திருமயிலைத்‌ தலபுராணம்‌
pm logo

மயிலை நாதமுனி முதலியார் இயற்றிய
"திருமயிலைத்‌ தலபுராணம்‌"

tirumayilait talapurANam
by mayilai nAtamuni mutaliyAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

மயிலை நாதமுனி முதலியார் இயற்றிய
"திருமயிலைத்‌ தலபுராணம்‌"

Source:
இது ஸ்ரீலஸ்ரீ மயிலை தணிகாசல முதலியார் மாணவராகிய
ரத்னாகரம்‌ மயிலை நாதமுனி முதலியாரால் பாடப்பெற்று
கோமனேசுவரன்‌ பேட்டை, வித்வான் ம. இராஜகோபால பிள்ளையவர்களால்‌
பார்வையிடப்பட்டு மகா ஸ்ரீ கதிர்வேலு முதலியாரவர்களது
நோபில்‌ பிரசில்‌ பதிப்பிக்கப்பட்டது.
1924.
Copy Registered.
---------

திருமயிலைத்‌ தலபுராணம்‌.

content: திருமயிலைத்‌ தலபுராணம்‌.

01. காப்பு. (17)
02. அகஸ்தியர்‌ படலம்‌.(8)
03. கூத்தாடும்‌ விநாயகர்‌ வரலாறு. (8)
04. நாட்டுப்‌ படலம்‌ (42)
05. நகரப்படலம் (41)
06. உமாதேவியார்‌ சாபமேற்ற படலம்‌ (62)
07. உமாதேவியார்‌ சாபந்தீர்ந்த படலம்‌ (39)
08. சிங்காரவேலர்‌ சத்திவேல்‌ பாசுபதாஸ்திரம் பெற்ற படலம் (129)
09. வெள்ளீசர்‌ /வெள்ளீசர் படலம் பிரபாவம் (47)
10. வாலீசர்‌ படலம்‌ /வாலீசர்‌ பிரபாவம்‌ (31)
11. அங்கம்‌ பூம்பாவை சரிதம் /அங்கம் பூம்பாவை சரித்திரப்‌ படலம்‌. (102)
12. திருவள்ளுவ நாயனார்‌ பிரபாவம்‌ (54)
13. முண்டகக்‌ கண்ணம்மை சரித்திரம்‌ (46)
14. இந்திரன்‌ கரமுகமான சரித்திரம்‌ (25)
15. மல்லீசர்‌ சரித்திரம் (40)
16. காரணீசுரர்‌ சரித்திரம்‌ (37)
17. விருபாட்சீசர்‌ சரித்திரம் (35)
18. ஸ்ரீ ராமர்‌ சரித்திரம்‌ (17)
19. தீர்த்தபாலீசர் சரித்திரம் (17)
20. வாயிலார் நாயனார் சரித்திரம் (7)
21. புராண நிறைவு (2)
-----------------

திருமயிலைத்‌ தலபுராணம்‌.

திருசிற்றம்பலம்‌.
01. காப்பு. (17)

விநாயகர்‌ காப்பு.
செந்திருவை மணந்‌தோனும்‌ வெண்டிருவை மணந்தோனும்‌
      தேவர்‌ கோனும்‌
வந்தகஜ முகன்வலிதீர்த்‌ தெமக்குவெற்றி வாழ்வளிக்க
      வருவா யென்று
முந்துரைத்த மனுக்கிரங்கி யஞ்சலென வமுதமொழி
      மொழிந்து காத்த
ஐந்துகரத்‌ தெழின்மயிலைச்‌ செல்வவிநாயக விந்‌நூற்‌
      கருள்செய்‌ வாயே.

நடேசர் துதி.
அம்புலிச் செஞ்சடையாட வருட்கரத்தில் மானாட
      வயன் கபாலம்‌
நம்பெருமான் கரத்தாடத்‌ தாழ்சடையும்‌ நீண்முடியுந்
      தயங்கி யாட
வெம்புலியும்‌ பதஞ்சலியும்‌ வியந்தாட விளங்கிழையாம்‌
      விமலை யாட
நம்பர்நட மிடுங்கழலே நமதுமுடிக்‌ கணிசெய்மணி
      நகையா மாதோ.

சிவகாமி யம்மையார்‌ துதி.
அறத்தாளே யுயிர்க்கெல்லா மமுதளிக்குங்‌ குணத்தாளே
      யழகார் பச்சை
நிறத்தாளே யடியவா்க்கு நிதியளிக்கு நெறியாளே
      நினையார்க்‌ கென்றும்‌
புறத்தாளே தில்லைநகர்ச்‌ சிவகாமி யெனவமர்ந்து
      புனித நல்குந்
திறத்தாளே யெமைவளர்க்குங்‌ கரத்தாளே நின்மலர்‌த்தாள்‌
      சிரங்கொள்‌ வேனே.

கபாலீசர்‌ துதி.
அருவாகி யுருவாகி யருவுருவங்‌ கடந்துண்மை
      யறிவா னந்தத்‌
தருவாகிச்‌ சரமசர மிருவகைக்குந்‌ தாயாகித்‌
      தாணு வாகித்
திருவாகி யயனாகித் தீயாகி நீராகித்
      திருமா லாகிக்‌
கருவாகி முளைத்த கபாலிப்பெருமான்‌ திருவடியைக்‌
      கருதி வாழ்வாம்‌.

கற்பகவல்லி யம்மையார்‌ துதி.
பூரணியென்‌ றொருபெயரு நாரணியென்‌ றொருபெயரும்‌
      போதா வென்றே
வாரணிந்த குயமுடைய மலையரையன்‌ மகளென்றும்‌
      வலைமா தென்றும்‌
தாரணிந்த முடிசூடித் தடாதகையென் றொருபெயருந்
      தானே கொண்ட
காரணியா மயிலைவளர்‌ கற்பகவல்‌ லிக்கனியைக்‌
      கருதி வாழ்வாம்‌.

தலவிநாயகர்‌ துதி.
வானவ ரேத்திநாளும்‌ வலம்வரு மயிலையின்‌றன்‌
தேனெனும்‌ புராணந்தன்னைச்‌ சிறப்புறப்‌ பாடுதற்கே
ஊனம தடையாவண்ண முறுதுணை யிருந்துகாக்கும்‌
தானமும்மதக்‌ கூத்தாடுந்‌ தனிப்பதம்‌ வணங்குவாமால்‌.

சிங்காரவேலர்‌ துதி.
கனிபெறவே கயிலைநின்‌று மெழுந்தருளி மயில்மீதில்‌
      கணத்தில்‌ சூழ்ந்து
முனிவர்களு மஞ்சலிக்க முறையோவென்‌ றசுரரழ
      முனைபோர்‌ தன்னில்‌
தனிவேலால் சூர்தடித்துத் தந்தையருக் குபதேசந்
      தானே செய்த
யினியவனை மயிலைவளர்‌ சிங்கார வேலவனை
      யிதையம்‌ வைப்பாம்‌. 7

வீரபத்திரர்‌ துதி.
தக்கனகங்‌ கொண்டபெருஞ்‌ செருக்கொழிய வீரனெனத்
      தணலிற் றோன்றி
நக்கர்தமக்‌ கிடுமவிசு நமக்கிடென மறுத்ததனால்‌
      நமனா ரூரில்‌
அக்கணமே சேர்ப்பனென வவன்‌வேள்வி தனையழித்தே
      யருளா னேர்ந்த
விக்குமொழிக்‌ காளியுடன்‌ வாழ்வீர பத்திரன்றா
      ளிதையஞ் சேர்ப்பாம்‌. 8

திருநந்திதேவர்‌ துதி.
அந்தியும்பகலும்‌ வானவர்சூழ்ந்தே யழகியகயிலைமால்‌ வரையில்‌
பந்தனைநீக்கச்‌ சிந்தனைசெய்யும் பரிசுகண்டவரவர் முந்திச்‌
சிந்தனைகலங்க நெருக்குதல்நீக்கச்‌ சிரத்தொகை தாக்கிடாவண்ணம்‌
பந்தியாய்நிற்கப் பிரம்படிவழங்கு நந்தியம்பகவனைப்‌ பணிவாம்‌. 9

திருஞானசம்பந்த மூர்த்தியார்‌ துதி.
அன்றுசிவை யமுதினிதுண் டருள்மொழியாற் பொற்சிவிகை
      யணையப்‌ பெற்று
நின்‌றசிவம்‌ பெரிதெனவே வைகைதனி லேடிட்டு
      நிருபற் றேற்றிப்
பொன்றவைத்த விடந்தீர்த்தே யாண்பனைபெண்‌ பனையாக்கிப்‌
      புகழே யென்றும்‌
மன்றவென்பைக்‌ கொடியாக்கும்‌ வளர்காழிச்‌ சம்பந்தர்‌
      மலர்த்தாள்‌ போற்றி. 10
திருநாவுக்கரசு சுவாமிகள்‌ துதி.
கலையோதாச்‌ சமணருடன்‌ கலந்துவருஞ் சூலையினால்‌
      கருத்திற்‌ றேர்ந்து
சிலைமாரன்‌ றனையொழித்த திலகவதி தனையடையச்‌
      சிவனைப்‌ போற்றின்
நிலையாகத்‌ தீருமென நீறிட்டுப்‌ பிணிதவிர்த்து
      நிதமும்‌ பாடி
மலைமாதி னருட்பாக னுடன்சேர்ந்த வாகீசர்‌
      மலர்த்தாள்‌ போற்றி. 11

சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌ துதி
விலைமாதர்‌ குலத்துதித்த‌ பரவையின்பால்‌ வித்‌தகரை
      விடுத்துப்‌ பாடிக்‌
கலைமாதின்‌ கொழுநனுடன்‌ மாதவனு மறியாத
      கமலப்‌ பாதம்‌
மலைமாது தனைப்பிரிந்தோ ரிரவெல்லாந்‌ தூதாகி
      வருந்தச்‌ செய்து
சிலைமாரன்‌ றனைக்காய்ந்தோர்‌ திருக்கயிலை மேவியசுந்
      தரர்தாள்‌ போற்றி. 12

மாணிக்கவாசக சுவாமிகள்‌ துதி.
பாண்டியற்குப்‌ பரிகொள்வான்‌ பொன்பெற்‌றுப்‌ பரமனடி
      பரவிச்‌ சென்று
வேண்டியநல்‌ லடியவர்க்கும்‌ பெருந்துறைவாழ்‌ வித்தகர்க்கும்‌
      வினையஞ்‌ செய்தே
ஆண்டியென வுடைதரித்து மழுதழுது பரிபெற்‌று
      மருட்பா வோதித்‌
தூண்டல்செயா மணிவிளக்கி னருளடைந்த மாணிக்கர்‌
      துணைத்தாள்‌ போற்றி. 13

அறுபத்துமூவர்‌ துதி.
உயர்வாஞ்சைவ நெறியுரைக்கு முண்மையுலக மினிதுணர்ந்து
மயர்வாம்பிறவி மயக்கறுக்க மகிழ்விற்போந்த மதியாளர்‌
அயர்வேதுமிலா திசையணிந்த அறுபான்மூவ ரடியிணைகள்‌
துயர்வோறமுப் போதுமெணித்‌ துதிப்பாஞ்செகத்திற் கதிப்பாமால்‌. 14

சண்டேசர்‌ துதி.
வெய்யபிறவிப்‌ பிணிதீர்ப்பான்‌ விரிநீர்வேணிப்‌ பெருமான்றன்
செய்யபணிக் கிங்கிடையூறு செய்யலுற்ற தந்தையுமோர்
அய்யனாகா னெனவொழித்த வடிகள் சண்டேச்சருபய
துய்யமலர்த்தா ளனுதினமுந் தொழுவார்துயர்நின் றெழுவாரே. 15

கலைமகள்‌ துதி.
கொச்சகம்‌.
வெண்கலனும்‌ வெண்ணிறமும்‌ வெண்டுகிலும்‌ கொண்டெழில்கூர்‌
வெண்கமலப்‌ பொற்றவிசில்‌ வீற்றிருக்கும்‌ வித்தகியாள்‌
மண்‌களிக்கு மாமயிலை மான்மியத்தை நான்புகலத்‌
தண்கருணை செய்வளவள்‌ தாமரைதாட்‌ டுணைபோற்றி. 16

அவையடக்கம்‌.
தமிழ்தேர்ந்த புலவர்களுந்‌ தங்குழவி குதலைமொழி
      சாற்றக்‌ கேட்டே
யுமிழ்வாரோ விலக்கணமு மிலக்கியமு முணராதே
      னுகப்பி னாலே
அமிழ்‌தமெனுந்‌ திருமயிலைப்‌ புராணமதைப்‌
      பாடலுற்றே னறிஞரானோர்‌
இமிழ்திரை மாஞாலமதிலிதுவு முலாவக்‌ கருணை
      யேன்‌ செய்யாரே. 17
----------------

02. அகஸ்தியர்‌ படலம்‌.(8)

அண்ண லாரருள்‌ பெற்ற வகத்தியர்
நண்ணு மாமலை நீங்கியே நம்பன்வாழ்‌
புண்ணி யத்தலம்‌ போற்றி வணங்கியே
௭ண்ணி லாமகிழெய்தி வருவரால்‌. 1

வந்த மாதவ வள்ளலைக்‌ கண்ணுவர்‌
தந்தோ ராதனம்‌ தாம்‌ வீற்றிருந்தபின்‌
எந்தையே யெங்க ளேக்‌கங்கள்‌ தீரவே
புந்திமால்‌ கெடப்‌ போதிக்க வேண்டுமால்‌. 2

யாதஃ தென்றிடி லித்தல மான்மியம்‌
ஓதுவீர் மயிலா யுமை போந்திவண்‌
மாது பாகனைப்‌ பூசித்து மன்னிய
ஏதந் தீர்ந்த வெழில் சரிதம்மரோ. 3

என்று கேட்ட முனிவரை நோக்கியே
பொன்ற லற்ற புகழுடை யாள்தவம்‌
நன்று கேட்டதும்‌ நான்‌சொலப்‌ பாக்கியம்‌
இன்று வாய்த்தது மென்று மகிழ்ந்தனன்‌. 4

இத்த லப்புகழ்‌ கேண்மி னியம்புவேன்‌
முத்த னென்குக னார்மொழிந்‌ திட்டவா
கைத்தலஞ்‌ சிரங்‌ கூப்பிக்‌ கண்ணீருடன்‌
சித்தமொத் தெனச்‌ செப்பினன்‌ செவ்வியோன். 5
வேறு.
நண்ணிய தவத்தினீர்‌ நவில்வன்‌ கேட்பிரால்‌
எண்ணிய வெண்ணங்க ளியாவு முற்றிடும்‌
புண்ணிய மயிலையின்‌ புகழை யான்சொலக்‌
கண்ணிய நாவனோ கல்வியோர்ந் திலேன்‌. 6

ஆதலா லுங்கட மார்வந் தீரவே
ஓதுவ னறுமுக னுரைத்த வாறுபோல்‌
கோதிலாக்‌ கண்ணுவ கேளென்‌ றேகுரு
பாததா மரைதனைப்‌ பரவிக்‌ கூறுவார்‌. 7

வேறு.
மதிவேண்டி னிதிவேண்டின்‌ மக்கள்வேண்டின்‌
மண்ணுலகிற்‌ புகழ்வேண்டின்‌ மாற்றார்‌ போற்றுந்
துதிவேண்டின்‌ மனைவேண்டிற்‌ பதாதிவேண்டிற்‌
றுணைசெய்ய வைந்தெழுத்தைத்‌ துதிக்கவேண்டிற்‌
சதிசெய்யும்‌ நோயதனைத்‌ தீர்க்கவேண்டிற்‌
சகலகலை சம்பத்‌துந்‌ தழைக்கவேண்டிற்‌
றதிநெய்பாலொடு துய்த்துக் க‌தியும்வேண்டிற்‌
றருமயிலை வளங்கேட்கச்‌ சார்ந்தபேர்க்கே. 8
---------------

03. கூத்தாடும்‌ விநாயகர்‌ வரலாறு. (8)

சலந்தரன்றன் னுடல்தடிந்த சக்கரத்தைப் பூசித்து
நலம்பெறவே கொள்வனென நாரணனு நாடோறு
மலர்ந்தமரைப் பதின்சதமா மலர்கொண்டு சிவபூசை
தலந்தனிலே தான்செய்யச் சங்கரனு மிகமகிழ்ந்தே. 1

ஆயிரத்தி லொருமலரை யவர்மறைக்க மிகுமகிழ்வால்‌
நேயமுடன்‌ விழிகளைந்து நின்மலனை யர்ச்சிக்கத்‌
தூயமனம கிழ்ந்து சிவன்றொலை விலாக்கண்ணனென
மாயவற்குப்‌ பெயரிட்டு மகிழ்திகிரி யளித்‌தனனால்‌. 2

சங்கரனார்‌ மனமுவந்து தந்ததிருச்‌ சக்கரத்தின்‌
பொங்குமகத்துவ மதனைப்‌ புலனறியக்‌ காணுமொரு
சங்கையினை மேற்கொண்டு சாகரத்‌திற்‌ றுயில்புரிவோன்‌
அங்கதனை விடுத்தனனா லத்தனார்‌ தம்மீதே. 3

தெரிவிலாச்‌ சூரனைப்போல்‌ சினந்துவர வதுகடிதின்‌
உரியதலை மாலையினி லோர்சிரமு நுங்கிடவே
பிரியமுடன்‌ கூத்தாடிப்‌ பெறுகவெனச்‌ சிவனருள
அரியுமதற்‌ குடன்பட்டே யாடினா னகைக்கவரோ. 4

நகைத்ததலை வாயினின்று நழுவியதோர்‌ சக்கரத்தைத்‌
திகைப்படைய மூத்தோனுந்‌ திருக்கரத்தா லெடுத்தொளித்‌துப்‌
பகைப்புலத்தை முருக்கியவப்‌ பண்ணவன்பா றாங்குறுகித்‌
தகைப்புடையோன்‌ போன்றிருக்கத்‌ தண்டுளபன்‌ றேடுவனால்‌. 5

யாரெடுத்தார்‌ திகிரிதனை யெனக்கேட்டுப்‌ புலம்பியழப்‌
பேரெடுத்த நாயகனும்‌ பேதுறேலியான்‌ றருவேன்‌
பாரினிலே நீநடித்த படிபார்க்கக்‌ காட்டெனவே
வேரியந்தண்‌ டுளவத்தோன்‌ விநாயகன்முன்‌ னாடினனே. 6

ஆட்டத்தைக் கண்டவுட னைங்கரனுந்‌ தானளித்தே
நாட்டத்தைப்‌ பெற்றபய னாரணனுந்‌ தானடைய
நீட்டியகா லொன்றெடுத்து நிலத்தில்படா வகைநடிக்கக்‌
கூட்டமாய்த்‌ தேவரெலாங்‌ கூத்தாடுங்‌ கணேசரென்றார்‌. 7

இப்பெயரை யைங்கரனா ரெய்திமிக வின்பமுடன்‌
ஒப்பிறையு நாடாத வொண்மயிலை நற்பதியில்
விப்பிரரு மேனையரு மேவிநிதம் வாழ்த்தெடுப்பத்
துப்புதவ வீற்றிருந்தார் சுகமடையத் தொல்லுலகே. 8
-----------

04. நாட்டுப்‌ படலம்‌ (42)

கண்டத்திற்‌ காளம்‌ வைத்த கண்ணுத லன்பர்‌ நீற்றுப்‌
புண்டரம்‌ பொலிய நின்று போற்றியே துதித்து நிற்ப
வண்டர்கட்‌ கரியான்‌ வாழ வருள்கொடு வந்தவிந்தத்‌
தொண்டைநாட்‌ டணிசிறப்பைச்‌ சொற்றிட வல்லார்‌ யாரே 1

எண்ணிலா வளத்தைநோக்கி யியம்புவா னியையவெண்ணிற்‌
கண்ணினான்‌ வலாரியொத்தார்‌ கணக்கிலர்‌ கருதிப்பார்த்‌தும்‌
புண்ணினாற்‌ பொருந்துநெஞ்சிற்‌ புழுங்கிட வெளியரானாற்‌
றிண்ணமா யிதுதெரிந்தே தெரிக்கயார்‌ வல்லார்மாதோ. 2

வேறு.
பூமகட்கொரு கோயிலாய்ப்‌ பொருவறப்‌ பொலிந்து
நாமகட்கொரு நாடக‌ சாலையாய்‌ நயந்து
சேமமெய்து வான்‌சேர்குந ரெவர்க்கும்‌ வெஞ்சென்மத்‌
தோமறத்‌ துணையாவதித்‌ தொண்டை நன்னாடே. 3

இருவ கைத்தவாந்‌ தவங்களும்‌ பொருள்களு மிலங்க
மருவு மன்பதை தமக்கிதே மகிழ்வுறு நாடென்‌
றொரு வருத்தமு மின்றியே வளந்தரற்குரித்தாய்த்
திருவி ளங்கிடத்‌ திகழ்வது தொண்டை நன்னாடே. 4
வேறு.
அம்மைதனக்‌ குறிதீண்ட வன்புடனே கம்பைநதி
இம்மையிலே காண்போர்க ளேழுலக நடுநடுங்க
விம்மிதமாய்ப்‌ பெருகிவர வேல்விழியா ளிருகரத்தால்‌
தம்மைவிட்டு நீங்காது தழுவியகாஞ்‌ சியுமுளதால்‌. 5

வேறு.
காணிற்‌ போகமுங்‌ கேட்டுறின்‌ மோக்கமுக்‌ கருத்தாற்‌
பேணிற் செல்வமும்‌ பேசிடின்மைந்த ரும்‌பெறலாற்‌
சேணில்‌ விண்ணவர்‌ துதிக்குமிச்‌ செழும்பதியதனை
வாணி வாழ்திரு வெண்பாக்கமொரு புடைமானும்‌. 6

எந்தநாட்டினு மில்ல தொரதிசய மெல்லா
மிந்தநாட்டினி லுண்டென யாவர்கொ லிசையார்
சிந்தையாரவோர்‌ தரமிதன்‌ சீர்சொலி னிதுவே
பந்தநீக்கிடும்‌ பாசூரம்‌ பதியெனப்‌ பகர்வாம்‌. 7

சத்தியத்தைத்‌ தவறாத சான்றோர்கள்‌ புகன்‌றபடி
சித்திபெறா வணிகனுயிர்‌ சேயிழையால்‌ மாண்டசெயல்‌
எத்‌திசைவாழ்‌ வேளாள ரெழில்குண்டந்‌ தனில்வீய்ந்த
அத்தியுரித்‌ தான்வாழு மாலங்கா டிங்குளதால்‌. 8

வேறு.
கண்ணிற்‌ காணொணா வதிசயம்‌ விளைத்திடுங்‌கருத்தால்‌
விண்ணிற்‌ றேவரும்‌ புகழ்ந்திட விரும்புமிப்பதியை
நண்ணு மண்ணுல கோரெலா நயந்திடவிருக்கும்‌
வண்ணமார்ந்தநற்‌ றிருமுல்லை வாயிலும்‌ சிவணும்‌. 9

ஞானநாயகன் சுந்தரர்‌ தூதனாய்‌ நயந்து
போனவேதியன்‌ றன்பதி நீங்கிடும்‌ புலர்வால்‌
வானமோங்கிய மகிழடி சேர்வையி னுண்மை
ஏனைவிண்ணவர்க்‌ கருளிய வொற்றியீங் கிலகும்‌. 10

வேறு.
கால்பாயும்‌ பெரும்பணையுங்‌ கணுப்பாயுஞ்‌ செங்கரும்புஞ்‌
சேல்பாயுஞ்‌ செந்நெல்லுஞ்‌ சேண்டவழ்முந்‌ திரியுமுறப்‌
பால்பெருகு பசுக்கணிரை பரமர்நடங்‌ காட்டவிது
வால்மீகி பூசித்த வான்மியூர்ப்‌ பதிமானும்‌. 11

வழுக்களைந்தே யருள்பெற்று வளர்வேத கிரியதன்மேல்‌
புழுக்கண்‌ முதற்‌ பிரமன்வரைப் புகழுடைய முத்திதரும்‌
மழுக்கரத்தோ னணியாக மன்னியுறை கோயிலிலே
கழுக்கள்வந்து நிதஞ்சூழுங்‌ கழுக்குன் றுமீதாகும்‌. 12

மருந்தின்றிப்‌ பிணிதீர்க்கு மன்னுலகி லுயிர்த்தொகைகள்‌
புரிந்தகொடு வினை தீர்க்கும்‌ புகழ்ப்பதியென்‌ றெந்நாளும்‌
தெரிந்‌துபசி தீர்க்கவெனத்‌ திருவுளங்கொள்‌ சுந்தரர்க்கு
விருந்திட்ட‌ திருக்கச்சி வியன்பதியு மிங்குளதால்‌. 13

பாம்பாட்டிச்‌ சித்தரெனப்‌ பரமசிவன்‌ பேரெடுக்கத்‌
தீம்பாலை யுண்டவர்நற்‌ றேவார மோதியதால்‌
நாம்பாடி நிதம்பரவ நல்லருள்செய்‌ சித்தனார்‌
ஓம்பாதோர்க்‌ கழுவேற்று மோத்தூரு மிங்கொளிரும்‌. 14

கருவூறல்‌ நீக்குபவர்‌ கயிலாய பதியென்றே
திருமாலு மிந்திரனுந்‌ தினந்தினமே வலம்வந்து
பருவரல்க ணீங்கிடவே பதம்பணிந்து பூசிக்கும்‌
திருவூறல்‌ பதியின்சீர்‌ செப்பரிதாய்‌ நின்றிலங்கும்‌. 15

தம்பெருமை யறியாத தமிழ்‌முனியைத்‌ தெக்கணக்தில்‌
நம்பெருமா னுய்த்திடலும்‌ ஞாலமது சரிவரவே
உம்பரெலா மணங்காண வொருவனைநீக்‌ குவதழகோ
எம்பெருமா னெனக்காட்டு மெழில்‌வேற்கா டிங்குளதால்‌. 16

திரிபுரத்தை யெரித்திடவே சிவனேறுந்‌ தோதனை
மருப்பொன்றா லச்சிறுத்த மைந்தனையே பூசித்து
விருப்பமுடன்‌ தேரேறி வீரனென வெதிர்நின்று
கருத்துமுற்ற நகைத்தெரித்த கனவிற்கோ லமுநிகழும்‌. 17

வண்ணச்‌ சிலந்தியுடன்‌ வாளரவு மத்தியுமே
பண்ணச்‌ சிவபூசை பரிசளித்த பெருமானும்‌
புண்ணியனார்‌ துணையாகிப்‌ பூவையரைக்‌ கொண்டருளிக்‌
கண்ணப்பர்க்‌ கருள்புரிந்த காளத்தி பதிநிலவும்‌. 18

வேறு.
திருக்கச்சி மேற்றளியுந்‌ திருவோணக்‌ காந்தமொடு
      திருமாற்‌ பேரும்‌
மருவுகுரங்‌ கணிமுட்டம்‌ மாகரலும்‌ வல்லமுடன்‌
      மயிலாப்பூரும்‌
பொருவிலாக்‌ கச்சிநெறி காரைக்கா டெனப்போற்றும்‌
      பனங்காட்டூரும்
கருவினிலே வாராது தடைசெயிலம்‌ பையங்கோட்டூர்‌
      கமழ்ந்துநிற்கும்‌. 19

ஐங்கரனா ரச்சிறுத்த அச்சிறுபாக் கரசிலியும்
      வமரிரும்பை
தங்குபுகழ்‌ மாகாளந்‌ தயங்குதிரு விளச்சுரமுந்‌
      தழைத்தவாக்கை
பொங்குகச்சி யனேகதங்கா வதமுடனே திருக்கள்ளில்‌
      புகழ்பெற்றோங்கும்‌
மங்கலமாம்‌ பாடியெனும்‌ பதிகண்முப்பா னிரண்டெனவே
      மன்னுநாடே. 20

வேறு.
மேக சாலங்கள்‌ சிவனென மேவியே குணக்கிற்‌
போக வாசைபோற்‌ புணரிவாய்‌ மடுத்துண்டு திளைத்தே
யேக நாயகன்‌ பாதியா ளெனப்பசந்‌ துலகில்‌
மாக நின்றுமா விடியுடன்‌ வழங்‌கின மழையே. 21

சந்தி ரன்றவழ்‌ நந்திமா மலையினைச் சார்ந்த
இந்தி ரன்சிவன்முடி யின்மே லாட்டிய வெழிற்பால்‌
வந்த ளப்பிலா வேகமோ டெழுந்து வானெழிலி
சிந்து நீர்ப்புகழ்‌ வெள்ளமாய்‌ விழுந்த துசிறந்தே. 22

கம்ப மாக்களி றோலிடக்‌ கலையினை மோட
வெம்பு மாபுலி வீறிட வியன்மரை கலங்க
நம்பு மாபுவி மகிழ்ந்திட நாடுகள்‌ செழிக்க
வும்ப ராலைய மோங்கவந்‌ துலாயது பாலி. 23

பஞ்சு சீரடி யாடவச்‌ சாலைபோய்ப்‌ பணிந்து
விஞ்ச வேவந்து தொண்டைநன்‌ னாட்டினை விரவித்‌
தஞ்ச மென்றுமே மறவர்கள் தளர்ந்திடத்‌ தவழ்ந்து
கொஞ்சிப்‌ பேசிய குழவியிற்‌ குலாயதுபாலி. 24

அருங்கு றிஞ்சியார்‌ சந்தமோ டாரமுங்குவித்து
வருந்து மேனத்தின்‌ கோட்டுடன்‌ வரையினன் முத்துந்‌
தெரிந்து கோவைசெய்‌ வேடுவர்‌ குடிகளைத்‌ தெழித்து
மருந்து நானென வுலகினில்‌ மகிழ்தர வருமால்‌. 25

சேணு லாவிய வெண்மதிச்‌ சேயினோ டாட
வேணு நன்றென வொருபெரு வெள்ளமா யெழும்பிக்
காணும்‌ வேட்கையின்‌ முல்லைமா மருதமுங் கலந்து
பூணுமா ரமாய்‌ நெய்தலோ டுலாயது புரிந்தே. 26

கால்கள்‌ சேர்பல குளமுமாய்‌ நிலைபெறக்‌ கலந்து
சேல்கடுள்ளிடச்‌ செழிக்கவே வயலெலாஞ்‌ செறிந்து
மால்கொளும்படி யிலஞ்சியா யெங்கணு மருவிப்‌
பால்வயங்கொளும்‌ பாலியாறெனும்‌ பெயர்‌ பரவ, 27

மற்றை யாற்‌றுநீர்‌ வெண்மையும்‌ கருமையு மதிப்பும்‌
பெற்றதாகிலு மொவ்வொரு குணமுறப்‌ பெறுமே
யெற்றைநாளிலு மருந்துநர்க்‌ கினிப்பினை யளித்தே
வுற்ற நோயையும்‌ பிறப்பையு மொழித்திடும்பாலி 28

கொழுநன்‌ வேற்றுமை யெண்ணியே கூடுவாள்போலப்‌
பழுதிலாவெனைப்‌ பழிபல கூறுதல்‌ பண்போ
வழுதுகூறியு மகற்றிடலடா துனக்‌ கென்றே
ஒழுகு நீத்தமாய்த்‌ தழுவியே கலந்தனளுவரி. (29)

வேறு
தண்ணிய வெள்ளத்தை சார்ந்து கண்டனர்‌
புண்ணிய தேவரைப்‌ போற்றி மள்ளர்கள்‌
திண்ணமாய்‌ மேதியைச்‌ சேர்த்‌ தெழுப்பினர்
கண்ணகன்‌ புவியினைக்‌ கலக்கு வீழ்‌குவார்‌. (30)

வீழ்ந்தபி னளற்றினில்‌ வித்தை வீசுமுன்‌
தாழ்ந்துதந்‌ தெய்வத்தைத்‌ தங்கள்‌ கைக்கொடு
சூழ்ந்தவர்‌ துதியுடன்‌ செந்நெல்‌ தூவியே
ஆழ்ந்திடு வாரிபோ லார்த்தல்‌ செய்வரால்‌. (31)

விளைந்திடும்‌ பயிர்கெட விளையும்‌ புற்களைக்‌
களைந்தனர்‌ விட்டபின்‌ கடைசிய‌ர்க் குழாம்‌
தளர்ந்துடல்‌ வாடல்‌போற்‌ றலைவ ணங்கியே
வளர்ந்தது சாலியும்‌ வளந்‌ தழைக்கவே. (32)

பார்த்தது முடையவர்‌ பலனைக்‌ கைக்கொள
வேர்த்துமெய்‌ கருகிட விளங்கு வாள்கொடு
ஈர்த்தரிப்‌ போரிட வெழில்வை நீக்கியே
கார்தவழ்‌ மலையிற்போர்‌ குவிப்பர்‌ காதலாய்‌. (33)

கூறிடும்‌ குவியலைக்‌ குமைத்துத்‌ தூற்றுவார்‌
மாறிலாக்‌ காணியூர்த்‌ தெய்வம்‌ வாழ்த்‌துவார்‌
ஆறினி லொன்றதை யரசற்‌ கீந்தபின்‌
வீறுறப்‌ பண்டியில்‌ விழைவி னேற்றுவார்‌. (34)

கொண்டு போய்‌ மனையிடங்‌ கும்பலாக்கியே
மண்டனில்‌ மாண்டதோர்‌ மக்கடங்கட்கும்‌
அண்டொணா தேவர்க்கு மதிதியாவர்க்கும்‌
திண்டிறற்‌ கேளிர்க்குஞ்‌ சிறப்பினீகுவார்‌. (35)

தனித்தனி பங்கினைத்‌ தாமுங்‌ கைக்கொண்டு
மனத்‌தினில்‌ மகிழ்ச்சியாய்‌ மக்க ளோம்புவார்‌
சினத்திடா தில்லறஞ்‌ சீர்தி ருத்தியே
கனத்துடன்‌ வாழ்குவர்‌ கலி விலக்குவார்‌. (36)

மறையவர்‌ மறைதனை மகிழ்வினோதவும்‌
கறைபெறு வேலினார்‌ கருதி வாழவும்‌
குறையிலா வைசியர்‌ குலவிவாழவும்‌
திறையிடுஞ்‌ சூத்‌திரர்‌ தினமும்‌ வாழ்வரால்‌. (37)

தேவருக்‌ கேற்றதோர்‌ தென்னை யோங்கியும்‌
மாவெலாந்‌ தங்கமா மரங்க ளோங்கியும்‌
பாவலர் துதித்திடும் பனைக ளோங்கியும்‌
பூவலர்‌ பலவினால்‌ புகழு மோங்குமால்‌ (38)

வேறு
காய்கதிர்‌ மிகுந்து விளைவெலா மஃகிக்‌ கனங்குறைந்‌
      திடர்பல வரினுந்‌
தாயென விரப்போர்‌ தமக்குநற்‌ பொருளுந் தானிய
      மிதுமுத லாய
தூய்மனை கழனி துணிமணி விற்றுத்‌ துன்பினைத்‌
      தவிர்ப்பவ ரென்றால்‌
வாய்விட்டு வழுத்தற்‌ கிடமுண்டோ வறத்தை வளர்ப்பவ
      ரவரல்லா லியாரே. (39)

வேறு
வனப்புடைய ரந்நாட்டாராதலினால்‌ மதனெனவே மகிழ்ந்து
      நின்று
தனம்பெருத்த மனைவியரை யிரதியென வேநினைத்துத்‌
      தழுவாநிற்பர்‌
இனத்தினர்க்கு விருந்தளித்தும்‌ வருவோருக்‌ கெதிர்பார்த்து
      மெழிலோடிங்குச்‌
சினத்தினையுங் கைவிட்டுச்‌ சிவனடியே யெந்நாளுஞ்‌
      சிந்திப்பாரால்‌. (40)

வேறு
அழகினை யுடையா ரெல்லா மனங்களி லழகு மிக்கார்‌
விழைபொரு ளில்லா ரெல்லாம்‌ விளங்கிய குபேரனெப்பார்‌
தழைபெறு கல்வி யில்லார்‌ தாழ்பிலச்‌ சேடனேர்வார்‌
இழிவினை யுடையோ ரெல்லா மிந்திரன்‌ றனையேபோல்வார்‌. (41)

ஆதலால்‌ முனிவீர்நாட்டி னதிசயம்பலவு மோதப்‌
பாதமில்‌ சேடனாலும்‌ பாரினி லரிதேயாகும்‌
ஓதநான் கேட்ட வாபோலுங்களுக்‌ குரசைத்‌தேனிப்பால்‌
தீதிலாநகரச்‌ சீர்த்திதெரிந்‌ தவாபுகலு வேனால்‌. (42)

நாட்டுப்படல முற்றிற்று.
--------------

05. நகரப்படலம் (41)

உலகமாந்‌ தைய லாளு மொருபெருந்‌ தவமியற்றித்‌
தலமதாந்‌ தொண்டை நாட்டைத்‌ தனக்கொரு மகவாய்ப்பெற்‌றாள்
அலகிலாப்‌ புகழினம்மா தருந்தவம்‌ நெடுநாட்‌ செய்து
திலகமாய்‌ மயிலைதன்னைத்‌ திருமுகத்‌ தணியாய்ப்‌ பெற்றாள்‌. 1

வேறு.
இங்கிதத்‌ திந்தத்‌ தொண்டை நாட்டினிற்‌
பொங்குஞ்‌ சோதிப்‌ பொருப்பை யெள்கியே
மங்கை நோற்று மயிலை யம்புரி
தங்கவந்த தலங்கள்‌ சாற்று வாம்‌. 2

வேறு.
வீதிகடோறு மாடம்‌ வியந்திடக்‌ கொடிகள்‌ நாற்றிச்‌
சோதிமுத்‌ தாரந்தூக்கித் துகடவிர் கதலி நாட்டிப்‌
பாதியா டன்னைக்‌ காணும்‌ பரிசெனத்‌ தீபமேற்றி
நீதியாங்‌ கோலமிட்டு நிறைமணிக்‌ குட மமைப்பார்‌. 3

புலவியி லூடிநீத்த பொற்கலன்‌ கனிந்தவின்பக்‌
கலவியிற்‌ கழித்‌தெறிந்த கலன்களும்‌ விலையிலாத
பலவகை முத்தின்மாலை பறித்தெறி வயிரமாலை
நிலவிய குப்பையாகி நிறைந்திடும்‌ வீதியெல்லாம்‌. 4

வேறு.
புதுமலா்‌ மழைபோல்விண்ணோர்‌ பொழிந்திடக் கீழ்சிந்தாது
முதுபழத்‌ தெங்கின்சோலை மொய்த்ததை யேந்தலாலே
விதுவொடு தபனன்காந்தி விளங்கிடா மயிலைமுற்றும்‌
கதிர்முத்து னொளிபோற்‌ சோதிகவிந்‌ திருளோட்டுமன்றே. 5

விண்ணினிலோசை காட்டும்‌ வியன்மணிக்‌ கோபுரந்தான்
கண்ணினிற்‌ கண்டபேர்க்குக்‌ களிப்பினைக்‌ கொடுத்துநிற்கும்‌
பண்ணிய பாவமெல்லாம்‌ பறந்திட வீதிநான்கும்‌
திண்ணமாய்‌ வலஞ்செய்வோர்கள்‌ சிவனொடு கூடிவாழ்வார்‌. 6

வேதியர்‌ வீதிமுத்தி வேள்விசெய்‌ தூமத்தாலுங்‌
கோதையரளக மூட்டுங் கொழும்‌புகை கூட்டத்தாலுஞ்‌
சோதிவான்‌ முகட்டிற்‌றுஞ்சுஞ்‌ சுகந்தரு வெண்மைகொண்மூ
மாதவன்‌ வடிவாயென்றும்‌ வளர்பொழி லுலவிநிற்கும்‌. 7

மன்னர்கள்‌ புதல்வரூறு மகம்பொழி கரிமாவெல்லாம்‌
பொன்னகர்க்‌ கிறைசெலுத்தும்‌ பொருவின்மே கத்தைக்குத்தித்‌
தன்மத னீரோடொக்கத்‌ தரைதனை யளறுசெய்யக்‌
கொன்னகர்‌ வீதிதன்னிற்‌ குலமணி யசையாநிற்கும்‌. 8

வயிசியர்‌ வீதியெல்லாம்‌ வாய்ந்திடும்‌ பொருளைக்‌கொள்ள
வயில்பொரு படைவேற்‌கண்ணா ரன்‌பொடு விலைகள்‌கேட்கக்‌
குயிலெனு மொழிக்கிரங்கிக்‌ கொள்விலைக்‌ கேற்பலாபம்‌
கையிற்பொன்‌ பெற்றுவிற்றுக்‌ கடன்படா நிலையில்‌வாழ்வார்‌. 9

உத்தம வணிகரெல்லா முயர்விலை கூறாராகிப்‌
பத்தினி மார்கட்‌கேற்ற பண்டங்கள்‌ காட்டிக்‌காட்டி,
யித்தின மிவ்விலைக்கே யீந்திடும்‌ பொருள்கணாளைக்‌
கொத்தைக்கோ ரிரட்டையென்ன வுபாயமாய்க்‌ கூறிவிற்பார். 10

ஏருழ வோர்கள்‌வாழு மெழிற்பெரு வீதியெல்லாம்‌
சீருறு செந்நெற்‌குன்று செழுங்கழைக்‌ கட்டிக்‌குன்றும்‌
பாருறு செம்பொற்‌குன்றும்‌ பலவகை மணியின்‌குன்‌றும்‌
தேருதற்‌ கரியவாகித்‌ திகழ்ந்திடு மினிதுமாதோ. 11

வேறு.
காணி னன்‌றியே வுயிர்தரியா தெனக்‌ கழறிப்‌
பேணி வாழ்குல மாதுபோற்‌ பிரியமாய்க்‌ கூடி
நீணி திப்பொருள்‌ கவர்ந்தபின்‌ னிமிர்பொது மகளீர்‌
வீணி னின்றெதிர்‌ பேசவே தகாதென வெறுப்பார்‌. 12

கரத்தற்‌ பொன்றரிற்‌ களித்தவர்‌ காளையர்‌ தம்மைப்‌
புரத்தை வென்றவரடியவ ராமெனப்‌ போற்றி
அரத்தை நீங்கியே வாய்மையோ டனுதினமகிழும்‌
பரத்தை மார்களும்‌ மயிலையிற்‌ பண்புடன்‌ பயில்வார்‌. 13

வேறு
மின்னார்கண்‌ மேடையின்மே லொயிலுடனே
      வீற்றிருக்கு மேன்மைகண்டு
பொன்னாட்டு மடவாரும்‌ புகழ்நாக
      நல்லாரும்‌ புகழிலாரே
யிந்நாட்டு மங்கையர்களெந்‌ நாட்டில்‌
      வாழ்வாரோ விணையொப்புண்டோ
பன்னாட்டுப்‌ பெண்களிலே பார்த்தெடுத்த
      வழகெனப்‌ பகரார்யாரே. 14

வந்தவர்க்கு விருந்‌திட்டும்‌ வருவோருக்
      கெதிர்பார்த்தும்‌ வலியச்சென்‌று
சிந்தையினி லெந்நாளுஞ்‌ சிவனைநினைத்
      தேவினையைச்‌ சிதையச்செய்து
பந்தமறுத்தவ ரடியை யெதிர்பணிந்து
      மனைக்கொண்டு பரிவினோடு
முந்தவவர் மனமகிழ வமுதளிப்ப
      ரந்நகரின்‌ முறைதேர்‌ மாந்தர்‌. 15

அருந்தினர்கண் முன்போக வருந்துகின்றோர்
      மகிழ்வடைய வசனத்சோடு
பொருந்தியநெய்‌ பாற்பெய்து புக்கவரை
      யுண்பிக்கும்‌ புகழேயன்றி
விருந்‌தினரைக்‌ காணாது வீதியெல்லாந்‌
      தான்தேடி விருப்பினில்லத்‌
திருந்தவித்தை வயல்‌ வீசிப்பெய்மழையை
      நோக்குவர்போ லியைந்து நிற்பர்‌. 16

