pm logo

கருணையா நந்தசுவாமிகள் எழுதிய
குருநாத சதகம்


kurunAta catakam
of karuNaiyA nantacuvAmikaL
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கருணையா நந்தசுவாமிகள் எழுதிய
குருநாத சதகம்

Source:
திருமூலர் மரபிலெழுந்தருளிய
கருணையா நந்தசுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய "குருநாத சதகம்"
சென்னை: மதராஸ் ரிப்பன் அச்சுயந்திரசாலையில் பதிப்பிக்கப் பட்டது
1913, விலை அணா 1
--------------------
கருணையானந்த சுவாமிகள் இயற்றிய குருநாத சதகம்


சிவமயம்
காப்பு

நேரிசை வெண்பா

வேதன் றிருமாலும் விண்ணோருங் காண்கில்குரு
நாதன் சதகம் நவிலவே - பாதநிழற்
றந்தானைச் சுந்தரப்பொற் றாளானைநம்போல
வந்தானை நெஞ்சேநீ வாழ்த்து.       1

குருவே துணையாகக் கூறினா னாளுங்
குருவே துணையாகக் கூடுங் - குருவே
துணையா யிருந்தறிவிற் றுன்னியெங்கும் நிற்பா
ரிணையார் நமக்குநெஞ்சே யீங்கு.       2

நூல்
கலிவிருத்தம்

உலகஞ்சுகஞ் சொருபஞ்சிவ முணர்கின்றிலே னுனையண்டினேன்
இலகுஞ்சுட ருதயங்களி லிதயம்பதிந் திலையென்கொலோ
கலகஞ்சிறந் தொலிதங்கிடுங் கலைகண்டருங் கதிநம்பினேன்
குலகுஞ்சர னருள்தாதையாங் குருநாதனே! குருநாதனே!       1

பூதாதிநா தமுநின்னதாம்[1] பூராயமாம் விழிபூத்தநின்
பாதாதிகே சமுநிற்குணம் பகல்கோடியோ மதிகோடியோ
ஏதாதிகண் டறியத்தகே னெல்லாமுநின் னருளையனே
கோதாதிதீ தறவான்கடற் குருநாதனே! குருநாதனே!       2

திருவாகினாய் திறமாகினாய் திகழ்பானுமா மதியாகினாய்
உருவாகினா[2] யருவாகினா யூனோடுயி ருறவாகினாய்
மருவாகினாய் மலராகினாய் மனமாதியெண் வடிவாகினாய்
குருவாகினா யெனையாண்டவா குருநாதனே! குருநாதனே!       3

நின்றாப்பெருங் கண்ணானவன் நீயாகின் நான்ஆர்சொலாய்
கொன்றாப்பெரும் பாவங்களார் கொண்டாடினுங் குணபானுநீ
சென்றாப்பெருந் தீயிற்சிறு திவலைச்சலஞ் செப்பத்தகுங்
குன்றாப்பெருஞ் செல்வத்துரைக் குருநாதனே! குருநாதனே!       4

பிணைக்கேடனை மலமாசனைப் பிணிமூப்பெனும் பிறவிக்குளே
கணக்கேடனை மூன்றற்றிடாக் [3]கசுமாலனைக் கனபாவியைச்
சுணக்கேடனை யிச்சைக்குளே சுழல்மூடனைக் கெடு[4]பூடனைக்
குணக்கேடனை யாட்கொள்ளுவாய் குருநாதனே! குருநாதனே!       5
------
[1] பூராயம் - விசித்திரம்; [2] அரு - உருவமற்றது; ¨
[3] கசுமாலன் - குற்றமுள்ளவன்; [4] பூடன் - புல்லன்

திருவாழ்கவெண் டிசைவாழ்கமால் திசைமாமுகன் முதல்வாழ்கவைந்,
தருவாழ்கவிந் திரன்வாழ்கநற் றவமாமுனி வரர்வாழ்கவிண்,
ணுருவாழ்கமற் றவைவாழ்கவெண் ணுருவாழ்கவிச் சதகஞ்சொலக்,
குருவாழ்கநல் லடிவாழ்கநன் குருநாதனே! குருநாதனே!       6

மாதாபிதா குருதெய்வநீ மற்றாரெனக் குற்றாருநீ
நாதாபிறப் பறநின்றநீ நானாமிவை தானாகுநீ
வேதாபிதா விண்ணோருநீ வெண்மைப்படி கமுமொத்தநீ
கோதாபுறர்க் குன்பாலுநீ குருநாதனே! குருநாதனே!       7

மலமாயைகன் மமுமாயதின் மருவத்தகுங் குணபேதமு
நிலமாயைபொன் னுடன்மாதரை நினைவாருனை நினையாவணஞ்
சிலமாயையால் வரவிட்டநின் சிவமாயையை யறிவார்களார்
குலமாயையைத் தலை[5] நூறிடுங் குருநாதனே! குருநாதனே!       8

ஆனாலுமென் னறியாமையா லறவாடினே னறியாய்கொலோ,
போனாலுமின் னுடலைச்சதம் போலாய்நினைந் தொழியாதெனை
யூனாலுமென் னுயிராலுமுன் னுணர்வாலுனை யுணரத்தகாக்
கோனாலுமென் மறையோதுமே குருநாதனே! குருநாதனே!      9

மிடியேனைவல் வினையாளனை மிகுமாயையி லழிபேயனை
விடியேனைவம் படும்வாயனை வீழுஞ்சடப் பவமாயனைத்
துடியேனைவந் தடிசாயனைத் துயரம்படுங் கடலோலனைக்
கொடியேனைவங் கணமாயனை குருநாதனே! குருநாதனே!       10

