pm logo

பாரதிதாசன் புதினங்கள் - 6 (தொகுப்பு)
(அன்னை, விஞ்ஞானி, பக்த ஜெயதேவர், குமரகுருபரர்,
ஆத்ம சக்தி & முகுந்த சந்திரிகை)


short novels of paratitAcan -6 (collection)
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Bharathidasan University, Trichy, Tamilnadu for providing a scanned PDF of this work :
    https://www.bdu.ac.in/misc/bharathidasan/puthinangal.php .
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பாரதிதாசன் புதினங்கள் - 6 (தொகுப்பு)

Source:
Bharathidasan University
https://www.bdu.ac.in/misc/bharathidasan/puthinangal.php

பாரதிதாசன் புதினங்கள் - 6 (தொகுப்பு)

1. அன்னை
2. விஞ்ஞானி
3. பக்த ஜெயதேவர்
4. குமரகுருபரர்
5. ஆத்ம சக்தி
6. முகுந்த சந்திரிகை (அல்லது) ஏழை உழவன் (நாடகம்)
----------------

பாரதிதாசன் புதினங்கள் : 1. அன்னை

பொங்கல் விழா, திருவரசி, பொன்னம்மா, மின்னொளி ஆகியோர் அதிகாலையில் ஞாயிறு போற்றிப் பொங்கல் தொடங்குகிறார்கள்.

பால் பொங்குகிறது. மகிழ்ச்சியால், 'பொங்கலோ பொங்கல்!" என்று ஆரவாரம் செய்கிறார்கள்.

இலை போடப்படுகிறது. நல்லப்பன் வருகிறான். திருவரசியும் பொன்னம்மாவும் வரவேற்று உடன் உண்ணச் செய்கிறார்கள். அவன் கண்ணும் கருத்தும் மின்னொளி மேல்!

நல்லப்பன் வெளியில் செல்லுகையில் சன்னலில் மின்னொளியைப் பார்க்கிறான். பேச்சுக் கொடுக்கிறான். அவள் உள்ளே போய்விடுகிறாள்.

அன்று மாலை மின்னொளியும் மீனாள் முதலிய பெண்களும் ஊஞ்சலாடி முடித்து ஒளிந்து பிடிக்கிறார்கள்.

காணாமற் போன மாட்டைத்தேடி வந்த இளவழகன், அலரிப் புதரில் வெண்ணிறங் கண்டு, 'இச்சு இச்சு' என்று ஓட்டியதை அறிந்த மின்னொளி, இனி அவன் கையிலுள்ள கோலாலும், மாடென்றெண்ணி
அடிப்பான் என்று நினைத்தவளாய் எதிர்வந்து நிற்கிறாள்.

கண்ணொடு கண் கலக்கின்றன. அவன் இனிதாக வர்ணித்து அரிதில் பிரிகின்றான்.

இதைப் பார்த்து வந்த மீனாள் மின்னொளியின் உளப்பாங்கை அறிந்து. அவன் இன்னான் என்று கூறி, மின்னொளியிடம் கடிதம் பெற்றுப் போகிறாள்.

இளவழகன் திருமணம் செய்துகொள்ள ஒப்புவதாகக் கடிதம் எழுதித் தந்ததை, மின்னொளியிடம் சன்னலில் மீனாள் கொடுக்கிறாள்.

சன்னலில் மின்னொளி கடிதம் படிப்பதைத் தெருப்புறத்தி லிருந்து நல்லப்பன் பார்த்துக் கொள்ளுகிறான். இதற்குள் இளவழகன் அனுப்பிய சிறுமி தில்லையும் பதில் கடிதம் கேட்க - மின்னொளி பதில் கடிதம் எழுதித் தில்லையிடம் கொடுக்கிறாள்.

தெருவில் போகும் தில்லை எதிரில் நல்லப்பன் குந்தி, தலையில் என்ன? பார்!' என்ன, சிறுமி கவனிக்கையில், அவள் மடியிலிருந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு. அனுப்பி விடுகின்றான்.

பெரிய பண்ணையாகிய மணிமொழியாரும் அவர் மானேஜரான நச்சினார்க்கினியர் என்னும் நல்லப்பன் தந்தையும், மணிமொழியார் இளமனைவி தேனருவியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

மணிமொழியாரும், நச்சினார்க்கினியரும் மலேயாவுக்குப் போகவேண்டும். இங்கு நல்லப்பனுக்கு திருமணத்தை முடித்து, மானேஜராக அமர்த்திவிட்டு !

நச்சினார்க்கினியர், தன் மகன். தானே ஒரு பெண்ணை மணக்க ஏற்பாடு செய்து கொண்டு வருகிறான் என்கிறார்.

விரைவில் திருமணம் முடிய வேண்டுமென்று கவலைப் படுகிறார் மணிமொழியார்.

தனக்குப் பிடித்தமாகத் தானே தேடிக்கொள்ளும்படி விடுவதுதான் நல்லதென்கிறாள் தேனருவி.

மின்னொளி தன் சன்னலின் ஒரு கடிதம் கிடக்கக் கண்டு எடுத்துப் படிக்க -

அன்புள்ள மின்னொளிக்கு,
நான் உன்னை நேரிற்காண விரும்புகிறேன். இன்றிரவு ஊரார் மாரியம்மன் கோயிலுக்கு மாவிளக்குக் கொண்டு போவார்கள். உன் பெற்றோர் போகட்டும். நீ போகாதே. இரவு 8 மணிக்கு நான் வருகிறேன்.
இங்ஙனம்,
இளவழகன்.

என்றிருப்பதை எண்ணி, மீனாவுடன் அன்று இரவு தன் வீட்டில், இளவழகனை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறாள்.

மீனா வேறு அறையில் இருக்கிறாள். மின்னொளி தன் வீடு நோக்கி வரும் இளவழகனை வரவேற்க வாயெடுக்கிறாள். நல்லப்பனைக் கண்டு வியப்பும் வருத்தமும் அடைகிறாள்.

நல்லப்பன் மின்னொளியைத் தனக்கு இணங்கும்படி முயலு கிறான்; முடியவில்லை. அச்சறுத்துகிறான்; அவள் அஞ்சவில்லை . சீழ்க்கை அடிக்க நால்வர் உள்ளே நுழைகிறார்கள்.

-மீனா கொல்லைப்புறமாக ஓடித் தெருக் கதவையும் மின்னொளி பின்னே ஓடிக் கொல்லைக் கதவையும் சாத்தித் தெருப்புறத்திலும் கொல்லைப்புறத்திலும் சங்கிலி போட்டுவிடுகிறார்கள்.

இதே நேரத்தில் மின்னொளியின் தாயான பொன்னம்மா கும்பலில் நெருக்குண்டு வீழ்ந்து கால் உடைந்து போக அவளை வண்டியில் ஏற்றிக்கொண்டு வருகிறான் தந்தை திருவரசு.

வீட்டில் ஏறிக்குதிக்கின்ற நல்லப்பன் மின்னொளியைத் தாவுகிறான்.

அவன் பிறகு குதிக்கின்ற நால்வரையும் மீனா தடியால் அடித்து வீழ்த்திய வண்ணமிருக்கிறாள்.

எதிர்த்து - பிடிக்கத் தாவிய - நல்லப்பனுக்கு மின்னொளி தன் இடையில் செருகியிருந்த கத்தியைக் காட்டி, 'என்னைக் காக்கும் இக்கத்தியை நீ எதிர்த்தால் குத்திக் கொல்லப்படுவாய்' என்று அவன் திடுக்கிட்டு நிற்கும்படி செய்கிறாள்.

தந்தை வந்துவிடுகின்றார்! வண்டியில் தாய் வந்துவிடுகின்றாள்! பின்னே தேனருவி, மணிமொழியாரின் கார் வந்துவிடுகின்றது,

செய்தி விளக்கம் அடைகிறது. தேனருவி, மின்னொளியின் திறத்தை வியந்து பேசுகிறாள்.
இதில் கோயில் விழாவை நம்பிய தாய்க்குக் கால் ஒடிவும், அன்னை தந்தையரே முன்னறி தெய்வம் என்று நம்பிய மின்னொளிக்கு புகழும் ஏற்பட்டதாகிறது.

முடிவில்,

தேனருவி. இளவழகனுக்கே மின்னொளி மனைவி திருமணம் விரைவில் முடித்துவிடுங்கள்' என்று கூறிச் செல்லுகிறார்கள்.

பெரிய பண்ணை மணிமொழியார் நச்சினார்க்கினியார் இருவரும். இரண்டாண்டுக்குப் பின்னர் இந்தியா வந்து திருமணம் முடிப்பதாகக் கூறி, நல்லப்பனை மானேஜர் ஆக்கிவிட்டு மலேயே செல்லுகிறார்கள்.

மணிமொழியார் முதலியவர்கள் போனபின் இளவழகன் - மின்னொளி திருமணம் (பதிவுத் திருமணம்) நடைபெறுகிறது.

இளவழகன் தன் மாமனாரின் புடைவை வாங்கும் தொழிலை மாமனார் வீட்டிலிருந்தே கவனித்துவருகிறான்.

நூல் கிடைக்கவில்லை. வியாபாரமில்லை. நிலுவை வசூலாக வில்லை . வருமான வரியாக 25,000 - க்கு நோட்டீஸ் வந்துவிட்டது.

தன் சொத்தையும் தன் மாமனார் சொத்தையும் விற்று கடன்களைப் பைசல் செய்கின்றான் இளவழகன்.

மின்னொளி ஆண் குழந்தை பெறுகிறாள். மூன்றாம் நாள் மாமனார் இறந்துவிடுகிறார்.

வெளியில் வரவேண்டியதை நம்பி, காலங் கழிக்கிறான். கொடுத்த கடனைக் கேட்டால் அடிக்க வருகிறார்கள் பலர்.

பெரிய பண்ணை வீட்டுக்காரியாகிய தேனருவி வீட்டுக்கு, அங்கு வேலை செய்யும் மேஸ்திரியைத் தேடிக்கொண்டு கொடுத்த கடனைக் கேட்க வருகிறான். இளவழகனைத் தேனருவி பார்க்கிறாள்.
நிலைமையை விசாரிக்கிறாள். கொய்யாப்பட்டுக் கிராமத்தின் மானேஜர் இடத்தைக் கொடுத்து, கார் கொடுத்து, அவ்வூரிலுள்ள கூரை வீட்டில் இருக்கச் சொல்லி, கையில் சிறிது தொகையும் தந்து அனுப்புகிறாள் இளவழகனை!

இந்த முடிவை மானேஜராகிய நல்லப்பன் மேலுக்கு ஒப்புகிறான்.

அவன், குடிசையில் தங்கும் இளவழகனைக் கொளுத்தி விடும்படி ஆட்களை அனுப்பிவிடுகிறான்.

தினமும், பிள்ளைக்குத் தாய்ப்பாலும், சோறும் பெற்றுப் போடும் செங்கோணி, மின்னொளியிடம் ஓடி வந்து அம்மா உங்கள் ஐயாவைக் கொளுத்த ஆட்கள் அனுப்பப் பட்டிருக்கிறார்கள். ஆட்களில் என் கணவனும் ஒருவன் என்கிறாள்.

மின்னொளி தாடியும் மீசையும் முண்டாசுமாகத் தேனருவியிடம் ஓடிக் கூறி, இதை மின்னொளி சொல்லச் சொன்னாள் என்று கூற,

- அவள் காரில் பலரை அனுப்புகிறாள். அப்பலரில் தாடிக்காரனும் உட்கார்ந்து கொள்கிறான். கார் போகிறது. அதை நல்லப்பன் இடையில் மறித்து நிறுத்தி, அங்குள்ள ஆட்களுடன் ஒத்திருங்கள் என்று கூறி அனுப்புகிறான். கார் பறக்கிறது.

இளவழகன் குண்டர்களால் கட்டிப் போடப்பட்டிருக்கும் குடிசை கொளுத்தப்படுகிறது. வேறுபுறமாக தாடி ஆள் இளவழகனை மீட்டுக் கொண்டு போகிறான்.

அதே நடு இரவில், இளவழகன் மீண்டு ஓடிய செய்தி நல்லப்ப னுக்கு எட்டுகிறது. இளவழகன் வீட்டைச் சூழ்ந்து இளவழகனையும் குழந்தையையும் மின்னொளியையும் கொன்று விடும்படி வந்த ஆட்களை ஏவுகிறான்.

இளவழகன் தேனருவி வீடு சென்றுவிடுகிறான். மின்னொளியும் வீட்டில் நுழைகிறாள். பலர் பின் தொடர்கிறார்கள். மின்னொளி அறையிற் புகுந்து தாளிட்டுக் கொள்கிறாள்.

ஆட்கள் மூன்று வயதுக் குழந்தையைத் தூணில் கட்டு கிறார்கள். வெளியில் வந்துவிடு மின்னொளியே என்கிறார்கள். அவள் வர மறுக்கிறாள். குழந்தையை வெட்டு என்கிறான் ஒருவன்.

மின்னொளி பிள்ளையைத் தன் இருகையால் மறைத்தபடி தன் மார்பை எதிரிகட்குக்காட்டி நிற்கிறாள். கத்தியை நீட்டுகிறான் செங்கோணி, கணவன். ஆயினும் கை ஓடவில்லை. பிள்ளைக்கு பால் தரும் மார்பு அள்ளி அள்ளிச் சோறிடும் அன்னையின் கை என்று கூறி கத்தியைக் கீழே வீசி மற்றவர்களையும் அழைத்துப் போய் விடுகிறான்.

அதே நேரம் அங்கு வந்த தேனருவியம் இளவழகனும் செய்தி யறிகிறார்கள்.

தேனருவி,

தற்காத்து தற்கொண்டான் பேணி தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

என்ற வள்ளுவர் உள்ளத்தை வையத்தில் மெய்ப்பித்தார்கள், அன்னை மின்னொளியார் என்று புகழ்கின்றாள்.

நல்லப்பன். தான் செய்த தீமைகளைத் தன் அந்தரங்க வேலைக் காரனாகிய செங்கோணி கணவன் ஆணைமுத்திடம் சொல்லுகிறான்.

அவன், 'நீங்கள் இனிமேல் அந்தவரயாய் நடந்துகொள்ள மாட்டீர்கள்' என்கிறான்.

தலைக்கு மேல் வெள்ளம், முழம் போனால் என்ன சாண் போனால் என்ன - தேனருவியை நெருங்குவதே சரி என்று உறுதி கொள்ளுகிறான்.

தேனருவிக்குத் தூக்கம் வரவில்லை. அவள் எண்ணமெல்லாம் இளவழகன்பால் விடுவித்திருந்தாள் 'ஆபத்து உதவிக்கு வா' என்று அழகனுக்கு அஞ்சல் அனுப்புகிறாள். அவன் ஓடி வருகிறான் தன் காதல் உள்ளத்தை காட்டுகிறாள். உதவி கோருகிறாள். அழகன் அவள் அன்பில் கட்டுப்படுகிறான்.

பஞ்சணையில் படுத்துள்ள இளவழகனுக்கு தேனருவி கால் பிடித் திருக்கையில், காமக் கனல் வெதுப்பக் கதவைத் திறந்து கொண்டு புகுந்த நல்லப்பன் இருவர் நிலைகண்டு பின் வாங்குகிறான். இவன் பார்த்து விட்டான் என்று தேனருவி மட்டும் தெரிந்துகொள்ளுகிறாள். நல்லப்ப னுக்குத் தேனருவியுடனிருந்தவன் இன்னான் என்பதும் தெரியாது.

தேனருவி, நடந்ததை இளவழகனிடம் கூறி. நீங்கள் என்னை விட்டு வெளியிலேயே போகக் கூடாது. போனால், இருவருக்கும் நல்லப்பனால் தீமை நடக்கும் என்று கூறிவிட்டு,

மின்னொளிக்கு உன் கணவனை அவசரமாக இலங்கை மானேஜ் மெண்டுக்கு அனுப்பி இருக்கிறேன் என்று கடிதம் எழுதியனுப்புகிறாள்.

விடிந்ததும். நல்லப்பன் தேனருவியைக் கண்டு, இரவு தேனருவியில் படிந்து கிடந்தவன் யாவன் என்று கேட்க,

அவள், நானும் என் தோழியுமான புண்ணியமும் சிவா பார்வதி நாடகம் நடித்தோம் என்கிறாள்.
அவன், அவளைத் தொடுகிறான். அவள் சீறி விலக்குகிறாள் உடனே நல்லப்பன் உங்கள் மனதைச் சோதித்தேன். உங்கள் கணவராகிய மணிமொழியாருக்கு உங்களைப் பற்றி அபிப்பிராயம்
தெரிவிக்க என்று மழுப்புகிறான்.

இளவழகன் தேனருவியின் உள்கட்டில் தேனருவியிடம், சதா இன்பத்தை அனுபவித்தபடி தன் மனைவி பிள்ளையை மறந்தவனாய் இருக்கிறான். தன் மனைவி கருப்பந்தாங்கி இருந்தாள் என்பதையும் அவள் செலவுக்கு தொல்லைப்படுவாள் என்பதையும் தன் நினைவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பமே அவனுக்கு இல்லாமல் செய்து வருகிறாள் தேனருவி.

நல்லப்பன், இளவழகன் ஊரில் இல்லாதிருத்தலை எண்ணு கிறான்; விசாரிக்கிறான். தேனருவியைக் கேட்கிறான். அவள், அவனை இலங்கைக்கு அனுப்பியிருப்பதாகக் கூறி விடுகிறாள்.

மலேயாவிலிருந்து நச்சினார்க்கினியர் எழுதிய கடிதம், தேனருவிக்குக் கிடைக்கிறது. அதில், மணிமொழியார் அங்கு மலாய் காரியை மணந்து குழந்தை பெற்றிருப்பதாயும், அவரை இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டால் நல்லதென்றும், காணப்படுகிறது.

தேனருவி ஓர் ஆண் குழந்தை பெறுகிறாள். பெற்ற குழந்தையை அவள் ஒருநாள் இரவு செங்கோணியிடம் கொடுத்து புதைத்துவிடு என்று கூறி ஒரு சரிகைப் புடவையில் சுருட்டித் தர அவள் வாங்கிச் சென்று கொல்ல மனம் வராமல் மின்னொளி, வீட்டுத் திண்ணையில் வைத்துவிட்டுப் போகிறாள்.

காலையில், மின்னொளி சாணியிட வந்தவள், குழந்தையை எடுத்து மார்போடணைத்துச் சரிகைச் சேலையைத் தூய்மை செய்து பெட்டியில் வைத்து குழந்தையைக் காத்து வருகிறாள்.

ஏணையில், அநாதைக் குழந்தையும் மடியில் தன் பிள்ளையும் ஆக உட்கார்ந்து நூல் உருண்டை சுற்றுகையில், தன் கணவன் நினைவு வரவே கண்ணீர்விட்டு கிடக்கிறாள் அதே நேரத்தில்,

இளவழகன் எதிரில், தேனருவி. அநாதைத் தாயின் சோகக் கதை பற்றிய அபிநயம் காட்டி ஆடுகிறாள். அநாதை தன் கையில் ஒரு பிள்ளையை வைத்துக்கொண்டு கதறுவதாகக் கண்ட இளவழகன், தன் மனைவி நினைவால் இரக்கமடைவதை. அவள் என்ன என்று கேட்க,

'என் மனைவி, செலவுக்கு என்ன செய்வாள்?' என்கிறான்.

அன்று முதல் புண்ணியத்தின் வசம் நாடோறும் பணம் அனுப்புவாள் ஆனாள்.

புண்ணியம் கொடுத்த ஐந்து ரூபாய்க்கு, நூல் தளைகள் வாங்கியது போக அரை ரூபாய் அரிசி அதிகம் வாங்கிச் சமைத்ததில் அன்று ஒருகை அளவு சோறு மீந்தது.

