pm logo

சித்தர் பாடல்கள் தொகுப்பு - 8
மௌனச்சித்தர், புண்ணாக்குச் சித்தர்,
கஞ்சமலைச் சித்தர் & நொண்டிச் சித்தர் பாடல்கள்


songs of maunac cittar, puNNAkkuc cittar & kanjcamalaic cittar
(cittar pATalkaL - part 9)
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சித்தர் பாடல்கள் தொகுப்பு - 8
மௌனச்சித்தர், புண்ணாக்குச் சித்தர்,
கஞ்சமலைச் சித்தர் & நொண்டிச் சித்தர் பாடல்கள்

Source:
1. பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை
வா. சரவணமுத்துப்பிள்ளை
சென்னை B. இரத்தின நாயகர் ஸன்ஸ், 1954.
2. சித்தர் பாடல்கள் - பெரிய ஞானக்கோவை
பதிப்பாசிரியர் : சி.எஸ். முருகேசன்
2004. சங்கர் பதிப்பகம், சென்னை.
----------

1. வகுளிநாதரென்னும் மௌனச்சித்தர் பாடல்


குறவஞ்சிப்பா

ஆதிபெருஞ் சோதிதனை அனுதினமும் நாடி
ஐயர்பதந் தேடிக்கொண்டு அருள்பெறவே பாடிச்
சோதியெனும் மனோன்மணியாள் அருளதனைப் பெற்றுச்
சுகருடைய பாதமதை மனந்தனிலே உற்று. 1

ஆங்காரம் தனையடக்கி அருள்நிலையை நோக்கி
அரியபுவ னங்களெல்லாம் அறிய மனதாக்கி
பாங்காகப் பெரியோர்கள் பாதமதுபணிவோம்
பத்தியொடு யோகநிட்டை நித்தியமும் புரிவோம். 2

பேய்க்குணத்தைச் சுட்டல்லவோ பிரமநிலை கண்டோம்
பிரமபதி தான்கடந்து சுழிமுனையுள் கொண்டோம்
நாய்போலே அலையாமல் நாமிருந்தோம் தவசில்
நல்லதொரு ஆங்காரம் அடக்கிமிகப் பவுசாய். 3

வஞ்சகமாம் வாழ்வைநம்பிச் சஞ்சலங்கள் அடையோம்
மகத்தான மகரிடிகள் பதங்காணச் சடையோம்
பஞ்சமா பாதகரை ஒருநாளும் பாரோம்
பாவவினை பற்றறுத்தோர் சிநேகிதங்கள் மறவோம். 4

ஆயிரம்பேர் சித்தருடன் அனுதினமும் பாடி
ஆனந்தத் திருநடனம் ஆடுவோமே கூடி
தாயிஉமை மனோன்மணியாள் எனக்கு சொன்னசித்தைத்
தானறிந்து நடந்து கொள்வோம் பெரியோரை அடுத்தே. 5

நிலையைக்கண்டு கொள்வதற்கு நினைந்துஉருகி வாடி
நிர்மலமாம் ஐயன்பதம் தினந்தினமுந் தேடி
கலைஅறிந்து வாசியையும் கட்டுடனே பிடித்தோம்
கனல் எழுப்பி மூலமதைச் சுகமுடனேபடித்தோம். 6

ஊணுறக்கம் நீக்கியல்லோ யோகநிட்டை புரிந்தோம்
உற்றாரைப் பற்றறுத்து மலைக்குகையில் இருந்தோம்
காணுதற்கும் எட்டாத பரவெளியைக் கண்டோம்
கற்பமது சாப்பிட்டு உடல்வளர்த்துக் கொண்டோம் 7

தந்தைதாயார் சுற்றமொடு தளர்ந்துஉற வாடோம்
தவநிலையைப் பெற்றுணராச் செய்கையைத் தேடோம்
விந்தையுடன் ஞானமதை மேன்பாடாய்த் தெரிந்தோம்
மேலான பரவெளியின் அருளதனை அறிந்தோம். 8

நாசிநுனி வழியதனில் நாட்டமதைத் தெரிந்தோம்
நல்லதொரு மூலவட்டம் சுழியை அறிந்தோம்
வாசியேற்ற வகையறிந்து ஆசைகளை அறுப்போம்
வையகத்தின் செய்கைதன்னை வழுவாமல் மறுப்போம். 9

