pm logo

திருமதி ராஜம் கிருஷ்ணன் எழுதிய
பெண் குரல், சமூக நாவல் - பாகம் 1


peN kural. part 1
Award winning Social Novel
by rAjam kirushNan
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருமதி ராஜம் கிருஷ்ணன் எழுதிய
பெண் குரல், சமூக நாவல் - பாகம் 1

Source:
பெண் குரல்
(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953)
ராஜம் கிருஷ்ணன்,1925-
சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [பி] லிட்,
2011, 311 ப.
Notes: கலைமகள் "நாராயணசுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது 1953."

முன்னுரை

நாவல் போட்டி நடத்துவதில் ஒரு விதத்தில் மகிழ்ச்சி உண்டாகிறது. மற்றொரு விதத்தில் கவலை உண்டாகிறது. எழுதும் ஆற்றலுடையவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்து அவர்களுடைய படைப்புத் திறமையைத் தூண்டி விடுகிறோம் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி உண்டாகிறது. ஆனால் போட்டியில் கலந்து கொள்ள, முன்பே பல கதைகளையும் நாவல்களையும் எழுதிய எழுத்தாளர்கள் முன் வருவதில்லை. புதிய எழுத்தாளர்களே தங்கள் நாவல்களை அனுப்புகிறார்கள். அப்போது ‘இத்தனை நாவல்களிலும் பரிசுக்குத் தகுதியானதாக ஒன்று கிடைக்க வேண்டுமே!’ என்ற கவலை உண்டாகி விடுகிறது. இதுவரை குறையின்றி நாராயணசாமி ஐயர் பரிசைத் தமிழ் அன்பர்கள் பாராட்டும் வகையில் வழங்கி வரும்படி நேர்ந்திருக்கிறது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

‘பெண் குரல்’ என்ற இந்த நாவல் 1953-ஆம் வருஷப் போட்டியில் பரிசு பெற்றது. கலைமகளில் தொடர்ச்சியாக வந்தது.

‘பெண் குரல்’ இடைத்தரக் குடும்பத்திலே பிறந்து தன் குடும்பத்தினும் உயர்தரமான குடும்பத்திலே வாழ்க்கைப்பட்டு, அங்குள்ளவர்களோடு மனத்தால் நெடுந்தூரம் விலகி நின்று, பலவகையான சங்கடங்களை அநுபவித்த பெண் ஒருத்தியின் குரல். சுமாரான குடும்பத்தில் பிறந்த சுசீலா சற்றுப் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த ராமநாதனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அவளுடைய கல்யாணத்தின் போதே அவளது பிற்கால வாழ்க்கையின் ரீதியைப் புலப்படுத்தும் நிமித்தம் உண்டாயிற்று.

அன்பில்லாத மாமியார், அதிகாரம் செலுத்தும் ஓரகத்தி, கடமையில் உழலும் கணவன். இவர்களுக்கு மத்தியில் அவள் தறியிலே ஓடும் குழல் போல ஓடி ஓடி உழைக்க வேண்டியிருந்தது. நாளுக்கு நாள் அவள் மனம் பசையற்றுப் போயிற்று. லீலா என்ற ஒருத்திதான் அவளுக்குப் பாலைவனத்தில் நிழல் மரம் போல இருந்து உதவுகிறாள். ஆனால் சுசீலாவுக்கு ஏமாற்றத்தின் மேல் ஏமாற்றந்தான் உண்டாகிறது. மீண்டும் பிறந்தகம் போகிறாள். அங்கும் அமைதி உண்டாகவில்லை.

எல்லோரும் மைசூருக்குப் போய் ஊட்டிக்குச் செல்கிறார்கள். வரதன் அவள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான். சங்கீதம் சுசீலாவையும் வரதனையும் நெருங்க வைக்கிறது. வரதன் தன் உள்ளத்தை வெளிபப்டுத்துகிறான். அதைக் கண்டு சுசீலா சீறுகிறாள். இவற்றையெல்லாம் மறைவிலிருந்து அறிந்த ராமநாதன் உண்மையை உணர்கிறான். அதற்கு முன் சுசீலாவின் போக்குக்கு வேறு காரணங்களைக் கற்பித்துக் கொண்டு அவன் விலகி நிற்கிறான். இதைக் கடைசியில் சுசீலா உணர்கிறாள். அன்புள்ளங்கள் இணைகின்றன. கதையும் பூரணம் அடைகிறது.

வாழ்க்கையின் அநுபவங்களை மிகவும் நுட்பமாகக் கவனித்து இந்தக் கதையில் புலப்படுத்தியிருக்கிறார் இதன் ஆசிரியை. பெண்ணின் உள்ளத்திலே தோன்றும் ஆசாபாசங்களையும் குமுறல்களையும் பொறாமையையும் நன்றாகக் காட்டுகிறார். இதில் தான் எத்தனைவிதமான பெண்கள் வருகிறார்கள்! இல்லற விளக்காகிய சுசியின் தாய், அகம்பாவம் பிடித்த அத்தை, தன் வயிற்றில் பிறந்த பெண்ணிடம் குளிர்ச்சியாகவும் பிள்ளையிடம் சூடாகவும் பேசும் பாட்டி. நவநாகரிகத்தில் தவழும் ஹேமா, பிறர் நலத்தைச் சிறிதும் எண்ணாத சுயநலப் புலி பட்டு, மலரைப் போன்ற மலர்ச்சியும் மனமும் உள்ள லீலா - இப்படிப் பலவிதமான பெண்களைப் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் இவர்களில் பலரை நாம் பார்த்திருக்கிறோம். இதே மாதிரி பேச்சு, இதே மாதிரி குணம் உடைய உருவங்களை உயிருடன் சந்தித்திருக்கிறோம். அதனால் தான் இந்தக் கதை ஜீவனுடையதாக இருக்கிறது.

கதையில் நிகழ்ச்சிகளும் மனத் தத்துவமும் இழைந்து செல்கின்றன. பாத்திரங்களும் பூரண உருவம் பெற்று நடமாடுகிறார்கள். சிறிய சிறிய இழைகளெல்லாம் சேர்ந்து பெரிய கயிறாக மாறிச் சோர்ந்து போன பெண் உள்ளத்தைப் பிணைத்து வீழ்த்துவதைப் பார்க்கிறோம். கதை மேலும் மேலும் விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் உள்ள நடை இயற்கையாக இருக்கிறது. பேச்சும் செயல்களும் இயற்கையாகவே உள்ளன. அங்கங்கே வரும் உபமானங்கள் அனுபவ சாரமாக இருக்கின்றன.

இந்தக் கதையை எழுதிய ஸ்ரீமதி ராஜம் கிருஷ்ணனை நான் பாராட்டுகிறேன். இப்படியே இன்னும் பல நாவல்களை எழுதிப் புகழ் பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

கி.வா. ஜகந்நாதன்
-----------

பெண் குரல், சமூக நாவல் - பாகம் 1
1.1 தளிர்

நாதசுரக்காரன் எழுப்பிக் கொண்டிருந்த தோடி ராகத்தின் இன்னிசையை அமுக்கிக் கொண்டு பாண்டு வாத்தியக்காரர்களின் சப்த ஜாலங்கள் செவிகளில் வந்து பாய்ந்தன. ஊர்வலத்திற்குத் தயாராகக் கார் வந்தாகி விட்டதென்பது தெரியும்படி மூலை முடுக்கில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், ‘நான் ஏறிக் கொள்ளப் போகிறேன்; நானும் நானும்’ என்று குதித்துக் கொண்டு வாயிற்புறம் ஓடினார்கள். முகூர்த்தத்தின் போது மடிதாறு வைத்து உடுத்திய கூறைப் புடவையின் கசங்கிய பாகங்களைப் பல்லைக் கடித்துக் கொண்டு பெரிய அக்கா இன்னமும் பிரித்துக் கொண்டிருந்தாள். பக்கத்திலே அவளுடைய மூத்த பெண் சாமளி கீழே சாமான் அறையின் குப்பையும் தூசும் புடவையிலே படாதபடி அவள் பிரித்த பாகத்தை முகத்தைச் சிணுக்கி முணுமுணுத்தபடியே தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள். எல்லோருக்கும் முன்பாகக் காரில் போய் உட்கார முடியவில்லையே என்ற துக்கம் அவளுக்கு. பங்குனி மாதத்திய வெப்பமும் புழுக்கமும் நிரம்பிய அறையும், பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெளிச்சமும், முடமுடவென்று புது ஆடைகளும் எனக்கு வேர்த்துக் கொட்டியது. கசங்கிய மஞ்சள் பட்டிருந்த கைக்குட்டையால் முகப் ‘பவுடரும்’ குங்குமமும் கலந்து வழிந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டு பொம்மை போல் நின்ற நான், “போதுமே அக்கா! அப்படியே உடுத்தி விடேன்!” என்றேன் அலுப்புடன்.

“நன்றாகத்தான் இருக்கு! ஒரு நாள் கல்யாணத்திற்கு இந்தப் பாடு படுத்தறயே? நாங்களெல்லாம் அஞ்சு நாள் எப்படி இருந்திருப்போம்? ஊர்வலத்துக்கு இப்படி வெறும் பின்னலோடா இருப்போம்? தலையிலே இரண்டு ‘டன்’ கனம் அழுத்தும். கழுத்திலே காசுமாலை முள்ளுப்போல குத்தும். இருக்கிற நகை அவ்வளவையும் சுமந்து கொண்டு வாயைத் திறக்க மாட்டோமே! நலங்கின் போதே புடவை ஒரே சுருக்கமாக இருந்தது; நன்றாக இல்லை. இதோ ஆச்சு. சற்று இரு” என்று ஒரே போடாகப் போட்டு விட்டாள் அவள்.

பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள் போல் இருக்கிறது. மாமா அறை வாயிற்படியில் நின்று கத்தினார். “இன்னுமா ஆகவில்லை? மாப்பிள்ளை தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார். சீக்கிரம் ஆரம்பித்தால் தான் தாமதமில்லாமல் முடியும்!”

ஒரு வழியாகப் பதினெட்டு முழப் புடவையைக் கொசுவிக் கொசுவி என் பாவாடைக்குள் வைத்துத் திணித்தாள் அக்கா. கெட்டிச் சரிகைத் தலைப்புத் தோளில் ‘டங்’கென்று நின்று நகைகளுக்கு மேல் அழுத்தியது. பரக்கப் பரக்க ஒட்டியானத்தை மாட்டிவிட்டு மாலையைப் போட்டவள் என் முகத்தைக் கவனித்துவிட்டு, “நெற்றிக் குங்குமத்தை அழிச்சுண்டுட்டியேடி சுசீ. போய் முகத்தையே சட்டுனு அலம்பிண்டு வா. புடவையிலே தண்ணீர்படாமல்” என்று உத்தரவிட்டாள்.

“வேண்டாம், அக்கா. இப்படியே துடைத்துப் பொட்டு வைத்துக் கொண்டால் போதும். இப்பத்தான் சற்று முன்பு முகம் அலம்பினேன். கண்ணாடியை மட்டும் கொடு” என்றேன் நான்.

“கண்ணாடி எங்கே? அடியே சாமளி! சனியன் அதுக்குள்ளே ஓடிப் போயிடுத்து பார். அவதானே வச்சு அழகு பாத்துண்டிருந்தா? சாமளி, சாமளி!” என்று அந்த இரைச்சலில் கத்திக் கொண்டே இடுப்பில் இருந்த கொத்துச் சாவி கிலுங் கிலுங்கென்று சப்திக்க அவள் வெளியே போனாள்.

அந்தக் கண்ணாடியை எத்தனை தரம் தேடியாகி விட்டது அம்மாடி! வீடு விட்டு வீடு வந்து கல்யாணம் என்றால் எத்தனை சிரமம்! வைத்த சாமான் வைத்த இடத்திலே இல்லை. மூலைக்கு ஒரு துணியும் மணியுமாக இறைந்தாலும் சமயத்திற்கு வேண்டிய பொருளைத் தேட வேண்டியதாக அவ்வளவு அமளி துமளியாக இருந்தது.

அக்கா கண்ணாடி கொண்டு வரவில்லை. மாமா மறுபடியும் வந்து விட்டார்.

“இன்னும் என்ன? அதற்குள்ளேயே மாப்பிள்ளையை இப்படியாக் காக்க வைப்பது, சுசீ?” என்று பேச்சோடு கேலியையும் கலந்து துரிதப்படுத்தினார்.

“இல்லையே! நெற்றிக்கு இட்டுக் கொள்ள வேண்டியதுதான் பாக்கி. கண்ணாடியைக் காணோம்” என்றேன்.

“சரி தான் போ. இப்போதுதான் கண்ணாடியைக் காணோம், மூக்காடியைக் காணோம் என்று தேடுகிறீர்களா? தங்கம் எங்கே? அடியே தங்கம்!” என்று கத்திக் கொண்டு அவரும் போனார்.

நல்ல ஊர்வலம் வேண்டியிருக்கிறது! சரியான ஆகாரம் இல்லை; தூக்கம் இல்லை. ‘அம்மாடி’ என்று காலை நீட்டிக் கொண்டு எனக்குப் படுத்துத் தூங்கலாம் போல உடம்பு கெஞ்சியது. அப்போது, “இன்னம் புறப்படவில்லையா?” என்று கேட்டுக் கொண்டே காந்த விளக்கின் ஒளியில் வைர அணிகள் டாலடிக்க அசக்கி அசக்கி நடந்து வந்த என் ஓரகத்தி புன்னகை பூத்தாள்.

“இதோ ஆச்சு” என்று அதற்குள் ஓட்டமும் நடையுமாக வந்த அக்கா, “கண்ணாடி எங்க போச்சோ? நான் இட்டு விடுகிறேன்” என்று என் நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்தாள். பரபரப்பில் அவள் முறுக்கிய கொண்டையிலிருந்து ஊசி நழுவியது. புடைவைக் கொசுவம் இழித்து கிழே புரண்டது. எனக்கு அவள் நிலை சிரிப்பை ஊட்டியது. “ஆகட்டும், ஆகட்டும்!” என்று மாமா பராக் சொல்ல என்னைக் கிளப்பி வரும் பெருமைத் தோற்றத்துடன் ஓரகத்தி என் தோளைப் பிடித்துக் கொண்டு நடக்க, நான் ‘தஸ் புஸ்’ என்று புடவை செய்த சத்தத்துடன், வாயிற்புறம் வந்தேன்.

தயாராகப் பன்னீர்ச் செம்பு வைத்துக் கொண்டு நின்ற வெங்கிட்டு அத்தான் “தூங்கி விழுந்து விடாதே அவர் மேல்!” என்று சிரித்தபடியே என் மேல் பன்னீரைத் தெளித்தான். அத்தனை புருஷர்களுக்கு நடுவே அவன் செய்த கேலிக்குத் தலை குனிந்த நான் வாசல் கம்பத்திலே லேசாகச் சாய்ந்து நின்றேன்.

“இன்னும் நிற்பானேன்? வா, வா” என்று பெரிய அத்திம்பேர் அவசரப்படுத்தியதற்கு வெங்கிட்டு, “அட மக்கு அத்திம்பேரே! அவர் வந்து கையைப் பிடித்து அழைத்துப் போக வேண்டாமா?” என்று கூறி இடி இடியென்று நகைத்தான்.

உடனே என் ஓரகத்தி, “என்ன ராமு, அங்கேயே நிற்கிறாயே; வந்து கையைப் பிடித்து அழைத்துப் போ!” என்றாள்.

காஸ் விளக்கின் அடியில் ‘ட்வீட்’ நிஜாரும் ‘கோட்டு’மாக மாலைக் கழுத்துடன் நின்ற என் கணவர் ஜோட்டுக் கால்கள் சத்தம் செய்ய என் அருகில் வந்த போது முகத்திலே புன்னகை அரும்பியது. என் கண்களுக்குப் புதுமையாக இருந்த அவருடைய அந்தக் கோலம் எனக்கு மனத்தில் பிடித்திருந்த அலுப்பை அகற்றிப் புத்துணர்ச்சி ஊட்டியது. சில்லென நான் உணர்ந்த அவரது வலிமை பொருந்திய கரத்துள் பஞ்சு போன்ற என் கை அடங்கி விட்ட போது, ‘ஆணுக்குப் பெண் அடங்கியவள் தான்’ என்று அறிவித்தது போல் இருந்தது. மாப்பிள்ளை பெண்ணுக்கு மட்டும் கணக்காக இடம் ஒதுக்கிவிட்டு, காரின் மற்ற உட்காரும் பாகங்களில் நிரம்பியிருந்த குஞ்சு குழந்தைகளை மேற்பார்வை பார்க்கும் தோரணையில் நின்றான் அம்மாஞ்சி சுப்பிரமணியன்.

என் புடவையின் தலைப்பு அவர் மேல் லேசாக உராய, நான் அவர் அருகிலே அமர்ந்தேன். மேல் மூடி அகற்றி மடக்கி விடப்பட்டிருந்த அந்தப் பழைய கார் ‘கர்... புர்ர்...’ என்று உறுமிக் கொண்டு புங்கனூர் வீதிகளை வலம் வரத் தொடங்கியது.

அப்பாடா! கடைசியில் ஊர்வலம் ஆரம்பமாகி விட்டது! இதற்குத் தான் எத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன! என் கல்யாணப் பிரச்னை கூட அப்பாவுக்குப் பெரிதாக இருக்கவில்லை. இந்த ஊர்வலப் பிரச்னை எங்கள் வீட்டையே ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. அப்பாவின் கோப தாபம், அம்மாவின் பட்டினி, கண்ணீர் எல்லாவற்றையும் கிளப்பி வைத்த தனிப் பெருமை இந்த ஊர்வலத்துக்கு உண்டு. விவாகம் நிச்சயமானவுடனேயே அம்மா, “கார் ஏற்பாடு செய்து விட்டீர்களா, மாப்பிள்ளை அழைப்புக்கும் ஊர்வலத்துக்கும்?” என்று கேட்டாள்.

அப்பா அழுத்தம் திருத்தமாக, “சுசி கல்யாணத்திற்கு ஊர்வலம் கிடையாது. ஆமாம், நிச்சயம் பண்ணி விட்டேன். மடப்பயல்! மாப்பிள்ளை அழைப்புக்கும் மறுநாளைய ஊர்வலத்துக்குமாக இருபத்தைந்து ரூபாய் கேட்கிறான். ஓர் ஓட்டைக் காரை வைத்துக் கொண்டு” என்றது அம்மாவைத் தூக்கிவாரிப் போட்டு விட்டது.

“நீங்க சொல்வது நன்றாக இருக்கே! ஆனால் மாப்பிள்ளை அழைக்க வேண்டாமா? பணம் அதிகமாகக் கேட்குறான்னு செய்ய வேண்டிய காரியத்தை நிறுத்தினால் நாலு பேர் என்ன சொல்ல மாட்டார்கள்? கேட்கிறவர்கள் சிரிக்கப் போகிறார்கள், நீங்கள் சொல்வதைக் கேட்டு” என்றாள் அவள்.

“மாப்பிள்ளை வேண்டுமானால் பன்னிரண்டு ரூபாய் தொலைகிறது என்று அழைத்து விட்டுப் போகிறேன். ஊர்வலம் வைக்க வேணும் என்று சாஸ்திரம் கண்டிப்பாகக் கிடையாது. அயோக்கியப் பயல்! இதுதான் சமயம் என்று வாய் கூசாமல் கேட்கிறான்!” என்று அவர் இரைந்தார்.

இரண்டாயிரத்தைந்நூறு ரூபாய் சுளையாக வரதட்சிணை கொடுத்து விட்டு, மேலே கல்யாணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும் போது ஏற்கனவே இரு பெண்களுக்கு விவாகம் செய்வித்து வற்றி வறண்ட எலுமிச்சம் பழத்தோல் போன்ற ஏழை குமஸ்தாவாகிய அவருக்கு ஊர்வலத்துக்கு இருபத்தைந்து ரூபாயாகும் என்றதும் கோபம் வராமல் என்ன செய்யும்? ஆகவே அவர் சல்லிக்குச் சல்லி கணக்குப் போட்டு இதில் சிக்கனம் செய்யலாமா, அதில் மீதம் பிடிக்கலாமா என்று ஆராய்ந்தார். அம்மாவுக்கோ கூடிய வரை எதிலும் மூளி வைக்கக் கூடாது என்று அவா. “ஒரு பெரிய விசேஷமானால் கூட நூறு இருநூறு செலவழியத்தான் செய்யும்? அதற்கு இப்படியா கணக்குப் பார்ப்பா? நம்ம தரித்திரம் இருக்கவே இருக்கு. ஊர்வலம் இல்லாமல் என்ன கல்யாணம்? உங்களிடம் கொண்டு வந்து ஈசுவரன் இப்படி என்னைப் பிணைத்து வைத்தானே? ஏறு என்றால் மாறு என்று கொண்டு!” என்று அவள் தன் வழக்கமான அஸ்திரங்களைப் பிரயோகம் செய்து அப்பாவை ஊர்வலம் விடச் சம்மதிக்க வைத்ததை எழுதினாலே தனிப்பெரும் புராணமாக ஆகிவிடும்.

குழந்தை குஞ்சுகளுடன் எங்களையும் சுமக்க மாட்டாமல் மூச்சுத் திணறுவது போல் சப்தம் செய்து கொண்டு கார் மெதுவாக ஊர்ந்தது. பின்னே பெண்கள் கலகலவென்று சிரித்துப் பேசிக் கொண்டு வந்தது எங்கள் காதிலே விழாதபடி மாமா ஏற்பாடு செய்திருந்த அந்தப் பாண்டு வாத்திய கோஷ்டி சினிமா கீதங்களை அள்ளி அள்ளி வீசியது. தூங்கி விழுந்த குழந்தை ஒன்று என் காலிலே சாய்ந்தது. இரவிலே வானத்து நட்சத்திரங்களைப் பார்ப்பதில் எனக்கு அளவற்ற ஆசை உண்டு. என் வாழ்க்கை ஆறு, முக்கியமான கட்டம் ஒன்றில் வந்திருக்கும் இன்று, வான வீதியைப் பார்க்கத் திடீரென ஆசை தோன்றியது. அதனுடனே வானவீதி ஒளி பெற்றிருந்தால் நம் வாழ்வும் அது போல ஒளிவிடும் என்ற அர்த்தமற்ற அசட்டு நம்பிக்கை கூட என்னுள்ளே முன்பின் நான் அறியாமலே எழுந்து விட்டது. இந்த எண்ணம் திடீரென எப்படித் தோன்றியது. ஏன் தோன்றியது என்று காரணம் கூற முடியாது. மனக்குதிரை கடிவாளமின்றி ஓடும் போது தனக்குத்தானே இத்தகைய எண்ணங்களில் சபலமுற்று நின்று முரண் செய்வதுண்டு. வானத்து ஒளிக்கும் வாழ்க்கையின் ஒளிர்வுக்கும் என்ன சம்பந்தம். இது என்ன முட்டள் நினைப்பு என்று எனக்கு அப்போது சிறிதேனும் மனத்திலே உறைக்கவில்லை. எப்படி உறைக்கும்? வாயிற் படியில் தலையை அவிழ்த்துக் கொண்டு நிற்கலாகாது. தும்மும் போது எந்தக் காரியத்தையும் ஆரம்பிக்கலாகாது என்பன போன்ற கொள்கைகளூடே பக்குவம் பெற்ற கிராம மங்கைதானே நான்?

ஆனால் மனப்பெண்ணின் மீதே எல்லார் கவனமும் இருக்கும் போது, கழுத்தை நிமிர்த்தி அண்ணாந்து பார்க்கலாமா நான்? ஏற்கனவே அம்மாவும் அத்தையும், “குனிஞ்சு உட்கார், சுசி. கல்யாணப் பெண்ணா லட்சணமா இல்லாமல் அங்கும் இங்கும் இப்படியா திரும்பித் திரும்பிப் பார்ப்பார்கள்?” என்று கோபித்துக் கொள்கிறார்கள். கழுத்து வலி பொறுக்காமல் என்னையும் அறியாமல் மாலை சற்று நிமிர்ந்து விட்டேன் போல் இருக்கிறது. தங்கம் என்னையே கவனித்துக் கொண்டிருந்திருக்கிறாள். மளுக்கென்று என் தலையைப் பிடித்து குனிய வைத்த போது எனக்குக் கழுத்துச் சுளுக்கிக் கொள்ளாமல் இருந்தது நல்ல காலந்தான். அதைப் பார்த்து என் பெரிய ஓரகத்தி வேறு சிரித்தாள். ‘பாவம்’ என்று என் நிலையை நினைத்து நகைத்தாளா, அல்லது எனக்கு மணப்பெண்ணாக இருக்கத் தெரியவில்லை என்று நகைத்தாளா என்பது எனக்கு இன்னமும் விளங்கவில்லை.

புங்கனூர் வீதியின் பள்ளம் ஒன்றில் அறியாமல் வண்டி விழுந்து விட்டது போலும். திடீரென ஏற்பட்ட குலுக்கல் என்னை அவர் மேல் சாய வைத்தது. பக்கத்திலே பன்னீர்ச் செம்பு சகிதம் நெருங்கி வந்து கொண்டிருந்த வெங்கிட்டு ஒரேயடியாகச் சத்தம் போட்டு நகைத்தான்.

எனக்கு முகமெல்லாம் ரத்தம் ஏறிவிட்டது போல் இருந்தது. சமாளித்துக் கொண்டு சரியாக உட்கார்ந்தேன்.

“மாப்பிள்ளை ஸார், எங்கள் சுசி பஞ்சுக் கனங்கூட இல்லாதவள், பார்த்தீர்களா? வண்டியின் குலுக்கலில் அசைந்து விழுந்து விடாதபடி அவளை நன்றாகப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்றான் அந்தக் குறும்புக்காரன்.

அவரும் புன்னகை செய்த வண்ணம் என் பக்கம் திரும்பிப் பார்த்தார். நானோ குனிந்த தலை நிமிராமல் என் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

இதற்குள் பின்னே திரும்பிய மாமா, “டேய் வெங்கிட்டு, சுத்த முட்டாளாக ஏண்டா காரைச் சுத்திச் சுத்தி வரே? இப்படி வா. அவர்கள் ஏதாவது பேசுவதாக இருந்தாலும் இடைஞ்சல் செய்து கொண்டு?” என்று கத்தினார்.

அவன் தலை தெறிக்க ஓடினான்.

விவரம் புரியாத ஓர் உணர்ச்சி என் நெஞ்சைப் படபடக்க வைத்தது. அது சந்தோஷமா, பயமா, கோபமா என்று என்னாலேயே தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் கை எப்படி என் மடிமீதிருந்த கையை எடுத்துக் கொண்டதென்று நான் அறியவில்லை. என் உள்ளங்கையை ஓர் அழுத்து அழுத்தி, “சுசீ!” என்று அவர் என் காதுகளில் மட்டும் படும்படியாகக் கூப்பிட்ட போது திறந்திருந்த என் மனத்திரை காற்றிலே அடித்துக் கொள்ளும் ஜன்னல் திரை போல வேகமாகச் சத்தம் செய்தது. பக்கத்து வீட்டு ஜானி என்னிடம் கூறியவை எல்லாம் திறந்துவிட்ட குழாயிலிருந்து கொட்டுவது போல என் நினைவில் வந்து நிரம்பின. ஜானி என்னை விட இரண்டு வயசு பெரியவள். அவளுக்குச் சென்ற வருஷந்தான் மணம் நிகழ்ந்தது. மனத்திலே குமிழியிடும் மகிழ்ச்சியுடனும் ஆசையுடனும் அவளுடைய ‘அவர்’ முதல் முதலிலே எப்படி அவளிடம் பேசிப் பழகினார் என்ற இன்ப நிகழ்ச்சிகளை என்னிடம் அவள் கூறிய போது எனக்கு அவ்வளவாக ரஸிக்கவில்லைதான்.

இப்போது...? அவர் கூப்பிட்ட குரலுக்கு எப்படிப் பதில் கூறுவது? என்ன கூறுவது? ஆனாலும் ஜானி சொல்வது போல, இந்தப் புருஷர்களுக்கே அசாத்திய துணிச்சல் தான். எனக்கு நாக்கு எழும்பவில்லை. கைக்குட்டையால் நெற்றியைத் துடைத்துக் கொண்டேன்.

“மிகவும் புழுக்கமாயிருக்கிறதில்லை?” என்றார் அவர், அடுத்த படியாக. தலையை அசைக்காமலேயே நான் “ஊம்” என்றேன்.

“கூப்பிட்டால் பதில் சொல்ல மாட்டாயோ என்று பயந்தேன். ஆமாம், இன்று முழுவதும் நீ ஒன்றுமே சாப்பிடவில்லையே; களைப்பாக இருக்காதா? அசடு போல் இப்படியா கூச்சப்படுவது?” என்றார் உரிமையுடன். இந்த அரை நாளில் அவர் என்னிடம் எத்தனை சுதந்திரம் கொண்டாட ஆரம்பித்து விட்டார்.

விருந்தும் உபசாரமும் திருமண வைபவத்தில் ஏகமாக நடக்கின்றன. ஆனால் மணப்பெண்ணைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்டப் பட்டினி தான். முன்னே அறிமுகம் இல்லாத புது மனிதனுடன் உட்கார வைத்து கும்பல் கும்பலாக ஆண்களும் பெண்களும் கூச்சலும் கேலியுமாக ரகளை பண்ண, விருந்து செய்கிறார்களாம் விருந்து! நான் அன்று இலையையே தொடவில்லை. காபி காபி என்று அதைக் குடித்தே வயிற்றை நிரப்பி இருந்தேன். அதைத்தான் அவர் அப்படிக் குறிப்பிட்டார்.

“உள்ளே போய் ஏதாவது சாப்பிட்டாயா இல்லையா?” என்றார் பின்னும்; விடமாட்டார் போல் இருக்கிறதே!

‘இல்லை’ என்ற உண்மையைச் சொல்லாமல் அதற்கும் “ஊம்” என்றேன்.

“ரொம்பவும் வெட்கப்படுகிறாயே, சுசீ; எங்கள் வீட்டில் மன்னி எல்லோரும் எப்படி சகஜமாகப் பழகுகிறார்கள், பார்த்தாயா? அப்படி நீயும் இருக்க வேண்டும். ஆண்பிள்ளையைக் கண்டுவிட்டாலே வாரிச் சுருட்டிக் கொண்டு சமையலறைக்குள் ஓடும் பெண்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது” என்று முதலிலேயே அவர் தம் அபிப்பிராயத்தைத் தெரிவித்த போது நான் பூரித்துப் போனேன்.

அப்பா முதல் நாளே வந்து சொன்னார். “சுசியகத்தில் எல்லோரும் மிகவும் நாகரிகமாகப் பழகுகிறார்கள். மைத்துனருடன் பேசக்கூடாது, மாமனாரைக் கண்டால் எழுந்து ஓட வேண்டும் என்ற தொந்தரவெல்லாம் அவளுக்கு இருக்காது. இன்று மத்தியான்னம் அவளுடைய ஓர்ப்படிகள் சரிக்குச் சமமாக உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். நாளை நம் சுசீலாவும் அப்படித்தான் இருப்பாள்” என்றார் என்னை நோக்கிச் சிரித்துக் கொண்டே. அப்போது எனக்கு எத்தனை பெருமையாக இருந்தது! பாவம் என் சின்னக்கா ஜகதுவுக்குப் பொறாமையாகக் கூட இருந்திருக்கும். படு கர்நாடகமான பட்டிக்காட்டில் அவள் வாழ்க்கைப்பட்டிருந்தாள்.

மூன்றாம் தடவையாக அவர் கோரிக்கைக்கு நான் ‘ஊம்’ கொட்டினேன். என் கையைக் கொஞ்சம் பலமாக அழுத்தி அவர் “சுசீலா நீ எவ்வளவு இனிமையாகப் பாடுகிறாய் தெரியுமா? அன்றைக்கு நீ பாடினாயே அதை என் ஆயுள் முழுவதும் மறக்க முடியாது. பெண் பார்க்க என்று நான் என் வாழ்க்கையிலே ஒரே ஒரு தரந்தான் வந்தேன். அப்போதே நீதான் எனக்காகப் பிறந்திருப்பவளென்று தீர்மானித்து விட்டேன்” என்றார்.

இந்த வார்த்தைகள் என் செவிகளில் விழுந்த போது இருதயந்தான் எப்படி விம்மியது? நான் இனிமையாகப் பாடுகிறேன் என்று எத்தனையோ பேர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் இன்று அவர் சொல்லும் போது என் மனக்கிண்ணம் அட்சய பாத்திரம் போலப் பொங்கிப் பொங்கிப் பெருகுவானேன்?

அவர் என்னைப் பார்க்க வந்த போது பாடுவதற்குப் பாட்டு அம்மாமி தான் பொறுக்கித் தந்தாள். ‘மனமுவந்தருள் செய்யத் தாமதமேனோ’ என்று துவங்கும் அந்தப் பாட்டை நான் பாடமாட்டேன் என்று தான் மறுத்தேன். “சொன்னால் கேட்க வேண்டும்” என்று அம்மாவும் சேர்ந்து கடிந்து கொண்ட போது விளையாட்டுப் போல அதைப் பாடி விட்டேன். அதைக் குறித்து வைத்துக் கொண்டு இப்போது கேட்கிறாரே, பொல்லாத மனிதர்! பாட்டையும் பாடச் சொல்லிவிட்டுக் கல்யாணம் நிச்சயமான தினத்திலிருந்து அம்மாமி என்னைத் துளைத்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

நானே வேண்டுமென்று அந்தப் பாட்டைப் பாடியதாக அவர் நினைத்திருப்பதை அறிந்து அளவற்ற மகிழ்வெய்தினேன். “என்னையும் முதல் முறையாகப் பார்க்க வந்தவர் நீங்கள் தாம்” என்று கூற மனம் துடித்தது. ஆனால் கூச்சம் தடுத்தது.

“என்ன ராமு? ஒரு நாழிகையாகப் பேச்சு வெளுத்து வாங்குகிறாயா! ஊம், ஊம் என்று அவள் எத்தனை ஊம் கொட்டுகிறாள்?” என்று சிரித்துக் கொண்டே என் பெரிய ஓரகத்தி காரின் பக்கமாக வந்து குரல் கொடுத்தாள்.

நான் இந்த உலக சிந்தனைக்கு வந்தேன். அவருக்குத்தான் எத்தனை துணிச்சல்!

“ஒன்றும் பிரயோசனம் இல்லை, மன்னி. ஊம் ஊம் என்பதைத் தவிர வேறு வார்த்தையே வெளியே வரமாட்டேன் என்கிறது!” என்றார் என்னைத் திரும்பிப் பார்த்து நகைத்துக் கொண்டே.

நான் ஊம் கொட்டினதை அவர் மூலமே அவள் தெரிந்து கொண்டு விட்டதை அறிந்ததும் வெட்கம் என் முகத்தில் சூடேற்றியது. சுமாராக நிமிர்ந்து உட்கார்ந்திருந்தவள், தலையை மறுபடியும் கவிழ்த்துக் கொண்டேன்.

அவர் இப்போது முன்னே சென்ற என் மைத்துனரையும், அருகே வந்த ஓரகத்தியையும் பார்த்தேன். அப்போது ‘உங்களுக்கு எல்லோரும் எப்படி எப்படி உறவோ அப்படித்தான் இனி எனக்கும் உங்களுக்கு மரியாதைக்கு உரியவர்கள் எனக்கும் அளவில்லாத மரியாதைக்கு உரியவர்கள்!’ என்று என் மனம் கற்பித்துக் கொண்டபடியே சொல்ல வார்த்தைகள் மேலுக்கு வந்தன. ஆனால் அந்தப் பாழும் சங்கோசம் உள்ளுக்கு இழுத்துக் கொண்டது. ஆம், அவர் குரலில் அவர் விருப்பம் அப்படி இருப்பதாக எனக்குத் தொனித்தது.

என்னையே கவனித்துக் கொண்டிருந்த மன்னி, “நம் வீட்டுக்கு வந்து நாலு நாள் ஆகிவிட்டால் நீ போதும் போதும் என்று முறையிடும்படி பேசிவாள். ஏன் அம்மா சுசிலா? அவன் முதலிலேயே புகார் பண்ணும்படியா நடப்பது?” என்று முறுவலித்தாள். என்னை அறியாமலேயே என் இதழ்கள் அவளைப் பார்த்து மலர்ந்தன. அந்தக் கணத்தில் நான் வண்ண மலர் வாசம் சூழும் உலகம் எதிலோ கவலையற்றுச் சஞ்சரிப்பதாக உணர்ந்தேன். என்னை விட பாக்கியசாலி யாருமே உலகத்தில் இருக்க முடியாது என்று எண்ணினேன். சிறு வயசிலேயே தந்தையை இழந்திருந்த என் கணவர், பெரிய தமையன் மதனி இவர்களுடைய அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்தவர் என்றும் தற்போதும் அவர்களுடனேதான் இருக்கிறார் என்றும் எனக்குத் தெரியும். எனவே அவர்களைத் தாய் தந்தையர் போலப் பாவிப்பது இயல்புதானே? அவர் மூலமாக இந்தச் சொற்கள் வந்த பிறகு மதனி என் கண்ணுக்கு அன்புருவாகத் தென்பட்டாள். அவர் மலர் முகமும் அகலக் குங்குமப் பொட்டும் என் மனத்தில் உயிர் பெற்று நான் அவளுடன் அன்பால் பிணைந்து வாழ்க்கை நடத்தப் போகிறேன் என்ற நினைப்பை எழுப்பி என்னைக் குளிர வைத்தன. இப்படி எந்தப் பெண்ணுக்காவது புக்ககம் வாய்க்குமா? சின்ன அக்கா ஜகது இருக்கிறாளே, அவள் மாமனார் மாமியார் எதிரில் இன்னமும் அத்திம்பேருடன் பேசமாட்டாள். முழுசாக ஒரு நாள் கூட ஆகவில்லை. இவ்வளவு சகஜமாக மதனியை வைத்துக் கொண்டு என்னைப் பேச்சுக்கு இழுக்கிறாரே! சந்தேகமில்லாமல் நான் கொடுத்து வைத்தவள் தான். கிடைத்தற்கரிய கணவனுடன் நல்ல புக்கமும் எனக்குக் கிடைத்திருக்கிறது. என் வாழ்வு ஒளி பெற்று விட்டது. இனிமேல் மலர்ந்து மணம் வீசும்.

‘டுடும் டுடும் டுடு’ என்று பாண்டு கோஷ்டி ஓய்ந்து தவில் முழங்கியது. நான் பக்கவாட்டில் முகத்தைத் திருப்பிக் கவனித்தேன். என்ன ஆச்சரியம்! தெருக்கள் கடந்து நாங்கள் திரும்பவும் கல்யாணப் பந்தலைச் சமீபித்து விட்டோம்!

அதற்குள்ளா முடிந்து விட்டது? இவ்வளவு சீக்கிரமா? அடடா! இது போலச் சந்தோஷம் இனி வருமா? ‘ஊர்வலம் நிச்சயம் விட வேண்டும்’ என்று அம்மா சொன்னாளே, என்று பல எண்ணங்கள் என் மனத்தைச் சங்கிலி போல் தொடர்ந்தன.

காரிலே ஏறுமுன் அவருக்கும் எனக்கும் இடையே இருந்த தூரம் இப்போது வெகுவாகக் குறுகி நான் அவருடன் மிகவும் நெருங்கி விட்டது போலவும், பந்தப் பிணைப்பு என்னை அவருடன் நன்றாக இறுக்கி விட்டது போலவும் எனக்குத் தோன்றியது. திறந்து கிடந்த என் சிந்தனைக் கதவு அவரை உள்ளே குடியேற்றிவிட்டு வேறு ஏதும் உள்ளே புகாதபடி தாழிட்டுக் கொண்டு விட்டது. ஐந்தாறு வார்த்தைகள் தாம். ஆனாலும் முதன்முதலாக அவரிடமிருந்து வந்த அவை என் நெஞ்சைக் கவர்ந்து விட்டன. கார் நின்றது. தூங்கி விழுந்த குழந்தைகளைச் சொந்தக்காரர்கள் எடுத்துக் கொண்ட பின் தான் எங்களுக்கு இறங்க வழி கிடைத்தது. இறங்கும் போது சட்டென்று ஞாபகத்தில் தூண்டப் பெற்றவளாக நான் வானவெளியை அண்ணாந்து பார்த்தேன். என் நெஞ்சம் துணுக்குற்றது. கண்கள் இருண்டு வரும் போல இருந்தன.

ஒரு நட்சத்திரத்தைக் கூடக் காணவில்லை. இரண்டு தினங்கள் சென்றால் பௌர்ணமி. இருந்தும் சந்திரனின் சுவடே தெரியாதபடி நாற்புறமும் கருமேகங்கள் குமுறிக் கொண்டிருந்தன.

“உம், கையைக் கோத்துக் கொண்டு பந்தலுக்குள் வாருங்கள்” என்ற அம்மாவின் உத்தரவும் என் கணவர் என் கையைப் பலமாகப் பிடித்துக் கொண்டு பந்தலுக்குள் நுழைந்ததும் எனக்குக் கனவிலே நடப்பது போல் இருந்தன.

“கிடு கிடு கிடா டமா...” என்று இடி முழங்கியது.

“நல்லவேளை! மழைக்கு முன் வந்து விட்டோம். பெரிய மழை வரும் போல் இருக்கிறது” என்றார் என் மைத்துனர்.

ஜோடனை செய்யப்பட்டிருந்த ஊஞ்சலில் நாங்கள் உட்கார்ந்தோம்.

“நம் வீட்டுப் பெண்கள் கல்யாணம் என்றாலே மழை வராமல் இருக்காதே” என்று அம்மா முணுமுணுத்தது என் காதில் விழுந்தது.

இடி, மின்னல் ஏன் இன்று எல்லாம் வர வேண்டும்? நான் முன்பு நினைத்தபடி இவை என் வருங்காலத்தின் சூசகமா. சே! அதெல்லாம் ஒன்றும் வராது.

சற்று முன் நடந்த நிகழ்ச்சி, இன்னும் சற்று நேரம் நீடிக்காதா என்று எனக்கு ஆசையூட்டிய நிகழ்ச்சி, கொஞ்சமும் மங்காத புத்தம் புதிய அந்த இன்ப நிகழ்ச்சி, என் கலக்கத்தினூடே மழையிடையே வெயில் போலப் பிரகாசித்தது. மழை வராதா? அது ஒரு தப்பா? ஜகது கல்யாணத்தில் மழை பெய்தது ஏன்? ஜானி கல்யாணத்தின் போது கூடத்தான் சாயங்காலம் கொட்டுக் கொட்டென்று கொட்டியது. அதனாலேயே மறுநாள் ஊர்வலம் விட்டார்கள். இதற்கும் என் வாழ்வுக்கும் என்ன சம்பந்தம்?

யாரோ தூங்கி விழுந்த குரலில் பாடினார்கள். நான் என் மனத்தை இழுத்து அந்தப் பாட்டில் செலுத்தினேன்.

படீர் படீர் என்று என் நெஞ்சில் யாரோ குத்துவது போல் வேதனை ஊட்டும்படி, “கண் குளிரக் காண்பதெல்லாம் கனவாகி” என்று வார்த்தைகள் சுழன்று சுழன்று ஒலித்தது.

நான் கண்பதெல்லாம் பொய்யா? நிஜமாக என் வருங்காலம் இன்றைய பொலிவோடு நிகழாதா?

மீண்டும் பயங்கரமாக இடி முழங்கியது. தொடர்ந்து மின்னல் ஒன்று வெட்டியது. “பொய்! பொய்! பொய்!” என்று ஏக காலத்தில் பல குரல்கள் என்னுள் கூச்சலிட்டன. கண்கள் நிலை நிற்காமல் சுழலுவன போல் இருந்தன. என் தலையே தரித்து நிற்க முடியாமல் இருப்பதை உணர்ந்தேன். நெஞ்சில் ஏதோ தடை கட்டியது. என்னையும் அறியாமல் ஊஞ்சற் சங்கிலியில் சாயப்போன எனக்கு அந்த நிலையிலும் கடபுடவென்று மழை விழுந்த சப்தம் கேட்டது. அவ்வளவு தான். வேறு ஏதும் எனக்கு நினைவு இருக்கவில்லை.
-------------

1.2 தளிர்

நான் மூர்ச்சித்து விழுந்து விட்டேன் போல் இருக்கிறது. கண்களை விழித்துப் பார்த்த போது, வாசல் அறையில் படுத்திருப்பது புலப்பட்டது. என் தலையில் இருந்த பூவெல்லாவற்றையும் எடுத்திருந்தார்கள். தஸ்புஸ் என்று எனக்கு வேதனை தந்த அந்தப் பதினெட்டு முழப் புடவையைக் கூடக் காணவில்லை. நான் மிகவும் லேசாக இருந்தேன். மெல்ல மெல்ல எனக்கு எல்லாம் நினைவுக்கு வந்தன. என் அருகில் ஜகது அக்காவும் அம்மாவும் இருந்தார்கள்.

“அம்மா மழை கொட்டுகிறதா இன்னமும்?” என்று நான் கேட்டது மிக ஈன சுரத்தில் ஒலித்தது.

“ஏன் அம்மா சுசீ, மழை கொட்டி அப்போதே ஓய்சு போச்சே? கோடை மழை. படபடன்னு ஒரு நாழிகை அடிச்சுது” என்று அம்மாவின் குரல் அறைக்கு வெளியேயும் கேட்டிருக்கிறது.

என் சிறிய மைத்துனர் உள்ளே வந்தார். அவர் டாக்டர் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அம்மாவும் அக்காவும் எழுந்து நின்றார்கள்.

“விழித்துக் கொண்டு விட்டாள் போல் இருக்கிறதே?” என்றார் அவர்.

எனக்கு ஏதோ குற்றம் செய்து விட்டவளைப் போல எல்லோர் முகத்திலும் விழிக்கவே வெட்கமாக இருக்கிறது. அயல் மனிதரைக் கண்டால் தன் சிறு கைகளால் முகத்தை மறைத்துக் கொள்ள முயலும் சிறு குழந்தையைப் போல் நானும் தலையணைக்கு அடியில் என் முகத்தைக் கவிழ்த்துக் கொள்ள முயன்றேன்.

“ஒன்றும் இல்லை, வெயில், உஷ்ணம், சந்தடி. ஏற்கனவே நல்ல திடகாத்திரமில்லாதவள் போல் இருக்கிறது. ஆகாரம் வேறு சரியாக இருக்கவில்லை” என்று அவர் அபிப்பிராயம் சொன்னார்.

“ஆமாம். நான் அப்போதே அதுதான் சொன்னேன். இன்று முழுவதும் அவள் ஒன்றுமே சாப்பிடவில்லை. உள்ளே அழைத்தாவது அவளைக் கவனித்திருக்க வேண்டும் நீங்கள்” என்று என் கணவருடைய குரலும் என் காதில் விழுந்தது. ஆம், அவர் இன்னமும் இங்கே தான் அறை வாசற்படியில் நிற்கிறார். அடடா! எத்தனை கரிசனம் அவருக்கு என் மேல்! அம்மா, அக்காமார்கள், அத்தை, அம்மாமி என்று எத்தனை பேர்கள் இருந்தார்கள். எல்லோரும் என் அலங்காரத்தில் சிரத்தை கொண்டார்களே ஒழிய, “இப்படிப் பட்டினி இருக்கிறாயே அம்மா” என்று அக்கறையாக ஒருவராவது கேட்கவில்லை. வந்தவர்களைக் கவனித்தார்கள். தங்களைக் கவனித்துக் கொண்டார்கள்! என்னை அடியோடு மறந்து விட்டார்கள். ஆனால் அவர் பகலில் தான் என்னைக் கைப்பிடித்து உரிமையாக்கிக் கொண்டவர். நான் உணவு கொள்ளாமலிருந்ததைப் பற்றியே இந்நேரமாகக் கவலைப்பட்டிருக்கிறார்! என்னிடம் முதல் முதலாக அதைப் பற்றித்தானே விசாரித்தார்? எனக்குக் கூட என்மேல் அத்தனை கவலை இருந்திருக்கவில்லையே? “இவா எல்லாம் இருக்காளே, கவனிச்சுக்குவாள்னு அசிரத்தையாக இருந்துட்டேன். எனக்குத்தான் போது எங்கே இருந்தது? அவளே பச்சை குழந்தை. நல்ல நாளிலேயே சரியான வேளைக்குச் சாப்பிட வேணும். இப்போது கேட்க வேணுமா?” என்று கசமுச என்ற குரலில் அம்மா முணுமுணுத்தாள்.

“பந்தியில் உட்கார்ந்து இப்படி ஒரேயடியாக அட்டகாசம் செய்தால்? நான் ‘போதும் பரிகாசம்’ என்று அப்போதே சொன்னேன். யாரும் கேட்கவில்லை” என்று அவர் நேரடியாகவே அம்மாவுக்குப் பதில் கொடுத்தார். இந்த மாப்பிள்ளையிடம் அம்மா அந்த வழக்கத்தைக் கைவிட்டு விட வேண்டியதுதான்.

மேலும் மேலும் அவர் எனக்குப் பரிவதைக் கண்ட என் இதயம் குறுகுறுத்தது. பரிவது மட்டுமா? இன்னும் இருபத்துநாலு மணி நேரம் முடிவதற்குள், நீங்கள் அவளைக் கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்! பதினாறு வருஷங்கள் அரும்பாடுபட்டு வளர்த்திருக்கிறார்களே அவர்கள். அதற்குள் நாம் இம்மாதிரி பேசுவது அழகா என்று அவருக்குப் படவில்லையே! என் மைத்துனர் தாம் ஆகட்டும், “அதற்குள் நீ போடு போடு என்ன போடுகிறாயே? கல்யாணாம் என்றால் அப்படித்தான் இருக்கும்” என்று சொன்னாரா? அவர் பக்கமே குழைவாக, “ஆமாம் அம்மா! ராமு சொல்வது போல நீங்கள் அவனைக் கவனியாமல் இருந்து விட்டீர்கள்” என்று ஒத்துப் பாடினார். அம்மாவுக்கு முகம் ஒரு விநாடி கறுத்து விட்டது. ஜகது அக்காவுக்கோ விண்டு வெடித்து விடும் போல் இருந்தது முகம். “சரி, மணி நாலரை தான் ஆகிறது. ஏழு மணிக்கு மேல் ஆசீர்வாதம் வைத்துக் கொண்டால் போதும். போய் எல்லாரும் சற்றுத் தூங்கலாம். பழ ரசம் ஏதாவது அவளுக்குக் கொஞ்சம் கொடுங்கள்” என்று கூறிவிட்டு என் மைத்துனர் வெளியே சென்றார்.

