pm logo

தீபம் நா. பார்த்தசாரதி எழுதிய
அனிச்ச மலர் (நாவல்),
பாகம் 2 (அத்தியாயம் 13-25)


anicca malar
by tIpam nA. pArtacArati, part 2 (chapters 13-25)
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

அனிச்ச மலர் (சமூக நாவல்)
பாகம் 2 (அத்தியாயம் 13-25)
தீபம் நா. பார்த்தசாரதி


Source:
அனிச்ச மலர்
நா. பார்த்தசாரதி
தமிழ்ப் புத்தகாலயம்
பாண்டி பஜார் சென்னை-600 017
முதற் பதிப்பு : டிசம்பர், 1975, நான்காம் பதிப்பு : ஜூலை, 2000
விலை : ரூ. 50.00
---------

அத்தியாயம் 13

தயாரிப்பாளர் கன்னையாவும் மேரியும்தான், காட்சி எப்படிப் படமாக்கப்பெற இருக்கிறது என்பதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார்களே ஒழிய டைரக்டர் உதவி டைரக்டர் என்ற பெயரில் வந்திருந்த இருவரும் வாயைத் திறக்கவே இல்லை. தயாரிப்பாளர் பேசிக் கொண்டிருக் கும்போது குறுக்கே வாயைத் திறந்தால் உத்தியோகம் போய்விடும் என்கிற பயத்திலோ என்னவோ அவர்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்துவிட்டார்கள்.

தன்னை அந்த வெளிப்புறக் காட்சிப் படிப்பிடிப்பிற்கு வரச் சொல்லிவிட்டதற்காக ஏதோ பேருக்கு நடிக்கச் சொல்வதாகச் சுமதிக்குத் தோன்றியதே ஒழிய அது அவ்வளவு முக்கியமானதாகப் படவில்லை. வந்திருந்த யூனிட் முழுவதும் ஏதோ பிக்னிக் புறப்பட்டு வந்தமாதிரி நடந்து கொண்டார்களே ஒழியப் படம் பிடிக்க வந்த மாதிரித் தெரியவில்லை. பணம் பாழாயிற்று. ഖ്ങ്ങ് அரட்டையும் வம்புமாக நேரம் கழிந்து கொண்டிருந்தது.

"இந்தாப்பா!பகல் சாப்பாட்டு மெனுவிலே மொறு மொறுன்னு ஒரு மசால் வடையையும் சேர்த்துக்கோ, மறந்துடாதே’ என்று தயாரிப்பாளர் மிகவும் அக்கறை பாகச் சொன்னார்.

"இந்த அவுட்டோர் உனக்குன்னே ஏற்பாடு பண்ணி னதுடி சுமதி” என்று சுமதியின் காதருகே சொன்னாள் மேரி. -

"தெண்டச் செலவு. முகம் கூடத் தெரிய வழியில் லாத ஒரு டுப் காட்சிக்காக இவ்வளவு செலவழிக் கணுமா மேரி?” என்று சுமதி வெடுக்கென்று கேட்டுவிட்டாள்.

“உன்னைப் போல ஒரு பெண்ணுக்காக நம்ம புரொட்யூஸர் எவ்வளவு வேணும்னாச் செலவழிப்பார் சுமதி

மேரி எதற்காக இப்படிச் சொல்கிறாள் என்று சுமதி யோசிக்கத் தொடங்கினாள். அவள் சொன்ன வாக்கியம் சரியாகச் சுருதி சேரவில்லை. அதில் சுருதி பேதம் இருந்தது. அதற்கேற்றாற் போலத் தயாரிப்பாளரும் குட்டி போட்ட பூனையைப் போலச் சுமதியையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தார்.

“சுமதிக்கு எது வேணும்னாலும் கூச்சப்படாம எங்கிட்டக் கேட்கணும். பகல் சாப்பாட்டோட ஏதாச்சும் ஒரு ஸ்வீட்டுக்குச் சொல்லட்டுமா? வேறே ஏதாவது ஜூஸ் கீஸ் வேணுமா?" என்றெல்லாம் அருகே வந்து மிகவும் கனிவாக விசாரித்துக் கொண்டிருந்தார்.

பகல் ஒன்றரை மணிக்குள் சுமதி தண்ணிரில் குதித்துக் கரையில் ஒதுங்குகிற காட்சியை எடுத்துவிட முயன்றார்கள் அவர்கள். இருமுறை முயன்றும் ஷாட் ஓ.கே. ஆகவில்லை. காரணம், தண்ணிரில் குதிப்பதில் சுமதிக்கு இருந்த பயம்தான். என்னதான் லாங்-ஷாட்டாக எடுத்தாலும் கதைக்கு ஏற்ப வாழ்க்கையை வெறுத்தவள் ஒருத்தி தண்ணிரில் குதிப்பது போலக் குதிக்காமல் தயங் கித் தயங்கிப் பயந்து கொண்டே குதித்தாள் அவள். இந்த மாதிரிக் குதித்ததனால் அவளுக்கே முழங்காலில் இலே சாகக் காயம்கூடப் பட்டுவிட்டது. முதல் ஷாட்டின் போது அவள் பயப்பட்டாள் என்பதற்காக இரண்டாவது 'ஷாட்'டின்போது தண்ணிரில் ஆழம் குறைவான இடமாகப் பார்த்துக் குதிக்கச் சொன்னார்கள். முதல் ஷாட்டில் அவள் பயந்து குதிக்காமலே இருந்துவிட்டாள். இரண்டாவது ஷாட்டில் குதித்துக் காயம் பட்டுவிட்டது. முதலில் குதிப்பதையும் பின்பு கரையில் ஒதுங்கி எழுந்தி ருப்பதையும், தந்திரமாக எடுத்துவிட முயன்றார்கள்; முடியவில்லை.

அதற்குள்ளேயே பகல் உணவு நேரம் வந்துவிட்டது. நடிக்க வேண்டும்; நடிக்க வேண்டும் என்று ஆசை ஒரு பக்கம் இருந்தாலும் நடிப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்று சுமதிக்கு அப்போதுதான் புரிந்தது. நடிப் பதற்கு மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் வாட்ட சாட்டமாகவும் இருந்தால் மட்டும் போதுமென்று அவள் இதுவரை நினைத்திருந்த நினைப்பு மேல்ல மெல்ல மனத்திற்குள்ளேயே கரைந்து அமுங்கிப்போய்விட்டது. 'காமிராவுக்கும், சுற்றி நிற்பவர்களுக்கும், பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் பயப்படாமல் அநாயாசமாக ஒரு சின்னக் காட்சியில் லாங்-ஷாட்டில் நடிப்பதுகூட இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே, என்று அவள் இப்போது உணர்ந்தாள்.

"பரவாயில்லை! வாம்மா. சாப்பாட்டுக்கு அப்புறம் பார்க்கலாம். முடிஞ்சா உனக்கே இன்னொரு 'டுப் போட்டுக்கலாம், என்று அயராமல் சொல்லியபடி அருகே வந்து சுமதியைத் தோளில் தட்டிக் கொடுத்தார் தயாரிப்பாளர். ஒரு சின்ன 'டுப் காட்சியைக்கூட ஒரே ஷாட்டில் கச்சிதமாகச் செய்து கொடுக்க முடிய வில்லையே என்று கூச்சமாகவும், வெட்கமாகவும் இருந்தது சுமதிக்கு.

"இந்தாப்பா ! உங்களைத் தானே? இங்கே அக்கம் பக்கத்துக் கிராமத்திலே யாராவது மீனவர் கம்யூனிட்டிப் பொண்ணுங்க இருந்தால் கூட்டிக்கிட்டு வாங்க. தண்ணிரிலே குதிக்கிற காட்சிக்கு அவங்களிலே யாரா வது ஒருத்தரைப் பயன்படுத்திக்கிட்டு அப்புறம் கரை யிலே ஒதுங்கறப்போ முதுகு மட்டும் தெரியறமாதிரி சுமதியை ஒரு ஷாட் எடுத்துக்கலாம்” என்ற தயாரிப் பாளரே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு யோசனை கூறினார்.

'பெரிய நடிகருக்கோ, நடிகைக்கோ தான் 'டுப்போடுவாங்க. ஆனா நம்ம புரொட்யூஸர் சார் குந்தளகுமாரிக்கு உன்னை 'டுப்' போட்டுட்டு உனக்கே இன்னொரு டுப் போடப்போறாரு உம்மேலே உள்ள பிரியத்திலேதான் இதெல்லாம் செய்யறாரு” என்றாள் மேரி.

தண்ணிரில் பயப்படாமல் சகஜமாகக் குதிக்கத்தக்கக் கூடிய ஒரு துணிச்சல்காரியான மீனவப் பெண்ணைத் தேடி ஆட்கள் பறந்தார்கள். அரைமணி நேரத்தில் அப் படிப் பட்ட பெண்மணி ஒருத்தியையும் கண்டுபிடித்து அழைத்து வந்துவிட்டார்கள். ஒரு மேட்டிலிருந்து அவளைத் தண்ணிரில் குதிக்கச் சொல்லி ‘லாங் ஷாட்’டில் எடுத்துக் கொண்டார்கள். கச்சிதமாக ஒரே ஷாட்டில் அது முடிந்து விட்டது.

தயாரிப்பாளர் அந்த மீனவப் பெண்ணுக்கு இருபத்தைந்து ரூபாய் கொடுத்தார்.

"என்னங்க. இது? அம்பது ரூபாயாச்சும் கொடுங்க” என்றாள் அந்த மீனவப் பெண்.

"சினிமாவிலே உன் மூஞ்சியைக் காமிக்கிறதுக்காக நீ எனக்குக் குடுக்கணும் அம்பது ரூபா" என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் தயாரிப்பாளர். தண்ணிரில் குதிக்கிற காட்சியை எடுத்து முடித்ததும் கரையருகே கதாநாயகி ஒதுக்கப்பட்டுத் தட்டுத் தடுமாறி எழுந்தி ருப்பது போல ஒரு காட்சி எடுக்கப்படவேண்டும். அந்தக் காட்சிக்காகச் சுமதி திறந்த முதுகுடன் தண்ணிரருகே குப்புறக் கிடக்க வேண்டும். திறந்த முதுகுடன் கிடப்பது பற்றி ஒரு சர்ச்சை மூண்டது. -

"இந்த இடத்தில் திறந்த முதுகு அநாவசியம்” என்றார் ஒருவர்.

'சென் ஸாரில் வெட்டிடு வாங்க” என்றார் மற்றொருவர்.

"அதெல்லாம் வெட்டாமே நான் பார்த்துக்கிறேன். வேணும்னா வெறும் முதுகு வேண்டாம், 'ப்ராவோட முதுகுப் பக்க வார் மட்டும் இருக்கட்டுமே” என்றார் தயாரிப்பாளர்.

அதற்குச் சம்மதமா இல்லையா என்று சுமதியை யாருமே கேட்கவில்லை. சுமதிக்கும் அதற்கு ஆட்சேபணை இல்லைதான். ஆனால் ஒரு சிறிய தயக்கம் இருந்தது. படம் வெளிவந்த பின் அதில் தான் இந்தக் கோலத்தில் தோன்று வதை யாராவது பார்த்து மதுரையில் அம்மாவிடம் போய் இதுபற்றிப் ப்ரஸ்தாபித்தால் வீண் சண்டை வருமே என்றுதான் தயங்கினாள். தன் சந்தேகத்தை மெதுவாக மேரியின் காதருகே நெருங்கிச் சொன்னாள் அவள்.

“உன் சந்தேகம் அனாவசியமானது டீ. சுமதி ! படத்திலே உன் முகமே வராது. முதுகும் ‘ப்ரா’பட்டையும் தான் தெரியும்” என்று மேரி அவளுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைத்தாள்.

தண்ணிரில் நனைந்த புடவையும் வெயில் வெளிச் சத்தில் தங்கப்பாளமாக மின்னும் அழகிய சதைச் செழிப் புள்ள முதுகுமாகச் சுமதி தண்ணிர் கரையருகே குப்புறச் சாய்ந்தாற் போலப் படுத்துக் கொண்டாள். காமிரா ஆட்கள் எல்லாம் ரெடியாயிருந்தனர்.

"இந்த ஒரு ஸீனாலேயே படம் பணத்தைக் குவிக் கணும். முதுகு மட்டுமில்லே; அதுக்குக் கீழேயும் கொஞ் சம் புரொஜெக்ட்'டிவ்வா எடுங்க” என்ற தயாரிப்பாளர் காமிராமேனிடம் சொல்லிக் கொண்டிருந்தது சுமதிக்குக் கேட்காமல் போகவில்லை. நன்றாகக் காதில் விழுந்தது.

'டுப் போட்டதே நல்லதாப் போச்சு. குந்தளகுமாரி யோட முதுகு இப்படிப் பசு வெண்ணெய் மாதிரித் தளதளன்னு இருக்காது. மூங்கில் மொறம் கணக்கா இருக்கும். நெல்லுக்கூடக் காயப் போடலாம். அத்தனை பெரிசு. இவ சும்மா லட்டு மாதிரி இருக்கா.” இதுவும் தயாரிப்பாளர்தான். அடிக்கடி சுமதியை 'லட்டு என்றார் அவர். -

மறுபடியும் யாரோ குறுக்கிட்டார்கள். "சார்! தண் ணரீரிலே ஹீரோயின் குதிச்சுக் கரையிலே ஒதுங்கறத்துக் குள்ளே இப்படிச் சேலை கீலை எல்லாம் ஒதுங்கி ரவிக் கை காணாமப் போயி வெறும் முதுகு மட்டும் 'ப்ரா' பட்டையோட தெரியறாப்பில ஆயிடுச்சிங்கறத நம்பவே முடியாது சார். கொஞ்சம் யோசனைப் பண்ணிச் செய்யுங்க”

“அட, இவன் யார்ராவன்? படம் பார்க்க வர்ரவன் கண்ணுக்குக் குளுமையா ரெண்டு காட்சியைச் சேர்க் கலாம்னா என்னென்னமோ தர்க்கமெல்லாம் பண்ணிக் கிட்டிருக்கான். நீ சும்மா இரு அய்யா, டைரக்டர் சார்! நீங்க ஷாட்டை ஓ.கே. பண்ணுங்க” என்றார் தயாரிப்பாளர்.

"இல்லீங்க! இது ஒரு சோகமான கட்டம். இதுலே போயி செக்ஸ்'ஸை நுழைச்சோம்னாக் கதையிலே சுருதி பேதம் தட்டும்” ⁠"தட்டட்டும், பரவாயில்லே. நீ உன் வேலையை பார்த்துக்கிட்டுப் போ". காட்சி தயாரிப்பளார் விரும்பிய படியே கதாநாயகி குப்புறச் சாய்ந்து படுத்தநிலையில் முதுகும், இடுப்புக்கு அப்பாலும் தூக்கலாகத் தெரிகிறாற் போலவே எடுத்து முடிக்கப்பட்டது.

"பப்ளிஸிட்டிக்காரன் கிட்டச் சொல்லிப் போட ணும். இந்த ஸீன்தான் முதல் வால்போஸ்டர்.குந்தள குமாரியோட மூஞ்சியை காமிக்கறதைவிட நம்ம சுமதி யோட முதுகைக் காமிக்கிறத்துக்கு எவ்வளவோ பப்ளிஸிட்டி வேல்யூ அதிகமாக இருக்கும்னேன்” என்று தமக்குத்தாமே சொல்லி மெச்சிக் கொண்டார் தயாரிப்பாளர்.

படப்பிடிப்பு முடிந்த பின்னும் நீண்ட நேரம் வரை தான் அதற்கு எப்படிச் சம்மதித்தோம் என்று சுமதிக்கு தன்னையே நம்ப முடியாமல் இருந்தது. படத்தில் முகம் தெரியாது என்பதால் ஆறுதலாகவும் இருந்தது . தயாரிப்பாளர் கொடுத்ததாக மேலும் இருநூறு ரூபாயைச் சுமதியிடம் கொடுத்தாள் மேரி.

"இந்தப் படத்தை நல்லா வந்திருக்கா இல்லியான்னு எப்போ நான் பார்க்கலாம்?” என்று சுமதி மேரியை கேட்டாள்.

“அடுத்த வாரக் கடைசியிலே தரணி ஸ்டுடியோ ரிக்கார்டிங் தியேட்டரில் ரஷ் போட்டுக் காட்டுவாங்க.அப்போ உன்னையும் கூப்பிடுவாங்க, வந்து பாரு என்றாள் மேரி.

அவுட்டோர் ஷுட்டிங் முடிந்த தினத்தன்று மாலை கல்லூரி விடுதி வாயில் வரை தயாரிப்பாளரின் காரிலேயே சுமதியைக் கொண்டு வந்து டிராப் பண்ணினாள் மேரி. சுமதிக்கு ஒரு சந்தேகமும் பயமும் இருந்தது. அதனால்தான் அவள் அந்தப் படத்தில் ரஷ்களை பார்க்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தாள். தான் மாட்டிக் கொண்டு விட்டோமோ என்ற பதற்றம் சுமதிக்கு உள்ளுற இருந்தது; மிகவும் தந்திரமாகவும் ⁠வஞ்சகமாகவும் தயாரிப்பாளரும் காமிராமேனும் தன்னை ஏமாற்றிவிட்டார்களோ என்ற அவள் சந்தேகப் பட்டாள். அந்த வாரக் கடைசியில் மேரியோடு தரணி ஸ்டுடியோ ரிக்கார்டிங் தியேட்டரில் போய் ரஷ் பார்த்தபோது சுமதிக்கு அவளுடைய முந்திய சந்தேகங்கள் உறுதிப்பட்டன. அவள் பதறி மனம் குழம்பித் தவித்தாள்.
------------

அத்தியாயம் 14

உறுதிகள் மெலிந்து சந்தர்ப்பங்களுக்கு ஒத்துப் போவது என்னும் பலவீனமும், தளர்ச்சியும் தன்னிடம் எப்போது ஆரம்பமாயின என்பது சுமதிக்கே புரியாததாக இருந்தது. சினிமா ஆசை என்ற ஒரே கோணத்தில் உயரப் பறப்பதற்காக வேறு பல உயரங்களிலிருந்து தான் கீழே விழுந்து விட்டோமே என்பதாக உணர்ந்தாள் அவள். மானக்கேடான விஷயங்களைப் பொறுத்து ஏற்பட வேண்டிய கூச்சமோ, ரோஷமோ, ஆத்திரமோ இப்போ தெல்லாம் தன்னிடம் ஏற்படுவதே இல்லை என்பது அவளுக்கே புரிந்துதான் இருந்தது. மேரி படிப்படியாக தன்னை ஜெயித்து விட்டாள் என்பதைச் சுமதி உணர்ந்தாள்.

வெளிப்புறக் காட்சிப் படப்பிடிப்புக்குப் போய் விட்டு வந்த மறுநாள் சுமதியிடம் ரொக்கமாக ஐநூறு ரூபாய் இருந்தது. பகல் இடைவேளையின் போது மேரியை வற்புறுத்தித் தன் அறைக்கு அழைத்து வந்து அவளிடம் கைமாற்றாக வாங்கியிருந்த தொகையைத் திருப்பிக் கொடுத்தாள் சுமதி. இப்ப ஒண்ணும் அவசரல் லேடீ...! ஸ்டார் ஆகியிருக்கே. உனக்கு நிறையச் செலவுகள் இருக்கும், வச்சுக்கோ” என்று அதை வாங்கிக் கொள்ளாமலே மேரி சுமதியிடம் மறுபடி திருப்பிக் கொடுத்துவிட்டாள்.

அதற்குப்பின் தரணி ஸ்டுடியோவில் ரஷ்களை போட்டுப் பார்த்த தினத்தன்று சுமதி மேரியோடுதான் அங்கே போயிருந்தாள். அன்றும் எப்படியாவது மேரியிடம் கடன் பட்டதை அடைத்துவிட முயன்றாள் சுமதி ,

"உனக்கு வேறு நினைவே இருக்காதா சுமதி? எப்பப் பார்த்தாலும் கடன் கடன்னே சும்மா அனத்திக்கிட்டி ருக்கே. ஃபர்கெட் இட் அட் ஒன்ஸ். நான் உனக்கு கடனே கொடுக்கலேன்னு வச்சுக்க, கிஃப்டாத்தான் கொடுத்திருக்கேன்’ என்று அப்போதும் சுமதியின் வாயை அடைத்துவிட்டாள் மேரி.

வெளிப்புற காட்சியில் எடுத்த ரஷ்களைப் போட்டுப் பார்த்தபோது, முகமே தெரியாமல் முதுகு மட்டும் தெரியும் படியாக எடுத்தது தவிர, அதற்கு முன்னும் பின்னுமாகச் சில முக்கால் நிர்வாணப் படங்களை முகமும் தெரியும் படியாகவே அந்தக் காமிராமேன் தந்திரமாகவும் சாமர்த்தியமாகவும் எடுத்திருப்பது தெரிந்தது. காமிராமேன் தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் எடுத்ததா, அல்லது தயாரிப்பாளரே சொல்லி எடுக்கச் செய்ததா என்பது தெரியவில்லை. எப்படி இருந்தாலும் சுமதி அந்தப் படங்களைப் பற்றி மிகவும் பயந்தாள். எவ்வாறாவது அவர்களிடம் சொல்லி அந்த நெகடிவ்களை அழித்துவிடச் செய்ய வேண்டும் என்ற நினைத்தாள்

சுமதி தன் சந்தேகத்தையும், பயத்தையும் மேரியிடம் தெரிவித்தபோது "அப்படியெல்லாம் தப்பாக எதுவும் செய்து விடமாட்டார்கள். பயப்படாதே’ என்றாள் அவள். மேரியிடம் அவள் கடனைக் கொடுத்துவிட்டுக் கணக்குத் தீர்த்து முடித்துவிடவேண்டும் என்றுதான் சுமதி வைராக்கியமாக இருந்தாள். ஆனால் அந்த வைராக்கியம் எடுபடவில்லை. மேரியை நேரில் பார்த்ததும் அவளுடைய உறுதிகள் எல்லாம் கரைந்தே போய்விட்டன.

“சீக்கிரமே இன்னொரு அவுட்டோர் ஷுட்டிங்குக்காகக் காஷ்மீருக்கே உன்னைக் கூட்டிக்கிட்டுப் போகணும்னு கன்னையா சொல்றாரு. இங்கேருந்து டில்லிக்குப் ப்ளேன்ல போயி ஒருநாள் தங்கியபின் அங்கிருந்து அப்புறம் காஷ்மீருக்குப் பறக்கணும்; நானும் கூட வந்தாலும் வருவேன்.”

“ஏண்டி மேரீ! நாம ரெண்டு பேரும் காலேஜிலே படிக்கிறோம்கிறதே உனக்கு நினைவில்லையா? காஷ்மீர், கன்னியாகுமரின்னு இப்பிடியே போய்க்கிட்டிருந்தாப் படிப்பு என்னடி ஆகிறது ?”

"ஹாங்... பெரிய படிப்பு இது..? ஸ்டாராகி லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கப் போறவளுக்குப் படிப்பைப் பத்தி என்னடி கவலை? படிச்சவள்ளாம் ஸ்டாராயிட முடியுமா?” என்று மேரி அலட்சியமாகப் பதில் சொல்லி விட்டாள். சுமதியால் அப்போது அவளை மறுத்து ஒன்றும் சொல்லமுடியவில்லை. ஆனாலும் அவள் மனம் என்னவோ பதறத்தான் செய்தது.

காமிராவுக்குமுன் முகத்தைக் காட்டுகிற ஆசையும், ஸ்டாராகிற பித்துமாகச் சேர்ந்து சுமதியை அறவே படிப்பில் நாட்டமில்லாதவளாகச் செய்துவிட்டன. அந்த வார இறுதியில் அம்மா மதுரையிலிருந்து சுமதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாள். -

'என் பக்கத்திலிருந்து இங்கே உள்ளூரிலேயே படிக்க விட்டால் செல்லம் கொடுத்து நானே உன்னைக் கெட்டுப் போகச் செய்து விடுவேனோ என்று பயந்தேன். செலவானாலும் பரவாயில்லை என்று உன்னைச் சென்னைக்கு அனுப்பிய காரணமே அதுதான். இதை நீ நன்கு புரிந்து கொண்டு சிரத்தையாகப் பாடுபட்டுப் படிக்க வேண்டும். அடிக்கடி சினிமாவுக்குப் போகாதே. சினிமாப் பத்திரிகைகளைக் கூடப் படிக்காதே. கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்து. முதல் வகுப்பில் தேர்ச்சி பெறப் பார்?' என்று மாற்றி மாற்றி அறிவுரைகள் அந்தக் கடிதத்தில் இடம் பெற்றிருந்தன. புதிதாக ஒன்றுமில்லை. வழக்கமான உபதேசம்தான்.

ஆனால் அடுத்த வார இறுதியிலேயே சினிமாத் தயாரிப்பாளர் கன்னையா "வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிக்காக காஷ்மீர் போகலாமா?” என்று சுமதியைக் கேட்டபோது அவளால் மாட்டேன் என்ற சொல்ல முடியவில்லை. மேரிதான் வந்து கூப்பிட்டாள். சுமதிக்கு முழுச் சம்மதம் என்றாலும்,

"காலேஜிலே என்னடி சாக்குச் சொல்லி லீவு கேட்கிறது?" என்று மேரியிடம் பதிலுக்கு வினவினாள் அவள்.

"இங்கே உள்ளூர்லே யாருக்காவது உடம்பு சுகமில்லேன்னு சாக்குப் போக்குச் சொன்னால் பத்து நாள் லீவு வாங்க முடியாது. துணிஞ்சு மதுரையிலே உங்கம்மாவுக்கே உடம்பு செளகரியமில்லேன்னு ஒரு லீவு லெட்டர் எழுதி நீட்டு. வார்டனோ, பிரின்சிபால் அம்மாளோ தட்டிச் சொல்ல முடியாது” என்று மேரியே ஒரு யோசனை சொல்லிக் கொடுத்தாள்.

மேரி சொல்லி கொடுத்தபடியே லீவு லெட்டர் எழுதி லீவும் கொடுத்துவிட்டார்கள். ஆனால் மாலதிசந்திரசேகரன் சுமதியைக் கூப்பிட்டு எச்சரித்தாள்;

"சுமதீ! நீ எப்போ தேடினாலும் ரூமிலேயே இருக்கிறதில்லே. சதா எங்கேயாவது சுத்திக்கிட்டிருக்கே படிப்பிலே நாட்டம் இருக்கிறதாவே தெரியலே. பத்து நாள் லீவு குடுத்திருக்கோம்கிறதுக்காகப் பத்து நாளுமே வராமல் இருக்கணும்னு அவசியம் இல்லே. அம்மாவுக்கு உடம்பு சரியானதும் உடனே புறப்பட்டு வந்துடணும் நீ, வேணும்னா நான்கூட, உங்கம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதறேன்.”

”நீங்க ஒண்ணும் எழுத வேண்டாம் ! நானே அம்மாவுக்கு உடம்பு சரியானதும் அதிக நாள் தங்காமப் புறப்பட்டு வந்துடறேன்” என்று வார்டனிடம் உறுதி சொன்னாள் சுமதி. ⁠காஷ்மீரில் எடுக்கப் போகிற படப்பிடிப்பில் தனக்கு என்ன வேலை இருக்கிறது என்ற தெரிந்து கொள்வதற்காகச் சுமதி மேரியை ஆனமட்டும் கேட்டுப் பார்த்தாள்.

“வேலை எல்லாம் அங்கே புறப்பட்டுப் போனால் தானே வரும். ஒரு யூனிட்டா எல்லாரும் புறப்பட்டுப் போறாங்க - கன்னையா நம்மையும் கூப்பிடறாரு. அலுங்காம ப்ளேன்ல போகப்போறோம்” என்று பதில் சொல்லி பூசி மெழுகிவிட்டாள் மேரி.

அம்மாவுக்கு உடல் நலமில்லை என்று பொய் சொல்லிவிட்டுக் காஷ்மீர் புறப்பட்டுப் போவது சுமதியின் மனத்தை உறுத்தினாலும் ஆசைதான் வென்றது. பெரிய பெரிய நடிகர்கள், நடிகைகள், டெக்னீஷியன்கள் எல்லாம் கூட வருகிறார்கள் என்பதால் அவர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை வேறு தூண்டியது. சுமதி காஷ்மீர் போவதற்கு முன் பல மாலை வேளைகளில் ’டான்ஸ்’ கிளாஸுக்கு வேறு போய் வந்தாள். அவள் நடனம் கற்கும்போது தயாரிப்பாளர் கன்னையாவே கூட இருந்து அவளை அக்கறையாகக் கவனித்துக் கொண்டார்.

"மாஸ்டர்! இவளுக்கு எல்லா டான்ஸும் கத்துக் குடுத்துடுங்க. பரத நாட்டியம், மணிபுரி, கதக், காபரே எல்லாம் தெரிஞ்சாத்தான் சினிஃபீல்டிலே உபயோகமா இருக்கும்” என்று கன்னையா டான்ஸ் மாஸ்டரிடம் சொல்லி வைத்தார்.

"கொஞ்சங்கூடக் கவலைப்படாதீங்க புரொட்யூஸர் சார். இவளுக்கு எதைக் கத்துக் குடுத்தாலும் பிரமாதமா வரும் ஜமாய்ச்சுப்பிடலாம்” என்றார் மாஸ்டர்.