ஆணாமனின் னறிவாய்மன [6]மம்போருகத் திலைநீர்நிகர்
தோணாமனின் றயர்வெய்திடத் தோலின்றொழி லானாடொறுங்
காணாமனின் னருள்வாரியைக் கருதித்திரிந் துறவாடுநாள்
கோணாமனின் னருள்தந்தவா குருநாதனே! குருநாதனே!       11
---
[5] நூறிடும் - அழித்திடும் ; [6] அம்போருகம் - தாமரை

நானானெனச் சொலிவீணிலே நடமாடுபாழ்ம் பிணமானநான்,
வானானெனப் பொருள்சொல்லியோர் வார்த்தைக்குளே வடிவொப்பிலா,
தேனானெனக் கருணாரசந் தேங்கித்தெளிந் திடுதேறலாங்,
கோனானெனப் பணிகொண்டவா குருநாதனே! குருநாதனே!       12

பொல்லாச்சனி வேட்கைக்குளே பொங்குஞ்சிறு வாழ்க்கைக்குளே,
நில்லாப்பனி சோகைக்குளே நிமிடங்கன வாக்கைக்குளே
வில்லாத்தனி வானிற்குளே விளைவாய்வரு மையிற்குளே,
கொல்லாயினி மேலாகிலுன் குருநாதனே! குருநாதனே!       13

சொல்லற்கரி தொருமாயைநின் சொருபத்தினி லுளவாகினால்
வெல்லத்தகும் பொருளுண்டரோ விளையாடினாய் வீடேறினாற்,
புல்லற்கரி தாகாதெனப் புகலுஞ்சிலர் கதையாதல்போற்
கொல்லற்குளூ சிகள்விற்குமோ குருநாதனே! குருநாதனே!       14

வம்பிட்டவாய்ப் பறையோதுவார் வலதாகினே னெனமீறவே
கம்பிட்டநாய் கடிகோலல்போற் கடுகுஞ்சிலர் கரையேறிலார்
அம்பிட்டநின் னடிசாய்ந்தரோ வரனேயெனப் பலகாலமுங்
கும்பிட்டவர் கரையேறுவார் குருநாதனே! குருநாதனே!       15

துஞ்சுங்கணப் போதிங்ஙனத் துயிலுந்தனித் துடலான திங்
கஞ்சும்பிரித் தறிவானிறைந் தயர்காலம்விண் டறியாமையா
னெஞ்சுந்தளர்ந் தலைமோதுமுன் னீநானிறந் தறிவாகநான்
கொஞ்சுந்திருத் தாளீகுவாய் குருநாதனே! குருநாதனே!       16

மதிக்காதறஞ் சுடுமூடரை மனக்காமிபின் னுடற்கேடரைத்
துதிக்காவரந் தருமையனே துணைக்காதர முனையல்லதார்
சதிக்காமனைப் படலஞ்செயச் சதிக்காரதிக் கினிநாளுமே
கொதிக்காதவன் றனையீந்தவா குருநாதனே! குருநாதனே!       17

தடுக்கின்றதா ரோர்க்கீவதைத் தானங்கதைப் பறிக்கின்றதார்
எடுக்கின்றதா ரெறிகின்றதா ரிவனானவ னென்கின்றதார்
படுக்கின்றதா ரெழுகின்றதார் பார்த்தாலுனை யலதொன்றிலை
கொடுக்கின்றதார் கொடாரெங்ஙனங் குருநாதனே! குருநாதனே!      18

முனிமாதவர் பலகோடிபேர் முடிராசர்கள் பலகோடிபேர்
நனிவானவர் பலகோடிபேர் நரர்காந்தருத் திரர்கோடிபேர்
கனிமாலயன் பலகோடிபேர் கமலாசனத் திருபாலிஞ்ங்
குனிவார்களுன் கழலியாவருங் குருநாதனே! குருநாதனே!      19

திருமாமணித் தரளங்களிற் றிகழ்பீடிகை [7]யறுகானடு
வொருமாமணிச் சுடராய்விரிந் தொருகோடிகோ டிகளொப்பிலா,
தருமாமணிக் கதிர்குண்டல மசையாதிருந் தகிலேசனாங்,
குருமாமணிக் குலதெய்வமே குருநாதனே! குருநாதனே!      20
--
[7] பீடிகை - ஆசனம்

சிறுகும்பணி பசுவிந்திரன் சிலதும்பர்நா யகனென்கொலோ
மறுகும்பணிக் கொருகாமதேன் மலரைந்தருச் சனையன்றியி
லிறுகும்பணிக் கெனனீநினை யெண்ணற்கருந் தருகாமதேன்
குறுகும்பணிக் கின்றேவலாங் குருநாதனே! குருநாதனே!       21

தூலங்களைந் துனையண்டினோர் தொடரும்பவந் துலைகண்டபேர்,
சீலங்களைந் தலைவாயினிற் சிதறுந்துரும் பினர்சேர்கிலார்,
மூலங்களைந் தயன்மால்களும் முடியுந்தர மொவ்வாமையாற்,
கோலங்களைந் தாருய்குவார் குருநாதனே! குருநாதனே!       22

நீடிக்குனிந் துடலாடினு நிலநீள்வனந் தனிலோடினும்
பாடிக்குனிந் துறவாடினும் பலகா லுனைச் செல்காலமாய்
நாடிக்குனிந் திடுமூடர்க ணம்பார்களுன் செம்பாதமுங்
கூடிக்குனிந் துய்வார்களோ குருநாதனே! குருநாதனே!      23

