்று எண்ணி விரதம் பூண்டது அவன் உள்ளம்.

அவன் நீராடி உடை மாற்றிக் கொண்டு அறையைப் பூட்டிய பின் சாப்பாட்டுக்காக மெஸ்ஸிற்குப் புறப்பட்ட போது, அப்போதுதான் அவன் ஊரிலிருந்து திரும்பியதைக் கவனித்த அறைப் பையன் அவன் ஊரில் இல்லாத நாட்களில் அவனைத் தேடி வந்தவர்களைப் பற்றிய விவரங்களை ஓடி வந்து தெரிவித்தான். பையன் கூறியதிலிருந்து சுகுணனிடம் கைமாற்றாகப் பணம் வாங்கிக் கொண்டு போயிருந்த பாலக்காட்டுப் பெண் கமலம் இரண்டு முறையும் துளசி நான்கு முறையும் அவனைத் தேடி வந்திருப்பதாகத் தெரிந்தது. வேறு சில நண்பர்களும் தேடி வந்திருந்தார்கள். டெல்லியில் நடைபெற இருக்கும் அகில இந்திய பத்திரிகையாளர் சங்க மாநாட்டு அழைப்பிலிருந்து பாண்டுரங்கனாரின் உள்ளூர்க் கந்த புராணப் பிரசங்க அழைப்பு வரை அழைப்புக்களும் கடிதங்களுமாக ஒரு கொத்துத் தபால்களும் அறைக்குள் விழுந்து கிடந்தன. அவற்றை உடனே பார்க்கும் சுறுசுறுப்பும் ஆர்வமும் கூட அன்றைய மனநிலையில் அவனிடம் இல்லை.

"யாராவது முக்கியமானவர்கள் தேடி வந்து அவசியம் பார்த்தாக வேண்டுமென்று வற்புறுத்தினால் மட்டும் இந்த விலாசத்தையோ ஃபோன் நம்பரையோ அவர்களுக்குக் கொடு. இனிமேல் என்னை இங்கே அறையில் பார்ப்பது சிரமம் எப்போதாவது தான் வருவேன். சில சமயம் இரண்டொரு நாள் வராமலே இருக்கும்படியும் ஆகி விடும்" என்று பையனிடம் நேஷனல் டைம்ஸ் விலாசத்தையும் ஃபோன் நம்பரையும் குறித்துக் கொடுத்தான் சுகுணன்.

பார்லிமெண்டில் ஏதோ ஒரு முக்கியமான பட்ஜெட் விவாதம் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அந்தச் சமயத்தில் ஒரு தினசரியின் கடமைகளும்,சுறுசுறுப்பும் அதிகமாக இருக்க வேண்டும். ஆதலால் பத்திரிகை தாமதமாக வருவதோ, உரிய புதுச் செய்திகள் வெளிவராமல் மற்றப் பத்திரிகைகளின் முந்திய பதிப்பில் வந்ததையே மாற்றித் திரித்து வெளியிடுவதாக அமைவதோ பேரையே கெடுத்து விடும். டைம்ஸின் மகாதேவன் இத்தனை ஆண்டுகளாகக் காப்பாற்றி வந்த பத்திரிகைத் தரம் சிறிது கூட இறங்கிவிடக் கூடாதென்ற அக்கறை செலுத்துவதில் சுகுணன் மிகவும் கவனமாயிருந்தான். அதனால் மறுநாளிலிருந்து இயலுமானால் 'நேஷனல் டைம்ஸ்' காரியாலயத்திலேயே தங்கி இராப்பகலாக உழைக்கக் கருதியிருந்தான் அவன். தன்னுடைய இளமையும், உழைக்கும் ஆற்றலும் அந்தப் பத்திரிகையை நிலை நிறுத்துவதற்காகவே அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பது அப்போது அவன் வைராக்கியமாகவும் - இன்னும் அழுத்தமாகச் சொல்லப் புகுந்தால் ஒரு வெறியாகவுமே இருந்தது. அந்தச் சமயங்களில் அவனுக்கு வேறெவையுமே நினைவில் இல்லை. ஊரிலிருந்து திரும்பியதும் ஞாபகமாகத் தனக்குத் தெரிவிக்கச் சொல்லியிருந்த துளசியைப் பற்றி விசாரிப்பதையும் அவன் மறந்தான். அவள் சிலமுறை தேடி வந்ததாகவும் பலமுறை ஃபோன் செய்ததாகவும் லாட்ஜ் பையன் தெரிவித்தும் அவன் அதற்கு இரங்கவோ உருகவோ முடியாமல் வேறு கவலைகளும் தாகங்களும் அவனைச் சூழ்ந்திருந்தன. கோவையிலிருந்து சௌக்கியமாகத் திரும்பியதற்குத் தங்கைக்கு ஒரு கடிதம் எழுத எண்ணியும் அதைச் செய்ய முடியவில்லை. பூம்பொழிலிலிருந்து தனக்கு வரவேண்டிய 'பிராவிடண்டு ஃபண்டு' முதலிய தொகைகளையும், தன்னுடைய புத்தகங்கள் விற்ற வரவிலிருந்து சேமித்து வைத்திருந்த ஒரு பெருந்தொகையையும், 'ரெக்கரிங் டிபாஸிட்'டில் போட்டிருந்த தொகையிலிருந்து எடுத்த ஒரு தொகையையும் திரட்டி முழு மூச்சாக மகாதேவனின் 'டைம்ஸி'ல் முதலீடு செய்து அதை நிலை நிறுத்திவிடத் திட்டமிட்டிருந்தான் அவன். துரதிருஷ்டவசமாக அவன் திரட்டிய தொகையில் முன்பே மகாதேவனிடம் அவரிருந்த போது தந்தது போக மீதமுள்ள தொகை முழுவதும் டைம்ஸுக்கு ஏற்கெனவே இருந்த கடன்களை அடைக்கவே சரியாயிருக்காது போல் தோன்றியது. சூரியன் மறைந்ததும் இருள் சூழ்வது போல் மனிதன் மறைந்ததும், 'இனி மேல் திரும்பிப் பணம் வருமோ வராதோ' - என்ற பயத்தில் கடன்காரர்கள் சூழ்ந்து கொண்டு ஒரே சமயத்தில் நெருக்கும் பாவத்துக்கு ஈடு ஏது? அந்தக் கடன் கொடுமையும் டைம்ஸுக்கு இருந்தது. 'டைம்ஸ்' நின்று விடாமல் வெளிவர வேண்டிய பொறுப்பைச் சுமக்கத் தொடங்கிய இரண்டொரு நாட்களிலேயே சுகுணனுக்கு இந்தச் சூழ்நிலை நன்கு தெரிந்து விட்டது. ஆனாலும் அவன் தளரவில்லை. மகாதேவனின் குடும்பத்தாரைக் கலந்தாலோசித்த பின் 'நிறுவியவர் மகாதேவன்' என்ற பெயரைப் பத்திரிகைப் பெயரின் கீழே அச்சிட்டு விடுவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு மற்றப் பொறுப்புக்களைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு 'நேஷனல் டைம்ஸ்' தொடர்ந்து வெளிவரப் பொதுமக்கள் ஆதரவைக் கோரி உருக்கமான அறிக்கை ஒன்றை எழுதி வெளியிட்டான் சுகுணன்.

"எங்கள் போர்க்களம் மிகவும் சிறியது. வசதிகளாலும் கருவிகளாலும் குறைவுடையது" - என்று தொடங்கி மகாதேவன் டைம்ஸ் முதல் இதழில் வெளியிட்டிருந்த வாக்கியங்களையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தான் அவன். சுகுணனின் கதைகளாலும், நாவல்களாலும் கட்டுண்டு மயங்கிய வாசகர்கள் தமிழகத்திலும் கடல் கடந்த நாடுகளிலும் நிறைய இருந்தார்கள். அவர்கள் இந்த அறிக்கையால் பெரிதும் கவரப்பட்டிருப்பது அடுத்தடுத்த தினங்களில் தொடர்ந்து வந்த ஆதரவுக் கடிதங்களாலும், 'செக்' மணி ஆர்டர்களாலும் நிரூபணமாயிற்று. சிலர் தங்க மோதிரங்களையும், பொன் வளையல்களையும், பொற் சங்கிலிகளையும், சவரன்களையும் கூட நிதியாக டைம்ஸுக்கு அனுப்பியிருந்தார்கள். மற்றப் பத்திரிகையாளர்கள் வியக்கும்படியும், அதிசயிக்கும்படியும் - ஏன் - பொறாமைப்படும்படியாகவும், இருந்தது இந்த அன்பு வெள்ளம்.