அவள் அந்த மீந்த சோற்றைக் கையில் ஏந்தியபடி ஒருபுறம் ஓவியம் போல் அசைவற்று நிற்கையில், புண்ணியம் சென்று, 'எதை நினைத்து இவ்வாறு சோறும் கையுமாக அசைவற்று நிற்கிறீர்கள்' என்ன,

அதற்கவள். 'இந்த மீந்த சோற்றை உண்ண இப்போது எனக்கு இன்னொரு குழந்தை இல்லையே' என்று கூறியதைக் கேட்ட புண்ணியம் மின்னொளியிடம் தாய்மை கண்டு, அவள் காலில் விழுந்து கும்பிட்டுச் செல்லுகிறாள்.

புண்ணியம், தேனருவி தனக்குப் பிள்ளை வேண்டாம் என்று நினைத்துக் காரியம் செய்வதையும், இளவழகனை அவள் மனைவி யிடம் அனுப்பாமல் உள்ளடக்கி வைத்திருப்பதையும் சகிக்காமல், நல்லப்பனிடம், உள்ளே இளவழகனிருப்பதையும், தேனருவி பெற்ற குழந்தை செங்கோணி இரக்கத்தால் மின்னொளியிடம் வளர்வதையும் கூறி இதற்கெல்லாம் நல்ல ஏற்பாடு செய்தால் நலம் என்று கூறுகிறாள்.

அதற்கு நல்லப்பன். மணிமொழியார் இந்தியாவுக்கு வரும்படி செய்துவிட்டால் எல்லாம் நேராகிவிடும் என்று கூறி.

மணிமொழியாருக்கு, கடிதம் எழுதுகிறான். அதில், நீங்கள் உடனே வராவிட்டால் தேனருவி சொத்தெல்லாம் இளவழகனுக்குப் பலவகையில் போய்ச் சேர்ந்துவிடும் என்று எழுதிவிடுகிறான்.

மின்னொளி குழந்தை பெறுகிறாள். (பெண்) சந்நியாசி ஒருவர் தேனருவி வீட்டில் குந்தியிருந்து, உதவி பெற்றுப் போகிறார். அவர் அடிக்கடி கூறும், "ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல பெண்டிர் சதமல்ல” என்பதில் பெண்டிர் சதமல்ல' என்ற வரியைத் தனக்கு அனுகூலமாகக் கொண்டு - இளவழகன் தன் மனைவியை மறந்திருக்க வேண்டிய அவசியத்தைக் கூறுவாள் தேனருவி.

தேனருவி ஒரு நாள் இளவழகனை அறையில் பூட்டிவிட்டு, கருத்தடை மருத்துவச்சியிடம் போகிறாள் அங்கு, சந்நியாசி. தன் மனைவிக்குக் கருத்தடைச் சிகிச்சையின் பொருட்டு வீட்டுக்கு
அழைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும் கூறுகிறார். இதைக் கேட்டுக் கொண்டு வெளியில் உட்கார்ந்திருந்த தேனருவி, சந்நியாசி போனபின். அவர் யார் என்று கேட்க, அவர் பெரிய பணக்காரர், இங்கு ஒரு பெரிய பங்களா வாங்கவும் முயன்று கொண்டிருக்கிறார் என்கிறாள் மருத்துவச்சி!

காரில் தேனருவி வந்து கொண்டு இருக்கிறாள். புண்ணியம் கடிதத்தைத் தபால் பெட்டியில் போட நெருங்குகிறாள், தேனருவி மறித்துப் பிரித்துப் படிக்கிறாள்.

தந்தையே, மணிமொழியார் இந்தியாவுக்கு வந்து விட்டதாகக் கூறியிருக்கிறீர் உங்கள் கடிதத்தில்! வரவில்லையே. தகவல் தெரிவியுங்கள்.
இங்ஙனம்,
ந. நல்லப்பன்

என்று இருந்ததைப் பார்த்துப் புண்ணியத்தை அதட்டிக் கேட்க - அவள் முன் மணிமொழியார்க்கு நல்லப்பன் எழுதிய அனைத்தையும் சொல்லிவிடுகிறாள். அவளைப் பணங் கொடுப்பதாயும், நயத்தாலும் பயத்தாலும் இனித் தன்னையே ஆதரிக்கச் செய்து கொள்கிறாள். பண்ணியம் இனி வீட்டின் உட்கட்டை விட்டு வெளியே போகக் கூடாதாம்.

இளவழகன் கொல்லையில் ஒரு புறம் உட்கார்ந்திருக்கிறான். இருபுறாக்கள் காதல் களிப்பில் இருப்பதைக் காணுகிறான். அங்கு வந்த செங்கோணியை எங்கே தேனருவி என்கிறான். மஞ்சத்தில் போய்ப் படுக்கிறான். மீண்டும் எழுந்து அவள் வருகை பார்க்கிறான்.

அவள் அவனை விட்டு வெளியிற் சென்றது. அவனுக்கு பலவகையிலும் துன்பத்தை உண்டாக்குகிறது.

அவள் வருகிறாள், 'என் மணவாளர் வந்துவிடக்கூடும். அவர் நான் நடந்து கொண்டு வந்துள்ளதை யெல்லாம் அறியக்கூடாது. அதற்காக நான் இனிச் செய்யப்போவது உங்கட்குத் துன்பத்தைத் தரலாம். என் நிலை கருதி நீங்கள் வருந்தலாகாது' என்று பதறுகிறாள். 'தேனருவி நீ எனக்கு இப்போது நன்மையே செய்தாய் நீ என் மனைவி அல்ல என்பதை எனக்கு உணர்த்தினாய். இனி எனக்கு செய்யப் போவதும் அப்படியே என்கிறான். அவள் ஓடுகிறாள். எங்கேயோ!

அவ்வூர்,

வடக்குத் தெரு மைதானத்தில் அறிஞர் ஒருவர் மாலை, "அரிசி எப்போது கிடைக்கும் என்பது பற்றிச் சொற்பொழிவு ஆற்றத் தொடங்குகிறார். ஊர் மக்கள் குழுமியிருக்கிறார்கள் சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கிறது!

இளவழகன் தான் படுக்கும் பஞ்சணையில் தான் படுத்திருப்பது போல் தோன்றும் தலையணை அடுக்கித் துணிபோர்த்து வைத்துவிட்டு வேறுபுறம் போய்க் காத்திருக்கிறான்.

சில கறுப்புடைக் காரர்கள் நுழைந்து பஞ்சணையில் தூங்குகிறான் இளவழகன் என்று எண்ணிக் குத்துவாளால் குத்துகிறார்கள்.

மின்னொளி! மக்களே! உங்கள் நிலை என்ன? - என்று கூவிக் கொண்டு தன் வீட்டை நோக்கி ஓடுகிறான். அதே நேரம்,

உடல்நலமில்லாத மின்னொளி தள்ளாடி நடந்து கைப் பிள்ளையை ஏணையிலும், அநாதைப் பிள்ளையைச் சரிகைப் புடைவையிலும், பெரிய பிள்ளையைப் பாயிலும் படுக்கவைத்து ஒருபுறம் விளக்கைச் சிறிதாக்கிக் கண்ணயர, ஓர் ஆள் வீடேறிக் குதித்து, அநாதைப் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு, தெருக்கதவைத் திறந்து கொண்டு ஓடுகிறான், சரிகைச் சேலையுடன், அடுத்த இரண்டே நிமிஷத்தில் திடுக்கிட்டெழுந்த மின்னொளி, அநாதைக் குழந்தை இல்லாதது கண்டு, ஏணைக்குழந்தையை ஏணையுடன் கழுத்தில் மாட்டிக்கொண்டும், மற்றப் பிள்ளையை இடுப்பில் இடுக்கிக் கொண்டும் வெளியில் பதைபதைக்கத் தோடுகிறாள். பிள்ளையைத் தூக்கி ஓடுகிறான் என்று கண்ட அவள், குழந்தையைக் காப்பாற்றுங்கள், ஐயையோ என்று கூச்சலிடுகிறாள். பன்முறை!

அதே நேரத்தில்,

சொற் பொழிவாளர் ".... .... ஆதலால் சாதி சமய வேற்றுமை இந்நாட்டை விட்டு ஒழிந்து போக வேண்டும் என்று முடிக்க -

அங்கு கேட்டிருந்த மக்களில் பலர் சாதி சமய வேற்றுமை ஒழிய என்ன செய்ய வேண்டும்? - என்று கேட்கிறார்கள்.

சொற் பொழிவாளர் விடை தேடி விழிக்கிறார் நிசப்தம்...

"குழந்தையைக் காப்பாற்றுங்கள்” என்ற ஒரு சொல் அனைவர் காதிலும் விழுகின்றது. அத்தொடரில் இங்கு எழுந்த கேள்விக்கும் விடை இருப்பதாகச் சொற்பொழிவாளர் முதலியவர்கட்குத் தோன்றுகிறது. ஆயினும் அடுத்த சொல்லாகிய 'ஐயோ' காதில் விழவே, சொல் வந்த திசை நோக்கிச் சொற்பொழிவாளர் ஓட, மற்றும் பெரும்பாலோரும் ஓடுகின்றார்கள்.

பிள்ளையைத் தூக்கி வந்தவன், பிள்ளையைக் கிணற்றில் போடுகிறான். பின்னே ஓடிவந்த மின்னொளி. கையிலுள்ள குழந்தைகளைக் கிணற்றடியில் கிடத்திவிட்டு, கிணற்றில் குதிக்கிறாள். குதிப்பவள் முதுகில் அருகிலிருந்த ஒருவன் கத்தியால் குத்துகிறான். குத்திய கத்தி - அவள் முதுகில் பதிந்ததை, கத்தியின் குருதி ஈரம் காட்டுகிறது. சூழ்ந்திருப்பவர்கள் இரக்கத்தால் துடித்து அலறுகிறார்கள். சிலர் அவளை மீட்கக் கிணற்றில் இறங்க முயலுகிறார்கள்.

அவர்கள் முயற்சி தேவைப்படவில்லை. மின்னொளி தன் கழுத்தில் தொங்கும் ஏணையில் பிள்ளையை இட்டுத் தூக்கி வெளி வருகின்றாள். அவள் ஏணையில் இருந்த பிள்ளையை எடுத்துப் பார்த்து மார்போடனைத்துக் கொள்ளுகிறாள். சுற்றியிருந்த சரிகைப் புடைவையைக் கீழே போட்டு.
தேனருவி தன் முகத்தைக் கையால் மூடிக்கொண்டு ஓ என்று அழுகிறாள். அங்கிருந்த சந்நியாசி அழுகிறான். ஒருபுறமிருக்கும் இளவழகன் அழுது துடிக்கிறான்.

மின்னொளி,
பிழைக்க மாட்டேன்
சாகின்றேன்.
சாக அஞ்சவில்லை
இந்த மக்களை
யார் காப்பாற்றுவார்கள்?
........ .......... ......
......... ............ ...........
............ ........... ....
நாட்டாட்சியின் கீழ்
பிள்ளை வளர்ப்புச் சாலைகள் தெருத் தோறும்

தேவை -
அதனால்,
சாதி, மதம், உயர்வு, தாழ்வு நீங்கும்.

எல்லார்க்கும் உணவு உடை உறையுள் கிடைக்கும்! இந்நாட்டில் வீடுதோறும் ஏங்கிக் கிடக்கும் திக்கற்ற பிள்ளைகள் வாழ்க! - உயிரற்று நிலத்தில் சாய்கிறாள்.

தேனருவி தன் குழந்தையைத் தாவி எடுக்கிறாள். அதே நேரம், அங்கிருந்த சந்நியாசியிடமிருந்து குழந்தையை மலாய்ப்பெண் வாங்குகிறாள். சந்நியாசி, மணிமொழியாராகக் காட்சி தருகிறார். தன்
சொற்பெருக்காளர் -

வேற்றுமை ஒழிய அரிசி கிடைக்க - பிள்ளை வளர்ப்புச் சாலைகள் நிறுவப்பட வேண்டும்.!

அறிவைச் செய்பவள் அன்னை .
ஆற்றலுடையவள் அன்னை .
வாழ்க அன்னையின் நாமம்.

மணிமொழியார் தன் சொத்தையெல்லாம், தேனருவி தன் சொத்தை யெல்லாம் பிள்ளை வளர்ப்புச் சாலைக்கு ஆக்குவதாக உறுதி கூறுகிறார்கள்.

- பாரதிதாசன் புதினங்கள், 1994
-------------

2. விஞ்ஞானி

புறக்கட்டில் இருக்கும். அங்கே மதுரை நடுங்கிக் கொண்டிருக்கிறான். அடிமேல் அடிவைத்து அறைக் சுதவின் இடுக்கில் பார்ப்பதும், அவ்வாறே மீள்வதுமா யிருக்கிறான். பிறகு ஒருவாறு ஊக்கத்துடன் வெளிவந்து அங்கு எல்லா இடத்திலும் துருவிப்பார்த்து ஒருபுறம் அங்கேயே உட்காருகிறான். மீண்டும் ஆளன் கடிதத்தைப் படிக்கிறான். அவன் மனக்கண் முன் பாண்டியன், அங்கயற்கண்ணி, மங்கையர்கரசி, அறிவுடை நம்பி தோன்றி மறைகிறார்கள்.

மதுரை, தன் வீடு சென்று மனைவி, மகள் இருவரை யும், என் செய்தியை வெளியிற் சொல்லியதுண்டா ? எனக் கெதிராக முயற்சி செய்வதுண்டா? என்று கேட்கிறான். அவர்கள் இல்லே என்கிறார்கள். பின் யார் என்னைப் பற்றிய செய்தியை வெளிப்படுத்தினார்கள் என்று கேட்க, அவர்கள், நாங்கள் எதிர்ப்பாக எதுவும் செய்யவில்லை என்பதற்கு நீங்கள் இதுவரைக்கும் உயிரோடு இருப்பதே அத்தாட்சி என்று கூறுகிறார்கள்.

உடன் பிறந்தானைக் காட்டிக் கொடுத்த விபீஷணன் ஒழியாப் பழியை அடைந்தது கண்டும் நான் தந்தையைக் காட்டிக் கொடுத்து வாழ ஒப்புவேனா என்கிறாள்.

பாங்கில் அழகிய உடையுடன் எட்டி வேலை பார்க் கிறான். அங்கு, சராய், சிலிப்பர், ஷர்ட், முக்காட்டுடன் ஒருத்தி வந்து நிற்கிறாள். அவள் எட்டியின் அழகில் சொக்கி வைத்தகண் சிமிழ்க்காமல் வாய் பேசாமல் மகிழ்ச்சி யால் ஆழ்கிறாள். பின்பு அவள் எட்டியை அணுகி, முகமலரை வேறுபக்கம் திருப்பியபடி, நகைமேல் பணம் தேவை என்கிறாள். எட்டி வேறு பக்கமுள்ள ஆளைக் காட்டி, அவரிடம் கேட்கச் சொல்லுகிறான். அதற்கு, என் நிலையில் உள்ள பெண்களிடம் அவர்கள் நடந்து கொள்ளத் தெரியாதவர்கள் என்று கூறித் தன் விரலை அவன் எதிரில் வைக்கிறாள். அதில் விலையேறப் பெற்ற மோதிரம் ஒளி வீசுகிறது, பொன் விரலுக்கு விளக்குப் போட்டது போல

எட்டி மனம் விரல்களின் அழகில் குழம்புகிறது ......... மோதிரத்தைக் கழற்றித் தாருங்கள் என்கிறான். என் காதலருக்காகக் காத்திருக்கும் மோதிரம் அது. நானே கழற்றிடுவது சரியல்ல. நீங்களே கழற்றிக் கொள்ளுங்கள் என்கிறாள். அவன் தொடுகிறான். கழற்றிக் கொண்டு, எவ்வளவு வேண்டும் என்கிறான். ஆயிரம் ரூபாயும், அந்த மோதிரம் இருந்த இடத்திற்கு வேறொரு மோதிரமும் வேண்டும் என்கிறாள். அவன் அவள் முகத்தைக் காண முயலுகின்றான். அவளும் முகந்திருப்பி முத்து நகை முகிழ்க்கிறாள். அவன் சிரிக்கிறான். அவள் கெஞ்சுகிறாள். முகத்தால் - எட்டி தன் மோதிரத்தை அவள் விரலுக்கு இட்டு, எவருக்குங் காட்டேல் என்கிறான். தில்லைக்கண் முக்காட்டை நீக்கி முழுமுகச் செழுநிலா ஒளிசெயச் சிரித்து ஓடுகிறாள்.

சிறிது நேரத்தில் எட்டியும் தன் பழைய நடையுடன் தில்லையுடன் போகிறான்.

தில்லைக் கண்ணு வீட்டில், எட்டி தில்லைக் கண்ணால் பாராட்டப்படுகிறான். தன்னைக் கைவிடக் கூடாதென்று அவனைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றாள். அவனையே கேட்கின்றாள், 'மதுரை தன்னை மணந்து கொள்ள திர்ப்பந்தம் செய்கிறான் நிராகரித்து விடவா என்று!

எட்டி, அப்படிச் செய்யாதே ஞாயப்படி அவன் கஷ்டம் வாங்கிய வகையில் 3 லட்சம் தரவேண்டிய திருப்பா தால் அதைப் பெறும் வரை நிராகரிக்காதே என்கிறான். அவன் கொலைகாரன் கொள்ளைக்காரன் அவனைக் காணுதற்கே கண் நாணுகிறது என்கிறாள். பொறுமை யுடன் எப்போதும் போல் நடந்து வா என்கிறான்.

அதே நேரத்தில் மதுரை அங்கு வந்து, என்னைச் சார்ந்த பல செய்திகள் வெளியான தற்கு நீ தானா காரணம் என்றும், நீதான் எனக்கு மொட்டைக் கடிதம் எழுதினாயா என்றும் பலவாறு கேள்வி கேட்க, அதற்குத் தில்லை நானில்லை என்று கூறி அக்கடிதத்தில் சொல்லிபடி நீவிர் நடந்து தான் இருக்கிறீர் என்றால் உன்னுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்கி றாள். அதையெல்லாம் தான் செய்ததேயில்லை என்று பலவாறு கூறி 15 ஆம் தேதி நாம் திருமண உறுதி செய்து கொள்ள வேண்டும் என்கிறான்.

திருமணம் எப்போது என்கிறாள் எட்டி?

அடுத்த வாரம் ரிஜிஸ்டர் மணம் நடத்திக் கொள்ள லாம் என்று கூற, தில்லைக்குக் கண்காட்டி நல்லது என்கிறான். அவளும் கேட்கிறாள்.

கிரையப் பணத்தை எப்போது கொடுப்பீர்கள் என்று கேட்கிறாள்.

அதற்கு மதுரை பலர் முன் திருமண உறுதி கூறிவிடு! மறு நாள் பணங் கொடுத்து விடுகிறேன். திருமண உறுதி தெருவீட்டார்க்கு நடுவில் நடைபெற வேண்டுமென்றும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விடுவதாகவும் சொல்லிப் போனான்.

பரங்கிமலைக் குகையில் விஞ்ஞானி நாய்ப் பிணத்தை அடைத்து வைத்த பெட்டியை எடுத்து பார்க்கிறான், திகைக்கிறான். நாயை எடுத்து அதற்கு மருந்து ஏற்றுகிறான். நாய் உயிர் பெற்று எழுந்திருக்கிறது. அதைத் தட்டிக் கொடுத்து அதற்கு உடனே பால் வைக்கிறான். இதை எதிரில் வரிசையாய்ப் பார்த்திருந்தவர்கள் அனை வரும் மகிழ்ச்சியால் ஆடுகிறார்கள்.

இன்ஸ்பெக்டர் மதுரையிடம் வந்து பேசுகிறான். மதுரை தனக்குப் பயமுறுத்தல் கடிதம் வந்திருப்பதாகக் கூறி, அதற்கு என்ன செய்யலாம் என்று கூற - அவன், அதெல்லாம் நான் தக்க ஏற்பாடு செய்கிறேன். நாமும் சில ரௌடிகளுக்குப் பணங்கொடுத்து, கையோடு வைத்துக் கொள்ள வேண்டும். மற்றப்படி போலீசும் கண்காணிப்பா யிருக்கும் என்கிறான்.

