pm logo

நாராயணசாமி பண்டிதர் எழுதிய
ஸ்ரீ மாரியம்மன் திருவருட் பதிகம், சிந்து & கும்மி


mAriyamman tiruvaruT patikam, cintu and kummi
of nArAyaNa paNTitar
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

நாராயணசாமி பண்டிதரவர் எழுதிய
ஸ்ரீ மாரியம்மன் திருவருட் பதிகம், சிந்து & கும்மி


Source:
பூமண்டலத்தில் சிறந்த சோழதேசத்தில் தஞ்சாவூர் ஜில்லா மாயூரம் தாலூகா
மேலப்பாதிக்கிராமம் நகார்ச்சுன க்ஷேத்திரத்தின் - மத்தியிலும்
காவேரி நதியின் உத்தரவாகினி வடபுரமிருக்கும் கீழையூர் உப்புச்சந்தை
ஸ்ரீ மாரியம்மன் திருவருட் பதிகம், கும்மி, சிந்து

இவை தஞ்சைஜில்லாநாகப்பட்டினம் தென்னிந்தியா ரெயில்வே
காரியேஜ் ரிப்பேரிங் ஷாப்பு, வர்ணபட்டரை ஹெட் மேஸ்திரியார்...
M. நாராயணசாமி பண்டிதரவர்களால் இயற்றப்பட்டு,
நாகை நீலலோசனி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.
1916
-------------
ஸ்ரீ மாரியம்மன் துணை.

நாகப்பட்டணம் நேஷனல் ஹைஸ்கூல் பிரதம தமிழ்ப்பண்டிதரும்
மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவானும் நாகை நீலலோசனி பத்திராதிபருமான
ம-ள-ள ஸ்ரீ ஜி. சதாசிவம்பிள்ளை அவர்களால் இயற்றிய சாற்றுக்கவி.

பத்தியின் குவையோ உவர்ச்சந்தைமாரி
      பதமலர் சாத்திடு மலரோ
புத்தமுதேயோ எனப் புகழ்ந்திடவே
      புண்ணிய நாகைமா நகரான்
வித்துவம் நிறைந்த நாராயணசாமி
      மேலவன் விளம்பினன்பதிகம்
உத்தமக் கொம்மி சிந்துக ளிவற்றை
      போதினார் தீதிலா தவரே.

மதலையின் குதலை யன்னையின் செவிக்கே
      வான முதத்தினு மினிதாம்
இதமுறு நாகை நாராயணசாமி யென்னு
      மோர் மதலை தானிசைத்த
பாதாமறு பதிகங் கொம்மி முன்னான
      காடு உப்பைனுவல்கள் பாரெலாமீன்ற
கதி தரும் உப்புச் சந்தைவாழம்மை
      காதுகட்கினியவையாமே.
--------------

ஸ்ரீ அம்பாள் துணை.

1. உப்புச்சந்தை ஸ்ரீமாரியம்மன் திருவருட்பதிகம்.

வெண்பா.
சீர்வளரும் செல்வத் திருவுப்புச் சந்தைநகர்
தார் வளரும் மாரியம்மன் தாளிணைக்கு - பார்வளரும்
பாமாலைபாட பரமனருளைங்கான்றன்
பூமாலைப் பாதம் புகல்.

விருத்தம்.
நித்யபரி பூரணி நிரஞ்சனி நிராமலி
       நிராதார வெளி யொளியு நீ
நீலி சிவகாமிநீ வாமிய சாமிநீ
        வினைவுக்குள் நின்றவளுநீ
முத்தியருள் போதநீ முனை சுழினை முடிவு நீ
        மூவுலக மாண்டவளும் நீ
அத்துவித வஸ்து நீ வமலவனு பூதி
        அரியினது தங்கை உமைநீ
சித்தரிய செல்வி செம்பவள வல்லி நீ
        சிருங்காரி ஓகோரிநீ
சத்துரு சங்காரிநீ கௌரிசாம் பவியு நீ
        சங்கரன் பங்குறையு நீ
வித்து நீ மற்று நீ விண்ணு நீ மண்ணு நீ
        விரைந்து வளர் கருணை யமுதே
வேதாந்தப் பொருண் முடிவில் நாதாந்த சத்தியாய்
        விளங்குப்புச்சந்தை புமையே. (1)

