pm logo

சதாசிவ பண்டாரத்தார் எழுதிய
முதற் குலோத்துங்க சோழன்


kulOttungka cOzan I
by catAciva paNTArattAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

முதற் குலோத்துங்க சோழன்
ஆசிரியர் தி. வை. சதாசிவ பண்டாரத்தார்

Source:
முதற் குலோத்துங்க சோழன்
ஆக்கியோர் : T. V. சதாசிவ பண்டாரத்தார்
Retd. Lecturer, Tamil Research Department, Annamalai University.
சிடைக்குமிடம் : பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை-1
நான்காம் பதிப்பு 1954
உரிமை ஆசிரியர்க்கே
விலை ரூபா 2
சாது அச்சுக்கூடம், இராயப்பேட்டை, சென்னை - 14
-----------------
பொருளடக்கம்
1. சோழரும் சளுக்கியரும்
2. குலோத்துங்கசோழன் முன்னோரும் பிறப்பும்
3. வேங்கிநாட்டில் குலோத்துங்கன் முடிசூடுதல்
4. குலோத்துங்கன் சோழமண்டலத்திற்கு வருதல்
5. "சோழமண்டலத்தில் முடிசூடுதல்
6. "அரசாட்சி
7. "போர்ச்செயல்கள்
8. "சமயநிலை
9. "குணச்சிறப்பு
10. "மனைவியரும் மக்களும்
11. "அரசியல் தலைவர்கள்
12. "அவைக்களப்புலவர்
13. "அரசியல்
14. "முடிவுரை
சேர்க்கை:
I. குலோத்துங்கன் மெய்க்கீர்த்திகள்
II. சோழசளுக்கியர் சம்பந்தம்
III. திருவைகாவூர்க் கல்வெட்டு
-----------
முதற் குலோத்துங்க சோழன்
ஆசிரியர் தி. வை. சதாசிவ பண்டாரத்தார்
--------------

முதற்குலோத்துங்க சோழன்
அதிகாரம் 1- சோழரும் சளுக்கியரும்


நம் தமிழகம்[1] சேரமண்டலம், சோழமண்டலம், பாண்டிமண்டலம் என்னும் மூன்று பெரும் பகுதிகளையுடையதாக முற்காலத்தில் விளங்கிற்று.[2] இவற்றுள், சோழமண்டலம் தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி, தென்னார்க்காடு முதலான ஜில்லாக்கள் அடங்கிய ஒரு நாடாகும். இது குணபுலம்[3] எனவும் வழங்கப்பெறும். இதனைப் பண்டைக் காலமுதல் ஆட்சிபுரிந்துவந்தோர் தமிழ் வேந்தர்களுள் ஒருவராகிய சோழமன்னர் ஆவர். இவர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய தலைநகரங்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்பன. பிற்காலத்துச் சோழமன்னர்களது ஆட்சிக் காலங்களில் தஞ்சாவூரும், கங்கைகொண்ட சோழபுரமும் தலைநகரங்களாகக் கொள்ளப்பட்டன. சோழர்களுக்குரிய அடையாள மாலை ஆத்தியாகும் ; கொடியும் இலச்சினையும் புலியாம்[4]. வடவேந்தரையொப்ப இன்னோர் சூரியகுலத்தினரென்றும் காசிபகோத்திரத்தினரென்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன[5].

பரசிராமர் அரசகுலத்தினரை அழித்தொழிப்பதையே தம் பெருநோன்பாகக் கொண்டு இப்பரத கண்டம் முழுவதும் சுற்றிவந்த நாட்களில், காவிரிப்பூம்பட்டினத்தில் காந்தமன் என்ற சோழமன்னன் ஒருவன் அரசாண்டுவந்தான். அவன் பரசிராமரது வருகையைக் கேட்டுப் பெரிதும் அஞ்சி, பூம்புகார்த் தெய்வமாகிய சம்பாபதிபாற் சென்று, தான் உய்யும்வழி யொன்றுணர்த்துமாறு பணிவுடன் வேண்டினன். அஃது அவனது காதற்கணிகையின் புதல்வனாகிய ககந்தனுக்கு முடிசூட்டிவிட்டு அவனைக் கரந்துறையுமாறு அறிவுறுத்திற்று[6]. அவனும் அங்ஙனமே கரந்துறைதலும் சோணாடு சென்ற பரசிராமர் அரியணையில் வீற்றிருந்து அரசாளுவோன் அரசகுலத்தினன் அல்லன் என்பதையறிந்து கணிகையின் புதல்வனாகிய அவனைக் கொல்லுதல் தம் நோன்பிற்கேற்றதன்று எனக் கருதி அந்நாட்டை விட்டகன்றனர். பரசிராமருக்குப் பயந்து கரந்துறைந்த இக் காந்தமன் என்பவனே காவிரியாற்றைக் கொணர்ந்த பெருந்தகையாளன் என்று பழைய தமிழ் நூலாகிய மணிமேகலையின் பதிகம் கூறுகின்றது[7]. பிற்றைநாளில், அப்பரசிராமர் இராமபிரான் திருமணஞ்செய்துகொண்டு மிதிலை மாநகரிலிருந்து திரும்புங்கால் அவரை எதிர்த்துத் தோல்வியுற்று, அரச குலத்தினரை வேருடன் களைதற்கெண்ணிய தமது எண்ணத்தை முற்றிலும் ஒழித்து, மலைச்சாரல் சென்று தவம்புரிந்தனர் என்பது இராமாயணத்தால் அறியக் கிடக்கின்றது.

இனி, இராமாயண காலத்தில் சோழ மன்னருள் ஒருவன் மலையமலையிலிருந்த அகத்தியமாமுனிவரது ஆணையால் மக்களது இன்னலைப் போக்குமாறு, வானத்தின்கண் அசைந்துகொண்டிருந்த மூன்று மதில்களை அழித்தனன் அக்காரணம்பற்றியே சிலப்பதிகாரமும் புறநானூறும் அவனைத் 'தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன்' என்று புகழ்ந்து கூறுகின்றன.[8]

பாரதப்போர் நிகழ்ந்த நாட்களில் ஒரு சோழ மன்னன் போர்முடியும் வரையில் தருமன் படைக்கு உணவளித்து உதவிபுரிந்தனன் என்று கலிங்கத்துப் பரணியுரைக்கின்றது.[9]

ஆகவே, இராமாயண பாரத காலங்களிலும் அவற்றிற்கு முந்தியநாட்களிலும் சோழகுலத்தினர் மிகச் சிறப்புற்று விளங்கினர் என்பது இனிதுணரப்படுகின்றது.

கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், மகதநாட்டில் செங்கோல் செலுத்திய அசோகனது ஆணையை யுணர்த்துங் கல்வெட்டுக்களிலும் சோழரைப்பற்றிய குறிப்புக்கள் உள்ளன. கி பி. முதல் நூற்றாண்டில், மேனாட்டினின்றும் தமிழ்நாடுபோந்த யவன ஆசிரியனாகிய தாலமி என்பானது வரலாற்றுக் குறிப்பிலும், மேனாட்டு வரலாற்று ஆசிரியன் ஒருவனால், அப்பழைய காலத்தில் எழுதப்பெற்ற 'பெரிப்ளஸ்' என்ற நூலிலும் சோழரைப்பற்றிய உயரிய செய்திகள் காணப்படுகின்றன. எனவே, கிரேக்கரும் உரோமரும் மிக உயர்நிலையிலிருந்த நாட்களில் நம் சோழரும் அன்னாருடன் வாணிபத் தொடர்புடையராய்ப் பெருமையோடு வாழ்ந்துவந்தனர் என்பது பெறப் படுகின்றது.

இவற்றையெல்லாம் ஆராய்ந்து உண்மை காணுமிடத்து, சோழகுலத்தினர் நம்மனோரால் ஆராய்ந்து அளந்து காணமுடியாத அத்துணைப் பழங்காலமுதல் நம் தமிழ்நாட்டின் கீழ்ப்பகுதியாகிய சோழவளநாட்டில் வீற்றிருந்து, அதனைச் சிறப்புடன் ஆண்டுவந்த அரச குலத்தினர் ஆவர் என்பது நன்கு விளங்குதல் காண்க.

இனிச் சளுக்கியர் என்பார், வடநாட்டினின்றும் போந்து, பம்பாய் மாகாணத்தின் தென்பகுதியிலுள்ள இரட்டபாடி நாட்டை, வாதாபிநகரம்,[10] மானியகேடம், கலியாணபுரம் முதலான நகரங்களில் வீற்றிருந்து அரசு புரிந்துவந்த ஓர் அரசகுலத்தினர் ஆவர். சீன தேசத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த வழிப்போக்கனாகிய யுவான் சுவாங் என்ற ஆசிரியன், சளுக்கியரது போர்வன்மையைத் தன் நூலுட் புகழ்ந்திருத்தலோடு வடவேந்தனாகிய ஹர்ஷவர்த்தனனைத் தென்னாட்டிற்குச் செல்லாதவாறு போர்புரிந்து விலக்கிய இரண்டாம் புலிகேசி என்பவன் இச்சளுக்கிய குலத்தில் தோன்றிய மன்னன் என்று பாராட்டிக் கூறியுள்ளான்.[11]

இரண்டாம் புலிகேசியின் தம்பியாகிய குப்ஜ விஷ்ணு வர்த்தனன் என்பான் கிருஷ்ணை, கோதாவரி என்ற இருபேராறுகளுக்கும் இடையிலுள்ள வேங்கி நாட்டின் மேற் படையெடுத்துச் சென்று அதனைக் கைப்பற்றிக் கீழைச்சளுக்கிய நாடொன்றை அமைத்தான்.[12] இது நிகழ்ந்தது முதல், சளுக்கியர் கீழைச்சளுக்கியர் மேலைச் சளுக்கியர் என்ற இரு கிளையினராயினர்.

இன்னோர் சந்திரகுலத்தினர் என்றும் மானவிய கோத்திரத்தார் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவர்களுக்குரிய கொடியும் இலச்சினையும் பன்றி என்பர்.

பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளிற் சோழருக்கும், மேலைச் சளுக்கியருக்கும் அடிக்கடி பெரும் போர்கள் நடைபெற்றன ; ஆனால், கீழைச் சளுக்கியர் சோழ மன்னரது பெண்களை மணஞ்செய்து கொண்டு அன்னோர்க்கு நெருங்கிய உறவினராய் நட்புற்று வாழ்ந்து வந்தனர். இவ்வுண்மையை அடுத்த அதிகாரத்தில் நன்கு விளக்குவாம்.

-------------
[1]. ‘இமிழ்கடல் வரைப்பில் தமிழகம்’ –
சிலப்பதிகாரம் - அரங்கேற்றுகாதை 37.
[2]. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும்
யாப்பின் வழிய தென்மனார் புலவர்’
தொல்–பொருள்–செய்யுளியல்–சூத்-79.
[3]. ‘தண்பணை தழீஇய தளரா விருக்கைக்
குணபுலங் காவலர் மருமான்’–
சிறுபாணாற்றுப்படை–78, 79.
[4]. 'நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே, நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே'- புறநானூறு-45'புலிபொறித்துப் புறம்போக்கி' -பட்டினப்பாலை-135
[5]. கலிங்கத்துப்பரணி - தாழிசைகள் 173, 174. விக்கிரமசோழனுலா - கண்ணிகள் 1, 2, 3. இராசராசசோழனுலா - ௸ 1, 2, 3.
[6]. மணிமேகலை --சிறைசெய்காதை 25- 100
[7]. செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்குங் கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமர முனிவன் அகத்தியன் றனாது கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை '-- மணிமேகலை - பதிகம் 9--12.
[8]. புறநானூறு 39. 'உயர்விசும்பில் தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை' -- சிலப்பதிகாரம்-வாழ்த்துக்காதை.
[9]. கலிங்கத்துப்பரணி 181.
[10]. The Mcdern Badami in the Bijapur District.
[11].Mysore Gazetteer Volume II Part II pages 708, 709 & 710
[12]. Mysore Gazetteer Volume II, Part II pages 707 & 708.
-----------

அதிகாரம் 2 : குலோத்துங்க சோழன் முன்னோரும் பிறப்பும்

கி. பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னர், தென்மதுரையில் நடைபெற்ற தமிழ்ச் சங்கத் திறுதிக் காலத்தில் நிலவிய சில சோழமன்னருடைய பெயர்கள் அச்சங்கத்துச் சான்றோர் இயற்றியுள்ள பாடல்களாலும் நூல்களாலும் தெரிகின்றன. அவர்களுள் சோழன் கரிகாலன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி, செங்கணான் முதலானோர் சிறந்தவராவர்.

இன்னோருள் சோழன் கரிகாலன் என்பான் காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறந்த துறைமுகப்பட்டினமாகக் கட்டி, அதனை வாணிபத்திற்கேற்ற வளநகராக்கியவன் ; காவிரியாற்றின் இருமருங்கும் கரையெடுப்பித்துச் சோணாட்டை வளப்படுத்திச் 'சோறுடைத்து' என்று அறிஞர்கள் புகழுமாறு செய்தவன்.[1] இது பற்றியே இவ் வேந்தர் பெருமானைக் கரிகாற்பெருவளத்தான் என்றும் திருமாவளவன் என்றும் மக்கள் பாராட்டிக் கூறுவாராயினர். பத்துப்பாட்டிலுள்ள பொருநராற்றுப் படையும், பட்டினப்பாலையும் இம்மன்னன்மீது பாடப்பெற்ற நூல்களேயாம். இவற்றுள் பட்டினப்பாலையை இயற்றிய ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு இவ்வேந்தன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் அளித்து அந்நூலைக்கொண்டான் என்று கலிங்கத்துப்பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டார் கூறியுள்ளார்.[2] இதனால் இவன் நல்லிசைப்புலவர்பால் கொண்டிருந்த பெருமதிப்பு நன்கு விளங்கும். இம்மன்னன் இமயமுதல் குமரிவரையில் தன் வெற்றியையும் புகழையும் பரப்பிய பெருவீரன் என்பது ஈண்டு அறியத்தக்க தொன்றாம்.

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தமிழ்ப் புலமையிற் சிறந்தவன்; புலவர்க்கும், இரவலர்க்கும் வேண்டியாங்களித்த பெருங்கொடை வள்ளல்; தமிழகத்தில் தன் வெற்றியைப் பரப்பி வீரனாய் விளங்கியவன்.

பெருநற்கிள்ளி என்பான் உறையூரிலிருந்து சோழ வளநாட்டை ஆட்சிபுரிந்து கொண்டிருக்கும் நாளில், புகார் நகரத்து வணிகனாகிய கோவலனது மனைவி கண்ணகிக்கு உறையூரின்கண் பத்தினிக்கோட்டம் எடுப்பித்து விழா நிகழ்த்தினன்.

பொய்கையார் என்ற நல்லிசைப் புலவரால் பாடப் பெற்ற களவழி நாற்பது[3] என்னும் நூல்கொண்டவன் சோழன் செங்கணான் ஆவன்.[4] இங்ஙனம் பெருமையுடன் வாழ்ந்துவந்த சோழரது நிலையும் கி. பி. நான்காம் நூற்றாண்டில் தளர்வுற்றது. அக்காலத்தில் போர் விருப்பம் வாய்ந்த பல்லவர் தமிழ்நாட்டில் புகுந்து தொண்டை மண்டலத்தையும் சோழமண்டலத்தையும் கைப்பற்றிக் காஞ்சிமா நகரையும் மாமல்லபுரத்தையும் தலைநகரங்களாகக்கொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினர். இவர்களது ஆளுகையும் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதிவரையில் சோழ மண்டலத்தில் நிலைபெற்றிருந்தது.

பல்லவரது ஆட்சிக்காலத்தில் சோழரின் வழியினர் குறுநில மன்னராகி அன்னோர்க்குத் திறை செலுத்தி வந்தனர். கி. பி. 819-ல் விசயாலயன் என்ற சோழ மன்னன் ஒருவன் பல்லவர்களோடு போர்புரிந்த சோழ மண்டலத்தின் ஒரு பகுதியைப்பற்றிக்கொண்டு தஞ்சாவூரில் வீற்றிருந்து முடிமன்னனாக அதனை அரசாளத் தொடங்கினான்.[5] இவனையே தொண்ணூற்றாறு புண்கள் மார்பிலே கொண்ட வீரன் என்று தமிழ் நூல்கள் புகழ்ந்து கூறுகின்றன என்பர். இவன் காலத்தேதான் தஞ்சாவூர் சோழமண்டலத்திற்குத் தலைமை நகரமாயிற்று. இவனது புதல்வன் முதலாம் ஆதித்த சோழன் எனப்படுவான். இவன் தன் நண்பனாகிய பல்லவ மன்னனைத் துணையாகக்கொண்டு பாண்டியனோடு பலவிடங்களில் பெரும்போர்கள் புரிந்தனன். இறுதியில் கி. பி. 880-ஆம் ஆண்டிற் கணித்தாகத் திருப்புறம்பயத்தில் நிகழ்ந்தபோரில் பாண்டியன் முற்றிலும் தோல்வியுறவே ஆதித்தன் வெற்றியெய்தினன். இப்போரின் பயனாகச் சோழமண்டலம் முழு வதும் ஆதித்தனுக்கு உரித்தாயிற்று. பிறகு தொண்டை மண்டலமும் அவனது ஆட்சிக்குள்ளாயிற்று. பல்லவரும் குறுநிலமன்னராய்ச் சோழமன்னர்கட்குத் திறை செலுத்தும் நிலையை அடைந்தனர். ஆதித்தனும் 27 ஆண்டுகள் அரசாண்டு கி. பி. 907-ல் இறந்தான்.

இவ்வாதித்தனது புதல்வன் முதலாம் பராந்தக சோழன் என்பான். இவன் காலத்தில் சோழரது ஆட்சி உயர்நிலையை யடைந்தது. இவன் பாண்டிய நாட்டையும் ஈழநாட்டையும் வென்று தன்னடிப்படுத்தியவன்; இவனை 'மதுரையும் ஈழமுங்கொண்ட கோப்பரகேசரிவர்மன்' என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.[6] இவன் தில்லையம்பலத்தில் பொன்வேய்ந்து அதனை உண்மையில் பொன்னம்பலமாக்கிய செய்தியொன்றே இவனது அளப்பரிய சிவபத்தியை நன்கு விளக்குகின்றது. [7]இவன் கி. பி. 907-முதல் கி. பி. 953-வரை அரசாண்டனன்..

இவ்வேந்தனுக்குப் பின்னர் இவனது புதல்வராகிய கண்டராதித்தசோழர் கி. பி. 957-வரை ஆட்சிபுரிந்தனர். இவரது ஆளுகையில் குறிக்கத்தக்க நிகழ்ச்சிகள் இல்லையாயினும் இவரது சிவபத்தியின் மாண்பும் செந்தமிழ்ப் புலமையும் பெரிதும் போற்றற்குரியனவாம். சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் ஒன்றாகிய ஒன்பதாந் திருமுறையில் தில்லைச் சிற்றம்பலத்தெம்பெருமான்மீது இவர் பாடியருளிய திருப்பதிகம் ஒன்றுளது. எனவே, ஒன்பதாந் திருமுறையினை யருளிச் செய்த நாயன்மார் ஒன்பதின்மருள் இவ்வரசர் பெருமானும் ஒருவர் ஆவர்.[8] கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள திருமழபாடி என்னுந் தலத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத்திலுள்ள கண்டராதித்தச் சதுர்வேதி மங்கலம் என்ற நகரம் இவர் அமைத்ததே யாகும். இவரது மனைவியாராகிய செம்பியன்மாதேவியாரது சிவபத்தியும் அளவிட்டுரைக்கும் தரத்ததன்று. இவ்வம்மையார் திருப்பணி புரிந்து நிபந்தங்கள் அமைத்துள்ள சிவன் கோயில்கள் நம் தமிழகத்தில் பல உள்ளன.[9] கண்டராதித்த சோழரது படிமம். இவரது மனைவியாரால் கட்டுவிக்கப்பெற்ற கோனேரி ராசபுரம் சிவன்கோயிலில் இன்றும் உளது.

இவ்வரசருக்குப் பின்னர் இவரது தம்பியாகிய அரிஞ்சயன் என்பான் சில மாதங்கள் ஆண்டனன். பிறகு இவனது புதல்வனாகிய இரண்டாம் பராந்தகன் கி. பி. 957-முதல் கி. பி. 970-வரை அரசு செலுத்தினான். இவனைச் சுந்தரசோழன் என்றும் வழங்குவர். அன்றியும், இவனைப் 'பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள்' என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. இவனது மனைவி வானவன் மாதேவி என்பாள்.[10]இவ்வரசனுடைய படிமமும் இவன் பட்டத்தரசி வானவன் மாதேவி படிமமும் தஞ்சாவூரிலுள்ள இராசராசேச்சுரத்தில் இவனது மகளாகிய குந்தவையால் எழுந்தருளுவிக்கப்பெற்றுப் பூசனைக்கு நிபந்தங்களும் விடப்பட்டுள்ளன.[11] இவ்வேந்தனது ஆட்சிக்காலத்திறுதியில் இவன் முதல் மகன் ஆதித்த கரிகாலன் இளவரசுப்பட்டங் கட்டப்பெற்றான். இவன் பெருவீரன்; பாண்டியனைப் போரில் வென்றமை பற்றி 'வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன்' எனப் பாராட்டப்பெற்றனன். சில ஆண்டுகளுக்குள் இவன் பகைவரது சூழ்ச்சியாற் கொல்லப்பட்டனன்.

பின்னர், கண்டராதித்தரது திருமகனாகிய உத்தம சோழன் கி. பி. 970-ல் பட்டத்திற்கு வந்தான். இவனுக்கு மதுராந்தகன் என்ற பெயரும் உண்டு. கி.பி. 985-ல் உத்தம சோழன் இறக்கவே, இரண்டாம் பராந்தகசோழனது இரண்டாவது மகனாகிய முதலாம் இராசராசசோழன் அரியணை ஏறினான்.

சோழமன்னருள் பல்வகையானும் பெருமையுற்றுப் பெருவீரனாய் விளங்கியவன் இவ்வேந்தனே என்று கூறுவது சிறிதும் புனைந்துரையாகாது. இவனது ஆளுகையில் சோழமண்டலம் மிக உயரிய நிலைமை! எய்திற்று. திருநாரையூரில் வாழ்ந்த ஆதிசைவராகிய நம்பியாண்டார் நம்பி என்னும் பெரியாரைக் கொண்டு சைவ சமய குரவர்களது திருப்பதிகங்களைத் திருமுறைளாகத் தொகுப்பித்தவன் இம்மன்னனே யென்பர். இவனுக்கு அக்காலத்தில் இட்டு வழங்கிய சிவபாதசேகரன் என்ற பெயரொன்றே இவன் சைவ சமயத்தில் எத்துணை ஈடுபாடுடையவனா யிருந்தனன் என்பதை நன்கு விளக்குகின்றது. ஆயினும் இவன் பிறமதத்தினரை என்றும் துன்புறுத்தியவனல்லன்; அன்னோருக்கு மிக்க ஆதரவுகாட்டி யொழுகிவந்தனன் என்பதற்கு எத்துணையோ ஆதாரங்கள் உள.

சோழமன்னர்களது பெருமைக்கும், புகழுக்கும் அக் காலத்திய சிற்ப நுட்பத்திற்கும் ஓர் அறிகுறியாய் இப்போது தஞ்சைமாநகரின் கண் விளங்குகின்ற 'இராசராசேச்சுரம்' என்ற பெரிய கோயிலை எடுப்பித்தவன் இம் மன்னர்பெருமானே யாவன் என்பது ஈண்டு அறியத்தக்கது. இவ்வேந்தன், வேங்கி, கங்கபாடி, நுளம்பபாடி, குடமலைநாடு, கொல்லம், கலிங்கம், ஈழம், இரட்டபாடி முதலான நாடுகளை வென்று தன்னடிப்படுத்திப் புகழெய்தியவன். இவற்றுள் வேங்கி என்பது கிருஷ்ணை கோதாவரி என்ற இருபேராறுகளுக்கு மிடையில் கீழ் கடலைச் சார்ந்துள்ளதொரு நாடு என்பதை முன்னரே கூறியுள்ளோம். இது கீழைச்சளுக்கியரது ஆட்சிக்குட்பட்டது. கி. பி. 972- முதல் 989-வரை இஃது உள் நாட்டுக் கலகங்களால் அல்லலுற்றிருந்தது. முதலாம் இராசராசசோழன் அச்சமயமே அந்நாட்டைக் கைப்பற்றுதற்குத் தக்கதெனக் கருதிப் பெரும்படையுடன் அவன் மகனாகிய முதலாம் இராசேந்திரசோழனை அவ்வேங்கிநாட்டிற்கு அனுப்பினான். அவன் அந்நாட்டை வென்றதோடு. அமையாமல் கீழைச்சளுக்கிய மன்னனாகிய விமலாதித்தனையும் சிறைபிடித்துக்கொண்டு தஞ்சைக்குத் திரும்பினான். விமலாதித்தனும் தஞ்சைமா நகரில் பல ஆண்டுகள் தங்கியிருந்தான்.