சக்திசக்ர பீடமேறிச் சுத்தவெளியைக் கண்டோம்
சகலமும்பரவெளி என்று எண்ணி மனமதனில் கொண்டோம்
சித்திபெற்ற முத்தர்களை எத்தினமும் அறிவோம்
சீவகலை இன்னதென்று நாட்டமுடன் தெரிவோம். 10

தொண்ணுத்தாறு தத்துவத்து உரைத்தனங்களைக் கொண்டோம்
தய்யபர வெளிதனிலே அய்யர்பதம் கண்டோம்
விண்ணுலகு இன்னதென்று அறிந்து கொண்டேன் யானே
மேலான பரவெளியின் ஒளிவைக்கண்டுதானே. 11

நானென்ற ஆணவத்தை நயந்தறுத்து விடுத்தேன்
நன்மைபெற்றுக் குகைதனிலே வாழ்ந்திருக்க அடுத்தேன்
தானென்ற கருவமதைத் தணித்து விட்டு வந்தோம்
தவமேதான் கதி என்று சரவழியில் உகந்தோம். 12
----------------

2. புண்ணாக்குச் சித்தர் பாடல்

தேவிமனோன்மணியாள் திருப்பாதம் காணஎன்று
தாவித்திரந்தேளே - ஞானம்மா
சரணம் சரணம் என்றே. 1

அஞ்ஞானமும்கடந்து அறிவை மிகச்செலுத்தி
மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் - ஞானம்மா
விலையிலா ரத்தினமடி 2

முட்டையினுள்ளே முழுக்குஞ்சு இருப்பதுபோல்
சட்டையாம் தேகத்துள்ளே - ஞானம்மா
தானுயிரு நிற்பதடி. 3

விட்டகுறைவாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல்
தொட்டகுறை ஆனதினால் - ஞானம்மா
தோன்றுமெய்ஞ் ஞானமடி. 4

தம்முளம் அறியாமல் சரத்தைத்தெரியாமல்
சம்சாரம் மெய்யென்று - ஞானம்மா
சாகரத்திலே உழல்வார். 5

இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்
துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா
சொன்னால் வருமோசம். 6

முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும்
நித்திரையும்விட்டு - ஞானம்மா
நினைவோடு இருக்கணுமே. 7

நினைவைக் கனவாக நீயெண்ணியே பார்க்கில்
சினமாய்வரும் எமனும் - ஞானம்மா
தெண்டநிட்டுப் போவானே. 8

யோக விளக்கொளியால் உண்மை தெரியாமல்
மோகம் எனும் குழியில் - ஞானம்மா
மூழ்கியேபோவார்கள். 9

சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி
ஆத்திதேட நினைத்து - ஞானம்மா
அலைவார் வெகுகோடி. 10

பூச்சும்வெறும்பேச்சும் பூசையும் கைவீச்சும்
ஏச்சுக்கு இடந்தானே - ஞானம்மா
ஏதொன்றும் இல்லையடி. 11

கலத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து
கணக்கைத் தெரியாமல் - ஞானம்மா
கலங்கி அழுதாரடி. 12

மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும்
நாளை எண்ணாமலல்லோ - ஞானம்மா
நலிந்தே அழுவாரடி. 13

கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல்
தேவமாதா இரவல் - ஞானம்மா
தெரியாதே அலைவாரே. 14

செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம்
உத்தமர்போலப் பேசி - ஞானம்மா
உலகில் திரிவாரடி. 15

காட்டில் இருந்தாலுங் கனகதவஞ் செய்தாலும்
காட்டில் குருவில்லாமல் - ஞானம்மா
கண்டறிதல் ஆகாதே. 16

நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது
இல்லாவெளிச்சமது - ஞானம்மா
ஈனவெளிச்சமடி. 17

சம்சாரமென்றும் சாகரமாமென்றும்
இம்சையடைவோர்கள் - ஞானம்மா
இருந்து பயன் ஆவதென்ன. 18

காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது
ஊத்தச் சடலமிது - ஞானம்மா
உப்பிலாப் பொய்க்கூடு. 19