பொன்னுலகி லிந்திரனாய்ப்‌ புகழளகை
      நிதிபதியாய்ப்‌ புவியிலுள்ள
மன்னுயிரைப்‌ புதுப்பிக்கு மலரயனாய்‌
      மாலாகி யேவிண்ணோர்கள்‌
நன்னர்தரும்‌ பொன்னியுட னாள்கழித்து
      வாழ்வரன்னோர்‌ நளிர்பூங்கொன்றை
சென்னிமிலை சடைக்கடவுள்‌ வாழ்மயிலைச்‌
      சிறுவரினுஞ்‌ சிறப்பிலாரே. 17

புவிபுகழு மயிலையின்றன்‌ புகழ்கூறப்‌
      புவனமதைப்‌ பொறுக்குஞ்சேடன்‌
அவிருமணி யுடையவீ ராயிரத்தி
      னாவாலு மாகானாயின்‌
கவின்முழுதுங்‌ கொடுவிளக்குங்‌ கைலைவிட்டுக்‌
      கண்ணுதலே காதல்கொண்ட
நவிலுமிந்தப்‌ பதிவளத்தை நான்சொல்லப்‌
      புகுவதற்கு நகையார்யாரே. 18

இந்திரனிப்‌ பதிவளங்கண்‌ டெந்நாளுந்‌ தன்னாட்டை
      யிகழா நிற்பன்‌
மைந்தனொடு மாயவனு மயிலைவளந்‌ தனைக்கண்டு
      மாழ்கா நிற்பன்‌
சந்திரருஞ்‌ சூரியரும்‌ வலம்வருங்கா லந்நகரச்‌
      சதிரைக்‌ காணார்‌
பைந்தொடியே மயிலாகப்‌ பூசித்த தலப்பெருமை
      பகர்வார்‌ யாரே. 19

திருமயிலையெனப்‌ புகல்வோ ரெந்நாளுந் தீவினைக
      டீரப்‌ பெற்றோர்‌
திருமயிலையெனப்‌ புகல்வோ ரெந்நாளுந் திருவதளை
      யடையப்‌ பெற்றோர்‌
திருமயிலையெனப்‌ புகல்வோ ரெந்நாளுந் தேவருடன்‌
      செழித்து வாழ்வார்‌
திருமயிலை யெனப்புகல்வோ ரெந்நாளுஞ்‌ சிவனோடு
      சேர்ந்து வாழ்வார்‌. 20

புத்திரனைப்‌ பெற்றவருக்‌ கிகபரபோகங்‌ களெல்லாம்‌
      புரிவார்‌ போல
முத்தனதுபதம்‌ வாழ்த்து மொய்க்கழகம்‌ பலனளித்து
      முயங்கா நிற்கும்‌
சித்தமதில்‌ படிந்திடவே சிறுவர்‌தமிழ்‌ வேதமதைச்‌
      செவ்வே யோத
வெத்திசையும்‌ வாழ்கிள்ளை கேட்டுநித மெதிரொலிபோ
      லிசைக்கா நிற்கும்‌. 21
கணக்கிலா வடியவருக்‌ கமுதளிக்கு மடமெங்குங்‌
      கனிந்து நிற்கும்‌
பிணக்கிலாச்‌ சிவனடியைப்‌ போற்றிநின்ற வாகீசர்
      பெயரைப்‌ பூண்டு
வணக்கமுடன்‌ வருபவர்க்கு மனமகிழ வெந்நாளும்‌
      வண்மை முற்ற
வணக்கமுடன்‌ விருந்தளிக்கு மயிலையப்பர்‌ மடமெனவே
வழங்கா நிற்பர். 22
வேறு
இத்‌தலத்தினி லுமையெழின்‌ மயிலுரு வெடுத்து
புத்தியோடு செய்பூசனைக்‌ குரியநற்‌ பொருள்கள்‌
சித்‌தமாகவே யளித்திடச்‌ சேடிபோற்‌ காக்கும்‌
முத்து வாணகை முண்டகக்‌ கண்ணியுமிருப்பாள்‌. 23

காலைமாலையுங்‌ கருதலர் வராவகை காத்து
வேலையோசைபோ லிலஞ்சியின்‌ கரையின்மே லோர்பால்‌
பாலையொத்ததீஞ்‌ சொல்லுடன்‌ பாலரைக்‌ காத்து
ஆலையம்மமர்ந்‌ தாளென வருள்கொடு நிற்பாள். 24

வேறு
கோலமாமழக யென்றும்‌ கோதிலாக்‌ காளியென்று
மேலவே யெல்லமாத்தாளெழிற்‌ றுலுக்காண மென்றும்‌
நீலவேல்‌ விழியாளோடு நீலிபாளையத்தா ளென்றும்‌
பாலலோசனத்தை யொத்த பாவைமார்‌ சூழ நிற்பார்‌. 25

விண்ணவர் புகழுமிந்த வியன்பதி மயிலைதன்னி
லெண்ணியே பார்க்க வொவ்வொன்‌ றேழென வமைந்துநிற்கும்‌
புண்ணிய கணேசர்‌ கோயில்‌ புகழ்காளி மாலொடொக்கத்‌
தண்ணிய குட்டையோடு தடைபடாப்‌ பேட்டை யுண்டால்‌. 26

வேறு
அரியதவ நெடுங்காலஞ்‌ செய்தடையும்‌ பலனெல்லா
      மன்றே சல்கும்‌
உரியவிர தமியாவுஞ்‌ செய்பவர்க ளடைபலனு
      முடனே பெய்யும்‌
புரியும்வினை தீரவெனப்‌ பலபதியில்‌ மிகப்பொருளைப்‌
      புகழ்வோ டீயும்‌
பரிவுடனுன்னிய வெல்லாம்‌ பரிந்தளிக்கு மிம்மயிலைப்‌
      பதிதா னம்மா. 27

வேறு
தேரணி மயிலைவாழுந்‌ தேவர்தம்‌ மருளைப்பெற்றோர்‌
நாரணன்‌ பதமேயன்றி நான்முகன்‌ பதமும்வான
வாரணன்‌ பதமுமற்றும்‌ வழங்கிட வல்லாரென்றால்‌
சீரணிமயிலைச்‌ செல்வர்‌ யாரெனச்‌ செப்பவல்லார்‌. 28

வேறு
மகவிலாக்‌ குறையிலை மனைக ளெங்கணும்‌
தகவுறாச்‌ செல்வத்தின்‌ தாட்சி யும்மிலை
புகழ்பெறு மணநிதம்‌ போற்றி நின்றிடும்‌
நிகரறு மயிலையி னீர்மை யென்பரே. 29

வேறு
திருவள ராரூரண்ணா மலையுடன்‌ திருக்காளத்தி
மருவளர்‌ காசிகாஞ்சி மன்னியமதுரை சேது
தருவளர்‌ மயிலையோடு தகுமெனச்‌ சாற்றலாகும்‌
உருவமி லங்கம்‌பெண்ணா யுதித்‌தநற்‌ காட்சிதன்னால்‌. 30

அத்தனாருரைத்த வேதமதைத்‌ தமிழ்க்குறளாய்ச்‌ செய்த
வித்தக நாயனாரும்‌ விழைந்த வித்தலத்தை யோர்ந்து
சத்தியலோகம்‌ விட்டுச்‌ சார்ந்தனர்‌ தேவரென்றா
லெத்தல மிதற்கொப்பாக வியம்பலாந்‌ தகைமைத்தம்மா. 31

வேறு
மயிலையென வாழ்த்துவர்கண்‌ மாதர்கரு வாரார்‌
மயிலையென வேபுகல்வர்‌ மறலிபயம்‌ நீப்பார்‌
மயிலையெனப்‌ போற்‌றுமவர்‌ மாதவசி யாவார்‌
மயிலையினில்‌ வாழ்பவர்கண்‌ மாண்கைலை சேர்வார்‌. 32

ஒருதர நினைத்தவர்க ளும்பர்பதி யாவா
ரிருதர நினைத்தவர்க ளினியகதி கொள்வார்‌
அருமையொடு மூன்றுதர மன்புற நினைப்போர்‌
பெருமையை யெடுத்தெவரும்‌ பேசல ரிதம்மா. 33

வேறு
ஆதலான்‌ மேலோர்‌ போற்று மருடருமயிலை யேபோல்‌
மாதல மிருக்குமென்று மனத்திலுங்‌ கருதவேண்டாம்‌
பூதல‌த் திதனின்மாயாப்‌ போகநாடீ தன்றாயின்‌
நாதனார் கைலைவிட்டு நண்ணியே நிலைகொள்வாரோ. 34

இறந்ததால்‌ முத்திநல்கு மெழில்‌ பெறுகாசி மென்பர்
பிறந்ததால்‌ முத்‌திநல்கும்‌ புகழ்பெறு கமலையென்பர்‌
சிறந்திடுமயிலை யின்றன்றிண்‌ புகழ்கேட்போர்க்‌ கெல்லாம்‌
வறந்திடப்‌ பாவமஃது வள்ளற்‌ சாரூப நல்கும்‌. 35

நற்றவத்‌ தோர்களென்‌று நாடுறுமயிலை தன்பால்‌
மற்ற மித்திரரைச்‌ சேர்க்காமன்ன வாமுற்றவத்தால்‌
உற்றிடவொரு கணந்தா னொண்மனத்து வகைபூப்ப
அற்றிறப்‌ பாவநீங்கி யருள்பெறு கணங்களாவார்‌. 36

மானிடராய்ப்‌ பிறந்தும்‌ மயிலையை வெறுத்துப்‌ புத்தி
போனவா றிகழ்‌வோரெல்லாம்‌ புகுவர்‌வெந் நிரையமெய்யே
யீனராம்‌ புலையராகி யிழிதொழி லியற்றிவாழுந்‌
தீனரானா லும்‌போற்றத்‌ தேவர்வாழ்‌ கைலை சேர்வார்‌. 37

விண்ணவர்‌ புகழுமிந்த வியன்பதிவிழாக்‌ காண்போர்க்கு
நண்ணுறு கற்பார்பெண்டு நலந்தரு புதல்வப்‌பேறும்‌
பண்ணவர்‌ பரவிவாமும்‌ பக்தியுமுணர்வு மேன்மைத்‌
தண்ணளியோடு வாழ்வுந்‌ தந்திடு மயிலைதானே. 38

பாதகந்தன்னைப்‌ போக்கப்‌ பரவுநீர்ப்‌ பந்தல்வைத்தோர்‌
சாதலை யறவேமாற்றிச்‌ சாரூபமடைவர்‌ மெய்யே
வீதியிற் பந்தலிட்டோர்‌ வியன்கொடி விளங்க வைத்தோர்‌
ஆதியினருளைப்‌ பெற்றே யடைவுடன்‌ கைலை சேர்வர். 39

பத்தர்கட்‌ கன்னமிட்டோர்‌ பரிவுடன்‌ விசிறியீந்தோர்‌
முத்தர்கள்‌ சோடை தீர்‌த்தேயமுதொடு பழமீந்தோர்கள்‌
அத்தனை யணுகிநின்றே வழகிய தூபமிட்டோர்‌
சத்திய மடைவர்முத்தி சஞ்சல மகன்றுமாதோ. 40

எண்ணிலாத்‌ தவத்தைச்‌ செய்தே யெழிலுறு முனிவீர்கேளீர்‌
கண்ணிலார்‌ நினைத்தபோதுங்‌ கைலையை யுடனேநல்கும்‌
மண்ணின்மா தவஞ்செய்தோர்தாம்‌ மயிலையின்‌ சரிதங்கேட்பர்‌
உண்மையீ துண்மை யாகுமுமைபெறு சாபஞ்‌ சொல்வாம்‌. 41

நகரப்படல முற்றிற்று.

06. உமாதேவியார்‌ சாபமேற்ற படலம்‌.


--------------------
ஏககா லத்திற்கோடி யிரவிக ளொளிர்ந்துநின்‌று
மோகமாய்க்‌ கிரணம்வீசி முற்றியசோதி வாய்ந்து
தாகவெந்‌ தாபமற்ற தவசியர்‌ நிறைந்துபோற்றும்‌
மேகமார்‌ வெள்ளிவெற்பில்‌ விமலனார்‌ கோயிலுண்டால்‌. 1

அம்புலிக்‌ கொழுந்துரிஞ்சு மணிமதி லகழியுண்டு
பைம்புலி யூட்டுங்கோதை பாவையர்‌ முழுகலுண்டு
ஐம்புலன்களு மொழித்த வருள்பெறு முனிவருண்டு
வெம்பியாங்‌ கிடம்பெறாத விண்ணவ ரனேகருண்டே. 2

மறையெலா மொருங்கேநின்‌று மன்னியே முழங்காநிற்கும்‌
சிறையெலாம்‌ விரித்தவன்னச்‌ சேவலுஞ்‌ சூழ்ந்துநிற்கும்‌
விறலியர்தெய்வப்‌ பெண்கள்‌ விரும்பியே பாடாநிற்பர்‌
கறைதவி ரையாவென்று கரைகுநர்‌ பலராங்குண்டே. 3

நந்தனவனத்தி லெல்லா நளிர்மயி லாடலுண்டு
மைந்தர்கண்‌ மனையரோடு மாதவர்‌ சூழல்கண்டே
இந்திரன்முதலாம்‌ விண்ணோ ரெழில்பெறு பெண்டீரோடுஞ்‌
சுந்தரக்‌ கை லைமேவிச்‌ சுகம்பெறக்‌ காணலுண்டே. 4

இன்னதோ ரெல்லையில்லா வெழில்பெறுங்‌ கைலைதன்னில்‌
பன்னகா சனன்றன்றங்கை பார்வதி தேவியார்க்கு
முன்னமே யுரைத்தவேத முத்திமந்‌ திரமாய்நின்று
மன்னிய வஞ்செழுத்தை மற்றவட்‌ குரைப்பதானான்‌. 5

மந்‌திரமிகழ்ந்‌து கேட்போர்‌ மன்னிய தேவர்தம்மி
லிந்‌திரன்‌ முகலோசேனு மெழில்புவி மனிதரேனும்‌
முந்‌திய தலத்தோரேனு முனிவர்கந்‌ தருவரேனும்‌
சிந்‌துசூழ்‌ புவியில்புள்ளின்‌ சீரிலாப்‌ பிறப்பையேற்பார். 6

ஆதலா லுமையேநீயு மாரம்ப முதலீறாகக்‌
காதலாய்க்‌ கேட்பாயென்னக் கவுரியுமு றுதிகொண்டு
போதவே யன்புகூர்ந்து புனிதையாய்ப்‌ போற்றிநிற்ப
நாதனுங்‌ கருணையோடு நவின்‌றிட லுற்றான்மாதோ. 7

தேவர்க்கு மறியாவேதச்‌ சிரப்பொரு ளருளிச்செய்வேன்‌
பாவையே கருத்தாய்க்‌ கேளாய்ப்‌ பஞ்சபூதத்‌தின்கூறாய்‌
மேவுமஞ்‌ செழுத்தேயாகு மேதினியுள்ளா ரோதில்
சாவினைத்‌ துடைத்துமுத்தி சாருவரைய மின்றால்‌. 8.

சிவமெனும்‌ வார்த்தைகூறச்‌ செவியுறக்‌ கேளாரேனும்
பவமிக விழைத்திழைத்துப்‌ பாழ்நர கடைவரேனும்‌
கவலையோடென்றும்‌ வாழ்ந்து காலத்தைக்‌ கழிப்பாரேனும்‌
புவனியிற்‌ சாம்போதிஃது புகன்‌றிடில்‌ முத்திசேர்வார்‌. 9

எண்ணிலாப்‌ பிறவியெய்தி யிழிவுறு நரகநீந்தி
மண்ணினிற்‌ பிறந்தோ ரன்பின்மருவி யிம்மந்திரத்தை
யுண்மை யென்றியம்பக்‌ கேட்டே வுயர்சிவ வென்றேமுக்கா
னண்ணியே புகல்வோர்முன்னர்‌ நமன்வந்து தொழுதுநிற்பான்‌. 10

எக்கொலை செய்தாரேனு மிவ்வெழுத்‌ தோதுவாரே
லக்கணமகலுஞ்‌ சொன்னோமையமே கொள்ளவேண்டாம்‌
பக்குவ வானந்தைக்குப்‌ பகலொளிக்‌ கடகமீந்த
நக்கனு முவகையோடந்‌ நாயகிக்கருளிச்‌ செய்வான்‌. 11

தந்தையைக்‌ கொன்ற பாவந்‌ தாய்தனைப்‌ புணர்ந்த பாவம்‌
மைந்தனை வதைத்த பாவமன்னுயிர்க்‌ குறுதிகூறு
மந்தமில்‌ குருதாரத்தை யணைந்ததால்‌ வந்த பாவ
மிந்தமா பாவமெல்லா மியம்பிடி லகலுந்தானே. 12

ஞானமா மழலிற்பூத்‌த நற்பெரும்‌ பூதிதன்னை
ஊனம தடையாவண்ண முயர்கரத்தேந்திப் போற்றித்‌
தானதை யணியவஃது தவிர்த்திடும்‌ பிறவியென்று
வானவர்‌ பரவத்தந்த வண்மையை மறந்தாய்கொல்லோ. 13

நீற்றினைத் தரிப்போர் தங்கள்‌ வினைகளை யாவுநீக்கும்‌
நீற்றினைத்‌ தரிப்போர்‌ தங்கள்‌ நோய்களை யாவுநீக்கும்‌
நீற்றினைத்‌ தரிப்போர் தங்கள்‌ நீளெரி நரகம்நீக்கும்‌
நீற்றினைத் தரிப்போரென்றன்‌ நேயரே யையம்வேண்டாம்‌. 14

முழுதுமே நீறுபூசு மூடரு மறிவைப் பெற்றுப்‌
பழுதிலாத்‌ தேவராலும்‌ பரவவே செல்வமேற்‌று
வழுவிலா முனிவராடு வையகம்‌ நீங்கும்போது
தழுவியே சிவகணங்கள்‌ தாள்பணிந்‌ தழைத்துச்செல்வார்‌. 15

ஆவினை வதைத்தபாவ மருங்கொலை புரிந்தபாவம்‌
காவிநேர்‌ விழியார்‌தங்கள்‌ கற்பினை யழித்தபாவம்‌
பூவினில்‌ சிசுவைக்கொன்ற புகலருங்‌ கொடியபாவம்‌
தேவினைப்‌ பழித்தபாவந் தீயிற்றூ சாகும்நீற்றால்‌. 16

வேர்வையால்‌ நெருக்கினாலும்‌ விரிபுன லாட்டினாலும்‌
கார்பொழி மழையினாலுங்‌ கலைந்திடும்‌ பூதியக்கால்‌
வார்பொழில்‌ தன்னில்வாழும்‌ வளர்முனி யலகையோடுங்‌
கூர்விழிப்‌ பூதராலுங்‌ குலைவுற நசிவரன்றே. 17

நம்‌முரு வைந்தெழுத்தை நாடியே நீறும்பூசி
யிம்பரிலுழலு மீனராயினு மிமையோராவர்‌
தம்வினை பறிக்கு நீற்றின்‌ றன்மையா மிங்கோர்காதை
உம்பர்கள்‌ வணங்குமாதே வுற்றுநீ கேட்பாய்‌ சொல்வேன்‌. 18

வேதியன்‌ மகததேச வேந்தர்க்கு வேந்தன்மாறி
னீதியில்‌ வல்லோனூழா னெறியினை யறவேவிட்டு
மாதர்கள்‌ யாவரேனும்‌ வழிவரின்‌ மகிழ்ந்துகூடும்‌
பாதகன்‌ காசுமீயான்‌ பாதக வுருவாய்‌ வந்தோன். 19

நன்‌றியையுடன்‌ மறப்பா னாயகிக்கிகலே செய்வான்‌
வென்றியாங்‌ கற்பழித்தல்‌ விரதமாய்‌ நிதமுங்கொள்வான்‌
புன்றொழி லவனுக்கேற்ற புண்ணிய மார்க்கமென்பா
ளென்செய்வான்‌ பாவிதன்னை யீன்றவடனையுஞ்‌ சேர்ந்தான்‌. 20

தாயவள்‌ மறுத்துங்‌ கேளான்‌ தந்தையை யுடனே மாய்த்தான்‌
தீயவனொருநாள்‌ செல்லுந்‌ தீநெறி தன்னில்‌ வந்த
தூயவனொருவன் றோளிற்‌ துணிந்தவனு ராயலுற்றான்
சேயவன்‌ திருவெண்ணீறு சிதறியதவன்‌ றன்‌மெய்யில்‌. 21

அன்னதை யவனுந் தேரானகன்றபின் பூதந்தோன்றித்
தின்னவே நெருங்கக்‌ கண்டான்‌ திடுக்கிட வடியில்‌ வீழ்ந்தான்
பொன்னவிர்‌ மேனியின்றன்‌ புறத்தினிற்‌ பூதிகண்டு
என்னருங்‌ குருவே யென்றவ் வீனனையெடுத்ததம்மா. 22

காண்டகு மேனிதன்னைக்‌ கழுதுநட்‌ புற்றுப்போக
வாண்டகை வீரன்பின்ன ரஞ்சுதலின்றிச்‌ சென்றான்‌
மாண்டரு நெறியினாங்கோர்‌ வன்கண மன்னோனாகந்‌
தீண்டியே கொல்வான்‌ சேரத்திகிலொடு தீயனின்றான். 23

செய்யகை பற்றியீர்த்துச்‌ செகுத்துடல்‌ தின்னுமுன்னே
மெய்திகழ்‌ பூதிகண்டு மெலிவுடன்‌ பதத்தில்வீழ்ந்தே
ஐயனைக்‌ கொல்லவந்த வறிவிலாநாயேன்‌ றன்னை
யுய்யுமாற ருள்செய்‌ யென்னவுயர்விலா னச்ச நீத்தான்‌. 24

இவ்விதநன்மை கண்டு மியாதினாற்‌ பிழைத்தோமென்றுந்‌
செவ்விதி னறியானாகித்தீவினை முழுதுஞ்‌ செய்வான்‌
நவ்வியங்‌ கரத்தோ னாம நவின்‌றிடான்‌ காலனோக்கிக்
கவ்வியே கொண்டுபோகக்‌ கடைதினம்‌ வந்தானம்மா. 25

வந்தவன் பாசம்வீசி வலியுடன்‌ புயமிரண்டுஞ்‌
சிந்தவே கட்டுமுன்னர்ச்‌ சீறியே நம்பன்‌தூதர்‌
முந்தினர்‌ கட்டவிழ்த்து முத்தின‌ற் சிவிகையேற்றி
நந்தலில்லாத வெள்ளி நகத்தினிற் சேர்த்தா ரன்றே. 26

காலனுங்‌ கோபமாகிக்‌ கணக்கினைப்‌ புரட்டிப்‌ பார்த்துச்‌
சாலநாள்‌ பாபஞ்‌ செய்தோன்‌ றன்னைநீர்‌ கொண்டுபோத
லேலவே தகாதென்றேகி யெம்பெரு மானைக்கண்டே
சீலமாயுரைப்போ மென்று சேர்ந்தனன் கூறலுற்றான்‌. 27

பாபமேமுழுதுஞ்‌ செய்த பாவியைநரகிற்‌ சேர்க்கத்
தாபதர்க்‌கருள்வாய்‌ வந்தேன்‌ சார்ந்துநின்‌ றூதர்தாமுங்
கோபமெம்‌ மீதிற்கொண்டு கொடுசென்றார் சிதடன்றன்னை‌
நீபரிந்‌ திதன்மன்‌ மத்தை நேயமாய்ச்சாற்றல்‌ வேண்டும்‌. 28

என்றவன்‌ கூறக்கேட்ட வெதிர்நின்ற நந்திசொல்வான்‌
மன்றினிலாடும்‌ பெம்மான்‌ மலரடிபோற்றா னேனுங்
கன்றியே பலரைக்கொன்ற கள்வன்றன்‌ புயத்துராய்ந்த
வென்றிகொள்‌ பூதியாலே விண்ணவர்‌ போற்றவந்தான் 29
[இராஜவிலாசம்‌ கி. இராஜாகிராமணியார்‌.]

ஆகையாற் காலவுன்ற னாளுகைக்‌ குள்ளாரோது
மோகையால்‌ பூதியிட்ட வுருவத்தைக்‌ காண்பாயானா
லேகநாயகனா வெண்ணி யிணையடி தொழுவாயென்று
நாகபூடணனாம்‌ நந்தி நவின்றிடக்‌ காலன்‌ சென்றான்‌. 30

இன்னுமோர்‌ சரிதஞ்‌ சொல்வே னிணையிலா வுமையேகேளாய்‌
பன்னுதற்‌ கரியதுக்கம்‌ படும்விண்ணோர்‌ பாலிறங்கி
என்விழி தன்னினின்று மிழிந்தநீர்‌ மணியாய்த்தோன்ற
நன்மையாய்த்‌ தரிப்போருக்கு நற்பெரும்பயனைச்‌ சொல்வாம்‌. 31

முச்சுடரதனி னின்று முதிர்மணி நன்னான்குற்ற
இச்சையாய்ப்‌ பூண்போருக்கே யெமபய மொன்றுமில்லை
அச்சமி லொருமுகத்தை யன்புடன்‌ தரிப்‌ போரெல்லாம்‌
நிச்சயமெனது ரூப நேயமா யடைவ ரன்றே. 32

இருமுகமணிவோ மெல்லா மிம்மையில்பசுவைக்‌ கோறல்‌
புரிந்தவப்பாவ நீங்கும்‌ புந்தியில்‌ விருப்பங்‌ கொண்டு
தரிப்பவர்‌ மறையோர்க்‌ கொன்ற தவிர்ப்பரும்‌ பழியினின்‌று
பரிவுடன்விலகி விண்ணோர்‌ பரவவே வாழ்வாரன்றே. 33

மும்முகமணிவோ ரெல்லாம்‌ மொய்குழற்‌ பலரைச்சேர்ந்த
வெம்பழி நீங்கிப்‌பாரில்‌ விளங்கிய புனிதராவார்‌
வெம்மைசெய்‌ பிணிக ணேராவேந்தரால்‌ தீங்குவாரா
கொம்மைவெம்‌ முலையார்க்‌ கொன்ற கொடும்பழி யகலுமெய்யே. 34

சதுர்முகம்‌ தரிக்குமேலோர்‌ தாந்தின மிளமைசெல்வம்‌
நிதிபதிபோல்‌ வாழ்‌வெய்தி நித்தில மாலைசூடி
விதுமுக மாதரோடு விளையாடி மகிழ்ந்துகூடிக்‌
கதிபெறும்‌ வழியுங்கண்டு கலையில்‌ வல்லவரேயாவர்‌. 35

ஐந்துமா முகத்தைப்‌ பூண்போ ரரனெனவுலகம்போற்ற
வந்தவரவரே யாவர்‌ வானவர்புகழ வாழ்வார்‌
இந்துசேகரனார்‌ பாத விணையினைப்போற்றி வாழும்‌
புந்தியில்‌ விருப்பமிக்கார்‌ புலவர்க ளவர்‌தா மன்றோ. 36

இருமூன்று‌ முகந்‌ தரிப்போ ரிம்பரி லெவரும்போற்ற
மருவுறு மனைவியோடு மைந்தர்கள்‌ மிகவுமுண்டாய்த்
திருவின்றன்‌ னிருக்கை யாகிச்செல்வமு மோங்கவாழ்வார்‌
இருமையுந்‌ தேவரென்றே யேத்‌துவர்விண்‌ ணோரெல்லாம்‌. 37

ஏழுமாமுகங் கொள்‌வாரேல்‌ எமனனு தினந்துதிப்பான்‌
தாழ்விலாச்‌ செல்வமோங்கத்‌ தரித்திர மோட்டெடுக்கும்‌
சூழ்வினை விட்டுநீங்கிச்‌ சுந்‌தரவடிவ மேற்பார்‌
ஆழ்கடல்‌ போலவொக்க லகலாது வாழ்வர்‌ தாமே. 38

அட்டமாமுகங்கள்‌ பூண்போர்‌ அன்னைய ராவர்யார்க்கும்‌
பட்டிமை வழக்கிநில்லார்‌ பாவலர்‌ புகழவாழ்வார்‌
துட்டர்க ணெருங்காரென்றுந்‌ தூய்மையராவர் மெய்யே
நட்டமே செய்யுநாதன்‌ நன்னக ரடைவர்‌ மாதே. 39

நவமுகந்‌ தரிப்போரெல்லா நன்றியைக்‌ கொன்றபாவந்‌
தவமுள கற்பின்மங்கை தனையழிசெய்த பாவம்‌
புவனியில்‌ பிறர்தாரத்தைப்‌ புணர்வதால்‌ நேரும்பாவம்‌
இவையெலாம்‌ நில்லாதேகு மிந்‌திரனாவர்‌ மெய்யே. 40

தசமுகந்‌ தரிப்போ ரெல்லாந் தவத்தர்க ளாகிவாழ்ந்து
இசைபட வெட்டுசித்தி யிம்மையிற்செய்து காட்டிப்‌
புசபல னாகிநேரும்‌ போரினில்‌ வெற்றிகொண்டு
சுசியோடு நிதமும்வாழ்ந்து சுந்தரக்‌ கயிலைசேர்வார்‌. 41

பதினொருமுகம்‌ விரும்பிப்‌ பாரினிலணிவோ ரெல்லாம்‌
விதிமதி யெரிநீர்காற்று விரவிய மண்ணோடான்மா
கதிரொடு கனலுமாகிக்‌ களித்துறை கடவுளேபோல்‌
சதிருடன்‌ வாழ்வர்பேசின்‌ சங்கரனவரே யாவர்‌. 42

பன்னிருமுகந் தரிப்போர்‌ பாரினில்‌ கிட்டாதாகுங்‌
கன்னியர் தாமேவந்து கலந்துவா ழின்பமேற்பர்.
சென்னியி லருகுவில்வஞ்‌ செவ்வல்லி மலர்கள்பூண்ட
மன்னிய கணேசருக்கு மகிழ்தரு மைந்தராவார்‌. 43

பதின்மூன்று‌ வதனம்‌ பூண்போர்‌ பண்டிதரா வரேயாவர்‌
நதியின்றன்‌ நீரில்மூழ்கும்‌ நன்மையும்‌ நயந்துகூடும்‌
சதிசெயும்‌ நாகம்நேரா சாயுஜ்யப்பதியும் வாய்க்குந்
துதிசெயுந்‌ தனதன்தானே துணைவனாய்க்‌ கொள்வான்மெய்யே. 44
ஈரெழு முகம்பூண்‌ போரே யீசனார்‌ பாலிருந்து
பாரினைப்‌ படைக்கும்‌ வேதன்பணியவே வாழ்வரென்றும்‌
மாரனைநீறாய்ச்‌ செய்தமன்னவர்‌ கண்போல்‌ நின்று
சாரணன்‌ முதலோர்‌ வாழ்த்தும்‌ நந்தியின்பதவி சேர்வார். 45

மூவைந்து முகந்தரிப்போர்‌ முன்னிய வெல்லாம்பெற்றுத்‌
தேவரே யாவர்மெய்யே தேர்ந்திடாப்‌ பொருளுமில்லை
மாவமர்‌ செய்யுஞ்சூரன்‌ மடியவே சமரிலட்ட
சேவகன்‌ பாதம்போற்றுஞ்‌ சீர்பெறு மைந்தராவார்‌. 46

ஈரெட்டு முகந்தரிப்போ ரிணையிலாக்‌ கந்தன்‌போன்று
வாரினைப்‌ பூண்டதேவி மார்கண்மேல்‌ வைத்தபாசம்‌
ஓரிறை நீங்காராகி யுயர்மண மலரும்‌போலப்‌
பாரினில்‌ தேவர்போற்றப்‌ பரிவுடன்வாழ்வ ரென்முன்‌. 47

அயனரி கால்களென்ன வலரெரி கண்களென்னப்‌
பயன்பெற கண்டமுச்சி பாரதி கமலையென்ன
வியன்பெறு மதியாதித்தர்‌ விரித்ததோர்‌ கலாபமென்ன
நயமிகும்‌ பார்வையோடோர்‌ மஞ்ஞைநா யகியாள்காண. 48

இந்திரன்‌ கண்கள்போல விணையிலாக்‌ கலாபமெல்லாஞ்‌
சுந்தர விழிகள்தோன்றச் சுகமுடன்‌ விரித்துநின்‌று
முந்திய வானநோக்கி முகமசைத்‌ தெழிலினோடு
வந்துமு னாடக்கண்டாள்‌ வளந்தரு மிமயமாது. 49

ஆடலி னழகைக்கண்டே யருள்மொழி கேளாநிற்ப
தோடணி வியன்நோக்கிச் சுடுசின முளத்திற்கொண்டு
கோடலில்‌ மலரைச்சூடுங்‌ குழலிநீ கூறும்வாய்மை
தேடரு மமிர்தந்தன்னைத் தேர்ந்திடா திகழ்ந்துநின்றாய். 50

ஆதர மற்றுக்கேட்டா யாதலா லமுதன்னாளே
பூதலந்‌ தன்னிலந்தப் புல்லிய தோகையாகி
யேதமாய் வாழ்குவாயென் றிட்டவிச் சாபங்கேட்டு
மாதவண் மகிழ்ச்சிநீங்கி‌ மலர்க்கரங்‌ கூப்பிச்சொல்வாள்‌. 51

பரதவன்‌ மகளாய்முன்பு பணித்திடன்‌ முறையோவென்று
கரதலங்‌ கூப்பிநின்று கரைந்துநா னழுதபோது
விரவிய மறையினுண்மை விருப்பின்‌றிக்‌ கேட்டலாலே
சிரமமில்‌ லாதொழிக்கச்‌ செப்பினேன்‌ சாபமென்றாய்‌. 52

அன்றுநாண்‌ முதலாயும்மை யருமறை மந்தணத்தை
யென்றுநான் கேட்டதில்லை யெம்பிரா னீயேகூறித்‌
துன்புறச்‌ சாபமிட்டுத்‌ தொலைக்கவே யெனக்களித்கா
யென்பொல்லா மணியேயுள்ள மிசைந்தது நீதியாமோ. 53

பூவினின்‌ மணமேபோலப்‌ பிரிவின்றிப்‌ பொருந்துவேனை
நாவினு நவிற்றற்கொண்ணா நாரினுங்‌ கடையதாகப்‌
பாவியேன்‌ றனக்குமிந்தப்‌ பழிவிளைப்‌ பதுவுநன்றோ
கரவிநேர்‌ கண்டாவென்று கணவனா ரடியில்‌ வீழ்ந்தாள்‌. 54

குவலயந் தன்னிற்பெண்கள்‌ கொழுநனைப்‌ பிரிகிலாத
தவமதைக்‌ கருதிநோற்றுத்‌ தலைவரைப்‌ பெற்றுவாழ்வார்‌
நவமதாந்‌ தவத்தைச்செய்து நான்பெற்ற வரியபேற்றை
யவனியி லெனக்களித்‌ தாலாருனை வசைசொல்வாரால்‌. 55

பத்தியே சிறிதுமில்லாப்‌ பாலனுக்‌ கருளைச்செய்ய
நித்தியா முடிவளைத்த நியமத்தைக்‌ குறித்தேயென்றன்‌
சித்தமோ சிறிதென்றெண்ணிச்‌ சிறுமையை விலக்கியென்று
முத்தமா வுனைவிட்டேகா வறுதியாம்‌ வரத்தையீவாய்‌. 56

கண்புன லடியிலாட்டிக்‌ கைதொழு தருகினின்று
வெண்பொடி யணியுமெய்யா விமலனே காப்பாயென்று
நுண்பொரு ளடியாளோர்ந்து நுவலவல்‌ லேனோமுன்னாள்‌
திண்ணனார்க்‌ கருள்புரிந்த தீரனே யறிகிலாயோ. 57

அரியவை யறியாப்பேதை யன்பினா லிழைத்ததீங்கைப்‌
பரிவுட னீக்கியென்னைப்‌ பாலிப்ப தழகல்லாமற்‌
பிரியமிற்‌ றோகையாகிப்‌ பிறிந்துநா னீங்கும்வண்ணம்‌
புரிவது ஞாயமன்று தீங்கினைப்‌ பொறுத்தியென்றாள்‌. 58

அன்பினை யுடையரேனு மன்பிலா தவர்களேனு
மென்பெருந்‌ தொண்டரேனு மென்னுடை மைந்தரேனு
மன்பெறு தேவரேனு மறைதனை யிகழ்ந்துநின்றாற்
றுன்புறச்‌ சாபநல்கித்‌ துய்த்தபின்‌ னருளைச்‌ செய்வோம்‌. 59

என்னலுந்‌ தோகைகேட்டிங்‌ கியைபிலா தழுங்கிநின்று
பன்னுதற்‌ கரியசீர்த்தி பலபல வெடுத்துக்‌ கூறி
யிந்நிலை தவிர்க்‌குந்தான மியாதென வெம்பிராட்டி
தென்னன்ற னடியுண்டானுந்‌ தேவியர்க்‌ கியம்பலுற்றான்‌. 60

விண்‌ணுல கதனினோர்ந்த வியன்பழி நீக்கவேண்டிற்‌
பண்ணவர்‌ முதலோரெல்லாம்‌ பாரினிற்‌ றவத்தைச்செய்வார்‌
புண்ணிய புவியிலென்றும்‌ புகழ்ந்திடு தொண்டைநாட்டைத்‌
திண்ணமா யடைந்துசாபந்‌ தீர்ந்திடப்‌ பெறுதியென்றான். 61

தேவியுஞ்‌ சாபமேற்ற திறனது சொற்றாம்பின்பு
பாவையுந்‌ தவத்தைச்செய்யப்‌ பண்ணவ னதனைத்தீர்த்துக்‌
காவிநேர் விழியினாளைக்‌ கற்பக வல்லியென்றுங்‌
கோவியல்‌ நாமமீந்த கொற்றமுங்‌ கூறுவாமால். 62

உமாதேவியார்‌ சாபமேற்ற படலம்‌ முற்றிற்று.
-----------

07. உமாதேவியார்‌ சாபந் தீர்‌ந்தபடலம்‌

.

புள்ளின்ற னுருவுகொள்ளப்‌ பொற்கொடிக்‌ களித்தல்கேட்டே
வள்ளியின்‌ கணவனோடே வளர்கச முகத்தான்கூடிச்‌
கொள்ளிக்கண்‌ டந்தைகேட்கக்‌ கொடுமையைக்‌ காண்பார்யாவர்‌
வள்ளலென் றுனக்குயார்பேர்‌ வகுத்தனர்‌ புகல்வீரையா. 1

கரியென வியற்பகைக்கோன் காதலி தன்னைக்கேட்டா
லுரியவன்‌ றருவானேற்றா லுமையவள்‌ பொறுக்காளென்றோ
பரிபவங்‌ கொண்டவந்திப்‌ பாவைக்கு மாளாய்ச்‌ சென்றால்‌
சரியது வல்லவென்று சாற்றுவா ளென்றோவையா. 2

மனைவிமேலாசை நீங்கிமறந்து நானிரேன்கா ணென்று
வினவியவாய்மை தப்பி விளங்கிழை தன்னைவேண்டி
நனைமலர்ச்‌ சோலைக்கூவம்‌ நண்ணிய வருணைமேவில்‌
சினங்கொள்வா ளென்றோ வையாசீறிநீ சாபமிட்டாய். 3

கங்கையின்‌ காய்ச்சலாலே காயத்தை யொழிக்கவெண்ணிப்‌
பொங்கிய விடத்தை யுண்ணப்‌ பூவையுந்‌ தடுத்தல்‌ கண்டோ
நங்கைமோ கினியைக்‌ கூடல்‌ நாயகி காண்பாளானாற்‌
சங்கரா பொறுக்கா ளென்றோ சாற்றினாய்‌ சாபமையா. 4

பொன்னனை யாடன்னில்லிற் பொருந்தியே யிரவிருக்க
நன்மையாய்க்‌ கேட்டபோது நானிரே னென்றுகூறி
மன்னிய மதுரைவந்து மாற்றத்தால்‌ மகிழ்ச்சிசெய்த
கன்னியினாசை யெங்கே‌ கைவிட்டா யுரையா யையா. 5

ஆனந்தை யென்னுந்தாசி யவடன்பாலாசை கொண்டே
தானொரு வணிகனாய்ப்‌ போய்த்‌ தண்ணருளதனைச்செய்து
தேனொத்த மொழியினாளைச் சேர்வது கண்டொப்பற்ற
மீனொத்தவிழி வருந்து மெனச்சாபம்‌ விளம்பினாயோ. 6

காளத்தி ருந்துதன்னில்‌ கலங்கழூஉ மவள்விரும்பி
வேளொத்து மயக்கிரோமம்‌ வெட்டுண மீண்டுநல்கி
வாளொத்தவிழியாள்‌ காணின்‌ வாடுவ ளென்‌றோவையா
மீளவும்‌ வாராவண்ணம்‌ விடுத்தனைபோலுஞ்‌ சாபம்‌. 7

என்‌றினையவர்கள்‌ கூறி யிணைவிழி வெள்ள மோடச்‌
கன்றியகோபங்‌ கொண்டு கற்களாலடிக்க லுற்றார்‌
நின்‌றிடும்‌ பெருமான்கண்டு நீள்பெரும்‌ பயங்கொண்டாராய்‌
நன்‌றியே செய்தே னென்று நாயகனாணையிட்டார்‌. 8

இட்டதோ ராணைகேட்ட விணையிலா மைந்தர்கோபம்‌
மட்டுற நீங்கித்தாயின்‌ மலரடி தன்னில்வீழ
இட்டமோ டெடுத்துத்‌ தேவியிளமகார்‌ முகந்துடைத்து
நட்டமே செய்யுநாத னாட்டிய திசையிற்‌ போமுன். 9

மயிலுருவேற்ற மாதுமக்களின்‌ பிரிவை நோக்கி
யயில்பொரு கண்ணீர்‌ சோரவழுவதைக்‌ கண்டமைந்தர்‌
குயிலிசை மொழியாள்‌ பாதங்கோதற மீண்டுந்தாழ்ந்து
புயலென விழியினீரைப்‌ பொழிந்தனர்‌ விம்மிவிம்மி. 10

கண்டவர் துயரமெல்லாங்‌ காதலற்‌ கினிதுகூறி
யண்டர்க்குந்‌ தேவிமார்க்கு மழகியமயிலாய்‌ நேர்ந்த
பண்டைவல்‌ வினையையோதிப்‌ பாரினிற்‌செல்வேனென்று
கொண்டல்க டுயிலுமேருக்‌ கோவரைமருங்கு சார்ந்தாள்‌. 11

காய்ந்த முப்புரத்தான்‌ வாழுங்‌ காசிகாஞ்‌ சியையுநீங்கி
ஆய்ந்தநூல் கூறுஞ்சேது வாலவா யையாறண்மி
மாய்ந்தவர்‌ பிறந்தால்‌ முத்திமருவியே யளிக்குமாரூ
ரேய்ந்துமே கண்டோர்முத்தி யெய்துமத்தில்லை வந்தாள்‌. 12

ஆதரித்‌ தொருகாற்‌ கூறி லருள்புரி யருணைகண்டு
பாதகம் போக்குங் காழிப்பதிவிட்டுப் புகலூர்தாழ்ந்து
நீதியாய்ப் புரமெரித்த நிமலர்வா ழதிகைமேவிச்
சாதலையறவே மாற்றுஞ்‌ சதுர்மறைக்‌ கிரியைக்கண்டாள்‌. 13

ஆதிமா புரியெல்‌ லைக்கு மருணடம் வான்மியூர்க்கும்
பாதியிலம்மை நின்று பாணற்கா விறகுவிற்ற
சோதிதன்‌ பாதமேத்‌திச்‌ சுகந்தரு புன்னையின்‌ கீழ்
நீதியாயிலிங்க மொன்றை நிறுத்திப்பூ சித்துநின்றே. 14

சோதியே போற்றியெல்லின்‌ சுடருக்குஞ்‌ சுடரேபோற்றி
நீதியே போற்றியென்ற னிலைகெழு சாபநீக்கு
மாதியே போற்றியிந்த வணிநகர்‌த்‌ தலைவா போற்றி
காதிவேற்‌ கயனைக்காய்ந்த கடவுளே போற்றி போற்றி. 15

இந்திரன்‌ பழியைத்‌ தீர்த்த விணையிலாத் தேவாபோற்றி
சுந்தரக்‌ கரியின்சாபந்‌ தொலைத்திட்ட சோதிபோற்றி
மைந்தன்மார்க்‌ கண்டற்காக மறலியை யுதைத்தாய்போற்றி
செந்திரு முதலோர்போற்றச்‌ செல்வத்தை யீந்தாய்போற்றி. 16

கன்னிய ரிருவர்கானில்‌ கலங்கிடக்‌ காத்தாய்‌ போற்றி
மன்னிய வணிகமைந்தன்‌ மாமனாய்‌ வந்தாய்‌ போற்றி
தன்னியல்‌ பழியாப்பன்றித்‌ தாயெனப்‌ பாலருத்தி
மன்னன்றன்‌ னமைச்சனாக மகழ்வுட னமைத்தாய்போற்றி. 17

பாலற்கு முடிவளைத்த பரமனே போற்றிமேலாம்‌
ஞாலத்தில்‌ தனபாலற்கு நற்றுணை வந்தாய்போற்றி
சேலொத்த விழியாளிட்ட செழியபிட்‌ டுண்டாய்போற்றி
மாலுக்குச்‌ சக்கரத்தை மகிழ்வுட னீந்தாய்போற்றி. 18

நாரைக்கு முத்திதந்த நற்குல மணியேபோற்றி
பாரினில்‌ பாணர்க்காகப்‌ பாவினை யீந்தாய்‌ போற்றி
தாரையாய்க்‌ கண்ணீர்சோருக்‌ தரங்கண்டு வந்‌திக்காகச்‌
சார்புடன்‌ மண்சுமந்‌த சங்கரா போற்றி போற்றி. 19

தேவர்கள்‌ வேண்டுகோளால்‌ திரிபுர மெரித்தாய்போற்றி
பாவலன்‌ சுந்‌தரற்காய்ப்‌ பரவைபால்‌ சென்றாய்போற்றி
காவிநேர்‌ விழியாள்‌ வேண்டக்‌ கணவனை யளித்தாய்போற்றி
கோவிய லரசுசெய்த கொற்றவா போற்றிபோற்றி. 20

அண்டர்கட்‌ கரியாய்போற்றி யயன்சிர மரிந்தாய்போற்றி
தொண்டர்கட்‌ கெளியாய்போற்றி தொல்வினை யொழிப்பாய்போற்றி
விண்டல வானோர்போற்றும்‌ வித்தகமணியே போற்றி
மண்டலத்‌ தீண்டுவாழு மாதவாபோற்றி யென்றே. 21

கற்பகக்‌ கொடியாளேற்றக்‌ காதினிற்‌ கேட்டலோடு
நற்குலமற்ற வேடனாகியே நாயும் வில்‌லும்‌
பொற்கொடி கோபங்கொள்ளப்‌ புன்மைமாமிசத்தைக்‌ கைக்‌கொண்
டற்புடனை யன்றானே யம்மையி னெதிர்னின்றானே. 22

இராஜவிலாசம்‌, இராஜாகிறாமணியார்‌.