கொழுத்த பணப் பெருச்சாளியால் நடத்தப்படும் எதிர்த்தரப்புப் பத்திரிகை ஒன்று மனம் வெந்து புகைச்சலெடுத்து - 'டைம்ஸ் பிச்சை எடுக்கிறது' - என்பது போல் குறிப்பாகக் கிண்டல் செய்து எழுதி இதைக் கேலி செய்த போது, 'பிச்சை எடுக்கக் கூட யோக்கியதை இல்லாதவர்கள் எழுதிய வாக்கியம் இது' என்று தலைப்பிட்டு அந்தப் பகுதியையும் டைம்ஸிலேயே எடுத்துப் போட்டான் சுகுணன். அதனாலும் டைம்ஸ் வாசகர்களின் அனுதாபம் பெருகிற்றே ஒழியக் குறையவில்லை. காலை, மாலை வேளைகளில் அவனுக்குப் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவ உழைக்கப் பல நண்பர்கள் தேடி வந்தனர். 'டைம்ஸ்' அலுவலகம் எப்போதும் கலகலவென்றிருந்தது. முன்பு அவனிடம் பண உதவி பெற்று அந்த நன்றி நிறைவோடிருந்த பாலக்காட்டுப் பெண் கமலம் இலவச 'டைப்பிஸ்டாக' வந்து காலை மாலை வேளைகளில் அலுவலக சம்பந்தமான கடிதங்களை முத்து முத்தாக அடித்து அனுப்பினாள். மனிதர்களின் உண்மை அன்பில் 'டைம்ஸ்' ஓர் சத்திய இயக்கமாக வளர்ந்தது. வெளியிடப்பட்ட 'இண்டஸ்ட்ரியல் ஸப்ளிமெண்டின்' - வருமானம் சிறிது காலம் தாக்குப் பிடித்தது. மகாதேவனின் குடும்பத்துக்கு மாதம் முதல் தேதி பிறந்ததும் ஐநூறு ரூபாய் உதவித் தொகை கொடுக்க ஏற்பாடு செய்து மிகவும் சிரமமான நிலைகளிலும் அந்த ஏற்பாட்டைத் தேதி தவறாமல் நாணயமாகக் காப்பாற்றி வந்தான் சுகுணன். மகாதேவனின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அந்தக் குடும்பத்தாருக்கும் இப்போது அவன் மேல் ஒரு சகோதர பாசமும் நம்பிக்கையும் பெருகியிருந்தது. அந்த உழைப்பின் வேகத்திலும், அளவுக்கு மீறிச் சுற்றித் திரிந்து அலைய நேர்ந்ததிலும் சுகுணன் கறுத்து இளைத்துப் போயிருந்தான். வேளாவேளைக்குச் சரியாக உண்ண முடியாது போயிற்று. பல வேளைகளில் 'உண்ண வேண்டிய வேளை இது' என்பதை நினைவு கூறவும் முடியாமல் வேறு வேலைகளில் மூழ்கி இருக்கும்படி நேர்ந்தது. துளசியை மட்டும் அவன் சந்திக்கவே முடியவில்லை. கண்ணாடியில் எப்போதாவது முகத்தைப் பார்க்கும் போது கறுத்து இளைத்திருப்பது நினைவு வந்தால், 'இந்த நிலையில் துளசி தன்னைப் பார்த்தால் மிகவும் வேதனைப் படுவாள்' - என்பதும் சேர்ந்தே நினைவு வரும். அவள் ஊரில் இல்லையா, இருக்கிறாளா என்பதைக் கூட அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. தெரிந்து கொள்வதற்கு ஓய்வும் வாய்ப்பும் கூட இல்லை. ஊரில் இருந்தால் துளசி துரத்தித் துரத்தித் தனக்கு ஃபோன் செய்வாள் என்பதும் தவறாமல் ஞாபகம் வந்தது. அவளால் எங்கிருந்தாலும் தன்னைத் தேடி வராமல் இருக்க முடியாது என்பதையும் அவன் நினைவு கூர்ந்தான். மனிதனுக்குள்ளே மூலாதாரமாக மறைந்து கிடக்கிற நெஞ்சக்கனல் அன்பினால் தான் ஜ்வலிக்கிறது என்பதை உணர்வது போல் அத்தனை பரபரப்பான வேலைகளிடையேயும், 'துளசி வரவில்லை' - 'துளசி ஃபோன் செய்யவில்லை' - என்பதை அந்தரங்கமாக நினைப்பதிலிருந்து தன்னை அவனால் தவிர்த்துக் கொள்ள முடியவில்லை. சொல்லப் போனால் அது ஒரு ஞாபகமாகவும் ஏக்கமாகவும் கூட இருந்தது. ஆயிரம் பேர் துணை நிற்கிறார்கள், உதவுகிறார்கள், அன்பு செய்கிறார்கள் என்பதில் எல்லாம் கூட திருப்தி காண்கிற மனித மனம் - ஆன்மாவோடு கலந்து விட்டாற் போன்ற யாரோ ஒருவர் துணை நிற்க வரவில்லையே என்பதற்காக ஏங்குகிற இந்த அந்தரங்கத்தை எண்ணி வியந்தான் சுகுணன். ஒவ்வொருவனுடைய மனத்தையும் அவனுடைய வாழ்க்கை முழுவதும் இப்படி ஏங்க வைப்பதற்கு யாராவது ஒருத்தி இருப்பாள் போலிருக்கிறது என்றும் ஒரு பிரமையான தத்துவம் கூடத் தோன்றியது அவனுக்கு. வெளியே புறப்பட்டுப் போய் விசாரிக்கவும் - தெரிந்து கொள்ளவும் முடியாமல் அதிக நேரம் அருகிலிருந்தே கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று 'நேஷனல் டைம்ஸில்' இருந்தது. செய்திகளோ, தந்திகளோ, கிடைக்கக் கிடைக்க அவற்றைப் பிரித்து வகைப்படுத்தி அச்சுக் கோர்ப்பவர்கள் கையில் கொடுத்து - அவர்கள் ஒவ்வொன்றாக அச்சுக் கோத்துக் கொடுத்த பின் பிழை திருத்தி மறுபடியும் சரி பார்த்து - அச்சிட வேண்டியிருந்தது. மற்ற தினசரிகளோடு போட்டியிட்டுச் செய்திகளை விரைவாகவும் முன்பாகவும் தருவதற்கு வேண்டிய வசதிகள் இதனால் குறைந்திருந்தன. விரைவாகக் 'கம்போஸ்' செய்வதற்கு 'டைம்ஸ்' போன்ற நல்ல தினசரிக்கு நவீன 'மானோ டைப்' இயந்திரம் ஒன்று தேவையாயிருந்தது. அந்த இயந்திரம் வைத்திருந்த மற்ற தினசரிகளோடு போட்டி போடவாவது டைம்ஸுக்கும் அது தேவையாயிருந்தது. 'மானோ டைப்' இயந்திரம் இல்லாததனால் சுகுணனும் பிழை திருத்துவோரும், இரண்டோர் உதவியாசிரியர்களும் அதிக நேரம் பாடுபட வேண்டியிருந்தது. கம்பாஸிட்டர்கள் மாற்றி மாற்றிக் 'கம்போஸ்' செய்ய அதிக நேரம் ஆயிற்று. நிறையப் புதுப்புதுச் செய்திகளைக் கொடுக்கவும் முடியாமலிருந்தது. 'கம்பாஸிட்டர்'களின் தொகையைக் கூடுதலாக்கலாம் என்றால் தமிழில் கம்பாஸிட்டர்கள் கிடைத்த அளவு ஆங்கிலத்தில் 'கம்போஸ்' செய்யத் தெரிந்தவர்கள் அதிகமாகக் கிடைக்கவில்லை. வலைபோட்டுத் தேடிப் பிடிக்க வேண்டியிருந்தது. கிடைக்காதபோது இருக்கிறவர்களை வைத்துக் கொண்டே சுகுணன் சிரமப்பட வேண்டியிருந்தது. சுகுணன் அந்தக் காரியாலயத்தில் பொறுப்புக்களை கவனிக்கத் தொடங்கிய நாளிலிருந்து இரவு பகல்கள் ஓடுவது தெரியாமல் போயிற்று. வேளா வேளைக்கு உணவு இல்லாததால் உடல் நலம் கெட்டு விட்டது. சரியான துணையோ, ஆதரவோ, அந்தரங்கம் புரிந்த நட்போ இல்லாமல் அவன் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அந்த வேதனையிலும் ஒரு மன நிறைவு இருந்தது. 'சத்திய வீரன் ஒருவன் மடிந்த போர்க்களத்தில் அவனுடைய சத்தியப் பணியைத் தாங்கித் தொடர்ந்து போரிடுகிறேன்' - என்ற பெருமிதத்தை உணர்வதன் மூலமே தன் கவலைகளை அவன் மறக்க முடிந்தது.

