pm logo

தீபம் நா. பார்த்தசாரதி எழுதிய
அனிச்ச மலர் (நாவல்)
பாகம் 1 (அத்தியாயம் 1-12)


anicca malar
by tIpam nA. pArtacArati,
part 1 (chapters 1-12)
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

அனிச்ச மலர் (சமூக நாவல்),
பாகம் 1, அத்தியாயம் 1-12
தீபம் நா. பார்த்தசாரதி


Source:
அனிச்ச மலர்
நா. பார்த்தசாரதி
தமிழ்ப் புத்தகாலயம்
பாண்டி பஜார் சென்னை-600 017
முதற் பதிப்பு : டிசம்பர், 1975, நான்காம் பதிப்பு : ஜூலை, 2000
விலை : ரூ. 50.00
---------

முன்னுரை

இந்த நாவல் நான் எழுதியிருக்கும் பிறநாவல்களிலிருந்து பலவிதங்களில் தனியானது. அளவில், முறையில், அணுகுதலில், பாத்திர அமைப்பில் எல்லாவற்றிலும்தான். இது ‘அலை ஒசையில்’ தொடராக வெளிவந்து கொண்டிருக்கும்போது ‘எங்கோ நிஜமாக நடந்த கதை போலிருக்கிறதே’ என்று சிலர் அடிக்கடி சொன்னார்கள். ‘எங்கேனும் நடந்ததோ அல்லது நடக்கிறதோ?’-என்ற எண்ணத்தை உண்டாக்கும் தன்மையே ஒரு கதையின் யதார்த்த நிலைக்குச் சரியான நற்சான்றி தழாகும். ஒரு தினசரியில் வெளிவந்தும், இந்த நாவலை நிறையபேர் படித்திருக்கிறார்கள். எனக்கு வந்த கடிதங்களிலிருந்தும் என்னிடம் விசாரித்தவர்களின் காரசாரமான விமர்சன விவாதங்களிலிருந்தும் இதை நான் தெரிந்து கொண்டேன்.

சில நண்பர்கள், ‘குறிஞ்சி மலரை’ எழுதின நீங்கள் ‘அனிச்ச மலரை’ எழுதலாமா? பூரணியைக் கதாபாத்திரமாகப் படைத்த நீங்கள் சுமதியையும் கதாபாத்திரமாகப் படைக்கலாமா?-என்றெல்லாம் கேட்டது உண்டு. அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் இந்த முன்னுரையில் நான் பதில் சொல்ல வேண்டியது அவசியமும் முக்கியமும் ஒரு விதத்தில் அவசரமும் கூட ஆகிறது.

குறிஞ்சி மலரும், பூரணியும் முன் உதாரணமாகக் கொள்ள வேண்டிய கதையும், கதாபாத்திரமும் ஆகமுடியும் என்றால் அனிச்ச மலரும் சுமதியும் முன் எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டிய கதையாகவும், கதாபாத்திரமாகவும் ஆவதற்கு ஏன் முடியாது? உடன்பாடான சமூகப் படிப்பினைகளை ஏற்கத் தயாராயிருக்கும் நம்மவர்கள் எதிர்மறையான சமூகப்படிப்பினைகளை ஏனோ ஏற்கத் தயங்குகிறர்ர்கள்.

இன்னும் சிலர், “சினிமா உலகின் சீரழிவுகளையும், சினிமா உலகின் ஊழல்களையுமே சமீபத்தில் ஒவ்வொரு கதையிலும் அழுத்திச் சொல்லுகிறீர்களே, வேறு எவையும் வேறு யாரும் உங்கள் கண்களில் படவே இல்லையா சார்?” என்று கோபமாகக் கேட்கிறார்கள்.

நான் சினிமாவை வெறுப்பவனில்லை, ஆனால் அது இன்றுள்ள நிலையில் அப்படியே அதை ஏற்றுக்கொண்டுவிட விரும்புகிறவனு மில்லை. அதில் பல விஷயங்கள் மாற வேண்டும். திருந்த வேண்டும். பணமும் தேவைக்கதிகமான டாம்பீகப் புகழும் இருப்பதன் காரணமாகவே சினிமா உலகைச் சேர்ந்தவர்களைக் 'காலில் அழுக்குப்படாத தேவாதி தேவர்கள்'-என்று நாம் நினைக்க வேண்டிய அவசியமில்லை. சமூகத்துக்கு மிக மிக அவசியமான ஒரு புரொபஸர். ஒரு டாக்டர், ஒரு என்ஜீனியர், ஆகியோரைவிடச் சினிமாவில் நடிப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்டு ஒரு புதிய சோம்பேறி வர்க்கத்தை உருவாக்குவதை எந்த அறிவாளியும் கவலைப்படாமல் எதிர்கொள்ள முடியாது. 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்'- என்று பாடிய பாரதி 'வீிணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்'-என்றும் சேர்த்தே பாடினான். உழைப்பையும், தொழிலையும் போற்றுவதுடன் சோம்பலைத் தூற்றுவதும் புதிய தலைமுறைக்கு அவசியமாகிறது.

இந்த நாவலில் வருகிற 'கன்னையா' மாதிரிச் சோம்பேறியான பலர் சினிமா உலகம் என்ற போர்வையில் சமூகக் குற்றங்களை வளர்த்து வருகிறார்கள். உண்மையான கலைஞர்களையும், உழைக்கும் வர்க்கத்தையும், டெக்னீஷியன்களையும் வந்தனை செய்வதோடு போலிக் கலைஞர்களை, சோம்பல் வர்க்கத்தை, அரை வேக்காடுகளை நிந்தனை செய்யவும் வேண்டியது இன்று அவசியமாகிறது. அந்த வகை நிந்தனை ஓரளவு சமூக நன்மைக்கும் பயன்படவே செய்யும் என்பது என் கருத்து.

அதனால்தான் பழம் புலவர்களைப் போல் வணங்குவதை வணங்கி விட்டு ஒதுங்கும் மரபைப் பாரதி பின்பற்றாமல், வந்தனை செய்வதோடு-நிந்தனை செய்ய வேண்டிய வர்க்கமும் ஒன்றிருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினான்.

இந்நாவலில் வருகிற சுமதி நிந்தனை செய்யப்பட வேண்டிய ஒரு வர்க்கத்திற்குப் பலியாகி விடுகிறாள். அந்த வர்க்கத்தை எதிர்த்துப் போரிட வேண்டிய தெம்பு அவளிடமில்லை. காரணம், அவளே அந்த வர்க்கத்தினரில் ஒருத்தி ஆக ஆசைப்பட்டுத்தான் சீரழிகிறாள். ஆகவே அவளிடமிருந்து எதிர்மறைப் படிப்பினைகளைத்தான் நாம் தெரிந்து கொள்ள முடியும். அனிச்சப் பூவைப்போல் அவள் மிகச் சுலபமாக மிக விரைவில் வாடிக் கருகி விடுகிறாள்; அவளிடமிருந்து எச்சரிக்கை அடையலாம். அனுதாபப் படலாம். வேறு என்ன செய்ய முடியும்?

இதை வேண்டி வெளியிட்ட அலை ஒசைக்கும் இப்போது நூலாக வெளியிடும் தமிழ்ப் புத்தகாலயத்தாருக்கும் என் அன்பையும் விசுவாசத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபம்
அன்பன்,
நா.பார்த்தசாரதி
--------------

அனிச்சமலர்
அத்தியாயம்1

அப்போது இரவு ஒன்பது மணிக்கு மேல் இராது. அந்தக் கல்லூரி விடுதி லவுஞ்சில் ஒரே கலகலப்பு.

“என்னடீ! எல்லோரும் படிக்கிறீர்களா அல்லது ஊர் வம்பு பேசி அரட்டை அடிச்சிக்கிட்டிருக்கீங்களா ? 'எக்ஸாம்' நெருங்கிவருது. ஞாபகமில்லையா?” மாடி. வராந்தாவின் கோடியில் வார்டன் மாலதி சந்திரசேகரனின் குரலைக் கேட்டதும் ஹாஸ்டல் லவுஞ்சில் கூட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த மாணவிகள் பட்டுப் பூச்சிகள் கலைவது போல் கலைந்து பரபரப்பாக அவரவர்கள் அறைக்குள் விரைந்தனர். மாலைத் தினசரிகளும், சினிமா இதழ்களும், வாரப் பத்திரிகைகளும் அவசர அவசரமாக மறைக்கப்பட்டன. அரட்டையும் கிண்டலும், சிரிப்பும் ஒய்ந்து அங்கே ஒரு ஸீரியஸ்நெஸ் வந்தது.

பாடப்புத்தகங்களும், வகுப்பு நோட்டுப் புத்தகங்களும் தேடப்பட்டுப் பிரித்து மேஜைமேல் வைக்கப்பட்டன. ரேடியோ ஒலி கேட்டுக் கொண்டிருந்த அறைகளில் பட்டென்று ஆஃப் செய்யப்படும் ஒசை வந்தது. சிலர் வார்டன் அம்மாளுக்குக் காது கேட்க வேண்டும் என்பதற்காக இரைந்து சத்தம் போட்டே படிக்கத் தொடங்கினார்கள். அதுவரை இருண்டிருந்த அறைகளில் கூட பளீரென்று விளக்கு வெளிச்சம் பாய்ந்தது. வராந்தா வெறிச்சோடியது.

செயற்கையாக ஏற்றப்பட்ட இந்தச் சுறுசுறுப்பும் தீவிரமும் எல்லாம் பத்து நிமிஷம்கூட நீடிக்கவில்லை. வார்டன் அம்மாள் மாடியில் இருந்து படியிறங்கிக் கீழே உள்ள விடுதியின் பிற்பகுதிகளையும் எதிர்புறம் இருந்த நியூ ஹாஸ்டல் பகுதியையும், கண்காணிப்பதற்காகச் சென்றபோது மறுபடியும் மேலே மாடி வராந்தா லவுஞ்சில் பெண்கள் கூட்டம் கூடியது. ஒரு பெண் கையிலிருந்த மாலைத் தினசரியைப் படிக்கலானாள்:-

"ஏய் பத்மா! உனக்காகத்தான் படிக்கிறேன் கேளு! ஒரு நாடகக் கம்பெனிக்கு மாலை நேரங்களில் மட்டும் நடிக்கக் கூடிய நடிகைகள் தேவையாம். பாலன் நாடகக் குழு, சென்னை. புதுமுகங்கள் தேவை. எங்களுடைய நாடகக் குழுவின் சமூக, சரித்திர-புராண நாடகங்களில் கதாநாயகி வேஷம் முதல் உப பாத்திரங்கள் வரை வேஷம் ஏற்று நடிக்கப் பெண்கள் தேவை. படிப்புக்கு இடையூறு இல்லாமல் மாலை நேரங்களிலே நடித்துப் பணம் சம்பாதிக்கலாம். புகைப்படத்துடன் விண்ணப்பிக்கவும். கல்லூரி மாணவிகளாயிருந்தால் விஷேச சலுகையுடன் அவர்களின் விண்ணப்பங்கள் கவனிக்கப்படும்.

உடனே அங்கே கூடியிருந்தவர்களில் ஒருத்தியைத் தவிர மற்றப் பெண்கள் எல்லோரும் தினசரிப்பேப்பரைக் கையில் வைத்து வாசித்துக் கொண்டிருந்தவளைச் சூழ்ந்து மொய்த்தார்கள். அவர்கள் மூலைக்கு ஒருவராக இழுத்த இழுப்பில் பேப்பர் ஒவ்வொருவர் கைக்கும் கொஞ்சமாகக் கிழிந்து துண்டு துண்டாகப் போய்விடும் போலிருந்தது. அந்த நேரத்திலும் பேப்பரைச் சுற்றிச் சூழ்ந்திருந்தவர்களில் ஒருத்தி,

"அதோ சுமதியைப் பாருடீ ! எதையோ பறிகொடுத்தவளைப்போல உட்கார்ந்திருக்கா" என்று, விலகி அமைதியாக உட்கார்ந்திருந்தவளைச் சுட்டிக் காட்டி மற்றவர்களிடம் கூறத் தவறவில்லை. உடனே அவர்களில் ஒருத்தி சுமதி என்கிற அந்தப் பெண்ணருகே ஒடிச் சென்று,

"என்னடி சுமதி? ஏன் என்னவோ போலிருக்கே? தலைவலியா?" என்று ஆதரவாகக் கேட்டாள். "ஒன்னுமில்லே. எனக்குத் தூக்கம் வருது! நான் ரூமுக்குப் போறேன்” என்று உடனே எழுந்து போய்விட்டாள் சுமதி என்று அழைக்கப்பட்ட அழகான அந்தப் பெண்.

அவளுடைய ரூம் மேட், சொந்த சகோதரனின் திருமணத்துக்காக மூன்று நாள் லீவு எடுத்துக் கொண்டு கோவை போயிருந்ததனால் அறையில் அவள் மட்டுமே தனியாக இருந்தாள். அதற்காக அவள் பயப்படவில்லை. அதை அவள் விரும்பினாள் என்றுகூடச் சொல்லலாம். தனிமை, கனவு காணும் வசதியைத் தருவதுபோல் வேறெதுவும் தருவதில்லை. அறைக்குச் சென்ற சுமதி பாத்ரூமுக்குள் போய் விளக்கைப் போட்டுக் கொண்டு வாஷ்பேஸினுக்கு மேலிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். சிநேகிதிகள் எல்லாம் அடிக்கடிச் சொல்லி வியக்கும் தன் அழகைப் பற்றிய பெருமிதத்தைத் தனக்கே உறுதிப்படுத்திக் கொள்வது போல் கண்ணாடியில் அவள் முகம் களை கொஞ்சியது.

தன் முகத்தைத் தானே நேருக்கு நேர் கண்ணாடியில் பார்த்துப் பெருமைப்பட்டுக் கொண்டவள், உடன் நிகழ்ச்சியாகச் சற்றுமுன் மாலைத் தினசரியிலிருந்து தோழிகள் படித்த விளம்பரத்தையும் நினைவு கூர்ந்தாள். ஏனோ அவளே மறக்க முயன்றும் அந்த விளம்பரம் அவளுக்குத் திரும்பத் திரும்ப நினைவு வந்து கொண்டிருந்தது. தூங்குவதற்கு முன் வழக்கம்போல் ஃபிரஷ்ஷை எடுத்துப் பற்பசையை அளவாக அதன் மேல் வழிய விட்டுத் தேய்த்தபோது கண்ணாடியில் தெரிந்த முல்லை அரும்பு போன்ற பற்கள் அவளைக் கர்வப்பட வைத்தன. அவளுடைய முக விலாசத்துக்கும், புன்னகைக்கும் யாருமே சுலபமாக மயங்கி வசப்பட்டு விடுவார்கள் என்று தோழிகள் எல்லாம் தங்களுக்குள்ளும் சில வேளைகளில் அவள் காது கேட்கவுமே பேசிக் கொண்டார்கள். இளமையாகவும் கவர்ச்சியாகவும் இருந்த சில புதிய இந்தி சினிமா நட்சத்திரங்களோடு அவளை ஒப்பிட்டுப் பரிகாசம் செய்த தோழிகளும் உண்டு.

எல்லாரிடமும் கடுவன் பூனையாக நடந்து கொள்ளும் ஹாஸ்டல் வார்டன் மாலதி அம்மாள்கூட அவளிடம் சிரித்துக் குழைந்து பேசுவாள். இதைப்போல் பலவற்றை நேரில் பார்த்தும் கேள்விப்பட்டும்தான் அவளுடைய முகராசியைப் பற்றித் தோழிகள் பேசிக் கொள்ளத் தொடங்கியிருந்தனர். சென்ற ஆண்டின் இறுதியில் கல்லூரி விடுதி நாள் கொண்டாட்டத்தின் போது முழுவதும் மாணவிகளே நடித்த ‘சகுந்தலை’ நாடகம் நிகழ்ந்தபோது பிரதம விருந்தினராகப் பிரபல நடிகர் ஒருவர் வந்திருந்தார். சுமதிதான் சகுந்தலையாக நடித்திருந்தாள்.நாடக முடிவில் அந்த நடிகர் நாடகத்தைப் பாராட்டிப் பேசும் போது, “சகுந்தலையாக நடித்த குமாரி சுமதி காவியத்தில் காளிதாசன் படைத்த சகுந்தலையைவிட அழகாயிருக்கிறார். அவருடைய தோற்றத்தையும் நடிப்பையும், எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று சிறிது தாராளமாகவே அவளைப் பாராட்டிப் பேசியிருந்தார்.

இவை எல்லாம் சேர்ந்து அவளுள் ஒரு கனவையே உருவாக்கியிருந்தன. தான் நடித்துப் புகழ்பெறப் பிறந்தவள் என்ற எண்ணம் அவளுள் உறுதிப்படத் தொடங்கியிருந்தது. கர்வம் அவளை மற்ற மாணவிகளிலிருந்து தனியே பிரித்தது. எல்லாரும் கலகலப்பாகப் பேசும்போது அவள் அவர்களோடு சகஜமாகப் பேசாமலிருப்பதும் எல்லாரும் மெளனமாக எதிலாவது ஈடுபட்டிருக்கும்போது அவள் கலகலப்பாகப் பேசி அனைவர் கவனத்தையும் கவர்வதுமாகத் தனக்குத்தானே ஒரு புது இயல்பையே உருவாக்கிக் கொண்டிருந்தாள் அவள் தான், மற்ற பெண்களைவிட அழகானவள், உயர்ந்தவள் என்று தனக்குத்தானே வலிந்து ஒர் அந்தஸ்தைப் புரிந்து கொண்டதன் காரணமாக ஏற்பட்ட இனிய ஆணவம்-அது தொடர்பாக அவளைப் பல கனவுகள் காண வைத்திருந்தது.

அந்தப் பெண்கள் கல்லூரியின் விடுதி நாள் கொண்டாட்ட நாடகத்தில் சுமதியின் நடிப்பைப் பாராட்டி பிரபல நடிகர் பேசிய பேச்சு வேறு 'நடிகர் பாராட்டிய மாணவி' என்ற தலைப்பில் ஒரு பிரபல வாரப் பத்திரிகையில் துணுக்காக அவள் படத்துடன் அச்சாகிவிட்டது. அதனால் அவள் மகிழ்ச்சி பல மடங்காகி இருந்தது. கர்வத்தைக் கூடச் சுமதி புது மாதிரியாகக் கொண்டாடினாள். பலர், கர்வம் வந்தால் அடக்கத்தையே இழந்து விடுவார்கள். அவளோ கர்வத்தினால் தன்னிடம் புதுப் புது அடக்கங்களை வளர்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வோர் அடக்கமும் அவளை உள்ளூர அடங்காப் பிடாரி ஆக்கிக் கொண்டிருந்தன. ஒவ்வோர் பணிவும் அவள் மனத்தைப் பணியவிடாமல் செய்து கொண்டிருந்தன. எல்லாரைக் காட்டிலும் எல்லா விதங்களிலும் தன்னை உயர்ந்தவளாகப் பாவித்துக் கொள்ளத் தொடங்கினாள் அவள். அதை அடிப்படையாக வைத்தே அவளுடைய கற்பனைகள் வளர்ந்திருந்தன. கனவுகள் பெருகித் தொடர்ந்து கொண்டிருந்தன.

தன்னையும் தன் அழகையும் விடுதிநாள் விழாவில் பாராட்டிப் பேசிய அந்தப் பிரபல நடிகருக்கு ஃபோன் செய்து பேசுவதற்குக்கூட இரண்டொரு தடவை அவள் முயன்று, அது முடியாமல் போயிருக்கிறது. அப்புறம் நேரிலேயே தேடிப் போயும் அது அவள் நினைத்தபடி நடக்கவில்லை.

“எப்படியாவது எதிலாவது எனக்கு நடிப்பதற்கு ஒரு சான்ஸ் வாங்கிக் கொடுங்கள்” என்று அந்த நடிகரிடம் கேட்பதற்காகத்தான் கூச்சத்தையும் பயத்தையும் விட்டு விட்டு அவள் அந்த நடிகரைத் தேடி நேரில் போனாள். ஆனால் அவரைச் சந்திப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமாயில்லை. சில சினிமாப் பத்திரிகைகளில் ‘எப்படி நடித்து முன்னுக்கு வந்தேன்?' என்ற தலைப்பின் கீழ்ப் பெரிய நடிகைகள் எழுதிய தொடர் கட்டுரைகளை படித்திருந்தாள். அதில் அவர்கள் முன்னுக்கு வர எப்படி எப்படி சிரமப்பட வேண்டியிருந்தது, எதை எதை இழக்க வேண்டியிருந்தது என்றெல்லாம் தெரிந்திருந்தது. அதனால் சுமதிக்கும் இலைமறை காயாகச் சில விஷயங்கள் புரிந்திருந்தன.

எப்படியோ படிப்பில் மெல்ல அக்கறை போய், நடிக்க வேண்டும், புகழ்பெற வேண்டும். பல லட்சம் இளைஞர்கள் தன்னை எண்ணி ஏங்கித் தவிக்கச் செய்ய வேண்டும் என்பதில் அவளுக்கு ஆசை வந்துவிட்டது. ஒரு நிலையில் அது ஏக்கமாகவும் மாறிவிட்டது.

சுமதி குளியலறையிலிருந்து வெளியே வந்து அறைக்குள் அமர்ந்து கைக்குக் கிடைத்த ஒரு சினிமாப் பத்திரிகையை எடுத்துப் புரட்டினாள். அவளுக்கு ஏக்கப் பெருமூச்சு வந்தது.

கையில் எடுத்துப் பிரித்த பத்திரிகையில் 'எனக்கு வரும் இரசிகர் கடிதங்களுக்குப் பதில் போடவும் ஆட்டோ கிராப் போடவுமே நேரம் இருப்பதில்லை. அதற்காக மாதம் ஐநூறு ரூபாய் சம்பளத்தில் இரண்டு காரியதரிசிகளையே தனியாக நியமித்துவிட்டேன்” என்று ஒர் இளம் நடிகை பேட்டியில் சொல்லியிருந்தது அவள் பிரித்த பக்கத்தில் வந்திருந்தது.
--------------

அத்தியாயம் 2

சுமதியின் கனத்த நெஞ்சகங்கள் மேலெழுந்து விம்மித் தணிந்தன. நான் இவ்வளவு பிரபலமாகும்போது எனக்கு வரும் கடிதங்களைக் கவனித்துப் பதில் போட வேண்டியிருக்கும் என்று தனக்குத் தானே சொல்லி-அப்படிச் செயற்கையாகச் சொல்லிக் கொள்வதில் கிடைக்கும் கற்பனைச் சந்தோஷத்தில் பூரித்தாள் அவள். பத்திரிகையில் வந்திருந்த அந்த நடிகையின் அழகையும் தன் அழகையும் ஒப்பிட்டு, தான் பல மடங்கு மேலானவள் என்று முடிவு செய்துகொண்டாள் அவள். சமீபகாலமாக இப்படி எல்லாம் பைத்தியக்காரத்தனமாக ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் ஓர் இயல்பு அவளுக்கு வந்திருந்தது. ஹாஸ்டல் விழாவின்போது அவளை வானளாவத் துாக்கி வைத்துப் புகழ்ந்துவிட்டுப் போன அந்தப் பிரபல நடிகர் அவளுள் இந்த இயல்பை வளர்த்துவிட்டுப் போயிருந்தார்.

பல ஏக்கப் பெருமூச்சுகளுக்குப்பின் மேஜை மேலிருந்த அலாரம் டைம்பீஸில் மணி பார்த்தாள் சுமதி. மணி பத்தரை. சில அறைகளில் விளக்கொளி. சில அறைகளில் படிக்கும் முணுமுணுப்பு சப்தம், தவிர ஹாஸ்டல் வராந்தாவும், லவுஞ்சும் ஆளரவமற்று அமைதியாயிருந்தன. மாணவிகளில் ஒவ்வொருத்தியும் ஒரு கேரக்டர். சின்ன வயசிலிருந்து இரைந்து படித்தே பழக்கமுள்ள சிலருக்கு வாய்விட்டுப் படித்தால்தான் படித்தது போலிருக்கும். 'ரெண்டோண்ரெண்டு' என்று வாய்ப்பாடு மனப்பாடம் பண்ணிய ஆரம்பப்பள்ளி நாட்களின் பழக்கமே கல்லூரி விடுதிக்கு வந்த நாளிலும் சில பெண்களிடம் நீடித்தது. லவுஞ்சிலுள்ள மேஜையில் தான் மாலைத் தினசரிகளும் பேப்பர்களும் கிடக்கும் என்பது சுமதிக்கு நன்றாகத் தெரியும்.

மாணவிகளில் பலர் 'மாலைப் பேப்பர் வாங்கப் போகிறேன்' என்று விடுதியைவிட்டு வெளியேறியதைத் தடுக்கவும், விடுதி கேட்டில் காவல் காக்கும் வாட்ச்மேன், பியூன் மூலம் காசு கொடுத்துப் பேப்பர் வாங்கச் சொல்லி அதனால் மூளும் தகராறுகளைத் தவிர்க்கவும் வார்டன் அம்மாள் விடுதி லவுஞ்சிலேயே காலை, மாலைப் பேப்பர்களை மாணவிகள் படிப்பதற்கு நேரம் வரையறுக்கப்பட்டிருந்தது. பேப்பர்களை யாரும் அறைகளுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்ற நிபந்தனையும், எல்லா நேரமும் படிப்பை விட்டுவிட்டு அங்கேயே சுற்றக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தன.

அங்கு சிறிது நேரத்திற்குமுன் சக மாணவிகள் கூட்டமாகக் கூடி அந்தப் புதுமுகம் தேவை என்ற விளம்பரத்தைப் படித்தபோது அதில் தனக்கு அக்கறையே இல்லாததுபோல் ஒதுங்கி விலகி உட்கார்ந்திருந்த சுமதி இப்போது பூனைபோல் ஒசைப்படாமல் அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். வார்டனின் விதியையும் மீறி அங்கே லவுஞ்சில் கிடந்த அந்தத் தினசரியை மங்கலான வெளிச்சத்திலும் தவறாமல் அடையாளம் கண்டு எடுத்துக் கொண்டு அறைக்குத் திரும்பச் சென்று கதவைத் தாழிட்டாள். தான் வெளியே சென்றது, பேப்பரை லவுஞ்சிலிருந்து எடுத்தது, அறைக்குத் திரும்பியது எதுவும் யாராலும் பார்க்கப்படவில்லை என்று உறுதி செய்துகொண்டு அறையின் விளக்கைப் போட்டாள். பின்பு நிதானமாக அந்தத் தினசரியில் அந்தப் பக்கத்தைத் தேடிப்பிடித்துப் 'புது முகங்கள் தேவை' என்ற விளம்பரத்தைப் படிக்கத் தொடங்கினாள்.

வெளியே பலருக்குமுன், உண்ணக் கூச்சப்பட்ட மிகவும் பிடித்தமான தின்பண்டம் ஒன்றை இரகசியமாக அறைக்கு வாங்கிவந்து விரும்பிய அளவு விரும்பிய விதத்தில் ருசித்துச் சாப்பிடுவதுபோல் அப்போது அவள் இருந்தாள். அந்த விளம்பரத்தை ஒவ்வொரு வாக்கியமாக ஒருமுறை, இருமுறை, மும்முறை, ஏன்? திரும்பத் திரும்ப அலுப்புத் தட்டும்வரை படித்தாள் அவள்.

“கல்லூரி மாணவிகளாயிருந்தால் அவர்களின் விண்ணப்பங்கள் விசேஷ சலுகையுடன் கவனிக்கப்படும்” என்ற ஒரு வாக்கியத்தை அப்படியே அடிக்கோடிட்டுப் பார்க்க வேண்டும் போலிருந்தது. விளம்பரத்தின் கீழே இருந்த விலாசத்தைப் பார்த்தாள். ஒரு தபால் பெட்டி எண்ணும் ஆற்காடு ரோடு கோடம்பாக்கம்-என்ற விவரமும் மட்டுமே இருந்தன. விளம்பரத்தின் மேற்பகுதியில் டெலிபோன் எண் கொடுக்கப்பட்டிருந்தது. அதைத் தவிரக் கதவு எண் எதுவும் இல்லை.

சுமதி தன்னுடைய விண்ணப்பத்தை எழுதத் தொடங்கும்போது இரவு பதினொரு மணி ஐந்து நிமிஷம் ஆகி இருந்தது. செயலை மிஞ்சிய அதிகமான ஆர்வம் யாருக்கு எப்போது எதில் இருந்தாலும் அதை ஒழுங்காகச் செய்ய முடியாது. ஆர்வம் தணிந்து சமனப் பட்டுச் செயலுக்கான நிதானம் வருகிறவரை எல்லாமே தாறுமாறாகவும்தான் முடியும். சுமதியும் அந்த நிலையில் தான் அப்போது இருந்தாள். அவளால் முதலில் நாலைந்து தாள்களை மாற்றி மாற்றி எழுதிக் கிழித்துப் போடத்தான் முடிந்தது. எதுவுமே சரியாக வரவில்லை. என்பது அதை எழுதிமுடித்த பின்பே தெரிந்தது. விண்ணப்பத்தோடு தன் புகைப்படம் ஒன்றையும் இணைத்தாள் அவள். கடைசியாகப் பன்னிரண்டேகால் மணிக்கு ஒரு விண்ணப்பத்தை முழுமையாக எழுதி முடித்தாள் அவள். தன்னுடைய கல்லூரி ஹாஸ்டல் நாள் விழாவில் தான் சகுந்தலையாக நடித்ததைப் பிரபல நடிகர் பாராட்டியதையும் அவள் அந்த விண்ணப்பத்தில் குறித்திருந்தாள். அதைப் பற்றித் தன் படத்துடன் வாரப் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்த துணுக்கின் 'கட்டிங்'கையும் விண்ணப்பத்தோடு இணைத்திருந்தாள். பின்பு ஞாபகமாக வராந்தா லவுஞ்சிலிருந்து எடுத்துக் கொண்டு வந்திருந்த தினசரிகளை அங்கேயே திருப்பிக் கொண்டு போய்ப் போட்டுவிட்டு வந்தாள்.