அஞ்சுபேர்கூடி அரசாளவே தேடி
சஞ்சாரஞ் செய்ய - ஞானம்மா
தானமைத்த பொய்க்கூடே. 20
---------------

3. கஞ்சமலைச் சித்தர் பாடல்

பரிபூர ணானந்த போதம் - சிவ
பரப்பிர்ம மான சதானந்த பாதம்

உரிதாம் பரம்பொருளை உள்ளு - மாயம்
உற்ற பிரபஞ்ச மயக்கத்தைத் தள்ளு
அரிதான சிவநாமம் விள்ளு - சிவன்
அடியார்கள் பணிவிடை அன்பாகக் கொள்ளு. 1

துச்சமு சாரவி சாரம் - அற்பச்
சுகமது துக்கமதாம் வெகு கோரம்
நிச்சய மானவி சாரம் - ஞான
நிர்மல வேதாந்த சாரமே சாரம். 2

கற்பனை யாகிய ஞாலம் - அந்தக்
கரணங்க ளாலே விளைந்த விசாலம்
சொற்பன மாம்இந்த்ர சாலம் - அன்று
தோன்றி விட்டாலது சூட்சானு கூலம். 3

அற்பம தானப்பிர பஞ்சம் - அது
அனுசரித்தாலே உனக்கிது கொஞ்சம்
நிற்பது அருள்மேவி நெஞ்சம் - அன்று
நிகரில்லை நிகரில்லை மெய்ஞ்ஞான பொஞ்சம். 4

ஆங்காரத் தால்வந்த கேடு-முதல்
ஆசையைக் கட்டோடே அப்பாலே போடு
தாங்காம லானந்த வீடு-அன்று
தாக்கும னோலயந் தானாகக் கூடு. 5

தத்துவக் குப்பைகள் ஏது-சித்தி
சாத்திர மான சடங்குகள் ஏது
பத்தி யுடன் மறவாது - குரு
பாதத்தைக் கண்டாற் தெரியும் அப்போது. 6

தூராதி தூரங்கள்இல்லை - அத்தைத்
தொட்டுப் பிடிக்க வென்றால் வெகு தொல்லை,
காரண தேசிகன் சொல்லை-நம்பிக்
கருத்தில் நிறுத்தியும் காணலாம் எல்லை. 7

ஆணவத் தால்வந்த காயம் - அதில்
ஐவரிருந்து தொழில்செய்யும் ஞாயம்
காணவ மாம்போகு மாயம்-நன்றாய்க்
கைகண்ட சூத்திரம் சொன்னேன் உபாயம். 8

மூடர் உறவு பிடியாதே-நாரி
மோக விகாரத்தால் நீ மடியாதே
ஆடம் பரம் படியாதே-ஞான
அமுதம் இருக்க விஷம் குடியாதே. 9

தான் என்று வாது கூறாதே-பேசி
தர்க்கங்கள் இட்டுச் சள் என்று சீறாதே
ஊனென்ற பாசம் மாறாதே-போனால்
உன்னாணை உன்மனஞ் செத்துந் தீராதே. 10

வந்த பொருளைத் தள்ளாதே-நீயும்
வாராததற்கு வீணாசை கொள்ளாதே
சிந்தை வசமாய்த் துள்ளாதே - சும்மா
சித்திரம் போலிருந்தது ஒன்றும் விள்ளாதே. 11

தேகபாச பவ பந்தம்-அப்பொருள்
சிற்றின்ப மானது சிச்சீர்க்கந்தம்
பாகம தானவே தந்தம்-பொருள்
பாவித்துப் பார்க்கில் உனக்கிது சொந்தம். 12

வஞ்சியர் ஆசை ஆகாதே-அந்த
மயக்கமானாற் கொஞ்ச மட்டிற் போகாதே

அஞ்சி யமன்கைச் சாகாதே-கெட்ட
ஆசா பாசமாம் நெருப்பில் வேகாதே. 13

கல்வி மயக்கங் கடந்து-எல்லாம்
கற்றோ மென்று றெண்ணுங் கசட்டைத் தொலைந்து
சொல்வெப் பினாலே கிடந்து-இரு
சூட்சாதி சூட்சத்தில் ஆசை படர்ந்து. 14