மெய்யாதியிற் றொடருந்தொழின் மெய்யென்பவர்க் குய்வென்கொலோ,
பொய்யாதியிற் குள்ளஞ்சினேன் பொய்யன்றனைப் பொருளென்றெனை,
வையாதியிற் றொழிலும்படி வானாடரு மற்றோர்களுங்,
[8]குய்யாதியிற் காலந்தளுங் குருநாதனே! குருநாதனே!       24

பையன்றனைப் பவமுங்கிடும் படிறன்றனைப் பலனுய்ந்திடா
தையன்றனைத் தொடரும்படிக் கடர்வாதனைக் கிடலாகுமோ
வெய்யன்றனை யினியாகிலும் வெளிவீடுறச் செய்மாதர்கார்
குய்யந்தனை நினையாமலாள் குருநாதனே! குருநாதனே!      25

சாடிக்குமோர் தடிகாரனைச் சவமுந்திவந் தெதிராடுமோ
ஆடிக்குமோர் பாதந்தனி லத்தொத்தலாற் சுதிகூடுமோ
சோடிக்குமோர் சகடங்கனஞ் சுள்ளாணியின் றடையென்பரால்
கூடிக்குமோர் குறிகாணுநீ குருநாதனே! குருநாதனே! 26

[9]சேடிக்குநின் சொருபத்தினிற் சொல்லாவிடி லென்னாசுகந்
தேடிக்குநின் னருளல்லதேற் றேவாதிதே வருமெங்ஙன
மேடிக்குநின் னருள்வாதவூ ரெந்தைக்கும்வந் தனமாகினோர்
கோடிக்குநின் னருடாரகங் [10]குருநாதனே! குருநாதனே!       27
---
[8] குய்யம் - மர்மஸ்தானம்; [9] சேடிக்கும் - அலங்கரிக்கும்;
[10] தாரகம் - ஆதாரம்

நிமிருந்திசை பகிரண்டமு நிமிர்கின்றநின் சுடர்தங்கின
மமரும்படிக் கிருபைகூரையா வையாமெய்யா வருள்வெள்ளமே
ஞிமிறுந்திரண் டொருகோடிகள் ஞிம்மென்றுபா டொலிநேரிடக்,
குமுறும்பிர ணவரூபனே குருநாதனே! குருநாதனே!       28

நிலனன்றனல் வெளியன்றறி நினைவன்றசை விண்ணன்றடர்,
மலனன்றலர் மணனன்றயன் மதனன்றக மயனன்றறச்,
சிலனன்றருஞ் செயலன்றஃகுஞ் சிவமென்றுறுஞ் சிறிதென்றுமோர்,
குலனன்றரு மறைபேசுமென் குருநாதனே! குருநாதனே!       29

ஆவென்றயர்ந் துயிர்போகினா லலறிச்சில ரருகாகிநின்,
றோவென்றடித் தழுவாரையொத் தோடித்திரிந் திவன்பங்கினிற்
சாவென்றதின் னாளில்லையோ சதியாயெமன் கொடுபோகினாற்,
கூவென்றழும் படிசெய்திடாக் குருநாதனே! குருநாதனே!       30

[11]சரவற்குல [12]மசரங்களுஞ் சகலாகம மிதிகாசமு
நாவற்குல முதலாதியாய் நானாவிதப் பலசீவரும்
பரவற்குல மலதில்லையார் பாத்தானிறை பரிபூரணக்
குரவற்குலக் குருராயனே குருநாதனே! குருநாதனே! 31

மலைப்பாதகங் களின்மூழ்கியான் மனமாயையா லினமாய்வனோ,
புலைப்பாதகங் களின்முழ்கினாற் பவியாள்கட னுனதல்லவெச்,
சிலைப்பாதகங் களின்வீழ்கினுஞ் சிவசற்குரு வெனினீங்குமே,
கொலைப்பாதகங் களைமாய்த்திடாக் குருநாதனே! குருநாதனே! 32

நிலமாதரும் விண்மாதரும் நினையண்டுமா முனிமாதரும்
பலமாதரும் பணிமாறியே பலகால்வல மிடமாயினுஞ்
சிலமாதரும் பணிகொள்ளினுஞ் சிவமாயிருந் தசையாதநின்
குலமாதரும் பணிபாதனே குருநாதனே! குருநாதனே!       33

என்போடுநீ ருதிரந்தசை யெழுபத்திரா யிரமார் [13]கசை,
நம்போடுசேர்த் துறநீள்பசை நவவாயில்தோன் மயிர்மேய்ந்தசை,
வம்போடுவா னுலவித்திசை வளியூடுபோய் வருமாமிசை,
கும்போடுலைந் தலையாதுசெய் குருநாதனே! குருநாதனே!       34
---
[11] சரம் - அசையும் பொருள்; [12] அசரம் - அசையாப் பொருள்,
[13] கசை - நரம்பு

செம்பாகுவன் களிம்பல்லவே திருவெண்கலம் பலதல்லவே
யிம்பாகுமன் றிடைநாடக மெம்போலுருக் கொண்டிங்ஙனந்
தெம்பாகுநின் னடிதொட்டிந்நாட் டேய்ந்தற்றிடாப் புளியென்னுமோர்,
கொம்பாகும்நின் னருளோங்குநாள் குருநாதனே! குருநாதனே!       35

இலைவேல்விழி மடமாதரா ரிளமாமுலை யவைமாய்கையிற்,
கலைவேன்மன நிலையாகிலென் கதிகாணிலேன் கரையேறிலே,
னுலைவேனையான் வதுமெந்தநா ளுடன்மித்தையே லெவைசொந்தநாள்,
குலைவேன்றனக் கருள்கூரையா குருநாதனே! குருநாதனே!       36