எழுதிய விண்ணப்பத்தை உறையிலிட்டு விலாசம் எழுதி வைத்த பின்பும் சுமதிக்கு உறக்கம் வரவில்லை. விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் படுத்து நெடுநேரம் இப்படியும் அப்படியுமாகப் புரண்டு கொண்டிருந்தாள். எதிர்காலத்தைப் பற்றி அவளாகத் தனக்குத் தானே கற்பித்துக் கொண்ட சுகங்களும் சந்தோஷங்களும் மனத்தில் புரண்டன. நடிப்புலகின் சக்கரவர்த்தியாக விளங்கும் ஒரு பெரிய நடிகரே தன்னைத் தாராளமாகப் பாராட்டி, அப்படிப் பாராட்டியது பகிரங்கமாகப் பிரபல பத்திரிகையிலும் வெளிவந்து தன் விண்ணப்பத்தில் தான் அதைக் குறிப்பிட்டிருப்பது நிச்சயமாக அந்த விண்ணப்பத்துக்கு ஒரு மதிப்பையும், கனத்தையும் அளிக்கும் என்று அவளுக்கே ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

எப்போது விடியும்? விடிந்ததும் தன் கைகளாலேயே ஸ்டாம்பு வாங்கி ஒட்டி அதைத் தபாலில் சேர்க்கப் போகிறோம் என்பதே அப்போது அவளுடைய ஒரே நினைவாக இருந்தது. வேறு நினைவுகள் எதுவுமே மனத்தில் தங்கவில்லை.

எவ்வளவு முயன்றும் துக்கம் வராமற்போகவே பெட்டியைத் திறந்து பல்வேறு சமயங்களில் பிடித்த தன் புகைப்படங்கள் அடங்கிய இரண்டு மூன்று ஆல்பங்களை எடுத்து மேசை விளக்கின் சுகமான உள் அடங்கிய வெளிச்சத்தில் திருட்டுத்தனமான மகிழ்ச்சியோடு ஒவ்வொன்றாகப் பார்க்கத் தொடங்கினாள். தன் அழகையும் கவர்ச்சியையும், எவரையும் நிச்சயமாகத் திரும்பிப் பார்க்க வைக்கும் தன் உடற்செழிப்பையும், தானே இன்னொரு முறை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள விரும்பினாற் போல் அவள் அந்தப் படங்களை இரசித்தாள். அந்தரங்கமான தாழ்வு மனப்பான்மை அப்போது அந்த ஊர்ஜிதத்தை விரும்பியது.

கோடை விடுமுறையின்போது கொடைக்கானலில் 'போனிரைட்'-குதிரை சவாரிக்காக அரை டிராயர் பனியனோடு குதிரைமேல் அமர்ந்து எடுத்த படம், டென்னிஸ் கோர்ட்டில் எடுத்த படம், இண்டர் காலேஜியேட் டிபேட்டின்போது வேறு கல்லூரி மாணவர்களோடு அவர்களே விரும்பிக் கேட்டதற்கு இணங்கி எடுத்துக் கொண்ட படம், என்.ஸி.ஸி. உடையில் சிப்பாயைப்போல் எடுத்துக்கொண்ட படம், எல்லாம் ஆல்பத்தில் இருந்தன. நகரின் வேறு கல்லூரி ஒன்றில் முன்பு நடந்த இண்டர் காலேஜியேட் டிபேட்டின் முடிவில்,

"மிஸ் சுமதி ! ப்ளீஸ், உங்களோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள எங்கள் மாணவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்?” என்று அந்தக் கல்லூரி மாணவர் யூனியனின் தலைவன் வந்து கெஞ்சியது அவளுக்கு ஞாபகம் வந்தது. வெளியிடங்களுக்குப் போகிறபோது கைக் கடிகாரத்தில் நேரம் கேட்கிற சாக்கில், ஏதாவது விசாரிக்கிற சாக்கில் தன்னோடு எப்படியாவது இரண்டு நிமிஷம் பேசி விடத் தவிக்கும் பலரை அவள் கண்டிருக்கிறாள். அவளுக்கு அப்படி ஒர் எழில் கொஞ்சும் தோற்றம். களைசொட்டும் முகம். கவின் நிறைந்த அங்கங்கள். கையிலிருக்கும் மணிபர்சில் தொகையை எண்ணிப் பார்ப்பதுபோல் தன்னுடைய பிளஸ் பாயிண்டுகளை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்துக் கொண்டாள் சுமதி.

எங்கோ கோழி கூவியது. ஹாஸ்டல் மரங்களில் விடிவதற்கு முன்னறிகுறியான பல்வேறு பறவைகளின் ஒலிக்கிளர்ச்சி ஆரம்பமாகியிருந்தது. காற்று, குளிர்ந்து வீசத் தொடங்கியிருந்தது. இருள் மெதுவாகக் கரைந்து போய்க்கொண்டிருந்தது.

எழுந்து பல் விளக்கி மெஸ்ஸில் போய்க் காபி சாப்பிட்டுவிட்டுத் திரும்பும்போதே மூன்றாவது அறை மோகனாவிடம் தபால்தலைகள் கேட்டு வாங்கி ஒட்டிக் காம்பஸுக்குள் இருந்த தபால் பெட்டியில் அந்தக் கவரைப் போட்டுவிட்டாள் சுமதி. அந்தக் கல்லுரரி விடுதி எல்லையில் இருந்த தபால் பெட்டியில் முதல் கிளியரன்ஸ் காலை 8.35க்கு என்று எழுதியிருந்தது. உள்ளூரில் அந்தக் கடிதம் பிற்பகல் டெலிவரியிலேயே விலாசதாரருக்குக் கிடைத்துவிடும் என்றும் உறுதி செய்து செய்துகொண்டு மகிழ்ச்சி அடைந்தாள் சுமதி. நினைவு என்னவோ அதைப் பற்றியே சதாகாலமும் இருந்தது. அங்கிருந்து அவர்கள் தனக்குப் பதில் எழுதித் தன்னை வரச் சொல்லுவது போலவும், ’இவ்வளவு பெரிய நட்சத்திர நடிகரே உங்களைப் பாராட்டியிருப்பதை அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம், நீங்கள் உடனே நமது அலுவலகத்திற்கு வந்து சந்திக்க வேண்டுகிறோம்' என்ற அவர்களிடமிருந்து பதில் வருவதாகவும் தானே எண்ணிப் பார்த்துக் கொண்டாள் அவள். கற்பனை என்பது மனித மனத்துக்கு எந்தச் செலவுமின்றித் தானே கிடைக்கிற போதைப் பொருள். மனத்தைத் தட்டிவிட்டால் எதையும் உள்ளே செலுத்தாமலே கற்பனைப்போதை அங்கே உருவாகிவிடும். அந்த போதை அவளுள்ளும் அன்றைக்கு உருவாகியிருந்தது

கற்பனை என்பது நிஜமில்லை. ஆனால் நிஜங்களும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை அல்ல. இன்றைய கற்பனைகள் நாளைய நிஜங்களாகலாம் ! நாளைய கற்பனைகள் நாளை மறுநாள் நிஜங்களாகலாம். ஆகாமலேயும் போய்விடலாம். ஆனால் அப்படி ஆகாமல் போகுமென்று பயந்தோ தயங்கியோ வாழ்வில் யாரும் எந்தக் கற்பனைகளையும் செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. கற்பனைகள் தாராளமாகச் செய்யப்படுகின்றன.

மாணவி சுமதியின் கற்பனைகள் நாட்கணக்கில் நீடித்தன. மறுநாளைக்கு மறுநாள் காலை முதல் தபாலில் அவளுக்கு ஒர் கனமான உறை வந்தது. உறையின்மேல் அனுப்புகிறவர் முகவரி இருக்கவேண்டிய இடத்தில் 'சொப்பன உலகம் நாடகக் குழுவினர்-தபால் பெட்டி எண்... கோடம்பாக்கம் சென்னை-26' என்று அழகாக அச்சிட்டிருந்தது. பெறுகிறவர் முகவரியில் புது டைப்ரைட்டரில் அடித்தாற் போன்று முனை முறியாத தெளிவான எழுத்துக்களில் மிஸ். கே. சுமதி... என்று தொடங்கி அவளுடைய கல்லூரி விடுதி முகவரி டைப் அடிக்கப்பட்டிருந்தது. விளம்பரத்திலிருந்த பாலன் நாடகக் குழு என்ற பெயரும் சொப்பன உலகம் என்ற புதுப்பெயரும் வேறுபட்டன.

ஆவலால் படபடக்கும் மனமும், மகிழ்ச்சியின் மிகுதியான எதிர்பார்த்தலால் நடுங்கும் கைகளுமாகச் சுமதி அந்த உறையைப் பிரிக்கத் தொடங்கினாள். உறைக்குள் நிறைய அச்சிட்ட தாள்களும், விண்ணப்ப பாரம் போன்ற ஒரு நீளத்தாளும் கடிதமும் இருந்தன. முதலில் அவள் கடிதத்தைத் தனியே எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள்.

அந்தக் கவர் தன் கைக்குக் கிடைத்த வேளையைக் கொண்டாட வேண்டும் போலிருந்தது சுமதிக்கு. கடிதம் அழகான தமிழ்க் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

‘எங்கள் விளம்பரத்தைக் கண்ணுற்றுத் தாங்கள் ஆர்வத்தோடு எழுதிய கடிதம் கிடைத்தது. தங்களைப் போலவே நாள் தவறாமல் நடிக்க விரும்பும் பல்லாயிரக் கணக்கான இளம் பெண்களின் கடிதங்கள் எங்கள் காரியாலயத்தில் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்தப் பல்லாயிரம் பேர்களிலிருந்து எங்களுக்குத் தேவையான சில நல்ல புதுமுகங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதுதான் இப்போது எங்கள் கவலையாயிருக்கிறது. எனினும் தங்கள் இண்டர்வ்யூவுக்கென ஒரு நாளைக் குறித்திருக்கிறோம். குறித்த நாளில் நேரத்தில் இங்கு வந்து சேருங்கள். அதற்கு முன்பே எங்களுக்குக் கிடைக்கும்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து உரிய தொகையோடு அனுப்பிவையுங்கள்.'

அந்தக் கடிதத்தின் கீழ் உள்ள கையெழுத்திலிருந்த பெயரைத் தெளிவாகப் படிக்க முடியவில்லை. கிறுக்கிக் கோடிழுத்திருந்தது. ரொம்பப் பெரிய மனிதர் ஒருவர் செக்கின் கீழே போட்ட கையெழுத்துப் போலவோ, நாள் பட்ட கம்பவுண்டர் எழுதிய ப்ரிஸ்கிரிப்ஷன் போலவோ அந்தக் கையெழுத்துப் புரியாமல் இருந்தது. புரியாமல் இருந்தது என்பதைவிட புரியாமல் இருக்கவேண்டும் என்றே போடப்பட்டது போலத் தோன்றியது.

ஆர்வத்திலும், பதற்றத்திலும் அவளுக்குப் புலப்படாமல் இருந்த ஒரு முரண்பாடு சற்று நிதானம் அடைந்த பின்பே விளங்கியது. மாலைத் தினசரியில் தான் பார்த்த விளம்பரத்திற்கும், இப்போது அனுப்பப் பட்டிருக்கும் விவரத்தாள்களில் உள்ள பெயருக்கும் உள்ள வேறுபாட்டை இப்போது அவள் சிந்தித்தாள். விளம்பரத்தில் 'பாலன் நாடகக் குழு’ என்று அச்சிட்டிருந்தார்கள். இப்போது தபாலில் கிடைத்திருக்கிற தாள்களில் எல்லாம் ’சொப்பன உலகம்’ நாடகக் குழு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இதில் எது உண்மையான பெயர் என்று தெரியவில்லையே எதற்காக இப்படி இரண்டு பெயர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று யோசித்தாள் சுமதி. பிரபல நடிகர் ஒருவர் தன்னைப் புகழ்ந்தது பற்றிய பத்திரிகைக் கட்டிங்கை இணைத்து அனுப்பியிருந்தும், எல்லாருக்கும் எழுதுவது போல் சாதாரணப் பதிலைத் தனக்கும் அவர் எழுதியிருந்ததை அவள் விரும்பவில்லை. இன்னும் சொல்லப் போனால் அந்தப் பதில் கடிதத்தை அவர்கள் ஒரு சுற்றறிக்கைபோல எல்லாருக்கும் பொதுவாகவே தயாரித்திருந்தார்கள் என்று தோன்றியது. அதில், கூடியவரை தங்களைப் பற்றிய சுய விளம்பரத்தைச் செய்து கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது.

விண்ணப்பத்தாள் போல் தெரிந்த நீண்ட ஃபாரத்தைப் பிரித்துப் பார்த்தாள். பெயர், உயரம், எடை, இடையளவு, மார்பளவு, வயது, மொழி, பேசத் தெரிந்த பிற மொழிகள், படிப்பு என்பவை பற்றிய கட்டங்கள் பூர்த்தி செய்வதற்கென்று காலியாக விடப்பட்டிருந்தன. மோட்டார் ஓட்டத் தெரியுமா, சைக்கிள் விடுவதற்குப் பழக்கம் உண்டா, நடனம் ஆடத் தெரியுமா, தெரியுமானால் என்னென்ன வகை நடனங்கள் தெரியும் என்றெல்லாம் வேறு கேள்விகள் இருந்தன.

அந்த விண்ணப்பத் தாளின் அடியில் தடித்த எழுத்துக்களில் அடிக்கோடிட்டு அச்சிடப்பட்டிருந்த வாக்கியம் சுமதியின் கவனத்தைக் கவர்ந்தது.

விண்ணப்பத்தாளுடன் ரூபாய் 100 மணியார்டர் செய்துவிட்டு எம்.ஓ. ரசீதை மறக்காமல் இணைத்து
அனுப்பக் கோருகிறோம் என்று அச்சிட்டிருந்த நிபந்தனை புதிதாக இருந்தது. 'நடிப்பதற்குப் புது முகங்கள் தேவை'-என்று மாலைத் தினசரிகளில் அவர்கள் செய்திருந்த விளம்பரத்தில் இப்படி ஒரு நிபந்தனை இல்லை என்பது சுமதிக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. விண்ணப்பங்கள் அனுப்பும் போது திடீரென்று நூறு ரூபாய் நிபந்தனை போடப்பட்டிருந்தது. இப்படிப் பல்லாயிரம் பேர்களிடம் நூறு ரூபாய் வீதம் வசூல் செய்தால் லட்சக்கணக்கில் சேர்ந்துவிடும் என்பதும் தெரிந்தது. உடனே நூறு ரூபாய்க்கு எங்கே போவது என்று சுமதி மலைத்தாள். மாதக் கடைசியில் ரூபாய் நூறு கைமாற்றுத் தர அங்கு யாரும் அகப்பட மாட்டார்கள் என்பதையும் அவள் அறிவாள். மாத ஆரம்பமாயிருந்தால் அந்த ஹாஸ்டல் எல்லைக்குள் யாரிடமாவது நூறு ரூபாய் கடன் வாங்குவது என்பது அவளுக்குப் பெரிய விஷயமாயிராது.

கஞ்சத்தனமானவள், கறாரானவள் என்று பெயர் பெற்ற வார்டன் மாலதி சந்திரசேகரனிடமே அவளால் கடன் வாங்கிவிட முடியும். ஆனால் இப்போது மாதக் கடைசி என்பதால் வார்டனிடமும் கையில் பணம் எதுவும் இராது.

கோடி அறையில் இருக்கும் பானுமதியிடம் கேட்டால் ஒருவேளை கிடைக்கலாம். பானுமதி கோவையைச் சேர்ந்த ஒரு பெரிய மில் அதிபரின் மகள். அவளிடம் மாதத்தில் எந்த வாரத்திலும் பணத்தட்டுப்பாடு இருக்காது. சினிமாவுக்கு, காபி ஹவுஸுக்கு, கடற்கரைக்குப் போனாலும் கூடவே நாலு தோழிகளுக்கும் செலவழித்துக் கூப்பிட்டுக் கொண்டுபோகக் கூடியவள் பானுமதி. ஆனால் அவளுக்கும் சுமதிக்கும் போன வாரம் ஒரு சின்ன மனஸ்தாபம். ஒருவருக்கொருவர் பார்த்தால் பேசிக்கொள்ளப் பழகத் தடையில்லாத மனஸ்தாபம் தான் என்றாலும் இப்போது அவளிடம் போயா கடன் கேட்பது? என்று தயக்கமாகத்தான் இருந்தது.

ஊரில் அம்மாவுக்குக் கடிதம் எழுதலாமா என்று பார்த்தால் பணம் எதற்கென்று சரியான காரணம் தெரிவிக்காமல் எழுதிக் கேட்க முடியாது. மார்வாடி கடையில் கழுத்தில் உள்ள செயினைக் கொண்டுபோய் அடகு வைக்கலாமா என்று நினைத்துப் பார்த்தாள். 'விண்ணப்பத்தை அனுப்புகிற தினத்தன்றே பணத்தை மணியார்டர் செய்யாமல் அப்புறம் நேரே இன்னொரு நாள் வரும்போது கொண்டுவந்து கட்டிவிடுகிறேன் என்று அவர்களுக்கு ஃபோன் பண்ணிப் பார்த்தால் கேட்காமலா போய்விடப் போகிறார்கள்?- என்றும் ஒரு யோசனை தோன்றியது. ஃபோனில் வேண்டுகோள் விடுத்து அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று தோன்றவில்லையானாலும் ஃபோன் செய்து பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தாள் அவள். அந்தக் கடிதத்திலிருந்த டெலிபோன் எண்ணைத் தனியே குறித்து எடுத்துக் கொண்டு, ஃபோனுக்காகக் கீழே படியிறங்கினாள் சுமதி.
-------------

அத்தியாயம் 3

சிவசக்தி மகளிர் கல்லூரியின் விடுதி அறைகளில் உள்ளவர்களுக்காகப் பொதுவில் ஒரே ஒரு டெலிபோன் மட்டும் இருந்தது. அதுவும் பொது உபயோகத்திற்கான டெலிபோன் ’பூத்'களில் உள்ளதுபோல் காசுபோட்டுப் பேசுகிற வகையைச் சேர்ந்தது. முதலில் எல்லா விடுதி அறைகளுக்கும் நடு மையமான பகுதியில் மூன்று ’பூத்’கள் வைத்திருந்தார்கள். எப்போது பார்த்தாலும் படிக்கிற மாணவிகளின் கூட்டம் அந்த ’பூத்’களையே மொய்த்துக் கொண்டிருக்கவே, அதைத் தவிர்க்கக் கருதி, மறு ஆண்டில் ஃபோன்களை இரண்டாகக் குறைத்தார்கள். அப்போதும் ஃபோனைச் சுற்றிக் கூட்டம் போடும் மாணவிகளின் எண்ணிக்கை குறையாமல் இருக்கவே, கடைசியில் ஒரே ஒரு டெலிபோனை மட்டும் ’பூத்’தை நீக்கிவிட்டுத் திறந்த நிலையில் வராந்தாவில் வைத்து விட்டார்கள்.

சுற்றிலும் கண்ணாடி அடைப்பு வைத்து இரகசியமாகப் பேசுவதற்குப் 'பூத்' அமைத்து, வசதி செய்து கொடுத்தால்தான் நிறையப் பேச வருவார்கள். அந்த வசதிகளைக் குறைத்துவிட்டு, ஃபோனை வராந்தாவில் வைத்துவிட்டாலே முக்கால்வாசி மாணவிகள் பேசுவதைக் குறைத்துக்கொண்டு விடுவார்கள் என்று யோசனை செய்து பிரின்ஸிபால் அம்மாள் இந்த முடிவுக்கு வந்திருந்தாள். டெலிபோனைச் சுற்றி இருந்த கண்ணாடி அடைப்புக்கள், தடுப்பு மரச்சுவர், கூண்டு எல்லாவற்றையும் நீக்கிவிட்டு, வராந்தாவில் சுவரை ஒட்டினாற்போலக் காசு போடுகிற பெட்டி, டெலிபோன் கருவி எல்லாவற்றையும் பொருத்திய பின்பும் கூடக் கூட்டம் என்னவோ குறையவே இல்லை. அவ்வளவு பேருக்கும் சேர்த்து ஒரே டெலிபோன் என்று ஆகியிருந்ததனால், கூட்டம் முன்னைவிடப் பெருகியிருந்தது. திறந்த வெளியில், வராந்தாவில் 'பிரைவஸி' இல்லாமல் பேச நேருகிறதே என்பதாலும் மாணவிகள் கவலைப்பட வில்லை. எப்படியோ பேசிச் சமாளித்துக் கொள்ளப் பழகியிருந்தார்கள். டெலிபோன் பேசுவதற்காகச் சுமதி படியிறங்கி வந்தபோதும் ஃபோனடியில் இரண்டு மூன்று மாணவிகள் கூடி நின்றுகொண்டிருந்தனர். எவ்வளவோ அசெளகரியங்கள் இருந்தும், மாணவிகளின் ஃபோன் பேசுகிற ஆர்வமோ, ஃபோனுக்காகக் காத்து நிற்கிற ஆர்வமோ ஒரு சிறிதும் குறைந்ததாகத் தெரியவில்லை. காத்திருக்க வேண்டும் என்பதோ, டயல் செய்து விட்டுப் பத்துக்காசு நாணயங்களாகத் தயாராய் மாற்றி வைத்திருந்து சிலவற்றை எண்ணிப் போடவேண்டுமென்பதோ ஒரு சிறிதும் பாதித்திருக்கவில்லை.

ஃபோனருகே காத்திருந்த மாணவிகள் பேசிவிட்டுப் போகட்டும் என்று சுமதி ஒதுங்கி நின்றுகொண்டாள். சிறிது முன் படித்த கடிதத்திலிருந்து குறித்துக் கொண்டு வந்திருந்த ஃபோன் நம்பர், கையில் பத்திரமாக இருந்தது.

தான் அந்த எண்ணுக்கு ஃபோன் செய்யும்போது அங்கே பக்கத்தில் யாரும் நின்று ஒட்டுக் கேட்க நேரக் கூடாது என்பதில் சுமதி முன்னெச்சரிக்கை கொண்டிருந்தாள்.

"ஹாய் சுமதி! என்னது? டெலிபோனுக்காக வெயிட் பண்றியா?” என்று விசாரித்துக் கொண்டே அங்கே வந்தாள் ஒரு விடுதித் தோழி.

"ஆமாம்! ஒரே கூட்டமாயிருக்கே... மத்தவங்கள்லாம் பேசிட்டுப் போகட்டும்னு இருக்கேன்..."

"ஏன்? வேறு யாரும் கேட்கக் கூடாதா.. ரகசிய ஃபோனா? யாராவது பாய் ஃபிரண்டா? அல்லது...?”

"இரகசியமாப் பேசணும்னாலே அது பாய் பிரண்டோடதான் இருக்கணும்னு, என்ன விதி? வேற யாரோடவும் இரகசியமாகப் பேசறதுக்கு விஷயமே இருக்காதா?” என்று சிறிதுகூடத் தயங்காமல் உடனே பதிலுக்குக் கேட்டுவிட்டாள் சுமதி.

"நான் உன்னோட மோதத் தயாராயில்லேடீ அம்மா! இப்போ உன் 'மூட்' சரியில்லை போலிருக்கு"-

சொல்லிவிட்டு மெதுவாகச் சுமதியிடமிருந்து நழுவினாள் அந்த மாணவி.

பத்து நிமிடம் காத்திருந்த பின் சுமதிக்கு ஃபோன் கிடைத்தது. -

தன்னுடைய ஆவலை அதிகம் கவர்ந்திருக்கிற-தன் மனம் அதிகமாக எதிர்பார்க்கிற ஒர் இடத்துக்கு ஃபோன் பேசுகிறபோது ஏற்படும் படபடப்பு இப்போது அவளுக்கு ஏற்பட்டிருந்தது.

ஃபோன் பேசுகிற இடத்தில் அவளருகே யாரும் இல்லை என்றாலும் சிறிது தொலைவில் சற்றுமுன் அவளுடன் வந்து பேசியவளும் வேறொருத்தியும் நின்று உரையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த இருவரில் ஒருத்தி தன் பக்கமாகக் கையைச் சுட்டிக்காட்டி மற்றவளிடம் பேசிக் கொண்டிருக்கவே சுமதியின் கவனம் அவர்கள் பக்கமும் திரும்பி லயித்தது. ⁠ஃபோனில் நம்பர் கிடைத்து எதிர்த் தரப்பில் யாருடைய குரலாவது கேட்ட பின் பெட்டியில் போடுவதற்காகப் பத்துக்காசு நாணயங்கள் சுமதியிடம் தயாராயிருந்தன. எங்கேஜ்டு ஒலிதான் முதலில் வந்தது. சிறிது காத்திருந்து மறுபடி ஃபோன் செய்தபோது அந்த நம்பரில் மணி அடித்தது ஆறுதலாயிருந்தது. யாரோ ஃபோனை எடுத்து 'ஹலோ' என்றார்கள். பத்துக்காசு நாணயங்களைப் போட்டாள் சுமதி.

"பாலன் நாடகக் குழுதானே?”

"இல்லீங்களே... நீங்க யார் பேசறது? முதல்லே அதைச் சொல்லுங்க...”

"சொப்பன உலகம் நாடகக்குழு ஆபீஸா?” என்று அதன் மற்றொரு பெயரைக் குறிப்பிட்டு இரண்டாவது முறையாக விசாரித்தாள் சுமதி. மறுபடியும் பழைய மாதிரியே பதில் வந்தது.

"நீங்க யாருன்னு சொல்லுங்க முதல்லே...”

சுமதி தான் யாரென்பதைச் சுருக்கமாக விவரித்தாள்.

"ஓ! அந்த விஷயமா? கொஞ்சம் லயன்லே இருங்க... ஆளைக் கூப்பிடறேன்” என்பதாக எதிர்ப்புறமிருந்து ஒரு தினுசாகப் பதில் வந்தது.

சுமதி அவசர அவசரமாகக் கையிலிருந்த தாளிலிருந்து நம்பரை மறுபடி சரிபார்த்துக்கொண்டாள். அதே நம்பர்தான், சந்தேகமில்லை. ஃபோனை எடுத்தவன் பேசிய விதத்திலிருந்து அந்த டெலிஃபோன் நாடகக் குழுவிற்குச் சொந்தமானது இல்லையோ என்று எண்ணத் தோன்றியது. வீட்டில் ஒண்டுக்குடித்தனம் இருக்கிற மாதிரி ஒரே டெலிபோன் நம்பரில் பலர் ஒண்டுக் குடித்தனம் இருப்பது என்பது சென்னை போன்ற பெரிய நகரத்தில் சகஜம்தான். புது முகங்களுக்காக விளம்பரம் செய்துள்ள அந்தக் கம்பெனியும், இந்த டெலிஃபோன் நம்பரில் ஒண்டுக்குடித்தனம் இருக்கிறதோ என்னவோ என்று ஊகிக்க முயன்று ஃபோனில் காத்திருந்தாள் சுமதி. சிறிது தொலைவில் அந்த இரு மாணவிகளும் கலைந்து போகாமல் இன்னும் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் இன்னும் தன்னைப் பற்றித்தான் பேசிக்கொள்கிறார்களோ என்ற அவள் மனம் குறுகுறுத்தது. பேச்சு முடிந்து அவர்களோ, அல்லது வேறு யாராவது மாணவிகளோ டெலிஃபோனுக்கு அருகே வந்துவிடக் கூடாதே என்று வேறு சுமதியின் நெஞ்சம் பரபரப்பு அடைந்தது.

அப்பாடா! நல்லவேளையாக டெலிஃபோனை எதிர்ப்புறம் யாரோ மீண்டும் எடுத்துக் குரல் கொடுத்தார்கள்.

“பாலன் நாடகக் குழு என்கிற சொப்பன உலகம் கம்பெனியிலிருந்து யாரையாவது பேசச் சொல்கிறீர்களா?”

“நான் அதனோட மேனேஜர்தான்ம்மா பேசறேன்...” “நீங்க பேப்பர்ல விளம்பரம் பண்ணியிருந்தீங்களே... அது சம்பந்தமா...”

“ஆமாம்! மேலே சொல்லுங்க...”

சுமதி, தான் அவர்களுக்கு விண்ணப்பம் அனுப்பியது, தன் பெயர், முகவரி எல்லாவற்றையும் சொல்லிவிட்டுத் தனக்கு அவர்கள் அனுப்பிய பதில் பற்றியும் குறிப்பிட்டாள்.

“ஃபாரத்தை எழுதி அனுப்பறதோட நூறு ரூபாய் எம்.ஒ. பண்ணிடுங்க. அப்புறம் ‘இண்டர்வ்யூ’ டேட் எழுதறோம்...”

“இப்போ எனக்குக் கொஞ்சம் பணக் கஷ்டம். அதனாலே ஃபாரத்தை மட்டும் அனுப்பிவிட்டு, அப்புறம் நேரே வர்ரப்போ பணம் கொடுத்துடலாம்னு பார்க்கிறேன்...”

“நாங்க அப்படி ஒத்துக்கறதில்லேம்மா. எம்.ஓ. ரசீதை சேர்த்து அனுப்பியிருக்கிற அப்ளிகேஷன்ஸை மட்டுந்தான் கவனிப்போம். அவங்களுக்குத்தான் நேரே வரச் சொல்லி ‘இண்டர்வ்யூ’க்கு எழுதுவோம்” “எனக்கு மட்டும் நீங்க கொஞ்சம் உதவி பண்ணப்பிடாதா? நான் கல்லூரியிலே படித்துக்கொண்டிருக்கிற மாணவி.”

“கொஞ்சம் லயன்ல இருங்க. கேட்டுச் சொல்றேன்” என்று ஃபோனை வைத்துவிட்டு, யாரிடமோ கேட்கப் போனான் அவன்.