காஷ்மீர் புறப்படுவதற்கு முந்தியதினம் பட்டுப் புடவைகள் செலக்க்ஷனுக்காகத் தயாரிப்பாளர் ஜவுளிக்கடைக்கு போகப் போவதாகவும், சுமதியும் வரவேண்டும் என்றும் மேரி வந்து கூப்பிட்டாள். சுமதியால் மறுக்கமுடியவில்லை. பாண்டிபஜாரில் உள்ள ஒரு பெரிய ஜவுளிக்கடையில் போய் பட்டுப்புடவை வாங்கினார்கள் அவர்கள். வேறு யாரும் வரவில்லை. மேரி, தயாரிப்பாளர் கன்னையா, சுமதி மூவரும் மட்டுமே போயிருந்தனர். சுமதிக்காக அரை டஜன் பட்டுப் புடவைகள் வேறுவேறு நிறங்களில் வேறுவேறு டிசைன்களில் எடுத்தார் தயாரிப்பாளர்.

கடையில் எல்லாம் முடிந்து வெளியே வரும்போது ஒர் அசம்பாவிதம் நடந்துவிட்டது. இவர்கள் வெளியே வருகிற நேரத்துக்கு வார்டன் மாலதி சந்திரசேகரன் புடவை வாங்குவதற்காகவோ, என்னவோ அதே கடைக்குள் நுழைந்தாள். சுமதி அவளைப் பார்த்தது போலவே அவளும் சுமதியை பார்த்துவிட்டாள். ஆனால் இருவரும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாதது மட்டுமில்லை. முகமலர்ச்சி கூடப் பரஸ்பரம் காட்டிக் கொள்ளவில்லை.

இதற்கிடையில் சில சினிமாப் பத்திரிகைகளில் அவள் பயந்தது போலவே படங்களும், செய்தியும் பிரசுரமாகிவிட்டன.

'தயாரிப்பாளர் கன்னையா கண்டுபிடித்த புதுமுகம்’ என்ற தலைப்பில் முந்திய வெளிப்புறக் காட்சியில் எடுக்கப்பட்ட ’ஸ்டில்ஸ்’ எல்லாம் மாற்றி மாற்றி ஒவ்வொரு பத்திரிகையிலும் பிரசுரமாகிவிடவே, எதையும் இரகசியமாக வைத்துக்கொள்ள முடியாது என்பது சுமதிக்குப் புரிந்துவிட்டது. அவள் பயந்த மாதிரியே அரை நிர்வாண, முக்கால் நிர்வாணப் படங்களே கூடச் சில பத்திரிகைகளில் பிரசுரமாகிவிட்டன. பத்திரிகைக்காரர்களுக்கு அவள் கல்லூரியில் படிக்கிறாள் என்பதைப்பற்றி என்ன கவலை? உடனே இல்லாவிட்டாலும் நாளடைவில் ஊரில் அம்மாவின் கவனத்திற்கும் இங்கே வார்டனின் கவனத்திற்கும் அவை தப்பமாட்டா என்பது அவளுக்குப் புரிந்தது.

காஷ்மீர் போவதற்காக டெல்லிக்கு விமானம் ஏறிய தினத்தன்று இந்தப் பயமே அவள் மனத்தில் நிறைந்திருந்தது. முதலில் வரவில்லை என்ற சொல்லிக் கொண்டிருந்த மேரியும் அவர்களோடு புறப்பட்டிருந்தாள். வரிசைக்கு மூன்று ஸீட்கள் வீதம் இருந்த ’ஜெட்’ விமானத்தில் நடுவாகச் சுமதியை உட்காரச் செய்து இருபுறங்களில் மேரியும், தயாரிப்பாளர் கன்னையாவும் அமர்ந்து கொண்டார்கள். தயாரிப்பாளரும், மேரியும் மிக உற்சாகமாக இருந்தார்கள். ஆனால் சுமதி எவ்வளவோ முயன்றும் அவளால் அவ்வளவு உற்சாகமாக இருக்க முடியவில்லை. விமானம் மேலே மேலே பறப்பதனால் ஏற்படுகிற மகிழ்ச்சி கூட அவளை மாற்றிவிட வில்லை. தான் பொய் சொல்லி வார்டனையும், அம்மாவையும் ஏமாற்றிவிட்டுப் புறப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வே சுமதிக்குக் குடைந்தது. பக்கத்தில் இருந்தவர்களோடு அவள் சகஜமாகப் பேசவும் கூட முடியவில்லை.

------------

அத்தியாயம் 15

காஷ்மீர் வந்த பின்புதான் தனக்கும், மேரிக்கும் அங்கு எந்த வேலையும் இல்லை என்பது சுமதிக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. தயாரிப்பாளர் கன்னையாவும் அவரோடு வந்திருந்த வேறு சிலரையும் 'குஷி'ப்படுத்தவே தாங்கள் அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்பது ஜாடைமாடையாகத் தெரிந்தது. ரீநகரில் ஒரு பிரபல ஹோட்டலில் மொத்தமாகப் பல அறைகள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. சென்னையிலிருந்த ஒரு டிராவல் ஏஜண்டு மூலமாக அவர்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தாங்கமுடியாத குளிர் இருந்ததனால் உல்லன் உடைகளுக்காக வேறு நிறையச் செலவழித்தார் தயாரிப்பாளர்.

ஸ்ரீநகருக்கு அருகிலிருந்த ஓர் ஏரியிலும், ஷாலிமார் கார்டன்ஸ் என்னும் மொகல் தோட்டத்திலும் படப்பிடிப்பு நடக்க இருந்தது. இந்த இரண்டு காட்சிகளுக்குமாகவே ஏராளமான தொகையைச் செலவிட்டுக் கொண்டிருந்தார் தயாரிப்பாளர். பணம் தண்ணீராகச் செலவழிந்தது என்றே சொல்லலாம். “பல படங்களிலே, லாபம் வந்த 'பிளாக்மணி' கையிலே நிறைய இருக்கு. அதை எல்லாம் இப்படி அவுட்டோர்னு காஷ்மீருக்கோ, சிம்லாவுக்கோ வந்து செலவழிக்கிறாங்க. அது புரியாமல் நீயும் நானும் வீணாக் கவலைப்பட்டுப் பிரயோசனமில்லே" என்றாள் மேரி.

ஒருநாள் மாலை ஸ்ரீநகரில் ஹோட்டல் அறையில் உட்கார்ந்து சுமதியும், மேரியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

சென்னையிலிருந்து புறப்படுவதற்குமுன் பாண்டி பஜார் பட்டு ஜவுளிக்கடையில் புடவைகள் தேர்ந்தெடுத்துவிட்டு வெளியேறியபோது தங்கள் ஹாஸ்டல் வார்டன் மாலதி சந்திரசேகரனைச் சந்திக்க நேர்ந்தது பற்றிக் கவலை தெரிவித்தாள் சுமதி.

”எனக்குப் பயமாயிருக்குடி மேரீ, ஏற்கெனவே வார்டன் என்னைப்பத்தி எங்கம்மாவுக்கு எழுதி வம்பு பண்ணியிருக்கா. இப்பவோ அம்மாவுக்கு உடம்பு சுகமில்லேன்னு பொய் சொல்லியே லீவு கேட்டிருக்கோம். வார்டன் எங்க அம்மாவுக்கே லெட்டர் கிட்டர் எழுதி வச்சு எல்லாக் குட்டும் உடைஞ்சிடப் போகுது...”

"வந்த இடத்திலே சந்தோஷமா இருக்கிறதை விட்டுட்டு இதையெல்லாம் என் நினைக்கிறடி சுமதி! மாலதி சந்திரசேகரன் பெரிய இவளோ? அவ யோக்கியதை எனக்குத் தெரியும். ஏதாவது வம்பு பண்ணினாளோ அவ வண்டவாளத்தைத் தண்டவாளம் ஏத்திப்புடுவேன். எங்கிட்டே அவ வாலாட்ட முடியாது.”

"சரி! அது போகட்டும்; எழுதிக் குடுத்த லீவு முடி யறத்துக்குள்ளேயாவது இங்கேயிருந்து ஊர் திரும்பிடுவோமோ இல்லியா? அதையாவது சொல்லுடி மேரி”-

“ஏண்டி பறக்கிறே? சொந்தத்திலே செலவழிச்சிக் கிட்டு நாம எப்பத்தான் காஷ்மீருக்கு வரப்போறோம்? ஏதோ மகராஜன் கன்னையா தயவுலே வந்திருக்கோம். கூட ரெண்டு நாள்தான் இருப்போமே?” என்றாள் மேரி. சுமதிக்கு மட்டும் பயமாகவே இருந்தது. ஊரில் என்னென்ன பேசிக் கொள்வார்களோ, என்னென்ன நடக்குமோ என்றெல்லாம் தயக்கம் இருந்தது; மனமும் குழம்பியது.

காஷ்மீர் என்ற பூலோக சுவர்க்கத்தின் அனுபவங்களும், அழகும் மனத்துக்கு மிகவும் பிடித்திருந்தாலும் நடு நடுவே வார்டனும், அம்மாவும் ஞாபகம் வந்து சுமதியைப் பயமுறுத்தினார்கள்.

காஷ்மீரச் சாலைகளில் எல்லாம் குடையை மடக்கிக் கவிழ்த்ததுபோன்ற உயரமான பச்சை மரங்களும், குங்குமப் பூ வயல்களும், ஏரிகளும், மலைச்சிகரங்களுமாக அந்தப் பிரதேசம் எழில் களஞ்சியமாக இருந்தது. ஏரிகளில் மிதக்கும் படகு வீடுகளில் ஒன்றில் தங்குவதற்குக் கன்னையா ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

"யூனிட்டிலே இருக்கிற அத்தினி பேருக்கும் படகுவீடு ஏற்பாடு பண்றதுன்னா நான் போண்டியாயிடுவேன், நீயும், நானும், மேரியும் மட்டும் ரெண்டு நாள் படகு வீட்டிலே தங்கலாம்"-என்றார் தயாரிப்பாளர். ஹோட்டலில் தங்கும் போதே ஒரு விஷயம் சுமதிக்கு புரியாத புதிராயிருந்தது. தயாரிப்பாளர் தனியாக ஒரு லக்சுரி அறையில் தங்கியிருந்தார். அதே வரிசையில் இருவர் தங்க முடிந்த ஒர் அறையில் சுமதியும், மேரியும் தங்கியிருந்தார்கள். மற்றவர்கள் வேறு வேறு அறைகளில் தங்கியிருந்தார்கள். பகலிலும் நள்ளிரவிலும் திடீரென்று மேரி சுமதியைத் தனியே விட்டு விட்டுத் தயாரிப்பாளரின் அறைக்குப் போய் விடுவாள். சில இரவுகளில் சுமதியைத் தனியே விட்டுச் சென்றவள் விடிகாலையில்தான் மறுபடி அறைக்கே திரும்பியிருக்கிறாள். அப்படி இரவுகளில் எல்லாம் பயத்தினாலும், புது ஊரில் புது இடத்தில் தனியாகவும் படுத்திருக்கிறோமே என்ற தனிமை உணர்வினாலும் உறக்கமே வராமல் சுமதி தவித்தது உண்டு. ⁠அந்த யூனிட்டைச் சேர்ந்த பலர் சுமதியையும், மேரியையும் பார்க்கும் போதெல்லாம் நமுட்டு விஷமமாகச் சிரித்துக் கொள்ளுவதும் தங்களுக்குள் 'குசுகுசு' வென்று காதைக் கடிப்பதுபோல் இரகசியம் பேசிக் கொள்ளுவதும் வழக்கமாயிருந்தன. ஆனால் பணம் வரவு செலவுக்காக உடன் வந்திருந்த 'புரொடக்க்ஷன் இன் சார்ஜ்' ஆள் மட்டும் சுமதி.மேரி விஷயத்தில் மிகவும் தாராளமாகவே நடந்து கொண்டார். அவர்கள் கேட்டது எதையும் அவர் மறுக்காமல் வாங்கிக் கொடுத்தார். அடிக்கடி அறையைத் தேடி வந்து "கூச்சப்படாமல் உங்களுக்கு எது வேணும்னாலும் எங்கிட்டச் சொல்லுங்கம்மா! உங்க ரெண்டு பேருக்கும் ஒரு குறையும் வைக்கப்பிடாதுன்னு ஐயாவே சொல்லியிருக்காரு” என்று புரொடக்க்ஷன் மானேஜர் சொல்லிக் கொண்டிருந்தான்.

ஊர் திரும்புவதற்குச் சில நாட்கள். இருக்கும்போது அழகான டீலக்ஸ் படகு வீடு ஒன்றைத் தேர்ந்தெடுத்து மேரியோடும் சுமதியோடும் அதில் தங்கினார் தயாரிப்பாளர் கன்னையா. யூனிட்டைச் சேர்ந்த மற்றவர்கள் எல்லாரும் முதலில் தங்கியிருந்த ஹோட்டலிலேயே இருந்தார்கள். ஏரி வாசம் மனோரம்யமாகத்தான் இருந்தது. மேஜை அலங்கரிப்புக்கான பூக்கள் விற்பவர்களும், பழங்கள், காய்கறிகள் விற்பவர்களும் படகுகளிலேயே ஏரியில் வந்து விற்பனை செய்தார்கள். பக்கவாட்டில் கருநீல நிறம் கப்பிய மலைமுகடுகளும், நெடிது நெடிதாக வளர்ந்த சினார் மரங்களும், கண்ணாடியைப் பதித்தாற்போன்ற நீர்ப்பரப்பும் வனப்பும் மிக்க சூழ்நிலைகளாக இருந்தன.

பொழுது போவது மட்டும் கடினமாக இருந்தது. சுடச் சுடத் தேநீர் அருந்திய வண்ணமாக இருந்தார்கள் அவர்கள். கன்னையாவும், மேரியும் வற்புறுத்தியது பொறுக்க முடியாமல் படகு வீட்டில் அவர்களோடு அமர்ந்து சீட்டாடினாள் சுமதி. சீட்டாடுவது சலித்தபின் வேறொரு திறந்த படகில் ஏரியைச் சுற்றிவரலாம் எனறாா கன்னையா. ⁠அவர்கள் படகில் ஏரியைச் சுற்றப் புறப்பட்டார்கள்.

"அழகிலும் நிறத்திலும் இந்தக் காஷ்மீரத்துப் பெண்கள் பிரமாதமாயிருக்கிறார்கள். எப்படித்தான் இவர்களுக்கு இவ்வளவு தளதளப்பு வருகிறதோ?’ என்று காஷ்மீரத்துப் பெண்களைப் பற்றி ஆரம்பித்தார் கன்னையா. உடனே மேரி குறுக்கிட்டு, " நீங்க சும்மா சொல்றீங்க. நம்ம சுமதியை விடவா அவங்க அழகாயிருக்காங்க? எங்கே? இப்படி ஒரு தடவை இவளைத் திரும்பிப் பார்த்தப்புறம் அபிப்பிராயம் சொல்லுங்க பார்க்கலாம்?" என்றாள்.

கன்னையா சுமதியை ஏறிட்டுப் பார்த்தார். அப்போது கிளிப்பச்சை நிற உல்லன் சால்வை போர்த்தியிருந்த சுமதி பச்சைக்கிளி போலிருந்தாள்.

"நீ சொல்றது சரிதான் மேரீ! என்னோட முந்தின அபிப்பிராயத்தை வாபஸ் வாங்கிக்கறேன். நம்ம சுமதிக்கு யாரும் ஈடாக முடியாது.”

படகிலிருந்து திரும்பியதும் கன்னையாவும், மேரியும் குடித்தார்கள் . சுமதியை வற்புறுத்தினார்கள்.

"இந்தக் குளிருக்கு ரொம்ப நல்லதும்மா! உடம்புக்குச் சூடா இதமா இருக்கும். கொஞ்சம் ட்ரை பண்ணு” என்றார் தயாரிப்பாளர்.

"ஒரு சின்ன பெக்' மட்டும்தான். உடம்பைக் கத கதப்பா வச்சுக்கும். எல்லாப் பெரிய நடிகைங்களும் குடிக்கிறாங்க. நீயும் நாளைக்கி ஸ்டாராகப்போறே... இத்தனை கூச்சம் இருந்தா எப்படி? ஸ்டார் ஆனப்புறம் எத்தினியோ 'வெட்' பார்ட்டிங்களுக்கு எல்லாம் அட்டெண்ட் பண்ண வேண்டியிருக்குமே?”

சுமதிக்கு அந்த வாடையே குமட்டியது. "தயவு செய்து என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க... எனக்கு ஒரு கோகோகோலா மட்டும் போதும்” என்றாள் சுமதி. தயாரிப்பாளர் மேரியை நோக்கி ஏதோ கண் ஜாடை காட்டினார். மேரி உள்ளே போய்க் கண்ணாடி டம்ளரில் 'கோகோ கோலா'வை ஊற்றி எடுத்து வந்தாள். சுமதி அதை எடுத்துப் பருகத் தொடங்கியபோது அந்த வாசனை அவளுக்குப் புதிதாயிருந்தது. அது அவளுக்குப் பழக்கமான கோகோ கோலா போல இல்லை. சிறிது கசந்தது. சிறிது குமட்டியது. என்னவோ செய்தது.

"இந்தா இதைச் சாப்பிடு! ஒண்ணும் பண்ணாது” என்ற ஒரு பிளேட் நிறைய பொன்நிற உருளைக் கிழங்கு வறுவலை எடுத்து நீட்டினாள் மேரி. சுமதி நாலு வறுவல் துணுக்குகளை எடுத்து மெல்லத் தொடங்கினாள். குமட்டல் சிறிது நின்றது. மீண்டும் கன்னையாவும், மேரியுமாக வற்புறுத்தி அவளை இன்னொரு கிளாஸ் பருகச் செய்தனர். அதையும் பருகிய பின் சுமதிக்குத் தடுமாறியது. எழுந்து நின்றாலே கால்கள் தள்ளாடின.

அதற்குப் பின்பு நடந்தவை அவளுடைய சுய நினைவுக்கு அப்பாற்பட்டவையாயிருந்தன.

மறுபடி அவள் கண் விழித்தபோது தயாரிப்பாளரின் இரட்டை கட்டிலடங்கிய படுக்கையில் தான் இருந்ததை உணர்ந்தாள். -

உடம்பெல்லாம் அடித்துப் போட்டதுபோல் வலித்தது. மேரியைக் காணவில்லை. தயாரிப்பாளர் கன் னையா உறங்கிக் கொண்டிருந்தார். அவருடைய குறட்டை ஒலி கர்ணகடுரமாக இருந்தது.

சுமதி விக்கி விக்கி அழுதாள். அந்த இருளில் அந்த அறையில் தான் எதை இழந்திருக்கிறோம் என்று நினைத்த போது சுமதிக்குப் பகீரென்றது. கட்டிலோரமாகக் கீழே விழுந்திருந்த 'ப்ரா'வை எடுத்து அணிந்து கொண்டு பிளவுஸையும் போட்டுக் கொண்டு மேலே உல்லன் ஸ்வெட்டரையும் மாட்டியபோது ஓர் இயந்திரம் போல்தான் அவள் இயங்கினாள். தான் மிகச் சுலபமாக மோசம் போய் விட்டோம் என்று அவளுக்குப் புரிந்தது.

அப்படியே படகு வீட்டின் கதவைத் திறந்து கொண்டு ஏரியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுவிடலாமா என்றுகூட அவள் அப்போது எண்ணினாள். அவளுடைய கதறலும் அழுகையும்கூடத் தயாரிப்பாளர் கன்னையாவை எழுப்பி விடவில்லை. வேட்டையாடிய மிருகத்தின் இறைச்சியைத் தின்று விட்டுத் துங்கும் வேடனைப்போல் கன்னையா அயர்ந்து துங்கிக் கொண்டிருந்தார். படகு வீட்டின் மரச்சுவரில் தலையை முட்டி மோதிக் கொண்டு கதறி அழுதாள் சுமதி. சத்தம் கேட்டோ தற்செயலாகவோ மேரி கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். கதவு உட்புறம் தாழிடப்பட்டிருக்கவில்லை. மேரியை அப்படியே பாய்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றுவிட வேண்டும் போலிருந்தது சுமதிக்கு. ஆனால் அப்படிச் செய்யவும் முடியாமல் பிரமை பிடித்தவள்போல் நின்றுவிட்டாள் அவள். மேரியோ, "ஒண்ணும் கவலைப்படாதே ! யாருக்கும் தெரியாது. எல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்று சுமதியிடம் ஒரு சிறிதும் பதறாமல் சொன்னாள்.
---------------

அத்தியாயம் 16

சுமதியால் நடந்து விட்டதை மறுபடி நினைத்துப் பார்க்கக்கூட முடியாமல் இருந்தது. தான் இழந்தது எத்தனை பெரிய விஷயம் என்பது ஞாபகம் வருகிற போதெல்லாம் அவள் உடல் நடுங்கியது. தன்மேல் தானே அறுவறுப்பு அடைந்தாள் அவள். தன்னைச் சமாதானப் படுத்த வந்த மேரியின் மேல் எரிந்து விழுந்தாள் சுமதி. சப்தம் கேட்டுக் கன்னையாவும் படுக்கையிலிருந்து உறக்கம் கலைந்து எழுந்திருந்து வந்தார். ஹிஸ்டீரியா வந்ததுபோல மேரியின் மேலும் கன்னையா மேலும் சீறிப் பாய்ந்து அறையவும், கைகளை மடக்கிக் கொண்டு முஷ்டியால் குத்தவும் தொடங்கினாள் அவள். உள்ளே கலவரம் கேட்டு 'கேர் டேக்கர்' போல அந்தப் படகு வீட்டைக் கவனித்துக் கொண்டிருந்த ஓர் காஷ்மீர் ஆள் தலையை நீட்டி எட்டிப் பார்த்தான்.

மேரி விரைந்து சென்று அவனைப் போகச் சொல்லி ஆங்கிலத்தில் வேண்டிக் கதவைத் தாழிட்டுக் கொண்டு வந்தாள். முதலில் சுமதியைத் தடுக்கவோ பதிலுக்குத் தாக்கவோ செய்யாமல் தன்மேல் அவளுக்கு ஏற்பட்ட ரவுத்திரத்தை அப்படியே அனுமதித்தாள் மேரி. கன்னையா தாங்கமாட்டார் என்பதனால் அவரை மட்டும் படுக்கை அறைக்குள் போய் உள்ளே தாழிட்டுக் கொள்ளும்படி ஜாடை காட்டினாள். அவரும் அப்படியே செய்து தப்பினார்.

சுமதியின் கோப வெறியும் ஆத்திரமும் தணிந்தபின் மேரி மெதுவாக அவளைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தாள். "உன்னை லட்ச லட்சமாகச் சம்பாதிக்கிற கதாநாயகியா ஆக்கப் போறாரு. புகழேணியின் உச்சிக்குக்கொண்டு போகப்போறாரு. நீயே யோசனை பண்ணிப்பாரு. அவரிட்ட இப்படி நடந்துக்கலாமா? இங்கே நடந்தது யாருக்குத் தெரியும்? யார் உன்னைத் தப்பா நினைக்கப் போறாங்க ? படிச்சவளான நீயே இப்படிப் பட்டிக் காட்டுப் பொண் மாதிரியா நடந்துக்கிறது? ஒண்னும் ஆகாது! நீயே கலவரப்படுத்தி ஊரைக் கூட்டி ஒப்பாரி வச்சு எல்லாருக்கும் உன்மேலே சந்தேகம் வர்ர மாதிரிப் பண்ணிப்பிடப்போறே. ரெண்டு 'பில்ஸ்' தரேன். முழுங் கிட்டுத் தண்ணியைக் குடிச்சுட்டு நடந்ததை மறந்துடு. வீண் வம்பு பண்ணி அடம்பிடிச்சேன்னா நீயா எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லேன்னு சொன்ன கதையா ஆயிடும்” என்று பாதி நயமாகவும், பாதி மிரட்டலாகவும் சொன்னாள் மேரி. சற்று நிதானப்பட்டவுடன் வெளியூரில் தான் அநாதரவாக இருப்பது சுமதிக்குப் புரிந்தது. அழுது கதறி ஆகாத்தியம் பண்ணுவதனால் தானே தன் நிலைமையை வெளிப்படுத்திக் கொண்டதாய் ஆகிவிடும் என்ற பயமும் தற்காப்பு உணர்வும் வேறு அவளுக்கு ஏற்பட்டன. தன் ஆத்திரத்தையும் கோபத்தையும் பார்த்து அவர்கள் பதிலுக்குப் பழிவாங்க முற்பட்டுவிட்டால் புது ஊரில் புது இடத்தில் புது மனிதர்களுக்கிடையே தன் நிலை எவ்வளவு நிராதரவாகப் போய்விடும் என்ற எண்ணிய போது சுமதிக்குப் பயமாயிருந்தது. அவள் சுதாரித்துக் கொண்டு விட்டாள். . . . . ⁠சுமதியின் ஆத்திரத்தையும், கோபத்தையும், அருவருப்பையும் தணிப்பதற்கு மேரி மேற்கொண்ட உபாயங்கள் பயனளித்தன. பேரும், புகழும், பணமுமாக வாழும் பல நட்சத்திரங்கள் அதற்காக எப்படி எப்படி எதை எதை இழந்திருக்கிறார்கள் என்றெல்லாம சுமதியிடம் விவரித்து அதெல்லாம் அங்கே சினிமா உலகில் சர்வசகஜம் என்பது போல் பலவற்றைச் சொல்லத் தொடங்கினாள் மேரி. வெளி உலகில் குணக்குன்றுகள் என்ற பெயரெடுத்த சில பெரிய குடும்பத்துப் பெண்கள் தனியே விரும்பியும் விரும்பாமலும் செய்த அந்தரங்கத் தவறுகளையும், அவற்றைப் பற்றிக் கவலைப்படாமலே அவர்கள் மேற்கொண்டு செல்வாக்காக வாழ்வதையும் கூடச் சுமதியிடம் பொறுமையாக விவரித்தாள். 'இது ஒன்றும் இந்தக் காலத்தில் பெரிய தவறில்லை. இப்படி ஆகாமல் சினிமாவில் பேரும் புகழும் பணமும் பெற்ற பெண்ணே கிடையாது'-என்பதுபோல் பொறுமையாகப் பல பேருடைய உதாரணங்களைக் கதையாகச் சொன்னாள். இந்த மாதிரி விஷயங்களைச் சமாளிப்பதில் மேரிக்கு இயல்பாக இருந்த சாதுரியமும் அப்போது பயன்பட்டது-சுமதி அடங்கி வழிக்கு வரலானாள்.

சுமதியை மெல்ல மெல்ல நடந்ததை ஜீரணித்துக் கொள்வதற்குத் தயாராக்கிவிட்டாள் மேரி. அடிமேல் அடி வைத்த பின் அம்மியும் நகரத்தான் செய்தது.

"ஊருக்குத் திரும்பியதும் உன்னைக் கதாநாயகியாக அறிவிக்கும் புதுப் படத்தின் முழுப் பக்க விளம்பரம் உன்னுடைய உருவத்தோடு எல்லாப் பெரிய தினசரிகளிலும் வெளிவரும்"-என்று சுமதியிடம் கன்னையாவும், மேரியும் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். காஷ்மீர் ஹேண்டிகிராஃப்ட்ஸ் எம்போரியம், பட்டுப் புடவைக்கடை எல்லாவற்றிற்கும் சுமதியை அழைத்துச் சென்று 'ஃப்ளாங் செக்' கொடுத்ததுபோல அவளுக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தியும் அங்கே இங்கே அழைத்துச் சென்றும் அடுத்தநாள் மாலைக்குள் அவர்கள் அவளைச் சரிக்கட்டி விட்டார்கள்.

தனது மாறுதலான நிலைமை, யூனிட்டைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் தெரியும்படி நடந்து கொள்வதுதான் தன்னை அதிகம் காட்டிக் கொடுத்துவிடும் என்று எண்ணிச் சுபாவமாகவும், கலகலப்பாகவும் எல்லாரிடமும் பழகினாள் சுமதி. அவளே சமாளிக்கத் தயாராகியிருந்தாள்.

காஷ்மீரில் அவுட்டோர். ஷூட்டிங் நடந்து முடிந்து டில்லி திரும்பியதும் அங்கே இரண்டு நாள் தங்கினார்கள் அவர்கள். அந்த இரண்டு நாளில் சுமதியை யாரிடத்தில் அறிமுகப்படுத்தினாலும் "எங்கள் புதுப் படத்தின் கதாநாயகி' என்று கன்னையா அறிமுகப்படுத்தினார். மேரியும், கன்னையாவும், முக்கியமாகத் தாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் சுமதியையும் உடனழைத்துச் சென்றனர். அவளைத் தனியே விடவே இல்லை.

அவர்கள் சென்னைக்கு விமானத்தில் திரும்பிய நேரம் இரவு ஏழு மணிக்கு மேலிருந்ததனால்-மீனம் பாக்கம் விமான நிலையத்திலிருந்து சுமதி நேரே ஹாஸ்டலுக்குச் செல்வதா, அல்லது மேரி வீட்டிலாவது கன்னையா வீட்டிலாவது அன்றிரவு தங்கிவிட்டு அப்புறம் மறுநாள் காலை ஹாஸ்டலுக்கு மதுரையிலிருந்து இரயிலில் வந்து இறங்கியவளைப் போலச் செல்வதா என்ற யோசித்தார்கள்.