“ஆமாம், அவளுக்கும் அலுப்பாயிருக்கும். தூங்கட்டும்” என்று கூறிக்கொண்டே என் கணவரும் அவரைத் தொடர்ந்து சென்றார்.

அவர்கள் சென்ற பிறகு அருகில் உட்கார்ந்த ஜகது என் கன்னத்தை நிமிண்டி, “அடியம்மா! அவர் எப்படித் துடிதுடித்து விட்டார் பாரேன்! பெரிய ஆர்ப்பாட்டமும் அமர்க்களமும் பண்ணி விட்டாயே. அதுக்குள்ளே நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்கிறாரே!” என்று தன் முகத்தில் கையை வைத்துக் கொண்டு அதிசயப்பட்டாள்.

ஆரஞ்சு ரசம் தயாரித்துக் கொண்டிருந்த அம்மா, “ஆமாம், அவர் சொத்தில்லையா இனிமேல்? இருந்தாலும் இந்த நாளைப் பிள்ளைகளே இப்படித்தான் இருப்பார்கள் போலிருக்கு!” என்றாள்.

“இன்னும் சற்றுப் போனா விடியப் போகிறதே. இப்ப என்னத்துக்கம்மா?” என்று நான் சிணுங்கினேன். அத்தனை பேருடைய பரிவும் நான் அறியாமலே என்னைக் குழந்தையாக்கியிருந்தது அப்போது.

“அவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நீ மாட்டேன்னு சிணுங்கு. அப்புறம் அவர் கொடுத்தேளான்னு கேட்டுக் கொண்டு வந்துவிடப் போகிறார். நன்றாகத்தான் இருக்கு. பதினாறு வயசுப் பெண் பச்சைக் குழந்தையாட்டமா இருப்பது!” என்று ஓர் அதட்டல் போட்டாள். நான் பெட்டிப் பாம்பு போல ‘மடக் மடக்’ கென்று வாங்கிக் குடித்தேன்.

“தூங்கு, இன்னும் சற்று நாழிகை. நாளைப் போதுக்குக் கொஞ்சம் மணையிலே உட்கார வேணும்” என்று உத்தரவிட்டவளாக அம்மா என் மேல் போர்வையை இழுத்து விட்டு வெளியே சென்றாள்.

“ஆமாமடி சுசீலா; அப்புறம் நீ தூங்காததற்கு அவர் வந்து எங்கள் பேரில் குற்றம் சொல்லப் போகிறார்” என்று குத்திக் காட்டுவது போல் கூறிக் குறும்புச் சிரிப்புச் சிரித்தாள் ஜகது.

என் நெஞ்சில் குடியேறிவிட்ட அவரைப் பற்றிக் குத்தலாகச் சொன்னால் எனக்கு மட்டும் ரோசமாக இருக்காதா? தங்கள் வீட்டில் இப்படி இருக்கவில்லை என்று இந்த அக்காவுக்கே கொஞ்சம் பொறாமைதான். இல்லாவிட்டால் அவர் இத்தனை பரிவு காட்டுவதற்குச் சந்தோஷம் அல்லவா பட வேண்டும்? “என்னவோ ஒரு வார்த்தை சொல்லி விட்டார் என்று வாய்க்கு வாய் சொல்லிக் காட்டுகிறாயே; அவர் கேட்டதும் வாஸ்தவம் தானே? என்னை நீங்கள் யாராவது கவனிச்சேளா?” என்று சிரித்துக் கொண்டே நானும் கேட்டுவிட்டேன்.

“அடேயப்பா! முழுசாக ஒரு நாள் ஆகலே? அவர்கள் வீட்டுத் தண்ணீர் கூட இன்னும் ஒரு வாய் உள்ளே போகலே. இவளுக்கு வரும் ரோசத்தைப் பாரேன்! லேசுப்பட்டவ இல்லேடி சுசி நீ! உம்! புருஷன் மனைவி என்றால் இப்படி அல்லவா இருக்க வேணும்?” என்று நீட்டி முழக்கிக் கொண்டு அவள் அதிசயப்பட்ட போது ‘நாமும் இருக்கிறோமே’ என்ற ஆற்றாமையும் தொனித்தது. அவளை விட ஒரு படி நான் உயர்ந்து விட்டேன் என்ற எக்களிப்பில் மிதந்தேன். அறையின் விளக்கை அணைத்துவிட்டுக் கீழே ஜமுக்காளத்தை விரித்துக் கொண்டு அவள் படுத்து விட்டாள். படுத்த சிறிது நேரத்திலேயே தூங்கியும் விட்டாள் அலுப்பு, அலைச்சல் அல்லவா?

எனக்குத் தூக்கம் வருமா? வெளியே திண்ணையிலிருந்து ‘பெட்ரோமாக்ஸ்’ விளக்கின் ‘ஹூய்’ என்ற சப்தமும், இரண்டொருவர் விடும் குறட்டையொலியும் நிசப்தத்தைப் பிளந்து கொண்டு வந்தன. தான் சிருட்டி செய்ததைத் திருப்பித் திருப்பி ரஸித்து இன்புறும் கலைஞனைப் போல என் உள்ளமும் அன்றைய நிகழ்ச்சிகளுக்கு உயிர் கொடுத்துத் திருப்பித் திருப்பி அவைகளிலேயே லயிப்பதில் இன்புற்றது.

வாழ்விலே ஒரு நாள். அந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது கூட அவற்றின் உண்மைகளை நான் சிந்திக்கவில்லை. இப்போதோ, அவை யாவும் என்னை அவருடன் நெருக்கிப் பிணைக்கும் புனித காரியங்களாக எனக்குப் பட்டன. அப்போது இல்லாதபடி இப்போது எனக்கு ஏதேனும் ஞானோதயம் வந்துவிட்டதோ?

இல்லையா பின்? அவருடைய அன்பு கனிந்த சொல், உறங்கிக் கொண்டு இருந்த என் மனத்தை மந்திரக்கோல் போலத் தட்டி எழுப்பி விட்டதே! அன்பின் ஒளியை நன்கு கிரகிக்கக் கூடிய சக்தியை இப்போது என் மனம் பெற்று விட்டது. பெரியவர்கள் விதித்த புனித காரியங்களினால் ஏற்படும் பந்தத்துடன் கூடவே பரஸ்பரம் அன்பு கனியவும் இடம் இருந்து விட்டால், தேனும் பாலும் சேர்ந்தது போல் ஏற்படும் பாசப் பிணைப்பில் எத்தனை ஆனந்தம் உண்டாகிறது! இந்தப் புது மகிழ்ச்சியில் என் உடல் நலிந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஏதோ புத்துணர்ச்சி பெற்றவளாகவே தோன்றியது. படுத்திருக்கப் பிடிக்கவில்லை. போர்வையைத் தள்ளிவிட்டு எழுந்து உட்கார்ந்தேன்.

முதல் முதலாக என் கண்களிலே எதிரே சுவரில் மாட்டியிருந்த ரோஜாப் பூமாலை, மங்கலான ஒளியில் ஜிகினா மின்னக் காட்சியளித்தது. திறந்திருந்த அலமாரியில் ஒட்டியாணம், அராக் கொடி இரண்டும் சுழற்றி வைத்திருந்தன. என் பழைய அலங்காரத்தின் இன்னொரு சின்னமாக கூறைப் புடவை அறையின் மூலை ஒன்றில் கிடந்தது.

பழையபடி அவைகளை அணிந்து கொண்டு நான் அவர் பக்கலில் அமர வேண்டும்! அந்த நினைவு எனக்கு எப்படி இன்ப மூட்டியது!

பெஞ்சியை விட்டுத் துள்ளிக் குதித்தேன். ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தேன். வீட்டின் வலப்புறம் இருந்த வாய்க்கால் வளைந்து நெளிந்து காலைப் பொழுதில் மங்கிய ஒளியில் தன் மேனியைப் பளபளப்பாகக் காட்டியவாறு பெரியதொரு கரு நாகம் போல் ஓடியது. இரு மருங்கிலும் அடர்ந்து வளர்ந்திருந்த தாழையும் செவ்வரளியும் காலைக் காற்றிலே தங்கள் சுகந்தத்தைக் கலந்து வைத்திருந்தன. அந்தக் கலவையில் இரவு அடித்த மழை காரணமாக லேசான மண் வாசனையும் இருந்தது. கதிரவன் இன்னும் தன் ஒளி முகத்தைக் காட்டவில்லை. ஆனால் இருளும் பிரிந்திருந்தது. காலைப் பொழுதின் அமைதி என்று நான் கதைகளில் படித்திருக்கிறேன். அது இத்தகைய கவர்ச்சி வாய்ந்தது. மனத்திற்கு ஒரு புதுமையையும் உற்சாகத்தையும் ஊட்ட வல்லது என்பதை அப்போதுதான் அறிந்து கொண்டேன்.

எத்தனை நேரமாக இப்படி நின்றேனோ?

ஜகது எழுந்து தோளின் மேல் கையை வைத்து, “ஏண்டி சுசீ, தூங்கலே நீ? என்ன பார்க்கிறாய் அங்கே?” என்று கேட்டாள்.

“ஒண்ணும் இல்லே அக்கா. நேற்று இரவு ரொம்பவும் இடி இடிச்சுதோ?” என்று வினவினேன் நான். என் மகிழ்ச்சியினூடே லேசாக அது உறுத்தியது.

“அழகாயிருக்கே கேள்வி? கோடை மழை. இடி இடிச்சுது. மின்னியது. அதிலே பயந்துதான் மயங்கி விட்டதாக்கும் குழந்தை!” என்று செல்லமாக என்னை இடித்தாள் அவள்.

“இல்லே அப்புறம் ராத்திரி யாரோ பாடினாளே, அது யார் அக்கா?” என்று அடுத்தாற் போல நான் விசாரித்தேன்.

“ஆமாம். இந்த சமயத்தில் இன்ன பாட்டுத்தான் பாட வேணும்னு சில பேருக்குத் தெரியறதேயில்லை.” எனக்குச் ‘சுருக்’ கென்றது. “உன் சின்ன ஓர்ப்பாட்டிதான் பாடினாள். நாலு பேர் சந்தோஷமாயிருக்கும் சமயத்திலே அந்தப் பாட்டையா பாடுவார்கள்? அசட்டுத்தனம்!” என்று பட்டிக்காட்டில் வாழ்க்கைப்பட்டிருந்த நாகரிகம் தெரியாத ஜகது அக்கா, அந்தப் பட்டிணத்தாளுக்குச் ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்தாள்.

இவளே இப்படிக் கூறும் போது கோணல் வகிடும், கைக் கடிகாரமுமாகத் துலங்கும் டாக்டர் மனைவியான என் சின்ன மன்னிக்கு அந்தச் சமயத்திலே அந்தப் பாட்டு பாடக் கூடாது என்று தெரியாதா? பின் ஏன் பாடினாள்? வேண்டும் என்றே பாடினாளா? நாகரிகம் இதற்கெல்லாம் பிரயோசனம் இல்லையா? இந்த உலகம் சதமில்லை என்பது நிசந்தானே? ஒரேயடியாய்ச் சந்தோஷத்தில் மூழ்கி இருப்பவர்களுக்கு உறைக்க வேண்டும் என்றே அந்தப் பாட்டு எழுந்ததோ? ஆனால், தற்போதைய என் மகிழ்ச்சி சதம் அல்லவா?

எள்ளுக்குள் எண்ணெய் போல் சுற்றி வளைத்து என் மனத்தின் உள்ளே கரும் குரும் என்று உறுத்திக் கொண்டிருந்த விஷயத்திற்கே வந்துவிட்டேன். அம்மாவும் பெரிய அக்காவும் பரபரப்பாக உள்ளே வந்தார்கள். “என்னவோ பெண் கண்ணைத் திறக்கலே. துவண்டு கிடக்கிறான்னியே? ரெண்டு பேரும் கதை பேசுகிறார்களே? ஏண்டி சுசீ? இரவு அப்படிப் பயமுறுத்தி விட்டாயே அவரை?” என்றாள் தங்கம்.

அம்மா அதையே மறந்து, “கேட்டாயடி ஜகது? அப்பா சொல்கிறார்: மாப்பிள்ளை கையுடனே சுசியை அழைத்துப் போக வேணும்னு அபிப்பிராயப்படுவதாக” என்றாள். அவள் குரலிலே கவலை, பரபரப்பு, மகிழ்ச்சி எல்லாம் பின்னியிருந்தன. அவர்களுடைய பரிவிலும், குழைவான நடப்பில்ம் அளவற்ற மகிழ்வெய்தியிருந்த என் பெற்றோர், அவர்கள் ஒரு படியில் இருந்தால் இவர்களாகவே இரண்டு படி ஏறி விடுவது போல யாரோ ஏதோ கூறியதை வைத்துக் கொண்டு என்னை உடனே அழைத்துப் போய் விடுவார்கள் என்று நிச்சயம் செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு அப்போது எப்படித் தெரியும்? எனவே ஆச்சரியம் தாளாத மனம், ‘நிஜமாகவா? அப்படி அவர் எண்ணம் இருந்தால் நேற்றுச் சொல்லியிருக்க மாட்டாரோ?’ என்று எண்ணமிட்டது.

“நான் அப்பவே நினைத்தேன். இவ்வளவு தூரம் கவலைப்படுபவர், எப்படி அவளை இங்கே இனி விட்டுட்டு இருப்பார்?” என்று ஜகது என்னை ‘நறுக்’கென்று கிள்ளினாள்.

“இல்லை. தெரிந்தால் தானே அவளுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கித் தயார் செய்ய ஏற்பாடு பண்ணலாம்? இப்படி அபிப்பிராயம் இருக்கும் என்று அப்பா இப்போது தான் கூப்பிட்டுச் சொல்கிறார்” என்றாள் தாய் கவலையுடன். அவள் விசாரம் அவளுக்கு.

என் பாட்டி சொல்லுவாள். “இந்தப் பெண்களே நன்றியற்றதுகள். ஆயிரம்பாடு அரும்பாடுபட்டு ஆளாக்கினவர்களிடம் ஒட்டாதுகள். வயிற்றுச் சோறு இல்லாவிட்டால் கூட அங்கே தான் ஒட்டும், அதுகளுக்கு” என்று.

எத்தனை அநுபவபூர்வமான வார்த்தை? இத்தனை நாட்கள் அருமையுடன் வளர்ந்த இடத்தை விட்டுப் போக வேண்டுமே என்ற வருத்தமோ கவலையோ எனக்கு ஏற்படவில்லை. ‘அவருடன் போகப் போகிறோம்’ என்ற குதூகலம் பொங்கியது.

‘நேற்றுச் சொல்லாவிட்டால் என்ன? என்னிடம் பிரஸ்தாபித்தால் தாய் தந்தையரை விட்டு உடனே வரப் பயப்பட்டுப் பிடிவாதம் செய்வேனோ என்று கூடத் தோன்றி இருக்கலாம். என்னைப் பார்த்தால் அப்படி நினைக்கும்படி இருக்கிறேனோ என்னவோ! பட்டணம் தெரியாமல் வளர்ந்த நான் படித்திருந்துங் கூட என் மீது கிராமாந்தரத்து ரேகைகள் தென்படாமலா இருக்கும்? இனிமேல் அவர் வீட்டவர்களைப் போல நானும் இருக்க முயல வேண்டும். எனக்கு அப்போதுதான் அங்கே மதிப்பு இருக்கும்’ என்றெல்லாம் கற்பனையுலகில் சஞ்சரித்தேன்.

சடங்குகள் யாவும் முடிந்த பிறகு அவர்கள் இறங்கியிருந்த இல்லத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். சில மணி நேரமே நான் அங்கு இருந்தேன். அந்த வீட்டில் என் மாமியார் எதையும் ம்ன்னின்று செய்பவளாகத் தோன்றவில்லை. அவளுக்குச் சொந்த உடன் பிறந்தவன் மகள் தானாம் பெரிய மதனி. அந்த சலுகையிலேதான் அவ்வளவு உரிமை பெற்றுவிட்டாளோ என்று கூட நான் நினைத்தேன். குடும்பத்தையே அவள் தான் நிர்வகிப்பவள் போல் காட்டிக் கொண்டு, எல்லோரையும் அதிகாரம் செலுத்தும் முறையில் அங்கும் இங்கும் போய் வந்தாள். புறப்படுவதற்கு முன்பு விடைபெற்றுக் கொள்ள எங்கள் விடுதிக்கு எல்லோரும் வந்தார்கள்.

பெரியவளாக லட்சணமாகப் பெரிய மதனி, “கல்யாணம் நன்றாக நடத்தி விட்டீர்கள். எங்களுக்கெல்லாம் சந்தோஷம்” என்று உபசாரமாகக் கூறினாள்.

அக்காவும் அம்மாவும் ஓடி ஓடித் தாம்பூலம் வழங்கினார்கள். பின் அவள், “இனிமேல் ஆடி கீடின்னு அவன் வரமாட்டான். சீர் செனத்தியின்னு பாத்திரமாகவும் பண்டமாகவும் வாங்க வேண்டாம். அவனுக்கு வேஷ்டி அது இதுன்னு நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் பெண்ணுக்கு நகையாகச் செய்து போட்டாலும் ஒரு காரியமாக இருக்கும்” என்றாள் மெதுவாக.

பாத்திரம் பண்டத்திலிருந்து நகை என்ற பெரிய வஸ்துவுக்கு அடி போடுகிறாள் என்ற எண்ணம் எனக்கு உறுத்தவில்லை. அதற்குப் பதிலாக ‘எத்தனை பெருந்தன்மை! அண்டாவைக் கொண்டா, குண்டாவைக் கொண்டா என்று அதட்டி வாங்காமல், வேண்டாம் என்று எந்தப் பிள்ளை வீட்டார் சொல்வார்கள்?’ என்று அவளைப் பார்த்துக் கொண்டே நான் வியந்து நின்றேன். என் தோளைத் தொட்டு அசக்கி, “ஊருக்குப் போறோம். கடுதாசி எழுது. அங்கு வரும் போது உடம்பு நன்றாக தேறி இருக்க வேண்டும். ரொம்ப பூஞ்சையாக இருக்கிறாய்” என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.

அவர்களுடன் அதே வண்டிக்குப் போகிற பேர்கள் எங்கள் வீட்டில் இருந்தனர். கூடம் முழுவதும், தாம்பூலம் வாங்கிக் கொள்வோரும், மூட்டை கட்டுவோருமாகப் பெண்கள் நிரம்பியிருந்தனர்.

‘படக் படக்’ கென்ற வேஷ்டிச் சத்தம் என் கவனத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்தது. அத்தனை பெண்களுக்கும் மத்தியில் அவர் தாம் என்னை நோக்கிப் புன்னகை செய்து கொண்டு வந்தார். கூடத்துத் தூணின் மேல் சாய்ந்து கொண்டு நின்ற என் கையிலே சிறியதொரு நீளமான அட்டைப் பெட்டியைத் திணித்தார். சின்னக் குழந்தையிடம் சொல்வது போல என் கன்னத்தை லேசாகத் தட்டி, “போய் வரட்டுமா, சுசீ?” என்றார்.

குழுமியிருந்த அத்தனை பேர்களும் தங்கள் தங்கள் செயலை மறந்து பேசாமல் நின்றார்கள். அவர் அப்பால் சென்றாரோ இல்லையோ, வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு சிரித்தார்கள். என்னால் தலையே தூக்க முடியாதபடி அக்காவும் அம்மாமியும் கன்னத்தில் வந்து இடித்துக் கேலி செய்தார்கள்.

“என்னதுடி அது. அவ்வளவு அருமையாக அவர் கொடுத்த பொருள்? பார்த்துவிட்டுத் தரட்டுமாடி நான்?” என்று என் கையில் இருந்ததை ‘வெடுக்’கென்று பிடுங்கினாள் ஜகது.

மதனி சிரித்துக் கொண்டே, “அவள் அண்ணா அவனுக்குப் ‘பிரஸன்ட்’ பண்ணினார் அதை. அவன் அவளுக்குக் கொடுத்து விட்டான்” என்றாள்.

“கடிதம் எழுதப் பேனா கொடுத்திருக்கிறார்” என்று ஜகது திறந்து பார்த்து முடிப்பதற்குள், “எங்கே! எங்கே?” என்று எல்லோரும் ஏதோ அதிசயத்தைக் கண்டது போல் முட்டி மோதிக் கொண்டார்கள்.

‘பட்டிக்காட்டுத் தனத்தை இப்படிக் காண்பித்துக் கொள்கிறார்களே. ஊருக்குப் போய் இந்த ஜனங்களைப் பற்றிச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்களோ என்னவோ’ என்று அங்கலாய்ப்பாக இருந்தது எனக்கு.

ஆகா! வாழ்விலே இந்த ஒரு நாள் என் போக்கிலேதான் என்ன மகத்தான மாறுதலைச் செய்து விட்டது! பதினாறு வருஷங்கள் இருந்து வளர்ந்த வீட்டிலிருந்தும் அன்புக்குரிய உறவினர்களிடமிருந்தும், தனியாளாகிவிட்ட நான், மலர்ச்சி எய்திவிட்ட புத்தம் புது மலரைப் போல ஒய்யாரத்துடனும் கர்வத்துடனும் தலை தூக்கி நின்றது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அல்லவா?
-----------

1.3 தளிர்

“சுசி கல்யாணம் ஆகிவிட்டதனால் என் தலை மேலிருக்கும் மலை இறங்கி விடும்” என்று அம்மா அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால் இப்போது காரியம் முடிந்த பிறகு அம்மா, அப்பாவைப் பொறுத்தவரை மலை இன்னும் கொஞ்சம் பளுவுடன் உறைந்திருக்கும் என்று தோன்றியதே ஒழிய இறங்கியதாகக் காணவில்லை. அவளுக்குத் தொண்டை பாறாங்கல்லாக இருந்தது. அவரோ பத்து வருஷம் கூடி விட்டவர் போலப் பரிதாபமாகக் காட்சி அளித்தார். சாமானும் சட்டுமாக நிரந்தரமான வீட்டிலே காலை வைத்த போது எல்லோருக்குமே, ‘அம்மாடி’ என்று இருந்தது. சந்தை கலைந்து தத்தம் வீடுகளுக்குத் திரும்புவதைப் போல ஒவ்வொருவராகப் பயணம் கட்டினார்கள். கடைசியாகக் கிளம்பியவர்கள், அத்தை பாட்டி இவர்கள்தாம். அத்தை என் தந்தைக்கு ஒரே சகோதரி. அத்தை புருஷர் மைசூரிலே பெரிய வக்கீலாக இருந்தார். ஆசைக்கு ஒரு பெண் ஹேமாவும், அருமைக்கு ஒரு பிள்ளை வெங்கிட்டுவுந்தான் அத்தைக்குக் குழந்தைகள். வைரமாகவே உடம்பில் இழைத்துக் கொண்டு கெட்டிக்கரைப் பட்டுப் புடவையுடன் வெள்ளிக் கூஜாவைக் கையில் எடுத்துக் கொண்டு அத்தை வண்டியை விட்டு இறங்கி வருவதே ஓர் அலாதி பெருமையையும் கர்வத்தையும் விளக்கும்.

“மாப்பிள்ளை பணமாகக் கொண்டு வந்து கொட்டுகிறான். நச்சுப் பிச்சென்று நாலைந்து பிடுங்கலில்லை” என்று பெண்ணைப் பற்றிய ஒரு தனியான கர்வம் பாட்டிக்கு மிகவும் உண்டு. பெண்ணிடமே அவள் வாசம் செய்ததற்கு இதுதான் காரணம். என் தந்தை அவளுக்கு ஒரே பிள்ளை. அந்த அருமைக் குமாரர் வழி மக்கள் நாங்கள். எங்கள் மீது பாசம் இருந்ததோ என்னவோ. “ஏண்டா வைத்தி, பெண்ணாய்ப் பிறந்தவளை மாசம் மாசம் ஆறும் ஏழும் சம்பளம் கொடுத்துப் படிக்க வைக்கிறாயே, ஏதோ கேட்டுப் பாடுகிறாளே அது போதாதா? பாட்டு வாத்தியார் வைத்து அது வேறு செலவு செய்கிறாய். இந்தப் பணத்தைக் கொண்டு கையிலே இரண்டு வளையாவது அடித்துப் போடலாமே? வயது வந்த கோர்க்காலி ஏணி போல உயர்ந்துவிட்டாள்? இப்படிக் குன்றிமணித் தங்கம் இல்லாமல் நிறுத்தி வைத்திருக்கிறாயே?” என்று என்னைக் குறித்துச் சொல்லும் போது எங்களிடம் உள்ள அலாதி வெறுப்பு தொனிக்காமலிருக்காது. அம்மாவுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வரும். ஆனால் என்ன பயன்? பல்லைக் கடித்துக் கொண்டு அடக்கிக் கொள்வாள். எப்போதாவது இம்மாதிரி கல்யாணம், கார்த்திகை என்றால் தான் அவர் எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கம். ஒரு தடவை சமீபமாகப் பாட்டி மட்டும் எங்கள் வீட்டுக்கே விஜயம் செய்தது எனக்கு நினைவை விட்டே அகலவில்லை. அண்டை அயலில் சிநேகம் பிடித்துக் கொண்டு நாள் முழுவதும் உட்கார்ந்து கிடந்தாள்.

“காபிக்கு முதற் கொண்டு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க வேணும்! போடி சுசீலா, பாட்டியை அழைத்துக் கொண்டு வா!” என்று என் தாய் கோபத்துடன் எனக்கு ஒரு நாள் உத்தரவிட்டாள். நான் சென்ற போது ஜானியின் தாயிடம் அவள், “பாரு கண்டும் காணாமலும் கொள்ளையாகத்தான் இவளுக்குச் செய்கிறாள். துணியாகவும் மணியாகவும் கொஞ்சமாவா கொடுத்திருக்கா? ஜகது வளைகாப்புக்கு வந்திருந்தாளே, குழந்தைகள் கையிலே சுளைபோலப் பத்துப் பத்து ரூபாய் குடுத்துட்டுப் போனா. நாளைக்கு சுசீலாவுக்கு எப்படிக் கல்யாணம் பண்ணப் போறான்? அவள் தான் ஒத்தாசை செய்யணும். என்ன செய்து என்ன நிறக்கிறதடி மீனு? அவளுக்குக் கொஞ்சமும் நன்றி விசுவாசம் கிடையாது. மஞ்சளும் குங்குமமுமா இருக்காளே, ஒரு கார்த்திகை, சங்கராந்தின்னு அஞ்சு ரூபா கொடுக்கணும்னு தோணுமா? மரியாதையே தெரியாது. வைத்தி தேமேனு அப்பாவித்தான். அவன் காலிலே இத்தனை சம்சாரத்தைக் கட்டி வச்சிருக்கு!” என்று பெண் பெருமையையும் நாட்டுப் பெண் சிறுமையையும் பிரலாபித்துக் கொண்டிருந்தாள். விளையாட்டுச் சிறுமியாகக் காலந்தள்ளிக் கொண்டிருந்த நான் அதுவரையில் எங்கள் குடும்பத்தையும் உள்ளேயுள்ள சச்சரவையும் கவனித்தவள் அல்ல. என் தாயைப் பற்றிப் பாட்டி இகழ்ச்சியாகக் கூறியது என் முற்றாத உள்ளத்தில் நன்கு பதிந்து விட்டது. ‘அத்தை இல்லாமல் நாம் இப்படி இருக்க முடியாதா? ஏன் இந்த அம்மாவுக்கு இதெல்லாம் தெரியவில்லை? பணக்கார அத்தையை விரோதித்துக் கொள்ளலாமா? பாட்டியின் மனத்தில் உள்ளதை அம்மாவிடம் தெரிவித்து விட வேண்டும்’ என்று அப்போது கவலைப்பட்டேன்.

இருந்தாற் போலிருந்து மறுநாளே பாட்டி, “இன்னிக்கு வண்டியிலே என்னை ஏற்றி விட்டுடு வைத்தி. எனக்கு என்னமோ இருப்புக் கொள்ளலே. அற்பசி மாதம் தலைக் காவேரிக்குப் போகணும்” என்றாள்.

பாட்டி சென்ற மறுகணமே அம்மா என் தந்தையைப் பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள். “பார்த்தேளோ இல்லையோ உங்கள் அம்மா சொன்னதை? ஆமாம், நான் ஏழை, இங்கு மாட்டின் வயிற்றில் குடியிருக்க வேண்டுமென்றால் முடியுமோ? பஞ்சமோ, பட்டினியோ, உன் காலடியில் வந்து நிற்க மாட்டோம்” என்று என்ன என்னவோ சொல்லிக் கொண்டு போனாள்.

பாவம், அப்பாவி அப்பா. தெய்வமே என்று முகத்தில் கையை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்! அந்த நிமிஷத்தில் எனக்கும் அம்மாவைப் போல ரோசமாகத்தான் இருந்தது. தன் சொந்தக் குழந்தைகளிடமேயா தாய் ஏழை பணக்காரர் என்று வித்தியாசம் பாராட்டுவாள்? அப்படி அவள் பாராட்டிச் சொல்லிச் சொல்லிக் காட்டும் போது, ‘அவர்களிடமிருந்து கை நீட்டி எதையும் வாங்கக் கூடாது’ என்ற சுரணை மேலிட முந்திரிக் கொட்டை போல நான், “அப்படியானால், நாளைக்கு எனக்குக் கல்யாணம் என்று அத்தையிடம் ஒத்தாசை கேட்கக் கூடாது அம்மா” என்றேன்.

உள்ளூற என் மனதில் அந்தப் பேச்சு, கோவையாகவே இருந்தது. ஆனால் வெளிக்குக் குடும்ப விவகாரம் அறியாத குழந்தையாக நடமாடி வந்த நான் சட்டென்று அந்த மாதிரி கூறியது, ஒரு சம்பந்தமுமின்றி அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தது. அம்மாவும் அப்பாவும் ஒரு கணம் அயர்ந்துதான் போய் விட்டார்கள். மறுவிநாடியே அம்மா என் தலையில் ‘நறுக்’கென்று ஒரு குட்டு வைத்தாள்.

“சிறிசா லட்சணமா இராமல் பெரியவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறாயா நீ? இப்படி இருந்தால் நாளைக்குப் புக்ககத்தில் போய்க் குடித்தனம் பண்ணி எப்படிக் குப்பைக் கொட்டுவாய்?” என்று கோபித்தாள். குட்டுப்பட்ட தலையைத் தடவிக் கொண்டு நான் அப்பால் வந்துவிட்டேன். என்றாலும் மனத்தில், ‘அவர்கள் பணக்காரர்கள். ஹேமாவும் வெங்கிட்டுவும் எனக்குச் சமதையாக ஒரு நாளும் ஆக முடியாது’ என்ற வேற்றுமை வேரூன்றி விட்டது. அம்மா அப்போது வைராக்கியமாகப் பேசினாலும், என் விவாகத்திற்கு அத்தை தான் ஏதோ கடன் கொடுத்து உதவியிருக்கிறாள் என்பது எனக்கு உள்ளங் கை நெல்லிக்கனி போல் விளங்கியது. பிடிக்கவில்லைதான். எனினும் பெரியவர்கள் யோசிக்காமலா செய்வார்கள்? தவிர, அவர்களுக்கு இல்லாத பெருமையும் சிறுமையும் எனக்கு என்ன வந்தன? ‘குடும்பம் என்றால் இப்படிச் சிக்கல்கள் இருக்கத்தான் இருக்கும். இவற்றையெல்லாம் பாராட்டாமல் விட்டுவிடுவதுதான் உகந்தது’ என்று என் மனத்தில் படிந்திருந்த பழைய பாசியை அகற்றிக் கொண்டு புதுமைக் கண்களுடன் அவர்களைப் பார்த்தேன். அதுவும் இப்போது என்னுள்ளே ஒளிவிட ஆரம்பித்திருந்த புது அன்பு அந்தப் பழைய தாழ்வு மனப்பான்மையை என்னிடமிருந்து அடியுடன் கல்லி எரிந்து விட்டது.

ஹேமா என்னோடொத்தவள் தான். “அம்மாமி, சுசீ எங்களுடன் ஊருக்கு வரட்டுமே? அப்புறந்தான் புக்ககம் போய் விடுவாள்” என்று அம்மாவிடம் அவள் கேட்டாள். நானும் சந்தோஷத்துடன் குதி போட்டுக் கொண்டு, “ஆமாம் அம்மா, நான் அவர்கள் ஊருக்குப் போனதே இல்லை” என்று கெஞ்சும் பாவனையில் சம்மதி கேட்டேன்.

பேசாமலே நின்ற அம்மாவிடம் அத்தையும், “ஆமாம் மன்னி, குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள். அங்கே வந்து பத்து நாள் இருக்கட்டுமே” என்று ஆசைக்கு உரமூட்டினாள்.

தாய்க்கு அரைச் சம்மதம் என்று தெரிந்தும் பொங்கிய மகிழ்ச்சியில் அவ்வளவாக நான் பொருட்படுத்தவில்லை.

பின்னாடி நினைத்துப் பார்த்துப் பார்த்து நான் ஆற்றாமையால் மனம் நொந்து போனேன். எவ்வளவு நன்றியற்றவள் நான்! பிறந்து வளர்ந்த இடத்தின் அந்தஸ்தையும் நிலைமையையும் உயரக் கொம்பில் இருந்து பார்ப்பதைப் போல அவ்வளவு துச்சமாகக் கருதும் அத்தை நமக்கு இனிச் சமமானவள் தான். அவளுடைய நிலைக்கு உயர்ந்து விட்டோம் என்று நினைத்தேனே!

உல்லாசமாக ஒத்த சகியுடன் காலம் கழிக்கப் போகிறோம் என்று துள்ளிக் கொண்டிருந்த என் ஆசை அடியுடன் அணைந்து போகும்படி ஊர் வந்து சேர்ந்த அன்றே ஹேமா தலைவலி என்று படுத்தவள் தான். அவளும் நானும் சரிசமமாகத் தோள் மேல் தோள் போட்டுக் கொண்டு ஊரெல்லாம் கண்டு களிக்கவில்லை. சிரித்துச் சிரித்து விளையாட்டுக் கதைகள் புகன்று உண்டு மகிழவில்லை. தெருவையும் வீட்டு வாசலையும் தவிர ஒன்றையுமே அறியாமல் அலுத்துச் சோஒர்ந்து ஏனடா வந்தோம் என்று கிலேசமுறும்படி ஹேமாவின் தலைவலி டைபாயிடு சுரமாக வளர்ந்து வீட்டையே களையிழக்கும்படி செய்துவிட்டது. என்னுடன் பேசுவார் யாரும் இல்லை. சிரிப்பார் யாரும் இல்லை. என்னைக் கேலி செய்து அக மகிழ்விப்பாரும் எவரும் இல்லை.

ஹேமா கண்ணையே விழிக்காமல் இருந்ததாகத் தெரிந்தது. டாக்டர் மணிக்கொரு முறை வந்து போனார். நர்ஸ் ஒருத்தி நோயாளிக்காக வீட்டுடனேயே அமர்த்தப்பட்டாள். அத்தைக்கு முகத்தில் ஈயாடவில்லை. பாட்டியோ கண்ட கண்ட தெய்வங்களுக்கு எல்லாம் நேர்ந்து முடிச்சிட்டு வைத்தாள்.

வந்து பதினைந்து தினங்களுக்கு மேல் ஆகிவிட்டன. மாடி வராந்தாவில் நின்று கீழே தோட்டத்தையும், காம்பவுண்டில் கட்டியிருந்த மாடு கன்றையும் பார்த்துப் பார்த்து எனக்குச் சப்பிட்டுவிட்டது. ‘அரைச் சம்மதம் கொடுத்த அம்மாவைத் தட்டிக் கொண்டு வந்தேனே! இப்போது ஊரில் இருந்தால்? எனக்கு அவர் பேனாப் பரிசு கொடுத்ததை ஊர்க்காரர்கள் அனைவரும் தெரிந்து கொண்டு என்னைக் கண்ட இடத்தில் எல்லாம் கேலி செய்வார்கள். கோவிலிலும் குளத்திலும் இன்னும் ஒரு மாதத்திற்காவது என் விவாகத்தைப் பற்றியும் மாப்பிள்ளையைப் பற்றியுமே பேச்சு நடக்கும். ஆமாம் நான் வந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டனவே! கடிதம் எதும் எனக்கு வந்திருந்தால்? மதனி கூடத்தான் கடுதாசி எழுதி என்றாள். இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறேனே!’

ஜகது இன்னும் ஊருக்குப் போகவில்லை. இரண்டு மூன்று மாசம் இருக்கப் போகிறாள் என்று எனக்குத் தெரியும்.

‘அவளுக்கு வேணுமானால் எழுதலாமா? எனக்கு ஏதும் கடிதம் வந்தால்...’ நினைக்கவே எனக்கு வெட்கமாக இருந்தது. தவிரவும் பாட்டி அத்தைக்குத் தெரியாமல் கார்டு கவர் வாங்கி நான் எப்படி எழுதுவது? செய்வது நன்றாக இருக்குமா?

புறப்படும் போது அவர்களிடம் இருந்த சகஜ மனப்பான்மை ஹேமாவுக்கும் எனக்குமிடையே நிலவியிருந்த நேசத்தால் தோன்றியது என்று நான் நினைக்கும்படி அத்தையாவது பாட்டியாவது என்னிடம் ஒரு வார்த்தை கூடத் தாராளமாகப் பேசவில்லை. ஹேமா திடீரென்று படுத்துக் கொண்டு விட்டதனால் இப்படி இருக்கிறார்களா அல்லது நான் வந்திருப்பதில் விருப்பம் கொள்ளவில்லையா என்று எனக்குப் புரியவில்லை. ஊரில் இருக்கும் போது பாட்டு மறந்து போகாமலிருக்கத் தினமும் பாடுவேன். இங்கு அவர்கள் கவனியாமல் இருக்கும் போது நானாகப் பாடுவதா? வீட்டிலே ரேடியோ, புத்தகங்கள், பொழுது போக்கு விளையாட்டிற்கான கேரம் பலகை போன்ற சாதனங்கள் எல்லாம் இருந்தன. இருந்தாலும் ஹேமா இல்லாமல் அவைகளைச் சுதந்தரமாக உபயோகிக்க எனக்குத் தைரியம் வரவில்லை. பிடித்து விட்டாற் போல் எப்படி நாட்களைத் தள்ளுவது என்று கவலை கொள்ளலானேன். அன்று வெங்கிட்டு வழக்கம் போல் ரேடியோவில் செய்திகள் கேட்டுக் கொண்டு இருந்தான். நானும் அருகிலேயே இருந்தேன். செய்திகள் முடிந்ததும், “இருக்கட்டுமா? நிகழ்ச்சி முடிந்ததும் இந்த ஸ்விச்சைத் திருகி அணைத்து விடுகிறாயா?” என்று கூறிவிட்டு வெளியே சென்றான். யாரோ ஒரு பெண்மணி பாடிக் கொண்டிருந்தாள். அவள் பாடிக் கொண்டிருந்த பாட்டு எனக்கும் பாடம். எனவே என்னையும் அறியாமல் அதிலிருந்து வரும் குரலுடன் நானும் மெதுவாக இழைந்து பாட ஆரம்பித்து விட்டேன். பாட்டி அங்கே வந்ததை நான் கவனிக்கவே இல்லை.

“ஏன்டி சுசீலா, குழந்தை கண்ணைத் திறக்காம கிடக்கிறா; வேதனை பிடுங்கித் தின்கிறது. இப்போ என்ன வேண்டியிருக்கு பாட்டும் கூத்தும்? வெங்கிட்டு எங்கே? அதை அணைக்கச் சொல்லு” என்று அவள் குரல் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது எனக்கு. “இல்லை பாட்டி, வெங்கிட்டு வெளியே போய்விட்டான். நானே அணைத்து விடுகிறேன்” என்றேன் ரேடியோப் பெட்டியினருகில் சென்றவளாய். “எத்தையானும் திருகி ஒடிச்சுத் தொலைச்சுடாதே. பணம் பெற்ற சாமான்!” என்று அவள் சொன்ன வார்த்தைகள், எனக்கு எப்படி சுரீர் என்று உரைத்தன. கண்டபடி திருகி ஒடித்து விடும்படி அத்தனை பச்சைக் குழந்தையா நான்? எழுத்து வாசனையற்ற மூட ஜடமா நான்? அடேயப்பா! பணப்பெருமை, தன் வழிக் குழந்தை தானே என்பதையும் மறந்து எத்தனை நீசமாகப் பேசச் சொல்கிறது? ஹேமாவுக்குச் சமமாக நான் உயர்ந்து விட்டதாக மனப்பால் குடித்தது எத்தனை பேதமை!

அந்தக் கணமே எனக்கு அங்கு விட்டு இறக்கை கட்டிக் கொண்டாவது பறந்து ஊரில் குதித்து விட வேண்டும் போலிருந்தது. பாலும் பழமுமின்றிப் பழையமுது சாப்பிட்டாலும் அந்த வீடு, அந்தச் சுதந்திரம் நினைக்கவே இன்பமாக இருந்தது. ரேடியோவும் புத்தகங்களும் இல்லா விட்டால் என்ன? ஜகது அக்கா வேறு இருக்கிறாள். தமாஷாக இரண்டு பேரும் சாயங்காலம் காற்றாடக் குளத்தங் கரைக்குப் போவதில் உள்ள ஆனந்தத்திற்கு ஏது ஈடு? பாவம், ஜகது! அவளோடு சேர்ந்து நான்கு நாட்கள் இல்லாமல் ஓடி வந்தேனே; வேண்டும் நன்றாக எனக்கு!

ஹேமாவுக்குச் சிறிது ஜுரம் இறங்கியது. கண்ணை விழித்துக் கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்கிறாள் என்று சொல்லிக் கொண்டார்கள். நாமும் பயணம் கட்ட வேண்டியதுதான். அத்தையிடம் மெதுவாகத் தெரிவிக்கலாம் என்று கீழே வந்தேன். பாட்டியும் அவளும் சாப்பிட உட்கார்ந்தனர் போலிருக்கிறது. உள்ளே நுழையுமுன்பே எனக்குப் பேச்சுக் குரல் கேட்டது.

“அவளா? அடேயப்பா, பலே கெட்டிக்காரி. பேச்சும் வார்த்தையுந்தான் சர்க்கரையாக இருக்கு. இந்தப் பெண்ணை ஆட்டி அம்பலத்தில் வச்சுடுவாள். பிள்ளையாண்டானுக்கு வயசு கிட்டத்தட்ட முப்பதாகப் போகிறதாம். இளையாளைப் போலப் பதினாலு வயசா வித்தியாசம்? ஆயிரம் நட்டாங்க் சொல்லுவாளே மன்னி? தானாகப் பார்த்து இதை எப்பிடிப் பொறுக்கினாள்?” என்றாள் அத்தை.

“இதுக்கேதான் ரூவாய் இரண்டாயிரத்தைந்நூறு கழற்றி இருக்காளே? பிள்ளையாண்டான் எங்கேயோ மாசம் அம்பது ரூபாய் சம்பாதிப்பதற்கு” - இது பாட்டி.

“வேலை கூடக் காயமில்லை. பி.டபிள்யூ.டி.யில் டெம்ப்ரரியாகத்தான் இன்னும் இருக்கானாம்” என்றாள் அத்தை மறுபடியும்.

என்னைப் பற்றித்தான் இவை என்று கூடப் புரியாத முட்டாளா நான்?

“சுசீலா அதிருஷ்டக்காரி. நல்ல வரனாகக் கிடைத்து விட்டது. அவர்கள் எல்லோரும் பெண்ணைத் தலைமேல் வைத்துத் தாங்கக் கூடியவர்கள்” என்று அம்மாவிடம் அபிப்பிராயம் கொடுத்த அதே அத்தையா இப்போது பேசுவது? எதற்காக இப்படி உள்ளொன்று வைத்து உதட்டில் ஒன்று பேசுகிறாள்.

நிஜமாக என் ஓரகத்தி அவ்வளவு பொல்லாதவளா? அவருக்கு நான் இளையாள் போல என்கிறாளே? அப்படியானால்... அவர் சீக்கிரமாக... நான்... சட்! எப்படி இருந்தால் என்ன? அவர் என் மீது அளவற்ற பிரியம் கொண்டிருக்கிறார். அது ஒன்றே எனக்குப் போதாதா? எப்பேர்ப்பட்ட குறைவும் மன நிறைவில் மறைந்து விடுமே!

சந்தர்ப்பம் சரியில்லை என்று வந்த சுவடு தெரியாமலே நான் திரும்பி விட்டேன். ஆனால் களங்கமற்றிருந்த என் இருதய வானிலே ஒரு சிறு புள்ளி விழுந்து விட்டது. அத்தையின் அபிப்பிராயம் ஏற்கனவே அமிழ்ந்து கிடந்த அந்த அர்த்தமற்ற நம்பிக்கையைக் கிளப்பிவிட்டு என்னை உறுத்த ஆரம்பித்தது.

குற்றங்கள் நம்மை அறியாமல் உள்ளே புதைந்து உணர முடியாமலே போவதற்குக் காரணம் அவைகளை அமுக்கி விடக் கூடியதாகச் சந்தோஷம் எழுப்பி விடுவதால் தான். என் புக்ககத்தாரின் மேற்படி குறைகள் நிஜமானவை தாமோ? ஏதோ உணர்ச்சி வசப்பட்ட புது ஆசையில் நான் அவைகளை நிறைவாகக் கருதலாம். நாள்பட்ட மெருகு அழிந்து போவதால் பல்லைக் காட்டும் முலாம் பூசப்பெற்ற பாண்டம்போல என் புது ஆசை மெருகும் அழியுமானால் குறை பெரிய மடுவாகக் காட்சியளிக்குமோ எனக்கு?

தொடர்ந்து அன்றைய நிகழ்ச்சிகள், இடி, மின்னல், பாட்டு எல்லாம் சங்கிலித் தொடர் போல என் உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டன. நினைக்கவே பயம் கொடுத்த இவ்வேதனை கட்டி வைத்தாற் போன்ற அந்தச் சுழ்நிலையில் வளர்ந்து வளர்ந்து என்னை வருத்தியது.

இரவு தூங்காமல் புரண்டு கொண்டிருந்த என்னை பக்கத்துப் பெஞ்சியில் வந்து படுத்துக் கொண்ட பாட்டி கூப்பிட்டாள்.

“ஏன் பாட்டி?” என்று கேட்ட நான் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தேன்.

“உன் அப்பா கடுதாசி போட்டிருக்கானாம்!” என்றாள் மெதுவாக. இதைச் சொல்லவா இந்த யோசனை? ஏன், வந்தவுடனேயே எனக்குச் சொல்லக் கூடாதா? “என்ன பாட்டி?” என்று ஆவலுடன் கேட்டேன்.

“உங்களாத்தில் உன்னைக் கொண்டு விடச் சொல்லி எழுதியிருக்கிறார்களாம்!”

“என்னது?” என் நெஞ்சு ‘டப்டப்’பென்று அடித்துக் கொண்டது.

“ஆமாண்டியம்மா, ஆமாம்! ஐந்நூறு ரூபாய்க்கு அடி போட்டிருக்கிறான் உன் அப்பா!” என்றாள் பாட்டி வேப்பங் காயைத் தின்று விட்டுத் துப்புவதுபோல்.

அப்பா இங்கே பணம் கேட்டு எழுதியிருக்கிறாரா?

நான் புரியாமல் விழித்தேன்.

அவள், “புடவை, வேட்டி, பெட்டி, படுக்கைன்னு ரூபாய் அஞ்சு நூறுக்கு இங்கே எழுதியிருக்கானாம். கல்யாணத்துக்கேதான் வேண்டியது செய்தாளே. ஒருத்தரையே உருவி உருவிக் கேட்கணும்னு ஏன் புத்தி போகிறது? அப்படித்தான் ‘நறுக்’குனு நூறு ரூவாயிலே ஒரு புடவையை வாங்கி மங்கிலியப் பெண்டுகள் இட்டு, சபை நிற்கப் பாருவுக்குக் கொடுத்தாளா? எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது. உன் அம்மாதான் எழுதச் சொன்னாள் என்றால் உன் அப்பாவுக்கு ஏன் இப்படி எழுதத் தோன்றுகிறது? இத்தனை வரதட்சிணை கொடுத்து, பி.ஏ. படிச்ச மாப்பிள்ளை பார்க்க வேண்டாமே? தன் விரலுக்குத் தக்கபடி வீங்கினால் போதுமே. குழந்தை மலை போலப் படுத்துக் கொண்டு விட்டாளே என்று அவாளுக்கு முகத்திலே ஈயாடலே. இப்பத்தான் பணத்துக்கு எழுதுவாளா?” என்று சரமாரியாகப் பொரிந்து தள்ளினாள்.

ஏற்கனவே அத்தையகத்து அந்தஸ்திற்கும் அகம்பாவத்திற்கும் முன் முதுமையின் தோலைப் போல் சுருங்கிப் போயிருந்த என் மனம். இப்போது அப்பா வேற எனக்குத் தேடித் தந்துவிட்ட அவமானத்தினால் கடுகிலும் கடுகாகப் போய்விட்டது போலிருந்தது.