சுமதி சில விநாடிகள் காத்திருந்தாள். இப்போது ஃபோனருகே இன்னும் சில பெண்கள் வந்துவிட்டார்கள். தான் இனிமேல் பேச வேண்டியவற்றை அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படாத வகையில் பேசி முடிக்க வேண்டும் என்பதைத் தன் மனத்திற்குள் எச்சரித்துக் கொண்டாள் சுமதி. மீண்டும் ஃபோன் எடுக்கப்படும் ஓசை கேட்டது. “நாங்க அதிலே போட்டிருக்கிற தேதிக்கு முன்னே பின்னே இரண்டு மூணுநாள் ஆனாலும் பரவாயில்லை. நீங்க எப்படியும் பணத்தை அனுப்பிச்சிடுங்க. அப்புறம்தான் உங்களை வரச்சொல்லி நாங்க எழுதுவோம்” என்று கூறிவிட்டு அவளுடைய பதிலை எதிர்பாராமலே ஃபோனை வைத்துவிட்டான் அந்த ஆள்.

“என்னடி சுமதி? இன்னும் ஃபோனை வைக்க மனசு வரலியா?” என்று கேட்டுக் கொண்டே சக மாணவி ஒருத்தி அருகே வந்தாள். சுமதி ஃபோனைக் கொக்கியில் தொங்கவிட்டாள். தன்னோடு கலகலப்பாகப் பேச முயன்ற மற்ற மாணவிகளை எவ்வளவு அவசரமாகத் தவிர்க்க முடியுமோ அவ்வளவு அவசரமாகத் தவிர்த்துவிட்டு, உடனே அறைக்குத் திரும்பினாள் அவள். நூறு ரூபாய்ப் பணத்தை எதிர்பார்த்துத் தயங்குவதன் காரணமாகத் தன் வாழ்வின் எதிர்காலத்தையே பொன்மயமாக மாற்றிவிடப் போகிற ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விடுவதா? என்று யோசித்தாள் அவள்.

கை வளைகளையோ, கழுத்துச் சங்கிலியையோ எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் மார்வாடிக் கடைக்குப் போய்விட்டு வந்தால்தான் காரியம் முடியும் என்று தோன்றியது அவளுக்கு.

திடீரென்று தன் கழுத்தில் சங்கிலியையோ, கைகளில் வளைகளையோ காணாவிட்டால் சக மாணவிகளில் யாராவது அவைகளைப்பற்றி விசாரிப்பார்களே என்றும் தயக்கமாயிருந்தது.

அன்று வகுப்புகளுக்குக்கூட அவள் செல்லவில்லை. 'தலைவலி என்று தோழிகளிடம் சொல்லி அனுப்பிவிட்டாள். வகுப்பு, கல்லூரி, பாடம், படிப்பு எதுவுமே அவள் நினைவில் அப்போது இல்லை. எப்படியாவது எங்கேயிருந்தாவது தொடங்கி சினிமா ஸ்டாராகிவிட வேண்டும் என்ற வெறிதான் மூண்டிருந்தது. எல்லாப் பத்திரிகைகளிலும், தெருச்சுவர்களிலும் தன் உருவத்தைக் காணப்போகிற எதிர்காலம் பற்றி அவள் இப்போதே கனவுகளில் மிதக்கத் தொடங்கியிருந்தாள்.

தான் மார்வாடிக் கடையில் போய் அடகு வைத்துப் பணம் வாங்கி அது பிரின்ஸிபால் அம்மாளுக்கோவார்டனுக்கோ தெரியவந்தால் தன்னைக் கல்லூரியிலிருந்தே நீக்கிவிடுவார்களோ என்றும் பயமாக இருந்தது. இறுதியில் பயம், தயக்கம், கூச்சம் எல்லாவற்றையும் ஆசை வெற்றிகொண்டது. எப்படியாவது பணத்தைப் பெற்று எம்.ஓ. செய்து விண்ணப்பத்தாளுடன் இணைத்து அனுப்புவது என்று முடிவு செய்துவிட்டாள் அவள். கடைசியாக மார்வாடிக் கடைக்குப் போவதைத் தவிரவும் இன்னொரு வழி மீதமிருப்பது தெரிந்தது. முன் பொரு நாள் மேரி தன்னைத் தேடிவந்து கூறிய விஷயம் சுமதிக்கு இப்போது நினைவு வந்தது. செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் குடியிருக்கும் மேரி சுமதியின் சக மாணவி. ஆங்கிலோ இந்தியப் பெண்மணியான அவள் படு துணிச்சல்காரி. சுமதியின் உடல் அழகைப்பற்றி அவளே கூச்சம் அடையும்படி அடிக்கடி அவளிடம் நேருக்கு நேர் புகழ்ந்திருக்கிறாள் மேரி. அந்த மேரியை இப்போது சந்தித்துப் பேசினால் என்னவென்று தோன்றியது. சுமதிக்கு. ‘டேஸ்காலரான’ மேரி அப்போது வகுப்புக்குப் போயிருப்பாள் என்றும், முதல் பீரியடு முடிந்ததும் அவளைப் பார்த்துத் தன் அறைக்கே அழைத்து வந்து தனியாக அவளிடம் பேசிக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தாள் சுமதி.
---------------

அத்தியாயம் 4

மனத்தில் ஒன்றின்மேல் ஆசை அளவற்றுப் பெருகும்போது காரண காரியங்களைப்பற்றிச் சிந்திக்கத் தோன்றாது. சாத்திய அசாத்தியங்களைப் பற்றிச் சிந்திக்கத் தோன்றாது. நியாய அநியாயங்களைப் பற்றிச் சிந்திக்க தோன்றாது. எதை விரும்புகிறோமோ அதுவே சாத்தியமென்று தோன்றும். எதன் மேல் ஆசைப் படுகிறோமோ அதுவே நியாயமென்று தோன்றும். அது மட்டுமே சரியென்றுகூடத் தோன்றும்.

சுமதியும் அன்று அப்படித்தான் இருந்தாள். வகுப்புக்களுக்குப் போவதில் அவளுக்கு நாட்டமில்லை. பாடங்களிலோ, படிப்பிலோ அவளுக்குக் கவனமில்லை. எப்படியாவது உடனே நூறு ரூபாய் சம்பாதிக்க வேண்டும். அந்த நூறு ரூபாயை மணியார்டர் செய்து அதன் ரசீதை உடன் இணைத்து, நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் அந்த நாடகக் குழுவுக்கு விண்ணப்பத்தை அனுப்பியாக வேண்டும். அல்லது நேரிலேயே விண்ணப்பத்தை எழுதி எடுத்துக்கொண்டு போயாவது பணத்தையும் கட்டிவிட வேண்டும்.

விடுதி அறைகளுக்கான கடிதங்களைப் பட்டுவாடா செய்யும் வேலைக்காரி வராந்தாவில் தென்பட்டாள்.

"லெட்டர் ஏதாவது இருக்கா மங்கம்மா?” "உங்க ரூமுக்கு இல்லே." "இங்கே வா... உன்னாலே ஒரு காரியம் ஆகணும்...” மங்கம்மா அறைக்குள் வந்ததும் மேரியை முதல் பீரியடு முடிந்து மணியடித்ததும் தன்னுடைய அறைக்கு

வரச்சொல்லி வேண்டி ஒரு சிறு துண்டுத் தாளில் அவளிடம் எழுதிக் கொடுத்து அனுப்பினாள் சுமதி.

முதல் பீரியடு முடிந்து எப்போது மேரி வரப்போகிறாள் என்று அவள் வருகிற நேரத்துக்காகக் காத்திருக்க வேண்டியதாயிற்று. இன்று தான் கூப்பிட்டுச் சொல்லியனுப்புகிற இதே மேரி சில வாரங்களுக்கு முன் தன் அறையைத் தேடி வந்தபோது தான் அவளை உதாசீனப்படுத்தி அனுப்பியது சுமதிக்கு நினைவு வந்தது. அன்று, தான் அவளிடம் நடந்து கொண்டதை நினைத்தால் இப்போது வருத்தமாகக்கூட இருந்தது. ஆனால் மேரி என்னவோ இவள் உதாசீனப்படுத்தியதைக்கூட அவ்வளவு ஸீரியஸ்ஸாக அன்று எடுத்துக் கொள்ளவில்லை.

'சரிǃ சரி! இப்போது இப்படித்தான் சொல்வாய். என்றாவது ஒரு நாள் நீயும் என் வழிக்கு வந்துதான் ஆக வேண்டும்?’ என்று சொல்வது போல் சிரித்துக் கொண்டே போய்விட்டாள் மேரி. -

மேரி ஒரு தினுசானவள் என்பது கல்லூரியில் எல்லாருக்கும் தெரியும். நேரடியாகத் தெரியாதவர் களுக்கு இலைமறை காயாக அது தெரியும். மலேசியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும், மொரீசியஸிலிருந்தும் அந்தக் கல்லூரியில் வந்து தங்கிப் படிக்கும் பல பெண்கள் மேரியின் தோழிகள். அந்த வெளிநாட்டுப் பெண்களுக்குப் பணத் தட்டுப்பாடு வரும் போது, பகுதி நேர வேலைகளில் இங்கேயே சம்பாதிக்கும் வழிகளை மேரி தேடிக் கொடுத்தாள். அவள் தேடிக் கொடுக்கிற வேலைகள் எப்படிப்பட்டவை என்பதைப் பற்றி வதந்திகளும், கேலிகளும், அபாண்டங்களுமாக நிறையப் பேச்சுக்கள் இருந்தன. ஆனாலும் அந்த வெளிநாட்டு மாணவிகளில் பலர் தொடர்ந்து மேரியிடம் விசுவாசமாகவும், பிரியமாகவும்தான் இருந்து வந்தனர். வெளிநாட்டு மாணவிகளைத் தவிர உள்நாட்டு மாணவிகளுக்குள்ளேயும் அழகிய தோற்றத்தை உடைய

பலருக்கு மேரி அவ்வப்போது வலை விரித்துப் பார்த்தது உண்டு. பிடித்ததும் உண்டு. -

சுமதி ஒருநாள் கிண்டலும் குத்தலும், எகத்தாளமும் இயைந்து தொனிக்கிற குரலில், ”இங்கே பல மாணவிகளுக்கு நீதான் முதலாளியாமே...? ’பார்ட் டைம் ஜாப்’ எல்லாம் தேடித் தருகிறாயாமே?” என்று அவளிடம் கேட்டு வைத்தாள். சுமதி இப்படிக் கேட்டபோது சிரித்துக் கொண்டே போய்விட்ட மேரி அன்று மாலையிலேயே நேரே விடுதியில் அவள் அறையைத் தேடிக் கொண்டு வந்துவிட்டாள். அவள் தேடி வந்ததைப் பார்த்துச் சுமதிக்கு ஆத்திரமே வந்துவிட்டது.

"நீ தேடி வந்திருக்கிறதைப் பார்த்தாலே மத்தவங்க என்னைத் தப்பா நினைப்பாங்க’.. நீ தயவு செய்து உடனே இங்கேயிருந்து போயிடணும்”-என்றாள் சுமதி.

“போகமாட்டேன்... நீ என்ன செய்வே?” "ப்ளீஸ்... கெட் அவுட்..." 'நீ என்னைப்பத்தி அனாவசியமாத் தப்பாப் புரிஞ்சிக்கிட்டிருக்கே சுமதி! நான் பலருக்கு உதவுகிறவள், யதார்த்தமாக இருப்பவள்.” -

"போதுமே! இந்தக் காலேஜிலே வந்து படிக்கிற ஃபாரின் ஸ்டுடண்ட்ஸ்லே முக்கால்வாசிப் பேரைக் கெட்ட வழியிலே சம்பாதிக்கப் பழக்கினதே நீ தானே?” 'உனக்கு யாரோ தப்பா என்னைப்பத்திச் சொல்லியிருக்காங்க... லெட்மீ எக்ஸ்ப்ளெய்ன் ஃபர்ஸ்ட்” "நீ சொல்லவே வேண்டாம்... எல்லாம் எனக்குத் தெரியும்.”

"என்ன தெரியும்? சொல்லேன்...” "பல அழகான பெண்களை நீ அடிக்கடி சினிமாவுக்கோ டிராமாவுக்கோ, ஷாப்பிங்குக்கோ அழைச்சுக்கிட்டுப் போற மாதிரி செயிண்ட்தாமஸ் மவுண்டிலே உங்க வீட்டுக்குப் பக்கத்திலே எங்கேயோ எதுக்கோ அழைச்சிக்கிட்டுப் போறே...”

"ஆமாம் ! அழைச்சிட்டுப் போறேன். எங்க வீட்டுக்குப் பக்கத்திலே ஃபேர்லேண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்'னு பணக்கார இண்டஸ்ட்ரியலிஸ்ட்டுகள் எல்லாம் சேர்ந்து ஒரு க்ளப் நடத்தறாங்க. அங்கே மாலை வேளைகளிலே 'டிரிங்க்ஸ் பார்ட்டி' நடக்கிறது உண்டு. அந்த பார்ட்டீஸ்லே குட் லுக்கிங் ஸ்மார்ட் கேர்ள்ஸ் ஸெர்வ் பண்ணினா சம்பாதிக்கலாம். ஃபாரின் கேர்ள்ஸ் மட்டுமில்லே சுமதி, உன்னைப்போல் அழகான நம்மூர்ப் பெண்கள் சில பேர்கூட அங்கே வராங்க. ஒரு டேபிள்லே ரெண்டு ரவுண்டு ஸெர்வ் பண்றதுக்குள்ளே முழு நூறு ரூபாய் நோட்டை டிப்ஸா வீசி எறியற பணக்காரன்கூட அங்கே இருக்கான்...”

“நீ நடத்தற ’பிராத்தலுக்’கு இப்படி ஒரு விளக்கமா ?”

'சுமதி ! டோண்ட் ஸே லைக் தட். பெண்கள் ஏர்ஹோஸ்டஸா இருக்கறதைப் பற்றி நீ என்ன நினைக்கிறே?”

"அதிலே என்ன தப்பு ?"

"அப்போ இதிலேதான் என்ன தப்பு? ஏர்ஹோஸ்டஸும் பிரயாணிகளைப் பார்த்துச் சிரித்து மினுக்கித் தளுக்கி அவர்களுக்கு டிரிங்ஸ் எல்லாம் பரிமாற வேண்டியிருக்கு. அதே காரியத்தைத்தான் இங்கே எங்க ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் ’க்ளப்’லியும் பெண்கள் செய்யறாங்க...”

”நீயும் உன் ரெக்ரியேஷன் கிளப்பும் எக்கேடு கெட்டாவது தொலையுங்க. உடன் நீ இங்கேருந்து போயிடு...”

மேரி சிரித்துக் கொண்டே போய்விட்டாள். அவள் சிரித்துக்கொண்டு போவதைப் பார்த்து ஆங்கிலோ இந்தியப் பெண்களுக்கு ரோஷமே இருக்காது போலிருக்கே என்று நினைத்துக் கொண்டாள் சுமதி. கல்லூரியில் நிறையப் பெண்கள் மேரியின் வலையில் விழுந்திருப்பது சுமதிக்குத் தெரிந்திருந்தது. ’ஏதோ ஏர் ஹோஸ்டஸ்

உபசரிப்பதுபோல்’ என்று ஒப்புக்குச் சொல்கிறாளே ஒழிய அவளோடு செயிண்ட்தாமஸ் மவுண்ட்டுக்குப் போய்ச் சம்பாதிக்கிற பெண்கள் தட்டுக் கெட்டுச் சீரழிந்திருப்பார்கள் என்றே சுமதி நினைத்தாள்.

அதே சுமதிதான் இன்று மேரியைத் தன் அறைக்குக் கூப்பிட்டனுப்பியிருந்தாள். மேரி வருகிறவரை சுமதியின் மனத்தில் ஒரே போராட்டமாயிருந்தது. ஒரே குழப்பமாகவும் இருந்தது. ’ஏர்ஹோஸ்டஸாயிருக்கிறது, எப்படியோ அப்படித்தான் இதுவும்’ என்று அன்றைக்கு மேரி கூறிய சொற்கள் இன்று திரும்பத் திரும்பச் சுமதியின் செவிகளில் ஒலித்தன. அவளைச் சமாதானப்படுத்தவும் முயன்றன.

காலை பதினொரு மணிக்கு மே ஐ கம்இன்? என்ற முதல் கேள்வியோடும், "கேன் ஐ டூ எனிதிங் ஃபார் யூ சுமதி?” என்ற அதையடுத்த இரண்டாவது கேள்வியுடனும் மேரி சுமதியின் அறைக்குள் நுழைந்தாள்.

"மேரீ! அன்னிக்கு நான் பேசினதை எல்லாம் நீ மறந்து என்னை மன்னிச்சுடனும்.”

"லெட் அஸ் ஃபர்கெட் த பாஸ்ட்! இப்போ நீ கூப்பிட்ட காரியம் பற்றிப் பேசுவோம் சுமதீ... பழசெல்லாம் எதுக்கு ?”

“முதல்லே நீ உட்காரு மேரீ! இன்னும் நின்னுக்கிட்டே இருக்கியே! மெஸ்ஸிலேருந்து காபி, டீ ஏதாவது குடிக்கக் கொண்டாரச் சொல்லட்டுமா ?”

"ஒண்ணும் வேண்டாம். நீ கூப்பிட்ட காரியம் என்னன்னு சொல்லு சுமதீ.”

சுமதிக்கு அதை எப்படி ஆரம்பித்து எப்படிச் சொல்லுவதென்று தெரியவில்லை. எடுத்தெறிந்து பேசித் துரத்தியவளையே மறுபடி வலியக் கூப்பிட்டுக் கொண்டு வந்து, நீ சொன்ன காரியத்துக்கு நான் தயார் என்று கூறுவது எப்படி என்று கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. ஆனால் மேரியிடம் அதைச் சொல்லியும் ஆகவேண்டும்.

"கூச்சப்படாம எங்கிட்டச் சொல்லு சுமதி... நான் என்ன செய்யனும்? பீ பிஃராங் வித் மி...”

"எனக்கு ஒரு நூறு ரூபாய் அவசரமா வேணும்...” அப்பாடா! விஷயத்தை ஒரு மாதிரி எப்படியோ மேரியிடம் சொல்லிவிட்ட திருப்தி சுமதிக்கு ஏற்பட்டது. அப்படியானால் நீ இன்றே ஃபேர்லாண்ட்ஸ் ரிக்ரியேஷன் கிளப்புக்கு வர்த் தயாரா?' என்று மேரி உடனே தன்னைத் திருப்பிக் கேட்கக்கூடும் என்று சுமதி எதிர்பார்த்தாள். ஆனால் மேரி மறுபேச்சுப் பேசாமல் தன் கையிலிருந்த சிறு டம்பப் பையைத் திறந்து புத்தம் புதிதாகப் பத்துப் பத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணி உடனே சுமதியிடம் நீட்டினாள். எந்த நிபந்தனையு மின்றியே நீட்டினாள்.

இவ்வளவு விரைந்து அவளிடமிருந்து பணம் கிடைக் கும் என்பதை எதிர்பார்த்திராத சுமதி அதை வாங்கு வதற்குத் தயங்கினாள். மேரி பணத்தை மேஜைமேல் வைத்து அது காற்றில் பறந்துவிடாமல் அருகிலிருந்த ஒரு புத்தகத்தையும் அதன் பாதிப்பகுதி மறைகிறாற்போல் ‘வெயிட்' ஆக மேலே எடுத்து வைத்தாள்.

அப்போது உடனே சுமதியின் மனக்கண்ணில் பிரமையாக ஒரு தோற்றம் உருவாகித் தோன்றியது. செயிண்ட் தாமஸ் மவுண்டில் ஒரு பெரிய தோட்டத் தோடு கூடிய ஒட்டடுக்கு வீட்டில் அகன்ற நடுக்கூடத்தில் தொந்தியும் தொப்பையுமாக அமர்ந்து சிகரெட்டை ஊதித் தள்ளிக் கொண்டே சீட்டாடும் ஒரு கோஷ்டிக்குமுன் மேரி தன்னை அழைத்துக் கொண்டு போய் நிறுத்தி ஒரு டிரேயையும் தன் கையில் கொடுத்துப் "போ சுமதி! இதமாக நடந்துக்கோ... எல்லாம் ரிச் பீப்பிள்” என்று அவர்களை நோக்கித் தன்னை துரத்து வதுபோல் தோன்றியது. ஆனால் அது தானாகக் கற்பித் துக் கொண்டது என்பதை அடுத்தகணமே சுமதி உணர முடிந்தது. மேரி பணத்தை எடுத்து வைத்துவிட்டு,

”எனிதிங் எல்ஸ்...? நான் கிளாசுக்குப் போகணும் நேரமாச்சி..." என்று கிளம்பத் தயாராகி விட்டாள்.

"இந்தப் பணத்தை நான்..." என்று சுமதி ஏதோ ஆரம்பித்தாள். அவள் அதை முடிக்கவிடாமல்,

“ஒன்றும் அவசரமில்லை சுமதிǃ மெல்லப் பார்த்துக் கொள்ளலாம்” என்ற தானே வாக்கியத்தை வேறுவிதமாகச் சொல்லி முடித்துவிட்டாள் மேரி.

”இரு மேரிǃ நான்கூட ஸெகண்ட் அவர் கிளாஸுக்கு வரலாம்னு நினைக்கிறேன். ஃபேஸை வாஷ் பண்ணிண்டு வரேன்.”

"உன் ஃபேஸ்க்கு என்னடி சுமதி ! இப்படியே வந்தால்கூட ’கிளியோபாட்ரா’ மாதிரி இருப்பே”. மேரியின் கவனம் தன் உடல் அழகிலேயே இன்னும் இருப்பது சுமதிக்குப் புரிந்தது.

"மலேசியாவிலிருந்து படிக்க வந்திருக்கிறாளே உன் ஃபிரண்டு ஷீலா; அவளைவிடவா என்னை அழகுன்னு சொல்றே?” - -

-ஏதோ உள்ளர்த்தம் வைத்துக் கொண்டுதான் சுமதி இப்படிக் கேட்டாள்.

"ஷீலா மட்டுமென்ன? உன்னைவிட அழகானவள் இந்தக் காலேஜிலேயே வேறு யாரும் கிடையாது.டி... சுமதி" என்று அதே பாணியில் ஓர் உள்ளர்த்தம் பொதிந்த பதிலை மேரியும் அப்போது சுமதிக்குச் சொன்னாள். மேரியின் அங்கீகாரம் சுமதிக்குப் புரிந்தது. சுமதியின் இசைவு மேரிக்கும் ஒருவிதமாகப் புரிந்தது.
--------------------

அத்தியாயம் 5

மேரியின் நிதானமும், பொறுமையும் சுமதிக்கு வியப்பூட்டின. நிபந்தனைகளோ நிர்ப்பந்தங்களோ இல்லாமலே அவள் தன்னிடம் பணத்தைக் கொடுத்து விட்டுப் போனது நம்ப முடியாததாயிருந்தது.
'அடிǃ சுமதி நீதானே அன்றொரு நாள் என்னிடம் வீறாப்புப் பேசினே? நீ அப்படி வீறாப்புப் பேசினாப்பவே என் வழிக்கு வராமல் போகமாட்டேன்னு எனக்குத் தெரியும். இப்போ பண முடை வந்ததும் நீ தானாகவே என் வழிக்கு வந்துட்டே'- என்று பணத்தைக் கொடுப்பதற்கு முன்பாகவோ, பணத்தைக் கொடுத்த பின்போ அவள் சொல்லிக்காட்டிவிடுவாள் என்று சுமதி பயந்தாள். மேரி அவள் பலத்தைப் பொய்யாக்கிவிட்டாள். ஆனாலும் மேரியின் நிதானத்தைப் பற்றிய சந்தேகம் இன்னும் சுமதிக்கு இருந்தது.

மேரி பணம் கொடுத்துவிட்டுப் போன தினத்துக்கு மறுநாள் காலை, முதல் வேலையாக அதை மணியார்டர் செய்து எம்.ஒ. ரசீதைப் பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டாள் சுமதி.

சுமதி தனக்கு உடல்நலமில்லை என்ற பெயரில் மறுநாளும் வகுப்புகளுக்கு மட்டம் போட்டுவிட்டாள். விண்ணப்பத்தாளைப் பூர்த்தி செய்துகொண்டு பணத்தோடு நேரில் போகலாமென்றுதான் முதலில் அவள் நினைத்தி ருந்தாள். ஆனால், அன்று ஃபோன் செய்து பேசியபோது எம்.ஓ. ரசீதையும் விண்ணப்பத்தையும் அனுப்பினாலே போதுமானது-பின்பு நாங்கள் இண்டர்வ்யூவுக்குக் கூப்பிடும்போது வந்தால் போதும்-என்று நாடகக் குழுவைச் சேர்ந்த அவர்கள் சொல்லிய விதம் நேரில் வர வேண்டாம் என்பது போலிருந்தது. ஆகவேதான் போகும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு, முதலில் எம்.ஓ. செய்திருந்தாள் அவள்.

நாடகக் கம்பெனியின் அச்சிட்ட விண்ணப்பத்தில் 'இடையளவு', 'மார்பளவு’ எல்லாம் கேட்டிருந்தார்கள். கல்லூரி வாயிலில் இருந்த ஒரு தையற் கடையில் வேலைக்காரி மூலம் ஒரு ரூபாய் கொடுத்து ஒர் இஞ்ச்டேப்பை அரைமணி இரவல் வாங்கி வந்து, பாத்ரூம் கதவைத் தாழிட்டுக்கொண்டு தனக்குத்தானே சுமதி அந்த அளவைகளைப் பார்த்தாள். விண்ணப்பத்தை ஒரு விதமாகப் பூர்த்தி செய்து எம்.ஓ. ரசீதையும் இணைத்து அனுப்பினாள். பகல் இரண்டு மணிக்குள் அந்த வேலை முடிந்துவிட்டது.

பிற்பகல் தபாலில் மதுரையிலிருந்து அம்மா எழுதிய கடிதம் கிடைத்தது.

அன்புள்ள சுமதிக்கு அநேக ஆசிகள். உன்னிடமிருந்து கடிதம் வந்து நாளாகிவிட்டது. ஏறக்குறைய நீ கடிதம் எழுதி ஒரு மாதத்துக்கும் மேலாகி இருக்கும் என்று நினைக்கிறேன். போன மாதம் அனுப்பியதுபோல் அடுத்த மாதம் முதல் தேதி உனக்கு நான் பணம் அனுப்ப முடியும் என்று தோன்றவில்லை. நம் வீட்டில் குடியிருந்தவர்கள் செங்கோட்டைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிக் காலி செய்து கொண்டு போய்விட்டார்கள். இனி மேல் வாடகைப் பணம் வராது என்பதோடு அவர்களிடம் வாங்கியிருந்த இரண்டு மாச அட்வான்ஸ் பணத்தை நான் சிரமப்பட்டு மேனேஜ் செய்து திருப்பிக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. புதிதாக யார் வாடகைக்கு வருவார்கள், எப்போது வருவார்கள் என்று தெரியவில்லை. வந்தால்தான் உறுதி.

எனக்கு ஸ்கூலில் சம்பளம் போட்டதும் முதல் வாரத்தில் ஏதோ முடிந்ததை அனுப்புகிறேன். இந்த மாதம் அதை வைத்து நீ அட்ஜஸ்ட் செய்துகொள். குடியிருந்தவர்களுக்கு அட்வான்ஸ் திருப்பிக் கொடுக்கவே பக்கத்தில் கைமாற்று வாங்க வேண்டியதாய்ப் போயிற்று. அதை வேறு திருப்பிக் கொடுக்க வேண்டும். இன்னும் சினிமாப் பத்திரிகைகளில் உன்னுடைய கேள்வி-பதில்களையும் ஆசிரியருக்குக் கடிதங்களையும் படிப்பதாகப் பக்கத்து வீட்டு சரசு சொல்லுகிறாள். உருப்படியாகப் படித்து முன்னேறப் பார். என்னருகே இந்த ஊரிலேயே இருந்து படித்தால் நானே உனக்குச்

செல்லம் கொடுத்து உன்னைக் குட்டிச் சுவராக்கி விடுவேனோ என்ற பயந்துதான் மெட்ராசுக்கு அனுப்பினேன். இந்த வயசில் மறுபடி பரீட்சைக்குப் படித்து 'ஸெகண்டரிகிரேட்’ வாத்தியார் வேலை போதாதென்ற ’தமிழ்ப் பண்டிட்' ஆவதற்கு வித்வான் பாஸ் பண்ணி, இப்போதுதான் நாலு மாதமாகத் ’தமிழ்ப் பண்டிட்’ வேலை போட்டு பி.டி. கிரேடு சம்பளம் எனக்குத் தருகிறார்கள். உன் ஒருத்திக்காகத்தான் நான் இந்த சிரமம் எல்லாம்படுகிறேன் என்பதாவது உனக்கு நினைவிருக்கிறதா? உங்கப்பா இருந்திருந்தால் நான் இவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்காது. அவர் போனப்புறம் வாழ்க்கையே வெறுத்துப்போன எனக்கு நீதான் நம்பிக்கையாயிருக்கே. நீ சொல்ற எதையும் நான் தட்டிச் சொல்றதில்லை. போன வருஷம் கோடை விடுமுறைக்குக் கொடைக்கானல் போகணும்னே. மறுபேச்சுப் பேசாமல் கூட்டிக் கொண்டு போனேன். இருபது நாள் தங்கினோம். ஆயிரம் ரூபாய்வரை செலவு ஆச்சு உன் திருப்திக்காக இதெல்லாம் நான் செய்வது போல் என் திருப்திக்காக நீ நன்றாகப் படிக்கணும். பரீட்சையில் டிஸ்டிங்ஷன் வாங்கணும். உன்னைப்பற்றி நான் எப்படி எப்படியோ கனவு கண்டு கொண்டிருக்கிறேன் சுமதி ! நீ ஐ.ஏ.எஸ். பாஸ் பண்ணி பெரிய பெரிய உத்தியோகம் எல்லாம் பார்க்கப் போகிறாய் என்றும் நிறைய - பேரும் புகழும் சம்பாதிக்கப் போகிறாய் என்றும் நான் நம்புவது வீண் போகக்கூடாது சுமதி ! ஹாஸ்டல் வார்டன் அம்மாள் அனுமதி கொடுத்தால் கூட நீ இரண்டு வாரத்திற்கு ஒரு சினிமாவுக்கு மேல் பார்க்கக் கூடாது. கண்ட கழிசடைச் சினிமா மேகஸீனை எல்லாம் படிக்காதே. அதில் எதிலாவது தாறுமாறான கேள்விகள், ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதி உன் பேர் அச்சில்

வருவதைப் பார்க்கும் அற்ப சந்தோஷத்தை இனியாவது விட்டு விடு. அது உன் படிப்பைக் குட்டிச் சுவராக்கிவிடும். இந்த மாதம் நான் குறைவாகப் பணம் அனுப்புவதற்காக வருத்தப்படாதே. அடுத்த மாதம் எதை மிச்சம் பிடித்தாவது வழக்கம்போல் அனுப்பி விடுவேன்.

