pm logo

ஞா.தேவநேயப் பாவாணர்
எழுதிய "தமிழர் மதம்"


tamizar matam
of tEvanEyap pAvANar
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தமிழர் மதம்
ஞா.தேவநேயப் பாவாணர்

Source:
தமிழர் மதம்
தேவநேயன் எழுதியது
நேசமணி பதிப்பகம்,
ஆ 1135, 2-ஆம் மேற்குக் குறுக்குச் சாலை,
காட்டுப்பாடி விரிவு, வ.ஆ. மாவட்டம்
1972, பதிப்புரிமை, விலை 6.25ரூ
ஞானமுத்து தேவ நேயன் (1902)
மறைமலை அச்சகம், புன்செய்ப் புளியம்பட்டி
-------------

தமிழர் மதம் - உள்ளடக்கம்

முன்னுரை
நூல்
I. குமரி நிலையியல்
II. இடைநிலையியல்
III. நிகழ்நிலையியல்
IV. வருநிலையியல்
V. முடிபுரையியல்
பின்னிணைப்பு
----------------

தமிழர் மதம் - முன்னுரை


1. மதம் என்னும் சொல் வரலாறு

ஆறு, நெறி, கொள்கை, மதம், சமயம் என்பன ஒருபொருட் சொற்கள். இவற்றுட் பின்னிரண்டும் வடமொழியென்னும் சமற்கிருதத்திலும் வழங்குவதாலும், அம் மொழி பிறமொழியினின்று கடன் கொள்ளாத தேவமொழி யென்னும் நம்பிக்கை இடைக்காலத் தமிழருள்ளத்திற் பதிக்கப்பட்டிருந்ததனாலும், அவ்விரு சொல்லும் வடசொல்லே யென்று இன்றும் கருதப்பட்டு வருகின்றன.

முத்துதல் = 1. பொருந்துதல் அல்லது சேர்தல். “ திருமுத்து ஆரம் = திருமகள் சேரு மாரம்; “ கழைபோய் விண்முத்தும்” என்றாற் போல” (சீவக. 504, நச். உரை). 2. மென்மையாகத் தொடுதல். 3. முத்த மிடுதல். “புதல்வர் பூங்கண் முத்தி” (புறம். 41)

முத்து - முட்டு. முட்டுதல் = 1. வன்மையாகத் தொடுதல், மோதுதல். “துள்ளித்தூண் முட்டுமாங் கீழ்”(நாலடி. 94). 2. முட்டித் தாங்குதல். 3. முடிதல். “ முட்டடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும்” (தொல். பொருள். 435). க. முட்டு

தகரம் மென்மையையும் டகரம் வன்மையையும் உணர்த்தும். ஒ,நோ : ஒத்து - ஒட்டு, குத்து - குட்டு. முட்டு = தாக்கு, பொருத்து, முடிவு.

முட்டு - மட்டு = முடிவு, அளவு. முத்து - மத்து = அளவு. மத்து - மத்தி - மதி.

மதித்தல் = 1. அளவிடுதல். “மண்விழைந்து வாழ்நாண் மதியாமை” (திரிகடு. 29). 2. கருதுதல். “ஆடலை மதித்தான்” (கந்தபு. திருவிளை. 1). 3. பொருட்படுத்துதல். “மண்ணாள்வான் மதித்து மிரேன்” (திருவாச. 5:12).

மதி = அளவிடப்பட்ட பண்டம். எ-டு : ஏற்றுமதி, இறக்குமதி.

மதி - மதிப்பு = 1. அளவிடுகை. 2. பொருட்படுத்துகை, கண் ணியப்படுத்துகை. “உமையைச் சால மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார்” (தேவா. 1014 : 7). 3. கருத்து. “மண்ணுல காளு மதிப்பை 


யொழித்தே” (பிரமோத். 8 : 99). 4. தோராயம். 5. கண்ணியம். தெ. மதிம்பு.

மதி - மதம் = 1. பெரிதாக மதிப்பது. 2. கருத்து. 3. கொள்கை. 4. நெறிமுறை. 5. சமயம். “தத்த மதங்களே யமைவதாக” (திருவாச. 4 : 52). வ. மத (mata).

மத என்னும் சமற்கிருதச் சொல்லை மன் என்னும் மூலத்தினின்று திரிப்பர். மன் என்பதினின்று, மான், மா, மானம் முதலிய சொற்கள் பிறக்குமேயன்றி மதி அல்லது மதம் என்னும் சொல் தோன்றாது.

கடைதலைக் குறிக்கும் மதி என்னும் வினைச்சொல்லும், மத்து என்னும் வடிவினின்றே திரிந்திருத்தலை நோக்குக. முத்து - மொத்து - மத்து = மொத்தையாக விருக்கும் கடைகருவி.

மத்து - மத்தி. மத்தித்தல் = மத்தினாற் கடைதல். மத்தி - மதி. மதித்தல் = 1. கடைதல். “மந்தரங் கொடு மதித்த நாள்” (சேதுபு. சங்கர. 20). 2. கடைதல்போல் விரலா லழுத்தி மசியச் செய்தல். மதி - மசி. மசிதல் = கடைந்ததுபோற் களியாதல். குழந்தைக்குச் சோற்றை மதித்து ஊட்டு என்னும் வழக்கை நோக்குக.

மத்து என்னும் பெயரை மந்த (mantha) என்றும், மத்தித்தல் என்னும் வினையை மத் (math) என்றும், சமற்கிருதத்தில் திரித்திருக்கின்றனர். இவற்றிற்கு வேர் தமிழிலேயே யன்றி வடமொழியிலில்லை.

அளத்தற் பொருள் குறித்த mete என்னும் ஆங்கில வினைச் சொல் கவனிக்கத் தக்கது. E. mete (to measure), OE., OS . metan, ON. meta. Goth. mitan, OHG mezzan.

E.meter = person or thing that measures. Metron (measure) என்னும் கிரேக்கச் சொல் மாத்திரை என்பதன் திரிபு. மா - மாத்திரம் - மாத்திரை - வ. மாத்ரா. மாத்தல் (அளத்தல்) என்னும் வினை தமிழில் வழக்கற்றது.

"எழுவகை மதமே உடன்படல் மறுத்தல்
பிறர்தம் மதமேற் கொண்டு களைவே
தாஅ னாட்டித் தனாது நிறுப்பே
இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே
பிறர்நூற் குற்றங் காட்டல் ஏனைப்
பிறிதொடு படா அன் தன்மதங் கொளலே” (நன். 11)

என்னும் நூற்பாவினின்று, ஒரு பொருள் அல்லது நெறிமுறை (principle) இன்னவாறிருத்தல் வேண்டுமென்று மதித்துக் கொள்வதே மதம் என்றும், சமயம் மதமென்னும் பெயர் பெற்றதும் இவ்வகையிலேயே என்றும், அறிந்து கொள்க.

தெய்வம் உண்மையின்மை, தெய்வத்தின் தன்மை, தெய்வத் தால் ஏற்படும் நன்மை, தெய்வத்திற்கும் மாந்தனுக்கும் உள்ள உறவு, மறுமை யுண்மை யின்மை, மறுமையில் இருக்கும் வாழ்வு நிலை ஆகியவற்றைப் பற்றி இன்னவாறிருக்கு மென்று ஒருவர் மதித்துக் கொள்வதே, பொதுவாக மதமென்று சொல்லப்படுவதாகும்.

தெய்வமும் மறுமையும் புறக்கண்ணாற் காணப்படாத பொருள்களாதலாலும், மக்களின் மனப்பான்மை வெவ்வேறு வகைப்பட்டிருப்பதனாலும், மதமானது, ஒவ்வொருவரும் தத்தம் அறிவிற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மதித்துக் கொள்வதாகவே யுள்ளது.

தெய்வம் உண்டென்று கொள்வது போன்றே, இல்லை யென்று கொள்வதும் மதமாகும். ஆகவே, நம்பு மதம், நம்பா மதம் என மதம் இருவகைப்படும். அவற்றுள் ஒவ்வொன்றும் பல திறப்பட்டுள்ளது. ஆயின், நம்பு மதப் பிரிவுகளே மிகப் பற்பல திறத்தினவாயுள்ளன.
-------------
2. சமயம் என்னும் சொல் வரலாறு

மதம், சமயம் என்னும் இரு சொல்லும் ஒரு பொருளனவாயி னும், தம்முள் நுண்பொருள் வேறுபாடுடையன. ஒரு தெய்வத்தை அல்லது இறைவனை மதித்து வழிபடுவது மதம்; இறைவனை இம்மையிலேனும் மறுமையிலேனும் அடைவதற்குச் சமைவது சமயம். ஆகவே, மதத் தினும் சமயத்திற்கு ஒழுக்கமும் நோன்பும் மிக வேண்டுவனவாம்.

உத்தல் = பொருந்துதல். உத்தி (உ + தி) = பொருத்தம், நூற்குப் பொருந்தும் முறை, விளையாட்டிற் கன்னை (கட்சி) பிரிக்க இருவர் இணைதல்.

உத்தம் = பொருத்தம். உத்தம் - வ. யுக்த. உத்தி - வ. யுக்தி.

உ - ஒ. ஒத்தல் = பொருந்துதல், போலுதல்.

உ - உம். உம்முதல் = பொருந்துதல், கூடுதல்.

எண்ணும்மை யிடைச்சொல்லானது இதுவே.

உம் - அம் = பொருந்தும் நீர். நீரொடு நீரும் நிலத்தொடு நீரும் ஆகப் பொருந்துதல் இருவகைத்து.

அம் - அமர். அமர்தல் = பொருந்துதல், அன்பால் உள்ளம் ஒன்றுதல்.

அம் - அமை. அமைதல் = பொருந்துதல், அடங்கியிருத்தல், கூடுதல், நெருங்குதல், நுகர்ச்சிக் கேற்றதாதல், தக்கதாக வாய்த்தல்

அமை - அவை = கூட்டம்.

அமை - அமையம் = பொருந்தும் நேரம், ஏற்ற வேளை, தக்க செவ்வி, வினை நிகழும் சிறுபோது.

அமை - சமை. சமைதல் = ஆக்கப்படும் அரிசி போலும் பூப்படையும் கன்னி போலும் நுகர்ச்சிக் கேற்றதாதல், பதனடைதல், இனிதாகச் செய்பொருள் வினை முடிதல், அணியமாதல்.

சமையல் = சோறு குழம்பாக்கும் வினை.

"சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும் சமைந்தால் தெரியும்." (பழமொழி)

சமை - சமையம் = பதனடைந்த அல்லது நுகர்ச்சிக் கேற்ற நிலை, வினைக்குத் தக்க வேளை.

சமையம் - சமயம் = ஆதன் (ஆன்மா) தான் இறைவனை அடைதற்கு அல்லது பேரின்பத்தை நுகர்தற்குத் தன்னைத் தகுதிப் படுத்தும் முக்கரணவொழுக்கம்.

பொருளை வேறுபடுத்தற்கு, சொல்லிடை மகர ஐகான் அகர மாயிற்றென அறிக.

வடமொழியாளர், சமயம் என்னும் தென்சொல்லை 'ஸமய' என்று திரித்தும், ஸம் + அய என்று பிரித்தும், உடன் வருதல் (to come together) அல்லது ஒன்றுசேர்தல் என்று பொருள் கூறி வடசொல்லாகக் காட்டுவர். அங்ஙனங் காட்டிய பின்பும்,

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்" (குறள். 380)

என்னுந் திருவள்ளுவர் திருவாய்மொழிக் கேற்ப, அவ் வடசொல் தென் சொற் றிரிபேயாதல் காண்க.

ஸம் = உடன், கூட. அய = செல்கை, வருகை.

'அய' என்னும் சொற்கு, 'அய்' என்பதை அடியாகவும் 'இ' என்பதை வேராகவும் காட்டுவர். இ - அய் - அயன = செலவு.

தமிழில், கூடுதலைக் குறிக்கும் அடிச்சொற்களுள் கும் என்பது ஒன்று. கும்முதல் = கூடுதல், குவிதல்.

கும் - கும்மல். கும் - கும்பு-கும்பல்.

கும் - குமி - குமியல். குமி -குவி - குவியல்.

கும்மல் - L. cumulus=heap; cumulare=to heap up, E. cumulate, accumulate.


கும் - கும்ம (நிகழ்கால வினையெச்சம் - Infinitive Mood) = கூட. கூடுதல் = ஒன்றுசேர்தல், மிகுதல்.

கூட (to gather) என்னும் (நி.கா.) வினையெச்சம், உடன் (together, with) என்று பொருள்படும்போது, மூன்றாம் வேற்றுமை உடனிகழ்ச்சி யுருபாகவும், முன்னொட்டாகவும் (prefix) ஆளப்படும்.

எ- டு : தந்தைகூட வந்தான் = தந்தையுடன் வந்தான்.
கூடப் பிறந்தான் = உடன்பிறந்தான்.
கூடுதலைக் குறிக்கும் கும் என்னும் வினைச்சொல், உ - அ திரிபு முறைப்படி கம் என்று திரியவுஞ் செய்யும்.

"கமம் நிறைந் தியலும்" (தொல்.சொல்.355)

நிரைதல் = நிரம்புதல், மிகுதல், கூடுதல்.

Cum என்னும் இலத்தீன அடிச்சொல்லும், முன்னொட்டாகும் போது com என்று திரிந்து, வருஞ்சொன் முதலெழுத்திற் கேற்ப con, col cor என்று ஈறுமாறும். சில எழுத்துகட்கு முன் co என்று ஈறு கெடவுஞ் செய்யும். இங்ஙனமே ஆங்கிலத்திலும்.

இங்ஙனம் இலத்தீனத்தில் கும் - கொம் என்றும், ஆங்கிலத்திற் கம் என்றும் திரியும் முன்னொட்டு, கிரேக்கத்தில் ஸு ம் (sum) என்றும் ஸிம் (sym) என்றும், சமற்கிருதத்தில் ஸம் (sam) என்றும் திரியும். கிரேக்க முன்னொட்டும், இலத்தீன முன்னொட்டுப்போற் பின்வரும் எழுத்திற் கேற்ப, சின் (syn), சில் (syl) என்றும் திரியும். சமற் கிருத முன்னொட்டு ஈறுகெட்டு ஸ (sa) என்றும் நிற்கும்.

இவற்றிற் கெல்லாம், கூட (உடன்) என்பதே பொருள்.

கூட என்பதற்கு நேரான கும்ம என்னும் தென்சொல்லே, முன்னொட்டாகிக் கும் என்று குறுகியும், கும் - கொம் - கம், கும் - ஸு ம், ஸு ம் - ஸம் என்று திரிந்தும், ஆரிய மொழிகளில் வழங்கும் என அறிக. அதன் முதன்மெய், ஐரோப்பாவின் வடமேற்குப் பகுதியிலும் மேற்குப்பகுதியிலும் இயல்பாகவும், அதன் தென் கிழக்குப் பகுதியிலும் இந்தியாவிலும் ஸகரமாகத் திரிந்தும், வழங்குவதை ஊன்றி நோக்கி வரலாற்றுண்மை தெளிக.

இனி, இந்திய ஆரியத்தில் (வேதமொழியிலும் சமற்கிருதத் திலும்) செல்லுதலைக் குறிக்கும் 'இ' என்னும் வேரும் 'அய்' என்னும் அடியுமாகிய வினைச்சொற்களும், உய் என்னும் தென்சொல் லினின்று திரிந்தவையே.

ஊ அல்லது உ, இதழ் குவிந்தொலித்து முன்னிடத்தை அல்லது முன்னிற்பதைச் சுட்டும் முன்மைச்சுட்டு.


ஊ - ஊன் = நீ (முன்னிலை யொருமைப் பெயர்).
ஊ - உ - உந்து. உந்துதல் = முன் தள்ளுதல்.
உ - உய். உய்தல் = முன்செல்லுதல், செல்லுதல்.
உய்த்தல் = முன்செலுத்துதல், செலுத்துதல்.
உய் - இய் - இயவு = 1. செலவு.

"இடைநெறிக் கிடந்த இயவுக்கொண் மருங்கில்"
(சிலப். 11:168) 2. வழி.

இயவு - இயவுள் = எல்லாவுயிர்களையும் வழிநடத்தும் இறைவன்.
இய் - இயல் = செலவு.

"புள்ளியற் கலிமா" (தொல். பொருள். 194).
இயலுதல் = செல்லுதல், நடத்தல்.

"அரிவையொடு மென்மெல வியலி" (ஐங். 175).

இய - இயங்கு -இயக்கு - இயக்கம். இயங்குதல் = செல்லுதல், நடத்தல், அசைதல்.

இய் - வ. அய். இனி, உய் என்பதும் அய் என்று திரிந்திருக்கலாம்.

தமிழ் ஆரியத்திற்கு முந்தியது என்னும் வரலாற்றுண்மையை யும், மேற்காட்டிய சொல் வரலாறுகளையும், நடுநிலையாக நோக்கு வார்க்கு, மதம் சமயம் என்னும் இருசொல்லும் தென்சொல்லே யென்பது, தெற்றெனத் தெரியாமற் போகாது.
----------

3. மதம் தோன்றிய வகை

(1) அச்சம்

காய்கனி கிழங்கு முதலிய இயற்கை விளைபொருளையும் வேட்டையாடிய விலங்கு பறவை யிறைச்சியையும் உண்டு வாழ்ந்து, அநாகரிக நிலையிலிருந்த முந்தியல் மாந்தர்; தீயும் இடியும் போன்ற பூத இயற்கைக்கும், பாம்புபோலும் நச்சுயிரிக்கும், இறந்தோ ராவிகட்கும் அவற்றுள் ஒரு சாரனவான பேய்கட்கும், அஞ்சிய அச்சமே; தெய்வ வணக்கத்தை அல்லது சிறுதெய்வ மதத்தை முதற்கண் தோற்றுவித்தது. அதனால், கொல்லுந் தன்மையுள்ள எல்லாவற்றையும் தெய்வமாகக் கொண்டு, அவை தம்மைக் கொல் லாவாறு இயற்கையும் செயற்கையுமாகிய உணவுப் பொருள்களைப் படைத்தும், இருதிணை யுயிரிகளையும் காவு கொடுத்தும், வந்தனர்.

நாகரிகம் முதிர்ந்துள்ள இக்காலத்தும், இம்மையிலும் மறுமையிலும் நேரக்கூடிய துன்பங்கட்கு அஞ்சுவதே, பல்வேறு மதவொழுக்கங்கட்கும் பெரும்பாலும் அடிப்படைக் கரணியமா யிருக்கின்றது.

அச்சத்தினாற் படைப்பதெல்லாம் தீமை விலக்கலைக் குறிக் கோளாகக் கொண்டது.

(2) முற்காப்பு

மாந்தன் வாழ்க்கை பல்வகைத் துன்பம் நிறைந்ததனால், அவற்றினின்று தப்புவதற்குத் தொன்றுதொட்டுப் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டியதாயிற்று. உடமைகளையும் உயிரையும் காப்பதற்கு முன்பு காவற்காரனும் பின்பு அரசனும் ஏற்பட்டனர். ஆயின், மக்களால், தடுக்க முடியாத கொள்ளைநோய், பஞ்சம், கடுங்காற்று, பெருவெள்ளம் முதலிய துன்பங்களைத் தடுத்தற்கும் நீக்கற்கும், மாந்தரினத்திற்கும் மேற்பட்ட சில மறைவான தெய்வங் களே ஆற்றலுள்ளவை யென்றுகருதி, அனைவரும் அவற்றை வணங்கவும் வழிபடவும் தலைப்பட்டனர். அத் துன்பங்கள் அத் தெய்வங்களின் சீற்றத்தால் நேர்வன வென்றும் நம்பி, அவற்றிற்கு அஞ்சினர். ஆதலால், முற்காப்பு அச்சத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

தீயும் பாம்பும் பேயும் என்று முள்ளன. கொள்ளைநோய், பஞ்சம் முதலியன ஒரோவொரு காலத்து நிகழ்வன.

(3) நன்றியறிவு

பல்வேறு தீங்குகட்கும் அச்சங்கட்கும் பெரிதும் இடந்தரும் காரிருளைப் போக்கி, உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு தேடவும் இனத்தாருடன் உறவாடவும், பேரளவாக உதவும் கதிரவனையும் சிற்றளவாக உதவும் திங்களையும்; உண்ணக் காய்கனியும் தங்கத் தண்ணிழலும் குடியிருக்க உறையுளும் உதவும் பல்வகைப் பழுமரங்களையும்; இளமை முதல் முதுமைவரை எல்லார்க்கும் இன்னுயிர்த் தீம்பால் உதவும் ஆவையும், இன்னோ ரன்ன பிறவற்றையும், தெய்வமாகப் போற்றியதும் வணங்கியதும் நன்றியறிவு பற்றியதாகும். அவ்வகை வணக்கத்தைக் குறித்த காலந் தொறும் தொடர்ந்து செய்வது, மேன்மேலும் நன்மை பெறலைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். வணக்க மெல்லாம் படைப்பொடு கூடியதே.

(4) பாராட்டு

இனத்தைக் காக்கப் பகைவருடன் புலிபோற் பொருதுபட்ட, உயிரீகி (பிராணத்தியாகி)யாகிய தறுகண் மறவனுக்கும்; மழை

வருவித்தும், பழுக்கக் காய்ச்சிய பொன்னைக் கையிலேந்தியும், தீயோரைச் சாவித்தும், சினத்தால் ஊரை யெரித்தும், உடன்கட்டை யேறியும், கடுங்கற்பைக் காத்த பத்தினிப் பெண்டிற்கும்; கல் நட்டி விழா வெடுத்தது பாராட்டுப் பற்றியதாகும்.

"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை" (குறள். 55)

என்னுங் கூற்று, ஒருசில நிகழ்ச்சிகளையேனும் சான்றாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

பட்டவன் கல்லும் பத்தினிக் கல்லும் இனத்தார் அல்லது பயன் பெற்றவர் நட்டுச் சிறப்புச் செய்வது, நன்றியறிவையும் ஒருமருங்கு தழுவியதே.

தீயானது, கொல்லுந்தன்மையால், அச்சத்திற்கும், இருள் போக்கியும் உணவுசமைக்க வுதவியும் கொடுவிலங்குகளை வெருட் டியும் குளிரகற்றியும் நன்மை செய்வதால் நன்றியறிவிற்கும் உரிய தாயிற்று.

(5) அன்பு

இருதிணைப் பகையையும் அழித்தும், உணவிற்கு வழிவகுத் தும், நடுநிலையாக ஆட்சி செய்தும், குடிகளை அரவணைத்துக் காத்த அரசன் இறந்தபின், அவனுக்குப் படிமையமைத்துப் படைத்து வணங்கியது அன்புபற்றியதாகும். இதினின்றே, விண் ணுலக வேந்தன் (இந்திரன்) வணக்கம் தோன்றிற்று.

(6) கருதுகோள்

முதற்காலத்திற் குறிஞ்சிநிலத்திலேயே வாழ்ந்த மாந்தர், பின்னர் ஏனை நிலங்களிலும் பரவியபின், அவ்வந் நிலத்திற்கேற்ப ஒவ்வொரு தெய்வந் தோன்றிற்று. அதன்பின், ஒவ்வொரு பெரு நிலத்திற்கும் பேராற்றிற்கும் பெருந்தொழிலுக்கும் பெருநன்மைப் பேற்றிற்கும், காதற்பண்பிற்கும், சாதல் தீங்கிற்கும் ஒவ்வொரு தெய்வம் இருப்பதாகக் கருதப்பட்டது.

கண்ணாற் காணும் இயற்கைக் கூறுகளும் நிகழ்ச்சிகளும் தோற்றங்களும் ஆவிகளும் வினைகளுமன்றி, மனத்தாலேயே படைத்துக் கொள்ளும் தெய்வங்களெல்லாம் கருதுகோளின் விளைவேயாகும்.

நீரூட்டியும் நீராடுவித்தும் உணவு விளைத்தும் பல்வகை யுதவும் ஆற்றை நன்றியறிவுபற்றி வணங்குவது வேறு;

(7) அறிவு வளர்ச்சி

மாந்தன் நாகரிகமடைந்து அறிவுவளர்ந்து பண்பாடுற்றபின், மறுமையும் கடவுளுண்மையுங் கண்டு, பல்வேறு மதங்களையும் சமயங்களையும் வகுத்தது அறிவு வளர்ச்சியாகும்.

மக்கள் மனப்பாங்கும் அறிவுநிலையும் பல்வேறு வகைப்பட் டிருப்பதால், மத சமயங்களும் பல்வேறாயின.

அறிவுவளர்ச்சி யென்னும் பெயருக்கு முரணாக, பல்வேறு மூடப்பழக்கங்களும் கொள்கைகளும் மதங்களிற் கலந்திருப்பதுண் மையே. அவை பெரும்பாலும் பழங்காலத் தன்மையாலும் தன்னலக் காரரின் சூழ்ச்சியாலும் ஏற்பட்டவை. இக்கால அறிவு நிலைக் கேற்ப, அவற்றை இயன்றவரை நீக்கிக் கொள்ளல் வேண்டும்.

மதமும் சமயமும் பெரும்பாலும் நம்பிக்கையைப் பொறுத்தன.
------------

4. மூவகை மதம்

மக்களின் அறிவுநிலைக் கேற்ப, மதம், (1) சிறுதெய்வ வணக்கம் (2) பெருந்தேவ மதம், (3) கடவுள் சமயம் என மூவகைப்படும்.

இம்மை நலத்தை மட்டும் நோக்கி, இன்பக்காலத்திலும் துன்பக் காலத்திலும். ஐம்பூதமும் ஆவிகளும் போன்ற சிறுதெய்வங் கட்கு உணவு படைத்துக் காவு கொடுப்பது, சிறுதெய்வ வணக்கம்; சிவன் அல்லது திருமால் என்னும் பெயரால் இறைவனை நாள் தோறும் வழிபட்டு, உயிர்க்கொலை நீக்கிக் காய்கனிமட்டும் படைத்து, அவ்வவ் மத அடையாளந் தாங்கி, இருதிணை யுயிருக்கும் தீங்கு செய்யாது இயன்றவரை நன்மையே செய்தொழுகுவது, பெருந்தேவ மதம்; எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை உருவ வணக்கமின்றி உள்ளத்திலேயே வழிபட்டு, தன்னையே படைத்து, முக்கரணமுந் தூய்மையாகி, இல்லறத்தி லேனும் துறவறத்திலேனும் நின்று, இயன்றவரை எல்லாவுயிர் கட்கும் நன்மையே செய்து, இம்மையிலேனும் மறுமையிலேனும் வீடுபெற வொழுகுவது, கடவுள் சமயமாம்.

சிறுதெய்வ வணக்கத்திற்கு உருவம் இன்றியமையாதது; பெருந்தேவ வழிபாட்டிற்கு, அது வழிபடுவாரின் அகக்கரண வளர்ச்சிக் கேற்றவாறு, இருந்தும் இல்லாமலும் இருக்கலாம்.
-----------

5. குமரிநாட்டு மதநிலை

மேற்கூறிய மூவகை மதநிலையும், கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன்பே குமரிநாட்டுத் தமிழ்மக்கள் கொண்டிருந்தனர். ஆரியர்
இந்தியாவிற்குட் புகுந்த காலம் தோரா. கி.மு. 1500. அவர் மதம் கொலைவேள்விச் சிறுதெய்வ வணக்கம். தமிழரொடு தொடர்பு கொண்ட பின்னரே, சிவ மதத்தையும் திருமால் மதத்தையும் தழு வினர். ஆதலால், அவரின் வேதாகம இதிகாச புராணக் கதைகளை யும் புரட்டுகளையும் நம்பி, அவையே சிவநெறிக்கும் திருமால் நெறிக்கும் அவற்றின் கொண்முடிபுகட்கும்(சித்தாந்தங்கட்கும்) மூலமெனக் கூறுவது, இவ் விருபதாம் நூற்றாண்டிற்கு எட்டுணை யும் ஏற்காது. இதன் விளக்கத்தை இந் நூல் நெடுகலுங் கண்டு தெளிக.
-----------

1. குமரிநிலை யியல்

1. சிறுதெய்வ வணக்கம்

(1) பேய் வகைகள்

திடுமென்று கொலையுண்டவர் அவர்க்குக் குறித்த வாழ்நாளெல்லை வரையும், வரம்பிறந்த கொடியோரும் தூய பெரி யோராற் சாவிக்கப்பட்டவரும் நெடுங்காலமும், இறந்தபின் பேயாய்த் திரிவ ரென்பது, பொதுவான கருத்து.

அலகை, அள்ளை, இருள், கடி, கருப்பு, காற்று, குணங்கு, கூளி, மண்ணை, மயல்(மருள்) என்பன பேயின் பொதுப்பெயர்கள். பேய்களுள் நல்லனவும் உள; தீயனவும் உள.

குறளி (கருங்குட்டி), பேய், கழுது, பூதம், முனி (சடைமுனி), அரமகள், அணங்கு எனப் பேயினம் பலதிறத்ததாகச் சொல்லப் படும். குறளியைக் குட்டிச் சாத்தன் என்பர். பேய்களுட் காட்டேறி தூர்த்தேறி முதலிய பலவகைக ளிருப்பதாகக் கூறுவர். பூதங்கள் குறும்பூதம் பெரும்பூதம் என இரு வகைய.

"குண்டைக் குறட்பூதம்" (தேவா. 944:1). அரமகளைத் தேவ மகள் என்று, அரைத் தெய்வத்தன்மை கொண்ட ஒரு தனியின மாகக் கூறுவது இலக்கிய வழக்கு. அரமகளிர்(nymphs), மலையர மகளிர் நீரர மகளிர் என இருவகையர். இருவகையரும் அடுத்த மாந்தரை அச்சுறுத்திக் கொல்வதால், சூரர மகளிர் எனப்படுவர். சூர் என்பது அப் பெயர்க் குறுக்கம்.

"எக்கர் நண்ணிய எம்மூர் வியன்றுறை
நேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோ டுற்ற சூளே" (குறுந். 53)

பன்மையிற் குறிக்கப்பட்டதனால், அவர் கூட்டங் கூட்டமாக வாழ்வதாகக் கொள்ளப்பட்டனர் போலும்!

அணங்கு என்பது, தன் அழகு மிகுதியால் ஆடவரை மயக்கிக் கொல்லும் பெண்பேய். 'தாக்கணங்கு' என்றார் திருவள்ளு வரும் (குறள். 1082).

கொல்லிமலை அப் பெயர் பெற்றது ஒரு தாக்கணங்கினா லேயே. கொல்வது கொல்லி.

"உரைசா லுயர்வரைக் கொல்லிக் குடவயின்
..................................தேனுடை நெடுவரைத் தெய்வ மெழுதிய
வினைமாண் பாவை" (நற். 185)

இதனுரையில், 'கொல்லிப்பாவை - அம் மலையிலுள்ள தேவ ரையும் முனிவரையுந் துன்புறுத்த வருகின்ற அவுணரும் அரக்கரும், அப் பாவையின் நகையைக் கண்டு மயங்கி உயிர்விடும்படி, தேவ தச்சனாக்கி வைத்த பெண் வடிவினது. அவுணரும் அரக்கரும் போதரு காலை, அவர் வாடை பட்டவுடன் தானே நகைசெய்யுமாறு பொறியுள் வைக்கப்பட்டது. அது நகைத்துக் கொல்லு மென்பதனை,

"...................................................திரிபுரத்தைச்
செற்றவனுங் கொல்லிச் செழும்பா வையுந் நகைக்கக்
கற்றதெல்லா மிந்தநகை கண்டேயோ"

(சித்திரமடல்) என்றதனாலு மறிக" என்று, பின்னத்தூர் அ. நாராயண சாமி ஐயர் குறித்திருப்பதைக் காண்க. அவுணரையும் அரக்கரையும் கொல்லத் தேவதச்சன் புனைந்த பொறிவினைப் பாவை என்னுங் கொள்கை, ஆரியத் தொல்கதை தோன்றிய பிற்காலத்தது. அது கொல்லி யணங்கின் பேரழகையும் கொல்லுந் திறத்தையும்பற்றிய உயர்வு நவிற்சியே. மக்கள் அவ்விடத்தை யணுகாவாறு எச்சரித்தற்கே. அவ்வணங்கின் படிமை அங்கு வைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

அணங்கை இன்று 'மோகினி' என்னும் வடசொல்லாற் குறிப்பர்.

மாந்தர்க்கு அறியாமையும் அச்சமும் மிக்கிருந்த முதற் காலத்தில், பேயாட்சியும் மிக்கிருந்தது. அக்காலத்து மதம் பேய் மதமே. பேயாடிகளும் பேயோட்டிகளும் பேய்மந்திரிகரும் பெரு மதிப்புப் பெற்றிருந்தனர். ஒருவரைப் பிடித்த பேயோட்டவும், நோய் நீக்கவும், ஒருவரை நோய்ப்படுத்தவும் வாய்கட்டவும் இயக்கந் தடுக்கவும் விரும்பிய இடத்திற்கு வருவிக்கவும் வசியஞ் செய்யவும் சாவிக்கவும், ஒருவர்மீது பேயேவவும், ஒருவருடை மையை மறைக்கவும் அழிக்கவும், சண்டையிலும் கலகத்திலும் போரிலும் வெற்றி தரவும், இறந்தோரைப் பேசுவிக்கவும், தம்மால் இயலு மென்று பேய் மந்திரிகர் தருக்கினர்.

இன்றும், பேயோட்டல் பெருவழக்கமாகவும், வசியமுஞ் செய் வினையும் அருகிய வழக்காகவும், இருந்துவருகின்றன. குறளியேவல் சில செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டது. போர் வெற்றிக்கு மந்திரிகரைத் துணைக்கொள்வது, திப்பு சுல்தான் காலம்வரை தொடர்ந்தது. இறந்தான்குறி (Necromancy) கேட்கும் இடமும் இன்று சிலவுள்ளன.

கடைக்கழகக் காலத்தில் பேயனார் என்றொரு புலவரும், பேய்மகள் இளவெயினி என்றொரு புலத்தியாரும் இருந்தனர். பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்று இறைவனடியார் பெயர் களும் அடுத்து வழங்கின. பேயன், பேய்ச்சி என்னும் இயற்பெயர் தாங்கிய மக்களை, இன்றும் நாட்டுப்புறத்திற் காணலாம்.

பண்டைக்காலத்திற் பேய்களே பெருவழக்காகப் பொதுமக்க ளால் வணங்கப்பட்டதனாலும், சில பேய்கள் நன்மையே செய்வன வாக இருந்ததனாலும், பேய்க்கு நாளடைவில் தெய்வம் என்னும் பெயரும் ஏற்பட்டது.

"கானுறை தெய்வம் காதலிற் சென்று
நயந்த காதலின் நல்குவன் இவனென
வயந்த மாலை வடிவிற் றோன்றிக்
கொடிநடுக் குற்றது போல ஆங்கவன்
அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீ ருகுத்து
வாச மாலையின் எழுதிய மாற்றம்
தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின்
கோவலன் செய்தான் கொடுமையென் றென்முன்
மாதவி மயங்கி வான்துய ருற்று
மேலோ ராயினும் கீழோ ராயினும்
பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும்
பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போன்மெனச்
செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண்
வெண்முத் துதிர்த்து வெண்ணிலாத் திகழும்
தண்முத் தொருகாழ் தன்கையாற் பரிந்து
துனியுற் றென்னையுந் துறந்தன ளாதலின்
மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது
எதிர்வழிப் பட்டோர் எனக்காங் குரைப்பச்
சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன்
பாத்தரும் பண்பநின் பணிமொழி யாதென"
(சிலப். 11 : 171-91)

என்பதிற் பேய்மகள் தெய்வம் எனப்பட்டமை காண்க. இனி, பேய் கட்கு எல்லாச் செய்தியும் தெரியுமென்பதும், எவ்வடிவுங் கொள்ள இயலுமென்பதும், பொருத்தமாகப் படைத்து மொழியுந் திறனுண் டென்பதும், நொய்ய வுடம்பன்றிக் கனவுடம்பும் இரவும் பகலும் எடுக்கவும் கானிலந் தோய நடக்கவும் கூடு மென்பதும், தம் தலைவியாகிய காளிக்குக் கட்டுப்பட்டும் பத்தினிப் பெண்டிர்க்கும் தூய துறவியர்க்கும் அஞ்சியும் ஒழுகும் கடப்பாடுண்டென்பதும், இப் பகுதியால் அறியப்படும். பேய்கள் பட்டப்பகலிலும் கனவுடம்பு கொண்டு பாதம் நிலத்திற் பதிய நடக்குமென்பதை, பழையனூர் நீலி கதையும் மெய்ப்பிக்கும். அல்லாக்கால், வணிகனை மட்டுமன்றி ஊராரையும் ஊர்முதலிகளாகிய எழுபது வேளாளரையும், நீலிப் பேய் ஏமாற்றியிருக்க முடியாது.

பேய்கட்கும் பூதங்கட்கும், கள்ளும் இறைச்சியும் படைப்ப தும் கடாவும் சேவலும் காவுகொடுப்பதும், கல்வியும் பண்பாடுங் குன்றிய பொதுமக்கட்குக் களிப்பையும் ஊக்கத்தையும் ஊட்டு வனவாயிருந்தன.

சில சமையங்களிற் புதைய லெடுக்கவும், கிணறு வெட்டவும், கட்டடங் கட்டவும், நரக்காவு கொடுக்கவேண்டிய தாயிற்று. "புதை யலைப் பூதங் காத்தாற் போல்", "கிணறு வெட்டப் பூதம் புறப்பட் டாற் போல்" என்னும் உவமைப் பழமொழிகள் கவனிக்கத்தக்கன.

தீய ஆவிகள் சிறுபிள்ளைகளைத் தீண்டாவாறு, அவர்களின் தலையுச்சியில் அரைத்த வெண்சிறுகடுகை அப்பி வந்தனர்.

போரிற் புண்பட்ட மறவரைப் பேய்கள் அண்டாவாறு, பெண்டிரும் உறவினரும், வேப்பங் குழையை வீட்டிற் செருகியும், மையிட்டும், வெண்சிறுகடுகு தூவியும், நறும்புகை காட்டியும்,, காஞ்சிப்பண் பாடியும் காத்தனர் என்பது,

"தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதறி ஆம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே" (புறம். 281)
என்னும் பாட்டால் அறியப்படும்.

"கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ அம்மானே"
என்று, புகழேந்திப் புலவர் ஒட்டக்கூத்தரை வெட்டிப் பாடி வேம்பின் சிறப்பை நாட்டியது இங்குக் கவனிக்கத்தக்கது.

பேய் என்னும் ஆவியினம் இருப்பது உண்மையேயாயினும், அறியாமையினாலும் ஆய்ந்து பாராமையினாலும், பேயல்லாத வற்றையும் பேயென்று மயங்கி யுணர்வது மாந்தரியல்பாக வுள்ளது.

சதுப்பு நிலங்களில் அழுகற் பொருளினின்று கிளம்பும் ஆவியம் (gas), இரவில் ஒளிவிட்டு எரிவதுண்டு. அதைக் கண்டு கொள்ளிவாய்ப் பேய் (ignis fatuus, jack-o'-lantern, will-o'-the-wisp, fen-fire) என்பது அறியாமைபற்றியதாகும்.

இராக் காலத்தில், காற்றினால் அண்மையிலுள்ள மரக்கிளை வளைந்து கதவின்மேற் படுவதைப் பேய் தட்டுவதாகவும், நில வொளியில் அசையும் மரக்கிளையின் நிழல் பலகணி வழியாய் அறைக்குள் விழுவதைப் பேய் குதிப்பதாகவும், கருதுவது ஆய்ந்து பாராமையின் விளைவாகும்.

பேய் என்னும் சொல், அச்சுறுத்துவது என்றும் அஞ்சுவது என்றும் பொருள்படும்.

"பேம்நாம் உரும்என வரூஉங் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள." (தொல். உரி. 67)
பே - பேம். பே - பேய்.

"அஞ்சினவன் கண்ணிற்கு ஆகாய மெல்லாம் பேய்", "அஞ்சினவனுக்கு அகப்பைக் கணையும் பேய்", "அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய்" என்னும் பழமொழிகள், அச்சத்தினாலேயே பல பேய்கள் படைத்துக் கொள்ளப்படும் உண்மையைத் தெரிவிக்கும்.

இனி, உண்மையான சில பேய்களும், அஞ்சுவாரைக் கண்டு அச்சுறுத்துவதும், அஞ்சாதாரைக் கண்டு விலகிப்போவதும் உண்டு. இதையே, "ஆளைக் கண்டு ஏய்க்குமாம் ஆலங்காட்டுப் பேய்" என்னும் பழமொழி உணர்த்தும்.

ஒரு சத்திரத்திலிருந்த அரசகுலப் பெண்பேய், அங்கு வந்து தங்கியவரை யெல்லாம் துன்புறுத்தியதுபோல், ஒளவையாரையும் நாற்சாமத்திலும் துன்புறுத்த வந்தது. அவர் ஒவ்வொரு சாமத்திலும் ஒவ்வொரு வெண்பாப் பாட, அது ஓடிப் போயிற்று.

ஓர் ஊரில் தலைவியா யிருந்த வேலி என்பவள், ஓர் இடிந்த மண்சுவரைக் கட்டுவிக்கப் பலமுறை முயன்றாள். அதிலிருந்த ஒரு பிராமணப் பேய், கட்டி முடித்த ஒவ்வொரு முறையும், கட்டின வனுக்குக் கூலிகொடுக்கு முன், அதை இடிந்து விழச் செய்தது. கடைசியிற் கம்பர் வந்து கட்டி முடித்துக் கூலி வாங்கிய பின், அது விழவிருக்குங் குறிப்பை யறிந்து,

"மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்தேன்
சொற்கொண்ட பாவின் சுவையறிவாரீங்கிலையே
"விற்கொண்ட வாணுதலாள் வேலி தருங்கூலி
நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே"

என்ற பாட்டைப் பாடவும், அது விழாது நின்றுகொண்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கரூரில், ஒரு நெடுஞ் சாலையைச் சற்று மறித்துக்கொண்டிருந்த ஒரு நூறாட்டை வேப்ப மரத்தை, வெட்டி விடும்படி உத்தரவாயிற்று. அதிற் பேயிருக்கின்ற தென்று ஒருவரும் வெட்ட முன்வரவில்லை. கூலி அதிகமாகத் தருவதாகச் சொல்லி அதிகாரிகள் வற்புறுத்தியதன்மேல், துணிந்து வந்த இரண்டொருவரும், கோடரியால் ஒரு வெட்டு வெட்டின வுடன் பின்வாங்கிக் காய்ச்சல் கண்டு, வீட்டிற் படுத்துக் கொண் டனர். அதன்பின் அச்சம் அதிகரித்தது. கூலியை எத்துணை உயர்த் தினும் வெட்ட ஒருவரும் இசையவில்லை. அதன் பின், திருச்சிராப் பள்ளித் தண்டலாளரான ஆங்கிலத் துரை, ஓர் 24 மணி நேர வெளியேற்றக் கட்டளைச் சீட்டில் தாம் கையெழுத்திட்டு, அம் மரத்தில் ஒட்டச் சொல்லிவிட்டு, மறுநாள் தாமே சில வேலைக் காரரைக் கொண்டுவந்து வெட்டச் சொன்னார். மரம் விரைந்து வெட்டப்பட்டது. ஒருவருக்கும் ஒன்றும் நேரவில்லை.

பேய்களையும் பூதங்களையும், கல்லிலும் சுதையிலும் சிறிதும் பெரிதுமாக அஞ்சத்தக்க முகத்துடன் மாந்தனைப் போன்ற படிவஞ் சமைத்தும், கற்றூணில் உருவஞ் செதுக்கியும், சுவரில் ஓவியம் வரைந்தும், உடம்பு வடிவின்றி மண்ணிலும் சுதையிலும் பட்டைக் கூம்பாக அமைத்தும், உருவ வணக்கஞ் செய்துவந்தனர் பண்டையர்.

(2) கடிமரம்

கடிமரம் என்பது, ஒவ்வொரு குறுநில மன்னனும் பெருநில வேந்தனும், கொடியும் முத்திரையும் போலத் தன் ஆள்குடிச் சின்னமாகக் கொண்டு, பகைவர் வெட்டாதவாறும் அவர் யானை யை அதிற் கட்டாதவாறும், காத்து வந்த காவல்மரம். கடைக்கழகக் காலத்தில், கடிமரம் ஓர் அரசச்சின்னம் போன்றே கருதப்பட்ட தாயினும், முந்துகாலத்தில் அது அரசக் குடியைக் காக்கும் தெய்வமாகவே வணங்கப்பட்டிருத்தல் வேண்டும். பண்டைக்காலக் கடிமரங்களுள் கடம்பு ஒன்று. அதைக் கொண்டவர் கடம்பர்.

பிற்காலத்தில் அரசமரம் தெய்வத்தன்மை யுள்ளதாகப் பொது மக்களாற் கருதப்பட்டதும், பிள்ளைப்பேறு வேண்டிய பெண்டிர் அரசமரத்தைச் சுற்றி வந்ததும், "அரசமரத்தைச் சுற்றிவந்ததும் அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்" என்னும் பழமொழியும், இக்கொள்கையை வலியுறுத்தும்.

(3) நாற்பூதம்

நிலம் : நிலம் மக்களைத் தாங்குவதனாலும், உணவு விளையும் இடமாயிருப்பதனாலும், இறுதியில் எல்லா வுடம்பும் அதற்குள் ஒடுங்குவதனாலும், தாயாகக் கருதப்பட்டது.

"நிலமக ளழுத காஞ்சியும்" (புறம். 365)

நீர் :
உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவை விளை விப்பதாயும், தானும் குடிக்கப்படுவதாயும், உடம்பையும் பொருள் களையும் துப்புரவு செய்வதாயும், சமைக்கவுதவு வதாயும், உள்ள நீர்நிலை, எங்குங் காணப்படாமையால். ஆண்டு முழுதும் ஓடிக் கொண்டிருக்கும் பேராறுகள் தெய்வமாக வணங்கப்பட்டன.

குமரிமலையும் பஃறுளியாறும் கடலுள் மூழ்கினபின், கங்கையே நாவலந்தேயத் தலைமைப் பேராறானமையின், அது ஒரு தாயாக அல்லது பெண்தெய்வமாக வணங்கப்பட்டது. கங்கை யம்மன் என்பது இன்றும் ஒரு சிற்றூர்த் தெய்வம். ஆற்றுநீரை மிகுதியாகப் பயன்படுத்துபவர் வேளாளராதலின், அவர் கங்கை புதல்வர் எனப்பட்டனர். அவர் குலம் கங்கை குலம் எனப்பட்டது.

கங்கை நாடு ஆரியநாடாக மாறியபின், வேளாளர் காவிரிப் புதல்வர் எனப்பட்டனர்.

"பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்" (சிலப். 10 : 148)

தீ :
தீ பல்வகையிற் பெருநன்மை செய்வதுபற்றித் தலைசிறந்த தெய்வமாக வணங்கப்பட்டதனால், தெய்வம் என்னும் பெயரே தீயைக் குறிக்குஞ் சொல்லினின்றே தோன்றிற்று.

மரங்களும் கற்களும் பிறவும் ஒன்றோடொன்று உரசுவதனால் தீப் பிறப்பதைக் கண்டனர். அதனால், ஞெலிகோல் என்னும் தீக்கடைக் கோலால் தீயுண்டாக்கும் வழியைக் கண்டு பிடித்தனர். பொருள்களின் உராய்வினால் தீத் தோன்றலைக் கண்டபின், உராய்தலைக் குறிக்கும் தேய் என்னும் வினையினின்று, தீ என்னும் பெயரும் தெய்வம் என்னும் பெயரும் தோற்றுவிக்கப் பட்டன.

தேய்தல் = பொருள்கள் ஒன்றோடொன்று உராய்தல்.
தேய் - தேயு = உராய்ந்து பற்றும் நெருப்பு.
தேயு - தேசு = நெருப்பின் ஒளி, ஒண்மை.
தேசு - வ. தேஜஸ்.
தேய் - தே = 1. தெய்வம் (பிங்.). "தேபூசை செய்யும் சித்திரசாலை" (சிவரக. நைமிச. 20 ). 2. நாயகன் (இலக். அக.).

தே - தீ = 1. நெருப்பு. "வளித்தலைஇய தீயும்" (புறம். 2). 2. விளக்கு. "தீத்துரீஇ யற்று" (குறள். 929). 3. வயிற்றுத் தீயாகிய கடும்பசி. "வயிற்றுத்தீத் தணிய" (புறம். 74). 4. தீப் போன்ற சினம் "மன்னர்தீ யீண்டுதங் கிளையோடு மெரித்திடும்" (சீவக. 250). 5. தீயின் தன்மை, தீமை. "தீப்பால தான்பிறர்கட் செய்யற்க" (குறள். 206). 6. நஞ்சு. "வேகவெந் தீநாகம்" (மணிமே. 20 : 98). 7. நரகத்தீ. "தீயுழி யுய்த்துவிடும்" (குறள். 168).

தே - தீ. ஒ.நோ: தேன்சுவை - தேஞ்சுவை - தீஞ்சுவை.
தேய் - தெய் = தெய்வம் (பிங்.).

தேய் - தேய்வு - தேவு = 1. தெய்வம் (பிங்.). "நரகரைத் தேவு செய்வானும்" (தேவா. 696 : 2 ). 2. தெய்வத் தன்மை.

தேவு - தேவன் = கடவுள். "ஒருவனே தேவனும்" (திருமந். 2104). தேவன் - வ. தேவ.

தேய்வு - தெய்வு - தெய்வம் = 1. வணங்கப்படும் பொருள். "தெய்வ முணாவே" (தொல். பொருள். 18). 2. தெய்வத்தன்மை. 3. தெய்வத்தன்மை யுள்ளது. 4. கடவுள். "அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்" (பழமொழி). 5. கடவுளின் ஏற்பாடாகிய ஊழ்.

தெய்வம் - வ. தைவ.
தெய்வம் - தெய்வதம். "ஆங்கத் தெய்வதம் வாரா தோவென"
(மணிமே. 9 : 70).

தகரம் எழுத்துப் பேறு. ஒ.நோ: படவு-படவர்-பரவர்-பரதவர்.

தெய்வதம் - வ. தைவத(daivata).
தெய்வம் - L. deus, Gk. theos.

தமிழரை என்றும் தம்மடிப்படுத்தவும் உலகத்தை ஏமாற்றவும் திட்டமிட்டுள்ள சமற்கிருத வெறியரான பிராமணர், மொழியிய லுண்மையை நெஞ்சார மறுத்து, தைவ என்னுந் தென்மொழித் திரிசொல்லினின்று தாம் செயற்கையாகத் திரித்துக்கொண்ட திவ் என்னும் மூலத்தினின்று, தெய்வம் தேவு தேவன் முதலிய தென் சொற்கள் பிறந்துள்ளதாகக் கூறுவர். தேய் என்னும் மூலத்திலுள்ள யகரமெய், தெய்வம் என்னுஞ் சொல்லிலுமிருப்பதையும், இலத்தீன கிரேக்கச் சொற்களிலும் யகரம் ஒலிப்பதையும், நோக்குக.

தொட்டாற் சுடுவதும் தொடர்ந்து பட்டால் எரித்துக் கொல் வதும் பற்றி, தீக் கொடியதென்று கருதப்பட்டு, அதன் பெயரினின்றே


தீமை என்னுஞ்சொல் தோன்றியிருப்பினும், பிற பூதங்கள் செய்யாத பல்வேறு பெருநன்மைகளைச் செய்வதால், சிறப்பாக இரவில் இடம்பெயர்விற்கும் அறிவுப் பேற்றிற்கும் உணவு தேடற்கும் இன்றி யமையாத ஒளியைத் தருவதால், தீயானது இன்றும் போற்றப்படு வதிலும் விளக்கேற்றியவுடன் வணிகரால் தொழப்படுவதிலும் வியப்பொன்றுமில்லை.

வளி(காற்று) :
நாற்பூதங்களுள்ளும் வலி மிக்கது வளி. "வளிமிகின் வலியுமில்லை" (புறம். 51). வலிமை மிக்கவனை வளிமகன் என்பர்.

"அரக்கில்லை வளிமக னுடைத்து" (கலித். 25)
மென்காற்றாகிய தென்றலாலும் தண்காற்றாகிய கொண்ட லாலும் இன்பத்தையும், வெங்காற்றாகிய கோடையாலும் குளிர் காற்றாகிய வாடையாலும் துன்பத்தையும், வன்காற்றாகிய சூறாவளி யால் துன்பத்தொடு சேதத்தையும் கண்ட மாந்தர், வெங்காற்றும் வன்காற்றும் வீசாவாறு காற்றுத் தெய்வத்தை வேண்டி வந்தனர். இதை,

"முளிமுதன் மூழ்கிய வெம்மைதீர்ந் துறுகென
வளிதருஞ் செல்வனை வாழ்த்தவு மியைவதோ"
(கலித். 16)
என்னும் கலித்தொகை யடிகள் உணர்த்தும்.

வளிதருஞ் செல்வன் என்றது காற்றுத் தெய்வத்தை. வேனிற் காலத்தில் வெங்கான வழியாகச் செல்லுங் கணவன்மீது, வெம்மை யாக வீசாவாறு காற்றுத் தெய்வத்தையே தலைவி வேண்டக் கருதி, தன் கற்பினால் மயங்கினாள். முதல் தாழிசையில் "இன்னிசை யெழிலி" யென்றது முகில் அல்லது மழைத் தெய்வத்தை. இரண்டாம் தாழிசையில் "கனைகதிர்க் கனலி" என்றதே ஞாயிற்றை. நச்சினார்க்கினியர் மூவிடத்தும் ஞாயிறென்றே பொருள்கொண்டு, ஞாயிற்றைப் பாலைக்குத் தெய்வமாகக் கூறினார். பாலைத் தெய்வம் காளியே. கதிரவனும் திங்களும் நானிலத்திற்கும் ஐந்திணைக்கும் பொதுவாகும். தொல்காப்பியர், "மாயோன் மேய" (தொல். 951) என்னும் நூற்பாவில், பாலைக்குத் தெய்வங் கூறாது விட்டதால், இம் மயக்கம் நேர்ந்தது.

இருசுடர்

கதிரவன் :
பகலைத் தோற்றுவித்துப் பல்வேறு தொழிலும் உலக வாழ்க்கையும் நடைபெறச் செய்யும் கதிரவனை வணங்கியது, இயற்கைக்கு முற்றும் ஒத்ததே.


இன்றும், நீண்ட நாள் இடைவிடாது அடைமழை பெய்யும் போதும், கடும்பனிக் காலத்திலும், கள்வரச்சமும் கடுவிலங்கச்சமும் உள்ள இடத்தில் இராத் தங்கும்போதும், விழா நாள்களிலும், வேலை நெருக்கடியுள்ளபோதும், நோய் நிலையிலும், தூக்கம் வராதபோதும், கண்ணன்ன கேளிரைக் காண விரையும் நிலை யிலும், இரவிற் சவமுள்ள வீட்டிலும், கதிரவன் தோற்றத்தின்மீது வேணவாக் கொள்வது இயல்பாதலால், நாகரிகம் குன்றிய பண்டைக் காலத்தில் அது மிக்கே யிருந்திருத்தல் வேண்டும்.

"கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ"
என்னுங் கலித்தொகையடி, கதிரவன் வணங்கப்பட்டதைக் குறிப்பாக வுணர்த்தும். காவிரிப்பூம்பட்டினத்திற் கதிரவன் கோவில் இருந்தது.

"உச்சிக்கிழான் கோட்டம்" (சிலப். 9 : 11)
முற்றத் துறந்த முழு முனிவராகச் சொல்லப் பெறும் இளங்கோவடிகளே, தம் இயைபு வனப்புத் தொடக்கத்தில்,

"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்"
என்று மங்கல வாழ்த்துப் பாடினார்.

உலக விளக்காக விருந்து உயிர்வாழ்க்கை நடைபெறச் செய்யும் கதிரவன், தீயின் கூறாக விருப்பதனாலும் பெருஞ்சிறப்புப் பெறு வதாயிற்று. அதனால், தெய்வப் பெயரினின்று கதிரவன் பெயரொன்றும் தோன்றிற்று.

சுள்ளுதல் = எரிதல், காய்தல், சுடுதல்.
சுள் - சுள்ளி = காய்ந்த குச்சு.
சுள் - சுள்ளை = கலமுஞ் செங்கலும் சுடும் காளவாய்.
சுள்ளை - சூளை.

சுள்ளென்று வெயிலடிக்கிறது என்று, இன்றுஞ் சொல்லும் உலக வழக்கை நோக்குக.

சுள் - வ. ஸு ஷ்.
சுள் - சுர் - சுறு - சுடு - சுடல் - சுடலை.
சுர் - சுரம் = சுடும் பாலை நிலம், உடம்பு சுடும் காய்ச்சல் நோய். சுரம் - வ. ஜ்வர.

நெருப்பைத் தொட்டவர், சுரீர் என்று சுட்டுவிட்டதென்று இன்றுஞ் சொல்லுதலைக் காண்க.

சுரம் - சுரன் = தீ வடிவில் தோன்றும் தெய்வம் அல்லது தேவன். சுரன் - வ. ஸு ர.

சுரன் - சூரன் = 1. நெருப்பு (பிங்.). 2. கதிரவன் (பிங்.) "காதற் சூரனை யனைய சூரா" (பாரத. பதினேழாம். 49). சூரன் - வ. ஸூர்ய.

ளகரம் லகரத்தின் திரிபு வளர்ச்சியாதலால், சுள் என்பதன் மூலம் சுல் என்பதே.
L. sol, E.sun, OE. sunne, sunna, ON. sunna, OS., OHG, sunno, sunna, Goth. sunno.

ஒரே மூலத்தினின்று திரிந்த வடசொற்கள், ஸு ர என்றும் ஜ்வர என்றும் முதலெழுத்து வேறுபட்டிருத்தலை, ஊன்றி நோக்கி உண்மை தெளிக.

எல் = 1. ஒளி. "எல்லே யிலக்கம்" (தொல். சொல். 271). 2. வெயில் (பிங்.). 3. கதிரவன். "எற்படக் கண்போன் மலர்ந்த" (திருமுருகு. 74). எற்பாடு = கதிரவன் சாயுங் காலம். 4. பகல். "எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி" (புறம். 170). 5. நாள் (பிங்.).

எல்லவன் = கதிரவன். "எல்லவன் வீழு முன்னம்" (பாரத. பதினெட். 119).
எல்லினான் = கதிரவன். "புயங்க முண்டுமிழ்ந்த வெல்லினா னென்" (கந்த பு. அக்கினி. 223 ).
எல்லோன் = கதிரவன் (பிங்.).

எல்லி = 1. கதிரவன் (பிங்.). 2. பகல். "இரவோ டெல்லியு மேத்துவார்" (தேவா. 344 : 8 ). ஒ.நோ: Gk. helios.

புது + எல் = புத்தெல் - புத்தேள் = புதிதாக ஒளிவடிவில் தோன்றும் தெய்வம் அல்லது தேவன். "புத்தே ளுலகத்தும்" (குறள். 213).

இதனால், எல் என்பது கதிரவனுக்கும் தேவனுக்கும் பொதுப் பெயரானமை காண்க.

திங்கள்:
ஞாயிறு மறைந்த இராக்காலத்தில், நிறைந்தும் குறைந்தும் மறைந்தும் அதற்குச் சிற்றளவு தலைமாறாகத் தோன்று வது திங்கள். தழு - தகு - திகு - திகழ் - திங்கள். தழு - தழல் - தணல். தழதழ - தகதக. தக - தகம் - தங்கம். ஆயிரக்கணக்கான வெள்ளிகளை விட விளக்கமாய்த் திகழ்வதால், திங்கள் எனப்பட்டது.

