pm logo

தீபம் நா. பார்த்தசாரதி எழுதிய
மூலக் கனல் (நாவல்), பாகம் 1


mUlakkkanal (social novel)
by tIpam nA. pArtacArati, part 1 (chapters 1-13)
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

மூலக் கனல் ( நாவல்),
பாகம் 1 (அத்தியாயம் 1-13)
தீபம் நா. பார்த்தசாரதி


Source:
தீபம் நா. பார்த்தசாரதி
மூலக் கனல்
தமிழ்ப்புத்தகாலயம்
திருவல்லிக்கேணி சென்னை - 600005
மூலக்கனல் (சமூக நாவல்)
முதற் பதிப்பு : ஜூன், 1985 இரண்டாம் பதிப்பு : அக்டோபர், 1993
விலை : ரூ. 28-00
--------------

முன்னுரை

சமூகத்தின் எந்த மனிதனும், எந்தப் பிரச்னையும் எழுத்துக்கோ எழுத்தாளனுக்கோ அப்பாற்பட்டவனோ அப்பாற்பட்டதோ இல்லை என்றாலும் சிலரைப் பற்றியும் சிலவற்றைப் பற்றியும் அணுகவும் பயப்படுகிற நிலை இன்னும் எழுத்தாளரிடையேயும், வாசகரிடையேயும் இருக்கிறது.

இந்தத் தடுமாற்றமோ பயமோ எழுதத் தொடங்கிய அன்றிலிருந்து என்னிடம் இருந்ததில்லை. அரசியல்வாதிகள், அரசியல், அவை சார்ந்த முறைகேடுகள், ஊழல்கள், தொடர்புடைய கதாபாத்திரங்களைக் கற்பனை செய்யவும் புனைந்தெழுதவும் நான் ஒரு போதும் தயங்கியது இல்லை. எழுதாமல் ஒதுங்கி நின்றதுமில்லை.

நெஞ்சக் கனல், சத்திய வெள்ளம், பொய்ம் முகங்கள் போன்ற என்னுடைய நாவல்களின் வரிசையில் இப்போது மூலக்கனலும் சேர்கிறது.

துடிதுடிப்போடு வாழ்வைத் தொடங்கி ஊழலில் துவண்டு பழைய துடிதுடிப்பை மீண்டும் கழிவிரக்க நினைவாக அடையும் மூலக்கனல் கதாநாயகன் கற்பனைப் பாத்திரமே.

ஆனால் ஒவ்வொரு கற்பனைக் கதாபாத்திரமும் தத்ரூபமாக அமைந்து விடுவதன் காரணமாகக் கதையை வாசிப்பவர்கள் கதையில் வருகிறவர்களையும், நடைமுறை வாழ்க்கையிலுள்ளவர்களையும் இணைத்துப் பார்த்துக் குழம்பிக் கொள்ள ஏதுவாவதுண்டு. பல கதைகள் இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாவதுண்டு. தத்ரூபத்தன்மைக்கு இந்த நிலை ஏற்படுவதும் கூட ஒரு சான்றாக அமையுமே ஒழிய வழுவாகாது. நிச்சயமாகக் கற்பனை தான் என மக்கள் அலட்சியமாக விட்டுவிடும் இலக்கியப் படைப்புக்களை விட இப்படிப்பட்ட இலக்கியப் படைப்புக்கள் அதிகமான சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். சர்ச்சைகளைச் சந்திக்க நேரிடும். சவால்களைச் சந்திக்க நேரிடும். ஒப்பிட்டுப் பார்த்துப் பேசுகிற விதத்தில் பொருந்தி அமைந்து விடுவதிலுள்ள ஓர் அபாயம் இது! ‘அவரைக் குறிக்குமோ, இவரைக் குறிக்குமோ’ என்ற அவசியமற்ற வம்புப் பேச்சுக்கள் கிளம்புவது தவிர்க்க முடியாமற் போகிறது. ஓர் அரசியல் நாவல் இப்படி வம்புகளுக்கு ஆளாவது விந்தையே.

இந்தக் கதையின் உள்ளோட்டமான சுருதியை யாரும் தட்டிக் கேட்கவில்லை; ஆனால் ‘அவரா, இவரா’ என்று சர்ச்சை செய்வதிலேயே நேரம் கழிக்கிறார்கள். அம்மாதிரிச் சர்ச்சைஅநாவசியமானது, தேவையற்றது.

இந்நாவல் முற்றிலும் கற்பனையே. எல்லா வலுவான கற்பனைகளும் உண்மைபோலத் தோன்றுவதைத் தவிர்க்கவோ, விலக்கவோ முடிவதில்லை. உண்மையோ என மருண்டு போக வைக்கும் கற்பனைப் படைப்பு எதுவோ அதற்கு அது ஒருவகையில் பெருமைதான். சிறப்புதான். நற்சான்றுதான்.

ஒரு காலகட்டத்தைத் தத்ரூபமாகச் சித்தரிக்க முயன்று பார்த்ததின் விளைவு தான் இந்த நாவல். ஒரு வேளை இன்னும் இருபதாண்டுகளுக்குப் பிறகு இப்போது உணர்வதை விட இதன் அருமைப்பாட்டை மிகவும் நன்றாக உணர முடியுமோ என்னவோ? அதுவரை பொறுமையாக இருக்கக் கூட நான் தயார்.

பாமர மக்களை விழிப்படையச் செய்யும் முயற்சியில் உருவாகும் இலக்கியப் படைப்புக்களை உருவாக்குகிறவர்களுக்குச் சில சோதனைகளும், எதிர்ப்புக்களும் ஏற்படத்தான் செய்யும். ‘எனை வகையால் தேறியக் கண்ணும் வினை வகையால் வேறாதல்’ என வள்ளுவர் கூறுகிறாரே அதுதான் கட்சியாயிருப்பவர்கள் ஆட்சியாக மாறும் போதும் நடக்கிறது. அதை எழுதினால் கசப்பாக இருப்பது போல் தோன்றுவது இயல்பு. கசப்பாக உணர்வதும் இயல்புதான்!

காரணம் - உண்மை கசப்பானது. ஆனால் சிலவற்றைக் கசப்பானது என்று முன்னதாக உணரும் ஞானம் எதுவோ அது இனிப்பானதே.

அத்தகைய ஞானமும் பக்கவமும் இருந்தால் தான் இந்த நாவலைப் படிக்க முடியும். இரசிக்க முடியும். அப்படி ஞானமும் பக்குவமும் கொண்டு இதைப் படிக்கப் போகிறவர்கள், ஏற்கெனவே படித்து முடித்து விட்டு அத்தகைய ஞானத்தையும் பக்குவத்தையும் பெற்றவர்கள், இரு சாரருக்கும் என் அன்பையும் வாழ்த்தையும் கூறிக் கொள்கிறேன்.

கல்கியில் வெளியான இந்நாவல் இப்போது தமிழ்ப் புத்தகாலயத்தார் நூல் வடிவில் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.

      நா.பார்த்தசாரதி
தீபம், 9-6-1985
-------------------------

அத்தியாயம் 1

முன்னே நடக்க வழியோ இடமோ இல்லை என்று ஆகிற போது பின்னால் திரும்ப வேண்டி நேர்வது தவிர்க்க முடியாதது. மேலே ஏறுவதற்கு உயரமோ, சிகரமோ இல்லாத போது கீழே இறங்க வேண்டியதைத் தவிர வேறு வழியே இல்லை. படியேறுவதைப் போல் படியிறங்குவது அத்தனை சிரமமான காரியமில்லைதான். ஏறுவதற்கு ஆன நேரத்தில் பாதி நேரத்திற்குள் கீழே இறங்கி விடலாம். நினைவுப் பாதையில் படியிறங்கித் திரும்பிப் பின்னோக்கி நடப்பதும் அப்படித்தான். கழிந்து போனவற்றை நினைத்து உருகுவதற்குத் தமிழில் அழகான சொற்றொடரே இருக்கிறது. ‘கழிவிரக்கம்’ என்று எத்தனை பொருத்தமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

அவனுக்குத் தன்னுடைய மனத்துக்குள் அந்தரங்கத்தில் ஏதோ வேகமாக வற்றிக் குறைந்து கொண்டிருப்பது போல் ஓர் உணர்ச்சித் தவிப்பு. குறைந்து கொண்டிருப்பது என்னவென்று சரியாக நினைக்கவும் சொல்லவும் தெரியவில்லை. ஆனால் உருவெளித் தோற்றத்தில் அது ஒரு காட்சியாக மட்டும் தெரிந்தது. மிகவும் மங்கலாகக் கனவுக் காட்சி போல் தெரிந்தது.

ஒரு பெரிய அகல் விளக்கில் எண்ணெய் வற்றித் திரி தன்னையே எரித்துக் கொண்டு பின்னோக்கி நகர்வது போல் மனவெளியில் காட்சி. எரிப்பதற்கு வேறு எதுவும் இல்லாத போது தானே தன்னை எரித்துக் கொண்டு மடியும் சுபாவம் நெருப்பினுடையது.

அணைகின்ற சுடர் - அவிகின்ற நெருப்பு - என்ற நினைப்பு அச்சானியமாகவும், பயமாகவும் இருக்கிறது. அப்படி எண்ணத் தொடங்கும் போதே நெஞ்சை ஏதோ இறுக்கிப் பிழிவது போலிருக்கிறது. இழப்பதை விட இழக்கப் போகிறோம் என்ற நினைப்பு மிகவும் பயங்கரமானது, கொடூரமானது, விட்டுவிட்டுக் கொலை செய்யக் கூடியது. அடைவனவும், இழப்பனவும் சேர்ந்ததுதான் வாழ்க்கையோ என்று கூடத் தோன்றுகிறது. அடைந்ததை எல்லாம் ஒவ்வொன்றாக நினைத்தால் இழக்கப் போகிறோம் என்ற நினைப்பே அச்சுறுத்துவதாக இருந்தது. அவனுடைய கண்களில் மெல்ல மெல்ல நீர் மல்கியது. இப்படி வேளைகளில் அழுவது கூட ஒரு சுகமான ஆறுதலாக - பாரத்தைக் குறைப்பதாக இருக்கிறது. ஒரு வேளை அழுகையில் துக்கம் கரைகிறதோ என்னவோ?

நடுநாயகமாக மாட வீதியிலிருந்த அந்தத் தனியார் நர்ஸிங் ஹோமில் ஒவ்வோர் அதிகாலையிலும் எல்லாச் சொகுசு அறைகளிலும் ஏ.சி.யை நிறுத்திவிட்டு ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்து வெளிக்காற்றைத் தாராளமாக அநுமதித்துச் சுத்தம் செய்த பின் மீண்டும் அரை மணி நேரத்துக்குப் பின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி மறுபடி ஏ.சி.யைப் போடுவது வழக்கம்.

அன்றும் அப்போது ஜன்னல்கள் திறந்திருந்தன. ஜன்னலுக்கு வெளியே அறைகளைத் துடைத்துச் சுத்தம் செய்யும் வேலைக்காரி வேறு யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

“இன்னிக்கித் தேரோட்டம். தேர் கிளம்பியாச்சு. வெய்யிலைப் பார்க்காமே வடம் பிடிச்சாங்கன்னாப் பொழுது சாயறதுக்குள்ளாறத் தேர் நிலைக்கு வந்துடும்.”

மிகவும் மங்கலான நினைவுகளோடு கண்களை மூடியபடி படுக்கையில் படுத்திருந்த அவனுடைய செவிகளில் யாரோ கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல இச்சொற்கள் ஒலித்தன.

நோய்ப் படுக்கையில் படுத்திருந்த அவனது மனம் பின்னோக்கிச் சென்றது. நினைவுகள் வந்த வழியே திரும்பி நடந்தன. அவனுக்குள்ளேயும் ஒரு தேரோட்டம் மெல்ல ஆரம்பமாகியிருந்தது.

*****

பச்சை வெல்வெட் துணியைத் தாறுமாறாய் உதறி அவற்றினிடையே ஒரு முத்து மாலையைக் கிடத்தினாற் போல் உயரமும் செறிவுமாய்க் கிடந்த மலைத்தொடர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு ஒன்றில் அமைந்திருந்தது அந்த ஊர். யாரோ கவியுள்ளம் படைத்தவன் அந்த ஊருக்குப் பெயர் சூட்டியிருக்க வேண்டும். ‘எழிலிருப்பு’ என்ற பெயர் தேய்ந்து கிழடு தட்டி எள்ளிருப்பு என்றும் எலியிருப்பு என்றும் நாளடைவில் விதம் விதமான பாட பேதங்களைப் பெற்றிருந்தது. ஊரைப் பற்றிய பழம் பாடல்களிலும் கோவில் மதில் கல்வெட்டுக்களிலும் ஜமீன் அரண்மனை ரெக்கார்டுகள் - சாசனங்களிலும் தெளிவாக எழிலிருப்பு என்று தான் இருந்தது. புகழ்மிக்க பாரம்பரியத்தைச் சேர்ந்த அந்த ஊர் இசை வேளாளர்கள் அது ஏழிருப்பு (ஏழிசை) அல்லது யாழிருப்பு என்றெல்லாம் தான் அழைக்கப்பட வேண்டுமென்றார்கள். சங்கீதம், கவிதை, நிருத்தியம் என்று கலைத்துறைகளில் புகழ்மிக்க பலர் அந்த ஊரில் தோன்றியிருந்தார்கள். அந்த ஊரில் தோன்றிய பலர் கவிதை எழுதியது ஒருபுறம் இருக்க அந்த ஊரே எழுதப்படாததோர் சுயம்புவான கவிதையாக இருந்தது. இயற்கை விட்டுவிட்டுப் புன்முறுவல் பூப்பது போல் மலைகளில் ஆங்காங்கே வெளேரென்று அருவிகள் சிரித்தன. காற்றில் சந்தனமும் முல்லையும் மணந்தன. வெப்பம் உறைக்காத இதமான மென்குளிர் ஆண்டு முழுவதுமே நிலவியது. அசுத்தமும், தூசியும் சந்தடியும் என்னவென்றறியாத அந்தப் பள்ளத்தாக்கு நகரம், மிகப் பெரிய கோவிலும், கோபுரமும் அதை ஒட்டினாற் போல் படிகமாய்த் தெளிந்த நீர்ப்பரப்பு அகன்ற தாமரைக் குளமும் தேரடியுமாகப் பரம்பரையான தமிழ்நாட்டுச் சிற்றூரின் சாமுத்திரிகா லட்சணங்களை எல்லாம் முதற் பார்வையிலேயே பெற்றிருந்தது. தேரடிக்கு அருகே கோவில் நந்தவனத்துக்கு அப்பால் பெரிய தென்னந்தோப்பின் நடுவே மதிற் சுவருக்குள்ளாக ஜமீன் அரண்மனைகள் இருந்தன.

மதிற் சுவருக்கு வெளியே இருந்த நகரப் பகுதிக்கு வெளிப்பட்டணம் என்றும் உள்ளே இருந்த நகரப் பகுதிக்கு - அதாவது - அரண்மனை - அதன் அங்கமானவர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு உள் பட்டணம் என்றும் பெயர்கள் ஏற்பட்டு நிலைத்திருந்தன. வெளிப்பட்டணத்து வீதிகள் தெருக்கள் எல்லாம் கோவிலுக்கு இப்பால் அளவாகவும் அழகாகவும் கட்டமைப்போடும் தொடங்கின. தெரு வீடுகள் கோணல் மாணலின்றி நூல் பிடித்த மாதிரி இருந்தன. உள்பட்டணத்தையும், வெளிப்பட்டணத்தையும், கோவிலும் தேரடியும் குளமும் நடுவே இருந்து தனித் தனியே பிரிந்தன. தேரடியில் இரண்டு பிரும்மாண்டமான கருங்கல் பாறைகளுக்கு நடுவில் இயற்கைக் குகை போல் அமைந்திருந்த ஒரு பிளவில் பாறையோடு பாறையாகச் செதுக்கப்பட்டிருந்த அநுமார் நகரின் காவற் கடவுளாகவும் சக்தி வாய்ந்த வரப்பிரசாதியாகவும் புகழ் பெற்றிருந்தார். அந்தக் குகையில் கோயில் தோன்றிய காலத்திலிருந்து அணையாமல் எரியும் வெண்கல அகண்ட விளக்கு ஒன்று இருந்தது. புயலானாலும் மழையானாலும் வெள்ளமானாலும் இந்த அகண்ட விளக்கு மட்டும் அணைந்ததேயில்லை என்று ஊரில் பெருமையோடும் கர்வத்தோடும் கூறிக்கொள்வார்கள். கதவும் பூட்டும் இல்லாத இந்த மாபெரும் பாறை அநுமார் தான் ஜமீனை ஆளும் வம்சாவளியினரான உடையார்களின் குலதெய்வம்.

அங்கே ஒவ்வொரு ஜமீன்தாருக்கும் முறைப்படி மணந்த பட்டத்து ராணியின் வாரிசுகளைத் தவிர மற்ற வகையில் தொடர்பு கொண்டிருந்த பெண்கள் மூலம் பிறந்த வாரிசுகள் வேறு ஏற்பட்டு ஜமீன் சொத்தைக் கணிசமாகக் கரைத்தார்கள். அசல் பட்டத்து ராணியின் பிள்ளைகள் அடியாட்களின் பலத்தோடும் அதிகார மமதையோடும், மற்ற வகையில் தங்களோடு போட்டிக்கு வந்து சொத்தைக் கரைப்பவர்களை உள் பட்டணத்திலிருந்து துரத்தும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஜமீன்தாரின் மரணத்துக்குப் பின்பும் சகஜமாக நடக்கும். சொத்துரிமைச் சண்டையில் அசல் வாரிசுகளல்லாதவர்கள் குரூரமாக வெளியேற்றப் படுவார்கள். சமஸ்தானத்துக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் ஏற்பட்டிருந்த ஓர் ஒப்பந்தப்படி பிரிட்டிஷ் போலீஸ் உள் பட்டணத்திற்குள் அழைக்கப்பட்டால் ஒழியத் தானாக நுழையவே முடியாது.

எழிலிருப்பு ராஜா ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் வைத்துக் கொண்டிருந்த பெண்களின் வாரிசுகளாகத் தோன்றிய ஆண்களும், பெண்களும், உரிமை எதுவும் கொண்டாடாமல் அடிமைகள் போல் உள் பட்டணத்தில் காலந்தள்ளலாம். உரிமை கொண்டாடினாலோ, அசல் வாரிசுகளுக்குச் சரிசமமாக நடக்க முயன்றாலோ உடனே ஆபத்து வரும். நிம்மதியாக வாழ முடியாது.

திருமலைராஜனும் அப்படி ராஜ சம்பந்தத்தில் பிறந்தவன் தான். ஆனால் அவன் தன்னைப் பெற்ற தாயின் முகத்தைக் கூடப் பார்த்ததில்லை. அவன் கண்களைத் திறக்கு முன்னே அவள் கண்களை மூடியிருந்தாள். தந்தை யாரென்று வளர்ந்து பெரியவனாகி நினைவு தெரிந்த பின் அவனுக்கு சொன்னார்கள். ஆனால் அவனுடைய தந்தையை அவன் அருகில் நெருங்கிப் பாசத்தோடு அப்பா என்று அழைக்க முடியாது. விலகி நின்று மற்ற அரண்மனை ஊழியர்களையும், விசுவாசிகளையும் போல் பயபக்தியோடு தான் ஸ்ரீராஜசேகர ரகுநாயக உடையாரை அவன் காண முடியும். ஆனால் அவனுக்குப் பின் பட்டத்து ராணியிடம் அவருக்குப் பிறந்த சின்னக் கிருஷ்ண ராஜ உடையார் என்னும் சின்னக் கிருஷ்ணன் அவருடைய மடியிலேயே ஏறி விளையாட முடியும். அந்த இளமையில் திருமலைராஜன் அதைப் பார்த்துப் பொறாமைப்பட்டான். சின்ன வயதிலேயே எது இருந்ததோ இல்லையோ, அவனுக்கு ரோஷமும் சுயமரியாதையும் அளவுக்கதிகமாக இருந்தன. அதனால் அடிக்கடி குட்டுப்பட நேர்ந்தது. குட்டுப்பட்டுக் குட்டுப்பட்டே வளர்ந்தான் அவன்.

அவனுடைய பதினேழாவது வயதில் காதில் கடுக்கன் அணிந்த உள் பட்டணத்து திண்ணைப் பள்ளிக்கூட வாத்தியாரிடம் அவன் சுதேசிப் படிப்புப் படித்த அதே சமயத்தில் சின்னக் கிருஷ்ணன் சகல ராஜ மரியாதைகளுடனும் மதராசில் ஆங்கில கல்வி கற்றான்.

அந்த ஏப்ரலில் ஸ்ரீ ராஜ சேகர ரகுநாயக உடையார் காலமான போது சின்னக் கிருஷ்ணனைப் போலவே திருமலைராஜனும் இரகசியமாகத் தன் தந்தையை இழந்தான்.

அதன் பிறகுதான் அநாதையான திருமலைராஜனின் சோதனைகள் ஆரம்பமாயின. திருமலைராஜனைப் போலவே இருந்த வேறு சிலர் பயந்து வெளியேறி விட்டனர். உள்பட்டணத்தில் திடீரென்று சின்னக் கிருஷ்ணனின் அந்தஸ்து உயர்ந்து விட்டது.

அவன் திருமலைராஜன் போன்றவர்களிடம் பேசுவதே, கேவலம் என்று நினைத்து நடந்து கொள்ள ஆரம்பித்தான். ரோஷமுள்ள திருமலைராஜன் சின்னக் கிருஷ்ணனைச் சந்தித்து ஏதோ பேச அவன் கோபத்தில் இவனை ‘பாஸ்டர்ட்’ என்று திட்டினான். அதற்கு என்ன அர்த்தம் என்று திருமலைராஜனுக்கு முதலில் புரியவில்லை. மறுநாள் முழுவதும் ஏதோ ஒரு சந்தேகத்தால் உந்தப்பட்டு வெளிப்பட்டணத்தின் பதினெட்டு வீதிகளிலும் சுற்றி இறுதியாக ஓர் ஆங்கிலப் பள்ளிக்கூட வாத்தியாரிடம் கேட்டு அவர் அகராதியைப் புரட்டிப் பார்த்துவிட்டுத் தயங்கித் தயங்கி “தகப்பனில்லாத அல்லது தகப்பன் பெயர் தெரியாத பிள்ளை” - என்று சொன்னவுடன் ஒரு தீவிர வெறியோடு புயல் வேகத்தில் உள் பட்டணத்தில் நுழைந்தான். அந்த வார்த்தையை நினைக்க நினைக்க அவன் உள்ளம் கொதித்தது. முதலில் தான் விசாரித்த பலர், “அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சு என்ன ஆகப் போகுது? விடு... வேறு ஏதாவது பேசு” என்று ஏன் ஒதுங்கினார்கள், தட்டிக் கழித்தார்கள் என்று இப்போதுதான் திருமலைராஜனுக்குப் புரிந்தது.

நேரே அரண்மனைக்குப் போய்த் தன் போன்றவர்கள் நுழையக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்த ராணியின் அந்தப்புர பகுதிக்குள்ளும் நுழைந்து அங்கே தன் தாயுடன் பேசிக் கொண்டிருந்த சின்னக் கிருஷ்ணனை நோக்கி வெடித்துச் சீறினான் திருமலைராஜன்.

“டேய்! சின்னக் கிருஷ்ணா! என்னையாடா பாஸ்டர்டுன்னே? உன்னைப் பெத்த அதே அப்பன்தாண்டா என்னையும் பெத்தான். இன்னிக்கில்லாட்டியும் என்னிக்காவது ஒரு நாள் உன் வாயாலேயே என்னை ‘அண்ணே’ன்னு கூப்பிட வைக்கல்லேன்னா நான் ஆம்பிளை இல்லேடா” - என்று அரும்பு மீசையை நீவிவிட்ட திருமலைராஜனைக் காவல்காரர்களை ஏவி அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள் ராணியும் மகனும்.

அன்றோடு அந்தச் சம்பவத்தோடு திருமலைராஜனின் உள்பட்டண வாசம் முடிந்தது. மறுநாள் விடிந்தால் வைகுண்ட ஏகாதசி. நள்ளிரவில் நடுங்கும் குளிரில் அடியாட்கள் மூலம் திருமலைராஜன் உள்பட்டணத்தில் இருந்து கடத்தப்பட்டான். மூர்ச்சையாகிற வரைக்கும் மூக்கு முகம் தெரியாமல் உதைத்து அவனை வெளியே கொண்டு போய் எறிந்தார்கள் அரண்மனை அடியாட்கள். திருமலைராஜனுக்குத் தன் நினைவே இல்லை.

சில்லென்று உடம்பில் குளிரும் பனியும் உறைத்து அவன் கண் விழித்துச் சுற்றும் முற்றும் பார்க்க முயன்ற போது உடம்பை அசைக்கவே முடியவில்லை. பூட்டுக்குப் பூட்டு வலித்தது. விழுந்து கிடந்த இடத்திலிருந்தே கண்களைத் திறந்து அந்த மங்கிய இருளில் பார்த்த போது குகையில் அநுமார் கோவில் அணையா விளக்கு எரிவது தெரிந்தது. தேரடிக்கும் அநுமார் பாறைக்கும் நடுவே தான் விழுந்து கிடப்பது தெரிந்தது. தன் பெயரோடு எதிரே கோவில் கொண்டிருக்கும் திருமலைராஜப் பெருமாள் சந்நிதியின் கோபுர விளக்கு உயரத்தில் தெரிந்தது. கோபுர வாசல் முகப்பில் வைகுந்த ஏகாதசிக் கூட்டத்தின் குரல்களும் சந்தடியும் மெல்ல ஒலிப்பதை அவன் விழுந்து கிடந்த தொலைவிலிருந்தே கேட்க முடிந்தது. அவர்கள் அடித்திருந்த இராட்சத அடிகளில் இறந்து போயிருந்தால் கூட வைகுண்ட ஏகாதசியன்று இறந்த புண்ணியம் தனக்குக் கிடைத்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. ஒரு கணம் தான் அந்த நினைப்பு நீடித்தது. ஏதோ ஒன்று சாதித்து முடிக்கப்படுகிற வரை தான் இறக்கக் கூடாது என்ற பிடிவாதமும், வாழ வேண்டும் - வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியமும் உடனே அடுத்த கணமே தோன்றின. உடம்பிலும், மனத்திலும் ஏதோ ஒன்று ஜிகு ஜிகு வென்று வேகமாகப் பற்றி எரிவது போல் அவன் உணர்ந்தான். அந்த எரிச்சல், அந்த தகிப்பு அவ்வளவு விரைவில் அடங்கி விடமுடியாதென்று அவனது உள்ளுணர்வே அவனுக்குச் சொல்லியது.

எந்தத் தேரடி மண்ணில் தான் வீழ்த்தப் பட்டோமோ அந்த இடத்திலிருந்தே எழுந்து நின்று வாழ்ந்து காட்ட வேண்டும் போல் தவிப்பாயிருந்தது. வீழ்த்தப்பட்டதன் காரணமாகவே எழுந்திருக்க வேண்டுமென்றும் ஒடுக்கப்பட்டதன் காரணமாகவே உயர வேண்டுமென்றும் துடிப்பாயிருந்தது. கண்கள் சோர்ந்து போய் மூடின. தளர்ச்சி உடம்பை அசைக்க முடியாமல் கட்டிப் போட்டிருந்தது. விண்விண்ணென்று இசிவெடுத்து வலித்தது.

அப்போது தாமரைக் குளத்தின் பக்கமிருந்து ஜலதரங்கம் வாசிப்பது போல் வளையொலி அவன் பக்கமாக நெருங்கி வருவது கேட்டது. சில விநாடிகளில் அந்த வளையொலியுடன் பூக்களின் கதம்பமான நறுமணத்தையும் அவன் நாசி உணர்ந்தது. மெல்லக் கண் விழித்தால், அந்த நேரத்தின் தேவதையாகிய உஷையே நீராடி விட்டுப் பூக்குடலையோடு அருகே வந்து நிற்பது போல் ஓர் இளம் பெண் நின்றாள். அவளருகே கோயில்களில் எல்லா விளக்குகளையும் திரியிட்டு ஏற்றுவதற்காக எண்ணெய்த் திரியுடன் எடுத்துப் போகும் கைவிளக்கோடு ஒரு முதியவரும் நின்றார். உற்றுப் பார்த்ததில் நந்தவனத்துப் பண்டாரமும் அவர் மகளும் என்று மெல்ல மெல்லப் புரிந்தது. அவர்கள் பதறினார்கள். தனக்கு யாரால், என்ன நேர்ந்ததென்று கோவையாக அவர்களிடம் எடுத்துச் சொல்லக் கூட வரவில்லை அவனுக்கு.
--------------

அத்தியாயம் 2

“ஐயா அரைத்துப் போட்டிருக்கிற பச்சிலைகளும், கட்டியிருக்கிற பட்டை மருந்துகளும் உங்களைக் குணப் படுத்துமோ இல்லையோ இந்தப் பூவாசனையும், சந்தன மணமுமே சீக்கிரம் குணப்படுத்தி விடும்னு நினைக்கிறேன்.”

கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த அவனைப் பார்த்துச் சொன்னாள் பூத்தொடுத்துக் கொண்டிருந்த பண்டாரத்தின் மகள் சண்பகம். கட்டிலுக்கு இப்பால் நின்றபடி பண்டாரம் அப்போது சந்தனம் அறைத்துக் கொண்டிருந்தார்.

தன் வலது கையால் தலையைத் தாங்கி மூட்டுக் கொடுத்துக் கொண்டே அவள் பூத்தொடுக்கும் அழகை இரசித்தபடி கயிற்றுக் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருந்த திருமலை அவள் கூறியதைக் கேட்டுப் பதில் எதுவும் கூறாமல் புன்னகை பூத்தான். அவள் என்ன சொல்லியிருந்தாளோ அதை ஒப்புக் கொண்டு அங்கீகரிப்பது போலிருந்தது அந்தப் புன்னகை.

இயல்பாய் ஏற்கெனவே அழகாயிருந்த சண்பகம் தரையில் அமர்ந்து பூத்தொடுக்கும் போது மேலும் அழகாகக் காட்சியளித்தாள். நாட்கள் இலையுதிர் காலத்துச் சருகுகள் போல் உதிர்ந்து விட்டன. எந்தப் பிறவியில் செய்திருந்த புண்ணியமோ ஜமீன் ஆட்கள் அவனை அடித்து உதைத்துச் சுயநினைவற்ற நிலையில் தேரடி மைதானத்தில் கொண்டு வந்து போட்டு விட்டுப் போன போது பண்டாரமும் அவர் மகளும் அவனை முதலில் பார்த்து இருள் புலரு முன்பே நந்தவனத்து மண்டபத்துக்குக் கொண்டு வந்து சேர்ந்திருந்தார்கள்.

பெரிய காடு போல் பரந்திருந்த அந்த நந்தவனத்தின் நடுவே பூத்தொடுக்கவும் சந்தனம் அரைக்கவும் பயன்பட்ட அந்த மண்டபத்தில் அவன் தலைமறைவாக தங்கிக் குணம் பெற முடிந்தது.

சண்பகம் சொல்லியிருந்தது போல் மனமும், உடலும் நலிந்து போயிருந்த அவனைப் பசுமை கமகமக்கும் சுத்தமான அந்தக் காற்றும், மலர்களும் சந்தனமும் இடைவிடாமல் மணக்கும் அந்த மண்டபமும் தான் குணப்படுத்தியிருந்தன. பூச்செடி கொடி மரங்களைத் தவிர நந்தவனம் நிறைய மூலிகைகள் மருந்துப் பச்சிலைகளை வளர்த்திருந்தார் பண்டாரம். பூத்தொடுப்பது தவிர நாட்டு வைத்தியம், மாந்த்ரீகம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து ஆகியவற்றிலும் முத்துப் பண்டாரத்துக்கு ஈடுபாடு உண்டு.

“நீ கொஞ்ச நாளைக்கு இந்த நந்தவனத்துக்குள்ளேயே தலைமறைவா இருந்துக்க! அதுதான் உனக்கு நல்லது தம்பி! உன் உயிருக்குக் கருக்கட்டிக்கிட்டு அலையப் போறாங்க” - பண்டாரம் அவனை எச்சரித்தார்.

“நான் உயிருக்குப் பயப்படலை! உலகத்திலே எவ்வளவு காலம் இருக்கணும்னு முடிஞ்சிக்கிட்டு வந்திருக்கமோ அவ்வளவு காலம் நம்மை யாரும் எதுவும் பண்ணிட முடியாது. என்னிக்குப் போகணும்னு இருக்கோ அதுக்கு மேலே கால் நாழி கூட இருந்துறவும் போவதில்லே.”

“இந்த வேதாந்தப் பேச்செல்லாம் மூட்டை கட்டி வையி தம்பீ! இப்போ நீ ரொம்ப முன் யோஜனையோடவும் ஜாக்ரதையாவும் நடந்துக்க வேண்டிய நேரம். உன் பட்டணத்து உடையாருங்க பெரிய போக்கிரிங்க. பழி பாவத்துக்கு அஞ்ச மாட்டாங்க.”

“நானும் அதே பெரிய உடையாருக்குப் பிறந்த மகன் தான்.”

“அந்த வீறாப்பெல்லாம் இப்போ வேணாம்! அதுக்கெல்லாம் இது சமயமில்லே தம்பீ!”

இதமாகப் பேசி முத்துப் பண்டாரம் அவனை நிதானப்படுத்தினார். அவருடைய வயதும் பக்குவமும் நடைமுறை வாழ்க்கையின் ஞானங்களை அவருக்குப் போதிய அளவு அளித்திருந்தன. ‘அடித்துப் போட்டு விட்டார்கள், அவமானப்படுத்தி விட்டார்கள்’ என்ற உணர்வுக் கொந்தளிப்பில் அவன் இருந்தான். அவர்கள் நயவஞ்சமாக நள்ளிரவில் பாதித் தூக்கத்தில் எழுப்பித் தன்னை அடித்து உதைத்து அவமானப்படுத்தியது போல் யாருக்கும் தெரியாமல் நடுநிசிக்கு மேல் மதில் சுவர் ஏறிக் குதித்து உள் பட்டணத்தில் புகுந்து சின்னக் கிருஷ்ண ராஜ உடையார் என்ற கிருஷ்ணராஜைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்து விட வேண்டும் போல் திருமலையின் கைகள் துறுதுறுத்தன. பண்டாரமும், சண்பகமும் பக்கத்திலேயே இருக்கவில்லையானால் அவன் எந்தப் பைத்தியக்காரத்தனமான முடிவுக்கும் சுலபமாக வந்திருப்பான். அவனுடைய உடம்பிலிருந்த காயங்கள், மனத்திலிருந்த பழிவாங்கும் வெறி, குரோதம் எல்லாவற்றையும் அவர்கள் தான் மெல்ல மெல்லக் குணப்படுத்தினார்கள். ஆற வைத்தார்கள்.

உலகில் மனிதர்களைக் குணப்படுத்தும் மருந்துகளில் எல்லாம் மிகப் பெரிய மருந்து அன்புதான். அன்பும் பிரியமும் உள்ளவர்களின் நெருக்கமும், அண்மையும் எத்தனை பெரிய நலிவையும், நசிவையும் கூடச் சரிக்கட்டி விட முடியும். கூர்ந்து கவனித்தால் மிகப்பல வேளைகளில் மனிதன் ஏங்குவதும், ஏங்க வைப்பதும் உண்மை அன்புக்காகத்தான் என்பது புரியும். இந்த விதமான அன்பு உள்பட்டணத்தில் யாரிடமிருந்தும் வாழ்வின் எந்த விநாடியிலும் அவனுக்கு இதுவரை கிடைத்ததில்லை. நந்தவனத்தில் அப்படி அன்பு சுலபமாகவும், இயல்பாகவும் கிடைத்தது. அவன் யார், தனக்கு என்ன உறவு ஆக வேண்டும், நாளைக்கு அவனால் தனக்கு என்ன ஆகப் போகிறது என்றெல்லாம் யோசித்துக் கணக்குப் பார்க்காமல் பண்டாரமும் அவர் மகளும் அவனைக் காப்பாற்றி ஆதரித்து உதவினார்கள். அவர் குடும்பம் முழுவதுமே அவனுக்காக உதவியது.

உள்பட்டணத்துப் பெரிய புள்ளிகள் விரோதம் காரணமாக அடித்துக் கொண்டு வந்து போட்டு விட்டார்கள் என்று தெரிந்தாலே அந்த ஊரில் மற்றவர்கள் அடிபட்டவன் பக்கத்தில் வரக் கூடப் பயந்து ஒதுங்கிப் போய் விடுவார்கள். உடையார்களுக்கு வேண்டாதவனுக்குத் தாங்கள் உதவினால் தங்களுக்கு என்ன ஆபத்து வருமோ என்று மற்றவர்கள் நினைக்கிற அளவு கெடுபிடி உள்ள ஊர் அது.

எல்லா விஷயமும் தெரிந்த பின்பும் பண்டாரம் அவனை நந்தவனத்திலிருந்து வெளியே போகச் சொல்லித் துரத்திவிடவில்லை. ஒதுக்கப்படுகிறவனை ஒடுக்கப்படுகிறவனை - வலுவான மனிதர்களினால் புறக்கணிக்கப்படுகிற எளியவனைக் காப்பாற்றி உதவ வேண்டுமென்ற அவரது மனிதாபிமானம் அவனை வியப்பில் ஆழ்த்தியது.

நந்தவனத்து முத்துப் பண்டாரம் நாலைந்து மாதக் காலம் அவனை நந்தவனத்துக்குள்ளிருந்து வெளியே போவதற்கே அனுமதிக்கவில்லை. அவன் உயிர் வாழ வேண்டுமென்பதில் அவனை விட அதிக அக்கறை காட்டினார் அவர். பண்டாரத்தின் குடியிருப்பும், நந்தவனத்தின் மற்றொரு பகுதியில் உள்ளேயே இருந்தது. அவனையும் தன் குடும்பத்தில் ஒருவனைப் போல் சேர்த்துக் கொண்டு வேளாவேளைக்குச் சாப்பாடு போட்டுக் காப்பாற்றினார் பண்டாரம்.

காயங்கள் ஆறி உடம்பு தேறுகிற வரை பூக்கட்டும் மண்டபத்தில் அவன் படுத்திருந்த கயிற்றுக் கட்டிலுக்கே சாப்பாடு தேடி வந்து விடும். சண்பகம் தான் கொண்டு வருவாள். உடம்பு தேறி எழுந்து நடமாடத் தொடங்கிய பின் அவன் பண்டாரத்தின் வீட்டுக்கே போய்ச் சாப்பிடத் தொடங்கினான்.

அங்கே அவர்களுடைய வேலைகளை மெல்ல மெல்ல அவனும் பங்கிட்டுக் கொண்டு செய்யத் தொடங்கிய போது, “தம்பீ! நீ இப்பிடி எல்லாம் சிரமப்படணும்கிறதில்லே...” என்று பண்டாரம் உபசாரமாக மறுத்ததை அவன் ஏற்கவில்லை. ஏக்கர்க் கணக்கில் மல்லிகையும், முல்லையும், ரோஜாவும், பூத்துக் குலுங்கும் அந்தப் பெரிய நந்தவனத்தில் அதிகாலையில் பூக்களைக் கொய்வது தொடங்கிப் பல வேலைகளைத் திருமலையும் தானாகவே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான். சண்பகத்திடம் பூத்தொடுக்கக் கற்றுக் கொண்டான். சந்தனம் அரைத்தான். அது நல்லதோர் உடற்பயிற்சியாகவும் அமைந்தது. அதிகப் பருமனில்லாமல் வெடவெட என்றிருந்த அவன் உடல்வாகு பாக்குமரம், தென்னை மரம் ஏற வசதியாயிருந்தது. பாக்குக்குலை, தேங்காய், இளநீர் பறிக்கிற வேலையையும் அவன் மேற்கொண்டான். மனிதர்களின் துவேஷம், வஞ்சகம், வெறுப்பு, சொத்து, ஆசை, குரோதம், கொலை வெறி இவற்றை எல்லாம் உள்பட்டணத்துப் பெரும் புள்ளிகளிடம் பார்த்துப் பார்த்துச் சலித்திருந்த அவனுக்குப் பூக்கள், செடி, கொடிகள், பசுமை இவற்றினிடையே ஊடாடுவது மிகவும் பிடித்திருந்தது.

“உனக்குப் பிடித்தால் நீ இங்கேயே இருக்கலாம்! எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை. ஆனால் நான் ஏதோ உன்னைக் காப்பாத்தினேன் என்பதற்காக இங்கேயே நந்தவனத்துக்குள் ஒரு வேலையாளாக வைத்துக் கொண்டதாக என்னைப் பத்தி நீ தப்பா நினைக்கப்படாது பாரு தம்பீ! அதனால தான் மனசு விட்டுப் பேசறேன். வெளியூருக்கு எங்காவது போய் நீ வேற தொழில் பண்றதுன்னாலும் போகலாம்... இங்கே தான் உன்னைத் தலையெடுக்க விட மாட்டாங்க... இந்த ஊர் அப்பீடி...” என்ற தயக்கத்தோடு அவனிடம் ஒரு நாள் கூறினார் பண்டாரம்.

திருமலை உடனே அவருடைய அபிப்ராயத்தை மறுத்து விட்டான்.

“நான் இப்பச் சொல்ற வார்த்தையை உறுதியா வச்சுகுங்க! என்னைப் பெத்த தாய் மேலே சத்தியம் பண்ணிச் சொல்றேன். நான் இந்த ஊரை விட்டுப் போகப் போறதில்லே. எந்தத் தேரடியிலே என்னை அடிச்சுப் போட்டாங்களோ, அங்கேயிருந்தே நான் யாருன்னு காமிக்கிறேனா இல்லியா பாருங்க...”

“எனக்கென்னவோ பயமாயிருக்குது தம்பீ! இது படு போக்கிரிப்பய ஊரு...!”

“இருக்கட்டுமே! ஊர் போக்கிரிப்பய ஊருன்னா நாம அதைவிடப் பெரிய போக்கிரியா ஆயிட்டாப் போவுது!...”

“உள்பட்டணத்தை எதுத்துக்கிட்டா அது எப்படித் தம்பீ முடியும்?”

“முடியுதா இல்லியா பாருங்களேன்? வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு போயிட்டான்னா - உள்பட்டணத்து வாசிங்க கதி அதோ கதிதான். வெள்ளைக்காரன் போகத்தான் போறான்... உள்பட்டணம் உடைஞ்சி போய் உடையாருங்க வெளியே பிச்சைக்காரனுங்களா வந்து அலையத் தான் போறாங்க... பார்த்துக்கிட்டே இருங்க... இது நடக்கத்தான் போகுது...”

“ஐயையோ! நாம எதுக்கு கெட்டது நினைக்கணும்? நல்லதாகவே நினைப்போமே... அவங்க பிச்சை எடுத்த நமக்கு என்ன ஆச்சு? கடவுள் புண்ணியத்துலே அவுங்க நல்லாவே இருக்கட்டும்ப்பா...”

“வரவரக் கடவுள், சாமி, பூதம்லாம் கூடப் பணம் படைச்சவனுடைய கையாளுங்க மாதிரித்தான் தோணுது. ஏழைக்கு நல்லது செய்யக் காணோம். ஏழையைத்தான் மேலே மேலே சோதிக்குதுங்க...”

“அப்படிச் சொல்லாதப்பா தம்பீ!”

“எனக்கென்னமோ வரவர அப்படித்தான் தோணுது. இல்லேன்னா எனக்கு இந்தக் கெடுதல் பண்ணினவங்களை இதுக்குள்ளாரப் பாம்பு பிடுங்கியிருக்க வேணாமா?”

“தெய்வம் நின்று தான் கொல்லும் தம்பீ! நம்மை மாதிரி அவசரப்படாது...”

திருமலை பண்டாரத்திற்குப் பதில் எதுவும் கூறவில்லையானாலும் அவர் கூறியதை ஏற்காத பாவனையில் ஏளனமாகச் சிரித்தான். அவன் உணர்வுகளில் ஒருவிதமாக முரடு தட்டிப் போய் இறுக்கம் வந்திருந்தது. பேச்சில் அது புலப்பட்டது.

அவமான உணர்வும், குரோதமும், துவேஷமும், அவனைக் கல்லாக்கியிருந்தன. மற்றவர்கள் ஏற்பதை எல்லாம் விரைந்து மறுக்க வேண்டும் என்பது போன்ற ஒரு வேகத்தை அவனுள் மூட்டி விட்டிருந்தன. உள்பட்டணத்துப் பெரும் புள்ளிகள் எதை எதை எல்லாம் உயர்த்தி வழிபட்டுத் தொழுகிறார்களோ அவற்றை எல்லாம் தான் எதிர்த்து அவமானப்படுத்த வேண்டும் போல ஒரு வெறி அவனுள் மூண்டிருந்தது. உள்பட்டணத்தாரின் மரியாதைக்குரியவர்கல் எல்லாம் தன்னால் அவமரியாதைப் படுத்துவதற்குரியவர்கள் என்று அவன் கருதினான். நியதி நிர்வாகம் எல்லாவற்றையும் ஏற்காமல் எதிர்க்க வேண்டும் என்பது போன்ற ஓர் கூர்மையான ‘ஆண்டி - எஸ்டாபிலிஷ்மெண்ட்’ உணர்வு அவனுள் முற்றியிருந்தது. தன் பிறவியிலேயே அவமானப் பட்டத்தைச் சேர்த்து ஒட்ட வைக்க விரும்பும் அந்த கிருஷ்ணராஜ உடையார், தங்கமும், வைரமுமாய் மின்னும் மகாராணியான அவன் தாய், அவர்கள் கும்பிடும் அநுமார், பெருமாள், அர்ச்சகர், புரோகிதர் அனைவருமே எதிரிகளாக அவன் கண்ணுக்குத் தோன்றினார்கள். கோவில், குளம், தர்மம், நியாயம், மரியாதைகள், பழக்க வழக்கங்கள், பண்டிகை, திருவிழாக்கள் எல்லாமே தன் போன்ற அநாதைகளை எப்போதுமாக ஒடுக்கி வைக்க ஏற்பட்ட நிரந்தரச் சதி திட்டங்களாக அந்த விநாடியில் அவனுக்குத் தோன்றின.

அந்த ஆண்டின் பிள்ளையார் சதுர்த்தி தினத்தன்று நந்தவனத்துக்குள்ளிருந்த ‘பூங்காவன விநாயகர்’ கோவிலில் பண்டாரம் பொங்கல் படையல் எல்லாம் செய்த போது - சண்பகம், பண்டாரத்தின் மனைவி, மகன் எல்லோருமே விழுந்து கும்பிட்டுத் திருநீறு வாங்கிப் பூசிக் கொண்டார்கள். திருமலை மட்டும் கும்பிட்டு விழவுமில்லை, திருநீறு வாங்கிப் பூசிக் கொள்ளவுமில்லை.

“தப்பா நெனைச்சுக்காதீங்க... இதெல்லாம் எனக்குப் பிடிக்கலே... இந்த வழக்கத்தை நான் விட்டாச்சு... இந்த ஜமீன் உப்பைத் தின்னு தின்னு இங்கே கிடக்கிற சாமி, பூதங்களும், நல்லது கெட்டது தெரியாமல் புத்தி கெட்டுத் தடுமாறிப் போச்சு.”

பண்டாரம் அவனை வற்புறுத்தவில்லை. சண்பகம், அவனை விநோதமாகப் பார்த்தாள். பண்டாரத்தின் மனைவி அவனை அருவருப்பாக நோக்கினாள். பண்டாரத்தின் மகன் அவனைக் கேட்டான்:

“என்ன? நீங்களும் நம்மூர் மருந்துக்கடை அண்ணனோடச் சேர்ந்தாச்சா?”

“இதுவரை இல்லை! ஆனால் அந்த அண்ணனைச் சீக்கிரமே பார்ப்பேன் என்று தோன்றுகிறது” என்றான் திருமலை. வெளிப்பட்டணத்தில் ‘இங்கர்சால் மருந்தகம்’ என்ற பெயரில் மருந்துக்கடை வைத்திருந்த பொன்னுச்சாமி என்பவர் ‘கடவுள், மதம் என்பதெல்லாம் ஏமாற்றுவேலை, அறிவும், சிந்தனையுமே மனிதனின் உயர் ஆற்றல்கள்’ என்று பேசி வந்தார். ஊரில் மருந்துக்கடை அண்ணன் என்று அவருக்குப் பேர் ஏற்பட்டு வழங்கி வந்தது. அவரைக் குறிப்பிட்டுத்தான் பண்டாரத்தின் மகன் திருமலையை விசாரித்திருந்தான்.

பிள்ளையார் சதுர்த்தி கழிந்த இரண்டு மூன்று தினங்களில் திருமலை கூறிய இன்னொரு செய்தி பண்டாரத்தையும் அவர் குடும்பத்தாரையும், ஆச்சர்யத்துக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.

“தேரடியிலே இளநீர்க் கடை போடப் போறேன். இளநீர் மட்டுமில்லே... தேங்காய், பழம், பூ, கற்பூரம், ஊதுபத்தி, வெற்றிலைப் பாக்கு எல்லாம் தான் விற்கிறதாய் உத்தேசம்...”

“சாமி பூதம் இல்லேங்கறே... அநுமார் கோவிலுக்கும் பெருமாள் கோவிலுக்கும் போற சனங்க உன்னை நம்பிக் கடைக்குப் பண்டம் வாங்க வரணுமே தம்பீ? அது எப்படி...?”

“எனக்குச் சாமி பூதத்துலே நம்பிக்கை இல்லே! ஏமாத்தாமே, கொள்ளை விலை வைக்காமே நியாயமா நான் தேங்காய் பழம் வித்தா வாங்கறவங்க வாங்கட்டும்... பிடிக்காதவங்க போகட்டும்...”

“உள் பட்டணத்து ஆளுங்க கெடுதல் பண்ண மாட்டாங்களா தம்பி!”

“யாருடைய கெடுதலுக்கும் நான் பயப்படலே! என்னை எவனும் அசைக்க முடியாது.”

----------------

அத்தியாயம் 3

அந்த ஊரும், ஊர் மக்களும் மேலானவையாகவும், மேலானவர்களாகவும் மதித்த எல்லாவற்றையும், எல்லோரையும் தான் கீழானவையாகவும், கீழானவர்களாகவும் கருதித் துணிந்து எதிர்க்கப் போகிறோம், விரோதித்துக் கொள்ளப் போகிறோம் என்ற உணர்வே கள்குடித்துவிட்டு நடப்பது போன்றதொரு பெரிய தைரிய போதையை அவனுக்கு அளித்திருந்தது.

எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்ற முறையில் தான் திருமலை, இங்கர்சால் மருந்தக உரிமையாளர் பொன்னுச்சாமியை அணுகியிருந்தான். பொன்னுச்சாமியின் உருவத்தையும், செம்மறியாட்டுக் கடாக் கொம்புகள் போன்ற அவரது மிடுக்கான மீசையையும் பார்த்தே மிரண்டவர்கள் பலர். உள் பட்டணவாசிகளையும், உடையார்களையும் அவர்களை ஆதரித்த மேட்டுக்குடி மக்களையும் பொன்னுச்சாமியும் அவருடைய சுயமரியாதை இயக்க ஆட்களும் முழு மூச்சாக எதிர்த்தனர். பொன்னுச்சாமியும் அவரது இயக்கமும் திருமலையைக் கவர்ந்ததற்கு முக்கியமான காரணம் இதுதான். அவன் யாரை எதிர்க்க விரும்பினானோ அவனை மேற்படியார்கள் அவனுக்கு முன்பிருந்தே எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் அந்த ஊரில் தனக்கு நிரந்தர அரணாக இருக்க முடியும் என்று திருமலை நம்பினான்.

நந்தவனத்துப் பண்டாரமும் அவன் மேல் இரக்கப்பட்டுச் சின்ன உடையார் அவனைத் திட்டிய மோசமான ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் சொல்லிய பள்ளிக்கூட ஆசிரியரும் வெறும் நல்லவர்கள் மட்டும் தான். இனி மேலும் அவன் அந்த ஊரில் காலந்தள்ள வேண்டுமானால் அதற்கு நல்லவர்கள் தயவு மட்டும் போதாது, வல்லவர்களின் பாதுகாப்பும் வேண்டும் என்பதைத் திருமலை தெளிவாக உணர்ந்து கொண்டிருந்தான். அந்த மலைப் பிரதேசத்திலும், சுற்றுப்புறத்து ஊர்களிலும் பொன்னுச்சாமியின் இனத்து மக்கள் தொகை அதிகமாயிருந்தது. உள்பட்டணத்து உடையார்கள் எப்போதுமே பொன்னுச்சாமியின் இன மக்களை விரோதித்துக் கொள்ளத் தயங்குவார்கள். ஆள் கட்டுள்ளவர்களின் விரோதத்தை எப்போதுமே தவிர்த்து விடுவது உடையார்களின் வழக்கம்.

தேரடியில் கடை போடுவதற்கு முன் திருமலை தானே பொன்னுச்சாமியைப் போய்ச் சந்தித்து எல்லா விவரமும் சொன்னான். உள்பட்டணத்துவாசிகள் அடியாட்கள் மூலம் தன்னைப் பழி வாங்கியதையும், பண்டாரம் தன்னைத் தூக்கிப் போய்ப் பல மாதங்கள் தலைமறைவாக வைத்துக் காப்பாற்றியதையும் கூடச் சொன்னான். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, “பயப்படாதீங்க தம்பீ! தனி மனிதனை அவசியமற்ற பயங்களிலிருந்து விடுவிப்பது தான் எங்க சுயமரியாதை இயக்கத்தின் தலையாய கடமை! எங்களைத் தேடி வந்திருக்கீங்க... இனிமே கவலையை விடுங்க...” - என்றார் பொன்னுச்சாமி. அந்த ஆதரவும், அரவணைப்புமே அவனை அவர்களோடு சேர்த்தன. மிகவும் இளைஞனான தன்னைக் கூட அவர் மரியாதைப் பன்மை கொடுத்துப் பேசியது திருமலையைக் கவர்ந்தது.

“நீங்க வந்து கடையைத் தொடங்கி வைக்கணும்.”

“கண்டிப்பா வாரேன் தம்பீ!”

வாக்குக் கொடுத்தபடி தம் ஆட்களோடு வந்து பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து ஒரே ஓர் இளநீர் மட்டும் வாங்கிக் குடித்து வியாபாரத்தை ஆரம்பித்து வைத்திருந்தார் பொன்னுச்சாமி. அவரும் அவரது ஆட்களும் வந்திருந்து கடையைத் தொடங்கியதால் திருமலைக்கு உடனேயோ, சில நாட்கள் கழித்தோ, உபத்திரவங்கள் செய்ய வேண்டுமென்று நினைத்துக் காத்திருந்த உள்பட்டணத்துக் கைக்கூலிகளுக்கு எச்சரிக்கை போல் அமைந்து விட்டது. திருமலையின் மேல் கை வைத்தால் பொன்னுச்சாமியின் வகையறாவின் விரோதத்தை உடனே விலைக்கு வாங்க வேண்டி நேரிடும் என்பது எல்லோருக்கும் அவனைப் பற்றிய ஒரு ஜாக்கிரதை உணர்வைத் தோற்றுவித்திருந்தது.

ஜமீன் பெரிய உடையார் காலமான பின் ஏழெட்டு மாத காலம் உள்பட்டணத்தில் அவன் சோதனைகளை அநுபவித்தான். கடைசியில் அவனுக்கும் சின்னக்கிருஷ்ணனுக்கும் மோதல் வந்து இரவோடிரவாகக் கடத்தி வந்து அவனை அடித்துப் போட்டார்கள். தொடர்ந்து பல மாதங்கள் பண்டாரத்தின் நந்தவனம் அவனுக்குப் புகலிடம் அளித்திருந்தது. தொடர்ந்து உயிர் வாழ வேண்டுமானால் அவன் ஊரை விட்டு வெளியேறி விடுவதுதான் நல்லது என்று பண்டாரம் அறிவுரை கூறினார். அதை அவன் ஏற்கவில்லை. விரக்தியும், ஆத்திரமும் கலந்த ஒரு வகை முரட்டுத்தனத்தை அந்த நந்தவனத்து அஞ்ஞாத வாசம் அவனுள் மூட்டிவிட்டிருந்தது. பொன்னுச்சாமியும், அவரது சுயமரியாதை இயக்கமும் அவனது இந்த முரட்டுத்தைரியத்தை ஒரு மதமாகவே ஏற்று அங்கீகரித்து அரவணைக்கத் தயாராயிருந்தது நல்லதாயிற்று. அவனுள் முறுகி வெறியேறியிருந்த பழிவாங்கும் உணர்ச்சிக்கு நாகரிகக் கலப்பற்ற ஒரு முரட்டு வீரம் உரமாகத் தேவைப்பட்டது. நாசூக்கோ, மென்மையோ, இல்லாத அத்தகைய முரட்டு அஞ்சாமையை அடையப் பொன்னுச்சாமி அவனுக்கு உதவினார்.

தேரோட்டத்துக்கு முதல் வடம் பிடிக்கவோ, அநுமாருக்கு மாவிளக்குப் போடவோ ஜமீன் குடும்பத்தினர் வெளிப்பட்டணத்துக்கு வந்தால், பண்டாரமும் மற்றவர்களும் இடுப்பில் மேல் வேஷ்டியைக் கட்டிக் கொண்டு அவர்களை விழுந்து வணங்கத் தயாராயிருந்த அதே சமயத்தில், “வடம் பிடிக்கும் உடையாரே! கடன் அடைக்க வழி உண்டா?” என்றும், “அரை வேளைச் சோற்றுக்கு வழியில்லை - திருநாளைக் கொண்டாடிப் பயன் என்ன?” என்றும் பெரிது பெரிதாகத் தேரடி மண்டபத்தின் சுவரில் எழுதும் அளவுக்குப் பொன்னுச்சாமியும் அவரது ஆட்களும் துணிந்து தங்கள் எதிர்ப்பு உணர்வைக் காட்டினார்கள்.