"இந்தப் பஞ்சைப் பயல்கள் எல்லாம் எத்தனை நாளைக்குப் பத்திரிகையை நடத்தி விட முடியும்? யானையைக் கட்டித் தீனி போடற காரியம் இது" என்று நாகசாமி தன்னைப் பற்றி யாரிடமோ அலட்சியமாகத் தெரிவித்திருந்த செய்தி, சுகுணன் காதுவரை எட்டியிருந்தது. 'வீரனை அவனறிய அலட்சியம் செய்கிறவன் தன்னுடைய அலட்சியச் சொற்களாலேயே அவனுடைய பலத்தைப் பல மடங்கு பெருக்கி விட்டுவிடுகிறான்' - என்பதை நாகசாமி அறிய மாட்டார். அவர் அலட்சியமாக நினைக்கிறார் என்பதாலேயே சுகுணனுக்குத் தன் இலட்சியங்களில் கவனமும் பிடிவாதமும் பெருகியிருந்தது என்னவோ உண்மை. முதன் முதலில் மகாதேவன் 'டைம்ஸை' வாராந்திரச் செய்தி அநுபந்தம் போல் தான் சுருங்கிய அளவில் தொடங்கி நடத்தினார். சிறிது காலத்தில் அது தினசரியாக பெருகியது. அப்படி அது தினசரியாக வளர்ந்து பெருகியபோதே நாகசாமியைப் போன்ற பெரும் பத்திரிகை முதலாளிகளுக்குத் தாங்க முடியாத அசூயையும் - ஆற்றாமையும் உண்டாகியிருந்தது சுகுணனுக்குத் தெரியும். தன்னோடு தொடர்பில்லாத யாரோ ஒரு சுதந்திரப் பத்திரிகையாளராகிய மகாதேவனின் பத்திரிகை வளர்ந்து தினசரியாகப் பெயர் பெற்றதையே அசூயையோடும், எரிச்சலோடும், எதிர் கொண்ட நாகசாமி தன் காரியாலயத்திலிருந்து விலகிப் போன ஓர் ஆசிரியர் இப்போது அதைப் பொறுப்பேற்று நடத்துகிறார் என்பதை மட்டும் எப்படிப் பொறாமையின்றி எதிர்கொள்ள முடியும்? அவருடைய பொறாமையைக் கண்டு சுகுணன் வியக்கவில்லை. 'அப்படிப் பொறாமை கொள்வதுதான் அவர் நிலையிலுள்ளவர்களுக்கு இயல்பு' என்று எண்ணினான் அவன். மற்றவர்களுடைய நெற்றிக் கண் தன்னை நோக்கித் திறக்கத் திறக்க அவனுடைய துணிவும் தன்னம்பிக்கையும் வளர்ந்து பெருகின. பழைய நக்கீரன் வெதும்பி விழுந்தது போல அவன் விழுந்துவிடவில்லை. தன் முயற்சிகளிலும், பிடிவாதங்களிலும் வெறி அதிகமாகவே - அவன் தன் உடல் தாங்க முடிந்த சக்திக்கு மேல் அதிக சக்தியைச் செலவழித்து உழைக்கலானான். அதன் விளைவையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. மறுநாள் டைம்ஸின் வாரமலர் வரவேண்டிய நாளாக அமைந்து விட்ட ஒரு முக்கியமான சனிக்கிழமை காலை. அவன் காரியாலயத்திலேயே தன் அறையில் ஒரு மூலையில் சுருண்டு தளர்ந்து படுக்கும்படி ஆகிவிட்டது. ஒரு வேலையையும் செய்ய முடியாத தளர்ச்சி அவனைப் பற்றியிருந்தது. கண்கள் நெருப்பாக எரிந்தன. தோள்பட்டைகளில் வெட்டி எறிந்தது போல் ஒரு சோர்வு கனத்தது. நடக்கவோ நிற்கவோ தள்ளாடும் நிலையில் ஒன்றுமே செய்ய முடியுமென்று தோன்றவில்லை. மூச்சுக் காற்றில் நாசி மயிர் எரிவது போன்ற பயங்கரக் காய்ச்சல், பசுமை செழித்த நல்ல மரத்தை யாரோ வெட்டிச் சாய்த்தது போல் தளர்ந்து படுத்து விட்டான் அவன். வேலைகள் என்னவோ நடைபெற்றுக் கொண்டிருந்தது. உதவியாசிரியர்களும், பிழைதிருத்துவோர்களும், வழக்கமான காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். கமலம் லீவு போட்டு விட்டு வந்து கடிதங்களைப் பார்த்து பதில் அனுப்ப வேண்டியவற்றிற்குப் பதில்களைத் தயார் செய்து கொண்டிருந்தாள்.

முக்கியமான பிரச்னை ஒன்று எதிர் நின்றது. இரண்டு மணிக்குள் பாங்கில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கட்டி கோடௌனிலிருந்து பத்திரிகைக் காகிதக் கட்டுகளை எடுத்தால் தான் மறுநாள் பத்திரிகை அச்சாகி வெளிவரும். உடல் நலமில்லாத சுகுணனிடம் இதை எப்படி தெரிவிப்பது என்று 'கிளியரிங் கிளார்'க்கும் - அக்கௌண்டெண்டும் தயங்கிப் பேசாமல் இருந்தார்கள். அப்போது மாத முதல் வாரம் வேறு. முந்திய சில தினங்களில் தான் எல்லாருக்கும் சம்பளம் கொடுக்கப் பட்டிருந்தது. அதனால் காரியாலயத்தில் மீதமிருந்த கையிருப்புப் பணம் இருநூறு இருநூற்றைம்பதுக்குள் தான் அடங்கியது. என்ன செய்வது என்ற திகைப்பும் கவலையும் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவர் முகத்திலும் இருந்தது. 'நேஷனல் டைம்ஸ்' போன்று ஏழைப் பத்திரிகைக்குத் திடீரென்று இவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்து கொள்ள ஒரு வசதியும் இருக்கவில்லை.

காரியாலயத்தைச் சேர்ந்த அனைவரும் இதை எண்ணி மலைத்துத் தயங்கியிருந்த வேளையில் சுகுணனே தள்ளாடியபடி எழுந்திருந்து தன் மேஜையருகே வந்து நாற்காலியில் உட்கார்ந்தான். ஃபோர்மெனைக் கூப்பிட்டு 'வாராந்தர சப்ளிமெண்ட்'க்கு ஸ்டிரைக் ஆர்டர் போடுவது பற்றி விசாரித்த போது எதிர்ப்புறம் நிலவிய தயக்கத்திலிருந்தே - 'நியூஸ் பிரிண்ட் காகிதம் இல்லை' என்பதைக் குறிப்பாகப் புரிந்து கொள்ள முடிந்தது அவனால்.

"இந்த வாரம் மட்டும் 'ஸப்ளிமெண்ட்' இல்லைன்னு போட்டுப்பிட்டு நியூஸ் பகுதியை மட்டும் முடிஞ்சவரை அடிச்சி விட்டுடலாம் சார்" என்று ஃபோர்மென் கூறிய யோசனையைச் சுகுணனால் ஏற்க முடியவில்லை. நண்பர்கள் யாரிடமாவது கடன் கேட்கலாமா என்று சிந்தித்து - கமலத்தை உள்ளே அழைத்தான் சுகுணன். டெலிபோனை எடுத்து டயல் செய்யவும் அவன் கைகளில் ஆற்றல் இல்லை. கமலத்திடம் இரண்டு டெலிபோன் நம்பர்களைச் சொல்லி டயல் செய்து அவர்கள் கிடைத்தால் தன்னிடம் கொடுக்கச் சொல்லி வேண்டினான் சுகுணன். அவன் கூறிய எண்ணுக்கு டயல் செய்வதற்காக கமலம் ஃபோனை நெருங்கிய போது அப்படிச் செய்ய முடியாமல் யாரோ கூப்பிடுகிற மணி அடித்தது. கமலமே எடுத்தாள் அடுத்த கணம், "அண்ணா யாரோ துளசியாம்..." - என்று அவள் டெலிபோனை அவனிடம் நீட்டியபோது - "உடம்பு சரியில்லையாம். அப்புறம் பேசுங்கன்னு - சொல்லி வைத்துவிடு" என்றான் சுகுணன். அப்போதுள்ள துன்பமான நிலையில் அவன் துளசியைப் பார்க்கவோ பேசவோ விரும்பவில்லை.

"ஹி இஸ் நாட் டூயிங் வெல்" என்று கமலம் டக்கென்று ஃபோனை வைத்த போது சுகுணனுக்கு முள் குத்தினாற் போல மனம் கூசினாலும் அப்போது அதைத் தவிர வேறெதுவும் செய்யத் தோன்றவில்லை. 'துளசி - நேற்று வரை ஏன் ஃபோன் செய்யவில்லை. ஒரு வேளை இன்று தான் எங்காவது வெளியூரிலிருந்து திரும்பினாளோ?' என்றெல்லாம் சிந்தனை ஆவலோடு ஓடினாலும் - அவன் ஒன்றும் வெளியே காண்பித்துக் கொள்ள முடியவில்லை.

துளசியின் அழைப்பை - அறுத்து முடித்த வேகத்தில் கமலம் அவன் கூறிய மற்ற நம்பர்களுக்கு முயன்றாள். இருவரில் ஒருவர், ஊரில் இல்லை. மற்றவருடைய நம்பர் கிடைக்கவே இல்லை. 'என்ன செய்வது?' என்ற கேள்வி சுகுணனின் முன் எழுந்தது. உட்கார முடியாமல் மறுபடியும் மூலையில் போய்ச் சாய்ந்தான் அவன்.