ஓடித் திரியும் கருத்து-அதை
ஓடாமல் கூட்டிப் பிடித்துத் திருத்து
நாடிக் கொண்டம்பைப் பொருத்து - அந்த
நாதாந்த வெட்டவெளிக் குள்இருத்து. 15

சாண்வயிற் றால்அலை யாதே-நிதம்
சஞ்சலப்பட்டுக் கொண்டே மலையாதே
ஆணவத் தால்உலை யாதே-உனக்கு
கானந்த முத்தி அது நிலையாதே. 16

அபிமானி யாகிய சீவன்-அவன்
அஞ்ஞானத்தாலே அழிவுண்டு போவான்
தபம்நினைந்தால் போதம் சார்வான்-நிலை
சார்ந்து கொண்டால் சத்தி ரூபமும் ஆவான். 17

நற்குரு சொன்னதே சொல்லு-தம்பம்
நாட்ட மென்றால் வன்னி நிலையிலே நில்லு
தற்சம யங்களை விள்ளு-உண்டு
தன்மயமாகவே தானே நீ கொள்ளு. 18

துன்ப இன்பங்களைத் தொட்டு-அந்தத்
தொந்தங்கள் எல்லாந் துருசறச் சுட்டு
பின்பு பாசத்தைக் கைவிட்டு-ஒன்று
பேசாம லந்தம் பெருமையை விட்டு. 19

பேச்சினால் என்னென்ன தோணும்-சும்மா
பேசப்பேசப் பிழைஅல்லோ காணும்
வாச்சுத லால்அம்பு பூணும்-நல்ல
மாசற்ற ஞான விசாரணை வேணும். 20

அநித்திய மானது தேகம்-அதில்
ஆசையும் ஒன்றால் அடங்காது மோகம்
தனித்திருந் தால்அந்த போகம்-ஒன்று
தானாகி நிற்பது வேசிவ யோகம். 21

விரும்பாசைக்கு இடங்கள் கொடாதே-காய
வேதனைக் குள்ளேநீ கட்டுப்படாதே
திரும்பச் செனனம் எடாதே-குரு
தேசிகர் பாதத்தில் அன்பு விடாதே. 22

கோடான கோடி தவங்கள்-அந்தக்
கோவிலைச் சுற்றிச் செபிக்குஞ்செபங்கள்
பாடான தல்லோ பவங்கள்-இது
பண்ணுமுன் நண்ணும் துன்ப அமலங்கள். 23

அந்தக் கரணவி லாசம்-அதை
யாராலும் தள்ளக்கூ டாது பிரயாசம்
தொந்தித்து நிற்பதே பாசம்-அதிற்
தோன்றாமற் தோன்றுஞ் சுயம்பிரகாசம். 24

நாமசொ ரூபமே சித்தி-அதை
நாடித் தெளிந்துகொண்டால் அல்லோ முத்தி
நேம சொரூபமே வித்து-எங்கும்
நிச்சய மாகும் நிரந்தர வத்து. 25
------------------

4. மச்சேந்திர நாதர் என்ற நொண்டிச் சித்தர் பாடல்


நொண்டிச் சிந்து

ஆதி பராபரையாள் சிவசத்தி
அம்பிகையின் பாதமதைக் கும்பிட்டு நித்தம்
கோதிலாச் சுடரொளியில் திரிகோணக்
குஞ்சரத்தின் பாதமலர் தஞ்சமாய்க் கொண்டு 1

திருமூலர் காலாங்கி போகர்
தென்பொதிகைக் குருமுனி தன்வந்திரியர்
கருவூரார் இடைக்காடர் அத்திரி
கலைக்கோடார் மச்சமுனி புலத்தியரே. 2

சுந்தரா னந்தர் கபிலர் கொங்கணர்
சூதமுனி கோசிகர் வேதமுனிவர்
நந்தீசர் சட்டைமுனிவர் தன்னை
நான்தொழு தேனடி தாள்பணிந்தேன். 3

அஞ்சுபுலக் கதவறிந்து பிரம
மந்திரத்தின் உண்மைவழி விந்தை தெரிந்து
சஞ்சலந் தனைப்பிரிந்து சித்தாதிகள்
தாள்பணிந் தேன் நான் துணிந்தே. 4