இவர்கள் இப்படிப்பட்டவர்கள் என்று தெரியாதோ? ஏன் இங்கு எழுதினார்? ஏதோ கல்யாண காலத்தில் நாலுபேருக்கு முன் சகஜமாக அளவளாவுவது போல காண்பித்துக் கொண்டால் அதையும் நிசம் என்ற நம்பி விடுகிறாரே இந்த அப்பாவி அப்பா! அம்மாவா எழுதச் சொல்லுவாள்? ஏற்கனவே தான் சமயம் வாய்த்த போது எல்லாம் பணக்காரத் தங்கை என்று குத்திக் காட்டுவாளே! இந்த ஐந்நூறு ரூபாய் எங்கும் கிடைக்காதா? இங்கு வந்து ஏன் முட்டிக் கொள்ள வேண்டும்? ஆனால் அப்பாவுந்தாம் என்ன செய்வார்? அவர் மீதில் என்ன தப்பு? ஐந்நூறு ரூபாய் இவர்களுக்குப் பெரிதா? இதோ ஹேமாவுக்குப் பணிவிடை செய்கிறாளே, அந்த நர்ஸுக்கு மட்டும் நாளைக்கு இருபது ரூபாய் என்று பேசிக் கொள்கிறார்களே! இன்னும் டாக்டர், மருந்து, என்று எத்தனையோ? ஆயிரம் ஆயிரமாக செலவழிக்கிறார்கள். அத்திம்பேருக்குத்தான் மாதம் ரண்டாயிர ரூபாய் போல் வரும் என்று கூறுகிறார்களே! ஐந்நூறு ரூபாய் கொடுக்க அப்பா என்ன அல்லா, அசலா? கூடப் பிறந்தவர்தாமே அத்தைக்கு? அப்படியாவது திராக்கிரகச் செலவுக்குக் கேட்கிறாரா? எனக்காக இந்த அற்பக் காசைக் கொடுப்பது இவர்களுக்குப் பிரமாதமில்லையே? அவர்களுக்கும் இந்தக் கடின சித்தம் வேண்டாம்; பாட்டிக்கும் இந்த ஏளனம் வேண்டாம். எப்படியாவது ஊருக்குப் போய் இவர்களுடைய மனப்பான்மையைத் தெளிவாக உடைத்து விட வேண்டும் போல் மனம் துடித்தது எனக்கு.

அப்படித்தான் இருக்கும். பாட்டி இதெல்லாமா என்னிடமா பேசுவது? பெரியவர்கள் பாடு ஆயிரம் இருக்கும். இந்த நிஷ்டூரங்களை அம்மாவின் ஸ்தானத்தில் என்னை மதித்துக் கூறுவது அழகாகுமா? ‘ஐயோ பாவம்! சின்னச் சம்பளம். இரண்டு பெண்களுக்கு முதலிலேயே கல்யாணம் செய்து சளைத்து விட்டான். அவனுக்கு உதவி செய்யத்தான் வேண்டும்’ என்று இரக்க புத்தியும் அநுதாபமும் இந்தப் பாட்டிக்கு ஏன் தோன்றவில்லை? பெண் என்றாலே தாய்மார்களுக்கு அலாதி வாஞ்சை உண்டு என்று நான் கண்டிருக்கிறேன். அதிலும் அத்தை சாமானியப் பெண் இல்லையே! பாரபட்சம் அதனால் தான் மலையும் மடுவுமாக உருவெடுத்திருக்கிறது போலும்!

இத்தகைய என் மனக்கிலேசங்களில் என்னைப் புக்ககத்தில் கொண்டு விடப் போகிறார்கள் என்ற நினைவு அமுங்கியே போய்விட்டது. ஐந்நூறு ரூபாய்ப் பிரச்னை இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வராமல் மலைபோல் என் முன் தோன்றிப் பயங்கரமாகக் காட்சி அளித்தது.

ஈசுவரன் ஏன் இப்படிக் கடின புத்தியுடன் செல்வத்தையும் ஏழ்மையுடன் மக்களையும் படைக்க வேண்டும் என்று அநாதி காலம் தொட்டு மக்கள் ஆராய்ந்தும் விடை கண்டறியாத புதிருக்குள் தலையை விட்டுக் கொண்டு நான் குழம்பிப் போனேன்.
-------------

1.4 தளிர்

இரவில் சரியாகத் தூங்காததனாலோ என்னவோ, பொழுது விடிந்ததும் தலை ஒரே கனமாகக் கனத்தது. உள்ளத்தில் குடைந்த வேதனையின் பிரதிபலிப்புப் போல உடம்பெல்லாம் குடைச்சலாக இருந்தது. வெகுநேரம் எழுந்திருக்காமல் படுத்துக் கொண்டு இருந்தேன். குளித்து விட்டுப் பாட்டி ஈரப்புடவையை உலர்த்துவதற்காகக் கொடிக்கோல் சகிதம் வந்தாள். “ஏண்டி சுசீலா, இன்னும் எழுந்திருக்க வேளையாகவில்லையா? புக்ககம் போகும் பெண் விடிந்து ஏழு மணி வரையுமா படுத்துக் கொண்டிருப்பாள்?” என்று கடிந்து கொண்டாள்.

அவள் கடுமையினால் கண்களிலே நீர் நிறைந்து விட்டது. பழக்கமுள்ள அம்மா எத்தனை கடிந்தாலும் எனக்கு உறைக்காது. பாட்டிதான் என்றாலும் என் மனத்தை விட்டுக் காத தூரத்துக்கு அப்பால் இருக்கிறவளாயிற்றே! பழக்கம் இல்லாத இடத்தில், அன்பு செய்ய யாரும் இல்லாத இடத்தில் வந்து முள்வேலிக்குள் அகப்பட்டுக் கொள்வது போல அகப்பட்டுக் கொண்டோமோ என்று வேதனை நெஞ்சை வந்து மறித்தது.

“இல்லை பாட்டி, தலையைப் பாறாங்கல்லாகக் கனக்கிறது. உடம்பெல்லாம் வலிக்கிறது” என்றேன் மெதுவாக.

“அது வாயை விட்டுச் சொன்னால் தானே தெரியும்? எழுந்து வா. குளிக்க வேண்டாம். சுக்குக் கஷாயம் போட்டுத் தருகிறேன்” என்றாள் அருமந்தப் பாட்டி.

ஹேமா அன்று தலைவலி என்று படுத்துக் கொண்டது, என் ஞாபகத்தில் வராதே என்று நெட்டித் தள்ளியும் கேட்காமல் வந்தது. சே சே! அவள் யார், நான் யார்? ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதிக்கும் செல்வச் சீமானின் அருமைப் புதல்வியாகிய அவள் எங்கே? கேவலம் ஐநூறு ரூவாய்க்குத் தாளம் போடும் ஏழை குமாஸ்தாவுக்கு வேண்டாம் என்று சொல்லும்படியாக மூன்றாம் பெண்ணாகப் பிறந்த நான் எங்கே? இந்தச் சுக்குக் கஷாயமே பெரிதாயிற்றே!

ஊருக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை என்னை உந்தித் தள்ளியது. கைகளையும் காலையும் நீட்டி முறித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்த நான், “என்னை ஊரிலே யார் கொண்டு போய் விடுவா?” என்று கேட்டேன்.

“ஏன்? இங்கே முள்ளின் மேல் இருப்பது போல் இருக்கா? ஊரிலே என்ன வச்சிருக்கு? மெதுவாகப் போனால் போச்சு” என்று அவள் முடித்து விட்டாள்.

‘போல் என்ன? முள்ளின் மேல் தான் இருக்கிறேன்’ என்று கூறிவிட வாய் துடித்தது. ஆனால் பேசாமல் படுக்கையைச் சுற்றி வைத்துவிட்டுக் கீழே இறங்கிச் சென்றேன். உடம்பு கணகணவென்று இருப்பது போல் வேறு உணர்ந்தேன்.

“ஹேமாவைப் போல நான் இங்கே படுத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வேன்?”

என்னைப் பயம் பற்றியது. ஊடே இந்த நினைவு மனத்திலே வந்தது.

அன்று ஒரு கணம் மயங்கி விழுந்ததற்கு அவர் அந்தப் பாடு பட்டாரே; இப்போது நான் இருக்கும் நிலை தெரிந்தால்...? இந்த அத்தையகத்தை இனிமேல் ஆயுளிலும் எட்டிப் பார்க்கக் கூடாது என்று உத்தரவு போட்டாலும் போடுவார்!

அச்சமும் கவலையும் சூழ நான் பாட்டி கொடுத்த சுக்குக் கஷாயத்தைக் குடித்து விட்டு மாடிக்கு வந்த சமயம், அத்தை ஓர் இளைஞனுடன் வராந்தாவில் நின்று பேசிக் கொண்டிருந்தாள்.

“இனிமேல் பயம் இல்லை என்று டாக்டர் சொல்கிறார். இனிமேல் ஜாக்கிரதையாக அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நானும் ஊரிலிருந்து வந்த நாட்களாக அங்கே வந்து எட்டிப் பார்க்க வேணும், பார்க்க வேணும் என்று குட்டிக்கரணம் போட்டுப் பார்க்கிறேன். எங்கே முடிகிறது? நாளைக்கு நீதான் மஞ்சுவைப் போய் அழைத்து வரப் போகிறாயாக்கும்? அப்பா உடம்பு எப்படி இருக்கிறது? அம்மாவுக்குச் சாதாரண ஜுரந்தானே?” என்று அத்தை விசாரித்தாள்.

“அப்படித்தான் டாக்டர் சொல்கிறார். அப்பா உடம்புக்குப் புதிதாக என்ன வந்திருக்கிறது. அதே நிலைதான். ஊரிலிருந்து மாமா பெண் வந்தாளே, அவளுக்கு இருமல். அவள் கைக்குழந்தைக்கு மாந்தம். அதை ஏன் கேட்கிறீர்கள், மாமி? வீடே ஆஸ்பத்திரியாக இருக்கிறது இப்போது. சிவனேயென்று நான் டாக்டருக்காவது படித்திருந்தால் லாபமாக இருந்திருக்கும். இன்னும் மஞ்சு வேறு வந்துவிட்டால் கேட்க வேண்டாம். ஏற்கனவே துர்ப்பலம். அதிலும் இப்போது கர்ப்பிணி” என்று சிரித்துக் கொண்டே கூறிய அவன் பார்வை என் மீது பட்டு விட்டது.

“இது யார் மாமி?” என்று நான் சென்ற பிறகு விசாரிக்காமல் நேரிடையாகவே அவன் கேட்டது வெகுளியான உள்ளத்தை எனக்கு அறிவித்தது.

“இவள் தான் சுசீலா. இவளுக்குத்தான் கல்யாணம் நடந்தது” என்றாள் அத்தை.

“ஓகோ! இவள் தான் கல்யாணப் பெண்ணா? பார்க்க ஹேமாவை விடச் சின்னவளாக இருக்கிறாளே; அதற்குள்ளாகவா கல்யாணம்? மாப்பிள்ளை என்ன பண்ணுகிறார்?” என்று அவன் விசாரித்த போது எனக்கு வெட்கமாக இருந்தது. நேருக்கு நேர் ஓர் இளைஞன் என்னைப் பற்றிக் கேட்பது இதுதான் முதல் தடவை.

“சின்னவள் என்ன? வயசு பதினாறு ஆகிறது. ஹேமா பார்க்கச் சற்றுத் தாட்டியாக இருக்கிறாளே ஒழிய, அவளை விட இவள் தான் பெரியவள். மாப்பிள்ளை பட்டணத்தில் தான் வேலையாக இருக்கிறான்” என்று பதிலளித்தாள் அத்தை.

அவன் பின்னும், “இவள் உங்களுடன் வந்தாளாக்கும்! பாவம் ஹேமா படுத்துக் கொண்டு விட்டாளே; இவளுக்கு எப்படி போது போகிறது? ஊரெல்லாம் சுற்றிப் பார்த்தாளோ?” என்று தூண்டித் துளைத்து விசாரித்தது, எனக்கு அவன் யாரென்று அறியும் ஆவலை மூட்டியது. அங்கு வந்து நான் ஒரு மாதத்திற்கு மேலாகியும் யாருமே என்னைப் பற்றி நினைக்காததை, அப்போதுதான் என்னைக் கவனித்தவன், ஒரு நொடிக்குள் இவளுக்கு எப்படிப் போது போகிறதென்று சரியாகக் கேட்டானே! இங்கு யாருக்கும் தோன்றாததை அறிந்து விட்ட இவன் யாராக இருக்கும்? என்று நான் வியந்தேன்.

“அவள் வந்த வேளையேதான் சரியாக இல்லையே! இத்தனை களேபரமாக இருக்கிறதே! ஓரிடத்துக்கும் இவளை அழைத்துப் போகவில்லை. நாளைக்கு மஞ்சுவை அழைத்துக் கொண்டு வந்து விட்ட பிறகு தான் நீ பட்டணம் போகிறாயாக்கும்” என்று அத்தை சமத்காரமாகப் பேச்சை மாற்றி விட்டாள்.

“ஆமாம், நாளையே கிளம்பிப் போய் அவளை அழைத்துக் கொண்டு இங்கே விட்டுவிட்டு மறுபடியும் நான் புறப்பட வேண்டும். காலேஜ் திறந்து விடுகிறது. வெங்கிட்டு இல்லையாக்கும்! நான் வரட்டுமா மாமி?” என்று அவன் கிளம்பலானான்.

“போகிறாயா? மஞ்சு வந்த பிறகு முடிந்தால் வந்து விட்டுப் போ. இரேன், சாப்பிட்டுவிட்டுப் போயேன்” என்று அத்தை உபசாரம் செய்தாள்.

“இல்லை, இல்லை. எனக்குக் கொள்ளை வேலை கிடக்கிறத். இவ்வளவு சீக்கிரம் சாப்பிடுவதற்கும் இல்லை. நான் வருகிறேன்” என்று கைபிடிச்சுவர் ஓரமாக நின்ற என்னைப் பார்த்துக் கூட அவன் விடை பெற்றுக் கொண்டான். அவனைத் தொடர்ந்து அத்தையும் கீழே சென்றாள். நான் வராந்தாவிலிருந்து அவன் வாயிலில் வந்து சைக்கிளில் ஏறிச் சென்றதைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அவன் யார் என்று அத்தையிடம் கேட்க எனக்குத் துணிவு வரவில்லை. அத்தையை ‘அம்மாமி’ என்று அழைத்தானே; ஹேமாவினுடைய அப்பா வழியில் சொந்தமாக இருக்கலாம்.

மெள்ள மெள்ள எனக்கு நினைவு வந்தது. ஹேமாவுக்கு அத்தை பிள்ளை இவனாகத்தான் இருக்க வேண்டும். மகாராஜா காலேஜில் புரொபஸராக இருப்பவர் இவன் தந்தையாகத்தான் இருக்க வேண்டும். அம்மா ஒருமுறை பேச்சுவாக்கில் அப்பாவிடம் கூறியது கூட என் ஞாபகத்திற்கு வந்தது. “உங்கள் தங்கை யகத்துக்காரருக்கு உடன் பிறந்தவள் உண்டே, அவளுக்குப் பிள்ளை இருக்கிறான். அவா மனசு வச்சா நம் சுசீலாவைப் பண்ணிக் கொள்ளக் கூடாதா? அவளுக்கு என்ன, அழகு படிப்பு எதில் குறைவு? எல்லாம் பணத்தில் மறைந்து கிடக்கு. அப்படி ஒன்றும் அது எட்ட முடியாத சம்பந்தம் இல்லை. சொத்து, சுதந்திரம் ஒன்றும் கிடையாது. அவர் வேலையுடன் சரி. அவர்கள் பண்ணிக் கொள்கிறேன் என்றாலும் உங்கள் தங்கையும் அம்மாவும் முட்டுக்கட்டை போடுவார்கள்” என்று அவள் குறிப்பிட்டது இவனாகத்தான் இருக்க வேண்டும். “சின்னவளாக இருக்கிறாளே? அதற்குள்ளா கல்யாணம்?” என்று அவன் கேட்டதை நினைத்தால் எனக்குச் சிரிப்பாக வந்தது. பார்ப்பதற்கு நான் அப்படியா இருக்கிறேன்?

தொடர்ந்து அத்தை முதல் நாள், “இத்தனை வயசா வித்தியாசம்? மாப்பிள்ளைக்கு முப்பது வயது இருக்கும் கிட்டத்தட்ட” என்று கொடுத்த அபிப்பிராயம் ஏனோ என் நெஞ்சில் வந்து குறுக்கிட்டது.

ஹாலின் ஒரு புறமாக இருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் என் உருவம் தெரிந்தது. அவன் கூறியது உண்மைதானா என்று ஆராயும் பொருட்டோ என்னவோ அதையே பார்த்துக் கொண்டு நின்றேன். உண்மையில் நான் அப்போது பூரணப் பொலிவுடன் விளங்கினேன் என்று சொல்ல வேண்டும். நானே என்னைப் பெருமையாகக் கூறிக் கொள்ளவில்லை. கதைகளிலே வரும் கதாநாயகி போல நீண்ட கூந்தல், பளபளத்த சிவந்த மேனி, அகன்ற கருவிழிகள் எல்லாவற்றிலும் என் முற்றாத இளமை நன்றாகத் தெரிந்தது. நிலைக்கண்ணாடியில் என் உருவத்தில் ஆழ்ந்திருந்த நான், மனக் கண்ணாடியிலுள்ள என் கணவரிடம் எப்படிப் போனேனோ?

முதல் முதலாக அவர் என்னைப் பார்க்க வந்த போது நான் கண்ட அவர் உருவத்துக்கும், பின் கண்ட காசி யாத்திரைக் கோலத்திற்கும் எத்தனையோ வித்தியாசங்கள் இருந்தன போல் எனக்குத் தோன்றியது. உண்மையைக் கூறப் போனால் அந்த இரு தோற்றங்களிலும் அவர் உருவம் என் மனத்தில் பதியவே இல்லை. ஆனால் ஊர்வலத்தின் போது நான் கண்ட அவர் கோலம் என்னுள் அழியாமல் உறைந்து விட்டது. அந்த மேற்கத்திய உடையில் அவர் எனக்கு அதிக உயரமுள்ளவராகக் காட்சி அளித்தார். முன் நெற்றியை மட்டும் மறைத்துக் கொண்டு இருமருங்கிலும் சற்று உள்ளே தள்ளிய கிராப்பு, அடர்ந்த புருவங்களுக்குக் கீழே கருமை பாயாத பெரிய விழிகள், அளந்து பிடித்தாற் போன்ற கூரான நாசி, சற்றே தடித்த உதடுகள், வளைவாக இரட்டை மோவாயில் வந்து முடியும் முகவாட்டம் என்றெல்லாம் என் உள்ளம் ஒவ்வொன்றாக ஆராய்ச்சி செய்தது. எப்படியும் அவரைப் பார்த்தால் எனக்குப் பொருத்தம் இல்லாதவராக மதிக்க முடியாது. நாலு பேர் நாலு விதமாகத் தான் அபிப்பிராயம் கொடுப்பார்கள். யார் என்ன சொன்னால் என்ன? அவருக்கு என்னைப் பிடித்து விட்டது. எனக்கு... எனக்கு மட்டும் என்ன? இப்போது நாங்கள் இருவரும் வாழ்வு முழுவதும் எக்காரணம் கொண்டும் பிரிய முடியாதபடி புனித ஒப்பந்தமாகிய மணமுடிப்பில் பிணைக்கப்பட்டு விட்டோம். இனிமேல் அம்மாதிரி நினைப்பது தவறு; நினைப்பது பாவமுங்கூட!

எத்தனை நேரம் இவ்விதச் சிந்தனைகளில் ஒன்றிப் போயிருந்தேனோ? ஒரு நாளும் இல்லாத திருநாளாக அத்தை என்னை அழைத்துக் கொண்டே வந்தவள், “ஊருக்குப் போக வேண்டும் என்று சொன்னாயாமே? பாட்டி சொல்லுகிறாளே” என்று கேட்டாள்.

“ஆமாம், நானும் வந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகவில்லையா?” என்றேன். அவள் குரலில் தோன்றிய பாவம் என்னை ஊருக்கு அனுப்புவதில் இஷ்டம் இருப்பதாக எனக்குத் தொனித்தது. எனக்கு அது சுதந்திர உணர்ச்சியின் மகிழ்ச்சியை அளித்தது.

“இல்லை, போகிறதானால், யார் கொண்டு விட இருக்கிறார்கள் என்று பார்த்தேன். பாட்டியை இப்போது அனுப்புவதானால் சிரமமாகிவிடும். நாளைக்கு மூர்த்தி அந்தப் பக்கந்தான் போகிறான். உன்னை ஊரிலே கொண்டு விடச் சொன்னால் தங்கமாக விட்டுவிடுவான். நாகப்பட்டினம் நாலைஞ்சு ஸ்டேஷன் தானே அப்புறம்? அண்ணாவுக்குக் கடிதம் போட்டால் வந்து அழைத்துப் போகிறான்” என்று இழுத்தாள் அத்தை.

இறக்கை கட்டிக் கொண்டாவது ஊரில் போய்க் குதித்து விட வேண்டும் என்று ஆவலுற்றுத் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்த நான் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடுவேனா? ஏற்கனவே துணைக்கு வர யாரும் இல்லை என்ற பீடிகையை வேறு அத்தை போட்டு விட்டாள். அப்புறம் எப்போது நேருமோ? அதுவரை சிறைக் கைதி போல இங்கேயே எப்படி இருப்பது?

“அப்படியானால் நான் நாளைக்கே போகின்றேன் அத்தை. ஊருக்கு இன்றைக்கு ஒரு கடிதம் போட்டு விட்டால் நாளைக்குப் போய்ச் சேர்ந்து விடும். அப்பா ஸ்டேஷனுக்கு வந்து அழைத்துப் போய்விடுவார்” என்றேன் ஆவல் ததும்ப.

“நிஜந்தானா? மூர்த்தியைப் பார்த்துத் தெரிவிக்க வேண்டும். அப்புறம் கடைக்குப் போய் உனக்கு... ஏதானும்” என்று இழுத்துக் கொண்டே அத்தை குண்டு குண்டென்று கீழே ஓடினாள்.

“எனக்கு எதுவும் வேண்டாம், அத்தை” என்று அவள் வாக்கியத்தை முடிக்கு முன்னரே ஊகித்துக் கொண்ட நான் கத்தினேன்.

சற்றைக்கெல்லாம் வெங்கிட்டு என்னைப் பார்த்தவன், “நாளைக்கு ஊருக்குப் போகிறாயாமே சுசீலா? அதற்குள் என்ன அவசரம்?... உம்... அவர் ஞாபகம் வந்து விட்டதாக்கும்?” என்று குறுநகை செய்தான்.

பெரியவர்களைப் போல இவர்களுக்கு இன்னும் அந்தஸ்துக்கு வேண்டிய கபடம் உரமேறவில்லை. அதனாலேயே என்னைச் சமமாகப் பாவித்தார்கள். ஆனால் நான் அடுத்த தடவை வரும் போது இவர்களும் பெரியவர்களாகி விடுவார்கள். நிலைமைக்குத் தகுந்த கௌரவம் சமத்துவ மனப்பான்மையை ஒழித்துவிடும்!

அசடு போல் எண்ணுகிறேனே. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம் பார்க்க வேண்டும்? ஒரு முறை வந்து விட்டுத்தான் எப்போது திரும்பப் போகிறோம் என்ற நிலையை அனுபவித்தேனே. “ஏதோ உடன் பிறந்தவன் பெண் வந்திருந்தாள் ஒரு மாதம்; நல்ல பெண்” என்ற மட்டிலும் வந்தேன். போகப் போகிறேன். முன்னும் இல்லை உறவு; பின்னும் இருக்கப் போவதில்லை.

அத்தை, பாட்டி பின் தொடரக் கையில் இரண்டு புடவைகளுடன் ஓடி வந்தாள். “அங்கே போய் மூர்த்தியிடம் சொல்லிவிட்டுக் கடைக்குப் போய் விட்டு அவசர அவசரமாக ஓடி வருகிறேன்... அப்பா! மூச்சுத் திணறுகிறது” என்று காரில் போய்விட்டு வந்த அத்தை சாவகாசமாகக் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டாள். பாட்டிக்குப் பொறுக்கவில்லை.

“எதுக்கடி பாரு, இப்போது அவளுக்குப் புடவையும் கிடவையும்? அவசரமாகக் கிளம்பி வந்துட்டான்னா உன்னை யார் என்ன சொல்லப் போகிறார்கள்? நீ செய்து கொண்டே இருந்தால் ஒரு காலணாவுக்கு உனக்கு அங்கே திருப்பிக் கொடுக்கிறவர்கள் இல்லை!” என்று பெண்ணின் சொத்துப் பறி போகிறதே என்ற முறையில் எச்சரித்தாள்.

எனக்குத் தர்மசங்கடமாக இருந்தது. என்னுடைய அத்தை வீட்டு வாழ்வின் இறுதிச் சோதனைக் கட்டம் வந்து விட்டதென நினைத்தேன்.

“நீ சும்மா இருடி அம்மா. எனக்கு எல்லாம் தெரியும். கல்யாணம் ஆகி முதல் முதலாக வந்திருக்கிறாள். வெறுங்கையோடு அனுப்பினால் நாளைக்கு, அத்தை அழைத்துப் போனாளே சீராட, என்ன வாங்கிக் கொடுத்தாள்? என்று ஊர்க்காரர்களே கேட்பார்கள். இந்த கலர்கள் இரண்டும் நன்றாக இல்லை, சுசீலா?” என்று வினவினாள் அத்தை.

“ஊர்க்காரர்களுக்கென்ன? வாய்க்கு வந்ததைக் கேட்பார்கள்” என்று சுவை குன்றியவளாக முகத்தைக் கோணிக் கொண்டாள் பாட்டி.

இந்தப் புடவைகளை வாங்கிக் கொள்ளலாமா, வேண்டாமா என்ற பிரச்னை என்னுள்ளே பெரிய திண்டாட்டத்தைக் கிளப்பி விட்டுவிட்டது. அத்தை அன்பாய் மருமகளைச் சீராட்டிவிட்டு அன்பின் அடையாளமான பரிசாக உள்ளன்புடன் இவைகளை எனக்கு வாங்கி அளிக்கவில்லை. தான் பணக்காரி என்ற கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக, அவளுடைய அகம்பாவத்தின் சின்னமாக, எங்களுடைய எளிய நிலையைக் குத்திக் காட்டும் வார்த்தைகளுடன், ஊர்க்காரர்கள் வாய்க்குப் பயப்படுவது போல் நடித்துக் கொண்டு இவைகளை வாங்கி அளிக்கிறாள். இப்படிப்பட்ட பொருளை, என் மனத்துக்குச் சிறிதும் ஒவ்வாத வகையில் நான் எப்படிப் பெற்றுக் கொள்வேன்! எவ்வளவுதான் இல்லாமையால் பீடிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் கண்ணியமுள்ள எவரும் தம் சுயமரியாதைக்குப் பங்கம் வரும் முறையில் தம்மை ஏளனப்படுத்திக் கொண்டு வரும் பொருளில் கொஞ்சமும் நாட்டம் கொள்ள மாட்டார்கள். கேவலம் அந்த நூல் புடவைகள் மிகச் சாதாரண ரகந்தான். இரண்டும் மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்தும் பத்தும் இருபது ரூபாய்க்கு மேல் பெறாது.

நான் போராட்டத்தில் ஆழ்ந்திருந்த போதே அத்தை தன் பரிசுப் பொருளைப் பற்றி மிகவும் சிலாக்கியமான வர்ணனைகளில் மூழ்கி விட்டாள். “நல்ல நைஸ் புடவை. ஸில்க் மாதிரி வழுவழுப்பாகவும் இருக்கிறது. துவைத்துக் கட்டவும் உதவும். இந்தக் கலர்கள் இரண்டே இரண்டு தான் இருந்தன. எனக்கு ஒன்று கொடுத்தான் கடைக்காரன். இப்போதே ஒன்றைப் பிரித்துக் கட்டிக் கொள்” என்று எனக்கு உத்தரவிட்டாள். என்ன பதில் கூறுவது என்றே எனக்குப் புரியவில்லை.

‘எனக்கு வேண்டாம்’ என்று நறுக்குத் தெறித்தாற் போல் முகத்துக்கு நேரே கூறுவதா, இல்லையென்றால் கொஞ்சமும் பிடிக்காமல் அந்தப் புடவைகளை வாங்கிக் கொண்டு வியாதியஸ்தர் துணிபோல் கூசிக் கூசி அணிவதா?

என் மனம் இரண்டுக்கும் இடம் கொடுக்கவில்லை. அந்த மட்டும் பாட்டி சமய சஞ்சீவி போல் எனக்கு உதவியாக, “செவ்வாய்க்கிழமையும் தானுமாக இன்று பிரித்துக் கட்டிக் கொள்ள வேண்டாம். புக்ககம் போகும் பெண்ணுக்கு இரண்டு சித்தாடை வாங்கும் குறை தீர்ந்தாச்சு. மாற்றி மாற்றி உடுபுடவையாக இருக்கும்” என்றாள். ‘அப்பாடா!’ என்று பெருமூச்சு விட்டவளாக நான் அவைகளை வாங்கிப் பெட்டியில் வைத்தேன். ஏதோ வாங்கி வைத்தேன் என்றாலும் முழு மனத்துடன் நான் அவைகளை அங்கீகரிக்கவில்லை.

“நாளைக்கு மூர்த்தி இங்கேயே வந்து அழைத்துப் போகிறேன் என்றான். வேண்டாம் அப்பா, உனக்கு எதுக்குச் சிரமம். நானே ஸ்டேஷனுக்குக் கூட்டி வருகிறேன் என்றேன். எப்படியும் இந்த வழியாகத்தான் போக வேண்டும். வருகிறேன் என்றான். ஆனால் சாப்பாட்டிற்கே வந்துவிடு என்று சொன்னேன். காலை பத்து மணிக்கு வண்டி. ஊருக்கும் போகிறாள்; ஒரு பாயசம் பச்சடியுடன் காலையிலே சமையல் செய்து விடும்படி அந்த அஸமஞ்சத்தினிடம் சொல்லு, அம்மா. ஹேமாவை இன்று பூரா நான் பார்க்கவில்லை. எப்படி இருக்கோ?” என்று அவசரமாக மொழிந்த அத்தை விரைந்தாள்.

பட்டணத்தின் நடுவே வந்து வழி தெரியாமல் அகப்பட்டுக் கொண்ட பட்டிக்காட்டானைப் போன்று புடவையை எப்படிக் கழிக்கலாம் என்று வழி தெரியாமல் நான் விழித்தேன்.
--------------

1.5 தளிர்

மைசூரின் அழகிய விசாலமான வீதிகளுக்குக் குளிர்ச்சியையும் மனத்துக்கு ரம்மியத்தையும் தரும் வண்ணம் நின்று நிழல் தரும் மரங்களும், ஊருக்கே ஒரு கம்பீரத் தோற்றத்தை அளித்த மாட மாளிகைகளின் கூட கோபுரங்களும் என் நினைவிலிருந்தும் பார்வையிலிருந்தும் ஒவ்வொன்றாகப் போய்க் கொண்டிருந்தன. ‘வாழ்க்கையின் ஒவ்வொரு பாகமுங் கூட இப்படித்தான் கழிந்து விடுகிறது!’ என்று நெடு மூச்செறிந்த நான் வண்டிக்குள் திரும்பினேன். அதுவரை நான் எட்டிக் கூடப் பார்த்திராத இரண்டாம் வகுப்புப் பெட்டியின் மெத்தை என் மனதில் அதிகமான கூச்சத்தை உண்டு பண்ணியது. அத்தனை நாட்களில் நான் அதுபோலத் தனிமையில், இல்லை - ஓர் அன்னிய வாலிபனுடன் பிரயாணம் செய்ததில்லை என்பதை நினைவுறுத்திக் கொண்ட போது என் கூச்சம் பின்னும் அதிகமாகி என்னை என்னவோ செய்தது. அவ்வளவு பணம் படைத்திருந்த அத்தை கூட, என்னை அழைத்து வந்ததாலோ, அன்றி அத்திம்பேரும் வெங்கிட்டுவும் முன்னமேயே ஊர் திரும்பி விட்டதாலோ, வரும்போது மூன்றாம் வகுப்பில் தான் பிரயாணம் செய்தாள். பழக்கமில்லாத என் நிலை அவனுக்குத் தெரிந்து விடக் கூடாதே என்று நான் அலட்சியமாக இருப்பவளைப் போலத்தான் பாவனை செய்து கொள்ள முயன்றேன். சாதாரணமாக இருக்கும் போது அழகாகத் தோன்றுபவர்கள் புகைப்படம் எடுப்பவரின் ‘இயற்கையாக இருங்கள்’ என்ற வார்த்தையில் மூன்று நாட்கள் சோகத்தில் திளைத்தது போல் ஆகிவிடுவதில்லையா? நானும் எந்தப் பாவனையும் செய்து கொள்ளாமல் இயற்கையாக இருந்திருந்தேனானால் அவன் கவனத்தைக் கவராமலிருந்திருப்பேன். இப்போது என் பாவனை பொருந்தாமலிருக்கும் முகத் தோற்றம் அவனைச் சீக்கிரம் கவனிக்கச் செய்து விட்டது!

“ஏன்? என்னவோ போல் இருக்கிறாயே? இடம் சௌகரியமாக இல்லையா? ஆமாம், அங்கிருந்து வெளியே பார்த்தால் முகத்தில் கரித்தூள் அடிக்கும். இப்படி வந்து உட்கார்ந்து கொள்” என்று அவனுக்கு எதிர்ப்புற ஆசனத்தில் மூலையில் உட்கார்ந்திருந்த எனக்கு, தனக்குப் பக்கத்திலேயே ஓரத்து இடத்தைக் காட்டினான் மூர்த்தி.

பெட்டியில் நான் ஒருத்திதான் என் இனத்தைச் சேர்ந்தவள். இன்னும் இரண்டே வயதானவர்கள் தாம் எங்களைத் தவிர அங்கு இருந்தனர். ஒருவர் புத்தகம் ஒன்றில் ஆழ்ந்திருக்க மற்றவர் தினசரிப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார்.

“இல்லை, இங்கேயே சௌகரியமாக இருக்கிறது” என்று சிரமத்துடன் அவனுக்குப் பதிலளித்துவிட்டு நான் மறுபடியும் முகத்தை வெளியில் நீட்டிக் கொண்டேன்.

“இல்லை, அங்கே கரித்தூள் அடிக்கும் கண்களில். இப்படி வா! சொல்வதைக் கேள்!” என்று அவன் மிகவும் சகஜமாக எச்சரித்தது என் சங்கட நிலையை உச்ச நிலைக்குக் கொண்டு போய் விட்டது.

‘இன்னும் எத்தனையோ தூரம் போக வேண்டுமே? எப்படிப் போகப் போகிறாய்?’ என்ற பயம் என் மனத்தில் குடியேறியது. அந்தப் பயம் ஏன் இப்படிப் புறப்பட்டு வந்தோம் என்று என்னை நினைக்கச் செய்து, முன்பின் பழக்கமில்லாத வாலிபன் அவன், அவனுடன் தனியே வழிப்பிரயாணம் செய்வதாவது? என் புத்தி ஏன் அசட்டுத்தனமாகச் சென்றது? ‘நீங்களே கொண்டு விடுங்கள், பாட்டி’ என்று பிடிவாதமாகச் சொல்லியிருக்கக் கூடாதா? இவனுடன் வர நேர்ந்த இந்தச் சந்தர்ப்பம் ஒரு சங்கடத்தை மட்டுமா தேடித் தந்திருக்கிறது? அத்தை என்னுடைய தாழ்ந்த அந்தஸ்தை விளக்கிக் காட்டுவது போல வேறு பேசிவிட்டாள். “டிக்கெட் வாங்க வேண்டாமா?” என்று கேட்டுக் கொண்டே அத்தை தனது பெரிய கைப்பையைத் திறப்பதற்குள் அவனாகவே கையில் இருந்த டிக்கெட்டுகளைக் காட்டி, “அவளுக்கும் சேர்த்தே வாங்கி விட்டேன்” என்றது அத்தைக்கு சற்றுச் சப்பிட்டுவிட்டதை முகம் காண்பித்து விட்டது.

“அவளுக்கும் சேர்த்தா இரண்டாம் வகுப்பு வாங்கினாய்? அவளை அழைத்துப் போக வேண்டும் என்றால் கூடவே இருக்க வேண்டும் என்று அர்த்தமா? பெண்கள் வண்டியிலேயோ, அடுத்த வண்டியிலேயோ உட்கார்த்தி விட்டுச் சற்றைக்கு ஒரு தரம் நீ கவனித்துக் கொண்டால் போதாதா? வீணாக ரெயில்காரனுக்குக் கொடுப்பானேன்? அந்தக் காசைக் குழந்தை கையில் கொடுத்தால் இரண்டு ரவிக்கைத் துணியாவது வாங்கிக் கொள்வாளே?” என்று அத்தை ஒரு குட்டிப் பிரசங்கமே அல்லவா செய்து விட்டாள்?

நான் இந்தச் சௌகரியங்களுக்கு எல்லாம் கொஞ்சமும் அருகதை இல்லை என்று அறிவித்துங்கூட அவன், “பரவாயில்லை மாமி. என்னையே அப்பாதான், இந்த முறை ‘ஸெகண்டு கிளாஸில் போ. திரும்பி உடனே நீ கிளம்ப வேண்டும். தவிர மஞ்சுவும் ஒன்பது மாதக்காரி’ என்று சொன்னார். அவரே சௌகரியமாகப் போ என்று கூறும் போது, நானாகக் குறைத்துக் கொள்வானேன் என்று தான் வாங்கினேன்” என்று சிரித்து மழுப்பி விட்டான். ஏற்கனவே நான் அவமானத்தால் கூனிக் குறுகிப் போயிருக்கிறேன் என்று கொஞ்சமும் அவள் அறியவில்லை? பணச் செருக்கும் அகம்பாவ அழுத்தமும் வேரோடி இருக்கும் நெஞ்சுக்கு எதிராளியின் தாங்காத மனசை ஏளனம் செய்வது போல் பேசுவது தவறு என்று படவே படாதோ? அத்தையாம் அத்தை! உயிரே போவதாக இருந்தால் கூட இவள் காலடிக்கு வரக் கூடாது!

“சொல்லச் சொல்ல அங்கேயே உட்கார்ந்திருந்தாய் அல்லவா?” என்று அவன் கேட்கும்படி பாழாய்ப்போன புகை என் முகத்திலே வந்து தாக்கிக் கண்களில் கரித்தூளை விசிறி விட்டது. தோல்வியை ஒப்புக் கொள்வது போல் குனிந்து கண்களைத் துடைத்துக் கொண்டேன். விழிக்கவே முடியாதபடி எரிச்சல் கொளுத்தியது. முன்பு அவன் காட்டிய இடத்தில் போய்ச் சாய்ந்து கொண்டேன்.

என்னையே கவனித்துக் கொண்டிருந்த அவன், “தண்ணீரை விட்டுக் கண்களை நன்றாக அலம்பிவிடு. சுமாராக இருக்கும்” என்று கூஜாவைத் திறந்து தம்ளரில் தண்ணீர் விட்டுக் கொடுத்தான். கண்களைக் கழுவித் துடைத்துக் கொண்டு நான் உட்கார்ந்து கொண்டேன்.

அவன் காட்டிய அந்தப் பரிவு எல்லோரிடமும் சரளமாகப் பழகும் இவன் சுபாவ குணமா அல்லது வேண்டுமென்றே காட்டுகிறானா என்று எனக்கு விளங்கத்தான் இல்லை. ‘ஊர் போய்ச் சேருவதற்கு இன்னும் எத்தனை நேரம் இருக்கிறதோ? இடையில் காபி, சாப்பாடு என்று வேறு இருக்கின்றன. முழு முட்டாளாக இப்படியா வேண்டுமென்று சங்கடத்தில் சிக்கிக் கொள்வேன்?’ என்று உள்ளூறத் தவித்துப் போனேன். அவன் ஒன்றும் பேசாமல் இருக்க வேண்டுமே என்று நான் வேண்டிக் கொள்ளப் போக, அவன் என்னைக் கேள்வியாகவே கேட்டுத் துளைத்து விடுவான் போல் இருந்தது.

“உங்கள் வீட்டிலே நீ ஒரு பெண்தானா?” என்று முதலில் கேட்டான்.

“இல்லை. எனக்கு அக்கா இருவர் இருக்கிறார்கள்” என்று நான் முணுமுணுத்தேன்.

“ஏதோ தனியாகப் போவதற்குப் பேச்சுத் துணையாகத் தமாஷாக இருக்கும் என்று உன்னைக் கொண்டு விடுகிறேன் என்று ஒப்புக் கொண்டேனே? நீ பேசா மடந்தையாக இருக்கிறாயே? இந்தக் காலத்தில் எந்தப் பெண் இப்படிப் பட்டிக்காட்டு அம்மாமியாக இருக்கிறாள்? ‘ஸ்கூல் பைனலில் அந்த ஜில்லாவுக்கே முதலாக மார்க்குகள் வாங்கித் தேறியிருக்கிறாள் சுசீலா. மாமா காலேஜில் சேர்க்காமல் இருக்கிறார்’ என்று உன்னைப் பற்றி ஹேமா கூட முன்பே சொல்லியிருக்கிறாளே? அப்படிப் படித்த பெண்ணாகவே நீ இருக்கவில்லையே?” என்று அவன் என்னைப் பார்த்து நகைத்தான்.

‘பட்டிக்காட்டு அம்மாமி’ என்று அவன் கூறியது என் உள்ளத்தில் உறைத்தது. என் கணவர் கூட இப்படி இருக்கும் பெண்களைக் கண்டால் பிடிக்காது என்றாரே! அந்தக் கணக்கில் நான் எல்லோருடனும் சகஜமாகப் பேசிப் பழக வேண்டும் என்றெல்லாம் சங்கல்பம் செய்து கொண்டேனே ஒழிய, அசடு, இப்போது சமயம் வாய்த்திருக்கும் போது பயந்து பயந்து சங்கோசப்பட்டுச் சாகிறேனே? அவரைப் போலப் பண்படைந்த மனமுள்ளவன் போல் இருக்கிறது இவன். இவன் வாயிலிருந்து பட்டிக்காட்டு அம்மாமி என்ற பட்டப் பெயர் கேட்கும்படியாக பித்துக்குளியாக நடந்து கொண்டு விட்டேனே?

என் அசட்டுக் கூச்சத்தைத் தூசியை உதறுவது போல உதறித் தள்ளி விட்டுப் பதில் கொடுக்க நான் முடிவு செய்த போது அவன் என்ன கேள்வி கேட்டான் என்று மறந்துவிட்டேன். ஆனால் மூர்த்தி அவ்வளவு தூரம் நான் சங்கடப்படும் வரை வைத்துக் கொள்ளவில்லை. அதற்குள் இன்னொரு கேள்வி விடுத்து விட்டான்.

“சென்னையில் உங்கள் வீட்டார் எங்கே இருக்கிறார்கள்?” என்று வினவினான்.

நான் பதில் கூற வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்ட பின் அவன் கேட்ட கேள்வி எனக்கு விடை தெரியாததாக இருந்தது! சென்னையை நான் முன்பின் பார்த்தவள் அல்ல. விலாசங்கூட எனக்கு இன்னும் சரியாகத் தெரியாது.

ஆனாலும் விட்டுக் கொடுக்காமல், “நான் இதுவரை அந்தப் பக்கம் சென்றதில்லை. ‘ராதாராம் எலக்ட்ரிகல்ஸ்’ என்று இருக்கிறதாமே? அந்தக் கம்பெனி சொந்தக்காரர் அவருடைய தமையன் தான்” என்றேன்.

அவன் சட்டென்று நிமிர்ந்து கொண்டு, “என்னது? ராதாராம் எலக்ட்ரிகல்ஸ் என்றா சொன்னாய்? அப்படியானால் கேசவமூர்த்தியின் தம்பியா?” என்று கேட்டது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

“தெரிந்திருக்கிறதே உங்களுக்கு?” என்று மலர்ந்த முகத்துடன் நான் திருப்பிக் கேட்டேன்.

“அவ்வளவாக எனக்குப் பழக்கமில்லை. கேசவமூர்த்தியின் மைத்துனியை எனக்கு நன்றாகத் தெரியும். கல்லூரி இளைஞர்கள் சங்கத்தின் ஆதரவிலே நடக்கும் விவாதங்களுக்கு ராஜதானிக் கல்லூரியிலிருந்து அவள் அடிக்கடி வருவது வழக்கம். அந்த முறையிலே எனக்குப் பரிச்சயம் உண்டு. அவள் பிரஸ்தாபித்துக் கேட்டிருக்கிறேன். ஒரு முறை கேசவமூர்த்தியின் சகோதரர் என்று பொருட்காட்சி ஒன்றில் அவள் எனக்கு அறிமுகம் செய்வித்ததாகக் கூட ஞாபகம் இருக்கிறதே?” என்று அவன் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசனை செய்தான்.

மதனியின் தங்கை ஒருத்தி அவர்களுடனேயே இருக்கிறாள். காலேஜில் படிக்கிறாள் என்று அப்பா சொல்லியிருந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. அவளாகத்தான் இருக்க்ம் என்று நான் ஊகித்துக் கொண்டேன்.

யோசனை பலனளித்து விட்ட மகிழ்ச்சியுடன் தலையைச் சாய்த்துக் கொண்டு அவன், “ம்... நினைவுக்கு வருகிறது. உன்னுடைய ‘அவர்’ பெயர் ராமநாதன் தானே?” என்று புன்னகை செய்துவிட்டு, “அவர் என்ன பண்ணுகிறார்?” என்று கேட்டான்.

இதுவரையில் நான் உதறித் தள்ளியிருந்த பாழும் சங்கோசம் என்னை மீண்டும் முகமூடியிட்டு விட்டது. காலில் கௌவும் அட்டையை உதறித் தள்ளுவது போல் அத்தனை சிரமப்பட்டு அதை உதறித் தள்ளியிருந்தேன். ஆனால் அவருடைய பேச்சை யார் எடுத்தாலும் உள்ளத்திலே பொங்கி வரும் உணர்ச்சி என் சரளமான போக்கில் நெளிவையும், குழைவையும் கொண்டு வந்து விடும் போது, குறும்புச் சிரிப்புடனும், குறுகுறுத்த விழிகளுடனும் எனக்கு அதிகம் பழக்கமில்லாத இளைஞன் ஒருவன் கேட்கும் போது நான் என்ன செய்வேன்? அதுவும் வேற்று ஆடவர் எவருடனும் தனிமையில் பழகும் அனுபவம் எனக்கு முற்றும் புதிதாக இருக்கும் போது? அவன் கேட்டுவிட்டு என்னையே வேறு புன்னகை மாறாமல் கவனித்துக் கொண்டிருந்தான்.

பட்டுத் துணியால் மூடியது போல் மனம் கதகதக்க எப்படியோ கூட்டிக் குழப்பி அவர் எங்கு வேலையாக இருக்கிறார் என்று நான் ஒரு வழியாகக் கூறினேன். “அப்பா...டா! இதற்கு இத்தனை யோசனையா?” என்று கேட்டுவிட்டு அவன் கலகலவென்று நகைத்தான்.

இந்தப் புதிய அனுபவம் ஒரு சமயம் தேவலை போலும் இருந்தது. ஒரு விதத்தில் பயமாகவும் இருந்தது.

சற்றும் எதிர்பாராத விதமாக மூர்த்தியிடத்தில் என்னுடைய புரியாத சந்தேகங்களைத் தெளிவிப்பது போலும், அவன் மனநிலை எனக்கு நன்கு விளங்குவது போலும் தொடர்ந்து நாங்கள் பெங்களூர் வந்து வண்டி மாறிய பின் ஓடும் ரெயிலில் ஒரு சம்பவம் நேரிட்டது.

நாங்கள் அந்தப் பெட்டியில் வந்து ஏறும் போது ஏற்கனவே ஒரு ஆடவனும் இளநங்கை ஒருத்தியும் அதில் இருந்தார்கள். அவள் கன்னட நாட்டைச் சேர்ந்தவள் என்பதை அவள் முகமும் அணிந்திருந்த ஆபரணங்களும் விளக்கின. சோகம் சூழ்ந்த அவள் முகத்தோற்றம் கல்வியோ நாகரிகமோ சிறிதும் இல்லாதவளாகவும், அறியாமை மெத்த நிரம்பினவளாகவும் தோன்றியது. அந்த மனிதன் நாகரிகமாக உடையுடுத்து நல்ல தேகக்கட்டு வாய்ந்தவன் போல மீசையும் கிருதாவுமாகத் தென்பட்டான். நானும் மூர்த்தியும், ஆமாம், உம் என்று பேசிக் கொண்ட மாதிரியில் கூட அவர்கள் பேசவில்லை. ‘வெவ்வேறு ஆசாமிகள் போல் இருக்கிறது’ என்று நான் முடிவு செய்தேன்.

“கீழே அப்படியே படுத்துக் கொண்டு விடு. இன்னும் ஆட்கள் வந்தால் படுக்க முடியாது” என்று சொல்லிவிட்டு மூர்த்தி மேல் தளத்தில் ஏறிப் படுத்துக் கொண்டு குறட்டை விட்டுத் தூங்கினான். ஆனால் எனக்குப் படுக்கப் பிடிக்கவில்லை. தூக்கமும் வரவில்லை. என்னை அப்படிக் கொட்டுக் கொட்டென்று விழித்திருக்கச் செய்ததற்கு வேறொரு காரணமும் இருந்தது. அவர்கள் இருவரும் அதே நிலையில் இருந்தது தான் அது.

அது என்னவோ சந்தேகம் தட்டியது. அந்தப் பெண்ணைப் பார்த்து நான், “எங்கே போகிறாய்?” என்று கேட்டேன். அவள் பதிலுக்கு அழுது வழிந்த குரலில் கன்னடத்தில் ஏதோ சொன்னாள். என்ன சொன்னாள் என்பது எனக்குப் புரியவில்லை. “தனியாகவா போகிறாய்?” என்று அர்த்தமில்லாமல் கேட்டு வைத்தேன். அதற்கும் அவள் ஏதோ உளறிக் கொட்டினாள். அவனைப் பார்த்தால் தமிழன் போலவே எனக்குப் பட்டது. ஆனாலும் எங்கள் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்தவன், ஏனோ வாயே திறக்கவில்லை.