காண்டலுஞ்‌ சினமீக்கொண்டு காடனே யிங்குவந்‌த
மாண்டகா ரணமதேது மாதேவரரு ளைவேண்டிப்‌
பூண்டவிவ் வடிவாலையன்‌ பொன்னடி போற்றாநிற்க
வீண்டுநீ வாராநின்றா யேகென முனிந்துசொன்னாள். 23

வேடனும்‌ கோபங்கொண்டு விளம்புவான்‌ மயிலேகேளாய்‌
ஏடவிழ் தார்ப்புயத்தி னெழில்வில்லா லன்னைக்கொன்று
தேடுதற் கரியநின்றன்‌ றசையெலாந்‌ தீயிட்டென்ற
னாடவர்‌ மைந்தர்க்கீந்தே நலிபசிகளை வேனானால்‌. 24

பெண்ணினைக்‌ கொல்வதற்குப்‌ பெண்ணலா லாணாற்கொல்வ
தண்ணலுக் கடாதுமற் றெனருள்வலிக்‌ கிழுக்குண்டாகும்‌
புண்ணியங்‌ குறைந்துதேயும்‌ புகழுமே நிதமுங்குன்றும்
பண்ணவ னருளுநீங்கும்‌ பாரினிற்‌ பழியுண்டாமே. 25

என்னவே யுமையுங்கேட்டே யேந்தும்வே லெயினச்செல்வா
பொன்னகர்க்‌ கிறைவனாலும்‌ பூங்கம லத்தனாலு
மன்னுலக தனைத்தின்ற மாயனென்‌ றமையனாலுங்‌
கின்னர்கந்‌ தருவர்சூரர்‌ கீர்த்திகளமைந் தோராலும்‌. 26

என்னையே வெல்வதற்கிங்‌ கேவரான்‌ முடியுங்கண்டா
யுன்னையொத் தாரோடேகி யுன்மொழிவிளம்‌ பல்வேண்டு
மிந்நிலைநின்றுன்வீர மியம்பிடின்‌ மதிக்ககில்லே
னன்னையென்‌ றறிவாயென்னை யறிவிலாய்‌ விலகிடென்றாள். 27

அறிவிலியென்றே வாணையலக்‌ கழித்‌துரைக் கும்பெற்றி
பொறியிலி யுனக்குவந்த புதுமைநா னறிவேனென்று
பரிவொடு மணித்தாய்ச்செல்லப்‌ பாவிநீ யருகேவந்தாய்‌
எரியெனு மழுவைக்கையி லெடுத்தன ளெறிவேனென்ன. 28

பைங்கிளி யெறியுமுன்னே பான்மதிச்‌ சடையான்றானுந்‌
தங்கையி லயன்கபாலந்‌ தாங்கிய கோலத்தோடு
செங்கையில்‌ மழுமானாடச்‌ செல்வியு மகிழ்ச்சிகொண்டே
யிங்கித மாகக்காண வெழிலுருக்‌ காட்டிநின்றான்‌. 29

காண்டலு மெய்ம்மறந்து கருத்தழிந்‌ தலறியேங்கிச்‌
சேண்டவ மியற்றினோர்க்குஞ்‌ செப்புதற் கரியதேவே
யீண்டென்றன்‌ றவத்தினிற்கு மெய்திய பரனேகாக்க
வேண்டுமென்‌ றையன்றாளில்‌ விழிக்கணீர் சொரியவீழ்ந்தாள். 30

விழியினன் னீரைமாற்றி விளங்கிழாய்‌ மயிலாய்நிற்கும்‌
பழியுனை விட்டுநீங்கிப்‌ பறந்திடத்‌ தவஞ்சோதித்தோம்‌
கழிபெருங்‌ காதல்கொண்டோங்‌ கற்பகவல்லியென்றே
யழிவிலாப்‌ பெயருந்தந்தோ மருளுவோம்‌ வரங்கேளென்றான்‌. 31

கூறியவார்‌த் தைகேட்டுக்‌ கோதிலாக்‌ குணத்தோய்நாயே
னீறிலாத்‌ தவத்தைச்செய்த விப்பெரும்‌ பதிதனக்கே
மாறிலா மயிலையென்ன மன்னும்பே ரோங்கவேண்டுந்‌
தேறியே கண்டோர்க்கெல்லாந்‌ திருவருள்‌ செய்தல்‌ வேண்டும்‌. 32

என்னுடன்‌ பிரியாதிங்க ணிறைவநீ யுறைதல்வேண்டும்‌
பொன்னகர்‌ வாழ்வோரெல்லாம்‌ போற்றிடல்‌ வேண்டுமன்றி
யிந்நக ரதனிற்பாவ மியற்றினுந் தேவராகி
மன்னுநின்‌ கைலைமேவி மலரடிவாழ்த்தல்‌ வேண்டும்‌. 33

பஞ்சமா பாதகங்கள்‌ பண்ணிய வொருவனேனுந்‌
தஞ்சமா யாருமின்றித்‌ தனியனாய் வந்தோனேனுங்‌
கொஞ்சிய மொழியாளோடு கூடியேவாழ்ந் தோனேனும்‌
விஞ்சிய மயிலைமேவில்‌ மெய்ப்பத மருளல்வேண்டும்‌. 34

எழுத்தறி யாதவூரி லிருந்‌ திவண்‌ வந்தேயென்னை
வழுத்தியே வலஞ்‌செய்வானேல்‌ வண்கவி யாகவேண்டும்‌
பழுத்தவெம்‌ வறுமைமேவிப்‌ பாதமேகதி யென்பார்க்குச்‌
செழித்திடச்‌ செல்வநல்க‌த் திருவருள்‌ செய்தல்வேண்டும்‌. 35

எண்ணிலாப் பாதகத்தா லியல்‌பிணி யுடையரேனுங்‌
கண்ணிலாக்‌ குருடரோடு கான்முட மானபேரும்‌
மண்ணவ ரோசைகேளா மாண்செவி யுடையரேனுந்‌
திண்ணமா யெனைத்துதித்தாற் றிருவருள டைதல்வேண்டும்‌. 36

பற்பல சொலியிவ்வாறு பகவதி கேட்டலோடும்‌
அற்பகற் றேவர்போற்று மையனுங்‌ கருணை கூர்ந்து
சிற்பரியா வுந்தந்தோஞ்‌ சிறப்பொடு மிவ்விடத்தே
பொற்புட னிருப்போமென்று புங்கவன்‌ புகன்றானன்றே. 37
கேட்டலு மெழுத்திருந்து கிளர்கரஞ்‌ சிரமேற்கொண்டு
நாட்டங்கள்‌ விழித்‌துநோக்க நாதனார்‌ பாகங்கொண்டு
தோட்டடம்‌ புளகங்கொள்ளத்‌ தொல்லுயி ராளுங்கோமான்‌
வாட்டமில்‌ கபாலியென்ன வழங்கருளி லிங்கமானார்‌. 38

வேறு
அருண்முனிவீ ருமைசாபம்‌ நீங்கியதை யுங்களுக்கே
      யறைந்தாமிஃது
திருவளிக்குங்‌ கேட்போர்தந்‌ தீயவினை யறமாற்றுந்‌
      தேவியின்றன்‌
மறுவொழித்த சரிதமிதை யாங்கேட்டு மனமகிழ்ந்தா
      மகியிலின்னுங்‌
கருவொழிக்கும்‌ வேலவன்றன்‌ கதைபுகல வேண்டுமெனக்‌
      கழறலுற்றான்‌. 39

உமாதேவியார்‌ சாபந்தீர்ந்த படலம்‌ முற்றிற்று.
--------------

08. சிங்காரவேலர்‌ சத்திவேல்‌ பாசுபதாஸ்திரம்‌ பெற்ற படலம்‌.

ஒருயுகத்திற்‌ கயிலைநணி யொப்பிலான்‌ றனைவணங்கி யுமையாடன்னை,
யிருநிலத்தி னிடைதாக்கா யணியென்ன வழைப்பதனை யினியான்றாளேன்‌,
பெருமானே தயைபுரிந்தப்‌ பெயரதனை மாற்‌றுகவென்‌ றிரந்துகேட்பத்‌,
தருவளரும்‌ பனிவரையி லுனைமகளாய்ப்‌ பெறவிமவான்‌ றவஞ்செய்‌கின்றான்‌. 1

அவனிடத்தி லருமகளா யவதரிப்பாய்‌ நாமணுகியையம்நீக்கிப்‌,
பவமகற்றி மணமுடித்துப்‌ பர்வதவர்த் தனியென்‌று பலரும்வாழ்த்த
நவமாக வுனக்கருள்வோ மெனக்கூறி யேவிடவும்‌ நந்திதானும்
சிவனோடு சத்தியையு மனுதினமுங்‌ கண்டுவருஞ்‌ சிறப்புற்றானால்‌. 2

நந்தியுமோர்‌ குளிகைதனை வாயடக்கி நாடோறும்‌ நயனோடேகி
முந்தியேயிமயமலை தனையடைந்து தேவிதனை முன்புபோற்றி
வந்துசிவன்‌ றனைக்காணும்‌ வழக்கம்போ லொருநாளில்‌ வளப்பமுள்ள
விந்துதவ ழிமகிரியைச்‌ சேருங்காற்‌ குளிகைதனை யிழந்து மாழ்கி 3

எடுப்பதற்குக்‌ கூடாம லிருக்கின்ற செயலதனா லெவருங்காண
அடுத்தனனன்‌ னவனெதிரில்‌ மலையரைய னெடுத்துக்‌ கொண்டவரைக்‌ கேட்பக்‌
கடுத்ததும்பு கண்டனையுங்‌ கன்னியையும்‌ நான்கண்டு கணத்திற்செல்வா
னடுத்தனனிம்‌ மணிவீழப்‌ பலர்கண்ணிற்‌ படலானே னந்தோவென்றான்‌. 4

இம்மணியைப்‌ பெற்றிடிலோ வீசனார்‌ கைலைக்கே குவனானென்று
மம்மருடன்‌ கூறிடவு மகதேவர்‌ தனைக்காண மாண்போடென்னை
உம்முடனே கொடுபோக வேண்டுமென மறுத்திடவு முறுதியோடு
தம்மைவிட்டு விலகாம லிருப்பதினால்‌ தான்கொண்டு கைலைசேர்ந்தான்‌. 5

போனவரும்‌ சிவபெருமான்‌ றனைநோக்கிப்‌ புன்மைபிழை பொறுப்பா யென்றே
ஞானவுரு நந்தியுமே புகன்றுவரு முன்னிமைய நளினவேந்தன்
வானவன்வாழ்‌ கைலையினி லொருமூலை யிடத்ததனில்‌ வலக்கையூன்றி
யூனமுடன்‌ றுயிலுகையி லுடைவாளி னுறைகிழிய வூன்றிற்றாமால்‌. 6

அவ்வாளின்‌ கூர்முனையி லழுந்தியவக்‌ கிரிவெள்ளி யளவுசொல்ல
ஒவ்வாத நாற்பத்தொன்‌ பதுகோடிப்‌ பொன்னெனவே யொப்பிலானும்
இவ்வாழ்வு பெறச்செய்‌த வெழில்நந்தி பதம்‌போற்றி வீசன்பாங்கர்
ஒவ்வாத புகழுடையா னருள்பெற்று மலையரைய னோங்கல் சென்றான். 7

நந்திதனைத்‌ தானோக்கி நாயகியைக்‌ கண்டசெயல்‌ நாதன்கேட்‌டுப்‌
புந்திமகி ழொருபாலும்‌ புன்பிழையா லொருபாலும்‌ பொருந்தக்‌கூர்ந்து
சந்திரன்றன்‌ குலந்தோன்று மாறனுக்கே யமைச்சனாய்‌ வருவாய்‌ சார்ந்து
வந்துனது பிழைதவிர்த்து வண்கயிலை சேர்ப்பமென வரமீந்தானால்‌. 8

இவ்வரத்தை யவற்களித்தே யிணையில்லா நால்வருக்கு மெழில்‌ கல்லாலின்‌
ஒவ்வுமுயர்‌ யோகமதை யுபதேசஞ்‌ செய்யுங்கா லூனங் கொண்ட
தெவ்வாழ்வு கொண்டபே ரரக்கராற் றேய்வுண்டு திருமாறன்பால்‌
செவ்வாழ்வு பெறவளிக்கச்‌ சிரம்வணங்கித்‌ தேவர்குறை செப்பலுற்றார்‌. 9

பொன்னாருந்‌ திருமார்பன்‌ புங்கவர்க டமைநோக்கிப்‌ புகல்வதானான்‌
பன்னாளுஞ்‌ சிவபெருமான் புரியோகந்‌ தனைநீங்கிப் பண்பினோடு
மொன்னார்தம்‌ குலங்கெடுக்க வொருமகவு தன்னிடமா யுதவநேரின்‌
மன்னாக நம்வாழ்வே மிலையாகி னரக்கரான்‌ மாள்வேமென்றான்‌. 10

இம்மொழியைக்‌ கேட்டவயன்‌ முதலோர்கண்‌ மிகவருந்‌தி யீசன் செய்யு
மம்மகயோ கம்மழிக்கப்‌ பூங்கணைவே ளலதுபிறர்க்‌ காகா தென்ன
வெம்மைதருங்‌ காமத்தை யெறும்புகடை யானைமுதல்‌ விளைவு செய்யுஞ்‌
செம்மைகொளக்‌ கரும்புசிலை நாண்சுரும்பு மலர்ப்‌பகழி சீர்வேள்‌ கேட்டான்‌. 11

கேட்டவுடன்‌ மதன்‌ பதைத்துக்‌ கிளர்செவிக டமைப்பொத்திக்‌ கேடில்லாத
நாட்டமொரு மூன்றவனை நானணுகி யிறப்பதற்கோ நவின்றீரையா
தோட்டிதழ்சேர்‌ மலர்த்தவிசின்‌ மீதிருக்குந்தொல்‌ லோய்நீ துணிந்துகூறும்
வாட்டமிலா நின்மொழிக்கு நானிசையே னெனமறுத்து வணங்கிச்‌ சொன்னான். 12

தானவரை நாஞ்சயிக்க முன்பொருகால்‌ ததிசிமுது கென்பைத்‌ தந்தான்
ஆனவுயிர்‌ தமைப்புரக்குஞ்‌ சிபியென்போன்‌ புள்ளினுக்‌காய்த்‌ தசையளித்தான்‌
ஞானமிலாச்‌ சடப்பொருளா மரங்கடமைக்‌ குறைப்பவர்க்கு நல்குநீழல்
தேனமர்பூவ்‌ கணையோய்நீ யிசையாயேற்‌ சபிப்ப னென்றான் றிசைமுகத்தோன்‌. 13

உன்சாப மதைப்பெற்றுப்‌ பிறந்துபிறந்‌ திறப்பதினு முமைபாகன்பாற்
பொன்றாலும்‌ புகமுண்டா மெனவிரதி யுடன்றேரிற்‌ பொருந்தவேறிப்‌
பின்வாசல்‌ வழிச்சென்று மலரம்பை விடும்போது பிறங்கு மீசன்‌
றன்‌றேசு நுதல்விழியைத்‌ திறக்கமத னயர்ந்துவெந்து சாம்பரானான்‌. 14

முன்னாள்முப்‌ புரம்பொடித்த முதல்வனுடன்‌ போர்செய்ய முடியாதென்று
சொன்னாலுங்‌ கேளாமற்‌ றேவருனை யேவினரென்‌ செய்வாயிப்போ
தன்னார்தந்‌ தொழில்முடிந்த தந்தோநீநீ றானாய டியாடானும்‌
மன்னாத னில்லாத பெண்ணானே னென்றிரதி மாழ்கி னாளால்‌. 15

உம்பரெலா முனையேவி யுயிர்நீங்கச்‌ செய்தவுபா யந்தா னென்னோ
செம்பதுமைத் திருக்குமரா சிறியாளின்னுயிர்க்‌ கணவா சிவனார் பேரில்‌
வம்புசெய்து வெல்வனெனக்‌ கயமுகனும்‌ போய்ப்பொருது வறிதே மாண்டான்‌
அம்புவியி னீயரனை யெதிர்த்து வெல்வே னெனத்துணிந்த தழகோ வென்றாள்‌. 16

ஒருவனைக்‌ கொன்‌ றோர்குடியைக்காத்தலற மெனவுன்னி யொப்பிலாத
தருநிழல்வா ழும்பரெலா மித்தகைய சூழ்ச்சிதனைத்தான்‌ செய்தாரோ
பெருமை தருமில்லறத்தைப்‌ பொய்வாழ்வென்றுரை முனிவர்பிறங்கு முன்னை
யுருவழிக்கச்‌ சமையமிதென்‌ றும்பருக்‌குத்‌ தாமுரைத்தீண்‌ டொழித்தார்‌ கொல்லோ. 17

திருவளரு மார்பனரு டிருக்குமர வுனைமணந்த திண்மை கேண்‌மோ
உருமிகவும்‌ வனப்புடையோர்‌ தந்தைமைந்த ராயிடினு முகந்தன்னாரைத்‌
திரையெறியுங்‌ கடற்பாரின்‌ மங்கையர்கடாமுகந்து திளைக்க வின்பம்‌
மருவுவர்நா னின்வடிவி னலம்வேட்டுக்‌ கொண்ட தென்றன் மாட்சியாமால்‌. 18

வானில்வரு மாதவனைத்‌ தாமரைகண்‌ டலருமன்றி வாணிலாவைத்
தேனவிருமரைகண்டு மலராதுபார்மீது தெளிந்தவுன்ற,
னானனத்தைக்‌ கண்டவென்ற னிருவிழிக ளுனையன்றி யயலார்தங்கள்‌
மானமுகந்‌ தனைக்கண்டுமகிழ்ந்திடுமோ புகழ்மலிந்த மாரவேளே. 19

மாயவன்றன்‌ புதல்வனென்று மகிழ்ந்துன்னை மாலையிட்ட மகிழ்ச்சியெல்லாம்‌
போயினவென்‌ றனைவிட்டுப்‌ புலம்புமொழி கேட்டேனும்‌ புகலொணாதோ
தீயுடையகண்ணாள னெரித்தபிழை கூறியவன்‌ திருமுன்னேநான்‌
போயிறைஞ்சி யுளையெழுப்பப்‌ புலம்புவேனென விரதியும்போயினாளே. 20

பொன்னுலகோ ரெல்லாரும்‌ கைலையான்‌ முன்சென்று போற்றி நின்றே
இன்னுலகைக் கரியாக்கி எம்வாழ்வுதனைச் சிதைக்க யாங்களெல்லாம்‌
மன்னுலகு தனில்வாழப்‌ பெருங்கேடு செய்சூரன்‌ மாளவின்று
பன்னுமொரு வழியையெமக்‌ கருடியென வடிவீழ்ந்து பரவி நின்றார்‌. 21

அன்றுநமை நிந்தித்ததக்கனது வேள்வியினை யடைந்ததீங்கா
லின்றுவந்து நீரடைந்தீ ரும்விதியு மனுபவிக்க வியைந்ததையோ
சென்றிமையமாதுதனை நாமணந்தோர்‌ சேயதனைச்‌ சிறக்கப்பெற்று
வன்றிறல்செய்‌ சூரனையும்‌ வதைசெய்தே புரப்பமென வழுத்தலுற்றான்‌. 22

எம்பெருமா னருள்பெற்றே யெண்ணிலா மகிழ்ச்சியுட னிமையோர்‌ போமுன்‌
வம்பவிழுங்‌ கூந்தலுடை யிரதியெனும்‌ பெண்மணியும்‌ வணங்கிநின்று
உம்பரெலா முயக்கொன்றீ ரென்கணவனுய்வதற்கிங்‌ குரைப்பீரென்னக்‌
கம்பமா யுரியான்ற னுடன்பகர்ந்து பெறுதி யெனக்கனிந்து சொற்றார்‌. 23

பெண்ணாகிப்‌ பெருந்துயரங்‌ கொண்டனன்கா ணதிமுடித்த பேரியோயென்றன்
கண்ணாள னறியாமற்‌ கடவுளர்கள்‌வேண்ட நனி கடிந்துசாபம்
அண்ணானின்‌ மீதுவிட்டா னவனைநுதற் கண்‌ணாலே யழித்தாயந்தோ
விண்ணாளா வவனின்‌ றியுயிர்தரியே னெனரதியும்‌ விளம்பிவீழ்ந்தாள்‌. 24

இமயமயி றனைமணந்து வரும்போது நாமவனை யீவோமந்தச்‌
சமயமதிலென விரதி சரீரமெல்லாம்‌ புளகித்துத்‌ தாழ்ந்துசென்றாள்
அமலமுறு கெளரிபுரி யருந்தவத்தைச்‌ சோதிக்க வரனாரந்த
வுமையவளு முளங்களிக்க வுவமையறுகிழ வுருவமெடுத்துச்‌ சென்றார்‌. 25

மன்னருள்‌சீர்‌ வழிபாட்டை யுடையபெரி யோரல்லான் மற்றையோர்க
டுன்னிடவுங்‌ கூடாதா லன்னவர்போல்‌ வருமுதியோன்‌ றோற்றங்கண்டே
வன்னையின்ற னரும்பாங்கி யருகினில்வந்தி யாரென்ன வையர்தாமும்,
என்னவிரும்‌ பித்தவத்தை யிழைப்பதிவள்‌ யாரென்ன விசைக்கலுற்றார்‌. 26

துன்னியவிவ் வுலகிலுள சராசரங்க ளளித்‌ தளிக்குந்‌ துகளிலாத
கன்னியெனப்‌ புகழன்னை மலையரையன்‌ மகளாகிக்‌ காதல்கொண்டு
தன்னிணைநே ரில்லாத சிவபெருமான்‌ றனைமணக்கத்‌ தவஞ்செய்‌கின்றா
ளென்னையா ளுடையபிரா னடியவரே கேண்மினென விசைத்தாளம்மா. 27

இம்மொழிகேட்‌ டம்முதியோ னக்குபுபெண்‌ மணியேயவ்‌ விறைவன்றன்னை
வம்மெனப்பன்‌ முனிக்கணங்க டவமிழைத்து மெய்‌வருந்தி வாடினாரால்‌
இம்மையில்நீ‌ கன்னல்‌நுகர்‌ வதைவிட்டு வேம்‌பதனை யிச்சித்தாய்கொல்‌
கொம்‌மெனவே யிறக்குமட்டுந்‌ தவஞ்‌செயினு மனமிரங்கிக் குறுகானையன்‌. 28

தேவரெலாந்‌ தவஞ்செய்து கைவிட்டார்‌ மெய்சோர்ந்து தெரியாமற்றான்‌
மாவலஞ்செய்‌ துலகமெலா மதிமயங்கச்‌ சித்தரெல்லா மையலானார்‌
பூவிலயன்‌ முடிகாணான்‌ பொன்‌னுடைமா லடிகாணான்‌ புகழினின்ன
மூவருமே யறியாத பேராளனிவடவத்தின்‌ முன்னிற்பானோ. 29

இதுகேட்ட பார்வதியு மித்தவத்திற்‌ கிரங்கானே லின்னும்‌வேறே
புதியதவ மியான்புரிந்து புண்ணியனை மாலையிட்டுப்‌ புகழ்‌வேனல்லாற்‌
கதுமெனவே விடுவனல்லே னெனக்கலங்கிக்‌ கண்‌ணருவி காலக்கண்டு,
விதுமறைத்த பெருமானுந்‌ தனையிகழ்ந்து வீண்‌மொழிகள்‌ விளம்பலானான்‌. 30

பெண்ணாகு மரசன்மகள்‌ பெறுகணவன்‌ நற்குணத்தைப்‌ பெற்றோனாகி
மண்ணாளு மன்னவனாய்‌ மானிடரி லழகுளனாய்‌ மனைவியாட்குக்
கண்ணாகித் தனையென்றும்‌ பிரியாது வைத்திருக்கும்‌ காட்சிகண்டு
விண்ணாடும்‌ புகழடைய வேந்தனையே மணம்புரிய விரும்புவாளால். 31

இவணீதான்‌ விழைகணவ னில்லமில்லா னேழைதனி லேழைமற்‌றும்
நவமாகும்‌ புலியுடையும்‌ நலமில்லா வெண்டலையும்‌ நஞ்சுங்‌ கொண்ட
அவமாகு மராமாலை யாரணிவா ரறியாயோ வன்னையில்‌லான்
றவமாக வுடன்முழுதும்‌ பூசுவது சுடுசாம்பல்‌ தையலாளே. 32

ஒருகாலு மணமில்லா வெள்ளெருக்குக்‌ காட்டாத்தி யுற்றகொன்றை
மருவென்ப தறியாத வில்வமுட னோச்சிமா விளமே மத்தந்
திருநாளு நீங்காத வருகம்புல்‌ முருக்கம்பூ திகழ்பூம்‌ பச்‌சைக்‌
கருநாளும்‌ வாராத கற்பகமா மலரெனவே கைக்கொள்‌வானே. 33

ஊர்கேட்கி லொற்றியூ ருடைகேட்கிற்‌ றோலாடை யுயர்வுபெற்ற
தார்கேட்கில்‌ கொன்றைப்பூ தமர்கேட்கில்‌ பேய்க்கூட்டந் தன்னிடந்தான்‌
பார்வெறுக்குஞ்‌ சுடுகாடு பணிகேட்கி லையமினிப்‌ பகர்வாய்‌ நன்று
வார்பூட்டும்‌ தனமுடையா ளெதைவேட்டிங்‌ கித்‌தவத்தை வருந்திச் செய்தல்‌. 34

பொங்குவிடந்‌ தானுண்டு புலவர்‌தமைப்‌ பிழைப்பித்‌த புனிதன்‌றன்னைத்‌
திங்களைமுன்‌ றக்கனிடும்‌ வெஞ்சாபந்‌ தீர்ந்திடவே சிரங்கொண்டோனை
யங்கணுல கெல்லாரு மறிந்திருக்க வறியார்போ லருகில்வந்தே
யிங்ஙனென்மு னிசைத்‌தனையே யிழிவுடைய முதுக்‌கிழவா வேகாயென்றாள்‌. 35

வாழிடமும்‌ வெள்ளிமலை வளர்வில்லும்‌ பொன்மலையாய்‌ வாய்க்‌கப்பெற்றோன்‌
தாழ்வடமும்‌ பொற்கண்டி தனியரசா யெவ்வுலகுந்‌ தாங்கப்பெற்றோன்
சூழுலகிற்‌ பஞ்சசபை நடமாடச்‌ சூழ்ந்திருக்கச்‌ சுடுகாடென்றே
யேழுலகும்‌ பழிக்குமொழி யிசைத்தனையே மதியில்லா யேகாயென்றாள்‌. 36

சிவவேடந்‌ தனைத்தரித்துச்‌ சிவநிந்தை செய்வார்தஞ்‌ சிரங்கணீங்கி
யவமாகு மசத்தலையு மழகில்லாக்‌ கரத்தலையு மணியாய்க்‌கொள்வார்
நவமாகுங்‌ கொடுமொழியை நவின்றதனாற்‌ கேடுனக்கு நணுகுஞ்‌ சொன்னேன்
பவமான பிறப்பெடுத்துப்‌ பலநாளுந்‌ துயருற்றுப் பழிபூண்பாயே. 37

சொற்கஞ்சு மூரலுடைத்‌ தோகையன நடையணங்கே சொன்னசொற்கள்
எற்கணனை யிகழ்ந்துரைத்தே னெனவெண்ண லீசனவ னெல்லார்க்குந்தான்‌,
அற்கண்ட னெனக்கேட்ட வணங்காங்கே யிருந்தவிட மகலும்போது
விற்கொண்ட மணிகோத்த மேகலைமுன்‌ றானைதனை விமலனீர்த்தான்‌. 38

உடைகரத்தா லீர்த்தவனைத் திரும்பியனை நோக்கும்போது கந்தமாலாம்‌
விடைமீதிற்‌ றிருவுருவங்‌ கண்குளிரக்‌ காணுதலும் விமலனாங்கே
தடையில்லா நின்றவத்தை நானுகந்தே னிவணின்றே தன்மையோடு
விடைகொடுநின்‌ றன்மனைக்கே குதியென்று விளம்பிடவும்‌ விரைவிற்சென்றாள். 39

நாயகனாரருள்பெற்று நற்றவத்தைப்‌ பூர்‌த்திசெய்து நயப்போடெய்தித்‌
தாயரொடுந்‌ தந்தையொடுந்தான்‌கூறி யவா்மகிழத்‌ தன்னேர்வந்த
நேயரிடம்‌ வாதிட்ட நெறிகூறி மெய்ம்மறந்து நிலைவினின்ற
தூயமகிழ்‌ தானடைந்தே யெதிர்நோக்கிப் பார்த்திருத்தல் துலங்கக்கண்டாள். 40

பங்குடையா னைமணக்க மகிழ்வுடனே மணம்பேசப்‌ பாசம்‌நீங்கி
எங்கணுமே புகழ்பெற்ற விருடிகளைத்‌ தாமழைத்தே யிமைப்பிற்சென்று
பொங்கமுட இமசயிலன்‌ தனைக்கண்டு மணம்பேசப்‌ போதுமென்னச்‌
சங்கரன்ற னன்பர்களு மக்கணமே யிமகிரியைச்‌ சார்ந்திட்டாரே. 41

சார்ந்தவரை யெதிர்போற்றிச்‌ சைலத்திலுறை வேந்துந்தாழ்ந்து பொங்கி
யோர்ந்தவரைக்‌ குறித்துரைக்க வொன்னார்கள்‌ புரமெரித்த வுயர்வோனுக்கு
வார்ந்தமுலை யம்பிகையை மணம்பேச வந்‌ததென வயிரத்தோள்கள்‌
கூர்ந்தபெரு மகிழ்ச்சியினாற்‌ றான்குலுங்க விம்‌மொழியைக்‌ கூறலுற்றான்‌. 42

எவ்வுலகு மெவ்வுயிரு மீன்றபெருந்‌ தேவியரை யிணையிலாத
பவ்வநிகர்‌ பிறவியெனும்‌ பவநீங்கப்‌ பாரினிலெல்‌ லோரும்‌பார்க்கச்‌
செவ்விடையான்‌ றனக்குமணஞ்‌ செய்துவைக்கத்‌ தடையில்லேன்‌ சிறியேனென்ன
வவ்வுமலர்க்‌ குழல்சூடு மேனையுங்கேட்‌ டிம்மொழியை வருந்திச்‌ சொல்வாள்‌. 43

பெற்றவளைக்‌ கேளாது கொடுக்கவிசைப்‌ பதுநலமோ பிரியமில்‌லேன்‌
நற்றவர்களேசாரோ நாட்டார்கள்‌ நகையாரோ நானிலத்தில்‌
முற்படவே சிறுவிதிக்குத்‌ தன்தலைபோ யசத்தலையை முறையாய்த்தந்தா
னுற்றிவளை மணமுடிக்க லென்கணவற்‌ கெத்தலையை யுகந்தீவானோ. 44.

உலகத்தி லெப்பிழையும்‌ பொறுத்தாளு மிறையோனுக் குயர்ச்சி நீங்கப்
பலவகையாய்த்‌ தூடித்‌துப்‌ பல்கோடி தேவருடன் பரிவாய்ச்செய்த
கலகமுறு வேள்வியினி லவியதனை மறுத்ததனாற் கருணைநீங்கி
நிலமுறவே யவன்றலையை வீட்டியசச்‌ சிரமளித்தா னிலைபெற்றோங்க. 45

ஆதலினா‌ லக்கொடியோன்‌ போலொத்து நிகழ்த்துவையே லறமோவென்ன
மாதவளு மருமகனார்‌ மிகவழகோ வழகிலியோ வழங்குவாயென்
றோதவவள்‌ மகிழ்வடைய வொப்பில்லான்‌ றன்னழகை யுன்னுமாறு
பாதமுதற்‌ சிரம்வரைக்கு முள்ளபெரு வழகெல்‌லாம்‌ பகரலுற்றார்‌. 46

ஊரழகன்‌ பேரழக னுடையழக னடையழக னுருத்திராக்கத்
தாரழகன்‌ றோளழகன்‌ றலையழகன்‌ கரமழகன்‌ றவத்தோர்போற்று
நேரழகன்‌ மதியழகன்‌ விடையழக னீற்றழகன்‌ நிகரதாக
வாரழகை யெடுத்துரைப்பேன்‌ சிவபெருமா னழகோடே யழகுற்றாளே. 47

எனக்கேட்ட மேனையுந்தா னீவதற்குத்‌ தடையிலைநீ ரியம்பும்‌ வார்த்தை
தனக்கேதுங்‌ குறைவுவரி னானிசையேன் மணஞ்செய்யத்‌ தழைத்த கூந்தல்‌
புனக்கிளிக்கோ பருவமிலை புங்கவரே மருகரிடம்‌ போவிரென்னக்
கனந்‌தவழுங்‌ கைலைசென்று கண்ணுதல்முன்‌ மேனைசொன்ன கதைசொன்னார்கள்‌. 48

கேட்டவுட னெம்பெருமான்‌ கிளர்மணங்‌ காண்பதற்குவரக்‌ கேடிலாத
நாட்டமதைப்‌ பெற்றபய னடைந்திடமா ஞானியர்க்கும்‌ நான்முகற்கும்
வேட்டுறுநன்‌ முனிவர்கட்கும்‌ தேவர்கட்கும்‌ மாதவர்க்கும்‌ விருப்பில்நல்கும்‌
பாட்டளிதுன்‌ றிடுமாலை சூடியதோரிஷி கட்கும்‌ பகரச்சொன்னார்‌. 49

வேறு
மங்கள மிமையமேவு மரகதக்‌கொடியை நாளை
மங்களச்‌ சோமவார மணஞ்செயக்‌ கைலைவிட்டு
மங்கலக் கோலத்தோடு மணவணிபூண்டுநா தன்‌
மங்கையு மகிழ்ச்சிகொள்ள மன்னனாய்‌ வாராநின்றான்‌. 50

திங்களங்‌ கண்ணிவேய்ந்த செஞ்சடைக்‌ கடவுள்‌தானே
மங்கையை மணக்கவெண்ணி மகழ்வுட னெவருங்காணப்‌
புங்கவ ரொருபால்வாழ்த்தப்‌ புவிமகளொரு பால்தாழ
இங்கித விமயமேவ விமையவர்‌ வருகவென்றும்‌. 51

சந்திரன்‌ றவழுமாடச்‌ சங்கமா ரிமையம்‌ நோக்கிச்‌
சுந்தரக் கயிலைநின்றுஞ்‌ சுகமுள சோமவாரம்‌
சந்ததந்‌ தேவர்போற்றுஞ்‌ சைலத்தில்‌ மணத்தைக்காணச்‌
சிந்தையில்‌ மகழ்ச்சிகொண்டு சிறப்புடன்‌ வருகமாதோ. 52

என்றுமே தேவதூத ரெழில்முர சறையக்கேட்டு
மன்றலைக்‌ காணவேண்டி மகரிஷி தேவர்நாகர்‌
மன்றலர்‌ மாலைசூடு மாதவர்‌ மண்ணுளோரும்‌
புன்றலைப்‌ பூதர்மற்றோர் புகழ்ந்திடு மிமையம்வந்தார்‌. 53

வந்தவர்‌ தமக்குத்தக்க வரிசைக ளாடைபூண்கள்‌
சிந்தை நன்கிசையு முத்துச்‌ சீர்பெறு மிரத்தினங்கள்‌
புந்‌தியில்‌ மகிழும்பச்சை புட்பராகத்தோ டியாவும்‌
விந்தையி னன்பினோடு மேவியே கொணர்தல்‌ கேட்டார். 54

வேறு.
கேட்டவுட னெம்பெருமா னகமகிழ்ந்தே யிமயவரைக்‌ கேடிலாத
நாட்டமுறு மூர்த்தியுடன்‌ களிரிமையஞ்‌ செலவிடுத்து நயந்துதானும்
கோட்டிமையஞ்‌ செல்வதற்கு மணவணிக டாம்புனைந்து கோதிலாத
தாட்கமலம்‌ விடைமீது தான்வைத்தான்‌ றவமுனிவர்‌ தாழ்ந்துவாழ்த்த, 55

இந்திரனை யெதிர்நோக்கி யெம்மருக னோவென்ன வில்லையென்ற
வந்தமொழி கேட்டயனை வரன்றானோ விவனென்ன வல்லவென்ற
சந்தமொழி பால்சலதி மகள்கொழுநன்‌ றனைக்கண்டு சார்ந்தோர்க்கெல்லாம்‌
பந்தமறுத்‌ திடுமரனு மிவர்தானோ பகரென்னப்‌ பாசமற்றோர்‌. 56

மாலென்ன மருகனதோ வருகின்றான்‌ காணென்ன மாதுநோக்கிக்
கோலென்னுங்‌ கண்திறக்கக்‌ கூர்விழியாள்‌ பார்வைக்கே குறைவாய்த்‌ தோன்ற
வேலென்னுங்‌ கண்மடவாள்‌ கண்டழவே வேள்வென்ற விமலர்நின்றார்‌
காலென்னக்‌ கண்ணிணைகள்‌ நெருப்‌பென்ன மெய்பதறிக்‌ கதறிச்சொல்வாள். 57

(வேறு)
தலையினை மாலைகொண்ட தரித்திர னிவனைத்தானோ
வலைபுனல்‌ கங்கைதாங்கு மழகிலி யிவானத்தானோ
புலையனும்‌ கொள்ளாப்போர்வை புலியத ளிவனைத்தானோ
விலையிலா வழகனென்றே விளம்பினார்‌ மோசமானேன்‌. 58

என்பினை மாலைகொண்டே யெருதேறி வருவான்றானோ
வன்பிணி கோய்கள்சார வருமிந்த வள்ளறானோ
பொன்னென வரவமாலை பூண்டவிம் மிடியன்றானோ
வென்னிலு மழகனென்றே யியம்பினார்‌ மோசமானேன்‌. 59

எண்ணிலா வீரும்பேனு மீர்த்திடுஞ்‌ சடையன்றானோ
புண்ணெலாந்‌ தெரிந்திடாமல் புழுதியைப்‌ பொடிப்பான்றானோ
கண்ணிலாதவர்கள்‌ கண்டு களித்திடு மழகன்‌றானோ
திண்ணமா யழகனென்றே தேற்றினார்‌ மோசமானேன்‌. 60

வந்ததோர் முனிவரெங்கே வல்லியைக்‌ குளத்தில்தள்ளி
முந்தவேயா னும்வீழ்வேன்‌ முகிழ்முலை யரும்பைநோக்கி
யிந்தரோகியை மணக்க வெண்ணிலாத்‌ தவத்தைச்‌செய்தாய்‌
சிந்தையின னலைமூட்டிச்‌ சிதைத்திட வைத்தாயென்றாள்‌. 61

ஜாதியி லுயர்வோ தாழ்வோ சாற்றிடத்‌ தந்தைதாயும்‌
நீதியா யொருவரில்லை நின்றிடுஞ்‌ சுடலைதானோ
பேதியா நடனசாலைப்‌ பெற்றமு மிரவறானோ
நாதனே மோசமானே னல்கிடேன்‌ போவென்றாளே. 62

வேறு.
மாமியா ரழகிலியென்‌ றேவெறுத்தா ளெனநின்று மன்னன்‌கூறக்‌
காமனையு மெரித்தருள்செய்‌ கண்ணுதலுங்‌ கண்ணில்லான்‌ மருகனென்றே‌
பூமியுளோர்‌ புகல்வதுவு மெய்யென்று நானறிந்தேன் புகல்வதென்னே
தோமிலா ரார்தாமுமிம்மொழியை மெய்‌யென்று சொல்வா சென்றார்‌. 63

பாவையர்க்கு விழியிலையென்றறியாது பார்வதிமேல்‌ பரிவுகூர்ந்தேன்
பூவுலகில்‌ மெய்யென்றே யுன்மொழியா லறிந்தனன்காண் புலவோர்‌நாட்டில்‌
யாவர்க்கு மழகுடைய வென்னையழ கில்லையென விசைத்தவுன்றன்
தேவிக்குக்‌ கண்ணிருந்தாற்‌ புகல்வாளோ நீதெரிந்து தெளிவியென்றார்‌. 64

மருமகனா ரழகிலியென்றே மேனை மறுத்தசெயல்‌ மன்னன்‌கூறி
யருகழைத்‌து விழிதிறந்து காணாமல்‌ கண்மூடி யறையலாமோ
தருநிகர்‌த்த கரமுடையா டன்விழியைத்‌ தான்றிறந்து காணுங்காலை
யுருவுபுலப் படுமென்‌ன வுத்தமியாள்‌ மெய்யென்றே வுற்றுப்பார்த்‌தாள். 65

ஆயிரங்கோடி காமரழகெலாந்‌ திரண்டுகூடி
மேயினர்போலத் தோன்ற மேனையுங்‌ கண்டுவெள்கி
வாயினில்‌ வந்தவென்றன்‌ வசைமொழி கேள்வியுற்றால்‌
காய்வரோ வென்னவின்னுங்‌ காணாம லொளித்துநிற்பாள்‌. 66