மேலும், மதுரை தனக்கும் தில்லைக் கண்ணுக்கும் 15-ல் திருமண உறுதி நடைபெறப் போவதாகவும் அதையும் உடனிருந்து நடத்த வேண்டும் என்று கூறி, உங்கள் நண்பர் முகவரியும் தேவை என்று தன் சட்டைப் பையி லிருந்து, தன் தினசரிக் குறிப்பை விரிக்க, 12 ஆம் தேதி ஆகிய தொரு பக்கத்தில், 15 ஆம் தேதி மாலை 7 க்கு உன் சாவு! திருமண உறுதி நடக்காது. அதற்குள் நான் சொன்னவைகளை நிறைவேற்றினால் தப்பிப்பாய்.
இங்ஙனம்
ஆளன்

இப்படி எழுதியிருந்த பக்கத்தை மதுரை இன்பெக்டரிடங் காட்ட அவன்,

திருமணவுறுதி டீ பார்ட்டி 10 பேரில் இருக்கட்டும். சுற்றிலும் ஆள் போட்டு விடுவோம். நானும் ஆயுதத் தோடு வந்திருக்கிறேன். விழா முடிந்ததும் ஆளனைப் பிடிக்க ஏற்பாடு செய்யலாம் என்கிறான்.

மதுரை, துப்பறியும் மாணிக்கம் இதில் சுறுசுறுப்புக் காட்டவில்லை என்று கூற இன்ஸ்பெக்டர் அவன் பயங் காளி என்று கூறிச் செல்லுகிறான்.

எட்டி வருகிறான். டைரியை அவனிடம் காட்டி மதுரை தன் அச்சத்தையும் வியப்பையும் வெளிப்படுத்து கிறான். எட்டி கண்ணீர் வடித்துக் கூறுவான்.

டீ பார்ட்டியில் கலந்து கொள்வார்க்கெல்லாம் முக மறையக் கறுப்புடை தருவோம். நீங்கள் உட்கார வேண்டிய இடத்தில் நம் ரௌடி ரத்தினத்தை உட்கார வைப்போம். நானும் கறுப்புடையுடன் பரிமாறுகிறேன். நம்மைச் சுற்றிலும் ஆயுதங்களுடன் ஆட்கள் இருக்கட்டும். இப்படிச் செய்தால் உங்கட்கு ஒரு தீமையும் வராது டைரியில் எழுதிய கள்ளன் கைவரிசையுடையவனாகவே இருக்க வேண்டும் என்று கூற, மதுரை அப்படியே செய்து விடு என்று மகிழ்ச்சியடைகிறான்.

மதுரையிடம் தில்லைக்கண் வந்து பேசியிருக்கிறாள். எட்டி செய்துள்ள ஏற்பாடுகளை மதுரை கூறி அஞ்சாதே என்கிறான்.

15 மாலை 6 மணி காட்டுகிறது பாங்கையடுத்துள்ள வீட்டின் கூடத்து மணிப்பொறி!

பலர் கம்புகளுடன் வந்து தம் சிலம்ப வரிசை காட்ட அவர்கள் கம்புடன் நிற்க வேண்டிய இடங்களைக் குறிப்பிடுகிறார் இன்ஸ்பெக்டர். அதாவது வீட்டின் புறத்தில்!
வீட்டின் வாயிலில் சிலர் நிறுத்தப்படுகிறார்கள்.

பின் இன்ஸ்பெக்டர் உட்பட ஓர் அறையில், பத்துப் பேர் முகமூடிக் கறுப்புடை போர்த்துக் கொண்டு மேசை யின் எதிரில் உள்ள நாற்காலிகளில் வரிசையாய் அமர்கின்றார்கள்

மதுரை இன்று எனக்கும் தில்லைக் கண்ணணுக்கும் நடக்க இருக்கும் திருமணத்தின் பொருட்டு உறுதி நடக்கப் போகிறது. உங்கள் முன்னிலையில் நான் என் உறுதியைக் கூறுகிறேன். நான் மனமார, தில்லைக் கண்ணை என் வாழ்க்கைத் துணையாக மணக்க உறுதி கூறுகிறேன்.

தில்லைக் கண், எழுந்திருக்கிறாள். நான் வாழ்க்கைத் துணையாக இவரை மணந்து கொள்வதாக உறுதி கூறுகிறேன்.

எட்டி : பேர் சொல்லவில்லை இன்ஸ் : மணவாளன் பெயரை மணப்பெண் சொல்லுவ தில்லை. இருவரும் மணந்து வாழ்க என்று வாழ்த்து கின்றேன்.

வாழ்க மணமக்கள்!
வாழ்க மண மக்கள்

மதுரை : ஒழிந்தான் என் பகைவன், அவன் போட்ட சபதம் ஒழிந்தது. முழுத் தோல்வியடைந்தான் ஆளன். என்று உட்கார எட்டி சிற்றுண்டி கொண்டு வருகி றான். அனைவரும் உண்ணுகிறார்கள்.

டீ கொண்டுவந்து வைக்கப்படுகிறது. அனைவரும் அருந்துகிறார்கள். மணிப்பொறியில் 7 1/2 அடிக்கிறது. டீ அருந்திய மதுரை சாய்கிறான்.

அனைவரும், மதுரையை ஆராய்கிறார்கள். அவன் இறந்து விட்டான், இன்ஸ்பெக்டர். இச்செய்தி வெளிக்குத் தெரிய வேண்டாம். மாரடைப்பால் இறந்ததாக உத்தரவு பெற்றுப் பிணத்தைப் புதைத்து விடுங்கள். ஏனெனில், இதைக் கிளறினால், அநேகத் தகவல்கள் வெளிப்பட்டு, அனைவர்க்கும் துன்பம் ஏற்படும் என்று கூறி, பிணத்தை எடுக்க உத்தரவும் தந்து போகிறான்.

அதே நேரத்தில், அழுது கொண்டே எட்டி, தில்லைக் கண்ணைக் கையுடன் அழைத்துக் கொண்டு வெளியிற் செல்கிறான். எதிரில் மங்கையும் அங்கயனும் அழுது கொண்டே வருகின்றார்கள்.

எட்டி, அழுது புரண்டு அனைவர்க்கும் அழைப்பு அனுப்ப வேண்டாம் என்று கூறுகிறான்.

போகிறான் தில்லைக் கண்ணுடன் அன்றிரவு பிணம் புதைக்கப் படுகிறது.

நள்ளிரவில் அப்பிணம் இரண்டுபேரால் தோண்டப் பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது காரில்!

விஞ்ஞானி அறையில் வார்க்கப்பட்ட பிணத்திற்கு மருந்து ஏற்றப் படவே உயிர் வருகிறது. அதே நிலையில் அங்குள்ள சிறையில் மதுரையை வளர்த்த அவன் சிறிது நேரத்தில் உயிர் பெற்று எழுகிறான்.

வாய் மூடி ஒருவன், அவனுக்குப் பால் சிற்றுணவு கொண்டு வைக்க மதுரை, அவைகளை ஆவலுடன் அருந்துகிறான். அவன், "நீங்கள் யார்?''- நான் எப்படி யாரால் இங்கு வந்தேன் - என்று கேட்க, வாய்மூடி தன் வாயை மூடிக் காட்டிச் செல்கிறான்.

மதுரை சிறையிலிருந்து தப்பியோட முயல்பவனாய் அங்குள்ள கம்பியை விலக்குகிறான்.

அதே நேரத்தில் எதிரிலுள்ள சுவரில் சிவப்பு ஒளி எழுத்தால் தப்பிப் போக முயல வேண்டாம் என்ற சொற்கள் காணப்படவே, உடனே, மதுரை அங்குள்ள கண்ணாடிப் பெட்டி ஒன்றைக் கைத்துண்டால் மறைக்க நேரும் போது கீழே பொருந்தியுள்ள பொறி ஒன்று அவனைத் தூக்கி எறிகிறது.

மதுரை, செயலற்று ஒருபுறம் உட்கார்ந்து விழிக்கிறான்.

அங்கயற்கண்ணி திருக்குறள் படித்துக் கொண் டிருக்கிறாள்.

எட்டியும் மங்கையர்க்கரசியும் ஒருபுறம் (சிறிது தொலைவில்) பேசியிருக்கிறார்கள். எட்டி, தில்லைக்கு உணவு கொண்டு போக வேண்டுமா என்று கேட்க, மங்கை யர்க்கரசி அம்மாவைக் கேட்கும்படி சொல்ல, அம்மாவைக் கேட்கிறான். அதற்கு அவள், எனக்கும் இந்தக் குடும்பத் துக்கும் இருக்கும் செயல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் மதுரையின் மனைவி அல்லள் ஆதலால் என்கிறாள். எல்லாவற்றிற்கும் மங்கையர்க்கரசிதான் உரியவள் என்கிறாள்.

மங்கையர்க்கரசியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு, ஏனெம்மா அப்படிச் சொல்லுகிறீர்கள். பெற்ற தாய்க்கு மகள் தனக்கென ஒன்று உடையவள் அல்ல என்று அழுகிறாள்.

அப்பாவின் எண்ணம் போல் தில்லைக் கண்ணுக்கு வேளை தோறும் உணவு கொடுத்து வரவேண்டியது தான் என்கிறாள் மங்கையர்க்கரசி!

எட்டி, ஆனால் தில்லை நம்மிடத்தில் உணவை எதிர் பார்க்கவில்லை. தனக்குச் சேர வேண்டிய மூன்று லட்சத்தைத்தான் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது என்கிறான்
மங்கையர்க்கரசியும், அங்கையனும் விபரங் கேட்ட திலிருந்து, ஆளனின் கடிதம் - ஆளன் தான் மதுரையின் எதிரி என்பனவற்றை வெளியாக்குகிறான் எட்டி!

மங்கையர்க்கரசி ஆளன் மேல் ஆத்திரங் கொண்டு, அவன் எதிரில் வரக்கண்டால் பழிக்குப் பழி வாங்குவேன் என்று கூற, அங்கு ஆளன் தோன்றுகிறான். மங்கையர்க் கரசி நிராயுதபாணி! ஆளன் மங்கையர்க்கரசி வாக்குவாதம். நாளைக்கு உன் ஆட்களுடன் காத்திரு! உன்னை நேரில் வந்து காணுகிறேன். அப்போதாவது என்னைப் பழிக்குப் பழி வாங்கலாம் என்று கூறி மறைகிறான்.

மங்கையர்க்கரசி ஆட்களைச் சேகரித்து, வீட்டில் எங்கும் நிறுத்தி, அவனைப் பிடித்துக் கட்டி வைக்கச் சொல்லுகிறாள். அவள் மேல் மாடியில் எட்டி துணையுடன் இருந்து வருவதாக முடிவு கூறுகிறாள்.

அங்கயற் கண்ணிக்கு இந்த ஏற்பாடெல்லாம் பிடிக்க வில்லை. ஆளன் அறத்தொண்டன் என்று வாதிக்கிறாள். அவன் சொன்னபடி, சொத்தை அவரவர்களிடம் சேர்த்து விடுவதே மேல் என்று கூறுகிறாள். மகள் அவ ரவர்களிடம் சொத்தைச் சேர்த்து விட அட்டியில்லை ஆயினும் என் தந்தையைக் கொன்றவனைக் கொல்லுவேன் என்கிறாள், அங்கயற்கண்ணி திருக்குறளுடன் வெளியிற் சென்று விடுகிறாள். அதே நேரத்தில் பழமலைக் கிழவர் பாங்கு ரசீதுகளில் மங்கையர்க்கரசியின் கையொப்பம் பெற்றுப் போகிறார். அதேநேரத்தில் எட்டி வந்து கொல்லையில் எருமை மாட்டைக் காணோம் என்கிறான். வீட்டு வாயிலிலும் உட்புறத்திலும் ஆயுதங்களுடன் ஆட்கள் காத்திருக்கிறார்கள்.

ஆளன் தன் விஞ்ஞானி ஆராய்ச்சி இல்லத்தை விட்டுப் புறப்படுகிறான். வாய்த்திரையுடைய ஒருவன், ஒரு ரிவால் வாரை நீட்டி இதை எடுத்துப் போக என்று கைகாட்ட, ஆளன் தன் நடு நெற்றியைக் காட்டி விட்டுப் போய் விடுகிறான்.

ஓர் எருமை மாட்டின் மேல் கறுப்புடை போர்த்த ஓர் உருவம் வருவதை ஆட்கள் கண்டு அஞ்சி வீட்டுக்குள் ஓடு கிறார்கள். எருமை வீட்டில் நுழைகிறது. அதே நேரத்தில் பழமலையும் வீட்டில் நுழைகிறார்.

வீட்டின் தோட்டத்திற் சென்ற எமனை ஆட்கள் நெருங்க அஞ்சுகிறார்கள் .
அதே நேரத்தில் மாடியிலிருந்த எட்டி, மங்கையர்க் கரசியின் எதிரில் ஆளன் தோன்றி பழிக்குப்பழி வாங்கு என்கிறான்.

அவள் சினத்தொடு பேசுகிறாள். கடைசியில், ஆளன் ஒரு கடிதத்தை அவளிடம் கொடுத்துப் படி என்ன, அவள் படித்து மயங்கி விழுகிறாள். அவளை ஆளனும் எட்டியும் தூக்கித் தெருவில் எறிகிறார்கள். எறியப்பட்ட மங்கையர்க்கரசி தெருவில் ஆட்களால் விரித்துப் பிடிக்கப்பட்டிருக்கும் வலையில் விழுகிறாள்.

ஆட்கள் மங்கையர்க்கரசியைக் காரில் தூக்கிச் செல்லு கிறார்கள்.

கொல்லையில் எருமைமேல் குச்சுக்களால் ஆன கறுப்புடை உருவத்தைக் கண்டு நாணிச் செல்லுகிறார்கள்,

மாணிக்கம் வருகிறான். நடந்ததை எட்டியால் அறிந்து, ஆளனைப் புகழ்கின்றான்.
தெருவில், ஒலி பெருக்கி கேட்கிறது :- மாலை மயிலைக் குளக்கரைச் சத்திரத்தில், அங்கையற்கண்ணி, " இருக்க வேண்டுமா?" என்ற பொருள் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தப் போவதறிந்த எட்டி, மாணிக்கம், அங்கு புறப் படுகிறார்கள்.

சொற்பொழிவு நடக்கிறது. மாணிக்கம், எட்டி, பழமலை மூவரும் கேட்கிறார்கள்; முடிகிறது.

அங்கயற்கண்ணியைக் கண்டு நடந்தவற்றைக் கூறு கிறார்கள் .

மாணிக்கம், எட்டி, பழமலை, அங்கயற்கண்ணி நால்வரும் மங்கையர்க்கரசியைத் தேடிச் செல்லுகிறார்கள்.

எட்டி, மலைக் குகைக்குள் அழைத்துச் செல்லுகிறான்.

குகைக்குள் புக மறுக்கிறார்கள். எட்டி, 'குகைக்குள் எல்லாம் உண்டு மங்கையர்க்கரசியிருக்கிறார்கள். நோய் தீர்க்க வல்லது! இம்மலையுள் புகுந்ததும் ஊமையும் பேசுவான்' என்கிறான்.

ஊமையாகிய பழமலை, வாருங்கள் போவோம் உள்ளே என்று சைகை காட்ட, அனைவரும் நுழைகிறார்கள்.

ஊமையாகிய பழமலைப் பேசத் தொடங்குகிறார்.

மாணிக்கம் வியப்புறுகிறான். குகை பேச வைத்தால், காடு பாடவைக்கும் கடல் ஆடவைக்கும் போலும் என்று இகழ்ச்சி பேசுகின்றாள்.

உள்ளே, கட்டடத்தின் எதிரில் - வெட்ட வெளி-- முகத்திரை உடையவன் விசிப்பலகையும் நாற்காலியும் கொண்டு வந்து போடுகிறான். நாற்காலியில் பழமலை உட்கார்ந்து பேச்சைத் துவக்குமுன் மற்றும் பலர் கறுப்புடை முகத்திரையுடன் கூடி வந்துட்கார, வைக்கப் படுகிறார்கள்.

1. பழமலை, துரையை முத்தும் வீராசாமியும் பாண்டியனாரும் கிணற்றில் போட்டுவிட்டது வருந்தத் தக்கது என்று கூற மூவரும் தத்தம் உருக்காட்டி காரணங் கூறுகிறார்கள். பழமலை, 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' என்பதால் அவ்வாறு செய்திருக்கலாகாது என்று தீர்ப்புக் கூறுகிறான்.

மாணிக்கத்திற்கும், அங்கயற் கண்ணிக்கும் பழமலை பாண்டியனார் முதலியவர்களை அறிமுகப்படுத்துகிறார்.

2. தில்லைக் கண் மதுரையை மணந்து கொள்வதாக ஆசைப் பேச்சுப் பேசியது வருந்தத் தக்கது என்கிறார்.

தில்லைக் கண் தன் உருவுடன் தோன்றி, காரணம் கூற,
சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பதறிவு
என்று முடிக்கிறார். தில்லைக் கண் மற்றவர்க்கு அறிமுகப் படுத்தப் படுகிறாள்.

3. பெற்றதாய், ஆளன் அறத்தொண்டன் என்கிறார் கள். அதன் பொருட்டு மங்கையர்க்கரசியார் தாயையே வெறுத்தார்கள். தாய் வெளியிற் செல்வதையும், ஒத்துக் கொண்டார்கள். ஆளன் சொல்லியபடி இன்னும், அவரவர் களிடம் சொத்தை ஒப்படைக்கவில்லை.

மங்கை தோன்றி, காரணங்கூறுகையில் தந்தையைக் கொன்ற ஆளளைக் கொல்ல வேண்டும் என்கிறாள்.

"இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு" என்று கூறி முடிக்கிறார். பழமலை.

4. அங்கயற்கண்ணியம்மையார் தமக்கும் மதுரைக்கு மிருந்த திருமணத் தொடர்பை அறுத்துக் கொண்டது, மதுரை வேறு ஒரு மங்கையை நாட இடங்கொடுத்தது.
மேலும் அவர்கள் தம் கணவரைத் தீவழியிற் செல் லாது காத்திருக்கலாம் என்கிறார் பழமலை.

அதற்குக் காரணம் கூறுகிறார் பழமலை.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணி தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்',

என்று கூறி முடிக்கிறார்.

5. மாணிக்கம், மதுரை சாவுக்குக் காரணமாக விருந்த ஆளனைப் பிடிக்க என்னால் முடியாது என்று கூறியிருக்க வேண்டும்! அப்படி அவர் செய்யாதது குற்றம்.
மாணிக்கம், காரணம் கூறுகையில், கொலையும் கொள்ளையும் செய்து வந்த மதுரையைப் பிடிக்க முடியாத வகையில் அரசியல் நிலை இருந்து வருகிறது. யாராலும் பிடிக்க முடியாது என்று கூறி ஆளனை யாசிக்கிறான்.

6. தானே மங்கையர்க்கரசி பேச்சைத் தொடங்குகிறாள்.

குற்றங்கள் செய்த மதுரையை ஆளன் மன்னிக்க வேண்டாமா? கொன்று விடலாமா? இன்னா செய்தார்க் கும் இனியவே செய்ய அவருக்கேன் தோன்றவில்லை. கொலை செய்ய ஆளனுக்கு என்ன அதிகாரம்? ஆதலால் ஆளனைக் கொலை செய்ய வேண்டும் என்கிறாள்.

பிறரிடம் வஞ்சித்த பொருள் இன்னின்ன என்று கூறி அவைகளை அவரவரிடம் சேர்க்க முயன்ற ஆளனுக்கு நன்றி கூற வேண்டாமா என்று மாணிக்கம் கேட்கிறான்.

பொது நலத்தில் நாட்டமுடைய ஆளனை வரவேற் கின்றேன். கொலை செய்த ஆளனைத்தான் கொல்ல நினைக்கிறேன் என்கிறாள்.

பழமலை :-ஆம். அக்கொலைக் குற்றத்தைச் செய்யா திருந்தால் ஆளனை ஆதரிப்பதில் மங்கை பின்னிட மாட் டாள். ஆளன் கொலை செய்தது மெய்தானா? மதுரை இறந்தது மெய்தானா? -

அங்கயற்கண்ணி: கொலைக்கும் காரணமாகாவிடில் ஆளன் போல் ஒருவர் கிடைப்பது அரிதே.