"என்னோடு வா! காலையில் டாக்ஸியில் அனுப்பி விடுகிறேன்” என்றாள் மேரி. சுமதியும் சம்மதித்தாள். கன்னையாவோடு போய் அவருடைய புரொடக்க்ஷன் அலுவலகத்தில் இரவு உணவை முடித்துக் கொண்ட பின்பு தான் அவர்கள் இருவரும் செயிண்ட் தாமஸ் மவுண்டுக்குக் காரில் புறப்பட்டுச் சென்றார்கள்.

மேரி வீட்டில் அன்றிரவு சுமதிக்கு உறக்கம் வர வில்லை. மனத்தில் பல நிகழ்ச்சிகள் உறுத்திக் கொண்டிருந்தன. அரிதாகவும், பெரிதாகவும் போற்றிக்காத்த கன்னிமையை இழந்து விட்டோம் என்பது எல்லா ஆறுதல்களுக்கும் பின்புகூட ஒரு மறவாத் துயரமாக நினைவு வரத்தான் செய்தது. படுக்கையில் துங்குவது போல் பாசாங்கு செய்து புரண்டு கொண்டிருந்தாள் அவள். இரவு ஒரு மணிக்கோ ஒன்றரை மணிக்கோ யாரோ மெதுவாக வந்து மேரியை எழுப்பினார்கள்.

சுமதி கண்களை இறுக மூடிக்கொண்டு அயர்ந்து துரங்குவதுபோல நடத்துவிட்டாள். மேரியை எழுப்பிய ஆண் குரல், "ஒரு பார்ட்டி வந்திருக்காரு” என்றதும் அவள் எழுந்து சென்றுவிட்டு ஒருமணி நேரம் கழித்துத் திரும்பி வந்ததும் சுமதிக்கு நன்கு தெரியும். ஆனால் விடிந்தபோது அதெல்லாம் தனக்குத் தெரிந்ததாக அவள் மேரியிடம் காண்பித்துக் கொள்ளவில்லை.

காலைச் சிற்றுண்டி காபிக்குப் பின்பு சுமதியை ஒரு டாக்ஸியில் அவளுடைய பெட்டி முதலிய பயணச் சாமான்களோடு கல்லூரி விடுதிக்கு அனுப்பி வைத்தாள் மேரி.

"ஒண்ணும் பயப்படாதே! உனக்கு இனிமே அந்தக் காலேஜில் படிச்சுப் பிரமாதமா எதுவும் ஆகப் போறதில்லே. நாளைக்கே நீ பெரிய ஹீரோயினா ஜொலிக்கப் போறே... வார்டன் எதாவது கேட்டாள்னா முழிச்சிக்கிட்டு நிற்காதே. தைரியமா ஃபேஸ் பண்ணு” என்று டாக்சி புறப்படுவதற்கு முன்னால் சுமதிக்கு ஒர் அறிவுரையும் சொல்லியனுப்பி இருந்தாள் மேரி. எதற்காக அப்படி அவள் சொல்லியனுப்பினாளென்று சுமதிக்குப் புரியவே இல்லை.

மதுரையில் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று பொய் சொல்லி லீவு கேட்டுக்கொண்டு காஷ்மீர் போயிருந்தாலும் செம்பரம்பாக்கம் அவுட்டோர் விஷயம் பத்திரிகைகளில் பிரசுரமானதும், வேறு சில சந்தேகங்களும் வார்டனைக் குழப்பிச் சந்தேகப்பட ருக்கலாம் என்று நினைத்தாள் சுமதி. 'தான் காஷ்மீர் போனதுகூடப் பரம ரகசியமில்லை. சில சினிமாப் பத்திரிகையில் செய்தியாக வந்திருக்கக்கூடும்' என்றே அவளுக்குத் தோன்றியது. டாக்சியில் விடுதிக்குச் செல்லும்போது சுமதி இதை எல்லாம் யோசித்தாள். பெட்டியையும் பிற சாமான்களையும் தூக்கிச் செல்ல முடியாது என்பதால் ஹாஸ்டல் கேட் அருகே டாக்ஸியை நிறுத்திக்கொண்டு அங்கு நின்ற 'வாட்ச்மேனை' உதவிக்கு அழைத்தாள். அவன் தயங்கித் தயங்கி வந்தான். "வார்டன் அம்மா நீ வந்தால் வந்ததும் உடனே ஹாஸ்டல் நோட்டிஸ் போர்டைப் பார்க்கச் சொல்லிச்சும்மா. அதைப் பார்த்துப் போட்டு அப்பாலே ரூம்லே வந்து அந்தம்மாளைப் பார்ப்பியாம்" என்றான் வாட்ச்மேன்.

சுமதிக்குத் 'திக்'கென்றது. ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அவள் மாடிப் படியில் சாமான்களை வைத்துவிட்டு ஆர்வத்தாலும், பதற்றத்தாலும் விரைந்து அடித்துக் கொள்ளும் நெஞ்சுடனே வார்டன் அறையை ஒட்டியிருந்த ஹாஸ்டல் நோட்டீஸ் போர்டைப் பார்த்தாள். பொய் சொல்லி லீவு பெற்றுக் கொண்டு கண்டபடி ஊர் சுற்றுகிற காரணத்துக்காக அவளை கல்லூரியிலிருந்தும் ஹாஸ்டலிலிருந்தும் 'சஸ்பெண்ட்' செய்திருப்பதாக வார்டன் அறிவித்திருந்தாள்.

அப்போது வார்டன் அறைக்குள்ளே இருப்பதாகத் தெரியவே சுமதி தயங்கியபடியே அந்த அறைக்குள் நுழைந்தாள். வார்டன் அவள் உள்ளே நுழைவதைத் தலை நிமிர்ந்து பார்த்தும்கூட 'வா' என்றோ 'இங்கே ஏன் வந்தாய்?' என்றோ கேட்கவே இல்லை. மறுபடி குனிந்து வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள். சுமதியின் நெஞ்சை உறுத்தியது அந்த அலட்சியம்.

சுமதியாக ஏதோ சொல்ல ஆரம்பித்தபோது, "சுமதி! யூ கெனாட் மேக் மீ எ ஃபூல்..” என்று சீறியபடியே சிவப்புப் பென்ஸிலால் கட்டம் கட்டி மார்க்

செய்யப்பட்ட ஒரு கத்தை நியூஸ்பேப்பர் கிளிப்பிங்ஸை எடுத்து மேஜை மேல் போட்டாள் வார்டன் மாலதி சந்திரசேகரன். அந்த நியூஸ் பேப்பர்'கட்டிங்ஸ்'எல்லாவற்றிலும் அவள் செம்பரம்பாக்கம் வெளிப்புறப் படப் பிடிப்புக் காட்சிகளில் கலந்துகொண்டது முதல் காஷ்மீர் புறப்படுகிற யூனிட்டோடு புறப்பட்டுச் சென்றதுவரை படங்களோடு செய்திகள் பிரசுரமாயிருந்தன. தன்னுடைய பொய், பச்சையாகக் கையும் களவுமாகக் கண்டு பிடிக்கப்பட்டுவிடவே சுமதி எதுவும் சொல்ல முடியாமல் கண்கலங்கி நின்றாள். "உங்க மதரோட கூட மதுரைக்கு நான் ட்ரங்க் ஃபோனில் பேசியாச்சு. இந்த 'வீக் எண்டிலே' உங்க மதர் இங்க வரா. நோட்டீஸ் போர்டிலே நீ பார்த்தது பழசு. லேடஸ்ட்டா நானும் பிரின்சிபாலும் உன்னை 'டிஸ்மிஸ்' பண்ணிக் காலேஜிலிருந்து அனுப்பிடறதுன்னு முடிவு பண்ணியாச்சு...”

சுமதிக்கு ஏதோ கெஞ்சிக் கதற வேண்டும் என்று தோன்றியது. ஆனால் வார்த்தைகள் எதுவும் வரவில்லை; நெடுமரம்போல் சும்மா நின்றாள் சுமதி.

"ஒரு படிக்கிற பொண்ணுக்கு இத்தனை சூதுவாது, பொய் எல்லாம் இருந்தா எப்பிடி உருப்படப்போறே நீ? உங்கம்மா என்னாடான்னா நீ பிரமாதமாப் படிச்சுக் கிழிச்சு 'டிஸ்டிங்க்ஷனோட' பாஸ் பண்ணப் போறதா சொப்பனம் கண்டுண்டிருக்கா! நீயானால் கண்ட கண்ட சினிமாக் காலிப்பசங்களோடல்லாம் ஊர் சுத்திண்டிருக்கே. இதென்ன காலேஜ்னு நினைச்சியா? இல்லே சத்திரம், சாவடின்னு நினைச்சியா?”

"இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க வார்டன்! ஏதோ தெரியாத்தனமா...”

"சும்மாக் கதை அளக்காதேடீ! தெரியாத்தனமாவது ஒண்ணாவது?. தெரிஞ்சு விரும்பி ஆசைப்பட்டு வேனும்னுதானேடீ நீ இதெல்லாம் பண்ணியிருக்கே?”

"ஐ டோண்ட் வாண்ட் டு ஸீ யுவர் டர்ட்டி ஃபேஸ். கெட் அவுட், ஐ ஸே கெட் அவுட்”.

சுமதிக்கும் திடீரென்று ஆத்திரமும் ரோஷமும் வந்திருக்க வேண்டும். அவள் வார்டனின் அறையிலிருந்து வெளியேறிக் கீழே வராந்தாவிலிருந்து காசு போட்டுப் பேசும் ஃபோனில் போய் மேரியோடு பேசினாள். நடந்ததைச் சொன்னாள்.

"அப்படியா சங்கதி? நீ ஒண்ணும் அலட்டிக்காதே, மறுபடியும் ஒரு டாக்ஸி வச்சுக்கிட்டு நேரே இங்கே வா. அல்லது புரொட்யூஸர் கன்னையா வீட்டிலே போய் இரு. நான் அங்கே வந்துடறேன்”- என்றாள் மேரி.

சுமதி ஹாஸ்டல் வாட்ச்மேனிடம் ஒரு ரூபாயைக் கையில் திணித்து மறுபடி அவன் உதவியுடனேயே பெட்டி சாமான்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். வாசலிலேயே டாக்ஸி ஸ்டாண்டு இருந்ததனால் அவள் வந்து இறங்கிய அதே டாக்ஸியே அங்கு இன்னும் நின்றிருந்தது. டாக்ஸியில் ஏறிக்கொண்டு தி.நகரிலிருந்த கன்னையாவின் புரொடக்க்ஷன் அலுவலக வீட்டுக்கே டாக்ஸியை விடச் சொன்னாள் சுமதி.

அவள் போனபோது கன்னையா துாக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. பெட்டி சாமான்களை வராந்தாவில் இறக்கி வைக்க அங்கே இருந்த புரொடக்க்ஷன் அலுவலகப் பையன் உதவி செய்தான். கன்னையாவின் ஏ.ஸி. அறையிலிருந்து யாரோ ஒர் இளம் எக்ஸ்ட்ரா நடிகை அவசர அவசரமாக வெளியேறுவதை அந்தப் பதற்றமான மன நிலையிலும் சுமதி கவனிக்கத் தவறவில்லை. நல்ல வேளையாக ஃபோன் வெளியில் இருந்தது. அங்கிருந்தே மறுபடி மேரிக்கு ஃபோன் செய்தாள் சுமதி. மேரி உடனே வருவதாகப் பதில் சொன்னாள். சுமதியின் மனத்தில் என்னவோ அந்தக் கணமே தன்னுடைய கல்லூரி வாழ்க்கை முடிந்து விட்டதாகவும் சினிமா உலகின் ஒளிமிக்க புதிய ஜொலிப்பு வாழ்க்கை ஆரம்பமாவதாகவும் தோன்றியது. அவள் கனவுகளில் மூழ்கியபடியே அப்படி நினைத்தாள். கன்னையா துக்கம் விழித்துச் சோம்பல் முறித்தபடி அறையிலிருந்து வெளியே வந்தார்.
-----------

அத்தியாயம் 17

அந்த அதிகாலையில் வீட்டு வராந்தாவில் சுமதியைப் பெட்டி சாமான்களோடு பார்த்தபோது தயாரிப்பாளர் கன்னையா ஒன்றும் ஆச்சரியப்பட்டதாகக் காண்பித்துக் கொள்ளவில்லை.

"வாம்மா! காபி சாப்பிடறியா?” என்ற சுபாவமாக வரவேற்றார். அவர் கேட்காமல் அவளாகவே கல்லூரி விடுதியில் நடந்ததை எல்லாம் அவரிடம் சுருக்கமாகச் சொல்லத் தொடங்கினாள்.

"நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம்மா! நான் இருக்கறப்ப உனக்கென்ன கவலை? பெட்டி சாமன்களை உள்ளாரக் கொண்டு போய் வை. மேரியும் இப்ப வந்துடுவா” என்று இதமாகவும் ஆறுதலாகவும் மறுமொழி கூறினார் கன்னையா. காபி வரவழைத்து அவரே ஆற்றிக் கொடுத்துப் பருகச் செய்தார். -

"இனிமே உனக்கெதுக்கும்மா காலேஜுப்படிப்பு? நீ ஸ்டாராகி ஜொலிக்கிறதுக்குன்னே பிறந்தவ. உனக்கிருக்கிற முகவெட்டு இங்கே எந்த சீனியர் ஹீரோயினுக்கு இருக்குது?”-

இப்படி ஏதாவது யாராவது இதமாகச் சொல்ல மாட்டார்களா என்றுதான் சுமதியின் மனமும் அன்று ஏங்கிக் கொண்டிருந்தது. வார்டனின் கடுமையான வார்த்தைகளுக்கும் உதாசீனத்திற்கும் பிறகு இங்கிதமாக வருடிக் கொடுப்பது போன்ற கன்னையாவின் சொற்கள் அவளைக் கவர்ந்தன. அவளுக்கு மன ஆறுதலை அளித்தன.

அதே வீட்டில் தம்முடைய ஏ.சி. அறைக்குப் பின்னால் பக்கவாட்டில் வாசல் உள்ள ஓர் அறையைச் சுமதியின் உபயோகத்துக்காகத் திறந்து விட்டார் கன்னையா. சிறிது நேரத்திற்கெல்லாம் மேரியும் வந்து சேர்ந்து விட்டாள். அவள் நடந்த விவரங்களைச் சுமதியிடம் கேட்டுக் கொண்டு வார்டனைக் கன்னா பின்னாவென்று ஏசினாள்.

"இந்த மாலதி சந்திரசேகரன் பெரிய பத்தினியோ? எனக்குத் தெரியும் அவ கதை எல்லாம், சொன்னால் ஊர் நாறும்’-என்றாள் மேரி. "நீ அங்கே போகவே வேண்டாம்! அடுத்த வாரத்திலேருந்து புதுப்பட வேலைகள் ஆரம்பமாயிடும். இங்கே இருந்து டான்ஸ் மட்டும் கொஞ்சம் சீக்கிரம் கத்துக்கப் பாரு.”

"அதுவரை இங்கேயே தங்கிக்கட்டுமா? அல்லது உன்கூட 'செயிண்ட் தாமஸ்' மவுண்டுக்கு வந்துடட்டுமா ?”

"ஏன் இங்கேயே இரேன்! அதெல்லாம் கன்னையா ராஜ போகமாகக் கவனிச்சிப்பாரு. கவலைப்படாதே"_என்று சொல்லிக் கண்களைச் சிமிட்டினாள் மேரி.

சுமதி அந்தத் தயாரிப்பு அலுவலக வீட்டிலேயே தங்கினாள். அவளுடைய உதவிக்காக ஒர் ஆயாக் கிழவியை வேலைக்கு அமர்த்தினார் தயாரிப்பாளர் கன்னையா.

டான்ஸ் கற்றுக் கொள்வது துரிதப்படுத்தப்பட்டது. அவள் அந்த வீட்டிற்குக் குடிவந்த மறுநாள் தரணி ஸ்டுடியோ சென்று சில 'ஸ்டில்ஸ்’ பத்திரிகை விளம்பரத்திற்காக எடுத்தார்கள்.

அந்த வார இறுதியில் கல்லூரி விடுதிக்கு வந்து பார்த்து விட்டு அங்கே வார்டன் தன்னிடமிருந்த பத்திரி கைக் கட்டிங்ஸில் இருந்து விலாசமும் சொல்லியதால் தேடிக் கண்டு பிடித்தோ என்னவோ சுமதியின் தாய் நேரே கன்னையாவின் தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தாள். அவள் தேடி வந்தபோது மாடியில் டான்ஸ் மாஸ்டரிடம் நாட்டியம் கற்றக் கொண்டிருந்தாள் அவள். கால்களில் சதங்கை கட்டிப் பரத நாட்டியத்துக் கேற்ற வகையில் உடையணிந்து மாஸ்டர் சொல்லியபடி ஆடிக் கொண்டிருந்தவள், திடீரென்று வாசல் முகப்பில் அம்மா வந்து நின்றதைப் பார்த்ததும் ஒன்றுமே தோன்றாமல் திகைத்துப் போய் விட்டாள்.

"ஏன் நிறுத்திப்புட்டே? யாரு வந்திருக்காங்க?"--என்று வினவியபடி மாஸ்டர் திரும்பிப் பார்த்தான்.

"ஏன்தான் இப்படிச் சீரழியறத்துக்குத் தலையெடுத்தியோ தெரியவில்லையே? மானம், வெட்கம், ரோஷம் எல்லாத்தையும் உதிர்த்து விட்டுப் புறப்பட்டிருக்கியாடீ?” சரமாரியாக வசைமாரியோடு உள்ளே பிரவேசித்தாள் சுமதியின் அம்மா.

"மாஸ்டர்! நீங்க கொஞ்சம் இருங்க. அது எங்கம்மா, ஊரிலிருந்து தேடி வந்திருக்கு. சமாதானமா சொல்லிப் பேசி என் அறையிலே உட்காரவச்சிட்டு வந்திடறேன்”--என்று வெளியேறினாள் சுமதி. கூட இருந்த கன்னையா நைசாக நழுவி மாடி வராந்தாப் பக்கம் போய்விட்டார்.

"நீ ஏனம்மா இங்கே வந்தே? டெலிஃபோன் நம்பரைக் கண்டுபிடிச்சு ஃபோன் பண்ணியிருந்தா நானே உன்னைத் தேடி வந்திருப்பேனே?”

“ஏண்டி? நான் இங்கே வந்து பார்த்தால் உன் வண்டவாளம்லாம் தெரிஞ்சு போகுமேன்னு பயப்படிறியா? ஏற்கெனவே வார்டனும் உன் ரூம் மேட் விமலாவும் எல்லாம் சொல்லிட்டாங்க. ஹாஸ்டல்லே உன் அறையிலிருந்த சாமான்களை ஒழிச்சுக் கொண்டு போய்ச் சொந்தக்காரங்க வீட்டிலே போட்டாச்சு. பிரின்ஸ்பாலோ, வார்டன் அம்மாளோ உன்னை மன்னிக்கவோ அந்தக் காலேஜிலே மறுபடி சேர்த்துக்கவோ தயாரில்லே. அவங்களைப் பொறுத்தவரை உன்னைக் கைகழுவி விட்டாங்க...”

"ஏனம்மா கத்தறே? கொஞ்சம் கூட நாகரிகமில்லாமே...”

"ஆமாண்டி! நீ கத்துக் குடுத்து இனிமேல்தான் நாகரிகத்தை எல்லாம் நான் தெரிஞ்சுக்கணும். சொல்லுவேடி சொல்லுவே! நீ ஏன் சொல்லமாட்டே? இதுவும் சொல்லுவே, இன்னமும் சொல்லுவே? 'உங்க பொண் உங்களுக்கு உடம்பு செளகரியமில்லேன்னு பத்து நாள்

லீவு எடுத்துக் கிட்டுப் போனாள். அது பற்றி எனக்குச் சந்தேகமா இருக்கு. அங்கே வந்திருக்காளா, இல்லியா?ன்னு வார்டன் மதுரைக்கு ஃபோன் பண்ணிக் கேட்டப்பவே எனக்குப் பகீர்ன்னுது. உன்னைப் பெத்த வயித்துலே பெரண்டையை வச்சுத்தான் கட்டிக்கணும்." -அருகே வந்து அம்மாவை மேலே பேச விடாமல் வாயைப் பொத்தினாள் சுமதி. தர தரவென்று அம்மா கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கன்னையா தனக்கு ஒழித்துவிட்டிருந்த தனி அறையை உட்புறம் தாழிட்டுக் கொண்டாள். அப்புறம் நிதானமாக ஒரு சிறிதும் பதறாமல் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க எதிரே நின்ற அம்மாவைப் பார்த்து,

"எதுக்கும்மா இப்படி கத்தித் தொலைக்கறே? இப்போ என்ன குடிமுழுகிப் போச்சு?” என்று கேட்டாள் சுமதி. அம்மாவோ உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளிம்பில் இருந்தாள்.

“என்ன குடிமுழுகிப் போச்சுன்னாடீ கேட்கிறே? குடிமுழுகறதுக்கு இன்னும் என்னடீ மீதமிருக்கு? நீ கேக்கறதைப் பார்த்து எனக்கு வயிறு பத்தி எரியறதேடீ? கூத்தாடிச்சியாப் போறதுக்குத் தலையெடுத்துப் படிப்பை உதறிப்பிட்டு வந்தயேடீ பாவி! உங்கப்பா மட்டும் இப்ப உசிரோட இருந்தார்னா உன் கழுத்தைத் திருகிக் கொன்னுடுவார்...”

"ஏன்? முடிஞ்சா நீயே இப்ப அதைச் செய்யேன் அம்மா? யாராவது கொன்னுட்டாத்தான் எனக்கும் நிம்மதி"--இதைச் சொல்லும்போது சுமதியின் கண்களில் நீர் மல்கியது . சுமதி அழுவதைப் பார்த்துத் தாயின் மனம் சிறிது இளகியது. அதனால் தாயின் குரலில் வெறுப் பின் கடுமை மாறிச் சிறிது பாசமும் கனிவும் வந்தன.

“எப்பிடிடீ இதுக்கெல்லாம் துணிஞ்சே; மான அவமானமும்கூட உறைக்கலியாடி உனக்கு? உன்னைப் படிக்கிறதுக்கு மெட்ராஸ் அனுப்பினேனா, இல்லே இப்படிக் கண்ட தடிப்பசங்களோட சினிமா 'டான்ஸ்னு' ஊர் சுத்தறதுக்கு அனுப்பினேனாடீ? முன்னே பின்னே தெரியாத

மனுஷங்களோட பத்துநாள் காஷ்மீர் போறது, பதினைஞ்சு நாள் கன்னியாகுமரி போறதுன்னு புறப்படறத்துக்கு முன்னாடி உடம்பு கூசலியாடீ உனக்கு.”

பதில் சொல்லாமல் சுமதி மேலும் பெரிதாக விசும்பி அழுதாள். உடம்பு கூசாமல் அப்படிப் புறப்பட்டுப் போனதால் தான் எதை இழந்தாளோ அதை அம்மாவிடம் சொல்வதற்கும் வாய் வரவில்லை அவளுக்கு. ஆனால் அம்மா கேட்ட கேள்வியில் காஷ்மீரில் நடந்தது நினைவு வந்து கோவென்று கதறி அழுதபடி தாயின் நெஞ்சில் சாய்ந்தாள் அவள். பெண்ணின் அழுகையைத் தாய் வேறு விதமாகப் புரிந்துகொண்டாள். தான் கேட்டதெல்லாம் உறைத்துப் பெண் மனம் மாறி அழுகிறாள் என்று எண்ணிக் கொண்டு, “என்னவோ உன் கெட்ட வேளை இதுவரை பண்ணின தப்பெல்லாம் பண்ணியாச்சு. இனி மேலாவது நீ மனசு திருந்தணும்டீ. நீ படிச்சுக்கூட எனக்கு ஒண்ணும் ஆகவேண்டியதில்லே. குடும்பப் பேரைக் கெடுத்துச் சீரழிஞ்சுபோய் நடுத் தெருவிலே நிற்கும்படி ஆயிடப்படாது. பேசாமல் என்னோட புறப்பட்டு மதுரைக்கு வந்துடு. வீட்டிலே இருந்து படிக்க முடிஞ்சது போறும். உனக்குப் பிரியம்னா அடுத்த வருஷம் மதுரையிலேயே எந்த லேடீஸ் காலேஜிலியாவது சேரலாம். இல்லேன்னா அதுகூட வேண்டாம்"-- என்று ஒரளவு சகஜமான குரலில் ஆரம்பித்தாள் சுமதியின் அம்மா. சுமதி இன்னும் அழுகையை நிறுத்தவில்லை. எந்தக் களங்கம் வந்துவிடக் கூடாது என்றும், வரவில்லை என்றும் நம்பி அம்மா தன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறாளோ அந்தக் களங்கத்தையே தான் சுமந்து கொண்டிருப்பதை உணர்ந்தபோது எதுவும் செய்ய முடியவில்லை. பெண்ணின் அழுகை அதிகமாக அதிகமாகத் தாயின் கனிவும் அதிகமாகியது. தன்னைத் தழுவினாற் போல நெஞ்சில் சாய்ந்திருந்த மகளின் தலையை ஆதரவாக வருடியபடி அறிவுரைகளைக் கூறலானாள் தாய்.

'இது யார் வீடு? எனக்கு இந்த இடமே பார்க்க சகிக்கலையேடீ? ஹாஸ்டலை விட்டுப் படிப்பைவிட்டு மானத்தை விட்டு எப்படிடீ இங்கே எல்லாம் வரத் துணிஞ்சே!'

“எப்படியோ வந்தாச்சும்மா! இனிமே மீளவும் முடியாது போலேருக்கு" - என்று அழுகைக்கிடையே சுமதி சொன்னாள். “ஏண்டீ முடியாது? நான் கையோட உன்னைக் கூட்டிண்டு போகலாம்னுதான் வந்திருக்கேன். எவனாவது குறுக்கே நின்னா வக்கீலை வச்சுக்கூடப் பார்த்துடறேன் ஒரு கை" என்று சீறினாள் சுமதியின் தாய்.

அப்போது தாழிட்டிருந்த அந்த அறையின் கதவை வெளிப்புறம் யாரோ பலமாகத் தட்டினார்கள். "நீ இருடீ நான் திறக்கிறேன்” என்று கதவைத் திறக்க முன்னேறிய தன் தாயைச் சுமதியே தடுத்தாள். தானே கண்களைத் துடைத்துக்கொண்டு அழுதது தெரியாதபடி முகத்தைச் சகஜமாக மாற்றிக் கொள்ள முயன்றபடி சுமதியே கத வைத் திறக்கச் சென்றாள். கதவைத் திறக்குமுன் சுமதியின் மனத்தில் பல உணர்வுகள் குழம்பின. தான் வேறு எதற்கோ அழுததைத் தவறாகப் புரிந்துகொண்டு அம்மா தன்னை ஊருக்கு இழுத்துக்கொண்டு போக முயலுவதை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று தீவிரமாக அப்போது அவள் உள்மனம் யோசிக்கத் தொடங்கியிருந்தது.
--------------

அத்தியாயம் 18

கதவைத் திறந்தால் வெளியே மேரியும், தயாரிப்பாளர் கன்னையாவும், டான்ஸ் மாஸ்டரும் பதற்றத்தோடு நின்று கொண்டிருந்தார்கள்.

"என்னது? எதுக்குத் கதவை உள்ளே தாழ்ப்பாள் போடணும்?” என்று கன்னையா கேட்டார்.

"சும்மா எங்களுக்குள்ளே ஒரு பிரைவேட் கான்வர்சேஷன். அவ்வளவுதான்” என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்ல முயன்றாள் சுமதி. கன்னையாவின் முகத்தில் பதற்றம் தெரிந்தது.

"உள்ளே அழுகைக் குரல் கேட்டிச்சு, ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிற மாதிரிப் பட்டதாலே சந்தேகப்பட்டுக் கதவை நான்தான் தட்டச் சொன்னேன்” என்றாள் மேரி.

"நீங்க மூணுபேரும் கொஞ்சம் அங்கேயே இருங்க. நானே எங்கம்மாவைச் சமாதானப்படுத்திட்டு அப்புறம் உங்களை எல்லாம் கூப்பிடறேன்” என்றாள் சுமதி. அவள் சொன்னதை அவர்கள் கேட்டார்கள். அதன்படியே விலகிச் சென்றார்கள்.

சுமதி மறுபடி கதவைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே வந்தாள். அம்மா அவளைக் கேட்டாள்.

“யாருடி இவங்கள்ளாம்? யாரோ ஒரு சட்டைக்காரிச்சிதான் உன்னை முழுக்க முழுக்கக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிட்டான்னு வார்டன் அம்மாள் சொன்னாளே. அவ இவதானா? கெட்ட சகவாசம் மனுஷாளை எவ்வளவு கெடுக்கும்னு சொல்லவே முடியாது! உன்னை நான் மெட்ராஸுக்குப் படிக்க அனுப்பினதே தப்பு. என் புத்தியைச் செருப்பாலே அடிச்சிக்கணும்டீ,” என்று அம்மா மறுபடியும் இராமாயணத்தை ஆரம்பித்து விட்டாள். எப்படி அவள் வாயை அடைப்பதென்று சுமதிக்குப் புரியவில்லை.

"ஏன்ம்மா இப்படி ஒரேயடியாகக் கத்தறே கத்தி இரைஞ்சு ஊரைக்கூட்டறதிலே உனக்கென்னம்மா லாபம்? கேட்கிறதை நிதானமாகத்தான் கேளேன்.”

“நின்னு நிதானமா விசாரிக்கிற மாதிரிக் காரியத்தையாடீ நீ பண்ணியிருக்கே?"