நாடு சுதந்திரம் அடைந்து விட்டால் கதர், காந்தி, காங்கிரஸ் எல்லாம் தான் இனி முன்னணியில் இருக்கும் என்று கெட்டிக்காரத்தனமாக முன் கூட்டியே அனுமானித்து உள்பட்டணவாசிகள் கதர் கட்ட ஆரம்பித்தனர். அவசர அவசரமாகச் சுதேசி உணர்வைப் போற்ற ஆரம்பித்தனர். அரண்மனைச் சுவர்களில் திலகர், காந்தி படங்கள் இடம்பெறலாயின. வசதியுள்ளவர்களும் செல்வந்தர்களும் நாளைக்குச் செல்வாக்குப் பெறப் போகிறவர்களை இன்றே முந்திக் கொண்டு ஆதரிக்கும் இயல்பான முன் ஜாக்கிரதை உள்ளவர்கள் என்பதை எழிலிருப்பு ஜமீனும் நிரூபித்தது. இப்போது உள்பட்டணத்தின் போக்கிற்கு எதிரான போக்குள்ள அணி எதுவோ அதில் இருந்தே ஆக வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் திருமலைக்கு இருந்தது. எனவே அவன் சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி என்று பொன்னுசாமியின் போக்கிலேயே தானும் தொடர்ந்து செல்ல வேண்டியிருந்தது. அதே பாதையில் மேலும் சென்றான் அவன். பூரணச் சுதந்திரக் கோரிக்கையை காங்கிரஸும் பாகிஸ்தான் கோரிக்கையை முஸ்லிம் லீக்கும் முன்வைத்துப் போராடிக் கொண்டிருந்த போது பொன்னுசாமி வகையறாவினர்,

‘மைசூர், கொச்சி, திருவிதாங்கூர், ஹைதராபாத் ஆகிய சமஸ்தானங்களைத் தவிர எஞ்சிய ஆந்திர, கேரள, கன்னட, தமிழ்ப் பகுதிகளடங்கிய தென்னாட்டைத் திராவிட நாடாகத் தனியே பிரித்துத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருப்பதற்குத்’ தீர்மானம் நிறைவேற்றினர்.

திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைய இது உதவும் என்று தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக இருந்த நீதிக் கட்சி தீர்மானம் கொண்டு வந்த 15-வது மாநில மகா நாட்டுக்குப் பொன்னுச்சாமியோடும் மற்ற ஊர் ஆட்களோடும் தானும் போய் வந்தான் திருமலை.

அவனுடைய போக்கைப் பார்த்துப் பயந்த பண்டாரம் மெல்ல ஒதுங்கி விட்டார். ஆனாலும் தன்னைக் காப்பாற்றியவர் என்ற முறையில் திருமலைக்குப் பண்டாரத்தின் மேலும் அவர் குடும்பத்தின் மேலும் ஒருவகை மரியாதையும் அன்பும் நீடித்தன.

பொன்னுச்சாமியைப் போலவே வெட்டரிவாள் மீசையும் உயரமும், பருமனுமாகத் திருமலை பார்க்கிறவர்களுடைய மிரட்சியைச் சம்பாதிக்கும் ஓர் ஆகிருதியை அடைந்திருந்தான். பொன்னுச்சாமி சொல்லித் தூண்டியதன் பேரில் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலில் கூட உள்பட்டணத்துக்காரர்கள் நிறுத்தியிருந்த மலையப்பன் என்ற வேட்பாளரை எதிர்த்து திருமலை போட்டியிட்டான். தோற்றுவிட்டான். ஆனாலும் அவன் நம்பிக்கையிழந்து விடவில்லை. தேரடி மண்டபத்தை ஒட்டி ஒரு தங்குமிடம் சிறிய வாசகசாலை எல்லாம் கூட ஏற்படுத்திக் கொண்டாயிற்று. இப்போதெல்லாம் முழு நேரமும் அவனால் கடையில் இருக்க முடிவதில்லை. சாதிக்காய்ப் பெட்டியைக் குப்புறக் கவிழ்த்து எளிதாகவும், சிறியதாகவும் ஆரம்பிக்கப்பட்ட கடை மேலும் வளர்ந்து பெரிதாகிப் பெட்டிக் கடையாக மாறியிருந்தது. இரண்டு பையன்கள் எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். சர்பத் கலக்க, இளநீர் வெட்டித் தர என்று உதவிக்கு ஆள் வேண்டியிருந்தது.

ஒருநாள் மாலை பொன்னுச்சாமி அண்ணன் ஏதோ வேலையாக இன்னொரு தொண்டருடன் - அவரும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் - மோட்டார் சைக்கிளில் திருமலையைத் தேடித் தேரடிக்கு வந்து பேசிக் கொண்டிருந்தார். மாலை வேலையாகையினால் கோயில்களுக்குப் போகும் பெண்களின் கூட்டம் அதிகமாகி இருந்தது. நல்ல வியாபார நேரம். அன்று ஏதோ விசேஷ நாள் வேறு. வழக்கத்தை விட அதிகக் கூட்டமாயிருந்தது அன்று.

அப்போது கடையருகே சண்பகம் வந்து கூசினாற் போல் ஒதுங்கித் தயங்கி நிற்பதைத் திருமலைதான் முதலில் பார்த்தான். அவனோடு பேசிக் கொண்டிருந்த பொன்னுச்சாமியும் அவளைப் பார்த்து விட்டார். “இந்தா திரு! முதல்லே தங்கச்சிக்கு என்ன வேணும்னு கேளு! நாம் அப்புறம் பேசிக்கலாம்” - பொன்னுச்சாமி அண்ணன் செல்லமாக அவனைத் ‘திரு’ என்று மட்டுமே கூப்பிடுவது வழக்கமாகியிருந்தது.

சண்பகத்துக்கு அவள் எதிர்பார்த்த தனிமை கிடைக்காததால் பொன்னுசாமியும், அவரோடு வந்திருக்கும் ஆளும் பேசிவிட்டுப் போகட்டும் என்று அவள் தயங்கினாற் போலத் தோன்றியது. திருமலை விடவில்லை. கடையிலிருந்து இறங்கி வந்து அவளை மலர்ந்த முகத்தோடு எதிர் கொண்டான்.

“என்ன சண்பகம்? உன்னைப் பார்த்து மாசக் கணக்கில் ஆகுதே? என்ன காரியமா வந்தே?”

“உங்ககிட்டத் தனியாக் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. அந்த அண்ணன் போன பெறவு மறுபடி வந்து பார்க்கிறேன்.”

“அண்ணன் இருந்தா உனக்கென்னா வந்திச்சு? நீ சொல்ல வந்ததைச் சொல்லேன்...”

“இல்லே! நான் கோயில் பக்கமாகப் போயிட்டு மறுபடி வரேன்” என்று வெட்கத்தோடு நழுவி ஒதுங்கி நகர்ந்து விட்டாள் சண்பகம்.

அவள் ஏதோ ஒரு முக்கிய வேலையாக வந்திருக்க வேண்டும் என்பது மட்டும் திருமலைக்குத் தோன்றியது. அது என்ன வேலையாக இருக்குமென்று தான் புரியவில்லை.

-----------

அத்தியாயம் 4

பொன்னுச்சாமியும் உடன் வந்திருந்தவரும் புறப்பட்டுப் போன பின் மறுபடி சண்பகம் திரும்ப வந்து தனிமையில் தன்னிடம் தெரிவித்த விஷயங்களைக் கேட்டு திருமலை யோசனையிலாழ்ந்தான். ஓரிரு விநாடிகள் சண்பகத்துக்கு என்ன பதில் சொல்வதென்றே அவனுக்குப் புரியவில்லை.

“என்ன இருந்தாலும் இது உங்க குடும்ப விவகாரம்! நான் வந்து தலையிடறது நல்லா இருக்குமா? உங்க ஐயா அதை எப்பிடி எடுத்துக்குவாரோ?”

“எப்பிடித் தலையிடறது யார் தலையிடறதுன்னு எனக்கொண்ணும் புரியலே... வெக்கத்தை விட்டு உங்களைத் தேடி வந்ததுக்குக் காரணம் நீங்க எதினாச்சும் பண்ணித் தடுக்க முடியும்னுதான்...”

“அதெல்லாம் சரிதான் சண்பகம்! ஏற்கெனவே எம்பேருலே பண்டாரத்துக்கு நல்லபிப்ராயமில்லே. இதை வேற நான் தேடிப் போய்ச் சொன்னா என்னைப் பத்தித் தாறு மாறா நெனைக்க மாட்டாரா?”

“ஐயா உடம்புக்குச் சுகமில்லாமப் படுத்து ரெண்டு வாரமாச்சு... அதைப் பார்த்து விசாரிக்க வந்த மாதிரி வாங்க... தோதுப்பட்டால் அந்த விஷயத்தைப் பேசுங்க... இல்லாட்டி சும்மா விசாரிச்சுட்டுத் திரும்பிடுங்க.”

“நீ சொல்றபடியே செய்யலாம். கடையை அடைச்சுப் போட்டு நந்தவனத்துப் பக்கம் வரேன். உங்கப்பா கிட்டப் பேசாமலியே இதைத் தடுக்கமுடியுமான்னும் நான் யோசிக் கிறேன் சண்பகம்...”

அவள் தயங்கித் தயங்கி நின்று விட்டுப் புறப்பட்டுப் போனாள். போகும்போது கண் கலங்கியிருந்தது தெரிந்தது. இன்னும் சிறிது நேரம் இருந்தால் அழுது கூட இருப்பாள். வெளிப் பட்டணத்திலிருந்து ஐந்தாறு மைல் தொலைவிலிருந்த மறவநத்தம் கிராமத்தில் மற்றொரு பண்டாரத்தின் குடும்பம் இருந்தது. அந்தக் குடும்பத்துப் பையன் ஒருவனுக்குச் சண்பகத்தைக் கட்டிக் கொடுப்பதென்று முத்துப்பண்டாரம் ஏற்பாடு செய்கிறாராம். பையன் குடிகாரன், பல பெண்களோடு தொடர்புள்ள விடலை என்றெல்லாம் கேள்விப்பட்டுச் சண்பகம் பதறினாள். அவளுக்கு அந்த இடம் பிடிக்கவில்லை. அம்மாவை, விட்டு முத்துப் பண்டாரத்திடம் மறுத்துப் பார்த்தாள். “கலியாணத்துக்கு முந்தி எல்லாப் பயல்களும் அப்படித்தான் இருப்பாங்க. சண்பகத்தைக் கட்டிக் குடுத்திட்டா எல்லாம் சரியாய்ப் போயிடும்” - என்று அம்மாவுக்குப் பதில் சொல்லி விட்டார் அப்பா. நீங்கதான் எப்படியாவது இதைத் தடுக்கணும்” என்பதாகத் திருமலையிடம் வந்து இரகசியமாகவும், அந்தரங்கமாகவும் மன்றாடியிருந்தாள் சண்பகம். திருமலைக்கே அவளிடம் அந்தரங்கமாக ஒர் ஆசை உண்டு. அவளுக்கும் அவன் மேல் அப்படி ஒர் ஆவல் இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் அதெல்லாம் நடை முறையில் ஒரு சிறிதும் சாத்தியமல்லாத காரியம் என்று இருவருமே பயந்தனர். பண்டாரத்தைப் போல் பழைமையில் ஊறிய ஜாதிக் கட்டுப்பாட்டில் தீவிரப் பிடிப்புள்ள ஒருவர் இதற்கெல்லாம் செவிசாய்க்கவே மாட்டார் என்று இருவருமே அறிந்திருந்தனர். நேரடியாக அப்படி வந்து சொல்லாவிட்டாலும், சண்பகம் இதைத் தன்னிடம் தேடி வந்து முறையிட்டதில் “எல்லாவற்றுக்கும் துணிந்த ஓர் இயக்கத்தில் இருக்கிறீர்களே, என்னை எங்காவது இழுத்துக் கொண்டு ஒடியாவது காப்பாற்றுங்களேன்” - என்பது போல் ஓர் உட்குறிப்பு இருக்கவே செய்தது. அவை ஒன்றும் தனக்குப் புரியாததுபோல் திருமலை பாமரனாக நடிக்க முயன்றான் என்றே சொல்ல வேண்டும். அவனுக்குத் தன்மேல் இருக்கும் எல்லையற்ற பிரியத்தை - ஊமைப் பிரியத்தை அவள் அறிவாள். அதேபோல் தன்மேல் அவளுக்கு இருக்கும் ஊமைப் பிரியத்தை அவனும் அறிவான். ஒருவேளை இப்படிச் சொல்லவும் தெரியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கும் ஊமைப் பிரியங்களைத் தான் உலகில் காதல் என்று பெரியதாகப் பெயர் சூட்டிக் கொண்டாடுகிறார்களோ என்னவோ?

நந்தவனத்தில் தலைமறைவு வாசம் செய்தபோது அணு அனுவாகப் பார்த்து ரசித்த அவளுடைய அழகுகளையும், அசைவுகளையும் பண்டாரம் யாரோ ஒரு புதியவனுக்குச் சொந்தமாக்கப் போகிறார் என்று நினைப்பதற்கே திருமலைக்கு எரிச்சலாயிருந்தது. இந்த விவகாரத்தில் தனக்கு எதுவும் இல்லை என்பதுபோல் திருமலை நடிக்கத்தான் நடித்திருந்தான். அவனுக்கு இதில் என்ன இருக்கிறது, எப்படி இருக்கிறது என்பதை அந்தரங்கமாகப் புரியவைக்க விரும்பியவளைப் போல்தான் சண்பகம் அவனைத் தேடி வந்து வெட்கத்தை விட்டு இதைச் சொல்லியிருந்தாள். அவனோ ரொம்பவும் பெரிய மனிதத்தனமாக ஒன்றுமே தெரியாதவனைப் போல், “இது உங்க குடும்ப விவகாரம்! நான் எப்படித் தலையிட முடியும்?” என்று பதில் பேசியிருந்தான். தான் அவளை ஏமாற்றுகிறோம் என்று புரிந்து கொண்டே ஏமாற்றியிருந்தான். தனது உடம்பிலும் மனத்திலும் எண்ணற்ற அவமானப் புண்களைத் தாங்கிக் கொண்டு நந்தவனத்திற்குள் அவன் நலிந்து கிடந்த காலங்களில் சண்பகத்தின் புன்னகையும் பார்வையுமே அவனை ஆற்றிக் குணப்படுத்தியிருந்தது. ஒரு புருஷனுக்கு அவனுடைய மனைவி செய்ய முடிந்ததை விடவும் அதிக சிரத்தையோடு, அவள் அவனை உபசரித்திருந்தாள். பிரியத்தில் நனைந்து மூழ்கச் செய்திருந்தாள்.

இப்போது அவள் திருப்திக்காகவும், தன் திருப்திக்காகவும் அவளை இழுத்துக் கொண்டு ஓடிப்போய் விடலாம் தான். கதையில் பிருதிவிராஜ் சம்யுக்தையைக் கடத்திக் கொண்டு போனதை வியக்கும் ஒரு தேசத்தில் தகப்பன் பெயர் தெரியாதவன் என்று ஊரார் இழிவாகப் பேசும் திருமலைராஜன் பண்டாரத்தின் மகள் சண்பகத்தைக் கடத்திப் போவதை அத்தனை தூரம் வியந்து கொண்டாடி விட மாட்டார்கள். திட்டுவார்கள். தூற்றுவார்கள், ஆனாலும் அவன் ஒரு கோழையைப் போல அவளைக் கடத்திச் செல்ல முயலப் போவதில்லை. எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தாலும் அதை அந்த ஊரிலே அதே தேரடி யிலிருந்து கொண்டே பகிரங்கமாகத் தன் விரோதிகளும், அறியும்படியாகவே செய்ய விரும்பினான் திருமலை. ‘ஒரு சுயமரியாதைக் காரனின் முதல் எதிரி பயம். இரண்டாவது எதிரி மலைப்பு’ - என்று பொன்னுச்சாமி அடிக்கடி சொல்வதை நினைத்துக் கொண்டான் அவன்.

இரவு பத்து மணிக்கு மேல் கடையை மூடிய பின் ஒரு சீப்பு மலைப்பழமும், நாலைந்து ஆரஞ்சுகளும் வாங்கிக் கொண்டு திருமலை பண்டாரத்தைப் பார்க்க நந்தவனத்துக்குப் போனான். படுத்த படுக்கையாக இருந்த பண்டாரம் அவனை அத்தனை உற்சாகமாக எதிர்கொள்ளவில்லை. நோயும் ஏலாமையும் காரணமாக இருக்கலாம் என்று திருமலை அதைப் பொருட்படுத்தவில்லை. ‘சண்பகமும்’ பண் டாரத்தின் மகனும், மனைவியும் ஒர் ஒரமாக நின்று கொண்டிருந்தார்கள். பண்டாரத்தின் மனைவி, “இந்த மனுஷனை விதி இப்படிப் படுக்கையிலே தள்ளிடிச்சே தம்பி!” என்று அவனிடம் அழமாட்டாக் குறையாக ஆரம் பித்தாள். சண்பகத்தின் திருமணம் பற்றிப் பேச்சே எழவில்லை. சிறிது நேரம் அவர்களோடு இருந்து விட்டு வெளியேறினான் அவன். நந்தவனத்திலிருந்து வெளியேறித் தேரடி முக்குக்கான வாசலை நோக்கி மரஞ்செடி கொடிகளிடையே அவன் இருளில் விரைந்து கொண்டிருந்த போது பாக்கு மரப் பகுதியில் வளையொலி கேட்டுக் திரும்பினால் குறுக்குப் பாதையில் சண்பகம் ஓடி வந்து கொண்டிருந்தாள்.

“என்னது...? இப்படிப் பண்ணிப்பிட்டிங்க?”

“எதை எப்பிடிப் பண்ணிட்டேன்...?”

“ஐயாகிட்டே ஒண்ணுமே பேசலியே?”

“நானா எதைப் பேசறது? எப்படிப் பேசறது? அவரு வாயைத் திறக்கலியே...? எம்மேலே ரொம்பக் கோபமா இருக்கற மாதிரியில்லே தோணுது?”

“இந்தக் கலியாணம் மட்டும் நடக்கும்னா அதுக்கு முன்னாடியே நான் அரளி விதையை அரைச்சுப் போட்டுக்கிட்டோ ஊமத்தங்காயைத் தின்னோ சாகறதை தவிர வேற வழியில்லே.”

இதைக் கூறும்போது அவள் குரலில் விசும்பல் ஒலிக்கத் தொடங்கியிருந்தது. பதில் எதுவும் கூறாமல் ஓரிரு விநாடிகள் யோசித்த திருமலை அருகே நெருங்கிச் சண்பகத்தின் கைகளைப் பற்றியபடி ஆறுதலாக அவளிடம் சொன்னான்:

“நீ கவலைப்படாதே சண்பகம்! உங்க ஐயாகிட்டப் பேசலேன்னாலும் மருந்துக் கடை அண்ணன் மூலமா மறவநத்தத்துக்குப் போயி எப்படியாச்சும் இந்தக் கலியாணத்தை நிறுத்திட முடியும்னு தோணுது! ஆனா இந்த விஷயம் நமக்குள்ளே பரம ரகசியமாயிருக்குணும்.”

அவளுடைய விசும்பல் நின்றது.

“இதை நிறுத்திடறதோட உங்க கடமை முடிஞ்சதா நீங்க நெனைக்கிறீங்களா?”

“இல்லே! ஆனா முதல்லே இதை நிறுத்தலாம்! மத்தது கொஞ்சம் பொறுத்து யோசிக்கலாம்...”

“எத்தனை காலம்தான் யோசிச்சுக்கிட்டே இருக்கப் போறீங்க...”

“இந்த ஊரை விட்டு ஓடிப் போயிடறதா இருந்தா யோசிக்காம உடனே எதை வேணாப் பண்ணிடலாம். ஆனா நான் இந்த ஊர்ல தொடர்ந்து இருந்து என் எதிரிங்க கண் காணச் சாதிக்க வேண்டியது நெறைய இருக்கு! யோசனைக்கு அதுதான் காரணம் சண்பகம்!”

“சரி! செய்யுங்க. உங்களை நம்பி இந்த நந்தவனத்துக்குள்ளே ஒரு ஜீவன் தவிச்சுக்கிட்டிருக்குங்கறது மட்டும் ஞாபகமிருக்கட்டும்.”

இருளில் ஒற்றையடிப் பாதை வழியே குடிசையை நோக்கிப் போகும் அவளைக் கவனித்தபடி சிறிது நேரம் பாக்கு மரங்களின் கீழே சுகமான அந்தக் கமுகம்பாளைகள் பூத்திருக்கும் வாசனையை நுகர்ந்தபடி நின்றான் திருமலை, சண்பகத்தின் நினைவுகளும் அந்த வாசனையும் சேர்ந்தே மனசைக் கிறக்கின.

அன்றிரவு நந்தவனத்திலிருந்து அவன் தேரடிக்குத் திருப்பிப் போகவில்லை. அகாலமானாலும் பரவாயில்லை என்று மறவர் சாவடி வீதியிலிருந்த மருந்துக்கடை அண்ணன் பொன்னுச்சாமியைத் தேடிச் சென்றான், பொன்னுச்சாமி அண்ணனே அவனிடம் பலமுறை சொல்லிருந்தார்: “இதப் பாரு தம்பீ! நீ எப்ப நம்ம ஆள்னு ஆயிட்டியோ அப்பவே என் குடும்பத்திலே ஒருத்தன் மாதிரித் தான். எதினாச்சும் நல்லது கெட்டதுன்னு என்னை அவசரமாப் பார்க்கணும்னா உடனே தேடி வந்து கூப்பிடு. இப்ப அண்ணனைப் பார்க்கலாமா, அப்புறம் பார்க்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு நிற்காதே. நீ சாமத்துக்கு வந்து எழுப்பினாலும் உனக்கு ஒரு கெடுதல்னா உடனே ஒடியாந்துடுவேன்.”

இது அவ்வளவு அவசரமான விஷயம் இல்லையென்றாலும் அண்ணனைப் பார்த்து உடனே சொல்லிவிட வேண்டும் என்று எண்ணினான் திருமலை. நல்லவேளையாக அவன் போய்ச் சேர்ந்த போது மருந்துக்கடை அண்ணன், வாசலில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார். வேறு யாரும் கூட இல்லை தனியாகத்தான் இருந்தார்.

“வாங்க தம்பீ! ஏது இந்த நேரத்துக்கு? ஏதாவது அவசரமா?”

“ஒண்ணுமில்லே!... நீங்க இருந்தப்பவே அந்தப் பண்டாரத்துப் பொண்ணு கடைக்கித் தேடி வந்திருந்திருச்சு... அதான் அண்ணனே பார்த்தீங்களே...?’’

“ஆமா! அதுக்கென்ன?”

திருமலை அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து தணிந்த குரலில் எல்லா விவரத்தையும் சொன்னான். பொன்னுச்சாமி கவனமாகக் கேட்டுக் கொண்டார். பின்பு உறுதி கூறினார்:

“போயி நிம்மதியாத் தூங்குங்க தம்பி அந்த மறவநத்தத்துப் பண்டாரம் இந்த ஊர்த் திசையிலே தலைவச்சுக் கூடப் படுக்கமாட்டான். நான் பார்த்துக்கிடுதேன்...”

அவர் கூறிய வார்த்தையைக் காப்பாற்றி விட்டார். என்ன செய்தாரோ, மறவநத்தத்துப் பையனுடன் சண்பகத்தின் திருமணம் கலைந்து போயிற்று. அதே அதிர்ச்சி யில் இரண்டு மாதத்தில் முத்துப் பண்டாரம் காலமானார்.

முத்துப் பண்டாரம் காலமான ஓரிரு மாதங்களில் அவர் மனைவியும் காலமானாள். சண்பகம் அநாதையானாள்.

ஒரு சில மாதங்களில் எழிலிருப்புக்காரர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் மற்றொரு காரியத்தையும் திருமலை. துணிந்து செய்வதற்கு முன் வந்தான். அதற்கும் பொன்னுச்சாமி அண்ணன்தான் துணை நின்றார்.

----------------

அத்தியாயம் 5

திருமலைக்கும், சண்பகத்துக்கும் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. அந்த ஊர் எல்லையில் முகூர்த்தநாள், நல்லநேரம் எல்லாவற்றையும் புறக்கணித்து அசல் இராகுகாலத்தில் நடைபெற்ற முதல் சுய மரியாதைத் திருமணமே அதுதான். திருமலை அதற்கு இணங்கியதைப் பற்றி யாரும் வியப்படையவில்லை. பக்தி சிரத்தை மிக்கவளாக வளர்ந்த பண்டாரத்தின் மகள் சண்பகம் நாள் நட்சத்திரம், நல்ல நேரம், தாலி, எல்லாவற்றையும் கைவிடத் துணிந்து அந்தத் திருமணத்துக்குச் சம்மதித்ததுதான் எல்லோருக்கும் பெரிய ஆச்சரியமாயிருந்தது. என்ன ஆனாலும் திருமலையையே மணப்பது என்று காத்திருந்த அவள் உறுதியும், பிடிவாதமும் அதில் தெரிந்தன. அது ஒரு கலப்புத் திருமணம். பொன்னுச்சாமியும், மற்றவர்களும் அரும்பாடுபட்டு ஈரோட்டிலிருந்து ஐயாவையே அழைத்து வந்து தலைமை வகிக்கச் செய்து அந்தத் திருமணத்தை நடத்தியிருந்தனர். சண்பகத்தின் சகோதரன் திருமணத்திற்கே வரவில்லை. திருமலை மட் டும் பழைய அநாதைத் திருமலையாயிருந்திருந்தால் உள்பட்டணத்துப் பெரும்புள்ளிகள் அடியாட்கள் வைத்துக் கல்யாணத்தை நடக்க விடாமல் தடுத்திருப்பார்கள். வெறும் பயல் என்று அவர்கள் எண்ணிய திருமலைராஜனுக்குப் பின்னால் இன்று வலுவான அரசியல் சமூக சீர் திருத்த சக்திகள் இருந்ததால் உள்பட்டணத்துப் பெரும் புள்ளிகளும், வெளிப்பட்டணத்து மடிசஞ்சிகளும் அந்த சு.ம. கல்யாணத்தைக் கண்டு கொள்ளாதது போல் ஒதுங்கி விட்டனர்.

‘கலி முத்திப் போச்சு! இல்லாட்டி இப்பிடியெல்லாம் நடக்குமா?’ என்ற வம்புப் பேச்சோடு ஊரார் தங்கள் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. எந்தப் புதிய மாறுதலையும் ஆயிரம் சந்தேகங்களுடனும் பதினாயிரம் பயங்களுடனும் பார்க்கக் கூடிய அந்தப் பழமையான ஊருக்குத் திருமலை தன்னுடைய திருமணத்தின் மூலம் போதுமான அதிர்ச்சியை அளித்திருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

“ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்! தாலிகூட இல்லாம ஒரு கல்யாணமா? உங்களுக்காகத்தான் இந்தக் கூத்துக்கெல்லாம் சம்மதிச்சேன்” - என்று சண்பகம், தனியே அவனிடம் சிணுங்கியதோடு தன் மெல்லிய எதிர்ப்பை நிறுத்திக் கொண்டாள். அதற்கு மேல். பகிரங்கமாக எதையும் அவளால் எதிர்க்க முடியாது; எதிர்க்கவும் அவள் விரும்பவில்லை. ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ - என்ற பழைய கொள்கைப்படி பார்த்தாலும் கூடத் திருமலை எந்தப் பாதையைக் காட்டுகிறானோ அந்தப் பாதையில் செல்ல வேண்டியது அவள் கடமையாயிருந்தது. ஊர் நிலைமையை உத்தேசித்து இவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகத் தாம் குடியிருந்த மறவர்சாவடி வீதியிலேயே ஒரு வீடு பார்த்துக் கொடுத்திருந்தார் பொன்னுச்சாமி. புதுமைகளையும் வழக்கத்துக்கு மாறான காரியங்களையும் சந்தேகத்தோடு மட்டுமன்றிக் கோபத்தோடும் பார்க்கிற ஒரு பழைய ஊரில் இப்படிப் பாதுகாப்பு அவசியமாகத்தானிருந்தது. திருமண்மாகி ஒராண்டுக் காலமும் ஒடிவிட்டது. தன்னுடைய பகுத்தறிவு நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று தோன்றியதால் வெளிப்படையாகப் பேசிக் கொள்ள நாணினான் என்றாலும் சண்பகத்தை மணந்த பிறகு தன் வாழ்வில் பல முன்னேற்றங்களும் வளர்ச்சி களும் படிப்படியாகத் தனக்கு ஏற்படுவதைத் திருமலை உணர்ந்தான். தேரடியிலேயே அநாதையாக வசித்து வந்த அவனுக்கு இப்போது வீடுவாசல் என்று ஒன்று ஏற்பட்டிருந்தது. தேரடியைத் தவிரக் குளக்கரையில் எண்ணெய், சிகைக்காய்த்தூள், தைலம், சோப்பு, சீப்பு, விற்கிற பெட்டிக் கடை ஒன்றும் புதிதாகப் போட்டிருந்தான் திருமலை. அதிலும் நல்ல வியாபாரம் ஆகியது. கையில் கொஞ்சம் பணமும் சேர ஆரம்பித்திருந்தது.