"ஹார்லிக்ஸ், போர்ன்விடா, ஏதாவது வாங்கி வருகிறேனே அண்ணா" என்றாள் கமலம். 'வேண்டாம்' என்பது போல் ஜாடை செய்துவிட்டு,

"இந்த மாதிரி சமயத்திலா நான் இப்படிப் படுத்துக் கிடக்க வேண்டும்?" என்று ஆற்றாமையோடு தனக்குத் தானே பேசுவது போல் கூறிக் கொண்டான் அவன். அப்போது பகல் பதினொன்றரை மணிக்கு மேல் ஆகியிருந்தது. இரண்டு மணிக்குள் பணம் கட்டி 'நியூஸ் பிரிண்ட், ரீல்களை எடுத்து வராமற் போனால்?' என்ற கேள்வி ஒவ்வொருவர் மனத்திலும் எழுந்து நின்றது. ஏதாவது மாயமாக நடந்து பத்திரிகையைக் காப்பாற்றினாலொழிய வேறு வழி இல்லை என்பதை எல்லாரும் உணர்ந்திருந்தார்கள். கடிகாரமும் தயவு தாட்சண்யமின்றி ஓடிக் கொண்டிருந்தது. 'டைம்ஸு'க்குப் பலமுறை இப்படி எத்தனையோ சோதனைகள் வந்திருக்கின்றன. ஒவ்வொன்றையும் கடந்து அது பிழைத்துத்தான் வாழ்ந்திருக்கிறது. 'ஆனால் இந்த முறையோ?'... நினைப்பதற்கே மரணத்தைவிடக் கொடுமையானதாக இருந்தது இந்தக் கேள்வி.
-----------

அத்தியாயம் - 14

ஆசையின் அழியாத தெய்வீக எல்லை நிராசைதான். ஏனென்றால் அந்த எல்லையில் ஆசைப்படுதல் என்ற உணர்வுத் துடிப்புக்கு முடிவே இருப்பதில்லை.

எதிரே சுவரில் காலஞ்சென்ற மகாதேவன் நேருவுடன் சிரித்துக் கொண்டே உரையாடிக் கொண்டிருந்த புகைப்படம் முன்பு எப்போதோ எடுத்து மாட்டப்பட்டிருந்தது. டைம்ஸ் காரியாலயத்துக்கு ஹரீந்திரநாத் சட்டோபாத்தியாயா வந்திருந்த போது எடுத்திருந்த புகைப்படம் ஒன்றும் அருகில் மாட்டியிருந்தது. இவ்வளவு பெரிய தலைவர்களுடனும், கவிஞர்களுடனும், கலைஞர்களுடனும் பழக்கமுள்ள ஒரு உண்மைத் தேசியவாதி நிறுவிய நல்ல பத்திரிகையே சரியாக நடக்க முடியாத இந்தத் தேசத்தில் மிட்டாய்க் கடை வைத்துப் பணக்காரர்களாகியவர்களும், சணல் ஆலை வைத்துச் செல்வம் குவித்தவர்களும், முதல் போட்டு நடத்துகிற ஏழாந்தர, எட்டாந்தரப் பத்திரிகைகள் கூட அற்புதமாகச் செலாவணியாவதை நினைக்கத் தொடங்கிய போது எதிரே ஒன்றையுமே பார்க்காமல் தளர்ச்சியோடு தளர்ச்சியாகக் கண்களை அப்படியே இறுக்கி மூடிக் கொண்டு விடவேண்டும் போல் தோன்றியது சுகுணனுக்கு. அந்தப் படங்களையும், சுவர்களையும் அப்பால் கவலையோடு தெரியும் கமலத்தின் முகத்தையும் பத்திரிகைக் காகிதப் பற்றாக்குறையை நினைவுறுத்தும் கேள்விக் குறி போல் நிற்கும் அச்சக ஃபோர்மெனையும் எதிர்கொண்டு பார்க்கவே கூசியவனாகக் கண்களை மூடினான் அவன். பத்து நிமிடங்கள் இப்படிக் கழிந்திருக்கும். சிந்தனையில் ஒன்றுமே வழி பிறவாத தளர்ச்சியில் கரைந்த விநாடிகள் அவை.

யாரோ படியேறி நடந்து வரும் காலடியோசை கேட்டது. தொலைவிலிருந்து நெருங்கி வரும் அநுராகத்தின் மெல்லிய சங்கீதம் போல் மெட்டி ஒலி தாளமிட நடந்து வரும் மங்கலமான திருமகளின் காலடி ஓசையா அது? தரித்திரமும் தளர்ச்சியும், துயரமும் தற்காலிகத் தோல்விகளும், நிறைந்துவிட்ட டைம்ஸ் காரியாலயத்திற்குள் எங்கிருந்து வருகிறது இந்த இலட்சுமீகரமான இங்கித நாதம்? இந்த நாதத்தைத் தொடர்ந்து கொல்லென்று சுற்றிலும் மல்லிகை பூத்துக் குலுங்குவது போல் நறுமணமும் விரைந்து வந்தது. ஓசையும் வாசனையும் நெருங்கின. காதில் கேட்பதும், கருத்தில் உணர்வதும், உண்மையா சொப்பனமா என்ற தயக்கத்தோடும் இந்த உலகம் என்ற பிடிவாதமான புறக்கணிப்பாகிய நெற்றிக் கண்ணின் வெப்பத்தில் வாடிய வாட்டத்தின் சோர்வோடும் மெல்லக் கண்களைத் திறந்து எதிரே பார்த்தான் சுகுணன்.

சித்திரம் போல் எதிரே நின்று கண்களில் நீர் அரும்ப அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் துளசி. எதிரே அவன் பார்வையில் பாதாதிகேச பரியந்தம் அவள் தென்பட்டபோது - தரையில் பதித்த தாமரைகளைப் போல் தெரிந்த அவள் பாதங்களில் 'இந்தக் கால்கள் இன்னும் உங்களருகில் நெருங்கி வந்து நிற்க முடியாமல் பெரியோர்கள் நாள் பார்த்து முகூர்த்தம் பார்த்து நிச்சயித்து இப்படித் தடையும் போட்டு விட்டார்கள்' - என்பது போல் அப்படிப்போட்ட அழகிய தடைகளாக மெட்டிகள் வெளேரென்று மின்னிக் கொண்டிருந்தன. பவழமாய்ச் சாயமிட்டிருந்த அளவான அழகான நகங்களோடு தயங்கிய அந்தப் பாதங்களில் அவன் பார்வை நிலைத்தது. அவள் முகத்தைத் தொடர்ந்து ஏறிட்டுப் பார்க்க அவனால் முடியவில்லை. மனமும் இல்லை.

"இதெல்லாம் என்ன? உடம்பு சரியில்லை என்றால் அதை அறிந்து கொள்ளக் கூடத் தகுதியில்லாத பாவியாகி விட்டேனா நான்?"

- அவள் குரலில் தயங்கிய பின் நிதானமாகவும் நிர்த்தாட்சண்யமாகவும் அவன் அவளுக்குப் பதில் கூறினான்:

"இவை என்னுடைய சொந்த சிரமங்கள். நான் பெருமைப்படவோ, சிறுமைப்படவோ இன்று காரணமாயிருப்பவை இவை தான். இவற்றை பங்கிட்டுக் கொள்ள நான் யாரையும் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய வறுமையின் துன்பங்களில் அவற்றைக் காண்பதற்காக என்னை விட வசதியுள்ளவர்கள் எதிரே வந்து நிற்பதை நான் விரும்பவும் முடியாது - இரசிக்கவும் வழியில்லை."

- அவனுடைய வாய் சொந்தத் தளர்ச்சியினாலும், ஆற்றாமையினாலும், எழுந்த கோபத்தில் இப்படிப்பட்ட சொற்களை உதிர்த்தாலும், மனம் - தான் அவளை நோக்கி நியமித்து அனுப்பும் இந்தச் சொற்கள் மிகக் கடுமையானவை என்பதை உணர்ந்தே இருந்தன.