நீர்கொண்ட மேகமதை வென்றிடுங் கூந்தலும்
        நித்திலச் சுட்டியழகும்
நீங்கிடாக் கருணை விழிப் பார்வையுடனே பிறை
        நிகர்த்த புருவத்தி னழகும்
ஏர்கொண்ட முழுமதியை வென்ற திரு வதனமும்
        இருகுழையி னோலையழகும்
என்றுங் களித்திடும் கொவ்வைவாய்ப் புன்னகை
        இசைமிருது வசனமழகும்
வார்கொண்ட கும்பத் தனத்தினழகும் பெரும்
        வளர்கர மமைந்த வழகும்
வர்ன மலர் பாதமொடு வின்னமுன் னழகையான்
        வாயினாற் சொல்ல லெளிதோ
வேர்கொண்ட நீறென்ன வினையுண்ட செல்வியே
        விஞ்சை யெவ்வா றுரைப்பேன்
வேதாந்தப் பொருண்முடிவில் நாதாந்த சத்தியாய்
        விளங்குப்புச் சந்தை யுமையே. (2)

முத்து நவ ரெத்தின மமைந்திலகு மகுடமும்
        முகில்வர்னத் திருமேனியும்
முளரிமலர் அங்கியும் முல்லை மலர் மாலையும்
        முகிழ் நகைகொள் தந்தவழகும்
சத்தபரி புரமொடு கிண்கிணி சிலம்பொலி
        சதங்கை நிறைகொண்ட பதமும்
தண்டாள மார்பிலணி மேகலா பரணமிடை
        சாந்து சவ்வாது வணியும்
சித்திர புரிச்சடையில் வைத்தசடை நாகமும்
        சீரொழுகு சந்த்ராரமும்
திவ்யகுண வழகியே திலத குங்கும மணி
        தேவியென வந்த முதலே
வித்து வொடு வஸ்துவாய் அத்தனொடு தில்லையில்
        விளையாடி நீ யமர்ந்தாய்
வேதாந்தப் பொருண் முடிவில் நாதாந்த சத்தியாய்
        விளங்குப்புச்சந்தை யுமையே. (3)

இந்திராதி தேவர்கள் வந்து பணி புங்கமலம்
        இருள் வினையை நீக்குகமலம்
இகபர சுவர்க்கமெனு மோட்சபதமே பெறும்
        இன்ப வீடுடைய கமலம்
முந்தியோன் கந்தனையும் முன்னீன்ற கமலமே
        முத்திநெறி யூட்டு கமலம்
மும்மலம் நீந்தினோர்க் கின்புறுங் கமலமே
        மூவர் அறியாத கமலம்
தந்திர மிகுந்து வளர் மாயவன் றங்கையென
        தயாபரியு மான கமலம்
தருமநெறி வாவியிற் பூத்த செங்கமலமே
        தயையுனக் கின்ன மிலையோ
விந்தையொடு சந்தையில் வந்து விளையாடிடும்
        வினையொழித் தாள் கமலமே
வேதாந்தப் பொருண்முடிவில் நாதாந்த சத்தியாய்
        விளங்குப்புச் சந்தை யுமையே. (4)

முன்னையூழ் வினையினால் ஜனனம தெடுத்து நான்
        மூடனாய்த் திரிந்து சில நாள்
முற்று மறி வில்லாமல் கற்றவரைப் பழுதிட்டு
        முனிந்து குடிகொண்டு சிலநாள்
தன்னையே சதமென மின்னார்க ளாசையிற்
        வளர்ந்து நடைபட்டுச் சிலநாள்
தாயெனத் தந்தையும் சுற்றமு மற்றுளோர்
        தயவு பெரிதென்று சில நாள்
என்னேரம் இல்லறத் தொல்லைவலையிற் சிக்கி
        ஏங்கித் திரிந்து சில நாள்
ஏக்கம் பிடித்து நான் கற்றதும் கேட்டதும்
        ஏது பலனில்லை யம்மா
வன்ம மெண்ணாமலே தர்மமென வெண்ணி நீ
        வாழ்வு தந்தாளு முமையே
வேதாந்தப் பொருண் முடிவில் நாதாந்த சத்தியாய்
        விளங்குப்புச் சந்தை யுமையே. (5)