மங்கை :-- ஆம், அவன் கண்ணைக் கவரும் கட்டழகன், ஆனால் கருத்தை வெறுக்க வைக்கும் கொலைகாரன. அவனைப் பிடிக்க வேண்டும். அவன் யார்? -ஆராய வேண்டும்,

பழமலை: ஆளன் ஆருமில்லை. பாண்டியனார் மகனே! அவன் இங்கிலாந்தில் எட்டியுடன் விஞ்ஞானம் படித்திருந்தான். அவனுக்குத் தந்தையார் சென்னை மங்கையர்க்கரசியின் உருவப் படத்தை அனுப்பியிருந்தார். அவன் அவள் மேல் ஆராக் காதல் கொண்டு - அவளைப் பார்க்கச் சென்னைக் குக் கிளம்பினான். இன்னும் தேர்வில் தேறவில்லை. 6 மாதங்கள் இங்கிலாந்தில்தான் தங்க வேண்டும் என்று டர்பனிலிருந்த தந்தைக்குப் பொய் கூறினான். இருபது லட்சம் தந்தையனுப்ப அதையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.


சென்னைக்கு - ஆளன் எட்டியுடன் வந்து சேர்ந்த வுடன் அவன் கேள்விப்பட்டான் மங்கை-செழியன் திருமணத்தை! அவன் கேள்விப்பட்டான் செழியன் கொல்லப் பட்டதை! மதுரையிடம் மறைந்திருக்கும் சூழ்ச்சியை அறிய எட்டி சமையற்காரனாய் அமர்ந்தான். அது போலவே ஆளனும், மதுரையிடம் செயலாளன் பழமலையாய் அமர்ந்தான் - என்றான்.

மறைவிடம் ஓடி, செயலாளன் வேஷத்தைக் கலைத்த ஆளனைக் கண்டு வியப்புறுகிறார் அனைவரும் அப்படியே!

மங்கை பதறுகிறாள் ஆளனை நோக்கி! அங்கயல் (தடுத்து பாண்டியனார் மகன் அழகிய மணவாளன் அல்லவா?

ஆளன் : ஆம்! நான் காதலில் மங்கையால் விலக்கப்பட்டேன்! எனக்கு அழகு போயிற்று. மணத்தை வெறுத்தேன். மணம் போயிற்று. மீதி ஆளன்!

மங்கை : நான் என் தந்தையைக் கொலை செய்தவனை மணந்து கொள்ளாதது சரியே! அவனை நான் வெறுப்பதும் சரியே! அவன் என் எதிரில் ஆண் மகன் போல் உயிர் வாழ்வது தான் வியப்பு! மறைந்து இருந்து வாலியைக் கொலை செய்த ராமனையே வெறுக்கும் இந்நாடு இந்த மாபா வியை விட்டு வைத்திருப்பது வெட்கக்கேடு.

ஆளன் : இருக்கலாம். பிறரிடம் அபகரித்த பணத்தைக் கொடாத நீ வாழ்வது மட்டும் நீதி போலும்!

மங்கை : சொத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். என் தந்தை உயிரைத் திருப்பித்தர முடியுமா? கொன்றவன் நீ இதற்கு மான உணர்ச்சியுடன் விடை கூற வேண்டும். என் தந்தை உயிரைக் கொடா விட்டால், உன் உயிரைக் கொடுக்க வேண்டும்.

இன்னா செய்தாருக்கும் இனியவே செய்ய வேண்டும் என்றாயே. இன்னா செய்த என் தந்தைக்குக் கொலையை அன்றே பரிசளித்தாய்.

ஆளன் புன் சிரிப்புடன் எழுந்து போகிறான். அங்கே முகமூடியுடன் ஒருவன் வருகிறான். தன் முக் மூடியை நீக்கி மதுரையாகக் காட்சியளிக்கிறான். அனைவரும் வியப்புறுகின்றார்கள். அப்பா என்று ஓடித் தழுவிக் கொள்கிறாள் மங்கை!

மதுரை தன்னை ஆளன் கொணரு வந்த வகையைக் கூறித் தான் செய்த தீச் செயல்களுக்கு வருந்துகிறான்.

அவரவர் பணத்தை அவரவரிடம் சேர்த்து விடும்படி கூற -

தில்லை, அறிவுடை நம்பி, வீராசாமி, முத்து பாண் டியனார் அனைவரும் தமக்குச் சேரவேண்டிய பணத்தை ஆளளிடமே கொடுத்து விடுவதாகக் கூறுகிறார்கள்.
மங்கை தனக்குடையானாகிய செழியனின் பத்து லட்சம் தனக்கே உரிமையுடையது ஆதலால், அதையும் ஆளனுக்கே தருகிறாள்.

ஒருபுறம்:--
மங்கை தனியே இருக்கிறாள். தில்லைக் கண்ணும் அங்கயற்கண்ணியும் அவளிடம் கூறுகிறார்கள்.

அழகிய மணவளான் உன்னிடம் ஒரு ரிவால்வரும், பூவும் பொட்டும் தருவார். அவரை மணப்பதாகப் பூவும் பொட்டும் எடுத்துக்கொள். உன் தந்தையை அவர் செய்ததற்கு - விரும்பினால் அவரைக் கொல்ல ரிவால் வரை எடுத்துக்கொள் என்கிறார்கள்.

அவள் - என் தந்தைக்கு அவர் நன்மை செய்தார் என்கிறாள்.

தில்லை மங்கைக்குத் தலைப் பின்னுகிறாள்.

தனியே இருந்த மங்கைக்கு - அழகிய மணவாளன் மலர் சூட்டிப் பொட்டிட்டு முத்தம் இடுகிறான்.

தனியே இருந்த அங்கயங்கண்ணியிடம் திருக்குறளை யும், தன் மாலையையும் மதுரை தர - அவள் திருக் குறளை எடுத்துக் கொண்டு,

'இல்லத் துறவு வேண்டும்
எல்லார்க்கும் தொண்டு செய்ய வேண்டும்' என்கிறாள்.

தனியே இருந்த தில்லையிடம் மாலையுடன் வருகிறான் எட்டி.
அவள் - எல்லார் முன்னிலையிலும் நம் திருமணத்தை நீ ஏன் தெரிவிக்க வில்லை என்று கேட்கிறாள்.

எனக்கு வெட்கமாய் இருந்தது என்று கோணங்கி யாடுகிறான்.

அவள் மாலையைப் போடுவது தானே என்கிறாள்.

எனக்கு எனனமோ போல இருக்கிறது என்கிறான்.

தில்லை மாலை சூட்டுகிறாள்; எட்டி மாலை சூட்டு கிறான் தில்லைக்கு. -

அனைவருடனும் - நின்று அழகிய மணவாளன்.

விஞ்ஞானம் வளர்க!

குறள் நெறி ஓங்குக!

எல்லா நிதியும் தமிழ் வளர்ச்சிக்கே!

எம் வாழ்வு தமிழ்த் தொண்டுக்கே!
--------------

3. பக்த ஜெயதேவர்

ஜகந்நாதத்தில் பில்வ வனம் என்னும் பார்ப்பனச் சேரியில் நாராயண பட்டர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் மனைவி கமலாபாய்.

அவர் அருந்தவப் பிள்ளை ஜெயதேவர்.

அதே ஜகந்நாதத்தில் அக்னிஹோத்ரன் மகள் பத்மாவதிக்குக் கலியாணம் ஆக வேண்டியதிருந்தது. கண்ணபிரான் அக்னிஹோத்ரனின் கனவில் தோன்றி, ஜெயதேவ னுக்குக் கொடு என்று கூ றிப்போக, ஜெயதேவரின் வீடு சென்றார்கள்.

நாராயண பட்டருக்கும் கண்ணன் கனவில் சொல்லி யிருந்ததால் திருமணம் முடிந்தது.

ஜெயதேவரும் பத்மாவதியும் இல்லறத்தை நடத்திவரு நாளில் நாராயண பட்டர் பிள்ளையை அழைத்து நான் தவம் புரியக் காடு செல்வேன், நீ உலகில் கீர்த்தியோடு வாழக்கடவாய் என்றார். ஜெயதேவர் வருந்தியும் நாராயண பட்டர் கேட்கவில்லை; போய்விட்டார்.

ஜெயதேவர் சகல சாஸ்திர பண்டிதர். தர்மவான். அனைவரும் அவனைப் புகழ்ந்து வரலானார்கள். பில்வா வில் ஒரு பிரபல வியாபாரி இருந்தான். நற்குண நற் செய்கையுடையவன். அவன் ஜெயதேவரை அடைந்தான். ஞானோபதேசம் பெற ஜெயதேவர் ஆத்ம ஞானத்தை உபதேசித்தார். அன்று முதல் அவன் ஜெயதேவர் கற்பித்த மார்க்கத்தில் நின்று ஆத்மானந்தத்தை அனுபவித்து வந்தான்.

ஜெயதேவர் பாகவதத்தை அனுதினம் ஓதுவார் கலி யுகத்தில் சண்ணன் புகழைத் துதிப்பதைக் காட்டிலும் வேறு மார்க்கம் கிடையாது. முக்திக்கும் அதுதான் மார்க் கம் என்று பாகவதம் விதிக்கிறது.

பஜனை செய்வாரானார். அவர் உலகம் வியக்கத்தக்க சங்கீத ஞானியாயும் கவிதா ரத்னமாகவும் விளங்கலானார். ஜெயதேவர் கீத கோவிந்தம் பாடினார் கீதகோவிந்தம் என்ற சாஸ்திரத்திற்கு மகத்வம் அதிகரித்தது. ஒரு சமயம் ஜெகந்நாத க்ஷேத்திரத்திற்கு ஜனங்கள் கீத கோவிந்தம் பாடி, பஜனை பண்ணியிருக்கையில், " கீத கோவிந்தத் தால் நாம் ஆனந்த மடைந்ததாம். அதை நாம் அங்கீகரித் தோம்" என்று அசரீரி எழுந்தது. அதனால் கீத கோவித் தத்தின் மதிப்பு அதிகரித்தது.

ஓட்டிர தேசத்திற்கு அரசன் சாத்து விகன். அவன் மகா பண்டிதன். அவன் தேசத்தில் கீத கோவிந்தம் மிகவும் பிர சித்தம் அடைந்திருப்பதை அவன் அறிந்தான். ''பகவானை கீர்த்தனையால் பாடுவது சிரேஷ்டமே'' என்ற முடிவுக்கு வந்தவனாய், தானும் 100 அழகிய கீர்த்தனங்கள் செய்து வெளியிட்டான். ஆயினும் அவைகளை ஜனங்கள் விரும்ப வில்லை . இதனால் அரசன் பண்டிதர்களையும் பிரபலஸ் தர்களையும் கூட்டிக் கீத கோவிந்தத்தைப் போல் என் கீர்த்தனங்களும் உயர்ந்தவை என்றும்,

- மேலும் இருவகைக் கீரத்தனங்களும் ஒரே கடவுளைப் பற்றியவை என்றும் கூறினான்.

பண்டிதர்கள் அரசனை நோக்கி, நீங்கள் பொறாமை யால் அந்தக் கீர்த்தனங்களை இயற்றினீர்கள். மேலும் ஜெயதேவர் ஒப்பற்ற பெரியவர்; ஞானி. அவரின் கீத கோவிந்தத்தைக் கடவுள் அங்கீகரித்து வியந்தார்.

அதுபோல நீங்களும் பெருமானின் அங்கீகாரத்தைப் பெற முயலுங்கள் என்றார்கள்.

அதற்கு அரசன் ஓர் பந்தயம் ஏற்படுத்தினான். அதன் படி பண்டிதர்களும், அரசனும் கிருஷ்ண ஜெயந்தியன்று ஜெகந்நாதம் சென்று கீத கோவிந்தத்தையும் அரசன் கீர்த்தனைகளையும் காப்பிட்டுக் கோவிலில் வைத்துப் போய்விட்டார்கள்.

விடியற்காலையில் சன்னதியைத் திறந்து பார்க்க,

கீத கோவிந்தத்தின் தலையேட்டில் இதை நாம் அங்கீ கரித்தோம் இப்படிக்கு ஜகந்நாதன் என்றிருந்தது. அரசன் வருந்தினான். வீடு வந்து உணவு நீத்துக் கடவுளைக் கெஞ்ச ஆரம்பித்தான். அன்றிரவு அவன் தூக்கத்தில் கடவுள் தோன்றி ஜெயதேவர் மகிமை கூறி, நீயும் கீத கோவிந்தத்தைப் பாராயணம் பண்ணுவாயாக என்ன,

அரசன் அவ்வாறு செய்யத் தலைப்பட்ட அளவில் கீத கோவிந்தம் உலகப் பிரசித்தம் அடையலாயிற்று.

ஒருநாள் அக்னிஹோத்ரன் தன் மருமகன் பெருமை கேட்டுப் பார்க்கவந்தான். ஆனந்தம் கொண்டான். மருமக னைப் பூசித்துத் தன் வீட்டுக்கு அழைத்துப் போனான். அங்கும் மக்கள் அனைவராலும் பூசிக்கப்பட்டிருந்தார் ஜெயதேவர். அங்கு முக்கிய மாணாக்கனாகிய பகவத் தாஸன் வந்து சுவாமி தாங்கள் பில்வாவுக்கு வந்து போக வேண்டும் என்ன, ஜெயதேவர் சென்று இருந்து - பிறகு. புறப்பட்டார்.

புறப்படும்போது தாஸன் ரத்தினங்கள் பொற்கட்டிக ளைப் பல்லக்குப் போகிகளிடம் கொடுத்து - இவற்றைச் சுவாமியின் மனைவியாகிய பத்மாவதியிடம் கொடுத்து வந்து சேர்ந்ததென்று ஓலைபெற்று வரவேண்டும் என்று அனுப்பியிருந்தான்:

பல்லக்குக் காட்டைக் கடக்கையில் திருடர் மறித்தார் கள். ஜெயதேவர் எம்மிடம் ஒன்றுமில்லை என்றார்.

திருடர் பல்லக்கைச் சோதிக்க, போகிகள் ஒருபக்கம் வைத்திருந்த தங்கம் ரத்தினம் கிடைத்தன. அவைகளை எடுத்துக்கொண்டு ஜெயதேவரையும் கால் கைகளை வெட்டி இவரைத் தூக்கிக் கிணற்றில் போட்டுப் போனார்கள்.

ஜெயதேவர் கிணற்றில் சமாதி யோகத்தில் கூடிக் கவலையற்று இருந்தார்.

சாத்துவிக மன்னன் வேட்டைக்கு வரும் வழியில் கிணற்றின் உள்ளிருந்து ஓர் ஒளி தெரிவதைக் கொண்டு கிணற்றைச் சோதித்தான். ஜெயதேவர் நிலைக்கு வருந்தினான்.

அரசன் தன் அரண்மனைக்குக் கொண்டு போய் ரணங் களை ஆற்றினான். ஜெயதேவர் அங்கிருக்கையில் -

போகிகள், பகவத் தாஸனிடம் நடந்தவைகளைத் தெரிவித்தார்கள். அவன் துடித்தான். ஜெயதேவர் இருப் பிடம் தெரியாமல் - தேடச்செய்து கொண்டிருந்தான்.

பத்மாவதிக்குச் சாத்துவிக மன்னன் பல்லக்கு அனுப்பி அழைத்து ஜெயதேவரைக்காட்ட அவள் துயரத்தில் மூழ்கி யிருந்தாள். ஜெயதேவரும் பத்மாவதியும் அங்கே இருந் தார்கள். அவர்களை அங்குள்ள ஜனங்கள் பூசித்தார்கள். அவர் புகழ் விரிந்தது.

இப்படி ஓர் மகாத்மா அங்குத் தங்கி இருப்பதால் நாமும் தரிசித்து நம் பாவத்தைத் தீர்த்துக் கொள்வோம் என்று நினைத்து ஐந்தாறு பேர் சாதுக்கள் வேடத்தோடு ஜெயதேவரிடம் வந்தார்கள். அரசனும் கூட இருக்கிறான். ஆனால் வந்தவர்கள் முன்பு ஜெயதேவரை இம்சித்த திருடர்கள். அவர்கள் ஜெய தேவரைக் கண்டதும் இவரா என்று நடுங்கினார்கள். ஆயினும் ஜெயதேவர் அவர்களை அரசனுக்குக் காட்டிக் கொடாமல், அவர்கள் சாதுக்கள் வேடந்தாங்கியது பற்றிச் சந்தோஷித்து அவர்கட்கு ஏற்ற உபசாரம் புரிவித்து - அவர்கள் கேட்டபடி, வண்டியில் ஆபரணம் ஏற்றி அனுப்பினார். வண்டி நகரைத் தாண்டி யதும், திருடர்கள் வண்டியை நிறுத்தச் சொல்லி -

அந்த அரசனது வண்டிக்காரனிடத்திலும் உடன்வந்த அரச சேவகரிடத்திலும் ஜெயதேவரைப் பற்றிக் குறை வாகக் கூறி - ஜெயதேவரைத் தாங்கள் படுத்திய இம் சைகளையும் கூறினார்கள்.

உடனே பூமி அதிர்ந்தது. நிலம் பிளந்தது. அந்தத் திருடர் பிளவில் வீழ்ந்து மாண்டார்கள்.

இத்தச் சேதி அரசனுக்கும் ஜெயதேவருக்கும் எட்ட அவர்கள் பிளவை வந்து பார்த்தார்கள். ஜெயதேவர் என்னால் இந்த மலிதர்கட்கு இந்தக் கதி வந்ததே என்று துக்கித்து மூர்ச்சையாகி விழுந்து பிணமானார். அரசின் பிராணத் தியாகம் பன்னிக்கொள்ள முயலுகையில்

பரமசிவன பிரத்யக்ஷமாகி,

ஜெயதேவரை விழிக்கச்செய்து அரசனுக்கும் அனுக்கிரகம் புரிந்து போகிறார்.

ஜெயதேவர் இல்லாத சமயம் அரசன் மனைவி ஜெய தேவர் மனைவியிடம் பேசியிருந்தாள். அச்சமயம் ஓர் தூதுவன் அரசியிடம், உமது சொந்தக்காரர் இறந்தார். அதனால் அவர் மனைவி உடன்கட்டை ஏறினாள் என்றான்.

கேட்ட அரசி திடுக்கிட்டாள். மேலும் அவள், உடன் கட்டை ஏறியவளைப் புகழ்ந்து பேசினாள். அது கேட்ட ஜெயதேவர் மனைவி, கணவன் இறந்தால் உடனே உயிர் விடுகிறவளே உத்தமி. கணவன் இறந்ததும் உடன் கட்டை ஏறுகிறவள் மத்யமிதான் என்றாள். இதனால் இருவர்க்கும் மனம் வேறுபடுகிறது.

ஒருநாள் அரசியின் சூழ்ச்சியின் படி சிலர் வந்து ஜெய தேவர் இறந்தார் என்று பத்மாவதியிடம் கூற, உடனே பத்மாவதி ஆவி பிரிகிறது. அரசி துடித்தாள்.

அரசனும் ஜெயதேவரும் ரதத்தில் வருகிறார்கள். விதி யில் துர்க்குறி காணுகிறார்கள். அரண்மனை சென்று சேதி அறிகிறார்கள்.

அரசன் துடித்தான். ஜெயதேவர் வருந்தினார். அரசன் தன் மனைவியைக் கொல்லப் போகிறான். ஜெயதேவர் தடுக்கிறார். அரசி ஜெயதேவரை நோக்கி என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறாள்,

ஜெயதேவர் மூர்ச்சையாகி விழ - அவர் கால் கை வளர்கின்றன. ஜெய தேவர் கடவுளைத் துதிக்க, பத்மா வதியைக் கடவுள் வந்து எழுப்புகிறார். கடவுள் ஆசி கூறி மறைந்தார்.

