pm logo

ராஜம் கிருஷ்ணன் எழுதிய
பாதையில் பதிந்த அடிகள்
பாகம் 2 (அத்தியாயம் 17-32)


pAtaiyil patinta aTikaL
by rAjam kirushNan
part 2, chapters 17-32
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

ராஜம் கிருஷ்ணன்எழுதிய
பாதையில் பதிந்த அடிகள்
பாகம் 2 (அத்தியாயம் 17.32)

Source:
பாதையில் பதிந்த அடிகள்
ராஜம் கிருஷ்ணன்
காலச்சுவடு பதிப்பகம், சென்னை,
இரண்டாம் பதிப்பு, 2014
----------------------

பாதையில் பதிந்த அடிகள்
அத்தியாயம் 17


ஆண்டு 1944, மே மாதம் மூன்று, நான்கு தேதிகளில், மன்னை நகர் அதுகாறும் காணாத விழாக் கோலம் கொண்டது. அதுகாறும் திருவிழா என்பது, நகரில் கோயில் கொண்டுள்ள இராஜகோபால சுவாமி கோவில் சார்ந்து வெண்ணெய்த்தாழி உற்சவமாகவே இருந்து வந்திருக்கிறது.

ஆனால் இந்த விழா புது மாதிரியான விழா. உழைக்கும் மக்கள் பள்ளுப் பறைகள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் ஆயிரமாயிரமாகத் திரண்டு வந்த விழா. இந்த விழாவில், பூசை, அலங்காரம், பட்டுப்பாவாடை அணிந்தவர்களின் அணிகள் ஏதும் கிடையாது. ஒரு சிலரின் ஆடம்பர விழா அன்று இது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் ஒவ்வோர் ஏழையும், தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வழி காணும் விழாவாகவே நினைத்து, தங்கள் காணிக்கைகளைச் சுமந்து வருகின்றனர். பாற்குடங்கள், தயிர்க்குடங்கள், அரிசி, பருப்பு, காய்கறி வகைகள் என்று அலங்காரச் சீராக மன்னை நகரின் மாநாட்டுப் பந்தலுக்கு மேள தாளங்கள், கொம்பு, தாரை தப்பட்டைகளுடன் வந்து சேருகின்றன. அனைத்து உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கு இதைவிட அரியதோர் விளக்கம் வேறு எங்கேனும் காண முடியுமா? மணி இம் மாநாட்டுக்காக உண்டியல் குலுக்கியிருக்கிறாள். ஆனால், கிடைக்கும் கூலி நெல்லில் ஒரு பகுதியைச் சேமித்து, துளிகளைப் பெருவெள்ளமாக்கி இந்த மாபெரும் வேள்வியில் தம்மை ஈடாக்கிக் கொண்ட அந்த எளியவர்களைக் கண்டு மனமுருகி நிற்கிறாள் மணி. தீண்டாமை என்ற ஓர் அரணுக்குள் கண் விழிக்கும் இளம் குருத்துகள் அதுகாறும் வெளியே தடுப்பு மீறி வந்து தொட்டால் நீரும் அசுத்தமாகி விடும் என்பதை எப்படி ஏற்றிருப்பார்கள்?

தொட்டுப் பார்க்கலாம், மேல் சாதித் தெருவுக்குள் வாருங்கள்! என்று திராவிட இயக்கம் இவர்களை ஊக்கியது உண்மையே. ஆனால் அதற்கு மேல் ஆண்டான் அடிமைக் கொடுமைக்கு முடிவு கட்ட இந்தப் பேரியக்கம், இவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல, இந்த மன்னை நகரில் விழாக்கொடி ஏற்றுகிறது.

முதல் விவசாயிகள் சங்க மாநாடு! விவசாயத் தொழிலாளர் சங்க மாநாடு!

இந்த மாநாடு வெறும் பொருளாதார அடிப்படையில் துண்டாக நின்றுவிடாமல், மக்கள் அனைவரையும் மனிதாபிமான அடிப்படையில் முழுமையாக இணைக்க வழி செய்கிறது. தலைவர்கள் உரைகள், திட்டங்கள், தீர்மானங்கள் என்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து, மக்களின் பிரபுத்துவ - அடிமை மனப்பான்மையையும், நிராசையில் அவிழ்ந்த சோர்வையும் புரட்டிவிடும் ஒரு சுறுசுறுப்பைத் தோற்றுவிக்கக் கலை நிகழ்ச்சிகள், அனைத்து மக்களையும் பரவசம் கொள்ளச் செய்கிறது. கந்தன் காட்டிய வழி - சுப்பனார் - சோவியத் வீராங்கனை - தான்யா என்று பல்வேறு நாடகங்களை, மக்களுக்காகவே மக்களே நடிக்கின்றனர். எழுச்சித் தத்துவம் இந்தக் கலை வடிவங்களை மேலும் பரிமளிக்கச் செய்கின்றன.

இந்த மாநாடு, ஒடுக்கப்பட்டவர்களை ஊக்கி எழுச்சி கொள்ளச் செய்யும் பொது உடைமை இயக்கத்தின் வெற்றியாகப் பரிணமிக்கிறது. பிரபுத்துவக் கூறுகள் வாளாவிருக்குமோ? எளிய மக்களின் கட்டமைப்பு அரணை வன்முறை அதிரடிகள் கொண்டு தகர்க்க முற்படுகின்றனர். மணியின் உறவுக் குடும்பங்கள் இவளுக்கு எதிரான அஹிம்சை காங்கிரசின் அணியில் இருக்கின்றன. இவள் அவர்களை எதிரிட்டுக் கொள்ளச் சிறிதும் தயங்கவில்லை.

“நெல்லைத் திருடினான் என்று கட்டி வைத்துத் திருக்கை மீன்வால் சாட்டை கொண்டு அடிப்பார்கள். அதாவது அவன் பெண்சாதிக்கு முன் கட்டிவைத்து அடிப்பார்கள்! அவன் பெண்சாதியையே சாணி கரைத்து வரச்சொல்லி, அவன் பொய் சொன்னான் என்று வாயில் செருப்பு வைத்து அதன் வழி அதை ஊற்றுவார்கள். பிறகு, ஓரணாக்காசை விட்டெறிந்து அவளிடம் கள் வாங்கி வந்து அவனுக்கு மானம் மரியாதை மரத்துப் போக ஊற்றுவார்கள். இந்த ஆள்கள்... அஹிம்சைக் காங்கிரஸ்!” என்று பண்ணை அருகிலேயே கூட்டம் போட்டுத் தோலுரிக்கிறாள். பண்ணையாள் கூலி, ஒப்பந்தத்தில் கண்டபடி உயர்த்திக் கொடுக்க, ஒரு மிட்டா மிராசும் ஒப்பவில்லை. குத்தகை வார விவசாயிகளுக்கு, நியாயமாகப் பெற்றுக் கொண்ட நெல்லுக்குக் களத்து மேட்டிலேயே ரசீது கொடுக்க வேண்டுமே?... அதைப் பற்றியும் அந்த வர்க்கம் சிரத்தை கொள்ளவில்லை.

ஒப்பந்தம் என்பது, இந்த வாயில்லாப் பூச்சிகளுக்காகப் பரிந்து வரப் புறப்பட்டிருக்கும் தலைவர்களை அப்போதைக்குச் சரிக்கட்டப் பயன்படுவது. காலம் காலமாக இவர்கள் அனுபவித்துவரும் உடைமை உரிமைகளின் மீது அவர்கள் எப்படியும் கை வைக்க முடியாது என்று பிடிவாதமாகவே நிற்கிறது பண்ணை வர்க்கம்.

எனவே, இந்த வர்க்கம் அடியாள்களை வெளிப்பிரதேசங்களில் இருந்து தருவித்து வைத்துக் கொண்டு வன்முறைக்குச் சோறு போடுகிறது. இந்த அடியாள்கள் யார்? பாசன வசதிகள் இல்லாமல், மானம் பார்த்த சீமையில் பிழைக்க வழியின்றி வயிறு பிழைப்பதற்காகச் சகோதரர்களையே கொல்லத் துணிந்து விட்ட, அடிமை வர்க்கத்தினர்தாம்.

உடைமை வர்க்கம், இவ்வாறு, உழைப்பாளரைக் கூறுபோட்டுக் கொக்கரிக்கையில், உழைப்பாளருக்காகவே ஒன்று திரண்டு வரும் மனித சக்தி வாளாவிருக்கலாமா?

இந்த உழைப்பாளிகளின் சங்கங்களில் உடல்பயிற்சி, தற்காப்புக்கான சிலம்பம் போன்ற விளையாட்டுகள் இளைஞரிடையே ஊக்குவிக்கப்படுகின்றன. இவர்கள் பரம்பரை விளையாட்டுகளை, இந்தச் சங்க அமைப்புகள் புதிய திருந்திய நோக்குடன், எல்லா இளைஞருக்கும் பயிற்றுவிக்க, தொண்டர் பயிற்சி முகாம்களை நடத்துகின்றன. பள்ளி மாணவராகவே இயக்கத்தில் பங்கு கொண்டு மணியுடன் உற்சாகமாகப் பணி செய்ய வந்த இளைஞன் கோபிக்கு இவள் மீது அளப்பரிய வியப்பு!

இத்தொண்டர் பயிற்சி முகாமொன்று, நாகையின் சுற்றுப்புறத்தில் உள்ள ஒதுக்கமானதொரு தென்னந்தோப்பில் நடக்கிறது. நிலவு நாள்கள். அறுவடை முடிந்து, மக்கள் கிராம தேவதைகளுக்கு விழா எடுக்கும் காலமும் இதுதான். சிக்கல்சிங்காரவேலனின் திருவிழாவும், சித்திரா பௌர்ணமியுடன் நடக்கும் எட்டுக்குடி வேலனின் காவடி உற்சவங்களும், அந்தக் கீழ்த்தஞ்சை பிரதேசங்களையே விழாக்கோலம் கொள்ளச் செய்யும். இந்தத் தெய்வ விழாக்களில், சுவாமி பவனி வரும்போது, வீர விளையாட்டுகளை இளைஞர் ஆடிக் காண்பித்து மக்களின் மனங்களில் களிவெறியும் உற்சாகமும் பெருக்கெடுக்கச் செய்வது வழக்கம்.

மணியைப் பொருத்த வகையில், அவள் எந்தத் தெய்வத்தையும் கும்பிடச் செல்வதில்லை. அந்தப் பூசைப்பெட்டியை ஒதுக்கித் தள்ளிய பிறகு, மானுடமே மேலான தெய்வம் என்று உறுதியாக நிற்கும் ஒரு பண்பு அவளுள் மேவியிருக்கிறது. அந்தப் பண்பு மேல் வர்க்கம் கொண்டாடும் எந்த ஆலயத்திலும் நேர்மையில்லை என்ற தெளிவை இவளுக்கு ஊட்டியிருக்கிறது. ஆனால்... இந்தக் கீழ் வர்க்கம்... அறியாமையும் மூட நம்பிக்கைகளுமாக அழுத்த, பூச்சியாக நசுங்கிக் கொண்டிருக்கும் மானிட உயிர்கள். அந்த மானிடத்தை மீட்க, அறியாமை நம்பிக்கைகளை அகற்றிக் கொள்ளும் முன்பு, மேலும் மேலும் புறத்தே வரும் தாக்குதல்களைச் சமாளிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தத் தற்காப்புக் கலைகள், இவர்கள் தெய்வ நம்பிக்கை சார்ந்தே காப்பாற்றப்பட்டிருக்கின்றன.

மணி தொண்டர் பயிற்சி முகாமில் அமர்ந்து இளைஞர் கம்பு சுழற்றுவதைப் பார்வை இடுகிறாள்.

நல்ல நிலாக் காலம். கடற்காற்று குளிர் சாமரமாக மேனியை வருடும் இதம். ஏதோ பழவாசனை போல், இலுப்பை மலர்களின் மணம். ஊடே பெண்கள் அணிந்திருக்கும் மல்லிகையின் மணம் பிரிக்க முடியாதபடி கலந்து கொள்கிறது.

அம்மா உட்கார ஒரு கயிற்றுக் கட்டில் போடப்பட்டிருக்கிறது. தீவர்த்திக் கம்புடன் ஓராள் நிற்கிறான்.

இந்த இளைஞர்களுக்குக் கழி சுழற்றும் ஆட்டம் கற்பித்த ஆசான் சாம்பான், ஓரமாக நிற்கிறான்.

“உட்காருங்கள் தோழர்!...”

கட்டிலில் அவனை உட்காரச் செய்கிறாள். நெருக்கமாக... இடம் கொடுக்கும் அளவுக்கு.

கழி சுழற்றிக்காட்ட வந்திருக்கும் இளைஞர் அனைவருமே ஊட்டத்தினால் கொழுத்த பலாட்டியர் இல்லை. சிதறல் நெல் அரிசியும், உப்பும் புளியும், நண்டும், மீனும், நேர்மை என்ற உரமும் தாம் இவர்கள் வலிமை.

ஆசானின் கால்களைத் தொட்டுக் கும்பிடுவதுடன் அம்மாவையும் கும்பிட்டு கிருட்டிணன் கம்பு சுழற்றுகிறான்.

மணி உன்னிப்பாகப் பார்க்கிறாள். கைகள் அசைகின்றனவே ஒழிய, உடல் இலாகவமாக வளையவில்லை. இந்த விளையாட்டின் தத்துவமே, பிறர் தாக்குதலுக்கு உள்படாமல் தன்னைக் காத்துக் கொள்வதென்றுதான் மணி உணர்ந்திருக்கிறாள்.

கால் மணி கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பையன் தளர்ந்து போவதைக் காண்கிறாள்.

“என்னடா பசங்க... நீங்க. சோம்பேறிக் கையாலாகாத பசங்க ஆடற ஆட்டமா இருக்கு!...”

அம்மாளின் இந்தக்குரல், அவர்களைத் திகைக்கச் செய்திருக்கிறது என்பதை உணர்ந்த மணி புன்னகை செய்கிறாள்.

“கொண்டா அந்தக் கழியை, நான் காட்டுகிறேன் எப்படீன்னு?” ஆசானான சாம்பான் திகைக்க, இளைஞன் கோவிந்து, “அம்மா? உங்களுக்கு... உங்களுக்குக் கம்பு சுழற்றத் தெரியுமா?” என்று வினவுகிறான்.

“இப்ப நாலு பேரைக் கூட்டிட்டு வந்து மோதவிடு. நான் எப்படிச் சமாளிக்கிறேன் பாரு!...”

மணிக்கு உற்சாகம் பிய்த்துக் கொண்டு போகிறது. எழுந்து இடுப்புத் துண்டைச் சட்டைக்கு மேல் வரிந்து கட்டுகிறாள். உயர்த்திக் கட்டிய வேஷ்டி; சிக்கென்று கம்பை வாங்கிக் கொண்டு களத்தில் துள்ளிப் பாய்கிறாள்.

“வாங்க...? வாங்கடா...?”

அம்மாளின் ஆட்டம் கண்டு அந்தத் தோப்பே ஸ்தம்பித்துப் போனாற்போல் இருக்கிறது. கடல் அலை ஓசை கேட்கவில்லை. காற்று வீச மறந்து போகிறது.

“ஆகா! அபாரம்... அம்மா... அம்மா..!”

“நீங்க மாரியாத்தாளா? நாங்க கும்புடற தெய்வமா?” எட்டு வகைப்பிடிகள், சுழற்சிகள், தாவல் என்று அற்புதம் நிகழ்த்திவிட்டு வருகையில்,

அவளுக்கு மூச்சு வாங்குவது கூடத் தெரியவில்லை. சோடா உடைத்துக் கொண்டு வருகிறார்கள்.

மேல்துண்டை அவிழ்த்து முகத்தில் ஒத்திக் கொண்டு மணி அமருகிறாள்.

“... அம்மா... உங்களுக்கு இதெல்லாமும் தெரியும்னு கொஞ்சங்கூட நம்பவில்லையே இதுநாள்?”

“ஆமாம்பா, என் வாழ்க்கையில் நான் ஒவ்வொரு நிலையும் தனியாக நின்று, இந்தச் சமுதாயத்தை எதிர்த்துப் போராடணும்னு உணர்ந்திட்டேன். என்னைச் சுற்றியிருக்கும் கூட்டம் என்னை எப்ப குழியில் தள்ளலாம்னு குறிவச்சிட்டிருக்கப்பா. நான் இந்தப் பொதுவாழ்க்கைக்கு என்னைத் தயார் பண்ணிக் கொள்ளும் அந்தக் காலத்திலேயே... பள்ளர்குடியில் ஒரு குருவிடம் இதை முறையாகக் கத்துக்கிட்டேன். பயிற்சியும் செய்வேன்...”

அந்தத் தடவையில் எல்லைக் காளியம்மன் விழாவில், அம்மன் பவனி வருகையில், இந்தத் தொண்டர் படை மஞ்சள் கச்சையணிந்து, கையில் கழி பிடித்து, ஆங்காங்கு ஆட்டம் காட்டி மக்களை மகிழ்விக்கிறது. இந்தப் பவனியில் இடுப்பில் துண்டு கட்டி, மணியும் இருக்கிறாள். ஒவ்வொரு ஆட்ட வீரனும், அம்மையின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்ட நிலையில் ஆடும்போது, அது வெறும் ‘அம்மா’ சங்கத்தை நடாத்தும் தலைவி என்ற தகுதிகளுக்காக மட்டுமில்லை, வீர விளையாட்டுகளுக்கு ஆசானாக இருக்கும் அன்னையும் அவளே என்று உணர்த்தும் வந்தனம் அது என்று கோபி மனம் நெகிழ்ந்து நிற்கிறான்.

இவளுடைய பொழுது, நாகை, திருவாரூர் என்று பெரும்பாலும் இப்போது சென்றாலும், மணலூர் குடிமக்களை மறக்கமுடியுமா?

...அம்மா...! அம்மா...!

என்று இரவிலும், வாய்க்காலின் குறுக்கே தென்னை மரப்பாலத்தில் தண்ணீருக்கு மேல் நடந்து வரும் இவளைக் கண்டு கொள்கின்றனர். எந்தக் குடிலின் வாசலில் - சாணி மெழுகிய திண்ணையில் இவள் உட்காருகிறாளோ, அது மக்கள் குழுமிக் குறைகள் கூறும் நியாய அரசவையாகி விடுகிறது. முடங்கிவிட்ட குடிசைகள் அனைத்திலும் உயிர்ப்பு முகிழ்க்கிறது.

“அம்மா! மணியம்மா வந்திருக்காங்க!...”

“அம்மா! இந்தப் பட்டாமணியப் பண்ணைங்க பண்ணுற அக்கிரமம் சகிக்கலம்மா...! அம்மாளத்தேடி மூணு தபா திருவாரூர் போனமுங்க!”

“அம்மா எங்களை மறந்துட்டீங்களாம்மா?”

“ஏம்பா அழுவுறீங்க? உங்களை நான் எப்படி மறக்கிறது? உங்களுக்காகவே போராடுறதுன்னு நான் என்னிக்கோ காட்டிக்கிட்டேன்... அட... யாருடா, இவன் ராமனில்ல? என்னடா முதுகில்... பச்சிலயா போட்டிருக்கு!”

சிம்னி விளக்கை ஏற்றி வந்து சாஞ்சி காட்டுகிறான். தோள், முதுகு, கன்னவிளிம்பு...

“என்னடா அநியாயம் இது? என்னமோ திராவகத்தைக் கொட்டினாப்பலல்ல இருக்கு? யார்ரா செய்தது?”

மணிக்கு உள்ளம் கொதிக்கிறது.

“எதுக்குன்னு கேளுங்கம்மா? இந்தப் பய கொஞ்சம் துடிப்பான புள்ள. பண்ணயில குதுர, குட்டி போட்டிருக்குதுங்க. அது... இம்மாத்தம் பெரிசா இருக்குதா...? மேஞ்சிட்டிருந்திச்சிங்க. இவனுக்கு அதுல ஏறிச் சவாரி பண்ணணும்கற ஆச. என்ன செஞ்சிட்டான், ஆலமரத்து விழுதப்புடிச்சி இழுத்து முறுக்கி, அத்தப் போட்டு லகான் போல இழுத்திட்டு, அதுமேல உக்காந்திட்டான். அது வீலு வீலுன்னு உதச்சிட்டு, பாயுது. இவன் விழுதைக்கட்டி இழுத்திட்டு, பண்ண வூட்டுக்கு முன்னாடி போயிட்டான்... “அடி செருப்பால, பறப்பயலே, உனக்கு குருத சவாரியாடான்னு புடிச்சிக் கட்டி வச்சி, திருக்கைவால் சாட்ட கொண்டாந்து அடிச்சிட்டாரு...”

“ஆரு... பாவி, இந்த மாதிரி ஒரு அசாதாரணமான தீரச் செயலுக்கு பண்ணராஜ்யத்தில் வாண்டையாரு குடுத்த சம்மானமா? இவங்களுக்குக் கேடுகாலம் காத்திட்டிருக்கு. சபாஷ் ராமா! நீ குதுர மேல ஏறி எப்படியும் அவம்முன்ன சவாரி பண்ணிட்டே!... நீ நிசமாவே பெரிய குதிரை வீரனா வருவே! குதிரை வீரன், உத்தண்டராமன்...! நீ படை வீரன்! சேனாதிபதி...! நல்ல குதிரை வாங்கி, அதில் சேணம் கடிவாளம் போட்டு, பிரமாதமா சவாரி பண்ணப்போறே. இப்ப, நல்ல மருந்து போட்டு, காயத்தை ஆற வச்சிக்கோ. அந்தப் பண்ணையாருக்கு நான் நியாயம் பண்ணுறேன்.”

இவளை அந்த மக்கள் கண்கண்ட தெய்வமாகப் போற்றாமல் வேறு என்ன செய்வார்கள்?
-------------

அத்தியாயம் 18


ஆண்டு 1945, மணிக்குப் புதிய உற்சாகமளிக்கும் விதமாகவே பிறக்கிறது. இந்த ஆண்டில் மணி கவிக்குயில் சரோஜினி தேவியைப் பார்க்கப் போகிறாள்; அவர் உரையைக் கேட்கப் போகிறாள்.

ஜனவரி இருபத்து நான்காம் தேதி, பெரம்பூர் ரயில்வே இன்ஸ்டிட்யூட் மைதானத்தில், தொழிற்சங்க காங்கிரஸ் நடக்கிறது. தொழிற் சங்கத் தலைவராக இந்நாள்களில் ‘டாங்கே’ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், பிரிட்டனில் நடக்கும் தேர்தலை முன்னிட்டு அவர் இங்கிலாந்து சென்றிருக்கிறார். ‘கன்ஸர்வேடிவ்’ என்ற பழைமைவாதிகளின் கட்சி வீழ்ந்து, தொழிற் கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுக்குச் சுதந்திரம் வரும் வாய்ப்பு பெரிதும் கூடுகிறதன்றோ?

அவருக்குப் பதிலாக தோழர் பங்கிம் முகர்ஜி தலைமை ஏற்க, கவிக்குயில் சரோஜினிதேவி மாநாட்டைத் திறந்து வைக்கிறார்.

இந்தியப் பெண் குலத்தின் ஒளிவிளக்கு! தேசத் தந்தை என்று மக்கள் கொண்டாடும் காந்திஜியின் உள்ளார்ந்த செல்வி. தங்கச் சிறகுகளுடன் கவிதை வானில் வட்டமிடும் இந்தப் பெருமகள், தூசிக்காற்றுச் சூழலின் தொழிற்சங்க மாநாட்டைத் திறந்து வைத்து வாழ்த்த வருகிறார். சென்னை நகரில் கால் வைக்கும்போதே புதிய கிளர்ச்சி தோன்றுகிறது.

இம்முறை அவள் ஆலிவர் ரோடு வீட்டுக்குச் செல்லவில்லை. தமக்கை மகன் மூர்த்தியும் மயிலாப்பூரில்தான் இருக்கிறான். இவனுக்குத்தான் நாகையில் கல்யாணமாயிற்று. தங்குவதற்கு ஏற்ற வீடு. தன்னுடன் வரும் இரு நண்பர்களையும் கூட்டி வருகிறாள்.

இந் நாட்களில், மணி எத்தனையோ மாநாடுகளில் பங்கு கொண்டிருக்கிறாள். விவசாயத் தொழிலாளர் சங்க மாநாடுகள் - கட்சி மாநாடுகள், தொழிற்சங்க மாநாடுகள் என்று தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் சென்று, தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, பல தலைவர்கள், தோழர்களின் பரிச்சயங்கள், நட்புறவில் நனைந்திருக்கிறாள். அறிவின் விரிவும், குறுகிய எல்லைகளின் குத்தலும் அனுபவப்பட்டிருக்கிறாள்.

ஆனால், கவியரசியின் குரலினிமையிலும், அதன் கம்பீர முழக்கத்திலும் மணி பரவசமடைகிறாள். ஏதோ ஒரு மந்திர நாதம் வந்து கட்டிப் போடுவது போன்று அச்சொற்கள் அவளை ஈர்த்துக் கொள்கின்றன.

“தொழிலாளத் தோழர்களே! இந் நாட்டின் உயிர் நாடிகள் நீங்கள். உங்களுடைய ஆக்க சக்தியும் ஒற்றுமையும் கட்டுப்பாடுமே, இந்தியாவின் உயிரோட்டமான வலிமை...!”

மக்கள் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் கை கொட்டித் தங்கள் வலிமையை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். அந்த மகிழ்ச்சி அலையும், பரவசமும் எங்கு நோக்கினும் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கையாகத் திகழ்கிறது. தலைவர் என்றால் இவரல்லவோ தலைவர்! தொடக்க உரை நிகழ்ந்து முடிந்ததும், தோழர் பங்கிம் சந்திரர், உரையாற்ற எழுந்திருக்கிறார். அவரது ஹிந்தி உரையை மொழி பெயர்க்க மொழி பெயர்ப்பாளர் வந்ததும், கூட்டத்தில் சலசலப்பு உண்டாகிறது. யார் யாரோ, ‘பி.ஆர். வேண்டாம்!’ என்று கூச்சல் போடுகிறார்கள்.

சரோஜினி எழுந்து நின்று கையமர்த்துகிறார்.

“என்ன விஷயம்? ஏன் இப்படி சத்தம் போடுகிறீர்கள்?”

“இந்த மொழி பெயர்ப்பாளர் வேண்டாம்!” என்று எங்கிருந்தோ ஒரு தனிக் குரல் ஒலிக்கிறது.

“சரி இந்தக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். இந்த மொழி பெயர்ப்பாளர் வேண்டாம் என்று சொல்பவர்கள் மட்டும் கை தூக்குங்கள்!”

சரோஜினியின் குரல் கேட்டதும் கூட்டம் எப்படி அடங்குகிறது? ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்களிடையே, இருபத்தைந்து கைகள் கூட அங்கே உயரவில்லை.

அதே தோழர், பங்கிம் சந்திர முகர்ஜியின் ஹிந்தி உரையை மொழி பெயர்க்கிறார்.

ஒற்றுமையை - பல முள்களை அமுக்கிச் செல்லும் இந்த ஒரு அசாதாரணமான மென்மை ஆற்றலை, இந்த அம்மை சாதிக்கிறாள் என்று மணி தெரிந்து கொள்கிறாள்.

அகில இந்திய அளவில், கதிரரிவாளும் சுத்தியலும் என்ற சின்னம், தொழிற் சங்கங்களின் பொது லட்சியத்தை உயிர் மூச்சென்று விளக்குகிறது. மணி, நாட்டின் இதயம் போன்ற கேந்திர ஸ்தானத்துக்கு இரத்தம் கொண்டு செல்லும் மெல்லிய இழை போன்ற கிராம அமைப்பின் நுணுக்கமான இயல்புகளை நன்கு உணர்ந்திருக்கிறாள். கிராமத்து மக்களை ஒன்று திரட்டுவதில் நேரிடக்கூடிய பல பிரச்சினைகளில் புகுந்து புறப்பட்டுப் பக்குவப்பட்டிருக்கிறாள். இந்த மெல்லிய இழைகள், கிராம வட்டங்களில் இருந்து ‘ஜில்லா’ என்றும் ‘மாகாணம்’ என்றும் சேர்ந்து வலிமையாக இணைந்து முழுமை எய்துமுன், எத்தனை துண்டிப்புகள், கத்தி விபத்துக்கள், இரத்தப் பீறல் இழப்புகள், சாட்சி-சம்மன் வழக்கு மோதல்கள்? எங்கிருந்து நிதிபெற்று இவற்றை ஈடுகட்ட முடியும்? நிதியை யாரிடமிருந்து திரட்டுவது? நிதி வைத்திருக்கும் சுற்றத்தானும், காங்கிரஸ்காரனும், இரத்தப் பெருக்குக்கு மாற்றுக் கொடுப்பானா? இவள், உண்டியல் எடுத்துக் கொண்டு பிச்சைக்காரி போல், சிறு கடைக்காரர், தோழர், நண்பர் என்று சிறுதுளி பெருவெள்ளம் என்று அலைகிறாள்...

நினைக்கையில் வியர்வை பூத்து வடிய உடலில் வெம்மை பரவுகிறது.

இது போன்ற சறுக்கல்களும், தூற்றுதல்களும், ஒரு பெண் என்ற முறையில் இந்த மாதரசிக்கு அனுபவம் ஏற்பட்டிருக்குமோ?...

சரோஜினி சென்னை மாநகரையே பரபரப்பு அலைகளுக்கிடையே கிளர்ச்சியூட்டுவதாக மணி உணர்கிறாள். மாணவர் கூட்டம், கல்வியாளர் கூட்டம், மகளிர் கூட்டம்... என்று எங்கு திரும்பினாலும் சரோஜினி அலை தெரிகிறது.

இவர் பேசும் கூட்டங்களை ஒன்று விடாமல் மணி சென்று கலந்து கொண்டு கேட்கிறாள். வி.பி.ஹாலில், மாதருக்கான தேசியக் கல்வி குறித்து சரோஜினி உரையாற்றுகிறார்.

“மாதருக்குக் கல்வி அவசியம். எந்த வகையான கல்வி? ஆங்கிலம் பேசவும், மேற்கத்தியப் பண்பாடுகளை விளக்குவதற்கும் பெண் கல்வியா? ஓராணை மகிழ்விக்கக் கல்வியா? இல்லை! தேசியக் கல்வி. நாடு என்ற அளவில் எண்ணங்களை உயர்த்தும் கல்வி. தான் ஒரு தனிப் பிறவி என்ற சுயநல வட்டத்துக்கப்பால் சமுதாயப் பிரதிநிதி, நாட்டின் பிரஜை என்று உணர்விக்கும் கல்வி... இங்கு பட்டுப்பட்டாடை பூச்சு நாகரிகங்கள் தேவையில்லை. எளிமை, கதராடை, எல்லோருக்கும் எல்லாம் என்ற பரந்த மனப்பான்மை...”

மணியின் அருகில் இரு பெண்கள், இவர் பேச்சைக் கேட்கவிடாமல் சளசளவென்று பேசுகிறார்கள். ஆயிரமாயிரமான மக்கள் அமர்ந்த அக் கூட்டத்தில், அவர் மந்திரக்குரல், கூட்டத்தை அமைதிக்கட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், இந்தச் சில நூறு கூட வராத கூட்டத்தில் பெண்களைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை.

ஒவ்வொருத்தியும் என்ன ஆடம்பர வெளிச்சம் போடுகிறாள்? வயிரங்கள், தங்கங்கள், பட்டுக்கள்... “அவ ஒட்டியாணத்தைப் பார்த்தேளா? முகப்பு புது மாதிரியா இருக்கு...”

“பச்சையும், சேப்பும் தெரியறது. என்ன முகப்பு?...”

“டிசைன் புது மாதிரியா இருக்கு. சேப்பு பின்னணி, பச்சையும் வைரமும் வச்சு இது புது மோஸ்தர்...”

“அதானே பார்த்தேன். அவா காங்கிரஸ்காரா. கதர்ப்பட்டு கட்டிண்டு இந்தப் புது மோஸ்தர் சர்க்கா டிசைன் ஒட்டியாணம் போட்டுண்டிருக்கா!”

“அதில்லம்மா? சர்க்கா டிசைன் இப்ப புது மோஸ்தர் இல்ல. சேப்புல, அரிவாள் சுத்தியல் மாதிரி டிசைன் போட்டிருக்கு. இப்ப இது புது மோஸ்தராம்! சர்க்கா டிசைனை விட இது எடுப்பா இருக்கு!”

“ஆமாம், இப்பல்லாம் காங்கிரஸ்காரன்னு சொல்றத விட, கம்யூனிஸ்ட்னு சொல்றது ஒரு பாஷன்!...”

“எதுவாயிருந்தாலும் நாமும் காலத்துக்குத் தகுந்தாப்பில போனாத்தான் நாலு பேர் மதிக்கிறா. கிட்டப்போய்ப் பார்க்கணும். ஸுரஜ்மல்ஸில் பண்ணினாளோ, வீகம்ஸில பண்ணினாளோ?...”

“அவா பாபலால்லதா வாடிக்கையா வாங்குவா!”

“பாபலால்ல, எனக்கென்னவோ அவ்வளவு திருப்தி வரதில்ல. எங்க வீட்டுக்கு ஸுரஜ்மல்ஸ் வயிரம் தான் ‘ஆவி’ வந்தது...”

இதற்குள் அந்தக் குழுவில் இன்னொரு இளவட்டம், ‘லாங்செயின்’ வயிரபுரோச் அணிந்து வருகிறது.

“டீ, நாகமணி! அந்தம்மாவோட புது ஒட்டியாண டிசைன் பார்த்தியோ?”

வயிர மூக்குத்தி டாலடிக்க அவள் தலையை ஆட்டுகிறாள்.

“ஒ, கேட்டுட்டேன், அதெல்லாம் ‘மாஸ்கோ’விலேந்து பண்ணி வந்ததாம்?”

மணிக்கு எழுந்து சென்று ஆளுக்கு ஓரடி கொடுத்து அடக்க வேண்டும் போல் பரபரப்பாக இருக்கிறது.

“ஏம்மா! நீங்கெல்லாம் உங்க நகைப் பெருமைகளை அவுத்துவிடவா இங்க கூட்டத்துக்கு வந்து, பேசறவங்களை அவமரியாதை பண்ணுறீங்க? நீங்க பேசுறதானா வெளில போங்க! நாங்க மேடைல பேசுறவரின் பேச்சை அமைதியாகக் கேட்போம்!” என்று ஒரு போடு போடுகிறாள்.

ஒரு நரைத்தலை முறைத்துப் பார்க்கிறது.

“இவ யாருடிவ? ஆம்பிளயா, பொம்பிளயா...”

“வேஷம் சகிக்கல?”

“எவளானும் மலையாளச்சியா இருக்கும்!... அதுக்குத் தலைய எதுக்கு இப்படி கோரம் பண்ணிக்கணும்?”

மணி அங்கிருந்து நகர்ந்து ஓர் ஓரம் சென்று நிற்கிறாள். எவ்வளவு முக்கியமான விஷயம் அந்த அரங்கில் பேசப்படுகிறது?

அந்தப் படிப்பறியா உழவர்களை ஒன்று சேர்க்கலாம். இங்கு, அதிக வளமை, அறியாமை என்றே புரியாமல் மூழ்கிக் கிடக்கும் சுயநல ஆசைகளில் பெண்கள், ஆடம்பரம், ஃபாஷன் என்று கூடி, சந்திரனை மறைக்கும் கருமேகங்களாக சரோஜினியின் உரையைப் பயனற்றதாகச் செய்கிறார்கள்...

வெளியே வருகையில், தெருவில் மூவலூர் அம்மாளைப் பார்க்கிறாள். மணியின் கரங்களைப் பற்றிக் கொள்கிறார் அந்த அம்மை.

முடியை வெட்டிக் கொண்டு வெண் உடையில் திகழும் இந்த அம்மை, சுயமரியாதைக்காரிதான். ஆம், சுயமரியாதை தாசிகள் என்ற ஈனக்கறைகள் படிந்த விலங்குகளை உடைத்தெறிந்துவிட்டுப் புரட்சிக்கரமாகப் புறப்பட்டவள். இவள் மணலூர் மணி; அவள் மூவலூர் இராமாமிருதம்.

அந்நாளில் காந்தியைச் சந்திக்க மன்னார்குடியில் இக் குலத்தில் உதித்த மகளிர் சிலர் வந்ததை விமர்சித்து, ஆசாரக்காரர்கள் பேசிய சொற்கள் இவள் நினைவில் மோதுகின்றன. அந்த நினைவில் கண்கள் கசிய, அவள் கரங்களைப் பற்றி நிற்கிறாள்.

“அம்மா? நீங்கள் மிகப் பெரிய சேவை செய்கிறீர்! பொட்டு உடைப்பு சங்கம்... மிகப் பெரிய சேவை. கறைகள் போக்கும் சேவை.”

“மணி அம்மா! உங்களை விடவா? அத்தனை பெரிய கொடிய ஆதிக்கங்களைத் தூக்கி எறிந்துவிட்டுத் துணிகரமா வந்திருக்கிறீர்களே?... அம்மா, வீட்டுக்கு வர முடியுமா?...”

“இன்னொரு தரம் வரேன். எப்போதும் நாம் பெண்கள் - சமுதாய உணர்வு, சாதிபேதமில்லா நாடு என்று நினைக்கிறோம். மனசால் ஒன்றுபட்டிருப்போம்... ரொம்ப தூரம் போகணும்... வரட்டுமா?...”

மனம் நிறைவாக இருக்கிறது.

இரவு நிகழ்ச்சிகள் முடிந்து வீடு திரும்புகையில் நேரமாகிறது. “தோசை வார்க்கட்டுமா? சாதம் ஆறிப் போயிருக்குமே?”

“வேண்டாம் அம்மா. ஒண்ணும் வேண்டாம். எல்லாம் சாப்பிட்டாச்சு...”

“பால் இருக்கு, புரைகுத்தல. கொண்டு வரேனே?”

“சரி, கொண்டா...”

இவள் உடை மாற்றத்தை இயல்பாக எடுத்துக் கொண்டவர்கள், முற்போக்கு வட்டத்திலேயே குறைவானவர்கள் தாம். ஆனால் புருஷன் வீடு, புருஷனைச் சார்ந்தவர்கள் என்று வரும்போது, பெண்கள் எப்படி அந்த வீட்டோடு ஒன்றிவிடுகிறார்கள்?

இந்த ஆண்டில் மகாமகக் கும்பல் கூடுகிறது. கலவரங்களும், நெருக்கடிகளும் மிகுந்தாலும் சனாதன நம்பிக்கைகளை யாரே துருவிப் பார்ப்பார்கள்? சென்ற மகாமகத்தில் மணியே காங்கிரஸ் பிரசாரத்துக்கென்று சென்று கடை பரப்பினாள். சுதேசிப் பொருள்காட்சி ஒரு பெரிய கவர்ச்சியாக இருந்தது.

இப்போதும் மக்களின் மகாத்மாவாக விளங்கும் காந்திஜியின் அத்தாட்சியுடைய கட்சியாகவே காங்கிரஸ் விளங்குகிறது. இவர்களுக்கு எதிரிகள்போல் இப்போது அந்தக் கட்சியின் முத்திரையைப் போட்டுக் கொண்டவர்கள் செயல்படுகிறார்கள்.

மணலூரில் குடும்பம் வைத்திருந்த அனந்தண்ணா, திருவாரூர் பெயர்ந்து போய்விடுகிறார். அவர் பையன் தியாகராஜனுக்கு அங்கே பள்ளிக்கூடத்தில் வேலை கிடைத்திருக்கிறது. மணியினாலும் மணலூருக்கு அன்றாடம் வராவிட்டாலும், நான்கில் எட்டில் கூட வர முடியவில்லை.