திக்கு வேறில்லையுன் பாதமே கதியெனத்
        தெண்ட திட் டேங்கி நின்றேன்
தேவியென் குறை முழுதும் நீமனது வைத்திடின்
        தீரவெகு பாரமாமோ
நக்கிடும் நஞ்சையே பணிகொண்ட செல்வியே
        நானின்னம் சொல்லல் முறையோ
நாயகி உனைவிட வேறு துணை யல்லாது
        நங்கைநீ யறியாததோ
கக்கியுண ணாயினேன் கதறினேன் அலறினேன்
        கரங்குவித் திறைஞ்சி நின்றேன்
கருணையுள மின்னமு மிரங்காது தர்மமோ
        கரும்பெரும் பாறை மனமோ
விக்கலுறு மதலைக்குத் தாயுதவு மமுதென
        விரும்பி யருளளிக்க நினைவாய்
வேதாந்தப் பொருண்முடிவில் நாதாந்த சத்தியாய்
        விளங்குப்புச் சந்தை யுமையே. (6)

இன்னமும் உன் மன மென் மீதி ரங்கிடா
        தேழை நான் செய்த குறையோ
எழிற் சந்தை மாநகர்க் கிவடம் வெகு தூரமோ
        எண்ணமென் மீதி லிலையோ
என்னமோ உன் கருணை இன்னவித மறியாது
        என் குறையை யார்க் குரைப்பேன்
எதிர்வந்து பேசினால் வாய்முத்தம் உதிருமோ
        ஏதோ இதென்ன வஞ்சம்
உன்னையே வேதங்கள் இன்னமும் புகழுமே
        உற்ற துணை வேறு முளதோ
உலகங்க ளீபேழும் ஈன்ற ஜெகதீஸ்பரி
        உன்னிரு பதம்பிடித்தேன்
வென்றிவிறை மல்லிகை முல்லைபல மலருடன்
        விரிந்தாடு மாலையழகி
வேதாந்தப் பொருண்முடிவில் நாதாந்த சத்தியாய்
        விளங்குப்புச் சந்தை யுமையே. (7)

வாதமொடு சூலையும் சோகையென விப்புருதி
        வந்த காமாலை பிளவை
வாங்கிடா நீரிழிவு நீர்மேகம் நீர்வெள்ளை
        வளர் மூலம் வெண் குஷ்டமும்
பேதையர் பெரும்பாடு பிதற்றிடு பயித்தியம்
        பிரமியம் மூர்ச்சை முதலாய்
பொல்லாத மேகரணம் கை கால் குறைந்திடும்
        பெருநோவு குறை நோவுடன்
ஏதேது தாங்காத வயிற்றுவலி மூர்ச்சையும்
        எடுபடா முயல் வலிப்பும்
என்றென்றும் வீங்கிடும் பெருலயிர் மகோதரம்
        ஏங்கிவிடு மூச்சு கபமும்
ஓதரிய உன் கோவில் வலமாக வந்திடில்
        ஒலிகடல் ஒளிக்குமன்றோ
வேதாந்தப் பொருண்முடிவில் நாதாந்த சத்தியாய்
        விளங்குப்புச் சந்தை யுமையே. (8)

பொல்லாத ராட்சதப் பேய்களுடன் டாகினிகள்
        பின் தொடரு மோகினிகளும்
பிதற்றியே தலைசுற்றி பாடிடும் சடாமுனிகள்
        பேய்கள் வேதாளி கூளி நில்லாத
வல்லிருளன் குறளிகாட் டேரியொடு
        நெருப்பெரியு மாடன் முதலாய்
நீங்கிடாச் சந்தி முனி அந்தி முனி ஒண்டிமுனி
        நேர்வருகு லாடமுனியும்
வல்லாண்மை பெற்றரவம் கேளாத ஊமை முனி
        வழிநிற்கும் சண்டிமுனியும்
வந்து மட மாதரைத் தொடர்ந்து தலை சுற்றிடும்
        வன்மதுரை வீரன் முதலாய்
வெல்லரிய சூன்யமொடு வைப்புட னேவலுன்
        வாயில்வர வோடிவிடுமே
வேதாந்தப் பொருண் முடிவில் நாதாந்த சத்தியாய்
        விளங்குப்புச் சந்தை யுமையே. (9)