சிற்றொளி வீசுதல் தவிர வேறொரு நன்மையுஞ் செய்யா விடினும், வேனிற்கால வெப்பந் தாங்கமுடியாது வருந்திய மாந்தர், தண்ணொளி வீசும் திங்களையும் புகழ்ந்து போற்றினர். 'பிறை தொழு கென்றல்' என்னும் அகப்பொருட்டுறை, திங்கள் வணக்கம் தொன்றுதொட்டு நிகழ்ந்து வந்தமையைக் காட்டும். காவிரிப்பூம்

பட்டினத்தில் திங்கட்கும் கோவிலிருந்தது. இளங்கோவடிகளும், "திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்" என்று மங்கல வாழ்த்துப் பாடினார்.

"நிலாக்கோட்டம்" (சிலப். 9 : 13)
திங்களைப்போல் தீயும் இரவில் ஒளி தருவதால், கதிரவன் திங்கள் தீ ஆகிய மூன்றும் முச்சுடர் எனப்பட்டன.

"அந்திச் சேயொளி முச்சுடர் முக்கணும்" (தக்க யாகப். 281)
பண்டைத் தமிழக முப்புலங்களுள், தென்புல மென்னும் பாண்டிநாடு வெப்பமிக் கிருந்ததனால், பாண்டியன் திங்களைத் தன் குல முதலாகவும்; குணபுல மென்னும் சோழநாடு பனிமலை வரை தொடர்ந்து வெப்பங் குன்றியிருந்ததனால், சோழன் கீழ்த் திசையிலெழுங் கதிரவனைத் தன் குல முதலாகவும்; குடபுல மென்னும் சேர நாடு நாள்தோறும் பெருமழை பொழியும் குட மலைத் தொடரைக் கொண்டிருந்ததனால், சேரன் தீயைத் தன் குலமுதலாகவும்; கொண்டிருந்தனர். மூவேந்தர் குடிக் கிளைகளே, வடநாவலம் ஆரிய நாடாக மாறியபின், 'சந்திர வமிசம்', 'சூரிய வமிசம்', 'அக்கினி வமிசம்' எனப் பெயர் பெற்றன.

நல்விலங்கு

வடார்க்காட்டு மாவட்ட ஆம்பூரின் பழம்பெயர் 'ஆன்மை யூர்' என்றும், ஆவை வணங்கி வந்ததால் அப் பெயர் பெற்ற தென்றும், அங்கிருந்த பெரும்புலவரும் பாவேந்தருமான துரை சாமிப் பாவலர் சொன்னார். இங்ஙனம் வேறு சில வூரிலும் ஆவை வணங்கியிருக்கலாம்.

நச்சுயிரி

தமிழகத்தில் மக்களைத் தொன்றுதொட்டுக் கொன்று வந்த நச்சுயிரிகளுள், தலைமையானது பாம்பு. பாம்பினத்தில், தீயதும் தீயதல்லாததும் ஆக இருசாருள. தீயவற்றுள்ளும், நச்சுப் பல்லாற் கொத்தி மேனி நோயுண்டாக்குவனவும் விரைந்து உயிர் போக்குவன வுமான சிற்றுடம்பினவும், வாயினாற் பற்றி மக்களையும் விலங்கு களையும் இரையாக விழுங்கும் பேருடம்பினவும், ஆக இரண்டு வகுப்புகளுள. கொல்வது மட்டும் செய்வனவற்றுள், நல்ல பாம்பு, விரியன் முதலிய பலவகை யுள. அவற்றுள்ளும், ஒவ்வொன்றும் பல திறப்பட்டதாகும்.

பாம்பு என்பது, முதற்கண் நல்ல பாம்பின் பெயராகவேயி ருந்து, பின்னர்ப் பொதுப் பெயராயிற்று. பாதல் - பரவுதல். பா -

பாவு. பா - பாம் - பாம்பு. நல்ல பாம்பு தன் படத்தைப் பரப்புவதால் பாம்பு எனப்பட்டது. அது பொதுப் பெயரான பின், குலமரத்தை "நன் மரம்" என்றாற் போலக் குலப் பாம்பை நல்லபாம்பு என்றனர்.

நாகம் என்பதே பாம்பின் பொதுப் பெயர். நகர்வது நாகம். ஒ.நோ: OE. snakan = to creep; snak - snake.

நாகம் - வ. நாக (naga). நக (naga) என்னும் சொல்லினின்று திரித்து, மலையிலிருப்பது நாகம் என்று வடமொழியாளர் கூறுவது, பொருந்தப் பொய்த்தல் என்னும் உத்தி. நச்சுப் பாம்புகளுட் பெரு வழக்காக மக்களில்லங்களை யடுத்து வாழ்வது, நல்ல பாம்பேயா தலால், நாளடைவில் நாகம் என்னும் பொதுப்பெயர் நல்ல பாம்பின் சிறப்புப் பெயருமாயிற்று. "நாகப் பாம்பு பைத்தனைய" (சீவக. 561). "நன்மணி யிழந்த நாகம் போன்று" (மணிமே. 25: 195).

முடிநாகராயர், இளநாகனார், நன்னாகனார், நாகனார், நாகன் தேவனார் என்னும் பண்டைப் புலவர் பெயர்களும், நாலை கிழவன் நாகன் என்னும் கடைக்கழக வேள் பெயரும், நாகப்பன் நாகராசன் நாகலிங்கம் நாகம்மை நாகமுத்து என்னும் இற்றை இயற்பெயர் களும், நாகபடம்(பாம்படம்) நாகமுடிச்சு நாகர் நாகவொத்து என்னும் பெண்டிர் அணிப்பெயர்களும், குறிப்பாகவும்; சில அரச மரத்தடியிலும் மேடைமேலுமுள்ள, ஐந்தலை நாகமும் எழுதலை நாகமும் இருநாகப் பிணையலும் ஆகியவற்றின் உருவம் செதுக்கிய கற்கள், வெளிப் படையாகவும்; பண்டை நாக வணக்கத்தைத் தெரிவிக்கும். நெல்லை மாவட்டத்தில் சங்கரநயினார் கோவிற் பக்கத்தில், பாம்புக் கோவில் சந்தை என்றொரு புகைவண்டி நிலையமும் உள்ளது. இன்றும் நாகக் கற்களை வணங்கும் மாந்தர் ஒருசிலர் உளர்.

நல்ல பாம்புப் புற்றோ வளையோ உள்ள வீடுகளில், நாள் தோறும் அல்லது செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பாலும் பழ மும் படைப்பது வழக்கம்.

வதி தெய்வம்

பண்டை மாந்தர், ஒவ்வொரு மலையிலும் சோலையிலும் இயற்கை நீர்நிலையிலும், ஒவ்வொரு தெய்வம் நிலையாக வதிந்த தாகக் கருதி, அவற்றையும் வணங்கி வந்தனர்.

ஐந்திணைத் தெய்வம்

குறிஞ்சித் தெய்வம்

குறிஞ்சிநில மக்கள் தம் தெய்வத்தைத் தீயின் கூறாகக் கொண்டு, சேந்தன்(சிவந்தவன்) என்று பெயரிட்டு வணங்கினர். சேயோன், சேய் என்பன இலக்கிய வழக்கு.

"செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
................செச்சைக் கண்ணியன்" (திருமுருகு. 206 - 8)

"பவழத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேய்க்கு முடுக்கை..........
சேவலங் கொடியோன்................" (குறுந். கடவுள்.)

"உடையு மொலியலுஞ் செய்யைமற் றாங்கே
படையும் பவழக் கொடிநிறங் கொள்ளும்
உருவு முருவத்தீ யொத்தி முகனும்
விரிகதிர் முற்றா விரிசுட ரொத்தி" (பரிபா. 19 : 97-100)

வேட்டைத் தொழிலாற் குறவர் மறஞ் சிறந்திருந்ததனால், தம் தெய்வத்தையும் மறவனாகக் கருதி, அதற்கேற்றவாறு அவனை முருகன் (இளைஞன்) என்றனர்.

முள் - முளை - முளையன் = சிறுவன். முள் - முர் - முரு - முருகு = இளமை (திவா.), அழகு (பிங்.). இளமையிலேயே அழகிருப்பதால், அழகு என்பது வழிப்பொருளே. முருகு - முருகன் = கட்டிளமை யோன் (திவா.), முருகத் தெய்வம். முருகன் என்னும் பெயர், இலக்கிய வழக்கில் ஆண்பாலீறு குன்றியும் வரும்.

"அருங்கடி வேலன் முருகொடு வளைஇ" (மதுரைக். 611)
குமரன் என்னும் பெயரும் இளைஞன் என்னும் பொருளதே. குறிஞ்சிநிலக் கடம்பின் மலரை அணிவித்ததனால் கடம்பன் என் றும், வேலைப் படையாக்கியதனால் வேலன் என்றும், முருக னுக்குப் பெயர்கள் தோன்றின. முருகனுருவம் பொறித்த தூண்களை அம்பலங்களில் நிறுத்தினதனால், அவனுக்குக் கந்தன் என்னும் பெயரும் தோன்றிற்று. கந்து = தூண். கந்தம் = தூணம் (பெருந்தூண்).

"கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்" (புறம். 52)
என்று புறப்பாடல் கூறுதல் காண்க. கற்றூண்களில் தெய்வவுருவம் பொறிப்பதை, 'கந்திற் பாவை' என்னும் மணிமேகலைச் சொல் லாலும் (21 ) அறிக.

கந்து - கந்தம் - கந்தன்.

குறிஞ்சிநிலப் பறவையாகிய மயிலை முருக னூர்தியாகக் கொண்டமையால், மயிலூர்தி, மயிலேறும் பெருமாள் என்னும் இலக்கிய வழக்கும் எழுந்தன. போர்மறஞ் சிறந்த சேவல் அவனுக்குக் கொடியாயிற்று.

குறிஞ்சிநிலத் தலைவி கொடிச்சியெனப்பட்டதனால், அதற் கேற்ப, முருகன் தேவி வள்ளி (கொடி) எனப்பட்டாள்.

தேனும் தினைமாவும் கள்ளும் இறைச்சியும், முருகனுக்குத் தொண்டகப் பறையறைந்து படைக்கப்பட்டன. முருகத்தெய்வ மேறி யாடுபவன், வேலேந்தியதனால் வேலன் எனப்பட்டான். அவன் கள்ளுண்டாடிய ஆட்டு வெறியாட்டு எனப்பட்டது. முருகன் கோவில்கட்குக் காவடி யெடுத்தல், அவனடியார்க்கே சிறப்பாக வுரிய நேர்த்திக் கடன்.

முல்லைத் தெய்வம்

முல்லைநிலத்தில், ஆடுமாடுகட்குப் புல் வளரவும், ஆயருண விற்கு வானாவாரிப் பயிர்கள் விளையவும், மழை வேண்டிய தாயிற்று. மழை கரிய முகிலினின்று விழுவதால், முகிலையே தெய்வமாகக் கொண்டு மால் என்று பெயரிட்டு வணங்கினர்.

"இன்னிசை யெழிலியை யிரப்பவு மியைவதோ" (கலித். 16)
என்பதால், முகில் தெய்வமாக வணங்கப்பட்டமை அறியப்படும்.

மால் - 1. கருமை. "மால் கடல்" (பெரும்பாண். 487). 2. கரு முகில். "சிலைமா லுருமு" (தஞ்சைவா. 164). 3. கரியவனான திருமால். "நீர்செல நிமிர்ந்த மாஅல் போல" (முல்லைப். 3).

மால் என்னும் தெய்வப் பெயர், உலகவழக்கில் என்றும் திருமால் என்று அடைபெற்றே வழங்கும். மாலை மாயோன் என்னுஞ் சொல்லாலுங் குறிப்பது இலக்கிய வழக்கு. மாயன் மாயவன் என்பன மாயோன் என்பதன் மறுவடிவங்கள். மால் மாயன் என்னும் இரண்டும் ஒரே மூலத்தினின்று தோன்றிய ஒரு பொருட் சொற்கள். மால் - மா - மாயோன் - கரியவன்.

மருதத் தெய்வம்

குமரிநாட்டு மருதநில மக்கள், முதன் முதலாக மறுமையைப் பற்றிக் கருதி, இவ்வுலகில் தீவினையை விட்டு நல்வினை செய்து வாழ்பவன் மறுமையில் மேலுலகத்தில் தேவனாய்ப் பிறப்பானென் றும், தீவினை செய்பவன் எரிநரகில் வீழ்வானென்றும், விண்ணுலகக் கொள்கையும் எரிநரகக் கொள்கையுங் கொண்டனர்.

நல்வினைகளுட் சிறந்த விருந்தோம்பற்கு ஏராளமாக உணவுப் பொருள் வேண்டுமாதலால், அதை விளைக்கக் கூடிய உழவர்க்கே அவ்வினை சிறப்பாக வுரியதென்றுங் கருதப்பட்டது. உழவனே விருந்தோம்பி வேளாண்மை செய்து வந்ததனால், அவன் வேளாளன் எனப்பட்டான். இவ் விருந்தோம்பற் பண்பு வழிவழி வளர்ந்து வந்ததனால், "வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான்" என்னுங் கொள்கை நிலைத்து விட்டது.

இம்மையில் இல்லத்திலிருந்து அறஞ் செய்து வாழ்பவன், மறுமையில் தேவனாய்ப் பிறப்பது திண்ணம் என்பதை உணர்த் தற்கே,

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்." (குறள். 50)
என்றார் திருவள்ளுவர்.

இல்லறத்தைச் சிறப்பாக நடத்தும் பொதுமக்களான வேளாளர், மறுமையில் தேவருலகில் தேவராகத் தோன்றுவா ரெனின், இம்மையில் வேந்தனாக விருந்து அறவாழ்க்கை நடத்தி னவன், மறுமையில் தேவர் கோனாய்ப் பிறப்பான் என்னும் கொள் கையும் எழுந்தது. அதனால், தேவர் கோனைத் தேவர் வேந்தன் என்றனர். அப் பெயர் பின்னர் வேந்தன் என்றே குறுகி வழங்கிற்று.

"வேந்தன் மேய தீம்புன லுலகமும்" (951)
என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க.

வேந்தன் வணக்கம் குமரிநாட்டிலேயே தோன்றிவிட்டதனால், முதற் பாண்டியனே வேந்தனாகக் கொள்ளப்பட்டிருத்தல் வேண் டும். அவனுக்குப் படை வயிரவாள்; ஊர்தி வெள்ளை யானை.

தேவநிலையங்கட்குக் கோட்டம் என்று பெயரிருப்பினும், கோவில் என்னும் பெயரே உலக வழக்காகவும் பெரும்பான்மை யிலக்கிய வழக்காகவும் வழங்கற்கு, வேந்தன் வணக்கமே கரணியமாயிருந்திருத்தல் வேண்டும். கோ = அரசன். இல் = மனை. கோ + இல் = கோவில் - கோயில்.

உழவுத்தொழிற்கு இன்றியமையாத மழை விண்ணிலிருந்தே பெய்வதால், விண்ணுலக வேந்தன் மழைக்கு அதிகாரியானான். ஆண்டு தோறும் வேந்தன் விழா மூவேந்தர் நாட்டிலும் கொண் டாடப்பட்டது. அதை வேந்தரே நடத்தி வந்தனர். சிவ மதமும் திருமால் மதமும் தோன்றியபின், வேந்தன்விழாப் படிப்படியாகக் கைவிடப்பட்டது. இறுதியாக அதை நடத்திவந்தவர் புகார்ச் சோழரே. ஆரியர்(பிராமணர்) தென்னாடு வந்தபின், வேந்தன்விழா வடநாட்டிற் போன்றே இந்திரவிழா எனப்பட்டது.

அரசன் செங்கோலாட்சி செய்தால், ஆண்டுதோறும் தப்பாது மழை பெய்யும் என்பது பண்டையோர் நம்பிக்கை. செங்கோ லாட்சியிலும் மழை பெய்யாது பயிர்கள் தீயின், அதற்குக் கொடுந்

தீயவனாயிருந்தவனே கரணியமென்று அவனைக் கட்டியிழுத்து எரிப்பது வழக்கம். இன்று அஃதியலாமையால், சூந்து கட்டியிழுத் தெரிக்கின்றனர் பாண்டிநாட் டுழவர்.

நெய்தல் தெய்வம்

நெய்தல்நில மக்கள், கடல் மீன்பிடித்தும், உப்பு விளைத்தும், முத்தும் பவழமுங் குளித்தும், நீர்வாணிகஞ் செய்தும், கடலாலேயே வாழ்ந்ததனால், தம் தெய்வத்தைக் கடல் தெய்வமாகவே கொண்டு, அதற்கு வாரணன் என்று பெயரிட்டனர்.

வள் - வர் - வார். வார்தல் வளைதல். வார் + அணம் = வாரணம். நிலத்தை வளைந்து அல்லது சூழ்ந்து இருப்பதால், கடல் வாரணம் எனப்பட்டது. வலம்புரியும் இடம்புரியுமான சங்கு வாரணம் எனப் பெயர் பெற்றதும், உள் வளைந்திருப்பதனாலேயே. வாரணம் - வாரணன் = கடலோன்.

வாரணன் - வ. வருண.

தொல்காப்பியர் ஆரியம் தமிழகத்தில் வேரூன்றிய காலத்தவ ராதலின், வருணன்(தொல். 951) என்று வடசொல் வடிவிற் குறித்தார்.

இந்திய வாரியிலும் அமைதி(Pacific) வாரியிலும் பெரியதும் வலியதும் கொடியதுமான மீன் சுறாவாதலால், அதன் முதுகந் தண்டை வாரணன் சின்னமாக நட்டு, நெய்தல் வாணரான பரதவர் வணங்கியும் விழாவெடுத்தும் வந்தனர்.

"சினைச்சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினான்
மனைச்சேர்த்திய வல்லணங்கினான்
மடற்றாழை மலர்மலைந்தும்
பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
புன்றலை யிரும்பரதவர்
... ... ... ... ... ...
உவவுமடிந் துண்டாடியும்
... ... ... ... ... ...
தீதுநீங்கக் கடலாடியும்" (பட்டினப். 86-99)

"சுறவ முள்மருப் பணங்கயர் வனகழிச் சூழல்." (பெரியபு. 25 :7)

பாலைத் தெய்வம்

நீர்நிலைகளெல்லாம் வற்றி வறண்டு பெரும்பாலும் மக்கள் வழக்கற்ற பாலைநிலம், போர்க்களங்களும் ஆறலைப்பால் விழுந்த பிணங்களும் நிறைந்த பாழ்ங் காடாதலால், பிணந்தின்னும் பேய்கட்குத் தலைவியாகிய காளியே அதற்குத் தெய்வமானாள். இதைச் சிலப்பதிகார வேட்டுவ வரியாலும், காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது என்னும் கலிங்கத்துப் பரணிப் பகுதிகளாலும், தெளிய அறிக.

பேய்நிறங் கருப்பாதலால், கருப்பு என்பதே பேயைக் குறிக்கும் பண்பாகு பெயராயிற்று. பேய்கட்குத் தலைவியாகிய காளியும், அக் கரணியம் பற்றியே அப் பெயர் பெற்றாள். அதனால் நீலியென்றும் அவட்குப் பெயர். கள் - காள் - காளம் - காளி = கருப்பி. நீலம் (கருப்பு) - நீலி. கருப்பி என்றும் நீலி என்றும் பெண்டிர்க்கு இடும் பெயரெல்லாம் காளி பெயரே. காளி பாலை யாகிய காட்டிற்குத் தெய்வமானதனால், காடு கிழவோள்(- காடு கிழாள் - காடுகாள்) என்று சொல்லப்பட்டாள். அவள் என்றும் இளமையானவள் என்னுங் கருத்துப்பற்றி, கன்னி குமரி யென்றும் பெயர் பெற்றாள். எல்லார்க்குந் தாய்போன்றவள் என்று கருதி, அம்மை என்றும் அவளைக் குறித்தனர். கருப்பாய், நீலம்மை, அங்காளம்மை என்னும் பெயர்கள் அக் கருத்துக் கொண்டன. ஏராளமாகப் பிணங்கள் விழும் போருக்குத் தலைவி என்பதுபற்றி, அமரி சமரி என்றும், சூலத்தைப் படையாகக் கொண்டமையாற் சூலி யென்றும், காளிக்குப் பெயர்கள் தோன்றின. போர் வெற்றியும் அவளால் தரப்படுவதென்று கருதி, அவளைக் கொற்றவை என்றனர். கொற்றம் - வெற்றி. அம்மை - அவ்வை = தாய். கொற்றம் + அவ்வை = கொற்றவ்வை - கொற்றவை.

காளி மாபெரு மறத்தியாதலால், அவளுக்கு அரிமாவும் விரைந்து பாய்ந்தோடுங் கலைமானும் ஊர்தியாயின. அவள் மறத் தினாலேயே, அம்மை யென்னும் பெயர் அம்மன் எனத் திரிந்தது.

பாலைவாணரான எயினரும் வேட்டுவரும் மறவரும், தமக்கு நில விளைச்சலின்மையால், ஆறலைத்தற்கு வழிப்போக்கரை வருவிப்பது காளியரு ளென்று நம்பினர்.

பாலைநிலத்திற்குரிய வேனிற் காலத்திற் காணுங் கொப்புள நோய், அம்மையாகிய காளியின் சினத்தால் நேர்வதென்று கருதி, அதற்கு 'அம்மை' நோய் என்றே பெயரிட்டனர்.

அம்மைநோய் மக்களெல்லார்க்கும் பொதுவாதலால், அதை நீக்குமாறு காளி வணக்கம் நாளடைவில் நானிலத்திற்கும் பொது வாயிற்று; ஊர்தொறும் காளிகோயில் தோன்றிற்று.

மூவேந்தரும் போர் வெற்றியை விரும்பினதினாலும், பாலை வாணர் படையாகிய காட்டுப் படையைத் துணைக்கொண்டிருந்தத

னாலும், போர்த் தொடக்கத்திற் கொற்றவை வழிபாடு இன்றியமை யாததாயிற்று.

"மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே" (புறத். 4)
என்று, தொல்காப்பியம் கூறுதல் காண்க. இங்ஙனம் காளிவணக்கம் பொதுவியலும் வேத்தியலு மாயிற்று.

தெய்வமேறி யாடுபவர், ஆடவராயின் தேவராளன், மருளாளி யென்றும்; பெண்டிராயின் தேவராட்டி, சாலினி என்றும், பெயர் பெறுவர். காளி பெண்தெய்வ மாதலின், அணங்காடுபவள் பெரும் பாலும் சாலினியே யென்பது, 'வேட்டுவ வரி'யால் அறியக் கிடக்கின்றது. மருளாளியும் சாலினியும், ஆடுகளின் அல்லது ஆட்டுக் குட்டிகளின் பச்சை யரத்தத்தைக் குடிப்பது முண்டு.

சேவல், ஆட்டுக்கடா, எருமைக்கடா ஆகியவை, காளிக்குக் காவு கொடுக்கப்பட்டன.

ஆரியர் வருமுன்னரே தமிழர் வடநாட்டிற் போய்ப் பரவி யிருந்ததனால், வங்கநாட்டிற் காளிக்கோட்டம் கட்டப்பட்டது. அதன் பெயரே அஃதுள்ள நகருக்குமாகி, இன்று ஆங்கில வழியாய்க் கல்கத்தா என்று திரிந்து வழங்குகின்றது.

காளி கடுஞ்சினத் தெய்வமாகக் கருதப்பட்டதனால், அலகு குத்துதல், உருமத்தில் உருண்டு வலம்வரல், தீமிதித்தல், செடிற் குத்துதல் (hook-swinging) முதலிய அஞ்சத்தக்க முரட்டு வினைகள் பத்திச் செயல்களாக நேர்ந்துகொள்ளப்பட்டன.

காவல் தெய்வம்

ஒவ்வொரு தீவிற்கும் ஊருக்கும் ஒரு காவல் தெய்வம் இருந்தது. நாவலந் தீவிற்குச் 'சம்பாபதி' என்னும் நாவல் மகளும், மதுரைக்கு மதுராபதியும் காவல் தெய்வம். நாவல் தெய்வ இருக்கை காவிரிப்பூம் பட்டினமென்று மணிமேகலை கூறுவதால், சோழ நாடு முதற்காலத்திற் பனிமலைவரை பரவியிருந்தமை உய்த்துணரப் படும்.

அரசர் சிலர் ஒவ்வொரு பூதத்தைத் தமக்குக் காவல் செய்ய அமர்த்தியிருந்தனர். முசுகுந்தச் சோழன் காவற்பூதப் படிமை, புகார் நடுச் சதுக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. முனியன் என்பது காவற் பூதங்களுள் ஒன்று.

எல்லம்மன், எல்லைக் கறுப்பன் என்பன சிற்றூர்க் காவல் தெய்வங்கள்.

பாராட்டுத் தெய்வம்

மதுரை வீரன், மாடன், கறுப்பண்ணன் முதலியவை நடுகல் தெய்வங்கள்.

கண்ணகி, ஒச்சாண்டம்மை முதலியன பத்தினித் தெய்வங்கள்.

கருதுகோள் தெய்வம்

திரு என்னும் செல்வத்திற்குத் திருமகளும், கல்விக்கு நாம களும், சாவிற்குக் கூற்றுவனும் தெய்வங்கள்.

ஞாலம் நாடு மலை ஆறு முதலிய இடங்களைத் தெய்வங் களாக அல்லது தாயராக உருவகித்துக் கொள்வது, கருதுகோள் தெய்வ வணக்கத்தின்பாற் படுவதே.

இல்லுறை தெய்வம்

குடும்பத் தெய்வமாகவோ தனிப்பட்டவர் தெய்வமாகவோ கருதிக்கொண்டு, இல்லத்தில் உருவம் வைத்து வழிபாடு செய்யும் தெய்வம் இல்லுறை தெய்வமாம்.

"அணங்குடை நல்லில்" (மதுரைக். 578)

தொழிற்குலத் தெய்வம்

பண்டை நிலவாணிகர், கோவேறு கழுதைச் சாத்தாகவும் குதிரைச் சாத்தாகவும் நெடுந்தொலைவு சென்று வாணிகம் செய்து வந்ததால், தம் தெய்வத்திற்குச் சாத்தன் என்று பெயரிட்டதாகத் தெரிகின்றது. அவனுக்கு ஐயனார் என்றும் பெயர்.

நெடுஞ்சாலை வழியெல்லாம், ஆங்காங்கு ஊருக்குப் புறம் பாகச் சாத்தன் கோவில் அமைந்திருப்பதால், அவன் புறம்பணை யான் (சிலப். 9 : 12)எனப்பட்டான். அவன் கோவிலில் உள்ள சுடுமண் குதிரைகள், குதிரைச் சாத்தை நினைவுறுத்தும்.

தலைநகர்களிலுள்ள பெருவணிகச் சாத்தினர், விழாநாள்களில் யானை யூர்ந்து செல்வதும் வழக்கமாதலால், சாத்தனுக்கு யானை யுங் குதிரையும் ஊர்தியாகச் சொல்லப்பட்டன.

"யானை யெருத்தத் தணியிழையார் மேலிரீஇ
மாநகர்க் கீந்தார் மணம்." (சிலப். 1:44)
ஒரு சோழன் சாத்தனிடம் செண்டு பெற்றுச் சென்று, பொன் மலையிலுள்ள பெரும்புதையலை எடுத்ததாகக் கூறுங் கதை, வணிகச் சாத்தினரின் பெருஞ் செல்வத்தைக் குறிக்கும்.

"பெருநில முழுதாளும் பெருமகன் றலைவைத்த
வொருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்து வானென்பான்
இருநிதிக் கிழவன்..........................................." (1 : 31-34)
என்று சிலப்பதிகாரங் கூறுதல் காண்க.

வண்ணார் வணங்கும் தெய்வம் மயிலார் எனப்படும்.

2. பெருந்தேவ மதம்

ஐந்திணைத் தெய்வ வணக்கங்களுள், இரண்டே மதமாக வளர்ச்சியடைந்தன. சேயோன் வணக்கத்தினின்று சிவமதமும், மாயோன் வணக்கத்தினின்று திருமால் மதமும் தோன்றின. விண்ணுலக வேந்தன் கொள்கையின் பின் எங்கும் நிறைந்த இறைவன் கொள்கை ஏற்பட்டபோது, தீயின் கூறாகச் சிவன் என்றும், நீரின் கூறாக மால்(மாயோன்) என்றும் பெயரிட்டு இறைவனை வழிபட்டனர்.

(1) சிவமதம்

இறைவன் பெயர்

சேயோன், சிவன் என்னும் இரு சொற்களும், ஒரே மூலத்தி னின்று தோன்றிச் சிவந்தவன் என்னும் பொருளைக் கொண்டன.

சுல் - சுள், சுல் - சுல்லி = அடுப்பு, அடுக்களை. சுள் - சுள்ளை -கலமுஞ் செங்கலும் சுடும் அடுப்புப் போன்ற காளவாய்.

சுல் - செல் - சேல் = செந்நிறக் கெண்டைமீன்.

சேல்விழி = சேல் மீன் போலும் செவ்வரி பரந்த பெண்ணின் கண்.

நெருப்பின் நிறம் சிவப்பாதலால், நெருப்பின் பெயர் செந் நிறத்தைக் குறித்தது.

ஒ.நோ: எரி = நெருப்பு, சிவப்பு. எரிமலர் = 1. சிவந்த முருக்க மலர். "எரிமலர்ப் பவளச் செவ்வாய்" (சீவக. 602). 2. செந்தாமரை. "செல்வ னெரிமலர்ச் சேவடியை" (சீவக. 2741).

செல் - செள் - செட்டு - செட்டி = 1. சிவந்த அடியை யுடைய வெட்சிச் செடி. "செங்கால் வெட்சி" (திருமுருகு. 21). 2. முருகன்.

செள் - செய் - செய்யவன் = 1. சிவந்தவன். 2. கதிரவன். 3. செவ்வாய். செய்யன் = முருகன்.

செய்யாள் (செய்யவள்) = செங்கோலத் திருமகள்.
செய்யான் = சிவந்தவன், செம்பூரான்.
செய் - சேய் = சிவப்பு, செவ்வாய், முருகன்.

சேய் - சேயது - சேய்து = சிவந்தது. சேய்து - சேது.
சேது + ஆ = சேதா. சேது + ஆம்பல் = சேதாம்பல்.
சேய் - சேயன் - சேயான் = செந்நிறத்தான்.

சேயவன் = செவ்வாய், முருகன்.
சேயோன் = முருகன், சிவன்.
சேய்-சே. சேத்தல் = சிவத்தல்.

சே = சிவப்பு, சேங்கொட்டை.
சே-சேத்து = சிவப்பு.
சேத்து - சேந்து = சிவப்பு, தீ, அசோகு.

சேந்து - சேந்தன் = சிவந்தவனான முருகன்.
சேந்தன் - சேந்து.
ஒ.நோ: வேந்தன் - வேந்து, முருகன் - முருகு.

சேந்து + இல் = சேந்தில் - செந்தில்.
சேந்து + ஊர் = சேந்தூர் - செந்தூர் (திருச்செந்தூர்).

செய் - செய்ம்மை - செம்மை - செவ்வை.

செம் - செவ் - செவ - செவப்பு.
செவ - சிவ - சிவப்பு - சிகப்பு.

சிவ - சிவல் - சிவலை.
சிவ - சிவம் - சிவன் = சிவந்தவன், நெருப்பின் கூறாக நின்று உலகத்தை இயக்கும் இறைவன்.

தீவண்ணன், அந்திவண்ணன், அழல்வண்ணன், மாணிக்கக் கூத்தன் முதலிய சிவன் பெயர்களை நோக்குக.

சிவன் மாலை

குறிஞ்சிநிலத்திற்குரிய கொன்றை மாலை. கொன்றை வேய்ந் தோன் - கொன்றை வேந்தன்.

சிவனூர்தி

குறிஞ்சிநிலத்திற்குரிய (வெண்) காளை. அதன் வெண்ணிறம் தூய்மை குறித்தது.

சிவன் படைக்கலம்

முக்கவர்ச் சூலம். அதனாற் சிவனுக்குச் சூலி என்று ஒரு பெயர். கணிச்சியும்(மழுவும்) சிவன் படை. அதனால் அவனுக்குக் கணிச்சியான்(மழுவாளி) என்றும் பெயர்.

சிவனிருக்கை

வீட்டுலகமும் வெள்ளிமலையும் திருக்கோவில்களும் தொண்டருள்ளமும்.

சிவன் குணம்

தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே கட்டுகளின் (பாசங் களின்) நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்பமுடைமை என்னும் எட்டு.

"பவமின்மை யிறவின்மை பற்றின்மை பெயரின்மை
உவமை யின்மை யொருவினை யின்மை
குறைவி லறிவுடைமை கோத்திர மின்மையென்
றிறைவ னிடத்தி லெண்குண மிவையே"
என்பது பிங்கலம்(2 : 6). பவம் (வ.) = பிறப்பு.

சிவன் தொழில்

படைப்பு காப்பு அழிப்பு என்னும் மூன்று.

சிவன் வடிவம் ஐ வகை

(1) கொன்றைமாலை யணிந்து சூல மேந்திக் காளை யூர்ந்து செல்லும் செம்மேனியன்.

(2) அம்மையப்பன்

எல்லா வுயிர்கட்கும் தாய்தந்தை போன்றவன். வலப்புறம் தந்தைகூறும் இடப்புறம் தாய்கூறும் கொண்டதனால், மங்கை பங்கன் அல்லது மாதொரு பாகன் என்று சொல்லப்படுபவன்

தந்தைகூற்றுப்பெயர் தாய்கூற்றுப் பெயர்

சிவன் சிவை
இறைவன் இறைவி
தேவன் தேவி
பரன் பரை
அப்பன் அம்மை
ஐயன் ஐயை
மலைமகன் மலைமகள்
சூலி சூலினி

மலைமகன் மலைமகள் என்னும் இருபெயரும், மலைவாழ் தெய்வம் என்றே பொருள்படுவன.

அம்மையப்பன் வடிவம், இலங்கம்(லிங்கம்) என்னும் உருவடிவிலும், ஓம் என்னும் ஒலிவடிவிலும், பிள்ளையார் சுழி யென்னும் உகர வரிவடிவிலும் குறிக்கப்பெறும்.

இலக்கு = குறி. இலக்கு - இலக்கம் - இலங்கம்.

அம்மையப்பன் வடிவு, இறைவனின் உண்மை வடிவைக் காணமுடியாத இல்லறவாணரான பொதுமக்கட்கே. உயர்ந்த அறிவு படைத்த சித்தரும் முனிவரும், இறைவனின் ஆற்றலையே பெண் கூறாக உருவகிப்பர்.

இலங்க வடிவு நிலையில், இறைவ னாற்றலைக் குறிக்கும் அடித்தளத்திற்கு ஆவுடையாள் என்றும், மேல் நிற்கும் இலங்கத் திற்கு ஆவுடையப்பன் என்றும், பெயர். ஆவுடையாள் என்பது ஆவுடையம்மை, ஆவுடையாச்சி என்றும் வழங்கும்.

(3) குரவன்

தகுதியுள்ளவர்க்கு, அந்தண(அருள் முனிவன்) வடிவில் வந்து உயரறிவுறுத்தும் பரம ஆசிரியன்.

முனிவன் கோலத்திற் சடையுடைமையால், சிவன் சடையன், சடையப்பன் என்றும் பெயர் பெற்றான். புரம் = உயர்நிலைக் கட்டடம், அஃதுள்ள வூர். புரம் - பரம் = மேலுலகம், வீட்டுலகம். பரம் - பரமன் = மேலோன், இறைவன். பரம் - வரம் - வரன் (குறள். 24).

(4) எண் வடிவன் (அட்டமூர்த்தி)

நிலம், நீர், தீ, வளி, வெளி, கதிரவன், திங்கள், ஆதன் (ஆன்மா) என்னும் எண்பொருள் வடிவினன். எங்கும் நிறைந் திருப்பதுபற்றி எண்டிசையும் சிவனுக்கு எண் கையாகச் சொல்லப் படும். அதனால் எண்டோளன் பிங்.) என்று பெயர். கதிரவன் திங்கள் தீ என்னும் முச் சுடரும் சிவனுக்கு முக்கண்ணாகக் கூறப்படும். அதனால் அவனுக்கு முக்கண்ணன் என்று ஒரு பெயர்.

(5) நடவரசன்

உயிரானது நினைவு செயல் என்னும் முத்தொழிற் படுமாறு, உடம்பின் நடுவுள் தொங்கி நின்று இயங்கும் நெஞ்சத் துடிப்பை நடமாக வுருவகித்து, அதுபோன்று எல்லா உயிரினங் களும்(படைப்பு காப்பு அழிப்பு என்னும்) தோன்றல் வாழ்தல் மறைதல் ஆகிய முத்தொழிற் படுமாறு, பேருலகப் பரவெளி யுடம்பின் நடுவில் நின்று இறைவன் நெஞ்சம் இயங்குவதாகக் கோடித்து (பாவித்து), அவன் முத் தொழிலையும் இன்ப நடமாக வுருவகித்து, அவனை நடருள் தலைவனாக்கி, நடவரசன்(நட நாயகன், ஆடவல்லான்) என்று குறித்தனர். இவ் வுருவகம், "அண்டத்திற் கொத்தது பிண்டத்திற்கும்" என்னும் உண்மையை, பிண்டத்திற் கொத்தது அண்டத்திற்கும் எனக் காட்டியவாறாம்.

குமரிநா டிருந்த பண்டைக் காலத்தில், குமரிமலைக்கும் பனிமலைக்கும் நடுவிடத்திலிருந்த தில்லைநகரைப் பாண்டியன் பாருக்கு நெஞ்சத் தாவாகக் கொண்டு, அங்கு நடவரசன் திருப்படிமை நிற்க அம்பலம் அமைத்தான். நடவரசப் படிமைகள் நிற்கும் கோவில்க ளெல்லாம், அம்பல மென்று பெயர் பெற்றி ருப்பது கவனிக்கத் தக்கது. அம்பலம் ஆடரங்கு. அம்பலக் கூத்தன், மன்றாடி என்பன தில்லைச் சிவன் பெயர்கள். பேரம்பலம் ஏற்பட்ட பின், ஆடம்பலம் சிற்றம்பலம் எனப்பட்டது. அப் பெயரே இன்று சிதம்பரம் எனத் திரிந்து வழங்குகின்றது. சிற்றம்பலம் பொன்னால் வேயப்பட்டபின், பொன்னம்பலம் எனப்பட்டது. அதன் பின்னரே மணியம்பலம் வெள்ளியம்பலம் செப்பம்பலம் முதலியவை தோன்றின.

கட்புலனாகக் காணும் நடவரசன் படிமை, அகக்கரண வளர்ச்சி யடையாத பொதுமக்கட் குரியதே. சிறந்த அறிவரான அடியார், திறந்த வெளியையே அம்பலமாகக் கருதுவர். அப் பரவெளி யம்பலமே திரை நீக்கிக் காட்டப்படும். அதுவே சிற்றம்பல மருமம்(சிதம்பர ரகஸியம்) என வழங்குவது.

நளி - நடி - நடம், நடனம். நடம் - நட்டம் - நட்டுவன். நட்டம் - வ. ந்ருத்த, நாட்ய.

அரசன் என்னும் தென்சொல் வரலாற்றைத் தமிழர் வரலாறு என்னும் நூலிற் காண்க.

உம்முதல் = கூடுதல். உம் - அம் - அமை. அமைதல் = 1.நெருங்குதல், அடர்தல். "வழையமை சாரல்" (மலைபடு. 181). 2. கூடுதல். அமை-அவை = கூட்டம், குழாம். 3. பொருந்துதல். "பாங்கமை பதலை" (கந்த பு. திருப்பர. 9). 4. நிறைதல். "உறுப்பமைந்து" (குறள். 761).

அம் - அம்பு - அம்பல் = 1. கூடுதல், கூட்டம். ஒ.நோ: உம் - கும் - கும்பு - கும்பல். அம்பல் - அம்பலம் = கூட்டம், அவை, கூடுமிடம், மன்றம்.

2. குவிதல், குவிந்த அரும்பு அல்லது மொட்டு. "அம்பல் என்பது முகிழ் முகிழ்த்தல்." (இறை. 22, உரை). ஒ.நோ: கும் - கும்பு -கூம்பு. கும் - குமி - குவி.

3. அரும்பு போன்ற சிலருரை பழி. "அம்பலும் அலருங் களவு வெளிப்படுத்தலின்" (தொல். கள. 48). "அம்பலும் அலரும் களவு." (இறை. 22).

ம. அம்பலம், க. அம்பல, து. அம்பில, வ. அம்பர.

வடசொல்லில் லகரம் ரகரமாகத் திரிந்திருத்தல் காண்க. அத் திரிசொல்லையே அம்பலம் என்னும் இயற்சொல்லிற்கு மூல மாகச் சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியிற் காட்டியிருப்பது, இற்றைத் தமிழரின் இழிவான அடிமைத்தனத்தையே காட்டும்.

சிவ வழிபாட்டு வடிவம்

சிவனுடைய ஐவகை வடிவுகளுள்ளும், பொதுமக்கள் வழி பாட்டிற் கேற்றது அம்மையப்ப வடிவமே.

சிவ வழிபாட்டு முறை

காலையிற் குளித்து, உண்ணுமுன், தீய நினைவின்றி அமைந்த வுள்ளத்துடன் அக்கமாலை யணிந்து திருநீறு பூசிச் சிவப் படிமை முன் நின்று, இயலும்போதெல்லாம் தேங்காயுடைத்து வாழைப் பழத்துடன் படைத்து, நறும்புகை காட்டிப் பூச்சாத்திக் கைகுவித்து, (ஓம் என்னும் முளை மந்திரத்தை முன்னிட்ட) சிவ போற்றி என்னுந் திருவைந் தெழுத்தை ஓதி, பல்வேறு போற்றித் தொடர்களால் வழுத்தி, நெடுஞ்சாண்கிடை வணக்கஞ் செய்து எழுந்திருப்பதே சிறந்த முறைப்பட்ட சிவ வழிபாடாகக் கொள்ளப் பட்டது.

உழவரும் உழைப்பாளிகளும் தொழிலாளரும் காலையில் சிவ வணக்கம் மட்டும் செய்ய முடியும். திருநாள்களிலும் திருவிழாக் காலத்திலும் எல்லாரும் கோவில் வழிபாடு செய்வர்.

அஃகு - அக்கு = கூர் அல்லது முள்ளுள்ள காய்மணி. அக்கு -அக்கம். முள்ளுண்மையால், அக்கத்திற்குக் கண்மணி முண்மணி யென்றும் பெயர். கள் = முள். கள்ளி = முள்ளி, முட்செடி. கள் + மணி = கண்மணி. முதற்காலத்திற் பனிமலையும் பாண்டியன் ஆட்சிக்குட்பட்டிருந்ததனால், ஆரியர் வருமுன்னரே, தென்னாட்டுச் சிவநெறியாரும் வடநாட்டு நேபாள அக்கமணியைத் தொன்று தொட்டு அணிந்து வந்தனர்.

"வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி"

சிவனையடைந்தவரின் மும்மாசும் எரிந்து சாம்பலாய் விடு கின்றன என்பதை உணர்த்தற்கே, திருநீறு பூசப்பட்டது. அது பூதி (பிங்.) என்றும் சொல்லப்படும். புழுதி - பூதி = தூள், நீறு, திருநீறு.

தேங்காயுடைத்து அதன் நீரைச் சிந்தி முறியைப் படைப்பது, வழிபடுவோன் தன் தீவினை நினைந்து மனமுடைந்து கண்ணீர் சிந்தித் தூய்மைப்பட வேண்டு மென்பதையும்; வாழைப்பழத்தைப் படைப்பது, அதன் சதைபோல உள்ளம் கனிந்து மென்மையும் இனிமையும் பெற வேண்டுமென்பதையும், குறிப்பாக வுணர்த்தும்.

சிவன்கோவிற் பூசகர், குருக்கள், பண்டாரம், ஓதுவார், புலவர், போற்றி எனப் பல பெயர் பெற்றனர்.

மூவேந்தரும் முதற்கண் சிவனடியாரா யிருந்து, பின்னர் ஆரியர்(பிராமணர்) வந்து முத்திருமேனிக் கொள்கை புகுத்திய பின், இடையிடை ஒரோவொருவர் மாலியத்தையும் (வைணவத்தையும்) தழுவினர். தம்மைப் போன்றே தாம் வழிபடு தெய்வமும் ஏற்றமாக இருந்து இன்புற வேண்டுமென்று, தமக்குரிய சிறப்பை யெல்லாம் தம் தெய்வத்திற்கும் செய்தனர். அச் சிறப்புகள் தெய்வத்தின் ஒப்பிலா வுயர்வு நோக்கிப் பன்மடி யுயர்வாகச் செய்யப்பட்டன.

வானளாவும் எழுநிலைக் கூடகோபுரமும் மாடமண்டபங்களும் சுற்றுமதிலும் கொண்ட திருவுண்ணாழிகைத் திருக்கோவில், ஊர்வலத்திற்குச் சிறந்த யானை குதிரை யொட்டக வெண்காளைகள், குடை கொடி முதலிய சின்னங்கள், கருவூல களஞ்சிய பண்ட சாலைகள், பல்வகை அணிகங்கள்(வாகனங்கள்), சப்பரங்கள், விலையுயர்வும் ஓவிய வேலைப்பாட்டுச் சிறப்புமுள்ள பொன்னாடை பொன்மணியணிகள், திருக்குளம், பூங்கா, திருப்பள்ளி யெழுச்சி யின்னியம், திருமுழுக்காட்டு, திருவின்னமுது படைப்பு, திருநாள் ஆரவார ஊர்வல உலாக்கள், ஆண்டுதோறும் (முத்தட்டு முதல் எழு தட்டுவரை கொண்ட) தேரோட்ட தெப்பத் தேர்த் திருவிழாக்கள், நில மானியங்கள், இயவர், காவலர், ஏவலர் மேற் பார்வலராகிய பணிமக்கள் முதலிய பலவகைச் சிறப்பும் வேந்தராலும் மன்னராலும் பெருஞ் செல்வராலும் செய்யப்பட்டன. இசையாலும் நடத்தாலும் இறைவனை இன்புறுத்த நால்வகைப் பட்ட எல்லாக் கருவியிசையும் ஆட்டும் பாட்டும் கோவில்களிலும் திருவுலாக்களிலும் நிகழ்ந்தன. இதற்கென்றே பாடகரும் கணிகையரும் நட்டுவரும் முட்டுவரும் அமர்த்தப்பட்டனர்.

கொண்முடிபு(சித்தாந்தம்)

தலைவன் தளையன் தளை என்னும் மூன்றும் தொடக்கமிலா முப்பொருள்கள். காமம்(காமியம்) வெகுளி(ஆணவம்) மயக்கம் (மாயை) எனத் தளை மூவகைத்து. தெரிந்தும் தெரியாமலும் செய்யும்

இருவகைத் தீவினையும் நீக்கி இறைவனை வழிபடின், இல்லறத் தாலும் துறவறத்தாலும் இருபாலாரும் வீடு பெறலாம். வீட்டுலகம் சிவனுலகம்(சிவவுலகம்) எனப்படும். வீடு பெறும்வரை ஆதன் பிறவிக் கடலுள் அழுந்தும். நிலைத்திணை, நீர்வாழி, ஊரி, பறவை, விலங்கு, மாந்தன், தேவன் எனப் பிறவி எழுவகை.

இதுவே சிவக் கொண்முடிபு.

அன்னீறும் ஆனீறும் ஒன்றன்பாலையும் உணர்த்தும்.

எ-டு : தனியன்(தனிப்பாடல்), தடியன்(பூசணிக்காய்),
அலவன், மடையான், குண்டடியன், கடுவன்.

"காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன்
நாமங் கெடக்கெடும் நோய்" (குறள். 360)
என்பதில், மும்மாசு குறிக்கப்பட்டிருத்தல் காண்க.

காமங் கெடுதல் என்பது, இல்லறத்திற்குப் பிறனில் விழை யாமையும் பிறன்பொருள் வெஃகாமையும்; துறவறத்திற்கு ஆசை அடியோ டொழிதல்.

தெரியாது மிதிப்பினும் தீச்சுடுதல் போல, தெரியாது செய்யும் தீவினையும் தீங்கு விளைக்கும் என்பது கொள்கை. நல்வினையாற் கேடில்லை.

"நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்" (குறள். 320)

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" (குறள். 5)
என்பதில், இருவினை யென்றது தெரிந்தும் தெரியாதும் செய்யும் தீவினைகளையே.

தசரதன் வேட்டையாடியபோது தெரியாது கொன்ற சிறு வனின் குருடரான பெற்றோர் இட்ட வைவே(சாபமே), பின்னர் இராமனைக் காட்டிற் கேகச்செய்தது என்பது, நடுநிலை யறிஞர் கருத்து.

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்" (குறள். 46)
என்பதனால், இல்லறத்தாலும் வீடுபேறுண் டென்பதே தமிழர் கொள்கையாம்.

"ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை யுடைத்து" (குறள். 42)

ஆதலால், துறவறத்தான் பொறையினும் இல்லறத்தான் பொறையே பெரிதாம்.

பேரின்ப வீட்டைப் பெற்றதாகப் பெரியபுராணங் கூறும் சிவனடியாருட் பெரும்பாலார், இல்லறத்தில் நின்றவரே.

இருவகை யறவாழ்க்கையையும் இறைவன் ஏற்கின்றான் என் பதை யுணர்த்தற்கே, அவனுக்கு அம்மையப்ப வடிவும் அந்தண வடிவும் குறிக்கப்பட்டுள்ளன.

மெய்ப்பொருளியல்

"சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு" (குறள். 27)
என்றார் திருவள்ளுவர். ஆகவே,

நிலம் நீர் தீ வளி வெளி என்னும் பூதங்கள் ஐந்தும், அவற்றின் சிறப்பியல்புகளான நாற்றம் சுவை ஒளி ஊறு ஓசை என்னும் ஐந்தும், அவற்றையறியும் கருவிகளான மூக்கு நாவு கண் மெய் செவி என்னும் அறிவுப் பொறிகள் ஐந்தும், பல்வேறு வினைசெய்யும் கை கால் வாய் எருவாய் கருவாய் என்னும் கருமப்பொறிகள் ஐந்தும், மதி, உள்ளம் (சித்தம்) மனம் நானுணர்வு என்னும் அகக்கரணங்கள் நான்கும், அவற்றைக் கொண்டு பொருள்களை ஆய்ந்தறியும் ஆதனும், அதன் வினைகட்கெல்லாம் இடம் போன்று நிலைக்களமாகிய காலமும் தூண்டுகோலான ஊழும் ஆகிய இரண்டும், எல்லாவற்றையும் இயக்கும் இறைவனும், ஆக மொத்தம் மெய்ப்பொருள்கள் (தத்துவங்கள்) இருபத்தெட்டாம்.

வருந்தி வேலை செய்யின், கரியவன் அகங்கை கருத்தலும் செய்யவன் அகங்கை சிவத்தலும் இயல்பு. அதனாற் கருத்தல் செய்தல் என்னும் வினைகள் தோன்றின. கரு - கருமம் = செய்கை, வினை, தொழில். கரு - கருவி, கரு - கரணம் = செய்கை, கருவி.

கருத்தல் என்னும் வினை பண்டே வழக்கற்றது.
கருமம் - கம்மம் - கம் = தொழில், கொல்லத் தொழில்.
கம் - கம்மியம் - கம்மியன். கம் - கம்மாளன்.
கருமம் - கருமி - கம்மி = ஐங்கொல்லருள் ஒருவன்.
மதித்தல் = அளவிடுதல். மதி = அளவிட்டறியும் அகக்கரணம்.

ஊழ் வினையின் பயன்.

"வகை தெரிவான்" என்றதனால் ஆதனும், 'காலமறிதல்' என்னும் அதிகாரத்தாற் காலமும், 'ஊழ்' என்னும் அதிகாரத்தால் ஊழும், கடவுள் வாழ்த்ததிகாரத்தால் இறைவனும் அறியப்பட்டன.

சிவமத விரிவளர்ச்சி

சிவமதம், நாளடைவிற் பல்வேறு வணக்கங்களையும், இறுதி யில் திருமாலியத்தையும் தன்னுட் கொண்டது.

நாக வணக்கத்தார் நாக வுருவைத் தம் தலையுச்சியில் அணிந்திருந்தனர். அவரைச் சிவனியராக்கற்கு, சிவன் முடிமீதும் நாகவுரு விருப்பதாகப் படிமையமைத்துவிட்டனர். அதோடு, சிவன் பாம்புகளையே பல்வேறு அணிகளாக அணிந்திருப்பதாகவும் காட்டி விட்டனர். அதனால், நாகப்பன், பாம்பணியன் முதலிய பெயர்களும் தோன்றின.

"பாம்பலங் காரப் பரன்" (திருக்கோ. 11)
தமிழகம் முழுதும் வேந்தராலும் தொழப்பட்ட காளி, சிவன் தேவியாக்கப்பட்டாள். அது திருவாலங்காட்டுத் திருநடப் போரில் அவள் தோல்வியுற்றதன் விளைவாகக் காட்டப்பட்டது. ஆண்பாற் கேற்ற ஊர்த்த நடனம் பெண்பாற் கேற்காமையால், காளியடியாரும் அதை ஒத்துக்கொள்ள வேண்டிய தாயிற்று.

உவர் - இவர். உவர் - ஊர். ஊர்தல் = ஏறி நடத்துதல் அல்லது செல்லுதல், உயர்தல். ஊர் - ஊர்த்தம் - வ. ஊர்த்வம் (urdhva).

சிவையுங் காளியும் ஒன்றானதினால், சிவை நீலி(கருப்பி) யெனவும், காளி இறைவி(இறைவன் தேவி) யெனவும், பெயர் பெற்றனர். அம்மை ஐயை என்பன இருவருக்கும் பொதுப் பெயர் கள். அம்மை - அம்மா - வ. அம்பா.

காளி சிவன் தேவியான பின், காளியப்பன், பேய்ச்சியப்பன் முதலிய பெயர்கள் சிவனுக்குத் தோன்றின.

விண்ணக வாழ்வு நிலையற்றதாய் எழுபிறவியுள் அடங்கின தினாலும், விண்ணக வேந்தனுக்கு மழை பெய்விக்கும் அதிகாரமே யிருந்ததனாலும், நிலையான வீட்டுலகத் தலைவனும் எல்லாம் வல்லவனுமான சிவனை வழிபடும் வழிபாட்டுள், வேந்தன் வணக்கம் மறைந்தொழிந்தது.

இறுதியில், திருமாலும் பெண்ணாக மாறிச் சிவபெருமானின் இடப்பாகத் தமர்ந்தான் என்னும் கதையெழுந்தது. அரி என்னும் திருமால் பெயர் இதனால் தோன்றியிருக்கலாம். அரம் = சிவப்பு. அரன் = சிவன். அரன் - அரி(பெண்பால்). பச்சையன் என்னும் பொருள் பிற்காலத்தது.

திருமால் மதமும் ஒரு தனி மதமாகத் தொன்றுதொட்டு இருந்து வந்திருப்பினும், சிவனுக்கே இறைவன் என்னும் பெயருண் மையும், "பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்"

சிலப்பதிகாரக் கூற்றும்(5 : 169), சிவமதத்தின் தலைமையை யுணர்த் தும். உலக மெல்லாம் உடையவர் என்பதுபற்றி, சிவனுக்குப் பெருவுடையார் என்றும் பெயர். "ஏழுடையான் பொழில்" (திருக்கோ. 7).

(2) திருமால் மதம்

திருமால் நிறமும் பெயரும்

எல்லாம் வல்ல இறைவனையே, முல்லைநிலத் தெய்வ அடிப் படையில் நீரின் கூறாகக் கொண்டு, நீரைப் பொழியும் முகில்நிறம் பற்றி மாயோன்(மாயன், மாயவன்) என்றும், மாலோன்(மால், மாலன், மாலவன்) என்றும், கார் வண்ணன்(கரியன், கரியவன்) என்றும் முகில் கூடும் வானிறம்பற்றி நீல வண்ணன்(மணிவண்ணன், கடல் வண்ணன்) என்றும், பெயரிட்டு வழிபட்டு வந்துள்ளனர் ஒருசார் தமிழர். மால் என்னும் பெயர் அடையடுத்துத் திருமால், பெருமால் என வழங்கும். பெருமால் - பெருமாள்.

முகிலுக்கும் அது நிற்கும் வானிற்கும் விண் என்னும் பெய ருண்மையால், அப் பெயரை அடியாகக் கொண்ட விண்டு என்னும் பெயரும் திருமாலுக்கு ஏற்பட்டது.

விள்ளுதல் = விரிதல், திறத்தல், வெளியாதல்.
விள் - விண் = வெளி, வானம், முகில், மேலுலகம்.
விண் - விண்டு = வெளி, வானம், முகில், திருமால், மேலுலகம்.
பச்சை நிறம் நீலநிறத்திற்கு இனமாதலால், பச்சையன், பச்சையப்பன் என்னும் பெயர்களும் திருமாலிற்குத் தோன்றின.

திருமாலிருக்கை

விண்டு + நகர் = விண்ணகர் = 1. திருமால் கோவில், திருமால் வீட்டுலகம்.

விண்ணகர் - விண்ணகரம்.

பரம பதம் = பரமன் பதிந்திருக்கும் இடம், வீட்டுலகம், திருமாலுலகம்.

திருமால் மலரணி

முல்லை நிலத்திற்குரிய துழாய்மாலை.

திருமால் ஊர்தி

கலுழ்தல் = கலத்தல். கலுழ் - கலுழன் = வெண்டலையும் செவ் வுடம்புமாக இருநிறங் கலந்த பறவை.

கலுழன்- வ. கருட(garuda).

திருமால் படை

சங்கு, சக்கரம், வில், வாள், தண்டம் என்னும் ஐந்து.

ஐம்படை யுருவாகச் செய்த ஐம்படைத் தாலி யென்னும் அணியை, மத வேறுபாடின்றிச் சிறு பிள்ளைகட்குத் தொன்று தொட்டுக் காப்பாக அணிந்து வந்திருக்கின்றனர்.

"தாலி களைந்தன்று மிலனே" (புறம். 77)
"பொன்னுடைத் தாலி யென்மகன்" (அகம். 54)

"அமளித் துஞ்சு மைம்படைத் தாலிக்
குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்" (மணிமே. 7:56-7)

"அழகிய வைம்படையு மாரமுங் கொண்டு" (பெரியாழ். திரு. 1:4:5)

"ஐம்படை சதங்கை சாத்தி" (பெரியபு. தடுத்தாட். 4)
"தன்படைக ளானதிரு வைம்படை தரித்தே" (கலிங். அவ. 9)

"தாலி யைம்படை தழுவு மார்பிடை" (கம்பரா. நாடு. 58)

"ஐம்படை மார்பிற் காணேன்" (திருவிளை. 39 : 25)

திருமால் நிலைகள்

வானிற் கலுழனூர்தலும், நிலத்தில் நிற்ற லிருத்தல் கிடத்தலும். கிடத்தற்குச் சிறந்த இடம் திருவரங்கம்.

திருவரங்கம் - வ. ஸ்ரீரங்க.

திருமால் தொழில்

படைப்பு காப்பு அழிப்பு என்னும் மூன்று.