“மணி, உனக்கும் திருவாரூர் நாகப்பட்டினத்தில் தான் பாதிநாளும் வேலை இருக்கு. இந்த மணலூர், நாகலூர், மயிலங்குடின்னிலாம உனக்கும் அடிக்கடி வெளிலே போகும்படி இருக்கு. ஜாகையை நீயும் திருவாருக்கு மாத்திக்கோ...” என்று யோசனை சொல்கிறார்.

மணி யோசனை செய்கிறாள்.

சுற்றுவட்டமுள்ள அத்தனை எளிய குடும்பங்களுக்கும் தாயாகத்தான் நின்றாள். ஆனால் இப்போது, மக்களை ஒரு பெரிய அமைப்பில் இணைக்கும் கட்சியில் ஓர் உறுப்பினர். அனைத்து மக்களையும் இணைக்கக்கூடிய ஒரு வலுவான சக்திக்குரிய பொறுப்பை ஏற்றிருக்கிறாள். இவ்வாறு முழு இழைகளையும் இணைக்கும் போதுதானே மாபெரும் அரண்களைத் தகர்க்கக்கூடிய சக்திகளை உருவாக்க முடியும்?

இந் நாள் வரையிலும், வெறும் மன்னர் குடை நிழலில் மக்கள் ஒதுங்கி நிற்கும் ஆட்சி முறையே எல்லோருக்கும் தெரியும். தரையைத் தொடாத குடை. இதன் நிழலில் ஆட்சி புரியும் செல்லப் பிள்ளைகளே அதிகாரிகள், மிட்டா மிராசு ஜமீன் எல்லாம். அந்தக் குடையைத் தூக்கி எறிந்து, மக்களாகிய அனைத்து இரத்த நாளங்களையும் இதயத்தோடு இணைத்து...

மணி திருவாரூருக்கு ‘ஜாகை’யைக் கிளப்பி விடுகிறாள். தெற்குத் தெருவில் ஒரு தற்காலிக இடம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சாமான்கள் என்பது, சில தட்டுமுட்டுகள், ஒருத்தி சமைத்துச் சாப்பிடத் தேவையான கும்மட்டி அடுப்பு, குடம் என்று அடங்கியவைதாம். அதிக இடத்தை ஆக்கிரமிப்பவை, பத்திரிகைக் கட்டுகள், புத்தகங்கள், இயக்கம் சார்ந்த பதிவேடுகள்... ஆகியவைதாம்.

எல்லாவற்றையும் ஒழுங்காக அடுக்கி வைக்கத் தோழர்கள் உதவி செய்கிறார்கள். புதிய ஜனசக்தி இதழைக் கொண்டு வருகிறான் கோபாலன். பிரித்துப் பார்க்கிறாள்.

சோவியத் நண்பர்கள் சங்கம்... கிருஷ்ணகிரி மாநாடு, கிஸான் சங்க மாநாடு... தடையுத்தரவு.

சடக்கென்று கண்கள் நிலைக்கின்றன.

.... சரோஜினி தேவி, கம்யூனிஸ்ட் ஆதரவாளராகச் செயல்படுகிறார்... இதைப் பொருட்படுத்த வேண்டாம்.

ஏனெனில் சரோஜினி அம்மையாருக்கு வயதாகிவிட்டது. அதனால் அவருக்கு அரசியல் சரியாகப் பிடிபடவில்லை; பேசவரவில்லை. அவருக்கு அரசியல் தெரியாது. அவர் கவி; அவ்வளவுதான்.

மேலும், சரோஜினி பேசுவதை அவ்வளவாகப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவர் ஒரு ஸ்திரீயாக இருப்பதால் மட்டுமே காங்கிரசில் வைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். மகாத்மா காந்தியே, இவர் பேச்சுகளைப் பொருட்படுத்தவில்லை. எனவே, சரோஜினி தொழிற்சங்கவாதிகளுக்கு ஆதரவாக நடப்பதை யாரும் பொருட்படுத்தத் தேவையில்லை...

மணிக்கு உடலே பற்றி எரிகிறது.

சரோஜினிக்கு அரசியல் தெரியாது? அவர் கவி... அது மட்டும்தான்!

இப்படி அந்த மாதரசியை மட்டம் தட்டிய மகானுபாவன் யார்?

காங்கிரசில் உனக்கு இடமில்லை. உங்கள் மரத்தில் கள் இறக்கக் குத்தகை விட்டிருக்கிறீர்கள் என்று பழி சுமத்திய மாமாவின் மருகர்... சரோஜினிக்கு வயசாகிவிட்டது. அரசியல் தெரியாது! ஸ்திரீயாக இருப்பதால் பிச்சை போட்டிருக்கிறார்கள்? இவனுக்கு என்ன வயது? அந்தப் பெருமாட்டியை, உலகுக்கே ஓர் ஒளியாக விளங்கும் கவியரசியை, பகிரங்கமாக மட்டம் தட்ட இவனுக்கு யார், உரிமை கொடுத்தார்கள்?

காங்கிரஸ்... இது ஆதிக்கக் கட்சி!

பெண் விரோத, மக்கள் விரோதக் கட்சி!

பத்திரிகையில் செய்தியாக வெளிவந்த அந்தப் பத்தியைக் கிழித்து, கசக்கிப் பிழிந்து சாணக்கியனைப் போல் அரிந்து விட்டு இக்கட்சியை ஒழிப்பேன் என்று சூளுரை எடுக்க வேண்டுமென்ற ஆத்திரத்தில் அவள் செவி மடல்கள் சூடேறுகின்றன.

--------------

அத்தியாயம் 19


அந்த ஆண்டு மே மாதத்தில், ஐரோப்பாவை ஒரு குலுக்குக் குலுக்கிய ஜெர்மனி - வீழ்ச்சியுறுகிறது. ஃபாஸிஸ ஹிட்லர் ஒழிந்து போகிறான்.

ஆனால் இந்தப் போரின் வெற்றி, உலகில் அமைதியைக் கொண்டு வரவில்லை. ஃபாஸிஸ ஹிட்லரையும் ஒரு படி மிஞ்சிய நிலையில், அமெரிக்கா அணுகுண்டை ஜப்பானிய மக்கள் மீது வீசி, தனது மேலாதிக்க ஆற்றலை நிரூபித்துக் கொள்கிறது. அந்த ஆகஸ்ட் ஐந்தாம் நாள், உலக மனித குல வரலாற்றுக்கே ஒரு கரிநாள் என்று கருதும் வகையில் ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரு நகரங்கள் பூண்டோடு அழிகின்றன.

இங்கோ, நாட்டில் இடைக்கல சர்க்காரின் நெருக்கடிகள் - முஸ்லிம் லீக் தகராறு என்று பூரண சுதந்திர சூரியனை மக்கள் காண முடியுமோ என்று கவலை கொள்ளச் செய்கின்றன. மக்கள் சமுதாயமோ, பதுக்கல் கள்ளச்சந்தை, முதலாளிகளின் முறையற்ற பணக் குவிப்பு, இடைத்தரகர் ஏகபோகங்கள், ஏழைக் குடும்பங்களைக் குரல்வளையைப் பிடித்து நெருக்குகின்றன. பசி, பஞ்சம், பட்டினி என்ற ஓலம், போர் முடிந்த வேலையில்லாத் திண்டாட்டத்துடன் சேர்ந்து கொள்கின்றன.

மணி திருவாரூர் ரயிலடிக்கு அருகாமையில் கடைவீதியில் ஒரு மாடியில் இடம் பெயர்ந்திருக்கிறாள். அவள் இருக்கை, இல்லம், அவள் சார்ந்த கட்சி, இயக்க அலுவலகம் எல்லாமும் அதே இடம் தான். இந்த மாடியில், தண்ணீர் மற்றும் அத்தியாவசியமான சில சொந்த வசதிகளுக்கும் கூட இடம் கிடையாது. ரயில் நிலையத்துக்குத்தான் இவள் அதற்கெல்லாம் செல்ல வேண்டும். விரிந்து பரந்த வெளியும், தோப்புகளும், வண்டிமாடுகளும், மனையும் சூழ்ந்த வசதிகள் அனைத்தையும் விட்டு இந்த மாடிச் சிறைக்கு இவள் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்கிறாள்.

இரவில்லை பகலில்லை என்று இயக்க அலுவல்கள்; போலீசு கச்சேரி, கோர்ட்டு, கூட்டம்; தலைமறைவுக்காரர்களுக்குச் செய்தி சொல்லும் தொடர்பாக இயங்குதல் என்று மணியின் நாள்கள் விரைந்து ஓடுகின்றன. இத்துடன் மகாநாடுகள் - மிக முக்கியமான நிகழ்ச்சிகளிடையே!

திருவாரூரிலும் இவள் பல சங்கங்களைக் காண்கிறாள். ஆதரவு தருகிறாள். துப்புரவாளர் சங்கம்; சுருட்டுத் தொழிலாளர் சங்கம் என்று பல தொழிற்சங்கங்களைச் சார்ந்தவர்களும் ‘அம்மாளிடம்’ வந்து கலந்து யோசனை கேட்கிறார்கள்.

உணவு உற்பத்தியில் இந்நாள்களில் அரசு அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது. நகரங்களிலெல்லாம், ஆறவுன்சு ரேஷன் என்ற முறை பங்கீட்டு அட்டை முறையாக வழங்கப்பெற்றிருக்கிறது. கிராமங்களில், நல்ல எரு, விதை என்று உற்பத்தியைப் பெருக்க, மிராசுதாரர்களுக்கு ஊக்கமளிக்கிறது. அவர்கள் ஏழை உழவர்களை மேலும் கசக்கிப் பிழிகிறார்கள். இவர்களுக்குக் கூலி சம்பந்தமாகச் சலுகைகள் வழங்கப் பெற்ற ஒப்பந்தங்கள் எந்த ஒரு பண்ணையிலும் மதிக்கப் பெற்றிருக்கவில்லை. குத்தகை விவசாயிகள், படும்பாடோ சொல்லத்தரமன்று. மணியின் திருவாரூர் இல்லத்தில் மக்கள் அபயம் என்று ஓடிவந்து சேதி சொல்பவர்களாகவே இருக்கிறார்கள்.

அன்று காலை உதயமாகு முன்பே ரயிலடிக்குச் சென்று காலைக் கடன்களை முடித்துக் கொண்டு குறுகலான படிகளேறி வருகையில், இருவர் காத்திருக்கின்றனர். சோர்ந்துவிட்ட முகங்கள், இவர்கள் ஆதரவு நாடி வந்திருப்பதை விள்ளுகின்றன.

கண்களாலேயே வினவுகிறாள், செய்தியை.

“அம்மா, என்ன சொல்ல? சூப்ரவைசர் வந்து பில்லட்டை வெட்ட ரோலர் பிலேட்டில் தூக்கி வைன்னாரு. நாலுக்கு நாலரை அடி நீளமுள்ள கட்டை. தூக்கிப் பார்த்தேன். முடியல. தூக்கி வைக்கிறப்ப வுழுந்திருச்சின்னா ரோல் டேப் நொறுங்கிடும். கால்ல, கையில வுழுந்துச்சின்னாலும் கூழாயிடும். அதுனால, இதெல்லாம் கிரேனில தாங்க தூக்கி வக்கியணும், அதாங்க வழக்கம், சுருக்க வெட்டிடலாம்னேன்... சூப்ரவைசர் சொல்ல, அதைச் செய்யாம மறுக்கிறாயா பயலேன்னு சொல்லிட்டுப் போனாரு. உடனே மானேசர் வந்திட்டாரு. இவரும் வந்து ஸார், இவன் வேலை செய்யமாட்டேன்னு நிக்கிறான்னாரும்மா? எனக்குக் கப்புன்னாயிடிச்சி. அதே நிமிஷம் என்ன ஒரு வார்த்தை என்ன ஏது கேக்கணுமே? கேக்கல, கை ஊக்கப்புடுங்கிட்டு, ‘போடா வெளில!’ன்னாரு. நாம் போகல.

“வெளிலே போடான்னா, ஏண்டா நிக்கிற? பகர்?”ன்னு வெரட்டினாரு.

“காரணமில்லாம நான் ஏன் சார் வெளியே போகணும்”னேன்.

“ஏண்டா திரும்பிக் கேள்வி கேக்குற? உனக்கு வேலை கிடையாது?”ன்னாரு.

“நான் வேலை செய்வேன், போகமாட்டேன்னேன்.”

“சம்பளம் தரமாட்டேண்டா நாயே”ன்னாரு.

“தராட்டி வாணாம். நான் போகமாட்டேன்னு” நின்னேன். உடனே மானேஜர் உள்ளாற போயி, வேலையில்லைன்னு நோட்டீசை நீட்டிட்டாரு.

இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை, ஓடியாந்தேன்...”

மணி கும்மட்டியைப் பற்றவைத்துக் காபிக்கு நீர் வைக்கிறாள். பாத்திரம் பாத்திரமாகப் பால் கறந்து வெள்ளமாகக் கையண்டு பழகிய மணி அரைக்கால் படி பாலில், துணியில் வடிகட்டிய காபி நீரை ஊற்றிக் கலக்குகிறாள். சர்க்கரையும் பஞ்சம். கலந்து அவர்களுக்கும் கொடுத்துத் தானும் அருந்துகிறாள். தன் தொங்கு பைச் சாமான்களைச் சரிபார்த்து வைத்துக் கொண்டு கதவைப் பூட்டியவளாய்க் கிளம்புகிறாள்.

“நீங்கள் போங்கள், நான் பின்னால் வருகிறேன்...” ஏனெனில் இவளுக்கு அதற்குள் கவனிக்க வேண்டிய தகராறு ஒன்றுக்காக வலிவலம் செல்ல வேண்டும்.

அந்தப் பண்ணை அதிபர் பல நூறு ஏக்கர்களுக்கு உடைமையாளர். இவர் நேரடியாக விவசாயிகளிடம் தொடர்பு கொள்ளக் கூட எட்டாத உயரத்தில் உள்ளவர். நாட்டாண்மைதான் எல்லா அதிகாரமும் செலுத்துபவன்.

கமலாலயம் கரையின் கீழ்ப்பக்கம் சீனிவாசன் வண்டியுடன் வருகிறான். இருவருமாகச் செல்கிறார்கள்.

“விசயம் இதுதாம்மா. எருக்கூடை சுமந்து கொட்டுனா கணக்குக் கிடையாது... நாள் பூரா உழைக்கிறாங்க. அவ முணமுணக்கிறா. காரியக்காரன் ஒடனே கையப் பிடிச்சிருக்கிறான். அவ திரும்பி தூன்னு துப்பிட்டு, ‘ந்தா, இந்த வேலயெல்லாம் எங்கிட்ட வச்சிக்காதே’ன்னிருக்கிறா. ‘ஏண்டி, பொட்டக் கழுத ஒனக்கு அத்தினி ராங்கியாடி? எறங்கு நெலத்தவுட்டு?’ன்னிருக்கிறான். ஏதானும் சொல்லி நெருக்குற சாக்கு. அவ்வளவுதான். இவள வெளியேத்தவும், அவ்வளவு பொம்புளயாள்களும் களத்தவுட்டு வெளியே வந்து உக்காந்துட்டாளுவ. நாத்துக் கட்டுவச்சது அப்படியே இருக்கு. வேற யாரும் நடவுக்கு வரதில்லைன்னு கட்டுப்பாடா இருந்திட்டாங்க. ‘பொட்டச் சிறுக்கிகளா. உங்களுக்கு என்ன திமுரு, பாக்கிறேன்’னு ஒடனே ஓடிப் படலயத் தள்ளி, குடிசங்களப் பிரிச்சிப் போட்டு சட்டி பானைய உடச்சி அட்டூழியம் பண்ணிருக்காங்கம்மா!”

இருவரும் பேசிக் கொண்டே வண்டியை விட்டிறங்கி நடக்கிறார்கள். வெய்யில் ஏறும் உக்கிரம்.

அவர்கள் குடியிருப்பு அலங்கோலமாகக் கிடக்கிறது. பனை ஓலைக்குடிசைகள். படலைகள் தூக்கி எறியப் பட்டிருக்கின்றன.

குஞ்சும் குழந்தைகளுமாக இவளை கண்டதும் தாயைக் கண்ட கன்றுகளாகக் கரைந்து புலம்புகிறார்கள். பாவிகள் சட்டி பானைகளை, அவர்களுடைய ஒரே உடைமைகளைக் கூடவா உடைக்க வேண்டும்? சேற்றில் இறங்கி, நாற்றைப் பதித்து சோற்றுக்கு வழி செய்யும் பெண்கள் குடல் எரிய நாசம் விளைவித்திருக்கிறார்களே? பூமி தேவியையே மானபங்கப்படுத்திவிட்ட பாதகம் அல்லவோ செய்திருக்கின்றனர்?...

இந்தப் பண்ணை உடைமையாளனின் பெயர் நினைவுக்கு வருகிறது. ஆபத்தில் துணை நிற்கும் ஈசுவரனின் பெயரை ஓர் இரக்கமில்லாத கடையனுக்குச் சூட்டியிருக்கிறார்கள். ஈசுவரனுக்கே செய்யும் அபசாரம் அல்லவோ இது? இந்தப் பிரபுவுக்குப் பதினாறு கிராமங்கள் சொந்தம். எல்லா இடங்களிலும் இதே சட்டம் படிக்கும் நாட்டாண்மைகள் தாம் நிர்வாகம் செய்கிறார்கள்.

“அம்மா, நீங்க நிலத்தில இறங்காதீங்க; வேற யாரையும் அண்டவும் விடாதீங்க? நீங்க தைரியமா இருங்க? அவன் வழிக்கு வரானா இல்லையான்னு பார்ப்போம்...”

புலிக் குகையை நாடிச் செல்லும் வேகத்துடன் அந்த நாட்டாண்மையைப் பார்க்க விரைகிறாள்.

இவள் அந்தத் தெருவுக்குள் நுழைகையிலேயே ஓர் அசாதாரண அமைதி படிகிறது. “யாரப்பா நாட்டாமை...?”

இவள் குரல் கேட்கையிலேயே நாமம் கடுக்கன் விளங்க நாட்டாண்மை விரைந்து வருகிறான்.

“ஏம்பா? என்ன நினைச்சிட்டிருக்கீங்க, நீங்கல்லாம்?”

“என்னம்மா இந்தப் பொம்பிளகளுக்கு நீங்க பரிஞ்சு பேச வந்துட்டீங்க? அவளுவ என்ன திமிர்த்தனமா நடக்கிறாளுவ தெரியுமா? ஒரு நா முச்சூடும் வேலை நடக்கல, ஆருக்குநட்டம்னு பாக்கிறே...!”

“ஏய்யா? பொம்பிளன்னா கிள்ளுக்கீரைன்னு எண்ணமா? ஆருக்கு நட்டம்னா கேக்குறிய? புள்ளையும் குட்டியுமா, நடுச்சந்தில கெடக்க, சட்டி பானய ஒடச்சி, படலை எடுத்தெறிஞ்சு என்னமோவெல்லாம் செஞ்சிருக்கீங்க? தட்டிக்கேட்க ஆளில்லைங்கிறது ஒங்க நெனப்பு. இல்ல? இத பாருங்க, மரியாதையா நின்னு போன வேலைக்கும் கூலி குடுத்து, பிரிச்சிப்போட்ட குடிசங்களக் கட்ட நட்ட ஈடும் குடுத்தா வேலைக்கு வருவாங்க. இல்ல, உனக்காச்சு ஒருகை, எங்களுக்காச்சு ஒரு கைன்னு... பாத்துக்கிடுவோம்!”

“ஓ, விடமாட்டீங்களா? கும்பிகாஞ்சா தானே ஓடியாருவாங்க!”

“வர மாட்டா. யாரையும் விடவும் மாட்டோம். இங்க இப்ப போலீசுதான் வரும்?”

மணி ஓர் அதட்டல் போட்டுவிட்டு, போலீசு கச்சேரிக்குத்தான் ஓடுகிறாள். அத்துமீறி குடிசைகளைப் பிரித்துப் போட்டு சட்டி பானைகளை உடைத்து, பெண்பிள்ளை ஆள்களைக் கைநீட்டி அடித்ததற்காக வழக்கு எழுதிக் குற்றம்சாட்டிவிட்டு நாகப்பட்டினத்துக்கு வண்டி பிடிக்க விரைகிறாள்.

இரவு... பெருங்கடம்பனூர் தோழியின் இல்லம். இவள் கதவைத் தட்டுகையில் ஐந்தாறு வயசில் ஒரு சிறுமி, கதவைத் திறக்கிறாள்.

“யாரம்மா? புதிசா இருக்கு?...” விசாரித்துக் கொண்டே உள்ளே நுழைகிறாள்.

“புதிசில்லை. எல்லாம் உறவுதான். பாமா பட்டணம் போனப்புறம் விரிச்சின்னிருக்குன்னு கொண்டு வச்சிட்டிருக்கேன். இவளும் பாமாதான்... என்ன, மீட்டிங்கா?”

“இல்ல, மில்ல தகராறு. தொண்டை புண்ணாட்டம் வலிக்கிறது. குஞ்சம்மா! நல்ல வெந்நீரில் கொஞ்சம் உப்புப் போட்டுக் கொண்டுவரச் சொல்லேன்? கொப்புளிக்கிறேன்...”

மஞ்சள் போட்டுக் காய்ச்சிய பாலும் வருகிறது. அறையில் அந்தச் சிறுமியின் பக்கத்தில் விரிப்பை விரித்துக் கொண்டு படுத்து அயர்ந்து உறங்குகிறாள்.

திங்கட்கிழமை காலையில் மில் வாயிலில் இவளை எதிர்பார்த்துத் தொழிலாளிகள் நிற்கின்றனர்... மாணிக்கம் என்ற அந்த வேலை நீக்கிய தொழிலாளியை உள்ளே நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

“...நீங்கள் எல்லோரும் உள்ளே போங்கள். ஆனால், ஒருவரும் வேலை செய்யாமல் அவரவர் இடங்களில் நில்லுங்கள்!” என்று மணி கட்டளை இடுகிறாள்.

ஆலை ஓடவில்லை. ஆலை ஓடாமல் ஒருமணி நின்று போனாலும் நிர்வாகத்துக்கல்லவோ இழப்பு அதிகம்! பரபரப்பு... கார் ஒன்று வெளியே பறந்து செல்கிறது... வெளியாள்களைக் கொண்டு வரும் ‘கான்ட்ராக்டர்’ உள்ளே அழைத்துச் செல்லப்படுகிறான்.

மணி வாசலில் உறுதியாக அமர்ந்து கொள்கிறாள். வெளியே சென்ற ‘கான்ட்ராக்டர்’ பதினோரு மணி சுமாருக்குத் திரும்பி வருகிறான்.

“... ஐயா! ஓராளும் வரமாட்டேங்கிறாங்க? ‘நம்மால தான தர்மம் செய்ய முடியாது. ஆனா, இவங்க போராட்டத்துல நாயம் இருக்குன்னு தோணுது... எல்லாம் அண்ணன் தம்பி, அக்கா தங்கச்சிபோல, அவங்களுக்குத் துரோகம் செய்ய மாட்டோம்னுறாங்க...” ‘சபாஷ்!’ என்று மணி பகிர்ந்து கொள்கிறாள். அப்போதுதான் நிர்வாகம் - மானேஜர், மணியைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது...

“இந்தப் பொம்பிள... பொம்பிளயில்ல, ஆம்பிளக்கு மேல... சரியான முள்ளு...” என்று முணுமுணுக்கும் கடுப்பை மணி உள்ளூர ரசித்துக் கொள்கிறாள்.

“என்னம்மா, இப்படித் தொழிலாளரை வேலை செய்யவிடாம தகராறு பண்ணுறீங்க?”

“ஏனய்யா? நானா தகராறு பண்ணுறேன்? அந்தப் பதத்தைத் திருப்பிப் போடுங்க? தகராறுக்குன்னு நீங்க தான் கச்சைக்கட்டிட்டு வந்திருக்கிறீங்க! ஏனய்யா, நீங்களே சொல்லுங்க, நாலுக்கு நாலு நாலரை அடிபில்லெட் அதைத் தூக்கிட்டு நடந்து ரோலர் பிளேட்டில் உம்மால வைக்க முடியுமா? அவன் மனிசன் தானே? நீங்க குடுக்கிற ஆறணா, எட்டணா கூலில, அவன் முட்டயும் பாலும் வெண்ணெயும் சாப்பிட்டு பிஸ்தாவா இருக்கிறானில்ல? நிச்சயமாக நீங்கள் அவனை விட நல்ல சாப்பாடு சாப்பிட்டு ஊட்டமா இருக்கிறீங்க! உங்களால அதைப் புரட்டித் தூக்கமுடியிதான்னு பாருங்களேன்?...”

இவளோடு வாதம் கொடுத்தால் தர்ம சங்கடம் என்பது புலனாகிறது.

“...அதைச் சொல்லலம்மா, அந்தப் பயல் உள்ளே வேலையே செய்வதில்லை. உள்ளே வந்து சங்கப் பிரசாரம் தான் பேசுறான். மற்றவர்களையும் வேலை செய்யாமல் கெடுக்கிறான்?”

“ஓர் ஆபத்து அபாயம்னு வரும்போது ஒற்றுமையாக இருக்க வேணும்னு சங்கமாகக் கூடி இருக்காங்க. அதை நீங்க உடைக்கப் பார்க்கிறீங்க. இந்தத் தகறாரை வேணுமின்னு நீங்க தொடங்கி, அந்தத் தொழிலாளியை எந்தக் காரணமும் காட்டாமல் வேலை நீக்கம் செய்திருக்கிறீர்கள். உடம்பில் ஒரு நரம்பு துண்டிக்கப்பட்டால், எனக்கென்னவென்று மற்ற அவயங்கள் வேலை செய்வதில்லை. வலிவலி என்று உடம்பு கூச்சல் போடுகிறது; இல்லையேல் இயக்கமில்லாமல் மரத்துப் போகிறது. பேசாமல், மாணிக்கத்தை வேலைக்கு எடுத்துக் கொண்டு பிரச்சினையைத் தீர்த்து விடுங்கள். அநாவசியமாக உங்களுக்கும் நஷ்டம் வேண்டாம்!” அடுத்த பயமுறுத்தலை அவளை நோக்கி வீசுகிறது நிர்வாகம்.

“பாதுகாப்புச் சட்டம் அமுலில் இருக்கு, தெரியுமா உங்களுக்கு? உற்பத்தி முடக்கம் கூடாது. நாங்க போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுப்போம். சட்டப்படி...”

“ஓகோ, சட்டம் உங்களுக்கு மட்டுமில்லை ஸார்! எங்களுக்கும் இருக்கு! நீங்க போலீஸ் கம்ப்ளெயின்ட் குடுங்க! என்ன நடக்கும்னு பாருங்க? இப்ப, என்ன, தொழிலாளர் வெளியே நின்று அமைதி கெடுக்கிறார்களா? கும்பல் கூடிக் கோஷம் போடுகிறார்களா? உங்களைத் தாக்குகிறார்களா? ஸ்டிரைக் செய்கிறார்களா? ஒன்றும் இல்லை. அவர்கள் உள்ளே சென்று உற்பத்தியைப் பெருக்க வேலை செய்யத்தான் விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் அவர்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாதுன்னு அநியாயமாக ஓராளை வேலை நீக்கம் செய்தீர்கள். போலீசைக் கூப்பிடுங்கள். நியாயம் எங்கே இருக்கிறதென்று பார்ப்போம்.”

இது மூக்கறுபடும் சங்கதியாக முடியும்போல் தோன்றுகிறது. ஆனால் நிர்வாகத்து வெண்கொற்றக்குடை அவ்வளவு எளிதில் இறங்கலாமா?

மணி அங்கேயே நிற்கிறாள், அசையவில்லை. காலை ஏழரை மணியில் இருந்து பகலுணவு நேரம் தாண்டியும் உள்ளே தொழிலாளர் அசையவில்லை. போலீசை அழைப்பதனால், இந்த அம்மாள் மசிந்துவிடமாட்டாள் என்று அவர்கள் புரிந்து கொள்கின்றனர்.

“ஏய், நான் பல தண்ணீர் குடித்து உரமேறியவள்... நீங்கள் வெளியாள்களை அழைப்பது ஒன்றுதான் வழி. அந்த உபாயத்திலும் பெரும் அடி விழுந்தாயிற்று...”

இவளுடைய செல்வாக்கு... நிர்வாகத்தை ஒன்றே முக்கால் மணிக்குப் பணிய வைக்கிறது.

மானேஜர், இவளை உள்ளே அழைக்கிறார்.

“வாங்கம்மா, உள்ளே வந்து உக்காருங்க!”

அறை துப்புரவாக இருக்கிறது. மேலே விசிறி ஓடுகிறது. நீண்ட மேஜையில் கண்ணாடி பலகை. வழுவழுப்பாக, பளபளப்பாக அழுக்கு ஒட்டாத - தூய்மை, வண்ணப் பேனாக்கள், மைக்கூடு... அருகில் டைப் இயந்திரம்.

ஆள் ஒருவன் டவரா டம்ளரில் காபி கொண்டு வந்து வைக்கிறான்.

“காபி குடியுங்கம்மா. காலையிலேந்து, நீங்க எதுவும் சாப்பிடாம நின்னிருக்கிறீங்க!”

அந்த மானேஜர் முகத்தில் வியப்பூறும் புன்னகை மிளிர்கிறது.

“நான் காபி குடிப்பது இருக்கட்டும். நீங்கள் முடிவாக அவனுடைய வேலை நீக்க உத்தரவை ரத்து செய்யணும். உங்களுக்கும் சரி, அவர்களுக்கும் சரி, வேலை நின்றால் நஷ்டம். ஆனால் அவர்களுடைய எட்டு மணி நேர உழைப்புக்கு நீங்கள் லாபத்தில் ஒரு கால் பங்கேனும் வரும்படி கூலி கொடுக்க வேண்டாமா? கூலியை இழந்து, குஞ்சும் குழந்தையுமாகத் தெருவில் பிச்சை எடுக்கவா அவர்கள் வேலை செய்யமாட்டோம் என்று நிற்கிறார்கள்?... ஆனால், நீங்கள் அநியாயமாகச் செயல்பட்டால், அதை எதிர்க்க அவர்களிடம் என்ன ஆயுதம் இருக்கு? சொல்லுங்கள்?”

“சரி, சரிம்மா. காபியைக் குடியுங்கள். நீங்களும் ஒரு மேலான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தொழிலாளிக்காக நிற்கிறீர்கள். உங்களை வீணாக நிற்க வைப்பதில் எங்களுக்கும் மனமில்லை. அவர்களை வேலை செய்யச் சொல்லுங்கள்!”

“இத பாருங்கள், இந்த மேல், கீழ் குடும்பக் கதையெல்லாம் இங்கே வேண்டாம்? நீங்கள் மாணிக்கத்தின் ஆர்டரை ரத்து செய்யுங்கள். இதற்காக அவனை எந்த ஒரு நிர்ப்பந்தத்தில் மாட்டுவதோ கூலி பிடிப்பதோ செய்யக் கூடாது...”

“சரி, ஒப்புக்கறேன். ஆனால், ஒரு நிபந்தனை. நீங்கள் உற்பத்திக்குக் குந்தகம் இல்லைன்னு சொல்றீங்க. இப்ப காலையில் இருந்து அஞ்சு மணி நேர உற்பத்தி தடைபட்டுப் போச்சு. அதை இவர்கள் ஈடு பண்ணியாகணும்.”

“அதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் இதே போல் கடந்த மூணு மாசங்களில் காரணமின்றி வேலையை விட்டு நிறுத்திய நாலு தொழிலாளரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த வகையிலும் கூலிக் குறைப்புக் கூடாது...”

“சரி...”

ஒப்பந்தம் பதிவாகிறது. உத்தரவுகள் பிறப்பிக்கப் படுகின்றன. வெற்றிக் களிப்புடன் மணி திரும்புகிறாள்.

“தோழர்களே! வேலை செய்யுங்கள்! வேலை நீக்க உத்தரவு ரத்தாகி விட்டது! மாணிகம்...! பச்சையப்பன், எல்லாரும் வேலைக்குப் போங்கள்!”

இரவு பத்து மணி வரையிலும் அன்று ‘ஸ்டீல் ரோலிங் மில்’ ஓடுகிறது. மாணிக்கத்துக்குக் கூலிப்பிடித்தம் இல்லை.

மணி அன்றிரவு ஒரு தொழிலாளியின் குடிலில் உணவு கொண்டு குழந்தைகளுடன் விளையாடுகிறாள்.

“எல்லாரும் சேர்ந்து சொல்லுங்கள்...
விடுதலை... விடுதலை... விடுதலை...!”
---------------

அத்தியாயம் 20


“அம்மா...!”

“யாரப்பா? குளுந்தானா? என்ன சமாசாரம்?”

குளுந்தன் தப்புச் செய்த பாவனையில் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்கிறான்.

“என்னடா? தேங்கா திருடினியா? அடி வாங்கினியா?”

“அதெல்லாம் இல்லீங்கம்மா... வந்து... அத்த, தலையப் புடிச்சு இழுத்து அடிச்சி ஒ ஆத்தா வூட்டுக்குப் போடின்னு தொரத்திட்டேன்...”

“உம் பொஞ்சாதியையா? ஏம்ப்பா, மாம மகளத்தான கட்டினே, ஆறு மாசம் ஆகல? அதுக்குள்ள எதுக்கு அப்படி அடிச்சே?”

“... வந்து... காலம, கஞ்சி கொண்டாந்தா. அதுக்குத் தொட்டுக்க ஒரு வியஞ்சனம், உப்பு மொளவா வச்சி அரச்சிக் கொண்டாரக் கூடாது? மொளவாயச் சுட்டு, கஞ்சில மொதக்க வுட்டிருந்தா... கோவம் வந்திடிச்சி... அடிச்சிட்டே...”

“நீ காலமேயே கள்ளும் குடிச்சிருந்த... இல்ல?...” அவன் நாணித் தலை குனிகிறான்.

“ஆமாங்க...!”

“ஏம்ப்பா, உங்களுக்கு எத்தினி தபா சொல்லணும்? குடிச்சதினால பொஞ்சாதிய அடிச்சு வெரட்டினே. எத்தினி நாளாச்சி!”

“மூணு மாசமாம்மா? எங்கம்மா போடா, போயி அதை அழச்சிட்டு வா, இல்லாட்டி உனக்குச் சோறு வய்க்கமாட்டேங்குறா. அவ அண்ணெமவ. அங்க போனா, மச்சா, மாமியா ஆரும் மொவம் குடுத்துப் பேசுறதில்லம்மா...”

மணி சிறிது நேரம் பேசாமல் இருக்கிறாள்.

பிறகு... “நாள ராத்திரி, ஆண்டாங்கரயில ஒரு மீட்டிங் இருக்கு. அங்க வா. இதுக்குத் தீர்வு அங்க சொல்லுறேன், போ?”

அது ஒரு முன் பனிக் கால இரவு. கார்த்திகைக் கடைசி. மழைத் துளியா, பனி நீர்த்துளியா என்று புரியாத ஈரத்தில் தரை குளிர்ந்திருக்கிறது. வானில் எங்கோ ஒரு நட்சத்திரம், பிரமையோ உண்மையோ என்று புரியாமல் முணுக் முணுக்கென்று சிமிட்டுவதுபோல் இருக்கிறது. இவள் தவிர பிற விவசாய சங்கத் தலைவர்களுக்கெல்லாம், வெளியேற்ற, தடைச் சட்ட ஆணைகள் போடப்பட்டிருக்கின்றன. எனவேதான் இரவோடிரவாகக் கூட்டம். இதற்கு யார் வருவார்களோ, வரமாட்டார்களோ? குரலில் இருந்து தான் ஆளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது ஒரு மாந்தோப்பு...

“வணக்கம்... வணக்கம்...”

குரலில் இருந்து சீனிவாசராவ், குப்பு என்று புரிந்து கொள்கிறாள்.

“எல்லாம் வந்துட்டீங்களா?... ஏம்ப்பா? அங்கே இங்கே இருக்கிறவங்க எல்லாம் கிட்ட வாங்க...?”

கசமுச கசமுசவென்று இரகசியக் குரல்கள்...

“மணி அம்மா... மணி அம்மா வந்திருக்கிறாங்கப்பா!...”

மணி பேசுகிறாள்:-

“அன்பார்ந்த தோழர்களே! சகோதர சகோதரிகளே! உங்களை எல்லாம் ஒன்றாகச் சேரவைத்துப் பொதுவான பிரச்சினைகளையும், உங்கள் சொந்தப் பிரச்சினைகள் எப்படி அந்தப் பொதுப் பிரச்சினையோடு சம்பந்தப்பட்டிருக்குன்னு சொல்லவும் வரச் சொல்லி இருக்கிறேன். நீங்கள் எல்லாரும், காலம் காலமாக நிலச் சொந்தக்காரர்களுக்காக உழைத்தீர்கள்; உழைக்கிறீர்கள். ஆனால் மானம் மறைக்க முழத் துணி இல்லை; வயிறு நிறையச் சோறு இல்லை. இந்த அநியாயம் புரியாமலே பழகிப் போயிட்டுது. இங்கிலீஷ்காரன்கிட்ட சுயராஜ்யம் கேட்டுப் போராடிட்டிருக்கிறோம். காங்கிரஸ், இதுக்காகப் பாடுபடற கட்சின்னு தெரியும். காங்கிரஸ் சர்க்கார் வந்திட்டா நமக்கு நியாயம் கிடைக்கும்னு நினைச்சோம். இப்ப இடைக்கால சர்க்கார், காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. ஆனா, காங்கிரஸ்ல இங்க யாரெல்லாம் இருக்காங்க? அடிமைகளைக் கசக்கிப் பிழியிறவங்களும், குத்தகை விவசாயிக்குக் கொடுக்காம வயிற்றிலடிக்கிறவனும்தான் இருக்காங்க. வெள்ளைக்காரன் கிட்ட ராவ்பகதூர் பட்டம் வாங்கினவங்க, திடீர் தேசபக்தி வந்து இங்கே புகுந்திருக்காங்க. இவங்க என்னிக்குமே உழைப்பவனை மதிக்கல. கிசான் சங்கம் வளரக் கூடாதுன்னு தற்காப்புப் படைன்னு வச்சு அடிச்சு நொறுக்குறவங்க இருக்காங்க. மன்னார்குடி ஒப்பந்தம் உங்களுக்குத் தெரியும். அந்தக் கூலி யார் குடுக்கிறாங்க? வேலைக்காரங்களுக்கு மூணில ரெண்டு வேணும்னு போராடினோம். பாதிக்குப் பாதியுமில்ல. அஞ்சில் ஒண்ணுக்கே வயித்திலடிக்கிறாங்க. சங்கமாடா பயலே? தொலைச்சிப்பிடுவேன்...னு மிரட்டல். புது சர்க்கார் வந்தப்புறம் நீடாமங்கலத்துக்கு வந்த சட்ட மந்திரி சர்க்கார் மத்யஸ்தம் வச்சுத் தீர்ப்புச் சொல்றது சரியில்ல, சர்க்காருக்கு அதுக்கு அதிகாரமில்லேன்னு சொல்றார். ஆனா, நியாயத்துக்காக நீங்க கூலி கேட்டு வாரம் கேட்டுப் போராடுற போது, புடிச்சி வழக்குப் போட்டு, ஜெயிலில் போட அதிகாரம் இருக்கா?...