“பெரிசா நான் எதையும் பண்ணிடலே. காலேஜை விட்டுட்டேன். சினிமாவிலே சேர்ந்திருக்கேன். இந்த வருஷக் கடைசிக்குள்ளேயே லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கிறேனா இல்லையா பாரேன்.” ⁠"பேரை எல்லாம் கெடுத்துண்டதுக்குப் பின்னே என்ன சம்பாதிச்சுத்தான் என்ன பிரயோசனம்டீ?"

"நாய் வித்த காசு குரைக்காது அம்மா! நீ தமிழ்ப் பண்டிட்டா வேலை பார்த்து ஒரு வருஷத்திலே சம்பாதிக்கிறதை நான் ஒரு மணி நேரத்தில் சம்பாதிப்பேன் அம்மா!"

'போறுமே நீ பேசறதும், லட்சணமும், அசடு வழியறது. இப்போ நான் சொல்றதைக் கேட்கப் போறியா இல்லியா!"

இந்தக் கேள்விக்குச் சுமதி உடனே மறுமொழி சொல்லிவிடவில்லை. அவளும் சரி, அவளுடைய தாயும் சரி உணர்ச்சிக் கொந்தளிப்புக்களும் பதற்றமும் அடங்கிய நிலையில் காணப்பட்டார்கள். அப்போது சுமதிக்குச் சினிமா உலகில் ஜொலிக்கப் போகிற ஆசை உள் மனத்தை உடும்புப் பிடியாகப் பிடித்திருந்தது. அம்மா மட்டுமில்லை, செத்துப்போன அப்பாவே வந்து எதிரே நின்று மிரட்டினால் கூட சினிமாவில் நடித்துப் புகழும் பணமும் சம்பாதிக்கும் ஆசையைச் சுமதி விட்டுவிடத் தயாராயில்லை. அதற்காக எவ்வளவோ பெரியவற்றை எல்லாம் இழந்த பின் இனி அதை அடையாமல் விட்டுவிட்டுப் பாதி வழியில் அம்மாவுக்கு அடங்கிய சாதுப் பெண்ணாகத் திரும்பிப் போய்விட அவள் தயாராயில்லை. அதே சமயம் கன்னையா, மேரி, டான்ஸ் மாஸ்டர் எல்லாரும் காண எல்லார் முன்னிலையிலும் தன்னைத் தேடி வந்திருக்கும் தாயோடு இரசாபாசமாகி விடுகிற எல்லைக்குக் கூப்பாடு உண்டாகும்படி சண்டை போடவும் தயாராயில்லை அவள்.

தன் அறைக்கு வேலைக்காரியாகத் தயாரிப்பாளர் கன்னையா நியமித்திருந்த ஆயாவைக் கூப்பிட்டு, "நல்ல காபியா வாங்கிண்டு வா! அம்மாவுக்குக் குடுக்கலாம்” என்று அவளை ஒட்டலுக்கு அனுப்பிவிட்டு அம்மா பக்கம் திரும்பி, "நீ இந்தத் தடவை எங்கேம்மா தங்கியிருக்கே!” என்று நிதானமாக விசாரித்தாள் சுமதி. ⁠"தங்கறது எங்கேடீ? என்னை நிம்மதியா ஒரு எடத்திலே தங்கவா விட்டே நீ? வந்ததிலிருந்து நாயா அலையறேன். உன்னைப் பெத்ததுக்குக் கை மேலே கண்ட பலன் அதுதான்.”

"பார்த்தியா பார்த்தியா? மறுபடியும் என்னையே திட்டறியே அம்மா? உனக்குப் பெண்ணாப் பிறந்தது இப்படி நான் உங்கிட்டவே திட்டுக் கேட்கிறத்துக்குத் தானா?" என்று கேட்டு மறுபடியும் அழத் தொடங்கினாள் சுமதி. அப்போது ஓரளவு அவன் தன் தாயைச் சரிப்படுத்துவதற்கான திட்டத்துடனும் தந்திரத்துடனும் நடிக்கத் தொடங்கியிருந்தாள். காபி வந்தது. அம்மாவுக்குச் சுமதியே ஆற்றிக் கொடுத்துப் பருக வைத்தாள்.

உணர்ச்சிக் கொந்தளிப்புக்களும் ஸெண்டிமெண்ட்ஸும் உள்ள பழைய தலைமுறைப் பெண்ணைச் சில வேளைகளில் இரண்டு மூன்று சொட்டுக் கண்ணீரைச் சிந்தியே வழிக்குக் கொண்டு வந்துவிடலாம். தாங்கள் அழக்கூடிய சுபாவமுள்ள சில மூத்த பெண்கள் தங்களுக்கு முன் நிற்பவர்கள் அழுதுவிட்டால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது பதறிப் போவார்கள். தன் அம்மாவும் அந்த ரகத்தைச் சேர்ந்தவள்தான் என்பது சுமதிக்குப் புரிந்திருந்தது. சுமதி அப்போதிருந்தே நடிக்கத் தொடங்கிவிட்டாள்.

"சொல்லும்மா! இங்கே டி.நகர்லே யோகாம்பாள் அத்தை வீட்டிலே தானேம்மா தங்கியிருக்கே?-

"ஆமாண்டீ! எனக்கு வேறே போக்கிடம் ஏது? சொல்லு. ஒரேயடியாச் சுடுகாட்டுக்குத்தான் இனிமேப் போகணும். இருந்து இப்படி அவஸ்தைப் படறதைவிடப் போயிடறது எத்தனையோ மேல்”-

”ஏனம்மா இப்படியெல்லாம் சொல்லி என் மனசைக் கஷ்டப்படுத்தறே? நானே நொந்து போயிருக்கேன். நீயும் எங்கிட்ட இப்படிப் பேசினா என்னால தாங்க முடியாது.” -

"சரிடீ பேசலே! ஆனா நீ இப்ப உடனே நான் சொல்றதைக் கேட்கணும். எனக்கு இந்த இடமே பிடிக்கலை. இங்கே நீயும் நானும் தனியாப் பேசிக்கிறதுக்குக் கூடப் ’பிரைவஸி’ இல்லே. தடித்தடியா ஆம்பிளைங்க வந்து கதவைத் தட்றாங்க. எங்கூட யோகாம்பா அத்தை வீட்டுக்கு வா. அங்கே பேசி முடிவு பண்ணிக்குவம். எனக்கு இன்னிக்கு ஒருநாள்தான் காஷூவல் லீவு மீதமிருக்கு நாளைக்கிக் காலம்பரப் பள்ளிக்கூடம் போகலேன்னா லாஸ்-ஆஃப் பேயிலேதான் லீவு போடணும்.”

"அப்போ நீ இன்னிக்குச் சாயங்காலமே ஊருக்குப் போறியா அம்மா?”

"நான் மட்டும் போறதா உத்தேசம் இல்லேடீ ! உன்னையும் கூட்டிண்டுதான் போகப்போறேன். யோகாம்பாள் அத்தையும் அதைத்தான் சொல்றா. ஜாதகப்படி இப்போ உனக்கு ரொம்ப மோசமான தசை! நீ தனியா இங்கே இருக்கிறது நல்லதில்லே சுமதி-”

"சரி! அதை அப்புறமா யோசிக்கலாம்! இப்ப நீ என்ன சொல்றே அம்மா? நான் உங்கூட உடனே புறப்பட்டு யோகாம்பா அத்தை வீட்டுக்கு வரணும்னுதானே? வரேன். அடுத்து நான் ஹீரோயினா நடிக்கப் போற படத்திலே டான்ஸ் ஆடணும்கிறதுக்காக ஏகப்பட்ட பணச் செலவிலே இங்கே இந்த மாஸ்டரை எனக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்கச் சொல்லி நியமிச்சிருக்காங்க. இதோ பேப்பர்லாம் பாரு! என் படத்தோட முழு முழுப்பக்கம் விளம்பரம்கூட பண்ணியாச்சு. இந்த விளம்பரத்தில் எல்லாம் என்ன போட்டிருக்குன்னு நீயே உன் கண்ணாலே பாரும்மா.'புத்தம் புதிய அழகு மலரான ஓர் இளம் கல்லூரி மாணவியையே கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறோம்’னு கொட்டை எழுத்திலே போட்டிருக்காங்களா இல்லியா பாரு? இவ்வளவு விளம்பரத்துக்குமாக் கால் லட்ச ரூபாய்க்கு மேலே செலவாகி இருக்குங்கறாங்க” ⁠"ஆனா என்னடி? நீதான் இந்தப் படத்திலே நடிக்கணும்னு எந்த சாஸ்திரத்திலே சொல்லியிருக்கு? வேற யாராவது ஒரு கல்லூரி மாணவியைப் போட்டுப் படத்தை எடுத்துக்கட்டுமே?”

"அதெப்படிம்மா சாத்தியம்? இத்தனை பெரிசா என்னோட 'ஸ்டில்ஸை'ப் போட்டு அதுக்குக் கீழேதானே 'கல்லூரி மாணவியை அறிமுகப்படுத்தறோம்'னு எழுதியிருக்காங்க...”

சுமதி இதைச் சொல்லுகிறவரை அவள் எடுத்து நீட்டிய தினசரிப் பேப்பர்களைப் பாராமுகமாக இருந்த அவளுடைய தாய் இப்போது அவற்றை ஒவ்வொன்றாகக் கூர்ந்து பார்த்தாள். பெண்ணின் அழகான பெரிய பெரிய புகைப்படங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்தப் படங்கள் எதற்காக என்ன நோக்கத்தோடு எப்படி வெளியிடப்பட்டிருந்தன என்பதைக் கண்டு எரிச்சலாகவும் துயரமாகவும் இருந்தது.

"பெத்த தாயைக் கூடக் கலந்து பேசிக்கணும்னு தோன்றாமே இத்தனை பெரிய காரியத்துக்கு எப்படிடீ தைரியம் வந்தது உனக்கு? இப்போ உன்னை ஏமாத்திக் கடத்திக்கிட்டுப் போயிட்டதாக இந்தப் புரொட்யூஸர் மேலே நான் கேஸ் போட்டா என்னடீ பண்ணுவே?”

⁠"அப்படி ஒரு கேஸ் நீ போடவே முடியாதும்மா! நான் மேஜரான பொண்ணு. இன்னும் உன் முந்தானைக்குள்ளே ஒழிஞ்சிண்டிருக்கிற பழைய சின்னக் குழந்தை 'சுமி' இல்லே, எனக்கு வயசாச்சு...” இதை விளையாட்டாகத் தான் அவள் சொன்னாலும் இந்தச் சொற்கள் அப்போது அவளுடைய தாயை வாயடைக்கச் செய்து விட்டன. தாய் யோசனையில் ஆழ்ந்துவிட்டாள்.

சுமதி கன்னையாவிடமும், மேரியிடமும் போய் அன்று மாலைவரை தாயுடன் வெளியே உறவினர்கள் வீட்டுக்குப் போய்வர அனுமதி கேட்டாள். முதலில் அவர்கள் ஏனோ தயங்கினார்கள். மேரியை நோக்கிக் கன்னையா ஏதோ ஜாடை பண்ணினார். உடனே மேரி, "சுமதீ! இங்கே வா. ஒரு நிமிஷம் தனியா உங்கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்று சுமதியை அறையின் ஒரு மூலைக்குக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போனாள். சுமதி ஒன்றும் புரியாமலும் மனத்தில் மேரி தன்னிடம் என்ன கேட்கப் போகிறாள் என்ற அனுமானம் கூட இல்லாமலும் அவளோடு சென்றாள். அறை மூலைக்குப் போனதும் பேசத் தொடங்கு முன் அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டு குரலை மிகவும் சன்னமாகத் தாழ்த்தி, "காஷ்மீர்லே நடந்ததையெல்லாம் உன் மதர்கிட்டச் சொல்லியிருப்பியோன்னு கன்னையா பயப்படறாரு, நீ கெட்டிக்காரப் பொண்ணு. அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன்னு நான் அவருக்கு உறுதி சொல்லியிருக்கேன். நீ சொல்லியிருக்க மாட்டியே?..” என்று கேட்டாள் மேரி.

அதைக் கேட்டுச் சுமதிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவளால் இதற்குப் பதில் சொல்லவே முடியவில்லை. ஞாபகப்படுத்தப்பட்ட விஷயம் எதுவோ அதனால் திக்பிரமை பிடித்துப்போய் அப்படியே நின்று விட்டாள் அவள்.

“என்னடீ? சொல்லிட்டியா?”

வார்த்தைகளால் பதில் சொல்லும் சக்தியைச் சுமதி இழந்துவிட்டிருந்தாள். ஆனால் மேரி அதே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கவே பதில் சொல்லாவிட்டால் அவள் விடமாட்டாள் என்று படவே, 'சொல்லவில்லை’ என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் அசைத்தாள். உடனே மேரி தயாரிப்பாளர் கன்னையாவை நோக்கி "அவ ஒண்ணும் அதெல்லாம் சொல்லலியாம்! எதுக்கும் நாளைக்குக் காலையிலே காண்ட்ராக்ட் எழுதிக்கலாம்! ரெண்டு தரப்புக்குமே அதுதான் நல்லது” என்று அந்த மூலையிலிருந்தே இரைந்து சொன்னாள்.

அவள் அதுவரை அதைச் சொல்லவில்லை என்பதில் நிம்மதியும் அதற்கு மேலும் எப்போதாவது சொல்லிவிடக் கூடாதே என்பதில் எச்சரிக்கையும் அடைந்தார்கள் அவர்கள். அவள் கேட்டபடியே அன்று மாலைவரை தாயோடு வெளியே போய்வர அவளை அனுமதித்தார்கள். ஆனால் தங்கள் கம்பெனிக் காரிலேயே போய் வருமாறு தனக்கு மிகவும் நம்பிக்கையான டிரைவரைப் போட்டு அனுப்பினார் கன்னையா. "சுமதியை இரயிலேறிப் போகவிடக்கூடாது. அவள் தாயுடன் ஊருக்குப் போகிறாள் என்பதுபோல் தெரிந்தால் உடனே எனக்கு எங்கேயிருந்தாவது ஃபோனிலே சொல்லு" என்று டிரைவரிடம் இரகசியமாகச் சொல்லியியிருந்தார் கன்னையா.

கன்னையாவின் காரில்தான் சுமதியும் அவள் தாயும் யோகாம்பாள் அத்தை வீட்டுக்குப் போனார்கள். யோகாம்பாள் அத்தை வீடு மகாலட்சுமி தெருவில் இருந்தது.

அங்கே போனதுமே அத்தையும் அம்மாவுமாகப் பேசி, "இவ ஜாதகப்படி ஒரு பரிகாரம் பண்ணனும். இங்கே பக்கத்திலே மந்திரிக்கிறது பார்வை பார்க்கிறதுலே கெட்டிக்காரரான வேளார் ஒருத்தர் இருக்கார். அவரை வரச் சொல்லி மந்திரிக்கலாம்” என்று முடிவு செய்து வேளாரை வரவழைத்து விட்டார்கள். சுமதியால் அதைத் தடுக்க முடியவில்லை. வேளார் பச்சைத் தண்ணீரை மண் குடத்தில் நிரப்பிப் பயறு, பழம், வெற்றிலை வைத்து வேப்பிலையைத் தண்ணீரில் தோய்த்துச் சுமதியைத் தலைவிரி கோலமாக உட்கார வைத்து மந்திரிக்கத் தொடங்கினார்.

"குழந்தை தூர தேசத்திலே போயி இருந்தப்பப் பயந்துக்கிட்டிருக்கு; சரியாயிடும்” என்று சொல்லி மடியிலிருந்து திருநீற்றுப் பையை எடுத்துச் சுமதியின் நெற்றியில் வேளார் தானே விபூதி பூசினார்.

'காஷ்மீர் போனாளோ இல்லியோ? அதைத்தான் சொல்றாரு, அங்கே பயந்துண்டிருக்கா” - என்று அம்மா தானாகவே ஆரம்பித்தாள்.

சுமதிக்குக் கண்களில் நீர் மாலைமாலையாக வடிந்தது. "பயப்படாதேம்மா! எல்லாம் ரெண்டு நாளி லேயே சரியாயிடும்” என்றார் வேளார். சுமதிக்கோ மேலும் அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.
------------

அத்தியாயம் 19

யோகாம்பாள் அத்தை வீட்டில் தனக்குப் பார்வை பார்த்து மந்திரிப்பது என்ற பெயரில் நடந்த எல்லாக் காரியங்களையும் அளவு மீறிய நிதானத்துடன் பொறுத்துக் கொண்டாள் சுமதி. அவளுடைய பொறுமை யும் மெளனமும் அவள் அம்மாவுக்கே ஆச்சரியத்தை அளித்தன. ⁠ மந்திரிப்பதற்கு வந்திருந்த வேளாருக்குப் பத்து ரூபாய் தட்சிணையும், வெற்றிலை பாக்கும் பழமும் வைத் துக் கொடுத்து அனுப்பிவிட்டு அம்மா ஊருக்குத் திரும்பு வது பற்றிய பேச்சை மெதுவாக ஆரம்பித்த போதுதான் சுமதி உடனே பதில் சொல்ல வாய் திறந்தாள்.

"நான் இனிமேல் எந்தக் காலேஜிலேயும் எந்த ஊர்லேயும் படிக்கிறதா உத்தேசம் கிடையாது அம்மா! அப்படி ஒரு எண்ணம் உனக்கு இருந்தா அதை இப்பவே நீ மறந்துடு”-

'இப்போ எங்கூட ஊருக்காவது வருவியோ இல்லியோ? நீ படிக்காட்டாக் கூடப் பரவாயில்லே.”

"அதுவும் உடனே சாத்தியப்படாது அம்மா! நான் கதாநாயகியா நடிக்கப் போற சினிமாவுக்காக நாளைக்குக் காண்ட்ராக்ட் ஃபாரம் கையெழுத்தாகும். இங்கேயே இருந்து சீக்கிரமாகப் படத்தை முடிச்சுக் கொடுத்து நான் நல்ல பேரெடுக்கணும்.”


"உனக்கு நான் பெரிசா-சினிமாலே நடிக்கிறது பெரிசாடீ?”

"இப்படியெல்லாம் கேட்டால் நான் பதில் சொல்றது கஷ்டம் அம்மா”

இந்தச் சமயத்தில் யோகாம்பாள் அத்தையையும் சாட்சிக்கு இழுத்தாள் சுமதியின் தாய். ஆனால் சுமதி பிடிவாதமாக ஊருக்கு வர மறுத்து விட்டாள். யோகாம்பாள் அத்தையின் கணவர் குறுக்கிட்டுச் சுமதிக்கும் அவள் தாய்க்கும் இடையே சமாதானப்படுத்தி வைத்தார்.

"அவ ஒண்ணும் பச்சைக் குழந்தை இல்லே! நீங்க ஊருக்குப் புறப்பட்டுப் போங்கோ. நாங்க பார்த்துக்கறோம். அவ இங்கேயே தங்கிண்டு நடிக்கிறதுக்காக ஸ்டுடியோவுக்குப் போகவேண்டிய நேரத்துக்கு மட்டும் போயிட்டு வரட்டும். மத்தவேளையிலே வீட்டோட இருக்கட்டும், ஒண்ணும் பயப்படாதீங்கோ!”

சுமதிக்கு இந்த யோசனையும் அவ்வளவாகப் பிடிக்க வில்லைதான். ஆனால் தாயிடமிருந்து தப்ப இதற்காவது இசைவதைத் தவிர வேறு வழி இல்லை என்று தோன்றியது அவளுக்கு. அத்தை வீட்டில் இருக்க சுமதி விரும்ப வில்லை. ஆனால் வேறு வழி இல்லை. இணங்க வேண்டியிருந்தது. -

"மாமா சொல்ற இந்த யோசனையை ரெண்டு பேரும் ஒத்துக்கலாம். நான் இங்கேயே தங்கிண்டு நடிக்கப் போயிட்டு வரேன்” என்றாள் சுமதி. அம்மா இதற்கு முழு மனத்தோடு இசைந்த மாதிரிப் பதில் சொல்ல வில்லை... "எப்படியோ உனக்குத் தோணினதைப் பண்ணு” என்று சொல்லிக் கொண்டே தான் இரயிலுக்குக் கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளத் தொடங்கினாள் அவள்.

"கொஞ்சம் விட்டுப் பிடியுங்கோ. ரொம்பத்தான் விரட்டினீங்கன்னா இந்தக் காலத்துப் பெண்கள் தாங்காது. அதான் கொஞ்சநாள் இங்கே இருக்கட்டும். நாங்க பார்த்துக்கறோம்னு சொன்னேனே? நான் சொல் றதைக் கேளுங்கோ” என்று யோகாம்பாள் அத்தையின் கணவர் மீண்டும் குறுக்கிட்டுச் சொல்லவே சுமதியின் தாய் கொஞ்சம் அடங்கினாள்.

இரவு எட்டுமணிக்கு சுமதியின் அம்மாவுக்கு மதுரை போக இரயில் இருந்தது. அங்கேயே சுமதியும் அவள் அம்மாவோடு உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்றாள் யோகாம்பாள் அத்தை. சுமதி மறுக்கவில்லை. சாப் பிட்டாள். சாப்பிடும்போது அம்மா சுமதியிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவள் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. இரயிலுக்குப் புறப்படும்போது, 'கம்பெனிக் காரிலேயே உன்னை ஸ்டேஷன்லே கொண்டு போய் விட்டுடறேன் அம்மா” என்று சுமதியாக முன்வந்து பேசியபோது அம்மா நேரடியாகச் சுமதியிடம் பதில் சொல்லாமல் யோகாம்பாள் அத்தையின் பையனைக் கூப்பிட்டு, "நீ கொஞ்சம் எங்கூடத் தெரு முனைவரை வந்து ஒரு ஆட்டோ ரிக்ஷாப் பார்த்துக் குடு அப்பா, உனக்குப் புண்ணியமாப் போறது” என்று அவனைக் கூட அழைத்துக் கொண்டு போய்விட்டாள். வேண்டுமென்றே அம்மா சுமதியிடம் போய் வருகிறேன் என்று சொல்லிக் கொள்ளவில்லை! சுமதியின் அருகே நின்றவர்களிடம் கூடச் சொல்லி விடைபெற்றுக் கொண்டாள். ஆனால் சுமதியிடம் மட்டும் சொல்ல வில்லை.

"இதென்ன சின்னக் குழந்தை முரண்டு மாதிரி.? குழந்தைகிட்ட ஒரு வார்த்தை சொல்லிண்டு போங்கோ !” என்று அத்தையும் அத்தை கணவரும் கெஞ்சியதுகூடச் சுமதியின் தாயை அசைக்கவில்லை.

"தான் செய்யறதை எல்லாம் அவ எங்கிட்டச் சொல் லிண்டுதானா செய்திருக்கா ? நம் மக்கிட்ட எதையும் சொல்லிக்காதவாளுக்கு நாம என்ன சொல்றது?’ என்று படியிறங்குகிறபோது சுமதியின் அம்மாவிட மிருந்து இதற்குப் பதில் வந்தது. சுமதிக்குக் கண்களில் மெல்ல மெல்ல நீர் சுரந்தது. அம்மா சொல்லிக் கொள் ளாமலே ஊருக்குப் போகிறாளே என்பதனால் மட்டும் அல்ல, தாயிடம் கூடச் சொல்லிவிட முடியாத களங்கம் தன்னிடம் ஏற்பட்டு விட்டதையும் தனக்கு மிகவும் வேண்டியவர்களிடமே அந்நியமாகி விட்டாற்போல் மனத்தால்தான் விலகி நிற்கும் தன் நிலைமையையும் எண்ணியபோது அவளுக்கு அழுகை வந்தது. பத்து நிமிஷத்துக்கெல்லாம் அம்மாவை ஆட்டோ’வில் ஏற்றி விட்டுவரச் சென்ற பையன் திரும்பி வந்து சேர்ந்தான்.

'மாமியை ஆட்டோ பேசி எக்மோருக்கு ஏத்தி யனுப்பியாச்சு” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான் பையன். அதுதான் சமயமென்று ‘நான் புறப்படறேன் மாமா” என்று சுமதி கிளம்பத் தயாரான போது, “கம்பெனி வண்டியைக் காலம்பர வரச் சொல் லித் திருப்பி அனுப்பி நீ இங்கேயே படுத்துக் கோம்மா” என்று குறுக்கிட்டார் யோகாம்பாள் அத்தை யின் கணவர்.'

"நாளைக்கு நான் நிச்சயமா இங்கே வந்துடறேன் மாமா என்மேல சந்தேகப்படாதீங்கோ. ஆனா இன்னிக்கு ஒரு மாற்றுப் புடவைகூடக் கையிலே எடுக்காமே நான் வந்திருக்கேன். என் பெட்டி படுக்கை சாமான்களெல் லாம் அங்கே இருக்கு. தனி வீடு மாதிரி ஒதுக்குப்புறமான போர்ஷன்லே நம்பிக்கையான வேலைக்காரி ஒருத்தியின் துணையுடன்தான் நான் இருக்கேன். சொல்லாமக் கொள்ளாம இப்பிடி வந்த இடத்திலே தங்கிட்டா அந்தப் புரொட்யூஸர் நான் சினிமாவிலே நடிக்கிறதுக்குப் பயந்து ஒடிப்போயிட்டேனு நினைச்சாலும் நினைப்பாரு. பாவம் என்னை நம்பிப் பத்திரிகைகள்ளே கூட நிறைய முழுப் பக்க விளம்பரம்லாம் பண்ணிட்டார். என்னை என் மனசு கோணாமல் ரொம்ப கெளரவமாக நடத்த வேணும்கிறத்துக்காகத்தான் புரொட்யூஸர் காரையும் டிரைவரையும் எங்கூட அனுப்பிச்சிருக்கார். அந்த மரியா தையை நான் காப்பாத்திக்கனுமா இல்லியா? நீங்களே சொல்லுங்கோ மாமா...”

அவருக்கும் அவள் சொல்வது நியாயமென்றே பட்டது. “சரி போயிட்டு வா, ஆனா நாளைக்காவது அவங்க மனசு கோணாமே விஷயத்தைச் சொல்லிட்டுச் சாமான்களை எல்லாம் எடுத்துண்டு இங்கே வந்துடு” என்று அந்த மாமா விடை கொடுத்தார். அத்தையிடமும், குழந்தைகளிடமும் கூடச் சொல்லிக்கொண்டு விடை பெற்று வெளியே தெருவுக்கு வந்து காரில் ஏறிக் கொண்டாள் சுமதி. மறுபடி கம்பெனிக்குத் திரும்பிய போது மேரியும் கன்னையாவும் வெளியே தோட்டத்துப் ‘புல்வெளி'யில் நாற்காலிகளைப் போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சுமதி காரில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்ததும், 'சுமதி! அப்புறம் உள்ளே போக லாம். இங்கே வா. இப்படி உட்காரு, உங்கிட்டக் கொஞ் சம் பேசணும்” என்று மேரியே அவளைக் கூப்பிட்டாள்.

"ஏன் மேரி அவசரப்படுத்தறே? உள்ளே போறதுன் னாப் போயிட்டு முகம் கிகம் கழுவிகிட்டு வரட்டுமே?” என்று கன்னையா குறுக்கிட்டுச் சொன்னார்.

"பரவாயில்லை. இப்பவே வரேன்” என்று சுமதி அப்போதே வந்துவிட்டாள். மேரியும் கன்னையாவும் அமர்ந்திருந்தது தவிர, மூன்றாவதாக ஒரு நாற்காலியும் அங்கே இருந்தது. அதை அருகே இழுத்துப் போட்டுக் கொண்டு சுமதி மேரியின் பக்கம் உட்கார்ந்தாள். மேரி தான். முதலில் பேச்சைத் தொடங்கினாள்.

“என்ன ? உங்கம்மா இன்னும் இருக்காளா? ஊருக்குப் போயாச்சா ?”

‘போயாச்சு. கொஞ்ச நாழிக்கு முன்னேதான் புறப் பட்டுப் போறா. நானும் கூடவே ஊருக்கு வந்தா கணும்னு சொன்னா. படத்துலே நடிக்கிறேன்னு வாக்குக் குடுத்தாச்சு நடிச்சிட்டுத்தான் வரமுடியும்னு சொல்லிட் டேன்.”

"பரவாயில்லியே. சபாஷ்! அப்படித்தான் தைரியமா ஃபேஸ் பண்ணனும்” என்றார் கன்னையா, மேரி ஒரு தாளைச் சுமதியிடம் நீட்டினாள். - -

"இதோ இதுதான் நீயும் நம்ம புரொட்யூஸர் சாரும் பண்ணிக்கப்போற காண்ட்ராக்டோட ட்ராஃப்ட். ஒரு தடவை படிச்சுத்தான் பாரேன். நீ படிச்சு ஓ.கே. பண் னினப்புறம்தான் இதை நான் டைப் பண்ணக் கொடுக் கணும். கன்னையா சொல்லலானார். "எந்தப் புரொட் யூஸ்ரும் இப்பிடி எடுத்த எடுப்பிலே ஒரு காலேஜ் கேர்ளை அப்பிடியே ஸ்டிரெயிட்டா காண்ட்ராக்ட்” போட்டு ஹீரோயினாப் போடறத்துக்குத் துணியமாட்டான் அம்மா! உனக்காகவும் உன்னோட தங்கமான குணத்துக் காகவும் மேரி சொல்றாளேங்கிறத்துக்காகவும் நான்தான் துணிஞ்சு இதை செய்றேன்ம்மா."