"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே." (கம்ப.சிறப்புப் பா. 1)
திருமால் வழிபாடு

அக்கமாலைக்குத் தலைமாறாகத் துளசிமணி மாலை யணிந்து, திருநீற்றிற்குத் தலைமாறாகத் திருமண் காப்புச் சாத்தி, 'சிவபோற்றி' என்பதற்குத் தலைமாறாக 'மால் போற்றி' அல்லது 'மாய போற்றி' என்று ஓதி, பிறவகைகளி லெல்லாம் சிவனியர் போன்றே செய்து வழிபடல்.

சிவனிய அரசர் சிவன் கோவில்கட்குச் செய்தது போன்று, மாலிய அரசரும் திருமால் கோவில்கட்குச் சிறப்புச் செய்து மானி யம் விட்டனர். இரு சாராருள்ளும் ஒருசிலர், சமயப் பொது நோக்கராயிருந்து இரு மதக் கோவில்கட்கும் இயன்றது செய்தனர். திருமால் கோவிற் பூசகர் திருவடி பிடிப்பான், நம்பி எனப் பெயர் பெற்றனர்.

கொண்முடிபு

பெரும்பாலும் சிவனியத்தை யொத்ததே. இறைவன் பெயரும் வீட்டுலகப் பெயரும் சில சொற்களும் மட்டுமே வேற்றுமை.

மெய்ப்பொருளியல்

சிவனியத்தை யொத்ததே.

சிவனியமும் மாலியமும், எல்லாம் வல்ல இறைவனான ஒரே தெய்வத்தை வெவ்வேறு பெயரால் வணங்கும் மதங்களாதலால், சிவனுந் திருமாலும் வெவ்வேறு தெய்வ மென்றோ, அவரிடை ஏற்றத் தாழ் வுண்டென்றோ, குமரிநாட்டார் கொள்ளவில்லை.

"அரியுஞ் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு." என்பது பழமொழி.

"அரனதிக னுலகளந்த வரியதிக னென்றுரைக்கு மறிவிலோர்க்குப்
பரகதிசென் றடைவரிய பரிசேபோற் புகலரிய பண்பிற்றாமால்."
(கம்பரா. நாடவிட். 24)
என்றார் கம்பர். இரு மதத்தார் பிள்ளைகட்கும் ஐம்படைத்தாலி அணியப்பட்டு வந்ததும், இதை வலியுறுத்தும்.

முற்காலத்தில், ஆடவரும் பெண்டிர் போன்றே தலைமுடியை நீள வளர்த்துக் கொண்டை முடித்தனர். நோயில்லா நிலையில் முடி வெட்டுவது, அவமானத் தோல்விக்கும் துயரத்திற்கும் அடை யாளமாகக் கருதப்பட்டது. இறைவன்முன் தம்மைத் தாழ்த்துவதற்கே, தெய்வப் பற்றாளர் திருக்கோவில்கட்குச் சென்று தம் தலையை மழித்துக் கொண்டனர். அவ் வழக்கம் இன்றும் ஓரளவு இருந்து வருகின்றது.

இனி, அடிமைகட்குக் காதில் துளையிடுவது அக்காலத்து வழக்கம். தெய்வப்பற்று மிக்க செல்வரும், தம்மை இறையடிமை யராகக் கொண்டு, தம் காதில் துளையிட்டனர். அது தூர்ந்து போகாமைப் பொருட்டே, கடுக்கன் குண்டலம் முதலிய காதணிகளை அணிந்துவந்தனர்.

மந்திர வெழுத்தும் சக்கரமும் பொறித்த தகட்டை உட் கொண்ட, குளிசம் போன்ற தெய்வக் காப்பான முன்கை யணியே, இன்று காப்பு என வழங்கி வருகின்றது.

நாகமும் நாகப்படமும் போன்ற உருவமைந்த எல்லா அணிகளும், தொடக்கத்தில் நாகவணக்கத்தைக் காட்டியவையே.

பண்டை ஐம்படைத்தாலியும் சங்குத்தாலியும் ஆமைத்தாலி யும் போன்று, இன்று குறுக்கை(சிலுவை)த் தாலியும் மூவிலைத் தாலியும் கிறித்தவப் பெண்டிரால் அணியப்படுகின்றன.

இங்ஙனம் தெய்வப்பற்றால் அணியப்படும் உருக்களெல்லாம், பொன்னாலும் மணியாலும் இயன்று, அழகிற்காக அணியும் அணிகலங்களாகவே மாறிவிடுகின்றன. என்றும் இயற்கை வடிவி லேயே அணியப்பட வேண்டிய அக்கமணியும், ஒரோ ஒருவரிடைப் பொற்பூச்சுப் பெற்று விடுகின்றது.

(3) கடவுட் சமயம்

ஊர் பேர் காலம் இடம் வண்ணம் வடிவம் பால் பருவம் முதலிய வரையறையின்றி, எங்கும் நிறைந்து, எல்லார்க்கும் எல்லா வற்றிற்கும் பொதுவாய், எல்லாம் வல்லதாய், என்றும் மாறாதிருக் கும் பரம்பொருளை உள்ளத்தில் அகக்கண்ணாற் கண்டு தொழுது, முக்கரணத் தூய்மையுடன் ஒழுகுவதே கடவுட் சமயமாம்.

பேர் என்றது, இயற்பெயரும் பண்புபற்றிய சிறப்புப் பெயரும் போன்றவற்றை.

கடவுட் சமயம், இல்லறம் துறவறம் என்னும் இருவகை அறவாழ்க்கைக்கும் பொதுவாம். அதனாற் பெறும் பேரின்பமும், இம்மை மறுமை யிரண்டிற்கும் பொதுவாம். இம்மையிற் பெறுவது உடலிருந்த வீடு என்றும், மறுமையிற் பெறுவது உடலிறந்த வீடு என்றும் பெயர் பெறும்.

எல்லாவற்றையும் கடந்து நிற்பவன் கடவுள். எல்லா வுலகங் களையும் ஆள்வதால் ஆண்டவன் என்றும், எங்குந் தங்கியிருப்பதால் இறைவன் என்றும், எல்லா வுயிர்கட்கும் உணவைப் பகுத்தளிப்பதால் பகவன் என்றும் பெயர் பெறுவன். 'ஆண்டவன்' முதலிய பிற பெயர்கள் பெருந்தேவ மதங்களிலும் வழங்குவதால், கடவுட் சமயத்திற்குத் தனிச் சிறப்பாகவுரிய தெய்வப் பெயர் கடவுள் என்பதே.

தெய்வம் என்னும் பெயர், இடத்திற் கேற்ப மூவகைத் தெய்வத் தையுங் குறிக்கும். "தெய்வம் உணாவே" (தொல். 964) என்பதிற் சிறு

தெய்வத்தையும், "நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்" (இராமலிங்க அடிகள் பாடல்) என்பதிற் பெருந்தேவ னையும், "தெய்வம் நின்று கொல்லும்" என்னும் பழமொழியிற் கடவுளையும், குறித்தல் காண்க. "வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும்" (குறள். 50) என்பதில், சிறுதெய்வத்தின் பாற்பட்ட தேவருலக வாழியைக் குறித்தது.

தன்வயத்தனாதல், எங்கும் நிறைதல், எல்லாம் வல்லனாதல், எல்லாம் அறிதல், என்று முண்மை, இயல் மாறாமை, முழுத் தூய்மை, ஒப்புயர்வின்மை, பேரருளுடைமை, வரம்பிலின்பமு டைமை என்பன கடவுளின் இயல்களாகச் சொல்லப் பெறும்.

எல்லாம் வல்ல இறைவணக்கத்தையே கொண்ட சிவனியம், மாலியம், யூதம், கிறித்தவம், இசலாம் முதலிய எல்லா மதங்கட்கும், கடவுட் சமயம் பொதுவாம்.

இசுமவேல இசுரவேலரின் முன்னோனான ஆபிரகாமிற்கு முன்பே, நோவா காலத்துப் பெருவெள்ளத்திற்கும் முன்னரே, கடவுளை உலகில் முதன் முதலாகக் கண்டவர் குமரிநாட்டுத் தமிழரே. கடவுள் என்னுஞ் சொல் தொல்காப்பியத்தில் ஆளப்பட் டிருப்பதே, அதற்குச் சான்றாம்.

"காமப் பகுதி கடவுளும் வரையார்" (தொல். புறத். 28)

"கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே." (தொல். புறத். 33)
கடவுள் என்னுஞ் சொல், எல்லாவற்றையுங் கடந்து எண் ணிற்கும் எட்டாத பரம்பொருளையே குறிக்கும். சிறுதெய்வ வணக்க ஆரியர்(பிராமணர்), பிற்காலத்தில் அதைப் பிழைபட ஆண்டு விட்டனர்.

கடவுட்கு உருவ மின்மையால், உருவ வணக்கமு மில்லை. எவரும் எங்கும் என்றும் தமித்தும் பிறரொடு கூடியும், கடவுளைத் தொழலாம்.

திருவள்ளுவர் கடவுட் சமயத்தார். அதனால், முதற் பகவன், வாலறிவன், மலர்மிசை யேகி, விருப்பு வெறுப்பில்லான், இறைவன், ஐம்புலம் வென்றான், உவமையிலி, அறவாழி யந்தணன், எண் குணத்தான், பிறவி நீக்கி எனக் கடவுட் குரிய பல்சமயப் பொதுப் பெயர்களையே தம் கடவுள் வாழ்த்தில் ஆண்டார்.

கடவுளியல்பை விளக்கும் பாடல்கள்

"அங்கிங் கெனாதபடி யெங்கும் பிரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடி யெல்லாம்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாம்
தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குத் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமாய்
என்றைக்கு முள்ளதெதுமேற்
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுவது
கருத்திற் கிசைந்ததுவே
கண்டன வெலாமோன வுருவெளிய தாகவும்
கருதியஞ் சலிசெய்குவாம்."
(தாயு. பரசிவ. 1)
"பண்ணே னுனக்கொரு பூசையொரு வடிவிலே
பாவித்தி றைஞ்சவாங்கே
பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப்
பனிமல ரெடுக்கமனமும்
நண்ணே னலாமலிரு கைதான் குவிக்கவெனின்
நாணுமென் னுளநிற்றிநீ
நான்கும்பி டும்போ தரைக்கும்பி டாதலால்
நான்பூசை செய்யல்முறையோ

விண்ணே விணாதியாம் பூதமே நாதமே

வேதமே வேதாந்தமே
மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
வித்தே யவித்தின் முளையே
கண்ணே கருத்தேஎன் எண்ணே யெழுத்தே
கதிக்கான மோனவடிவே
கருதரிய சிற்சபையி லானந்த நிருத்தமிடு
கருணாகரக் கடவுளே."
(தாயு. கருணா. 6)

"எட்டுத் திசையும் பதினாறு கோணமு மெங்குமொன்றாய்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம்
கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர் கருத்தில்வையார்
பட்டப் பகலை யிரவென்று கூறிடும் பாதகரே."
(பட்டினத். பொது. 30)


"உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையற
புளியிட்ட செம்பையும் போற்றுகி லேனுயர் பொன்னெனவே
ஒளியிட்ட தாளிரண் டுள்ளே யிருத்துவ துண்மையென்று
வெளியிட் டடைத்துவைத் தேனினி மேலொன்றும் வேண்டிலனே."
(பட்டினத்.பொது. 61)
"முப்பாழும் பாழாய் முதற்பாழுஞ் சூனியமாய்
அப்பாழும் பாழா யன்புசெய்வ தெக்காலம்." (பத்திர. 113)

"வெட்ட வெளிக்குள்ளே விளங்குஞ் சதாசிவத்தைக்
கிட்ட வரத்தேடிக் கிருபைசெய்வ தெக்காலம்." (பத்திர. 199)

"நட்ட கல்லைத் தெய்வமென்று
நாலு புட்பஞ் சாத்தியே
சுற்றி வந்து முணமுணென்று
சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோநம்
நாத னுள்ளி ருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம்க
றிச்சு வைய றியுமோ." (சிவவாக். 518)
கொண்முடிபு

சிவமதத்திற்குக் கூறிய கொண்முடிபே கடவுட் சமயத்திற்கும். தலைவன் தளையன் தளை என்னும் முப்பொருளை, கடவுள் கட்டுணி கட்டு என்று சொன்மாற்றியுங் கூறலாம்.

இல்லற வாயிலாகவும் இறைவன் திருவடியடையலாமாத லால், நல்வினையாற் கேடில்லை.

"செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே
ஐயம் அறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்த லுண்டெனின்
தொய்யா வுலகத்து நுகர்ச்சியும் கூடும்
தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின்
மாறிப் பிறப்பின் இன்மையுங் கூடும்
மாறிப் பிறவா ராயினும் இமயத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே." (புறம். 214)


'பிறவாராயினும்' என்பதில் உம்மை எதிர்மறை. 'அசைநிலை' என்று பழையவுரை கூறுவது பொருந்தாது.

இல்லறத்தாலும் வீடு பெறலாம் என்பதே குமரிநாட்டுத் தமிழர் கொள்கை. சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி பரவையாராகிய தேவ கணிகையரொடு இன்பம் நுகர்ந்தது, இறைவனுக் குடம்பாடென்று சொல்லப்படும்போது, இறைவன் வகுத்த முறைப்படி கரணத்தொடு மணந்த கற்புடை மனைவியொடு இல்லறம் நடத்துவது, எங்ஙன் இறைவனுக்கு ஏற்காதிருக்கும்?

மெய்ப்பொருளியல்

சிவமதத்திற்குக் கூறியதே கடவுட் சமயத்திற்கும்.

கடவுட் சமயம் துறவியர்க்கே உரிய தென்றும், இல்லறத் தார்க்கு உருவ வணக்கம் இன்றியமையாத தென்றும், தன்னலப் பிராமணப் பூசாரியரால், ஒரு தவறான கருத்து இற்றைத் தமிழ ருள்ளத்திற் புகுத்தப்பட்டுள்ளது. கிறித்தவரும் முகமதியரும் உருவத் துணையின்றியே இறைவனை வழிபட்டு வருகின்றனர். கற்றாருங் கல்லாருமான தமிழரும், வீட்டிலும் காட்டிலும் வழிப்போக்கிலும் துன்பம் நேர்ந்த விடத்து, அண்ணாந்து வானை நோக்கி "ஆண்டவனே!" அல்லது "கடவுளே" என்று விளித்து வேண்டுதல் செய்வது; அல்லது ஒருவர் அறமுறை தவறி அட்டூழியஞ் செய்யும் போது, வானை நோக்கி, "அதோ போகிறானே, அவன் கேட்பான்" என்று முறையிடுவது, இன்றும் வழக்கமாயிருக்கின்றது. ஆதலால், கல்லார்க்கோ, பொதுமக்கட்கோ, இல்லறத்தார்க்கோ, கடவுள் வணக்கமும் வழிபாடும் ஏற்கா தென்பது பொருந்தாது.

உருவ வணக்கப் பழைய ஏற்பாடு(Old Testament) நீங்கி, உருவிலா வணக்கப் புதிய ஏற்பாடு(New Testament) குமரிநாட்டிலேயே அறிஞரிடைத் தொடங்கிவிட்டதென்றும், அது ஈரறத்தார்க்கும் ஏற்குமென்றும், உண்மையறிக.

ஆரியர் வருகைக்கு முற்பட்ட முதலிரு கழக இலக்கியம் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டமையால், அதினின்று சான்று காட்ட இயலா தென்றும்; மாடம் அழிந்தபின் அதினின்றெடுத்த உறுப்புகளைக் கொண்டமைத்த கூடம் போன்ற, பிற்காலத்திலக் கியத்தினின்றே சான்று காட்டப்படு மென்றும் அறிந்து கொள்க.

----------

2. இடைநிலை யியல்

ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலம் தோரா. கி.மு. 1500. அவரது வேதக் காலம் கி.மு. 1500-1200.

1. ஆரியத் தெய்வங்கள்

தியசு (த்யஸ் - Dyas)

தியசு = ஒளியுள்ள வானம், வானம், வானத்தெய்வம் இச் சொல் த்யௌஸ் (Dyaus), த்யௌக்ஷ் (Dyaush) என்ற வடிவுகளிலும் வழங்கும்.

தீயும் தீப்போல் ஒளிதரும் சுடர்களும் ஒளிவடிவான தோற்றங்களும், முதற்காலத்தில் உலகமெங்கும் தெய்வங்களாக வணங்கப்பட்டன. குமரிநாட்டில் தீவணக்கமும் கதிரவன் வணக்க மும் தோன்றிப் பரவிய காலத்தில், ஆரியரின் முன்னோர் ஐரோப்பா விற்குப் பிரிந்து போயினர். அதனால், மேலை யாரியரும் கீழை யாரியரும் பிரியுமுன்னரே, சுடர்களெல்லாந் தோன்றும் வானத்தை ஒரு மூலத் தெய்வமாகக் கொண்டு, அதை வணங்கி வந்தனர்.

ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே, கிரேக்கமும், இலத்தீனும் வேத ஆரியமும் தோன்று முன்னரே, ஐரோப்பிய ஆரியர் வானத் தெய்வத்தைத் த்யுபாதர்(வானத் தந்தை) என்று பெயரிட்டு வணங்கி வந்ததாகவும்; அப் பெயர்(Dyu Patar) வேத ஆரியத்தில் Dyaush-Pitar என்றும், கிரேக்கத்தில் Zeus Pater என்றும், இலத்தீனில் Jupiter என்றும், பழைய நார்வேயத்தில் Tyr என்றும், திரிந்துள்ளதாகவும் மாகசு முல்லர்(Max Mueller) கூறுகின்றார்.

தேயு அல்லது தெய்வு(தெய்வம்) என்னும் தென்சொல் தியூ அல்லது த்யு என்றும், தேவு என்னும் தென்சொல் திவ் என்றும் ஆரியத்தில் திரிந்துள்ளன.

எ-டு : L. deus, divus, divinus.

வே. ஆ. த்யு, த்யஸ், திவ், திவ.

திவ் என்னும் மூலத்தினின்று, ஒளியுள்ள இடத்தையுங் காலத்தை யுங் குறிக்கும் இந்திய ஆரியச் சொற்கள் தோன்றியுள்ளன.


திவ = வானம், நாள் (பகல்) வே. ஆ.
திவன், திவஸ், திவஸ = நாள் (சமற்கிருதம்)
திவாகரன் = பகலைச் செய்பவன், பகலவன்.
தேவன் என்னும் தென்சொல், பிராகிருதத்தில் தேவ் என்றும், வேத ஆரியத்தில் தேவ என்றும் திரியும்.

பிருதுவி(ப்ருத்வீ)

நிலமகள், த்யாவா - ப்ருத்வீ என்று வானத் தந்தையுடன் இணைத்து விளிக்கப்படுபவள். புடவி - வ. ப்ருத்வீ.

அதிதி (Aditi)

"அதிதி என்பவள் ஒரு பெண்தேவதை. அவட்கு மித்திரன், வருணன் முதலிய எட்டுப் பிள்ளைகள் உளர். அவள் உலகத்திற் கெல்லாம் நன்மையளிக்கின்றாள் என்ற காரணத்தால் 'விச்வ ஜந்யா' எனக் கூறப்படுகிறாள். சுகத்தை அளிக்கவும் பாபத்தைப் போக்கவும் வேண்டப்படுகின்றாள்." (வ.நூ.வ.).

வருணன்(வருண)

இருக்கு வேதக் காலத்திற் சிறந்த தெய்வம் வருணனே. "அவரே பேரரசன். அவரது ஆணைப்படியே சூரியன் தன் வழியிற் சென்று பிரகாசிப்பான். சந்திரனும் நக்ஷத்திரங்களும் இரவிற் பிரகாசிக்கும்; நதிகள் ஒரே வகையாக ஓடும். ஜலத்திற்கு அரசன் அவரே. பறவைகள். கப்பல்கள் இவற்றின் கதியை அவரே அறிவர். பிறர் செய்த செயலையும் செய்யப் போகுஞ் செயலையும் அறிவர். பூமியையும் ஸு வர்லோகத் தையும் இடம் பிறழாதபடி செய்தனர். வேள்வி செய்வோனாலும் அவன் முன்னோராலும் செய்யப்பட்ட பாவத்தை நீக்குவர்." (வ.நூ.வ.) G.k ouranos(heaven).

வாரணன் - வ. வருண.

மித்திரன்(மித்ர)

மித்திரன் பகலை ஆள்பவனென்றும், வருணன் இரவை ஆள்பவனென்றும் வேத விளக்க வுரைஞர் சாயனர் கூறுவர்.

அக்கினி(அக்னி-Agni)

மண்ணுலகத் தெய்வங்களுள் தலைமையானவன் அக்கினி. அவன் வானுலகிற் கதிரவனாகவும், இடைவெளி யுலகில் மின்னாக வும், மண்ணுலகில் தீயாகவும் இருப்பன். வேள்விகளில், மேற்கும்

கிழக்கும் தெற்குமாக, வட்டம் சதுரம் முக்கோணம் ஆகிய வடிவு களில் வைக்கப்படும், காருகபத்தியம் ஆகவனீயம் தக்கிணாக் கினியம் என்னும் முத்தீ வடிவு கொள்வன். செல்வத்திற்குக் கரணி யன்; இல்லறத்திற்கு நல்ல தலைவன்; அரக்கரையழிக்கச் சிறந்த துணைவன்; வேள்விப் படைப்புகளை யெல்லாம் தேவரிடம் சேர்ப்பதால், தேவர் தூதன்; இறந்தவரை நல்லுலகிற்குக் கூட்டிச் செல்வன். பகைவரை யழிக்கவும் உணவுப் பொருள்களை விளைக் கவும் நன்மக்களைப் பெறவும், அவன் அருள் வேண்டும். L. ignis.

இந்திரன்(இந்த்ர)

இடைவெளி யுலகிற் சிறந்த தெய்வம் இந்திரன். அவன் ஏழு தானவரையும் இலட்சக்கணக்கான தாசரையும் அழித்தனன்; சம்பரன் என்னும் அசுரனின் நூறு கோட்டைகளைத் தகர்த்து, நாற்பதாண்டின் பின் அவனைக் கண்டு கொன்று, திவோதாசனைத் துன்பத்தினின்று விடுவித்தனன்; மக்களைத் துன்புறுத்திய பதினா யிரம் விருத்திரரை மாய்த்தனன். இத்தகைய செயல்களைப் புரிய ஏழு காற்றுக் கூட்டங்கள்(மருத் கணங்கள்) அவனுக்கு உதவும். அதனால் மருத்வான் என்று அவனுக்குப் பெயர். அவனுக்கு ஆற்றலுண்டாகுமாறு, சோமவேள்விகளிற் சோமம் படைக்கப்படும். மலைகளும் கோட்டைகளும் போன்ற மழை பெய்யா முகில்களை, அவன் தகர்த்ததாகச் சொல்லப்படும்.

வேதக் காலத்தில் வருணனும் பிற்காலத்தில் இந்திரனும் தலைமைத் தெய்வமாயிருந்தனர்.

உழை(உக்ஷஸ்)

விடியல் தெய்வம். கிரேக்கர் தெய்வம் ஈயோஸ் (Eos). உரோமர் தெய்வம் ஆரோரா (Aurora).

சவிதா, சாவித்திரி(ஸவிதா, ஸாவித்ரீ)

கதிரவன் எழுமுன் பெறும் பெயர்.

சூரியன்(சூர்ய)

கதிரவன் எழுந்தபின் பெறும் பெயர்.

த. சூரன் - வ. சூர்ய.

விண்டு(விக்ஷ்ணு)

எழுகை, உச்சிச் செலவு, விழுகை ஆகிய முந்நிலை யியக்கங் கொண்ட சூரியன். ஒ.நோ: த. விண்டு = வானம்.

அசுவினியர்(அஸ்வின்)

அசுவினி மருத்துவர் என்று சொல்லப்படும் இருவர்; கதிரவனின் குதிரை யூர்வாரும்(?) தேவமருத்துவரு மாவர்.

ஆதித்தர்(ஆதித்ய-Aditya)

முதலில் பிதிர்த்(பித்ரு) தெய்வங்களாகவும், பின்னர் அதிதி யின் மக்களாகவும் கருதப்பட்டவர். பின்னிலையில், முதற்கண் அறுவராகவும் பின்னர் எண்மராகவும் இறுதியிற் பன்னிருவராகவுங் கணிக்கப்பட்டவர். இறுதிநிலையிற் கதிரவனைப் பன்னிரு மாதத்திலும் படி நிகர்ப்பவராகக் கொள்ளப்பட்டனர்.

பரிசனியன்(பர்ஜன்ய)

முகில்தெய்வம். Ger. பர்கன்ய(parganya), Lit. பெர்க்குன (Perkuna), Old slav. பெருனு(இடி), Russ. பெருன்.

வாயு

காற்றுத் தெய்வம்.

மருத்துக்கள்(மருத்)

புயற்காற்றுத் தெய்வங்கள். மழைக்கு உதவுவதால் அல்லது மழையொடு கூடி வருவதால், இந்திரனின் தோழர் எனப்படுவர்; இருபத்தொருவர் என்றும், நூற்றெண்பதின்மர் என்றும் சொல்லப் படுவர் .

உருத்திரன்(ருத்ர-Rudra)

சூறாவளி அல்லது கடுங்காற்றுத் தெய்வம். ருத்(rud) என்பதை மூலமாகக் கொண்டு, அழுபவன், ஊளையிடுபவன், உரறுபவன் என்று சொற்பொருளுரைப்பர்.

சினத்தவன் அல்லது வெகுள்வோன் என்று பொருள்படும் உருத்திரன் என்னும் தென்சொல்லின் திரிபாகக் கொள்ளினும், பொருந்தும். உருத்தல் = சினத்தல். உரு - உருத்திரம் - வ. ருத்ர, E. wroth, OE. wrath.

சோமன்(ஸோம)

மூசாவான் (Muja-vat) முதலிய மலைகளினின்று நிலா வெளிச் சத்திற் பிடுங்கிக்கொண்டு வந்த சோமக்கொடித் தண்டுகளை, இரு கல்லிடை நெருக்கிப் பிழிந்த சாற்றை வடிகட்டி, பெருங்கலங்களில் வார்த்து நெய்யும் மாவுங் கலந்து புளிக்கவைத்து, பதமானபின்

குடிக்கும் நறுமண இன்சுவைப் புளிங்காடியே, தேவரும் விரும்பும் 'சோம பானம்' என்னும் வெறிக்குடிப்பாம்.

இருக்கு வேதத்தின் 9ஆம் மண்டலத்திலுள்ள 114 பதிகங்கள் அனையவும், சோம தேவனையே முதிர்ந்த பத்திவணக்கப் பான்மையில்,

"சோமதேவன் அற்றங் காவாதவர்க்கு ஆடை அணிவிக்கின் றான்; நோயாளிகளை நலப்படுத்துகின்றான்; குருடருக்குப் பார் வையளித்து முடவரை நடக்கச் செய்கின்றான். எல்லா வல்லமை களும் அவனுக்குண்டு. எல்லா ஈவுகளும் அவனிடத்திலேயே பெறற்குரியன. அவன் இறவாத தெய்வத் தன்மையன்; தேவர்க்கும் மாந்தர்க்கும் இறவாமை யளிப்பவன்" என்று போற்றிப் புகழ்கின்றன.

ஓரிடத்தில், "ஓ தூய்மை யானவனே! நித்தலொளியும் மகிமையுமுள்ள அப் பொன்றாவுலகிற்கு என்னை உய்ப்பாயாக" என்னும் வேண்டுதலு முள்ளது.

இவற்றை நடுநிலையாய் நோக்கின், கட்குடியன் பிதற்றல் கட்கும் இவற்றிற்கும் வேறுபாடின்மை, தெற்றெனத் தெரியும்.

சோமன் பக்கொசு (Bakkhos) என்னும் கிரேக்க மதுத் தெய் வத்தை ஒத்தவன்.

துவட்டா(த்வஷ்டா)

தேவ கம்மியன். வொல்கான்(Vulcan) என்னும் உரோமத் தெய்வத்தை ஒத்தவன்.

இரிபுக்கள்(ரிபு-Ribhus)

வாசன் (வாஜ), விபுவா (விப்வா), ரிபு என்னும் மூவர்; சுதன்வ முனிவரின் புதல்வர். வியக்கத்தக்க செயல்களைச் செய்து, இந்திரனின் நட்பைப் பெற்றுத் தேவராகி, சோமத்தைப் பருகத் தகுதியடைந்தனர்.

விசுவகர்மன்(விச்வகர்மா)

உலகமைப்போன்.

பிரசாபதி(ப்ரஜாபதி)

உயிரினம் படைப்போன்.

பிருகற்பதி(ப்ருகஸ்பதி-Brihaspati)

தேவரின் சடங்காசிரியன்(புரோகிதன்). பிராமணசுபதி (Brahmanaspati) என்றும் சொல்லப்படுவான்.


வாச்(Vac)

பேச்சுத் தெய்வம். பிராமணத்தில் வேதத் தாய் என்று சொல்லப்படுவள்.

பூசன்(பூஷன்)

கால்நடைகளைக் காக்குந் தெய்வம்.

அபாம் நபாத்து(அபாம் நபாத்)

கோட்டைக்குள் பெண்டிராலும் நீராலும் சூழப்பட்டிருக்கும் இடைவெளியுலகத் தெய்வம். முகிலிடை மின்னலாயிருக்கலா மென்பது ஆராய்ச்சியாளர் கருத்து.

திரிதன்(த்ரித)

ஓர் இந்தோ இரானியத் தெய்வம்.

வனற்பதி(வனஸ்பதி)

ஒரு பெருமரத் தெய்வம்.

திதி

ஓரிடத்தில் அதிதி, வருணன், மித்திரன் முதலியவருடனும், மற்றோரிடத்தில் சவிதா, பகன்(ஓர் ஆதித்தன்) முதலியவருடனும் விளிக்கப்படும் பெண் தெய்வம்.

சரசுவதி(ஸரஸ்வதி)

முதற்கண் ஓர் ஆற்றுத் தெய்வம்; பின்னர் நாமகள்.

பாரதி(Bharati)

ஆதித்தன் மகள்; பின்னர் நாமகள்.

பிதிர்க்கள்(பித்ரு)

தனிப்பட்டவரின் முன்னோரும் மன்பதை முன்னோருமான பிதிருலக ஆவிகள்.

யமன், யமி

யமன் விவசுவானின் மகன் என்றும், பிதிர்க்கள் இருக்கும் உலகத்திற்கு அரசன் என்றும், அவன் வீட்டை நாற்கண்ணும் அகன்ற மூக்குத் துளைகளும் உள்ள இரு கொடிய நாய்கள் காக்கின்றன வென்றும், அவனும் யமியும் இரட்டைப் பிள்ளைகள் என்றும், யமி அவனை மணக்க விரும்பியபோது உடன்பிறந்தாளை

மணக்கக் கூடாதென்று அவன் மறுத்துவிட்டான் என்றும், இருக்கு வேதம் பத்தாம் மண்டலம், 10ஆம் 14ஆம் பதிகங்களிற் கூறப்பட் டுள்ளது.

யமன் முதன் முதலாக இறந்து விண்ணுலகம் சென்ற மாந்தன் என்று, அதர்வ வேதம் கூறும்.

யமன் புளூட்டோ என்னும் உரோமத் தெய்வத்தை ஒத்தவன். அவன் நாய்கள் புளூட்டோவின் கொடிய (செர்பெரசு - Cerberus என்னும்) முத்தலை நாயை ஒத்தன.

பெண்தெய்வங்கள்

பிருதுவி, இளா, சரசுவதி முதலிய பெண்தெய்வங்களுடன், வேறு சில ஆண்தெய்வங்களின் மனைவியரும் கூறப்பட்டுள்ளனர். ஆயின் அவர்க்குச் சிறப்புத் தொழிலில்லை.

எ-டு: ஆண்பால் பெண்பால்

இந்திரன் -- இந்திராணீ

வருணன் -- வருணானீ

அக்கினி -- அக்கினாயீ

அசுவின் -- அசுவினீ

இணைத்தெய்வங்கள்

த்யாவா பிருத்வீ, மித்ரா வருணௌ, இந்த்ராக்னீ, இந்த்ரா வருணௌ, ஸோம ருத்ரௌ எனப் பல தெய்வங்கள், வேத மந்திரங்களில் அடிக்கடி இணைந்தும் விளிக்கப்படுகின்றன.

கணத் தெய்வங்கள்

மருத்துக்கள், ரிபுக்கள், விசுவே தேவர், வசுக்கள், உருத்திரர், ஆதித்தியர், ஆப்பிரியர் என்பவர் வெவ்வேறு தேவ குழுவார்.

வேள்விக்கு உரிய விறகு, தருப்பைப் புல் முதலிய பன்னிரு பொருள்கள் ஆப்பிரியர்(ஆ-ப்ரீயஸ்) என்னும் தெய்வங்களாக விளிக்கப் பெறும்.

மூவகைத் தெய்வங்கள்

மண்ணுலகத்(பூலோக) தெய்வங்கள்: பிருதுவி, துவட்டா, வனற்பதி முதலியவை.

இடைவெளி யுலகத்(அந்தரிக்ஷ லோக) தெய்வங்கள்: வாயு, வருணன், உருத்திரன், மருத்து, சவிதா, யமன், உழை, பிருகற்பதி முதலியன.

விண்ணுலகத் (த்யுலோக) தெய்வங்கள்: சூரியன், விசுவே தேவர், அசுவினியர் முதலியன.

அக்கினி, இந்திரன் முதலிய சில தெய்வங்கள் மூவகை யுலகிற்கும் உரியன.

வேதக்கால ஆரியத் தெய்வநிலைகள்

(1) எல்லாத் தெய்வங்களும் சிறுதெய்வ நிலையின.

(2) வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு தெய்வம் தலைமையாய் இருந்திருக்கின்றது.

(3) சில தெய்வங்களைப்பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருந் திருக்கின்றன.

(4) ஒரே தெய்வத்தைப்பற்றியே பகுத்தறிவிற் கொவ்வாத முரண் பட்ட கூற்றுகளும் உள்ளன.
எ-டு: இந்திரன் தன் தாய் தந்தையரைப் படைத்தான். தக்கன் (தக்ஷன்) அதிதியைப் படைத்தான்; அதிதியிடம் தக்கன் உண்டானான்.

(5) இயற்கைத் தோற்றங்களெல்லாம் தெய்வங்களாக்கப் பட்டுள்ளன.

(6) வாரணன் என்னும் நெய்தல்நிலத் தமிழ்த் தெய்வம், கிரேக்க ரிடையும் கீழை யாரியரிடையும் வானத்தெய்வமாக மாறி, மீண்டும் தமிழர் தொடர்பால் நீர்த் தெய்வமாகவும் கடல் தெய்வமாகவும் முந்து நிலைக்குத் திரும்பிற்று.

(7) இந்திரன் என்னும் வடநாட்டுத் தெய்வம், பெயர் மாறிய வேந்தன் என்னும் மருதநிலத் தமிழ்த் தெய்வமே.

(8) பிரமன் என்னும் ஆரியப் படைப்புத் தெய்வம், இருக்கு வேதக்காலத்தில் தோன்றவில்லை.

(9) முருகன், சிவன், காளி, திருமால் என்னும் தமிழச் சிறு தெய்வங்களையும் பெருந் தேவரையும் பற்றி, ஆரிய வேதத்தில் ஒரு குறிப்பு மில்லை.

(10) மங்கலம் அல்லது நன்மை என்று பொருள்பட்டு, அக்கினி இந்திரன் உருத்திரன் ஆகிய முச் சிறுதெய்வங்கள் பெயர்க் கும் அடைமொழியாய் வழங்கிய 'சிவ' என்னும் எச்சச் சொல் வேறு; சிவந்தவன் என்று பொருள்படும் சிவன் என் னும் தமிழப் பெருந் தேவன் பெயர் வேறு.

ஆரியர் தெய்வ வணக்க நிலை

வேத ஆரியர் தெய்வ வழிபாடெல்லாம், கொலைவேள்விப் பல் சிறுதெய்வ வணக்கமே. அசுவமேதம் என்னும் குதிரைவேள்வி மிக அருவருப்பானது. தசரதன் குதிரை வேள்வியில், அவன் தலைமைத் தேவியான கோசலை, ஓர் இரா முழுதும் வேள்வி யாண்குதிரையைக் கட்டித் தழுவிக் கிடந்தாள் என்று, மார்க்க சகாய ஆச்சாரியார் வெளியிட்ட 'சித்தூர் அதாலத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு' என்னும் சுவடியிற் கூறப்பட்டிருத்தல் காண்க. 'பௌண்டர யாகம்' என்னும் வேள்வியோ, சொல்லவும் எழுதவும் ஒண்ணா இடக்கர் மிக்க தென்று சொல்லப்படுகின்றது.

மாந்தனைக் காவு கொடுக்கும் நரமேதம் என்னும் வேள்வியும் இருந்த தென்பதற்கு, சுனசேபன் கதை மட்டுமன்றி,

பாட்டு "அந்த நரமேத மக மியற்றுதற்கு" என்னும் பாரதக் கூற்றும்(இராகசூ. 14) சான்றாம். மாட்டிறைச்சி யுண்டு 'சோம பானம்' என்னும் தேட்கடுப்பன்ன தேறலை வயிறாரப் பருகிவிட்டு, இருதிணையுயிர்களையும் இரக்கமின்றிக் காவு கொடுக்கும் சிறுதெய்வ வணக்கம், காளிக்கும் காட்டேறி தூர்த்தேறி முதலிய பேய்கட்கும், பூதங்கட்கும் காட்டு வாணரும் கல்லா மக்களும் கொடுத்து வந்து கடாவெட்டுக் கொடுமையினும், கொடியதேயாம்.

ஆரியர் மறுமைக் கொள்கை

மக்கள் இறந்தபின், அவருயிரைத் தீயும் கூற்றுவனும் வேற்று லகிற்குக் கூட்டிச் செல்வர். நல்லோ ருயிர்கள் மக்கள் அளிக்கும் உணவால் அங்கு வாழ்ந்திருக்கும். அவை 'பித்ருயாணம்' (தென் புலத்தார் வழி) 'தேவயாணம்' (தேவர் வழி) என்னும் இருவழியால் நல்லுலகிற்குச் செல்லும். தென்புலத்தாருலகிற்கு அரசன் கூற்றுவன். அங்குச் செல்லா நல்லுயிர்கள் 'சுவர்லோகம்' என்னும் விண்ணு லகையடையும். தீவினையர் அவ் வீருலகத்திற்கும் செல்லாது நரகிற் சேர்வர்.

குறிப்பு : கோவில் வழிபாடு, பெருந்தேவ மதம், கடவுட் சமயம், நாற்பொருள், வீடுபேறு என்பனபற்றி, இருக்கு வேதியர்க்கு ஒரு கருத்தும் இருந்ததில்லை.

2. ஆரியர் தமிழரை அடிப்படுத்திய வகைகள்

(1) தமிழத் தெய்வ வணக்கத்தை மேற்கொள்ளல்

ஆரியர் ஆடுமாடு மேய்க்கும் இனமாகக் கூட்டங் கூட்ட மாய்க் காந்தார நாட்டு(ஆபுகானித்தானம்) வழி இந்தியாவிற்குட்
புகுந்தாராயினும், அவருட் பூசாரியர் தவிரப் பிறரெல்லாம் இந்தியப் பழங்குடி மக்களொடு கலந்துபோனமையால், வடநாட்டிலும் தென் னாட்டிலும் ஆரியத்தைப் பரப்பியவரும், ஆரியரென்று பொதுவாகச் சொல்லப்படுபவரும், பிராமணரே என்றறிதல் வேண்டும்.

ஆரியர் தம் முன்னோர் மொழியை மறந்து போனதற்கும், அவரது வேதமொழி வடநாட்டுப் பிராகிருதத்தொடு கலந்து எகர ஒகரக் குறிலில்லாமலிருத்தற்கும், அவர் சிறுபான்மையராயிருந்து பழங்குடி மக்களொடு கலந்து போனதே கரணியமாகும்.

ஆரியர்க்கும் பழங்குடி மக்கட்கும் இடையே நடந்தனவாக வேதத்திற் சொல்லப்படும் போர்களெல்லாம், பிராமணியத்தை ஏற்றுக்கொண்டவர்க்கும் ஏற்காதவர்க்கும் இடைப்பட்டனவேயாம்.

விரல்விட்டு எண்ணத்தக்க பிராமணர் தென்னாடு வந்து, தாம் நிலத் தேவ ரென்றும் தம் மொழி தேவமொழி யென்றும் சொல்லி, மூவேந்தரையும் அடிப்படுத்தியதையும்; இன்றும் ஆரியச் சார்பான பேராயத் தமிழர் உரிமைத் தமிழரை வன்மையாக எதிர்ப்ப தையும் நோக்கின், தமிழ் திரிந்தும் தமிழாட்சியின்றியும் போன வட நாட்டில், ஆரியப் பூசாரியர் சில அரசரைத் துணைக் கொண்டு நாட்டு மக்களை வென்றது, ஒரு சிறிதும் வியப்பன்று.

ஆரியர், முன்பு பிராகிருதரையும் பின்பு திரவிடரையும் அதன் பின் தமிழரையும் வெல்லக் கையாண்ட வழிகளுள் ஒன்று, அவர் தெய்வத்தைத் தாமும் வணங்கல். இது அடுத்துக் கெடுத்தல் என்னும் வலக்காரத்தின் பாற்பட்டது.

முதலிற் சிந்துவெளியிலும், பின்னர்ச் சரசுவதி யாற்றிற்கும் திருடத்துவதி யாற்றிற்கும் இடைப்பட்ட பிரமவர்த்தத்திலும், அதன் பின் விசனசத்திற்குக் கிழக்கும் பிரயாகைக்கு மேற்குமாகப் பனி மலைக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட மத்திய தேசத்திலும், இறுதியில் ஆரியாவர்த்தம் என்னும் வடஇந்தியா முழுதும் பரவிய ஆரியர், வங்கத்திலுள்ள காளிக்கோட்டத்தை யடைந்தபின், காளி வணக்கத்தை மேற்கொண்டனர். பிராமணனே காளிக்குக் கடா வெட்டும் பூசாரியுமானான். காளி - வ. காலீ. ஆரியர் சிந்துவெளியி லிருந்தபோதே, வேந்தன் வணக்கமாகிய இந்திர வணக்கத்தை மேற்கொண்டது முன்னர்ச் சொல்லப்பட்டது. வேதக் காலத்தின் இறுதியில், இந்திரன் தலைமை ஆரியத் தெய்வமானது கவனிக்கத் தக்கது.


"The name of Indra is peculiar to India, and must have been formed after the separation of the great Aryan family had taken place, for we find it neither in Greek, nor in Latin, nor in German."

-India, What can it teach us?(p. 182)

"...We know from the Veda itself that there were sceptics, even at that early time, who denied that there was any such thing as Indra,"

-Herbert Lectures(p. 307)

இந்திர வணக்கத்தையும் காளி வணக்கத்தையும் மேற்கொண் டும், சில பிராகிருத(வடதிரவிட) மன்னரைத் துணைக் கொண்டும், வடஇந்தியா முழுவதையும் அடிப்படுத்திய பின், ஆரியர் விந்தியமலை தாண்டித் தென்னாடு வந்தனர். மக்கட் குடியிருப்பு மிக்கில்லாத தண்டகக் காட்டையும், குடியிருப்பிலும் ஆட்சி முறை யிலும், அதினுஞ் சிறந்த தக்கணத்தையும், படிப்படி யாகக் கடந்து தமிழகம் வந்த பின், தலைசிறந்த நாகரிகத்தையும் நாட்டு வளத்தை யும் தமிழுயர்வையும் இலக்கியச் சிறப்பையும் மூவேந்தர் செங்கோ லாட்சியையும் கண்டு, வியந்து வெஃகி, வட நாட்டில் தாம் கையாண்ட வழிகளையே தென்னாட்டிலுங் கையாண்டு முதற்கண் மூவேந்தரையும் தம் அடிப்படுத்தத் திட்டமிட்டு, அதன்படியே எல்லாவற்றையுஞ் செய்து வருவாராயினர்.

(2) ஏமாற்று

வெப்ப நாட்டு வாழ்க்கையால் தமிழருட் பெரும்பாலார் கருத் திருந்ததையும், மூவேந்தரும் முந்தியல் பேதைமை மதப்பித்தம் கொடைமடம் ஆகிய முக்குணங்களைக் கொண்டிருந்ததையும், கண்ட ஆரியர், தம் வெண்ணிறத்தையும் வேதமொழியின் வெடிப் பொலியையும் பயன்படுத்தி, தாம் நிலத்தேவர்(பூசுரர்) என்றும், தம் வேத மொழி தேவமொழியென்றும் கூறி ஏமாற்றிவிட்டனர். அதனால், அவர் என்ன சொன்னாலும் நம்பவும், எது கேட்டாலும் கொடுக்கவும், அவரைத் தெய்வமாக வழிபடவும், வேண்டிய தாயிற்று.

"தெய்வா தீனஞ் ஜகத்ஸர்வம்
மந்த்ரா தீனந்து தைவதம்
தன் மந்த்ரம் ப்ராஹ்மணாதீனம்
ப்ராமணா மமதைவதம்."
இதன் பொருள்: உலகம் தெய்வத்துள் அடக்கம்; தெய்வம் மந்திரத்துள் அடக்கம்; மந்திரம் பிராமணருள் அடக்கம்; ஆதலாற் பிராமணரே நம் தெய்வம்.

ஒருசார் பழங்குடி மக்களின் பேதைமை கண்டு, பிராமணரே இங்ஙனம் தம்மைப் புனைந்துரைத்துக் கொண்டனர்.

"மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி." ஆதலால், மூவேந் தரும் சென்ற நெறியே பொதுமக்களும் சென்றனர். திருவள்ளுவர் போன்ற தெள்ளறிஞர் எத்துணை நல்லறிவு கொளுத்தி எச்சரிப் பினும், பேதை வேந்தர் பொருட்படுத்தியிலர். பிராமணர்க்குக் கடவுட்குரிய பகவன்(பகுத்தளித்துக் காப்பவன், படியளப்பவன்) என்னும் பெயர் இலக்கிய வழக்கில் வழங்கத் தொடங்கிற்று. உலக வழக்கில் அவரைச் 'சாமி' என்றனர். சொம் - சொத்து. சொம் - வ. ஸ்வாம். சொம் - சொம்மி - வ. ஸ்வாமின்.

(3) நாற்பிறவிக் குலப் பிரிவினை

தொழில் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பொருளிலக்கணத்திற் கூறப்பட்டுள்ள, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நாற்பாற் பாகுபாட்டைத் தீய முறையிற் பயன் படுத்திக்கொண்டு, இந்தியரெல்லாரையும் தொழில் நிற அடிப்படை களில் பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நால்வரணப் பிறவி வகுப்புகளாக வகுத்து, அவை முறையே ஒன்றினொன்று தாழ்ந்தவையென்றும், தாம் பிராமணரும் ஏனையர் ஏனை மூவகுப்பாரு மாவர் என்றும், இப் பாகுபாடு இறைவன் படைப்பே யென்றும், கூறிவிட்டனர் ஆரியப் பூசகர்.

"ப்ராஹ்ம ணோஸ்ய முகமாஸீத்
பாஹூ ராஜன்ய; க்ருத:
ஊரூத தஸ்ய யத்வைஸ்ய:
பத்வியாக்ம் ஸூத்ரோ அஜாயத."
இது இருக்கு வேதம் 8ஆம் அட்டகத்திலுள்ள புருடசூத்தம் (புருஷ ஸூக்த) என்னும் பகுதியைச் சேர்ந்ததாகும்.

(இ - ள்) பிராமணன் பிரமத்தின் முகத்தினின்றும், சத்திரியன் அதன் தோளினின்றும், வைசியன் அதன் தொடையினின்றும், சூத்திரன் அதன் பாதத்தினின்றும் தோன்றினர்.

பிராமணர் தமிழகம் வந்தபின், அந்தணர்(அருளாளர்) என்னும் தமிழ முனிவர் பெயரையும் மேற்கொண்டனர்.

பாரதம் - அநுசாச. நீக பருவம் - பூதேவர் மகிமை யுரைத்த சருக்கத்து,

"அந்தணர்கள் தவவலியா லரசர்செங்கோல் நிகழ்வதெலாம்
அந்தணர்க ளொழுக்கத்தா லாருயிர்கள் செறிவதெலாம்
அந்தணர்கள் நான்மறையா லருமாரி பொழிவதெலாம்
அந்தணரி லதிகருல கதிலுண்டோ புகலாயே."


"ஆயுள்வேண் டினர்செல்வ மாண்மைவேண் டினர்மிக்க
சேயைவேண் டினர்தத்தஞ் சீலம்வேண் டினர்முத்தி
நேயம்வேண் டினர்சுவர்க்க நீடுவேண் டினர்விப்பிரர்
தூயதா ளினிற்றொழுது சூழ்வரே யேற்றமென"
என்னும் செய்யுள்களும்,

"இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே" (புறம். 6 : 19-20)
என்னும் புறநானூற் றடிகளும் பிராமணர் இந்தியா வெங்கும் பெற்றிருந்த மாபெரு மதிப்பை யுணர்த்தும்.

(4) முத் திருமேனிப் புணர்ப்பு

தமிழப் பொதுமக்கள் அரசரைப் பின்பற்றிப் பிராமணர்க்கு எத் துணை அடிமைப்பட்டுப் போயினும், ஆரிய வேள்வி மதத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை. பிராமணரும், வடநாட்டிற் சிவக் குறி(இலங்க) வணக்கஞ் செய்து வந்த சிவனியரை ஆண்குறித் தெய்வ வணக்கத்தார்(சிச்ன தேவ) என்று பழித்து வந்தாரேனும், தென்னாடு வந்தபின் சிவனிய மாலியங்களின் உயர்வையுணர்ந்து, அவற்றை ஆரியப்படுத்தற்கு, இறைவன் முத்தொழிலையும் வெவ்வேறு பிரித்து, தாம் புதிதாகப் படைத்த பிரமனைப் படைப்புத் தேனென்றும், முத்தொழில் திருமாலைக் காப்புத் தேவ னென்றும், முத்தொழிற் சிவனை அழிப்புத் தேவனென்றும், முத்திருமேனிக் கொள்கையைப் புகுத்திவிட்டனர்.

ஆயினும், தமிழர் பிரமனை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், அவனுக்குக் கோவிலும் கும்பீடும் இல்லாது போயின. அதோடு, அடி முடி தேடிய கதையால் அவன் பெரும் பொய்யனாகவும் காட்டப்பட்டான். பிராமணரோ, முத்திருமேனியரும் ஒருவரே என்பதை உணர்த்தற்கு, எங்கும் என்றும் முக்கோலுங் கையுமாய்த் திரிந்தனர்.

"நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய."
(தொல். மரபியல், 71)
"உறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும்
நெறிப்படச் சுவலசைஇ, வேறோரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர்"
(கலித். 9)
சிச்ன(தேவ) என்னும் வடசொல்லும் தென்சொல் திரிபே. சண்ணு - சண்ணம் - வ. சிச்ந.

பிராமணர், அவர்க்குரிய கல்வித் தொழிற் கேற்றவாறு, கூர்மதி யராய்ப் படைக்கப்படுகின்றார் என்னும் ஆரியக் கருத்தைப் பிற


வகுப்பாருள்ளத்திற் பதித்தற்கே, பிராமணரின் முதல்வனாகக் கருதப்படும் பிரமனைப் படைத்துத் தெய்வமாக்கினர். ஆக்கல் தொழிற்கு நீரும் அழிப்புத் தொழிற்குத் தீயும் சிறந்தன வாதலால், நீர்க் கூறனான திருமாலைக் காப்புத் தேவனாகவும், அழல் வண்ண னான சிவனை அழிப்புத் தேவனாகவும், அமைத்தனர் போலும்! அரன் (சிவன்) என்பதன் திரிபான ஹர என்னும் வட சொற்கு அழிப்பவன் என்னும் பொருளுண்மையும், சிவனை அழிப்புத் தேவனாகக் கொள்ள ஏதுவாயிற்று. அழிப்புத் திருமேனி என்னும் பெயர் அமங்கலமாய்த் தோன்றியதனால், அதனை மறைத்துச் சிவனியரை மகிழ்விக்குமாறு, சங்கரன்(நன்மை செய்பவன்) என்றொரு பெயரைச் சிவனுக்கு இட்டனர். அப் பெயர் 'சிவ' என்னும் வடசொற் பொருளொடும் பொருந்துவதாயிற்று.

5. தமிழாரியத் தெய்வ இணைப்பு

(மங்கல அல்லது நல்ல என்று பொருள்படும்) 'சிவ' என்னும் அடைபெற்ற ஆரியத் தெய்வங்களுள் ஒன்றா யிருந்ததனாலும், அழிப்புத் தொழிற்கேற்ற வலி மிக்குடைமையாலும், கடுங்காற்றுத் தெய்வமான உருத்திரன் அழிப்புத் திருமேனி என்னும் சிவனோடு ஒன்றுபடுத்தப்பட்டான். திருமாலைக் குறிக்கும் விண்டு என்னுந் தென்சொல்லை யொத்த விஷ்ணு என்னும் வடசொல் கதிரவனைக் குறித்ததேனும், சொல்லொப்புமை யொன்றுபற்றியே திருமாலை ஆரியத் தெய்வமாகக் கொண்டுவிட்டனர்.

இனி, பிரமனைத் திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய மக னென்றும்; மாயோள் என்னுங் காளியின் தொடர்பினால் நீலி அல்லது நீலம்மை(நீலாம்பிகை) எனப் பெயர்பெற்ற மலை மகளை, மாயோன் என்னும் திருமாலின் தங்கை யென்றும்; பொருத்தமற்ற ஓர் உறவும் பொருத்திவிட்டனர். இதனால், சிவன் மகனாக்கப்பட்ட முருகன் திருமாலின் மருகனானான்.

"நீனிற வுருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டின்" (பெரும்பாண். 402-4)
மலைமக ளோடிணைக்கப்பட்ட காளியும் திருமாலின் தங்கையானாள்.

"மாலவற் கிளங்கிளை" (சிலப். 12 : 68)
(6) தெய்வப் பெருக்கம்

ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், அசுவினியர் இருவர் ஆகத் தேவர் முப்பத்து மூவர் எனக் கணக்கிட்டு, பின்னர் அவரை முப்பத்து முக்கோடியராகப் பெருக்கினர்.

இனி, தேவகணத்தாரென்று பதினெண் வகுப்பாருங் குறிக்கப் பட்டனர்.

"அமரர் சித்தர் அசுரர் தைத்தியர்
கருடர் கின்னரர் நிருதர் கிம்புருடர்
காந்தருவர் இயக்கர் விஞ்சையர் பூதர்
பசாசர் அந்தரர் முனிவர் உரகர்
ஆகாய வாசியர் போக பூமியர்
பாகு பட்டன பதினெண் கணமே." (பிங். 2 : 92)

"நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும்
பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்." (5 : 176-8)
என்னுஞ் சிலப்பதிகார அடிகள் தமிழ வேந்தர் ஆரியர்க்கு அடிமைப்பட்டுப் போனதைக் காட்டும்.

முல்லைநிலத்து முகில் தெய்வமாகிய மாயோன் வணக்கத் தினின்று திருமால் மதம் தோன்றியதுபோல், குறிஞ்சிநிலத்து முருகன்(சேந்தன்) வணக்கத்தினின்று சிவமதம் தோன்றியிருப்பினும், பொதுமக்கள் பண்டை முறையிலேயே முருக வணக்கத்தை இன் றும் போற்றி வருவதனாலும் அவன் இளைஞன் எனக் கொள்ளப் படுவதாலும் அவன் சிவன் மகனாக்கப்பட்டான்.

முதன்முதற் சிவன் மகனென்றும் பிள்ளையார் என்றும் பெயர் பெற்றவன் முருகனே.

கடைக்கழகக் காலத்திற் கருவூர்க் கந்தப் பிள்ளை சாத்தனார் என்றொரு புலவ ரிருந்தார். அவர் தந்தை பெயராகிய கந்தப் பிள்ளை என்பது முருகன் பெயரே. புறப்பொருள் வெண்பா மாலைக் கரந்தைப் படல 21ஆம் வெண்பாவில் வரும் "வேன் முருகன்" என்னுந் தொகைச் சொற்கு, "வேலினை யுடைய பிள்ளையார்" என்று உரை வரைந்துள்ளார் சாமுண்டி தேவ நாயகர். நச்சினார்க்கினியரும், திருமுருகாற்றுப்படையுரை யில், முருகனைக் குறிக்கப் "பிள்ளையார்" என்னுஞ் சொல்லை ஆண்டிருக்கின்றார். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் தோன்றிய விநாயகர்க்கு 'மூத்த பிள்ளையார்' என்னும் பெயர் ஏற்பட்டது வேடிக்கைச் செய்தியே. முருக வணக்கம், கி. மு. 10ஆம் நூற் றாண்டிற்கு முன்னரே, குமரிநாட்டுக் குறிஞ்சிநிலத்தில் தோன்றிய தென்பதை அறிதல் வேண்டும்.

சேயோன் சிவன் என்னும் இரு சொல்லும் சிவந்தவன் என்று பொருள்படும் ஒரே சொல்லின் இரு வடிவமாயினும், நடைமுறை யில் அவை இருவேறு தெய்வங்களைக் குறித்தலாலும், சேய்

என்னும் முருகன் பெயர் குழவி என்றும் பொருள்படுதலாலும், முருகன் குமரன் என்னும் பெயர்கள் இளமைபற்றியவையாதலா லும், முருகனைத் தமிழரே சிவன் மகனாகக் கொண்டுவிட்டதாகத் தெரிகின்றது. இது, பாலைநிலத் தெய்வமாகிய காளியைச் சிவன் தேவி யாக்கியது போன்ற, சிவமத விரிவளர்ச்சி.

முருகனும் சிவனும் நிறத்தில் ஒத்தவரேனும், பருவம் வடிவம் தோற்றம் தேவி மாலை படைக்கலம் ஊர்தி அணி வழிபாட்டு முறை முதலியவற்றில், முற்றும் வேறுபட்டவ ராவர். வெறியாட்டு, காவடி யெடுப்பு, காவு கொடுப்பு, முருக வள்ளியர் இளமையும் அழகும், அவர் மயிலூர்தி முதலியன பொதுமக்கள் உள்ளத்தை முற்றுங் கவர்ந்து விட்டன. அதனால், காளி சிவன் தேவியான பின்பும் தனியாக வணங்கப்பட்டதுபோல், முருகன் சிவன் மகனான பின்பும் தனியாக வணங்கப்பட்டான். புலவர் முருகனைச் சிவனோ டொப்பக் கொண்டு, வீடளிப் பதிகாரமும் அவனுக்குரிமைப் படுத்தினமை, திருமுருகாற்றுப்படையால் அறியப்படும்.

முருகன் முளைமந்திரப் பொருளைச் சிவனுக்கு விளக்கிக் கூறி, அதனால் தன் தந்தைக்குக் குரு(தகப்பன்சாமி) ஆனான் என்பதும், முருகசிவர் சமன்மையை உயர்வுநவிற்சியாற் காட்டும்.

முருகனுக்குப் பிணிமுகம் என்னும் யானையை நிலவூர்தி யாக்கினது புலவர் செயல் போலும்!