பிறகு, முதலாம் இராசராசசோழன் தன் மகள் குந்தவையை அவனுக்கு மணஞ்செய்து கொடுத்ததோடு வேங்கி நாட்டை யாட்சிபுரியும் உரிமையும் அளித்து அந்நாட்டிற்கு அவனைத் திரும்ப அனுப்பினான்.[12] விமலாதித்தனும் அந்நாட்டைக் கி. பி. 1015-முதல் 1022-வரை அரசாண்டான். அவனுக்கு இராசராச நரேந்திரன், விசயாதித்தன் என்ற இருமக்கள் இருந்தனர். அவர்களுள் இராசராசரேந்திரன் என்பவனே விமலாதித்தன் இறந்த பின்னர்க் கி. பி. 1022-ல் முடிசூட்டப் பெற்றான். முதலாம் இராசராசசோழனது மகனாகிய முதலாம். இராசேந்திரசோழன் தன் மகள் அம்மங்கைதேவியைத் தன் உடன் பிறந்தாளது மகனும் வேங்கிநாட்டு வேந்தனுமாகிய இராசராச நரேந்திரனுக்கு மணம்புரிவித்தான். மணமக்கள் இருவரும் வேங்கி நாட்டில் வாழ்ந்துவந்தனர்.

அந்நாளில் பட்டத்தரசியாகிய அம்மங்கைதேவி கருப்ப முற்றுத் தன் பிறந்தகமாகிய கங்கைகொண்ட சோழபுரஞ் சென்று அங்குக் கி. பி. 1044-ஆம் ஆண்டில் பூசநாளில் ஒரு தவப்புதல்வனைப் பெற்றாள்.[13] திருமகன் பிறந்த நாளிலே நன்னிமித்தங்கள் காணப்பட்டன. அவற்றைக் கண்ட நகரமாந்தர் எல்லோரும் இறும்பூதுற்று, முன்னாளில் இலங்கையை யழித்துப் பின்னாளில் பாரதப்போர் முடித்த திருமாலே இப்புவியின் கண் மறம் நீங்க அறம் வளருமாறு இந்நாளில் அம்மங்கைதேவியின் ஆலிலை போன்ற திருவயிற்றில் தோன்றியுள்ளார் என்று கூறிப் பெருமகிழ்வுற்றனர். முதலாம் இராசேந்திர சோழனது பட்டத்தரசியும் இவற்றையெல்லாம் கண்டு களிப்பெய்தித் தன் காதற்பேரனைக் கைகளில் ஏந்திப் பாராட்டியபோது சில திங்களுக்குமுன் காலஞ்சென்ற தன் நாயகனுடைய அடையாளங்கள் பல அக்குழந்தையின்பாலிருத்தல்கண்டு 'இவன் எமக்கு அருமகனாகி எங்கள் இரவிகுலத்தைத் தளராது தாங்குவானாக' என்றுரைத்து அம்மகவிற்கு 'இராசேந்திர சோழன்'[14] என்று பெயரிட்டாள்.[15] இவ்வரசிளங்குமாரனும் அங்கேயே வளர்ந்து வந்தான். இராசேந்திரனும், இளமையில் கல்வி கற்றுப் பல கலைகளிலும் தேர்ச்சியுற்று அறிஞர் யாவரும் 'கற்றுத் துறைபோய நற்றவக் குரிசில்' என்று புகழ்ந்து பேசுமாறு கல்வியில் உயர்நிலையையடைந்தான். பிறகு இவ்வரசிளங் குமரன், உலகங் காக்கும் கடமை பூண்ட தன் குலத்திற்குரிய படைக்கலப் பயிற்சியும் பெற்று, யானையேற்றம் குதிரை யேற்றங்களும் பயின்று, தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தனன். இவனது அம்மான் மார்களாகிய இராசாதிராசசோழன், இரண்டாம் ராசேந்திர சோழன், வீரராசேந்திரசோழன் முதலானோர் இவனிடத்து மிக்க அன்புடையவர்களாக நடந்துவந்தனர். இவனது ஆற்றலையுணர்ந்த சான்றோர் தந்தையின் சந்திர குலத்தையும் தாயின் சூரிய குலத்தையும் ஒருங்கே பெருமையுறச் செய்து, அவற்றைப் புகழுக்கு நிலைக்களமாக்க வந்த உபயகுலோத்தமன் என்று இவனைப் பெரிதும் பாராட்டிப் பேசுவாராயினர்.

[1]. கலிங்கத்துபரணி தா. 184
[2]. 'தத்து நீர்வராற் குருமி வென்றதுந் தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன் பத்தொ டாறுநூ றாயி ரம் பெறப் பண்டு பட்டினப் பாலை கொண்டதும். - க. பரணி - தா. 185.
[3]. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
[4]. கலிங்கத்துப்பரணி - தா. 182.
[5]. The Tiruvalangadu Plates of Rajentlra Chola I Soutll Indian Inscriptions Vol. III No. 205; Kanyakumari Inscription of Vira Rajendra Deva. Epigraphia Indica Vol. XVIII No. 4.
[6]. Ins, 331 of 1927.
[7]. 'கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றங்
காதலாற் பொன்வேய்ந்த காவலனும்' -- விக்கிரமசோழனுலா - கண்ணி 16.
[8]. ஒன்பதாம் திருமுறையின் ஆசிரியர்களுள் ஒருவராகிய இவ்வரசர் பெருமானது வரலாற்றைச் 'செந்தமிழில்' யான் எழுதியுள்ள 'முதற் கண்டராதித்த சோழதேவர்' என்ற கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
[9]. திருவாரூர் அரனெறி, செம்பியன் மாதேவி (நாகபட்டினம் தாலூகா), தென்குரங்காடுதுறை (S. I. I. Vol. III. No.144.) திருநல்லம் (கோனேரிராஜபுரம் S. I. I. Vol. III. No.146, 147 and 151); திருமணஞ்சேரி; விருத்தாசலம்.
[10]. சுந்தர சோழனது பட்டத்தரசியாகிய வானவன் மாதேவி தன் நாயகன் இறந்தபோது உடன்கட்டை ஏறினாள் என்றும் அதுபோது அவ்வம்மைக்கு ஓர் இளங்குழந்தை யிருந்ததென்றும் திருக்கோவலூரிலுள்ள முதல் இராச ராசன் கல்வெட்டு உணர்த்துகின்றது. (செந்தமிழ் - தொகுதி 4 பக். 232.)
[11]. South Indian Inscrptions Vol. II No. 6.
[12]. Mysore Gazetteer Vol. II page 947.
[13]. S. I. I. Vol. VI No. 167.
[14]. இந்த இராசேந்திர சோழனே நம் வரலாற்றுத் தலைவனாகிய முதலாம் குலோத்துங்க சோழன். இப்பெயர் இவனுக்கு அபிடேகப் பெயராக வழங்கத்தொடங்கிற்று.
[15]. க, பரணி - தா. 223, 224, 225.
----------

அதிகாரம் 3 : வேங்கி நாட்டில் குலோத்துங்கன் முடிசூடுதல்

நம் இராசேந்திரன் பல கலைகளிலும் வல்லவனாய்ப் பல்லோரும் புகழுமாறு கங்கைகொண்ட சோழபுரத்தில் வாழ்ந்துவரும் நாட்களில், வேங்கி நாட்டில் ஆட்சி புரிந்துகொண்டிருந்த தன் தந்தையாகிய இராசராச நரேந்திரன் நோயுற்று வருந்திக்கொண்டிருக்கின்றனன் என்று ஒரு திருமுகம் வரப்பெற்றனன். இதனைக் கண்டதும் அவன் பெருங்கவலையுற்றுத் தன் மாமன்மாரிடம் விடை பெற்றுக்கொண்டு விரைவில் வேங்கி நாட்டையடைந்தான்; அங்குப் பிணியுற்றுக்கிடந்த தன் தந்தையின் நிலைமையைக்கண்டு பெரிதும் மனமுடைந்து, அவனை விட்டகலாது அணுக்கத்தொண் டனாயமர்ந்து, வேண்டியன புரிந்துவந்தான். அந்நாளில் சளுக்கிய இராசராசனும் தனக்குக் கடவுள் அமைத்த வாழ்நாள் முடிவுற்றமையின் கி. பி. 1062-ஆம் ஆண்டில் வானுலகஞ் சென்றனன்.[1] தந்தையின் பெரும் பிரிவிற்காற்றாது வருந்திய இராசேந்திரனும் மகன் தந்தைக்கு ஆற்றவேண்டிய தீக்கடன் நீர்க்கடன் முதலியவற்றை முடித்து, அம்மான்மாரும் ஆன்றோரும் ஆறுதல் கூற, ஒருவாறு அத் துன்பத்தினின்று நீங்கினான். பின்னர், அமைச்சரும் சுற்றத்தினரும் அவனுக்கு முடி சூட்டுவிழா நடத்தற்குத் தக்க ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர்.

இஃது இங்ஙனமாக, கீழைச் சளுக்கியரது தாயத்தினரான மேலைச்சளுக்கிய மன்னர்களுள் ஆறாம் விக்கிரமாதித்தன் என்ற ஓர் அரசன் இருந்தான். அவன் பெரிய போர்வீரன். அவனுக்கும் சோழருக்கும் அடிக்கடி பெரும்போர்கள் நிகழ்ந்துவந்தன. சோழர்கள் தெற்கேயுள்ள பல மன்னர்களை வென்று தம்மடிப்படுத்தித் தாம் முடிவேந்தர்களாய் மேன்மையுற்று விளங்கினர். அங்ஙனமே மேலைச்சளுக்கியரும் தக்கணத்தின் வடபாகத்தில் பெருமையுடன் நிலவினர். இதனால் பேராண்மையும் பெருவீரமும் படைத்த இவ்விரு அரசகுலத்தினரும் ஒருவரை யொருவர் வென்று கீழ்ப்படுத்தவேண்டுமென்ற எண்ணமும் முயற்சியும் உடையவராகவே இருந்தனர். இதற்கேற்ப, முதலாம் இராசராசசோழன் காலமுதல் சோழர்கள் கீழைச்சளுக்கிய மன்னர்களுக்குத் தம் பெண்களை மணஞ்செய்து கொடுத்து அன்னோரைத் தமக்கு நெருங்கிய உறவினராகச் செய்துகொண்டதோடு தம் ஆட்சிக்குட்பட்டிருக்குமாறும் செய்துவந்தனர். இதனால் கீழைச்சளுக்கியரது உதவி மேலைச்சளுக்கியருக்குக் கிடைக்காமற் போயிற்று. அன்றியும், சோழர்களது வலிமையும் பெருமையும் வளர்ச்சியுறலாயின. இதனையுணர்ந்த மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிரமாதித்தன் தன் தாயத்தினரான கீழைச்சளுக்கியரைச் சோழர்களினின்று பிரித்துத் தன்பால் சேர்த்துக்கொள்ளவேண்டுமென்ற கருத்துடையவனாய்க் காலங்கருதிக் கொண்டிருந்தான். அதற்கேற்ப அவன் வேங்கியின் மன்னனாகிய இராசராசநரேந்திரன் இறந்ததை யறிந்து, அதுவே தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கோடற்குத் தக்க காலம் என்று கருதித் தன் தண்ட நாயகனான சாமுண்டராயன் தலைமையில் ஒரு படையை வேங்கி நாட்டிற்கனுப்பினான்.[2]

இச்செய்தியை யறிந்த வீரராசேந்திரசோழன் தன் முன்னோர்கள் காலமுதல் நெருங்கிய உறவினால் பிணிக்கப்பட்டிருந்த வேங்கிவேந்தரையும், தங்கள் ஆட்சிக்குட்பட்டிருந்த வேங்கி நாட்டையும் இழப்பது தன் ஆண்மைக்கும் வீரத்திற்கும் இழிவையே பயக்குமென்று துணிந்து ஒரு பெரும்படையோடு அந்நாட்டை நோக்கிச் சென்றான். அங்குக் கடும்போர் நடைபெற்றது. அப்போரில் மேலைச்சளுக்கியரது தண்டநாயகனான சாமுண்டராயன் என்பான் கொல்லப்பட்டான். அவனது படைகள் எல்லாம் சிதறுண்டு நாற்றிசையிலும் ஓடியுய்ந்தன. வெற்றியெய்திய வீரராசேந்திரசோழன் தன் மருமகனாகிய இராசேந்திரனுக்கு வேங்கிநாட்டில் ஒரு நன்னாளில் முடி சூட்டி, அந்நாட்டிலுள்ள மக்கள் எல்லோரையும் மகிழ்வுறச்செய்தான். அக் கீழைச் சளுக்கிய நாட்டின் ஒழுகலாற்றின்படி, நமது இராசேந்திரன் ஏழாம் விஷ்ணுவர்த்தனன்[3] என்னும் பெயரை முடிசூட்டுநாளில் எய்தித் 'தந்தையினும் சதமடங்கு தனயன்' என்ற ஆன்றோர் உரைக்கு இலக்காக அரசு செலுத்திவந்தான். அக்காலங்களில் அவனுக்கு உசாத்துணையாயிருந்து அவனது பேரன்பிற்குரியவனாய் ஒழுகிவந்தவன் விசயாதித்தன் என்ற அவனது சிறிய தந்தையே யென்பர். அவனது ஆட்சிக்காலத்தில் வேங்கிநாடு மிகச் செழிப்புற்றிருந்தது. குடிகளும் இன்புற்று வாழ்ந்துவந்தனர்.

[1]. S. I.T.Vol. I. No.9.
[2]. சளுக்கிய விக்கிரமாதித்தன் சரித்திரம் பக் - 26.
[3]. S. I. I. Vol. VI. No. 201.
-------------

அதிகாரம் 4: குலோத்துங்கன் சோழமண்டலத்திற்கு வருதல்

சோழநாட்டில் முதலாம் இராசராசசோழன் கி. பி. 1014-ல் விண்ணுலகெய்திய பின்னர் அவனது புதல்வனாகிய முதலாம் இராசேந்திரசோழன் அரியணை ஏறினான். இவனைக் கங்கைகொண்டசோழனென்றும் வழங்குவர். இவனது ஆளுகையில் சோழமண்டலம் ஈடும் எடுப்புமற்ற நிலையை யடைந்தது. மற்றைச் சோழமன்னர்களது ஆட்சிக்காலங்களில் இச்சோழமண்டல இத்தகையதொரு சிறப்பும் பெருமையும் எய்தவில்லையென்றே கூறலாம். இவ்வேந்தன் மண்ணைக்கடக்கம், ஈழம், இரட்டபாடி, கோசலநாடு, உத்தரலாடம், தக்கணலாடம், வங்காளம், கடாரம், பப்பாளம், இலாமுரி தேசம் முதலான நாடுகளையும், கங்கையாற்றைச் சார்ந்த சில பகுதிகளையும் வென்று பெரும் புகழுடன் விளங்கினான். இவனைப் 'பூர்வதேசமுங் கங்கையுங் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரிவர்மன்' என்று கல்வெட்டுக்கள் கூறும். இவன் வடநாட்டு வேந்தர்களை வென்று கங்கைநீர் நிரம்பிய குடங்களை அவர்களுடைய தலைகளில் ஏற்றிச் சோழமண்டலத்திற்குக் கொண்டுவரச்செய்து, திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் பெரியதோர் ஏரி வெட்டு வித்து[1] அக்கங்கை நீரை அதில் ஊற்றி அதற்குச் 'சோழ கங்கம்' எனப் பெயரிட்டான். இந்த ஏரியின் பக்கத்துள்ளோர் இதனைப் பொன்னேரி என்று இப்போது வழங்குகின்றனர். இதனருகில் இவ்வேந்தன் தான் வட நாட்டில் அடைந்த வெற்றிக்கு அடையாளமாக ஒரு நகர் அமைத்து அதற்குக் கங்கைகொண்டசோழபுரம் என்று பெயரிட்டனன். இவன்காலமுதல் இப் புதியநகரமே சோழர்களுக்குத் தலைநகரமாயிற்று. இங்கு இம்மன்னனால் எடுப்பிக்கப்பெற்ற கங்கைகொண்ட சோழேச்சுரம் என்ற சிவன் கோயில் ஒன்றுளது. இஃது ஒன்பதாம் திருமுறையாசிரியருள் ஒருவராகிய கருவூர்த்தேவரால் பாடப்பெற்றது. பழையாறை என்று தற்காலத்து வழங்கும் முடிகொண்டசோழபுரத்தும் [2] இவ்வேந்தனுக்குப் பெரியதோர் அரண்மனை இருந்தது. முடிகொண்டான் என்ற பெயருடன் தஞ்சாவூர் ஜில்லாவில் இப்போதுள்ள முடிகொண்டசோழப் பேராற்றை வெட்டுவித்தவனும் இவ்வரசனே யாவன். இவ்வேந்தன் கி. பி. 10-14-ஆம் ஆண்டில் இறந்தான்.

பிறகு இவனுடைய மக்களுள் முதல்வனாகிய முதலாம் இராசாதிராசசோழன் பட்டத்திற்கு வந்தான். இவன் தன் தந்தையைப் போன்ற பெருவீரன். இவன் மேலைச் சளுக்கியரோடு அடிக்கடி போர்புரிந்து இறுதியில் சளுக்கியமன்னனான ஆகவமல்லனோடு புரிந்த கொப்பத்துப்போரில் கி. பி. 1054-ல் உயிர் துறந்தான். இவனைக் 'கலியாணபுரமும் கொல்லாபுரமும் கொண்டருளி ஆனை மேல் துஞ்சியருளிய பெருமாள் விசயராசேந்திரதேவன்' என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. பின்னர், இவனது தம்பியாகிய இரண்டாம் ராசேந்திரசோழன் பொருகளத்தில் முடிகவித்து, அப்போரை நடாத்தி வெற்றி பெற்றான். இவன் தன் தந்தையையும் தமையனையும் போலவே சிறப்புடன் அரசாண்டுவந்தான். இவனும் மேலைச்சளுக்கியரோடு தொடர்ந்து போர்செய்துவந்தான். இவன் சளுக்கியரோடு நிகழ்த்திய போரொன்றில் உயிரிழந்தனன் போலும்.

பின்னர், இவனது இளவலாகிய மும்முடிச்சோழன் என்பான் இராசமகேந்திரன் என்ற பெயருடன் பட்டம் பெற்று அரசாளத் தொடங்கினான். இவன் சோழ மண்டலத்தின் ஆட்சியை அடைவதற்குமுன் தன் தந்தையாகிய கங்கைகொண்டசோழனது ஆணையின்படி சேரமண்டலத்திற்கும் பாண்டிமண்டலத்திற்கும் அரசப் பிரதிநிதியாயிருந்து சோழபாண்டியன் என்ற பட்டத்துடன் அவ்விரண்டையும் ஒருங்கே ஆண்டவன். இவன் தன் காலத்தில் சோழமண்டலத்திலுள்ள மக்கள் எல்லோரும் அமைதியாக வாழ்ந்துவருமாறு நன்னெறி வழாது செங்கோல் செலுத்தினான். இத்தகைய பெருங்குண வேந்தனும் சில ஆண்டுகளில் துஞ்சினான்.

பிறகு, இவனது தம்பியாகிய வீரராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில் கி.பி. 1063-ஆம் ஆண்டில் அரசு கட்டிலேறினான். இவ் வேந்தன் பேராற்றலும் பெருவீரமும் படைத்தவன். இவன் முடிமன்னர்களான தன் தமையன்மார்களுக்கும், அன்னோரது மக்களுக்கும் மேலைச்சளுக்கியர்களால் நேர்ந்த ஆற்றொணா இன்னல்களை மனத்திற்கொண்டு, பெருஞ் செற்றமுடையவனாய் அவர்களைப் பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்ற எண்ணத்தோடு பெரும்படையைத் திரட்டிக்கொண்டு அவர்களது இரட்டபாடி நாட்டின் மேற் சென்றான். இவன், இங்ஙனம் ஐந்து முறை படையெடுத்துச்சென்று மேலைச்சளுக்கியரது நாட்டைப் பல விடங்களிற் கொள்ளையிட்டும் சிலவிடங்களில் அழித்தும் பாழ்படுத்தினான். இம்மானக்கேட்டைப் பொறாத மேலைச் சளுக்கியர் தம் படையைத் திரட்டிக்கொண்டு இவனோடு பலவிடங்களில் போர்புரிந்தனர். இறுதியில் கிருஷ்ணையும் துங்கபத்திரையும் கூடும் இடமாகிய கூடல்சங்கமத்தில் கி. பி. 1064-ல் இருப்படைகளும் கைகலந்து பெரும் போர்செய்தன. அப்போரில் மேலைச்சளுக்கிய மன்னர்களாகிய ஆகவமல்லன், விக்கிரமாதித்தன் முதலானோர் தோல்வியுற்றுப் புறங்காட்டி ஓடி ஒளிந்தனர். சளுக்கிய சாமந்தர்களுட் பல்லோர் போர்க்களத்தில் உயிர் துறந்து புகழ் கொண்டனர். வீரராசேந்திரசோழனும் தன்னுடன் பிறந்த முன்னவர் எண்ணம் முடித்து வெற்றித் திருவை மணந்து, தனது தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மகிழ்வுடன் சென்று இனிது செங்கோல் ஓச்சுவானாயினன்.

இங்ஙனம் சோழருக்கும் மேலைச்சளுக்கியருக்கும் நிகழ்ந்துவந்த போர்களில் சோழகுலத்துதித்த முடி வேந்தர் சிலரும் அரசிளங்குமரர் பலரும் இறந்தொழிந்தனர். இறுதியில் எஞ்சியவர் வீரராசேந்திர சோழனும் இவனது மைந்தனான அதிராசேந்திர சோழனுமேயாவர். வீரராசேந்திர சோழனது ஆட்சியில் கி. பி. 1067-ல் இளவரசுப் பட்டங் கட்டப்பெற்ற அவன் புதல்வன் அதிராசேந்திரனுடைய கல்வெட்டுக்களில் வீரராசேந்திரனது ஆட்சியின் எட்டாம் ஆண்டு வரை ஆண்டு குறிப்பிடப்பட்டிருத்தலால் வீரராசேந்திரன் கி. பி. 1070-ஆம் ஆண்டின் முற்பகுதிவரை உயிர் வாழ்ந்திருந்தனன் எனத் தெரிகிறது. பிறகு அவன் மகன் அதிராசேந்திர சோழன் முடிசூட்டப் பெற்றுச் சில திங்கள் அரசுபுரிந்தான். தஞ்சாவூர் சில்லா கூகூரில் காணப்படும் கல்வெட்டொன்று அதிராசேந்திரன் தன் ஆட்சியின் மூன்றாமாண்டில் கொடிய நோய்வாய்ப்பட்டுத் துன்புற்றானென்றும் அவன் நோய் நீங்கி நலம் பெறுதற் பொருட்டுக் கூகூர்க்கோயிலில் இறைவன் திருமுன்னர் நாள் தோறும் இருமுறை தேவாரப் பதிகங்கள் ஓதப்பெற்று வந்தன வென்றும் கூறுகின்றது. இவனது ஆட்சியின் மூன்றாமாண்டு இருநூறாம் நாளுக்குப் பின் இவன் கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்படவில்லை. எனவே நோய்வாய்ப்பட்டிருந்த அதிராசேந்திரன் அந்நாட்களில் உயிர் துறந்தனனாதல் வேண்டும். அதிராசேந்திரனுக்குப் புதல்வன் இல்லாமையாலும் சோழநாட்டில் முடி சூட்டப்பெறுவதற்குரிய வேறு சோழ அரச குமாரனொருவனும் அத்தொல் பெருங்குடியில் இல்லாமையாலும் புகழும் பெருமையும் வாய்ந்த விசயாலய சோழன் காலமுதல் சோழநாட்டில் தொடர்ந்து ஆட்சிபுரிந்து வந்த பண்டைச் சோழமன்னர் மரபு அதிராசேந்திர சோழனோடு முடிவெய்துவதாயிற்று.

இந்நிலையில் கங்கைகொண்ட சோழனது மகள் வயிற்றுப் பேரனும் வீரராசேந்திரசோழனது தங்கையின் மகனும் கீழைச்சளுக்கிய வேந்தனுமாகிய இராசேந்திர னென்பான் வடபுலத்துப் போரில் ஈடுபட்டிருந்தனன். இவன் மத்திய மாகாணத்திலுள்ள வயிராகரம் என்ற ஊரில் எண்ணிறந்த யானைகளைக் கைப்பற்றிக்கொண்டு அவ்வூரையும் எரியூட்டினான்;[3] பின்னர், அம்மாகாணத்திலுள்ள சக்கரக்கோட்டமண்டலத்தை ஆண்டுவந்த தாராவர்ஷன் என்னும் வேந்தனோடு போர்புரிந்து அவனைத் தனக்குத் திறை செலுத்தும்படி செய்தான்.[4] இங்ஙனம் இராசேந்திரன் வடபுலத்தில் பெருவீரத்துடன் போர் செய்துகொண்டிருக்கும் நாட்களில் தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்தில் அதிராசேந்திரசோழன் விண்ணுலகெய்தியதை யறிந்து சோழநாட்டிற்கு விரைந்து வந்தனன்.