அண்ணத்தில்வா ழுயிரியாதினு மசைவித்தசித் தலர்பூவினுங்,
கண்டத்தில்வா ழொலியாதினுங் கதிராதியா மொளியாதினும்,
பிண்டத்தில்வா ழியல்பென்னநீ பிரியாவிதம் பலகோடியாய்
கொண்டத்திலங் குரையாடுவாய் குருநாதனே! குருநாதனே!       37

நாடானபா ருளநீளமு நரரண்டமே முதலாளினு
மேடானவெண் கலைபாஷைசித் தெல்லாமுவந் தெமதூதர்கை
யாடானநல் லுயிர்விட்டுமே லாகந்தளர்ந் திடுபோதிலே
கோடானகோ டிகள்கற்றுமென் குருநாதனே! குருநாதனே!       38

ஆதாரமார் பொருளாருனை யல்லாதெவ ரெல்லாமுநின்
பாதாரவா ழியைநம்பினோர் பரிசாலகத் தொழிலாளர்கள்
கேதாரமுங் கயிலாயமுங் கெடிநீள்சிவத் தலமியாதினுங்
[14]கோதாரநின் குறியென்பர்காண் குருநாதனே! குருநாதனே!       39
---
[14] கோதார - சிறந்த பிரணவத்தை யுடையவனே

மண்ணாகினாய் நீர்வன்னிகான் மாவானமுந் தானாகினாய்
கண்ணாகினாய் மனமாகினாய் கதறும்பல கதையாகினா
யெண்ணாகினா யெழுத்தாகினா யேகச்சிதா காசத்தினிற்
குண்ணாகினாய் கடலாகினாய் குருநாதனே! குருநாதனே!       40

சீமைச்சிமிண் மயிர்மொய்த்திடுஞ் சலதாரையென் சிறுவாசல்புன்,
தூமைச்சல மொழுகித்தினந் துலையாமனா றிடுமல்குலாந்,
தீமைக்குழிக் கிரையாய்விடிற் றின்னக்கரை யடையன்கொலோ,
கூமைக்கட லிழியாமலாள் குருநாதனே! குருநாதனே!       41

நன்றைப்பிளந் தெறிவார்களார் நாடற்கருந் தீமைகுறித்
தின்றைக்குநா ளைக்கென்பர்மே லீயார்கள்தே னீயொத்தவர்
பின்றைப்பிறப் பாளர்க்கிடம் பிறியாமல்வந் தெனையாண்டருல்
கொன்றைச்சடை முடிபெற்றனன் குருநாதனே! குருநாதனே!       42

நன்றைப்பிளந் தெறிசூரனை நாடிப்பிளந் தெறிவேனிகர்
ஒன்றைப்பிளந் தெறிவாயதென் னோதப்பெறி னடர்காலனாம்
இன்றைப்பிளந் தெறியத்தகா தென்னாலுமிங் கினிதாணவக்
குன்றைப்பிளந் தெறிவேலவர்க் குருநாதனே! குருநாதனே! 43

தூராத [15]பாண் குழிசாண் [16]வயின் துலையாமனான் றுணைகொண்டுமே,
தீராதவல் வினையாய்மனந் திகைப்பாகினேன் றிகைப்பூண்டிதோ,
ஆராதவஞ் சகமாயையை யறமோதிடக் கிருபைபாரையா,
கோராதமா மணிமாலையாங் குருநாதனே! குருநாதனே!       44
---
[15] பாண் - பாழ்; [16] வயின் - வயிறு

ஊரேதினம் பேரேதின முறவேதினம் பகையேதினஞ்
சீரேதினஞ் செயலேதினஞ் சிந்தாகுல மெல்லாமிவை
பாரேதினம் விண்ணாதியாய்ப் பகர்போதினி லெல்லாமலங்
கூரேதினஞ் சொல்லாயெலாங் குருநாதனே! குருநாதனே!       45

மெய்யன்பிலா தவர்பாலுநீ மெய்யன்பிலா தவனாகுவாய்
பொய்யன்பிலா தவர்பாலுநீ பொய்யன்பிலா தவனாகுவாய்
கையன்பிலா தவனாகுநின் கழனம்பினென் கைதாவையா
கொய்யன்பிலா மலமாசறக் குருநாதனே! குருநாதனே!       46

சத்தாதியிந் திரியமைம்பொறிச் சடமாகுமிவ் வையைந்திவை
யித்தாதியோ டொத்தாடிநா னிசைதந்தியின் னிசையாகினாற்
சித்தாதியா யறியாமலிச் சீவாதியா லலைவென்கொலோ
கொத்தாதியாய் வருகாரணக் குருநாதனே! குருநாதனே!       47

கல்லாதமா மடையன்றனைக் கசடன்றனைப் பொருளாகவே
சொல்லாதமா வசனஞ்சொலிச் சோராதறி வினிலாரவைத்
தில்லாதமா றுலகன்னிய மில்லாமனல் லின்பம்பெறக்
கொல்லாதமா விரதந்தருங் குருநாதனே! குருநாதனே!       48

தீதற்றமா தவமாகுநின் றீவாந்தரக் கரைகாண்பதார்
வாதற்றமா விரதங்களாம் வந்துன்னடிக் கன்பாகுமார்
ஏதற்றமா வடிவஞ்சொலி லெங்குஞ்சுடர்ப் பொங்காகரங்
கோதற்றமா மணிமேகமே! குருநாதனே! குருநாதனே!       49

