pm logo

வேம்பத்தூர் பிரமஸ்ரீ சர்க்கரைபாரதி
இயற்றிய "பாகம்பிரியாள் மாலை"


pAkampiriyAL mAlai
by vEmpattUr prahmasri carkaraipArati
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

வேம்பத்தூர் பிரமஸ்ரீ சர்க்கரைபாரதி
இயற்றிய "பாகம்பிரியாள் மாலை".

Source:
பாகம்பிரியாள் மாலை.
இஃது வேம்பத்தூர்ச் சங்க வித்துவான்களிலொருவரும், சிவகங்கை இராம
நாதபுரமென்னுமுபய சமஸ்தான வித்வான் சிலேடைப்புலி பிச்சுவையரவர்கள் கனிஷ்டரும்,
சிவகங்கை சமஸ்தானம் சங்கீதவித்வான் பிர்மஸ்ரீ பெரிய வைத்திநாதையர்
அவர்களின் பிரதம சிஷ்யருமான சிவதாஸரென்ற சர்க்கரைபாரதிகளாற் பாடப்பெற்று
திருவெற்றியூர் சங்கீத பண்டிதை நாகரத்தினத்தின் பொருளுதவியால்
வேம்பத்தூர் சிலேடைப்புலி பிச்சுவையாவர்கள் குமாரர் நடேசையரால்
மதுரை மீனலோசனி பிரசில் பதிப்பிக்கப்பெற்றது.
விலை காப்பிரைட்) 1924 (ரிஜிஸ்டர்டு (அணா 4
------------------------------------------

கற்பகவிநாயகர் துணை,
பதிப்புரை.

இம்மாலை சிவகங்கைச் சமீனைச்சார்ந்த திருவாடானைக்குத் தெற்கே எழுமைல் தூரத்திலுள்ள திருவெற்றியூரி லெழுந்தருளியிருக்கும் மகாவரப்பிரசாதியாகி ஸ்ரீ பாகம் பிரியாளென்னும் நாமம் பூண்ட அம்மன் மீது, வேம்பத்தூர்ச் சங்க வித்வான்களிலொருவரும், சிவகங்கை, இராமநாதபுரமென்னு முபய ஸமஸ்தான வித்வான் சிலேடைப்புலி பிச்சுவையரவர்கள் கனிஷ்டரும், சிவகங்கை சமஸ்தான சங்கீதவித்வான் பிர்மஸ்ரீ பெரியவைத்திநாதையரவர்கள் பிரதமசிஷ்யரும், எனது சிறியதந்தையாருமாகிய சிவதாஸரென்ற சர்க்கரை பாரதியவர்களாற் பாடப்பெற்றுள்ளது. இம்மாலையன்றி இவர் திருநெல்வேலி ஜில்லா தென்காசி உலகநாயகியம்மன் பதிகம், திருக்குற்றாலத்தி லெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பழநியாண்டவர் பதிகம் முதலிய பிரபந்தங்களுமியற்றியுள்ளார். இவர் தனக்கு மறுமைக்கண்ணெய்துதற்கரிய பெரும்பேறு கிடைக்கும் பொருட்டுப், பூலோக கைலாசமாகிய மதுராபுரியிலெழுந்தருளிய ஸ்ரீ சோமசுந்தரக்கடவுள் செய்த திருவிளையாடல்களைக் கீர்த்தனங்களாகப் பாடியுள்ளார். இவரது சங்கீத சாஹித்யப் புலமையை இவரியற்றியுள்ள கீர்த்தனங்களானன்கு தெரியலாம்.

சிவகங்கையை யாண்ட ஸ்ரீமாந் முத்துவடுகநாததுரை ராஜா, இராமநாதபுரம் கொடைவள்ளலாகிய ஸ்ரீ பாஸ்கரசேதுபதி ராஜா, ஸ்ரீ தினகரஸேதுபதி ராஜா அவர்களால், இவர் நன்கபிமானிக்கப் பரிசில்கள் பெற்றுள்ளார். மேலும், சேற்றூர், சிவகிரி, ஊற்றுமலை, சிங்கம்பட்டி முதலிய ஜமீந்தார்களாலும் அபிமானிக்கப் பெற்றுள் ளார். சங்கீத சாஹித்ய வல்லுநரானவிவர், பிரபந்தங்கள் செய்ததன்றித், திரிபு, யமகமாகச் சில விடுகவிகளும், சில சித்திரகவிகளும் பாடியிருக்கின்றார். அவ்விடுகவிகளில் ஊற்றுமலைச் ஜமீந்தார் ஸ்ரீமாந் இருதயாலயமருதப் பேந்திராவர்கள் பேரிற் கூறிய கவிகளில் இரண்டொன்றெடுத்துக் காட்டுகின்றேன்.