சுந்தர மிகுந்தபர லோகசாதகி யுனது
        சூட்சபத மோட்ச மறியேன்
சுகிர்தபரி சுத்தமன பக்தியொடு உன்றனைத்
        தூயமலர் போற்ற வறியேன்
கந்தமலர்ப் பாதமதைப் பாடவறியேன் பெரும்
        கடாட்சியருள் தேடவறியேன்
கானமறியேன் யோக மோனமறியேன் தினம்
        கண்மூடி மவுன மறியேன்
மந்த்ரமறியேன் சுருதி தந்தரமறியேன் திவ்ய
        வடிவிதிகளாய வறியேன்
மாது நினையாதபவ மேதுமறியேன் துரிய
        மார்க்க வீடடைவதறியேன்
விந்தையொடு வந்தெனது சிந்தைகளிகூரவே
        விருகமல பாதமருள்வாய்
வேதாந்தப் பொருண்முடிவில் நாதாந்த சத்தியாய்
        விளங்குப்புச் சந்தை யுமையே. (10)

அற்புத மிகப்புகழ் இப்பெரும் புவியிடை
        அறுபத்து நாலு கலையும்
ஆகம புராணதொண்ணூற்றாறு தத்துவம்
        அடர் நான்கு வேத முதலாய்
விற்பன ருரைத்திடும் வேணபல நலெலாம்
        விரும்பிசெவி ததும்பு மவையில்
வெளியனுன் னடைக்கலப் பாதபங்கயந் தொழுது
        வெழுது பாமாலை யதனுள்
நற்கவி விருத்தமொடு கும்மி பல யாவையும்
        நயமன துடன் பொறுத்து
நல்வா மெனக்குதவி இல்லறம் விளங்கவோர்
        நற்சேயளிக்க நினைவாய்
விற்படையு மங்குசச் சூலமொடு வேந்திரி
        விளையாடி நின்ற முதலே
வேதாந்தப் பொருண்முடிவில் நாதாந்த சத்தியாய்
        விளங்குப்புச் சந்தையுமையே. (11)
--------------

விருத்தம்.

சத்தியாய்ப் பொருளாய்ச் சடாட்சரியுருவாய்ச்
        சஞ்சலம் தீர்க்கும் நாயகியாய்
முத்தியாய் வேத முதன்மையாய் நாளும்
        முளைத்தெழும் சோதியினுருவாய்
பத்தியாய்ப் பரையாய் பழமறைப் பொருளின்
        பங்கினிலுறைந்திடு முமையாய்ச்
சித்தியா யுப்புச் சந்தையுண் மேவும்
        செல்வியே யென்னையாள் உமையே. (1)

தினந்தின மலர்ந்த மலர்த் தொடையணிந்த
        செல்வியே திங்களின் உருவே
மன நிலை பொருந்து மடியவர் குழாத்தின்
        மயக்கொழித் திடவருள் புரியும்
முனம்பகை யசுயர் குலத்தை யூடறுத்த
        முடிவிலா மறைமுதற் செல்வி
வன மயிற் குலங்களசைந்து நின்றாடும்
        வளருப்புச் சந்தைவாழ் உமையே. (2)

தவமுனி யோகர் ரிஷியொடு முனிவர்
        தானவர் வானவர் வுரவோர்
பவமொழித் துனது பதமலர் போற்றி
        பணிந்திடும் பக்தரின் கொடிய
அவமறுத்தாளும் அரசியே நினது
        அரும்பத மெனக் களித்தருள்வாய்
நவமணிச் சிகரம் உயர்ந்து நின்றிலங்கும்
        நறுமணம் கமழ்சந்தை யுமையே. (3)

அரியயன் தேவர்க் கறிந்திடவறியா
        அன்ன பூரணி சதாநந்தி
தெரிந்திடர் புரிந்த மகுடனைச் சேயித்த
        திறலியே தேவர்ககமுதே
கரிந்திடு முகில்போல் பிறங்கிடுமேனிக்
        கருணையே களிப்புறுங் கனியே
விரிந்திடு மலரூடிசைந்த வண்டினங்கள்
        விளங்கிடும் சந்தைவாழ் உமைவேனை (4)

வடவனற் கனலில் வயங்கி நின்றாடும்
        வளர் திரு வமலையே நினது
தடம் பெரும் குழையில் கோமளம் வயங்கத்
        தரித்த பொற் பதக்கமோடொளிரும்
விடத்தினின் றெடுத்த விலையிலா மணியா
        லிழைத்த பொற் சரிகைமே கலையாய்
தடத்திடை யனங்கள் பெடையுடனுலவும்
        தவம்புரிச் சந்தை வாழ் உமையே. (5)