அவளோ இந்த வார்த்தைகளில் சீற்றமடையாமல் கண்களில் நீர் நெகிழ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு ஒவ்வொரு வார்த்தையாக எண்ணித் தேர்ந்தெடுத்துத் தொடுத்து வாக்கியம் அமைத்துப் பேசுபவள் போல அவள் அவனை நோக்கிப் பேசினாள்:-

"எனக்குத் தனியே என்னுடைய சொந்த சிரமங்கள் என்று பிரிக்கும் படியாக ஒன்றுமில்லை. ஏனென்றால் உங்களுடைய சிரமங்களையே என் சிரமங்களாக உணரப் பழகிவிட்டவள் நான். இந்த வரவு செலவுக்கணக்கிலும், உப்புப் புளிச் செலவிலும் தேய்ந்து விடாமல் - உல்லாசமாக - சுதந்திரமாக நீங்கள் எழுதிக் கொண்டிருக்க வேண்டுமென்று எனக்குள் இரவு பகல் உறங்காமல் இன்னும் நோன்பியற்றுகிறேன் நான்...! கோபத்தில் ஏதேதோ பேசுகிறீர்கள். பரவாயில்லை. ஆனால் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்களுடைய முதல் சிறுகதையைப் பாராட்டி உருகத் தொடங்கின நாளிலிருந்து உங்கள் மனக்கோவிலில் இலட்சுமீகரமாக நின்று - கற்பனையாகிய ஐசுவரியத்தைப் பொங்கச் செய்வது நானல்லாமல் வேறு யார்? நானா? இல்லையா? இல்லையென்று வாயால் துணிந்து நீங்கள் சொல்லிவிடலாம். நான் இன்னொருவருக்குக் கழுத்தை நீட்ட நேர்ந்து விட்ட துர்ப்பாக்கியம் உங்களை அப்படிச் சொல்ல வைக்கும். ஆனால் உங்கள் மனச்சாட்சியை நீங்களே பொசுக்கி விட முடியாது. உங்களுக்கு மனம் இருந்தால் அதற்கு நான் தான் சாட்சி. இன்றும் நாளையும் - ஏன் இந்த மண்டை வேகிற வரையும் அப்படித்தான். என்னுடைய வெறும் மாமிச உடம்பைத் தான் இன்னொருவருக்கு வாழக் கொடுத்திருக்கிறேன். அது நான் செய்த பாவம். மனம் - மனம் என்று வானளாவ எழுத்தில் எழுதியிருக்கிறீர்களே, அந்த அற்புத வஸ்துவை உங்களிடமல்லவா வைத்துவிட்டுப் போனேன்... நம்பி ஒப்படைத்துவிட்டுப் போன பொருளை இல்லையென்று ஏமாற்றுவதுதான் நியாயமா?"

- துளசியின் பேச்சு இதுவரை இவ்வளவு கூராக அவன் நெஞ்சில் வந்து தாக்கியதே இல்லை. சோகத்தை கற்பித்துப் பேசுகிறவனின் சொற்கள் வேறு, சோகத்தை அனுபவிக்கிறவர்களின் சொற்கள் வேறு. சோகத்தை இதயத்திலிருந்து கொட்டுகிறவர்களுக்கு அந்தச் சோகமே சொற்களாக வருகின்றன. அது தன்னைப் போல் கற்பித்து எழுதியவர்களின் கற்பனைச் சோகத்தைப் பொய்யாக்கி விடுகிறது என்று அப்போது தோன்றியது சுகுணனுக்கு. துளசி அவ்வளவு உணர்ச்சி நிறைந்த வார்த்தைகளைத் தன் சோகமாகக் கொட்டி விட்டாள் அவன் முன். சிறிது நேரம் அவளுக்கு எதை மறுமொழி கூறுவது, எப்படிக் கூறுவது, எந்தச் சொற்களால் கூறுவது என்றே தெரியாமல் அவன் தயங்கினான். அந்த அறையில் அப்போது அவர்கள் இருவரைத் தவிர வேறெவரும் இல்லை. துளசி அழுது கொண்டே சுகுணனிடம் ஏதோ வினாவியதைக் கண்டு, 'இவர்கள் சொந்தப் பேச்சுக் கிடையே இனி இங்கும் நாம் நிற்கக்கூடாது' என்பது போல் கமலமும் கூட வெளியேறி முன் வராந்தாப் பக்கம் போயிருந்தாள்.

தரையில் சாய்ந்து கொண்டிருந்த சுகுணன் பெருமூச்சு விட்டபடியே எழுந்து மறுபடியும் நாற்காலியில் வந்து அமர்ந்தான். துளசியும், அவனாக உட்காரச் சொல்லுகிற வரை உட்காருவதில்லை என்பது போல் எதிரே நின்று கொண்டே இருந்தாள். அவனோ மறுபடி பழைய கோபத்தை அடைந்து விட்டவன் போல்,

"தயவு செய்து என்னைத் தனியே விடு துளசி! நான் படவேண்டிய துன்பங்களும், கவலைகளும் அதிகமாயிருக்கின்றன" - என்று கூறியபடியே முன்பு ஃபோனில் கிடைக்காத நண்பருக்கு மறுபடி டயல் செய்தான். இந்த முறை ஃபோனில் அவர் கிடைத்தார். சுகுணன் தன்னுடைய இயல்புக்கு மாறாக டெலிபோனில் அந்த நண்பரிடம் கெஞ்சிக் கூத்தாட வேண்டியிருந்தது.

"ரொம்ப நெருக்கடியான நிலைமை சார்! இந்த முறை எப்படியும் நீங்கள் உதவியே ஆகவேண்டும். ஒரு நல்ல மனிதர் தொடங்கிய காரியம் நின்று போய்விடக் கூடாது என்ற பிடிவாதத்துக்காகத்தான் நான் இதில் தலை கொடுத்து உழைக்கிறேன்..."

"....."

எதிர்ப்புறம் பேசியவர் எவ்வளவு தேவையாயிருக்கும் என்று கேட்டிருப்பார் போலிருக்கிறது.

"சுமார் ஆயிரம் - ஆயிரத்தைந்நூறு ரூபாய் வரை தேவையாயிருக்கும்" - என்றான் சுகுணன்.

"....."

"எப்படியாவது பாருங்கள் சார்."

"....."

"அப்படியா?... பரவாயில்லை... சார்... உங்களைச் சிரமப்படுத்தி விட்டேன். மன்னியுங்கள்."

- சுகுணன் சோர்வோடும், ஏமாற்றத்தோடும், டெலிபோனை வைத்துவிட்டு நிமிர்ந்த போது - எதிரே துளசி தன் கைப்பையைத் திறந்து பளீரென்று மின்னும் புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொண்டிருந்தாள். அவளையும் அந்தப் பணத்தையும் இலட்சியம் செய்யாதவன் போல வேறு ஏதோ காரியங்களில் மூழ்கினான் அவன். அவனுடைய அந்த அலட்சியத்துக்காகக் கூட அவன் மேல் ஆத்திரப்பட முடியாத அவ்வளவு பிரியத்தை வைத்து விட்ட துளசியோ நிதானமாகப் பணத்தை எண்ணி ஓர் உறையில் போட்டு அதன் மேல் முத்து முத்தான எழுத்துக்களில் 'டைம்ஸுக்கு ஓர் அபலையின் நன்கொடை' - என்று எழுதி அவனிடம் அதை நீட்டினாள். அவன் அதை வாங்கிக் கொள்ள மறுத்தான்.

"ஏன்? 'டைம்ஸ்' நின்று போய்விடக் கூடாதென்ற அக்கறையும், கவலையும் எனக்கு இருக்கக் கூடாதா?"

"டைம்ஸுக்கும் அதன் பிடிவாதக்கார ஆசிரியனுக்கும் சில கொள்கைகள் உண்டு. உன் நன்கொடையை ஏற்க முடியாது."

"இப்படிச் சொல்வது உண்மையாயிருந்தால் இன்று வரை சுமார் முப்பதாயிரம் ரூபாய் வரை நீங்கள் என்னிடம் பிடிவாதமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும்..."

"என்ன உளறுகிறாய்? எதற்காக உனக்கு நான் முப்பதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்?"

"எத்தனை, எத்தனையோ பெயர்களில் நான் யார் என்று காண்பித்துக் கொள்ளாமலேயே - ஆயிரக்கணக்கான ரூபாய்களையும், பொன் வளையல், பொன் மோதிரங்கள், வைர நகைகள், என்று என்னுடைய சகல ஐசுவரியங்களையும், நீங்கள் 'டைம்ஸு'க்கு நிதி கோரி எழுதி அறிக்கை விட்ட போது பல ஊர்களிலிருந்து அனுப்பியிருக்கிறேன்; என்னுடைய இந்த நன்கொடை மறுக்கப்படுமானால் அவையும் மறுக்கப்படத்தானே வேண்டும்? இதோ நானே அப்படி அவற்றை அனுப்பியதற்கான தபால் இரசீதுகள்; பிரயாண டிக்கெட்டுகள் - எல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன்..."

- ஒரு கொத்து விமான டிக்கெட்டுகளையும், மணியார்களையும் அனுப்பிய இரசீதுகளையும், பாங்க் டிராஃப்ட்கள் அனுப்பிய இரசீதுகளையும், இன்ஷூர் பவர் அனுப்பிய பதிவு சீட்டுக்களையும் ஆவேசத்தோடு தன் கைப்பையிலிருந்து அவன் மேஜை மேல் அள்ளிக் குவித்தாள் துளசி. அவள் அப்படிச் செய்திருப்பது சாத்தியமென்பதை உறுதியாக நம்பிய சுகுணன் அப்படியே மலைத்துப் போய் அவளை இமையாமல் நோக்கினான். தாங்கிக் கொள்ள முடியாத பெரு வியப்பாயிருந்தது அது. அவளோ ஒரு பாவமும் அறியாத பேதை போல், 'உங்கள் இதயத்தில் நிரம்பிக் கிடக்கும் இலட்சுமீகரம் நான் தான். என்னை அங்கிருந்து தயவு செய்து வெளியேற்ற முயலாதீர்கள்' - என்று இறைஞ்சுவது போல் கண்ணீர் மல்க அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் கூறிய உண்மையை நிரூபிப்பது போல் அவள் கைகளில் நிறைந்திருந்த பொன் வளைகள், காதிலிருந்த வைர அணிகள், மூக்குத்தி, மோதிரம், கழுத்திலிருந்த வைர நெக்லஸ் எல்லாம் அந்த அந்த இடங்களில் இப்போது இல்லாது சாதாரணமான சில அணிகளோடு பொலிவற்று வெறுமையாயிருப்பதையும் அவன் கவனிக்கத் தவறவில்லை. அவள் மேல் எல்லையற்ற கருணையும் பச்சாதாபமும் பெருகிட அவன் இப்போது அவளை நோக்கினான். அவனுக்குத் தொண்டை கம்மி அடைத்தது. குரல் கரகரத்தது.