உள்ளூர்க் கோவாபரேட்டிவ் பாங்க் ஒன்றின் டைரக்டர்ஸ் போர்டுக்கு நடந்த எலெக்ஷனில் நின்று வெற்றியும் பெற்று விட்டான்.

“தம்பி! மெல்ல மெல்லப் பொது வாழ்க்கையிலே மேலே வரணும் நீங்க... அதுக்கு மேடைப்பேச்சு முக்கியம்... மேடையிலே பேசிப் பழகுங்க. நம்ம மாதிரி ஆளுங்களும் இயக்கங்களும் பேசிப்பேசித்தான் மேலே வளரணும்’ என்றார் பொன்னுச்சாமி.

அதுவரை அந்த ஊரில் இராமாயணம், பாரதம், கதா காலட்சேபம் செய்கிறவர்களும், காங்கிரஸ்காரர்களும் தான் தேரடியில் கூட்டங்களை நடத்தி வந்தார்கள். சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களைப் பயிற்றுவிப்பதற்காகப் பொன்னுச்சாமியே ஒரு பெரிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். தாமே தலைமையும் வகித்தார். “தங்கத் தமிழகத்தின் சிங்கநேர் இளைஞர்கள் திராவிட இயக்கத்தின் ஆடலேறுகள் இன்று மேடையேறுகின்றன! மாற்றார் கேட்டு நடுங்க மடிசஞ்சிகள் பதை பதைக்க, சநாதனிகள் தடுமாற, வைதீர்கர்கள் வழியறியாது திகைக்க இந்த அறிவுப்படை ஆயுதத்தோடு புறப்பட்டு விட்டது” - என்று தம்முடைய முரட்டுக் குரலில் பேச்சாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தார் பொன்னுச்சாமி அண்ணன். ஐயாயிரம் பேருக்கு மேல் மக்கள் தொகையுள்ள அந்த ஊரில் ஐம்பது பேர்கூட இவர்கள் கூட்டத்துக்கு வரவில்லை. அதிலும் சரிபாதிக்கு மேலே வேடிக்கை பார்க்க வந்த கூட்டமாயிருக்கும் போலிருந்தது. ‘தென்மொழி வளர்த்த திராவிட நாட்டில் இன்று திருட்டுக் கூட்டம் பிழைக்கிறது’ - என்பது போல் குரலையும், உணர்ச்சியையும் உச்சஸ்தாயியாக உயர்த்தியபோது கூட மேடையில் சிலரும், கீழே சிலருமாக உதிரியாய்க் கைதட்டினார்களே ஒழியக் கூட்டம் முழுவதும் கை தட்டவில்லை. நிழல் யுத்தம்போல் யாரோ ஒரு எதிரியைக் கற்பனை செய்து கொண்டு சாடு, சாடு என்று திட்டித் தீர்த்தார்கள் பேச்சாளர்கள்.

“வைதீகக் கோட்டையாகிய உள்பட்டணம் உருக்குலையப் போகிறது. அதிகார ஆணவங்கள் அழியப் போகின்றன. பணத்திமிர் பட்டழியப் போகிறது. உடையார்கள் உடையப் போகிறார்கள். இல்லாதவர்கள் பொல் லாதவர்களாகப் போகிறார்கள்” - என்று திருமலை பேசிய - பேச்சில் அறிவு வாதத்தைவிட உள்பட்டண எதிர்ப்பே மேலோங்கியிருந்தது.

1943-ல் திருமலை சண்பகம் மணவாழ்வு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையை அளித்தது. பொன்னுச்சாமி அண்ணன் அந்தக் குழந்தைக்கு ‘மலர்க்கண்ணி’ என்று பெய்ர் சூட்டினார்.

மூன்றாண்டுகள் தவழ்ந்து விளையாடி விட்டு 46-ல் ஒரு குளிர்காலத்தில் அந்தக் குழந்தை கண்ணை மூடி விட்டது. மீண்டும் 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் நாளில் அவர்களுக்கு ஒர் ஆண் குழந்தை பிறந்தது.

சண்பகம் குழந்தைக்கு ‘சுதந்திரன்’ - என்றே பெயர் வைத்து விடலாம் என்றாள். சுதந்திர தினத்தைத் துக்க தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற அபிப்பிராயத்தி லிருந்த பொன்னுச்சாமி அண்ணன் அதை மறுத்து “இராவணன்” என்று பெயர் சூட்டினார். சண்பகத்துக்கு இந்தப் பெயர் அறவே பிடிக்கவில்லை என்றாலும் சகித்துக் கொண்டாள். தன்னளவில் அவள் குழந்தையை ‘ராஜா’ என்றே கூப்பிட்டுக் கொஞ்சினாள்.

“என்ன தங்கச்சி! நான் ஒரு பேரு வச்சிருக்கேன். நீ பாட்டுக்கு ‘ராஜா’ன்னு வேற பெயரைச் சொல்லிக் கூப்பிடறே?” என்று எப்போதாவது பொன்னுச்சாமி அண்ணன் சண்பகத்தைக் கேட்டால், “உங்க ராவணனும் ஒரு ராஜாவாகத்தானே இருந்தான்? அதான் ‘ராஜா’ன்னு கூப்பிட்டுக்கிட்டிருக்கேன்” என்பதாகப் பதில் சொல்லிச் சமாளித்துக் கொண்டிருந்தாள் அவள்.

ஒரு மலையருவியிலிருந்து தண்ணீர் கொட்டுகிற மாதிரி வார்த்தைகளை அள்ளிக் கொட்டியே படிப்படியாய் மக்களை மலைக்க வைக்கும் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவனாகி விட்டான் திருமலை. உள்ளூரில் யாரையோ எதிர்க்கும் முனைப்பில் ஆரம்பித்த அவனது மேடைப் பேச்சு மெல்ல வெளியூர்களிலும் அழைத்து மேடை போட்டுக் கேட்க விரும்புகிற ஒன்றாகி விட்டது. மிகக் குறைந்த அடிப்படைக் கல்விகூட இல்லை என்றாலும் வாக்குக் சாதுரியத்தால் மிகப் பெரிய பேச்சாளனாகி விட்டான். அவன் தங்கள் இயக்கத்தின் மேடை ‘ஒக்க பிலேரி’யில் அவன் பிரமாதமாகத் தேறிவிட்டான். காங்கிரஸ் கூட்டங்களில் மகாத்மாகாந்தி என்றும், நேரு என்றும் ராஜாஜி என்றும் கூறினால் தங்கள் கூட்டங்களில் காந்தியார் என்றும், நேரு பெருமகனார் என்றும் ஆச்சாரியார் என்றும் கூற வேண்டும் என்பது அவனுக்கு அத்துபடியாகியிருந்தது. மனிதர்களை ‘இன்ஸ்டண்டாக’ப் புகழுவதற்கும் தாக்குவதற்கும் தோதான தமிழ் வார்த்தைகள் அவனுக்கு இலகுவாகப் பிடிபட்டிருந்தன. முன்பெல்லாம் இயக்கத் தொண்டர்களும், வெளியூர் அன்பர்களும் பொன்னுச்சாமியை அண்ணன் என்று மரியாதையாக அழைத்ததைப் போல் அவனையும் திரு அண்ணன் என்று உரிமையோடும் மதிப்போடும் இப்போது அழைக்க ஆரம்பித்திருந்தார்கள். புகழும் வருமானமும் போதுமான ஆணவத்தையும் கர்வத்தையும் அவனுக்கு அளித்திருந்தன. நெஞ்சை நிமிர்த்திப் பேசுகிற குணம் வந்தது. தன்னால் எதுவும் செய்யமுடியும் என்ற முரட்டு நம்பிக்கையும் அடாவடித்தனமும் கூடவே வந்தன. கூட்டங்களில் பேச நிபந்தனை போட ஆரம்பித்தான் அவன். எல்லாப் பேச்சாளர்களும் பேசிய பின்பு கடைசியாக முத்தாய்ப்புப் பேச்சாகத் தன்னுடைய பேச்சே இருக்கவேண்டும் என்று வற்புறுத்தினான். கூட்டத்திற்காக விளம்பரங்கள் செய்யும் போது சிறப்புப் பேச்சாளர், சீர்திருத்தச் சிங்கம் - பகுத்தறிவுப் பகலவன் திருமலை என்று தன் பெயருக்கு முன் அடைமொழிகளோடு முக்கியத்துவம் தந்து விளம்பரம் செய்யவேண்டும் என்பதை வற்புறுத்தினான். தான் பேசுவதைக் கேட்க இரவு எவ்வளவு நேரமானாலும் மக்கள் கலையாமல் உட்கார்ந்திருப்பதையும் கை தட்டுவதையும் கண்டு தன்னிடம் ஏதோ ஒரு வசீகர சக்தி இருப்பதாக அவனே எண்ணத் தொடங்கினான். ‘தனக்கு எல்லாமே தெரியும்’ என்று பாமரர்கள் நம்பியதைத் தானும் நம்ப ஆரம்பித்தான். வெறும் அரைக்கைச் சட்டையும் நாலு முழம் கைத்தறி வேட்டியும் கட்டிக் கொண்டு ‘அறிவியக்கத்தின் ஏழைத் தொண்டர்களில் நானும் ஒருவன்’ என்று விநயமாகச் சொல்லிக் கொண்டிருந்தவன், தோளில் நீளமாகத் துண்டு போட ஆரம்பித் தான். பெட்டிக்கடைகளின் பக்கம் அவன் போவது குறைந்தது. எனினும் விற்று முதல் லாபம் வீடு தேடி வந்தது. அவன் பெயரை வைத்து ஆட்கள் கடைகளை நடத்தினார்கள். திருமணங்களுக்குத் தலைமை, மகாநாடுகள், சிறப்புக் கூட்டங்கள். போராட்டம், மறியல், ஊர்வலம் என்று அவன் அலய ஆரம்பித்தான். சதாகாலமும் அண்ணன், அண்ணன் என்று நாலைந்து தம்பிகள் அவன் கூடவே சுற்றினர். வேடிக்கை என்னவென்றால் அவனை விட இரண்டு மூன்று வயது அதிகமானவர்கள் கூட இப்போது அவனருகே கைகட்டி, வாய் பொத்தி நின்று, “அண்ணன் மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல்லித் தேதி குடுங்க? நாளைக்கே கூட்டத்துக்கு ஸெட் அப் பண்ணிடலாம்” - என்று பேசத் தொடங்கினார்கள். இந்தச் சுற்றுப்புற மரி யாதைகள் உள்ளே தன்னடக்கத்தையும் பண்பாட்டையும் வளர்க்காமல் புறத்தே மட்டும் அவன் வளர்ச்சியைப் பெரிதாக்கின. பப்பாளி மரம் போல் முருங்கை மரம் போல் உள்ளே வைரம் பாயாத மேற்பார்வைக்கு மட்டும் மருட்டத்தக்க வெறும் புறவளர்ச்சியாயிருந்தது அது.

சில ஆண்டுகளில் பொன்னுச்சாமி அண்ணனுக்கு ‘முதல் ஹார்ட் அட்டாக்’ - ‘இரண்டாவது ஹார்ட் அட்டாக்’ என்று அடுத்தடுத்து இரண்டு அட்டாக் வந்து டாக்டர் அறிவுரையின் பேரில் அவர் வீட்டோடு ஒடுங்கித் தங்கி ஓய்வு பெற ஆரம்பித்தார். இது திருமலையின் பிரமுகத்துவத்தைத் திடீரென்று உயர்த்தி அதிகமாக்கியது. அந்த வட்டாரத்தின் ஒரே பிரமுகராக அவன் உயர்ந்தான். உள் பட்டணத்து ஜமீன்தார் வகையறாவும், காங்கிரஸ் சட்டசபை, மந்திரி பதவி என்று வேறு வழியில் மேலே போய் முன்னேறிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனாலும் அவர்களுடைய வளர்ச்சி திருமலையின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடியதாக இல்லை. ஜமீன்தார் ஒரு திறப்பு விழாவுக்கோ, அடிக்கல் நாட்டு விழாவுக்கோ வந்து பேசினால் கூடுகிற கூட்டத்தைவிடத் திருமலை தேரடியில் பேசினால், கூடுகிற கூட்டம் பல மடங்கு அதிகமாகவே இருந்தது.

இணையற்ற இந்தக் கூட்டமும் இந்தப் புகழும் தந்த ஆணவ நெறியில் அந்த வருஷ நடுப்பகுதியில் ஒரு தவறான காரியத்தை முன்நின்று நடத்திக் கைதாகி முதல் தடவையாக ஜெயிலுக்கும் போனான் திருமலை. பொன்னுச்சாமி அண்ணன் சம்மதம் தெரிவித்து ஒப்பாத அந்தப் போராட்டத்தில் அரை மனத்தோடுதான் அவன் இறங்கினான். ஆனால் அது பொன்னுச்சாமி அண்ணன் எச்சரித்தது போலவே அவனைச் சிறைக்குள்ளே கொண்டுபோய்த் தள்ளிவிட்டது.

-----------------

அத்தியாயம் 6

உடல் நலிந்து படுத்த படுக்கையாயிருந்த பொன்னுச்சாமி அண்ணனைச் சந்தித்துத் திருமலை தாங்கள் நடத்த இருந்த அந்தப் போராட்டம் சம்பந்தமாக யோசனை கேட்ட போது அவர் அதற்கு அவ்வளவு உற்சாகமாக வரவேற்று மறுமொழி கூறவில்லை.

“தம்பீ! எதுக்கும் கொஞ்சம் நிதானமாப் போங்க ‘எதையும் நம்பாதே, நம்பாதே’ன்னு சொல்லிச் சொல்லி ஜனங்க நம்மையே நம்பாமப் போயிட்டாங்க. அடாவடித்தனமா இந்த மாதிரி எல்லாம் போராட்டம் நடத்தினா இயக்கத்தோட பேரு கெட்டுப் போகும். அவசரப்படாதீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க.”

அங்கே எழிலிருப்பு ஊரில் உள்பட்டினத்துக்கும், வெளிப்பட்டணத்துக்கும் நடுவே தாமரைக் குளத்தின் கரையில் ஒரு பழங்காலத்து அரசமரமும், அதனடியில் பிள்ளையில், நாகர் சிலைகளும் இருந்தன. திருமணமான பெண்களில் மக்கட்பேறு இல்லாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அந்த அரச மரத்தைச் சுற்றி வந்தார்கள். நேர்ந்து கொண்டவர்கள், மரத்தில் சிறுசிறு தொட்டில்களோடு குழந்தைப் பொம்மைளைக் கட்டித் தொங்க விட்டார்கள். இந்த மூடப் பழக்க வழக்கங்களை எதிர்த்து அரசமரத்தடியில் மறியல் செய்ய வேண்டும் என்றான் திருமலை. அவனை ஒத்த சில இயக்க இளைஞர்களும் அதை வர வேற்றனர்.

பொன்னுச்சாமிக்கு அவனுடைய இந்தத் திட்டம் பிடிக்கவில்லை. படுத்த படுக்கையான பின் அவருடைய பல பிடிவாதங்களில் தளர்ச்சி வந்திருந்தது. அவர் உடல்நலம் தேறி எழுந்திருக்க வேண்டுமென்று அவருடைய மனைவி வெட்டுடையார் கோயிலுக்கு இரகசியமாகப் போய் வந்தாள் என்பதைத் திருமலை கேள்விப்பட்டிருந்தான். அடுத்த இரண்டு அட்டாக்குகளால் தளர்ந்து படுத்தபின் அண்ணன் பல விஷயங்களில் மென்மையாகி மாறியிருப்பது திருமலைக்குத் தெரிந்தது. பலவற்றில் நிதானமாகி யிருந்தார். வீணாக மனிதர்களை விரோதித்துக் கொள்ளக் கூடாது என்கிற எண்ணம் அவருக்கு இப்போது வந்திருப்பது புரிந்தது. திருமலை எவ்வளவோ மன்றாடியும் பொன்னுச்சாமி அண்ணன் அந்தப் போராட்டத்திற்குச் சம்மதிக்கவில்லை.

“பொம்பளைங்க குளிச்சுப்போட்டு ஈரத் துணியோட அரச மரத்தைச் சுற்றி வர்றப்ப - நாம தடித்தடியா ஆம்ளைங்க போயி நின்னுக்கிட்டு மறியல், அது இதுன்னு வழி மறிச்சா நம்ம பேர் தான் கெட்டுப் போகும். நமக்கு அவநம்பிக்கைப்பட எத்தினி சுதந்திரமும், உரிமையும் இருக்குதோ, அத்தினி சுதந்திரமும் உரிமையும் அவங்களுக்கு நம்பிக்கைப்படறதிலேயும் இருக்கு. மூட நம்பிக்கையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யலாமே ஒழிய நேரடி நடவடிக்கையிலே எறங்கிடப்படாது.”

ஈரோட்டிலிருந்து ஐயா எப்போது பொதுக் கூட்டத்துக்கு வந்தாலும் கூட்ட மேடையில் ஐயாவின் காலடியில் அமர்கிற அளவு ஈடுபாடுள்ள அண்ணனா இப்படிப் பேசுவது என்று வியந்தான் திருமலை. ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தில் சிறிய திருவடியாகிய அநுமன் ராமபிரானின் காலடியில் பவ்யமாக அமர்ந்திருப்பது போலதான் ஐயா பேசும் கூட்டங்களில் அவர் காலடியில் அமர்ந்திருப்பார் பொன்னுச்சாமி. வயதும், தளர்ச்சியும், விரக்தியும் அவரைக் கூட இப்படி மாற்றியிருப்பது தெரிந்தது. இன்று!

அப்போது அவர் சொன்னபடி செய்யாமல் அரச மரத்தடியில் மறியலில் ஈடுபடுவது என்று திருமலையும் மற்ற இளைஞர்களும் தாங்களாகவே முடிவு செய்தனர் இளங்கன்று பயமறியாது என்பது போல் ஏதாவது ஒரு போராட்டத்தை நடத்திப் பேர் வாங்கிவிட வேண்டும் என்று மட்டுமே துறுதுறுப்பாயிருந்தார்கள் அவர்கள்.

ஒரு நல்ல ஆடி வெள்ளிக்கிழமையன்று குளித்து விட்டு ஈர உடையோடு அரசமரத்தைச் சுற்றிக் கொண்டிருந்த இளம் பெண்களை வழி மறித்தாற் போல் அணுகி, “அரச மரத்தைச் சுற்றுவதை விட்டுவிட்டு, ஆண் பிள்ளையைச் சுற்றினாலும் பயனுண்டு” - என்றும், “அரசமரம் குழந்தையைக் கொடுக்காது - அதைச் சுற்றுவது அறிவுடமை ஆகாது” - என்றெல்லாம் கோஷம் போட்டார்கள். இதைக் கண்டு பெண்கள் பயந்து சிதறி ஓட, விஷயம் போலீஸ் வரை போய்த் தகராறு ஆகியது. ஈவ் டீஸிங், அநுமதி பெறாமல் மறியல் செய்தது ஆகிய குற்றச்சாட்டுக் களைச் சுமத்தி, திருமலை முதலிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர், மறிக்கப்பட்ட பெண்களில் ஒருத்தியின் கணவன், ஆத்திரத்தோடு, “ஏன்ய்யா! நீங்கள்ளாம் அக்கா தங்கச்சிங்களோட பிறந்தவங்கதானா? உங்க அக்காவோ, தங்கையோ, சம்சாரமோ தெருவிலே இப்படி எவனாலேயாவது வழி மறிக்கப்பட்டால் எப்படி இருக்கும்?” - என்று திருமலை வகையறாவைப் பார்த்துக் கூப்பாடு போட்டான். பொன்னுச்சாமி அண்ணனைப் போன்றவர்கள் ஒரளவு, கெளரவத்தோடும், பண்பாடோடும் வளர்த்திருந்த இயக்கம் இந்த அரசமர மறியல் போராட்டத்தால் கெட்ட பெயரைச் சம்பாதிக்க நேர்ந்து விட்டது. ஊர் நடுவிலும் விவரத் தெரிந்தவர்களிடமும் இப்படித் தலைக்குனிவை ஏற்படுத்தியிருந்தாலும், இயக்க இளைஞர்களிடையே பொன்னுச்சாமி அண்ணனை விடத் திருமலை அண்ணன் தான் மிகவும் - தீவிரமான கொள்கைப் பிடிப்பிள்ள ஆள் என்பது போல் ஒரு பெயரை இந்தப் போராட்டம் ஏற்படுத்தியிருந்தது. தொண்டர்கள் தன்னிடமே இப்படிச் சொல்லித் தன்னைப் புகழ்ந்தபோது திருமலைக்கு முதலில் அது பிடிக்கவில்லை என்றாலும் அவர்களை மறுக்கவும் கண்டிக்கவும் தோன்றவில்லை. பொது வாழ்வில் தான் மேலே ஏறி வரப் பயன்பட்ட விலைமதிப்பற்ற ஏணியைத் தன் கால்களாலேயே உதைக்கிறோமோ என்று கூடப் பயமாயிருந்தது. அதே சமயம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் கட்சியின் ஒரு பழைய பெரிய ஆள் தளர்ந்து விழும்போது தான் இனி அந்த இடத்தைப் பிடிக்கலாம் என்ற ஒரே ஆசையில் அந்தப் பழைய ஆளின் வீழ்ச்சியைப் பற்றித் தயங்கி இரங்கவோ, வருந்தவோ கூட நேரமில்லாத அத்தனை அவசரம் அந்த இடத்தைத் தான் உடனே கைப்பற்றுவதில் ஏற்படுவதைப் போல் திருமலைக்கும் இப்போது ஏற்பட்டிருந்தது.

“என்னதான் பெரியவராயிருந்தாலும் இப்ப உங்க தீவிரம் அண்ணனுக்கு இல்லீங்க... எதுக்கெடுத்தாலும் நிதானம், நிதானம்னு பயந்து சாகறாங்க” - என்று காரியம் ஆக வேண்டாதவரைத் தாழ்த்திக் காரியம் ஆக வேண்டியவரை உயர்த்தும் அடிவருடிகளின் சகஜமான முகஸ்துதி திருமலையையும் ஈர்த்துக் கவர்ந்ததில் வியப்பு ஏதும் இல்லை.

கைதானதை எதிர்த்து வழக்கு நடத்த தங்களை ஜாமீனில் வெளியே கொண்டுவர எதற்கும் பொன்னுச்சாமி அண்ணன் ஏற்பாடு செய்யாதது வேறு எரிச்சலை வளர்த்தது. கடைசியில் அபராதமும் கட்டி நாலு மாத காலம் சிறைவாசமும் அனுபவித்துவிட்டு வெளியே வருகிற போதாவது தாம் வர முடியவில்லையென்றாலும், வேறு ஆட்களை விட்டு மாலை போட்டு வரவேற்க அண்ணன் ஏற்பாடு செய்வாரென்று எதிர்பார்த்து அவர்கள் ஏமாந்தார்கள். பிடித்த காரியமோ பிடிக்காத காரியமோ, வழி யனுப்புவது, வரவேற்பது, சிறை சென்றால் வெளியே வரும்போது கொண்டாடுவது இதெல்லாம் இயக்க நடை முறைகள். ஆனால் இந்த முறை அண்ணன் அந்த நடைமுறையைக் கூடப் பொருட்படுத்தவில்லை. அவர்களை அறவே புறக்கணித்துவிட்டார்.

தாங்கள் சிறைவாசம் முடிந்து மீண்டதும் திருமலையும் மற்றவர்களும் அண்ணனைப் போய்ப் பார்த்து அவரது உடல் நிலையைப் பற்றிக் கூடப் பொருட்படுத்தாமல் இதை எல்லாம் விசாரித்த போதும் கூட, “இந்தா திரு! நான் முதல்லியே இந்த அரசமர மறியல் போராட்டம் கூடாதுன்னேன். யாராயிருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் நம்ம சமூகத்திலே திருமணமான பெண்கள் மரியாதைக்குரியவர்கள்! அவங்க முன்னாடிப்போயி, ‘அரச மரத்தை நம்பாதே! ஆம்பிளையை நம்பு!’-ன்னு வல்கரா பேசிக்கிட்டு நீங்க நின்னது சரியில்லை. அதான் நான் உங்களுக்காக வழக்காடவோ, விடுவிக்கவோ, வரவேற்கவோ எந்த ஸ்டெப்பும் எடுக்கலே” - என்று நிதானமாகவும், கறாராகவும் பதில் சொல்லி விட்டார் பொன்னுச்சாமி அண்ணன்.

“வரவர உங்க போக்கு நல்லா இல்லே அண்ணே! அண்ணி வெட்டுடையார் கோவிலுக்குக் கூட இரகசியமாகப் போய் வந்தாங்கன்னு கேள்விப்பட்டோம்.”

“இந்த இயக்கத்திலே நான் சேர்ந்த நாளிலிருந்து என் மனைவி என் கொள்கைகளை ஒப்பவில்லை என்பதும், அப்படி ஒப்பாமலிருக்க நான் அவளுக்குச் சுதந்திரமளித்திருப்பதும் ஊரறிந்த உண்மையாச்சே தம்பீ!”

“உள்ளூர் அநுமாரையும், பெருமாளையும் விட்டுப் போட்டு அண்ணி வெட்டுடையார் கோயிலைத் தேடிப் போனது மத்தவங்களுக்குத் தெரியக் கூடாதுன்னு தானே?”

“அப்படி நீயாகக் கற்பனைப் பண்ணிக்கிட வேண்டியது தான். அது அவ பிறந்த வீட்டாருக்குக் குலதெய்வம்னு அவ போயிட்டு வந்திருக்கா. பெண்களுக்கு முழு சுதந்திரம் தரணும் அவர்களைத் தொழுவத்து மாடுங்க மாதிரி அடிமைப்படுத்தப்படா துங்கிறதுதான் ஐயாவோட கொள்கை. அதை நான் அப்படியே கடைப்பிடிக்கிறேன்.”

“எது எப்படியோ, மத்தவங்க காண அண்ணன் எங்களை விட்டுக் கொடுத்து, ரொம்ப அவமானப்படுத்திட்டீங்க... ஜெயில்லேருந்து வெளியே வந்தப்பக்கூட வாங்கன்னு கூப்பிட நாதியில்லாமே வெளியே வந்தோம். நாங்க...”

“வரவேற்கிற மாதிரிக் காரியத்தைப் பண்ணிட்டு நீங்க ஜெயிலுக்குப் போயிருந்தீங்கன்னா டாக்டர் அட்வைஸைக் கூடப் பொருட்படுத்தாம நானே எந்திரிச்சுக் கையிலே மாலையோடப் பெரிய கூட்டத்தைக் கூட்டிக்கிட்டு வரவேற்க வந்திருப்பேன்.”

“வரவேற்க முடியாதபடி அப்பிடி என்ன மோசமான காரியத்தை நாங்கப் பண்ணிப்பிட்டோம் அண்ணே?”

“ஊரான் வீட்டுப் பொம்பளைகளை நடுத் தெருவிலே வழிமறிக்கிறதை விடக் கேவலமான காரியம் வேறொண்ணும் இருக்க முடியாது.”

“இதிலே நான் அண்ணனோட கருத்து வேறுபடுவேன்.”

இதன் பிறகு அவனுக்கும், பொன்னுச்சாமி அண்ணனுக்கும் பெரிய பிளவு ஏற்பட்டது. அவர் பொது வாழ்விலிருந்து அறவே ஒதுங்கி ஒடுங்கிவிட்டார். சண்பகத்திடம் இந்தக் கருத்து வேறுபாட்டைக் கூறியபோது கூட அவள் பொன்னுச்சாமி அண்ணன் சொல்லியதுதான் சரி என்றாள். “அரசமரத்தைச் சுத்தறது அறிவீனம்னு நீங்க கூட்டம் போட்டுப் பேசலாம்! அதை விரும்பறவங்க வந்து கேட்டுத் திருந்தலாம். திருந்தாமச் சும்மா கேட்டுச் சிரிச்சுட்டுப் போகலாம். ஆனா அரசமரத்தைச் சுத்திட்டிருக்கிற பொம்பளைங்களையே நேரே போய் வழிமறிக்கிறதுங் கறது. அத்து மீறல்!” - என்று சண்பகமே அவனை எதிர்த்து வாதிட்டாள். திருமலை அவள் வாதத்தை ஏற்க வில்லை.

எப்படியோ இயக்கம் முழுக்க முழுக்க இப்போது அவனது தலைமையின் கீழ் அவனுடைய முழுக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. அவன் செய்ததையும், செய்வதையும் முழுமூச்சாகப் புகழ்கிறவர்களும், வியக்கிறவர்களுமே அவனைச் சூழ இருந்ததால், எது நல்லது, எது தவறானது என்று ஒன்றுமே புரியவில்லை. புகழப்படுவது எல்லாம் சாதனை என்று எண்ணிக் கொள்ளும் மனப்பான்மைக்கு அவன் வந்திருந்தான். அவனைச் சுற்றிச் சதா வானளாவப் புகழ்ந்து நிற்கும் ஒரு கூட்டம் அலைமோதியது. அந்த வருடக் கடைசியில் பொன்னுச்சாமி அண்ணன் காலமானார். மரணத்திற்குப் பிறகு விரோதங்கள் அர்த்தமற்றுப் போகின்றன. திருமலை ஒரு பெரிய இரங்கல் கூட்டம் போட்டுப் பொன்னுச்சாமி அண்ணனை வானளாவப் புகழ்ந்து முடிவில் தன்னுடைய தலைமையை உறுதிப்படுத்திக் கொண்டான்.