இப்படிக்கு அன்புடன் உன் அம்மா பெரியநாயகி. கடிதத்தைப் படித்ததும் சுமதியின் மனத்தில் உறுத்திய முதல் விஷயம் அம்மா குறைவாகப் பணம் அனுப்பப் போகிறாள் என்பதுதான். மேரியின் பணத்தை உடனடியாகத் திருப்பிக் கொடுக்க முடியாது என்பது உறுதியாயிற்று. இரண்டாவதாக அந்தக் கடிதத்தில் அவளுக்குப் பிடிக்காத விஷயம் சினிமாவைப் பற்றி அம்மா அறுத்திருந்த அறுவை. புலவர் பரீட்சைகளைப் பிரைவேட்டாக எழுதிப் பாஸ் செய்து அம்மா தமிழ்ப் பண்டிட் ஆனாலும் ஆனாள். அவள் கடிதங்கள் எல்லாம் ஒரே உபதேச காண்டங்களாகவே வந்து சேருகின்றன. வெறும் ஸெகண்டரி கிரேட் டீச்சராக இருந்தபோது அம்மா இவ்வளவு துாரம் உபதேசம் செய்யமாட்டாள். தமிழ் பண்டிட் ஆனவுடன் அம்மா நிறைய உபதேசம் செய்வதற்குக் கற்றுக் கொண்டு விட்டாளோ என்றெண்ணித் தனக்குத்தானே சிரித்துக் கொண்டு சுமதி கடிதத்தை மடித்து மேஜை மேலிருந்த கல்லூரிக் காலண்டரில் சொருகினாள்.

அறை வாசலில் நிழல் தட்டியது. சுமதி திரும்பினாள். மேரி நின்று கொண்டிருந்தாள். சிரித்தபடியே, "இங்கிலீஸ் லெக்சரர் லீவாம். ஈவினிங் கிளாஸ் இல்லே. உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன்” என்றாள்.

“உள்ளே வாயேன்! ஏன் வாசல்லேயே நிற்கிறே?” மேரி உள்ளே வந்தாள். - "இன்னிக்கும் நீ காலேஜுக்கு லீவா சுமதி?”

"வேலை இருந்தது. வரலே... வந்துதான் என்ன வெட்டி முறிக்கப் போகிறோம். கிளாஸுக்கு வரதைவிட ரூம்லே இருந்து நோட்ஸை ஒழுங்காப் படிச்சால்கூட போதும்...”

”நேற்று உனக்கு உதவ முடிஞ்சதிலே எனக்கு ரொம்பத் திருப்தி சுமதி!... பை தி பை... தப்பா நெனைச்சுக்காதே, இப்பக்கூட எங்கிட்டப் பணம் இருக்கு... உனக்கு ஏதாவது தேவையிருந்தால் தரேன்...”

சுமதிக்குத் தேவை எதுவும் இல்லை. ஆனால் ’பணம் குறைவாக அனுப்பப்போகிறேன்’என்ற அம்மாவின் முன்னெச்சரிக்கைக் கடிதம் பயமுறுத்தியது. என்ன நினைத்தாளோ தெரியவில்லை மேரியின் தயவை அப்போதே பயன்படுத்திக் கொள்ள விரும்பியவள் போல், "இருந்தால் இன்னும் ஒரு ஐம்பது ரூபாய் கொடேன் மேரி! நூற்றைம்பதாகக் கணக்கு வைத்துக் கொள்ளலாம்” என்றாள் சுமதி.

"கணக்கு என்னடீ கணக்கு ! உனக்கு நான் கணக்குப் பார்த்துத்தான் கொடுக்கணுமா? ஐயாம் நாட் எ மணி லெண்டர். ஜஸ்ட் யுவர் கிளாஸ் மேட், டேக் திஸ்.”

இப்போது மேரி நீட்டியது ஒரு முழு நூறு ரூபாய் நோட்டு. சுமதி தயங்கினாள். ஆனால் ஒரு கணம்தான். புதுமுகங்கள் தேடும் நாடகக் குழுவினர் தன்னை இண்டர்வ்யூவுக்குக் கூப்பிட்டு எழுதினால் அன்று போகவர டாக்ஸி செலவு முதலியவற்றுக்காக மறுபடி மேரியிடமே கடனுக்காக நிற்கவேண்டாம்? இப்போதே அவளிடம் நூறாக வாங்கிக்கொள்வதில் என்ன தவறு? என்ற மறு பரிசீலனையும் மனத்தில் தோன்றவே அடுத்த கணம் அந்த நூறு ரூபாய் நோட்டையே தயக்கமின்றி அவளிடமிருந்து வாங்கிக் கொண்டாள் சுமதி. "மொத்தம் இருநூறு ஆகிறது. மேரி...” "கவுண்ட் பண்ணாதே சுமதி ! அது பிடிக்கலே. இருநூறு என்ன? உனக்காக ரெண்டாயிரம் கூட ஆகட்டுமே... நான் தரேன்...”

"மேரி... ரியலி ஐயம் கிரேட்ஃபுல் டு யு... அண்ட் ஐ நெவர்...”

அருகே வந்து மேரி அவள் வாயைப் பொத்தினாள்.

'நேரத்தை வீணாக்காதே. ’ஜெர்ரிலூயி’ படம் ஒண்ணு ஃபேமிலி ஜுவல்ஸ்’னு மாட்னிஷோ இருக்கு. வார்டனிட்ட பெர்மிஷனுக்குச் சொல்லிவிட்டுவா சுமதி ! போகலாம்...”

"படத்துக்கா போகணும்கிற?”

"ஆமாம்! வா போகலாம்?...”

அன்றென்னவோ சுமதிக்கு எங்காவது வெளியே போய்ச் சுற்றிவிட்டு வரவேண்டும் போலிருந்தது. அன்றைய மனநிலை விடுபட்டாற்போல எங்காவது சுற்றத் தோன்றியது. உடை மாற்றிக்கொண்டு மேரியோடு புறப்பட்டுவிட்டாள். வார்டனிடம் அவளுக்குள்ள முகராசியினாலும், பகல் காட்சி என்பதனாலும் சுலபமாகவே அனுமதியை வாங்கிக் கொண்டு கீழே படியிறங்கி ஏற்கெனவே ப்ளே கிரவுண்டில் போய்க் காத்திருந்த மேரியோடு சேர்ந்து சுமதி போனபோது மறுபடி மேலே மாடியில் வராந்தாவிலிருந்து வார்டன் அம்மாளின் குரல், "சுமதி, உன்னைத்தானே ஒரு நிமிஷம் இப்படி வந்திட்டுப் போயேன்... என்று இரைந்து கூப்பிடவே திரும்ப நிமிர்ந்து பார்த்த சுமதி, "இரு மேரி! போய் என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன்” என்று சொல்லி விட்டு மறுபடி மேலே படியேறிப்போனாள். அவள் மேலே போவதற்குள் வராந்தாவில் நின்ற வார்டன் தன் அறைக்குள் போயிருந்ததனால் இவளும் திரும்ப அறைக்கே சென்றாள்.

"ஆமாம்! இப்போ யாரோட சினிமாவுக்குப் போறே?”

"ஏன் ?”

”மேரியோடையா?”

கேள்வி ஒரு தினுசாக ஒலிக்கவே உடனே தற்காப்பு உணர்வையடைந்த சுமதி பொய் சொல்லத் துணிந்தாள். "இல்லே. கிரவுண்டிலே நின்னுண்டிருந்தா அவ. நான் போறபோது சும்மா எங்கூடப் பேசிண்டே வெளியிலே அவளும் புறப்பட்டுட்டா... அவ எங்கூட வரலே” "அப்படியானால் சரி... போ...” வார்டன் ஏன் இப்படிக் கூப்பிட்டுக் கேட்கிறாள் என்பது சுமதிக்குப் புரியவில்லை. மேரியோடு யார் யார் மாலை வேளைகளில் வெளியே புறப்பட்டுப் போகிறார்களோ அவர்களை எல்லாம் வார்டன் தீவிரமாகக் கண்காணிக்கிறாள் என்று அர்த்தமா? அல்லது தற்செயலாகத்தான் வார்டன் தன்னை திரும்ப மேலே அழைத்து இதை விசாரித்தாளா என்று புரிந்து கொள்ள முடியாமல் சுமதி மனம் குழம்பினாள். கீழே இறங்கிப் போய் மேரியோடு சேர்ந்து கொண்டு மறுபடி அவள் நடந்தபோது, மேரியே வார்டன் அம்மாளைப் பற்றி ஆரம்பித்தாள் "சுமதி, பீ கேர் ஃபுல்! வார்டன் அம்மாள் பெரிய ராட்சஸி! சில இன்னொஸண்ட் கேர்ள்ளை ராத்திரிலே கையை அமுக்கி விடு... காலை அமுக்கிவிடுன்னு தன் ரூமுக்கு வரவழைச்சுக் குட்டிச் சுவராக்கியிருக்கா... நீயும் ஏமாந்திடாதே..."

"நிஜமாவா மேரி...?" "நிஜமில்லையா பின்னே? நீ இந்தக் காலேஜிலே யாரை வேணாக் கேட்டுப் பாரேன்.”

பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் கல்லூரிக் காம்பவுண்டைக் கடந்து வெளியே டாக்ஸி ஸ்டாண்டும் அருகேயே பஸ் ஸ்டாப்பும் உள்ள பிரதான சாலையோரத்துக்கு வந்திருந்தார்கள். பஸ் ஸ்டாப் அருகே சில மாணவிகள் பஸ்ஸுக்காகக் காத்திருந்தனர். சுமதியும் விரைந்து பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தபோது,

"பஸ் வேண்டாம் சுமதி ! இப்பவே நேரமாச்சு. டாக்சியிலேயே போயிடலாம் வா!” என்று கூறித் தடுத்தபடி ஒரு டாக்சியையும் கையசைத்து வரவழைத்துவிட்டாள் மேரி.

மேரியையும், சுமதியையும் பார்த்ததும் டாக்சிக்காரன் சிரித்துக்கொண்டே மீட்டரைப் போட்டான். அவன் ஏன் சிரிக்கிறான் என்பது சுமதிக்குப் புரியவில்லை. ஒரு வேளை அவன் மேரிக்கு முன்பே தெரிந்தவனாக இருக்கவேண்டும் என்று சுமதி நினைத்துக் கொண்டாள். டாக்சியில் ஏறி மேரி அருகே அமர்ந்து கொண்டு பக்கத்தில் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவிகளைப் பார்த்தபோது அவர்களும் தங்கள் பக்கமாகப் பார்த்துச் சிரித்தாற் போல் நிற்கவே சுமதியின் உள்மனம் என்னவோ குறுகுறுத்தது. டாக்சிக்காரனும் சிரிக்கிறான். அருகே நிற்கிற மாணவிகளும் சிரிக்கிறார்கள்? யாருக்காகச் சிரிக்கிறார்கள்? எதற்காகச் சிரிக்கிறார்கள்? இவர்களெல்லாம் ஏன் சிரிக்கிறார்கள்? கேள்விகள் பெரிதாக அவள் மனத்தில் எழுந்தன. அதற்கான பதில்தான் அவளுக்கு உடனே புரியவில்லை. மர்மமாயிருந்தது.
-----------

அத்தியாயம் 6

டாக்சியில் போகும்போது சுமதி மேரியிடம் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. தியேட்டர் வாசலில் போய் இறங்கும்போது, "பரங்கிமலை போகணும்னா நானே நீங்க படம் முடிஞ்சி வர்ரவரை வெயிட் பண்றேம்மா’ என்று டாக்சி டிரைவர் தானாகவே திடீரென்று அப்போது வலியவந்து மேரியிடம் கேட்டபோது சுமதியின் சந்தேகம் இன்னும் அதிகமாயிற்று. அந்த டாக்சி டிரைவருக்கு மட்டுமல்லாமல் எந்த டாக்சி டிரைவருக்கும் மேரியை நன்றாகத் தெரிந்திருக்கும் என்று தோன்றியது. ”வேண்டாம்! நீ போகலாம்” என்று சிறிது கடுமையாகவே அவனுக்குப் பதில் சொல்லி மீட்டர் பார்த்துப் பணம் கொடுத்தாள் மேரி. கீழே இறங்கி நின்று தியேட்டர் முகப்பிலிருந்து பெரிய பெரிய படங்களையும் சுவரொட்டிகளையும் பார்த்த சுமதி,

”ஏய் மேரீ! நீ சொன்ன படமில்லேடீ... ஏதோ ’மை கெய்ஷா’ன்னில்லே போர்டிலே போட்டிருக்கான்...” என்று கேட்டாள்.

"ஐயாம் வெரி ஸாரி சுமதி ! நான் சரியாப் பார்க்கலே, நேத்தி வரை ’தியேட்டர் புரோக்ராம்'ஸிலே அந்தப்படம்தான் போட்டிருந்தான். இன்னிக்கு சேஞ்ஜ் ஆகியிருக்கும் போலேருக்கு. பரவாயில்லை, இதுவும் நல்ல படம்தான்; பார்க்கலாம் வா ?”

சுமதிக்கு ஆட்சேபணை இல்லை. மேரி அதிகச் செலவையும் பொருட்படுத்தாமல் 'பால்கனி'க்கு இரண்டு டிககெட் வாங்கினாள். மேரியின் ஊதாரித்தனமான செலவுகள் சுமதிக்கு ஆச்சரியத்தை உண்டாக்கின. பஸ்ஸுக்குப் பதில் டாக்சியில் வந்ததும், டாக்சிக்காரனுக்கு மீட்டரில் ஆனதற்குமேல் ஒரு ரூபாய் போட்டுக் கொடுத்ததும் அதிக விலையுள்ள பால்கனி டிக்கட்கள் வாங்கியதும் அதிகப்படியான காரியங்களாகச் சுமதிக்குத் தோன்றியது. "நீ ரொம்பத்தான் அதிகமாகச் செலவழிக்கிறே மேரி.”

"செலவா பெரிய விஷயம்; உன்னைப்போல ஒரு ஃபிரண்டு கூட வர்ரப்போ எத்தனை ஆயிரம் வேணும்னாச் செலவழிக்கலாம் டீ சுமதி...”

இருவரும் உள்ளே நுழைந்து பால்கனியில் தங்களுக் குரிய இருக்கைகளில் அமர்ந்தார்கள். ஏற்கனவே விளக்குகள் அணைக்கப்பட்டு ஸ்லைடுகள் காண்பிக்கப்பட்டு முடிந்து, ’இந்தியன் நியூஸ் ரெவ்யூ’ ஆரம்பமாகி ஒடிக்கொண்டிருந்தது. இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் யாரோ ஆண்பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். நடுவாக மேரிக்கும் சுமதிக்கும் இடம் கிடைத்திருந்தது. நியூஸ் ரீல் முழுவதும் ஓடியபின் படம் ஆரம்பமாகியது. படம் ஜப்பானிய தேவதாசிகள் எனப்படும் கெய்ஷாப் பெண்களைப் பற்றியது. ஆண்களை உபசரித்து, மயக்கிக் கவர்வதையே ஒரு கலையாகப் பாவித்து

வளர்த்து வரும் அழகிய இளம் கெய்ஷாப் பெண்களைப் பற்றியது கதை. படம் ஒடிக்கொண்டிருக்கும்போது மேரி ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாற்றி மாற்றிச் சுமதிக்கு விளக்கங்கள் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"நம்ம நாட்டிலேதான் இதை எல்லாம் தப்பாக நினைக்கிறோம். ஒரு பெண் அழகாகவும் இளமையாகவும் இருந்துவிட்டால் அவள் யாரோடும் பழகக்கூடாது என்றும், யாரையும் உபசரிக்கக்கூடாது என்றும் தடுத்து விடுகிறோம். ஜப்பானிய கெய்ஷாக்கள் அழகு என்பது ஆண் மகனின் கண்கள் அனுபவிப்பதற்கே என்று நினைக்கிறார்கள், உபசரிக்கிறார்கள், ஆண்களை மயக்குகிறார்கள், சம்பாதிக்கிறார்கள். நம் இந்தியாவில் கோடிக்கணக்கில் வரவு செலவு செய்யும் ஒரு கம்பெனி மானேஜிங் டைரக்டர் என்ன சம்பாதிக்கிறாரோ அதை ஜப்பானில் ஒரு கெய்ஷா சம்பாதித்து விடுகிறாள் சுமதி !"__ தயக்கத்தோடுதான் மேரியின் இந்த விளக்கங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் மெல்ல மெல்லத் தன்னை 'பிரெயின் வாஷ்' செய்கிறாளோ என்று முதலில் சுமதி சந்தேகப்பட்டாலும் பின்னால் அந்தச் சந்தேகம் மாறி மறந்து, படத்தில் வருகிற நிகழ்ச்சிகளுக்கும் மேரி சொல்லுகிற கருத்துக்களுக்கும் ஒற்றுமை இருக்கவே, அதைச் சுமதியால் ஊன்றிக் கேட்க முடிந்தது.

"கெய்ஷா கேர்ள்ஸ் ஆஃப் ஜப்பான் என்று என் கிட்ட ஒரு புஸ்தகம் இருக்கு. அதை உனக்கு வேணூம்னாப் படிக்கத் தரேன் சுமதி!"

அது ஒரு ஹாலிவுட் டைரக்டருக்கும் ஜப்பானிய கெய்ஷாவுக்கும் ஏற்படுகிற உறவு பற்றிய படம். கெய்ஷாப் பெண் அந்த ஹாலிவுட் டைரக்டரின் உடற் களைப்புத் தீர கைகால்களை இதமாகப் பிடித்து விடுகிறாள். டீ தயாரித்துக் கொடுக்கிறாள். அழகிய சிறிய தங்கப் பதுமை போன்ற அந்த ஜப்பானிய கெய்ஷரப் பெண் நிற்பது, நடப்பது, சிரிப்பது, பேசுவது எல்லாமே காவியமாய் இருந்தன. கெய்ஷா அழகுப் பதுமையாய் இயங்கினாள், மயக்கினாள்.

இடைவேளை வந்தது. தியேட்டரில் விளக்குகள் எரிந்தன. விளக்கொளியில் அக்கம் பக்கத்து சோபாக்களில் இருந்தவர்களில் பலர் ஒரே சமயத்தில் மேரியை நோக்கி, "ஹலோ!" என்ற விளித்தனர். மேரி அவர்களை எல்லாம் திடீரென்று சந்தித்ததில் தான் வியப்படைந்தவள் போல் காட்டிக் கொண்டாள். தன்னோடுகூட இருந்த சுமதியை அவர்களுக்கெல்லாம், "மீட் மிஸ் சுமதி!'- என்று தொடங்கி உற்சாகமாக அறிமுகப்படுத்தி வைத்தாள். மேரியால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் அனைவருமே ஆண்கள்தாம். இருபத்தெட்டு வயது முதல் நாற்பது வயது வரை பலவிதமானவர்கள் அவர்களில் இருந்தனர். ஹிப்பித் தலையர்கள், ஒட்ட வெட்டிய கிராப்புடன் ஸ்மார்ட்டாக இருந்தவர்கள், உருவி எடுத்தது. போல் பேண்ட், ஷூ, டை, கோட் எல்லாம் அணிந்த பிளாஸ்டிக் முகமுடைய மனிதர்களைப்போல் சுத்தமாயி ருந்தவர்கள் எல்லாரும் தென்பட்டார்கள். எல்லாரையும் மேரிக்குத் தெரிந்திருந்தது. அவர்களை எல்லாம் மேரி தனக்கு அறிமுகப்படுத்தியபோது, அவர்கள் தன்னை. நோக்கி 'ஓவரா'கச் சிரித்தது, முகம் மலர்ந்தது எல்லாம் சுமதிக்குப் பிடிக்கவில்லை. ஏதோ காணாததைக் கண்டதுபோல் சிலர் சுமதியிடம் நேருக்கு நேராகவே அவள் அழகை வியந்து சொல்லத் தொடங்கினார்கள். அந்த ஆண்களின் பேச்சு, தோரணை பாவனைகள் எல்லாவற்றையும் பார்த்துச் சுமதி கொஞ்சம்' ரிஸர்வ்டு': ஆகவே நடந்துகொண்டாள். அவளுக்கு அச்சமாயிருந்தது. "பீ சீர்ஃபுல் மைடியர்..” என்று அவளைத் தோளில் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்துவதற்கு முயன்றாள் மேரி. அவளைச் சூழ்ந்திருந்த ஆண்களில் சிலர், "வெளியிலே போய் ஏதாவது டிரிங்க்ஸ் சாப்பிடலாம் வாங்க" என்றார்கள்.

"லெட் அஸ் ஸெலபரேட் திஸ் நைஸ் மீட்டிங்" என்று சுமதியின் பக்கமாகக் கையை நீட்டிச் சுட்டிக் காட்டிச் சிரித்தான் ஓர் இளைஞன். சுமதி மெல்லத் தப்பித்துக் கொள்ள முயன்றாள்.

"எனக்கு டிரிங்ஸ் எதுவும் வேண்டாம்! நான் இங்கேயே ஸீட்'லே இருக்கேன். நீங்கள்ளாம் போயிட்டு வாங்க...”

"நோ. நோ. வாட் இஸ் திஸ்?. உனக்கு மேனர்ஸ் கூடவா புரியாது சுமதி? இவங்க உன்னைச் சந்திச்சதை ஸேலபரேட் பண்ணத்தான்னு கூப்பிடறாங்க. நீ என்னடான்னா..? இவங்கள்ளாம் யாருன்னு நினைச்சே நீ.? சும்மா தெருவிலே போற ஆளுங்க இல்லே. எல்லோரும் பெரிய மனுஷங்களாக்கும். இவர் க்வீன் அண்ட் கம்பெனி சேர்மன். அவர் எமரால்ட் பெயிண்ட்ஸ் பி.ஆர்.ஒ. இன்னொருத்தர் பெரிய டயர் மெர்ச்சென்ட். எல்லாரும் அநேகமா ஃபோர் ஃபிகர்ஸ்ல ஸாலரி வாங்கிறவங்களாக்கும்.” மேரி சுமதியின் காதருகே இதை மெதுவாகச் சொல்லி வற்புறுத்தினாள். அதற்குள் சுமதி மறுக்கிறாளோ என்று சந்தேகப்படத் தொடங்கிவிட்ட அவர்களில் ஒருவர், "மிஸ் சுமதி மட்டும் நம்மோடு இப்ப வரலேன்னா நாங்கள்லாம் இங்கேயே தர்ணா’ப் பண்ணிடுவோம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

அதற்குமேல் அந்தச் சூழ்நிலையில் எதிர்நீச்சலிடும் சக்தியைச் சுமதி இழந்தாள். மேலுக்குச் சிரித்தாற்போல் இருக்க முயன்றபடி உள்ளூற வேதனையோடு அவர்களுடன் சென்றாள். தியேட்டரின் மாடியிலேயே வராந்தாவில் இருந்த காஃபி பாரில் எல்லோருக்குமாகக் கோகோ கோலா ஆர்டர் செய்யப்பட்டது. ஆண்கள் அவரவர்கள் பிராண்ட் சிகரெட்டை வாங்கிப் புகைத்துக் கொண்டே உரையாடலானார்கள். இடைவேளை முடிந்து உள்ளே விளம்பர ஸ்லைடுகள் காண்பிக்கத் தொடங்கியிருந்தார்கள். ஸ்லைடுகள் முடிந்து படம் தொடங்குகிற நேரம் வரும்வரை அவர்கள் எல்லாரும் வெளியேதான் பேசிக்கொண்டிருந்தார்கள். மேரி ஒவ்வொருவரையும் தனித் தனியே சில விநாடிகள் அந்த லவுஞ்சிலேயே ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று ஏதோ பேசிவிட்டு வந்தாள். அப்படி அவள் அழைத்துச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது அவளால் அழைத்துச் செல்லப்பட்ட ஆளைத் தவிர மற்றவர்கள் சுமதியைச் சூழ்ந்துகொண்டு சம்பந்தா சம்பந்தமில்லாமல் அவளிடம் சிரித்துப் பேசலாயினர். சுமதியும் அவர்களிடமிருந்து முகத்தை முறித்துக்கொண்டு தப்பிப்போய் உள்ளே சென்று அமர முடியாதபடி சுற்றி வளைத்துக்கொண்டு நின்றுவிட்டார்கள். அவர்கள் அந்த நிலையில் அப்போது தனக்குத் தெரிந்தவர்களோ சக மாணவிகளோ யாராவது தன்னைப் பார்த்தால் என்ன நினைத்துக் கொண்டு போவார்கள் என்றெண்ணியபோது சுமதிக்கு மனம் கூசத்தான் செய்தது. எதற்கோ எங்கேயோ தொடங்கித் தான் எங்கேயோ வரக்கூடாத இடத்துக்கு வழி தப்பி வந்துவிட்டதாகத் தோன்றியது அவளுக்கு. மேரி அந்தத் தியேட்டரில் இடைவேளையில் அவர்களை எல்லாம் சந்தித்தது தற்செயலாக இருக்கும் போலவும் பட்டது. முன்பே திட்டமிட்டது போலவும் பட்டது. எது உண்மையாயிருக்கும் என்று முடிவு செய்ய இயலவில்லை.

இடைவேளை முடிந்து மீண்டும் படம் தொடங்கிய போது மறுபடி மேரியின் குரல் சுமதியின் காதருகே வழக்கமான கீதோபதேசத்தைத் தொடங்கிவிட்டது.

"நம்ம தேசத்திலேதான் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய, இளமையின் அழகை எல்லாம் என்றைக்கோ புருஷன் என்று பெயர் சொல்லிக்கொண்டு தன்னிடம் வரப்போகிற எவனோ ஒர் ஊர் பேர் தெரியாத ஆண் பிள்ளைக்காக மட்டுமே என்று பணம் சேர்த்து வைக்கும் அனுபவிக்கத் தெரியாத கஞ்சப்பயலைப் போலச் சேர்த்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறாள். மற்ற ஊரில் எல்லாம் ஃப்ரீமார்ஷியல் லைஃப், எக்ஸ்ட்ரா மார்ஷியல்

லைஃப், டேட்டிங் எல்லா சுதந்திரமும் பெண்களுக்குக் கிடைக்கிறது.”

சுமதி பதிலே சொல்லவில்லை. மேரியும் நிறுத்த வில்லை.

"அட்தி ஸேம் டைம்... ஓர் ஆண் தான் தாலி கட்டப் போகிற ஒரு பெண் எதிர்ப்படுகிறவரை அப்படி விரதம் காத்துக் கற்போடு பொறுத்திருக்கிறானா என்றால் இல்லை. ஆண் மட்டும் திருமணத்துக்கு முன்னால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பெண்தான் சுத்தமாயிருக்கணுமாக்கும்? இதுதான் இந்தியப் பண்பாடு என்கிறார்கள். என்ன பண்பாடோ இது?"

இதைக் கேட்டுச் சுமதி பதில் சொல்லாததோடு சற்றே எரிச்சலடைந்தாள். மேரி தன்னைக் குழப்பி மூளைச் சலவை செய்ய முயலுகிறாளோ என்ற எச்சரிக்கையும் ஜாக்கிரதை உணர்வும் மீண்டும் சுமதிக்குத் தோன்றியது.

"மேரி: ப்ளிஸ் லெட் மீ ஸீ த பிக்சர் ஃபர்ஸ்ட்... அப்புறம் நாளைக்கு இதெல்லாம் விவாதிக்கலாமே?” என்று துணிந்து குறுக்கிட்டு மேரியின் வாயை அடைத்தாள் சுமதி. இல்லாவிட்டால் அப்போது மேரி ஒய்ந்தே இருக்கமாட்டாள் என்று தோன்றியது.

படம் ஒருவிதமாக முடிந்தது. மேரியும் அவள் சிநேகிதர்களும் சுமதியும் கும்பலாகத் தியேட்டருக்கு வெளியே சேர்ந்து வந்தார்கள். மேரி இப்போது டாக்ஸி தேட வில்லை. அவள் தியேட்டரில் சந்தித்த சிநேகிதர்களில் நடுத்தர வயதை உடைய ஒருவர் ஒரு புத்தம் புது மெர்ஸிடீஸ் பென்ஸ் காரைக் கொண்டு வந்து நிறுத்தி அவர்கள் இருவரையும் அதில் ஏறிக் கொள்ளச் சொன்னார்.

"நீ வேணும்னாப் போ மேரீ! நான் ஒரு ஆட்டோவில் ஹாஸ்டலுக்குப் போய்க்கிறேன்” என்று சுமதி ஒதுங்கிக் கொள்ள முயன்றாள்.

"உன்னை ஒண்ணும் நான் கடிச்சு முழுங்கிட மாட்டேன் சுமதி! ஏறிக்கோ, ஹாஸ்டல் வாசல்லே டிராப் பண்ணிட்டு அப்புறம் நாங்க போறோம்” என்றாள் மேரி,

சுமதி மேலும் தயங்கவே அந்தக் காரின் உரிமையாளரே, "ஏறிக்கோம்மா!.. உன்னை ஹாஸ்டல்லே டிராப் பண்றேன், பயப்படாதே" என்று கெஞ்சினார்.