திரிபு.
விடங்கடங்கா வெனப்புகலும் விழிதனக் கூந்தற்குமரி மேற்காமன்போர்
தொடங்கடங் காமற்சரந் தீர்த்தாளிவளைக் கருதலர்கடொ கையாமாம
குடங்கடங் காவிதந்தேய்க் குங்கழற்காலா வீரைநகர்க் குமணாவீரை
மடங்கடங் காமுரசம திர்முன்றின் மருதப்பேந்த்ர மன்னரேறே.

யமகம்.
வாசியாத வருன்சமுகத் தினில்வந் தடுப்பதரித டுத்தார்பச்சை
வாசியாத வர்காந்திமுன் பங்கயமா மெனக்கல்வி வாய்விரிந்தாலிலை
வாசியாத வரைப்புரக் குங்கணாமாத வாபொன்மகி ழுமகானுபா
வாசியாதவ போதவெனத் துதிமருதப் பேந்தரவெனப் பாவரைவரே,

மாதரங்கமா வெனச்சொன் மாவேகப்ப ரிப்பவனி வருதல்கண்டு
மாதரங்கமா துறங்கமன மின்றியன மின்றிவா டினாள்பூ
மாதரங்கமா கிளுவைமரு தப்பேந்திர வொன்னார்ம டங்கச்செய்து
மாதரங்கமா நிகர்வாண் மனங்களிக்கச் சேர்வையெங் கண்மன்னரேறே.

இக்கவிநயங்கள் திரிபு, யமகம் பாடும் வல்லுநர்க்கன்றி மற்றவர்க்குக் காண்டலரிதாகும். சற்றேறக்குறைய முப்பது வருடங்கட்கு முன்னர் இப்பெரியோர் தேகவியோகமாயினர். இது நிற்க, இவருடன் கூடிப்பழகியவர்களும், எமதுறவினர்களுமாகிய தென்காசி பிர்மஸ்ரீ சங்கரசுப்பையர், ச. நாராயணையர், ரா.சு. அப்பாத்துரை ஐயர், வல்லநாடு கை. ரா. சிவராமகிருஷ்ணையர், முன் பராபரை மாலை யச்சியற்றுதற்குதவிபுரிந்த ஆண்டவனென்னும் பட்டப் பெயர் பூண்ட ஆ. மு. சீனிவாசையர் ஆகிய இவர்களின் தூண்டுதலின் பேரிலேயே, இந்நூலாசிரியரின் பிரபந்த வேடுகளைத் தேடிப்பார்க்கையில் எங்கள் வீட்டிற் சில பிரதிகளும், தென்காசியில் ஒரு பிரதியும் கிடைத்தன. அவைகளை எனது சிறிய தந்தையாருங் குருவுமாகிய பிர்மஸ்ரீ சௌந்தரபாரதியவர்களுடனிருந்து பார்த்துப் பின்னர் முதலில் பிரபந்தத்தை யச்சிடுதற்கு முயற்சித்துச் சில கனவான்களிடத்துத் தெரிவித்தேன். தெரிவித்தும் முயற்சி பயன்படாது

தபிக்கையில் திருவெற்றியூரிற் செனித்தவளும், ஸ்ரீதேவியினிடத்து மிக்க அன்புள்ளவளுமாகிய சங்கீத பண்டிதை நாகரத்தினம் இதற்குச் செலவாம் பொருளை நான் தருகிறேனென்று ரூபாய் நாற்பது வரை கொடுத்துதவினாள். பிறகு அச்சிடலானேன். எனது சிறிய தந்தையாரவர்களிடத்தும், பொருளுதவி செய்த நாகரத்தினத்தினிடத்தும் மிக்க நன்றி பாராட்டுகிறேன். ஸ்ரீ தேவியருள் பெற்றவென் முன்னோர்களின் பிரபந்தங்களை யச்சிடத் துணிந்த வெனதவாவின் விர்த்தி தளராது மேன்மேலும் விர்த்தியாம்படி பராசக்தி திருவருள் பாலிக்க வனவரதமுஞ் சிந்தித்து வந்திக்கின்றேன். சுபம்.
இங்ஙனம்,
பி. நடேசையர்
-----------------------
சாற்றுக்கவிகள்.