சித்தாலசைந் திவைகானலார் செகத்தாய்விரிந் திடலாகுமென்
றுத்தாலகன் கதைகற்றபே ருன்னாரிவை பொன்னாகினும்
பெத்தாலவர்க் கிடராகுமிப் பேராசையின் பிணியற்றவர்க்
குத்தாலநா யகதேவனெங் குருநாதனே! குருநாதனே!       50

பண்டாய்மறை நான்குங்கலை பலகோடிசாத் திரம்பண்ணற,
விண்டாய்குவா ரறிவாயிரார் வீவைக்குழன் றலைவாரையா,
தொண்டாய்நினக் கடியானெனத் தொண்டாகநா டொறுமூழியங்,
கொண்டாய்குருந் தடிநீழலிற் குருநாதனே! குருநாதனே!       51

இன்பத்தினிற் றுன்பத்தினி லிசையற்றழுந் துடலத்தினிற்
சம்பத்தினி லென்பற்றினிற் சகப்பற்றினி லகப்பற்றினிற்
கம்பத்தினில் விம்பத்தினிற் கலக்கத்தினின் மயக்கத்தினிற்
கும்பத்தினிற் றம்பித்தியோ குருநாதனே! குருநாதனே!       52

ஆடற்பதிக் கரசாயவ ரருணைப்பதிக் கனலாயருள்
நாடற்பதிச் சந்தாய்த்திரு நாவற்பதிக் கமுதாய்மிளிர்ந்
தேடர்பதிக் காளத்திசூழ்ந் தோங்கும்பதிக் காசிக்குயர்
கூடற்பதிக் கதிபாதெய்வக் குருநாதனே! குருநாதனே!       53

ஏழாக்கினா யெட்டாக்கினா யெண்ணிக்கையற் றொன்றாக்கினா
யூழாக்கினாய் வினையாக்கினா யூணாமெனு முணர்வாக்கினாய்
சூழாக்கினா யேகத்திலிச் சூதாகுமோ சொல்லப்பெறிற்
கூழாக்கினா யினியென்செய்வாய் குருநாதனே! குருநாதனே!       54

ஆளாகுநின் னடியாரெலா மருகாகநா னறியாதவன்
வாளாகுமிங் குளவாய்மனம் வாடாவெனில் வருகாதெனிற்
றாளாகுநின் றேனூறலைத் தாராவிடிற் றாகங்கெடாக்
கோளாகுமிவ் வழிமாளுமோ குருநாதனே! குருநாதனே!       55

செண்டாடுவா ரொழியாமனஞ் சேணூடறி வாய்நின்றலார்
உண்டாடுவார் சுவைகண்டதி லூடாடுவார் யோனிக்குளே,
தொண்டாடுவார் துறைகாண்கிலர் தொழிலோய்விலா துயரத்தையே
கொண்டாடுவா ரலதில்லையாற் குருநாதனே! குருநாதனே!       56

மெய்யாதவன் போனின்னருண் மேலாயவ ரென்சொல்குவார்,
பொய்யாதவன் குருடன்கணிற் பொல்லாங்கினா லில்லாததாம்,
செய்யாதவன் நுளகாலமுஞ் சேரார்கதி சேராரவர்,
கொய்யாதவன் மலர்ப்பாதனே குருநாதனே! குருநாதனே!       57

போட்டான்கணிற் குறியொன்றினாற் போனால்வரா வழிமுத்தியைக்,
காட்டான்பணின் றிசைமாற்றினாற் கண்ணாயிருந் தறியாமையான்;
மீட்டான்மணிப் பொன்னதியாய் மின்னார்முதற் றிரையூடுறக்
கோட்டான்கணில் ரவிகாணுமோ குருநாதனே! குருநாதனே!       58

தீட்டாகிநன் றிவைமாய்கையைத் தின்னத்தினச் சுவைபோலுறுஞ்,
சூட்டாகிநின் றிவையால்வரும் பூதங்களா நேசங்கொளிற்,
பூட்டாகிமன் றிவையால்வரும் பூதங்களா நேசங்கொளிற்,
கூட்டாகிநன் றிவையன்றுகாண் குருநாதனே! குருநாதனே!       59

பெற்றாய்பிர மாண்டங்களும் பேரூருனக் கியாதிங்ஙனம்
வித்தாய்விரிந் திடலியாதவை வினவிற்றனக் கயலம்படா
முத்தாய்விளங் கொளியாய்வளர் மூவாதிதே வர்கள்பூதமுங்,
குத்தாய்விளைந் தலர்பூடணக் குருநாதனே! குருநாதனே!       60

விண்டார்கணைக் கெண்டைக்கிணை விழியைக்கலந் தறியாமடர்
வண்டார்மலர்க் குழலென்பர்காண் வாயானல மயிலென்றிடார்,
கண்டார்தசை தோலென்பெனக் காண்பார்கண்மற் றிலையாகையாற்,
கொண்டார்வினைக் கீடாமுடற் குருநாதனே! குருநாதனே!       61

முத்தாய்வள ரொளியாயெழின் மூலாதிகா ரணமாகமுதற்,
பூத்தாய்சர மசரங்களாம் புவனங்களிற் பிறனுண்ணிலோ
பாத்தாயிருந் தறிவானுமாய்ப் பாத்தாலுநீ வேறாகுமோ
கோத்தாய்நிறைந் தெங்குநீயாய்க் குருநாதனே! குருநாதனே!       62

சூலாசைகொண் மலடிக்குநேர் சுகபோகசொற் பனமா,மகன்,
மேலாசைகொண் டலையப்பெறின் மெய்யாகுமோ வது,போலுடற்,
றோலாசையான் மெலியாமனின் றோதற்றசிற் பொருளுக்கனு,
கூலாசைதந் தருள்செய்குவாய் குருநாதனே! குருநாதனே!       63