மறவர் சாவடித் தெருவில் ஒரு படிப்பகம் திறந்து அதற்குப் ‘பொன்னுசாமி அண்ணன் நினைவுப் படிப்பகம்’ என்று பெயரும் சூட்டினான். பிள்ளையார் சிலை உடைப்பு நடத்தித் தன்னைப் பிரமுகனாக வளர்த்துக் கொள்ளும் காரியத்தைத் திருமலை தொடர்ந்து செய்தான்.

இப்போது பொன்னுச்சாமி அண்ணன் இல்லாத காரணத்தால் அவனைத் தனிமைப்படுத்தித் தொலைத்து விடலாம் என்று உள்பட்டணத்தார் மறுபடியும் சில விஷமங்களை ஆரம்பித்திருந்தார்கள். ஆனால், முன்னை விட இயக்க ரீதியாக அவனுடைய பலம் வளர்ந்திருப்பதை அவர்கள் சரியாகக் கணிப்பதற்குத் தவறியிருந்தார்கள் என்றே கூறவேண்டும். சில இடையூறுகளைத்தான் அவனுக்கு அவர்கள் செய்ய முடிந்ததே ஒழிய, அவனை அழிக்க முடியவில்லை. சரியாகவோ, தவறாகவோ, அவன் பெரிதாக வளர்ந்திருந்தான். அழித்து விட முடியாத, உயரத்துக்கு, தகர்த்துவிட முடியாத ஆழத்துக்கு, நசுக்கி விட முடியாத கனத்துக்கு அவனுடைய அப்போதைய வளர்ச்சிகள் இருந்தன.

அவனது வாழ்வையும் வளர்ச்சியையும் சகித்து ஏற்றுக் கொண்டு அவனுக்குச் சில இடையூறுகளை, மட்டுமே அவர்களால் அப்போது செய்துவிட முடிந்தது. ஊர் ஏற்கெனவே அவர்களை எல்லாம் மதித்து, ஒப்புக் கொண்டிருந்தது. இப்போது அவனை மதித்து ஒப்புக் கொள்ளவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் திணறிக் கொண்டிருந்தது.
---------------

அத்தியாயம் 7

பண்பாடும், மனப் பக்குவமும் இல்லாதவனுக்கு வரும் பதவிகளும் புகழ், பொருளாதார வளர்ச்சிகளும் அவனைத் தாறுமாறகச் சீரழிக்கும். குரங்கு கைப் பூமாலையில் உள்ள பூக்கள் போல இங்கிதம், மென்மை, சகிப்புத்தன்மை என்ற அம்சங்கள் எல்லாம் அவனிடம் உருக்குலையும். பொன்னுச்சாமி அண்ணன் மறைந்த பின்னர் திருமலையும், அப்படி ஆகியிருந்தான். அவனிடமிருந்த இயக்கத் தலைமை, மேடை ஆணவம், ஆள்கட்டு, எல்லாமே அவனை ஒரு காட்டாறு போல் தறிகெட்டு ஒடச் செய்திருந்தன. ஆறோ குளமோ கரைகளுக்கு நடுவே அடங்கியிருக்கிற வரைதான் அழகு. கரைகளை மீறிவிட்டால் சுற்றுப்புறம்தான் அழியும். கரைகளை மீறிய வெள்ளமாக வளர்ந்து கொண்டிருந்தான் திருமலை.

அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. சின்னக் கிருஷ்ணராஜ உடையாரை - உள் பட்டணத்து அந்தஸ்துக்களை விலாசமற்றுப் போகச் செய்துவிட வேண்டும் என்று முயன்றான் அவன். அது ஒரு வெறியாகவே அவனுள் வளர்ந்திருந்தது.

ஆனால் அவனுடைய துரதிர்ஷ்டமோ, சின்னக் கிருஷ்ணராஜ உடையார் காங்கிரஸ் அமைச்சரவையில் ஒரு மந்திரியாகியிருந்தார். “பாவம், நம்மூர் ராஜா மந்திரியாகப் பதவி இறக்கம் செய்யப்பட்டிருக்கிறார்” என்று இதை மேடைகளில் கிண்டல் செய்தான் திருமலை. ராஜா, மந்திரி என்ற வார்த்தைகள் கிண்டலுக்குத் தோதாக இருந்தன.

தேரடி குளக்கரைகளில் இருந்த திருமலையின் பெட்டிக்கடைகளை ‘என்க்ரோச் மெண்ட்’ என்றும் சாலைப் போக்குவரத்துக்கு இடையூறு என்றும் அங்கிருந்து அகற்றும் முயற்சியில் உள் பட்டணத்துப் பெரும் புள்ளிகள் இறங்கினார்கள். பஞ்சாயத்து போர்டில் ஆட்களைப் பிடித்து அந்த இடங்களில் உள்ள கடைகள் பொதுமக்களுக்கு மிகவும் உபயோகமானவை என்று தீர்மானம் போட வைத்துக் குறைந்த பட்ச வாடகையும் நிர்ணயிக்க வைத்துத் தன்னைப் பாதுகாத்துக் கொண்டான் திருமலை. ஊரார் அவனை மதித்துப் பயப்படவில்லை. ஆனால் பயப்பட்டு மதித்தார்கள். பயப்படாதவர்களை மிரட்டிக் கூட்டம் போட்டு வாயில் வந்தபடி திட்டும் வசதி அவனுக்கு இருந்தது. பெரிய கனவுகளுடனும் காதலுடனும் அவனையே அடைவதென்று உருகித் தவித்து அவனை மணந்து கொண்ட சண்பகத்துக்குக் கூட இப்போது சலிப்பாக இருந்தது. அவளோடு ஒர் அரைமணி நேரம் உடன் உட்கார்ந்து இதமாக நாலு வார்த்தை பேசக்கூட அவனுக்கு இப்போது நேரமில்லை. மாதத்தில் இருபது நாட்கள் வெளியூர்களில் அலைச்சல். மீதிப் பத்து நாட்களில், உள்ளூரிலேயே கூட்டம். குடும்பத்தையோ சண்பகத். தையோ கவனிக்க அவனுக்கு நேரமே இல்லை.

கிருஷ்ணராஜன் மந்திரியாகி விட்டதால் திருமலை தன்னுடைய மேடைப் பேச்சுக்களில் விடாமல் அவனைத் தாக்கி வந்தான். மந்திரியாக இருந்த சின்ன உடையார் இந்தத் தாக்குதலைக் கண்டுகொள்ளாமலும் பொருட் படுத்தாமலும் விட்டு விட்டதால் இவனது எரிச்சல் இன்னும் அதிகமாகியது.

நாம் யாரை முழு ஆக்ரோஷத்தோடு குத்தித் தாக்குகிறோமோ அவருக்கு அது வலிக்கவில்லை என்று தெரியும்போது நமக்கு மேலும் கோபம்தான் வருகிறது. நமது தாக்குதல் நம் எதிரிக்கு வலிக்க வேண்டும் உறைக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். அது வலிக்கவும், உறைக்கவும், பாதிக்கவும் செய்யாதபோது நமக்கே எரிச்சல் வருகிறது. படிப்பும், பரம்பரையும் தோல்விகளாலும், இல்லாமையாலும் அதிகம் பாதிக்கப்படாத ஒரு சீரான வாழ்க்கை உயரமும் கிருஷ்ணராஜனைப் பக்குவப்படுத்தியிருந்தன.

குமுறி எழுந்து ஆத்திரப்பட்டுப் புயலாக எதிர்த்து வருகிறவனைப் பதிலுக்கு எதிர்க்காமல் முகமலர்ச்சியோடு சிரித்து வரவேற்கிறவன் அந்தச் சிரிப்பாலும் முகமலர்ச்சியாலுமே எதிரியைப் பாதி வென்றுவிட முடியும். கிருஷ்ணராஜனும் அவனைப்போல் திருமலையின் எதிர்ப்புக்கு ஆளான பிற தேசிய இயக்கத் தலைவர்களும் நீண்ட காலத்துக்கு இந்தப் பாதி வெற்றியிலேயே திருப்திப் பட்டுக் கொண்டிருந்தனர்.

பாதி வெற்றி என்பது எப்போதுமே அபாயகரமானது. எதிரியை மேலும் மேலும் எரிச்சலூட்டித் தயார் செய்யக் கூடியது. மதில் மேல் பூனை போன்றது என்பதை எல்லாம் பற்றி அன்று அவர்கள் கவலைப்படவில்லை. ஆளும் உரிமையும் பெற்ற சுதந்திரத்தை மேற்பார்வையிட்டுக் காக்கும் வசதியும் தங்களுக்கே நிரந்தரம் என்று சுகமாகவும், சொகுசாகவும் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்தக் காலகட்டத்தில் தனக்கும் தன் இயக்கத்துக்கும் எல்லாரும் பயப்படுகிறார்கள் என்பதே திருமலைக்கு மகிழ்ச்சியளித்தது. ஆனால் தங்களைத் தீவிரமாக யாருமே பொருட்படுத்தவில்லை என்று ஆத்திரமூட்டியது. தங்களைக் கவனித்துப் பொருட்படுத்தி மலைத்து நிற்கும்படி ஆட்சிக்கும், சமூகத்துக்கும் அடுத்தடுத்து அதிர்ச்சிகளைக் கொடுக்கவேண்டும் என்று அவன் எண்ணினான்.

மற்றவர்கள் நம்பிய எல்லாவற்றையும் அவனும் அவன் இயக்கத்தாரும் நம்பாமல் எதிர்த்தார்கள். மற்றவர்கள் கள்ளுக்கடை மறியல் என்றால் அவன் தன் ஆட்களைச் சேர்த்துக் கொண்டு ‘கள் உண்ண விரும்புவோர் கழகம்’ என்றான். அவர்கள் இராமாயணம், பாரதம், பெரிய புராணம் போன்ற கதைகளைக் கற்பித்து ஒழுக்கத்தை வளர்க்கிறோமென்றால் அவன் அவையனைத்தையும் தெருவில் குவித்து வைத்து மண்ணெண்ணெயை ஊற்றித் தீயிடத் தயாராக இருந்தான்.

பொன்னுச்சாமி அண்ணனின் மரணத்துக்குப் பின்பு அவனது தீவிரம் இன்னும் அதிகமாயிற்று. பொன்னுச்சாமி அண்ணன் கடவுள், மதம் இவற்றையெல்லாம் நம்ப வில்லை என்றாலும், சட்டம், ஒழுங்கு, கட்டுப்பாடு, சமூகத்தை மதிப்பது, இவற்றை எல்லாம் நம்பினார். அவன் இவை எதையுமே நம்பத் தயாராயில்லை.

ஓர் அநாதையாகத் தேரடியில் வாழ்க்கையைத் தொடங்கிய அவன் ஒர் ஆறாகப் பெருகியபோது பாதுகாப்பான இரண்டு கரைகள் அன்று அந்த ஆற்றுக்கு இருந்தன. பொன்னுச்சாமி அண்ணன் ஒரு கரையாகவும், சண்பகம் மற்றொரு கரையாகவும் இருந்து காத்து வந்தார்கள். முதல்கரை தானாக உடைந்து விட்டது. இரண்டாவது கரை மெல்ல மெல்ல ஆற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் வலுவிழந்து கொண்டிருந்தது. ஆற்றில் வெள்ளமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. அவனைக் கண்டிக்க யாருமே இல்லாததால் அவன் அதிகத் தவறுகளைச் செய்யத் தொடங்கினான். தவறு செய்கிறோம் என்ற உணர்வே இன்றிச் சகஜமாக அவற்றைச் செய்தான் அவன்.

பொன்னுச்சாமி அண்ணன் காலமான பின் ஒரு சமயம் வெளியூர்க் கூட்டம் ஒன்றுக்காக அவன் போயிருந்த போது இந்தச் சம்பவம் நேர்ந்தது. இதனால் காட்டாறு மேலும் பொங்கிப் பெருக்கெடுத்தது.

வழக்கமாகப் பத்துப் பதினொரு மணிக்குக் கூட்டம் முடிந்ததும் தங்கியிருக்கிற அறைக்குப் பாட்டில்களும் சிக்கன் ரோஸ்ட், மீன் வறுவல் என்று அவனுக்குப் பிடித்த அயிட்டங்களும் வரும். எல்லாம் சாப்பிட்டுவிட்டுப் படுக்க ஒரு மணி கூட ஆகும். அன்றைக்கும் அப்படியேநடந்தது. ஆனால் ஒரு மாறுதல், ஒரு மணிக்கு மேல், “அண்னே! கொஞ்சம் வாங்க. வெளியே ஒரு ரவுண்டு போய் வரலாம்” என்று வாசலில் காரைக்கொண்டு வந்து நிறுத்தினான் அந்த ஊரில் அவனுடைய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவன்.

“எங்கப்பா போகணும்? இந்நேரத்துக்கு ஏன் தொந்தரவு செய்யிறே?”

“தொந்தரவு ஒண்ணும் இல்லே! எல்லாம் சுகம்தான் வாங்க சொல்றேன்! வந்தாத்தானே தெரிஞ்சுக்குவிங்க” என்று குறும்புச் சிரிப்புடன் மீண்டும் வற்புறுத்தினான் கூப்பிட்டவன். திருமலைக்குப் புரிந்தது. ஆனால் புரியாதது போல் நடித்தான்.

“ரொம்ப ஹை-கிளாஸ். புதுச் சரக்கு! இப்பத்தான் வந்திருக்குது. முத்தின மாடில்லே இளசு. அண்ணனுக்காக.”

“ஹைகிளாஸ்னா...?”

அவன் விவரம் சொன்னான்.

“ஆங்!... அதான் விசாரிச்சேன். பண வசதியும், சமூகத்திலே மேல் மட்டத்திலே இருக்கிறோம்கிற திமிரும் - சேர்ந்து இதுவரை அவனுகதான் மத்த சாதியில, பூந்து வெள்ளாடினாங்க. இப்ப மேல் மட்டத்துப் பொண்ணுங்களே இப்பிடி நம்பு லையன்லே வருதுங்கிறே, முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்கிறது சரிதான்.”

எல்லாப் பொண்ணுங்களிலேயும் சிலது தட்டுக் கெட்டுப் போறப்ப இவங்களிலேயும் சிலது இப்பிடிக் கெட்டாத்தான் என்னான்னேன்?”

“கெடட்டும்... நாமே கெடுப்போம். அப்பவாவது இந்த உள் பட்டணத்துக் கயவனுங்களுக்குப் புத்தி வரட்டும்.”

இருளில் நெடுந்துாரம் பயணம் செய்து ஊரிலிருந்து ஒதுக்கப்புறமாக ஒரு தோட்டத்தின் நடுவே அமைந்திருந்த வீட்டின் முகப்பில் போய்க் கார் நின்றது. முகப்பிலேயே செண்ட், ஊதுபத்தி வாசனைகள் மூக்கைத் துளைததன.

அவனைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தவன், “அண்ணே! இறங்குங்குக... நீங்க திரும்ப வர்ற வரைக்கும் நானும் காரும் இங்கேயே காத்துக்கிட்டிருப்போம்” என்றான்.

வீட்டு வாசற்படியின் அலங்காரத் திரைச் சீலையை விலக்கி மைதீட்டிய சிவந்த விழிகளும், பொய் நாட்டமுள்ள மயக்குச் சிரிப்புமாக, கட்டான உடல் அழகுடன் கூடிய இளம்பெண் ஒருத்தி எட்டிப் பார்த்து, “வாங்க” என்றாள்.

உடனே யாரையோ பழி வாங்கிக் கொலை செய்யப் போவது போன்ற ஒரு வகை வெறியுடன் தான் அந்த வீட்டுக்குள் நுழைந்தான் திருமலை. ஆம்! . அதுகூட ஒரு வகைக் கொலை வெறிதான். மூன்று காரியத்துக்கும் ஒரே வகையான வெறியுணர்வு தேவைப்படுவதாலோ என்னவோ கொலை, களவு, காமம் மூன்றையும் ஒரு வரிசையில் சேர்த்து வைத்து எண்ணியிருந்தார்கள். உள் பட்டினத்து ராஜ வம்சத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி எப்படியோ நெறி தவறி நொடித்து இந்த வழியில் வந்து இப்படிப் பள்ளத்தில் வழுக்கி விழுந்திருந்தாள். அவளை அவள் எங்கிருந்து வந்தவள் என்று தெரிந்ததாலேயே அதிகமான மிருக வெறியோடு அணுகினான் அவன்.

தன் தாயைப் பழிவாங்கிய வம்சத்துப் பெண் ஒருத் தியை அதே விதமாகப் பழி வாங்கிவிட்டோம் என்பது போன்ற மிருகச் சந்தோஷத்தோடு தான் அன்றிரவு அங்கிருந்து திரும்பினான் திருமலை.

முன்பு பொன்னுச்சாமி அண்ணனுக்குத் துரோகம் செய்தது போலவே தன் வாழ்வுக்கு மற்றொரு கரையாயிருந்த சண்பகத்துக்கும் இப்போது துரோகம் செய்ய ஆரம்பித்திருந்தான் அவன்.

முதலில் அவன் மேல் குருட்டு விசுவாசத்தோடிருந்த ஒரு விசிறி தொடங்கி வைத்த இந்தக் கெட்ட பழக்கம் நாளடைவில் கூட்டம் முடிந்தவுடன் மது, மாமிசம், உணவு ஆகிய மற்றவற்றைப் போல ஒர் அவசியமும் வழக்கமும் ஆகிவிட்டது. கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறவர்கள் இதற்கும் சேர்த்தே ஏற்பாடு செய்தாக வேண்டும் என்பது போலவே இது மாமூல் ஆகிவிட்டது. ஏற்பாடு செய்தார்கள். வெகுசிலர் மட்டுமே தயங்கி முணு முணுத்தார்கள். தகவல் எப்படியோ ஐயா காதுவரை எட்டி அவனைக் கூப்பிட்டுக் கண்டித்தார் அவர். “கடவுள நம்பாதேன்னு துணிஞ்சு சொல்ற அளவு மானமுள்ள ஒரு சுயமரியாதைக்காரன் முதல்லே ஜனங்க தன்னை நம்பும்படியா நடந்துக்கணும். ஊர் ஊராகக் கூத்தியா, வீட்டைத் தேடிக்கிட்டுப் போயிட்டிருந்தியானா உன்னை எவன் நம்புவான்? பண வரவு செலவுலே கை சுத்தம், சிக்கனம், ஒழுக்கம் இதெல்லாம் பிடிக்காட்டி நீ இந்த இயக்கத்திலிருந்து ஒதுங்கிக்கிறது நல்லது. கண்ட கண்ட கெட்ட பழக்கங்களோடு இதிலே நீ இருந்து ஒரு வெங்காயமும் பிரயோஜனமில்லே...”

அவனுக்கு ஐயா தன்னை நாலு பேரறிய இப்படிப் பகிரங்கமாகக் கண்டித்ததிலே மிகவும் வருத்தந்தான்.

திருவண்ணாமலையிலே ஆச்சாரியாரைக் கலந்து பேசி ஐயா மணியம்மையை மணந்து கொள்ள முடிவு செய்த போது அதைக் கண்டித்து வெளியேறியவர்களை ‘கண்ணிர்த். துளி’ என ஐயாவே கிண்டல் செய்தார். ஐயாவிடமிருந்து விலகி வெளியேறக் காலம் பார்த்துக்கொண்டிருந்த அவன் அப்போது வெளியேறிய கும்பலோடு தானும் வெளியேறினான். கண்ணிர்த் துளிகளில் ஒருவனாக மாறினான். “ஈரோட்டைவிடக் காஞ்சிபுரத்தில் தெருக்கள் பெரியவை. அகலமானவை - கைவீசிச் சுதந்திரமாக நடக்க ஏற்றவை” என்று தான் விலகிய புதிதில் பேசிய முதல் கூட்டத்திலேயே ஈரோட்டுப் பாதையிலிருந்து தான் காஞ்சிப் பாதைக்கு மாறி வந்த மாற்றத்தைத் தனக்கே உரிய சாதுரியத்தோடு குறிப்பிட்டிருந்தான் அவன்.
-----------------

அத்தியாயம் 8

திருமலையின் வளர்ச்சியில் மாறுதலும், மாறுதலில் வளர்ச்சியும் இருந்தன. 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அவன் ஈரோட்டுப் பாதையிலிருந்து காஞ்சிப் பாதைக்கு வந்து சேர்ந்ததைப் போலவே தமிழ் நாட்டின் பெருவாரியான இளைஞர்களும் வந்திருந்தனர். சென்னை மாநகரில் ராபின்சன் பூங்காவில் புதிய கட்சி பிறந்த கூட்டத்திற்கு அவனும், நண்பர்களும் வந்து கலந்து கொண்டு ஊர் திரும்பிய போது மாபெரும் உற்சாகத்தோடு திரும்பியிருந்தனர்.

திருமலை ஊரில் இல்லாத போது அவன் பெயருக்குத் தபாலில் வந்திருந்த ஒர் அரசியல் மஞ்சள் பத்திரிகையைத் தற்செயலாகப் பிரித்துப் படிக்க நேர்ந்த சண்பகம் ஏற்கெனவே பராபரியாகக் கேள்விப்பட்டிருந்த பல வதந்திகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. திருமலையின் எதிர்த்தரப்பைச் சேர்ந்த அரசியல் மஞ்சள் பத்திரிகை திருமலைக்குப் பல ஊர்களில் பல்வேறு பெண்களோடு தொடர்பு இருப்பதாகவும் ஐயா இதைக் கண்டித்ததால் தான் அவன் விலகியதாகவும் எழுதியிருந்தது. பத்திரிகையைப் படித்ததும் சண்பகம் இடிந்து போனாள். அவள் மனம் சுக்கல் நூறாக உடைந்து சிதறினாற் போலிருந்தது. மனத்தை விட்டு விடாமலிருக்கச் சிறுவன் ராஜாவை அணைத்து உச்சி மோந்து ஆறுதலடைய முயன்றாள். அன்று குழந்தைக்கு இராவணன் என்று பெயர் சூட்டச் செய்த திருமலை இன்று தானே இராவணாக மாறிக் காடு மேய்வது அவளை அதிர்ச்சி கொள்ளச் செய்தது. அவள் மனம் தடுமாறிக் குமுற ஆரம்பித்தது.

திருமலை சென்னைக்குப் போய் விட்டுத் திரும்பிய தினத்தன்று காலை மற்ற தபால்களை எல்லாம் அவனிடம் அடுக்கிக் கொடுத்த சண்பகம், அந்தப் பத்திரிகையை மட்டும் கொடுக்கவில்லை. அன்றிரவு எப்படியும் அவனிடம் கண்டித்துப் பேசி அந்தப் பத்திரிகையையும் காட்டிவிட வேண்டுமென்று திட்டமிட்டிருந்தாள் அவள். நாள் நட்சத்திரம் பார்க்காமல், தாலி சடங்குகள் இல்லாமல் நடந்த கல்யாணமாதலால்தான் இப்படியெல்லாம் ஆகி விட் டதோ என்று கூட அவளுடைய மனத்தில் பயம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட ஒர் ஆளையா காதலித்து, உருகி உயிரை வைத்துப் பிரியம் செலுத்தி மணந்தோமென்று எண்ணியபோது அவளுக்கு வேதனை தாங்க முடியவில்லை. கோபித்துக் கொண்டு போய் விடலாமென்றால் எங்கே போவது? தாயும் இல்லை, தந்தையும் இல்லை. உடன் பிறந்தவனோ பேச்சுவார்த்தையின்றி ஒதுங்கி விட்டான். திருமலையிடம் பேசி அவனைத் திருத்த முடியுமென்று அவளுக்கு நம்பிக்கையுமில்லை.

கொஞ்ச காலத்துக்கு முன்பு பொன்னுச்சாமி அண்ணன் உயிரோடிருந்த போது இப்படி நடந்திருந்தாலாவது அண்ணனை விட்டுக் கண்டிக்கச் சொல்லியிருக்க லாம். இப்போது அண்ணனும் இல்லை. இரவுச் சாப்பாடு முடிந்து குழந்தையைத் தூங்கச் செய்தபின் தானே அவனிடம் நைச்சியமாகப் பேச்சை ஆரம்பித்தாள் சண்பகம்.

மெல்ல வெற்றிலையை மடித்து நீட்டிக் கொண்டே, “முன்னெல்லாம் எங்கிட்டே ரொம்பப் பிரியமா இருப்பீங்க... இப்ப வர வர வெளியூருக்குப் போனாத் திரும்பி வர்றப்ப ஒரு முழம் பூக்கூட வாங்கி வர்றதில்லே நீங்க...” என்று கெஞ்சலாகத் தொடங்கினாள்.

“எங்கே முடியுது?... வரவரப் பொது வாழ்க்கையும் கட்சி வேலையுமே நேரத்தை எல்லாம் முழுங்கிடுதே.”

“கட்சி மட்டும்தானா? உங்க நேரத்தை இப்ப யார் யாரோ முழுங்கறாங்க!”

“நீ என்ன சொல்றே சண்பகம்” - அவன் கை அவள் மடித்துக் கொடுத்த வெற்றிலையை வாங்கிக் கொள்ளாமல் சற்று முரட்டுத் தனமாகவே விலக்கியது.

“நான் இல்லாததை ஒண்ணும் சொல்லலே! இதோ இதைப் பாருங்க, புரியும். உங்களைப் பத்தி இப்படித் தாறுமாறா வர்றதைப் பார்த்தா நல்லாவா இருக்கு...?” என்று வினவியபடியே மறைத்து வைத்திருந்த அந்தப் பத்திரிகையை எடுத்துப் பிரித்து அவனிடம் நீட்டினாள். அதை அவளிடம் இருந்து வாங்கிப் படித்த அவன் தனக்கு ஏற்பட்ட ஆத்திரத்தில் சீறினான்.

“உங்க பேருக்குத் தபால்லே வந்திச்சு. பிரிச்சுப் படிச்சேன்.”

“எனக்கு வந்த தபாலை நீ எப்பிடிப் பிரிக்கலாம்?”

“...”

சுளிரென்று அவள் கன்னத்தில் மாறி மாறி அறைகள் விழத் தொடங்கின. ஒவ்வொன்றும் ஒரு பேயறை. வலி பொறுக்க முடியாமல் அவள் கதறிய கதறலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை விழித்துக் கொண்டு மருண்டு போய் அழ ஆரம்பித்தது.

“சி! நீ ஒரு மனுஷனா? நீ பண்ணின தப்பைச் சொன்னா அதுக்காக இப்பிடிப் பிசாசு மாதிரி அறையிறியே...?”

ஆத்திரத்தில் கூப்பாடு போட்டாள் அவள். வலியும் வேதனையும் தாளாமல் ஏக வசனத்தில் வந்துவிட்டது.

“ஆம்பிளை உடம்பிலே வலு இருந்தா என்னவும் பண்ணுவான். எங்கேயும் போவான். அதைக் கேக்கறதுக்கு நீ யாருடி?”

“நான் கேக்காமே வேற யாரு கேட்பாங்க?... தெருவில் போறவளா.வந்து கேப்பான்னேன்?”

“எதுத்தா பேசறே...? வாயை மூடுடி.”

மறுபடியும் அறை. குழந்தையையும் அவளையும் தனியே விட்டுவிட்டு வெறியோடு வெளியேறினான் திருமலை. அவளும் குழந்தையும் கதறியழுத சத்தம் கேட்டு என்னவோ ஏதோ என்று பதறி ஓடி வந்த அக்கம் பக்கத்தாரிடம், “ராத்திரி முருங்கைக்காய் சாம்பாரு வைக்கச் சொல்லியிருந்தாரு. மறந்து பேச்சு... அதுக்காகக் கோவிச்சுக்கிட்டு இத்தனை கூத்தும் பண்ணிட்டுப் போறாரு” என்று பொய் சொல்லிச் சமாளித்தாள் சண்பகம்.