ஜெயதேவர் பாகவதத்தை வடமொழியில் பாடியரு ளினார் அரசன் முயற்சியால் அரங்கேற்றும் போது புதிய அந்தணர் ஒருவர் அங்கு வந்து, அநேக குதர்க்க வாதம் புரிந்து, பின் கண்ணனான தன் சொந்த உருவத்தோடு காட்சிதந்து நூலைப் புகழ்த்து ஆசிதந்து போனார்.

ஜெயதேவர் சிவபெருமானைக் குறித்து ஐந்து கீர்த்தனம் செய்தார். இப்படியிருக்க -

ஒருநாள் கணேச (பட்டர்) மகோபாத்யாயர் வந்து கீத கோவிந்தம் முதலியவைகளைச் சொல்லும்படி கேட்க, அதில் குற்றம் சொன்னார். அதற்கு அரசன் கோபித்து அவை குற்றமுடையது என்று எண்பித்தால் என் அரசை உமக்குத் தருகிறேன் என்று பந்தயம் கூற, உபாத்தியாயர் சம்மதித்துக் காசிச் சங்கத்திற்கு அழைத்துப் போனார்.

சங்கத்தின் தலைவரான சர்வக்ஞ பண்டிதர் நூலைப் பார்த்தார். சபையாரோடு கங்கைக் கரைக்குச் சென்று கங்கையைத் துதித்து நூலைக் கங்கையில் போட்டார் - காங்கா தேலி நூலை ஏந்தி எதிர்வந்து நின்று நூலின் மகத்துவத்தை விவரித்தாள்.

கங்கைக்கும் சர்வக்ஞர்க்கும் மனத்தாங்கல் ஏற்படு கிறது. கீத கோவிந்த ஏடுகளைச் சர்வக்ஞ வானில் எறி கிறார். அப்போது ஏடுகளை ஏந்திக் கண்ணபிரான் ப்ராப்தமாகி (ருக்மணி பாமா சகிதம்) காட்சியளித்துச் சந்தேகத்தை நீக்கி, அதே நேரத்தில் சர்வக்ஞ பண்டிதராய் இருந்த சிவபெருமானும் காட்சியளித்தார். மற்ற கணேசர், சுப்ரமணியர் காட்சியளித்தார்.

அதன் பிறகு ஜெயதேவர், அரசனுக்கும் தம் மனைவிக் கும் ஞானோபதேசம் செய்து முக்திப் பேறடைந்தார்.
------------------

4. குமரகுருபரர்

280 வருடங்களுக்கு முன் கைலாசபுரத்தில் ஷண்முக சிகாமணிக் கவிராயர் - அவர் மனைவி சிவகாம சுந்தரி இருந்தார்கள். அவர்கள் பிள்ளை 5 வயதாகியும் ஊமை.

1. சிதம்பர வைத்தியர் வருகிறார். குழந்தையைப் பரிசோதிக்கிறார். மனிதரால் தீர்க்கப்படும் நோயல்ல என்று கைவிடுகிறார். கவிராயர், இப்பிள்ளையைக் கொண்டு சென்று செந்தூர் முருகனை வேண்டுகிறேன் என்று தெரிவிக்கின்றார். வைத்தியர், அவர்களால் பிறந்த பிள்ளையின் ஊமைத் தன்மையைத் தீர்ப்பது அவரால் தான் முடியும் என்று போகிறார்.

2. கவிராயரும், மனைவி சிவகாமசுந்தரியும் மாட்டு வண்டியில் ஏறிச் செந்தூரானைத் துதிபாடிச் செந்தூர் சேருகின்றனர்.

3. திருச்செந்தூர்க் கோயில் சுவாமி எதிரில் பிள்ளை யைக் கிடத்தி ஒரு மண்டலத்தில் (40 நாளில்) இப்பிள்ளை யின் ஊமைத்தன்மையை நீர் நீக்கி யருளாதொழியின், அதன் மேல் என் உயிரைப் போக்கிக் கொள்வேன் என்று சபதம் செய்து, பணிந்து, பிள்ளையுடனும், மனைவி யுடனும் சண் முக விலாசத்தில் தங்குகிறார்.

4. 39 நாட்கள் ஆகின்றன. தன் மனைவியிடம் நாளை சாவது நிச்சயம். நான் மண்ணில் வாழ்வது முருகனுக்குப் பிடிக்கவில்லை என்று அழுது புலம்ப அவளும் புலம்புகிறாள்.

5. 40 ஆம் நாள் முருகனைத் துதித்து நித்திரை செய்கிறார்கள்.

6. கைலாசத்தில் பார்வதி எதிரில் பாலசுப்பிரமணியன் கையில் வேல் தூக்சி நர்த்தனம் புரிய, அவன் வாகனமாகிய மயிலும் ஆடுகிறது. பார்வதி களிப்புடன் பார்த்திருக் கிறாள். பாலமுருகனின் மனக்கண்ணில் ஊமைப்பையன் நித்திரைப்புரிவதும், தந்தை தயார் நித்திரை புரிவதும் தோன்றவே பூலோக நோக்கி ஆடியபடி செல்ல, மயிலும் ஆடியபடி தொடர்கின்றது. பார்வதி இது தெரிந்து பிள்ளையை ஆசீர்வதித்து மறைகிறார்.

7. பாலசுப்பிரமணியன் 'குருபரா' என்று தட்டி எழுப்பி நாவில் கடாச்சியத்தை வார்த்து நமது விஸ்வரூப தரிசனத்துக்கு விரைவில் வருக என்று மறைகிறான்.

8. குருபரன் அப்போதே தன் தாய் தந்தையரை அணுகி, 'அம்மே' 'அப்பா' என வாய் திறந்து கதறித் துயில் எழுப்ப, அவர் எழுந்து அதிசயித்தார். நடந்தவை கூறுகிறான், குருபரன். நித்திரை.

9. மறுநாள் திருச்செந்தூர் விசுரூப தரிசனம் செய்து கந்தர் கலிவெண்பாவால் துதிக்கிறான் குமரகுருபரன். அது கேட்ட அனைவரும் (அங்கிருந்தவர்) அதிசயித்து வணங்குகிறார்கள்

10. வீட்டில் தாய் தந்தை பிள்ளை சம்பாஷணை. ஞானாசிரியனை அடைய ஆவல் ஏற்படுகிறது என்கிறான் குருபரன். தாய் தந்தையர் வருத்துகிறார்கள். ' என் ஆசை அனைத்தும் முருகன் கட்டளையே,' என்கிறான் குருபரன். அவன் விழிகள் மூடுகின்றன. அவன் நா முருகனைப் பாடுகிறது.

அசரீரி! நீ உத்தர யாத்திரை செய்யுங்கால் உனக்கு எவன் முன் வாக்குத் தடைபடுகிறதோ அவனே உன் ஞான சிரியன் என்று அறிக!

11. பெற்றோர் வருந்த, அவர்களைத் தேற்றித் தன் தம்பி குமார கவியுடன் மதுரைக்கு கிளம்புகிறான். பரன் +

12. வழியில் குமரகுருபரன் பாடிக்கொண்டே போகக் குமாரகவி அவைகளை ஏட்டில் குறித்துக்கொண்டே போதல்.

13. கைலாசத்தில் பார்வதி பரமசிவன் சம்பாஷணை. அச்சமயம் இருவர் மீதும் குமரகுருபரன் பூலோகத்தில் பாடும் பாட்டின் ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு மலராக வீழ்கிறது. பார்வதி தன்னைக் குறித்துக் குமரகுருபரன் பாடும் பாட்டுக்கள் இவை என, அப்பாடல் சேர்ந்த பிள்ளைத்தமிழை மதுரையில் அரங்கேற்றும்படியும் குமரகுருபரன் பெருமையை மதுரைமன்னன் அறியும்படி யும் அறிவித்து வருவதாகப் பரமசிவனிடம் விடை பெறுகிறாள் பார்வதி.

14. திருமலை நாயக்கன் நித்திரை செய்கிறான். மீனாக்ஷி கனவில் தோன்றி குமரகுருபரன் வருகையையும் அவன் இயற்றிய பிள்ளைத் தமிழையும், அதை அரங் கேற்ற அவனை எதிர் கொண்டழைக்க வேண்டியதையும் உரைத்து மறைகிறாள்.

15. திருமலை நாய்க்கன் ஆசனத்தில் இருக்க, பரி ஜனங்களும் புலவர்களும் பிரதானிகளும் அமர்ந்திருக்க, குமரகுருபரன் மீனாக்ஷியம்மன் பிள்ளைத் தமிழ் ஆரம்பிக்கிறான். அச்சமயம் சிவவேடந்தாங்கிய கந்தர்வச் சிறுவன் ஒருவன் அங்குள்ள சிலரை இங்கென்ன விசேஷம் என்ன - அவர்கள் பிள்ளைத்தமிழின் விசேஷத்தையும் ஆக்கியோன் வரப்பிரசாதம் பெற்றதையும் கூறுகிறார்கள்.

16. கந்தர் வன் தான் மாத்திரம் அதைக்கேட்கும் பேறு பெறுவது போதாது; கந்தர்வ லோகம் அவ்வின்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து நிற்க, அவன் ஆடை பூவாடையாகவும் உடல் பொன்னுடலாகவும் அங்கங்கள் நவரத்ந சகிதமாகவும் மாறுகின்றன. முதுகின் புறத்தின் வெண் சிறகு தளிர்த்துப் பறக்க ஆயத்தமாகிறது. கந்தர்வன் பறந்து போகிறான்.

17. 'உலகில் கவிதை பிறக்கிறது. இசை உன்னக நிலையடைகிறது.' எனக் கந்தர்வ ராஜாவிடம் முறை யிடுகிறான் மகிழ்ச்சியோடு.

18. பளிங்கு மாடங்கள் மரகதத் தழையால் ஆகிய மரங்கள் கொடிகள் விதவிதமானப் பூக்கள் நிறைந்த கந்தர்வ லோகத்தில் 16 வயது பிராயத்தாராகிய கந்தர்வ மாதர்களும் ஆடவரும் ரத்நாபரணங்கள் கவசங்கள் முடிகள் புஷ்பலதாம்பரங்கள் (புஷ்பத்தாலும் இலைகளா லும் ஆகிய உடைகள்) துலங்க - கவிதைரசம் அருந்த ஆயத்தப்படுகிறார்கள்.

19. திருமலை நாயக்கன் அரங்கேற்றந் தொடங்க அனுமதியளிக்கிறான். அதே சமயம் கோயிலின் அர்ச்சகன் மகள் (சிறுபெண்) காலின் சதங்கை ஒலிக்கக் கூட்டத்தின் நடுவில் ஓடி வருகிறாள். அவள் நேரே ஓடிவந்து அரசன் மடியில் உட்கார அவன் மடியில் தாங்கிக் கொள்கிறான்.

20 குமரகுருபரன் -

தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே!
நறை பழுத்த துறைத்தீந் தமிழின் ஒழுகும் நறுஞ்சுவையே!
அகந்தைக் கிழங்கை அகழ்ந் தெடுக்கும்,
தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே!
வளர்சிமய இமயப் பொருப்பில்
விளையாடும் இளமென் பிடியே!
எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திருவுள்ளத்தில்
அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிர் ஓவியமே!
மதுகரம் வாய் மடுக்கும் குழற்காடேந்தும்
இளவஞ்சிக் கொடியே வருகவே!
மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே
வருக வருகவே!

என்று பாட அதே நேரத்தில் கந்தர்வ லோகத்தில் இப் பாடலின் கருத்துத் தோன்ற அபிநயம் காட்டி ஆடுகிறார்கள்.

அதே நேரத்தில் தேவர்கள் கூடிப் புஷ்ப வருஷம் புரிகிறார்கள்.

21. சிறுமி பாடலுக்குத் தக்கபடி சிரக்கம்பம் செய்து கனித்தலை அனைவரும் கவனிக்கிறார்கள். திருமலை நாயக்கன் உனக்குப் பொருள் தெரிந்ததா? எனச் சிறுமியை நோக்கி வினவும் சமயம் சிறுமி மறைதல். அனை வரும் 'அவள்' என்று வணங்கி நிற்றல்.

22. அரசன் குமர குருபரனைச் சிங்காசனத்தில் அமைத்துப் பாதத்தில் வீழ்ந்து யானை, குதிரை, சிவிகை குடை, கொடி, சாமரம்.-பொற்குவியல் காணிக்கையாகக் கொடுத்தல்.

23. திருமலை நாய்க்கன் மாளிகையில் குமரகுருபரன் குமாரகவி சாப்பாட்டுக்கெனக் காத்திருக்க, அரசன் தன் பிரதானிகள், புலவர்கள் இடத்து. குமரகுருபரன் இயற்றி யருளிய மீனாட்சியம்மை குறம், இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம் இவைகளின் மேன்மையைச் சொல்லி யருள நாழிகையாகிறது.

அரசன் அதன் பிறகு குமர குருபரனை உணவுக் கழைக்க, குமரகுருபரன்.

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்த லரிது''

என்ற குறட்பாவைச் சுவரில் எழுதுகிறான். அதன் பொருளை அரசன் வினாவ விடை கூறுகிறான் குமர குருபரன். அதனால் அப்படிப்பட்ட நீதி நூல் வேண்டும் என்று அரசன் கேட்ப, ஆகட்டும் என உணவுக்குப் போதல்.

24. தம்பியாகிய குமாரகவியை நீர் இல்லறத்தை மேற்கொள்வாயாக என்று கைலாசபுரத்திற்கு அனுப்ப, குமாரகவி வருத்தத்தோடு சம்மதிக்கிறார்.

25. குமாரகவி திருமலை நாயக்கனைக் கண்டு விடை கேட்க, அவர் விடை நல்கக் குமரகுருபரனும் யாத்திரை போதல் அறிந்து வருந்துகிறான், குமாரகவி விடை பெற்றுப் போதல்,

26. திருமலை நாயக்கன் (அரசன்) குமரகுருவின் பிரிவு ஆற்றாதவனாய்ப் பரிவாரங்களுடன் வழியனுப்பி வருகிறான்.

27. குமரகுரு தனக்குக் கிடைத்த விருந்துகளுடன். சோழநாட்டில் திருச்சிராப்பள்ளியில் சுவாமிதரிசனம்.

28. திருவானைக்காவில் சுவாமி தரிசனம்.

29. திருவாரூர் சென்று சுவாமிமேல் திருவாரூர் நான்மணிமாலை பாடியருளுதல்.

30. தருமபுரம் திருக்கைலாய பரம்பனாகிய நான்கா வது குருமூர்த்தியாய் எழுந்தருளிய ஸ்ரீமாசிலாமணி தேசிகர் - தம் சிஷ்யர் ஆகி - தம் காட்சி யாளிகளின் குரு பரன் அவர்களை பணிந்து எதிர் இருக்க, தேசிகர் -

ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
திருந்து சாத் துவிகமே யாக

இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தோர்

என்னும் திருவிருத்தத்தின் அனுபவப் பயனை வினவ,

குமரகுருபரனுக்கு வாக்குத் தடைப்படுகிறது. குரு பரன் நீவிரே அடியேனுக்கு ஞானகுரு என்று பணித்திருந்தார்.

குரு நீ சிதம்பரம் சென்று வா எனப் பணிக்க. அவ் வாறே புறப்படுதல்.

31. புள்ளிருக்கும் வேளூரைத் தரிசித்துப் போகும் வழியில் முத்துக் குமாரசுவாமி (ஸ்தல மூர்த்தி) ஓர் சைவப் பெரியார் வடிவத்தோடு எதிர்த் தோன்றிய அளவில் குருபரன் யார் என வினவ. வம்பு பேசித் தம்மைக் குறித்து ஓர் பிள்ளைத்தமிழ் பாடென்ன, நீர் யார்? என முருகர் மறைந்தருவிகிறார். பொன்பூத்த குடுமி என ஆரம்பித்து முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடுகிறார்.

32. சிதம்பர தரிசனத்துக்குச் சென்று சிதம்பர மும் மணிக் கோவை பாடித் திரும்புகையில் ஓர் கல்விமான் வித்துவான் குருபரனுக்கு மரியாதை செய்யாதிருக்கச் சிலர் கேள்விப்படுகிறார்கள். அதற்கு அந்தப் புலவன் குருபரன் வரகவிதானே. கவியுள்ளம் தெரியாது என இது கேட்டுக் குருபரன் சிதம்பரச் செய்யுட் கோவை செய்து அவனுக்கு அனுப்புகிறான்.

33. சைவாச்சாரிகள் மகிழ சிவகாமி இரட்டை மணி மாலை செய்து சொல்லிக்காட்ட, அனைவரும் மகிழ்ந்து போற்றுகிறார்கள். கர்வியாகிய புலவனும் தனது அபசாரம் பொறுத்தருள்க எனப் பணிகிறாள்.

34. தருமபுரத்தில் ஞானசிரியனைப் பற்றிப் பண்டார மும்மணிக்கோவை பாடி, அதைக் குருவின் எதிர்பாடியளிக்க அவர், 'நீ இயல்பாகவே துறவி யாயினும் முறைப்படி காஷாயம் தரிக்க' என்று கூறிக் காஷாயம் தரிப்பிக்கிறார். குருபரன் தான் பெற்ற விருதுகள் திரு வினங்கள் அனைத்தையும் குருவின் பாதத்தில் வைக்க,

இவைகளைக் கொண்டு போய்க் காசியில் தருமம் செய்க என்று ஒட்டகத்தில் ஏற்றிக் குமரருருபரரை அனுப்புகிறார்.

35. கங்கைக் கரையில் நின்று பார்க்க, காடு தவிர வேறென்றையும் காணாமையால் காட்டைத் திருத்தி விசுவநாதரைத் தரிசித்தல்

36. விசுவநாதரைத் தரிசித்து காசிக் கலம்பகத்தை இயற்றல்.

37. ஓர் சிற்றூரில் தங்கி டில்லி நிலை. அதன் பாதுஷா வின் ஆட்சி இவைகளைத் தெரிந்து கொண்டு, கோயில் கட்ட பாட்சாவைக் காண நிச்சயிக்கிறார் இந்துஸ்தானி கற்க நினைக்கிறார். அந்த துர்ப்பாஷையானது தமிழர்க்கு உச்சரிக்க வருவது சிரமம் ஆன தால் வாணிதனைத் துதித்து நிற்கிறான். வாணி அருள் புரிந்தார்.

38. பாதுஷாவின் தர்பார் செல்ல, அவன் மரியாதை செய்யாதிருக்கிறான். காரணம் கேட்க கேவலம் உரு வத்தைக் கண்ட மாத்திரத்தில் மனிதன் மதிப்பது சரியல்ல என்னத் திரும்புகிறான் குருபரன்.

39. பாதுஷாவின் தர்பாரில் குருபரனைப்பற்றி உயர்த் தியும் தாழ்த்தியும் பேச்சு நடக்கிறது. அவரை மரியாதை செய்யாது அனுப்பியது பிழையென்று பாதுஷா உணருகிறான்.

40. அதே சமயம் குருபரன் உண்மையான சிங்கம் தனக்குத் தேவை என்று காளியைத் தோத்தினார். சிங்கம் ஒன்று வருகிறது. அதன் மேல் ஏறித் தர்பார் செல்லல். மரியாதை நடக்கிறது. வீரம் என்பது என்ன? என்ற கேள்விக்கு உத்தரங்கூறிய குருபரனை நோக்கி, பாக்ஷா சிற்றின்பத்தைப் பற்றி விவரித்துச் சொல்லென அவன் அவ்வாறே விவரிக்கிறான். அவர் அவ் வாறே விவரிக்க தர்பாரில் சேருவோன் (தர் பாரில் புலவன்), நீ இயல்பாகவே' துறவியாயின் இச்சிற்றின்ப அனுபவம் எப்படி வந்தது, என்ன, குருபரன் உடனே ஒரு பித்தளைக் குடத்தைக் கொண்டுவரச் செய்து, அதைச் சேற்றில் புதைத்து வரச் சொல்லுதலும் அவ்வாறே புதைத்த சில மணி நேரத்தில் அதைத் தோண்ட அது பொற்குட மாயிற்று. அதைக் கண்ட தர்பார் புலவன், 'சேற்றில் உள்ள புளிப்பால் அது அவ்வாறு பொன்னாதல் கூடும்' என்ன, குருபரன் சேற்றில் புளிப்பு இருப்பதை நீர் சேற்றைத் தின்று அறிந்தீரா? இல்லையே? அது போலத்தான் சிற்றின்பம் விளக்க அனுப விக்க வேண்டாம் என்றான் குருபரன்.