இப்ப சர்க்கார் குறுகிய காலக் குறுவை நெல்லை அதிகமாக விளைவித்து விற்றால் மணங்குக்கு ரெண்டு போய் போனஸ் கொடுப்பதாக அறிவிப்புச் செய்தது. ஆனால் இந்த போனஸ், பாடுபட்ட தொழிலாளிகளுக்குத் தானே சேர வேண்டும்? அதுதானே நியாயம்? மூணு மணிக்கு உழவோட்டியவனுக்கு, எருச் சுமந்து கொட்டிய பெண்சாதிக்கு, கரவெளிப் போட்டில நின்னு நடவு நட்டவளுக்கு, களையெடுத்தவளுக்கு, மடை பார்த்து மடை வெட்டி ராப்பகலா பூச்சி பொட்டுக்கு அஞ்சாம பாதுகாத்தவனுக்கு, அறுவடை செய்து, போரடித்துத் தூற்றினவனுக்குப் போனஸ் இல்லை. போனஸ் ஏன்? அரைக்கால் மரக்கால் கூட்டிக் கேட்ட கூலி கூட இல்லை. அதோடு, நம் மந்திரி மகானுபாவர், மிராசு இஷ்டப்பட்டால் யாரையும் நிலத்தை விட்டோ, மனைக்கட்டை விட்டோ வெளியேற்ற உரிமை உண்டுன்னும் சொல்லியிருக்கிறார்!

அன்பார்ந்த தோழர்களே! நீங்கள் இப்ப என்ன செய்ய வேணும்? நாம் ஒண்ணு சேரணும். ஒண்ணு சேருவது... அதற்கு அடையாளமாகச் சங்கம் சேரணும். என்ன சங்கம்? செங்கொடிச் சங்கம். கதிரும் அரிவாளும் போட்ட சின்னம் உள்ள செங்கொடிச் சங்கம். இது பாட்டாளியை மதித்துக் கௌரவிக்கும் - அமைப்பின் சின்னம். உழவர்களும் தொழிலாளிகளும் ஒன்று சேர்ந்து நாட்டை, சமுதாயத்தை விடுதலை செய்யும் சின்னம், ஒரு புதிய தத்துவம் பூப்பூவாய் மலரக் கூடிய சின்னம்...

உங்களுக்குள் எத்தனையோ சொந்தத் தவறுகள் இருக்கலாம். சச்சரவுகள் இருக்கலாம். ஆனால் நீங்கள் எல்லோரும் உழைப்பாளிகள் என்ற ஒரே வர்க்கம். வாய்க்கார், சாம்பார், அம்பலக்காரர், வள்ளுவர் என்றெல்லாம் எந்த வேறுபாடும் உங்களைப் பிரிக்கக் கூடாது. நீங்கள் எல்லாரும், மிராசு ஜமீன்களுக்கு அடிமைப்பட்ட வர்க்கம். உங்களைச் சேர்க்கும் கொடிதான் இது. உங்களை ஒற்றுமையாகப் பிணைக்கும் இக்கொடியை வைத்து ஒவ்வொரு ஊரிலும் சங்கம் கட்டுங்கள்! தோழர்களே! சேருவீர், செங்கொடியின் கீழ்! ஜெய்ஹிந்த்!”

உரை முடிந்து இவள் கிளம்பும் சமயம் குளுந்தான் ஓடி வருகிறான்.

“அம்மா, நீங்க வரச் சொன்னீங்க, வந்திட்டேன். மச்சானும், மாமனும் முகம் கொடுத்துப் பேசலீங்க...”

“ஓ... அந்தப் பிரச்சினையா!... இப்ப... பேசினதக் கேட்டீல்ல! உங்க ஊருல, செங்கொடி சங்கம் கட்டு! உன் பொஞ்சாதிய நானே கொண்டு வுட்டுடச் சொல்லுற!...”

தனியாரின் பிரச்சினைகளையும் இந்தச் சங்கம் வேகமாகத் தீர்த்து வைக்கிறது.

எல்லாரும் அக்கொடிக்குக் கீழ் ஒரே குடும்பம். ஆணும் உழைக்கிறான்; பெண்ணும் உழைக்கிறாள். கள் குடிப்பது வேண்டாம்; பெண்சாதியைக் கை நீட்டி அடிப்பது பாவம்... ஒற்றுமையாக இருந்தாலே வஞ்சிப்பவரைப் பார்த்து நியாயம் கேட்டுப் போராடலாம்...

இந்த மொழிகள், மந்திரங்களாக ஒவ்வொரு உழைப்பாளியின் செவிகளிலும் மோதுகின்றன.

பகலெல்லாம் அலைந்துவிட்டு, இரவில்தான் அன்றாட வரவு செலவை இவள் கணக்குப் பார்க்க வேண்டி இருக்கிறது. எதிரே உள்ள அச்சகம் தவிர, கடைவீதியே பொட்டலமாக மடிந்துவிட்ட அந்த நள்ளிரவிலும் இவள் அறை விளக்கு எரிகிறது.

ரசீதுப் புத்தகங்களை எண்ணி எண்ணிப் பார்த்துக் கட்சிக் கணக்கைச் சரி பார்க்கிறாள். செங்கொடிச் சங்கச் சந்தா, ஆண்டொன்றுக்கு ஜோடிக்கு இரண்டணா. மணி, அச்சகத்துக்காரரிடம் மொத்தமாக ரசீதுப் புத்தகங்களுக்கு ‘ஆர்டர்’ கொடுத்துவிடுவாள். அவ்வப்போது ஐந்நூறு இருநூறு என்று தேவைக்குப் பெற்றுக் கொள்கிறாள். கையில் கிடைக்கும் தொகையில் சிறுகச் சிறுகக் கட்டி விடுகிறாள். செலவோ, கொடி, கூட்டங்களுக்கான துண்டுப்பிரசுரம் அச்சடித்தல், விளக்கு வாடகை, தொண்டர்களை ஆங்காங்கு அனுப்புதல், ‘தலைமறைவு’ இயக்கத்தை நிர்வகித்தல்... என்று பல நிர்ப்பந்தங்கள்.

அதிகப்படியாக இருபத்து நான்கு ரூபாய் துண்டு விழுகிறது.

எந்த இனம்... கொடுக்கப்படவில்லை?

கட்சிக்கு நிதி என்று பல பிரசுரங்களை விற்று வந்த பணம்...

மாநாடுகளில் கூட்டங்களில் அவற்றை வைத்துக் கொண்டு ஒரணா, ஒரணா என்று வசூல் செய்த பணம்...

நமது சரித்திரப் பாரம்பரியம்...

மக்கள் வயிற்றில் அடிக்காதே...

சோவியத் ஜனநாயகம்...

ஒவ்வொன்றும் ஆயிரம் பிரதிகள் வரவழைத்திருந்தாள். அனைத்தும் தீர்ந்து போயிருக்கின்றன... இந்தக் கணக்குகளை மறுபடி கூட்டுகிறாள்.

கடந்த ஒரு வாரமாக, வலிவலம், நாகை, கச்சேரி பொதுக்கூட்டம் என்று அலைந்த அலைச்சலில் உடல் வலிக்கிறது. அசதி, படுத்துக்கொள் என்று கெஞ்சுகிறது. மணி பன்னிரண்டைத் தாண்டிவிட்டது.

விடியற்காலையில் இவள் எழுந்திருக்க வேண்டும்.

கட்சிப் பணக் கணக்கென்பது நெருப்பு.

இவளுக்குச் சொந்தமாக அந்த வீட்டையும் நிலத்தையும் விற்ற தொகை ஆயிரத்துச் சொச்சம் இருக்கிறது. இவளுடைய கொடுக்கல் வாங்கல் எல்லாம் குஞ்சம்மாள் வகையில் தான் நடக்கும். அவள் ஏழைகளுக்கும் கொடுப்பாள். பணம் இருப்பவருக்கும் கொடுப்பாள். சொந்த பந்தங்கள், இவளை எப்படி நினைக்கிறார்கள். இவளுக்கென்ன, பிள்ளையா, குட்டியா? இவள் சேமித்தால் கட்சிக்காரன் அநாமத்தாகக் கொண்டு போவான்... என்ற மனப்பான்மைதான் தெரிகிறது. கட்சிப் பணம் மட்டும் கறாராக நாகை கடைவீதியில் உள்ள அனுமான் வங்கியில் இருக்கிறது.

புகையிலைக் கம்பெனிக் கிழவன்... இருமுகிறான்.

இவன் அடுக்கிருமல் தொடர்ந்தால் மணி ஒன்றரை என்று கொள்ளலாம்.

இவள் எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை.

கதவு தட்டும் ஓசை கேட்கிறது.

“அம்மா...”

வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறாள்.

“நாந்தாம்மா, சீனிவாசன். வண்டி கொண்டாந்திருக்கிறேன்... காலமேயே முகூர்த்தம்...”

மணி கண்களைக் கசக்கிக் கொள்கிறாள்.

“ஓ, நாகலூர் கல்யாணமா? நான் மறந்தே போனேன். கோனேரிராஜபுரம் போகணும்னிருந்தேன்...”

“எப்படிம்மா? நீங்கதானே சங்கம் கட்டின கையோட கல்யாணமும் நடக்கும்னீங்க. அம்மா கையால தாலி குடுத்துக் கட்டுறதுன்னு முடிவாயிடிச்சே!...”

“...சரி... வரேன்...”

சீனிவாசன் இன்னும் அருகில் வருகிறான்.

“அம்மா, இந்த உத்தண்டராமன் வந்து உஷார்னு சொல்லிட்டுப் போயிருக்காப்புல. அம்மாளச் சுத்தி, இருக்கிற முள்ளுவளே பிடுங்கிடும்போல இருக்குன்னான்.”

“ஏம்ப்பா? கண்டங்கத்திரி பிறந்த இடமே முள்ளுத்தானே? அதை மருந்துக்குப் பறிக்கணும்னா கவனமாத்தான் இருக்கணும்...”

“நீங்க நேரா வந்திருங்க இப்ப, பிளசர் காத்திட்டிருக்கு. நேரா, ஊருக்குப் போயி நீங்க குளிச்சி எல்லாம் செஞ்சிக்குலாம்!”

நாகலூரைச் சுற்றி இவளுடைய உறவுகள் பிறந்த குடும்பம் சார்ந்தவை. அந்நாள்களில் சனாதனத்துக்கு உள்பட்டுப் பூச்சியாக ஊர்ந்த நாள்களில் உறவுக் கூட்டம் இவளை மதித்தது. இப்போது சாதி ஆசாரங்களைத் துறந்துவிட்ட இவளைப் பிடுங்குவதற்குக் கருக்கட்டிக் கொண்டிருப்பது இயல்புதானே? போனவள் எங்கோ கண் காணாமல் தொலையக் கூடாதா! சுற்றிச் சுற்றி அவர்கள் வளைவுச் சேரிகளுக்குள்ளேயே நடமாடினாள்!

மணி அந்தக் கருக்கிருட்டில் கதவைப் பூட்டிக் கொண்டு, ஓசைப்படாமல் வந்து நிற்கும் பிளசரில் கிளம்புகிறாள். வண்டி, பாலம் கடந்து செல்வது தெரிகிறது. பிறகு திரும்புகிறது. சுந்தரவளாகத் திருப்பம் என்று புரிந்து கொள்கிறாள். அங்கே கதவு திறக்க, ஓராள் கூட ஏறிக் கொள்கிறான். ஊர் வந்து சேர்ந்ததும் காலைக் கடன் முடித்து, அவர்கள் நிரப்பி வைத்திருக்கும் இதமான வெந்நீரில் உடல் நோவு போகக் குளிக்கிறாள்.

உடன் கொண்டு வந்த வேஷ்டி சட்டை மாற்றி, ஈரம் துவைத்துப் படலையில் போடுகிறாள்.

அதற்குள், “அம்மா வந்துட்டாங்க! அம்மா வந்தாச்சு!” என்ற மகிழ்ச்சி ஆரவாரங்கள் பரவுகின்றன.

“சும்மா இருங்கடே...” என்று சீனிவாசன் அதட்டுகிறான்.

ஓராள் வந்து குசுகுசுக்கிறான்.

மணி தலை சீவிக்கொள்ளக் கண்ணாடி வருகிறது. சுடச்சுட இட்டிலி, தூக்குச் செம்பில் காபி... கொண்டு வருகிறார்கள்.

“வேல்கம்பு, பாலா கம்பு, ஆராக்கத்தி, அரிவாள்...” என்று கூறுவது செவிகளில் விழுகிறது.

“என்னப்பா, சீனிவாசா?...”

“உங்களுக்கு ஒண்ணுமில்ல. நீங்க சாப்பிடுங்கம்மா!”

மணமேடை என்று பிரமாதமில்லை. சிவப்புக் காகிதத் தோரணம் கட்டப்பெற்ற நான்குகால் பந்தல். சாணி மெழுகிய இடத்தில் பலகையில் கோலம் போடப்பட்டிருக்கிறது. மணமக்கள் வந்து அம்மாளைப் பணிகிறார்கள்.

மணி இதற்கென்றே கொண்டு வந்திருக்கும், அரிவாள் கதிர் சின்னம் பொருந்திய சிவப்பு வில்லையை இருவர் ஆடைகளிலும் பொருத்துகிறாள்... குத்துவிளக்கு ஏற்றப்படுகிறது. பிறகு மாலைகள் இரண்டையும் அம்மா எடுத்து ஒன்றைப் பெண்கையில் கொடுத்து மணமகனுக்குப் போடச் சொல்கிறாள். பிறகு மற்றொரு மாலையை மணமகன் கையில் கொடுத்து மணமகளுக்குப் போடச் சொல்கிறாள். நடுவீட்டில் இருவரும் பலகையில் வந்து அமர்கிறார்கள்.

அம்மாதான் புரோகிதர்; அம்மாதான் தலைவர்; அம்மா... அம்மாதான் எல்லாம்.

“குழந்தைகளா! நீங்கள் ஒருவரை ஒருவர் விரும்பிக் கல்யாணம் செய்து கொள்கிறீர்கள். சாம்பார் வாய்க்கார் என்ற பிரிவுகள் இல்லை என்று அழிந்து போக, ஒன்றுபடுகிறீர்கள். காலம் முழுவதும் ஒருவருக்கொருவர், பிரியமாய் நேசமாய் இருப்பீர்கள். வாழ்க்கை என்பது எதிர்ப்படும் கஷ்டங்களைத் தீரமாக எதிர்த்துப் போராடி வெல்வது தான். அப்படி எந்தவிதமான கஷ்டம் வந்தாலும், நீங்கள் சேர்ந்து, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதால், மொத்த சமுதாயமும் அப்படியே ஒன்றுபட்டிருக்க ஏதுவாக இருக்க முடியும். குழந்தைப் பேறு பெற்று, ஐக்கியமாக, இந்தச் சமுதாயத்தை இன்னும் துணிவும் பலமும் மிகுந்த தாக்குவீர்கள். எந்தப் பிளவும் உங்களிடையே வராமல் இருக்கட்டும்...”

தாலிச் சரடில் மஞ்சள் கிழங்கை வில்லையாக்கிக் கோத்திருக்கிறார்கள். அதை அம்மா எடுத்து மணமகன் கையில் கொடுக்க, மணமகள் கழுத்தில் அவன் கட்டுகிறான். கட்சிக்கென்று நன்கொடையாக 5 ரூபாய் வெற்றிலை பாக்குப் பழத்துடன் தட்டில் வைத்து அம்மாவுக்கு அளிக்கப்படுகிறது. பெண்கள் குலவை இட, திருமணம் மகிழ்ச்சியுடன் நிறைவேறுகிறது.

அந்த உற்சாகத்தில் எவனோ, “மணியம்மை வாழ்க!” என்று குரல் கொடுக்கிறான்.

அருகே உத்தண்டராமன் வந்து, வாயைப் பொத்திச் சாடை காட்டுகிறான்.

“அம்மா, வாங்க. இனிமே இங்கே இருக்க வாணாம்!” இவளைக் குறுக்குப் பாதையில் எங்கோ தனியாக அழைத்துச் செல்கிறான். வேல்கம்பு, ஆராமீன் அறுக்கும் கத்தி... பாலாகம்பு என்று ஓர் ஆயுதப்படை இவளைச் சூழ்ந்து கவசமாக்கிக் கடத்திச் செல்கிறது.

வேறொரு கிராமம்... வண்டிப்பாதையை விட்டு வரப்பில் விரைகிறார்கள். அறுவடைக்குக் காத்திருக்கும் கதிர்கள் சாய்ந்திருக்கின்றன.

மணலூர்... “அம்மா! அம்மா வாங்க!” கால் கழுவ நீர் வருகிறது. குஞ்சு குழந்தைகளோடு இவளை வரவேற்கும் இனிய முகங்கள். கைகள் நீண்டு நீண்டு அனைவரையும் ஆரத்தழுவ வேண்டும்போல் உணர்ச்சி வசப்படுகிறாள் மணி.

அம்மாவை ஒரு குடிலுக்குள் அழைத்துச் செல்கிறார்கள். மணி விரைந்து இந்த அயர்வு நீங்கத் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள். உடனே ஓடிச்சென்று ஒரு பனை ஓலை விசிறி கொண்டு ஒரு பெண் விசிறுகிறாள்.

“அம்மா, உங்களுக்குச் சிரமமில்லாம, பிளசர்ல கூட்டிப் போகணுமின்னு இருந்தோம். பிளசரை மறிச்சி நிறுத்த ஆளுகள் நிறுத்தியிருக்காங்க பாதையிலன்னு ராமன் சொன்னான். இப்படிக் கூட்டிட்டு வரவேண்டியதாயிட்டதம்மா...”

“மன்னிச்சிக்குங்கம்மா!”

சீனிவாசன் பணிந்து சொல்கிறான்.

நில உடைமை ஆதிக்கங்கள் இவ்வாறு திட்டமிட்டதில் இவளுக்கு வியப்பில்லை.

இவள் உடைமை வர்க்கங்களை அதே வளைவில் நின்று குதறி எறிகிறாள் அல்லவோ!

சனாதனப் போர்வைகளைக் கிழித்து எறிகிறாளே...! ஆனால் இந்தக் குழந்தைகள் காட்டும் அன்பு...! அடிபட்டு மிதிபட்டுப் பஞ்சையானாலும், தளும்பி நிற்கும் மனிதாபிமானம்...!

“அம்மா, ஐயர் வச்சு சமையல் பண்ணி, பொண்ணு மாப்பிள கூட பந்தில நீங்களும் சாப்பிடணும்னு ஆசையாக இருந்தோம்... தப்பா நினைக்காதிங்க தாயி! டிபன் காரியர்ல சாப்பாடு வருது...”

தலைவாழை இலையைப் போட்டுச் சுத்தமாகத் துடைத்து, காரியரைக் குப்பாயி திறந்து வைக்கிறாள்.

“ஏம்ப்பா, இவ்வளவு சோறா நான் சாப்பிடப் போறேன்! வாங்கடேய்!...”

மணி சோறு குழம்பு போட்டுப் பிசைந்து, அருகில் குழந்தைகளைக் கூப்பிட்டு உருட்டிக் கொடுத்துவிட்டுச் சாப்பிடுகிறாள். பாயசம், வடை, லட்டு, நொறுங்கி விட்ட அப்பளம், மோர்...

மணி உண்ட பின் அந்தக் குடிலிலேயே இளைப்பாறுகிறாள். பிறகு இருட்டும் நேரத்தில் வண்டியில் ஊர் திரும்புகிறாள். திரும்பும் போது நெஞ்சில் முணுக் முணுக்கென்று நோவுகிறது... மாடி ஏறும்போது மூச்சு வாங்குவதுபோல் வலி வந்தவள் பாயை விரித்துப் படுத்துக் கொள்கிறாள். தூங்கிப் போகிறாள்.

இரவு ஒன்பது மணிக்கு மேலிருக்கும். இவளுடைய உறவினரான, ஒன்றுவிட்ட சகோதரன், டாக்டர் வருகிறான்.

“மணி, உடம்பு சரியில்லையா...?”

“... ஒண்ணுமில்லையே? ஆரு சொன்னா?...”

“... நீ கிராமத்துப் பக்கம் எங்கேயோ பள்ளர்குடிக் கல்யாணத்துக்குப் போறதாக் காதில் விழுந்தது. நான் உன்னைப் போகவேண்டாம்னு சொல்ல வரணும்னு நினைச்சேன். ஒரு அவசரக் கேசு, மாட்டிண்டுட்டேன்.”

“... ஏன் போகவேண்டாம்னு சொல்ல நினைச்சே? இவ இப்படிக் குடி கெடுக்கிறாளே, ஆள் வச்சு அடிக்கணும்னு ஏற்பாடு பண்ணிருந்தார்களோ...”

இவளுக்கு உணர்ச்சி வசப்படுவதால் தானோ என்னவோ படபடப்பு அதிகமாகிறது.

“அதெல்லாம் தெரியாது மணி. எதுக்கு ரசாபாசம்? ஏற்கெனவே பாப்பான் அப்படி இப்படின்னு ஒரு கூட்டம் துரத்திண்டு திரியறது! நீ வெளியூரில் எங்கேயானும் போறப்ப நமக்கு ஒண்ணும் தெரியாது. ஆனா சொந்த இடத்துல சகதியப் பூசிக்கிறாப்பல, ஒரு மட்டு மரியாதை இல்லாம நீயும் விட்டுக்குடுத்துப் பேசற. இல்லையா?”

“ரொம்பச் சரி. என் மானம் மரியாதை பத்தி உனக்கேனும் இவ்வளவு அக்கறை இருப்பது எனக்குச் சந்தோஷமாயிருக்கப்பா.”

“மணி, உன் முற்போக்குக் கொள்கை எல்லாம் நல்லதுதான். ஆனா, இந்த ஜனங்கள் நீ நினைக்கிறாப்பில இல்ல. நீ என்ன சொன்னாலும் செஞ்சாலும் உன் கட்சி கூட உன்னை வேறயாத்தான் நினைக்கும். சொந்த பந்தங்கள் கிட்ட உனக்கு ஏன் வெறுப்பு? நீ வேஷம் மாறினதாக யாருக்கும் விரோதம் இல்ல. ஆனா, நீ கீழ்ஜனங்கள் கிட்டப் போயி, நீ பிறந்த குடியைத் தூத்தறது சரியில்ல...”

“நீ ஏன் இதுக்குச் சாதிக்கலர் குடுக்கறே? உன் பார்வை தப்பு...”

“மணி, உனக்கு இப்பப் புரியாது, நீ நினைக்கற மாதிரி உன் கட்சியோ ஜனங்களோ இல்ல...”

“ரொம்பச் சரி. நீ இப்ப வந்திருக்கே. வாயுக்குத்து மாதிரி ஒரு வலி முணுக்முணுக்குனு வரது. ஏதானும் மருந்து இருந்தாக்குடேன்!”

அவன் கிளினிக்குக்கு சைக்கிளில் சென்று மருந்துப் பெட்டியுடன் வருகிறான். இவளைப் பரிசோதிக்கிறான். “...மணி, நீ இப்படி ரொம்ப அலட்டிக்கக் கூடாது. ரெஸ்ட் எடுக்கணும். நான் முன்னே சொன்னதை ஞாபகத்தில வச்சுக்கோ!”

“அது சரி, நீ மருந்து ஏதானும் குடுக்கிறதானாக் குடு. மத்ததெல்லாம் எனக்குத் தெரியும்.”

சில மாத்திரைகள், டானிக்புட்டி எல்லாம் மறுநாள் காலையில் வருகின்றன.
-------------

அத்தியாயம் 21


ஆண்டு 1947. ஆகஸ்ட் பதினைந்தாம் நாள். விடியப் போகிறது!

அந்த இரவில் பாரத நாடே விழித்திருக்கிறது.

விஜயபுரத்துக் கடைவீதி உறங்குமா? இந்த ஒரு நாளைக் காண எத்தனை எத்தனை போராட்டங்கள், களபலிகள், துப்பாக்கிக் குண்டுகள், சிறைவாசங்கள்!

வெள்ளை அரசாங்கம் தன் குடையைச் சுருட்டிக் கொண்டு கப்பலேறுகிறது!

ஒவ்வொரு கடை வாயிலிலும், வாயிற்படியிலும் இரவு பன்னிரண்டு மணியை எதிர்பார்த்துக் கிளர்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிவப்பு, மஞ்சள், பச்சையில் சின்னச் சின்ன பல்புகள் எரியும் தொடர் விளக்குத் தோரணங்கள். கொடியேற்றும் நிகழ்ச்சியை ஒவ்வொரு தெருவிலும் திட்டமிடுகிறார்கள். நள்ளிரவில், பட்டாசைக் கொளுத்தி, கொண்டாடுகிறார்கள். மணி தங்கள் அலுவலக இருக்கையிலும் கொடி ஏற்றுகிறாள். ஒரு பக்கம் செங்கொடி இன்னொரு பக்கம் பெரிய அளவிலான தேசீயக் கொடி. ஒரு கிராமஃபோன் பெட்டி, ‘மைக்’கில், ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்று பட்டம்மாளின் குரலாய் முழங்குகிறது.

மணி விடியற்காலைக்கு முன்பே இரயில் நிலையக் கிணற்றில் நீராடி, புதிய கதர் வேஷ்டி, சட்டை அணிகிறாள். இனிப்புடன் இட்லியும் சட்டினியும் வாங்கி வருகின்றனர் தோழர்கள். அவர்களுடன் காலை உணவருந்திவிட்டு, பல்வேறு விவசாயத் தொழிலாளர் சங்கங்களில் தேசீயக் கொடியேற்று விழாவில் கலந்து கொள்ளக் கிளம்புகிறாள்.

இந்தக் கோலாகல மகிழ்ச்சியுனூடே, கரும்புள்ளிகள் இல்லாமல் இல்லை.

கருப்புச் சட்டை அணி ஒன்று மவுன ஊர்வலம் புறப்பட்டிருக்கிறது.

“இது என்னப்பா, திருஷ்டி பரிகாரம்?”

“... இந்தச் சுதந்திரம் யாருக்கு? தமிழனுக்குச் சுதந்திரம் இன்னும் வரவில்லை. இது ஆரிய சுதந்திரம் தானேன்னு சொல்றாங்கம்மா!” என்று சுவாமிநாதன் தெரிவிக்கிறான்.

“அட, இதில இதுவேறே இருக்கா!...”

“அவங்க இன்னிக்குச் சாயங்காலம், ஐநூத்துப் புள்ளயார் கோவில் முன்ன பார்க்கில் துக்க மீட்டிங் போடுராங்க!”

“...ஓ...! அப்படியா சங்கதி!”

இந்தக் கருஞ்சட்டைப் படையினர் தவிர, இன்னொரு முள்ளும் இச் சுதந்திர நாளை உறுத்திக் கொண்டிருக்கிறது.

“...தேசம் துண்டாடப்பட்டிருக்கிறது. ஹிந்துக்களை முஸ்லிம்கள் கொலை பண்ணுகிறார்கள். முஸ்லிம்களை ஹிந்துக்கள் கொல்கிறார்கள்! காந்திஜியே இந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை!” என்று ஓர் அணி, இது துக்க நாள் என்று அறிவிக்கிறது.

உண்மையே. ஆனால், துவக்க நாள்களில் இருந்து பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பற்றி உணர்ந்து ஒற்றுமை ஒற்றுமை என்று இவர்கள் குரல் கொடுக்காமலில்லையே! அவன் சூழ்ச்சியில் வென்று விட்டான். ஆனால் அதற்காக, இந்தச் சுதந்திரம் பொய் என்று துக்கம் கொண்டாடுவது மடத்தனம் இல்லையா?

நண்பர்கள் புடைசூழ, மணலூரில், தேவூரில், கொடியேற்று வைபவம் காணச் செல்கிறாள். எல்லாச் சங்கங்களிலும், தலைக்கு ஓரணா வசூல் செய்து, கொடியேற்றி, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்க ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.

“தோழர்களே, நமக்கு இது நன்னாள். அன்னியர் பிடியில் இருந்து அகன்றது முதல் அரசியல் விடுதலை. இந்தியாவின் எல்லா முன்னேற்றங்களுக்கும் எது முதல் முட்டுக்கட்டை என்று நினைத்துப் போராடினோமோ, அந்த முட்டிக்கட்டை அகன்று விட்டது...

காங்கிரஸ்காரர், கம்யூனிஸ்ட்காரர், ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய எல்லாரும் இந்தியர். இந்தியாவுக்கு விடுதலை வந்துவிட்டது...

ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே! பறையருக்கும் இங்கு தீயர், புலையருக்கும் விடுதலை...!... இது ஆனந்த சுதந்திரமாக நாம் பாடுபடுவோம், தோழரே!”

நடையில் அலுப்புத் தெரியாமல் சுற்றுகிறாள்.

மாலையில் ஐநூற்றுப் பிள்ளையார் கோயில் பக்கம் வந்து சேருகிறாள்.

பிள்ளையார் கோயில், எதிரே சாலையைக் கடந்தால் அல்லிக்குளம். குளத்தை அடுத்த மைதானத்தில் தான் கருஞ்சட்டைக்காரர்களின் கூட்டம் 6-30 மணிக்கு என்று அறிவித்திருக்கிறார்கள். ஆங்காங்கு ஓரிரு கருஞ்சட்டைகள் காணப்படுகின்றன. இந்த இளவல்களுக்கு உண்மையில் இந்தத் துக்கத்தைக் கொண்டாட உள்ளூர விருப்பம் இருக்காது. ஊர் முழுதும் கோலாகலமாக ஆடிப் பாடுகையில் இவர்கள் தங்கள் தலைவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு துயர நாளாகக் கருதி முடங்க வேண்டி இருப்பது துர்பாக்கியம்தான். மேலும், கொண்டாட்டத்துக்குத் தான் கூட்டம், கோஷம் எல்லாம் தேவை. துக்கத்துக்கு என்ன கூட்டம்? கண்டனக் கூட்டம் என்றாலும் அதில் ஓர் அர்த்தமுண்டு.

தமிழனுக்கு இதில் பங்கில்லை என்று தேசீய நீரோட்டத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளுதல் சரியோ? மணி இடுப்பில் கை வைத்துக் கொண்டு அல்லிக் குளத்தைச் சுற்றியுள்ள வீடுகளைப் பார்க்கிறாள். குளத்தின் இடப்புறம் - வீதியில், ஒரு மாடி வீடு இருக்கிறது. மறுபுறம் தான் கூட்டம் நடக்கும் திடல்.

மணி விடுவிடென்று அந்த வீட்டுக்குள் செல்கிறாள்.

“ஜே ஹிந்த்...!”

“வாங்கம்மா... வாங்க!” என்று வீட்டுக்காரர் இவளை மகிழ்ந்து வரவேற்கிறார்.

“உங்ககிட்ட ஒரு விண்ணப்பம். மாடியைக் கொஞ்சம் உபயோகத்துக்குத் தரமுடியுமா? சுதந்திர நாள் கூட்டம் போடணும்...”

“ஆகா! தாராளமாக உபயோகிக்கலாம். இதுக்குக் கேக்கணுமா?...”

அவ்வளவுதான். தொண்டர்கள், கிடுகிடுவென்று மொட்டைமாடியைக் கூட்ட மைதானமாக்குகிறார்கள். மேசை ஒன்று; நாற்காலி; விரி சமக்காளம்; பெரிய புனல் போன்ற ஒலிபெருக்கிக் குழாய்...

அங்கே துக்கக் கூட்டம் துவங்கச் சில நிமிஷங்களுக்கு முன் இங்கே குரல் ஒலிக்கிறது.

“அன்பார்ந்த, தோழர்களே! சகோதரர்களே! சகோதரிகளே!” என்ற விளிப்புக் குரலை அல்லிக்குளத்துச் சிற்றலைகள் சிலிர்த்து வரவேற்கின்றன. காற்றிலே பரப்புகின்றன. விநாயகர் கோயிலின் முன் சுதந்திர நாள் - வெள்ளிக்கிழமை அலங்கார வழிபாடு காணக் குழுமிய பக்தர் குழாம், குரல் வரும் திசை எது என்று ஆகாயத்தைப் பார்க்கின்றனர்.

சிறிது நேரத்தில், அந்த வீட்டின் முன், வாயிலில் மாடி திண்ணை என்று கூட்டம் நிரம்பிவிடுகிறது.

“மணி அம்மா...! நம்ம மணி அம்மாய்யா!”

“கம்யூனிஸ்ட் கூட்டமா இது?...”

“அட இல்லைய்யா, இது சுதந்தர நாள் கூட்டம். இதுல காங்கிரஸ் கம்யூனிஸ்டெல்லாம் கிடையாது!”

கருப்புச் சட்டைத் துக்கங்கள், இந்தக் கோஷங்களிலும், முழக்கங்களிலும் கரைந்து போன இடம் தெரியவில்லை!

“இது துக்க நாளா? தோழர்களே! நம்மைப் பிடித்த பிசாசு போயிற்று. சுதந்தர ஆர்வம் கொண்டு நமது பூசாரிகள் அடித்த வேப்பிலையில், ஐயோ போறேன், போறேன்னு போயிருக்கிறது. இது துக்க நாளா? இப்ப தமிழனுக்குச் சந்தோஷமில்லையென்றால், அந்த அன்னிய ஆதிக்கத்தில் தமிழன் சந்தோஷமாக இருந்தானென்று அர்த்தமா? தோழர்களே! நமக்குள் வேற்றுமைகளை அழித்த நிலையில், ஒட்டுமொத்தமாக, வயிற்றுக் குழந்தை வெளிவந்த சுதந்தரம் இது! இனிமேல் இதற்குக் கண் திறந்து, மூச்சுத் துவாரம் செம்மையாக்கி, சுத்தமாக்கி போஷித்து வளர்க்க வேண்டும்... நாம் இப்போதுதான் கண்ணும் கருத்துமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும்!”

கூட்டங்கள், கோஷங்கள் முடிந்து அறையில் திரும்புகையில் உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோரவில்லை. ரோஜா இதழ்களின் கசகசப்பு... நூல் மட்டுமே தெரியும் மாலைகள். கல்யாணம் முடிந்த ஆசுவாசம்...

ஆக, சுதந்திரம் வந்துவிட்டது!

ஆனால், சிவப்பும் மஞ்சளும் பச்சையுமாகக் குளிர்ச்சியாகத் தெரிந்த வண்ணங்கள் ஒரே அலசலில் குழம்பிச் சாயங்கள் அழிகின்றன. வடக்கே நாடு துண்டாடப்பட்டதனால் ஏற்பட்ட சமயக் கலவரங்கள், வன்முறைகளின் கோர தாண்டவங்கள், நாடு முழுதும் எதிர்பார்ப்புகள் பொய்யாகிப் போன நிதர்சனங்கள்... ஒன்றா, இரண்டா? மக்களின் அன்றாட வாழ்வுக்கான உணவுப் பொருள்கள் விலை ஏறுவதுடன், கிடைக்காமலும் போகின்றன. அத்துடன், தமிழகத்தில், புதிய ஆட்சியாளர், தம்மை மிராசு வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவே மெய்ப்பித்துக் கொள்ளும் போக்கு மணி எதிர்பார்த்தபடியே நிகழும் நிகழ்ச்சிகளில் விளங்குகின்றன. ஆனால், இவள் போராடப் பிறந்தவள். வாழ்க்கையே இவளுக்கு எதிரான அறைகூவல்தானே!

செங்கொடிச் சங்கங்களை நசுக்க, காங்கிரஸ் விவசாய சங்கம் நிறுவுகிறது. நியாயக் கட்சி, அதன் வகையில் தன் ஆதிக்கத்தைச் செலுத்தி, பாட்டாளிகளின் ஒற்றுமையைத் துண்டாடுகிறது.

மயிலாங்குடிப் பண்ணையில் தகராறு. குறுவை நெல் ஒரு நெருக்கடிச் சாகுபடி முன்பெல்லாம், குறுவைச் சாகுபடி முக்காலும் கிடையாது. இப்போது அரசு உணவு உற்பத்தி ஊக்கம் என்று, குறுவை அதிகமாகப் பயிரிடுவது வழக்கமாகி இருக்கிறது. அதை அறுத்துப் போரடித்து மூட்டையாக்கி வீடு கொண்டு வரும் நாள்களில் வானில் கருமேகம் சூழ்ந்து கொட்டுவேன் என்று பயமுறுத்தும்.

இம்முறை மயிலாங்குடிப் பண்ணையில் மணி கூறியபடி ஆள்கள் கூலிக் குறைப்பை ஏற்க மறுக்கிறார்கள். பலன், தடியடி, போலீசு, பொய் வழக்கு... சுப்பையா என்ற ஆளைப் பொய்வழக்குப் போட்டுக் கொண்டு போய் விட்டார்கள்.

மணிக்கு முதல் நாளிரவு தான் தப்பலாம்புலியூரில் செய்தி வருகிறது. இவள் அதிகாலையில் விரைகிறாள். இருள் பிரிவு நேரத்தில் வரப்பில் விறைத்துக் கொண்டிருந்த இவள் கழுத்தில் குடை வளையும் கவ்வுகிறது. “பொட்டச்சி, அம்பிட்டுக்கிட்டா!...”

தப்திப்பென்று அடிகள்.

மணிக்கு நின்று நிதானிக்கச் சிறிது நேரம் ஆகிறது. கையில் ஒரு கம்பு கொண்டு வரவில்லை. குடைக்குள் ஒரு கத்தி வைத்து எப்போதும் இடுக்கிக் கொண்டிருப்பாளே, அதுவும் இல்லை. ஏதோ ‘அஹிம்சா மூர்த்தி’களிடம் பேச்சுவார்த்தை நடத்தவருவது போலல்லவா வந்தாள்!

அவள் முரண்டி இருந்தால், ஒருகால் கொலையே செய்திருப்பார்கள். இது அவளை அவமானப்படுத்த வேண்டும் என்று செய்யும் செயல். அவர்களாக இவளை இழுத்துச் செல்வதற்கு உடன்பட்டுச் செல்கிறாள்.

“அம்மா, தனியாப் போகாதீங்க” என்று அவள் மைந்தர்கள் அலறுவார்களே!

சுதந்திர இந்தியாவில் இவளுக்குக் கிடைக்கும் முதல் மரியாதையா இது?

இவள் மனம் புழுங்கியவளாகப் பண்ணை எல்லையை மிதிக்கையில் பண்ணை அதிபனான தடியன்... கோட்டை வாயில் போன்ற கதவைத் திறக்கிறான்.

“ஆம்புளப் பொட்டச்சி! அம்புட்டுக்கிட்டியா! நீ என்னான்னு நினைச்சிட்டு ஆளுகளைத் தூண்டிவிடுற? காலம் காலமா சாணிப் புழுக்களைப் போல சிலும்பாம பண்ணவேலை செஞ்சிட்டிருந்தானுவ, நீ வந்து தூண்டிக் குடுத்து ஆட்டம் காட்டுற!... எந்த... வந்து உனக்கு இப்ப மால போடுறான்னு பாக்குறேன்! எங்களுக்கு எதிரா, அந்தப் பசங்களை வச்சிட்டு நீ கொடிகட்டுற! ஆ, ஊன்னா, கலெக்டர் ஜட்ஜியக் கையில போட்டுட்டு ஆர்டர் வாங்கிற?... இந்தா வச்சிக்க! எந்தப் பயலும் இப்ப வரமாட்டா.”

கால் செருப்பைக் கழற்றி இவள் மீது வீசி எறிகிறான் அந்தப் பதர். அட பழிகாரா! எவன் வருவான்னா சொல்ற? என் மக்கள் திரண்டு வந்தால் நீ ஒரு மூச்சிக்குத் தப்ப மாட்டே அலறுவாய்! தடி ராஸ்கல்! அவங்க போடும் சோறு, அது கொடுக்கும் வீச்சுதான் உன் திமிர்...! மனதோடு பொருமிக் கொள்கிறாளே ஒழிய, வாய் திறக்கவில்லை.

