pm logo

கோபாலகிருஷ்ணதாசர் இயற்றிய
எம்பிரான் சதகம்
        (பன்னிரு சதகத்திரட்டு - பாகம் 6)


empirAn catakam
of kOpAlakrishNatAcar
        (catakat tiraTTu - part 6)
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கோபாலகிருஷ்ணதாசர் இயற்றிய
எம்பிரான் சதகம்
பன்னிரு சதகத்திரட்டு - பாகம் 6

Source:
பல வித்துவான்கள் இயற்றிய
பன்னிரு சதகத் திராட்டு
இதனுள் பன்னிரண்டு சதகங்கள் அடங்கியுள்ளன
வல்லை பாலசுப்ரமணியம் அவர்களால் பரிசோதிக்கப் பெற்றது
பதிப்பிடம் பி. இரத்தின நாயகர் அண்ட் ஸன்ஸ், சென்னை -1
பதிப்புரிமை, விலை ரூ. 6.00
முதல் பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1948

கோபாலகிருஷ்ணதாசர் இயற்றிய எம்பிரான் சதகம்.
இஃது மகாவித்வான் காஞ்சீபுரம்-இராமசாமி நாயுடு அவர்களால்
பார்வையிடப் பெற்றது.
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை,
87, தம்பு செட்டி வீதி, சென்னை.
[2-வது பதிப்பு]
1917 விலை அணா 1
-------------

எம்பிரான் சதகம்

ஸ்ரீராமஜயம்.
பாயிரம்.
காப்பு.

ஏன்றுத் திருமாற்கே யாளாவே னெம்பெருமான்
என்று மெனக்கே பிரானவான்--என்றும்
பிறவாத பேறாளன் பேரா யிரழம்
மறவாது வாழ்த்துகவென் வாய்.

ஆழ்வார்கள் பன்னிருவர் பாடல் போற்றும்
        அரிபத்தன் கோபால கிருஷ்ண னன்பால்
கேள்வியாற் றனதறிவின் மிகுதி யாலுங்
        கிருபைகூர் குருகடா க்ஷத்தி னாலும்
தாழ்வில்லா வெம்பிரான் சதகந் தன்னைச்
        சாற்றினான் போற்றியன்ப ரேத்தும் வண்ணம்
கேள்வியா லனுதினமுங் கீர்த்திப் பார்கள்
        கிளர்விஷ்ணு வைகுந்தத் துளராய் வாழ்வார்.         (1)

பிடிபடா மறைபடித்து வேத மார்க்கப்
        பிரதிஷ்டா பனாசார்ய ருபதே சத்தை
அடைவுடனே யெழுபத்து நால்வர்க் கீந்தே
        அவர்கள் சிங்கர தனக்குருக்காக வைத்தோர்
உடையவரெம் பெருமானார் பாஷ்ய காரர்
        உயர்பூதூர் வள்ளலார் நினைந்தோர்க் கெல்லாம்
இடாறுக்கு மெதிராசர் விப்பிர துங்கர்
        எங்களிரா மாதுசர்தா ளிறைஞ்சு வோமே.         (2)

கிம்புருடர் கருடர்காந் தருவர் சித்தர்
        கின்னரர்வித் தியாதரர்சங் கீதம் பாடத்
தும்புருநா ரதர்சனகா தியர்நற் சேடன்
        சுரருடனே ரிஷிமுனிவர் பலரும் போற்ற
அம்புயனான் மறையோத வீற்றி ருக்கும்
        அச்சுதனே யுனக்கென்றன் புன்சொல் லாலே
எம்பிரான் சதகமென விருத்தத் தாலே
        இசைப்பதற்கே முன்னிற்பா யெம்பி ரானே,       (3)

பாயிரம் முற்றிற்று.

நூல்.

திருமாது வீற்றிருக்குங் கமல மார்பா
        திகிரிசங்கந் தரித்தருளுஞ் செய்ய கையா
கருமாணிக் கக்கிரிபோ னிறத்த மெய்யா
        கதிரிரவி மதியிரண்டுங் கண்ணாங் கண்ணா
அருமாம றைப்பொருளா மாதி தேவா
        அனைத்துலகும் படைத்தளித்திட் டழிக்கு மையா
இருபாத மலர்போற்று மெய்யர் நெஞ்சில்
        இருத்திநா ராயணனே யெம்பி ரானே.                 (1)

மாதவநீ திருமங்கைக் குபதே சித்த
        மந்திரஞ்சே னாபதிமெய்ச் சடகோ பன்சீர்
நாதமுனி யுடனுய்யக் கொண்டார் மிக்க
        ஞானமணக் கானம்பி யாள வந்தார்
நீதிபுனை பெரியநம்பி யுலகம் போற்றும்
        நிகரிலிரா மாநுசனல் லுபதே சம்பெற்
றேதமற வெழுபத்து நாலு பேருக்
        கெதிராச னுரைக்கவைத்தா யெம்பி ரானே                 (2)

பூதலத்தி லுண்டான தலங்க டம்மில்
        புண்ணியகோ டித்தலமொன் றாய்ந்து பார்த்தே
வேதநெறி யாலாதிப் பிரமன் றானும்
        மிக்கதிருக் கச்சியில்வந் திறங்கி யுற்றே
ஆதரவா யத்திகரித் தலத்தி லோமம்
        அன்றவன்றான் பண்ணவந்த வோம குண்டத்
தேதமற வந்துதித்தே வரங்க ளீந்தாய்
        எண்ணரிய வருளாளா வெம்பிரானே.         (3)

உன்னுடைய வுடன் மயமே பூமி யெல்லாம்
        உனது செவ்வாய் நீர்மயமே யுதக மெல்லாம்
மின்னியநின் கண்மயமே தேயு வெல்லாம்
        விறியதின் சுவாசமய மேகாற்றெல்லாம்
நின்னினைவின் மயமேயா காய மெல்லாம்
        நின்மூர்த்தி மயமயிர்க ளுணர்வி லெல்லாம்
என்னுடலோ டுயிர்செய்கை யெல்லா நீயே
        இரண்டுபண்ணி யலைப்பதென்னோ வெம்பிரானே.         (4)

அருளாளா வேகவதி நதிசூழ் கச்சி
        அத்திகிரி நாதாவே தாக மத்தின்
பொருளாநா ராயணனே வாசு தேவா
        தண்ணியகோ டிக்கிறைவா தேவ ராசா
மருளான விரணியன்றான் குறித்த தூணில்
        வந்துதித்த நரசிங்கா வரத ராசா
இருளான தணுகாம நின்றாள் போற்றி
        ஈடேற நினைவளிப்பா யெம்பி ரானே.         (5)

பண்ணியிடும் பணிபலவே பொன்னொன் றேயாம்
        பாண்டத்தின் பேர்பலவே மண்ணொன் றேயாம்
வண்ணமிகும் பசுப்பலவே பாலொன் றேயாம்
        வகையேழி னுடல்பலவே சீவ னொன்றாம்
நண்ணுமறு சமயங்கள் பேர்வே றல்லால்
        நாதனீ யொருவனே யவர்க டம்மை
எண்ணியே செயுந்தொண் டருச்சைக் கெல்லாம்
        இரங்கிவரந் தருகின்றா யெம்பி ரானே.         (6)

கேசவநா ராயணமா தவகோ விந்த
        கிளர்விஷ்ணு மதுசூத கேடி லாத
நேசதிரி விக்ரமனே வாம னாசீர்
        நிறைந்தருளுஞ் சீதரா விருடி கேசா
மாசிலெழில் சேர்பதும நாபா வெங்கும்
        வளர்தாமோ தரவெனும்பேர் பன்னி ரண்டிற்
கீசனா யெண்டிசையுட் புறம்பு கீழ்மேல்
        இவையீரா றிடத்துறைவா யெம்பி ரானே.         (7)

சங்கர்ஷ ணாவாசு தேவா முத்தி
        தரும்பிரத்தி யும்மனா வனிருத் தாசீர்த்
துங்கபுரு டோத்தமனே யதோட்ச சாவெஞ்
        சுடர்நார சிங்கவெழி லச்சு தாநீள்
அங்கசனார்த் தனவுபேந் திரனே மிக்க
        வரிகிருஷ்ணா வென்று திரி சந்தி தோறும்
எங்குமுள்ள பூசுரர்கள் சந்தி பண்ண
        இருத்திநா ராயணனே யெம்பிரானே.         (8)

