pm logo

தங்கமுத்துதாஸ்‌ இயற்றிய
சிங்கப்பூர் ஒப்பாரி


cingkapUr oppAri
of tangkamuttutAs
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தங்கமுத்துதாஸ்‌ இயற்றிய
சிங்கப்பூர் ஒப்பாரி

Source:
கடவுள் துணை.
ஜெகமெங்கும் புகழ்பெற்ற இன்பகானகீதமணி
திருசிறபுரம் ஸ்ரீமான் R. T. தங்கமுத்துதாஸ் அவர்கள்
இயற்றிய "சீமாட்டிகள் சொல்லும் சிங்கப்பூர் ஒப்பாரி"
------------

தகப்பனாருக்குப் புலம்பல்

வண்ண மணி தந்திமரம்
என்னைபெற்ற அப்பா
வார்த்தைமிக பேசுமரம்
என்னைஈன்றவர் துரை
மாண்டீர் என்று
எனக்கு வார்த்தை வந்து கேட்டவுடன்
என்னைகொண்டவல்லவரை முன்னே விட்டு
வந்துசேரும் முன்னாலே
நீங்கள் பெற்றபெரியமகள் நின்றழுதால்
பேசாது வன்னிமரம்
நடுமகள் நின்றழுதால்
நடுங்காது வன்னிமரம்
கடமகள் நின்றழுதால்
கலங்காது வன்னிமரம்
நீபெற்றசெல்லி நான்
வாய்க்கரிசி கொண்டு
வலபுரம் எண்ணைகொண்டு
சீயக்காயரப்புக்கொண்டு
சீயாளி டேளம் சிதம்பரத்து மாலைகொண்டு
சிகப்புகிர பட்டுக்கொண்டு
நான் தாங்கி அடியைவைத்து
தலைமீது கையைவைத்து
ஒங்கியழுது வந்தால்
உங்கள் வாசல் உயர்ந்த மரம் ஓசையிடும்

பவளமணித் தந்திமரம்
என்னை பெற்ற அப்பா
நம்பவாசல் பல சேதி பேசுமரம்
என்னைபெற்றபார்த்திபரும் மாண்டீரென்று
எனக்குபலசேதி வந்தவுடன்
என்னைக்கொண்ட பாண்டியரை
முன்னே விட்டு பாலர்களை பின்னே விட்டு
நான்பாவி வருவதற்குள்
நீங்கள் பெற்ற பெரியமகள் தொட்டபின்
போகாது பூந்தேரு
நடுமகள் தொட்டால்
நகராதுபூந்தேரு
இளையமகள் தொட்டால்
எழும்பாது பூந்தேரு
நீபெற்ற செல்லிநான் பல்லுவிளக்காமல்
பாலுபழம் தின்னாமல் எண்ணைத் தலையோடு
இளம் பல்லு காவியோடு
மாமதுரை மேளங்கொண்டு
மதிப்பான பட்டுக்கொண்டு
மங்கி அடியைவைத்து
மார்மேலே கையைவைத்து
நான் ஏங்கியழுதுவந்து
என்னைப்பெற்ற அப்பாநான்
ஏலேலம் என்று சொன்னால்
இன்னைக்கு ஏலப் பொடிமணக்கும்
என்னைப் பெற்ற அப்பா
உங்கள்வாசல் எழுந்திருக்கும் பூந்தேரு

தெற்குக் கலகோடி
தென்னாட்டு கப்பலேரி
என்னைப்பெற்ற அப்பா
நீங்க சிங்கப்பூர் போயிறங்கி உங்கள் செல்லிக்கி ஏற்றதொரு
சிறுநகை அனுப்பிவைத்தீர்
சிறுநகையு மிங்கிருக்க
உங்களுக்குவந்த சீமாட்டி காத்திருக்க
சிங்கப்பூர் போனவர்கள்
திரும்பிவரக் காணலையே
என்னைப்பெற்ற அப்பா நீபெற்ற
செல்லிகுறை ஆறலையோ

வடக்குகடலோடி வடக்குகப்பலேரி
என்னைப்பெற்ற அப்பா நீங்கள்
வங்காளம் போனவர்கள்
நான் வயதாளுக்கு ஏற்றதொரு
வயிரநகை செய்துதந்தீர்
அந்தவயிரககை இங்கிருக்க
என்னைப்பெற்ற அப்பா உங்களுக்கு
வாய்ந்தவல்லவனும் காத்திருக்க வங்காளம் போனவர்கள்
வாசல் வந்து சேரலையே
என்னைப்பெற்ற அப்பா நீபெற்ற
வயதால் குறை ஆறலையோ
--------