சரியையுங் கிரியையும் விட்டு அப்பாற்
சாதனாமா யோகமதின் பாதம் அதைத்தொட
உரியா தீதம்வெளிப்பட் டங்கு
சும்மாயிருந் ததைச்சொல்ல எம்மாலாகுமோ. 5

பராபர வெளிகைக்கொண்டு மனம்ஒன்றிப்
பற்றிடவே சிற்பரத்தின் உற்பனங் கண்டு
நிராதர மான பண்டு
நீங்கா ஆனந்தரசம் பாங்கதாய் உண்டு. 6

அடிநடு முடிவு கண்டேன் மோனநிலை
அறிந்து கொண்டேன் ஞானந் தெரிந்துகொண்டேன்
முடிவில்லாப் பரப்பிரம சொரூபத்தை
முற்றும் கண்டேன் இகப்பற்றும் விண்டேன். 7

சுத்தப் பரவெளியே ஒளியாகத்
தோன்றிட மெய்ஞ்ஞானச் சுகமடைந்தேன்
சத்துச்சித் தானந்தத்தைத் தெரிசிக்கச்
சகலமும் பிரமமயம் புகலரிதே. 8

நாசிமுனை நடுவில் விளங்கிய
நயனத்திடை ஒளியாம் பரவெளியில்
தேசிகன்திருக் கூத்தை
தெரிசித்தே மோனநிலை பரிசமுத்தே. 9

நினைவே கனவெனவும் தெளிந்தந்த
நினைவையும் மறந்தெழு கலைமறந்தே
தனதெனும் தனைமறந்தே சுத்த
சாகரத்தில் உழலாத பாகந் துறந்தே. 10

ஓமென்ற பிரணவத்தை இன்னதென
உண்மைகண்ட பின்புவெகு நன்மையும் பெற்றேன்
நாமெனும் அகங்காரந் தனைவிட்டு
நாட்டந் தெரிந்து கொண்டேன் தேட்டமுடனே 11


ஆசையை விட்டுஒளிந்து விரிந்தோடும்
ஐம்புலனைத் தான் அறுக்குந் தெம்பை அளித்துப்
பாசந் தனைக்கடந்து குருசொல்
படிதவ றாமல்அப் படிநடந்து. 12

கவனக் குளிகை கொண்டு அதனாலே
ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று
தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற
சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன். 13

தவசுப் பாரையின்மேல் இருக்கிற
சாமிபர ஞானநவ சித்தருடனே
சிவசொரூ பம்தெரிந்தேன் மனதினில்
தீபவொளி கண்டபின்பு ஆவலும் விண்டேன். 14

மூலாதாரந் தெரிந்தேன் தெரிந்ததந்த
முச்சுடரின் தீபவொளி கண்டுமகிழ்ந்தேன்
நாலா கலையறிந்தேன் என்பாட்டன்
நந்தீசர் கிருபையால் சந்தோடம் கொண்டேன். 15

யோகாம் அனுபவமறிந்தே மணிபூரகம்
உத்தமர்க்குச் சித்தியென மெத்தவுங் கண்டேன்
சாகா திருந்திடவே விசுத்திநிலை
தன்னில் இருந் தன்னிலையே நன்னிலையதாய். 16

கண்டதே அங்கு நின்றேன் சிவசத்தி
கற்பனையது தென்றுமகிழ்ந் தப்புறஞ்சென்றேன்.
பண்டுஅன்னைஉமையகட்கு அருளிய
பாதைகண்டு ரசபான போதையும் உண்டேன். 17

ஆரும் அறிய ஒண்ணாப் பூரணத்து
ஆச்சரியங் கண்டபின்பு பேச்சடங்கினேன்.
சீருஞ் சிறப்பும் மிக்க மனோன்மணி
தேவிஅருளால் அறிந்து மேவிக்கொண்டேன். 18

காமியங் கடந்தவிடம் தினந்தினம்
கண்டறிந்து கொண்டேன்முனி அண்டர்புகழும்
வாமியிவள் எனப்பேர் நன்றாக
வாங்கிக் கொண்டேன்பரத் தோங்கிக் கொண்டேன். 19

