pm logo

கோயமுத்தூர் கந்தசாமி முதலியார் எழுதிய
திருப்பேரூர் பச்சை நாயகியாரூசல்


tiruppErUr paccai nAyakiyArUcal
of kOvai kantacAmi mutaliyAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for assistance in the preparation of the soft copy of this work for Project Madurai.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கோயமுத்தூர் கந்தசாமி முதலியார் எழுதிய
திருப்பேரூர் பச்சை நாயகியாரூசல்

Source:
ஸ்ரீமேலைச் சிதம்பரமாகிய திருப்பேரூர் பச்சை நாயகியாரூசல்
கோயமுத்தூர் வித்துவான் மகா--ஸ்ரீ --ஸ்ரீ -ஸ்ரீ,
கந்தசாமி முதலியாரவர்களால் இயற்றப்பட்டு,
திருசிரபுரத் தமிழ்ச்செல்வன் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
நந்தன வரு ஆவணி மாதம்
இவை இந்நூலாசிரியர் குமாரர் மகா--ஸ்ரீ --ஸ்ரீ -ஸ்ரீ,
சுப்பிரமணிய முதலியாரவர்களால் பதிப்பிக்கப்பட்டது.
----------------

சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
ஸ்ரீ பேரூர் பச்சைநாயகியாரூசல்.


காப்பு.
சீர்பூத்த பட்டிவினாயகர்தாள் போற்றிச்
      சிவசுப்ரமண்யர்பதம் சிரத்திற்போற்றி
நார்பூத்த நம்பியாரூரர்ப்போற்றி
      நாவினுக்கு மன்னரடி நளினம் போற்றி
ஏர்பூத்த சீகாழிக்கிறையைப் போற்றி
      எழில்வாத வூரடிகளிணைத்தாள் போற்றிப்
பார்பூத்த பச்சைநாயகியார்மீது
     பாடுவாமூசலொரு பத்துந்தானே.
--------------------
நூல்-ஊசல்.
திருமருவு வேதாகமங்கள் வாழத்
     திருநீறு மைந்தெழுத்துஞ் சிறந்துவாழக்
குருமருவு மெய்யடியார் கூட்டம்வாழக்
     கோதிலாத் தமிழ்வேதங் குலவிவாழ
வுருமருவு மக்கமணி யுயர்ந்துவாழ
      வுலகனைத்துஞ் சிவசமய மோங்கிவாழத்
தெருமருவு பேரைநகர்ப் பட்டிநாதர்
      தேவிபச்சை நாயகியாராடி ரூசல் .      (1)

முன்பாலாழியிற் பாலன் உய்யப்பூசை
     முற்றியமால் மார்பகத்தாட் டயர்ந்தாற்போலப்
பொன்பயிலும் ரத்நமணி மண்டபத்தே
     பொற்பிலகுஞ் சிற்பநூற் புலவர்செய்து
மின்பயிலு நவரத்ந கசிதமாக
     விளங்கியபொன் னூசலிடைவீற் றிருந்து
தென்பேரூர் நகர்க்கிறைவர் பட்டிநாதர்
     தேவிபச்சை நாயகியா ராடி ரூசல்.       (2)

மங்கல சோபனமியம்பத் தேவமாதர்
     வாழ்த்திசைப்பக் கின்னரகிம் புருடமாதர்
தங்குநடனம் புரிய வரம்பைமாதர்
     சாமரைகள் புடையிரட்டச் சேடிமாதர்
செங்கமலை வெண்கமலை வடந்தொட்டாட்டச்
     செயசெயவென் றிந்திராணி வடந்தொட்டாட்டத்
திங்கடவம் மதிற்பேரூர்ப் பட்டிநாதர்
     தேவிபச்சை நாயகியா ராடிரூசல்.      (3)