[1]. S. I. I. Vol. III. No. 205 ; Kanyakumari Inscription of Virarajendra Deva-Epi. Ind. Vol. XVIII. No. 4.
[2]. Inscription No. 271 of 1927.
[3]. S. I. I. Vol. III. No. 418 ; க. பரணி தா. 239. வயிராகரத்தில் யானைகளும் வைரச்சுரங்கங்களும் முற்காலத்தில் மிகுதியாக இருந்தன என்று 'அயினி அக்பரி' கூறுகின்றது. இது சக்கரக்கோட்டத்திற்கு அண்மையிலுள்ளது. (Epi. Ind. Vol. X. No. 4.)
[4]. S. I. I. Vol. III. No. 68 ; க. பரணி - தா. 241. சக்கரக்கோட்டம் என்பது மத்திய மாகாணத்திலுள்ள வத்ஸ ராச்சியத்தில் உள்ளது. (Baster State) இஃது இது போது இந்திராவதி ஆற்றின் தென்கரையில் இருக்கிறது; சித்திரக் கூடம் (Chitrakut) என்று வழங்கப்படுகின்றது; தற்காலத் தலைநகராகிய ஜகதல்பூருக்கு மேற்கே 25 மைல் தூரத்தில் உள்ளது. (Epi, Ind. Vol. IX. page 178.) இதனைத் தலைநகராகக்கொண்டது சக்கரக் கோட்ட மண்டலம் ஆகும். குருஸ்பால் என்ற விடத்திலுள்ள ஒரு கல்வெட்டு "சக்கரக்கூடாதீஸ்வரனாம்.........தாராவர்ஷநாமோ நரேஸ்வரா" என்று கூறுகின்றது. இதனால், சக்கரக்கோட்ட மண்டலத்தை ஆட்சிபுரிந்தவன் தாராவர்ஷன் என்பது உறுதி எய்துகின்றது. (Do-pages 161 & 179)
-----------

அதிகாரம் 5 : குலோத்துங்கன் சோழமண்டலத்தில் முடிசூடுதல்

அதிராசேந்திரசோழன் இறந்தபிறகு சோழநாடு அரசனின்றி அல்லலுற்றது. குறுநிலமன்னரது கலகம் ஒருபுறமும் உண்ணாட்டுக்குழப்பம் மற்றொருபுறமும் மிக்கெழவே, சோழநாட்டு மக்கள் எல்லோரும் அமைதியான வாழ்வின்றி ஆற்றொணாப் பெருந்துன்பத்துள் ஆழ்ந்தனர். கலிங்கத்துப்பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டார்,

"மறையவர் வேள்வி குன்றி மனுநெறி யனைத்து மாறித்
துறைகளோ ராறு மாறிச் சுருதியு முழக்க மோய்ந்தே

சாதிக ளொன்றோ டொன்று தலைதடு மாறி யாரும்
ஓதிய நெறியி னில்லா தொழுக்கமு மறந்து போயே

ஒருவரை யொருவர் கைமிக் கும்பர் தங் கோயில் சாம்பி
அரிவையர் கற்புச் சோம்பி யரண்களு மழியவாங்கே[1] கலியிருள்பரந்தது"

என்று இக்குழப்பத்தை அந்நூலிற் கூறியுள்ளார். அன்றியும் சோழநாடு அக்காலத்தில் அரசனின்றி அல்லலுற்றிருந்த செய்தியை,


“அருக்க னுதயத் தரசையி லிருக்கும்
கமல மனைய நிலமகள் தன்னை
முந்நீர்க் குளித்த அந்நாள் திருமால்

“ஆதிக் கேழ லாகி யெடுத்தன்ன
யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத்
தன்குடை நிழற்கீ ழின்புற விருத்தி"

எனவும்,

"தென்றிசைத்
தேமரு கமலப் பூமகள் பொதுமையும்
பொன்னி யாடை நன்னிலப் பாவை
தனிமையுந் தவிரவந்து புனிதத்
திருமணி மகுடம் உரிமையிற் சூடி"

எனவும் வரும் முதலாங்குலோத்துங்க சோழன் மெய்க் கீர்த்திகளாலும் உணரலாம்.

சோழநாடு அரசனின்றி நிலைகுலைந்திருந்த செய்தியையறிந்து வடபுலத்திலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு விரைந்துவந்த இராசேந்திரனைக் கண்ட அமைச்சர் படைத்தலைவர் முதலான அரசியலதிகாரிகள் எல்லோரும் இவ்வரசகுமாரன் தக்க சமயத்தில் வந்தமைக்குப் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்கள். சோழர் மரபில் முடி சூடுதற்குரிய அரசகுமாரர் எவருமில்லாமையாலும் கங்கைகொண்ட சோழனுடைய மகள் வயிற்றுப் பேரனாம் உரிமை இவனுக்கிருத்தலாலும் இவ்விராசேந்திரனே சோழநாட்டின் அரசனாக முடிசூடும் உரிமையுடையோன் எனவும் உறுதிசெய்தனர். அங்ஙனமே இவனுக்கு முடிசூட்டுதற்குத்தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன, கி. பி. 1070-ஆம் ஆண்டு சூன் திங்கள் 9-ஆம் நாளில் கங்கைகொண்டசோழபுரத்தில் இவன் முறைப்படி முடிசூட்டப்பெற்றான். அந்நன்னாளில் இவன் குலோத்துங்க சோழன் என்னும் அபிடேகப் பெயரும் எய்தினான். உடனே உண்ணாட்டுக் குழப்பமும் கலகமும் ஒழியவே, சோழமண்டலமெங்கும் அமைதி நிலவிற்று. அப்பொழுது சிற்றரசர்கள் இவன் அடிமிசை அறுகெடுத்திட்டு வணங்கினர் ; அந்தணர் 'அரசர் பெருமான் நீடு வாழ்க' என்று வாழ்த்தினர் ; மனுநெறி எங்கும் தலையெடுக்கவே இவன் புகழ் யாண்டும் பரவுவதாயிற்று. இவனது பேராற்றலையும் இவனால் சோணாடு அடைந்த நலங்களையும்,

நிழலிலடைந்தன திசைகள்
      நெறியிலடைந்தன மறைகள்
கழலிலடைந்தனர் உதியர்
      கடலிலடைந்தனர் செழியர்.

பரிசில்சுமத்தனர் கவிஞர்
      பகடுசுமந்தன திறைகள் அரசு
அசுமந்தன இறைகள்
      அவனிசுமந்தன புயமும்.

எனவரும் கலிங்கத்துப்பரணி தாழிசைகளால் உணரலாம்.

குலோத்துங்கன் சோழநாட்டு ஆட்சியைப் பெற்றமை பற்றி வரலாற்றாராய்ச்சியாளர்க்குள் கருத்து வேறுபாடு உண்டு. அதிராசேந்திரசோழனைக் கொன்றோ அல்லது கொல்வித்தோ இவன் சோழநாட்டாட்சியைக் கைப்பற்றினன் என்பர் சிலர். வைணவர்களை அதிராசேந்திரன் துன்புறுத்தினமையால் அன்னோர் நிகழ்த்திய கலகத்தால் அவன் கொல்லப்பட்டானென்றும் அச் சமயத்தில் குலோத்துங்கன் சோழநாட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டானென்றும் கூறுவர் வேறு சிலர். கங்கைகொண்ட சோழன் மனைவி, தன்பேரனாகிய இவனைச் சுவீகாரம் எடுத்துக்கொண்டாள் என்பர் மற்றுஞ் சிலர். அதிராசேந்திரசோழன் நோய்வாய்ப்பட்டிறந்தமைக்குக் கல்வெட்டில் ஆதாரமிருத்தலாலும் நம் குலோத்துங்கன் சோழநாட்டை யடைந்தபோது அந்நாடு அரசனின்றி அல்லலுற்ற நிலையில் இருந்ததென்று கல்வெட்டுக்களும் கலிங்கத்துப்பரணியும் ஒருங்கே கூறுவதாலும் அதிராசேந்திரன் ஆட்சியில் திருமால் கோயில் கற்றளியாக ஆக்கப்பட்டிருத்தலை நோக்குங்கால் அவன் வைணவசமயத்தில் வெறுப்புடையனல்ல னென்பது நன்கு புலனாதலாலும் அவன் ஆளுகையில் சோழநாடு கலகமின்றி அமைதியாகவே இருந்தமைக்கு அவன் காலத்துக் கல்வெட்டுக்களில் போதிய ஆதாரங்கள் கிடைத்தலாலும் அவர்கள் கூறுவனவெல்லாம் சிறிதும் பொருந்தாமை காணலாம். கங்கைகொண்டசோழனுக்குப் புதல்வர் ஐவர் இருந்தனரென்பது கல்வெட்டுக்களால் தெளியக்கிடத்தலால் அவன் மனைவி தன் பேரனாகிய குலோத்துங்கனைச் சுவீகாரப் புதல்வனாகக் கொண்டன ளென்பதற்கும் இடமில்லை.

[1]. க. பரணி - தா. 245, 246, 247.
-------------

அதிகாரம் 6: குலோத்துங்கனது அரசாட்சி

நம் இராசேந்திரன் சோழமண்டலத்தின் ஆட்சியைக் கி. பி. 1070-ஆம் ஆண்டில் எய்திய பின்னர், ஐந்தாண்டுகள் வரை இவனுக்கு இப்பெயரே பெரும்பாலும் வழங்கிவந்தது. அதற்கு முன்னர் இவன் வேங்கி நாட்டையாண்டுவந்த போது அந்நாட்டின் ஒழுகலாற்றின்படி, இவனுக்கு 'விஷ்ணுவர்த்தனன்' என்ற பெயரும் வழங்கிற்றென்பதை முன்னரே கூறியுள்ளோம். ஆயினும் சோணாட்டரசுரிமையை அடைந்த பிறகு கி. பி. 107-) முதல் குலோத்துங்கன் என்ற பெயரே இவனுக்கு வாணாள் முழுமையும் நிலைபெற்று வழங்கலாயிற்று. குலோத்துங்கன் என்ற பெயருடைய சோழமன்னருள் இவனே முதல்வனாதலின், இவனை முதலாங் குலோத்துங்கன் என்று வழங்குதலே அமைவுடைத்து. இனி, நாமும் இவனைக் குலோத்துங்கன் என்றே எழுதுவோம். இப்பெயரேயன்றி இவனுக்கு வழங்கிய வேறுபெயர்களும் சில உள. அவை, அபயன், விசயதரன், சயதுங்கன், விருதராச பயங்கரன், கரிகாலன், இராச நாராயணன், உலகுய்ய வந்தான் என்பன. இப்பெயர்கள் இவனைக் குறித்தலைக் கல்வெட்டுக்களிலும் கலிங்கத்துப்பரணியலும் தெளிவாகக் காணலாம். சோழ அரசர்கள் தத்தம் ஆட்சியின் தொடக்கத்தில் ஒருவர்பின் ஒருவராகப் புனைந்து கொண்டுவந்த இராசகேசரி, பரகேசரி என்ற பட்டங்களுள்,[1] நம் குலோத்துங்கன் இராசகேசரி என்ற பட்டம் பெற்றவன் ஆவான்.

இவ்வேந்தன் காலத்து நிகழ்ந்த போர்களுள்ளே ஒன்றிரண்டொழிய எஞ்சியன வெல்லாம் இவனது ஆட்சியின் பதினான்காம் ஆண்டிற்கு முன்னரே முடிவெய்தின. போர்களெல்லாம் ஒருவாறு முடிவுற்ற பின்னர், கி. பி. 1084-ஆம் ஆண்டில் இவன் சக்கரவர்த்தி என்ற பட்டமும்' 1090-ல் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டமும்[2] புனைந்துகொண்டு பல்வகையாலும் பெருமையும் புகழும் எய்தி இனிது வாழ்ந்துவந்தான். திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டம் புனைந்து ஆட்சி புரிந்த சோழமன்னருள் இவனே முதல்வன் ஆவான். இவனுக்குப் பின்னர் ஆட்சிபுரிந்த இவனது வழித்தோன்றல்களுள் ஒவ்வொருவரும் இப்பட்டம் புனைந்தே அரசாண்டுவந்தனர். 'திரிபுவன சக்கரவர்த்தி' என்ற தொடர்மொழி சேரமண்டலம், சோழமண்டலம், பாண்டி மண்டலம் ஆகிய மூன்றுக்கும் சக்கரவர்த்தி என்ற பொருளை யுணர்த்துவதாகும்.

இங்ஙனம் பெருமையுடன் வாழ்ந்துவந்த குலோத்துங்கன் நாட்டிற்கு நலம்புரியக் கருதி முதலில் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் அரசர்க்கு நெடுங்காலமாகச் செலுத்திவந்த சுங்கத்தை நீக்கினான். ஓர் அரசன் தன் நாட்டிலுள்ள எல்லா மக்கட்கும் இனிமை பயப்பனவாகப் பொதுவாகச் செய்யக்கூடிய நலங்களுள் இதனினும் சிறந்தது வேறு யாதுளது? இதனால் மக்கள் எல்லோரும் இவனை வாயாரவாழ்த்திச் 'சுங்கந்தவிர்த்த சோழன்' என்று வழங்குவாராயினர். 'தவிராத சுங்கந்தவிர்த்தோன்'[3] என்று புலவர் பெருமக்களும் இவனைப்புகழ்ந்து பாராட்டினர். தஞ்சாவூரைச் சார்ந்த கருந்திட்டைக்குடி இவனது ஆட்சிக்காலத்தில் சுங்கந் தவிர்த்த சோழனல்லூர் என்ற பெயரும் எய்திற்று. பின்னர், சோழமண்டலம் முழுவதையும் அளந்து நிலங்களின் பரப்பை உள்ளவாறு அறிந்தாலன்றி நிலவரியை ஒழுங்குபடுத்தல் இயலாது என்று கருதி, அதனை முற்றிலும் அளக்குமாறு ஆணையிட்டான். அவ்வேலையும் இவன் பட்டமெய்திய பதினாறாம் ஆண்டாகிய கி. பி. 1086-ல் தொடங்கப்பெற்று, இரண்டு ஆண்டுகளில் முடிவுற்றது.[4] பிறகு, இவன், குடிகள் எல்லோரும் ஆறிலொரு கடமை நிலவரி செலுத்திவருமாறு ஏற்பாடு செய்தான். இங்ஙனமே இவனது பாட்டனுக்குத் தந்தையாகிய முதலாம் இராசராசசோழன் காலத்தும் சோழமண்டலம் ஒருமுறை அளக்கப்பெற்றதோடு ஆறிலொருகடமை வரியும் விதிக்கப்பெற்றது. குலோத்துங்கனது ஆளுகையில் வரி விதிக்கப்படாமல் ஒதுக்கப்பெற்ற நிலங்களும் உள. அவை, ஊர்நத்தம், குளம், கம்மாளச்சேரி, வெள்ளான் சுடுகாடு, பறைச்சுடுகாடு, ஊர்நிலத்தூடறுத்துப்போன வாய்க்கால், சீகோயில், ஐயன்கோயில், பிடாரிகோயில், கழனிக்குளங்கள், பறைச்சேரிநத்தம், நந்தவனம், குடியிருக்கை, ஊரிருக்கை, ஓடை, ஈழச்சேரி, வண்ணாரச்சேரி, பெருவழி, திருமுற்றம், ஊருணி, கொட்டகாரம், களம், தேவர் திருமஞ்சனக்குளம், கன்றுமேய்பாழ், சுடுகாட்டுக்குப் போகும் வழி, மனை, மனைப்படப்பை, கடை, கடைத் தெரு, மன்று, கிடங்கு, புற்று, காடு, உவர், ஆறு, ஆறிடு படுகை, உடைப்பு, மீன்பயில்பள்ளம், தேன்பயில் பொதும்பு என்பனவாம். வரி விதிக்கப்பெறாத மேலே குறித்துள்ள இடங்களை ஆராயுங்கால், அந்நாளில் விளை நிலங்களுக்கு மாத்திரம் நிலவரி வாங்கப்பெற்று வந்ததேயன்றி மற்றை நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை என்பது நன்கு அறியக்கிடக்கின்றது.

நம் குலோத்துங்கன் தன் நாட்டிலுள்ள குடிகளது உழவுத்தொழில் வளர்ச்சியுறுமாறு ஆங்காங்குப் பல ஏரிகளையும் குளங்களையும் வெட்டுவித்தான் ; காடுகளை யழிப்பித்து மக்கள் வாழ்தற்கேற்ற பல ஊர்களும் நகரங்களும் அமைத்தான்; மக்களது தெய்வபக்தி ஓங்குமாறு ஊர்கள் தோறும் சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் பல புதிய கோயில்கள் எடுப்பித்ததோடு அவற்றின் பூசை, திருவிழா முதலியவற்றிற்கு நிபந்தங்களும் விட்டான் ; அன்றியும் நகரங்களிலுள்ள பழைய செங்கற் கோயில்களை இடித்து அவற்றைக் கற்றளிகளாக எடுப்பித்தான். இங்ஙனம் இவனது ஆட்சிக்காலத்தில் மக்கட்குண்டான நன்மைகள் பலவாகும்; விரிப்பிற் பெருகும்.

இக்குலோத்துங்கனது ஆட்சியின் 50-ஆம் ஆண்டில் வரையப்பெற்ற கல்வெட்டுக்கள், திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையந் தாலூகாவிலுள்ள காமரச வல்லியிலும், தஞ்சாவூர் ஜில்லா மன்னார்குடித் தாலுக்காவிலுள்ள கோட்டூரிலும் காணப்படுகின்றன. ஆதலால் இவன் சோழமண்டலத்தை ஐம்பது ஆண்டுகளுக்குமேல் ஆண்டிருத்தல் வேண்டும். இவன் தன் பாட்டனாகிய கங்கைகொண்ட சோழனாலும், மாமன்மார்களாகிய இராசாதிராசன், இரண்டாம் ராசேந்திரன், வீரராசேந்திரன் முதலானோராலும் அரும்பாடுபட்டு உயரிய நிலைக்குக் கொண்டுவரப்பட்ட சோழமண்டலத்தை, அதன் பெருமையுஞ் சிறப்பும் ஒரு சிறிதுங் குறையாதவாறு, யாண்டும் அமைதி நிலைபெறச் செங்கோல் செலுத்திய பெருந்தகை ஆவன். இவனுக்கு முன்னர் அரசாண்ட சோழன் கரிகாற்பெருவளத்தான், முதலாம் இராசராச சோழன், கங்கைகொண்டசோழன் முதலான பேரரசர்களை இவனுக்கு ஒப்பாகக் கூறலாமேயன்றி ஏனையோரைக் கூறுதல் சிறிதும் பொருந்தாது. இவன் காலத்திற்குப் பின்னர் இவனுக்கு ஒப்பாகக் கூறத்தக்க சோழமன்னன் ஒருவனும் இலன் என்றே கூறிவிடலாம். எனவே, நம் தமிழகம் தன்னைப் புகழுக்கும் பெருமைக்கும் நிலைக்களமாக்கிக் கோடற்குச் சிற்சில காலங்களில் அரிதிற்பெறும் பெருந் தவப்புதல்வர்களுள் ஒருவனாகவே இவனைக் கருதல் வேண்டும். இவனது ஆட்சிக்காலத்தில் சோழநாடு வடக்கேயுள்ள மகாநதி முதல் தெற்கேயுள்ள குமரிமுனை வரையிற் பரவியிருந்தது. அந்நாளில் சோழநாட்டிற்கு வடவெல்லையாகவும் மேலைச்சளுக்கிய நாட்டிற்குத்தென் னெல்லையாகவும் அமைந்திருந்தது இடையிலுள்ள துங்கபத்திரையாறே ஆகும். இப்பெருநில வரைப்பில் நம் குலோத்துங்கன் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து ஐம்பது யாண்டுகள் அமைதியாக ஆட்சிபுரிந்தது மக்களாகப்பிறந்தோர் பெறுதற்குரியனவும் அரியனவுமாகிய பெரும்பேறுகளுள் ஒன்றேயாம் என்று கூறுதலில் தடை யாதுளது?

--
[ ]1. சோழவமிச சரித்திரம் பக். 7.
[2]. S. I. I. Vol. III. page 131.
[3]. குலோத்துங்க சோழனுலா - வரி 52.
[4]. The Historical Sketches of Ancient Dekhan page (358)
----------

அதிகாரம் 7: குலோத்துங்கனுடைய போர்ச்செயல்கள்

நம் குலோத்துங்கன் நடத்திய போர்களுள் ஒன்றிரண்டொழிய ஏனையவெல்லாம் இவனது ஆட்சியின் முற்பகுதியிலேயே நிகழ்ந்துள்ளன என்று முன்னரே கூறியுள்ளோம். அப்போர் நிகழ்ச்சிகளைத் தற்காலத்தே வெளிவந்துள்ள கல்வெட்டுக்களைக்கொண்டு ஒருவாறு ஆராய்ந்து அறிந்துகொள்ளலாம். அவை :-

1. மேலைச்சளுக்கியருடன் நடத்திய முதற்போர்
2. நுளம்ப பாண்டியருடன் நடத்திய போர்
3. மேலைச்சளுக்கியருடன் நடத்திய இரண்டாம்போர்
4. பாண்டியருடன் நடத்தியபோர்
5. சேரருடன் நடத்திய போர்
6. தென்கலிங்கப்போர்
7. வடகலிங்கப்போர்

என்பன. இப்போர் நிகழ்ச்சிகளின் காரணத்தையும். இவற்றின் முடிவையும் கல்வெட்டுக்களும் முன்னூல்களும் உணர்த்தும் குறிப்புக்களைக் கொண்டு சிறிது விளக்குவாம்.

1. மேலைச்சளுக்கியருடன் நடத்திய முதற்போர்:- இது குலோத்துங்கன் மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிரமாதித்தனோடு கி. பி. 1076-ஆம் ஆண்டில் நடத்திய போர் ஆகும். தன் மைத்துனனாகிய அதிராசேந்திரசோழன் நோய்வாய்ப்பட்டு இறந்தபின்னர், சோழவளநாட்டில் குலோத்துங்க சோழன் முடிசூடியதையுணர்ந்த சளுக்கிய விக்கிரமாதித்தன் வேங்கிநாடும் சோணாடும் ஒருங்கே ஓர் அரசனது ஆட்சிக்குட்பட்டிருப்பது தன் ஆளுகைக்குப் பெரியதோர் இடுக்கண் விளைவதற்கு ஏதுவாகும் என்று கருதிக் குலோத்துங்கனது படை வலிமையையும் வீரத்தையும் குலைத்தற்குப் பெரிதும் முயன்றான். அவன், அம் முயற்சியில் வெற்றியுறும்வண்ணம் ஐந்து ஆண்டுகளாகப் படைசேர்த்தும் வந்தான். இந்நிலைமையில் விக்கிரமாதித்தனுக்கும் அவனது தமையனாகிய இரண்டாம் சோமேச்சுரனுக்கும் ஒற்றுமை குலைந்து மனவேறுபாடு உண்டாயிற்று. உண்டாகவே. விக்கிரமாதித்தன் தன் தம்பியாகிய சயசிங்கனை அழைத்துக்கொண்டு மேலைச்சளுக்கியரது தலைநகராகிய கல்யாணபுரத்தை விட்டுச்சென்றான்.[1] பிறகு மேலைச்சளுக்கியரது இரட்டமண்டலம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுச் சோமேச்சுரனாலும் விக்கிரமாதித்தனாலும் தனித்தனியாக ஆளப்படும் நிலையை அடைந்தது. இதனையுணர்ந்த குலோத்துங்கன் சோமேச்சுரனைத் தன்பாற் சேர்த்துக்கொண்டான். பின்னர், விக்கிரமாதித்தன் தான் சேர்த்துவைத்திருந்த படைகளைத் திரட்டிக்கொண்டு குலோத்துங்கனோடு போர்புரியப் புறப்பட்டான். திரிபுவனமல்ல பாண்டியன், கதம்பகுலத்துச் சயகேசி முதலானோர் விக்கிரமாதித்தனுக்குப் பேருதவி புரிந்தனர். அவனது தம்பி சயசிங்கனும் அவன் பக்கல் நின்று வேண்டியாங்கு உதவினான். சோமேச்சுரன் குலோத்துங்கன் பக்கத்திருந்து போர் புரிந்து உதவுவதாக உறுதியளித்திருந்தான். இறுதியில் குலோத்துங்கனது படையும் விக்கிரமாதித்தனது படையும் துங்கபத்திரை யாற்றங்கரையில் எதிர்த்துப் போர் செய்தன. விக்கிரமாதித்தன் தன் தமையனாகிய சோமேச்சுரன் குலோத்துங்கனோடு சேர்ந்து தன்னுடன் போர்செய்ய இயலாதவாறு ஓர் சூழ்ச்சிசெய்து இடைநின்று தடுத்தான். இப்போரிற் குலோத்துங்கன் வெற்றியாதல் தோல்வியாதல் எய்தினான் என்று கூறுதற்கிடமில்லை. ஆயினும் நம் குலோத்துங்கனுக்கு உதவி புரிதற்குத் துணைப்படை கொணர்ந்த சோமேச்சுரன் தோல்வியுற்றுத் தன் தம்பியாகிய விக்கிரமாதித்தனாற் சிறைபிடிக்கப்பட்டு நாட்டையும் இழந்தான்.[2] குலோத்துங்கனைச் சோழநாட்டினின்று துரத்துவதற்கு விக்கிரமாதித்தன் ஐந்து ஆண்டுகளாகச் சேர்த்துவந்த பெரும் படையானது அவன் தன் தமையனைத் துங்கபத்திரைப் போரில் இங்ஙனம் தோல்வியுறச்செய்து இரட்டமண்டலத்துள் தன் தமையன்பாலிருந்த நாட்டைக் கைப்பற்றிக்கொள்வதற்குப் பெரிதும் பயன்பட்டது. விக்கிரமாதித்தனும் மேலைச்சளுக்கிய நாடாகிய இரட்டபாடி ஏழரையிலக்கம் முழுமைக்கும் முடி மன்னன் ஆயினான். முதலாம் மேலைச்சளுக்கியப்போர் இவ்வாறு முடிவெய்தியது. இதனை முதலாம் துங்கபத்திரைப்போர் என்றும் கூறலாம்.