வீணாகமும் மலமாசுறில் வீணாகுநா ளவமாகினாற்
பூணாகவந் தடுபாதிகள் பொன்னோடிரும் பொன்றாமவை,
சேணாகநின் னிருபாதிகச் செயலிற்கலந் தணுகாவிடிற்
கோணாகமுஞ் சதிசெய்குநங் குருநாதனே! குருநாதனே!       64

வேதாந்தசித் தாந்தத்தினில் வெளியாண்டசித் தாந்தத்தினில்
நாதாந்தசித் தாந்தத்தினி னானோய்ந்தசித் தாந்தத்தினில்
ஏகாந்தசித் தாந்தத்தினி லெனையாண்டுவைத் திடுவாய்கொலோ
கோதாந்தசித் தாந்திப்பர குருநாதனே! குருநாதனே!       65

மெய்வாய்கணிற் செவிநாசியின் மேவிச்சிறந் தறியாயெனி,
லைவாய்வழிக் கிடமெங்ஙன மறிவானெவ னறியார்களார்
செய்வாய்செவிக் கையாதினுஞ் செய்வித்திடுஞ் செயனின்னதாற்
கொய்வாய்சிர மீவாய்பினுங் குருநாதனே! குருநாதனே!       66

வாதாட்டமண் பெண்பொன்னிவை வருமூவகைப் பொருளாகுமிச்,
சூதாட்டநன் றிவைகாட்டிமேற் சுகரூபமாந் தனைமாய்ப்பதென்
ஏதாட்டநின் வினையாட்டெனி லென்னாசைவிஞ் சிடிலங்கெனாங்,
கோதாட்டம்விண் டறிவாகலை குருநாதனே! குருநாதனே!       67

காற்றாடிகயி றுபோலவுங் கண்ணாடியி னிழல்போலவுஞ்
சேத்தாடியும் ரசம்போலவுஞ் சிறியோர்கள்பம் பரம்போலவும்
பாத்தடிலுன் றொழிலொப்பிடிற் பகல்ராவினு மிலையன்றியிற்
கூத்தாடியுன் றொழிலார்சொலுங் குருநாதனே! குருநாதனே!       68

எட்டாதபே ரறிவானவ ரெல்லாமுமா யல்லாதபேர்
சுட்டாதசிற் சுகமானவர் சுரர்பூசிதர் தவமாதவர்
கிட்டாதநின் மலர்க்கானவர் கிடையாமன்மா சடைவேனையாள்
கொட்டாதசீர் முதலானவர்க் குருநாதனே! குருநாதனே!       69

வாசப்புரந்தரன் மான்முதல் வானாடரு மறியார்கணின்
னேசப்புரந்த னிலாருறும் நெட்டூரநெஞ் சறுசிற்சுகத்
தேசப்புரங் குடியேறவுந் தேகாதியற் றரசாள்கெனக்
[17]கோசப்புரங் களைவென்றருள் குருநாதனே! குருநாதனே!       70
---
[17] கோசம் - செல்வம்

வெறும்பைத்தசை துர்க்கந்தமாம் வெங்கும்பியை வினைக்கந்தையை,
யெறும்பைத்தனக் கீயைத்தனக் கென்றிங்கிறு மாந்தூறிடு,
நறும்பைத்தக ருடலைச்சதம் நம்பித்திரிந் திடுமென்மனக்
குறும்பைத்தவிர்த் திடமோதிடுங் குருநாதனே! குருநாதனே!       71

ஒன்றேபக னுருவேசொலி னொப்பாருனக் கிப்பார்மிசை
நன்றேசெயின் றீதேசெயி னானோவதற் காளாகுவேன்
நன்றேயெனக் குயிராய்ப்பொரு ணாவிக்குள வாகுந்திருக்
குன்றேபரஞ் சுடரேயருட் குருநாதனே! குருநாதனே!       72

துறையற்றநீள் பிறவிக்கடல் துலையாகுமித் துறைமீள,யான்,
உறையற்றகத் தியையொத்தன னொளிமங்கிடா தருள்பெற்றையா,
பொறையற்றநெஞ் சொடும்வாழ்கிலன் புகழுந் திருவடியாகுநின்,
குறையற்றசெல் வமுமீகுவாய் குருநாதனே! குருநாதனே!       73

எறியற்றநீள் கடலொத்திடு மெனையற்றபாழ் வெளியிற்குளே,
வெறியற்றசிற் றொளியிற்குளே வேறற்றவைம் புலனைந்துறும்,
பொறியற்றகண் ணுடையையநின் பொதுவிற்றனித் தினிதாகநான்,
குறியற்றபோ தமுமீகுவாய் குருநாதனே! குருநாதனே!       74

தேறாதபா ழொருகாலமும் தெளியாதுறுஞ் சிந்தைக்குணான்
மாறாதவாழ் விவையின்னதென் மதிக்காமனின் கதிக்காகிலேன்,
ஆறாதநல் லமுதாய்வரு மானந்தமோ னானந்தமிக்
கூறாதபே ரானந்தமோ குருநாதனே! குருநாதனே!       75

சிணமுஞ்செய லெனக்கொன்றிலன் சிவமன்றியிங் கனமொன்றிலை,
கணமும்பிறித் துயிருங்கிலேன் களைநின்களை யிடையொன்றிரா,
மணமுற்றிடு மலர்ப்பாதனே மனமாதியைத் தொழினீதனே,
குணமுங்குறி யறநின்றிடுங் குருநாதனே! குருநாதனே!       76