அனைவரும் குருபரன் அறிவுடைமையையும் அனுமானத் தன்மையையும் வியக்கின்றனர். குமரகுருபரன் மேற்கொண்டிருக்கும் வேடம் பொய் என்கிறார்கள். காய்ச்சிய இரும்பைத் தொட்டு மெய்ப்பிக்க, அதன் பின் அவர்கள் குருபரனுக்கு உணவு பரிமாறுகிறார்கள். அங்கு புலால் வைக்கப்பட்டிருந்ததால் குருபரன் பன்றி இறைச்சி எங்கே என்ன, அதை ஹரம் என்ன, எனக்கு இவை ஹரம் என்கிறான்! கடைசியில் பாக்ஷா கோயில் கட்ட இடம் தர இசைகிறான்.

41. மறு நாள் அதே ஈஸ்வரர் சொப்பனத்தில் தோன்றி, 'உபயகருடன்கள் வட்டமிடும் அவ்விடத்தை கேள்' என்ன.

42. அவ்வாறு கேட்டுப்பெற்று,

43. மடம் கட்டினான்; தருமம் பல புரிந்தான். கோயில் கட்டினான்.

44. தருமபுரம் ஞானசிரியனை வணங்கி உபதேசம் பெறுகிறார். நான் காசி போகேன்; தங்கள் சமூகத்தில் தான் இருப்பேன் என்கிறான்.

குரு : காட்டிருந்தாலும் மலையிருந் தாலும் கருதரிய
நாட்டிருந்தாலும் நமக்கென்ன நல்லதோர் கமலை
வீட்டிருந்தாண்டருள் ஞானப் பிரகாசன் விரைமலர்த்தாள்
கேட்டிருந்தாலும் பிறவா நெறிவந்து முட்டிடுமே

என்ன, குருபரன் காசிக்குப் புறப்படுதல்.

45. காசியில் குருபரன் முக்தியடைதல்.
------------------

5. ஆத்ம சக்தி

1. அடிமைப்பட்ட அந்தச் செம்மை நாட்டின் உள்ளத்தில் தேசபக்தி கொழுந்து விட்டெரிந்து கொண் டிருந்தது. ஆளுவோர் மேல் அந்நாட்டுக்கு ஏற்பட்டிருந்த மனக்கசப்புக் கொஞ்சமல்ல. விடாது தீயைக் சுக்கிக் கொண்டிருக்கும் எரிமலையின் கீழ் குடித்தனம் பண்ணு வது போல், படையை வைத்துக்கொண்டு காலந்தள்ளி வந்தார்கள் ஆளுவோர். ஆயினும் ஆரை விட்டது ஆளும் ஆசை. ஆட்சியினால் வரும் சுரண்டற் பொருள் போய் விட்டால் என்ன பண்ணுவார்கள் ஆளுவோர்?

செம்மை நாட்டார் நிராயுதபாணிகள். ஆயுதங்கள் இல்லாமை ஒருபுறமிருக்க சுதந்தரத்தை விரும்புவோர்க்கு இருக்க வேண்டியவைகளில் அநேகம் செம்மை நாட்டில் இல்லை என்பதும் வாஸ்தவந்தான். ஆனால் ஒன்று, செம்மைநாட்டில் பூத்துக் காய்த்துள்ள ஆத்ம சக்தி ஜகத்தையே எதிர்க்க வல்லது.

செம்மை நாட்டில் ஜனங்களை சுதந்தரப் பாதையில் நடத்திப் போகின்றவர்களில் பிரதானமானவர்கள் இரு தலைவர்கள். ஒருவன் அழகன். ஆநந்தன் மற்றவன், இருவரும் ஒத்த மனோபாவம் உடையவர்கள். உருவத்தில் இருவராகக் காணப்பட்டார்கள். எண்ணத்தால் இருவரும் ஒரே இரும்புக்குண்டு.

2. வழக்கப்படி அவள் அழகனை ஒரு தனியாகக் கண்டாள். அவள் பெயர் பட்டு, ஆனந்தனின் தங்கை. எனக்கு உறுதி கூறினால் போதும் என்று கெஞ்சினாள். அழகன், சொன்னான்: நமது தேசத்தை உன் அண்ணன் எதிர்க்கவில்லை. மெய்தான். ஆயினும் நீ உயர்ந்த ஜாதிப் பெண். அழகனின் இந்த வார்த்தை பட்டுக்குக் கொடூர மாக இருந்தது. அதைப்பற்றி உனக்கென்ன. ஜாதியைத் தான் தள்ளிவிட்டோமே. நாட்டின் விடுதலைக்கு ஜாதி ஒரு முட்டுக்கட்டை யல்லவா? "கரை கடந்து பாயும் என் காதலுக்கு ஒரு தேக்கிடம் காட்டு" என்றி பதைத்தாள். அழகன், "சுதந்தரமில்லை . நாம் அடிமை. இதில் கல்யாணம்" என்றான். 'சுதந்தரந்தான் வந்து விடப் போகிறதே. சரி வந்தபின் மணந்து கொள் - என்ன?'' என்று கேட்டாள். அழகன் ஒத்துக்கொண்டான் ஆற்றொணாத் துன்பத்தால் இன்னொரு வரம் கேட்டாள் பட்டு. "மணம் ஆகிறவரைக்கும் நாம் தனி வீட்டில் இருந் தால் என்ன?" என்றாள். அவன் ஒப்பவில்லை . "சுதந்திரம் கிடைத்த மறு நிமிஷம் கல்யாணம் இந்த ஒரு சந்தோஷந் தான் பட்டு உயிரோடு காலம் தள்ளி வருவதற்குக் காரணம்.

3. செம்மை நாட்டைப் பிடித்து, அதில் தன் படை யையும் தனது பிரதி நிதியையும் வைத்து ஆண்டுவந்த சென்னிநாட்டுப் பொன்னரங்க மன்னன் செம்மை நாட்டுக்கு சுதந்தரம் கொடுத்து விடுவது என்ற முடிவுக்கு வந்தான். ஆனால் செம்மை நாட்டுக்கு விடுதலை கொடுத்த பின், அது தன்னைத்தான் காத்துக் கொள்ளவோ ஆண்டு கொள்ளவோ முடியாமல் போனால் சில சமயம் தன் கையைவிட்டு அந்தச் செம்மை நாடு தன் எதிரியாகிய நடுநாட்டுக்கு உட்பட்டுவிட்டால் ஆபத்து. இதற்காகச் சென்னி நாட்டுப் பொன்னரங்கன் செம்மை நாட்டின் நிலையறியவும் விடுதலை கொடுக்கவும் வருவ தாகச் சொல்லி அனுப்பினான் செம்மை நாட்டுக்கு. செம்மை நாட்டின் உள்ளம் ஆனந்தக் கடல்,


4. பெரியதோர் வரவேற்புக்குப் பின், பொன்ன ரங்கன் ஆநந்தன் இல்லத்தில் தங்கி, செம்மை நாட்டின் அறிஞர்கள் பிரதான குடிகள் ஆகிய பலரை அழைத்துப் பேசினான். நகரங்கள், கிராமங்கள், பொது ஸ்தாபனங்கள் ஆகிய இடங்கட்கு நேரில் சென்றும் நிலைமையை அறிந்தான்.

சேரி ஜனங்கள் சுதந்தரம் கிடைத்ததும் தீண்டாமை ஒழியும் என்ற விஷயத்தில் சந்தேகம் தீர்ந்திருந்தார்கள். ஏழைகள் பணக்காரர் ஆவதும் சுதந்தர நாட்டில் தான், நல்ல பொதுவான சட்ட திட்டங்களும் அப்போதுதான். சுதந்தரம் ஆத்மா அவர்கட்கு.

5. பொன்னரங்கர் நம் நாட்டுக்குச் சுதந்தரம் தருவ தாக ஓர் சுதந்தரப் பிரகடனம்'' சித்தப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்து மக்கள் சந்தோஷக் கடலில் ஆழ்ந்திருந்தனர். பட்டு, தன் இருப்பிடத்திலிருந்து ஓடி அழகனிடம் உத்தரவு கேட்டாள், சோலையில் தோழி மாருடன் ஆனந்தக் கூத்தடிக்க.

அறிஞர்கள், பொன்னரங்கன் தங்களுக்குச் சுதந்தரம் கொடுக்க இசைந்ததற்கு பொன்னரங்கன் மேல் பாய, நடுநாட்டான் படை திரட்டுகிறான் அதனால் தான் நம்மைச் சுதந்தரம் அளிப்பதன் மூலம் தட்டிக் கொடுக் கிறான் என்று காரணம் சொல்லிக் கொண்டார்கள். தேச பக்தர்கள் தமது ஆத்ம சக்தியின் வேகத்தை வியந்து கொண்டார்கள். எல்லோருக்கும் ஆத்மசக்தி செய்த வேலையை எடுத்துக் காட்டினார்கள்.

6. பொன்னரங்க மன்னர் ஆனந்தனின் உப்பரிகை யில் காற்றோட்டமாக வீற்றிருந்தபடி சுதந்தரப் பிரகட னத்தை எழுதிக் கொண்டிருந்தார். இடையில் அவர் கண்கள் திறந்த ஜன்னலின் வழியாகக் குதித்துச் சோலையைத் தடவின. சோலையில் பட்டு, தோழிமா ரோடு கூத்தடித்துக் கொண்டிருந்தாள், கண்ணைப் பறிக்கும் கட்டழகோடு; பொன்னரங்கன் உள்ளம் மறுக்க முடியாத ஓர் முடிவுக்கு வந்தது. உயிரோடு வாழ்வ தென்பது பட்டோடு வாழ்வது தான்.

7. தனது பிரதிநிதியுடன் இதுபற்றி யோசித்தான். பட்டு அழகனைக் காதலிப்பது தெரிந்தது. சுதந்தரம் கொடுப்பதை நிறுத்தி வைக்கிறேன். பட்டு சிடைத்ததும் அதை மேளதாளத்தோடு தருகிறேன் என்று கூறிவிட்டான் ரகசியமாகத் தன் பிரதிநிதியுடன்.

8. பின் பொன்னரங்க மனனன் வெளிப்படையாகச் சொல்லிவிட்டான். பட்டை எனக்குக் கொடுத்தால் சுதந்தரத்தை நான் கொடுப்பேன்'' என்று.

பட்டு பொன்னரங்கனை விரும்பவில்லை என்று அழகன் கேள்விப் பட்டான். அவளை நான் அரசனுக்கு ஆட்படச் சொல்ல மாட்டேன். என் காதலியைக் கொடுத்து நாட்டுக்கு உரிமை பெற முடியாது என்று குதித்தான்.

ஆள்வோரின் படைக்கத்தி சுழற்றவும் ஆரம்பித்து விட்டது. குடிகள் துன்பம் தாங்க முடியவில்லை. பட்டின் உற்றார், அண்ணாகிய ஆனந்தன் ஆகியேரர் பலமுறை அரசனைப் பேட்டி கண்டார்கள். இதோ முடிவு, அதோ சமாதானம் என்று நிமிஷத்தை எண்ணியபடி இருந்தார் கள் ஜனங்கள், படை வீரர் தம்மைப் படுத்தும் பாடு தாங்காமல்! ஆத்மசக்திக்குத் தெரியும் நேரம். அப்போது அது சும்மா இருந்தது படையை எதிர்க்காமல்

9. பட்டு, காவலில் வைக்கப்பட்டாள் என்றும் அவள் உயிர் போனாலும் அழகனையன்றி வேறொருவரைக் காதலிக்க முடியாது என்று கூறுகிறாள் என்றும் தக்க இடத்திலிருந்து, அதாவது உயிர் போன்ற நண்பனாகிய ஆநந்தன் வாயிலாகக் கேள்விப்பட்டான். அடிக்கடி அந்த இன்பமான நிமிஷங்களைத் தேன் போல் அழகன் அனு பவித்தாலும் நாட்டு மக்கள் படும் துன்பத்தையும் தன்னால் சுதந்தரம் தடைப்பட்டு விட்டதையும் அவன் நினைந்து வருந்தாமலில்லை.

10 ஊர் நாட்டாண்மைக்காரன் ஜனங்கள் சகிதம் அழுது கொண்டே வந்து அழகனைக் கண்டார்கள். *உங்கள் காதல் சேஷ்டையால் எங்கள் நிலை இப்படி ஆகலாமா?'' என்று கேட்டார்கள். பட்டு மன்னனை மணந்து கொண்டால் எங்கட்கு இப்படிப்பட்ட தொல்லை ஏற்படாதே'' என்று கேட்டார்கள்.

"நீங்கள் பட்டு மேல் எண்ணங் கொண்டு அதை வெற்றிகரமாக முடிப்பதற்காகத்தான் ஜனத்தலைமை வசிக்க வந்தீர்களா?'' என்று சுடச்சுடக் கேட்டார்கள்.

அழகனின் பதைபதைப்பும் துக்கமும் சேர்ந்து அவனை ஒருபதிலும் சொல்ல முடியாத நிலையில் வைத்தன. மீண்டும் ஜனங்கள், நாங்கள் சின்னத் தலைவராகிய ஆநந்தனைக் கண்டு முறையிட்டோம். அவர் தலைவரைக் காணுங்கள்" என்று கூறிவிட்டார். என்றார்கள். ஏன் ஆநந்தன் சமாதானம் கூறியிருக்கக்கூடாது. என்று அழகன் நினைத்தான். நண்பனைத் தன் நெஞ்சம் நிந்தித் தது பற்றித் தானே வருந்தினான்

அழகன் ஜனங்களை நோக்கி, " அவள் மன்னனை மணந்து கொள்வதை நான் வேண்டாம் என்று கூற வில்லையே. நான் அவளைக் காதலிக்கும் போது இத்தகைய நிலை ஏற்படும் என்று எப்படித் தெரியும்?'' என்று பரிதாபமாய் அழுது கூறினான். சீக்கிரம் நிலை மையை ஒழுங்குபடுத்துவதாகச் சொல்லி அனுப்பினான்.

11. ஆநந்தன் நள்ளிரவில் இரைக்க இரைக்க கத்தி யும் கையுமாக ஓடிவந்தான் அழகனிடம். ''என் தங்கை யால்! அவளால் தானே அழகா?- அவளில்லாவிட்டால் மன்னன் மனோ நிலை இப்படியாகி இராதே!" என்றான். அழகன் என்ன செய்தாய் அதற்காக?'' என்று கேட்டான்.

ஆநந்தன், நான் அவளைக் கொன்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். சென்றேன். அவளைச் சுற்றிலும் நியமித்திருந்த காவற்காரர் விழித்துக் கொண்டார்கள். நான் ஆள் தெரியாமல் ஓடிவந்தேன். நீ என்னை மன்னித்து விடு! அவள் உனக்குரிய பொருள்" என்றான்.

அழகன் : அவளிறந்தால் அவன் காதலுக்கும் பங்கம் ஏற்படாது. நாட்டின் சுதந்தரமும் அளிக்கப்பட்டு விடும் என்பது உன் எண்ணமாகும். உன் தியாகம் நன்று. உடன் பிறந்தாளைப் பலியிட வேண்டியதாயிற்று சுதந்தர தெய்வத்துக்கு?

அழகன் கண்ணீர் சொரிந்து கூறுவான் : ஆநந்தா வேறு வழியில்லை. நான் அதைச் செய்கிறேன். அவள் போன பின் நான் இருப்பது கிடையாது. அவளைத் தொடர்கின்றேன். சுதந்திர தேசத்தை நீ நல்ல முறையில் ஆண்டிரு. வர்ணாஸ்ரம தர்மம் இந்தக்காலத்தில் மக்களின் ஒற்றுமையைக் கெடுக்கிறது. அது மக்கள் முன்னேற்றத் திற்குப் பெரியதோர் முட்டுக்கட்டை. அதை ஒழி. நல்ல தோர் சட்டம் செய். மக்கள் சமம் என்ற வேதத்தை நடை முறையில் வை நான் இப்போதே உன்னிடம் விடை கேட் சிறேன். கடைசி விடை. அடுத்த ஜன்மத்தில் உன் நட்புக் கிடைக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. நானும் பட்டும் இறப்புலகில் ரகசிய சந்திப்பும் மறுபிறவியில் இந்த நாட்டில் ஏழைச் சதிபதியாகவாவது பிறந்து வாழும் இன்ப வாழ்க்கையும், ஆண்டவன் கிருபை செய்யட்டும் என்றான்.

அழகன் கண்ணீர் விட்டான். அழகன் மேலும் பேசி னான். ஆயினும் அப்பேச்சில் எழுத்துக்கள் ஒன்றும் புரிய வில்லை. ஆநந்தன் கேட்டிருந்தான். இவன் விழிகள் மூடியிருந்தன. ஆநந்தன் தன் நண்பனைக் கும்பிட்டு, "அழகா நீயே உன் உயிரை மாய்த்துக் கொண்டதாக ஒரு கடிதம் எழுதி என்னிடம் கொடு. உன்னுடைய ஆசீர்வாதம் எனக்கு எதேஷ்டமாகப் பயன்பட வேண்டும்'' என்று கூறினான்,

ஆத்திரத்தோடு வெகு விரைவில் அழகன் அவ்வாறே எழுத ஆரம்பித்தான். ஆநந்தன், இடையில் நான் சொன்ன மாதிரி எழுது. நீ இப்போது கூறியபடி பிற் காலத்தின் என் ஆட்சிமுறை இவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் அதில் குறிக்காதே, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எச்சரித்தான். தரும தேவதை "அழகனை வாழ்த்தத் தொடங்கினாள். அவனால் தியாக லக்ஷணம் உலகுக்கு விகசிதமாகப் போகிறதென்று."

12. அதே இரவு. அழகன் வீட்டின் முன்புறம் கருடிக் கூடம். அது தனியறை போன்றது. அங்கே செம்மை நாட்டின் அறிஞர்கள் சிலர் காத்திருந்தார்கள். அவர்கள் வாய்கள் முணுமுணுவென்று பேசிக் கொண்டிருந்தன. அழகன் வீட்டின் பின் கட்டில் கும்பிட்டபடி இருந்தான்.

பிரிந்து போன ஆநந்தன் அழகன் வீட்டின் தோட்டத்து வாசல் வழியாக உட்புகுந்தான். "நான் மாய்த்தேன் என் தங்கையைத் தேசத்துக்காக'' என்று ஆநந்தன் கூவி அழக னின் கால்மாட்டில் வீழ்த்தான், தடுமாறி விழுபவன் போல. அதை அழகன் கேட்டான். ஆநந்தனைப் பார்த்தான். "சென்றாயா என் உயிரே" என்து பட்டைக் குறித்துச் சொன்னான். அவன் கால்கள் கருடிக் கூடத்தின் கதவண்டை கொண்டு சேர்த்தன அழகனை. அவன் கருடிக் கூடக் கதவைத் திறந்து கத்தி ஒன்றைத் தூக்கினான். அறிஞர்கள் எழுந்து நின்றார்கள் தலைவனுக்கு மரியாதை செய்யும் முறையில். அவன் அறிஞர்களை எதிர்பாராத விதமாகப் பார்த்து. "என் உயிர் முடிந்தது தேசத்துக்காக" என்று கத்தியை கழுத்தில் வைத்தான். 'ஒரு சேதி' என்று கூவித் தடுத்தனர் அறிஞர்கள்.