வேம்பத்தூர்ச் சங்கவித்வான்களிலொருவராகிய சாமாவையரென்ற ஆண்டியையாவர்கள் குமாரர் சௌந்தரபாரதியவர்களியற்றியது.
வெண்பா.
சீர்மேவுஞ் சோலைத் திருவெற்றி யூரமர்ந்தாள்
பேர்மேவு பாகம் பிரியாள்மே-னார்மேவச்
சாத்தினன்பா மாலைசிவ தாஸனென்ற சர்க்கரைவே
ளேத்திடப்பா வாணரின மே.

வேம்பத்தூர் சிலேடைப்புலி பிச்சுவையாவர்கள் மாப்பிள்ளையும்
சவுந்தாபாரதியின் முதன் மாணாக்கருமாகிய கோவிந்தபாரதிகளியற்றியவை

பாகம் பிரியாப் பரைமீது பாடினான்
மோகம் பிரியா முதிர்சுவையாம் - மேகந்
தவழ்மாட நிம்பைச் சருக்கரை நாமச்
சிவதாசன் மாலைச் செயுள்.

கண்டிக்குத் தேன்முக் கனிரசம்பால் வானமுதைக்
கண்டிக்கும் மாலை கழறினா - னெண்டிக்கும்
பெற்றபுகழ்ப் பாகம் பிரியாண்மேற் சர்க்கரைப்பே
ருற்றசிவ தாச னுவந்து.
----------------
உ - தர்மமே ஜெயம்.
கற்பகவிநாயகர் துணை.

பாகம்பிரியாள் மாலை.

காப்பு.
சீரார் திருவெற்றி யூரார்ந் திலங்குஞ் செகசெனனி
நீரார் சரோருக நேரும் பதத்தைநா னெஞ்சிலெண்ணிப்
பாராரும் பைந்தமிழ்ப் பாமாலை பாடிப் பணியவருள்
காரார் கரிமுகத் தெந்தை கணேசன் கழறருமே,

நூல்.
கட்டளைக்கலித்துறை.
பூமேவு கல்வியுஞ் செல்வமு மாயுளும் போற்றிடுமெய்ப்
பாமேவு ஞானமும் பத்தியுந் தேன்றுளி பாய்மலர்ப்பொற்
காமேவு மீகையுந் தந்துமே நாடொறுங் காத்திடுமாற்
றேமேவு பாகம் பிரியாத வன்னை தெரிசனமே.       (1)

கூர்வாளை வென்ற விழியாளை மாநடங் கொண்கனொடு
நேர்வாளை நெற்றி நெருப்பாளை மேதி நிசிசரனை
யீர்வாளை யென்னு ளிருப்பாளை யெங்கு மிவருமரி
யூர்வாளைப் பாகம் பிரியாளைப் போற்றுவ ருத்தமரே.       (2)

பாசாங் குசத்தியைப் பண்பா ரிடைச்சியைப் பத்தருளத்
தேசாருஞ் சோதி மயமான செல்வியைத் தேர்ந்துபணி
தாசானு தாசர்க் கருளு மறத்தியைத் தத்தைநிகர்
தேசாரும் பாகம் பிரியாளை யென்றைக்குஞ் சிந்திப்பனே.       (3)

வாராது வன்னோய் மருவாது வெம்பேய் மலர்த்திருவும்
போரார் திருவும் புயமுறச் செய்குவள் பொங்கிவளர்
சீராருஞ் செல்வத் திருவெற்றி யூரருட் செல்விமிகு
மோரரும் பாகம் பிரியாள் பதத்துணை யேத்துவர்க்கே.       (4)

பாகான சொல்லியைப் பண்பாரும் வல்லியைப் பார்முதலாம்
லோகாதி யண்டங்கள் யாவையும் போற்றும்வி லோசனியை
வாகாருந் தோகை மயிற்சாய லாளை மணிவிளக்கை
யோகாளைப் பாகம் பிரியாளைச் சிந்திப்பர் யோகிகளே.       (5)

சூனிய வஞ்சக் கருத்தொழிற் கேடு சுகமிகுநல்
மேனியின் மேவிவடுச்செய் யுரோகம் வெண் மேகவெட்டை
வானியல் பக்ஷிகளால் வருந் தோஷம் மனமருட்சி
கானியற் பாகம் பிரியா ளெனிற்செலுங் காவதமே.       (6)

மண்ணாடுந் தேவர் வளநாடு மாலயன் வாழுலகு
மெண்ணாடு மண்டங்கள் யாவையு மீன்றவ ளெண்ணிநிதம்
கண்ணாடு மன்பர் கவலையைத் தீர்த்துக் கனிந்தவர்த
முண்ணாடி மேவுபா கம்பிரி யாளெனு முத்தமியே.       (7)