அச்சுதனே மாதவனே தேவ தேவா
        ஆதிபுரு ஷோத்தமனே யரியே மாலே
பச்சைநிறக் காகுத்தா வாசு தேவா -
        பரந்தாம னே முகுந்தா பதும நாபா
நச்சரவின் மிசைநடித்த கோவிந் தாஸ்ரீ
        நாராய ணாகேச வாவென் றுன்னை
இச்சையுடன் றுதிப்பதுவே யெனக்குப் போதும்
        இதற்கிணையா யேதுமில்லை யெம்பி ரானே.         (9)

பரப்பிரம மாமாதி மூல மேநீ
        படைத்தளித்திட் டழித்துவிளை யாட வென்றே
திருத்தமுடன் பிரமாவாய்ச் சிருஷ்டித் தன்றே
        ஸ்ரீபதியாம் விஷ்ணுவா யுயிரைக் காத்து
உருத்திரனா யுயிரையெல்லாஞ் சங்க ரித்திட்
        டோருருவே மூன்றுருவாய் மூன்று மொன்றாய்
இருக்குமெழி லச்சுதமின் மகிமை சற்றும்
        இமையவர்க்குங் காணவரி தெம்பி ரானே.         (10)

சிட்டிக்கப் பிரமாவைக் கருணை யாலுன்
        திருநாபிக் கமலத்தே செனிக்கச் செய்தாய்
மட்டற்ற செனனமெல்லாங் காமத் தாலே
        வர்த்திக்க மன்மதனை மனத்திற் றந்தாய்
நெட்டுற்ற விப்புவியிற் பிறந்த வெல்லாம்
        நீறாக்க வுருத்திரனைப் பிரம னீந்தான்
இட்டத்தே யேகனா யிராதே யிங்ஙன் -
        ஏன் செய்தா யச்சுதனே யெம்பி ரானே.         (11)

பலர்கூடி யிருந்தசந்தை கலைந்த தொக்கும்
        பழுத்தாலிற் பறவைகள்சேர்ந் தகன்ற தொக்கும்
நலமாகச் சூளையொன்றில் வெந்த பாண்டம்
        நாற்றிசையும் போயுடைந்து போவ தொக்கும்
சலமீதில் மிதந்திரண்டு சாஷ்டங் கூடிச்
        சடக்கெனவே பிறிந்ததொக்குஞீ சமுசா ரந்தான்
இலதாகத் தெளிந்துனது திருத்தாள் போற்றி
        ஈடேற நினைவளிப்பா யெம்பி ரானே.         (12)

அறக்கொடிய பவமெடுத்தா லதினூ றாண்டில்
        ஐம்பதுநித் திரை போய்மற் றைம்ப தாண்டில்
சிறுக்குழந்தை பேதையொடு பால னென்றே
        திரிந்துபசி பிணிமூப்புத் துன்ப மேவிக்
கறுத்தமயிர் வெளுத்துடலங் கூனிப் பல்போய்க்
        காதுகெட்டுக் கண்மூடிக் குழறிப் பேசி
இறக்கமுற்றுக் கிடந்திறக்கும் பிறவி வேண்டேன்
        இனிக்கரையேற் றச்சுதனே யெம்பி ரானே.         (13)

பாதத்திற் பிரியாம லிருக்குங் கங்கை
        பரமேட்டி பிறந்ததுந்திப் பதுமத் தண்பூ
தீதற்ற கௌத்துவமா மணிபூ ணாரம்
        தேசுளபீ தாம்பரநீ யுடுக்குங் கூறை
வேதத்தை விரிஞ்சனுக்கு நீபோ தித்தாய்
        விண்ணவர்க்குன் றிருக்கையா லமுத மீந்தாய்
ஏதுற்று நாரணனே யுனைப்பூ சிப்பேன்
        இமையவர்தம் பெருமானே யெம்பி ரானே.         (14)

அன்னாதி யாமரியே யுனது நாமம்
        ஆயிரத்திற் பலவாத லொன்றே யாதல்
பன்னாளுங் கீழ்க்குலத்தோ ரெண்ணி னாலும்
        பாலிருக்குங் கோபாலர் பாண்ட மொப்பார்
நின்னாம மெண்ணாமற் றர்க்கம் பேசும்
        நெறியில்லார் குலம்பார்ப்பா ரானக் காலும்
இன்னாத கள்ளிருக்கு நவபாண் டத்திற்
        கிணையிதுசத் தியமரியே யெம்பி ரானே.         (15)

வளைவான பெரும்பல்லு மெரிந்த கண்ணும்
மைம்மலை போற் காத்திரமு முடைய காலன்
அளவான பெரும்பாசங் கொண்டே யென்றன்
        அங்கத்தைப் பிணமாக்கி யாவி யென்னும்
ஒளிவேறா யாதனா சரீரக் கூட்டில்
        உறப்பண்ணித் தெண்டிக்கு மிடரா னாயேன்
இளையாம லிப்பொழுதே யடிமை
        கொள்வாய் இறைவாநா ராயணனே யெம்பி ரானே.         (16)

அச்சுததின் மெய்யடியா ருகந்தே யிட்ட
        தணுவெனினு மகமேரு வாகக் கொள்வாய்
நிச்சயமா யுனை நம்பி யெண்ணா மூடர்
        நினைந்திடிலோர் நூற்றையொன் றாயுங்கொள் ளாயால்
நச்சிமற்ற பிதிர்க்களுக்குந் தேவ ருக்கும்
        நமஸ்கரித்துப் படைத்தவெல்லா நதியின் வெள்ளம்
இச்சையுடன் சமுத்திரத்தே சேரு மாபோல்
        எல்லாங்கைக் கொள்கின்றா யெம்பி ரானே.         (17)

தந்தை தாய் தினும்பண்டம் பிள்ளை வாயில்
        தானிட்ட சேடத்தைக் கேட்டு வாங்கிச்
சிந்தை மகிழ்ந் தின்பமுறத் தின்னு மாபோல்
        தேவாவுன் னுடைமையை நீ யடியார்க் கீய
அந்தவுன் றன் மெய்யடியார் பத்தி யாலே
        அளித்தகூ ழமுதினையுண் டேப்ப மிட்டே
இந்திரைக்கு மிதுதிட்டங் காட்டித் தொண்டர்
        ஏற்றமதைத் தெளியவைத்தா யெம்பி ரானே.         (18)

மன்னவராய் வாழ்ந்துசுகித் திருந்த பேரை
        வறுமையராய்ச் சலித்திரந்து திரிய வைப்பாய்
அன்னமரி தாயிரந்து திரிந்த பேரை
        அதிகராய் வாழ்ந்துசுகித் திருக்க வைப்பாய்
நின்னருளே யல்லாமல் யாவருக்கும்
        நினைத்தபடி நேரொண்ணா தாகை யாலீ
தென்னதிரு விளையாட்டுன் மகிமை சற்றும்
        இமையவர்க்குங் காணவரி தெம்பி ரானே.         (19)

அருளுடன்மீன் பார்த்தக்காற் சினைதான் குஞ்சாம்
        ஆமைமுட்டை தாய்நினைந்தாற் குட்டி யாகும்
பரிசத்தாற் பறவைமுட்டை குஞ்ச தாகும்
        படியிலிவை யிற்கடையாக் கிடக்கு நாயேன்
கருணையினாற் குருமூர்த்தி பார்த்த தாலும்
        கருத்தாரத் திருவுளத்தே நினைத்த தாலும்
இருபதத்தைத் தலையில்வைத்த பரிசத் தாலும்
        இருளறுத்தே னச்சுதனே யெம்பி ரானே.         (20)

சக்கரஞ்சங் கிருபுயத்திற் பொறித்த பின்பு
        தயவுடனே பன்னிரண்டு திருமண் சாத்திச்
சிக்கெனவே தாசனென்று நற்பே ரிட்டுச்
        செவிகுளிர மந்திரமு முபதே சித்து
அக்கினியிற் செந்துளவக் காஷ்டங் கூட்டி
        ஆவினெய்யாற் புனர்செனன வோமம் பண்ணி
இக்கிரியை யைந்தினாற் றிருத்திக் காக்கைக்
        கெழிற்குருவா யுதித்தனையே யெம்பி ரானே.         (21)