அதன்பின் அவளது இல்வாழ்க்கை நரகமாயிற்று. தினம் வீடு திரும்பினால் அடிதான். உதைதான். திருமலையைத் திருத்த அவளால் முடியவில்லை. அவன் சார்ந்திருந்த மனிதர்களில் யாரும் தனிமனித ஒழுக்கத்தையோ சமூக ஒழுக்கத்தையோ பற்றி அக்கறை ஏதுவும் காட்டவில்லை. ஒழுக்கச் சிதைவையே நியாயப்படுத்த முயன்றார்கள். குடும்பம் என்ற அமைப்பின் புனிதத்தை மதிக்கத் தயாராயில்லை. குடும்பம் என்கிற கரையை உடைத்துக் கொண்டு காட்டாறாகப் பெருகினான் அவன். தந்தை, தாய், உடன் பிறந்தான் அத்தனை பேருடைய பேச்சையும் மதிக்காமல் இந்த மனிதனைக் காதலித்து மணந்த வேதனை அவளை வாட்டியது. வாழவும் முடியவில்லை. அவனை விட்டுவிட்டு ஓட வேறு போக்கிடமும் இல்லை. சாகவும் வழியில்லை. வீட்டின் நாலு சுவர்களுக்குள்ளேயே தேய்ந்து நைந்து சண்பகம் நலிந்து கொண்டிருந்தாள், கூட்டம், இயக்கம், கட்சி வேலைகள் என்று, வீட்டுக்குச் சதா வந்து கொண்டிருந்த கும்பலுக்குப் பிரியாணி தயாரித்துப் போடும் சமையற்காரியாகக் காலந்தள்ளினாள் அவள். பார்க்க அடையாளமே தெரியாமல் எலும்பும் தோலுமாகக் களையிழந்து போனாள் சண்பகம். சண்ப கத்தை இந்த நிலையில் வைத்ததற்காகத் திருமலையைக் கண்டிப்பார் யாருமில்லை.

“தலைவர் இருக்காங்களா?” - என்று கைகட்டி வாய் புதைத்துத் தேடி வருகிறவர்களிடம் அவனைவிட்டுக் கொடுத்து அவள் என்ன சொல்ல முடியும்? வீடு, வருமானம், மின் விசிறி, கட்டில், சோபா என்று வசதிகள், பெருகின. அன்பும், ஒட்டுறவும் குறைந்தது. திருமலையை இரவு நேரத்தில் யாராவது தேடி வந்தால், “அவரு இங்கே இல்லீங்க... ‘அந்த வீட்டிலே’ போய்ப் பாருங்க...” என்று இவளே பதில் சொல்லும்படி உள்ளுரிலேயே ஒரு சக்களத்தி வீடு ஏற்பட்டு விட்டது, பகலில் இங்கே, இரவில் அங்கே என்று வாழப் பழக்கிக் கொண்டு விட்டான் திருமலை. அந்தக் கொடுமையையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்தாள் அவள்.

கொஞ்ச நாள் “கூட்டம் முடிஞ்சிதும் அண்ணன் இங்க சாப்பிட வரலேன்னு தாக்கல் சொல்லியனுப்பிச்சாரு. சாப்பாடு வெளியிலயாம்” - என்று கட்சி ஆள் ஒருத்தன் வந்து தகவல் சொல்லிக் கொண்டிருந்தான். அப்புறம் அதுவும் நின்று போய் விட்டது. அவளாகப் புரிந்து கொள்ள வேண்டிய நிலைதான். பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு வயதான ஆச்சி சண்பகத்திடம் அடிக்கடி துணைக்கு வந்து பேசிக் கொண்டிருந்தாள். அறுபது வயதுக்கு மேல் ஆகி வெளேரென்று தும்பைப் பூவாகத் தலைநரைத்துப் போன அந்த ஆச்சி சிலநாள் பழக்கத்தில் சண்பகம் எதுவும் வாய் திறந்து சொல்லாமலே அவளது வேதனைகளைப் புரிந்து கொண்டாள். குழந்தை ராஜாவை எடுத்து வைத்துக் கொஞ்சும் போது அந்த ஆச்சி “உங்க அப்பன் இப்பிடிப் போயிட்டானேடா பாவி” என்று சிரித்துக்கொண்டே சொல்வாள். அப்போது சண்பகம் குறுக்கிட்டு, “ஆச்சி! இவனாவது உருப்படியா வளரட்டும்... அப்பனைப் பத்தியே இவங்கிட்டப் பேசாதீங்க...” என்பாள். ஆச்சிக்குச் சண்பகத்தினிடம் அளவு கடந்த அதுதாபமும், பிரியமும் உண்டு. அடிக்கடி சண்பகத்தைத் தேற்றுவதற்காக ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பாள். ஒரு நாள் ஆச்சி சண்பகத்திடம் பேசும்போது சொன்னாள்:

“அப்பன், ஆத்தா, சாதி சனங்களையெல்லாம் விட்டுப் போட்டு ஒண்ணையும் லட்சியம் பண்ணாமே நீ இந்த மனுஷனை நம்பி வந்தே. இது பழைய ஊரா இருந்தா ஊராரே இப்ப இவன் பண்ற அக்கிரமத்தைத் தட்டிக் கேட்பாங்க. பழைய சமூகக் கட்டுப்பாட்டிலே தனி மனிதன் தப்பாவோ, தாறுமாறாகவோ நடந்துக்கிடறது. அவனோட சொந்த விஷயம்னு விட்டுட்டு ஒதுங்கிப் போயிட மாட்டாங்க. உரிமை எடுத்திட்டுக் கண்டிப்பாங்க. ஒரு தெருவிலே ஒரு வீட்டிலே தீப்பிடிச்சா பக்கத்திலேயும் பரவிடக் கூடாதுன்னு ஊர் பூரா ஒடியாந்து தீயை அணைக்கிற மாதிரித்தான் அன்னிக்கி இதுவும் இருந்திச்சு. ஒரு காட்டிலே நெருப்புப் பத்திக்கிட்டா எல்லா மரமும் தான் அழியும்கிற மனப்பான்மை அன்னிக்கி இருந்திச்சு. பெரியவங்க கண்டிப்பாங்களேங்கிற பயம் அன்னிக்குப் பெரிய அம்சமா இருந்து தப்புப் பண்றவங்களைத் தடுத்திச்சு. தப்புத் தண்டாவுக்குப் போனாப் பாவம், சாமி கண்ணை அவிச்சுப் போடும்னு நம்பிக்கை வச்சிருந்தாங்க இன்னிக்கிப் பயமும் இல்லே... நம்பிக்கையும் போச்சு. யாரும் எதுக்கும் பயப்பட வேணாம்னு ஆயிப்போயிடிச்சி, யாரும் எதையும் நம்பாத படியும் பண்ணிட்டாங்க. தனி மனுசன் ஒழுக்கங் கெட்டுப் போனா அது மொத்த சமூகத்தையும் உடனே பாதிக்கலேன்னாலும் படிப்படியாப் பாதிக்கத்தான் செய்யும். தனி மனித ஒழுக்கத்தில் பிடிக்கிற தீயாலே சமூக ஒழுக்கமும் பற்றிக்கொண்டு எரிந்து சிதைவது தவிர்க்க முடியாமப் போயிடும்! இன்னிக்கு யாருக்குமே அது புரியறதில்லே சண்பகம்! தேவைக்கு மேலே தனி மனுஷனுக்குச் சுதந்திரம் கொடுத்திட்டா அது இப்பிடித்தான் ஆகும்டி.”

“யாரு குடுத்தாங்க ஆச்சி? எல்லாம் இவங்களா எடுத்துக்கிற சுதந்திரம்தானே?”

“அதில்லேடி! சமூகக் கட்டுப்பாடு, பொது ஒழுக்கம்லாம் வேண்டாம்கிற அளவு அந்த சுதந்திரம் வந்திரிச்சு. கட்டுப்பாடில்லாத சுதந்திரம் இந்த மாதிரித்தான் ஆகும்.”

“அதாவது முன்னெல்லாம் பெரிய பெரிய தப்புக்களைப் பண்ற ஒரு மனுஷனை அந்தத் தப்புக்களை மறந்திட்டு நல்லா மேடையிலே பேசறான், கச்சேரியிலே, அழகாப் பாடறான் டிராமாவிலே நல்லா நடிக்கிறான்னெல்லாம் மன்னிச்சுப் புகழ்ந்துட மாட்டாங்க...”

“இப்ப அப்பிடிச் செய்துடறாங்கங்கிறீங்க. அது தானே ஆச்சி, நீங்க சொல்ல வந்தது?”

“சரியாப் புரிஞ்சுக்கிட்டிருக்கேடி! உனக்கு இத்தினி பெரிய துரோகத்தைப் பண்ணிப்போட்டு உம் புருஷன் மேடை மேடையா ஏறி அத்தினி நீளத்துக்கு தோளிலே ஒரு துண்டையும் போட்டுக்கிட்டு இப்பிடி நெஞ்சை நிமிர்த்திப் பேச முடியுமா? பேசி கை தட்டு வாங்க முடியுமா? சீர்திருத்தச் சிங்கம், பகுத்தறிவுப் பகல்வன்னு பட்டம்லாம் போட்டுக்க முடியுமா? பெரிய குறையுள்ளவங் களைச் சிறிய குணங்களுக்காகப் புகழுகிற சமூக அமைப்பே சீரழிஞ்ச நிலைமையின் அடையாளம் தான்...”

“இப்பத்தான் பணம், பதவி, எல்லாத்தையும் போலப் புகழும் நமக்குக் காரியம் சாதிச்சுக் குடுக்கிறவங்களுக்கு நாம தர்ற லஞ்சத்திலே ஒண்ணு மாதிரி ஆயிடிச்சே ஆச்சி? தகுதிக்காகவா புகழறோம்? காரியம் ஆவதற்காகத்தானே புகழறோம்? காரியம் ஆகிறதுக்காக ஒருத்தருக்குப் பணத்தை லஞ்சமாகக் கொடுக்கிற மாதிரிப் புகழையும் லஞ்சமாக் குடுக்கிறோம். அவ்வளவுதானே?”

“புகழ், பணம், மரியாதை, மதிப்பு. எல்லாத்தையும் தகுதிக்காகக் குடுக்காம காரியம் ஆகிறதுக்காகக் குடுக்கப் பழகிவிட்ட காலத்திலே இதுதாண்டி நடக்கும் ஒழுக்கமா இருக்கணும்னு எவன் நினைப்பான்? எவன் இனிமே அதுக்கு ஆசைப்பட்டு அக்கறை காட்டுவான்?”

----------------

அத்தியாயம் 9

சண்பகத்தின் துயரமோ வேதனையோ, திருமலையின் வளர்ச்சியைப் பாதிக்கவில்லை. அவள் தேய்ந்து துருப்பிடித்துக் கொண்டிருப்பதை உணரவோ, புரிந்து கொள்ளவோ நேரமின்றியே அவன் வளர்ந்து கொண்டிருந்தான். சண்பகத்தின் வசதிகள், பொருளாதாரத் தேவைகள் கவனித்துக் கொள்ளப்பட்டன. திருமலையிடமிருந்து வாழ்க்கை மட்டும் கிடைக்கவில்லையே ஒழியப் பணமும் வசதிகளும் அவளுக்குக் கிடைத்தன.

மேடை நாடகங்கள் மூலம் கொள்கைகளையும் இலட்சியங்களையும் பரப்பவேண்டுமென்ற முனைப்பு அவனது இயக்கத்தில் அதிகமாயிற்று. விதவை மறுமணம், இந்தி எதிர்ப்பு, சநாதன எதிர்ப்புக் கொள்கைகளை உள்ளடக்கி ‘வேரிற் பழுத்த பலா’ - என்ற நாடகத்தைத் திருமலை எழுதி அரங்கேற்றினான். அதில் எதுகை மோனை நயத் தோடு அவன் எழுதியிருந்த வசனங்கள் காட்சிக்குக் காட்சி கைத்தட்டலைப் பெற்றன. அவனே அதில் முக்கியப் பாகமேற்று நடிக்கவும் செய்தான். முதன்முதலாக அவனுக்குப் பழக்கமான அந்த அழகிய பெண்ணும் அதில் நடித்தாள்.

‘செந்தமிழ்ச் சிட்டுகள் சீர்திருத்த பனுவல் பாடும் வைத்தமிழ் நந்தவனம் - நமக்கோர் சொந்தவனம்’ - என்பதுபோல் அவன் அதற்கு எழுதியிருந்த வசனங்கள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன.

“செந்தமிழ்ப் பூஞ்சிட்டுக்களே நீங்கள்
திராவிடப் பூங்காவில் வந்தாடுவீர்!
தென்னவர் எதிரியைப் பந்தாடுவீர்!”

என்பதுபோல் அவன் எழுதியிருந்த பாடல் ஒன்று மிகவும் புகழ் பெற்று விட்டது. மேடைக்கு மேடை அதைப்பாட ஆரம்பித்து விட்டார்கள். ‘நமது இயக்க வீரர் திருமலை எழுதிய ‘செந்தமிழ்ப் பூஞ்சிட்டுக்களே’ என்ற பாடல் மிக அருமையாக, செழுமையாக, எளிமையாக - வலிமையாக - இயக்க உணர்வுகளை எடுத்தியம்புவதாய் அமைந்து விட்டது. அப்பாடல் தலை சிறந்தது - கலை சிறந்தது - நிலையுயர்ந்தது. திரு விடமெங்கும் ஒரு இடமும் விடாமல் ஒலிக்க வேண்டிய பாடல் அது என்பதை நீ உணர்ந்திட வேண்டும் தம்பீ’ - என்பதாக நூறாவது நாடகத்துக்குத் தலைமை வகித்து அது திருச்சி தேவர் மன்றத்தில் நடந்த போது அவன் பேரறிஞர் பெருந்தகையாய்க் கருதிய அண்ணனே புகழ்ந்த பின் அவனுடைய மதிப்பு மேலும் அதிகமாகிவிட்டது. அதை ரெக்கார்டு ஆகப் பதிவு செய்து இயக்கக் கூட்டங்களில் எல்லாம் ஒலிபரப்பினார்கள். அண்ணனின் அபிமானத்துக்குரிய பாடல் என்பதால் அது பெரும் புகழ் பெற்றது. பெரும் பொருள் ஈட்டியது.

இயக்க உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வசனங்களும், பாடல்களும், நாடகங்களிலும், மேடைகளிலும், திரைப்படங்களிலும் அமோக வெற்றியைப் பெற்றுக் கொண்டிருந்த காலம் அது.

தங்கள் இயக்கப் போராட்டங்களில் அவன் முன்னணியில் நின்றான் - ‘லால்சந்த் நகர்’ என்ற பெயரைப் ‘புளிய மரத்துப்பட்டி’ என்ற அதன் பழைய நிலைக்கு மாற்றுவதற்காக அந்த நிலையத்தில் ரயிலுக்கு முன் மறியல் செய்து தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த முன்னணி வீரர்களுள் அவனும் ஒருவனாயிருந்தான். என்றாலும் தனக்கு முறையான படிப்பில்லை என்பதை உணரும்போதும், உணர்த்தப்படும்போதும் அதை உணர்த்தியவர்கள் மீது அவன் படமெடுத்து ஆடி விஷம் கக்குவதற்குத் தயங்கியதில்லை.

உள்ளுர்த் திருக்குறள் கழகத்தில் ஒரு முறை அவனைப் பேசக்கூப்பிட்டு அவன், “திருக்குறளின் நாலாயிரம் பாடல்களிலும் தமிழ்ப் பண்பாடு தகத்தகாயமாய் மின்னிடுதல் கண்டு பெருமிதப்படுகிறோம் நாம். தமிழினத்தின் வெற்றி இது” - என்று இடி குரலில் முழங்கிய போது, கூட்டத்திலிருந்து ஒரு குரல் இடைமறித்தது. அள்ளி முடித்த கட்டுக்குடுமியும் பட்டை பட்டையாய் விபூதிப் பூச்சுமாயிருந்த ஒரு நடுத்தர வயது மனிதர், “திருக்குறளை ஒருதரம் புரட்டிப் பார்த்து விட்டாவது பேச வரக் கூடாதா அப்பா” என்று கேட்டு விடக் கூட்டமே கொல்லென்று சிரித்து விட்டது. திருக்குறளில் இருப்பதே மொத்தம் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள் தான் என்ற விவரம் அன்று வரை அவனுக்குத் தெரியாது. இந்த மாதிரி தர்ம சங்கடமான நிலைமைகளைத் தவிர்க்க எண்ணி யாரிடமாவது கொஞ்சம் முறையாகத் தமிழ்படிக்க எண்ணினான் அவன்.

யாரிடம் தமிழ் படிக்கலாம் என்று யோசித்த போது எழிலிருப்பு நகரின் தமிழ்ப் புலவர்கள் ஒவ்வொருவராக அவனது நினைவுக்கு வந்தனர்.

1. உள்பட்டணம் சித்தாந்த ரத்நாகரம் சிவவடிவேல் உடையார், 2. அஷ்டாவதானம் அரியநாயகத் தேவர், 3. புலவர்-பண்டித வித்வான்-வேணுகோபாலசர்மா.

இந்த மூவரில் சிவவடிவேல் உடையார் திருமலையின் பேரைக் கேட்டாலே சிவசிவ என்று காதைப் பொத்திக் கொள்வார். தேவருக்கும் அவனுக்கும் ஒத்து வராது. ஒய்வு பெற்ற டிஸ்ட்ரிக் போர்டு தமிழாசிரியரான சர்மாவிடம் கற்கலாம் என்றால் கொஞ்சம் தயக்கமாயிருந்தது. பாமர மக்கள் தன்னையே பெரும் புலவர் என்று நினைத்துக் கரகோஷ்ம் செய்கிற அளவு புகழுள்ள தான் போய் ஊர் பேர் தெரியாத சர்மாவிடம் தேடித் தமிழ் கற்பதா என்று கூச்சமாகக் கூட இருந்தது. ஆனால் சர்மா பயந்த சுபாவமுள்ளவர். வரச் சொல்லிக் கூப்பிட்டனுப்பினால் கூட வந்து விடுவார். வறுமையில் சிரமப்படுகிறவர், கொஞ்சம் பண உதவி செய்தால் கூட அதிகம் இழுத்த, இழுப்புக்கு வருவார். தேடிப் போய்க் கற்க அவசியமில்லாமலே வந்து சொல்லிக் கொடுத்து விட்டுக் கொடுத்த பணத்தை மரியாதையாக வாங்கிப் போவார். பணிவாகவும் இங்கிதமாகவும் நடந்து கொள்வார்.

உள்பட்டண விரோதியான அவனுக்கு உடையார் சொல்லிக் கொடுக்க மாட்டார். தேடி வந்து கும்பிட்டுக் காலில் விழுந்தாலொழியத் தேவர் அவனைப் பொருட் படுத்தவே மாட்டார். சுயமரியாதைக்கு இழுக்கு இல்லாமல் சர்மாவிடம் தான் கற்க முடியுமென்று திருமலைக்குத் தோன்றியது. ஓர் ஆளிடம் சொல்லிச் சர்மாவைக் கூப்பிட்டனுப்பினான். சர்மா உடனே ஓடோடி வந்தார்.

“என்ன கூப்பிட்டனுப்பிச்சேளாமே?”

“ஆமா... இருங்க... பேசலாம்...”

“உங்களுக்கு இப்ப வேலை ஜாஸ்தின்னா அப்புறமா வேணா வந்து பார்க்கறேனே? நிறையப்பேர் தலைவரைப் பார்க்கணும்னு இங்கே வெளியிலே காத்திண்டிருக்காளே...?”

“உங்ககிட்டக் கொஞ்சம் தனியாப் பேசணும்... எல்லாரையும் இன்னொரு நாள் வரச்சொல்லி அனுப்பிடறேன்.”

“உங்க இஷ்டம்.”

திருமலை ஒரு தொண்டனைக் கூப்பிட்டு, “இந்தா, அந்த ஆளுங்களை எல்லாம் இன்னொரு நாள் வரச் சொல்லித் திருப்பி அனுப்பு. உள்ளார யாரையும் விட்டுறாதே... நான் இவருகிட்டத் தனியாகக் கொஞ்சம் பேசணும்.”

“சரிங்க...”

அவன் போனதும் கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டபின் திருமலை அவரிடம் தயங்கித் தயங்கித் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். கேட்டு விட்டு சர்மா சிரித்தார்.

“ஏன் சிரிக்கிறீங்க சாமி?”

“தயவு செய்து என்னைச் சாமீன்னு கூப்பிடாதீங்கோ! எனக்கு அது பிடிக்காது! சார்னாலே போதும், சார் பிடிக்கலேன்னா ஐயான்னு சொல்லுங்க. இதெல்லாம் உங்களுக்கு அவசியமான்னு நினைச்சேன். சிரிப்பு வந்துடுத்து. நீங்கதான் தமிழ்லே சரமாரியா மேடையிலே பேசறேளே, இன்னும் என்ன கத்துக்கணும்?”

“முறையா இலக்கண இலக்கியமெல்லாம் தெரியணும்.”

“அதுக்குவேண்டிய பொறுமையும் அவகாசமும் உங்களுக்கு இருக்கா?”

“இருக்கோ இல்லியோ... உண்டாக்கிட்டே தீரணும்! நான் ஊர்லே இருக்கறப்பல்லாம் ஆளனுப்பறேன். ஒரு நடை வந்திட்டுப் போயிடுங்க... மாசம் அம்பது ரூபா குடுத்திடறேன். ஆனா ஒரே ஒரு கண்டிஷன்...”

“என்ன கண்டிஷன்...?”

“நான் உங்ககிட்ட ட்யூஷன் படிக்கிறேன்னு யார் கிட்டவும் மூச்சு விடப்படாது...”

“...”

“வேணும்னா நட்பு முறையிலே நானும் திருவும் அடிக்கடி சந்திச்சுப் பேசறதுண்டுன்னு சொல்லிக்குங்க. எனக்கு அதிலே ஆட்சேபனை இல்லே. தலைவர் திரு சர்மாகிட்ட ட்யூஷன் படிக்கிறாராம்னு எனக்குக் கெட்ட பேராயிடப்படாது.”

‘இதுல கெட்ட பேருக்கு என்ன இருக்கு’ - என்று கேட்க நினைத்துக் கேட்காமலே அடக்கிக் கொண்டார் சர்மா. இன்றைய நிலையில் மாதம் ஐம்பது ரூபாய் என்பது அவருக்குப் பெரிய வரவு. அந்த வரவை இழக்க விரும்பாமல் சம்மதித்தார் அவர். படிக்க ஆசை. அதே சமயம் இன்னாரிடம் படிக்கிறோம் என்பது வெளியே தெரியக்கூடாது என்று ஒரு கூச்சம். அவன் சரியான அரசியல் வாதியாக நடந்து கொண்டான்.

மாதத்தில் நாலைந்து நாள் தான் அந்த ட்யூஷன் சாத்தியமாயிற்று. மற்ற நாட்களில் திருமலைக்கு நேரம் கிடைக்கவில்லை. செந்தமிழ் நாவலர் என்று மக்கள் தனக்குச்சிறப்புப் பட்டம் கொடுத்துத் தன்னைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, தான் ஓர் ஒய்வு பெற்ற தமிழ் வாத்தியாரிடம் படிக்கிறோம் என்பது வெளியே சிறிதும் தெரிந்து பரவி விடக்கூடாது என்பதில் அவன் மிகவும் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தான். அதற்காக அதிகக் கவனம் எடுத்துக் கொண்டான்.

யாப்பிலக்கணம் படிக்கையில் “அகர முதல் எழுத்து எல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு” - என்று குறளை அவன் கைப்பட எழுதி அசை, சீர், தளை பிரித்துக் காட்டச் சொல்லி அவனுக்கு ஒரு ஹோம் ஒர்க் கொடுத்திருந்தார் சர்மா, “அகற முதள எளுத்தெள்ளாம் ஆதி பகவண் முதற்றே உளகு” என்று திருமலை பதிலுக்கு எழுதியிருந்த இலட்சனத்தைப் பார்த்துச் சர்மாவுக்கு பகீரென்றது. தமிழில் இவ்வளவு எழுத்துப் பிழையோடு எழுதுகிற ஒருவனை மக்கள் ‘செந்தமிழ் நாவலர்’ என்று அழைக்கத் துணியும் அளவிற்குப் பாமரர்களாகவும் ஒன்றை உணர்ச்சிப் பூர்வமாக மட்டுமே கண்ணை மூடிக் கொண்டு அளந்து முடிவு செய்கிறவர்களாகவும் இருந்தது சர்மாவுக்கு வியப்பை அளித்தது. அன்றிலிருந்து திருமலையை நிறைய எழுதச் செய்து திருத்திக் கொடுக்கத் தொடங்கினார் அவர். சர்மாவின் அடக்கமும் தனக்குச் சொல்லிக் கொடுப்பதை இரகசியமாக வைத்திருக்கும் குணமும் திருமலையைக் கவர்ந்தால் அவரது டியூஷன் மாதச் சம்பளத்தை எழுபத்தைந்து ரூபாயாக உயர்த்தினான் அவன். அவரை அவனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

அந்த ஆண்டின் இறுதியில் திருமலையின் இரண்டாவது கொள்கைப் பரப்பு நாடகமாகிய ‘திராவிட முழக்கம்’ அரங்கேறிச் சக்கைப் போடு போட்டது. முதல் நாடகமாகிய ‘வேரிற் பழுத்த பலா’வை விட, இதற்கு அதிக வரவேற்பு இருந்தது. இந்தப் புதிய புகழ் வேறொரு பளபளப்பான மாறுதலுக்கு அவனை விரைந்து இட்டுச் சென்றது.
--------------

அத்தியாயம் 10

மேடை நாடகங்களுக்கும் இயக்கம் தொடர்புடைய இருபொருள்படும் வசனங்களுக்கும், பாடல்களுக்கும், திருமலை பெற்ற பாராட்டும், கை தட்டுக்களும், ஒரு சினிமா கம்பெனி அதிபரைப் பெரிதும் கவர்ந்தன. அவர் தாம் தயாரிக்க இருந்த ஒரு படத்திற்குச் சென்னையில் வந்து தங்கி வசனம் எழுதிக் கொடுக்கும்படி திருமலையை கேட்டார். ஒருபுறம் அவனுக்கு மலைப்பாயிருந்தாலும் மறுபுறம் அதில் ஈடுபட வேண்டுமென்று ஆசையாகவும் இருந்தது. பெருவாரியான மக்களைக் கவர்ந்து தன்பக்கம் இழுக்க அது ஒரு சாதனம் என்று அவனுக்குப் புரிந்திருந்தது. இயக்கமே அப்படித்தான் புரிந்து கொண்டிருந்தது.

இதற்கிடையில் பதவியிலிருக்கும் அமைச்சராக எழிலிருப்புக்கு விஜயம் செய்த சின்னக் கிருஷ்ணராஜனுக்கு எதிராக அவனும் இயக்கத் தோழர்களும் கறுப்புக் கொடி காட்டினார்கள். காங்கிரஸ் அமைச்சராகப் பதவியிலிருந்த சின்ன உடையார் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதைக் காட்டவும் மதச்சார்பற்ற அரசின் பிரதிநிதியாகிய உடையார் எழிலிருப்புத் தேரோட்டத்தில் முதல் வடம் பிடிக்க வருவதைக் கண்டித்தும் கறுப்புக்கொடி பிடிக்கப்பட்டது. கறுப்புக் கொடி காட்டுவதற்கான இரண்டாவது காரணம் ஊரில் யாருக்கும் பிடிக்கவில்லை. சின்ன உடையாருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தேருக்கு முதல் வடம் பிடிப்பது என்பது வழக்கமாகியிருந்தது. ஒரு வம்புக்காக அதை எதிர்ப்பது என்பது யாருக்கும் திருப்தி தரவில்லை. திருமலைக்கு இரகசியமாகத் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த வேணுகோபால் சர்மா கூட அதை அவனிடமே கண்டித்தார். மதச்சார்பற்ற என்பதற்கு அர்த்தம் எல்லா மதங்களையும் சமமாகப் பாவிக்கிறது என்பது தானே ஒழிய, இந்து மதத்தை மட்டும் ஒழிக்கிறதுங்கறதில்லே. ஒரு கிறிஸ்தவ அமைச்சரே இஸ்லாமிய அமைச்சரோ இப்படித் தங்கள் மத சம்பந்தமான விழாவுக்கு வந்தாங்கன்னா அவங்களுக்குக் கறுப்புக் கொடி பிடிக்கிற துணிச்சல் உங்களுக்கு உண்டா? ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதுபோல் நடந்து கொள்கிறீர்களே!”

“சாமி இதெல்லாம் அரசியல்! உங்களுக்குப் புரியாது. நீங்க கண்டுக்காம ஒதுங்கிக்குங்க! எங்களுக்கு உடையாரை எதிர்க்கணும், அதுக்கு என்ன வேணாச் செய்வோம்” என்று அவருக்குப் பதில் சொல்லிச் சமாளித்தான் திருமலை. சர்மா எத்தனையோ தடவை திருப்பித் திருப்பிக் கண்டித்தும் அவன் அவரைச் சாமி என்று தான் விளித்தான்.

அவன் சினிமாக் கம்பெனிக்கு வசனம் எழுதுவதற்காகச் சென்னைக்குப் புறப்பட வேண்டிய சமயத்தில் இந்தக் கறுப்புக் கொடிப் போராட்டம் வந்ததால் பயணம் தடைப்பட்டது. திருவிழாவில் தேரோட்டத்துக்கு இடையூறாகக் கலவரம் மூளுமோ என்று பயந்தனர் போலீஸார், கறுப்புக்கொடிப் போராட்டத்துக்கு அநுமதி தரப்படவில்லை. தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

துணிந்து தடையை மீறிக் கறுப்புக்கொடி காட்டியதால் கைதாகி ஒரு வாரம் கழித்துத்தான் வெளியிலே வர முடிந்தது. உடையார் எதை செய்தாலும் எதிர்க்கவேண்டுமென்ற திருமலையின் போக்கு ஊராருக்குப் பிடிக்கவில்லை. அதனால் இந்தக் கறுப்புக்கொடிப் போராட்டம் ஆதரவற்றுப் பிசுபிசுத்துப் போயிற்று. விடுதலையானதும் அவன் சென்னைக்குப் புறப்பட வேண்டியிருந்ததனால் போராட்டத்தின் தோல்வியை அவன் பொருட்படுத்தவில்லை ஆனால் கறுப்புக்கொடிப் போராட்டத்தைத் தவிர வேறொரு தோல்வியும் அவனுக்கு ஏற்பட்டது.