மணவறை யதனிற்சென்‌று மாதவத்‌ தோர்கள்வாழ்த்த
பணவர வல்குல்கங்கை பார்வதி களத்‌தில்தாலி
யிணையில்மும்‌ முடியுநல்கி எழிலருந்‌ ததியுங்கண்டு
கணமெலாந்‌ திரண்டுபோற்றக்‌ கைலையங் கிரியைச்சார்ந்தார். 67

வேறு
இதுசமய மெனவறிந்தே யெண்ணிலா மகழ்ச்சியட னிரதிதானும்‌,
நதிமுடித்த பெருமானை யடிவணங்கிக்‌ கணவனைத்தான்‌ நல்கவேண்ட
சிதைவுபட்ட மன்மதனை நீகாண வுருவமதாய்ச்‌ சிறக்கத்‌தந்தோம்‌
புதியவனாய்‌ மற்றோர்கட்‌ கருவுருவா யிருந்து தொழில்‌ புரிவானென்றார்‌. 68

வேறு
கண்டநற்றேவர்‌ வேண்டக்‌ கட்பொறி யாறுசிந்த
ஒண்டொடி சேர்த்தெடுக்க வோருரு முகமாறாக
விண்டவர்‌ மிகவேவாழ விளங்கிய கந்தற்கொண்டு
மண்டனில்‌ சூரன்றன்னை மாய்த்திட வருள்செய்தானால்‌. 69

தேவர்கள்‌ வேண்டுகேளாற்‌ றிருமயி லையின் கண்‌வந்து
பூவடி வணங்கிப்‌ போற்றப்‌ புண்ணியன்‌ கருணைகூர்ந்து
மாவமர்‌ தனில்செலுத்த மங்கள வாசிகூறிப்
பாவலர்‌ புகழும்‌ பாசுபதாஸ்திர மளித்தானம்மா. 70

கற்பக வல்லிநோக்கிக்‌ கணவனா ரருமைகண்டு
பொற்புடன்‌ சத்திவேலைப்‌ புதல்வன்றன்‌ கரத்திலீந்து
நற்பய னடைவாயென்ன நயப்புட னாசிகூறி
மற்புயன்‌ றனக்குவேண்டும்‌ வரமெலா மகிழ்ந்தளித்தாள். 71

பெற்றதோ ராயுதத்தாற்‌ பெருமையாய்ச்‌ சூரற்கொன்று
செற்றநாள் செந்தில்‌ சேர்ந்து தேவர்கோன்‌ றவத்தினாலே
வுற்றநந்‌ தெய்வயானை யுயர்கொடி தனைமணந்து
மற்றொரு கவலையின்றி மகிழ்வுடனிருக்கு நாளில்‌. 72

நற்றவ நாரதன்றா னளிர்புன வள்ளியென்னும்‌
பொற்றொடி சரிதந்தன்னைப்‌ புகன்றிடத்‌ தருணமென்று
முற்றிய வன்புபொங்க மூவிரு முகனைநோக்கிச்‌
சற்றுநீ பொறுத்துக்கேட்கச்‌ சாற்றுவே னென்‌றுசொன்னான். 73

நலங்கிள ரொழுக்கமிக்க நாரதன்‌ புகலுமாற்றம்‌
குலங்கெழு சூரற்கொன்ற கொற்றவ னகைத்துநோக்கிப்‌
புலங்களை வென்ற மேலோய்‌ புகலுதி யென்னக்கேட்கச்‌
சிலம்பினிற்‌ கொடியைக்கண்டேன்‌ சிறப்பினி லாரொப்பாரே. 74

அளவிலா வனங்கன் றோன்றி யழகெலாங்‌ கூடினாலும்‌
அளவிலா பிரமர்‌ சேர்ந்தே யழகினைச்‌ சிருட்டித்தாலும்‌
அளவிலா மின்னல்கூடி யருளொளி விளைத்திட்டாலும்‌
அளவிலா வள்ளியின்ற னழகுக்கு யாரொப்பாரே. 75

இம்மொழி கேட்டவேல னிணையிலா ளழகைக்காண
வம்மென வெவருமெண்ண வயதொரு தொண்ணூறாகிச்‌
செம்மையம்‌ மலையிலேகிச்‌ சேயிழை தன்னைக்கண்டு
கொம்மைவெம்‌ முலையாயென்றன்‌ கொடும்பசி தவிர்த்தியென்றான்‌. 76

மாதவள்‌ கேளாளாகி மறுமொழி கூறாநிற்பக்‌
கோதையே யுன்பேரென்ன கூறினாலுய்வே னென்ன
நாதனென்‌ றறியாளாகி நாணத்தோ டொதுங்கி நின்று
பாதக வேடர்வந்து பற்றுவார்‌ போபோவென்றாள்‌. 77

கானவ குலத்துவேடர்‌ கணத்தொடு துடியுஞ்சங்கும்‌
மானநல்‌ லோசையோடு மன்னவன்‌ வருதல்கண்டு
தேனெனு மொழியாள்‌ முன்னே திகழ்கணியாகி நின்றான்‌
மான்விழி கண்ணினாளு மகிழவே தந்தைவந்தான்‌. 78

வந்ததோர்‌ தந்‌தைதானு மகிழ்வுடன்‌ மகட்கரத்தில்‌
செந்தினைமாவுந்‌ தேனும்‌ செழுங்கனி முதலநல்கிப்‌
புந்தியி லன்புகொண்டு புதல்வியைப்‌ புசிக்கச்சொல்ல
முந்தையில்லாத வேங்கை முன்னவன்‌ கண்டுகேட்டான்‌. 79

தாதைகேளுண்மை சொல்வேன்‌ றமியன்யா னின்றுகாலை
நூதனமாகக் கண்டே னெனவவள்‌ நுவலுமுன்னே
காதக வேடர்கேட்டுக்‌ கணிதனை வெட்டா விட்டால்‌
பாதகம்‌ பழிகள்வந்து பலித்திடு முண்மை யென்றார்‌. 80

வேடரில்‌ முன்னோன்‌ கேட்டு வெட்டவொட்டாது செய்து
கோடலி லலரைச்சூடுங் கூந்தலாள்‌ வள்ளிக்காக
மாடுறு கணியும்சன்றே மங்கைக்கு நீழலாகும்
காடெலாந்திரியும்‌ வேடன்‌ கணத்தொடும்‌ சென்றான்கூறி. 81

போனதைக்‌ கண்டவேலன்‌ பொற்கொடி தனக்கு முன்னே
ஞானியா முதியோன்‌ போன்று நான்மிகப்பசித்தேன் பாவாய்‌
தேனுடன்‌ கனியுமாவும்‌ தேக்கிட வுண்ணு முன்னே
ஆனவென்‌ பசியைநீக்க வளித்துநீ யுண்பா யென்றான்‌. 82

பசியினால்முதி யோன்‌வாடல்‌ பார்ப்பது பாவமென்று
அசிகொள்வேற் கண்ணாடானு மன்புடன்‌ தினையின்‌மாவும்‌
சுசிகொள்‌ மாமலையின்‌ றேனுஞ்‌ சுகமொடு கலந்தெடுத்தே
கசிகொள்தேன்‌ மொழிகள்செப்பிக்‌ கனிவுடன்‌ கொடுத்துநின்றாள்‌. 83

கூட்டியே வமுதுதன்னைக்‌ குணமுடன்‌ கொண்ட பின்னர்
வாட்டிய பசிதணித்தாய்‌ வருத்தியதாக மொன்றே
தாட்டீகமாகச்‌ செல்லத்‌ தடைசெய மயங்கா நின்றேன்‌
காட்டினிற்கூவ முண்டோ கானவர்கிளியே யென்றான்‌. 84

சொல்லுமுன்‌ வேடர்‌முன்போல்‌ துடியுடன்‌ படகம்‌பம்பை
கல்லெனு மொலியினோடு கன்னியைக்‌ காண்பதாக
வல்லவர்‌ வருதல்முன்னே வயதொரு தொண்ணூறாகி
நல்லவர்‌ புகழாகின்ற நற்றவ வேடங்கொண்டான்‌. 85

வேடர்கள்‌ முன்னே நின்று விபூதியை யளிக்க வாங்கி
நாடியே பெரியோரென்று நற்றவர்‌ பதத்தில்‌ வீழத்‌
தேடருந்தயை மேற்கொண்டு செப்பியே வதியச்‌ செய்தார்‌
கூடியே வேடரொல்லாங்‌ குறுகிய திவண்யே தென்றார்‌. 86

வரையில்‌ நற்குமரியாட வந்தன னென்று சொல்லச்‌
சிரமமில்லாம லிங்கே சேயிழை யோடு சென்று
திரையெறி குமரி தீர்த்தம்‌ தினமாடலாகு மென்று
புரையிலாவேடர்‌ சொல்லிப்‌ பூவையை விட்டுப்‌ போனார்‌. 87

சென்றதைக்கண்டே வையன்செப்பமார்‌ வளையல்‌ இங்கே
மன்றலங்கோதை மாதேமகிழ்ச்சியைக்‌ கண்டு விற்போன்‌
என்றுமே கூறிவிற்க வெழிலுளவள்ளி கண்கள்‌
நின்றன வண்டுமேலே நின்மலிதரிக்கச்‌ சொன்னாள். 88

பொள்ளெனவருகிற்‌ சென்றுபொற்கொடி கரத்தைப்பற்றிக்‌
கள்ளமாய்‌ விற்போன்‌ றானுங்கரத்தினை முகிழ்க்கும்போதே
உள்ளமு மகழ்ச்சி கொள்ளவுண்மையாய்‌ மையலேற்றி
எள்ளரும்‌ பெரியோ னாகியேகியே மறைந்துவந்தான்‌. 89

முன்கொண்ட கோலம்‌ போலமுகிழ் தன வள்ளிகாண
உள்ளியே யருகில்வந்தே ஓய்வுறத்‌ தாகமானேன்‌
பொன்னியொத்தாளே யென்புன்‌ பசிப்பிணி போக்கினாற்போல்‌
கன்னியே யிதுவும்போக்கக்‌ கருணைநீ செய்யென்றானே. 90

சொல்லியமாற்றங்கேட்டுச்‌ சோர்விலா முதியோய்‌ தென்பால்‌
கல்லின்‌றன்‌ சுனையினீருங்‌ கண்டிடா ரொருவருண்டோ
வில்லிலும்‌ வளைந்தகூனா வீரமாய்ச்‌ சென்றுநீயும்‌
ஒல்லெனத்தாக முண்டுனுறுகளை தவிர்த்தி யென்றாள்‌. 91

அளவிலா முதியோயென்ற வருங்கிளாய்‌ சுனையின்பாங்கர்‌
தளர்வுடன்‌ செல்லுமுன்னே தனிச்சுனைதனில்‌ விழுந்தே
உளமதில்‌ மகிழ்ச்சியில்லா துயிர்‌துறந்‌ திறப்பேன்‌பாவாய்‌
இளமையின்‌ வனப்பினாளே யென்னுடன்‌ வருவாயென்றான்‌. 92

முதியவன்‌ மொழிந்தமாற்றம்‌ முடிக்கவே துணிந்தன்னாளும்‌
வதியுமப் பரணிறங்கி வளர்சுனை தன்னைக்காட்டக்‌
கதிதரும்‌ வேலோன்சென்று கரத்தினா னீரருந்தித்‌
துதியெனச்‌ சிலசொற்‌ கேட்கத்‌ துணிந்தவன்‌ கூறலுற்றான்‌. 93

நாகநன்மயிலே கேட்டிநற்குணங்‌ கண்டேனின்பால்‌
சோகமாயெனக்கு நேர்ந்த சொல்லொணாப்‌ பசிதணித்தாய்
தாகமுந்தவிர்த்தா யின்னுந் தவிர்ப்பதாங்‌ குறையொன்றுண்டு
ஏகமாயென்னைக்கூடி யின்பத்தை யளிப்பா யென்றான். 94

சற்றுமே மதியுமில்லாய்‌ சடையெலா நரைத்து நின்றாய்‌
எற்றுக்கு வயதில்மூத்‌தா யிழிகுலமடந்தை வேட்டிங்‌
கித்தனை கொடியவார்‌த்தை யியம்பினாயியையே னென்றன்‌
கொத்துக்குப்‌ பழியைக்கூட்டுங்‌ குணமிலேன்‌ போபோவென்றாள்‌. 95

அந்தரத்‌ தேவர்வந்தங்‌ கருளொடு கேட்டபோதும்‌
பைந்தொடியிசைவே னல்லேன்‌ பாளைபோறிரைத்து நின்றாய்‌
இந்தவோர்‌ வயதுதன்னி லிழிவினை விளைக்குமாற்றஞ்‌
சிந்தையில்‌ விரும்பவேண்டாஞ்‌ சீசீயென்றிகழக்கேட்டே. 96

வேதியனான வென்னைவிலக்குத றகுதியாமோ
மாதர்கட் கரசேயென்ன மாண்பெரும்‌ வேடர்தங்கள்
கோதிலாக்‌ குலத்தில்வந்த கோதையை விரும்பும்‌ பார்ப்பான்‌
சாதியிலுயர்வுற்றானோ சாற்றுவாய்‌ முதியோ யென்றாள். 97

நாடிடுமன்னர்‌ வேடா்நற்பதி தன்னிற்காக்க
நாடிடுவேடா்‌ பெண்ணைநாந்தரோ மென்னவெள்கித்‌
தேடரிதாய வாரந்தெறித்திட வெறிந்தவில்லைப்‌
பீடுறவேலியாகப்‌ பிரியமாய்‌ நட்டார்‌ பாரீர்‌. 98

இரவலர் பெண்கிட்டாம லெழில்பெறு மகுடம்வீசிப்‌
பரவியே சிவத்தைநோக்கிப்‌ பழியிலாத்‌ தவஞ்செய்கின்றார்
சிறுமிகளவை யெடுத்துச்‌ சீருடனளக்கவாய்ந்த
பெருமையாம்‌ படியே யென்றுபேணியே தினையளப்பார்‌. 99

ஆதலாலாண்டி நீயிவ்வழகிய விடத்தை விட்டே
போதுவாய்‌ முன்னோர்‌ கண்டாற்‌ போமுயிர்‌ தப்பாதென்னக்‌
காடுதுவேலன்ன கண்ணி காதலைத்‌ தவிராயாகில்‌
நீதியுமல்ல வென்றனீளுயிர்‌ நீங்குமென்றார்‌. 100

பொன்றினுமிசையே னென்னப்பூவையே மனமுங்கல்லோ
நன்றதோ வாணிறத்தல்‌ நற்குலமழியு மல்லால்‌
கன்றிய பாவமுன்றன் கால்களைச்‌ சுற்றாநிற்கும்‌
நின்‌றினிப்பதில்‌ கூறென்னா நின்மலைமறுகிக்கூறும்‌. 101

ஆண்டியா யிவண்வந்தென்ற னாவியைவிடுவே னென்றால்‌
வேண்டியே யெவர்தடுப்பார்‌ வீணுரை செவிகேளாது
பூண்டவுன்‌ மனைவியாட்கும்‌ புதல்வர்க்கும்‌ நட்டமல்லால்‌
ஈண்டெனக்‌ காவதுண்டோ வீனனே யேகாயென்றாள்‌. 102

தவஞ்செயு முயர்குலத்துத்‌ தவசினானறிவாய்‌ பாவாய்‌
அவஞ்செயா தென்னைக்‌ கூடிலருளொடு பதவியுண்டாம்‌
நவமதியற்ற பேர்க்கு நற்றவ சித்தியுண்டோ
பவமதிலுனக்குக்‌ கிட்டும்பாவைதாள்‌ பதவி யென்றாள்‌. 103

ஒரிபல்மாலை கொண்ட வொண்ணுதால்‌ தடைசெயாது
வாருடைத்‌தனத் தையென்றன்‌ வளர்புயம்‌ தனிற்றேயென்னப்‌
பாரினிறிரைத் திருந்தும்‌ பழிக்கஞ்சுங்‌ குணத்தைக்‌காணேன்‌
பூரியோய்‌ பசியானாலும்‌ புலிபுல்லைத்‌ தினுமோவென்றாள்‌. 104

இடரினைக்‌ களையவல்ல வெம்பெருமான்‌ முன்னோனைத்‌
தடையின்றி வருகவென்றே தாழ்ந்தனன்‌ தம்பிக்காக
மடையுடை மதம்‌பாய்வெள்ளை வாரண வுருவுகொண்டு
வடந்தவழ் தனத்தாள்‌ காணவல்லையில்‌ வந்தானையன்‌. 105

காண்டலும்‌ வள்ளிமாது கந்த வேடன்னை நோக்கி
யீண்டந்தக்‌ கரிவரா மலிக்கண மகற்று கென்றாள்‌
பூண்டயங்‌ கிளமென் சாயல்‌ பொற்கொடி புகல்வேனொன்று
மாண்புடனீயு மென்னை மருவிடி றவிர்ப்பே னென்றான்‌. 106

பதில்‌மொழி புகலுமுன்னே பங்கயப்பதங்கள்‌ நான்கும்‌
அதிருடனருகில்காண வபயமே கேட்பாள்‌ போலக்‌
கதிதரு மெந்தையாரைக்‌ கலப்பனா னகற்று மென்ன
விதியுடன்‌ போற்றா நிற்க விநாயகர்‌ மறைந்து போனார்‌. 107

கிளிமொழி யெதிரேகாணக்‌ கிரணரோர்கோடி பேர்கள்‌
ஒளிகொடு வந்தாற்போல வொளிகொளோர்‌ முகமாறாகி
தளிரெனக்‌ கரமீறாருந் தங்கமாம்‌ வேலுந்தோன்ற
யிளிமொழி மடந்தை கண்டா ளிணையிலான்‌ றன்னைச்‌ சேர்ந்தாள்‌. 108

கூடியே மகிழ்ந்தபின்பு கோதிலா வள்ளிகேளாய்‌
தேடியே வருமுன்‌தாதி செல்லுககடிதி னென்றான்‌
நாடியே வருவேனானும்‌ நங்கையே யஞ்சேலென்ன
வாடியே பிரிவுக்காக வருந்தியே யோடிவந்தாள்‌. 109

கண்டனள்‌ சேடிதானுங்‌ கன்னியின்‌ குறியுமற்றும்
பண்டைய வுருவமாறி யிருத்தலும்‌ பதைத்து நோக்கி
மண்தனில்‌ குலப்பழிக்கே மாதுநீ நின்றாயையோ
ஒண்டொடி யெங்குசென்றா யோடியேன்‌ வந்தாயென்றாள்‌. 110

என்‌றுமே கோபங்கொண்டே யிகுளையுங்‌ கேட்டபோது
வனச்சுனை யாடச்‌சென்றேன்‌ வந்தன னென்றுகூறக்‌
கன்னியே கண்கள்சேப்பக்‌ கனியிதழ்‌வெளுக்க வேர்க்கப்‌
பொன்னின்மா மேனிகன்றப்‌ புணர்செயல்‌ கண்டிலேனே. 111

தாதிதன்கோப வார்த்தை தான்தெரிந் தழுது நிற்க
நீதியைக்‌ கேட்டேனம்மா நீள்விழி துடைத்துக்‌ கொண்டு
போதுதியிதண்மே லென்னப்‌ பூவையும்‌ பிழைத்தோ மிந்தத்‌
தீதினை யறியாளென்று தேறியே தெளிந்து சென்றாள்‌. 112

கந்தனக்‌ காலைமெச்சும்‌ கரத்தினில்‌ வில்லைத்தாங்கி
வந்ததோ கரியுமொன்று மார்பினி லுதிரஞ்சோரச்‌
சுந்தர வள்ளியாரைச்‌ சூழ்ந்துமே குறித்துச்‌ சொன்ன
மைந்தன்றன்‌ வார்த்தையாலே மாதின்மே லையங்‌ கொண்டாள்‌. 113

பார்த்திடும்‌ பரிவினாலும்‌ பாவைபுன்னகை யினாலும்‌
கூர்த்திடு விழியினாலுங் கோதையி னன்பினாலும்‌
வார்த்தையி னயத்தினாலும்‌ வள்ளியைக்‌ கலந்தா யென்னச்‌
சேர்த்திட வேண்டு மென்று சேவலன்‌ கேட்க லுற்றான். 114

என்றனா லியன்றமட்டு மேற்பாடு செய்வே னென்னச்‌
சிந்தையில்‌ கவலைகொள்ளேல்‌ செல்வனே போகென்றேவக்‌
கந்தனும்‌ புகழ்ந்து சென்றான்‌ கணத்துடன்‌ வேடன்‌ வந்து
பந்தியாய்த்‌ தினைகள்முற்றிப்‌ பழுத்ததைக்‌ கண்டுசொல்வான்‌. 115

மங்கையைக்‌ காவல்நீக்கி மாளிகை தனில்சேரென்னப்‌
பைங்கிளி கேட்டலோடும்‌ பாரினில்‌ துவண்டு வீழ்ந்து
சங்கரன்‌ பாலன்றன்மேல்‌ சார்ந்ததோர்‌ கவலையாலே
தங்கிய வில்லாரோடுந்‌ தாயொடும்‌ பேசாள் நிற்பாள்‌. 116

தாயவள ழைத்தபோதுந்‌ தந்தையா ரழைத்தபோதும்‌
வாய்விட்டுப்‌ பதிலுஞ்சொல்லாள்‌ வரைபகவெ றிந்தான்‌குற்றம்‌
மேயதென் றுணர்ந்து தேர்ந்துவெறியயர்‌ வித்துக்கேட்டார்‌
தூய்மையாம்‌ வள்ளிதன்னை தொட்டனமென்று சொன்னார்‌. 117

எப்படிதீரு மென்றே யிணையிலா வேடர்கேட்க
வொப்பிலான் றனக்கே யன்பாலுதவினால்‌ தீருமென்னச்‌
செப்பியமாற்றந்‌ தேரார்சேயிழை தேர்ந்து தீர்ந்தாள்‌
தப்பிலாக்‌ குமரனில்லில்‌ சார்ந்தனன்‌ தாதிகண்டாள்‌. 118

வாடிய மகனைக்கண்டு வள்ளியை யழைத்துவந்து
கூடவே சேர்த்தனுப்பக்‌ குமரியு மிசைந்து சென்றாள்‌
பாடிய வளிகள்‌சூழ்ந்த பைம்பொழில்‌ நிழலின்கீழே
நாடியே யிருப்போமென்று நங்கையோ டிருக்குங்காலை. 119

காலையில்‌ மகளைக்காணாள்‌ கதறிநாயகற்குக்‌ கூறிச்‌
சேலைநேர்‌ விழியாள்சேடி தன்னையே செவிலிகேட்க
மாலையில்‌ கண்டதன்றி மகளுடன்‌ றுயின்றாய்நீயும்‌
நீலவேல்‌ விழியாய்நானும்‌ நேர்ந்ததை யறியேனென்றாள். 120

மனைவியார்‌ கூறக்கேட்ட மன்னனு மரபுளோரும்‌
வினயமா யோர்ந்துகூடி வியன்பழி நேராவண்ணம்‌
புனையிழை தன்னைக்‌ கொண்டுபோனவன்‌ றன்னைவீட்டிக்‌
கனமுடன் வருவோ மென்றுகாவெலாந்‌ தேடலுற்றார்‌. 121

தேடியே வருகின்றாரைத்‌ திருந்திழை கண்டுமாழ்கி
மாடுள வரையைத்தாண்டி மலர்வன முட்புகுந்து
நாடியே நம்மைக்காண நண்ணுமிக் கூட்டம்பாரீர்‌
வீடுவா ருண்மையென்றே விளம்பிட வீரன்கூறும்‌. 122

வீரனாம்‌ சூரன்றன்னை வீட்டிய வேலிருக்கத்‌
தீரமாயிரு வென்றோதத்‌ தேடியே வந்தோர்கண்டு
காரெனத்‌ திரண்டொலிக்குங்‌ கணத்தொலி கேட்குமுன்னே
வாரணக்‌ கூச்சலாலே வந்தவர்‌ மாண்டாரன்றே. 123

தன்பதிதனக்குச்‌ செல்லுந்‌ தருணத்தில்‌ நாரதன்றான்‌
இன்பமாய்க்‌ கண்டுபோற்றி யிளங்கொடி சுற்றமெல்லாம்‌
துன்பினில்‌ மடியவைத்துத்‌ தோகையோ டேகல்நன்றோ
அன்புடனருளு மென்னவன்னத்தை யெழுப்பச்‌ சொன்னார்‌. 124

வள்ளியின்‌ மொழியினாலே வனசர ரெழுந்து தாழ்ந்து
கள்ளமாய்க்‌ கொள்ளல்‌ நன்றோ கடிமணஞ்‌ செய்துபோக
வள்ளலே வருகவென்ன வாழ்த்துட னழைத்துச்‌ சென்றே
யுள்ளமு மகிழ்வேலற்கங்‌ குவப்புடன்‌ மணஞ்செய்தீந்தார்‌. 125

வள்ளியின்‌ மணத்தைக்‌ கண்ட வனசரர்‌ முனிவர்‌தேவர்‌
உள்ளமு மகிழ்ச்சி யோடேவுமை யொடு சிவனுமாலும்‌
கள்ளவிழ்‌ மலரோன்றேவி கமலையுஞ்‌ சசியின்கேள்வன்‌
தெள்விளி குரவையாடிச்‌ சிறப்புடன்‌ பதிக்குச்சென்றார்‌. 126

வேடரின்குலத்தில்‌ வந்தமெல்லியாம்‌ வள்ளியாரும்‌
கூடவே நோற்றநோன்பு குறிப்படி முடிந்தபின்சேய்‌
தேடருந்‌ தேவிமார்க ளிருவருந்‌ தேவரோடு
வீடருள்‌ மயிலை மேவிவீற்றினி திருந்தானம்மா. 127

கந்தன்றன்‌ சரிதந்தன்னைக்‌ கனிவுடன்‌ படித்தோர்‌ கேட்டோர்‌
சிந்தையில்‌ மகிழ்ச்சியோடு சிறப்புடன்‌ நெடுநாள்வாழ்ந்து
மைந்தர்கள்‌ மிகவுமுண்டாய்‌ மறலியுந்தொழுது வாழ்த்தப்‌
புந்தியின்‌ மகிழ்ச்சிகொண்டு புகுவர்கள்‌ கயிலைமாதோ. 128

வேறு
வேல்பாசு பதம்பெற்ற சரிதமிதென்‌ றகத்தியரும்‌ விளம்பக்கேட்டே
கால்பாயுங்‌ கண்ணருவி மார்பகமும்‌ தான்னையக்‌ களிப்பின்மூழ்கி
மால்நீங்கு வெள்ளீசர்‌ கதைகேட்க மனமகிழ்வோ மகிபாவென்னச்‌
சேல்பாயுந்‌ தடமயிலை வெள்ளீசர்‌ வந்தபெருஞ்‌ சீர்த்திசொல்வாம்.

சிங்காரவேலர்‌ சத்திவேல்‌ பாசுபதாஸ்திரம் பெற்ற படலம்‌ முற்றிற்று.
-------------------

09. வெள்ளீசர் படலம்



மாமியார்‌ தேராக மாமனாரம்பாக மைத்துனன்றான்‌
தோமிலாப்‌ பாகனாய்க்‌ தொன்மதி யாதித்தனே யுருளையாகக்‌
காமமிலான்‌ புரமெரித்த கடவுள்தேரச்சிறுத்த‌ கருணையானாம்‌
வாமமயிலைத்‌ தென்பாற்‌ செல்வவிநாயகனார்‌ நன்மலர்த்தாள்போற்றி.

வேறு
உவமையில்‌ கயிலைத‌ன்னி லொப்பிலா னுமையாளோடு
நவமதாஞ்‌ சரசவார்த்தை நவின்றிடுங்‌ காலைதன்னில்‌
அவிரொளி கொண்டதீப மணைந்திடத்‌ தொடங்கக்‌ கண்டே
யெவரிதைத் தூண்டவல்லா ரெப்பரி சளிப்பீ ரென்றாள். 1

நாயகி வினவக்கேட்டு நம்பனுமகிழ்ந்து தோகை
சாயலாள்‌ தன்னை நோக்கித்‌ தயங்கவள்‌ மகிழுமாறு
நேயமாய்த் தூண்டுவோர்க்கு நீள்புவி யரசுசெய்ய
வேயுமப்‌ பரிசளித்தே யினிதவர்‌ மகிழச்செய்வோம்‌. 2

என்னலும்‌ வினவித்தேவி யியம்புவா ளொருவர்காணோம்‌
பன்னகஞ்‌ சுமக்கும்பாரைப்‌ பரிவுடனாள வாய்ந்தோர்‌
முன்னமே சென்றாரென்‌று முகிழ்முலை வாய்திறந்து
நன்னய மாகக்கூற நாயகன்‌ வருவா னென்றான்‌. 3

இப்படி மாற்றமாடு மிருவர்முனெலி யொன்றெய்திச்‌
செப்பு மாலய நெய்யுண்டு செல்வது போலவன்றும்‌
தப்பிலாத்‌ தீபநெய்யுண்‌ சமயம்வத்‌தியில்‌ மூக்குற்றே
ஒப்பிலா வொளியுந்தோன்ற வுமையவள்‌ மகிழ்ந்தாளன்றே. 4

அண்ணலவ் வெலிக்கப்போதே யருள்செய மனமகிழ்ந்தே
கண்ணிணை களிக்கக்கண்ட கன்னியேயிதுதா னென்று
தண்ணரு ளெலிக்குச்செய்யத்‌ தழைத்தது நானாய்‌ நின்று
நண்ணுல காளவேண்டேன்‌ நாதகே ளென்றதம்மா. 5

தலைவன்றன்‌ மொழியைக்கேட்டுத்‌ தரணியை யாண்டுநிற்‌கில்‌
மலைவளைத்‌ தவனேயுன்றன்‌ மலரடிமறந்து போவேன்‌
அலைபுனல்‌ கங்கையேற்ற வண்ணலே யருள்செய்வாயால்‌
மலர்தலை புவனம்வேண்டா மலரடி யென்றுமன்பாய்‌. 6

வேறு
வெம்புகொடும்‌ பாசத்திலலைவதற்கு நானாற்றேன்‌ விமலாவென்‌று
மும்பர்களும்‌ வந்துதொழு முத்தமனே யுனைநீங்கி யுய்வேனல்லேன்‌
நம்புபெரும் புவிவாழ்வை நாடினோர்‌ நின்னருளை நாடுவாரோ
அம்புவியி லுன்‌மலர்த்தா ளர்ச்சிக்கு மிச்சுகத்தை யகலுவேனோ. 7

ஊர்சொல்வேன்‌ பேர்சொல்வே னுத்தமனே யுன்னைவிட்டே யுறுதியாக
ஆர்சொலினு நான்போகே னருள்வலியா லெனையனுப்‌பல்‌ நீதியாமோ
தார்‌சொலிக்கும்‌ நின்பாகந்‌ தனில்வாழு மெம்மன்ளை தன்னைக்கண்டு
பேர்சொல்லி யிவணிருப்பேன்‌ பிஞ்சகனே யெனக்குமற்ற பேறேவேண்டேன். 8

கொடுத்தவர மொருகாலும்‌ நீக்குதலுங்கூடா துகுழந்தாய் நின்னை
அடுத்தெந்தச் சத்துருவும்‌ புவியில்‌ நெருங்கார்க ளழகார்வண்மை
தொடுத்திடு நன்மாபலி யென்றொரு பேருமிப்பொழுது துணிவாய்த்‌ தந்தோம்‌
விடுத்திடுநீ புலம்புவதை மூவுலகாளெனப்‌ பரமன்‌ விடைதந்தானே. 9

வேறு.
எலியது வருந்திக்‌ கேட்டு மெழில்‌வர‌ந் தவிர்ந்திடாது
வலியமாபலி யென்றோர்‌பேர்‌ வழங்கிட வுலகை யாண்டு
கலியினைத்‌ துடைத்துக்‌காத்துக்‌ கருணையால்‌ பலரும்‌ போற்றப்‌
புலியென வரசரஞ்சப்‌ பொலிவினை யுற்று வாழ்‌ நாள் 10

தேவரைப்‌ பகைத்தன்னோர்தஞ்‌ சிறப்பினைக்கெடுத்து நாளும்‌
ஏவலராக வெண்ணி யிழிதொழில்‌ புரியச்செய்தும்‌
காவலில் வைத்‌து முள்ளம்‌ கலங்கிடச்‌ செய்தானத்தால்‌
மூவர்கள் முதல்வன்றன்பால்‌ மொழிந்தவர்‌ புகலக்கேட்டே. 11

கண்ணனை யுழைத்து நோக்கிக்‌ கடவுளர்‌ வருந்தச்செய்யும்‌
திண்ணிய மமதைவாய்ந்த தீரன்‌ மாபலிபால்சென்று
மண்ணினை யீயவாங்கி மற்றவன்‌ வன்மைபோக்கி
வண்ணப்பா தாளஞ்‌ சேர்த்துவல்லை நீவரவென் றானால்‌. 12

அன்னவனுயிரை நீக்காதருள்‌ செய்ததெத னாலென்றால்‌
நன்மையாமரியே கேளாய்‌ நலிந்திடத்‌ தேவரெல்லாம்‌
இன்னலே செய்தானேனு மெழில்பெறு கைலை தன்னில்‌
மன்னொளி வயங்கத்‌தூண்டி மகிழநம்‌ வரம்பெற்றானால்‌ 13

என்றலும்‌ விண்டுபோற்றி யெழில்‌ நெய்யைத்‌ திருடக்கண்டும்‌
புன்றலை யெலிதனக்குப்‌ புவிதனையாளச்‌ செய்தல்‌
நன்றல வென்றுகூற நாதன்‌ மைத்துனனை நோக்க
நன்றிதான் சிறிதேயேனு மறப்பரோ நாளுமேலோர். 14

ஸ்ரீதென்கூர்‌ செல்வவினாயகர்‌ வெள்ளீசர்‌ தேவஸ்தானம்‌.
கேட்டரி குறளனாகிக்‌ கிளர்வலி யுடையான்றன்னை
நாட்டினர் புகழும்பூபாநானு மூவடிமண்‌ வேண்டி
வாட்டமாய்க்‌ கேட்கவந்தேன்‌ வழங்குகவென்னக்‌ கேட்கத்‌
தோட்டலம்‌ குலுங்கநக்குத்‌ தொழுதவன்‌ நல்குமுன்னே. 15

வெள்ளியு மருகேவந்து விளம்புவா னரசரேறே
கள்ளமா யனுமேமுற்றும்‌ கவர்ந்திடக் குறித்துவந்தான்‌
நள்ளிருள்‌ மேனியாற்கு நல்‌கிடவேண்டா மென்றான்‌
வள்ளலுங் கேட்டுவெள்ளி வார்த்தையை மறுத்துச்சொல்வான். 16

மாயனேகேட்கிலென்னை மறுத்திடல்‌ மரபதாமோ
ஏயவேயீதல்‌ மேன்மையேற்பதே யிகழ்ச்சியென்று
தாயொத்துப்‌ பலியுமம்மாதவன் கரநீரைவார்க்கத்‌
தோயமும்‌ வீழாவண்ணந்தூர்த்தனன்‌ வெள்ளிவண்டாய். 17

கண்டதுவிண்டுதானுங்‌ கரத்தெடுத்தொருதுரும்புத்
துண்டினாற்துளையைக்குத்தத்‌ துட்டனுங்கண்ணிழந்தான்‌
மண்டனிலறஞ்செய்வாரை மறுத்தவரடையுந்தீங்கால்‌
விண்டதுபார்வையென்று விளக்கினான்புவியிலம்மா. 18

நீரதைவிடவுமாயன்‌ நீண்டதோரடியால்விண்ணைப்‌
பாரையோரடியாலேற்றுப்‌ பண்புளான்‌றலைமேலொன்‌றுஞ்‌
சேரவேவைத்தளந்து சேர்த்தனன்பலியென்றோதும்‌
வீரனைப்பாதலத்தில்‌ விடு்த்தனனென்றும்வாழ. 19

இவனிலையின்னதாக விழந்தகண்‌ வெள்ளியென்போன்
கவலைமேற்‌ கொண்டானாகிக்‌ கலங்கியக்கண்ணைக்கொள்வான்‌
பவனதுபாதமேத்திப்‌ பண்புடன்‌ தவமியற்ற
நவமதாம்பதியே தென்‌றுநாடுவானாயினானே. 20

நாடியே யிருக்குங்காலை நாரதனங்கு வந்து
வாடுவதேனோ வென்னவடுவது நேர்ந்ததோதப்
பீடுடையோனுங் கேட்டுப்‌ பிழையிலாத்தவத்தைச்‌ செய்யில்‌
தேடிய தடைவாயென்று தேர்ந்திட வுரைத்துச்‌ சென்றான்‌. 21

சித்தமுங்கலங்கி வெள்ளிசீடர்க ணகைக்கலானேன்‌
பத்தினிமார்கள்‌ கண்டு பழித்திடும்‌ பரிசினின்‌றேன்‌
உத்தமன்றனையே நோக்கியு ஞற்றுவன்றவமதென்றே
சித்‌திரைமதியில்‌ வந்து சீர்பெறு மயிலைசார்ந்தான். 22

கானகமயிலின்‌ சாபங்கழிந்த விப்பதியில்‌ வெள்ளி
யூனமதடைந்த நாட்டமொளிபெறத் தவத்தைச்‌ செய்ய
ஞானதற்பனார்‌ பாங்கர்நற்‌ றவச்சாலை யொன்று
ஈனமில்லாமலாங்கே யியற்றினான்‌ மதியுமாதோ. 23

தவத்தினில்‌ விளைந்ததீயுந்‌ தகிக்கவிண்ணாடன்‌ கண்டு
சிவத்தினைத்‌ தொழுது வெள்ளிசெய்திடு மருந்தவத்தைப்‌
பவத்தினை யிழைக்குமாதர்‌ பகையினா லொழிக்கவெண்ணிக்‌
கவற்றிலூர்வசியை நோக்கிக்‌ கழறுவான்‌ மேயினானால். 24

மாதர்கட்கரசே நீயுமாதவ வெள்ளி தன்பால்‌
காதலால்‌ சென்றுகூடிக்‌ கடவுளர்‌ களிப்பின்மேவிப்‌
பூதரமதனில்‌ வாழப்‌ புரிந்தருள்‌ செய்வாயென்ன
ஏதமிலாதான்‌ றன்பாலேகுதல்‌ முடியாதென்றாள்‌. 25

காசிபர்‌ தவத்தையன்று கலைத்தது மாயையல்லால்‌
பேசுவதென்னோ சொல்லாய்‌ பிழைபடா மடந்தைமார்கள்‌
கூசுதலின்றி நாடிக்‌ குறிப்பொடு தக்கோர்செய்யும்‌
நேசமாந்தவத்தை நீக்கும்‌ நெறியுன்னுவாரோ வென்றாள்‌. 26

பெண்களேதவமழிக்கப்‌ பிறந்தவரென்‌றிருக்க
வண்ணமென்கொடியே நீயும்வலிந்துபோயிவனைக்கூடி
மண்ணகத்தவன் தவத்தை மாற்றிடிலுய்வாயன்றேல்
திண்ணமாந்தொலையாச்சாபந்துய்ப்பை யென்றவனுஞ்சொன்னான்‌ 27

அண்ணல்தன்மாற்றங் கேட்டேயழகுறு மாடைபூண்டு
விண்ணவருய்யும்‌ வண்ணம்விரும்பிவந்‌ தவனைக்கண்‌டே
உண்மையாயிவனைக்‌ கூடவொருவரால்முடியாதென்று
திண்ணமாய்மனதிலெண்ணித்‌ திருத்தமாஞ்சோலைபுக்காள். 28

தடங்களுமலருஞ்சூழத் தண்ணளிதென்றல்வீசப்
படவரவல்குலாளும்‌ பகர்‌தவன்பார்க்கநின்று
மடமதையடைந்த மாதுமகிழ்ந்த புன்னகையினோடே
திடனுறுவகை தவத்தைச்‌ செய்தனளிருந்தாள்சின்னாள். 29

மலர்தரும ணத்தினாலும்‌ மறுவிலாத் தென்றலாலும்‌
அலமரலெய்தி மிக்‌கோனரி யதாந்‌தவத் தினின்றான்‌
நலமதுகொண்டு நின்றநங்கை யின்முகத் தைப்பார்க்க
விலவிதழ தரம்விம்ம வேந்திழைநகைத் துநின்றாள்‌. 30

மண்ணிடை மாதரல்ல மற்றிவள்‌ சேணிலுள்ளா
ளெண்ணியென் றவத்தை நீக்கவிவண்வந் தாளென்றுதேர்ந்து
கண்ணினைத்‌ திறந்துகண்டு கனற்பொறி சிதறநோக்கி
விண்ணிடை மாதேவ‌ந்த விதமெனக் கறைதியென்றான். 31

காண்டலு நகையுந்தோன்றக்‌ கனியிதழ் மூரலோடு
சேண்படு மாதுயானுந்‌ தேவர்கள்‌ பலருமென்னை
மாண்பொடு சேரவேண்ட மறுத்துனைக்‌ கூடவந்தேன்‌
ஆண்டகாய் மகிழ்ந்தேயென்னை வணைந்திடவேண்டுமென்றாள். 32

காரிருங்‌ கயலுண்கண்ணாய்‌ கண்பெறத் தவமிழைப்பேன்‌
ஊரடையாது நோற்கவுடன் பட்டவெனக்‌ கேவுன்பால்‌
நேரிடவில்லை யிச்சைநீ யிவண்விட் டுநீங்கி
ஊரினை யடைவாயின்‌ றலுன்னையான்‌ சபிப்பேனென்றான். 33

தவமதுசெய்து தேர்ந்தோர் தரணியி லெவருமில்லை
யவமதேயடைந்து கெட்டோ ரனேகர்கள்‌ கணக்‌கேயில்லை
பவமதில்சுகமிழந்த பயனுக்காய்க்‌ கைலைவாழும்‌
சிவனருள்கன்னி யென்னைச்சேர்ந்து நீமகிழ் வாயென்றாள்‌ 34

ஊரரற்கொற்றி யூராமுண்பதுவிட மேவேட்ட
வேருடைமனை யினாளு மிணையிலா மலைவாழ்நீலி
தாரெனில் கொன்றைப்பூ வேதரிப்பது புலித்தோலாடை
பேரணிமலை யின்பாம்பே மதித்தெதைப்‌ பேணிநோற்பாய்‌. 35

கட்டிடல் புலியின்‌ றோலேகையினி லயன் கபாலம்‌
நட்டமே செயுமிடந்தான்‌ நலமிலாச் சுடுமயானம்‌
தட்டறாவெலும்பு மாலைதலை மாலைமார் பினுள்ளான்‌
கொட்டுடன் மண்ணெடுத்துங் கூலிபிட்டுண்டு வாழ்வோன். 36

வேண்டுவதி யாதுனக்கு விரைவினி லடையநோற்பாய்
மாண்டநின் றவத்தின்லாபம்‌ மருவிடநான் கி‌டைத்தேன்‌
ஆண்டகையுனக்கு நேருமழகி நானுற்றுநோக்காய்‌
சேண்தவழ் விண்ணோர்‌ சேரச்செய்திலார் தவமதென்றாள். 37

மாதுநீ கூறும்வார்த்தை மனதினில்‌ சிறிதுமேற்கா
தேதமாம்‌ வார்த்தை சற்றுமிசைந்திடா தேகுவாயேல்‌
பூதலந்‌ தன்னில்மிக்க புண்ணியமா குமின்றேல்‌
பாதகம் புரியச்‌ செய்யில்‌ பகைந்துனைச்‌ சபிப்பேனென்றான். 38

சுகமதை யளிக்கவந்தால்‌ சுகிர்தமென் றனுபவித்தே
யகமதில்‌ களிகூராம லகற்‌றிடல்‌ நீதியாமோ
இகபர சுகக்தை யீவோரெழிலுடை மாதரல்லால்‌
பகைதனை மேற்கொள்வோரே பாவிகளென்பர் பொய்யோ. 39

ஆகையாலென்னைக்‌ கூடிலதர பானத்தை யுண்டே
யோகையை யடைவாயென்னு மொண்டொடி வார்த்தைகேட்டு
வாகையையுடைய வெள்ளி வலிமையாந்‌ தவத்தினாலே
தோகையாய்ப்‌ போகவென்று சொற்றனன்‌ தீர்க்கவெண்ணி. 40

சுந்தரிமயிலாய்‌ நோற்ற தொல்பதி மயிலைதன்னில்‌
இந்திரனாலேயேற்ற விப்பெரும்‌ பழியைத்‌ தீர்க்க
வந்தனனென்று சொல்லி வளர்மதிச்‌ சடையினாரைப்‌
புந்தியாய்ப்‌ பட்சம்‌நோற்றுப்‌ பொன்னகரதனைச்‌ சேர்ந்தாள். 41

வெள்ளியினுறுதி கண்டு வேதியனாகி யையன்‌
வள்ளல்முன்‌ சென்றுனக்கு வரமெது வேண்டுமென்னக்‌
கள்ளம்நான்‌ செய்ததற்காய்க்‌ கண்ணினை யிழந்தேனையா
பிள்ளைவெண்‌ பிறையணிந்தாய்‌ பேரருள்‌ புரிவாயென்றான்‌. 42

கங்கையையணிந்தோன்‌ கேட்டுக்‌ கண்ணொளி யீய்ந்தான்‌கண்டு
மங்கையை யிடப்பால்வைத்த மகிபனேயான்‌ பூசித்த
சங்கையிலிங்கங்‌ கண்டோர்‌ சஞ்சலமின்‌றி வாழ
வெங்கரியுரித்தாய்‌ நீயும் வீற்றிடவருளல்‌ வேண்டும்‌. 43

பத்தியே சிறிதுமில்லாப்பாலனாம்‌ யான்பூசித்த
சத்தியலிங்கந்‌ தன்னைச்சார்ந்துமே வணங்குவோர்கள்‌
புத்தியும்புகழுஞ்‌ செல்வம்பொருந்தியே வாழ்ந்தபின்பு
சித்தராய்க்கைலைமேவச்‌ சிறப்புட னருளல்வேண்டும்‌. 44

பண்ணியமாவின்‌ பானல்பழவகை கொண்டுபோற்றில்‌
எண்ணியவெண்ண மெல்லாமெளி தினிலருளல்வேண்டும்‌
அண்ணலேநான்பூசித்த வருட்குறியதற்குநாமம்‌
நண்ணும்வெள்ளீசரென்று நாளுமேவழங்கல்‌ வேண்டும். 45

இன்னணம்வரத்தைக்‌ கேட்டவெழில்‌ பெறுவெள்ளிதன்னை
முன்னவனருளானோக்கி மொழிகுவான்‌ கருணையோடு
நன்னருள்‌ தவத்தைக்கண்டு நயந்தனம்வரங்களீந்தோம்‌
புன்மையுந்தீர்ந்தோம்‌ நீயும்‌ புகழ்பதமேவுகென்றான். 46

நற்றவத்தினின்மேலோரே நன்மையாமிப்பதிக்குச்‌
சொற்றிடும்பெயர்‌ யாதென்னில்‌ சுக்கிரபுரியாமென்பார்‌
வெற்றிவெள்ளீசனார்‌ தம்வியப்புறு சரிதைசொன்னேன்‌
மற்றுயான்வாலிபூசை வண்கதை யுரைக்கக்கேண்மோ. 47
வெள்ளீசர்‌ பிரபாவமுற்றுப்பெற்றது.
---------------------------

10. வாலீசர்‌ பிரபாவம்‌

ஒருகொம்ப னிருசெவியன்‌ மும்மதத்தனெனப்‌ போற்றுமொப்பில்லாத
தருநிகர்த்துவடியருக்கு பொருளுதவுஞ்‌ சற்குணனே தமியேனுக்கே
அருள்கொடுத்துப் பாடவைக்கு மைங்கரனே யானைமுகமுடையகோவே
மறுவொழித்து வல்லாளன்மனமகிழப்‌ பிரசனனாய்‌ வந்ததேவே.