சுமதி மேலும் அவர்களிடம் மன்றாடிக் கொண்டு நிற்காமல், காரில் ஏறி முன் ஸீட்டில் மேரியின் அருகே அமராமல் பின் ஸீட்டில் தனியே அமர்ந்து கொண்டாள். கார் ஒசையின்றி வழுக்கிக் கொண்டு விரைந்தது.
----------------

அத்தியாயம் 7

தியேட்டர் வாசலில் புறப்பட்ட கார் அங்கிருந்து நேரே 'ஸ்பென்ஸர்' காம்பவுண்டுக்குள் புகுந்து நின்றது. அதுவரை மேரியும் அந்தக் காரைச் செலுத்தி வந்த வர்த்த்கப் பிரமுகரும் தங்களுக்குள் ஆங்கிலத்தில் ஏதேதோ பேசிக்கொண்டு வந்தார்கள். சுமதியை அவர்கள் பின் ஸீட்டில் தனியே விட்டுவிட்டதனால், அவளைத் தங்கள் உரையாடலுக்கு இழுக்கவும் இல்லை. அவளும், அதில் கவனம் செலுத்தத் தயாராக இல்லை. ஏதோ அருவருப்படைந்த மனநிலையில் அப்போது இருந்தாள் சுமதி. அவர்கள் தன்னோடு பேசாமல் தன்னைப் பின் ஸீட்டில் தனியே விட்டுவிட்டதே அப்போது அவளுக்கு இதமாகவும் ஆறுதலாகவும் சுலபமாகவும்கூட இருந்தது.

ஸ்பென்ஸரில் போய்க் கார் நின்றதும், "நீங்க வண்டிலே இருங்க. பெர்மிட்டை எங்கிட்டக் குடுங்க. நான் போய் வாங்கிட்டு வந்துடறேன்” என்றாள் மேரி.

"நோ நோ, நீ இங்கேயே இரு. "ஐ வில் கலெக்ட் மை ஸெல்ஃப்" என்று அந்தப் பிரமுகரே இறங்கிப் போனார்.

'பெர்மிட் ஹோல்டர்ஸ் கவுண்ட்டர்' என்ற பகுதியை நோக்கி அவர் நடப்ப்தைக் காரிலிருந்தபடியே சுமதி கவனித்தாள். மேரி காரில் முன்புறம் அமர்ந்திருந்தும் பின் ஸீட்டிலிருந்த சுமதியிடம் எதுவுமே பேச வில்லை. சுமதியும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். மேரி பேசுவதாகக் காணோம். பொறுமை இழந்த சுமதி. "நயன் ஃபார்ட்டி ஃபை வோட ஹாஸ்டல் எண்ட்ரீ கேட் க்ளோஸ் பண்ணிடுவாங்க... நீ முதல்ல என்னை 'டிராப்' பண்ணிட்டு அப்புறம் வேற எங்கே வேணும்னாப் போ மேரி! அதான் நான் அப்பவே ஆட்டோவிலே போறேன்னேன்” என்ற சிறிது கடுமையான குரலிலேயே சீறுவதுபோல் பேசினாள்.

"ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக்கோ. உன்னைப் பத்திரமாகக் கொண்டு போய் 'டிராப்' பண்ணிடறோம்டீ ஹாஸ்டல் வார்டன் அம்மாளே எத்தினியோ நாள் டாக்சி வரவழைச்சு ராத்திரிப் பதினொரு மணிக்குப் புறப்பட்டு எங்கெங்கோ சுத்திட்டு மூணு மணிக்குத் திரும்பி வரா. நீ என்னடான்னா ஹாஸ்டலைப்பத்தி ஒரேயடியா நடுங்கறே?”

"யார் எப்படியிருந்தா நமக்கென்ன மேரி? நாம நம்மளவிலே ஒழுங்கா இருப்போமே. அதில் என்ன தப்பு?”

"ஆகா, தாராளமா ஒழுங்கா இரு. உன்னை யார் வேண்டாம்னாங்க.”

மேரி அப்போது சுமதியை நோக்கிப் பேசிய குரலும் சூடேறித்தான் இருந்தது. பெர்மிட் ஹோல்டர்ஸ் கவுண்டரைத் தேடிப்போனவர் மேலே அழகாக 'விஸ்கி' என்ற அச்சிட்டிருந்த அட்டைப் பெட்டியுடன் திரும்பி வந்து காரைக் கிளப்பிப் புறப்பட்டார்.

சொன்னபடி மேரி முதலில் சுமதியை ஹாஸ்டல் முகப்பில் டிராப் செய்துவிட்டுத்தான் போனாள். மேரியின் சிநேகிதரும் அவளும் காரிலிருந்தபடியே சுமதிக்கு 'குட்நைட்' சொன்னார்கள். அப்போதிருந்த மனக்குழப்பத்தில் அவர்களிடம் பதிலுக்கு 'குட்நைட்' சொல்லக் கூடத் தோன்றாமல் ஹாஸ்டல் எண்ட்ரீ கேட்டை நோக்கிச் சுமதி ஒட்டமும் நடையுமாக விரைந்தாள்.

அறைக்குப் போய் முகம் கழுவிக்கொண்டு அவள் போவதற்குள் மெஸ் மூடிவிட்டார்கள். மெஸ்ஸில் சொல்லி விட்டுப் போயிருந்தாலாவது ஏதாவது எடுத்து வைத்திருப்பார்கள். சினிமாவுக்குப் புறப்படுகிற அவசரத்தில் மெஸ்ஸில் சொல்லவும் மறந்து போயிற்று. வெளியிலேயும் எதுவும் சாப்பிடவில்லை. இடைவேளையின் போது தியேட்டரில் கோகோ-கோலா சாப்பிட்டது தான், அதனால் பசி அதிகமாயிருந்தது.

மறுபடி கேட்வரை நடந்துபோய் கூர்க்காவிடம் சொல்லி பிஸ்கட் பொட்டலம், ரொட்டி ஏதாவது வாங்கிவரச் சொல்லலாம் என்ற தோன்றியது. மறுபடி படியிறங்கிக் கீழே போவதை வார்டனாவது வேறு யாராவது பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் அந்த எண்ணத்தையும் அடக்கிக் கொண்டு சுமதி பேசாமலிருந்துவிட்டாள். அன்றிரவு அவள் முழுப் பட்டினி கிடக்க வேண்டியதாகி விட்டது.

மாலையில நடந்த சம்பவங்கள் வேறு அவள் மனத்தை போதுமான அளவு குழப்பம் அடையச் செய்திருந்தன. தற்செயலாகச் செய்வது போல் மேரி எல்லாவற்றையுமே திட்டமிட்டுச் செய்கிறாளோ என்ற சந்தேகம் சுமதியின் மனத்தில் வலுப்பட்டுக் கொண்டிருந்தது காலேஜில் படிக்கிற வயதில் ஒர் இளம் பெண்ணுக்கு இத்தனை பணக்கார வர்த்தகர்களின் சிநேகிதம், கார்ச் சவாரி இதெல்லாம் சகஜமான முறையில் எப்படி சாத்தியம் என்பதைச் சுமதியும் யோசித்துப் பார்த்தாள். அவளுக்கு அது நேரடியாகப் புரியவில்லை. அதில் ஏதோ இடறுகிறாற்போல் இருந்தது. அது புரியவும் புரிந்தது. புரியாதது போலவும் இருந்தது. 'லிக்கர் பெர்மிட்' உள்ள நடுத்தர வயது சிநேகிதருக்கு, "நீங்க வண்டிலேயே இருங்க, பெர்மிட்டை எங்கிட்டக் குடுங்க, நான் நிமிஷமா வாங்கியாந்துடறேன்” என்று அவள் பதில் சொல்லிவிட்டுச் சிரித்த காட்சி சுமதிக்குக் கண்களிலிருந்து இன்னும் மறையவில்லை.

மறுநாள் மேரியை வரவழைத்து அவளிடம் நேருக்கு நேர் கண்டித்துப் பேசிவிடவேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டாள் சுமதி. மேரியிடம் எந்தவிதமான ஒளிவு மறைவுமில்லாமல், "அடி மேரீ! உன்னிடம் இன்ன செலவுக்காக நான் இருநூறு ரூபாய் கடன் வாங்கினேன். அதை ஐம்பது ரூபாயாக நாலு மாதத்திலே திருப்பிக் கொடுத்துடுவேன். அவசியமானால் அதுக்கு வட்டிகூட வாங்கிக்கோ” என்று கறாராகச் சொல்லிவிட வேண்டும் என்றுகூட நினைத்தாள். கழுத்து நுனிவரை அன்றைய அனுபவங்கள் கசப்பாயிருந்தது அவளுக்கு. மேரியின் ஆண்பிள்ளைச் சிநேகிதர்கள் என்று அவள் தியேட்டரில் அறிமுகப்படுத்திய ஆட்கள் எல்லாமே தத்தாரிகளாக இருந்தார்கள். அவர்களில் ஒருத்தன் தனக்கு, 'கோகோ கோலா' வேண்டாம் என்கிறபோது, "ஐ ஆல்வேஸ் ஹேட் ஸாஃப்ட் ட்ரிங்க்ஸ்” என்ற சொல்லி விட்டுச் சுமதியின் பக்கமாகப் பார்த்துக் கண்ணடித்தான். உடனே இன்னொருத்தன், “வயிறு சரியில்லேன்னா ஸோடா வேணும்னா சாப்பிடேன்” என்றான். அதைக் கேட்டு மறுபடியும் அந்த ஆள் சுமதியைப் பார்த்து முன்பு போலவே கண்ணடித்தபடி "ஐ நெவர் டேக் ப்ளெயின் ஸோடா” என்றான். இப்படி ஒரு கும்பலுக்கு 'கோ--பிட்வின்' ஆக மேரி பயன்படுகிறாள் என்பதை நம்ப முடியாமல் இருந்தது. அந்தக் கும்பலில் ஒருத்தன் தியேட்டர் இருட்டில் இடைவேளைக்குப் பின்பக்கத்திலிருந்த மற்றொருவனிடம் "டேய்! இந்த வாட்டி மேரி அறிமுகப்படுத்தின புதுமுகத்துக்கு நூற்றுக்கு நூறு மார்க் போடலாம்டா! சரியான வாளிப்புத்தான்" என்று சுமதிக்கும் காதில் விழும்படியாகவே சொல்லிக் கொண்டிருந்தான். சுமதி மெல்ல மெல்ல உஷாராகிவிட்டாள். ஒரு சபலத்தினால் மேரியிடம் கைநீட்டிப் பணம் வாங்கிவிட்டாலும் இப்போது சுமதியின் மனதில் தற்காப்பு உணர்ச்சியே மேலெழுந்து நின்றது. மேரியைப் பற்றிப் பயமாகவும் இருந்தது. மறுநாள் காலை வகுப்புக்கள் தொடங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே மேரி கல்லூரிக்கு வந்துவிட்டாள். அவளே சுமதியின் அறைக்குத் தேடி வந்தாள். முதல் நாள் சுமதிக்கு மிகவும் சிரமம் கொடுத்துவிட்டதாகச் சொல்லித் தானாகவே வலிந்து முதலில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள். சுமதி சிறிது நேரம் தயங்கியபின் ஒரு சிறிதும் ஒளிவு மறைவின்றி எல்லா விவரங்களையும் மேரியிடம் சொல்லி அவள் கடனாகத் தந்த பணத்தை நாலு தவணையில் ஐம்பது ரூபாயாகத் தந்து விடுவதாய்த் தெரிவித்தபோது மேரி "வாட் எஃ பூலிஷ் கேர்ள் யூ ஆர்?.பேப்பர்ல வந்த விளம்பரத்தைப் பார்த்தா நூறு ரூபாய் எம்.ஒ. பண்ணினே?” என்று பதிலுக்கு வினவினாள்.

"அதிலே என்ன தப்பு?நடிப்பிலே முன்னுக்கு வந்து பேரும் புகழும் சம்பாதிக்கணும்னு எனக்கு ஆசை. பணத்தைக் கட்டி அப்ளை பண்ணியிருக்கேன்.”

இதைக் கேட்டு மேரி பதில் சொல்லாமல் சிரித்தாள். பின்பு சிறிது நேரம் கழித்து, இதெல்லாம் பணம் கட்டி 'அப்ளைப் பண்ணி சான்ஸ் வர்ர விஷயமில்லே; உண்மையிலேயே நீ ஸ்டாராகணும்னு இண்ட்ரெஸ்ட் இருந்தால் என்னோட புறப்பட்டு வா. எங்க வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கிற ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்புக்கு தினம் சாயங்காலம் நாலஞ்சு பெரிய புரொடியூஸர்ஸ் வர்ராங்க ரெண்டு மூணு புகழ்பெற்ற டைரக்டர்ஸ்கூட வர்ராங்க. நான் அவங்ககிட்ட உன்னை இன்ட்ரொடியூஸ் பண்ணி சான்ஸ் வாங்கித் தரேன். அது ஒண்ணும் கஷ்டமில்லே; என்னாலே சுலபமா முடியும். அதைச் செய் சுமதி".

சுமதி ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்புக்கு வருகிற தயாரிப்பாளர்கள், டைரக்டர்களின் பெயர்களைத் தெரிவிக்குமாறு மேரியிடம் கேட்டாள். மேரி சிறிதும் தயங்காமல் உடனே பெயர்களை அடுக்கி விவரித்தாள். எல்லாமே புகழ் பெற்ற பெரிய பெயர்களாகவே இருந்தன.

சந்தேகமே இல்லை. அவர்களில் ஒருவர் மனம் வைத்தால் கூடத் தான் நிச்சயமாக ஸ்டாராகிவிட முடியும் என்று சுமதிக்குத் தோன்றியது. சுமதியின் மனத்தைப் பற்றி மறுபடியும் சபலம் வலை விரித்தது. எதிலிருந்து தப்புவதற்காக அவள் மேரியிடம் சொல்லி விவரித்து மாதம் ஐம்பது ரூபாய் வீதம் நாலு மாதத்தில் அவள் கடனைத் தீர்த்துவிடுவதாகச் சொல்லியிருந்தாளோ அதிலேயே மீண்டும் வகையாகச் சிக்கினாள் அவள். அன்று மாலையே மேரியோடு பரங்கிமலைக்கு வர இணங்கினாள் சுமதி.

"ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் மேரீ! உன்னோட சேர்ந்து போனால் வார்டன் கோபித்துக் கொள்கிறாள். நீ முதலிலேயே போயி ஜெமினி சர்க்கிள் கிட்ட இரு. நான் பின்னாடி வந்து உன்னோட சேர்ந்துக்கிறேன். போயிட்டு வந்துடலாம். எட்டரை மணிக்குள்ளே நான் ஹாஸ்டலுக்குத் திரும்பிடணும். சினிமாவிலேயிருந்து திரும்பி மெஸ்ஸிலே சாப்பாடு கிடைக்காமே நேற்று ராத்திரியே நான் பட்டினி கிடக்கும்படி ஆச்சு.இன்னிக்கும் அப்படி ஆயிடக்கூடாது.”

“எட்டரை மணி எதுக்குடி? நீ ஏழு மணிக்கே அங்கேயிருந்து திரும்பிடலாம். அதற்கு நான் பொறுப்பு சுமதி?”

அன்று மாலை மறுபடி வார்டனிடம் தியாகராய நகரில் உறவுக்காரப் பாட்டி ஒருத்தி சாகக் கிடப்பதாகவும், அவளை உடனே பார்த்தாக வேண்டும் என்பதாகவும் பொய் சொல்லி இரண்டுமணி நேரம் வெளியே போய்வர அனுமதி பெற்றாள் சுமதி. சொல்லிவைத்த படியே ஜெமினி சர்க்கிளில் மேரி டாக்ஸியோடு காத்திருந்தாள்.

இருபது நிமிஷத்தில் பரங்கிமலைப் பகுதியில் விசாலமான தோட்டத்தோடு கூடிய ஓர் ஒட்டடுக்கு வீட்டுக்குள் டாக்சி போய் நின்றது. அந்தத் தோட்டத்திலேயே ஒரு பகுதியில் கீற்றுக் கொட்டகை போல் ஒரு பெரிய 'ஷெட்' இருந்தது. அந்த ஷெட்டின் முகப்பில்

'ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்' என்று போர்டு தொங்கியது. வெளியே ஐந்தாறு பெரிய கார்கள் நின்றன. சுமதியை இரண்டு நிமிஷம் வெளியே நிற்கச் சொல்லி வேண்டிக் கொண்டபின் முதலில் தான் மட்டும் உள்ளே சென்றாள் மேரி. ஐந்து நிமிஷம் கழித்து மறுபடி வெளியே வந்து, "வா சுமதி!' என்று அவளையும் உள்ளே அழைத்துச் சென்றாள். மேரியுடன் சுமதி படபடக்கும் நெஞ்சுடன் சிரமப்பட்டுத் தடுமாறாமல் நடந்து உள்ளே சென்றாள். வெளிப் பார்வைக்கு 'ஷெட்' போலத் தெரிந்தாலும் உட்புறம் நன்கு டெகரேட் செய்யப்பட்டிருந்தது அந்த இடம்.

உள்ளே மதுக் கோப்பைகளும், பாட்டில்களும், சோடாக்களும் நிறைந்த டேபிளைச் சுற்றி நாலைந்து பேர் அலங்கோலமாக அமர்ந்திருந்தனர். சிலர் கால்களை மேஜை மேல் கூடத் துரக்கிப்போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். .

"இவர்தான் குபேரா பிக்சர்ஸ் குப்புசாமி, அவர் அன்புமணி சினிடோன், அந்த பக்கம் இருக்கிறது ஆராவமுதன் கம்பெனி" என்ற அந்த நிலையிலேயே அவர்களைச் சுமதிக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கினாள் மேரி. அவர்களில் ஒருத்தர் மட்டும் தலைநிமிர்ந்து "இது தான் நீ சொன்ன அந்தப் புதுப் பொண்ணா?" என்று மேரியை நோக்கிக் கொச்சையாக நாக்குழற வினவினார்.
-----------------

அத்தியாயம் 8

அந்தச் சூழ்நிலை பொறுக்காமல் சுமதிக்கு குமட்டிக் கொண்டு வந்தது. மேரி அவளை வற்புறுத்தி அங்கே ஒரு நாற்காலியில் பிடித்துத் தள்ளி உட்கார வைத்து விட்டுப் போய்விட்டாள்.

அங்கே அக்கம்பக்கத்தில் சில மேஜைகளில் ஒரு தினுசாகத் தெரிந்த பெண்கள் சிலர் ஆண்களோடு சிரித்துப் பேசிக் கும்மாளம் அடித்தபடி சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். விளையாடும்போதே அந்தப் பெண்கள் வரம்புமீறி ஆண்களைத் தொடுவதும், ஆண்கள் அவர்களைத் தொடுவதும் நிகழ்ந்து கொண்டிருந்தன. சிரிப்பொலியும், எக்காளமிடும் குரல்களும், அரட்டைச் சொற்களுமாக அங்கே சுற்றிலும் கேட்டுக் கொண்டிருந்தன. மது, சிகரெட் புகை நெடி வேறு. மேரி அவளை உள்ளே கொண்டு வந்து விட்டுப் போனவள்தான், அப்புறம் திரும்பவில்லை, சுமதி மருண்டு போய்ச் சுற்றும் முற்றும் பார்த்தாள். எல்லாக் கண்களும் அவளையே நோக்கி வெறித்தபடி இருந்தன.

அதற்குள் அவள் எந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாளோ அந்த நாற்காலிக்குரிய மேஜையைச் சுற்றி வேறு நாற்காலிகளில் அமர்ந்த ஆண்களில் ஒருவர், “கமான் டார்லிங்! ஆட்டத்தைத் தொடங்கலாமா?” என்று சீட்டுக்கட்டை கலைக்கத் தொடங்கியிருந்தார்.

சுமதிக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. பதில் சொல்லலாம் என்றால் தொண்டைக் குழியை ஏதோ அடைத்துக் கொள்வது போல் இருந்தது. வாய் விட்டுப் பேச வரவில்லை.

அடுத்த கணமே சுற்றி இருப்பவர்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று தட்டுத் தடுமாறி எழுந்திருந்து ஒட்டமும் நடையும் கலந்த ஒர் அவசரத்தில் அங்கிருந்து வெளியேறினாள் சுமதி. அவளுடைய நல்ல காலமோ என்னவோ வெளியே அப்போதுதான் யாரோ ஒருவர் டாக்சியில் வந்து இறங்கி மீட்டரில் தொகை கணக்குப் பார்த்து அதை 'டிஸ்போஸ்’ செய்து கொண்டிருந்தார். வெளியே ஓடிவந்த சுமதி பின்புறம் கட்டிடத்தின் ஏதோ ஒரு ஜன்னல் வழியாக மேரியின் குரல் தன்னை இரைந்து கத்திக் கூப்பிடுவதை யும் பொருட்படுத்தாமல் டாக்சிக் கதவைத் திறந்து அதற்குள் ஏறிக் கதவைப் படிரென்று அடைத்துக் கொண்டாள்.

டாக்சி டிரைவர் மீட்டரைத் தூக்கி மறுபடி சாய்த்து விட்டு, வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொண்டு, "எங்கே போகணும்மா?" என்று கேட்டுக்கொண்டே ஸ்டார்ட் செய்தான். நல்லவேளை, அவன் மறுக்கவில்லை.

வேகமாகப் படபடத்து அடித்துக் கொள்ளும் நெஞ்சுடன் தன்னுடைய கல்லூரி விடுதி இருந்த சாலையின் பெயரைச் சொன்னாள் சுமதி. தன் குரல் என்னவோ மாதிரி இருப்பதை அவள்தானே அப்போது உணர்ந்தாள்.

"மேலே ஒரு ரூபாய் போட்டுக் குடுத்துடும்மா"-என்றான் டாக்சி டிரைவர். அவள் பதில் சொல்ல வில்லை. மவுனத்தை அவளுடைய சம்மதமாக அவன் எடுத்துக் கொண்டான். டாக்சி விரைந்து ஒடத் தொடங்கியது.

டாக்ஸி சிறிது தொலைவு விரைந்து பின் பிரதான சாலையில் திரும்பிக் கிண்டி தொழிற்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது தான் சுமதிக்குத் தான் செய்தது சரியா தவறா என்பது போன்ற கேள்வியே மனத்தில் எழுந்தது.

'சினிமாவில் நடிக்கச் சான்ஸ் வாங்கித் தருகிறேன் என்று தன்னை எங்கேயோ இழுத்துவந்து சீரழிப்பதற்கு மேரி முயல்கிறாள்' என்று ஒரு கணமும் 'மேரியின் மேல் என்ன தவறு? அவள் நாலைந்து தயாரிப்பாளர்களுக்கு என்னை அறிமுகப்படுத்துவதற்குள்ளேயே நான் பயந்து போய் என்னவோ ஏதோ என்ற நினைத்துக்கொண்டு ஓடிவந்து விட்டால் அது மேரியின் தவறா?' என்று மற்றொரு கணமும் மாறி மாறித் தோன்றியது சுமதியின் மனத்தில் தான் பதற்றத்தின் காரணமாக அவசரப்பட்டு விட்டோமோ என்று கூட இப்போது அவளுக்குத் தோன்றலாயிற்று. அந்த ஆட்களிடம் சீட்டு விளையாட ஆரம்பித்து அவர்கள் கையைக் காலைப் பிடித்து இழுப்பதற்கு முன்னர் வெளியே தப்பி ஓடிவந்தது நல்லதுதான் என்பது போலவும் ஒரொரு சமயம் தோன்றியது. பல விதமாக நினைத்தாள் அவள். சிந்தனை தறிகெட்டு ஓடியது.

டாக்ஸியை ஹாஸ்டல் மெயின் கேட்டுக்கு வெளியிலேயே நிறுத்திவிட்டு விடுதி அறைக்கு நடந்து போய்ப் பணம் எடுத்துக்கொண்டு திரும்பி வந்து மீட்டர்படியும் அதற்குமேல் ஒரு ரூபாயும் கொடுத்தாள் சுமதி. அன்றிரவு பலவிதமான சிந்தனைகளால் சுமதிக்கு நெடுநேரம் உறக்கம் வரவில்லை. பயமும், திகைப்பும், குழப்பமும் அவளைப் பிடித்துக் கொண்டிருந்தன.

மறுநாள் காலையில் மேரி வகுப்புக்கு வரவில்லை. சுமதி அரை நாள் லீவு கேட்டு வாங்கியபின் யாரிடமும் சொல்லாமல் மெயின்ரோட்டுக்கு வந்து பஸ் ஏறிக் கோடம்பாக்கம் சென்றாள். அவள் கைப் பையில் புது முகங்களை நடிக்க வைப்பதாக விளம்பரப்படுத்திய பாலன் நாடகக் குழுவின் கடிதம் இருந்தது. வெளியூரில் பெற்றோர் உள்ள மாணவிகளுக்குக் 'கார்டியன்' என்று யாராவது உள்ளூர் உறவினரைப் போட்டுக் கொண்டு அவர் கையெழுத்திருந்தால் லீவு, வெளியே போக அனுமதி எல்லாம் வாங்கி விடலாம். சுமதிக்குச் சென்னையில் ஒர் அத்தையைத் தவிர உறவினர் என்று யாரும் அதிகம் இல்லாததால் வார்டன் மாலதி சந்திரசேகரனே கார்டியனாக இருந்தாள். ஆகவே அனுமதிகள் மிகச் சுலபமாகக் கிடைத்தன.

தான் பணம் எம்.ஓ. செய்து நடிப்பதற்கு மனுப்போட்ட திட்டத்தை விட்டுவிட்டு மேரியின் மூலம் முயன்றதால் தானே இந்த வம்பெல்லாம் வந்தது? தாம் எம்.ஓ. செய்து விண்ணப்பித்த இடத்திலேயே போய்க் கேட்டுவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டு சுமதி ஒர் ஆவேச வெறியுடன் புறப்பட்டிருந்தாள். நடந்தே போனால் மதிப்பார்களோ, மதிக்கமாட்டார்களோ, அது எப்படிப்பட்ட இடமோ என்று தயங்கி வடபழனி பஸ் ஸ்டாண்டுவரை பஸ்சில் போய் அங்கே இறங்கி ஒரு டாக்ஸி வைத்துக் கொண்டு போனாள் சுமதி. அந்த இடம் வடபழனியிலிருந்து மிகவும் பக்கத்தில்தான் இருந்தது. டாக்சியை 'வெயிட்டிங்'கில் வைத்துக் கொண்டே விசாரித்தாள் அவள். அந்தக் கட்டிடத்தில் பாத்ரும் அளவு சிறியதாயிருந்த ஒர் அறையைச் சுட்டிக் காட்டி "நேத்து வரை யாரோ இருந்தாங்கம்மா. நேத்துச் சாயங்காலமாத்தான் வாடகை கணக்கைத் தீர்த்துக் காலி பண்ணினாங்க” என்றார் கட்டிடச் சொந்தக்காரர். சுமதி விவரங்களைச் சொல்லி விசாரித்தாள்.

"தினம் நூறு நூறு ரூபாய் மணியார்டரா ஆயிரம் இரண்டாயிரம்னு பத்துப் பன்னிரண்டு நாளா வந்துச்ச வாங்கினாங்க... பணமெல்லாம் வந்ததும் காலி பண்ணிட் டாங்க...” என்று கர்மயோகியைப் போல் பட்டுக் கொள்ளாமல் பதில் சொன்னார் கட்டிடச் சொந்தக்காரர். சுமதி மேலும் எதற்கோ தயங்கி நின்றபோது, “எங்களுக்கு வாடகை ஒழுங்காகக் குடுக்குறாங்களா இல்லையான்னுதான் நாங்க பார்ப்போமே ஒழிய டெனன்ட்ஸ் என்ன மாதிரி பிஸினஸ் பண்றாங்கன்னு பார்க்கிறது எங்க வேலையில்லை. உங்களை மாதிரி விவரந் தெரிஞ்சவங்க இப்படி விளம்பரத்தை எல்லாம் நம்பிப் பணம் அனுப்பலாமா?" என்று கேட்டார் அவர். சுமதி தொடர்ந்தாள்.

"அவங்களுக்கு டெலிஃபோன் கூட இருந்திச்சே சார்?"

"டெலிஃபோனாவது ஒண்ணாவது? எங்க டெலிஃபோன் நம்பரை அவங்க லெட்டர் ஹெட்லே அச்சடிச்சுக்கிட்டாங்க, அவ்வளவுதான்.”

சுமதி ஏமாற்றத்தோடு போஸ்ட் ஆபீசுக்குப் போய்த் தபால் பெட்டி எண்ணைச் சொல்லி விசாரித்தாள். அவர்கள் சற்றுமுன் அவள் போய்த் தேடிட்டு வந்த அதே விலாசத்தை அவளிடம் குறித்துக் கொடுத்தார்கள். பொறுப்பான பதில் எங்கிருந்தும் யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை. மணியார்டர் ரசீதை வைத்து நடவடிக்கை எடுக்கலாம் என்றாலும் மணியார்டர் ரசீதையும் தந்திரமாக விண்ணப்பத்தோடு இணைத்து அனுப்பச் சொல்லியிருந்தார்கள் அவர்கள்.

பத்து இருபது ரூபாய் டாக்ஸிக்குச் செலவானது தான் மிச்சம். கெட்ட சொப்பனம் கண்டதுபோல் அதை மறந்துவிட முயன்றாள் சுமதி. ஆனால் மறக்கவும் முடிய வில்லை. ஏமாந்து விட்டோம் என்பது ஞாபகம் இருந்தது. 'பணம் கொடுத்து மயக்கி அழைத்துச் சென்று சினிமாவில் சேர்த்து விடுகிறேன்' என்று சொல்லும் மேரி ஒரு புறமும், பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டவர்கள் மற்றொரு புறமும் சுமதியின் மனத்தைக் குழப்பினர்.

இரண்டு நாள் கழித்து மேரி அவளைக் கல்லூரியில் சந்தித்தபோது அவளுடைய செயலுக்காக மிகவும் வருத்தப்பட்டாள். "ரெண்டு பெரிய மனுஷாளுக்கு இண் ரொட்டியூஸ் பண்றப்பவே பயந்துகிட்டு ஒடியாந்துட்டா அப்புறம் நீ எப்படி ஸ்டார் ஆறது?”

சுமதி இதற்குப் பதில் சொல்லவில்லை, மேரியும் அவள் மேல் நம்பிக்கை இழந்து அவளை விட்டுவிடத் தயாரில்லை. சுமதிக்கு அட்வைஸ் செய்தாள்.