அழகன் : அவள் இறந்தாள்
அறிஞர் : அவள் மாயவில்லை
அழகன் : ஆநந்தன் மாய்த்துவிட்டான்
அறிஞர் : அவன் பொய் சொன்னான்.
அழகன் : பொய் கூறமாட்டான்.
அறிஞர் : ஜாதி வெறிபிடித்த பொய்யன்.
அழகன் : அவள் எங்கே ?
அறிஞர் - அரசனோடு ஒத்துப் போனாள்.
அழகன் : ஏன் அவன் பொய் கூறினான்.
அறிஞர் : உன்னைச் சாகடிக்க.
அழகன் : அதனால் அவனுக்கு என்ன வரும்?
அறிஞர் : உம் பதவி அவனுக்கு வரும்.
அழகன் : பதவி அவனுக்கேன்?
அறிஞர் : பதவி தவிர மற்றவை அவனுக்கேன்?
அழகன் : என்ன ?
அறிஞர் : வர்ணாஸ்ரம முறைப்படி உயர் ஜாதிக்குச் செல்வாக்கிருக்கும்படி ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பது தான் அவனுடைய, அவன் இனத்தாருடைய எண்ணம்.
அழகன் : எப்போதிருந்து?
அறிஞர் : ஆதிமுதல்
அழகன் : நீங்கள் அறிவீரா?
அறிஞர் அறிவோம்,
அழகன் : ஏன் கூறவில்லை ?

அறிஞர் : நேரம் ஏது?
அழகன் : இப்படிப்பட்ட வஞ்சகனா?
அறிஞர் : அவன் மட்டுமா?
அழகன் : ஒருவரும் நல்லவரில்லையா?
அறிஞர் : இருக்கிறார்கள்
அழகன் : யார்?
அறிஞர் : பிறகு சொல்லுவோம். ஐயனே கத்தியைக் கொடும். நாங்கள் சொல்லுவது சத்தியம்.
அழகன் : (கத்தியைக் கொடுத்து) தன் தங்கையை எனக்குத் தந்தான். அவனுக்கு உயர் ஜாதி எண்ணமிருந்தால் சம்மதித்திரானே?
அறிஞர் : அவன் உயர் ஜாதி அல்ல என்பது நம்மை விட அவனுக்கு நன்றாய்த் தெரியும்.
அழகன் : பின்?
அறிஞர் : சுயநலம்.
அழகன் : இன்னுமா அந்த அவிவேகம்?
அறிஞர் : தீர்ந்துவிடுமா?
அழகன் : எப்போது?
அறிஞர் : ஊழிக்காலத்தில்.
அழகன் : மேலே நடக்க வேண்டியது?
அறிஞர் : அரசனுக்கு ஒன்றும் தெரியாது. அவன் அரசனுக்கு ஒத்துக் கொண்ட மறு நிமிஷம் உம்மை ஒழிக்க ஆநந்தன் செய்த ஆநந்தச் செய்கைகள் இவை.

அழகன் : இப்போது? அறிஞர் : எல்லோரும் ஓர் குலம் ஆக்குவோம்.
எல்லார் தளைகளையும் அறுத்து ஆற்றுவோம். அரசன் துணை செய்க.

அழகன் : அதன் பின்
அறிஞர் : அரசன், இங்குள்ள அவன் படை தரணி போக வேண்டியது தான், செம்மை நாடு சுதந்தர நாடு?
-----------------

6. முகுந்த சந்திரிகை (அல்லது) ஏழை உழவன் (நாடகம்)

சந்திரிகை - கதாநாயகி
சாரங்கன் -- அவள் தமயன்
பெருமாள் - அரச வம்ஸத்தான்
இரவற் சேலை - அவன் தங்கை
சுந்தரி - அவன் மனைவி
முகுந்தன் - சுதா நாயகன், ஏழை உழவன்
முராரி - தந்தை
முத்தாயி - தாய்
ராஜகானி - இடை நாட்டை இருந்தாளும் சோழப் பிரதிநிதி
சேனாதிபதி - இடை நாட்டின் சேனாதிபதி
சோழன் - சோழநாட்டரசன்
மந்திரி - ௸ யார் பிரதானியார்

ஏழை உழவன் அல்லது முகுந்த சந்திரிகை

களத்தில் குவிந்த நெல் அளக்கப்படுகிறது. தண்ணீர் இறைத்த கடனுக்கும், எரு வாங்கிய கடனுக்கும் நில வரிக்கும் பிற ஆட்களுக்கும் பகிர்ந்து கொடுத்தபின் மீதியில்லை .

அளவுகாரன் மீதியில்லை என்பதைத் தெரிவிக்கிறான். முகுந்தன் என்னும் ஏழை உழவன் விழிக்கிறான். வயோதிகத் தாய் தந்தையரைக் காப்பது எப்படி என்று தவித்து நிற்கிறான். அவன் நிழல் கண்ணில் படுகிறது. என் அருமைத்தாய் தந்தையால் வளர்க்கப்பட்ட இத்தனை பெரிய உடல் எனக்கிருந்தும் பயனென்ன என்று அளவு காரனிடம் கூறுகிறான். இதைக்கேட்டுக் கொண்டே வந்த அவர் தந்தை முராரி, "எல்லாம் தரும் இந்த உடல் அப்பா, வருந்தாதே'' என்று கூறித் தேற்றுகிறான்.

வீட்டில் தாய் தந்தையார்க்கு உருக்கமான சம்பாஷணை. முராரி சோழநாட்டில் உள்ள உழவுத் தொழில் வசதியைக் கூறுகிறான். அந்த வசதி இடை நாட்டில் இல்லை. காரணம் இடை நாடு அடிமை நாடு. காடழிக்கிறார்கள். முகுந்தன் மரம் பிளக்கிறான், மற்றும் பலரோடு.

காட்டுக் குத்தகைக்காரன் அவரவர் பிளந்த அளவுக்குக் கூலி கொடுக்கிறான்.

ஓர் கிழவன் பிள்ளையில்லாதவன். தன்னால் கட்டை பிளக்க முடியவில்லை. முடியாமை தெரிந்தால் எப் போதுமே கிழவனைக் காட்டுக்குள் விடமாட்டார்கள். அந்தக் கிழவனுக்கு முகுந்தன் தான் வெட்டிய விறகுகளில் பாதியை கிழவன் வெட்டியதாகக் காட்டுகிறான். இதனால் சரிபாதிக் கூலி கிழவனுக்குப் போகிறது.
முகுந்தன் கூலி பெற்றுச் சிறிது விறகைத் தலையில் சுமந்து வீட்டுக்குப் போகிறான்.
வழியில் பறை முழங்குகிறது. கிராமத்தார் கூடு கிறார்கள். ஆல மரத்தின் கீழ் சந்திரிகா (கதாநாயகி) சாரங்கன் (ஷைள் தமயன்) பெருமாள் பாடு, இரவற்சேலை முதலிய தேசத்தொண்டர்கள் பிரசங்கம் செய்கிறார்கள். இடை நாடு சுதந்தரம் அடைய வேண்டும் என்பது பற்றித் தான் பேச்சு, அப்பிரசங்கம் பொது ஜனங்கட்கு உணர்ச் சியை உண்டு பண்ணவில்லை. விளங்கவில்லை. ஜனங்கள் தேசத்தொண்டர்களிடைப் பரஸ்பர முணுமுணுப்பு. பேதம். இதற்கிடையில் நீங்கள் நன்றாக விஷயத்தை விளக்கவில்லை" என்று ஒரு குரல் கேட்கிறது. இப்படிக் கூறிய பிறகு தலைவன் மேடையில் பேசக் கேட்டுக் கொள்ளப்படுகிறான். வாய்க்கால் வடிகால் ஏரிமராமத்து இல்லை. தொழிலாளர்க்கு வசதி, உழவுக்குக் கடன் கொடுப்பதில்லை என்று தொடங்கி சுதந்திரம் தேவை என விளக்குகிறான். மக்களிடைச் சந்தோஷ ஆரவாரம்.

தேசத் தொண்டர்கள் கூடி, முகுந்தன் தாய் தந்தை யரிடம் போகிறார்கள். தாய் தந்தையர் தமது வறுமை நிலையிலும் தம் குமாரனை நாட்டுக்கு தத்தம் புரிகிறார்கள்.
சந்திரிகா முடியிழந்த மன்னன் மகள். அவள் முகுந்தன் என்னும் அந்த ஏழை உழவன் மேல் காதல் கொள்கிறான்.

அடிக்கடி இருவரும் சந்திக்க நேர்ந்த போதெல்லாம் சந்திரிகா பேசும் காதல் பேச்சுகட்கெல்லாம் முகுந்தன் பொருள் தெரியாது தேசீய விடை கொடுக்கிறான். இதனால் அவன் எண்ணம் தேசத்தொண்டில் ஈடு பட்டிருப்பதைச் சந்திரிகா உணருகிறாள். மேலும் முயலுகிறாள். பல சந்திப்புக்குப் பின் முகுந்தனுக்கும் அவள் மேல் காதல் உண்டாகிறது. எனினும் அடிமை நாட்டில் திருமணம் செய்து கொள்ளேன் என்கிறான். சுதந்திரம் பெற்றவுடன் மணம்-முத்தம் என்று ஒரே பிடியாகப் பிடிக்கிறான். கடைசியில் ஓரிரவு பூரண சந்திரனும் வானம்பாடியின் இனிய சேஷடையால் அவள் காதல் தீயில் கொளுத்தப்பட்டதால் அவனை மருந்துக்கு இழுக்கிறாள். முடியவில்லை. சுதந்திர நாட்டில் திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறுவதாகக் கைபோட்டுத் தருகிறான். இதை மறைவிலிருந்து சேனாதிபதி (இடை நாட்டில் சோழனால் நியமிக்கப்பட்டிருப்பவன்) பார்த்து விடுகிறான். கிண்டலான சம்பாஷனைகளின் பின், சேனாதிபதி, சீக்கிரம் நாட்டுக்குச் சுதந்தரம் கிடைக்கப் போகிறது. அதனால் உங்கள் திருமணமும் சீக்கிரம் நடக்கும் என வாழ்த்திச் செல்லுகின்றான்.

சுதந்தரம் கிடைத்த மாதிரிதானே நாம் கலியாணம் செய்து கொள்ளலாமே. தாராளமாக இப்போதே எனக்கு ஒரு முத்தம் தரலாமே என்கிறாள் சந்திரிகா. சிரிப்போடு மறுக்கிறான் முகுந்தன்.

நகர வீதியில் பிற நாட்டார்க்கு இங்கென்ன வேலை என்ற பாட்டைப் பாடி மக்களுக்கு எழுச்சியை உண்டாக்குகிறார் முகுந்தனும் பிறரும்.

மற்றொருபுறம் "கலையும் தொழிலும் நாம் அறிவோம், போர் செய்வோம். முன்னர் ஆண்டாம்; இப்போதும் ஆள்வோம். ஆயத்தமாய் இருங்கள்'' என்ற பாட்டும் பிரசங்கமும் நடைபெறுகிறது முகுந்தனால்

முகுந்தன், சந்திரிகா, பிறர் கைது செய்யப்பட்டு சேனாதிபதியால் விலங்கிடப்படுகிறார்கள். ராஜதானி (சோழன் பிரதிநிதியாக இருந்து இடை நாட்டை ஆண்டு வருவோன்) வருகிறான். தேசத் தொண்டர்களுக்கு அனு கூலமாகப் பேசி அவர்களை விடுதலை செய்கிறான்.

ராஜதானி இடை நாட்டின் நல்ல நிலையையும் முகுந்தன் திறமையான பிரசாரத்தையும் கூறி, இடை நாட்டுக்குச் சுதந்திரம் கொடுத்து விட வேண்டும் என்கிறான். இது விஷயத்தைத் தான் சோழனுக்கு அறிவித்து விடப் போவதையும் கூறி, சேனாதிபதியின் அபிப்பிராயத்தையும் பெறுகிறான்.

பெருமா இமாடு என்பவன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவன். ஏழை முகுந்தனும் சந்திரிகாவும் சந்தோஷ மாகப் பேசியிருந்ததைப் பார்த்து விட்டதிலிருந்து தான்
சந்திரிகாலை அடைய வேண்டும் என்று சதா உடையை கிழிந்ததையும் பழசுகளையும் - ஏராளமாகத் தூக்கித் தோளில் போட்டுக்கொள்வதை உடுத்திக் கொண்டதாக நினைத்துச் சந்திரிகாவிடம் போய்ப் பாடுவதும் ஆடுவது மாக இருக்கிறான். அவள் எதிர்ப்பைப் பலப்படுத்தக் கூடாது என்றெண்ணிப் பெருமாள் மாட்டைத் தட்டிக் கொடுத்து வருகிறாள். பெருமாள் மாடு அதை உண்மை யென்றே நினைத்து விடுகிறான், தன் மனைவியாகிய சுந்தரியிடம் அவன் பேசுவதே கிடையாது அவள் ஒரு நாள் காரணம் கேட்கிறாள் தன்னைச் சந்திரிகை காதலிக் கிறாள் நான் அவனைக் காதலிக்கிறேன் என்றும் அதனால் செல்வம் கிடைக்குமென்றும் கூறுகிறான். இதற்காகச் சுந்தரி வருந்து கிறாள். ஒருநாள் அவள் தனியாகச்சிந்திக்கத் தொடங்கினாள். தன்னிடம் பால் குடிக்கும் குழந்தையிருப் பதால் தன் மீது அவன் வெறுப்பு அடைகிறான் என்ற முடி வோடு, பிள்ளையைத் தரையில் மோதக் தூக்குகிறாள். அக்குழந்தையின் சிரித்த முகம் அவள் அன்பைத் தூண்டி விடவே மோதத் தூக்கிய கைகள் தழுவிக் கொள்ள எண்ணவே ஒன்று முத்தத் தருகிறாள்.

பெருமாள் மாடு மனேராஜ்யம் புரிவதும், மனைவிவெறுப் பதும் மனோராஜ்யத்தில் கடைசியில் உணவு இல்லை என்ற முடிவு தெரிந்து பெருமாள் மாடு ஏமாறுவதுமாகக் காலந் தள்ளுகிறான். அவன் மனோராஜ்யத்தை முழுதும் ஆமோ திப்பவள் பெருமாள் மாட்டின் தங்கை இரவற்சேலை என் பவள்.

(சந்திரிகை மெச்சும்படி ஆரம்பத்தில் ஒருநாள் பெரு மாள் மாடு ஏராளமான உடைகளோடு வெளிவருகிறான். அவனைப் போலவே பெருமாள் மாடும் ஏராளமான துணி களைப் போட்டுக் கொண்டு போயிற்று. இதைக் கண்ட தண்பர்கள் அவனுக்குப் பெருமாள் மாடு என்ற பேரை வைத்து விடுகிறார்கள்.)

பாண்டியன் சோழ நாட்டின் மேல் படையெடுப் பானோ என்ற சந்தேகம் சோழனுக்கு ஏற்படுகிறது. இது பற்றிச் சோழன் தன் மந்திரிப் பிரதானிகளிடம் பிரஸ்தா பிக்கிறான். இச்சமவத்தில் இடை நாட்டுக்கும் நாம் சுதந் தரம் கொடுத்து விடுவது நல்லது என்ற முடிவுக்கு வரு கிறான் சோழன். இதே சமயம் இடைநாட்டை ஆண்டு வரும் ராஜதானியின் அறிக்கை கிடைக்கிறது. அவ்வறிக் கையும் இடைநாட்டின் நல்ல நிலையை உத்தேசித்தும், பாண்டியன் படையெடுப்பை உத்தேசித்தும், இடை நாட் டுக்குச் சுதந்திரம் கொடுத்து விடலாம் என்றிருக்கிறது. சோழன் தான் இடைநாட்டின் நிலைமை அறிந்து அங்கேயே சுதந்தரப் பிரகடனத்தை வெளிப்படுத்திக் வருவ தாகப் புறப்படுகிறான்.

இடை நாட்டின் கோட்டை வாசற்படியில் சில வைதீகப் பார்ப்பனர் வந்து உட்போக உத்தரவு கேட்கிறார்கள்.

பார்ப்பனக் கோலத்தைக் கண்டகாவற்காரர் ஆச்சரியப் படுகிறார்கள். தங்கள் தலைமுறையில் இப்படிப்பட்ட கோலத்தோடு இடைநாட்டில் மனதாரப் பார்த்ததில்லை என்றும் பார்ப்பனர் போன்ற பேரையே கேட்ட தில்லை யென்றும் கூறிவிடுகிறார்கள். ஆயினும் கடைசியில் அவர் கள் உட்போக அனுமதிக்கப் படுகிறார்கள்.

பிறகு சில பறையர்கள் உட்புசுக் கேட்கிறார்கள். அது பற்றியும் அப்படியே ஆச்சரியம் உண்டாகிறது. அவர்களும் உட்போக அனுமதிக்கப்படுகிறார்கள்.

இப்படி மாறுவேடத்துடன் வந்த சோழனும், பிர தானிகளும் இடை நாட்டில் ஜாதி என்ற பேச்சே மறைந்து விட்டதாக அறிந்து சந்தோஷிக்கிறார்கள். ராஜதானியும் சேனாதிபதியும் (இடை நாடு) பேசியிருக்கையில் இடை நாட்டுத்தேசபக்தர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் உள்ளே நுழைகிறார்கள். ராஜதானியையும், சேனாதிபதியை யும் பார்த்து எங்கள் நாட்டில் நீங்கள் இருப்பது மானங் கெட்ட வேலை என்று எதிர்ப்பாகப் போகிறார்கள், சேனாதிபதி வாளை உருவுகிறான். ராஜதானி தடுக்கிறான். தேசபக்தர்கள் என்று கூறிய அந்தச் சோழ மன்னன் முதலி யவர்களைச் சொந்த உருவத்தைக் காட்டி ராஜதானியின் தன்மையைப் பாராட்டுகிறார்கள்.

சோழனும் ராஜதானியும் சில பிரதானிகளும் மாறு வேடம் அணிந்தும், மற்றும் நினைத்த உருவத்தை அடைய உடை மீசை தாடிகளை எடுத்துக் கொண்டும் இடை நாட் டின் நிலையை அறியப் புறப்படுகிறார்கள்.

நாட்டுப்புறத்தில் சில குடிசைகள்.

அந்தக் குடிசைகளில் அந்த அர்த்த ராத்திரியில் சிலர் சில மாணவர்கட்குப் பாடம் சொல்லித் தருகிறார்கள். பிரதானிகளில் ஒருவன் மாறு வேடத்தோடு சென்று, 'ஏன் இந்நேரத்தில் படிப்பு?' என்கிறான். பிள்ளைகளைப் பாட சாலைகளுக்கு முறையாக அனுப்பாததால் நாட்டாண்மைக் காரர் எம்மை ஊரிலிருந்து நீக்கி விட்டார்கள். எம் பிள்ளைகட்குக் கணிதம், இலக்கியம், இலக்கணம் சொல்லி கொடுத்துவிட்டால் பிறகு ஊரில் சேர்த்துக் கொள்வார்கள் என்று பதில் கூறுகிறார்கள்.

அரசன் இடை நாட்டின் கல்வி அபிவிருத்தியைப் புகழ்கிறான்.

சீர்திருத்தத் திருமணம் நடக்கிறது. இங்கு நடத்திய சம்பாஷணைகள், சச்சரவுகளால் பறையன் என்பதும் பார்ப்பான் என்பதும் புரோகிதம் என்பதும் இடைநாட் டில் கிடையாது என்பதும் விளங்குகிறது.

மூஞ்சி சுருங்கிய தொண்டு கிழவன் குறட்டை விட்டுத் தூங்குகிறான். அவன் பக்கத்தில் அவன் இளமனைவி இருந்து அவன் கோலத்தைப் பார்த்துச் சிரிக்கமாட்டாதவ ளாகி விஷத்தை அருத்தும் சமயம் அவள் தாய் பார்த்துத் தடுக்கிறாள். இதற்குள் கிழவன் விழித்து விஷயம் அறிந்து, தான் இளமங்கையை மணந்தது தவறு என்று உணர்ந்து அவளைப் பார்த்து, 'பெண்ணே நான் இறந்தால் நீ வேறொருவனை மணந்து கொள்வதாக எனக்கு உறுதி கொடு' என்கிறான். அவள் மறுக்கிறாள்.

அச்சமயத்தில் தேசபக்கன் (முகுந்தனின்) சின்னத்தின் சப்தமும் தேச நீதி முழக்கமும் கேட்கிறது. அதை எடுத்துக் காட்டி - உறுதி கேட்க அவள் அவ்வாறே தேச நீதிக்குக் கீழ்ப்படிகிறாள்.