என்னதான் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாலும் நள்ளிரவு சமயத்தில் அறியாமலே என்னை ஓர் அசத்தல் அசத்தி விட்டது. ஆசனத்தில் சாய்ந்தவாறே நான் கண்களை மூடியிருக்கிறேன். ‘டடக், டடக், டடக், டடக்’ என்று சக்கரங்கள் தண்டவாளத்தில் உருளும் சப்தம் மட்டும் கொஞ்சம் நேரம் வரை என் செவிகளில் விழுந்து கொண்டிருந்தது. பின்னர் அதுவும் மெல்ல மறைந்து விட்டது. எத்தனை நேரம் நான் தூங்கி விட்டேனோ தெரியவில்லை. சப்தம் போட்ட பேச்சுக்குரல், அழுகையொலி எல்லாமாக என்னைத் திடுக்கிட்டு எழ வைத்தன. வண்டி ஓடிக் கொண்டிருக்க, அந்தப் பெண்மணி கன்னடத்தில் ஏதேதோ கடல்மடை திறந்து விட்டது போல் சொல்லிப் பிரலாபித்து அழுது கொண்டிருந்தாள். மூர்த்தி கீழே ஓரத்தில் தூங்கி விழுந்த கண்களுடன் அவள் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். எனக்கு எல்லாம் விசித்திரமாகவும் குழப்பமாகவும் இருந்தன. ஆவலும் சந்தேகமும் பின்ன, “என்ன விசேஷம்” என்று நான் வினவினேன்.

“வண்டியில் ஏறி உட்கார்ந்த உடனேயே சொல்ல மாட்டாளோ...? அயோக்கியன்!” என்று அவள் பிரலாபித்து முடித்ததும் மூர்த்தி தானாகவே கூறிக் கொண்டான். பிறகு என்னிடம் அவன் தெரிவித்த விவரம் இதுதான்:

அந்தப் பெண் எழுதப் படிக்கத் தெரியாத கிராமவாசி. அவள் புருஷனுக்கு மைசூரை அடுத்த கிராமம் ஒன்றில் பட்டு நெசவு போடும் தறிகள் சொந்தத்தில் இருக்கின்றனவாம். மூன்று மாதம் முன்பு அங்கிருந்து ஐம்பது அறுபது மைல் தூரத்தில் உள்ள பிறந்த ஊருக்குப் பிரசவத்துக்காக வந்தாளாம். குழந்தை பிறந்து இறந்து விட்டதாம். திடீரென்று இரண்டு தினங்களுக்கு முன்னர், அவள் புருஷன் மாரடைப்பால் இறந்து விட்டதாகவும், உடனே புறப்பட்டு வரும்படியும் தந்தி கிடைத்ததாம். வந்த சமயம் அவள் தந்தை ஊர் விவகாரத்தில் சிக்கி விரோதக்காரர்களின் தாக்குதலால் பக்கத்து நகர ஆஸ்பத்திரியில் படுத்திருந்தானாம். அவள் என்ன செய்வாள்? எப்படியோ தன்னந்தனியே பக்கத்து ஊர் வந்து ரெயிலேறி இருக்கிறாள். தவறுதலாக அறியாமல் மைசூர் செல்லும் வண்டிக்குப் பதில் பெங்களூர் வண்டியில் ஏறி விட்டாள். கிராமத்தை விட்டு வெளி உலகம் தெரியாத பெண் தானே? அத்துடன் கஷ்டநிலை வேறு. ஊர் வந்து சேரும்வரை அவளுக்குத் தவறுதல் புலப்படவில்லை. இரவு நேரத்தில் அந்தப் பெரிய நகரத்தில் வந்ததும் அவளுக்குத் திக்குத் திசை புரியவில்லை. அந்த சமயத்தில் அவன் குறுக்கிட்டிருக்கிறான். பாவம், அவள் அவனை நம்பித் தன் கஷ்டங்களைத் தெரிவித்துச் சரியான வண்டிக்கு ஏற்றித் தன்னைச் சேர்த்துவிடக் கோரியிருக்கிறாள். அவள் அணிந்திருந்த ஆபரணங்கள், தோற்றம் எல்லாம் அவனை ஆசை வலைக்குள் வீழ்த்தி விடக் கூடியவனவாக இருந்திருக்கின்றன. திக்கற்ற அவள் நிலை, அறியாமை எல்லாம் அவனுக்குச் சாதகமாக இருக்கவே, தானும் மைசூர் போகப் போவதாகக் கூறித் தேற்றி அனுதாபப்படுபவன் போல நடித்து, கடத்திப் போக எண்ணியவனாகக் கன்னட நாட்டை விட்டுச் செல்லும் வேறு வண்டியில் தன்னுடன் ஏற்றிக் கொண்டு விட்டான். கொஞ்ச தூரம் வந்த பிறகு அவளுக்கு ஏதோ சந்தேகமாக இருந்ததாம். என்னிடம் தன்னுடைய ஊருக்கு வண்டி எப்போது போகும் என்று கேட்டாளாம்! நானும் தூங்கி விடவே அவன் கூறிய பதில் அவளுக்குச் சமாதானமாகத் தொனிக்கவில்லையாம். அவனும் என்ன நினைத்தானோ என்னவோ, சற்று முன் அவள் ஸ்நான அறைக்குள் சென்றிருந்த போது அவன் அவள் பெட்டி சகிதம், வண்டி நிற்கும் சமயம் சரியாக இருந்திருக்கவே, இறங்கி விட்டான். திரும்பி அவள் வந்து பார்த்த போது அவன் இருக்கவில்லை. அவள் குழப்பம் தீர்ந்து, பெட்டியைக் காணவில்லை என்று அறிவதற்குள் வண்டி ஓட ஆரம்பித்துவிட்டது. அப்புறந்தான் சத்தம் போட்டு மூர்த்தியை எழுப்பியிருக்கிறாள்.

அடுத்த தடவை வண்டி நின்றதும் மூர்த்தி அவளுடன் இறங்கிப் போய் விவரங்களைத் தெரிவித்து அவளை போலீஸாரிடம் ஒப்பித்து விட்டு வந்தான். என் மனம் எல்லாவற்றையும் மறந்து அவள் பால் இளகிவிட்டது. சுய தைரியமும், வெளி உலகில் பழகிய அனுபவம் இல்லாத பெண்கள் திக்கற்ற நிலையில் சிக்கிவிட்டால் நயவஞ்சக வலையைக் கொண்டு வீழ்த்தி விடக் கயவர்கள் காத்திருக்கிறார்களே?

“பாஷை தெரியவில்லை. போயும் போயும் ஒரு போக்கிரியிடமா அகப்பட்டுக் கொள்ள வேண்டும்? நிர்க்கதியான அவளுடைய கஷ்டத்தைக் கேட்டாலே யாருக்கும் மனம் இளகுமே? எப்படித்தான் மோசடி செய்ய அவன் துணிந்தானோ? கண்டவர்களையும் நம்பக் கூடாது என்று சொல்வதும் சரியாக இருக்கிறது. எனக்கு அப்போதே சந்தேகம் தட்டியது” என்று என்னை அறியாமலேயே மனம்விட்டுச் சொல்லிக் கொண்டு போனேன் நான்.

இத்தனை நீளமாக முணுமுணுக்காமல் என் இயற்கையான போக்கிலே அவன் முன்னிலையில் நான் பேசியது அதுதான் முதல் தடவை.

“அவன் போயே போய்விட்டான். இனிமேல் எங்கே அகப்படப் போகிறான்? பெட்டியில் நூறு ருபாய் போலப் பணம் வைத்திருக்கிறாளாம். மூன்றாம் வகுப்பானால் கூடக் கூட்டம் அதிகம். யாரேனும் எப்படியேனும் அந்தப் பெண்ணை விசாரிக்க நேர்ந்து உளவு தெரிந்துவிடும் என்று முன் யோசனையுடன் தான் இங்கு யாருமில்லாத வண்டியில் எறியிருக்கிறான், திருடன். கவிழ்க்கும் எண்ணமும் மோசடியுமே எங்கும் மலிந்து விட்டன. முதலிலேயே சந்தேகம் தோன்றியவுடனேயே ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று கேட்கிறேன், பார்த்தவுடனேயே யாரையும் எப்படி நம்புவது என்ற ஞானோதயம் திடீரென அப்போது குறுக்கிட்டதாம். ஏன் அப்படிச் சொன்னாள் என்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை என்னையும் அவன் கோஷ்டியில் சேர்த்து விட்டாளோ என்னவோ?” என்று கூறிய மூர்த்தி கலகலவென ஒலிக்க நகைத்தான்.

அவனுக்கு என்ன புரிந்ததோ புரியவில்லையோ. எனக்கு அவன் கூறியது எதுவும் அப்போது மண்டையில் பிடிபடவில்லை. இன்னொரு விஷயம் என் நினைவில் அப்போது உறுத்திக் கொண்டிருந்தது. நாங்கள் இருவர் மட்டுந்தான் அப்போது அந்தப் பெட்டியில் இருந்தோம்! நானும் கிட்டத்தட்ட அவள் போன்ற நிலையில் தான் இருக்கிறேன். அநுபவமில்லாதவள். பழக்கமில்லாத பிராந்தியத்தில் பிரயாணம் செய்கிறேன். மூர்த்தியை எனக்கு நன்றாகத் தெரியாது. அவளைப் போல இவன் என்னை ஏமாற்றி மோசடி ஏதும் செய்ய முடியாது. ஆனால்... ஆனால்... நினைக்கும் போதே மனம் பயத்தால் துடித்தது. அவனோ இளைஞன். நானோ பருவ மங்கை... இதோ அருகில் தான் உட்கார்ந்திருக்கிறான். அப்படியே நெருங்கி என் கையைப் பிடித்தானானால்?... நான் என்ன செய்வேன்? பொறி ஒன்றில் நானே வலிய வந்து அகப்பட்டுக் கொண்டதைப் போல உணர்ந்தேன். என்னுடைய சிந்தனைக்குள் புகுந்து என்னை இன்பங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக்கிக் கொண்டிருந்த ‘அவர்’ நினைவு, அத்தையகத்து ஏளனம், அப்பாவின் கஷ்ட நிலை எல்லாம் என்னை விட்டு ஓடிவிட்டன. எப்படி அங்கே விட்டு நாசுக்காகத் தப்புவது என்பதிலேயே சிந்தனை லயித்தது. ‘என்னை வேறு பெட்டியில் கொண்டு விட்டு விடுங்கள்’ என்று திடீரென்று நான் கூறினால் அவன் என்ன நினைப்பான்?

என்ன நினைப்பான் என்ன? உண்மையில் குற்றமுள்ள நெஞ்சானால் ‘ஏன் எதற்கு?’ என்று ஆட்சேபிப்பான். இல்லாவிட்டால்...

இல்லாவிட்டால் மட்டும் என்ன செய்வான்?

‘சீ அசட்டுத்தனம். அப்படிக் கேட்கக் கூடாது. உண்மையில் நான் பயந்த மாதிரியாகக் காண்பித்துக் கொள்வதே ஆபத்துத்தான். அத்தகைய துடுக்குத்தனம் காண்பித்தானானால் அபாய அறிவிப்புச் சங்கிலி இருக்கவே இருக்கிறது’ என்று சற்றுத் தைரியம் கொண்டு என்னை நானே பலப்படுத்திக் கொண்டேன். “என்ன சுசீலா? அவளைப் பற்றிய சிந்தனையில் ஒரேயடியாய் ஆழ்ந்து விட்டாற் போல் இருக்கிறது?” என்ற மூர்த்தியின் சிரிப்பொலி என்னைச் சிந்தனை உலகிலிருந்து மீட்டது.

நான் எதுவும் பேசும் முன் அவனாகவே பேசலானான்.

“இம்மாதிரி சில பேர்கள் இருப்பதனால் ஆண் சமூகத்தையே எல்லோரும் சந்தேகிக்கும்படி இருக்கிறது. அவனுடைய கௌரவமான நடையும் பாவனையும் மோசடி செய்பவனாகவா காட்டின? ஏற்கனவே நம் ஹிந்து சமூகத்தில் முன்னுக்கு வரும் பெண்கள் குறைவு. அதிலும் ஆண்கள் அவர்களைச் சகோதரிகள் என்று சமமாக எண்ணி மரியாதை கொடுக்காமல் கீழ்த்தரமாக நினைப்பதால் அவர்களுக்குக் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் தைரியமும் ஓடிப் போய் விடுகிறது. நான் எவ்வளவோ முறைகள் கவனித்திருக்கிறேன்? பஸ்ஸிலோ, மற்றும் பொது இடங்களிலே சற்று நன்றாக ஆடையணிந்து கவர்ச்சிகரமாகப் பெண்கள் யாரேனும் தென்பட்டுவிட்டால், பெண்கள் முன்னேற வேண்டும், முன்னேற வேண்டும் என்று மேடைப் பிரசங்கம் செய்பவர்கள் கூட, ஏதோ காணாது கண்ட அதிசயம் போல் வெறித்துப் பார்ப்பார்கள். சகஜமாக நினைப்பதில்லை. இத்தனை நாகரிகம் வந்துங்கூட, கூட்டங்களிலோ, க்யூ வரிசையிலோ பெண்மணி ஒருத்தி நிற்க வேண்டி வந்தால் மரியாதையில்லாமல் இடித்துக் கொண்டு போகும் ஆண்களை நான்பார்த்திருக்கிறேன். உண்மையில் பெண்கள் முன்னேற வேண்டுமானால், எல்லாத் துறைகளில்ம் தங்கள் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால், ஆண்கள் தங்களைத் தாங்களே சீர்திருத்திக் கொள்ள வேண்டும். கெட்ட எண்ணமும், மரியாதை தவறி நடப்பதும் அகல வேண்டும்” என்றெல்லாம் மேடை பிரசங்கி தோற்று விடுவான் போல ஆவேசமாகக் கூறிக் கொண்டு போனான்.

என் சந்தேகத் திரை படீரெனக் கிழிந்தது. மூர்த்தியின் தூய இருதயத்தை நான் தெளிவாகக் கண்டேன். அடாடா, மனித உள்ளங்கள் தாம் எத்தனை விசித்திரமானவை! நான் அவன் சொல்லிலும் செயலிலும் சகஜ மனப்பான்மையைக் காட்டுவதைச் சந்தேகித்து இந்தக் குறுகிய நேரத்துக்குள் என்னவெல்லாம் எண்ணிவிட்டேன்! அத்தை எனக்கு உயர் வகுப்புச் சௌகரியம் தேவையில்லை என்று சொல்லியும் அவன் கேட்காமலே இருந்ததன் காரணத்தைக் கூட இப்போது வேறு வழியிலே கண்டுபிடித்தேனே; அவன் அந்தத் துர்பாக்கியவதியை எக்காரணம் கொண்டு இந்த வண்டியில் ஏற்றினானோ அது போல இவனும் நினைத்து விட்டானோ என்றல்லவா கலங்கியது பாழாய்ப் போன மனசு? அதுவும் அந்தக் காரணத்தைத் தானாகவே அவன் எனக்கு கண்டுபிடித்துச் சொன்ன போது என் சந்தேகம் ஊர்ஜிதம் ஆகிவிட்டது போல் பீதி கொண்டேனே!

ஆனால் அதே சமயம் அவன் என் மனத்திலுள்ளபடியே சற்றும் சிந்திக்கவில்லை என்றும், நிர்மலமாக நடந்து கொள்ளாத ஆண் சமூகத்தினிடம் அவன் சிந்தனை லயித்திருக்கிறது என்றும் இப்போதல்லவா தெரிகிறது? இருவர் மனப்பான்மைக்கும் எத்தனை வித்தியாசம், மலைக்கும் மடுவுக்கும் போல, சீர்படாத குறுகிய என் நோக்கு எங்கே? எல்லாவற்றையும் பரந்த நோக்குடன் பார்க்க்ம் அவன் சீரிய மனப்பான்மை எங்கே?

உள்ளூறக் குன்றிவிட்ட எனக்கு அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துப் பேசவே முதலில் அவமானமாக இருந்தது. தெளிவு கொண்டு பின், “ஆமாம், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை” என்று ஆமோதித்தேன்.

என் மனோவேகம் எப்படித்தான் சென்றது என்று நானே அறியவில்லை. என் கணவர், கிராமத்துப் பெண்ணின் அர்த்தமற்ற சங்கோஜத்தையும் அளவுக்கு மீறிய அடக்கத்தையும் வெறுப்பவர். இத்தகைய மனோபாவந்தான் கொண்டிருப்பாரோ என்று மகிழ்வுடன் ஆராய ஆரம்பித்து விட்டேன்.

இந்நேரத்தில் நான் இப்படி மூர்த்தியுடன் பிரயாணம் செய்கிறேன். இந்த விஷயம் பற்றிப் பேசுகிறோம் என்று அறிந்தால் அவர் பெருமை கொள்வாரா?

மறுநாள் புங்கனூருக்கு எங்கள் வண்டி வந்த போது அப்பா என்னை அழைத்துப் போக ரெயில் நிலையத்திற்கு வந்திருக்கவில்லை. அத்திம்பேரின் கடிதம் அவருக்கு நாங்கள் போய்ச் சேர்ந்த அன்ற் கிடைக்கும் போது, நான் வருகிறேன் என்று முன்கூட்டியே அவர் எப்படி அறிந்திருக்க முடியும்?
----------

1.6 தளிர்

அப்பாவை ஸ்டேஷனில் காணாமற் போகவே நான் ஒரு விநாடி வெலவெலத்துப் போய்விட்டேன். கடிதம் போய்ச் சேர்ந்திருக்காது என்ற நினைப்பே எழவில்லை. ‘உடம்பு மிகவும் அசௌகரியமாக இருக்குமோ ஒருவேளை? அப்படியானால் சுந்துவாவது வந்து நிற்பானே; ஏன் அவனையும் காணோம்?’ என்று ஒரு கணத்துக்குள் மனம் எண்ணாதவெல்லாம் எண்ணிவிட்டது.

வண்டி புங்கனூரில் இரண்டு நிமிஷத்திற்கு மேல் நிற்காது. நீண்ட பிரயாணக் களைப்புடன் எற்பட்டிருக்கும் இப்போதைய கவலையும் என்னைக் கலக்க “ஒருவரும் வரவில்லையே!” என்று கையைப் பிசைந்தேன். தலையை ஜன்னலுக்கு வெளியே நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி, “நன்றாகப் பார்த்தாயா? பயப்படாமல் நிதானமாகப் பார். யாரும் வரவில்லையானால், நானும் இறங்கி விடுகிறேன். அடுத்த வண்டிக்குப் போனால் போகிறது” என்றான்.

‘அவனுக்கு எதற்கு என்னால் வீண் சிரமம்? ஊர் வரை வந்தாயிற்று. எனக்குத் தெரியாத இடமில்லையே!’ என்று எண்ணிய நான், “வேண்டாம், நானே ஒரு வண்டியை வைத்துக் கொண்டு வீட்டுக்குப் போய் விடுவேன்” என்றேன்.

“அப்படியானால் உங்கள் ஊருக்குள் நான் வரவேண்டாம் என்கிறாயாக்கும்?” என்று முறுவலித்தான் அவன்.

நான் அவனுக்குச் சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நினைத்துச் சொன்னதை அவன் அப்படி வித்தியாசமாக நினைத்துப் பேசியது எனக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது.

“ஓ! அப்படி நான் நினைக்கவில்லை. எங்கள் ஊருக்குள்ளும் வீட்டுக்கும் நீங்கள் விஜயம் செய்வதில் எனக்கு மிகவும் சந்தோஷம்” என்று பதிலுக்கு நானும் நகைத்தேன். அவசர அவசரமாகச் சாமான்களைக் கீழே தள்ளினோம். அந்தப் பாழாய்ப் போன ஊரில் சாமான்களைக் கொண்டு செல்ல ஒரு கூலி கூடக் கிடையாது. ஸ்டேஷன் கட்டிடத்திற்கு வெளியே நாலைந்து குதிரை வண்டிகள் மட்டும் நிற்கும். “இருங்கள்” என்று மூர்த்தியிடம் கூறிவிட்டு நான் வெளியே நின்ற வண்டிக்காரனை அழைத்து வரப்போன போது ஸ்டேஷன் மாஸ்டர் என்னைப் பார்த்து விட்டுப் புன்னகை செய்தார்.

பிறகு, “ஏம்மா அப்பா வரவில்லை? முதன் முதலில் பெண்ணும் மாப்பிள்ளையும் ஊரிலிருந்து வரும்போது இப்படியா அலட்சியமாக இருப்பது?” என்று கேட்டார் அந்த மனிதர்! மூர்த்தி மாப்பிள்ளையாகத்தான் இருக்க வேண்டுமென்று எவ்வளவு சுளுவாக அவர் ஊகித்து விட்டார்!

‘அவர் மாப்பிள்ளை அல்ல!’ என்று கூறிவிட என் வாய் துடித்தது. ஆனால் பின் அவன் யார் என்பார்; வெறித்துப் பார்ப்பார். இந்த அநாவசிய வளர்த்தலுக்கு இடம் வைத்துக் கொள்வதைக் காட்டிலும் பேசாமல் போவது உத்தமம் என்று மௌனமாக நான் வண்டிக்காரனை அழைத்து வந்தேன். அவனுக்குச் சாமான்களைக் காட்டிவிட்டு நான் மூர்த்தியுடன் ஸ்டேஷன் கட்டிடத்தை விட்டு வெளியேறினேன். அவன் கொடுத்த நாகை டிக்கெட்டுக்கு விவரம் கேட்ட ஸ்டேஷன் மாஸ்டர், நாங்கள் சற்று அப்பால் வந்ததும், புக்கிங் கிளார்க் சுந்தரேசனிடம், “வைத்தியநாதையர் மாப்பிள்ளை கல்யாணத்தின் போது மாநிறமாக இருந்தாற் போல் இருந்ததே; இப்போது சிவப்பாக இருப்பது போலத் தோன்றுகிறதே! ஏனையா, என் கண் தான் கோளாறா! அல்லது கல்யாணம் ஆன பிறகு பிள்ளையாண்டான் சிவந்துவிட்டானா?” என்று தம் ஹாஸ்யத்திற்குத் தாமே நகைத்துக் கொண்டு அபிப்பிராயம் கேட்டது எனக்கு மட்டுமின்றி, மூர்த்திக்கும் காதில் விழுந்து விட்டது. ‘களுக்’ என்று அவனுக்குச் சிர்ப்புக் கூட வந்துவிட்டது. எனக்கோ வெட்கம், கோபம், அவமானம் எல்லாம் மேலிட்டன. ‘உங்கள் ஊர் ஜனங்கள் என்ன இப்படி இருக்கிறார்கள்?’ என்று அவன் கேட்டு நகைப்பது போல இருந்தது. ஏதோ குற்றம் செய்துவிட்டவளைப் போல நான் வண்டியில் முதலில் ஏறிக் கொண்டேன்.

‘ஜல், ஜல்’ என்று அக்கிரகார வீதியில் குதிரை வண்டிச் சத்தம் கேட்டு விட்டால் போதும், யார் வீட்டிற்கு யார் வருகிறார்கள் என்ற சங்கதிகளை ஆவலாக அறியும் பொருட்டு அக்கிரகார மகாஜனங்கள் அவ்வளவு பேரும் தெரு வாசற்படியில் ஏதோ ஊர்வலம் காணுவதைப் போல வந்து நிற்பதும், பின் வண்டி சென்றதும் ஒவ்வொருவரும் தத்தம் அண்டை அயலாருடன் கூடி எதற்காக, யார், எப்படி வந்திருக்கிறார்கள் என்பன போன்ற விவரங்களைக் குறித்து விவாதம் செய்துவிட்டுத்தான் உள்ளே செல்வார்கள் என்பதும் என்னை இன்னும் கலக்கும்படி நினைவுக்கு வந்து தொலைத்தன.

மூர்த்தி வேறு, வண்டி தெருவுக்குள் நுழைந்ததுமே, “இவ்வளவு பேர்கள் நம் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்பார்கள் என்று நான் எண்ணவில்லை, சுசீலா! இரட்டைச் சாரி வீடுகளிலும் ஜனங்கள் அமோகமாக வரவேற்புக் கொடுக்கிறார்கள்” என்று எனக்குத் தகவல் கொடுத்தான். நானே பின்புறம் உட்கார்ந்திருந்தால் அவ்வளவு தெரிந்த முகங்களையும் பார்க்க நேர்ந்து வழியிலேயே அவர்களிடையே குசல ப்ரச்னங்களுக்குப் பதில் கொடுக்கவும் வேண்டி வரும்! அதற்கு இது தேவலைதான்.

வீட்டு வாசலில் வண்டி நின்றது. அப்பாவுக்கு அன்று ஏதோ காரணம் கொண்டு காரியாலய விடுமுறை என்று எண்ணுகிறேன். திண்ணையில் உள்ள பழைய சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு சுந்துவுக்குக் கணக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தவர், வண்டி நின்றதைப் பார்த்து ஆச்சரியத்துடன் வந்தார். பின்னால் ஜகது, அம்மா எல்லோருமே வண்டிச் சத்தம் கேட்டு வந்து விட்டார்கள். பக்கத்து வீட்டில் ஜானி வந்திருக்கிறாள் போல் இருக்கிறது. அவள் வேறு என் கண்களில் முதல் முதலாகத் தட்டுப்பட்டு விட்டாள். அவள் இதழ்களில் இலங்கிய கேலியும் குறும்பும் கலந்த அர்த்த புஷ்டியான நகை, நான் ‘அவருடன்’ வந்திருப்பதாக அவள் எண்ணியிருப்பதை எனக்கு அறிவித்தது!

“வருகிறோம் என்று கடிதம் போடவில்லையே! திடீரென்று புறப்பட்டீர்களா?” என்று அப்பா கேட்டார்.

அம்மாவும் ஜகதுவும், “இந்தப் பிள்ளையாண்டான் யார்?” என்று என்னைக் கேட்காமல் கேட்டார்கள். “உள்ளே வாருங்கள், விவரமாகக் கூறுகிறேன்” என்று ஜாடையாக நான் விடுவிடென்று உள்ளே நுழைந்தேன். மூர்த்தியை அப்பா திண்ணையிலேயே ஐக்கியமாக்கிக் கொண்டு சங்கதிகளை விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.

“ஹேமாவுக்கு அத்தை பிள்ளையம்மா இவன். நாகப்பட்டினத்திலிருந்து தங்கையைப் பிரசவத்துக்கு அழைத்து வரப்போவதாக முந்தாநாள் வந்து சொன்னான். தற்சமயம் என்னைக் கொண்டு விட வருவதற்கு யாரும் இல்லை என்று இவனுடன் அனுப்பினார்கள். கடிதம் போட்டிருக்கிறதென்று அத்தை சொன்னாளே? அப்பா ஸ்டேஷனுக்கு வந்து அழைத்துப் போவார் என்று நான் நினைத்திருந்தேன். யாருமே வராதது எனக்கு எத்தனை கவலையாகிவிட்டது தெரியுமா அம்மா? அப்பாவுக்குத்தான் உடம்பு சுகமில்லையோ என்று பயந்துவிட்டேன்” என்று நான் மடமடவென்று ஒரே மூச்சில் கூறி முடித்தேன்.

“ஏன், உன் பாட்டிக்கு என்னவாம், உன்னை அழைத்து வர முடியாமல்? இந்த மாதிரி அறிந்த பேர் பின்னும் அறியாத பேர் பின்னும் அனுப்ப வேண்டுமா?” என்றாள் அம்மா. எனக்கு அவள் அபிப்பிராயம் வேதனையைக் கொடுத்தது.

“இவன் ரொம்பத் தங்கமானவன் அம்மா. இவனை விட வேறு நல்ல துணை கிடைக்கவே கிடைக்காது. மிகவும் சரளமாகப் பழகும் வெகுளியான சுபாவம்” என்று அழுத்தம் திருத்தமாக நான் தெரிவித்ததைக் கண்டு ஒரு கணம் ஜகதுவும் அம்மாவும் அசந்து போய்விட்டார்கள்.

அம்மா வெறுப்பை மாற்றிக் கொள்ளாமலேயே, “போதும்! உன் அத்தையின் காரியம் உனக்குத்தான் பிடிக்கும். என்ன செய்தாலும் மெச்சிக்கொள்ள! ஏதோ மதிப்புக்கு ஒரு வார்த்தை சொன்னதை வைத்துக் கொண்டு குதி போட்டுக் கொண்டு ஓடினாயே?” என்று இடித்தது மல்லாமல் அத்தையின் பேரிலுள்ள வெறுப்பால் மூர்த்தியையும் மட்டமாக எடை போட்டது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. “நான் ஒன்றும் மெச்சிக் கொள்ளவில்லை. உங்களுக்குப் பிடிக்காமல் நான் போனது தப்பு தப்பு என்று ஆயிரம் தடவை சொன்னால் கூடப் போதாது. அத்தையாம் அத்தை! ஆனால் இந்தப் பிள்ளையுடன் அனுப்பியது தவறு என்று மாத்திரம் நினைக்காதேயுங்கள். இவன் மிகவும் நல்லவன்” என்றேன் நான். மூர்த்தியின் கபடமற்ற தனத்தை அதற்கு மேல் அவர்களிடம் எப்படிச் சொல்வது என்று அப்போது எனக்குப் புரியவில்லை.

அப்பாவுடன் சாப்பிட உட்கார்ந்த மூர்த்தி, “உங்கள் பெண் என்ன சொன்னாள் தெரியுமா? நீங்கள் வரவேண்டாம், நானே வண்டி வைத்துக் கொண்டு போய் விடுகிறேன் என்றாள். நான் அப்படியே போயிருந்தால் தேவலை என்று அவள் உள்ளூர நினைத்துத்தான் கூறியிருக்கிறாள் என்பது எனக்கு அப்புறந்தான் தெரிந்தது! ஏனென்றால் நான் யாரென்று தெரிந்தால் இந்த ஊர்க்காரர்கள் என்னை விரட்டி அடித்திருப்பார்கள் போல் இருக்கிறது” என்று நகைத்தான். அப்பா அவன் பேச்சை சட்டென்று புரிந்து கொள்ளாமல் விழித்துவிட்டு, “என்ன சொல்லுகிறாய்?” என்றார்.

மூர்த்தி என்னை நோக்கிவிட்டுப் பின்னும் சிரித்தான்.

உதடுகள் துடிக்க நான், “ஆமாம் அப்பா! வண்டியை விட்டு இறங்கினதுமே ஸ்டேஷன் மாஸ்டரிலிருந்து வண்டிக்கார முனியன் வரை பெண்ணும் மாப்பிள்ளையும் முதல் முதலில் வரும் போது நீங்கள் ஸ்டேஷனுக்கு ஏன் வரவில்லை என்று கேட்டால்... இந்த ஊர்க்காரர்களுக்கு கொஞ்சமும் விவஸ்தையே கிடையாது!” என்றேன்.

சூதுவாது ஏதும் தோன்றாத வெள்ளை உள்ளம் படைத்த என் தந்தைக்கு இது பெரிய ஹாஸ்யமாக இருந்தது. “அப்படியா கேட்டார்கள்” என்று கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.

உள்ளே வந்த என்னிடம் ஜகது, “இப்படி ஓர் அந்நிய புருஷனுடன் நான் சிரித்துப் பேசினாலோ அல்லது தனி வழிப் பிரயாணம் வந்ததாகத் தெரிந்தாலோ என்னை வீட்டு வாயிற்படி ஏற்ற மாட்டார்கள். என்னதான் நாகரிகம், நாகரிகம் என்றாலும் ஒரு வரையறை வேண்டியிருக்கிறது. ஊர்க்காரர்கள் கேட்பது எப்படித் தப்பாகும்? கல்யாணம் சமீபத்தில் ஆகியிருக்கிறது. பெண்ணும் மாப்பிள்ளையும் வருகிறார்கள் என்று தான் எண்ணிக் கொள்வார்கள்” என்றாள்.

கிராமத்தைத் தவிர நாலு படித்த மனிதர்களுடன் பழகி அறியாதவள் தானே அவள்? கிராமத்தோடு கிராமமாக வயல்வெளியைக் கட்டிக் கொண்டு கிடக்கும் அத்திம்பேருடைய குறுகிய மனப்பண்பு அவளுக்கு ஒத்து வருகிறது. நான் அப்படியா?

ஆறு வயசுக் குழந்தையும் எட்டு வயசுக் குழந்தையும் அப்பா அம்மா விளையாட்டு விளையாடும் போது தாங்கள் குழந்தைகள் என்பதையே முற்றும் மறந்து விடுவார்கள். அப்பா அம்மாவை ‘ஆபீஸுக்கு நேரமாச்சு’ என்று விரட்டுவது போலவே அவன் விரட்டுவான். அம்மா நிஜமாக அப்பாவைக் கோபித்துக் கொள்வது தோற்று விடும்படி அவ்வளவு அபாரமாக அம்மாவாக இருக்கும் குழந்தை கோபித்துக் கொள்வாள். பெரியவர்களாகும் ஆசை, அவர்களுக்கு குழந்தை நினைப்பையே மறைத்து விடும்.

இந்தக் குழந்தைகள் நிலையில் தான் வாழ்க்கையில் இன்னும் முதற்படி கூட எடுத்து வைத்திராத நான் இருந்தேன். அக்கா, அம்மா இவர்களை விட மிகவும் பதம்பட்ட மனமும் நாகரிகப் பண்பாடும் அடைந்து விட்டதாக எண்ணி இறுமாப்பு கொண்டிருந்தேன் என்றால் மிகையாகாது. அதுவும் மூர்த்தியுடன் ஒரு நாளைப் பழக்கத்திற்குப் பிறகு என் அறிவு பின்னும் அதிகமாகி விட்டது போலும். புதுமனிதர்கள் சங்கத்தில் பழகும் மெருகு பெற்று விட்டேன் போலும் பெருமை கொண்டிருந்தேன். எனவே, ஜகதுவின் அபிப்பிராயம் தவறு, பெண்கள் முன்னேற்றம் என்ற ஆசையால் அவள் மனம் விரிவடைய வேண்டும் என்று அவளுக்கு உறைக்கும்படி, அவளை மடக்கி நான் வாயாடினேன்.

“உன்னைப் போல் இப்படி நாமே நம் அறிவையும் ஆற்றலையும் பயந்து பயந்து குறுக்கிக் கொண்டால் எப்படியடி பெண்கள் முன்னேற முடியும்? நாலு பேருடன் மனம் விட்டுப் பழகி, நாலு புது விஷயங்களை அறிந்து கொள்வதில் என்ன தப்பு இருக்கிறது? அந்நிய புருஷனுடன் பேசுவதே ஆபத்து என்ற கெடுதலான முறையில் ஏன் நினைக்க வேண்டும்? உங்களுக்கெல்லாம் இந்தக் குதர்க்க புத்திதான் முன்னுக்கு வரும் போல் இருக்கிறது! எங்கள் வீட்டில் எல்லாம் இப்படி இல்லையம்மா. எல்லோருடனும் சகஜமாகப் பழகுவதை வித்தியாசமாக நினைக்க மாட்டார்கள். அதுவும் அவருக்கு எடுத்ததற்கெல்லாம் அடுப்பாங்கரையில் போய் ஒளிந்து கொண்டால் பிடிக்கவே பிடிக்காதாம்!” என்று விடுவிடென்று உணர்ச்சி வேகத்தில் அவர் சொன்னதை எல்லாம் உளறிவிட்டேன்.

அவள் ஒரேயடியாக மலைத்து விட்டாள்.

“அடியம்மா! இப்போதே என்னவெல்லாம் பேசுகிறாள் இவள்? அவருக்கு அப்படி இருந்தால் பிடிக்காது, இப்படி இருந்தால் பிடிக்காது என்று அதற்குள் என்னவெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாள்?” என்று கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அதிசயித்தாள்.

அத்துடன் நான் விட்டேனா? அம்மாவிடம் அத்தை வீட்டு சம்பிரமங்களையும் பாட்டி கூறிய கசப்பு மொழிகளையும் ஓர் அட்சரம் விடாமல் தெரிவித்து விட்டு, “ஏனம்மா, போயும் போயும் பணத்திற்கு அவர்களிடமா எழுத வேண்டும்? எங்கள் வீட்டில் தான் அது வேண்டாம், இது வேண்டாம் என்று கூறியிருக்கிறார்களே. நீங்கள் அத்தையிடமிருந்து எதையும் பெற்றுக் கொண்டு என்னைக் கொண்டு விட வேண்டாம். அதை விட நான் ஒன்றும் இல்லாமலே போய்க் கொள்வேன். அவர்கள் எதுவும் நினைத்துக் கொள்ள மாட்டார்கள்!” என்று எல்லாம் தெரிந்த அநுபவசாலியைப் போலப் பேசினேன்.

இவைகளுக்குப் பலன் கை மேலேயே உள்ளது என்பதை அப்போது நான் அறியவில்லையே!

“அவர்களிடத்தில் யார் தானம் கேட்டார்கள்? சமயத்தில் கொடுத்தால் நாளைக்கு அப்பா ரிடையர் ஆனவுடனே ‘பிராவிடண்ட் பண்டு’ பணம் வரும்; வட்டியும் முதலுமாக ஒரு சல்லிக்காசு மிச்சம் வைக்காமல் விட்டெறிந்து விடப் போகிறோம். உறவு மனுஷர் செல்வாக்காக இருந்தால் ஒரு சமயம், போது என்று ஒத்தாசை கேட்பது உலகத்தில் இல்லையா? நான் புடவை வாங்கிக் கொடுத்தால் அகலமில்லை, சரிகையில்லை என்று பாத்திரக்காரிக்குப் போட்டேன், கூட்டுகிறவளுக்குக் கொடுத்தேன் என்று முகத்திலடித்தாற் போல உன் அத்தை சொல்லுவாள். தங்கத்தின் கல்யாணத்தின் போது அப்படித்தான் நேருக்கு நேர் மட்டம் தட்டினாள். இப்போதுதான் ஆகட்டும், சுமங்கிலிப் பிரார்த்தனைக்கு வரச் சொல்லி ஆயிரம் தடவை வரிந்து வரிந்து எழுதச் சொன்னேனே! மதிப்பு வைத்து வந்தாளா உன் அத்தை? உன் பாட்டிக்கு என்னைச் சொல்லாவிட்டால் சாப்பிடுவது ஜெரிக்காது. அவர்களுக்கு அதே வழக்கம். அதே தொழில்” என்று அம்மா காரசாரமாகப் பேசியதுமன்றி, உன் அத்தை, உன் பாட்டி என்று அழுத்திக் கூறினாள். அங்கேயானால் பாட்டி, உன் அம்மா, உன் அப்பா என்றாள். இவர்களுக்கு நடுவே நான் இப்படியா அகப்பட்டுக் கொள்ள வேண்டும்? அநாதி காலம் தொட்டே இருக்கும் இந்த விரோத மனப்பான்மை காரணமில்லாமலே வளர்ந்து வரும் சக்தி வாய்ந்தது. இந்தச் சிக்கலைப் பிரிக்க பிரிக்க இன்னொருபுறம் தாறுமாறாக நமக்குத் தெரியாமலே பின்னிக் கொள்ளும் சக்தி வாய்ந்தது என்பதை அறிய எனக்கு இன்னும் அநுபவம் கிட்டவில்லையே!

“அத்தையிடமிருந்து இத்தனை நிஷ்டூரங்களைக் கட்டிக் கொண்டு வந்தாயாக்கும்?” என்றாள் ஜகது.

எனக்கு அந்தப் புடவைகளின் ஞாபகம் வந்தது. அவற்றை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்றிருந்த என் தயக்கம், அத்தை இரண்டாம் வகுப்புச் சீட்டுக்கு மட்டம் தட்டிய போது, ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தது. ‘அவள் அகங்காரத்துடன் அம்மா அளித்த விலையுயர்ந்த புடவையையே அலட்சியம் செய்யலாமானால், நான் நிராகரிக்கக் கூடாதா? சொன்னதெல்லாம் உறைந்திருக்கிறது. நானும் மழுங்குண்ணி மண் பொம்மையல்ல என்று தெரிந்து கொள்ளட்டுமே! இப்போது அவைகளை மூர்த்தியிடம் கொடுத்து விட்டால் என்ன? ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லித் தந்திரமாக அவைகளைத் தட்டிக் கழித்து விட வேண்டும். ஆனால் அதற்குள் இவர்களிடம் சமாசாரத்தைக் கூறிவிடக் கூடாது. முடித்து விட்டுச் சொல்லிக் கொள்ளலாம்’ என்று முடிவு செய்து கொண்டவளாக, மூர்த்தி திண்ணையில் இருக்கிறானா, அப்பாவும் கூட இருக்கிறாரா என்று அறிந்து கொள்ளும் பொருட்டு வாசற் பக்கம் வந்தேன்!

அவ்வமயம் தபால்காரன் வந்துவிட்டுப் போயிருக்கிறான் போல் இருக்கிறது.

புன்னகையுடன் ரேழியிலே எதிர்ப்பட்ட மூர்த்தி, “ஸ்ரீமதி சுசிலா ராமநாதனுக்குக் கடிதம் இருக்கிறது” என்றான் என்னைப் பார்த்து.

அவனிடமிருந்து சாய்ந்த கையெழுத்திலே அச்சுப் போலிருந்த மேல் விலாசத்தைத் தாங்கிய கடிதத்தைப் பெற்றுக் கொண்ட போது, ஆனந்த மிகுதியால் என் உள்ளத்துடன் உடலின் ஒவ்வோர் அணுவும் துடித்தது. நடுங்கிய கரங்களுடனும், ஒளி மிகுதியால் அசைவற்ற விழிகளுடனும் நான் கடிதத்தை வாங்கிக் கொண்டவள், அத்துடன் இன்னொரு கார்டும் வந்திருக்கிறது என்பதைக் கவனிக்கவில்லை. அவனாகவே, “இது, நீ வருவதைக் குறித்து மாமா எழுதியிருந்த கடிதம் போலிருக்கிறது” என்று கூறிவிட்டுக் கொடுத்தான். அவனிடம் கூற வந்த விஷயத்தை நான் அடியுடன் மறந்து விட்டேன்.

நான் சற்றும் எதிர்பாராத விதமாக கடிதம் ஆங்கிலத்தில் ‘டைப்’ செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு வரியிலும் கரை புரண்ட அவரது அன்புப் பிரவாகத்திலேயே ஊறியவளாக நின்று விட்ட எனக்கு, ஜகது வந்து எட்டிப் பார்த்து, “ஆபீஸ் கடுதாசி போலிருக்கிறதே! ஏதடி? எங்கிருந்து வந்திருக்கிறது?” என்று கேட்டதோ, நடையிலிருந்து மூர்த்தி, “ஐந்து மணி வண்டியில் கிளம்பலாம் என்றிருக்கிறேன். வண்டி ஒன்று வேண்டுமே” என்று கேட்டதோ கனவு உலகத்திலேயிருந்து கேட்பது போல் இருந்ததில் அதிசயம் இல்லையே! அத்தையைச் சொல்லப் போனேனே? இன்னும் கொஞ்சம் கூடிவிட்ட பெருமையில் கர்வம் தலைதூக்க, ஜகதுவின் அறியாமையை ஏளனம் பண்ணும் முறையிலே, “அடி மக்கு! டைப் அடித்திருந்தால் ஆபீஸ் கடிதமாக்கும்!” என்று புங்கனூர் எலிமெண்டரி பாடசாலையில் மூன்றாம் வகுப்புக்கு மேல் எட்டிப் பார்த்திராத அவளுக்கு துணைப் பாடங்கள் யாவையும் ஆங்கிலத்திலேயே படித்து வெற்றிகரமாக உயர்தரப் பள்ளிப் படிப்பை முடித்திருந்த நான் பட்டம் சூட்டினேன்.

பெட்டியைத் திறந்து விலை மதிப்பற்ற பொக்கிஷமாகிய அந்தக் கடிதத்தைப் பத்திரம் செய்யப் போன போது தான் புடவைகள் கண்களைக் கவர்ந்து கவனத்தில் நுழைந்தன. எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். அப்பா வெளியில் எங்காவது போயிருந்தாரோ என்னவோ, காணவில்லை. ஜகதுவும் முகத்தைச் சுளுக்கிக் கொண்டு பின்கட்டுக்குப் போய்விட்டாள். “அத்தை எனக்கு இரண்டு புடவைகளும், ஹேமாவுக்கு இரண்டும் வாங்கி வந்தாள். பேச்சு வாக்கில் என்னிடம் கொடுத்த போது நான் நாலையும் கவனியாமல் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு விட்டேன் போல் இருக்கிறது. இப்போதுதான் கவனித்தேன். நீங்கள் திரும்பிப் போவீர்கள் இல்லையா அங்கு? இதை தயவு செய்து கொண்டு கொடுத்து விடுகிறீர்களா?” என்று புடவைப் பொட்டலத்தை அவனிடம் நீட்டினேன்.

அவன் வாங்கிக் கொண்டு பிரித்துப் பார்த்தான். “நாலும் உனக்கே தான் வாங்கினாளோ என்னவோ” என்றான்.

“இல்லை, இல்லை. ஹேமாவுக்கு என்று சொன்னாளே” என்றேன் நான். அழுத்தம் திருத்தமாக.

“இம்மாதிரி புடவைகள் கூட அவள் உடுத்துகிறாளா என்ன! ஸில்க்கும் ஜார்ஜெட்டும் தவிர அவள் நூல் புடவைகள் உடுத்தியே நான் பார்த்ததில்லையே?” என்று அவன் முறுவல் செய்தான்.

என் முகத்தில் அசடு தட்டியிருக்க வேண்டும் என்று நான் ஊகித்துக் கொண்டாலும், வேண்டாத சுமை ஒன்று கழிந்தது என்று திரும்ப எத்தனித்தேன். அப்பா வெளியிலிருந்து வந்தார்.

“என்னது? புடவையா?” என்று கேட்டு அவர் அதைக் கைகளில் வாங்கு முன்னரே என் நெஞ்சம் குற்றமுள்ளதைப் போலக் குறுகுறுத்தது. தூண்டித் தூண்டி அவர் ஏதாவது கேட்டு, மூர்த்தி வாயை விட்டு விட்டால் குட்டு உடைந்து விடுமே என்ற பயத்துடன் நான் முந்திரிக் கொட்டை போல் முந்திக் கொண்டு, “ஒன்றுமில்லை அப்பா. அவர் தங்கைக்கு வாங்கிப் போகிறாராம்!” என்று துணிந்து ஒரு பொய்யை, எப்படித்தான் என் நாவில் வந்தது என்று அறியவில்லை, சொல்லிவிட்டேன்.

அதிகம் எனக்குப் பழக்கமும் சொந்தமும் உரிமையும் கொண்ட அப்பாவின் கேள்விகளுக்குப் பயந்து ஒரு நாள் பழக்கமுள்ள மூர்த்தியிடம் அதிக சுவாதீனம் கொண்டாடும் முறையில் ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் புகன்றது எனக்கே பிறகு எண்ணிப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.

அப்பா புடவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவன் என்னை விழிகள் அகலப் பார்த்தான். நான் என்ன காரணம் கொண்டு அவ்விதம் பொய் கூறினேன் என்று அவன் எப்படி ஊகித்துக் கொண்டிருக்க முடியும்? எப்படியோ பளுவை அவன் மீது சுமத்திவிட்டு நான் ஒன்றும் அறியாதவள் போல் உள்ளே வந்து விட்டேன்.

அவனும் குட்டை குழப்பவில்லை. சற்று நேரத்தில் கிளம்பிப் போய் விட்டான். அசட்டுத் துணிச்சலுடன் காரியம் செய்து விட்டேனே ஒழிய அந்த நிமிஷத்திலேயே மனம் நிம்மதியை இழந்து விட்டது.

பெரியவர்களிடம் மறைந்து அவசரப்பட்டு விட்டேனே! நான் கூறிய பிரகாரம் மூர்த்தி அவைகளை அத்தையிடம் கொண்டு கொடுத்தால் வேண்டுமென்று நான் செய்திருக்கும் காரியத்திற்கு என்னவெல்லாம் சொல்லுவாளோ? அவளுக்கு வேறு இந்தச் சங்கதியெல்லாம் தெரிந்து விடுமே!

சே... சே... என்ன பிசகு செய்தேன்? ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு என்பதற்குச் சரியாக ஒரு நாழிகை வேகத்தில், இந்தக் காரியம் என்ன பலனைக் கொடுக்கும் என்பதைச் சிந்திக்காமல் ஒன்றும் அறியாத அவனை மாட்டி வைத்தேனே? நான் சொன்ன பொய்யைக் கேட்டு அவன் என்ன நினைத்தானோ? பார்க்கப் போனால் அற்ப விஷயந்தான்.

‘ஏன் கொடுக்கக் கூடாது? அவள் குத்திக் காட்டுவது போல் எங்கள் எளிய நிலையை இடித்து விட்டு அளித்திருக்கும் பரிசை நான் நிராகரித்தது தான் சரி’ என்று ஒருபுறம் மனம் விவாதித்தது.

அப்பா அம்மாவிடம் பிறகு தெரிவிக்கலாம் என்றிருந்தவள் கடைசியில் யாரிடமுமே தெரிவிக்கவில்லை.
-------------

2.1 மலர்

தாயின் புனிதமான அன்பை ஆண்டவன் அடியிணையில் ஏற்படும் ஆனந்தத்துக்குச் சமமாக, அறிந்தோரால் தான் உணர முடியும். தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் சண்டமாருதமும் தென்றலும் கலந்து வீசும். மென்மையுடனும் தூய்மையுடனும் ஆழமும் சுழிகளும் இட்டு ஓட்ம். பனிக்கட்டியை ஒத்த ஜிலு ஜிலுப்புடன் கூடக் கொதி நீரில் பொங்கும் ஆவியும் தாயன்பில் பிணைந்து நிற்கும். கற்கண்டின் இனிமையுடன் கடலுப்பின் உவர்ப்பும் போட்டி போடும். முற்றும் அறியாத அஞ்ஞானிக்கும் நீரின் ஓட்டத்துக்கும் கம்பீரம் கொடுக்க ஆழமும் சுழலும் அவசியம் என்றும், சண்டமாருதம் இன்றித் தென்றலின் சுகம் அனுபவிக்க முடியாது என்றும் தெரியாது. கற்கண்டைச் சுவைத்து உப்பைத் தூவென்று துப்பும் இயல்பு வாய்ந்த குழந்தையால் எல்லையில்லாத, ஒப்புவமை கூற இயலாத உயர்தரமான தாயுள்ளத்தை உண்மையாக அறிய முடியாதுதான். என் நலனுக்காகவும் மேன்மைக்காகவுமே என்னைக் கண்டிக்கவும் கோபிக்கவும் அம்மா முன் வருகிறாள் என்ற உண்மை எனக்கு ஒரு போதும் உறைத்ததில்லை.