வாலியென்னும்‌ வலியன்றன்‌ தாதையை
நாலுமாமறை போற்றிடு நாதனை
ஏலப்பூசிக்கு னெய்தும்‌ பயன்றனைச்‌
சீலமோடுரை செய்யென வேண்டினான்‌. 1

மைந்தன்றன்னை மகிழ்ந்து தழீஇயவன்‌
சிந்தைதேறத்‌ தெரிப்பன்‌ செவ்வேளெனுங்‌
கந்தன்‌ தாதையைக்‌ கருதித்தவஞ்செயப்‌
புந்திகொண்டவர்‌ புண்ணிய ரென்றனர்‌. 2

அஞ்செழுத்தி னரும்பொரு ளாய்ந்துதம்‌
நெஞ்சஞ்சோர்‌ வின்றிநீள் தவஞ்செய்பவர்‌.
செஞ்சொல்மாலை யார்தேவருங்‌ காண்கிலா
நஞ்சணிகண்‌ டனற்பதங்‌ காண்பரால். 3

ம. கு. முனிசாமி கிராமணியார்‌.

கண்ணகன்புவிக்‌ காவலர்‌ நாவலர்‌
விண்ணிலுள்ள விபுதர்கள்‌ போற்றவே
நண்ணிவாழ விரும்புவோர்‌ நாதனை
யெண்ணி நோற்றுக்‌ தவத்தினாலெய்துவார். 4

சிறுவநீயெண்ணிச்‌ செய்யுந் தவத்திற்குப்‌
பருவரல்‌ வரப்பண்ணுவர்‌ தேவர்கள்‌
மருவலின்றியே மானதக்‌ கரையினில்‌
நெறியினின்று நெடுந்தவஞ்‌ செய்யென்றான். 5

தனையனேற்‌ றவற்றாழ்ந்து விடைகொடு
முனிவு நீங்கிய மூதறிவாளரிற்‌
றனியனாகத்‌ தவஞ்செயு நாளினி
லனல்களோங்கியே யார்த்தங்‌ கெழுந்ததே. 6

தேவர்யாவருந்‌ தீயவனலினா
லாவதொன்று மறிந்திலர்மாழ்கியே
காவறாங்கிய வாயிரங்கண்ணனாந்‌
தேவன்றன்கணித்‌ தீவினைகூறினார். 7

மின்னுலாவிய மெய்யளரம்பையை
யுன்னிநாடியேயோர்ந்த வன்கூறுவான்‌
மன்னிவாலிம கிழ்வுடன்செய்தவம்‌
பின்னமாகப்‌ பிரித்திவண்வாவென 8

மாதுகேட்டு மகிழ்ந்தவணேகினள்‌
கோதிலாவக்‌ கொடுந்தவங்கண்டனள்‌
தீதுநேருமத்‌ தீயின்சுவாலையால்‌
ஏதுசெய்குவனென்றவ ளேங்கினாள் 9

மாயையாலோர்‌ மலர்வனமாக்கியே
பாயுமோடைபறவையும்‌ பற்பல
காயும்வெம்மைகள்‌ காட்டாதகற்றநீர்‌
தோயுஞ்சோலையுந் தோன்றிடச்செய்தனள். 10

(வேறு)
அருகுவந் துநந்தவன மமைப்பித்தாள்‌ நற்றென்ற லலர்கள்வீசக்‌
கருகியநற்‌ சோலையெலாந்‌ துளிர்க்க விளங்கால்வீசக்‌ கண்டமேலோன்‌
உருகியநன் மனங்கொண்டிங் கொண்டொடிநீ யாரென்ன வூமையானாள்‌
பெருகியவென் றவமழிக்க வந்தபெருங் கொடுவினையோ பேசாயென்றான். 11

அமரர்மன்றில்‌ நடமாடும் வேசியானுனை
      வேட்டிங்கணையவந்தேன்‌
இமையவர்க்கு நானஞ்சேன்‌ மண்ணாள்வார்‌
      தனைமதியேனிந்திரற்கும்‌
கமரில்விட்ட பாலானேன்‌ பன்முறையுமெனைக்‌
      கலக்கப்பட்‌டார்பாடு
மமர்கொள்ளா தெனையணைந்தா லுன்றவத்தின்‌
      பயனென்றேமகிழ்‌வாயென்றாள்‌ 12

வல்லியுரை கேட்டதவன்‌ மாதேவர்தனைச்‌ சேர்ந்து
      வாழுமென்னை
வல்லபத்தி னீமுயங்க வந்‌திடினும்‌ நானிசையேன்‌
      வசனஞ்‌ சொல்லேன்‌
நல்லகுல முடையவர்க ளொருநாளும்‌ பிறர்‌தம்மை
      நாடார்‌ நாடார்‌
செல்லறனில்‌ முழுகாதே தியங்காதே நான்சேரேன்‌
      செல்வாயென்றான். 13

வந்தடைந்த மாதருக்கு வருங்காம மொழிப்பதுவே
      வாய்மையன்றோ
சந்திரனுந்‌ தாரைதனைத்‌ தான்கூட றவிர்ந்‌தானோ
      சதிரோய்‌ நீயும்‌
நொந்தணைந்த வெனைக்கூடி லெந்நாளும்‌ புகழ்பெருகும்‌
      நோயுஞ்சேரா
சிந்தைதனில்‌ பயம்வேண்டாஞ்‌ சேராயேலுயிர்நீத்துச்‌
      சிதைவேனென்றாள்‌. 14

பொன்றிடினும்‌ நான்புணரேன்‌ பூலோக வாசையிலேன்‌ புல்லர்போல
வொன்றுசொல்லி வேறெண்ணு மொழுக்கமிலா னானல்லே னுண்மையுண்மை
கன்றுசினங்‌ கொள்வதற்குக்‌ காலமணுகாதபடி கடிது செல்வாய்
நின்றினிநீ பதில்‌கூறினீ றாகநான்‌ சபிப்பேன்‌ நீங்கிடென்றான்‌. 15

பொன்னாசை வேண்டேனே பொருளாசை வேண்டேனே பூலோகத்தி
லென்னாசைப்படி கிடையாதொன்று முண்டோ யெனைக்‌கூட விசைவாயென்றே
சொன்னாலுங்‌ கேளாயே மறுமொழியுங்‌ கூறாயே துறவோயென்றும்
பன்னாகந்‌ தரித்தானும்‌ பார்வதியைப்‌ பிறிந்தனனோ பகர்வாயென்றாள்‌. 16

ஈதல்லால்‌ மோகினியை யீசனவன்‌ கூடினது மெழிலோவென்‌றன்
காதலினைத்‌ தணிக்காமல்‌ கைவிடிலோ கணத்திலதோ கதிக்குச்‌செல்ல
ஓதுமலர்க்‌ கணையெறிந்த மன்மதனைப்‌ போலவுனை யுறுத்துநோக்கிப்
பாதகத்தி லுழன்றிடவே பன்னாளும்‌ பெருஞ்சாபம்‌ பகர்‌வேனென்றாள்‌. 17

பெண்ணாகிக்‌ காமத்தால்‌ பேயாகி யுன்னாசைப்‌ பிரியாளாகிக்
கண்ணாளா வெனக்கேட்டுங் கைசோர விடுவதுவோ கருணையாகும்
மண்ணாட்டில்‌ மாதவரு மாதர்வரக்‌ கண்டாரேல்‌ மருவிவாழ்ந்து
விண்ணாட்டுச்‌ சுகமதிலு மிஞ்சிய தீதெனமகிழ்ந்து வியன்கொள்வாரே. 18

தவத்‌தினால்‌ வரும்பயன்கள்‌ யாதென்ன மதிப்பிட்டாற் றானேதோன்று
மவத்திலே யுடலழியும்‌ நல்லுணவு தானகலு மழகும்போகும்
பவத்திலே சுகம்நீங்கும்‌ பெண்போகந்‌ தான்குன்றும்‌ பாவமல்‌லால்
சிவத்திலே கலத்தலெனுஞ்‌ சிறுமொழியே யெந்நாளுஞ்‌ சேருந்தானே. 19

இல்லறத்தில்‌ வாழ்வார்க ளின்பசுகமான வுணவென்றுந்துய்த்து
நல்லறமாயதிதி கட்குமுணவிட்டு நற்சயனம்‌ நாளுங்கொண்டு
வல்லைநிகா்‌ குவிமுலையா டோள்தோய்ந்து மதிப்பெய்தி வலிமையாகக்‌
கல்‌லொத்த வுடலுடனே யெக்காலுஞ்‌ சிவனையே கருதிவாழ்வார்‌. 20

ஆதலினா லெனையணைந்திங்‌ கொருகணமாகிலுஞ்‌ சுகத்தை யருளாயென்ற,
காதலுடை யரம்பைதனைக்‌ கரமதனி னீரெடுத்துக்‌ ௧ரமதாகப்‌
பேதையே யுருக்கொளெனச்‌ சபித்தபினர்த்‌ தவஞ்செய்யப்‌ பெருமான்றானு
மீதைநிதம்‌ பூசிப்பா யெனவென்றோர்‌ சிவலிங்க மீந்‌தானம்மா. 21

பெற்றதனை நாடோறும்‌ பெருமானைப்‌ பூசித்துப்‌ பெட்டகத்தில்‌
நற்றவனு மெடுத்துவைத்து நலந்துய்த்து வருகையிலே நண்ணலாரும்‌
வெற்றிபெற முடியாது விதிர்விதிர்ப்பார்‌ விண்ணோரும்‌ விரும்பிச்‌ சூழ்‌வார்
மற்றொருநாள்‌ மயிலையிலே பூசிக்குங்‌ காலமவன்‌ மருவினானால்‌. 22

காலையிலே நீராடிக்‌ கடன்களெலாந்‌ தான்முடித்துக்‌ கடவுள்‌பூசை
நீலியெனுங்‌ காளியட்குஞ்‌ சூலியெனு மெல்லியற்கும்‌ நேராய்வந்து
கோலியருட்‌ குறிவைத்துப்‌ பூசித்து மீண்டெடுக்கக்‌ கோமானென்னும்
பாலிநதிச்‌ சிரமுடையான்‌ வேரோடி மிகவகழ்ந்து படிந்து நின்றான்‌. 23

எடுக்கவவன்‌ கூடாமல்வலிசெய்ய மனமகிழ்ந்தே யெந்தாயெந்தாய்,
அடுக்கல்களு மெனதுவலிக்‌ கசைந்தடியோ டேவருமே வையாவையா
சுடுக்கனலா லெனைத்தகிக்க காரணமென்‌ சுருதியெலா முறையிட்‌டின்ன
மடுத்திடினு மறியாத வருமருந்தே யென்வினையோ வறியேனென்றான்‌. 24

வாலினால்‌ தனைக்கோலி வலியோடு வீழ்த்திடலும்‌ வாலறுந்து
சூலிதிரு வாலயத்தின்‌ முன்வீழச்‌ சுருண்டெழுந்து சுற்றிவந்தான்
காலினுடன்‌ கரத்தினையுந்‌ தானூன்றி யிழுத்திடினுங்‌ கருணையாகி
பாலினுநல்லினிப்‌ புடையான்‌ பட்சம்‌வைத்து வாரானேல்‌ பகர்வார்‌யாரே. 25

எந்நாளுமெனைப்‌ பிரியாதென்னோடு நனிவாழ்ந்தே விந்நாள்விட்‌டுப்
பன்னாளுந்‌ துயருறவே செய்ததிந்‌த மயிலையல்லால்‌ பட்சமோடு
சொன்னாலு முடன்வாராய்ச்‌ சுருதியெல்லாந்‌ தொழுதேத்துஞ்‌ சொற்‌பிரகாச
மன்னாநா னென்செய்வேன்‌ மறுமொழியும்‌ வழங்காயேல்‌ மாய்வே னெந்தாய். 26

ஆவியெனைப்‌ பிரியாதே யாரிருளும்‌ நீங்காதே யணுகி நின்றாய்
பாவியெனைக்‌ கைவிட்டுப்‌ பரிதவிக்கச்‌ செய்வதுவும்‌ பண்போவையா
வோவியமு நிகரில்லா மயிலுருவாய்‌ பூசித்த வுமையோடிங்கு
மேவியிவண்‌ தானுறையக்‌ கைவிட்டு நீயிருந்தால்‌ மேன்மையாமோ. 27

சுந்தரஞ்சேர்‌ சுந்தரியைமயிலாகச்‌ சபித்ததுவுஞ்‌ சுருதியேத்து
மந்திரமே யென்னைவிட்டுப் பிரிவதற்கோ கருதியதால்‌ மகிழ்ச்சியாமோ
சந்திரனை முடிசூடி யென்னிடத்தி லெத்தோடஞ்‌ சதிராய்ச்சொல்லாய்‌
வந்திலையே லிப்போதே யுயிர்நீப்பேனெனக்கூறி வாளையீர்த்தான்‌. 28

கண்டத்தில்‌ படைவைத்தங் கறுப்பதற்கு முயன்ற செயல்கண்‌ டேயெந்தை
வண்டிரையு மலர்க்‌ கூந்தல்வல்லியுடன்றான்‌ தோன்றி வாலியென்று
தண்டத்தால்‌ மிகவருடிய வனழுகை தனைநீக்கித்‌ தயவுகூர்ந்தே
அண்டருக்குங்‌ கிட்டாத வருமருந்தாஞ்‌ சிவக்குறிநீ யர்ச்சித் தாயால்‌. 29

அருட்குறியு முன்பேரா லமரர்திருப் போமெனை நாடியழுகலேனோ
மருட்கொள்ள லென்னபலன்‌ மயிலைவிடுத் தும்மோடு வருவேமல்லேம்‌
இருட்குழியி லிருப்போரைக்‌ கரையேற்ற விங்கமர்ந்தோ மெழிலோய்‌நீயும்‌
தெருட்கொள் ளாதெனை நினைக்கிற் பழயபடி யருள்செய்வோம்‌
தெளிதியென்றார்‌. 30

எம்பெருமா னருள்பெற்றே யெழின்மயிலை வாலீசரிணைத்‌ தாள்‌போற்றித்‌
தம்பெருமான்‌ றனைப்‌பிரிந்த சோபமதால்‌ மிகமாழ்கித் தலங்களேற்றி
உம்பர்பிரா னருளடையச்‌ சென்றகதையா முரைத்தோ முயர்‌தவத்தீர்
வம்பமரு மயிலையினிலங்கம்‌ பூம்பாவை வரலாற்றைச்‌ சொல்‌வாம். 31

வாலீசர்‌ படலம்‌ முற்றிற்று.
-------------------

11. அங்கம் பூம்பாவை சரித்திரப்‌ படலம்‌.


மருவிலா விமயமங்கை மயிலுருவடைந்து நோற்றுக்‌
கருதிய வரத்தைப்‌ பெற்‌றுக்‌ கற்பகவல்லி யென்றே
வுறுதியாய்‌ வழங்காநின்ற வுத்‌தரமயிலைதன்னில்‌
இருமையும்‌ புகழப்பெற்ற வெழில்சிவ நேசனென்போன். 1

குலத்தினிற்‌ கேற்றவாறு கோதிலா விரத்தினங்கள்‌
பலதிசைப்‌ பொருளுளோர்க்கும்‌ பாரின்மன்‌ னவர்க்கும்விற்றே
நலத்தொடு செல்வமீட்டி நாட்டினில்‌ குபேரன்போல்வான்‌
நிலைத்திடா வுடலீடேற நீற்றினிற்‌ பற்றுவைத்தான்‌. 2
மு‌. மயிலை ஜெகந்நாத நாயகர்‌.

நீற்றினை யணியப்பெற்றோர்‌ நேர்வருந்‌ தடத்திற்கண்டால்‌
சாற்றிடு மொழியைக்கேட்டுச்‌ சங்கர னடியனென்றே
போற்றித்தம்‌ மனைக்குட்சேர்த்தே பூம்பதம்‌ விளக்கிநீரை
மாற்றினேன்‌ பிறவியென்றே மனமகிழ்ந்‌ துட்கொள்வானால்‌. 3

பிஞ்ஞகன்‌ பேரைச்சொல்‌வோன்‌ பிரிவுறாப்‌ பிணியனேனும்‌
வஞ்சக முடையவேட வனப்பினா னீறிட்டோனும்‌
தஞ்சமென்‌ றடையாரேனுந்‌ தாயெனப்‌ பிரியங்கொண்டே
துஞ்சுதற்‌ கிடமுமூணுந்‌ துய்த்திட மகிழ்ச்சிசெய்வோன். 4

அந்தராட்‌ டரசன்வேட்ட வழகிய மனைவியார்க்கே
சந்திரன்‌ போன்றொலிக்குந்‌ தழைமணி வேண்டிக்கேட்க
இந்துசேர்‌ சடையானன்ப ரெழிலுள மணியைக்காட்டித்
தந்திடு விலையுங்கூறத்‌ தான்வந்து பெறுநாள்முன்னே. 5

திருவள ராரூர்வாழுந்‌ தியாகற்குப்‌ பதக்கஞ்செய்தோர்‌
அருண்மணி யிரண்டுவேண்டி யடிகளை யிர‌ந்துவேண்டப்‌
பொருளிலைக்‌ கொள்வதற்குப்‌ புண்ணியா தருவாயென்ன
வருளுட னாரூர்வாழு மையரோர்‌ மணியைத்தந்தே. 6

மற்றதோர்‌ மணியை யொற்றிமன்னிய தியாகனீவான்‌
பெற்றுநு மெண்ணமுற்றப்‌ பெறுதியென்றுரைக்கச்‌ சூழ்ந்து
கற்றைவார்‌ சடையார்‌ மாற்றங்காண்ப லென்றிருவர்தாமுஞ்‌
சற்றுமே தாழாதொற்றித்‌ தனிநகர்வந்து சேர்ந்தார்‌. 7

தாழ்ந்துமே தியாகன்றாளில்‌ தம்பிரா னெங்களுக்கே
சூழ்ந்தொளிவீசும்‌ நல்ல சுந்தரமணியீ கென்றே
வாழ்ந்‌திடுமன்பாற்‌ கேட்க வாதிமாபுரி வாழீசன்‌
காழ்ந்திடு முதியோன்‌ போன்று கனிவுடன்றோன்றிச்‌ சொல்வார்‌. 8

நல்லதோர்மணியும்‌ வேண்டில்‌ நண்ணுமி னெம்மோடென்று
சொல்லியே யழைத்துச்சென்று சுந்தரமயிலையின்௧ண்‌
வல்லதோர் சிவநேசன்பால்‌ வந்தவர் பார்க்கக்காட்ட
சொல்லுக பரியமென்னச்‌ சோர்விலார்‌ சொல்லு முன்னே. 9

வந்தவர்‌ வாங்கிப்பார்த்‌து மாணிக்கம்‌ போதுமென்னச்‌
சிந்தையில்‌ மகிழ்ந்து சொல்லச்செல்லுங்க ளென்றுசைகை
எந்தையுங் காட்டவோட்ட மெடுத்தனர்‌ திருவாரூர்க்கே
தந்தையு மவர்களோடு தளர்ந்திடா தோடிநின்றே. 10

மாணிக்கத் தியாகனென்று மன்னுமென்‌ பெயருக்கேற்ப
மாணிக்கர்‌ தியாகஞ்செய்தேன்‌ மயங்கிடா தாரூரேகி
மாணிக்கம்‌ பதித்தரத்னப்‌ பதக்கத்தை மார்பிற்சாத்தி
மாணிக்கப்‌ பூணாவென்று மகிழ்வுடனழைப்பீ ரென்றான்‌. 11

சிவநேசர்‌ வருவேகத்தைத்‌ தவிர்த்திடச்‌ செம்மலன்பால்‌
தவமெனக்கங்கை தானுந்தன்னருள்‌ காட்டுமா போல்‌
அவம து சேர்ந்திடாமல டுத்தவர்‌ பற்றாவண்ணம்‌
நலமதாம்‌ நதியேயாகி நண்ணிய தாழியம்மா. 12

ஐயர்‌ முன்கரையினின்றா ரடியர்பின்‌ வரம்பினின்றார்‌
உய்விலாவழிபால்‌ செல்மு னொற்றியூர்‌ பெருமான்காணார்‌
செய்வினை யாதொவென்று செட்டியாரில்லம்‌ வந்தார்‌
கைவினைமுற்றிச்‌ சாற்றிக்‌ கண்டனர்‌ மகிழ்ந்தாரூரில். 13

மற்றநாள் மன்னன்றானும் மாணிக்கங்‌ கொணர்கென்றேவ
ஒற்றலர்‌ வந்துகூற வுயர்சிவ நேசனென்பார்‌
சற்றுமே தாழாதேகிச்‌ சார்ந்துபோ யரசன்முன்னர்‌
உற்றது மொழியக்கேட்டே யுணர்விலா னிறுமாப்புற்றே. 14

எனக்கெனக்‌ கூறிச்சென்றே யெழில்பெறு நிதியமிக்க
வனப்புள மணியைவிற்றாய்‌ வழியிலான்‌ வாங்கவென்றே
புனற்சடை யீசனன்பர்‌ பொய்மொழி சொல்வதென்று
சினத்தினால்‌ காவல்வைக்கச்‌ செய்தன னென்செய்வானால். 15

காவலி லிருந்துதேம்பிக்‌ கலங்கியே சிவநேசன்றான்‌
ஆவலித்‌ தழவேகேட்ட வழகிய வொற்றியாருஞ்‌
சேவகன்‌ காணாவாறு சென்றுபோய்ச்‌ செட்டியார்க்கு
மேவவே விடுவீர்வேண்டும்‌ மணியில்லிற்‌ கொணர்வேனென்பாய்‌. 16

கொணர்கென விடுவான்நீயுங்‌ கோட்டமில்‌ பேழைதன்னைக்‌
கணமதில்‌ திறந்துகாட்டின்‌ காணுநன்‌ மணிகளொன்பான்‌
பணமுடைச்‌ சேடன்றாங்கும்‌ பாரினை யாள்வோர்க்கீவாய்‌
மணமலர்‌ தாராயென்பேர்‌ மாணிக்கத்‌ தியாகரென்றார்‌. 17

சாற்றியே மறைந்துபோகச்‌ சங்கர னென்றுதேர்ந்தே
மாற்றமில்‌ மகழ்ச்சிபொங்க மன்னவர்‌ கறிவித்தன்றே
யேற்றமா மணியுநல்கி யெய்திய விதமுஞ்சொல்லி
யாற்றல்சா லன்பினோடு மடியரைப்‌ போற்றிவாழ்நாள்‌. 18

மகபதி போலவாழ்ந்தும்‌ மைந்தாபே றற்றதாலே
பகவனே யீசாவென்றும்‌ பாலனைத்‌ தருவாயென்றுஞ்‌
சுகமிலா வாழ்வைத்தந்த சுந்தரன்‌ றூதாவென்றுந்‌
தகவிலா மகவீயென்றே சங்கரன்‌ றன்னையேற்பான்‌. 19

சிவனது பக்கனின்ற செல்வியு மனமகிழ்ந்தே
சிவநேசச்‌ செட்டியார்க்கோர்‌ செல்வியை யளித்துநின்றாள்‌
தவமது பலித்ததென்று தன்மனை பெற்றசெல்விக்‌
கவமிலா மலர்ப்பூம்பாவைக்‌ கருமணி யெனப்பேர்தந்தான்‌. 20

போற்றியே வளர்க்குநாளில்‌ பூம்பாவைக்கைந்‌ தாமாண்டை
யேற்றபினா லையத்தி லெழில்பணி புரியுமன்பால்‌
ஆற்றலால்‌ பணிகளெல்லா மடியவர்‌ செய்யாமுன்ன
மேற்றமார்‌ தொழிலை முற்றியிணையிலாவின்‌ பத்தாழ்வாள்‌. 21

சிலர்வந்து சிவநேசர்க்குச்‌ சீர்காழிவேந்தர்‌ செய்யும்‌
பலபல வெற்றிகூறப்‌ பந்துக்கள்‌ பலருங்கேட்கக்‌
கலைவல்லார்‌ தமக்கே யென்றன்கன்னியை யளிப்பேனென்று
மலர்முக நிமிர்த்திக்கூறி மகழ்ச்சியாய்‌ வாழுநாளில்‌. 22

கண்டவர்‌ யாருமெச்சக்‌ கபாலியின்‌ பணியினிற்குச்‌
தொண்டருக்‌ கந்நாள்‌ தொட்டே தொல்பணியிலாது செய்தாள்‌
பண்டவள்செய்த பாவம்‌ பாம்பெனக்‌ கடித்தலாலே
விண்டுயிரிழக்க நேர்ந்தாள்‌ விடந்தலைக்‌ கேறியம்மா. 23

அவ்விடை நின்றோர்‌ கண்டே வம்மையின்செய்கை தன்னைச்‌
செவ்வழித்‌ தந்தைதாய்க்குஞ்‌ சென்றவர்‌ கூறக்கேட்டே
யிவ்வினைக்கியாது செய்வே மெனவவர்மகட்குச்‌ செய்யுங்‌
கைவினையீமச்‌ செய்கை முடித்தவர்‌ கவலையோடு. 24

அத்தியைக் குடத்தில்‌ சேர்த்தே வாடையாலலங்கரித்துப்‌
பத்தியா யிருவருக்கும்‌ படிசெலவதற்கு நேர்ந்து
சுற்றிய தீர்த்தமாடிச்‌ சுயம்பிர காசனாளும்‌
நத்திய காசிசேர்ந்து மூழ்கிப்‌ பின்நயந்து பார்ப்பீர். 25

அங்கமாயிருக்குமானா லதையதில்‌ விடாமற்‌ கொண்டே
யிங்குநீர்‌ வருவீரென்றே யினியதோர்‌ மலரதானால்‌
துங்கமாந்தீர்த்தந்‌ தன்னில்‌ துதித்து நீர்விடுவீரென்று
மங்களமகட்குச்‌ செய்யும்‌ வரிசையுஞ்‌ செய்தனுப்ப. 26

இருவருங் குட‌த்தோடேகி யினியதோர்‌ காசிசேர்ந்து
பருவரலின்றி யாடைநீக்கியே பார்க்கும்போது
முருவலாளங்க மெல்லாமுன்பு போலிருக்கக்‌ கண்டு
கருவினைதீர்க்குங்‌ காசுப்பதிவிட்டு மயிலை சார்ந்தார்‌. 27

வந்தவர்‌ தடத்தின்மூழ்க வல்லையி லொருவன்சென்றான்‌
பைந்தொடி யங்கம்வைத்‌த குடத்திடை யொருவனின்றான்‌
சுந்தர பணியாரத்தின்‌ சுகமுள மணமும்வீசச்‌
சிந்தையில்‌ மகிழ்ச்சிகொண்டு சிறப்புட னவிழ்த்துப்பார்த்தான்‌. 28

மல்லிகை மலரைக்கண்டு மனதினி லையங்கொண்டான்‌
வல்லையில்‌ முன்னோன்‌ வந்து வணங்கிப்பின்‌ னெடுத்துச்சென்று
ஒல்லையி லேழுதீர்த்த மூழ்கியே யுவந்‌துபார்க்க
நல்லதோ ரங்கமோடு நறுமலர்‌ பாதிகண்டார்‌. 29

பின்னவன்‌ கண்டகாட்சி பிரியமாய்ச்‌ சொல்லக்கேட்டு
நன்னய நேசருக்கு நவின்றிடக்‌ கேட்டிமாழ்கி
முன்னம்நாம்‌ கன்னிதன்னை முறைமையால்‌ காழிநாட்டு
மன்னனுக்‌ களிக்கநேர்ந்தேன்‌ மறுத்தது பிழையேயென்று. 30

குடத்திற்கு முன்போலாடை குறைவிலா வகையிற்சாத்தித்‌
தடத்தினுக்‌ கருகேவைத்துத்‌ தான்போற்று நாளிற்சேடன்‌
படத்தினால்‌ தாங்கும்பாரில்‌ பரமனா லயங்கடம்மில்‌
வடதிசைத்‌ தலஞ்சேவித்தோ ரந்தணன்‌ மயிலைவந்தான்‌. 31

வந்தவன்‌ குளத்தில்‌மூழ்கி வல்லியோ டையன்றன்னைச்‌
சிந்தையில்‌ புகழ்ந்‌துபாடித் திரும்பிய வழியிற்காணும்‌
பைந்தொடி போலச்செய்த பாவையின்‌ சரிதங்கேட்டே
யந்தண னழைத்துநேசற்‌ கறைகுவா னாயினானே. 32

செல்வமிக்‌ குடையாய்‌ கேண்மோ சிந்தையி லையம்வேண்டாம்‌
வல்லவர்‌ புகழுங்காழி வள்ளலம்‌ பிகைப்பாலுண்டு
நல்லபொற் றாளம்சின்னம்‌ நன்முத்துப்‌ பந்தர்பெற்று
எல்லையி லடியார்சூழ யிணையிலா மருகல்வந்தார்‌. 33

மருகலிலரவால்‌ மாண்ட மணாளனை வணிகக்கன்னி
பரிவுடனல்க வேண்டபாவை தன்னுயினைக்‌ காக்கக்‌
கருணையால்‌ பதிகமோதிக்‌ கணவனுக்கு யிரளித்து
மறுவிலாமணமுஞ்செய்து மன்னுபூந் து‌ருத்தி சேர்ந்தார். 34

சம்பந்தர்மகிமை யின்னுஞ்‌ சாற்றுவேன்‌ நேசரேநல்‌
வம்பராமமண ரெல்லாம்‌ வள்ளல்பாண்டியன்‌ முன்சென்று
நம்பவேசமண்‌ போதித்து ஞாலத்தில்‌ கன்னிநாட்டை
யும்பரும்‌ போற்றி வாழுமுயர்வினை நீக்கச்சொன்னார்‌. 35

ஆலையமொன்‌ றுண்டாக்கி யருகனைத்‌ தெய்வமென்றே
காலனையுதைத் தான்‌கோயில்‌ கதவினை யடைத்‌துநாளும்‌
ஏலவேதொழு வோரில்லா விணையிலாச்‌ சமணமொன்றே
மூலமென்றெண் ணிப்‌போற்ற முரசறை வித்தான்மன்னன்‌. 36

கன்னி நாடாளு மன்னன்கட்ட ளைத்தவிராராகி
அன்னிய மதமில்லாம லருகனே தெய்வமென்றும்‌
மன்னிய சுந்தரேசனாலைய மறந்துஞ்‌ சூழார்‌
பொன்னியை யிழந்தநாடு போல்‌ வளங்குன்றிற்றம்மா. 37

மங்கையர்க்கரசி யாருமமைச்‌ சருமிருவரல்லா
லெங்கு மோர்சைவரில்லா வீனத்தால்‌ சிறப்பேயில்லை
செங்கையில்‌ மழுமானேந்துஞ்‌ செல்வரை யவர்கள்கண்டு
கங்குலில்‌ நாளும்வந்து கண்கள்‌ நீர்சொரியப்‌ போவார்‌. 38

மற்றொருராளில்‌ தேவி மந்திரியோடு போற்ற
வுற்றநாள் நேர்ந்ததாலே வொன்னலார்‌ புரத்தைக்காய்ந்த
கற்றைவார்‌ சடையான்பாத‌ங் கைதொழுதழவே கண்ட
நற்றவவேதி யன்றான்‌ நண்ணியே புகல்‌ கின்றானால்‌. 39

பற்பலவாலயங்கள்‌ பாரினில்‌ பணிந்து வந்தேன்‌
இற்றைநாள் காணுந்துன்ப மென்றுநான்‌ பார்த்ததில்லை
புற்றரவணிந் தான்மைந்தன்‌ புசலிகா வலனார்கேட்கில்‌
மற்றவரிங்குவந்து மாற்றுவ துண்மை யென்றான்‌. 40

இருவருங்கேட்டு வந்தே யிணையிலான்‌ றன்னைப்‌போற்றி
வருவரோ விவிடமென்ன வாயுரை புகலுமுன்னே
பெருமையை எடுத்துக்கூறிப்‌ பெட்புடன்‌ வருவாரென்னத்‌
தருகுவ தவரையிங்குத்‌ தனிக்கடனுமதே யென்றார்‌. 41

வேதிய னிசைந்ததாலே வித்தகர்‌ வரவுக்கேற்ற
நீதியி லமணர்செய்யும்‌ நிந்தனை யாவும்கூறி
ஆதியினருளைப்‌ பெற்றவமைச்சரு மம்மையாரும்‌
பாதமே கதியென்றேற்றிப்‌ பரவியே யோலைநேர்வார். 42

வேறு.
அழுதுமுலைப்‌ பாலுண்ட வம்பிகையின்‌ புத்திரன்ற னடிகள்‌போற்றி
தொழுதுசொல்லுங்குறை கேட்டே யிவண்வந்து சமணழித்துத்‌ தூயநீற்றைப்‌
பழுதுபடா வகைநிறுவிப்‌ பாண்டியற்குச்‌ சைவமதைப்‌ பரவச்செய்வீர்‌
முழுதுலக வாழ்வளிக்க வந்தபெருந்‌ தகைமூர்த்தி முறையோவென்று. 43

வேறு.
எழுதிய வோலைதன்னி லியல்புட னெழுத்துமிட்டுப்‌
பழுதிலா வேதியன்றான்‌ பகரவே யாவுஞ்சொல்லி
வழுதியு மறியாவண்ணம்‌ வந்தனஞ்‌ செய்தனுப்பத்‌
தொழுதுகா ழியர்கோன்கேட்கத்‌ துன்பத்தைக்‌ கூறியீந்தான்‌. 44

கழுமலப்‌ பாலனோலை கரத்தினில்‌ வாங்கிப்‌பார்த்து
விழுமிய வமைச்சருக்கும்‌ விரும்பிய மானியார்க்கும்‌
குழுவமண்‌ குண்டர்‌தம்மைக்‌ கூரிய கழுவிலேற்‌றி
வழுதிநா டடையநீறு வழங்கிட வருவாமென்றே. 45

ஓலைக்குப்‌ பதிலளித்தே வுத்தமனனுப் பச்சென்று
மாலையிலமைச்‌ சர்க்கீந்து மானியார்‌ மகிழநின்றான்‌
காலையில்‌ பாண்டிநாட்டைக்‌ கழுமலப்‌ பாலன்செல்லும்‌
வேலையி லப்பர்வேண்டி விலக்கிட நாள்கோளென்றார்‌. 46

நாளுக்குப்‌ பதிகம்பாடி நாடியே கன்னிநாட்டில்‌
வேளினை யழித்தான்மைந்தன்‌ விடுதியில்‌ சேர்ந்தபின்பு
வாள்விடு நீறணிந்து வள்ளலார்‌ கோயில்செல்லும்‌
வேளையில்‌ சமணர்கண்டு வேந்தனுக்‌ குரைப்பச்சென்றார்‌. 47

வேறு.
மன்னவகேள்‌ நம்மதத்தை மாளவைப்பா னிவண்வந்தான்‌
சென்னிமதி மிலைந்த சிவன்சிறுவனொடு சீடர்களும்‌
துன்னியிவண்‌ வந்தவரைத்‌ துகளாக்க வேண்டிவந்தோம்‌
வன்னியினால்‌ மாளவைப்போம்‌ வழுதிநீ யஞ்சேல்காண்‌. 48

பாவியர்கள்‌ மொழிகேட்டுப்‌ பாண்டியனு மிசைந்தனுப்ப
மேவியவண்‌ பலால்கும்பல்‌ மேல்விரித்துத்‌ தீவைக்கக்‌
கோவெனவே கூச்சலிட்ட குண்டர்கள்‌தம்‌ மொலிகேட்டுப்‌
பாவினால்‌ பாண்டியற்குப்‌ பையவே புகவனுப்ப. 49

பையவென்று சொன்னபயன்‌ பலன்யாதோ வெனக்கூறில்‌
கைதவனு மீடேறக்‌ காதலிமங்‌ கலம்வாழ
மெய்ம்மைபெற வமைச்சனுடன்‌ மேதினியு மகிழ்வடைய
துய்யநீ றதுபரசவச்‌ சுகமடையக்‌ தொல்லுலகே. 50

வேறு.
வேந்தனு மழலில்‌மூழ்கி மிகுதுய ரடைந்துமெய்யில்‌
காந்த‌நேர் சமணரெல்லாங்‌ கையில்பீ லியையுந்தாங்கிச்‌
சேர்ந்தொரு கூட்டமாகிச்‌ சீடர்கள்‌ மந்திரிக்க
பாந்தள்த‌ன்‌ விடம்போல்மீறிப்‌ பதைத்திடத்‌ துடிக்கலானான்‌. 51

முத்துகள்‌ வெடிக்கமேனி முழுதுமே வழல்கள்வீச
சித்திர வமளியெல்லாம்‌ செந்தீயால்‌ நீறதாக
உத்தமர்‌ நெருங்காவண்ண முறுமேனி கருகாநிற்க
எத்திறத்‌ தவருஞ்சேர விடந்தரா வழியில்நின்றான்‌. 52

கதலியின்‌ குருத்தின்மேலே கன்னிநா டனைக்கிடத்திப்‌
பதமுற விசிறினாலும் பாண்டியன்‌ சகியானாகி
இதமுறு வார்த்தையாலே யியம்பினுங்‌ கேளானாகிக்‌
கதழெரி வீசக்கண்டு கலங்கியே யிருக்குங்காலை. 53

கண்டதை யமைச்சன்றானுங் கைதவ னருகில்வந்து
மண்டலத்‌ தரசரேறே மைந்தனும்‌ வயதுமூன்று
உண்டபா லறாவாயார்காண்‌ வுகந்தபேர்‌ பெற்றோன்காழி
இண்டைசேர்‌ சடையான்மைந்த னிவண்வந்தால்‌ தீர்ப்பானென்றான்.54

கேட்டதே முட்டுமானேன்‌ கிளரெரி நீற்றைப்பாரேன்‌
வாட்டமே கொண்டுநானும்‌ வதைவதால்‌ மெலிவுநேரேன்‌
பாட்டளி மாலைவெந்த பரிவதால்‌ புகன்றவாய்மை
கேட்டிலா னென்றேவூழின்‌ கெடுதியை நினைத்‌துச்சென்றான்‌. 55

மங்கையர்க்‌ கரசியாரு மன்னன்றன்‌ னருகேவந்து
கொங்கைமேல்‌ கண்ணீர்பாயக்‌ குமுறியே வமைச்சன்போல
விங்குன்ற னுயிர்க்குச்சேதம்‌ வருமிந்த வடிகளாலென்‌
மங்கல நீக்குமெய்யே மன்னகே ளெனவிசைதந்தான்‌. 56

மன்னவ னிசையக்கண்டு மமைச்சரு மரசியாரும்‌
முன்னமே காழிவேந்தை முறையினால்‌ வண‌ங்கிப்பின்னும்‌
பொன்னகர்‌ முதலோர்போற்றப்‌ புகலிகா வலனார்பாதம்‌
சென்னியில்‌ படவேவீழ்ந்து சிறப்புட னழைத்துவந்தார். 57

வந்தவர்‌ தமையமைச்சர்‌ வலபுறத் த‌ணைமேலேற்றிச்‌
சிந்தையில்‌ முனிவுகொண்டு சீரிலாச் சமணரெல்லாம்
நொந்துதம்‌ மனமும்வாடி நேயமும்‌ விட்டுநோக்கி
மைந்தனே விச்சுரத்தை மாற்றுவா யென்றுசொன்னார்‌. 58

வலமிட மிரண்டுகூறாய்‌ வகையுடன்‌ பிரித்தேயொன்றைத்‌
தலைவனைத்‌ தீர்க்கச்சொன்னார்‌ சம்பந்தர் நீற்றையள்ளிப்‌
பலன்றருஞ்‌ சிவனைப்போற்றிப்‌ பாண்டியற்‌ களிக்குமுன்னே
நலமுடன்‌ பதிகமோதக்‌ கண்டவ ரிடப்பால்நண்ணி. 59

தங்கடம்‌ பாகந்தன்னைத்‌ தான்‌தீர்ப்ப தாகக்கூறி‌
அங்கையின்‌ பீலிவாங்கி யதட்டியும்‌ மந்திரித்தும்‌
எங்கணுந்‌ தடவிநீரை யிறைக்கவும்‌ பொறாதுமேனி
பங்கமாய்த்‌ தீயில்வாடும்‌ பாம்பென நெளிந்துசொல்வான். 60

போதுமே யடிகள்மாரே பூவுல குள்ளகாறும்‌
ஓதியே மந்திரித்து முங்களால்‌ சுரம்நீங்காது
வாதியாய்‌ வந்துநின்ற வடிகளே போதுமென்று
பூதியால்‌ தீரும்வேந்தன்‌ புண்ணியஞ்‌ சேரச்சொல்வான்‌. 61