தாயும் மங்கையும் அப்புறம் போனதும், கிழவன் தள்ளாடி நடந்து விஷத்தை எடுத்துக் குடித்து உயிர் துறக் கிறான். இது கண்ட அரசன் முதலியவர்கள் நாட்டின் நிலைக்கு மெச்சியும், கிழவனிலைக்கு வருந்தியும் அகலுகிறார்கள்.

நாட்டுப்புறத்தில் குடியானவன் பசு கன்று போடு கிறது மழை பொழிகிறது. இல்லம் வீழ்கிறது வீட்டுக் காரி பிரசவவேதனை அடைகிறாள். கொல்லையில் பண்ணையாள் குளிரால் மெலிந்து உயிர் விடுகிறான். மழையீரம் காயுமுன் அவசரமாக விதைக்க நெல்கொண்டு போகிறான். வழியிலே கடன்காரர் மறிக்கிறார்கள் . சாவோலை கொண் டொருவர் எதிரே வருகிறார். விருந் தாளி ஒருவன் வந்து விடுகிறான். கடைசியாகக் குடியான வனைச் சர்ப்பம் தீண்டுகிறது. அவன் இறந்து போகிறான்.

இவைகளை யெல்லாம் கண்ட அரசர் முதலானோர் இடை நாட்டின் வறுமை நிலைக்கு வருந்திச் செல்கிறார்கள்.

முகுந்தன் தன் பரிவாரத்தோடு ஆயுதச் சாலையைப் பார்வையிடுகிறான். அங்கு ஊக்கமளிக்கும் சில வார்த்தைகள் வீரர்கட்குச் சொல்லுகிறான்.

குதிரைப் படையைப் பார்வையிடுகிறான். ' சுதந்தரம் நமது ஆத்மா" என்று கூறிக் குதிரைகளைச் சேர்க்கும்படி கூறுகிறான்.

காவாட்களை அணுகி ஓர் சொற்பொழிவு நடத்துகிறான்.

இவைகளை யெல்லாம் பார்த்திருந்த அரசன் ஆச்சரியப்பட்டுச் சேனாபதியை மாறுவேடத்தோடு அவனிடம் பேசிவர ஏதோ கூறி அனுப்புகிறான்.

மாறுவேடத்தோடுள்ள சேனாபதி முகுந்தனிடம் நமது சோழ நாட்டின் மேல் பாண்டியன் படையெடுப்ப தால் சோழனுக்கு நெருக்கடி ஏற்படும் அந்த நெருக்கடி நமக்குச் சாதகமல்லவா? நெருக்கடியான நேரத்தில் நாமும் சோழனை எதிர்த்து நாட்டை மீட்கலாம்

இதுகேட்ட முகுந்தன், பாண்டியன் படையெடுப்பு நிச்சயமா?' என்கிறான். நிச்சயமென்று ஆதாரத்துடன் கூறவே,

சோழ ராஜனுக்கு நெருக்கடி நேரத்தில் நாம் சுதந்தி ரம் - கிளர்ச்சி ஆகிப்பதே சரியல்ல. உயர்ந்த நோக்க மாகாது. சுதந்திரம் நிலைக்காது. சோழராஜனும், ராஜ தானியும் கோரினால் நாம் அக்ரமக்காரனாகிய பாண்டி யனைச் சோழன் படையோடு சேர்ந்து முறியடிக்க வேண்டும். பிறகு நமது சுதந்தரக் கிளர்ச்சி என்று கூறி சேர்ந்த படைகளைக் கலைக்கிறான்.

இச்சமயம் பெருமாள் மாடு இதையெதிர்த்துப் பேசுகிறான்,

ஒருபுறம் பெருமாள் மாட்டை ஒருவன் தனியே அழைத்து ஏன் எதிர்க்கிறாய் என்று கேட்கிறான். இடை நாட்டுக்குச் சுதந்தரம் கிடைத்ததும் சந்திரிகை என்னைக் கலியாணம் செய்து கொள்வது பற்றி யோசிப்பதாகச் சொன்னாள் என்கிறான்.
அப்படியானால் சுய காரியத்தை உத்தேசித்துத்தான் நீ சோழனுக்கு நெருக்கடியை எதிர்பார்க்கின்றாயோ?

மற்றொருபுறம்.
முகுந்தன் சந்திரிகை பேசுகிறார்கள். ஏன் நீங்கள் இடை நாட்டின் சுதந்தர நாளைத் தள்ளிக்கொண்டு போகிறீர்கள்? கலியாணம்?

முகுந்தன். ஒழுக்கமும் பெருந்தன்மையும் சுயகாரியத் தைவிடப் பெரியவை என்கிறான்.

அரசன் முதலானோரிடம் பிர தானிகள் இதைக் கூற, அரசன் உண்மையில் இடை நாடு தேச ஒழுக்கத்தில் சிறந் தது என்று கூறிப் போகிறான்.

பாண்டியன் வேட்டையாடுகையில் புலி அடித்ததால் இறந்தான் என்ற சேதி சோழனுக்குக் கிடைக்கிறது. சோழ நாட்டின் மேல் பாண்டியன் படையெடுப்பு இல்லை என்று தெரிந்து விட்டது. சோழன் வருகையைத் தேசத் தொண்டர்கட்கு அறிவிக்கப்படுகிறது. இடைநாடு முடி யிழந்த மன்னன் மாளிகையில் சோழன் முதலியவர்கட்கு உற்சாகமான வரவேற்பு நடக்கிறது. சோழன், பாண்டியன் இறந்ததைக் கூறி - இடை நாட்டிற்குச் சுதந்திரம் அளிப்பதாகவும் வாக்களிக்கிறான். அனை வரும் மகிழ்ச்சியடைகிறார்கள்.

முகுந்தன் சந்திரிகையைக் கண்டு இந்தச் சந்தோஷச் செய்தியைத் தெரிவிக்க ஓடுகிறான். அவள் அந்தப்புரத்தில் இல்லை. அங்கிருந்தவர்களிடம் அவள் வந்தால் சுதந்தரம் நாளைக்கு என்பதை அவளிடம் கூறச் சொல்லி- அதோடு நில்லாமல் பின்னும் அவளைத் தேடித் தேசப் பொது மன்றில் ஓடி அங்கேயும் காணாமல் உத்யான வனத்தை நோக்கி ஓடுகிறான்.

பெருமாள் மாடு உடை உடுத்துகிறான். மனைவியிடம் சுதந்தரம் நாளைக்கு - கலியாணம் நாளை மறுநாள் என்று கூறுகிறான். அவள் கண்ணீர் விடுகிறாள். இவன் வெளியில் துணிகளோடு ஒடுகிறான்.

உப்பரிகையில் சுதந்தரப் பிரகடனம் தயாரித்துக் கொண்டிருந்த அரசர் தற்செயலாக ஜன்னல் வழியாகப் பார்க்கிறார். உத்தியான வனத்தில் சந்திரிகை, இரவற் சேலை, தோழிமார் நீராடியிருந்தார்கள். சோழன் சந்திரிகையின் அழகில் சிக்கிச் சேனாதிபதியை இவள் தான் சந்திரிகை நீ சொன்ன வனிதையோ? இவளை நான்
அடைய மார்க்கம் தேடு என்கிறான்.

அவள் முகுந்தன் மேல் காதல் கொண்டவள், அவள் மனம் உங்களிடம் திரும்புவது அருமை என்கிறான்.

நீராடித் துறை ஏறிய சந்திரிகையிடம் ஆவலோடு முகுந்தன் தோன்றி சுதந்தரம் உண்டு என்கிறான்.

அதே சமயம் சோழன் சேனாபதியிடம் சுதந்தரம் இல்லை என்கிறான்.

சந்திரிகை உப்பரிகை ஜன்னலில் அரசர் பார்ப்பதை இரவற்சேலைக்குக் காட்டு கிறாள். அனைவரும் ஓடி மறை கிறார்கள். முகுந்தனும் உடன் போகிறான்.

அன்று மாலை சோழன் சந்திரிகை சந்திப்பு. சோழன் எண்ணத்தைச் சந்திரிகை நிராகரித்தல்.

சோழன்-முகுந்தன் சந்திப்பு.

முகுந்தன் தன் காதலிக்குச் சோழனைப் பற்றிச் சிபாரிசு செய்ய மறுத்ததோடு, ஒருவர் கொடுத்து வாங்குவது சுதந்தரமாகாது. அது நிலைக்கவும் நிலைக்காது. தாமே பெறுவது தான் சுதந்தரம், நிலைப்பது என்று கூறிப் போகிறான்.
சந்திரிகை தன் அந்தப்புரத்தில் காவற் படுத்தப்படு கிறாள், சோழன் கட்டளைப்படி,
முகுந்தன் சிறையில் இடப்படுகிறான். ரகசியமாக. பெருமாள் மாடு தன் தங்கை இரவற்சேலையிடம் சோழன் யாரோ ஒருத்திமேல் ஆசைப்பட்டானாம்.
அவளைக் கொடுத்தால்தான் சுதந்தரம் கொடுப்பேன் என்று கூறுகிறானாம். இப்படி மாளிகையில் ரகசிமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்கிறான்.

இரவற் சேலை என் மேல் ஆசைப்பட்டான் அரசன். எனக்கு நல்ல சேலை ஒன்று இரவல் வாங்கிக் கொடுத்தால் நான் அரசனிடம் சென்று - கலியாணத்தை முடித்துக் கொள்வேன். அதன் பிறகு சுதந்தரம். அதன் பிறகு உனக்கும் சந்திரிகைக்கும் கலியாணம் என்கிறாள்.

சாரங்கன் (சந்திரிகை தமயன்) முதலிய தேசத் தொண்டர்கள் கூடி ஆலோசிக்கிறார்கள்.
அரசன் தன் தங்கையின் அந்தப்புரத்தில் காவல் நியமித்ததன் காரணம் தெரியவில்லை . முகுந்தன் ஏன் சிறைப்படுத்தப்பட்டான்.

இச்சமயம் பெருமாள் மாடு தோன்றுகிறான். தன் தங்கையாகிய இரவற்சேலை மேல் சோழன் காதல் கொண்ட தாயும், அவள் சேலை நல்லதாக இல்லாததால் சோழன் அவளைக் கலியாணம் செய்து கொள்ளத் தயக்கப் படுகிறது என்றும் ஒரு சேலை இரவல் வேண்டும் என்றும் கேட்கிறான்.

அனைவரும் சிரிக்கிறார்கள். சிலர் நம்புகிறார் கள். சந்திரிகை கட்டியிருந்த சேலையைச் சாரங்கன் கொண்டு வந்து கொடுக்கிறான்.

சுதந்தரந்தான் இரவற் சேலையில் வந்து நிற்கிறதா என்று அனைவரும் நகைக்கிறார்கள்.

எனினும் இச்சேதி காட்டுத்தீப் போல் பரவுகிறது . இரவற் புடவையின் அழகைப் பார்க்க ஊர் ஜனங்கள் அவள் வீட்டில் கூடி விடுகிறார்கள்.

இரவற்சேலை கவியாணப்பெண் ஜாடையில் காட்சி கொடுக்கிறாள். சாரங்கனும் கண்டு பரிகசித்துப் போகிறான்.

சோழனும் சாரங்கனும் சந்திக்கிறார்கள். சோழன் அவளை நான் மணந்தால் - மணக்கும்படி - நீங்கள் துணை செய்தால் சுதந்தரம் கிடைக்கும் என்கிறான்.

சாரங்கன் அவள்தான் சம்மதிக்கிறாளே என்று கூறு கிறான். அரசன் ஆச்சரியப்பட்டு, அப்படியா இதை மெய்ப் பிக்கிறீரா?' என்கிறான். இதோ என்று திரும்புகிறான் சாரங்கன்.

இரவற்சேலை திருணக் கோலத்துடன் பரிஜனங்கள் புடை குழ வாத்திய சகிதம் சோழனிருந்த இடம் நோக்கி அழைத்துப் போகப்படுகிறாள். இரவற் புடவையில் இருந்து கிடைக்கிறது சுதந்தரம் என்கிறார்கள்.

அதே நேரத்தில் தனக்கும் சந்திரிகைக்கும் திருமணம் என்றும் - இந்த ராஜ்ஜியத்திற்கு நான் தான் அரசன் என்றும், என் தங்கைதான் சோழ நாட்டின் ராணியென்றும் கூறிக் கம்பீரமாக நடக்கிறான் பெருமாள் மாடு.

சோழனும் ராஜதானியும் சேனாதிபதியும் பேசியிருக் சிறார்கள். சோழன் தனக்குச் சந்திரிகை வாழ்க்கைப்படப் போவதை அவர்களிடம் சொல்லிப் பெருமை பேசுகிறான். தன் உடை நன்றாக இருக்கிறதா என்று தன்னைத்தானே பார்த்துக் கொள்கிறான். மற்றவர்களை எல்லாம் போகும் படி கேட்டுக் கொள்கிறான்.

இரவற்சேலை வந்து தலை குவிந்து ஒருபுறம் அமர்த்தப் படுகிறாள். அனைவரும் வெளியே போகிறார்கள். அரசன் அணுகி - கடைசியில் இரவற் சேலையென்று அறிந்து அளவற்ற கோபமும் நாணமும் அடைகிறான். அவளைப் போம்படி கூறுகிறான். அவள் எழுந்தோடுகிறாள். வாசலில் ஜனங்கள் நிற்கிறார்கள். விஷயத் தெரிந்து நகைக்கிறார்கள். பெருமாள் மாடு என் தங்கை கலியாணம் நிச்சயமாய் விட்டது. இனி என் கலியாணம்தான் பாக்கி என்று கூறுகிறான்.

அனைவரும் பரிகசிக்கிறார்கள்,

சோழன் சேனாபதிக்கு ஆக்ஞையிடுகிறான், தேசத் தொண்டர்களையும் பிரதான குடிகளையும் சிறைப் படுத்தித் துன்பம் இழைக்கும்படி,

அவ்வாறே நடைபெறுகிறது. நாடு துன்பத்தை அடைகிறது. ஜனங்கள் அலறுகிறார் கள்.
நகர வீதியில் ஒன்று தீக்கிரை ஆக்கப்படுகிறது. சந்திரிகை உள்ளத்தைத் தன்பக்கம் திருப்பச் சொல்லி அவளிடம் அனுப்புகிறாள்.

ஜனங்கள் சந்திரிகையை அணுகி அவளைச் சபிக் கிறார்கள். அவள் துன்பம் அடைகிறாள். காதல்? தேசம்?

ஒருவன் மேல் சென்ற உள்ளம் பிறரை நினைப்பதும் கற்புத்தவறு என்று கூறுகிறாள்,
கற்பா? தேசமா? எது பிரதானம்?

மீண்டும் ஜனங்கள் முகுந்தனிடம் வந்து அவனை நிந்திக்கிறார்கள். முகுந்தன் அவள் பிறரை மணப்பதில் எனக்குத் தடையில்லை. தேசத்தின் பொருட்டு. எனினும் அவள் கற்புடையவள்; உண்மைக் காதலுள்ள அவள் அப் படிச் செய்யாள் என்று கூறித் துடிக்கிறாள்.

ஊரின் மக்கள் ஐயோ என்று கூக்குரலிடுவது சந்திரிகை காதில் நாராசமாகிறது.
அவ்வாறே முகுந்தன் காதில் வீழ்வதால் அவன் நடுக்கம் அடைகிறான். இரக்கத்தால் சோர்ந்து விழுகிறான்.

-முகுந்தன் அன்றிரவு தூக்கமில்லாமல் சிறையில் உலாவுகின்றான். ராஜதானி அங்கு வருகிறான். ராஜதானி, தனக்கு இடை நாட்டின் நன்மையில் அக்கறை உண்டு என்பதை ஞாபகப் படுத்துகிறான். முகுந்தா இந்தத் தர்மசங்கடத்தை நீ எவ்வாறு தாங்குவாய் என்கிறான்.

கடைசியாக, "நீயே உன் கையால் உன் உயிர் போன்ற காதலியைக் கொன்றுவிடு. அதனால் அவள் கற்புக்கும் காதலுக்கும் பழுது ஏற்படாததோடு நாடும் சுதந்தரமடை யும், மக்கள் படும் தொல்லை தீரும்'' என்கிறான்.

முகுந்தன் சரி என்ற முடிவுக்கு வருகிறான் சிரமசாத்ய மாக. முகுந்தன் சந்திரிகையை நோக்கிப் போகிறான். ராஜதானி சந்திரிகையின் காவற்காரரை யெல்லாம் அப்புறப்படுத்துகிறான்.

பெருமாள் மாடும், இரவற்சேலையும் பேசிக்கொண்டு தெருவில் நடக்கிறார்கள். அதே இரவில் .

சேனாதிபதி அடுத்த தெருவைத் தீக்கிரையாக்க ஆட்களோடு நிற்கிறான். பெருமாள் மாடு இரவற்சேலை இருவரோடு சேனாதிபதி சம்பாஷிக்கிறார். கேலியாகவும் தான் நிற்பதன் நோக்கத்தை அவர்கள் அறியாமல் இருக்க வும் பெருமாள் மாடு இரவற்சேலை இருவர்க்கும் தெரிந்து விடுகிறது மக்களோடு தெருவைக் கொளுத்தப் போவது! அவ்விருவரும் பதுங்கியிருந்து பார்க்கிறார்கள் - கொளுத்தப் போவது உண்மை என்று தெரிந்தால் இரவற்சேலையும், பெருமாள்மாடும் கூச்சலிட்டு தெரு வீடுகளில் உறங்கும் மக்களை எழுப்பிவிடலாம் என்ற நோக்கத்தோடு பதுங்கியிருக்கிறார்கள்.

முகுந்தன் சந்திரிகையை அடைகிறான். அவள் நித்திரை செய்கிறாள். அவளைக் குத்திக் கொல்ல முயலு கிறான் அவன். கை துணியவில்லை, துடிக்கிறான், தேசத்தை நினைக்கிறான், பின்னும் முயற்சி...

அவள் நாதா! என்று வாய் பிதற்றிப் புரண்டு படுக் கிறாள். முகுந்தன் பதைத்துக் கத்தியை விட்டெறிகிறான். அவள் விழிக்கிறாள். அவனைத் தழுவிக்கொள்கிறாள் ஆவலாக. அவன் முகத்தில் ஒளியில்லை. கண்ணில் காதல் இல்லை. காரணம் கேட்கிறாள். அவன் மறைத்துக் கூறுகிறான். அவள் தழுவிய கைகளை விலக்கிச் சிறிது வெளிப்புறம் வந்து உலாவுகிறான்.

அதற்குள் கூச்சல். ஐயோ தெருவோரே எழுந்தோடுங் கள். தெருவைக் கொளுத்துகிறார்கள்.

ஐயோ பற்றி எரிகிறது நாடு. அந்த முகுந்தனாலும் சந்திரிகையாலும்.........
ஐயோ ......! ஐயோ ......! என்ற மக்கள் கூச்சல்... அலறல்! இதை முகுந்தன் கேட்கிறான். பதைத்து உள்ளே போகிறான், கீழே விழுந்த கத்தியை எடுக்கிறான். அவள அவனைத் தழுவிக் கொள்கிறாள் காதலால்.

தன்மேல் படர்ந்த வஞ்சிக் கொடியை அந்த முகுந்த விருக்ஷத்தின் விளக்கை-குத்திக் கீழே போட்டது நாட்டுக் காக?

உடனே முகுந்தன் அதே வாளால் தன்னைத் தன் காதலியுடன் சேர்த்தான்.

மரண பூமியில் இருவரும் ஒன்றுபட்டார்கள்.

நாட்டு மக்கள் தலைவர்கள் எதிரில்: சோழன் முகுந்தனின் கிழத்தாய் தந்தையிடம், 'பெரியோரே உம் உயிர் போன்ற மகனை இழந்தீர். இந்தாரும் சுதந்தரப் பிரகடனம்!'

கிழத் தந்தை, சுதந்திரம் கிடைத்தது! நான் என் பிள்ளையை மீண்டும் பெற்றேன். நலம்!

---------------