“உனக்கு ஜகதுவும் தங்கமுந்தான் உயர்த்தி! அவர்கள் தாம் சாதிக்கப் போகிறார்கள்! என்னை இப்படிக் குட்டுவதைப் போல் அவர்களை நீ விரலாலாவது தொட்டிருக்கிறாயா? இப்படி வேண்டாப் பெண்ணாக நடத்துவதை விடக் குளத்தில் கிணற்றில் அப்போதே தள்ளியிருப்பதற்கு என்ன?" என்று பிஞ்சில் பழுத்த பழமாகப் பேசும் போது அவள் இருதயம் நோகும் என்று நான் உணர்ந்ததில்லை. என் முற்றாத இருதயம் இப்படி ஆத்திரத்தில் நொந்து வார்த்தைகளைக் கொட்டியதற்குக் காரணம், அவளுடைய அன்பில் என் சகோதரிகளுக்கும் எனக்கும் ஆனைக்கும் பூனைக்கும் உள்ள வித்தியாசம் இருந்ததுபோலத் தோன்றிய தோற்றந்தான். அவள் காட்டிய அன்பிலே வித்தியாசம் கண்ட நான், அவர்கள் வளர்ந்த விதத்திற்கும், நான் வளர்ந்த விதத்திற்கும் இடையே இருந்த வேற்றுமையைக் காணும் சக்தி படைத்திருக்கவில்லை.

பள்ளிப் படிப்பு முடியும் வரையில், வீட்டு வேலை என்றால் என்ன என்பதையே நான் அறிந்திருக்க மாட்டேன். பொழுது விடிந்தால் பள்ளிப் பாடம் தயாரித்துக் கொள்ளவும், பாட்டு வாத்தியாரிடம் உட்காரவுமே எனக்கு நேரம் சரியாக இருக்கும். என் துணிமணிகளைப் பிறர் கவனிக்க வேண்டும். நான் சாப்பிட உட்காரும் போதே அம்மா தலைவாரிப் பின்னி விட வேண்டும். பள்ளிக்குக் கிளம்பு முன் தயாராக இடைவேளை உணவு கட்டி வைத்திருக்க வேண்டும். தள்ளாமையால் அம்மா சில சமயங்களில் முணுமுணுப்பாள். அப்பாவின் சலுகை எனக்கு அதிகம் என்று குற்றமும் சாட்டுவாள். அந்தச் சமயங்களில் அவள் உள்ளத்தை அறியாத நான், ஏதோ கடனே என்று எனக்கு எல்லாம் செய்ததாகப் பிரமை கொள்ளுவேன்.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் அம்மாவின் குணம் ராட்சச குணமாகத் தோன்ற எனக்குச் சந்தர்ப்பங்கள் உதவின. அத்தனை நாட்களுக்குப் பின் என்னைப் பழி வாங்குவது போல, காலை வேளையில் குளித்துவிட்டு, வீட்டு வேலைகளை நானே செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டாள். சரியாகச் செய்யாவிட்டால் கோபிப்பாள். நான் வாயாடி அடித்தால் அடிக்கவும் அடித்து என்னை அடக்கினாள். அறியாமை அகலாத நான் எனக்கு அவள் மீது பாசமே இல்லை என்று மட்டுமல்ல, இந்த வீட்டை விட்டுப் போய்விட்டால் வருந்தி வருந்தி அவள் அழைத்தால்ம் வரக் கூடாது என்று முடிவு கட்டியிருந்தேன்.

அந்த வேளை எனக்கு வந்து விட்டது. என்றென்றைக்கும் நான் வேறொரு புது வீட்டிற்கு, புது மனிதர்களின் நடுவே புது அன்புப் பிணைப்பில் குடிபுகப் போகிறேன்.

உறுதியும் வைராக்கியமும், உண்மையை அஸ்திவாரமாகக் கொண்டு வளம் பெற்ற மனத்திலே எழுந்தால் தான் நிலைநிற்கும். அப்படி இருக்க, என் உள்ளமோ முற்றாதது. என்னுடைய முடிவில் பிரமையில் எழுந்தது, எப்படி நிலைநிற்கும்? நான் புக்ககம் செல்லும் வேளை நெருங்க நெருங்க என்னை மூடியிருந்த அஞ்ஞானமும் பிரமையும் விலக ஆரம்பித்தன. அவள் எதுவும் கோபித்தால் இனி நெஞ்சு புண்ணாகும்படி, சுடச்சுட ஏதும் பேசக் கூடாது என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் அம்மா என்னைக் கோபிக்கும் சந்தர்ப்பமே வரவில்லை. “இன்னும் கொஞ்ச நாள் தானே? அந்தப் பாட்டைப் பாடு; இந்தப் பாட்டைப் பாடு; அடுப்புப் பக்கம் நீ வர வேண்டாம்" என்று என்னை உள்ளூற வெட்கமுறச் செய்தாள்.

ஏற்கனவே கல்யாணத்தின் அபாரச் செலவினால் அப்பா ஒரேயடியாகக் கூனிக் குறுகியிருந்தார். அதனுடன் அத்தையின் உதவியும் இன்றி அவர் மேலும் நெருக்கிய செலவுகளைச் சமாளிக்க அம்மாவின் ஒத்துழைப்பும் பரிபூரணமாகத் தேவையாக இருந்தன. அவளுடைய உடமைகள் முழுமையும் என்னைக் கணவன் வீடு கொண்டு விட வேண்டிய புதிய செலவுகள் கபளீகரம் செய்து விட்டன. வெறும் மஞ்சள் சரட்டுடனும் கம்பி வளையலுடனும் அவள் வளைய வரும் போது, என் குற்றமுள்ள நெஞ்சம் “அம்மா" என்று கட்டிக் கொண்டு கதற விழைந்தது. இதெல்லாம் என்ன கொள்கைகள்? தாயும் தந்தையும் ஆசையுடன் தங்கள் சக்திக்கு உகந்தபடி பெண்ணுக்குப் பரிசுகள் வழங்க வேண்டியிருக்க, இப்போது இப்படி நிர்பந்தமாகவும் கஷ்டப்பட்டுக் கொண்டும், கடன் பட்டுக் கொண்டும் செய்தே தீர வேண்டும் என்ற கடும் சம்பிரதாயமாக ஆகிவிட்டதே! இந்தப் பாசி படிந்த கொடிய சம்பிரதாயங்களை ஒழிக்க ஏன் யாரும் முன் வரவில்லை? பெண்ணிடம் உள்ள ஆசையும், அன்பும் குன்றும்படி இந்தச் சீர்ப் பிரச்சனைகள் மலை போல் அல்லவோ நிற்கின்றன?

நானாகவே, “கெட்டிச் சரிகைப் புடவை வேண்டாம், அம்மா. இது போதும். பாத்திரம் பண்டங்கள் தாம் வேண்டாம் என்றார்களே. வேணுமானால் நான் எழுதுகிறேன். பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றெல்லாம் மிகமிகக் குறைந்த செலவிலேயே என் தேவைகளை நிரப்பிக் கொண்டேன்.

‘அவரிடம் இந்த அசட்டுக் கொள்கைகளையும் அப்பாவின் நிலைமையையும் விளக்க வேண்டும். இதுவரை யாருமே கண்டிராதபடி புதுமையாக, எனக்காகச் செலவழித்து விட்டுக் கடனடைக்க வகையறியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் அப்பாவுக்கு வரதட்சிணைப் பணத்தையாவது திருப்பி விடும்படி என் கணவரிடம் வேண்டிக் கொள்வேன். சுசீலா - ராமநாதன் என்றாலே அப்பா, அம்மா, ஏன் ஊர்க்காரர்களுக்குக் கூடப் பெருமை பொங்கும்படி என்னால் செய்து விட முடியும்’ என்றெல்லாம் மனக்கோட்டை என் அந்தரங்கத்தில் உயிர் பெற்றது.

ஆயிற்று. வாசலில் வண்டி கூட வந்துவிட்டது. என்னைக் கொண்டு விட்ட பின் அப்பாவால் ஒரு நாள் கூடத் தங்க முடியாது. அன்று மாலையே திரும்பி விட வேண்டும். அவர் கஷ்டத்தைக் கண்ணுற்ற போது, என் இன்ப துன்பம், அபிலாஷைகள் எல்லாமே கரைந்து விட்டன. “பெண்களுக்காக உடலை ஓடாக உழைத்து உழைத்து அவர் என்ன பயன் காணப் போகிறார்? நாம அவர் கஷ்டத்துக்குப் பிரதியாக என்ன செய்யப் போகிறோம்? ஒரு நாளைக்கு அன்பாகக் கூப்பிட்டு மனம் குளிர உபசரிக்கக் கூடப் பிறர் முகத்தைக் கவனிக்க வேண்டி இருக்கிறது" என்று ஜகது சொல்வது வழக்கம். புறப்படும் சமயம், ‘நான் அப்படி இருக்க மாட்டேன். என்னுடைய வீட்டார் முன்னேற்றம் அடைந்தவர்கள். எனக்குச் சகல சுதந்திரங்களும் இருக்கும். ஏன் ‘ரிடையரா’கி விட்டால் அப்பாவை என்னிடமே கூட வைத்துக் கொள்வேன்!’ என்று பெருமிதத்துடன் எண்ணிக் கொண்டேன்.

“போய் வருகிறாயா அம்மா சுசீ? சமர்த்தாக இரு. கடிதாசி போடு அடிக்கடி" என்று அம்மா கூறி என் நெற்றியில் சுவாமி விபூதியை இட்ட போது என் கண்கள் கலங்கி விட்டன. வெற்றிலை பாக்குப் பெற்றுக் கொண்டு, எல்லோரையும் வணங்கினேன். கடைசியாக அதுவரையில் ஆடி ஓடி வளர்ந்த வீட்டிலிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.

அப்பா வண்டியருகில் நின்றார். நான் ஓர் எம்பு எம்பி வண்டியில் ஏறப் போனேன். புடவையின் ஓரம் பாதம் வைக்கும் விளிம்பில் மாட்டித் தாறாகக் கிழிந்தது.

“மெதுவாக ஏறக் கூடாது?" என்று அப்பா கடிந்து கொண்டார்.

“என்ன? புடவையைக் கிழித்துக் கொண்டாளா. புறப்படும் சமயம் பார்த்து? கொஞ்சங் கூட நிதானம் கிடையாது! இறங்கி வா, ஒரு தம்ளர் தீர்த்தம் சாப்பிட்டு விட்டுப் போகலாம்" என்றாள் அம்மா, கோபமும் பதைபதைப்பும் கலந்த குரலில்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை. வண்டிக்கு நேரமாகி விட்டது. விடப்பா வண்டியை!" என்று அப்பா வண்டியில் ஏறிவிட்டார். சதங்கை ஒலிக்க வண்டி கிளம்பி விட்டது. பக்கத்து வீட்டில் நின்றிருந்த ஜானி உட்பட எல்லோருக்கும் “போய் வருகிறேன்!" என்று கத்தினேன். தெரு மறையும் வரை அம்மா, ஜகது, சுந்து, ஜானி எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என் பார்வையிலிருந்து மறைந்த பின் தான் கிழிந்த புடவையின் ஓரம் என் கண்களில் உறுத்தியது.

புறப்படும் சமயத்திலே இது ஏன் கிழிய வேண்டும்?

என் உள்ளத்து ஒலியிலே கீறல் விழுந்து விட்டது.

ஊர்வலத்தின் இறுதியில் குமுறிய வானம், அந்தப் பாட்டு, இதோ புடவைக் கிழிசல்! இதெல்லாம் என்ன? வருங்காலத்தில் நிகழக் கூடிய சம்பவங்களை அறிவுறுத்தும் சூசகமோ?

வண்டியின் ஓட்டத்தில் ஒரு குலுக்கல் உள்ளத்துடன் உடலும் குலுங்கியது. மண்டை ‘நங்’கென்று பிரம்புச் சட்டத்தில் இடித்தது. நான் கையில் பிடித்திருந்த கூஜா நழுவிச் சாய்ந்தது.

“சற்று மெதுவாக ஓட்டப்பா" என்றார் அப்பா. வண்டிக்காரனைப் பார்த்து. தெளிவாகச் சிந்திக்கவே முடியாதபடி புகையைப் போல் என் மனதை நினைவுகள் கப்பிக் கொண்டன.

அவள் ஏன் அந்தப் பாட்டைப் பாட வேண்டும்? வேறு நல்ல பாடல்கள் எத்தனையோ இல்லையா? அப்போதுதான் கட்டும் புடவை சற்று மாட்டிக் கொண்டதை வியாஜமாகக் கொண்டு கிழிய வேண்டுமா? இத்தனைக்கும் புடவை நைந்ததன்று. பழசு இல்லை; இரண்டு நனைப்புகளே ஆகியிருக்கும் புதுப் புடவை.

முன் காலத்துக் கதைகளில் எல்லாம் வருமே, போர் வீரனைப் போருக்கு அனுப்பு முன் மனைவிக்கு ஹாரத்தி தாம்பாளம் கீழே விழுந்தது, மலர் மாலை வாடியது என்று; அவள் துணுக்குறுவாள். அவன் ‘சகுனமாவது மண்ணாவது! பீதியிலே கை நடுங்கித் தாம்பாளத்தைக் கீழே போட்டிருப்பாய்’ என்று சமாதானம் சொல்லிவிட்டுப் போவான். கடைசியில் முக்காலும் சகுனமே பலிக்கும். அவன் திரும்பியே வரமாட்டான். எப்படியாவது இதெல்லாம் மூட நம்பிக்கை என்று ருசுப்படுத்தும்படி பலியாமல், நல்லது நடந்திருக்குமோ? ஊஹூம், அல்லவே இல்லை!

அப்படியானால் இவை எதைக் குறிக்கின்றன?

“அவள் இந்தப் பெண்ணை ஆட்டி அம்பலத்தில் வைத்து விடுவாள்!"

அத்தையின் வார்த்தைகள் என் காதுகளில் ரீங்காரம் செய்தன. ‘என்னை என்ன ஆட்டி வைப்பது அவள்? கிராமாந்தரமாக இருந்தால் அந்தக் காலத்தில் சொல்லுவார்கள்; புது மாட்டுப் பெண் பேசக் கூடாது, வாயிலில் வரக் கூடாது, வீட்டுப்பாடு என்று உழைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அதற்கெல்லாம் இங்கு இடம் இல்லையே! மேலும் அன்று ஒரு நாழிகை உடல் நலம் கெட்டதற்கு அம்மாவைக் குற்றம் சொன்ன அவர், அவள் ஆட்டி வைக்கப் பார்த்துக் கொண்டு கல்லுப் பிள்ளையாராக இருப்பாரா?’

‘இதெல்லாம் சுத்த மனப்பிரந்தி காக்கை உட்காருவதும் பனம்பழம் விழுவதும் போல சில சமயங்களில் சில நிகழ்ச்சிகள் மனக் குரங்குகள் இணைந்தாற் போல அமைந்து விடுகின்றன. இதை வைத்துக் கொண்டு மனத்தில் அசட்டு எண்ணத்தை வளரவிட்டுச் சந்தோஷத்தைக் குறைத்துக் கொள்வார்களா? இப்படி நான் முட்டாள்தனமாக எண்ணினேன் என்பதைக் கேட்டால் கூட அவர் நகைப்பார்!’

மழையுடன் சில சமயங்களில் வெயிலும் கலந்து அடிப்பது உண்டு. எந்த நிகழ்ச்சியையும் ஆழத்திலே அமுக்கி ஜீரணித்துக் கொள்ளச் சக்தியில்லாத பொறுமையற்ற இயல்பு படைத்த மனம் மாறி மாறி எண்ணமிட்டது. புங்கனூரிலிருந்து தஞ்சாவூர் ஜங்ஷன் வந்து தான் நாங்கள் சென்னை வண்டி ஏற வேண்டும். நல்லவேளை மாலையிலேயே இருட்டுகிறதென்று புறப்பட்டு விட்டோமே ஒழிய ஜங்ஷனில் அடைத்துக் கொண்டிருந்த ஜனக் கும்பலில் நாங்களும் இருவராக அமர்ந்து கொண்டோம். அப்போது எனக்கு மூர்த்தியுடன் சுகமாக மேல் வகுப்பில் பிரயாணம் செய்ததும், பெங்களூரில் சகல வசதிகளுடன் கூடிய ‘வெயிட்டிங் ரூமி’ல் இளைப்பாறியதும் தென்றலின் குளுமை போல நினைவில் பரவின. ஒருவேளை அடுத்த தடவை சென்னையிலிருந்து அவருடன் வரும்போது அப்படி வருவேனோ என்னவோ?

அப்பா தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “சுசீ!" என்று அழைத்தார்.

ஊரிலிருந்து கிளம்பியதிலிருந்து எதுவுமே பேசாமல் யோசனையில் ஆழ்ந்திருந்த அவர் திடீரெனக் கூப்பிட்டதும் நான் நிமிர்ந்து, “என்னப்பா?" என்றேன்.

“நாளைக்கு நான் உடனே திரும்பி விடுவதால் உன்னுடன் பேச முடியுமோ முடியாதோ? நீ சில சமயங்களில் மிகவும் துடுக்காக நடந்து கொள்கிறாய். அன்றைக்கு அந்தப் பிள்ளையாண்டானிடம் புடவையைக் கொடுத்து விட்டு நீ என்னிடம் பொய் தானே சொன்னாய்?" என்றார். போகாமல் போன விருந்தைப் புளியிட்டு அழைத்த மாதிரியில் அவர் என்னிடம் அந்தப் பழைய சங்கதியை, தீர்ந்து போயிற்று என்று அதனுடன் நான் அறவே மறந்திருந்த விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்குவார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. பதில் எனக்குச் சட்டென்று எப்படி வரும்?

“அத்திம்பேர் நீ இந்த மாதிரி மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதைக் குறித்து வருத்தப்பட்டுக் கொண்டு எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அவர்கள் பணம் பெருத்தவர்கள். நமக்கோ அது தேவையாக இருக்கிறது. எப்போது சுழலும் சக்கரத்தில் அகப்பட்டுக் கொண்டு விட்டோமோ, கஷ்டமோ நஷ்டமோ அதன் போக்குப்படித்தான் சுழல வேண்டும் அம்மா! நீ சிறு பெண். அவர்கள் ஏதேனும் கடுஞ்சொல் மூலம் உன் மனத்தை நோவ வைத்திருக்கலாம். என்றாலும் நீ செய்தது தவறு. இப்போதே இத்தனை ரோசம் வைத்துக் கொண்டிருப்பது பின்னாடி உனக்கே கஷ்டமாக ஆகிவிடக் கூடாதே என்று எனக்குக் கவலையாக இருக்கிறது. நாளை நீ பெரிய குடும்பம் ஒன்றில் காலெடுத்து வைக்கப் போகிறாய். உன் ஓரகத்தி, அவள் தாய், தங்கை, உன் மாமியார், மைத்துனர் என்று மூன்று குடும்பத்து மக்கள் அங்கு ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது இருக்கும் நிலையுடன் நீயும் ஒட்டி இருக்க வேண்டும். ஒவ்வொருவர் அபிப்பிராயங்களும் குணமும் வெவ்வேறாக இருக்கலாம். நீயும் அவர்களுக்குத் தகுந்தாற் போல் இணைந்து போனால்தான் நலமாக இருக்கும். ஆயிரம் பேராக இருந்தாலும் புருஷர்கள் ஒத்துப் போய் விடுவார்கள். பெண் மக்கள் அப்படி அல்ல. அத்தியந்த சிநேகிதர்களாக இருந்தால் கூடச் சகஜமாகப் பழக மாட்டார்கள். குற்றம் கண்டுபிடிக்கும் நுண்ணிய சக்தி அவர்களுக்கு அபாரம். அதனாலேயேதான் அபிப்பிராய பேதம், மனத்தாங்கல் ஏற்படுவது பெண்களிடையே சுலபமாகி விடுகிறது. இந்த வழியில் நீ உன் அறிவை ஒரு போதும் செலுத்தி விடக் கூடாது. எந்த அபிப்பிராயத்தையும் மேலெழுந்த வாரியாகவே எடுத்துக் கொள். அடுத்தபடியாக உழைப்பைத் துச்சமாகக் கருதி நீ சோம்பேறியாகி விடக் கூடாது, சுசீலா. சந்தனக்கட்டை தேயத் தேயத்தான் மணம் பெறும். இன்னும் உன்னுடைய சௌகரியங்களை நீ எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொண்டு பழகுகிறாயோ அவ்வளவுக்கு அவ்வளவு உனக்கு நல்லது. ‘அது இல்லாவிட்டால் எனக்குச் சரிவராது’ என்று அபரிமிதமான சுகங்களுக்கும் சௌகரியங்களுக்கும் ஒரு போதும் நீ இரையாகி விடக் கூடாது. தியாக புத்தி கொஞ்சமும் இன்றி உண்மையான பெருமையும் இல்லை. இன்பமும் இல்லை. பெண்கள் குடும்பத்துக்குத் தூண் போன்றவர்கள். அதன் வாழ்வையும் தாழ்வையும் அவர்கள் தாம் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ‘நாட்டுப் பெண் வந்தாள்; மறுநாளே சட்டியைத் தூக்கி வேறு வை என்று சொல்லிவிட்டாளே’ என்று நாலு பேர் அபிப்பிராயம் கொடுக்கும் நிலையில் நீ நடந்து கொள்ளக் கூடாது. உன் புருஷன் அண்ணனிடமும் மதனியிடமும் அலாதியான மதிப்பு வைத்திருக்கிறான். அந்த மதிப்புக் குறைந்து, ஒட்டுதல் விட்டுப் போகும்படியான நிலைமை இனிமேல் எப்போது வந்தாலும் அது உன்னால் வந்ததாகத்தான் கருதும்படி இருக்கும். இத்தனை சிரமப்பட்டு உனக்கு உரிய இடத்தைத் தேடி மணம் செய்வித்தது கூட எனக்குப் பெரிதல்ல. நாளைக்கு உன்னால் ஒரு வார்த்தைக்கு இடம் இருக்கக் கூடாது. தெரிகிறதா அம்மா?" என்று முடித்தார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பார்த்தால் பசுப்போல் இருக்கும் அப்பா என்னவெல்லாம் தெரிந்து கொண்டு சொல்லுகிறார்!

“நீங்கள் இப்போது கூறியது அத்தனையும் எனக்கு எப்போதும் நினைவிருக்கும் அப்பா. அப்படியே நடந்து கொண்டு நல்ல பெயர் வாங்குவேன்" என்று உறுதியுடன் மொழியும் போது ஏனோ எனக்கு நாத் தழுதழுத்தது.

“தங்கமும் புக்ககம் போனாள்; ஜகதுவும் புக்ககம் போனாள். அப்போதெல்லாம் நான் இவ்வளவு சிரத்தை கொள்ளவில்லை. சிரமமும் கொள்ளவில்லை. கவலையும் இருக்கவில்லை. உன் விஷயம் அப்படி எனக்கு எளிதாகத் தோன்றவில்லை. எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் உனக்குக் கல்வி புகட்டினேன்; சங்கீதம் பயிற்றினேன். ‘சுசீலா ஆண் பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டியவள். அவளுக்குக் கல்யாணம் பண்ண வேண்டாம் ஸார்! காலேஜில் சேர்த்து விடுங்கள்! மேலே படித்து உத்தியோகம் பண்ணி முன்னுக்கு வரட்டும்’ என்று கூட நீ படிப்பில் காட்டிய ஊக்கத்தைக் கண்டு என்னிடம் தலைமையாசிரியர் உட்பட எல்லோரும் உரையாற்றினார்கள். ஆனால் நான் ஜீவனத்துக்காகவும் விவாகச் செலவு குறைவதற்குமாகவா உனக்குக் கல்வி புகட்டினேன்? குடும்பப் படகை வலித்துப்போக ஓரளவாவது பெண்களுக்கு அறிவு கூர்மையாக வேண்டும் என்றே உனக்குக் கல்வி வசதி அளித்தேன். ஆனால் கல்வியறிவைப் பெண்கள் சீரிய முறையிலும், ஒழுக்கமான வழியிலும் பயன்படுத்த வேண்டும். ‘என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும். நான் அதற்காக அடிமையாக இருக்க மாட்டேன்’ என்று கணவனை எதிர்த்து வாயாடுவதற்காக அந்த அறிவை உபயோகிப்பது முறை அல்ல. ஒருவருக்கொருவர் பலவந்தமான அதிகாரத்துக்குட்பட்ட அடிமைகளாக இருப்பதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அன்பின் பின்னலுக்கு உட்பட்டு ஒருவருக்கொருவர் கட்டுப்பட்ட வாழ்க்கையைத் தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சதிபதிகளே இன்பம் பெறுவார்கள் என்பது என் கருத்து. இந்தக் கணவனும் மனைவியும் தேர்ந்த அறிவுடன் தெள்ளிய மனமும் படைத்திருப்பதாக நடுநடுவே வாழ்க்கைக் கடலில் ஏற்படும் சிறு பூசல்களைக் குழப்பமோ கலக்கமோ இன்றி, ஆழ்ந்த சிந்தனையின் மூலம் தாங்களாகவே தெரிவித்துக் கொள்வார்கள். இத்தகைய மனமொத்த குழந்தைகளாக நீங்கள் வாழ வேண்டும் என்பது என் அவா, சுசீலா!" என்று கூறிவிட்டு என் முகத்தை அவர் உற்று நோக்கினார்.

எங்கள் ஊரில் ஒரு குளம் உண்டு. அதன் வடக்கு மூலையில் ஒரு வடிகாலும் உண்டு. மழை அதிகம் பெய்து தண்ணீர் நிறைய வந்துவிட்டால் வடிகாலைத் திறந்து விடுவார்கள்.

நான் பள்ளிக்கூடம் போகும் காலத்தில் குளத்திலிருந்து தண்ணீர் வடிகாலில் ‘கோ’ என்ற சத்தத்துடன் பீறி எழும் ஆவேசத்துடன் ஓடி உருண்டு செல்வதைப் பார்த்துக் கொண்டே ஆச்சரியப்பட்டவள் போல் நிற்பேன். ‘குளத்திலே சலனமில்லாமல் சப்தமில்லாமல் தேங்கியிருக்கும் நீர் சிறிது வழி கிடைத்தவுடன் எப்படி ஆவேசமாக வருகிறது! அத்தனை தண்ணீரையும் திறந்து விட்டால் எப்படிப் போகும்?’ என்று சிந்திப்பேன். எனக்கு அது நினைவுக்கு வந்தது. அப்பாவின் மன ஆழத்திலே நிரம்பியிருக்கும் அன்புக்கும் அநுபவத்துக்கும் இப்போது சற்றுப் போக்குக் கிடைத்திருக்கிறது போலும்! ஜகதுவினிடமும் தங்கத்தினிடமும் அவருக்கு இல்லாத பாசம் என்னிடம் இருக்கிறது என்று அவர் வாயிலிருந்தே வந்ததே! குளத்து நீரைப் போல் அவர் உள்ளத்திலிருந்து பெருக்கெடுத்து வந்த அன்புணர்ச்சி என் மனத்தைக் கிளர்த்தி விட்டது. முழுதும் வழுக்கையாகிப் பளபளவென்று பிரகாசித்த தலையும், ஒட்டி உலர்ந்த முகமும், எப்போதோ வேலைக்கு வந்த போது தைத்துக் கொண்ட ஓரங்களில் விரிசல் விழுந்த கோட்டும் அவருடைய தன்னலமற்ற தியாகத்தை எனக்கு எடுத்துப் பறைசாற்றின. தம் உயிரின் அணுக்களால் ஆக்கப்பெற்ற எனக்காக அவர் தம் சொந்தச் சௌகரியங்களைக் கொஞ்சமாகவா தியாகம் செய்திருக்கிறார்? இதற்கெல்லாம் நான் பிரதி செய்யக் கூடிய காலம் வருமா?

தூரத்தில் வண்டி வருவதன் அறிகுறியாகச் சத்தம் கேட்டது.

“வண்டி வந்துவிட்டது போலிருக்கிறதே, அம்மா!" என்று எழுந்தார் என் தந்தை.

என் வாழ்வின் நீண்ட யாத்திரையிலே என்னை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு முக்கியமான கட்டத்திற்குக் கடத்திப் போகும் அந்த வண்டி நள்ளிரவிலே தென்படும் கரும் பூதம் போல் அலறிக் கொண்டு வந்தது.
---------

2.2 மலர்

கரிய கங்குலைப் பிளந்து கொண்டு தன் பொன்மேனியுடன் மலர்ந்து உதய கன்னி என்னை வரவேற்க, நான் என் புது வாழ்வின் உதயத்தில் இணைய அடி எடுத்து வைத்தேன். வண்டியிலிருந்து என் கண்களில் முதல் முதலாக மைத்துனர் தென்பட்டார். அவருக்குப் பின்னால், மூன்று நாலு வயசிருக்க்ம் பெண் குழந்தை ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டு வெள்ளை நிஜாருடனும் ஷர்ட்டுடனும் என் கணவர், லேசான நகையுடனும் கனிவு கொண்ட விழிகளுடனும் என்னைப் பார்த்துக் கொண்டு நின்றார். காலை வேளையின் புத்துணர்ச்சி அவர்களிடம் நிரம்பி இருந்தது. எனக்கோ சரியாகக் கூட உட்கார இடமில்லாமையால், உடம்பெல்லாம் வலித்தது. தூக்கம் இல்லாததால் கண்கள் ஜிவு ஜிவுவென்று எரிந்தன. மரத்துப் போயிருந்த கால்களைக் கூட வண்டியில் அடைந்திருந்த கூட்டம் இறங்கிய பின்னரே நீட்ட முடிந்தது. ரெயில் சூட்டில் கருகித் தலையிலிருந்து தொங்கிய மல்லிகைச் சரத்தை எடுத்துக் கொண்டே வண்டியை விட்டு இறங்கினேன். பிரிந்த குழல் பறந்து பறந்து கண்முன் வந்து விழுந்தது. அப்பா சாமான்களை எடுத்துக் கொடுக்க, அவர் ஒரு கை பிடிப்பதைக் கண்ட என் மைத்துனர், “போர்ட்டர் போர்ட்டர்!" என்று கூலி ஒருவனைப் பார்த்துக் கூவினார்.

“நல்ல கூட்டம் போலிருக்கிறது. சௌகரியமாக உட்காரக் கூட முடியவில்லையோ?" என்று கேட்ட என் கணவர் என்னை நோக்கிச் சிரித்தார். கூட்டம் என்பதைத் தெரிவிக்கும் அத்தாட்சியாக நான் இருக்கிறேனோ என்ற வெட்கத்துடன் தலை மயிரைக் கோதிக் கொண்டேன். பிறகு அவர்களுடன் ஸ்டேஷன் கட்டிடத்தைத் தாண்டி வெளியே வந்தேன். அவர்கள் காட்டிய நீல வர்ணக் கார் ஒன்றில் கூலி சாமான்களை எல்லாம் வைத்தான். முன்புறம் வண்டி ஓட்டியின் ஆசனத்திலே என் கணவர் அமர்ந்ததைக் கண்ட என் மனம், ‘ஓகோ! சொந்தக் கார் போலிருக்கிறது!’ என்ற உவகையால் விரிந்தது.

அவருக்குப் பக்கத்தில் என் மைத்துனர் மடியில் குழந்தையுடன் அமர்ந்து கொள்ள அப்பாவையும் என்னையும் பின்புற ஆசனத்தில் தாங்கிக் கொண்டு பட்டணத்தின் வழு வழுப்பான தார் ரோட்டில் கார் சென்ற போது எனக்கு வான ஊர்தியில் சஞ்சரிப்பது போல் இருந்தது. கண் மூடிக் கண் திறப்பதற்குள் வீடு வந்துவிட்டது போல் எனக்குத் தோன்றியது. முன் வாசல் முகப்பில் பிரம்பு நாற்காலி ஒன்றில் சாய்ந்து கொண்டிருந்த என் ஓரகத்தி எங்களைக் கண்டதும் எழுந்து நின்றாள். நாங்கள் எல்லோரும் வீட்டுக்குள் புகும் போது, அப்பாவின் எளிய தோற்றமும் உடை எல்லாவற்றையும் அந்தச் செல்வச் சூழ்நிலை மிகைப்படுத்திக் காண்பித்தது. சுகமாக உண்டு உறங்கிச் செல்வத்தில் புரளுபவர்கள் மத்தியில் வறுமையின் சின்னமாகவும், உழைப்பின் பிரதிநிதியாகவும் அவர் தென்பட்டது போல் எனக்குத் தோன்றியது. சிரமத்துடன் நாற்காலியிலிருந்து எழுந்து நின்றிருந்த என் ஓரகத்தி, “வா" என்று புன்னகை மலர்ந்த வதனத்துடன் என்னை வரவேற்றாள். அவள் தோற்றம், அவள் அப்போது கர்ப்பிணி என்பதைச் சுலபமாக எனக்கு அறிவித்தது.

அதற்குள் எதிரே அவசர அவசரமாக வந்த என் மாமியார், “ஏன் பட்டு! ஆரத்தி எடுக்க வேண்டாமோ? அதற்குள் உள்ளே வந்துவிட்டாளே!" என்றாள். “எடுக்க வேண்டுமா? இதெல்லாம் யாருக்கு ஞாபகம் இருக்கிறது?" என்று கூறிய அவள் என்னை நோக்கி மறுபடியும் புன்னகை செய்தாள்.

திரும்பவும் வாசலில் போ என்பார்களாக்கும் என்று நான் தயங்கி நிற்பதைக் கண்ணுற்ற என் கணவர், “பரவாயில்லை, உள்ளே போகலாம்" என்று நகைத்தார். முன் சென்ற மாமியாரைத் தொடர்ந்து நான் சென்றேன். சமையலறையில் ஓர் அம்மாள் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். “இது தான் பட்டுவின் அம்மா; நமஸ்காரம் பண்ணு" என்றாள் என் மாமியார்.

கீழே குனிந்து பணிந்த என்னைப் பார்த்து, பர்வதம் போல் உட்கார்ந்திருந்த அந்த அம்மாள், “பாவம், கண்ணெல்லாம் சிவந்திருக்கிறது. ரெயிலிலே கூட்டம் போலிருக்கிறது" என்று மெல்ல நகைத்தாள். அவள் காதிலே இருந்த வயிர ஓலையும், கையிலே மின்னிய மோதிரங்களும், இடுப்பிலே தகதகத்த காவி நிறப் பட்டும் அவள் ஒன்றுக்குமில்லாமல் மகள் வீட்டில் வந்து இருக்கவில்லை என்பதை அறிவித்தன. அடுப்பைக் கவனிக்கப் போன என் மாமியாரிடம், “முதலில் காபியைக் கலந்து கொடுங்கள்" என்றாள்.

“இல்லை, நான் இன்னும் பல்லே தேய்க்கவில்லை" என்று கூறிய நான் சமயலறையைச் சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டே நின்றேன். புது மனிதர்களும் புது இடமும் எனக்கு அங்கே எப்படிப் பழகுவது, சகஜமாக எப்படி வளைய வருவது என்பதே புரியாதபடி இருந்தன. அத்தையகத்து வாழ்க்கையின் வாசனை என் மனத்தில் லேசாகப் பரவியது.

“இதோ இருக்கிறாளே, இது யார் தெரியுமா?" என்று குழந்தைகளின் சிரிப்பொலிக்கும் அழுகையொலிக்கும் மத்தியிலே தம் குரல் கேட்க, என் கணவர் சமையலறை வாசற்படியிலே வந்து நின்றார்.

பட்டுப் பாவாடையின் இழையைத் தொட்டுக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்திருந்த பெண் குழந்தை, “இது தான் சித்தி! எனக்குத் தெரியுமே!" என்று தன் மழலை மொழியில் கூறி நகைத்தது.

“ஏண்டா குமார், இந்தச் சித்திக்கும் ரொம்ப நன்றாகக் கணக்குச் சொல்லிக் கொடுக்கத் தெரியுமாம். அந்தச் சித்தி போல இரண்டைத் தொண்டையால் கத்திக் கத்தி அடிக்கவே மாட்டாளாம்!" என்று அழுத கண்களை ஷர்ட்டுத் துணியால் துடைத்துக் கொண்டு நின்ற எட்டு வயசுச் சிறுவனுக்கு என்னை பழக்கம் செய்வித்தார் அவர்.

‘குழந்தைகள் இருக்கிறார்கள் இங்கு. அன்புடன் இருக்க வேண்டும்’ என்று நினைத்த வண்ணம் நான் அவர்களை நோக்கி முறுவலித்தேன்.

“ஓகோ! ஆசாமியை எங்கே காணோம் என்று பார்த்தேனே! அதற்குள் இங்கே மிஸஸ்ஸுடன் பேச வந்துவிட்டாரோ?" என்று இரட்டைத் தொண்டையில் கட்டைக் குரல் ஒன்று கேட்டதும் நான் திரும்பிப் பார்த்தேன். ஒரு பெண், அழகே உருவெடுத்தாற் போன்றவள், காலைப் பொழுதின் மனோகரத்தில் முழுகி எழுந்ததைப் போன்ற கவர்ச்சியுடன் நின்றாள்.

“இவர்களுக்கெல்லாம் ‘இன்ட்ரட்யூஸ்’ பண்ணிக் கொண்டிருந்தேன். வா, உனக்கும் சொல்லுகிறேன். இவள் தான் என் மிஸஸ் சுசீலா, எப்படி?" என்று எடுத்த எடுப்பிலேயே அவளை அபிப்பிராயம் கேட்டார் என் கணவர். தன் முல்லைப் பற்களை வெளியே காட்டிச் சிரித்துக் கொண்டு, அவள் கனிவு ததும்பிய பெண்மை விழிகளுடன் என்னைப் பார்த்தாள்.

“எப்படி என்றா சொல்ல வேண்டும்? இதோ சொல்லுகிறேன். கேட்டுக் கொள். கார்மேகக் கூந்தல், கருவண்டை யொத்த கொஞ்சும் விழிகள். குமிழ் போன்ற அழகிய மூக்கு!" என்று அவள் வர்ணித்ததைக் கண்டு நடுவே குறுக்கிட்ட என் கணவர், “ஏது ஏது? எனக்கு மூச்சுத் திணறுகிறது! பெரிய நாவலாசிரியர் தோற்று விடுவார் போல் அளக்கிறாயே!” என்று நகைத்தார். ஆண்களும் பெண்களும் சகஜமாகப் பேசுவது, வித்தியாசமின்றிப் பழகுவது என்பதை அறிந்திருந்தாலும் இப்படி எல்லாம் பேசி நான் கேட்டவளே அல்ல.

“பார், பார். உண்மையைச் சொன்னால் நான் அளக்கிறேனாம்? நான் சொல்கிறேனே என்று நீ வேண்டுமானால் பார்; கருவண்டையும் கார் மேகத்தையும் கவனிக்கும் போது, சுசீலாவின் கூந்தல் இன்னும் கருப்பாக இருக்கும். அவள் கண்களின் கவர்ச்சி இந்தக் கருவண்டுக்கு வராது என்று தோன்றுகிறதா இல்லையா?”

“இதெல்லாமா நான் உன்னிடம் கேட்டேன்? அழகு தான்” என்றார் அவர்.

“ஓகோ! என்னடாப்பா என்று பார்த்தேனே? ஏற்கனவே எனக்கு மதி மயக்கம் தலைக்கேறி இருக்கிறதே என்பதை ஒப்புக் கொள்கிறாயா? என் அபிப்பிராயத்தைச் சொல்லட்டுமா?” என்று என் அருகில் வந்து தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டு என் முகத்தைப் பார்த்து அவள் முறுவலித்தாள்.

‘இவள் அபிப்பிராயம் என்னவாக இருக்குமோ? பீடிகை போடுகிறாளே!’ என்று எனக்கு உள்ளூறச் சிரிப்பு வந்தது. சட்டென்று கையை எடுத்த அவள், “கிடக்கட்டும். நான் யாரென்று அவளுக்கு நீ சொல்லவே இல்லையே?” என்று கேட்டாள்.

“நான் சொல்லுவானேன்? உன் தொண்டையே லீலா என்று அவளுக்கு அறிவித்திருக்குமே! இந்தக் குமார் அதற்குள் வந்து, சித்தி இரட்டைத் தொண்டையில் கத்திக் கத்திச் சொல்லிக் கொடுப்பது பிடிக்க வில்லை என்று புதுச் சித்தியிடம் புகார் சொல்ல ஆரம்பித்து விட்டான்” என்றார் அவர்.

“அடடே! இவ்வளவுக்கு வந்துவிட்டீர்களா நீங்கள்? இருக்கட்டும் இருக்கட்டும்” என்று பொய்க் கோபம் கொண்டு குழந்தைகளைப் பார்த்து அவள் கறுவினாள்.

அவளுடைய ஒவ்வொரு பேச்சையும் உண்டாகும் முக அசைவையும் எனக்கு அன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கலாம் போல இருந்தது.

“அவள் வந்து இறங்கி இன்னும் காபி கூடச் சாப்பிடவில்லை. அதற்குள் உங்கள் அரட்டையைத் துவக்கி விட்டீர்களே; முகமெல்லாம் சோர்ந்து கிடக்கிறது” என்றாள் அவளுடைய தாய்.

“நீ மகா மோசம் ராமு. ஏதடா ரெயிலில் அவஸ்தைப்பட்டு வந்து இறங்கி இருக்கிறாளே, ஒரு ‘கப்’ காபி கொடுத்து உபசாரம் பண்ணுவோம் என்று தோன்றுகிறதா, பார்! அவளை உட்காரக் கூடச் சொல்லாமல் கால் கடுக்க நிற்க வைத்து இப்படியா அவமானம் பண்ணுவது? புது மனைவி வந்திருக்கிறாள் என்றால், எந்த நிமிஷம் கோபித்துக் கொள்வாளோ என்ற பயம் வேண்டாமோ?” என்று அவள் நீட்டி முழக்கிக் கொண்டிருக்கும் போதே, என் ஓரகத்தி, அவளுடைய சகோதரிதான், “ஏண்டி லீலா அவருக்குக் காபி கொண்டு வா என்று உன்னை அனுப்பினேனா? இல்லை இங்கு வந்து வாயாடச் சொன்னேனா? ஏய் நளினி! இந்தப் பட்டுப் பாவாடையை நாசமாக்காமல் அவிழ்த்து வை. இரவெல்லாம் ஜுரம் கண்ணைத் திறக்கவில்லை. வா, டாக்டர் வீட்டுக்குப் போக வேண்டும்” என்று கடிந்த குரலிலே கூறிக் கொண்டே வந்தாள்.

சலுகையுடன் சிற்றப்பாவின் கால்களைக் கட்டிக் கொண்ட நளினி, “நான் மாட்டேன்” என்று பிடிவாதமாக அழுகைக்கு ஆயத்தம் செய்தாள்.

பலவந்தமாகக் குழந்தையைத் தரதரவென்று அவள் இழுத்துச் செல்கையில் குமாருக்கும் மைதிலிக்கும் கூட ஒரு சூடு விழுந்தது. “ஏண்டா தடியா, பள்ளிக்கூடத்துக்கு நேரமாகவில்லை? புத்தகத்தை எல்லாம் கடை பரத்தி வைத்திருக்கிறீர்களே. அடி மைதிலி, குளித்து விட்டு வாயேன். பின்னிக் கொள்ள வேண்டாம்?” என்று இரைந்து விட்டுச் சென்றாள்.

லீலா அப்பாவுக்குக் காபி கொண்டு போகிறாள் என்பதை அறிந்த நான், “வேண்டாம், அப்பா காப்பி சாப்பிடும் வழக்கம் கிடையாது. காலை வேளையில் அவர் ஒன்றும் சாப்பிடவே மாட்டார். அதுவும் ஸ்நானம் செய்யாமல்...” என்றேன்.

“என்னது? ஒன்றும் குடிக்க மாட்டாரா?” என்று அதிசயத்துடன் கேட்ட அவள், “பின் இந்தக் காபி இப்போது யாருக்கு வேண்டும்?” என்று கையில் தம்ளருடன் விளையாட்டுக் குழந்தை போல ஏலம் கூறினாள்.

“இங்கே கொண்டா” என்று அவளிடமிருந்த தம்ளரை வாங்கிக் கொண்ட என் கணவர், “எனக்கு அதிகாலையில் சாப்பிட்டது மறந்து போய் விட்டது” என்ரு தாம் அருந்தலானார்.

“அட ராமா! வாங்கி அவளுக்குத்தான் கொடுக்கப் போகிறானாக்கும் என்றல்லவா நினைத்தேன்? மடக் மடக்கென்று தான் குடிக்கிறானே!” என்று லீலா கூறிக் கொண்டிருக்கும் போதே புன்னகையுடன் அவர் அங்கிருந்து அகன்றார்.

அவர் பேச்சிலும் நடவடிக்கையிலும் புதுமை கண்ட நான் மனக் களிப்பிலே மிதந்தேன். குளித்துவிட்டு எல்லோருடனும் உணவருந்த வந்து உட்கார்ந்த என் மைத்துனர், “இன்று தான் நான் குளிக்கச் சென்ற போது அறை சுத்தமாக இருந்தது. வெந்நீரடுப்புப் புகையவில்லை. வெந்நீர் சரி சூடாக இருந்தது. புது மாட்டுப் பெண் வந்துவிட்டாள் என்பதைக் காட்டி விட்டது’ என்று கூறிய போது எனக்குச் சந்தோஷம் கரைபுரண்டது. ‘இந்த அற்ப விஷயத்திற்கே இத்தனை திருப்தி கொண்டாடுகிறாரே? வெகு சீக்கிரத்தில் இங்கு எல்லோரையும் கவர்ந்து விட முடியும்’ என்று உள்ளூற எண்ணிக் கொண்டேன். அப்பா பரிமாற வந்த என்னைப் பெருமையுடன் நோக்கினார்.

எல்லோரும் இலைகளை விட்டு எழுந்திருக்கவில்லை. என் ஓரகத்தி டாக்டர் வீட்டுக்குக் குழந்தையை அழைத்துப் போயிருந்தவள், உள்ளே வந்தாள்.

தட்டிலே கையைக் கழுவிக் கொண்டிருந்த என் மைத்துனர், “என்ன? குழந்தைக்கு உடம்பு ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டாரோ டாக்டர்?” என்று ஏளனம் தொனிக்கும் குரலில் அவளைக் கேட்டார்.

“ஆமாம்! உங்களுக்குக் கேலியாக இருக்கிறது. இந்த நெஞ்சுக் கட்டுச் சாதாரணமாக இல்லை என்று நான் அப்போதே சொல்லவில்லையா? அத்துடன் காலையிலே ராமு திரட்டுப் பாலை வேறு கொடுத்து வைத்திருக்கிறான். குழந்தை நோவுக்குக் கள்ளமில்லை என்று எழுந்து நடமாடியிருக்கிறது. ஜுரம் நூற்றுநாலு இருக்கிறது. இப்போது டாக்டர் நியுமோனியா என்று சந்தேகப்பட்டு ‘நர்ஸிங் ஹோமி’லேயே விட்டு விட்டுப் போங்கள் என்றார். கத்து கத்து என்று கத்துகிறது. விட்டு விட்டுக் குளித்துச் சாப்பிட்டுப் போகலாம் என்று வந்தேன். நான் சொன்னால் யார் கேட்கிறார்கள்? ராமுவினுடைய செல்லம் அதற்குத் தலைக்கு மேலே ஏறிப் போயிருக்கிறது!” என்று படபடப்பாக அவள் என் கணவர் மீது குற்றம் சாடினாள்.

“வெகு அழகுதான்! நானா திரட்டுப் பால் கொடுத்தேன். எல்லாம் உங்கள் அருமைத் தங்கையின் வேலை! கார் வந்த சப்தம் கேட்டவுடனேயே ஆளைக் கூட அவள் கவனிக்கவில்லை. பட்சணங்களை ஆராய ஆரம்பித்து விட்டாள். எல்லாம் காலியாவதற்குள் நான் நல்ல வேளை பார்த்தேன். குழந்தைகளுக்கெல்லாம் அவள் தான் விநியோகம் செய்தாள்” என்று அவர் லீலாவைச் சாடினார்.

“அதனாலேயே ஜுரம் இப்போது நூற்று நாலு வந்து விட்டதாக்கும்? நான் கண்டேனா ஜுரம் என்று? காலையில் பட்டுப் பாவாடை எல்லாம் கட்டிக் கொண்டு தடபுடலாக ஸ்டேஷனுக்கு வேறு போய் விட்டு வந்தது. எனக்கு எப்படித் தெரியும்? எல்லோரும் தின்னும் போது குழந்தை கேட்டது, கொடுத்தேன். உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடனேயே படுக்கையில் விடாமல் கண்டபடி அலையவிட்டால்? உங்களுக்குக் குழந்தையை வளர்க்கத் தெரிந்தால்தானே?” என்று முடிவாக ஒரு போடு போட்ட லீலா கலத்தை விட்டு எழுந்து போனாள்.

“ராமுவுக்குத் தெரியாதா ஜுரம் என்று? சிற்றப்பாவிடம் போகிறேன். சிற்றப்பாவிடம் போகிறேன் என்று ராத்திரி என் பிராணனை வாங்ன்கி அவனிடம் போய்ப் படுத்துக் கொண்டதே. ஸ்டேஷனுக்கு நான் கூட்டிப் போக வேண்டாம் என்று சொன்னதை யார் கேட்டார்கள். நீங்கள் தலைக்கு ஒரு விதமாகச் செல்லம் கொடுங்கள். அப்புறம் எனக்குக் குழந்தை வளர்க்கத் தெரியவில்லை என்று குற்றம் கூறுங்கள்” என்று பட்டு கடுகடுத்தாள்.