மணியிசைக்கா வந்திடுமான் செவியான் மாயும்
        மகிழ்புணர்ச்சிக் காகவிப மண்ணிற் சிக்கும்
கணில்விளக்கைக் கண்டு விட்டில் வீழ்ந்து பொன்றுங்
        கடுந்தூண்டிற் கவ்வி மச்சம் வாயான் மாளும்
அணுகியளி நாசியிற்செண் பசுமோந் தெய்க்கும்
        ஐம்பொறியு முடையநா னலைந்தி டாமல்
இணையிலும் தேசத்தாற் றிருத்திக் காக்கைக்
கெழிற்குருவா யுதித்தனையே யெம்பி ரானே.         (22)

ஆகார நித்திரைமை துனம்ப யந்தான்
        அனைத்துயிர்க்கு முண்டுநரர்க் கதிகம் ஞானம்
சேகாரு நல்வினைதீ வினையி ரண்டால்
        சிற்றின்பம் பேரின்பஞ் சேர்ந்திடாமல்
நாகாரி வாகனனே கேச வாநின்
        நற்பதங்கண் டீடேறக் குருவு ரைக்கும்
ஏகாந்த வுபதேசப் பொருளை நம்பி
        எண்ணமெய்ஞ்ஞா னந்தருவா யெம்பி ரானே.         (23)

பெருத்திருந்த பூசினிப்பூ வின்கீழ்க் கொட்டை
        பெருத்துயர்ந்து காயாய்ப்பூத் தேய்ந்துற் றாற்போல்
கருத்திலுறு நல்லறிவை வீறொட்டாமல்
        கபடமுறும் புல்லறிவு மேலிட் டந்தால்
குருப்பகரு முபதேசப் பொருளை நம்பிக்
        குறைவறவே யுருவேறத் திருவு மேறி
இருட்பறந்து மெய்ஞ்ஞானம் விளங்கச் செய்தாய்
        இறைவாநா ராயணனே யெம்பி ரானே.         (24)

உப்புத்தி தேனுத்தி கருப்பஞ் சாற்றின்
        உத்திநெய்யி னுத்திதயி ருததி யுன்றன்
வைப்பெனும்பா லுத்தி நன்னீ ருததி யென்னும்
        வளைகடலே ழுண்டாக்கித் தீவுண் டாக்கித்
கப்பலுடன் சோங்குமரக் கலமுண் டாக்கிக்
        கடலோடிக் கரையேறக் கற்பித் தாற்போல்
இப்பிறவிக் கடலேழுங் கடந்தே யுய்கைக்
        கெழிற்குருவா யுதித்தனையே யெம்பி ரானே.         (25)

சீராமா வென்றொருகா லுரைத்தா லுன்றன்
        திருநாம மாயிரத்துக் கிணையா மென்றே
நீராருஞ் சடையான்பா கத்து மைக்கு
        நிகழ்த்திடலம் மத்திரத்துக் கிணையொன் றுண்டோ
பாராரு மதுதனையுச் சரித்தீ டேறப்
        பத்துருவில் ராமனென்றே முக்கால் வந்த
ஏராரும் பரசுரா மாஸ்ரீ ராமா
        எழிற்பலபத் திரராமா வெம்பி ரானே.         (26)

சீரரியே நின்கோயிற் றுவார பாலர்
        செயவிசய ரிருவருநின் னேவ லாகும்
காரணத்தா விரணியனோ டிரணி யாட்சன்
        கடியரா வணனுடனே கும்ப கர்ணன்
மாரிநிகர் சிசுபால னுடனே தந்த
        வக்கிரனு மாகமுக்கால் வதைத்து மீண்டும்
ஈரமுடன் பண்டையிலுஞ் சாரூ பந்தந்
        தேற்றமுற வைத்தனையே யெம்பி ரானே.         (27)

கரியுன்னி மூலமே யென்ற மட்டிற்
        கராவைவதைத் தொருநொடியிற் கரியைக் காத்தாய்
உரிகின்ற துகில்வளர க்ருஷ்ணா வென்றே
        உரைத்தளவிற் றுரௌபதைக்கு மானங் காத்தாய்
அரியெங்கு முளனென்றோர் பாலன் சொல்ல
        அக்கணத்திற் றூணினர சிங்க மானாய்
எரிகின்ற பெருந்தணலை யவனுக் கன்றே
        இமசலமாக் கினையரியே யெம்பி ரானே.         (28)

திருமணிட்டு நீறுமிட்டுத் திகழ்வை தீகச்
        சீபெரிய வயிட்டிணவர் சைவர் புத்தர்
அருகர்சம ணர்கள் துருக்கர் கர்த்தா வுண்டென்
        னறுசமயத் தோர்களுக்கு மிறைவ னீயே
றருமதெறி பதிவிரத மறையொ ழுக்கம்
        தயவுசமஞ் சத்தியஞ்சூ ளுடைய பேர்க்கு
இருளறுத்து மெய்ஞ்ஞானம் விளங்கச் செய்வாய்
        இறைவாநா ராயணனே யெம்பி ரானே.         (29)

திருக்கச்சி நம்பியுனை நம்பிச் செம்பொற்
        றிருவால வட்டகயிங் கரியஞ் செய்து
பெருக்கமழிந் தேதிருவாய் மலர்ந்து பேசிப்
        பேதமற்றுத் திட்டமா யிருக்க வோர்நாள்
கருக்கலினி லருளாளன் மறைவிற் றூங்கக்
        காணாம லருளாளா வென்ன நீவந்
திரக்கமுடன் கைவிளக்குப் பிடித்துச் சென்றாய்
        இயல்சக்க ராயுதனே யெம்பி ரானே.         (30)

திறத்தபொய்கை யார்பூதத் தார்பே யாழ்வார்
        திருமழிசை யார்வில்லி புத்தூ ராழ்வார்
அறிக்கைமிகுங் குலசேக ராழ்வார் ஞான
        ஆரணத்தைத் தமிழ்செயுநம் மாழ்வார் பத்தி
குறைச்சலில்லாத் தொண்டரடிப் பொடியாழ் வார்பண்
        குளிர்ந்த சொல்லா லிசைபாடுந் திருப்பாணாழ்வார்
இறக்கவெட்டிப் பறித்ததிரு மங்கை யாழ்வார்
        இவர்பதின்மர்க் கருளினையே யெம்பிரானே.         (31)

பத்துப்பே ராழ்வார்கள் தமினம் மாழ்வார்
        பாதார விந்தத்தைப் பணிந்து பாடி
முத்திபெற வருமதுர கவியாழ் வாரும்
        மூதறிவா லுயர்வேதப் பொருளைக் கொண்டு
உத்தமமாம் பாமாலை யொடுபூ மாலை
        உகந்துனக்குத் தருங்கோதை யாருங் கூட
இத்தலத்திற் பன்னிரண்டு பேராழ் வாரென்
        றெண்ணமுற வைத்தனையே யெம்பி ரானே.         (32)

அருளுடனே பொய்கையா ருறங்கப் பூதத்
        தாழ்வார்வந் திருவரா யிருக்கப் பேயார்
சொரிமழையிற் போய்மூவ ராகி நிற்கச்
        சொலற்கரிய நீ நாலாம் பேராத் தோன்றிக்
கருணையுட னம்முவர் பாடல் கேட்டுக்
        கமலமலர்த் திருவடி வீடாகப் பாலித்
திருளறவே கோவலூ ராய னாரென்
        றிடைகழியி னின்றனையே யெம்பிரானே.         (33)

வெயிற்காயு மாதித்தன் கனகத் தேர்க்கு
        விடநாகம் வடஞ்சகடொன் றேழு வாசி
சயத்தாலா காயத்திற் றேர்க டாத்தும்
        சாரதிகா லிரண்டுமில்லா முடவ னுன்றன்
மயத்தான்மா மேருவைத்தேர் சுற்றிச் சுற்றி
        மறைந்து திப்பு தேதினமா நின்வே தத்தின்
இயற்சேரும் பிரமகற்பங் கிராண நன்னாள்
        இதிற்றோன்ற வைத்தனையே யெம்பி ரானே.         (34)