சுமதி அதை வாங்கிப் படிக்க ஆரம்பித்தாள். சுமதிக்கு மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்தில் கன்னையா வின் படங்களில் நடிப்பதற்கு ஐந்து வருட காலத்துக்கு அந்த ஒப்பந்தம் எழுதப்பட்டிருந்தது. படம் எடுக்கப் பட்டாலும் எடுக்கப்படாவிட்டாலும் அந்தச் சம்பளம் தரப்படும் என்றும், இந்த ஒப்பந்தகால அளவிற்குள் கம்பெனி அனுமதிபெற்று அவள் வேறு வெளியார் தயாரிப்புக்களில் நடிக்க நேரிட்டால் அந்த நடிப்புக்கான வருமானம் முழுவதும் கன்னையாவைச் சேரும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. சாட்சிக் கையெழுத்துக்களை மேரியும் டான்ஸ் மாஸ்டரும் போடுவார்கள் என்று கன்னையா சொன்னார். சுமதிக்கு அந்த ஒப்பந்தத்தில் கோளாறுகள் எதுவும் இருப்பதாக மேலோட்டமாய்ப் பார்த்ததில் தெரியவில்லை.

"டைப் பண்ணச் சொல்லிடுங்க. நாளைக்குக் காலம் பர வடபழநி கோயிலுக்குப் போய் அர்ச்சனை பண் னிட்டு வந்து நான் இதிலே கையெழுத்துப் போட்டுத் தந்துடறேன்” என்றாள் சுமதி.

"கோவிலுக்குத்தானே? நானே உன்னைக் கார்லே இட்டுக்கினு போறேன்மா, புரொட்யூஸர்ங்கிற முறை யிலே நீ நல்லா நடிச்சுப் பேர் வாங்கணும்னு நானும் சாமியைக் கும்பிடணுமே? இல்லியா?”

சுமதி கன்னையாவைப் பார்த்துச் செயற்கையாக முகம் மலருவதற்கும், சிரிப்பதற்கும் முயன்றாள். சிரிப்பு வரவில்லை முகமும் மலரவில்லை.

"சாரிட்ட விசுவாசமா நடந்துக்கோ. நீ அமோகமா முன்னுக்கு வருவே, அதிலே சந்தேகமே இல்லே” என் றாள் மேரி. கன்னையாவும் சுமதியும் மறுநாள் காலை வடபழனி கோவிலுக்குப் போய்விட்டு வந்ததும் ஒப்பந்தம் பரஸ்பரம் கையெழுத்தாயிற்று. தயாரிப்பாளர் கன்னையா அட்வான்ஸ் என்று ஒரு மூவாயிரம் ரூபாய்க்குச் செக் எழுதிச் சுமதியிடம் கொடுத்தார். இந்த ஒப்பந்தம் நடந்த மூன்றாவது நாளோ, நான்காவது நாளோ புதுப்படத்துக்குப் பூஜை போட்டார்கள். மறுநாளே புதுப்படத்துக்காக, ஒரு காபரே காட்சியில் இரவு நடனக்காரியாக அவள் நடிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

அந்தக் காட்சிக்கான கால்வீட் இரவு பத்தரை மணிக்குப் போடப்பட்டிருந்தது. சுமதிக்கு உடலின் இரு பகுதியும் ஏதோ பெரிய இறக்கைகள் வைத்துக் கட்டி முக்கால் நிர்வாணமாக ஒரு தோற்றத்தில் இரவு விடுதி யில் அவள் நடனமாடி வருவதாக ஒரு காட்சியாக அது வர்ணித்துச் சொல்லப்பட்டது. .

ஆனால் என்ன காரணத்தாலோ அந்தக் காட்சியை ஒரு டிரிங்ஸ் பார்ட்டியாக நடத்தினார் கன்னையா. மேரியின் செயிண்ட் தாமஸ் மவுண்ட் ரெக்ரியேஷன் கிளப்பிலும் அன்றொரு நாள் மைகெய்ஷா சினிமா விலும் பார்த்த பல பிரமுகர்களை இந்தக் காபரே' காட்சி ஷூட்டிங்கின்போதும் சுமதி அங்கே பார்த்தாள். அந்த முக்கால் நிர்வாணக் காட்சியில் அப்படிப் பலருக்கு முன் நிற்கவே அவள் கூசினாள். கன்னையாவோ அந்தத் தோற்றத்தோடு அவள் நிற்கையிலேயே பல பிரபலஸ்தர் களை அவள் அருகே அழைத்து வந்து அவளுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். சுமதிக்குச் சந்தேகம் ஏற்பட்டது. தன்னுடைய நிர்வாணத்தை அறிமுகப்படுத் தவே அவர்களை எல்லாம் கன்னையா தன்னருகே அப்படி இழுத்து வந்து விசேஷமாக அறிமுகப்படுத்துவது போல நடிக்கிறாரோ என்று சுமதிக்குத் தோன்றியது. அன்று செம்பரம்பாக்கத்தில் எடுத்த அவுட்டோர்’ காட்சி தொடங்கி ஒவ்வொன்றாகச் சிந்தித்தால் தொடர்ந்து கன்னையாவும், மேரியும் தன்னை முக்கால் நிர்வான உடம்புடனேயே காமிராவுக்கு முன்னால் நிறுத்துவதை அவள் சம்சயிக்கத் தொடங்கினாள். ஆனால் அதிலிருந்து தப்ப அவளுக்கு வழி தெரிய வில்லை. மேரியோ அவளுடைய அப்போதைய மன நிலை புரியாமல், "கூச்சப்படாதே சுமதி: கூச்சப்பட்டால் நடிக்க முடியாது” என்று சுமதியை உற்சாகப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு அடிக்கடி அவளருகே வந்து சொல்லிக் கொண்டிருந்தாள். சுமதிக்கு மனமும் உடலும் பதறின. காமிராமேன், டைரக்டர், ஸ்வுண்ட் என்ஜீனியர் எல்லாரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஃப்ளோரில் படப்பிடிப்பு என்று பேர் பண்ணினாலும் கன்னையா தன்னை நிர்வாணமாக நிறுத்தி நகரின் ஆஷாட பூதிகளுக்கு உண்மையாகவே ஒரு காபரே’க் காட்சியை நல்கித் தலைக்கு ஐநூறு, ஆயிரம் என்று அவர்களிடம் பணம் வசூல் பண்ணிக் கொண்டிருக்கிறாரோ என்றுகூட அவள் சந்தேகப்படத் தொடங்கினாள்.

‘வெள்ளம் தலைக்கு மேலே போயாச்சு! இனிமேல் ஜான் போனாலென்ன? முழம் போனாலென்ன?’ என்று அவளுக்கே உள்ளூர ஒரு மன ஆறுதலும் ஏற்பட்டு அவள் ரோஷ உணர்ச்சியை அமுக்கவும் தொடங்கி யிருந்தது. பத்தே நிமிஷத்தில் எடுக்க முடிந்த அந்தக் காபரேக் காட்சியை நள்ளிரவு பன்னிரண்டு மணிவரை நீடிக்கவிட்டார் கன்னையா. நேரம் ஆக ஆகச் சுமதிக்கு அந்த உடையில் அப்படிப் பலர் நடுவே நிற்பது பழகி விட்டாற் போலிருந்தது. திரும்பத் திரும்பப் பிரமுகர் களோடு அவளருகே வந்து அவளை அலுக்காமல் சலிக்காமல் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்கள் கன் னையாவும் மேரியும். தரகர்கள் கிராக்கியை வாடிக்கையாளர்களுக்குக் காட்டுவதுபோல் அது பிசகாமல் நடந்து கொண்டிருந்தது.
----------

அத்தியாயம் 20

அவர்கள் தன்னைக் கதாநாயகியாகப் போட்டு எடுக்கப் போகிற படம் என்ன, தன்னோடு, அதில் வேறு யார், யார் நடிக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு முறையாக எப்போது தொடங்கும், எப்போது முடியும் எதுவுமே சுமதிக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படவில்லை. சில மாலை வேளைகளில் யோகாம்பாள் அத்தை வீட்டுக்குச் சென்று இரவு அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் காலைதான் தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தாள் அவள். வேறு சில மாலை வேளைகளில் தயாரிப்பு அலுவலகத்திலேயே யாரோடாவது நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்துவிட்டு இரவு அங்கேயே தங்கிவிடவும் செய்திருக்கிறாள். எதிலும் அவள் கண்டிப்பாக இருந்துகொள்ள முடியவில்லை. முடியவுமில்லை, யோகாம்பாள் அத்தை வீட்டில் வாக்குக் கொடுத்தபடி தினம் இரவு அங்கே தங்கப் போகவும் இல்லை. போகாமலும் இல்லை. -

கன்னையாவின் தயாரிப்பு அலுவலகத்துக்கு அருகே இருந்த பாங்கு கிளை ஒன்றில் சுமதியின் பெயருக்கு ஒரு கணக்குத் திறந்து வைக்கப்பட்டது. தனக்குத் தரப் பட்ட முதல் செக்கை அந்தக் கணக்கில் போட்டாள் அவள். தொடர்பாகவும் திட்டமிட்டும் படப்பிடிப்பு நடக்கவில்லை என்றாலும் அவ்வப்போது அன்று எடுக்கப்பட்ட நடனக் காட்சியைப் போலத் துண்டு துண்டாகச் சுமதியை வைத்து எதையாவது எடுத்தார்கள். அதில் சுமதியை மட்டுமே நடிக்கச் செய்தார்கள். அந்தக் காட்சிக்குப் பலர் பார்வையாளர்களாக அழைக்கப் பட்டார்கள். பலருக்குச் சுமதியும், சுமதிக்குப் பலரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். நிறையப் பெரிய மனிதர்கள், தொழிலதிபர்கள் வீட்டுக்கெல்லாம் சுமதியைக் கப்பல் போன்ற சவர்லெட் காரில் ஒரு வேலையுமின்றி உடனழைத்துக் கொண்டு போய்விட்டு வந்தார் கன்னையா.

காஷ்மீரிலிருந்து திரும்பிய இருபதாவது நாளோ முப்பதாவது நாளோ சுமதிக்கு வழக்கமான லேடி டாக்டர் ஒருத்தியிடம் அஆத்துச் சென்று ஊசி போட்டு மாத்திரைகள் சில வாங்கிக் கொடுத்தாள் மேரி. அதை யடுத்து வீட்டில் உட்காரவேண்டிய நாட்களில் தவறாமல் உட்கார்ந்த பின்புதான் சுமதிக்குப் பயம் போய் நிம்மதி வந்தது.

'சுமதி! நீ எதுக்கும் பயப்பட வேண்டியதில்லை. இந்த லேடி டாக்டர் எங்களுக்கு ரொம்ப வேண்டியவ. யாரிட்டவும் எதையும் சொல்லமாட்டா. ஒரு தடவை இங்கே மேலே டான்ஸ் படிக்க வந்த பொண் ஒருத்திக்கு ரெண்டு மாசமோ மூணு மாசமோ கர்ப்பமே ஆயிடுச்சு. டான்ஸ் மாஸ்டர் கையைப் பிசைஞ்சுக்கிட்டு நின்னான். அந்தப் பொண்ணு 'கிணத்துலே குதிச்சுச் சாகப் போறேன்னு' அழுதது; இந்த லேடி டாக்டரிட்டக் கூட்டிக்கிட்டுப் போய்த்தான் சரிப்படுத்தினேன்” என்று மேரி கூறினாள். அவள் தன்னைத் தைரியப்படுத்து கிறாளா அல்லது மேலும் மேலும் தாராளமாகத் தான் கெட்டுப் போவதற்குத் துரண்டுகிறாளா என்பது புரியாமல் சுமதி மருண்டாள்.

தயாரிப்பாளர் கன்னையாவைப் பொறுத்தவரை சுமதியிடம் மிகமிகத் தாராளமாக நடந்து கொண்டார். ஒருநாள் அவள் ஏதோ ஜவுளிக் கடைக்குப் போக வேண் டும் என்றாள். அந்த ஜவுளிக் கடை கூப்பிடு தூரத்தில் தான் இருந்தது. பாண்டி பஜாருக்கு அவள் இருந்த அபிபுல்லா ரோடிலிருந்து நடந்தே கூடப் போய்விட்டு வந்துவிடலாம். கன்னையாவிடம் போய்க் கடைக்குப் போகப் போவதைச் சொன்னதும், 'என்னம்மா நீ இன்னும் விவரந் தெரியாத பொண்ணாயிருக்கே, உன்னை மாதிரிப் பத்துப் பத்திரிகையிலே படம் எல்லாம் வெளி வந்து பிரபலமான ஸ்டார் ஒருத்தி அனாதை மாதிரித் தெருவிலே நடந்து போறது நல்லாவா இருக்கும்? நீ அப்பிடி எல்லாம் போகப்பிடாது, அது உனக்கும் மரியாதை இல்லே. உன்னை வச்சுப் படம் எடுக்கிற எனக்கும் மரியாதை இல்லே. இங்கே இருக்கிறதுக்குள்ளே பெரிய சவர்லெட் வண்டியிலே உன்னைக் கடையிலே கொண்டு போய் விட்டுக் கூட்டிக்கிட்டு வர்ரேன்” என்றார். "நீங்க எதுக்குங்க வீணா அலையனும்? நானே போயிட்டு வந்துடறேன்” என்றாள் அவள். “சரி வேண் டாம்னா நான் வரலே. டிரைவரைக் கூப்பிட்டுச் சொல்லிட றேன். நீ போயிட்டு வா. வேணுங்கறதை வாங்கிக்கோ. பணம் ஏதாச்சும் வேணுமா? இந்தா! எதுக்கும் கையோட வச்சுக்கோ இருக்கட்டும்” என்று ஒர் ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவளிடம் எடுத்துக் கொடுத்தார் கன்னையா

"பணம் வேண்டாங்க ஏற்கெனவே நீங்க கொடுத்த 'செக்கை மாத்திக் கொஞ்சம் பணம் எடுத்து வச்சிருக்கேன். அது போறும்னு நினைக்கிறேன்" என்று மறுத்தாள் சுமதி. கன்னையா விடவில்லை.

"அட அது இருந்தா இருக்கட்டுமே அம்மா! இதையும் கூட வச்சுக்க” என்று அவள் வலது கையைப் பிடித்து இழுத்து அதில் நூறு ரூபாய் நோட்டுக்களைத் திணித்தார் அவர். முதுகில் ஒரு செல்லப் பிராணியைத் தட்டிக் கொடுப்பதுபோல் அவளைத் தட்டிக் கொடுத்தார்.

பாண்டி பஜாரில் இருந்த ஒரு பெரிய பட்டு ஜவுளிக் கடைக்குப் போனாள் அவள். கன்னையாவின் டிரைவர் கடை வாசலில் கப்பல் போன்ற அந்த நீளமான சவர்லெட்டை நிறுத்திக் கீழே இறங்கிப் பின் nட்டில் அமர்ந்திருந்த சுமதி இறங்குவதற்காகக் கதவையும் திறந்துவிட்டான். சுமதி கீழே இறங்கவும் அவளுடைய பழைய கல்லூரித் தோழிகள் ரூம்மேட் விமலா உட்பட நாலைந்து பேர் ஹாய் ! சுமதி என்று வந்து அவளைச் சூழ்ந்து கொள்ளவும் சரியாயிருந்தது. சுமதி தற்செயலாக அவர்களை அங்கே சந்தித்தாள்.

'இது உன் காராடி?” என்று கேட்டாள் விமலா. "அப்பிடித்தான் வச்சுக்கோயேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் சுமதி. வேண்டுமென்றேதான் அவளுக்கு அப்படிப் பதில் சொன்னாள் சுமதி.

"உன் சினிமா விளம்பரம் எல்லா டெய்லிஸ்லேயும் முழு முழுப்பக்கம் வந்ததே, அந்தப் படம் எப்படி ரிலீஸாறது ? நாங்கள்ளாம் ரொம்ப ஆவலோட காத்திண்டிருக்கோம்டீ?" என்றாள் மற்றொரு தோழி. "ஐயாம் வெரி வெரி ப்ரெளட் ஆஃப் யூ சுமதி' என்றாள் வேறொரு சிநேகிதி. வேறொரு தோழி சுமதியிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டாள்.

'நீ காலேஜ் படிப்பைப் பாதியிலே விட்டுட்டுச் சினிமாவுக்கு ஓடினது தப்புன்னு விமலா அபிப்ராயப் பட்டா. நான் அப்படி நினைக்கலேடீ சுமதி ! நீ காலேஜிலே படிச்சிண்டே கிடந்தேன்னா இன்னும் ஏழு தலைமுறையானால் கூட இப்படி ஒரு சவர்லே இம்பாலாவிலே வந்து ஜம்னு இறங்க முடியாது. நீ செய்ததுதான் சரி! நம்மைத் தேடி வர்ர அதிர்ஷ்டத்தை நாம காலாலே எட்டி உதைக்கப் பிடாது' என்று சுமதிக்கு அவள் செய்தது சரிதான் என்று நற்சான்றிதழ் கொடுத்தாள் ஒரு சிநேகிதி. சுற்றி நிற்கிற அனைவர் கண்களும் அப்போது தன்னைப் பொறாமையோடு நோக்குவதைச் சுமதி புரிந்து கொண்டாள். சுமதிக்கு உள்ளூரக் கவர்வமாகக் கூட இருந்தது.

"எல்லாரும் வாங்கடி! துணியை செலக்ட் பண்ணி எடுத்திட்டு எங்கேயாவது போய்க் காபி குடிக்கலாம்' என்று தோழிகள் அனைவரையும் தன்கூட அழைத்தாள் சுமதி.

"ஹே. ஆளைப்பாரு. வெறும் காபியோட எங்களை ஏமாத்திடலாம்னு பார்க்காதே. நீ பெரிய ஸ்டாரா யிட்டே உன் ஸ்டேட்டஸுக்கு தகுந்த மாதிரி எங்களுக்கு ஏதாவது பண்ணனும் டீ. எல்லாரையும் இப்பவே தாஜ்கோரமேண்டலுக்குக் கூட்டிண்டு போடி” என்றாள் துடிக்குக்காரியான தோழி.

"நீங்கள்ளாம் வர்ரதா இருந்தா எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லேடீ. தாஜ்கோரமண்டல், சவேரா, இண்டர்நேஷனல் எங்கே கூப்பிட்டாலும் நான் வரத் தயார்' என்று இணங்கினாள் சுமதி. தன்னுடைய உள்மனத்தின் வேதனைக்குத் தற்காலிகமான மாற்றாகப் பயன்படும் அந்தத் தோழியர் கூட்டத்துக்காக அவள் பணம் செலவழிவதைப் பற்றிக்கூட கவலைப்படவில்லை. அவளுக்கு அவர்களுடைய கம்பெனி அப்போது இதமான உணர்வைக் கொடுத்தது. தோழிகள் அவளைச் சூழ்ந்துகொண்டு மொய்த்தனர். அத்தனை தோழி களோடும் கூட்டமாக ஜவுளிக்கடைக்குள் நுழைவது பெருமையாகக்கூட இருந்தது. பத்திரிகைகளில் அவள் படத்தைப் பார்த்திருந்த கடை ஊழியர்கள் சிலர் தங்களுக்குள், "டேய்! இவதான் புதுமுகம் சுமதிடா” என்று தணிந்த குரலில் தன் பெயரைச் சொல்லித் தங்களுக்குள் முணுமுணுத்தது கூட அவளுடைய கர்வத்தை வளர்ப். பதாயிருந்தது. ஒர் ஊழியன் ஒரு வாரத்துக்கு முந்திய தினசரி ஒன்றை எடுத்து நீட்டி அதில் முதல் பக்கத்தி லேயே கவர்ச்சிப் படமாக வெளியாகியிருந்த அவளது முக்கால் நிர்வாண நடனப் படத்தை இன்னொருவனி டம் சுட்டிக் காட்டி அவளைப் பற்றிச் சொல்லிக் கொண் டிருந்ததை அவளே ஒரக்கண்ணால் கவனித்துக் கொண் டே கவனிக்காதது போல் கடைக்குள்ளே போனாள். அதுவும் அவளுக்குப் பெருமையாகவே இருந்தது.

"வாங்கம்மா, புரொட்யூலர் கன்னையாகூட நீங்க வந்துக்கிட்டிருக்கீகன்னு இப்பத்தான் ஃபோன் பண்ணிச் சொன்னாரு” என்று அந்த ஜவுளிக்கடையின் முதலா ளியே எழுந்திருந்து வந்து கைகூப்பி எதிர் கொண்டு தன்னை வரவேற்றபோது சுமதிக்குப் பெருமித உணர்வு ஏற்பட்டது. கன்னையாவின் செயல் அவளை உயர்த்துகிற வகையிலேயே அவள் மனத்தில் புரிந்தது. தோழிகள் முன்னிலையில் அந்தச் சவர்லெட் இம்பாலா சவாரி, உபசாரம், வரவேற்பு எல்லாம் அவளுக்கு மிகவும் பிடித்தி ருந்தன. பெண் என்பவள் இங்கிதமான உபசாரங்களா லும், முகமன் வார்த்தைகளாலும் எந்தக் காலத்திலும் ஏமாற்றப்பட முடிந்தவள் என்ற கருத்துக்கு நிதரிசனமான உதாரணமாக அப்போது சுமதி இருந்தாள். ஒவ்வொரு பெண்ணும் ஆசை மயமானவள், சபலங்கள் நிறைந்தவள். புகழுக்கு வசப்படுகிறவள், உபசாரங்களில் சிக்கிக் கொள்கிறவள் - என்று கன்னையா அனுபவ மூலம் தெரிந்து வைத்திருந்த அளவுகோல் சரியாகவே இருந் தது. சுமதியும் அவள் தோழிகளுமாகப் புடவை ஸெலக்ட் செய்கிற காட்சியைப் பக்கத்து ஸ்டுடியோக்காரரை வரவழைத்து நாலைந்து புகைப்படங்கள்கூட எடுத்துக் கொண்டார் அந்த கடை முதலாளி. "நாளைக்கு ஏதாவது பேப்பர்லே விளம்பரம் பண்றப்போ இன்ன ஸ்டார் எங்க வாடிக்கைக்காரங்கன்னு போடறப்ப, இந்தப் படத்தையும் போடலாம் பாருங்க” என்று சிரித்துக் கொண்டே சொன் னார் கடைக்காரர். அவர்களுக்கு எல்லாம் குளிர்பானம் வரவழைத்துக் கொடுத்து உபசரித்ததோடு மிகவும் மரியா தையாக வாசலில் கார்க் கதவுவரை வந்த வழியனுப் பினார் அவர். தோழிகள் எல்லோரையும் ஏற்றிக் கொண்டு அவர்களோடு நேரே நுங்கம்பாக்கம் ஹை ரோட்டிலிருந்து தாஜ் கோரமண்டல் ஹோட்டலுக்குச் சென்றாள் சுமதி. திடீரென்று "இந்த ஹோட்டல் ஏன் இன்கம் டாக்ஸ் ஆபீஸ்- க்கு எதிரே இருக்குன்னு யாருக்காவது தெரியுமா?’ என்று தோழிகளைக் கேட்டாள் சுமதி.

“தெரியாது! நீதான் சொல்லேன்’ என்றார்கள் தோழிகள்.

"இன்கம் டாக்ஸ் கட்டினப்புறமும் யாரிட்ட லட்ச லட்சமா மீந்திருக்கோ அவங்க இங்கே வந்தால்தான் கட்டுபடியாகும். அதனாலேதான் இன்கம் டாக்ஸ் ஆபீசுக்கு எதிர்த்தாப்லேயே கட்டிப்பிட்டாங்க” என்று சுமதி ஒரு ஜோக் அடித்ததும் தோழிகள் எல்லாம் கலகல வென்று சிரித்தார்கள். அந்த ஜோக்கைப் பாராட்டவும் செய்தார்கள்.

“எப்படியோ நீ இங்கே வர்ர தகுதி உள்ளவள்னு தெரிஞ்சுக்கிட்டதுலே நாங்க சந்தோஷப்படறோம்டீ சுமதி !” என்று விமலா மட்டும் சுமதி சொன்னதை வைத்தே இடக்காக அவளுக்கு மறுமொழி கூறினாள்.

தாஜ்கோரமண்டலில் சாப்பிட்டு முடிக்க இரண்டு மணி நேரம் ஆயிற்று. பில் எண்ணூறு ரூபாய் ஆகி விட்டது. சுமதியிடம் கன்னையா கொடுத்த பணம் இருந்ததால் அவள் தாராளமாகச் செலவழித்தாள். பில்லைத் தோழிகளிடம் காட்டிவிட்டு, "இப்போ சொல்லுங்கடீ! நான் இதுக்குள்ளே நுழையறப்போ இது ஏன் இன்கம் டாக்ஸ் ஆபீசுக்கு முன்னாடி இருக்குன்னு ஜோக் அடிச் சேனே அது எத்தனை பொருத்தம்?” என்று சிரித்தபடியே தோழிகளை வினவினாள் சுமதி.

ஹோட்டலிலிருந்து வெளியேறியதும் தோழிகளை ஹாஸ்டல் வாசலில் கொண்டுபோய் டிராப் செய்தாள் சுமதி.

'ஏண்டி! வார்டனைப் பார்த்துவிட்டுப் போறியா? நீ சவர்லே'யிலிருந்து இறங்கியதை அவள் பார்க்கட்டும்” - என்றாள் விமலா,

"வொய் ஷாட் ஐ ?” என்று முகத்தைச் சுளித்தாள் சுமதி. அவள் தயாரிப்பு அலுவலகத்துக்குத் திரும்பியதும் வாசலிலேயே உலாவிக் கொண்டிருந்த கன்னையாவிடம், “கொஞ்சம் மன்னிச்சிக்குங்க. நேரமாயிடிச்சு, என் ஃபிரண்ட்ஸ்-சங்க சில பேர் வழியிலேயே பார்த்துட் டாங்க” என்றாள்.

"நோ நோ! மன்னிக்கறதாவது ஒண்ணாவது ? இந்தக் கார் உன்னோடதும்மா! உன் சொந்தக்கார் உன் சொந்த வீடுன்னு இதை எல்லாம் நீ நினைச்சால்தான் எனக்குத் திருப்தி” என்றார் கன்னையா. அவருடைய அந்த அளவு கடந்த பிரியம் எதற்கு ஏன் என்பதை அவள் யோசித்துக் கொண்டிருந்தாள். அந்த யோசனை முடியுமுன் அன்றிரவே அது புரிந்தது.
-------------

அத்தியாயம் 21

தோழிகளை தாஜ்கோரமண்டலுக்கு அழைத்துச் சென்று உபசரித்துவிட்டுத் திரும்பிய தினத்தன்று இரவு சுமதி தயாரிப்பாளர் அலுவலகத்தில் தங்குவதாக இல்லை. மகாலெட்சுமி தெருவிலுள்ள யோகாம்பாள் அத்தை வீட்டுக்குப் போய்விடுவதாகத்தான் இருந்தாள். ஆனால் கன்னையாதான் அவளைத் தடுத்தார். மேரியும் வற்புறுத்தினாள். “கொஞ்ச நேரத்திலே என்னோட ஃபைனான்ஷியர் ஒருத்தன் இந்திக்காரன் இங்கே வரான், ஒரு சின்ன லிக்கர் பார்ட்டி இருக்கு நீயும் மேரியும்கூட அதுக்கு இருக்கணும். வர்ரவன் நான் கேட்கிறப்போ எல்லாம் லட்சம் லட்சமா எனக்குக் கடன் கொடுக் கிறவன். நீங்கள்ளாம் கூட இருந்து சுமுகமாப் பழகினிங் கன்னா அவன் ரொம்ப சந்தோஷப்படுவான். கொஞ்சம் தயவு பண்ணனும்” என்றார் கன்னையா. சுமதியால் அதைத் தட்டிச் சொல்ல முடியவில்லை. கன்னையாவே கெஞ்சிக் குழைந்துதான் அவளிடம் அதைக் கேட்டி ருந்தார்.

கல்லூரியில் முதன் முதலாக மேரி கொஞ்சம் கொஞ்சமாக அவளை எப்படி கடன்பட வைத்து வசப் படுத்தினாளோ அப்படியே அதே முறையில் கன்னை யாவும் அவளை மெல்ல நன்றிக் கடன்பட வைத்து வசப்படுத்தி விட்டார். அவளால் எதையும் முகத்தை முறித்தது போல மறுக்க முடியவில்லை, கன்னையா அவளை அடிமைபோல் ஆண்டார். அந்த இந்திக்காரனோடும் கன்னையாவோடும் மேரியோடும் சேர்ந்து அவளும் குடிக்க வேண்டியாதாயிற்று. கார்ச் சவாரியைப் பணப் பகட்டைத் தன்மீது அவசர அவசரமாகத் திணிக்கப் பட்ட நட்சத்திர அந்தஸ்தை - எதையும் இப்போதும் இனிமேலும் சுமதி இழக்கத் தயாராயில்லை. அவற்றை எல்லாம் பகிரங்கமாக இழக்காமல் இருப்பதற்காக வேறுசில விஷயங்களை ரகசியமாகவாவது இழக்கவும் அவள் தயாராகிவிட்டாள். ஒரு சினிமாத் தயாரிப்பாள ரின் பெரிய காரில் ஜவுளிக் கடை வாசலில் போய் இறங்கியபோது அன்று பகலில் முன்பு தன்கூடப் படித்த கல்லூரி மாணவிகளும், கடைக்காரரும் காண்பித்த மரியாதை அவளுக்கு நினைவு வந்ததது. சுமதி பல விஷயங்களை விட்டுக் கொடுக்கவும், அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும் புரிந்து கொண்டு விட்டாள். அவள் மாறுதல்கள் கன்னையாவுக்கும் ஓரளவு புரிந்துவிட்டிருந்தன.