"நீ இப்படிச் செய்திருக்கக் கூடாது துளசீ! இன்னொருவருடைய உடைமையாகிவிட்டவள் நீ என்பதை மறந்து விட்டாயா?"

"மறக்கவில்லை! ஆனால் இது மனிதர்களின் உலகம். வெறும் அன்பினால் மட்டும் நமக்கு வேண்டியவர்களைக் காக்கவோ, வளர்க்கவோ இங்கு முடிவதில்லை. நமக்கு வேண்டியவர்களை அவர்களுடைய தேவைகளுக்குத் திண்டாட விட்டு விட்டுப் பிரியங்களுக்காக மட்டும் எதிர்பார்ப்பது நியாயமாகாது. இன்று இந்தத் துளசி எங்கோ தளிர்த்துத் தழைக்கலாம். ஆனால் இதன் ஆணி வேர் உங்கள் உள்ளத்தில் ஊன்றியிருக்கிறதே! வேர் இருக்கிற இடம் வாடினால் அது செடிக்கு மட்டும் நல்லதா என்ன? மணம் என்பது வேரிலிருந்து ஊறும் மூலப் பொருளாயிற்றே?"

"உண்மைதான்! மற்றச் செடிகளுக்கும் துளசிச் செடிக்கும் கௌரவமான வேறுபாடு ஒன்றுண்டு. துளசி வேரிலிருந்து தளிர் வரை புனிதமாக மணக்கிறது. வாடினாலும் மணக்கிறது. அதன் பெருமையால் அது நிற்கிற மண்ணும் மணக்கிறது..."

"தவறு! நிற்கிற மண்ணின் பெருமையால் தான் அது மணக்கவே முடிகிறது."

"நீ உன் பெருந்தன்மையை அளவுக்கதிகமாக நிரூபிக்கிறாய் துளசீ! நான் இவ்வளவுக்குப் பாத்திரமாகத் தகுந்தவன் தானா என்று எனக்கே இப்போது சந்தேகமாக இருக்கிறது. என்னுடைய குணமோ பிடிவாதம். நான் உன்னிடம் அடிக்கடி பேசும் சொற்களோ கடுமையானவை. இருந்தும் நீ என்னை விடாமல் பிரியத்தினால் துரத்துகிறாயே? இதில் என்ன பயன் கண்டாய் நீ?"

"பயனும், இலாப நஷ்டமும் பார்க்கிற சிறிய விவகாரமாக இதை நான் நினைக்கவில்லை. நான் மனப்பூர்வமாக வேரூன்றியிருக்கும் சத்தியமான மண் எதுவோ அது வாடக் கூடாது. அந்த மண் வாடினால் நானும் வாடியே தீர வேண்டும்..."

"மணந்து கொள்ள முடியாமற் போன பின் 'மணக்க நினைத்திருந்தோம்' என்ற எண்ணத்திலேயே மணந்து கொள்வதை விடச் சிறப்பாக வாழ்கிறோம் நாம்..."

"ஒப்புக் கொள்கிறேன். முதல் முதலாக உங்கள் கடுமையும் ஆத்திரமும் நீங்கி இன்று என்னிடம் ஒரு நல்ல வார்த்தை பேசியிருக்கிறீர்கள். இந்த வார்த்தைகளே என்னை உங்கள் முன் சௌபாக்கியவதியாக்குகின்றன. தயவு செய்து இந்தப் பணத்தை எடுத்துக் கொடுத்து 'நியூஸ் பிரிண்ட்' கிளியர் செய்து வாங்க வழி செய்யுங்கள். பத்திரிகையின் வெளிவரவேண்டிய பதிப்புக் கால தாமதமில்லாமல் வெளிவரட்டும். என் உதவியைப் புறக்கணிக்காதீர்கள். நான் வாடாமலிருப்பதற்காக நானே செய்து கொள்ளும் உதவி இது..."

"என்னைப் பெரிய கடனாளியாக்குகிறாய் துளசி?"

"நானே உங்களுக்குக் கடன்பட்டிருக்கும் போது அது எப்படி சாத்தியம்?..."

- சுகுணன் அவளை நோக்கி முழுமையாக முகமலர்ந்து புன்முறுவல் பூத்தான். அவள் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். சுகுணன் கமலத்தை அழைத்துப் பணத்தை அவள் கையில் ஒப்படைத்தான். அக்கௌண்டண்டிடம் கொடுத்து 'கிளியரிங் கிளார்க்' மூலம் பேப்பருக்கு ஏற்பாடு செய்யும்படி வேண்டியதோடு துளசியையும் சுருக்கமாக அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான். பத்திரிகை நிற்காமல் காப்பாற்ற வந்த ஓர் அபூர்வ வன தேவதையைத் தொழுவது போல பாவனையில் துளசியை நோக்கிக் கைகூப்பினாள் கமலம்.

'சாசுவதத்திற்கு எல்லை காலத்தின் நெடுமையில்லை. ஒரு விநாடி சத்தியமாக நின்றாலும் அந்த ஒரு விநாடி கூட சாசுவதம் தான். புகழையும் பொறுப்பையும் தாங்குகிற ஆயுதமாய்ப் பழியையும் பாராட்டுதலையும் நிர்ணயிக்கிற சக்தியாய்த் தன் கையிலிருக்கிற எழுதுகோலைப் போல் அவள் நினைவும் தன்னுள் சாசுவதமே' என்று முன்பு ஒருநாள் துளசியைப் பற்றி நினைத்த நினைப்பே இப்போது அவனுள் மிகுந்தது.

"நான் புறப்படுகிறேன். நாளைக்கு மறுபடி டில்லி போக வேண்டுமாம். அப்பா நாளைக் காலை விமானத்தில் டிக்கட் வாங்கிவிட்டார். மறுபடி எப்போது சென்னை வருவேனென்று எனக்கே தெரியாது..." துளசி விடைபெற முயன்றாள்.

"கொஞ்சம் உட்கார்! போகலாம்... உன்னோடு சிறிது பேச வேண்டும் போல் தாகமாயிருக்கிறது..." என்றான் சுகுணன்.

"நீங்கள் சிறிது பேச விரும்பும் இதே தாகம் - நான் வாழ் நாள் வரை தவிக்க வேண்டிய ஒன்று என்பது ஞாபகமிருக்கட்டும்..." என்று கூறிக்கொண்டே எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள் துளசி.

"துளசி? உன்னை நான் முன்பு கடுமையாகப் பேசியிருக்கும் சில வார்த்தைகளுக்காக நீ என்னை மன்னிக்க வேண்டும். ஏதோ ஓர் அவசரமான ஆசையில் பிறக்கிற மனிதர்களின் காதல் சத்தியங்கள் வேறு ஏதோ ஓர் அவசரத்தில் அல்லது அவசியத்தில் எத்தனை விரைவாகப் பொய்யாய்ப் போய் விடுகின்றன? அதையும் ஒரு நிறைவாக ஒப்புக் கொள்கிற திருப்தியை இப்போது நீ எனக்கு நிரூபித்து விட்டாய். ஆசையின் அழியாத தெய்வீக எல்லை நிராசை தான். ஏனென்றால் அந்த நிராசை என்ற எல்லையில் ஆசைப்படுதல் என்ற உணர்வுத் துடிப்புக்கு முடிவே இருப்பதில்லை. திருப்தியில் ஆசை நெருப்பு நீறு பூத்து அவிந்து போய்ச் சாம்பலாகிக் குவிந்து விடுகிறது. நாமோ இப்போது பரிபூரணமாக நிராசையோடு எதிரெதிரே நிற்கிறோம். நம்முடைய இந்தத் தாபம் - இந்த ஆசை நெருப்பு என்றும் அணையவே அணையாது. ஆசையின் முடியாத எல்லை நிராசைதான் என்று எனக்கு இப்போது நன்றாக விளங்குகிறது. நிராசை தான் மனிதனை மயக்குகிறது. இல்லையானால் நிராசையில் முடிந்த அம்பிகாபதி அமராவதி, லைலா மஜ்னு, கதைகளில் மட்டும் ஏன் அத்தனை கவர்ச்சி உண்டாக வேண்டும்? தாபம், நிராசை, அதிருப்தி, குறைவு, தாகம், என்பன போல் நிறையாத மூளியான உணர்வுகளால் தான் மனிதன் தன்னுடைய சொர்க்கத்தைத் தேட வேண்டுமென்பது கடவுளின் சித்தம் போலிருக்கிறது."