முத்தேவ ருக்கும் முதல்விமுக் கண்ணி முகுளிதநேர்
முத்தார முத்தனத் தாள்கர ணங்களோர் மூன்றினுமே
நத்தா தவர்தம்மை நத்தா தவளுயர் நாசிகையி
னத்தாரும் பாகம் பிரியாண் மலர்ப்பதம் நம்புவமே.       (8)

காகங் கருடன் றனைநிகராது கரும்பிணையாய்
மாகம் வரைவளர் நாண லுறாது மதிக்கிணைய
நேகம் முடுக்கண மாகாத வாறுபோ னீணிலத்திற்
பாகம் பிரியாட் கிணையொரு தெய்வத்தைப் பன்னரிதே.       (9)

நந்தா மெனப்புகழ் கந்தரத் தாளடி நாண்மலரில்
நந்தாத பத்திகொண் டர்ச்சித்து நாளும் நயக்கினுயர்
கொந்தாருங் கற்பக நீழலின் வாழ்வுங் குலத்தின்மிகு
சந்தானம் பாகம் பிரியாத வன்னை தருமுவந்தே.       (10)

மானே யனைய விழித்துணை யாளிம வான்றனையள்
கானேய் மலரணி குந்தளத் தாள்குழைக் காதுடையாள்
ஆனே யெனப்புகழ் வண்மைக் குணமுடை யாள்தனக்குத்
தானே நிகர்சொல்பா கம்பிரி யாள்பதந் தந்திடுமே.       (11)

மாடங்கொள் மேடை மணியா டாங்கொளிர் மாமணியின்
கூடம் வயப்பரி யாரு பிரதங்கள் கூர்மதமா
ஆடம் புனற்றடஞ் சூழ்திரு வெற்றியூ ராள்பவள்வி
சேடங்கொள் பாகம் பிரியாள் தினமருள் செய்குவளே.       (12)

பூமன் னினைந்திப் புவியையுண் டாக்கவும் பூந்தளவத்
தாமன் மகிழ்ந்து தினந்தொறுங் காக்கவுந் தண்மதிகொள்
வாமன் வியந்துதன் செய்கையை யாற்றவும் வாழ்த்தென்மனத்
தேமெனும் பாகம்பிரியாள் பலதுணை செய்திடுமே.       (13)

மேதையர் போற்று மபிராமி யேழையின் வெவ்வுரையா
மீதை மகார்மழ லைச்சொலைத் தாய்கேட் டினித்திடல்போல்
கோதை யகற்றி மகிழ்வாய் மனத்தினிற் கொண்டருள்வாய்
சூதைப் புரிசிவன் பாகம் பிரியாச் சுடர்க்கொழுந்தே.       (14)

கோகன கத்திரு மாயனும் பால்நிறங் கூறெகின
வாகனத் தேவனுங் காணாம லோங்கி வளர்ந்திடுநல்
ஏகனித் தாரணி கொண்டாடு மெய்த்தர்ம மென்னும்விடைப்
பாகனட் பாகம் பிரியா ளருள்செயும் பாக்கியமே.       (15)

கஞ்சத்தில் வாழ்பவ னுந்திரு மாயனுங் காமனும்ப்ர
பஞ்சமும் யாவுந் தொலைந்திடும் நாளினின் பாகமமர்
மஞ்சொத்த கண்ட னழியா திருந்திடல் வாய்த்தவருட்
புஞ்சமெய்ப் பாகம் பிரியாண் மொழியற் புதமென்பரே.       (16)

காலன்றன் பாசம் விரவாமற் போற்றுங் கருதலர்நம்
மேலடர்ந் தேஜெயங் கொள்ளாது செய்திடு மேவவையின்
பாலுரைக் குஞ்சொற் றவறா தியற்றுமன் பாயொளிர்முச்
சூலங்கொள் பாகம் பிரியாத வன்னை துணைப்பதமே.       (17)

பொருதா நேரும் விழியாள் புராந்தகி புங்கவியோங்
கிருதா மான பயோதரத் தாள்மனத் தெப்பொழுதுங்
கருதான் காமுறு நேயத்தி னாண்மிகு காதலுடன்
ஒருதாம் பாகம் பிரியா ளெனிற்செல்வ மோங்கிடுமே.       (18)