அருட்பெருஞ்சோதி யமுதமே யமுதில்
        அமைந்தொழும் இனிய நற்சுவையே
மருள் பெருந் துயரால் மெலிவுற வாடி
        மறங்தனன் மலர்ப்பதம் ஏழை
பொருளெனத் திரிந்து வலைந்து சஞ்சலத்தால்
        போக்கிவாழ் நாளையுங் கழித்தேன்
திரளென மணிகள் கொழித்திடும் நதிசூழ்
        தினம்வரம் பெறும் சந்தையுமையே. (6)

பெற்றதோர் அன்னை தந்தையாம் சுற்றம்
        பெரும்பொருட் டுணையெலாம் நீயே
நற்றவள் நீயே வரமுடன் உரமும்
        நான்பெருஞ் செல்வமு நீயே
குற்றங்கள் பலவும் செய்யினு மடிமை
        கொண்ட பின் விடுவதுன் னழகோ
பற்றிடு மடியார் உளத்தினி லமரும்
        பதியுப்புச் சந்தைவாழ் உமையே. (7)

படையடை மகுடா சூபனைச் செயித்த
        பாண்டியன் றவத் துரும் புதல்வி
உடையெனக் கரியின் உரியினைத் தரித்த
        உம்பர்கோள் தனக்கரு ளுவந்து
விடையினி விலங்கும் எம்பிரா னிடப்பால்
        வீற்றிடு மலர்ந்த பூங்கொடியே
புடையொடுந் தேவர் சூழ்ந்துநின் றிறைஞ்சும்
        புர்மதிற் சந்தைவாழ் யுமையே. (8)

தோணியா யிருந்தென் துயர்க்கடல் கடத்தித்
        தொலைவிலா மாயை யூடறுத்து
ஏணியா யிருந்து பேருலக தனில்
        ஏற்றியுன் னெழிற் பெரும்பதத்தில்
காணியா யிருக்கச் சுவர்க்க வீடளிக்கும்
        கருணையே கடைக்கண் தந்தருளும்
ஆணியா யுப்புச் சந்தை யுண்மேவும்
அம்மையே யெம்மையா ளுமையே. (9)
-------------

2. நொண்டிச் சிந்து.

கட்டி யமைந்தமேடை- அதனுள்- கட்டழகி வீற் றிருக்கும் சிங்காதனத்தில்,
முகமோ-மதிவதனம்-அம் பாள் முல்லை மலர் மாலைபல வான நிறங்கள்,
இடையோ கொடிமின்னல்-அம்பாள் இருபுறமும் சூலமென அம் குசமதாய்,
கையோ செழுங்கமலம் - அதனிடை-கண் ணழகுபெற்றகிளி யசைந்தாட,
நவரெத்ன மாலைபாதக் கம்-வதனிடை- நல்லதொரு மாணிக்கமும் மரகதமும்,
இணையாய் ஜதை சேர்த்து - அதனை-இழைத்து விட்டார் கள் தினம் தரித்துவிட்டார்,
தனனாம் - தன- தனனாம்.

மின்னார் புடைசூழ தினம் தினம் - மெல்லி நல்லாள் அம்பிகைக்குச் சாமரைபோட,
பொன்னார் மின்னிடை ச்சி-சிலர்கள் - புகுந்தெடுத்து வாளேந்தி உருவிக்கொண்டு,
நின்றார் பொறிபறக்க-சிலர்கள் நீண்ட நிழல் கண் ணாடியை முகத்தில் விளங்க,
அமைந்தாள் கொலு முக த்தில் அம்பாள் ஆதரிக்கவேணுமென்று வந்த ஏழையை
பார்த்தாள் கருணை விழி-உங்களுக்கு பட்சமதாய்ரட் சித்திட வந்துதித் தேன்யான்
தனனாம் - தன- தனனாம்.
------------------

3. கும்மி .