நாதாந்த மோனமெனும் நிலைகண்டு
நானிருந்தேன் உறக்கமூனு மற்றேன்.
வேதாந்த வழியறிந்தேன் அஞ்ஞான
வீட்டைக் கடந்துமேலாம் வீட்டையுங்கண்டேன். 20

சாத்திரம் பலபடித்தேன் பொல்லாச்
சண்டாளர் சவகாசந் தன்னை மறந்தேன்
பாத்திரம் அறிந்து கொண்டேன் அவருடன்
பத்தியொடு சேர்க்கைசெய்து முத்தியைக்கண்டேன். 21

உப்பிட்ட பாண்டமிது வந்தவழி வந்தவழி
உண்மைதெரி யாதமாந்தர் நன்மையீதென்று
செப்புக் குயமானார் ஆசைகொண்டு
தேசமதிலே அலைந்து பாசத்து உழல்வார். 22

நிலையிலாப் பொய்க்கூடு இத்தேகம்
நிச்சயம தற்றதென் அச்சமதோடு
மலைகுகை தனில் ஏகி சிவஞான
மார்க்கம் தெரிந்ததின் நேர்க்கையாகி. 23

ஆங்காரமும் ஒழித்தேன் உண்மைநிலை
அறிந்திடும் நொண்டியெனச் சிறந்திழித்தேன்
பாங்காம் நிலைதெரிந்தேன் குருசொன்ன
பரப்பிரம சொரூபத்தின் தெளிவறிந்தேன். 24

தன்னையும் தானுணர்ந்தேன் எட்டுத்
தலங்களும் ஒன்பது வாசல் உணர்ந்தேன்
பின்னுமக் கதவடைந்தேன் மேலாம்
பெருவழி .ஊடுசென்று திருவடைந்தேன். 25

மாதா மனோன்மணியாள் பீடமதில்
மணிச்சத்தத் தொனியது கணகணன
நாதகீ தங்கேட்டுச் சிவதிரு
நடனக்கண் காட்சியை உடனே கண்டேன். 26

மந்திரந் தனைத் தெரிந்தேன் ஓங்கார
வட்டமதைத் திட்டமதாஎட்டிஅறிந்தேன்
இந்திர பீடம்முணர்ந்தேன் மோனநிலை
இன்னதென்று கண்டுமனம் நன்னயங்கொண்டேன். 27

அழியாப் பொருளிதுதான் என்றுதொழுது
அகமகிழ்ந்தேன் ஞானச் சுகமடைந்தேன்
வழியாய் உணர்ந்தவர்க்கு மோட்சநிலை
வாய்க்குமென்று பேய்க்குணத்தைப் போக்கிப்புகழ்ந்தேன். 28

வேத முடிவுணர்ந்தேன் எங்கும்
விளங்கும் பொருளைக்கொண்டு உளங்குளிர்ந்தேன்
நாத வெளியில் உற்றேன் இந்த
நானிலத்தோர் புகழவே ஞானிபேர் பெற்றேன். 29

வெட்ட வெளிதானே யாமிது
வென்றறிந்துக் கொண்டவர்வே றொன்றையுமுன்னார்
பட்டப் பகலதனை இருளாகப்
பார்த்தவருக்குக் காணஞான நேத்திரமுண்டோ? 30

மூல முதலி மொள்ளே என்றுமுன்னாள்
மொழிந்தார் நமதுகுரு மூலரன்றே
சாலவே மறைநான்கும் சொன்னதோர்
சங்கைதெளிந் தானந்தம் பொங்கித் ததும்ப. 31

தான் நான் என அற்று குருவருள்
தன்னைமற வாமல் என்னை என்னாலறிந்தேன்
ஊனுடல் அழியாமல் நிட்டைதனில்
உற்றவிழி துயிலாத பெற்றிலிருந்தேன். 32

ஒருபொருள் விரிவாலே கண்டறிந்த
உற்பனமெல் லாம்விழலாங் கற்பனையென்றே
அறிவால் அறிந்து கொண்டு சிதம்பரத்து
ஆடல்கண்டு ஆனந்தப் பாடல் விண்டேன். 33
-----------------

This file was last updated on 10 April 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)