இவளைப் பின்கட்டில் வண்டிச் சாமான்கள் உள்ள அறைக்குள் இழுத்து விடுகிறான் காரியக்காரன். பூட்டிக் கொண்டு போகிறார்கள்.

அநியாய ஆதிக்கம், நியாயங்களை நசுக்க வன்முறையைக் கையாளுகிறது.

அந்தக் காலத்தில், கள் குத்தகையை எடுத்து ருக்மிணி சத்யாக்கிரகம் செய்கையில் இரவோடு இரவே, அந்த ஆதிக்கம், தொண்டர்கள் மீது மலங்களைக் கரைத்துக் கொட்டினார்களாம். ருக்மிணி கதை கதையாய்ச் சொன்னாள்...

ருக்மிணி இவளை விட இளைய பெண். ஏழு வயசில் கல்யாணம்... சீர் செய்நேர்த்தி போதவில்லை என்று விட்டுப் போனானாம்...

ஏதேதோ நினைவில் வருகின்றன. ருக்மிணி அந்தக் கலவரத்தில் அவர்களை மன்னிப்புக் கேட்க வைத்ததாகச் சொன்னாள். ஆனால், இந்த வர்க்கம், அப்படிக்கு இறங்குமா?

திடீரென்று கசமுசவென்று குரல்கள் கேட்கின்றன.

ஆள்கள் திமுதிமுவென்று வரும் ஓசைகள்...!

இவள் நெஞ்சம் விம்முகிறது.

அவர்களுக்கு இவள் கற்பித்திருக்கும் ஒற்றுமை - ஒருமைப்பாட்டிற்கு, ஒரு சிறிதும் பலனில்லாமல் போகவில்லை.

குரல்கள் மோதுகின்றன. கேட்டை உடைக்கும் சப்தங்களும் வருகின்றன. அருகிலேயே குரல்கள்... செங்கொடி வாழ்க... அம்மா எங்கே?

“எங்கம்மா எங்கே! அம்மா எங்கே, சொல்! பழி வாங்குவோம்! எலேய், உசிருக்குப் பயமிருந்தால் அம்மாளை விடு! அடிடா! உடை...!”

இவள் அறைக் கதவு திறக்கப்படுகிறது.

யார்...?

இவன் கீழ்வெண்மணிப் பண்ணை...

“அம்மா... வாங்க, ஏதோ தப்புத்தண்டா நடந்திடிச்சி. மன்னாப்பு...”

இவன் எங்கே இங்கே வந்தான்?

இவன்... ஒரு பெண் விடலை... ஒரு குமரிப்பெண்ணை விட்டுவைக்காத கயவன் அல்லவா?

இப்போது இவளைக் கையெடுத்துக் கும்பிடுகிறான்.

“அம்மா, எங்க உசிரைக் காப்பாத்தணும்...”

“ஏன், உங்க உசிருக்கு இப்ப என்ன வந்தது? அதான் சண்டைக்கடா போல அடியாள் வளர்த்து வச்சிருக்கிறீங்க?”

“அம்மா, நீங்க இப்ப மனசு வைக்கணும்...”

சற்று முன் செருப்பை விட்டெறிந்தவன் இப்போது காலில் விழுகிறான். வெளியே கூச்சல் பலக்கிறது. கதவை உடைத்துவிட்டார்கள். ஓட்டின் மீது, முற்றங்களில் திமுதிமுவென்று புகுந்துவிட்டார்கள்.

அம்மம்மா! இவள் பிள்ளைகள் - பெண்கள், மடிநிறையக் கற்கள், கம்பு, தடி, பாவாக் கம்பு, மண்வெட்டி... “டே, நாகப்பா, சீனுவாசா, ராமா, கோவாலு, என்னப்பா இதெல்லாம்!”

“அம்மா... அம்மா, உங்கள என்ன பண்ணாங்க? எங்க வவுத்திலே மண்ணள்ளிக் கொட்டும் அக்கிரமத்துக்கு மேலே... இவனுவளக் கொன்னு தொலைச்சிட்டு நாங்க ஜெயிலுக்குப் போறோம்...”

மணிக்குக் கண்கள் கசிகின்றன.

“எனக்கு உங்க நெஞ்சுகளே துணையா இருக்கறப்ப இவங்களால ஒண்ணும் செஞ்சிட முடியாது...”

“அவங்களப் போகச் சொல்லுங்கம்மா... மன்னாப்பு...”

“உன்னைச் சும்மா வுடணுமா? தூ!” என்று ஒருவன் வெற்றிலைச் சாற்றை உமிழ்கிறான்.

“எங்க உயிர்நாடி நீங்க. இந்தக் கும்பலை நம்பாதீங்கம்மா? இவனுவள நொறுக்கிட்டு ஜெயிலுக்குப் போறோம்...”

“ஷ், வாண்டாம்பா, நான் உங்களுக்கு நல்லது சொல்வேன். அப்படிச் செய்வது வீரமில்லை. நாம் சத்தியப் பாதையில் நின்னு இப்ப உரிமை கேட்கிறோம். நீங்கள் எல்லோரும் அமைதியாக இருங்கள். நான் இப்ப உங்கள் விவகாரத்தைத் தீர்க்கிறேன்...”

விவகாரம் தீர்ப்பது என்று வரும்போது, மணி இம்மியும் அசையவில்லை.
-------------

அத்தியாயம் 22


“சத்தியத்தின் ஜோதியை ஏந்திக் கொண்டு நம்மை விட்டுப் பிரிந்து போனார்” என்று கடை வீதி ரேடியோ அழுகிறது. கூட்டம் கொத்துக் கொத்தாகச் சேர்கிறது. மணி அப்போதுதான் பட்டுக்கோட்டையில் இருந்து பஸ்ஸில் வந்து இறங்கியிருக்கிறாள். தியாகப்பிரும்ம உத்ஸ்வ ஆராதனை கொண்டாடும் ரேடியோவில்...

“என்னப்பா?...”

“காந்தி செத்துப் போயிட்டாரம்மா! உண்ணாவிரதம் இருந்ததைத்தான் முடிச்சிட்டாரே? எப்படிச் செத்துப் போனாருன்னு தெரியல?” என்று ஒருவன் செய்தி சொல்கிறான்.

இவள் ரேடியோ பக்கம் செல்கிறாள்.

“ஓராள் குண்டுபோட்டுக் கொன்னிட்டான். நமஸ்தேன்னு சொல்லி வணக்கமா வந்து, கிட்ட வந்ததும் துப்பாக்கி எடுத்துச் சுட்டுட்டான். ‘ஹே ராமா’னு விழுந்துட்டாரு. கொன்னவனைப் பிடிச்சிட்டாங்களாம்!”

மணிக்கு மாடி ஏறத் தோன்றவில்லை. உண்மையிலேயே இருள்... முனிசிபாலிட்டுச் சங்கு, யுத்த காலத்தை நினைவுபடுத்திக் கொண்டு அழுகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் மெகாபோனை வைத்துக் கொண்டு “பொதுமக்களே, நமது தேசப்பிதா, நமக்குச் சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மா காந்தி, ஒரு பாதகனால் சுட்டுக் கொல்லப்பட்டார். மக்கள் அனைவரும் காலையில் நீராடி உண்ணாவிரதம் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்...” என்று இரவெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து இந்தத் துயர அலையில், பஜனைகளும், பக்திப் பாடல்களின் ஒலிகளும் வானொலிப் பெட்டி தரும் இறுதி ஊர்வல விவரங்களுமாகப் பொழுது கழிகிறது.

ஆட்சியாளர் அனைவரும், அஸ்தி கலசம் என்று நாடு முழுவதும் பங்கிட்டுக் கொண்டு வந்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று புனித நீர் நிலைகளில் கரைக்கும் சம்பவத்தை ஒரு தேசீய நிகழ்ச்சியாகச் செய்கின்றனர். சத்தியம் காத்த காந்தியின் மரணத்துக்காக உலகமே கரைகையில், இந்நாட்டின் ஆளும் கட்சியாகப் பரிணமித்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும், அந்த மகாத்மாவைப் பெற்ற பெருமையை ஏற்று, தங்களை அந்த மகாத்மா விட்டுச் சென்ற கொள்கைகளைக் காப்பவர்களாகவே பிரகடனம் செய்து கொள்கின்றனர். ஆனால், ஒப்பந்தப் பத்திரங்களை வீசி எறிந்துவிட்டு உரிமை கோரிய உழவர் பெருமக்களை ஈவிரக்கமின்றிப் பொய் வழக்குகள் போட்டு சட்டத்தின் கண்ணிகளில் அவர்களை மாட்டி, நில உடைமை வர்க்கம் கொடுமைகள் இழைக்கையில் ‘சத்திய வாரிசா’ன அரசு அதிகாரிகளும் அவர்களுக்கே ஆதரவாக இருக்கின்றனர்.

“அம்மா, மணலூரில ஒரே ரகளையம்மா! பாவி, ராசுமவன அடிச்சே கொன்னிட்டான். போலீசு வந்து வீட்டில் புகுந்து சட்டிபான கூட இல்லாம உடச்சிட்டாங்க. நமுக்கு சொதந்தரம் வராம இருந்தப்ப கூட போலீசுக்காரன் இப்படி அடாவடி பண்ணலம்மா!” என்று ஓலமிடுகிறார்கள்.

இவள் நாகப்பட்டினத்துக்கு விரைகிறாள்.

கலெக்டரைப் பார்க்க முடிகிறதா? மனுக்களையும் மகஜர்களையும் எழுதி வைத்துக் கொண்டு காத்திருக்கும் கும்பல்... கதர்ச் சட்டைகளின் ஆதிக்கங்கள் புரிகிறது. முன்பு ஆங்கிலேய நாகரிக சூட்டும் கோட்டும் டையும் அணிந்த கனவான்கள், இன்று குளோஸ் கோட் போன்ற நீண்ட அங்கியும் வெள்ளைச் சராயும் அணிந்திருக்கிறார்கள். இது தேசீயம். காத்துக்கிடந்து கலெக்டரைப் பார்க்க ஒரு நாளாகிறது. ஒரு தமிழ்வாதி சொல்கிறான். கலெக்டர் என்ற பெயர் இனிமேல் “தண்டல் நாயகம்” என்று மாற்றப்படுமாம்.

மணிக்கு வேடிக்கையாக இருக்கிறது.

கலெக்டர் அறை இவளுக்குப் பழையதுதான். “என்னம்மா!”

“ஸார், சுதந்தர சர்க்கார் வந்த பிறகும் இப்படித் துயரமான நடவடிக்கைகள் நடக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. சத்தியத்தின் பெயரால் ஆட்சியைப் பற்றியவர்கள்... சத்தியமே வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு, போலீஸ், ஒன்றுமறியாத ஜனங்களை நசுக்கி விடலாமா? கிஸான் சங்கம் - சர்க்கார் - பண்ணை மூன்று பேரும் சேர்ந்து செய்த ஒப்பந்தம் ஓரிடத்திலும் மதிக்கப்படவில்லை. ‘மூன்று படியா? மொத்தக் கண்டு முதலில் பங்கா, கிடையாது. உன்னால் ஆனதைப் பார்’ என்று சொல்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் நியாயம் இதுதானா?”

இவளுக்கு முகம் சிவக்க, குரலில் சூடு பறக்கிறது. “அம்மா... கொஞ்சம் அமைதியாகப் பேசுங்கள். நீங்கள் எந்த ஊர் பற்றிப் பேசுகிறீர்கள்...”

“நான் மணலூரில் இருந்து வரேன். சில நாள்களுக்கு முன் தான் குறுவை சாகுபடி சமயம் மயிலாங்குடியில் பெரிய கலவரத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டோம். ஆனால், உடனே மறுபடியும் அதே கதை. இந்தியாவின் பரம ஏழைகளுடன் தம்மை இணைத்துக் கொண்டார் காந்திஜி. அவர் மரணம் சத்தியத்தின் மரணமாகி விட்டதா?”

அவர் சற்றே திணறித்தான் போகிறார்.

“அம்மா, நீங்கள் இப்ப என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறீர்கள்?”

“நீங்கள் மணலூருக்கு வரவேண்டும். நமக்குச் சுதந்தரம் வந்துவிட்டது. நல்ல நியாயம் கிடைக்கும் என்று ஏழைகள் எதிர்பார்த்தது பொய்யென்று ஆகக் கூடாது. நீங்கள் வந்து இரு தரப்பையும் விசாரித்து நியாயம் வழங்க வேணும்.”

“கிளார்க்! குறிச்சுக்கோப்பா...”

சிறிது யோசனை செய்துவிட்டு, “பிப்ரவரி 24-வரேம்மா, காலையில்” என்று கூறுகிறார்.

மணி வெற்றிப் பெருமிதத்துடன் நடக்கிறாள்.

கலெக்டரின் விஜயம் சுற்றுவட்டப் பல பண்ணை அதிபதிகளையும் பரபரப்புக்குள்ளாக்குகிறது.

அவர்கள் அனைவரும் வருகின்றனர். ஆங்காங்கு உள்ள விவசாய சங்கத் தலைவர்களும் வருகிறார்கள். அசைக்க முடியாத நம்பிக்கையுடன் மணி நிற்கிறாள். இந்தப் பகுதியில், எத்தனை முயன்றாலும் இந்த உழைப்பாளி மக்களின் ஒற்றுமையையும் நேர்மையையும் குலைக்க முடியாது...

சென்ற ஆண்டில் இதே தஞ்சையில், முப்பதாயிரம் ஏக்கராவையும் வாரதாரர்களுக்குக் குத்தகைக்கு விடாமல் வெளி ஆள்களை வைத்துச் சாகுபடி செய்வதென்று முடிவு செய்தார்கள். அப்போதும் இதே காங்கிரசின் இடைக்கால அரசு ஆளுகை செய்தது. ஆனால் விவசாயிகள் அஞ்சி விடவில்லை. களத்தில் இறங்கி வெளி ஆள்களை வேலை செய்ய விடாமல் தடுத்த போது, தஞ்சையில் நிலப்பிரபுத்துவம் தகர்கிறது என்று ஆதிக்கம் அலறியது.

அதெல்லாம் பழைய கதை. இப்போது?

சரியாகப் பதினோரு மணிக்கு, மணலூர் கம்பிச் சாலையில் ஜீப் வண்டி வருகிறது. போர் முடிந்த பிறகு இந்த வண்டிகள், அரசு அலுவலக அதிகாரிகளைச் சுமக்கின்றன.

இந்த அதிகாரி, தமிழ் நன்றாகவே பேசுகிறார். எல்லாத் தரப்பு வாதங்களையும் கேட்பது மட்டுமின்றி எழுத்து மூலமாகவே வாங்கிக் கொள்கிறார்.

பண்ணையாளுக்கு மூன்று படி நெல்லும் அரை ரூபாய்க் காசும் கொடுக்க வேண்டும். ஆண் - பெண் கூலியில் வித்தியாசம் இருக்கக் கூடாது. எருக்கூடை சுமப்பது தனியான வேலை. அது வயல் சம்பந்தமான வேலையோடு சேர்ந்ததல்ல. நாற்று நடுவது என்றால், அது மட்டும்தான். அதே போல் ஆண், வைக்கோல் போர் போடுவது தனியான வேலை. இதுபோன்ற உபரியான வேலைகளுக்குத் தனியான கூலி உண்டு. பிரசவம், நோய் போன்ற காலங்களில் ஓர் அடிப்படைக் கூலியைச் செலவுக்காகப் பண்ணை கொடுக்க வேண்டும். குடியிருப்பு இடங்களைக் காலி செய்யச் சொல்லி, அநியாயமாக வழக்குச் சுமந்து கொண்டு சென்று காவலில் வைத்திருக்கும் ஆள்களை விடுதலை செய்ய வேண்டும்.

பண்ணைகளுக்குப் பேச விஷயம் இல்லை.

ஆனால், மூன்று படியும் அரை ரூபாயும் அதிகம் என்று வாதாடுகின்றன. கலெக்டர் நடுநிலையில் நின்று இரண்டு படியும் அரை ரூபாயும் என்று தீர்க்கிறார். பின்னர், இவர்கள் முன் வைத்த அனைத்து ஷரத்துகளையும் ஒப்புக் கொள்ளச் செய்து, ஒப்பந்தம் எழுதப் பணிக்கிறார். ஒப்பந்தம் தயாரானதும் எல்லோரிடமும் கையொப்பம் வாங்கி, ஒவ்வொருவரிடமும் ஒரு பிரதியைக் கொடுக்கிறார்.

காக்கழனியில் வந்து கலெக்டருக்கு வடை பாயாசத்துடன் சாப்பாடு போடுகின்றனர். அவரும், அவருடைய சிப்பந்திகளும் சாப்பிட்டுவிட்டு, மாலையோடு ஜீப் வண்டியிலேறிச் செல்கிறார்கள்.

அவர்களை மணி, வழியனுப்பிவிட்டுத் திரும்புகையில், திண்ணையில் மணலூரின் இளைய மைனர், பட்டா மணியம் - உட்கார்ந்து இருக்கிறான். இவன் தந்தை காலமாகி விட்டார். இவன் சில்க் ஜிப்பா, குதப்பும் வெற்றிலை, வாசனை என்று அடாவடித்தனத்தின் மொத்த உருவமாகத் திகழ்கிறான். சுவரில் தெறிக்க, வெற்றிலைச் சாற்றை உமிழ்கிறான். இது மணிக்குத்தான்.

“... கலெக்டரைக் கூப்பிட்டு ஒப்பந்தம் பண்ணிட்டே! ஒரு காசு கொடுக்க முடியாது... இந்தப்... பசங்களுக்கு. கலெக்டர் வந்தா மட்டும் நடந்திடுமோ? ஹேஹ்ஹேன்னானாம்! கலெக்டருக்குமேல, மெட்றாஸ் ஐகோர்ட்டுக்குப் போய் உங்களை ஒண்ணுமில்லாம அடிக்க முடியும்...?”

“... வாயைக் கொட்டாதேப்பா? அதுக்குமேல எனக்கும் எங்கே போகணும்னு தெரியும்! சத்தியம் பேசும் இங்கே!”

“சத்தியம் பேசும்!”

“ஆமாம். பேசுறதைப் பார்க்கிறேன். உங்களை அழுத்தி எழுந்திருக்க முடியாம பண்ணாட்டா நா... நா... நானில்ல!”

“வீணாச் சவடால் விடாதே! நானும் பார்க்கிறேன்!”

மணியின் ஆத்திரப் படபடப்பு அடங்க வெகு நேரமாகிறது. அண்ணா வருகிறார்.

“கிடக்கிறான் மணி, இவனோட என்ன, தெரிஞ்ச குணம்தானே? நீ உள்ளே வா!”

அப்போதைக்கு அது, அற்பமாகத்தான் தோன்றுகிறது.

ஆனால், திருப்பம் இவள் எதிர்பாராமல் ஏற்படுகிறது.

மணி அன்று ரயில் நிலையத்தில் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தன் இருப்பிடம் வரும்போதுதான் அவரைப் பார்க்கிறாள். குடுமி வைத்துக் கொண்டு நாமம் போட்ட முகம். நடுத்தர வயசு இருக்கும். பருமனில்லாத, உயர வாகு. மூலைக்கச்ச வேஷ்டி; முழுக்கைச் சட்டை. உள்ளூர்வாசியாகப் பார்த்த முகமாகத் தோன்றவில்லை. என்றாலும் பரிச்சயமானதொரு பார்வை. இவள் நினைவின் மடிப்புகளைத் துழாவுகிறது.

“நீங்க... மணியம்மாதானே?”

“ஆமாம்...” என்ற பாவனையில் தலையசைத்து விட்டுப் படியேறி இவள் மாடிக் கதவைத் திறக்கிறாள். “உள்ளே வந்து பேசலாமே? என்ன சமாசாரம்?”

“வந்து உக்காந்து பேசுறதுக்கில்ல. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டுப் போகவந்தேன்.”

குரல், மிக நெருக்கமாக, நட்புறவின் இணக்கம் தோய்ந்ததாக இருக்கிறது.

“சொல்லலாமே!”

“உங்களுக்கு என்னைத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனா, எனக்கு உங்களை நல்லாத் தெரியும்... நீங்க ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது... இத்தனை நாளைப் போல இல்ல...!”

இதைக் கூறிவிட்டு அவளுடைய பதிலுக்குக் காத்திராமலே அவர் விடுவிடுவென்று இறங்கிச் செல்கிறார்.

மணி முன்புறத்துச் சன்னலருகில் நின்று கீழே பார்க்கிறாள். இன்னும் கடைகள் திறந்து முழுக் கலகலப்பும் வரவில்லை. துடைப்பமும் கையுமாகச் சாக்கடை பெருக்கும் வீராயி வருகிறாள். ஒரு காக்கை வரிச்சட்டத்தில் வந்து குந்துகிறது.

மின்னல் கீற்றுகளாக எத்தனையோ முகங்கள்; சம்பவங்கள்... இந்த ஜாக்கிரதை என்ற சொல் இவளுக்குப் புதிதில்லை. ஆனால் இப்படித் தீவிரமாகவே தோன்றியதில்லை. இவளைச் சுற்றிக் காலை வாரிவிடும் வஞ்சகங்கள் எப்போதுமே வலைவிரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த ஜாக்கிரதைக்கு... இப்போது புதிய பரிமாணம் இருப்பது போல் தோன்றுகிறது.

பலருக்கும் வாரண்டுகள் பிறப்பித்து அஞ்சாத வாசத்தில் தள்ளி இருக்கிறது அரசு. நாற்பதுகளின் தொடக்கங்களிலேயே தலைவர்களைச் சிறைபிடித்துப் பிறகு விடுதலை செய்தாலும், அவரவர் ஊர் எல்லைகளை விட்டுத் தாண்டலாகாது என்ற ஆணை பிறப்பித்திருக்கிறது. சொந்த மண்ணில் அன்னியமாக நடமாடுபவர்களும், பெண்களைப் போல் முக்காடும் சேலையும் போட்டுக் கொள்பவர்களும் கூட வியப்புக் குரியவர்களாகத் தோன்றாமல் இயக்கம் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது... ஆனால், இப்போது, இவள்... இவளுக்குக் கண்ணியா? இவளால் இனியொரு வேஷம் புனைய முடியுமா? பைராகி, ஊதுவத்திக்காரர் என்று பொருந்துமா?... இவளுக்கு ஒளிவு மறைவு சமாசாரமே பொருந்தா. எல்லாம் நேருக்கு நேர் போராட்டம்தான். எனவே இவளைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்... இந்த ஆள் தகவல் உளவாளி... ஸி.ஐ.டி.யோ? இவளை எச்சரித்திருப்பதாகக் கொள்ளலாமா?

மணி மறுபடி நினைவு படுத்திக் கொள்கிறாள்.

சில மாதங்களுக்கு முன்வரை போராட்டம் தீவிரமாக இருந்தபோது, வரித்துறை, ரெவின்யூ மந்திரி இங்கு நிலவரங்கள் அறிய சுற்றுப் பயணம் வந்தார். அவருக்கு விவரங்கள் கூறச் சென்ற குழுவில் இவளும் இருந்தாள். திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கும்பகோணம், சீர்காழி எல்லா இடங்களுக்கும் சென்றாள். எங்கு சென்றாலும், ஒரு பெண் ஆண் வேஷத்தில் வருவதனால் ஏற்படும் சலசலப்பில் கிசுகிசுப்பில் ஏளனப் பார்வைகளும், கிண்டல், குத்தல்களும் இவளுக்குப் பரிச்சயமானவை.

இப்போது... இயக்கம் சம்பந்தமான பல பதிவேடுகள், குறிப்புகள் எல்லாம் இருக்கின்றன. அவை பத்திரமாக்கப் பட வேண்டும்.

காக்கழனி மருமகனை வரச்சொல்லிச் செய்தி அனுப்புகிறாள். அன்று மாலையே மன்னார்குடிக்குப் பயணமாகிறாள்.

--------------

அத்தியாயம் 23


“அம்மா, என்ன, இந்த நேரத்துல?... நடந்தா வந்தீங்க?”

“ஆமாம், முக்கியமான சமாசாரம்...”

பைக்குள் மறைத்துக் கொண்டு வந்ததொரு குறிப்புப் புத்தகத்தை அந்த அம்மையிடம் கொடுக்கிறாள்.

நள்ளிரவை நெருங்கும் நேரம். தலைக்கு விலை வைக்கப்பட்டுத் தலைமறைவாக இருக்கும் ஒரு தோழரின் அன்னை அவர். இந்த இரவுப் பரிமாறல்கள் பழக்கம் என்றாலும், மணியை மிகுந்த கனிவுடனும், மரியாதையுடனும் நோக்குகிறார்.

“நீங்க எப்படிப் பத்திரமாக் காப்பாத்துவீங்களோ, சேர்த்துட்டேன். இருட்டோடு கும்பகோணம் போகணும்மா?”

மணிக்கு இந்த ஒரே நாளில் தொண்டை கட்டி ரணமாக வலிக்கிறது.

அந்த அன்னை கொதிக்க வைத்த பாலை ஆற்றி, இவளிடம் கொண்டு வந்து கொடுக்கிறார்.

அருந்திவிட்டு அங்கேயே சிறிது நேரம் உறங்குகிறாள். பிறகு இருளோடு கிளம்பி விடுகிறாள். பகல் முழுவதும், ஆங்காங்கு விவசாய சங்கக்காரர்களைச் சந்தித்த பின் மாலை மங்கி, இருள் பரவிய பிறகே இவளால் கும்பகோணம் செல்ல முடிகிறது. வண்டிப் பயணம்; பஸ்; நடை... ஓய்ச்சலில்லாத இயக்கம். பாணாதுறை வடக்கு வீதியில் சாமிநாதபிள்ளை வீடு...

அந்தக் காலத்தில், போலீஸ்காரராக இருந்து தேசீயக் கைதியைத் தப்பவிட்டதற்காக வேலை நீக்கம் செய்யப் பெற்றவர். இவர் இல்லம் பல தலைமறைவுத் தோழர்களுக்கு நிழல் தரும் இல்லம்.

இவளைக் கண்டதும் சாமிநாதன் மனைவி முகமலர்ந்து வரவேற்கிறாள்.

“வாங்கம்மா! இப்பத்தா பேசிட்டிருந்தாங்க. மயிலாங்குடி சமாசாரம் பத்தி...”

அடுப்பில் ஏதோ தீயும் வாசனை.

உள்ளே ஓடுகிறாள்.

“காந்தி, அம்மாளுக்குத் தண்ணி இறைச்சிக் குடு, கால் கழுவ...” என்று கூறும் குரல் கேட்கிறது.

சிறுமி வருகிறாள். வந்து பார்த்துவிட்டு உள்ளே ஓடிச் செல்கிறாள்.

“அம்மா, வாசல்ல யாருமில்லையே? நடையில் ஒரு தாத்தாதா நின்னிட்டிருக்காரு போல...”

“மக்கு, அவங்கதாண்டி!” என்று அதட்டிக் கொண்டு அவளே வருகிறாள்.

“ஏம்மா, உள்ளார வாங்க...”

மணி நடை ஓரம் செருப்பைக் கழற்றி வைக்கிறாள். பையுடன் உள்ளே சென்று பையை ஓரமாகச் சாத்திவிட்டுக் கொல்லைப்புறம் செல்கையில் சிறுமி செம்பில் நீர் முகர்ந்து கொடுக்கிறாள். “தாத்தான்னு நினைச்சியாம்மா? நான் பாட்டி...” என்று சிரித்துக் கொள்கிறாள். முகம், கை, கால் கழுவிச் சுத்தம் செய்து கொள்கிறாள்.

“வெந்நீர் வச்சித் தாரேனேம்மா? குளிக்கணுமா? ரொம்ப தூரம் நடந்து வந்தாப்பில இருக்கு...?”

“வேணாம். குடிக்க மட்டும் வெந்நீர் குடுங்க போதும்...”

உள்ளிருந்து தாளித மணம் வருகிறது.

சிறிது தேங்காயெண்ணெய் வாங்கித் தலையில் புரட்டிக் கொள்கிறாள். குச்சிகுச்சியாக, கனமாக இருக்கிறது. ஓர் அரிப்பு, உழவர் குல மக்கள் வயற்காட்டுக் களியைத் தலைக்குத் தேய்த்து முழுகுவார்கள். ஏதேனும் தலையில் தேய்த்து முழுக வேண்டும். சளியில்லாமல் தலை கனமாகத் தெரிகிறது. தொண்டைக் கட்டு; கால் வலி; அசதி...

இந்தச் சகோதரியின் பரிவில் எல்லா நோவும் கரைந்து போகின்றன. காலையில், மன்னார்குடியில் மூக்கன் வாங்கி வந்து தந்த இரண்டு இட்டிலிதான் அன்று அவள் கொண்ட உணவு. இலையில் சுடச்சுட அவல் உப்புமா தாளித்து வைத்துச் சர்க்கரையும் வைக்கிறாள்...

இந்த அன்பில் நெஞ்சு கனிந்து உருகுகிறது.

“... இதெல்லாம் பத்திரமாக இருக்கட்டும்...” என்று பையை அங்கு சேர்ப்பிக்கிறாள்.

“உப்புமா ஆறிப் போகுது, சாப்பிடுங்கம்மா...”

“நேத்து முந்தா நா... ராவு வந்திருந்தாப்பல. அதுக்கு நாலு நா முன்ன மணலிக்காரரு வந்தாருங்க. அடயாளம் தெரியல. இந்த அவுலுதா தாளிச்சி வச்சே... என்னமோ... சொல்லிக்கிறாங்க...”

“அம்மா சுயராச்சியம் வந்திருக்கு, ஆனாலும் நீங்கதா தேசத்தை இப்ப காப்பாத்தறாப்பில இருக்கு...”

நெஞ்சில் அவல் சிக்கிக் கொண்டாற் போல் புரையேறுகிறது. கண்களில் நீர் பெருகுகிறது.

மணிக்கு இதுவரையிலும், போலீசு, சிறை என்ற அச்சம் தோன்றியதேயில்லை. இலையை மடக்கிக் கொண்டு சென்று கொல்லையில் எறிந்து விட்டுக் கை கழுவிக் கொண்டு வருகிறாள்.

உக்கிராண அறை காலியாக இருக்கிறது. உண்மையான தேசத் தியாகிகள்... படுத்தால் உறக்கம் பிடிக்கவில்லை.

கூடத்தில் சாமிநாதன் வந்துவிட்ட குரல் கேட்கிறது. “மணி அம்மா... வந்திருக்காங்க... ஏதோ தஸ்தாவேஜி குடுத்து வச்சிருக்காங்க...”

“அதா, வாசல்லே நாமக்காரன் நிக்கிறானேன்னு பார்த்தேன். ஏதானும் சாப்பிட்டாங்களா?”

“அவுல்தா... தாளிச்சுக் குடுத்தேன்...”

வெகுநேரம் உறக்கம் வரவில்லை. ஏதேதோ நினைப்புகள். இனம் புரியாததொரு பரபரப்பு. புரண்டு புரண்டு படுக்கிறாள். காந்தியின் தாய் வந்து எழுப்பும் போதுதான் தூங்கியிருக்கிறோம் என்ற உணர்வு வருகிறது. ஆனால் கண்கள் எரிகின்றன. தலை பாரம் குறையவில்லை.

“மணி ஆயிட்டுது. போட் மெயிலுக்குப் போகணும்னீங்களே?...”

விறுவிறென்று சுமை குறைந்த பையை மாட்டிக் கொண்டு கிளம்பிவிடுகிறாள். திருவாரூரில் இவள் அறைக்குத் திரும்புகையில் காக்கழனி மருகன் வந்து காத்திருக்கிறான்.

“அத்தை? வரச் சொன்னீகளாமே?”

“ஆமாம்பா, என்னமோ சந்தேகமா இருக்கு. ஏதானும் நடக்குமோ என்னமோ தெரியலே... ஒரு ஏற்பாடு பண்ணிக்கணும் இல்லையா? எனக்கும் வயசாகிறது. நான் திரும்பி வரப்ப எப்படி இருப்பேனோ? குஞ்சம்மாகிட்ட சில பத்திரங்கள் இருக்கு. எனக்குன்னு கடைசிக் காலத்தில் ஒரு நிழல் வேணும்னு இப்ப தோணுறது. ஓஞ்சு போயி கட்சிக்குப் பாரமா இருக்கக் கூடாது. நீ சிமிளில போய்ச் சொல்லு. அந்தப் பத்திரம் காலாவதியாறத்துக்கு முன்ன வாங்கி, வசூல் பண்ணினா ஒரு ரெண்டு ரெண்டரை தேறும்... எனக்கு ஒரு நிழல்... இருக்கட்டும்...”

கும்மட்டியைப் பற்ற வைத்து, சோறு வடித்து, மிளகைத் தட்டிப் போட்டு ரசம் வைக்கிறாள். குளிக்கவில்லை.

ரசத்தைக் கரைத்துப் பருகுகையில், நாலைந்து கிராமத் தோழர்கள் வருகிறார்கள்.

“அம்மா...?”

“என்னப்பா, எங்க வந்தீங்க?”

“நேத்தே வந்தோம். காணமின்னவே, கதி கலங்கிப் போனோம்மா? மணலூர் ஒப்பந்தம் ஆச்சுன்னாங்க... பட்டாமணியம் கருவிட்டிருக்கிறானாம்!...”

“அதெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது...”

பேச முடியவில்லை. இவள் இதுநாள் வரை இப்படி உணர்ச்சிவசப் பட்டதில்லையே!

“அம்மா சூடா காபி வாங்கியாரட்டுமா?”

“வேண்டாம்பா, தொண்டைக்கட்டு, படுத்துத் தூங்கினா சரியாயிடும்...”

“கவனமா இருங்கம்மா... இதா முனிசாமி இங்கதா இருக்கிறான்... ஒரு குரல் கூப்பிடுங்க போதும்... இப்பிடியே படுத்துக் கிடக்கட்டும் ராவுக்கு.”

“... வேணாம்பா, அரசமரத்தப் புடிச்ச பேயி புள்ளையையும் பிடிச்சிதான்னு ஆவப்போகுது? நீங்க பத்திரமா இருந்துக்குங்க!...”

புத்தகங்கள், பிரசுரங்களை அடுக்கி வைக்கிறாள். “இதெல்லாம் வாணா கொண்டிட்டுப் போயி... நம்ம... தொப்பாளாம் புலியூர் தோழர் வீட்டில வச்சிடுறீங்களா? படங்கள் நம்ம சங்க இயக்கம் சம்பந்தமானது.”

அவற்றையும் கட்டி அனுப்பி விடுகிறாள்.

ரசத்தைச் சூடு செய்து சூடாகக் கரைத்துப் பருகி விட்டுப் படுக்கிறாள்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவைத் திறக்கும் முன் விளக்கைப் போடுகிறாள். வெளிச்சம் மங்கி இருக்கிறது... நள்ளிரவு என்பதை ஓசை அடங்கிய தெருவே விள்ளுகிறது. ஒரு காக்கிச் சட்டை போலீசு... மற்ற இருவர் ‘மஃப்டி’.

“அம்மா... உங்களை... இதோ வாரண்ட்!...”

இவள் எதிர்பார்த்திருந்தாள். ஆனால் இவ்வளவு விரைவிலா?

பரபரப்பு அடங்கிப் போகிறது. நிதானமாகச் செயல்படுகிறாள். எப்போதும்போல் தன் பெரிய பையை எடுத்துக் கொள்கிறாள். அதில் தன் கதர் வேட்டி, சட்டை, உள்ளாடைகள், பற்பொடி, சோப்புக் கட்டி, தேங்காயெண்ணெய்க் குப்பி எல்லாவற்றையும் வைக்கிறாள். தனது போர்வை, ஜமுக்காளம் தலையணைகளைச் சுற்றிக் கொள்கிறாள். சிறைவாசம் பற்றித் தோழர்கள் கூறிய விவரங்கள் கேட்டிருக்கிறாள். மதுரை ஜானகி, சிறை வாசத்தில், சோறும் ஊட்டமும் இன்றியே ஆஸ்த்மா நோய்க்கு இரையாகி இளமையை அகாலத்தில் பறி கொடுத்திருக்கிறாள்.

ஆனால்...

இவளை, இந்த வாரண்ட், தடுப்புக் காவல் சட்டம் என்று தெரிவிக்கிறது.

எப்படியானாலும் இது புதிய அனுபவம்.

சிறைக்குச் சென்றவர்களை மீண்டும் வீட்டில் சேர்த்துக் கொள்வதானால் பிராயச் சித்தம் செய்ய வேண்டும் - செய்தால் போதும், தேசியம் சனாதனம் - என்று சங்கராச்சாரியார் தீர்ப்பை ஒப்புக் கொண்ட காலம் நினைவில் வருகிறது. நாங்கள் சுதந்திரம் பெற்று ஆட்சிக்கு வந்தால், ஏழை எளியாருக்குச் சொர்க்கம் காட்டுவோம். வீதியில் தேனும் பாலும் ஓடும் என்று சொன்ன காங்கிரஸ்காரர்களின் கைதியாகப் போகிறாள் மணி. மாட்சிமை தங்கிய மன்னர் பெருமானின் அடிச்சுவட்டில் நின்று முதலில் உரிமைக் குரலை நெருக்கும் சட்டமாகத் தடுப்புக் காவல் சட்டம் இவளை வளைத்திருக்கிறது.

யாருக்கு, எதைத் தடுக்கும் காவல் இது?

எண்ணங்கள் பொலபொலக்க, கைப்பையுடன் இவள் இறங்குகிறாள். ஒரு மஃப்டி இவள் படுக்கைச் சுருளை எடுத்து வருகிறான்.

கடை வீதி, அச்சகம், சுதந்தரக் கொடியேந்திப் பல முறைகள் இவள் ஊர்வலம் சென்ற இடங்கள், எல்லாம் உறங்குகின்றன. தெரு விளக்குகள் மஞ்சளாக அழுது வடிகின்றன! கூண்டு போன்ற போலீசு வண்டி ஏற உயரமாக இருக்கிறது. மற்றவர் உதவியுடன் ஏற்றப்படுகிறாள். அது ஒரு சனிக்கிழமை இரவு. வண்டி இவளைக் கடலூர் சிறைக்குக் கொண்டு செல்கிறது.
--------------

அத்தியாயம் 24


கடலூரில் இவளுக்கு ஒரு சிரமமும் இல்லை. குளிப்பதற்கும் வேறு சொந்தத் தேவைகளுக்கும் வசதிகள் இருக்கின்றன. ‘காவல்’ என்ற ஒரு கட்டுத்தான். தனது பழைய வேட்டி சட்டை உள்ளாடைகளைத் துவைத்து வைத்து உலர்த்துகிறாள். பின்னர் புதிய உடை உடுத்தி, இட்டிலியும் காபியும் அருந்தி உட்கார்ந்திருக்கிறாள்.

உள்ளே... ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வருகின்றார்.

“என்னம்மா? எல்லாம் சவுகரியமா இருக்கா?...”

இவளுக்குத் திக்கென்று நெஞ்சில் உணர்வு முட்டுகிறது.

இவர்... இவர் யார்...? நாமம், முகம், உயரம்... மூலைக் கச்சம்...

கண்கள் மின்ன, ம்... என்று அவள் மேலும் பேச வாயெடுக்குமுன் அவர் ஒற்றை விரலை உதட்டில் வைத்துச் சைகை செய்கிறார்.

வியப்பில் அவள் மவுனமாகிறாள்.

... இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

காவல் ஆணைக்குத் தப்பும் தலைமறைவு இரகசியங்கள், பசி, பட்டினி, உயிரைப் பணயம் வைக்கும் பயணம் எல்லாம் இவர்களுக்கு மட்டும்தானா? அந்நாளில் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பணிந்து சொந்தச் சகோதரனை அடித்துக் கொன்ற காவல் துறையானை நோக்கி, “ஏ போலீஸ் நாயே! வேலையை விடு!” என்று கூவினார்கள். சட்டம் படித்தவர்களை ‘நீதிமன்றங்களைப் புறக்கணியுங்கள்’ என்றார்கள். ஆட்சி ஸ்தம்பித்து, அன்னியன் செய்வதறியாமல் ஓடிப் போவான் என்று நம்பினார்கள். ஆனால் இன்று ஆட்சி நம்முடையது. இந்த நம்முடைய ஆட்சியில் சகோதரனைச் சகோதரன் அடிக்கிறான். அந்தக் காங்கிரஸ்காரனை விட இவன் மனிதத்தன்மையிலிருந்து பிரியும் கொடூரத்தை அனுபவிக்கிறான். எனவே, இங்கு ஆட்சி அன்னியர், சொந்தக்காரர், என்பதற்கெல்லாம் ஒரே பொருள்... வலியவன் தன் அதிகார பலத்தினால், இன்னொரு சாராரை வருத்தி வாழ, மேலும் ஓர் ஆட்சி என்பதுதான். இவர்கள் மனித உரிமைகளை மதிப்பவர்கள் என்றிருந்தால், மணி சிறைக்கு வரவேண்டாம்.

இவளைக் கண்ணியமாகவே நடத்துகிறார்கள். வழக்கு விசாரணை எதுவுமில்லை. யாருக்கேனும் செய்தி அனுப்ப வேண்டுமா என்று கேட்டுப் பரிவு காட்டுகிறார்கள். பின்னர், வேலூர் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப் படுகிறாள்.

புகழ்பெற்ற வேலூர் சிறை. சிறை என்பது? திருடர்களுக்கும் கொலையாளிகளுக்குமே என்றிருந்த கரும்பெயரில் இன்று, நாட்டுக்காக உரிமைக் குரல் கொடுத்துத் தாமாகவே வந்து புகக்கூடிய ஒரு கௌரவ இடம் என்ற புதிய பரிமாணமும் இசைந்திருக்கிறது.

பெரிய மதில் சுவர்... வட்ட வடிவமான பெண்கள் சிறை. இவளுக்குத் தனி அறை - குளியலறை, கட்டில், மேசை நாற்காலி வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. சிறையின் பெண் அதிகாரியும், ஏனைய சிப்பந்திகளும், இவளைக் கண்டதும் வியந்து முகத்தில் கை வைக்கின்றனர்.

‘... இவங்க... பொம்பிள... ஆம்பிளயாட்டமா இருக்காங்க?’

‘இவங்க பெரிய தலைவர் போல, காங்கிரஸ்காரங்களைத்தான் விட்டாச்சே? கம்யூனிஸ்டோ?...’

இவளுக்கென்று ஏவல் பணி செய்ய ஓர் ஆர்டர்லி பெண் இருக்கிறாள். இவர்களைப் போன்று தடுப்புக் காவல் சட்டக் கைதியாக அடுத்த அறையில் மதுரைத் தோழி ஜானகி இருக்கிறாள். உடல்நிலை, ஆஸ்துமாவினால் மிக மோசமாக இருக்கிறது.

இவர்களுக்குச் சமையல் செய்து போட உதவியாளர் இருக்கின்றனர். சூபரின்டெண்ட் அம்மா, நடுத்தர வயசுக்காரி...

மணி வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து, உடற்பயிற்சிகள் செய்கிறாள். நீராடி, துணி துவைத்து உலர்த்துகிறாள். காலையில் காபி ரொட்டி. நண்பகலுக்கு அரிசி பருப்பு, காய் வகைகள், தயிர் நெய் என்று எல்லாச் சாமான்களும் வருகின்றன. இவள் அடுப்படியில் இருந்து தனக்குத் தேவையான உணவைச் சமைக்கச் சொல்லலாம். மூன்று மணிக்குத் தேநீர், பிஸ்கோத்து, மாலை ஏழு மணிக்குச் சாப்பாடு. இரவு பருகுவதற்குப் பால்... அரச போகம்!

இந்த அரச போகத்துக்கா மணி சிறைக்கு வந்திருக்கிறாள்? வட்டவடிவமான சிறையைச் சுற்றிப் பார்க்கப் போகிறாள். வரிசையான கொட்டடி போன்ற அறைகள். அனைவரும் திருட்டு, கொலை, சாராயக் குற்றவாளிகள். தகவல் பலகையில், மொத்தம் ஐந்நூற்று இருபத்து மூன்று கைதிகள் என்று கணக்கு எழுதப்பட்டிருக்கிறது. அதில், வகை வகையாக, கொலைக் குற்றவாளிகள், முப்பத்து எட்டு திருட்டுக் குற்றவாளிகள், சாராயக் குற்றவாளிகள் என்று பிரிவுப்படுத்தி விவரம் காண்கிறாள்.

குற்றவாளிக் கைதிகளை மணி மிகுந்த பரிவுடன் நோக்குகிறாள். இவர்களில் பெரும்பான்மையோர், சாராயம் விற்பதில் உடந்தையாக இருந்த காரணத்தினால் சிறைக்கு வந்திருக்கிறார்கள். மதுவிலக்கு உண்மையில் பெண்களுக்குத்தான் வரப்பிரசாதம் என்று சொல்லலாம். அதை மீறி அவர்கள் ஏன் தொழில் செய்கிறார்கள்? குற்றவாளியாகிறார்கள்?

இந்தக் குற்றவாளிகளுக்கு மாலை ஐந்து மணிக்கே இரவுக்கான உணவு கொடுக்கப்பட்டு விடுகிறது. இதற்கு மேல்தான் மணி தாராளமாகச் சிறைக்குள் நடமாடலாம். அவர்களைச் சந்தித்துப் பேசலாம் என்று கண்டு கொள்கிறாள்.

மதுரைத் தோழியைத் தவிர்த்து, தெலிங்கானாவில் இருந்து வந்த சகோதரிகள், இளையவர்கள் இருவர் அங்கே அடுத்த அறைகளில் இருக்கின்றனர்.

மொழி வேற்றுமை மட்டுமின்றி, அரசியல் சார்ந்த கருத்துகளிலும் அவர்கள் வேறுபாடு கொண்டிருக்கிறார்கள். நூலகத்தில் இருந்து தினமணி, சுதேசமித்திரன் பத்திரிகைகள் வருகின்றன. ஆனால் சில பத்திகள் கறுப்பு மையினால் மெழுகப்பட்டிருக்கின்றன.

இவள் வந்த பிறகு, கட்சி தடை செய்யப்பட்டிருக்கிறது. வெளியே போலீசு அடக்குமுறை அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. தெலிங்கானாவில் இருநூறு, முந்நூறு கிராமங்களே பொது உடமைக் கட்சியின் ஆதிக்கத்தில் வந்திருப்பதை மணி அறிவாள். அங்கே மக்கள் எந்த அளவில் குரூரங்கள் அனுபவிக்கிறார்களோ? அந்தச் செய்திகள் விவரிக்கப்படவில்லை. மாறாக, கம்யூனிஸ்ட்கள் என்பவர்கள், எறி குண்டு எறிந்தும், கத்தியால் குத்தியும், தண்டவாளம் பெயர்த்தும் நிரபராதி மக்களைக் கொலை செய்பவர்கள் என்ற கருத்தைப் பொது மக்களுக்கு நன்கு உணர்த்தும்படி செய்திகள் இருக்கின்றன. மணி புரட்சி தொடர்பான வன்முறைகளில் கருத்து வேறுபாடு உடையவள். சமுதாய ரீதியாக அடிமட்டம் வரையிலும், சமூக மாற்றங்களுக்குப் பக்குவமான மனப்பாங்கைத் தோற்றுவிக்காமல், ‘ஆயுதப் புரட்சி’ என்று கிளம்புவதில் பயனில்லை என்று கருதுகிறாள். இதனாலேயே ஆந்திரப் பெண்ணும் இவளும் ஒத்துப் போகமுடியவில்லை?

ஒரு நிமிஷம் நின்று நிலைக்காமல் ஓடிக் கொண்டிருந்த அவளுக்கு நாள் முழுதும் அடைபட்டுக் கிடப்பது உண்மையில் பெரிய தண்டனைதான். மணிக்கு ஐந்து மணி எப்போது வரும் என்றிருக்கிறது.

அன்று இவள் உலாவுகையில், ஓர் இளம் வயசுப் பெண் இவளையே பார்த்து நிற்கிறாள்.

மணி பரிவுடன் அருகில் சென்று, “ஏம்மா...? உன் பேரென்ன?” என்று வினவுகிறாள்.

மருட்சியுடன் இவளையே பார்க்கிறாள். முகத்தில் குழந்தைத்தனமே மாறாத இளமை. தலையை மொட்டை போட்டிருக்கிறார்கள்.

இவள் என்ன பெயர் என்று தானே கேட்டாள்?

“ஏழு வருசம்” என்று பதில் வருகிறது.

“ஏம்மா, பெயரைத்தானே கேட்டேன்?... ஏழு வருசம் தண்டனை அனுபவிக்க நீ என்ன குத்தம்மா பண்ணினே?...”

குத்தம்... குத்தம்...!

நெருப்புக் கொப்புளம் வெடிப்பது போல் அவள் கண்களில் கொலை வெறி... ‘டேய்... பயலே? நீ இங்ஙன வந்து, குத்தம் என்னன்னா கேக்குறே?’

ஒரு கணமாய்ப் பாய்ந்து மணியின் கழுத்தை நெரிக்க முயல்கிறாள்.

“ஐயோ... ஏழு வருசக்காரி, கொல... கொல...” என்ற கத்தலும் பரபரப்பும், மணியை அவள் நெருக்கலில் இருந்து விடுபடச் செய்கின்றன. ஜெயிலர் அம்மா ஓடோடி வருகிறாள்.

“அம்மா, இந்த ‘கான்விக்ட்’கள் பயங்கரமானவங்க... அவங்க பக்கம் போகாதீங்கம்மா... ஐயோ, ஏதானும் ஆயிருச்சின்ன, எங்க பாடு மோசமாயிடும்மா...!”

மணி கழுத்தைத் தடவிக் கொள்கிறாள்.

பால்மணம் மாறாத அக்குழந்தை முகத்தில்... எப்படிக் கொலை வெறி திரண்டு வந்தது? இருபது வயசு கூட இருக்காது...

ஓ, இந்தப் பெண்கள் ஏன் கொலை செய்கிறார்கள்? திருடுகிறார்கள்? சாராயம் விற்கிறார்கள்?

மணியினால் இரவு தூங்க முடியவில்லை. இந்தக் குற்றவாளிச் சூழல், வஞ்சிக்கப்பட்டவர்களின் உலகை அநியாய தண்டனை என்னும் நரகவாதனைக்குட்பட்டவர்களின் உலகை, மனிதத்துவம் நசித்துவிட்ட ஓர் உலகை அணுவணுவாகக் காட்டிக் கொண்டிருக்கிறது. பருப்பு, நெய், தயிர், வெண்டைக்காய், வெங்காயம் என்று இவளுடைய உணவுப் பொருள்கள் வரும்போதும், பணி செய்பவர் வந்து, ‘என்ன சமைக்கணும் அம்மா’ என்று கேட்கும்போதும், இவளால் சிந்திக்கவே முடியவில்லை.

“இங்கே இதுபோல், அந்த கான்விக்ட் பெண்களுக்கு ரேஷன் கொடுப்பார்களா...?”

ஜானகி, பதினெட்டு வயசில், அந்தச் சிறை தண்டனையை அனுபவித்தவள். “ரெண்டரை அவுன்சு கஞ்சி, குழம்பு, புளி நெளியும். வாயில் வைக்க வழங்காது. அவங்க குடுக்கற ரேஷனெல்லாம் எண்ணெய், காய், பருப்பு எல்லாம் ஆபீசிலேயே பங்கீடாகி யார் யாருக்கோ போயிடும்...” என்று இளைப்பும் இருமலுமாக அவள் தெரிவிக்கிறாள்.

பிள்ளைக் கொட்டடி என்று ஒன்று இருக்கிறது. கைதிப் பெண்கள் மூன்று வயசுக்குட்பட்ட குழந்தைகளுடன் வருவார்களேயானால், குழந்தைகளுக்கென்று தனியாக அமைக்கப்பெற்ற இடம் அது. எந்தக் குற்றவாளித் தாயும், குழந்தையும் விடுதலை பெற்றுப் போனதாக வரலாறே கிடையாது என்று சொல்கிறார்கள்.

ஏனென்றால் நருநருவென்ற சோளக் கஞ்சியைப் பிள்ளைகளுக்கு ஊற்றுவார்களாம். அது கழிச்சலில் கொண்டு விடும். நீர்ப்பசை வற்றி, யமனுலகுக்குப் பயணம் சென்று விடும்.

“இங்கே வரும் போது எடை மெஷினில் நிற்க வைத்து குறிக்கிறார்கள். போகும்போது அதைச் செய்து ஒரே எடைன்னு சொல்வது எப்படி?”

“ஓ, அது ஒரு தந்திரம். அந்தப் பெண்பிள்ளைகளுக்குக் குடிக்கிற தண்ணீல ஏதோ கலப்பாங்களாம். உடம்பு நீர் கொண்டுக்கும். எடை குறையாது. ஆனா, மாசவிலக்கு... சொல்ல முடியாம கஷ்டமாயிடும். நா அனுபவிச்சிருக்கேம்மா...”

படுபாவிகளா என்று கத்தத் தோன்றுகிறது.

“இந்த மாதிரி அக்கிரமங்கள் ஒழிய, ஏகாதிபத்திய மிச்சங்கள் தொலைய, ஆயுதப் போராட்டம் தான் தீர்வு.”

இது தெலுங்குச் சகோதரியின் அழுத்தமான முடிவு.

“கல்வியும் விழிப்புணர்வும் சுத்தமாக இல்லாத கோடானு கோடிகளை வைத்துக் கொண்டு, ஒரு பாரபட்ச சமுதாய அமைப்பு நம்மை வஞ்சிக்கிறது என்கிற உணர்வு ஒவ்வொருவருக்கும் இல்லாத நிலையில், ஆயுதம் தூக்குவது குழப்பத்திலும் அராஜகத்திலும் கொண்டுவிடும். கட்டுப்பாடு, கண்ணியம், மனிதாபிமான உணர்வு எதுவும் மிஞ்சாது!”

“இல்லை, சீனத்தில் சாத்தியமாகலியா...?”

மணியினால் ஒப்ப முடியவில்லை. அவள் ஒவ்வொரு கிராமத்தின் அனைவரையும் தொட்டு உணர்ந்திருக்கிறாள். எனவே யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை.

தனிமை; தனிமை; தனிமை...

இரவில் உறக்கம் தொலைகிறது. பரபரப்பும் படபடப்பும் மிஞ்சுகின்றன. சிறை மருத்துவர் பார்க்கிறார்.

இரத்த அழுத்தம் என்று மருந்து கொடுக்கிறார்.

ஒரு நாள், பார்வையாளர் அறையில் இவளைப் பார்க்க, அத்திம்பேர் வந்திருப்பதாகத் தெரிந்ததும், பேராவலுடன் செல்கிறாள்.

சிறையின் தனிமையில், உறவின் அண்மை சொல்லொணா ஆறுதலைத் தருகிறது. எல்லோரைப் பற்றியும் விசாரிக்கிறாள்.

“மீனா எப்படி இருக்கிறாள்? அவள் குழந்தை சௌக்கியமா? மதுரையில் எல்லாரும் சௌக்கியமா? வத்சலா குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? பட்டுக்கோட்டையில் மோகன் குடும்பம்; திருவாரூரில் குஞ்சு...” என்று, இயக்கம் சம்பந்தமாக எதுவும் கேட்க முடியாத நிலையில் விசாரிக்கிறாள். ஓய்வு நேரத்தில் பின்னின லேஸ் சுருளைக் குழந்தை கவுனுக்குத் தைக்கக் கொடுக்கிறாள்.

அவர், இப்போது அவளிடம், உடைமைகளுக்கு உரியவராக, சான்றாகக் கையொப்பம் வாங்கிச் செல்ல வந்திருக்கிறார்.

“தெற்குத் தெரு வீட்டை வாங்கி உனக்காக வச்சுடறேன், மணி. அதுபத்திக் கவலைப்படாதே...” என்று சொல்கிறார்.

“நம்ப மரத்தில் பழுத்த மாம்பழம்... கொண்டு வந்திருக்கேன்... அவா கொடுப்பா... வேற உனக்கு என்ன வேணுமோ காகிதம் எழுது...”

இந்தப் பரிவுகள் மேலும் மேலும் கசியச் செய்கின்றன.

“குழந்தையைக் கூட்டி வந்திருக்கக் கூடாதா? அடுத்த தடவை வரப்ப, அவர்களையும் கூட்டிட்டு வாருங்கோ, அத்திம்பேர்!...”

“சரிம்மா, உடம்பைப் பார்த்துக்கோ!”

அவர் விடைபெற்றுக்கொண்டு செல்கிறார்.

மணி அன்றிரவு கண்களையே மூட முடியாத கிளர்ச்சியில் புரண்டு படுக்கிறாள். இந்தச் சிறையில் மனித உறவின் நேயத்துக்கே வழியில்லை. ஆற்றில் இருந்து எடுத்துப் போட்ட மீனாய் ஒரு துடிப்பு. இவள் தேசம் கொண்டு உறவாடிய சேரிக் குடும்பங்கள், உத்தண்ட ராமன், கோபாலு, வீரையன்... மூக்காயி... வெந்நீர் வைத்துத் தரும், தோசை வாங்கிக் கொண்டு ஓடி வரும், அம்மா, அம்மா என்று ஆயிரம் முறைகள் ஒரு நாளில் பாசக் குரல்கள் அவள் இதயத்தில் படியும். அவர்களை எல்லாம் இந்தப் போலீஸ் என்ன செய்கிறார்களோ?

இந்தச் சூரியாவதி சொல்வதுபோல் ஆயுதப் போராட்டம் சாத்தியமோ? அத்தனை தலைவர்களும் இதே வேலூர் சிறையில் ஆண்கள் பகுதியில் இருப்பதாக அவளுக்குப் படுகிறது.

தங்கமணி - மோகன் - தந்தை, தாய் இருவரும் காங்கிரஸ் மந்திரி சபையில் இருப்பவர்கள்...

உணர்ச்சியோ எதுவோ நெஞ்சைப் பந்தாக அடைக்கிறது. மூச்சு விட முடியவில்லை...

அம்...மா... அம்...மா!

இந்தச் சிறையில் இவள் அநாதையாக இறந்து விடுவாளோ? நெஞ்சை நீவிக் கொள்கிறாள்.

அசையாமல் கிடக்கிறாள்.
-------------

அத்தியாயம் 25


மேலே விசிறி சுழல்கிறது.

ஒரே வெண்மை; தூய்மை; ஆஸ்பத்திரிச் சூழலுக்கே உரிய கிருமிநாசினி வாசனை.

மணி முதல் வகுப்பு கைதி. முதல் வகுப்பின் மெத்தைப் படுக்கையில் பயணம் செய்து அவள் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறாள். வாயில் வராந்தாவில் அவள் படுக்கைக்கு ஒட்டினாற் போல் நிற்கும் காவலாளி இவள் சுதந்திரமற்றவள் என்பதை வெளியாருக்குப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறான். அந்தப் பெரிய அறைக்குள் ஆறு படுக்கைகள் இருக்கின்றன. அவளுக்கு எதிரே ஓர் இளம் பெண் படுத்திருக்கிறாள். சிறுநீரகக் கோளாறாம். கணவன், தாய், தகப்பனார் என்று மாற்றி மாற்றி வந்து பார்க்கிறார்கள். ஏழு மாசக் கைக்குழந்தை வேறு இருக்கிறது. வலதுபக்கம் ஒரு நடுத்தர வயசுக்காரி. காலில் ஏதோ நரம்புக்கோளாறு... மகளும், கணவனும் வருகிறார்கள். கோடியில் ஒரு வயதான அம்மாள், மகளும், மருமகனும் வருகிறார்கள்.

இவளுக்கென்று யார் இருக்கிறார்கள்?

வந்து இரண்டு நாள்களாகின்றன. ஆரஞ்சு ரசம், பால்கஞ்சி, ஆர்லிக்ஸ் என்று திரவ உணவுதான் கொடுக்கிறார்கள். காலையில் ஆயா ஒரு காபி, கண்ணாடித் தம்ளரில் கொண்டு வந்து கொடுக்கிறாள். குடையாக ஆடை படிந்து காபியே வாய்க்குப் பிடிக்கவில்லை. ஒரு மிளகு ரசம் சோறு கரைத்துக் கொடுப்பவர்... யார்...?

ஓ... எதிர்காலம் என்ற ஒன்றை இப்படிப் பலவீனமான படுக்கைக்காரியாக அவள் நினைத்ததே இல்லையே? மணலூரில் அன்று நடுத்தெருவில் இவள் நிறுத்தப்பட்ட போது கூட, ஒரே இரவில் அதே தெருவில் குடியேறத் துணிவு கொண்டிருந்தாளே? எத்தனை அதிகார வர்க்கப் போராட்டங்கள்? பட்டாமணியத்தின் வசைகள், அச்சுறுத்தல்கள்...? அவள் உயிரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்பட்டதில்லை.

இப்போது...

மணி பதினொன்று. டாக்டரும் வருகிறார்.

வெண்ணுடைத் தாதி வந்து போர்வையைச் சரி செய்கிறாள்.

‘கேஸ் ஷீட்டை’ எடுத்துக் கொடுக்கிறாள்.

டாக்டர் ‘ஸ்டெத்’ வைத்துப் பார்க்கிறார்.

“இப்ப நெஞ்சு வலி இருக்காம்மா...?”

“பரவாயில்லை.”

“சாப்பிட்டீர்களா...?”

அப்போது தான் மணி அருகில் இன்ஸ்பெக்டர் நிற்பதைப் பார்க்கிறாள். “ஃப்ளூயிட்ஸ் நிறையச் சாப்பிடலாம். ரசம் சோறு, கஞ்சி சாப்பிடலாம்...” சொல்லிவிட்டு அவர் நகருகிறார்.

இன்ஸ்பெக்டர் அருகில் வருகிறார்.

“அம்மா, உங்களுக்கு வீட்டுக்குச் சொல்லி அனுப்ப வேண்டுமா? இங்கே சொந்தக்காரர்கள் யாரேனும் இருந்தால் சொல்லுங்க... தெரிவிக்கிறோம்...”

மணி நினைத்துப் பார்க்கிறாள்.

இவள் தாய் வழி உறவில்... ஒரு பிள்ளை இருக்கிறான். சீனிவாசன். பிறகு ருக்மிணி... ருக்மணி இங்குதான் பக்கத்தில் வால்டாக்ஸ் ரோடில் இருக்கிறாள். அவள்... வெளியில்தானிருப்பாள்.

இன்ஸ்பெக்டரிடம் ருக்மிணியின் விலாசம் கொடுக்கிறாள். சீனிவாசனின் விலாசமும் நினைவூட்டிக் கொண்டு கொடுக்கிறாள்.

அடுத்த நாளே ருக்மிணி, ரசம் சோறு கரைத்துத் தூக்கில் எடுத்துக் கொண்டு விசாரித்தவாறு வந்து விடுகிறாள். மெல்லிய குரலில் “காம்ரேட்...?” என்று காதோடு அழைக்கிறாள். கண்ணீர் மல்குகிறது.

நெய்த்தாளிதமும், கறிவேப்பிளையுமாக இவளுக்குப் பிடித்த மிளகு ரசம்... மிளகு ரசம் சோறு கரைத்த உணவு அமுதமாக இருக்கிறது.

“ருக்மிணி...?” அவள் கைகளை எடுத்துக் கண்களில் வைத்துக் கொள்கிறாள்.

வாயில் நிற்கும் காவலாளிக்கு இவளும் கட்சிக்காரி என்று தெரிந்திருக்குமோ? என்ன பேசுகிறார்கள் என்று கண்காணிக்கமாட்டானா?

“... ருக்மிணி... எத்தனை அடக்கினாலும்... பொங்கி வருகிறதே...?”

“இருக்கட்டும் காம்ரேட்... வேண்டாம்... அமைதியாக இருங்கள்...”

முகத்தைத் துண்டால் துடைத்து, நெஞ்சை நீவி இதம் செய்கிறாள்.

“நான் சில புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறேன் காம்ரேட்...” என்று பையில் இருந்து சில நூல்களை எடுத்துத் தலையணைக்கடியில் வைக்கிறாள்.

ஓ... இவள் புத்தக விற்பனையில் பரிசு பெற்றவளாயிற்றே...?

மாலை வரையிலும் அருகில் அமர்ந்திருக்கிறாள்; மீண்டும் ஹார்லிக்ஸ் கரைத்துக் கொடுத்து விட்டு விடைபெற்றுச் செல்கிறாள்.

சற்றே ஆறுதலாக இருக்கிறது.

மணி தேவையில்லாமல் வளவள என்று பேசுபவள் இல்லை. பிறரின் கருத்துக்களை, அவை தன்னைப் பற்றிய விமரிசனங்களாக இருந்தாலும் இப்போதெல்லாம் உள்வாங்கிச் சிந்தனை செய்கிறாள். ஆனால் வேண்டுமென்று சகதியை வீசுவதற்காக இறைக்கப்படும் சொற்களை இவள் என்றுமே பொருட்டாக்கியதில்லை. மாறாக இவளுடைய இயக்கத்தை இதுவரையில் எவராலும் கட்டுப்படுத்தி இருக்க முடியவில்லை. சிறையிலேனும் உலவச் சென்றாள். தன் சொந்த வேலைகளிலும் துணி துவைப்பது போன்ற வேலைகளிலும், சமையல் வேலைகளிலும் கூட ஈடுபட்டாள். ருக்மிணி வந்தாலும் எதையும் பேச முடிவதில்லை. அவளுக்கே தடையுத்தரவு என்று வருமோ...? அயல் படுக்கைக்காரர்கள், அவர்கள் உறவினர்கள் கூட இவளை ஒரு மனிதப் பிறவியாகப் பார்க்கவில்லை. “ஆணைப் போல் கிராப்பு வைத்துக் கொண்டு வேட்டி உடுத்தும் கைதி. இவள் என்ன கைதியோ, என்ன இழவோ...?” என்று ஓர் இகழ்வுக்குரிய பார்வையைத்தான் பதிக்கிறார்கள். “ருக்மிணி, நான் இந்தச் சோர்விலேயே போய்விடுவேனோ என்று பயமா இருக்கும்மா... ஆனா... நான் சாகக் கூடாது. நான் விடுதலையாகி இந்த அநியாயங்களை எதிர்க்கும் போராட்டத்தை மீண்டும் நடத்துவேனா...?”

“ஹும்... காம்ரேட்... என்ன நீங்கள்? உங்களுக்கு ஒன்றுமில்லை. நிச்சயமாக எல்லாம் நடக்கும். எங்களுக்கு நீங்கள் மலையாக ஆதரவு... சாப்பிடுங்கள்... நீங்களே தளர்ந்தால் நாங்கள் என்ன செய்வோம்...?”

ருக்மிணி மறுநாள் வரவில்லை.

ஆனால் சீனிவாசனை இன்ஸ்பெக்டர் கூட்டி வருகிறார்.

“சீனிவாசா...?”

“அத்தை, எனக்கு இவா வந்து சொன்னா. சாதம் கரைச்சிண்டு வந்தேன்...”

சீனிவாசனிடம் அதிகம் பேசுவதற்கில்லை என்றாலும், அவனை ஜனசக்தி அலுவலகத்துக்கு அனுப்புகிறாள், புத்தகங்கள், செய்திகள் பெற முடிகிறது.

உடல் நலம் தேறிவிட்டாலும் சென்னை ஆஸ்பத்திரி வாசம் முடிந்து வேலூர் சிறைக்கு மீண்டும் திரும்ப மூன்று மாதங்கள் ஆகின்றன.

வேலூரில் இவள் மீண்டும் வந்து பார்க்கையில் ஜானகி இல்லை. வெளியே ஒரே கொந்தளிப்பு. ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்; துப்பாக்கிச் சூடுகள், தஞ்சை மாவட்ட விவசாய இயக்கத்தைச் சிதைக்க அரசு பஞ்சமாபாதகங்களையும் மேற்கொள்வதாகத் தகவல் கிடைக்கிறது. சிறைகளில் நிரம்பி வழியப் போராளிகள் கொண்டு வரப்படுகிறார்கள். இவளுக்கு சூப்பரிண்டென்டண்ட், ஜெயிலர் எல்லோருமே ஆதரவாக இருக்கின்றனர்.

இவள் அன்று உலாவச் செல்கையில், ஆஸ்பத்திரிக் கட்டடத்தை நெருங்கியவாறு நிற்கிறாள். போர்வைகளுக்குள் முடங்கிய கைதிகளைப் பார்த்தவாறு நிற்கிறாள்.

தயங்கித் தயங்கி இவள் நிற்கையில், வேப்பமரத்தின் பட்டையை நகத்தால் உரித்துக் கொண்டு ஒரு ‘கான்விக்ட்’ பெண் இவளை அருகில் வரச் சாடை காட்டுகிறாள்.

“என்ன?”

“...கம்மூனிஷ்ட்... நீயா?”

“ஏன்...?”

“புதுசா... ஒரு பொம்பிளை கம்மூனிஷ்ட். அடி அடின்னு அடிச்சி மண்ட ஒடஞ்சு இருக்காங்க. கீழ்ப்பசள, ராமநாதபுரம்னு சொன்னாங்க...”

“ஆ...?”

கீழ்ப்பசளைச் சிவப்பியா?

இந்தப் பெண், போலீசுக்காரன் செங்கொடியைப் பறித்து எறிந்த போது, அவன் கைத் துப்பாக்கியைப் பறித்து அந்தக் கட்டையால் அவனை அடித்தவள் அல்லவோ? இராமநாதபுரத்து வீர மறக்குல மங்கை. அவள் இங்கே வந்து மண்டை உடைபட்டுக் கிடக்கிறாளா?

மணி தாமதிப்பாளா?

“சிவப்பி அம்மா? சிவப்பி அம்மா” என்று கூப்பிட்டுக் கொண்டு ஆஸ்பத்திரி வார்டுக்குள் நுழைந்து விடுகிறாள்.

புயலின் வேகம் இவளுக்கு. அந்தக் குழந்தை முகம் மலருகிறது. இப்போதுதான் இவளைப் பார்க்கிறாள் மணி. பதினேழு பதினெட்டுப் பிராயம் இருக்குமா? முகத்தில் உதடு ஒரு பக்கம் வீங்கித் தொங்க, மண்டைக் கட்டுடன் படுத்து இருக்கிறாள். கைகளில் கட்டு.

“செங்கொடி காத்த சிவப்பி அம்மா? என்ன ஆச்சு?”

“அடிச்சிட்டாங்க. நேத்து ஜனவரி ஒண்ணுக்கு எனக்கு இது. கம்யூனிஸ்ட்கள்னு, கொலைத் தண்டனைக் கைதிகளை ஏவி லத்தியில அடிக்கச் சொன்னாங்க வார்டன்...”

பேச முடியவில்லை.

மணி அவள் கையைப் பரிவுடன் பற்றுகிறாள்.

“... கம்மூனிஷ்ட், நீ... போலீசை அடிச்சியாமே? இப்ப என்னாடி செய்வே... அடியுங்கடீ...ன்னு...”

“சிவப்பிம்மா, உங்கள அடிச்சவங்க யாருன்னு எனக்கு அடையாளம் காட்டுறீங்களா?...”

“... அம்மா... அவங்களும் ஆயுள் கைதிங்க கொல செஞ்சிப் போட்டு இங்ஙன வந்தவுங்க...”

“ம்... கம்யூனிஸ்ட்னா... அடின்னு இவங்க அகராதில இருக்காப் போல இருக்கு. உங்களுக்குச் சாப்பாடெல்லாம் சரியாக் குடுக்குறாங்களாம்மா...?”

“இதுக்கு முன்னாடி மதுரயில சோறே குடுக்காம போட்டாங்க. அதுனால இங்ஙன வாரப்ப, நல்ல சோறு குடுக்கணும்னு எழுதிப் போடுங்கன்னே. அதுக்கு... இவ சரியான கம்யூனிஷ்ட், கவனிச்சிக்குங்கன்னு எழுதிட்டாங்க போல இருக்கு.”

“...அப்படியா? சிவப்பிம்மா, நாங் கவனிக்கிறேன்... நீங்க வருத்தப்பட வேண்டாம்...”

மணி நேராகச் சிறையின் டிபுடி சூபரின்டெண்ட் அம்மாளிடம் வருகிறாள். அந்த அம்மாள் பரிவும் மரியாதையும் காட்டுகிறாள்.

“ஏம்மா? நம்ம சுயராச்சிய சர்க்காரில் இப்படிப் பெண் பிள்ளைக்குப் பெண் பிள்ளை அடிச்சுக் கொல்லணுமா? இது சரியா? இது தேவையா?... ஒரு தனிமனித நலன் கருதி, பசி தீர்த்துக்க, திருடறதும் சாராயம் விற்கிறதும் குத்தம்னு சொல்ல முடியாது. சமுதாயத்துக்காகவே எதிர்ப்பைக் காட்டும் ஒரு பெண்ணை அடிச்சு மண்டையை உடைக்கிறதுக்குத்தான் ஜெயிலாம்மா?... அந்தப் பெண் ஒரு கட்டுப்பாட்டினால் திரும்பி அடிக்கல. கொள்கைக்காக உசிரைப் புல்லாக மதிச்சு வந்திருக்கிறாள்...”

சூப்ரின்டெண்ட் அம்மாள் மென்னகை புரிகிறாள்.

“இனிமேல் இதுபோல் நடந்தால், நானே சும்மா இருக்க மாட்டேன்!”

மறுநாளே அவளை அடித்த இரு ஆயுள் கைதிகளையும் இன்னாரென்று தெரிந்து கொள்கிறாள்.

அவர்களை நெருங்குகிறாள்.

“ஏம்மா? நீங்கதா சிவப்பிய அடிச்சீங்களா?” அவர்கள் ஒப்புக்கொண்டு மவுனமாக நிற்கின்றனர்.

“உங்களுக்குப் புள்ள குட்டி இருக்கா?”

“இருக்கு. இவ புள்ளதா ஒண்ணு கொட்டில கழிச்சல் வந்து செத்துப் போச்சு.”

“என்ன குத்தம் பண்ணின?”

“குடிச்சிட்டுக் கழுத்த நெரிக்க வந்தான் பாவி. அருவாளால வெட்டிப் போட்டே. ஏழு வருஷம் போட்டாங்க. இன்னும் மூணு வருஷம் இருக்கு.”

“உன் புள்ளங்க யாரிட்ட இருக்கு?”

“முதத்தாரத்தா மவளத் தம்பிக்குக் கெட்டிருக்கு. அவகிட்ட இருக்கு. ஓராண், ஒரு பெண்ணு.”

“ஏம்மா, நீ... எப்படி?”

“புருசனே இமிசை பண்ணி இன்னொரு மிருகத்துக்குக் கூட்டிவுடத் தள்ளினா... அவன செவுத்துல மோதிக் கொன்னிட்டே. இங்க செத்தது பொம்புளப்புள்ள. வீட்ல பத்து வயசில ஓராண். எங்க சித்தாத்தாகிட்ட இருக்கு...”

“ஏம்மா, நீங்களெல்லாம் திமிருபுடிச்சி வேணுன்னு ஒரு உசுரக் கொல்லல. அந்த அளவுக்குக் கொதிச்சு உங்களைக் காப்பாத்திக்க, அப்படி ஒரு செயலைச் செய்தீங்க. இங்கே வந்து, ஆயுள் கைதின்னு, ஈனமான தண்டனைய அனுபவிக்கிறீங்க. எதுக்கு? திரும்பப் போயி, நல்லபடியா புள்ளகுட்டியோடு வாழணும்னு தானே?...”

“ஆமாம்மா. ஒவ்வொரு நிமுசமும் ஒவ்வொரு நாளயும் எண்ணிட்டிருக்கிறம்...”

“இப்ப, தெரிஞ்சிக்குங்க. அந்தப் பொண்ணு உசுருக்குத் துணிந்து வந்திருக்கிறாள். போலீசுக்காரன் துப்பாக்கியையே புடுங்கி அடிச்சா. ஏன்? மொத்த சமுதாயத்துக்கும் நியாயம் கேட்கும் ஓரமைப்புக்கு, உண்மையா இருக்கிறா. அது அவளுக்கு அவ உசுரை விடப் பெரிசு. அவ இப்ப நீங்க அடிக்கிற போது பேசாம இருக்கான்னு நினைச்சிடாதீங்க! இனிமே அடிக்கத் துணிஞ்சா, நீங்க எதைச் செஞ்சிட்டு இந்தத் தண்டனை அனுபவிக்கிறீங்களோ அதைச் செய்யலாம். அதனால், தண்டனை பெற்று வந்திருக்கிற ஒருத்தரை, நீங்களே அடிக்கிறது கேவலம்.”

“அம்மா, மேட்ரன் அடிக்கச் சொல்றாங்க. அடிக்கலன்னா எங்கள அடிப்பா.”

“அடிக்கிறது எந்தச் சட்டத்திலும் கிடையாது. எல்லாரும் இதை எதிர்க்கணும். உங்க பிள்ளைகளை அநாதையாக்கி விடணும்னா நீங்க அடியுங்க?...”

இந்த அறிவூட்டலுக்குப் பயன் இல்லாமலில்லை.

சில நாட்கள் சென்ற பின், ஒரு நாள் பகலில், சிறையில் ஒரு கலவரம்... ஜெயிலர், சூபரின்டெண்ட், டாக்டர் எல்லோரும் ஓடுகிறார்கள். சிவப்பியின் இடத்துக்கு.

என்ன...?

சிவப்பியை மேட்ரன் அம்மா மீண்டும் அடிக்கக் குற்றவாளிகளை ஏவினாள். அவர்கள் லத்திகளைக் கீழே வைத்துவிட்டு, ஓடி ஒளிந்தார்கள். அப்போது மேட்ரன் அம்மா, கோபம் கொண்டு தானே அந்த லத்தியை எடுத்து அடிக்க ஓங்கிய போது, சிவப்பி பாய்ந்து அவள் கையைப் பற்றி இழுத்துப் பலமாகக் கடித்ததில் வாய் நிறைய இரத்தம்... அந்த இரத்தத்தைச் சுவரில் உமிழ்ந்து தேய்த்து விட்டாள்.

“பாத்துக்குங்க? என்னை அடிக்க வறவங்களுக்கு எச்சரிக்கை?”

“அந்தப் பொம்பிளை, காளி போல நிக்கிறாளுங்க?” என்று ஜெயிலர் ஆச்சரியப்படுகிறாள்.

“ஓ... இந்த இயக்கம்... வரலாறு படைக்கும் பெண்களால் பெருமைப்படுகிறது...?”