கும்மியடி பெண்காள் கும்மியடி யருள்
கொண்டு விளங்கிடும் சந்தை யாளின்
செம்மை வளர் திரு அம்மை மலர்ப்பதம்
சேவித்துச் சொல்லுவேன் சேடிகளே. 1

ஆனை முகவ னடிபோற்றி அருள்
அம்பிகை பெற்ற குகன் போற்றி
தேன்மலர் வாணியின் றாள் போற்றிச்சிவ
காமி கருணைப் பதம்போற்றி. 2

அட்டாள தேச மறிந்தவளா மிவள்
ஆயி மகமாரி யான வளாம்
இட்டமுட னுப்புச் சந்தைவா ழம்மையை
இறைஞ்சிக் கும்மி யடியுங்கடி. 3

கண்ணுக்குக் கண்கொண்ட காட்சியடி யிவள்
காருண்ய மாரி பாஞ் சோதி விண்ணுக்கு
மண்ணுக்கும் ஒன்றாய் முளைத்தி
வேத வழகியைப் போற்றுங்கடி. 4

வேம்பே தலையணை யுற்றவளா மிவள்
வேம்பே பஞ்சணை பெற்றவளாம்
வேம்பைக் கரும்பாய் விரும்புவளா மிவள்
வேம்பே வினை தீர்க்கும் பத்திரியாள். 5

கொண்ட கருத்தை முடிப்பவளா மிவள்
குவலய மெங்கும் பேர் கொண்டவளாம்
அண்டர் முனிவர்கள் எண்டிசை போற்றிடும்
ஆனந்த ரூபியைக் காணுங்கடி. 6

முத்தர்கள் பக்தர்கள் எத்தலத் தோர்களும்
பக்தியுடன் வந்து தோத்தரித்து
நித்தம் வரமளித் தின்பங் கொடுத்திடும்
நீலியின் ஆலயம் பாருங்கடி. 7

நித்ய கல்யாணியாய் நின்றவளா மிவள்
நீலி பரஞ்ஜோதி யானவளாம்
பக்திபுரியும் பஞ்சாட்சரி பாதத்தைப்
பணிந்து கும்மி யடியுங்கடி. 8

கருனா கடாட்சியாய் நிற்பவளா மிவள்
காருண்ய மாரி திரி சூலி
சாணார விந்த மலர்ப்பதம் சேவித்துத்
தாழ்ந்து கும்மியடி யுங்கடி. 9

அனலைப் புனலாய் நினைப்பவளா மிவள்
அனலே விளையாடும் தாட்சூரி
அனலே சொருபமாய் நின்றிலங்கு மிவள்
அனலே பாவெளி யாங்காரி. 10

நீலி கபாலி நிறைந்த பஞ்சாட்சரி
நிர்க்குண சூலி நிரஞ்சனியே
சூலி கபாலி சுதந்தரி மாரி
சுடர்கொளும் காட்சி யென் சுந்தரியே. 11

ஓங்காரரூபம் உதித்தவளே தினம்
உரிமையாய்ச் சாம்பிராணி வாசகியே
ஆங்காரச் சூலம் கபாலமு மேந்திடும்
அம்மை காமாட்சியும் நீயலவோ. 12

முக்கோணச் சக்கரத் துள்ளானா யெங்கள்
முன்னவன் தேவியும் நீயானாய்
நாற்கோணம் தன்னிலும் நீயமர்ந்தாய் நடு
நான்மறை வேதமு நீ யானாய். 13

ஐம்பத்தோ ரட்சர மானவளா மிவள்
ஆதி திரிபுர சுந்தரியாம்
பம்பை உடுக்குகள் பேரிகை மேளங்கள்
பண்பாய் முழங்கு மணிவாயில். 14

ஆரணியிற் பெரு மாலயந் தன்னில்
அமர்ந்திடு மாரியும் நீயலவோ
வீர ரெகுராமன் பட்டணந் தன்னில்
விளையாடும் பாலகி நீயலவோ. 15

சமய புரத்தில் சமைந்தவளே அருள்
கண்ண பரத்தி லமர்ந்தவளே
இமையோர் போற்றிடும் மலையாள தேசத்தில்
எங்கும் பகவதி யானவளே. 16

பச்சைக்கொடி சிவகாம வல்லி சிவன்
பங்கி லுறைந்திடும் ஞான வல்லி
இச்சை முதற்பல பேதவல்லி இவள்
எல்லா மறிந்திடு மோனவல்லி. 17

பங்கஜ வல்லி பதுமவல்லி செழுங்
குங்கும வல்லி குமுதவல்லி
மங்கள வல்லி மரகதமே யெந்தன்
மாணிக்க வல்லி வடிவழகி. 18