எங்கள்‌தந்‌ துயரைமாற்ற வெழுந்தருள்‌ மணியேயிங்குத்‌
திங்களை யொத்தாயெந்தன்‌ தீவினை தீர்ப்பாயென்ன
மங்கையர்க்‌ கரசியாரு மமைச்சரு மகிழ்ச்சிகொள்ள
செங்கையில்‌ நீறெடுத்துச்‌ செல்வரு மெறியுமுன்னே. 62

வெந்தவுன்‌ சாம்பல்வேண்டாம்‌ வேந்தனுந்‌ தரிக்கானென்றே
புந்தியி லாதார்கூறப்‌ புகலிகா வலனுங்கேட்டுச்‌
சுந்தரன்‌ கோயில்வாயில்‌ திருமடப்‌ பள்ளிநீற்றை
முந்துநீர் தாருமென்று முனிவுடன்‌ கேட்கவீந்தார்‌. 63

மற்றவர்‌ கொடுப்பவாங்கி மந்திர மென்றெடுத்து
முற்றிய பதிகமோதி முனிவுடன்‌ சமணர்நாணக்‌
கொற்றவன்‌ மெய்தீண்டாது குணக்குன்றா னெறியுமுன்னே
வற்றிய கடல்‌போல்மாறி மன்னனு மெழுந்தானம்மா. 64

உற்றதோ ரரசன்தேக மிருந்தநோய்‌ தீர்ந்ததோர்ந்து
சுற்றிய சமணர்கண்டு சுடுமொழி சிலதுகூறிக்‌
கொற்றவா வெற்றிகாண மூன்றுண்டு கண்டோமொன்று
மற்றதோ ரிரண்டில்வெற்றி மன்னகேள்‌ நமதென்றாரே. 65

தீயினில்‌ மந்திரத்தைத்‌ தீட்டியே விடில்வேகாத
தூயதோர்‌ மதமேமேலாம்‌ துகள்படு நீறுமானால்‌
ஆயவர்மதமே தோல்வி யடைந்ததாம்‌ என்றுசொல்லி
மேயவே தீயிலேட்டை விட்டனர்‌ வெந்தொழிந்த. 66

மன்னவன்‌ கண்டுகாழி வள்ளலார்‌ மலர்ப்பதத்தைச்‌
சென்னியில்‌ படலேவீழ்ந்து சீரிலா வமணர்நாணப்‌
பன்னியபடியே யேட்டைப்‌ பார்க்கவே வனலிலிட்டு
நன்னிதி யெனவேகாண நயம்படச்‌ செய்வீரென்றான்‌. 67

மறைமொழி பதிகமென்றும்‌ மந்திரம் சிவமேயென்றும்‌
கறைகண்டம்‌ தேவமாதர்‌ கந்தர‌ந் தன்னில்வாழும்‌
உரைபெறு மங்கலத்தை யுண்மையில்‌ காத்ததென்றும்‌
வரையறு திருநள்ளாற்றிற்‌ பதிகத்தை வாழ்த்திவிட்டார்‌. 68

முன்னவர்‌ பார்க்கவிட்ட மொய்குழல்‌ மணாளன்றன்சீர்‌
பன்னிய பாடல்கண்டு பரந்தெரி யெடுத்துப்போற்றி
நன்னயத்தோடு பச்சை யேடென நயந்துநீட்ட
மன்னவன்‌ கரத்திலீந்தார்‌ மகிழ்ந்தவர்‌ பதத்தில்வீழ்ந்தான்‌. 69

தீயினில்வெற்றி காணத்‌ தீயராமமணப்‌ பேய்கள்‌
மேயவேயேடு விட்டு வைகையில்‌ மேல்செலாது
ஆயதோ ரேடுவாரி யடைந்திடில்‌ தோல்வியென்று
காயும்வேல்‌ மன்னன்முன்பு கழிரினார்‌ கேட்டுவேந்தன். 70

தோற்றவர்‌ தமக்குத்தண்டம்‌ யாதெனத்‌ தூய்மையற்றோர்‌
சாற்றுவர்‌ கழுவினேறல்‌ சத்திய மதுவேயென்றார்‌
ஆற்றல்சா ரேட்டைவைகை யாற்றினில்‌ முன்புவிட்டார்
மாற்றவ ரேடுமுற்றும்‌ வாரியே செல்லக்கண்டார்‌. 71

சுற்றிலுமிருந்தோர்‌ பார்த்தார்‌ சுகம்பெற்ற பாண்டிநாடன்‌
நிற்றிடு புகலிவேந்தர்‌ நீள்பதம்‌ வணங்கித்தாழ்ந்து
உற்றிடுமுன்ற னேட்டை விடுகென வுவந்துபோற்ற
வற்றல்மா மரத்திலேற்ற வாழ்கவந்‌ தணர்களென்றே. 72

பாடியபதிக மேட்டைப்‌ பாண்டியன்‌ முன்னேவிட்டார்‌
ஓடியகனவட்டம்போ லொல்லென வோடக்‌ கண்டு
வாடியே வணங்கக்கண்ட வளர்காழி யருளால்நிற்கக்‌
கூடிய பாசத்தால்‌ கூனுட னிமிரக்கண்டார்‌. 73

கண்டன னரசன்றானுங்‌ காழியர்‌ தமைவணங்கி
மண்டனில்‌ கழுவிலேற்ற மன்னவன்‌ கேட்டலோடும்‌
துண்டமாம்‌ பிறையணிந்த தொல்லுயி ராகுங்கோமான்‌
புண்டரமணிவோ ரெல்லாம்‌ புண்ணியர்‌ கழுவைநீத்தோர்‌. 74

நீற்றினையணியா ரெல்லாம்‌ நீண்டிடு கழுவிலேறச்‌
சாற்றிய மொழிதப்பாது சண்டன்ற னுலகமேறல்‌
ஏற்றதே யென்றுசொல்ல வென்றும்நாம்‌ நீற்றைத்தீண்டோம்‌
போற்றவே கழுவிலேறிப்‌ புகுதுமே லுலகமென்றார். 75

மதத்தினில்‌ மானம்பூண்டார்‌ வலியவே கழுவிலேறக்‌
குதத்தினில்‌ கழுவுமேறிக்‌ கூக்குரலிட்டு மாண்டார்‌
சிதைத்திடு வார்களென்று சிரமது பிளக்கவேறி
வதைத்திடக்‌ கழுவில்கத்தி வளர்கழு குத்தமாண்டார்‌. 76

பூதினையணியா ரெல்லாம்‌ புகலிகா வலனார்முன்னம்‌
வேதனை செய்வாரென்றே விபூதியை யிட்டுநின்றார்‌
ஓதியகோமயத்தை யுயா்பூதிப்‌ பாலென்‌ றிட்டார்‌
ஆதியாராவின்‌ கன்றை மரமென வன்‌போடேற்றார்‌. 77

மூன்றுமே கிட்டாரெல்லாம்‌ முழுநீறு பூசுவாரின்‌
ஆன்றமெய்‌ தனிலுறாய்ந்தே யருட்குறி, தன்னையேற்றார்
கான்றமெய்‌ கழுகுகுத்திக்‌ களித்துண்ணக்‌ காகமோடு
சான்றெனநின்றா ரெல்லாம்‌ சண்டன்றன்‌ பதத்தைப்பெற்றார்‌. 78

இவ்வகை சமணழித்தே யெங்குமே சைவம்போற்ற
நவ்வவியங் கரத்தோன்‌ நாமம்‌நாட்டிய பெரியோன்றன்னை
எவ்வமிலடியா ரோத்தூரெழில்‌ பதியழைத்துப்‌ போகக்‌
கவ்வியசமணால்‌ நேர்ந்த கஷ்டத்தைப்‌ புகன்றார்போமுன். 79

பிரிவதாலமைச்சன்‌ மன்னன்‌ பெண்கொடி யிவர்கள்வாடும்‌
பரிபவங்கண்டு தேற்றிப்‌ பாண்டிநா டதனினின்றும்‌
விரவிய வடியாரோடும்‌ விமலர்வா ழோத்தூர்மேவக்‌
கரவுடையமண ரெல்லாங்‌ கலங்கியே வேள்விசெய்தார். 80

வேள்வியி னின்றெழுந்த விடமுள நாகமொன்றை
வாள்விடு நீறணிந்த வடியரை நுங்கச்செய்தார்‌
கோளுடை நாகஞ்சீறக்‌ கோதில்கா ழியருங்கண்டு
தோளினி லரவம்பூண்ட தோன்றலே தோட்டீரென்றார்‌. 81

வேறு.
தோட்டீ ரேதுத்‌ தியாடு மரவத்தை
ஆட்டீ ரேயெனக்‌ கேட்டு வருளொடு
மாட்டி னின்றவர்‌ மகுடியுடன்‌ வந்து
ஆட்டிப்‌ பாம்புட னாலையம்‌ புக்கனர்‌. 82

சண்டநேர்‌ வருஞ்‌ சமணர்க ளாண்பனை
உண்டு பெண்பனை யாக்கிடி லுன்மதம்‌
கண்ட வுண்மையால்‌ கலந்துவாழ்‌ வோமெனக்‌
குண்டர் வெள்கக்‌ குரும்பையாண்‌ பனையென்றார்‌. 83

குரும்பை யாண்பனை யென்றுமே கூறுமுன்‌
அரும்பு காய்வர வண்ண லருள்செய்தார்‌
பெரும்பு வியுளோர்‌ போற்றித்‌ துதித்தனர்‌
இரும்‌ பதியினி லின்ன மிருப்பதே. 84

கண்‌ டமணர்கள்‌ கைதொழு தேத்தியே
அண்டர்‌ போற்று மரன்முத லோனென
பண்டு முப்புர தீய்த்தவர்‌ பாதத்தைக்‌
கொண்டு பாடிக்‌ குலாவக்‌ கண்டேகுவோர்‌. 85

வேறு
வெண்பாக்க மதனிலேகி வியன்பெரும்‌ பதிகமோதிப்‌
பண்ணிசைப்‌ பாடும்பாசூர்‌ பதிகடந்‌ தம்மையாரும்‌
புண்படத்‌ தலையினாலே நடந்ததோர்‌ பதிபோகாது
நண்ணிய பழனஞ்சேர்ந்து நாதர்மேல்‌ பதிகம்பாடி. 86

திருமுல்லை வாயில்வந்‌து தேவாரமோதி நீத்தே
கருவினை யொழிக்குமொற்றித்‌ தியாகர்தம்‌ பாதங்காண‌
மருவிய வடியார்சூழ வந்தனரின்று கண்டேன்‌
தருகுவாய்‌ நீபோயென்னத்‌ தாழ்விலா துடனெழுந்தே. 87

ஒற்‌றியி லிருந்தேநேச ருயர்புகழ்‌ மயிலைகாறுங்‌
குற்றமில்‌ பந்தர்‌வேய்ந்‌து கொடியொடு கதலிநாட்டி
வற்றிடாத்‌ தண்ணீர்ப்பந்தர்‌ வளமுள வாத்தியங்கள்‌
உற்றிடச்‌ செய்துசென்றே வொப்பிலா னடியிற்றாழ்ந்தான்‌. 88

எங்கள்தங்‌ குறைமுடிக்க வெழுந்திடு மருந்தேமங்கை
மங்கள மயிலாய்நோற்ற மயிலைக்கு வருகவென்று
சங்கர நேசர்போற்றச்‌ சற்றுமே தாழ்கிலாது
திங்களை முடித்தவொற்றித்‌ தியாகனைத்‌ தொழுதுமீண்டார்‌. 89

மன்னிய மயிலைசேர்ந்து மாதுமை யோடுமையன்‌
தன்னிய லெழிலாய்நிற்குந்‌ தன்மையை நோக்கித்தாழ்ந்து
பொன்னவிர்‌ சடையான்றன்னைப்‌ போற்றியே வலஞ்செய்‌போதில்‌
மின்னிய குடத்தில்காட்டும்‌ மெல்லிபோற்‌ கோலங்கண்டார்‌. 90

காண்ட லுமையன்யாது காரண மென்றுகேட்க
மாண்டகா ரணத்தைத்தந்தை மாழ்கியே யுரைத்துத்தாழ்ந்கான்‌
ஈண்டுநா னெழுப்பியீவே னினிதுயர்‌ விடுதியஞ்சேல்‌
வேண்டிய நேசன்றன்னை விருப்புடன்‌ கொணர்வாயென்றார்‌. 91

அருளலுங் குடத்தைத்தாங்கி யவர்முன்னே வைத்தலோடும்‌
மருளுடை மண்ணோர்காண மங்கைநீ வருவாயென்று
தெருளுடை மேலோர்கேட்கத்‌ தேகம தெடுத்தோரெல்லாம்‌
கருவினில்‌ நேராவண்ணங்‌ காரணக்‌ காட்டிச்சொல்வார்‌. 92

உலகினில்‌ பிறந்‌தோரெல்லா முறுதியை யடையவேண்டிப்‌
பலகலை போற்‌றுமேலோர்‌ பரமனா ரடியர்தம்மை
நலமுடன்‌ பூசைசெய்து நயந்தவர்க்‌ கனமளித்துச்‌
சிவனது விழாக்காண்போரே சீர்பெற்றார்‌ காணவாராய்‌. 93

திருச்சிற்றம்பலம்‌.
மட்டிட்ட புன்னயங்‌ கான மடமயிலை
கட்டிட்டங்‌ கொண்டான்‌ கபாலிச்‌ சுரமமர்ந்தா
னொட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்‌
கட்டிட்டல்‌ காணாதே போதியோ பூம்பாவாய்‌. 94

கானமர் சோலைக்‌ கபாலீச்‌ சுரமமர்ந்தான்‌
தேனமர்‌ பூம்பாவை பாட்டாகச்‌ செந்தமிழான்‌
ஞானசம்பந்த னலம்புகழ்ந்த பத்தும்‌ வல்லார்‌
வான சம்பந்த மவரோடும்‌ வாழ்வாரே. 95

திருச்சிற்றம்பலம்‌.
ஓதிய பாசுரத்தி ணுண்மையின்‌ வலிமையாலே
மீதெழுங்‌ குடத்தினின்று மெல்லியல்‌ தன்னைக்கண்ட
பாதகம்‌ நீத்தமேலோர்‌ பரவினார்‌ பதிகமேன்மை
காதலா லெடுத்துக்கூறிக்‌ களிப்பெனுங்‌ கடலிலாழ்ந்தார். 96

கண்டவக்‌ காலையுற்ற கண்ணுத லன்பரெல்லாம்‌
விண்டுசொல்‌ மாற்றமற்‌று வேந்தனாம்‌ காழிநாடன்‌
புண்டரீகத்தோ டொத்த பூம்பதந்தன்னில்‌ வீழ்ந்தே
பண்டைவல்‌ வினையுந்தீர்ந்து பாங்கினில்‌ சூழநின்றார். 97

இவ்வண்ணஞ்‌ சூழநின்ற விணையிலா வடியாரோடுஞ்‌
செல்வண்ணச்‌ சிவநேசன்றான்‌ செல்வியைக்‌ காண்டலோடுங்
கைவண்ணச்‌ சிலையான்மைந்தன்‌ காழியார்‌ பதத்தில்வீழ்ந்தே
மைவண்ணக்‌ கூந்தலாளை மணஞ்செய வேண்டினாரால்‌. 98

நேசனார்‌ வார்த்தைகேட்டு நிருமலன்‌ பணியைக்காட்டித்‌
தேசொடு பசுக்கள்நித்தந்‌ திருவபி டேகஞ்செய்யும்‌
பூசையைக்‌ கேட்டுக்காணப்‌ புகழ்‌ திருவான்மீ யூர்க்கே
ஆசையா யடியாரோடு மன்புடன்‌ சென்றாரம்மா. 99

தம்பிரான்‌ போனபின்பு தந்தைமுன்‌ பணித்தல்போல
எம்பிரான்‌ கோயில்‌வேலை யென்றுமே விடாதுசெய்து
வம்பவிழ்‌ குழலினாரும்‌ வையகத்‌ தோர்கள்போற்ற
வும்பர்நா யகனார்பாத முற்‌றுநற்‌ கயிலைசேர்ந்தார்‌. 100

அங்கம்பூம்‌ பாவையோடு மண்ணலார்‌ மைந்தரோடும்‌
செங்கண்மால்‌ பிரமனோடுஞ்‌ சிவனரு ளடியாரோடும்‌
இங்கித மயிலைதன்னி லெழிலெட்டாந்‌ தினவிழாவில்‌
தங்கிய வுவகையோடுந்‌ தான்வரக்‌ காண்பாரின்றும்‌. 101

புங்கவர்‌ புகழுமிந்தப்‌ பூம்பாவை சரிதங்கேட்போர்‌
திங்கள்சூ டியவன்பாதந்‌ துயரது நீங்கிச்சேர்வார்‌
சங்கையில்‌ கூட்டமெல்லாஞ்‌ சார்ந்துமே நிதமும்போற்றும்‌
துங்கமால்‌ குறள்செய்தீந்த தூயவர்‌ சரிதஞ்சொல்வாம்‌. 102

அங்கம்‌ பூம்பாவை சரிதம்‌ முற்றிற்று
------------------------------------------------

12. திருவள்ளுவ நாயனார்‌ பிரபாவம்‌.


ஆதியும்‌ பகவனு மன்பின்‌ மேன்மையால்‌
நீதியாய்‌ மயிலையில்‌ நிலைத்திலுப்‌ பையின்‌
மாதவழ்‌ சோலையில்‌ மகிழ்ந்து கூடவும்‌
சோதியின்‌ புகழ்வளர்‌ சுதனுதித்‌தனன்‌. 1

ஈன்றவப்‌ பாலனைப்‌ பிரிவதெவ்‌ வகையென
ஆன்றதொல்‌ குரவர்க ளகன்றுபோகுமுன்‌
தேன்பொழி சோலையி லிருக்குந்‌ தேவரும்‌
பான்மணங்‌ கமழ்தரப்‌ பாடல்‌ பாடினார்‌. 2

வெண்பா.
“எவ்வுயிருங்‌ காக்கவோரு ரீசனுண்டோ வில்லையோ
அவ்வுயிரில்‌ யானொருவ னல்லவோ - வவ்வி
யருகுவது கொண்டிங்‌ கலைவதே னன்னே
வருகுவது தானே வரும்‌'' 3

வேறு.
கேட்டலும்‌ பாடலைக்‌ கிளரிலுப்‌ பைப்பொழின்‌
மாட்டினி லிருத்தியே மறைந்து போனபின்‌
வேட்டுயர்‌ நதிக்குலம்‌ விளங்கவந்தானொரு
மேட்டிமை யான்மனை வியக்கக்‌ கண்டனள். 4
காதல ரிலாமையால்‌ கலங்கிடாவகை
நாதனாரளித்ததை நாமறுப்பது
நீதியன்‌ றெனவுள நேர்ந்து நேரிழை
ஆதரவுடனெடுத்‌ தணைத்துக்‌ கொண்டனள். 5

கண்டனன்‌ கணவனுக் காளையின்னுரு
உண்டெனவேறு மெவ்வுலகில்‌ காண்பரோ
மண்டியவன்புடன்‌ மார்பணைத்‌ துப்பின்‌
ஒண்டொடி தன்னொடு மோடினானில்லினில். 6

வேறு.
இல்லத்தி லுய்த்தபின்ன ரெழில்பெறு சுற்றமெல்லாம்‌
செல்வத்தைக்‌ கண்டுமாறாச் சினங்கொண்டு மனந்தாளாமல்‌
அல்லொத்த குழலாரோடே யாடவர்‌ பலருங்கூடிக்‌
கொல்லைவா ழோரிபோலக்‌ கூக்குர லிழைத்தாரம்மா. 7

எந்தவூரெந்த சாதியெவரிதை யீன்ற பேர்கள்‌
சிந்தனையிலாம லில்லில்‌ சேர்ப்பது நீதியாமோ
புந்தியில்‌ விருப்பினோடு போற்றிடல்‌ கடனதல்ல
நிந்தனை நேராமுன்னம்‌ நீக்குதல்‌ மரபேயென்றார்‌. 8

எப்பழி நேர்ந்த்போதுமினி வீடேனென்று நின்று
தப்பிலான்‌ மைந்தனுக்குத்‌ தங்கடொன்‌ மரபிற்கேற்ப
ஒப்பிலாப்‌ புகழ்களோங்கவுன்ன தப்பணிகள்‌ பூட்டிச்‌
சிப்பிவாய்‌ முத்தொத்தானைச்‌ செல்வமாய்‌ வளர்க்குநாளில்‌. 9

ஆளிதத்தரென்றும்‌ பகவரென்றும்‌ சிலநூலிற்கூறியுள்ளது.

வரவர நாள்களேற வள்ளுரெவென்னும்‌ பேரால்‌
பரிவுடனி யாவருக்கும்‌ பயன்றருவான்‌ போலோங்கிக்‌
கரியவன்‌ காணாப்பாதக்‌ கமலங்கள்‌ பூசைசெய்தே
உரிய நல்‌யோக முற்றேவுலகிற்குக்‌ கண்போனின்றான்‌. 10

காவிரிப்பாக்க மார்க்க சகாயனென்றொரு காராளன்‌
மாவல பேய்தானொன்று மன்னிய பயிரழிக்கக்‌
கோவெனக்‌ கதறிவந்து கோதிலார்‌ பதத்தில்வீழ்ந்தே
யீவனென்‌ கன்னிதன்னை யித்துயரொழிப்பி னென்றான்‌. 11

கேட்டலு மவனோடேகிக்‌ கிருபையால்‌ பயிரைக்காத்தான்‌
சேட்டவர்‌ தொழவவன்றன்‌ செல்விவாசுகியாள்‌ தன்னை
நாட்டங்கள்‌ மகிழநல்கி நன்மணம்‌ பூண்டபின்னர்ப்‌
பாட்டளிசோலை சூழ்ந்த பழயதோர்‌ மயிலைவந்தார்‌. 12

மயிலையில்வந்த பின்பு மன்னிய வில்லறத்தைக்‌
குயிலொத்த மொழியாளோடு கோதறவியற்ற வெண்ணிப்‌
பயிலுஈற்றொழி லென்றுன்னிப்‌ பாவினா லாடைசெய்தே
எயிலுற்ற பதியில்‌ விற்றேயில்லறம்‌ வளர்க்குநாளில்‌. 13

கொங்கண சித்தனோர்நாள்‌ குறுகியே பிச்சைகேட்க
மங்கையுந்‌ தாழ்ந்தாளென்று மற்றவ ளெரியநோக்க
அங்குநீ யெரித்ததோர்கொக்‌ கல்லகா ணிந்தகொக்கென்‌
றிங்குவிட்‌ டகல்வாயென்ன வெண்ணிலா வியப்பையுற்றான்‌. 14

நாமெரி செய்தகொக்கு நங்கைக்கு யாவர்சொற்றார்‌
தாமன மகிழ்ந்துகற்பின்‌ றன்மையை யறிவாராரே
பூமினு நிகராகாவிப்‌ பூவையின்‌ கற்பைநோக்கி
யேமஞ்செய்‌ யாசையுள்ளா னெண்ணியே நைந்துபோனான்‌. 15

அடுத்தநா ளவனும்பிச்சை யமுதுக்கு வந்தபோது
துடிக்கவே நாயனாருந்‌ தோன்றவே பொன்னைக்‌ கெட்டான்‌
படிக்கணே வுப்பைக்காய்ச்சிப்‌ பரிசித்தா லாகுமென்ன
நொடிக்குளே வியற்றக்கண்டான்‌ நோன்மைசால்‌ பசும்பொனம்மா. 16

பரிவுடன்‌ றிரண்டபொன்னைப்‌ பாவைக்கு வழங்கவெண்ணி
அறிவிலான்‌ கொண்டுசென்று வம்மையர்க்‌ களிக்கவாங்கிப்‌
பிரியமாய்ப்‌ பூஷணத்தைப்‌ புதுக்கவே கணவர்க்காட்ட
நெறியுடன்‌ சிறுநீர்தன்னால்‌ நீட்டினார்‌ நீள்பசும்பொன். 17

மற்றநாள்‌ கொங்கணன்றான்‌ மனைவரக்‌ கண்டநல்லாள்‌
உற்றநற்‌ பொருளைக்காட்டி வுவகையோ டெடுத்துத்தந்தே
யித்தகைப்‌ பொருளைவேண்டோ மிணையிலாக்‌ கொழுனற்கன்பாய்‌
நற்றவக்‌ கொழுந்தாய்நானே நடந்திடிலது பொன்னென்றாள்‌. 18

போனபின்‌ நாயனாரும்‌ புகழேலச்‌ சிங்கனில்லில்‌
ஆனநூல்‌ கொள்ளவேண்டி யவரெங்கே யென்றுகேட்கத்‌
தேனுகு கொன்றைசூடுந்‌ தேவர்தம்‌ பூசைதன்னைத்‌
தானருள்‌ பெறவேசெய்யுந்‌ தருணமென்‌ றுரைத்தாளில்லாள்‌. 19

மனைவியார்‌ கூறக்கேட்ட மடபரும்‌ கறையில்பூசை
நினைவுடன்‌ செய்கின்றாரோ நீபுகலெனுமுன்வந்து
கனமுட னடியேன்றன்னைக்‌ காக்கவே வேண்டுமென்று
புனிதர்தம்‌ பதத்தில்வீழப்‌ புகட்டினா ரைந்தெழுத்தை. 20

அச்சுத மன்னன்கேட்டே யருமக விலாகதாலே
நச்சியே குருவைநாடி நற்சுத னீகேளென்ன
நிச்சய மாகக்கேட்க நின்மல னருளால்‌ கிட்டும்‌
பச்சிம திசையான்போலப்‌ பாலனும்‌ பிறப்பானென்றார்‌. 21

சந்ததங்‌ காலையாவைத்‌ தான்கண்டு வருநாளொன்‌றில்‌
சிந்தையில்‌ மகழ்ச்சிகொள்ளச்‌ சிவனொரு மகவாய்த்தோன்ற
எந்தையே யென்னவேத்தி வெழில்குரு பரர்க்குக்‌ காட்ட
அந்‌தமில்‌ லழகானந்த ரெனவருட்‌ பெயர்புனைந்தார்‌. 22

மன்னவற்‌ கருளால்வந்த மகவென விவண்வராதோ
வென்னுமுன்‌ னடியில்வந்தே யிருக்கவே களிப்புற்றானால்‌
அன்னவற்‌ கிட்டபேரே யழைத்தவன்‌ மனைவிக்கீயத்‌
தன்னிடந்‌ தனிற்சுரந்த தனப்பாலை யூட்டினாளே. 23

ஊட்டியே வளர்க்குநாளி லூழ்நிலை நீக்குஞான
நாட்டமா மந்திரத்தை நற்றவர்க்‌ குபதேசித்து
வீட்டினை யடையும்மேன்மை விளம்பினா ரிப்பால்வங்கம்‌
மேட்டினிற்‌ றிட்டக்கண்டு மிகுதுய ரோடுசொற்றான்‌. 24

கேட்டலுங்‌ கரையில்வந்து கிளர்கரமத னாற்றொட்டே
யீட்டமா யேலோவென்றே யிழுமென முன்பேலாக
மீட்டுமோர்‌ வற்கடத்தில்‌ மிகுவுண வின்றிமக்கள்‌
தேட்டமாய்‌ மடியக்கண்டு சிங்கற்குச்‌ சொல்வதானார்‌. 25

வற்கடம்‌ நீங்குகாறும்‌ வாங்கின விலைக்கே யேற்றம்‌
விற்பனை செய்வாயென்ன வேண்டிய வருடமேழும்‌
சொற்றவராது விற்ற சொர்ணத்தைக்‌ கடலில்‌ வீச
நற்றவர்‌ சொன்ன வாறே வீசினான்‌ நல்ல சிங்கன்‌. 26

வீசின பொன்னை யெல்லாம்‌ விழுங்கிய மகரமொன்று
பாய்ச்சின வலையில்‌ சிக்கப்‌ பரதவன்‌ பிடித்தரிந்து
கூசின கல்லைக்‌ கொண்டு கொற்றவன்றன்‌ பாலீய
மாசது நீங்கத்தன்‌ பேர்வரைந்ததைக்‌ கண்டான்‌ மன்னோ. 27

தானியங்‌ குறைவிலாத தன்மையாலே லோலசிங்கன்‌
வானத்தை யெட்டுங்‌ கும்பல்‌ வளர்வதை வையர்க்கோத
ஈனமாய்க்‌ கொள்‌ விலைக்கே வில்லென விரவு முன்னே
போனது கண்டு மற்றோர்‌ பொருளுமிப்படி போமென்றார்‌. 28

நாயனாரிடம்‌ போய் நின்று நல்லழகாந்தரோடு
நேயமாய்ப்‌ பெரியோர்‌ சூழ்ந்து நீள்‌ புவியோர்கட்கெல்லாம்‌
மாயுமிப்‌ பிறவிக்கேற்ற வறம்பொருளின் பமென்னும்‌
தூயதோர்‌ வேத நூலைத்‌ தொடுத்துநீ தரவென்றாரால். 29

அம்மொழி யவருங்‌ கேட்டே யாயிரமுந்நூற்றோடு
செம்மொழி யையாறாகச்‌ சிறப்புடன்‌ முப்பால்‌ சேர்த்தே
யிம்மொழி வேதநான்கும்‌ ஈந்ததா மென்று கூறி
நம்மொழி தப்பா தென்று நற்‌ பெயர்‌ குறளென்றாரால்‌. 30

குறளெனும்‌ பெயரைக்‌ கேட்டக்‌ கோதிலா முனிவரெல்லாம்‌
மருள்‌ செயுஞ்‌ சங்கத்தோரை யழிக்கலா மிந்நூல்‌ கொண்டே
திறமுடனையரோடு செல்வழி தன்னில்‌ சேர்ந்த
அறம்‌புகழ்‌ காடாவ்‌ வையவரொடு மதுரை சார்ந்தார். 31

மூவருஞ்‌ சென்று கூடி முத்தமிழ்ச்‌ சங்கமேவும்‌
பாவலர்‌ நடுங்கித்தோற்கப்‌ பழுதிலா நாயனாரும்‌
தேவர்கள்‌ சூழுமொற்றிச்‌ செல்வனார்‌ நடனங்காண
மேவியே வந்தாரங்கு முடிந்தது விழாக்கள் முற்றும்‌. 32

நடனங்கள்‌ முடிந்ததாலே நடுவிருளுயிரை நீக்கத்‌
திடமுடனிருக் கக்‌கண்டு திருவொற்றித்‌ தியாகருந்தான்‌
மடம்விடு ரிஷபமாத மன்னிடு முற்சவத்தில்‌
கடைதின நடனந்தன்னைக்‌ காட்டுவேனுனக்கே யென்றார்‌. 33

எந்தை தன்மொழியைக்கேட்டே யெண்ணிய மகிழ்ச்சியோடு
சுந்தர வொற்றிதன்னில்‌ சுகமுடனிருந்து சின்னாள்‌
தந்தைசொற்படியே வாழ்த்தித்தம்‌ பிரானடனங்‌ கண்டு
வந்தனர் மயிலைவாழும்‌ மனைவியோடி ருக்குங்காலை. 34

மூத்தவரிருவர்‌ வந்து முதல்வரே யெந்தமுக்கே
யேற்றமோயில்லறந்‌ தானியம்பிய துறவறந்தான்‌
சாற்றிட வேண்டுமென்று தாஞ்‌ சிலநாளிருப்ப
கூற்றினைக்கடந்த கோமான்‌ கோதிலாமனைவி தன்னை. 35

சலமதைக்கேணி தன்னிற்றான்‌ தூக்கு மத்திதன்னில்‌
புலன்பெறு நாயனாரும்‌ போதுக பெண்ணேயென்ன
நலமதாய்‌ விடுத்துவந்து நவின்றதை முடித்துச்சென்று
பவமதில்லாதாள்‌ பாதிகிணற்று நீர்‌ மீண்டுங்கொண்டாள். 36

அடுத்த தோர்தினத்தின்‌ காலையையற்குப்‌ பழையதிட்டு
மடுத்திட வருகிருக்க மனைவியைச்‌ சூடுநீக்க
கொடுத்திடு சிவிறியென்னக்‌ கோதிலாள்‌ விசறிநிற்க
எடுத்திடும்‌ போதுமென்‌ னவின்பமாய்‌ விட்டாளம்மா. 37

மீண்டொரு பகலிலையன்‌ மெல்லிய தீபங்கொண்டே
யீண்டுவா வூசிதேட வென்றவ ருரைக்குமுன்னம்‌
மாண்புடன்‌ தீபத்தோடு மனைவியுங் கூடத்தேடக்‌
காண்டலு மெடுத்துத்தந்த கற்பினைக்‌ கண்டுதேர்ந்தார்‌. 38

ஆலங்காடதனி லைய னாடிய நடனந்தன்னைக்‌
காலனை யுதைத்தகாலா கழறெனக்‌ கேட்டவிண்ணோர்க்
கேலவே நாயனாரு மியம்புவர்‌ கேட்பீரென்ன
ஞாலத்தில்‌ விண்ணோர்வந்து நண்ணியே கேட்டார்கேட்க. 39

வெண்பா.
“பூவிலயனும்‌ புரந்தரனும்‌ பூவுலகைத்‌
தாவியளந்தோ னுந்‌தாமிருக்க - நாவி
லிழைநக்கி நூனெருடு மேழையறிவேனோ
குழைநக்கும்‌ பிஞ்ஞகன்றன் கூத்து.” 40

பாசுரங் கேட்டமேலோர்‌ பரமனார்‌ நடனமேன்மை
தேசுடன்‌ விளங்கத்தேர்ந்து தேவரை வணங்கிச்சென்றார்‌
பாசமாம்‌ மனைவியாரும்‌ பார்வதி பாகன்றானே
நேசமாங்‌ கணவரென்றே நித்தலும்‌ நினைந்துவாழ்நாள். 41

இவ்வுலக தனைவிட்டே யேகிடுங்கால முன்னம்‌
நவ்வியங்‌ கரத்தர்க்கொப்பாம்‌ நாயனார்‌ வதனம்நோக்க
செவ்விதி னறிந்தமேலோன்‌ செயலெது வென்னலோடும்‌
திவ்விய சலத்தோடூசி தினம்வைக்கப்‌ பணித்தீரையா. 42

அத்தின மாலை யிட்டவன்று நாளின்று காறும்‌
வைத்த நான்‌ சலமூசிக்கே வழியொன்றுங் காணேனென்னக்‌
குற்றமாய்ச்‌ சாதஞ்‌ சிந்தில்‌ குத்தியிவ் வூசிதன்னால்‌
சுத்தியாய்‌ நீரிற்றோய்த்துச்‌ சுகமுடனுண்ண வென்றார். 43

நாயனார்‌ மொழியைக்‌ கேட்டு நந்திவாகனனார்‌ வாழும்‌
நேயமாங்‌ கைலைசேர நியதியின்‌ விதிகளெல்லாம்‌
தூயவே செய்தமைத்துச்‌ சுடர்‌ செழு சமாதி செய்முன்‌
காயத்தை நீத்த பாவாய்‌ கண்ணினியுறங்கா தென்றே. 44
வெண்பா.
“அடிசிற்‌ களியாளே அன்புடையாளே
படி சொற்றவருத பாவா யடி வருடிப்‌
பின்‌றூங்கி முன்னெழுந்த பேதையே போதியோ
வென்றூங்கு மென்‌ கணிரா” 45

என்றுமே வருந்திப்‌ பாடியிணையிலாள்‌ தனக்குச்‌ செய்யும்‌
ஒன்றிய வீமச்செய்கை யொழியாது செய்தமைத்து
நன்றறி சிங்கர்க்கூவி நானிலம்‌ நீப்பேனானால்‌
வன்பலால்‌ புரியிற்கட்டி யறுமிடம்‌ விடுவாய்‌ வள்ளால். 46

எனவவர்‌ கூறக்‌ கேட்டே யெண்ணிலாக்‌ கவலை கொள்வான்‌
மனமிலை செய்ய வென்னும்‌ மருமத்தை யுணரவெண்ணித்‌
தனைநிகர்‌ நாயனாருந்‌ தானயிக்கியங்‌ கொண்டார்‌ போல்‌
நனவினில்‌ காட்டலோடும்‌ நனிதுயரடைந்தான்‌ பின்பு. 47

பாதத்தில்‌ விழுந்து தேம்பிப்‌ பதினெண்ணா மியங்களேங்க
ஓதத்தினோசை போல வுலகெலாங்‌ கேட்கச்‌ செய்து
கோதற்ம செம்பொன்‌ பேழைதனில்‌ கொண்டு வைக்குமுன்னே
நாதரும்‌ விளித்துச்சிங்கா நீசெய்வ தடாதுகண்டாய்‌ 48

கழுகென முனிவரெல்லாம்‌ காத்திருக்‌ கின்றார்கண்டாய்‌
மொழிதவ றாதுசெய்வா யெனவவர்‌ முனிந்துகூறிப்‌
பழுதிலா நாயனாரும்‌ பரிபூர்ண திசையைக்‌ கண்டு
வழிவருஞ்‌ சிங்கன்றானும்‌ வள்ளல்சொற்‌ படியேசெய்து. 49

மூண்ட பேரன்பினாலே மூன்றரைக்காதம்‌ போகப்‌
பூண்டநற்‌ புரியறந்து போகவம்‌ பிவியில்விட்டார்
காண்டலும்‌ பட்சியெல்லாங்‌ கவ்விய தசைகள்யாவும்‌
வேண்டிய தங்கமாக விழுங்கவுங்‌ கண்டாரம்மா. 50

விழுங்கிய கழுகுங்காகம்‌ வேறுவேறு ருவம்பெற்று‌
ஒழுங்குடன்‌ கணங்களாகி யொல்லெனக்‌ கைலைசெல்ல
வழங்கினர்‌ புஷ்பமாரி வள்ளுவரூ ரென்றேபேர்‌
கழங்கொலி யோடழைத்துக்‌ கண்பெற்ற பேரும்பெற்றார்‌. 51

அன்றுநாள் மயிலைவந்தே யழகியவில்‌ லந்தன்னைப்
பொன்றி லாலயமதாக்கிப்‌ புனிதரைப்பிர திட்டைசெப்தார்‌
ஒன்றிய நீதிநூலை யுலகத்தில்‌ வாழுமாக்கள்‌
குன்றலில்‌ குறள்செய்தீந்த குணக்குன்றை நிதம்பூசிப்பார்‌. 52

வயம்பெறு விடபத்திங்கள்‌ வழிவருவ னுடந்தன்னில்‌
நயம்பெறவபி டேகாதிநன்மை யாம்விழாக்‌ காண்போரே
பயன்பெறுமுட லைப்பெற்றார்‌ பக்தியாயுலகோ ரெல்லாம்‌
வியன்பெறப்‌ படித்தாராய்ந்‌ தோர்விம்மிதங்‌ கொள்ளாராரோ. 53

நான்மறைய தனையார்க்கும்‌ நயம்பட நாயனாரும்‌
மேன்மையாமுப்‌ பாலாகவீறுரு குறள்‌ வெண்பாவாய்ச்‌
தேன்மொழி தமிழாற்செய்த செல்வா்நற் கீர்த்திசொற்றாம்‌
பான்மொழி முண்டகக்கண்‌ மாரியின்பாடல்‌ சொல்வாம்‌. 54

திருவள்ளுவ நாயனார்‌ பிரபாவம்‌ முற்றிற்று.
-----------------------------------------------------------

13. முண்டகக்‌ கண்ணம்மை சரித்திரம்‌;

விநாயகர்‌ துதி.
உலகதனையுண்டோனு முலகதனைப்‌ படைத்தோனு மும்பர்கோனும்‌
புலனைவென்ற யோகிகளுமுனிவர்களுந் தேவர்களும்‌ புகழ்ந்‌துபோற்றிச்‌
கலகமிடுங்கஜமுகனைத்‌ தேய்த்தெம்மைக்‌ காக்கவெனக்‌ கதறக்கேட்டு
மலர்கரக்கோட்டாலழித்த மாணிக்க விநாயகநின்‌ மலர்த்தாள்போற்றி.