மணி தனக்குள் பூரித்துப் போகிறாள்.
-----------

அத்தியாயம் 26


மணி வேலூருக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஓடி விடுகிறது. சிறைவாசம் என்பதை அதை அனுபவித்தவர்களால்தான் உணர்ந்து கொள்ள முடியும். அத்திம்பேர் விசுவநாதன் முதன் முதலாக அவர்கள் வீட்டில் சிறைவாசம் அனுபவித்து வந்த புதிதில், அங்கு எவ்வாறு தம் வைதீக ஆசாரங்களைக் காப்பாற்றிக் கொண்டார் என்பதையே பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார். அங்கு சிதைக்கப்பட்ட சிதிலங்களாய் நடமாடிய ‘மனித வடிவங்களை’ அவர் காணவில்லை. ‘நான்... நான் தேசீயவாதி. யாரும் செய்யாத ஒரு செயலைச் செய்து வந்திருக்கிறேன்’ என்று தான் நினைத்திருப்பார்.

மணியிடம் அந்த ‘நான்’ இல்லை. அந்த உணர்வு பெண்ணாய்ப் பிறந்து அவள் ஆளுமை தலைகாட்டும் முன்பே சிதைக்கப்பட்டு விடுகிறது. திருமணத்தில் அது இருந்த இடம் வேர் தெரியாமல் அழிக்கப்பட்டு விடுகிறது. கைம்மை நிலையில் அவள் உடல் சார்ந்த உணர்வும் கூட குரூரங்களுக்கு உள்ளாகிறது. இத்தனை அடிகளையும் மீறிக்கொண்டு மணியின் உள்ளத்து ஆளுமை எத்தகைய பரிணாமத்தை எய்தியிருக்கிறது? அவளே நினைத்துப் பார்க்கிறாள்.

அண்மையில் சிறையில் கிடைத்த நூல்களிடையே ‘ஃபீனிக்ஸ்’ என்ற ஒரு கற்பனைப் பறவையைப் பற்றிப் படித்தாள். காந்திஜி கூட, தாம் தென்னாப்பிரிக்காவில் ‘மாதிரி ஆசிரமம்’ ஒன்று அமைக்கையில் அதற்கு ‘ஃபீனிக்ஸ் பண்ணை’ என்று பெயரிட்டார். அந்தப் பறவை சாகாதாம், செத்தாலும் அதன் அழிவின் எச்சங்களில் இருந்தே மீண்டும் மீண்டும் உருப்பெறுமாம்.

மணியை இந்தக் கற்பனை பெரிதும் கவர்ந்திருக்கிறது. மணி, தானே உருமாறி, உருமாறி, ஃபீனிக்ஸ் பறவையாகி எழுந்து... மேலே... மேலே...

இரவில் புதிய கைதி வரும் அரவம் கேட்கிறது.

உறக்கம் கலைந்து எழுந்து உட்காருகிறாள். விடிந்த பின்னரே, அந்தக் கைதியை - ஜானகி இருந்த அறையில் புதிதாக வந்திருக்கும் பெண்ணைப் பார்க்கிறாள்.

“யாரம்மா?...”

மெல்லிய உருவம், இளமையின் தலை வாயிலில் நிற்கும் வயசு.

“அம்மா... நான் ஷாஜாதி...”

ஒரு கருப்புப் பாவாடை, தாவணி, சட்டை, நீண்ட சடை, வாராமல் பின்னாமல் சிடுக்குக் கூண்டாக...

கன்னங்கள் தேய கண்கள் கருவளையும் ஆக மெலிந்து, “நீ... நீதான் ஷாஜாதியா?... ஓ... ஷாஜாதி! ரயில்வே நிர்வாகத்தையே கதி கலங்கச் செய்த தொழிற் சங்கப் பெண் ஷாஜாதியா நீ?...”

அவள் நலிந்த இதழ்களில் புன்னகை எட்டிப் பார்க்கிறது.

“ஆமாம் ஷாஜாதி, ரத்னா, ராஜி... எல்லாம் நான் தான்.”

மணி எழுச்சியுடன் அவளைத் தழுவிக் கொள்கிறாள்.

“உண்ணாவிரதம் இருந்தேனம்மா... ரொம்ப இம்சைப்படுத்திட்டாங்க...”

“உண்ணாவிரதத்தை முடிச்சியா?”

“இல்ல. அம்மா, அண்ணன் எல்லாம் வந்தாங்க. கெஞ்சினாங்க. அழுதாங்க. வாயில இட்டிலிய வச்சாங்க. ஆனா நான் விடல...”

“சபாஷ்... ரொம்பப் பெருமையா இருக்கும்மா?”

“பின்ன கைது பண்ணி கடலூர் ஜெயில்ல வச்சாங்க. அங்க ஒரு வசதியும் இல்லே...”

மணி அந்த மெலிந்த உடலில் சோர்ந்த விழிகளிலும் கூட மின்னிய ஒளியைக் கண்டு வியந்து நிற்கின்றாள்.

இந்தப் பெண் எந்தப் பின்னணியில் இருந்து இத்தனை ஆளுமை பெற்றாள்? முகத்தைக் காட்டுவது கூடப் பாவம் என்று கனத்த முகத்திரைக்குள் பெண்களை மறைத்துக் குருடாக்கும் ஒரு சமய சம்பிரதாயப் பின்னணியில் இருந்து வந்தவள்.

இவள் கண்களில் மின்னும் ஒளி தேசீயமா? இல்லை தேசீயம் கடந்த சர்வதேசீயம்; அதையும் கடந்த மனிதாபிமானம் சார்ந்த ஒரு கொள்கை கொண்ட அமைப்பு தந்த ஆற்றல்.

“நீ உடம்பு ரொம்ப மெலிந்திருக்கேம்மா, உன் உடம்பைத் தேற்றுவது இனிமேல் என் பொறுப்பு. காலையில் எதானும் சாப்பிட்டாயா?”

“ஒரே வயிற்று நோவம்மா, எதுவும் பிடிக்கல்ல...”

“பிடிக்க வைக்கிறேன் பாரு!”

மணியிடம் ஒளிந்திருந்த அந்தப் பேணும் ஆற்றல் எழுச்சி கொள்கிறது. சமையற்கட்டில் சென்று, சோறும் பருப்பும் பக்குவமாகப் பொங்கிக் குழைத்து காயும் போட்டு மசித்து புளிக்காத மோர் ஊற்றிக் கரைத்துக் கொடுக்கிறாள். தலையை எண்ணெய் தொட்டுச் சீவிச் சிக்கெடுத்து, வெந்நீர் பதமாக வைத்துக் குளிக்கச் செய்கிறாள்.

மெல்ல, மெல்ல உடல் தேறி ஆரோக்கியம் கூடுகிறது.

இவளுக்கு உற்றதொரு இளந்தோழியாகச் செல்வக் குமரியாக ஒன்றிப் போகிறாள். இந்தச் சிறைவாசத்தை இனிய அனுபவமாக்குகிறாள்.

ஒரு நாளின் பெரும்பொழுதும் இணைந்தே இருக்கிறார்கள்; செயல்படுகிறார்கள்.

“பெண்ணே தூங்கினாயா?... ஓ... நீயும் அதற்குள் குளித்து துணி துவைத்து... எல்லாமாயிற்றா?...”

“அம்மா உங்கள் சுறுசுறுப்பு எனக்கு வர வேண்டாமா?”

இருவரும் சிறையின் பெரிய சமையற்கூடத்தைப் பார்க்கச் செல்கிறார்கள்.

பல அரிவாள்மனைகள் இயங்கி டக்கு டக்கென்று மரம் போன்ற கீரைத் துண்டுகளையும், பூசணி, பரங்கித் துண்டுகளையும் வெட்டுகின்றன. சோறு பெரிய பெரிய பானைகளில் வடிக்கப்பட்டு உருண்டு கிடக்கின்றது. புளியும், பருப்பும் என்ற நாவுக்கு உணர்வூட்டும் குழம்பு கறி வகைகள் கிடையாது. வடித்த கஞ்சியில் மிளகாய்த் தூளை அள்ளிப்போட்டு அந்தக் காய்த் துண்டங்கள் போட்ட குழம்பு...

“அம்மா இந்தப் பெண் கைதிங்க ஏன் மரப்பட்டைகளை விரலால உரிச்சிக்கிட்டிருக்காங்க?... தெரியுமா?...”

“நான் கேட்டேன் ஷாஜாதி. இவங்களுக்கு வெத்தில புகையில போட்டுப் பழக்கம். அது கெடையாது. மரப்பட்டய உரிச்சி மென்னு துப்புறாங்க...”

சிறையில் இவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது. பன்னிரண்டு ரூபாய் போல் செலவுக்குப் பணமும் உண்டு. ஆனால் இந்தச் சுகங்கள், அலைகடலில் மிதக்கும் இலையின் சுகத்தை ஒத்ததாகப் படுகிறது.

ஷாஜாதியை வழக்கு விசாரணைக்காக, வெளியே கடலூருக்குக் கூட்டிச் செல்கிறார்கள். அந்தக் கெட்டிக்காரி, மீண்டு வருகையில், இயக்கம் பற்றிய செய்திகளை, முக்கிய அறிக்கைகளை, பாவாடை மடிப்புக்குள் வைத்துத் தைத்து உள்ளே கொண்டு வருகிறாள்.

“அம்மா, இயக்கம் ஸ்தம்பித்து விட்டது. நாம் சிறையில் இருந்து வெளியே செல்கையில், கம்யூனிஸ்ட்கள் என்று சொல்ல ஆட்களே இருக்க மாட்டார்கள்!...”

இவள் மனம் துயரத்தில் ஆழ்ந்து போகிறது.

ஒவ்வொரு துளியாகச் சேர்த்த நன்னீர்... அதுவும் ஓட்டைக் கலத்தில்... ஒரு புறம் அடைத்தால் மறுபுறம் பொத்துக் கொள்ளும் கலத்தில்... சேர்த்த நீர்... மக்களின் அரிய உணர்வை மையமாக்கி வைத்துக் கட்டிய இயக்கம், வெளியே இருக்கும் கட்சி... உதிரிகளாக நிற்பவர்கள், நாள்தோறும் அடிபட்டும், துன்பப்பட்டும் சாகிறார்கள். அவர்கள், சிறைக்குள் உயர் வகுப்பில் சொகுசாக வாழும் தலைவர்களை நோக்கி, ‘உண்ணாவிரதம் இருங்கள்! போராடுங்கள்! நாங்கள் சாகிறோம்... நீங்கள் போராட வேண்டும்! உயிரைத் திரணமாக மதியுங்கள்’ என்று கருத்துரைக்கிறார்கள். ஆனால்... இங்கே தலைமை என்ன முடிவு எடுக்கிறது? எல்லாருமே செத்துவிட்டால், இந்த இயக்கத்தில் - பொது உடைமைக்காரர் என்று மிஞ்ச யாருமே இருக்கமாட்டார்கள் - அப்படியாகிவிடுமோ?

ஆனால், மணி ஷாஜாதியுடன் சிறைக்குள் வேறு விதமாக ஒரு போராட்டத்தை மேற்கொள்கிறாள்.

பிள்ளைக் கொட்டடியை ஒரு நாள் சென்று பார்க்கிறார்கள். ஓ, இந்தப் பிஞ்சுகள் என்ன பாவத்தைச் செய்தன? தாயும் தகப்பனும் திருடியோ, சாராயம் விற்றோ, செய்த பாவங்களின் கரி நிழலில் இந்தப் பிஞ்சுகள் கருகி வெம்பி விடுகின்றன.

ஈரும் பேனும் உடலில் ஊரும் நிலை மொட்டையடித்த தலைப்புண்கள்... கண்கள் புளிச்சையும், பொங்கிய வீக்கமுமாகப் பார்வையை மறைக்கின்றன. கூழ்பற்றாத நெஞ்சுக் கூடுகள், சூணா வயிறுகள் - மல மூத்திரக் காடாகத் தரை; அழுகை, ஓலங்கள்... மணி, சேரிக் குழந்தைகளைச் சீராட்டிப் பாராட்டியவள் அல்லவா? கற்பித்தவள் அல்லவா?

இப்போது அத்தனை குழந்தைகளையும், வெந்நீர் வைத்து எண்ணெய் பிரட்டி, பேனும் சிக்கும் எடுத்து, குளிப்பாட்டி, மருந்து போட்டு, பாலும் சோறும், கஞ்சியும் ருசியாகக் கொடுத்து, வேறு சட்டை போட்டு... அவற்றின் சிரிப்பொலியைக் காண வேண்டுமே?

இருவரும் ஊக்கமாக, தங்களுக்குக் கிடைக்கும் அன்றாட உணவுப் பொருள்களைச் சேகரிக்கிறார்கள். காசைப் பத்திரமாகச் சேமிக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சிறைக்கூட அலுவலர் ஏதோ கடனே என்று காலத்தைக் கழித்துவிட்டுப் போய்விடுகிறார். மணியும் ஷாஜாதியும், ஜெயிலரின் உதவியுடன், அந்தக் குழந்தைகளை இங்கே கொண்டு வரச் செய்து, தாயாரையும் வரவழைத்து, சுடுநீர் போட்டு, எண்ணெய் தடவிக் குளிப்பாட்டுகிறார்கள். நல்ல பருப்புச் சோறும் பாலும் கொடுக்கிறார்கள். புதிய துணி போடச் செய்கிறார்கள். அதே போல் மாதம் ஒருமுறை, இந்தக் கைதிப் பெண்களுக்கு, காரம், புளிப்பு, உப்புப் போட்டுக் குழம்பு வைத்துச் சோறு செய்து கொடுத்து, வெற்றிலை பாக்கும் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

இரு மனிதாபிமான உள்ளங்கள் இணைந்தால் என்ன செய்ய முடியாது?

பெண்கள் இவளை, அன்னை என்றே கொண்டாடுகிறார்கள்.

அப்போதுதான் சிறைக்குள், கூட்டுதலும் துப்புரவு செய்தலும், கைதிகளுக்கு ஆடை மாற்றிக் கொடுப்பதுமாக ஒரு பரபரப்பு உண்டாகிறது.

“என்னம்மா? என்ன பரபரப்பு, இன்னிக்கு யார் வராங்க?” என்று ஜெயிலரை மணி கேட்கிறாள்.

“மந்திரி வராங்க...”

“எப்ப...?”

“நாளக்கி, அவங்க இங்க இருந்தவங்க...”

“யாரு...? ஜெயில் மந்திரி...?”

மணி யோசனை செய்கிறாள்.

“ஓ, மாதவமேனன்... குட்டியம்மாளு... அவர் மனைவி தெரியுமே?”

“ஷாஜாதி, நாம் ஒண்ணு செய்வோம்.”

இருவரும் சேர்ந்து திட்டமிடுகிறார்கள்.

மந்திரியும் அவர் குழுவும் சிறை - காவல்துறையின் பெரிய அதிகாரிகளும், பார்வையிட வாயில் கடந்து வருகையில், இவர்கள் அவர்கள் முன் நின்று வழிமறிக்கிறார்கள். இவர்களுடன் எலும்பும் தோலுமான குழந்தைகளின் ஒரு படை...

“...என்ன...ம்மா?”

“ஆனரபிள் மினிஸ்டர், ஸார்! இந்தக் குழந்தைகளைப் பார்த்தீர்களா? இவர்கள் பெற்றோர் செய்த பாவத்துக்கு இந்தக் கபடமற்ற குழந்தைகளும் இப்படித் தண்டனை அனுபவிக்க வேண்டுமா? நூற்றுக்குத் தொண்ணூறும் தாய்மார் தண்டனை முடிந்து செல்லுமுன் இங்கேயே சாகின்றன. எதிர்கால இந்தியாவுக்கு இந்த நிலைமையினால் வளம் காண முடியுமா? சொல்லுங்கள்?”

மந்திரி இவளை - துணிவை வியப்புடன் பார்க்கிறார்.

இவள் கோலம் கேரளத்துக்காரியோ என்றும் ஐயமுறச் செய்கிறது.

“குழந்தைகள் எந்தப் பாவமும் செய்யவில்லை. அவர்களை நன்கு பராமரிக்கப் போதுமான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பால், பழம், முட்டை என்ற சத்துள்ள உணவுப் பொருள்கள் குழந்தைகளுக்குக் குறைவில்லாமல் வழங்கப் பெற வேண்டும்.”

இவள் கோரிக்கை அடங்கிய மனுவையும் அவரிடம் கொடுக்கிறாள். பலனில்லாமல் போகவில்லை.

மணி சிறைத்தண்டனை முடிந்து வெளியேறுமுன், குழந்தைகளுக்குச் சத்துள்ள உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
----------

அத்தியாயம் 27


தைப் பொங்கல் கழிந்ததற்கடையாளமாகக் கிராமத்துக் கோயில் மதில் சுவர்கள், வீட்டுத் திண்ணைகளெல்லாம் பளிச்சென்று வெள்ளையும் காவியுமாகத் துலங்குகின்றன. கால்வாய்களில் நீர் ஓடும் ஓசையும், தலை சாய்ந்து அறுவடையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வயல்களும், ஏறும் வெயிலும் கூட மணிக்கு மிக இனிமையாக இருக்கின்றன. வரப்பில் செருப்பைக் கழற்றிவிட்டுக் கால் பதிய நடக்க வேண்டும் போல் இருக்கிறது... விடுதலை...!

அடியக்கமங்கலத்தில் ரயிலை விட்டிறங்கி அவள் நடந்து வருகையில் யாரும் அவளை வரவேற்று முகமன் கூறவில்லை. தெரிந்த முகங்களையே காண்பதற்கில்லை. தொலைவில் மனிதப் புள்ளிகள் தெரிந்தாலும், ஓடோடி வரவில்லை. காப்பும், கொலுசும் அணிந்து காய்த்துப் போன தடம், அவற்றைக் கழற்றியபின் வெகு நாட்களானாலும் தடம் மறைந்து விடுவதில்லை. அப்படி கம்யூனிஸ்ட் என்ற பெயருக்கே ஒரு அச்சுறுத்தலை ஒட்டி இருக்கிறது அரசாங்கம். இவள் கம்யூனிஸ்ட்...!

தேவூர்ப் பக்கம் வருகிறாள். வீரையா...!

அறுவடைக்காலமாதலால் ஆணும் பெண்ணுமாக வேலைக்குச் சென்றிருக்க வேண்டும்... பலரும் தென்படுகின்றனர். ஆனால் ஒதுங்கிச் செல்கின்றனர்.

“ஏம்பா... எல்லாம்... எப்படி இருக்கீங்க...?”

“நீங்க இங்க நிக்கவேண்டாம்மா” என்று சொல்லும் பாவனையில் தலையை ஆட்டுகிறான் வீரையன்.

ஒவ்வொரு முகமும் கிலி பிடித்துப் போயிருக்கிறது.

அரணை உடைத்து உள்ளே ‘அழிவு விளையாட்டை’ நடத்தியிருக்கும் அரசு காவலர்கள், அழியாதபடி சூடு போட்டிருக்கிறார்கள்.

கால்வாய்க்கரையில் பல்குச்சியுடன் வடிவு நிற்கிறான்.

“அம்மா...!” என்று வியப்பு மலரக் கூவுபவன் அவன் தான்.

“வடிவு! நல்லா இருக்கிறீங்களா?”

மணிக்குத் தொண்டை அடிக்கிறது. “இருக்கேம்மா” என்று சொல்பவன், கண்ணீர் முட்டத் துண்டால் துடைத்துக் கொள்கிறான்.

“எல்லாரும் எப்படிப்பா இப்படிக் கிலி புடிச்சிப் போயிட்டீங்க?”

“பின்ன எப்படீம்மா இருப்பாங்க... அந்தக் கொடுமயச் சொல்லி முடியாதம்மா? இந்தத் தெரு முழுதும் போலீசு பூந்து கண்ணு மண்ணு தெரியாத அடிச்சாங்க. சரளக்கல்லக் கொட்டி அதுல முட்டிக்கால் போடச் சொல்லி... நடந்துவரச் சொல்லி அடிச்சாங்கம்மா?”

சேரித் தெருவில் பக்கிரி... இவள் பார்த்து நலம் செய்த சிறுவன். இன்றும் முழங்கால் ரணத்தில் ஈ மொய்க்க திண்ணையில் உட்கார்ந்திருக்கிறான்.

“அம்மா! நாங்கல்லாம் தாயில்லாப் புள்ளங்களாப் போனோம்! நாதியத்தவங்களாப் போனோம்...”

“நீங்க எப்பம்மா வெளியே வந்தீங்க?”

“இப்பத்தான் வந்திட்டே இருக்கிறேன். கன்றைப் பிரிஞ்சாப்பல நானும் தான் தவிச்சிப் போனேன். சங்கமெல்லாம்...”

“சங்கமா?... பேசாதீங்க... நீங்க உள்ளாற வாங்க...!” குறுகிய பள்ளர் தெருவுக்குள் வருகிறார்கள். சரிந்த பனை ஓலைக் கூரைகள் - படலைகள்... புண்களும் சீழ்களுமாகக் குழந்தைகள்; சில நோஞ்சான் ஆடுகள், நாய்கள்...

திண்ணையில் கிழவி கண்பார்வை இல்லாமல் ஒடுங்கிக் கிடக்கிறாள்.

“பொன்னாயி... பொன்னாயி இல்ல...?”

“ஆமா...? ஆரு வந்திருக்கிறது...?”

“மணியம்மா... நம்பம்மா... கொரல் தெரியல?”

பொன்னாயி எப்படி இப்படியானாள் இரண்டாண்டுக் காலத்தில்?

அந்நாளில் மயிலாங்குடிப் பண்ணையில் இவள் சிறைப்பட்டபோது மடியில் கல்லைப் பொறுக்கிக் கட்டிக் கொண்டு வந்து வீசி எறிந்தவள்.

கண்ணொளியும், வெற்றிலைக் குதப்பு வாயுமாய், பாதி நரைத்த கூந்தலை முடிந்த கையுடன் நிற்கும் அந்தப் பொன்னாயியா?

“அம்மா வாங்க...!” என்று வாய் நிறைய அன்பு குழவ அழைக்கும் பொன்னாயி! இவள் புருசன் எங்கே? மகனுக்குக் கல்யாணம் செய்தாள்... பாறைப் போல் இறுகிவிட்ட உணர்ச்சிகள் வெடிக்கின்றன.

“அம்மா... என்னெப் பெத்த தாயே! உங்களையும் அந்தப் பாவிங்க செயில்ல அடிச்சாங்களா? அவங்கள இந்தத் தெய்வம் ஒரு கழிச்சல்ல வாரிட்டுப் போகலியே? அம்மா...! அம்மா...!” என்றவள் பாடத் தொடங்கினாள். நடவு நடும்போது இவள் பாடும் குரல் அந்தப் பசுஞ்சூழலில் எத்துணை இனிமையாக இருக்கும்? மண்ணுலகில் விண்ணுலகம் படைக்கும் இந்தப் பெண்கள்...

ரோதை உருண்டுவர - அம்மாவோ
ரத்தம் தெறிச்சுவர
பாதையெல்லாம் செங்குழம்பு
- அம்மாவோ...
பதிஞ்ச அடி செம்பருத்தி
பஞ்சை முறிஞ்சுவிழ
- அம்மாவோ...
பாலும் செவப்பாச்சி
எச்சுமியான் நெல கொலஞ்சா...
- அம்மாவோ...
எரியுதம்மா ஈரக்கொலை...

தளர்ந்துவிட்ட ரவிக்கையல்லாத துணிச் சுருணை உடல் குலுங்கக் குலுங்க அழுகிறாள்.

மணி அவள் அருகில் உட்கார்ந்து தேற்றுகிறாள்.

“பொன்னு... பொன்னம்மா, அழுவாதம்மா?...”

அவள் கண்ணீரைத் துடைத்து ஆற்றுகிறாள். ஒரு சிறு கும்பலே அதற்குள் அங்கு கூடுகிறது. பதினெட்டு வயசுப்பிள்ளை ராக்கன், அவன் முதுகிலும் விலாக்களிலும் கால்களிலும் சாட்டையடியின் தழும்புகள் இன்னும் செந்நிறம் மாறாமல் இருக்கின்றன.

“இத பாருங்கம்மா, பூடிசு காலால மெதிச்சாங்க...”

தாயைக் கண்டதும் ஆற்றாமை எல்லாம் பீறி வருகின்றது.

“சொல்லுரா, அந்தத் தலவன் அவன் எங்கே? இவன் எங்கேன்னு வாயிலேயே அடிச்சாங்க. லாரில போட்டுட்டு திருவாரூர் போறவரைக்கும் அடிச்சிட்டே போனாங்க... இந்தப் பொண்ணு ஓடிப்போயி, பின்னால் பானைக்கு மறவா ஒளிஞ்சிட்டா... இழுத்திட்டு வந்து புருஷன் மின்னாடி வச்சிட்டுக் குலச்சான். அது மக்யா நாளு அரளி விதையை அரச்சிக் குடிச்சிடிச்சி. இதா அஞ்சு வயசுப் புள்ள...”

மணி கல்லாய்ச் சமைந்து போகிறாள்.

ஓ... இதுவா இவர்கள் கனவு கண்ட காந்திராச்சியம் - ராமராச்சியம். இந்த ஏழைகள் என்ன தவறு செய்தார்கள்? அஹிம்சையைக் கொள்கை என்று சொல்லிக் கொள்கிறவர்கள் ராச்சியம். நீதியா இது? அப்போது அங்கே ஒருவன் வருகிறான்.

“ஏ, என்ன கூட்டம் இங்க? போங்க அல்லாம்!”

மணி சிலிர்த்து, நிமிர்ந்து, “யாரப்பா? நீ யாரு இவங்கள விரட்ட?” என்று கேட்கிறாள்.

“யாரோ. நீ யாரு? எதுக்கு இங்க வந்து உக்காந்துக்கிட்டு ஆளுங்களைக் கலைக்கிற? இப்ப இது சுந்ததிர சருக்காரு. இங்க எல்லாரும் காங்கிரசு. உன் கம்மூனிஷ்டு வேலை எல்லாம் இங்க காட்டாம எந்திரிச்சிப் போ!”

மந்தைபோல் கூடியவர்கள் அனைவரும் அவனைப் பின்பற்றிப் பிரிந்து போகிறார்கள். அவன் பழனி பண்ணையின் நடுவாள் என்று புரிகிறது. மணிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. விடுதலையின் இன்பக் கிளர்ச்சியெல்லாம் வெயிலில் பட்ட பனி நீராகப் போகின்றன. இந்த முடிவுக்கா இவள் விடுதலை பெற்று வந்திருக்கிறாள்? இவள் வாழ்க்கைப் பாதை இப்படி வந்து முடிந்து போகவா இத்துணைப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தாள்? அந்தச் சிறு கிராமச்சேரியே மூங்கையாகிப் போய்விட்டாற்போல் இருக்கிறது. குரலெடுத்துச் சந்தை சொல்லி அழுதவளும் மூங்கையாகிப் போகிறாள்.

மணி எழுந்து நிற்கிறாள்.

“நான் ஓயமாட்டேன்... நான் ஓயப் பிறக்கவில்லை. போராடப் பிறந்தேன். மீண்டும் இந்த ஆதிக்கங்களை எதிர்த்துப் போராடுவேன். தோழர்களே, மீண்டும் செங்கொடிச் சங்கங்கள் தோன்றும்! போராடுவோம்!”

ஒரு பிரதிக்ஞையுடன் மணி நடக்கிறாள். நடுப்பகல் கடந்த சூடு பிடித்த வெயில். நீர்ப்பசை வறட்டும் வெயில். காக்கழனிக்கு நடக்கிறாள்.

“மணியா? வா வா...!”

“எப்ப விடுதலை ஆனே?”

“விடுதலையே ஆயிருக்க வேண்டாமோன்னு தோணறது மன்னி, சுடுகாடா ஆக்கிட்டானுகளே?”

“நீ திருவாரூர் வந்துட்டு வரியா? இப்ப தான் சித்தமுன்ன பக்கிரி, மணியம்மா வந்துட்டாங்க போல, குப்பாண்டி பாத்தானாம்னு சொன்னான்...”

இவளுக்குத் திடீரென்று ஆத்திரம் பொங்கி வருகிறது.

“எத்தனை கடிதாசி உங்களுக்கு, அத்திம்பேருக்கு எல்லாம் விசாரிச்சு எழுதினேன்?... அநுமான் பாங்கி முழுகிப் போச்சாமே? அதில் கட்சிப்பணம் இருந்துதப்பா, ஒரு அய்ந்நூத்துச் சொச்சம்... நான் யார் யாருக்கெல்லாமோ எழுதி விசாரிக்கச் சொன்னேனே? ஒரு பதில்... ஒரு விசாரணை...? எங்கிட்ட வந்து பத்திரம் மோடோவர் பண்ணிக்க வந்ததோட சரி, நான் இப்ப கட்சிக்குப் பதில் சொல்லணுமேப்பா?...”

“ஆமா நீதான் அத்திம்பேருக்கு அத்தாட்சி குடுத்திட்டே, நான் எல்லாம் பார்த்துக்கறேன்னு சொன்னார்...”

மன்னி பால் கறந்து காபி கொண்டு வருகிறாள்.

“அவ இன்னும் குளிச்சி சாப்பிட்டதாத் தெரியலியே?... இருக்கட்டும்...” என்று காபியை ஆற்றி மணி குடிக்கிறாள்.

“கட்சி தடையுத்தரவு எடுக்கறதாக் கேள்விப்பட்டேன். முதமுதல்ல, நீ தான் அரெஸ்டாகிப் போனே, அதுனால முதல்ல வந்துடுவேன்னு நானே இன்னிக்குக் காலமதான் சொல்லிண்டிருந்தேன். மணி, நீ உடம்பு ரொம்பத் தளந்து போயிட்டே...”

அக்கம்பக்கம் பார்த்துக் குரலை இறக்குகிறார்.

“இந்தக் காட்டு தர்பாரிலே, கட்சி இருக்கிற இடம் தேடிப் பிடிக்கணும். என்னதான்னாலும், அவங்க பெரும்பான்மை, நீ இனிமே அரசியல்ல இருக்க முடியும்னு தோணலே...”

“ஏன்? இங்கே வந்து இத்தனை அழிச்சாட்டியங்களையும் பார்த்த பிறகு, நான் செத்துப் போனாலும் அந்தச் சாம்பல்லேந்து கிளம்புவேன்? இது... சத்தியம். இந்தப் பஞ்சை பனாதிகளை அன்னிக்கு ஆண்டைகள், பிரிட்டிஷ் ராச்சியத்தில் அடிச்சது பெரிசல்ல... இன்னிக்கு நம்ப சுதந்திர சர்க்காரின் போலீஸ் அட்டூழியம் பண்ணியிருக்கு... நான் ஓயமாட்டேன், அண்ணா!”

அவர் இவளுடைய ஆவேசம் கண்டு மவுனமாகிறார்.

மணி உள்ளே சென்று, அழுக்குப் போகத் தேய்த்துக் குளித்துத் துணி துவைத்து உலர்த்துகிறாள்.

மன்னி இலைபோட்டுப் பரிமாறுகிறாள்.

விளக்கு வைத்தாகிவிட்டது. அண்ணா அவள் முன் வந்து உட்காருகிறார்.

“நீ கடன் பத்திரத்தை வசூல் பண்ணி வீடு வாங்கச் சொன்னயாமே?”

“ஆமாம், அப்ப சொன்னேன். இப்ப என் முடிவு வேறு. உயிர் மூச்சு உள்ள வரை கட்சியில்தான் இருப்பேன். இதுவே எனக்கு முதல், முடிவு எல்லாமாக இருக்கும் அண்ணா! காந்தி முன்னே சொன்னாராம். அஹிம்சைங்கறது, மனிதனின் நாகரிகப் பண்பாட்டின் வளர்ச்சி. அதற்காக மனிதர் தலைமுறை தலைமுறை கூடக் காத்திருக்கலாம்னு சொன்னாராம். அந்த அஹிம்சையின் பேரைச் சொல்லி இன்னிக்கு ஆட்சியைப் பிடித்த சர்க்கார்தான், தருமத்தின் குரலைக் கழுத்தைப் பிடிச்சு நெரிச்சிருக்கு! நான் இதுக்குப் போராட எத்தனை ஜன்மம் வேணாலும் எடுப்பேன், இந்த ஜன்மாவில் நடக்கலேன்னா!”

“ஏம்மா மணி, நீயும் ஏத்தாப்பல தான் பேசற?”

மணி சோற்றைப் பிசைந்து கொண்டு மன்னியை நிமிர்ந்து பார்க்கிறாள்.

“தெற்குத் தெருவில வீடு வாங்கி இருக்கிறார்கள்... மீனா பேரில...!”

இவளுக்குத் தொண்டையில் சோற்றுப்பருக்கை சிக்கிக் கொள்கிறது. மூக்கிலும் கண்களிலும் நீர் வர இருமுகிறாள்.

“ஷாஜாதி நினைச்சுக்கிறாள்” என்று சொல்லிக் கொண்டு தண்ணீரை மடமடவென்று குடிக்கிறாள்.

“யாரு?...”

“அவ கட்சியில் ஒரு மணியான பெண். இன்னும் இருபது வயசு கூட ஆகலே. எனக்குப் பெத்த பெண் மாதிரின்னா, சொத்துக்கு உரிமைன்னு நினைக்க வேண்டாம். மனிஷ அபிமான உறவுக்கு ஒட்டிக் கொள்ளும் கட்சி வாரிசு!”

அடுத்த நாள் இவள் திருவாரூர் செல்கிறாள்.

அச்சகத்துக்காரர் தாம் வரவேற்று நலம் விசாரிக்கிறார்.

“எப்பம்மா விடுதலையானீங்க? கொஞ்ச முன்னே ஆறுமுகசாமியப் பார்த்தேன். ஒரு கல்யாணப் பத்திரிகை அச்சுக் குடுக்க வந்தார். உங்களைப் பத்திப் பேசினோம்...”

இவளுடைய அறைச்சாவி, போலீஸ் - காவல் நிலையத்தில் அல்லவா இருக்கிறது. அனந்தண்ணா வீட்டுக்குப் போகிறாள்.

மறுநாள் காலையில் தான் சாவி கிடைக்கிறது.

அறையைத் திறக்கிறாள். சுவரில் இருந்த மார்க்ஸ் படம் கீழே விழுந்து உடைந்திருக்கிறது. ஜனசக்திப் பிரதிகள் இறைந்து கிடக்கின்றன. இரண்டரை ஆண்டுப் புழுதியைக் கூட்டி வார முற்படுகையில், செய்தி கேள்விப்பட்டு, துப்புரவுப் பெண் மூக்காயி, ராக்கையன், இருவரும் வந்து விடுகிறார்கள்.

பின்னே சீலாயி, குப்பன்...

“குடும்மா, நான் கூட்டி அள்ளுறேன்?”

“எப்படிம்மா இருக்கீங்க?”

“இருக்கிறம்மா, அடியும் மிதியுமா, எம்புருசன் எட்டு நாளா அதா கமலாலயக்கரை போலீசு டேசன்ல வச்சு அடிச்சு மிதிச்சு நரவல வாயில போட்டு இமிச பண்ணாங்க. சீக்காப்பூடிச்சி, இப்ப எந்நேரமும் குடிச்சிட்டுக் கெடக்கு...”

“நான் பெருக்குறேன், சீலாயி, நீ ரயில்வே பைப்படில போயி நாலு கொடம் தண்ணி கொண்டா!”

தேய்த்துக் கழுவுகிறார்கள். துடைத்துவிட்டு எல்லோரும் உட்காருகிறார்கள். புகையிலை வெட்டும் தொழிலாளி, முடி திருத்துபவர் ஆகியோரும் வந்துவிடுகின்றனர்.

“அம்மா, உங்களையும் அடிச்சாங்களா?”

எல்லோரும் கேட்கும் கேள்வி இது.

“என்னை அடிக்கல. ராஜபோகமா நடத்தினாங்க. ஆனால் உங்களைப் படுத்தின இம்சை எனக்கு நெஞ்சில ஆழமாப் பதிஞ்சிருக்கு. நாம, இனிமே ரொம்ப கவனமா, ரொம்பத் தீவிரமா வேலை செய்யணும். எல்லாச் சங்கங்களும் மறுபடி எழுந்து நிமிரணும். அன்னிக்கு வெள்ளக்காரன் ஆண்டான். இன்னிக்கு நம்ம மனிசங்களே நசுக்கறாங்க. இதை விடக் கூடாது!”

இரவு பத்துமணி வரையிலும் இவர்கள் பேசுகிறார்கள்.

--------------

அத்தியாயம் 28


பட்டுக்கோட்டையில் மூத்த சகோதரி மகன், வைத்தியத் தொழில் செய்கிறான். வீடு நிறையக் கலகலப்பான குழந்தைகளும் உறவுகளுமான குடும்பம். இங்கேயே தான் மீனாவின் வீடும் இருக்கிறது. நீலகிரியில் இருந்து வந்திருக்கிறாள்.

இவள் படியேறியதுமே, ஓடி வந்து வரவேற்கிறாள். “சித்தி... எப்ப வேலூரிலிருந்து வந்தேள்? அப்பா சொல்லிண்டே இருந்தார்...”

அன்பு மகளாக நெருங்கியவள். வெந்தயம் போட்ட தோசை மணக்கிறது. காபி ஃபில்டரில் டிகாக்‌ஷன் இறங்கும் போதே ஒரே மணம்.

“நீங்க விஜயபுரத்தில் ஆஃபீசிலதான் இருக்கேளா சித்தி? நீங்க வந்தா இருக்கணும்னுதான் தெற்குத் தெரு வீட்டை ரெண்டாயிரத்துச் சொச்சம் குடுத்து வாங்கியிருக்கா. வீட்டை இப்ப பூட்டி வச்சிருக்கா. நீங்க பார்க்க வேண்டாமா?”

“உன் அப்பா எங்கே?”

“நேத்துத்தான் கும்மாணம் போனார். உங்களுக்குத் தான் தெரியுமே? புசுக்குன்னா ஸ்ரீமடத்துக்குப் போவா. சுவாமிகள் கூப்பிட்டனுப்பினாப்பல... உக்கார்ந்துக்குங்கோ சித்தி!”

மணி ஊஞ்சலில் உட்காருகிறாள். தட்டில் இலை வைத்து நெய்யொழுகும் சொஜ்ஜியைக் கொண்டு வருகிறாள் மீனா.

“என்ன இன்னிக்கு?”

“நீங்க வரப்போறேள்னு இக்ஷிணி சொல்லித்து... ஊட்டிக்குளிர் எனக்கு ஒத்துக்கல. இங்கதான் இருக்கேன். இன்னிக்கு என்னமோ தோணித்து. வெண்ணெய் காய்ச்சின நெய் இருந்தது. ரவை என்னமோ ரேஷன்ல குடுத்தான்னு மின்ன, ஊரிலேர்ந்து கொண்டு வந்தது இருந்தது. சித்தி வறுத்த ரவை தண்ணீர் சர்க்கரை நெய் எல்லாத்தையும் ஒண்ணாக் கலந்து அடுப்பில வச்சுக் கிளறிண்டே இருந்தா, கட்டிதட்டாம பிரமாதமா வரது...” என்று மீனா விடாமல் பேசுகிறாள்.

“மீனா, கட்டி தட்டாது. ஆனா முன்னமே சர்க்கரையைச் சேத்துட்டா அது வேகாது. சீரணமும் ஆகாது. வெந்தப்புறம் சர்க்கரை போடலாம். மனுஷா கண்ணை மூடுறதுக்குமுன்ன, அவாகிட்ட என்ன இருக்குன்னு பாத்துவச்சிக்கறதுபோல அது...?”

பேத்திப் பெண் அருகில் வந்து நிற்கிறாள்.

“ஏம்மா குழந்தே! உனக்கு லேஸ் போட்டு அனுப்பினேன். கடிதாசி போட்டேன். ஏன் பதிலே போடல நீ?”