கற்பக வல்லி கனகவல்லி மலர்
கஞ்சுக வல்லியுன் தஞ்சமடி
அற்புதக் காட்சியாய் நின்று துலங்கிடும்
ஆனந்தவல்லி பதம்கதியே. 19

அன்னமே வாகனம் கொண்டவளா முயற்
அன்னமே பொன்னிற சாயலடி
அன்னமே தேவர்கள் அன்பாய் வளர்த்திடும்
அன்ன மீதேறி வருவாளாம். 20

மாலை யசையத் திண்டோளசைய மலர்
பூச்செண்டு கையிற் கிளியசைய
வாலையசைய நகையசைய எந்தன்
வல்வினை போக்கும் மனமசைய. 21

அரும்பு அசைய மலர் அசைய வதில்
அடைந்திடும் வாசனை தானசைய
கரும்பு மொழியுரை முத்தெனத் தந்தங்கள்
காட்டி யசைவதைப் பாருங்கடி. 22

வண்டு மலர்களும் தானாட உயர்
வயிரப் பதைக்கமும் நின்றாட
கெண்டை மலர்விழி சுழன்றாடக் கிளர்
தண்டைச் சிலம்பு மசைந்தாட. 23

வீணை யிசைப்ப மறையிசைப்ப எங்கும்
வேதியர் கூட்ட மிசைப்பதுடன்
நாணை யிறுக்கி வடித்திடும் பேரிகை
நன்றாய் முழங்கிடும் பேரொலியே. 24

நாகக் கங்கணம் உயர்ந்தாட நடு
நாயகப் பச்சை யசைந்தாட
ஆகம வேத முனைப்பாட உன்னை
அண்டினோர் பாபம் பறந்தோட 25

அண்ட மதிரப் புவியதிர எங்கள்
அம்மையுப் புச்சந்தை தான திரத்
தெண்டிரை சூழ்திரு மண்டலம் சுற்றியே
தேவி வருவதைப் பாருங்கடி. 26

அங்கங் குலுங்க மனங்குலுங்க எந்தன்
ஐம்புலக் கூட்டமும் தான் குலுங்கச்
செங்கை குவிந்து மென் கண்கள் குளிர்ந்திடச்
சேவித்து என்றுனைக் காண்பேனோ. 27

நாகமே கங்கணம் பூண்ட வளாம் பெரு
நாகமே பூஷண மானவளாம்
நாகமே ரூபமாய்த் தோன்றிடுவாள் பெரு
நாகமே கொஞ்சிடும் நாயகியாள். 28

சங்கரி யென்றுசிலர் துதிப்பார் சிலர்
சாமுண்டி சூலியென உரைப்பார்
மங்கையே மாதரி யெனத்தொழுவார் சிலர்
மாயவன் றங்கை யெனப்பணிவார். 29

அந்தரி யாமளை யெனவுபைப்பார் சிலர்
அம்பிகை கௌரி யெனத் துதிப்பார் வந்தரி
சந்தையாள் எனத் தொழுவார் சிலர்
மாதங்கி நீலி யெனப்பணிவார் 30

அங்குச பாச மணிந்தவளே திரி
ஆயுத சூலம் நிறைந்தவளே
பங்கி லுறைந்திடு மீஸ்பாயே புரம்
பக்கம் தணலாய்ச் சினத்தவளே. 31

தேவி யுனது செயலிது வென் றுமே
சிந்தை குழைந்து மனமுருகி
ஓவி பெருகிக் கருணை சுரந்திடும்
உத்தமி தன்னைக் கொண்டாடுங் கடி. 32

இப்பெருங் காட்சி யினியெந்தக் காலத்தில்
ஒப்புடன் பார்க்கத் தினம் நேரும்
செப்பத் தரமற்ற வாச்சியின் பாதத்தை
சேவித்துக் கும்மி யடியுங்கடி. 33

அண்ட முண்ட பெருவாயனுடன் பிறந்
தன்ன நடைபெற்ற மாதரியே
தண்டைச் சிலம்பொலி யெங்கு மதிர்ந்திடக்
தாள் மலர் கண்டு களிப்பேனோ. 34

பொன்னைப் பழித்த திருமேனி யிவள்
பொங்குங் கடலுள் புகழ்கீர்த்தி
மன்னும் திருவுருக் கொண்டிடு மாரியை
மகிழ்ந்துக் கும்மி யடியுங்கடி. 35