தனக்கு முதல் முதலில் ஒர் இரவுப் பறவையாகப் பழக்கமாகிப் பின்பு தன் நாடகங்களில் நடிக்கும் நடிகையாகிவிட்ட பெண்ணைத் தவிர எழிலிருப்பிலேயே அவனோடு இன்னொரு வீட்டில் ஏறக்குறைய மனைவியாக வாழ்ந்த மற்றொரு பெண்ணைத்தான் அவன் தன்னோடு சென்னைக்குக் கூட்டிக்கொண்டு போவதாக முடிவு செய்திருந்தான். சண்பகத்தைப் போன்ற அதிகப் படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்ணை அவன் சென்னைக்கு அழைத்துப் போவதில்லை என்றே முடிவு செய்துவிட்டான். நீண்ட காலமாகச் சண்பகத்தைப் பார்க்காமலே இருந்துவிட்ட அவன் ஊருக்குப் போவதற்கு முன் சொல்லிக் கொண்டு போகலாம் என்று அவளிடம் போனான். இவன் போவதற்கு முன்பே ‘சக்களத்தியைத் தான் சென்னைக்கு அழைத்துப் போகிறான்’ என்கிற தகவல் சண்பகத்துக்கு எப்படியோ எட்டியிருந்தது. இதற்கு நடுவில் ஒருநாள் வெட்கத்தை விட்டு நந்தவனத்துக்குத் தேடிப் போய்த் தன் சகோதரனைச் சந்தித்துத் தன்னுடைய சிரமங்களை எல்லாம் சொல்லிவிட்டு வந்திருந்தாள் அவள். அவனும் அவள்மேல் அநுதாபத்தோடு எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டிருந்தான். “கஷ்டகாலத்தில் நம்ம உடன்பிறப்புத்தான் நமக்கு உதவுவாங்க. எதுக்கும் உன் கூடப் பிறந்தவனைப் பார்த்து எல்லாம் சொல்லி வையி” - என்று இந்த விஷயத்தில் பக்கத்து வீட்டு ஆச்சிதான் சண்பகத்துக்கு யோசனை சொல்லியிருந்தாள். இப்போது, புருஷன் தன்னிடம் சொல்லிக் கொண்டு போக வரப் போவதை அறிந்ததும் சண்பகம் அவசர அவசரமாக ஆச்சிமூலமே சகோதரனுக்குத் தகவல் அனுப்பினாள். அவனும் உடனே வந்தான், தொடர்ந்த நரக வாழ்க்கையாகப் பட்டியில் அடைப்பட்ட மாடு போல் வாழ்வதைவிட இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று சண்பமுகம் இப்போது துணிந்திருந்தாள்.

“முதல்லியே நீ இங்கே இருக்கவேணாம் ஆச்சி வீட்டிலே இரு. கொஞ்ச நேரம் நான் பேசிச் சமாளிக்கிறேன். அப்புறம் திடீர்ன்னு தற்செயலா வர்ற மாதிரி நீயும் ஆச்சியும் உள்ளே வாங்க” என்று சொல்லிச் சகோதரனை ஆச்சி வீட்டில் வந்து மறைந்திருக்கச் செய்தாள் சண்பகம்.

எதிர்பார்த்தபடி திருமலை வந்தான். அவசர அவசரமாக இரண்டு வார்த்தை சொல்லிவிட்டுக் கிளம்பும் வேகத்தில், “இந்தா சண்பகம் இப்போ உட்கார நேரமில்லே. எனக்கு அவசரம், மெட்ராஸ் புறப்பட்டுப் போறேன். சினிமாவுக்கு வசனம் எழுதற சான்ஸ் வந்திருக்கு. மாசா மாசம் பணம் வந்து சேரும், வீட்டையும், பயலையும் கவனிச்சிக்கோ...?” - என்று ஆரம்பித்தான்.

“நீங்க மட்டும்தான் தனியாப் போறியளா?”

“ஆமாம்... அதுக்கென்ன...?”

“பொய் சொல்லாதீங்க... அந்த வடக்குத் தெருக்காரி உங்களோட வர்றதாக் கேள்விப் பட்டேனே? உள்ளதைச் சொல்லுங்க?”

“அப்படித்தான் வச்சுக்கயேன், அவளை எங்கூட இட்டுக்கிட்டு போறதுக்கு உன் பெர்மிஷன் எனக்கு தேவையில்லை.”

“உங்களுக்கு எதுக்குத்தான் என் பர்மிஷன் தேவை? நீங்கதான் எல்லாப் பாவத்துக்கும் துணிஞ்ச மனுஷனாச்சே...?”

“ஆங்... போடீ உங்கிட்டப் பெரிசா அட்வைஸ் கேக்க நான் இங்கே வரலே, பாவ புண்ணியத்துக்கு நீதான் ஹோல்சேல் ஏஜென்ஸி எடுத்திருக்கியோ...?”

இந்தச் சமயத்திலே சண்பகத்தின் சகோதரனும் ஆச்சியும் உள்ளே நுழைந்தனர்.

“வாப்பா மச்சான்! நீ எப்ப வந்தே?” - என்று அவனை எகத்தாளமாக வரவேற்றான் திருமலை.

“நீங்க மெட்ராஸ் போறதா இருந்தா அக்காவையும் ராஜாவையும் தான் உங்க கூடக் கூட்டிக்கிட்டுப் போகணும். அதுதான் முறை.”

“முறை என்னடா பெரிய முறை? நான் எதைச் செய்யறேனோ அதுதாண்ட முறை.”

“இப்படி முரட்டடியாப் பேசினா எப்பிடித் தம்பி? சண்பகத்துக்கும் உங்களை விட்டா வேற யார் இருக்காங்க நீங்கதானே எல்லாம்?” - என்று ஆச்சியும் இதமாக எடுத்துச் சொன்னாள். அவனே என்ன பேசுகிறோம் என்ற சுய நினைவே இன்றி, “ஏன்? வேற யார் இருக்காங்கன்னு குறைப்பட்டுக்க வேண்டாமே, யாரையாவது நல்ல ஆளாப் பார்த்துத் தேடிக்கிறதுதானே?” - என்று சொல்லியதும், “டேய் நாக்கை அளந்து பேசு” - என்று சண்பகத்தின் தம்பி கையை ஓங்கிக்கொண்டு திருமலை மேல் பாய ஆச்சி அவனைத் தடுத்தாள். அவன் கூறிய வார்த்தைகள் சண்பகத்தின் ரோஷத்தைக் கிளறிவிட... அவள் எரிமலையாகச் சீறி வெடித்தாள்.

“உன் புத்திதானே உனக்குத் தோணும். நாய் எச்சிக் கலையிலே வாய் வைக்கிற மாதிரி நீ ஊர் ஊராப் பொம்பிளைப் பித்துப்பிடித்து அலையிறியே, அது மாதிரி என்னையும் நினைச்சியா? நான் நல்ல வமிசத்திலே நல்ல அப்பனுக்குப் பொறந்தவடா” - என்று சண்பகம் கூறியதும் அவள் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது போல அவள் மேல் விருட்டென்று பாய்ந்தான் திருமலை. அவனு டைய மிகவும் பலவீனமான பகுதியை அவள் சொற்கள் சீண்டிவிட்டன. ஆச்சியும். சண்பகத்தின் தம்பியும் அக்கம் பக்கத்தாரும் ஓடி வந்து விலக்கியிராவிட்டால் திருமலை சண்பகத்தைக் கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பான் அப்போது.

“அறுத்தெரியறதுக்கு நீ எங்கழுத்திலே தாலி கூடக் கட்டலே... இன்னியிலேருந்து உனக்கும் எனக்கும் இனிமேப் பேச்சு வார்த்தையே கிடையாது. உன் முஞ்சியிலேயே இனிமே முழிக்க மாட்டேன்” என்று குழந்தையை எடுத்துக் கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறித் தம்பியோடு மறுபடி நந்தவனத்துக்கே போய்விட்டாள் சண்பகம். எந்த ஒரு பலவீனமான பகுதியைச் சீண்டியதற்காக அவன் உள் பட்டணத்தின் மீது ஜன்ம விரோதியாக மாறினானோ அதே பகுதியை இப்போது கீறி ரணப் படுத்தி விட்டாள் சண்பகம். எல்லாவற்றையும் மறக்க மறைக்க அவன் வடக்குத் தெரு ஆசைநாயகியோடு பட்டினம் புறப்பட்டான். சினிமா உலகம் அவனைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. அவனது வாழ்க்கையில் மற்றோர் அத்தியாயம் புதிதாக ஆரம்பமாகியது. முதல் படம் அமோகமான வெற்றியை அடைந்தது. நூறு நாளையும் கடந்து பல ஊர்களில் படம் ‘ஹவுஸ்ஃபுல்’ ஆக ஒடவே ஒரே சமயத்தில் பல படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுத வேண்டிய சான்ஸ்கள் அவனைத் தேடி வந்தன. ஓர் உதவியாளர் நம்பிக்கையானவராக வேண்டி யிருந்தது. எழிலிருப்புப் புலவர் வேணுகோபால் சர்மா வுக்குத் தந்தி கொடுத்தான். சர்மா உடனே அடுத்த ரயிலிலேயே சென்னைக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்தார்.
---------------

அத்தியாயம் 11

திருமலைக்கு ஆசிரியராக இருந்து கற்பித்த சர்மா அவனுக்கே உதவியாளர் ஆகிவிட்டார். எல்லாச் செலவும் போக ஊரிலுள்ள குடும்பத்துக்கு மாதம் ஐந்நூறு ரூபாய் வரை அனுப்ப முடிகிறாற் போல ஒரு வேலையில் இருக்க நேர்ந்ததைத் தம் அதிர்ஷ்டமாக எண்ணினார் சர்மா. அவருடைய வயதுக்கும், அறிவுக்கும், அநுபவத்துக்கும் சினிமா உலக நடைமுறைகளின் விடலைத்தனமான ஆட்களும் பழக்க வழக்கங்களும் ஒத்து வரவில்லை என்றாலும் அவரை நன்றாகப் புரிந்து கொண்டிருந்த - அவருக்கு நன்றாகப் புரிந்த திருமலையோடு சேர்ந்து வேலை செய்வதில் சிரமம் எதுவும் நேரவில்லை.

திருமலை தாறுமாறாகவும், எழுத்துப் பிழையோடும் எழுதிப் போடுகிற ஸ்கிரிப்டுகளைத் திருத்திச் சரியாக எழுதி வைப்பது ஒன்றுதான் அவரது வேலையாயிருந்தது. பள்ளி நாட்களில் பையன்களின் காம்போசிஷன் நோட்டைத் திருத்துகிற மாதிரி இப்போது திருமலையின் வசனங்களில் எழுத்துப் பிழைகளையும், ஒலிப்பிழைகளையும் திருத்திப் போடுகிற வேலையைச் செய்தார் அவர். பேர் என்னவோ ‘ஸ்கிரிப்ட் அஸிஸ்டெண்ட்’ என்று தான் கொடுத்திருந்தார்கள். வாழ்க்கைத் தேவைகளும், வறுமையும் அவரை அந்த வயதிலும் அப்படி உழைக்க வைத்திருந்தன.

எழிலிருப்பிலிருந்து சென்னைக்குப் புறப்படும்போது ஏற்பட்ட கசப்பான அநுபவங்களைத் திருமலை மெல்ல மெல்ல மறந்து விட்டான். புதிய புகழும் வசதிகளும் பழைய துன்பங்களைச் சுலபமாக மறந்து போகச் செய்திருந்தன. எப்போதாவது சண்பகத்தின் நினைவு வந்து போகும். அவள் தான் அடிபட்டு விழுந்து படுத்த படுக்கையாகக் கிடந்த நாட்களில் நந்தவனத்தில் செய்த சிசுருஷைகள் நினைவு வரும். அந்தச் சண்பகமா இப்படிக் கடுமையான வார்த்தைகளை எல்லாம் பேசினாள் என்று கூடவே வியப்பும் ஏற்படும். ‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ என்பது போல் விளையாடி விட்டுத் தான் அவளைத் திரும்பிப் பாராமல் காடு மேய ஆரம் பித்ததாலேயே அவள் விரக்தியடைந்து மாற நேர்ந்தது என்பது அவனுக்கு உறைக்கவில்லை. சண்பகம் தன்னை மிகவும் மரியாதைக் குறைவாகப் பேசி விட்டுக் குழந்தையையும் தூக்கிக் கொண்டு தம்பியோடு ஒடி விட்டாள் என்பது மட்டுமே நினைவுக்கு வந்தது. ஊரிலிருந்து வந்து போன யார் மூலமோ, அவள் நந்தவனத்தில் பூத்தொடுத்துக் காலந்தள்ளுகிறாள், மகன் இராவணன் என்கிற ராஜாவை உள்ளுர்க் கான்வெண்ட் பள்ளி ஒன்றில் சேர்த்திருக்கிறாள் என்றெல்லாம் தகவல்கள் காதில் விழுந்தன.

திருமலை கடந்த காலத்தையும், கவலைகளையும் மறக்க நிறையக் குடிக்க ஆரம்பித்தான். ஊரில் எப்போதாவது பீடி என்றிருந்த புகைப் பழக்கம் இப்போது ‘சிகரெட்’ ஆகி ‘செயின் ஸ்மோக்கிங்’ என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டிருந்தது. எவ்வளவோ மனக்கசப்பு இருந்தும், படிக்கிற மகனுக்கு உதவியாக இருக்கட்டும் என்று சண்பகத்தின் தம்பி பெயருக்கு ஆரயிம் ரூபாய்க்கு டிராஃப்ட் ஒன்று எடுத்து அனுப்பியிருந்தான் அவன்.

“நமது மனத்தாங்கள் நம்மோடு போகட்டும். குழந்தை சிரமப்பட வேண்டாம். அவனை நல்ல கான்வெண்டாகப் பார்த்துச் சேர்த்திருப்பது பற்றி மகிழ்ச்சி. உங்கள் சிரமங்களோடு அவனது படிப்புச் செலவுகளையும் தாங்குவது முடியாத காரியம் என்று எனக்குப் புரிகிறது. என் மேல் கோபப்படாமல் அவ்வப்போது நான் இப்படி அனுப்புகிற பணத்தை ஏற்றுக் குழந்தையின் படிப்புச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும்” என்று அந்த டிராப்ஃடோடு சண்பகத்தின் தம்பிக்கு ஒரு கடிதமும் வைத்திருந்தான் அவன்.

டிராப்ஃட் சுவரில் அறைந்த பந்தாகத் திரும்பி வந்து சேர்ந்தது. அதோடு சண்பகத்தின் தம்பி கடுமையான மொழி நடையில் ஒரு கடிதமும் எழுதியிருந்தான்.

‘நான் ஒருவன் இருக்கிற வரையில் என் அக்காளும், மருமகனும் நாதியற்றுப் போய் விட மாட்டார்கள். உங்கள் பணத் திமிரும், கொழுப்பும் தான் உங்களை இப்படி எல்லாம் செய்யத் தூண்டுகிறது. இதை ஏற்றுக் கொள்கிற அளவு நாங்கள் மானங்கெட்டுப் போய்விடவில்லை. கோயில் வாசலில் பூத்தொடுத்து விற்றாவது தன் மகனைக் காப்பாற்ற முடியும் என்று என் அக்காளுக்கு நம்பிக்கையிருக்கிறது’ - என்பதாகக் குமுறலோடு எழுதப்பட்டிருந்தது, சண்பகத்தின் தம்பி கடிதம். திருமலைக்கு முகத்தில் அறைந்த மாதிரி இருந்தது. அதன்பின் ஊருக்குப் பணம் அனுப்பும் எண்ணம் அவனுக்கு வரவே இல்லை. தாயிடமிருந்து மகனைப் பிரித்து மகன் தன்னோடுதான் இருக்க வேண்டும் என்று வழக்குப் போடலாம் என்பதாகத் திருமலைக்கு யாரோ யோசனை சொல்லித் தூண்டி விட்டார்கள். அந்த யோசனையை அவன் ஏற்கவில்லை. தன்னோடு இருந்தால் பையனைக் கவனிக்கத் தனக்கு நேரமிருக்காது என்கிற பயமும், தான் வசிக்கிற ஆசை நாயகி வீட்டில் சண்பகத்துக்குப் பிறந்த பிள்ளை என்பதாலேயே அவன் அநுபவிக்க நேரும் கொடுமைகளைப் பற்றிய எண்ணமுமே திருமலையைத் தடுத்தன. தானிருக்கும் திரை உலகின் நிலைமைகள் ஒரு வளரும் சிறுவனைஎன்னென்ன செய்யுமோ என்ற தயக்கமும் உள்ளுற இருந்தது.

ஏற்கெனவே பொன்னுச்சாமி அண்ணன் காலமான பின் வாழ்வின் எல்லா ஒழுக்க நெறிகளையும் கடைப் பிடிக்க இயலாமல் தாறுமாறாகச் சீரழிந்திருந்தான். திருமலை. சென்னை வாசமும் திரையுலகப் புகழும், பண வசதிகளும், மேலும் அவனைச் சீரழித்திருந்தனவே ஒழியப் பண்படுத்தவில்லை. வீடு, கார், வசதிகள், எதுவுமே அவனை மாற்றிவிடவில்லை. மேலும் மோசமாகவே ஆக்கியிருந்தன. எழிலிருப்பையும் அதனோடு தொடர்புடைய தன் நாட்களையும், சம்பவங்களையும் மெல்ல மறக்க முயன்றான் அவன்.

ஆனால், அந்தச் சமயத்தில் தவிர்க்க முடியாதபடி தன் இயக்க மாவட்ட மகாநாடு ஒன்றிற்காக அவன் எழிலிருப்பிற்கே செல்ல நேர்ந்து விட்டது. அவன் இல்லாமல் அந்த மகாநாட்டை நடத்துவதற்கு இயக்க முன்னணித் தலைவர்களே சம்மதிக்கவில்லை. சமூக சீர்திருத்தம், தமிழர் நலம் பேணல் ஆகியவற்றோடு மட்டும் தொடர்புடையதாக இருக்கும் தங்கள் இயக்கம் அவற்றோடு அமையாமல் மற்ற அரசியல் கட்சிகளைப் போலத் தேர்தலில் கலந்து கொண்டு ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் இயக்க ஊழியர்கள் மத்தியில் வலுத்துக் கொண்ருந்தது. அந்த எழிலிருப்பு மகாநாட்டில் கூட அது பற்றிப் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் தீர்மானம் அனுப்பியிருந்தார். ஐயாவின் தலைமையிலிருந்து பிரிந்து வந்த பின்பு படிப்படியாக இயக்க ஊழியர்கள் மத்தியில் தேர்தல் சபலம் தலையெடுத்திருந்தது. பதவிகள் இல்லாமல், கட்சிப் பணியின் பிரதிபலனை அநுபவிக்க வாய்ப்பின்றி வெறும் கலாசார இயக்கமாகவே தொடர்ந்து பத்தியச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்க ஊழியர்கள் யாரும் தயாராயில்லை. ஆட்சியைப் பிடிக்கவேண்டுமானாலும், சட்டசபையில் எதிர்க் கட்சியாகப் போய் அமர வேண்டுமானாலும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றாக வேண்டியது அவசியம் என்ற உணர்வு அடிமட்டத்து ஊழியர்களிடம் கூட ஏற்பட்டுவிட்டது, எழிலிருப்பு மகாநாட்டுக்கு அவன் போனான். நகரின் டி.பி.யிலிருந்த ஒரே ஓர் ஏ.சி. சூட்டில் தங்கினான் திருமலை. மினிஸ்டர் வந்தால் எந்த நிமிஷமும் காலி செய்து கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனையோடு தான் அந்த அறையை அவனுக்குத் தத்தான் டிராவலர்ஸ் பங்களாவின் கேர் டேக்கர்.

எழிலிருப்பு ஊர் இப்போது மாறியிருந்தது. நிறைய இடங்களில் அவனுடைய இயக்கக் கொடிகள் தென்பட்டன. ஏற்கெனவே இருந்த நிரந்தர - டூரிங் சினிமாக் கொட்டகைகளைத் தவிர மேலும் இரண்டு மூன்று புதிய சினிமாத் தியேட்டர்கள் உண்டாகியிருந்தன. நிறைய மரங்கள் வெட்டப்பட்டு அந்த இடங்களில் கட்டிடங்கள், அல்லது குடிசைகள் தோன்றியிருந்தன. ஒலி பெருக்கிக் கடைகள் நாலைந்து வந்திருந்தன.

காரிலிருந்து கீழிறங்கி மகாநாட்டு மேடைக்குப் போகிற வழியில் தேரடியில் சண்பகம் பூ விற்றுக் கொண்டிருப்பதைத் திருமலை தன் கண்களாலேயே பார்த்தான். முன்னும் பின்னுமாக மரியாதை பந்தாவுடன் அவனை மேடைக்கு அழைத்துச் சென்ற ஆட்கள் முன்னிலையிலேயே அவனைக் கண்டவுடன் மூகத்தைத் திருப்பிக் கொண்டு காரித் துப்பினாள் அவள். அதை அவர்கள் கவனித்தார்களோ இல்லையோ அவன் கவனித்தான். தன் மேல் அவளுக்கு ஏற்பட்ட ஆத்திரம் இன்னும் தணிய வில்லை என்று தெரிந்தது. எப்படியாவது யாருக்கும் தெரியாமல் நந்தவனத்துக்கோ, பள்ளிக்கூடத்துக்கோ தேடிச் சென்று தன் பையனைப் பார்க்க வேண்டும் போலத் தோன்றியது அவனுக்கு. தானிருக்கும் உயரம், தனது அந்தஸ்து, தனியே நினைத்த நேரத்துக்கு எங்கேயும் தன்னிச்சையாகக் கிளம்பி விட முடியாத நிலை எல்லாமாகச் சேர்ந்து அவனைத் தடுத்து விட்டன. சினிமாப் பிரகாசத்தால் ஊரில் அவனது கவர்ச்சி அதிகமாயிருந்தது. எல்லோரும் அவனை முன்னிலும் மிகுதியாகப் புகழ்ந்தார்கள். முகஸ்துதி செய்தார்கள். ‘நமது இயக்கச் செம்மல், தந்தையின் தனயன், அண்ணனின் அருமைத் தம்பி திரு அவர்கள் மேடையிலிருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் திரு அண்ணனின் பேச்சைக் கேட்க ஆவலோடு காத்திருப்பதை நான் அறிவேன்’ - என்றெல்லாம் பாராட்டுரைகள் மேடையில் அவன் காதில் விழுந்தன. அவன் கடைசியாகப் பேசுவதற்கு முன்பு பேசிய ஒவ்வொரு வரும் தங்கள் பேச்சில் கணிசமான பகுதி அவனைப் புகழ்ந்தனர். அண்ணன் தன் சக்தி வாய்ந்த வசனங்கள் மூலம் இன்னும் இரண்டு படம் எடுத்தால் ஆட்சியையே மாற்றிக் காட்டுவோம் - என்று கூட ஒருவர் பேசினார். திருமலைக்கு உச்சி குளிர்ந்தது. அண்ணன் பிறந்த மண்ணில் நடக்கும் இந்த மாநாடு வரலாறு படைக்கப் போகிறது என்று தொடங்கிக் கட்சி தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார் ஒருவர். இதே தீர்மானம் இயக்கத்தின் மாநில மாநாட்டிலும் கொண்டு வரப்படும் என்றும் அவரே கூறினார்.

அன்றைய மாநாட்டின் நிறைவாகத் திரு. பேசிய பேச்சை இருபதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கூடியிருந்து கேட்டு வாக்கியத்துக்கு வாக்கியம் கரகோஷம் செய்தனர். திருமலைக்கு ஆளுயர மாலைகளும், கைத்தறி ஆடைகளும் மலையாகக் குவிந்தன. மாநாட்டில் அவன் தன்னுடைய பேச்சை முடித்தபோது இரவு பதினொன்றே கால் மணி. நெருக்கியடித்துக் கொண்டு பேச்சைக் கேட்டார்கள். ஒர் ஆள் கூட இறுதிவரை எழுந்திருக்கவில்லை. மாநாடும் பாராட்டும் கைதட்டலும், தந்த உற்சாகமான கர்வங்கள் சண்பகம் முகத்தைத் திருப்பிக் கொண்டு காரித்துப்பியதைக் கூட மறக்கச் செய்து விட்டன.

அதே கர்வத்தில் மிதந்தபடி கூட்டத்தை விலக்கி மெதுவாகக் காரைச் செலுத்திக் கொண்டு டி பி. வாசலில் வந்து இறங்கினால் அங்கே அவனது பெட்டி, படுக்கை முதலிய சாமான்கள் வராந்தாவில் எடுத்து அடுக்கப்பட்டிருந்தன. வாட்ச்மேன், ஒடோடி வந்து, “சார்! திடீர்னு நம்மூர் மினிஸ்டரே வந்துட்டாரு. வேற வழி இல்லே. உங்க சாமான்கள்ளாம் இதோ இருக்கு... நீங்க வேற இடம் பார்த்துக்க வேண்டியதுதான்...” என்றான். வந்து தங்கியிருக்கும் மந்திரி உள்பட்டணம் சின்னக் கிருஷ்ண ராஜ உடையார்தான் என்பதும் தெரிந்து விட்டது.

நடுத்தெருவில் யாரோ பகிரங்கமாகத் தன்னை மூக்கை அறுத்து விட்டதுபோல ஆக்ரோஷமாயிருந்தது .திருமலைக்கு.

“என்னடா பெரிய மினிஸ்டர்? நானும் ஒரு நாள் மினிஸ்டிராகி இதே மாதிரி இவன் பொட்டி படுக்கையை வராண்டாவிலே தூக்கி எறியாட்டி நான் ஆம்பளை இல்லே” - என்று வாட்ச்மேனிடம் சவால் விட்டான் அவன்.
--------------

அத்தியாயம் 12

திருமலையைப் போலவே இயக்கத்தில் ஈடுபாடுள்ள தலைவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், எல்லோருமே நாடகங்களில் நடிப்பது, திரைப்படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதுவது, வெடிப்புள்ள தமிழ் நடையில் இயக்கத்திற்கான ஏடுகள் நடுத்துவது என்றெல்லாம் பல வழிகளில் முனைப்பாக இறங்கினர். காங்கிரஸாரின் மெத்தனம், அலட்சியப் போக்கு, தாய்மொழி உணர்ச்சி இன உணர்ச்சி, பிரதேச உணர்ச்சி பற்றிக் கவலையே படாமல் அவற்றைப் புக்கணித்த நிலை எல்லாமாகச் சேர்ந்து, திருமலை வகையறாவுக்கு விறுவிறுவென்று முன்னேறும் வாய்ப்புக்களை அளித்தன. அவர்கள் மொழி உணர்வே அற்றிருந்தார்கள் என்றால், இவர்கள் மொழி உணர்வே சகலமும் என்றார்கள். எழிலிருப்பில் மாவட்ட மாநாடு முடிந்து உடையாரால் ஏ.சி. ரூமிலிருந்து வெளியேற்றப்பட்டு அவமானத்தோடும் ஆத்திரத்தோடும் சென்னை திரும்பிய திருமலை சில நாட்களில் ‘திராவிட முழக்கம்’ என்றோர் பத்திரிகைக்குத் தன்னை ஆசிரியனாகவும் வெளியிடுபவனாகவும் சீஃப் பிரசிடென்சி மாஜிஸ்திரேட் முன்பு பதிவு செய்து கொண்டான். அந்தக் காலகட்டத்தில் இப்படி வேறுபல ஏடுகளும் வெளிவரத் தொடங்கின. சினிமா வேலைகளோடு பத்திரிகை வேலைகளும் சேர்ந்து கொண்டன. இயக்கத்திற்கென்று இரண்டு மூன்று தினசரி ஏடுகளும். ஏற்பட்டிருந்தன. ஆங்கில மொழி ஏடுகளும், பிரபலமான பிரதேச மொழித் தினசரிகளும் உள்ளூர்ச் செய்திகளைப் புறக்கணித்த போது திராவிட இயக்கத் தினசரிகள் உள்ளுர் மொழி இனச்செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்துக் கவர்ச்சி பெற ஆரம்பித்தன. மற்றவர்களைவிட வீச்சு நிறைந்த போர்க் குணமுள்ள துள்ளு தமிழ் நடை வேறு இவர்களைத் தனித்தன்மையுள்ளவர்களாக மக்களிடையே எடுத்துக் காட்டியது. திராவிட முழக்கமும் அப்படி நடைக்குப் பேர் பெற்றிருந்தது. அதில் ‘அதிரடி’ என்ற பகுதியைத் ‘திரு’ என்ற பெயரில் அவன் எழுதி வந்தான். முதல் இதழின் முதல் ‘அதிரடி’யில் ‘எழிலிருப்பு மாஜி ராஜாவின் ஏர்க்கண்டிஷன் சோஷலிஸம்’ - என்ற தலைப்பில் கிருஷ்ணராஜனைப் பிடிபிடி என்று பிடித்திருந்தான், இயக்கத் தொடண்டர்கள் மத்தியில் அதிரடி பகுதி மிகவும் விரைவிலேயே பிரபலமாகி விட்டது. பெரியவர்கள், சிறியவர்கள் என்று பாராமல் இயக்கத்துக்கு எதிரான எல்லோரையும் தாக்கினான் அவன். ஆட்சியிலிருந்த காங்கிரஸ் மந்திரிகள் தான் அவனது முதல் இலக்காயிருந்தனர். அவர்களே விமர்சனத்துக் காளாயினர்.