காட்டிலுற் றாலுங் கடலிலுற் றாலுங் கடிமணலின்
மேட்டிலுற் றாலும் வினையார் கொலைஞர் மிகவுறுமந்
நாட்டிலுற் றாலும் நினைக்கி னபய நவின்றருளசீ
மாட்டிமெய்ப் பாகம் பிரியாண் மலர்ப்பதம் வாழ்த்துமினே.       (19)

மாடீயும் மாமலர்க் கற்பகச் சோலை வளமிகுபொன்
னாடீயு நான்முக னுந்திரு மாயனும் நண்ணருமெய்
வீடீயு நாளுந் துதிக்குமெய்த் தொண்டன் வியந்திடப்பொற்
றோடீயும் பாகம் பிரியா ளெனச்சொலுந் தொல்புவியே.       (20)

காந்தளம் போதி னுயர்வான கையினள் காதலுறுஞ்
சாந்தமி லங்கும்ப யோதரத் தாள்செயத் தம்பமதி
லார்ந்திடும் வாகைப்ப தாகையி னாள்விடை யண்ணலுடன்
சேர்ந்திடும் பாகம் பிரியா தவட்கிணை செப்பரிதே.       (21)

நாரணி பார்ப்பதி கல்யாணி நாண்மலர் நான்முகன்சொல்
ஆரணி யான பாரபரை நாளு மருளுமன்ன
பூரணி நற்றவஞ் செய்திடுந் தென்னன் புதல்விசெக
காரணி பாகம் பிரியா தவளெனைக் காப்பவளே.       (22)

வற்றாம் லோங்குங் கருணையின் வாரிதி வந்தடிமை
யுற்றார்க் கெமன்செய லோடச்செய் யுத்தமி யோங்கமணர்ச்
செற்றாளு ஞானசம் பந்தனுக் குப்பா றெளிந்துதவும்
நற்றாய்மெய்ப் பாகம் பிரியாள் வரந்தரு நாடொறுமே.       (23)

கண்டே யெனப்புகழுஞ்சொல்லி யோங்குபொற் காம்பைநிக
ரெண்டோளி தூய வபிராமி வாமி யெமனுடலம்
விண்டோடும் வண்ண முதைத்தவ ணாயேன் வினைத்தொகைது
வண்டேகப் பாகம் பிரியாள் பதத்தை வணங்குவனே.       (24)

ஆரங் கடக மணிந்திடுஞ் சூலி யமைப்பருமெய்
வீரசிங் காசனி வேதா கமம்புகழ் மேன்மையினா
ளீரம் மிகுந்தகங் காநதி சூடு மிறைவனெனுந்
தீரனற் பாகம் பிரியாட் கிணை தெய்வஞ் செப்பரிதே.       (25)

பாசாங் குசத்துடன் சூலமுந் தாங்கிமெய்ப் பத்தர்மன
மேசார்ந் தருளும் கருணா கடாக்ஷியிம் மேதினியோர்
மாசாந்தந் தோறும்வந் தேபணிந் தானல் வரங்கள்தருந்
தேசார்ந்த பாகம் பிரியா ளெனச்சொலும் தெள்ளமுதே.       (26)

காதாடு மூச லெனத்தோ டிரண்டுடன் கழைநிகர்தோள்
மீதாடுஞ் சோதி மிகுமணி மாலை விசித்தகச்சார்
சூதாடு மீசன்முன் னாளினிற் றேவர் தொழநடஞ்செய்
போதாடும் பாகம் பிரியா ளெனச்சொலும் பூங்குழற்கே.       (27)

ஆதிப ராபரை சூலித யாபரி யாாணிபொற்
சோதிகு ணாகரி யானந்த போதினி சூழ்ந்தமரர்
ஓதிமை யாசல முற்றவ ளீச னுவந்திடுமெய்ப்
பாதிநற் பாகம் பிரியா தவளருள் பாலிக்குமே.       (28)

காவிய நான்முகன் செப்பிடும் வேதா கமத்தினிடம்
மேவிய மெய்ப்பொரு ளாய்வளர்ந் தோங்கும் விமலைபுகழ்
நாவிய லாசு முதனாற் கவியும் நவின்றிடவே
தேவியம் பாகம் பிரியா டிருவருள் செய்திடுமே.       (29)

நிம்பா புரிமறை யோன்சிவ தாச னிகழ்த்தணியைச்
செம்பாக மாக நினைந்துளங் கொண்டு திருத்தளியிற்
கும்பாகக் கூடு மடியார்க் குரைத்தருள் கூர்ந்தெளியேன்
வெம்பாமற் பாகம் பிரியா ளருளுமெவ் வேளையுமே.       (30)

முற்றிற்று.
------------

This file was last updated on 15 Dec. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)