உதித்துவரும் போதுமத்தி யானப் போதும்
        உயரத்த மலைவாயிற் புகுதும் போதும்
மதத்தசுர ரருக்கனைத்தேர் நடத்தொட் டாமல்
        வளைந்து பொரத் திருநாபிக் கமலம் வந்த
விதிக்கடவு ளுரைத்ததிரு மந்திரத்தால்
        விப்பிரர்கள் யாவருமுச் சந்தி தோறும்
எதிர்த்திறைத்த நீர்க்கணையா லசுரர் கீழ்ப்பட்
        டெதிர்நடக்கப் பண்ணுகின்றா யெம்பி ரானே.         (35)

திண்ணமுடன் பாண்டுவுக்குச் சாப முற்றும்
        திறற்றரும னுற்பவித்தா னென்ற மட்டில்
கண்ணில்லாத் திரிதராட்டிரன்றன் றேவி
        காந்தாரி கெற்பம் விழப் புடைத்துக் கொள்ள
மண்ணிலது பொன்றாமுன் முனிவி யாசன்
        வந்தெடுத்துப் பலகலசத் தடைத்து நின்பேர்
எண்ணவது நூற்றுவராய்ப் பிறக்கச் செய்தாய்
        இறைவாநா ராயணனே யெம்பி ரானே.         (36)

விண்ணுலகு மண்ணுலகு மசுரர் மிஞ்சி
        வேதமற்று வேள்வியற்று நீதி யற்றாண்
பெண்ணென்னுங் குலமிரண்டும் வரம்பு கெட்டுப்
        பிரமாவும் படைப் பொழிந்திட் டிருந்த நாளில்
திண்ணமுடன் கெருடவா கனமீ தேறித்
        திறலசுர ரனை வரையுங் கொன்று தேவர்
எண்ணவுல கீரேழும் படியப் பண்ணாய்
        இறைவாநா ராயணனே யெம்பி ரானே.         (37)

வன்னியினன் புகழ்விசுவ தேவன் சுத்த
        வருணன்வயிஷ்க் காரணிய னிந்தி ரன்சீர்
நன்னெறிசேர் தேவமுனி யேசு பாதன்
        நமன்வாயு வுமைபிதுர்க்க டனக் குபேரன்
கொன்னமருஞ் சங்கரனார் விதியோ னென்னும்
        குறைவினா விவர்கள்பதி னைந்து பேரும்
இன்னமுத மதிக்கலையைத் தினமொன் றாக
        என்றுமுண வைத்தனையே யெப்பிரானே.         (38)

முதற்பிறையா மென்னுமோர் கலையிற் கூடி
        மூவைந்தும் வளர்ந்துகலை பதினாறாகும்
மதிக்கலையிற் பதினைந்தைச் சுரருண் டென்று
        வந்திதனைக் கூடுமமா வாசை நாளில்
கதிர்ப்பருதி பசும்பயிர்புல் கன்ம ரத்திற்
        கலந்தணைத்து பசுவிடத்தே வந்து கூடி
இதிற்பஞ்ச கவ்வியத்தால் பணுமோ மத்தால்
        இந்துதிக்கப் பண்ணுகின்ற பெம்பிரானே.         (39)

காமனுரு விலிபுரவி கிளிதேர் காற்று
        கடல்முரசங் குயில் காணஞ் சேனை மின்னார்
மாமகரங் கொடி கரும்பு சிலைநாண் வண்டு
        மலர்கனைக விலை கொண்டே மதனாய் வீறிப்
பூமியுயர் வானமெங்குஞ் சஞ்சரித்துப்
        பூங்கணை யெய் தாண் பெண்ணைப் பொருத்திக் கூட்டி
ஏய்கிறத் தயன்படைப்பு மிவனால் வர்த்தித்
        தேற்றமுற வைத்தனையே யெம்பிரானே.         (40)

பட்டமற்றுப் பதினாலாண் டடவி யுற்றுப்
        பத்தினியுஞ் சிறைபோய்ப்பின் னோனு நீயும்
மட்டறவே சலித்திருக்கச் சுக்கிரீவன்
        வந்துதவக் கவித்திரளாற் சேது கட்டித்
துட்டனெனும் ராவணனைக் கொன்று தேவர்
        தோத்திரிக்க வீடணற்குப் பட்டங் கட்டி
இட்டமுட னுலகாண்ட ஸ்ரீரா மாவென்
        றெண்ணவிருளறுக்கின்றா யெம்பி ரானே.         (41)

மீதான மச்சகெந்தி மகன் செத் தில்லாள்
        வியாசமுனிக் குப்பெற்ற பாண்டு தந்தை
மாதாக்கள் குந்தியுமத் திரையென் பாளும்
        மந்திரத்தா லைவருக்கை வரையும் பெற்றார்
சூதாடிப் பொய்யுரைத்துக் குருவைக் கொன்றார்
        துரௌபதையே பஞ்சவர்க்குத் தேவியானாள்
ஈதார ணப்பொருள்பா ரதமா மென்றே
        எண்ணவிரு ளறுக்கின்றா யெம்பி ரானே.         (42)

நண்ணியொரு பாகவதன் வறுமை தன்னால்
        நாகரசன் பாற்சென்று நலிவு கூற
மண்ணிலவ னிருபதாண் டினுக்குச் செல்லும்
        மனைவர்த்திக் கீந்துபின்னும் வாவென் றோதக்
கண்ணதனாற் கானகத்திற் பதித்த வேங்கை
        கண்டவனுங் கலங்கியந்தக் கலக்கந் தீர
எண்ணரியே யெனக்கேட்ட புலிக்கு முத்தி
        ஈந்தனை வேங் கடத்தரியே யெம்பிரானே.         (43)

அறுசமயத் துறைகளுக்கு மிறைவ னீயென்
        றறியாமற் பாண்டியன்முன் றர்க்கத் துற்றால்
விறலரசன் பொற்கிழியை யுயரக் கட்டி
        விழப்பாடிக் கொடுபோங்கள் பெரியோ ரென்ன
மறைகளொன்று மோதறியாப் பெரியாழ் வாரை
        மாமறை நீ யோதுவித்துக் கிழிய றக்கண்
டிறைவணங்கிப் பட்டர்பிரான் வந்தா னென்றே
        எண்ணவிரு ளறுத்தனையே யெம்பி ரானே.         (44)

நந்தவனங் கொத்தநிலத் தெழுந்த பெண்ணை
        நம்மாழ்வார் புத்திரியா வளர்த்த நாளில்
சிந்தை மகிந் துனக்காழ்வார் கட்டி வைத்த
        திருமாலை யவள்சூடி நிழல்பார்த் தீய
உன்றனக்கு மற்புதமாத் தினமுஞ் சாத்த
        உகந்துசூ டிக்கொடுத்த நாச்சி யாரென்
றிந்திரைக்கு மிதுதிட்டங் காட்டித் தொண்டர்
        இருதயத்து ளிருக்கின்றா யெம்பி ரானே.         (45)

மச்சகூர் மவராக நார சிங்க
        வாமனமூ விராமபுத்த கற்கி யாம்பத்
தச்சமுன்ற னவதார மாகு மென்றே
        அகிலாண்டந் தெளியவிவற் றிரண்டாம் ராமன்
கச்சமரா டக்குறுகும் பரசு ராமன்
        கைச்சிலையை வாங்கியே நாரி யேறிட்
டிச்சகத்தி லெப்பொழுதும் பரசு ராமன்
        இருத்துமுறை செய்திட்டா யெம்பி ரானே.         (46)

பிறக்குமுன்னே வயிற்றுக்குட் கருவி றந்து
        பிணத்தைப் பெற் றழுதுசிலர் புரளவைப்பாய்
குறுக்கப்பட் டேவயிற்றிற் பிணமா வீங்கிக்
        கூற்றுவனாய்ச் சில தாயர்க் கொல்லச் செய்வாய்
மிறுக்கமற்று மகப்பெற்று முன்னஞ் செய்த
        வினைகடமை யனுபவித்திட் டிறக்கச் செய்வாய்
இறக்குமிடர் பிறக்குமிட ரிரண்டும் வேண்டேன்
        இனிக்கரையேற் றச்சுதனே யெம்பி ரானே.         (47)

ஆவணிரோ கிணிநாளி லபர பக்ஷத்
        தஷ்டமியிற் சசியுதிக்கும் வேளை தன்னில்
தேவர்தொழும் வடமதுரா புரியிற் றோன்றிச்
        சிசுவடிவாய் வசுதேவன் கைமீ தேறி
நீவரிற்ச யந்திநாள் வனத்துக் காளி
        நேயமுடன் கனிகடரி லுகந்து கொண்டே
யாவருக்கு மரியபத மவளுக் கீந்தாய்
        இறைவாநா ராயணனே யெம்பி ரானே.         (48)