பாதிப் பார்ட்டியிலேயே மேரியும், கன்னையாவும் ஒருவர்.பின் ஒருவராக நழுவிவிட்டார்கள்; அந்த சிந்தி ஃபைனான்ஷியரும், சுமதியும் மட்டுமே தனியாக விடப்பட்டார்கள். அந்தப் பணக்காரர் வந்ததும் அவரை அறிமுகப்படுத்துகிறபோதே, 'சுமதி ! இவருதான் நீ ஹீரோயினா நடிக்கப்போற படத்துக்கு ஃபைனான்ஸ் பண்றவரு, உன்னோட ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாரு. அன்னிக்கு முதல் காஷ் ஷீட், அதான் அந்தக் காபரே ஸீன் எடுத்தமே, அப்பக் கூட வந்து உன்னைப் பார்த்திருக்காரு. நீதான் இன்னிக்கு இவரை எண்டர்டெயின் பண்ணனும். அன்னிக்கே உன் அழகைப் பார்த்து, சார்மிகர்லின்’னு திரும்பத் திரும்ப எங்கிட்டப் புகழ்ந்துக் கிட்டிருந்தாரு” என்று சுற்றி வளைக்காமல் சுமதியிடம் நேராகவே கூறிவிட்டார் கன்னையா. சுமதிக்கும் அவர் என்ன கூறுகிறாரென்று புரிந்துவிட்டது.

மேரியும் கன்னையாவும் - சுமதியையும் அந்தப் பணக்காரனையும் ஏ.ஸி. ரூமில் தனியே விட்டுவிட்டு வெளியேறிய போது இரவு பதினொன்றரை மணி. அந்த சிந்திக்காரன் சுமதியிடம் ஆங்கிலத்தில் பேசினான். எங் கெங்கெல்லாம் 'எஸ்' என்ற எழுத்தை உச்சரிக்க வேண் டுமோ அங்கெல்லாம் எஜ் என்று அதை உச்சரித்தான். ஸோதட் என்பதற்குப் பதில் ஜோதட் என்றும், கர்வ்ஸ் என்பதற்குப் பதில் கர்வ்ஜ் என்றும் அவன் பேசியது கேட்க வேடிக்கையாயிருந்தது.

கன்னையா தனக்கு அறிமுகப்படுத்திய பெண்கள் எல்லோரினும் சுமதிதான் அழகானவள் என்று நற்சான்று வழங்கியபடியே அவளைத் தொட்டுத் தனது காமச் சேஷ்டைகளை ஆரம்பித்தான் அவன். சுமதிக்கு இதயம் மரத்துப் போயிருந்தது. உடம்பு மட்டுமே ஒரு மிஷின் மாதிரி இயங்கியது. ஓரளவு குடித்துச் சுயநினைவு தடு மாறியிருந்தாலும் முதலில் தான் காஷ்மீரில் கன்னையா விடம் இழந்ததை இன்று மற்றொருவனிடம் இழக்கிறோம் என்று மெல்லியதாக ஒரு மனத்தைப் பிசையும் ஞாபகம் உள்ளுற இழையோடத்தான் செய்தது. அதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

அன்று நள்ளிரவு இரண்டரை மணிக்கு அந்த இந்திக்காரன் போனபின் சுமதி படுக்கையில் தளர்ந்து அயர்ந்து கிடந்தாள். மூன்று மணிக்கோ மூன்றரை மணிக்கோ கன்னையா தன்னருகே வந்து படுத்ததுகட்ட அவளுக்குத் தெரியாது; நடுவே ஒருமுறை ஏதோ கைகள் தன்னை இறுகத் தழுவியபோதுகூட இருளில் இந்தி பைனான் வியர் இன்னும் போகவில்லை போலிருக்கிறது என்று தான் அவள் நினைத்தாள். பாதி அசதி-பாதி போதை யில் இருந்த அவள் ஏதோ ஒரு ஞாபகப் பிசகில் அந்த இந்திக்காரனையே திரும்பவும் எண்டர்டெயின் செய்வ தாக நினைத்துக் கொண்டு கன்னையாவை எண்டர் டெயின் செய்திருந்தாள். விடிந்த பின்புதான் அவளுக்கே அது தெரிந்தது. காலை எட்டரை மணிவரை அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை. உடலில் ஒரே அயர்ச்சி, வலி. அடித்துப்போட்ட மாதிரித் துரங்கினாள். எட்டரை மணிக்கு அவளைத் தொட்டு எழுப்பிக் கன்னையாவே பிளாஸ்கிலிருந்து காபியை ஊற்றிக் கொடுத்தார். டிபன் எத்தனை மணிக்கு வேணும் என்று ஒரு வெயிட்டர்’ கேட்பதுபோல அவளிடம் மரியாதையாகக் கேட்டார்.

"நம்ம போஜ்வானிக்கு ஒரே குஷி ! உன்னை மாதி ரிப் பொம்பளை உலகத்திலேயே கிடையாதுங்கிறான். போறப்போ இந்த கவரை உங்கிட்டக் கொடுக்கச் சொல் லிட்டுப் போனான். அவன் இரண்டரை மணிக்குப் போனப்புறம் உனக்குத் துணையா இருக்கட்டும்னு நான் இங்கே வந்து படுத்துக்கிட்டேன்.”

உடனே சுமதி அந்தக் கவரை வாங்கிப் பிரித்தாள். அதில் புத்தம் புது நூறு ரூபாய் நோட்டுகளாக நிறைய இருந்தன. அவற்றை அவள் எண்ணவில்லை. ஒரு பார்வையில் ஆயிரத்துக்கும் மேலாக இருக்கும் என்று தோன்றியது.

"பாத் ரூம்லே நல்ல வெந்நீர் ரெடியாயிருக்கு. வெந்நீர்லே குளி: உடம்புக்கு இதமா இருக்கும். பாத் 'டப்லே ஸெண்டெட் ஹாட்வாட்டர் உனக்காக ரொப்பியிருக்கேன். இந்த ஸெண்ட்கூட நம்ம ஃபைனான்ஷியர் போஜ்வானி ஹாங்காங்கிலிருந்து கொண்டாந்ததுதான்” என்றார் கன்னையா. சுமதி பதிலே சொல்லவில்லை. ஃபோன் மணி அடித்தது. கன்னையா எடுத்தார் "உனக்குத் தான் சுமதி ! யாரோ யோகாம்பாள் அத்தை வீட்டிலே இருந்து கூப்பிடறாங்களாம்” என்று சொல்லி ஃபோனை அவளிடம் நீட்டினார் கன்னையா. சுமதி ஃபோனை வாங்கினாள்.

“மன்னிச்சுக்குங்கோ மாமா! திடீர்னு இங்கே ராத்திரியும் ஷல்ட்டிங் இருக்குன்னுட்டாங்க வர முடி யலே. நான் இப்போ கொஞ்ச நாழியிலே முடிஞ்சா அங்கே வரேன்” என்று ஃபோனில் பதில் சொன்னாள் சுமதி. ஃபோனை வைத்ததும், "மேரி இருக்காளா, வீட்டுக்குப் போயிட்டாளா?” என்று அவள் கன்னை யாவைக் கேட்டாள்.

"அவ ராத்திரியே வீட்டுக்குப் போயிட்டா சுமதி: அங்கே கிளப் ஆளுங்கள்ளாம் வந்திருப்பாங்களே.... வேணா இப்ப ஃபோன்ல அவளைக் கூப்பிட்டுக் குடுக்கட்டுமா ?”

‘'வேண்டாம் ! குளிச்சிட்டு வந்தப்புறம் நானே அவகிட்டப் பேசிக்கிறேன். அவசரம் ஒண்னுமில்லே.” நாளடைவில் சுமதி பலவற்றை ஜீரணித்துக் கொள்ளப் பழகிவிட்டாள் என்பது கன்னையாவுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் தன்னோடு கலகலப்பாகச் சிரித்துப் பேசிப் பழகாமல் அவள் உள்ளேயே வேகிறாள் என்பது ஒரளவு அவரை வருத்துகிற விஷயமாகவும் இருந்தது. அதனால் அவர் வேறு சில தந்திரங்களை மேற் கொண்டார். சுமதி தனியாக இருக்கும்போது அவளுக்கு வேறு மனப்பான்மைகள் தலையெடுத்து ரோஷம் வந்து விடக் கூடாது என்பதற்காக அவள் வேறு வேறு பெருமி தங்களை அடையும்படி செய்தார் அவர். பத்திரிகைக் காரர்களைத் தாமே ஏற்பாடு செய்து அவளைப் பேட்டி காணவும் அவள் படங்களைப் பிரசுரித்துப் புகழவும் வகை பண்ணினார். யாரோ ஒரு மூன்றாந்தரச் சினிமாப் பத்திரிகைகாரனைக் கூப்பிட்டுச் சுமதியின் வாழ்க்கை வரலாற்றை அவளிடமே கேட்டு எழுதி வெளியிடச் செய்தார். எல்லாத் தினசரிகளிலும் சினிமாப் பகுதி வெளிவருகிற தினத்தன்று எப்படியும் சுமதியின் கவர்ச்சிப் படம் ஒன்று தவறாமல் வெளிவருமாறு செய்து கொண்டிருந்தார். தன்னுடைய கைப்பாவையாக அவள் பயன்பட வேண்டுமென்பதற்காக அவளைப் புகழேணி யின் உச்சிக்குத் துரக்கிவிடத் தான் ஏற்பாடுகள் செய்வ தாக அவளே அறியும்படி நடந்து கொண்டார். நீ என்னிடம் வந்திராவிட்டால் இந்தப் பணமும் பவிஷ-ம், பகட்டும் புகழும் உனக்கு வருகிற விதத்தில் வேறு யாராலும் செய்திருக்க முடியாது?’ என்று நிர்ப்பந்தமாக அவளுக்கு அறிவுறுத்துவதுபோல நடந்துகொண்டார் அவர். இன்னொருபுறம் மேரியின் மூலமாகப் பெர்மி எலிவ் ஸொஸைட்டி பற்றிய ஆங்கில நூல்கள், நாவல்கள் ஆகியவற்றைச் சுமதிக்கு நிறையப் படிக்கக் கொடுத்தும், பேசியும், கற்பு, புனிதம் பற்றிய அவள் மனநிலைகளைக் கரைத்துவிடவும் முயன்றார். சுமதியை மிகச் சில மாதங்களிலேயே குடிப்பதற்கும் போதை தரும் எல்.எஸ்.டி., மார்ஜுவானா மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும் சகஜமாகப் பழக்கிவிட்டார். பணத்தாலும் செளகரியங்களாலும், அவளைக் குளிப்பாட்டினார். சலிப்பின்றி அதைச் செய்தார். கன்னையா தாமே முயன்று நகரின் மிகப் பெரிய குழந்தைகள் கான்வென்ட் ஒன்றின் விழாவில் ஒரு பெண் மந்திரியின் தலைமையில் பரிசளிப்பதற்குச் சுமதியை அழைக்கச் செய்தார். அந்த மந்திரியம்மையாரும் சுமதியைப் புகழ்ந்து நாலு வார்த்தைகள் சொல்லிவிட்டு அப்புறம் அவள் பரிசளிப்பது பற்றிக் கூட்டத்தில் அறிவித்தார். அந்த விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்களில் முதல் வரிசையிலேயே சுமதி முன்பு படித்த சிவசக்தி மகளிர் கல்லூரியின் பிரின்ஸிபால் அம்மாள், வார்டன் மாலதி சந்திரசேகரன் எல்லாரும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எதிரேயே தான் மேடையில் வி.ஐ.பி.யாக அமர்ந்திருப்பதில் சுமதிக்கு கர்வமாகக்கூட இருந்தது. பரிசளிப்பு விழா முடிந்ததும் சுமதியின் சார்பில் அந்தக் கான்வென்டிற்கு ஆயிரம் ரூபாய் நன்கொடையாகத் தருவதாக அங்கேயே அந்தக் கூட்டத்திலேயே மந்திரி அம்மாளைவிட்டு அனெளன்ஸ் செய்யவைத்தார் கன்னையா. தானே கூப்பிட்டுக் கொண்டு வந்திருந்த புகைப்படக்காரனைக் கொண்டு சுமதி குழந்தைகளுக்குப் பரிசளிக்கும் காட்சியையும், மந்திரி அம்மாளின் அருகே அழகு மயிலாக அமர்ந்திருக்கும் காட்சியையும், பல படங்கள் பிடித்துக்கொள்ளச் செய்தார். மறுநாள் காலையே பத்திரிகைகளில் அந்தப் படங் களையும் சுமதியின் தாராள மனப்பான்மையையும் பற்றிப் பிரசுரிக்கச் செய்தார்.

சுமதி புகழாலோ, பூரிப்பாலோ அல்லது கன்னையா வோடு, மேரியோடு சேர்ந்து குடிக்கப்பழகியதாலோ சிறிது சதை போட்டுப் பருத்தாள். கொடி போலிருந்த அவள் மொழுமொழுவென்று ஆகி அழகாக உப்பியிருந்தாள். கன்னையா விளம்பரம் செய்த அவள் கதாநாயகி யாக நடிக்கிற படம்தான் இன்னும் தயாராகவில்லை. அதன் விளம்பரங்கள்தான் புதுப்புது விதத்தில் வந்து கொண்டிருந்தன. கன்னையாவின் பண உதவியாளர் களில் பலர் சுமதி அவரிடம் இருக்கிறாள் என்பதாலேயே அவரை மாலை வேளைகளில் அடிக்கடி சந்திக்க வரத் தொடங்கினார்கள். அவருக்கு வேண்டியமட்டும் கடன் தரத் தயங்கிய சிலர் இப்போது எவ்வளவு வேண்டுமானாலும் தரத் தயாராக இருந்தார்கள். சுமதி அவருடைய சக்தி வாய்ந்த முதலீடாக மாறியிருந்தாள். நடுநடுவே வேறு கம்பெனிகளின் படங்களின் சிறுசிறு வேடங்களில் அவளை நடிக்கவிடக் கன்னையா தயங்கவில்லை... ஆனால் எல்லாமே குளியலறைக் காட்சியாகவோ இரவு விடுதி நடனமாகவோதான் இருந்தன. முதலில் தான் எப்படி அறிமுகப்படுத்தப்பட்டாளோ அப்படியே ஒவ்வொரு தயாரிப்பாளரும் தன் உடல் வளப்பத்தையே காட்டும் காட்சிகளைத் தனக்குத் தருவது சுமதிக்குப் புரிந்துவிட்டது. படிப்படியாக மெல்லமெல்ல யோகாம் பாள் அத்தை வீட்டுக்குப் போவதைச் சுமதி விட்டு விட்டாள். அவர்களும் நாலைந்து முறை கேட்டுப்பார்த்து எச்சரித்துப் பார்த்துவிட்டு ‘நமக்கென்ன வந்தது ?’ எக்கேடு கெட்டு வேண்டுமானால் போகட்டும் என்று அவளைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட்டார்கள்.

அந்தச் சமயத்தில் ஒருநாள் சுமதியின் பேருக்கு ஒரு ரிஜிஸ்தர் தபால் மதுரையிலிருந்து வந்தது. கடிதத்தை அவளுடைய அம்மாதான் அனுப்பியிருந்தாள். நோட் டீஸோ என்று முதலில் சுமதி சந்தேகப்பட்டாள். அப் புறம் எதுவாயிருந்தாலும், வாங்கித்தான் பார்க்கலாமே? என்று துணிந்து கையொப்பமிட்டு அதை வாங்கிப் பிரித்த போது அது ஒரு நீண்ட கடிதமாக இருந்தது. ஏதோ கட்டுரைக்குத் தலைப்புப் போடுவதுபோல் ஒரு தாயின் கடைசி எச்சரிக்கை என்று அதற்குத் தலைப்பே போட்டி ருந்தாள் அம்மா. இதுதான் அநேகமாய் நான் உனக்கு எழுதுகிற கடைசிக் கடிதமாக இருக்கும் என்ற முதல் வாக்கியத்தோடுதான் அம்மாவின் கடிதமே ஆரம்ப மாகியது. அம்மாவின் அந்த நீண்ட கடிதத்தைப் படிக்கத் தொடங்கியபோது சுமதியின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ளத் தொடங்கியது.
-----------

அத்தியாயம் 22

அன்புள்ளவளாக இருந்த.க்கு உன்னைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்குக் கூட உனக்கும் எனக்கும் இடையே இனி எந்த நெருக்கமும், பாசமும் இருப் பதாக இப்போது நான் நினைக்கவில்லை. எனக்குக் கட்டுப்படாத-என் வார்த்தைகளைக் கேட்கத் தயாராயில்லாத ஒரு பெண்ணுக்கு நான் கடிதம் எழுது வதற்குக்கூடக் கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் சொல்ல வேண்டியதைக் கடைசியாகச் சொல்லித் தீர்த்து விடுவது நல்லதென்றுதான் இதை எழுதுகிறேன். அப்புறம் உனக்குத் தலை முழுகிவிடலாம்.

அங்கே யோகாம்பாள் அத்தை வீட்டிலிருந்து நேற்றுக் கடிதம் எழுதியிருந்தார்கள். ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி நீ அவர்கள் வீட்டில் தங்கிக் கொண்டு படப்பிடிப்புக்குப் போய் வருவது என்ற நிபந்தனையை மீறி விட்டாய் என்றும், இரவில்கூட அவர்கள் வீட்டுக்குத் தங்க வருவதில்லை என்றும் எழுதியிருக்கிறார்கள். உன்னைப் பற்றி அவர்கள் ஜாடைமாடையாக எழுதி யிருப்பதை எல்லாம் படித்தால் எனக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருக்கிறது. உன்னைப் போல் ஒர் அடங்காப் பிடாரியை - ஊர் சுற்றியை - ஒடு காலியைப் பெண்ணாகப் பெற்றதற்காக நான்தான் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாக வேண்டும். என்னை விசாரிக்கிற நாலு பேருக்கு இனிமேல் நான் மானமாகப் பதில் எதுவும் சொல்ல முடியாது. நீ என் பெயர், குடும்பப் பெயர் எல்லாவற்றையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிட்டாய் உன்னால் எனக்கு ஏற்பட்டுவிட்ட தலைக்குனிவு இனிமேல் நான் செத்தால் கூடத் தீராது போலிருக்கிறது. சாவும் வரும் வழியாயில்லை.

மென்மையான பெண் என்பவள் அனிச்சமலரைப் போல் வேற்று மனிதர்களின் வெப்பமான மூச்சுக் காற்றால் மோந்துப் பார்க்கப்படுகிற போதே வாடிவிடக் கூடியவள். பிறர் முகம் திரிந்து நோக்கும் அளவுக்கு வாடி விடக் கூடிய ஒரு பெண் பிறகு திருந்தவோ, தேரவோ, மலரவோ முடியாது. மலர்வதற்கு முன்பே வாடுவதற்கு நீயாக முடிவு செய்துகொண்டுவிட்டால் நாங்கள் எப்படி அதைத் தடுக்க முடியும்? அரும்பாக இருந்தாலாவது மீண்டும் மலரலாம் என்ற நம்பிக்கை உண்டு. வாடி விட்டால் பின்பு மலர்ச்சியைப் பற்றிக் கனவுகூடக் கான முடியாது. பெண் மென்மையானவளாக இருக்கலாம். அது தவறு இல்லை. ஆனால் பலவீனமானவளாக இருக்கக் கூடாது. மென்மையான உடலும், திண்மையான உள்ள மும் உள்ளவளாகப் பெண் இருக்கவேண்டும். பலவீன மான உடம்பும், பலவீனமான மனமும் கூடவே கூடாது. சபலமும் புகழ்வெறியும் ஆசைகளும் ஒரு பெண்ணைச் சீரழிக்கப் போதுமானவை.

இன்று நீ திருத்தி மீட்டுக் கொண்டுவர முடியாத நரகத்தில் வீழ்ந்துவிட்டாய். உன்னைப் பற்றி இனி மேல் நானோ பிறரோ நினைப்பதுகsடப் பாவம். வாடாமல் மொட்டாக இருந்தாலாவது இனி மலர்ச்சி வரும் என்ற எதிர்கால நம்பிக்கை உண்டு. வாடிவிட்ட மொட்டுக்கு அந்த நம்பிக்கையும் இருக்க முடியாது. வாடாதது மலரும், வாடியது கருகும், கருகுவது மறுபடி மலர முடியாது. இதுதான் உலக நியதி.

உன்னைச் சென்னைக்கு அனுப்பிப் படிக்க வைத்த போது நான் என்னென்னவோ சொப்பனங்கள் கண் டேன். நீ டாக்டராக, வக்கீலாக, புரொபஸராக, ஐ.ஏ.ஸ், அதிகாரியாக எப்படி எப்படி எல்லாமோ வருவாய் என்று எண்ணினேன். கடைசியில் நீ சாக்கடையில் போய்க் குதித்துவிட்டாய். உன் உடம்பெல்லாம் சேறாகி விட்டது. -

இனி உன்னை நினைப்பதைவிட மறப்பதுதான் நல் லது. கண்ட பத்திரிகைகளில் உன்னுடைய அரை நிர் வாணப் படங்களையும், முக்கால் நிர்வாணப் படங் களையும் பார்த்துப் பலர் என்னிடம் விசாரிக்கிறார்கள். என்னிடம் படிக்கிற பெண்களே அவற்றைப் பார்த்துக் கேலி செய்கிறார்கள். என்னோடு பணிபுரியும் சில மூத்த ஆசிரியைகள், "என்னடீ உன் பொண்ணை இப்படித் தாறுமாறாகப் போக விட்டுட்டே! நீ ஏன் கண்டிக்கக் கூடாது?" என்று கேட்கிறார்கள். நான் கண்டித்து நீ அடங்க மாட்டாய் என்று சொன்னால் ஒருவேளை அதை அவர்கள் நம்புவதற்கு மறுக்கலாம். யார் யார் தலையில் எப்படி எப்படி எழுதியிருக்கிறதோ அப்படித் தான் நடக்கும். எழுதினதை மாத்தி எழுத முடியப் போறதில்லை. என்னுடைய இந்தக் கடிதம் உனக்கு கோபமூட்டலாம். இதை நீ கிழித்துக் கூடப்போட்டுவிடுவாய். ஆனால் இந்தக் கடிதத்தில் நான் எழுதியிருக்கும் விஷயங்களை என்றாவது ஒருநாள் நீயாகவே மறுபடி நினைவு கூர்வதற்கு நேரிடும் என்பது நிச்சயம். அப்போதுதான் நான் சொல்கிற நியாயங்கள் உனக்குப் புரியும். அதுவரை அவை உனக்குப் புரிவது சிரமம்.

      இப்படிக்கு
      உனக்குத் தாயாக நேர்ந்த
      துர்ப்பாக்கியவதி.

கடிதத்தில் எழுதியிருந்த சில வாக்கியங்களால் அம்மா சுமதியின் மனத்தை ஒரு கலக்குக் கலக்கியிருந்தாள் என்றாலும் சுமதி அதை மறக்க முடிந்தது. அந்தக் கடிதத்தை அவள் படித்துக் கொண்டிருந்தபோது ஏ.ஸி. அறையில் மேரியும், தயாரிப்பாளர் கன்னையாவும் குடித்துக் கொண்டிருந்தார்கள். சுமதி டெலிபோனில் ஏ.ஸி. அறையைக் கூப்பிட்டு 'வரலாமா?’ என்று கேட்டாள் அவர்கள் வரச்சொன்னார்கள்.

"ஓ. எஸ். வித் பிளஷர் யூஆர் ஆல்வேஸ் வெல்கம்” என்றாள் மேரி. அன்று முதன் முதலாகத் தானே விரும்பி அவர்களோடு சேர்ந்து குடிப்பதற்குச் சென்றாள் சுமதி. அவளுக்கு அப்போது அம்மாவை மறக்க வேண்டியிருந்தது. அம்மாவின் கடிதத்தை மறக்க வேண்டியிருந்தது. கடந்த காலத்தை மறந்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று மிதக்க எதன் உதவியாவது தேவைப் பட்டது. முன்பெல்லாம் பிறர் வற்புறுத்தலுக்காக அவள் குடித்தாள். இன்று இப்போது இந்த விநாடியிலோ சுமதி தனக்காகவே குடிக்கத் தொடங்கியிருந்தாள். அவள் மிதமிஞ்சிப் போவதைப் பார்த்து மேரிக்கும், கன்னையாவுக்கும் பயமாயிருந்தது.

அம்மா, மகள் வாடிச் சருகாகிறாளே என்று வருந்தினாள். மகளோ கருகிச் சாம்பலாகிவிடவே முடிவு செய்துகொண்டு விட்டாற்போல் தீவிரமாகவும், வேகமாகவும், கெட்டுப் போகத் தொடங்கினாள். கன்னையா அவளைக் கதாநாயகியாகப் போட்டு எடுக்க வேண்டிய படம் என்ன ஆயிற்று என்பதை அவளும் மறந்துவிட்டாள். கன்னையாவும் மறந்துவிட்டார். சுமதி கன்னையாவுக்கும் மேரிக்கும் வேறு விதங்களில் பயன்படத் தொடங்கினாள்.

ஒரு சமயம் ஒரு பெரிய மில் முதலாளியின் மனைவி யிடம் சுமதிக்கு முற்றிலும் புதுமையான அனுபவம் ஏற்பட்டது. சுமதி ஒரு புத்தகத்தில் அதைப் படித்திருந்தாள் 'லெஸ்பியன் லெக்ஸ்' வகையைச் சேர்ந்த ஓர் அம்மாளை முதன் முதலாகத் தன்னருகே கண்டாள் அவள். எருமை மாடு மாதிரிப் பெருத்துக் கொழுத்திருந்த அந்த அம்மாள் ஒரு வேட்டை நாயின் வெறியோடு சுமதியைக் கசக்கிப் பிழிந்துவிட்டாள்.

"அந்த அம்மாளுக்கு ஆம்பிளைங்கன்னாலே பயம், ஆம்பிளைங்களே ஆகாது” என்றாள் மேரி. 'ஆம்பிளைங்க ஆபத்தான ஆளுங்க. விஷயத்தை வெளியிலே சொல்லிடுவாங்க'ன்னுமேரியிடம் ஒரு தடவை தன்னைப் பற்றி அந்த அம்மாளே சொல்லியிருந்தாள். மேரியும் சுமதியிடம் அந்த அம்மாளைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லியிருந்தாள்.

"இந்தம்மா பொம்பிளையாத் தேடறாரு இந்தம்மாளோட ஹஸ்பெண்ட் ஆம்பிளையாத் தேடறாரு. பிரிட்டன்லே ஒரே இனத்தைச் சேர்ந்தவங்க தனியிடத்திலே சந்திக்கிறது சட்டபூர்வமாயிட்டது. வேறே சில ஊர்களிலே அப்படி ஒரே இனக் கலியாணத்தைக்கூட அங்கீகரிக்கிறாங்க இங்கே முடியாது; கூடாது.”

"சமூகத்திலே தனி மனிதர்களிடத்தில் பணம் அள வுக்கு அதிகமாகச் சேர்ந்தால் இப்படித் தாறு மாறுகள்தான் அதிகமாகும் என்பதை நம்ம நாட்டிலுள்ள பணத் திமிர் பிடித்த ஆணும் நிரூபிக்கிறான். பெண்ணும் நிரூபிக்கிறாள். பணம்தான் இதுக்கெல்லாம் காரணம்டீ, மேரி!' என்றாள் சுமதி.

"பணம் இல்லாட்டா எதுதான் நடக்கும் பணத் தேவை இல்லேன்னா நீயும் நானும் இப்படி எல்லாம் ஏன் ஆகப் போறோம்? எங்கப்பா ரெயில் என்ஜின் டிரை வர். எனக்குப் பத்து வயசானப்பவே செத்துப் போயிட் டாரு. அம்மாவும் நானும் மூணு தம்பிகளும் பிழைக்க வேண்டியிருந்தது. இப்படி ஆகவேண்டி வந்தது. உங்கப்பாவும் சின்ன வயசிலே போயிட்டார்னு நீ சொன்னே. உங்கம்மா தமிழ்ப் பண்டிட் நீயும் இப்போது இப்படி ஆயாச்சு. வறுமையுடன் தவிப்பவர்களைப் பணத்தோடு தவிப்பவர்கள் சந்திக்கு ' போதெல்லாம் தான் இப்படி ஸோவியல் கிரைம்ஸ் நிறைய நடக்குது.”

"ஆனால் இதெல்லாம் டு மச்! நம்ம நாட்டின் பெருமைக்கே இழுக்கு.” -

சுமதியின் விவாதங்களை மேரி ஏற்கவில்லை. "இப்படி எல்லாம் பேசினால் பணம் சம்பாதிக்க முடி யாது. கண்ணை மூடிட்டுத் தப்புப் பண்ணினால் தான் இங்கே பணம் சம்பாதிக்கலாம்” என்றாள் மேரி. 'நாம கண்ணைத் திறந்துண்டேதான் தப்புப் பண்றோமே?” என்று சுமதி இதற்குப் பதில் சொன்னாள். அவளுக்கு மேரியின் விரக்தியும் கசப்பு உணர்ச்சியும் புரிந்தன. அவர்கள் இருவரும் இதற்கு முன்பெல்லாம் தங்களுக்குள் எப்போதும் இப்படிப் பேசிக் கொண்டதே இல்லை. வரவர இருவருமே தங்களுக்குள் கருத்துக் களைப் பரிமாறிக் கொள்வது வழக்கமாகி இருந்தது.