"....."

"'நீ ஒரு பூமாலை' - என்று நீண்ட நாட்களுக்கு முன் ஒரு முறை உன்னிடம் கூறினேன்; நினைவிருக்கிறதா துளசி?..."

"நினைவில்லாமலென்ன? 'வீரர்களின் கம்பீரமன தோள்களை அலங்கரிக்க வேண்டிய மணமாலைகள் சந்தர்ப்ப வசத்தால் கோழைகளின் தளர்ந்த கைகளில் சூட்டப்பட்டு விடுவதும் உண்டு போலும்' - என்று பின்னால் அதையே மாற்றி எழுதி எனக்கு வாழ்த்து அனுப்பினீர்களே? அது கூட நினைவிருக்கிறது."

"தயவு செய்து இப்போது அதை மறந்து விடு துளசீ..."

"எப்பொழுதோ படைத்த சொற்கள் நாம் அழிக்க முயன்றாலும் அழிவதில்லை. மனிதர்களின் முன்னோர்களில் யாரோ சிலர் சொற்களுக்கு உண்டாக்கி வைத்த மந்திர சக்தி இன்னும் அவைகளில் இருக்கிறது. வசை சுடுகிறது. புகழ் குளிரச் செய்கிறது. புகழ் மறந்தாலும் வசை மறப்பதில்லை... அது சொல்லின் சக்தி போலும்..."

"நான் வசையாக எதுவும் உனக்கு எழுதவில்லை. என்னுடைய வசையிலும் - என் அன்பின் தொனி இருப்பதை நீ உணர்ந்திருக்கலாம்..."

"உங்கள் சொற்களில் அன்பை உணர்ந்ததை விட வேதனையைத் தான் நான் அதிகமாக உணர்ந்தேன். அதற்காகவும் நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் 'சாதாரண மனிதர்களின் வேதனைதான் அவர்களுக்குத் தவம். எல்லாராலும் தவம் செய்யக் காட்டுக்குப் போய்விட முடியாது. பலருக்கு அவர்கள் படுகிற துன்பங்களே அவர்கள் அடைய வேண்டியதை அடைவிக்கிற தவமாக இருக்கும்' - என்று நீங்களே எழுதியிருக்கிறீர்கள். அப்படி நான் செய்த தவம் இன்று பலித்திருக்கிறது..."

"உண்மை! நாம் மனிதர்கள். பலவீனமான நம் அதிருப்திகளுக்கிடையேயும் அன்பினால் தான் நிமிர்ந்து நடக்கிறோம். வெளிப்படையாக உன்னிடம் பலமுறை நான் கடுமையான சொற்களைக் கூறியிருந்தாலும் எனக்குள் அந்தரங்கமாக உன்னை நினைத்து நினைத்துக் கருணை மயமாக நெகிழ்ந்திருக்கிறது என் உள்ளம். இன்னொருத்தியின் உள்ளத்தில் நாம் தவிப்பாகவோ - ஏக்கமாகவோ நிரம்பியிருக்கிறோம் என்ற ஞாபகமே ஒரு தவிப்பாக எரிந்திருக்கிறது என்னுள். அதை உன்னால் புரிந்து கொள்ள முடிந்ததோ இல்லையோ எனக்குத் தெரியாது?"

"புரியாமலென்ன? 'வாழ்வின் துயரங்களுக்கு வெறும் நெஞ்சில் மட்டும் சாட்சியாக நிற்கிற ஊமைத் துணைகளால் பயனில்லை' - என்று நீங்கள் ஒரு முறை என்னிடம் குத்திக் காட்டியிருக்கிறீர்கள். அதை உங்களை விட நன்றாக நான் உணர்ந்திருந்த காரணத்தால் தான் இப்போது கைகளாலும் உதவி செய்து சாட்சியாக நிற்பதற்கு வந்தேன். 'டைம்ஸ்' நடந்தால் தான் உங்களுடைய பெருமை காப்பாற்றப்படும் என்பதில் உங்களை விட எனக்குக் கவலை அதிகம்..."

"குயிலைப் போல், கிளியைப் போல், சிட்டுக் குருவியைப் போல், மைனாவைப் போல் பெண்ணின் அன்பிற்கும் மெல்லிய சிறகுகள் தான் உண்டு என்று முன்பு நான் நினைத்திருந்தேன். 'விடாமல் நம்மைத் துரத்தும் இந்தக் காதல் பறவையின் மெல்லிய சிறகுகள் வலிக்குமே' - என்று கூடச் சில சமயங்களில் அந்தரங்கமாக உன்னை நினைத்து நான் பச்சாதாபப்பட்டிருக்கிறேன். ஆனால் உன்னுடைய அன்பின் சிறகுகள் மெல்லியவையாயினும் வல்லவைகளாயிருப்பதை - எவ்வளவு தூரம் வேண்டுமாயினும் துணைப் பறவையைத் துரத்திப் பறந்து வர முடிகிற அளவு வல்லவைகளாயிருப்பதை இன்று உன் செயல்களிலும், சொற்களிலுமிருந்து நான் நன்றாகத் தெரிந்து கொள்ள முடிகிறது துளசீ"

"....."

சிறிது நேர மௌனத்துக்குப் பின் துளசி அவனிடம் சிறு குழந்தை போல் ஓர் அல்ப ஆசையைத் தெரிவித்தாள்.

"தயவு செய்து இந்த ஆட்டோகிராப்பில் இரண்டு வரி எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பீர்கள் அல்லவா. எனக்கு உங்கள் கையெழுத்துக்களைத் தினம் ஒரு முறையாவது கண் குளிரப் பார்க்க வேண்டும் போல ஆசையாயிருக்கும்."

"என் எழுத்தில் என்னைப் பார்ப்பதை விட உன் இதயத்தினுள்ளேயே என்னை நீ சுலபமாகப் பார்த்துக் கொள்ள முடியுமே துளசீ...!"

"இதுவரை நான் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டிய அவசியமில்லாது அருகிலேயே இருந்து விட்டேன். இப்போது தொலை தூரத்துக்குப் பிரிந்து போவதால் ஏதோ அல்ப ஆசை. உங்கள் கையெழுத்தையோ போட்டோவையோ நான் வேறுவிதமாகப் பார்க்க உலகம் ஒப்பாது. தயவு செய்து மறுக்காதீர்கள்" - என்று கூறியவாறே ஆட்டோகிராப்பை நீட்டினாள் அவள். அதில் தான் எழுத வேண்டிய பக்கத்துக்கு எதிர்ப்புறம் தனது சிறிய புகைப்படம் ஒன்று அளவாகக் கத்தரித்து ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டான் சுகுணன்.

"மனிதர்கள் நாடும் ஆசைகள் இப்படி அல்பமானவை தான். ஆனால் இந்த அல்பமான சுகங்களைத் தானே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மகாகவிகள் பெரிதாகக் கொண்டாடி எழுதியிருக்கிறார்கள்" - என்று எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தான் சுகுணன். அவள் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டு கைப் பையின் உள்ளே வைத்தாள். மறுபடியும் அவள் கண்களில் நீர் திரண்டது.

"அப்பா டில்லியில் என் சொந்த ஆடம்பரச் செலவுகள் அதிகமாயிருக்குமென்று மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்புகிறார். இவருடைய சம்பளம் வேறு நிறைய வருகிறது. உங்களுடைய பத்திரிகையைக் காப்பாற்றுவதற்காக நான் பவுடர் ஸ்நோவைக் கூட விட்டாயிற்று. வீட்டுச் செலவையும் சொந்த ஆடம்பரச் செலவுகளையும் மீதம் பிடித்தாவது டைம்ஸுக்கு என் உதவிகளைத் தொடர்ந்து செய்வேன்."

"மறுக்கவில்லை. என்னைத் துரத்தும் காதல் பறவையின் சிறகுகள் அவ்வளவிற்கு வலிமையானவை என்று உணர்ந்து அதற்கு நான் நன்றி செலுத்துகிறேன்."

"நன்றி வேண்டாம். அது என்னை அந்நியமாக்குகிறது. அன்பு செய்யுங்கள், போதும். நான் உங்களிடம் ஒப்படைத்திருக்கும் என் மனத்தை நீங்கள் விட்டு விடாமல் பேணினாலே எனக்குத் திருப்தி தான்."

- அவன் அவளை வழியனுப்புவதற்காகப் படியிறங்கி வாயில் வரை சென்ற போது அப்போதுதான் நியூஸ் பிரிண்ட் ரீல்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. உள்ளே மெஷின் ஓடும் ஓசை கடமுட வென்று எழுந்தது.