முருகனுக்கு மேலும், 'விநாயகன்' என்னும் ஆனைமுகவனை ஆனைமுக வசுரன் கதையாலும், வீரபத்திரனைத் தக்கன் வேள்வி யழிப்புக் கதையாலும், வைரவனைப் பிரமன் தலை கொய்வுக் கதையாலும், சிவன் மக்களாகப் படைத்துக்கொண்டனர் ஆரியர். அவர்களை மக்கள் என்னாது மேனி வடிவுகள்(மூர்த்தங்கள்) என்பர் சற்றுத் தெளிந்தோர். ஆயினும், நடைமுறையில் வேறுபா டொன்று மில்லையாம்.

இனி, சாத்தன் என்னும் ஐயனாரையும், சிவமாலன்(சங்கர நாராயணன்) என்னும் புணர்ப்பில் தோன்றிய மகனாகக் கூறி, அவனை அரியரன் புதல்வன்(ஹரிஹர புத்ர) என்றனர்.

மேற்குறித்த கதைகளெல்லாம் கட்டுச் செய்திகளே யன்றி, உண்மையாக நிகழ்ந்தவை யல்ல. இறைவன்(சிவன்) வடிவான ஓங்காரம் வரிவடிவில் யானை யுருவத்தை யொத்திருப்பதால், அதினின்று தோன்றியதாகக் கூறிய வடிவை யானை வடிவாகவே காட்டிவிட்டனர். மேலும், அதற்குப் பெருச்சாளியை(பெருத்த எலியை) ஊர்தியாக்கினது, சிறுபிள்ளையின் உத்திக்கும் பொருந்தாச் செய்தியாம்.

முளைமந்திரமான (பிரணவம் என்னும்) ஓங்காரத்தின் பொருள் தெரியாமையால், பிரமன் முருகனாற் குட்டப்பட்டான் என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.

திருமால் அணங்கு(மோகினி) வடிவுகொண்டு சிவனுக்குத் தேவியானதால், அரி என்னும் பெயர் அரன்(சிவன்) என்பதன் பெண் பாலாகவும் இருக்கலாம். ஆயின், ஹரி என்னும் வட சொற்குப் பச்சை நிறத்தன் என்று பொருள் கூறுவர். பச்சையும் நீலமும் கருமைக்கு இனமான நிறங்களாதலாலும், திருமாலுக்குப் பச்சை (பச்சையன்) என்னும் பெயருண்மையாலும், ஹரி என்னும் சொற்குப் பச்சை யென்னும் பொருட்கரணியம் ஊட்டினது, தமிழ் வழக்கைத் தழுவியதாகவே யிருத்தல் வேண்டும்.

பெருமாள் என்னும் திருமால் பெயர் பெருமகள் என்பதன் மரூஉவாகக் கொள்ளற்கு இடந்தருமேனும், பெருமால்(மகா விஷ்ணு) என்பதன் திரிபென்று கொள்வதே மிகப் பொருத்தமாம்.

காளியை ஆரியத் தெய்வ மாக்கியதோடு பத்திரகாளி, மாரி, பிடாரி, சண்டி(சண்டிகை), துர்க்கை, சாமுண்டி, மகிடாசுர மர்த்தனி, நிசும்பசூதனி எனப் பல பெயர் கொடுத்து, ஆரியச் சொற்களே வழங்குமாறும், பல்வேறு பெண்தெய்வ மென்று கல்லா மாந்தர் கருதுமாறும் செய்துவிட்டனர்.

(7) தொல்கதைக் கட்டு

தமிழ நாகரிகத்தையும் மதங்களையும் ஆரியப்படுத்தற்கும், தமிழனைத் தாழ்த்திப் பிராமணனை உயர்த்தற்கும், பதினெண் தொன்மங்களையும் (புராணங்களையும்) பதினெண் துணைத் தொன்மங்களையும் (உபபுராணங்களையும்) இயற்றிக்கொண்டனர். அவற்றுள் 'கந்த புராணம்' என்னும் ஒன்றுமட்டும், ஓரரிசிப்பதம் பார்ப்பாக இங்கு ஆராயப்படும்.

முருகன் பிறப்பு

"இறைவன் உமையை வதுவை செய்துகொண்ட நாளிலே, இந்திரன் சென்று நீ புணர்ச்சி தவிர வேண்டுமென்று வேண்டிக் கொள்ள, அவனும் அதற்கு உடம்பட்டு அது தப்பானாகிப் புணர்ச்சி தவிர்ந்து கருப்பத்தை இந்திரன் கையிற் கொடுப்ப, அதனை இருடி களுணர்ந்து அவன் பக்கனின்றும் வாங்கித் தமக்குத் தரித்தல் அரிதாகையினாலே, இறையவன் கூறாகிய முத்தீக்கட் பெய்து அதனைத் தம் மனைவியர் கையிற் கொடுப்ப, அருந்ததி யொழிந்த அறுவரும் வாங்கிக் கொண்டு விழுங்கிச் சூன் முதிர்ந்து சரவணப் பொய்கையிற் பதுமப் பாயலிலே பயந்தாராக, ஆறு கூறாகி

வளர்கின்ற காலத்து, இந்திரன் தான் இருடிகளுக்குக் கொடுத்த நிலையை மறந்து ஆண்டு வந்து வச்சிரத்தான் எறிய, அவ்வாறு வடிவும் ஒன்றாய் அவனுடனே பொருது, அவனைக் கெடுத்துப் பின் சூரபன்மாவைக் கொல்லுதற்கு அவ் வடிவம் ஆறாகிய வேறுபட்ட கூற்றாலே மண்டிச் சென்றதென்று, புராணங் கூறிற்று" என்பது திருமுருகாற்றுப்படை நச்சினார்க்கினியருரை(58).

இது,

"உமையொடு புணர்ந்த காம வதுவையுள்
..............................................................
பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல் (5 : 28-49)
என்னும் பரிபாடற் பகுதியைத் தழுவியது.

வள்ளி பிறப்பு

தொண்டைநாட்டில், வெள்ளிமலை யருகில் மேற்பாடி என் னுஞ் சிற்றூரை, நம்பியரசன் என்னும் வேடர் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பெண்மக வின்மையால், ஒரு பெண்மகப் பேறு வேண்டி மலைத்தெய்வத்தை வழிபட்டு வந்தான்.

அக்காலத்தில், சிவமுனி என்பவன், அம் மலையருகில் ஐம்புலனையும் அடக்கிச் சிவன்மேல் மனத்தைச் செலுத்தித் தவஞ் செய்துகொண்டிருந்தான். ஒரு நாள் ஓர் அழகிய இளம் பெண்மான் அவனருகில் வந்து உலாவியது. அதைக் கண்டு, அவன் கரை யிறந்து காமுற்று மதிமயங்கிப் பேரிடர்ப்பட்டான். அவன் காமக் காட்சியினால் அம் மான் கருவுற்று, உரிய காலத்தில் ஒரு பெண்மகவை யீன்று, வள்ளிக்கிழங் ககழ்ந்த ஒரு குழியில் இட்டுச் சென்றது. அக் குழவியைக் கண்ட நம்பியரசன் எடுத்து, வள்ளிக் கிழங்குக் குழியிற் கிடந்ததுபற்றி வள்ளியென்று பெயரிட்டுத் தன் தேவியிடங் கொடுத்தான். அவள் வளர்த்தாள்.

சிவமுனிவன் இளம்பிணையைக் கண்டு மையல் கொண்டு பட்ட பாட்டை,

"போர்த்தொழில் கடந்த வைவேற்
      புங்கவ னருளால் வந்த
சீர்த்திடு நவ்வி தன்னைச்
      சிவமுனி யென்னுந் தூயோன்
பார்த்தலு மிளைமைச் செவ்வி
      படைத்திடும் பிறனிற் கண்ட
தூர்த்தனின் மைய லெய்திக்
      காமத்தாற் சுழல லுற்றான்."


"ஏமத்தின் வடிவஞ் சான்ற
      இலங்கெழிற் பிணையின் மாட்டே
காமத்தின் வேட்கை வைத்துக்
      கவலையா லவல மெய்தி
மாமத்த மளைபுக் கென்ன
      மனக்கருத் துடைந்து வேறா
யூமத்தம் பயன்றுய்த் தார்போ
      லுன்மத்த னாகி யுற்றான்." (கந்தபு. வள்ளி. 21-2)
என்று, கச்சியப்ப சிவாசாரியார் என்னும் புலவர் சிறிதும் நாண மின்றிப் பாடியிருக்கின்றார். இடக்கர் மிகுந்தனவும் இயற்கைக்கு மாறானவுமான இக்கதைகள், அகக்கரண வளர்ச்சியும் ஒழுக்க வுயர்வு மில்லாத ஒருவன் கட்டியன வாகும்.

முதலிலிருந்து முடிவுவரை, கந்த புராணம் முற்றும் கட்டுக் கதையாகும். முருகனும் வள்ளியும், குமரிநாட்டிலேயே குறிஞ்சி மக்கள் உள்ளத்தில் தோன்றிவிட்டனர். "இந்தப் புளுகு கந்த புராணத்திலு மில்லையே!", "கந்த புராணத்தி லில்லாத புளுகு எந்தப் புராணத்திலுமில்லை." என்னும் பொதுமக்கள் கூற்றும் பழமொழியும் இங்குக் கவனிக்கத்தக்கன.

முருகன் 'சரவணம்' என்னும் நாணற்காட்டுப் பொய்கையிற் பிறக்கவில்லை. அவனுக்கு ஒரே முகமும் இரு கையும்தான். அவன் சூரபதுமன் என்பவனைக் கொல்லவுமில்லை; தேவயானை(தெய்வ யானை) என்பவளை மணக்கவு மில்லை.

காங்கேயன், சரவணன்(சரவணபவன்), ஆறுமுகன்(சண் முகன்), பன்னிரு கையன், கார்த்திகேயன், முதலிய கந்தபுராணத்துப் பெயர்களெல்லாம் முருகனுக்கு ஒருசிறிதும் ஏற்கா. நாற்றிசையுடன் மேலுங் கீழுஞ் சேர்ந்த அறுதிசைகளை, அல்லது கோவில் கொண் டுள்ள ஆறு சிறந்த இடங்களை, முகமாகக் கொள்ளின், ஆறுமுகம் என்னும் பெயர்மட்டும் முருகனுக்குப் பொருந்தும்.

கந்தபுராணம் போன்றே, ஏனைப் புராணங்களும் தமிழருக்கு வேண்டுவனவும் ஏற்பனவும் அல்ல எனக் கூறி விடுக்க.

பிராமணருக்கு நல்லவன் என்று பொருள்படும் சுப்பிர மணியன் என்னும் வடசொற் பெயர், முன்பு திருமாலுக்கும் சிவனுக் கும் பெயராக வழங்கி, இன்று முருகனுக்குச் சிறப்பாக வழங்கி வருகின்றது.

திருமால் தோற்றரவுக் கதைகள்

திருமாலின் 'தசாவதாரம்' என்னும் பத்துத் தோற்றரவுக் கதை களும் ஒரே காலத்தில் தோன்றியவை யல்ல. முதலில் எட்டும்,
பின்னர்த் தொண்டும்(ஒன்பதும்), அதன் பின் பத்துமாகக் கணக் கிடப்பட்டு வந்திருக்கின்றன. முதலெட்டும் பாரதக் காலத்திற்குப் பின்னரே தோன்றியிருத்தல் வேண்டும். சில பனுவல்கள் புத்தரைத் தொண்டாம்(ஒன்பதாம்) தோற்றரவாகக் குறிக்கும்.

முதல் தோற்றரவுக் கதை, சதபத பிராமணத்திற் சொல்லப் பட்டுள்ள சத்தியவிரதன் கதையை அடிப்படையாகக் கொண்டி ருப்பதாகத் தெரிகின்றது. அவன் கடல்கோளினின்று தப்பிய கப்பலே, மீனாக உருவகிக்கப்பட்டதாகத் தோன்றுகின்றது. அவன் தமிழரசன்(திரவிடபதி) என்றும், அரச முனிவன்(ராஜரிஷி) என்றும், கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

2ஆம் தோற்றரவுக் கதை, சுரை(ஸு ரா) யுண்டவர் சுரர் என்னும் கருத்தையோ, நிலநடுக்கத்தோடு கூடிய ஒரு கடல்கோட் கதையையோ, தழுவியதாக இருக்கலாம்.

3ஆம் தோற்றரவுக் கதை, நிலம் நீரினின்று தோன்றிற்று என்னுங் கொள்கையைத் தழுவியதாகும்.

"உண்முறை வெள்ள மூழ்கியார் தருபு
மீண்டு பீடுயர் பீண்டி யவற்றிற்கும்
உள்ளீ டாகிய இருநிலத் தூழியும்
நெய்தலுங் குவளையும் ஆம்பலுஞ் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய்குறி யீட்டங் கழிப்பிய வழிமுறை
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி யொருவினை யுணர்த்தலின் முதுமைக்
கூழி யாவரும் உணரா
வாழி முதல்வநிற் பேணுதுந் தொழுது." (பரிபா. 2 : 10-19)
4ஆம் தோற்றரவுக் கதை, நரமடங்கல் வடிவாகச் செதுக்கிய கற்றூண், அதைப் பொன்னன்(இரணியன்) உதைத்தவுடன் அவன் மீது விழுமாறு, எளிதாய்ப் பொருத்தி அல்லது நிறுத்தி வைக்கப் பட்ட சூழ்ச்சி பற்றியதாயிருக்கலாம்.

5ஆம் தோற்றரவுக் கதை, ஆரியரைப் போற்றாதிருந்த மாவலி என்னும் மாபெருஞ் சேரவேந்தன் ஒரு படுகுழியில் வீழ்ந்து மறையுமாறு, ஒரு குள்ளப் பிராமணன் வாயிலாகச் செய்யப்பட்ட சூழ்ச்சிபற்றியதா யிருக்கலாம்.

6ஆம் 7ஆம் தோற்றரவுக் கதைகள், ஒரே காலத்தில் நிகழ்ந்தன என்பதும், ஒன்று இன்னொன்றை எதிர்த்துத் தோற்றது என்பதும், தோற்றது பிராமணக் குலத்திற் பிறந்து அரசர் வகுப்பை அழிக்கவே


தோன்றிற்று என்பதும், உத்திக்குப் பொருந்தாதனவும் தன்முரணான வும் தோற்றர விலக்கணத்திற்கு முற்றும் மாறானவுமாகும்.

8ஆம் 9ஆம் தோற்றரவுக் கதைகள், ஒரே காலத்தில் நிகழ்ந்ததொடு அண்ணன் தம்பி முறைப்பட்டனவாகவும், அவற் றுள் மூத்தது மக்களினத்திற்குச் சிறந்த முறையிற் பயன்படாத தாகவும், இருந்ததனால், அம் மூத்தது தோற்றர விலக்கணம் இல்லதேயாம்.

இனி, 10ஆம் தோற்றரவோ வெனின், அது கலியூழி முடிவில், சம்பளம் என்னும் சிற்றூரில், விட்டுணு எச்சன்(விஷ்ணு யஜ்ஞ) என்னும் பிராமணன் இல்லத்திற் குதிரைமுகத்தொடு பிறந்து, அல்லவை நீக்கி அறத்தை நிலைநிறுத்துவதாம். இது ஒருவகை யிலும் ஒவ்வாத தேனும், இதன் தீர்ப்பைக் கலியூழி முடிவுக் காலத்தினர்க்கே விட்டுவிடுவது நன்று.

இதுகாறுங் கூறியவற்றால், திருமாலை இயன்றவரை ஆரியத் தெய்வமாகக் காட்டுவதே, தோற்றரவுக் கதை நோக்கம் என்பதைத் தெற்றெனத் தெரிந்துகொள்க.

(8) தெய்வ வடிவு மாற்றம்

பகீரதன் கதையாற் சடைமேற் கங்கையும், திங்கள் சாவம் பெற்ற கதையால் முடிமேற் பிறையும், நஞ்சுண்ட கதையாற் கழுத்திற் கருநிறமும், தாருகவனக் கதையாற் கரியுரிப் போர்வையும், பிரமன் தலை கொய்த கதையாற் கையில் மண்டையோடும், பிராமண வொப்புமையாற் பூணூலுங் குடுவையும், தமிழச் சிவன் வடிவை ஆரிய வடிவாக மாற்றின.

இக் கதைகளால், கங்கை யணிந்தோன் (கங்காதரன்), மதிசூடி, பிறைசூடி (சந்திரசேகரன்), மதியழகன்(சோமசுந்தரன்), கறை மிடற்றோன், மணிமிடற்றோன் (நீலகண்டன்), மண்டையேந்தி (காபாலீ), இரப்பெடுத்தோன்(பிச்சாடனன்) முதலிய பெயர்கள் தோன்றின.

பிராமணர் "முட்டி புகும் பார்ப்பார்" என்று பழிக்கப்பட்ட தனால், அப் பழிப்பை நீக்கச் சிவபெருமானையும் ஓர் இரப்போ னாக்கிவிட்டனர்.

தாருகவனக் கதையால், அரியரன்(ஹரிஹரன்), சிவமால் (சங்கர நாராயணன்) என்னும் பெயர்களும் தோன்றின.

திருமாலுக்கு, நரன்மகன்(நாராயணன்), அரவணையன் (சேஷசாயி) முதலிய பெயர்களுடன், தோற்றரவுக் கதைகள்பற்றிய பல்வேறு பெயர்களும் தோன்றின.


சிவ வழிபாட்டிற்குத் தமிழர் கொண்ட வடிவுகள் குறி, அம்மையப்பன், விடையேறி, நடமன், குரவன் அல்லது அந்தணன் என்னும் ஐந்தே ஆயின், ஆரியர் இவற்றொடு ஏனையவற்றையுஞ் சேர்த்து மொத்தம் இருபத்தைந்தென வகுத்துவிட்டனர்.

திருமால் வழிபாட்டிற்குத் தோற்றரவுக் கதைகளாற் பல்வேறு வடிவங்கள் ஏற்பட்டன.

(9) தெய்வப் பெயர் மாற்றம்


சிவன் பெயர்கள்
தமிழ் சமற்கிருதம்

அடியார்க்குநல்லான் -- பத்தவற்சலன்(பக்தவத்சல)
அம்மையப்பன்-- சாம்பசிவன், சாம்பமூர்த்தி
உடையான்-- ஈசுவரன்(ஈச்வர)
உலகுடையான் சகதீசுவரன், சகதீசன்(ஜகதீச)
ஒருமாவன், ஒருமாவின் ஏகாம்பரன்(ஏகாம்ர),
கீழன், ஒருமாவடியான் ஏகாம்பரநாதன்
கேடிலி அட்சயன்(அக்ஷய)
சொக்கன் சுந்தரன்
தாயுமானவன் மாதுருபூதம்(மாத்ருபூத)
தான்றோன்றி சுயம்பு(ஸ்வயம்பூ)
தூக்கிய திருவடி குஞ்சித பாதம்
தென்முக நம்பி தட்சிணா மூர்த்தி
(தக்ஷிணாமூர்த்தி)
நடவரசன் நடராசன்(நடராஜ)
புற்றிடங்கொண்டான் வன்மீகநாதன்
பெருந்தேவன் மகாதேவன்(மஹாதேவ)
பெருவுடையான் பிருகதீசுவரன், மகேசுவரன்
மங்கை பங்கன், அர்த்தநாரி, அர்த்தநாரீசுவரன்
மாதொருபாகன்
மணவழகன் கலியாணசுந்தரன்
வழித்துணையான் மார்க்கசகாயன்

சிவை பெயர்கள்

அம்மை அம்பா
அழகம்மை அபிராமி, சுந்தராம்பா,
சௌந்தராம்பிகை


இடவி

வாமி

உடையாள்

ஈசுவரி

உலகம்மை

சகதாம்பா(ஜகதாம்பா)

உலகமுழுதுடையாள்

அகிலாண்டேசுவரி

கயற்கண்ணி

மீனாட்சி(மீனாக்ஷி)

காமக்கண்ணி

காமாட்சி(காமாக்ஷி)

தடங்கண்ணி

விசாலாட்சி(விசாலாக்ஷி)

நீலம்மை

நீலாம்பா, நீலாம்பிகை

மலைமகள்

பார்வதி





திருமால் பெயர்கள்

அரங்கன்

ரங்க(ன்)

அரங்கநம்பி

ரங்கநாத(ன்)

உலகநம்பி

சகநாதன்(ஜகந்நாத)

கோவலன்

கோபால(ன்)

பெருமால் - பெருமாள்

மகாவிஷ்ணு

விண்டு

விஷ்ணு

கடவுள் பெயர்கள் (பொது)

ஆண்டவன்,

ஆண்டான்

சாமி(ஸ்வாமின்)



இயற்றியான்

கர்த்தா

பகவன், பகவான்

பகவான், பகவத்

பரஞ்சுடர்

பரஞ்சோதி(பரஞ்ஜோதி)

(10) இடப்பெயர் மாற்றம்

அருணமலை-அண்ணாமலை

அருணாசலம்

இடைமருதூர்

மத்தியார்ச்சுனம்

கழுக்குன்றம்(கழுகுக்குன்றம்)

பட்சிதீர்த்தம்

சிற்றம்பலம்

சிதம்பரம்

திருவரங்கம்

ஸ்ரீரங்கம்

திருவானைக்கா

சம்புகேசுவரம்

நாவலந்தீவம்

சம்புத்தீவம்(ஜம்புத்வீப)

பழமலை(முதுகுன்றம்) விருத்தாசலம்

பனிமலை இமாலயம்(ஹிமாலய) -
இமயம்

பாதிரிபுரம்

பாடலிபுரம்

புக்கொளியூர்

அவிநாசி

பொன்மலை மேரு(பர்வதம்)
பொன்னம்பலம் கனகசபை
மயிலாடுதுறை மாயூரம்(மாயவரம்)
மறைக்காடு(மரைக்காடு) வேதாரணியம்
வினைதீர்த்தான் கோவில் வைத்தீசுவரன் கோவில்
(புள்ளிருக்கு வேளுர்)
வெண்காடு சுவேதவனம்
வெள்ளிமலை கைலாசம் - கைலாயம்
களித்தல் (த.) = மகிழ்தல். களித்தல் (ம.) = விளையாடுதல். களி - கேல் (பிரா.) = விளையாடு. கேல் - கைல (வ.) = விளையாட்டு, மகிழ்ச்சி, இன்பம்.

இரு என்னும் தமிழ் வினைச்சொல், தியூத்தானத்தின் (Teutonic) வடவழக்கில் இஸ்(is) என்றும், தென்வழக்கில் ஆர்(are) என்றும், திரிந்துள்ளது. இஸ் என்னும் வடிவம், இலத்தீனிலும் கிரேக்கத்திலும் எஸ்(es) என்றும், வேத ஆரியத்தில் அஸ்(as) என்றும் திரியும்.

அஸ் - ஆஸ = இருக்கை. கைல + ஆஸ = கைலாஸ.

(11) சொற்பொருள் திரிப்புக் கதைகள்

சிவமதம் குறிஞ்சிநிலத்திற்குரிய சேயோன் வணக்கத்தினின்று தோன்றியமையாலும், வீட்டுலகம் மேலேயுள்ளது என்னுங் கருத்தி னாலும், நாவலந் தேயத்தில் அல்லது உலகத்தில் முதற்றிற உயரமுள்ள வெள்ளிமலை மண்ணுலகப் பேரின்ப நிலையமாகக் கொள்ளப்பட்டது. மலையை இருக்கையாகக் கொண்ட சிவை மலைமகள் எனப்பட்டாள். மகள் = பெண்தெய்வம். ஒ.நோ: நிலமகள், நாமகள், மலர்மகள். இதை நோக்காது, மலைமகள் என்னும் பெயருக்கு மலையரசன் மகள் என்று பொருள் கொண்டு, அதற்கேற்ப ஒரு கதையைக் கட்டினர்.

அக்கம் = முள், முண்மணி. அக்கம் என்னும் தென் சொல்லை அக்ஷ என்று திரித்து, அதற்குக் கண் என்னும் பொரு ளூட்டி, சிவபெருமான் கண்களினின்று விழுந்த நீரில் தோன்றிற் றென்று கதைகட்டி, சிவ பெருமானோடிணைக்கப்பட்ட உருத்திரன் என்னும் ஆரியத் தெய்வப் பெயரொடு சேர்த்து உருத்திராக்கம் (ருத்ராக்ஷ) என்றனர்.

கொக்கிறகு என்பது ஒருவகைப் பூவின் பெயர். வடிவிலும் நிறத்திலும் அளவிலும் கொக்கிறகை ஒத்திருப்பதால், அப் பெயர் பெற் றது. அரச மன்னார்குடியருகிலோடும் பாம்பணி யாற்றின் வட

கரையிலுள்ள, பாம்பணிக் கோயிலிற் கொக்கிறகு செடியுள்ளது. இதையறியாது, கொக்கு வடிவில் வந்த குண்டாசுரன் என்னும் அசுரனை, சிவபெருமான் கொன்று அவன் இறகை அணிந்தனன் என்று கதை கட்டினர்.

மரைக்காடு என்பது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் அடவிப் பகுதி. மரை என்பது ஒரு மானினம். அது மிக்கிருந்த தனால் அவ்விடம் அப் பெயர் பெற்றது. ஆரியர் அப் பெயரை மறைக்காடு எனத் திரித்து, ஒரு காலத்தில் ஆரிய மறைகள் சிவனை வழிபட்டு வீடுபெற்ற இடமென்று, இயற்கைக்கு மாறானதும் ஒருபோதும் நிகழாததுமான பொருட்கரணியங் காட்டிவிட்டனர்.

(12) பகுத்தறிவைக் கொல்லும் பச்சைப் பொய்க்கதைகள்

விருகன் அல்லது பன்மன்(பஸ்ம) என்னும் அசுரன் சிவ பெருமானை நோக்கித் தவஞ் செய்ய, அவர் தோன்றி, என்ன ஈவு வேண்டுமென்று வினவினார். அவன், தான் எவர் தலைமேற் கைவைக்கினும் அவர் இறக்கவென ஈவு வேண்டிப் பெற்று, அதன் உண்மையறிய அப் பெருமான் தலைமீதே கைவைக்கச் சென்றான். அவர் உடனே மறைந்தருளினார். அன்று பெண்ணுருக்கொண்டு அங்கு வந்த திருமாலை அவ் வசுரன் விரும்பிப் பின்செல்ல, அவர் அவனைக் குளித்துவர ஏவினார். அவன் அவ்வாறே குளிக்குங்கால், தான் பெற்ற ஈவை மறந்து தன் தலைமேல் தானே கை வைத்து இறந்தான்.

காசியப முனிவன் தட்சப் பிரசாபதியின் புதல்வியர் பதின் மூவரை மணந்தனன். அம் மனைவியருள், அதிதியிடம் ஆதித்தரும், திதியிடம் தைத்தியரும், தனுவிடம் தானவரும், அனாயுவிடம் சித்தரும், பிரதையிடம் காந்தருவரும், முனியிடம் தேவமகளிரும், சுரசையிடம் இயக்கரும் அரக்கரும், இளையிடம் மரஞ்செடி கொடி புற் பூண்டுகளும், குரோதவசையிடம் அரிமா புலி முதலிய விலங்குகளும், தாமரையிடம் குதிரை கழுதை பறவை முதலியனவும், சுரபியிடம் ஆநிரைகளும், வினதையிடம் அருண னும் கலுழனும், கத்துருவிடம் நாகரும் பிறந்தனர்.

இவை போலிகைக் கதைகள். அகத்தியன் கும்பத்திற் பிறந் தான் என்பது போன்ற இடக்கர்க் கதைகள் இங்கு விடப்பட்டுள்ளன.

(13) கொண்முடிபு(சித்தாந்தம்)

துறவினாலேயே வீடுபே றென்றும், துறவு பிராமணனுக்கே யுரிய தென்றும், பிராமணன் வாழ்க்கை மாணவம்(பிரமசரியம்), மனை வாழ்வு(கிருகத்தம்), காடுறைவு(வானப்பிரத்தம்), துறவு

(சன்னியாசம்) என நானிலைப்பட்ட தென்றும், ஆரியப் பார்ப்பான் (பிராமணன்), அரச மறவன்(சத்திரியன்),வேளாண் வணிகன் (வைசியன்), கீழ்மகன்(சூத்திரன்) என்னும் நால்வரணங்களும் இறைவன் படைப்பென்றும், ஒவ்வொரு வரணத்தாரும் தத்தம் குலத்தொழிலைச் செய்வதே ஒழுக்கம் (தருமம்) என்றும், சூத்திரன் தன் குலவொழுக்கத்தில் நின்று பிராமணனுக்குத் தொண்டு செய்வ தனால் மறுபிறப்பில் வைசியனாகி, பின்னர் இவ்வாறே படிமுறை யாகப் பிறப்புயர்ந்து இறுதியிற் பிராமணனாவா னென்றும், அவ்வவ் வரணத்திற் கேற்பவே முக்குணங்களும் முந்நாடிகள்போல் மிக்குங் குறைந்தும் நிற்கு மென்றும், ஆரியர் தம் மேம்பாட்டிற் கேதுவாகத் தம் மனம்போற் கொண்முடிபு வகுத்துக் கொண்டனர்.

சிவனியக் கொண்முடிபில், வீடுபேற்று வாயில்கள் கோவில் தொண்டு(சரியை), வழிபாடு(கிரியை), ஓகம்(யோகம்), அறிவை (ஞானம்) என நான்காகக் கூறப்பட்டது. மாலியத்தில் கருமம் (கன்மம்), ஓதி(ஞானம்), புகலடைவு, பத்தி(பிரபத்தி) என்பன இறைவனை யடையும் நாற்படிகளாகக் கொள்ளப்பட்டன. கல்வியைப் பிராமணன் குலத்தொழிலாகக் கொண்டதினாலும், விருந்தோம்பலும் வேளாண்மையும் ஈகையும் ஒப்புரவொழுகலும் பிராமணனுக் கின்மையாலும், ஓதியே வீடுபேற்றிற்குச் சிறந்த வாயிலெனக் கூறினர். கண்ணப்ப நாயனார், இளையான்குடி மாறநாயனார் முதலிய சிறந்த அடியார்கள், வழிபாட்டாலும் தொண்டாலுமே வீடுபேறெய்தினர். உண்மையான வீடுபேற்று வாயில்கள் அறிவு அன்பு என்னும் இரண்டே. அறிவென்பது, இறைவனையும் அவனையடையும் வழியையும்பற்றி அறிந்து கொள்வது. அவ்வழி, இல்லறம் துறவறம் என்னும் இரண்டுமாம். அன்பென்பது தொண்டும் ஈகமும்(தியாகமும்).

"அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்." (குறள். 71)

"அன்பிலா ரெல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு." (குறள். 72)

"அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே." (திருமந். 257)
அன்பெல்லாம் முட்டுண்டவிடத்து ஈகத்தில்தான் முடியும்.

"நத்தம்போற் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது." (குறள். 235)
அன்புவடிவான சிவத்தை அன்பினால்தான் அடையமுடியும். மக்களிடம் அன்பில்லாதவன் இறைவனிடம் அன்பு செய்ய முடியாது.

இனி, வீடு அல்லது பேரின்பம் ஒருவகைப்பட்ட தாகவே யிருக்க, அதை நால்வகை வாயிலின் பயனாக உடனுலகம் (சாலோகம்), உடனண்மம்(சாமீபம்), உடனுருவம்(சாரூபம்), உடனொன்றம்(சாயுச்சியம்) என நால்வகைப் படுத்துவது, உத்திக்கும் தமிழ மரபிற்கும் ஒத்த தன்று.

மும்மாசு

"மூன்றுள குற்ற முழுதும் நலிவன
மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறன்றே." (திருமந். 2396)

"காமம் வெகுளி மயக்க மிவைகடிந்
தேமம் பிடித்திருந் தேனுக்கு...." (திருமந். 2397)
என்று திருமூலரும்,

"காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன்
நாமங் கெடக்கெடும் நோய்." (குறள். 360)
என்று திருவள்ளுவரும், கூறியுள்ளவாறு, மும்மாசுகள் காமம் வெகுளி மயக்கம் எனும் மூன்றே. இவையே ஆணவம் மாயை காமியம் என்றும் சொல்லப்படும். ஆணவம் என்பது செருக்கு. அவன் ஆணவம் பிடித்தவன் என்னும் உலக வழக்கையும், அருணந்தியார் முதற்கண் மெய்கண்டாரின் இளமை நோக்கி எள்ளிச் செருக்கோடு நின்று, "ஆணவம் எவ்வாறிருக்கும்? என்று வினவியதற்கு, மெய்கண்டார் அருணந்தியாரைச் சுட்டி "அது இவ்வாறிருக்கும்." என்றதையும், நோக்குக. ஆள் - ஆண் - ஆணவம். ஆணவத்தால் தோன்றுவதே வெகுளி. மாயை என்பது மயக்கம். காமியம் என்பது காமம். அதுவே தீவினைகட் கெல்லாம் வேர்.

"ஆரா வியற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா வியற்கை தரும்." (குறள். 370)
ஆணவம் அணுவளவின தென்றும் மயக்கஞ் செய்வதென்றும், காமியம் கன்மமென்றும், ஆரியர் கூறியது தவறாம். ஆணவம் என்னுஞ் சொல்லை ஆரியமாக்கவே, அதை அணு என்பதன் திரி


சொல்லாகக் கொண்டனர். மயக்கஞ்செய்வது மாயையேயன்றி ஆணவமன்று. வினைப்பயனாகிய ஊழ் (நியதி) ஒரு தனி மெய்ப் பொருளாகக் கொள்ளப்படுவதால், அதினின்றும் வேறாக வினை (கன்மம்) என்று மாசு கொள்ள வேண்டுவதில்லை.

இல்லறத்தாலும் வீடுபேறுண் டென்பது தமிழர் கொள்கை யாதலால், "இருள்சேர் இருவினை" என்று திருவள்ளுவர் கூறியது, தெரிந்தும் தெரியாதும் செய்யும் இருவகைத் தீவினைகளையே.

(14) மந்திரம்

ஓங்காரம்(பிரணவம்)

ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே.

வடமொழியில் அகரவுகரம் புணர்ந்து (குல + உத்துங்கன் = குலோத்துங்கன் என்பதுபோல்) ஓகாரமாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர்.

ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை,

"ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி" (திருமந். 765)

"ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்" (திருமந். 941)
என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை

"ஓமெனும் ஓங்காரத் துள்ளே யொருமொழி
ஓமெனும் ஓங்காரத் துள்ளே யுருவரு
ஓமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே." (திருமந். 2627)

"ஓங்காரத் துள்ளே யுதித்தவைம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே யுதித்த சராசரம்
ஒங்காரா தீதத் துயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே." (திருமந். 2628)
என்பவற்றாலும், அறியலாம்.


ஓங்கார வரிவடிவம் தமிழ் ஓகாரவரி வடிவே யாதலாலும், அது யானைவடிவை யொத்ததென்று விநாயக புராணங் கூறுவதா லும், ஓங்கார மந்திரம் தமிழ் மந்திரமேயென்பது தெளிவாம்.

அது சிவனியத்திற் குரியதாயினும், மாலியத்திலும் ஆளப்படு வது, முன்னதன் முன்மையையும் தொன்மையையும் முதன்மையை யும் உணர்த்தும்.

திருவைந் தெழுத்து

'சிவ போற்றி'(= சிவனே! வணக்கம்) என்பதே, தமிழர் கொண் டதும் உண்மையானதுமான திருவைந்தெழுத்தாம். மாணிக்க வாசகரின் போற்றித் திருவகவலிலுள்ள போற்றித் தொடர்களை நோக்குக.

"தென்னா டுடைய சிவனே போற்றி" (போற்றி. 164)
ஆரியர், 'சிவ போற்றி' என்னும் உண்மைத் திருவைந்தெழுத் தைச் சமற்கிருதத்திற் 'சிவாயநம:' என்று மொழிபெயர்த்துள்ளனர். சிவாய என்பது வடமொழி யுருபேற்ற தென்சொல்.

'ய' என்பது வடமொழியில் 4ஆம் வேற்றுமை ஒருமை யுருபு. அதை யேற்கும் பெயரின் அகரவீறு ஆகார வீறாக நீளும். அதனாற் சிவ என்னும் பெயர் 4ஆம் வேற்றுமையிற் சிவாய என்னும் வடிவு கொள்ளும். அதனொடு புணரும் நமஸ்(வணக்கம்) என்னும் வடசொல் நம: என்று திரியும். ஆகவே, சிவாயநம: என்னும் இரு மொழித் தொடர்ச் சொல், உண்மையில் ஆறெழுத்தேயன்றி ஐந்தெழுத்தாகாது. அது ஈறு கெட்டுத் தமிழிற் சிவாயநம என்று நிற்கும்போதே ஐந்தெழுத்தாகும்.

சிவாயநம என்பது நமசிவாய என்று தமிழில் முறைமாறி நிற்கும் போதும், நமச்சிவாய என்று இடையில் வலிமிக்கு ஆறெழுத் தாகும்.

"நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க"
என்று மாணிக்கவாசகரின் 'சிவபுராணம்' தொடங்குதல் காண்க.

"நன்றுகண் டாயது நமச்சிவா யக்கனி." (திருமந். 2649)
சிவாய நம என்னும் இருமொழித் தொடரைச் சிவயநம என்று இடையாகாரங் குறுக்கி, அது சிறப்பு, வனப்பு, யாப்பு, நடப்பு, மறைப்பு என்னும் தென்சொற்களின் முதலெழுத்துத் தொகுப்பென்றும்; அவ்வெழுத்துகள் முறையே சிவன், ஆற்றல்(சத்தி, சிவை), ஆதன் (சீவன்), மறைப்பு(திரோதாயி) அல்லது மாசு(மலம்), மாயை என்பவற்றைக் குறிக்குமென்றும், கூறுவது உண்மைக்கும் உத்திக்கும்

மொழிநூற்கும் ஒருசிறிதும் பொருந்தாது. இது, North, East, West, South என்னும் சொற்களின் முதலெழுத்துத் தொகுப்பே 'NEWS' என்னும் சொல் லென்றும், அது நாற்றிசையினின்றும் வரும் செய்தி களைக் குறிக்கு மென்றும், கூறுவ தொத்ததே.

சிவ என்பது, சிவம் என்னும் தென்சொல்லின் வடமொழி வடிவம். அதன் அகர வீறு ஆகார வீறானது வடமொழி யுருபு புணர்ச்சி விளைவு. 'ய' வடமொழி 4ஆம் வேற்றுமை யுருபு. நம: என்பது, நமஸ் என்னும் வடசொல்லின் திரிபான நம: என்பதன் கடைக்குறை அல்லது ஈறு கேடு. இங்ஙனம், சிவாய நம: என்னும் வடமொழித் தொடரைச் சிவய நம என்று திரிப்பின், அது வடமொழித் தொடருமாகாது தென்மொழித் தொடருமாகாது இடைத் தட்டில் நிற்பதாகும். அதையும் எழுத்தெழுத்தாகப் பிரிப்பின் ஒன்றுமில்லாது போம்.

சிவம் என்பது, செம் என்னும் அடிப் பிறந்து, ஒருவகையிலும் திரியாது என்றும் ஒரே தன்மைத்தாய் நிற்கும் செம்பொருளாகிய கடவுளைக் குறிக்கும் தென்சொல்.

"பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு." (குறள். 358)
என்று திருவள்ளுவர் கூறுதல் காண்க.

"செம்பெரு மானே சிவபுரத் தரசே" (திருவாச. வாழாப் பத்து, 2)
சுள் - செள் - செய் - செய்ம்மை - செம்மை - செம்.

செம் - செவ் - செவ - சிவ - சிவம் - சிவன்.

செம்மை = தீயின் நிறமாகிய சிவப்பு, தீயின் தன்மையாகிய
நேர்மை, கோடாமை, திரியாமை, நடுநிலை.

சிவ என்பது தமிழிற் சிவன் என்பதன் விளிவடிவம். அதைச் 'சி' , 'வ' , என்று எழுத்துப் பிரிப்பின் அச் சொல்லாகாது.

"சீறிட்டு நின்று சிவாய நமவென்ன" (910)

"மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும்" (956)

"சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோத" (958)

"தேறாச் சிவாய நமவெனத் தேறிலே" (2460)

"தெளிய வோதிச் சிவாய நமவென்னும்" (2659)

"தெள்ளமு தூறச் சிவாய நமவென்று" (2663)


"திரிமலம் நீங்கிச் சிவாயவென் றோதும்" (2665)

"சிவாய நமவெனச் சித்த மொருக்கி" (2669)

"உருவில் சிவாய நமவென வோதே" (2752)
என்று திருமூல நாயனாரும்,

"சிவாய நமவென்று சிந்தித் திருப்பார்க்கு" (நல். 15)
என்று ஒளவையாரும் பாடியிருப்பதால், சிவாய நம என்பதே மூல வடிவென்றும், அது இருமொழித் தொடரென்றும், சிவய நம என்பது அதன் திரிபென்றும், சிவ என்னும் நிலைச்சொல்லே தென் சொல் லென்றும் அறிந்துகொள்க.

இனி, சிவய நம என்பதை நம சிவய என்று முறை மாற்றி அது பருவியல் ஐந்தெழுத்து(ஸ்தூல பஞ்சாக்ஷர) என்றும், சிவய நம என்பது நுண்ணியல் ஐந்தெழுத்து(ஸூக்ஷ்ம பஞ்சாக்ஷர) என்றும், சிவய சிவ என்பது அதிநுண்ணியல் ஐந்தெழுத்து (அதிஸூக்ஷ்ம பஞ்சாக்ஷர) என்றும், திருமந்திர உரையாசிரியர் கூறுவர். ஆயின், மூலத்திற் சிவாய என்று வகர ஆகாரமுள்ள வடிவேயுள்ளது. ஆகவே, யாப்பு என்னும் தென்சொல்லின் முதலெழுத்தும், சிவாய என்னும் வடசொல்லின் இடையெழுத்தும், முறையே, 'ய' என்று குறுகின தாகக் கொள்ளப்பட்டதும் 'வ' என்று குறுக்கப்பட்டதும் தெளிவாம்.

இனி, 'சிவய', 'சிவ', 'சி' என்பவற்றையும் திருவைந்தெழுத்தின் வகைகளாகக் கொள்ளுவர். அவை அங்ஙன மாகாமை வெளிப் படை.

தமிழரை மயக்கிச் சிவமதத்தை ஆரிய வண்ணமாக்கற்கே, சிவாய நம என்னும் இருமொழித் தொடர்த் திரிபின் எழுத்துகட்கு வெவ்வேறு குறிப்புப் பொருள் குறித்துள்ளனர். அவ்வாறே,

"சிவன்சத்தி சீவன் செறுமல மாயை" (2660)
என்று திருமூலரும் பாடி யுள்ளார்.

ஐந்து என்னும் தொகைபற்றி, திருவைந்தெழுத் தென்பவற்றைச் சிவன் கைகால்களொடும் ஆடுமன்றங்களொடும் தொடர்புபடுத்திக் கூறுவர்.

"திருந்துநற் சீயென் றுதறிய கையும்
அருந்தவர் வாவென் றணைத்த மலர்க்கையும்
பொருந்தில் இமைப்பிலி யவ்வென்ற பொற்கையுந்
திருந்தநத் தீயாகுந் திருநிலை மவ்வே." (திருமந். 2751)
'சி' யாப்பு நோக்கிச் 'சீ' என நீளும். அதை 'நாயோட்டும் மந்திரம்' என்பர் திருமூலர்.


"சேர்க்குந் துடிசிகரம் சிக்கனவா வீசுகரம்
ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிலிறைக்
கங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கும் மகரமது தான்." (உ.வி. 33)

"மேலாம் சிவயநம மேவுமணி பொன்வெள்ளி
பாலாம்செம் போடுமண் பற்றல்போல் - மேலாம்
அவனாடல் செய்வனகம் ஆல்தில்லை கூடல்
தவநெல்லை குற்றாலம் தான்."
சிவன் திருநடத்தை ஐந்தொழில் தடம் என்பதால், இரு மொழித் திருவைந்தெழுத்து சிவன் ஐந்தொழிலொடும் தொடர்பு படுத்தப் பெறும்.

இனி, ஓகநூலார், மாந்தனுடல் தொடை முதல் மண்டைவரை இருமொழித் திருவைந்தெழுத்து வடிவில் அமைந்திருப்பதாகவும், வரைந்து காட்டுவர்.

'சிவாய நம' என்பதில், ய, ந, ம, என்னும் மூவெழுத்துகளை யும் பிரித்துக் குறிப்புப் பொருள் கூறின், ராமாய நம, நாராயணாய நம, குமாராய நம, கணேசாய நம என்பவற்றிலும் அவ் வெழுத்து களைப் பிரித்து அக் குறிப்புப் பொருள் கூறல் வேண்டும். அங் ஙனங் கூறும் வழக்கம் இல்லை. அதோடு அவை ஐந்தெழுத்தும் ஆறெழுத்தும் ஏழெழுத்துங் கொண்ட தொடர்களைச் சேர்ந்தவை.

திருமூலர் தலைசிறந்த ஓகியரும் மெய்ப்பொருளோதியரும் (தத்துவஞானியரும்) ஆதலால், "அவர் எங்ஙனம் தவறாகக் கூறி யிருக்க முடியும்?" எனச் சிலர் வினவலாம். இதற்கு விடை, அவர் காலத்திற்கு முன்பே, ஆரியச் சொற்களும் கருத்துகளும் சிவனி யத்தில் வேரூன்றி விட்டதனாலும், அவர் காலத்திலும் மொழியா ராய்ச்சியின்மையாலும், அவர்போலும் பெரியார்க்கும் ஆரியக் கலப்பை அறியவும் அதை நீக்கவும் இயலாது போயிற்றென்பதே.

இறைவன் திருவருள் பெற்றவ ரெல்லாம் எல்லா மறிந்தவர் என்று கருதுவது, அறியாமையின்பாற்பட்டதே. இறைவன் ஏற் படுத்தியவாறு, ஒவ்வொருவரும் ஒவ்வோர் அறிவுத் துறையிலேயே வல்லுநராதல் கூடும். கணித அறிஞர் வரலாறறியாததுபோல், மெய்ப்பொருளியலாரும் அறிவியல் அறியார். மொழிநூல் ஓர் அறிவியல். அது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே குமரிநாட்டில் தோன்றியதேனும், ஆரியரால் மறைக்கப்பட்டுவிட்டது.

திருமூலர் போல்வார் திங்களையடையும் வான்கலத்தைத் தம் மனவலியால் தடுக்கமுடியும். ஆயின், அதன் அமைப்பை விளக்க முடியாது. மனவலி வேறு; நூலறிவு வேறு.


மந்திரம் என்பது மனவலிமையே யன்றி எழுத்தொலிப்பன்று. முன்னுதல் = கருதுதல். முன் - மன். மன் + திரம்(திறம்) = மன்றிரம் -மந்திரம். மன் - மனம்.

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப." (தொல். 1434)

"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்." (குறள். 666)
வீடுபேறும் நல்வாழ்வும் இறைவனருளாற் பெறுவனவாத லின், அவன் திருப்பெயரை முழு நம்பிக்கையுடன் ஓதி வழிபடல் வேண்டும். இறைவனுக்கு எல்லா மொழியும் ஒன்றே. ஆயினும் தமிழ், உலக முதன் மொழியும், சிவ(இறைவன்) வழிபாடு தோன்றிய மொழியும், ஆரியத்திற்கு மூலமொழியும், இளைத்தவரும் பேசக் கூடிய மெல்லொலி மொழியும், முழுத் தூய முனிவர் வளர்த்த மொழியும், முதல் மறை இயன்ற மொழியும் ஆதலால், சிவ போற்றி என்னும் செந்தமிழ்த் திரு வைந்தெழுத்தே சிவனுக்கேற்ற சிறந்த மந்திரமாம்.

'நம' என்னும் வடசொல் உடல் வணக்கத்தைமட்டும் குறிக்கும். 'போற்றி' என்னும் தெய்வத் தமிழ்ச்சொல்லோ, வழுத்துத லோடு கூடிய வணக்கத்தையே குறிக்கும்.

'சிவாய நம' என்பதிலுள்ள உயிர் நாடிச்சொல், சிவ என்னும் தீந் தமிழ்ச் சொல்லே. ஆதலாற் சிவ போற்றி என்பதே அறிவுடைத் தமிழர்க்கு உரியதாம். சிவ சிவ என்றோதி வணங்கினும் போதும்.

"சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே" (திருமந். 2667)
எந்த எழுத்திற்கும் குறிப்புப் பொருளாக எதையும் குறிக்க லாம். ஒவ்வொரு மதத்தாரும் ஒவ்வோர் எழுத்திற்கும் ஒவ்வொரு பொருள் குறிப்பர். கடவுள் வணக்கமும் முழு நம்பிக்கையும் கலந்தாலன்றி எந்த எழுத்தும் சொல்லும் பயன்படா.

ஈராயிரம் ஆண்டாக வழங்கி வந்ததனால் மட்டும், எந்தத் தொடர்ச்சொல்லும் உண்மையான மந்திரம் ஆகிவிடாது. தமிழறி யாத ஆரியர்க்கே, 'சிவாயநம' என்பது உரியதாம். தமிழர்க்கு உரியது சிவ போற்றி என்பதே. இது ஆரிய ஐந்தெழுத்தினும் வலிமையுள்ள தென்பதைத் தொடர்ந்தோதிக் காண்க.


"சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி"

"சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி"

"தென்னா டுடைய சிவனே போற்றி"

"சிறவே போற்றி சிவமே போற்றி"

"சிந்தனைக் கரிய சிவமே போற்றி"
என்று மாணிக்கவாசகரே தம் 'போற்றித் திருவகவ'லில் வழுத்தி யிருத்தல் காண்க.

'சிவனே' என்பது சேய்மை விளி வடிவும், 'சிவ' என்பது அண்மை விளிவடிவும், ஆன ஒரே சொல்லே. சிவனை முன் னிலைப் படுத்தியோ உண்ணிலைப்படுத்தியோ விளிக்கும்போது, 'சிவ' என்னும் வடிவே ஏற்றதாம். ஆதலால், 'சிவனே போற்றி' என்பதும் 'சிவ போற்றி' என்பதும் ஒன்றேயாம். இவையே, ஆரியர் தென்னாடு வருமுன்பும் இந்தியாவிற்குட் புகுமுன்பும், தொன்று தொட்டு வழங்கிய குமரிநாட்டுத் தமிழர் வழக்காம். வேதமொழியும் சமற்கிருதமும் ஆகிய கீழையாரியம் தேவமொழி யென்னும் ஆரிய ஏமாற்றும், தமிழரின் குருட்டு மூட நம்பிக்கையுமே, சிவ போற்றி என்னும் ஒரு மொழி மூல உண்மைத் திருவைந்தெழுத்தை மறைத்ததென்று, உண்மையறிந்து செந்நெறி கடைப்பிடிக்க.

'சிவாய நம' என்னும் சமற்கிருதத் தொடரும்,'obeisance to Siva' என்னும் ஆங்கிலத் தொடரும், பொருளளவிலும் பயனள விலும் ஒன்றே.

சிவன் என்னும் தென்சொல்லைக் கடன்கொண்டு, அதை ஒப்புக்கொள்ளாது வடசொல்லென்று ஏமாற்றும் ஆரியப் புரட்டு, இறைவனுக்கு ஏற்குமா? அப் புரட்டுச் சொல் மந்திரமாகுமா? எண்ணிக் காண்க.

(15) மெய்ப்பொருளியல்

எங்கும் நிறைந்துள்ள இறைவனே, சிவனியராற் சிவன் என்னும் பெயரால் வணங்கப்படுகின்றான். சிவன் பெயர்களுள் இறைவன் என்பதும் ஒன்று. இறைவன் எங்குந் தங்கியிருப்பவன். இறுத்தல் - தங்குதல்.

"இருசுட ரோடிய மானனைம் பூதமென்
றெட்டு வகையு முயிரும்யாக் கையுமாய்க்
கட்டிநிற் போனும்.........................." (மணிமே. 27 : 89-91)
என்று கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே சிவன் வடிவங் கூறப்பட்டது. இறைவன் என்னும் பெயராலும் எண்குணத்தான் என்னும் இயல்


பாலும், கடவுளும் சிவனும் ஒன்றே என்பது பெறப்படும். ஆயினும், இல்லறத்தார்க்கும் பொதுமக்கட்கும் எளிதாய் விளங்குமாறு, இறைவனையும் அவனாற்றலையும் பேருலகத் தந்தையும் தாயுமாக உருவகித்துச் சிவனும் சிவையும் என்றனர். உலகிலுள்ள உயரிய உயிரினங்களெல்லாம் ஆணும் பெண்ணுமாக அமைந்தே கான் முளையைப் பிறப்பித்தலாலும், தாய்மைப் பண்பிலேயே அருண் மைப் பண்பு சிறந்திருத்தலாலும், இறைவனை அம்மையப்பனாகக் காட்டினார் அறிஞர். உண்மையில், இறைவனிடத்தில் ஆண்மையு மில்லை; பெண்மையுமில்லை. அவன் கட்புலனான உருவின்றி எங்கும் நிறைந்திருக்கும் ஆவி வடிவான பேராற்றல்; எண்ணுக்கும் எட்டாது எல்லாங் கடந்தவன்; இயற்கையாகவே எல்லாம் அறிந்தவன்; இமைப்பொழுதிற் கருதிய வளவிலேயே எத்துணையு மின்றி எல்லாம் படைக்க வல்லவன்; எவ்வகையிலும் பகுக்கப் படாத ஒப்புயர்வற்ற தன்னந்தனிப் பொருள்; தொடக்கமிலியாக முத்தொழிலுந் தானே செய்து வருபவன்; இம்மியும் திரியாது என்றும் ஒரே நிலைமையில் இருப்பவன்.

"படைத்து விளையாடும் பண்பி னோனும்
துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
தன்னில் வேறு தானொன் றிலோனும்
அன்னோன் இறைவ னாகுமென் றுரைத்தனன்" (27 : 92)
மணிமேகலைக்கு அறிவுறுத்திய சிவனியக் குரவன்.

இங்ஙனம் மூன்றாயிருந்த சிவன் தொழிலை மறைத்தல் (துரோபவம்), அருளல்(அனுக்கிரகம்) என்னும் இரண்டு சேர்த்து ஐந்தாக்கி, அவற்றைச் செய்பவர், முறையே நான்முகன், திருமால், உருத்திரன், பெருவுடையான்(மகேசுவரன்), என்றும் நல்லான் (சதாசிவன்) என்னும் ஐவர் என்றும்;

ஐந்தொழிலும், பருவியல்(ஸ்தூல) ஐந்தொழில், நுண்ணியல் (ஸூக்ஷ் ம) ஐந்தொழில், அதிநுண்ணியல் ஐந்தொழில் என மூவகைப் படுமென்றும்;

சிவனைச் சிவம், ஆற்றல்(சக்தி), என்றும் நல்லாண்மை (சாதாக்கியம்), பெருவுடையான்மை(ஈசுரம்), தூவறிவை அல்லது வாலறிவம்(சுத்தவித்தை) என்னும் ஐம் மெய்ப்பொருளாகக் கூறு படுத்தி; அவற்றில், முறையே, அறிவே கொண்ட சிவனும், வினையே கொண்ட ஆற்றலும், அறிவும் வினையும் சமமாகக் கொண்ட என்றும் நல்லானும், அறிவு குன்றி வினை மிக்க பெருவுடையானும், வினை குன்றி அறிவு மிக்க வாலறிவனும்(வித்தியேசுவரனும்) நின்று தொழிற்படுவரென்றும்;


சிவம், ஆற்றல், ஓதை (நாதம்), விந்து என்னும் நான்கும் ஒடுக்க (லய) நிலையிலுள்ள சிவனின் உருவிலா(அரூப)த் திருமேனி களும்; என்றும் நல்லான் என்பது நுகர்வு(போக) நிலையிலுள்ள சிவனின் உருவவுருவிலா(ரூபாரூப)த் திருமேனியும்; பெருவுடையான், உருத்திரன், மால், நான்முகன் என்னும் நான்கும் அதிகார நிலையி லுள்ள சிவனின் உருவ(ரூப)த் திருமேனிகளும் ஆகுமென்றும்;

திருவிலங்கம்(லிங்கோற்பவன்), நலவிருக்கையன்(சுகாசனன்), ஆற்றல் தோற்றி(சக்திதரமூர்த்தி), மணவழகன்(கலியாணசுந்தர மூர்த்தி), மங்கைபங்கன்(அர்த்தநாரீசுவரன்), சிவை கந்தர் சேர்ந்தான் (சோமாஸ்கந்தன்), சக்கர மீந்தான்(சக்ரவரதன்), முத்திருமேனி (திரி மூர்த்தி), மாலிடங் கொண்டான்(ஹரியர்த்தன், சங்கர நாராயணன்), தென்முக நம்பி(தக்ஷிணாமூர்த்தி), மண்டையேந்தி(பிக்ஷடான மூர்த்தி, காபாலீ), குறளன் முதுகொடித்தான்(கங்காளன்), காமனைக் காய்ந்தான்(காமாரி), காலனை யுதைத்தான்(கால சங்காரமூர்த்தி), கடல் வளர்ந்தானைக் கொன்றான்(சலந்தராரி), முப்புர மெரித்தோன் (திரிபுராரி), எண்காற் புள்ளுருவன்(சரபமூர்த்தி), நஞ்சுண்டான் அல்லது கறைமிடற்றன்(நீலகண்டன்), முப்பாதன்(திரிபாதன்), ஒரு பாதன்(ஏகபாதன்), பேமுருவன்(பைரவன்), விடையேறி (இடபா ரூடன்), பிறைசூடி(சந்திரசேகரன்), நடவரசன்(நடராஜன்), கங்கை தாங்கி(கங்காதரன்) என்னும் இருபத்தைந்தும் சிவ வழிபாட்டு வடிவங்கள் என்றும்;

ஆற்றலை(சக்தி) விருப்பாற்றல்(இச்சா சக்தி), அறிவாற்றல் (ஞான சக்தி), வினையாற்றல்(கிரியா சக்தி) என மூன்றாக வகுத்தும், மேலும் தொண்டாக (ஒன்பதாக) விரித்தும், ஐம்பதாகப் பெருக்கியும்;

மாயை(மாயா, மோஹினீ), காலம், ஊழ்(நியதி), கலை, அறிவம்(வித்தை), விழைவு(அராகம்), ஆதன்(புருஷ) என்னும் ஏழும் அறிவ மெய்ப்பொருள்(வித்யாதத்வம்)என்றும், அவற்றை இறைவன் ஈறிலி(அனந்தன்) என்னும் வாலறிவன் வாயிலாகக் கருமிய (காரிய)ப் படுத்துவானென்றும்;

இங்ஙனம் சிவ மெய்ப்பொருள் ஐந்தும், அறிவ மெய்ப் பொருள் ஏழும், எல்லா மதங்கட்கும் பொதுவான ஆத மெய்ப் பொருள் இருபத்து நான்கொடு கூடி, மெய்ப்பொருள் மொத்தம் முப்பத்தா றென்றும், இது சிவனியக் கொண்முடிபு சிறப்பென்றும்; தமிழரை மயக்கி, உயர்ந்த அறிவியற் கல்வியும் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவரும் குருட்டுத் தனமாக நம்பி உருப்போட்டுக் கிளிப் பிள்ளைப் பாடமாக ஒப்பிக்குமாறு செய்து விட்டனர் ஆரியர். இலங்கம்(லிங்கம்), மங்கைபங்கன், விடையேறி, நடவரசன், அந் தணன் அல்லது குரவன் என்னும் ஐந்தே தமிழர் வழிபாட்டு வடிவம் என்பது, முன்னரே கூறப்பட்டது.