சிற்றேவலன் றுலகில்லையால் சீவாதிரூ பமுமெங்குறும்
எத்தேசகா லமுநின்கழற் கென்னாசைமற் றுன்னாதுனைப்
பெற்றேன்றனை யறிவாகநான் பேசாதபூ சனைவந்தனங்
குற்றேவல்கொண் டருளையனே குருநாதனே! குருநாதனே!       77

தேடத்தகும் பொருளொன்றிலைத் தேவென்றுனைத் தொழுவேனலா,
னாடத்தகும் பொருளொன்றிலை நாடுந்திரு வடிநீழலை,
யோடத்தகும் பொருளொன்றிலை யோய்வற்றதூர முமாம்வழி,
கூடத்தகும் பொருளொன்றிலை குருநாதனே! குருநாதனே!       78

ஞாலாகலா! நானாவிதா! நாமாருபா! ஞானாகரா!
தூலாமலா! சூராவீரா! சூட்சாதிசூட் கமகாரணா!
லீலாவிலா சா!பூரணா! நீதாபர போதாகரா!
கோலாகலா! [18]தேசோமயா! குருநாதனே! குருநாதனே!       79
--
[18] தேசோமயம் - பேரொளி

நெடும்பத்திசெய் திடன்முற்றிலுன் னேசத்தினோர் நினையற்றவர்,
கெடும்பத்திசெய் திடுவேன்றனைக் கேளாயெனி னாளாகிலேன்,
அடும்பத்திகண் டருள்சேரனா னாகாதெலா மாகாவிடுங்,
குடும்பத்தினி லினி மாய்த்திடாக் குருநாதனே! குருநாதனே!       80

உச்சந்தனி லசைவற்றநின் னுதயச்சுட ரருள்வெற்பிடை
யச்சந்தவிர்ந் திடவந்திருந் தனுசூதமற் றிடுமென்றனா
டுச்சந்தனக் கயலற்றெழுந் துகளுற்றபொய்ப் போதத்திருட்
கொச்சந்தவிர்ந் தெரிபரனெனுங் குருநாதனே! குருநாதனே!       81

அடுத்தேனுனக் காளாகவே யல்லற்படுந் துயர்போக்கவே,
கெடுத்தேனுனக் கல்லாதபேர் கேள்விக்குமுன் னுள்ளிட்டநேர்,
விடுத்தேனுடல் பொருளாவியை வித்தாருநின் கொத்தாகவே,
கொடுத்தேனுனக் கெனைமுன்னமே குருநாதனே! குருநாதனே!       82

பாராதியாய் திரைபூதமும் பகிரண்டமாய் வளர்காதமும்
தாராதிபுத் திரமித்திரர் தனமாதிதன் னுயிரேமுதற்
பேராதியாகிய போகமும் பெண்மைப்பட மிகுதாகமுங்
கோராதிருந் தவர்முத்தராங் குருநாதனே! குருநாதனே!       83

எட்டாதருங் கோடூடுதே னேறத்தகா முடவன்கையிற்
கிட்டாதவன் னிட்டப்படிக் கிடையாதனா னடைவென்கொலோ
கட்டாதருங் காலிக்கிணைக் கடிதாமனத் தலைநோய்படக்
குட்டாதடைத் திலையென்வசங் குருநாதனே! குருநாதனே!       84

பாவிக்கிலிங் குனையல்லதிற் பற்றற்றிடே னின்பத்திலார்
தாவிக்கனின் னடிதாவணந் தம்பித்தது வாய்நிற்பனியான்
ஆவிக்குநல் லுறவிங்ஙன மாரென்பதிங் கருளல்லதார்
கோவிக்கிலிங் கயல்போக்கிலன் குருநாதனே! குருநாதனே!       85

துடிகொண்டவிப் பகிரண்டமுந் துருவாதியாம் பலபிண்டமுங்
கெடிகொண்டமா லயனண்டருங் கேடாய்விடுந் திசைகாலமும்
வடிகொண்டகா லனுமூழியும் வரவுஞ்செல விலைகண்டுளங்
குடிகொண்டசின் மயரூபனே குருநாதனே! குருநாதனே!       86

கணமேனுமியா னினையேனுனைக் கல்லாதபுல் லறிவேனுமெவ்
வணமேறிவந் துனையெய்துவென் வடவானிழல் வருதெய்வமே
மணமேதரும் மலரேமறை வடிவேயடி முடியற்றசற்
குணமேநிறை கடலேயருட் குருநாதனே! குருநாதனே!       87

ஆட்டுக்குழா முடன்கூடியே யாடாய்மடங் கலும்வாடியே
காட்டுக்குள்வாழ்ந் தினந்தேடிலாக் கதைபோலுமியா னுனைநாடிலா
வீட்டுக்குணீ யடியார்கடன் விளையாடவிங் கதிபாதகக்
கூட்டுக்குள் யானலறத்தகா குருநாதனே! குருநாதனே!       88

நெஞ்சுக்குத வியகோலமு நெட்டூடுரு வியகாலமும்
பஞ்சுக்குரு வியபொத்துடல் பகைமாறநின் றகைமீறியே
யஞ்சுக்குரு வியசுத்தமா மறிவைப்பெற வலதாசையாய்க்
குஞ்சுக்குரு வியையொத்தனன் குருநாதனே! குருநாதனே!       89

ஈனப்பிற வியின்மூழ்கினா லினிதாகுநின் னருளெங்குறும்
மானப்பிற வியவெங் [19]கரா வாயிற்படின் மனமெங்கறுந்
தீனப்பிற ரிடமேவினின் றிருநின்றபே ரருளென்பெறுங்
கூனப்பிறை முடிசூடுவோய் குருநாதனே! குருநாதனே!       90
---
[19] கரா - முதலை