அரிதிவச மாமேகா தசிநன் னாளை
        அணுஷ்டித்த ருக்குமாங் கதனைக் கண்டவ்
விரதமனுஷ் டித்தளவி லாத பேர்கள்
        மிகக்கதிசே ருகையாலே சுரர்சோ தி
உருவமிகு மோகினியை விடுத்த மட்டில்
        உறுதியாத் தன்மகனை வெட்டுங் கூர்வாள்
இருபுயத்திற் பூந்தொடையா வைகுந் தத்தே
        இனத்தோடும் வைத்தனையே யெம்பிரானே.         (49)

பத்தியுடன் றுவாதசியன் றம்ப ரீஷன்
        பாரணைசெய் வதுதவிர்ப்பான் றூரு வாசன்
குத்திரமா வந்தொளிக்க வுண்ண வஞ்சிக்
        கோவிந்தா வென்றுனது தீர்த்தங் கொண்டான்
உத்தமமென் றெண்ணாம விடுஞ்சா பத்தால்
        உயர்முனியைத் துரந்தண்டத் துறவொட் டாமல்
இத்தலத்தி லம்பரீஷ நீயே காவென்
றிரந்தடையப் பண்ணினையே யெம்பி ரானே.         (50)

பாதகக்கண் டாகன்ன னெனு மியக்கன்
        பத்தியற்றுன் பெரும் புகழைக் கேளோ மென்று
காதிரண்டிற் சத்தமிகு மணியைக் கட்டிக்
        கணப்பொழுது மோயாம லசைத் திருக்கத்
தீதுநினைந் தானென்றுன் மனத்தெண் ணாமல்
        சிந்தையினால் மறவாமல் தியானித் தானென்
றேதமற வவனுக்கு மவன்றம் பிக்கும்
        இரங்கிமுத்தி யளித்தனையே யெம்பி ரானே.         (51)

கடிக்கிலிர தித்தமாங் கனியை மீளக்
        கடியாமற் கல்லையில்வைத் துனக்கா மென்றே
படைத்துவைத்த வேடுவிச்சி சபரி நெஞ்சிற்
        பரிவு கொண்டு ரகுராம வவதாரத்தில்
சடக்கெனவே முன்றின்ற கனியைத் தானே
        தக்கவிதிப் படிபடைத்த தாக வுட்கொண்
டிடுக்கணறச் சாரூப மவளுக் கீந்தன்
        றீடேற்றி விட்டனையே யெம்பி ரானே.         (52)

திண்ணமுடன் கோபாலர் மனையில் வெண்ணெய்
        திருடினதைக் கண்டவர்க டுரத்தும் போது
கண்ணிலாத் ததிபாண்டன் மனையுட் புக்குக்
        கண்கொடுத்தோர் சாடியிற்புக் கொளித்துக் கொள்ள
புண்ணிகராங் கண்வேண்டேன் கதிதா வல்லால்
        போகவிடே னெனச்சாடி மூடிக் கொள்ள
எண்ண ரிய பரமபத மவனுக் கீந்தாய்
        இறைவாநா ராயணனே யெம்பி ரானே.         (53)

மிடித்தில்லாள் பசிதொறுக்கிற் குசேல னென்னும்
        விப்பிரன்றா னஞ்சியுன்றன் பதிக்கு வந்தால்
அடுத்தசிநே கிதன் வந்தா னென்றே சிந்தித்
        தறிந்தழைத்தென் கொடுவந்தீர் தாரு மென்றே
மடிக்கணுறு பொரியவலா மதனை வாங்கி
        மகிழ்ந்து விர லாலள்ளி யிருகா லுட்கொண்
டிடுக்கணறச் சம்பத்து முத்தி வீடும்
        இரங்கியவற் களித்தனையே யெம்பி ரானே.         (54)

நந்தகோ பாலனுறுந் திருவாய்ப் பாடி
        நகர்மீதிற் படையெடுத்து மண்ட லீகர்
வந்திடிலப் பகைவரெல்லா மடிவ ரென்றே
        வரங்கொடுத்துப் பின்னகரங் கட்டு வித்தாய்
அந்தவரத் தாற்கஞ்சன் வரவே யஞ்சி
        அசுரர்களிற் பலரைவிடுத் துன்னைக் கொல்கைக்
கெந்தவகை தொடுத்தாலுஞ் செயித்த நேக
        ராட்சதரை வதைத்தனையே யெம்பி ரானே.         (55)

உக்கிரசே னன்றனைப் போல் வடிவு கொண்டே
        உத்தமியைப் போரசுரன் வந்து கூடி
அக்கிரமக் கஞ்சனுதித் தசுர னாகி
        அரக்கரைக்கூட் டிக்கொண்டே பிதாவைத் தள்ளி
திக்கெல்லா மவனாளின் மதுரைக் கேகித்
        திரளுடனே கஞ்சனைக்கொன் றவன்பி தாவை
இக்குவலை யம்புரக்கப் பண்ணி வைத்தாய்
        இறைவாநா ராயணனே யெம்பி ரானே.         (56)

நின்னினைவா நித்திரையைத் துற்கை யாக்கி
        நிகரினந்த கோபனுக்குப் பெண்ண தாக்கி
அந்நிசியி லனைவரையு மயங்கப் பண்ணி
        அருளுடனே வசுதேவன் கைமீ தேறி
நன்னெறிசேர் திருவாயர் பாடி புக்கு
        நந்தனுக்கு மகவான துற்கைப் பெண்ணை
இந்நிசியிற் றேவகியார் பெற்றா ரென்றே
        இனிதுரைக்கப் பண்ணினையே யெம்பி ரானே.         (57)

கடியகர்த்த பாசுரனுஞ் சத்த மாகக்
        கத்துவது கேட்டளவிற் கஞ்ச னஞ்சிப்
படையெடுத்துக் கவசந்தொட் டநேக ரோடும்
        பதிலமாய் வந்திடத்தே வகியார் கண்டே
திடமுடையா ணல்ல பெண்ணே யென்ற போதும்
        சீக்கிரமாக் கல்லிலடித் திடவே யோங்க
இடியிடித்தாற் போன் மார்பி லுதைத்தே துற்கை
        ஏகநினைத் தருளினையே யெம்பி ரானே.         (58)

முலையில்விட மருத்தியுனைக் கொல்ல வெண்ணி
        மோகினியாய் வந்தபூ தகியென் பாளோர்
மலையெனவீழ்ந் திடமுலையி னஞ்சும் பாலும்
        வல்லுயிருந் திருப்பவள வாயா லுண்டே
கொலை செய்ய வந்தவடன் பகையெண் ணாமல்
        கொடுத்தனைசா யுச்சியவீ டென்னிற் போற்றும்
இலகியமெய்த் தொண்டருக்குக் கதிதா னீவ
        தெளிதுனக்குச் சீரரியே யெம்பி ரானே.         (59)

குறைச்சலறக் கனிக்கரிசி யள்ளி மூடிக்
        குதித்துவர மோதிரத்தின் வழியாச் சிந்தி
முறத்திலிட வெறுங்கையாய்த் திகைத்து நிற்க
        முகம்பார்த்துத் தின்கனியிட் டப்பா வென்ன
நிறத்தநவ மணிகள்கனி விற்பாள் கூடை
        நிறையவவ ளஞ்சிநந்த கோப னென்னும்
இறைக்குரைக்கி லுனது சொம்மே கொடுபோ வம்மா
        என்றுரைக்கப் பண்ணினையே யெம்பி ரானே.         (60)

மன்னனைப்பா டாமற்போ கின்றே னீயும்
        வாவரியே யென்றழைத்த புலவன் பின்னே
பன்னகப்பாம் பணைசுருட்டிக் கொண்டே யேகிப்
        படுத்துக்கொ ளென்ற மட்டிற் படுத்துக் கொண்டாய்
சொன்னவண்ணஞ் செய்த பெருமாளே யென்று
        சுரர்துதிக்கக் கச்சியில்வீற் றிருக்கின் றாய்நீ
என்னுயிரு மென்னுணர்வு மெல்லா நீயே
        இறைவா நா ராயணனே யெம்பி ரானே.         (61)