நாகவல்லி யாம்‌ நங்கை பிருகுவின்‌
பாகங்‌ கொண்டவள்‌ பண்புடன்‌ வாழுநாள்‌
சோகமாகவே மூவருஞ்‌ சேர்ந்து போய்‌
ஏகமானவ ளெழில்‌ நலங் காணவே. (1)

பிச்சைவேண்டினர்‌ பேதை கொண்டேவர
இச்சை கொள்வோம்‌ நிர்வாணமாயீகென
அச்சமின்றி யளகத்தினால்‌ மறைத்‌
திச்சகந்தனி லியாவர்‌ நிகரென்றாள். (2)

கண்டு மூவரும்‌ காலினை யேவவே
பண்டை நல்லுரு பார்க்கவே வீசினான்‌
கொண்ட நாணத்தால்‌ கோதை முப்பாலராய்‌
உண்டுறங்கத்தன்‌ பால்தந்‌ துதவினாள். (3)

மூவர்‌ தேவிமார்‌ முன்னியவளிடம்‌
காவலரா்த்தர வேண்டலும்‌ விட்டுப்பின்‌
மூவுலகினில்‌ மூன்று பிறவியை
மேவவே விடுத்தா ளந்த மெல்லியாள்‌. (4)

கண்ட தேவர்‌ கனன்று அழகிலா
ஒண்டொடி யென வுலகம்‌ பழிக்கவே
புண்படுஞ்‌ சொலால்‌ பூவையைக்‌ கூறினார்‌
உண்டோ இப்படி யூழும்‌ விளைத்ததே. (5)

பிருகைக்‌ கண்டவள்‌ பேதுற்றுக்‌ கூறவே
வருவராதி பகவனிம்‌ மார்க்கமாய்‌
உருவிலான்‌ கணையா லூற்றுக்‌ காட்டினில்‌
மருவு வாரவர்‌ மண்டபந்‌ தன்னிலே. (6)

அங்கு சென்றுநீ யவர்மக ளாகியே
துங்கமா முப்பை யென்னும்‌ பெயரொடு
இங்கு திக்குநா ளேகாலி கொண்டுனைப்‌
பங்க மின்‌றியே பாரில்‌ வளர்ப்‌ பனால்‌. (7)

வண்ணான்‌ பந்துக்கள்‌ வைவரது கேட்டுப்‌
புண்ணாக மனம்‌ பொறாது மயிலையில்‌
நண்ணு நற்றவம்‌ நங்கையே செய்துமே
கண்ணா யுயிர்களைக்‌ காப்பாய்‌ நீமாரியாய். (8)

என்று நற்றவ ரியம்பிய சொற்படி
பொன்‌ றிலாத புகழுடன்‌ மயிலையில்‌
நின்று வாழுநாள்‌ நீள்புவி மன்னவன்‌
மன்றல்‌ சூழ்குழல்‌ மாதங்கு வந்தனள். (9)

பாலனைத்‌ தரப்‌ பாவையும்‌ வேண்டியே
காலைமாலையுங்‌ கவனமாய்‌ வாழ்த்து நாள்‌
கோல மாகக்‌ குழந்தை பிறந்தனன்‌
ஞாலத்தோ ரெலாம்‌ நன்கு மகிழவே. (10)

மைந்தனுக்கு வயதைந்‌ நான்காகவே
சிந்தை கூர்ந்து சிறுவனுக்கே மணம்‌
முந்தச்‌ செய்‌தனர்‌ மொய்குழ லாளொடு
நிந்தை யின்றி நிலைத்தவன்‌ வாழுநாள்‌. (11)

தந்தை மாண்டனன்‌ தரணியை யாளவே
சிந்தை கொண்டவன்‌ செங்கோல்‌ செலுத்துநாள்‌
முந்தை யூழினால்‌ மொய்‌ குழலார்பலர்‌
வந்து சேர்ந்தனர்‌ வயதினிளமையான்‌. (12)

பெண்கள்‌ மோகத்தால்‌ பெரிது முழன்றதால்
நண்ணொணா ஜன்னி சுரம்வந்து நண்ணியே
விண்ணவர்க்கு விருந்தாவா னென்றுமே
எண்ணவே யெய்தி யியைந்தது அன்னையும்‌. (13)

மாரி யாலயம்‌ வந்து வணங்கியே
வேரி மாலையான்‌ வேந்தன்‌ பிழைத்திடில்‌
பாரில்‌ பண்ணவர்‌ சிரம்‌ பதினாயிரம்‌
கூரரும்‌ பலிகொடுப்ப னென்‌ றேத்தினாள். (14)

என்று போற்றி யெழிலுட னிற்கவும்‌
மன்றல்‌ வீசு மலர்க்குழல்‌ மாரியும்‌
பொன்றல்‌ தீர்ந்தது பூவையே போகென
நன்று போற்றி நயப்புட னில்சென்றாள். (15)

கண்டு மைந்தனைக்‌ கனமுடன்‌ பிரார்த்தனை
கொண்ட வெண்ணத்தைக்‌ கூறச்‌ சினங்கொண்டு
உண்டு இப்படி யூழ்வினை னேர்ந்துபின்‌
பண்டு போலப்‌ பிழைத்ததைப்‌ பார்த்தனம்‌. (16)

பொங்கலிட்டுப்‌ புகழ்வதம்‌ மாரிக்குத்‌
திங்கள்‌ போன்ற நற்‌றேங்கா யுடைப்பதும்‌
மங்களம்பெற வாத்தியம்‌ வைப்பதும்‌
எங்குஞ்‌ செய்வர்‌ பிரார்த்தனை எண்ணிலார்‌. (17)

தலை கொடுப்பதாய்‌ பிரார்த்‌தனை செய்குவோர்‌
அலை கடற்புவி தன்னி லறிந்‌திலேன்‌
நலமதன்று நம்மாரியும்‌ நச்சிடாள்
தலமதில்‌ஆடு கோழி தருவரால்‌. (18)

என்ன மைந்த னிசைக்கவுங்‌ கேட்கிலா
தன்னை சொல்லை யழித்திடும்‌ பிள்ளைகள்‌
இன்னல்‌ சேர்நர கம்புகு வாரெனா
முன்னையோர்‌ மொழி முற்றும்‌ பொய்யாகுமோ. (19)

என்றவ்‌ வன்னை யிசைத்‌ததைக்‌ கேட்டுமே
நின்ற மன்னன்‌ நிலைதடு மாறியே
பொன்றல்‌ செய்யப்‌ புதல்வனைத் தாவென்று
மன்றல்‌ மாலையான்‌ மந்திரிக் கோதினான்‌. (20)

ஒற்றர் கூவியே வொருமக வீந்‌திடில்‌
பெற்றுப்‌ போகலாம்‌ பொன்‌ பதினாயிரம்‌
இற்றை நாளி லெவரிசைந்‌ தாலுமே
கொற்றவன்‌ முன்னேகொண்டுவா வென்றனன்‌. (21)

கேட்டதூ துவர்‌ கிளர்‌ பொருள்‌ கைக்கொடு
நாட்டிலும்‌ தனிக்‌ காட்டிலும்‌ போயவர்‌
வேட்ட னன்மன்‌ விரும்பிய பாலனைக்‌
கூட்டமாகக்‌ கொடுவரச்‌ சென்றனர். (22)

எங்கு ற்றும்‌ மெவரும்‌ மிசையாதலால்‌
மங்கை மன்னை மடிய வதைப்பளே
பங்கமாக நாம்‌ செல்லிற்‌ பழிப்பர்கள்‌
இங்கு காண்கிலமென்று தளர்ந்தனர்‌. (23)

வாடிச்‌ செல்லும்‌ வழியிலோ ரந்தணன்‌
தேரி வந்தென்‌ சிறுவனை யீகுவன்‌
கூடிப்‌ போவெனக்‌ கூறவழைத்துப்‌ போய்‌
நாடித்‌ தன்‌ மனையாளிடம்‌ நவிலுவான்‌. (24)

மனைவி கேட்க மகிழ்வுடன்‌ கூறுவான்‌
சினங்‌ கொளாது நம்‌ சிறுவனொருவனைத்‌
தனம்பெற்று விற்றுத்‌ தரணியில்‌ வாழலாம்‌
மனமதெப்படி மாது நீ கூறென்றான். (25)

மைந்தரைக்‌ கொல்ல விற்று வறுமையைச்‌
சிந்தை செய்வரோ சீரிலா வேழையும்‌
தந்தை தாயோ தனையனை விற்பவர்‌
எந்த வூரிலு மேலாதிச்‌ செய்கையே. (26)

மன்னர்‌ கோடிபேர்‌ மைந்த னில்லாமலே
சொன்ன சொன்ன விரதங்கள்‌ நோற்றுமே
ஈன்மை நேராது நாளும்‌ நலிவுற்று
இன்னல்‌ கொண்டு இறந்தவ ரெண்ணிலார்‌. (27)

அருணை மன்னன்‌ அருமக வற்றுப்பின்‌
தருமம்‌ செய்து சலித்ததை சங்கரன்‌
கருமஞ்‌ செய்பவன்‌ கானெனச்‌ காணவே
உரிய மைந்தனா யுற்று மறைந்தனர்‌. (28)

தனபதி யெனும்‌ வணிகனத்‌ தாழ்வினால்‌
கனம்பெறத்‌ தங்கை மைந்தனைக்‌ கைக்கொண்டு
சினம்பெறச்‌ சொன்ன சிறியவள்‌ வார்த்தையால்‌
வனஞ்சென்றே யின்னம்‌ வந்திலன்‌ கேட்டியால்‌. (29)

கால மெல்லாங் கவலையை நோக்கியே
சீல மைந்தரை விற்றிடில்‌ சேதிப்பர்
பாலனைத் தந்த பாவிகள் யாரென்‌றே
தாலத் தோர்கண்டு தானிசைப் பார்களே. (30)

வறுமை நேரினும்‌ வையத்தோர்‌ வைதற்கு
ஒருவழி சொல உற்றவர் யாருளார்‌
தரும்‌ வழியிலை தயவா யவர்களைக்‌
கருதிடாம லனுப்புவாய்‌ காதலாய்‌. (31)

என்று கேட்டபின்‌ ஏந்திழை கற்பினை
இன்று போக்குத லன்றோ‌ இசைமொழி
நன்று மல்ல நவையொழி கற்பினாய்
துன்ற நின்ற துயரொடு சொல்லுவாள். (32)

ஆவல்‌ கொண்ட வறியாத பாலனைக்‌
காவலன்‌ கொலக் கனவிலு மீந்திடேன்
பாவை முன்னின்று பன்னுசொல்‌ கேட்டுமே
தாவில்‌ மூத்த மகனையும்‌ தந்திடேன்‌. (33)

நடுவன்‌ றன்னையே நங்கையு மீந்திட
முடிவு சொல்ல மொழிந்த மொழிகொடு
படியில்‌ வீழ்ந்து பின்பாலன்‌ புலம்பியே
அடிகளே யென்னை யாதரியென்‌ றனன்‌. (34)

உண்டி கேட்டிலன்‌ உணவும்நான்‌ கேட்கிலன்‌
கண்ட எப்பொரு ளையுங்‌ கருதலேன்‌
சண்ட நேர்‌ஒற்றர்‌ தம்மொடு சார்வனேல்‌
மிண்டு செய்தென்றன்‌ மெய்தடிவார்களே. (35)

அன்னை யுன்றன்‌ அடிமடி பற்றுமே
என்னை யெப்படி காண்பாய் மனங்கொண்டு
பொன்னியே வுன்றன்‌ புருடன்‌ மடிந்திடில்‌
கன்னியே பிச்சையேற்‌ றுனைக்காப்பனே. (36)

பற்பல வகையாகவே கூறியும்‌
சொற்‌ பயனில்லை துன்னு முன்னூழையே
நற்பய னென்று நண்ணினன்‌ மன்னன்முன்‌
அற்பனாயவனும்‌ மிசைந்தனனரோ. (37)

அன்னை தன்கண்‌ ணனுப்பினான்‌ மைந்தனைக்‌
கன்னி காண்டலும்‌ கடுகியே பொங்கலை
முன்ன மிட்டுமே பூஜைகள்‌ முற்றியே
சின்ன மைந்தன்‌ சிரங்கொய்யச்‌ சொல்லுமுன்‌. (38)

வேறு.
தாயெனைவிட்டாள்‌ தந்தையோவிற்றான்‌ தரணியை யாண்டிடு மன்னன்‌
நேயமாயென்னைக்‌ காப்பனென்றெண்ணேன்‌ நீதியில்லவனுமேநீத்தான்‌
சேயெனைக்காக்க செல்வியே அடிமைசிறுவனுக்‌கருள்‌ செயாவிடிலோ
பேயெனச்சொல்வார்‌ நீதியோபாராய்‌ பிழையில்‌ முண்டகக்கண்ணெம்‌
அன்னாய்‌. (39)

பெரியம்மையெனவும்‌ சின்னம்மையெனவும்‌ பேர்பெற்ற ராமக்‌கமெனவும்
அரியதட்டம்மை பனையேறியெனவும்‌ அமர்தரும்‌ அக்‌கினிஎன்றும்
பிரியமாய்மைந்த ரழகெலாங்கெடுத்துப்‌ பேதுறக்காப்‌ப துன்கடனாம்‌
உரியநற்றாயே மைந்தனைக்கண்பார்‌ உயர்‌முண்டகக் கண்ணியம்மா. (40)

மைந்தரைக்காக்க மாரியாய்வந்து மயிலையில்‌ துதிசெயாநிற்கும்
சுந்தரியென்றன்‌ குறைதனைக்கேட்டு சுகமுடன்வுயிர்‌ பலிநீக்கி
அந்தரிகெளரி அபிராமிகாளி ஆதியவடிவமாய்‌ நின்று
வந்தகண்‌மணியே எந்தனைக்காக்க வரமருள்‌ முண்டகக்கணியே. (41)

என்றவன்‌ துதிக்க எம்மன்னையெழுந்து எழில்புரந்தன்‌ கையால்நீவி
நன்றுநின்றுதியால்‌ மகிழ்ந்தனமஞ்சேல்‌ நட்புடன்‌ மன்னனையழைத்‌து
பொன்றிடாவகையாய்த்‌ தடுத்துநற்பொருளைப்‌பொருந்தவே தந்திடப்பணிக்க
நின்‌றவன்‌ றனக்குமன்னனு நேர்ந்து நீதியாய்மனைசெல விடுத்தான். (42)

பெற்றதோர்பொருளைக்‌ கைக்கொண்டு வெளியேபோகுமுன்‌ தந்தையும்தாயும்‌
நற்றவப்பேறே நல்வினைப்பயனே நண்ணிய தெய்‌வமேயென்று
சற்றுமேதாழா தோடியேவந்து சார்ந்தனர்‌ தம்மிடங்‌கண்டு
பெற்றவப்பொருளால்‌ என்பயன்கண்டாய்‌ பேதுறல்‌ மொழியெனப்‌ புகன்றான்‌ (43)

விற்றதோர்பொருளு மிருந்ததுஒருநாள் விரும்பியே கைதொடவில்லை
மற்றநாளிரவில்‌ கள்ளர்கள்வந்து வலிந்தெமைத்‌ தூணினில் கட்டி
சுற்றியேகந்தை எரித்தனர்கொண்டு சென்றனர்‌ காசும்‌வையாமல்
சத்தியமாக மொழிந்தனம்‌ மகனேசங்கதி யீதெனப்‌ புகன்றார்‌. (44)

சிறிதுமேயிரக்கங்‌ கொண்டிலன்‌ அவன்மேல் சேண்படுநில மொன்றுவாங்கி
உரியசத்திரந்தான்‌ கட்டியேபலர்க்கும்‌ உபயோகப் படும்படிசெய்து
கருதியநீர்மோர்‌ யாவர்க்குந்தந்து கனிவுடன்‌ உபசரித்திருந்தான்‌
தெரிதரப்‌ பனவன்சாவடியென்று செப்புவர்‌ யாவருமினிதே. (45)
வேறு
மாரியினருளால்‌ மைந்தன்‌ மன்னவன்‌ வரிசைபெற்று
சீரினையடைந்த கீர்த்தி சிறப்புடன்‌ சொற்றாம்பின்பு
நாரியாம்‌ தூருவாசன்‌ நங்கையால்‌ கரமுகத்தைப்‌
பாரினில்‌ சதமகற்குப்‌ பயந்தவா மொழிதல்செய்வாம்‌. (46)

முண்டகக்‌ கண்ணம்மை சரித்திரம்‌ முற்றிற்று.
——

14. இந்திரன்‌ கரமுகமான சரித்திரம்‌

பொன்னுலகாளும்‌ அண்ணல்‌ புகாரெனும்‌ பட்டினத்தில்‌
மின்னிடுந்‌ தடத்தைக்கண்டு மிகுவியப் பெய்திநோக்கக்
கன்னியி னழகுகாந்‌தி மதியெனும்‌ பெயருக்கேற்ப
உன்னியே நோக்கலுற்றா னூழ்வினை வயத்தாலம்மா. (1)

மாதவள்‌ தடாகம்விட்டு வருமுனே மஞ்சனெஞ்சம்‌
வேதனை கொண்டசொத்து விழியெலாஞ்‌ சிவந்துமாழ்கி
பாதக னவிடம்விட்டுப்‌ படர்ந்திடா தெதிர்போய்நின்று
போதில்வாழ்‌ மணியேநீயார் புகலுவாயென்று கேட்டான்‌. (2)

என்வர வுனக்குவேண்டா மேந்தலே செல்கவென்னப்‌
பொன்நகர்‌ வேந்தன்பாவாய்‌ பொற்புறு மதனம்பாலே
இன்னல்‌ நானடையாவண்ண மின்பத்தை யளிப்பாயானால்‌
பின்னொரு நாளுங்கிட்டாப்‌ பேரின்ப மடைவேனேன்றான். (3)

மற்றொருவனைச்‌ சேர்மாது மரணம தடைந்தகாலை
சுற்றியே பாசம்வீக்கிச்‌ சொல்லொணா நரகமெல்லாம்‌
உற்றிட நமன்செய்கோல மொருவரு மறியார்கொல்லே
சற்றுநீ நோக்கிடாது சாற்றிய தவறுக்காக. (4)

முன்னமே யகலிக்காக முழுவுடல்‌ குறியைப்பெற்றே
இன்னலால்‌ பட்டபாட்டை யெண்ணிலா றேனால்நீயும்‌
மன்னனா யிருப்பயிததாலே மனுவெனும்‌ வரம்பைவிட்டாய்‌
பன்னிடுங்‌ கரமுகத்தைப்‌ பாவிநீ யடைவாயென்றாள்‌. (5)

கண்களெண்ணி லாதுபெற்றுங்‌ கரமதின்‌ முகத்தைப்பெற்று
நண்ணிய விதியைநோக்கி நாணத்தால்‌ வெளிகாட்டாது
புண்ணிய மிருந்தும்போற்றான்‌ புன்கணோய் விளைவும்பாரான்‌
எண்ணியே யெவருங்காணா தேகினான்‌ முழையிலம்மா. (6)

இன்னண முகத்தைப்பெற்று மிந்திரன் மனங்கோணானாய்ச்‌
தன்‌விதிதானே நொந்துஞ் சார்விலார்‌ தம்மனோர்க்கே
யன்னையாய்‌ வந்துகாப்பா னருளென்‌று வாய்ப்பதந்தோ
முன்னையூழ்‌ வினையின்செய்கை மூடனா னறியேனென்பான்‌. (7)

கற்பக நாடரெல்லாங்‌ கண்டிலா ரரசன்றன்னை
நற்பய னடையச்சென்று நான்முகன்‌ றன்னைக்கேட்க
விற்பன முடையான்‌தேடி விண்டுவுக்‌ குரைத்தலோடும்‌
அற்பனாய்ச்‌ செய்தசெய்கை யறிந்தவ னுரைக்கலுற்றான். (8)
பையர வணிந்தவேணிப்‌ பகவனே போன்‌ றமேலோன்‌
துய்யதோர்‌ தூருவாசன்‌ றுணைவியைக்‌ கண்டபாவி
நையவே புகன்றசொல்லால்‌ நற்கர முகமாகென்று
வெய்யதோர்‌ சாபமிட்டாள்‌ விளைந்தவச்‌ சாபந்தன்னால். (9)

கரமுகமேற்ற பாவி கலங்கியே யுழல்கின்றானைத்‌
திரமுறைக்காண வேண்டில்‌ தேடிநீரலைய வேண்டாம்‌
புரமெரிசெய்தோன்‌ வாழும்‌ பூம்புகார்‌ நகரந்தன்னில்‌
சிரமத்தோடுழல்‌ வோன்றன்னைச் சென்றுபோய்க் காண்பீரென்றான்‌ (10)

கேட்டலும்‌ விண்ணோரெல்லாங்‌ கேடிலாப்புகாரை மேவி
நாட்டமாய்த்‌ தேடவங்கே நவில்வினையடைந்த தீயோன்‌
வாட்டத்தைக்‌ கண்டுவாடி வரம்பெற வழக்கைக்கேட்டுத்‌
தேட்டமின்றியதால் நேர்ந்த தீவினை தீர்ப்பீரென்றான்‌. (11)

மீட்டுமாலிடத்தில்‌ வந்து மேவினார்‌ சொல்லக்கேட்டு
வாட்டமில்லாது நல்ல வடிவினைப்‌ பெறுவதற்கே
நாட்டினில்‌ மயிலைமேவி நலந்தரும்‌ கபாலிதீர்த்தம்
ஆட்டிலவ்‌ வுருவுநீங்கி யாயிரங்‌ கண்ணனாவான்‌. (12)

என்றவர்‌ புகலக்கேட்டே யெழில்பெறு தேவரெல்லாம்‌
மன்‌றினில்‌ நடனஞ்செய்யும்‌ மன்னன்‌ற னருளைவாழ்த்தி
நன்றென மயிலைவந்து நலந்தருந் தீர்‌த்தங்கொண்டு
கன்றிய சாபந்தீரக்‌ கடவுள ராட்டினாரே. (13)

மயிலையின்‌ தீர்‌த்தத்தாலே மகபதியுருவம்‌ வாய்ந்து
குயிலொத்த மொழியாள்‌ பாகங்கொண்டவர்‌ தம்மையன்பாய்‌
நயனத்தால்‌ காணவேண்டி நற்கன்னி பெளர்ணமிக்கண்‌
தயிலத்தாலாட்டி யாட்டித்‌ தான்செய்தானவண்‌ வந்துற்றே. (14)

விண்ணகர்ப்‌ பொருள்கள்‌ தம்மில்‌ விதம்விதமாகக்‌ கொண்டும்‌
மண்‌ணுலக தனிலுள்ள மறுவிலாப்‌ பொருள்கள்‌ யாவும்‌
அண்ணல்‌ பாதாளந்தன்னி லளவிலா விதங்கள்முற்றும்‌
திண்ணமாய்‌த்தேவர் விண்ணோர்காணவே சீர்செய்தானால்‌. (15)

பாகற்காய்‌ கத்‌திரிக்காய்‌ படர்புடலங்காய்‌ மாங்காய்‌
மாகமார்‌ வாழைக்காயும்‌ மடற்பனை தென்னங்காயும்‌
வாகைசேர்‌ பூசனிக்காய்‌ வளர்வண்டை பீர்க்கங்காயும்‌
சோகந்தீர்‌ கொத்தரைக்காய்‌ சுகந்தரும்‌ கன்னல்கோலே. (16)

இருவித நெல்லிக்காயு மினியதோர்‌ மாசிக்காயும்‌
பருவர லொழியாரஞ்சி பழுதில்‌ கிச்சிலியுமீச்சன்‌
மருவிடு முருங்கையத்தி மாதுளம்‌ பலாவன்னாசி
தெருள்‌தருஞ்‌ ஜம்புநாகன்‌ தேர்ந்துமே வரிசைநாட்டி. (17)

அவரையும்‌ துவரைக்காயு மழகுநெற்‌ கதிரின்கற்றை
எவரும்வாயூறு மிஞ்சிஎலுமிச்சன்‌ நார்த்தங்‌ காயும்‌
நவமதாம்‌ சுரைக்காய்‌ மொச்சைநவின்‌றிடு வெள்ளரிக்காய்‌
அவமிலா முந்திரிக்கா யன்புடனாட்டிப்‌ பின்னா்‌. (18)

பன்னரும்‌ விளாம்மெலாங்‌ காய்பரிவிலாதாழங்‌ காயும்‌
பொன்னெனும்‌ புளியங்காயும்‌ புகழ்பொன்னாங்‌ கணிகடுக்காய்‌
துன்னிடும்‌ தூதுளங்காய்‌ துதித்திடுங்‌ கமுகங்கொத்தும்‌
இன்னலை நீக்கேலக்கா யெழில்‌ பிரப்பங்காய்‌ நாட்டி. (19)

கண்டவர்‌ கண்கள்பெற்ற பேறெனக்‌ கபாலிதன்னை
மண்டலர்‌ தன்னிலுள்ள மதுரமார்‌ கனிகளோடு
கொண்ட நற்றாமம்‌ தேங்காய்கோ திலாச்‌ சூடமேத்தி
அண்டரும்‌ மகிழ்ச்சி கொள்ளவன்புடன்‌ துதிசெய்வானால்‌. (20)

வித்தகமணியே போற்றி விண்ணவர்‌ தலைவாபோற்றி
பத்தியில்லாத மூடன்பாசத்தால்‌ செய்த குத்தம்‌
முத்தனே பொறுப்பாய்‌ போற்றி முப்புரமெரித் தாய்போற்றி
நத்தனே மயிலைவாழும் கபாலியே போற்றிபோற்றி. (21)

மின்னனாள்‌ தன்னால்நேர்ந்த மிகுபழிதொலைத்தாய்‌ போற்றி
என்னையும் பொருளாய்க்கொண்ட ஏந்தலே யினியுன்பாதம்‌
தன்னையே வணங்கி நாளுந்தாழ்‌ வினின்பேரை யேத்தி
உன்னியே வாழவைப்பாய்‌ உத்தமாபோற்றி என்றான்‌. (22)

மாமனாய் வந்தவையர்‌ மகழ்ந்‌துனக்‌ கருள்வோம்யாவும்‌
பூமனுங் குழலினாளும்‌ பொற்கலை நூல்வல்லாளும்‌
காமவேள்‌ தன்னைப்போல கற்பக நாட்டுளோரும்‌
நாமமே வாழ்த்தவாழ்வாய்‌ நலம்பெற வரந்தந்தோமே. (23)

என்றவர்‌ புகலக்கேட்டே யெழில்பெறு மயிலைநீங்கக்‌
கன்றிய மனத்‌தினோடு கபாலியி னடியைப்போற்றி
நின்றிடத்‌ தேவரோடும்‌ நிமலனார்‌ விடைபெற்றன்றே
சென்றனன்‌ மகிழ்ச்சிபொங்கச்‌ சேர்ந்தனன்‌ கனகலோகம்‌. (24)
பொன்னுல கதனில்வந்த புரந்தரன்‌ புலவரோடும்‌
தன்னுழை யிருந்தகாதை சாற்றின மல்லிசெய்யும்‌
முன்னமே தவமழிக்க முடுக்கிய மேனைஎன்னும்‌
கன்னலின்‌ மொழியினாளால்‌ கடிந்தவச்‌ சீர்த்திசொல்வாம்‌. (25)

இந்திரன்‌ கரமுகமான சரித்திரம்‌ முற்றிற்று.
-------------------------

15. மல்லீசர் சரித்திரம்

அருள்பொழியு மயோத்திநகர்‌ வாழப்பெற்ற
      வருள்மூர்த்தி யந்தணன்றன் புதல்வனாகிப்‌
பெருமைபெறப்‌ பிரார்த்தனெனப்‌ பேரும்பெற்றுப்‌
      பிரியமுடன் கல்வியில் வல்லவனுமாகி
அரியமறை முழுதுணா்ந்து ஆய்ந்துதேர்ந்து
      அழியாதவுடல்‌ பெறவேஅன்பு கொண்டு
கருவதனைப்‌ போக்குபவ ரியாவரென்று கருதிவரக்
      கைலாச பதியென் றோர்ந்தான்‌. (1)

வேறு
மானதமோ வாசிகமோ காயிகமோ மன்னுலகி
லூனமிலா விவைமூன்றி லுற்றது காயிகமொன்றே
ஞானமயமான சிவன்‌ நண்ணியதோர்‌ தலஞ்சூழ்ந்து
வானவர்கணிதம்‌ பரவும்‌ வளர்மயிலை வந்தடைந்தான்‌. (2)

அம்மைதவம்‌ புரிந்தபதி யருளெளிதிற்‌ றருமென்றே
செம்மைதவச்‌ சாலையொன்று சிறப்புடனே தானமைத்திட்‌
டிம்மையிலே முத்திதர வெம்பெருமான்‌ றிருவுருவாம்‌
மும்மையிலும்‌ பேறளிக்கு முதல்வரையே தாபித்தான்‌. (3)
மண்ணுலகோர்‌ மருட்கொள்ள மாமுனிவர்‌ மிகவாழ்த்‌த
விண்ணவர்கள்‌ மனங்கலங்க விழைந்து தவம்‌ புரிநாளில்‌
பண்ணவர்கள் சகியாது பாரிறவஞ்‌ சிதைத்திடவே
புண்ணியமே வுருக்கொண்ட பொன்னுலகஞ்‌ சென்றார்கள்‌. (4)

இ‌ந்திரனைக்‌ கண்டவுட னிடுக்கணதை எடுத்துரைக்க
தந்‌திரமாய்‌ மேனகையைச்‌ தான்குறித்துச்‌ சாற்றிடுவான்‌
பைந்தொடியே மயிலையினிற்‌ பண்புடனே தவஞ்செய்யுஞ்‌
சுந்தரனைச் சேர்ந்து தவஞ்சிதைத்திடெனச்‌ சூளுரைத்தான்‌. (5)

கேட்டவுடன்‌ பைந்தொடியுங்‌ கிளர்ந்‌துமனங்‌ குதுகலித்து
நாட்டமதின்‌ மையெழுதி நலங்கிளர்‌ பொன்மணிபூண்டே
யீட்டரிய தவமழிக்கு மெழிலழகி யெனப்போற்ற
தாட்டுணையிற்‌ கிண்கிணியுந்‌ தகுசிலம்புந்‌ தான்‌றரித்தாள்‌. (6)

மேனகையைக்‌ கண்டவுடன்‌ மெழுகனல்‌ பட்டெனவுருகி
வானவரும்‌ தான்வணங்க வந்தவளும்‌ மல்லிவனத்‌
தூனமிலாத்‌ தவஞ்செய்யு முயர்முனியை நாடிவந்து
மானவரி லுத்‌தமனை மல்லிகை கீழ்க்கண்டனளால்‌. (7)

நாட்டங்க ளிரண்டொழிய நண்ணுமுடல்‌ முற்றிலுமே
வாட்டமிலா வன்மீகமூடியதால்‌ வள்ளல்‌ தவச்‌
சேட்டுணையும்‌ பாய்ந்துவிழுஞ்‌ செழுந்தீயி னருகில்செல
மாட்டுவனே யென்றென்றே மதிமயங்கிப்‌ புலர்ந்தனளால்‌. (8)

தவமழிக்கா தேகுவனேல்‌ சாற்றுவான்‌ பெருஞ்சாபம்‌
பவமதனிற்‌ பிறந்‌துழலப்‌ பவநேருமென வயர்ந்து
சிவமேயுன்‌ றிருவுள்ளந்‌ தெரிகிலன்‌ சிறியாள்யான்‌
அவநேரா தெனைக்காக்க வடியாட்கு அருளுதியே. (9)

எம்பெருமான்‌ றவநீங்க வேழுலகுந்‌ தவமழித்தேன்‌
நம்பியெனை யனுப்பினபின்‌ நற்றவனைக்‌ காணுங்கால்‌
வெம்பியுளந்‌ தீச்சுடவே வேதனையால்‌ மிகமெலிந்து
தம்பெரிய மாயையினாற்‌ றனிவனத்தைத்‌ தானமைத்தாள். (10)

மாமரமுங்‌ கூவிளமு மந்தரையுங்‌ கோங்கரும்பும்‌
காமரங்க ளொலியிசைக்குங்‌ கருங்கோட்டுப்‌ புன்னைகளுஞ்‌
சேமசமும்‌ பாதிரியுஞ்‌ செறிந்தகொடி முந்திரியுஞ்
சாமரம்போல்‌ குலைகாட்டுஞ்‌ சார்கமுகுந்‌ தானமைத்தாள். (11)

குயிலிசையு மெக்காளக்‌ குணத்தொனியுந்‌ தூதைகளின்‌
பயிலொலியும்‌ நடனமுடன்‌ பசுந்தோகை விரித்தாடும்‌
மயிலினமுந்‌ தத்தைகளின்‌ வாழ்த்தொலிபோய்‌ வனமெங்கும்‌
அயில்பொருவேற்‌ கண்ணாளு மழைக்குமொலி யெனவிசைப்ப. (12)

மல்லிமுல்லை சண்பகமும்‌ மாவலரி பிப்பிலியும்‌
அல்லிமரை செவ்வல்லியழகு கொன்றை யிருவாட்சி
பல்லவஞ்சூழ்‌ பாதிரியும்‌ பரந்‌துமணஞ்‌ சூழ்ந்துவிம்ம
வெல்லையில்லா மணத்தென்ற லெய்தலினாற் றவந்தெளிந்தான். (13)

நாட்டமதைத்‌ தான்‌ திறந்து நாடுமுன்னே பெண்கொடியும்‌
நாட்டியத்தைத்‌ தான்புரிய நகையொளியு முருவொளியுங்‌
காட்டினிலே நான்காணக்‌ கனதவங்கள்‌ செய்தனெனக்‌
கேட்டமட வாடானுங்‌ கிட்டினது சூளென்றாள்‌. (14)

மீண்டுமுனி மேல்‌ நோக்க மின்னிடையு மருகில்வரக்‌
காண்டலுமே கண்சிவந்து கன்னியரே யாரென்ன
மாண்ட தவமாதவனே மாதுமுனைச்‌ சேர்வதற்கே
யீண்டுவந்தேயுன்‌ னருகிலெண்ணில நாட்டவ மிழைத்தேன்‌. (15)

எண்ணரிய தினமாக யானியற்று்ந்‌ தவமின்றே
நண்ணுபய னளிப்பதுபோ னன்மொழியுங்‌ கேட்டனனால்‌
உண்மையுட னெனைக்கூடி யூடறணி விப்பதுவே
ஒண்பிறப்பாணுக்குச்‌ சுகம்‌ வேறுண்டோ வோதுங்கால்‌. (16)

மாதுதிருவாய்மலர மாமுனிவர்‌ செயிர்த்து நின்று
கோதிலாத்‌ தவமழிக்கக்‌ கோரிவந்தா யாதலினால்‌
நீதியுட னின்பதி தாள்‌ நேரிழையே கூடென்று
ஓதிவிடக்‌ கேட்டபின்ன ருன்னியிவை கூறுவளால்‌. (17)

மாதர்களே வலியவந்தால்‌ மறுப்பதுவு நீதியல
காதலனென்‌ றொருவனிலைக்‌ கவினுடையோன்‌ காதலனே
பூதலத்தி னகலிகையைப்‌ பொன்னாட்டி னிந்திரனும்‌
ஆதரவாய்க்‌ கூடினதை யறியாரார்‌ கூறுகவே. (18)

ஆரியன்றன்‌ றேவிதனை யாதரவாய்‌ மதிகூடிப்‌
பாரிலின்னம்‌ பழிநாளும்‌ பகர்ந்திடுத லறியாரார்‌
காரிகைத னற்பயனால்‌ கண்ணுதலார்‌ சிரமீதி
லேறிடவும்‌ பதம்பெற்றா ளெவர்பெற்றா ரியம்பிடுவாய். (19)

வேடர்பெண்ணைக்‌ கூடுதற்கு வேலவனுங்‌ கானிலுள்ள
நாடறிய குற்றமெல்லாம்‌ நண்ணிநண்ணிப்‌ பின்புணர்ந்தான்‌
தேடரும்‌ பெண்கிட்டாது தெருவெல்லாம்‌ நின்றேங்கிப்
பீடுபெற வைங்கரனும்‌ பேதுறுத லாரறியார்‌. (20)

இமயமலைச்‌ சாரலிலே யீசனார்‌ பெண்தேடி
சமயமது நேராமற்‌ சஞ்சலத்தான்‌ மிகமெலிந்தார்‌
அமயமெனைக்‌ கூடுதற்கே வருள்செய்ய வேண்டுமெனத்
தமனியநேர்‌ தனக்குன்றைத் தான்காட்டிப்‌ புல்லலுற்றாள். (21)
வேறு.
கண்டுவெகுண்டனன்‌ கண்ணுதல்போல
வண்டர்களேவ வணைந்தனையென்றா
லொண்டொடி யுன்னுடனோர்‌ தினங்கூடில்‌
மண்டனிலென்றவ மாய்ந்‌ திடுங்‌ கொல்லே. (22)

அரிய தவம்புரிந்‌ தண்ணலி னடியைக்‌
கரியவன்‌ காண்டிலன்‌ காரிகை கேளாய்‌
தெரிவையர்‌ தோளையான்‌ றீண்டகிலேனால்‌
புரிதவந்‌ தவிர்கிலேன்‌ புகலுவன்மானே. (23)

அரைக்கணத்‌ தேயழி யரிவைய ரின்பம்‌
தரைக்கண்பல்‌ லூழிநாட்‌ டாழ்ந்‌ திடச்‌ செய்யும்‌
விரைகுழல்‌ நங்காய்‌ விளம்புவன்‌ கேண்மோ
வரைவிலா மங்கையர்‌ வாழ்வொரு வாழ்வோ. (24)

ஆதலி னாலுனைத்‌ தீண்டுவ னல்லேன்‌
மாதரைத்‌ தூதனாய்‌ மறலி விடுப்பான்
தூதென வெண்ணிக்‌ துணிந்து துறந்தேன்‌
போதுதி யென்று புகன்று வெகுண்டான்‌. (25)
வேறு
என்னலுங்கேட்டு வாடியேந்தலை நோக்கிச்‌ சொல்வாள்‌
பன்னகாசனனுஞ்‌ சேரப்பாங்கினி லழைக்கப்‌ போகேன்‌
நன்மையா யின்னுஞ்சொல்‌வே னலிந்‌திடச்‌ செய்வையாகில்‌
பன்னுவேன்‌ சாபமென்று படிறுகள்‌ பகர்வதானாள். (26)

சாபமென்றுரைக்கு முன்னே சாம்பராய்ச்‌ செய்வேனின்‌னும்‌
கோபமுங்கொள்ள கில்‌லேன்‌ கொற்றவைபோல நின்று
தாபமாய்க்கூறக்‌ கேட்டே தணிக்கவே மார்க்கஞ்சொல்வேன்‌
நீபமாவிருக்கத்தின்‌ கீழ்‌ நீதவம்‌ புரிதியென்றான்‌. (27)

(வேறு)
என்றிடலு மேனகையு நாணிநின்றே யியம்புவா ளென்‌றலைவா
      இணங்காவிட்டால்‌
பொன்றிடுவேன்‌ பழிசூழும்‌ புகழும்நீங்கும்‌ புவிதனிலே
      யுனைநிந்தை புகல்வர்‌ கண்டாய்‌
மன்‌றினிலே நடஞ்செய்யு நாதன்றானு மாதரையேநோக்கி
      யவனாடாநிற்க
வன்‌றிலென விருவருமே கூடியன்பி னாழ்கடலின்முழுகி
      டவேயருள்‌ செய்வாயே. (28)

பொன்‌றிடினும்‌ நான்சேரேன்‌ பொய்யுஞ்‌ சொல்லேன்‌
      புரிந்ததவமழியவரும்‌ போவாயென்ன
மன்றினிலே யெனையணைந்துஞ்‌ சுகமேயில்லை வலியவுயிர்‌
      விட்டிடிலுன்‌ வாழ்வுநீங்கும்‌
என்றனுக்கு நட்டமிலை யேகுவாயென்‌ றியம்புமொழி
      கேட்டவளு மேந்தலேகேள்‌
நன்றிதுவே நங்கையின்றன்‌ காமநீக்க நற்றவசு
      சித்தியென நவிலும்‌வேதம். (29)

வேதமே பொதுசிறப்பென்றறியாய்‌ நீயும்‌ வேகவைக்குங்‌
      காமமென்றே விரித்துச்‌ சொல்லும்‌
நாதனே யெனைக்கலந்து காமநீக்கனல்ல மறைச்சம்மதமும்‌
      நவின்றேன்‌ கேளாய்‌
ஆதலால்‌ பெண்ணைவிட்டார்‌ தனிக்கமாட்டா ராலிலையான்மார்பில்‌
      வைத்தானயனோ வென்று
லோதிடுதன்னாக்கில்‌ வைத்தான்‌ சிவனோவென்றா லொருபாதி
      யிடங்கொடுத்தா னுற்றுப்பாரே. (30)

கந்தனோயிருபாலும்‌ பெண்ணைக்‌ கொண்டான்‌ கடவுளர்கோன்‌
      கரமுகத்தை வாய்க்கப்பெற்றான்‌
சிந்தையிலே பெண்கிட்டா தலைந்தார்‌ சித்தர்சிறப்பெல்லாம்‌
      பெண்கணல்லால்‌ வேறேயுண்டோ
நிந்தைசொலி யெனைநீக்கி னீதியல்ல நீலகண்டனருள்‌ பெறுவாய்‌
      யென்‌ னைமேவின்‌
மைந்தர்களை யான்பெறுவேன்‌ வீடும்வாய்க்கும்‌ மறுத்தோர்க்கு
      நரகமது மன்னுந்தானே. (31)

(வேறு)
இனியமொழி கூறுவதை யேந்தலவன்‌ கேட்டுப்‌
பனிமொழியுன்‌ னெண்ணம்விடு பாவமிது கேண்மோ
தனிவருத னீதியல தாபத ரிணங்கார்‌
முனிவுசெயி னரகமுறும்‌ மூளும்வினை யென்றான்‌. (32)

என்றமொழி கேட்டவுட னேந்திழை நிலத்தில்‌
குன்றமென நின்‌றவளுங்‌ குப்புற விழுந்தே
வன்‌றிறலி லின்னுயிர்தன்‌ வாழ்க்கையது நீங்கி
பொன்றினள்போ னின்றிடவும்‌ புண்ணியன்‌ வெருண்டான். (33)

கண்டவுட னேந்திழையைச்‌ கையினி லெடுத்தே
யண்டர்புகழ்‌ மல்லிமுனி யன்புடனணைக்க
புண்டரிகம்‌ பூத்ததென பூவைகண்‌ விழிக்க
விண்டுமொழி பேசிடவும்‌ விம்மித மடைந்தான்‌. (34)

மெல்லியடன்‌ மேனிபட மெழுகெனக்‌ கரைந்து
வல்லியைப்‌ புணர்ந்தபினர் வள்ளலவ ணீங்கி
மெல்லென வெழுந்தவளை மேவுதலை விட்டே
வொல்லெனமுன்‌ போன்றுதவ முஞற்றுதலை நீத்தான்‌. (35)

விண்ணவரு மேவரிய மேனை வடிவாலே
மண்ணுலகி றவன்றவ மழிந்ததையு நோக்கிக்
கண்ணுதல்‌ கபாலியைக்‌ கருத்‌தினிலை நாட்டிப்‌
புண்ணிய விலிங்கமதைப்‌ போற்றித் துதிசெய்வான்‌. (36)

(வேறு)
அடியவர்கட்‌ காரமுத மானாய்‌ போற்றி
ஆதியே வருள்செய்யு மண்ணால்‌ போற்றி
படிமீதி லென்பிழையைப்‌ பொறுப்பாய்‌ போற்றி
பரிவுடனே வரமருளும்‌ பண்பா போற்றி
கொடியனேன்‌ செய்பிழையைக்‌ கொள்வாய்‌ போற்றி
கொற்றவனே கோரும்வரங்‌ கொடுப்பாய்‌ போற்றறி
கடிகமழு மலர்‌வேணிக்‌ கபாலி போற்றி
கண்மூன்றாய்‌ சிறியேனைக்‌ காப்பாய்‌ போற்றி. (37)

(வேறு)
போற்றுமொலி கேட்டவுடன்‌ புண்ணியன்முன்‌ றோன்றி
ஆற்‌றரிய நற்றவனே யஞ்சலைநீ யென்றே
மாற்றரிய விக்குறியில்‌ மகழ்வுட னிருப்போம்‌
சாற்றுவது நின்பெயரைச்‌ சாந்தமுடன்‌ கொண்டோம்‌. (38)

எனமொழி யிசைத்தவுட னெந்தை யடிதாழ்ந்து
சினவிடைகொள் நாதனருட்‌ சேவடியி லன்பும்‌
மனமகிழ மாகயிலை மன்னியுறு வாழ்வும்‌
வினவின னளித்தியென விடையவ னளித்தான். (39)

(வேறு)
விடையவனருளைப்‌ பெற்ற வித்தக மல்லியென்பான்‌
கடைமுறை யிலிங்கமேற்றிக்‌ கதிபெற்ற சரிதமீதால்‌
அடையவுஞ்‌ சிவமேயென்ற வருள்முனி காரணீசன்‌
படியினில்‌ வந்தகாதை பகருவேன்‌ முனிவீர்கேண்மின்‌. (40)
மல்லீசர்‌ சரித்திரம்‌ முற்றிற்று.
------------------

16. காரணீசுரர்‌ சரித்திரம்‌.