1957-ஆம் ஆண்டில் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி மாநில மகாநாட்டில் இயக்கப் போக்கில் சில மாறுதல்கள் தென்பட்டன், ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் எதிர்ப்பது தங்கள் நோக்கமில்லை என்றும், அந்த இனத்தின் தன்மைகளையே - தாங்கள் எதிர்ப்பதாகவும் தீர்மானம் நிறைவேறியது. இயக்கம் தேர்தல்களில் ஈடுபட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது.

தன்னுடைய ஜன்ம வைரி என்ற முறையிலும், காங்கிரஸ் அமைச்சரவையில் ஒர் ஆள் என்ற முறையிலும் சின்னக் கிருஷ்ணராஜனைத் திருமலை விடாமல் தாக்கி எழுதியும் அவர் பதிலுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் எல்லோருமே அப்படிப் பெருந்தன்மையாயிருந்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. எதிர் முனையிலும் காரசாரமான அரசியல் ஏடுகள் தோன்றியிருந்தன. அவனையும் அவன் இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும் சாடு சாடென்று பதிலுக்குச் சாடின. அகப்பட்டால் அவமானப் படுத்துவதற்குக் கூடக் காத்திருந்தன. ஆட்சியிலிருந்தவர்களின் ஒழுக்கம் சம்பந்தமான விமர்சனங்களை அவர்கள் செய்த போது தாங்கள் கண்ணாடி மாளிகையிலிருந்து கல்லெறிகிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை.

திருமலை ஒரு தடவை வகையாக மாட்டிக் கொண்டான். மதுவிலக்கு அமுலிலிருந்த காலம். ஒர் ஊரில் மாநாட்டிற்குப் பின் இயக்க நாடகம் நடத்தி விட்டு, அவன் டி.பி.யில் தங்கியிருந்தான். அலைச்சலும் உடல் அசதியும் இளைப்பும் மிகுதியாயிருந்தன. வேண்டிய ஆள் ஒருத்தன் வெளிநாட்டுப் பாட்டில் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து கொடுத்தான். அந்த ஊர் எழிலிருப்பு வட்டாரத்தைச் சேர்ந்தது தான். இரவு ஒன்றரை மணிக்கு மேல் அவன் நல்ல குடி வெறியில் நாடகக் குழுவைச் சேர்ந்த எக்ஸ்ட்ரா நடிகை ஒருத்தியுடன் ஒரே அறையில் மகிழ்ச்சியாயிருந்த போது போலீஸ் ரெய்டு என்று வந்து அறைக்கதவைத் தட்டியது. அவனுக்கோ சுயநினைவே இல்லை. எப்.ஐ.ஆர். தயாரிக்க அவனையும், உடனிருந்த பெண்ணையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல முன்வந்த கான்ஸ்டபிளைக் குடிவெறியில் ஓங்கி அறைந்துவிட்டான் திருமலை. அவன் அடிதடியில் இறங்கவே விஷயம் மிகவும் பெரிதாகி விட்டது. திருமலையின் உதவியாளரும் நாடகக்குழு நிர்வாகியுமாக இருந்த கன்னையா என்பவன் போலீஸாரைத் தண்டங் கட்டிச் சரிசெய்து அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருந்த சமயத்தில் திருமலை இப்படி நேரடி நடவடிக்கையில் இறங்கவே தர்ம சங்கடமாகி விட்டது. அந்தச் சமயத்தில் மந்திரி கிருஷ்ணராஜன் சுற்று வட்டாரத்து ஊர்களான தம் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து விட்டு எழிலிருப்புக்கே திரும்பி வருகிற தம் அசல் திட்டத்தைச் சிறிது மாற்றிக் கொண்டு நடு வழியில் இந்த டி.பி.யில் தங்குகிற எண்ணத்துடன் வந்திருந்தவர் இந்த விவரத்தை அறிய நேர்ந்தது, திருமலை அப்போதிருந்த நிலையில் சுய நினைவற்று இருந்தான். கான்ஸ்டேபிளை அறைந்து விட்டு மறுபடி படுக்கையில் படுத்து விட்டான் அவன். மந்திரி வந்திருப்பது பற்றி எல்லாம் அவனுக்குத் தெரியாது. போலீஸார் மதுவிலக்கு மீறல் பற்றி குற்றிச்சாட்டுடன் ‘இம்மாரல் டிராஃபிக்’ குற்றச்சாட்டையும் சுமத்தித் திருமலையைக் கைது செய்ய ஏற்பாடு பண்ணிக் கொண்டிருந்தனர். போலீஸாரைத் தாக்கிய குற்றம் வேறு சேர்ந்து கொண்டிருந்தது. நினைத்தபடி அவர்கள் திருமலையைக் குற்றம் சாட்டிக் கையும் கனவுமாகக் கைது செய்திருந்தால் மறுநாள் காலை எல்லாப் பத்திரிகையிலும் அந்தச் செய்தி பெரிதுபடுத்தப்பட்டிருக்கும். குடித்து விட்டு ஒரு பெண்ணுடன் டி.பி.யில் விபச்சாரக் குற்றத்தில் ஈடுபட்டதாகவும், போலீஸ் கான்ஸ்டபிளைத் தாக்கியதாகவும் செய்திகள் பிரசுரமாகியிருக்கும். தன் அரசியல் எதிரிதானே என்கிற நிலையில் மந்திரி கிருஷ்ணராஜன் அதைப் பார்த்து மகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால் மந்திரி அப்படி மகிழவில்லை. மிகமிகப் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார். அவர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டதற்குத் திருமலையின் நாடகக் குழு நிர்வாகியே கண்கண்ட சாட்சியாக அருகிலிருந்தான்.

“இந்தாப்பா! இதை ஒண்னும் பெரிசு படுத்தாதிங்க. மனுஷன் குடிவெறியிலே ஏதோ தப்புப் பண்ணிட்டான். எஃப்.ஐ.ஆரைக் கிழிச்சுப் போடுங்க... ஒண்ணுமே நடக்கலேன்னு நினைச்சு விட்டுடுங்க... நான் சர்க்கிள்கிட்டப் பேசிக்கிறேன். வீணா ரசாபாசப்படுத்த வேணாம்” - என்று மந்திரி சொல்லியதையும் அதன்படி நடந்ததையும், தன் நினைவற்றிருந்த திருமயைத் தவிர மற்ற அனைவரும் அறிந்திருந்தனர். மந்திரி விரோதங்களை நினைவிற் கொண்டு அவனைப் பழி வாங்காமல் பெருந்தன்மையாக மானத்தைக் காப்பாற்றியிருந்தார். மத்திரியே தலையிட்டதால் போலீஸார் மேற்கொண்டு அவனையோ அவன் ஆட்களையோ தொந்தரவு செய்யவில்லை. விட்டு விட்டுப் போய் விட்டார்கள்.

மறுநாள் பொழுது விடிந்ததும் கன்னையா இந்த, விவரங்களை எல்லாம் திருமலையிடம் கூறி, “மந்திரி வந்து தான் ரொம்பவும் பெருந்தன்மையா உங்களைக் காப்பாத்தினாரு இல்லாட்டி ரசாபாசமாப் போயிருக்கும்” - என்றான். இதற்குத் திருமலை கூறிய பதில் கன்னையாவை மட்டுமில்லாமல் உடனிருந்த அனைவரையுமே அதிர்ச்சியடையச் செய்தது.

“நீ அடிக்கிற மாதிரி அடி! நான் வந்து காப்பாத்துற மாதிரி காப்பாத்திடறேன்னு மந்திரியே போலீஸாரைத் தூண்டிவிட்டு அனுப்பி வைத்து விட்டு பின்னாடியே வந்திருப்பாரு” - என்றான் திருமலை. தனது எதிரி பெருந்தன்மையாக நடந்து கொண்டிருக்க முடியும் என்பதை அவன் நம்பவோ ஒப்புக் கொள்ளவோ சிறிதும் தயாராயில்லை. உலகில் எல்லாமே வஞ்சம், சூது, சூழ்ச்சி ஆகிய அடிப்படைகளில்தான் திட்டமிடப்பட்டிருக்க முடியும் என்று அவன் நம்பினான். தன்னையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் வைத்தே மற்றவர்களையும், மற்றவற்றையும் கணித்தான் அவன். தன் எதிரி நல்லவனாக இருக்கமுடியாது, கூடாது என்பது அவனது தீர்மானமான எண்ணமாயிருந்தது. “உள்பட்டணத்துக்குப் போயி யாருக்கும் தெரியாமக் காதும் காதும் வச்சாப்பிலே அவருக்கு ஒரு வார்த்தை நன்றி சொல்லிட்டுப் போயிடலாங்க” - என்று உதவியாளர் கன்னையா கூறிய யோசனையைத் திருமலை ஏற்கவில்லை.

“நீ சும்மாயிரு! உனக்கு இந்த உள்பட்டணத்துக் காரனுவளைப் பத்தித் தெரியாது. கடைஞ்செடுத்த அயோக்கியனுவ. சோழியன் குடுமி சும்மா ஆடாது. ‘அதிரடி’யிலே விடாம இவனுகளைத் தாக்கி எழுதிறேனில்லே. பேரம் பேசி அதை நான் எழுத விடாமப் பண்றதுக்கு இப்போ இப்படி அடிப் போடறாங்க-”

“அப்பிடித் தோணலிங்க... நிஜமாகவே நல்லெண்ணத்தோடே தான் பண்ணின மாதிரித் தோணுதுங்க... சமய சஞ்சீவி மாதிரி மினிஸ்டர் மட்டும் அந்த நேரத்துக்கு வரல்லேன்னா... காலம்பரப் பேப்பருங்களிலே எல்லாம் தாறுமாறா நியூஸ் வந்திருக்கும்.”

“கன்னையா! நீ சும்மாயிரு. இது அரசியல். உனக்குப் புரியாது” என்று ஒரே வாக்கியத்தில் அவன் வாயை அடைத்துவிட்டான் திருமலை. ‘அரசியல் வாதியாயிருந்தால் ஒரு சரியான விஷயத்தைக் கூடத் தவறாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும் போலிருக்கிறது’ என்று எரிச்சலோடு தனக்குள் முணுமுணுத்தபடி சும்மாயிருந்து விட்டான் கன்னையா. ‘கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே’ என்ற பழைய பாட்டுத்தான் கன்னையாவுக்கு நினைவு வந்தது. “எங்களுக்குள்ளார இருக்கிற விரோதம் ரொம்ப டீப்! உனக்குப் புரியாது கன்னையா! நான் உள் பட்டணத்திலே அரண்மனைக்குள்ளே நுழைஞ்சாலே என்னைத் தீர்த்துக்கட்டிடுவாங்க” -என்று திருமலை மறுபடியும் வற்புறுத்தி சொன்னான். இறுதி வரை தனக்கும் ஜமீன் குடும்பத்துக்கும் கடினமான விரோதம் இருப்பதாகப் பாவிப்பதையே அவன் விரும்பினான். அந்தப் பாவனை அவனுக்கு வேண்டியிருந்தது. அந்தப் பாவனையிலிருந்து சிறிது நெகிழ்ந்தோ இளகியோ, தணிந்தோ, போவதுகூடப் பாவம் என்று அவன் எண்ணினான். விரோதத்தில்தான் அவன் வளர்ந்தான். விரோதத்தில் தான் அவனது அரசியல் சார்பு தீர்மானமாயிற்று. விரோதத்தில்தான் அவன் பேச்சு, எழுத்து, வளர்ச்சி, புகழ் எல்லாமே இருந்தன. அந்த விரோதத்தை இன்னும் விட்டு விட அவன் தயாராயில்லை.

விரைவில் அடுத்து வந்த பொதுத்தேர்தலில் சின்ன உடையாரை எதிர்த்து அவன் சட்டசபைக்குப் போட்டியிட வேண்டுமென்று கட்சி முடிவு செய்தது. முதல் முதலாகச் சட்டமன்றத் தேர்தலுக்கு நின்ற கட்சியின் முக்கியப் புள்ளிகளில் அவனும் ஒருவனாயிருந்தான். பரம்பரையும் செல்வாக்கும் உள்ள ஒரு பெரும் புள்ளியை எதிர்த்து அவன் வெல்ல முடியுமா என்று பயமும் சந்தேகமும் பொதுமக்களில் பலருக்கு இருந்தன. தேர்தலில் நிற்கும்போதே சின்ன உடையார் மந்திரியாயிருந்தார். பதவியின் உயரம் வேறு அவருக்கு இசைவாயிருந்தது. திருமலை மட்டும் பயப்படாமல் துணிந்து நின்றான். சின்ன உடையாரைப் :பழி வாங்கும் வெறிநெருப்பு அவனுள் எப்போதும் போல் அணையாமல் கனன்று ஜ்வலித்துக் கொண்டிருந்தது.
---------------

அத்தியாயம் 13

தேர்தல் வேலைகளில் திருமலை முழுமூச்சாக இறங்கினான். சின்னக் கிருஷ்ணராஜனைப் பற்றி அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்க்காமல் உள்பட்டணத்தோடு சம்பந்தப்படுத்திப் பழைய பூர்வோத்தரங்களை எல்லாம் சொல்லிக் கொச்சையாக எதிர்த்தான் திருமலை. அதற்கு நேர் மாறாகச் சின்னக் கிருஷ்ணன் தன்னை எதிர்க்கும் தனிநபர்கள், பெயர்களைக் குறிப்பிடாமல் தன்னால் மக்களுக்கு என்னென்ன நன்மைகளைச் செய்ய முடியும் என்று. மட்டும் பிரச்சாரம் செய்தார். சின்னக் கிருஷ்ணனின் இந்தப் பண்பு பலரால் பாராட்டப்பட்டது. பெரும்பாலோரால் வரவேற்கப்பட்டது. திருமலை சண்பகத்தைத் தள்ளி வைத்திருப்பது சொந்த மகனைப் படிக்க வைக்கக் கூடப் பண உதவி செய்யாமல் தன் சுகத்துக்காகப் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பது ஆகிய விவகாரங்களைப் பற்றி எதிர்த் தரப்பினர் பதிலுக்குப் பேச ஆரம்பிப்பார்களே என்று யாரும் யோசிக்கவே இல்லை. ஒரே ஒருவர் யோசித்து அதுபற்றி அவனை எச்சரித்தார். “தம்பீ! உங்க பூர்வோத்தரமும் மத்ததும் இந்த ஊர்லே எல்லோருக்கும் நல்லாத் தெரியும். அதனாலே கோவில் குளம் பக்தி இதுகளிலே தீவிர நம்பிக்கையுள்ள மேல் தட்டு மக்களில் யாருடைய ஓட்டும் உங்களுக்குக் கிடைக்காது. அவர்களுக்கு உங்க மேலே நம்பிக்கை வர்ற மாதிரி நீங்க உடனே எதினாச்சும் பண்ணியாகணும்.”

“எதினாச்சும் பண்ணியாகணும்னு நான் திடீர்னு அனுமாருக்கு வடைமாலை போடவோ, பெருமாளுக்குத் திருக்கல்யாண உற்சவம் நடத்தி வைக்கவோ முடியாது. அதுக்கு ஒருநாளும் என் மனச்சாட்சி சம்மதிக்காது. வேணும்னா ஒரு காரியம் பண்ணலாம்! நம்ம வேணு கோபால சர்மா முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலே உள்ளூரிலே தமிழாசிரியரா இருந்து ஓய்வுபெற்றவர். முக்கால்வாசி வாக்காளர்கள் அவருடைய மாணவர்களாக இருந்திருப்பார்கள். அவர் பக்தி, கோவில், குளம், சம்பிரதாயம் பழைய பழக்க வழக்கங்கள் எல்லாத்திலேயும் நம்பிக்கை உள்ளவர்தான். அவருக்கு ஒரு மணிவிழா நடத்தி தடபுடல் பண்ணி அதன் மூலமாக மேல்தட்டு ஒட்டுக்களை நம்ம சைடிலே திருப்ப முடியுமான்னு பார்க்கணும்.”

“மணிவிழான்னு போட முடியாது. அவருக்கு ஏற்கெனவே அறுபது முடிஞ்சு போச்சுங்க...”

“மணிவிழாவுக்கும், அறுபதுக்கும் சம்பந்தம் இருந்தாகணும்னு ஒண்ணும் கட்டாயமில்லை. எப்ப யாருக்கு, மணிகுடுக்கிறோமோ அதுதான் மணிவிழா! இப்ப சர்மாவுக்கு மணிவிழா! போஸ்டரிலும் அழைப்பிதழிலும், எல்லாத்திலியும் ‘வித்தகர் வேணுகோபாலனார் மணி விழா’ன்னு பிரிண்ட் பண்ணுங்க. சர்மான்னு பேரு வேணாம். தலைவர் திரு. நடத்தும் ‘வித்தகர் வேணு கோபாலனார் மணி விழா’ன்னு போஸ்டர் போடுங்க. வேணுகோபாலனார் படத்தையும் எம் படத்தையும் அந்த ஆளுயரப் போஸ்டர்லே அச்சுப் போட்டு, உள்பட்டண வெளிப்பட்டண அக்ரஹாரங்கள், சந்நிதித் தெருக்கள் எல்லாத்திலியும் நிறைய ஒட்டுங்க...”

“நல்ல ஐடியா! செஞ்சிடலாம்.”

மணிவிழா எற்படாயிற்று. மணிவிழாவில் வேணு கோபாலனார்க்குப் பொன்னாடை போர்த்தி மலர்க் கிரீடம் சூட்டித் திரு பேசினான்:

“மாற்றான் தோட்டத்திலே மலர்ந்ததாயினும் ஏற்றதொரு நறுமலரை அதன் மணத்தை மதிப்பவர்கள் நாங்கள். ஏறக்குறைய முப்பதாண்டுக் காலத்திற்கும் மேலாக இங்கே தமிழ்த் தொண்டாற்றிய இந்தப் பெரியவரைக் காங்கிரஸார் ஏன் கவனிக்கவில்லை? உள்பட்டணத்துப் பண மூட்டைகள் இந்த ஏழைத் தமிழ்த் தொண்டருக்கு ஏன் உதவ முன் வரவில்லை? இவர் மந்தி நிகர் இந்தி மொழியைப் பரப்பப் பாடுபட்டிருந்தால் தொந்திகள் குலுங்க உள்பட்டணத்துப் பெருந்தனக்காரர்கள் இவருக்கு உதவிட ஓடோடி வந்திருப்பார்கள். இவர் பாடுபட்டதோ ஏழைத் தமிழுக்காக. பாடுபட்டவர்கள் நாதியற்றும் போகலாகாது என்ற அக்கறை எங்கள் இயக்கத்துக்கு மட்டுமே உண்டென்பதை நாடறியும், நானிலம் முழுவதுமே அறியும். நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டும் என்பதில்லை” - என்பதாக முழக்கித் தள்ளினான் திருமலை.

உள்ளுர் மக்களில் பெரும்பாலோர் அநுமார்மேல் அசையாத நம்பிக்கையும் பயபக்தியும் உள்ளவர்கள். பெரும்பாலான பாமர மக்களிடம் அந்த எழிலிருப்புத் தேரடி அநுமார் படத்தை நீட்டி வலது கையில் சத்தியம் வாங்கிக் கிருஷ்ணராஜனுக்கே ஓட்டுப் போடுமாறு காதும் காதும் வைத்தாற்போல் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் ஜமீன்தாருக்காக வேலை செய்தவர்கள். தேர்தல் நாள் நெருங்க நெருங்கப் பரபரப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. பரம்பரைப் பெரிய மனிதனை மதிக்கவேண்டும் என்ற தழும்பேறிய மனப்பான்மை ஊரில் அதிகமாக இருந்தது. உள்பட்டணத்து அரச குடும்பத்தைக் கேரக்டர் அஸாஸினேஷன் செய்வது போல் திருமலையும், அவன் தரப்பினரும் பேசிய பேச்சுக்கள் சுவரில் எழுதிய கன்னா பின்னா எழுத்துக்கள் எல்லாமே நேர் எதிரான பலன்களை அளித்தன. அந்த எழுத்துக்களைப் பார்த்தபின், பேச்சுக்களைக் கேட்ட பின் மக்களுக்கு உள்பட்டண அரச குடும்பத்தினர் மேல் மரியாதை அதிகமாயிற்றே ஒழியக் குறையவில்லை. எழிலிருப்பு போன்ற பழமையான ஜமீன் நகரங்களில் ‘நெகடிவ் அப்ரோச்’ எடுபடவில்லை. சினிமாவில் சம்பாதித்த பணத்தைத் தண்ணிராய் ஓட விட்டுச் செலவழித்தும், முழுமூச்சாக எதிர்ப்புப் பிரச்சாரத்தில் இறங்கியும் ஜெயித்து விடலாம் என்று திருமலையால் முழுமையாக நம்ப முடியவில்லை.

தேர்தலுக்குப் பத்துப் பதினைந்து நாள் இருக்கும் போது, இருந்தும் பயனில்லை செத்தும் பயனில்லை என்பது போல் சண்பகம் அவனுக்கு மகத்தான கெட்ட பெயரை உண்டாக்கி விட்டுப் போய்ச் சேர்ந்தாள். நந்தவனத்து மனோரஞ்சிதப் புதரடியில் பாம்பு கடித்து இறந்து போன சண்பகத்துக்குச் சிறுவன் ராஜா தலையை மொட்டை அடித்துக் கொண்டு கொள்ளிச் சட்டி ஏந்தி அந்திமக்கிரியைகள் செய்தான். திருமலைக்கு யாரும் வந்து தகவலே சொல்லவில்லை. தன்னுடைய தேர்தல் அலுவலக மாடியிலிருந்து ஒரு பாடையைப் பின்பற்றி யாரோ ஒரு சில உறவினர்களுடன் முன்னே ஒரு சிறுவன் மொட்டையடித்துக் கொண்டு சுடாமல் இருக்க உறி போல் கட்டிக் கொள்ளிச் சட்டியைப் பிடித்துப் போவதையும் கூடத் திருமலையே பார்த்தான்.

போவது தன் மூத்த மனைவி சண்பகத்தின் பிணம் தானென்பதையோ, கொள்ளி ஏந்திச் செல்வது தன் மகன் தான் என்பதையோ அவனால் அனுமானிக்க முடியவில்லை. மாலையில் தான் விவரம் அவனுக்குத் தெரிந்தது. நந்தவனத்துக்கு ஓடினான். சண்பகத்தின் தம்பியோ மகன் ராஜாவோ அவனிடம் முகம்கொடுத்துப் பேசவே இல்லை.

“எலெக்‌ஷனுக்குத்தானே வந்திருக்கீங்க. எலெக்‌ஷன் வேலையைப் போய்க் கவனியுங்க” - என்று வேறு எகத்தாளமாகப் பேசி விட்டான் சண்பகத்தின் தம்பி. வைக்கோற்போரில் தீப்பற்றுவது போல், ‘உள்ளூரிலேயே இருந்துக்கிட்டுச் சொந்த சம்சாரத்தோட சாவுக்குக் கூட எட்டிப் பார்க்காத கல் நெஞ்சுக்காரன் ஐயா அந்தத் திருமலை’ - என்று இச் செய்தி எங்கும் நெருப்பாகப் பரவிவிட்டது, அவன் கல்நெஞ்சுக்காரன், ஈவு இரக்கமில்லாத படுபாதகன் என்பது போல் அவனுக்கு எதிராகப் பரவியவற்றை அந்தச் சமயத்தில் மேடை போட்டு மறுத்துப்பேசவும் முடியவில்லை. உண்மையிலேயே அவன் சண்பகத்தின் சாவுக்குப் போக முடியாமல், ஊரறியத் தன் அநுதாபத்தைக் காட்ட முடியாமல் விதி சதி செய்து விட்டது. விதியில் அவனுக்கு நம்பிக்கை கிடையாது என்றாலும் அப்போது நம்பாமலிருக்கவும் முடியவில்லை. இம்மாதிரி அபக்கியாதிகள் எழிலிருப்பைப் போன்ற ஊர்களில் ஏற்படும்போது அவற்றைச் சுலபத்தில் பிரசாரம் செய்து மறுத்தோ, மேடை போட்டுப் பேசியோ மாற்றி விட முடியாதென்று அவனுக்கு நன்றாகப் புரிந்தது. இவ்வளவுக்கும் உள்பட்டணத்தார் தரப்பில் யாரும் இந்தச் சம்பவத்தை எடுத்துச் சொல்லிப் பேசவோ, பிரசாரம் செய்யவோ முயலவில்லை. கிருஷ்ணராஜனே அதைத் தடுத்து விட்டாராம். ஆனால் பிரசாரமே செய்ய அவசியமில்லாமல் அது பரவியது. கணிசமாக அவன் பெயரைக் கெடுத்தது. சண்பகத்தின் எதிர்பாராத திடீர் மரணத்துக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் தேர்த லின் போக்கையே பாதித்துத் திசை திருப்பி மாற்றி விட்டது. அது. அவளுடைய சாவு அவனுடைய வெற்றி நம்பிக்கையயும் சேர்த்துக் கொன்று விட்டது.

இவ்வளவுக்கும் கிருஷ்ணராஜன் மிகவும் பண்போடு தன் தேர்தல் அலைச்சல்களுக்கு நடுவில் எங்கேயோ ஒர் ஐந்து நிமிஷம் திருமலையைத் தனியே சந்தித்துச் சண்பகத்தின் மரணத்துக்காக முறைப்படி துக்கமும் விசாரித்து விட்டார்.

தேர்தல் நாளுக்கு முன்னமேயே திருமலையின் தரப்பில் வேலை செய்தவர்களிடம் ஒரு சோர்வு வந்துவிட்டது. சோர்வும், அவநம்பிக்கையும் அவர்களைத் தளர்த்திவிட்டன.

தேர்தல் முடிந்தது. வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் இருந்த நிலைமையைப் பார்த்தால் திருமலைக்கு டெபாஸிட் பிழைக்குமா என்றே சந்தேகமாக இருந்தது. ஆனால் பின்னால் சில தொகுதிகளில் அவனுக்குக் கிடைத்த ஓட்டுக்கள் நிலைமையைச் சரிப்படுத்த உதவின. பத்தாயிரத்து எழுநூற்றெண்பது ஒட்டுக்கள் அதிகம் பெற்று உள்பட்டணம் கிருஷ்ணராஜன் வெற்றி பெற்று விட்டார். திருமலைக்கு டெபாஸிட் போகாமல் பிழைத்து மானத்தைக் காப்பற்றியது. தேர்தல் முடிவு டெக்ளரேஷனில் கையெழுத்துப் போடும் போது “ஒரு மரியாதைக்கு அவரைக் கங்கிராஜுலேட் பண்ணிட்டு வாங்க” -என்று தன் உதவியாளன் கன்னையா தன்னிடம் சொன்னதைத் திருமலை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. எவ்வளவோ பேரும் புகழும், பணமும் வந்தும் திருமலையிடம் ‘கல்ச்சர்’ என்ற அம்சம் பூஜ்யமாகவே இருப்பதைப் பார்த்து உதவியாளன் கன்னையா உள்ளுற வருத்தப்பட்டான். பணவசதி, படாடோபம், ஜமீன் ஆட்சியுரிமை, எல்லாம் பறிபோன பின்பும் உள்பட்டணத்து அரச வம்சத்தினரிடம் ஒட்டிக் கொண்டிருந்த பண்பாடும் பெருந்தன்மையும் மட்டும் குன்றாமல் குறையாமல், அப்படியே இருந்தன. அதைக் கண்டும் அவர்கள் மேலே பொறாமைப்படுவதைத் தவிரத் திருமலையால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. அவனது இயக்கம் முதல் முதலாகத் தேர்தலில் இறங்கி எப்படியோ மாநிலம் முழுவதுமாகச் சேர்த்து ஒரு பத்துப் பதினைந்து இடங்களில் சட்டசபை உறுப்பினர் பதவியைக் கைப்பற்றியிருந்தது. எதிர்பார்த்ததைவிட இது குறைவுதான் என்றாலும் அரசியலில் பதவியைப் பிடிக்கும் முயற்சிக்கு ஆரம்பம் கிடைத்து விட்டதற்காக அவர்கள் மகிழ்ந்தார்கள்.
--------------
continued in part 2 (chapters 14-27)
-----------------

This file was last updated on 19 Jan 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)