2. நுளம்ப பாண்டியருடன் நடத்தியபோர் :- இது நம் குலோத்துங்கனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் நிகழ்ந்த மற்றொரு போராகும். இப்போரைப்பற்றிய செய்திகள் இப்போது நன்கு புலப்படவில்லை. குலோத்துங்கனது மெய்க்கீர்த்தியும் இதனை விளக்கிற்றில்லை. ஆயினும், இது, விக்கிரமாதித்தனுக்குத் துணையாக நின்று போர்புரிந்த நுளம்ப பாண்டியனாகிய திரிபுவன மல்ல பாண்டியனுடன் குலோத்துங்கன் நடத்திய போராய் இருத்தல் வேண்டுமென்பது ஊகிக்கப்படுகிறது. இப்போர் நிகழ்ச்சியில் நம் குலோத்துங்கன் வெற்றிபெற்றான். இவனது பகைவனாகிய பாண்டியன் கொல்லப்பட்டான். இது குலோத்துங்கன் நுளம்ப பாண்டியரோடு நடத்திய போராதலின், இதனை நுளம்ப பாண்டியப் போர் என்று கூறுதல் பொருத்தமுடையது.

3. மேலைச்சளுக்கியருடன் நடத்திய இரண்டாம் போர் :- இது, குலோத்துங்கனது ஆட்சியின் 11-ஆம் ஆண்டாகிய கி. பி. 1081-ல் நிகழ்ந்தது ; விக்கிரமாதித்தன் அவன் தம்பி சயசிங்கன் ஆகிய இருவரோடும் நம் குலோத்துங்கன் நடத்தியதாகும். இச்சண்டைக்குரிய காரணம் நன்கு புலப்படவில்லை. குலோத்துங்கன் பெரும்படையைத் திரட்டிக்கொண்டு வடக்கு நோக்கிச்சென்று விக்கிரமாதித்தனது தம்பியாகிய சயசிங்கன் என்பான் அரசப்பிரதிநிதியாகவிருந்து ஆண்டுகொண்டிருந்த வனவாசியைக் கைப்பற்றிக்கொண்டு, தன்னை வந்தெதிர்த்த விக்கிரமாதித்தனோடு கோலார் ஜில்லாவிலுள்ள நங்கிலி என்னுமிடத்தில் பெரும்போர் புரிந்தனன்.[3] இப்போரில், குலோத்துங்கன் வெற்றி எய்தியதோடு விக்கிரமாதித்தனைத் துங்கபத்திரை யாற்றிற்கப்பால் துரத்தியுஞ் சென்றான். அங்ஙனந் துரத்திச் சென்றவன் இடையிலுள்ள மணலூர், அளத்தி முதலான இடங்களில் மீண்டும் அவனைப் போரிற் புறங்கண்டான்.[4] அளத்தியில் நிகழ்ந்த போரில், இவன் மேலைச் சளுக்கியர்களுடைய களிறுகளைக் கவர்ந்து கொண்டான். அன்றியும், இவன் மைசூர் நாட்டிலுள்ள நவிலையில் சளுக்கிய தண்டநாயகர்களால் காக்கப்பெற்ற ஆயிரம் யானைகளையும் கைப்பற்றிக்கொண்டனன் என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது.[5] இறுதியில் துங்கபத்திரைக் கரையில்[6] இரண்டாம்முறை நடைபெற்ற போரில் விக்கிரமாதித்தனும் சயசிங்கனும் தோல்வியுற்று ஓடி ஒளிந்தனர். கங்கமண்டலமும் கொண்கானமும் நம் குலோத்துங்கன் வசமாயின. இங்ஙனம் போரில் வாகை சூடிய குலோத்துங்கன் எண்ணிறந்த யானைகளையும் பொருட்குவியலையும் பெண்டிர்களையும் கவர்ந்துகொண்டு சோணாட்டையடைந்தான்; அவற்றுள், யானைகளையும் பொருட்குவியலையும் தான் போரில் வெற்றிபெறுவதற்குக் காரணமாயிருந்த போர் வீரர்களுக்குப் படைத் தலைவர்களுக்கும் பகுத்துக் கொடுத்து அவர்களுக்கு மகிழ்ச்சியை யுண்டுபண்ணினான்; சிறை பிடிக்கப்பட்ட மகளிரைத் தன் அரண்மனையிலுள்ள தேவிமார்களுக்கு வேலை செய்துவருமாறு வேளம் புகுவித்தான். நம் குலோத்துங்கன் மேலைச்சளுக்கியரோடு நடத்திய இரண்டாம் போரும் இவ்வாறு வெற்றியுடன் முடிவுற்றது.

4. பாண்டியருடன் நடத்திய போர்:- குலோத்துங்கன் நடத்தியதாக அறியப்படும் இந்தப் பாண்டியப் போரும் இவனது ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டாகிய கி. பி. 1081-ன் தொடக்கத்தில் நடைபெற்றது. வடக்கேயுள்ள நுளம்பபாடிப் பாண்டியனோடு கி. பி. 1076-ல் இவ்வேந்தன் புரிந்த போரும் தெற்கேயுள்ள செந்தமிழ்ப்பாண்டி நாட்டின் அரசர்களுடன், கி. பி. 1081-ல் இவன் நிகழ்த்திய இப்போரும் வெல்வேறு போர்களாம்.

முதலாம் பராந்தக சோழன், முதலாம் இராசராச சோழன் ஆகிய இரு வேந்தர்களின் காலங்களில், பாண்டியர் தம் நிலைகுலைந்து சோழர்களுக்குத் திறைசெலுத்தும் சிற்றரசர் ஆயினர். ஆனால் அவர்கள் சிறிது படை வலிமை எய்தியவுடன் அடிக்கடி சோழர்களுடன் முரண்பட்டுத் தாம் முடிமன்னராதற்கு முயன்றுவந்தனர். அவர்கள், அங்ஙனம் முரண்பட நேர்ந்தமையின் சோழ மன்னர்களுள் ஒவ்வொருவரும் தம் தம் ஆட்சிக்காலங்களில் பாண்டி நாட்டின் மீது படையெடுத்துச் செல்லல் இன்றியமையாததாயிற்று. இதனால் நேரும் துன்பங்களையுணர்ந்த கங்கைகொண்ட சோழன் எனப்படும் முதலாம் இராசேந்திரசோழன் பாண்டியரை அரியணையினின்று இறக்கித் தன் மக்களுள் ஒருவனுக்குச் சோழபாண்டியன் என்னும் பட்டம் அளித்துப் பாண்டிநாட்டின் தலைநகராகிய மதுரையில் அரசப்பிரதிநிதியாயிருந்து அந்நாட்டை யாண்டுவருமாறு ஏற்பாடு செய்தான். அங்ஙனமே அவன் மக்களுள் இருவரும் பேரன் ஒருவனும் சோழபாண்டியன் என்னும் பட்டத்துடன் அம் மதுரைமா நகரிலிருந்து ஆட்சி புரிந்தனர்.

வீரராசேந்திரன் காலத்திற்குப் பின்னர் அதிராசேந்திரன் சோழவளநாட்டை ஆண்டுவந்தபோது பாண்டியர் தாம் முடிமன்னராதற்கு அதுவே தக்க காலமெனக் கருதித் தம் நாட்டை ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஐந்து அரசர்களாகவிருந்து அவற்றை ஆளத் தொடங்கினர். அவர்களது ஆளுகையும் கி. பி. 1081வரை நடைபெற்றுவந்தது. குலோத்துங்கன் வடக்கே நடத்திய போர்கள் எல்லாம் ஒருவாறு முடிவெய்திய பின்னர், தெற்கேயுள்ள பாண்டி நாட்டையும் தன்னடிப்படுத்த எண்ணி, இப்பாண்டியர் ஐவர்மீதும் தும்பை சூடிப் போர்க்கெழுந்தனன்.[7] இதனையுணர்ந்த பாண்டியர் ஐவரும் ஒருங்கு சேர்ந்து பெரும்படையோடு வந்து இவனை எதிர்த்துப் போர் புரிந்தனர். இப்போரில் பெருவீரனாகிய நம் குலோத்துங்கனே வெற்றியடைந்தான். பாண்டியர் ஐவரும் புறங்காட்டி ஓடி ஒளிந்தனர்.[8] குலோத்துங்கன் பாண்டி நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றியதோடு அவ்விடங்களிலெல்லாம் வெற்றித் தூண்களும் நிறுவினான். இப்போரில் குலோத்துங்கன் கைப்பற்றிய நாடுகளுள் முத்துச்சலாபத்திற்குரிய மன்னார்குடாக்கடலைச் சார்ந்த நாடும் பொதியிற் கூற்றமும் கன்னியாகுமரிப் பகுதியும் சிறந்தவைகளாகும்.

5. சேரருடன் நடத்திய போர் :- இது நம் குலோத்துங்கன் குடமலைநாட்டில் சேரரோடு நடத்திய போராகும். இதுவும் குலோத்துங்கனது ஆட்சியின் 11-ஆம் ஆண்டில் நடைபெற்றது. இப்போரும் சேரரைத் தனக்குத் திறைசெலுத்தும் சிற்றரசர்களாகச் செய்யும் வண்ணம் குலோத்துங்கனால் தொடங்கப்பெற்றது. திருவனந்தபுரத்திற்குத் தெற்கே பத்துமைல் தூரத்தில் மேலைக்கடற்கோடியிலுள்ள விழிஞத்திலும், திருவனந்தபுரத்தைச் சார்ந்த காந்தளூர்ச்சாலையிலும் குமரி முனைக்கு வடக்கிலுள்ள கோட்டாறு என்ற ஊரிலும் சேர நாட்டு வேந்தனுக்கும் நம்குலோத்துங்கனுக்கும் பெரும் போர்கள் நடந்தன.[9] சிறிதும் அஞ்சாது எதிர்த்துப் போர்புரிந்த மலைநாட்டாருள் பலர் போர்க் களத்தில் உயிர் துறந்தனர். குலோத்துங்கன் காந்தளூர்ச் சாலையிலுள்ள சேரமன்னனது கப்பற்படையினை இருமுறையழித்துப் பெருமை எய்தினான். [10]கோட்டாறும் எரிகொளுத்தப்பெற்று அழிக்கப்பட்டது. சேரமன்னனும் குலோத்துங்கனுக்குத் திறைசெலுத்தும் சிற்றரசர்களுள் ஒருவனாயினன். சேரரும் பாண்டியரும் தம் நிலைமை சிறிது உயர்ந்தவுடன் தன்னுடன் முரண்பட்டுத் தீங்கிழைக்காதவாறு கோட்டாறு முதலான இடங்களில் சிறந்த தலைவர்களின் கீழ் நிலைப்படைகள் குலோத்துங்கனால் அமைக்கப்பெற்றன ; அவ்வாறு கோட்டாற்றில் நிறுவப்பட்ட படைக்குக் கோட்டாற்று நிலைப்படை' என்று பெயர் வழங்கிற்று.[11]

6. தென்கலிங்கப்போர் :- இது குலோத்துங்கனது ஆட்சியின் 26-ஆம் ஆண்டாகிய கி. பி. 1096-ல் நிகழ்ந்தது. இப்போர் வேங்கிநாட்டில் அரசப்பிரதிநிதியாயிருந்த அரசிளங்குமரன் விக்கிரமசோழன் என்பான் தன் இளமைப்பருவத்தில் தென்கலிங்கநாட்டின் மன்னனாகிய தெலுங்கவீமன்மேற் படையெடுத்துச் சென்று அவனை வென்றதையே குறிக்கின்றது. இதனை விக்கிரமசோழனது: மெய்க்கீர்த்தி,

‘தெலுங்க வீமன் விலங்கல்மிசை யேறவும்
கலிங்க பூமியைக் கனலெரி பருகவும்
ஐம்படைப் பருவத்து வெம்படை தாங்கி
வேங்கை மண்டலத் தாங்கினி திருந்து
வடதிசை யடிப்படுத்தருளி’

என்று தெளிவாக விளக்குதல் காண்க.

இப்போர் குலோத்துங்கனது மகனாகிய விக்கிரமனால் நிகழ்த்தப்பெற்றதாயினும் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்திலே நடைபெற்றதாதலின் மகனது வென்றிச் சிறப்பு தந்தைக்கேற்றியுரைக்கப்பட்டதென்றுணர்க.

7. வடகலிங்கப்போர் :- இது குலோத்துங்கனது ஆட்சியின் 42-ஆம் ஆண்டாகிய கி. பி. 1112-ஆம் ஆண்டிற்கு முன்னர் நடைபெற்ற போராகும் [12];" வடகலிங்க வேந்தனாகிய அனந்தவன்மன் என்பானோடு குலோத்துங்கன் நடாத்தியது." [13]வடகலிங்கத்திற்கு நேரிற்சென்று இப்போரை வெற்றியுற நடாத்தித் திரும்பியவன் குலோத்துங்கனது படைத்தலைவர்களுள் முதல்வனாகிய கருணாகரத் தொண்டைமானே யாவன். இவனோடு வாணகோவரையன், முடிகொண்ட சோழன் என்ற இரண்டு படைத்தலைவர்களும் அங்குச் சென்றிருந்தனர்.[14] குலோத்துங்கனது ஆட்சியில் நடந்த போர்களுள் இதுவே இறுதியில் நடந்தது. வடகலிங்கத்தில் நடந்த இப்போர் நிகழ்ச்சியை விரித்துக்கூறும் நூல் கலிங்கத்துப் பரணி என்பது. அந்நூல் இப்போரைப்பற்றியுணர்த்தும் செய்திகளை அடியிற் காண்க.

ஒருநாள் நம் குலோத்துங்கன் காஞ்சிமாநகரிலுள்ள அரண்மனையில் ஓவியமண்டபத்து வீற்றிருந்தபோது, வாயில்காப்போரில் ஒருவன் ஓடிவந்து அரசனது அடிகளை முடியுறவணங்கி, ' எம்பெருமானே, வேந்தர் பல்லோர் திறைப்பொருள் கொணர்ந்து கடைவாயிலின் கண் காத்துக்கொண்டிருக்கின்றனர்' என்றனன். அதனைக் கேட்ட அரசன் 'அன்னாரை விடுக' என,

'தென்னவர் வில்லவர் கூவகர் சாவகர் சேதிபர் யாதவரே கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே கங்கர் கடாரர் கவிந்தர் துமிந்தர் கடம்பர் நுளும்பர்களே வங்கர் இலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவர் ஐயணரே கொங்கணர் கொங்கர் குலிங்கர் அவந்தியர் குச்சரர் கச்சியரே வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர் மிலேச்சர்களே குத்தர் திகத்நர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே.'

என்ற மன்னர்கள் அம்மன்னனை யணுகிப் பணிந் தெழுந்து மன்னர் மன்ன ! அடியேம் நினக்கு இறுக்கக்கடவதாய இறைப்பொருள் கொணர்ந்துளேம்' என்றுரைத்துத் தாம் கொண்டுவந்துள்ள பொற்கலம் மணித் திரள் முதலான பொருள்கள் அனைத்தையும் அரசன் திருமுன்னர்க் காட்டிக் கைகுவித்து ஒருபுடை நின்றனர்.

அப்போது அரசன் 'இவர்களொழியத் திறை கொடாதார் இன்னும் உளரோ' என்று வினவினான். அச்சமயத்துக் கடகர் முன்றோன்றி, 'பெருமானே, எங்கள் திறையும் கொண்டுவந்துவிட்டோம்' என்றுரைத்து அவன் கழல் வணங்கினர். அப்போது, 'வட கலிங்கத்தரசன் இருமுறை திறை கொணர்கிலன்' என்று அமைச்சன் கூற, அதனைக்கேட்ட அரசன் பெரிதும் வெகுண்டு ' அங்ஙனமாயின் அவனது வலிய குன்றரணம் இடிய வென்று அவனையும் அவனது களிற்றினங்களையும் பற்றி ஈண்டுக்கொணர்மின்' என்றனன். அரசன் அங்ஙனம் கூறலும், ஆண்டு அருகிருந்த பல்லவர்கோனாகிய கருணாகரத்தொண்டைமான் 'அடியேன் கலிங்கமெறிந்து வருவல் ; அடியேற்கு விடைகொடுக்க' வென, அரசனும் 'அங்ஙனமே செய்க' என்றனன்.

குலோத்துங்கனிடத்து விடைபெற்ற கருணாகரன் கால்வகைத்தானையோடும் போர்க்கெழுந்தனன் ; எங்கும் முரசங்கள் முழங்கின : வளைகள் கலித்தன ; நாற்படையும் சூழ்ந்து நெருங்கி வெள்ளத்தைப்போல் திரண்டெழுந்தன. அவற்றைக் கண்டோர் பலரும் வியப்பெய்தி, இவை கடலைக் கலக்குங்கொலோ ? மலையை இடிக்குங்கொலோ ? ஒன்றும் அறிகிலம் ; இவற்றின் எண்ணம் யாதோ?' என்று ஐயுற்று நடுக்கமுற்றனர். நாற்றிசைகளும் அதிர்ந்தன. தூளிப்படலம் பிறந்தது. பல்லவர் கோனாகிய கருணாகரன் வளவர் பெருமானோடு களிற்றின் மீது இவர்ந்து இரைவேட்ட பெரும்புலிபோற் பகைமேற் சென்றனன். பாலாறு, பொன்முகரி, பழவாறு, கொல்லியெனும் நாலாறுந் தாண்டிப் பெண்ணையாற்றையும் கடந்து தொண்டைமான் படைகள் சென்றன ; அதன் பின்னர், வயலாறு, மண்ணாறு, குன்றியென்னும் ஆறுகளையுங் கடந்து கிருட்டினை நதியும் பிற்படுமாறு போயின; பிறகு, கோதாவரி, பம்பாநதி, கோதமை நதியென்னும் இவற்றையுங்கடந்து கலிங்கநாட்டையடைந்து, சில நகரங்களில் எரிகொளுவிச் சில ஊர்களைச் சூறையாடின.

இத்திறம் நிகழ்வனவற்றைக் கண்ட குடிகளெல்லோரும், 'ஐயோ, மதில்கள் இடிகின்றனவே ; வீடுகள் எரிகின்றனவே ; புகைப்படலங்கள் சுருண்டு சுருண்டு எழுகின்றனவே ; அரண் எங்குளது?. நமக்குப் புகலிடம் யாண்டுளது? இங்குத் தலைவர் யாவர் ? படைகள் வருகின்றன ; அந்தோ ! நாம் கெடுகின் றனம்! மடிகின்றனம் !!' என்று ஓலமிட்டுக்கொண்டு நாற்புறமும் ஓடி அலைந்தனர். அவ்வாறு ஏங்கித் துணுக்குற்ற குடிகளெல்லாம் 'ஐயோ ! நம் மன்னன், குலோத்துங்க சோழற்கு இறுக்கக் கடவதாகிய திறை கொடாது உரைதப்பினான்; ஆதலின் எதிரே தோன்றியுள்ளது அட்மன்னனது படையே போலும் ; அந்தோ! இனி என் செய்வது!' என்றலறிக்கொண்டு உரைகுழறவும் உடல் பதறவும் ஒருவருக்கொருவர் முன்னாக அரையிற் கட்டிய துகில் அவிழ ஓடித் தம் அரசனது அடிமிசை வீழ்ந்தனர். அங்ஙனங் குடிகள் தன்னடியில் வீழ்ந்து அலறி ஓலமிடுதலைக் கண்ட கலிங்கர் கோமானாகிய அனந்தவன் மன் வெகுளி யினால் வெய்துயிர்த்து, கைபுடைத்து வியர்த்து, அன் னாரை நோக்கி ' யான் அபயனுக்கே யன்றி அவன் தண்டினுக்கு பொளியனோ?' என்றுரைத்துத் தடம்புயங் குலுங்குற நகைத்தனன். பின்னர், ' நமது நாடு கான ரண், மலையரண், கடலரண், இவற்றாற் சூழப்பெற்றுக் கிடத்தலை அறியாது, அவன் படை வருகின்றது: போலும் ; நல்லது, சென்று காண்போம்' என்று கூறினன்.

அம்மன்னன் கூறியவற்றைக் கேட்ட எங்கராயன் என்னும் அமைச்சர் தலைவன், அரசர் சீறுவரேனும் அமைச்சனாகிய தான் உறுதியை யுரையாதொழியின் அது தன் கடமையினின்று தவறியதாகுமென்பதை நன்குணர்ந்தவனாய், அரசனை நோக்கி, ' மன்னர் பெருமானே, அடியேன் கூறுவனவற்றை யிகழாது சிறிது செவிசாய்த்துக் கேட்டருளல் வேண்டும். வேற்றரசர் களைப் புறங்கண்டு வெற்றி கோடற்குச் சயதரன் படை போதாதோ ! அவனே நேரில் வருதல் வேண்டுமோ ? அவனுடைய படையினாற் பஞ்சவர் ஐவருங் கெட்ட கேட்டினை நீ கேட்டிலை போலும் ; முன்னொருநாள் அவனது படையுடன் பொருவானெழுந்த சேரர் செய்தி நின் செவிப்பட்டதில்லையோ ? அவன் விழிஞமழித்ததும், காந்தளூர்ச்சாலை கொண்டதும் தன் படையினைக் கொண்டன்றோ? தண்டநாயகராற் காக்கப்பெற்ற நவிலையின் கண் ஆயிரம் யானைகளை அவன் கைப்பற்றிக்கொண்டதை நீ யறியாயோ ? அபயன் படையினால் ஆரஞருற்-றுத் தம் மண்டலங்களை இழந்தவேந்தர் இத்துணைய ரென்றுரைத்தல் சாலுமோ ? ஆதலால் அத்தண்டின் முன்னர் நின் புயவலி எத்தன்மைத்தாகுமென்பதை எண்ணித் துணிவாயாக ; இன்று என்னைச் சீறினும், நாளை அச்சேனைமுன் நின்ற போழ்தினில் யான் கூறிய துண்மை யென்பதை நன்குணர்வாய் ' என்று நன்மதி நவின்றனன்.

அமைச்சர் தலைவன் கூறியவற்றைக் கேட்ட கலிங்க மன்னன் அவனை நோக்கி, ' யாம் கூறியவற்றை மறுத்துரைப்பதெனின் இமையோரும் எம் முன்னர்ப் போதரற்குப் பெரிதும் அஞ்சுவர். பன்னாட்களாகச் செருத் தொழில் பெறாது எம்தோட்கள் தினவுற்றிருத்தலை நீ அறியாய்போலும். முழைக்கண்ணுளதாய அரியேற்றின் முன்னர் யானையொன்று எளிதென்றெண்ணிப் பொருதற்குக் கிட்டிவருதல் உண்மையாயினன்றோ அபயனது படை எம்முடன் பொருதற்கெழும்! எமது தோள்வலியும், வாள்வலியும் பிறவலியும் இத்தன்மையன வென்றுணராது பிறரைப்போல் ஈண்டுக் கூறலுற்றாய். இது நின் பேதமையன்றோ ? நன்று ! நமது நாற்படையு மெழுந்து அபயன் ஆணையாற் போதரும் படையுடன் போர்தொடங்குக' என்றுரைத்தனன். அப்பொழுதே

பண்ணுக வயக்களிறு பண்ணுக வயப்புரவி
பண்ணுக கணிப்பில் பலதேர்
நண்ணுக படைச்செரு நர் நண்ணுக செருக்களம்
நமக்கிகல் கிடைத்த தெனவே'

என்று எழுகலிங்கத்தினும் முரசறையப்பட்டது. உடனே, கலிங்கர் கோமானது படைகள் போர்க்குப் புறப்பட்டன; வரைகள் துகள்பட்டன; கடலொலிபோல் முரசங்கள் மொகுமொகென்றொலித்தன ; இடைவெளி யரிதென ஒருவருடலினில் ஒருவர் தம் உடல்புக நெருங்கிச் சென்று, கலிங்கப்படைகள் கருணாகரன் படைகளின் முன்னுற்றன.