"நீ ரொம்ப சேஞ்ஜ் ஆகணும். அடுத்தவங்களை நம்பணும். ஸோஷியலா இருக்கப் பழகணும். இப்போ இருக்கிற இந்தியன் ஸொஸைட்டி ஓரளவுக்குப் 'பெர்மிஸிவ்' ஆக இருக்கா விட்டாலும் நீயே கட்டுப்பெட்டியா நடந்துக்கிறியே? இந்த மடிசஞ்சித்தனமெலாம் போனாத் தான் நீ முன்னுக்கு வரலாம்.” மேரிக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் "முதல் இன்ஸ்டால்மெண்ட் ஐம்பது ரூபா ஃபர்ஸ்ட் வீக் தரேன் மேரீ!” என்று ஆரம்பித்த சுமதியைத் தடுத்து, "ஏன் பணம் பணம்னு அதையே ஞாபகப்படுத்திக் கிட்டிருக்கே? எனக்கொண்ணும் பணத்துக்கு அவசர மில்லேடீ சுமதி! உன் ஃபிரண்ட்ஷிப்தான் பெரிசு. பணம் பெரிசில்லே" என்று மேரி அப்போதும் பணத்தைப் பொருட்படுத்தாமல்தான் பேசினாள்.

ஒரு வாரம் கழித்து ஒருநாள் அதிகாலையில் சுமதிக்கு ஒரு ஃபோன் வந்தது. வார்டன் அறையில் உள்ள டெலிஃ போனில்தான் கூப்பிட்டிருந்தார்கள். போய்ப் பேசினால் எதிர்ப்புறம் அம்மாவின் குரலைக் கேட்டு சுமதிக்கு ஆச்சரியமாகப் போயிற்று. அம்மா சொன்னாள்.

"நாங்க ஒரு நாலஞ்சு டீச்சர்ஸ் எங்க ஸ்கூல் கேர்ள்ஸை மெட்ராஸ், மைசூர் எல்லாம் எக்ஸ்கர்ஷன் சுத்திக் காட்ட அழைச்சிட்டு வந்திருக்கோம் திடீர்னு நானும் புறப்பட்டேன். உனக்கு முன் தகவல் எழுத முடியலே. நீ எப்படி இருக்கே...? நாங்க மத்தியானம் பெங்களூர் முற்படுவது. இப்போ பதினொரு மணிக்குள்ள நான் அங்கே வரேன், நீ எங்கேயும் வெளியிலே புறப்பட்டுப் போயிடாதே?"

"நீங்கள்ளாம் எங்கேம்மா தங்கியிருக்கிங்க?"

“இங்கே சிந்தாதிரிப் பேட்டையிலே ஏதோ ஒரு ஸ்கூல்லே தங்கியிருக்கோம்".

"நான் வேணா அங்கே வந்து பார்க்கட்டுமா அம்மா?"

"வேண்டாம்! நானே வரேன். வார்டன் அம்மாளையும் பார்த்தாப்பில இருக்கும். நீ அங்கேயே இரு."

"சரி வா; நான் ரூம்லியே இருக்கேன்" என்ற சொல்லி ஃபோனை வைத்தாள் சுமதி.

காலை ஒன்பதரை மணி சுமாருக்குத் தன் அறையில் ஏதோ படித்துக் கொண்டிருந்தாள் சுமதி. வார்டன் கூப்பிடுவதாக வேலைக்காரி வந்து சொன்னாள். சுமதி உடனே அறைக் கதவைப் பூட்டிக் கொண்டு வார்டனின் இடத்துக்குச் சென்றாள்.

அங்கே வார்டனின் நாற்காலி காலியாயிருந்தது. எதிர்ப்புறம் வரிசையாகப் போடப்பட்டிருந்த பார்வையாளர் நாற்காலிகள் ஒன்றில் அம்மா உட்கார்ந்து ஏதோ கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். சுமதியைப் பார்த்ததும் அம்மா கடிதத்தை மடித்துத் தன் கைப் பையில் வைத்துக் கொண்டுவிட்டாள்.

"என்னம்மா? நீ நேரே ரூமுக்கு வராமே இங்கே வந்து உட்கார்ந்து..."

"வார்டனைப் பார்த்தேன். அப்படியே உனக்கும் இங்கே இருந்தே சொல்லி அனுப்பினேன்..."

"அறைக்கு வாம்மா போகலாம். இங்க பேசுவானேன்?...”

“இங்கேதாண்டி பேசணும்! இரு! வார்டனும் வந்துடட்டும்... எனக்கு இன்னிக்கு ரெண்டிலே ஒண்ணு ரெண்டு தெரிஞ்சாகணும். நீ தொடர்ந்து படிக்கப் போறியா...அல்லது இப்படித்தான் உருப்படாமப் போகப் போறியா?" திடீரென்று அம்மாவின் குரல் கடுமையாக மாறியது. அவள் தன் கைப் பையிலிருந்து அந்தத் தடித்த உறையை எடுத்துப் பிரித்துக் கடிதத்தைச் சுமதியிடம் காட்டினாள். அது பாலன் நாடகக் குழுவுக்கு சுமதி எழுதிய கடிதம். உறையில் விலாசதார் இல்லை என்ற சிவப்புமை அடித்த கோடோடு கல்லூரி விடுதிக்கே அக்கடிதம் திருப்பி அனுப்பப்பட்டிருந்தது.

"என்னடி இதெல்லாம்?"

சுமதி தலைகுனிந்தாள். தாய்க்கு அவள் பதில் சொல்ல முடியவில்லை. தான் வகையாக மாட்டிக் கொண்டு விட்டோமென்று அவளுக்கே தெரிந்தது.

"உன்னைப் படிக்கணும்னு மெட்ராஸூக்கு அனுப்பினேனா? இப்படி உருப்படாமப் போறதுக்காக அனுப்பினேனாடி? ஏண்டி இப்படிப் புத்தி கெட்டுப் போச்சு உனக்கு?"

சுமதியிடமிருந்து மெளனம்தான் நீடித்தது. வார்டன் அறையை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அம்மாவின் குரல் தணிவதாக இல்லை. தொடர்ந்து சூடேறிக் கொண்டே இருந்தது. வார்டன் முன்னாலேயே அம்மா இப்படி ஆரம்பித்துவிட்டாளே என்று கூசினாள் சுமதி. கடிதத்தை வார்டன்தான் அம்மாவிடம் கொடுத்திருப்பாள் என்பது நினைவு வரவே வார்டனும் தன்னைக் கை விட்டு விட்டதைச் சுமதி உணர்ந்தாள். அவள் கண்களில் நீர் அரும்பியது.
----------------

அத்தியாயம் 9

அம்மா, சுமதியை மிகவும் கடுமையாகக் கண்டித்து எச்சரித்து விட்டுப் போனாள். 'சுமதி விஷயத்தில் எந்த விதிகளையும் தளர்த்தவோ தாராளமாக நடந்து கொள்ளவோ கூடாது' என்ற வார்டன் அம்மாளிடமும் சொன்னாள். "இன்னொரு தடவை இப்படி ஏதாவது தத்துப்பித்தென்று பண்ணினாயோ படித்துக் கிழித்தது போதுமென்று காலேஜை நிறுத்திவிட்டு வீட்டோடு வாசலோடு பாத்திரம் தேய்த்துக் கோலம் போட்டுக் கொண்டு கிடக்கட்டுமென்று கொண்டு போய்த் தள்ளி விடுவேன்” என்று சுமதியிடம் கடுமையாக எச்சரித்திருந்தாள் அம்மா.

அம்மா புறப்பட்டுப் போன பின்பு வார்டன் அம்மாள், "சுமதி! நீ என்னைத் தப்பாக நினைச்சுக்காதே! இதெல்லாம் உன் நன்மைக்காகத்தான். நீ தட்டுக் கெட்டுச் சீரழிந்து விடக்கூடாதேன்னுதான் இந்தக் கண்டிப் பெல்லாம்” என்று அருகே வந்து நின்று கொண்டு ஆதர வாகத் தலையைக் கோதி விட்டபடி சுமதியிடம் சொன்னாள்.

இதற்கு மறுநாளிலிருந்து விரக்தியும் ஏமாற்றமும் தான் நினைத்தபடி நடக்காமல் போனதும் சுமதியைச் சோர்ந்துபோகச் செய்திருந்தன. அவள் படிப்பிலும் வகுப்புக்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினாள். ஊரிலிருந்து திரும்பி வந்த சுமதியின் ரூம்மேட், 'என்னடீ சுமதி! ஏன் என்னவோ போல இருக்கே? எதையோ பறிகொடுத்த மாதிரி உட்கார்ந்திருக்கியே?’ என்று விசாரித்தாள். -
"ஒண்ணுமில்லே. நான் எப்பவும் போலத்தானே இருக்கேன்” என்று சொல்லிச் சுமதி சமாளிக்க முயன்றாலும் அவள் குரல் தெம்பாக இல்லை. தொடர்ந்து பல நாட்கள் சுமதி எங்கும் வெளியே செல்லவில்லை. ஹாஸ்டல் எல்லைக்குள்ளேயே அவளுடைய நாட்கள் கழிந்தன. தன் அழகையும், கவர்ச்சியையும் பற்றி அவளுக்குத் தற்காலிகமாக ஏற்பட்டிருந்த பெருமிதமும், கர்வமும் சிறிது மறந்திருந்தன. தான் சினிமாவில் நடித்துப் புகழ் பெறுவதற்காகவே பிறந்தவள் என்ற இறுமாப்பு உணர்ச்சியும் உள்ளூர ஒடுங்கிப் போயிருந்தது. மேரியை எதிரே காண நேரும்போதெல்லாம் இவள் பயந்து ஒதுங்குவதும் மேரி சிரித்துக் கொண்டே போவதும் வழக்கமாகி இருந்தன. அந்த வழக்கத்தை மீறி, "என்னடி சுமதீ? எப்படி இருக்கே?' என்று மேரியாகவே வலிய விசாரித்தபடி அருகே வந்த நேரங்களில் கூட சுமதி முகத்தைத் திருப்பிக் கொண்டு போயிருக்கிறாள். சில நாட்கள் இப்படி நடந்தது.
ஆனால் சுமதி இப்படி எல்லாம் வித்தியாசமாக நடந்து கொண்டும் கூட மேரி அவளிடம் தான் கொடுத்த
கடனைத் திருப்பிக் கேட்கவே இல்லை. இது சுமதிக்கு வியப்பை அளித்தது. பெண், சினிமாக் கம்பெனிக்கு நூறு ரூபாய் பணம் அனுப்பித் தண்டச் செலவு செய்தாள் என்பது தெரிந்ததுமே சுமதியின் அம்மா மிகமிகக் கருமித் தனமாகப் பணம் அனுப்ப ஆரம்பித்தாள். மெஸ்ஸுக்குக் கட்டியது போகச் சோப்பு, சீப்பு, பவுடர் வாங்கக்கூடப் போதாமல் இருந்தது. இந்த லட்சணத்தில் மேரியின் கடனைத் திருப்பிக் கொடுப்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட முடியாமல் இருந்தது.

மாதக்கணக்கில் ஓடிவிட்ட பின்னும் மேரியின் கடன் அப்படியேதான் இருந்தது. மேரியும் கேட்கவில்லை. சுமதியும் கொடுக்க முடியவில்லை. ஆனால் வகுப்புக் களில் மைதானத்தில், மாடிப் படிகளில் ஏறுகையில், இறங்குகையில் சந்திக்கும் போது அவள் சுமதியிடம் சுமுகமாகப் பேசுவதும், செளக்கியம் விசாரிப்பதும் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தன. சுமதி பாராமுகமாக நடந்து கொண்டால்கூட மேரி, சுமுகமாகவே இருந்தாள். சுமுகமாகவே சிரித்துப் பேசிப் பழகுகிறாள். அவளிடம் வாங்கிய இருநூறு ரூபாயைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்பது சுமதியின் மனத்தில் இன்னும் உறுத்திக் கொண்டுதான் இருந்தது. கல்லூரியில் படித்துக் கொண்டே ஓய்வு நேரத்தில் எப்படிச் சம்பாதிப்பது என்பது அவளுக்குப் புரியவில்லை. பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதிப் பார்த்தாள். எல்லாம் சுவரில் அடித்த பந்துபோல் திரும்பி வந்தன. ஒரு பெரிய கவர்ச்சி வாரப் பத்திரிகையின் ஆசிரியர் மட்டும் அழகிய பெண்கள் தாங்கள் எழுதிய கதைகளோடு நேரில் வந்து தம்மைப் 'ப்ளிஸ்' செய்தால் கதைகளைப் பிரசுரித்துத் தாராளமாகப் பணம் கொடுப்பதாகச் சொன்னார்கள். அவரை 'ப்ளீஸ்' செய்வது எப்படி என்பதை விசாரித்தால் அது மேரியின் 'ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்பை' விட மோசமாக இருந்தது. பல பெரிய குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்கள்கூட அந்தப் பத்திரி காசிரியரின் தயவுக்காக அப்படி எல்லாம் செய்வதாகக் கேள்விப்பட்டபோது சுமதியால் நம்பமுடியாமல் இருந்தது. அதே சமயத்தில் அவற்றைப் பொய் என்றும் அவளால் தள்ளிவிட முடியவில்லை.

சுமதியின் அம்மாவோ ஒவ்வொரு செலவாகக் குறைக்கச் சொல்லி எழுதிக் கொண்டிருந்தாள். படிக்கிற காலத்தில் படிக்கிற வயதில் தலைக்கு வாசனைத் தைலம் இல்லாவிட்டால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. வெறும் தேங்காய் எண்ணை பூசி வாரிக்கொள் போதும், பவுடர் வேண்டாம். பவுடருக்கு ஆகிற செலவு அனாவசியம் என்று ஒவ்வொன்றாகக் குறைக்கச் சொல்லி அம்மா எழுதிய கடிதங்களில் எல்லாம் மகளுக்கான உபதேசப் பட்டியல் இருந்தது. சிக்கன விளக்கவுரை இருந்தது.

சுமதி ஏற்கெனவே நவநாகரிகப் பொருட்களின் மேல் அளவற்ற ஆசைகள் நிறைந்தவள். விலையுயர்ந்த சோப்பு, விலையுயர்ந்த ஹேர் ஆயில் என்று உபயோகிக்க விரும்புகிறவள். அம்மா அவளைச் சிக்கனப்படுத்த சிக்கனப்படுத்த அவள் பேராசைகள் உள்ளூர வளர்ந்தன. அடிபட்ட நாகம் படத்தை மேலே மேலே உயர்த்திச் சீறுவது போல் அவளுடைய ஆசைகளும், சபலங்களும் மேலெழுந்தன. மற்றவர்களுக்கிடையே ஒரு மகாராணிபோல் உலாவர வேண்டுமென்று அவள் விரும்பினாள். தாயின் கட்டுப்பெட்டித் தனத்தை அவள் வெறுத்தாள். விலையுயர்ந்த சேலை, பிளவுஸ் பீஸ் இவைகளை எல்லாம் அவள் விரும்பினாள். தன்னைப் பிறருக்கு எடுப்பாகக் காண்பிக்கும் ஆடை அலங்காரம் அழகு சாதனங்கள் இவற்றை எல்லாம் அவள் தேடித் தவித்து வாங்குவதும், சேகரிப்பதும் வழக்கமாகி இருந்தன. பீச் ஸ்டேஷன் அருகே பர்மா பஜாரில், சிங்கப்பூரிலிருந்து வருகிற மிகமிகக் கவர்ச்சியான பிரேலியர்கள் விற்கப்படுவதாக ஒரு சிநேகிதி தெரிவித்தபோது அவளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு அந்தக் கடைக்குப் போய் ஒரு ஜோடி பிரேஸியர்ஸ் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் சுமதி.

"இயற்கையாகவே நீ நல்ல வளர்த்தி! உனக்கு இதெல்லாம் எதுக்குடீ” என்ற அந்த சிநேகிதி கூடச் சுமதியை அப்போது கேலி செய்திருந்தாள். அப்புறம் சுமதி அதை அணிந்து வந்த தினத்தன்று "அழகுக்கு அழகு செய்வதுபோல் இது உனக்கு எடுப்பா இருக்குடீ சுமதி!" என்று அதே சிநேகிதி அவளைப் புகழ்ந்தும் இருக்கிறாள். அம்மாவும் வார்டனும் சேர்ந்து சதி செய்து இப்போது அந்தக் கனவுகளை எல்லாம் பாழாக்கி விட்டாற்போலத் தோன்றியது. அவர்கள் இருவர் மேலும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது சுமதிக்கு. தன் வழியில் அவர்கள் முட்டுக்கட்டைகளாய்க் குறுக்கே நிற்பதாக உணர்ந்தாள் அவள்.

நீண்ட நாட்களுக்குப்பின் ரூம்மேட் அவளை அன்று காலை வெளியே அழைத்தாள். அன்று கல்லூரிக்கு விடுமுறை நாள். யூனிவர்சிட்டி லைப்ரரியில் ஒரு வேலையாகச் சேப்பாக்கம் வரை போய்விட்டு வரலாம் என்று, அறையில் உடன் வசிக்கும் விமலா வற்புறுத்தியும்கூடச் சுமதி மறுத்தாள். விமலா அவளை விடவில்லை. மேலும் வற்புறுத்தினாள்.

"தனியாகப் போயிட்டு வர்ரதுக்குப் போராடிக்கும்டி! சும்மா எங்கூட வா... வார்டன் ஒண்ணும் சொல்லமாட்டா. ஸ்டடீஸ் சம்பந்தமாத்தான் நாம யூனிவர்சிட்டி லைப்ரரிக்குப் போறோம். கேட்ட உடனே பெர்மிஷன் கிடைக்கும்.”

"நான் ஒண்ணும் வரலை. சலவைக்குப் போன ஸாரி ஒண்ணும் திரும்பி வரலே. கட்டிண்டு வெளியிலே போறத்துக்கு எங்கிட்ட நல்ல ஸாரிகூட எதுவும் இல்லேடி விமலா...” "நான் தரேண்டி அருமையான ஸாரி, புறப்படு. ஸாரி மட்டுமில்லே. ஹேர் ஆயில், சோப்பு, எது வேணும்னாலும் நான் தரேன். உனக்கு வேண்டிய மட்டும் எடுத்துக்கோ உன்கில்லாததாடி?”

விமலா இதைச் சொல்லியபோது தன்னைக் குத்திக் காட்டிக் கிண்டல் செய்கிறாளோ என்று சுமதிக்கு முதலில் அவள்மேல் கோபம்தான் வந்தது. ஹேர் ஆயில் வாசனைப் பவுடர் இதெல்லாம் வேண்டாம் என்று அம்மா தனக்கு எழுதிய கடிதத்தைத் தான் எங்காவது அசந்து மறந்து வைத்துவிட்டுப் போயிருந்தபோது, விமலா எடுத்துப் படித்துப் பார்த்திருப்பாளோ என்று கூடச் சுமதிக்குச் சந்தேகமாயிருந்தது. ஒன்று, அவள் அந்தக் கடிதத்தைப் படித்திருக்க வேண்டும். அல்லது தன்னுடைய ஹேர் ஆயில், ஸ்நோ, பவுடர் இவை எல்லாம் தீர்ந்தபின் தான் புதியவற்றை வாங்காமலே இருப்பதைப் பார்த்து விமலாவாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் விமலா அதைச் சொல்லிய விதம் கிண்டலாகவோ, கேலியாகவோ இல்லை. அவள் இரண்டாவது முறையாகவும், அதே விஷயத்தைச் சொல்லிய விதம் உண்மையாகவே சுமதி தன்கூட வருவதை விரும்பும் தொனியில்தான் இருந்தது. விமலாவின் தாராளமான முகஸ்துதி சுமதியை அவள் வசப்படுத்தியது. "உனக்கு எதுக்குடி பவுடர், ஹேர் ஆயில் எல்லாம்? நீ எந்த ஸாரி கட்டிண்டாலும் அழகாயிருக்கப் போறே. நீ கட்டிக்கிற ஸாரிக்குத்தான் உன்னாலே அழகு. ஸாரியாலே உனக்கு என்ன அழகு?”

சுமதி அன்று விமலாவோடு யூனிவர்சிட்டி லைப்ர்ரிக்குப் புறப்பட்டாள். மாதக் கணக்கில் எங்குமே வெளியே போகாத சுமதி அன்று புறப்பட்டிருந்தாள் என்பதால் வார்டன் அனுமதி மறுக்கவில்லை. பகல் நேரத்தில் விமலாவும் துணைக்கு வர அவள் போகிறாள் என்பதாலும் வார்டன் அம்மாளுக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை. போகட்டும் என்று விட்டுவிட்டாள். சுமதியும் விமலாவும் ஹாஸ்டல் மெஸ்ஸில் பகலுணவை முடித்துக் கொண்டு புறப்பட்டிருந்தார்கள். இருவரும் விடுதியை விட்டுக் கிளம்பி மெயின்ரோட்டுக்கு வந்து பஸ் நிறுத்தத்தில் நின்றபோதுதான், விமலாவுக்குத் தான் ‘மணிபர்ஸ்' எடுத்துவர மறந்துவிட்டது ஞாபகம் வந்தது.

"சுமதி! நீ இங்கேயே நில்லுடி! நான் பர்ஸை மறந்து அறையிலேயே வச்சிட்டு வந்துட்டேன். ஒரு நிமிஷத்திலே ஒடிப்போயி எடுத்திண்டு வந்துடறேன்” என்றாள் விமலா.

"எல்லாச் செலவுமா அஞ்சு ரூபாய்க்கு மேலே போகாதுன்னா நீ திரும்ப ரூமுக்குப் போகவேண்டாம். எங்கிட்டேய இருக்குடி விமலா! சமாளிச்சுக்கலாம். வா" என்று சுமதி சொல்லியும் விமலா கேட்கவில்லை.

"பரவாயில்லேடீ! நான் ரூமுக்கே போய் எடுத்துண்டு வந்துடறேன். கையிலே கொஞ்சம் பணம் வச்சிண்டு வெளியிலே புறப்படறதுதான் நல்லது” என்று சொல்லிக் கொண்டே அறைக்குத் திரும்ப நடக்கத் தொடங்கி விட்டாள் விமலா, விமலா போனபின் அவள் தலை கல்லூரிக் காம்பவுண்டுக்குள் மறைந்ததுமே பஸ் நிறுத்தத்தில் சுற்றும் முற்றும் நின்றவர்களைக் கவனித்தாள் சுமதி. அந்தப் பஸ் நிறுத்தம் வம்புக்கும் கலகத்துக்கும் பெயர் பெற்றது. பெண்கள் கல்லூரிக்கு அருகில் இருந்ததினால் வம்பு செய்யும் மாணவர்களின் குழு ஒன்று அங்கு நிரந்தர மாக இருக்கும். அன்று விடுமுறை நாளானதால் மாணவர்களின் கூட்டம் எதையும் காணோம். ஆனால் வேறு ஆட்கள் இருந்தார்கள். அவளருகே இடுப்பில் லுங்கியும், கழுத்தில் கட்டிய கலர்க் கைக்குட்டையுமாகத் தலை சீவாத பரட்டைத் தலை ஆண்கள் இருவர் பஸ்ஸுக்காக நின்று கொண்டிருந்தனர். இருவரும் தன் பக்கமே வைத்த கண் வாங்காமல் பார்ப்பதைக் கண்டு சுமதி முகத்தை சுளித்தாள். அவசரமாகத் தன் பார்வையை அவர்கள் பக்கமிருந்து அவள் மீட்டுவிட்டாலும் அவர்களுடைய பார்வையும் கவனமும் அவள் மேலிருந்து விலகவில்லை. அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

சொல்லி வைத்தாற்போல ஒரே சமயத்தில் அவர்கள் இருவருமே அவளருகே நெருங்கி வந்தனர்.

"என்னம்மா அதுக்குள்ளார மறந்துட்டியா? அன்னக்கி ஹோட்டல் குபேராவிலிருந்து நான்தானேம்மா இட்டாந்தேன்" தணிந்த குரலில் அந்த இருவரில் ஒருவன் சுமதியை நோக்கி ஏதோ சொன்னான்.

சுமதி பதில் சொல்லவில்லை. ரவுடிகளைப் போல வும், காலிப் பயல்களைப் போலவும் தோற்றமளித்த அவர்களிடம் தனக்கென்ன பேச்சு வந்தது என்று வாயை இறுகப் பொத்திக் கொண்டு பேசாமலிருந்தாள் அவள்.

"என்னம்மா அதுக்குள்ளார மறந்துட்டியா? அல்லது மறந்துட்டாப்ல நடிக்கிறியா? செயிண்ட் தாமஸ் மவுண்ட் சட்டைக்காரிச்சி ஒருத்தி-அதுகூட இங்கேதாம்மா படிக்குது அந்தப் பொண்ணுசுட நீ வரமாட்டே? கபாலியை அதுக்குள்ளார மறந்தா போச்சு?”

"நீங்க ரெண்டு பேரும் யாரு? எனக்கு உங்க ரெண்டு பேரையும் தெரியாதுப்பா. ஆனா நீங்க ஏதோ ரொம்பத் தெரிஞ்சமாதிரிப் பேசறீங்க. வேற யாரோன்னு தவறாகப் புரிஞ்சிகிட்டுப் பேசறதாத் தெரியுது . நான் உங்களை இதுக்கு முன்னாடிப் பார்த்ததே கிடையாது..." என்று சுமதி கண்டிப்பான குரலில் இரைந்ததும் அவர்கள் இருவரில் ஒருவன், "சர்த்தான் விடுடா! புதிசா வேஷம் போடுது. பெரிய பத்தினித் தங்கமாட்டம் பேசுது” என்றான்.

சுமதிக்கு ஆத்திரம் மூண்டது.

"வாயை அடக்கிப் பேசு! போலீஸ்லே பிடிச்சுக் குடுக்கனுமா ?”

அவள் இப்படிக் கேட்டுக் கொண்டிருக்கும்போது விமலா திரும்பி வந்துவிட்டாள். அந்த இரு ரவுடிகளும் கூட மெல்ல மெல்ல ஒதுங்கிவிட்டனர். விமலாவும் பக்கத்தில் வந்து சேர்ந்துவிட்டாள். "என்னடி சுமதி ஏதாவது தகராறா? யார் அந்த ஆட்கள்? வரவர நம்ம காலேஜ் பஸ் ஸ்டாப் பெரிய வம்புபிடித்த இடமாப்போச்சு. எத்தனையோ தடவை பிரின்ஸிபால் கிட்டவும், வார்டன் கிட்டவும், கம்ப்ளெயிண்ட் பண்ணி அவங்க போலீஸ் கமிஷனருக்குப் புகார் எழுதி இங்கே இந்த பஸ் ஸ்டாப் கிட்ட ஒரு போலீஸ்காரன் காவல் நிற்கறதுக்கு ஏற்பாடு பண்ணினாங்க. இன்னிக்கு வீவு நாளோ இல்லையோ அதனாலே அந்தப் போலீஸ் பாராவைக் கூடக் காணோம். ஏதாவது பெரிய தகராறு ஆனால் வார்டன் ரூமுக்குப் போய் ஃபோன் பண்ணிட்டுப் போகலாம் வர்ரயா?” என்று விமலா கேட்டவுடன், “அதெல்லாம் ஒண்ணு மில்லேடி! காலிப்பசங்க கிட்டவந்து நின்னு யாரிட்டவோ பேசற மாதிரி ஜாடைமாடையா ஏதோ உளறினாங்க. கொஞ்ச நாழி பொறுத்துப் பார்த்தேன், முடியலே. காது கொடுத்துக் கேட்க முடியாதபடி எல்லை மீறிப் போச்சு, அப்புறம் பதிலுக்கு நாலு வார்த்தை விட்டேன், வாயை மூடிண்டு போனாங்க” என்ற சிரித்தபடியே விமலாவுக்கு மறு மொழி கூறினாள் சுமதி.

“பேசினால்கூடப் புரியாது தடியங்களுக்கு, காலிலே இருக்கிறதைக் கழற்றி செமத்தியா நாலு வாங்கு வாங்கியிருக்கனும், அப்பத்தான் புரியும்.”

பஸ் வந்தது. இருவரும் ஏறிப் புறப்பட்டனர். விமலாவோடு சகஜமாகச் சிரித்துப் பேசிக்கொண்டு சென்றாலும் சுமதியின் மனம் என்னவோ பஸ் நிறுத்தத்தில் சந்தித்த அந்த இரு தரகர்களையும் சுற்றியே இருந்தது. மேரி அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்த வேறு யாரோ ஒரு பெண் என்று தன்னைத் தப்பாகப் புரிந்துகொண்டு அவர்கள் தன்னிடம் வந்து பேசியிருப்பதைச் சுமதி தெரிந்துகொண்டாள்.

யூனிவர்சிட்டி லைப்ரரியில் வேலை முடிந்து எதிரே கடற்கரை மெரீனா கேண்டீனில் தேநீர் அருந்தச் சென்ற போது கூடச் சுமதியின் சிந்தனை எங்கோ இருந்தது. விமலா எதையோ பாட சம்பந்தமாக விவரித்துக் கொண்டு வந்தாள். சுமதி போலியாக அதைக் கேட்பது போல நடித்துக் கொண்டு சென்றாள். அவள் மனம் பஸ் நிறுத்தத்தில் சந்தித்த அந்த ஆட்கள்-அவர்கள் பேசிய பேச்சு எல்லாவற்றையும் பற்றியே சுற்றிச் சுற்றி வந்தது. அவர் தன்னை மேரியோடு சேர்த்துப் பார்த்திருப்பது புரிந்து கொண்டிருப்பது பற்றியும் சுமதி நினைத்தாள்.