எண்ணிக் கணக்கி லடங்காத ஜனம்
எந்தெந்தத் தேசமறியாது
உன்னிப் பணிவர் ஊழ்வினை நீக்கிடும்
உத்தமி கோலத்தைப் பாருங்கடி. 36

எள்ளுக் கிடமுண்டோ பெண்ணாசே தொகை
எத்தனை கோடியோ கண்ணரசே
வள்ளலாய் உப்புச் சந்தை மகத்துவம்
வாயினால் சொல்ல மிகப்பெரிதே. 37

எல்லை யெல்லாம் காவல் கொண்டவளே
எந்தன் தொல்லை வினையை விடுப்பவளே
அல்லல் தினம் பெருஞ் சள்ளையில் நின்றெனை
ஆதரிப் பாருனை யல்லாமல். 38

காக முடியில் நின் றாடுவளா மிவள்
காட்சிக்கு வித்தாய் முளைத்த வளாம்
பாவசமாகி நினைந்துனைச் சேவிக்கும்
பக்தர்க்கு முத்தி யளிப்பவளாம். 39

வேம்பு பிரம்பும் விபூதி தரித்து நீ
விளையாடும் மஞ்சள் நீராடையுடன்
தேம்பி நினைந்துனை யான்படுந் தொல்வினை
தீர்க்கு மருந்தொன்று தாராயோ. 40

நெஞ்சம் எனக்கு உருகுதம்மா எந்த
நேரமு மென் மன முன்னடியில்
கொஞ்சும் குழவிக்குத் தஞ்ச மருள் தினம்
வஞ்சம் மனதினில் வையாமல். 41

புத்தாய்ச் சமைந்து பொலிந்தவளா மிவள்
பொல்லாத தேள் விஷ மானவளாம்
சித்தா யுலகத்தில் செய்திடும் வேடிக்கை
சேவித்துக் கும்மி யடியுங்கடி. 42

பூலோக பாபம் தனைச்சுமந்தோர் இவள்
புண்ய நதியிற் றினம் மூழ்க சாலோக மேலாம் பதங் கொடுக்கும் இவள்
சத்தி சடாச்சரி தோன்றி நிற்க. 43

பாம்பணை யானுக்குத் தங்கை யென்றே இவள்
பல்லோ ருரைக்கு மொழிப் படிக்குச்
சாம் பலணிந்த சதாசிவனைத் துதி
சம்பந்தனுக்குப் பால் தந்தவளாம். 44

தங்கமே முத்துச் சௌந்தரமே பெங்கள்
மங்களமே இங்கு வாருங்கடி
பங்க மில்லா நாகக்கங்கணி மாரியைப்
பரிந்து கும்மி யடியுங்கடி. 45

தூய மறை நான்கும் கேடரிய இவள்
தொல்லை மனக்குறை யாவையுமே நேய
வரங்களைத் தந்துநின் றாடிடும்
நிமலி வாரதைப் பாருங்கடி. 46

என்ன வரம் பெறவேணு மென்றே வரும்
ஏழை மனக்குறை நீக்கிவிடும்
பன்னும் தணல் மிதித்தாடிக்குறி சொல்லும்
பார்பதி தன்னைக் கொண்டாடுங்கடி. 47

எண்ணிய எண்ணம் முடிந்த தென்று சிலர்
எத்தனை தூரமிருந்து வந்து பண்ணிடும்
காணிக்கை உண்டியல்சேர்ப்பித்துப்
பரிந்து போவதைப் பாருங்கடி. 48

அண்டமும் பிண்டமும் நீயாகிச் செல்வி
ஆனவுடலுயிர் நீயாகி
மண்டல நாகை தனிலுறையும் சிறு
மதலை நாராயணசாமி சொன்னேன். 49

குற்றத்தை நீக்கிக் குணத்தை வகித் திடும்
கூறிடும் யின்னூல் தனை பார்த்து
முற்றும் பொறுத்தருள் செய்யவேணும் பெரு
மூதறிவோர்கள் பதம் தொழுதேன். 50

பாடிப்படிப்பவர் தினம் வாழ்க விதை
பார்த்துப்பலர்க்குறைத்தோர் வாழ்க
டிகேலைமகள் வாழ்ந்திட நான் மறை
வயதிச் சிந்தையா வாழியவே. 51

முற்றிற்று.


This file was last updated on 15 April 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)