பின்னர் இருதிறத்தார்க்கும் போர் தொடங்கலாயிற்று ; ‘படை எடும் எடும்' என்ற ஓசையும், 'விடும் விடும்' என்ற ஓசையும், கடலொலி போன்றிருந்தன ; சிலை நாண்தெறிக்கும் ஓசை திசைமுகம் வெடிப்பதொக்கும். இருதிறப்படைகளும் எதிர்நிற்றல், இருபெருங் கடல்கள் எதிர்நின்றாற்போன்றிருந்தது. பரியொடுபரி மலைவது கடற்றிரைகள் தம்முள் இகலி மலைந்தாற் போன்றிருந்தது. யானையொடு யானை பொருவது வரையொடு வரை பொருதாற்போன்றிருந்தது ; முகிலொடு முகில் எதிர்த்ததுபோல் இரதமும் இரதமும் எதிர்த்தன. புலியொடு புலி யெதிர்த்தாற்போல் வீரரொடு வீரரும் அரி யொடு அரி எதிர்த்தாற்போல் அரசரொடு அரசரும் எதிர்த்துப் பொருவாராயினர் ; வீரர்களின் விழிகளிலே சினக்கனல் தோன்றிற்று. அக்கனல் மின்னொளி வீசின ; அன்னார் கையிற் கொண்ட சிலைகள் உருமென இடித்துக் கணைமழை பொழிந்தன ; அதனாற் குருதியாறு பெருகலாயிற்று. அவ்வாற்றில் அரசர்களது நித்திலக்குடைகள் நுரையென மிதக்கலுற்றன ; போரில் துணி பட்ட களிற்றினங்களின் உடல்கள் அவ்யாற்றின் இருகரையென இருமருங்குங்கிடந்தன.

குருதிவெள்ளத்திற் பிளிற்றிவீழுங் களிற்றினங்கள் வேலைநீருண்ணப்படிந்த மேகங்கள் போன்றிருந்தன ; அவ்யானைகளின் கரங்களை வாளாற்றுணித்துத் தம் புயத் திட்ட வீரர்கள் தோற்பைகளைத் தோளின் கண்ணே கொண்டு நீர்விடுந் துருத்தியாளரைப் போன்றிருந்தனர் ;
அம்புகள் தைக்கப்பெற்றுச் சுருண்டு விழும் யானைகளின் கைகள் வளையங்கள் போன்றிருந்தன. இருதொடையும் துணிபட்டுக்கிடந்த மறவர் தம் முன்னர்ப் பொருவானெழுந்த வாரணத்தின் வலிகெட ஒரு தொடையைச் சுழற்றி அதன்மீதெறிவர் ; மற்றொன்றை இனி எறியுமாறு எடுத்துவைப்பர் ; சில வீரர் தம் உரத்தின்மீது பாய்வான் எழுந்த இவுளியை ஈட்டியாற்குத்தி எடுத்துத் திரிவது வெற்றிமங்கைக்கு எடுக்கப்பெறும் வெற்றிக் கொடி போன்றிருந்தது. அன்னார் யானைகளின் மத்த கங்களைப் பிளக்குங்கால் வீழும் முத்துக்கள் அவ்வெற்றி மங்கைக்குக் சொரியப்பெறும் மங்கலப் பொரிகளை யொப்பனவாகும்; மாற்றார் சிலையில் அம்பைத்தொடுக்கு மளவில் தம்மிடத்து அம்பில்லாத வீரர்கள் தங்கள் மார்பினிற் குளித்த பகழியைப் பற்றியிழுத்துச் சிலையிற் றொடுத்துவிடுவர். குறையுடலங் கூத்தாட, அவற்றின் பின்னர்க் களிப்போடாடும் பேயினங்கள் ஆடல் ஆட்டு விக்கும் ஆடலாசிரியன்மாரை யொக்கும். சடசடவெனும் பேரொலியாற் செருக்களம், தீவாய் மடுக்கும் கழைவனம் போன்றிருந்தது.

இவ்வாறு போர் நிகழுங்கால் களப்போரினை விரை வில் முடித்து வாகை சூடுமாறு வண்டையர் அரசனாம் கருணாகரத் தொண்டைமான் தன் வேழ முந்துறச் சென்றனன், அவனது படையும் முன்னர்ச் செல்லலுற்றது. அங்ஙனஞ் செல்லவே கலிங்கப்படையின் மத யானைகள் துணிபட்டன ; துரக நிரையொடு தேர்கள் முறிபட்டன. குடர்கள் குருதியின் மேல் மிதந்தன; அவற்றைக் கழுகுகளும் காகங்களும் உண்டுகளித்தன ; ஆயிரம் யானைகளைக்கொண்டு ' பொருவம்' எனவந்த கலிங்கவீரர்கள், தங்கள் அரசன் உரைசெய்த ஆண்மையுங்கெட அமரில் எதிர் நிற்கமாட்டாது ஒதுங்கினர்; இப்படை மாயையோ மறலியோ வென்றலறிக்கொண்டு நிலை குலைந்து விழுந்து ஓடினர்; 'அபயம்' 'அபயம்' என்றலறிக் கொண்டு ஒருவர் முன்னர் ஒருவர் ஓடினர்; அங்ஙனம் ஓடிய கலிங்க வீரர் பதுங்கியது கன்முழையின் கண்ணோ ! மறைந்தது அரிய பிலத்தினுள்ளோ ! கரந்தது செறிந்த அடவியிலேயோ! இவற்றை முழுதுந் தெரிந்துகோடல் அரிதாகும். அவ்வாறு கலிங்கரோடப் பலப்பல யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், தேர்கள், மணிக்குவியல்கள், மகளிர்கள் ஆகிய எல்லாவற்றையும் கருணாகரனது படை வீரர்கள் கைப்பற்றினர். கைக்கொண்ட அன்னோரே அவற்றின் அளவைக் கணித்துரைப்பது அருமையெனின், மற்றையோர் அவற்றைக் கணித்துரைத்தல் எங்ஙனம் கூடும்!

இவற்றைக் கவர்ந்தபின் ' இனி கலிங்க மன்னனையும் கைக்கொண்டு பெயர்குதும் ; அவனிருக்கின்ற இடத்தையறிக' என்றனன் கருணாகரன். அவன் சொற்கள் பிற்படுமாறு சில வீரர்கள் விரைந்து சென்று வரைகளிலும் வனங்களிலும் தேடிக் காணப்பெறாது, முடிவில் ஒரு மலைக்குவட்டிற் கரந்திருந்த கலிங்கர் கோனைக் குறுகி ' நமது அடற்படையைக் கொணர்க ' வென்றனர். எனலும் அவனைக்கொணருமாறு கருணாகரன் தன் படைஞரை ஏவினன். அவர்கள் சென்று வெய்யோன் அத்தகிரியை அடையுமளவில் கலிங்க மன்னன் கரந்திருந்த வெற்பினையெய்தி வேலாலும் வில்லாலும் வேலிகோலி விடியளவுங்காத்து நின்றனர். பின்னர், செங்கதிரோன் உதயகிரியையடையுமுன்னர் அம்மன்னனைக் கைப்பற்றித் திரும்பினர்.
அன்னாரது வழியில் எதிர்ப்பட்ட சில கலிங்கர்கள் தங்கள் உடல்முழுவதும் மாசேற்றித் தலைமயிரைப் பறித்தெடுத்து அரையிலுள்ள கலிங்கத்தைக்களைந் தெறிந்துவிட்டு, ' ஐயா யாங்கள் சமணர்கள் ; கலிங்கரல்லேம்' எனக் கூறிப் பிழைத்துச் சென்றனர். சிலர் சிலையின் நாணை மடித்து முப்புரி நூலாக அணிந்து கொண்டு ' ஐயா, யாங்கள் கங்கை நீராடப் போந்தேம். விதிவலியால் இங்கு அகப்பட்டுக்கொண்டேம் ; கரந்தவ ரல்லேம்' எனச் சொல்லி உயிர் பிழைத்தனர். குருதி தோய்ந்த கொடித்துணிகளைக் காவியுடையாக வுடுத்துக் கொண்டு தலையினை முண்டிதஞ் செய்துகொண்டு “ஐயா, எங்கள் உடையைக் கண்டவளவில் எங்களைச் சாக்கிய ரென்று அறிகிலிரோ?" என்றியம்பி யுய்ந்தனர் சிலர். சிலர் யானைகளின் மணிகளை அவிழ்த்துத் தாளமாகக் கையிற் பிடித்துக்கொண்டு கும்பிட்டு, "ஐயா, யாங்கள் தெலுங்கப்பாணர்கள் ; சேனைகள் மடிகின்ற செருக்களங்கண்டு திகைத்து நின்றேம்; இத்தேயத்தினரல்லேம்" என்றுரைத்துப் பிழைத்துப்போயினர். இவ்வாறு பிழைத்துச் சென்றவர்கள் தவிர, கலிங்க நாட்டில் உயிர் பிழைத்தவர்கள் வேறு ஒருவருமிலர்.

கலிங்கமெறிந்து வாகைமாலைசூடிய கருணாகரத் தொண்டைமான் களிற்றினங்களோடு நிதிக்குவியல்களையும் பிறவற்றையுங் கவர்ந்துகொண்டுவந்து குலோத் துங்க சோழன் திருமுன்னர் வைத்து வணங்கினான். நேரியர்கோன் பெரிதும் மகிழ்ச்சியுற்றுத் தொன்டைமானது போர்வீரத்தைப் பலபடப் பாராட்டி அவற்தத் தக்க வரிசைகள் செய்தனன்.

[1]. சளுக்கிய விக்கிரமாதித்தன் சரித்திரம்-பக். 30.
[2]. சளுக்கிய விக்கிரமாதித்தன் சரித்திரம் பக் - 34.
[3]. சோழவமிச சரித்திரச் சுருக்கம் - பக். 31.
[4] (1) தளத்தொடும்பொரு தண்டெழப் பண்டொர்நாள் அளத்தி பட்ட தறிந்திலை யையநீ.' - க. பரணி- தா. 372 (b) - வில்லது கோடா வேள் குலத் தரசர் அளத்தியி லிட்ட களிற்றின தீட்டமும் ' - முதற்குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தி.
[5]. 'தண்ட நாயகர் காக்கு நவிலையிற் கொண்ட வாயிரங் குஞ்சர மல்லவோ' - க. பரணி-தா. 373
[6]. க. பரணி - தா. 89.
[7]. 'வடகடல் தென்கடல் படர்வது போலத்
தன்பெருஞ் சேனையை யேவிப் பஞ்சவர்
ஐவரும் பொருத போர்க்களத் தஞ்சி
வெரிநளித் தோடி அரணெனப் புக்க
காடறத் துடைத்து நாட்டிப் படுத்து '
      - முதற்குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தி.
[8]. 'விட்ட தண்டெழ மீனவர் ஐவருங்
கெட்ட கேட்டினைக் கேட்டிலை போலுநீ'
      - க. பரணி--தா. 363
[9]. 'வேலை கொண்டு விழிஞ மழித்ததுஞ் சாலை கொண்டதுந் தண்டு கொண் டேயன்றோ' - பரணி - தா. 370
[10]. விக்கிரமசோழனுலா-ண்ணி 24
[11]. S. I. I. Vol. III. No. 73. Do.page 144 Foot-note.
[12]. S. I. I. Vol. IV, page 136
[13]. Epi. Ind, Vol. III. page 337.Indin Antiquary Vol. 18. Pages 162 & 166.
[14]. க. பரணி--தா. 352,மு. கு. 4
-------------

அதிகாரம் 8: குலோத்துங்கனது சமய நிலை

நம் குலோத்துங்கன் கொண்டொழுகியது பொதுவாக வைதிகசமயம் என்பது 'முந்நூல் பெருமார்பிற் சிறந்தொளிரப் பிறப்பிரண்டாவது பிறந்து சிறந்த பின்னர்[1]வேதங்கள் நான்கினையும் வேதியர்பாற் கேட்டருளி[2]னான் என்று ஆசிரியர் - சயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியிற் கூறியிருத்தலால் நன்கு விளங்குகின்றது. ஆனால் இவன் வைதிக சமயத்தின் உட்பிரிவுகளாகிய சைவ வைணவ சமயங்களுள் சைவசமயத்தையே சிறப்பாகக் கொண்டொழுகியவன் ; சிவபெருமானிடத்து அவவுகடந்த பத்தி செலுத்தியவன். இவன் காலத்திற்கு முற்பட்ட சோழ மன்னர்கள் எல்லோரும் சைவராகவே இருந்திருப்பதோடு தில்லையில் எழுந்தருளியுள்ள திருச்சிற்றம்பலநாதரைத் தம் குலதெய்வமாகக்கொண்டு வழிபட்டும் வந்துள்ளனர். ஆதித்தன், முதற்பராந்தகன் முதலானோர் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பொன் வேய்ந்து அதனைச் சிறப்பித்திருக்கின்றனர். நம் குலோத்துங்கனும் தன் முன்னோரைப் போலவே திருச்சிற்றம்பலத்தெம்பெருமானைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபாடு புரிந்துவந்தான். ஆயினும், தாம் மேற்கொண்ட சமயமொழிய மற்றைச் சமயங்களைக் கைக்கொண்டொழுகும் தம் நாட்டு மக்களை வெறுத்துப் பல்லாற்றானும் துன்புறுத்தும் அரசர் சிலர்போல இம் மன்னர் பெருமான் புறச்சமயங்களில் சிறிதும் வெறுப்புக் காட்டியவன் அல்லன். இதற்குச் சில சான்றுகள் எடுத்துக்காட்டிச் சிறிது விளக்குவாம்.

சோழ இராச்சியத்திலுள்ள பல வைணவ சமண பௌத்தக் கோயில்கள்தோறும் இவனுடைய கல்வெட் டுக்கள் காணப்படுகின்றன. தஞ்சாவூர் ஜில்லாவைச் சார்ந்த மன்னார்குடியிலுள்ளதும் இப்போது இராச கோபாலசாமி கோயில் என்று வழங்கப்பெறுவதுமாகிய திருமால்கோட்டம் இவன் பெயரால் எடுப்பிக்கப்பெற்ற தொன்றாம். ' குலோத்துங்க சோழ விண்ணகரம்' என்பது; அதற்குரிய பழைய பெயர். அன்றியும் நாகப்பட்டினத்தின்கண் கடார [3]த்தரசனாகிய சூடாமணிவர்மனால் கட்டத் தொடங்கப்பெற்று அவனது மகனாகியமாற விசயோத்துங்கவர்மனால் முடிக்கப்பெற்ற இராசராசப் பெரும்பள்ளி என்னும் புத்தவிகாரத்திற்கு நம் குலோத்துங்கன் விளைநிலங்களை நிபந்தமாகவிட்டிருக்கிறான். கி. பி. 1090-ல் இக்கோயிலுக்கு இவ்வேந்தன் விட்ட நிபந்தங்களை யுணர்த்தும் செப்பேடுகள்'[4]ஹாலண்டு ' தேயத்திலுள்ள ' லெய்டன்' நகரத்துப் பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டிருத்தலை இன்றுங்காணலாம். இத்தகைய செய்திகளை யாராய்ந்து உண்மை காணுமிடத்து, இவன் தன் காலத்து வழங்கிய எல்லாச் சமயங்களிடத்தும் பொது நோக்குடையவனாய் அவற்றை அன்புடன் ஆதரித்து வந்தவன் என்பது இனிது பெறப்படுகின்றது. ஆயினும், இவன் சிவபிரானிடத்து ஆழ்ந்த பத்தியுடையவனாய்ப் பெரிதும் ஈடுபட்டிருந்தான் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். இவன் எய்தி யிருந்த திருநீற்றுச்சோழன் என்ற அருமைத் திருப்பெயரொன்றே இதனை நன்கு வலியுறுத்தும். ஆகவே இவனைச் சிறந்த சைவர் தலைமணி என்று கூறுதல் எவ்வாற்றானும் பொருத்தமுடையதேயாகும்.

[1]. க. பரணி - தா. 229
[2]. ௸ 230
[3]. கடாரம் = மலேயாவின் மேல்கரையில் தென் பக்கத்தில் கெடா என்னும் பேருடன் உள்ளது.
[4]. The Smaller Leiden Grant.
------------

அதிகாரம் 9: குலோத்துங்கனது குணச்சிறப்பு

நம் குலோத்துங்கன் ஒரு செங்கோல் வேந்தனுக்குரிய எல்லா நற்குணங்களையும் ஒருங்கே படைத்தவன். இவன்பாற் காணப்படும் உயர்குணம் பலவுள் முதலாவதாக வைத்துப் பாராட்டத்தக்கது இவனது கடவுள் பத்தியேயாகும். சிறப்பாகச் சிவபெருமானிடத்து இவன் ஒப்பற்ற பத்தியுடையவனாய் ஒழுகிவந்தவன் என்பது முன்னர் விளக்கப்பட்டது. அன்றியும், தன் தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்தினின்று புறப்பட்டுக் காஞ்சிமா நகரை நோக்கிச் செல்பவன், தில்லையம்பதிக்குப் போய்ப் பொன்னம்பலத்திலே நடம்புரியும் முக்கட்பெருமானை வணங்கி, அவரது இன்னருள் கொண்டு வடதிசை ஏகினான் என்று கலிங்கத்துப்பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டார் கூறியிருப்பது இவனது சிவ பத்தியின் மாண்பை இனிது விளக்குகின்றது.'[1]

இனி, அடுத்துப் புகழ்தற்குரியதாய் இவனிடத்து அமைந்திருந்த சிறந்த குணம் இவனது வீரத்தன்மையேயாம். இவன் இத்தமிழகம் முழுமையும் இதற்கப்பாலுள்ள கங்கம், கலிங்கம், கொண்கானம், சிங்களம், கடாரம் முதலான பிற நாடுகளையும் தன்னடிப்படுத்திப் புகழுடன் ஆண்டுவந்த பெருவீரன் என்பதை முன்னரே கூறியுள்ளோம். ஆகவே, இவனை இப்பரதகண்டத்தின் பெரும்பாகத்திலும் இதனைச் சூழ்ந்துள்ள பிறவிடங்களிலும் தன் வெற்றிப் புகழைப் பரப்பிய வீரர் தலைமணி என்றுரைத்தல் சிறிதும் மிகைப்படக் கூறியதாகாது. இவனது படைத்தலைவர்களும் அமைச்சர்களும் இவனைப் போலவே வீரத்தன்மை வாய்ந்தவர்களாய் இவனுக்கு உசாத்துணையாய் அமர்ந்து இவனது வென்றிமேம்பாடு யாண்டும் பரவுதற்குக் காரணமாயிருந்தனர் என்பது ஈண்டு அறியத்தக்கது. அன்னோருள் சிலரது வரலாற்றை மற்றோர் அதிகாரத்திற் காணலாம்.

இவன் செந்தமிழ்ப் புலமையிற் சிறந்த வேந்தன் ஆவன் ; சங்கத்துச் சான்றோர் நூல்களையும் பின்னுள்ளோர் செய்த சிந்தாமணி முதலாய நூல்களையும் நன்கு பயின்றிருந்தான். ஆசிரியர் சயங்கொண்டாரும் இவனைப் பண்டித சோழன் என்று கலிங்கத்துப் பரணியில் ஓரிடத்தில் குறித்துள்ளார்.[2]இவன் புலவர்களது கல்வித் திறத்தை அளந்து கண்டறிதற்குரிய பேரறிவு படைத்தவனாயிருந்தமையின் அன்னாரிடத்துப் பெருமதிப்பும் அன்பும் வைத்திருந்தான். அன்றியும், அவர்கட்கு வேண்டியன அளித்துப் போற்றியும் வந்தான். எனவே, இம்மன்னன் புலவர்களைப் புரந்துவந்த பெருங்கொடை வள்ளல் ஆவன். இவன் ' கலையினொடுங் கவிவாணர் கவியினொடும் இசையினொடும் '[3]

பொழுது போக்கி வந்தனன் என்பர் கவிச்சக்கரவர்த்தியாகிய சயங்கொண்டார். இவன், செந்தமிழ்ப் புலமையுடையவனாயிருந்தமையோடு வடமொழிப் பயிற்சியும் பெற்றிருந்தான். அன்றியும், இவன் வேங்கி நாட்டில் ஆட்சிபுரிந்தபோது அந்நாட்டு மொழியாகிய தெலுங்கே அரசாங்கமொழியாக அமைந்திருந்தது. வேங்கி நாட்டிலுள்ள இவனது கல்வெட்டுக்களும் தெலுங்கு மொழியில் காணப்படுகின்றன. எனவே, இவன் தெலுங்கு மொழியையும் கற்றவனாதல் வேண்டும். ஆகவே, தமிழ், ஆரியம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் இவ்வேந்தன் நல்ல பயிற்சி யுடையவனாயிருந்தனன் என்பது நன்கு புலப்படுகின்றது.

அன்றியும் இவ்வேந்தன் இசைத் தமிழ்நூல் ஒன்று இயற்றியுள்ளனன் எனவும் அந்நாளில் இசைவாணர்களாகிய பாணர்கள் இவ்வேந்தனது இசை நாலைப் பயின்று நன்குபாடி வந்தனரெனவும் இவன் தேவிமார்களுள் ஒருத்தியாகிய ஏழிசைவல்லபி என்பாள் தன் கணவன் இயற்றிய இசைநூலைப் பயின்று நன்கு பாடி வந்தனள் எனவும் கலிங்கத்துப்பரணி ஆசிரியர் கூறியுள்ளார்.

நம் வளவர் பெருமான் நூலறிவு எய்தியிருந்ததோடு இயற்கையில் நுண்ணறிவும் அமையப்பெற்றிருந்தான் ; நல்லறிஞர்களோடு அளவளாவி அறியவேண்டியவற்றை நன்கறிந்து பேரறிஞனாய் விளங்கினான். ஆசிரியர் சயங் கொண்டார் இவனை ' அறிஞர் தம்பிரான் அபயன் '! என்று கலிங்கத்துப்பரணியில் கூறியிருத்தலும் இச்செய்தியை இனிது வலியுறுத்தும்.

இனி, இவ்வேந்தனது செங்கோற் பெருமையும்: பெரிதும் மதிக்கத்தக்கதாகும். இவன் ' குடியுயரக்கோல் உயரும்' என்பதை நன்குணர்ந்தவனாதலின் தன் நாட்டி லுள்ள குடிகள் எல்லோரும் வளம் பெறுதற்கேற்ற செயல்களைச் செய்து அவர்களது பேரன்பிற்குரியவன் ஆயினன். இவன், தன் குடிமக்கள் பண்டைக்கால முதல் அரசர்க்குச் செலுத்திவந்த சுங்கத்தைத் தவிர்த்து, அவர்களது வாழ்த்திற்கும் புகழுரைக்கும் உரிமைபூண்டு விளங்கிய செய்தி முன்னர் விளக்கப்பட்டுள்ளது. இவனது செங்கோற் சிறப்பை அபயன் ' இமயத்தினைத் திரித்தகோலில் வளைவுண்டு - நீதிபுனை செய்ய கோலில் வளைவில்லையே'[4] என்று பாராட்டிக் கூறியுள்ளனர் புலவர் பெருமானாகிய சயங்கொண்டாரும்.

அன்றியும், இவன் அஞ்சாமை, ஈகை, ஊக்கம், சுற்றந்தழுவுதல், காலமறிந்து கருமமுடிக்கும் ஆற்றல் முதலான அருங்குணங்கள் படைத்த பெருந்திறல் வேந்தனாய் அந்நாளில் நிலவினான். சுருங்கவுரைக்குமிடத்து, இம்மன்னர் பெருமான், தன்னடி வந்து பொருந்தினோர் எவரேயாயினும் தண்ணளி சுரந்து அவர்களை வாழ்விக் குர் வண்மையும், எதிர்த்தோர் கூற்று வெகுண்டன்ன ஆற்றலுடையவராயினும் அன்னோரைப் போரிற் புறங் காணும் வீரமும் உடையவனாய் விளங்கிய பெருந்தகை யாவன் என்று கூறி இவ்வதிகாரத்தை ஒருவாற்றான் முடிக்கலாம்.

[1]. க. பரணி -- தா. 236.
[2]. க. பரணி - தா. 519.
[3]. ௸ 264.
[5]. க. பரணி- தா. 260.
--------------

அதிகாரம் 10: குலோத்துங்கனுடைய மனைவியரும் மக்களும்

குலோத்துங்கனது பட்டத்தரசியாக விளங்கியவள் மதுராந்தகி என்பாள். இவளே இவ்வேந்தனது முதல் மனைவி. இவளுக்குத் தீனசிந்தாமணி என்ற பெயரும் உண்டு. இவ்வரசி இவனது அம்மானாகிய இரண்டாம் ராசேந்திர சோழனது மகள். இவனுக்கு வேறு இரு மனைவியரும் இருந்தனர். அவர்கள் ஏழிசைவல்லபி, தியாகவல்லி என்ற இருவருமேயாவர். பட்டத்தரசியாகிய மதுராந்தகி என்பாள் குலோத்துங்கனது ஆட்சியின் இருபத்தாறாம் ஆண்டில் இறந்துவிட்டனள். பின்னர், இவனது மறொரு மனைவியாகிய தியாகவல்லி என்பவள் பட்டத்தரசியாயினள். இவளே இவ்வரசனது ஆட்சியின் பிற்பகுதி முழுமையும் பட்டத்தரசியாக விருந்து வாழும் பேற்றை எய்தியவள்.