சிவ மெய்ப்பொருள் ஐந்தும் தூய மாயையில் தோன்றின வென்பது, எல்லாவற்றையுங் கடந்து நிற்கும் இறைவனை ஐங் கூறிட்டதொடு, அவனை மாயையினின்று படைத்தது மாகின்றது.

ஆண் பெண் பான்மையின்றி ஒரே தன்மையாய் ஆற்றல் வடிவா யுள்ள இறைவனை, பொதுமக்கட்கு அம்மையப்பனாகக் கூறிய அணி வகையை அறியாது, மாந்தரைப் போன்ற கணவனும் மனைவியுமாகக் காட்டி, தலையுங் காலுமில்லாத பல்வேறு கதை களைக் கட்டி, சொல்லளவாகவுள்ள சிவன் சிவைக்கு ஆண்டு தொறும் திருமணம் நடத்திவைப்பது, எத்துணைத் துணிச்சலான தெய்வப் பழிப்புச் செயல்!

மாயை என்று ஒரு தனிப் பொருளில்லை. நாற்பூதமும் வெளியில் அணுக்களாக மறைந்து நிற்பதே மாயை. மாய்தல் மறைதல். மாய்-மாயை. ஒ.நோ: சாய் - சாயை = நிழல். மண்ணி னின்றே குடமும் மரத்தினின்றே பெட்டியும் ஆதல்போல், அழிப்புக் காலத்தில் அணுக்களாக ஒடுங்கி நின்ற நிலம் நீர் தீ வளி என்னும் நாற்பூதங்களே, படைப்புக் காலத்தில் மீண்டும் திரண்டு தோன்றும்.

இடம் (வெளி), காலம், இறைவன் என்னும் மூன்றும், வேறு ஒன்றினின்றும் தோன்றாது என்றும் ஒரே தன்மையாய் நிற்கும் நித்தப் பொருள்களாம். காலம் கருத்துப் பொருளே.

நில் - நிற்றம் - நித்தம் - வ. நித்ய. நித்தம் - நித்தல்.

ஒ.நோ: வெல் - வெற்றம், கொல் - கொற்றம்.

குற்று - குத்து. முற்றகம் - முத்தகம்.
இடம் உண்மையின்(இருத்தலின்) தொடர்ச்சியே காலம். அது ஒரே தன்மையது. அழியும் பொருள்களை நோக்கியே இறப்பு நிகழ் வெதிர்வு என்றும், கதிரவன் திங்கள் தோற்ற மறைவும் தட்பவெப்ப நிலை வேறுபாடும் பற்றியே சிறுபொழுதும் பெரும்பொழுதுமாகவும், அது பகுக்கப்படும். எதிர்வெல்லாம் நிகழ்வாகிப் பின்பு இறப்பாகிவிடும்.

கால் போல் நீண்டு செல்வது காலம். கால் - காலை. கால் - காலம் - வ. கால.

"காலம் உலகம் உயிரே உடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்என வரூஉம்
ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன
ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம்
பால்பிரிந் திசையா வுயர்திணை மேன" (தொல். 541)
என்னும் தொல்காப்பிய நூற்பாவை நோக்குக.

உலவுதல் = வளைதல், சுற்றுதல், திரிதல், உருளுதல்.

உலவு - உலகு - உலகம் - வ. லோக.

உலகு = உருண்டையாயிருப்பது, சுற்றுவது.

வினை, அறிவு, விருப்பம் ஆகியவற்றைத் தோற்றுவிப்பன ஆதனோடு கூடிய அகக்கரணங்களும் புறக்கரணங்களுமான ஆத மெய்ப்பொருள்களாதலால், கலை, அறிவம்(வித்தை), விழைவு, (அராகம்) என்னும் அறிவ மெய்ப்பொருள்கள் உண்டென்பது மிகைபடக் கூறலாம். ஆகவே, முற்கூறிய இருபத்தெண் மெய்ப் பொருள்களே உண்மையானவை என அறிக. சித்தம், குணம், முதனிலை(பிரகிருதி), மான் என்பன ஒருபொருட் சொற்கள்.

திரவிட நாகரிகத்தை ஆரியமாகக் காட்டுவதற்கு, பொருட் டொகைகளைப் பெருக்குவதும், புதுச் சொற்களைப் புணர்ப்பதும் ஆரியர் வழக்கமாகும்.

திருவாசகத் திருவெம்பாவைப் பழைய உரைமுகத்தில், தொள் ளாற்றல்களின்(நவ சக்திகளின்) பெயர் அம்பிகை, கணாம்பிகை, கௌரி, கங்கை, உமை, பராசத்தி, ஆதி சத்தி, ஞான சத்தி, கிரியா சத்தி, என்றும்; உரையுள் மனோன்மணி, சர்வபூத தமனி, பெலப் பிரதமனி, பெலவிகரணி, காளி, இரவுத்திரி, சேட்டை, வாமை, சிவ சத்தி என்றும் கூறப்பட்டுள்ளன. இவை யெல்லாம், விழுப் பொருளொன்றுமின்றி வெறுஞ் சொல்லாரவாரத்தால் தமிழரை மயக்கி அடக்கியாள்வதற்கே புனையப்பட்டன என அறிக.

சொல்லுலகம்(சத்தப் பிரபஞ்சம்)

மெய்ப்பொருளியலில், மொழித்துறையில்தான், ஆரியர் ஏமாற்றும் தமிழர் ஏமாறலும் இருசாரார் அறியாமையும் விளங்கித் தோன்றுகின்றன.

சொல்லுலகம், பொருளுலகம்(அர்த்தப் பிரபஞ்சம்) என உலகம் இரு வகைப்படும் என்றும்; அவற்றுட் சொல்லுலகம் வண்ணம் அல்லது வரணம்(வர்ண), கிளவி(பதம்), மந்திரம்(மந்த்ர) என முத்திறப்படும் என்றும்; வரணம் ஐம்பத்தொன்றும், பதம் எண்பத்தொன்றும், மந்திரம் பதினொன்றும் ஆகுமென்றும்; அறிவுக் கரணியமாயிருப்பதால், சொல்லுலகம் தூய(சுத்த) மாயையின் கருமியம்(காரியம்) என்றும்; அது உந்தியிலிருந்து எழுப்பப்படும் உதானன் என்னும் காற்றினால் விளைவதென்றும்; வாய்ச் சொல்(வாக்கு) நுண்ணிலை(சூக்குமை), கருநிலை(பைசந்தி), இடைநிலை(மத்திமை), உருநிலை(வைகரி) என நானிலையதென் றும்; அந் நால்வகை வாய்ச்சொல்லாலேயே வேறுபடுத்துணர்வு

(சவிகற்ப ஞானம்) உண்டாகும் என்றும், அவையின்றேற் பொதுப் படுத்துணர்வே(நிர்விகற்ப ஞானமே) உண்டாகும் என்றும்; ஆரியர் தம் கருத்துகளைச் சிவனிய மெய்ப்பொருளியலிற் புகுத்தி விட்டனர்.

ஆரிய மந்திரம் எழுகோடி யென்னுங் கூற்று முள்ளது. சொல்லுலகம் என்று கண்கூடும் நிலையும் ஆன ஒரு தனியுலகம் இல்லவே யில்லை. வெளியிடத்திற் பொருள்கள் மோதுவதனாற் செவிப்புலனான ஒலியும் ஓசையும் தோன்றி, உடனே நீர்மே லெழுத்துப் போல் மறையும். அவற்றைக் குறிக்கும் வரிவடிவுகளே, அவை எழுதப்பட்ட பொருள்கள் உள்ளவரை கட்புலனாக நிற்கும்.

நாடாப் பதிவானிற் பதியப்பட்ட பேச்சும் பாட்டுமான ஒலிகளும், அவை தோன்றியவுடனேயே மறையும்.

எல்லா வொலிகளும், கருத்தறிவிக்கும் குறிகளான சொல்லும். சொல்லுறுப்புமாகப் பயன்படா. மாந்தன் வாயிற் பலுக்க(உச்சரிக்க)க் கூடிய ஒலிகளே சொற்களாம். ஒரு வகுப்பார் அல்லது இனத் தார் வழங்கும் சொற்றொகுதியே மொழியாம்.

மொழியில்லாமற் பறவையும் விலங்கும்போல் ஒருசில வொலிகளைக் கொண்டே, முந்தியல் மாந்தர் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தனர்.

முதற் காலத்திற் சொற்களாகவே மொழியொலிகள் தோன்றின. நாகரிக மாந்தன் மொழியறிவு பெற்ற பின்பே, சொற்களை எழுத் தொலிகளாகப் பகுத்தான். ஓரெழுத் தொலியாகவும் பல வெழுத் தொலியாகவும் சொற்கள் இரு வகையாய் அமையும்.

பல எழுத்தொலிகள் மக்களெல்லார்க்கும் பொதுவாயினும், மாந்தனின வளர்ச்சிக் காலம், தட்பவெப்ப நிலை முதலியவற்றின் வேறுபாட்டால், பல இனத்தார் மொழிகளில் சிலவும் பலவுமான சிறப் பெழுத்தொலிகளும் அமைந்துள்ளன.

தமிழர் குமரிநாட்டில் தோன்றிய முந்திய இனத்தாராதலின், அவர் மொழியில் முப்பதொலிகளே அமைந்துள்ளன. அவை பெரும் பாலும் மிக எளியன. ஆரியர், அவருள்ளும் வேத ஆரியர், மிக மிகப் பிந்தியவராதலின், அவர் மொழியில் 51 ஒலிகள் அமைந்துள் ளன. அவற்றுட் பல ஒலித்தற்கு அரியன; சில செயற்கையானவை.

சிவனிய மெய்ப்பொருளியல் எழுத்து 51 என்று கூறியிருப்பது சமற்கிருதம் நோக்கியேயாம். அது தமிழர் மொழியன்று. கோலெ ழுத்துக்காலத்திலும் வட்டெழுத்துக் காலத்திலும் தமிழிலும் 51 எழுத்தி ருந்தன என்று கூறுவது, வரலாற்றறிவும் மொழிநூலறிவும் அறவும் இன்மையையே காட்டும். கோவில்களில் 51 விளக்கேற்றி எழுத்தா லத்தி(அக்கராலத்தி) எடுப்பதும், ஆரிய மொழியமைப்புப் பற்றியே.


எழுத்தொலி அல்லது மொழியொலி மூச்சுக் காற்றாகிய உயிர்ப்பு வளியாற் பிறக்குமேயன்றி, ஆரியர் கூறியதுபோல் உதானன் என்னும் உந்தி வளியாற் பிறவாது.

காட்சியும் கருத்தும் ஆகிய இருவகைப் பொருள்களும் தோன்றிய பின்னரே, அவற்றைக் குறிக்கும் சொற்கள் மாந்தனால் அமைக்கப்பட்டன. பொருள் தோன்றியபோதே சொல்லும் உடன் தோன்றிற் றென்றும், சொல் இயற்கையாகப் பொருளுணர்த்து மென்றும், இடுகுறியாகவும் சொற்கள் இருக்குமென்றும், வட மொழி தேவமொழியென்றும், அது வேறெம் மொழியினின்றும். கடன் கொள்ளாதென்றும், உண்மைக்கும் மொழிநூற்கும் மாறான பல அறியாமையும் ஏமாற்றும் ஒருங்கே கலந்த கூற்றுகள் தமிழுக்கும் தமிழனுக்கும் ஓரளவு கூற்றாகவே முடிந்தன.

"அகார முதலாக ஐம்பத்தொன் றாகி" (திருமந். 2950)

"ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும்
ஆதி யெழுத்தவை ஐம்பத்தோ டொன்றென்பர்" (திருமந். 942)

"அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே" (திருமந். 943)

"ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்
ஐம்ப தெழுத்தேயும் ஆவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே" (திருமந். 944)
என்று திருமூலர் திருமந்திரத்தினின்று மேற்கோள் காட்டிப் பயனில்லை. இதற்கு விடை திருவைந்தெழுத்து விளக்கத்திலேயே கூறப்பட்டு விட்டது. "ஐம்பத்தோ டொன்றென்பர்" என்று பிறர் கூற்றாகக் கூறியதும் இங்குக் கூர்ந்து நோக்கத்தக்கது. உலகனைத்துந் தழுவிய வரலாறும் மொழிநூலும் போன்ற அறிவியற் செய்திகளை, ஒருசார் தமிழர்க்கு மட்டும் ஏற்குமாறு திரித்துக் கூறுவதால், கருதிய பயன் கைகூடிவிடாது. ஓர் உலகப் பொதுவுண்மையை உலக அறிஞர் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். பொய்யொடு கலந்த மெய்யும் பொய்யாகவேபோம்.

(16) இறையுயி ருறவுக் கொள்கை

இறைவனுக்கும் ஆதனுக்கும் இடைப்பட்ட உறவியல்புபற்றி, ஒருமை(அத்துவிதம்) என்னும் ஒற்றுமை யுறழும்(அபேதவாதமும்), இருமை(துவைதம்) என்னும் வேற்றுமையுறழும்(பேதவாதமும்), சிறப்பொருமை(விசிஷ்டாத்துவிதம்) என்னும் ஒன்றிய வேற்றுமை யுறழும்(பேதாபேதவாதமும்) தோன்றியுள்ளன. இம் மூன்றற்கும் பொதுவான தூவொருமையே(சுத்தாதுவிதமே) சிவனியக் கொள்கை

யென, இக் காலக் கொண்முடிபர் கூறுவர். தூவொருமையை வெள் ளொருமை எனினும் ஒக்கும்.

இறைவனொடு ஆதன் இரண்டறக் கலந்ததெனின், பின்னதன் இன்பநுகர்ச்சிக் கிடமில்லை. இரண்டும் வெவ்வேறெனின், இறை வனின் எங்கும் நிறைந்த தன்மைக்கு இழுக்காகும். ஆகவே, சிறப்பொருமை என்பதே உத்திக்குப் பொருந்துவதாகும்.

ஒருமையும் இருமையும் ஆரியராற் புகுத்தப்பட்ட கொள்கை கள். சிறப்பொருமை இராமானுசாச்சாரியரால் திருமாலியத்திற் புகுத்தப்பட்டதேனும், அதுவே பழந்தமிழ்க் கொள்கையாகும். ஆரியக் கொள்கைகள் தோன்றும்வரை, அது கூறப்படத் தேவை யின்றி மறைவாயிருந்தது. முக்கொள்கையையுந் தழுவியது தூவொருமையென்பது, முரண்பட்டதும் கோமுட்டி சான்றுரை போன்றதுமாகும்.

இறைவனின் நிழல்வடிவே எல்லாப் பொருள்களுமென்றும், காண்பனவெல்லாம் கனவிற் கண்டவைபோலப் பொய்யென்றும், இம் மெய்யுணர்வைப் பெற்றவளவிற் பிறப்பின்றி வீடுபெறலா மென்றும், கூறுவதெல்லாம் பிதற்றல்களும் பித்துரைகளுமே.

இறைவனும் ஆதனும் ஒன்றென்று சொல்லிக்கொண்டே, நால்வேறு மக்கள் வகுப்பும் பிராமணவுயர்வும் பிறப்பிலமைந்தவை யென்று கூறுவது, எத்துணைத் தன்முரணும் நெஞ்சழுத்தமுமான கூற்றாம்!

(17) மதப் பிரிவுகள்

சிவனியம், மாலியம் என இரண்டாகவே யிருந்த மதங்கள், குமரனியம்(கௌமாரம்), ஆனைமுகவம்(காணபத்தியம்), கதிரவம் (சௌரம்), காளியம்(சாக்தம்) என்னும் நான்கொடு ஆறாயின.

சிவனியத்திற்குள்ளேயே, அகச் சமயம் ஆறென்றும் அகப் புறச் சமயம் ஆறென்றும் பன்னிரு பிரிவுகள் தோன்றின.

அபிதான சிந்தாமணியார் ஊர்த்த சைவம், அனாதிசைவம் முதலிய பதினேழ் சிவனியப் பிரிவுகளைக் கூறியுள்ளனர்.

பாசண்டம் என்னும் சிலப்பதிகாரச் சொற்கு(9 : 15), தொண் ணூற்றறுவகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை என்று பொரு ளுரைத்துள்ளார் அடியார்க்குநல்லார்.

"தொண்ணூற் றறுவகைக் கோவையும் வல்லவன்" (வளையாபதி)

"பாசண்டத் துறையும் இவற்றுட் பலவாம்
பேசிற் றொண்ணூற் றறுவகைப் படுமே" (திவா. 12ஆவது)

மதப் பிரிவுகள் பல்கினமையால், தமிழில் வடசொற் கலப்பும், தமிழர்க்குள் பிரிவினையும், மேன்மேலும் மிக்கன.

(18) கடவுட் சமய மறைப்பு

உருவ வழிபாட்டினாலேயே ஆரியர்க்குப் பிழைப்பும், தமிழரை முன்னேற வொட்டாது என்றும் அடிமைத்தனத்துள் அமிழ்த்தும் வாய்ப்பும், உண்மையால், கடவுட் சமயம் மறைக்கப் பட்டது.

(19) தொழுகை நூற் புணர்ப்பு

திருக்கோவில்களி லெல்லாம், என்றும் பிராமணரே பூசகராயிருந்து சமற்கிருதத்தில் வழிபாடு நடத்துமாறு, 'ஆகமம்', 'தந்திரம்' முதலிய தொழுகை நூல்களை அமைத்துக்கொண்டனர். ஆகமம் = தோன்றியம்(புதிதாகத் தோன்றியது).

(20) தொன்ம மறவனப்புத் தொடர் சொற்பொழிவுகள்

பிராமணரைத் தெய்வமாக வுயர்த்தியும் அவர்க்குத் தொண்டு செய்வதை வற்புறுத்தியுங் கூறும், தொன்ம(புராண) மறவனப்பு (இதிகாச)க் கதைகளைத் தொடர்ந்து ஊர்தொறும் விழாக் காலங்களில் இசையொடு சொல்லி வந்ததனால், ஆரியப் பற்றுப் பொதுமக்கள் உள்ளத்திற் பசுமரத் தாணிபோற் பதிந்து, அரத்தத் தோடரத்தமாய்க் கலந்து ஊறிப் போயிற்று. பாரத இராமாயணத் தொடர் சொற்பொழிவுகள், இன்றும் நடைபெறுகின்றன.

3. ஆரியத்தால் விளைந்த கேடுகள்

(1) தமிழ் மதக் கேடு

வேள்வி வளர்ப்பு

"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் றொன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று" (குறள். 259)
என்று திருவள்ளுவர் கண்டித்திருந்தும், பல்வேள்விச் சாலை முது குடுமிப் பெருவழுதி ஆரியப் பல்சிறு தெய்வக் கொலை வேள்வி நெறியைத் தழுவினான். அவனைப் பின்பற்றுமாறு, மாங்குடி மருத னாரும் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனை வேண்டினார். கரிகால் வளவன், பெருநற்கிள்ளி முதலிய சோழ வேந்தரும், பல்யானைச் செல்கெழு குட்டுவன் சேரன் செங் குட்டுவன் முதலிய சேரவேந்தரும், முதுகுடுமி போன்றே கழிமடம் பட்டனர். பேதை வேந்தரையே மாற்றி இருபத்தொரு வேள்வியும்


முடித்த பூஞ்சாற்றூர்ப் பிராமணனை, ஆவூர் மூலங்கிழார் மான மிழந்து மதிகெட்டுப் பாடியுள்ளார். சோழனும் பாண்டியனும் தன்னை இகழ்ந்தாரென்று செங்குட்டுவன் வெகுண்டபோது, மாடல வேதியன் அவனைப் புகழ்ந்து சினந் தணிவித்து வேள்வி யியற்றச் சொன்னது, நச்சுத் தன்மையான வலக்கார மாகும்.

அண்ணாமலை பல்கலைக் கழக அறிவியற் கட்டட அடிப் படைக் கல் நாட்டியபோது, தில்லையிலிருந்து ஒரு பிராமணர் வந்து எரி வளர்த்து வேத மந்திரம் ஓதினார். இது ஆரிய வழிபாடே யன்றித் தமிழ வழிபாடாகாது.

சிறுதெய்வ வணக்கம்

சிறுதெய்வங்களையே வழுத்தும் வேத மந்திரங்களைக் கோவில்களில் ஓதுவிப்பதும், மழை வேண்டும்போது வாரண மன்றாட்டை(வருண ஜபத்தை)ச் செய்விப்பதும், மனை கட்டும் போது 'வாஸ்து புருஷ(ன்)' என்னும் மனைத்தெய்வத்தை வணங்குவ தும், பெருந்தேவ வழிபாட்டிற்கு மாறான சிறுதெய்வ வணக்கமாம்.

கடவுட்பெயரிழிபு

எங்கும் நிறைந்து எண்ணிற்கும் எட்டாது எல்லாவற்றையுங் கடந்து நிற்கும் பரம்பொருளாகிய கடவுட் பெயரை, பெருந்தேவ மதத்தில் ஆள்வதும் பொருந்தாதிருக்கையில், சிறுதெய்வங்கட்கும் முனிவர்க்கும் துறவியர்க்கும் குருக்கட்கும் பிராமணர்க்கும் முறையே ஆண்டதும் பன்மையில் வழங்கியதும், கடவுட்பெய ரிழிபாம்.

பல்தெய்வ வணக்கம்

உண்மைத் துறவியரும் பெரும் புலவரும் சிறந்த இறையடி யாரும் ஒரு பெருமட நிறுவனருமான குமரகுருபர அடிகளும், தம் மீனட்சியம்மை பிள்ளைத் தமிழ் என்னும் பனுவலில், விநாயகன், திருமால், (சித்திவிநாயகன்), சிவபெருமான், முருகன், நான்முகன், தேவர்கோன், திருமகள், கலைமகள், காளி, எழுமாதர், முப்பத்து மூவர் என்னுந் தெய்வங்களையும்,

முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் என்னும் பனுவலில், விநாயகன், வினைதீர்த்தான்(வைத்தியநாதன்), தையல் நாயகி, (கற்பக விநாயகன்), நான்முகன், தேவர்கோன், திருமகள், கலைமகள், எழு மாதர், முப்பத்து முக்கோடி தேவர் என்னும் தெய்வங்களையும் வணங்கியிருத்தல்.

(2) ஆரிய மேம்பாடு

குல வுயர்த்தம்

கண்ணபிரான் பாரதப் போர் தொடங்குமுன் அருச்சுனனுக்கு அறிவுறுத்திய செவியறிவுறூஉவாக, கடைக்கழகக் காலத்தில் ஒரு வலக்காரப் பிராமணனாற் கட்டி வரையப்பட்ட பகவற்கீதை என்னும் சமற்கிருதப் பனுவலில், பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நால் வரணத்தார்க்கும்,அவ்வவ் வரணத்திற்குரிய குணங்கட் கேற்பக் கடமைகள் வகுக்கப்பட்டுள்ளன வென்று கூறப்பட்டுள்ளது. இதுவே அந் நூலாசிரியன் கூறக் கருதிய உயிர் நாடிச் செய்தி. முதற் பதினேழ் அதிகாரங்களிற் பல்வேறு அறவினைகளையும் பத்தியொழுக்கத்தையும் எடுத்துக் கூறி, கடவுள் நம்பிக்கை யுள்ளவரும் பகுத்தறிவைப் பயன்படுத்தாதவருமான மக்களைப் படிப்படியாக வயப்படுத்தி, இறுதிப் பதினெட்டாம் அதிகாரம் 41ஆம் சொலவத்தில், பாலொடு தேன் கலந்து படுநஞ்சையூட்டுவது போல் இப் புரட்டுச் செய்தியைப் புகட்டியிருக்கின்றான்.

நால்வரணப் பகுப்பு இறைவன் ஏற்பாடாயின், இந்தியாவிற் போன்றே ஏனை நாடுகளிலும் அவ்வொழுங்கிருத்தல் வேண்டும். அஃதில்லை. மேலும், பிராமணர் நால்வரணத்தார் தொழிலையுந் தொன்றுதொட்டுச் செய்து வந்திருக்கின்றனர்.

அருச்சுனன் தன் குரவரையும் நெருங்கிய உறவினரையும் போர்க்களத்திற் கண்டு, அவரைக் கொல்லத் துணிவு கொள்ளாது பின்வாங்கியபோது, அவன் தன் கடமையைச் செய்யுமாறு அவனைத் தேற்றியதே கண்ணன் செய்த தெல்லாம். பகவற்கீதை போன்ற நூற் செய்தியைப் போர்க்களத்திற் சொல்ல நேரமும் இருந்திருக்காது. சொல்லியிருப்பின், பகை மறவர் அதற்குள் தாக்கி வென்று மிருப்பர்.

பகவற்கீதையைக் கண்ணனார் சொல்லியிருப்பின், அவரே னும் அதைச் செவியுற்ற அருச்சுனனேனும் அவ் விருவருள் ஒருவன் சொல்லக் கேட்ட வேறொருவரேனும், அக் கீதையை எழுதியிருத்தல் வேண்டும். அங்ஙனம் ஒருவரும் எழுதியிலர். அக் கீதைக்கு ஆசிரியன் பெயரும் குறிக்கப்படவில்லை. திருத ராட்டிரன் சஞ்சய முனிவனிடம் போர் நடபடிக்கைகளைப்பற்றி வினவியதாகவும், அம் முனிவன் தான் வியாசனிடம் கேட்டதை அவனுக்குச் சொன்னதாகவுமே, கீதைச் செய்தி அமைந்துள்ளது. போர்க்களத்தில் இரு படைகளும் போர்த் தொடக்கக் குறியாகப் போரிசைக் கருவிகளை முழக்கிய பின், ஒரு மாநாட்டுச் சொற்பொழிவினும் மிக விரிவான உரையாட்டும் செவியறிவுறூஉவும் நிகழ்ந்தன வென்பது, நம்பத் தக்க செய்தியன்று.

மேலும், கண்ணன் இறைவனின் தோற்றரவென்று கொள்ளப் படுவதால், நால்வரணமும் இறைவனாற் பிறவிக் குலமாகப் படைக்கப்பட்டன வென்னும் பொய்யான செய்தியை, அவன் சொல்லியிருக்க முடியாது; சொல்லியிருப்பின், இறைவனின் தோற்றரவாக இருந்திருக்க முடியாது.

ஆகவே, ஆரிய நால்வரண ஏற்பாட்டை நிலைநிறுத்த வேணவாக் கொண்ட பிற்காலத்துப் பிராமணனொருவன் கட்டிய செய்தியே, வியாச பாரதப் பகுதியாக இடைச் செருகப்பட்ட தெனவுணர்க.

இளங்கோவடிகளும் திருமூலரும் போன்ற துறவியர்க்குரிய அந்தணன், ஐயன், முனிவன் என்னும் பெயர்கள் மட்டுமன்றி, தெய்வத்திற்கேயுரிய பகவன் என்னும் பெயரும், பிராமணர்க்கு வழங்கி வந்திருப்பது, அவர்க்கு ஏற்பட்ட குலவுயர்த்தத்தைக் காட்டும். துறவு நிலையில் எல்லாரும் சமமேனும், இன்றும் சங்க ராச்சாரியாரைப் பெருமிதத்தொடு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கும் மன்னரும் வெள்ளையரும், தமிழ மடத்தலை வரை அங்ஙனம் வணங்குவதில்லை.

ஏந்தான வாழ்வு

மூவேந்தராலும், பிராமணர் கூட்டங் கூட்டமாகச் சதுர்வேதி மங்கலம் என்னும் புதிய குடியிருப்புகளிற் குடியேற்றப்பட்டனர். அது அகர மேற்றுதல் எனப்பட்டது. அதைத் திருமூலரும்,

"அகரம் ஆயிரம் ஆரியர்க் கீயிலென்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கிலென்
பகரும் ஞானி பகலூண் பலத்துக்கு
நிகரிலை யென்பது நிச்சயந் தானே" (திருமந். 1824)

"ஆறிடும் வேள்வி அவிகொளும் நூலவர்
கூறிடும் விப்பிரர் கோடிபே ருண்பதில்
நீறிடுந் தொண்டர் நினைவின் பயனிலை
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே" (திருமந். 1825)
என்று கண்டித்தார்.* அகரம் மருதநிலத்தூர். ஆகையால், சதுர்வேதி மங்கலம் நல்வயல்களோடு கூடியது.

திருநாள் பெருநாள்களிலும் வெற்றி விழாக்களிலும் வெளி யூர் செல்லும் போதும், மூவேந்தரும் பிராமணர்க்குத் துலைநிறை (துலாபாரம்), பொன்னா(இரணிய கருப்பம்), ஆவாயிரம்(கோச கஸ்ரம்) முதலிய தானங்களைச் செய்துவந்தனர்.

* இங்குக் காட்டப்பட்டுள்ள திருமந்திரச் செய்யுட்கள் சை.சி.நூ.ப.க. பதிப்பு. வே. விசுவநாதம் பிள்ளை பதிப்பில், ஈரிடத்தும் அந்தணர் என்னும் சொல்லே உள்ளது.

வீடும் நிலமுமில்லாத ஏழைப் பிராமணர்க் கெல்லாம், கோவில்களில் ஊட்டுப் புரைகள் அமைக்கப்பட்டன.

பெருங்கோவில்களில், ஆயிரக்கணக்கான பிராமணப் பூசகர் எளிய பணி செய்து இன்பமாக வாழ்ந்து வந்தனர். தில்லையில் மட்டும் மூவாயிரம் பேர் இருந்தனர். அதற்குக் கேட்பார் கேள்வி யில்லை.

இலவசக் கல்வி

முக்கூடல், எண்ணாயிரம், திருவொற்றியூர் முதலிய பல இடங்களில், பிராமண மாணவர்க்கு மட்டும் ஊண், உடை, உறையுள், எண்ணெய் முழுக்கு, நோய் மருத்துவம், பொத்தகம், கல்வி ஆகிய அனைத்தும் இலவசமாக நடைபெற்றது.

கொலைத்தண்டனை யின்மை

பிராமணனுக்குக் கொலைத் தண்டனையாவது, அவன் தலையை மொட்டையடித்து அவன் பொருள்களுடன் அவனை வேற்றூர்க்கு அனுப்பிவிடுவதே என்று மனுதரும சாத்திரம் கூறுகின்றது. அரசனுட்பட, யாரேனும் ஒருவன் ஒரு பிராமணனைக் கொன்றுவிடின், அப் பிராமணனது ஆவி கொன்றவனைத் தொடர்ந்து பழிவாங்கிவிடும் என்று பிராமணர் ஒரு கருத்தைப் பரப்பிவிட்டனர். அதனால், கேரள நாடுகளில், பிராமணக் குற்ற வாளிக்குக் கொலைத்தண்டனை விலக்கப்பட்டிருந்தது.

மூன்றாங் குலோத்துங்கச் சோழன் ஒரு கொலைக் குற்றவாளி யான பிராமணனுக்குக் கொலைத்தண்டனை யிட்டான். அதனாற் பிராமணரிடையே ஒரு படபடப்பு ஏற்பட்டதாகத் தெரிகின்றது. அதுபற்றிய கதை வருமாறு :

குலோத்துங்கச் சோழன் ஒரு பிராமணனுக்குக் கொலைத் தண்டனையிட்டான். அதனால் அப் பிராமணன் ஆவி அரசனை அல்லும் பகலும் தொடர்ந்தது. அரசன் அதினின்று தப்புவதற்கு எல்லாச் சிவன் கோவில்களிலும் வழிபட்டான். இறுதியில் திருவிடை மருதூரில் அப் பழி நீங்கிற்று. ஆயினும், அரசன் கோவிலி னின்று வெளியே வந்த போது, அங்கும் அவ் வாவி காத்துக் கொண்டிருந்ததைக் கண்டு இறைவனிடம் முறையிட்டான். இறைவன் திருவுண்ணாழிகைச் சுவர்ப் பக்கத்திலுள்ள ஒரு துளை வழியாக அவனைப் பின்பக்கம் போக்கி, மேலைக் கோபுரவாசல் வழித் தப்புவித்தான். அதன் பின்னும், அரசன் அஞ்சித் தன் குதிரை

மேலேறி ஒரு கல் தொலைவு விரைந்தோடித் திரும்பிப் பார்த்த போது, பிராமணக் கொலைப் பழிப்பேய் தொடராது நின்று விட்டது கண்டான். அவ்விடமாகிய திரிபுவனத்தில், தன் நடுக்கந் தீர்த்த சிவனுக்கு ஒரு சிறந்த கோவில் கட்டினான்.

இக் கதையை மெய்ப்பிக்கும் பொருட்டாக, திருவிடை மருதூர்க் கோவில் திருவுண்ணாழிகைச் சுவரருகில் ஒரு துளையும், கீழை வாயிற் பக்கத்தில் பிராமணப் பேயுருவும், கோவிற் கல்வெட் டுகள் சிலவும், இன்றும் உள்ளன.

எல்லாம் வல்ல இறைவனே பிராமணப் பேய்க்கு அஞ்சிய போது, மாபெரு வேந்தராயினும் மக்கள் அஞ்சாதிருக்க முடியுமா?

நடுக்கந் தீர்த்தான் என்று பெயர் பெற்றிருக்க வேண்டிய சிவன், கம்பஹரேசுவரர் எனப் பெயர் பெற்றது, ஈசுவர சிவா என்னும் பிராமணக் குரவனின் வடமொழி வெறியாகும்.

கோவிற் களவு

தெய்வ வுடைமையாகிய திருக்கோவிற் பொருள்களைத் திருடி விற்பதும் பயன்படுத்துவதும், கையாடுவதும் தீராத் தீவினை யாகக் கருதப்படும்.

திருப்பனந்தாட் கோவிலில் வெள்ளித் தட்டைத் திருடிய பூசகனுக்கு, ஓரிரு நாள் வேலை நிறுத்தமே தண்டனையாக இடப்பட்டது.

தஞ்சாவூரையாண்ட விசயராகவ நாயக்கர்(கி.பி. 1633-73), தம் குடிகளின் சேமத்தைக் கருதி, நாள்தோறும் தாம் உண்ணுமுன் பன்னீ ராயிரம் பிராமணருக்கு உண்டி படைத்து வந்தார். ஓராண்டு பன்னாள் விடாப் பெருமழை பொழிந்து எங்கும் வெள்ளமாகி விட்டதனால், பிராமணருக்கு உண்டி சமைக்க விறகு கிடைக்க வில்லை. அதனால், அரண்மனையின் ஒரு பகுதியை இடித்து, அதிலுள்ள உத்தரம், துலாக்கட்டை, கைமரம், சட்டம், கம்பம், நிலை, கதவு, பலகணி முதலிய எல்லா மரவுறுப்புகளையும் வெட்டி யெரிக்க நாயக்கர் உத்தரவிட்டார். அவை தீர்ந்த பின், பிராமண ரூண் தடையுண்ணாவாறு, அரண்மனையிலுள்ள விலையுயர்ந்த பட்டாடைகளெல்லாம் எண்ணெயில் தோய்த்து எரிக்கப்பட்டன.

இந் நிலையில், திருவரங்க நாய்ச்சியாரின் விலை மதிக்க முடியாத வயிர மூக்குத்தி களவு போய்விட்டது. அங்குள்ள இடவகன்(ஸ்தானீகன்) ஆன பிராமணப் பூசகன் திருடினானென்று அக் கோவி லதிகாரிகள் அவனை நையப் புடைத்தனர். அவன் அடி தாங்காது நாயக்கரிடம் வந்து முறையிட்டான்.

உடனே ஒரு பிராமணப் பெண், அரங்கநாயகி தன் மீதேறிய தாக நடித்து அணங்காடி, "பிராமண வுண்டி சமைக்க அரண் மனைப் பட்டாடைகளை எண்ணெய் தோய்த்தெரித்த போதெ ழுந்த புகையைப் பொறுக்க முடியாது, மடைப்பள்ளியா ரெல்லாம் ஓடிப் போய்விட்டனர். அரங்கநாயகியே ஒரு பிராமண மடைமக ளாக வந்து சமைத்தாள். அவளும் புகையால் முகத்திலும் மூக்கிலும் தாக்குண்டு, அங்கிருந்த கழுநீர்த் தொட்டியில் மூக்குச் சிந்தியபோது, அவள் மூக்குத்தி அத் தொட்டிக்குள் விழுந்து இன்னும் அங்கேயே கிடக்கின்றது. அதற்காகக் கோவிற் பூசகனை அடிப்பது அறங் கடை" என்று விளம்ப, நாயக்கரும் அங்ஙனமே மூக்குத்தியைக் கண்டெடுத்து, அரங்கநாயகியே தன் அரண் மனைக்கு வந்தருளினா ளென்று அளவற்ற மகிழ்ச்சி கொண்டாடி, அம் மூக்குத்திபோல் எண் மூக்குத்தியும் நாய்ச்சியார் பொற்படிமை யொன்றும் செய்வித்து, மேள தாளங்களுடன் திருவரங்கத்திற்கு அட்டோலக்கமாய் அனுப்பிவைத்தார்.

ஆங்கூர்க் கோவிற் பூசகன், பூசை வேளையில் திருவமுது படைக்காது வெறுங் கொட்டுமுழக்கம் மட்டும் செய்வித்து வந்தது,

"தேங்குபுக ழாங்கூர்ச் சிவனேயல் யாளியப்பா
நாங்கள் பசித்திருக்கை நாயமோ - போங்காணும்
கூறுசங்கு தோன்முரசு கொட்டோசை யல்லாமற்
சோறுகண்ட மூளியார் சொல்"
என்னும் இரட்டையர் பாடல் தெரிவிக்கின்றது.

சங்கரநயினார் கோவிற் சிவமால்(சங்கரநாராயணன்) செப்புப் படிமையை, செண்பகக்கண் நம்பி யென்னும் பூசகன் திருடிக் கொண்டு போய்த் திருவுத்தரகோச மங்கையில் விற்றுவிட்டான். அவனுக்குத் தண்டனையே யில்லை.

(3) தமிழ்க் கேடு

சின்னமனூர்ச் சிவபிரான் கோயில் பெருந் திருவிழாவில்(1902), திருவுருவம் மறுகிற்கு(வீதிக்கு) எழுந்தருளி ஆரியப் பார்ப்பனச் சேரியில் வரும்போது, சிவதீக்கை பெற்ற வேளாள ஓதுவார் தேவார திருவாசகங்களைப் பண்ணிசையோடு ஓதி வந்ததை, சூத்திரப் பாடல்கள் தங்கள் காதில் விழக்கூடாதென்று அங்குள்ள பிராமணர் தடுத்ததொடு, ஊர்காவல் கண்காணிப்பாளராகவும் வழக்குத் தீர்ப்பாளராயுமிருந்த பிராமணரின் பாதுகாப்பையும் தேடிக் கொண்டனர்.

தமிழ் வழிபாட்டு விலக்கு, முதலிரு கழக இலக்கிய முற்றழிவு, நூற்றுக்கணக்கான இடைக்கால நூல் இறந்துபாடு, அறிவியல்

இலக்கிய வளர்ச்சியின்மை, தேவார மறைப்பு, தென்சொல் வளர்ச்சி யின்மை, வடசொற் கலப்பு, தென்சொல் லிழிபு, தென்சொல் வழக் கழிவும் இறந்துபாடும், செந்தமிழ் கொடுந்தமிழ் மொழிகளின் உறவு முறிவு முதலியன தமிழுக்கு நேர்ந்த தீங்குகளாம்.

(4) தமிழினக் கேடு

தமிழன் தாழ்வு, பிறவிக்குலப் பிரிவினையும் ஒற்றுமைக் கேடும், தன்னினப் பகையும், தொழிலிழப்பும் பிழைப்பிழப்பும், எளியார்க்கு அறப்பேறின்மை, தமிழப் பண்பாட்டழிவு, அகக் கரண வலியிழப்பு, தீண்டாமையும் கோவிற் புகவின்மையும், பிரா மணர்க் கச்சம், ஆரியப் பழக்க வழக்க மேற்கொள்வு, வரலாற்று மாற்றம் முதலியன தமிழினத்திற்கு நேர்ந்த தீங்குகளாம்.

(5) தமிழ மத உட்போர்

கிறித்தவமும் இசலாமும் போலச் சிவனியமும் மாலியமும் வேறுபட்ட மதங்களாம். ஆயினும், இரண்டும் இறைவனையே வெவ்வேறு பெயரால் வணங்குவனவாம். ஆதலால், சிவனைப் போன்றே திருமாலும் முத்தொழில் செய்பவன் என்று கூறப்படும்.

"சமயகோடிக ளெலாம், தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது"
என்று தாயுமானவரும்,

"முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்"
என்று திருமூல நாயனாரும்,

"தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலமன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கைகண் டாருமஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக்கண்டார்
ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரையொத்தார்"
என்று கம்பரும், பாடியிருப்பதை நோக்குக.

சிறுதெய்வ வணக்கத்திலேயே நீண்ட காலமாக அடிப்பட்டுக் கடவுளைப்பற்றிக் கருத்தில்லாத ஆரியர், சிவனும் திருமாலும் வேறென்று கொண்டு அவரை முத்திருமேனிக் கூண்டிற்குட் புகுத்தி, ஒவ்வொரு தொழிலே வகுத்ததனால், சிவனியரும் மாலியருமான தமிழரும் மயங்கி, முத்தொழி லிறைமையில்லாத சிவ மாலருள் எவன் பெரியவன் என்று வினா வெழுந்து, அதனால் தமிழர்க்குள் ளேயே கடும் போர் மூண்டது.

சிறந்த சிவனடியானான இரண்டாங் குலோத்துங்கச் சோழன் (1138-50) இப் போரில் ஈடுபட்டு, "சிவனிலும் பெரிய தெய்வ மில்லை" என்னும் வாசகம் பொறித்த செப்புப் பட்டயத்திற் கையெழுத்திடு

மாறு, திரு இராமானுச அடிகளை அழைத்தான். அடிகட்குத் தலைமாறாகக் கூரத்தாழ்வான் என்னும் மாணவகரே (சீடரே) சென்று, "சிவத்திலும் பெரியது துரோணம்" என்று கூறியத னால், உடனே தம் இரு கண்ணையும் இழந்தார்.

வடமொழியிற் சிவம் என்பது குறுணி(ஒரு மரக்கால்) என் றும், துரோணம் என்பது தூணி(இரு மரக்கால்) என்றும் திருமால் என்றும் , பொருள்படும். சிவத்தினும் பெரியவன் திருமால் என்னுங் கருத்தை, இங்ஙனம் நகையாண்டி செய்து கூறியதனால், சிவனையும் குலோத்துங்கனையும் ஒருங்கே பழித்த குற்றத்திற்குள்ளானார் கூரத்தாழ்வார். இராமானுச அடிகளோ, இவ் விளைவை அறியு முன்னரே, ஒய்சள நாட்டிற்கு விரைந்து சென்று தப்பினார்.

'சிவவோதி நுவற்சி'(சிவஞான போதம்) ஆசிரியர் மெய்கண் டார், வரலாற்றவும் மொழிநூலாராய்ச்சியும் அக் காலத்தின்மை யால், முத்திருமேனிக் கொள்கையினின்று தப்ப வழி தெரியாது, "அந்தம் ஆதி என்மனார் புலவர்" என்றொரு வட்டவழி ஏரண முறையைக் கையாண்டு, சிவனுயர்வை நாட்டினார்.

தொன்ம(புராண)க் கதைகளையே சான்றாகக் கொண்டு, சிவ மாலரின் ஏற்றத் தாழ்வைக் கூறும் அரியர(ஹரிஹர) தார தம்மியம் என்றொரு தமிழ்ப் பனுவலு முண்டு. இது அப் பெயர் கொண்ட வடநூலின் மொழிபெயர்ப்பு.

(4) சிவனியர் ஆரியச் சார்பும் திருமாலியர் தமிழ்ச் சார்பும்

சிவனியம் மாலியம் இரண்டும் தமிழ மதங்களேனும், முந்தித் தோன்றியதனாலும், பெரும்பான்மைத் தமிழராற் கைக்கொள்ளப் பெறுவதனாலும், சிவனியமே மிகுந்த தமிழச் சார்பாயிருத்தல் வேண்டும். ஆயின், இயற்கைக்கு முரணாகத் திருமாலியமே மிகுந்த தமிழச் சார்பாகவுள்ளது.

சிவனியம்

மாலியம்

ஆரிய வேதமே வேதமெனத்
தமிழராலும் ஒப்புக்கொள்ளப்
பட்டுள்ளது. நாலாயிரத் தெய்வப் பனுவலும்ஆரிய
வேதத்தோ டொப்பத் திராவிட வேதம்
என(த்தென்கலை)ப் பிராமணராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

மெய்ப்பொருளியல் ஆரியக் கலப்பு
மிக்கது. மெய்ப்பொருளியல் ஆரியக் கலப்
பில்லாதது.

திருஞான சம்பந்தராகிய பிராமணரே
தலைசிறந்த அடியார். நம்மாழ்வாராகிய தமிழரே தலைசிறந்த ஆழ்வார்.


தில்லை நடவரசன் திருப்படிமையைக் காண
வந்த சிறந்த அடியாரான நந்தனார்
தீண்டாதவர் என்று தீயிலிட்டுக்
கொளுத்தப்பட்டார் திருவரங்க நம்பி திருப்படிமையைக் காண அஞ்சித் தொலைவில் நின்ற திருப்பாணாழ்வார், திருவரங்க நம்பியேவலால் தலைமைப் பூசகராகிய பிராமணர் தோள்மீது ஏற்றிக்கொண்டு வரப்பட்டுத் தெய்வத் திருமுன்பு நிறுத்தப்பெற்றார்.
தெய்வப் பெயரும் சமயகுரவர் பெயரும்
திருநகர்ப் பெயரும் பெரும்பாலும்
வடசொற்களாக அமைந்தும், மாற்றவும்
பட்டுள்ளன. தெய்வப் பெயரும், ஆழ்வார் பெயரும்
திருநகர்ப் பெயரும் பெரும்பாலும்
தென்சொற்களாக அமைந்துள்ளன.
கொண்முடிபு வீடுபேற்று வாயில்களை
ஆரிய முறைப்படி கூறுவது கொண்முடிபு வீடுபேற்று வாயில்களை
தமிழ் முறைப்படி கூறுவது.
திருநீலகண்ட யாழ்ப்பாணர் மதுரையில் முதல்நாள் கோயில் வாயிலில் நின்று பாடினார். திருவாரூரிலும், அங்ஙனமே கோவில் வாயிலில் நின்று பாட, அதன்பின் அவர்க்கு வடதிசைக்கண் வேறு வாயில் தனியாக வகுக்கப்பட்டது. திருக்காழியிற் சம்பந்தர் அவரைக் கோயிற் புறமுன்றிற்குக் கொண்டு சென்று கும்பிடு வித்தார்.


"நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி
நான்மறை ஞானசம் பந்தன் சொன்ன
பண்ணியல் பாடல்.................."

"பொன்புடை சூழ்தரு மாடக் காழிப்
பூசுரன் ஞானசம் பந்தன் சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும்......."

"கண்டல்கள் மிண்டிய கானற் காழிக்
கவுணியன் ஞானசம் பந்தன் சொன்ன
கொண்டினிதா விசைபாடி........"
எனவும், பிறவாறும் சம்பந்தர் தம் தேவாரப் பதிகந்தொறும் இறுதி யில் தம்மைப்பற்றிக் குறித்துள்ள முறைமையையும், அப்பர் சுந்தரர் தேவாரப் பாடல்களையும், நோக்கின்,

"சம்பந்தன் தன்னைப் பாடினான்
சுந்தரன் பொன்னைப் பாடினான்
என்னப்பன் என்னைப் பாடினான்"
என்று இறைவன் கூற்றாகக் கூறும் மக்கள் சொலவடை ஓரளவு பொருத்த முள்ளதாகவே தோன்றுகின்றது.


சம்பந்தர் வேதத்தையும் வேதியரையும் வேள்வியையும் பலவிடத்தும் பாராட்டிப் போற்றியிருப்பதை நோக்குமிடத்து, அவர் சிவ நெறியை மட்டுமன்றி வேதநெறியையுங் காக்கவே, சமண மதத்தைப் பாண்டிநாட்டில் தொலைத்தார் என்று கருத நேர் கின்றது.

மரைக்காட்டில், திருநாவுக்கரசர் பாடிய பதிக இறுதியில் கதவு திறந்ததும், சம்பந்தர் பாடிய பதிகத் தொடக்கத்திலேயே கதவு சாத்திக் கொண்டதும், திருவீழி மிழலையிற் சம்பந்தர் படிக்காசு வட்டங் கொடுத்தும் நாவுக்கரசர் படிக்காசு வட்டங் கொடாதும் மாற்றப்பட்டதன் விளைவான பிராமணச் சூழ்ச்சி போலும்! மறைக் காடு என்னும் பெயரே, அவ் வூர்ப் பிராமணப் பூசகரின் புரட்டை விளக்கப் போதிய சான்றாம்.

முத்தொழிற் சிவனை அழிப்புத் திருமேனியாகவும், முத் தொழின் மாலைக் காப்புத் திருமேனியாகவும், ஆரியர் வகுத்தத னாலும் மாலியம் தமிழகத்தில் வரவர வளர்ந்து வந்திருக்கின்றது என்னலாம். இராமாயண பாரதக் கதைகளும் இதற்குப் பெரிதும் துணை செய்திருக்கின்றன.

மாலியரான தொல்காப்பியர், சேயோனும் குறிஞ்சியும் முத லாகச் சொல்ல வேண்டிய திணைகளை, கி.மு. 7ஆம் நூற்றாண்டி லேயே மாயோனும் முல்லையும் முதலாகச் சொல்லிவிட்டார்.

தமிழச் சிறுபிள்ளைகட் கெல்லாம், கடைக்கழகக் காலத்திற்கு முன்பிருந்தே, மதவேறுபாடின்றி ஐம்படைத் தாலி காப்பணியாக அணியப்பட்டு வந்திருக்கின்றது.

நம்மாழ்வார் காலத்திற்குப் பின் நெடுங்கணக்கு அரிச்சுவடி என்று பெயர் பெற்றுவிட்டது. இடைக்காலத்தில், 'அரி ஓம் நம' என்று தொடங்கி எழுத்தறிவிக்கப்பட்டதாகத் தெரிகின்றது.

--------------

III. நிகழ்நிலை யியல்

இக்காலத்தில், சமணம் புத்தம் ஆகிய வடநாட்டு மதங்களைத் தழுவிய ஒருசிலரும், கிறித்தவம், இசலாம் ஆகிய மேனாட்டு மதங் களைத் தழுவிய பெருங்கூட்டத்தாரும், தமிழருள் உள்ளனர்.

1. திருநான்மறை ஆராய்ச்சி

சிவனியம் மாலியம் என்னும் இரு தமிழ மதங்களினின்றும் ஆரியக் கூறுகளை நீக்கும் முயற்சி, திருவள்ளுவர் காலத்தினின்று தொடர்ந்து வருகின்றது.

பல்லவபுரம் தவத்திரு மறைமலையடிகள், திருவாசகப் போற்றித் திருவகவலுக்குத் தாங்கள் வரைந்த விரிவுரையில், "மூவா நான்மறை முதல்வா போற்றி" என்னும் அடியிலுள்ள "மூவா நான் மறை" என்னுந் தொடர்ச்சொல், தொல்காப்பியம், இறைய னாரகப் பொருள், திருக்குறள், தேவாரம், சிவஞான போதம் என்னும் நூல்களைக் குறிக்குமென்றும், வடமொழி நான்கு வேதங் களைக் குறிக்காதென்றும் கூறினார்கள். அதைத் திருச்சி மா. சாம்பசிவப் பிள்ளை எதிர்த்து ஒரு மறுப்புரை வெளியிட்டார்.

அதன்பின், பேரா. கா.சுப்பிரமணியப் பிள்ளை செந்தமிழ்ச் செல்வி முதற் சிலம்பில், 'திரு நான்மறை விளக்கம்' என்னும் தலைப்பில், நான்மறை என்பன தமிழ்நூல்களேயென்று ஒரு தொடர் கட்டுரை வெளியிடுவித்தார். அதன் கருத்து:

சிவபெருமான், நம் தமிழ்நாட்டில், ஒரு கல்லால மரத்தின் கீழ்த் தமிழ்மக்கள் நால்வர்க்கு அறம்பொருளின்பம் வீடென்னும் உறுதிப் பொருள் நான்கினையும் உணர்த்தினார். அத் தமிழறிஞர், திருக்குறள் போன்ற நான்மறை நூல்களையும், அவற்றிற்குத் துணையாக அறுவகை உறுப்பு நூல்களையும் இயற்றினர். அவை தலைக் கழகக் காலத்துக் கடல்கோளில், கழக நூல்களுடன் அழிந்துபோயின. நம் சிவனியக் குரவர் கருத்தும் இதுவே என்பதேயாம்.

இதையும் சாம்பசிவப் பிள்ளை மறுத்து, 'திரு நான்மறை விளக்க ஆராய்ச்சி' என்னும் 236 பக்க எதிர்நூலொன்று வெளியிட்டார். அந் நூற்கு அவர் கருத்திற்கிணங்கிப் பல பிராமண அறிஞரும், நெல்லைச் சிதம்பர ராமலிங்கம் பிள்ளை, தச்சநல்லூர் இலக்கு மணப் போற்றி ஐயா, அம்பாசமுத்திரம் காந்திமதிநாதப் பிள்ளை, திருச்சிராப்பள்ளி ஆ. சுப்பிரமணியப் பிள்ளை, உறந்தைப் புலவர் பெரியசாமிப் பிள்ளை, கோவை (C.K.) சுப்பிரமணிய முதலியார், தஞ்சை அராவ ஆண்டகை (ராவ் பஹதூர்) (K.S.) சீநிவாசப் பிள்ளை, சீகாழிப் புலவர் முத்துத் தாண்டவராயப் பிள்ளை, உயிர் நூலாசிரியர் ப.மு. சோமசுந்தரம் பிள்ளை, ச. சதாசிவ முதலியார், யாழ்ப்பாணம் சிவபாதசுந்தரம் பிள்ளை, ச. சதாசிவ முதலியார், யாழ்ப்பாணம் சிவபாதசுந்தரம் பிள்ளை, கைலாசலிங்கம் பிள்ளை, அருளம்பலம், ஆறுமுகம் பிள்ளை, கணேச பண்டிதர், சுவாமிநாத பண்டிதர் ஆகிய தமிழ அறிஞரும், நன்மதிப்புரையும் பாராட்டு ரையும் வழங்கியுள்ளனர்.

நால்வேதம் அல்லது நான்மறை, ஆறங்கம், ஆகமம் என்பன ஆரிய நூல்களே என்பதும், திருக்குறள் தவிர இதுபோதுள்ள மற்றைப் பண்டை நூல்களிலெல்லாம் அந்தணர் என்பது பிராம ணரையே குறிக்கும் என்பதும் சரியே. ஆயின், ஆரியச் சார்பான இற்றைப் பண்டை நூல்களெல்லாம், ஆரியர் தென்னாடு வந்து தம்மை நிலத்தேவரென்றும் தம் மொழியைத் தேவமொழி யென்றும் சொல்லி ஏமாற்றி, தம் மேம்பாட்டை நாட்டி மதத்தையும் வரலாற் றையும் திரித்த பின்னரே இயற்றப்பட்டவை யாதலால், அவற்றை முதனூல்களென மயங்கி, அவற்றிற்குமுன் தமிழ்நூல்கள் இருந்த தில்லையென்று கொள்வது, வரலாற்றறிவும் மொழியாராய்ச் சியும் இன்மையால் நேர்ந்த விளைவாம். இவ்விரண்டும் போதிய அளவு இன்மையாலேயே, ஆரிய ஏமாற்றையும் அதனால் தமிழர் அடைந்துவரும் பெருங்கேட்டையும் கண்ட அடிகளும் பேராசிரி யரும், இனநல நன்னோக்கமாகவே, நான்மறை தமிழர்க் குரியவை யல்ல வென்றும், இறந்துபட்ட தமிழ்நூல்க ளென்றும், கூறலாயினர்.

திருமந்திரம் ஆரியம் தமிழகத்தில் வேரூன்றிய 6ஆம் நூற்றாண்டு நூலாதலால்,

"மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
வாரிய முத்தமி ழும்முட னேசொல்லிக்
காரிகை யார்க்குங் கருணைசெய் தானே"

"அவிழ்க்கின்ற வாறும் அதுகிட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் லெனுமிவ் விரண்டும்
உணர்த்து மவனை யுணரலு மாமே"


"அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழ லோம்பிமுப் போது நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
சந்தியு மோதிச் சடங்கறுப் பார்களே"

"பெருநெறி யான பிரணவ மோர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான திருகை யிருத்திச்
சொரூபம தானோர் துகளில்பார்ப் பாரே"
என்பவற்றைக் கணேச பண்டிதரும்,

"சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேச ருருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மிற்றாம் பெற்ற
நவவா கமமெங்கள் நந்திபெற் றானே"
என்பதைச் சுவாமிநாத பண்டிதரும், திருவாசகம் தேவாரம் முதலிய பிற பனுவற் செய்யுள்களைப் பிறரும், தம் கொள்கைக்குச் சான்று காட்டிப் பயனில்லை.

"மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்" என்று சிறப்புப் பாயிரம் கூறுவதால், திருமந்திர மண்டிலங்கள் (விருத்தங்கள்) மொத்தம் மூவாயிரமே. வே. விசுவநாதப் பிள்ளை பதிப்பில் 3047 மந்திரங்கள் உள்ளன. சை. சி. நூ. ப. கழகப் பதிப்பில் மூவாயிரமே உள்ளன. அவற்றுள், "அவிழ்க்கின்ற வாறும்," "அந்தண ராவோர்" என்னு மிரண்டும் இடம்பெறவில்லை. அவை இடைச்செருகல் போலும்!

"வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி யதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்......"

"இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர்............"
என்னும் சிவஞான முனிவர் கூற்றுகள் இக்காலத்திற் கேற்கா. வடமொழிக்கு மூலம் தென்மொழி யென்பதை, இந் நூலின் முடிபுரையியலில், 'எது தேவமொழி?' என்னும் பகுதியிற் காண்க.

"மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்"
என்று பாடினார், கி.பி. மூன்றாம் நூற்றாண்டிறுதியிற் பாண்டி நாட்டிற் பிறந்து வளர்ந்து, தமிழை முற்றக் கற்று, வரகுண பாண்டி யனின் தலைமை மந்திரியாரா யிருந்து, சிறந்த சிவனடியாராக மாறிய மாணிக்கவாசகர்.

மகேந்திரமலை தெற்கே மூழ்கிப் போன குமரிமலைத் தொட ரின் வடபகுதி யென்பது,

"துங்கமலி பொதித்தென்பாற் றொடர்ந்தவடி வாரத்தின்
அங்கனக இலங்கையுமேழ் வரைச்சார லடித்தேசம்" (கோபுர. 68)
என்னும் சிவ தருமோத்திர அடிகளால் அறியப்படும். "மிகவும் உயர்ந்திருக்கிற பொதிய மலைக்குத் தெற்காகிய மயேந்திர கிரியின் அடிவாரத்தில், அழகிய பொன்மயமாகிய இலங்கை யென்னுந் தேசமும் பொருந்தும்" என்னும் அவ் வடிகளின் உரையை நோக்குக.

கி.பி. 2ஆம் நுற்றாண்டிடை வரை இருந்ததாகத் தெரிகின்ற குமரியாறு, மகேந்திரம் என வடவர் வழங்கும் குமரிமலைப் பகுதியி னின்றே எழுந்தோடி, இலங்கைத் தீவு பிரியாது பெருநிலத்தோடு சேர்ந்திருந்த காலத்தில், அதனூடு பாய்ந்து கடலிற் கலந்திருத்தல் வேண்டும்.