இந்தச் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாடிக் கொண்டு சிறு குழந்தைகள் போல் பேசிக் கொண்டது எனக்கு வியப்பைத் தந்தது. ஓடியாடும் குழந்தை உடம்புக்கு வந்திருக்கிறது. அதற்கு இத்தனை பிரமாதப்படுத்துகிறார்களே? எங்கள் வீட்டில் எங்களில் யாருக்காவது ஜுரம் வந்தால் அநேகமாக அது அப்பாவுக்குக் கூடத் தெரியாது. இரண்டு வேளை கஞ்சி கொடுப்பாள் அம்மா. அதற்கும் தணியாவிட்டால் லோகல் கண்டு ஆஸ்பத்திரியில் தருமத் தண்ணீர் இரண்டு வேளை வாங்கிக் கொடுப்பாள். அத்துடன் சரி. எடுப்பாரும் பிடிப்பாரும் இருந்தால் இப்படித்தான் இருக்கும் போலும்! அத்தை வீட்டில் ஹேமாவுக்கு வந்ததையும் நடந்ததையும் விட இது பெரிது அல்லவே?

பதினொரு மணிக்குள் வீடு நிசப்தமாகி விட்டது. குழந்தைகள் பள்ளிக்குச் சென்று விட்டனர். லீலா கல்லூரிக்குப் போய்விட்டாள். என் மைத்துனரும் கணவரும் காரியாலயம் சென்று விட்டார்கள். பட்டுவுங்கூடச் சிகிச்சை இல்லம் போய் விட்டாள். கிழவிகள் இருவரும் கீழே முன் கட்டில் கட்டை மணை சகிதம் படுத்து விட்டார்கள். நான் ஸ்நானம் செய்த கூந்தலை ஆற்றிக் கொண்டு மெள்ள மாடிப் பக்கம் சென்றேன். வராந்தாவை அடுத்த கூடத்தில் அப்பா கீழே சிமென்ட் தரையில் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். மேலே மின்சார விசிறி சுழன்று கொண்டிருந்தது. அவருக்கு எத்தனை உடல் சிரமம்.

ரேடியோ, கண்ணாடி, அலமாரி, சோபாக்கள், எல்லாமாக அந்தக் கூடத்தை அலங்கரித்தன. ஒரு புற வாயில் வராந்தாவுக்கு வழி காட்டியது. இன்னொரு புற வாயில் வழியாக ஒரு குறுகிய தாழ்வரை சென்றது. அதை ஒட்டி அடுத்தடுத்து மூன்று அறைகள் இருந்தன. முதல் அறையின் கதவு திறந்திருந்தது. எதிரே பெரிய நிலைக் கண்ணாடி பொருத்திய மேஜையில் இருந்த அலங்காரப் பொருள்கள், புத்தக அலமாரி, கொடியில் மடித்துப் போட்டிருந்த புடவைகள் எல்லாம் அது லீலாவின் அரை என்று யாரும் சொல்லாமலே விளங்கின. கதவு சாத்திப் பூட்டப் பெற்றிருந்தது. கடைசி அறையும் திறந்தே கிடந்தது. மூலையில் ஒரு பிரம்பு மேஜை, நாற்காலி, ஓர் அகலப் பெஞ்சி, ஒரு கோட் ஸ்டாண்டு, துணிமணிகள் வைக்கும் அலமாரி ஒன்று எல்லாம் அந்த அறையில் இருந்தன. கோட் ஸ்டாண்டில் தொங்கிய ஷர்ட்டையும், பெஞ்சின் மேல் கிடந்த வேஷ்டியையும் கண்ணுற்ற நான் அது என் கணவருடைய அறை என்று ஊகித்துக் கொண்டேன். உள்ளே ஒரு தூசு தும்பு கூட இல்லாமல் எல்லாம் துப்புரவாக இருந்தது. கீழிருக்கும் என் பெட்டியைக் கூட இங்கே கொண்டு வைக்க வேண்டும் என்று எண்ணியவாறு அங்கிருந்து அடுத்த வீடு தெரியும் ஜன்னலில் கண்களை ஓட்டினேன். அடுத்த வீட்டு முற்றத்தில் அந்த ஜன்னல் இருந்தது. முற்றத்தை ஒட்டிய வராந்தாவின் கைப்பிடிச் சுவரில் அழகழகான பூந்தொட்டிகள் அலங்காரமாக வைத்திருந்தன. உட்புறச் சுவரிலே பெரிய பெரிய படங்கள் தெரிந்தன. ஆனால் ஜன நடமாட்டமே இல்லாதது போல் நிசப்தம் நிலவியது. என்ன இருந்தாலும் பட்டணத்துத் தினுசே அலாதிதான். புங்கனூராக இருந்தால் புது மாட்டுப் பெண் வந்த அன்று வீட்டுக்கு எத்தனை பேர்கள் வருவார்கள், போவார்கள்! சேர்ந்தாற் போல் வீடுகள் இருந்தும் இங்கு அவரவர்கள் ஜோலியைக் கவனித்துக் கொண்டு பேசாமல் இருந்து விடுவார்கள் போலும்!

இப்படி நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே, அடுத்த வீட்டு மாடிக்கு ஒரு பெண் வந்தாள். அவள் தான் வீட்டுக்கு உரியவளாக இருக்க வேண்டும். நான் அவளைப் பார்த்த போது அவளும் என்னைப் பார்த்தாள். ஆனால் சிரிக்கக் கூட இல்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே போய் விட்டாள். உள்ளே ரேடியோவைத் திருப்பி விட்டிருக்கிறாள் போலிருக்கிறது. ‘ஜம்’மென்று என் செவிகளில் இசை பாய்ந்தது.

‘இங்கும் இருக்கிறதே, அத்தை வீட்டைப் போல். கூசாமல் நானும் போட்டுப் பார்க்கலாமே! எனக்கும் உரிமை உள்ள வீடுதானே இது?’ என்று நினைத்துக் கொண்டு எழுந்து வந்தேன்.

கீழிருந்து, “சுசீலா! சுசீலா!” என்று மாமியாரின் குரல் ஒலித்தது.

“இதோ வந்துவிட்டேன்” என்று குரல் கொடுத்தவாறு அப்படியே பின்புறம் சென்ற படிக்கட்டுகள் வழியாகக் கீழிறங்கி வந்தேன்.

“சற்றுக் கும்மட்டியைப் பற்ற வை. லீலா வந்துவிடுவாள். மணி ஒன்றாகப் போகிறது” என்றாள்.

‘இப்போது இடைவேளைக்கு வருவாளாக்கும்! அவர் கூட வருவாரோ?’ என்று என்னுள்ளேயே கேட்டுக் கொண்டவளாக நான் வேலையில் முனைந்தேன்.

“ஒரு பில்டரில் காபிப் பொடி போட்டால் போதும். புருஷர்களுக்குச் சாயங்காலம் புதிதாகப் போடலாம்” என்றாள் மாமியார்.

“சாயங்காலந்தான் அவர்கள் வருவார்களோ?” என்று நான் மெதுவாகக் கேட்டேன்.

“ஆமாம், ஆறு மணியாகும். இந்தச் சேப்பாக்கம் ஆபீஸில் இருக்கும் வரை ராமுவும் வருவான், லீலாவுடன். இப்போது இதை விட்டுவிட்ட பிறகு வருவதில்லை” என்றாள் அவள்.

‘இதை விட்டு விட்ட பிறகா? ஆனால் பழைய இடத்தில் இப்போது வேலை செய்யவில்லையா? அப்பா கூடச் சொல்லவில்லையே, இதைப் பற்றி?’ சிந்தையை இந்தக் கேள்விகள் கிளர்த்தின. ஆனால் கேட்கத் துணிச்சல் வரவில்லை. தானாகத் தெரிந்து போகிறது. அப்புறம் எனக்கு வேலை சரியாக இருந்தது. அப்பா ஊருக்குக் கிளம்புவது கூட உள்ளே எட்டிப் பார்த்து, “போய் வரட்டுமா அம்மா சுசீலா?” என்று கூப்பிட்ட பிறகுதான் நினைவுக்கே வந்தது. தூக்கிச் செருகியிருந்த புடவையை அவிழ்த்து விட்டுக் கொண்டே, “கிளம்பி வீட்டீர்களா அப்பா?” என்று வெளியே வந்தேன். அருகில் வந்து நின்ற என் மாமியாரிடம் அவர் “குழந்தையை உங்கள் பொறுப்பில் விட்டாச்சு அம்மா! இதுவரை அவள் வீட்டை விட்டு எங்கும் போய் இருந்ததில்லை. அதனால் ஏறவோ தாழவோ இருந்தாலும் மனசில் வைத்துக் கொள்ளக் கூடாது. உங்கள் பெண் அவள் இனிமேல்” என்று கூறும் போது தொண்டை கரகரத்தது.

“கவலையே படாதேயுங்கள். நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று சம்பிரதாயமாக அவள் விடை கொடுத்தாள்.

கூடவே வாயில் வரை போய் நின்ற நான், “அவர் வருகிறாரா அப்பா ஸ்டேஷனுக்கு?” என்று மெதுவாகக் கேட்டேன். யாருமே அப்பாவைக் கவனிக்கவில்லை போல எனக்குத் தோன்றியது.

“மாப்பிள்ளைதானேயம்மா காரை ஓட்டிக் கொண்டு வரப்போகிறார்?” என்றார் அப்பா. அவர் கதவைத் திறந்து ஏறிக் கொண்அதைப் பார்த்துக் கொண்டே பேச்சற்று நான் வாயிற்படியிலேயே நின்றேன். மாடிப் படியிலே வேகமாக இறங்கி வந்த என் கணவர் நான் நின்றதைப் பார்த்தார். மங்கலான வாயில் விளக்கின் நீல ஒளியில் என்னை அறியாமலேயே என் கண்களில் துளித்திருந்த கண்ணீர் முத்துக்கள் அவருக்குத் தெரிந்து விட்டன போலும்! என் மோவாயைப் பற்றி மெல்லிய குரலில், “அப்பா ஊருக்குப் போவதற்காகவா அழுகிறாய்? அசடு!” என்றார். யாரோ என்னை எங்கோ அலேக்காகத் தூக்கிச் செல்வது போல் இருந்தது.

வீட்டு வேளைகள் முடிந்து விட்டன. ஸ்டேஷனுக்குச் சென்றிருந்த அவர் இன்னமும் வரவில்லை.

எங்கள் அறையில் வந்து ஜன்னலைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த என் மனத்தில் அப்போது லீலாவைப் பற்றிய எண்ணங்களே நிரம்பியிருந்தன. ஆம், சற்று முன் தான் அவள் கேலியும் குறும்பும் கலந்த பேச்சுடனும் நகைப்புடனும் என் கூந்தலை வாசம் வீசும் மல்லிகைச்சரம் கொண்டு அழகு செய்துவிட்டுப் போயிருந்தாள். எத்தனை அன்பும் அநுசரணையும் வாய்ந்த வெகுளியான பெண் இவள்! படித்திருக்கிறாள்; அழகு இருக்கிறது; செல்வம் இருக்கிறது; துளி கர்வம் இல்லையே!

அவள் வீட்டில் இருக்கிறாள் என்றாலே எனக்கு ஏதோ சொல்ல முடியாத சந்தோஷம் உண்டாயிற்று. ஒரு நாளிலேயே குறுகுறுக்கும் அவள் முகமும் கபடமற்ற இருதயத்திலிருந்து வந்த அவள் பேச்சும் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டன. அவளுடைய தோழமை எனக்குக் கிடைத்தற்கரிய பாக்கியம் எனக் கருதி மகிழ்ந்தேன்.

ஜன்னல் வழியாக நிலவின் கதிர்கள் என் மீது விழுந்தன. அதன் குளுமையை ரஸிக்க நான் எழுந்து விளக்கை அணைத்தேன். அடுத்த வீட்டு மாடியில் நான் பகலில் கண்ட பெண் பால் செம்பு சகிதம் வந்தாள். அதை உள்ளே கொண்டு வைத்துவிட்டு, அவள் பூந்தொட்டியின் அருகே வந்து நின்று கொண்டு வானைப் பார்த்தாள். சற்றைக்கெல்லாம் ஓர் ஆடவன் அங்கு வந்தான். வந்தவன் சப்தம் செய்யாமலேயே பின்னால் சென்று அவள் கண்களைத் தன் கரங்களால் மூடினான்.

அவ்வளவுதான் தண்ணென்ற வலிய கைகள் என் பார்வையை மறைத்தன. உடல் சிலிர்த்தது எனக்கு.

“நாளைக்கு இந்த ஜன்னலுக்கு ஒரு திரை போட்டு விட வேண்டும்” என்று புன்னகை செய்தார் என் கணவர்.

ஊமைப் பெண்ணைப் போல நான் அந்தச் சமயத்தில் சங்கடப் பட்டேன். மனத்திலே கரை புரண்ட உணர்ச்சிப் பெருக்கு என் தொண்டையைத் தடை செய்தது.

“வாயைத் திறந்து பேச மாட்டேன் என்கிறாயே சுசீ? இதோ இந்த நிலவு உன் பொன் முகத்தில் விழும் போது எப்படி இருக்கிறது தெரியுமா?” என்று என் முகத்தைப் பிடித்து நிமிர்த்தினார் அவர்.

வானத்துக் கருமேகங்களின் மீது தண்ணிய காற்றுப் படும்போது மழை பொழிகிறதே, அது போல என் நெஞ்சத்தைப் பிடித்துக் கொண்டிருந்த உணர்ச்சிகள் யாவும் அவருடைய ஸ்பரிசத்தால் கண்களை வந்து திரையிட்டன.

“அழுகிறாயா என்ன? என்ன சுசீ?” என்று அவர் அதற்குள் பதறி விட்டார்.

கண்ணீரின் நடுவே நான் மெல்ல சிரித்தேன்.

“இல்லை, அழவில்லை” என்று திணறினேன்.

“நான் பயந்து போய்விட்டேன்! இன்னமும் அப்பா ஊருக்குப் போனதை நினைத்துத்தான் அழுகிறாயோ என்று. சுசீ, உன் கண்களில் நீர் வந்தால் என் நெஞ்சை யாரோ அமுக்கிப் பிழிவது போலல்லவா இருக்கிறது? இன்று காலையில் லீலா கூறினாளே, அது போல் உன் செவ்விதழ்களைத் திறந்து நீ நகை புரியும் போது என் ஆவி என் வசம் இருப்பதில்லை. காரியாலயத்தில் எனக்கு ஏதாவது வேலை ஓடினால்தானே?” என்று என் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்ட அவர் முகம் என் முகத்துக்கு வெகு சமீபமாக நேராக வந்தது. அவர் இதழ்கள் என் இதழ்களில் பொருந்தி இருக்கும். ஆனால்...?

திடீரென்று அறைக்கு வெளியே, “ராமு! ராமு!” என்று என் மைத்துனர் கூப்பிடும் குரல் கேட்டது. இவ்வுலகையே மறந்திருந்த அவர் திடுக்கிட்டுப் பின் வாங்கினார். என் உள்ளம் துணுக்குற்றது.

கதவைத் திறந்து கொண்டு, “என்ன அண்ணா?” என்ற அவருடையை கேள்வி எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பதாக எனக்குத் தோன்றியது.

“குழந்தைக்கு உடம்பு மிகவும் நன்றாக இல்லை. ராமு, சிற்றப்பா சிற்றப்பா என்று சாயங்காலம் நான் பார்த்த போதே அரற்றிக் கொண்டிருந்தாள். இப்போதும் அதே ஸ்மரணைதான். நெஞ்சு பாறையாகி மூச்சுத் திணறுகிறது. இந்த நிலையிலும் அவள் உன் நினைவாகப் பிதற்றுவது பார்க்கச் சகிக்கவில்லை. மன்னியைக் கொண்டு விடப் போயிருந்தேன் அல்லவா? டாக்டரே சொல்லுகிறார். உன்னைக் கூப்பிடவே எனக்கு...” என்று தயங்கினார் மைத்துனர்.

“அடாடா! அப்போதே சொல்லக் கூடாது? இதோ வந்துவிட்டேன்” என்று அவருடைய மறுமொழி எனக்குக் கனவிலே கூறுவது மாதிரி இருந்தது. அடுத்த கணம் அவருடைய செருப்பு, தாழ்வரையில் சிமிட்டித் தளத்தில் ‘சடக் சடக்’ கென்று உரசியது என் நெஞ்சில் உரசியது போலிருந்தது. வானத்திலிருந்து கல் மாரியோ, மண் மாரியோ பொழிந்து என்னை நெருக்குவது போல் உணர்ந்தேன். அவற்றின் நடுவே அந்தப் பழைய சம்பவங்கள். ஊர்வலத்தின் இறுதிக் கட்டம். புறப்படுமுன் கிழிந்த புடைவை. எல்லாம் ‘டங் டங்’கென்று இரும்புக் குண்டுகள் போன்று என் நினைவில் வந்து மோதின. செயலற்றுத் துவண்டு படுக்கையில் வீழ்ந்த என்னை நோக்கி ஜன்னல் வழியாக வந்த நிலவு, தலையிலே தொங்கிய மல்லிகையின் மனம் எல்லாம் பரிகசித்தன.

--------------

2.3 மலர்

இரவின் தனிமையூடே நான் எத்தனை நேரம் விழித்திருந்தேனோ? நித்திராதேவிக்கு என் மீது எப்போதுமே கருணை உண்டு. அவள் என்னை அறியாமலேயே என்னைத் தன் வசம் ஆட்கொண்டு விட்டாள்.

“அவர் எப்போது வருவாரோ?” என்று நினைவில் படிந்த எண்ணத்தினூடனே உறங்கிவிட்ட என்னை, “சுசீலா, சுசீலா!” என்று மெதுவாக அழைக்கும் குரலும், குப்புறப்படுத்துக் கொண்டிருந்த என் முதுகில் யாரோ தட்டிய உணர்வும் என் நித்திரையைக் கலைத்தன. ‘அவர் வந்து விட்டார்’ என்ற புல்லரிப்புடன் நான் திரும்பிக் கொண்டு கண்களை விழித்தேன். எத்தகைய ஏமாற்றம் எனக்குக் காத்திருந்தது? காவிப் புடவையும் தானுமாக விடியற் காலையின் மங்கிய வெளிச்சத்தில் என் மாமியார் முன் நின்றாள்!

“சற்று எழுந்து வந்து காபி கொட்டையை அரைத்து வை, சுசீலா. பால்காரன் வந்துவிட்டான். நான் போய்ப் பார்த்து வாங்க வேண்டும்” என்று உதய கீதத்துடன் என்னை எழுப்பி விட்டு அவசர அவசரமாகச் சென்றாள் அவள்.

குறிக்கோள் ஒன்றைக் கொண்டு செல்லும் மனத்துக்கு நடுவே வரும் தடங்கல்கள் ஒன்றையொன்று மிஞ்சிக் கொண்டு பிரமாண்டமாகத் தோன்றினாலும், அதை விட இது சிறியது. கடந்துவிடலாம் என்ற தைரியம் கொண்டால் முன்னேறிச் செல்வது எளிதாகுமாம். என் வாழ்விலே குறிப்பிட்ட லட்சியம் ஏதும் இருப்பதாக எனக்கு அதுவரை தோன்றியதே இல்லை. அந்த மாதிரியான லட்சியத்தைச் சிருஷ்டித்துக் கொண்டு அதை அடையும் ஆர்வம் கொள்ளும் சூழ்நிலையில் நான் பண்படையவில்லை. ‘பெண்கள் மணமாகி கணவன் வீட்டுக்குப் போவார்கள். அங்கே சுகமாகவும் சந்தோஷமாகவும் அன்பின் பிணைப்பில் வாழ்க்கை நடத்துவார்கள். அப்படி இல்லாதவள் துரதிருஷ்டசாலி, என்ற எண்ணங்களிலே தான் நான் ஊறியிருந்தேன். இரவின் ஏமாற்றமும், காலை உதயத்தில் அதைத் தூக்கியடித்த இன்னோர் ஏமாற்றமும் எனக்கு ஏதோ என் வாழ்விலே தெளிவில்லாத லட்சியம் ஒன்று உண்டென்றும், அதை அடைய நான் இது சிறியது, இதைவிட முன்னது பெரியது என்று எனக்கு ஏற்படும் தடங்கள்களை மனத்துணிவு கொண்டு கடக்க வேண்டுமென்றும் தோன்றச் செய்தன.

அவருடைய மேனிபடாத அந்தப் புத்தம் புதுப் படுக்கையைச் சுற்றி வைத்து விட்டு வாடிச் சோர்ந்த இருதயத்துடன் நான் அன்றையப் பொழுதின் அலுவல்களை அணைய வந்தேன். அடுத்த அறையின் ஒருக்களித்த கதவிடுக்கின் வழியாக என் மைத்துனர் நிச்சிந்தையாகத் தூங்குகிறார் என்று அறிவிக்கும் குறட்டைச் சத்தம் வெளி வந்தது. லீலாவின் அறையில் விளக்கு எரிந்தது. மேஜையின் மீது சாய்ந்து கொண்டு அவள் ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள். முன் கூடத்தில் குழந்தைகள் உறங்கினார்கள். கடிகார முள் மணி ஐந்தேகால் என்று அறிவித்தது. ‘அதற்குள்ளாகவா காபி?’ என்று எண்ணியவளாகக் கீழே வந்த நான் பல்லைத் தேய்த்துவிட்டுக் காபி கொட்டையை அரைக்கலானேன்.

முதல் நாள் ரெயிலில் கண் விழித்திருந்தேன். ஆனாலும் புது மலர்ச்சியிலே உள்ளம் கொண்ட ஆவலால் உடல் சோர்வு சிறிதும் தெரியவில்லை. அவயங்கள் வேலை செய்யத் துறுதுறுப்பாகப் புத்துணர்ச்சி பெற்றிருந்தன. இன்றே மலருவதற்கான ஆவலுடன் சூரியோதயத்தை எதிர்பார்த்து நிற்கும் மடலவிழும் மலரின் மேல் திடீரெனக் கார் மேகங்கள் மழை பொழிந்தால் கூம்பி விடுவது போல என் இருதயத் தாமரை சோர்ந்து கிடந்தது. உடலில் சுறுசுறுப்பு உயிர் அணுக்களை விட்டு அப்பால் உறங்கிக் கிடந்தது. செய்யும் வேலை எனக்கு மகிழ்வை ஊட்டுவதற்குப் பதிலாகப் பாரமாய் இருந்தது.

வாழ்நாள் முழுவதும் இப்படிப் பாரமாகி விடுமோ என்னவோ?

‘என்ன பேதமை! குடும்பம் என்றால் அதில் கடமை, அன்பு, ஆட்சி, அலுவல் எல்லாமே பின்னிக் கிடக்கும். ஒன்றுக்கு அவசியம் நேரிடும் போது இன்னொன்றின் வரையறையை விட்டுச் சற்று விலக வேண்டியே வரும். இதை எல்லாம் பொருட்படுத்தித் தைரியத்தை இழந்து தன்னைத் தானே கோழையாக்கிக் கொள்ளலாமா? குன்றி விடும்படி இப்போது என்ன விதத்தில் தாழ்ந்து விட்டேன்?

கோபம் வரும் சமயத்தில் ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணினால் போதும். கோபம் தணிந்து விடும் என்று சொல்வது வழக்கம். சில சமயங்களில் மனத்தில் ஏற்படும் சஞ்சலங்களும் அப்படித்தான். சிந்தித்துப் பார்த்ததில் பிரமாதமாக எதுவும் நடந்து விடவில்லை என்றே தோன்றுகிறது.

கொஞ்சம் ஆறுதல் பெற்றவளாக அடுப்பில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்த போது லீலா வந்தாள். “என்ன அத்தை, புது மாட்டுப் பெண்ணை அதற்குள் அடுப்படியில் உட்கார்த்தி வைத்து விட்டீர்களே?” என்று என் மாமியாரைக் கேட்டுக் கொண்டே அவள் என் அருகில் வந்து உட்கார்ந்தாள்.

“ராத்திரி என்னவோ, நளினிக்கு உடம்பு அதிகமாக இருக்கிறது, சிற்றப்பா என்று அலறுகிறாள் என்று அத்திம்பேர் ராமுவைக் கூப்பிட்டார். இப்போது எப்படி இருக்கிறதாம்?” என்று கேட்டாள் அவள்.

எனக்கு எதுவுமே தெரியாது போல் நான் தலையைக் குனிந்து கொண்டு மௌனம் சாதித்தேன்.

“ஒன்றும் தெரியவில்லையே. பட்டுவையும் காணோம். இன்னும் அவனும் வரவில்லையே!” என்று என் மாமியார் கவலை தொனிக்க பதிலிறுத்தாள்.

“ஆனால் இரவு முழுவதும் ராமு அங்கே தான் இருக்கிறானா?” என்று வினவிய லீலா ஆச்சரியத்துடன் குனிந்து என் முகத்தை நோக்கினாள்.

மனத்திலே இருக்கும் துயரம் தானாக அமுங்கிக் கிடக்கும். யாராவது அநுதாபமாக இருப்பது தெரிந்து விட்டாலோ, குபுக்கென்று வெளிக் கிளம்பிவிடும். லீலாவின் அநுதாபம் தோய்ந்திருந்த அந்தக் கேள்வி சாம்பல் பூத்திருந்த என் உள்ளக் கனலை ஊதிவிட்டு விட்டது. எனக்கு மட்டும் கேட்கும்படியான மெல்லிய குரலிலே “பாவம்!” என்று அவள் பகர்ந்த போது உண்மையில் எனக்கு அழுகையே வந்து விடும் போல் இருந்தது. ஒரு வேலையை நான் செய்து முடிப்பதற்குள் நாசுக்காக இன்னொரு வேலைக்குத் தயாராகக் கட்டளை இடுவதில் என் மாமியாருக்கு ஈடு அவளேதான். ஒரு நாளைய அனுபவத்திலேயே இதை நான் தெரிந்து கொண்டேன்.

லீலா கவனித்து விடப்போகிறாளே என்ற அச்சத்துடன் சாம்பல் கண்களில் பறந்து விட்டது போல் பாவனை செய்து கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டேன். பிறகு கரண்டியில் நெருப்பை எடுத்துக் கொண்டு வெந்நீரடுப்புப் பற்ற வைப்பதற்காகக் குளிக்கும் அறைப் பக்கம் போனேன். பல்விளக்கும் ப்ரஷ்ஷில் பசையை விட்டுக் கொண்டு அவர் வாயிற்படியில் நின்றார். அப்போதுதான் வந்திருக்கிறார் போல் இருக்கிறது.

சற்று முன்னே என்ன என்னவோ சமாதானம் செய்து கொண்டேன்? அவரைக் கண்டவுடன் அவை அனைத்தும் போன இடம் தெரியவில்லை. போனது தான் போனாரே, இரண்டு மணியோ, மூன்று மணியோ இருந்து விட்ட பிறகு வந்தாரா? குழந்தைக்குத் தந்தை இங்கே சுகமாகக் குறட்டை விடுகிறார்! என்ற கோபம் என் நெஞ்சுக்குழியிலே திரளாக வந்து நின்றது. அவரைப் பார்த்தது போலவே காட்டிக் கொள்ளாமல் கை வேலையில் கவனம் செலுத்தலானேன். அவர் என்னையேதான் நோக்கிக் கொண்டு நின்றார் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. உட்கார்ந்து அடுப்பு மூட்டிக் கொண்டிருந்த என்னைப் புஜத்தைப் பற்றி எழுப்பினார். அப்போதும் நான் என் பார்வையை உயர்த்தவில்லை. “கோபமா சுசீ” என்று என் முகத்தைப் பிடித்து அவர் நிமிர்த்தினார். அவர் குரலிலும் விழிகளிலும் குலவிய கனிவு தான் என்னை எப்படி அவர் வசம் இழுத்தது! யாரேனும் கவனித்து விடப் போகிறார்களே என்ற அச்சமும் நாணமும் கௌவிக் கொள்ள நான், “இல்லை” என்று தலையை ஆட்டியவாறு அவர் பிடியிலிருந்து திமிறினேன். “நல்ல வேளை, இதோ ராமு வந்து விட்டானே?” என்று கூறிக் கொண்டே லீலா சோப்புப் பெட்டி சகிதம் வந்தாள். “குழந்தைக்கு எப்படி இருக்கிறது?” என்று கேட்டாள்.

“நியுமோனியாதான். அவ்வளவு சீக்கிரம் ஜுரம் குறைந்து விடுமா? இப்போது கூடக் கண்ணை விழித்துக் கொண்டு, ‘போகாதே’ என்று அழுதாள். இரவெல்லாம் நான் எங்கே போய்விடுவேனோ என்ற பயம். என் கையைப் பிடித்துக் கொண்டே இருந்தாள். அப்படி இப்படிச் சற்று நகர்ந்து விட்டால் கூடப் போதும், அழ ஆரம்பித்து விட்டாள். நெஞ்சிலிருந்து குரல் எழும்பினால் தானே? ‘காபி குடித்து விட்டு ஓடி வருகிறேன்’ என்று சமாதானப்படுத்தி வந்தேன்” என்றார் அவர்.

“நல்ல வேளை! தத்துப் பெண் சொன்னாள் என்று அங்கேயே இருந்து விடாமல் இருந்தாயே. கல் நெஞ்சக்காரன் நீ ராமு!” என்று லீலா சற்றும் யாருக்கும் அச்சமின்றிப் பட்டம் சூட்டினாள் அவருக்கு.

மனத்திலே பட்டதைச் சற்றும் தயங்காமல் வெளியிட்டுவிடும் அவளது தீரத்தை உள்ளூறப் பாராட்டினேன் நான்.

அவர் பதிலுக்கு என்னை நோக்கி முறுவலித்தார்.

அதனுடன் அந்தப் பேச்சு முடிந்து விட்டது. முன்னால் போல அண்ணனும் தம்பியும் காரில் ஏறிக் கொண்டு சென்றார்கள். ‘அவர் எந்த இடத்தில் வேலை செய்கிறார்? என்ன வேலை? என்ன வருவாய்? வீடு, கார், ரேடியோ என்று தடபுடலாக நடக்கிறதே, இவை யாவும் என் மைத்துனரால் தான் நடைபெறுகின்றனவா?’ என்பன போன்ற குடும்பச் சங்கதிகளைத் தெரிந்து கொள்ளும் அரிப்பு என் மனத்தைத் தின்றது. ஆனால் யாரிடம் கேட்பது?

மாமியார் வேலை சொன்னாள்; செய்தேனே ஒழிய நெருங்கிக் கேட்கும் அளவுக்கு சகஜ பாவம் வரவில்லை. பட்டுவுடன் நான் இன்னும் சேர்ந்தாற் போல நாலைந்து வார்த்தைகள் கூடப் பேசியிருக்கவில்லை. அவள் தான் வீட்டுக்கும் சிகிச்சை இல்லத்துக்குமாக அலைந்து கொண்டிருந்தாளே? மேலும் அவள் எப்போதும் என் முன் சிரித்த முகத்துடனேயே தென்பட்டாலும் மனம் விட்டுப் பேச முடியாதென்ற அர்த்தமற்ற அச்சம் என்னுள் எழும்பியது. லீலாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றாலும் அதிலும் எனக்குச் சங்கடம் தென்பட்டது.

நான் அவரை மணந்து கொண்ட மனைவி. அந்த வீட்டிலே அடியெடுத்து வைத்திருக்கும் மருமகள். என் கணவர் என்ன உத்தியோகம் செய்கிறார். குடும்பம் எப்படி நடக்கிறது என்பன போன்ற விஷயங்கள் எனக்கு இன்னமும் தெரியவில்லை என்ற என் அறியாமையை நான் அவளிடம் காட்டிக் கொள்ளுவதா? வான வீதியிலே பறக்கும் உல்லாசப் பறவையைப் போலச் சுயேச்சமாக நடமாடும் அந்த நாகரிக ராணியிடம் நான் இத்தகைய சமாசாரங்களைக் கேட்பதனால் எனக்கு மட்டுமல்ல, என்னிடம் இதெல்லாம் தெரிவிக்காத அவரிடமும் அவள் வைத்திருக்கும் மதிப்புக் குறைந்து போகாதா? எனவே, அந்த யோசனையையும் கை விட்டேன்.

அன்று பகல் கல்லூரியிலிருந்து வந்த பின் லீலா, “சுசீலா, நீ இதற்கு முன் இவ்வூருக்கு வந்ததில்லையே?” என்று கேட்டாள்.

நான் உதட்டைப் பிதுக்கினேன்.

என் காதோடு நெருங்கிய அவள், “நல்ல படம் ஒன்று ஓடுகிறது. இன்று ‘மாட்னி ஷோ’வுக்குப் போகலாமா? எனக்கு இனிமேல் முக்கியமான வேலை ஒன்றும் இல்லை. வருகிறாயா?” என்று அழைத்தாள்.

எனக்கு ஒரு புறம் சந்தோஷமாகவும், ஒரு புறம் கஷ்டமாகவும் இருந்தது. மாமியாரிடம் சொன்னால் என்ன சொல்லுவாளோ? வந்து முழுசாக இரண்டு தினங்கள் ஆவதற்குள், “நான் லீலாவுடன் சினிமாவுக்குப் போகிறேன்” என்றால் நன்றாக இருக்குமோ? சிற்றுண்டிக்கு ஆரம்பிக்க வேண்டும்! அரிசி உளுந்து ஊறுகிறது, வேலைக்காரி வருவாள். இத்தனை வேலைகளையும் விட்டு விட்டு எப்படிக் கேட்பது? ஆனால் லீலா, அவ்வளவு குறுகிய காலத்தில் என் உள்ளத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு அன்புடன் அழைக்கும் போது தட்டுவதா?

என் மௌனத்தைக் கண்ணுற்ற அவள், “என்ன யோசனை செய்கிறாய்? ‘போனால் அவருடன் அல்லவோ போக வேண்டும்? இவளுடன் போவானேன்’ என்று இருக்கிறதா, கள்ளி!” என்று என் கன்னத்தைச் செல்லமாக இழைத்துக் குறுநகை செய்தாள்.

“இல்லை, அத்தையிடம் நீங்கள் சொல்லுகிறீர்களா? வேலை நிறைய இருக்கிறதே!” என்று நான் இழுத்தேன்.

“பூ! இவ்வளவு தானா? சமையலறை இருக்கவே இருக்கிறது. மாடிக்குப் போய்த் தலைவாரி ‘டிரஸ்’ பண்ணிக் கொள். நான் சொல்லிச் சரிப்படுத்தி விடுகிறேன்” என்று என் முதுகில் தட்டிக் கொடுத்து அவள் உற்சாகப்படுத்தினாள்.

வீட்டில் அடக்கமாக வளைய வர வேண்டிய மருமகள் நான் என்பதையும் மறந்து சந்தோஷத்துடன் துள்ளிக் கொண்டு மாடிக்கு ஓடினேன். அத்தையிடமும் தாயிடமும் லீலா என்ன கூறினாளோ? சற்றைக்கெல்லாம் தன்னை அலங்கரித்துக் கொள்ள அவளும் மாடிக்கு வந்து விட்டாள். இருவருமாகத் தோள்மேல் தோள் போட்டுக் கொண்டு உல்லாசமாக மாடியை விட்டுக் கீழே வந்த போது, வாயிலில் கூடைக்காரியிடம் என் மாமியார் கத்தரிக்காய் வாங்கிக் கொண்டிருந்தாள். எங்களை அகன்ற விழிகளுடன் நிமிர்ந்து பார்த்த அவளுக்கு லீலா, “அத்தை நான் மாம்பலத்துக்கு ஒரு சிநேகிதி வீட்டுக்குப் போக வேண்டியிருக்கிறது. இவளுந்தான் ஓரிடமும் பார்த்ததில்லையே. எனக்கும் துணையாக இருக்கும் என்று அழைத்துப் போகிறேன்” என்று கூறிவிட்டுப் பதிலுக்குக் காத்திராமலேயே செருப்புச் சத்தம் ஒலிக்க என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

“நீங்கள் இப்போதுதான் சொல்லுகிறீர்களா? ஏதாவது நினைத்துக் கொண்டால் என்ன செய்வது?” என்று நான் கலவரத்துடன் வினவினேன்.

“நினைத்துக் கொள்வது என்ன? அவர்களாகப் பார்த்து உன்னை அனுப்ப வேண்டும் என்று எண்ணிப் பயந்தால் நீ பயந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். ஏதடா, நேற்று வந்த பெந்தானே என்று கூட இல்லாமல் உடனே சமையலறைக்குள் உட்கார்த்தி விட்டார்களே! இத்தனை நாட்களாக எப்படிச் சமாளித்தார்களாம்?” என்று ஆத்திரத்துடன் மொழிந்தாள் லீலா.

“அதனால் என்ன? வேலை ஏதும் இல்லாவிட்டால் எனக்கும் எப்படிப் போது போகும்? ‘தேய்ந்த கட்டை தான் மணம் பெறும்’ என்று அப்பா சொல்லுவார். சோம்பேறி வாழ்க்கையில் என்ன சுகம் இருக்கிறது?” என்றேன் நான் பதிலுக்கு.

“அது சரிதான். ‘புதுப் பெண். புதிதான சூழ்நிலையில் நம்மிடம் பழக வந்திருக்கிறாள். நான்கு நாளைக்கு நாம் அன்புடன் அரவணைத்துக் கொண்டு போக வேண்டும்’ என்று இங்கு யார் நினைக்கிறார்கள்? அம்மாவும் அத்தையும் அடுப்பங்கரை உதவிக்கு ஆச்சு என்று நினைப்பது கிடக்கட்டும். அக்கா, ஏதோ ஓடியாடும் குழந்தைக்கு உடம்புக்கு வந்திருக்கிறதென்று இல்லாமல் ஒரேயடியாகப் பிரமாதப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு யாரும் வேண்டாதவர்கள் வந்திருப்பதைப் போன்று இதுதான் சமயமென்று நர்ஸிங்ஹோமி’லேயே உறைந்து கிடப்பது நன்றாகவே இல்லை. நேற்றிரவு சாப்பிடும்போது அத்திம்பேர் ‘மாட்டுப்பெண் சமையல் தானே?’ என்று கேட்கிறார். எனக்கு எரிச்சல் வந்தது. இரவுதான் ஆகட்டும் குழந்தை சற்றுத் தூங்கினதும் அவன் சங்கடப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தால் கூட ‘நீ போ ராமு. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று அக்கா சொல்ல வேண்டாமா? மரியாதை கொடுத்து அல்லவோ மரியாதை வாங்க வேண்டும்? எனக்குப் பொறுக்கத்தான் இல்லை!” என்று விடுவிடென்று சொல்லிக் கொண்டு போனாள் அவள்.

எனக்கு ஒரே பிரமிப்பாக இருந்தது. நான் கூட இவ்வளவு ஆழ்ந்து கவனிக்கவில்லையே! உரியவளான எனக்கே இப்படி எல்லாம் குற்றமாக எடுத்துக் கொள்ளத் தோன்றாத போது, படிப்பிலும் களிப்பிலும் மனதைச் செலுத்தி வரும் கல்லூரி மாணவியான அவள் வீட்டிலும் குடும்பத்திலும் இன்னும் தொடர்பு கொள்ளாதவள். வெகு நுட்பமாகக் கவனித்திருக்கிறாளே! மண வாழ்க்கையை இன்னும் மேற்கொள்ளாத அவளுக்குப் புது மனைவியின் உள்ளத் துடிப்பு எப்படித் தெரிகிறது! அந்த வாழ்விற்கும் உரிய பருவம் வந்துவிட்டால் தானாகவே உணர்ந்து கொள்ள முடியும் போலும்? லீலா என்னை விட வயதில் மூத்தவள் அல்லவா? ‘ஒவ்வொருவருடைய குணமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். எதையும் நுட்பமாக ஆராயமல் சகஜமாக எடுத்துக் கொள்வதுதான் நலம்’ என்று அப்பா உபதேசித்தது என் நினைவுக்கு வந்தது. இப்படி எல்லாம் இருக்கும் என்று முன்பே அறிந்து சொன்னது போல் அல்லவோ நடக்கிறது.

லீலாவின் அபிப்பிராயங்களை அப்படியே மடக்கி நான் பதில் கொடுத்தேன். “இது போன்ற விஷயங்களை ஊன்றி ஊன்றிக் கவனிக்காமல் விட்டுவிடுவதுதான் நல்லது. வீணாக ஆராய்ச்சி செய்து மனத்தைச் சஞ்சலத்திற்குள்ளாக்கிக் கொள்வதில் என்ன லாபம்?”

ஒரு கணம் நடைபாதையிலேயே நின்ற லீலா என்னைப் பிரமிக்கும் விழிகளுடன் பார்த்து, “ராமு அதிருஷ்டசாலிதான்” என்று முணுமுணுத்தாள்.

பஜார் ரோடு ஒன்றுக்கு நாங்கள் வந்தோம். லீலா என் கையைப் பிடித்து அழுத்தி, “இங்கேயே நிற்கலாம். பஸ் இங்கே தான் வரும்” என்றாள். பிற்பகல் வேளையாதலால் துணிக் கடைகளிலும், வளையல் கடைகளிலும் ஏறி இறங்கும் பெண் மக்கள் தாம் அதிகம் காணப்பட்டனர். நான் வைத்த கண் வாங்காமல் எதிர் வரிசையில் உள்ள கடைகளைக் கவனித்துக் கொண்டிருந்த பொழுது, அந்தப்புறம் ஒரு பஸ் வந்து நின்றது. ஆட்கள் இறங்கிய பின் மறுபடியும் அது நகர்ந்தது.

“ஹலோ!” என்று யாரோ பழகிய குரலில் விளித்தது என் கவனத்தை இழுத்தது. எதிர் வெயிலில் முகத்தைச் சரித்துக் கொண்டு பார்த்தேன். பஸ்ஸிலிருந்து இறங்கியவர்களில் ஒருவனான மூர்த்திதான் அப்படிக் கூப்பிட்டிருக்கிறான்.

ரஸ்தாவின் குறுக்கே கடந்து எங்கள் அருகில் வந்த அவன், “நான் காண்பது மெய்தானா? கண்கள் பொய் சொல்லவில்லையே?” என்று முறுவலித்தான்.

“கண்களைத் துடைத்துக் கொண்டு நன்றாகப் பாருங்கள். இந்த உலகத்தில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் பின்னும் குறுக்கிட்டால் கிள்ளி விட்டுக் கொண்டு பாருங்கள்” என்று பதிலுக்குப் புன்னகை செய்தாள் லீலா.

“மிஸஸ் ராமநாதனுக்கு அருகிலே இருக்க வேண்டியவர் மிஸ்டர் ராமநாதனாயிற்றே என்ற சந்தேகம் ஒரு புறம் இருக்க, என் கண்களிலேயே தட்டுப்படாமல் இந்தப் பரந்த பட்டினத்தில் எங்கோ ஒளிந்து கொண்டிருந்த லீலாவை இன்று கும்பிடப் போன தெய்வம் குறுக்கே நின்று மரித்தாற்போல் காண நேரிட்ட செயல் ஒரு புறமாக, என்னை என் கண்களே நம்பிக்கை இழக்கச் செய்து விட்டது” என்றான் அவன்.

“எங்கே... இத்தனை தூரம்?” என்று லீலா கேட்டாள்.

“மௌண்ட் ரோடு வரை ஒரு வேலையாக வந்தேன். அப்படியே மிஸஸ் ராமநாதனைப் பார்க்க, உங்கள் வீட்டைத் தேடிப் பார்க்கலாம் என்று தான் கிளம்பினேன். அவள் எனக்குத் தெரிந்தவளாக்கும்.”

“அட! அப்படியா சங்கதி? என்னிடம் நீ சொல்லவேயில்லையே சுசீ. உங்களுக்கு உறவா அவள்?” என்று லீலா மலர் முகத்துடன் கேள்விகளை அடுக்கினாள். அவனைக் கண்டதுமே எனக்கு அவன் புடைவைகளைக் கொண்டு அத்தையிடம் கொடுத்திருப்பானோ, அத்தை என்ன சொல்லியிருப்பாளோ அவனிடத்தில், அவன் என்ன நினைத்துக் கொண்டிருப்பானோ என்ற எண்ணங்களெல்லாம் மனத்தின் அடித்தளத்திலிருந்து கிளம்பி என்னை உறுத்தத் தொடங்கி விட்டன. அதைப் பற்றி அவன் இப்போது லீலாவுக்கு முன் கேட்டு விடாமல் இருக்க வேண்டுமே என்று நினைத்தேன்.

எங்கள் பரிச்சயத்தை அவனே விளக்கிய பின் லீலா, “ஆனால் சுசீலாவைப் பார்க்க எங்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தீர்கள் என்று சொல்லுங்கள்!” என்றாள் சந்தோஷத்துடன்.

என் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ‘அந்த விஷயத்தை அவன் சமய சந்தர்ப்பம் அறியாமல் கேட்டு விட்டால்? இவனிடம் புடவையைத் திருப்பிக் கொடுத்தது என்ன முட்டாள்தனம்?’

“நாங்கள் படம் ஒன்று பார்க்கத் தியேட்டருக்குக் கிளம்பினோம். ஆட்சேபம் ஏதும் இல்லை, வருகிறீர்களா? ஒரு விஷயம் இல்லை, பல விஷயங்கள் வேண்டுமானாலும் கேட்க அவகாசம் இருக்கும்” என்று சிரித்துக் கொண்டே லீலா அவனையும் அழைத்தாள்.

அவன் தட்டிக் கழிக்க வேண்டுமே என்று நான் விரும்பினேன். ஆனால் அவனோ, “ஓ! வருகிறேன். ஆனால், அந்தச் சமாசாரம் இப்போது கேட்பதற்கில்லை. அவளிடம் தனியாகத்தான் கேட்க வேண்டும்!” என்று என்னை நோக்கி நகைத்த போது, லீலாவின் முகத்தில் கேள்விக் குறியிட்டு விட்டது. “அப்படியானால் எனக்குத் தெரியாமல் நீங்கள் அவளைப் பார்த்துப் பேச வீட்டுக்கு வந்தது தடைப்பட்டு விட்டதாக்கும்!” என்ற அவள் கேள்வியில் தொனித்த வேதனையின் கீறல் என் உற்சாகத்தை விழுங்கி விட்டது.

எனக்குத் தர்ம சங்கடமாகவும் கஷ்டமாகவும் இருந்தது.

“அப்படி முழுக்கவும் சொல்வதற்கில்லை. லீலா அவர்களையும் பார்க்க முடியுமானால் ஒரு விஷயம் பேசலாம் என்ற ஆசையும் இருந்தது” என்றான் அவன் அடுத்தபடியாக. எனக்கு உயிர் வந்தது. உற்சாகமாக, “ஓகோ!” என்று லீலாவை நோக்கிப் புன்னகை செய்தேன்.

“ஆனால் அதுவும் சொந்த விஷயம். இப்போது பேசுவதற்கில்லை” என்றான் மூர்த்தி. லீலாவின் முகம் பட்டுப்போல் சிவந்தது. மூர்த்தியுடன் அவள் வார்த்தையாடிய விதத்தில் எனக்கு ஏனோ அவளிடத்தில் நான் காணாததொரு புதுமை இருந்ததாகப் பட்டது. ஆரம்பம் முதலே அவளைக் கூர்மையாகக் கவனித்து வந்த என் கணவருடன் தங்குதடையின்றி அரட்டையடிக்கும் அவளுடைய இயல்பான மாதிரியில் இப்போது அவனுடன் பேசவில்லை என்று எண்ணினேன்.

இதற்குள் நாங்கள் எதிர்நோக்கியிருந்த பஸ் வந்து விட்டது.

மூவரும் உட்கார்ந்தானதும் லீலா, “நீங்கள் நினைத்தது முற்றும் தவறு. எங்கள் இருவரையும் வீட்டிலே தனித்தனியே சந்தித்துப் பேசுவது என்பது முடியாத காரியம். கிடக்கட்டும். நீங்கள் தனியாகப் பேசும் விஷயங்களை நாங்கள் உடனேயே பரிமாறிக் கொண்டு விடுவோம்! அதற்கு என்ன சொல்கிறீர்களாம்?” என்றாள்.

“அது உங்கள் சொந்த விஷயம், அதைப்பற்றி எனக்கு என்ன? நீ முடியாது என்கிறாய் அல்லவா? நான் உங்கள் வீட்டிலேயே நான் கூறியபடி சந்தித்துக் கேட்க வேண்டியவற்றைக் கேட்கிறேனா இல்லையா பாருங்களேன்?” என்று அவன் புதிர் போட்டான்.

என்னையும் மறைத்து லீலாவிடம் அவனுக்குச் சொந்தச் சமாசாரம் என்ன இருக்கும் என்பதை நான் ஊகித்துக் கொள்ளப் பல தடைகள் தெரிந்தன. அவளைக் கண்டதும் அவன் முகம் அப்படி மலர்வானேன்? அவளுடன் பேசும் போது, குரலில் அத்தனை மகிழ்ச்சி தாண்டவமாடுவானேன்? என்னிடம் தனியாக ஒரு சங்கதி கேட்க வேண்டும் என்று அவன் தெரிவித்த போது, லீலாவின் இருதயம் சுருங்குவதை முகமண்டலம் உடனே எடுத்துக் காட்டுவானேன்? என் பங்குக்கு நான் நகைத்ததும் அவன் ‘சொந்த விஷயம் அதுவும்’ என்று கூறியதும் அவள் முகத்தைக் குங்குமமாக ஆக்குவானேன்? இன்னும் அன்றையப் பொழுதில் நான் நினைத்தபடி அவள் வெற்று உள்ளத்துடன் இருக்கவில்லை என்பது நன்கு புலப்படும்படி பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இரண்டும் இரண்டும் நாலு என்று அறியப் பெரிய பெரிய கணக்குப் போட வேண்டுமா?

களிப்புடன் நாங்கள் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து பின்னும் மூர்த்திக்குப் போக வேண்டுமே என்று இருந்தாலும், “நேரமாகவில்லை இன்னும். கடற்கரைக்கு வருவதானால் நானும் உங்களுடன் வருவேன்” என்றான் அவன்.