'பொன்னின்மாலை மலர்மாலை பணிமாறியுடனே புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ்புடைவரச்- சென்னி யாணையுடனாணையை நடத்துமுரிமை தியாகவல்லி நிறைசெல்வியுடன் சேர்ந்துவரவே '[1]என்னுங் கலிங்கத்துப்பரணிப் பாடலால் பட்டத்தரசியாகிய தியாக வல்லியின் பெருமையும் அரசன் அவள்பால் வைத் திருந்த மதிப்பும் நன்கு விளங்கும். இவள் ' சிவனிடத் துமையெனத் தியாகவல்லி-உலக முழுதுடையாள் ' என்று நம் குலோத்துங்கனது மெய்க்கீர்த்தியிலும் புகழப்பட்டுள்ளாள்.

இனி, ஏழிசைவல்லபியை 'ஏழிசை வளர்க்க வுரியாள்"[2]என்று ஆசிரியர் சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் கூறியிருத்தலால் இவள் ஏழிசையிலும் புலமையெய்தி அவற்றை இனிது வளர்த்துவந்தனள் என்பது நன்கு புலப்படுகின்றது.

நம் குலோத்துங்கனது மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கியவளைப் புவனமுழுதுடையாள் அல்லது அவனி முழுதுடையாள் என்றும், மற்றையோரை ஏழுலகுமுடையாள், திரிபுவனமுடையாள், உலகுடையாள் என்றும் அக்காலத்தில் வழங்கிவந்தனர் என்பது கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. அவர்களது இயற்பெயர்களோடு இப்பெயர்களையும் சேர்த்துச் சிறப்பிப்பது அந்நாளில் பெருவழக்கா யிருந்தது. இவ்வுண் மையை அக்காலத்துக் கல்வெட்டுக்களைக்கொண்டறியலாம்.[3]

மதுராந்தகி என்பவள் பட்டத்தரசியாக நிலவிய நாட்களில் புவனிமுழுதுடையாள் என்றும் அவனி முழுதுடையாள் என்றும் வழங்கப்பட்டனள். அப் போது, ஏழிசைவல்லபி, தியாகவல்லி என்ற மற்ற மனைவியர் இருவரும் ஏழுலகுமுடையாள் உலகுடை யாள் என்னும் சிறப்புப் பெயர்களை எய்தி வாழ்ந்தனர். மதுராந்தகி வானுலகடைந்தபின்னர்த் தியாகவல்லி பட்டத்தரசியாயினள் என்று முன்னரே கூறியுள்ளோம். அவள் அந்நிலையை எய்தியவுடன் அக்கால வழக்கம் போல் புவனி முழுதுடையாள் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றனள்.

நம் குலோத்துங்கனது முதல் மனைவியாகிய மதுராந்தகிக்கு மக்கள் எழுவர் இருந்தனர். அவர்களுள் முதல் மகன் விக்கிரம சோழன் எனப்படுவான். இரண்டாம் மகன் இராசராசன் என்னும் பெயரினன். மூன்றாம் மகன் வீரசோழன் என்பான். மற்றைப் புதல்வர்களது பெயர்கள் இக்காலத்துப் புலப்படவில்லை. அன்றியும், அம்மங்கைதேவி என்ற ஒரு மகளும் இருந்தனள். இவர்களுள் முதல்வனாகிய விக்கிரமசோழன் கி. பி. 1108-ஆம் ஆண்டில் சோழமண்டலத்திற்கு இளவரசுப் பட்டங்கட்டப்பெற்றுத் தன் தந்தையிடம் அரசியல் நுட்பங்களைக் கற்றுவந்தான். இவன், தென் கலிங்க மன்னனாகிய தெலுங்கவீமன்மேல் ஒரு முறை படையெடுத்துச் சென்று அவனைப் போரிற்புறங்கண்டு வெற்றித்திருவுடன் திரும்பினான்[4] கி. பி. 1120-ல் நம் குலோத்துங்கன் விண்ணுல கெய்தியபின்னர் அரியணை யேறிச் சக்கரவர்த்தியாக முடிசூடிக்கொண்டு ஆட்சி புரிந்தவன் இவ்விக்கிரம சோழனேயாவன். இவனுக்குக் தியாக சமுத்திரம் அகளங்கன் முதலான வேறு பெயர்களும் உண்டு[5] புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர் இவ்வேந்தன்மீது ‘ விக்கிரமசோழனுலா' என்ற ஓர் உலாப் பாடியுள்ளனர். இம் மன்னன் இப்புலவர் பெருந்தகையைப் பெரிதும் பாராட்டி ஆதரித்துவந் தான்.

இரண்டாம் மகனாகிய இரண்டாம் இராசராசன் என்பான் கி. பி. 1077 முதல் 1078 வரை ஓராண்டு, வேங்கி நாட்டில் அரசப் பிரதிநிதியாயமர்ந்து அதனை அரசாண்டனன் ; பின்னர், தன் தந்தையிடத்தமர்ந்து அணுக்கத் தொண்டுகள் புரிதல்வேண்டுமெனச் சோழ மண்டலத்திற்குத் திரும்பிவந்துவிட்டான்.[6]

மூன்றாம் மகனாகிய வீரசோழன் என்பவன் தன் தமையனாகிய இரண்டாம் இராசராசனுக்குப் பின்னர் வேங்கி நாட்டிற்கு அரசப்பிரதிநிதியாக அமர்ந்தான்.[7]

அங்கு அவனது ஆட்சி பல ஆண்டுகள் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்று தெரிகிறது.

குலோத்துங்கனது மற்றை மக்களைப்பற்றிய வரலாறு இப்போது புலப்படவில்லை.

குலோத்துங்கன் சுற்றத்தினர்:
1. தந்தையைப்பெற்ற பாட்டன் ... விமலாதித்தன்.
2. தந்தையைப்பெற்ற பாட்டி ... குந்தவ்வை II.
3. தந்தை ... கீழைச்சளுக்கியனாகிய இராசராச நரேந்திரன்.
4. தாய் ... அம்மங்கைதேவி I.
5. உடன் பிறந்தாள் ... குந்தவ்வை III.
6. மனைவியர் ....மதுராந்தகி, ஏழிசைவல்லபி, தியாகவல்லி.
7. மக்கள் ...விக்கிரம சோழன், இராசராசன் வீரசோழன், அம்மங்கைதேவி II.
8. சிறிய தாதை ...விசயாதித்தன் VII.
9. தாயைப்பெற்ற பாட்டன் ...கங்கைகொண்ட சோழன் என்னும் இராசேந்திரசோழன் I.
10. அம்மான்மார் ...இராசாதிராசன் I. இரண்டாம் ராசேந்திரசோழன், மும்முடிச் சோழன், வீரராசேந்திரசோழன்.
11. அம்மான்சேய் ...அதிராசேந்திரன்.
12. முதல் மனைவியின் தந்தை ...இரண்டாம் ராசேந்திரன்.

----
[1]. க. பரணி- தா. 273. மு. கு. 5
[2]. க. பரணி - தா. 272.
[3]. S. I. I. Vol. III page 177.
[4]. -" போர்த்தொழிலால் ஏனைக் கலிங்கங்கள் ஏழினையும் போய்க்கொண்ட தானைத் தியாக சமுத்திரமேவிக்கிரமசோழனுலா- கண்ணி -
[5]. விக்கிரமசோழனுலா--கண்ணிகள் 59, 152, 152, 209, 216 (256, 284.
[6]. S. I. I. Vol. No. 39-A Grant of Virachoda. Do.
[7]. ௸ ௸
-----------

அதிகாரம் 11: குலோத்துங்கனுடைய அரசியல் தலைவர்கள்

குலோத்துங்கனது ஆளுகையில் அமைச்சர்களாகவும் படைத்தலைவர்களாகவும் திருமந்திர ஓலைநாயகமாகவும் திருமந்திர ஓலையாகவும் திருவாய்க் கேள்வியாகவும் புரவுவரித்திணைக்களத்தினராகவும் அமர்ந்து அரசாங்கத்தை இனிது நடத்திய அரசியல் அதிகாரிகள் எத்துணையோ பலர் ஆவர். அவர்களுட் சிலருடைய பெயர்கள் மாத்திரம் கல்வெட்டுக்களால் தெரிகின்றன. அன்னோருள் மூவரது வரலாற்றைச் சிறிது விளக்குதற் குரிய கருவிகள் கிடைத்துள்ளமையின் அவர்களைப் பற்றிய செய்திகளும் ஈண்டுச் சுருக்கமாக எழுதப்படுகின்றன.

1. கருணாகரத்தொண்டைமான் :- இவனது வரலாற்றைக் கலிங்கத்துப்பரணி ஒன்றே சிறிது கூறுகின்றது. அந்நூல் ஒன்றிலதேல் தமிழகத்தில் அக் காலத்தே பெருவீரனாய்ப் பெரும்புகழ் படைத்து விளங்கிய இக்குறுநில மன்னனது பெயரே பின்னுள்ளோர் தெரிந்துகொள்ளாதவாறு மறைந்தொழிந்திருக்கும் என்பது திண்ணம். இவன் பல்லவர் குலத்தில் தோன்றிய ஒரு சிற்றரசன். இவன், நுண்ணறிவிலும் கல்வி கேள்விகளிலும் சிறந்தவனாயிருந்தமையின் நம் குலோத்துங்கனது அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாக முதலில் அமர்த்தப்பட்டான். பின்னர், தன் சீரிய ஆற்றலாற் படிப்படியாக உயர்நிலையை எய்தி இறுதியில் வேந்தனது அமைச்சர் தலைவனாகவும் படைத்தலைவர்களுள் முதல்வனாகவும் ஆயினான். இவனே, வடகலிங்கப் போர்க்குத் தலைமைப் படைத்தலைவனாகச் சென்று, போர்நடத்தித் தன் அரசனாகிய குலோத்துங்க சோழற்கு வாகைமாலை சூட்டியவன். குலோத்துங்கன் எய்திய பெரும்புகழுக்குச் சிறந்த காரணமாயிருந்தோருள் இவன் முதன்மையானவன் என்று சிறிதும் ஐயமின்றிக் கூறலாம். கவிச்சக்கரவர்த்தியாகிய சயங்கொண்டாரும் இவனை 'வண்டையர் அரசன் அரசர்கள் நாதன் மந்திரி-உலகுபுகழ் கருணாகரன்[1] எனவும், 'கலிங்கப் பரணி' நம் காவலனைச் சூட்டிய தோன்றல்[2] எனவும் புகழ்ந்துள்ளார். இவனது அரிய அரசியல் ஊழியத்தைப் பெரிதும் பாராட்டி அதற்குரிய அறிகுறியாக வேள்' ‘தொண்டைமான்' ஆகிய பட்டங்கள் குலோத்துங்க சோழனால் இவனுக்கு வழங்கப்பட்டன. இவன் இத்தகைய சிறப்பினை எய்திக் குலோத்துங்கனது அரசியலைப் பெருமையுறச் செய்தது இவ்வேந்தனது ஆட்சியின் பிற்பகுதியிலேயாகும். இவன், குலோத்துங்கனது மகனாகிய விக்கிரம சோழனது ஆளுகையிலும் இருந்துள்ளான் என்பது விக்கிரம சோழனுலாவினால் அறியப்படுகின்றது.[3]. இவன் வாழ்ந்த ஊர் வண்டை என்பர் ஆசிரியர் சயங்கொண்டார். அவ்வூர், சோழமண்டலத்தில் குலோத்துங்க சோழவள நாட்டைச்சார்ந்த திருநறையூர் நாட்டிலுள்ள வண்டாழஞ்சேரியாகும் என்று ஒருகல்வெட்டு உணர்த்துகின்றது.[4] அஃது இப்போது வண்டுவாஞ்சேரி என்ற பெயரோடு தஞ்சாவூர் ஜில்லாவில் கும்பகோணம் தாலூகாவிலுள்ள நாச்சியார் கோயிலிலிருந்து குடவாசலுக்குச் செல்லும் பெருவழியிலுள்ளது. வண்டாழஞ்சேரி என்பது வண்டுவாஞ்சேரி என்று பிற்காலத்தில் மருவி வழங்கிவருகின்றது.

இவன், சிவபெருமானிடத்தில் அளப்பரிய பேரன் புடையவனாய்த் திருவாரூரில் அரிய திருப்பணிகள் செய்துள்ளனன். இவன் இறுதியில் திருவாரூரில் தியாகேசரது திருவடிகளிற் கலந்தனன் என்றும் தியாகேசரது திருப்பெயர்களுள் கருணாகரத் தொண்டைமான் என்பதும் ஒன்று என்றும் திருவாரூர் உலாக் கூறுகின்றது. இதனால், இவன் அப்பெருமானிடத்துக் கொண்டிருந்த அன்பின் முதிர்ச்சி ஒருவாறு விளங்கும்.

2. அரையன் மதுராந்தகனான குலோத்துங்க சோழ கேரளராசன் :- இவன் சோழமண்டலத்தில் மண்ணி நாட்டிலுள்ள முழையூரின் தலைவன் ; குலோத் துங்கசோழனது படைத்தலைவர்களுள் ஒருவன். அரசனால் கொடுக்கப்பெற்ற குலோத்துங்க சோழகேரளராசன் என்ற பட்டம் எய்தியவன் ; குலோத்துங்கன் சேரர் களோடு நடத்திய போர்க்குப் படைத்தலைமை வகித்துச் சென்று அதில் வெற்றிபெற்றவன் ; இவ்வேந்தனால் சேரமண்டலத்தில் கோட்டாற்றில் நிறுவப்பெற்ற நிலைப் படைக்குத் தலைவனாயிருந்தவன். இவன் கோட்டாற்றில் தங்கிய நாட்களில் அங்கு ' இராசேந்திர சோழேச்சுரம்' என்ற கோயில் எடுப்பித்துள்ளான்.[5] அதற்கு நிபந்தங் களுக்காகத் தேவதான இறையிலியும் குலோத்துங்க சோழனால் விடப்பட்டுள்ளது. இதனால், இவன் சிவ பெருமானிடத்தில் பெரிதும் ஈடுபாடுடையவனாய் இருந்தனன் என்பது நன்கு விளங்குகின்றது.

3. மணவிற் கூத்தனை காலிங்கராயன் :- இவன் தொண்டைமண்டலத்திலுள்ள இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய மணவிற்கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவன் ; குலோத்துங்கனது ஆட்சியின் பிற்பகுதியில் படைத்தலைவனாயமர்ந்து பெரும் புகழ் எய்தியவன் ; குலோத்துங்கன் வேனாடு, மலைநாடு, பாண்டி நாடு, வடநாடு முதலியவற்றோடு நிகழ்த்திய போர்களில் படைத்தலைமை வகித்து வெற்றியுற்று, அதனால் தன் அரசனுக்கு என்றும் நிலைபெறத்தக்க புகழையுண்டுபண்ணியவன்.[6] இவனது போர்வன்மையையும் பெருமையையும் நன்குணர்ந்த குலோத்துங்கன் இவனுக்குக் ' காலிங்கராயன்' என்ற பட்டம் அளித்தான்.

இவன், தில்லையம்பலத்தில் கடம்புரியும் இறைவனிடத்துப் பேரன்பு பூண்டொழுகி, ஆண்டு இயற்றியதிருப்பணிகள் பல ; அவற்றுள் தில்லையம்பலம் பொன் வேய்ந்தமையும், அங்கு நூற்றுக்கால்மண்டபம், பெரிய திருச்சுற்று மாளிகை, தேவாரம் ஓதுதற்குரிய மண்டபம், சிவகாமகோட்டம் முதலியவற்றைக் கட்டுவித்தமையும் சிறந்தனவாம். அன்றியும், இவன் தியாகவல்லி முதலான ஊர்களைப் பொன்னம்பலவாணருக்குத் தேவதான இறையிலியாகவிட்டிருக்கின்றனன். சமயகுரவருள் ஒரு வராகிய திருநாவுக்சரசு அடிகளை ஆட்கொண்டருளிய திருவதிகை வீரட்டானேச்சுரர் திருக்கோயிலில் இவன் செய்துள்ள அருந்தொண்டுகள் பலவாகும். அங்குக் காம கோட்டம் எடுப்பித்தும், பொன்வேய்ந்தும், ஆடரங்கும் வேள்விச்சாலையும் அமைப்பித்தும், தேவதான இறையிலிவிடுத்தும் செய்த அருந்தொண்டுகள் அளவிறந்தன என்பர். இவற்றால் இவனது சிவபத்தியின் மாட்சி இத் தகையதென்று நன்கு புலப்படுகின்றதன்றோ? இனி, இவன் சைவசமயத்திற்குப் புரிந்துள்ள அரும்பணிகளுட் சிறந்தது மூவர் அருளிய தேவாரப் பதிகங்களைச் செப் பேடுகளில் எழுதுவித்துத் தில்லையம்பதியிற் சேமித்து வைத்தமையேயாகும்.[7]' இவன் இவ்வாறு ஆற்றிய அரும் பெருந்தொண்டுகளை விளக்கக்கூடிய பல வெண்பாக்கள் தில்லையம்பதியிலும் திருவதிகையிலும் உள்ள கோயில்களில் வரையப்பட்டுள்ளன.[8]

இவன், விக்கிரம சோழன் ஆட்சியிலும் இத்தகைய உயர் நிலையிலே இருந்தனன் என்பது விக்கிரம சோழன் உலாவடிகளால் புலனாகின்றது.[9]

[1]. க. பரணி - தா. 430.
[2]. ௸ 522.
[3]. விக்கிரமசோழனுலா-நண்ணி - 69.
[4]. ஸ்வஸ்திஸ்ரீ கோ இராசகேசரிவன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று. ஜயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து எயில் நாட்டுத் திருவத்தியூராழ்வார்க்குச் சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவள நாட்டுத் திரு நறையூர் நாட்டு வண்டாழஞ் சேரியுடையான் வேளான கருணாகரனாரான தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு.' (S. I. I. Vol. IV. No. 862).
[5].S. I. I. Vol. III. No. 73.
[6]. S. I. I. Vol. IV No. 225.
[7]. S. I. I. Vol VI. No. 225 [தொகுதி 23
[8]. Ins. No. 369 of 1921; M. E. R. 1922; செந்தமிழ்த்
[9]. விக்கிரமசோழனுலா- கண்ணிகள் 78, 79.
-------------

அதிகாரம் 12 : குலோத்துங்கனுடைய அவைக்களப்புலவர்

இனி, குலோத்துங்கன் காலத்துச் சிறந்து விளங்கிய புலவர் பெருமான் கலிங்கத்துப் பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டார் ஆவர். இவரது வரலாற்றை அடியிற் சுருக்கி வரைவாம்.

இப்புலவர் பெருந்தகையார் சோழமண்டலத்திலே கொரடாச்சேரி புகைவண்டி நிலையத்துக்கு அண்மையிலுள்ள தீபங்குடி என்னும் ஊரின்கண் பிறந்த நல்லிசைப் புலவராவர். இவரது குலமும் சமயமும் நன்கு புலப்படவில்லை. இவர் பெரும் புலமை படைத்தவராய் நம் குலோத்துங்க சோழனைக் காணவேண்டி அவனது அவைக்களத்தை அடைந்தபோது அவ்வரசன் 'நமது. ஊர் யாது?' என்று வினவ,

செய்யும் வினையும் இருளுண் பதுவும்
      தேனும் நறவும் ஊனும் களவும்
பொய்யும் கொலையும் மறமுந் தவிரப்
      பொய்தீர் அற நூல் செய்தார் தமதூர்
கையும் முகமும் இதழும் விழியும்
      காலும் நிறமும் போலுங் கமலம்
கொய்யும் மடவார் கனிவா யதரங்
      கோபங் கமழும் தீபங் குடியே.

என்று தம்புலமைக்கேற்பப் பாடலால் விடைகூறினர். இச்செய்தி, தமிழ் நாவலர் சரிதையால் அறியப்படுகின்றது. அரசன் இவரது புலமைக்கு வியந்து தன் அவைக்களப்புலவராக இவரை இருக்கச் செய்தனன் என்று தெரிகிறது.

இவர் அரசனுக்கு விடைகூறிய பாடலில், பொய் கொலை முதலியன நீக்குதலையும், சமணர்க்குச் சிறந்த இரவுண்டல் தவிர்தலையும், தமதூர் சைனக்கடவுளின் தலமாயிருக்கும் சிறப்பையும் எடுத்துரைத்துப் புகழ்ந் திருத்தலால் இவர் சைனமதப் பற்றுடையவராயிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலப்படுகின்றது. இவர் தாம் பாடியுள்ள கலிங்கத்துப்பரணியில் கடவுள் வாழ்த்து என்ற பகுதியில் சிவபெருமான், திருமால், நான் முகன், சூரியன், கணபதி, முருகவேள், நாமகள், துர்க்கை , சத்த மாதர்கள் என்ற இன்னோர்க்கு வணக்கங்கூறியிருத்த லாலும் இவர்களுள் சிவபெருமானுக்கே முதலில் வணக்கங்கூறியிருத்தலாலும் இவர் பரணிபாடியகாலத்தில் சைவமதப் பற்றுடையவராக மாறி இருத்தல் வேண்டுமென்பது நன்கு விளங்குகின்றது. ஆகவே, இவர் முதலில் சைன மதப் பற்றுடையவராயிருந்து சைவமதத் தினனாகிய குலோத்துங்கசோழனையடைந்து அவனது அவைக்களப் புலவராயமர்ந்த பின்னர், சைவமதப் பற்றுடையவராயினார் போலும்.

இனி, இப்புலவர் தம்முடன் வாதம்புரிவான் போந்த தென்னாட்டுப்புலவர் சிலரை வென்ற காரணம் பற்றி, 'சயங்கொண்டார்' என்றழைக்கப் பெற்றனர் என்பர். ஆயின் இவரது இயற்பெயர் யாதென்பது இப்போது தெளியக்கூடவில்லை.
'கலிங்கரைத் தொலைத்து வாகைமிலைந்த குலோத்துங்கன் இப்புலவரை நோக்கி, ' புலவீர்! யானும் சயங் கொண்டானாயினேன்' என்றனன். உடனே புலவர், ' அங்ஙனமாயின், சயங்கொண்டானைச் சயங்கொண்டான் பாடுதல் மிகப் பொருத்தமுடைத்தன்றோ!' என உரைத்துப்போய், சின்னாட்களில் ' கலிங்கத்துப்பரணி' என்ற ஓர் அரிய நூலை இயற்றிவந்து அரசனது அவைக்களத்தே அரங்கேற்றினர். அப்போது அப்பரணி நூற் பாடல்களைப் பரிவுடன் கேட்டுக்கொண்டு வீற்றிருந்த வேந்தர்பெருமான் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும். பரிசிலாகப் பொற்றேங்காய்களை ஒவ்வொன்றாக உருட்டித்தந்து இவரையும் இவரியற்றிய நூலையும் பெரிதும் சிறப்பித்தனன்.

இக்கதை எவ்வாறாயினும், இப்புலவர், தாம் அரசன் பாற்கொண்ட பேரன்பின் பெருக்கத்தால் அவனது கலிங்கவெற்றியைச் சிறப்பிக்கக் கருதி, ' கலிங்கத்துப் பரணி' என்ற நூல் பாடினரெனக் கோடலில் இழுக் கொன்றுமில்லை. பரணி நூல்கேட்ட வளவர்பெருமானும் புலவர்க்குத் தக்கவாறு பரிசில் அளித்துப் பாராட்டியிருத்தலும் கூடும்.

இனி, இவரியற்றிய பரணி சொற்பொருள் நயங்கள் நன்கமையப்பெற்று நிலவுதலால், இவரைப் 'பரணிக் கோர் சயங்கொண்டான் ' என்று முற்காலத்திய அறிஞர் புகழ்ந்துரைப்பாராயினர். சிலப்பதிகார உரையாசிரிய ராகிய அடியார்க்கு நல்லாரும் இப்பரணியிலுள்ள சில பாடல்களைத் தம் உரையில் மேற்கோளாக எடுத்து ஆண்டிருத்தலோடு இதன் ஆசிரியராகிய சயங்கொண்டாரைக் 'கவிச்சக்கரவர்த்தி' என்றும் புகழ்ந்துள்ளார். புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன் மகனும் தம்பால் தமிழ் நூல்களைக் கற்றுத் தெளிந்த வனுமாகிய இரண்டாம் குலோத்துங்க சோழன் மீது தாம் பாடிய பிள்ளைத்தமிழில் ' பாடற் பெரும்பரணி தேடற் கருங்கவி கவிச்சக்கரவர்த்தி பரவச் செஞ்சேவகஞ்செய்த சோழன் திருப்பெயர செங்கீரையாடியருளே' என்று கூறி நம் கலிங்கத்துப்பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டாரைக் கவிச்சக்கரவர்த்தி என்று மனமுவந்து பாராட்டியிருத்தல் ஈண்டு அறியத்தக்கதொன்றாம். விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராசசோழன் ஆகிய மூன்று மன்னர் களாலும் பெரிதும் பாராட்டப்பெற்றுக் கவிக்சக்கரவர்த்தி என்ற பட்டமும் எய்தி மிக உயரிய நிலையில் வீற்றிருந்த நல்லிசைப் புலவராகிய ஒட்டக்கூத்தர் ஆசிரியர் சயங்கொண்டாரிடத்து எத்துணை மதிப்பும் அன்பும் உடையவராயிருந்தனரென்பது மேற்கூறிய வற்றால் இனிது விளங்கா நிற்கும்.