குமரியாற்றின் ஒரு பகுதி ஓடிக்கொண்டிருந்த காலத்திலேயே ஆரியர் ஒருசிலர் தென்னாட்டிற்கு வந்துவிட்டாரேனும், மகேந்திரம் என்னும் குமரிமலையிற் சிவபெருமானிடம் அல்லது அவரருள் பெற்ற நந்திபோன்ற குரவனிடம், கொள்கை மறையும் தொழுகை மறையும் பற்றிப் பாடங் கேட்டவர் தனித்தமிழ்ப் பெயர் தாங்கிய தமிழராகவே யிருந்திருத்தல் வேண்டும்.

இன்றுள்ள வடமொழிச் சிவாகமங்கள் கி.பி. 5ஆம் நூற்றாண் டிற்குப் பின்னரே தோன்றின. அவற்றுள் மூலமானவை தொண்டு (ஒன்பது) என்பதும், ஏனைப் பதின்றொண்டும்(பத்தொன்பதும்) அவற்றின்வழிப் பின்னர்த் தோன்றின என்பதும்,

"பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே" (73)

"ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு
மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன்
றாக முடிந்த அருஞ்சுத்த சைவமே" (74)
என்னுந் திருமந்திரங்களான் அறியப்படும்.

முப்பேதம் - மூவேறுபாடு. அவை கருமக் காண்டம், வழி பாட்டுக் காண்டம், அறிவக் காண்டம் என்பன.

சிவனியம் ஆரியர் இந்தியாவிற்குட் புகுமுன்னரே குமரி நாட்டில் தோன்றிய மதமாதலால், குமரிமலைத் தொடரின் வடமுடி

யொன்றாகிய மகேந்திர மலையில், இறைவனருள் பெற்ற குரவனிடம், தொல்காப்பியர் காலமாகிய கி.மு. ஏழாம் நூற்றாண் டிற்குமுன் பாடங் கேட்டவர் தமிழராகவே இருந்தது மட்டுமன்றி அவர் பாடங் கேட்டதும் அதை நூலாக வரைந்ததும் தனித்தமிழ் வாயி லாகவே நிகழ்ந்திருத்தல் வேண்டும். அந் நூல் அல்லது நூல்களே, பிற்காலத்து வடமொழி யாகமங்கட்கு மூலமாயிருந் திருத்தல் வேண்டும். அம் மூலநூல்கள் யாவும் ஆரியரால் அழிக்கப் பட்டுவிட்டன.

பிராமணரே ஓதவும் ஓதுவிக்கவும், இருவகைச் சடங்கும் கோவில் வழிபாடும் நடத்தவும், இவ்வகையில் தமிழரை என்றும் அடிமைப்படுத்தவும், வேண்டுமென்னுங் குறிக்கோளுடனேயே, வடமொழி யாகமங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

ஆகமம் என்னும் வடசொற்குத் தோன்றியது என்றே பொருள். தோன்றற் புணர்ச்சியை வடமொழியாளர் ஆகமசந்தி என்று கூறுதல் காண்க. குறியீட்டு முறையில் ஆகமத்தைத் 'தோன்றி யம்' எனலாம். தோன்றியது என்னும் பொருளாலேயே, ஆகமங்கள் வடநாட்டு ஆரியர் தென்னாடு வந்தபின் புதிதாகத் தோன்றியவை என்பதை, ஆகமம் என்னுஞ் சொல் உணர்த்துதல் காண்க.

இனி, ஆகமம் என்னும் வடசொல்லும் தென்சொல் அடி வேரினின்றே தோன்றிய தென்பதை, கீழ்வருஞ் சொல் வரலாற்றால் தேர்ந்து தெளிக.

உய்தல் = செல்லுதல். உய்த்தல் = செலுத்துதல். உய் - இய் - இய
- இயவு = 1. செலவு. "இடைநெறிக் கிடந்த இயவுக்கொண்
மருங்கில்" (சிலப். 11:168). 2. வழி. "இயவிடை வருவோன்"
(மணிமே. 13:16).

இய - இயல். இயலுதல் = 1. செல்லுதல். 2. நடத்தல். "அரிவை
யொடு மென்மெலவியலி" (ஐங்.175). (3) கூடியதாதல்.

இயவு - இயவுள் = (1) வழி. (2) நடத்துவோன், தலைவன்,
இறைவன். "பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள்" (திரு
முருகு. 274).

இயவு - (இயகு) - இயங்கு. இயங்குதல் = செல்லுதல். இயங்கு -
இயக்கு - இயக்கம் = செலவு.

இய் - எய் - எய்து. எய்துதல் = நடத்தல், நிகழ்தல், சென்றடை
தல், அடைதல்.

எய் - ஏ. ஏதல் = போதல். இவ் வினை இன்று வழக்கற்றது.

ஏ - ஏவு. ஏவுதல் = செலுத்துதல், தூண்டுதல், தூண்டிக்
கட்டளையிடுதல்.

ஏ - ஏவு - ஏகு. ஏகுதல் = போதல்.

ஒ.நோ : போ - போவு - போகு.

ஏ - யா - யாத்திரை = செலவு. தகடூர் யாத்திரை = தகடூர்ச்
செலவு. ஒ.நோ : மா - மாத்திரை. மாத்தல் = அளத்தல். இதுவும்
ஒரு வழக்கற்ற வினை.

ஏகாரம் யாவாகத் திரிதலை, ஏன் - யான், ஏ - யா, ஏது - யாது,
ஏனை - யானை, ஏமை - யாமை, ஏமம் - யாமம் - சாமம்
முதலிய சொற்றிரிபுகளான் அறிக.

யா-ஜா (மராட்டி, குசராத்தி, இந்தி, வங்கம்).

யாத்திரை - யாத்ரா - ஜாத்ரா.

மராட்டியும் குசராத்தியும் பழம் பஞ்ச திரவிடம்; இந்தியும் வங்கமும் வடதிரவிடமாகிய முன்வடமொழி (பிராகிருதம்).

ய - ஜ, போலித் திரிபு.

எ-டு : யோகி (வ.) - ஜோகி (இ.),

யுவன் (வ.) - ஜவான்(இ.), யௌவனம்(வ.) - juveni (L.)

ஜா - ga. OE, OS. gan, OHG. gan, gen, E. go, Skt ga (to go), gatu (going).

சகரம் ககரமாகத் திரிதலால், ஜகரம் ககரத்தின் எடுப்பொ லியாக 'g' என்று திரியும்.

வடதிரவிட வழிப்பட்ட இந்தியிலேயே, போதலைக் குறிக்கும் வினைச்சொல்லின் ஜகரம், இறந்த காலத்திற் ககர எடுப்பொலி (ப) ஆகி விடுகின்றது.

எ-டு : ஜா = போ. ஜாத்தா ஹை = போகின்றான்.
ஜாவேகா (javega) = போவான்.
கயா (gaya) = போனான்.
வடமொழி என்னும் சமற்கிருதத்தில், ga என்னும் முதனிலை ga என்று குறுகியும் gam என்று திரிந்தும், gati, gama, gamana என்னும் வினைப்பெயர்களைப் பிறப்பிக்கும்.

கம் (gam) என்னும் முதனிலை 'ஆ' என்னும் எதிர்மறை முன்னொட்டொடு சேர்ந்து, செல்கைக்கு எதிரான வருகையைக் குறிக்கும் ஆகம (agama) என்னும் வினைப்பெயரையும் வினையாகு


பெயரையும் தோற்றுவிக்கும். ஆகம என்னும் வடசொல், தமிழில் ஆகமம் என்று மகரமெய்யீறு கொடுத்துக் குறிக்கப்படும்.

'ஆ' என்னும் எதிர்மறை முன்னொட்டு, அகர எதிர்மறை முன்னொட்டின் நீட்டமே.

அல் - அ - ஆ. ஒ.நோ : நல் - ந.

இங்ஙனம், ஆகார எதிர்மறை முன்னொட்டுச் சேர்க்கையால் எதிர்வினைச்சொற்களைப் படைப்பது சமற்கிருத இயல்பே.

கம் = போ. ஆகம் = வா.

தா = கொடு. ஆதா = கொள், வாங்கு.

சமற்கிருதம், தன்னில் ஐந்தி லிருபகுதியை முழுச்சொற் கடனாகவும், வேறோர் ஐந்திலிருபகுதியை வேர்ச்சொற் கடனாகவும், தமிழினின்று கொண்டுள்ளதென்பதை, 'எது தேவமொழி?' என்னும் பகுதியிற் காண்க.

'திரு நான்மறை விளக்க ஆராய்ச்சி'க்கு மதிப்புரை வழங்கிய வருள் ஒருவரான, தஞ்சைச் சீனிவாசப் பிள்ளை,

"ஸ்ரீமான் கா. சுப்பிரமணியப் பிள்ளை யவர்கள், நல்ல குலத்தில் பிறந்தவராயிருந்தும் இந்த நான்மறை விளக்கம் எழுதி யிருப்பது, கலியுகக் கூத்துகளில் ஒன்று தோன்றுகிறது. அசஞ்சல சிவபக்தியில் சிறந்த குடும்பத்தில் தோன்றிய ஸ்ரீமான் சாம்பசிவம் பிள்ளையவர்கள், மேலே கண்ட ஆராய்ச்சி என்னும் நூலை எழுதியிருப்பது, சைவர்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது" என்று வரைந்திருப்பது, ஆரியர்க்கு அடிமையராயிருப்பவரே நல்ல குலத்தாரென்றும் நல்ல சிவனிய ரென்றும் பொருள்படுவதாயுள்ளது. இதை அவர்தம் 'தமிழ் வரலாறு' மறுபதிப்பில் வெளியிடாது போயினர்.

இத்தகைய நல்ல குலத்தாரும் நல்ல சிவனியரும் இருந்ததனால் தான், சின்னமனூர்த் தேவார ஊர்வலம் பிராமணத் தெருவில் தடுக்கப்பட்டதும், அதுபற்றித் தொடர்ந்த வழக்கில் பிராமண முறையாளி பிராமணச் சார்பாகத் தீர்ப்புக் கூறியதும் ஆகும்.

'மகேந்திரம்' என்னும் முடியைக் கொண்ட குமரிமலைத் தொடரின் வடபகுதி மூழ்கிய பின்னரே, கஞ்சம் மாவட்டத்திற் சிவன் கோவில் கொண்டுள்ள மலை மகேந்திரம் என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டும். "மந்திர மாமலை மகேந்திர வெற்பன்" என்னும் திருவாசகத் தொடரில் (2:100) மாணிக்கவாசகர் குறித்துள்ள மலை,

கஞ்சம் மாவட்ட மலையேயென்று, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி தன் இயல்பிற்கேற்பக் குறித்துள்ளது.

2. தமிழ்நாட்டுச் சிவமடங்கள்

இன்று எல்லாத் துறையிலும் ஆரியத்தைப் போற்றிவருவன, தமிழ்நாட்டுச் சிவமடங்களே. இவற்றுள் குன்றக்குடி மடம் ஒன்றே விலக்காகும்.

மடத் தலைவரான தம்பிரான்மாரும் அவர் மாணவராகிய குட்டித் தம்பிரான்மாரும், துறவியர் எனச் சொல்லப்படுகின்றனர். ஆயின், தமிழத் துறவுமுறைக் கேற்ற நிலைமைகள் அவர் மடங் களில் இல்லை. நால்வகை வெள்ளாளரே தம்பிரான்மாராதற் குரியவர் என்பதும், உண்டிவகையிற் பிராமணர்க்குத் தனிச் சிறப்பும், மொழித்துறையிற் சமற்கிருதத்திற்கே முதலிடங் கொடுத்தலும், கோவிற் பூசகர் பதவிக்குப் பிராமணரையே பயிற்றுவதும், திருக் கோவில் வழிபாட்டில் வேத மந்திரங்களை ஓதுவிப்பதும், முற்றும் ஆரியச் சார்பான பழக்க வழக்கங்களாம்.

அணிகளை யணிவதும் உருவ வணக்கஞ் செய்வதும், உயரிய துறவுநிலைக் குரியவை யல்ல.

"மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன்
ஆகுல நீர பிற." (குறள். 34)

"மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பு மிகை." (குறள். 345)

"சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்லிலும் மாசற்ற ஆகாயந் தன்னிலும் ஆய்ந்துகிட்டோர்
இல்லிலும் அன்ப ரிடத்திலும் ஈச னிருக்குமிடம்
கல்லிழுஞ் செம்பிலு மோவிருப் பான்எங்கள் கண்ணுதலே."
(பட்டினத்தார் பாடல்)
'வேதச் சுருதி' என்றது, நீண்ட கால ஆரிய விளம்பரத்தினால் அடிப்பட்ட வழக்குப் பற்றியது.

இல்லறத்தாரான அடியார் நிலைமை வேறு; துறவுபூண்ட அறிவர் நிலைமை வேறு.

திருவாவடுதுறை மடம்

ஆங்கிலராட்சியும் ஆங்கிலக் கல்வியும் மொழியாராய்ச்சியும் ஏற்படாத காலத்தில், "இருமொழியும் நிகரென்னும் இதற்கையம்


உளதேயோ" என்று பாடிய மாதவச் சிவஞான முனிவர் தொடர் பாலும்; சோறு என்னும் தூய தமிழ்ச்சொல்லைச் சொன்னதற்காக ஒரு புலவரையடித்த குட்டித் தம்பிரானை, பெரிய தம்பிரானார் விலக்கிவிட்ட நிகழ்ச்சியாலும், திருவாவடுதுறை மடம் சிறப்புற்றதே. ஆயினும், தமிழைப் போதிய அளவுபோற்றாதது வருந்தத் தக்கதே.

தருமபுர மடம்

கோவிற் பூசகர் பதவிக்குப் பிராமண மாணவரையே இலவச ஊணுடையுறையுள் அளித்து ஆரிய மந்திரங்களிற் பயிற்றுவதும், வினைதீர்த்தான் (வைத்தீசுவரன்) கோவிற் கும்பமுழுக்கு விழாவிற்கு, ஒரு மாதக் காலமாக நூற்றுக்கணக்கான வேதியரைக் கொண்டு வேத மந்திரங்களை ஓதுவித்தது, ஆரியத்தை நிலைநாட்டும் 'வருணாஸ்ரம சந்திரிகை', 'சித்தாந்த சைவ வினா விடை', 'சித்தாந்தத் தெளிவியல்' முதலிய பல பொத்தகங்களை வெளியிட்டு வருவதும், தமிழ மாணவரைத் தாழ்வாக நடத்தியதும், பிறவும், ஆரியம் தருமை மடத்தில் அடைக்கலம் புகுந்தது மட்டுமன்றித் தலைவிரித்தும் ஆடுகின்றது என்னுமாறுள்ளன. முந்திய தம்பிரான் ஒருவர் சமற் கிருதத்திற் கையெழுத்திடுவதே வழக்கம் என்றும் சொல்லப்படுகின்றது.

"குண்டாசுர னென்னும் ஓரசுரன் கொக்கு ரூபமாயிருந்து அண்டமனைத்துங் கொறித்துக் கொறித்து, தேவர்களை வருத்தி வந்தமையால் சிவபெருமான் அவனைச் சம்ஹாரம் செய்து அவனது இறகையணிந்தருளினார்." (ப. 94) என்னும் கொக்கிற கணிவிளக்கம் ஒன்றே, 'சித்தாந்த சைவ வினா விடை'யின் சிறப்பை விளக்கப் போதிய சான்றாம்.

"வைதிக முறைப்படி உபநயனமும் சிவாகம முறைப்படி சமயம், விசேடம், நிர்வாணம் என்னும் தீட்சைகளும் பெற்று, ஆச்சாரியாபிடேகம் செய்துகொண்டு சைவக் குருமார்களாய் விளங்குபவர்கள், ஆதி சைவர் எனப்படும் சிவமறையோர். 'சிவா சாரியார்' என்று சொல்லப்படும் இவர்கள், சிவபெருமானைச் சிவாகமங்களின்வழித் தம் இல்லங்களில் ஆன்மார்த்தமாகவும், சிவாலயங்களில் பரார்த்தமாகவும் பூசை செய்பவர்கள். சிவாலயங் களில் நித்திய நைமித்திகங்களாகிய பூசைகளையும் விழாக் களையும் நடத்துபவர்கள்." (ப. 11).

"வேதம்பசுஅதன்பால் மெய்யாக மம்நால்வர்
ஓதும் தமிழ்அதனின் உள்ளுறுநெய் - போதமிகும்
நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணெய் மெய்கண்டான்
செய்ததமிழ் நூலின் திறம்" (ப. 33)


"உலகம் சொல்வடிவம் பொருள்வடிவம் என இருவகையாய் உள்ளது. சொல் உலகம் 'சத்தப் பிரபஞ்சம்' எனவும், பொருள் உலகம் 'அர்த்தப் பிரபஞ்சம்' எனவும் சொல்லப்படும்.

"அவற்றுள் சொல் உலகம், எழுத்துகளை உறுப்பாகக் கொண்ட சொற்களும் சொற்றொடர்களுமாம். எழுத்துகள் 'வன்னம்'(வர்ணம்) என்றும், சொற்கள் 'பதம்' என்றும் வட மொழியிற் சொல்லப்படும். சொற்றொடர்களில் சிறப்புடையன மந்திரங்கள். அதனால், 'மந்திரம், பதம், வன்னம்' எனச் சத்தப் பிரபஞ்சம் மூவகையாகச் சொல்லப்படும். வடமொழி மரபும் சைவ மரபும்பற்றி, 'வன்னம் ஐம்பத்தொன்று, பதம் எண்பத்தொன்று, மந்திரம் பதினொன்று' எனச் சிவாகமங்கள் வரையறை செய்கின்றன. இங்குக் கூறப்பட்ட எழுத்து சொல் சொற்றொடர்களில், எல்லா மொழிகளிலும் உள்ள எழுத்துகளும் சொற்களும் நூல்களும் அடங்கும் என்பது சிவாகமங்களின் கொள்கை."

"சத்தப் பிரபஞ்சம் அறிவுக்குக் காரணமாய் நிற்றலின், அது சுத்த மாயையின் காரியமே யாகும். ஆகவே, சுத்த மாயையின் காரியமே சொற் பிரபஞ்சம், பொருட் பிரபஞ்சம் என இருவகையா கின்றது. அசுத்த மாயையின் காரியங்களும், பிரகிருதி மாயையின் காரியமும், பொருட் பிரபஞ்சம் ஒன்றேயாதல் அறிந்துகொள்க." (ப. 180) என்னும் பகுதிகள், 'சித்தாந்த தெளிவியல்' எத்துணைக் கொண் முடிபு மயக்கியல் என்பதைத் தெரிவிக்கும்.

பூணூ லணிவு, தமிழ வாழ்க்கைமுறைக்கும் சிவநெறி யொழுக் கத்திற்கும் புறம்பான, பொருளற்ற ஆரிய வழக்கம். ஆதிசைவர் அல்லது முந்து சிவனியர் என்று சொல்லப்படத் தக்கவர் ஓதுவார். பண்டாரம், புலவர், குருக்கள் என்னும் வகுப்புகளைச் சேர்ந்த தமிழப் பூசகரே.

வேதத்திற்கும் சிவநெறிக்கும் யாதொரு தொடர்புமில்லை.

எழுத்து சொல் சொற்றொடர் என்பவற்றின் இயல்பு முன்னரே விளக்கப்பட்டது. மொழித்துறைபற்றிய ஆரியக் கொள்கை அறியாமையின் விளைவாகும். சிவநெறி தோன்றிய மொழி தமிழாதலால், எழுத்தெனப் படுவன முப்பதே. பல்வேள்விச் சாலை முதுகுடுமிப் பெருவழுதி காலத்திலேயே, ஆரியக் கொள் கைகள் சிவனியக் கொண்முடிபிற் கலந்துவிட்டதனால், ஏழு அல்லது எட்டு நூற்றாண்டுகட்குப் பின் தோன்றிய திருமூலர், அவற்றை அங்ஙனமே மேற்கொண்டு விட்டார்.

திருப்பனந்தாள் மடம்

திருப்பனந்தாள் மட மூலவரான குமரகுருபரர்,


"பல்லுயிர்த் தொகுதியும் பயன்கொண் டுய்கெனக்
குடிலை என்னும் தடவயல் நாப்பண்
அருள்வித் திட்டுக் கருணைநீர் பாய்ச்சி
வேதம் என்னும் பாதபம் வளர்த்தனை"
என்று 'பண்டார மும்மணிக் கோவை'யிற் பாடியிருப்பதே, வேதம் பற்றி வழிவழித் தமிழரிடை வழங்கி வந்த குருட்டு நம்பிக்கையைக் காட்டும்.

திருப்பனந்தாள் மடத் தலைவராகத் திருத் தவத்திருச் சுவாமி நாதத் தம்பிரான் அவர்கள் இருந்த காலத்தில், ஒரு முறை சென்று அவர்களைக் கண்டு, என் தமிழாராய்ச்சியை எடுத்துக் கூறி, அதை வெளியிடப் பொருள் வேண்டினேன். தம்பிரான் அவர்கள், நான் சொன்னதை அமைதியாகச் செவிகொடுத்துக் கேட்டு, அடுத்து வரும் குருபூசை நாளன்று வரச் சொன்னார்கள். மகிழ்ச்சியோடு திரும்பினேன்.

ஆயினும், நான் கருதியது கைகூடுமா வென்று ஓர் ஐயம் எனக்கிருந்தது, ஏனெனின், அங்கு 'இராயசம்' என்றிருந்த பிராமண எழுத்தாளர், நான் பண்டாரம் திருமுன்பு செல்லு முன்பே என்னை அழைத்து, தம் அகவைக்கும் அறிவிற்கும் பதவிக்கும் தகாத பல வினாக்கள் வினவினார். நான் தங்கியிருந்த மடத்து விடுதிமேலாள ரும், என்னைப் பண்டாரத் திருமுன்பு அழைத்துச் சென்ற பணியா ளரும், மடத்துக் காசுக் கணக்கரும் பிராமணரே. அதோடு, பெரும் பேராசிரியர் உ. வே. சாமிநாத ஐயர் அங்கு வந்து தங்கும் தனி மனையையுங் கண்டேன். அவர் தம்பிரானுக்கு ஆசிரியராயிருந்தவர் என்றும் கேள்விப்பட்டேன்.

ஆதலால், 'வாய்த்தால் தமிழுக்கு; வாய்க்காவிட்டால் வட மொழிக்கே' என்று கருதிக்கொண்டு, குருபூசை நாளன்று சென்றேன். பெரும் பேராசிரியரும் வந்திருந்தார். அவரும் தம்பிரான் அவர் களும் ஒருங்கே நின்றவிடத்துச் சென்று கண்டேன். "ஐயர் அவர் களைப்பற்றித் தெரியுமா?" என்று தம்பிரான் அவர்கள் வினவி னார்கள் . "தெரியும்" என்றேன். ஐயரோ, ஒருமுறை நான் அவர் இல்லஞ் சென்று கண்டிருந்தும், தமக்கு நினைவில்லையென்றார். அவ்வளவுதான், தம்பிரான் அவர்கள் அப்பாற் சென்றுவிட்டார்கள். நானும் விடுதிக்குத் திரும்பினேன்.

எத்தனையோ ஆராய்ச்சிக் கட்டுரைகளும் நூல்களும் வெளி யிட்ட பின்பும், தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தி.மு.க. அரசும், வெவ்வேறு நிலைமையிலுள்ள தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களும், என் ஆராய்ச்சியைப் போற்றாதபோது, நிலத்தேவர்

காவலிலுள்ள ஒரு நிறுவனம் எங்ஙனம் போற்றும்! அதை எதிர் பார்ப்பது எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடுவதே.

என்னொடு தமிழன்பரான தமிழர் வேறு சிலரும் விடுதித் தாழ் வார அறையில் தங்கியிருந்தனர். பிராமணர்க்கோ உள்ளிடம். நண்பகலுணவு எங்கட்குப் பிற்பகல் 3 மணிக்குத்தான் வந்தது. கரணியம் வினவியபோது, அன்றுதான் பிராமணப் பந்தி முடிந்த தென்று தெரிவிக்கப்பட்டது.

எனக்கு மடத்துப் பொருளுதவி தப்பியதுபற்றி எள்ளளவும் வருத்தமில்லை. தமிழர் குமுகாயநிலைத் தாழ்வே என்னை மிகமிகப் புண்படுத்தியது. நாடு தமிழ்நாடு; மடம் தமிழன் மடம்; மதம் தமிழன் மதம்; பணம் தமிழன் பணம். அங்ஙனமிருந்தும், தமிழன் நாய்போல் நடத்தப்படுவது இவ் விருபதாம் நூற்றாண்டிலும் தொடர்கின்றதெனின், இற்றைத் தமிழன் உயர்திணையைச் சேர்ந்தவனல்லன் என்பது தெள்ளத் தெளிவாம்.

பிராமணர்க்கு உள்ளும் தமிழர்க்கு வெளியுமாக வெவ்வேறி டத்தில் உண்டி படைக்கப்படினும், ஒரே நேரத்திற் படைக்கப்பட்டி ருப்பின், ஓரளவு நன்றாயிருந்திருக்கும். அக்காலத்துப் பிராமணப் பொது வுண்டிச்சாலைகளில். பிராமணரின் எச்சிலைகளிலிருந்து கறிவகைகளை யெடுத்துத் தமிழர்க்குப் படைப்பது வழக்கமாயிருந் தது. காசு கொடுத்துண்ணும் இடத்திலேயே அந் நிலைமையாயின், இலவசமா யுண்ணும் இடத்தில் எங்ஙனம் இருந்திருக்கும்!

மடம் துறவியர் பயிற்சிக்கு ஏற்பட்டது. கற்பிக்கப்படுவன கொண்முடிபும் மெய்ப்பொருளியலும். முப்பத்தாறென்று கொள்ளப்படும் மெய்ப் பொருள்களுள், குலம் எதைச் சார்ந்தது? குலம் மாந்தன் இயல்பாயின், ஏனை நாடுகளில் ஏன் அஃதில்லை? "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்று திருமூலரே சொல்ல வில்லையா?

வேதம் ஓதித் திருக்கோயில் வழிபாடு நடத்தும் பிராமணப் பூசகனை ஒருவாறு உயர்வாகக் கருதினாலும், வேதமறியாது உழவு, கைத்தொழில், வணிகம், சமையல், கோழிப்பண்ணை, ஏவல், கணக்கம், ஆசிரியம், ஊர்காவல், ஆள்வினை முதலிய பல தொழில் களைச்செய்யும் பிராமணரையும் ஏன் உயர்வாகக் கருத வேண்டும்? பிராமணர் போலுடுத்துப் பிராமணர்போற் பேசிப் பிராமணராக வாழும் தமிழரும் உண்டே! நயன்மைக் கட்சி (Justice Party) ஆட்சிக் காலத்தில், அலுவற் பேற்றின் பொருட்டுப் பூணூல் களைந்து தம்மைத் தமிழராகக் காட்டிக் கொண்ட பிராமணரும் உண்டே!

தமிழருள்ளும் ஒருவரைக் குலப்பட்டத்தினால் மட்டும், ஒரு குலத்தாரென்று எங்ஙனங் கொள்ள வியலும்? முதலியார் குலத்தை எடுத்துக்கொள்ளின், வேளாண் முதலி, செங்குந்த முதலி, அகம் படிய முதலி, கோலிய முதலி, முதலிப் பெண்ணை மணந்ததனால் ஆன முதலி, தானே பட்டஞ் சூட்டிக்கொண்ட முதலி, பண்டை அரசியல் அதிகாரிகள்வழி வந்த முதலி எனப் பலவகையுண்டே.

மேலும், முதலியார் என்பது படைமுதலியார்(சேனை முதலியார்) என்னும் படைத்தலைவர் பதவிப் பெயரின் குறுக்க மாதலால், அதை அரியநாயக முதலியார் என்னும் விசயநகரப் படைத் தலைவர் போன்றாரின் வழியினரே மதிப்புறவுப் பட்ட மாகப்(courtesy title) பூணுவது, மேலை முறைப்படி பொருந்தா திருக்க, பொதுவகையான படைஞரின் வழியின ரெல்லாம் அப் பட்டத்தை வழிவழி பூணுவது எங்ஙன் பொருந்தும்?

இன்றும், திருப்பனந்தாள் மடத்தில், பிராமணப் பையன் களையே சமற்கிருத வகுப்பிற்குச் சேர்ப்பதும், பிராமண மாண வர்க்கும் தமிழ மாணவர்க்கும் வெவ்வேறிடத்தில் உண்டி படைப் பதும், முகம், மீனம் முதலிய தூய தென்சொற்களை வடசொல் லென்று கற்பிப்பதும், வழக்கமாயிருப்பதாகத் தெரிகின்றது.

மும்மடங்களும் ஆரியச் சார்பாயிருந்து குலவேற்றுமை காட்டுவதற்கு, பின்வருபவை கரணியமா யிருக்கலாம்:

(1) வெள்ளாண் குலத்தினரே மடத்தலைவராக இருத்தல்
வேண்டுமென்னுங் கொள்கை

(2) சமற்கிருதம் தேவமொழியும், வேதம் சிவமத மூலமும், ஆகு
மென்னுங் குருட்டு நம்பிக்கை.

(3) ஆரியத்தைப் போற்றாவிடின், பிராமண வழக்கறிஞர் சிவ
மடங்களை அறநிலையப் பாதுகாப்பு மன்ற ஆட்சிக்
குட்படுத்தி விடுவர் என்னும் அச்சம்.

(4) சூத்திரனுக்குத் துறவில்லை யென்னும் ஆரியக் கொள்கை
பற்றிய தாழ்வுணர்ச்சி.

(5) சிவத் தொன்மங்களும் (புராணங்களும்) திருமந்திரமும் சிவ
ஞான போதமும் முதலிய கொண்முடிபு நூல்களும்,
சிறப்பாக, ஓங்காரப் பகுப்பும் சிவாயநம என்னும் திருவைந்
தெழுத்தும் மெய்ப்பொருள் முப்பத்தாறென்னும் முடிபும்
ஆகியவை, ஆரியச் சார்பாயிருத்தல்.
இவற்றை நீக்குவதற்கு, ஒவ்வொரு மடத்திலும், தனித்தமிழ் ஆசிரியர் ஒருவரையும் உண்மை வரலாற்றாசிரியர் ஒருவரையும்


அமர்த்தி, உருவிலா வழிபாட்டை மேற்கொள்ளல் வேண்டும். உருவ வழிபாடு துறவுநிலைக் கேற்பதன்று.

சிவநெறிச் செலவு, புலான்மறுத்தல், துப்புரவு, ஒழுக்கம் ஆகியவையே, சிவமடத் துறவியர் ஆசிரியர் இலக்கணமாய் அமைதல் வேண்டும்.

இன்று தி.மு.க. ஆட்சி ஏற்பட்டிருப்பதால், பிராமண வழக்கறி ஞரைப்பற்றி அஞ்ச வேண்டுவதில்லை. பிராமணியத்தினின்று தப்ப முடியாதவர் பிறவியினின்று ஒருகாலும் தப்பமுடியாது. கூரையேறிக் கோழி பிடிக்கத் தெரியாதவனா கோபுர மேறிக் குடக் கூத் தாடுவான்?

சிவமடங்கள் திருந்தாவிடின், எதிர்காலத்தில், தமிழராட்சி வந்து திருத்தும்; அல்லது பொதுவுடைமை யாட்சிவந்து, மூன்றாங் குலோத்துங்கச் சோழன் காலத்துக் குகையிடி கலகம் போன்ற கிளர்ச்சி யெழும்.

3. சைவசித்தாந்த மகாசமாசச் சிவத்தொண்டு

பிராமணர் மட்டுமன்றி வையாபுரிப் பிள்ளை போன்ற தமிழ ரும், மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' வடமொழி 'ரௌரவ' ஆகமத்தின் மொழிபெயர்ப்பென்று, நீண்ட காலமாகப் பிதற்றி வந்தனர்.

திரு. ம. பாலசுப்பிரமணிய முதலியார், மறுக்கமுடியாத 120 கரணியங் காட்டி, 'சிவஞான போதம் தமிழ் முதனூலே, மொழி பெயர்ப்பன்று' என்று நாட்டிய அரிய ஆராய்ச்சிச் சுவடியை, சைவ சித்தாந்த மகா சமாசம், 1965ஆம் ஆண்டு தன் வைரவிழா வெளியீடாக வெளியிட்டது, சிவனியரும் தமிழரும் மிகப் பாராட்டி மகிழத்தக்கதொன்றாம்.

4. காஞ்சிக் காமக்கோடிப் பீடச் சங்கராச்சாரியாரின் கரைகடந்த தமிழ் வெறுப்பு

சில ஆண்டுகட்கு முன், இற்றைக் காஞ்சிச் சங்கராச்சாரியார், ஆண்டாள் திருப்பாவையின் "செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்" என்னும் அடியிலுள்ள தீக்குறளை சென்றோ தோம்" என்னும் தொடருக்கு, தீய திருவள்ளுவரின் குறளை யாங்கள் ஓத மாட்டோம் என்று ஆண்டாள் சொன்னதாகப் பொது மேடை யிற் பொருள் கூறி, தம் தமிழிலக்கண அறியாமையையும் தமிழ் வெறுப்பையும் வடமொழி வெறியையும் ஒருங்கே காட்டினார்.

ஆட்சிமொழிக் காவலர் திரு. கீ. இராமலிங்கனார் ஆச்சாரி யார் மடத்திற்குச் சென்று இதுபற்றி வினவியபோது, ஆச்சரியார்

நேரடியாகத் தமிழில் விடையிறுக்காது. தம் அணுக்கத் தொண்டர் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லுமாறு சமற்கிருதத்திலேயே விடை கூறினாராம். "சுவாமிகளுக்கு நன்றாகத் தமிழ் தெரியுமே! தமிழிலேயே எனக்கு நேரடியாய் விடை கூறலாமே!" என்று ஆட்சி மொழிக் காவலர் சொன்னதற்கு, "சுவாமிகள் பூசை வேளையில் நீச பாஷையில் பேசுவதில்லை" என்று அணுக்கத் தொண்டர் மறு மொழி கூறினாராம். எது நீச மொழி என்பதை, 'எது தேவமொழி?' என்னும் பகுதியிற் காண்க.

5. அகோபிலம் சீயர் ஆணவம்

முன்பு தருமை வளாகத் தமிழ்க் கல்லூரி முதல்வராக இருந்த வரும், இன்று காஞ்சி ஞானப்பிரகாசர் மடத் தலைவராக இருப்ப வரும் ஆன தமிழத் துறவியார்,வடார்க்காடு மாவட்ட முக்கூர் என்னும் சிற்றூரில், தம் இல்லத்தையே மடமாக்கிக் கொண்டு 'அகோபிலம் சீயர்' என இறுமாந்திருக்கும் பிராமணரைப் பார்க்கச் சென்றிருந்தபோது, அப் பிராமணர் "நீ ஒரு சூத்திரன். உனக்குக் காவி கட்ட அதிகாரம் உண்டா? வேதம் படிக்க அதிகாரம் உண்டா?" என்றும் பிறவாறும் திமிரொடு வினவியிருக்கின்றார்.

6. தவத்திருக் குன்றக்குடி அடிகளின் சிவ தமிழ்த்தொண்டு

ஐங்கோவில் வருமானமே யுடையவரேனும், ஆண்டு முழுதும் நாடெங்கும் சுற்றி, மொழித்துறையிலும் மதத்துறையிலும் கற்றார்க்கும் கல்லார்க்கும் நல்லறிவு புகட்டி, ஆரியத் தீங்குகளை அறவே அகற்றி, தமிழர் திருந்திய முறையில் வாழவும் தெய்வத் தமிழில் வழிபடவும், அல்லும் பகலும் அரும்பாடுபட்டு, ஆயிரக்கணக்கான வேலி நிலங்களையுடைய ஏனை மடங்களின் தலைவரினும் சிறந்த பணியாற்றி வரும், தவத்திருக் குன்றக்குடி அடிகளின் தவப்பெருஞ் சிவ தமிழ்த்தொண்டு போற்றிப் புகழத்தக்கதாம்.

7. தி.மு.க. அரசின் திருக்கோவில் தொண்டு

நம்பா மதத்தாரென்று தமிழ்ப் பகைவராலும் அவரடியாரா லும் பழிக்கப்பட்ட தி.மு.க. அரசினர், பழங்கோவில்களைப் புதுக்கி யும், திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தியும், வருமானத்தைப் பெருக்கியும், தமிழரெல்லாரும் நெஞ்சுருகி உண்மையாக வழிபடத் தாய்மொழியில் வழிபாடு செய்வித்தும்; மாந்த ரெல்லாரும் இறைவன் மக்களென்று உணர்ந்து, ஏமாற்றும் ஏற்றத் தாழ்வும் இனப்பகையு மின்றி, எல்லாரும் உடன்பிறப்புப்போல் ஒருமித்து இன்புற்று வாழ, கோவிற் பூசகரை எல்லா வகுப்பினின்றும் தெரிந்தெ டுக்கத் திட்டமிட்டும்; இதுவரை வேறெவ்வரசும் செய்யாத முறை


யில், சிறந்த இறையடியார்போல் உண்மையான மதத் தொண்டு செய்து வருவது, எதிர்காலத் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு நற்குறியாகும்.

ஆயினும், தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் என்னும் உண்மையை நாட்டினாலன்றி, இவ் வேற்பாடு நிலைத்த பயன்தராது.
-------------

IV. வருநிலை யியல்


1. திருக்கோவில் தமிழ் வழிபாடு

கிறித்தவம் கி. பி. 3ஆம் நூற்றாண்டு உரோம நகரத்தினின்று பிரித்தானுக்குட் புகுத்தப்பட்டது. அதைப் புகுத்தியவர் மறைமொழி இலத்தீனமாயிருந்ததனால், கோவில் வழிபாடு அம் மொழியிலேயே நடைபெற்று வந்தது. ஆயின், 16ஆம் நூற்றாண்டில், மார்ட்டின் லுத்தர் என்னும் செருமானியர், போப்பாண்டவரின் அதிகாரத்தை யெதிர்த்துப் பெருங் கிளர்ச்சி செய்து சீர்திருத்தத்தை யேற்படுத்திய பின், எல்லா நாடுகளிலுமுள்ள சீர்திருத்தக் கிறித்தவக் கோவில் களில், அவ்வந் நாட்டுத் தாய்மொழியிலேயே வழிபாடு நடந்து வருகின்றது. இங்ஙனம், ஐரோப்பியரும் ஆங்கிலரும், தம் உரிமை யுணர்ச்சியால், அயல் நாட்டினின்று அயன்மொழி வாயிலாக வந்த மதத்தையும், தம் தாய்மொழி மதமாக மாற்றிக்கொண்டனர்.

தமிழரோ, தமிழ்நாட்டில் தமிழரால் தோற்றுவிக்கப்பட்ட மத வழிபாட்டை, ஒருபோதும் வழக்கில் இல்லாத, ஒருவர்க்கும் தெரி யாத அயல்நாட்டு இலக்கிய மொழியில் நடைபெறுவித்து, செவிடர் போல் நின்று மீள்கின்றனர்.

சிவனியமும் மாலியமும் தூய தமிழ மதங்களா யிருந்தும், அன்பான தந்தையுடன் அவன் அருமை மக்கள் நெஞ்சு கலந்து நேரடியாய்ப் பேசி இன்புற முடியாவாறு, இடையில் ஓர் அயலான் நின்று தடுத்து, அவர்கள் கொண்டுவந்த தின்பண்டங்களையும் தானே வாங்கிக் கொடுத்து, அவர்கள் தந்தையைப் போற்றிப் புகழ்வது போலும், தந்தை அவர்களை வாழ்த்துவது போலும், தானே மனப்பாடஞ் செய்து கொண்டனவும் அவர்கட்குப் பொருள் தெரியாதனவுமான சில தொடர்களைச் சொல்லி, அதன்பின் அவர்களே விலகிக்கொள்ளுமாறு செய்வதுபோல், கோவிலிலுள்ள பரமத் திருத்தந்தையும் அருட்கடலுமான இறைவனுருவிற்கு, தமிழர் தாமே தம் அன்பார்ந்த நெஞ்சு கனிந்த வணக்கத்தைத் தம் தாய்மொழியில் தெரிவித்து வழிபட்டுப் படைத்து, பேரின்பப் பெரு


மகிழ்ச்சியைப் பெற முடியாவாறு, வடநாட்டினின்று வந்த பிரா மணன் இடைநின்று, படைப்புத் தேங்காயை வாங்கித் தானே யுடைத்து, தமிழர்க்குத் தெரியாத, தனக்குத் தெளிவாக விளங்காத, அரைச் செயற்கை இலக்கிய நடைமொழியாகிய சமற்கிருதத்தில் தான் உருப்போட்டதைச் சொல்லி, அஞ்சலகத்திலும் வைப்பகத் திலும்(Bank) வரியகத்திலும் பணஞ் செலுத்தியவர் திரும்புவதுபோல் வழிபட்டவரைத் திரும்பச் செய்வது, எத்துணை ஏமாற்றும் துணிச்சலுமான தீச் செயலாம்! ஆங்கிலப் பட்டக் கல்வியரும் அறிவியல் ஆராய்ச்சியாளரும் இதற்கு இணங்கியிருப்பது, எத்துணை இழிதகவான அடிமைத்தனமாம்!

தமிழே திரவிடத்தாயும் ஆரிய மூலமுமாகும் என்னும் உண்மை, அண்ணிய காலத்திலேயே உலகறிய நாட்டப்படும். அதன் பிறகேனும், தமிழர் இருவகைச் சடங்குகளையும் கோவில் வழிபாட்டையும் தமிழிலேயே நடைபெறச் செய்தல் வேண்டும்.

பொதுக்கூட்டங்களில், அவைத் தலைவர் 'அம்மையப்பன் திருவடி போற்றி!' என்றே ஒலிக்க. அவையினர் 'அரகர (அரவர) மாதேவா!' என்று ஆர்ப்பரிக்க.

2. பல்வகுப்புக் கோவிற் பூசகர்

பொதுக் கல்வி, சிறப்புக் கல்வி, தமிழ்ப் பற்று, தெய்வ நம்பிக்கை, புலான் மறுத்தல், துப்புரவு, ஒழுக்கம் ஆகிய எழுவகைத் தகுதியும் உள்ளவரை, எல்லா வகுப்பினின்றும் பூசகராகத் தெரிந் தெடுத்துப் பணியாற்றுவித்தல் வேண்டும். இதற்கு மாறாயிருப்பவரை அரசு தண்டித்தலும் வேண்டும்.

3. வழிபாட்டில் வீண்செலவு நிறுத்தம்

கோவில்களிற் படைக்கப்படும் உணவுப் பொருள்கள், வழி படுவார்க்கும் பூசகர்க்கும் இரப்போர்க்கும் ஏழைகட்கும் பயன் படும். ஆயின், பால் முழுக்கு, நெய்யாட்டுப் போன்றவை ஒருவர்க் கும் பயன்படா. இறைவனுக்கும் ஏற்காது. மக்கட்டொகைப் பெருக்க மும் வேலையில்லாத் திண்டாட்டமும் பொருள்விலையுயர்வும் வறுமையும் வறட்சியும் மிக்க இக்காலத்தில், ஏழை மக்கள் குடிக்கக் கூழுமின்றிப் பசியும் பட்டினியுமாய்க் கிடந்து வருந்துகையிலும், தற்கொலை செய்து வருகையிலும், உயிரற்ற ஓருருவத்தின்மேற் குடங்குடமாய்ப் பாலைக் கொட்டுபவனை, இறைவன் அடியான் என்னாது கொடியான் என்றே கருதுவன். இறைவனுக்கு எண் ணில்லா எல்லாவுலகும் என்றும் சொந்தம். அவனுக்கு ஒரு பொரு ளும் தேவையில்லை. அவனே எல்லார்க்கும் எல்லாவற்றையும்

அளிப்பவன். அவன் விரும்புவது மனம் ஒன்றே. அதை முழுமையும் அளிக்க முடியாதவர், பூசகர்க்கும் ஏழைகட்கும் பல்வகைப் பணிசெய்யும் பொதுமக்கட்கும் பயன்படுமாறு, தத்தமக்கு இயன்றவளவு பல்வகைப் பொருள்களைக் காணிக்கையாகப் படைக்கலாம்.


4. உருவிலா வழிபாடு

துறவறத்தார்க்கு மட்டுமன்றி, அறிவு விளக்கம் பெற்ற இல்லறத்தார்க்கும் உருவிலா வழிபாடே உகந்ததாம். உருவ வழி பாட்டினால், இறைவனின் எங்கும் நிறைந்த தன்மை உணரப் படாதுபோம். அதோடு, அவனது அளவிடப்படாத பெருமைக்கும் அது இழுக்காகும்.

உலகிலுள்ள உயிரினங்களுள் உயர்ந்தது மாந்தனினம். ஆதலால், தலைசிறந்த வகையிலும், மாந்தன் வடிவில்தான் இறை வனைக் காட்ட முடியும். அதுவே அவன் மாட்சிமைக்கு இழுக்கா யிருக்க, பகுத்தறிவில்லா யானை வடிவிற் படிவமமைத்து வணங்கு வது எத்துணைப் பழிப்பாகும்! ஒருவர் படத்தைத் தவறாக வரையின், அவருக்கு எத்துணைச் சினம் எழுகின்றது! மாந்தனுக்கே அங்ஙனமாயின் இறைவனுக்கு எங்ஙனமிருக்கும்!

கசினி மகமது கற்படிமைகளை யுடைத்துப் பொற்படிமை களை உருக்குவான்; சண்பகக்கண் நம்பி செப்புப் படிமையைத் திருடிக் காடு மேடாய் இழுத்துச் சென்று விற்பான், படிமை ஒன்றுஞ் செய்யாது.

"விள்ளுவமோ சீராசை வீடுவிட்டுக் காடுதனில்
நள்ளிருளிற் செண்பகக்கண் நம்பியான் - மெள்ளவே
ஆடெடுக்குங் கள்வரைப்போ லஞ்சா தெமைக்கரிசற்
காடுதொறு மேயிழுத்தக் கால்."

ஒருவனது தெய்வப் படிமையே அவன் வீட்டுப் படிக்கல்லாக வந்து அமையினும் அமையலாம்.

இல்லற மக்கட்கு உருவ வழிபாடு இன்றியமையாத தென்பர் சிலர். கிறித்தவரும் மகமதியரும் உருவிலா வழிபாட்டிற் சிறந்து விளங்குதல் காண்க.

துறவறம் உயர்ந்த அறிவுநெறி யாதலால் பட்டினத்தாரும் தாயுமானவரும் போன்ற உண்மைத் துறவிய ரெல்லாம், உருவ வழி பாட்டை அறியாமைச் செயலாகவே கருதினர்.

இறைவனுக்கு நெஞ்சக்கோயிலே இனியதென்று திருவள்ளு வரும் திருமூலரும் கண்டனர்.


"மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்." (குறள். 3)

"உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே யுத்தமன் கோயில்கொண் டானென்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே." (திருமந். 705)

"படமாடக் கோயில் பகவற்கொன் றீயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்க தாமே." (திருமந். 1821)
மதத்தை யொழித்துவிட்டாற் பிராமணியம் அடியோடொ ழியு மென்று கருதி, கடவுளில்லை யென்று சிலர் சொல்லிவருகின்ற னர். உருவ வணக்கத்தை ஒழித்துவிட்டாலே பிராமணியம் ஒழிந்து போமென்று உறுதியாய்ச் சொல்லலாம்.

தமிழ்நாட்டில் உருவிலா வழிபாடு பதினெண் சித்தர் காலத் தில் தோன்றியதென்றும், கிறித்துவிற்குப் பிற்பட்டதென்றும், தவ றாகக் கருதப்படுகின்றது. உலகில் முதன்முதல் கடவுளை உணர்ந் தவர் தமிழறிவரே. கடவுள் என்னும் சொல், குமரிநாட்டில் தலைக் கழகக் காலத்திலேயே தோன்றியதாகும். "முந்துநூல் கண்டு முறைப் பட எண்ணிப்" புலந்தொகுக்கப்பட்ட தொல்காப்பியத்தில், கடவுள் என்னுஞ் சொல் ஆளப்பட்டிருத்தல் காண்க.

ஆரியர் வந்தபின், கடவுட் சமயம் மறைக்கப்பட்டது; கடவுள் என்னும் சொல்லின் பொருளும் குறைக்கப்பட்டது.

5. இந்துமதம் என்னாது தென்மதம் எனல்

(1) இந்து என்பது வடநாடுகளுள் ஒன்றின் பெயரான சிந்து என்பதன் திரிபு. சிந்து = ஓர் ஆறு, அது பாயும் நாடு. சிந்து என்னும் பெயர் பாரசீகத்தில் ஹிந்து எனத் திரிந்தது. பிற்காலத்தில் அதினின்று இந்தியா என்னும் பெயர் கிரேக்கத்தில் தோன்றிற்று. வேத ஆரியர் முதன் முதல் சிந்து வெளியில் தங்கியிருந் ததனால், ஹிந்து என்பது நாளடைவில் நாவலந் தேயம் முழுமைக்கும் பெயராயிற்று. ஆரியர் தம் வேள்வி மதத்தொடு தமிழ மதங்களையும் இணைத்து, அக் கலவையைத் தமதென்று காட்டி, இந்தியா முழுதும் பரவி இந்தியர் எல்லாரும் அக் கலவை மதத்தைத் தழுவும்படி செய்து விட்டதனால், ஹிந்து என்னும் தேசப் பெயர், அத் தேச மக்களையும் அம் மக்கள் மதத்தையும் குறிக்கலாயிற்று. அது தமிழில் இந்து எனத் திரிந்தது.


(2) இந்துமதம் என்பது, ஒரு தனி மதமன்றி ஆரியமும் தமிழமுஞ் சேர்ந்த கலவை மதம்.

(3) இந்துமதத் தெய்வங்களான முத்திருமேனிகளுள், படைப்புத் தொழிலனான நான்முகன்(பிரமன்) என்னும் ஆரியத் தெய் வத்தை, தமிழர் தொடக்கந்தொட்டு ஒப்புக் கொள்ளவில்லை. அவன் சிவனையே ஏமாற்றின படுமோசப் பொய்யன் என்றும், ஓங்காரப் பொருள் தெரியாது முருகனாற் குட்டுப் பட்டவன் என்றும், கதைகள் தோன்றியுள்ளன.

(4) சிவன் என்றும் திருமால் என்றும் இருவேறு பெயராற் குறிக் கப்படும் ஒரே இறைவன், காப்புத்தெய்வ மென்றும் அழிப்புத் தெய்வமென்றும் இருவேறு தெய்வங்களாகக் காட்டப்பட் டுள்ளான்.

(5) முத்தொழில் இறைவனான சிவன் அல்லது திருமால், ஒரே தொழில் தலைவனாகக் குறிக்கப்பட்டுள்ளான்.

(6) ஒரே இறைவனை இருவேறு தெய்வமாகக் காட்டியதால், சிவன் பெரியவனா, திருமால் பெரியவனா என்னும் மதப் போர் மூண்டுள்ளது.

(7) பொய்யும் புரட்டுமான பல கதைகளும் கொள்கைகளும் கூற்றுகளும், ஆரியத் தொன்மங்களிலும் கொண் முடிபியலி லும் மெய்ப் பொருளியலிலும் கூறப்பட்டுள்ளன.

(8) ஆரியன் நிலத்தேவன் என்று உயர்த்தப்பட்டும், தமிழன் 'சூத்திரன்' என்று தாழ்த்தப்பட்டும் உள்ளனர்.

(9) இந்துமதத்தால் தமிழப் பண்பாடு அழிக்கப்படுகின்றது.

(10) இந்துமதத்தால் தமிழ் வழிபாடு எதிர்க்கப்படுகின்றது.

ஆதலால், இனிமேல், சிவநெறியான் தன்னைச் சிவனியன் என்றும், திருமால் நெறியான் தன்னை மாலியன் என்றுமே குறித்தல் வேண்டும். இரு நெறிக்கும் பொதுமை குறிக்க விரும்பின், தென் மதத்தான் அல்லது தமிழ மதத்தான் என்று குறித்தல் வேண்டும்.
இந்து உயர்நிலைப் பள்ளியென்றும், இந்துக் கல்லூரியென் றும், தமிழ்நாடெங்கும் இருக்கும் கல்விநிலையப் பெயர்களைத் தென்னவர் உயர்நிலைப் பள்ளி, தென்னவர் கல்லூரி யென்று மாற்றல் வேண்டும். மூத்த தலைமுறையைச் சேர்ந்த பெரியோர் பெரும்பாலும் அடிமையராயும் பேடியராயும் இருத்தலால், இளந் தலைமுறையைச் சேர்ந்த மாணவரே பெருங் கிளர்ச்சிசெய்து இம்


மாற்றத்தைச் செய்தல் வேண்டும். இந்து என்னுஞ் சொல் ஆரிய அடிமைத்தனத்தைக் குறித்தலால், உரிமைத் தமிழர் அச் சொல்லால் தம்மைக் குறித்தல் பெரு மானக்கேடான செயலாகும்.

முதற்கண், செந்தமிழ்ப் பாண்டிநாட்டின் தென்தலைநகராகிய திருநெல்வேலியில் உள்ள, திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியின் பெயரைத் 'திரவியம் தாயுமானவர் தென்னவர் கல்லூரி' யென்று நெல்லைத் தமிழ மாணவர் மாற்றி, ஏனைக் கல்விநிலைய மாணவர்க்கும் நல்வழி காட்டுவாராக.

6. எல்லா மதமும் தனித்தமிழ் போற்றல்

கடவுள் புறக்கண்ணாற் காணப்படாமையாலும், மதம் மறுமையை நோக்கிய தாதலாலும், மக்கள் மனப்பான்மை பல்வேறு வகைப்பட்டிருப்பதனாலும், உள்நாட்டு மதமென்றும் வெளிநாட்டு மதமென்றும் வேறுபாடு காட்டாது கருத்துவேறு பாட்டிற்கு இடந்தந்து, தனித்தமிழைப் போற்றுவதையே எல்லா மதத்தாரும் கடைப்பிடித்தல் வேண்டும்.

7. தவத்திருக் குன்றக்குடி அடிகள் கடமை

சிறந்த தமிழறிஞராயும் துறவியராயும் தமிழப் பண்பாட்டி னராயும் சீர்திருத்த நோக்கினராயும் ஒரு திருமடத் தலைவராயும் உள்ள, தவத்திருக் குன்றக்குடி அடிகள், தமிழ்நாட்டுச் சிவமடங்களி லேனும், பண்டைக் கடவுட் சமய உருவிலா வழிபாட்டைப் புகுத்த முயல்வார்களாக.

-----------

முடிபுரை யியல்


1. எது தேவ மொழி?

சமற்கிருத வரலாறு

தெற்கே முழுகிப் போன குமரிநாட்டில், தோரா. கி. மு. 50,000 ஆண்டுகட்கு முன், தமிழ் என்னும் உலக முதன்மொழி தோன்றிற்று. அது வடக்குநோக்கிப் பரவித் திரவிடமாகத் திரிந்தது. திரவிடம் வடமேற்கு நோக்கிப் பரவி, ஐரோப்பாவில் ஆரியமாக மாறியது . ஆரியம் ஐரோப்பாவின் வடமேற்கினின்று தென்கிழக்கு நோக்கி வந்து இந்தியாவிற்குட் புகுந்து, வழக்கற்று வடதிரவிடமாகிய பிராகிருதத் தொடு கலந்து வேதமொழியாயிற்று. அதனாலேயே, மேலையாரியத்தில் உள்ள எகர ஒகரங்களை யிழந்தும், அதிலில்லாத டகர ணகரங்களைப் பெற்றும் உள்ளது. வேதமொழி தமிழொடு கலந்து அரைச் செயற்கையான சமற்கிருதம் என்னும் இலக்கிய நடைமொழி (Literary dialect) புணர்க்கப்பட்டது.

சமற்கிருதம் ஓரிடத்தும் ஒருகாலும் ஓரினத்தாராலும் தாய் மொழியாகப் பேசப்பட்டதன்று. அது பிறப்பும் இறப்புமில்லாப் பாவை போன்றது. வேதக்காலத்தில் வடஇந்தியாவில் வழங்கிய மெழிகள் 'பிராகிருதம்' எனப்பட்டன. பிராகிருதம் = முந்திச் செய்யப்பட்டது. ஸம்ஸ்க்ருதம் = பிந்திக் கலந்து செய்யப்பட்டது. இவ் விருபெயரும் உறவியற் சொற்கள் (Relative terms). தமிழையும் 'த்ராவிடீ' என ஒரு பிராகிருத மாக்குவர்.

வேதமொழி வேறு; சமற்கிருதம் வேறு. மேலையர் சமற்கிரு தத்தை அடிப்படையாக வைத்து ஆய்ந்ததனால், தலைகீழான முடிபும் பல தவறான கருத்துங் கொண்டுள்ளனர். இனவெறியும் குமரி நாட்டிலக்கிய அழிவும் இற்றைத் தமிழரின் தாழ்நிலையும் மேலையர் கண்ணை மறைக்கின்றன.

சமற்கிருத வண்ணமாலை

வேத ஆரியர் ஆடுமாடு மேய்க்கும் முல்லை நாகரிக நிலையில் இந்தியா வந்து சேர்ந்தார்கள். வேதம் ஏற்பட்ட பின்பும், நீண்ட நாள் அவர்கள் எழுத்தில்லாதிருந்தனர். அவர்கள் வேதம் வாய்மொழியாகவே வழங்கி வந்ததால், எழுதாக்கிளவியெனப் பட்டது. சமற்கிருதம் தோன்றிய பின்னரே, தமிழ் நெடுங் கணக்கைப் பின் பற்றிய வண்ண மாலை, முன்பு கிரந்த எழுத்திலும், பின்பு தேவநாகரியிலும் அமைக்கப்பட்டது.

சமற்கிருதச் சொற்கள்

(1) சுட்டுச்சொற்கள்

திரவிடத்திற் போன்றே ஆரியத்திலும், சுட்டுச்சொற்கள் அ, இ, உ என்னும் முத்தமிழ்ச் சுட்டெழுத்துகளையே மூலமாகக் கொண்டன.

தமிழ்ச் சுட்டெழுத்துகள் சமற்கிருதத்திற்கு முந்தியவை யென்றும், ஆரியத்தின் மூல மொழியொடு தொடர்பு டையனவென்றும், கால்டு வெலார் தேற்றமாகக் கூறியிருத் தலைக் காண்க.

சமற்கிருதச் சொற்கள், திரிசொற்க ளாதலால், ஓரெழுத்துச் சொல்லாயிராது பலவெழுத்துச் சொல்லாகவே யிருக்கும்.

எ-டு : அதஸ் = அது, அப்படி, அங்கே.

இஹ = இங்கே, இவ்விடத்தில், இவ்வுலகில்.
சில சுட்டுச்சொற்கள் இடமாறிச் சுட்டும்.

எ-டு : அத்ர = இங்கே, அதுனா = இப்பொழுது.
சில சுட்டுச்சொற்கள் சேய்மையண்மை யிரண்டையும் சுட்டும்.

எ-டு : அத்தஸ் (atas) = அதனால், இதனால்
இகரச் சுட்டு ஏகார மாகவும் திரியும்.

எ-டு : ஏதத் (etad) = இது, இங்குள்ளது, இங்கு.