எனக்கு அடிமனத்தில் அச்சம் துடித்தது. எங்கே லீலா சரி என்று கூறிவிடப் போகிறாளோ என்று நான், “வேண்டாம் இப்போது” என்று அவள் காதைக் கடித்தேன்.

“இவள் இருக்கிறாளே, நான் கூப்பிடும் போதே அவர் இல்லாமல் வர மாட்டேன் என்றாள். இப்போது வீட்டில் அவர் வந்து விடுவாராம்! துடியாய்த் துடிக்கிறாள்!” என்று லீலா என் கையைப் பிடித்து ‘நறுக்’கென்று கிள்ளினாள்.

“ஓ! நான் மறந்து விட்டேனே! ரொம்பவும் உண்மை. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பாள். அப்படியானால் நான் வரட்டுமா? நாளைக்கு வருகிறேன்” என்று எங்களிடம் அவன் விடைபெற்றுக் கொண்டான். நாங்கள் திரும்பும் போது லீலா என்னுடன் விசேஷமாக எதுவும் பேசவில்லை. ஏதோ ஆழம் காணாத சிந்தனையில் லயித்து விட்டாள் என்பதையும், அவள் மனம் எங்கோ வானத்தில் பறக்கும் பட்டாம் பூச்சி போல் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் அவள் மௌனமும் என் கேள்விகளுக்குச் சம்பந்தமில்லாத பதில்களும் புலப்படுத்தின.

வீட்டில் நாங்கள் திரும்பி அடி எடுத்து வைத்ததுமே பொலிவுள்ள சந்திரனைப் பிடிக்க வரும் ராகுபோல் எங்கள் மகிழ்வு மறையும்படி பட்டு லீலாவை நோக்கி, “ஏண்டி லீலா? அவளையும் அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற இதுதானா சமயம்? நானும் வீட்டில் இல்லை. அத்தை ஒண்டிக்காரியாக ஊர்ப்பட்ட வேலைகளுடன் சிரமப்படுகிறாள். குழந்தைகள், புருஷர்கள் காப்பிக்கு வருகிறார்கள். மயிலாப்பூரிலிருந்து ஜயமும் மச்சினரும் வேறு அவளைப் பார்க்க வந்துவிட்டுப் போகிறார்கள். வீடு திமிலோகப்படுகிறது. இன்னும் நாலு நாட்கள் கழித்துப் போகக் கூடாதா? வீட்டிலே சமய சந்தர்ப்பம் தெரிய வேண்டாமா?” என்று சிள்ளென்று விழுந்தாள்.

இந்தச் சூடு லீலாவுக்கு மட்டும் அல்ல, எனக்குந்தான் முக்கால்வாசியும் என்று என் உள்ளத்தில் சுரீரென உறைத்தது. குற்றவாளியைப் போல நின்றேன்.

“சமயம் என்ன சமயம்? இந்த வீடு எப்போதுந்தான் திமிலோகப்படும்! அத்தை ஒண்டிக்காரியாகச் சிரமப்படுவது இன்று ஓரகத்தி வந்த பிறகு தான் கண்களில் உறுத்துகிறதாக்கும்! அடாடா!” என்று ஏளனும் கேலியும் கலந்த குரலில் கூறிய அவள் விடுவிடென்று யாரையும் லட்சியம் செய்யாதவளாக மச்சுப் படியில் ஏறினாள்.
-------------

2.4 மலர்

மறுநாள் சனிக்கிழமையாதலால் லீலா வீட்டிலேதான் இருந்தாள். எனக்கு வெளியில் எட்டிப் பார்க்கக் கூட அவகாசம் இல்லாதபடி சமையலறை அலுவல்கள் அத்தனையும் வெகு சுவாதீனமாக அதற்குள் என்னைப் பற்றிக் கொண்டு விட்டன. முன்னாள், அவர் வீட்டிலேயே தங்கவில்லை. சிகிச்சை இல்லமும், குழந்தையும் அவரைப் பிடித்துப் பசை போட்டு ஒட்டிக்கொண்டு விட்டன. கர்ப்பிணியாக இருந்த பட்டுவை டாக்டர், ‘இரவு கண் விழிப்பது கூடாது’ என்று கூறி விட்டதனால் அவள் முழுப் பொறுப்பையும் அவர் தலையிலேயே கட்டிவிட்டு வீடு வந்து விட்டாள். “ஏற்கனவே உன் உடம்பு பூஞ்சை. இராக் கண் பகல் கண் முழித்தால் உனக்கு ஆகாது. ராமுதான் இருக்கிறான். குழந்தைக்கு உடம்பு சரியாகும் வரை பார்த்துக் கொள்கிறான். குழந்தையும் அவனிடமே தானே ஒட்டிக் கொண்டு இருக்கிறாள்?” என்று என் மாமியார் வேறு செல்ல மருமகளுக்கு இதமாகப் பரிவு காட்டினாள்.

‘குழந்தையின் அருகில் இருக்கத் தாய்க்குப் பதில் வீட்டிலே வேறு பெண் மக்களே அஸ்தமித்து விட்டார்களா? அவர் நர்ஸ் வேலை செய்ய வேண்டுமா? ஏதோ வீட்டில் அன்பு காட்டுபவரிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகள் உண்டுதான். அதற்காக அவரே அதைத் தொட்டிலிட்டுத் தாலாட்டும் நிலைமையில் முழுக்க முழுக்க ஐக்கியமாகி விட வேண்டுமா?’ முதல் நாள் அமுங்கிக் கிடந்த என் குரோத உணர்ச்சி கொதிக்கலாயிற்று.

முழுசாக மூன்று நாட்கள் ஆவதற்குள், பாம்புக்கு விஷம் இல்லாமல் போகாது என்றபடி தன் குணத்தை இப்போது காண்பித்து விட்டாள். எங்கோ வெளியே அழைத்துப் போனாளாக்கும் என்றில்லாமல் லீலாவை என்னைச் சொல்லாதவள் போலத் தேள் கொட்டுவது போல் சுள்ளென்று கடிந்து கொண்டாளே! கொட்டினது அவளைத் தான் என்றாலும் நெறி எனக்குத் தான் ஏறியது. ஏண்டி அழைத்துப் போனாய் லீலா என்றாலும் நீ ஏண்டி போனாய் சுசீலா என்று தான் அர்த்தம்.

என்னைப் பார்ப்பதற்கு என்று மயிலாப்பூரில் தனியாக இருக்கும் என் டாக்டர் மைத்துனரும், அவர் மனைவி விஜயமும் வந்திருந்தார்களாம். எனக்காகக் காத்துப் பார்த்து விட்டு இன்னொரு நாள் வருவதாகக் கூறிப் போய் விட்டார்களாம். இடித்துக் காட்டுவதைப் போல இதை என் காதுகள் கேட்கவே மும்முறை சொன்னாள். நான் லீலாவுடன் வெளியே சென்றிருக்கும் செய்தியை அவர் வீடு வந்தவுடனேயே அறிவித்திருக்க மாட்டாளா?

இரவு சமையலறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தேன் நான். சிகிச்சை இல்லம் செல்லுமுன் ‘பிளாஸ்க்’ அலம்ப வந்த என் கணவர், “லீலாவுடன் எங்கெல்லாம் போயிருந்தாய்?” என்று கேட்டார்.

“எங்கும் இல்லை, ஒரு சினிமாவுக்குப் போயிருந்தோம்” என்று மெதுவான குரலில் பதில் அளித்தேன்.

“தேவலையே! எந்தப் படத்திற்குப் போனீர்கள்? அதற்குள் நீயும் லீலாவும் இத்தனை சிநேகம் பூண்டு விட்டீர்களே!” என்று மனத்தில் ஏதும் மாசின்றிச் சந்தோஷமாக எங்கள் நட்பை உற்சாகப்படுத்தும் பாவனையில் கூறினார் அவர்.

தாம் இன்றி, தமக்குத் தெரிவிக்காமல் வெளியே சென்றதற்காக அவர் என்னைக் கண்டிக்கட்டும் என்று பட்டு எண்ணியிருந்தாளோ என்னவோ? கோபத்தின் ரேகை கூட அவரிடம் காணவில்லை. மதனியிடம் அவர் அளவு கடந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கலாம். ஆனால் லீலா கூறியது போல மரியாதை கொடுத்திருந்தான். மரியாதை வாங்க வேண்டும் என்று என் அவளுக்குத் தெரியவில்லை. அவருடைய அத்தனை மதிப்பையும் குலைத்துக் கொள்ளும் வகையில் அவள் நடந்து கொண்டு அவருக்குக் கோபமூட்டி விட்டுப் பிறகு என் மீதே குற்றம் சாட்டுவாளோ என்னவோ? ஊர்வலத்தின் போது நான் அவளைப் பற்றி அவ்வளவு உயர்வாக எண்ணிப் பெருமைப்பட்டேன்! அந்த அறியாமையை நினைத்துக் கொண்டால் எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. மனத்தில் எது நல்லது என்று படுகிறதோ அதற்குத் தோற்றப் பொலிவும் இருந்தால் அதற்கு அதிக மதிப்பு உண்டாகிவிடும். சர்க்கரைப் பண்டத்துக்கு வலம் ஊட்டுவது போல ஆகிவிடும். அப்படி அவள் அகன்ற குங்குமப் பொட்டும், கம்பீரமான முகமும், நகை தவழும் இதழ்களும் நான் அவள் அன்பின் அவதாரம் என்று எண்ணியதற்கு இன்னும் அநுசரணையாக இருந்தனவே! ஒரு தரம் சிறு வயசில் எனக்கு மலேரியாக் காய்ச்சல் வந்திருந்தது. அப்போது வைத்தியரிடமிருந்து அப்பா இரண்டு மாத்திரைகள் வாங்கி வந்து எனக்குக் கொடுத்தார். வெண்மையாக, உருண்டையாக, பார்ப்பதற்குச் சர்க்கரை மிட்டாயைப் போல் இருந்த அம்மாத்திரையை நான் முரணேதும் செய்யாமல் வாயில் போட்டுக் கொண்டேன். நாவில் பட்டதும் அசல் மிட்டாயைப் போலத் தித்தித்தது. அந்த உற்சாகத்தில் நான் அதைக் கடைவாய்ப் பற்களால் கடித்ததுதான் தாமதம், விஷமாகக் கசந்தது! தொண்டை மூக்கெல்லாங் கூட நெடியேறியது!

பட்டு என்னைக் கண்டு செய்யும் புன்னகையும் இப்படித்தான் போலும்! உண்மை அன்பு செயல்களினாலன்றோ வெளிப்பட வேண்டும்? உள்ளத்தில் கசப்பை வைத்துக் கொண்டு மேலுக்குக் காட்டும் இனிப்பு உண்மையானதல்ல என்று வெளிப்பட எத்தனை நேரமாகும்?

ஒரு கொடியில் காய்த்திருக்கும் லீலாவுக்கும் பட்டுவுக்கும் எத்தனை வித்தியாசம்! ஒருத்தி இரண்டு நாட்களுக்குள் எனக்குக் கசப்பை உண்டாக்கும்படி நடந்து கொள்வானேன்? இன்னொருத்தி இரண்டு நாட்களுக்குள் என் இருதயத்தையே கவர்ந்து விடுவானேன்?

வைரமும் கரியும் ஒரே மூலப் பொருளிலிருந்து உண்டாகவில்லையா? சேற்றில் செந்தாமரையும் முளைக்கிறது! பாசியுந்தான் படருகிறது!

‘மூர்த்தி வேறு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறான். அவன் இன்னும் என்ன பூகம்பத்தைக் கிளப்பி விடுவானோ? ஒரு விஷயம், ஒரு விஷயம் என்று புடவைச் சங்கதியை அப்படி மழுப்பினானே! இங்கே தனியாகக் கண்டு என்ன சொல்லப் போகிறானோ?’ என்ற கவலை வேறு என் மனச் சஞ்சலத்திற்குச் சூடேற்றியது.

பகலில் கல்லூரியில் அரிசி அரைத்துக் கொண்டிருந்தேன். லீலா வந்து, “மூர்த்தி வந்திருக்கிறார், சுசீ” என்று எனக்கு செய்தி தெரிவித்தாள்.

கலவரத்துடன் நான், “எங்கே? கீழேயா மாடியிலா?” என்று கேட்டேன்.

“கீழேதான் நிற்கிறார். அவர் வருவதைப் பார்த்துவிட்டு உன்னிடம் கூறத்தான் வந்தேன். நீ போ. நான் அரைக்கிறேன்” என்று லீலா என்னை எழுப்பினாள்.

அவள் என் ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டாள். கையை அலம்பித் துடைத்துக் கொண்டு புடவையைச் சரி செய்து கொண்டு உமிழ்நீரை விழுங்கி மனத்தைத் திடம் செய்து கொண்டவளாக நான் சமையலறையைத் தாண்டி வந்த போது, அவன் பக்கத்தில் உள்ள சாப்பிடும் அறையிலேயே வந்து நின்று புன்முறுவல் பூத்தான். அவன் கையிலிருந்த அந்தப் புடவைப் பொட்டலத்தைக் கண்டதும் எனக்குத் ‘திக்’கென்றது. அத்தை திருப்பி அனுப்பி விட்டாளா என்ன? நன்றாகத்தான் இருக்கிறது. அந்தப் புடவைகள் அவனுடன் போவதும் வருவதும்!

“மாமி இவைகளை உனக்காகவே வாங்கினாளாம். நீயே அவளிடம் திருப்பிக் கொண்டு கொடுத்து விடு என்று சொல்லி விட்டாள்” என்றான் அவன்.

என் அசட்டுத்தனத்தையும் அத்தை யகத்து அவமரியாதையையும் அவன் அறிந்து கொண்டிருப்பானா, அல்லது அவனுக்கு அறிவிக்காமலே அத்தை உள்ளூற விஷயத்தைக் கிரகித்துக் கொண்டு நாசுக்காகத் திருப்பியிருப்பாளோ என்ற நடுக்கத்துடன் நான் புடவைகளைப் பெற்றுக் கொண்டேன்.

பின்னாலேயே வந்து நின்ற என் மாமியார், “என்ன அது? யார் இந்தப் பிள்ளை?” என்றாள். அவள் படபடத்த கேள்வியிலே இரும்பின் கடினமும் வேம்பின் கைப்பும் எனக்குப் புலனாயின.

“அத்தை இரண்டு புடவைகள் வாங்கி அனுப்பியிருக்கிறார். அத்திம்பேருக்குத் தமக்கை பிள்ளை இவர்” என்றேன் நான் சுருக்கமாக.

உடனேயே அவள் அவனிடம் மலர் முகத்துடன் குலம், கோத்திரம் முதற்கொண்டு விசாரிக்க ஆரம்பித்து விட்டாள். தன்னைப் பற்றிய விஷயங்களை மூர்த்தி கூறும் போது, தன்னுடைய கண்கள் நாலு புறமும் சுற்றி அலைந்ததை நான் கவனிக்காமல் இல்லை. அவனை அங்கேயே நிற்க வைத்துப் பேசியது எனக்கு ஏதோ போல் இருந்தது என்றாலும் பெரியவளான மாமியார் பேசாமல் இருக்கும் போது நான் உட்காருங்கள் என்று உபசரிக்கலாமா? ஒரு தம்ளர் காபி கொண்டு கொடுக்கலாமா?

சங்கடத்துடன் கையைப் பிசைந்த வண்ணம் சிறிது நேரம் நின்றேன். அந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த சமயம் எனக்கு எத்தனையோ சுதந்திரம் இருக்கும் என்று மனப்பால் குடித்திருந்தேன். இப்போது என்னுடைய சுதந்திரத்தைப் பரிசோதிக்கக் கூடிய சந்தர்ப்பம் வந்திருப்பதாகத்தான் எனக்குப்பட்டது. நிஜமாக எனக்கு அவ்வளவு சலுகை இருப்பதாக நான் நினைக்கும்படியான சூழ்நிலை இருக்கவில்லை.

எனினும் தைரியத்துடன் உள்ளே வந்து அவனுக்குக் காபி தயாரித்தேன். அரைக்கும் வேலையை முடித்து விட்டு லீலா கையை அலம்பிக் கொண்டிருந்தாள்.

“அவருடைய கண்கள் உங்களைத் தேடுகின்றன” என்று அவள் காதோடு கூறிவிட்டு நான் செல்லுவதற்குள், உட்காராமலேயே பேசிவிட்டு மூர்த்தி, “நான் வரட்டுமா சுசீலா?” என்று அங்கு இருந்தபடியே கூவினான்.

“இல்லை இருங்கள். இதோ காபி சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்று நான் தம்ளரும் கையுமாக விரைந்தேன். அவன் கவனம் என் மாமியாரின் கையிலே லயித்திருந்தது. நான் அப்படியே கீழே வைத்துப் போயிருந்த புடவைப் பொட்டலம் அவள் கையில் இருந்தது. மேலே இருந்த காகிதத்தை நீக்கி அவள் புடவைகளை எடுத்தாள். நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதிலிருந்து ஒரு கடித உறை கீழே விழுந்தது.

“கடிதாசு ஏதோ எழுதி வைத்திருக்கிறாள் போலிருக்கிறதே? அதை எடு, சுசீலா” என்று என் மாமியார் கூறு முன் நான் குனிந்து அதை எடுத்தேன்.

கொட்டை கொட்டையாக ‘லீலா’ என்று விலாசமிடப்பட்டிருந்தது அதில்! விஷமச் சிரிப்புடன் நான் அதைத் திருப்பி வைத்துக் கொண்டு மூர்த்தியைப் பார்த்தேன். நீரில் முழுகி எழுந்தவனைப் போல அவன் முகபாவம். ‘நல்லவேளை! தப்பினேனே!’ என்று சொல்வது போல் தென்பட்டது. கவனித்திருந்தால் கூட என் மாமியாருக்கு ஆங்கிலம் புரிந்திருக்காதுதான். என்றாலும் ஆபத்து ஆபத்துதானே?

“நான் வரட்டுமா மாமி” என்று விடைபெற்றுக் கொண்ட அவனைப் பின் தொடர்ந்து நானும் சென்றேன். அறையின் வாயிற்படியிலே ‘பிளாஸ்’கும் கையுமாகப் பட்டு, ‘சிகிச்சை இல்லத்’திலிருந்து வருபவள் எதிர்ப்பட்டாள். மூர்த்தியைக் கண்டு “யார் இவன்?” என்ற கேள்வி அவள் முகத்தைச் சிணுக்கியது. நானாக அவன் யாரென்பதையும், வந்த காரியத்தையும் அவளுக்கு அறிவித்தேன்.

வாசல் வரை அவனைத் தொடர்ந்து சென்ற என்னிடம் அவன் மெதுவான குரலில், “லீலாவிடம் அதைக் கொடுத்து விடுகிறாயா?” என்றான் கெஞ்சும் பாவனையில்.

“இல்லை கொடுக்க மாட்டேன்” என்று சிரித்த வண்ணம் மொழிந்துவிட்டு, குதூகலம் பொங்கக் குதித்துக் கொண்டே இரண்டு படியை ஒரு படியாகத் தாண்டி மச்சுப் படியில் ஏறினேன். ஒன்றுபட்ட இரண்டு உள்ளங்களின் தவிப்பு எனக்கு அவ்வளவு ஆனந்தத்தைக் கொடுத்தது. பின்கட்டு வழியாகவே அவள் மாடிக்குச் சென்றுவிட்டாள் என்று எனக்குத் தெரியும். அறையின் வாசற்புறம் முதுகைக் காட்டிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் அவள்.

கடிதத்தைப் பின்னால் மறைத்துக் கொண்டு நான், “அவர் உங்களைத் தேடு தேடு என்று தேடினார். நீங்கள் இங்கு வந்து கோபித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே! பாவம்! அவரை வரச்சொல்லிவிட்டு இப்படி ஒரு வார்த்தைக் கூட அவரிடம் பேசாமல் இங்கு வந்து உர்ரென்று நீங்கள் உட்கார்ந்திருப்பது எனக்கு நியாயமாகவே படவில்லை. நண்பர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்களாக்கும்! அதுவும் சாமானியமான நண்பர்கள் கூட இல்லை...!” என்று இழுத்தேன்.

“என்ன உளறுகிறாய், சுசீலா? சாமானிய நண்பர்கள் இல்லாமல் பின் என்னவாம்! சங்கக் கூடங்களில் சந்திக்க நேரிட்டிருக்கிறதே ஒழிய சேர்ந்தாற் போல் அவருடன் பத்து வார்த்தைகள் பேசியதே நேற்றுத்தான்” என்று மூடி மறைத்து லீலா என்னிடம் மெழுகினாள்.

“ஓகோ! ஆனால் வாய்ப் பேச்சை விடக் கண்களின் உறவுக்கு அதிகச் சக்தி உண்டு என்று தெரியாதா எனக்கு? சொந்த விஷயம் என்று அவர் பேச வந்திருக்கிறாரே. இங்காவது வரச் சொல்லி இருக்கக் கூடாதா? அவர் ஏமாற்றத்தை எனக்குப் பார்க்கவே சகிக்கவில்லை!”

“நீ மிகவும் அதிகப்பிரசங்கி, சுசீலா! கண்கள் பேசுவது, காதுகள் உறவாடுவது எல்லாம் உனக்குத்தான் தெரியும். சொந்த விஷயம் ஒன்றும் இருக்காது. அடுத்த கூட்டத்தில் யார் எதைப் பற்றித் தலை வேதனைப் பிரசங்கம் செய்யப் போகிறார்கள் என்று சொல்வார். மூடி மூடிப் பேசுவதே அவர் வழக்கம். உன் அத்தை கொடுத்து அனுப்பி இருக்கும் புடவைகளையும், ஊரில் எல்லோரும் சௌக்கியம் என்று நெல்லுக்குள் அரிசி சமாசாரத்தையும் வைத்துக் கொண்டு உன்னிடம் அப்படி கூறினாரே” என்று முகத்தை நான் பார்க்க முடியாதபடி லீலா திருப்பிக் கொண்டாள்.

“அது போன்ற சங்கதிகளுக்குக் கடிதங்கூட எழுதுவாராக்கும்?” என்றேன். சூடுண்ட உடம்பில் உஷ்ணமானியை வைத்த உடனே பாதரசம் விறுவிறு என்று ஏறுவதில்லையா? என் கேள்வி அவள் அமுக்கி வைத்திருந்த ஆவலையும் துடிப்பையும், அவளுடைய பாசாங்கை மீறிக் கொண்டு எழுப்பி விட்டது. “ஏன் சுசீலா, ஏதாவது கடிதம் கொடுத்தாரா?” என்று பரபரப்போடு கேட்ட அவள் என் கையில் இருந்த கடிதத்தைப் பார்த்து விட்டாள்.

“அப்படி வாருங்கள் வழிக்கு!” என்று நகைத்த நான், “நல்ல வேளையாகத் தப்பினீர்கள்! அத்தை அனுப்பிய புடவைப் பொட்டலத்தில் அதைப் பத்திரப்படுத்தி இருக்கிறார் என்று நான் கண்டேனா? அலட்சியமாகக் கீழே வைத்து விட்டு வந்தேன். அம்மா எடுத்துப் பார்த்து விட்டார். நல்லவேளை! விலாசம் புரியவில்லை. அத்தை எனக்குக் கடிதம் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். மூர்த்தியின் முகத்தை நீங்கள் பார்க்கவில்லையே அப்போது!” என்று அவளிடம் கடிதத்தைக் கொடுத்தேன்.

“சுசீலா!” என்று கீழிருந்து வந்த குரல் என்னை உலுக்கியது. கீழே ஓடி வந்த என்னை மாமியார், “ஓடி ஓடிப் பச்சைக் குழந்தையைப் போல நாலும் கிடக்க நடுவில் போய் விடுகிறாயே? இந்தா! புடவையை வாங்கிக் கொண்டு வைத்துவிட்டு, அடுப்பில் தோசைக் கல்லைப் போடு” என்று கடிந்து கொண்டாள்.

இரவு, வேலைக்காரி கவனியாமல் போய்விட்டிருந்த எங்கள் அறையைப் பெருக்கிக் கொண்டிருந்தேன் நான். ‘சிகிச்சை இல்ல’த்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த என் கணவர் உள்ளே வந்தார். அன்று மாலை காரியாலயத்திலிருந்து வந்த பின் அவருக்கு என்னுடன் எதுவுமே பேசச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. “உன் அத்தை உனக்குப் புடவைகளை வாங்கி அனுப்பி இருக்கிறாளாமே, சுசீ? என்னிடம் நீ காட்டவே இல்லையே?” என்று கேட்டார்.

நான் தலையைத் தூக்காமலேயே சுருதி கலைந்த வீணையைப் போல் “ஆமாம்” என்றேன். அவர் மட்டும் சக்தியுடையவராக இருந்தால் அந்த ஓர் ஆமாமிலேயே என் ஆற்றாமை அவ்வளவையும் தெரிந்து கொண்டிருக்கலாம்.

“அப்புறம், மூர்த்தி உனக்கு உறவினனாமே? நீ என்னிடம் இதுவரை சொல்லவே இல்லையே! அவன் இன்று வந்திருந்ததாக மன்னி சொல்லுகிறாளே?” என்று கேள்விகளை என்னை உற்சாகப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு அவர் அடுக்கினார்.

மன்னிதான் எல்லாவற்றையும் சொல்லுகிறாளே; நான் வேறு சொல்ல வேண்டுமா? பெட்டியைத் திறந்து, மௌனமாகவே புடவைகளை எடுத்துக் கொடுத்தேன். தடவிப் பார்த்துவிட்டு அவர், “நன்றாக இருக்கிறது. நிறங்கூட உனக்குப் பொருத்தமாக இருக்கும். அத்தைக்கு உன்னிடத்தில் பிரியம் அதிகமோ? நாளை ஞாயிற்றுக்கிழமைதானே. மூர்த்தியை வரச் சொல்லுவது தானே? மன்னி யாரோ என்றாள். அப்புறந்தான் லீலா, மூர்த்திதான் வந்தவர் என்று சொன்னாள்” என்று கூறி என் மனத்தைக் குலைத்த மாயப் புன்னகை ஒன்று புரிந்தார்.

“உங்களுக்கு அவனைத் தெரியுமா?” என்று நான் கேட்டேன்.

“லீலா தான் எனக்கு ஒருதரம் அவனை அறிமுகம் செய்வித்தாள். அதிலிருந்து எப்போதாவது சந்தித்தால் புன்னகை செய்வான். நானும் நின்று இரண்டொரு வார்த்தைகள் பேசுவேன். இனிமேல் நெருங்கிப் பழக்கம் செய்து கொண்டால் போகிறது” என்றார் அவர்.

நான் பதில் ஏதும் கூறவில்லை.

இந்த ஆண்களுக்கே பெண்களின் பேதை உள்ளத்தின் பலவீனம் நன்கு தெரிந்திருக்கிறது. கெஞ்சலிலும் கொஞ்சலிலும் முகஸ்துதியிலும் பெண்கள் மயங்கி விடுவார்கள் என்பதை நன்கு அறிந்திருப்பதால் தான் சமயத்திற்கு அவர்களை ஆட்டி வைக்கும் ஆயுதங்களாக அவைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.

சுவரோரமாகச் சாய்ந்து நின்ற என் தோள் மீது கையை வைத்து அவர் என் காதில், “குழந்தைக்கு இன்னும் நாலைந்து நாட்களில் உடம்பு சரியாகி விடும். மன்னிக்கு உடல்நிலை சரியாக இல்லை. பார்! இந்தச் சமயத்தில் விட்டுக் கொடுக்கலாமா? கோபமா சுசி, உனக்கு? எனக்கும் எவ்வளவு சங்கடமாக இருக்கிறது தெரியுமா? நாளை ஞாயிற்றுக்கிழமை. உன்னிடம் சாவகாசமாக நாலு வார்த்தைகளாவது பேச முடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்” என்றார்.

அழும் பிள்ளைக்கு மிட்டாய் கொடுப்பதைப் போல இது என்ன, எனக்குக் கண் துடைப்பா? பேசாமலே அவர் போயிருந்தால் தேவலையே! இந்தக் குழைவும் கொஞ்சலும் என் மனத்தை இன்னமுமல்லவோ நெளிய வைக்கின்றன?

நான் வாயைத் திறந்து சொல்ல என்ன இருக்கிறது?

“பார்த்தாயா? உனக்குக் கோபந்தான் போல் இருக்கிறது!”

“கோபமும் இல்லை, ஒன்றும் இல்லை. கோபப்படுவானேன்?” என்று நான் முணுமுணுத்தேன்.

“நீ இப்படிச் சொல்லும் போதே கோபம் தொனிக்கிறதே! கோபம் இல்லை என்றால் என் மனத்தை இழுக்கும் உன் புன்னகை எங்கே போயிற்று, சுசி?”

இந்த நாடக மேடைப் பேச்சு, ‘பக்’கென்று என்னைச் சிரிக்க வைத்தது.

“கொஞ்ச நாளைக்குப் புன்னகை புரிந்து உங்கள் உள்ளத்தைக் கவர்ந்து சங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்று தான் இருந்தேன்.”

“பொல்லாதவள் சுசி, நீ!” என்று சிரித்துக் கொண்டே போய்விட்டார். அவர் சென்ற திக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நான் நின்றேன்.

வந்து இரண்டு தினங்களிலேயே அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என்றெல்லாம் ஆனந்த வானத்திலே சஞ்சரித்த நான் கனவுகள் கலைந்து உண்மையை நிதரிசனமாகக் கண்டுவிட்டேன். அன்பில்லாத மாமியார், அதிகாரம் செலுத்தும் ஓரகத்தி, கடமையில் உழலும் கணவன், இவர்களுக்கு மத்தியில் நான் தறியிலே ஓடும் குழல் போல ஓடி ஓடி உழைக்க வேண்டும்!

ஏமாற்றமும் வெறுப்பும் மேலிட்டவளாக நான் சாளரத்தண்டை திரும்பி நின்றேன்.

அடுத்த வீட்டில் காதல் நாடகம் நடந்து கொண்டிருந்தது. அன்று எனக்குப் பார்க்கப் பிடித்த காட்சி இன்று காணத் தகாத காட்சியைப் போல அருவருப்பைத் தந்தது. விளக்கை அணைத்து விட்டுப் படுக்கையில் வந்து உட்கார்ந்தேன். குழந்தைகள் உறங்கிச் சந்தடி ஓய்ந்து விட்டதே ஒழிய மைத்துனரும் பட்டுவும் கூடத்திலேதான் இருந்தார்கள். ரேடியோ ஏதோ புரியாத ஹிந்துஸ்தானி இசையைப் பரப்பிக் கொண்டிருந்தது.

சங்கீதம், கூத்து, கொம்மாளம், கேளிக்கை எல்லாம் அவர்களுக்குத் தான். எனக்கு அவற்றை எல்லாம் அனுபவிக்க ஓர் உரிமையும் கிடையாது. அத்தை வீட்டில் அன்று பாட்டி என்னை நேரிலேயே சுட்டு விடும்படி சொன்னாள். அதாவது ஒரு விதத்தில் தேவலை போலிருந்தது. இங்கே என்னை எல்லோரும் சொல்லாமலேயே நான் ஒன்றுக்கும் தகுதியற்றவள் என்று எப்படியோ அறியச் செய்தார்கள். இந்த வீட்டில்... இதே சூழ்நிலையில் இப்படியே என்றால் வாழ்நாள் முழுவதும்... அம்மாடி! நினைத்தாலே எனக்கு ஏதோ என் தலையில் மலையை ஏற்றுவது போலப் பளுவாக இருந்தது.

இருட்டிலே ஏதோ உருவம் நிழலாடியது. குலுங்கிய வளையல் ஒலி லீலா என்று கட்டியம் கூறியது. வாயிற்படியில் காலை வைத்த அவள், “விளக்கை அணைத்து விட்டு இருட்டிலே உட்கார்ந்திருக்கிறாயே, நீ தூங்கி விட்டாயாக்கும் என்றல்லவா எண்ணினேன்?” என்றாள்.

“ஆமாம், கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருப்பேன். தூக்கம் வந்தவுடன் அப்படியே படுத்து விடலாம். அப்புறம் எழுந்து விளக்கை அணைக்கச் சோம்பலாக இருக்காதா?” என்று மெல்ல நகைத்த நான் விளக்கை ஏற்றி விட்டு அவளை வரவேற்றேன். அப்போதைய என் நிலையில் அவள் வருகை சூடுபட்டுக் கன்றிப்போன தோலின் எரிச்சலில் தேங்காயெண்ணெய் பட்டது போன்ற இதத்தைக் கொடுத்தது. மேஜையடியில் கிடந்த நாற்காலியில் அமர்ந்த அவளை நான் மூர்த்தியின் கடிதத்தைக் கொடுத்த பிறகு அப்போதுதான் கவனித்தேன். மனத்திலே கரைபுரளும் அவள் மகிழ்ச்சி அவள் முகவழகை மிகைப்படுத்திக் காண்பித்தது. நிதானம் இல்லாமல் துள்ளித் திரியும் அவளுடைய படபடப்புச் சுபாவம் அடங்கி நிறைகுடத்தின் பொலிவை நினைப்பூட்டியது. நான் அவளை ஆராய்ந்து கொண்டிருக்க, அவள் என்னை ஆராய்ந்திருக்கிறாள்.

“ராமு இத்தனை முட்டாளாக இருப்பான் என்று நான் எண்ணவில்லை சுசி” என்றாள் மெதுவாக.

நான் பேச்சை மாற்றி, “மூர்த்தி உங்கள் இளைஞர் மன்றத்து விஷயமாகத்தான் எழுதியிருந்தாராக்கும்” என்றேன்.

அவள் நான் கேட்டதை விடுத்து, “நீ மிக நன்றாகப் பாடுவாயாமே சுசீ? ராமு சொல்லியிருக்கிறானே!” என்றாள்.

“அப்படிப் பெருமையடித்துக் கொண்டாராக்கும். நான் கேட்டதை விட்டுவிட்டீர்களே! மூர்த்தி இத்தனை சாமர்த்தியக்காரராக இருப்பார் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. உல்லாசமான வானம்பாடி போல் பறந்து திரிந்து கொண்டு இருப்பதாக நான் நினைத்த லீலாவைத் தந்திரமாக மனச்சிறைக்குள் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறாரே!”

பொய்க் கோபம் கொண்டவளாக என் கையைப் பிடித்து அழுத்திய லீலாவின் சூடேறிய முகம் பார்க்க இன்னும் அழகாகத்தான் இருந்தது.

“ஆமாம்... இல்லை. நான் தப்பாகச் சொல்லி விட்டேன். கோபப்படாதீர்கள். அவர் தந்திரம் ஏதும் செய்யவில்லை. தானாகவே பறவை கூண்டுக்குள்...”

நான் முடிப்பதற்குள் அவள் குறுக்கிட்டாள். “சுசி, நீ இந்த மாதிரி எல்லாம் பேசக் கூடாது. பழக்க தோஷத்தால் அப்புறம் நீ பாட்டில் அம்மா, அத்தை, அக்கா எல்லோரும் இருக்கும் சமயத்தில் ஏதாவது உளறி வைத்து விடப் போகிறாய்!” என்று என்னை எச்சரித்தாள்.

“தெரிந்தால் என்னவாம்? ஒரு நாளைக்குத் தெரிய வேண்டியதுதானே. தலைவியின் களவொழுக்கத்தைக் குறிப்பாகப் பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டியது தோழியின் கடமை இல்லையாக்கும்?”

“வெகு அழகுதான்! அப்புறம் சங்ககாலத்துப் பெற்றோர்களைப் போல உடனே அழைத்து மணம் நடத்தி விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறாயாக்கும்! எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வரதன் என்ன ஆவது? அவர் மூன்று வருஷங்களாகப் பார்த்துப் பார்த்து எனக்காக ஊட்டியில் கட்டும் பங்களா என்ன ஆவது? இந்தச் சமாசாரம் ஏதும் என் பெரியோர்களுக்குத் தெரிந்தால், மூர்த்தியை அப்புறம் இந்த வீட்டுக்குள்ளேயே ஏற்ற மாட்டார்கள்!” என்ற அவள் குரலிலே பேச்சுக்கு உரிய பாணி தொனிக்கவில்லை. நகை இருக்க வேண்டிய இடத்தில் சோகம் ஒளிந்திருந்தது. பாகவதர் சுகமாக ஆலாபனம் செய்யும் போதும் அபஸ்வரம் விழுந்து விட்டது போல் நான் உணர்ந்தேன்.

“அது யார் அந்த வரதன்? அவர் கட்டும் பங்களாவிற்காக மூர்த்தியைப் பற்றி பிரஸ்தாபிக்கக் கூடாது என்று வாய்ப்பூட்டும் போடுகிறீர்களே!”

“நீ விளையாடுகிறாய் சுசி. ராமுவிடங்கூடப் பேச்சு வாக்கில் பிரஸ்தாபித்து விடாதே. ஏனெனில் அவன் சும்மா இருக்க மாட்டான். விஷயத்தை ஆலோசியாமல் அக்காவிடமும் அத்திம்பேரிடமும் பரப்பி விடுவான். தவிரவும், அவராக முனைந்து வரவேண்டுமே ஒழிய, ஊருக்கு முன் எல்லோருக்கும் தெரிய வைப்பது, நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும். முதல் முதலாக அக்கா காலேஜுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவாள். எனக்கு அதுதான் பயமாக இருக்கிறது. வரதன் அம்மாவுக்குச் சிறிய தகப்பனார் பிள்ளை. தலைமுறை தலைமுறைக்கு உட்கார்ந்து சுகம் அனுபவிக்கக் கூடிய அளவுக்குச் சொத்து இருக்கின்றது. சின்ன வயசிலே தூர உறவிலே ஒரு குழந்தையைப் பிடித்துப் பொம்மைக் கல்யாணம் செய்து வைத்தார்கள். அது கொடுத்து வைக்கவில்லை. திரண்ட ஐசுவரியங்கள் இப்போது ஓர் எஜமானிக்கு ஏங்கி நிற்கின்றன. வரதனுடைய தகப்பனார் ஒரு காலத்தில் என் தந்தைக்கு உதவி செய்தார். ஏற்கனவே தாம் செய்த பொம்மை விவாகத்தால் மனம் விட்டுப் போயிருந்த அவர் இறக்கும் தறுவாயில் வரதனுக்கு என்னை மனைவியாக்கும்படி என் தந்தையிடம் வாக்கு வாங்கிக் கொண்டார். இப்போது அவரும் போய் விட்டார் என்றாலும் வரதனுக்குத்தான் நான் என்று எல்லோரும் உறுதியாக முடிந்து வைத்திருக்கிறார்கள். படிக்க ஆசைப்படுகிறாள் என்று விவாகத்தைத் தள்ளிப் போட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். அத்திம்பேர் முதல் முதலாக வியாபாரம் ஆரம்பித்த போது கூடப் பண உதவி அந்தக் குடும்பத்திலிருந்து தான் கிடைத்தது. எனவே அவர்களுக்கும் அங்கே மிகுந்த மதிப்பு இருக்கிறது. நான் எல்லாம் தெரிந்தும் இப்போது மூர்த்தியைப் பற்றிப் பிரஸ்தாபித்தால் எத்தகைய பூகம்பம் எழும் என்று நீயே யோசித்துப் பார்!” என்றாள் லீலா.

மெதுவாக நான், “மூர்த்திக்கு இதெல்லாம் தெரியுமா?” என்று வினவினேன்.

“ஊஹூம்! நீ நினைக்கும் மாதிரியில் நாங்கள் மனதில் உள்ளதை இதுவரை பேசியதில்லை. நீ கொடுத்தது அவர் உள்ளத்தை அறிவிக்கும் முதல் கடிதம், சுசி.”

நான் அசைவற்று அவளையே வைத்த கண் இமைக்காமல் நோக்கினேன்.

“எனக்கு என்ன பண்ணுவதென்றே புரியவில்லை. நீ என்ன சொல்லுகிறாய்?” என்று என் தோளிலே கைகளை வைத்துக் கொண்டு என்னை உற்றுப் பார்த்தாள்.

என்னை விட வயசிலும் கல்வி கேள்வியிலும் வெளி உலக அனுபவத்திலும் மூத்தவள். என் கண்களுக்கு நான் சரிசமமாக நினைக்க முடியாதபடி மரியாதைக்கு உகந்த பாத்திரம் அன்பு ஒன்றினால் தான் அவளிடம் நெருங்கிப் பழக முடிகிறது என்று என்னை விட ஒருபடி மேலாக நான் கருதியிருக்கும் அவள், கிராமத்து மக்களிடம் குருட்டு நம்பிக்கைகளிடையே பக்குவம் அடைந்திருந்த என்னிடம் யோசனை கேட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. வெகு சுலபமாக, “அதனால் என்ன? வரதனை என்னால் மணம் புரிந்து கொள்ள முடியாது என்று பயப்படாமல் சொல்லி விடுங்களேன். என்னைப் பயங்கொள்ளி என்று கூறிவிட்டு நீங்களே பயங்கொள்ளியாக இருக்கிறீர்களே?” என்றேன் நான்.

“போ சுசீலா. உனக்கு விளையாட்டாக இருக்கிறது. நாகரிகம், நாகரிகம் என்பதெல்லாம் நடை உடை பாவனையில் தான் இருக்கிறது. மனத்திலே வரவில்லை. ராமுவுடன் நான் வித்தியாசமின்றி விளையாட்டாகப் பேசுவதையே அக்கா நொடிக்கு நூறு தரம் கண்டிப்பாள். வரதனை நான் மறுத்தால் நிச்சயமாக எல்லோருடைய விரோதத்தையும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் வகுத்த வழியிலே வாழ் நாள் முழுதும் துயரக் கடலில் உழல வேண்டும்” என்று தன் மனத்தைத் திறந்து அவள் கொட்டினாள். கதைகளில் மட்டுமே அதுவரையில் காதலைப் பற்றிப் படித்திருந்த எனக்குக் கண் முன் அதில் சிக்குண்டு வாடும் லீலாவைக் காண மனத்திலே மகிழ்ச்சி கிளம்பியது.

காதல் காதல் என்று கதாசிரியர்களும், காவிய கர்த்தாக்களும் புகழும் அந்த அனுபவம் நமக்குக் கிட்டவில்லையே என்று தோன்றியதோ இல்லையோ, உடனே உள்ளிருந்து இன்னொரு குரல், ‘ஏன் கிட்டவில்லை? அவருடைய பேச்சும் பார்வையும் ஏன் இப்படிச் சிந்திக்கச் சிந்திக்க இனிக்கின்றனவாம் பின்? காதல் என்று தேவலோகத்திலிருந்து தனியாக வந்து குதிக்குமோ? பெரியவர்கள் சுட்டிக்காட்டிய திசையில் அன்பு எனக்கு உதித்திருக்கிறது. வாழ்வில் தடுமாறாமல் ஒரே நிலையில் இன்பமாகப் பிரயாணம் செய்ய அவள் அப்படி இல்லை. தன் மனம் போலச் செல்லும் திசையில் அன்பு கண்டு விட்டது. அதுதானே வித்தியாசம்? என்றது. இந்த எண்ணம் வந்ததும், என் உள்ளத்திலே அலாதியான ஒளி பிறந்தது. லீலாவை மறந்து என் வாழ்வின் விமரிசனத்தில் ஈடுபடும்படி சிந்தனைக் குதிரை வேறு திசையில் திரும்பி விட்டது. என் வீட்டிலும் சாதாரணமாக ஜகது, தங்கம் இருவரும் விவாகமாகிக் கணவன் வீடு சென்றிருந்தனர். தங்கத்தைப் பற்றி என்னால் அவ்வளவாக அறிய முடியவில்லை. ஆனால் ஜகது என்னைப் போலில்லை என்பது நிச்சயம். “இந்த மாப்பிள்ளைக்காகத் தந்தியடித்து, தபாலனுப்பி ஆயிரம் பாடுபட்டீர்களே, எதற்கெடுத்தாலும் அம்மாவிடம் உம் கொண்டிருக்க!” என்று எத்தனையோ முறைகள் அவள் அம்மாவிடம் புகார் கூறியிருக்கிறாள் என்றால் அந்த மாதிரி சொல்ல முடியாதே! அவள் ஆயிரமாயிரம் குற்றங்கள் செய்தால் கூட அவரை நான் மணந்திருப்பது மகத்தான பேறு என்றல்லவா களிப்புறுகிறேன்? என் வாயாலேயே அவரை இழிவு செய்வேனா? இத்தகைய அழுத்தமான பிடிப்பு இந்தக் கொஞ்ச நாட்களிலேயே என்னை அறியாமல் என் உள்ளத்தில் வளர்ந்திருப்பதன் காரணம் என்ன? லீலா அவள் அறைக்குச் சென்ற பின் புதிதாகத் தோற்றமிட்டிருந்த மன ஒளியிலே என்னை மறந்து நான் சொக்கி விட்டேன். என்னுடைய அந்தப் புதிய உலகிலே கற்பனை விமானமேறி மனம் போனபடி சஞ்சரித்தவளை எப்படி நித்திரை அரசி ஆட்கொண்டாள் என்பதே தெரியவில்லை.
-----------

2.5 மலர்

மனித வாழ்வுக்குச் சுவை கூட்டும் அதிமுக்கியமான வியஞ்சனங்களாகிய நம்பிக்கையும் ஏமாற்றமும், புடவை ஒன்றில் பின்னிப் போகும் சரிகையும் நூலையும் போல் வாழ்க்கையிலே பின்னிக் கொண்டிருக்கின்றன. சரிகையின் ஒளிக்கு நூல் ஆதாரம். நூலின் மேன்மையைக் காட்டவும் சரிகை உதவுகிறது. ஒரு பொருளையோ, எதிர்காலத்தையோ குறித்துத் துடிக்கும் ஆவலுடன் தொங்கும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கை வைத்திருப்பதுதான் எத்தனை இன்பமூட்டுகிறது! அடுத்து வரும் ஏமாற்றம் வாழ்க்கையின் ஏடுகளிலே இல்லாமலே அழிந்து விட்டால் துடிப்பு ஏது? ஆவல் ஏது? எனவே ஏமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டேதான் இன்பம் எழுகிறது. அன்று எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் இன்று எத்தகைய இன்பத்தில் கொண்டு வந்து விட்டது.

“குழந்தைக்கு உடம்பு குணமாகிவிட்டது. இன்று வீட்டுக்கு அழைத்து வரலாம்” என்று மைத்துனர் சொல்லிக் கொண்டிருந்தது என் செவிகளில் தேன்மாரியைப் பொழிந்தது. ‘சங்கடமூட்டும் முகத்துடனே கொஞ்சும் விழிகளுடன் அவர் என்னைப் பார்த்து விடை பெற்றுக் கொள்ளும் பாவனையில் அன்றிரவு போய்விட மாட்டார். தயங்கித் தயங்கி நாலு வார்த்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் மனம் விட்டு நான் கேட்க வேண்டிய சமாசாரங்களை எல்லாம் கேட்க முடியும்’ என்றெல்லாம் களிப்பிலே மிதந்தேன்.

அடுப்படியில் ஒரு காலும், குழாயடியில் ஒரு காலுமாகப் பல வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கையில் சுகுமார், “சித்தி, இந்தக் கணக்கைச் சொல்லிக் கொடுங்களேன்?” என்று அடுப்பங்கரையில் நோட்டைப் பிரித்து வைத்துக் கொண்டான். ‘எனக்கு வெள்ளைப் பாவாடை வேணும் சித்தி. டீச்சர் வெள்ளை டிரஸ் போட்டுக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறாள்” என்று மழலை மாறாத குரலில் மைதிலி தன் கோரிக்கையைச் சமர்ப்பித்தாள்.

“அம்மா, சுசீலா, அடுப்பில் இந்தச் சுக்குக் கஷாயத்தைப் பொங்க வைத்துக் கொடேன். காலையிலிருந்து வயிற்றைப் புரட்டுகிறது” என்று கெஞ்சும் முறையில் வேண்டுகோள் விடுத்தாள் லீலாவின் தாய்.

“வெந்நீரடுப்புப் புகைகிறது. கொஞ்சம் விசிறி கொடு. சுசீலா” என்று மைத்துனர் சமையலறை வாசற்படியில் வந்து நின்றார்.

“ராமு குளித்து விட்டு வேஷ்டியை எறிந்து விட்டுப் போயிருக்கிறான். மைதிலியின் சிவப்புப் பாவாடைச் சாயம் முழுவதும் அதில் ஏறிக் கிடக்கிறது. இதை எல்லாம் கவனிக்க வேண்டாமா, சுசீலா?” என்று கண்டிக்கும் தோரணையில் என் காதில் போட்டு வைத்தாள் மாமியார்.

‘இன்னும் யார் பாக்கி, சுசீலாவைக் கூப்பிட?’ என்று நான் எண்ணி முடிப்பதற்குள் பின்புறத்தின் வழியாக மாடியிலிருந்து வந்த என் கணவர், “மன்னி ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் கரைத்துக் கொண்டு வரச் சொன்னாள் சுசீ!” என்று சமாசாரம் கொண்டு வந்தார்.

லீலாதான் பாக்கி என்று நான் நினைத்து விடும் படி அவள் தன் பங்குக்குச் சோடையாகி விடவில்லை. “சுசீலா எங்கே? மயிலாப்பூரிலிருந்து ஜயம் மாமி வந்திருக்கிறாள். இங்கு யாரோ சிநேகிதி வீட்டு ஆண்டு நினைவுக்கு வந்தாளாம். ‘குழந்தையை விட்டுவிட்டு வந்தேன். அன்றைக்கே பார்க்கவில்லை. சுசீலாவை வரச் சொல். பார்த்துவிட்டுப் போகிறேன்’ என்று மாடிக்குப் போகிறாள் இப்போதுதான்” என்று தகவல் கொடுத்தாள்.

நான் மூச்சு விடக் கூடச் சாவகாசம் இல்லாமல் பறப்பதைப் பார்த்து என் கணவருக்குப் பெருமை பிடிபடவில்லை. “ஏதேது? இவ்வளவு குறுகிய காலத்துக்குள் இந்த வீட்டில் சுசீலாவுக்கு இத்தனை கிராக்கி வந்து விட்டதே!” என்று என்னை நோக்கி இளநகை செய்தார்.