இனி, இப்பரணியில் பண்டைச் சோழவேந்தர் களின் வரலாறுகள் கூறப்பட்டிருத்தலால் சோழரைப் பற்றி ஆராய்வார்க்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்பது திண்ணம். அன்றியும், பண்டைக்கால வழக்க ஒழுக்கங்களுள் பலவற்றை இந்நூலிற் காணலாம்.

நமது சயங்கொண்டார் வணிகர்மீது ' இசையாயிரம்' என்ற நூலொன்று பாடியுள்ளனரென்று தமிழ் நாவலர் சரிதை உணர்த்துகின்றது. அந்நூல் இது போது கிடைக்கப் பெறாமையின் இறந்ததுபோலும். அன்றியும் ' விழுப்பரையர் ' என்ற ஒரு தலைவர்மீது ' உலாமடல்' என்னும் நூலொன்று பாடியுள்ளனர் என்று தெரிகிறது. சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் நமது சயங்கொண்டாரேயாவர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

இனி, கவிகுமுதசந்திர பண்டிதராகிய திருநாராயண பட்டரென்பார் கி. பி. 1097-ல் குலோத்துங்க சோழ சரிதை என்ற நூலொன்று இவ்வேந்தன் மீது இயற்றி, புதுச்சேரியைச் சார்ந்த திரிபுவனியென்ற ஊரில் இறையிலிநிலம் பரிசிலாகப் பெற்றிருப்பது ஈண்டு அறியத்தக்கதாகும்.[1]

[1]. Ins. 198 of 1919.
-------------

அதிகாரம் 13 : குலோத்துங்கனது அரசியல்

நம் குலோத்துங்கனது அரசியல் முறைகளை இனி விளக்குவாம். பொதுவாக நோக்குமிடத்துப் பழைய தமிழ் நூல்களாலும் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறியப்படும் அரசாங்க முறைகள் எல்லாம் நம் மன்னர் பெருமானாகிய குலோத்துங்கனுக்கும் உரியவையென்றே கூறலாம். அவற்றை எல்லாம் ஆராய்ந்து ஒன்றையும் விடாது எழுதப்புகின் அவை ஒரு தனி நூலாக விரியும் என்பது திண்ணம். ஆதலால், அவ்வரசியல் முறைகளை மிகச் சுருக்கமாக எழுதி விளங்க வைத்தலே எமது நோக்கமாகும்.

1. இராச்சியத்தின் உட்பிரிவுகள் :-- நமது வேந்தர் பெருமானது ஆணையின் கீழ் அடங்கியிருந்த சோழ இராச்சியம் அக்காலத்தில் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றுள், சோழமண்டலம், சயங் கொண்ட சோழமண்டலம், இராசராசப் பாண்டிமண் டலம், மும்முடி சோழமண்டலம், வேங்கைமண்டலம், மலைமண்டலம், அதிராசராசமண்டலம் என்பன சிறந்தவை. இவற்றுள், சோழமண்டலம் என்பது தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி ஜில்லாக்களையும் தென்னார்க்காடு ஜில்லாவின் தென்பகுதியையும் தன்னகத்துக்கொண்டுள்ள நிலப்பரப்பாகும் ; சயங்கொண்ட சோழமண்டலம் என்பது தென்னார்க்காடு ஜில்லாவின் பெரும்பகுதியையும் செங்கற்பட்டு, வடவார்க்காடு, சித்தூர் ஜில்லாக்களையும் தன்னகத்துக்கொண்டது ; இராசராசப் பாண்டி மண் டலம் என்பது மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களைத் தன்னகத்துக்கொண்டது : மும்முடி சோழமண்டலம் என்பது ஈழமாகிய இலங்கையாகும் ; வேங்கைமண்டலம் என்பது கீழைச்சளுக்கிய நாடாகும்; மலைமண்டலம் என்பது சேர நாடாகும் ; இது திருவாங் கூர் இராச்சியத்தையும் மலையாளம் ஜில்லாவையும் சேலம் ஜில்லாவின் ஒரு பகுதியையும் தன்னகத்துக் கொண்டது ; அதிராசராசமண்டலம் என்பது கொங்கு நாடாகும் ; இது கோயம்புத்தூர் ஜில்லாவையும் சேலம் ஜில்லாவின் ஒரு பகுதியையும் தன்னகத்துக் கொண்டது.

இனி, ஒவ்வொரு மண்டலமும் பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முதல் இராசராச சோழன் காலத் தில் சோழ்மண்டலம், இராசேந்திர சிங்கவளநாடு, இராசாசிரயவளநாடு, நித்தவிநோதவளநாடு, கூத்திரிய சிகாமணி வளநாடு, உய்யக்கொண்டார் வளநாடு, அருமொழிதேவ வளநாடு, கேரளாந்தக வளநாடு, இராசராச வளநாடு, பாண்டிய குலாசனி வளநாடு என்னும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.[1] பெரும்பான்மையாக நோக்குமிடத்து, ஒவ்வொரு வளநாடும் இரண்டிரண்டு பேராறுகளுக்கு இடையில் அமைந்திருந்த நிலப்பரப்பாகும். உதாரணமாக, உய்யக்கொண்டார் வளநாட்டை எடுத்துக்கொள்வோம். அஃது அரிசிலாந் றுக்கும் காவிரியாற்றுக்கும் இடையிலுள்ள நிலப்பரப்பு ஆகும் என்பது தஞ்சையிலுள்ள இராசராசேச்சுரத்திற காணப்படும் ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.[2] இங்குக் குறிக்கப்பெற்றுள்ள வளநாடுகளின் பெயர்கள் எல்லாம் முதல் இராசராசசோழனுடைய இயற்பெயரும் பட்டப் பெயர்களுமேயாகும். நம் குலோத்துங்க சோழன் தன் ஆட்சிக் காலத்தில் இவ்வளநாடுகளுக்குரிய பெயர்களை நீக்கிவிட்டுத் தன் பெயர்களை அவற்றிற்கு இட்டனன். க்ஷத்திரிய சிகாமணி வளநாடு என்பது குலோத்துங்கசோழ வளநாடு என்னும் பெயருடையதாயிற்று. இராசேந்திர சிங்க வளநாடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது ; அவற்றுள் மேற்கிலுள்ள பகுதி உலகுய்யவந்த சோழ வளநாடு எனவும் கிழக்கிலுள்ள பகுதி விருதராச பயங்கர வளநாடு எனவும் வழங்கப்பட்டன. உலகுய்யவந்தான், விருதராசபயங்கரன் என் பன நம் குலோத்துங்கசோழனுடைய சிறப்புப் பெயர்கள் என்பது சலிங்கத்துப்பரணியால் அறியப்படுஞ் செய்திபாகும்[3]. பிற மண்டலங்களும் இங்ஙனமே பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. தொண்டைமண்டலமாகிய சயங்கொண்ட சோழமண்டலம் மாத்திரம் முன்போலவே இருபத்துநான்கு கோட்டங்களாகப்பிரிக்கப்பட்டிருந்தது.

இனி, ஒவ்வொரு வளநாடும் பல நாடுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. வளநாட்டின் உட்பகுதிகளாகிய நாடுகளுள் சில, கூற்றங்கள் எனவும் வழங்கிவந்தன. ஒவ் வொரு நாடும் சில தனியூர்களாகவும் பல சதுர்வேதி மங்கலங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சதுர்வேதி மங்கலமும் சில சிற்றூர்களைத் தன்னகத்துக் கொண்டு விளங்கிற்று.

2. அரசனும் இளவரசனும் :- இங்ஙனம் வகுக்கப்பட்டிருந்த சோழ இராச்சியத்திற்குச் சோழ அரசனே தலைவன் ஆவன். அரசியலில் தலைமை வகித்து எவற்றிற்கும் பொறுப்புடையவனாய் நீதி தவறாது ஆட்சிபுரியும் கடமை இவ்வேந்தனுக்கேயுரியதாகும். சோழமன்னர் கள் பட்டத்திற்குரிய தம் புதல்வர்க்கு இளவரசுப் பட்டம் கட்டி அவர்களை அரசியல் முறைகளில் நன்கு பழக்கிவருவது வழக்கம். இதற்கேற்ப, நம் குலோத்துங்கன் தனது மூத்தமகனாகிய விக்கிரம சோழனுக்குத் தன் ஆட்சிக்காலத்தில் இளவரசுப்பட்டம் கட்டி அரசியல் நுட்பங்களையுணர்ந்து வன்மையெய்துமாறு செய்தான். இவ்விக்கிரம சோழனே குலோத்துங்கனுக்குப் பின்னர் முடிசூடியவன் என்பது முன்னரேயுணர்த்தப்பட்டது.

3. உடன் கூட்டம் ;- அரசன், தான் விரும்பிய வாறு எதனையும் நடத்தற்குரிமையுடையவனெனினும் பல அதிகாரிகளுடனிருந்து ஆராய்ந்தே காரியங்களை நடத்துவது வழக்கம்.[4] இவ்வதிகாரிகளை 'உடன்கூட்டத்ததிகாரிகள்' என்று கல்வெட்டுக்களும் செப்பேடு களும் கூறுகின்றன. இவர்கள் அரசனால் அளிக்கப் பெற்ற பலவகைச் சிறப்புக்களையும் எய்திப் பெருமையுற்றவர்கள்.

4. அரசியல் அதிகாரிகளும் அவர்கள் கடமைகளும் :--நம் குலோத்துங்கனது ஆளுகையில் பல்வகைத் துறைகளிலும் தலைவர்களாக அமர்ந்து அவனது ஆட்சி நன்கு நடைபெறச் செய்தோர், அமைச்சர் படைத் தலைவர், நாட்டதிகாரிகள், நாட்டையளப்போர், நாடு காவலதிகாரி புரவுவரித்திணைக்களம் வரிப்புத்தகம், பட்டோலைப் பெருமான், விடையிலதிகாரி, திருவாய்க் கேள்வி, திருமந்திர ஓலை, திருமந்திர ஓலைநாயகம் என்ற அரசியல் அதிகாரிகள் ஆவர்.[5]

இவர்களுள், படைத்தலைவர் அரசனது காலாட் படை, குதிரைப்படை, யானைப்படை இவற்றிற்குத் தலைமைவகித்துப் போர் நிகழுங்கால் அதனை வெற்றியுற நடத்துவோர். நாட்டதிகாரிகள் ஒவ்வொரு உள்நாட்டிற்கும் தலைவர்களாய் விளங்குவோர் ; இவர்கள் தம்தம் நாட்டைச் சுற்றிப்பார்த்துக் குடிகளின் நலங்கள், அற நிலையங்கள், நியாயம் வழங்குமுறை முதலானவற்றைக் கண்காணித்து வருவது வழக்கம். நாட்டையளட்போர் ஒவ்வொரு நாட்டையும் கூறுபட அளவிடுவோர். நாடு காவலதிகாரி என்போன் நாட்டிலுள்ள ஊர்களில் களவு, கலகம் முதலான தீச்செயல்கள் நிகழாமல் காத்து வந்த ஒரு தலைவன் ஆவன். புரவுவரித் திணைக்களம் என்பது நிலவரி சம்பந்தமுடைய அதிகாரிகள் பலரை உறுப்பினராகக் கொண்ட நிலவரிக்கழகமாகும். இஃது ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தது. வரிப்புத்தகம் என்போர் அரசனுக்கு ஒவ்வோர் ஊரினின்றும் வருதற்குரியனவும் நீக்கப்பட்டனவுமாகிய அரசிறைக்குக் கணக்குவைப்போர். பட்டோலைப் பெருமான் நாள்தோறும் நடப்பவற்றை நிகழ்ச்சிக்குறிப்பில் எழுதிவைப்போன். விடையிலதிகாரி என்போர், கிராமசபைகளினின்றும் பிற அதிகாரிகளிடத் திருந்தும் வரும் ஓலைகளைப் படித்துப்பார்த்து அவற்றிற்குத் தக்கவாறு விடையெழுதியனுப்புவோர் ; அன்றியும் அரசனது ஆணைத்திருமுகத்தை ஊர்ச்சபைகளுக்கும் பிற அதிகாரிகளுக்கும் முறைப்படி பணிமக்கள் வாயிலாக அனுப்புவோரும் இவர்களேயாவர். திருவாய்க் கேள்வி என்போர் அரசன் திருவாய் மலர்ந்தருளிய வற்றைக் கேட்டுவந்து திருமந்திர ஓலையிடம் அறிவிப்போர். திருமந்திர ஓலை என்போர் அரசனது ஆணையை எழுதுவோர். இவர்களுக்குத் தலைவராயிருப்போர் திருமந் திரவோலை நாயகம் எனப்படுவார்.

இனி, இவர்களேயன்றி அரச காரியங்களை முட்டின்றி நடத்தும் கரும மாராயம் என்போரும் தலைநகரிலிருந்து வழக்காராய்ந்து நீதி செலுத்தும் அறங்கூறவையத்தாரும் அந்நாளில் இருந்தனர்.

ஆங்கிலேயராட்சியில் அரசாங்க அதிகாரிகளுள் சிறந்தோர்க்கு அவர்களது ஆற்றலையும் அரசியல் ஊழியத்தையும் பாராட்டி, 'ராவ்பகதூர் ' 'திவான்பகதூர்' 'சர்' 'C. I. E. ' முதலான பட்டங்கள் அளித்து அரசாங்கத்தார் அவர்களை மகிழ்வித்ததுபோல, பதினொன்றாம் நூற்றாண்டில் நம் தமிழ்கத்தில் முடிமன்னனாக வீற்றிருந்து செங்கோல் ஓச்சிய நம் குலோத்துங்கனும் தன் அரசியல் அதிகாரிகளுக்குப் பல பட்டங்கள் வழங்கி அவர்களைப் பாராட்டியுள்ளான் என்பது ஈண்டு உணரத்தக்கது. அங்ஙனம் அரசனால் அளிக்கப்பெற்ற பட்டங்கள், மூவேந்தவேளான், கேரளராசன், காலிங்க ராயன், தொண்டைமான், வாணகோவரையன், பல்லவ ராயன், இளங்கோவேள், காடவராயன், கச்சிாரயன், சேதிராயன், விழுப்பரையன் முதலியனவாகும். இப்பட்டங்களை அரசன் பெரும்பாலும் தன் பெயர்களோடு இணைத்தே வழங்குவது வழக்கம்.

இதன் உண்மையைக் குலோத்துங்கசோழ கேரள ராசன், இராசேந்திர சோழ மூவேந்தவேளான், விருத ராசபயங்கர வாணகோவரையன், வீரசோழப் பல்லவ ராயன், சனநாதக் கச்சிராயன் என்று வழங்கப்பெற்றுள்ள பட்டங்களால் நன்குணரலாம். அன்றியும் பெருந்தரம், சிறுதரம் என்ற இரண்டு பட்டங்கள் இருத் தலைக் கல்வெட்டுக்களில் காணலாம். இவை அதிகாரி களது உயர்வு தாழ்வுகளாகிய வேறுபாடுகள் குறித்து இக்காலத்தில் வழங்கப்பெறும் Gazetted and Non Gazetted officer's போன்ற இருபிரிவுகளாகும்.

5. அரசிறை :-அக்காலத்தில் குடிகள் தம் அரசனுக்குச் செலுத்திவந்த நிலவரி காணிக்கடன் என்று வழங்கப்பெற்றுள்ளது. இக் காணிக்கடன் விளையும் நெல்லின் ஒரு பகுதியாகவாதல் பொன்னும்காசுமாக வாதல் செலுத்தப்பெறுவது வழக்கம்.[6] இக்காணிக் கடனை ஊர்ச்சபையார் குடிகளிடத்திலிருந்து ஆண்டு தோறும் வாங்கி அரசனது தலைநகரிலுள்ள அரசாங்கக் கருவூலத்திற்கு அனுப்புவர். மூன்றாம் ஆண்டு தொடங்கியும் கடந்த ஈராண்டிற்கும் நிலவரி கொடாத வர் நிலங்கள் ஊர்ச்சபையாரால் பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்படுவது வழக்கம். அங்ஙனம் விற்றமையால் கிடைத்தபொருள் அரசாங்கத்தில் சேர்ப்பிக்கப் பெறும்.

இனி, நிலவரியேயன்றிக் கண்ணாலக்காணம், குசக்காணம், நீர்க்கூலி, தறியிறை, தரகு, தட்டாரப்பாட்டம் இடைப்பாட்டம், (இடைப்பூட்சி) ஓடக்கூலி, செக்கிறை,[7] வண்ணாரப்பாறை, நல்லா, நல்லெருது, நாடுகாவல், உல்கு ஈழம்பூட்சி முதலான பலவகை வரிகளும் இருந்துள்ளன.[8]

எனவே, அந்நாளில் பற்பல தொழில்களுக்கும் வரிகள் ஏற்பட்டிருத்தல் அறியத்தக்கது. வரிகளின் பெயர்கள் மிகுந்துள்ளமைபற்றி அரசாங்கவரிகள் அக்காலத்தில் மிகுந்திருந்தன என்று கருதற்கு இடமில்லை. ஒவ்வொரு தொழிலின் பெயரையும் சுட்டி வரிப்பெயர் குறிக்கப் பெற்றிருத்தலின் வரிப்பெயர்கள் மிகுந்து காணப்படு கின்றனவேயன்றி வேறில்லை. இந்நாளில் தொழில்வரி என்ற பொதுப்பெயரால் எல்லாத் தொழிலாளரிடத்தும் வரி வாங்கப்படுகின்றது. ஆகவே, இற்றைநாள் தொழில் வரி ஒன்றே எல்லாத் தொழில்களுக்குமுரிய பல்வகைத் தொழில் வரிகளையும் தன்னகத்து அடக்கிக்கொண்டு நிற்றல் காணலாம்.

கடன், கூலி, இறை, பாட்டம், பூட்சி என்பன வரிகளையுணர்த்தும் மொழிகளாம். கண்ணாலக்காணம் என்பது கல்யாணவரி என்றும் அது திருமண நாளில் மணமகனும் மணமகளும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய அரைக்கால் பணமேயாம் என்றும் ஈரோட்டி லுள்ள முதற் பராந்தக சோழன் கல்வெட்டு ஒன்று உணர்த்துகின்றது.[9]நாடுகாவல் என்னும்வரி பாடி காவல் எனவும் வழங்கும். இஃது ஊர்களைக் காத்தற்கு வாங்கிய ஒரு தனிவரியாகும். உல்கு என்பது சுங்க வரியாகும். ஈழம்பூட்சி என்பது கள் இறக்குதற்குச் செலுத்தவேண்டிய வரியாகும்.

6. நில அளவு :- ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஊர் களை முறையாக அளந்தாலன்றி அங்கு விளைநிலங்கள் எவ்வளவு உள்ளன என்பதும் அவற்றிற்குரிய நிலவரி பாகிய காணிக்கடன் குடிகளிடத்திலிருந்து அரசாங்கத் திற்கு எவ்வளவு வரவேண்டும் என்பதும் நன்கு புலப்பட மாட்டா. ஆதலால், சோழ இராச்சியம் முழுமையும், முதல் இராசராச சோழனது ஆட்சிக்காலத்தில் ஒரு முறையும், முதற் குலோத்துங்க சோழனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையும், மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும் அளக்கப்பட்டது.[10] இவை முறையே கி. பி. 1001, கி. பி. 1086, கி. பி. 1216ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவையாகும்.

நிலம் அளந்தகோலை 'உலகளந்தகோல்' என்று வழங்குவர். இக்கோல் பதினாறுசாண் நீளமுடையது. நிலங்களை நீர்நிலம், கொல்லை, காடு என்று வகுத்துள்ளனர். இவற்றுள், நீர் நிலம் கொல்லை என்பன முறையே நன்செய் புன்செய்களாகும். நிலங்கள் நூறுகுழிகொண்டது ஒருமா ஆகவும் இருபதுமா கொண்டது ஒரு வேலியாகவும் அளக்கப்பெற்றன. வேலி ஒன்றுக்கு நூற்றுக்கல விளைவுள்ளதும் அதற்குக் கீழ்ப்பட்டதுமென நிலங்கள் இருதரமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்நாளில் நிலத்தின் எத்துணைச் சிறுபகுதியும் விடாமல் நுட்பமாக அளக்கப்பெற்றுள்ளது என்பது - 'இறையிலி நீங்கு நிலம் முக்காலை இரண்டுமாக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழ் அரையே இரண்டுமா முக்காணிக்கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிகைக்கீழ் நான்குமாவினால் இறைகட்டின காணிக்கடன்' என்பதனால் நன்கு விளங்கும். நிலத்தையளந்து எல்லையறிந்து அங்குப் புள்ளடிக்கல் நடுவது வழக்கம் என்பதும் பல கல்வெட் டுக்களால் அறியப்படுகின்றது.

7. இறையிலி :--நம் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்தில் வரி விதிக்கப்பெறாமல் ஒதுக்கப்பெற்ற நிலங்கள் யாவை என்பது முன்னரே விளக்கப்பட்டது. சைவ வைணவ திருக்கோயில்களுக்கு இறையிலியாக அளிக்கப்பட்ட நிலங்கள் தேவதானம் எனவும், சைன பௌத்த கோயில்களுக்கு அளிக்கப்பெற்றவை பள்ளிச் சந்தம் எனவும் பார்ப்பனர்க்கு விடப்பெற்றவை பிரம தேயம், பட்டவிருத்தி எனவும் அறநிலையங்கட்கு விடப்பெற்றவை சாலாபோகம் எனவும் வழங்கப் பெற்றன. புலவர்க்கு அளிக்கப்பெற்றது புலவர் முற்றூட்டு எனப்படும்.

8. நாணயங்கள்:- நம் குலோத்துங்கன் காலத்தில் பொன்னாலுஞ் செம்பாலுஞ் செய்யப்பெற்ற காசுகள் வழங்கிவந்தன. இக்காசுகளுள் சில இக்காலத்தும் சிற் சில விடங்களிற் கிடைக்கின்றன. அக்காலத்துச் சோழ மன்னர்களது நாணயங்கள் எல்லாம் ஒரே எடையுள்ளனவாகச் செய்யப்பட்டிருக்கின்றன என்று பழைய நாணயங்களை ஆராய்ந்து அரிய நூல் ஒன்று எழுதியுள்ள டாக்டர் கன்னிங்காம் என்ற துரைமகனார் வரைந்துள்னர். காய்ச்சி உருக்கினும் மாற்றும் நிறையும் குன் றாதது என்று அதிகாரிகளால் ஆராய்ந்து உறுதி செய்யப்பட்டதற்கு அடையாளமாகத் துளையிடப்பெற்ற துளைப் பொன்னும் அந்நாளில் வழங்கிற்று.[11]

9. அளவைகள் :- அக்காலத்தில் எண்ணல்,எடுத்தல், முகத்தல், நீட்டல் ஆகிய நான்கு வகைப்பட்ட அளவைகளும் வழக்கில் இருந்தன. இவற்றுள் எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும். மணி, பொன், வெள்ளி முதலான உயர்ந்த பொருள்கள், கழஞ்சு, மஞ்சாடி, குன்றி என்னும் நிறைகல்லாலும், செம்பு, பித்தளை, வெண்கலம், தரா முதலான தாழ்ந்த பொருள்கள் பலம் கஃசு என்னும் நிறைகல்லாலும் நிறுக்கப்பட்டுவந்தன. அரசாங்க முத்திரையிடப்பெற்ற நிறைகல் குடிஞைக்கல் எனப்படும். பொன்னின் மாற்றறிதற்குரிய ஆணியும் அப்போது இருந்தது என்பது ஈண்டு உணர்தற்குரியதாகும்.

இனி, செம்பு, பித்தளை முதலியவற்றால் செய்யப் பெற்றவை, இரண்டாயிரம் பலம், மூவாயிரம் பலம் என்று நிறுக்கப்பட்டுள்ள செய்தி, கல்வெட்டுக்களால் வெளியாகின்றது.[12]ஆகவே, அந்நாளில், சேர், வீசை, தூக்கு, மணங்கு ஆகியவற்றால் நிறுக்கும் வழக்கமின்மை நன்கு புலப்படுகின்றது.

நெல், அரிசி, உப்பு, நெய், பால், தயிர் முதலியன செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி, பதக்கு, தூணி, கலம் என்னும் முகக்குங் கருவிகளால் அளக்கப்பட்டன.[13]சர்க்கரை, மிளகு, கடுகு, புளி முதலியன பலத்தால் நிறுக்கப்பட்டன. அரசாங்கமுத்திரை இடப் பெற்ற மரக்காலும் இருந்தது. தோரை, விரல், சாண், முழம் என்பவற்றால் நீட்டல் அளவை நடைபெற்றது.