சந்திரனை வென்றிலகு வதனமாடத்
      தடநெடுங்கண் ணொடுசெவி கடாம்போராட
எந்தவுலகுந் தருமா லிலையுமாட
      இல்லைபுண் டென்றோது மியலிடையுமாடப்
பந்தமறுத் தருணல்கும் பதங்களாடப்
      பலமுனிவர் கொண்டாடிப் பாடியாடச்
செந்திருவாழ் பேரைநகர்ப் பட்டிநாதர்
     தேவிபச்சை நாயகியா ராடிரூசல்.      (4)

சோடிணைசேர் சிரப்பணியின் தொகைகளார்ப்பத்
      தோளணியு மார்பணியுந் துவன்றியார்ப்பச்
சூடகமும் வால்வளையுங் கரத்திலார்ப்பத்
      துய்ய மேகலை காஞ்சி மருங்கிலார்ப்பப்
பாடகமு நூபுரமும் பதத்திலார்ப்பப்
     பல்லியஞ் சங்கீதவொலி பரவியார்ப்பத்
தேடரிய புகழ்ப்பேரூர்ப் பட்டிநாதர்
      தேவிபச்சை நாயகியா ராடிரூசல்.      (5)

நடைமலியும் வன்றொண்டர்க் கருளவேண்டி
     நண்பருட னெண்பயிலும் விளையாட்டாலே
முடைமலியுங் கடைசியரா வுருவுமாறி
     முளைத்தபசு நெற்பயிரின் முடியைப்பற்றி
கொடைமலியும் அறம்வளர்த்த திருக்கையாலே
      கோதற்ற நடவுதொழில் குயிற்றாநின்ற
மடைமலியும் வயற்பேரூர்க் கரசியான
     மரகதவல் லித்தாயா ராடிரூசல்.     (6)

சீதரனைப் பாம்பாகச் சபித்தவாறும்
     சிலைமதனை யுடலழியச் சபித்தவாறும்
தாதைதக்கன் மகஞ்சிதையத் தெரித்தவாறும்
     தாருகனை மயிடனைச்சங் கரித்தவாறும்
பூதலமுமீ தலமும்ப டைத்தவாறும்
     போந்தவழி மீட்டுமவை துடைத்தவாறும்
வாதமறக்கட் டியர்கட்டி யங்கள்கூற
     மரகதவல்லித் தாயா ராடிரூசல்.      (7)

முச்சகமும் பேணியறம் வளர்த்தசீரும்
     மூவருக்குங் குணம்பிறப்பாய் முடிந்தசீரும்
அச்சமற அபயகரமருளுஞ் சீரும்
     அருங்காலத் தம்புலிவா னழைத்தசீரும்
கொச்சைமகன் பாடிடப்பால் கொடுத்தசீரும்
     கொழுநனுடல் செம்பாதி கொண்டசீரும்
மச்சவிழி மடமாதர் பாடியாட
     மரகதவல்லித் தாயாராடி ரூசல்.      (8)

பண…சுவை மனிதர்முகம் பண்ணும்பேரூர்
     பறப்பிற்றவத்தோர்க்கே நண்ணும் பேரூர்
தணலரிய பவமோகம் நீக்கும்பேரூர்
     தவமியற்றிற் சிறிதுபெரிதாக் கும்பேரூர்
துணிவிலர்க்குஞ் சிவஞானங்கொ டுக்கும்பேரூர்
     சுமதிமுதலியர் பவமுங்கெடுக் கும்பேரூர்
மணிகொழிக்குந் திருக்காஞ்சி நதிவாய்ப்பேரூர்
     மரகதவல் லித்தாயா ராடிரூசல்      (9)

தேனைநிகர் பண்மொழியா ராடிரூசல்
     தென்பேரை நகருடையா ராடிரூசல்
சேனைமலி திருவுடையா ராடிரூசல்
     சிவகாம சுந்தரியா ராடிரூசல்
ஆனைமுகற் கொருதாயா ராடிரூசல்
     ஆறுமுகன் திருத்தாயா ராடிரூசல்
மானைமருட் டியவிழியா ராடிரூசல்
     மரகதவல் லித்தாயா ராடிரூசல்.      (10)

திருப்பேரூர் பச்சைநாயகியாரூசல் முற்றிற்று



This file was last updated on 11 August 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)