கன்னையா தயாரிப்பாளரா அல்லது பெரும் பனக் காரர்களுக்கும் ஆஷாடபூதிகளுக்கும் ஏற்பாடு செய்து தருபவரா என்ற விஷயம் இப்போது சந்தேகத்துக்கு இட மில்லாமல் நிரூபணமாகிவிட்டது. வருஷம் ஒன்று விளை யாட்டுப் போல ஒடிவிட்டது. சுமதியின் பாங்க் கணக்கில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை எட்டுகிறாற் போலப் பணம் சேர்ந்துவிட்டது. தயங்கித் தயங்கி அவளிடம் ஒரு சமயம் கன்னையாவே அதைக் கடனாகக் கேட்டார்.

'பாங்கிலே தர்ற தைவிட இரண்டு மடங்கு 'இண்ட்ரெஸ்ட் தர்றத்துக்கு நான் தயார்” என்றார்.

"அதுக்கென்ன? தர்றேன். எங்கிட்ட இருந்தா என்ன? உங்ககிட்ட இருந்தா என்ன? உடனடியா இப்போ எனக்கு ஒண்ணும் செலவு இல்லே.”

"ஒரு புரோநோட் வேணும்னா எழுதிக்கலாம். புரோ நோட்டுலே உனக்கு நம்பிக்கை இல்லேன்னா டாகு மெண்ட் வேணா ரெஜிஸ்தர் பண்ணிக்கலாம். ஆனா ஒன்லி எ மேட்டர் ஆஃப் ட்வண்டி டேஸ்; இருபது நாளைக்கி ஒரு நோட்டான்னு கேக்காதே. பன விஷயம் பாரு” என்றார் கன்னையா.

'நான் செக் எழுதித் தரேன், எடுத்துக்குங்க. நோட்டும் வேண்டாம். வட்டியும் வேண்டாம். நீங்க முடியறப்போ திருப்பிக் கொடுங்க போதும்.”

"நான் உன் செக்கை எடுத்துக்கிட்டுப் பேங்குக்குப் போனா அது நல்லா இராது சுமதி! எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருக்கு. நீயே தயவுசெய்து செல்ஃப் போட்டு எடுத்துக் குடுத்துடேன்” என்று கெஞ்சுகிறாற் போன்ற குரலில் குழைந்து நெளிந்து கேட்டார் கன்னையா.

"இதென்ன பெரிய விஷயம், தந்தால் போகுது! வாங்கிக்குங்களேன்” என்று சுமதி சம்மதித்து விட்டாள். அடுத்த நாள் காலையிலேயே பணம் எடுத்துக் கொடுக்கவும் செய்தாள். இரண்டு நாள் கழித்து மேலும் ஒரு பெரிய தொகை கேட்டார் கன்னையா. கடைசியில் சுமதியின் கணக்கில் ஒரு பத்து ரூபாய் மட்டுமே மீதமிருக்கிற அளவு பணம் குறைந்துவிட்டது. மற்றதைக் கன்னையா படிப்படியாக வாங்கிக் கொண்டு விட்டிருந்தார்.

ஆனால் சுமதிக்கு அதனால் பணக் கஷ்டம் எதுவும் வந்து விடவில்லை. முன்புபோல் அவளை ராஜ போகத்தில் வைத்துக் கொண்டார் கன்னையா. நடுவே அவள் ஒருநாள் யோகாம்பாள் அத்தையின் வீட்டுப் பக்கமாகக் காரில் போக நேர்ந்தபோது அத்தையைப் பார்க்கலாம் என்று காரை நிறுத்தச் சொல்லி இறங்கிப் போனாள். வாசலில் அத்தையின் கணவர் எதிர்ப்பட்டவர் வழியை மறிப்பது போல் குறுக்கே எதிரில் நின்று கொண்டு "இங்கே எல்லாம் நீ இனிமே வராதே சுமதி: இது கெளரவமான ஃபேமிலி. உன்னாலே எங்க பேர் கெட்டுப் போகணும்கிறதுதான் உன் ஆசையா? தயவு செய்து போயிடு, இங்கே யாரையும் நீ பார்க்க வேணாம். உன்னைப் பார்க்கலேன்னு இங்கே யாரும் தவிச்சுக் கிடக்கலே’ என்று முகத்திலடித்தாற்போலச் சொல்லி விட்டார். சுமதிக்கு என்னவோ போல் அவமானமாக இருந்தது. வீடு திரும்பியதும் அவளே கன்னையாவைக் கேட்டு நிறையக் குடித்தாள். தன்னை மறக்க முயன்றாள். நடுநடுவே குமுறிக்குமுறி அழுதாள். கன்னையாவுக்கு அவள் நிலை புரியாத புதிராக இருந்தது.
------------

அத்தியாயம் 23

அன்றைய நிகழ்ச்சிக்குப் பின் யோகாம்பாள் அத்தை வீட்டுக்கு இனிமேல் போகக்கூடாது என்று சுமதியின் உள்ளத்திற்குள் ஒரு வைராக்கியம் பிறந்தது. தன் தாய் தன்னை அதிகமாகத் திட்டியபோதெல்லாம், 'ரொம்பத்தான் திட்டாதீங்கோ. இந்தக் காலத்துக் குழந்தைகளைக் கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும்' என்றெல்லாம் நிதானமாகப் பேசிய யோகாம்பாள் அத்தையின் கணவரா இப்போது தன்னை இவ்வளவு எடுத்தெறிந்து பேசினார் என்று சுமதியாலேயே நம்ப முடியாமல் இருந்தது. தாயும் உறவினர்களும் தன்னை வெறுத்து அவமானப்படுத்திய தன் விளைவு தன்னை வெறுக்காத கன்னையா, மேரி போன்றவர்கள் மேல் அவள் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவர்கள் சொன்னதை எல்லாம் அவள் கேட்டாள். ஒரு விரக்தியில் நல்லது கெட்டது பிரித்துணரும் சக்தியே அவளிடமிருந்து போய்விட்டிருந்தது. கன்னையா இழுத்த இழுப்பு அவள் தங்கக் கம்பியாக வளைந்தாள். அவர் சொன்னதை எல்லாம் தட்டாமல் தயங்காமல் செய்தாள்.

பரந்த இந்த உலகில், அவரும் மேரியும்தான் தன்னைப் பாதுகாப்பவர்கள் என்ற உணர்வுகூட அவளுக்கு ஏற்பட்டுவிட்டது. மேரியும் கன்னையாவும் கற்பித்த வாழ்க்கை அவளுக்குப் பழகிவிட்டது. மேலும் சில மாதங்கள் சுலபமாக ஓடிவிட்டன. கவலை இன்றியும் ஓடி விட்டன.

"நான் வாங்கின அந்தப் பணத்தை முழுக்க அப்படியே அடுத்த வாரம் மறுபடி உன் அக்கெளண்டிலே டெபாசிட் பண்ணிடறேன் சுமதி ! உனக்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கேன். நீதான் சமயத்திலே கை கொடுத்துக் காப்பாத்தினே" என்று கன்னையாவே ஒருநாள் ஞாபகமாக அவளிடம் வாங்கியிருந்த கடன் பற்றிப் பிரஸ்தாபித்தார். சுமதி அதைப் பெரிதுபடுத்தவில்லை. "எங்கே ஒடிடப்போகுது? மெல்லக் குடுங்க. அத்தனையும் நீங்க சம்பாதிச்சுக் குடுத்த பணம்தானே? உங்ககிட்ட இருந்தா என்ன? எங்கிட்ட இருந்தா என்ன?” என்று சுமதி கன்னையாவுக்கு மிகவும் ஆறுதலாகப் பதில் சொன்னாள். நாளடைவில் சுமதியிடம் கன்னையா கடன் வாங்கியிருக்கிறார் என்பது எப்படியோ மேரிக்குத் தெரிந்து அவள் ஒருநாள் சுமதியைக் கடிந்து கொண்டாள். படத் தயாரிப்புத் தொழிலைக் கன்னையா அறவே விட்டுவிட்டாற் போல ஒதுங்கியிருந்தார். மாடியில் குடியிருந்த டான்ஸ் மாஸ்டரைக் கூடக் காலி செய்யச் சொல்லி அனுப்பிவிட்டார். சுமதியின் டான்ஸ் பாடங்கள் அரைகுறையாக நின்றன.

டான்ஸ் மாஸ்டர் போனதும் சுமதியைக் கூப்பிட்டு, "சுமதி? நீ வேணும்னாக் கீழே காலி பண்ணிட்டு மாடிக்கு வந்துடறியா? மாடியிலே ஏ.ஸி. போட்டுத் தந்துடறேன்” என்று கன்னையா கேட்டபோது சுமதி கீழேயே இருக்க விரும்புவதாகச் சொல்லிவிட்டாள். அடுத்த நாளே மாடிக்கு டிஸ்டம்பர் பூசி ஒழுங்குபடுத்தினார்கள். மாடியில் ஒரே ஹாலாக இருந்த பகுதிகள் இரண்டு மூன்று அறைகளாகத் தடுக்கப்பட்டன. மாடிப் படியேறுகிற பகுதியில் வெளிப் பக்கத்திலிருந்தும் உட்பக்கத்திலிருந்தும் திறக்கவும், பூட்டவும், முடிந்த மாதிரி ஒர் இரும்புக் கம்பி வெளிக் கதவு வேறு புதிதாகப் போடப்பட்டது.

ஒருவாரம் கழித்து ஒருநாள் பிற்பகல் முடிந்து இருட்டுவதற்குச் சிறிது நேரம் இருக்கும்போது நாலைந்து தெலுங்குப் பெண்களோடு காரில் வந்து இறங்கினார் கன்னையா. சுமதி தான் வசித்துக் கொண்டிருந்த போர்ஷனில் இருந்து தற்செயலாக முன்பக்கம் வந்தவள் இந்தக் காட்சியைப் பார்த்தாள். கன்னையாவே ஓடிவந்து, "இனிமே இவங்கதான் இங்கே டான்ஸ் ஸ்கூல் நடத்தப் போறாங்க. பழைய ஆளு ஆம்பிளையா இருந்து தொலைச்சதாலே ரொம்பப் பொண்ணுங்க டான்ஸ் படிக்க நினைச்சாக்கூடப் பயந்து கூச்சப்பட்டாங்க, அதான் பொம்பிளைங்களாகக் கொண்டாந்துட்டேன். இவங்க 'குச்சுப்புடி' டான்ஸ்லே எக்ஸ்பர்ட். இங்கே நிறைய ஆந்திராக்காரர்களும் இருக்காங்க. அவங்க வீட்டுப் பெண்ணுங்கள்ளாம் படிக்க வரும். இந்த பொண்ணுங்க ரொம்ப நல்ல மாதிரி” என்று சுமதியிடம் தானே வலிந்து முந்திக் கொண்டு விவரங்களைச் சொன்னார். சுமதி இதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. ஆனால் அவர் சொன்னதை முழுமையாக அவள் நம்பவும் இல்லை. ஏதோ அவசரம் அவசரமாக இட்டுக் கட்டிச் சொன்னது மாதிரி பட்டது. அதற்கு அடுத்த நாள் கன்னையாவின் வேலைக்காரப் பையனை எதற்காகவோ கூப்பிட்டபோது அவனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள் சுமதி. "நீங்க கேட்டா டான்ஸ் கத்துக் குடுக்க வந்திருக்காங்கன்னு ஐயா உங்ககிட்டேச் சொல்லச் சொல்லியிருக்கு” என்றான் அவன். தமிழ் தெளிவாகப் பேச வராத மலையாளத்துப் பையனாகிய அவன் உள்ளதை அப்படியே வாய் உளறிப் போய்ச் சொல்லி விட்டான். சுமதி இரண்டாவது முறையாக அவனை அழுத்திக் கேட்டதற்கு அவன் சிரித்துக் கொண்டே பேசாமல் போய்விட்டான். சுமதிக்குச் சந்தேகம் தட்டியது. இது மாதிரி விஷயங்களில் பெண்மைக்குள்ள மோப்ப சக்தி அவளுக்கு அப்போது உதவியது.

அன்று பிற்பகலில் மேரி வந்தாள். கன்னையாவும், மேரியும் சேர்ந்தே மாடிக்குப் போய் அந்த ஆந்திர அழகிகளைப் பார்த்துப் பேசிவிட்டு வந்தனர். கன்னையாவின் புரொடக்‌ஷன் ஆபீஸின் வெளிவாசல் அருகே, ’இங்கே கைதேர்ந்த பெண் ஆசிரியைகள் குச்சிப் புடி நடனம் கற்பிக்கிறார்கள்’ என்ற புதிய விளம்பரப் பலகை வேறு வைக்கப்பட்டுச் சந்தனம் குங்குமம் தெளிக்கப்பட்டுப் பூச்சரம் சூட்டப்பட்டது. சுமதிக்கு என்னவென்று ஒரளவு புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகவே புரிந்தது. அந்த ஆந்திர அழகிகள் வந்திருப்பது தங்கியிருப்பது எதுவும் நல்லதற்கில்லை, என்பதை அவள் உணர்ந்தாள்.

சுமதி மேரியைத் தனியாகத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள். அவளிடமே இதுபற்றிக் கேட்டாள்.

"என்னடீ மேரி? இந்தத் தெலுங்குப் பொம்பளைங்கள்ளாம் யாரு? இவங்களைக் கன்னையா எதுக்காக இங்கே கொண்டு வந்து அடைச்சு வச்சிருக்காரு? கேட்டால் குச்சிப்புடி அது இதுன்னு புளுகறாரு? என்னடி இதெல்லாம்?"

"அவங்களுக்குள் ஆயிரம் இருக்கும்? அதெல்லாம் உனக்கு எதுக்குடீ தெரியணும் ? உன் பாட்டைப் பார்த்துக்கிட்டு நீ சும்மா இரு போதும்” என்றுதான் மேரி சுமதியிடம் அப்போது பதில் சொன்னாளே ஒழிய கன்னையாவை விட்டுக் கொடுத்து எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் பொறுத்து முன்னும் பின்னும் தொடர்பில்லாமல் "உன் லோனை அவரிட்டச் சீக்கிரம் திருப்பி வாங்கிடு! அதிலே மெத்தனம் வேண்டாம். ஒருபிடிப்புமில்லாம ஆளை நம்பி வாய் வார்த்தையை நம்பி லட்ச ரூபாய் கடன் கொடுக்கிற அதிசயத்தை நான் இப்பத் தாண்டி சுமதி கேள்விப்படறேன்" என்று மீண்டும் இரண்டாவது முறையாக சுமதியை எச்சரித்தாள் மேரி. முன்பெல்லாம் மேரி இப்படி எச்சரிக்கும்போது வழக்கமாகச் சொல்லுகிற ’எங்கேடீ போகுது பணம்?’ என்ற வார்த்தைகளைத் தன்னாலேயே இப்போது சொல்ல முடியவில்லை என்பதைச் சுமதி உணர்ந்தாள். அவள் உள்ளுணர்வு விழிப்படைந்திருந்தது.

இந்த அதிர்ச்சி போதாதென்று வேறோர் அதிர்ச்சியும் சுமதிக்கு அன்று ஏற்பட்டது.

மேரியின் இரகசிய ஏற்பாட்டின் படியும், அறிவுரையின் படியும் தன் உடல்நிலை குறித்து மாதவிடாய்க் காலம் தப்பிவிடாமல் பேணுவது குறித்தும் சுமதி அருகிலேயே ஒருலேடி டாக்டரிடம் ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள்.

“இங்கே வந்தாச்சு! இனிமேத் தாறுமாறா யார்யாரோடவோ எப்பிடி எப்பிடியோ இருக்கறாப்பல ஆயிடும். லேடி டாக்டரைத் தவறாமப் பார்த்துக்கோ. இல்லாட்டி வயிறும் புள்ளையுமா நிற்பே. ஜாக்கிரதை” என்று கொஞ்சம் பச்சையாகவே மேரி ஒருநாள் அவளை இது விஷயமாக எச்சரித்திருந்தாள். கன்னையா வீட்டிலிருந்து மூன்று வீடு தள்ளியிருந்த ஒரு லேடி டாக்டரிடம் கூப்பிட்டுக் கொண்டு போய் மேரியும், கன்னையாவுமே சுமதியை அந்த டாக்டரம்மாவுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்கள். சுமதியும் இரவுகளையும், பகல்களையும், நிகழ்ச்சிகளையும் ஞாபகம் வைத்திருந்து அந்த டாக்டரம்மாவைச் சந்தித்து ஊசிகள் போட்டுக் கொண்டு மாத்திரைகளை விழுங்கிச் சமாளித்துக் கொண்டிருந்தாள். மாடியில் ’குச்சிப்புடி’ என்கிற பெயரில் ஆந்திர அழகிகள் குடியேறிய பின் அவள் டாக்டரம்மாவிடம் போகவேண்டிய முதல் முறை நாளன்று டாக்டரம்மா மேற்படிப்புக்காகப் பிரிட்டனுக்குப் புறப்பட்டுப் போய் விட்டாளென்று தெரிந்தது. அன்று போட வேண்டிய இன்ஜெக்‌ஷனையும் போட்டுக் கொள்ள முடியவில்லை. 'மெடிக்கல் செக்-அப்’ பையும் செய்து கொள்ள முடியவில்லை. வேறு டாக்டர்களிடம் போகலாம் என்றால் இந்த மாதிரி இரகசிய விஷயங்களுக்கு யாரை நம்பிப் போவது என்பது சுமதிக்குப் புரியவில்லை. கன்னையாவைப் போய்க் கேட்கலாம் என்றால் மாடியில் ஆந்திர அழகிகள் வந்த நாளிலிருந்து சுமதிக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு ஒருத்தருக்கொருத்தர் பேச்சு வார்த்தை நின்று போயிருந்தது. இரண்டொரு தடவைகள் கன்னையா வலிந்து தாமாகப் பேச முன்வந்தபோது கூடச் சுமதி முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டாள். ஆகவே அவரிடம் போய் லேடி டாக்டர் ஏற்பாடு செய்து தரச் சொல்லிக் கேட்கச் சுமதிக்கு விருப்பமில்லை.

சுமதி உடனே மேரிக்கு ஃபோன் செய்தாள். மேரி மாலையில் வந்து டாக்ஸியில் லஸ் சர்ச் ரோடில் யாரோ ஒரு டாக்டரம்மாவிடம் சுமதியை அழைத்துச் சென்றாள். அந்த லேடி டாக்டர் மிகவும் கறாராக இருந்தாள். 'மிஸ் சுமதி’, என்று மேரி பேர் சொல்லி இருந்ததனால், "இது மாதிரி இன்ஜெக்‌ஷன்களைக் கலியாணமாகாத பெண்களுக்கு நான் போட்றதில்லேம்மா! தப்புப் பண்றவங்களுக்கு நாங்க ஒத்தாசையா இருக்க முடியாது. தயவு செய்து இது விஷயமா நீங்கள்ளாம் இனிமே என்னைத் தேடி வரப்பிடாது” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.

"எல்லா டாக்டர்களும் இதுக்கு ஒத்துவர மாட்டாங்க. சிலபேர்தான் ஒத்து வருவாங்க. அந்தச் சில பேருக்கும் நிறையப் பணம் குடுக்கணும். ஆம்பிளை டாக்டரா இருந்து அந்த டாக்டர் ஆசைக்காரனா இருந்தா அவனோட ஆசையையும் பூர்த்திசெய்ய வேண்டியிருக்கும். அதுக்காகத்தான் நானும் கன்னையாவும் ரொம்பப் பாடுபட்டு அந்த மாம்பலம் லேடி டாக்டரைப் பிடிச்சு வச்சிருந்தோம். அவ மேற்படிப்புக்கு யூ.கே. போயிட்டா. போகணும்னு ரொம்ப நாளாச் சொல்லிக்கிட்டிருந்தா” என்று அதிலுள்ள சிரமங்களை மேரி விவரித்தாள். மறுபடி சுமதியும், மேரியும் திருவல்லிக்கேணியில் இன்னொரு டாக்டரம்மாவைப் பார்க்கச் சென்றார்கள்.

இந்த டாக்டரம்மாள் எல்லாப் பேஷண்டுகளையும் பார்த்து முடித்து அனுப்பிய பின் தனியானதும் இவர்கள் இருவரும் உள்ளே சென்றார்கள். எந்த முன் நிபந்தனையும் போடாமல் அந்த டாக்டரம்மாள் சுமதியைப் பரிசோதித்தாள்.

ஆனால் பரிசோதனை முடிந்ததும் மருந்துச் சீட்டு எழுதிக் கொண்டே, "உங்க ஹஸ்பெண்ட் என்னம்மா வேலை பார்க்கிறாரு?" என்று கேட்ட டாக்டரம்மாளுக்குப் பதில் சொல்ல முடியாமல் சுமதி பரக்கப் பரக்க விழித்தாள்.

டாக்டரம்மாள் எழுதுவதை நிறுத்தி விட்டுச் சுமதியை நிமிர்ந்து பார்த்து மறுபடியும் தன்னுடைய அதே பழைய கேள்வியைக் கேட்டாள்.

"... நாட் யெட் மேரீட்” என்று சுமதி தயங்கித் தயங்கி ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிய மறுமொழியைக் கேட்டு அந்த டாக்டரம்மாள் திகைத்துப் போய் இவள் முகத்தையே இமையாமல் பார்த்தாள்.

"நாட் மேரீட்? தென் ஹெள...” என்று எதையோ கேட்க ஆரம்பித்து உதட்டைக் கடித்துக் கொண்டு பாதியிலேயே நிறுத்தினாள் டாக்டரம்மாள். சிறிது நேரம் கழித்து, "கர்மம்! கர்மம்! நீங்கள்ளாம் ஏம்மா இங்கே என்னைத் தேடிவந்து கழுத்தறுக்கிறீங்க! என் பேரைக் கெடுக்கிறதுக்கா? போம்மா போ! கோடம்பாக்கத்திலே சினிமா எக்ஸ்ட்ராக்களுக்கு வைத்தியம் பண்ற டாக்டரம்மாக்கள் யாராவது இருப்பாங்க. ஐயாம் நாட் ஸோ சீப். அங்கே போய் யாரையாவது பாரும்மா” என்று பாதி எழுதியிருந்த ’ப்ரிஸ்கிரிப்ஷனை’ அப்படியே கிழித்துக் கீழே இருந்த குப்பைத் தொட்டியில் எறிந்தாள் அந்த டாக்டரம்மாள். சுமதிக்கு உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டிவிட்டது.

"இது கெளரவமானவங்க வர்ர டிஸ்பென்ஸ்ரி ! இங்கெல்லாம் இனிமே நீ வராதே. இப்ப நீ வந்ததை நான் இரகசியமாக வச்சுக்கிறேன். யாரிட்டவும் சொல்லலே. ஆனா நீ இங்கே இனிமே வரப்பிடாது” என்ற கண்டிப்பான குரலில் மறுபடியும் சொன்னாள் அந்த டாக்டரம்மாள். சுமதிக்கு முகத்தில் அடித்தாற் போலிருந்தது அந்தப் பதில்.
------------

அத்தியாயம் 24

திருவல்லிக்கேணி டாக்டரம்மாள் வீட்டிலிருந்து திரும்பும்போது சுமதியும் மேரியும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் கோபித்துக் கொண்டவர்கள் நிர்ப்பந்தமாக ஒருவருக்கருகே மற்றவர் உட்கார நேர்ந்தது போல் அவர்கள் அப்போது உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். எதுவும் பேசவில்லை என்றாலும், அவளும் உள்ளூரக் கவலையிலாழ்ந்திருப்பதை அவள் முகமே காட்டியது. சுமதியோ கண்களில் நீர் வடிய வீற்றிருந்தாள். நடுவே ஒரே ஒருமுறை மட்டும் மேரி சுமதியின் தோளில் தட்டி "வேண்டாம் அழாதே! எல்லாம் சரிப்படுத்திக்கலாம்” என்று ஆறுதலாகச் சொன்னாள். சுமதி கோபத்தோடு அப்போது மேரியின் கையைத் தன் தோளிலிருந்து நீக்கி வெடுக்கென்று உதறினாள்.

வீடு வந்ததும் இறங்கி ஓடிப்போய்த் தன் அறைக்குள் நுழைந்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டாள் சுமதி. மேரி எவ்வளவோ தட்டிப் பார்த்தும் சுமதி கதவைத் திறக்கவில்லை.

மேரிக்குச் சந்தேகமும் பயமும் ஏற்பட்டுவிட்டன. இம்மாதிரி மனநிலையில் பெண்கள் என்னென்ன பயித்தியக்காரத் தனங்களைச் செய்வார்கள் என்று சிந்தித்துப் பதறினாள் மேரி. அறைக்குள் தூக்கு மாட்டிக் கொள்வாளோ, மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பு வைத்துக் கொள்வாளோ, தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக என்றெல்லாம் எண்ணி மேரி மனம் பதைத்தாள். சுமதியை எப்படிக் கதவு திறக்கச் செய்வது என்று மேரிக்குப் புரியவில்லை. சுமதியோ வெறுப்பும் பிடிவாதமுமாக உள்ளே இருந்தாள். “இன்னும் ரெண்டு நிமிஷத்திலேயே நீ கதவைத் திறக்கலேன்னா நான் போலீசுக்கோ ஃபயர் சர்வீசுக்கோ ஃபோன் பண்ண வேண்டியிருக்கும். வேறே வழி இல்லை" என்று. வெளிப்புறமிருந்தே சாவித் துவாரத்தின் அருகே வாயை வைத்து இரைந்து கத்தினாள் மேரி. உடனே பயந்து போய்ச் சுமதி கதவைத் திறந்துவிட்டாள். உள்ளே துழைந்து மேரியிடம், "பாவி! கடைசியிலே என்னை வயி றும் பிள்ளையுமா நடுத்தெருவிலே நிறுத்தியாச்சு உனக்கு இப்போ திருப்திதானே? போதுமோ இல்லியோ?” என்று கூப்பாடு போட்டுத் தலையிலும் வயிற்றிலுமாக மாறிமாறி அடித்துக்கொள்ளத் தொடங்கினாள் சுமதி.

மேரிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வேணாம்! சொன்னாக் கேளு சுமதி கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டி வம்பு பண்ணாதே. வீணா நீயே உன் பேரைக் கெடுத்துக்கப்போறே. இதைச் சரிப்படுத்த எப்பிடியும் நான் ஹெல்ப் பண்றேன். என்னை நம்பு” என்றாள் மேரி.

"உன்னை நம்பி நம்பித் தானேடீ இந்தக் கதிக்கு வந்தேன்" என்று பதிலுக்குக் கூப்பாடு போட்டாள் சுமதி. அப்போது மாடிப்படியருகே யாரோ மடமடவென்று படியில் உருளுகிற ஓசையும் வேலைக்காரப் பையனின் கூப்பாடும் கேட்டன. சுமதியின் கவனமும், மேரியின் கவனமும் திசை திரும்பின.

சுமதியும், மேரியும் அறையிலிருந்து வெளியேறி வந்து பார்த்தால் கன்னையா மாடிப்படியிலிருந்து உருண்டு விழுந்திருந்தார். “உள்ளே நீங்க ரெண்டுபேரும் சத்தம் போட்டுக்கிறதைக் கேட்டு மாடியிலேருந்து ஓடி வந்தாரு. வேஷ்டி தடுக்கிப் படியிலே விழுந்துட்டாரு” என்றான் வேலைக்காரப் பையன். சுமதியும் மேரியும் அருகில் நெருங்கிப் பார்த்தபோது சும்மா வேஷ்டி தடுக்கி மட்டும் அவர் விழவில்லை. நன்றாகக் குடித்திருந்தார் என்றும் தெரிந்தது. மாடியிலிருந்த தெலுங்குக் காரிகளின் சகவாசத்தில் சில நாட்களாக அவர் மூழ்கியிருந்ததில் சுமதிக்கு அவர்மேலே ஒரு வெறுப்பு. ஆனாலும் இப்படிச் சமயத்தில் அவரை விட்டுக் கொடுக்க முடியவில்லை.

கீழே விழுந்த கன்னையாவுக்கு முழங்கால் பட்டை பிசகிவிட்டது. எழுந்திருக்க முடியவில்லை. உடனே மேரி பையனைக் கூப்பிட்டு, "காரை எடுக்கச் சொல்லுப்பா, உடனே டாக்டரிட்டக் கூட்டிக்கிட்டுப் போயாகணும்!” என்றாள். பையன் டிரைவரிடம் காரை எடுக்கச் சொல்லி அவசரப் படுத்தினான். எழுந்திருக்க முடியாமல் தரை யில் வேஷ்டி அவிழ விழுந்து கிடந்த கன்னையாவின் இடுப்பில் வேஷ்டியை இறுக்கிக் கட்டிவிட்டுப் 'பெல்ட்'டும் போட்ட பின் மேரி ஒரு பக்கமும், சுமதி ஒருபக்கமும் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று காரில் ஏற்றினார்கள். காரின் முன் ஷீட்டைக் கழற்றி இன்னும் சிறிது முன்னுக்கு நகர்த்திய பின்னர் பின் பக்கத்து இருக்கையில் இடவசதியை அதிகமாக்கிக் கொண்டுதான் கன்னையாவைக் காரில் கிடத்துவதற்கு முடிந்தது. வலது முழங்காலில் சிறிது 'ஃபிராக்சர்'. இருக்குமோ என்று தோன்றியது.