ஏவம் = இப்படி


(2) பொதுச்சொற்கள்

எ-டு :

அக்கை
தமிழ் சமற்கிருதம் தமிழ் சமற்கிருதம்
அக்கா
அடவி
அடவீ (t)
அம்-அம்பு,ஆம்
அம்பு, அப்
அம்பலம்
அம்பர
அம்மை
அம்மா, அம்பா
அரசன்
ராஜன்
ஆணி
ஆணி
ஆம் (yes)
ஆம்
இடைகனி
தேஹலி
உண்ணம்
உஷ்ண
உத்தரம் (வடக்கு)
உத்தர
உம்பர்
உபரி
உரு-உருவு -உருவம்
ரூப
உலகு-உலகம்
லோக
உவமை
உபமா
ஏமம்-யாமம்
யாம
கடுகு-கடுகம்
கடுக (t)
கரணம்
கரண
கரு-கரும்

-கருமம்
கர்மன்
கலுழன்
கருட (g)
கன்னி
கன்யா
கன்னிகை
கன்யகா
காக்கை
காக்க
காயம்
ஆகாச
கால்-காலம்
கால
காளம்(கருப்பு)
கால
காளி
காலீ
குடும்பு-குடும்பம்
குடும்ப (t)
குண்டம்
குண்ட
கும்பம்
கும்ப (bh)
கோ (ஆ)
கோ (g)
கோபுரம்
கோபுர (g)
சகடம்
சகட (t)
சங்கு-சங்கம்
சங்க (kh)
சமம்-சமர் -சமரம்
சமர
சவம்
சவ
(அமை-அவை-) சவை
சபா (bh)
சுட்கு-சுக்கு
சுஷ்க
(உவண்-உவணம்-) சுவணம்
ஸு பர்ண
தக்கு-தக்கணம்
தக்ஷிண
தண்டு-தண்டம்
தண்ட
தயிர்
ததி (dh)
தாமரை
தாமரஸ
தா-தானம்
தான
திடம்
த்ருட (dh)
திரு
ச்ரீ, ஸ்ரீ
துருவு
த்ரு
துலா
துலா
தூண்-தூணம்
ஸ்தூணா
தூணி
த்ரோண
தூது-தூதன்
தூத
(துகள்-தூள் -) தூளி
தூலி (dh)
தோணி
த்ரோணி
நகர்-நகரம்
நகர(g)
(நடி-நடம்-)

நட்டம்
ந்ருத்த
நாகம்
நாக(g)
(நளி-நடி)

நாடகம்
நாடக (t)
நாடி (pulse)
நாடி
நாவி-நாவாய்
நௌ
நாழி
நாடி
நாழிகை
நாடிகா
நிலை-நிலையம்
நிலய
நீர்-நீரம்
நீர
நீல்-நீலம்
நீல
பகு
பஜ் (bh)
பகு-பக்கம்
பக்ஷ
பகு-பாகம்
பாக (bh, g)
படி-படிமை
ப்ரதி - ப்ரதிமா
பதி-பதம்
பத (foot)
பழு-பழம்
பல (ph)
பள்-பள்ளி பல்லி
பதம்-பாதம்
பாத
பல்லி
பல்லீ
பலகை
பலக (ph)
(பிண்டி-பிடி)

பிண்டம்
பிண்ட
புகு (உண்)
புஜ் (bh)
புடவி
ப்ருத்வீ
புருவம்
ப்ருவ (bh)
புழல்-புடல்- புடலை
பட்டோலிகா
பூ-பூதம்
பூத (bh)
(element)
பூது-பூதம்
பூத (bh)
(demon)
புழுதி - பூதி
பூதி (bh)
(சாம்பல்)
பெட்டி
பேட்டீ
பெட்டகம்
பேட்டக
பெருகு
ப்ருஹ் (b)
பொத்தகம்
புஸ்தக
மண்டு- மண்டபம்
மண்டப
மண்டு-

மண்டலம்
மண்டல
மண்ணி-மணி
மணி
மத்தம் மத்த. மத்தளம்
மர்தல
மத்து
மந்த (th)
மதி
மதி (t)
மயிர்
ச்மச்ரு
மயில்
மயூர
முன்-முன்னம் -முனம்-மனம்
மனஸ்
மா (அள)
மா
மாத்திரம்
மாத்ர
மாத்திரை
மாத்ரா
மதி-மாதம்
மாஸ
முய-மய-மயல்-

மால்-மாலை
மாலா
மா-மானம்
மான
மின்-மீன்-மீனம்
மீன
முகு-முகம்
முக (kh)
முத்து-முத்தம்
முக்த
மெது
ம்ருது
மேழம்-மேடம்
மேஷ
வள்-வட்டு -வட்டம்
வ்ருத்த
வடை
வடா
(பதி-) வதி
வஸ்
வலம்
பல (b)
வள்-வளை- வளையம்
வலய
விள்-விட்டை
விஷ்டா (th)
விடை வ்ருஷ,
வ்ருஷப (bh)


இச் சொற்கட் கெல்லாம் வேரும் மூலமும் தமிழிலேயே உள்ளன. வடமொழி தேவமொழியாதலாற் கடன் கொள்ளா தென்னும் ஏமாற்றும், வடமொழித் தென்சொற்கட்குப் பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த்தலாகவும் வேறு மூலங்காட்டுவதும், இக்காலத்திற்கு ஏற்கா.

தமிழ் ஆரியத்திற்கு மூலம் என்பதை நாட்டற்கு 'தா' என்னும் சொல் ஒன்றே போதிய சான்றாம். தா - ச. தா, தத் (dad), இலத். தோ, கிரேக், திதோ.

இச்சொல் தமிழில் தொன்றுதொட்டுப் பெருவழக்காயிருந்து வருவதுடன்,


"ஈதா கொடுவெனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகியட னுடைய."
(தொல். எச். 48)
"அவற்றுள்,
ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே."
(தொல். எச். 49)
"தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே."
(தொல். எச். 50)
"கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே."
(தொல். எச். 51)
"தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த."
(தொல். கிளவி. 29)
என்னும் வரம்புகட் குட்பட்ட சிறப்புப் பொருளதாயும், தா என்னும் தந்தை பெயராயும் உள்ளது. கன்னடத்திலும் மலையாளத்திலும் போன்றே ஆரியத்திலும் பொதுப் பொருளில் வழங்குவதால், அவ்வாரிய மொழிகள் தமிழினின்று இச் சொல்லைக் கடன் கொண்டுள்ளன என்பது, தெரிதரு தேற்றமாம்.

ஒரே தென்சொல் முதனிலையினின்று திரிந்த திரிசொற்கள், சமற்கிருதத்தில் வெவ்வேறு முதலெழுத்துப் பெற்று வெவ்வேறு மூலத்தினபோல் தோன்றுகின்றன.

எ-டு : சாய் (முதனிலை). சாய்தல் = பேணுதல், வளைதல்,விழுதல், படுத்தல், இறத்தல்

சாயுங் காலம் = பொழுது சாயும் ஏற்பாடு. பொழுது சாய வந்தான் என்னும் வழக்கை நோக்குக.

சாயுங் காலம் - சாயங் காலம் - சாய்ங்காலம் (கொச்சைத் திரிபு).

வடமொழியாளர் சாயங்காலம் என்பதைச் சாயம் + காலம் எனத் தவறாகப் பிரித்து, சாயம் என்பதை ஏற்பாட்டின் பெயராகக் கொண்டு, அதை வடமொழியில் ஸாயம் என்று குறித்துள்ளனர்.


சாய்-சாயை = சாயும் நிழல். சாய்கிறது என்பது வழக்கு. சாயை - ச. சாயா (chaya). நிழல் வடிவத்தையும் நிறத்தையும் குறிக்குமாதலால், சாயல், சாயம் முதலிய சொற்களும் தோன்றியுள்ளன.

சாய் - சாயி = படுத்தவன், பள்ளிகொண்டான். சேஷசாயி = அரவணைத் துயின்றோன். தலை சாய்த்தல் என்னும் வழக்கை நோக்குக. சாய் - சயனம் = படுக்கை.

சாய் - சா. விழுதலும் படுத்தலும் இறத்தலையுங் குறிக்கும். சா -சாவு - சவம். ஆள் சாய்ந்துவிட்டான் என்னும் வழக்கை நோக்குக.

சில தென்சொற்களினின்று, ஒத்த பொருட்கரணியமுள்ள வேறொரு சொல்லையும் படைத்திருக்கின்றனர் வடமொழியாளர்.

எ-டு :

சுள் - சுர் - சுரம் = சுடும் பாலைநிலம்.
சுரம் - ஜ்வர = சுடும் காய்ச்சல் நோய்.
சில தென்சொல் முதனிலைகளினின்று, ஏராளமான பூதுச் சொற்களைத் தோற்றுவித்துச் சமற்கிருதத்தைவளம்படுத்தியுள்ளனர்.

எ-டு : பூ (முதனிலை). பூத்தல் = தோன்றுதல், உண்டாதல்,இருத்தல்.

"பூத்தலிற் பூவாமை நன்று" (நீதிநெறி. 6)

"பூத்திழி மதமலை" (கம்பரா. கும்பகர். 315)


புகு - பொகு - பொகில் = அரும்பு.

பொகில் - போகில் = அரும்பு.

புகு - போ - போத்து = புதிதாய் வெடிக்கும் சிறு கிளை.

பூ - பூது - பூதம் = தோன்றிய ஐம்பூதங்களுள் ஒன்று (any of the
five elements).
பூ - bhu. இதினின்றுதான் புவனம், புலி, பூதி, பூமி, பவம், பவனம், பவித்ரம், பவிஷ்யம், பாவம், பாவகம், பாவி, பாவனை, பாவிகம், அபாவம், அனுபவம், அனுபவி, அனுபூதி, உத்பவம், சம்பு, தத்பவம், ப்ரபு, ப்ரபாவம், பரிபவம், ஸம்பவம், ஸம்பாவிதம், ஸம்பாவனை, சுயம்பூ முதலிய நூற்றுக்கணக்கான சொற்கள் பிறக்கும். தமிழர்க்கு எளிதாய் விளங்குமாறு இவை இங்கு இயன்றவரை தமிழெழுத்தில் எழுதப் பட்டுள்ளன.

சில தென்சொற்கள் திரிந்தும் முன்னொட்டுப் பெற்றும் உருமாறி வடசொற்களாகி யுள்ளன.

எ-டு : ஆயிரம் - அஸ்ரம் - அஸ்ரம் - ஸகஸ்ர.

சில தென்சொற்கள் மேலையாரிய வழியாகத் திரிந்து, நம்பமுடியா அளவு சமற்கிருதத்தில் முற்றும் வடிவு மாறியுள்ளன.

எ-டு : Teut, kun, ken, con, cun, can, know, L.gno, GK. gno, Skt. jna. (ஜ்ஞா) காட்சி
(அறிவு) = ஜ்ஞான.

சில தென்சொற்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்து அமைத்துள்ளனர்.

எ-டு : விலங்கு - த்ரியச்,
அங்குற்றை - தத்ரபவத்.

சமற்கிருதம் இலக்கிய மொழியும் செயற்கை மொழியுமாத லால், பல பொருள்கட்கும் பொருட் பாகுபாடுகட்கும் விருப்பம் போல் இடுகுறிச் சொற்களைப் படைத்துள்ளனர்.

எ-டு : எழுமுகில் (ஸப்த மேகம்) : சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலா வர்த்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவர்ணம் என்பன.
சங்கராபரணம், நாதநாமக்கிரியை முதலிய நூற்றுக்கணக் கான பண்ணுப் பெயர்களும் இடுகுறிச் சொற்களே.

கல்லால மர நீழலிற் சிவபெருமானிடம் பாடங்கேட்ட ஆரிய முனிவர் பெயராகச் சொல்லப்படும் சனகர், சனந்தனர், சனாதரர், சனற் குமாரர் என்பனவும் இத்தகையனவே.

இங்ஙனம், சமற்கிருதத்தில் ஐந்தி லிருபகுதி முழுத் தமிழ்ச் சொல்; ஐந்திலிருபகுதி தமிழ் வேரினின்று திரிந்த திரிசொல்; ஐந்தி லொரு பகுதி இடுகுறிச்சொல்.

பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாதையர், தாம் வரைந்த குறுந்தொகை யுரையுள், நூலாராய்ச்சி என்னும் தலைப்பின்கீழ், 44 சொற்களை வடசொல்லைக் காட்டி, 'முதலியன' என்னுஞ் சொல்லால் முடித்து, "இவற்றிற் சிலவற்றைத் தமிழெனவே கொள் வாரும் உளர்" என்று எழுதியிருக்கின்றார்.

அவற்றுள் அகல், அமயம், அமிழ்தம், அரசன், அவை, ஆரியர், உலகம், ஏமம், கடிகை, கலாவம், காமம், காலம், குணன், குவளை, சகடம், சூலி, சேமம், சேரி, தண்டு, தாது, தூது, தெய்வம், நகர், நீலம், பக்கம், பணிலம், பருவம், பவழம், மண்டிலம், மணி, மதம், மதி, மாலை, முகம், முத்து, முரசு, யாமம் என்னும் முப்பத் தேழும் தென் சொல்லாம்.

சாமிநாதையர்க்குத் தமிழ் தவிர வேறொரு மொழியும் தெரி யாது. அவர் தமிழாலேயே வளர்ந்து தமிழாலேயே வாழ்ந்தவர். ஆயினும், பிறப்பிலேயே அமைந்த ஆரிய நச்சுத்தன்மை அவரை


விடவில்லை. பணிலம் என்னும் சொல் வடமொழி அகரமுதலி களில் இல்லை. தென்சொல்லை வடசொல்லாகக் காட்டுவதில் தலைசிறந்த சென்னைப் ப.க.க. தமிழ் அகரமுதலியும், அச் சொல்லை வடசொல்லாகக் குறிக்கவில்லை. அங்ஙனமிருந்தும், சாமிநாதையர் எங்ஙனம் வடசொல்லாகக் கண்டாரென்று தெரிய வில்லை. அவர் தமிழுக்கு மாபெருந் தொண்டு செய்தார் என்பது உண்மையே. ஆயின், அவர் முன்னோரான பிராமணர் தமிழுக்கு மாறாகச் செய்த வழுவாயின் ஆயிரத்திலொரு கூற்றிற்குக் கூட, அது கழுவாயாக வில்லையென்பதை அறிதல் வேண்டும்.

அவி - அவிழ் = சோற்றுப் பருக்கை, சோறு. அவிழ் - அவிழ்து -அமிழ்து - அமிது - அமுது = சோறு, உணவு. பருப்பமுது, கறியமுது, தயிரமுது, இலையமுது என்பன உண்ணுங் கறிவகைகளைக் குறிக்கும் கல்வெட்டுச் சொற்கள்.

அமுது செய்தல் = உண்ணுதல். அமுது படைத்தல் = உணவு பரிமாறுதல். திருவமுது = தெய்வப் படிமைக்குப் படைக்கப்படும் உணவு.

அமிழ்து - அமிழ்தம். அமுது -அமுதம்.

கட்டிப் பொருளாயினும், நீர்ப் பொருளாயினும், உண்ணப் படுவதெல்லாம் அமுதமாம். உணவிற்குச் சுவையூட்டும் உப்பும் அமுதம் எனப்பட்டது.

அமுது - 1. சோறு. 2. உணவு. "வாடா மலரும் நல்லமுதும்" (ஞானவா. பிரகலா. 8). 3. பால் (அக. நி.) 4. நீர். (பிங்.).

அமுதம் = 1. சோறு (பிங்.) 2. பால் (பிங்.) 3. நீர்

"துலங்கிய வமுதம்" (கல்லா. 5).

உண்டவன் வாழ்வான்; உண்ணாதவன் சாவான். சோறும் நீரும் சாவைத் தவிர்ப்பதால் இருமருந் தெனப்படும்.

தயிர் அமுதம் எனப்படுவதால் வெண்ணெயும் அமுதமாம்.

தேவர் மக்களினும் உயர்ந்தவராதலால், அவருணவு சிறந்த தாகக் கருதப்பட்டது.

"ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
வானோ ரமுதம் புரையுமால் எமக்கென" (தொல். கற். 5)
அமுதம் என்னுஞ் சொல் வடமொழியில் அம்ருத என்று திரியும். அதை அ + ம்ருத் என்று பிரித்துச் சாவைத் தவிர்ப்பது என்று பொருள் கொண்டு, அதற்கேற்பத் தேவரும் அசுரரும் கூடித்


திருப்பாற்கடல் கடைந்து வெண்ணெ யெடுத்ததாகக் கதை கட்டி விட்டனர். அக் கதையிற் பகுத்தறிவிற் கொவ்வாத பல செய்தி களிருத்தல் காண்க.

வேதப் பெயர்கள்

வேதமொழியிலும் சமற்கிருதத்திலும் நூற்றுக்கணக்கும் ஆயிரக் கணக்குமான தமிழ்ச்சொற்கள் இருப்பதுடன், வேதத்தின் பெயர்களும் தென்சொல் திரிபாகவே உள்ளன.

விழித்தல் = கண் திறத்தல், பார்த்தல், அறிதல். விழி = அறிவு,

ஓதி (ஞானம்).


"விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்" (திருமந்.)
விழி - L. vide, OS. wit, Goth. wit. ON. vit, Skt. வித் - வேத =அறிவு,
அறிவுநூல், மறை.

செவியுறுதல் = கேட்டல். செவியுறு - ச்ரு - ச்ருதி = கேள்வி,
எழுதாக் கிளவியாய்க் கேட்டறியப்பட்ட ஆரிய மறை.

வேதப் பிரிவின் பெயரான மண்டலம் என்பதும் தென் சொல்லே.

மண்டுதல் = வளைதல். மண்டு - மண்டி. மண்டியிடுதல் = காலை வளைத்து நிற்றல் அல்லது இருத்தல். மண்டு - மண்டலம் = வட்டம், நாட்டுவட்டம், காலவட்டம், வட்டமான பொருள், நூற்பிரிவு. மண்டலம் - மண்டிலம். என் 'வடமொழி வரலாறு' பார்க்க.

"மூன்றன் பகுதியும் மண்டிலத் தருமையும்" (தொல். அகத். 41)
தொண்டைமண்டலம், கொங்குமண்டலம் என்பன தொன்மையான நாட்டுப் பெயர்கள்.

மண்டலம் - மண்டலி. மண்டலித்தல் = வட்டமிடுதல், பாட்டின் எல்லா அடிகளும் அளவொத்திருத்தல்.

"மண்டிலம் குட்டம் என்றிவை யிரண்டும்" (தொல். செய். 116)
வட்டமிடும் அல்லது வட்டமாயிருக்கும், பாம்பு, நச்சுப்பூச்சி முதலிய உயிரிகளும், நரப்பிசைக் கருவிகளும், மண்டலம் அல்லது மண்டலி எனப் பெயர் பெற்றுள்ளன.

மந்திரம் முதன் முதலாகத் தோன்றியது தமிழிலேயே.

"மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும்" (தொல். எச்ச. 53)

மந்திரம் என்னும் சொல் வரலாற்றைப் பக்கம் 76-ல் காண்க.

முற்றத் துறந்த முழு முனிவர் தம் தூய வுள்ளத்தின் எண்ண வலிமையால் ஆய்ந்து கூறும் மெய்ம்மொழி, நிறைமொழி மாந்தரின் நிறைவேறுங் கூற்று.

மந்திரம் வாய்மைபற்றியும் வாய்ப்பது பற்றியும் வாய்மொழி யெனவும் படும்.

சிவனியச் சார்பான திருமந்திரமும் மாலியச் சார்பான திருவாய் மொழியும் தமிழில் உள்ளன.

தத்துவமசி

ஓகநிலைக்குரிய 'தத்துவ மசி' என்னும் சொற்றொடரைப் பெருங் கூற்றியம் (மகா வாக்கியம்) என்று வடமொழியாளர் பறை யறைவர். அது முற்றும் தென்சொற் றிரிபென்பதை அவர் அறியார்.

தத் + த்வம் + அஸி = தத்த்வமஸி.

தான், தாம் என்னும் பெயர்கள், முதற்காலத்தில் ஒருமையும் பன்மையுங் குறித்த படர்க்கைச் சுட்டுப்பெயர்களாக விருந்து, அகர வடி கொண்ட ஐம்பாற் படர்க்கைச் சுட்டுப்பெயர்கள் தோன்றிய பிற்காலத்தில், தற்சுட்டுப் பெயர்களாக (Reflexive Pronouns) மாறின.

தான் (அவன், அவள், அது.) - ச. தத் = அவன், அவள், அது.

ஒ.நோ : திருமகன் - திருமான் - ச. ஸ்ரீமத். OE., thae E. that

ஊன், ஊம் என்னும் முன்னிலைப் பெயர்கள், நூன், நூம் என்று நகர மெய்ம்முதல் பெற்று, பின்னர் நீன், நீம் எனத் திரிந்தன.

நூன், நூம் என்பன, வடதிரவிடத்துள் ஒருவகையான சூரசேனிப் பிராகிருதத்தில் தூன், தூம் என்று திரிந்து, இன்று அதன் வழிப்பட்ட இந்தியில் தூ, தும் என்று வழங்குகின்றன.

தூ (நீ) என்னும் இந்தி வடிவமே, இயல்பாகவும் குறுகியும் மேலை ஆரிய மொழிகளில் வழங்குகின்றது.

OE, OS. thu, OHG. du, ON. thu, Goth. thu, L. tu, E. thou.

ஏன், ஏம் என்பவற்றிற்கும் நான் நாம் என்பவற்றிற்கும் இடையே, யான் யாம் என்பவை இருப்பதுபோன்றே, ஊன் ஊம் என்பற்றிற்கும் நூன் நூம் என்பவற்றிற்கும் இடையே, யூன் யூம் என்பனவும் இருந்தன.

இவ் யகர அடியினின்றே ஆங்கில சாகசனீயம் யீ (ye) அல்லது யூ (you) என்னும் முன்னிலைப் பன்மைப் பெயரைத் தோற்றியுள்ளது.

மதிப்புறவுபற்றித் தும் என்னும் பன்மைப் பெயரை இந்தியும், யூ என்னும் பன்மைப் பெயரை ஆங்கிலமும், ஒருமைக்கு வழங்குவது போல், வேத ஆரியமும். தும் என்னும் பன்மைப் பெயரைத் த்வம் என்று திரித்து ஒருமைக்கும், யுவாம் யூயம் என்னும் யகரவடிப் பெயர்களை முறையே இருமை பன்மைக்கும் வழங்கிற்றுப் போலும்.

ஆகவே, நூம் என்னும் முன்னிலைப் பன்மைப் பெயரின் திரிபே, இந்திய ஆரியத்திலுள்ள த்வம் என்னும் முன்னிலை யொருமைப் பெயர் என்று கொள்ளப்படும்.

அஸ் என்னும் சொல் வரலாற்றைக் கைலாஸ என்னும் சொல் வரலாற்றிற் காண்க. (ப. 67).

சமற்கிருத முன்னிலை யொருமை நிகழ்கால வினையீறு 'ஸி'. அஸ் என்னும் வினை இதனொடு புணரும்போது ஈறு கெட்டு அஸீ என நிற்கும். ஆகவே, தத், த்வம், அஸி என்னும் முச் சொல்லும் சேர்ந்து, நீ அதுவா யிருக்கின்றாய் என்று பொருள்படும் 'தத்த்வமஸி' என்னும் கூற்றியம் அமையும்.

தத் என்னும் சுட்டுப்பெயரினின்றே தத்வ (தத்துவம்) என்னும் சொல்லும் பிறக்கும்.

தத்வ = அதாயிருக்கும் தன்மை, உண்மையான தன்மை, உண்மை, மெய்ப்பொருள்.

வடசொல் என்பதற்கும் சமற்கிருதச் சொல் என்பதற்கும் ஒரு வேற்றுமை யுண்டு. தொன்றுதொட்டு வடநாட்டில் தனிச் சிறப்பாக வழங்குஞ் சொல்லெல்லாம் வடசொல்லே. சமற்கிருதச் சொல் என்பது, வேத ஆரியர் வந்தபின் புதிதாக அமைக்கப்பட்ட ஆரியச் சொல். ஆரியர் வரு முன்பே, வடதிரவிடர் (பிராகிதர்) பல புதுச் சொற்களைப் புனைந்திருந்தனர். அவையும் வடசொல். ஆகவே, வடசொல் என்னும் பெயர், ஆரிய மல்லாத வடநாட்டுச் சிறப்புச் சொற்கும், சமற்கிருதச் சொற்கும் பொதுவாம். எல்லாச் சமற்கிருதச் சொல்லும் வடசொல்லாகும்; ஆயின், எல்லா வடசொல்லும் சமற்கிருதமாகா.

ஆதி என்னும் சொல் வடசொல்லே; சமற்கிருதமன்று. இக் கருத்தில்தான் அது என் 'திருக்குறள் தமிழ் மரபுரை'யில் வட சொல்லென்று குறிக்கப்பட்டுள்ளது. அது கழக இலக்கிய வழக்கில் இல்லை. ஆயினும், உண்டாதல் என்னும் பொருள்கொண்ட ஆதல் வினையியின்று அதைத் திரிப்பர் தமிழன்பர் சிலர்.

ஆக்குதல் = படைத்தல். "அனைத்துலகும் ஆக்குவாய் காப் பாய் அழிப்பாய்" (திருவாச. 1 : 42). இவ் வாட்சி அவர்க்குத் துணை செய்யலாம்.

சமற்கிருத இலக்கணம்

தமிழிலக்கணத்தைப் பின்பற்றிச் சமற்கிருதத்தில் முதன் முதலாகத் தோன்றிய இலக்கணம் ஐந்திரம். அதன் காலம் தோரா. கி.மு. 8ஆம் அல்லது 9ஆம் நூற்றாண்டாகும். அதன்பின், கி.மு. 4ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது 'அஷ்டாத்யாயீ' என்னும் பாணினீயம். இரண்டும் எழுத்தும் சொல்லும் ஆகிய இரு கூறுகளையே கொண்டன.

எழுத்தின் முறை, பிறப்பு, உயிர்மெய்த் தனிவடிவம், மாத்திரை, கிளவி(பதம்), புணர்ச்சி ஆகியவற்றில், சமற்கிருத இலக்கணம் தமிழையே தழுவியுள்ளது. எழுத்தின் வரிவடிவும், கிரந்தம் நாகரி என்னும் இருவகையிலும் பெரும்பாலும் தமிழை ஒத்திருப்பது, கூர்ந்து நோக்குவார்க்குப் புலனாகும்.

பெயர் வினை இடை என்னும் தமிழ்ப் பாகுபாட்டையே, சமற்கிருதச் சொல்லிலக்கணமும் தழுவியுள்ளது. வேற்றுமைகள் இலத்தீனில் ஐந்து; கிரேக்கத்தில் ஆறு; சமற்கிருதத்தில் தமிழிற் போல் எட்டு. இதனால், வேற்றுமையமைப்பில், சமற்கிருதம் தமிழைப் பின்பற்றிய தென்பது வெளிப்படை.

சமற்கிருத இலக்கியம்

பதினெண் தொன்மங்களும் (புராணங்களும்) இராமாயணம் பாரதம் ஆகிய மறவனப்புகளும் (இதிகாசங்களும்) தவிர, இசை, நாடகம், கணியம், மருத்துவம் முதலிய பிற கலை யறிவியல் இலக்கியமெல்லாம் தமிழ் முதனூல்களின் வழிநூல்களாம். சமற்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டபின், தமிழ் முதனூல்களெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன.

சமற்கிருதத்திற்கு முந்திய இந்திய ஆரிய இலக்கியம் வேதம் ஒன்றே. வேதத்தைப் பெண்டிரும் சூத்திரரும் ஓதக்கூடா தென்பர். ஆயின், பெண்டிரும் சூத்திரரும் சிலர் வேத மந்திரங்களையே இயற்றியிருக்கின்றனர்.

வேதம் இயற்றிய பெண்டிர்

புலோமனை மகள் ஷசி
காமை மகள் சிரத்தை
சக்தி மகள் கோரவி
அப் பிரீனா மகள் வாக்கு
அகத்தியர் மகள் லோபா முத்திரை

வேதம் இயற்றிய பழங்குடி மக்கள்

அரசர் (சத்திரியர்) : மந்தாத்திரி, ஷிவி, வசுமனான், பிரதர்த்தனன், விஸ்வாமித்திரன், மது சந்தனன், ரிஷபன், ரேணு, அம்பரிஷன், பரதன், மேதாநிதி, நாபகன், இரகுகணன், வக்ஷப்பிரியன், புரூரவன், வேனன், சுதாசன், கிருதசமதன், தேவாபி, சந்தானு முதலியோர்.

தொழிலாளர் (சூத்திரர்) : கவஷன், ஐலுஷன் முதலியோர்.

கலப்புக் குலத்தார் : கக்க்ஷீவது (அங்கநாட்டு அரசனின் புழுக்கச்சி மகன்) போன்ற பலர்.

இப் பெயர்கள் வருண சிந்தாமணியில் உள்ளவாறே எழுதப்பட்டுள்ளன.

ஆரியர் கருத்துப்படி, வடநாட்டு மக்களே பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வகைப் பாகுபாட்டினர்; தென்னாட்டுத் தமிழரும் திரவிடரும் ஆகிய அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் அனைவரும் சூத்திரரே. ஆயின், ஆட்சி செய்யும் அரசரைச் சத்திரியர் என்றும், பொருள் கொடுக்கும் வணிகரை வைசியர் என்றும் புகழ்வர். இது அதிகாரமும் பொருளும் செய்யும் வேலை. வேள்வி செய்வித்த பண்டை மூவேந்தரையும் சத்திரியர் என்று புகழ்ந்தே வேள்வி செய்விக்கத் தூண்டினர்.

வேதத்தின் பின் வேள்விமுறைகளை விளக்கும் பிரமாணங் களும், ஆரியர் தமிழரோடு தொடர்புகொண்டபின் உபநிடதங் களும் குல வொழுக்க நூல்களாகிய தரும சாத்திரங்களும் தோன்றின.

வேதம் செய்யுள் வடிவான மந்திரங்களைக் கொண்டது. முதன் முதல் தோன்றியது இருக்கு (ருக்) ஒன்றே. வேள்வி செய்தற் குரிய மந்திரங்களை அதினின்று பிரித்துத் தொகுத்தது எசுர் (யஜு ர்). வேள்வியிற் பாடக்கூடிய மந்திரங்களைப் பிரித்துத் தொகுத்தது சாமம் (ஸாம). இங்ஙனம் ஒரு வேதம் மூவேதம் (வேதத்ரயீ) ஆயிற்று. அதன்பின் ஆறிலொரு பகுதி இருக்குவேத மந்திரங் களைக் கொண்டதும், பெரும்பாலும் சாவிப்பு மந்திரங் களாலானதும், உரைநடை கலந்ததுமான, அதர்வணம்(அதர்வண்) தோன்றிற்று. அதன் பின்னரே நான்மறை(சதுர்வேத) என்னும் வழக் கெழுந்தது.

வேதக் காலத்தின் பின், வேத சாத்திரங்களின் பொருளையும் பயனையும் சிறப்பையும் பெரும்பாலும் உரைநடையில் விளக்கும் உரையாகத் தோன்றியவை பிராமணம். காடுறைவு(வானப்பிரத்த) நிலையிற் பிராமணனுக்குப் பயன்படும் கொண்முடிபு நூல்கள்

ஆரணியகம்(ஆரண்யக). துறவு(சந்நியாஸ) நிலையிற் பிராமண னுக்குப் பயன்படும் மெய்ப்பொருள் நூல்கள் உபநிடதம் (உபநிஷத்).

உபநிஷத் = உடன் கீழிருக்கை. உப = உடன், நி = கீழ், ஸத் (sad) = இருத்தல். ஆசிரியன் அடியருகிருந்து அவன் நுவற்சியைக் கேட்டல் என்பதே விளக்கப் பொருள். பரம்பொரு ளறிவால் அறியாமையை ஓய்ந் திருக்கச் செய்கை என்பர் வடமொழியாளர். "நன்கு அழித்தற்கு ஸாதனம்" என்பர் பர். (P.S.) சுப்பிரமணிய சாத்திரியார்.

வேதத் தெய்வியம் பல்தெய்வியமே (Polytheism). பல்லொரு தெய்வியம் (Homotheism) என்று மாக்கசு முல்லரும், ஒருதெய்வியம் (Monotheism) என்று மாகடானெலும் (MacDonell) கூறியது தவறாம். ஆரியர் பரம்பொருளறிவைத் தமிழரிடமே பெற்றனர். பல்சிறு தெய்வ வேள்வி மதத்திற்கும் பரம்பொருட் சமய மதத்திற்கும் மடுவிற்கும் மலை முடிக்கும் உள்ள தொலைவே.

ஸத் என்னும் சொல்லும் தென்சொல் திரிபே.

குத்து - குந்து. L. sid, sed, AS. sitt, E.siit, Goth. sit, ON. siti, OHG. sizz, Skt. sad.

கி. பி. 5ஆம் நூற்றாண்டிற்குப் பின், கோவிலமைப்பு, படிமை யமைப்பு, வழிபடுமுறை, பூசகன் தகுதி, கொண்முடிபு முதலிய வற்றைக் கூறும் தொழுமறைகள் தோன்றின. அவற்றுள், சிவனியத் திற்குரியவை தோன்றியம்(ஆகமம்) என்றும், மாலியத்திற் குரியவை தொகுப்பியம்(ஸம்ஹிதை) என்றும், காளியத்திற்கு(சாக்தத்திற்கு) உரியவை பாவகம்(தந்திரம்) என்றும் பெயர் பெறும்.

இந்திய ஆரிய வளர்ச்சியின் ஐந்நிலைகள்

(1) வடுகம்(தெலுங்கு)
(2) வடதிரவிடம்(பிராகிருதம்)
(3) மேலை யாரியம்(தியூத்தானியம், இலத்தீனம், கிரேக்கம்)
(4) வேதமொழி
(5) சமற்கிருதம்

இந்திய ஆரியத்தில் தென்சொற்கள் கலந்த முக்காலம்

(1) வடதிரவிடக் காலம்
(2) வேதமொழிக் காலம்
(3) சமற்கிருதக் காலம்


தென்மொழிக்கும் வடமொழிக்கும் வேறுபாடு

தென்மொழி வடமொழி

(1) அயன் மொழி திரிமொழி

(2) மெல்லோசை மொழி வல்லோசை மொழி

(3) உலக முதன் மொழி
(இந்தைரோப்பிய
மொழிக் குடும்பத்தின்
தொடக்க முனை). மேலை யாரியத்தின் பின்
தோன்றிய மொழி
(இந்தைரோப்பிய மொழிக்
குடும்பத்தின் இறுதிமுனை).

(4) தூய ஓரினத் தாய்மொழி ஈரினக் கலவை மொழி

(5) குமரிநாட்டு மொழி தனக்கென ஓர் இடமில்லாத
நாடோடி மொழி

(6) கலையும் அறிவியலும்
பற்றிய முதலிலக்கிய
மொழி அறிவியலும் பற்றிய கலையும்
வழியிலக்கிய மொழி


(7) உள்ளது சொல்லும்
மெய்ந்நூன் மொழி இல்லது சொல்லி ஏமாற்றும்
பொய்ந்நூன் மொழி

(8) கடவுள் வழிபாட்டுமொழி சிறுதெய்வக் கொலைவேள்வி
மொழி

(9) இயற்கைப் பான்மொழி செயற்கைப் பான்மொழி

(10) செம்மை வரம்பு மொழி செம்மை வரம்பிலா மொழி

(11) பொருளிலக்கணம்
மொழி பொருளிலக்கணம் இல்லா
உள்ள மொழி

(12) மன்பதை முழுவதையும்
ஒன்றுபடுத்தும் மொழி ஓரினத்தையே நாற்பிறவிக் குல
மாகப் பிரிக்கும் மொழி

(13) பேச்சு மொழி இலக்கிய மொழி

(14) மக்கள் மொழியென்று
ஒப்பு மொழி தேவமொழி யென்று ஏமாற்று மொழி
தேவமொழியின் இயல்புகள்

தொன்மை, முன்மை, இயன்மை, வியன்மை, தாய்மை, தூய்மை, எண்மை, ஒண்மை, இளமை, வளமை, அம்மை, செம்மை, இனிமை, தனிமை, மறைமை, இறைமை என்னும் பதினாறும் தேவமொழிக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத பண்புகளாம்.

இப் பதினாறும் உடையது தமிழ் ஒன்றே. வடமொழிக்கு ஓரிரு பண்புகள் உள்ளன.

தமிழைப்போற் பிறமொழி கலவாது பேசத்தக்க மொழி உலகில் வேறொன்றுமில்லை. ஆரிய மொழிகள் பிற தமிழ்ச்சொற்களை விலக்கினும், சுட்டுச்சொற்களை விலக்கவே முடியாது. ஆதலால், அவற்றின் உயிர்வாழ்விற்குத் தமிழ்த்துணை இன்றியமை யாததாம். ஆகவே, தமிழே தேவமொழி என்றும், சமற்கிருதம் இழிமொழி (நீச பாஷை) என்றும், தெற்றெனத் தெரிந்து கொள்க.

2. பிராமணன் நிலத்தேவனா?

கதை நீலநரி, தான் நீலத்தொட்டிக்குள் விழுந்து நீலநிறம் பெற்றதனாலேயே, அரிமாவும் வரிமாவும் கரிமாவும் போன்ற வன்மா விலங்குகளையும் ஏமாற்றி அடக்கியாண்டது போன்றே, வேதப் பிராமணனும் குளிர்நாட்டு வாழ்க்கையாற் பெற்ற தன் வெண்ணிறத்தைத் துணைக்கொண்டு, தான் நிலத்தேவன் என்று தமிழரையும் திரவிடரையும் ஏமாற்றி அடக்கியாண்டான். அந் நீலநரியின் ஊளையால் அதன் இனம் அறியப்பட்டது போன்றே, பிராமணனும் ஆரிய மாந்தன் என்பது, மேலையாரியத்திற்கு இனமான அவன் மொழியினால் அறியப்பட்டுள்ளது.

உலக வரலாற்றறிவும் மொழியாராய்ச்சியு மில்லாத பண்டைக் காலத்தில், பழங்குடிப் பேதைமையும் மதப் பித்தமும் கொடை மடமுங் கொண்ட மூவேந்தரையும் பல்வகையில் வயப்படுத்தி, அவர் வாயிலாகப் பொதுமக்களிடைப் பிராமணியத்தைப் புகுத்தினர் ஆரியர். அந் நிலைமைகள் இன்றின்மையால், அக்காலத்து மூட நம்பிக்கைகட்கும் இன்றிடமில்லை.

கடந்த மூவாயிரம் ஆண்டாக, பிராமணர் கல்வியைக் தம் குலத் தொழிலாகக் கொண்டிருந்ததனால், கல்விக் கேற்ற மனப்பான் மையும் நினைவாற்றலும் அவர்க்கு மிக வளர்ந்து வந்திருக்கின்றன. ஆயினும், இவ்வளர்ச்சி குலவாரி யளவிலேயே யன்றித் தனிப் பட்டவர் அளவில் இல்லை. ஏனெனில், இறைவன் கல்வியை எல்லாக் குலத்தார்க்கும் பொதுவுரிமையாக்கி வைத்திருப்பதொடு, வெவ்வேறு குலத் தனி மக்கட்கே சிறந்த கல்வித் திறமையை அளித்திருக்கின்றான். ஒரே குலத்தார் கல்வியைத் தம் முற்றுரிமை யாகக் கொள்வது, இயற்கைக்கும் இறைவன் ஏற்பாட்டிற்கும் மாறானதே.

திருவள்ளுவர் போன்ற அறநூலாசிரியரோ, கம்பரினுஞ் சிறந்த பாவலரோ, பிராமணர்க்குள் இருந்ததில்லை.


இக்காலத்தும், வயவர்(Sir) சந்திரசேகர வெங்கட்டராமன் போன்றே, கோவைக் கோ. துரைசாமி நாயுடும்(G.D. Naidu) புதுப் புனைவாற்றலர். முன்னவர் அறிஞர்க்குப் பயன்படும் கருத்தியல் ஆராய்ச்சிமட்டும் செய்தவர்; பின்னவரோ, அனைவர்க்கும் பயன் படும் காட்சியியற் கருவிகளையும் இறும்பூதுகளையும் செய்தவர். ஆயினும், அவரைப் பேராயமும் போற்றவில்லை; தி.மு.க. வும் போற்றவில்லை.

குடந்தை இராமானுசம் போன்றே, செங்கோட்டைப் பர்.(Dr) சிவசங்கர நாராயணப் பிள்ளையும், மேனாட்டார் போற்றுமளவு கணிதத் திறவோர். ஆயினும், பிராமணர்க்குள்ள இனவுணர்ச்சி தமிழருக்கின்மையால், அவருக்கு விளம்பரம் இல்லாமலே போயிற்று.

முகவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தமிழர், இருகண்ணும் தெரியாதவர், எத்தனை பேரெண்களையும் உள்ளத்திற் கொண்டு நால்வகைக் கணக்குஞ் செய்யவும், எத்துணைப் பேரெண்ணிற்கும் நான்மடி வேர் காணவும், வல்லவரா யிருந்தார்.

பல்கலைக்கழக ஆள்வினைத் திறமையிலும் ஆங்கிலப் பேச் சாற்றலிலும், பர்.(Dr) வயவர்(Sir) ஆ. இலக்குமணசாமி முதலியாரி னும் மிக்கவர், பிராமணர்க்குள் இருக்கவே முடியாது. இங்ஙனம் ஏனைத் துறைகளிலும் எத்தனையோ பேர் உள்ளனர். தமிழரின் தன்னலமும் பொறாமையும் இனவெறுப்பும், பலர் தலையெடுக்க வாய்ப்பில்லாமற் செய்துவிடுகின்றன.

பிராமணர் கல்வித் திறமையிற் சிறத்தற்கு இன்னொரு கரணி யமும் உண்டு. அது மறைவான இனக்கலப்பு.

மக்களுள் நால்வேறு வரணம் போன்றே நால்வகைக் கலப்புக் குலமும் உள்ளன வென்று, மனுவின் குலவொழுக்க நூல் கூறுகின் றது. மேல்வரண ஆடவனுக்கும் கீழ்வரணப் பெண்டிற்கும் பிறந்தவன் அனு லோமன். கீழ்வரண ஆடவனுக்கும் மேல்வரணப் பெண்டிற்கும் பிறந்தவன் பிரதிலோமன். அனுலோம ஆடவனுக்கும் பிரதி லோமப் பெண்டிற்கும் பிறந்தவன் அந்தராளன். பிரதிலோம ஆடவனுக்கும் அனுலோமப் பெண்டிற்கும் பிறந்தவன் விராத்தியன்.

மேல் மூவரணத்தாரும் தத்தமக்குக் கீழ்ப்பட்ட வரணங்களி லும் அல்லது வரணத்திலும் பெண் கொள்ளலா மென்று, மனுநூல் கூறுகின்றது. ஆயின், கீழ்மூவரணத்தாரும் தத்தமக்கு மேற்பட்ட வரணத்திற் பெண் கொள்ளலா மென்று நெறியீட்டு முறையாய்க் கூறவில்லை. ஆயினும், அவ் வழக்கம் தொன்றுதொட்டு இருந்தே வந்தது. இதை மனுநூலுங் கூறுகின்றது.

"பிராமணனுக்கு க்ஷத்திரிய வைசிய ஸ்திரீகளிடத்திற் பிறந்த வர்கள், எப்படி உபநயந முதலியவற்றிற்குரியர்களா யிருப்பதால் உயர்ந்திருக்கிறார்களோ, அப்படியே வைசியனுக்கு க்ஷத்திரிய ஸ்திரீ யிடத்திலும் க்ஷத்திரியனுக்குப் பிராமண ஸ்திரீயிடத்திலும் பிறந்த புத்திரர்கள், சூத்திரனுக்கு வைசிய க்ஷத்திரிய பிராமண ஜாதி ஸ்திரீயிடத்திற் பிறந்தவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள்." (மநு. (மொழி பெயர்ப்பு) 10 : 28).

மூவேந்தரும் பிராமணர்க்கு முழு அடிமையராய்ப் போன தற்கு, பிராமணப் பெண்நுகர்ச்சியும் கரணியமா யிருந்திருக்கலாம்.

பண்டை முறைப்படி தமிழிலேயே திருக்கோவில் வழிபாடு செய்து வந்த குருக்கள் என்னும் தமிழ வகுப்பார், ஆரிய மந்திரங் களைக் கற்றுக் கொண்டு சமற்கிருதத்தில் வழிபாடு நடத்தி இந் நூற்றாண்டிற் பிராமணராக மாறிவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

பிராமணர் என்றும் தம் மேம்பாட்டை நிலைநிறுத்தி இன்புற்று வாழ விரும்பியதால், தம்மின வுயர்த்தத்தைப் பேணுவதிற் கண்ணுங் கருத்துமாயிருந்து வந்திருக்கின்றனர்.

இறையடியா ரென்று சிறப்பித்துச் சொல்லப்படுபவர், செயற்கரிய செயல் செய்த தெய்வப் பற்றாளரே.

வாளான் மகவரிந் தூட்டவல் லேனல்லன் மாதுசொன்ன
சூளா லிளமை துறக்கவல் லேனல்லன் தொண்டுசெய்து
நாளாறிற் கண்ணிடத் தப்பவல் லேனல்லன் நானினிச்சென்
றாளாவ தெப்படி யோதிருக் காளத்தி யப்பனுக்கே."
(திருத்தில்லை,3)
என்று பட்டினத்தார் மனம் வருந்திப் பாடியுள்ளார்.

'திருத்தொண்டத் தொகை' பாடிய சுந்தரமூர்த்தி நாயனார், "தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று தொடங்கியிருக்கவே வேண்டியதில்லை. தில்லைவாழந்தணர் பிராமணரே யன்றித் தமிழ் முறைப்படி அந்தணரு மல்லர்; அவருள் ஒருவரேனும் செயற்கரிய பத்திச்செயல் செய்தது மில்லை. மூவேந்தரும், சிறப்பாகச் சோழவேந்தர், விட்ட மானியங்களையும் இட்ட காணிக்கைகளையுங் கொண்டு, ஒரே கோயிலில் மூவாயிரவர் இருந்து உண்டு கொழுத்துச் சோம்பேறித் தனமாய் வாழ்ந்து வந்தவர். பொன்னம்பலப் பூசகரைப் போற்றுவதெனின், வெள்ளி யம்பலம் செப்பம்பலம் முதலிய ஏனையம்பலப் பூசகரையும் போற்று தல் வேண்டும். அது பொருந்தாக்கால், பொன்னம்பலப் பூசகரையும் போற்றுதலும் பொருந்தாது.


கோவில் வழிபாடு அதற்குத் தகுதியுடைய எல்லாக் குலத்தா ரும் செய்யலாம், செய்விக்கலாம். தமிழ்நாட்டில் தமிழரே தமிழில் மட்டும் செய்வித்தல் வேண்டும். இங்ஙனமே ஆரியர் வருமுன் நடை பெற்று வந்தது.

நீண்ட காலமாக இருந்துவந்த ஆரிய அடிமைத்தனத்தினால், அடிமைத்தனத்திலேயே பிறந்து அடிமைத்தனத்திலேயே வளர்ந்து, அடிமைத்தனமே எலும்புங் குருதியுமாக ஊறிப்போன தமிழரே பலர் தமிழ் வழிபாட்டை எதிர்க்கின்றனர். இதனால், தமிழ் வழி பாட்டையும், தமிழர் பூசகராவதையும் பிராமணர் வன்மையாக எதிர்க்கின்றனர். சிவகோசரியாரின் சமற்கிருத வழிபாட்டினும், கண்ணப்பனாரின் தமிழ் வழிபாடே சிவபெருமானுக்குச் சிறந்ததும் உகந்ததுமாயிருந்ததை யறிந்தும், இரு சாராரும் உணர்கின்றிலர். ஏனை நாடுகளின் நடப்பையும் இக்கால உரிமை வேட்கையையும் நோக்குகின்றிலர்.

ஆரிய முறைப்படி நோக்கினும், பிராமணர் இன்று ஊர் காவல் துறையிலும், படைத்துறையிலும் ஆள்வினைத் துறையிலும் சேர்ந்து சத்திரியராயும், உழவுத்தொழில் செய்தும் உண்டிச்சாலை வைத்தும் வாணிகம் மேற்கொண்டும் வைசியராயும் கைத்தொழி லும் ஏவலும் செய்து சூத்திரராயும் மாறியுள்ளனர்.

எது எங்ஙனமாயினும், பிராமணன் நிலத்தேவ னல்லன் என்பதும்; உலகியலிலும் மதவியலிலும் இல்லறத்திலும் துறவறத்தி லும், தமிழனுக்கில்லாத ஏற்றம் அவனுக்கு இம்மியும் இல்லையென் பதும், இதை உணராதவன் எத்துணைக் கற்றவனேனும் உருவத்தால் மாந்தனும் உள்ளத்தால் அஃறிணையுமாவனென்பதும்; தெரிதரு தேற்றமாம். ஆரியர் வெண்ணிறம் இன்று பொன்னிறமும் செந் நிறமும் புகர்நிறமும் கருநிறமுமாகமாறியுள்ளது. தமிழர் மொழி யாராய்ச்சியும் வரலாற்றாராய்ச்சியும் செய்து உண்மையறிந்து கண்விழித்துக் கொண்டனர்.

3. பிராமணனுக்கு உரியது எவ்வறம்?

அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றியறிதல், நடுவுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்க முடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை, அழுக் காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினையச்சம், ஒப்புரவறிதல், ஈகை என்பன இல்வாழ்க்கை யறங்களாகத் திருக்குறள் மறையிற் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் முதன்மையானது விருந்தோம்பல்.

"இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு." (குறள். 81)

விருந்தோம்பும் இயல்பும் ஈகையும் பிராமணனுக்கின்மை யால், இல்லறம் அவனுக் குரியதன்று.

பிராமணன் தொழிலாகச் சொல்லப்படும் ஆறனுள், ஈதல் என்பது ஓதுவித்தலில் அடங்குதலால், உண்மையில் அவன் தொழில் ஐந்தே.

அருளுடைமை, புலான்மறுத்தல், தவம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை, துறவு, மெய் யுணர்தல், அவாவறுத்தல் என்பன துறவுநெறி யறங்களாகத் திருக்குறள் மறையிற் சொல்லப்பட்டுள்ளன.

கொலைவேள்வி செய்தலாலும், துறவுநிலையிலும் 'அகம் பிரமம்' என்றும் 'சிவோகம்' என்றும் அகங்கரிப்பதாலும், தமிழ மதத்தை ஆரிய மதமென்றும் தன்னை நிலத்தேவன் என்றும் தன் இலக்கிய மொழியைத் தேவமொழி என்றும் சொல்லி இந்தியப் பழங்குடி மக்களை ஏமாற்றுவதாலும், பிராமணனுக்குத் துறவறமும் உரியதாகாது.

ஆகவே, பிராமணனுக்கு நாடும் பேச்சுமொழியும் போன்றே அறவாழ்க்கையும் இல்லையாம்.

4. சிவமதமும் திருமால் மதமும் தமிழ மதங்களே

சிவமதம் தமிழர் மதம் என்பதற்குச் சான்றுகள்

(1) 'சேயோன் மேய மைவரை யுலகமும்" என்று, முருக
வணக்கம் தமிழகத்துக் குறிஞ்சிநிலத்திற் குரியதாகத்
தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டிருத்தல் (அகத். 5)
(2) சிவபெருமான் வெள்ளிமலை யிருக்கையும், மலைமகள்
என்னும் பெயரும்,கொன்றைமாலையும் காளையூர்தியும்
சூலப்படையும் அக்கமணியும், குறிஞ்சித்திணைக் குரியன
வாதல்.

(3) "தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே",

"மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்",

"மந்திர மாமலை மகேந்திர வெற்பன்",

"பாண்டி நாடே பழம்பதி யாகவும்"

"தென்னா டுடைய சிவனே போற்றி
யெந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி",
என்று மாணிக்கவாசகர் கி. பி. 3ஆம் நூற்றாண்டிற் பாடியிருத்தல்.


(4) சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களும்,
செந்தமிழ்ப் பாண்டிநாட்டுத் தலைநகராகிய மதுரையில்
நிகழ்ந்தமை.

(5) சிவபெருமானின் எண் மறச்செயலகமும் (அட்ட வீரட்டம்) தமிழ்நாட்டிற்குள்ளிருத்தல்.

"பூமன் சிரங்கண்டி யந்தகன் கோவல் புரமதிகை
மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர்
காமன் குறுக்கை யமன்கட வூரிந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையுந் திங்களுஞ் சூடிதன் சேவகமே."

(6) சிவன் நடஞ்செய்யும் அம்பலம் ஐந்தும் தமிழ்நாட்டிலிருத்தல்.

(7) முருகனும் சிவனும் வேதத் தெய்வமன்மை.

(8) உருத்திரன், இந்திரன், அக்கினி ஆகிய மூவர்க்கும் வேதத்தில்
வந்துள்ள 'சிவ' என்னும் அடைமொழி, நல்ல அல்லது
மங்கல என்றே பொருள்படுதல்.

(9) வேத ஆரியர், வடநாட்டுச் சிவனியரை, சிவக்குறி வணக்கம்
பற்றி ஆண்குறி வணக்கத்தார்(சிச்ன தேவா) என்று பழித்தமை.

(10) ஆயிரத்தெண் சிவத்திருப்பதிகளுள், ஒருசிலவே வடநாட்டிலிருத்தல்.

(11) கல்லாலமர நிழலில் நால்வர்க்குத் திருமறை கற்பித்த திருவாசி
ரியனைத் தென்முக நம்பி (தக்ஷிணாமூர்த்தி) எனல்.

(12) சிவன் என்னும் சொல் செவ்வண்ணன் என்று பொருள்படுதலும்,
சிவனுக்கு அழல் வண்ணன், அந்திவண்ணன், மாணிக்கக்
கூத்தன் என்னும் பெயர்களுண்மையும்.
திருமால் மதம் தமிழர் மதம் என்பதற்குச் சான்றுகள்

(1) "மாயோன் மேய காடுறை யுலகமும்" என்று, மால் வணக்கம்
தமிழகத்து முல்லைநிலத்திற்குரியதாகத் தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டிருத்தல். (அகத்.5)

(2) துழாய் மாலையும் கலுழ(கருட)வூர்தியும் முல்லைத்திணைக்
குரியனவாதல்.

(3) மாயோன், மால் என்னும் பெயர்கள் கரியன் என்று பொருள்
படுதலும், கரியவன், கார்வண்ணன், கடல்வண்ணன், மணி
வண்ணன் என்னும் பெயர்கள் திருமாலுக் குண்மையும்.


(4) முல்லை வாணரான இடைய ரெல்லாரும் திருமால் வழிபாட்
டினராயிருத்தல்.

(5) திருமால் வேதத் தெய்வமன்மை.

(6) விண்டு (விஷ்ணு) என்னும் வேதத்தெய்வம்
கதிரவத்தெய்வமா யிருந்தமை.

(7) திருவரங்கமும், மொழிவாரி மாநிலப் பிரிவால் தெலுங்கரைச்
சேர்ந்து போன திருப்பதியும், திருமால் மதத்தினர்க்குத் தலை
சிறந்த திருநகர்களாயிருத்தல்.

5. தமிழ ஆரிய மத வேறுபாடு

வேதக்காலம்

தமிழம் ஆரியம்

சிறுதெய்வ வணக்கமும் பெருந் பல் சிறுதெய்வ வணக்கம்.
தேவ மதமும் கடவுட் சமயமும்.

இல்லத்திலும் கோவிலிலும் வீட்டிலும், வெளியிலும் வேள்வி
உருவ வழிபாடும் எங்கும் வளர்த்தல்.
உருவிலா வழிபாடும்.

தமிழக் குருக்கள். பிராமணக் குருக்கள்.

தமிழ் வாயில். வேத மந்திர வாயில்.

மறுமையில் நல்வாழ்வும் மறுமையில் விண்ணுலகப் பேறு.
விண்ணுலகப் பேறும் வீடுபேறும்.

வாய்மையால் தூய்மை. நீரால் தூய்மை.

மக்கள் நல்லொழுக்கத்தாலும்செங் வேள்வியால் மழையெனல்.
கோலாட்சியாலும் மழையெனல்.
முத்திருமேனி அல்லது இந்துமதக் காலம்


தமிழம் ஆரியம்

சிவ வழிபாடு அல்லது திருமால் முத்திருமேனி வழிபாடு.
வழிபாடு அல்லது கடவுள் வழிபாடு.

சிவன் முத்தொழில் தலைவன்
அல்லது திருமால் முத்தொழில்
தலைவன் எனல். நான்முகன், திருமால், சிவன்
(உருத்திரன்) ஆகிய மூவரும்
முறையே படைப்பும் காப்பும்
அழிப்பும் செய்பவர் எனல்.


(தமிழ் வழிபாடு ஆரியரால்
நீக்கப்பட்டது.) ஆரிய மந்திரமும் சமற்கிருதமும்
வழிபாட்டு வாயில் .

(தமிழக்குருக்கள் கோவில்
வழிபாட்டுத் தொழிலினின்று
விலக்கப்பட்டனர்) பிராமணக் குருக்கள்.

தேங்காய் பழம் படைத்தல். தீ வளர்த்தல்.

துறவறமும் வீடுபேறும்
எல்லார்க்கும் உரியன. துறவறமும் வீடுபேறும்
பிராமணர்க்கே யுரியன.

இல்லறம் துறவறம் என
வாழ்க்கைநிலை
எல்லார்க்கும் இரண்டே. மாணவம் (பிரமசரியம்),
இல்வாழ்க்கை (கிருகஸ்தம்),
காடுறைவு(வானப்ரஸ்தம்),
துறவு (சந்நியாசம்)எனப் பிராமணன்
வாழ்க்கை நிலை நான்கு.

இல்லறத்தாலும் துறவறத்தாலும்
வீடுபேறு. துறவறத்தால் மட்டும் வீடுபேறு.

ஒழுக்கத்தாற் சிறப்பு. பிறப்பாற் சிறப்பு.

தமிழும் தேவமொழி யெனல். சமற்கிருதமே தேவமொழி; தமிழ்
இழிமொழி யெனல்.

ஏழைக ளெல்லாம் தானம்
பெறற்குரியர். பிராமணரே தானம் பெறற்குரியர்.

கல்வி எல்லார்க்கும் பொது. கல்வி பிராமணனுக்கே சிறப்பு.

நாற்குலம் தொழில்பற்றிய
பாகுபாடு. நால்வரணம் இறைவன் படைப்பு.

கொலைத்தண்டம் எல்லாக்
கடுங் குற்றவாளிகட்கும் பொது. கொலைத்தண்டம்
பிராமணனுக் கில்லை.

தமிழிலும் மறையுண்டு. ஆரியத்தில்தான் வேதமுண்டு.

எல்லா மொழியும் இறைவனுக்கு
ஏற்கும். சமற்கிருதம் ஒன்றே
இறைவனுக்கு ஏற்றது.

6. கொண்முடிபு குறியீடுகள்

"மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும்" (தொல். 932)

"பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்


நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும்
யாப்பின் வழிய தென்மனார் புலவர்." (தொல். 1336)

"எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின்
அடிவரை யில்லன ஆறென மொழிப." (தொல். 1420)

"அவைதாம்,
நூலி னான உரையி னான
நொடியொடு புணர்ந்த பிசியி னான
ஏது நுதலிய முதுமொழி யான
மறைமொழி கிளந்த மந்திரத் தான
கூற்றிடை வைத்த குறிப்பி னான." (தொல். 1421)

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப" (தொல். 1434)
என்பவற்றால், ஆரியர் வருமுன்பே, தனித்தமிழ் மறைநூல்களும் மந்திர நூல்களும் குமரிநாட்டில் தோன்றியிருந்தன வென்பது, தெள்ளத் தெளிவாம். இவற்றையே பேரா. கா.சுப்பிரமணியப் பிள்ளை தம் 'திருநான்மறை விளக்க' வுரையிற் குறிப்பிட்டார்.