கருதலர்க்குத் தோலாத வரத்தால் வந்த
        காலயவ நன்போரிற் பின்னிட் டோடி
வரைமுழையிற் றனையுறக்க மெழுப்பும் பேர்கள்
        மடிவரென்றே முசுகுந்தன் வரத்தாற் றுஞ்சும்
பரிமளிக்க விடத்தொக்கத் துயிலு வானைப்
        பதறி நீ யென்றுதைக்கன் முசுகுந் தக்கோன்
இருகண் விழித் திடக்கால யவந னீறாய்
        இறக்கவகை யிட்டனையே யெம்பிரானே.         (62)

சயிந்தவனை யிப்பகலே கொல்வேன் றப்பில்
        தழலிறப்பே னெனவிசயன் சபதங் கூறப்
பயந்தவன்பெட் டிக்குளுறச் சக்க ரத்தால்
        பகலைமறைத் திரவாக்கித் தருமன் சேனை
மயங்கியிடச் சயிந்தவனு மொளிப்பு நீங்கி
        வரவிரவைப் பகலாக்கி விசயா வெய்யென்
றியம்பியந்தச் சயிந்தவனை வதைத்துப் பார்த்தன்
        இறவாமற் காத்தனையே யெம்பி ரானே.         (63)

மைந்தனெனுஞ் செயத்திரதன் சிரத்தை யிந்த
        மண்ணில் விழச் செய்தவர்கள் மடிக வென்றே
சிந்துபதி தபசுபண்ணி யிருக்கப் பார்த்தன்
        செயத்திரதன் றலையறவே யெய்த பாணம்
சந்திபண்ணுங் கையிற்சிரத்தைக் கொடுபோய் வைக்கத்
        தறையிலிட்டுச் சிந்துபதி தானே சாக
இந்தவகை தொடுத்ததனா லன்று பார்த்தன்
        இறவாமற் காத்தனையே யெம்பி ரானே.         (64 )

கன்னனெய்யுங் கடுநாகக் கணையாற் பார்த்தன்
        கழுத்தறுந்து மாயாமற் றேரைத் தாழ்த்த
மின்னுமணி முடிக்கிலக்காய்க் கொடுபோய்ச் சர்ப்பம்
        மிகவெட்கித் தனை மீண்டுந் தொடுக்கச் சொன்னால்
உன்னருளான் முன்னாளிற் குந்தி தேவிக்
        குரைத்தசொற்காத் தொடுத்தகணையினித்தொடேன்போ
என்னவந்தப் பாம்புதலை யடித்துக் கொண்டே
        இறக்கவகை யிட்டனையே யெம்பி ரானே.         (65)

தினம்பன்னீ ராயிரங்கோ தானம் பண்ணும்
        திறலரசன் முன்னைநா ளீந்த வோரா
தனதுகீ தாரத்திற் சேரி லத்தை
        தானுமொரு வர்க்களித்த சாபத் தாலே
மனநடுங்கிக் கிணற்றினிற்பச் சோந்தி யாகி
        மயங்கியுற நீயெடுக்கச் சாப நீங்கி
இனனிறமா யுலகமெல்லாம் புரக்க வைத்தாய்
        இறைவாநா ராயணனே யெம்பி ரானே.         (66)

வரத்திலர னுங்கணமும் வாசல் காக்க
        மதத்தவா ணாசுரன்மே னீவந் தக்கால்
உருத்திரனக் கினிவிடநீ குளிரை யேவ
        உஷ்ணமுடன் குளிருமா யரனுற் றக்கால்
கரத்திரளிற் படையெடுத்தே யெதிர்த்த வாணன்
        கைகளோ ராயிரத்தி லிரண்டு கையை
இருத்திமற்றைக் கரங்களெல்லாந் துணித்துக் காத்தாய்
        இலகுசக்ரா யுதத்தரியே யெம்பி ரானே.         (67)

பொன்னுலகைர் செயித்தநர காசு ரன்றான்
        பூதலத்திற் கொடுவந்து வைக்குந் தேவ
கன்னியர்கள் பதினாறா யிரம் பேர் தம்மைக்
        கலியாண முகுர்த்தமொன்றிற் பண்ணிக் கொண்டே
நன்னெறிசே ரவரவர்க்கோர் புருட னாகி
        நாடோறு மவரவர்க ளுடனே கூடி
என்னகத்தி லேயிருப்பா ரெங்கும் போகார்
        என்னவுற்றாய் மாயவனே யெம்பி ரானே.         (68)

உருக்கும்ணிக் கொருபூநீ யளித்தத் தாலே
        உன்னுடன்சத் தியபாமை பேசா துற்றால்
தருக்கொடுவந் துனக்களிப்பே னென்று சொல்லிச்
        சயகருடன் மீதேறி வானுக் கேகி
மருக்கமழும் பாரிசா தங்கொள் போது
        மறித்தசுர ரிந்த்ரன்விழச் சங்க மூதி
இரக்கமொடத் தருக்கொணர்ந்து மனைவிக் கீந்தாய்
        இறைவாநா ராயணனே யெம்பி ரானே.         (69)

பயிர்க்கிறைத்துக் காலில்வருங் கிணற்று நீரைப்
        பாகவதன் கைச்செம்பான் முகந்து கொண்டு
வெயிற்சுடுகால் குளிரவே நனைத்துக் கொள்ள
        வேளாள னிறக்கவெம தூதர் பாசக்
கயிற்றினிற்கட் டொட்டாமன் முகுந்தா வுன்றன்
        கணநாத ராதரவா யழைத்து வந்தே
இயற்சுருதி முழங்கியசீர் வைகுந் தத்தில்
        இனத்தொடும்வைத் திடச்செய்தா யெம்பி ரானே.         (70)

பாதகவெஞ் சினமுடைய கிராத கன்றான்
        பதியிழந்த விதவையைப் பெண் டாக்கிக் கொண்டே
பாதையினில் வீடுகட்டி யிருக்க வோர்கள்
        பாகவதர்க் கமுதளிக்கும் பொருட்டா லுச்சிப்
போதோரடி யவனவன்பந் தலிலே நின்று
        போகவடி யார்க்குநிழ லீந்தா னென்றே
ஏதமற விவனோடுஞ் சாலோ கத்தில்
        ஏற்றமுற வைத்தனையே யெம்பி ரானே.         (71)

அடவிதனி லரிதாச னெறியே செல்ல
        அறியாமற் பறிக்கவந்தோர் கள்ளன் கிட்ட
படைவிற்கொண் டோர்வேடன் கூடி யத்தால்
        பறியாக்கள் என்றொலைய வூர்போய்ச் சேர்ந்தே
திடமுற்ற பத்தியினா லுன்னைப் போற்றி
        திருவாரா தனஞ்செய்ய வேட னாலே
இடரற்றா னென்றவனை வைகுந் தத்தே
        எண்ணமுற வைத்தனையே யெம்பிரானே.         (72 )

உன்னாம மாயிரத்தி லொருபேர் சொல்லான்
        உனதடியார்க் கொருநாளும் வணங்கிப் பேசான்
சொன்னாலும் பெரியோர்கள் புத்தி கேளான்
        சொல்வதெல்லாம் பொய்கொலையுங் களவுஞ் செய்வான்
அந்நீசன் திருடி வந்தே திருவரங்கத்
        தரிசியென்று விற்றதனா லவனுக் காவந்
தென்னூரின் பேர் சொன்னா னென்பேர் சொன்னான்
        என்று முத்தி யளித்தனையே யெம்பி ரானே.         (73)

தாயாய்நற் றந்தையாய்க் குருவாய்த் தேவாய்த்
        தாரமாய்ப் புத்திரரா யுறவாய் நானாய்
நீயாகி யெள்ளிலெண்ணெய் போலே யெங்கும்
        நிறைந்துபரி பூரணமாய் நிற்குஞ் சோதி
மாயாகண் ணாவரதா வாசு தேவா
        மாதவா வென்றுசுரர் வணங்கிப் போற்ற
ஏயாவென் றோயாமல் வேயால் வாயால்
        இசையூதி நின்றனையே யெம்பி ரானே.         (74)