தாயாருக்குப் புலம்பல்

மலைமேலே தோட்டம் வைத்து
என்னைப்பெற்ற அம்மா நீபெற்ற
மங்கைமயிலாட மனதுக்கு ஏற்றதொரு மலைவாழை உண்டுபண்ணி
மண்ணால் சுவரெடுத்து
மனிதரையும் காவல் வைத்து உங்கள் கண்மறைந்த நாழிகைக்கு
மலையும் சரியலாச்சோ மலைவாழை வீணாச்சோ
என்னைப் பெற்றதாயே
நீபெற்ற மங்கைமனம் புண்ணாச்சோ
சிலைமேலே தோட்டம்வைத்து
என்னைப்பெற்ற அம்மா நீபெற்ற
செல்லிசிந்தைக்கு ஏற்றதொரு
சிறுவாழை உண்டுபண்ணி
செங்கல் சுவருவைத்து சேவகரை காவல்வைத்து
உங்கள் கண்மறைந்த நாழிகைக்கு
சிலையும் சருக்கிடுச்சோ சிறுவாழை வீணாச்சோ
நீ பெற்றசெல்லி மனம் புண்ணாச்சோ
இரண்டு இடியிடிக்க என்னைபெற்றதாயே
நம்பவாச பெருவெள்ளம் ஓடிவர
அந்த பெருவெள்ளக் தண்ணியிலே
நீங்கள் பெற்ற பெண்ணாள் நனைந்து வந்தாள்
நீ புதுச்சேரி துண்டெடுத்து
உன்னுடைய பிடரிதுவட்டினாலும்
நான் பெண்குறையும் ஆறிடுமோ
கலந்து இடி இடிக்க நம்பவாசம்
கனவெள்ளம் ஓடிவர
அந்த கன வெள்ளத் தண்ணீரிலே
நீங்கள் பெற்றகன்னி நனைந்துவந்தால்
நீ காரைக்கால் துண்டெடுத்து
என்னுடைய கண்ணை துவட்டினாலும்
நான் கன்னிகுறை ஆறிடுமோ
-----------

புருஷனுக்குப் புலம்பல்

புதுக்கோட்டைச் சாலையிலே
என்னைத்தேடியசாமி உங்கள் கண்ணுள்ள நாளையிலே
பூமரங்கள் உண்டுபண்ணி போரவர்கள் வாரவர்கள்
பூமரங்கள் ஆறுதென்றால் என்னைக்கொண்ட புண்ணியனும் வைத்த
பூமரச்சோலை என்பார்
உங்கள் கண்மறைந்த நாழிகைக்கு அந்த பூமரச்சோலை என்பார்
நான் புலம்பியழுதேனென்றால்
இன்னைக்கு பூவும் விலையாகும் என்னைத்தேடிய புண்ணியனார் பேர்விளங்கும்

மாமதுரைச் சோலையிலே
என்னைத் தேடியசாமி
உங்கள் கண்ணுள்ள நாளையிலே
மாமரங்கள் உண்டுபண்ணி
மதுரைவழி போரவர்கள்
மாமரங்கள் ஆறுதென்றால்
என்னைக்கொண்ட மன்னவர்வைத்த
மாமரச் சோலை யென்பார்
உங்கள் கண்மறைந்த நாழிகைக்கு
அந்த மாமாரச் சோலையிலே
நான் மங்கை அழுது நின்றால்
இன்னைக்கு மாங்கா விலையாகும்
என்னைத்தேடிய மன்னவனார் பேர்விளங்கும்

ஏழுபசுவு இளம்பசுவு தானமிட்டு
என்னைத் தேடியசாமி
என்னைபெற்ற ஈஸ்வரியும் ஈஸ்வரரும் இந்திரரைத் தேடிவைத்தார்
நீங்கள் என்னை மறந்து விட்டு
எமலோக வாழ்வுக்கு
இச்சைவைக்க நீதியுண்டோ
நான் ஏங்கி அழுகிறது
நீங்கள் போன எமலோகம் சம்மதமோ
பத்துபசுவு பால்பசுதானமிட்டு
என்னைத்தேடியசாமி என்னைப் பெற்ற
பரமசிவனும் பார்வதியும் உங்களைபாண்டியரைத் தேடிவைத்தார்
என்னுடைய பக்ஷமறந்திட்டு
பரமலோக வாழ்வுக்கு பாசம்வைக்க நீதியுண்டோ
பதிரியழுகிறது என்னைத்தேடியசாமி
நீங்கள் போன பரமலோகம் சம்மதமோ
-------------

மாமியாருக்குப் புலம்பல்

அத்தையடி அத்தை என்னைக்கொண்ட
அருச்சுனரைப் பெற்ற ஆசாரமுள்ள அத்தை
உன்கண்ணுள்ள நாளையிலே
அடுக்குமல்லி நானறியேன்
அதைச்சூடிபார்த்தறியேன்
அழகான சேலை ஒன்று அறையில்கட்டி நானறியேன்
அலுத்துச் சற்று
அறையில் படுத்தறியேன்
இப்போ அலுப்புக்கு ஆத்தாமல்
என்னைத்தேடிய படுபாவி அத்தையரே
நான் அடித்து அழுகவந்தேன்

மாமியாரே மாமியாரே என்னைக்கொண்ட
மன்னவரைபெற்ற மதிப்பான மாமியாரே
உன் கண்ணுள்ள நாளையிலே
மல்லிகை நானறியேன்
மலர்சூடிபார்த்தறியேன்
மதிப்பானபட்டு ஒன்று
மடிச்சுடுத்தி நானறியேன்
என்மனது சலித்துச்சற்று
மாடியில் படுத்தறியேன்
இப்போமனது சகியாமல் என்னைத்தேடிய மாமியாரே
மாரடிக்க ஓடிவந்தேன்
கோயிலுக்கு போயறியேன்
கும்பிட்டு நானறியேன்
என்னைத்தேடிய அத்தையரே
ஒரு திருநாளுக்கு போயறியேன்
தெருவில் நடந்தறியேன்
தாம்பூலம் பார்த்தறியேன் மோறுபாலு நானறியேன்
என்னைக்கொண்ட மாமியாரே
இப்போமுட்டியழுகவந்தேன்

சிங்கப்பூர் ஒப்பாரி முற்றிற்று.
------------------

This file was last updated on 24 April 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)