தனியாயினம் பிரிமானெனத் தமியேன்மிகு தளர்வெய்தினா
லினியாய்நினை யடைவோர்கதி யிதுவோசொலா யிவைஞாயமோ
பனியாமல மகல்பானுவே பரிபூரண மலதோர்தெய்வங்
குனியாமல்வந் தெனையீகுவாய் குருநாதனே! குருநாதனே!       91

தேனுண்டுமிழ் வரிவண்டுபோய்த் தேடுஞ்சில மலர்கண்டுணும்,
நானுண்டுமிழ் மறுவிங்கிலை நளினத்திரு மலரெங்குளாய்,
வானுண்டுமி ணாயின்கதை வலதற்றன்யான் நிலமுற்றுநீ,
கோனுண்டுநன், றுனையெண்ணினேன் குருநாதனே! குருநாதனே!       92

மோசானுபூ திகளானமர் மோகத்தொழில் பசுஞாயமாய்
நேசானுபூ திகளுற்றபேர் நெய்மாண்ட தீ பமுமொத்தநின்
பேசானுபூ திகள்கண்டிலார் பெருமானெநல் வருடாரகங்
கூசானுபூ திகடந்தருள் குருநாதனே! குருநாதனே!       93

பாடும்படிக் குன்கீதமே பணிசெய்தவற் குன்பாதமே
சூடும்படிக் குன்னீதியே தொழுதற்குநின் னருட்சோதியே
நாடும்படிக் குந்நாதமே நவிலும்படிக் குன்போதமே
கூடும்படிக் கருள்செய்குவாய் குருநாதனே! குருநாதனே!       94

சீமானுனைத் தனிதேடினான் சிந்தித்துநொந் தறவாடினேன்
பூமானெனைப் பொருளென்றுமே பூதப்பிரி வுறவோதினாய்,
நாமாகுநீ நாமென்றதார் நன்மாமறைப் பொதுவிண்டனன்
கோமானெனக் குனையன்றியார் குருநாதனே! குருநாதனே!       95

ஏட்டும்படிக் கென்பார்சில ரெழுத்தின்படிக் கென்பார்சிலர்
ஊட்டும்படிக் கென்பார்சில ருன்னார்களுன் பொன்னார்கழல்
ஆட்டும்படி யசைவன்றியில் லளவிட்டநல் லடியார்நடுக்
கூட்டும்படி யருள்கூரையா குருநாதனே! குருநாதனே!       96

வனித்தாதியாய் வருபோகமும் வானாதியாய் வருசோகமும்,
செனித்தாதியால் வருதேகமுஞ் செய்விக்குநின் செயல்சித்திரம்,
இனித்தாதியாம் பதமேவில னிறைவாவிரண் டறவேண்டுவேன்,
குனித்தாதியாம் புரம்வென்றவா குருநாதனே! குருநாதனே!       97

பழுதுற்றபா தகனன்பிலாப் பதிதன்பொலா தவன்மிஞ்சினோ,
னழுதைம்புலா திகள்வென்றுமே யருளைப்புகுஞ் சிகையென்பவன்,
தொழுதும்பர்சூழ் திருமுத்தனான் றுணைதந்திட வருவன்கொலோ,
கொழுதும்பைசூ டியசுந்தரா குருநாதனே! குருநாதனே!       98

நெஞ்சத்தின்வா தனைபற்றறு நேய்பானிக ரெனினின்றிடுங்
கஞ்சத்தினன் னூலான்மத கரிகட்டுவார் கதைபோலநின்
வஞ்சத்தின னிவனாகுமோ வலியாயதின் வழிகூட்டினாற்
கொஞ்சத்தின மெனைக்கைவிடேல் குருநாதனே! குருநாதனே!       99

அறியப்படும் பொருணீயலா யறியப்படாப் பொருணீயலாய்
பிறியப்படும் பொருணீயலாய் பரியப்படாப் பொருணீயலாய்
செறியப்படும் பொருணீயலாய் செறியப்படாப் பொருனீயலாய்
குறியப்படும் பொருணீயலாய் குருநாதனே! குருநாதனே!       100

குருவென்றுனைப் பணியாதவர் கூடுங்கதி யவைகண்டிலன்,
குருவென்றுனை யருச்சித்திலார் குறுகுஞ்சுக மவையென்கோலோ,
குருவென்றுனை யடையப்பெறின் குறையொன்றிலை குணமென்பராற்,
குருவென்றுனைத் தொழுமேழைகாண் குருநாதனே! குருநாதனே!       101
வாழி

திருவாழ்க!வெண் டிசைவாழ்க!மால் திசைமாமுகன் முதல்வாழ்க!வைந்,
தருவாழ்க!விந் தரன்வாழ்க!நற் றவமாமுனி வரர்வாழ்க!விண்,
ணுருவாழ்க!மற் றவைவாழ்க!வெண் ணிசைவாழ்க!விச் சதகஞ்சொலக்,
குருவாழ்க!நல் லடிவாழ்நன் குருநாதனே! குருநாதனே!       102

நேரிசை வெண்பா

சற்குருவென் னையன் சதகமொரு நுற்றொன்றுஞ்
சற்குருவென் னையற்குச் சாற்றினேன் - சற்குருவென்
னையனுனை யல்லா லியாமா ருலகமெங்ஙன்
பொய்யன் றதுவாம் பொருள்.       103

குருநாத சதகம் முற்றிற்று

This file was last updated on 4 May 2022.
Feel free to send the corrections to the Webmaster (pmadurai AT gmail.com)