எதிர்ப்புறம் ஓரமாகப் பார்க் செய்திருந்த காரருகே அவள் சென்றாள். சுகுணன் அவளை விட்டுப் போக மனம் வராமல் இன்னும் வாயிற்படியிலேயே நின்று கொண்டிருந்தான். காருக்குள் ஏறி உட்கார்ந்தவள் ஏதோ நினைத்துக் கொண்டாற் போல் மறுபடி கதவைத் திறந்து கொண்டு இறங்கித் தயக்கத்தோடு நடந்து அவனருகே வந்தாள்.

"என்னை மறந்து விட மாட்டீர்களே...?" கேட்கத் தொடங்கியவள் விம்மிக் கொண்டு வரும் அழுகையை உள்ளேயே அடக்க முயல்வது குரலில் தெரிந்தது. சுகுணனின் இதயத்தை வேதனை பிசைந்தது. இத்தனை பெரிய பிரிவாற்றாமை அவன் நெஞ்சை இதுவரை சுமையாக அழுத்தியதே இல்லை.

"அசடே! பைத்தியம் போல இப்படித் தெருவில் அழலாமா? தன்னுடைய நம்பிக்கைகளை ஒருவனிடம் பூரணமாக ஒப்படைத்து விட்ட ஒருத்தியின் உடம்பை யார் மணந்து கொண்டால் தான் என்ன? உண்மையில் அந்த நம்பிக்கைகளை ஆள்கிறவன் அல்லவா அந்த மனத்தை ஆள்கிறான். என்னை நம்பு. கவலையின்றிப் போய் வா! நீ இதயபூர்வமாக நோன்பியற்றுகிற வரை என் எழுத்திலும் இந்தப் பத்திரிகையிலும் இலட்சுமீகரம் குறையவே குறையாது" - என்று அருகே வந்தவளிடம் நாத் தழுதழுக்கக் கூறினான் அவன். சில விநாடிகள் குனிந்து பூமியையே பார்த்துக் கொண்டு தயங்கி நின்ற துளசி - தொண்டையை அடைக்கும் குரலில் "வருகிறேன்..." என்று கூறிவிட்டு மீண்டும் காரை நோக்கி நடைப்பிணமாகச் சென்றாள். அந்தப் பிரியும் நேர மன நிலைக்குப் பொருத்தமாக அமைந்தாற் போல, 'மனிதர்களின் ஆசைகளே இப்படி அல்பமானவை தான்' - என்று அவளுடைய கையெழுத்து நோட்டுப் புத்தகத்தில் தான் எழுதியதை மீண்டும் நினைத்துக் கொண்டான் அவன்.

அவள் கார் புறப்பட்டது. நகரும் காரிலிருந்தே ஒரு கையை ஸ்டியரிங்கில் வைத்தபடி இன்னொரு கையை உயர்த்தி ஆட்டி விடை பெற்றாள் அவள். அவனும் வலது கையை உயர்த்தி ஆட்டினான். கார் தெருத் திரும்புகிற வரை நின்று பார்த்துக் கொண்டிருந்தான் சுகுணன். மனத்தில் ஏதோ ஊமையாக அழுதது. அடுத்த கணமே அங்கு ஒரு திடமான சமாதானமும் பிறந்தது.

'ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவருக்கு மற்றொருவர் அர்ப்பணமாகிவிடுகிற நிச்சயமான காதல் என்பது முனிவர்களின் தவச்சாலைகளில் பக்தி சிரத்தையோடு அணையாமல் காக்கப்படும் வேள்வித் தீயைப் போல் உள்ளேயே கனிகிறது. வாழ்வின் சோர்வுகளில் அது அணைவதில்லை. நீறு மட்டுமே பூக்கிறது' - என்று எண்ணியபடியே மேலே படி ஏறி அலுவலகத்துக்குள்ளே திரும்பினான் அவன். இனி அடுத்த வினாடியிலிருந்து ஓர் இலட்சியப் பத்திரிகாசிரியனை நோக்கிச் சமூகத்திலிருந்து திறக்கும் எத்தனையோ நெற்றிக் கண்களைப் பொறுத்துக் கொண்டு அவன் வெதும்பி விழுந்து விடாமல் நிற்க வேண்டியிருக்கும். அந்த நெற்றிக் கண் சூடுகளை அவன் இனிமேல் தளராது தாங்க முடியாது. அவனுக்குள் இருக்கும் மற்றொரு இதயத்தின் அன்பு அதற்குத் துணை செய்யும். அந்த அன்பில் அவன் வேதனை இருக்கிறது. அந்த வேதனையில் தான் அவன் அன்பும் இருக்கிறது. சாதாரண மனிதர்களின் வேதனை தான் அவர்களுக்குப் பெரிய தவம். ஏனென்றால் வாழ்க்கையை விட்டு விட்டுக் காட்டுக்குப் போய் வேறு தனித் தவம் செய்ய அவர்களால் முடியாது.

உள்ளே போய் அமர்ந்த சுகுணன் அன்றைய 'டைம்ஸ்' பதிப்புக்குத் தலையங்கம் எழுதப் பேனாவை எடுத்தான். வெளியே மாலை இருள் மயங்கத் தொடங்கியிருந்தது. கார் ஹார்ன் ஓசைகளும், மனிதர்களின் குரல் விகாரங்களும் நெருக்கியடித்துக் கொண்டு கேட்கத் தொடங்கின. இருந்தாற் போலிருந்து மகாதேவனோடு தாமஸ் மன்றோவின் குதிரைச் சிலை கண்முன் மானசீகமாக ஓடுவது போல் ஒரு பிரமை நிழலாடியது. அவன் எழுதத் தொடங்கினான். சக்தி வாய்ந்த சொற்கள் அவன் நியமித்த வேகத்தோடு - விதியோடு காகிதத்தில் போய் இறங்கி உருவாகி நின்றன.

ஒரு நல்ல பத்திரிகையாளனுக்கு இரண்டு கவலைகள் உண்டு. சமூக நியாயத்தைப் பற்றிய கவலைகள். சொந்த நியாயங்களைப் பற்றிய கவலைகள். அவனுக்குச் சொந்தமென்று எதுவுமில்லை. ஆனால் அவனுள்ளும் ஒரு கவலை இருந்தது. மறுபடியும் கூறினால் அந்தக் கவலை தான் அவன் வேதனை. அந்தக் கவலை தான் இன்று அவன் மகிழ்ச்சி. இரண்டும் வேறு வேறு இல்லை. தன்னுடைய வறுமைக்காகவும் பிறருடைய அறியாமைகளுக்காகவும் சேர்த்துப் போராட வேண்டிய ஒரு தேசத்தில் தான் வாழ்கிறோம் என்பதை இனி ஒவ்வொரு கணமும் அவன் நினைவு கூர்ந்தாக வேண்டிய சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கும். வறுமை உள்ளவர்களிடம் நல்லெண்ணமும் வசதி உள்ளவர்களிடம் அலட்சியமும் மிகுந்த ஓர் இரண்டுங்கெட்டான் தேசத்தில் நியாயங்களைச் சாதிக்க முயலுகிற ஓர் இலட்சியப் பத்திரிகையாளனின் சிரமங்கள் எல்லாம் இனி அவன் அடைய வேண்டியிருக்கும். புதுமைக்கும், வளர்ச்சிக்கும் செவி சாய்த்து வரவேற்கும் மனப்பான்மையில்லாத ஓர் ஆட்டுமந்தைக் கூட்டத்தைத் திருத்துவதற்குப் பிடிவாதமும், இலட்சியமும் மட்டும் போதாதென்பதை ஒவ்வொரு கணமும் அவன் உணர வேண்டியிருக்கும். பிடிவாதமும், இலட்சியமும் சாதிக்க முடிந்ததை விடச் சாதுரியமும் சமயோசித புத்தியுமே அதிகமாகச் சாதிக்க முடியும் என்ற சாதாரண நடைமுறை உண்மையையும் எதிர்கொண்டாக வேண்டியிருக்கும். அறியாமைக்கு எதிராக அறிவைக் கொண்டு போராட வேண்டியது தவிர வெறும் மனிதர்களின் சூழ்ச்சிக்கு எதிராக அறிவைக் கொண்டு போராட வேண்டியிருக்கும் என்று இனி அவன், உணரவும் நேரிடலாம். யாருடைய அநியாயங்களை எதிர்த்து அவன் குரல் கொடுக்கிறானோ அந்த அநியாயங்களைப் பயிர் செய்து பிழைப்பவர்கள் அவனை நோக்கிக் கோரமான நெற்றிக் கண்களைத் திறந்து வெதுப்பவும் முயலலாம். ஆனால் அதற்காக அவன் தயங்கவோ, தளரவோ முடியாது. அவன் தனக்குள் அணையாமல் காக்கும் அன்பு என்கிற வேள்வி நெருப்புத் தான் சமூகத்தின் மூலை முடுக்குகளிலிருந்து அவனை நோக்கித் திறக்கும் இந்தக் கோரமான அனல் விழிகளிலிருந்து மீளும் சத்தியத்தை இனி அவனுக்குத் தரவேண்டும் போலும்!

(முற்றும்)

-----------------

This file was last updated on 19 Jan 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)