அந்தக் காலை நிமிர்த்தவே முடியவில்லை. "கீழே சத்தம் கேட்டால்தான் என்ன? நீங்க ஏன் இப்பிடிப் பதறிப் போய்த் தலைகால் புரியாமலே படியிலே இறங்கறீங்க? அதுவும் இந்த மாதிரி நிலைமையிலே ஒவ்வொரு படியும் ரெண்டு படியாகக் கண்ணுக்குத் தெரியுமே?’ என்று மேரி அவரைக் கடிந்து கொண்டாள்.

'நம்ம கையிலே என்ன இருக்கு ? அது நடக்க வேண்டிய நேரத்துக்கு நடந்துதானே தீரும்? நாம் தடுத்து நிறுத்தினா மட்டும் விதி நின்னுடுமா?’ என்று கஷ்டகால வேதாந்தம் பேசினார் கன்னையா.

மாம்பலத்திலேயே ஒரு பிரபலமான பிரைவேட் நர்விங்ஹோமில் சேர்ந்து கன்னையா சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டது. படுக்கையில் படுக்க வைத்து எலும்பு பிசகிய காலை ஊஞ்சல் மாதிரி கட்டித் தொங்க விட்டுவிட்டார்கள். பதினைந்து நாள்வரை படுக்கையை விட்டு அசையக்கூடாது என்று டாக்டர் கடுமையாக உத்தரவு போட்டுவிட்டார்.

தந்தி மூலம் அறிவிக்கப்பட்டுச் சேலத்திலிருந்து கன்னையாவின் மனைவி மக்கள் புறப்பட்டு வந்தார்கள். வீட்டில் அவர்களும் வந்து தங்கவே சுமதிக்கு அங்கே தொடர்ந்து இருக்கப் பிடிக்கவில்லை. கன்னையாவின் குடும்பத்தினர் வந்து தங்கியபின் மேரி அங்கு வருவதைக் குறைத்துக் கொண்டுவிட்டாள். மாடியிலிருந்த குச்சுப் புடிப் பெண்கள் ஒருவாரம் ஊருக்குப் போய்விட்டுத் திரும்புவதாகச் சென்றவர்கள் திரும்பியே வரவில்லை. சில வேளைகளில் வெறிச்சோடிக் கிடக்கும் அந்தப் பெரிய வீட்டில் சுமதி மட்டுமே தனியாக இருக்க நேர்ந் தது. அந்த மாதிரித் தனியான நேரங்களில் கார்களிலும், டாக்ஸிகளிலும், ஸ்கூட்டரிலுமாகத் தேடி வந்த ஆண் களையும், அவர்கள் கேட்ட கேள்விகளையும் வைத்துச் சுமதி ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள். நாட்டியப் பள்ளிக்கூடம், குச்சுப்புடி கலாசாலை என்ற

பெயர்களை வைத்துக் கொண்டு கன்னையா நடத்தியவை எல்லாம் விபச்சார விடுதிகளே என்பது மெல்ல மெல்லப் புரிந்தது. தன்னுடைய இந்த விடுதிகளுக்கு அழகிய பெண்களை இழுப்பதற்கும் கவர்வதற்கும் ஒரு வியாஜ்யம்தான் சினிமாத் தயாரிப்பே ஒழிய உண்மையில் அவர் சினிமாத் தயாரிப்பாளர் இல்லை என்பது போலவும் புரிந்தது. முன்பே இலைமறை காயாகத் தெரிந்திருந்த இந்த விவரம் இப்போது உள்ளங்கை நெல்லிக்கனி போல் சுமதிக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. கன்னையா ஆஸ்பத்திரியில் போய்ப் படுத்தபின் சுமதிக்குப் பணமுடை பயங்கரமாக ஆரம்பமாயிற்று.

கணக்கிலுள்ள பத்து ரூபாய் மீதத்தில் மினிமம் டெபாஸிட்டாக இருக்க வேண்டிய ஐந்து ரூபாயை விட்டு விட்டு மீதி ஐந்து ரூபாயை எடுத்துச் செலவழிக்க வேண்டிய அளவு அவள் கை வறண்டது. கார் எல்லாம் கன்னையா குடும்பத்தினரின் உபயோகத்துக்குப் போய் விட்டதனால் அவள் வெளியே போகவர டாக்ஸி தேட வேண்டியிருந்தது மேரிக்கு ஃபோன் செய்தால் அவள்' வேளாங்கண்ணி' போயிருப்பதாகவும், திரும்பி வரப் பத்து நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் தெரிவித்தார்கள்.

பெரும்பாலும் மாலை வேளைகளில் கன்னையாவின் குடும்பத்தினர் அவரைச் சந்திக்க மருத்துவமனை போய் விடுவார்கள். வீட்டில் சுமதி மட்டுமே இருப்பாள். பணக் கஷ்டம் அதிகமானபின் மாலை வேளைகளில் தேடிவருகிற இரண்டொரு பணக்கார ஆண்களைச் சிரித்துப் பேசி உள்ளே அழைத்து அவர்களுடைய உடற் பசியைப் பூர்த்தி செய்து பணம் சம்பாதிக்க முனையும் அளவுக்குச் சுமதிக்குக் கட்டாயமான நிலைமைகள் ஏற்பட்டன. கன்னையா முன்பு நடத்தியதை இப்போது அரை-குறைத் துணிச்சலுடன் அவளே நடத்தத் தொடங்கினாள். நடுநடுவே அவளுக்கும் கன்னையாவின் குடும்பத்தினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. ஒருநாள் காலை சுமதி ஏ.சி. ரூமில் ஏதோ படிப்பதற்காக வாரப் பத்திரிகைகள் எடுக்கப் போனபோது, அவள் காது கேட்கும்படியாகவே வேலைக்காரப் பையனிடம் சொல்லுவது போல்,

"இதென்னப்பாது? வீடா, சத்திரமா? கண்ட கண்ட ஆளுங்கள்ளாம் திறந்த வீட்டிலே நாய் நொழையற மாதிரி நொழைஞ்சுடறாங்க. கேள்வி முறையே இல்லியா?" என்று கன்னையாவின் மனைவி கூப்பாடு போட்டாள். வேலைக்காரப் பையன் இதற்குப் பதில் சொல்லவில்லை. சுமதி உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட்டாள். சிறிது நேரம் கழித்து வேலைக்காரப் பையனே சுமதி குடியிருந்த பகுதிக்கு அவளைத் தேடி வந்தான். ஆறுதலாகச் சுமதியிடம் பேசிப் பார்த்தான்.

"இந்தப் பொம்பிளை கூப்பாடு போடறதை நீங்க ஒண்ணும் மனசிலே வச்சிக்காதீங்கம்மா. ஐயா உங்களைக் கைவிட மாட்டாரு. நேத்துக்கூட எங்கிட்ட உங்களைப் பத்தி விசாரிச்சாரு 'எங்கேடா சுமதியைக் காணோமே'ன்னு அன்பாகக் கேட்டாரு” என்று அவன் கூறியதால் சுமதிக்கு எந்த நிம்மதியும் புதிதாக ஏற்பட்டுவிடவில்லை. கவலைகளே அதிகமாயின. 'தன் வாழ்க்கை அழுகிக் குழம்பி விட்டதோ?' என்ற சுமதி மறுகிய இந்த நாட்களில் ஒரு தினத்தன்று தாயின் கடைசிக் கடிதத்தைப் பெட்டியிலிருந்து மறுபடி எடுத்துப் படித்தாள். அவளுக்கு முன்பு கசந்த அதிலிருந்து இன்று ஏதோ சிறிது ஆறுதல் கிடைத்தாற் போலிருந்தது.
----------------

அத்தியாயம் 25

ஏதோ ஒர் ஆசையில் என்றோ, எப்படியோ, திசை தவறிய தன் வாழ்க்கை மிகக் குறுகிய காலத்திலேயே திருத்திக் கொள்ள முடியாத அகல பாதாளத்தில் வீழ்ந்திருப்பதை இன்று இந்தத் தனிமையில் சுமதி உணர்ந்தாள். தன்னையறியாமலேயே தான் வந்து சேர்ந்துவிட்ட சேற்றுக்குட்டையை- சாக்கடையை நினைத்தபோது அவள் உடம்பு பதறியது. அந்தத் தனிமை அவளைக் கொன்றது. மேரி ஊரில் இல்லை. யோகாம்பாள் அத்தை வீட்டிலோ உள்ளே நுழையக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். கன்னையாவோ ஆஸ்பத்திரியில் படுக்கையை விட்டு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் அசைய முடியாமல் கிடந்தார். ஒரு நிலையில் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்குப் புறப்பட்டுப் போய் அம்மா காலடியில் விழுந்து விடலாமா என்றுகூட அவளுக்குத் தோன்றியது. ஆனால் அதுவும் முடியவில்லை.

எல்லா டாக்டர்களும் கைவிட்ட தினத்தன்று, "நான் ஆச்சுடி! யாரிட்டவாவது அழச்சுக்கிட்டுப் போய்க்காட்டி எப்படியாவது சரிப்படுத்திடறேன்” என்று வாக்குக் கொடுத்திருந்த மேரி சொல்லாமல் கொள்ளாமல் வேளாங்கண்ணிக்குப் புறப்பட்டுப் போய்விட்டாள். கன்னையாவின் குடும்பத்தினர் வந்து தங்கியபின் ஊரிலிருந்தே வேலைக்காரியைக் கூப்பிட்டுக் கொண்டு வந்திருந்ததால் சுமதிக்கு ஆதரவாயிருந்த 'ஆயாவை' அவளிடம் கேட்காமலே வேலையைவிட்டு நிறுத்திவிட்டி ருந்தார்கள். வேலைக்காரப் பையன்கூட முக்கால்வாசி நேரம் ஆஸ்பத்திரி, மருந்துக்கடை என்று அவர்கள் வேலையாக அலையத் தொடங்கியதால் சுமதிக்கு ஏனென்று கேட்க ஆளில்லாமல் போய்விட்டது. காபி போட்டுக் கொள்வதிலிருந்து சமையல் செய்வது, பாத்திரம் கழுவிக் கவிழ்ப்பது வரை எல்லா வேலைகளும் சுமதியே செய்துகொள்ள வேண்டியிருந்தது. இந்த நிலைமையும், கையில் பண வறட்சியும் சேர்ந்து பரம ஏழையாகத் தன்னைப் பற்றித் தானே நினைக்கச் செய்ததால் சுமதிக்கு ஒருவகைத் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. தான் ஏமாந்துவிட்டோம் என்பதை அவள் முழுமையாக உணரத் தலைப்பட்டாள். கன்னையாவைப் பார்த்து அவர் தன்னிடம் கடனாக வாங்கியிருந்த பணத் தைத் திருப்பிக் கேட்கவேண்டும் என்று நினைத்தாள் சுமதி. கையில் பணம் இருந்தாலாவது பணத்தைச் செல வழித்து எந்த டாக்டரிடமாவது முயன்று வயிற்றி

லிருப்பது வளர்ந்துவிடாமல் கரைத்து விடலாம். பணமும் இல்லாமற் போகவே அவளுக்குத் தவிப்பாக இருந்தது. மறுநாள் காலை ஆஸ்பத்திரியில் போய்க் கன்னையாவைப் பார்த்துப் பணம் கேட்கத் திட்டமிட்டுக் கொண்டுதான் அன்றிரவு படுக்கைக்குச் சென்றாள் அவள். படுக்கச் செல்லும்போது இரவு மணி ஒன்பதரை. வீடு 'ஹோ' என்று தனிமையில் வெறிச்சோடிக் கிடந்தது. கன்னையாவின் குடும் பத்தினர் வேலைக்காரப் பையனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு இரவு இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குப் போயிருந்தார்கள். சுமதி மட்டும்தான் வீட்டில் தனியாக இருந்தாள். பயமாகக்கூட இருந்தது அவளுக்கு. வாசலில் கூர்க்கா காவலுக்கு இருந்தான்.

வெளியே காம்பவுண்டு கேட்டை உட்பக்கமாகப் பூட்டிக்கொண்டு பங்களாவின் பிரதான வாசலையும் தாழிட்டுக்கொண்டு சாவிக்கொத்தில் உள்ள பத்திருபது சாவிகளில் கன்னையாவின் அந்தரங்க அறைச் சாவியைத் தேடிக் கண்டுபிடித்து அந்த அறையைத் திறந்தாள் அவள். எதற்காகச் சந்தேகப்பட்டு அந்த அறையை அவள் திறந்தாளோ அந்தச் சந்தேகங்கள் மெய்தானென்று தெரிந்தன. அந்த அறையில் சிறிய புரொஜெக்டர் ஒன்றும், சுவரில் தொங்கவிடக்கூடிய ஸ்கிரீன் ஒன்றும், பிலிம் சுருள்கள் அடங்கிய டப்பாக்களும் இருந்தன. எல்லாம் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தன. இரவு அகால நேரங்களில் விநியோகஸ்தர்களையும், பல பெரிய மனிதர்களையும் கன்னையா இரகசியமாக அந்த அறைக்குள் அழைத்துச் சென்று ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் கழித்து மறுபடி வெளியே வருவதைச் சுமதியே சில நாட்கள் கவனித்திருக்கிறாள். - -

புரொஜெக்டரில் தயாராக இருந்த பிலிம் சுருளை விளக்கை அணைத்துவிட்டு ஒட்டிப்பார்த்தாள் அவள்.

படப்பிடிப்பு என்ற பெயரில் தன்னை ஏமாற்றி எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களும், பிற நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 'ப்ளூ' பிலிம்களும் அதில் இருந்தது. லிஸ்ட் செய்யப்படாத நம்பரையுடைய அந்த டெலிபோனில் திடீரென்று மணி அடிக்கவே அதைத் தான் அப்போது எடுத்துப் பேசுவதா விட்டுவிடுவதா என்று சுமதி தயங்கினாள். யார் எதற்காக அப்போது அங்கே ஃபோன் பண்ணுகிறார்கள் என்று அறிய ஆவலாகவும் இருந்தது. சிறிது நேரத்து மனப் போராட்டத்தின் பின் ஆவல்தான் வென்றது.

டெலிஃபோனை எடுத்தாள். "நான்தான் கோயம்புத்தூர் மில் ஒனர் ஆர்.எம்.ஜி. பேசறேன். உடனே அங்கே வரட்டுமா ?”

சுமதி முதலில் பதில் சொல்லத் தயங்கினாள். அப்புறம் துணிந்து பதில் சொன்னாள்.

"கன்னையா இல்லீங்க... நான் சுமதி பேசறேன்."

“எனக்குக் கன்னையா ஒண்ணும் வேணாம். நீதான்ம்மா வேணும். நீதானே அன்னிக்குத் தரணி ஸ்டுடியோவிலே 'காபரே' ஆடினே? உனக்காகத்தான் நான் கன்னையாவுக்கே ஃபோன் பண்ணினேன்? நீயே பேசிட்டே. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி. இதோ நான் இப்பவே வர்ரேன். என்னோட கார்லே 'மியூசிகல் ஹார்ன்' பொருத்தியிருக்கேன். உங்க வீட்டு வாசல்லே வந்து ஹார்ன் கொடுத்ததுமே நீ தெரிஞ்சிக்கலாம்.”

சுமதி அவருக்குப் பதில் சொல்வதற்கு முன் அவர் ஃபோனை வைத்துவிட்டார். கன்னையாவின் ரகசிய அறையும் ப்ளூ பிலிம்களும் லிஸ்ட் செய்யப்படாத ஃபோன் நம்பரும் எதற்கு என்று இப்போது சுமதிக்கு மெல்ல மெல்லப் புரிந்தன. உண்மைகள் பட்டவர்த் தனமாகத் தெரிந்தன.

அவசர அவசரமாக அந்த அறையைப் பூட்டிவிட்டுப் பங்களா முகப்புக்கு வந்தாள் அவள். பத்து நிமிஷத்தில் கேட் அருகே மியூசிகல் ஹார்ன் ஒலித்தது. 'கூர்க்கா' கேட்டைத் திறந்துவிட்டான். பெரிய படகுக் கார் சர்ரென்று சீறிக் கொண்டு உள்ளே நுழைந்தது. சுமதி பங்களா முகப்பிலிருந்து படியிறங்கி வந்து அவரை எதிர் கொண்டாள். "வா போகலாம்! உடனே என் கூடப் புறப்படு. ஹோட்டல்லியே எல்லாம் சொல்லி வச்சிருக்கேன். சரின்னுட்டாங்க” என்றார் அவர்.

"இங்கே வீட்டிலே யாரும் இல்லியே!”

"தெரியும் ! கன்னையாவைக் காலம்பர ஆஸ்பத்திரி லேயே போய்ப் பார்த்தேன். நீ கிடைப்பேன்னு அவன் தான் சொன்னான். இங்கே கன்னையா குடும்பத்து ஆளுங்களெல்லாம் தங்கியிருப்பாங்களே. அதனாலே இங்கே வேணாம். ஹோட்டலுக்கே போயிடுவோமே?”

"இப்ப யாரும் இங்கே இல்லே, கன்னையா வீட்டு ஆளுங்களெல்லாம் செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போயிருக்காங்க, வர்ரதுக்கு ரெண்டு மணி ஆகும்...”

"வேணாம், நாம ரெண்டுபேரும் நேரம் போறது தெரியாம ஏ.ஸி. ரூமிலே இருந்துடுவோம். திடீர்னு சினிமாவுக்குப் போனவங்க அவங்க பாட்டுக்கு வந்து கதவைத் தட்டுவாங்க. நல்லா இருக்காது. ஹோட்டல் னாக் கேள்வி முறை இல்லே... நைட் வாட்ச்மேன் முதல் ரூம்பாய்ஸ் வரை அங்கே எல்லாருக்குமாப் பணத்தை வாரி இறைச்சிருக்கேன்.”

"நான் வெளியிடத்துக்கு ரொம்பப் போறதில்லே.”

"எனக்காக வாயேன்... நான் மணி விஷயத்தில் 'தாராளமாக நடந்துக்குவேன். எனக்குக் கணக்குப் பார்த்துக் கொடுக்கத் தெரியாது.”

சுமதி உடை மாற்றி அலங்கரித்துக்கொண்டு சாவிக் கொத்தைக் கூர்க்காவிடம் கொடுத்தபின் அவரோடு காரில் புறப்பட்டாள். காரை அவரே ஒட்டிக்கொண்டு வந்திருந்தார். "நான் எப்பவுமே இது மாதிரி வர்ரப்ப டிரைவரை கூட்டிக்கிட்டு வர்ரதில்லே. அஞ்சு ரூபாய்க் காசை விட்டெறிஞ்சு 'சினிமாவுக்குப் போடா'ன்னு அனுப்பிச்சுடுவேன்' என்றார் அவர். சுமதி முன் சீட்டில் அவர் அருகே அமர்ந்திருந்தாள். நடுநடுவே இடது கையால் இடுப்பிலும் தோள்பட்டையிலும் சேட்டைகள் செய்தார் அவர். அவள் அதைத் தடுக்கவில்லை. அவரும் கிள்ளல் தடவல்களை நிறுத்தவில்லை.

ஹோட்டலிலும் அவருக்குத் தடை எதுவும் இருக்க வில்லை. எல்லாரும் சலாம் வைத்து உள்ளே போகவிட்டு விட்டார்கள்.

நடு இரவு ஒரு மணிக்கு அவர் அயர்ந்து தூங்கிவிட் டார். அவள் அரை குறைத் தூக்கத்தில் இருந்தாள். ஒட்டல் அறைக் கதவை யாரோ ஓங்கித் தட்டினார்கள். திறப்பதா வேண்டாமா என்று அவள் தயங்கினாள். மீண்டும் மீண்டும் மிகவும் பலமாகத் கதவு தட்டப்படவே அவளுக்குப் பயமாக இருந்தது. அதே சமயம் அறைக் குள்ளே ஃபோன் மணியும் அடித்தது. அவள் ஃபோனை எடுத்தாள். ரிஸப்ஷனிலிருந்து யாரோ மணி என்பவன் பேசினான். சுமதிக்குக் கை கால்கள் பதறின. "சார் மன்னிக்கணும்! திடீர்னு எதிர்பாராத விதமாப் போலீஸ் ரெயிட்னு வந்துட்டாங்க. அங்கே உங்க அறைப் பக்கமாகத்தான் வராங்க” என்று அவன் கூறுகிறவரை, அவள் தன்னை யாரென்று காட்டிக் கொள்ளவில்லை. நடுவே "ஐயையோ, இப்போ என்ன செய்யிறது?" என்று அவள் குரல் கொடுக்கவே எதிர்ப்புறம் பேசியவன் சுதாரித்துக்கொண்டு, "உடனே அவரை எழுப்பி ஃபோனைக் குடும்மா. அவசரம்” என்று விரட்டினான். அவள் அவரை எழுப்பி ஃபோனைக் கொடுத்தாள். ஃபோனில் பேசிய

அவர் உடனே உட்புறமிருந்தே பக்கத்து அறைக்குப் போத முடிந்தது போலிருந்த ஒரு கதவை திறக்கலானார். இன்னும் வெளியே கதவு தட்டப்படுவது நிற்கவில்லை. அவள் கேட்டாள்: "என்ன செய்யப் போறீங்க? நானும் உங்ககூட வந்துடட்டுமா?"

"வேண்டாம்! நான் இந்த வழியா வெளியே போய் அவங்களைச் சரிப்படுத்தி அனுப்பிச்சிட்டு வந்துடறேன். நீ பேசாம இங்கே உள்ளேயே இரு" என்றார் அவர்.

அடுத்த அறைக்குள் சென்ற அவர் அங்கேயிருந்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டுவிட்டார். சுமதி இருந்த அறையைத் தட்டியவர்கள் பொறுமை இழந்து கதவையே உடைத்து விடுவதுபோலத் தட்டுதலை மிகுதி யாக்கி இருந்தார்கள். வேறு வழியின்றிச் சுமதி கதவைத் திறந்தாள். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும், இரண்டு கான்ஸ்டபிள்களும் இருந்தனர். என்ன செய்வதென்றே அவளுக்குப் புரியவில்லை. பயந்து போய்ப் பரக்கப் பரக்க விழித்தாள் அவள் கையும் காலும் ஓடவில்லை. மில் முதலாளியைப் பற்றி அவள் சொல்லியதை அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவள் மட்டுமே வகையாக மாட்டிக் கொண்டாள். விபசாரக் குற்றம் சாட்டப்பட்டாள். கண்ணிர் சிந்தினாள். கதறி அழுதாள்.

அவளை ஜீப்பில் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள். போகிறபோதே அந்த எஸ்.ஐ. அவளிடம் ஜீப்புக்குள் இருட்டில் சேட்டைகள் செய்யத் தொடங் கினான். திமிறியவளை மிரட்டினான். சேட்டைகளைத் தொடர்ந்தான்.

ஸ்டேஷனில் ஒர் அறையில் அவளை அடைத்தார்கள். நள்ளிரவு இரண்டரை மணிக்கு இன்னும் யாரோ இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்களுடன் முதலில் அவளை அரெஸ்ட் செய்த இன்ஸ்பெக்டர் லாக்-அப் அறைக்கு வந்தார். மூவரும் நன்றாகக் குடித்திருப்பது தெரிந்தது. திடீரென்று லாக்-அப் அறை விளக்கு அணைக்கப்பட்டது. மூவரும் அவள்மேல் பாய்ந்தனர். அவளுடைய புடவை பல இடங்களில் கிழிந்தது. ஜாக் கெட் அறுபட்டது. கதறலும் அழுகையுமாக வெடித்த அவளது கூப்பாடுகள் எடுபடவில்லை. கர்சீப்பை வாயில் திணித்தார்கள். மூன்று வேட்டை நாய்கள் விழுந்து கடித்தபின் ஒரு மெல்லிய முயல்குட்டி எப்படி இருக்குமோ அப்படி இப்போது இருந்தாள் அவள், மலையி லிருந்து கீழே உருட்டி விட்டாற்போல் அவள் உடம்பு வலித்தது. சில இடங்களில் கடிப்பட்ட காயம் இரத்தக் கசிவு! கால் கைகள் கோடாரியால் பிளந்த மாதிரி வலித்தன. மூன்று முரடர்களுடைய வெறிக்கு அடுத்தடுத்துப் பலியான அவள் ஏறக்குறையப் பாதி செத்துப் போயிருந்தாள். முழுவதும் செத்துவிட்டால் பழி தங்கள் மேல் வந்து விழுந்து விடுமோ என்ற பயத்தில் வழக்கு எதுவுமே பதிவு செய்யாமலே அவளை ஜீப்பில் தூக்கிப் போட்டு எடுத்துக்கொண்டு போய் ராயப்பேட்டை நெடுஞ்சாலையும், எட்வர்ட் எலியர்ட்ஸ் ரோடும் சந்திக்கிற முனையில் ஓர் ஒரமாகப் போட்டுவிட்டார்கள். கிழிந்த ஜாக்கெட், நிலைகுலைந்து தாறுமாறான புடவைதலைவிரி கோலத்துடன் தன் நினைவின்றி அவள் அங்கே அனாதையாகக் கிடந்தாள். எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தோம் என்று அவளுக்கே சுய நினைவில்லை.

விடியுமுன் அதிகாலை நாலு நாலரை மணிக்கு குளிர்ந்த காற்று மேலே பட்டுப் பிரக்ஞை வந்து அவள் எழுந்து தட்டுத் தடுமாறி நின்றபோதுதான் தான் நாற் சந்தியில் இருப்பது புரிந்தது. உண்மையிலேயே இன்று தான் சந்தியில் நிற்பதை அவள் உணர்ந்தாள்.

சுமதிக்கு எங்கே போவதென்றும் தெரியவில்லை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. உலகத்தின் எல்லா வாயிற் கதவுகளும் தனக்கு அடைக்கப்பட்டு விட்டதுபோல அவளுக்குத் தோன்றியது.

மேற்குப் பக்கமாகப் போனால் அவளுக்குப் பழக்க மான அந்தக் கல்லூரியும், அதன் விடுதியும் இருந்தன. கிழக்குப் பக்கமாகப் போனால் எல்லையற்ற கடல் இருந்தது. தெற்கே போனால் மயிலாப்பூர்க் குளமும் கோயிலும் இருந்தன. வடக்கே போனால் மவுண்ட் ரோடும், மதுரைக்குப் போக எழும்பூர் ரயில் நிலையமும் நகரின் இதயமான பகுதிகளும் இருந்தன. சாலையின் நடுவேயிருந்த 'சிக்னலில்' இயக்கம் இல்லை. அதை இரவுக்காக ஆஃப் செய்திருந்ததால் எந்தப் பக்கத்தில் போகலாம் எந்தப் பக்கத்தில் போகக் கூடாது என்று அது வழிகள் எதையும் சுட்டிக் காண்பிக்கவில்லை.

"மலர்வதற்கு முன்பே வெம்பி வாடிவிடும் மலர் களுக்கு அப்புறம் மலர்ச்சி என்பதே இல்லை. பெண் அனிச்ச மலரைப் போன்றவள். அவள் சிறிது வாடினாலும் கருகி அழிந்துவிடுவாள்” என்று அம்மா முன்பு தனக்கு எழுதி யிருந்த பழைய எச்சரிக்கை கடிதத்தின் நிஜமான அர்த்தம் இப்போது அநாதையாய் இப்படி நடுத்தெருவில் நிற்கும் போதுதான் சுமதிக்குப் பட்டவர்த்தனமாகப் புரிந்தது. ஆனால் திருத்த முடியாத எல்லைக்கு, மலர முடியாத எல்லைக்கு இன்று அவள் வாடிப் போயிருந்தாள். அது அவளுக்கு விளங்கியது. இந்த அவலக் கதாநாயகி சுமதி இனி எங்கே போவது? என்ன செய்வது? அது அவளுக்கும் தெரியவில்லை. உங்களுக்கும் புரியவில்லை. இப்போது அவள் எதிரே இருந்த 'சிக்னலில்' வழியும் அவளுக்குக் கிடைக்கவில்லை. ஓர் இராப்பிச்சைக்காரி போல் தனியாக நாற்சந்தியில் அலங்கோலமாக இன்றைக்கு இந்த வேளையில் நிற்கிறாள் அவள்.
இனி அவளுக்குச் சாகவும் துணிவில்லை. வாழவும் துணிவில்லை. அவளுடைய கதை மேற்கொண்டு தொடரவும் வழி இல்லை. முடியவும் வழியில்லை என்றுதான் இப்படிக் கதைகள் முடிந்திருக்கின்றன? இம்மாதிரிக் கதைகள் ஒருபோதும் முடிவதும் இல்லை. முற்றுவதும் இல்லை.

விடிவதற்கு இன்னும் சில மணி நேரம் தான் இருக்கலாம். ஆனால் இனி விடிவு என்று ஒன்று வரும் என்ற பிரக்ஞையே அவளுக்கு இல்லை.

இருள் போக இன்னும் சில நாழிகைகள் இருக்கலாம். ஆனால் ஒளி வரும் என்ற நம்பிக்கையே அவளுக்கு இல்லை. மீண்டும் மலர முடியாதபடி கருகிவிட்ட ஒரு மெல்லிய பூவுக்கு விடிந்தால் என்ன விடியாமலே இருந்தால்தான் என்ன? இரண்டுமே ஒன்றுதான்.
--------------

This file was last updated on 19 Jan 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)