எடுத்தல் அளவை :–

2 குன்றி = 1 மஞ்சாடி
20 மஞ்சாடி = 1 கழஞ்சு

முகத்தல் அளவை :-
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 நாழி
8 நாழி = 1 குறுணி
2 குறுணி = 1 பதக்கு
4 குறுணி = 1 தூணி.
12 குறுணி = 1 கலம்.

10. கிராமசபை :- நம் குலோத்துங்கன் காலத்தில் ஊர்கள் தோறும் சபைகள் இருந்தன. இச்சபை பின்ரே அங்கு நடைபெறவேண்டிய எல்லாவற்றையும் நிறைவேற்றிவந்தனர். சுருங்கச்சொல்லுமிடத்து அந்நாளில் கிராம ஆட்சி முழுமையும் இச்சபையாரால்தான் நடத்தப்பெற்று வந்தது எனலாம். இச்சபையின் உறுப்பினர் எல்லோரும் கிராமத்திலுள்ள பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்றவர் ஆவர். அக்காலத்தில் தனியூர்களும் பல சிற்றூர்களடங்கிய சதுர்வேதி மங்கலங்களும் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பகுதியையும் குடும்பு (Ward) என்று வழங்கினர். ஒவ்வொரு குடும்பிற்கும் பிரதிநிதியாக ஒவ்வோர் உறுப்பினரே தேர்ந்தெடுக்கப்பெற்றனர். செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள உத்தரமேரூர் முப்பது குடும்புகளையுடையதாகவும் தஞ்சாவூர் ஜில்லாவில் செந்தலை என்று தற்காலத்து வழங்கும் சந்திரலேகைச் சதுர்வேதிமங்கலம் சற்றேறக்குறைய அறுபது குடும்புகளையுடையதாகவும் இருந்தன. எனவே, உத்தரமேரூரிலிருந்தசபை முப்பது உறுப்பினரையுடையதாயிருந்தது என்பதும் சந்திரலேகைச் சதுர்வேதிமங்கலத்திருந்தசபை அறுபது உறுப்பினர்களையுடையதாயிருந்தது என்பதும் நன்கு விளங்குகின்றன. ஆகவே சபையின் உறுப்பினரது எண் அவ்வவ்வூரின் பெருமை சிறுமைக்கு ஏற்றவாறு குறிக்கப்பெறும் எனத் தெரிகிறது.

இனி, சபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறும் உரிமையுடையோர் காணிக்கடன் செலுத்தற்கேற்ற கால்வேலி நிலமும் சொந்த மனையும் உடையவராகவும் சிறந்த நூல்களைக்கற்ற அறிஞராகவும் காரியங்களை நிறைவேற்றுவதில் வன்மையுடையவராகவும் அறநெறியில் ஈட்டிய பொருளைக்கொண்டு தூயவாழ்க்கை நடத்துவோராகவும் முப்பத்தைந்துக்குமேல் எழுபத் தைந்துக்குட்பட்ட வயதினராகவும் மூன்று ஆண்டுகட்கு உள்பட்டு எந்த நிறைவேற்றுக் கழகத்திலும் உறுப்பினராக இருந்திராதவராகவும் இருத்தல்வேண்டும் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது.

இனி, எந்தச் சபையிலாவது உறுப்பினராகவிருந்து கணக்குக்காட்டாதிருந்தவரும், ஐவகைப் பெரும்பாகங்கள் புரிந்தோரும், கிராம குற்றப்பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டவரும், பிறர்பொருளைக் கவர்ந்தோரும், கையெழுத்திடலாகிய கூடலேகை (Forgery) செய்தோரும், குற்றங்காரணமாகக் கழுதை மீது ஏற்றப்பட்டவரும், எத்தகைய கையூட்டுக் (Brille) கொண்டோரும் கிராமத் துரோகி என்று கருதப்பட் டோரும் இங்குக் குறிக்கப்பெற்றோர்க்கு உறவினரும் தம் வாழ்நாள் முழுமையும் கிராமசபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெறுதற்குத் தகுதியற்றவராவர்.[14]

பொதுமக்கள், கிராம சபையின் உறுப்பினரை ஆண்டுதோறும் குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுப்பது வழக்கமாகும். தேர்ந்தெடுத்தற்குக் குறிக்கப்பெற்ற நாளில் அரசாங்க அதிகாரி ஒருவர், சபை கூடுதற்கு அமைக்கப்பட்டுள்ள மாளிகையில் அவ்வூரிலுள்ள இளைஞர் முதல் முதியோர் ஈறாகவுள்ள எல்லோரையும் கூட்டுவர். அக்கூட்டத்தின் நடுவில் ஒரு குடம் வைக்கப்பெறும். அங்குள்ள நம்பிமாருள் வயது முதிர்ந்தார் ஒருவர் அக்குடததை எடுத்து அதனுள் ஒன்றும் இல்லை என்பதை எல்லோரும் அறியக்காட்டிக் கீழேவைப்பர். உடனே, அவ்வூரில் ஒவ்வொரு குடும்பிலுள்ளாரும் தமக்குத் தகுதியுடையார் என்று தோன்றுவோர் பெயரைத் தனித்தனி ஓலையில் எழுதி, அவ்வோலைகளை ஒருங்குசேர்த்து, அவை எக்குடும்பிற்குரியவை என்பது நன்கு புலப்படுமாறு அக்குடும்பின் பெயர் வரையப்பெற்ற வாயோலையொன்றைச் சேர்த்துக்கட்டி அக்குடத்தில் இடுவர். இங்ஙனமே எல்லாக்குடும்பினரும் குடவோலை இடுவர். பின்னர், அம்முதியார் அங்கு நடை பெறுவதையுணராத ஓர் இளைஞனைக்கொண்டு அக்குடத்தினின்றும் ஓர் ஓலைக்கட்டை எடுப்பித்து, அதனை அவிழ்த்து வேறு ஒரு குடத்திலிட்டுக் குலுக்கி, அவற்றுள் ஓர் ஓலையை அச்சிறுவனைக்கொண்டு எடுக்கச் செய்து, அதனைத் தாம் பெற்று, அங்குள்ள கரணத்தான் (கணக்கன்) கையிற்கொடுப்பார். அவன் தன் ஐந்து விரல்களையும் விரித்து உள்ளங்கையில் அதனை வாங்கி, அவ்வோலையில் எழுதப்பெற்றுள்ள பெயரை அங்குள்ளோர் யாவரும் உணருமாறு படிப்பான். பின்னர் அங்குள்ள நம்பிமார் எல்லோரும் அதனை வாசிப்பர். அதன் பிறகு, அப்பெயர் ஓர் ஓலையின் கண் வரைந்து கொள்ளப்படும். அவ்வோலையிற் குறிக்கப்பெற்ற பெயருடையவரே அக்குடும்பிற்குரிய கிராமசபை உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர் ஆவர். [15]

இங்ஙனமே மற்றைக் குடும்புகளுக்குரிய உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பெறுவர். ஊரிலுள்ள எல்லாக் குடும்புகளுக்கும் உரிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தபின்னர், அவர்களுள் வயதிலும் கல்வியிலும் அறிவிலும் முதிர்ந்தோர் பன்னிருவரைச் சம்வத்சர வாரியராகத் தேர்ந்தெடுப்பர். மற்றையோருள் சிலர் தோட்டவாரியராகவும், சிலர் ஏரிவாரியராகவும், சிலர் பொன்வாரியராகவும், சிலர் பஞ்சவாரவாரியராகவும் ஏற்படுத்தப்படுவர். எனவே, கிராமசபை, சம்வத் சரவாரியம், தோட்டவாரியம், ஏரிவாரியம், பொன்வாரியம், பஞ்சவாரவாரியம் என்ற ஐந்து உட்கழகங் களைத் தன்னகத்துக்கொண்டு விளங்கிற்று. சபையின் உறுப்பினர் ஏதேனும் குற்றம் பற்றி இடையில் விலக்கப் பட்டாலன்றி ஓராண்டு முடிய எவ்வகை ஊதியமும் பெறாது தம் வேலைகளை நடத்துவதற்கு உரிமைபூண்டவராவர். இவர்களை ஆளுங்கணத்தார் எனவும் பெருமக்கள் எனவும் கூறுவர். இவர்கள் கூடுதற்கு ஊர்தோறும் மாளிகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவர்களுள் நியாய விசாரணை செய்வதும் அறநிலையங்கள் நன்கு நடைபெறுகின்றனவா என்று பார்த்துக்கொள்வதும் சம்வத்சரவாரியரது கடமையாகும். ஏரி குளம் ஊருணி முதலிய நீர்நிலைகளைப் பாதுகாத்தலும் விளைவிற்கு வேண்டும் நீரைப் பாய்ச்சுவித்தலும் ஏரிவாரியரது கடமை யாகும். நிலத்தைப்பற்றிய எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுதல் தோட்டவாரியரது கடமையாகும். பல் வகையாலும் வாங்கப்பட்ட பொற்காசு செப்புக்காசுகளை ஆராய்வது பொன்வாரியரது கடமையாகும். விளைவில் ஆறிலொரு கடமை அரசனுக்காகவும் ஏனை ஐந்து கூறு நிலமுடையார்க்காகவும் பிரித்துக் கொடுப்போர் பஞ்சவாரவாரியராவர். இச்சபையார் பணித்தவற்றைச் செய்பவன் கரணத்தான் எனப்படுவான். இவனை மத்தியஸ்தன் எனவும் கூறுவதுண்டு. நல்வழியில் ஈட்டிய பொருளும் நல்லொழுக்கமும் உடையவனையே கரணத்தானாக அமைப்பர். இவன் கணக்கு எழுதல்வேண்டும். எழுதிய கணக்கைச் சபையார் விரும்பியபோது, தானே நேரில் காட்டவேண்டும். இவன் சபையாரது நன்கு மதிப்பைப் பெறாவிடின் அடுத்த ஆண்டில் இவனுக்கு அவ்வேலை கொடுக்கப்படமாட்டாது. ஒரு நாளைக்கு ஒரு நாழி நெல்லும் ஓராண்டிற்கு ஏழுகஞ்சு பொன்னும் இரண்டு கூறையும் கணக்கனுக்குச் சம்பளமாகக் கொடுக்கப்படுவது வழக்கம். கணக்கன் தான் எழுதிய கணக்கைச் சபையாரிடம் ஆராய்ந்து பார்த்தற்குக் கொடுக்கும் போது கையில் காய்ச்சிய மழுவை (Red Hot Tor:) ஏந்தி உறுதிமொழி கூறிக் கொடுத்தல் வேண்டும். அங்ஙனம் கொடுக்குங்கால் கையில் ஊறுபாடு நேராதாயின் கணக்கனுக்கு எழுகழஞ்சிற்குமேல் காற்பங்கு பொன் சேர்த்துக் கொடுக்கப்படும். ஊறுபாடு நேருமாயின் பத்துக்கழஞ்சு பொன் தண்டமும் வேறு தண்டமும் சபையாரால் விதிக்கப்படும். [16]

இனி, நியாய விசாரணை நடத்தும் சம்வத்சரவாரியர் கொலை செய்தவனுக்குக் கொலைத் தண்டம் விதித்தலும், பிறவற்றிற்குச் சிறையிடுதலும், தளையிடுதலும், பொன் தண்டம் விதித்தலும் வழக்கம். அறியாமையால் தற்செயலாக நேர்ந்த சாவிற்கெல்லாம் அவ்வவற்றிற்கு ஏற்றவாறு திருக்கோயில்களில் விளக்கிடுவதற்குக் குற்றவாளிகள் பொன் கொடுக்குமாறு சபையார் தீர்ப்புக் கூறுவர். வேட்டைக்குச் சென்றோன் ஒருவன் எய்த அம்பு குறி தவறி ஓர் உழவன் மேற்பட்டு அவன் இறந்ததற்கும், ஒருவன், தன் மனைவியைத்தள்ள, அவள் விழுந்து இறந்தமைக்கும், ஒருத்தி, தன் மகள் மீது எறிந்த கோல்பட்டு அண்மையில் நின்ற வேறொருபெண் மாண்டதற்கும் திருக்கோயில்களில் விளக்கிடுமாறு தீர்ப்புக் கூறினரேயன்றி அன்னோர்க்குக் கொலைத்தண்டம் விதித்திலர். ஏற்றுக்கொண்ட கடமைகளை நிறைவேற்றா தொழிந்தவர்களுக்குப் பொன் தண்டம் விதித்தல் வழக்கம் என்பதும் அவர்கள் அதனைக் கொடாது ஓடிவிட்டால் அன்னோரது வீடு, காணி முதலியவற்றை அரசனது ஆணையின்படி விற்று ஊர்ச்சபையார் ஒழுங்கு செய்தல் வழக்கம் என்பதும் பல கல்வெட்டுக்களால் புலப்படுகின்றன.

11. ஆவணக்களரி :- அந்நாளில் ஊர்கள் தோறும் எழுதப்படும் ஆவணங்களைக் (பத்திரங்கள்) காப்பிட ஆவணக்களரியும் (Registration Office) இருந்தது. நிலத்தை விற்போரும் வாங்குவோரும் ஆவணத்துடன் அங்குச்சென்று நிலத்தின் விலையையும் நான் கெல்லையையும் தெரிவித்துத் தம் உடன்பாட்டிற்கும் உறுதி மொழி கூறி ஆவணம் காப்பிடப்பெற்ற பின்னர்த் திரும்புவர். இவ்வாவணம் என்றும் பயன்படக் கூடியதாயிருப்பின் அவ்வூரிலுள்ள கோயிற்சுவரில் அதனைப் பொறித்து வைப்பது வழக்கம்.

12. படை :- நம் குலோத்துங்கன்பால் யானைப்படையும் குதிரைப்படையும் காலாட்படையும் மிகுதியாக இருந்தன. இவன் காலத்தில் தேர்ப்படை ஒரு தனிப்படையாகக் கருதப்படவில்லை. வில், வேல், வாள், அம்பு, தடி முதலியன அக்காலத்தில் வழங்கிய படைக்கலங்கள் ஆகும். குலோத்துங்கனும் அவனது முன்னோர்களும் நிலத்திலும் கடலிலுஞ் சென்று போர்புரிவதில் சிறந்த ஆற்றல் வாய்ந்தவர்கள் என்பது பல கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. எனவே, நம் குலோத்துங்கனிடத்துப் பல கப்பற்படைகளும் இருந்திருத்தல் வேண்டும். 'இரு முடி சோழன் தெரிந்த வில்லிகள்' என்பதனால் ஒவ்வொரு படைக்கும் வெவ்வேறு பெயரிடும் வழக்கம் உண்டு என்ற செய்தி புலனாகின்றது. படைஞர் போர் நிகழாத காலங்களில் உழுது பயிரிட்டுக்கொண்டு இருப்பது வழக்கம். வென்று கொண்ட நாடுகளில் நிலைப்படை அமைத்தலும் உண்டு. குலோத்துங்கன் சேர மண்டலத்தை வென்றபோது அங்குள்ள கோட்டாற்றில் ஒருநிலைப்படை ஒரு படைத்தலைவன்கீழ் நிறுவப்பெற்றது என்பது முன்னரே விளக்கப்பட்டது.
13. கோயில்கள் :- அந்நாளில் நம் தமிழகத்தில் பல கோயில்கள் இருந்தன. செங்கற்கோயில்களாகவிருந்த இவற்றைக் கற்றளிகளாக அமைப்பித்தவர்கள் சோழமன்னர்களும் அன்னோரது அதிகாரிகளுமேயாவர். பல புதிய கோயில்களும் இவர்களால் கட்டுவிக்கப்பெற்றன. தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள நீடூர், திருவைகாவூர்[17] முதலான தலங்களிலுள்ள கோயில்கள் நம் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்தில் கற்றளிகளாக்கப்பட்டன. சூரியனார் கோவில் என்ற ஊரிலுள்ள சூரியனது ஆலயமும், மன்னார் குடியிலுள்ள குலோத்துங்க சோழவிண்ணகரமும் மேலப்பழுவூரிலுள்ள குலோத்துங்கசோழேச்சுரமும் இவ்வேந்தன் காலத்தில் கட்டப்பெற்றனவேயாம். கோயில்கள் எல்லாம் அரசர்களாலும் பிற அன்பர்களாலும் அளிக்கப்பெற்ற பெரும் பொருளும் நிலமும் உடையனவாய் அக்காலத்தில் விளங்கின. திங்கள் தோறும் பூரணையில் கோயில்களுக்கு விழா நடைபெற்றது. உச்சியம் போதில் கோயில்களில் மாகேச்சுரர்க்கு நாள் தோறும் அன்னம் இடுவது வழக்கம். தேவாரப் பதிகங்கள் நாள்தோறும் திருமுன்னர் விண்ணப்பஞ் செய்தற்கு நிபந்தங்கள்விடப்பட்டிருந்தன.[18] கோயிற் காரியங்களை எல்லாம் அவ்வூரிலுள்ள ஒரு சபையார் நன்கு நடத்தி வந்தனர். அரசனும் அரசாங்க அதிகாரிகளும் நாட்டைச் சுற்றிப்பார்த்து வருங்கால் கோயில்கள் திட்டப்படி நடத்தப்பட்டு வருகின்றனவா என்று ஆராய்ந்து வருவது வழக்கம்.[19] கோயிற்குரிய செலவு போக எஞ்சிய பொருளின் ஒரு பகுதியைக் கல்வி வளர்ச்சிக்குச் செலவிட்டு வந்தனர் என்பது தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள எண்ணாயிரம் என்ற ஊரிலுள்ள கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.[20] ஒரு பகுதி மருத்துவ நிலையத்திற்கும் செலவிடப்பட்டது என்பது செங்கற்பட்டு ஜில்லாவி லுள்ள திருமுக்கூடல் கோயிற் கல்வெட்டால் அறியப்படுகின்றது.[21]
-------
[1]. S. I. I. Vol. II. Introduction pages from 1 to 27 மு. கு. 6
[2]. அரிசிலுக்கும் காவிரிக்கும் நடுவான உய்யக்கொண்டார் வள நாட்டுத் திரைமூர்நாட்டுப்பள்ளிச்சந்தம் இறக்கின நெற்குப்பை அளந்தபடி நிலம்'-5. I. I. Vol. I. Ins. No. 4 ; கொள்ளிடத்திற்கும் காவிரிக்கும் நடுவிலுள்ள நிலப்பரப்பு, விருதராசபயங்க ரவளநாடு என்று வழங்கிற்று என்பது மாயூரந்தாலூகா இலுப்பைப்பட்டிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.
[3]. 4. பரணி - தா , 134, 243, 582.
[4]. சோழவ மிச சரித்திரச் சருக்கம். பக். 43, 44.
[5]. The Historical Sketches of Ancient Dekhar pages 371, 372, 373 374.
[6]. S. I. I. Vol. II. Ins. No. 4 & 5.
[7]. S. I. I. Vol. III Ins. No. 9.
[8]. S. I. I. Vol. II. Nos. 98 & 99
[9]. The Historical Sketches of Ancient Page 348. Dekhan,
[10]. Do. pages 357 & 358.
[11]. (a) - I. I. Vol. III. No. 96. (b) 1)0. page 229 Foot -note:
[12]. S. I. I. Vol. II. Ins. Nos. 36, 41, 85.
[13]. S. I. I. Vol. II. Ins. Nos. 35, 51, 84.
[14]. சோழவ மிச சரித்திரச் சுருக்கம் பக். 53, 55.
[15]. சோழவமிச் சரித்திரச் சருக்கம் பக், 54.
[16]. Annual Report on Epigraphy of the Southern Circle for the year ending 31st March 1916, pages 115 & 116. மு. கு. 7
[17]. திருவைகாவூரிலிருந்து எடுக்கப்பெற்றதும் அவ்வூரிலுள்ள திருக்கோயில் முதற்குலோத்துங்க சோழனது ஆட்சிக் காலத்தில் கற்றளியாக அமைக்கப் பெற்ற செய்தியை யுணர்த்துவதும் ஆகிய ஒரு கல்வெட்டு இப்புத்தகத்தின் இறுதியில் சேர்க்கப்பெற்றுளது.
[18]. {a) S. I. I. Vol. III. Ins. 139, 51-A (6) DO. Vol. II. Ins. No. 65.
[19]. S. I. I. Vol. III. Ins. Nos. 49, 57 & 66.
[20]. Ins. 333, 335 & 343 of 1918 (Madras Epigraphical Report.)
[21]. The Historical sketches of Ancient Dekhan page 336,
---------------

அதிகாரம் 14 : முடிவுரை

இதுகாறும் எழுதியுள்ள பல அதிகாரங்களால் பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சோழமண்டலத்தில் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து நம் தமிழகத்தையும் இதற்கப்பாலுள்ள பிறநாடுகளையும் ஆட்சி புரிந்த முடிமன்னனாகிய முதற் குலோத்துங்கசோழனது வர லாற்றை ஒருவாறு நன்குணரலாம். அன்றியும் சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகள் வரை நம் தமிழகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் இவ்வரலாற்று நூல் இயன்ற வரை இனிது விளக்காநிற்கும். நல்வினை முதிர்ச்சியால் அறிவு திருவாற்றல்களுடன் நிலவிய நம் வேந்தர்பெரு மான் கடைச்சங்கநாளில் சிறப்புடன் விளங்கிய சோழன் கரிகாலன், சேரன் செங்குட்டுவன் முதலான முடிமன்னர் களோடு ஒருங்குவைத்து எண்ணத்தக்க பெருமையும் புகழும் உடையவன் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இத்தகைய பெருவீரன் அரசுவீற்றிருந்து செங்கோல் செலுத்திய திருவுடைநகரம் கங்கைகொண்டசோழபுரம் ஆகும். நம் குலோத்துங்கனது தாய்ப்பாட்டனாகிய கங்கைகொண்டசோழனால் அமைக்கப்பெற்ற இப்பெருநகரம் அவ்வேந்தன் காலத்திலேயே சோழமண்டலத்திற்குத் தலைநகராகும் பெருமை எய்திற்று. அவனுக்குப் பின்னர், சோழர்களது ஆட்சியின் இறுதிவரை இந்நகரமே எல்லாச் சோழமன்னர்களுக்கும் தலைநகராக இருந்தது. எனவே, இது தஞ்சையினும் சிறந்த அரணுடைப் பெருநகரமாக அந்நாளில் இருந்திருத்தல் வேண்டும். இந்நகர், கங்காபுரி என்று கலிங்கத்துப் பரணியிலும் விக்கிரம சோழனுலாவிலும், கங்கைமாநகர் என்று வீரராசேந்திரன் மெய்க்கீர்த்தியிலும், கங்காபுரம் என்று தண்டியலங்காரமேற்கோள் பாடலிலும் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. இத்தகைய பெருமைவாய்ந்த இந்நகரம் இதுபோது தன் பண்டைச் சிறப்பனைத்தும் இழந்து திருப்பனந்தாளுக்கு வடக்கில் கொள்ளிடத் திற்குக் கட்டப்பெற்றுள்ள லோயர் அணையிலிருந்து அரியலூர்க்குச் செல்லும் பெருவழியில் ஒரு சிற்றூராக உள்ளது. ஆயினும் இவ்வூரின் பழைய நிலையை நினைவு கூர்தற்கும் சோழச்சக்கரவர்த்திகளின் பெருமையையுணர் தற்கும் ஏதுவாக இன்றும் அங்கு நிலைபெற்றிருப்பது கங்கைகொண்ட சோழேச்சுரம் என்னும் சிவாலயமேயாகும். இந்நகரில் நம் குலோத்துங்கனுக்குப் பின்னர் வீற்றிருந்து ஆட்சி புரிந்தோர் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் என்போர். இவர்கள் எல்லோரும் புகழாலும் வீரத்தாலும் நம் குலோத்துங்கனது பெருமையைப் பின்பற்றியவர்கள் என்று ஐயமின்றிக் கூறலாம். சோழமன்னர்களுள் இறுதியானவன் மேற்கூறிய மூன்றாம் இராசேந்திரனே ஆவன். அவனுக்குப் பின்னர், சோழநாடு பாண்டியரது ஆட்சிக்குள்ளாயிற்று. சோழர்களும் பாண்டியர்க்குத் திறைசெலுத்தும் குறுநிலமன்னர்களாயினர். இவர்களது தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரமும் பகையரசர்களால் முற்றிலும் அழிக்கப்பெற்றுச் சிறுமை எய்திற்று. படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டுவந்த தமிழ் வேந்தர்களான சோழர்கள் தங்கள் ஆட்சியும் வீரமும் இழந்து தாழ்வுற்றனரெனினும் அவர்களது ஆதரவினால் வெளிவந்த தமிழ் நூல்களும், அவர்களால் எடுப்பிக்கப்பெற்ற திருக்கோயில்களும், வெட்டப்பெற்ற பேராறுகளும், கட்டப்பெற்ற அணைகளும் இன்றும் நிலைபேறுடையனவாய் அன்னோரது பெருமையனைத்தும் நம்மனோர்க்குணர்த்தும் கலங்கரை விளக்கமென நின்று நிலவுதல் ஒருவகையால் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் என்பது திண்ணம்.

முதற் குலோத்துங்க சோழன் - முற்றும்
------

This file was last updated on 26 Jan 2023.
Feel free to send the corrections to the webmaster (pmaduria AT gmail.com)