சீர்பெருகு முத்தம்வளர்‌ சிந்துநதி தென்பா
லேர்பெருகு தண்மருத மெய்துவள மோங்கிப்‌
பார்புகழும்‌ பத்மபுரி பசுபதியின்‌ மைந்தன்‌
தார்தவழு மோர்மறையோன்‌ றனஞ்சய னிருந்தான்‌. (1)

பொய்களவு காமமுதல்‌ போக்கிய வுளத்தான்‌
மெய்யுரையை நாடொறும்‌ விருப்புடன்‌ வளர்ப்பா
னையரிகண்‌ மங்கையர்க்‌ கனங்கனை நிகர்ப்பான்‌
செய்வனவிங்‌ கியாவையுஞ்‌ சிறக்கவே முடிப்பான்‌. (2)

அல்லல்படு மிப்பவ மழிக்க சிவனல்லா
லில்லையென வென்றுமே யியம்புமனு வாயான்‌
தொல்லைமறை யாவையுந்‌ தொடுத்துநித மேத்தி
யெல்லையறு சீரிறைவ னேற்கமகஞ்‌ செய்வான்‌. (3)

தந்தையது நோக்கிமணந்‌ தக்கவகை யாக
முந்தைபுரி வேதநெறி முற்றமதி காந்தி
சுந்தரக்‌ கழுத்‌திலொளிர்‌ சுற்‌றமுத லாய
தந்தமது நண்பர்கண்முன்‌ றாலிதரிப்‌ பித்தான்‌. (4)

காதலனும்‌ காதலியும்‌ கண்டவர்‌ வியக்க
நீதியுட னில்லறம் நிகழ்த்திவரு நாளில்
பேதைமதி காந்தியவள்‌ பேணியிசை வாகப்‌
போதமுடை நாயகனைப்‌ போற்றிவர லானாள்‌. (5)

வேறு
அருகிலுள்ள மனையில்‌ வாழ்‌ கின்றவ
ளுருகி வெந்துதா னுற்றவள்‌ கற்பினைப்‌
பருகித் தன்னையே பற்பலர்‌ நிந்திக்கக்‌
குருமொழி யெனக்‌ கூறுதல்‌ மேயினாள்‌. (6)

அழகு வாய்ந்தது மன்னியர்‌ தோணலம்‌
பழக நித்தம்‌ பருகுதற்கே யன்றோ
நிழல்செய்‌ யெளவனம்‌ நீங்கும்‌ வயதினி
லழகனைத்‌ தொட வஞ்சுவ ராருமே. (7)

கிஞ்சுகக்‌ குரல்‌ கேட்டியால்‌ கீர்த்தியில்‌
விஞ்சு தோளனை மேவி யணைந்திடி
லெஞ்ச லில்‌சுக மென்பது தோன்றும்பின்‌
நஞ்செனக்‌ கொள்வை நாயகன் றன்சுகம். (8)

புணர்ச்சி யென்பது புந்தியிற் றேர்ந்திலா
யுணர்ச்சி நீங்கிய ஒண்பது மைத்திரங்
கணிகைபோலக்‌ கணவன்‌ விடா யென்றுந்‌
தணித்த லாமெனத்‌ தக்கவர்‌ சொல்வரால்‌. (9)

பேதைமை யென்றல்‌ மாதர்க்‌ கணியென
நீதிநூலி னிகழ்‌த்‌து மொழி யினால்‌
மாதர்‌ தம்மன மற்றொர்பால்‌ பற்றிடாக்‌
காதல்‌ கற்பினைக்‌ கைவிடா ரென்பரால்‌. (10)

காதலி நீயே யென்பரங்‌ கைவிடாப்‌
போதில்வாழ்‌ திருவே யென்று போற்றுவார்‌
நீதி யென்று நினைக்கிலை நங்கையே
ஓதுவன்‌ றன்‌ சுகம்பெற லுன்னியே. (11)

வேறு
இன்பம்‌ கொள்ளவே யிக்கதை யாயிரந்‌
துன்ப மெய்தச்‌ சுடுமொழி கூறிடார்‌
அன்பு மிக்க வருள்கொடு துய்த்தபின்‌
வன்பி லாயிரம்‌ வார்த்தைக ளேசுவார்‌. (12)

என்று கூறுமின்‌ னல்மொழி கேட்டபின்‌
பன்றி யுண்பது பவ்வியல்லால்‌ பழம்‌
நன்று கொள்ளுமோ நன்மண மேற்குமோ
புன்மொ ழிக்குப்‌ பொறாதென துள்ளமே. (13)

வழக்கு நாள்செல வாய்த்த நன்னாளினில்‌
பழக்க மான பதியுநல்‌ லோரையில்‌
குழுக்க ணித்திரை செய்தபின்‌ கூடியே
யிழுக்கு நேரா திருந்துயில்‌ கொள்வனால்‌. (14)

நல்ல நாளினி னற்பதி கூடினா
லல்ல னீங்கு மறிவுட னாண்மையும்‌
வல்ல செல்வமும்‌ வாழ்வய தோங்கலு
மெல்லை யில்பல மெய்துவன்‌ மைந்தனே. (15)

தீய நாளினி லாடவர்‌ கூடிடில்‌
மாய மைந்தனை மறலிகொள்வான்‌ விடிற்‌
றோய குட்டமுந்‌ தொலையாப்‌ பிணியுடன்‌
தேய முற்றுந்‌ திரிகுவன்‌ மூர்க்கனாய்‌. (16)

திங்க ளொன்றுக்‌ கொருதினந்‌ தேடியே
மங்கை யென்னை மகிழ்வுடன்‌ கூடவே
செங்கை கொண்டநற்‌ செல்வரைப்‌ பெற்றனன்‌
இங்கு நின்மதி யேற்பது கைக்கொளேன்‌. (17)

கற்பினை விட்ட காரிகை தன்னையே
பற்பலர்‌ நிந்தை பண்ணவும்‌ நேரிடும்‌
அற்பர்‌ போன்ற வரங்கையைப்‌ பற்றுவர்‌
நிற்பர்‌ வெந்நிர யத்திலெஞ்‌ ஞான்றுமே. (18)

கால தூதர்‌ கழுத்தறி யேற்றுவார்‌
ஆலம்‌ வீசு மழல்முனை நாட்டுவார்‌
சூல மீதினில்‌ சுற்றியே வீசுவார்‌
ஏல வீயத்தைக்‌ காய்ச்சி யுகுப்பரால்‌. (19)

எந்தக்‌ கோது மெமன்பொறுக்‌ கானெனிற்‌
றந்தை யொத்த தலைவற்‌ பழித்திட
நிந்தை பெற்றிடு நேரிழை தன்னையே
சிந்தை வேகச்‌ சிதைப்ப னரகினில்‌. (20)

ஆத‌ லாலென துள்ளமால்‌ கொண்டிட
ஓது வார்த்தையு முட்கொளே னோதுவல்
நீதி வாக்கியங்‌ கேட்டன நேரிழாய்‌
நாதனைவிட நண்ணேன்‌ பிறர்‌ சுகம்‌. (21)

போடி துட்டி யெனவவள்‌ போயினள்‌
வாடி யெண்ண மடிந்‌திடு தன்மையாள்‌
நேடி மற்றோர்‌ தினத்தந்த நேரிழை
கூடி மீண்டுங் குறித்திது கூறுவாள்‌. (22)

நின்னன் பன்‌தன்மை நேரிழை கேட்டியால்‌
பன்னு வன்வெறுப்‌ பானவன்‌ வீட்டிலோர்
கன்னி யோடு கலந்திடக்‌ கண்டதால்‌
உன்னி நின்னோடுரைப்பதற் காயினேன்‌. (23)

காம மென்பதை யாரும்‌ கடப்பரோ
நீம திக்கிலை நேர்ந்த தறிந்திலை
சேம வைப்பெனுஞ்‌ செவ்வி கழிப்பது
தூம வார்குழ றையலு மேற்றனள். (24)

காம னேரெனுங்‌ காளையைக்‌ காட்டியே
நீமு யங்கென நேரிழை கூறினாள்‌
வாம மேகலை வாங்கப்‌ பொருள்‌ தந்தான்‌
தாம வார்குழ றையலு மேற்றனள். (25)

பொன்னைக்‌ கண்டபின்‌ பூசையு நாடொறுங்
கன்னிப்‌ பெண்ணவள்‌ கற்பின்‌ வலைவிட்டுத்‌
தன்னைப்‌ போன்‌றவ ளில்லை தலத்‌தினி
லென்னக்‌ கேட்டே யிசைகொடு மேவினாள்‌. (26)

பணமளிப் போர்‌ பதியினி லேகியே
கணமுந்‌ தாழ்கிலள்‌ கற்பினை நீக்குவாள்
நிணமும்‌ பெற்றன ணேரிழை கோனவள்
குணமுங்‌ கண்டு குறித்து வெறுத்தனன்‌. (27)

பாவி யோடு பழகி யிருந்‌தவென்‌
ஆவி போக்க லழகிது வன்றியும்‌
மேவி நின்றிடில்‌ மெய்த்தவஞ்‌ செய்தலைக்‌
கூவி வேதமுங்‌ கூறுவ துண்மையே. (28)

ஆத லாலியா னருந்தவஞ்‌ செய்துமே
பூதலந்‌ தனில்‌ பெண்பழி போக்குவேன்‌
ஏதந்‌ தீர்தல மெங்கெனச்‌ சூழ்ந்தபின்‌
மாதர்‌ மாமயி லைப்பதி நண்ணினான்‌. (29)

நண்ணும்‌ போதினி னற்றவச்‌ சித்தியைத்‌
திண்ணமாகப்‌ பெறுவையென்‌ றேதிகழ்
வண்ணங்‌ கொண்ட வளர்குயில்‌ கூவவும்‌
மண்ணி னின்றிடு மாதவன்‌ கேட்டனன்‌. (30)

வேத மேவுரு வாகிய வேதிமேல்‌
காத லாகக்‌ கபாலியின்‌ றன்னுரு
நீதியாக நிலையுற காட்டியே
போது கொண்டவற்‌ போற்றுதல்‌ மேயினான்‌. (31)

வேறு
எண்ணிலாத்‌ திருநாம முடையாய்‌ போற்றி
      யேற்றுவார்க்‌ கிருநிதிய மீவாய் போற்றி
மண்ணிலே கதியளிக்கு மகிபா போற்றி
      மாதவற்குச்‌ சக்கரத்தை யளித்தாய் போற்றி
உண்ணிலா முயிர்தோறு முறைவாய் போற்றி
      உத்தமனென்‌ றேயோத வுவந்தாய் போற்றி
கண்ணிலாக்‌ துட்டர்களைக்‌ களைவாய்‌ போற்றி
      கபாலியெனும்‌ பதிவாழுங்‌ கர்த்தா போற்றி. (32)

என்று போற்று மெழில்முனி தன்னிடம்‌
கன்று மான்கொள்‌ கபாலியுந்‌ தோன்‌றியே
நன்றி யற்றவுன்‌ நங்கையை நீங்கியே
துன்றிங்‌ கென்னைத்‌ துதித்தனை யாதலால்‌. (33)

கண்டு காருண்யம்‌ கொண்டு கருதியே
மிண்டு செய்தவள்‌ மெய்தடி யாமலே
புண்டரீக மலர்கொடு போற்றினாய்‌
அண்டர்‌ யார்க்கு மருமுனி யாயினாய்‌. (34)

அன்பி னோடெனை யா்ச்சித்த விக்குறி
யென்றுங்‌ காரணி யீசனென்‌ றோங்கவே
நின்று பேசியந்‌ நீல மிடற்றினான்‌
றுன்று சோதியாய்த்‌ தோன்றி மறைந்தனன்‌. (35)

பூசை முற்றியப்‌ புண்ணிய மாமுனி
யீச னைநித மேற்றி யெழிலுடை
வாச மாமலர்ப்‌ பாதம்‌ வணங்கிப்பின்‌
பாசம்‌ நீக்கும்‌ பரனடி சார்ந்தனன்‌. (36)

வேறு
காரணீ யீசன்வந்த கதையிது வாகுமிப்பால்‌
பூரணி மணாளன்‌ றன்னைப்‌ போற்றிய விருபாக்கண்ணல்‌
நாரணன்‌ முதலோரேத்தும்‌ நற்பதி மயிலைதன்னில்‌
சீரணிலிங்கம்வந்த சீர்த்தியை எடுத்துச்‌ சொல்வாம்‌. (37)

காரணீசுரர்‌ சரித்திரம்‌ முற்றிற்று.
------------------

17. விருபாட்சீசர்‌ சரித்திரம்‌.

நன்னகர்‌ மயிலைதன்னி னற்றவ மிழைத்திலாதா
லின்னலே நிரம்பப்பெற்றோ னிணையிலாக்‌ கலையில்வல்லோன்‌
பின்னவர்‌ குல‌த்‌திற்றோன்‌றிப்‌ பிரியனென்‌ றொருபேர்பெற்றோன்
பன்னக ருழன்றுமீண்டும்‌ பயன்கிட்டா னாகிவாழ்நாள். (1).

தவன்றன தடியார்தம்மைத்‌ தாழ்மையாய்க் கண்டுநீரென்
சிவமிவண்‌ வந்ததென்னத்‌ திருமனை தன்னிற்சேர்த்தே
உவமையி லன்னமிட்டாங்‌ குபசரித்‌ திருக்குநாளில்‌
நவமதாஞ்‌ செல்வந்தோன்றி நாட்குநாட்‌ குறைந்ததன்றே. (2)

இவ்வித மாகவாழ்ந்து மெய்‌திய கவலை நோக்கான்‌
செவ்வையாய்‌ நாளுமில்லச்‌ சிறப்பினுக்‌ குவகைவையான்‌
நவ்வியங்‌ கரத்தன்கோயி னாளுமே வலஞ்செய்தேத்திக்‌
கவ்விய பாசநீத்துக் களிப்புடன்‌ மனைக்கண்செல்வான்‌. (3)
மற்றொரு நாளினேர்‌ந்த மகிபனாம்‌ யோகிதன்னை
யுற்றவ னிணைத்தாள்போற்றி யூழ்வினை வசத்தால்நாயேன்‌
பெற்றவெந் துயர்போய்நன்மை பெறவருள்‌ செய்வீரென்ன
அற்றவற்‌ கன்னையொப்பா னருளுடன்‌ மொழிவதானான்‌. (4)

வருமல்ல னீங்கவேண்டின்‌ வையகங்‌ காக்கவேண்டி
னருமையா மைந்தரில்ல மரும்பொரு ளடையவேண்டின்‌
தருமிக்குப்‌ பாடறந்த தம்பிரான்‌ றனைப்பூசிக்கி
னிருமைப்பே றடைவாயென்றே யியம்பிட மகிழ்ந்தான்பின்னும்‌. (5)

செல்வம தடைந்தகாலைச்‌ சிவத்தினை மறக்கனீங்கும்‌
வல்லவ னாகிவாழ்த்தின்‌ வளர்ந்‌திடும்‌ போகமெல்லாங்‌
கல்வியும்‌ புகழுமோங்குங்‌ கண்டுநீ பூசியென்றே
நல்வினை யறிந்ததூயோ னவின்றனன்‌ சென்றானம்மா. (6)

மைந்தரை மனையைநீத்து மருவிவாழ்‌ பதியைவிட்டுச்‌
சிந்தையிற்‌ பூசைசெய்யுஞ்‌ சிறப்பினா லன்புகூர்ந்தே
தந்திர மொழியில்வல்ல தையலார்‌ மயல்கொளாம
லிந்திர பதியையேய்க்கு மெழிலொற்றி யூரைச்சார்ந்தான்‌. (7)

நற்றவர்‌ முனிவர்மாற்றம்‌ நன்றென மனங்கொண்டானாய்‌
அற்றைநாள் முதலாய்ப்பூசை யருமையாய்ச்‌ செய்‌துவந்தான்‌
மற்றனதப்‌ போக்கவூழும்‌ வந்துடன்‌ சேர்தல்போன்று
வெற்றிகொள்‌ பொதுமடந்தை மேவியீ துரைக்கலுற்றாள்‌. (8)

பூசையுந்‌ தவமுஞ்செய்வார்‌ புகழுடன்‌ சென்றுமுத்தி
நேசமா யடைவரென்றே நிலைபெற வெழுதிவைத்தோர்‌
பாசமா மனைவியார்க்குப்‌ பண்புடன்‌ சுகமீயாத
நீசரே யவர்தம்வார்த்தை நிலையென நம்பல்நன்றோ. (9)

மனைவியை மகிழ்ந்துகூடி மறுவறு சுகத்தைப்பெற்‌றே
மனதினை வாட்டுங்காம வன்னியைத்‌ தணித்‌துநாளும்‌
தனமெனுங்‌ குன்றமேறித்‌ தானதைக்‌ குழையப்புல்லிக்‌
கனமுறு களிப்பைநல்காக்‌ கசடர்கள்‌ வார்த்தையா மே. (10)

ஆடையும்‌ பணியுந்தந்தே யணைந்திடச்‌ சக்தியற்று
நாடவ ரிகழாவண்ணம்‌ நன்மனை மைந்தருக்குத்‌
தேடியே பொருளளிக்கத்‌ திடமிலா மூடமக்கள்‌
கூடியே யெழுதிவைத்த கொடுமொழி யென்றுதேரே. (11)

ஆதலா லென்னைக்கூடி யதரத்தி னமுதமாந்‌திக்‌
கோதிலா தென்றனில்லில்‌ கூடியே வாழ்தல்பூசை
பாதக வறுமையாலே படுக்கப்பா யற்றே வூணும்‌
நீதியாய்க்‌ கிடைத்தலின்றி நிற்பது தவமென்றெண்ணே. (12)

மற்றொரு மாற்றம்வேண்டா மறுமொழி புகலல்வீணாஞ்‌
சற்றுமே யெனைநீங்காது சஞ்சல மின்றிவாழ
உற்றவென்‌ மொழியைக்கேட்டே வுய்யென உரைத்தலோடும்‌
நற்றவ மில்லான்றானும்‌ நன்றென விசைந்தபின்னர்‌. (13)

மனைவியாய்க்‌ கொண்டபின்பம்‌ மாதுடன்‌ வாழுநாளில்‌
வினையம தானசூது வெறிகொள்கள்‌ ளினையுமாந்திப்‌
புனைமணி யாவுந்தோற்கப்‌ புண்படு மனத்தால்‌வேசி
சினமுட னுயிரைநீக்கச்‌ சென்றொரு தடத்‌ தில்வீழ்ந்தாள்‌. (14)

மாண்டது தெரியானாகி மலையுடன்‌ கானஞ்சுற்றிக்‌
தூண்டுமெவ் விடமுந்தேடிச்‌ சோகித்து மூன்றாநாளில்‌
காண்டலுந் தடத்‌தினின்றுங் கணவனும்‌ புலம்பியார்த்து
சேண்செல வீமச்செய்கை செய்‌தவன்‌ முடித்தபின்னர்‌. (15)

தேவியே யென்றழைப்பான்‌ றியங்கியே விழுவான்பாரி
லாவியே யென்னைநீங்கி யடைந்தையோ கைலையென்பான்‌
மேவிய சுகத்தைத்தந்த மெல்லியே கொடுமையென்பான்‌
காவிநேர்‌ கண்ணாயுன்னைக்‌ காண்பதெப்‌ பிறப்பிலென்பான்‌. (16)

இப்படிப்‌ புலம்பிப்பன்னா ளெழில்பதி விட்டுநீங்கித்‌
தப்பிலாத்‌ தவத்தைச்செய்து தண்ணிய கைலைசேர்தல்‌
இப்பிறப்‌ பதனிலற்றே னியல்வலி கழிந்‌துமூப்பு
மொப்புடன்‌ வந்ததென்றே வுயங்கியே வாட்டங்கொண்டான்‌. (17)

உணவது தருவாரில்லை யுயிரதும்‌ நீங்கவில்லை
பணவர வணியான்மாட்டுப்‌ பக்‌தியும்‌ நேர்ந்ததில்லை
கணமதுந்‌ தாழ்க்கவொண்ணாக்‌ கடும்பசி யொழிவதில்லை
தணலென வெரியும்வெங்கான்‌ தனினின்றுந்‌ திகைத்தானம்மா. (18)

அக்கண மயிலைநின்றே வருள்கொளோர்‌ தபசிநேர்ந்தே
இக்குவில்‌ லவனைக்காய்ந்த வெம்பிரான்‌ பூசைக்காகத்‌
தக்கநல்‌ வில்வந்‌தந்து தமியனே டுண்டுவாழ்ந்து
துக்கமின் றிருப்பாயென்னத்‌ துணைவனாய் நயந்தானம்மா. (19)

அன்றுதொட்‌ டவனுங்காலை யருந்துயி லொழிந்துசென்று
நன்றென நீரில்மூழ்கி நளிகொள்கூ விளத்திலேறி
வன்றிற லாளன்போன்று வகைவகை யிலைகள்கொய்து
ஒன்றுங்கீழ்‌ விழாதவற்றை யுகப்பொடு முற்றுங்கொள்வான்‌. (20)
சிந்திடா நின்ற வில்வஞ்‌ சேர்த்தெடுத் தவைகள்யாவும்‌
அந்திவா னிறத்தற்கென்றே யன்புடன்‌ முனிபால்வைப்பான்‌
புந்தியில்‌ மகழ்ச்சிகொள்வான்‌ புண்ணிய முனிவனின்னம்‌
தந்ததை யுண்டுநாளுந்‌ தணிவுட னிருக்குநாளில்‌. (21)

மன்னிய வில்வங்‌ கொய்ய மரத்தொர்நா ளேறுங்காலை
தன்னியல் பழிந்து கீழேதவறியே மூர்ச்சையாகிக்‌
கன்னியோர்‌ பங்கன்மீது கனிவுடன்‌ வில்வமெல்லாஞ்‌
சென்னியில்‌ சிந்தவீழ்ந்து சீவனைவிட்டானம்மா. (22)

விட்டவன் பரிவினாலே வியனுறக்கையாற் கொய்த
மட்டவிழ் வில்வ மெல்லா மங்கைதன்‌ பாகன்‌ மெய்யில்‌
பட்டதால்‌ மகிழ்ந்தன்னோனைப்‌ பரமன்வாழ்‌ கைலைசேர்ப்பான்‌
கட்டளைபெற்ற நந்தி கணங்களை யேவு முன்னே. (23)

அந்தகன்றூதர்‌ பற்‌றி யழுந்‌திடப்‌ புயத்திற்கட்டிச்‌
சிந்தையில்‌ முனிவனோடு தென்றிசை செல்லுமுன்னே
வந்தவத்தூதர்‌ தம்மை வலிமையா யுரத்தில்குத்தி
நொந்திட வதைசெய்போது நுண்ணறி வுடையோர்‌சென்றார். (24)

தன்னறிவிழந்த தூதர்தளர்ச்சியு நீங்கித் தங்கோன்‌
பொன்னடி பணிந்துகூறப்‌ பொருக்கெனக்‌ கைலைக்கேகி
சன்னிதி முன்னரேமன்‌ தயங்கின னவனைநோக்கி
யென்னென வெம்மானன்னோ னியம்புவான்‌ கரங்கள்‌ கூப்பி. (25)

பாலன்றன்‌ னாளறிந்து பாசத்தா லிழுத்தஞான்று
தாலத்தி லுதைத்த காயந்தவிர்கில னின்‌றுமுண்மை
ஞாலத்தி லந்நாள்தொட்டு நடுங்கியென்‌ றூதர்செய்யுஞ்‌
சீலத்தை நோக்கிடாது சிதைத்திடல்‌ முறையோ எந்தாய்‌. (26)

அவமதைச்‌ செய்தோனுக்கு மழகியகைலையீந்து
நவமதாந்தூதர்‌ தம்மைநலிந்திட வதைத்தனன்றோ
சிவபெருமானே யுன்‌றன்‌ திருவுளமிதுவோ வென்று
கவலையோடுரைத்த மாற்றங்கண்ணுதல்‌ கேட்டுக்கூறும். (27)

கூவிளத் தருவின்‌ கீழ்நாம்‌ கொண்டதோர்‌ வடிவைச்சூழ்ந்தே
தூவியேயவனும்‌ விட்டானஃதறிந் தவனை யுன்றன்‌
தீவினையடைய தூதர் தொழுது செல்லாதுதீது
மேவினரவரை நாமும்‌ வெறுத்தன மென்றானெந்தை. (28)

என்றரன்கூறக்‌ கேட்டவியமனுந்‌ தொழுதுநின்று
மன்றினில்‌ நடனங்காட்டுமகிபனே செவியிலேற்க
வொன்றியமாற்றஞ்‌ சொல்‌வேனுற்றவன்‌ வயிற்றுக்காக
நன்றுமே நின்றுவீழ்ந்த நலனன்றி வேறுமுண்டோ. (29)

தவத்தினை யாதுசெய்தான்‌ றையலர்மயக் கினின்றான்‌
சிவத்‌தினை நினைக்கிலாதான்‌ சிறுமையால்‌ வேசிசேர்ந்தான்‌
பவத்தினை விளைக்குங்கள்ளைப்‌ பரிவுடனாளுமுண்டான்‌
அவத்தினை யடைவானுன்‌ றனருளுக்கு மருகனாமோ. (30)

என்னலுநகைத்தேயீச னேம நீயெடுத்துச்சொன்ன
வன்னதுமெய்யே யன்னோனகட்டினை வளர்ப்பான்நன்மை
முன்னவன றியாதொன்று முற்றலால்‌ கைலைசேர்ந்தான்‌
தன்னுளத்தறிந்து செய்தால்‌ சாருமென்‌ வடிவமென்றான்‌. (31)

விடமமர் கண்டர்‌மாற்றம்‌ வினவியேதொழுது தான்வாழ்‌
தடமதாந் தெக்கணத்தைச்‌ சார்ந்தவச்‌ சமனிச்சீரால்‌
படர்வளமயிலைதன்னில்‌ பதிந்தநல்‌ வில்வநீழல்‌
படவரவ ணிந்தானுக்குப்‌ பகர்ந்திடும்‌ பெயர்யாதென்னில்‌. (32)

ஆரவேநாட்டமூடா தங்கையின்‌ மலரைச்சிந்தி
சீர்பெறுமொருவன்‌ பூஜைசெய்ததோர்‌ செயலால்முன்னம்‌
நார்பெறாச்‌ சமணரெல்லாம்‌ நலிந்திடக்கயமுரித்‌த
வீரனாம்‌ பெருமானுக்கு விருபாட்சியெனப்‌ பேரிட்டார்‌. (33)

ஆனநாள் முதலாவிந்த வழகியமயிலையென்னுங்
கானகமயிலாள் சாபங்கழிந்த நற்பதிகுணக்கி
லீனமில்லா திருந்தே யேற்றுவோர்க்‌ கருள்மிகுந்த
ஞானசூரிய னாய்நின்று நல்லருள்‌ செய்வானெந்தை. (34)

முனிவர்காளி தற்குப்‌பின்னர்‌ முறைமையா லிராமனேத்திக்‌
கனிவுடன்‌ வழிபட்டுய்ந்த கதையினைக்‌ கேட்பீரென்று
நனிமகிழ கத்தியப்பேர்‌ நல்லமாதவன்றான்‌ மேனாள்‌
துனிகொளுஞ் சூரற்செற்ற தோன்றல்‌தாள்‌ பரவிச்சொல்வான்‌. (35)

விருபாட்சீசர்‌ சரித்திரம்‌ முற்றிற்று.
------------------------------

18. ஸ்ரீ ராமர்‌ பூஜை செய்தது,

காவலனாயுலகாண்ட தசரதன்றன் மகனாகிக் கருணையுள்ள,
சேவகனாஞ்‌ சனகனென்போன்‌ றானீன்ற செல்வியெனுஞ்‌
      சீதைதன்னைப்‌,
பூவுலகில்‌ மணம்புரிந்தப்‌ பொன்னியொடு வாழ்ந்திடுநாள்‌
      பொறாமைகொண்டு,
பாவலர்கள்‌ புகழாத பாவியெனும்‌ கைகேசி பகைமேற்‌
      கொண்டாள்‌. (1)

கமுகைவென்ற கந்தரத்தாள்‌ கணவனையுந் தானழைத்துக்‌
      கதிர்வேலோய்நீ
குமுதம்வென்ற செவ்வாயாற்கொடுத்த வரத்தின்‌படியே
      கோதில்லாத
வமுதமெனு மொழியுடையான்‌ பரதனுக்கே‌ யரசுரிமை
      யருளல்வேண்டும்‌
சமுகமதிலணுகாம லிராமனையே வனமனுப்பச்‌
      சாற்றென்றாளே. (2)

புன்மொழியைக்‌ கேட்டவுட னிருசெவியுந்‌ தான்புதைத்துப்‌
      புகழ்‌வேலோனும்‌
இன்மொழியாய்‌ நீயுரைத்த கொடுமொழியுங்‌ கேட்பதற்கு
      விசையேனென்ன
நன்மொழியென்‌ றேராமன்‌ பன்‌னான்‌கு வருடம்வரை
      நற்கான்செல்வேன்‌
என்மொழியைக்கேளென்‌ றேயிளையோனும்‌ பின்செல்ல
      விசைந்தானன்றே‌. (3)

கனத்தைநகுங்‌ கருங்குழலாள்‌ சீதையெனும்‌ பெண்ணரசி
      கணவர்விட்டு
இனத்திலும்வாழ்‌ வேனோநான்‌ எளியாளை விட்டுநீ
      யேகுவாயேல்
மனத்தினிலு முணராத மரணமதைக்‌ கைக்கொள்‌வேன்‌
      மறவாதுன்னை
வனத்தினிலும்‌ பிரியாதுன்‌ னுடன்‌வருவன்‌ மறுத்‌திடேல்‌
      வள்ளாலென்றாள்‌. (4)

எனக்கூடி மூவருமே வனத்திலுறை காலைதனி
      லெழில்மாரீசன்‌
மனத்தினிலு மாசையுற மானுருவந்தான்‌கொண்டு
      மாதுசீதை
வனத்திலுறும்‌ போதுகண்டு பிடித்தளிக்க வேண்டுமென
      வள்ளன்றானும்‌,
பினர்த்தொடர விராவணனு மிதுசமய மெனக்கொண்டு
      போயினானே. (5)

தசக்ரீவன்‌ சிவபூஜை சானகலானவனை வெல்வோர்‌ தரணிதன்‌னில்‌,
தசைக்கு இபர்‌ தம்மாலு மிந்திரனார முதலான தேவசாலும்‌,
புசபலத்தால்‌ வெல்லுவதற்‌ கெவசாலு முடியாது புகழின்மிக்க,
வசைச்சொலிலா மயிலையினிற்‌ றவஞ்செய்தே யவளைவெல்ல
வரங்கொள்வேனே. (6)

என்றவனும்‌ மயிலைதனி னற்றவத்தை யேந்திநிற்க
      இறைவன்றானும்
கன்றிளமான்‌ காளசண்டத்திரிநேத்ர மழுவோடு
      காணத்‌தோன்‌றி
வென்றிபெறத்‌ தவம்புரிந்தாய்‌ விரைவினிலே சேதுகட்டி
      வீரன்றானும்
பொன்றிடவே யமர்புரிந்து சீதைதனைச்‌ சிறைமீட்டுப்‌
      புகழ்கொள்வாயே (7)

எனக்கொடுத்த வரமதுபெற் றெண்ணிலாப்‌ புகழுடையா
      ளொடும்‌ஈடில்லா
வனத்‌துறையும்‌ வேடனெனத்‌ தம்பியுடன்றான்‌ திரிந்து
      வழியில்கண்ட
புனக்கிளியைப்‌ போகாது தான்தடுத்த சடாயுவுக்குப்‌ புலவிதீர
மனத்துடனே வருள்புரிந்து வாலிதனை மடிவித்து மன்னி
நின்றான்‌. (8)

புந்தியினில்‌ சினங்கொண்டு புகழ்பெற்ற சுக்ரீவன்‌ புரியாநின்ற
தந்திரத்தால்‌ வீடணனை வசஞ்செய்து சேதுகட்டித்‌ தாண்‌டிப்போக
அந்தவனும னையனுப்பி யருள்சீதை நிலைகண்டே யழகின்‌மிக்க
இந்துதவழ்‌ சோலைவள ரிலங்கைக்கோ ரெமனாகி யெரித்திட்‌டானே. (9)

எதிர்த்துவந்த விராவணானை யிணையிலான்‌ முன்வென்றே
      யிளையோனுக்கு
அதிர்த்துசர்வ வாத்தியமு முழங்கிடவே வரசளித்‌தின்
      னருளைச்‌செய்து
துதித்துநின்ற சீதைதனை யுடனழைத்துத்‌ சேதுதன்னிற் றுரிதமாகப்‌
பதித்‌திலிங்கம்‌ பூஜைசெய்யக் கொண்டுவர வனுமனையே
      பணித்திட்டானே. (10)

காலமது தாழ்ந்ததெனக்‌ காளகண்டன் றனைப்‌போற்றிக்
      கருத்‌தில்கொண்டு
வேலையின்‌றன்‌ மணலெடுத்தே விளங்கிழையுந் தானுமாய்
      விமலர்க்கோலி
வாலமதிச்சடை யோனையர்ச்சிக்கு மமையத்தில்‌ வலிமையோடு
கோலமுற வனுமானுங்‌ கொண்டுவந்த லிங்கமதைக்‌
      குறிப்பித்தானே. (11)

எடுத்துவந்த லிங்கமதை முன்பூஜை முறைமுடித்தே
      யெழிலின்மிக்க
வடுத்‌திருவர்‌ பின்‌பூஜையருமையொடு செய்தமைக்கவை
      யன்றாளிற்‌
றொடுத்துமல ரன்பென்னுந்‌ தார்சுட்டியிருவரையுந்‌
      தொகுதிசெய்த
கடுத்தவிடக்‌ கண்டனையுங்‌ கணம்பிரியா வம்மையையுங்‌
      கருதித்‌தாழ்ந்தார்‌. (12)

வேறு
வினையன்‌றன்னை வதைத்த வியன்பழி
யெனைவிட்‌டேக இசைவி னருளினாய்க்‌
கனிவுட னெனதுள்ளக்‌ கமலமுந்‌
துனியுறாவகை செய்தனைத்‌ தூய்மையோய்‌. (13)

கருணையென்பது கண்டன னின்னிடம்‌
அருணைமன்னற்‌ கருமகவாகியே
சிரமநீக்கித்‌ தெளியவைத் தாய்புகழ்‌
ஒருவனே யெனவுத்தமன்‌ ஏத்தினான்‌. (14)

மங்கைபங்கனைக்கண்டு மயிலையில்‌
துங்கமாகிய சொற்பிரகாசனே
சங்கரா வெனைச்சாரக்கடனுனக்‌
கிங்கு வந்தனன்‌ என்பிழை தீர்ந்ததே. (15)

சீதையுடன்‌ மயிலைக்கு வந்துசேர்ந்து சிவபெருமான்‌ தனைப்பூசை
      செய்துசெய்து
வாதை தவிர்த்தாண்ட பெரும்வள்ளலுக்கு வண்மைதிகழ்‌ திருவிழா
      நடத்திவைத்து
போதமிகு முனிவர்களுந் தம்பிமாரும்‌ புகழ்பெற்ற வனுமானும்‌
      புண்யரூபக்‌
கோதையுடனயோத்தி யெனும்‌பதிக்குச்‌ சென்றுகோதிலா வரசுரிமை
      கொண்டானன்றே. (16)

அருமையுள முனிவர்களே யருளிராமன்‌ அழகுபெறு சரிதமதை
      யறைந்தாமிப்பால்‌
பெருமையுள தேவரெலாம்‌ கடையஆழி பெருகும்விடத்‌ தாலயர்ந்து
      பெரியோன்‌றன்னைக்‌
கருணைசெய வேண்டுமெனக் கனிந்துபோற்றக் காளமதைக் கண்டமதிற்
      களிப்பாயேந்தி
வரமுதவுதீர்த்தபா லீசனார்தம்‌ வளங்குலவு சரிதைதனை
      வழங்கலுற்றேன்‌. (17)

ஸ்ரீ ராமர்‌ சரித்திரம்‌ முற்றிற்று.
----------

19. தீர்த்தபாலீசர்‌ சரித்திரம்‌

தேவரெல்லாஞ்‌ சபைகூடித்‌ திசைமுகனைப்‌ பதம்பணிந்து
      தெளிந்துபோற்றி
நாவலர்கொண்‌ டாடுமெங்க ணாதவெமக் கிறப்பில்லா
      நன்மருந்தை
நீவழங்கி யருளென்ன வதுநம்மாலாகாது நீரார்வேணி
மாவலவனாகுமெழில்‌ மானிடத்தான்‌ பதம்‌பணியின்‌
      வழியாமென்ரான். (1)

மந்தரத்தை மத்தாக வாசுகியைநாணாக வலியமாட்டி,
தந்திரத்தாற் பாற்சலதி தனைக்கடைந்து வருமமிர்தம்‌ தவிராதுண்டா
லந்தமதைய டைவதற்கே வழியிலையென்‌ றேவுணர்ந்தங்‌ கரியோடொக்க
வந்தசுரர்யாவருமே தாங்கூடி யொருமொழியாய்‌ வழங்கினாரே. (2)

சுராசுரர்க ளொருங்கெய்தி வாசுகிமந்தரகிரியைத்‌ தூக்கிச்
பரசிவனை நினையாது பாற்சலதி கடைந்‌திடுங்காற்‌ பரிவினா
வரமுடைய வாசுகியும்‌ வல்விடத்தை வெளியிடவே வந்ததேவர்‌
இரவெனநீள்‌ கருநிறத்தாற்‌ றகிப்புண் டுகண்கலங்கி யிரங்கலுற்றார். (3)

வேறு
ஐயனே யமரரெலா மறியாம லேயிழைத்த
வெய்யவினை யதனாலே விண்ணாடுங்‌ கருகியது
கையரே நின்னுடைய கருணையின்றி யிறுமாந்து
பையரவான்‌ மந்தரத்தாற்‌ பாற்கடலைக்‌ கடைந்தேமால். (4)

பன்னுபய சலதியுமே பாலமுத மளிப்பதுபோல்‌
துன்னுவிடந்‌ தந்தெமையுந்‌ துஞ்சிடவே செய்ததினால்‌
உன்னுமிடச்‌ தெம்மானே யுன்னருளென்‌ றேதெரிந்தேம்‌
சின்னவர்கள்‌ பிழைதீர்ப்பா யென்றுசிவன்‌ றாள்பணிந்தார். (5)

காலனவன்‌ றனையுதைத்த கட்டழகா விரிஞ்சையிலே
பாலனுக்கு முடிவளைத்த பரிவுடையோய்‌ சுந்தரற்கு
வாலையெனும்‌ பரவையிடந்‌ தூதுசென்‌ற வாஞ்சையனே
கோலமுறு பொன்மேனிக்‌ கொற்றவனே வபயமென்றார்‌. (6)

வந்திக்கு மண்சுமந்து வைகைநதிக் கரையடைத்த
தந்‌திமுகற்‌ கினியவொரு தந்தையனே தேவர்களைப்‌
பந்‌திக்கும்‌ பாசமெலாம்‌ பரிந்தொழித்துக்‌ காவாயேல்‌
அந்திமதி முடியணிந்தாய்‌ அருள்செய்வா ராரென்றார். (7)

பாணர்குறை நீக்குவான்‌ பண்புடனே விறகுவிற்றாய்‌
நாணிலனென்‌ றுனைநாட்டார் நகைசெய்தே யிகழ்வாரோ
காணுமெங்கள்‌ மேனியெல்லாங் கருகவே செய்விக்கும்‌
வேணியனே வல்விடத்தை நீதொலைக்க வேண்டுமென்றார். (8)

இன்றுநீ யிதுமாற்றி யெங்களுயிர்‌ காவாயேல்‌
துன்‌றமரர்‌ தமக்குநீ யன்னையெனச்‌ சொல்வாரார்‌
பொன்றுவது நன்றோவிப்‌ புத்தேளி ரனைவருமே
வென்றிதருஞ்‌ சிவமேயிவ் வினையோமுக்‌ கிரங்காயோ. (9)

அன்னையவ டன்குழவிக்‌ கமுகமளிப்‌ பதுபோன்று
பன்னுமெமக்‌ கிவ்விடத்தைப்‌ பரிந்துநீ யூட்டிடிலோ
பின்னதனை விலக்கிநின்றன்‌ பொற்கரத்தைப்‌ பிடிப்பார்யார்
முன்னைவினை யோர்தமக்கு முற்றுமன மிரங்கென்றார்‌. (10)

கூறுமவர் குறைகேட்டுக் கோதிலா னெதிர்நக்கு
மாறுபடுந்‌ தேவர்முதல்‌ மன்னுயிர்கள்‌ வாழ்வதற்கு
ஊறுபெறு மிவ்விடத்தை யும்பர்களே யென்செயலாம்‌
கூறுபெருஞ்‌ சிவஞானக்‌ கொம்பேநீ கூறென்றார். (11)

இவ்வார்த்தை தான்கேட்டே யெம்மிறைவி நோக்கலுமே
வெவ்விடமு முருமாறி வியனமுத மாகியதால்‌
பவ்வமெழுங்‌ கொடுங்காளம்‌ பரமனார்க்‌ கமுதாகும்‌
அவ்வனப்பை யறிகிலமென்‌ றமரர்சொலி யார்‌த்தனரால். (12)

தேவிதிருக்‌ கருணைபெறு தேவரெல்லா மம்பிகையை
மேவியெம்மோ யீதெம்மை மெலிவுசெயு மாகையினாற்‌
கூவிநனி குழையிரந்துங்‌ கோமானு ணாதுவிடின்‌
ஆவியிழப்‌ போமிதனுக்‌ கையமிலை யென்றார்கள். (13)

இவ்வோசை கேட்டவுடன் எம்மிறைவி தானிசைந்து
கவ்வையுறு காளமதை கடுகளவாய்ச் சேர்த்தரனார்
செவ்வாயில் கொண்டூட்ட சிவபெருமான் உண்டிடவும்
துவ்வார்பொன் வண்ணனிடம் தொல்சுரர்கள் ஒன்றுரைப்பார். (14)

கண்டத்தின் மீதிருத்தின் காண்டோறும் யாம்மறவோம்
துண்டமதிச் சடையோனே! எனவெழுந்தே தொழுதுநின்றார்
அண்டர்களைத் தான்காக்க அண்ணலார் அவ்விடத்தை
கண்டமதில் இசையவைத்தார் கருணையது தோன்றஅரோ. (15)

வைத்தமன்னர் விண்ணவர்கள் மகிழ்ந்திருந்த வானமுதை
சித்திரையில் விடந்தீர்ந்து செல்வனார் உதவியதால்
நித்தியராய்த் தீர்த்த பாலீசரென நிலைபெற்றே
இத்தரையில் இந்நாமம் இனிதவர்க்கு விளங்கினதால். (16)

வேறு
தீர்த்த கபாலீசர் சீரை உரைத்தனம்
பார்த்த தேவர்கள் பார்புகழ் மன்னவரை
தேர்த்தெடுத்த அத்தீதிலா மாயையில்
காத்த வாயிலார் காதை விளம்புவேன். (17)

தீர்த்தபாலீசர் சரித்திரம் முற்றிற்று
----------------

20. வாயிலார் நாயனார் சரித்திரம்

முனிவரே மயிலையின் முன்னவன் பாகம்வாழும்
கனிமொழி கற்பகாம்பாள் கழலடி நாளுமேத்திப்
பனிமழை வேனிற்கெல்லாம் படுமுடல் வாடலின்றித்
தனியனாயிருந்து போற்றுந் தன்மையில் மிக்குயர்ந்தோன். (1)

உலகத்தி லுள்ளோரெல்லா உம்பொரு ளடைவதற்காய்
பலபல தொழில்கள் செய்துபற்பல விடயவாசை
மலமெனுங் குழியிலாழ்ந்து மயங்குவர் தம்மைக்கண்டு
வியலகுவ துண்மையென்று விழியினை மூடினானால். (2)

அசையால் பொருள்கணாடி உஅலைந்துமே கழுதுபோல
................... நல்வழியிற் செல்ல விடாதுதன் கான்முளைக்கே
................... வைத்துமிக்க நிதியினைப் பாதுகாத்த
................... வாடாமை நெறியென மவுனமுற்றான். (3)

................... பொய்யர் மிகுதுயர் விளைக்கு மூர்க்கர்
................... தையலர் பதத்தில் தாழ்வோர்
................... துயருழக்கும் லோபர்
................... செவிகொடாதார். (4)

பருவர லின்னறியல்லும் பகலுமே மவுனமுற்றுத்
திருவுள மறிவதல்லாற் றேவரு மறியலாகா
கருணையோ டுமையாள் ..........தன்கழலடி யிடைவிடாமல்
திருமலர் நீரன்பென்னத் தினமுமே யர்ச்சிப்பனால். (5)

(மூலநூலில் 807, 808, 809 பாடல்கள் முழுவதும் சிதைந்துள்ளது)

இந்நிலை கண்டெம்மான யிருகரமதனி லேற்றுத்
தன்மடி மீதிருத்தித் தைவந்து முதுகுதன்னைச்
சின்மய மவுனத்தோனைச் சேர்த்தனன் கைலைதன்னில்
வன்மனத் தோரும்போற்ற வாயிலார் நாயனானார். (6)

இத்தகைய சிறப்புவாய்ந்த வெழில்வளர் மயிலையின்கண்
மெத்தவும் புகழப்பெற்ற மெய்யுணர் வாயிலார்தாம்
பத்தியாய்த் தவத்தைச் செய்து பண்புறும் பேரானந்த
சித்தியை யடைந்தார் காண்மின் தேவரும் போற்றமாதோ. (7)

வாயிலார் நாயனார் சரித்திரம் முற்றிற்று.
------------

21. புராண நிறைவு


வேறு
இந்தவிதம் திருமயிலைக் கிசைந்துநிற்கும்
      ஏற்றமெலாம் மகரிஷிகட் கினிதெடுத்துச்
சிந்தைமகிழ்ந் தகத்தியரும் சூதனாரும்
      திகழ்பிரமாண் டத்துளவா றியம்பினர்நற்
செந்தமிழிற் றிருவிருத்தப் பாடலாலே
      செகத்துளோர் கண்டுநலம் பெறவேவேண்டி
எந்தையெழி லார்ந்தகபா லீசனார்தம்
      இன்னருளை மின்னிட்டே இசைத்தேன்யானே.

வாழி

புயல்வாழி ஆனிரைகள் பொலிந்து வாழி
பூவுலகைப்பரிந்தளிக்கும் வேந்தன் வாழி
வியனார் பஞ்சாக்கரம் வெண்ணீறும் வாழி
வேதமுடன் ஆகமமும் விளங்க வாழி!
----------

This file was last updated on 10 May 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)