கன்றுடனே கோபால ரநேகம் பேரைக்
        கமலவய னபகரித்துக் கொடுபோய் வைக்க
வென்றியுட னந்தந்த வடிவ மாகி
        வேற்றுமையற் றனைத்துமுற வேசிட்டித்தாய்
அன்றிருந்து மற்றைநா ளயன்வந் தக்கால்
        அனைத்து முறக் கண்டஞ்சித் தெண்டன் பண்ணி
ன்றடியேன் செய்த பிழை பொறுத்துக் காவென்
        றேத்தவளித் தனையரியே யெம்பி ரானே.         (75)

பலவிசையச் சராசந்த னுன்றன் பேரிற்
        படையெடுக்க முறிந்தோடிப் பின் பொருக்கால்
மலைமிசை நீ யேறத்தீ மூட்டி நீதான்
        மடிந்தனையென் றெண்ணிமிகச் சயமா யுற்றால்
அலைவின்றி நீயுதித்து மாறு பாகம்
        ஆகவொரு துரும்பினைத்தான் பிளந்தெறிந்தே
இலகுபல முளவீம சேனன் கையால்
        இருபிளவாக் கினையரியே யெம்பிரானே.         (76)

நிருவாணத் துடன்குளித்துப் பனைகள் போல
        நின்றமையாற் சுரர்கள் முனி சாபத் தாலே
மருதாகி நிற்குமிடத் துன்னை யாயர்
        மதியாமல் வெண்ணெய்க்கா யுரலிற் கட்ட
வெருவாம லேதவழ்ந்து மருதைக் கிட்டி
        விறற்றிகிரி யாவிரலா மறுத்து வீழ்த்தி
இருளான சாபந்தீர்த் தவரைப் பண்டில்
        ஏற்றமுற வைத்தனையே யெம்பி ரானே.         (77)

நிலமாது மோகித்தே யுனக்குப் பெற்ற
        நிருதநா காசுரனை யும்பர்க் காநீ
கொலவேண்டி வந்து பொரவவன்விடுத்த
        கொடுங்கணை நின் னெற்றியிற்பட் டுதிரத் தாற்கண்
மலர்மூடிக் கொள்கையினின் கரத்தி லுற்ற
        வரிசிலையிற் சத்தியபா மைப்பெண் ணெய்ய
இலகாழி யெய்தாற்போ னரகன் மேற்பட்
        டிறக்கநினைத் தனையரியே யெம்பி ரானே.         (78)

சயமிகுத்த சாம்புவனைப் பொருது வென்றே
        சாம்பவதிப் பெண்ணையுங்கைக் கொண்ட வந்தாள்
நயமுடனே சிமந்தகமா மணியுங் கொண்டே
        நாடனைத்தும் போற்றவெழி லாக வந்தாய்
அயனையளித் துலகனைத்தும் படைக்கப் பண்ணும்
        அச்சுதனே யென்றமரர் முனிவ ரெல்லாம்
இயலிசைசேர் வேதத்தாற் றுதிக்க வேவீற்
        றிருக்குநா ராயணனே யெம்பிரானே.         (79)

திட்டமுட னாயரில்லில் வெண்ணெய் நெய்பால்
        திருடுகைக்கே கண்டபெண்க ளுனைக்க யிற்றால்
கட்டிவைத்து நந்தன்மனை தன்னிற் சென்றே
        கைதொழுத சோதையுடன் முறையிட் டக்கால்
தொட்டிலிலே பார்க்கமிக்க கொறுக்கை விட்டே
        தூங்குதல்கண் டஞ்சியந்தப் பெண்க டெண்டன்
இட்டறியா தேசொன்னோம் பொறுமா தாவே
        என்றுரைக்கப் பண்ணினையே யெம்பி ரானே.         (80)

மகரத்திற் சூரியன்வந் துதித்த காலில்
        வந்திக்க விந்திரனை நோக்கிப் பொங்கல்
மிகவிட்டுக் கயிலைமலை போலே வைக்க
        விளையாட்டா யத்தனையும் நீயே யுண்ணக்
ககனத்தி லிந்திரனும் வந்து பார்த்துக்
        கன்மழையை நிரைமீதில் விடுத்த மட்டில்
இகபரத்துக் கிறையவனே நிரைக்காக் குன்றை
        எடுத்து மழை தடுத்தனையே யெம்பி ரானே.         (81)

தீமையினால் மக்கள் பழிக் காக்கண் ணில்லாத்
        திருதராட் டிரன்வீமற் கொல்ல வெண்ண
வீமனைப்போல் வல்லிரும்பாற் சமைப்பித் தந்த
        விழியிலான் முன்னிறுத்தி வீமன் பேச
மாமிடுக்காற் கை நெருக்க விருப்பு வீமன்
        வலியதலை தெறித்துயரப் பரக்க வேகண்
டேமமுடன் வீமனையாள் கண்ணா வென்றே
        எல்லோருந் தொழவிருந்தா யெம்பி ரானே.         (82)

உலகங்க ளீரேழுங் கற்பாந் தத்தில்
        ஒருங்கவே யோர்கணத்தி லெளிதா யுட்கொண்
டலைவின்றிக் கற்பாந்த வெள்ளந் தன்னில்
        ஆலிலைமேற் குழவியாய்த் துயின்ற வந்தாள்
சலிலமற மதுகயிட வரையுண் டாக்கிச்
        சக்கரத்தாற் பிளந்துடலாற் சலத்தை மூடி
இலகமுனுண் டருளுலகை யுமிழ்ந்தே பண்டில்
        ஏற்றமுற வைத்தனையே யெம்பி ரானே.         (83)

அருமறையா ரிருக்கெசுர்சா மத்தி னோடும்
        அதர்வணமா கியசதுர்வே தங்க டம்மைத்
திருடியெடுத் துக்கொண்டே யுத்தி சேரும்
        தீயனுக்கா மச்சாவ தார மாய் நீ
ஒருசெலுவிற் சமுத்திரத்தைச் சுருக்கி யேவைத்
        துக்கிரத்தாற் சோமுகா சுரனைக் கொன்றிட்
டிருளறவே விதிபடைக்க வவ்வே தத்தை
        இரங்கியளித் தனையரியே யெம்பி ரானே.         (84)

மந்தரமத் தமிழ்ந்தாமற் பாற்க டற்குள்
        வளர்ந்தாதி கூருமமாய் மலையைத் தாங்கிச்
சுந்தரவா சுகியைவட மாகச் சுற்றிச்
        சுராசுரர்நின் றமிர்தங்க டைந்த வந்தாள்
ஐந்தருசிந் தாமணிநன் னிதிக ளொன்ப
        தானைபரி மூதேவி தாரை தேனு
இந்திரைபொற் கௌத்துவமா மணியோ டாலம்
        இளம்பிறையுந் தந்தனையே யெம்பி ரானே.         (85)

புண்ணியந்தெய் வதழுஞ்சேர் பூலோ கத்தைப்
        புற்பாய்போற் சுருட்டிக்கொண் டேபா தாளம்
நண்ணிரணி யாட்சனைப்பின் றொடர்ந்தே யேகி
        நலமுடனே யாதிவரா கத்தே வாகி
மண்ணுலக மனைத்துமிடந் தெடுத்தோர் கோட்டில்
        வைத்துவர வவன்மறிக்க வதைத்துத் தேவர்
எண்ணவுல கீரேழும் படியப் பண்ணாய்
        இறைவாநா ராயணனே யெம்பி ரானே.         (86)

நலமருவு பிரகலாத னிரணி யாய
        நமவென்று சுக்கிரனன் றோதச் சொன்னால்
அலைவின்றி யரிகரிநா ராய ணாவென்
        றறிந்துரைக்கப் பிதாசுதனைக் கொல்ல விட்ட
பலமல்லர் மதகரிபாம் பனல் நீர் வெற்பு
        படுபடைகண் மித்துருவாக் காக்கப் பண்ணி
இலகியபொற் றூணினர சிங்க மாய்வந்
        திரணியனை வதைத்தனையே யெம்பி ரானே.         (87)

சுரரசுரர் முனிவர் நரர் கையிற் பாரிற்
        சுடர்வானிற் பகலிரவி லுள்பு றம்பிற்
பெருபடையிற் றான்சாகா விரண்யன் றன்னைப்
        பிரகலாதன் தற்கித்துண் டென்ற தூணில்
நரகரியாப் பொழுது புகு நேரந் தன்னில்
        நாடியுதித் துயர்வாசற் படிமீ தேறி
இரனியனைத் தொடைமிசைவைத் துகிரி னாலே
        இருபிளவாக் கினையரியே யெம்பிரானே.         (88)