“புறப்பட்டு வந்ததிலிருந்து உன் யோசனை எங்கேயோ இருக்குடி, நான் எதையோ சொல்றேன். நீ பராக்குப் பார்த்துக்கொண்டே கேட்கிறே? அந்த ஆட்கள் உன்னை ஏதாவது பயமுறுத்தினாங்களா? உள்ளத்தை சொல்லுடி, போனதும் முதல் வேலையா வார்டன் கிட்டச் சொல்லிப் போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கலாம்” என்று விமலாவே மறுபடி துணிந்து கேட்ட போதுதான்,

"பயமுறுத்தறதாவது ஒண்ணாவது ? ஆளைப்பாரு ஆளை. என்னைப் பயமுறுத்தறதுக்கு அவன் தாத்தா வந்தாலும் ஆகாது” என்று தெம்பாக விமலாவுக்கு மறுமொழி கூறினாள் சுமதி.
----------

அத்தியாயம் 10

யூனிவர்ஸிடி லைப்ரரிக்குப் போய்விட்டு வந்த மூன்றாம் நாளோ நான்காம் நாளோ, வகுப்பில் லெக்சரர் வருவதற்கு முன்பாக எல்லாப் பெண்களும் ஒரு பெண் புதிதாக கட்டிக் கொண்டு வந்திருந்த மிகமிக அழகான பாம்பே வாயில் புடைவையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சிடையே ஒரு தோழி,

"இந்த மாதிரிப்புடவை நம்ம 'சுமதிக்குப் பிரமாதமா மேட்ச்' ஆகும். இதை அவள் கட்டிண்டா அப்சரஸ் மாதிரி இருப்பா” என்ற சுமதியைச் சுட்டிக் காட்டிச் சொன்னாள். அப்போது அருகே அமர்ந்திருந்த மேரி, "எக்ஸாக்ட்லி" என்ற வியந்தாள். உடனே மற்றொருத்தி குத்தலாகக் கேட்டாள்:

"இதுக்கென்னடி அர்த்தம்? சுமதிக்குத்தான் இந்த ஸாரி மேட்ச் ஆகும்னா இவளுக்கு மேட்ச் ஆகலேங்கறிங்களா?”.

நல்லவேளை! இதற்குள்ளாக லெக்சரர் அம்மாள் வகுப்புக்குள் நுழைந்து விடவே இந்தச் சர்ச்சை ஒய்ந்துவிட்டது.

மறுநாள் காலை வகுப்புக்களும், கல்லூரியும் தொடங்குவதற்கு ஓர் அரை மணி நேரம் முன்னதாகவே மேரி, சுமதியின் அறைக்குத் தேடி வந்தாள். அவள் கையில் ஒரு பெரிய காகிதப் பொட்டலம் இருந்தது. அறைக்குள் நுழைந்த மேரி சுமதிக்கு முன்னாலேயே அதைப் பிரித்துக் காட்டினாள். முதல் நாள் வகுப்பில் யாரோ ஒருத்தி கட்டிக் கொண்டு வந்திருந்த அதே பாம்பே வாயில் புடவை மேரியின் கையில் இருந்தது.

"எடுத்துக்கொள்! உனக்காகத்தான் நேற்று மாலையே பிராட்வேயில் ஷோரூமுக்கே தேடிப் போய் இதை வாங்கிக் கொண்டு வந்தேன் சுமதி!”

-நல்ல வேளையாக அறையில் உடன் வசிக்கும் விமலா அப்போது வெளியே போயிருந்தாள்.

"என்னைக் கேட்காமல் என் சம்மதமில்லாமல் நீ இதை எப்படி எனக்கு வாங்கிக் கொண்டு வரலாம் மேரி?"

"இது உனக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தெரிந்து வாங்கி வந்தேன். நீ மறுக்கமாட்டாய் என்று நம்புகிறேன் சுமதி.”

"மறுத்துவிட்டால் என்னடி செய்வே?”

"உன் பிரியமுள்ள சிநேகிதியை நீ அப்படி எல்லாம் சோதனை செய்யமாட்டாய் என்று எனக்குத் தெரியும் சுமதி!' ⁠“ஸாரி ரொம்ப நல்லாத்தான் இருக்கு. ஆனால் நீ என்னை மேலே மேலே கடனாளியாக்கறே மேரீ?”

"சும்மா வாயை மூடு ! கடனாவது, ஒண்ணாவது ? கிஃப்ட் எல்லாம் கடன் ஆகாது. நான் இதை இங்கே கொண்டாரப்பவே கிஃப்ட்னுதானே சொன்னேன்”.

சுமதி மேரியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள். அந்தப் புடவையையும் அன்றே கட்டிக் கொண்டுதான் வகுப்புக்குப் போனாள். எல்லாரும் அவளைப் பாராட்டினார்கள். அந்தப் புடவையில் அவள் பிரமாதமாகத் தெரிவதாய்க் கொண்டாடினர்.

மேரி தனக்கு அதை வாங்கிக் கொடுத்ததாகச் சுமதியும் யாரிடமும் சொல்லவில்லை. சுமதிக்குத் தான் இதை வாங்கி அளித்ததாக மேரியும் யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை.

நாலைந்து நாட்களுக்குப் பின் ஒரு சனிக்கிழமை காலையில் சுமதிக்கு ஃபோன் வந்தது. அபூர்வமாகத் தனக்கு ஃபோன் செய்வது யார் என்ற திகைப்புடன் போய் ஃபோனை எடுத்தாள் சுமதி. எதிர்ப்புறம் மேரி தான் பேசினாள்.

'சுமதி நீ அதிர்ஷ்டக்காரி! ஒரு கோல்டன் ஆப்பர்ச்சூனிட்டி வந்திருக்கு. அன்னிக்கு நீ சந்திச்ச புரொட்யூஸர்ஸிலே ஒருத்தர் இன்னிக்குக் காலை 10 மணிக்கு உன்னை மேக்-அப் டெஸ்ட்டுக்கே வரச் சொல்றாரு. தரணி ஸ்டுடியோவில் 3ஆம் நம்பர் ஃப்ளோருக்கு வரணும். அங்கே அதே புரொட்யூஸ்ரோட வேறொரு படம் தயாராயிக்கிட்டிருக்கு. வரயா, இல்லையா? வரதும் வராததும் உன் இஷ்டம். நான் ஒண்ணும் உன்னை வற்புறுத்த மாட்டேன்.”

"நான்தான் அன்னிக்குப் பாதியிலேயே ஒடி வந்துட்டேனே ? அங்கே யாரிட்டவும் நான் சரியாப் பேசக்கூட இல்லே-அவங்க யாரும் என்னைக் கவனிச்சுப் பார்த்திருக்கக்கூட முடியாதேடீ ?”

"அதெல்லாம் நீயா நினைக்கிறே சுமதி அவங்க எல்லாரும் உன்னை நல்லாக் கவனிச்சுப் பார்த்திருக்காங்க. இன்னிக்கு வரச் சொல்லிக் கூப்பிடறாரே, இவரு ரொம்ப இம்ப்ரஸ் ஆகித்தான் ஒரு கேள்வியோ விசாரணையோ, இல்லாமே நேரே மேக்-அப் டெஸ்ட்'டுக்கே உன்னை வரச் சொல்றாரு”.

'மேக்-அப் டெஸ்ட்டுன்னா எப்படி வரணும் ? என்னென்ன செய்வாங்க...'

"ஒண்ணும் கடிச்சு முழுங்கிடமாட்டாங்க. சும்மா பயப்படாமே வாடி சுமதி!”

"நீ அன்னிக்கு வாங்கிக் குடுத்தியே அந்த வாயில் ஸாரியைக் கட்டிண்டு வரட்டுமா மேரி ?

“நைஸ் ஐடியா! அதையே கட்டிக்கிட்டு வா சுமதி! அவசியம்னா இங்கே வந்ததும் இவங்க வேறே மேக்-அப் போட்டுக் காமிராவுக்கு முன்னே நிறுத்திப் பாப்பாங்க.. கரெக்ட்டாப் பத்து மணிக்கு வந்துடு. முன்னாடி வந்தால் தப்பில்லே ஆனா லேட்டா மட்டும் வராதே...”

இந்த அழைப்பு சுமதிக்கு உள்ளுறப் பெருமகிழ்ச்சியைத்தான் அளித்திருந்தது. அன்று விடுமுறை நாளாகையினால் பாட சம்பந்தமாக ஏதோ படிப்பதற்காக யூனிவர்ஸிடி லைப்ரரிக்குப் போக வேண்டும் என்று அறைத் தோழி விமலா சொல்லிக் கொண்டிருந்தாள். அவளோடு சேர்ந்து யூனிவர்ஸிடி லைப்ரரிக்குப் போகவேண்டும் என்ற அனுமதி கேட்டால் வார்டன் உடனே வெளியே போக அனுமதித்து விடுவாள். விடுதியிலிருந்து வெளியேறி மெயின் ரோட்டுக்கு வந்ததும் விமலாவிடம் சொல்லி விட்டுத் தரணி ஸ்டுடியோவுக்கு ஒரு டாக்சியில் பறக்க வேண்டும் என்று திட்டமிட்டு முடிவு செய்துகொண்டாள் சுமதி. விமலாவிடம் ஸ்டுடியோவில் மேக்-அப் டெஸ்டுக்குப் போவதாகச் சொல்லாமல் வேறெதாவது பொய் சொல்லிக்கொள்ள வேண்டும் என்றும் நினைத் துக் கொண்டாள். ⁠நினைத்தபடியே செய்வதில் எந்தத் தடையும் இல்லை. வாரம் தவறாமல் லீவு நாட்களில் சுமதியும், விமலாவும் புத்தகங்கள் படிக்க யூனிவர்ஸிடி லைப்ரரிக் குப் போவது பற்றிய மகிழ்ச்சியுடன் வார்டன் அம்மாள் அனுமதி கொடுத்தாள். அனுமதி பெற்று விடுதி காம்பவுண்டுக்கு வெளியே வந்தவுடன் முதல் வேலையாக, "அடி விமலா! நீ தப்பாக நினைத்துக் கொள்ளாதே. தி.நகரில் எங்க உறவுக்காரங்க வீட்டுக்கு ஒரு முக்கிய வேலையா நான் போயாகனும், நீ பன்னிரண்டரை மணிவரை லைப்ரரியிலேயே இரு. நான் தி.நகரிலிருந்து நேரே அங்கேயே வந்து விடுகிறேன். அப்புறம் ரெண்டு பேருமே சேர்ந்து திரும்பி வந்துடலாம். ஒருவேளை பன்னிரண்டரை மணிக்குள்ளே நான் அங்கே திரும்பி வரலேன்னா நீ எனக்காக வெயிட் பண்ணவேண்டாம்” என்றாள்.

விமலா அதற்குச் சம்மதித்தாள். அவளைப் பஸ் நிறுத்தத்தில் விட்டு விட்டு அருகிலிருந்த டாக்ஸி ஸ்டாண்டிற்கு விரைந்தாள் சுமதி. ஒன்பதே முக்கால் மணிக்கே மேரி ஸ்டுடியோவில் வந்து காத்துக் கொண்டிருப்பதாகச் சுமதியிடம் டெலிஃபோனில் சொல்லியிருந்தாள். டாக்ஸி ஸ்டாண்டில் அவளுக்கு இன்னோர் ஆச்சரியம் காத்திருந்தது. அன்றொரு நாள் மேரியையும் அவளையும் சினிமாத் தியேட்டருக்குச் சவாரி கொண்டு போய் விட்ட அதே டாக்ஸி டிரைவர் வண்டியோடு இருந்தான். அவன் சுமதியைப் பார்த்ததும், "என்னம்மா? செயிண்ட் தாமஸ் மவுண்ட்டுக்கா?” என்று கேட்டுக் கொண்டே மீட்டரை போட்டது அவளுக்குப் பிடிக்க வில்லை.

'இல்லை! கோடம்பாக்கம் தரணி ஸ்டுடியோவுக்குப் போ. அவசரம்! ஏம்ப்பா எப்ப வண்டியிலே ஏறினாலும் செயிண்ட் தாமஸ் மவுண்ட்டுக்கான்னு கேட்டா என்ன அர்த்தம் ?” ⁠"தப்பா நினைச்சுக்காதீங்கம்மா! அந்தச் சட்டைக் காரிச்சிப் பொண்ணோட சிநேகிதிங்கள்ளாம் அங்கே தான் அடிக்கடி போவாங்க. அதான் கேட்டேன்."

டாக்ஸி விரைந்தது. தரணி ஸ்டுடியோ வாசலில் கூர்க்கா டாக்ஸியைத் தடுத்து நிறுத்திவிட்டான். யாரைப் பார்க்க வேண்டும் என்று அவன் விசாரித்தபோது சுமதி ஒரு கணம் தயங்கியபின் மேரி தன்னிடம் ஃபோனில் சொல்லியிருந்த அந்தத் தயாரிப்பாளரின் பெயரைச் சொன்னாள். சுமதியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு டாக்ஸியை உள்ளே செல்ல அனுமதித்தான் கூர்க்கா. உட்புறம் ஸ்டுடியோ பகுதிகளுக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் 'டாக்ஸிகள் இங்கேயே நின்றுவிட வேண்டும். அதற்கு அப்பால் செல்லக்கூடாது' என்று பெரிதாக ஒரு போர்டு இருந்தது. அந்த இடத்திலேயே டாக்ஸியை நிறுத்திவிட்டு மீட்டரில் வாடகை கணக்குப் பார்த்துப் பணம் கொடுத்து அனுப்பினாள் சுமதி.

தோட்டப் பகுதியைக் கடந்து உள்ளே சென்ற சுமதிக்குப் பெரிய பெரிய ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்டுகளாக வரிசையாய் இருந்த ஃப்ளோர்களைக் கண்டுபிடிப்பதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. மூன்றாவது ஃப்ளோர் முகப்பில் காலை ஒன்பதேமுக்கால் மணியிலிருந்தே சுமதிக்காகக் காத்துக் கொண்டிருப்பதாய்ச் சொல்லிய மேரியைத்தான் அங்கே காணவில்லை. சிறிது நேரம் மேரியை எதிர்பார்த்து மூன்றாவது ஃப்ளோர் முகப்பிலேயே நின்று கொண்டிருந்தாள் சுமதி. மேரி தட்டுப்படாமற்போகவே, உட்புறமிருந்து காபி பிளாஸ்க்குடன் வெளியே வந்த ஒரு காக்கி அரை டிராயர் அணிந்த பையனிடம் தான் தேடி வந்திருந்த தயாரிப்பாளரின் பெயரைச் சொல்லி விசாரித்தாள் சுமதி.

"உள்ளாற ஷுட்டிங் நடக்குதுங்க... நீங்க இங்கேயே இருங்க. நான் அவர் கையிலே சொல்றேன்" என்று சொல்லி விட்டுச் சுமதி உட்காருவதற்காக ஒரு மடக்கு நாற்காலியை விரித்துப் போட்டுவிட்டுப் போனான் பையன்.

அவளை அவன் உட்காரச் செய்து விட்டுப்போன இடம் அந்த மூன்றாவது ஃப்ளோரின் மேக்-அப் அனெக்ஸுக்கு முகப்பாக இருந்தது. ரோஸ் நிறம் கன்றிய பவுடர்ப்பூச்சு முகமும் கீறினாற்போன்ற கரும்புருவமும் மேக்கப் உடையலங்காரமுமாக யார்.யாரோ வந்தார்கள், போனார்கள்.

உள்ளே ஏதோ குரூப் டான்ஸ் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்ததோ என்னவோ கும்பலாக ஒரு பத்துப் பன்னிரண்டு துணை நடிகைகள் படிப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த ஃப்ளோரிலிருந்து சிரிப்பும் கும்மாளமுமாக மேக்-அப் அனெக்ஸ்-க்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சிறிது பின்தங்கி நடந்து வந்த உடற்கட்டுள்ள ஒரு பெண்ணின் தோளில் கை போட்டபடி இரட்டை நாடி சரீரமுள்ள ஒரு குட்டை மனிதர் தென்பட்டார். அந்த மனிதர்தான் மேரி சொல்லிய புரொட்யூலராக இருக்க வேண்டும் என்று சுமதி புரிந்து கொண்டாள்.

சுமதி அன்று ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்புக்குப் போயிருந்த போது இந்த மனிதரைச் சுட்டிக் காட்டி மேரி அறிமுகப்படுத்தியிருந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. அதற்குள் அந்த மனிதரே சுமதியைப் பார்த்து விட்டு, “ஹலோ. நீ எப்பம்மா வந்தே? மேரி ஃபோன் பண்ணிச் சொல்லிச்சு. அதாலே,வரமுடியலியாம். நீ மேக்-அப் டெஸ்ட்டுக்கு வருவேன்னு சொல்லிச்சு. ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக்கோ. இந்த ஃப்ளோர்ல படிப்பிடிப்பு முடிஞ்சிடும். ஆளுங்கள்ளாம் போயிடுவாங்க. காமிராமேனிட்டச் சொல்லி வச்சிருக்கேன். உள்ளே கூட்டம் குறைஞ்சதும் உனக்கு மேக்-அப் போடச் சொல்றேன்” என்று உற்சாகமாகச் சொன்னார். அவர் நின்று கொண்டிருந்த பிரதேசத்தைச் சுற்றி அவர் உடலிலிருந்து விலையுயர்ந்த வாசனைகள் கமகமவென்று கிளர்ந்து கொண்டிருந்தன.

"எனக்கு ஒண்ணும் அவசரமில்லே! மெல்ல ஆகட்டும்" என்றாள் சுமதி.

"அது சரியம்மா! அன்னிக்கு ஏன் கிளப்பிலே எங்களை எல்லாம் பார்த்ததும் ஏதோ பேயையோ, பிசாசையோ பார்த்துட்ட மாதிரிப் பயந்துக்கிட்டு ஒடினே?”

இதற்குச் சுமதி பதில் சொல்லவில்லை. நாணித்தலை குனிந்தபடியே சும்மா இருந்துவிட்டாள்.

"சரி! உன் மனசைச் சங்கடப்படுத்தறதா இருந்தா நான் அதைப்பத்திக் கேட்கலே. அதை மறந்துடலாம். இப்போ என்ன குடிக்கிறே? காபியா, போர்ன்விடாவா, இல்லே கூலா ஏதாவது?”

இதற்கும் அவள் உடனே பதில் சொல்லவில்லை. ஆனால் அவராகவே கையைத் தட்டி, 'டேய் யார்ரா புரொடக்க்ஷன் பாய்! ரெண்டு கோகோ கோலா வாங்கிட்டு வா, சொல்றேன். ஜல்தி போ... ஜில்னு இருக்கணும்" என்று ஆர்டர் போட்டார்.

சுமதி முதலில் பார்த்த அந்தக் காக்கி அரை டிராயர்ப் பையன் ஓடி வந்தான்.

"தோ வந்துட்டேன் சார்” என்று ஓடினான் அவன். சிறிது நேரத்தில் எக்ஸ்ட்ராக்கள் ஒரு வேனில் அடைத்துக் கொண்டு கிளம்பினார்கள். பெரிய நடிகர் நடிகைகள் காரில் கிளம்பினார்கள். நீ வாம்மா; போகலாம்” என்று சுமதியை மேக்-அப் அனெக்ஸுக்குள் அழைத்துச் சென்றார் தயாரிப்பாளர். அனெக்ஸ் அறை ஏ.சி. செய்யப்பட்டிருந்தது. உள்ளே மேக்-அப் மேனும், அவனுடைய உதவியாளனும் மட்டுமே இருந்தார்கள்.

தயாரிப்பாளர் கொஞ்சம் தாராளமாகவே உரிமை கொண்டாடி, "இதோ இந்தச் சேருக்கு வாம்மா! இது தான் ரொம்ப ராசியான சேர். இப்பப் பிரமாதமா ஜொலிக்கிறாளே குமுதகுமாரி, அவ முத முதலா இந்த நாற்காலிலே உட்கார்ந்துதான் மேக்-அப் போட்டுகிட்டா. தெரியுமா?” என்று சுமதியின் தோளைத் தொட்டுக் கூப்பிட்டார். அவருடைய கையை எடுத்து உதறினால் எங்கே கோல்டன் ஆப்பர்ச்சூனிட்டி போய் விடுமோ என்ற பயத்தில் சுமதி அப்போது அதைச் சகித்துக் கொண்டாள்.

"இந்தாப்பா!... புருவத்தைக் கத்திரிச்சுப்பிடாதே. இவ காலேஜிலே படிக்கிற பொண்ணு. இப்போதைக்குச் சும்மா 'அய் பிராமினன்ஸ்' வர்ற மாதிரி ஏதாச்சும் அட் ஜஸ்ட் பண்ணிக்க” என்ற சுமதிக்காக அவரே அக்கறை எடுத்துக் கொண்டு மேக்-அப் மேனை எச்சரித்தார்.

மேக்-அப் மேன் தன் தலையை-முகத்தை-மோவாயை-தோள் பட்டையை எல்லாம் தாராளமாகத் தொட்டபோது கூடச் சுமதிக்குக் கூச்சமாகத்தான் இருந்தது. ஆனால் அந்தக் கூச்சங்களை அவளே உதற முயன்று தன் மனத்தைத் தேற்றிக் கொண்டாள். தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டாள். வேற்று ஆடவர் தொடக் கூசும் மனத்தையும் உடலையும் வைத்துக் கொண்டு சினிமாவில் சோபிக்க முடியாது என்பது சுமதிக்கு நன்றாகப் புரிந்துதான் இருந்தது.

மேக்-அப் முடிந்ததும் அவரே அவளை உள்ளே ஃப்ளோருக்கு அழைத்துச் சென்றார். அழைத்துச் செல்லும் போதும் தோளைத் தழுவினாற் போல் நெருங்கியே நடந்து வந்தார் அவர்.

உள்ளே ஃப்ளோரில் காமிராமேன், உதவிக் காமிராமேன் இரண்டு மூன்று லைட்பாய்ஸ் எல்லோரும் இருந்தனர். இவர்கள் அங்கே நுழையவும் புரொடக்ஷன் பாயும் இரண்டு கோகோ கோலா பாட்டில்களோடு கூடிய டிரேயுடன் உள்ளே வந்தான்.

சுமதியைத் தாராளமாகத் தொட்டு முகத்தைத் திருப்பி இடுப்பை சரிசெய்து, கைகளை ஒழுங்கு பண்ணிக் காமிராவுக்கு முன் நிற்க வைத்தார் தயாரிப்பாளர். ⁠அப்புறம் காமிராமேனும், தன் பங்குக்கு என்னென்ன விதமாகத் தொட முடியுமோ அத்தனை விதமாகவும் தொட்டாயிற்று.

"ஓ.கே. ரெடி.." என்று கூறியபடி ஒரு கோகோ கோலா பாட்டிலை எடுத்து உறிஞ்சிக் கொண்டே சிறிது ஒதுங்கி நின்றார், தயாரிப்பாளர்.

சுமதி சிரித்த முகமாக இருக்க முயன்றாள். விளக்குகள் பளிச்சிட்டன. அணைந்தன. மறுபடியும் பளிச்சிட்டன. நடுவே, "இந்தாம்மா! ரொம்பக் களைப்பா இருக்கும்! குடி’ என்று மற்றொரு கோகோ கோலா பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினார் தயாரிப்பாளர்.

"இப்ப வேண்டாம்! முடிஞ்சதும் எடுத்துக்கறேன்' என்று கூறியபடி அவர் நீட்டிய பாட்டிலை எடுத்து மறுபடி டிரேயிலேயே வைத்தாள் சுமதி. முகபாவங்களை மாற்றச் சொல்லி இரண்டு மூன்று முறை படங்களைப் பிடித்தபின் "உனக்கு நல்ல காமிரா ஃபேஸ் இருக்கும்மா” என்றார் தயாரிப்பாளர். காமிராமேன் ஒன்றுமே சொல்லவில்லை. அவளும், தயாரிப்பாளரும் ஃப்ளோருக்குள்ளிருந்து வெளியேறு முன்பாகத் திடீரென்று மேரியும் அங்கே வந்து சேர்ந்தாள். "ஹாய் சுமதி: பிரமாதம்” என்றாள் மேரி. சுமதியும் அவளை நோக்கி, "தாங்க்ஸ் மேரி: உன் காம்ப்ளிமெண்ட்ஸைவிட வேறென்ன பெரிசு ?” என்று சிறிது தாராளமாகவே அப்போது அவளைப் பாராட்டி வைத்தாள்.
----------------

அத்தியாயம் 11

மேரியைக் கண்டதுமே அந்தத் தயாரிப்பாளர் படு உற்சாகம் அடைந்தவராகக் காணப்பட்டார்.

"ஏய் மேரீ! உன் சிநேகிதிக்குக் கொஞ்சம் அநாவசிமான கூச்சமும் பயமும், வீண் தயக்கமும் இருக்கு. அதெல்லாம் போயிட்டா இவ பிரமாதமா ஷைன் பண்ணுவா, இவளை அடிச்சுக்க எந்த முன்னணி ஹீரோயினாலேயும் முடியாது. நல்ல களையான முகம், அருமையான நிறம் கலர்ப் படத்திலே போட்டால் சும்மா லட்டு மாதிரி இருப்பா...".

அவருடைய புகழ்ச்சி அதிகமாக மிகைப்படுத்தி விரசமாகப் புகழ்கிற பாஷையில் ஒரு தினுசாகப் போய்க் கொண்டிருப்பது சுமதிக்குப் புரிந்தது. ஆனாலும் சர்வ வல்லமை வாய்ந்த ஒரு புரொட்யூஸரை எப்படி எதிர்த்துப் பேசுவது? அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டாள். அவர் தன்னைத் தொடுவது-தொட்டதை எல்லாம் பொறுத்துக் கொண்டாள். அபிப்ராயங்களுக்கு எல்லாம் தலையாட்டினாள். அவர் தன் பக்கம் திரும்பிய போதெல்லாம் கூழைச் சிரிப்புச் சிரித்தாள். மயக்குவது போல் பார்த்தாள்.

"அடி சுமதீ! உன்னுடைய யோக காலம்தான் நீ சாரோட கையாலே அறிமுகம் ஆயிருக்கே. நம்ம குபேரா பிலிம்ஸ்சார் இராசிக்கார மனுஷனாக்கும். இவர் காமி ராவுக்கு முன்னாலே கொண்டுவந்து நிறுத்தின எந்தப் பெண்ணும் சோடை போனதில்லே. அவங்கள்ளாம் இன்னிக்கு லட்ச லட்சமாச் சம்பாதிக்கிறாங்க" என்றாள் மேரி.

"சும்மாவா பின்னே? பேரே குபேரா பிலிம்ஸ்னு வச்சிருக்காரே?” என்று சுமதியும் மேரியோட சேர்ந்து கொண்டு அந்தத் தயாரிப்பாளரை உச்சி குளிரச் செய்தாள்.

"மேரீ! இன்னிக்கி இனிமே நம்ம கம்பெனி கால்ஷீட் எதுவும் இல்லே. நான் ஃப்ரீ, எங்கே போகலாம்னு சொல்லு, மகாபலிபுரம் டயமண்ட் பீச் ஹோட்டலுக்குப் போகலாமா? அல்லது வேறு எங்காவது போகலாமா? நீதான் சொல்லணும் : சுமதிக்கு எது பிடிக்கும்னு உனக்குத்தான் தெரியும். முதல்லே நம்ம புரொடக்ஷன் ஆபீஸுக்குப் போவோம். அங்கே டான்ஸ் மாஸ்டர் ரவிகுமார் வந்து காத்துக்கிட்டிருப்பாரு...”

"டான்ஸ் மாஸ்டரை இப்போ, இன்னிக்கு அவசியம் பார்த்தாகணுமா சார்?

"ஆமாம் மேரி! நம்ம கம்பெனியோட அடுத்த தயாரிப்பிலே ஹீரோயினே ஒரு டான்ஸ்காரிதான். அந்த ரோலுக்குத் தயாராகணும். இப்பவே உன்னோட தோழி சுமதிதான் அதுக்குத் தயாராகணும். இந்த டான்ஸ் இருக்கே, அது கடுகுமாதிரி. சமையல்லே எதைத் தயாரிச்சாலும் கடைசியிலே கொஞ்சம் தாளிச்சிட்டாப் பிரமா தமா வாசனை வரும். அதுமாதிரிச் சினிமா, டிராமா சங்கீதம் எல்லாத்துக்கும் கொஞ்சம் டான்ஸைத் தாளிக்கணும் இந்தக் காலத்திலே! என்னா நான் சொல்றது? என்று மேரியிடம் கூறிக் கொண்டே சுமதியின் பக்கம் திரும்பிக் கண்களைச் சிமிட்டினார் குபேரா பிலிம்ஸ் அதிபர். அந்தக் கண்சிமிட்டல் மிகவும் 'சீப்' எடிஷனாக இருந்தது.

"ரொம்ப நைஸ் ஐடியா. அதைப் பிரமாதமாகச் சொல்றீங்க. கடுகு உவமை இருக்கே அது டாப்” என்றாள் சுமதி. தயாரிப்பாளருக்குத் தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. சுமதியை மாதிரி அந்நியமான இளம்பெண் ஒருத்தி திடீரென்று தன்னைப் புகழ ஆரம்பித்தது, அவருக்குப் போதையூட்டியது. வெறியூட்டியது.

காரில் மேரியையும், சுமதியையும் அழைத்துக் கொண்டு ஹபிபுல்லா ரோடில் இருந்த தன் புரொடக்ஷன் ஆபீசுக்குச் சென்றார் தயாரிப்பாளர். காரில் போகிறபோது சுமதி மேரியிடம் தான் ஒரு மணிக்குள் யூனிவர்ஸிடி லைப்ரரிக்கு வருவதாக விமலாவிடம் காலையில் சொல்லி அனுப்பியிருந்ததைச் சொன்னாள்.

"சரிதான். நீ போகாட்டாப் பரவாயில்லே. உன்னாலே வரமுடியலேன்னு விமலா புரிஞ்சிப்பா. இன்னிக்கு இந்த ஆளை விட்டுவிடாதே. ஆள் நல்ல மூட்லே இருக்கான்' என்று சுமதியின் காதைக் கடிக்கிறாற் போல நெருக்கமாக மெல்லிய குரலில் சொன்னாள் மேரி.

முன் ஸீட்டில் டிரைவர் அருகே அமர்ந்திருந்த தயாரிப்பாளர், "என்னது? ரெண்டு பேருமா எனக்குத் தெரியாம ஏதோ ரகசியம் பேசிக்கிறீங்க?" என்று சிரித்துக் கொண்டே திரும்பிக் கேட்டார்.

மேரி சொன்ன வாக்கியம் கேட்பதற்கு என்னவோ போலிருந்தது சுமதிக்கு, இந்த ஆளை விட்டு விடாதே. ஆள் நல்ல மூட்லே இருக்கான்' என்று மேரி எதை நினைவூட்டுகிறாள் என்பது சுமதிக்குப் புரியவில்லை. அந்தச் சொற்களும் அதை அவள் வெளியிட்ட விதமும் மிகவும் கொச்சையாக இருந்தன, குழப்பமாகவும் தோன்றின.