பண்டைத் தனித்தமிழ் மறைகளும் மந்திர நூல்களும் பிற நூல்களுடன் ஒருங்கே அழிக்கப்பட்ட பின், பிராமணரும் அவரைக் குருட்டுத்தனமாய்ப் பின்பற்றிய தமிழரும், ஆரிய வேதங்களையே பொதுமறையாகப் போற்றி வந்தனர். கிறித்துவிற்கு முற்பட்ட முதுகுடுமிப் பெருவழுதி காலத்திலேயே வேரூன்றிய ஆரியக் கொள்கைகளும் ஒழுகலாறுகளும், கி.பி. 3ஆம் நூற்றாண்டில் மாணிக்க வாசகர் காலத்தில் ஆழ வேரூன்றிவிட்டன. அதனால், அவருக்குப் பின் ஐந்தாம் நூற்றாண்டிலெழுந்த ஆரிய ஆகமங் கள், இம்மியும் ஐயுறவும் எதிர்ப்புமின்றித் தெய்வவுரைபோல் எழுத்துப் படி நம்பப்பட்டுவிட்டன.

வரலாற்றையும் தமிழியல்பையும் அறியாத சில குருட்டுச் சிவனியர், வடசொல் வழக்கையே அடிப்படையாகக் கொண்டு, சிவனியம் ஆரிய வழிப்பட்ட தென்றும், திருக்கோவில்களில் சமற்கிருத வழிபாடே நடைபெறல் வேண்டுமென்றும், பிதற்றி வருவ தால், இற்றை ஆரிய மதவியற் சொற்கட்கெல்லாம் நேர்த் தென் சொற்கள் கீழே வரையப்பட்டுள்ளன. சொல் வரலாறு வரையப் படாத இடங்களில், இடைக்கோட்டின், இடப்புறம் உள்ளன வெல்லாம் சமற்கிருதச் சொல்லென்றும், வலப்புறம் உள்ளன


வெல்லாம் தமிழ்ச்சொல் லென்றும், அறிந்துகொள்க. இறந்துபட்ட சொற்கட்குப் புதுச் சொற்கள் புனையப்பட்டுள.

சித்தாந்தம் - கொண்முடிபு. வேதாந்தம் - மறைமுடிபு.

தத்துவம் - மெய்ப்பொருள். தத்துவ சாஸ்திரம் - மெய்ப் பொருள் நூல், பட்டாங்கு நூல்.

சிவ தத்துவம் - சிவ மெய்ப்பொருள் (5)

சிவம் - சிவம், சக்தி - ஆற்றல், சாதாக்கியம் - அருளாண்மை, மகேசுரம் - பேரிறைவம், சுத்த வித்தை - வாலறிவம்.

வித்தியா தத்துவம் - அறிவ மெய்ப்பொருள் (7)

மாயை - மாயை, காலம் - காலம், நியதி - ஊழ், கலை - கலை, வித்தை - அறிவம், அராகம் - விழைவு, புருடன் - ஆதன்.

ஆன்ம தத்துவம் - ஆத மெய்ப்பொருள் (24)

இவை முன்னரே கூறப்பட்டன (பக். 36).

தாத்துவிகம் - மெய்ப்பொருளியம் (60)

பிருதிவி - புடவி (நிலம்). இதன் கூறுகள் (5): மயிர், தோல், தசை, நரம்பு, எலும்பு.

அப்பு - அம்பு (நீர்). இதன் கூறுகள் (5): சிறுநீர், வியர்வை, அரத்தம், சிலேட்டுமம் - கோழை, சுக்கிலம் - விந்து (அல்லது சோணிதம்-செந்நீர்).

தேயு - தீ. இதன் கூறுகள் (5): பசித்தீ, கண்சிவப்பு, கணை, நெஞ்செரிவு, பித்தம்.

வாயு - வளி. இதன் கூறுகள் (10): பிராமணன் - மூசன், அபானன் -பரியன், உதானன் - உந்தன், வியானன்-அரத்தன், சமானன்-செரியன், நாகன் - விக்கன், கூர்மன் - இமையன், கிருகரன் - எரியன், தேவதத்தன் - ஆவிரியன், தனஞ்சயன் - உச்சியன்.

ஆகாயம் - வெளி. இதன் கூறுகள் (10): சுத்தி-கன்னி, அலம் புஷா-அலம்புடை, இடை - இடங்கலை, பிங்கலை - வலங்கலை, சுஷ்முனா - சுழிமுனை, காந்தாரி - காந்தாரி, குகு - கரவன், சங்கினி - சங்கன், ஜிகுவா - நாவி, புருஷன் - ஆதன்.

கர்மேந்திரிய விஷயம் - கருமப்பொறிப் புலனம். இதன் கூறுகள்(5): வசனம் - சொலவு, கமனம் - செலவு, தானம் - தானம் (கொடை), விசர்க்கம் - கழிப்பு, ஆனந்தம் - இன்புறவு.

ஞானேந்திரிய விஷயம் - அறிவுப்பொறிப் புலனம். இதன் கூறுகள் (5): சத்தம் - ஓசை, பரிசம் - ஊறு, ரூபம் - ஒளி, ரசம் - சுவை, கந்தம் -நாற்றம்.

அகங்காரம் - 'நான்' உணர்வு. இதன் கூறுகள் (3): தைசதம் - தீயிகம், வைகாரிகம் - வேறுபாட்டியம், பூதாதி - பூதமுதல்.

அகப்பகை யென்னும் குற்றம் (5): காமம் - காமம், குரோதம் - சினம், லோபம் - இவறல், மோகம் - மயக்கம், மதம் - செருக்கு.

குணம் - குணம் (3): சாத்துவிகம் - தேவிகம், இராசதம் - மாந்திகம், தாமதம் - பேயிகம்.

வாக்கு - வாய்ச்சொல் (4).

இவை முன்னரே கூறப்பட்டன. (ப. 8)

மமகாரம்('எனது' உணர்வு) என்பதற்கு எதிரான அஹங் காரம்('நான்' உணர்வு) என்னும் சமற்கிருதச் சொல் வேறு; செருக் கைக் குறிக்கும் அகங்காரம் என்னும் தமிழ்ச்சொல் வேறு. 'அஹம்' என்பது தன்மை யொருமைப் பெயர். அகம் என்பது மனத்தின் பெயர்.

கடு - கடி - கரி. கரித்தல் = மிகுதல், கடுத்தல். உப்புக் கரித்தல் என்னும் வழக்கை நோக்குக.

அகம் கரித்தல் = மனம் மிகுதல், செருக்குதல். அகங்கரி-அகங்காரம். ஒ.நோ: இளக்கரி - இளக்காரம், அதிகரி - அதிகாரம். அகங்கரி என்னும் வினைச்சொல் சமற்கிருதத்தில் இல்லை. அதனால், அதை வடசொல்லாகக் காட்டும் தமிழ்ப் பகைவர், அதனை அகங்காரம் என்னும் வினைப்பெயரினின்றே திரிப்பர். நான் என்னும் தற்சுட்டு வேறு; நான் என்னும் ஆணவம் வேறு.

இருவகைப் பொருள் (சித்து x சடம்)

செத்தல் = கருதுதல். செ - செத்து - சித்து = கருத்து, அறிவு, அறிவுள்ளது. சித்து - ளமவ. ரவ ஒ.நோ : செந்துரம் - சிந்துரம்.

சட்டம் = உடம்புச் சட்டம் (bodily frame), உடம்பு.

சட்டம் - சடம் = உடம்பு. சடம் - ச. ஜட.

ஒ.நோ: பட்டம் -படம் (துணி).

சடம் - சடல் - சடலம் = உடம்பு. ஒ.நோ : உடல் - உடலம்.


சடலம் - சதரம் = உடம்பு (பாண்டிநாட்டு வழக்கு).

சதரம் - வ. சரீர.

பதி லக்ஷணம் - தலைவன் (இறை) இலக்கணம்.

தலைவன் = 1. முதல்வன். "கயிலாய மென்னும் மலைத் தலைவா" (திருவாச. 6 : 40). 2.கடவுள். "தலைவன் காக்கும்" (மணிமே. 21 : 63).

சொரூபம் - தன்னியல்பு. தடத்தம் - சார்பியல்பு. சொரூபசிவன் -பரமசிவன், இயனிலைச் சிவன், தன்னியற் சிவன். தடத்த சிவன் -செயனிலைச் சிவன், சார்பியற் சிவன்.

சிவ வுருவம் (9): சிவம் - சிவம், சத்தி-ஆற்றல், விந்து - விழியம், நாதம் - ஓதை, சதாசிவன் - அருளாளன், மகேசுரன் - பேரிறைவன், ருத்திரன் - உருத்திரன், அரி - மால், அயன்-நான்முகன்.

லயம் - ஒடுக்கம். போகம் - நுகர்வு. அதிகாரம் - அதிகாரம்.

அரூபம் - உருவிலி. ரூபாரூபம் - உருவ வுருவிலி. ரூபம் - உரு, உருவு, உருவம்.

உருத்தல் = தோன்றுதல். உரு = தோற்றம், வடிவு, வடிவுடைப் பொருள். உரு - உருவு - உருவம். உருவு - உருபு = வேற்றுமை வடிவான சொல் அல்லது எழுத்து. உருவம் - வ. ரூப. அ + ரூப = அரூப. அல் - அ. அல் - அன் (அந்) - வ. ந (முறை மாற்று - metathesis).

பராசக்தி - பரையாற்றல். ஆதிசக்தி - முந்தையாற்றல். இச்சா சக்தி - விருப்பாற்றல். ஞானசக்தி - அறிவாற்றல். கிரியாசக்தி - வினையாற்றல்.

அத்துவித சம்பந்தம் - இருபொரு ளொருமைத் தொடர்பு. தாதான்மிய சம்பந்தம் - ஒருபொரு ளிருமைத் தொடர்பு.

வித்தியேசுவரன் - அறிவாண்டான். அனந்தன் - ஈறிலி. சீகண்ட ருத்திரன் - மணிமிடற் றுருத்திரன்.

பதிஞானம் - இறையறிவு.

பசு லக்ஷணம் - ஆதல னிலக்கணம்.

விஞ்ஞான கலர் - தலைமாசர். பிரளயாகலர் - இடைமாசர். சகலர் - கடைமாசர்.

அவஸ்தை - நிலை (5) : சாக்கிரம் - நனவு, சொப்பனம் - கனவு, சுஷு த்தி - உறக்கம், துரியம் - அயர்வுறக்கம், துரியாதீதம் - உயிர்ப் படக்கம்.

ஆவார சக்தி-மறைப்பாற்றல். அதோ நியமிகா சக்தி - கீழுறுத் தாற்றல். ஆகந்துகம்-வந்தாரி.

பந்தம் - கட்டு (3) : பிரதிபந்தம் - எதிர்க்கட்டு, அனுபந்தம் -துணைக்கட்டு, சம்பந்தம் - தொடர்புக்கட்டு.

பாவம் - தீவினை, கரிசு, அறங்கடை. புண்ணியம்-அறப்பயன். பாவம், புண்ணியம் என்னும் இருசொல்லும் மேலை யாரிய மொழி களில் இன்மையால், வடநாட்டுச் சொல்லே; சமற்கிருதமல்ல.

மானதம் - மனவிகம். வாசிகம் - உரையிகம். காயிகம்-மெய்யிகம்.

சஞ்சித கர்மம் - இறந்தகால வினை. பிராரத்த கர்மம் - நிகழ் கால வினை. ஆகாமிய கர்மம் - எதிர்கால வினை.

நாசோற்பத்தி - நசிவு தோற்றம். பிரவாக நித்தம் - ஆற்றொ ழுக்கு நித்தம். நில் - நிற்றம் - நித்தம் - வ. நித்ய.

பஞ்ச கஞ்சுகம் - ஐஞ்சட்டை. பஞ்சகோசம் - ஐயுறை. அன்ன மய கோசம் - உணவிய லுறை. பிராணமய கோசம் - மூசவிய லுறை. மனோமய கோசம் - மனவிய லுறை. விஞ்ஞானமய கோசம் - புலம விய லுறை. ஆனந்தமய கோசம் - மகிழிய லுறை. (புலம் - புலமம் = சாஸ்திரம், விஞ்ஞானம்).

தூலம் - பருமம். சூக்குமம் (புரியட்டம்) - நுண்மம். பரம் - பரம். (புரம் - பரம் - வரம் - வரன்).

நிர்விகற்ப ஞானம் - பொதுப்படை யுணர்வு.

சவிகற்ப ஞானம் - வேறுபாட் டுணர்வு.

சாதனம் - வாயில். சரியை-தொண்டு. கிரியை - வழிபாடு. யோகம் - ஓகம், ஒன்றம். ஞானம் - அறிவம், ஓதி.

தாச மார்க்கம் - அடிமைநெறி. சற்புத்திர மார்க்கம் - நன்மக நெறி. சகமார்க்கம் - தோழமை நெறி. சன்மார்க்கம் - நன்னெறி.

அட்டாங்க யோகம்-எண்ணுறுப்பு ஓகம்.

இயமம் - அடக்கம், நியமம் - ஒழுங்கு, ஆசனம்-இருக்கை, பிராணாயாமம் - வளிநிலை, பிரத்தியாகாரம் - ஒருக்கம் (தொகை நிலை), தாரணை - நிறை, தியானம் - ஊழ்கம், சமாதி - நொசிப்பு (பள்ளியடை).

சடாதாரம் - அறுநிலைக் களம்

மூலாதாரம் - அடிமூலம், நாலிதழி


சுவாதிட்டானம் - அல்கிடம், ஆறிதழி

அனாகதம் - உந்தியம், பன்னீரிதழி

மணிபூரகம் - நெஞ்சகம், பத்திதழி

விசுத்தி - நாவடி, பதினா றிதழி

ஆக்ஞை - புருவிடை, ஈரிதழி
சத்திநிபாதம் - அருள்பதிகை. மலபரிபாகம் - மாசு தேய்நிலை. மந்ததரம் - அதிமந்தம். மந்தம் - மந்தம். தீவிரம் - மும்முரம். தீவிரதரம் - அதிமும்முரம். பதமுத்தி - பதவீடு. அபரமுத்தி - அபரவீடு. பரமுத்தி -பரவீடு. அண்டம் - கோளம்.

மொத்து - மொத்தம் (மொத்தை) - மத்தம் - மந்தம் = மழுக்கம்.

தசகாரியம் - பதின் கருமம்.

தத்துவ ரூபம் - மெய்ப் பொருள் காண்பு. தத்துவ தரிசனம் - மெய்ப் பொருள் தெளிவு. தத்துவ சுத்தி - மெய்ப்பொருள் தூய்மை.

ஆன்ம ரூபம் - தற்காண்பு. ஆன்ம தரிசனம்-தற்றெளிவு. ஆன்ம சுத்தி-தற்றூய்மை.

சிவரூபம் - சிவக்காட்சி. சிவதரிசனம் - சிவத்தெளிவு. சிவ யோகம் - சிவவோகம். சிவபோகம் - சிவநுகர்வு.

பஞ்ச கலை - ஐயருள் நிலை.

நிவிர்த்தி கலை - விடுவிப்பு நிலை. பிரதிட்டா கலை - உய்ப்பு நிலை. வித்தியா கலை - அறிவுறுத்த நிலை. சாந்தி கலை -அமைதி யுறுத்த நிலை. சாந்தி யதீத கலை - துன்பொழிப்பு நிலை.

அஷ்டமா சித்தி - எண்பெரும் பேறு.

அணிமா - நுண்மை. மகிமா - பருமை. கரிமா - கனமை. லகிமா - நொய்ம்மை. பிராப்தி - பேறு (விரும்பியது பெறுகை). பிரா காமியம் -விரும்பியது செய்கை. ஈசத்துவம் - இறைமை. வசித்துவம் - வயப்படுத்தம்.

பிற சொற்கள்

மாயா - மாயை.

மும்மாயை : சுத்தம் - தூய்மை. அசுத்தம் - தூவின்மை. பிரகிருதி - முதனிலை, மூலம்.

சுத்த மாயை - தூமாயை, தூய மாயை.

அசுத்த மாயை - தூவில் மாயை, தூய்தல் மாயை.

பிரேரக காண்டம் - இயக்கக் காண்டம். போஜயித்திரு காண்டம் - நுகர்வுறுத்தக் காண்டம், போக்கிய காண்டம் - நுகர்வுக் காண்டம். மிச்சிரம் - கலப்பு.

வைந்தவம் - விழியியம். மாயேயம் - மாயையம். பிராகிருதம் -மூலியம், முதனிலையம்.

நாதாந்தம் - ஓதை முடிபு, ஓதைக் கடப்பு.

நாதம் என்னும் வடசொல்லும், சங்கநாதம் சிங்க(கொம்பு) நாதம் என்று ஓசைப்பொருளில் வழங்குதல் காண்க.

பிரணவம் - இமிழி, இமிழொலி, ஓங்காரம்.

சமஷ்டிப் பிரணவம் - தொகுநிலை யிமிழி.

வியஷ்டிப் பிரணவம் - வகுநிலை யிமிழி.

ஞானம் - அறிவு. ஞேயம் - அறிபொருள். ஞாதுரு - அறிவோன், அறிநன். ஞானி - அறிவன்.

வியக்தம் - வெளிப்பட்டது. அவ்வியக்தம் - வெளிப்படாதது. சூனியம் - சுன்னையம், இன்மம், வெறும்பாழ்.

ஆதாரம் - நிலைக்களம், பற்றுக்கோடு. ஆதேயம் - நிலைக் களவன், பற்றுக்கோடன்.

வியாபி - வியலி. வியாபகம் - வியலம். வியாப்பியம்-வியலியம்.

அதிட்டித்தல் - நிலைக்களங் கொள்ளுதல்.

சேட்டி - தொழிற்படு. சேட்டிப்பி - தொழிற்படுத்து.

பாவகம் - கோடிப்பு. வைராக்கியம் - பற்றின்மை. அவை ராக்கியம் - பற்றுடைமை.

தீத்தல் = எரித்தல், கருக்குதல். தீ = ஒளி, விளக்கு. தீக்கை = அறியாமையை அல்லது மாசைப் போக்கி அறிவுகொளுத்துதல். திருநீறு மாசெரிந்து சாம்பலான நிலையைக் குறிப்பதே. தீக்கை - தக்ஷா (வ.).

முத்தீக்கை : சமயம் - சமயம். விசேஷம் - சிறப்பு. நிர்வாணம் -அவிப்பு .

கிரியாவதி - வினைமுறை. ஞானாவதி-நினைமுறை. நிராதாரம் -நேரடி. சாதாரம் - வாயில்வழி.

ஆசாரி யாபிஷேகம் - ஆசிரியத் திருநீராட்டு.

குரு லிங்க சங்கமம் - குரு விலங்கத் திருக்கூட்டம். இலக்கு - இலக்கம் - இலங்கம் = குறி.

அத்துவா - அதர்வு அல்லது அதர்வம்.

அத்துவா சோதனை - அதர்நிலை நோட்டம்.

குரு = பருமன், பெருமை, கனம். குரு - குரவன் = பெரியோன், கனம் (கண்ணியம்) உள்ளோன்.

சச்சிதானந்தம் - மெய்யறிவின்பம்.

நமப் பார்வதி பதயே! - மலைமகள் மணாள போற்றி!

ஹரஹர மஹா தேவ! - அரவர மாதேவ!

அரம் = சிவப்பு. அரம் - அரன் = சிவன்.

இதை ஹர என்று திரித்து அழிப்பவன் என்று பொருள் கூறுவது ஆரிய வழக்கு.

7. மக்கள் முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டையா?

மதவெறியும் அதனா லேற்படும் போருமே, மக்கள் மகிழ்ச்சி யாய் வாழ்வதற்கும் அமைதியாய் முன்னேறுவதற்கும் தடையாய் நிற்கின்றன. மதம் தன்னளவில் மக்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையன்று. தமிழர் எல்லாத் துறையிலும் தலைசிறந்து சீருஞ் சிறப்புமாக வாழ்ந்தது, குமரிநாட்டு மதவாழ்க்கைக் காலமே. இன்றும் அறிவியல் கம்மியத் துறைகளில் தலைசிறந்து திங்களை யடைந்த அமெரிக்கர், கடவுள் நம்பிக்கை யுள்ளவரே.

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்னும் உண்மையை யுணர்ந்து , மாந்தரெல்லாரும் கடவுளின் மக்களான உடன் பிறப்பென்று கருதி, "யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்று அன்பொடு கூடி வாழ்வதற்கே மதம் ஏற்பட்டது. ஆயின், மாந்தர் தம் மனம் போனவாறு மதத்தைத் திரித்து, தம்மொடு மாறுபட்ட கருத்தி னரைப் பகைத்து, அவரினின்று பிரிந்து போவதும் அவரொடு பொருவதும், வெறியான மதத்தின் விளைவேயன்றி நெறியான மதத்தின் விளைவன்று. பன்னூற்றாண்டு கூடி வாழ்ந்த இந்தியரும் பாக்கித்தானியரும், பகைவராய்ப் பிரிந்துபோனமைக்கு, மத வெறியே கரணியம்.

மக்கள் அகக்கரண வளர்ச்சிக் கேற்றவாறு, மதம் முந்நிலைப் பட்டுள்ளது. அவற்றுள் உயர்ந்த நிலையான கடவுட் சமயத்தைக் கடைப்பிடிப்பின், கோவில் குளமோ, உருவ வழிபாடோ தேவை

யில்லை. அதனால், பால் நெய் முதலியன பாழாவதும் அரசிறையான பொதுப்பணச் செலவும் ஏற்படா.

உருவ வழிபாட்டை விரும்பியவரும், தனிப்பட்டவராகவோ பலர் கூடியோ, வீண் செலவு செய்யாது வழிபட்டு, விடுமுறை நாளிலும் வேலையில்லா நாளிலும் தம் சொந்தப் பணத்தைச் செலவிட்டு விழாக் கொண்டாடி, பிறரைப் பகைக்காதிருப்பின், அதனாலுங் கேடில்லை. ஆகவே, இவ் விருவகையாலும், மதத்தால் மக்கள் முன்னேற்றத்திற்குத் தடையில்லை யென்பது பெறப் படுகின்றது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், மக்கள் முன்னேற்றத் திற்கு முட்டுக்கட்டையாயிருப்பது, ஆரியத்தா லேற்பட்ட பிறவிக் குலப் பிரிவினையேயன்றி வேறன்று. இது இந்தியாவிற்கே சிறப்பான குமு காயக் கொடுநோய். பிராமணன் தன்னை நிலத்தேவனென்றும் தன் இலக்கிய மொழியைத் தேவமொழியென்றும் சொல்லி ஏமாற்றி, மதத் துறையுட் புகுந்து, கோவில் வழிபாட்டையும், இருவகைச் சடங்கு நடாத்தத்தையும் தன் குலத்தொழிலாகக் கொண்டதனா லேயே, மக்களுடன் மதமுங் கெட்டதன்றிக் கடவுள் நம்பிக்கையா லன்று. இந் நிலைமை என்றும் நிலைத்தற்பொருட்டே, தமிழருள் துப்புரவில் உயர்ந்தவன் வீட்டிலும் தான் தண்ணீருங் குடிப்ப தில்லை யென்று தன்னை எல்லார்க்கும் மேலாகவுயர்த்தியும், தமிழர்க்கு ஒற்றுமையும் உரமும் ஒருமித்த முன்னேற்றமும் ஏற்படா வாறு, அவரை நூற்றுக்கணக்கான ஏற்றத்தாழ்வுள்ள பிறவிக் குலக்கூண்டுகளுள் அடைத்தும், வைத்திருக்கின்றான் பிராமணன். ஆகவே தமிழரை முன்னேற்றுதற்கு, பிராமணியத்தை மதத்தினின்று முற்றிலும் பிரிப்பதே அறிஞர் மேற்கொள்ளத்தக்க செய்தியாம். மதத் துறையிலுள்ள குற்றங் குறைகளை நீக்காது மதத்தையே ஒழிக்க வேண்டு மென்பது, சோற்றிலுள்ள கற்களைப் பொறுக்காது சோற்றையே கொட்டிவிடுவது போன்றதே. சோறு முழுவதையும் கல்லென்றோ மணலென்றோ ஒருவன் கருதுவா னாயின், அது அவன் புறக்கண்ணின் அல்லது அகக்கண்ணின் கோளாறே யாகும்.

மதத்திற் குற்றங் களைவது எளிதன்று; எல்லார்க்கும் இயல்வது மன்று. பரந்த கல்வியும் ஆழ்ந்த ஆராய்ச்சியும் பண்பாடும் பொறுமையும் உள்ளவரே, மதத்தைச் சீர்திருத்த முடியும். மூவாயிரம் ஆண்டாக ஈண்டியுள்ள அழுக்குக் குன்றை ஒரே தலை முறையில் அகற்றிவிட முடியாது.

இன்றும் தமிழருட் பெரும்பாலார் கடவுள் நம்பிக்கையுள்ள வராதலால், கடவுளில்லை யென்று சொல்லச் சொல்ல, அது ஆரிய மேம்பாட்டிற்கும் ஏமாற்றிற்கும் அரண் செய்ததேயாகின்றது.

மாந்தன் மனத்தை இறுகப் பிணிக்கக்கூடிய பற்றுகளுள், மிகுந்த வலிமையுடையது மதப்பற்று அல்லது கடவுட் பற்றே. தமிழன் அரும்பாடுபட்டுக் கண்ட மதத்தை ஆரியனது எனின், ஆரியனுக்கு உயர்வும் தமிழனுக்குத் தாழ்வும் ஏற்படுவதோடு, உறைத்த மதப்பற்றுள்ள தமிழனுக்கிருக்கும் ஆரிய அடிமைத்தனம் இடும்புத் தனமாக இறுகவே செய்கின்றது. அதனால் ஆரியன் சுரண்டலும் அதிகரிக்கின்றது. இது கண்ணாரக் காணும் செய்தி.

மாந்தன் புறநாகரிகத்தினும் சிறந்தது அகநாகரிகம். அதன் விளைவே பல்வேறு பண்பாட்டறிவியல்கள். அவற்றுள் தலைமை யானது மதவியல் அல்லது மெய்ப்பொருளியல் என்றே, மேலை யராலும் கருதப் பெறுகின்றது.

"அன்பிலா ரெல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு." (குறள். 4)
என்பது திருக்குறள் மறை.

"அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே." (திருமந்திரம். 257)
என்பது திருமந்திர மறை.

இங்ஙனம் உயர்ந்த தேவிக அறத்தை வலியுறுத்தும் மதவியல், பகுத்தறிவிற்கு மாறானதென்று எந்தப் பகுத்தறிவாளன் சொல்ல முடியும் ?

கத்தரிக்காயறுக்க வாங்கிய கத்தி கழுத்தறுக்குங் கருவியா யிருப்பின், அது கழுத்தறுத்தான் குற்றமா? கத்தியின் குற்றமா? மாந்தரையெல்லாம் கடவுளின் மக்களாக்கி உடன்பிறப்பன்பால் ஒன்று பட்டின்புற்று வாழச் செய்யும் உயர்ந்த மதவியலை, ஒரு

தன்னலக் கொள்ளைக் கூட்டம் தாம் வாழவும், பிறர் தாழவும் பயன்படுத்தின், அக் குற்றம் எங்ஙன் மதவியலைச் சாரும்?

இன்று கடவு ளில்லை யென்று சொல்வாரும் கொள்வாரும், தமக்குச் சமமானவரும் தம்முடன் உண்ணும் தகுதியுடையவருமான வகுப்பாருடனும் மணவுறவு கலவாது, ஆரியன் வகுத்த வழியி லேயே நின்று, என்றும் தம் பிறவிக் குலத்துள்ளேயே கொள்வனை கொடுப்பனை செய்துகொள்வது, எங்ஙனம் பகுத்தறிவுச் செயலாகும்? இதனாலும், மதம் மக்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையன்றென்பது பெறப்படுகின்றதன்றோ? "பழியோரிடம் பளகோரிடம்."

ஆரியம் என்ற பேரு மில்லாத குமரிநாட்டிலும், கடவுள் நம்பிக்கையில்லாதவர் சிலரிருந்தனர். பிராமண வகுப்பில்லாத பிற நாடுகளிலும், கடவுள் நம்பிக்கையில்லாத பலரிருக்கின்றனர். இது பிறவிக் குணங்களுள் ஒன்று.

கடவுளும் மறுமையும் இல்லை யென்று கூறும் உலகியம் (லோகாயத) என்னும் மதம், கடைக்கழகக் காலத்தில் தமிழகத்தி லிருந்தமை, "பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்" என்னும் மணிமேகலையடியால் (27 : 78) அறியப்படும். இம் மதவியலை நூலாக விரித்துரைத்தவன் சார்வாகன் (Carvaka).

"அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது" (குறள். 1075)
என்பது உண்மையாதலால், ஓரளவு நல்லொழுக்கத்திற்குத் தூண்டு கோலாக இருக்கும் வகையிலேனும், மதத்தால் நன்மையுண்டென்று கருதி, மதத்தின் பெயரால் உண்மையில் தீங்கு செய்யும் பிறவிக்குலப் பிரிவினையையே, அறவே ஒழித்தல் வேண்டும்.

8. கடவுள் உண்டா?

கடவுள் உண்டென்பாரும் இல்லை யென்பாரும், தொன்று தொட்டு உலகில் இருந்து வருகின்றனர். உண்டென்பாரே இன்றும் பெரும்பாலரேனும், இல்லை யென்பார் தொகை வரவர வளர்ந்து வருகின்றது.

கடவுள் உண்டென்பதற்குச் சான்றுகள்

(1) கதிரவக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள் எல்லாம், இடை யறாது
ஓர் ஒழுங்காக இயங்கிவருகின்றன.

ஓர் ஊரில் ஊர்காவலோ அரசியலாட்சியோ சிறிது நேரம்
இல்லாவிடினும், கலகமுங் கொள்ளையும் கொலையும் நேர்
கின்றன. உயிரற்ற நாளும் கோளும் பாவையாட்டுப் போல்
ஒழுங்காக ஆடிவரின், அவற்றை ஆட்டும் ஓர் ஆற்றல்
இருத்தல் வேண்டும்.அவ்வாற்றல்அறிவற்றாயிருக்க முடியாது.
அவ்வறிவே இறைவன்.

(2) இவ் வுலகம் முழுவதற்கும், கதிரவன் பகல் விளக்காகவும் திங்கள்
இரா விளக்காகவும் எண்ணிற்கும் எட்டாத காலத்திலிருந்து விளங்கி
வருகின்றன.

ஒரு வீட்டில் விளக்கேற்றி வைப்பது அதிற் குடியிருக்கும் மக்கட்கே.
மக்களில்லா வீட்டில் விளக்குத் தானாகத் தோன்றி

எரியாது. பல வுலகங்கட்கும் இரு சுடரையும் விளக்காக ஏற்படுத்தியவன் ஒருவன் இருத்தல் வேண்டும். வேலை செய்யாத தூக்க வேளையாகிய இராக்காலத்திற்கு, வெப்ப மான நெருப்பொளி விளக்காகாது குளிர்ந்த நிழலொளி விளக்காக விருப்பதும், கவனிக்கத் தக்கது.

(3) பிற கோள்களைப்போற் சுற்றாது ஒரேயிடத்திலிருக்கும் கதிரவன், பத்துத் திசையும் ஒளி சமமாகப் பரவுமாறு உருண் டையாயிருப்பதும், அளவிடப்படாத நீள்பெருங்காலம் எரிந்து வரினும் அதன் எரியாவி குன்றி யணையா திருப்பதும், இயற்கைக்கு மாறான இறும்பூதுச் செய்தி யாதலால், அதை யியக்கி யாளும் ஒரு பரம்பொருள் இருத்தல் வேண்டும்.

(4) கோள்கள் ஒன்றேடொன்று முட்டாது தன்தன் பாதை வட்டத்தில் இயங்குமாறும், இவை சுழலுங்கால் அவற்றின் மேலுள்ள பொருள்கள் நீங்காவாறும், ஒவ்வொன்றையுஞ் சூழ ஒரு கவர்ச்சி மண்டலம் அமைந்திருப்பதும், இயற்கைக்கு

(5) காலமும் இடமும் தொடக்கமும் ஈறும் இல்லாதவை யாதலால், இற்றை மக்களுலகந் தோன்றுமுன், எண்ணிக்கை யற்ற உயிருலகங்கள் தோன்றியழிந்திருத்தல் வேண்டும். இதைத் தான்,

"படைத்து விளையாடும் பண்பி னோனும்
துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
தன்னில் வேறு தானென் றிலோனும்
அன்னோன் இறைவ னாகும்என் றுரைத்தனன்"

மணிமேகலைக்கு அறிவுறுத்திய சிவனியத் தருக்கி (சைவவாதி).

(6) மாந்தன் தோன்றி ஐம்பதினாயிரம் ஆண்டாயிற் றென வைத்துக்கொள்ளினும், நூற்றுக்கணக்கானதலைமுறைகள் கழித்திருத்தல் வேண்டும். பத்துக் கணக்காகத் தொடங்கிய மக்கட்டொகை இன்றுநூறுகோடிக் கணக்காகப் பெருகி யுள்ளது. ஒவ்வொரு தலைமுறையிலும் எத்தனைய ராயினும், அத்தனையரும் அடையாளங் காணுமாறு வெவ்வேறு முகவடிவிலுள்ளனர். கைவரையும் வேறுபட்டுள்ளது. இது அறிவு நிரம்பிய ஒரு பேராற்றலின் செயலேயாகும்.

(7) "கடவுளை நம்பினோர் கைவிடப் படார்" என்பது இன்றும் சிலர் வாழ்க்கையில் மெய்ப்பிக்கப்படுகின்றது.

கடவுள் இல்லை யென்பதற்குக் காட்டப்படும் சான்றுகள்

(1) உடல்நலம், மனநலம், மதிநலம் முதலிய நலங்கள் உள்ளாரும் இல்லாரும் படைக்கப்பட்டிருத்தல்.

(2) பஞ்சம், கொள்ளைநோய், பெருவெள்ளம், நிலநடுக்கம் முதலிய இயற்கை அழிவு நிகழ்ச்சிகள் நேர்தல்.

(3) கடவுள் புறக்கண்ணிற்குப் புலனாவதில்லை.

(4) ஒன்றோடொன்று முரண்பட்ட பல்வேறு மதங்கள் உலகில் வழங்கி வருகின்றன.

(5) நல்லோர் பலர், வறுமை, நோய், பிறரால் துன்பம் முதலியவற்றால் வருந்திக் குறுவாழ்க்கையராய்ச் சாக, தீயோர் பலர் எல்லா வகையிலும் இன்புற்று நீடு வாழ்கின்றனர்.

(6) பல அஃறிணை உயிரினங்கள் பிறவற்றைக் கொன்று தின்பனவாகவே படைக்கப்பட்டுள்ளன.

(7) சிலர் எத்துணை உருக்கமாய் இறைவனை வேண்டினும், தாம் விரும்பியதைப் பெறுவதில்லை.
இங்ஙனம், கடவுள் உண்டென்பதற்கும் இல்லையென்பதற் கும் காட்டப்படும் சான்றுகளுள் உண்டென்பதற் குரியவையே மிகுந்தும் வலிமையுள்ளனவாகவும் இருக்கின்றன. காட்சியளவை போன்றே கருத்தளவையும் உண்மை யறிவும் வழியாகும்.

கடவுள் எங்கும் நிறைந்து ஆவி வடிவி லிருப்பதால், அவரை ஒருவனும் புறக்கண்ணாற் காண முடியாது. முரண்பட்ட மதங்கள் மாந்தர் படைப்பு. நல்லோர்க்கு மறுமையில் நல்வாழ்விருக்கலாம். பல் பிறவி நம்பிக்கையாளர் நல்லோர் துன்பத்தைப் பழவினைப் பயன் என்பர்.

மாந்தன் மதியாற்றல் மட்டிட்ட தாதலின், இறைவன் ஆட்சியி லுள்ள எல்லாவற்றையும் அறிய முடியாது.

"ஆழ வமுக்கி முகக்கினும் ஆழ்கடலில்
நாழி முகவாது நானாழி." (மூதுரை. 19)
நல்லோர்க்கு நேரும் தீங்குகட்கு, அவர் பழம்பிறப்பிற் செய்த தீவினைகளைக் கரணியமாகக் காட்டுவர் கொண்முடிபாளர்.

எங்ஙன மிருப்பினும், இரு சாராரும் தத்தம் கொள்கையை எதிர்க் கொள்கையார் நம்புமாறு நாட்டமுடியா திருப்பதால், கருத்து வேறுபாட்டிற் கிடந்தந்து, ஒரு சாராரை யொரு சாரார் பழிக்காதும் பகைக்காது மிருப்பதே உண்மையான பகுத்தறிவாம்.

மேலும், கடவுள் உண்மையாக இல்லை யெனின், நம்பாத வனுக்குக் கேடில்லை. ஒருகால், உள்ளா ரெனின் அவனுக்குக் கேடுண்டாம். ஆதலால், நம்பா மதத்தினரும் நம்பு மதத்தைக் கடைப் பிடிப்பதே சாலச் சிறந்ததாம்.

9. மதத்தை அழிக்க முடியுமா?

கடவுள் நம்பிக்கையில்லாத தற்பெருமை வேந்தரும், நெறி தப்பிய அறிவியலாராய்ச்சியாளரும், பொதுவுடைமைக் கொள்கை யினரும், கடவுட் கொள்கையை ஒழிக்கத் தம்மால் இயன்றவரை முயன்று வந்திருக்கின்றனர். மதவியல் முற்றும் மனத்தைப் பொறுத் ததாதலின், அதை எவரும் அழிக்க வியலாது. சாக்கிய நாயனார் பகைவர்போன்று சிவப் படிமையைக் கல்லாலடித்தே, சிவனடியா ராயினர் எனின், வேறு என்ன சொல்ல விருக்கின்றது!

மேலும், பொதுவுடைமை இறைவனுக் கேற்றதே. மக்களெல் லார்க்கும் உணவெனின், தந்தை மகிழத்தானே செய்வான்! அங்ங னமே பரமத் தந்தையும்.

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக வுலகியற்றி யான்" (குறள். 1062)
என்றார் திருவள்ளுவர். கிறித்தவர் எதிர்நோக்கும் ஆயிரவாண்டு அரசாட்சியும் பொதுவுடைமை வகையில்தான் இயலும்.

கனவு காணாது உறங்கும் நேரம் தவிர, மற்றெல்லா நேரத்தி லும் - இருப்பினும், நடப்பினும், வேலை செய்யினும், உரையாடி னும் உண்ணினும் - இறைவனை நினைக்கவும் வழுத்தவும் வேண் டவும் இயலு மாதலின், மனம் உள்ளவரை மதத்தை ஒருவராலும் அழிக்க முடியா தென அறிக.

10. நம்பா மதமும் ஒரு மதமே

கடவுளும் மறுமையும் இல்லையெனும் கொள்கையும் ஒரு மதமாதலால், மதத்தை ஒழிக்கவேண்டு மென்பது, செருக்கை யடக்க வேண்டும் என்றே பொருள்படுவதாகும். உள்மதம் (ஆஸ்திகம்), இல் மதம் (நாஸ்திகம்) என்னும் வழக்கையும் நோக்குக.

மக்களாட்சியும் குடியரசும் நடைபெறும் இக் காலத்தில், ஒவ்வொருவர்க்கும் தத்தம் மதத்தைப் பரப்ப முழு வுரிமையுண்டு. ஆதலால், தஞ்சைப் பெரியார் படிமை யடித்தளத்தில், "கடவு ளில்லை கடவுளில்லை கடவுளென்ப தில்லையே" என்று பொறித் திருப்பதுபற்றியும், அப் படிமையைத் திறந்து வைத்த முதலமைச் சரைக் குறித்தும், ஓர் ஆரியக் கூட்டம் உவலை கூறுவது நச்சுத் தன்மையான குறும்புத்தனமே.

சேலம் மூடநம்பிக்கை யொழிப்பு மாநாட்டிலும், பெரியார் ஏவலால் வரைந்து காட்டப்பட்ட ஓவியங்கள், தொன்மங்களிற் சொல்லப்பட்ட செய்திகளே. அவ் வோவியங்களைப்பற்றிக் குமரிமுதல் பனிமலைவரை வீண் பேராரவாரம் செய்யப்பட்டது. அவற்றிற்கு மூலமான செய்திகளை நீக்கின், அவ் வோவியங்கள் தாமாக நீங்கிவிடும்.

இற்றை அறிவியற் போக்கு

இறைவ னின்றி எல்லாம் இயற்கையாகத் தோன்றிய தென் பதையே, அறிவியற் பொது அடிப்படையாக இக்காலத்துப் புதுப் புனை வாராய்ச்சியாளர் பலர் கொண்டுள்ளனர். தார்வின் (Darwin) கொள்பும் (theory) இதற்குத் துணையெனக் கருதுகின்றனர். ஆயின் தார்வினே தம் இறுதிக் காலத்தில் தம் இளமைக் காலக் கொள்பு பற்றி வருந்தினதாகத் தெரிகின்றது. தாழ்ந்த இனத்தினின்று உயர்ந்த இனம் படிமுறையாகத் தோன்றிற்று என வைத்துக்கொள்ளினும், அடிப்படை யுயிரியான ஒற்றைப் புரையன் (unicellular being) எங்ஙனம் தானே தோன்றும்? சடத்தினின்று சித்துத் தோன்றுமோ? தோன்றாதே! ஆதலால், திரிபாக்கக் கொள்பு (Evolution theory) தவறென்றே கொள்ள வேண்டியுள்ளது. இனி, கதிரவனினின்று ஞாலம் வீழ்ந்ததெனின், கதிரவன் எதினின்று வீழ்ந்தது? இக் கொள்பாளர் கணக்கற்ற கதிரவக் குடும்பங்கள் பெரு விசும்பில் (Grand Universe) உள்ளதை அறிந்தாரா? அறிவியலாராய்ச்சியாளர் இயற்கையிலுள்ள, இறும்பூதுகளைக் கண்டு இறைவன் பெருமையை உணர்ந்து வியப்பதற்கு மாறாக, திறவுகோல் பெற்ற வேலைக்காரன் திருடனாக மாறி விடுவதுபோல், தனக்கு நுண்மதியளித்த இறைவனையே இல்லையென மறுப்பது, விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுவது போன்ற தன்றோ!

"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்." (குறள். 2)

"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே" (திருமந். 2251)
காணப்பட்ட பொருள்களைப்பற்றியே கருத்து வேறுபாடி ருக்கும் போது, காணப்படாத கடவுளையும் மறுமையையும்பற்றிக் கருத்து வேறுபாட்டிற்கு மிகுந்த இடமிருப்பதால், கடவுளை நம்புகிறவரும் நம்பாதவரும் ஒருவரை யொருவர் குறைகூறாதும்
----------

பின்னிணைப்பு


1. தமிழ்நாட்டரசின் திருக்கோவில் வழிபாட்டுச் சீர்திருத்தம்.

ஆரியர் வருமுன், குமரிநாட்டுச் சிவன் (சேயோன்) கோவில் களிற் குருக்கள் அல்லது பண்டாரம் என்னும் வகுப்பாரும், திருமால் கோவில்களில் நம்பிமார் என்னும் வகுப்பாரும், காளிகோவில்களில் உவச்சர் என்னும் வகுப்பாரும், பூசையும் பொதுவழிபாடும் தனித்தமிழில் நடத்திவந்தனர்.

திருக்கோவிற் பணிகளைக் கவனித்தற்கு, ஊர்தொறும் ஊரவைப் பிரிவான கோயில் வாரியம் என்னும் குழு விருந்தது. தலை நகர்களிலும் கோநகர்களிலும் உள்ள பெருங்கோவில்களில், அரசரின் நேரடி யாட்சிக் குட்பட்ட முதுகேள்வி (supervising officer), இளங்கேள்வி (subordinate supervising officer) என்னும் ஈரதிகாரிகள் இருந்துவந்தனர்.

நீண்ட காலமாக புன் சிறு தெய்வங்களையே போற்றி வந்த வரும் கடவுளியல்பை யறியாதவருமான ஆரியர், கி.பி. 5ஆம் நூற்றாண்டின் பின்னரே, மூவேந்தரையும் பல்வேறு வகையில் வயப் படுத்தி, 'ஆகமம்', 'சங்கிதை', 'தந்திரம்' என்னும் மூவகைத் தொழு மறைகளை இயற்றி, பிராமணரே திருக்கோவில்களில் வழிபாடு செய்து வருமாறு திட்டஞ் செய்துவிட்டனர். தமிழர் கோவில்களில் ஆரியராட்சி புகுந்தது, கறையான் புற்றிற் பாம்பு குடிகொண்டது போன்றதே.

ஆதலால், எதற்கும் அஞ்சாதும் எவ் வெதிர்ப்பையும் பொ ருட்படுத்தாதும், பின்வருமாறு சீர்திருத்தங்களை உடனடியாகச் செய்வது தமிழ்நாட்டரசின் தலைமேல் விழுந்த தலையாய கடமை யாம்.

(1) கோவில் வழிபாடு தமிழிலேயே நடைபெறல்.
(2)
அவ்வம் மதநம்பிக்கையும் தெய்வப் பத்தியும் கல்வித் தகுதியும் பணிப்பயிற்சியும் தூய வொழுக்கமும் உள்ள,பல வகுப்பாரும் பூசகராக அமர்த்தப்பெறல்.


(3) பூசகர் பதவியிலும் கையடைஞர் (Trustees) பதவியிலும் தொடர்மரபு (Hereditariness) நீக்கப்படல்.
(4) அறிஞரும் ஆராய்ச்சியாளரும் அறிக்கையாளரும் உயர் பதவியாரும் பெருமக்களும் அரசரும், திருவுண்ணாழிகை யல்லாத கோவிலகத்துட் புகவுச் சீட்டுப் பெற்று புகவிடல்.
(5) பெருங்கோவில்களின் வருமானத்தி லொரு பகுதியைப் பொது நலப் பணிக்குச் செலவிடல்.
(6) அறநிலையப் பாதுகாப்புத் துறை யமைச்சர் கடவுள் நம்பிக்கை யுடையவராயிருத்தல்.
(7) உருவிலா வழிபாட்டைப் படிப்படியாகப் பொது மக்களிடைப் புகுத்தல்.
கடவுள் எல்லார்க்கும் பொதுவான அன்பார்ந்த தந்தையாத லாலும், கணக்கற்ற உலகங்களையுடைமையாலும், அவருக்கு ஒரு தேவையுமின்மையாலும், அருமை மக்கள் போன்ற அனைத்துயிரும் இன்பமாக வாழ்வதே அவர் விருப்பாதலாலும், வாழ்க்கையினின்று மதத்தை வேறாகப் பிரிப்பதும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கடவுள் இருக்கையான கோவிலுக்குட் புகுவதைத் தடுப்பதும், கோவிற் சொத்து கோவிற் பணிக்கே செலவிடப்பட வேண்டு மென்பதும், கடவுளியல்பை அறியாதவரும் அவருக்கு மாறானவருமான தன்னல வகுப்பாரின் செயலாதலின் அதைப் பொருட்படுத்தாது பொதுநலப் பணியில் ஈடுபடல் வேண்டும். கோவிற்சொத்தைப் பிராமணர்க்கே செலவழிப்பின் திருப்பணியும், எல்லார்க்கும் பயன்படுத்தின் தெருப்பணியும் ஆகும் போலும்!

2. மதச் சமநோக்கு

சிவனியம், மாலியம், உலகியம் (லோகாயதம் அல்லது சார் வாகம்) என்னும் மூன்றே தொன்றுதொட்டு வழங்கும் தமிழ மதங் களாயினும், இன்று வெளிநாட்டு மதங்களும் தமிழரிடைப் புகுந் திருப்பதாலும், அம் மதத்தாரைத் தமிழரல்லர் என விலக்கல் கூடாமையாலும், இற்றை முறைப்படி சமணம், புத்தம், கிறித்தவம், இசலாம் என்னும் மதங்களையும் தமிழ்நாட்டு மதங்களாகவே கூறல் வேண்டும்.

உலகியம் ஒன்றுமட்டும் உலகம் முழுமைக்கும் தொன்று தொட்டுப் பொதுவாகும்.

மதங்களெல்லாம் தேவியம் (Theism) அல்லது உள்ளியம் (ஆஸ்திகம்), தேவிலியம் (Athenism) அல்லது இல்லியம் (நாஸ்திகம்) என


இருவகைப்பட்டிருப்பதால், மதவியல் வாயிலாக மக்களை ஒன்று படுத்தல் இயலாது. அதனாலேயே, இந்திய ஒன்றியமும்(Indian Union) மதவியலைத் தழுவாது உலகியலையே(Secularism) தழுவியுள்ளது.

ஆகவே, தாய்மொழி யொன்றே ஓரினப் பல மதத்தாரையும் ஒன்றாயிணைக்க வல்லதாம். ஆதலால், தமிழர் எம் மதத்தாராயினும் தமிழைத் தாய்போற் பேணிக் காத்தல் வேண்டும். தமிழ் என்பது தனித்தமிழே. அயல்நாட்டு மதம் என்னுங் கரணியத்தால், அயன் மொழிச் சொற்களை ஆளுதல் கூடாது. தமிழ்மொழிபற்றியே தமிழர் என்னும் இனம் அமைத்திருப்பதால், தமிழ்ச்சொல்லை வழங்காதார் தமிழராகார். அயல் நாட்டு மதம்பற்றிய அயன்மொழிச் சொற்களை யெல்லாம் தமிழில் மொழி பெயர்த்தாள வேண்டும். நேர்த் தென்சொல் ஏற்கெனவே யில்லாவிடின், புதுச்சொல் புனைந்து கொள்ள வேண்டும்.

மதம் என்பது, காணப்படாத மறுமை நோக்கிய தாதலால், எல்லா மதங்களையும் சமமாக நோக்குதல் வேண்டும். ஒவ்வொரு மதத்தார்க்கும் தம் மதத்தைப் பிறர்க்கெடுத் துரைக்க வுரிமை யிருப்பினும், அதுபற்றிப் பிற மதத்தாரை வெறுப்பதும் பகைப் பதும், மத நோக்கத்திற்கும் மாந்தன் தன்மைக்கும் முற்றும் மாறான தாகும்.

கடவுளிருப்பது உண்மையாயின், அவரை நம்புவாரையும் நம்பாதாரையும் அவரே மறுமையிற் கவனித்துக் கொள்வார். இம்மையைப் பொறுத்தமட்டில், எல்லாரும் உடன்பிறப்பாக ஒன்றி வாழல் வேண்டும். அதுவே உயர்திணை யென்னும் மக்கட்டன்மை.

3. மாந்தரியற்கை வேறுபாட்டு விளக்கம்

மாந்த ரெல்லாரும் ஒரே திணையாயினும், நாகரிக வாழ்க்கை யில் உணவுமட்டுமன்றி, உடை, உறையுள், கருவி, தட்டுமுட்டு, ஊர்தி, மருந்து, இன்புறுத்தி, அறிவுநூல் முதலிய பல்வேறு பொருள் கள் தேவையா யிருப்பதால், அவற்றை யெல்லாம் உருவாக்கு வதற்கு, அவர் அகக்கரணங்களும் புறக்கரணங்களும் இயற்கை யிலேயே வெவ்வேறு வகைப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பொருளும் உழைப்பினாலேயே உருவாக்கப்படும். உடலுழைப்பும் மதியுழைப்பும் என உழைப்பு இருவகை. இருவகை யுழைப்பும் இன்றியமையாதனவே. உடலுழைப்பாளிகள் உடல் வலிமையராகவும் மதியுழைப்பாளிகள் மதிவலிமையராகவும் பிறக்கின்றனர். இது இறைவன் ஏற்பாடு. இதையே ஊழ் (விதி) என்பர்.


எல்லாரும் மதிவலியராயின் உடலுழைப்பு நடைபெறாது. இதை, "எல்லாரும் பல்லக் கேறினால் எவர் தூக்குவது?" என்னும் பழமொழி உணர்த்தும். ஆயின், உடலுழைப்பாளியரைத் தாழ்வாகக் கருதுவதும், அவர்க்கு வேண்டிய வாழ்க்கைத் தேவைகளைத் தர மறுப்பதும், கொடுமையும் அஃறிணைத் தன்மையும் ஆகும். உடலுழைப்பாளியரையும் உடன்பிறப்புப்போற் கருதி மதிக்க வேண்டுமென்பதையே,

"யாதும் ஊரே யாவரும் கேளிர்
..............................
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்தல் அதனினு மிலமே" (புறம். 192)
என்று பாடி அறிவுறுத்தினார் கணியன் பூங்குன்றனார்.

உடலுழைப்பாளியர் தம் உரிமையைப் பெறும்பொருட்டே, காரல் மார்க்கசுவும் பிரெடிரிக்கு எஞ்சல்சுவும் சென்ற நூற் றாண்டில் தோற்றுவிக்கப்பட்டனர்.

இனி, அகக்கரணமும் புறக்கரணமும், மீண்டும் வெவ்வேறு தொழிற்பிரிவிற் கேற்றவாறு, பல்வகை நுட்ப வேறுபாடுடை யனவாய்ப் பிறப்பில் அமைகின்றன. இதன் விளக்கத்தை யெல்லாம், என் மண்ணில் விண் என்னும் நூலிற் கண்டு தெளிக. ஈண்டு விரிப்பிற் பெருகும்.

எல்லா மக்களும் வெவ்வேறு தொழிலும் வினையுஞ் செய்து உடன் பிறப்புப்போற் கூடி வாழ்தற்கே, அவர் உடல் உளம் மதி முதலியன வெவ்வேறு திறம்பட இறைவனாற் படைக்கப் பட்டுள்ளன.

இனி, உணவு, தட்பவெப்ப நிலை, பழக்கவழக்கம், பயிற்சி முதலியவற்றாலும், தொடர்மரபினாலும் (heredity), இருவகைக் கரண வலியும் மேன்மேலும் வளர்க்கப்படுவனவாயு முள்ளன.

மாந்தனுக்குப் பகுத்தறிவும் தன்விருப்பச் செயலுரிமையும் அளிக்கப்பட்டிருப்பதால், அவன் தன் வலிமையை வளர்ப்பதும் தளர்ப்பதும் அவனையே பொறுத்துள்ளன. தீய அல்லது தகாத வாழ்க்கையால் ஒருவன் தன் வலிமையைக் கெடுத்துக்கொள்ளின், தன் வழியினர் வலிமையையுங் கெடுத்தவ னாகின்றான்.


"சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனுங் குறளும் ஊமுஞ் செவிடும்
மாவும் மருளும்" (புறம். 28)
ஆகிய எண்வகை எச்சப் பிறவியும், குறுவாழ்வும், கொடுநோயும், தீய மனமும், முன்னோர் தவற்றாலும் நேரலாம். அத்தகைத் தொல்வரவுப் பேறு எத்தனை தலைமுறை தாண்டியும் நேர்தல் கூடும்.

இனி, செல்வமும் வறுமையும் போன்றே, மனத்தூய்மையும் மனத் தீமையும், இயற்கைச் சேதமுங் கொள்ளை நோயும், அரசியல் தவற்றாலும் நேரும்.

ஆதலால், பிறவியிலமையும் தீய நிலைமைகட்கும் இயற்கை யில் நேரும் துன்ப நேர்ச்சிகட்கும், இறைவனே கரணியமாகான் என்பதை அறிதல் வேண்டும்.

"இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு." (குறள். 374)
ஆதலால், தெள்ளிய அறிஞர் செல்வ ராவதில்லை. அதற்கு ஆசையின்மையும் பண்புடைமையுமே கரணியம். சோம்பேறிகள் முயற்சியின்மையால் வறுமையடைகின்றனர். அதனால்,அவர் மக்கள் வறியராய்ப் பிறக்கின்றனர். முயற்சியுடையார் வறியராதற்கு அரசியல் தவறே கரணியம்.

தனிப்பட்டவர் நோயுறுவதற்குத் தன் தவறோ, முன்னோர் தவறோ, தெய்வத் தண்டனையோ கரணியமா யிருக்கலாம். நல்லார் நோயுறுதற்கு இறைவன் தடுத்தாட் கொள்ளலும் கரணிய மாகும்.

இயற்கைச் சேதத்தால் ஓர் ஊரார் அல்லது நாட்டார் அழிவது பெரும்பாலும் தெய்வத் தண்டனையே. உலகம் முழுவதும் அழிவது இறைவன் அழிப்புத் தொழில். அது மக்கள் மிகையால் அல்லது இழுக்கத்தால் நேர்வது.

end of the work

-----------
முன்னுரை
1. மதம் என்னும் சொல் வரலாறு
2. சமயம் என்னும் சொல் வரலாறு
3. மதம் தோன்றிய வகை
4. மூவகை மதம்
5. குமரிநாட்டு மதநிலை

நூல்
I. குமரி நிலையியல்
1. சிறு தெய்வ வணக்கம்
2. பெருந்தேவ மதம்
1. சிவ மதம்
2. திருமால் மதம்
3. கடவுட் சமயம்

II. இடைநிலையியல்
1. ஆரியத் தெய்வங்கள்
2. ஆரியர் தமிழரை அடிப்படுத்திய வகைகள்
3. ஆரியத்தால் விளைந்த கேடுகள்
4. சிவனியர் ஆரியச் சார்பும் திருமாலியர் தமிழச் சார்பும்

III. நிகழ்நிலையியல்
1. திருநான்மறை ஆராய்ச்சி
2. தமிழ்நட்டுச் சிவமடங்கள்
3. சைவ சித்தாந்த மகா சமாசச் சிவத்தொண்டு
4. காஞ்சிக் காமக் கோடிப் பீடச் சங்கராச்சாரியாரின் கரை கடந்த தமிழ் வெறுப்பு
5. அகோபிலம் சீயர் ஆணவம்
6. தவத்திருக் குன்றக்குடி அடிகளின் தமிழ்த் தொண்டு
7. திமுக. அரசின் திருக்கோவில் தொண்டு

IV. வருநிலையியல்
1. திருக்கோவில் தமிழ் வழிபாடு
2. பல வகுப்புக் கோவிற் பூசகர்
3. வழிபாட்டில் வீண் செலவு நிறுத்தம்
4. உருவிலா வழிபாடு
5. இந்து மதம் என்னானது தென் மதம் எனல்
6. எல்லா மதமும் தனித்தமிழ் போற்றல்
7. தவத்திருக் குன்றக்குடி அடிகள் கடமை

V. முடிபுரையியல்
1. எது தேவமொழி?
2. பிராமணன் நிலத் தேவனா?
3. பிராமணனுக்கு உரியது எவ்வறம்?
4. சிவ மதமும் திருமால் மதமும் தமிழ் மதங்களே
5. தமிழ் ஆரிய மத வேறுபாடு
6.கொண் முடிபுக் குறியீடுகள்
7. மக்கள் முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டையா?
8. கடவுள் உண்டா?
9. மதத்தை அழிக்க முடியுமா?
10. நம்பா மதமும் ஒரு மதமே

பின்னிணைப்பு
1. தமிழ் நாட்டரசின் திருக்கோவில் வழிபாட்டுச் சீர்திருத்தம்
2. மதச் சமநோக்கு
3. மாந்தரியற்கை வேறுபாட்டு விளக்கம்
---------------