தீமையினால் மாவலி தான் வாழ்நா ளந்தத்
        தேவாசெயும் வேள்வியைத்தான் செய்கை யாலே
வாமனனாய் மூவடிமண் டாரை யேற்று
        வானிலயன் பூசிக்க வொருதா ணீட்டிப்
பூமியோ ரடியாக்கித் தாரை வார்த்த
        பூதானக் குறையடியுந் தந்து போவென்
றேமவுல கிற்சுகமாப் பாதாளத்தில்
        எழிற்பலியைச் சிறையில் வைத்தா யெம்பி ரானே.         (89)

உலகளந்த போது வளர்ந் தண்ட கோளத்
        துதைந்ததிரு வடியையயன் விளக்குந் தீர்த்தம்
பலமுகமா யாகாச கங்கை யாகிப் பகிரதன்
        மெய்த் தவத்தாற்பார்க் கிறங்கும் போதச்
சலமிகுந்தே யரன் சடையிற் றங்கி யந்தச்
        சங்கரனைச் சிவனாக்கி யிழிந்த தீர்த்தம்
இலகுபுகழ்க் காசியிலே கங்கை யாய்வந்
        திடர் தீர்க்கப் பண்ணினையே யெம்பிரானே.         (90)

தசரதன்பா லுதித்து முனி யாக முற்றித்
        தாளிணையாற் கல்லைப்பெண் ணாக்கி யார்க்கும்
வசமலாப் பினாகத்தைக் குனித்தொ டித்து
        மனமகிழச் சீதையைான் மணமுஞ் செய்து
குசலைபண்ணிக் கவித்திரளாற் சேது கட்டிக்
        கொடியரா வணகும்ப கருண ரைக்கொன்
றிசைபெறவே வீடணற்குப் பட்டங் கட்டி
        ஏற்றமுற வைத்தனையே யெம்பி ரானே.         (91)

வசுதேவன் சுதராறு பேரைச் கஞ்சன்
        வதைத்தபின்னே ழாங்கருவால் வழுவி யேவீழ்ந்
தசரீரி யாலந்த நந்த கோபன்
        அடைக்கலமா முரோகிணியார் வயிற்றிற் புக்குச்
சசிவடிவாய்ச் சங்கரூ ஷணனாய் வந்தே
        தக்கதிறற் கண்ணனுக்குத் தமைய னாகி
இசைவாக வலாயுதத்தா லுலகைக் காத்தாய்
        எற்பலபத் திரராமா வெம்பி ரானே.         (92)

வசுதேவ னிடத்துதித்து நந்த கோபன்
        மகவாகிச் சுரர்பணிந்து போற்ற வீறி
அசுரேசரநேகருடன் கஞ்ச னைக்கொன்
        றைவருக்காப் பாரதப்போர் பொருது வென்று
சிசுபாலன் வசை கேட்டுப் பொருது சாபந்
        தீர்த்த ருளிப் பரமபத மவனுக் கீந்தே
இசையாகத் திருவிளையாட் டநேகஞ் செய்தாய்
        ஏற்றமுள்ள கோவிந்தா வெம்பி ரானே.         (93)

நம்பியமெய்க் குருராமா நுசனைப் போற்றி
        நலமுடனே கச்சியில்வாழ் கடாம்பி யாச்சான்
தும்பையூர்க் கொண்டி யென்பா ணவபாண் டத்திற்
        றோய்த்த தயிர் விலை பேசிக் கொண்டு வந்தே
உம்பர்தொழு முனக்கேத்தித் தானு முண்ண
        உளத்திருள் போய்த் தயிர்க்குவிலை வாங்காக் கொண்டிக்
கெம்பரமென் னாச்சான்சொற் கேட்டு முத்தி
        ஈந்திட்டா யச்சுதனே யெம்பிரானே.         (94)

பாகவத கிருஷ்ணயங்கா ரென்பார் நின்பால்
        பத்திகொடு சங்கீதம் லட்சம் பாட
நீ கருணை கூர்ந்து திருப் பதிநூற் றெட்டும்
        நிமிடத்தி னேசமுடன் றோன்ற வைத்தாய்
மோகமுட னெடுத்தவனை விழுங்கிக் காட்டி
        முடியிலவன் றரித்தப்பட்டும் வாயிற் காட்டி
ஏகமாய்க் கூடியது திட்டங் காட்டி
        எல்லாரு மறியவைத்தா யெம்பி ரானே.         (95)

சக்கரஞ்சங் குயர்கதைவா டனுவோ டைந்தும்
        தரித்தருளும் பரம்புருடா கமலக் கண்ணா
மிக்கபரா பரமூர்த்தி துளபத் தாமா
        விறலுடனே மண்ணளந்துண் டிருக்குஞ் சோதி
அக்கரமைம் பத்தொன்றாய்ச் சொல்லாய்ச் சொல்லின்
        அருத்தமுமா யெட்டெழுத்தின் வடிவு மாகி
எக்கணிலு மணுவுக்கு மணுவாய் நின்றும்
        எழிற்குருவா யுதிக்கின்றா யெம்பிரானே.         (96)

திருமாதும் திலமாதும் பத்தி யாலே
        திருவடிகள் வருடியிட விழித்து றங்கும்
கருணாக ராமுத்தி வீடா பெங்கும்
        கலந்துருவா பருவாகி யிருக்கு மாயா
அருளாளா வுயர்சனகன் சனக்கு மாரன்
        அனந்தன்கரு டன்விசுவச் சேன னென்றும்
இருள் சேரா மார்க்கண்டன் பிருகு போற்ற
        இருக்கின்றாய் நாரணனே யெம்பிரானே.         (97)

கண்ணிரண்டா யிரமுடைய சேஷன் பன்னாள்
        காத்திருந்து முன்னுடைய வடிவங் காணான்
பண்ணுறத்தன் னாவிரண்டா யிரத்தா லோதிப்
        படித்து முன்றன் பெருமைதனைப் பகர மாட்டான்
மண்ணுலகிற் சிறியவனோர் நாவா லுன்றன்
        மகிமையைக்கண் டுரைக்கவென்றால் வசமோ வானோர்
என்ணரிய மாயவனே கச்சி வாழும்
        இறைவாநா ராயணனே யெம்பி ரானே.         (98)

பட்டமரந் தளிர்த்துமிகப் பூத்துக் காய்க்கப்
        பாற்பசுக்கள் சுரந்தொழுக்க மலடு மீனத்
துட்டவியாக் கிரமமுமா னினமு மொன்றாத்
        தோகைமயில் படநாக முடனே யாட
வட்ட முலைக் கன்னியர்கள் மாலாய் நிற்க
        வானவருந் தானவரும் வணங்கிப் போற்ற
இட்டமுட னே வேணு காநம் பன்னாய்
        இறைவாநா ராயணனே யெம்பி ரானே.         (99)

ஆருமுனை நவமாகப் பாட வேதம்
        ஆகமசாஸ் திரமனைத்தும் நீயு ரைத்தாய்
பேருமுனக் குண்டான பழைய பேரே
        பெருங்கதையு மியலிசையும் பழைய வேயாம்
காருத்தி நீர்தனையே முகந்து பெய்யிற்
        கடலிலது நீத்தமதாய்க் கலந்துற் றாற்போல்
ஈரமுடன் மெய்யடியார் நவமாய் பாடில்
        இரங்கியதுட் கொள்கின்றா யெம்பிரானே .         (100)

திருநாம மறவாவுன் றாசர்க் கெல்லாம்
        சீர்பாதத் தூளிநா யடியே னுன்றன்
அருளாலே யெம்பிரான் சதக மென்றே
        அறைந்தகவி நூற்தனி லொன்றா னாலும்
பரிவாகக் கற்றவர்க்குங் கேட்ட பேர்க்கும்
        படிமிசையிற் றுன்பமறுத் தின்பம் பாலித்
திருவடியின் மெய்ஞ்ஞானம் விளங்கச் செய்வாய்
        இறைவாநா ராயணனே யெம்பி ரானே.         (101)

எம்பிரான் சதகம் முற்றிற்று.
-------------

This file was last updated on 26 March 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)