லீலாவின் சமாசாரத்துக்குத்தான் நான் முதலில் பணிந்தேன். மாடிக்கு ஓடினேன். விறகின் ஈரப்புகை என்னை அசல் செந்தாமரைக் கண்ணாளாக்கியிருந்தது. கசங்கிய புடவை கீழே புரளாதபடி தூக்கிச் செருகியிருந்தேன். தலைவாரிக் கொள்ள நேரம் இல்லாமையால் கையால் கோதிவிட்டுக் கொண்டிருந்தேன். இப்படி மாடியில் அலமாரியில் இருந்து பெரிய கண்ணாடி என் தோற்றத்தை எனக்கு விளக்கியது.

சோபா ஒன்றில் பட்டு சாய்ந்து கொண்டிருந்தாள். மஞ்சள் பட்டுப் புடைவைக்கு மேலே கழுத்தில் நட்சத்திரமாலை டாலடிக்க, மல்லிகைப் பூவும் சந்தப் பூச்சும் அவள் விசேஷ வீட்டிலிருந்து வந்திருக்கிறாள் என்பதை எடுத்துக்காட்ட பருமனான தன் தேகத்தை நாற்காலி ஒன்றில் அடக்கிக் கொண்டு என்னைப் புன்னகை வதனத்துடன் வரவேற்கிறாள் சின்ன மதனி ஜயம்.

“உன்னைப் பார்க்க அன்று வந்திருந்தேன். ம்! அடுப்பில் ரொம்ப வேலை போல இருக்கிறது!” என்றாள்.

நான் பேசாமலே சிரித்து வைத்தேன். ஆனாலும் உள்ளுக்குள்ளே, அவர்கள் இருவரும் சரிக்குச் சமானமானவர்கள். நானோ? என் காதுகளில் வைரம் பளபளக்கவில்லை. இடுப்பிலே பட்டு மின்னவில்லை. என் கணவர் காரிலே காரியாலயம் போய்விட்டு வந்தாலும், அவர்களுக்கு வண்டி ஓட்டியின் ஸ்தானத்தில் தான் இருக்கிறார் என்ற உண்மை அழுத்தியது.

“மன்னி வந்திருக்கிறாள் என்று தெரிந்து தானே வந்தாய்? காப்பி கொண்டு வரக்கூடாது? இது தெரிய வேண்டாமா?” என்று பட்டுவின் சொற்கள் வேறு என்னுடைய தாழ்வை எனக்கு உணர்த்தின.

“வேண்டாம் மன்னி இப்போதுதான் அவர்கள் வீட்டில் வலுக்கட்டாயமாகச் சாப்பிட்டேன். நான் வெறுமே பார்க்கலாம் என்று வந்தேன்” என்று ஜயம் சம்பிரதாயமாக மறுத்தாள். என்றாலும் அவள் ‘ஹார்லிக்ஸ்’ கேட்டாளே!

நான் பின்புறம் படிக்கட்டுகள் வழியாகக் கீழே விரைந்தேன். அவர் அறையில் - நிஜாருக்குப் பொத்தான் போயிருக்கிறது போலிருக்கிறது - தாமாகத் தைத்துக் கொண்டிருந்தார். யார் யாருக்கெல்லாமோ ஏவலாளாக இருக்கிறோமே, நீ தைத்து வை என்று கூடச் சொல்லாமல் தாமே செய்து கொள்கிறாரே! என்று அவரது பணிவான சுபாவத்தை வியந்தேன்.

இரு தம்ளர்களைக் கையில் ஏந்திய வண்ணம் முன்புறப் படிகளின் வழியாக நான் ஏறிய போது பட்டுவின் குரல் என் காதில் பட்டது. என்னையும் அறியாமல் நான் அசைவற்றுப் படியிலேயே நின்று விட்டேன். “என்னவோ பிச்சைக்காரப் பிராமணனைப் போலப் படுக்கையைத் தைத்துப் பெண்ணைக் கொண்டு விட்டுப் போய்விட்டான்! ஒரு பாத்திரம் நகை என்று ஒன்றைக் காணோம்! கையிலே புல்லுப்போல் ஒத்தை வளையைப் போட்டு எப்படித்தான் அனுப்பினாளோ? அதையாவது அழித்து நல்லதாக இரண்டு பண்ணிப் போடட்டும் என்று தானே ஜாடையாக நான் அநாவசியமாகப் பாத்திரம், வேஷ்டி என்று வாங்க வேண்டாம் என்று சொன்னேன்?”

அடுத்தாற் போல் ஜயம், “அத்தை அவ்வளவு பணக்காரியாக இருக்கிறாளே, ஆசையாக இருக்கிறாள், பெண்ணுக்குச் செய்வாள் என்று அம்மா சொல்லிக் கொண்டு இருந்தாரே?” என்று கேட்டாள்.

“என்ன ஆசையோ! மைசூர்ப் பட்டுப் பேர் போனது. நறுக்கென்று நல்லதாக ஒரு புடவை வாங்கி அனுப்பக் காணோம். இல்லாவிட்டால் பேசாமலாவது இருக்க வேண்டும். மெனக்கெட்டு வெள்ளைக் கோடு போட்ட நூல் புடவை. நம்ம வீட்டு முனியம்மா உடுத்துவது போல வாங்கி அனுப்பியிருக்கிறாள்” என்றாள் பட்டு ஏளனமாக.

மின்சார அதிர்ச்சி ஏற்பட்டது போல் நெஞ்சம் சுருங்கியது. உடல் நடுங்கியதைத் தம்ளர்களைத் தாங்கியிருந்த கைகள் உணர்த்தின.

‘பிச்சைக்காரப் பிராமணன்! அப்பா! நீங்கள் என்னை வளர்த்து அறிவூட்டி இந்த வீட்டில் கொண்டு விட்டதற்கு இது பட்டப் பெயரா?’

அன்பில்லாத உள்ளம் என்பதை நான் ஒருவாறு எதிர்பார்த்திருந்தாலும் நேராகப் பேச்சில் உண்மை தெளிந்து விட்ட பின்னர் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என்னால் பொறுக்க முடியாததாகவே இருந்தது. பழுதையோ பாம்போ என்று சந்தேகப்படும் போது உண்டாகும் அச்சத்திற்கும், உண்மையாகவே அது நெளியும் போது ஏற்படும் உடல் நடுங்கும் அச்சத்திற்கும் வித்தியாசம் இல்லையா?

சற்று ‘நக்’கென்று வைப்பது போலவே தம்ளர்களை மேஜையில் வைத்தேன். அவர்கள் பேசியதை நான் கேட்டு விட்டதாக என் முகபாவம் உணர்த்தியதோ என்னவோ? கபட நெஞ்சைப் போர்வையிட்ட புன்னகை நெளிய பட்டு, “அதற்குள் கொண்டு வந்து விட்டாயா?” என்று அன்புடன் கேட்பது போல் வினவினாள்.

“எனக்கு எதற்கு இப்போது காப்பி? நான் தான் வேண்டாமென்று சொன்னேனே! ராமு எங்கே?” என்று ஜயம் கேடுக் கொண்டிருந்த போதே அவர், “என்ன மன்னி, காலங் கார்த்தாலே திடீர் விஜயமாக இருக்கிறதே. அண்ணா வந்திருக்கிறானா?” என்று விசாரித்த வண்ணம் அங்கு வந்தார்.

“இல்லை, நான் மட்டுந்தான் வந்தேன். உங்களை எங்கே கண்ணிலேயே காணாம்? அண்ணா கம்பெனியில் சேர்ந்தாலும் சேர்ந்தீர்கள், ஆளைக் காண்பதே அபூர்வமாக இருக்கிறதே? அன்று வந்தேன். சுசீலாவை லீலா அழைத்துப் போய்விட்டாள். ஒரு ஞாயிற்றுக்கிழமைதான் அவளை அங்கு அழைத்து வரக்கூடாதோ? ‘ஏன் அம்மா, சிற்றப்பாவைக் காணவே காணோம்? வரவே இல்லையா?’ என்று நேற்று சரோஜ் கூடக் கேட்டாள். ‘சித்தி வந்துட்டாளோ இல்லையோ, இனிமேல் எங்கே வரப்போகிறார்?’ என்றேன் நான்” என்று மடமடவென்று கூறி நகைத்தாள் அவள்.

அவர் எங்கே உத்தியோகம் செய்கிறாரோ? அண்ணாவின் காரியாலயத்துக்குப் பக்கத்தில் இருக்கிறதாக்கும் என்றெல்லாம் ஏதேதோ குருட்டு யோசனைகள் செய்தேனே. எனக்குத் தெரியாத சமாசாரம் யாருக்கெல்லாம் தெரிந்திருக்கிறது! பட்டு என்னை ஏன் தாழ்மையாக நடத்த மாட்டாள்? அவர்கள் கீழ் வேலை செய்யும் கையாள்தாமே அவர்? ஏற்கனவே என் அந்தஸ்த்தைத் தூக்கவே முடியாதபடி நகை நட்டும் துணிமணிகளும் இல்லாத பிறந்தகத்து வறுமை வேறு இருக்கிறது. அன்பு, ஆசை, சீர்திருத்த மனப்பான்மை, நாகரிகம் என்றெல்லாம் என்ன என்னவோ பைத்தியம் போல் எண்ணினேனே! அந்த வீட்டை விட்டாவது உடனே வர முடிந்தது. இந்தச் சுதந்திரமற்ற சூழ்நிலையில் எனக்குத் துளியும் ரத்தப்பந்தம் இல்லாத ஒருத்தியின் அலட்சியத்தையும் அகம்பாவத்தையும், ஏளன சொற்களையும் சகித்துக் கொண்டா நாட்களைத் தள்ள வேண்டும்? அத்தை வீட்டிலே அத்தை கூட என்னை நேருக்கு நேர் எதுவும் கூறவில்லை. பாட்டி, என் தந்தையைப் பெற்றவள். என்னை அடிக்கவும் அணைக்கவும் உரிமை கொண்டவள் சொன்ன சொற்களுக்கே அத்தனை ரோசம் கொண்டேனே! இங்கோ?

இந்த வீடுதான் எனக்குப் புகலிடம். இதை விட்டு எங்கும் போகவும் முடியாது. வாழ்நாள் முழுவதும்... சுழன்று சுழன்று இருதயத்தைத் தாக்கிய கிலேசத்தால், ஜயம் விடைபெற்றுப் போகும் வரை நான் எப்படித்தான் சமாளித்துக் கொண்டு நின்றேனோ? பின்புறமாக நடந்தவள் எங்கள் அறைக்கு வந்தேன். அடுத்த வீட்டில் காரியாலயத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அவனிடம் அவள் குழைந்து கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தது என் கண்ணில் பட்டது. இனம் தெரியாத துயரம் உந்திக் கொண்டு வர, சுற்றி வைத்திருந்த படுக்கையில் சாய்ந்தேன். இருதயத்தில் இருந்த பளுவை அழுது அழுது கரைத்தால் தான் இதமாக இருக்கும் போல இருந்தது. அடுப்படி அலுவல்கள், மாமியார் எல்லாவற்றையும் மறந்தவளாக விம்மல்களுடன் கண்ணீர் பெருக்கினேன்.

“சுசீலா? சுசீ! சுசீ!” என்று பதறும் குரலுடன் அவருடைய அன்புக் கரங்கள் என் மேல் பட்டன.

உணர்ச்சியை அடக்கிக் கொள்ள முடியாத என் பலவீனம் எனக்கு அப்போதுதான் புலனாயிற்று. அசட்டுத்தனமாக அழுதுவிட்டேனே? அவர் இப்போது கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வேன்? என்னுடைய செய்கை அடுத்த நிமிஷத்தில் எப்பேர்ப்பட்ட பலனைக் கொடுக்கும் என்று சற்றும் சிந்தியாமல் அல்லவோ பலவீனத்திற்கு ஆளாகிவிட்டேன்.

தலையைத் தூக்கி என் அமுத முகத்தை அவருக்குக் காட்டவே எனக்கு லஜ்ஜையாக இருந்தது.

“சரி, என்னம்மா இது? என்ன சமாசாரம்?” என்று துடிதுடிக்கும் கண்களுடன் அவர் என் முகத்தைத் திருப்பினார். “என்ன வருத்தம் உனக்கு சுசீலா? சொல்லி விட்டு அழேன். என்ன நேர்ந்தது?” என்றெல்லாம் அடுக்கியவாறு அவர் என் கண்களைத் துடைத்த போது எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

“ஒன்றுமில்லை...”

“ஒன்றுமில்லையா? குலுங்கக் குலுங்க விம்மினாயே, சுசீ! என்னிடம் சொல்லக் கூடாதா? இன்னுமும் உன் விம்மல் ஒலி என் நெஞ்சைத் தாக்குகிறது. நீ ஒன்றுமில்லை என்கிறாயே?”

ஆனாலும் நான் எத்தனை அசடு? அவரிடம் என்ன சொல்லுவது? உங்கள் மதனி என் தந்தையைப் பிச்சைக்கார பிராமணன், நகை செய்து போடவில்லை என்று சொன்னாள் என்று சொல்வதா? சீ, சின்னக் குழந்தைகள் சண்டையா இது? அவள் என்ன சொன்னால் எனக்கு என்ன? விலைமதிப்பற்ற அன்புச் சுரங்கமாகிய அவர் எனக்குச் சொந்தமாக இருக்கும் போது, வேறு என்ன குறை எனக்கு, இந்த அற்பச் சங்கதிகளை எல்லாம் அவர் காதில் போடுவது தப்பு.

என் கிலேசப் புகையினூடே அப்பாவின் உபதேசம் பளிச்சிட்டது.

‘ஒவ்வொருவர் குணம் ஒவ்வொரு விதமாக இருக்கும். அவரவர்கள் இயல்புக்கு ஒத்தபடி இணைந்து போக வேண்டும்’ என்றாரே!

கொடுக்கக் கூடாத பொருளை விரும்பிக் குழந்தை அழுதால் தாய் எத்திப் பேச்சு வாக்கில் ஒளித்து விடுவாள். ஆனால் சற்றே சமாதானம் அடைந்தது போல் தூங்கும் குழந்தை, நித்திரையில் அந்த நினைவு வந்தால் கூடக் கேட்டு அலற ஆரம்பிக்கும். அப்படித்தான் அப்பாவின் நினைவு மறுபடியும் என் நெஞ்சில் வேதனையைக் கிளர்த்தியது. பட்டுவின் இழிவுச் சொல், அவரது பரிதாபமான எலும்பெடுத்த உருவம் - எல்லாம் என்னைத் திரும்பவும் உணர்ச்சிக்கு அடிமையாக்கின. மீண்டும் விசும்பல் எழும்பியது.

அவர் என் நெஞ்சை அமுக்கிக் கொண்டார். “ஒன்றும் இல்லை என்று திரும்பவும் தேம்புகிறாயே, சுசீ? உனக்கு மனக் கஷ்டம் என்ன என்று சொல்ல மாட்டாயா?” என்று கெஞ்சினார்.

இந்த அயனான கட்டத்தில், “ஏண்டி சுசீலா?” என்று கூப்பிட்டுக் கொண்டே மாமியார் வந்து விட்டாள்.

எக்கச்சக்கமாக எங்காவது நரம்பு பிசகிக் கொண்டிருந்தால் மளுக், மளுக் என்று வலிக்கும். சில சமயங்களில் அது எவ்வித மருந்தும் இன்றிச் சட்டென்று திரும்பும் போதோ சோம்பல் முறிக்கும் போதோ பிசகிய விதம் போல விட்டுவிடுவது உண்டு. மாமியாரின் குரல் சாட்டையடி போல என் துயரத்தைக் களைந்து மேலே வீட்டு வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்ற என் பழைய நிலைக்குக் கொணர்ந்தது என்றாலும், கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட திருடனைப் போல் அல்லவா அழுத கண்களுடனும், ஆதரவு காட்டும் அவருடனும் தென்பட்டு விட்டேன்? ஏதோ சொல்ல வந்தவள் திக்பிரமை அடைந்து விட்டவள் போல் எங்களை வெறித்துப் பார்த்த வண்ணம் அவள் நின்றாள்.

நிமிர்ந்து பார்க்காமலேயே புடவைத் தலைப்பால் கண்களை அழுத்தித் துடைத்துக் கொண்டு “எனக்கு ரொம்பத் தலை வலிக்கிறது” என்று சமயோசிதமாகப் புளுகினேன்.

“நன்றாக இருக்கிறது! தலைவலிக்கா இப்படி முகம் சிவக்க அழுதிருக்கிறாய்? என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேனே! ஆயிரம் மருந்துகள் இருக்குமே இங்கு? எதையாவது கொஞ்சம் கேட்டு வாங்கிப் போட்டுக் கொள்வதற்கென்ன? என்னவோ அம்மா! எங்கள் நாட்களில் இந்த வயசில் மங்கு மங்கென்று காரியம் செய்வோம். இங்கு என்ன இடுப்பில் ஒரு குடமும் கையில் ஒரு குடமும் தூக்க வேண்டுமா? வீடு மெழுக வேண்டுமா? மாடு கறக்க வேண்டுமா, என்ன இருக்கிறது? இந்த அடுப்பில் ஏற்றி இறக்குவது ஆகாமல் பூஞ்சையாக இருக்கிறதுகள்” என்று பொழிந்து தள்ளிக் கொண்டு போனாள் அவள்.

என் கணவர் அப்போது ஒன்றும் கேட்கவில்லை. மாமியார் சென்ற பின், “நிஜமாக உனக்கு என்ன வருத்தம் சுசீலா? தலைவலி என்று பொய் தானே சொன்னாய்?” என்று கேட்டார். அவர் கூரிய பார்வை என் மனதைப் பிளந்து கொண்டு போகும் போல் இருந்தது.

“ஒன்றும் இல்லை. நிஜமாகவே தலைவலிதான். ஏதோ நினைத்துக் கொண்டேன். ஊரின் ஞாபகம் வந்துவிட்டது” என்று என் பொய்க்குக் குஞ்சலம் பொருத்தி விட்டேன் நான். கஷ்டப்பட்டுச் சிரிப்பை வரவழைத்துக் கொள்ளக் கூட முயன்றேன். மேகங்களிலிருந்து வெளிப்படும் சந்திரனைப் போல் அவர் நகைத்தார். “அட அசடு! அம்மா அப்பாவை நினைத்துக் கொண்டா குழந்தை அப்படி அழுது விட்டது. இந்தச் சில நிமிஷங்களில் நான் எப்படித் துடித்து விட்டேன். தெரியுமா சுசீ? நான் இருக்கும் போது நீ இப்படி அழலாமா? இனிமேல் இம்மாதிரி உன் முகம் கன்றக் கூடாது. தெரியுமா சுசீ?” என்றார். சிறு குழந்தையைச் சமாதானப்படுத்துவது போல. இந்நிலையில் மாமியார் அமிர்தாஞ்சன் டப்பி ஒன்றை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள். “இந்தா! இதைத் தடவிக் கொண்டு சற்று படுத்திரு. தானாகப் போய்விடும். நன்றாக அழுதாய்? பச்சைக் குழந்தையைப் போல், தலையை வலிக்கிறதென்று!” என்று கூறி, அதைக் கொடுத்துச் சென்றாள்.

படுக்கையை விரித்து அவர், “நீ படுத்துக் கொள். நான் மருந்து தடவி விடுகிறேன்” என்று உபசாரம் செய்தார். “எல்லோரும் சாப்பிடக் காத்திருப்பார்களே, நான் போகிறேன்” என்று நழுவ முயன்ற என்னைப் பலவந்தமாகப் படுக்கையில் தள்ளி, அமிர்தாஞ்சனத்தைத் தடவி விட்டு அவர் சாப்பிடப் போய்விட்டார்.

என் அசட்டுத்தனத்துக்காக என்னையே நொந்து கொண்டேன். அருங்குணக் குன்றாக அவர் இருக்கும் போது அவசரக் கிளர்ச்சிக்கு இடம் கொடுத்தேனே என்று குன்றிப் போனேன். சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்து அவர் கூறிய வார்த்தைகள் அன்று முழுவதும் அவர் அன்பையே எண்ணி வியக்க வைத்தன!

“சுசீலா, உன்னால் எனக்கு எத்தனை பெருமையாக இருக்கிறது தெரியுமா? இந்த வீட்டில் குழந்தைகள் பெரியவர்கள் வரையில் எல்லோரையும் அதற்குள் நீ எப்படி கவர்ந்து விட்டாய்! வந்த மறுகணமே புக்ககத்து மனிதர்களிடம் வெறுப்புக் காட்டும் பெண்களே மலிந்து இருக்கும் போது, நீ எனக்கு மனைவியாகக் கிடைத்திருப்பது நான் செய்த பாக்கியம் என்றெண்ணி மகிழ்ந்திருக்கிறேன். உன் கண் கலங்க நான் எப்படிச் சகிக்க முடியும்?” என்று புகழ் வார்த்தைகளால் போர்வை இட்டு விட்டார். ‘கணவன் வீட்டாரிடம் நான் காட்டும் பணிவுக்கு எனக்கு இவ்வளவு தூரம் நன்றி காட்டும் அவரன்றோ உண்மையில் ஆதர்ச புருஷர்? அவருடைய மனம் கோணாமல், அவர் என்னிடம் வைத்திருக்கும் பெருமையையும் மதிப்பையும் நான் நிலைநாட்டிக் கொள்ள வேண்டாமா? அது ஒன்று தான் என் வாழ்வின் குறிக்கோள். வைரத்திலும் புள்ளியுண்டு. முத்திலும் சொத்தையுண்டு எனக் கேட்டதில்லையா நான்? அவர் எனக்கு இங்கு இருக்கும் போது, இந்த அற்பமான தோஷங்களைப் பொருட்படுத்தக் கூடாது’ என்று சங்கற்பம் செய்து கொண்டேன்.

அன்றிரவு பட்டு சாப்பிடுவதற்காகக் கீழே வரவில்லை. அதற்குப் பதில் தன் பர்வத உடம்பைத் தூக்கிக் கொண்டு அவள் தாய் மேலும் கீழும் போய் வந்தாள். என் கணவர் காரியாலயத்திலிருந்து வந்ததிலிருந்து டாக்டர் வீட்டுக்கும், மருந்துக் கடைக்கும் அலைந்த வண்ணமாக இருந்தார். இரவு பத்து மணிக்குப் பிறகே சந்தடி குறைந்திருந்தது. ‘பிரசவத்திற்கு இன்னும் போதிருக்கிறது’ என்று சொல்லி டாக்டர் போய்விட்டதாக மாமியார் சொல்லிக் கொண்டாள்.

வேலைகளை முடித்துக் கொண்டு நான்மாடிக்கு வந்த போது தான் எனக்கு எத்தகைய அதிர்ச்சி காத்திருக்கிறது என்று புரிந்தது. எங்களுடைய அறை தான் பிரசவத்திற்கு ‘ஆகி’ வந்ததாம்! அங்குள்ள சில சாமான்கள் கூடத்துக்கு வந்திருந்தன. குழந்தைகள் கூடத்தில் உறங்கிக் கொண்டிருக்க என் கணவர் முன்புற வராந்தாவில் படுக்கை மீது சாய்ந்தவாறு ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார். வழக்கம் போல் மைத்துனர் தம் அறைக்குள் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். லீலா மேஜை விளக்கு எரிய ஏதோ எழுதிய வண்ணம் இருந்தாள். அவள் அறைக்குள் வைத்திருந்த என் பொருள்கள், நான் அன்றிரவும் அதற்கு மேலும் எத்தனை நாட்களோ அவளுடன் கழிக்க வேண்டும் என்று யாரும் சொல்லாமல் விளக்கின. அர்த்தமற்ற, யாரிடமென்று சொல்ல முடியாததொரு கோபம், படபடப்பு, கவலை, ஏமாற்றம், துயரம் முதலிய எல்லா உணர்ச்சிகளும் என்னை வென்று அடிமையாக்கி விடும் போல் இருந்தன. போர்வையால் முகத்தை மூடிக் கொண்டு வெளிக்குத் தெரியாமல் மௌனமாகக் கண்ணீர் பெருக்கினேன்.
----------------

2.6 மலர்

அன்று வீடு திமிலோகப்பட்டது. கார்களின் சப்தமும் டாக்டர், நர்ஸ்களின் பாதரட்சை ஓசையும், காபி, வென்னீர் என்று சமையலறையில் எனக்கு வந்து குவிந்த உத்தரவுகளும், என் மாமியார் அடிக்கொரு தடவை மாடிக்கு ஏறிச் சென்றதும் அவசரத் தேவைக்கு வெளியே செல்வதற்காக என் கணவர் அன்று காரியாலயத்துக்குச் செல்லாமல் இருந்ததும், அந்த வீட்டுக்கே பட்டு முடிசூடா மன்னிதான் என்று விளக்கின. என்னதான் நல்லெண்ணங்கள் மூலம் நான் நிச்சலனமாக இருக்க முயன்றாலும், பலத்த மழைக்கும் புயலுக்கும் அறிகுறியாக அகலாமல் வந்து குவியும் கார் மேகங்களைப் போல் என் இருதயத்தே வந்து எல்லா உணர்ச்சிகளும் சூழ்ந்து கொண்டன. இளம் தம்பதிகள், துடிக்கும் ஆவலுடன் தனிமைக்கு ஏங்கி நிற்பார்கள் என்று ஏன் இந்த வீட்டில் யாருமே தங்கள் கவனத்தைச் செலுத்தவில்லை? என் மாமியார் தான் ஆகட்டும், வாழ்ந்து சுக துக்கங்கள் அனுபவித்தவள் அல்லவா? என் மைத்துனருக்குத்தான் எங்கள் விஷயத்தில் கண் குருடாகி விட வேண்டுமா?

நான் ஏழையாக இருக்கலாம். ஆபரணங்களும், பட்டாடைகளும் என்னை அலங்கரிக்காமல் இருக்கலாம். காரிலே உல்லாசச் சவாரி போகவும், இசை விருந்துகளை அனுபவிக்கவும், மின்சார விசிறியின் அடியில் உட்கார்ந்து அதிகாரம் செலுத்தவும் உரிமை அற்றவளாக இருக்கலாம். ஆனால் அன்பே உருக்கொண்ட கணவனைக் கைப்பிடித்திருக்கும் பெண் அல்லவா நான்? என்னிடம் உயிரையே வைத்திருப்பதாகத் தோன்றும் அவருடன் தோழமை பெற உரிமை உள்ளவன் அல்லவா நான்.

விதை இல்லாவிட்டால் பூ ஏது, கனி ஏது? முதல் முதலாக இந்த வீட்டில் சகலமான பேர்களும் என்னை அளவற்ற சுவாதீனத்துடன் சுசீலா, சுசீலா என்று அழைத்துச் சர்வ சுவாதீனமாகக் கட்டளை இடுவது எதனால் வந்தது? அவரை நான் மணந்திருப்பதால் தானே? கணவனுடைய வீட்டிலே போய் அமைதியாக உழைப்பதுடன் திருப்தி அடைந்து விட வேண்டும் என்று பரம ஏழையாக இருக்கும் பெண்ணாக இருந்தால் கூட, ஏன் அங்கஹினம் அவலட்சணம் என்ற குறைபாடுகள் உள்ள பெண்ணாக இருந்தால் கூட எண்ண மாட்டாளோ! வெளியே செல்லக் கூடாது, எவருடனும் அளவளாவக் கூடாது, பிறந்த வீட்டுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்பன போன்ற சுதந்தரங்களில் வேண்டுமானாலும் தடை விதித்து உரிமைகளைப் பறித்துக் கொள்ளட்டும். மணவாழ்வின் ஜீவநாடியான உரிமைக்குக் கூட இடம் இல்லாத வீட்டிலே நான் என்றென்றும் சலனம் இல்லாமல் எப்படி வாழ முடியும்?

என் பேதமை எனக்கு நன்றாக விளங்குகிறது. எனக்கு இங்கே சகல சுதந்திரங்களும் இருக்கும், ஜகதுவைப் போல எவ்வித இன்னலுக்கும் ஆளாக வேண்டாம் என்று எண்ணினேனே, அது எத்தனை அறியாமை!

உள்ளே வலுக்கும் புயலோடு நான் போராடிக் கொண்டிருந்தேன்.

அவரோ, எப்போதும் போன்ற சாந்த முகத்துடன், இதழ்களிலே வழக்கம் போன்ற நகையுடன் குழந்தைகளுடன் சரளமாகப் பேசிக் கொண்டு நிச்சலனமாக வளைய வந்தார். இதைக் கண்ணுற்ற போது என்னுள்ளே புயலுக்கான எதிர்ப்புக் குறைந்து விடும் போல இருந்தது.

அவரும் இது போன்ற மனநிலையில் இருக்க வேண்டியவர் தாமே? இப்போது என்னைப் பாதித்திருக்கும் சங்கடங்கள் அவரையும் பாதித்திருக்க வேண்டுமல்லவா? பின் அவற்றின் ரேகைகள் கூட அவரிடம் தென்படவில்லையே! என்னைப் பார்க்கும் போது கூடச் சஞ்சலமற்றுப் புன்னகை செய்கிறாரே!

பொன்னொளியைப் பூசிக் கொண்டு விரிந்து பரந்திருக்கும் வானத்தில் இருள் தேவன் ஆட்சி புரிய வந்து விட்டானானால் சற்று முன்னால் ஜகஜ் ஜோதியாக மனத்தை மயக்கும்படி ரம்மியமாகத் தோன்றிய வானந்தானா என்று சம்சயிக்கும்படி பொன்னால் பூசப்பெற்ற ரேகை கூட இல்லாமல் அந்தகாரம் கப்பிக் கொண்டு விடும். அவர் அன்பின் அவதாரம். காவியங்கள் போற்றும் காதல் தெய்வம். அருங்குணக் குன்று என்றெல்லாம் போற்றியிருந்தேனே; கிடைத்தற்கரிய ஆதர்ச புருஷர் என்று உள்ளே பூரித்திருந்தேனே. அவை யாவும் உண்மைதானா, அல்லது புக்ககத்து வாழ்வைப்பற்றி நான் மனப்பால் குடித்திருந்ததைப் போல பேதமைக் கண்ணாடி பூண்டிருக்கும் என் கண்களின் தோற்றந்தானா? இந்தச் சந்தேகம் அவரிடம் நான் கொண்டிருக்கும் அசையாத நம்பிக்கை என்ற கற்கோட்டையிலே சிறு நெகிழ்ச்சிக்கு இடமளித்து விட்டது போலப்பட்டது. எனக்கு ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பதைப் போல. பிரமையோ என்னவோ, நான் எத்தனை முயன்றும் அவருடைய முதல் நாளைய அரவணைப்பு, நெஞ்சைத் தொட்ட கனிவுச் சொற்கள், எல்லாம் என் மனத்திரையில் தெளிவாக விழாமல் திறக்கப்பட்ட கதவுக்கு முன் காணும் ‘மாட்டினி’க் காட்சியைப் போல ஒளியிழந்து வெளிறித்தான் தோன்றின.

உண்மையைச் சொல்லப் போனால் பெண் நாணத் திரைக்குள் இருப்பவள். ஊர்வலத்தின் போது என் கையை அழுத்தித் துணிச்சலுடன் என்னைப் பேச்சுக்கு இழுத்தவருக்கு இப்போது தாமாக முயன்றால் என்னுடன் தனிமையை ஏற்படுத்திக் கொள்ள முடியாதா? பெரியவர்கள் மனதிற்கு ஏற்ப இணைந்து தான் போக வேண்டும் என்றாலும் அதற்கு ஒரு வரையறை வேண்டாமா? இவ்வளவு தூரம் அடிபணிந்து போகும் பயங்கொள்ளியா அவர்? மரியாதை என்றே வைத்துக் கொண்டாலும் விட்டுக் கொடுப்பதற்கு ஓர் எல்லையே இல்லையா? அப்படி என்றால் என்னிடம் அவருக்குக் கரை காணாத அன்பு இருக்கிறதென்பதற்கு அத்தாட்சியே காணவில்லையே? அவர் மனம் முழுவதும் அவர் சொல்லுவது போல என் மீதுள்ள பிரேமை வியாபித்திருக்குமானால் இத்தகைய அர்த்தமற்ற மரியாதைக்கு இடம் விட்டிருக்குமா?

கணவன் வீடு இந்திரலோகமாக இருக்கும் என்ற என் மனக்கோட்டை மண்ணோடு மண்ணாகப் போனதில் எனக்கு ஏற்பட்ட சங்கடம் என்றால் பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை. வற்றாத ஜீவநதி போல என்னிடம் பெருக்கெடுத்து வரக்கூடியது அவர் பிரேமை என்று நான் எண்ணியிருப்பது கானல் நீராக... இருந்துவிட்டால்... இருந்துவிட்டால்...?

அம்மம்மா? என் மனம் தாளாது. ஆமாம், அதன் ஜீவநாடி அறுந்து விட்டது போல விண்டு விரிந்தாடும். மண்டை உடைந்தாலும் பொறுக்கலாம், மனம் உடைந்தால் பொறுக்க முடியாது.

அன்று பகல் பட்டுவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மழை ஓய்ந்த பூமியைப் போல வீட்டின் அமளி எல்லாம் மாலை அடங்கியிருந்தது. கல்லூரியிலிருந்து வந்து விட்ட லீலா, என்னிடம் அந்தரங்கமாகப் பேசும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்ததைப் போலச் சமையலறை மேடை மீது வந்து உட்கார்ந்தாள். யாருமே அப்போது அங்கு இருக்கவில்லை. நான் என் கை வேலையிலிருந்து கவனத்தை அவள் மீது திருப்பினேன். எத்தனை தான் எனக்குச் சங்கடம் இருக்கட்டும். வேதனை இருக்கட்டும். அவள் முகத்தைக் கண்டவுடன் அவ்வளவும் பஞ்சாய்ப் பறந்துவிடும். உள்ளங்கள் இணைந்து தோழமை பூண்டிருப்பதன் இன்பம் இதுதான் போலும்.

“என்ன, மூர்த்தியை அப்புறம் பார்த்தீர்களா? என்ன பதில் கொடுத்தீர்கள்? எனக்கு ஒன்றுமே தெரிவிக்கவில்லையே! இன்னொரு தரம் அவர் இம்மாதிரி கடிதம் எழுதி அசட்டுத்தனம் செய்து வைக்கப் போகிறார்! அன்றே தப்பியது தம்பிரான் புண்ணியம். மன்னியாக இருந்திருந்தால், எனக்கு அப்பா எழுதும் கடிதத்தையே படித்து விட்டுக் கொடுப்பவர். உங்களுக்கு வரும் கடிதத்தை அவ்வளவு லகுவில் பார்க்காமல் கொடுத்திருக்க மாட்டார்?” என்று நான் மெதுவாக, பட்டுவின் தகாத செய்கையை அவளுக்குத் தெரிய வைத்தேன்.

“சிலர் தெரிந்து வேண்டுமென்றே தகாத காரியம் செய்கிறார்கள். இதிலெல்லாம் நீ பொறுத்துப் போவது சரியல்ல, சுசீ! இன்னொரு முறை அப்படிச் செய்தால் முகத்தில் அடித்தாற் போல், ‘என்ன விசேசம், மன்னீ? நீங்களே சொல்லி விடுங்கள்’ என்று கேள். அக்காவின் சர்வாதிகார மனப்பான்மை எனக்கு ஒவ்வொரு சமயத்தில் எரிச்சலை மூட்டுகிறது. பயப்பட வேண்டும் என்றால் அதற்கு வரம்பு இல்லையா? இதிலெல்லாம் உனக்குத் துணிச்சலே போதவில்லை” என்று என்னைக் கோபித்து விட்டு அவள், “போன வாரம் ராமு, மூர்த்தியைப் பார்த்தானாமே, சொன்னானா?” என்று கேட்டாள்.

“ஊஹூம்!” என்று நான் தலையை ஆட்டினேன்.

“ஹோட்டல் ஒன்றில் பார்த்தானாம். ‘சுசீலாவுக்கு நீ உறவு என்றே தெரியாதே! அடிக்கடி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிரு’ என்று அழைத்தானாம்” என்றாள்.

“நீங்கள் அழைக்கத் தேவையில்லை. என்னை அங்கே இழுக்கக் கூடிய காந்தம் இருக்கிறது என்றாராக்கும்!”

“ஏய்! சுசீ?” என்று கோபக் குரலில் அடக்குவது போல் விளித்து அவள், “அவர் இங்கு வருகிறார் என்றாலே ஏனோ எனக்குப் பயமாக இருக்கிறது. நாலைந்து நாட்களுக்கு முன்பு நான் காலேஜ் முடிந்து வருகையில் கடற்கரையில் என்னைச் சந்தித்தார். இன்று கூட அங்கே பார்ப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் நான் காத்துப் பார்த்தேன். அவரைக் காணவில்லை. என்ன அசௌகரியமோ என்பது ஒரு புறம் இருக்க, இங்கு எல்லோருக்கும் தெரிந்து விட்டால் என்ன நேருமோ என்று வேறு திக்திக்கென்று அடித்துக் கொள்கிறது” என்றாள்.

“ஓகோ! அதுதான் இப்போதெல்லாம் நீங்கள் வீடு வர இருட்டும் சமயம் ஆகி விடுகிறதாக்கும்! அன்று, ‘இப்போதுதான் காலேஜிலிருந்து வருகிறாயா, லீலா!’ என்று மைத்துனர் கேட்டதற்கு, ‘ஆமாம், காலேஜிலே ஏதோ மீட்டிங்’ என்று புளுகினீர்களே, நிஜமாகவே அலுத்துக் கொள்வது போல் அப்படி நடித்தீர்களே!” என்று நான் வியப்பும் குறும்பும் கலந்த பார்வையில் அவளை நோக்கினேன்.

“உஷ்! வாயை மூடிக் கொள், சுசீ! ராமு வருகிறான்” என்று என்னை அவள் எச்சரித்தாள்.

“என்ன, இங்கே அந்தரங்க மந்திராலோசனை. பூவுடன் சேர்ந்து நாரும் மணம் பெற்ற கதையாக! லீலாவை முன்பெல்லாம் இந்தச் சமையலறைக்குள் பார்க்கவே முடியாது. இப்போது என்னடா என்றால் அடுப்பங்கறையிலேயே ஐக்கியமாகிக் கிடக்கிறாளே? பேசு பேசு என்று பேச உங்களுக்கு அப்படி என்னதான் சமாசாரம் இருக்கிறதோ, தெரியவில்லையே!” என்று அவர் நகைத்தார்.

“பார்த்துக் கொள், சுசீ! நீ பூவாம், நான் நாராம், நீதான் புது மனைவியாயிற்றே என்று சற்றைக்கொருதரம் வந்து கவனிக்காமல் இருக்கிறாயே நானாவது வந்து பார்த்து உற்சாகப்படுத்தலாம் என்று வந்தேன். நல்லதுக்குக் காலமில்லை!” என்று பதிலுக்கு நகைத்தாள் லீலா.

“சுசீலா, சொல்ல மறந்துவிட்டேனே. இப்போதுதான் ஸென்ட்ரல் அருகில் மூர்த்தியைப் பார்த்தேன். அவன் தங்கை இறந்து விட்டாளாம். ஊருக்குப் போகிறான். பாவம்! பெண் பிள்ளை மாதிரி அழுகிறான். ஒரே தங்கையாம்!” என்று பரபரப்புடன் சமாசாரத்தை அவிழ்த்தார் அவர் எனக்குத் துணுக்குற்றது.

அவளைத்தானே அப்போது பிரசவத்துக்கு அழைத்துச் சென்றான்? “அடபாவமே! பிரசவித்தா இறந்து போனாள்?”

“அப்படித்தான் போல் இருக்கிறது. ஐந்து மணிக்குத்தான் தந்தி கிடைத்ததாம். உடனேயே மெயிலில் கிளம்புகிறான். அவனைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது. அவன் தகப்பனார் வேறு நாலைந்து மாதங்களாகப் பாரிச வாயுவால் படுக்கையில் இருக்கிறாராமே; அதையும் சொல்லிக் கவலைப்பட்டுக் கொண்டான்.”

லீலா கல்லாகச் சமைந்து போயிருந்தாள்.

எனக்கோ செய்தி கேட்டதிலிருந்து எதுவுமே ஓடவில்லை. அந்தப் பெண்ணை நான் பார்த்தது கூட இல்லை. எந்த விதத்திலும் எனக்கு ஒட்டு உறவு என்று பந்தமும் இல்லை. ஆனால் மூர்த்தி அவளைக் காணாமல் இருக்கும் போதே நொடிக்கு நூறு முறை, ‘மஞ்சு, மஞ்சு’ என்று அன்று சினிமாப் பார்க்கும் போது பேசியபோது அண்ணன் தங்கை என்ற பாசத்தின் மென்மை வெளிப்பட்டது. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது எனக்கு. என்ன இருந்தாலும் சகோதர பாசம் அலாதியான மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியதுதான். ‘ஓர் அண்ணா எனக்கும் இப்படி இருந்தால்?’ என்று கூட நான் எண்ணிக் கொண்டேன். அந்த மஞ்சு இறந்து விட்டாள் என்ற செய்தி அவனுக்கு அதிர்ச்சியூட்டியதில் வியப்பு ஏதுமில்லையே? அதனால் தான் அவன் லீலாவிடம் கூறியிருந்தபடி அவளைச் சந்திக்கவில்லை.

அன்றிரவு லீலாவின் செய்கை என் வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைக்கக் கூடிய விதமாக இருந்து விட்டது. முன்னாள் போல அவள் எழுதிக் கொண்டிருக்கையில் வேலை முடிந்து வந்த நான் அலுப்புத் தாங்காமல் படுத்து விட்டேன். சற்றுத்தான் அசந்திருப்பேன். நான் விழித்துக் கொண்ட போது விளக்கு அணைந்திருந்தது. அறையிலே லீலா படுத்திருக்கவில்லை. அவள் கீழே படுக்கையைத் தூக்கிக் கொண்டு போகப் போகிறாள் என்பது எனக்கு முன்னே தெரிந்திருக்கவில்லை. எனக்கு ஏதோ அருவருக்கத்தக்க செய்கை செய்து விட்டவள் போல மனத்தில் வெறுப்பு, கசப்பைப் பரப்பியது. மணி என்ன ஆயிற்று என்று பார்த்தேன். பத்தரைதான் ஆகியிருந்தது. விளக்கை அணைத்து விட்டு அவள் சற்று முன் தான் போயிருக்க வேண்டும். சே! என்ன வெட்கக் கேடு? இத்தனையும் அவருடைய அர்த்தமற்ற மரியாதையால் வந்ததுதானே? அவரே அப்படிச் சலனமற்று இருக்கையில் என் மாமியார் என் ஏற்பாடு என்று என்னைக் கேவலமாக நினைக்கமாட்டாளா? கோபமும் வெறுப்பும் அளவுக்கு மேலிட்டன. அந்தப் பழைய நிகழ்ச்சிகள், வருங்காலத்தில் நிகழக் கூடியவைகளை முன்கூட்டியே எனக்கு உணர்த்திய துர்ச்சகுனங்கள், என் மனத்தின் மேல் பரப்பில் மிதந்தன. கசப்பை விழுங்குவது போல எல்லாவற்றையும் விழுங்கியவாறு நான் தூங்க முயன்றேன்.

வசந்தத்தின் தென்றல் எங்கும் வாசம் வீசியது. சுற்று முற்றும் என் கண்களுக்குத் தென்பட்ட இடமெல்லாம் வண்ண வண்ண மலர்களைத் தாங்கி நின்ர செடிகளும் கொடிகளும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. பச்சை இலைகளுடன் மிளிர்ந்த மரங்கள் ஆயிரமாயிரம் உயிர்த் துளிகள் பச்சை உருவத்தில் பூமிதேவியின் மடியிலிருந்து எழுந்து விட்டன போல் தோன்றின. புறாக்கள் தகதகவென்று வெளுப்பும் கறுப்புமாகப் பிரகாசிக்கும்படி இப்படியும் அப்படியும் வெண் சிறகுகளை வீசிக் கொண்டு வான வீதியிலே பறந்து சென்றன. பசும்புல் தரை - என்னைப் போதை வெறி கொள்ளும்படி செய்த புல்தரை - நான் என்றுமே பார்த்திராத காட்சியாகத் தோன்றியது. இயற்கை அன்னையின் எழிலிலே ஒன்றிப் போன நான் இன்னும் அதற்கு உறு துணையாகி இன்பம் பெற மனம் போனபடி பாட ஆரம்பித்தேன். ஆனால், ஏனோ மனத்தின் களிப்பிலிருந்து எழும்பிய கீதம் எனக்குச் சோக ரஸமாக ஒலிக்கிறது? என் தீங்குரலிலிருந்து மகிழ்ச்சி பொங்கும் நாதமே எழும்பவில்லையே!

பாடிவிட்டு நான் குலுங்க குலுங்க அழுதேன். எனக்கு அழ வேண்டும் போல் இருந்தது.

“சுசீலா...!” கண்ணீரிடையே நான் நிமிர்ந்து பார்த்தேன்.

ஆகா! குரலில் தான் எத்தனை அன்பு, எத்தனை இதம்!

“இங்கே வா அம்மா சுசீலா!” என்று அன்பே உருவெடுத்த இரு கரங்கள் என்னை அழைத்தன.

குழைந்து போல நான், நீட்டிய கரங்கள் முன்பு என்னை மறந்து ஓடி விடப் போனேன்.

‘சே! என்ன பிரமை? யாரையும் காணவில்லைஎயெ? அந்தக் கைகள் எங்கே?’ நான் கண்களைத் துடைத்துக் கொண்டு நெஞ்சம் துடிக்கப் பார்த்தேன்.

ஆ! இது என்ன? மின்னல் ஒன்று கண்களை வெட்டியது. கார் மேகங்கள் காது செவிபடும்படி கர்ஜித்தன. பார்க்க அதிபயங்கரமாக நெருப்புக் கண்களும் கோரப்பற்களுமாக ஓர் உருவம் எங்களூர்க் குளத்தங்கரைப் பிடாரி கோயிலுக்கருகில் நிற்கும் கறுப்பண்ணனின் சிலையைப் போன்ற நிஜ உருவம் ‘ஹஹ்ஹஹஹா!’ என்று இடி முழக்கக் குரலில் நகைத்தது. கண்களை இறுக மூடிக் கொண்டு நான், “நீ யார்? என்னை அன்புடன் அழைத்தவர் எங்கே? அந்தக் கைகள் எங்கே?” என்று கத்தினேன்.

“நான் தான்... நான் தான்...” என்ரு மீண்டும் பேய்ச் சிரிப்பு என் செவிகளில் பாய்ந்தது. நான் கிரீச்சிட்டேன்.

உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரையில் வேர்த்துக் கொட்டியது. என் இதழ்களில் ஏதோ சில்லென்று பட்டது. உடல் கிடுகிடென்று நடுங்கியது.

திடுக்கிட்டவளாக நான் விழித்துக் கொண்டேன்.

“பயந்து போனாயா சுசீலா?” என்று என் கன்னத்தை ஆதரவுடன் வருடினார் என் கணவர்.

‘இது இரவு. நான் சற்று முன் கண்டது கனவு. கதவைத் திறந்து கொண்டு அவர் வந்திருக்கிறார்’ என்று நான் அறியச் சில விநாடிகள் சென்றன.

அந்தக் கனவுதான்... அம்மம்மா! எத்தனை பயங்கரம்! அந்த அன்புக் கரங்கள் உண்மையில் அன்புக் கரங்கள் அல்ல.

என்னுடைய பலம் அவ்வளவையும் பிரயோகிப்பது போல அவர் கையை என் கன்னத்திலிருந்து அகற்றித் தூரத் தள்ளினேன்.

“சுசீ! நான் தான் சுசீ... இதோ பார்” என்று அவர் தம் முகத்தை எனக்குச் சமீபமாகக் கொணர்ந்தார்.

என் வெறுப்பு, கோபமாக உருவெடுத்தது. நாகப் பாம்பு போல் சீறியவளாக அவர் தோளைப் பிடித்துத் தள்ளினேன்.

“என்னம்மா சுசீலா? தூக்கக் கலக்கமா?” என்று மேலே தொங்கிய மங்கலான விளக்கொளியில் புன்னகை செய்த அவர் என்னை மீண்டும் தொட வந்தார். “சீ! என்னைத் தொடாதீர்கள்! ஆமாம். இவ்வளவு கீழ்த்தரமான மனசு படைத்த நீங்கள் என்னைத் தொட அருகதை அற்றவர்! உங்கள் ஆசைக்குப் பலியாக மாட்டேன்! இப்போதே வெளியே போகிறார்களா... இல்லை நான்...” என்ற ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் படபடத்தேன்.

“சுசீலா...!” என்ற அவர் குரல் விழிகள் எல்லாம் அசைவற்றுக் கெஞ்சின போல் இருந்தன.

என்னுடைய அப்போதைய மனநிலைக்கு அவை பின்னும் ஆத்திரமூட்டின.

“போகிறீர்களா, இல்லையா?” என்று எழுந்து நான் வெறி கொண்டவளைப் போன்று அவர் கைகளைப் பிடித்து வெளியேற்றப் போனேன். அவராகவே தலையைக் குனிந்து கொண்டு வெளியே போய்விட்டார். நான் மடாரென்று கதவைச் சாத்திக் கொண்டேன். ‘ஒரு பெண்ணுக்குள்ள தைரியங்கூட இல்லாத பயங்கொள்ளி அவர்! காதலுக்கு மதிப்புக் கொடுப்பவர். பெண்மையைப் போற்றுபவர் என்று நான் மனப்பால் குடித்தது அத்தனையும் கனவுதான். பிறர் தயவில் அடிமையாக உலவும் கோழை அவர்!’ என் நெஞ்சம் துடித்தது. உதடுகள் படபடத்தன. கண்கள் பொங்கு மாங் கடலைப் போலக் கண்ணீரைப் பெருக்கின.
-------------
continued in part 2
This file was last updated on 19 Dec. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)