“ஜெயிலுக்கெல்லாம் கடிதாசி போட்டா ஒழுங்காப் போய்ச் சேராதுன்னு அப்பா சொன்னார். ஆனா, தினமும் நினைச்சிண்டே இருந்தோம். ஏ கிளாஸ்தான். கஷ்டமில்லை. எல்லாம் மீனுக்கே இருக்கட்டும். எனக்கென்ன இனிமேல்னு சொன்னேளாம். அப்பா சொன்னார்...”

இவளுக்குச் சர்க்கரையின் சூட்சுமம் புரிந்துவிட்டது.

“அம்மா! தாத்தா...! தாத்தா வந்துட்டார்!”

“அப்பா, மணிச் சேத்தியார் வந்திருக்கார்...!”

“அத்திம்பேர்...”

“எப்ப வந்தே மணி! இப்பத்தான் கும்மாணத்தில பஸ் ஏர்றப்ப கேள்விப்பட்டேன்... ஆமா, ஆத்தைப் போய்ப் பார்த்தியோ? ஒரு வெள்ளை அடிச்சுட்டு, ஓமம் பண்ணி நல்லது செஞ்சுண்டு போயிடலாம். இந்தக் கட்சி கிட்சி எல்லாம் இன்னமே உனக்கு என்னத்துக்கு?”

மணி அமைதியாகப் பேசுகிறாள்.

“நான் எந்த வீட்டுக்கும் போகப்போறதில்ல. எனக்குக் கடைசி வரையிலும் ஒரே இடம்னு தீர்மானமாயிட்டுதே!”

ஆம். கொஞ்சநஞ்சமிருந்த பந்தபாச உறவுகள் அனைத்தும் விடுபட்டுப் போகின்றன. சிறையில் இருந்து மற்ற தலைவர்கள் வெளியே விடுதலையாகி வருமுன், இவள் ஒரு பெருஞ்சக்தியாக மக்களைத் திரட்டுகிறாள். கட்சி அமைப்புக்கு ஊட்ட மருந்து நிதி. பழைய ஆணவ மிராசுகள், பகிரங்கமாகவே போலீசு ஆதரவுடன் பண்ணைக்காரர்களை நசுக்குகிறார்கள். குத்தகை ஒப்பந்தங்கள் காற்றில் பறக்க விடப்பட்டிருக்கின்றன.

மணி மறுபடியும் உண்டியல் தூக்கிக் கொண்டு பழைய நண்பர்கள், ஆதரவாளர்கள் என்று நிதி திரட்டுகிறாள். மழை கொட்டும் ஒரு நாளில் பெருங்கடம்பனூர் போய்ச் சேருகிறாள். இவள் விடுதலையாகி வந்தபின் ஒருமுறை சென்ற போது குஞ்சம்மா ஊரில் இல்லை. படியேறிச் செல்லும் மணி, திகைத்து நிற்கிறாள். ஊஞ்சற் பலகையின் பக்கம்... குஞ்சம்மாளா? இவள் குஞ்சம்மாளா? அத்தனைக்கத்தனை உயரம் நிமிர்ந்து, விரித்த கூந்தல் சடை போல் தொங்க நிற்பாளே? குஞ்சம்மா, உன்னைப் பார்த்தால் மாரியம்மா, காளியம்மா, துர்க்கை நினைவு வருகிறது என்பாளே? இவளுக்கு என்ன ஆயிற்று? ‘சிவபூசைப் பெட்டியை யாரோ சொன்னார் என்று நீ தூக்கிப்போட்டே? ஏன் அருகதை இல்லை? நானே சந்நியாசின்னா? ரமணரிடம் போய் உபதேசம் கேட்டேன். ஏன் ஸ்திரீ சந்யாசியாக இருக்கக் கூடாதா மணி?’ என்றெல்லாம் வாதம் பண்ணுவாளே! இவளுக்கு என்ன ஆயிற்று? ‘நீ இப்படி பேசுவதனால் தான் நான் உன்னிடம் வந்து பழக முடிகிறது குஞ்சம்மா!’ என்று சொல்வாளே? இவளுக்கு என்ன ஆயிற்று? மொட்டைத்தலையும் முக்காடுமாக... ஐயோ... என்று பரிதவிக்கிறது மனம்.

“என்ன மணி இப்படிப் பார்க்கறே? என் வீட்டுல வியாசபூசை பண்ண வேணும். காவி என்னமோ அன்னிக்கே கட்டிண்டேன். துறவு காஷாயம்னா, முழுசாக இருக்கணுமில்லையா? இதையும் முழுசா... முழுமுழுக்கத் தொலைச்சிட்டேன். மணி, நீ சொல்லல? நான் மறு ஜன்மமா, ஆண்னு நினைச்சிண்டு உலாவினாலும் இந்த நெத்திப் பச்சைக்கோடு உறுத்தறது. அதை என்ன செய்யிறதுன்னு தெரிலென்னு? எல்லாரும் ஆண்னு நினைச்சு, பெண்கள் பக்கத்திலேயே ஒட்டவிடல, ஆண்கள் மத்தியிலும் இக்கட்டா இருக்குண்ணு நீயே சொல்லி இருக்கல? அப்படித்தான் இதுவும். சந்யாசின்னு சொல்லிட்டு சடையும் தானுமா பிரும்ம ராக்ஷஸ்மாதிரி என்ன வேஷம்? ஒரு குழந்தை அப்படியே கேட்டுது. இப்படியானப்புறம் வியாசபூஜை கிரமமா நடத்தினேன்...”

மணி எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொள்கிறாள். வியாசர்... வியாசர் யார்? அவர் துறவியா? அவருக்கும் காவிக்கும், மொட்டைத் தலைக்கும் என்ன சம்பந்தம்?

ஏதோ அக்கினிக் குண்டம் உள்ளே வெடித்த மாதிரி எரிச்சல் கிளர்ந்து வருகிறது.

நெற்றிப்பச்சைக் கோட்டைப் பெயர்த்து எறிய வேண்டும் என்று, சிறை டாக்டரிடம் கூடக் கேட்டாள். அதெல்லாம் இங்கே சாத்தியமில்லை என்றார் அவர். வெளிப்புறச் சின்னங்கள்தாம் என்றாலும், அவை ஆளுமையைச் சிதைக்கப் பிணிக்கின்றன...

குஞ்சம்மாளின் வீழ்ச்சி இவளைப் பெரிதும் பாதித்து விடுகிறது. எதை எதையோ அவளிடம் பேசவேண்டும் என்று வந்தவள் நாவெழாமல் நிற்கிறாள். “மணி, நீ என்ன நினைக்கிறாய்னு புரிகிறது... உன் பணம் இப்பவும் என்னிடம் கொஞ்சம் இருக்கு. உனக்கு எப்பத் தேவைன்னு சொல்லு...”

அவள் பரிவாகத்தான் இருக்கிறாள். பேருதவியாக இருக்கிறாள். என்றாலும் இந்தச் சனாதனத்துக்குக் குஞ்சம்மா குனிந்து விட்டாளே? இவள் மறுபடியும் பத்திரிகைக்குப் பணம் கட்டி, பிரசுரங்கள் வரவழைத்து, தொண்டர்களைத் தேடிச் சென்று உற்சாகமூட்டுகிறாள்.

மறுபடியும் வயல்கள் வரப்புகள் ஏறி இறங்கி, மனிதத் தொகுதிகளை ஐக்கியப்படுத்தும் விவசாயச் சங்கம் துப்புரவாளர் சங்கம் என்று ஊக்குவிக்கிறாள். கதிர் அரிவாள் சின்னம், கிராமப்புறங்களில் மீண்டும் தலை தூக்குகிறது.

இதே ஆண்டின் இறுதியில், சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது.

வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை!

முன்புபோல் பட்டம் பெற்றோர், நில உடைமையாளர் மட்டுமே வாக்களிக்கலாம் என்ற வரையறை இல்லை. தாழ்த்தப்பட்டோர், ஊமை, செவிடு என்று ஊனமுற்றவரானாலும், எழுத்தறியாதவர்களாக இருந்தாலும், அனைவரும் இந்தியப் பிரஜைகள். அரசைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை அனைவருக்கும் உண்டு.

நிலப் பிரபுக்களாகக் கொடிகட்டிப் பறக்கும் காங்கிரஸ் பிரமுகர்கள் அனைவருமே தேர்தல் களத்தில் குதிக்கின்றனர். மணி, நாகையில் நடக்கும் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறாள். இப்போது, இங்கே அமைக்கப்பெற்றிருக்கும் புதிய நிர்வாகக் குழுவில் உறுப்பினர்கள் அனைவரும் இவளை விட வயதில் இளையவர்கள். இவளுடைய போராடி வந்த பின்னணி மற்றவர்கள் எவருக்கும் இல்லை. ஏனெனில் ஆண் என்ற ஒரு தகுதியே அவர்களுக்கு அடிப்படை உரிமை. இன்னும் பல தலைவர்கள் சிறையில் இருந்து விடுபடவில்லை. தலைமறைவாக இருப்பவர்களும் வெளிவரவில்லை. நில உடைமையாளர் சார்ந்த அரசு, பல தொண்டர்கள், தலைவர்கள் மீது சதி வழக்குகள் தொடுத்துக் கடுந்தண்டனைக்கு ஆளாக்கி இருக்கிறது. களப்பாள் குப்பு போன்றோரை, அநியாயமாகக் கொன்றும் ரத்தக் கறையேற்றிக் கொண்டிருக்கிறது.

காங்கிரசை எதிர்த்து, ஜனநாயகத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்த கட்சி, தேர்தல் களத்தில், நிலப் பிரபுக்களை எதிர்த்துப் போராட உறுப்பினர்களைத் தேர்வு செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் அது.

மணி, நாகைத் தொகுதியில் தன்னைத் தேர்ந்தால், போட்டியில் போராடி வெற்றி காணலாம் என்று தன் விருப்பத்தை வெளியிடுகிறாள். ஆனால்...?

கொல்லென்ற அமைதிப்படுதா வீழ்கிறது.

அவளுடைய குரல் அங்கே எந்த உயிர்ப்பையும் தோற்றுவிக்கவில்லை.

நாகைத் தொகுதிக்கு ரயில்வே தொழிலாளர் யூனியன் பிரதிநிதி...

ரிஸர்வ் தொகுதிக்கு இன்னொரு தோழர் என்று முடிவு செய்யப்படுகிறது.

“கட்சிப் பணத்தைச் சாப்பிட்டவங்க அபேட்சகராக நிக்கிறதா?” என்ற முணுமுணுப்புகள் இவள் நெஞ்சில் இடியாய் மோதுகின்றன.

இவளுடைய கோரிக்கை நியாயம் என்ற வகையில் மனசாட்சியினால் உறுத்தப்பட்ட ஓர் இளைஞர், “அம்மாளை நன்னிலம் தொகுதிக்கு நிற்க வைக்கலாமே” என்று மெல்லக் குரல் கொடுக்கிறார்.

ஆனால் அதுவும் ‘கட்சிப் பணம்’ என்ற முட்டலில் அமுக்கப்படுகிறது. கூட்டத்தை விட்டு வெளியே வருகையில் செயலாளரான இளைஞர், “அம்மா, உங்கள் விருப்பம் நியாயம். ஆனால் உங்களைப் பதவிக்கு அனுப்பிவிட்டால், இந்தக் கட்சியை யாரால் கட்டிக் காக்க முடியும்? உங்கள் அணுகுமுறையும் மக்கள் நேசமும் யாருக்கு இருக்கின்றன? நீங்கள் கட்சியின் பெருஞ்சக்தி. அதனால் தப்பாக நினைக்க வேண்டாம்...” என்று சமாதானம் கூறும் வகையில் பேசுகிறார்.

மணி உணர்ச்சியை விழுங்கிக் கொள்கிறாள்.

“பரவாயில்லை, நான் என் ஆயுள் உள்ள மட்டும், கட்சிக்கு உழைப்பதே விரதம் என்று கொள்வேன். எனக்குப் பதவி பெரிதில்லை. இதே தொகுதியில் நமது செங்கொடிச் சின்னம் வெற்றி பெறச் செய்வேன்...” குடையை இடுக்கிக் கொண்டு அவள் தெருவில் இறங்குகிறாள். இத்தனை நாள்களாகக் ‘கதிர் அரிவாள்’ சின்னம், புலி வருகிறது, புலி வருகிறது என்ற ஒரு விளையாட்டுப் பாவனையில் தான் அச்சுறுத்தலாக இருந்திருக்கிறது.

ஆனால் புலி என்பது பாவனை அன்று, உண்மையிலேயே அது ஒரு வெற்றித் தத்துவம் என்ற வகையில் கதிர் - அரிவாள் சின்னம் காங்கிரஸ்காரரிடையே ஒரு பீதியைத் தோற்றுவித்திருப்பதை மணி உணருகிறாள். இந்தத் தேர்தல் களத்தில் குதித்திருக்கும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கங்கள் முழு மூச்சாகச் செயல்படுகின்றன. மணியின் உறவுக் கூட்டங்களின் அதிபர்களில் பண்ணையடிமைகளுக்கு அக்கினித் தளை போடுபவர்கள் இருக்கின்றனர்.

“ஏய் பயல்களா? மரியாதையா, எல்லாம் உழவு மாட்டுக்கு ஓட்டு போடுங்கள்! அதுதான் உங்களுக்குச் சோறுபோடும் கட்சி, இல்லையோ, தொலைச்சிடுவோம்...!” என்ற மிரட்டல்கள் அன்றாடம் அவர்களை நெருக்குகின்றன.

இன்னும் ஒருபடி மேலே சென்று சில புண்ணியவான்கள், “ஓட்டுப்போடுகிறோம், அது இதுன்னு இந்த எல்லையை விட்டு வெளியே போனீங்க? தொலைச்சிடுவோம், ஜாக்கிரதை!” என்று சொல்லால் சூடு போடுகிறார்கள். ‘போலீசு’ என்ற சொல்லை உச்சரித்தாலே நாடி நரம்புகள் தளர்ந்து ஓய்ந்து போகும் மக்களை, உயிர்ப்பித்து எழுச்சி கொள்ளச் செய்ய வேண்டி இருக்கிறது...

ஊர் ஊராக நடக்கிறாள்.

“அம்மா... வாங்க...!”

“ஏம்பா... நீ வில்வபடுகை இல்ல... கோபால்...?”

“ஆமாம்மா, போலீசு எங்க எல்லாரையும் புடிச்சி அடிச்சிட்டே, மைல் கணக்காத் தெருத்தினாங்க... இவுரு... தலையில் அருவா கத்தி போல குடுமி வச்சாங்க...!”

மணி கண்ணீர் மல்க நிற்கிறாள். உடம்பு முழுவதும் அந்தச் சின்னம் தரித்து, கட்சி மாநாடுகளில் வேடம் புனைந்து வந்த இளைஞரைப் பார்த்திருக்கிறாள். இவர்கள் இப்படிக் கேலியா செய்தார்கள்?

“தோழர்களே, இந்தச் சின்னம் உங்கள் நெஞ்சில் பதிந்திருக்கட்டும். இது உழவனின் சின்னம்; பண்ணை உழைப்பாளி, பாட்டாளிகளின் சின்னம் - பண்ணை அதிபர் முதலாளிகள் கொஞ்சம் பேர். நீங்கள் பல்லாயிரக் கணக்கில் இருப்பவர்கள். மனித சக்தி உங்களிடம் இருக்கிறது. ஒவ்வொருவரையும் எழுச்சி கொள்ளச் செய்யும் சின்னம். இது வெற்றிச் சின்னமாகட்டும்...”

“தோழர்களே! காங்கிரஸ் என்ற அமைப்பின் அஹிம்சைச் சாயம் இங்கே அழிந்துவிட்டது. இது கோர உருவத்தைக் காட்டிவிட்டது. மனித ரத்தம் குடிக்கும் மிருகம் என்று புரிந்திருக்கிறது. தோழர்களே! ஒற்றுமையே நம் பலம். செங்கொடிக்குக் கீழ் நின்று, நாம் இந்த ஒற்றுமைப் பிரதிக்ஞை எடுத்துக் கொள்வோம். வெற்றி பெற்றே தீருவோம்...”

மறுபடியும் மணி ஓய்வு ஒழிச்சலின்றி வெறிபிடித்த நிலையில் இயங்குகிறாள். விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், துப்புரவாளர் சங்கங்கள், புகையிலைத் தொழிலாளர் சங்கங்கள், ரயில்வே தொழிலாளர் சங்கங்கள் எல்லாம் உயிர்ச் சூடுபிடித்து எழுகின்றன. அரிவாள் - கதிர்ச் சின்னச் செங்கோடுகள் கிராமக் குடில்களில், சேரிகளில் கோலோச்சுகின்றன. பண்ணைச் சேரிகளைச் சுற்றிப் போடப் பெற்றிருக்கும் அக்கினி வேலிகளை உடைக்கின்றனர். இரவோடு இரவாகக் குடைக்குள் கத்தியைச் செருகிக் கொண்டு பிணைவாசல், கமலாபுரம் என்று போகிறாள்.

காய்ந்த சருகுகள் மரங்களிலிருந்து உதிருவனபோல், இருளில் மெல்லிய குரல்கள் உயிர்க்கின்றன. பெட்ரோமாக்ஸ் தீவர்த்தி ஒளிகளும் கூட இல்லை.

“நாகப்பா...! உனக்குச் சொல்ல வேண்டாம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தா எப்படி இருக்கும்னு புரிஞ்சிட்டிருப்பீங்க. கோட்டை மீறி எப்படியானும் ஓட்டுப் போட வய்க்கணும்... உம் பொறுப்பு...!”

“அதெல்லாம் நான் பாத்துக்கறேம்மா...!”

“ஓட்டுப் போடறது உங்க உரிமை. அவங்க உங்களைத் தடுப்பது மிகப் பெரிய குற்றம். உங்களை நெல் திருடினான், தேங்கா திருடினான்னு அடிக்கிறாப்போல இல்ல, அதுனால... நீங்க பயப்பட வேண்டாம். பின்னால நான் பாத்துக்கறேன்...!”

லோட்டாவில் அம்மாளுக்குப் பால் கொண்டு கொடுத்து உபசரித்து, பாதி வழி துணை செல்கிறான் நாகப்பன்.

தேர்தல்... சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில், தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சையில் நிலப் பிரபுத்துவக் கோட்டை பரபரவென்று சரிகிறது. கதிரரிவாள் சின்னம்... பாட்டாளி மக்களை நெஞ்சம் நிமிரச் செய்து, வெற்றிச் சின்னமாக மிளிருகிறது.

மணி, ஆனந்தக் கண்ணீர் சொரிகிறாள். இவள் பாடுபட்ட அபேட்சகர், தலைமறைவு நிலையிலிருந்தே வெற்றி மாலை சூடுகிறார்.
--------------

அத்தியாயம் 29


நாகைக்கு வந்தாலே, மணிக்கு இப்போது, குஞ்சம்மாளை நினைத்து ஒரு தொய்வு ஆட்கொள்கிறது. பெண்... பெண் ஒரு கருவி; செக்குமாடு. இவள் தொழுவத்தில் கட்டப்பட்டு, வேண்டும் என்ற போது அவிழ்த்துக் கொண்டு போகப்படும் பிராணி... குஞ்சம்மாளை நினைத்த தொய்வுதானா?

ஏனிப்படித் தோன்றுகிறது? வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறாள். ஆனால், வெற்றி விழாக்களில், இவளுக்கு என்ன பங்கு இருக்கிறது?

... சே, இது பிற்போக்குத்தனமான சோர்வு...

புரட்டாசி மாசத்து வெயில் சுரீலென்று விழுகிறது.

அச்சகத்தில், தோழர் சிங்காரவேலு இருக்கிறார். “வாங்கம்மா, இப்பதான் உங்களைப் பத்திச் சொல்லிட்டிருந்தேன்! நூறு வயசு...!”

“அப்படியெல்லாம் சபிக்காதீர்கள் தோழர்! செங்கொடி வெற்றி பெறணும்னு நினைச்சேன். வெற்றி கிடைத்ததுமே நம் வேலை முடிஞ்சுபோச்சு?”

“என்னம்மா நீங்க இப்படிச் சொல்றீங்க? வேலை எங்கே முடிஞ்சிச்சி? இப்பத்தான் ஆரம்பம். பொதுவுடைமைக் கட்சி, பதவியைப் பிடித்ததும் அப்படியே நிற்க முடியுமா? அது ஒரு மக்கள் இயக்கம். அது தேங்கலாமா? நீங்கள் இன்னிக்கு மக்கள் மத்தியில் ஒரு பெருஞ்சக்தி. ஓயக்கூடாது.”

“இல்லை தோழர். விளக்கில் எண்ணெய் இருக்கும் வரையிலும் சூழலைப் பற்றிப் பயம் இல்லை. எண்ணெய் குறைந்துவிட்டால், ஒரு சின்னக் காற்றின் அசைவு கூட சுவாலையை அணைத்துவிடுமோ என்ற நடுக்கம் தோன்றுகிறதே, அது போல்தான்...”

“அம்மா, உங்களுக்குத் தெரியாததில்லை. இன்னிக்கு இந்தத் தஞ்சாவூர் ஜில்லாவில், பழிவாங்குறாப்போல், எல்லா மிராசுகளும் அவனவன் கீழுள்ள ஆட்களை, நிலத்தை விட்டு வெளியேற்றுவதில் கண்ணாக இருக்கு. அரிசி ரேசன், ஆறவுன்சோ, நாலவுன்சோன்னு ஒரு கன்ட்ரோல் முறை இருந்தது. இப்ப அதுவும் போயிட்டுது. திண்டாடுறாங்க. இது வெற்றியாம்மா? சுப்பிரமணியம் கமிட்டி, முடிவு செஞ்சி அறுபது, நாப்பதுன்னு தீத்திருக்கு. எந்த மிராசு கொடுப்பான்? நீங்க கிள்ளுகுடி என்ன, ராஜபுரம் என்ன, வலிவலம் என்னன்னு ஓடி ஓடிச் செங்குடிச் சங்கங்களைக் கட்டி ஓட்டுப்போட வச்சீங்க. ஓட்டுப் போட்ட குத்தத்துக்காக அவங்க வதைபடு படலம் ஆரம்பமாயிடிச்சி. நீங்க ஓஞ்சுட்டா அப்புறம் என்ன ஆவுறது?”

நெஞ்சு கனத்துப் போகிறது.

“சாகும்வரையிலும், என் இறுதி மூச்சுள்ளவரையிலும் இந்த இயக்கம், உழைப்பாளி உரிய பங்கைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடும் இயக்கம்... இதை விட்டுவிட மாட்டேன்...” என்று சொல்லிக் கொள்கிறாள்.

“அம்மா, சாப்பிட்டீங்களா? இல்லையே? உள்ளே சாப்பாடு வந்திருக்கு!”

மணி ஆறுதலடைகிறாள். முகம் கழுவிக் கொண்டு, உள்ளே செல்கிறாள்.

எலுமிச்சை, தயிர் - கலந்த சாதங்கள்.

“தோழர், எலுமிச்சை பித்தத்துக்கு நல்ல ஆரோக்கியம், இப்ப... எனக்கு உங்கள் பேச்சே எலுமிச்சையாக இருக்கு. உங்களுக்கு ரொம்ப வந்தனம்!”

சாப்பிட்டு முடித்தபின் புத்தகங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஜனசக்தி நிதி திரட்டப்படும் நாட்கள்... மக்கள் மத்தியில் புதிய தத்துவங்களைப் பரப்பும் கதைகள் நிறையச் சேரவேண்டும். எப்படி?

“அம்மா, இப்போதுகூட, மாக்ஸிம் கார்க்கியின் கதைகள் - அமரசிருஷ்டி - அவற்றில் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். பெற்ற தாய் - பிறந்த பொன்னாடு என்ற தலைப்பில். ஆனால், புத்தகம் போட்டுப் பணம் பண்ண முடியாது. எப்படியோ போடலாம் என்றால், பொருளுதவி இல்லாமல் ஒன்றும் ஆகிறதில்லை... எங்கே திரும்பினாலும் நெருக்கடி...”

“தோழர், இந்தத் தொண்டு நிச்சயம் செய்தாக வேண்டும். நான் எப்படியானும் முயற்சி செய்கிறேன்...”

அவர் குறிப்பிட்டது உண்மைதான், மிராசுதார் அடக்குமுறைகள், அலையலையாக இவர்களை வீழ்த்த நெருக்குகின்றன.

வலிவலம், கீவளூர், கிள்ளுகுடி என்று இவள் ஓடி ஓடிப் போய்க் களத்தில் நிற்கிறாள்.

ஒப்பந்தக் கூலி கிடையாது; நாற்பதாவது, அறுபதாவது! என்று விரட்டியடிக்க வெளியாட்கள் கொண்டு வரப்படுகின்றனர். “தோழர்களே! வெளியேறாதீர்! ஒன்றுபடுங்கள்! நாம் உயிருள்ளவரை போராடுவோம்! உரிமை கிடைக்கும் வரை ஓயமாட்டோம்!”

துப்பாக்கிச் சூட்டில் இறந்து போன வீரன் மகனைப் புதைத்து விட்டு மீண்டும் போராட்டத்தைத் தொடர்கிறார்கள்...

அந்த ஆண்டில், புயல் நாகையைத் தாக்குகிறது. ஏன்? தஞ்சை ஜில்லாவின் பெரும் பண்ணைகளே வெள்ளக் காடாகின்றன. தென்னை, வாழை அடியோடு நாசமடைகின்றன. சாலைப் புளியமரங்கள் ஒன்று கூட நிற்கவில்லை. குடிசைகள் வெள்ளக் காடாகி, மக்களைச் சின்னாபின்னமாக்கி அலையச் செய்கிறது.

மணி இந்தச் சூழலில், சீர்திருத்தப் பணியில், உழைப்பாளிகளுக்கு நியாய ஊதியம் பெற்றுத் தர முன்நிற்கின்றாள்.

“ஏம்ப்பா? உங்க ஊரில சங்கம் இருக்கா? நியாயக் கூலி இல்லாமலா வேலை செய்யிறீங்க...?”

“...மின்ன இருந்திச்சி. அம்மா கட்னீங்க. இப்ப அல்லாம் பூடிச்சி... வெள்ளம் வந்திச்சா...? அல்லாம பண்ணையாளுன்னு இப்ப ஒண்ணும் இல்லாமில்ல...? எங்க வேணா வேலைக்குப் போயிக்கறாங்க?”

“ஏம்ப்பா, கூட்டி வச்ச வேப்பங் கொட்டயா சங்கமங்குறது? எல்லா ஆளுகளும் சேர்ந்து செங்கொடிச் சங்கத்தைக் கட்டுங்கப்பா.” அவன் மவுனம் சாதிக்கிறான்.

“ஏம்ப்பா...?”

“சங்கம்னா காசு வேணுங்க; சந்தா குடுக்கமாட்டம்ங்கறாங்க...”

“என்னப்பா சந்தா? வருசத்துக்கு சோடிக்கு - ஆணுக்கும் பெண்ணுக்குமா நாலணா. இது குடுக்க முடியாதா?”

“குடுக்கமாட்டம்ங்கறாங்க. அவவ ஓரணான்னா ஓரணாங்குறான்?”

மணி சிறிது யோசனை செய்கிறாள்.

“சரி, வருசத்துக்கு சோடிக்கு ரெண்டணாத் தாங்க. போதும், சங்கத்தைக் கட்டுங்க! நான் வர புதங்கிழமை கொடி கொண்டாந்து ஏத்தி வைக்கிறேன்...! அம்பது பேருக்குக் குறையாம இருக்கணும்!”

இது புதிய விறுவிறுப்பைக் கொண்டு வருகிறது.

மணி அச்சகத்தில் ரசீது புத்தகம் அச்சடித்து, ஊர் ஊராகத் தானே சென்று சங்கங்களை முறையாக நிமிர்த்துகிறாள். வாய்ப்பேச்சு இல்லாமல் கூட்டம், தீர்மானம், கோரிக்கை என்று ஒழுங்கு கற்பிக்கிறாள்.

இந்தக் கிராமச் சுற்றுப் பயணங்களில், புதிய விறுவிறுப்பில், சில அடிப்படை சமாசாரங்கள் இவளுக்குக் குறுக்கே வரவில்லை.

திருவாரூரில், இவள் அலுவலகத்தில் குழு உறுப்பினர் ஒருவர் வந்து உரத்துக் கேட்கிறார்.

“என்னம்மா, நீங்க செய்யிற வேலை? இது கட்சித் துரோகம் இல்லை?”

மணி, ஜனசக்திப் பிரதிகளுக்கு மறுபடி பிரதிநிதியாக இருந்து வரவழைக்கிறாள். கோவிந்தராஜன், பக்கிரி என்று இரு இளைஞர்கள் ரயிலடியில் சென்று வாங்கி அவற்றைச் சந்தாதாரருக்கும் மற்ற வாடிக்கையாளர்களுக்கும் விற்றுவிட்டு வருகிறார்கள்.

முதல் நாள் பிரதியை அவள் பார்த்துக் கொண்டிருக்கையில் இடியாக ‘கட்சித் துரோகம்’ என்ற சொல் முட்டுகிறது.

“என்ன சொல்கிறீர்கள் தோழர்?”

“நீங்க கட்சி நிர்வாகக் குழுவினரைக் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று தெரியாதா? பதவி கிடைக்கலேங்கற ஆத்திரத்தில், நீங்க கட்சியை... நீங்களே பிராபல்யம் பெற பிளவு பண்ண முடிவு எடுத்திருக்கிறீங்க?”

இவள் திகைத்துப் போகிறாள்.

“நான் என்ன முடிவு செய்துவிட்டேன், தோழர்?”

“சோடிக்கு ரெண்டணா சந்தான்னு யாரைக் கேட்டு முடிவு செய்தீங்க? ஏற்கெனவே கட்சிப் பணம் போனதுக்கு உங்ககிட்ட சரியான விளக்கம் இல்ல. உங்க சொந்தப் பணம் தங்கி, வீடு வாங்கியிருக்கிறீங்க! கட்சிப் பணம் மட்டும்...”

அடி வயிற்றில் கத்தி சொருகப்பட்டாற் போன்று துடிதுடித்துப் போகிறாள்.

என்றாலும், இவள் சத்தியம், இவள் விவேகம், இவள் முதிர்ச்சி, இவளை அமைதியாக வைக்கின்றன.

“உங்கள் இஷ்டத்துக்கு நீங்கள், ஆட்களை உங்கள் பக்கம் சேர்த்துக் கொள்ளுறீங்க... இது பெரிய துரோகம்!”

“தோழர்... நிதானமாகப் பேசுங்கள். துரதிஷ்ட வசமாக நான் அந்தப் பணம் பற்றிப் பேசும் நிலையில் இல்லை. எனக்கென்று ஒரு பணமும், சொத்தும் நான் வைத்துக் கொள்ளவில்லை. என் சொத்தே என் சத்தியமும், நான் உழைக்கும் இந்த இயக்கமும் தான். உழைப்பாளிகளை, விவசாயிகளைப் பண்ணை முதலாளிகள் தாம் வயிற்றில் அடிக்கிறார்கள். அவர்களை எந்தக் காரணம் காட்டி சங்க ஒற்றுமையைக் குலைக்கலாம் என்று கண்ணி வைக்கிறார்கள். நாமும் கட்சி என்ற முறையில் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தலாமா? நம் குறிக்கோள் சங்க உணர்வைச் சிதையாமல் காப்பாற்ற வேண்டும்...”

“அதற்காக உங்கள் இஷ்டப்படி முடிவு செய்வதா? அது கட்சி மேலிடம் தீர்மானம் செய்யும் விஷயம். தனிப்பட்டவர் கருத்து இங்கே குற்றம் தான். கட்சி விதிக்கு விரோதமாக நீங்கள் செயல்படுறீங்க?”

“அப்படியானால் மக்களை இயக்கத்தில் இணைப்பது முக்கியமில்லையா? கட்சி விதி... அதுதான் முக்கியமா? வேலி பயிரை மேய்ந்தால், அதைத் தூக்கி எறிவேன் நான்!”

இவளும் பொங்கித் தான் வெடிக்கிறாள்.

ஆனால், இந்தக் கத்திக் குத்தல் போன்ற தாக்குதல் புரையோடிப் போவது தெரியாமல், இவளைத் தனிமைப் படுத்தும் போக்குகள் தொடருகின்றன. ஏற்கெனவே இவள் சொந்தபந்தங்கள், இடைநிலை வருக்கப் பெண்கள் என்று அன்னியப்படுத்தப்பட்டவளாக இருக்கிறாள். கட்சி சார்ந்தும் இவள் அன்னியப்பட்டுப் போவது வெளிக்குத் தெரியாமலே தொடருகிறது. அவள் தானாக அண்டிய தனித்துவம், தன் சுயமதிப்புக்காக, தற்காப்புக்காகத் தேடிக் கொண்டது. அந்தத் தனித்த ஆளுமையில் கவரப்பட்ட ஆயிரமாயிரம் ஏழை உழைப்பாளர்கள், அவளைத் தன்னிகரில்லாத் தலைவியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

“மணியம்மா! எங்க ஊருக்கு வாங்க! எங்களுக்கும் உங்க சங்கத்துல சேரணும், செங்கொடி குடுங்க!” என்று இவள் செல்லுமிடமெல்லாம் மக்கள் மொய்க்கின்றனர்.

“என்னப்பா பக்கிரி? படிப்பை மேலே தொடராமல் என்னிடம் வேலை குடுங்கன்னு வரியே? உன்னைத் திருச்சி ஆஸ்டலில் சேர்க்கச் சொல்லட்டுமா?...”

“அம்மா, உங்க கூடக் கொஞ்ச நாளேனும் இருக்கேம்மா! என்ன வேலைன்னாலும் குடுங்கம்மா!”

இந்த இளைஞர்களுக்குத்தான் இவளிடம் எவ்வளவு நம்பிக்கை!

அவன் காலையில் ரயிலடிக்குச் சென்று, ஜனசக்தி இதழ்களைப் பெற்று, வாடிக்கையாளரிடம் கொடுத்துக் காசு வாங்கிக் கொண்டு பத்து மணி சுமாருக்கு அம்மாவின் இருப்பிடத்துக்கு வந்தால், காலை உணவு தோசையோ, உப்புமாவோ அம்மா கொடுக்கிறாள். பிறகு, அவனைக் கட்சிச் சங்க அலுவலாக எங்கு அனுப்பினாலும் சென்று திரும்பி விடுகிறான்.

அம்மாவின் அலுவலகத்தில்தான் படுக்கை.

இன்னோர் இளவல் தியாகராசன். இவன் பொதுவுடைமைக் கட்சியைச் சேராத, திராவிட முன்னேற்றக் கட்சி இளைஞன். அம்மாளிடம் மிகுந்த அபிமானம். அம்மாள் பொதுவுடைமைப் பிரசார வெளியீடுகளை எங்கே கொண்டு செல்லப் பணித்தாலும் ஓடி வந்து ஒட்டிக் கொள்கிறான். இவளுடைய மனிதாபிமானத்துக்குக் கட்சி, சமயம் இனம் எதுவுமே கிடையாது. திராவிடக் கட்சியில் ஈடுபாடு கொண்டதால் ஜமாத்தை விட்டு விலக்கம் பெறும் முஸ்லிம் அன்பர் அம்மாளிடம் வந்து ஆலோசனைக் கேட்டுப் பழகுகிறார்.

“அம்மா...!” என்றழைத்துக் கொண்டு அன்று காலை வில்வனம்படுகை கோபால் வருகிறான்.

“என்னப்பா கோபால், என்ன சமாசாரம்?”

“பட்டாமணியம், அதாம்மா மணலூரு பட்டாமணியம் போயிட்டாரு...!”

“என்னது...? சொக்கலிங்கமா? சின்ன வயசு; நல்லாத்தானே இருந்தான்?”

“... ஆமாம்மா... பந்தநல்லூரில... தொடுப்பா இருந்த பொண்ணு வீட்டில என்னமோ சாப்பிட்டாராம். பலது சொல்லிக்கிறாங்க. பிளசர் வச்சிக் கொண்டாந்திருக்காங்க.”

“அட... பாவி...”

இவளை எப்படி எதிரிட்டுக் கொண்டு தனக்கு நிகரில்லை என்று நடந்தான். ‘நீ உன்னாலானதைப் பார்ப்பியோ? சல்லிக்காசு பேராது!’ என்று அவன் பேசிய பேச்சுகள் ஒலிக்கின்றன.

பிறர் உழைப்பில் உண்டு கொழுத்த சதைப் பசிக்கு எத்தனை பெண்கள் இரையாயிருப்பர்?...

அவன் இளம் மனைவி... உறவினர்...

“இரப்பா, கோபால், நானும் வரேன்! சாவு வீட்டுக்குப் போகணும்!”

அன்று கோபாலும் அவளும் பேசிக் கொண்டே ரயிலில் அடியக்கமங்கலத்தில் இறங்கி, மணலூருக்கு நடந்து செல்கிறார்கள்.

--------------

அத்தியாயம் 30


1953, ஏப்ரலில், மன்னார்குடியில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் 5வது மாநில மாநாடு கூடுகிறது. இந்த மாநாடு கூடுவதற்கு முன்பே, மணி பொது இயக்கத்திலிருந்து தான் அன்னியப்படுத்தப்பட்டு விட்டதை உணர்ந்திருக்கிறாள்.

ஆனால், அவளுடைய மக்களில் எவருக்கேனும் இந்த மேலிடத்தின் போக்குத் தெரியுமோ? இது மிக நுட்பமான நரம்போட்டம்.

“எங்களுக்கு மணியம்மா கட்சிதா வோணும். நாங்க அதில சேர்ந்திட்டோம்...?”

“அதென்ன மணியம்மா கட்சி?”

“செங்கொடிக் கட்சி... அதுதா மணியம்மா கட்சி. சோடிக்கு ரெண்டணாச் சந்தா...”

இந்த அலையை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

“அது என்னடா மணியம்மா கட்சி? ஆட்டுப் புழுக்கை கட்சி?”

“ஓரடிக்குத் தாங்காது! மரியாதையா எல்லாம் காங்கிரசில சேந்து நாயமா இருங்க!” என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் பண்ணையாள்களை மிரட்டுவதையும் மணி அறிகிறாள்.

ஆனால், மணி, மக்களையும், தன் இலட்சியங்களையும் தவிர வேறு எந்தப் பேச்சையும் போக்கையும் பொருட்படுத்தாதவளாகச் செயல்படுகிறாள். ஜனசக்திக்கு மட்டுமின்றி, சோவியத் நாடு, மற்றும் சோவியத் நாட்டில் வெளியாகும் குழந்தைப் புத்தகங்கள் உள்ளிட்ட பல பிரசுரங்களையும் வரவழைத்து விற்பனை செய்யப் போகிறாள்.

எந்தக் கூட்டமானாலும் தயங்குவதில்லை. பாபநாசமா, ராதாநல்லூரா? வெண்ணைத்தாழி உற்சவமா! இளைஞன் தியாகராசனுடன் கட்டுக்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிடுவாள்.

‘ஓரணாத்தான். வாங்கிப் படியுங்கள்? புதிய செய்தி? புதிய அறிவு. தான்யா, வீரமங்கையின் கதை...” என்று இவள் புத்தகப் பிரசுரங்களை வைத்துக் கொண்டு விற்பது சாதாரணக் காட்சியாகிறது.

முன்பெல்லாம் எந்தக் கூட்டமானாலும், இவள் பேசாமல் அது நிறைவு பெறாது “இப்போது தோழியர் மணியம்மை பேசுவார்!” என்று அறிவிப்பதை எதிர்பார்த்து மக்கள் இருப்பார்கள்.