கார் அபிபுல்லா ரோடில் முன்புறம் விசாலமான தோட்டத்தோடு கூடிய ஒரு பங்களா கேட்டுக்குள் புகுந்து நின்றது. பங்களா முகப்பில் குபேரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று ஒரு போர்டும் இருந்தது.

உள்ளேயிருந்து ஒரு பையன் ஓடிவந்து கார்க் கதவைத் திறந்துவிட்டான்.

"வாங்க! உள்ளே போகலாம்” என்று மேரியையும், சுமதியையும் அழைத்தார் அவர்.

"டேய் பையா ரூம்லே ஏ.ஸி.யைப் போட்டு வச்சிருக்கியா ? மறந்துட்டியா?” என்று படியேறிக் கொண்டே கேட்டார் தயாரிப்பாளர்.

'நீங்க ஃபோன்ல சொன்னப்பவே போட்டு வச்சிட்டேன் சார்!’ என்று பையனிடமிருந்து பதில் வந்தது.

தயாரிப்பாளரை முதலில் படியேறிப் போகவிட்டு விட்டுப் பின்னால் சிறிது தயங்கி நின்ற சுமதி, மேரியிடம், "இவர் பேரு என்னடி? புரொட்யூஸர் புரொட்யூஸர்னே எத்தினி தரம்தான் சொல்றது?’ என்று கேட்டவுடன், "பேரு கன்னையா! ஆனால் பேரைச் சொல்லிடாதே, புரொட்யூஸர் சார் என்ன சொல்றீங்க? புரொட்யூஸ்ர் சார் தூங்கறாரா? புரொட்யூஸர் சார் வந்தாச்சான்னு இந்த மாதிரியே கேட்டுக்கோ, அதுதான் பெரிய மரியாதைன்னு இந்த ஸினி பீப்பிள் நினைப்பாங்க" என்று மேரி அவளுக்குப் பதில் சொன்னாள். ⁠அந்த ஏ.ஸி. ரூமில் டேபிள், சேர் அலுவலகச் சாமான்கள், படுப்பதற்கு மெத்தை தலையணையோடு கூடிய பெரிய கட்டில், சோபாக்கள் எல்லாமே இருந்தன. சுமதி மேரியின் காதருகே கேட்டாள்:

'என்னடீது இங்கே ஆபீஸ் ரூம்லேயே படுக்கையையும் போட்டு வச்சிருக்காரு?"

"சினிமாக்காரங்களுக்கு ஆபீஸ், படுக்கை அறை எல்லாமே ஒண்ணுதான்! இன்னும் நல்லாச் சொல்லணும்னாப் படுக்கையறையிலேதான் பல ஆபீஸ் விஷயங்கள் கூட ஸெட்டில் ஆகும்” என்று சொல்லிவிட்டபின் இத்தனை பட்டவர்த்தனமாக அதை ஏன் சுமதியிடம் சொன்னோம் என்று சிறிது தயங்கியவளாக நாக்கைக் கடித்துக் கொண்டாள் மேரி.

சுமதி இதற்குப் பதில் சொல்லவில்லை. குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்திருந்தாள். அதற்குள் உள்ளே அந்த ஏ.ஸி. ரூமிலேயே இருந்த அட்டாச்டு பாத்ரூமுக்குப் போயிருந்த தயாரிப்பாளர் தொண்டையைச் செருமிக் கனைத்தபடியே திரும்பி வந்து சேர்ந்தார். மணியை அமுக்கி பையனைக் கூப்பிட்டபடி, குரலை சிறிது குறும்புத்தனமாகத் தணித்து, "என்ன மேரீ, சுமதிக்குப் பிராந்தியா? விஸ்கியா' என்றார். சுமதி துணுக்குற்றாள்.

"ரெண்டுமே இல்லே அவளுக்கு எதுவுமே பழக்கம் கிடையாது” என்று மேரி இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. ஒரு விநாடி பொறுத்து, "அதெல்லாம் இனிமே நீங்கதான் பழக்கித்தரணும். உங்க கைதான் ராசியான கை” என்று சொல்லி வைத்தாள். சுமதிக்கு அது விரசமாகப்பட்டது. மேரி மிகவும் வெளிப்படையாகவே கீழிறங்கி வந்து பேசத் தொடங்கி விட்டாளோ என்று சந்தேகமாயிருந்தது. சென்னையைப் போன்ற ஒரு நவநாகரிக ஊரில் ஆண் தரகர்களைவிடப் பெண் தரகர்கள் மோசமானவர்களாகவும் மட்டமானவர்களாகவும் இருப்பார்கள் போலிருந்தது. ஆனாலும் மேரியை ஏறிட்டுக் கோபமாக உறுத்துப் பார்க்க முடியாதபடி
சுமதியை ஏதோ தடுத்தது. அவளால் மேரியைக் கண்டிக்க முடியவில்லை. கோபிக்க முடியவில்லை. எதிர்த்து விரோதித்துக் கொள்ளவும் இயலவில்லை.

தயாரிப்பாளர் பிரிஜ் டோரைத் திறந்து பாட்டில்களை யும் கிளாஸ்களையும் மேஜை மேலே வைக்கத் தொடங்கினார். சுமதி மெல்லக் குறுக்கிட்டு, "யாரோ டான்ஸ் மாஸ்டரைப் பார்க்கணும்னிங்களே?” என்று கேட்டு வைத்தாள். அதுதான் சமயமென்று "இவள் மாடி யிலே டான்ஸ் மாஸ்டரைப் பார்த்துப் பேசிக்கிட்டிருக் கட்டுமே பையனோட அனுப்பி வச்சிடலாமா?” என்று மேரி தயாரிப்பாளரை நோக்கிச் சிரித்துக் கொண்டே கேட்டாள்.

"ஏன் சுமதிக்கு எதுவும் வேண்டாமா ?” என்று தயாரிப்பாளர் மேஜை மேலிருந்த கிளாஸ்களைக் காட்டி மறுபடியும் கேட்டார். மேரி வேண்டாம் என்பதுபோல் தலையை அசைத்தாள். தயாரிப்பாளர் மறுபடியும் மேஜை மேலிருந்த மின்சார மணிக்கான பொத்தானை அமுக்கினார். பையன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். .

"டேய்! இவங்களை மாடியிலே டான்ஸ் மாஸ்டரிட் டக் கொண்டு போய்விடு” என்று சுமதியைக் காட்டித் தயாரிப்பாளர் பையனுக்கு உத்தரவு போட்டார்

பையன் பின்தொடரச் சுமதி எழுந்து சென்றாள். மாடிக்குப் படி ஏறுகிற வழியில் ரவிகுமார்-டான்ஸ் மாஸ்டர் என்று பெயர் எழுதி அவரைச் சந்திக்கும் நேரமும் எழுதப்பட்டிருந்தது.

டான்ஸ் மாஸ்டரைச் சுற்றி நாலைந்து இளம் பெண்கள் இருந்தார்கள். பைஜாமா, ஜிப்பா அணிந்த பாகவதர் கிராப்புடன் கையில் வைர மோதிரமும், பற் களில் வெற்றிலைக் காவியும் மின்ன அவன் உற்சாகமாக இருந்தான். சுமதியை அழைத்துச் சென்ற பையன், "புரொட்யூஸர் சார் அனுப்பிச்சாருங்க” என்று சுமதியைச் சுட்டிக் காட்டினான். அப்புறம் சுமதி பக்கமாகத் திரும்பி “உள்ளே போங்கம்மா” என்று அவளுக்கு உள்ளே போக விலகி விழி விட்டான்.

“பலே! பலே! டான்ஸுக்குன்னே செதுக்கி வச் சாப்ல உடம்பு, வாம்மா வா..” என்று அவளுடைய உடல் வனப்பைப் பாராட்டியபடியே வரவேற்றான் டான்ஸ் மாஸ்டர்.

சுமதி அவனை வணங்கிவிட்டு, நடு ஹாலில் விரித்திருந்த ஜமுக்காளத்தில் நின்றாள். "நீ தலையை ஒயிலாகச் சாய்த்துக் கும்பிடறதே டான்ஸ் மாதிரி இருக்கும்மா.

சுமதி புன்னகை பூத்தாள்.

“உன் பேர் என்னம்மா ?”

“சுமதி.”

“பலே! பலே! பேரும் பிரமாதம்தான்.”

சுமதி ஜமுக்காளத்தில் உட்காருவதா நின்று கொண்டே இருப்பதா என்பது தெரியாமல் தயங்கிய போது, "எங்கே இப்போ நான் அபிநயம் பிடிக்கிற மாதிரி நீயும் பிடி பார்க்கலாம். இன்னும் பாடம்லாம் நிறைய இருக்கு. இது சும்மனாச்சும் ஒரு டெஸ்ட்டுக்குத்தான்” என்றான் டான்ஸ் மாஸ்டர். சுமதி அவன் செய்த மாதிரியே செய்து நின்றாள். அவன் அருகே வந்து அவள் நின்ற பாணியைத் திருத்துவது போல் மோவாய், இடுப்பு, தோள் பட்டையை எல்லாம் தொட்டு, இப்படி இல்லேம்மா. இன்னும் கொஞ்சம் இடுப்பு வளையணும். முகபாவம் மாறணும்-ஏதேதோ சொன்னான். வேறு பெண்கள் முன்னிலையில் அவன் தன்னைத் தொட்டது என்னவோ போலிருந்தது. ஆனால் அந்த வேறுபெண்கள் அதையெல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தாதது போலக் குஷாலாய்ச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அதில் துடுக்குக்காரியாகத் தோன்றிய பெண் ஒருத்தி ஏதோ ஹாஸ்யமாகச் சொல்வதுபோல், "மாஸ்டருக்குப் புது கிராக்கி வந்தாச்சு. இனிமே நம்மை எல்லாம் கவனிக்கவா போறாரு ?” என்றுகூட இரைந்து சொன்னாள். தயாரிப் பாளருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. தயாரிப்பாளரின் அலுவலக மாடியில் டான்ஸ்மாஸ்டரே தனியே ஸ்கூல் நடத்துகிறார் என்பது புரிந்தது. ஆனால் அது உண்மை யில் டான்ஸ் ஸ்கூல்தானா, அல்லது அந்தப் பெயரில் அங்கு வேறு ஏதாவது இரகசியமாக நடந்து கொண்டிருக் கிறதா என்பது சுமதிக்குச் சந்தேகமாகவே இருந்தது. சூழ் நிலைகள் அப்படி இருந்தன. டான்ஸ் மாஸ்டர் சுமதியை லேசில் விடவில்லை. என்னென்னவோ சம்பந்தமுள்ள தையும், சம்பந்தமில்லாததையும் செய்யச் சொல்லி வேர்க்க விறுவிறுக்க கஸ்ரத் எடுத்தது போல ஆகியபின் "உனக்கு டான்ஸ் ஜோரா வரும் தங்கம்” என்று செல்லப் பெயர் கொண்டாடிச் சொன்னான். சிறிது பொறுத்து, “நீ நாளையிலேருந்து வந்துடும்மா! உனக்கு மாச ஃபீஸ் நூத்தம்பது போட்டுக்கறேன்” என்றான் டான்ஸ் மாஸ்டர்.

“சரி வரேன் மாஸ்டர் சார்” என்று அவனிடம் சொல்லிக் கொண்டு கீழே படியிறங்கி வந்தாள் சுமதி. ஏ.ஸி. அறை வாசலில் உட்கார எதுவும் இல்லை. சரி உள்ளேதான் போகலாமா என்று எண்ணிக் கதவைத் திறந்த சுமதி திறந்த கதவுக்கு உள்ளே பார்த்த காட்சி உடனே கதவை மூடிவிட்டுப் பின் வாங்கும்படி இருந்தது. மேரியும், தயாரிப்பாளரும் மேஜையருகே உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்த்து சுமதி கதவைத் திறந்திருந்தாள். ஆனால் அவர்கள் இருவரும் கட்டிலில் படுக்கையில் இருந்தார்கள். சுமதி மறுபடி கதவைத் திறக்க முடியவில்லை. வெளியிலேயே அவள் தயங்கி நின்று கொண்டிருந்தாள்.
----------

அத்தியாயம் 12

பித்துப் பிடித்தவள் போல் எவ்வளவு நேரம் அந்த அறை வாயிலில் நின்றோம் என்பது சுமதிக்கே நினை வில்லை. மற்றவர்களுக்குக் கூசுகிற பல விஷயங்கள் சினிமா உலகில் உள்ளவர்களுக்கு மரத்துப் போயிருப்பது தெரிந்தது. மறுபடி மாடிக்கே படியேறிப்போய் டான்ஸ் மாஸ்டரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாமே என்று மேலே நிமிர்ந்து பார்த்தால் மாடி முகப்புக் கதவும் அடைத்திருந்தது. படியேறிச் சென்று கதவைத் தட்டுவதற்கு அவளுக்குப் பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது. அந்த வீட்டில் எந்தக் கதவுக்குப் பின்னால் என்ன இருக்குமோ என்ற கூச்சம் இன்னும் இருக்கத்தான் செய்தது. ஆனால் படிப்படியாகச் சுமதியின் மனம் பேதலித்துக் குழம்பியது. கூச்சம் போய்ச் சலிப்பு வந்தது.

இவர்களெல்லாம் இப்படி இருக்கிறார்களே என்ற ஆத்திரம் வருவதைவிட இப்படி இருப்பதுதான் வாழ்க் கை போலிருக்கிறது என்ற சலிப்பு மட்டுமே வரத் தொடங்கியிருந்தது. மேரி எவ்வளவோ தந்திரமாகவும் பொறுமையாகவும் தனக்கு வலை விரித்திருந்தாலும், அவள் வலைதான் விரித்திருக்கிறாள் என்ற சுமதிக்குப் புரிந்ததே ஒழிய உறைக்கவில்லை.

'இன்னிக்கு இந்த ஆளை விட்டுடாதே! ஆள் நல்ல 'மூட்லே இருக்கான்' என்று அரைமணி நேரத்திற்கு முன் மேரி தன்னிடம் சொல்லியிருந்தாளே அந்த வாக்கியம் சுமதியின் செவிகளில் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தது.

அதையும், அது போன்ற வாக்கியங்களையும் சகித்து ஜீரணித்துக் கொள்கிற அளவு தன் மூளை சலவையாகி விட்டதோ என்றுகூட அவள் நினைத்தாள். தொடர்ந்து தவறுகளாகப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாளடைவில் எது சரி எது தவறு என்ற கூடக் கண்டு பிடிக்கும் உணர்வு போய்விடும். தொடர்ந்து பாவங் களாகவே கண்டுகொண்டிருப்பவர்களுக்குப் புண்ணியத் தைப் பற்றிய உணர்வு மரத்துப் போய்விடும். மேரி தன்னுடைய தந்திரத்தாலும் கெட்டிக்காரத்தனத் தினாலும் சுமதியை மெல்ல மெல்ல அந்த நிலைக்கு ஆக்கிவிட்டிருந்தாள். குழப்பி விட்டிருந்தாள்.

"நிற்கிறீங்களேம்மா. உட்காருங்க” என்று பையன் ஒரு மடக்கு நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்து பிரித்துப் போட்டான். சுமதி உட்கார்ந்து கொண்டாள்.

அன்று செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் செய்தது போல் அருவருப்படைந்து ஒடுகிற சக்தி இப்போது சுமதியிடமே இல்லை. இந்த அளவிற்குத் தன் உணர்வுகள் பதிந்து போய்விட்டனவே என்ற ரோஷம்கூட இப்போது அவளுக்கு வரவில்லை.

சிறிது நேரத்தில் ஒன்றுமே நடக்காததுபோல் சகஜ மாகப் புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டுக்களை எண் னியபடி மேரி அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். சுமதியைக் கண்டதும், "என்னடி நீ இங்கேயா உட்கார்ந்துக்கிட்டிருக்கே: மாடியிலே போய் டான்ஸ் மாஸ்டரைச் சந்திக்கலியா?” என்ற கேட்டபடி ரூபாய் நோட்டுக்களை அப்படியே 'பிளவுஸ்"க்குள் திணித்துக் கொண்டாள் மேரி. -

கையிலிருந்த டம்பப் பையை விட்டு விட்டுப் பிளவுஸ்-க்குள் பணத்தை அவள் திணித்துக்கொண்டது சுமதிக்கு ஒரு வித்தியாசமான பழக்கமாகத் தெரிந்தது.

"டான்ஸ் மாஸ்டரைப் பார்த்துட்டு வந்தாச்சு’ என்றாள் சுமதி. ஒரு நிமிஷம் பொறுத்து, "நாளையிலே யிருந்து டான்ஸ் கிளாஸுக்கு வரச் சொன்னாரு. மாச ஃபீஸ் நூத்தைம்பது ரூபாய்னும் சொன்னாரு” என்றும் சேர்த்துச் சொன்னாள். ' பணத்தைப் பத்திக் கவலைப்படாதே! நான் இருக்கேன். யூ கோ எஹெட்” என்று சொல்லிச் சுமதியின் முதுகில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தாள் மேரி. "கன்னையா துரங் கிட்டாரு. நாளைக் குச் செம்பரம் பாக்கம் ஏரியிலே ஏதோ 'அவுட்டோர் ஷூட்டிங் இருக்காம். அதுக்கு உன்னையும் வரச்சொல்லி எங்கிட்ட முன்பணம் கொடுத்திட்டாரு. அவர் கார்லியே போயி உன்னை ஹாஸ்டல் வாசல்லே 'டிராப் பண்ணிட்டு இப்ப நான் போறேன்” என்று சுமதியிடம் சொல்லிவிட்டு வாசற்பக்கம் நின்ற பையனைக் கைதட்டிக் கூப்பிட்டு மேரி காருக்குச் சொன்னாள்.

கார் ஸ்டார்ட் ஆகிற சத்தம் கேட்ட சுவட்டோடு முகப்பில் கொண்டுவந்து தயாராக நிறுத்தப்பட்டது.

இருவரும் காரில் ஏறி அமர்ந்ததுமே பிளவுஸில் கையை விட்டுப் பணத்தை எடுத்த மேரி மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களைச் சுமதியிடம் கொடுத்தாள்.

"உங்கிட்டவே இருக்கட்டுமே! நான்தான் உனக்கு நிறையத் தரணுமே” என்று அதை வாங்கிக்கொள்ளத் தயங்கினாள் சுமதி. *

"நோ நோ! அதெல்லாம் அப்புறம் தா. வாங்கிக் கறேன். இப்ப இதை ரெஃப்யூஸ் பண்ணாதே. முதல் முதலா நீ சம்பாதிக்கிற பணம் இது” என்று சிரித்தபடியே சுமதியின் கைகளில் திணிக்காத குறையாக அதை வைத்து அழுத்தினாள் மேரி. சுமதி வாங்கிக் கொண் டாள். மறுக்கும் சக்தியும், தடுக்கும் சக்தியும் இப்போது அவளை அறவே கைவிட்டிருந்தன. எதையும் அவளால் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. எதற்கும் அவளால் முடியாது என்ற மறுக்க முடியவில்லை. அவள் மேரியின் கைப்பாவை போலாகி இருந்தாள். அவள் கொடுத்த பணத்தை எங்கே வைத்துக் கொள்வதென்று சுமதி திணறியபோது மேரியே அதை மறுபடி வாங்கி, “நமக்கு இதுதான் பத்திரமான இடம்டி!” என்று அதைச் சுமதியின் பிளவுசுக்குள் திணித்து விட்டாள். அதையும் சுமதியால் தடுக்க முடியவில்லை. தடுக்க முடியாததோடு அதற்கு இசைகிறேன் என்பதன் அடையாளமாக, “ஏதோ அவுட்டோர் ஷாட்டிங்ணியே. நாளை எத்தனை மணிக்கு, எங்கே வரணும்? இப்பவே அதைச் சொல்லிடு” என்று மேரியை அவளே வினாவவும் செய்தாள்.

"எங்கேயும் வரவேண்டாம். நீ பாட்டுக்கு ஹாஸ்டல் காம்பவுண்டுக்கு வெளியிலே வந்து பஸ் ஸ்டாப்பிலேயோ டாக்ஸி ஸ்டாண்டிலேயோ காலை எட்டரை மணிக்கு நில்லு. இதே வண்டி வந்து உன்னைப் பிக்-அப் பண்ணிக்கும்” என்றாள் மேரி.

“எட்டரை மணிக்கு அவ்வளவு காலங்கார்த்தாலே எனக்கு வார்டனிட்டப் பெர்மிஷன் கிடைக்கிறது கஷ்டமாச்சேடி. ?”

“நாளைக்கு ஒரு நாள் மட்டும் எப்படியாவது "மானேஜ் பண்ணிக்கோ சுமதி! அதுக்கப்புறம் பெர்ம னென்ட்டா உனக்கு நான் ஒரு வழி சொல்லித் தரேன். யாரிட்டவும் பெர்மிஷனே இல்லாம நீ வெளியே வரலாம்.”

அது என்ன வழி என்று அறிந்து கொள்ளச் சுமதிக்கு ஆவலாக இருந்தும் அப்போது மேரியை உடனே அதைச் சொல்லும்படி அவள் வற்புறுத்தவில்லை.

சுமதியின் அதிர்ஷ்டம் அவள் ஹாஸ்டல் வாசல் பஸ் ஸ்டாப் அருகே காரிலிருந்து இறங்கவும், விமலா யூனிவர்ஸிடி லைப்ரரியிலிருந்து பஸ்சில் திரும்பி வந்து இறங்கவும் சரியாக இருந்தது. இருவரும் சேர்ந்தே ஹாஸ்டலுக்குள் சென்றார்கள். அறைக்குள் சென்றதும் லாரி மாற்றும்போது பிளவுவிலிருந்து முந்நூறு ரூபாயை வெளியே எடுத்தாள் சுமதி. விமலா பார்த்திருக்கமாட் டாள் என்ற நினைப்பில் ரூபாய் நோட்டுக்களை எடுத்த சுமதி பக்கத்திலேயே நின்று தன்னைப் போல் லாரி மாற்றிக் கொண்டிருந்த விமலா அதை பார்த்ததும் சுமதி அர்த்தமின்றிச் சிரித்துக் கொண்டாள். மழுப்பலான ஒரு சிரிப்பாயிருந்தது அது.

“என்னடி சுமதி! போன இடத்திலே இத்தனை பெரிய வரும்படியா? விமலா சாதாரணமாகத்தான் இப்படிக் கேட்டாள். குத்தலாகவோ வேறு உள்ளர்த்தம் வைத்தோ அவள் சுமதியை இப்படிக் கேட்கவில்லை. முதல் நாள்சுடப் பணப் பற்றாக்குறை பற்றி வருத்தப் பட்டுக் கொண்ட சுமதியிடம் திடீரென்று மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களைப் பார்த்தவுடன் சுபாவமாகக் ⁠கேட்பதற்கு வாயில் வந்த வார்த்தைகளைச் சிறிதும் தணிக்கை செய்து பேசத் தோன்றாமல் அப்படியே மனதில் தோன்றியபடி கேட்டிருந்தாள் விமலா,

சுமதிக்கு அந்தக் கேள்வி என்னவோ போலிருந்தது. இத்தனை பெரிய வரும்படியா? என்ற அவள் வார்த்தை கள் மிகவும் குத்தலாக அவளுக்குத் தோன்றின. ஆனால் அதற்காக விமலாவிடம் அவள் எரிந்து விழவில்லை. பொறுத்துக் கொண்டாள்.

மறுநாள் காலையிலும் விமலாவிடம் சொல்லி அவ ளையும் அழைத்துக் கொண்டு வெளியே போவது போல் தான் வெளியேற முடிந்திருந்தது. முதல்நாள் சொல்லியி ருந்தபடி சரியாக எட்டேகால் மணிக்கு ஹாஸ்டல் வாசலில் இருந்த பஸ் ஸ்டாண்டிற்குக் கார் வந்துவிட்டது. கல்லூரிக்கு அன்று விடுமுறை நாள்தான். மாலையில் நேரங்கழித்து திரும்பினால்கூடப் பரவாயில்லை. ஆனால் சொல்லியிருந்தபடி காரில் மேரி வரவில்லை. நேரேயே தயாரிப்பாளரோடு போய் விட்டதாக டிரைவர் கூறினான். -

பூந்தமல்லி ஹைரோடில் ஒரு பெரிய ஹோட்டல் வாசலில் டிரைவர் காரை நிறுத்தி, "கொஞ்சம் இருங் கம்மா! அவுட்டோருக்கான டிஃபன், காபி எல்லாத் துக்கும் இங்கேதான் சொல்லியிருக்காங்க. டிக்கியிலே ஏத்திக்கிட்டு வந்துடறேன்” என்றான்.

சுமதி காரிலேயே உட்கார்ந்திருந்தாள். அரை மணி தாமதாமாயிற்று. எல்லாம் ஏற்றி முடிந்ததும் கார் மறுபடி புறப்பட்டது.

படப்பிடிப்பிற்குக் குறிப்பிட்டிருந்த லொகேஷனுக் குப் போனதும் முதலிலேயே போய்த் தயாரிப்பாளர், மேரி மற்ற நடிகர் நடிகைகள், எல்லாரும் அங்கே தயாராகக் காத்திருப்பதைப் பார்த்தாள் சுமதி.

"ரொம்பப் பெரிய வி.ஐ.பி. நட்சத்திரம்தான் கால் ஷட்லே கடைசியா வந்து சேரும். இன்னிக்கு நம்ம சுமதி தான் லேட்டா வந்திருக்கு. அதனாலே அவதான் வி.ஐ.பி” என்று தமாஷ் பண்ணினார் தயாரிப்பாளர்.

"நீங்க சொன்னாலும் சொல்லலேன்னாலும் அவ நிச்சயமா ஒரு நாள் வி.ஐ.பி. ஆகப்போறவதான் புரொட் யூலர் சார்” என்று மேரி சேர்ந்து கொண்டு சொன்னாள். இன்னும் சாதாரணமாக வருகிற வெயில் வெளிச்சம் கூட வரவில்லை. வானம் மந்தாரம் போட்டு மூடியி ருந்தது. அந்த இடம் வேறு மரக்கூட்டங்கள் அடர்ந்த தோட்டம் போல இருந்தது. "முதல்லே ஜமுக்காளத்தை விரிங்க. டிஃபன் சூடு ஆறிப்போறதுக்கு முன்னாடி சாப்பிட்டுடலாம். மத்ததை அப்புறம் கவனிக்கலாம்” என்று தயாரிப்பாளர் உத்தரவு போட்டார்.

புல் தரையில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டது. முக்கிய மானவர்கள் எல்லாம் வந்து உட்கார்ந்தார்கள். எங்கேயோ பராக்குப் பார்த்தாற்போல் நின்ற சுமதியைப் போய்க் கை யைப் பிடித்து இழுத்து வந்து தயாரிப்பாளருக்கும் தனக்கும் நடுவே உட்கார்த்திக் கொண்டாள் மேரி.

"டேய்! நம்ம எதிர்கால ஹீரோயினுக்குக் கூட ஒரு வடை வை” என்பதுபோல் இடையிடையே சுமதியை விசேஷமாகக் கவனித்து உபசரித்துக் கொண்டிருந்தார் தயாரிப்பாளர்.

ஜமுக்காளத்தில் உட்கார்ந்திருந்தவர்களிடையே பஞ்சவர்ணக்கிளி போல் தனித்துத் தெரிந்தாள் சுமதி. ஒரே அரட்டையும் சிரிப்புமாக இருந்தது. தொழிலாளிகளும் உப நடிகர், நடிகைகளும் சற்று விலகி ஒரு மரத் தடியில் தனியே சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தார் கள். அவர்களில் சில பெண்கள் அடிக்கடி தன் பக்கம் கையை நீட்டிப் பேசும் போதெல்லாம் சுமதிக்கு என்னவோ ஓர் உணர்வு மனத்தில் குறுகுறுத்தது. தயாரிப் பாளர் அத்தனை பெரிய கூட்டத்தில் தன்னை மட்டும் விசேஷமாகக் கவனித்தது பலருக்கும் பிடிக்கவில்லை என்று சுமதிக்கே கூட ஜாடைமாடையாகத் தெரிந்தது. வந்த காரியமாகிய அவுட்டோர் ஷல்ட்டிங் பற்றிப் பதி னொரு மணிவரை யாருமே கவலைப்படவில்லை. டிபன் சாப்பிட்டு முடிந்ததும் பத்துப் பன்னிரண்டு நாலைந்து ரக சிகரெட் பெட்டிகள், வெற்றிலை - அசோகா, சுண் ணாம்பு என்று அடுத்த அயிட்டங்கள் பிரித்து வைக்கப் பட்டன.

"மேரி! இந்தா நீயும் பிடி" என்ற தயாரிப்பாளர் உற்சாகமாகக் கூறியபடி மேரியிடம் சிகரெட்டையும் தீப்பெட்டியையும் நீட்டியபோது மேரி கூட ஒரு சிக ரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு புகையைக் இழுத்து ஊதி விட்டாள். தயாரிப்பாளர் வேடிக்கையாக ஒரு தடவை மேரியின் முகத்துக்குக் குறிவைத்துப் புகை யை ஊதினார். அடுத்த தடவை சுமதியின் முகத்துக்குக் குறிவைத்துப் புகையை ஊதினார். சுமதி சிரித்தாள்.

'இப்போ உனக்கு என்ன வேஷம்னாப் பிரபல குந்தளகுமாரி ஏரியிலே விழறதா ஒரு காட்சி. அவளுக்கு உடம்புக்கு சுகமில்லை. அதுனாலே லாங்ஷாட்டிலே உனக்கு "டுப்” போட்டு அவ காட்சியை எடுத்துடலாம்னு இருக்கேன்.”

சுமதிக்கு ஒன்றும் புரியவில்லை. டுப் போட்டு எடுக் கிறது என்றால் என்ன என்பதைத் தயாரிப்பாளரும், மேரி யும் அவளுக்கு விளக்கிச் சொல்லத் தொடங்கினார்கள். சுமதிக்கும் மெல்ல மெல்ல அது புரியத் தொடங்கியது. பன்னிரண்டு மணியளவில் வெயிலும் அங்கே ஓரளவு வந்திருந்தது.
-----------
continued in part 2 (chapters 13-25)
-----------------

This file was last updated on 19 Jan 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)