“ஆம்பிள மாதிரியப்பா, பொம்பிள பேசுறாங்க!” என்று பார்ப்பார்கள். “மணி அம்மா! நம்ம மணி அம்மா!” என்று கீழ்வருக்கம் பூரித்துப் போகும். போலீசும் கூட இவள் பேசும் கூட்டத்தை விலக்குவதில் தீவிரம் காட்டியதில்லை. அத்தகையவளுக்கு, இன்று மாநாட்டில், பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிறது. பண்ணையாள் பாதுகாப்புச் சட்டமா? வார உரிமைப் பிரச்சினையா? எதுவானாலும் கீழ்மட்டத்தில் அடிவரையில் உழலும் மக்களின் உணர்வோடு ஒன்றி அவற்றைப் பரிசீலனை செய்யும் தகுதி அவளை விட ஏறு எவருக்கு உண்டு? இவள் ‘நடுவாள்’ முறையை ஒழிக்க முன்வந்து உழைப்பவர் பக்கம் நின்ற போது, இவளைச் சேர்ந்த காங்கிரசே இவளைத் தூக்கி எறிந்தது. ‘பொதுவுடைமையில் ஜனநாயகத்துக்கு ஏது இடம்?’ என்று அந்நாளில் இவளைப் பலரும் துருவியிருக்கிறார்கள். இந்நாளில் காங்கிரஸ் தன் செல்வாக்கு, அதிகாரம் அனைத்தையும் பிரயோகித்து, பண்ணையாட்களைச் சிறிது சிறிதாகத் தங்கள் பக்கம் கவர முயலுகிறது. அவர்களை எதிர்த்து, ஏழை உழைப்பாளிகளின் உரிமை உணர்வை ஒன்றுபட்ட சக்தியைத் தோற்றுவிக்க, ஓர் அற்பமான சந்தாக் குறைப்பு... இதை ஒத்துக் கொள்ளக் கூடாதா மேலிடம்?

“ஓ, நீங்கள் கையாண்ட யுக்தி சரியே அம்மா. நாம் கூட்டத்தில் இதுபற்றித் தீர்மானம் நிறைவேற்றுவோம். நம் கட்சிக்கு இது ஊக்கச் சக்தியாகும்...” என்று ஏன் இவர்கள் சொல்லவில்லை?

மாறாக... மாறாக... இவளுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. ஏன்... ஏன்?

காலம் காலமாக ‘தான்’ என்று ஆதிக்கச் சிந்தனையை வளர்த்து வந்திருக்கும் ஆண் வருக்கம், அங்கே பெரும்பான்மை.

இவள் சிறுபான்மை இனத்தில் பட்ட பெண். எந்தப் பக்கமும் ஆதரவின்றி அன்னியப்படுத்தப்பட்டவள்.

வெளியே காட்டிக் கொள்ளாமல் மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே பிரசுரங்கள் விற்கிறாள், சில்லறையை எண்ணிப் போட்டுக் கொள்கிறாள்.

இந்தக் கட்சி அமைப்பு, விதிகள், கட்சி ஒருமைப்பாடு அனைத்துமே, இரகசிய ஆணைகளின் வலிமையில் நிலை நிற்பதாகும்.

உங்கள் கட்சியில் மனிதமதிப்பு தனிமனித நிலையில் துடைக்கப்படுகிறது என்று அவளிடம் எத்தனை பேர் வாதாடி இருக்கிறார்கள்? தனிமனிதர்களை அமுக்கி வெறும் இயந்திரங்களாக்கும் அமைப்பா இது? மனித சக்தியை ஒன்றிணைக்கச் சில விதிகளும் கட்டுப்பாடுகளும் கடுமையாக இருக்கவேண்டியதவசியம் என்றாலும், மனிதாபிமான வேரையே அது பதம்பார்ப்பது சரிதானா...?

இல்லை... இல்லை... இவளை அன்னியப்படுத்தித் தூக்கியெறியும் இந்தப் போக்கு, இவள்... இவளாக இருப்பதால் தான்.

கட்சியின் உயிர்மூச்சாக, அது நலிந்த நிலையிலும் கட்டிக்காத்த அவளுக்கு இந்தத் தண்டனை சரிதானா...?

இத்துணை குமுறல்களையும் அவள், அந்தப் பெரிய கூட்டத்தின் ரகசிய அரண்களை உடைத்துக் கொண்டு வெடிக்க முடியும்.

அது... கட்சியின் புனிதமான இலட்சியத்தை மாசுபடுத்திவிடும்.

ஏற்கெனவே நிலப் பிரபுத்துவமும் முதலாளித்துவமும், இந்தக் கட்சியின் மீது வன்முறை உயிர்க்கொலை வண்ணங்களைப் பூசி, இளைஞர் பலரையும் இந்த அமைப்பில் சேராவண்ணம் தடுத்துக் கொண்டிருக்கின்றன. எனவே, மணி பொறுக்கிறாள்.

மாலையில் பொதுக்கூட்டம், இரவில் சில நிகழ்ச்சிகள். ‘தான்யா’ நாடகம் அரங்கேறுகிறது. சோவியத் வீராங்கனை தான்யவாக ருக்மணி நடிக்கிறாள்.

ருக்மணி... “காம்ரேட்! உங்களுக்கு ஒண்ணுமில்லை; உடம்பு சரியாகிப் போகும். உங்கள்... இலட்சியம் வீணாகாது!” என்று சொல்லி அமுதமாக ரசம் சோறு கரைத்துக் கொண்டு வந்த சகோதரி, நாடகம் முடிந்ததும் மேடையேறிச் சென்று அவளைத் தழுவிப் பாராட்டுகிறாள்.

“ருக்மணி, அற்புதமாக நடித்தீர்கள்...”

கண்ணீர் மல்க, உணர்ச்சிமுட்ட, பேச நாவெழாமல் நிற்கிறாள்.

இந்த மாநாட்டில் வரலாறு காணாத அளவு மிகப் பெரிய பேரணி நடக்கிறது. விவசாய சங்கங்கள் ஒவ்வோர் ஊராக அணி அணியாகத் திரண்டு நிற்கிறாகள். மணி எத்தனையோ பேரணிகளில் பங்கு கொண்டிருந்திருக்கிறாள். மதுரைத் தொழிற்சங்க மாநாட்டில் இவளுக்குத் தான் எத்தனை புகழும் பெருமையும் செல்வாக்கும் இருந்தன? கூட்டத்தில் பெண்கள் அணியில் இவள் கோஷமிட, கேரளத்தில் இருந்து வந்த தோழர் ஒருவர் இவளை ஆணென்று நினைத்து, ‘இந்தப் பக்கம் வாருங்கள்!’ என்று கத்தியபோது எழுந்த சிரிப்பலை!

ஆனால், இன்றும் இவளுடைய தொண்டர்களாகிய செல்லப்பிள்ளைகளை இவளைத் தலைவியாகத்தான் கருதி நீண்ட அணியாக நிற்கின்றனர். ‘செங்கொடி வானில் பறக்கட்டும்! புரட்சி ஓங்குக! பாட்டாளிகளின் உரிமையைப் பறிக்காதே! உழவனின் உரிமையைப் பறிக்காதே!’ என்ற கோஷங்களுக்கு இடையே ‘தோழியர் மணியம்மை வாழ்க!’ என்றும் முழங்குகிறார்கள்.

இவளோ, ‘உழவருக்கும் தொழிலாளிக்கும் நியாயம் செய்! உரிமைகளைப் பறிக்காதே! ஒற்றுமை ஓங்குக! உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுவோம்!’ என்ற கோஷங்களை முன் வைத்து நடக்கிறாள்.
-----------

அத்தியாயம் 31


“வாய் கசந்து, ரொம்பப் பித்தமாக இருக்கு; தலை சுத்தறது. எதானும் மருந்து குடப்பா!”

“சொல்லி அனுப்பினால் நான் வரமாட்டேனா மணி? எதற்கு நீ முடியாமல் இங்கே வரணும்?”

“... ஒரு நாலெட்டுக்கூட இல்ல, இது ஒரு முடியாமையா? டெயிலர்ட்ட ஒரு பெரிய பை தைக்கச் சொல்லிக் குடுத்திருந்தேன். அதை வாங்கிட்டுப் போக வந்தேன். அப்படியே உன்னிடம் மருந்தும் வாங்கிக்கலாமேன்னு நுழைஞ்சேன்!”

இவள் வட்டமான ஸ்டூலில் உட்காருகிறாள். தலை கனமாக இருக்கிறது. இரவில் நல்ல உறக்கம் வருவதில்லை. உறங்கினாலும் உருப்படியில்லாத கனவுகள்.

டாக்டர் இவள் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கிறான்.

“உனக்கு பிரஷர் இருக்கு மணி, பேசாம எல்லாத்தையும் விட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ...”

“இராத்திரி போட்டுண்டு கொஞ்சம் தண்ணீர் குடிச்சிட்டுப் படுத்துக்கோ...” என்று மருந்துப் பொட்டலமும் டானிக்கும் தருகிறான். சூசகமாக “எல்லாம் விட்டுடு” என்கிறான்; உறவு முறையில் சகோதரன் ஆக வேண்டும்.

எல்லாம் என்றால் எதை எப்படி? விடுவது?

புதிதாகத் தைத்த பை பெரிதாக இருக்கிறது. ஒரு விரிப்பு, ஒரு செட் உடை எல்லாம் தாராளமாகக் கொள்ளும். இரவு நன்றாகத் தூங்குகிறாள்.

பையில் சமக்காளம், போர்வையை மடித்து இவள் வைப்பதைப் பார்க்கும் வண்ணம் தியாகராஜன் படியேறி வருகிறான்.

“அம்மா, எங்கே கிளம்புறாப்பல?”

“ஏம்பா, தியாகராஜன்? என்ன, விசேஷம் எதானும் உண்டா?”

“ஆமா, லால்குடில மகாநாடு...”

“என்ன மகாநாடு? இந்தி எதிர்ப்புப் போராட்டமா?”

“இல்லம்மா... பல பிரச்னைகள்...”

மணி ஒரு கணம் மவுனமாக நிற்கிறாள்.

அதே நாளில்தான் நாகையில் இவர்கள் கட்சி மாநாடு நடக்க இருக்கிறது. இவள் மீது நடவடிக்கை எடுத்து... அதிகபட்ச தண்டனை கொடுக்கும் தீர்மானம்...

“ஏம்பா, உங்க மாநாட்டிலும் கூட்டம் நிறைய இருக்குமில்லையா?”

“ஆமாம்மா! நேரு, தி.க., தி.மு.க. வித்தியாசம் கூடத் தெரியாமல் பொதுப்படையா நான்சென்ஸ்னு சொன்னாரே, அதைக் கண்டனம் செய்யறது முக்கியம்... அரசியல் நடவடிக்கைகள், குலக் கல்வித் திட்டம், எல்லாம் தான் பேசுவாங்க.”

“நம்ம பிரசுரங்களை அங்கே கொண்டு வந்தாலும் விற்கலாம், இல்லையா?”

“... ஓ... விற்கலாம்மா?”

“அப்பா, வெள்ளிக்கிழமை சாயங்காலம், வழக்கமான இடத்தில் வந்து, இந்தக் கட்டெல்லாம் எடுத்திட்டுப் போகிறாயா?...”

“நெட்டி வேலைக்காரன் தெரு பெட்டிக் கடையில் தானே?”

“ஆமாம், நீ கிளம்பு முன்ன, வெள்ளிக்கிழமை அங்கு வந்து இரு...”

அவனுக்குச் சந்தோஷம்; போகிறான்.

இவளுக்கு ஓர் இறுக்கம் விட்டாற் போல் இருக்கிறது. டாக்டரிடம் வாங்கி வந்த பொடியைப் போட்டுக் கொண்டு தண்ணீரைக் குடிக்கிறாள்.

அன்றிரவு உறங்கிப் போகிறாள்.

மாநாடு - மாநில அளவில் நடக்கிறதென்றால், எத்தனை உற்சாகமாக இவள் முன்னேற்பாடுகளைச் செய்வாள்? நிதி திரட்டுவாள்? அறுவடையானதும் மக்களிடம் அரைப்படி, ஒரு படி என்று அரிசி வாங்கி மூட்டையாகச் சேர்த்துக் கொண்டு போவார்கள்.

ஆனால், இப்போது கிராமங்களில் மணியம்மை கட்சி என்று சொல்பவர்கள், மணியம்மா இல்லாத கம்யூனிஸ்ட் மாநாடு கூட்டுகிறது என்று அறிவார்களோ?...

இந்தக் கட்சியின் பெயரிலேயே பிற இளைஞர்களுக்கு ஓர் அச்சம் தோன்றியிருப்பது உண்மை. ஏனென்றால் எந்த ஒரு முரணான சிலும்பலையும் மேலிடம் பொறுக்காது. அநியாயம் என்று எவரும் வாதிட முடியாது. கட்சி மேலிடம் என்பது தனிப்பட்ட தலைவனின் ஆணையா, பொதுக்குழுவா என்பதைக் கூடக் கேட்க முடியாது. தொண்டனாகச் செயல்படுபவன், யாருக்குத் தூது செல்கிறான், யாரைக் கூட்டிச் செல்கிறான், யாருக்கு உணவு போகிறது என்பதையே அறியான். சொல்லப் போனால் அவன் இயந்திரம். அதற்கு மேல் அவனுக்கு அறிவு தேவையில்லை. எனவே மணியம்மாவுக்கு அநியாயம் இழைக்கப்படுகிறதென்று அரசல் புரசலாகத் தெரிந்தாலும் அது ஒதுக்கப்படும். அவர்கள் இதை அறிவதற்குள் இவள் விலாசம் இல்லாதவளாகி விடுவாள்.

இத்தனை நாட்களில் இத்தனை போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறாளே, வெளிப்படையாக இவளை யாரேனும் பாராட்டு முகமாக அல்லது இவர்கள் பத்திரிகையிலே கூட ஒரு பெயரையேனும் வெளியிட்டிருக்கிறார்களா? இல்லை.

பெண்ணும் ஆணும் சமம் - சம உரிமை என்று வாய் கிழியக் கொள்கை பேசினாலும், ஒரு பெண், ஆணுக்கு நிகராக - ஏன் மேலாகவே போராளியாவதைச் சகிக்காத ஆதிக்கமே இவள் உணர்ந்த உண்மை.

இவள் அதையெல்லாம் பொருட்படுத்தி இருக்கவில்லை.

இவள் இலட்சியம், சமுதாய ஒற்றுமை, பலம், மனித சக்தி, அதனாலேயே இவள் எதையும் பொருட்படுத்தி இருக்கவில்லை. இது இறுதிக் கட்டப் போராக இருக்கும். ஆம், அனைத்து உழைப்பாளிகளும் இவள் பக்கம் வருவார்கள். நியாயக் குரல் ஓங்கும்.

வெள்ளியன்று காலையில் பையை மாட்டிக் கொண்டு குடையை இடுக்கிக் கொண்டு கிளம்புகையில் ஓர் ஆள் வருகிறான்... பேச்சுவார்த்தைக்கு, சமரசத்துக்கு வரவும்... என்று சோதரராக உறவு கொண்டாடும் பண்ணையில் இருந்து செய்தி கொண்டு வருகிறான்.

“சரி... பூந்தாழங்குடிக்கு நாளக் காலம வர்றேன். அங்கேந்து வரேன்னு சொல்லு?”

மனம் இலேசாகிறது. தம்பி முறைப் பையன். புதிய முன்னேற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வம் உடையவன்.

பேச்சுவார்த்தைக்குச் செல்லும் முக்கியத்துவம் இருக்கிறது...

விறுவிறுப்பாக நெட்டி வேலைக்காரத் தெருவுக்கு நடக்கிறாள்.

“நாகப்பா! ஒரு சோடா குடு!” என்று கேட்டு வாங்கிக் குடிக்கிறாள். வைகாசி பிறக்கப் போகும் நாட்கள் ஏறும் வெய்யிலே கடுமையாக இருக்கிறது.

“நான் இன்னிக்கு தியாகராஜனிடம் லால்குடி மகாநாட்டுக்கு வரதாச் சொல்லியிருந்தேன். வரதுக்கில்ல, வேற ஓரிடம் போக வேண்டியிருக்கு. அவன் வந்து விசாரிப்பான். சொல்லிடுங்கோ!”

காலையில் இவள் பூந்தாழங்குடியில் வந்திறங்குகையில், பல புன்னகை முகங்கள் வரவேற்கின்றன. “வாங்கம்மா! வாங்கம்மா! இத்தின நேரமாச்சே, இந்தப் பக்கம் பஸ் போயிடிச்சேன்னு பார்த்தேம்மா” என்று வரவேற்கும் தோழர், வீட்டுக்குக் கூட்டிச் செல்கிறார். கட்டிலைப் போட்டு, உட்காரச் சொல்கிறார்கள். தட்டில் சர்க்கரையும் பழமும் வருகின்றன.

வீட்டில் பெண்கள் பலர் புடை சூழும் கோலாகலம், வாயிலில் கோலம்; மாவிலைத் தோரணம்.

இளநீரைச் சீவிக் கொண்டு வந்து வைக்கிறார்கள்.

“அம்மா! நீங்கள் கட்டி வச்ச ராசாத்தி! எட்டு வருசம் கழிச்சி புள்ள பெத்திருக்கா... அம்மா மடில வச்சி பேரு சொல்லணும்...” சுருள் முடி கண்களை மறைக்க, ஒரு பூங்குழந்தையை அதன் பாட்டி இவள் மடியில் கொண்டு வந்து வைக்கிறாள்.

மணிக்கு உடல் புல்லரிக்கிறது. பட்டுப்போன்ற அதன் மேனியைத் தொடும்போதே ஒரு பரவசம் தோன்றுகிறது.

மனித சமுதாயம் என்றும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஜீவநதியன்றோ? என்றும் பழமையாய், என்றும் புதுமையாக ஓடிக்கொண்டிருக்கும் ஜீவநதி.

குழந்தையின் முடியில் எண்ணெய்க் கிண்ணத்தைத் தொட்டு உச்சி வைக்கிறாள். சர்க்கரையை நாவில் வைக்கிறாள். அது செவ்விதழ் அகல பட்டுப்போன்ற நாக்கில் இனிப்பைச் சுவைப்பது கண்டு பூரித்துப் போகிறாள். இங்கு சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற வேற்றுமைகள் கரைந்து போகட்டும். மனிதன்... ஒப்புயர்வற்ற அந்த உன்னத நேய உணர்வு என்றென்றும் இனிமையாகச் சுரக்கட்டும்.

இதுவே இந்த மனிதத்தின் இலட்சியமாக இருக்கட்டும். போராட்டங்களும், புயல்களும் கொந்தளிப்புகளும், இந்த இலட்சியத்தை நோக்கிய இயக்கங்களாகவே இருக்கக்கூடும்...

“பேர் வைக்கணும்மா, நீங்க...! புள்ளக்கி நல்ல பேரா வைங்க.”

“‘உஷா’ன்னு வைக்கிறேன். காலை உதயம். இருட்டுப் போகும் வெளிச்சம். விடிவெள்ளி... இவள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பாள்.” முத்தமிட்டுக் குழந்தை பெயரைச் சொல்லி அழைக்கிறாள்.

உஷா... உஷா...

ஒரே மகிழ்ச்சி.

பிறகு பெண்களைப் பாடச் சொல்கிறாள்.

விடுதலைப் பாட்டு; கட்சிப் பாட்டு; நடவுப்பாட்டு; தாலாட்டுப் பாட்டு... ஒரே உற்சாகத்தினிடையே மணி தோசையும் காப்பியும் அருந்துகிறாள். பதினோரு மணி சுமாருக்கு பஸ் வருகிறது. எல்லோரும் வந்திருந்து பஸ்ஸில் ஏறுவதைப் பார்க்கிறார்கள்.

அண்மையிலுள்ள ஊர்தான். சாலையின் ஒரு புறத்தில், குளத்தங்கரை, அரசமரம், பள்ளிக்கூடம். எதிரே பண்ணைப் பங்களா. அதனுள் செல்லும் கப்பிப் பாதை நேராக இவர்களுடைய கிராம அக்கிரகார வீட்டுக்குச் செல்லும்.

உச்சி வெயில் உக்கிரமாக இருக்கிறது. நீலவானில் ஒரு பஞ்சு ரேகை கூடக் கிடையாது.

மணி, தன் மணிக்கட்டுக் கடிகாரத்தைப் பார்க்கையில் கமலாபுரம் தோழர் குரல் கேட்கிறது.

“வாங்கம்மா... இந்த பஸ்ஸில் தான் வாரீங்களா?”

“ஆமா, பூந்தாழங்குடி போயிட்டேன் காலம... என்னப்பா விவகாரம்...?”

இதற்குள் ஆங்காங்கிருந்த பண்ணை ஆட்கள் வந்து சூழ்ந்து விடுகிறார்கள்.

ஒருவன் உள்ளே பங்களாவின் முன் பெஞ்சியைக் கொண்டு வந்து போட்டுத் தகவல் சொல்லப் போகிறான்.

மணி உட்காரவில்லை.

பிணைவாசல் நாகப்பன் தட்டு வண்டியில் நெல் மூட்டைகளுடன் வந்தவன் அம்மாளைக் கண்டு வண்டியை விட்டிறங்கி நிற்கிறான்.

“பொம்பிளங்க சாணிக்கூடை சுமக்கணும். மூணுபடி குடுக்க முடியாது. அம்புட்டுப் பேரும் போயி காங்கிரசுக்கு விரோதமா ஓட்டுப் போட்டீங்க... இதாம்மா வெவகாரம்.”

மணி கேட்டுக் கொண்டே நிற்கிறாள்.

எதிரே கப்பிப் பாதையில் வில் வண்டி வந்து நிற்கிறது.

சகோதரன் தம்பி இறங்கி வருகிறான்.

“அக்கா வந்து ரொம்ப நாழியாச்சா?”

“இப்பதான் கொஞ்ச நேரம்...”

“ஆத்துக்குப் போகலாமா? வாயேன்? சாப்பிட்டுட்டுப் பேசலாம்...”

“வரதுக்கில்ல...”

இவள் இருபக்கமும் பார்த்துக் கொண்டே உள்ளே அவனுடன் நடந்து செல்கிறாள்.

“புதுசா கிரேன் கிரஷர்... வந்திருக்கு பார்க்கிறாயா?”

அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டு நடக்கிறான்.

கரும்பைப் பிழிந்து பெரிய கொப்பறைகளில் இட்டு வெல்லங் காய்ச்சுவார்கள். இப்போது வேலை நடக்கவில்லை.

அருகில் உள்ள பெரிய பண்ணைக்காரர் - மிகப் பெரிய பண்ணை - சர்க்கரை ஆலை ஓடுகிறது. ஆலை என்று வைத்தால் அதற்குப் பகாசுரத் தீனி போட வேண்டும். கரும்பு சீசன் இல்லாத நாட்களில் தொழிலாளிக்கு வேலை கிடையாது.

“இவனுக ரொம்பத் தகராறு பண்றானுக. வைக்கோல் போர் போடுவது வழக்கம் தானே? ஒரு பேச்சுக்குச் சொன்னால் கேட்கிறதில்ல. அந்தக் கமலாபுரம் ஆள் வேற தூண்டிக் கொடுக்க...”

“அது சரி, அவங்க நியாயத்துக்குமேல் கேட்க மாட்டா. ஒப்பந்தத்துல இருக்கிறாப்பல, கூலியை நீங்க குடுக்க வேண்டியதுதானே? மனைக்கட்டை விட்டுப் போகச் சொல்வது நியாயமா? நீங்க ஒண்ணு மறந்து போயிடக் கூடாதப்பா, அவங்க உழைப்புத்தான் நாம சாப்பிடுறோம். நீயாயப்படி, அவங்களுக்கு எத்தனையோ உரிமை இருக்கு. கல்வி, வைத்தியம், வயசு காலத்துக்கான பாதுகாப்பு இதெல்லாம் கூட இருக்கணும். இதெல்லாம் நினைச்சுப் பார்க்க வேண்டாமா?”

இது எப்போதும் இவள் ஊதும் சங்குதான். ஆனால் பலன்...?

மணி பேசிக் கொண்டே போனவள், திரும்பிச் சாலை ஓரம் இவர்களை எதிர் நோக்கி வருகிறாள். அவன் வண்டியிலேறிக் கொண்டு திரும்பிச் செல்கிறான்.

குளத்தங்கரை அரச மரத்தடியில், அம்மா என்ன சொல்கிறார்கள் என்றறிய ஆணும் பெண்ணுமாய்க் கூடி இருக்கிறார்கள்.

“நீங்க விட்டுக் குடுக்கக் கூடாது. எட்டு மணி நேர வேலைன்னா, வேலை தான். நீங்க ஒண்ணு சேர்ந்து நிற்பதுதான் ஆயுதம். இந்தப் பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் இதெல்லாம் பலனில்லாமல் போகும்போது, வேற வழியில்லை.”

“என்ன நாகப்பா? பிணைவாசல்தானே? இங்க எங்கே வந்தே?”

“இது சேப்பு ராசி வெத நெல்லு. போட்டுட்டு ரெண்டு மூட்ட வெள்ள ராசி வாங்கிட்டு வரச் சொன்னாருங்க ஐயா...” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கையில் வளைந்த குச்சியுடன் பயல் சாலையைக் கடந்து இவர்கள் பக்கம் வருகிறான்.

“மான் அந்தால தோப்புல கட்டியிருக்காங்களா? இந்தப் பொடிப்பயதா மான் மேய்க்கிறவன். இவன் சொன்னா அது கேட்கும். நில்லுன்னா நிக்கும்; ஓடுன்னா ஓடும்...” என்று யாரோ கூட்டத்தில் விளக்கம் கொடுக்கிறான்.

மணிக்கு நினைவு வருகிறது. இவன் இங்கே அபூர்வமாகக் கலைமான் ஒன்று வளர்க்கிறான். குட்டியாகக் கொண்டு வந்தான். அதை இங்கே இந்தப் பக்கத் தோப்பில் கட்டியிருக்கிறானா?

ஆனால் மணி திரும்பித் திருவாரூர் செல்லும் பஸ்ஸுக்காகக் காத்து நிற்கிறாள். மானைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்க முடியாது. இந்த பஸ்ஸை தவற விட முடியாது. இவர்கள் அழகுக்கு, ஆசைக்கு மான் வளர்க்கிறார்கள்.

மனிதத்துவத்தை வளர்க்க மாட்டார்கள். காட்டில் யதேச்சையாகக் கூட்டத்தோடு திரியும் மிருகத்தைக் கொண்டு வந்து இங்கே கட்டிப் போட்டு வளர்க்க வேண்டுமா?

இவளுக்கு மாட்டைக் கட்டுவது கூடப் பிடிக்காது. அந்த நாட்களில் மணலூரில், இவள் பசுக்கள் ஒவ்வொன்றும் எப்படி இருக்கும்? பட்டாமணியத்தின் ஆட்கள் அவற்றை வழி மறித்துப் பற்றிக் கொண்டு போக நிற்பார்கள். அவை தாமாக அதைப் புரிந்து கொண்டு ஒரே பாய்ச்சலில் இவள் கொட்டிலில் வந்து நிற்கும். ஏன் தம்பி நிலங்களையும், தோப்பையும், வீட்டையும் பட்டாமணியத்துக்குக் குத்தகைக்கு விட்ட நாட்களில் கூட, அந்தப் பசுக்கள் இவள் கொட்டிலில் தான் வந்து நிற்கும்.

நாகப்பன் கத்துகிறான். “அம்மா! மானை அவுத்திருக்காப்பல, ஓடி வருது!”

“அதுக்கு நீ ஏம்ப்பா கத்தறே? மான் அவுத்திட்டா அது அந்தால தோப்புக்குள்ள ஓடிப்போகுது.”

சொல்லிட்டு மணி பையும் இடுக்கிய குடையுமாகச் சாலையில் பஸ்ஸைப் பார்த்து நிற்கிறாள்.

அடுத்த சில கணங்களில், அவள் இடுப்பிலும், விலாவிலும், குத்து வாளாய்க் கொம்பு இறங்க... “அம்மா...?” என்ற எதிரொலி அனைத்து மக்களின் இதயங்களையும் தாக்கும்படி எழும்புகிறது.

இரத்தம் பீறிட, குடல் சரிய அந்தப் பெருமகள் மண்ணுக்கு மணியாரமாக அணி செய்பவளாகச் சாய்கிறாள்.

இறுதிவரை என் இலட்சியம் கட்சிப்பணி. என்னை நீக்கி விட்டு நீங்கள் மாநாட்டை வெற்றிகரமாக முடிப்பீர்களா? இந்த அணியில் இருந்து என்னை நீக்கிவிட முடியுமா? என்று கேட்கும் முகம். அவள் அடி வைத்த இடங்களில் செம்பருத்தி இதழ்களாய்ச் சிவக்க குருதி...
------------

அத்தியாயம் 32

தாய், குடல் சரிய குலை சரிய இரத்தம் பீறிட, மண்ணை நனைத்துக் கொண்டு கிடக்கிறாள். சமுதாயத்துக்கு உணவளிக்கும் ஏழைகளின் தாய்...

நாகப்பன் அப்படியே இறுகிப்போய் நிற்கிறான்.

வானம் இடிந்து தலையில் விழுந்துவிட்டது; பெரும் பிரளயம் வந்து முழுக்கி விட்டது.

அம்மா...! அம்மா...!

நீங்க ஏன் வந்தீங்க? எதுக்கு வந்தீங்க?

எத்தனை முறைகள் அம்மாளைக் காப்பாற்ற விளக்கும் பாலாகம்பும் கொண்டு பின்னே சென்றிருக்கிறான்?

மான் எப்படி இந்தப் பக்கம் ஓடி வந்தது? இந்த நடுப்பகலில், தோப்பில் கட்டியிருந்த மான் எப்படி இங்கே அம்மாளைக் குத்த ஓடி வந்தது? அது சனியா? யமதூதனா?...

ஓடி ஓடி வருவாயே அம்மா?

எந்த பஸ்ஸுக்குக் காத்திருந்தாளோ, அது வருகிறது.

நவுரு, நவுரு... வழி விடுங்க!...

பஸ்ஸில் எடுத்துச் செல்கிறார்களா? உசிர் இருக்குமா?

நாகப்பன் எம்பிப் பார்க்கிறான். வந்த காரியம்... மூட்டையும் நெல்லும் அநாதைகளாக... மறந்து போய் நிற்கிறான்.

பஸ் அப்படியே போகிறது.

அம்மாளின் உடல் போகவில்லை.

“பஸ்ஸில் ஏத்திட்டுப் போனா என்னடா? பாவி! போயி முட்டிட்டுச் சாவு!” என்று ஒரு பெண் பிள்ளை கையை நெரிக்கிறாள்.

“போலீசு கேசாயிடுமில்ல? அவனுக்கு ஏன் வீண் வம்பு?” என்று ஒருவன் வியாக்கியானம் சொல்கிறான்.

ஒன்றரை மணி சுமாருக்கு விழுந்த அம்மாளின் உடல் மூன்று மணி சுமாருக்கு யாரோ கார் கொண்டு வர, திருவாரூர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப் படுகிறது.

நாகப்பன் வண்டியைத் திருப்பி மூட்டை நெல்லை மாற்றாமலே பிணைவாசலுக்கு ஓட்டிச் செல்கிறான்.

செய்தி காட்டுத் தீயாகப் பரவுகிறது.

‘அம்மா...! அம்மா, மணியம்மா, போயிட்டாங்க! பிணைவாசல்லே மான் குத்தி... போயிட்டாங்க!’

‘மான் குத்திச்சா?... மான் எப்படீப்பா குத்திச்சி...?’

‘திருவாரூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டிட்டுப் போயிருக்காங்க?’

சுற்று வட்டம் கிராமங்கள் அனைத்திலுமிருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று சாரிசாரியாகத் திருவாரூருக்கு நடக்கின்றனர்.

எத்தனை மாநாடுகள், எத்தனை பேரணிகள் கண்டவள் மணியம்மை! இன்று, நாகை மாநாட்டுப் பேரணி... ‘என்னை விலக்கிவிட்டு நடந்து விடுமோ’ என்று அறைகூவல் விடுத்து வெற்றியும் பெற்றுவிட்டாள்.

திருவாரூர் ஆஸ்பத்திரி டாக்டரின் அறுவை சிகிச்சையில் இவள் உயிர் மீட்கப்படவில்லை. அறுத்துத் தைக்கப்பட்ட உடல், அந்திம ஊர்வலத்துக்குத் தயாராகிறது.

கல்யாண காலமன்றோ? மல்லிகை, ரோஜா, செவ்வரளி மாலைகள் வந்து குவிகின்றன. நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் இவளைச் செம்மலர் மஞ்சத்தில் வைத்து, செம்பட்டுக் கொடி கொண்டு போர்த்துகிறார்கள்.

செய்திகள் வானில் பரவும் புகை மண்டலம் போல் பரவுகிறது. ஆஸ்பத்திரிக்கு முன் திரண்ட கூட்டம், உடலை ஊர்வலத்துக்குப் பெறுமுன், கட்டுக்கடங்காத உணர்வுகளுடன் அலை மோதுகிறது.

“மணி அம்மாவா... அவங்களையா, பண்ணை வளர்ப்பு மான் குத்திச்சு? ஆம்பிள போல வேட்டி கட்டிட்டு வருவாங்களே? அந்தம்மாளா? விவசாயத் தொழிலாளர்களுக்காக, கொடி புடிச்சிட்டு வரும் மணி அம்மாளா? தோட்டித் தொழிலாளர்களுக்காகப் போராட்டம் நடத்தின அந்த மணி அம்மாளா?”

“வேணுமுன்னுதான் மானை அவுத்துவிட்டிருக்காங்க. பாவிங்க! தாயைக் கொன்னிட்டாங்க...”

இவர்கள் ஊகங்களும், சோகத்தில் பீறிட்ட வெறிகளும், நிலப்பிரபுத்துவ வருக்கத்தையே சுட்டுச் சாம்பலாக்கிவிடப் போதுமான வேகம் கொண்டிருக்கிறது.

ஆனால், நாகை மாநாட்டை முடிக்காமலே, அந்திம ஊர்வலத்தை இவளைக் கட்சி அமைப்பிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்ட கட்சி நடத்துகிறது. ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் செயலாளருக்கும், நெஞ்சு வலிக்கச் சத்தியத்தின் சாட்டை கொண்டு வீசினாற் போல் ஓர் அதிர்ச்சியைத் தந்திருக்கிறாள் அல்லவோ? இறுதி ஊர்வலத்தில் அனைத்துத் தலைவர்களும் கலந்து கொண்டு இரங்கல் கூட்டம் நடத்துகிறார்கள்.

இவளுடைய போராடும் எழுச்சி கண்டு பொறாமல், பிற பெண்களை இவளிடம் இருந்து விலக்கி வைத்த சாதிச் சமுதாயம், இவள் அந்திம ஊர்வலம் கண்டு மலைத்து நிற்கிறது. கூட்டுப் புழுக்களாய் இருந்த அந்த உறவு கிராமப் பெண்கள், இந்நாளில் திருவாரூர் வீட்டுப் படிகளில் நின்று, “அடியே, இவளைப் பற்றி எத்தனை பழி சொல்லி மறைவாகத் தூற்றினோம்? உண்மையில் இப்படி ஒரு மகிமைக்காரியா இவள்? காந்தி செத்துப் போய் ஊர்கோலம் போன போது கூடின கூட்டம் பேப்பரில் வந்ததைக் காட்டினாளே, அப்படி அல்லவா ஜனக்கூட்டம் போகிறது?”

அவர்களையும் அறியாமல் கண்ணீர் பெருகி வருகிறது. திராவிட முன்னேற்றக் கட்சி மாநாடு முடிந்த பின் திருவாரூர் திரும்பிய இளவல் தியாகராஜன், அன்னை மாண்டதை எந்தக் கடையில் அவள் தன்னுடன் வருவதற்கில்லை என்ற செய்தியை அறிந்தானோ அதே இடத்தில் தான் கேள்விப்படுகிறான்.

திடுக்கிட்டுத் தூக்கி வாரிப் போட நிலை குலைகிறது நெஞ்சம். அம்மா... அம்மா! விதியை நம்பாதவர்களையும் கலங்க வைக்குதே இச்செய்தி!... நீங்கள் அன்று... அந்தப் பிரசுரங்களுடன் இந்த மாநாட்டுப் பந்தல் வாயிலில் வந்து கடை விரித்திருக்கலாகாதா? இங்கே ஏன் நின்றீர்கள்?

மான்... மான் எப்படிக் குத்தியது?...

“மானா... வேறு விதமாகவும் சொல்லிக்கிறாங்க... இந்த கம்யூனிஸ்ட்காரங்களே பின்னாடிருந்து குத்திட்டதாச் சொல்லிக்கிறாங்கப்பா!”

“... அதெல்லாம் இல்ல... சும்மா... டிராக்டர் ஓடுறத வேடிக்க பாத்திட்டு அம்மா போயிருக்காங்க. மான் வந்து பின்னாலேந்து குத்திடிச்சி. ஏழு கலை கொம்புள்ள ஆண் மான். புல்லுக்குடுக்கறதுக்குப் போனாங்களாம், குத்திச்சாம்பா? ஏவிவிட்டுக் கொன்னிட்டாங்கன்னு சொல்றாங்க. அது சும்மா?...”

பல்வேறு பிசுறுகள், வதந்திகளாக - செய்திகளாக மாறிப் பரவ அவள் அந்நாளிலேயே வரலாற்று நாயகியாகிப் போகிறாள்.


நண்டு வள மண்ணெடுத்த
நாலு பக்க வளவுக்குள்ளே
பண்டு பண்டாய் நாங்க ருந்தோம்
பண்ணய்க்காரர் அடிமகளாய்,

புத்துவள மண்ணெடுத்த
புத்தூரு கோட்டக் குள்ள,
புத்தி சத்தி இல்லாமலே
புதஞ்சிருந்தோம் நாங்களெல்லாம்.

கோட்டைக்குள்ள நாங்கருந்தோம்
கொடுமயெல்லாம் சகிச்சிருந்தோம்
சாட்டயடி கொண்டிருந்தோம்
சாணிப்பால் குடிச்சிருந்தோம்.

கோட்ட சரிஞ்சி விழ
கொடி பிடிச்சி அம்மா வந்தா.
சாட்ட யடிக்கு முன்னே
சாகசங்கள் செய்து வந்தா.

மதிலுகள் சரிஞ்சு விழ,
மணியம்மா, அங்கே வந்தா
பதிலுகள் கேட்டு வந்தா
பட்ட மரம் தழைக்க வந்தா.

நம்பி உழைப்பவர்க்கு
நாயங்கள் கேட்டு வந்தா
கும்பி குளுர வந்தா
குரலுகளும் எழுப்பி வந்தா.

ரோதை உருண்டு வர,
ரத்தம் தெறிச்சிதம்மா!
பாதை யெல்லாம் செம்பூவாய்
பதிஞ்ச அடி பூத்ததம்மா!

மாடு முட்டிக் கேட்டதுண்டு,
மான் முட்டிக் கேட்டதுண்டோ?
ஆடு முட்டிப்பாத்ததுண்டு
ஆமை முட்டிப்பாத்ததுண்டோ?

ஏழைக்குலம் குளுரும்
எங்கம்மா பேரு சொன்னா!
மக்கள் குலம் விளங்கும்
மணியம்மா பேரு சொன்னா.

பாதையில் பதிந்த அடிகள் முற்றும்
--------------

This file was last updated on 2 Dec. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)